பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் குறித்த ஆய்வுகள் பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதி தொடங்கிப் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்க கட்டங்களில் விரிவாக முன்னெடுக்கப் பட்டுள்ளன. இவ்வாராய்ச்சியை முன்னெடுத்ததில் சி.வை.தா., உ.வே.சா. நாராயண சரணர், ரா.இராகவையங்கார், திருமணம் செல்வகேசவராய முதலியார், கா.ர.கோவிந்தராச முதலியார் உள்ளிட்ட செவ்விலக்கியப் பதிப்பாசிரியர்களுக்குத் தனித்த இடம் உண்டு. இதன் தொடர்ச்சியில் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் இவைதாம் என்ற தெளிவான கருத்து முடிவுகளை ஆராய்ச்சியாளர்கள் முன்வைத்துள்ளனர். சிலர் இம்முடிவுகளுக்கான தொடக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். இவ்விரு நிலைப்பட்ட ஆய்வுப் புள்ளிகளை இணைத்து உரையாடுவதாக இக்கட்டுரை அமைகின்றது. குறிப்பாக இவ்விரு வகைப்பட்ட ஆராய்ச்சி முறையியலை முன்னெடுத்தவர்களாகத் திருவாரூர் சோமசுந்தர தேசிகர், துடிசை கிழார் அ.சிதம்பரனார், ச.வையாபுரிப்பிள்ளை, மயிலை சீனி.வேங்கடசாமி ஆகியோரைக் குறிப்பிடலாம். பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் குறித்த இவர்களது ஆய்வுகள் தொடக்ககால முயற்சிகளை அடியொற்றிச் சென்றாலும்  குறிப்பிடத்தக்க சில ஆய்வு முடிவுகளைக் கண்டறிந்துள்ளன. முந்தைய பதினெண் கீழ்க்கணக்கின் பதிப்பாசிரியர்கள் சிலரிடம் காணப்பட்ட கருத்தியல் ரீதியான குழப்பங்கள் இவர்களிடத்தும் காணப்படுகின்றன. அதாவது கைந்நிலையைப் பதினெண் கீழ்க்கணக்கில் ஒன்றாகச் சேர்ப்பதா, அல்லது இன்னிலையை ஏற்பதா?. இவ்வகையான விவாதங்களைச் சோமசுந்தர தேசிகர், துடிசை கிழார் அ.சிதம்பரனார் ஆகிய இருவரிடத்தும் காணலாம். இவ்விருவர்களில் சோமசுந்தர தேசிகர் இன்னிலையை ஏற்றுக்கொள்ளபவராக இருப்பதை அவரது கருத்துகள் தெளிவுபடுத்துகின்றன. இவர்கள் இருவரிலிருந்து சில தெளிவான முடிவுகளை முன்வைத்தவர்களாகச்  ச.வையாபுரிப்பிள்ளை, மயிலை சீனி.வேங்கடசாமி ஆகிய இருவரையும் அடையாளப்படுத்தலாம்.

பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் குறித்து 1940கள் வரை நடைபெற்ற விவாதங்களைத் தொகுத்து ஆராய்ந்தவர் ச.வையாபுரிப்பிள்ளை. இவர் அ.நாராயண சரணர், ரா.இராகவையங்கார், இ.வை.அனந்தராமையர் ஆகியோரின் கருத்துகளை வலியுறுத்தும் விதமாகக் கைந்நிலையைக் கீழ்க்கணக்கில் ஒன்றாகக் காட்டுகின்றார். ச.வையாபுரிப்பிள்ளை பாட்டும் தொகையும் (1940) நூலைப் பதிப்பித்த பிறகு கீழ்க்கணக்கைச் சார்ந்த இன்னா நாற்பது (1944), நான்மணிக்கடிகை (1944), திரிகடுகமும் சிறுபஞ்சமூலமும் (1944) ஆகிய நான்கு நூல்களைப் பதிப்பிக்கிறார். இவற்றில் திரிகடுகமும் சிறுபஞ்சமூலமும் என்னும் நூற்பதிப்பில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் குறித்த தெளிவான கருத்துகளை முன்வைத்துள்ளார். இந்நூலின் முன்னுரை மூலம் பதினெண்கீழ்க்கணக்கின் பெயராட்சி, பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் குறித்து நடைபெற்றுள்ள விவாதங்கள் அதற்கான விடைகள், பதினெண்கீழ்க்கணக்கு நூல்களின் காலம், திரிகடுகம், சிறுபஞ்சமூலம் ஆகிய இரு நூல்கள் பற்றிய விரிவான குறிப்புகள் ஆகியவற்றைக் குறித்து அறிந்துகொள்ள முடிகின்றது. இங்குப் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் பற்றிய விவாதங்கள் மட்டும் கவனப்படுத்தப்படுகின்றது. இதைப் பின்வரும் நிலைகளில் பகுத்து நோக்கலாம்.

  • பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் குறித்த சி.வை.தாமோதரம் பிள்ளை முன்வைத்த கருத்துகளுக்குச் ச.வையாபுரிப்பிள்ளையின் விளக்கங்கள்.
  • கைந்நிலையைப் பதினெண்கீழ்க்கணக்கைச் சார்ந்த தனி நூல் என்று நிறுவுதற்கான அடிப்படைத் தரவுகள் மற்றும் அகச் சான்றுகள்.
  • சி.வை.தாமோதரம் பிள்ளையின் ஊகத்தை அடிப்படையாகக் கொண்டு த.சொர்ணம்பிள்ளை தேடிக் கொடுத்த ஏட்டின் வழி வ.உ.சிதம்பரம் பிள்ளை பதிப்பித்த இன்னிலையினைக் கற்பித நூல் என்று நிறுவும் சான்றுகள்.

ஐம்பது ஆண்டுகளுக்கும் (1885 – 1944) மேலாகப் பதினெண்கீழ்க்கணக்கைச் சார்ந்த நூல்கள் எவை என்பது குறித்த விவாதங்கள் விரிவாக நடைபெற்றுள்ளன. இவ்விவாதத்தைத் தொடங்கியவர்களில் முதன்மையானவர் சி.வை.தாமோதரம் பிள்ளை. இவர் கொண்ட கருத்தில் உள்ள முரண்களுக்குரிய விடைகள் பல இன்று கிடைத்துள்ளன. குறிப்பாக ‘நாலடி நான்மணி…’ என்னும் வெண்பாவில் உள்ள முப்பால் திருக்குறளைக் குறிக்காது என்று குறிப்பிட்டுள்ளார். இதை மறுக்கும் விதமாகச் ச.வையாபுரிப்பிள்ளையின் கருத்து அமைகின்றது. திருக்குறளின் புகழைப் பேசும் வகையில் அமைந்த திருவள்ளுவமாலையின் சில பாடல்கள், இலக்கண விளக்கப் பாட்டியலின் உரைக் குறிப்பு (நூ.57 உரை), திருக்குறளின் பெயரைக் குறிக்கும் பழைய செய்யுள், பேராசிரியர் நச்சினார்க்கினியரின் செய்யுளியல் உரைக் குறிப்புகள் (நூ.547), யாப்பருங்கலக்காரிகையின் (40) உரைக் குறிப்பு ஆகியவற்றின் மூலம் முப்பால் என்பது திருக்குறளையே குறிக்கின்றது. எனவே திருக்குறள் பற்றிச் சி.வை.தா. கொண்ட கருத்தின் பொருந்தாமையினை இதன்வழி உணர்ந்துகொள்ள முடிகின்றது என்கிறார் ச.வையாபுரிப்பிள்ளை.

அடுத்து இன்னிலை, இன்சொல் என இரண்டு நூல்கள் கீழ்க்கணக்கில் இருப்பதாகச் சி.வை.தா. உத்தேசமாகக் கலித்தொகையின் பதிப்புரையில் குறிப்பிட்டிருந்தார். பின்னர் வெளிவந்த திணைநூல்களின் பதிப்புகளால் இக்கருத்துத் தெளிவு பெற்றுள்ளது. இறுதியாகக் கைந்நிலையினைப் பதினெண் கீழ்க்கணக்கைச் சார்ந்த தனிநூல் என்றும், உரையோடு சுவடியில் காணப்படுகின்றது என்றும் நாலைந்திணை என எடுத்துத் திணை பற்றிய நான்கு நூல்களாகக் கொள்ளப்பட வேண்டும் என்றும் இவ்வாறு கொள்ளும்போது பதினெட்டு என்ற கணக்குச் சரியாகப் பொருந்துகின்றது என்றும் சி.வை.தா. அறிய வைத்தார். இக்கருத்தை உறுதிபடுத்தும் விதமாக ரா.இராகவையங்காரின் திணைமாலை நூற்றைம்பதின் (1903) முகவுரைப் பகுதி அமைந்துள்ளது. மேலும் உ.வே.சா. தனது ஐங்குறுநூற்றுப் (1903) பதிப்பின் முகவுரையில் கைந்நிலை என்ற நூலைக் குறிப்பிட்டு, அதன்கண் திணைகோர்த்து அமைந்துள்ள முறையைக் காட்டியுள்ளார். இதனைப் பின்பற்றி நாலைந்திணை என்று சுட்டாமல் ஐந்திணை என்றே கொண்டு ஐந்து தனிப்பட்ட திணைநூல்கள் உள என உ.வே.சா. கருதியுள்ளமை புலனாகும். இக்கருத்தை ரா.இராகவையங்கார் கொண்ட ‘நன்னிலையதாகும் கணக்கு’ என்ற பாடமும் ஐந்திணை என்பதற்கு ஐந்து திணைநூல்கள் எனத் தெளிவுபடுத்துகின்றது. இவற்றோடு அவர் கொண்ட இப்பாடத்துக்கு ‘ஐந்திணையைம்பது முதலிய நான்கும் கைந்நிலையுமாம்’ என்ற அடிக்குறிப்பும் தெளிவுறக் காட்டுகின்றது. இவர் கைந்நிலைதான் பதினெண்கீழ்க்கணக்கைச் சார்ந்தது என்பதற்கு மேலும் இரண்டு சான்றுகளைத் தருகின்றார்.

  1. கி.பி. 1849இல் வேம்பத்தூர் முத்துவேங்கட சுப்பபாரதியார் இயற்றிய பிரபந்த தீபிகை நூலில் இடம்பெற்றுள்ள 44ஆவது செய்யுளில் கைந்நிலை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றெனவும் இதன்கண் 60 செய்யுட்கள் உள்ளன எனவும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன.
  2. ஸ்ரீ இ.வை.அனந்தராமையர் 1931இல் கைந்நிலை என்ற நூலை வெளியிட்டுள்ளார். இப்பதிப்பின் இறுதியில் ‘இன்னிலைய காஞ்சியொ டேலாதி யென்பதூஉம்/கைந்நிலையு மாகுங் கணக்கு’ என்ற பாடத்தைத் தந்துள்ளார்.

மேற்குறிப்பிட்ட பிரபந்த தீபிகையின் செய்யுட் குறிப்பாலும், இ.வை.அனந்தராமையரின் கைந்நிலைப் பதிப்பில் உள்ள பாடவேறுபாட்டாலும் கீழ்க்கணக்கைச் சார்ந்தது கைந்நிலை எனத் தெளிவு பெறலாம்.

இவ்வாறு சி.வை.தாமோதரம் பிள்ளை, ரா.இராகவையங்கார், வேம்பத்தூர் முத்துவேங்கட சுப்பபாரதியார், இ.வை.அனந்தராமையர் உள்ளிட்ட அறிஞர்களின் கருத்துகள்வழிக் கைந்நிலையினைப் பதினெண்கீழ்க்கணக்கைச் சார்ந்த நூல்தான் என்று நிறுவுகின்றார். அதே நேரத்தில் இவர் இன்னிலை கீழ்க்கணக்கைச் சார்ந்த நூல் அன்று என்றும் மறுத்துள்ளார்.

‘இன்னிலைசொல் காஞ்சியோடு’ என்ற அடியைக் கொண்டு 1887இல் சி.வை.தா. ஊகமாகக் கருதி ‘இன்னிலை’ என்னும் பெயரில் ஒரு நூல் உண்டு என்று குறிப்பிட்டிருந்தார். இக்கருத்தை ஆதாரமாகக் கொண்டு த.மு.சொர்ணம் பிள்ளை ஏடு தேடும் முயற்சியில் ஈடுபட்டார். இவர் தனக்கு கிடைத்த இன்னிலை ஏட்டினை வ.உ.சிதம்பரம் பிள்ளையிடம் கொடுத்தார். இதை 1917இல் வ.உ.சி. பதிப்பித்து வெளியிட்டார். இப்பதிப்பில் பின்வரும் சில கருத்துகளை அவர் முன்வைத்துள்ளார்.

  • இவ்வரிய இன்னிலை நூலை இயற்றியவர் பொய்கையார்
  • இன்னிலையினைத் தொகுத்தவர் மதுரையாசிரியர்
  • கடவுள் வாழ்த்துச் செய்யுள் செய்தவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்
  • இன்னிலையின் செய்யுட்கள் பண்டைய இலக்கண நூல்களின் உரைகளில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன

மேற்சுட்டிய வ.உ.சி.யின் கருத்துகளில் உள்ள உண்மைத் தன்மையை ஆராய்ந்த ச.வையாபுரிப்பிள்ளை இன்னிலையினைக் ‘கற்பித நூல்’ என நிறுவுகின்றார். வ.உ.சி. முன்வைத்த இக்கருத்துகளுக்குச் ச.வையாபுரிப்பிள்ளையின் மறுப்புரைகள்:

  • பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் இயற்றியவர், தொகுத்தவர், கடவுள் வாழ்த்துப் பாடியவர் (பாரதம் பாடிய பெருந்தேவனார்) என மூவரைக் கூறும் சிறப்பு இன்னிலையைத் தவிர வேறு நூல்களுக்கு இல்லை.
  • இன்னிலையின் 5 செய்யுட்களை இளம்பூரணர் தனது உரையில் எடுத்தாண்டதாக வ.உ.சி. குறிப்பிடுகின்றார். இச்செய்யுட்கள் அனைத்தும் இன்று கிடைக்கும் இளம்பூரணரின் உரை ஏட்டுப் பிரதி, அச்சுப் பிரதி இரண்டிலும் இல்லை.
  • தொல்காப்பியச் செய்யுளியல் உரையில் பேராசிரியரும், நச்சினார்க்கினியரும் இன்னிலையின் செய்யுட்களை எடுத்துக்காட்டியதாக வ.உ.சி. குறிப்பிடுகின்றார். ஆனால் இவர் காட்டும் இரண்டு செய்யுட்களும் பூதத்தார் அவையடக்கு என்றே இவர்களது உரைகளில் காணப்படுகின்றன. இங்கு இன்னிலையைக் குறித்தோ, பொய்கையார் குறித்தோ எந்தக் குறிப்பும் இல்லை.
  • யாப்பருங்கல விருத்தியுரையில் இன்னிலையின் ஒரு செய்யுள் இடம்பெற்றுள்ளது என இறுதியாய் வ.உ.சி. குறிப்பிடுகின்றார். ஆனால் செய்யுள் ஔவையார் பாடியதாக அங்குக் குறிக்கப்பட்டிருகின்றது.

இவ்வாறு வ.உ.சி.யின் கருத்துகளை உரிய தரவுகளோடு வையாபுரிப்பிள்ளை மறுத்துள்ளார். இதை மேலும் சில கருத்துகளைக் கொண்டும் விளக்கியுள்ளார். இன்னிலையின் பாடல்களில் இடம்பெற்றுள்ள தொடர்களைக் கொண்டு இந்நூலைக் ‘கற்பித நூல்’ என்கின்றார். அவர்தம் கருத்து:

இன்னிலையில் உள்ள செய்யுட்கள் சில பண்டைத் தமிழிலக்கண நெறியினின்றும் வழுவினவாகக் காணப்படுகின்றன. உதாரணமாக ‘வேலற் றரீஇய விரிசடைப் பெம்மான்’என்ற கடவுள் வாழ்த்துச் செய்யுளில் தரீஇய என்பது தந்த எனப் பெயரெச்சமாக வந்துள்ளது.இங்ஙனம் வருதல் தமிழ் மரபேயன்று. இவ்வாறே தட்பம் என்பது பாசம் என்ற பொருளிலும், உழண்டை என்ற புதுப்பதம் துன்பம் என்ற பொருளிலும், தண்ணீர் என்பது அருள் என்ற பொருளிலும், பூயல் என்ற புதுப்பதம் பொருந்துதல் என்ற பொருளிலும், நாப்பண் என்பது சுவர்க்கம் என்ற பொருளிலும், வட்டல் என்பது திரட்டுதல் என்ற பொருளிலும் வந்துள்ளமை தமிழறிஞர்களுக்கு வியப்பாகவே இருக்கும். கீழ்க்கணக்கு நூல்களில் இவை போன்ற பிரயோகங்கள் காணப்படவில்லை. தமிழ்மொழிக்கே இவ்வழக்குகள் புதியனவாம். இக்காரணங்களால் இன்னிலை என்பது இக்காலத்து யாரோ ஒருவர் புதுவதாக இயற்றிச் சங்கப்புலவர் ஒருவரது தலையில் சுமத்திய கற்பித நூல் என்றே கொள்ளத்தக்கது. இப்பொய்ந்நூலை ஸ்ரீசெல்வக்கேசவராய முதலியார் அவர்கள் கூடத் தமது பழமொழிப் பதிப்பிலும், ஆசாரக்கோவைப் பதிப்பிலும் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றென வைத்து எண்ணி யெழுதியது பெருவியப்பே (1944:முன்னுரை).

மேலே முன்வைத்த கருத்துகளைக் கொண்டும், இளம்பூரணர், நச்சினார்க்கினியர், நாற்கவிராச நம்பி ஆகிய உரையாசிரியர்களால் எடுத்தாளப்பட்ட கைந்நிலைச் செய்யுட்களைக் கொண்டும் பதினெண்கீழ்க்கணக்கைச் சார்ந்தது இன்னிலை இல்லை; கைந்நிலைதான் என்று ச.வையாபுரிப்பிள்ளை தெளிவாகக் குறிப்பிடுகின்றார்.

இக்கருத்துகள் பின்னர் ச.வையாபுரிப்பிள்ளை எழுதிய இலக்கிய மணிமாலை (1957), இலக்கியச் சிந்தனைகள் தொகுதி – 1 (1989) ஆகிய இரு நூல்களிலும் இடம்பெற்றுள்ளன.

  • ··

மயிலை சீனி.வேங்கடசாமி தனது பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியம் என்னும் நூலில் பதினெண்கீழ்க்கணக்கு குறித்த தனது கருத்துகளைத் தெளிவாகவும் அதேவேளையில் விரிவாகவும் பதிவுசெய்துள்ளார். இவரும் ச.வையாபுரிப்பிள்ளையினைப் போலவே தொடக்க காலம் முதல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களின் தொகுப்புக் குறித்து முன்வைக்கப்பட்ட கருத்துகளைத் தொகுத்துத் தந்து அவற்றினைக் குறித்த தனது ஆழமான கருத்துகளைப் பதிவுசெய்துள்ளார். இலக்கணக் கொத்தின் உரையாசிரியர் சுவாமிநாத தேசிகர் புறச்சமய நூல்களைக் குறித்த தாக்கத்தைத் தனது உரையில் வெளிப்படுத்தியிருந்தார். இக்கருத்தே மயிலை சீனி.வேங்கடசாமியின் கீழ்க்கணக்கு நூல்கள் குறித்த ஆய்வின் தொடக்கப் புள்ளியாக அமைகின்றது.

18, 19 ஆம் நூற்றாண்டுகளிலே சங்க நூல்களையும் சங்கம் மருவிய நூல்களையும் படிக்கக்      கூடாது என்னும் கொள்கை படித்தவர்களிடையே பரவிற்று. சமயப் பற்றுக் காரணமாகத்       தோன்றிய இந்தக் கொள்கையினாலே, தமிழாசிரியர்கள் மாணவர்களுக்கு அந்த நூலைப்   பாடஞ் சொல்லாமல் விட்டனர். இதனால் அந்த, நூல்கள் மறக்கப்பட்டுக் கிடந்தன.      படிப்பாரற்றுக் கிடந்தமையால் அந்நூல்களின் பெயர்கூட மறக்கப் பட்டிருந்தன. சென்ற   19ஆம் நூற்றாண்டின் இறுதியில் கீழ்க்கணக்கு நூல்கள் எவை என்பது பற்றிப் படித்த        புலவர்களுக்குள்ளே ஐயங்களும் வாதப் பிரதி வாதங்களும் நடந்தன. கீழ்க்கணக்கு      நூல்கள் பதினெட்டின் பெயர்களைப் பற்றியதே அந்த ஆராய்ச்சி. அந்த ஆராய்ச்சி      ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகள் நடந்த பின்னர் ஓய்ந்தது. தமிழ் இலக்கிய வரலாற்றிலே இது ஒரு சுவையுள்ள கட்டம் (2012:229).

என்று கீழ்க்கணக்கு நூல்களின் ஆராய்ச்சி வரலாற்றை மயிலை சீனி.வேங்கடசாமி குறிப்பிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து பேராசிரியர் உரைக்குறிப்புகள் (தொல்.செய்.470, 547), மயிலைநாதரின் உரைக் குறிப்பு (நன்.387) ஆகியவற்றைக் கொண்டு கீழ்க்கணக்கு நூல்கள் பதினெட்டு என்பதை எண்ணிக்கையின் அடிப்படையில் நிறுவ முற்படுகின்றார். இதன் பின்னரே கீழ்க்கணக்கு நூல்களின் பெயர்களைக் கூறும் பழைய வெண்பாவைச் சான்றுகாட்டி இந்நூல்கள் குறித்த பெயர் விளக்கத்தைத் தருகின்றார்.

கீழ்க்கண்ட பழைய வெண்பா, கீழ்க்கணக்கு நூல்களின் பெயரைக் கூறுகின்றது.

நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப்

பால்கடுகம் கோவை பழமொழி மாமூலம்

இன்னிலைசொல் காஞ்சியுடன் ஏலாதி யென்பவே

கைந்நிலைய வாங்கீழ்க் கணக்கு.

இந்தப் பழைய வெண்பாவில் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களின் சில பெயர்கள்        தெளிவாகத் தெரிகின்றன. சில பெயர்கள் துணித்துக் கூற முடியாதவையாக இருந்தன. நாலடி, நான்மணி(கடிகை), முப்பால், (திரி)கடுகம், (ஆசாரக்) கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், (முதுமொழிக்)காஞ்சி, ஏலாதி என்னும் நூற்பெயர்கள் தெளிவாகத் தெரிகின்றன. நானாற்பது, ஐந்திணை என்பன பற்றியும் இன்னிலை, கைந்நிலை என்பன      பற்றியும் சென்ற நூற்றாண்டிலே பலருக்கும் பலவித ஐயங்களை உண்டாக்கின. ஏன்? முப்பால், கோவை என்னும் பெயரிலுங்கூட ஐயம் நிகழ்ந்து வாதப் பிரதிவாதங்கள் நடந்தன.

இதற்குக் காரணம் இடைக்காலத்திலே இந்நூல்கள் சில தலைமுறையாகப் பயிலப்படாமல் போனதுதான் என்பதை முன்னரே கூறினோம்.