New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சி.வை.தாமோதரம்பிள்ளை


Guru

Status: Offline
Posts: 24601
Date:
சி.வை.தாமோதரம்பிள்ளை
Permalink  
 


பதிப்புலகில் சி.வை.தாமோதரம்பிள்ளை

http://thfwednews.blogspot.in/2018/02/blog-post.html
 
சுவடிப்பதிப்பியல் என்பது எளிதானதொரு காரியம் அல்ல என்பது தமிழ் நூல்கள் பதிப்புப் பணியில் ஈடுபட்டோருக்கு நிச்சயமாகத் தெரியும். ஒரு ஓலைச்சுவடியை எடுத்தோம், அதனை அப்படியே அதில் உள்ள எழுத்துக்களை அச்சுக்கோர்த்து நூலாகக் கொண்டு வந்தோம் என்பது தான் அச்சுப் பதிப்பாக்கம் என யாரேனும் நினைத்தால் அது ஒரு கற்பனை என்று தான் சொல்லவேண்டும். ஏனெனில் சுவடி நூலிலிருந்து அச்சுப்பதிப்பாக்கமாகக் கொண்டுவருவதென்பதில் உள்ள பல்வேறு சிக்கல்களை நாம் புரிந்து கொண்டால் தான், ஒரு நூலை ஒரு பதிப்பாசிரியரால் சரியான முறையில் அதனை அச்சு மொழிக்குப் பெயர்த்து மாற்றிக் கொண்டு வர இயலும். 
malar82.jpg
 
எனது கடந்த பதினெட்டு ஆண்டு தமிழ் மரபு அறக்கட்டளை மின்னாக்க முயற்சியில் ஏராளமான ஓலைச்சுவடி நூல்களை நேரில் காணும் வாய்ப்பு எனக்குக் கிட்டியுள்ளது. பொதுவாகவே ஓலைச்சுவடி எனச் சொன்னவுடன் கேட்போரின் எதிர்பார்ப்பு என்பது, அது சோதிட சுவடியா என்பதாகத் தான் இருக்கும். ஏனெனில் ஓலைச்சுவடி என்றாலே அது சோதிடத்தைப் பற்றித்தான் சொல்லும் என்ற பிழையான கருத்து ஒன்று மிக விரிவாக நம் தமிழ்ச்சூழலில் இருக்கின்றது. நமது சூழலில் பொதுவாகவே மந்திரம். மாயம், சோதிடம், திடீர் அதிசயம் என்பதில் தான் மக்களுக்குப் பெருமளவு ஆர்வமும் ஈர்ப்பும் இருக்கின்றதே தவிர, ஆராய்ச்சிப் பூர்வமான செய்திகளிலோ அல்லது சுயசிந்தனையோடு கூடிய செயல்பாடுகளிலோ நாட்டம் என்பது மிக மிகக் குறைவாகத்தான் இருக்கின்றது. இதனால் தான் ’வானத்தில் சிவனும் பார்வதியும் தெரிகின்றார்கள்’ என யாராவது சொன்னால் நம்பிவிடுவதும், ’கர்த்தர் பக்க வாதம் வந்தவர்களை அவர்கள் கிருத்துவ மதம் மாறி நம்பிக்கை கொண்டால் அவர்கள் எழுந்து நடமாடுவார்கள்’ என்று சொன்னால் நம்பி விடுவதும், இந்தச் சாமியாரிடம் சென்றால் பிள்ளை வரம் கிடைக்கும் என நம்பிச் சென்று பின் ஏமாந்துபோய் திரும்பி வந்து அழுது புலம்புவதும் தொடர்கின்றது. 
 
சுவடி நூல்கள் என்றால் என்ன? 
சுவடி நூல்களில் என்ன தான் இருக்கின்றன? 
இப்படியான கேள்விகள் எழுவோருக்காக சில அடிப்படை செய்திகளை வழங்க வேண்டியதும் அவசியமாகின்றது. அதோடு சுவடி பதிப்பாக்கத்தில் சிறந்த பங்களிப்பு வழங்கியோரைப் பற்றி விளக்கம் தருவதும் அவசியமாகின்றது. 
 
அச்சு இயந்திரம் கி.பி.14ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் குட்டன்பெர்க் என்ற ஜெமானியரால் கண்டுபிடிக்கப்படும் வரை, உலகின் எல்லா பகுதிகளிலும் இலக்கியங்களையும். மருத்துவக் குறிப்புக்களையும், வானியல் சாத்திரங்களையும், பாடல்களையும் இலக்கணங்களையும், ஓவியங்களையும், கணிதக் குறிப்புக்களையும். வர்த்தகச் செய்திகளையும் ஏதாவது ஒரு வகையில் பதிந்து வைத்துப் பாதுகாக்கப்படும் முயற்சிகள் நிகழ்ந்தன. சீனாவில் பட்டுத்துணியில் எழுதி வைக்கும் கலை பன்னெடுங்காலமாக இருந்தது. எகிப்திலும் கிரேக்க, ரோமானிய நாகரிகங்களிலும் பாப்பிரஸ் தாளிலும் பாறைகளில் கல்வெட்டுக்களாகப் பொறிக்கும் வழக்கமும் இருந்தது. தென்னிந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில், பனை ஓலைகளைத் தயார் செய்து அவற்றில் எழுத்தாணி கொண்டு எழுதி வைப்பதும், கல்வெட்டுக்களைக் கீறி அவற்றில் செய்திகளைக் கல்வெட்டுக்களாகப் பொறிப்பதும் வழக்கமாக இருந்தது. இப்படிப் பனை ஓலைகளில் தான் தமிழ் மக்களின் பெருவாரியான சிந்தனைக்களஞ்சியம் பதியப்பட்டு வழிவழியாக அவை படியெடுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வந்தன. 
 
இன்று நமக்குக் கிடைக்கின்ற பனை ஓலைச்சுவடிகள் பலதரப்பட்ட செய்திகளைக் கொண்டிருக்கின்றன. அவற்றுள் சில 
  • இலக்கிய இலக்கண நூல்கள் 
  • மனிதர்களைக் குணப்படுத்தும் மூலிகைகள், உடற்கூறு அறிவியல் 
  • வான சாத்திரம் 
  • கட்டிடம், வீடு கட்டும் சாத்திரம் 
  • அடிமைகள் வாங்கி விற்பது பற்றிய தகவல்கள் 
  • கோயில் பராமரிப்பு பற்றிய ஆவணங்கள் 
  • நில மேலாண்மை ஆவணங்கள் 
  • விலங்குகள், பறவைகளுக்கான மருத்துவக் குறிப்புக்கள் 
  • கப்பல் கட்டும் சாத்திரம் 
  • சோதிடம் 
  • நாட்டுப்புறப் பாடல்கள் 
  • ஓவியங்கள் 
  • கணிதக்குறிப்புக்கள் 
  • சமய தத்துவ, தோத்திர நூல்கள் 
  • தலபுராணங்கள் 
என்று வகைப்படுகின்றன.
 
அச்சு இயந்திரம் தமிழகத்தில் 16ம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. முதலில் தமிழில் வெளியிடப்பட்ட அச்சு நூல் தம்பிரான் வணக்கம் என்னும் கிருத்துவ மறை நூலாகும். இதனைப் போர்த்துக்கீசிய பாதிரியார் ஹென்றிக்ஸ் ஹென்றிக்ஸ் அடிகளார், தமிழ் மொழியைக் கற்றுக் கொண்டு, அச்சுக்கட்டைகளை உள்ளூர் மக்களின் உதவியுடன் தயாரித்து உருவாக்கினார். இன்று கிடைக்கக்கூடிய இந்த நூலில் ஒரே ஒரு படிவம்  ஹார்வர்ட் பல்கலைக்கழக நூலகத்தில் பாதுகாக்கப்படுகின்றது. இந்தியாவிலேயே வேறெந்த மொழிகளிலும் அல்லாது,  முதன் முதலில் தமிழ் மொழியில் தான் அச்சு இயந்திரம் கொண்டு உருவாக்கப்பட்ட முதல் நூல் வெளிவந்தது.
 
படிப்படியாகத் தமிழகம் வந்த ஐரோப்பியர் பலர் அச்சுப்பதிப்புப் பணியில் ஈடுபட்டு தமிழ் நூல்களை அச்சிடும் பணியை மேற்கொண்டனர். கி.பி.18ம் நூற்றாண்டு தொடங்கி அச்சுக்கலை தமிழகத்தில் வளர்ச்சியடையத்தொடங்கியது. 19ம் நூற்றாண்டில் தமிழகத்தில் தமிழ் பழம் நூல்களின் அச்சுப்பதிப்புப் பணியில் முன்னோடிகளாகத் திகழ்ந்தோரில் ஐரோப்பியர் சிலரை குறிப்பிட வேண்டும். குறிப்பாக கொண்ஸ்டாண்டின் பெஸ்கி என்ற இயற்பெயர் கொண்ட போர்த்துக்கீசியரான வீரமாமுனிவர், திருக்குறளை ஜெர்மானிய மொழிக்கு மொழி பெயர்த்த ஃப்ரெடெரிக் காமெரர், மற்றும் எல்லிஸ் ஆகியோரை நாம் மறக்கவியலாது. இவர்களை அடுத்து தொடர்ச்சியாக திருநெல்வேலி அம்பலவாண கவிராயர், யாழ்ப்பாணம் நல்லூர் ஆறுமுக நாவலர் போன்றோர் மிகச் சிறந்த பதிப்புப் பணியாற்றியிருக்கின்றார். அவருக்கு உதவியாக இருந்து பின்னர் அவருக்குப் பின் தமிழ் நூல்கள் அச்சுப்பதிப்பாக்கப் பணியில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர் யாழ்ப்பாணம் சி.வை.தாமோதரம்பிள்ளை அவர்கள். இவர் உ.வே.சாமிநாதையருக்கு முன் தமிழ் நூல்கள் அச்சுப்பதிப்புப் பணியை இலங்கையில் தொடங்கி பின்னர் இப்பணிக்காகத் தமிழகம் வந்து தங்கியிருந்து அச்சுப்பதிப்புப் பணியில் தம் வாழ்நாளைச் செலவிட்டவர். 
 
 
அடிப்படையில் சட்டக் கல்வி முடித்து நீதிபதியாகத் தொழில்புரிந்தவர் யாழ்ப்பாணம் ராவ்பகதூர் சி.வை.தாமோதரம் பிள்ளை அவர்கள். தமிழ் நூற்கள் அச்சுப்பதிப்புப் பணியில் அவர் 1854 ஆம் ஆண்டில் ஈடுபடத் தொடங்கினார். யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர் அவர்கள் 1849-ஆம் ஆண்டில் அச்சுப் பதிப்புத்துறையில் ஈடுபட்டு வரும் போதே இவரும் அவருடன் இணைந்து தமிழ் நூற்கள் பதிப்பிக்கும் துறையில் செயல்பட்டார். 
 
இவர் பதிப்பித்த நூல்களின் எண்ணிக்கை மொத்தம் பதினொன்று. அவற்றுள் இலக்கண நூல்கள் ஏழு. இலக்கிய நூல்கள் நான்கு. இலக்கண நூல்களின் பட்டியலில் வருபவை:
 
  • தொல்காப்பியம் - சொல்லதிகாரம் சேனாவரையருரை (1868) 
  • வீரசோழியம் - மூலமும் பெருந்தேவனார் உரையும் (1881) 
  • இறையனார் அகப்பொருள் - நக்கீரருரை (1883) 
  • தொல்காப்பியம் - பொருளதிகாரம் நச்சினார்க்கினியருரை , 3 பகுதிகள் (1885) 
  • இலக்கண விளக்கம் - (1889) 
  • தொல்காப்பியம் - எழுத்ததிகாரம், நச்சினார்க்கினியருரை (1891) 
  • தொல்காப்பியம் - சொல்லதிகாரம் , நச்சினார்க்கினியருரை (1892) 
 
இலக்கிய நூல்களின் பட்டியலில் வருபவை 
  • நீதிநெறிவிளக்கம் - (1854) 
  • தணிகைப்புராணம் - (1883) 
  • கலித்தொகை - நச்சினார்க்கினியருரை (1887) 
  • சூளாமணி (மூலம் மட்டும்) (1889) 
 
 
பதிப்புத்துறையில் 19ம் நூற்றாண்டின் மத்திய பகுதியை ஆறுமுகநாவலர் காலம் என்றும், நாவலரையடுத்து 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியை சி.வை.தாமோதரம்பிள்ளையின் காலம் என்றும் அதனைத் தொடர்ந்து 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தை சாமிநாதையர் காலம் என்றும் குறிப்பிடுகின்றார் பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை. 
 
இத்தனை பெருமைகள் கொண்ட யாழ்ப்பாணம் சி.வை.தாமோதரம்பிள்ளையவர்களின் வரலாற்றை அறிந்து கொள்வது இக்காலத் தலைமுறையினருக்குப் பயனளிக்கும். 
 
இலங்கைத்தீவின் வடக்கில் உள்ள யாழ்ப்பாணம் நகரில் அமைந்திருக்கும் ஒரு சிற்றூரான சிறுப்பிட்டி யில் இவர் 12.9.1832ம் ஆண்டு பிறந்தார். இவரது பெற்றோர் பெயர் வைரவநாதர், பெருந்தேவியார் என்பதாகும். இவருக்கு ஆறு தம்பிகளும் இருந்தனர். தந்தையார் வைரவநாதர் ஆசிரியராகப் பணிபுரிந்தார். ஆக தொடக்கக்கல்வியை தம் தந்தையிடமே இவர் கற்றார். பின்னர் தெல்லியம்பதி அமெரிக்கன் மிசன் கலாசாலையில் பயின்று அதன் பின்னர் யாழ்ப்பாண வட்டுக்கோட்டை பலகலைக்கல்லூரியிலும் கணிதம், தத்துவம், வானவியல் ஆகியன கற்றார். பின்னர் தமிழகத்தின் சென்னை பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட காலத்தில் நடத்தப்பட்ட பி.ஏ. வகுப்பிற்கான தேர்வில் முதல் மாணவராகத் தேறினார். பி.ஏ பட்டம் பெற்று பின்னர் சட்டக் கல்வி பயின்று அதிலும் தேர்ச்சி பெற்றார். 
 
தனது கல்வியை முடித்து முதலில் யாழ்ப்பாண கோப்பாய் ஆசிரியர் பயிற்சிப்பள்ளியில் ஆசிரியரானார். அத்துடன் தினவர்த்தமானி என்ற வார இதழுக்கு துணையாசிரியராக பணியாற்றினார். தமிழகத்தின் சென்னையில் இவருக்கு வரவு செலவு கணக்குத் துறையில் அலுவலகர் பணி கிடைத்தது. அப்பதவி வகித்தபோதுதான் சட்டக் கல்வி பயின்று 1871ம் ஆண்டு தேர்வில் தேர்ச்சி பெற்றார். தமது ஐம்பதாம் அகவையில் பதவி ஓய்வு பெற்றார். தமிழகத்தின் கும்பகோணம் பகுதிக்கு மாற்றலானார். அங்கு வழக்கறிஞராகப் பணியாற்றினார். இடையில் பல நூல்களை அச்சுப்பதிப்பாக்கி வெளியிட்டு வரும் பணியையும் மேற்கொண்டு வந்தார். 1887ம் ஆண்டு புதுக்கோட்டை அரசின் முறைமன்ற நடுவர்களில் ஒருவராக பணியாற்றும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. நான்காண்டுகள் இப்பணியையும் இவர் ஆற்றினார். பின்னர் சென்னைப் பல்கலைக்கழக பாடத்திட்டக் குழு உறுப்பினராகவும், தேர்வுத் திட்டம் வகுக்கும் குழுவின் தலைவராகவும் சேவையாற்றினார். இவர் 1901ம் ஆண்டு ஜனவரி முதல் நாள் காலை இயற்கை எய்தினார். 
 
சி.வை.தாமோதரம் பிள்ளையவர்கள் மிகுந்த ஈடுபாட்டுடனும் ஆர்வத்துடனும் இலங்கையிலும் தமிழகத்திலும் ஏடு தேடி பயணித்துப் பல சுவடி நூல்களை வாங்கி ஆராய்ந்து அவற்றை அச்சுப்பதிப்பாகப் பதிப்பிக்கும் பணியைச் செய்தவர். இவரது பணிகளை அறிந்த அன்றைய அரசு அவருக்கு ’இராவ் பகதூர்’ என்ற சிறப்புப் பட்டத்தை அளி த்து கவுரவித்தது. 
 
தமிழுலகில் அச்சுப்பதிப்பக்கத்திற்குச் சேவையாற்றியோரில் இன்று நாம் அறிந்த உ.வே.சாமிநாதையர், யாழ்ப்பாணம் ஆறுமுகநாவலர், வ.உ.சிதம்பரனார், வடலூர் வள்ளலார், புதுவை நயனப்ப முதலியார், மகாவித்துவான் சி.மீனாட்சிசுந்தரம் பிள்ளை, முகவை இராமானுசக் கவிராயர், களத்தூர் வேதகிரி முதலியார், திருத்தணிகை க.சரவணப் பெருமாளையர், திருவேங்கடாசல முதலியார், சந்திரசேகர கவிராச பண்டிதர், காஞ்சிபுரம் மகாவித்துவான் சி.எஸ். சபாபதி முதலியார் போன்று சிறப்பித்துக் கூறப்படவேண்டியார்களின் பட்டியலில் இடம் பெறும் சிறப்பு, ’பதிப்புச் செம்மல் சி.வை.தா” என அன்புடன் அழைக்கப்படும்  சி.வை.தாமோதரம் பிள்ளையவர்களுக்குமுண்டு. வாழ்க தமிழ் !
 
c.w.t-1%2B%25281%2529.jpg

 

c.w.t-2%2B%25281%2529.jpg

 

c.w.t-3%2B%25281%2529.jpg

 

C.W.Thamotharampillai%2B%25281%2529.jpg


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard