New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வான்உறையும் தெய்வத்துள் வைக்கப் படும்


Guru

Status: Offline
Posts: 24603
Date:
வான்உறையும் தெய்வத்துள் வைக்கப் படும்
Permalink  
 


 வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

தெய்வத்துள் வைக்கப் படும். (அதிகாரம்: இல்வாழ்க்கை குறள் எண்:50 )
பொழிப்பு (மு வரதராசன்):உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன், வானுலகத்தில் உள்ள தெய்வ முறையில் வைத்து மதிக்கப்படுவான்.
மணக்குடவர் உரை: இல்வாழ்க்கை வாழும்படியிலே வாழுமவன் உலகத்திலே தேவருள் ஒருவனாக மதிக்கப்படுவன்.
இவன் எல்லாராலும் நன்கு மதிக்கப்படுவ னென்றவாறு.
பரிமேலழகர் உரை:வாழ்வாங்கு வையத்துள் வாழ்பவன் - இல்லறத்தோடு கூடி வாழும் இயல்பினால் வையத்தின்கண் வாழ்பவன்; வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படும்- வையத்தானே எனினும் வானின்கண் உறையும் தேவருள் ஒருவனாக வைத்து நன்கு மதிக்கப்படும்.
பின் தேவனாய் அவ்வறப்பயன் நுகர்தல் ஒருதலையாகலின், 'தெய்வத்துள் வைக்கப்படும்' என்றார். இதனான் இல்நிலையது மறுமைப்பயன் கூறப்பட்டது. இம்மைப் பயன் புகழ், அதனை இறுதிக்கண் கூறுப.(அதி.24.புகழ்)
இரா சாரங்கபாணி உரை:உலகில் வாழுமுறைப்படி இயல்பாக வாழ்பவன் வானகத்துள்ள தெய்வங்களுள் ஒருவனாக மதிக்கப் பெறுவான்.
பொருள்கோள் வரிஅமைப்பு:வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன், வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படும்.
பதவுரை: வையத்துள்-நிலவுலகத்துள்; வாழ்வாங்கு- வாழும் முறைப்படி; வாழ்பவன்-வாழ்க்கை நடத்துபவன்; வான்-விண்ணுலகம்; உறையும்-தங்கும்; தெய்வத்துள்-தெய்வத் தன்மையில்; வைக்கப்படும்-மதிக்கப்படும்.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இல்வாழ்க்கை வாழும்படியிலே வாழுமவன் உலகத்திலே;
பரிதி: பூமியிலே இல்லறம் நடத்தும் முறையாலே நடப்பவன்;
பரிமேலழகர்: இல்லறத்தோடு கூடி வாழும் இயல்பினால் வையத்தின்கண் வாழ்பவன்;
'உலகத்திலே இல்வாழ்க்கை வாழும்படியிலே வாழ்பவன்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'உலகத்தில் மணந்து முறையாக வாழ்பவன்', 'இவ்வுலகத்திலே வாழவேண்டிய முறைப்படி மனையாளோடு வாழ்பவன்', 'இவ்வுலகில் இல்லறத்தில் வாழும் முறைமையோடு வாழ்கின்றவன்', 'இம்மண்ணில் வாழ்வாங்கு வாழ்பவன்' என்றபடி உரை தந்தனர்.

உலகத்திலே வாழும் முறைப்படி வாழ்பவன் என்பது இப்பகுதியின் பொருள்.
வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தேவருள் ஒருவனாக மதிக்கப்படுவன்.
மணக்குடவர் குறிப்புரை: இவன் எல்லாராலும் நன்கு மதிக்கப்படுவ னென்றவாறு.
பரிதி: தேவர்க்கு நிகராவன் என்றவாறு.
பரிமேலழகர்: வையத்தானே எனினும் வானின்கண் உறையும் தேவருள் ஒருவனாக வைத்து நன்கு மதிக்கப்படும்.
பரிமேலழகர் குறிப்புரை: பின் தேவனாய் அவ்வறப்பயன் நுகர்தல் ஒருதலையாகலின், 'தெய்வத்துள் வைக்கப்படும்' என்றார். இதனான் இல்நிலையது மறுமைப்பயன் கூறப்பட்டது. இம்மைப் பயன் புகழ், அதனை இறுதிக்கண் கூறுப.(அதி.24.புகழ்)
'வானின்கண் உறையும் தேவருள் ஒருவனாக வைத்து நன்கு மதிக்கப்படுவான்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'மேலுலகத் தேவராக மதிக்கப்படுவான்', 'விண்ணுலகிலுள்ள தேவருள் ஒருவனாக மதிக்கப்படுவன்', 'வானில் வாழ்வதாகக் கருதப்படும் தேவருள் ஒருவனாக மதிக்கப்படுவான்', 'வானுறையும் தெய்வங்களின் வரிசையில் வைத்தெண்ணப்படுவான்' என்றபடி பொருள் உரைத்தனர்.
வானுலகத்திலுள்ள தேவர்களில் ஒருவராக எண்ணப்படுவான் என்பது இப்பகுதியின் பொருள்.
நிறையுரை:உலகத்திலே வாழ்வாங்கு வாழ்பவன் வானுலகத்திலுள்ள தேவர்களில் ஒருவராக எண்ணப்படுவான் என்பது பாடலின் பொருள்.
'வாழ்வாங்கு வாழ்பவன்' யார்?
திருக்குறள் நூலுக்கான தொகுப்புரைச் செய்யுளாக இப்பாடலை எண்ணலாம். இக்குறளில் சொல்லப்பட்ட கருத்து புதுமையானது; புரட்சிகரமானது. திருவள்ளுவர் உலகின் மற்றச் சிந்தனையாளர்களிலிருந்து வேறுபட்டவர் என்பதைக் காட்டும் குறட்பாக்களில் இதுவும் ஒன்று. இல்வாழ்க்கை நடத்துபவன் எய்தக்கூடிய உச்ச நிலையைக் கூறுகிறது.
இல்வாழ்க்கையிலிருந்து ஐம்புல இன்பங்களை ஆரத் துய்த்துக் கொண்டு தீதின்றி வந்த பொருள் கொண்டு அற உணர்வுடையவனாகி, வாழும்முறைப்படி வாழ்பவன், விண்ணுலகிலுள்ள தெய்வங்களுக்குச் சமமாகக் கருதப்படுவான் என்று இக்குறள் சொல்கிறது. இல்வாழ்க்கை அதிகாரத்தில் இப்பாடல் வருவதால் வாழ்வாங்கு வாழ்பவன் இல்லறத்தானைக் குறிக்கிறது என்பது சொல்லாமல் விளங்கும்.
வாழும் நெறிப்படி வாழ்தல் அருமையுடைய முயற்சி; அது மனிதனிடமுள்ள தெய்வத்தன்மையை வெளிக்கொணர்கிறது. 'அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை' என உறுதிபட உரைத்த வள்ளுவர் 'வாழ்க்கை வாழ்வதற்கே' என்ற கருத்தும் கொண்டவர். உலக வாழ்வில் மேன்மை பெற இல்வாழ்வே போதுமானது; பண்பும் பயனும் மிக்க இல்லறத்தை நடத்துபவன் எல்லாராலும் போற்றப்பட்டு தெய்வத்தன்மை கொண்டவனாக எண்ணப்படுவான் என்னும் கருத்தை இங்கு முன்வைக்கிறார்.
வானுலகம் என்று ஒன்று உள்ளது; தெய்வநிலை பெற்றவர்கள் அங்கே உறைகிறார்கள் என்பது மக்களிடையே உள்ள ஒரு பொதுவான நம்பிக்கை. தெய்வநிலை பெற்றவர்கள் தேவர் அல்லது தெய்வத்தன்மை உடையவர் என்று அறியப்படுவர். தெய்வநிலை எய்துவது எப்படி? மண்ணில் நல்ல வண்ணம் வாழ்ந்தால் மனிதன் வானுலகில் உள்ளோர் போல் தெய்வநிலையை அடையலாம்; அப்படி வாழ்பவர் தெய்வமாக மதிக்கப்படுவர் என்கிறார் வள்ளுவர். உலக வாழ்க்கையைக் கண்டு அஞ்ச வேண்டாம்; அதைப் புறக்கணிக்க வேண்டாம்; நல்ல நெறியைப் பின்பற்றி வாழ்ந்தால் இங்கேயே - இவ்வுலகிலேயே பேரின்பம் கிட்டும்; வாழ்வின் முழுமையைப் பெறலாம்; தெய்வநிலையை அடையமுடியும் என உணர்த்துகிறார்.
இயல்பான இல்வாழ்வு நடத்தி இன்ப துன்பங்கள் பற்று பாசங்கள் கொண்ட வாழ்வினில் பங்கு பெறுவோரும் தெய்வநிலை அடைய முடியும் என்றது பெரிதும் மாறுபட்ட சிந்தனை. இக்குறட்கருத்தை வள்ளுவர் ஐயத்திற்கிடமில்லாத உறுதியோடு அறிவிக்கிறார்.
வைக்கப்படும்' என்றதனால், வள்ளுவர் இதைத் தன் கூற்றாகக் காட்டவில்லை என்றும் வாழ்வாங்கு வாழும் இல்வாழ்வான் மற்றவர்களால் தெய்வமாக வைக்கப்படுகிறான் என்ற கருத்து நயத்தையும் ஆய்வாளர்கள் சுட்டுவர்.
எளிய நல்வாழ்வு வாழும் மக்களுக்கு நம்பிக்கையையும் ஊக்கத்தையும் ஊட்டவல்ல குறள் இது. அமைதியும் நிறைவும் தரும் வாழ்க்கையை இல்லறத்திலேயே பெறமுடியுமா என்னும் வினா நமக்குள் அடிக்கடி எழுவதுதான். வாழ்வாங்கு வாழ்பவரால் அதைப் பெற முடியும் என்கிறது இப்பாடல். மகாத்மாக்களை மனதில் கொண்டு பாடப்பட்டதல்ல இக்குறள். இது வரலாற்றில் வராத, பாடல் பெறாத, வாழ்வாங்கு வாழும் எண்ணற்ற தெய்வப் பண்பு கொண்ட மனிதர்களை நினைத்துப் படைக்கப்பட்டதாகும்.
'வாழ்வாங்கு வாழ்பவன்' யார்?
'வாழ்வாங்கு வாழ்பவன்' என்றதற்கு இல்வாழ்க்கை வாழும்படியிலே வாழுமவன், இல்லறம் நடத்தும் முறையாலே நடப்பவன், இல்லறத்தோடு கூடி வாழும் இயல்பினால் வாழ்பவன், இல்லறத்தோடு கூடிப் பெருஞ்செல்வத்தோடும் பேரறத்தோடும் வாழும் இயல்புடையவன், வாழவேண்டிய முறையில் வாழ்கின்றவன், இயற்கை படைத்த நியதிப்படி, இல்லறத்தில் வாழ்வாங்கு வாழ்பவன், மணந்து முறையாக வாழ்பவன், வாழுமுறைப்படி இயல்பாக வாழ்பவன், மனைவி மக்களோடு இல்லறம் நடத்தி வாழ வேண்டிய முறையில் வாழ்கின்றவன், வாழவேண்டிய முறைப்படி வாழ்பவன், வாழவேண்டிய முறைப்படி மனையாளோடு வாழ்பவன், இல்லறத்தில் வாழும் முறைமையோடு வாழ்கின்றவன், நல்ல முறையில் வாழ்க்கை நடத்துபவன், இல்லறத்து வாழும் முறைப்படி வாழ்கின்றவன் என உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

'வாழ்வாங்கு வாழ்தல்' என்பது வாழவேண்டிய முறையில் வாழ்வதைக் குறிப்பது. இதுதான் வாழும் முறை என்று வரையறை செய்வது இயலாது. அன்பும் அறமுங் கொண்டு இயல்பினால் இல்லறம் பேணுவது வாழும் நெறியாகும் என்று பொதுமையில் இதை விளக்கலாம்.
நல்ல முறையில் செய்ய வேண்டியதையெல்லாம் செய்தும் செய்யக்கூடாததை எல்லாம் செய்யாமல் விலக்கியும் இல்லற வாழ்க்கையிலிருந்து ஆற்றும் உயர்ந்ததோர் ஒழுக்கம் வாழும் முறை ஆகும். ஒருவன் அவன் மனதிற்குத் தோன்றுமாறு நடந்து கொள்வதோ அல்லது தான் கற்பவற்றை நல்ல முறையில் தேர்வு செய்யாமலும் தேர்ந்தவற்றை ஆராயாமலும் அப்படியே ஒழுகுதலோ வாழும் நெறிகள் ஆகா.
வாழவேண்டிய முறை என்பதற்கு திரு வி க தரும் விளக்கமாவது: 'முறைகள் பலபட்டன. அவைகளிற் சிறந்தனவற்றை அறிவுறுத்துவது திருவள்ளுவர் நூல். ஒருத்தியும் ஒருவனும் கற்பன கற்று, கேட்பன கேட்டு, மணம் புரிந்து, இல்வாழ்க்கையில் தலைப்பட்டு, மன மாசற்று, விடுதலை பெறுதற்குப், பிள்ளைப் பேறுண்டாகவும், அன்பு, பெருகவும், விருந்து நிகழவும், அடக்கம் அமையவும், ஒழுக்கம் ஊடுருவவும், பொறை பொருந்தவும், ஒப்புரவு உயரவும், ஈகை எழவும், அருள் வளரவும், தவம் ஓங்கவும், வாய்மை சிறக்கவும், அவா அறவும், துறவு நிலைக்கவும், மெய்யுணர்வு மேம்படவும் வாழ்வு நடாத்தல் வேண்டும். இவ்வாறு வாழ்தல் முறைப்படி இல்வாழ்க்கையில் ஒழுகுவதாகும்.'
'வாழ்வாங்கு வாழ்பவன்' என்ற தொடர்க்கு வாழவேண்டிய முறையில் வாழ்கின்றவன் என்பது பொருள்.
உலகத்திலே வாழும் முறைப்படி இல்வாழ்க்கை வாழ்பவன் வானுலகத்திலுள்ள தேவர்களில் ஒருவராக எண்ணப்படுவான் என்பது இக்குறட்கருத்து.
அதிகார இயைபு
இல்வாழ்க்கை வாழ்வான் தெய்வமாகவும் உயரலாம்.
பொழிப்புவாழும் முறைப்படி இவ்வுலகில் வாழ்பவன் மேலுலகத் தேவராக மதிக்கப்படுவான்.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்
(அதிகாரம்:அடக்கமுடைமை குறள் எண்:121)
பொழிப்பு (மு வரதராசன்): அடக்கம் ஒருவனை உயர்த்தித் தேவருள் சேர்க்கும்; அடக்கம் இல்லாதிருத்தல், பொல்லாத இருள் போன்ற தீய வாழ்க்கையில் செலுத்திவிடும்
மணக்குடவர் உரை: மன மொழி மெய்களை யடக்கி யொழுக அவ்வடக்கம் தேவரிடத்தே கொண்டு செலுத்தும்: அவற்றை யடக்காதொழிய அவ்வடங்காமை தானே நரகத்திடைக் கொண்டு செலுத்திவிடும்.
மேல் பலவாகப் பயன் கூறினாராயினும், ஈண்டு அடக்கத்திற்கும் அடங்காமைக்கு மிதுவே பயனென்று தொகுத்துக் கூறினார்.
பரிமேலழகர் உரை: அடக்கம் அமரருள் உய்க்கும் - ஒருவனை அடக்கம் ஆகிய அறம் பின் தேவருலகத்து உய்க்கும் ; அடங்காமை ஆர்இருள் உய்த்துவிடும் - அடங்காமையாகிய பாவம் தங்குதற்கு அரிய இருளின்கண் செலுத்தும்.( 'இருள்' என்பது ஓர் நரக விசேடம். "எல்லாம் பொருளில் பிறந்துவிடும்" (நான்மணி.7) என்றாற்போல, 'உய்த்துவிடும்' என்பது ஒரு சொல்லாய் நின்றது.)
கா சுப்பிரமணியம் பிள்ளை உரை: அடக்கம் ஒருவனிடமிருந்தால் அஃது அவனை விண்ணவரிடத்தே சேர்ப்பிக்கும். அடங்காமை நிறைந்த இருளினிடை செலுத்திவிடும்.
பொருள்கோள் வரிஅமைப்பு:
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும்.
பதவுரை:அடக்கம்- அடக்கமாக நடந்து கொள்ளுதல்; அமரருள்-சாகாதவரிடை; உய்க்கும்-சேர்ப்பிக்கும்; அடங்காமை-அடங்கியொழுகாதிருத்தல்; ஆர்-நிறை; இருள்-இருள்; உய்த்துவிடும்-செலுத்திவிடும்.
அடக்கம் அமரருள் உய்க்கும்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மன மொழி மெய்களை யடக்கி யொழுக அவ்வடக்கம் தேவரிடத்தே கொண்டு செலுத்தும்;
பரிதி: திரிவிதகரணங்களையும் அடக்கில் இகபரத்துக்கும் பயன்படும்; [திரிவிதகரணங்கள்-மனமொழி மெய்யாய மூன்று கருவிகள்; இகபரம் -இம்மை, மறுமை]
காலிங்கர்: நெஞ்சத்து அடக்கமுடைமையாகின்ற இது பின்பு அவனைத் தேவருலகத்துக் கடவுளாய்ச் செலுத்தும்;
பரிமேலழகர்: ஒருவனை அடக்கம் ஆகிய அறம் பின் தேவருலகத்து உய்க்கும்;
பரிமேலழகர் குறிப்புரை: "எல்லாம் பொருளில் பிறந்துவிடும்" (நான்மணி.7) என்றாற்போல, 'உய்த்துவிடும்' என்பது ஒரு சொல்லாய் நின்றது.
'அடக்கமுடைமை ஒருவனைத் தேவருலகத்துச் செலுத்தும்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'அடக்கம் வீரருள் ஒருவனாக்கும்', 'அடக்கம் ஒருவனை வீரர்குழாத்துள் சேர்க்கும்', 'அடக்க முடைமை என்ற நற்குணம் ஒருவனுக்கு யாரும் வணங்கும்படியான தெய்வத்தன்மையை உண்டாக்கும்', 'உள்ளம், உரை, உடல்களால் அடங்கி இருக்கும் தன்மை உயர்ந்தோரிடையே வைக்கும்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
அடக்கம் ஒருவனை உயர்ந்தோரிடையே சேர்க்கும் என்பது இப்பகுதியின் பொருள்.
அடங்காமை ஆரிருள் உய்த்து விடும்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவற்றை யடக்காதொழிய அவ்வடங்காமை தானே நரகத்திடைக் கொண்டு செலுத்திவிடும்.
மணக்குடவர் குறிப்புரை: மேல் பலவாகப் பயன் கூறினாராயினும், ஈண்டு அடக்கத்திற்கும் அடங்காமைக்கு மிதுவே பயனென்று தொகுத்துக் கூறினார்.
பரிதி: அடக்கமின்றதால் நரகத்தைக் கொடுக்கும் என்றவாறு.
காலிங்கர்: மற்று அடங்காமையாகின்ற இது நரகமாகிய இருள்வழிச் செலுத்தும்.
காலிங்கர் கருத்துரை: அஃது அன்றியும் நாய், கோழி, பன்றி, புல், புழு முதலிய பிறவியுள் செலுத்தி விடும் என்றவாறு.
பரிமேலழகர்: அடங்காமையாகிய பாவம் தங்குதற்கு அரிய இருளின்கண் செலுத்தும்.
பரிமேலழகர் குறிப்புரை: 'இருள்' என்பது ஓர் நரக விசேடம். "எல்லாம் பொருளில் பிறந்துவிடும்" (நான்மணி.7) என்றாற்போல, 'உய்த்துவிடும்' என்பது ஒரு சொல்லாய் நின்றது.
'அடங்காமை நரகமாகிய இருள்வழிச் செலுத்தும்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'அடங்காமை பேதைக் கூட்டத்தில் சேர்க்கும்', 'அடங்காமை பெருந்துன்பத்திற்கு ஆளாக்கும்', 'அடங்காமை என்ற கெட்ட குணம் ஒருவனை அவன் இருப்பதைக்கூட யாரும் அறியமுடியாத அந்தகாரமான இருளில் தள்ளிவிடும்', 'அடங்காமை மிகுந்த துன்பத்துள் வைக்கும்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.
அடங்காமை நிறைஇருளான இடத்துள் செலுத்திவிடும் என்பது இப்பகுதியின் பொருள்.
நிறையுரை: அடக்கம் ஒருவனை உயர்ந்தோரிடையே சேர்க்கும்; அடங்காமை ஆரிருள் செலுத்திவிடும் என்பது பாடலின் பொருள்.
'ஆரிருள்' குறிப்பது என்ன?
அடக்கம் ஒருவனுக்கு உயர்ந்த வாழ்வு தரும்; அடங்காமை அவனைத் தீயவழியில் தள்ளிவிடும்.
நெஞ்சத்தில் எழுகின்ற எண்ண நிலையிலேயே மனத்தில் அடக்குவதும், அந்த எண்ணம் முற்றி வாய்வழிச் சொல்லாகவும் மெய்வழிச் செயலாகவும் வந்தாலும் அவற்றை அடக்குவதே அடக்கம் எனப்படும்.
அமரர் என்ற சொல் சாவாதார் அதாவது இறந்தும் என்றும் நினைவில் வாழுபவர், வானுலகத்திலுள்ள தேவர், வீரர் என்ற பல பொருள் தரும். இங்கு முதற்பொருளான புகழ்நிலைத்தவர்கள் எனக் கொள்வது பொருந்தும். அமரருள் என்பது தேவர்கள் உள்ள இடம் எண்று தொல்லாசிரியர்கள் கூறி தேவர்கள் உள்ள இடத்துக் கொண்டு சேர்க்கும் என்றனர். இது தொன்மங்களில் கூறப்பட்டுள்ள சொர்க்கம் நரகம் இவற்றைச் சுட்டுவது.
வ சுப மாணிக்கம் 'அடக்கம் வீரருள் ஒருவனாக்கும். அடங்காமை பேதைக் கூட்டத்தில் சேர்க்கும்.' என இக்குறளுக்கு உரை செய்தார். இரா சாரங்கபாணி: 'அடக்கம் ஒருவனை வீரர்குழாத்துள் சேர்க்கும். அடங்காமை பெருந்துன்பத்திற்கு ஆளாக்கும்' என்று இக்குறளுக்கு உரை கூறி 'அமரர் என்பதற்குத் தேவர் என்னும் பொருள் உளதாயினும், வீரர் என்ற பொருளும் உண்டு. அமரர்கண் முடியும் அறுவகை யானும்’ (புறத்திணையியல் 81) எனத் தொல்காப்பியத்தில் வீரம் என்னும் பொருளில் வருதல் காண்க. (தொல்காப்பிய உரையாளர்களுள் ச சோ பாரதி அங்ஙனம் உண்மைப் பொருள் கண்டெழுதியது நோக்கத்தகும்) ‘அமர்’ போர் என்ற பொருளிலும் ‘ஒள்ளமர்க் கண்ணாள்’(1125) அமரகம்-போர்க்களம் என்ற பொருளிலும் அமரகத்து வன்கண்ணர் போல (1027) எனக் குறளில் வந்துள்ளது. அமர்-போர், அமரர்-போர் செய்யும் வீரர் எனக் கொள்ளுதல் இயல்பாகும். புலன்களையும் மனத்தையும் அடக்குதல் சிறந்த வீரர்க்கே முடியுமென்பதால் வீரரிற் சேர்க்கும் என்றெழுதிய உரை சிறக்கும். புத்தரை ‘மாரனை வெல்லும் வீர’ (11:61) என மணிமேகலை குறித்தல் காண்க. குறளும் பிறன் மனையை நோக்காமையைப் ‘பேராண்மை’ (148) எனக் குறித்தல் ஒப்பு நோக்கத்தகும்' என்ற விளக்கமும் தந்துள்ளார்.
மற்றும் சிலர் அமர்-அருள் எனப் பிரித்து (சிறந்த) கடவுளினது கருணையிடத்தே செலுத்தும் என்றும் பொருள் கொள்ளலாம் என்றும் அமர்+அருள் எனப் பிரித்து மிக்க மேன்மை, அமைதியான அருள், (மெய்யுணர்வு) விரும்பும் அருள், சிறந்த கடவுளின் கருணை என்றும் உரை செய்துள்ளனர்.

அடக்கம் என்பது புலன்களைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ளும் ஓர் உயர் பண்பு. அடக்கம் என்றால் அடங்கி ஒடுங்கி நிற்பதைக் குறிப்பது அல்ல. அடக்கமுடையோர் என்பவர் எந்நேரமும் தற்காப்பைப் பற்றியே எண்ணி அஞ்சி வாழ்பவர் என்பதும் அல்ல. அடக்கம் ஒருவரைக் கீழ்மைப்படுத்தாது; மாறாக அது அவரை மேன்மேல் உயர்த்தவே துணை செய்யும். அடக்கமானவர்கள் கோழைகள் அல்ல. மனம், மொழி, மெய் இவற்றை அடக்குதலுக்கு-கட்டுப்பாடற்று ஓடும் புலன்களை ஒடுக்குவதற்கு வீரப் பண்பு வேண்டும். இதனால்தான் அமரர் என்பதற்கு வீரர் எனவும் பொருள் கண்டனர் போலும். வீரரும் புகழ்வாய்ந்தோருள் அடங்குவர். அடக்கமுடையோர் வீரர்; அவர் இறவாப் புகழ் படைத்தோர்; அவர் உயர்ந்தவர் உலகத்தில் வைக்கப்படுவார்.
அடங்காத தன்மை ஒருவரை துன்பம் நிறைந்த இருளில் சேர்த்துவிடும்.
அடங்காமை எனும் செருக்கினால் சிந்திக்கும் திறன் குறைந்து அறியாமை பெருகும். அறியாமை மூடத்தனத்துக்கும், முரட்டுத்தனத்துக்கும் வழிவகுக்கும். நல்லோர் உறவு கிடைக்காது, இருள்போன்ற தீய வழியில் செல்லத் தொடங்குவர். அவர்கள் வாழ்க்கை துன்பமயமாகும். உய்க்கும் என்பது சேர்ப்பிக்கும் என்ற பொருளது, உய்த்துவிடும் என்பது விரைவும் நிறைவும் உணர்த்தும். அதாவது இருளில் செலுத்தப்படுவது திண்ணம் என்பதைக் குறிக்கும்.
'ஆரிருள்' குறிப்பது என்ன?
'ஆரிருள்' என்ற சொல்லுக்கு நரகத்திடை, நரகம், நகரமாகிய இருள்வழி, தங்குதற்கு அரிய இருள் (நரகம்), இருள் சூழ்ந்த உலகம், பொல்லாத இருள் போன்ற தீய வாழ்க்கை, பேதைக் கூட்டம், பெருந்துன்பம், மிகுந்த இருட்டான இடம், இருள் சேர்ந்த இன்னாவுலகம், மிகுந்த துன்பத்துள், இருள் சூழ்ந்த இடம், இருள் நிறைந்த இடம், துன்பம் நிறைந்த இடம், நரக லோகம், இருள்சூழ் நிலை, கெடுதல் என்னும் இருட்டு, அறியாமை, வறுமை ஆகிய அரிய இருள், அறிவு ஒளியும் உணர்வு ஒளியும் சென்று எட்டமுடியாத நிறை இருட்டும் பண்பாகிய கயமைச் செறிவு, எனப் பலவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.
'ஆர்' என்ற சொல், அருமை என்ற உயர்பொருளைத் தருவது ஆர் இருள் என்பது அரிய இருள் எனப் பொருள் தருவது. அரிய இருள் என்பதை விளக்குவது கடினம். இதனாலேயே பரிமேலழகர் தங்குதற்கு அரிய இருள் அதாவது தங்கவே இயலாத இடம் எனப் பொருள் கூறினார். 'ஆரிருள்' என்பதற்கு இருண்ட வாழ்வு என்றும் நரகம் என்றும் பொருள் கொள்வர். இச்சொல்லைத் தேவநேயப் பாவாணர் 'பண்டைக் காலத்தில் இருட்டறையுள் அடைப்பதும் ஒருவகைத் தண்டனையாயிருந்தமையின், நரகம் இருளுலகம் எனப்பட்டது. ஆர் இருள் என்பது திணிந்த இருள் என்றுமாம்' என விளக்கினார். ஆர் இருள் என்பதற்கு நிறைந்த இருள் என்றும் பொருள் கூறுவர்.
'அமரர்’ என்பதற்கு வீரர் எனப் பொருள் கூறியவர்கள் ‘ஆரிருள்’ என்பதற்குப் பண்பாக உரையாது அறியாமை உடையோர் (பேதைக் கூட்டம்) எனப் பொருள் கண்டனர். இது அடங்காமை ஒருவனை முட்டாள்கள் உலகத்தில் சென்று சேர்க்கும் என்ற சிறந்த பொருள் தருகிறது.
அடக்கம் இல்லாதவன், புலன்கள் போன வழியில் போவான், என்ன செய்கிறோம், எங்கே போகிறோம் என்று அவனுக்குத் தெரியாது. இதனால் அடக்கம் இன்மை அவனை விரைவில் இருட்டுக்குள் தீய வழியில் தள்ளி விடும்.
ஆரிருள் என்பதற்கு நிறை இருட்டு என்ற பொருள் பொருந்தும். இது தீய வாழ்க்கையைக் குறிப்பதாம்.
‘ஆரிருள்’ என்பதற்கு நிறை இருட்டான இடம் அதாவது தீயவர்கள் உலகு என்ற பொருள் சிறக்கும்.
அடக்கம் ஒருவனை உயர்ந்தோரிடையே சேர்க்கும்; அடங்காமை நிறைஇருளான இடத்துள் செலுத்திவிடும் என்பது இக்குறட்கருத்து.
அதிகார இயைபு :அடக்கமுடைமை ஒருவரை மேன்மேலும் உயர்த்தவல்லது.
பொழிப்பு: அடங்கி இருக்கும் தன்மை ஒருவரை உயர்ந்தோர் உலகில் சேர்ப்பிக்கும்; அடங்காமை நிறைஇருளான இடத்துள் செலுத்திவிடும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

 செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்

நல்வருந்து வானத் தவர்க்கு. குறள் 86: விருந்தோம்பல்.
மணக்குடவர் உரை:வந்த விருந்தினரைப் போற்றி வாராத விருந்தினரது வரவு பார்த்திருக்குமவன், வானத்தவர்க்கு நல்விருந்தாவன். வரவு பார்த்தல்-விருந்தின்றி யுண்ணாமை.
பரிமேலழகர் உரை:செல் லிருந்து ஓம்பி வருவிருந்து பார்த்து இருப்பான் - தன் கண்சென்ற விருந்தைப் பேணிப் பின் செல்லக் கடவ விருந்தைப் பார்த்துத் தான், அதனோடு உண்ண இருப்பான்; வானத்தவர்க்கு நல் விருந்து - மறுபிறப்பில் தேவனாய் வானிலுள்ளார்க்கு நல் விருந்து ஆம். ('வருவிருந்து' என்பது இடவழு அமைதி. நல்விருந்து: எய்தா விருந்து. இதனான் மறுமைக்கண் எய்தும் பயன் கூறப்பட்டது.).
மு. வரதராசன் உரை:வந்த விருந்தினரைப் போற்றி, இனிவரும் விருந்தினரை எதிர் பார்த்திருப்பவன், வானுலகத்தில் உள்ள தேவர்க்கும் நல்ல விருந்தினனாவான்.
மு. கருணாநிதி உரை:வந்த விருந்தினரை உபசரித்து அவர்களை வழியனுப்பி வைக்கும்போதே, மேலும் வரக்கூடிய விருந்தினரை ஆவலுடன் எதிர்நோக்கி நிற்பவனை, புகழ்வானில் இருப்போர் நல்ல விருந்தினன் என்று வரவேற்றுப் போற்றுவர்.
சாலமன் பாப்பையா உரை:வந்த விருந்தினரைப் பேணி, வரும் விருந்தை எதிர்பார்த்து இருப்பவன் மறுமையில் வானத்தவர்க்கு நல்ல விருந்தினன் ஆவான்.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு. குறள் 58: வாழ்க்கைத் துணைநலம்.
மணக்குடவர் உரை:பெண்டிரானவர் தம்மை மனைவியராகப் பெற்றவரையே தமக்குத் தலைவராகப் பெறின் தேவர் வாழும் பெரிய சிறப்பினையுடைய உலகத்தைப் பெறுவர்.
பரிமேலழகர் உரை:பெண்டிர் பெற்றான் பெறின் - பெண்டிர் தம்மை எய்திய கணவனை வழிபடுதல் பெறுவராயின்; புத்தேளிர் வாழும் உலகு பெருஞ்சிறப்புப் பெறுவர் - புத்தேளிர் வாழும் உலகின் கண் அவரால் பெருஞ்சிறப்பினைப் பெறுவர். (வழிபடுதல் என்பது சொல்லெச்சம். இதனால் தற்கொண்டாற் பேணிய மகளிர் புத்தேளிரால் பேணப்படுவர் என்பது கூறப்பட்டது.).
மு. வரதராசன் உரை:கணவனைப் போற்றிக் கடமையைச் செய்யப்பெற்றால் மகளிர் பெரிய சிறப்பை உடைய மேலுலகவாழ்வைப் பெறுவர்.
கலைஞர் உரை:நற்பண்பு பெற்றவனைக் கணவனாகப் பெற்றால், பெண்டிர்க்கு இல்வாழ்க்கையெனும் புதிய உலகம் பெருஞ் சிறப்பாக அமையும்.
சாலமன் பாப்பையா உரை:பெண்கள் இத்தனை சிறப்புகளையும் பெறுவார்கள் என்றால் தேவர்கள் வாழும் உலகில் மிகுந்த மேன்மையை அடைவார்கள்.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

KURAL%20VAITHIKAME%20RSPV%20MANIAN_page-KURAL%20VAITHIKAME%20RSPV%20MANIAN_page-



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

KURAL%20VAITHIKAME%20RSPV%20MANIAN_page-

KURAL%20VAITHIKAME%20RSPV%20MANIAN_page-

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard