New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தொல்காப்பியத்தில் துர்கை, அக்னி- சந்தானம் சுவாமிநாதன்


Guru

Status: Offline
Posts: 24603
Date:
தொல்காப்பியத்தில் துர்கை, அக்னி- சந்தானம் சுவாமிநாதன்
Permalink  
 


தொல்காப்பியத்தில் துர்கை, அக்னி!

https://tamilandvedas.com/2014/03/31/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/

durga in MBPuram
Durga (Mahishasura Mardhani) in Mahabalipuram,Tamil Nadu

கட்டுரையாளர் : லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண். 945 தேதி- 31st March 2014.

முந்தைய கட்டுரைகளில் தொல்காப்பியதில் இந்திரன், வருணன் குறித்தும் தொல்காப்பியர் காலம் தவறு ( Four Parts Article ) என்றும் எழுதியிருந்தேன். இப்பொழுதைய கட்டுரை துர்கை, சூரியன், சந்திரன், அக்னி வழிபாடு பற்றியது. தொல்காப்பியத்தில் சில மர்மங்கள் நீடிக்கின்றன. அவர் பயன்படுத்திய கொடிநிலை, கந்தழி என்ற சொற்கள் சங்க இலக்கியத்திலோ பிற்கால பக்தி இலக்கியத்திலோ இல்லை. அவர் என்ன அர்த்தத்தில் இந்தச் சொற்களைப் பிரயோகித்தார் என்பதிலும் உரைகாரர்கள் இடையே கருத்து வேறுபாடுகள் உண்டு.

சிவன் பற்றி அவர் யாங்கனுமே செப்பாதது வியப்பானது. சிந்து சமவெளியில் இருக்கும் பசுபதி முத்திரைதான் ஒரிஜினல் “திராவிட” சிவன் என்று ‘ஆரிய திராவிட’ இன பேதம் பேசுவோருக்கு தொல்காப்பியம் அறைகூவல் விடுக்கிறது. சிவனைப் பற்றிய புறநானூற்றுக் குறிப்புகள் யஜூர் வேதத்தில் உள்ள சம்ஸ்கிருதச் சொற்களின் மொழி பெயர்ப்பாகவே இருக்கின்றன. அப்பரும் சம்பந்தரும் இதை உறுதியும் செய்கின்றனர்.

தொல்காப்பியக் கடவுளரைக் காண்போம்:–

“மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேயதீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் எனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே”
(தொல்காப்பிய, அகத்திணை இயல் சூத்திரம்)

என்று நான்கு முக்கிய தெய்வங்களை பழந் தமிழர் தெய்வங்களாக தமிழினத்தின் மிகப் பழைய நூலான தொல்காப்பியம் குறிக்கிறது. வேதங்களில் மிக முக்கிய இடம் வகிப்பது இந்திரனும் வருணனும்தான். அவ்விரு தெய்வங்களையும் இந்த சூத்திரத்தில் குறித்தவர் இன்னொரு சூத்திரத்தில் மற்றொரு வேத கால முக்கியக் கடவுளான அக்னி பகவானையும் (கந்தழி) குறிப்பிடுகிறார்.

முல்லை= திருமால்
குறிஞ்சி = முருகன்
மருதம் = இந்திரன்
நெய்தல் = வருணன்

durga from indonesia

Durga from Java, Indonesia in US Museum.

கீழ்வரும் சூத்திரத்தில் காளி வழிபாடு பற்றிப் பாடுகிறார்.

கொற்றவை = துர்கை = காளி (பாலை நிலக் கடவுள்)
“மறம் கடை கூட்டிய துடிநிலை, சிறந்த
கொற்றவை நிலையும் அத்திணைப் புறனே”
(தொல். பொருளதிகார புறத் திணை இயல் சூத்திரம்)

கதிரவன், தீ, சந்திரன் என்னும் இயற்கைப் பொருள்களையும் தொல்காப்பிய காலத்துத் தமிழர்கள் தெய்வங்களாக வழங்கி வந்தனர்.

“கொடிநிலை, கந்தழி, வள்ளி என்ற
வடுநீங்கு சிறப்பின் மன்னிய மூன்றும்
கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே”
(தொல். பொருளதிகார புறத் திணை இயல் சூத்திரம்)

:கதிர், தீ, மதி இம்மூன்றை வாழ்த்துவதும் கடவுள் வாழ்த்துப் போலவே எண்ணப்பட்டு வரும் என்பது இதன் பொருள்.
கொடிநிலை = சூரியன்
கந்தழி = நெருப்பு (அக்னி பகவான்)
வள்ளி = சந்திரன்

(இந்த விளக்கம் இளம்பூரணர் உரையை ஆதாரமாகக் கொண்டது. வேறு உரைகாரர் இதற்கு மாற்றுப் பொருள் கூறினாலும் வேத கால வருணனையும் இந்திரனையும் பழந்தமிழர்கள் வழிபட்டதாகக் கூறுவதால், அக்னி என்று இளம்பூரணர் எழுதிய உரையே நன்கு பொருந்தும் என்பது என் கருத்து).

three_fires_1

புறநானூற்றில் பிராமணர் வீட்டு மூன்று தீ

இந்த தருணத்தில் வேறு ஒரு முத்தீயை நினைவு கூறுதல் சாலப் பொருத்தம். இதோ புறநானூற்றில் உள்ள அவ்வையார் பாடல்:

“ஒன்று புரிந்து அடங்கிய இருபிறப்பாளர்
முத்தீப் புரையக் (போல) காண்தகு இருந்த
கொற்ற வெண்குடைக் கொடித்தேர் வேந்திர்!
யான் அறி அளவையோ இவ்வே வானத்து
வயங்கித் தோன்றும் மீனினும் இம்மென
இயங்கும் மாமழை உறையினும்
உயர்ந்து சமந்தோன்றிப் பொலிக நும் நாளே (புறம் 367)

((சேரமான் மாரிவெண்கோவும், பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதியும், சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் ஒருங்கு இருந்தாரை அவ்வையார் பாடியது))

சேர ,சோழ, பாண்டிய மன்னர்கள் மூவரும் சோழன் பெருநற்கிள்ளி நடத்திய ராஜசூய யாகத்தில் ஒருங்கே அமர்ந்திருந்ததைக் கண்ட அவ்வைப் பாட்டிக்கு ஒரே அதிசயம், ஆச்சர்யம்!! தமிழ் மன்னர்களை போர்க்களம் தவிர வேறு எங்கும் ஒருங்கே பார்க்க முடியாது. இங்கு அதிசயமாக , மஹா அதிசயமாக, உலக அதிசயமாக, மூன்று தமிழ் தலைவர்கள் இருந்தவுடன் அவர்களை எப்படிப் பாராட்டுவது என்றே அவருக்குத் தெரியவில்லை. சொல்லப் போனால் தலை, கால் புரியவில்லை. ஏனெனில் உவமையாகக் கூறப்படும் பொருள் மன்னர்களைவிட உயர்ந்ததாக இருக்கவேண்டும் என்பது செய்யுள் இலக்கண விதி. இவர்களை என்னதைச் சொல்லி திருப்திப் படுத்துவது? என்று திகைத்தார்.

இமய மலை, பொதிய மலை, விந்திய மலை என்று புகழலாமா? அதுவும் பொருத்தம் இல்லை. ஏனெனில் மூன்றும் ஒரே இடத்தில் இல்லை. கன்னியாகுமரி சரியான பொருத்தம். ஏனெனில் மூன்று கடல்களும் ஒருங்கே கூடுகின்றன. ‘’அடா, அடா, உப்புக் கடல்களைப் போய் இந்த தருணத்தில் ஒப்பிடுவது பொருந்தாதே’’– என்று எண்ணிக் கொண்டிருந்தார். திடீர் என்று ஒரு ‘ஐடியா’ வந்தது. மூன்று மன்னர்களும் க்ஷத்ரிய வம்சத்தினர்; சூரிய, சந்திர, அக்னி குலத்தைச் சேர்ந்தவர்கள். கொடிநிலை, கந்தழி, வள்ளி என்று தொல்காப்பியர் ‘ஸ்டைலில்” ஒரு போடு போட்டிருக்கலாம். ஆனால் அதைவிட உயர்வாக எதையாவது சொல்ல வேண்டும் என்று துடியாய்த் துடித்தார் அவ்வையார்.

பிராமணர் வீடுகளில் முத்தீ – அதாவது ஆகவனீயம், கார்கபத்யம், தக்ஷிணாக்கினீயம் — என்று மூன்று தீ எரியும். உடனே சேர சோழ பாண்டியர்களை—- “ஐயர் வீட்டு முத்தீ போல அருமையாக ஒருங்கே இருக்கிறீர்களே!! நீங்கள் மழைத்துளிகளின் எண்ணிக்கையை விட, வானத்திலுள்ள நட்சத்திரங்களின் எண்ணிக்கையை விட அதிக வாழ்நாட்களோடு வாழுங்கள்”— என்று வாழ்த்தினார். மேலே கொடுத்த பாட்டை இப்போது மீண்டும் ஒருமுறை படித்துப் பாருங்கள்.

ajanta Cave14_DurgaSamhara
Durga in Ajanta Caves

கண் இமைக்காத தேவர்கள்

தேவர், இமையோர் என்ற சொற்களும் தொல்காப்பியத்தில் வருகின்றன.
தேவர் என்பது சம்ஸ்கிருத சொல். அதுமட்டுமல்ல, இமையோர் என்ற சொல் ,புராணச் செய்திகளைக் கூறும் சொல்— கண் இமைக்காதவர்கள் தேவர்கள்.

இதுபற்றி நான் எழுதிய ஆங்கிலக் கட்டுரையில் இவர்கள் வெளிக் கிரகவாசிகளாக இருக்கலாம் என்று எழுதி இருக்கிறேன். நம் எல்லோ ருக்கும் ஒரு கேள்வி மனதில் எழும். அந்தக் காலத்தில் தேவர்கள், நாரதர் முதலானோர் பூமிக்கு அடிக்கடி வந்தார்களே. இப்போது ஏன் வருவதில்லை என்று. இதற்கு ஆதிசங்கரர் பதில் கொடுத்து இருப்பதை எம்.ஆர்..ஜம்புநாதன் எழுதிய யஜுர் வேதக் கதைகள் என்ற புத்தகத்தில் படித்தேன்:–

“பிராமணன், ராஜசூய யாகத்திலே க்ஷத்ரியனுக்குக் கீழாகவே உட்காரவேண்டும்…….. ஆனால் அவர்களைவிட ஒழுக்கம் நிறைந்தவர்களை நாம் பார்ப்பது அரிது. அவர்களின் ஒழுக்கங்களைக் கண்டு தேவர்களும் மனிதர்களுடன் சேர்ந்து புசித்தார்கள். ஆனால் நாளடைவில் ஒழுக்கம் குன்றி ‘’எனக்கு அதுவேணும், இதுவேணும்’’ என சனங்கள் சொல்லவே பிச்சை எடுப்பவர்களை விரும்பாமல் தேவர்கள் பிற்காலத்தில் புவி நீங்கினார்கள் என ஆதி சங்கரர் கூறுகிறார்”. (பக்கம் 12, யஜுர்வேதக் கதைகள், எழுதியவர் எம்.ஆர்.ஜம்புநாதன், கலா சம்ரக்ஷண சங்கம், தஞ்சாவூர், 2004)

இதுதவிர பலராமனின் பனைக் கொடி பற்றிய குறிப்பும் தொல்காப்பியத்தில் உண்டு. ஆகையால் கண்ணன், பலராமன் வழிபாடும் இருந்திருக்கவேண்டும். எனது முந்திய கட்டுரையில் முழு விவரம் காண்க.

Durga in Dulmi (Jharkhand)
Durga in Dulmi (Jharkahand)

தென்புலத்தார் வழிபாடு

இறந்தோர்கள் தெற்கு திசைக்குச் செல்வர் என்ற இந்துமதக் கோட்பாட்டை வள்ளுவர் பாடியதை எல்லோரும் அறிவோம் (குறள்–43). தொல்காப்பியரும் இறந்தோர் (நடுகல்) வழிபாடு பற்றிப் பேசுகிறார்.

காட்சி, கால்கோள், நீர்ப்படை, நடுகல்
சீர்தரு மரபின் பெரும்படை, வாழ்த்தல்
(தொல். பொருளதிகார புறத் திணை இயல் சூத்திரம்)
இது ஆறு கட்டங்களாக செய்யப்படும்:–

1.காட்சி= கல்லைக் கண்டு தேர்ந்தெடுத்தல் (சேரன் செங்குட்டுவன் புனிதமான இமயமலைக்குச் சென்று கல் எடுத்தான். ஒரு முறை தனது தாய்க்கும் மறுமுறை கண்ணகிக்கும் 3000 மைல் பயணம் செய்து கல் எடுத்தான் என்றால் அவன் பக்தியை என்னவென்று மெச்சுவது)
2.கால்கோள்= மரியாதையாக எடுத்து வருதல்
3.நீர்ப்படை=புனித நீரில் நீராட்டுதல் (சேரன் செங்குட்டுவன் புண்ய கங்கை நதியில் நீராட்டினான்)
4.நடுகல்= குறித்த இடத்தில் நடுதல்
5.வீரனுடைய பெயரும் பெருமையும் கல்லில் பொறித்தல்
6.தெய்வமாகக் கொண்டாடி விழா எடுத்தல் (கண்ணகி கற்சிலை துவக்க விழாவுக்கு பல சிறப்பு விருந்தினர்களை (Special Invitations) செங்குட்டுவன் அழைத்தான். கடல் சூழ் இலங்கை கயவாகு வேந்தன் (கஜபாகு) ஒரு பிரதம (Chief Guest) விருந்தினர். அந்தக் காலம் முதல் நாமும் இலங்கையும் அவ்வளவு நெருக்கம்!. முதல் மன்னனான விஜயனுக்கு பாண்டிய நாட்டுப் பெண்தான் மனைவி!!)

நல் அமர்க் கடந்த நாணுடை மறவர்
பெயரும் பீடும் எழுதி அதர்தொறும்
பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல் (அகம் 67)

என்ற அகநானூற்றுப் பாடல் அக்கற்களுக்கு மக்கள் மயில் பீலி சூட்டி வழிபட்டதைக் கூறுகிறது.
சங்கத் தமிழ் இலக்கியத்தில் பாட்டுக்குப் பாட்டு இந்துமதக் கடவுளர்கள் பவனி வருவதைக் காணலாம்.. சிவன் என்ற சொல் திருமுறை-தேவார காலம் வரையில் கையாளப்படாவிடினும், தொல்காப்பியத்தில் இல்லாவிடினும், புறநானூற்றின் மிகப்பழைய பாடல்களில் நீலகண்டனையும் முக்கண்ணனையும் காண்கிறோம்.

சங்க காலத்துக்குப்பின் வந்த சிலப்பதிகாரத்தை இந்து மத ‘என்சைக்ளோபீடியா’ (கலைக் களஞ்சியம்) என்று சொல்லும் அளவுக்கு இந்து கலாசாரம், கடவுளர்கள் பற்றி ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன.

இது தொடர்பான எனது முந்தைய கட்டுரைகள்:—
தொல்காப்பியர் காலம் தவறு—பகுதி1, 2, 3, 4 (posted 9-9-12 முதல் 13-9-12 வரை)
தொல்காப்பியத்தில் இந்திரன் posted on 14 ஜூன் 2013
தொல்காப்பியத்தில் வருணன் posted on 8 ஜூலை 2013
மூன்று தமிழ் சங்கங்கள் கட்டுக்கதையா? (25-2-2012)
No Brahmins ! No Tamil ! (posted on 12/1/2012)
Tolkappian- A Genius ( posted on 12/9/2012)
Indra in the Oldest Tamil Book
Varua In the Oldest Tamil Book

Contact swami_48@yahoo.com



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
RE: தொல்காப்பியத்தில் துர்கை, அக்னி- சந்தானம் சுவாமிநாதன்
Permalink  
 


சங்க இலக்கியத்தில் கடல்கோள் (சுனாமி)

சுனாமி(Tsunaami) எனப்படும் கடல்கோள் இலட்சக்கணக்கான உயிர்களைப் பலிகொண்ட பின்னர், மக்கள் இதைப் பற்றி அறிய பெரும் ஆர்வம் கொண்டுள்ளனர். தமிழ் இலக்கியத்தில் கடந்தகால கடல்கோள் (‘சுனாமி’) தாக்குதல்கள் குறித்து நிறையக் குறிப்புகள் உள்ளன.

கடலுக்கு தமிழில் ‘முந்நீர்’ என்று ஒரு பெயர் உண்டு. சங்க இலக்கியத்தில் சுமார் நாற்பது இடங்களில் ‘முந்நீர்’ என்ற சொல் வருகிறது (புறநானூற்றுப் பாடல்கள் 9, 13, 20, 30, 35, 60, 66, 137, 154 முதலியன). "நிலத்தைப் படைத்தலும். காத்தலும். அழித்தலுமாகிய மூன்று தொழில்கள் உடைமையின் முந்நீர்" என்ற நச்சினார்க்கினியர் உரை கூறுகிறது. ஆகவே கடலின் அழிவுசக்தி குறித்தும், ‘சுனாமி’ எனப்படும் இராக்கதப் பேரலைகள் குறித்தும் தமிழர்களுக்கு முன்பே தெரியும். நிலத்தைப் படைப்பதும் அழிப்பதும் கடல்தான்.

தமிழை வளர்க்க அமைக்கப்பட்ட முதலிரண்டு தமிழ்ச் சங்கங்களையும் கடல் விழுங்கியதால் தற்போதுள்ள மதுரையில் மூன்றாவது தமிழ்ச்சங்கம் நிறுவப்பட்டது. இந்த ‘சுனாமி’யைக் "கடல்கோள்" என்று பழைய உரைகார்கள் குறிப்பர். தென்மதுரையையும், கபாடபுரத்தையும் கடல் விழுங்கியதால் மூன்றாவது தமிழ்ச்சங்கம் நிறுவப்பட்டது. இறையனார் கள்வியலுரையும், அடியார்க்கு நல்லாரின் உரையும் இதைப்பற்றி விளக்கமாகப் பேசுகின்றன.

சங்கத் தமிழ் நூலான கலித்தொகையும், சங்கக் காலத்துக்குப் பின் எழுந்த சிலப்பதிகாரமும் பாண்டிய நாட்டின் தென்பகுதியைக் கடல் விழுங்கியதைப் பின்வருமாறு கூறுகின்றன:-

"மலிதரை யூர்ந்துதன்மண்கடல் வௌவலின் 
மெலிவின்றி மேற்சென்றுமேவார் நாடிடம்படப் 
புலியோடு வின்னீக்கிப்புகழ்பொறிந்த கிளர்கெண்ட 
வலியினான் வணக்கியவாடாச்சீர்த் தென்னவன்"

– கலித்தொகை 104

(முற்காலத்தில் கடல்பொங்கிப் பாண்டியனின் நாட்டை விழுங்கியது. ஆனாலும் பாண்டியன் தளர்ந்து விடவில்லை. அருகிலுள்ள சேர, சோழ நாடுகளை வென்று புலிக்கொடி, வில்கொடியை நீக்கி அவைகளைப் பாண்டிய நாட்டுடன் சேர்த்துக் கொண்டான்.)

"பஃறுளி யாற்றுடன்பன்மலை யடுக்கத்துக் 
குமரிக் கோடுங் கொடுங்கடல்கொள்ள 
வடதிசைக் கங்கையுமிமயமுங் கொண்டு 
தென்னிசை யாண்ட தென்னவன்வாழி"

– சிலப்பதிகாரம் I-11-17/22

(கடல் சினந்து எழுந்து பஃறுளி என்னும் ஆற்றையும் பல மலைகளையும் குமரிக் கோட்டையையும் மூழ்கடித்தது. அதற்குப் பின்னர் பாண்டிய மன்னன் வடதிசைக்குச் சென்று கங்கை ஆற்றையும் இமயமலையையும் வெற்றி கொண்டான்) 
சிலப்பதிகாரத்தில்மற்றொரு பாடலுக்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார், 700 காதம் பரப்புடைய 49 நாடுகளைக்கடல் விழுங்கியதாகக் கூறுகிறார். அந்த 49 நாடுகளின் (வட்டாரங்களின்) பெயர்களையும் நமக்கு அளிக்கிறார். தலைச்சங்க காலத்தில் தோன்றிய தமிழ் நூல்கள் எதுவும் நமக்குக் கிடைக்கவில்லை. இடைச்சங்க காலத்தில் எழுந்த தொல்காப்பியமும், சில பாடல்களுமே நமக்குக் கிடைத்தன.

கொற்கையிலிருந்த தலைநகர் மதுரைக்கு மாற்றப்பட்டதைப் பிளினியும் குறிப்பிடுவதால் இந்தக் கடல்கோள் கி.மு முதலிரண்டு நூற்றாண்டுகளில் ஏற்பட்டிருக்கலாம்.

பல சங்கப் பாடல்கள்சுனாமிக்குக் காரணமான நில அதிர்ச்சி குறித்தும் கடல் எல்லை மீறுவது பற்றியும் பொதுவாகப்பாடுகின்றன.

நிலம்புடை பெயரினும் நீர்த்தீப் பிறழினும் 
இலங்குதிரைப் பெருங்கடற் கெல்லை தோன்றினும்

– குறுந்தொகை 373

‘நிலம், நீர், தீஆகியன அவைகளின் இயல்பான நிலைகளிலிருந்து மாறினாலும் கடல் எல்லை மாறுபட்டாலும்’ என்று கூறுவதிலிருந்து இத்தகைய இயற்கை மாற்றங்களை மக்கள் அறிந்தது தெரிகிறது.

‘பெருநிலங்கிளறினும்’ (நற்றிணை 201) ‘நிலம்புடை பெயர்வதாயினும்’ (நற்றிணை 9) ‘நிலத்திறம் பெயருங்காலை யாயினும்’ (பதிற்றுப்பத்து 63-6), ‘நிலம்புடை பெயர்வதாயினும்’ (புறநானூறு 34-5) ஆகிய அடிகள் நில அதிர்வு பற்றியும் நிலம் அழிந்துபட்டு எல்லை மாறுவது பற்றியும் பேசுகின்றன.

வடவைத்தீயும் மடங்கலும்

கடலுக்கடியில் ‘வடவை’எனும் தீ எரிந்து கொண்டிருப்பதாகவும், அது ஊழிக்காலத்தில் கடல் நீருடன் எழுந்து வந்துஉலகை அழிக்கும் என்றும் சங்க நூல்களுக்கு உரை எழுதியோர் கூறுகின்றனர். வடவைத் தீயை’வடமுகாக்கினி’ என்றும் அது திரை வடிவமுள்ள பெருந்தீ என்றும் வட மொழி நூல்கள் குறிப்பிடுகின்றன.

வடவை என்பது கடலுக்கடியிலுள்ள எரிமலைகளா என்று தெரியவில்லை. இந்தியாவில் ஆந்திரப் பிரதேசத்தில் இராட்சதப் பேரலைகள் வந்து ஆயிரக்கணக்கானோரை உயிர்பலி கொண்டபோது ‘மர்மத்தீ’ ஒன்றும் கடலில் தோன்றியது. இது புயலின்போது பேரலைகளின் உராய்வினால் ஏற்பட்ட மின்சார சக்தி என்று அப்பொழுது விஞ்ஞானிகள் கருத்துத் தெரிவித்தனர். இதுதான் வடவைத் தீயா என்றும் தெரியவில்லை. ஆனால் வடவைத் தீ தோன்றும் போது கடல் பொங்கி எழுந்து நாட்டை அழிக்கும் என்று புலவர்கள் நம்பியது உறுதியாகத்தெரிகிறது.

சங்க இலக்கியத்தில் வரும் மற்றொரு சொல் "மடங்கல்". இதற்கு உரை எழுதிய ஆசிரியர்கள் ஊழிக்காலத்தில் உலகம் மடங்கிப் போவதை (அழிவதை) இப்படிக் கூறுவதாக விளக்கம் எழுதியுள்ளனர். இந்தப் பிரபஞ்சம் உருவானதற்கு ‘மாபெரும் வெடிப்பு’ (Big Bang) காரணம் என்று கூறும் வானநூல் அறிஞர்கள் இது ஒரு காலத்தில் சுருங்கி (மடங்கி) அழியும் (Big Crunch) என்றும் கூறுகின்றனர். இந்த விளக்கம் சங்ககாலத்திலேயே இருப்பது வியப்புக்குரியது. (மடங்கல்: பர்பாடல் 1-47,3-8 கலித்தொகை 2-3, 105-20, 120-8, 122-1 ப.பத்து – 62-8 முதலியன)’.

பாண்டியனும் பரசுராமனும்

தமிழ்ச் சங்கத்தை அழித்த கடற்கோளுக்குப் பாண்டியனின் செயல்தான் காரணம் என்று பாடல் கூறுகிறது. (சிலப்பதிகாரம் XI – 11 – 17). வடிம்பலம்ப நின்ற பாண்டியன் தனது பாதச்சுவடுகள் போலச் செய்து அதைக் கடல் கழுவும்படி கடற்கரையில் செய்து வைத்தாலும் கடல் பொங்கியபோது ‘வேலை எறிந்து’ அதை அடக்கியதாலும் கடலுக்குக் கோபம் ஏற்பட்டதாகச் சிலப்பதிகாரமும் திருவிளையாடல் புராணமும் கூறுகின்றன. இவை பழைய காலச் சடங்குகளையும், நம்பிக்கையும் காட்டுகின்றன. ஆனால் கடல் பொங்கி நாட்டை அழித்தது உண்மை. இக்கதைகளைப் ‘புராணக் கதைகள்’ என்று சொல்லி ஒதுக்கிவிடாமல் அதன் பின்னுள்ள அறிவியல் உண்மைகளை உய்த்தறிவது நம் கடமை. தென்கிழக்கு ஆசியாவில் கூடக் கடற்கரையில் மன்னர்களின் பாதங்களைச் (அடிச்சுவடு) செய்து வைக்கும் பழக்கம் இருந்தது. காளிதாசன் பாதச்சுவடுகளைக் குறிப்பிடுவான். இன்றும் கூட இலங்கையில் புத்தரின் – சிவனின் பாதச்சுவடுகள் உள்ளன.

பரசுராமன் (விஷ்ணுவின் பத்து அவதாரங்ககளில் ஒன்று) கேரளத்துக்கு வந்த போது கடலும், மலையும் ஒட்டியிருந்ததாகவும் பரசுராமனின் வேண்டுகோளுக்கிணங்கிக் கடல் பின்னோக்கிச் சென்று கேரள மாநிலத்தை அவருக்கு வழங்கியதாகவும் புராணங்களும் கேரள மகாத்மியங்களும் கூறுகின்றன. இதிலுள்ள அறிவியல் உண்மை என்னவென்றால் "கடல் சுவற வேல்விட்ட" பாண்டியன் ஆட்சி செய்த காலத்தில் தமிழ்நாட்டிலும் பரசுராமன் வந்தபோது கேரளத்திலும் கடல் பின்வாங்கிச் சென்றது என்பதுதான். கடல் எல்லை மாறி நிலம் வெளிப்பட்ட புவியியல் மாற்றம்தான் (Geological Change) இப்படிப் புராணக் கதைகளாக மாறிவிட்டன.

(அகத்திய முனிவர் விந்திய மலையைக் கர்வபங்கம் செய்தார், ‘கடலைக் குடித்தார்’ என்பதெல்லாம் அவர் மலை வழியாகத் தென் இந்தியாவுக்கு வந்து தென்கிழக்கு ஆசியா வரை சென்று நாகரீகத்தை நிலைநாட்டினார் என்பதையே கூறுகிறது.)

இராவணன் மலையைத் தூக்கியதாகவும் சிவபெருமான் கோபங் கொண்டு அவன் கைகளையும் தலையையும் நசுக்கிய பின்னர், அவன் மன்னிப்புக் கேட்டு ஓடியதாகவும் ஒரு கதை (தேவாரப் பாடல்களிலும், சங்கபுராணத்திலும்) உள்ளது. ராமனின் தண்டனையைப் பொறுக்காமல் சீதையை பூமா தேவி நிலத்தைப் பிளந்து அழைத்துச் சென்றதாக இராமாயணம் கூறுகிறது. இவை எல்லாம் அந்தந்த காலங்களில் நடந்த பூகம்பங்கள்தான். காலப்போக்கில் ஏதாவது இரண்டு நிகழ்ச்சிகளைத் தொடர்புபடுத்தி மக்கள் ‘கதை’ கட்டிவிடுகின்றனர்.

தற்காலத்தில் கூட ஒருவர் தேர்தலில் படுதோல்வி அடைந்தால், "மண்ணைக் கவ்வினார், மூக்குடைபட்டார். முகத்தில் கரி பூசிக் கொண்டார், பலத்த அடி வாங்கினார்" என்று எல்லாம் பத்திரிக்கைகள் எழுதும். ஆனால் இவைகளின் உண்மைப் பொருள் என்ன என்று எல்லோருக்கும் விளங்கும்.

கடலுள் மாய்த்த இளம்பெருவழுதி என்ற பாண்டிய மன்னனின் பாடல் புறநானூற்றில் உள்ளது. இந்தப் பாண்டிய மன்னர் ‘சுனாமியில்’ இறந்தானா அல்லது கடற்படை படையெடுப்பில் இறந்தானா என்பது ஆராய்ச்சிக்குரிய செய்தி.

ஊழிக்காலத்தில் கடல் பொங்கி எழுவதைத் தயங்கண்ணனார் (புறம் 397) இப்படிப் பாடுகிறார்:-

"அறிதிரைப் பெருங்கடல் இறுதிக்கண் செலினும்"

பரிபாடல், நான்கு வகையான ஊழிகள் குறித்துப் (பரி 3-0) பாடுகிறது.

ஊழிக்காலத்தில் உலகம் அழிந்துவிடும் என்று மற்றொரு புலவர் பாடுகிறார்.

பசும்பொன் நுலகமும் மண்ணும் பாழ்பட
விரும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்ல
பரிபாடல் 2-1/4

ஊழியின் இறுதியில் உலகம் முழுதும் இருள் பரவிக் கடல் பொங்கி எழுந்து நிலப்பகுதிகளை எல்லாம் மூழ்கடிக்கும் என்று பின்னரி பன்னிரு சூரியர்களும், வடவைத் தீயும் தோன்றி நீரை வற்றச் செய்யும் என்றும் அரிசில் கிழார் எழுதிய பாடலுக்கான (பதிற்றுப் பத்து 72-8/16) உரை கூறுகிறது. மற்றொரு பாடல் (62.5/)மடங்கல் பற்றி விரிவாகக் கூறுகிறது.

இறைவனிட்ட சாபத்தால் கடற்கோள் தோன்றும் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது:-
"வானவன் விழாக் கோண்மா நகரொழிந்தது
மணிமேகலா த்ய்வ மற்றது பொறாஅள்
அணிநகர்தன்னை பலைகடல் கொள்கென
விட்டனர் சாமப் பட்டதிதுவால்".

இந்திர விழாவை மன்னன் கொண்டாடாவிட்டால் மன்னனது நாட்டைக் கடல் அழிக்கும் என்பது இதன் பொருள்.

வராகவதாரத்தில், விஷ்ணு பன்றி வடிவங் கொண்டு பூமியைக் கடலிலிருந்து மீட்டதாகக் கூறுவதும் புவியியல் மாற்றத்தையே. கடல்நீரால் மூடியிருந்த உலகில் நீர் வடிந்து நிலப்பகுதி வெளியானது என்ற உண்மையைத்தான் புராணக் கதை வழியாகத் தருகிறார்கள். இதுபோன்ற பல உண்மைகள் சங்க இலக்கியத்தில் மறைபொருளாகக் கூறப்பட்டுள்ளன. அவைகளைப் பகுத்தறிவது நம் கடமை.”



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard