New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பாகிஸ்தான் அரசியல் வரலாறு / அத்தியாயம் 1


Guru

Status: Offline
Posts: 24603
Date:
பாகிஸ்தான் அரசியல் வரலாறு / அத்தியாயம் 1
Permalink  
 


பாகிஸ்தான் அரசியல் வரலாறு / அத்தியாயம் 1

Pakistan-Flag-Art-Desktop-Wallpaper-Collectionபொதுவாக ஒரு நாடு எப்படி பிறக்கிறது என்பதை யாராலும் தெளிவாகக் கூற முடியாது. ஒரு நதியின் கதை எவ்வளவு  பழமையானதோ அதே போன்ற கணிக்க முடியாத கால ஓட்டத்தைக் கடந்து ஒரு நாடு பிறக்கிறது. இந்தியா போன்ற மிகப் பழமையான நாடுகளுக்கு இது மிகச்சரியாகப் பொருந்தும். அதே வேளையில் நம் கண் முன்பே சில நாடுகள் புதிதாக பிறந்துள்ளதையும் நாம் கண்டிருக்கிறோம். 1947ல் பிறந்த பாகிஸ்தான் ஒரு சிறந்த உதாரணம்.

முஸ்லிம்களுக்குத் தனி நாடு வேண்டும் என்ற கொள்கையை ஜின்னாவுக்கு முன்னால்  முன்னெடுத்தவர்களில் முக்கியமானவர்  சர் சையத் அகமது கான்ங (1817—1898). எனவே பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே, தனி நாடு வேண்டும் என்ற எண்ணம் முஸ்லிம் மக்கள் சிலரிடம் தோன்றி இருக்கிறது. 1947 ஆகஸ்ட் 15 அன்று சுதந்தர இந்தியா மலர்ந்தது. அதற்கு முந்தைய நாள் ஆகஸ்ட் 14 ஆம் தேதி முன்னமே செதுக்கப்பட்ட பாகிஸ்தான் இந்தியாவில் இருந்து பிரித்து எடுக்கப்பட்டது. இந்தக் கூற்று  தேசப்பிரிவினை பற்றி  ஜின்னா போன்றவர்கள் கொண்டிருந்த கருத்துக்கு மிக மிக நெருக்கமாக இருக்கும். இந்தியாவில் பெரும்பான்மையினராக இருக்கும் இந்துக்களில் இருந்து  பண்பாடு, மதம் ஆகியவற்றால் வேறுபட்ட முஸ்லிம் இன மக்களை மட்டுமே கொண்ட ஒரு தனி நாடாக பாகிஸ்தான் ஜின்னாவின் கொள்கைக்கு ஏற்ப பிரிக்கப்பட்டது. இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் ஒரு தனி சிலையாகச் செதுக்கி எடுக்கப்பட்டது என்பது அவர் முதலில் கொண்டிருந்த  நம்பிக்கை. பாகிஸ்தான் என்பது செதுக்கப்பட்ட சிலை அல்ல, இந்தியாவிடம் இருந்து உடைக்கப்பட்ட ஒரு பகுதி என்று சொல்பவர்களும் உள்ளனர்.

தனி பாகிஸ்தானைப் பெற்று அதிகாரத்தில் அமர கனவு கண்ட சிலர் அதை எவ்வழியில் அடைந்தார்கள் என்பது எல்லோரும் கவனத்தில் கொள்ளவேண்டிய ஒன்று. அவர்கள் அப்போது  கையாண்ட முறைகள் அவர்களுடைய அரசியல் சித்தாந்தத்திலும், கொள்கையிலும் ஒன்றுகலந்தன. அவை இன்றும் பாகிஸ்தானின் அரசியல் வரலாற்றில்  தொடர்ந்து வெளிப்படுகின்றன.

கடந்த நூற்றாண்டின் மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்று இந்தியப்  பிரிவினை. அதன் காரணமாகப் பிறந்த  பாகிஸ்தான் பற்றி பல்வேறு காலகட்டங்களில் பலவேறு கருத்துகள் பலரால் முன்வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் வாதப் பிரதிவாதங்கள் நிறைய இருக்கின்றன.

0

இந்திய விடுதலைச் சட்டம் 1947 பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்துக்கு 1947 ஜூலை மாதம் பிரிட்டிஷ் அரசின் ஒப்புதல் கிடைத்தது. இந்தச் சட்டத்தின்படி ஒரே நாடாக இருந்த இந்தியாவும் பாகிஸ்தானும் இரண்டு டொமினியன்களாகப் பிரிக்கப்பட்ட பிறகு சுதந்தரம் பெற்றன. 1947 ஆகஸ்ட் 14 அன்று பாகிஸ்தானும், ஆகஸ்ட் 15 அன்று இந்தியாவும் விடுதலை அடைந்தன. இந்திய விடுதலைச் சட்டம் 1947ல் இந்தியப் பிரிவினை பற்றிய விஷயங்கள் அடங்கியுள்ளன. அதன் முக்கியமான பிரிவுகளில் ஒன்று வங்காளம், பஞ்சாப் ஆகிய மாகாணங்கள் பிரிக்கப்பட்டு இந்தியா, பாகிஸ்தான் ஆகியவற்றுக்கு அளிக்கப்படுவதைக் குறிப்பிடுகிறது. பிரிவினை ஒப்பந்தப்படி அனைத்தும் பிரித்துக் கொடுக்கப்பட்டன. அவற்றில் இந்தியக் கருவூலம்; இந்திய அரசுப் பணி; இந்திய ராணுவத்தின் தரைப்படை,  கப்பல் படை, விமானப் படை மற்றும் எஞ்சி இருக்கும் அத்தனை நிர்வாக அமைப்புகளும் அடங்கும்.

புதிதாகப் பிறந்த பாகிஸ்தானின் அப்போதைய தலைநகரம் கராச்சி. பளிங்கு கற்களால் ஆன ஓர் அரண்மனையில், பாகிஸ்தான் மக்களின் தன்னிகரற்ற தலைவனாக கிட்டத்தட்ட ஓர் அரசனைப் போல் ஜின்னா இருந்தார். இந்தப் பாகிஸ்தான் அவ்வளவு எளிதாக அவருக்கும் அந்த மாபெறும் கனவை நனவாக்கத் துடித்த அவர் சகாக்களுக்கும் கிடைத்து விடவில்லை. பெரும் விலையை இந்தியர்களும் பாகிஸ்தானியர்களும் கொடுக்கவேண்டியிருந்தது. பாகிஸ்தான் உருவான கதையின் சாரம் என்பது அந்தத் தேசத்துக்காகக் கொடுக்கப்பட்ட பெரும் விலைதான்.

பிரிவினைக்கு முன்பும் அதற்குப் பின்பும்  இந்தியாவில்  இந்துக்களுக்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையில் இருந்தவர்கள் முஸ்லிம் மக்கள்தாம். இந்தியாவின் வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் அவர்களுடைய  பங்களிப்பு  கணிசமானது. அதனால்தான் மத அடிப்படையிலான அந்தத் தேசப் பிரிவினையை மிகுதியான மக்களும் தலைவர்களில் பலரும் விரும்பவில்லை. பல நூற்றாண்டுகளாக இந்துக்களும், முஸ்லிம்களும் ஒன்றாக  வாழும் நாட்டை மத அடிப்படையில் பிரிக்க வேண்டிய அவசியமில்லை என்று அவர்கள் கருதினார்கள். இந்தியாவைக் கிட்டத்தட்ட  இரு நூறு ஆண்டுகளுக்கு மேலாக ஆண்டவர்கள் பிரிட்டிஷார். அதற்கு முன்னால் சுமார் முந்நூறு ஆண்டுகள் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகள் முகலாயர்களின் ஆட்சியின் கீழ் இருந்தன. அன்றும் ஒன்றுபட்ட பெரும் இந்தியா இருந்திருக்கிறது. அப்போதெல்லாம் மதஅடிப்படையிலான பிரிவினைக் கருத்து மக்களிடையே – குறிப்பாக முஸ்லிம் மக்களிடையே தலைதூக்கவில்லை. இதன் காரணமாகவே 1947 இல் இயங்கிக் கொண்டிருந்த  பல முஸ்லிம் அரசியல் கட்சிகள்  பிரிவினையை எதிர்த்தன.

ஆனால் இந்திய முஸ்லிம் லீக் பிரிவினைக் கொள்கையில் உறுதியாக இருந்தது. 1940ல் நடைபெற்ற லாகூர் கூட்டத்தில் ஜின்னா முஸ்லிம்களுக்குத் தனி நாடு அவசியம் என்று அறிவித்தார். அதைத் தொடர்ந்து தேசப் பிரிவினை அதிகாரப்பூர்வமாக நிழ்ந்த 1947 வரை ஏழு வருடங்களாக நாடு பெரும் இன்னல்களைச் சந்தித்தது. அதற்குப் பிறகும் இன்னல்கள் தொடர்ந்தன.

பாகிஸ்தானின் முதல் கவர்னர் ஜெனரலான முகமது அலி ஜின்னா அந்நாடு உருவாவதற்கு  முக்கியப் பங்காற்றியவர். பிரிட்டிஷ் இந்தியாவின் சிந்துவில் பெரும் செல்வக்குடும்பத்தில் பிறந்த அவர் இங்கிலாந்தில் சட்டம் பயின்றவர். ஒரு தேசியவாதியாக முகமது அலி ஜின்னா உருவானார். இங்கிலாந்தில் இருந்தபோதே தாதாபாய் நௌரோஜி போன்ற தலைவர்களால் அவர் ஈர்க்கப்பட்டார். இந்தியாவுக்கு வந்து 1906ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸில் தன்னை இணைத்துக்கொண்டார். அதே ஆண்டு தொடங்கப்பட்ட  முஸ்லிம் லீக்கில் சேர்வதற்குத் தயக்கம் காட்டினார். ஆனால் 1913ல் முஸ்லிம் லீக்கில் இணைந்த அவர் மூன்று ஆண்டுகளில் அதன் தலைவராகி விட்டார். அந்நியர்கள்  ஆண்டபோது வராத கவலை, முஸ்லிம் தலைவர்களை அப்போது வாட்டியது. இந்தியா சுதந்தரம் பெற்றால் இந்துக்கள் தங்கள்மீது அதிகாரம் செலுத்துவார்கள் என்று அவர்கள் எண்ணினார்கள். 1906 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸில் உள்ள இந்து உறுப்பினர்கள் மீது  முஸ்லிம் தலைவர்கள் கொண்ட சந்தேகத்தின் காரணமாக இந்திய முஸ்லிம் லீக்  தொடங்கப்பட்டது.

1930 ஆம் ஆண்டு நடந்த முஸ்லிம் லீக் கூட்டத்தில் எழுத்தாளர் அலாமா இக்பால்   தலைமை உரையாற்றியபோது இவ்வாறு கூறினார். “இந்துக்கள் மிகுதியாக இருக்கும் இந்தியத் துணைக் கண்டத்தில் முஸ்லிம்களுக்குத் தனி நாடு அவசியமாகிறது.பிரிவினை வெகு சீக்கிரத்தில் நடக்கும் என்பதே என் கணிப்பு.”

இருபதாம் நூற்றாண்டின் மிகப்பெரிய மக்கள் இடப்பெயர்ச்சிக்கு வழிவகுத்தது இந்திய பாகிஸ்தான் பிரிவினை. அது எல்லைக் கோட்டின் இருபுறமும் சுமார் ஐந்து லட்சம் மக்கள் உயிர் இழக்கக் காரணமாக இருந்தது.

1905 ஆம் ஆண்டு இந்தியாவின் வைஸ்ராய் கர்சன் பிரபு வங்காளத்தை கிழக்கு, மேற்கு பகுதிகளாகப் பிரித்தார். அதன்மூலம் இந்து முஸ்லிம் பகையை வளர்த்து, இந்திய தேசிய காங்கிரஸின் செயல்பாடுகளை நீர்த்துப் போகச் செய்யலாம் என்று அவர் எண்ணினார். எதிர்ப்புகள் வலுக்கவே 1911ல் மீண்டும் வங்காளத்தின் பகுதிகள் இணைக்கப்பட்டன. அது ஒரு முக்கியமான நிகழ்வுக்குக் காரணமானது. அதுதான் இந்திய முஸ்லிம் லீக்கின் தொடக்கம். மேலும் அது இந்தியாவை மத ரீதியில் பிரிப்பதற்கு ஒத்திகை பார்த்தது போலாகிவிட்டது.

பரந்து விரிந்து பலவிதமான  பழக்க வழக்கங்களையும், மொழிகளையும் கொண்ட மக்கள் வாழும்  நாடு இந்தியா. இது பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் ஒன்றாக  இருந்தது என்பது  மிகவும் வியப்பான ஒரு விஷயம்தான்.  ஏனென்றால் அப்போது இந்தியாவில் பிரிட்டிஷாரின் நேரடி ஆட்சியின் கீழ் செயல்பட்ட மாகாணங்கள் தவிர, நேரடி கட்டுப்பாட்டில் இல்லாத ஐநூறுக்கும் மேலான  சமஸ்தானங்கள் இருந்தன.

முதலில் இந்தியாவை ஆண்டது கிழக்கிந்திய கம்பெனிதான். ஈஸ்ட் இண்டீஸ் என்ற பெயர் பதினாறாம் நூற்றாண்டு முதல் ஐரோப்பாவில் பிரபலம் அடையத் தொடங்கியது. ஐரோப்பியர்கள் ஆசியாவில் இருக்கும் பல நாடுகளையும், அவற்றைத் தாண்டி பசிபிக் கடலில் இருக்கும் பெரும் தீவுக் கூட்டங்களையும் ஈஸ்ட் இண்டீஸ் என்ற பெயரால் அழைத்தார்கள். அதன் படி ஈஸ்ட் இண்டீஸ் என்பது இந்திய துணைக்கண்டம்; தென்கிழக்கு ஆசிய நாடுகள்; பசிபிச் கடலில் இருக்கும் ஆஸ்திரேலியாவோடு இன்னும் பல தீவுக் கூட்டங்கள்; மேலும் சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளையும் குறிக்கும் ஒரு சொல்.

1600 ஆம் ஆண்டு  லண்டனில் தொடங்கப்பட்ட ஈஸ்ட் இண்டியா கம்பெனி தான் ஐரோப்பாவில் இருந்தவற்றில் மிகவும் பழமையானது. இந்த கிழக்கிந்திய கம்பெனியின் பங்குதாரர்களாக பெரும் வியாபாரிகளும், பிரபுக்களும் இருந்தார்கள். எலிசபெத் அரசி அதற்கு  ராஜ உரிமை அளித்தார். இருப்பினும் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு  அதில் பங்குகள் எதுவும் இல்லை. அரசாங்கம் மறைமுகமாக அதனை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.1707 ஆம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனி பிரிட்டிஷ் ஜாயின்ட் ஸ்டாக் கம்பெனி ஆனது. 1757 ஆம் ஆண்டில், கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி இந்தியாவில் உறுதியானது. 1857 இல் நடந்த சிப்பாய் கலகம் வரை கிழகிந்திய கம்பனி ஆட்சி தொடர்ந்தது. 1858 இல் இயற்றப்பட்ட இந்திய அரசாங்க சட்டத்தின் படி, இந்தியா பிரிட்டிஷ் அரசாங்கத்தின் நேரடி ஆளுமையின் கீழ் வந்தது.

பிரிட்டிஷ் ஆட்சியில் இந்தியாவின் நிலப்பரப்பில் சுமார் 60 சதவிகிதம் பிரிட்டிஷாரின் நேரடி ஆளுமையில் இருந்தது. எஞ்சிய 40 சதவிகிதம் 565 பல்வேறு சமஸ்தானங்களின் கீழ் இருந்தது. இந்த சமஸ்தானங்களின் அரசர்கள், அரசர்களாக இருக்க அனுமதிக்கப்பட்டாலும் அவர்களை தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டது பிரிட்டிஷ் அரசு. சுதந்தரத்துக்குப் பிறகு இவற்றுள் அதிக விவாதத்திற்குள்ளான சமஸ்தானங்கள் காஷ்மீர், ஹைதராபாத், தற்போது குஜராத்தில் இருக்கும் ஜுனாகத் ஆகியவை தாம். முஸ்லிம்கள் மிகுதியாக உள்ள காஷ்மீரை ஓர் இந்து அரசர் ஆள்கிறார். இந்துக்கள் மிகுதியாக உள்ள ஹைதராபாத்தையும், ஜுனாகத்தையும்  முஸ்லிம் அரசர்கள் ஆள்கிறார்கள். இவை விசித்திரமான முரண்பாடுகள். அதே வேளையில் இவை இந்தியாவில் இந்துக்களும், முஸ்லிம் மக்களும் எவ்வாறு கலந்து, கலாசாரத்தால் இணைந்து வாழ்ந்தார்கள் என்பதற்கு சாட்சிகளாகவும் உள்ளன.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் அனைத்து சமஸ்தானங்களும் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கீழ் இருப்பதற்கு  ஒப்பந்தம் செய்து கொண்டன. மொத்த சமஸ்தானங்களில்  21 சமஸ்தானங்கள் மட்டுமே  தங்களுக்கென மாநில அரசாங்கம் வைத்திருந்தன. அவற்றிலும் ஹைதராபாத், மைசூர், பரோடா, ஜம்மு – காஷ்மீர் ஆகிய நான்கு மட்டுமே பெரியவை. மற்ற எல்லா சமஸ்தானங்களும் சிறியவை.அவற்றின் அரசர்கள்  இந்திய வைஸ்ராயின் ஒப்பந்தக்காரர்கள் போல செயல்பட்டார்கள்.

இந்தியாவை தன் ஆட்சியின் கீழ் கொண்டு வந்த  பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு எண்ணிக்கையில் அதிகமாக இருக்கும் சமஸ்தானங்களை மேய்ப்பது ஒரு  முக்கியமான வேலையாக இருந்தது. சிறிய ஜமீன்கள் போன்றவை நீங்கலாக இருநூறுக்கும் மேலான சமஸ்தானங்கள் பாதுகாப்புப் படை வைத்திருந்தன. இந்த சமஸ்தானங்களில் இரண்டு மோதிக் கொள்ளும் போதும் ஒரு பெரிய சமஸ்தானம் சிறிய ஒன்றைப் பிடிக்க முயலும் போதும், பிரச்னை எழுந்தது. அந்தச் சமயங்களில் இந்தியாவில்  ஆட்சி செலுத்தும் பிரிட்டிஷ் பேரரசின் அதிகாரம் கேள்விக்குள்ளானது. இன்று வளர்ந்த நாடுகளின் வரிசையில் பிரிட்டன் நீடிப்பதற்குக் காரணமாக இருப்பவை ஆங்கிலேயர்களின் அறிவு, திறமை, உழைப்பு ஆகியவைதாம் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை. அதே வேளையில் இங்கிலாந்து நாட்டின் உண்மையான மண்ணின் மைந்தர்கள் அவர்கள் அல்ல என்பது மறுக்கமுடியாத உண்மை. பிரிட்டானியர் என்ற பெயருக்கும் அவர்கள் உரிமையானவர்கள் அல்ல. ஏனென்றால் இங்கிலாந்தின் பூர்வ குடிகள் செல்டிக் மக்கள். இப்படி தொடக்கம் முதலே பிறரை அடக்கியாளும் குணம் கொண்ட ஆங்கிலேயர்களிடம் இருந்தது. இந்தியாவிலும் இது பிரதிபலித்தது.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

 தொடக்கப்புள்ளிகள்

image026பிரிட்டிஷ் காலனியாதிக்கத்துக்கு எதிராக இந்தியா போராடத் தொடங்கியது. 1930க்கு பிறகு இந்திய விடுதலைப் போராட்டம் முக்கியமான திருப்பத்தைச் சந்தித்தது. மத வேறுபாடு பாராட்டாமல், எல்லோரும் இந்தியர்களாக இணைந்து பிரிட்டிஷாரிடமிருந்து விடுதலை பெறவேண்டும் என்பது மிகுதியான மக்களின் எண்ணம். பெரும்பான்மையினராக இருக்கும் இந்துக்கள், முஸ்லிம்கள்மீது அதிகாரம் செலுத்துவார்கள் என்ற வாதத்தை முன் வைத்தது ஜின்னா தலைமையில் இயங்கிய இந்திய முஸ்லிம் லீக். இந்த வாதத்துக்குள் இருக்கும் சந்தேகம் சில அரசியல் தலைவர்களிடமும் இருந்தது. அதாவது ஆட்சி அதிகாரம் என்று வரும்போது இந்து அரசியல் தலைவர்கள் தங்கள் நலன்களை உதாசீனம் செய்வார்கள்; தங்களை ஒதுக்கிவிடுவார்கள் என்று அவர்கள் எண்ணினார்கள். இந்தச் சந்தேகத்தையும் அச்சத்தையும் முஸ்லிம் மக்களின் முன்பே இவர்கள் வைத்தார்கள். இப்போது அது மக்கள் பிரச்னை ஆகிவிட்டது.

இந்தியர்களே இந்தியாவை ஆளும் அனுபவத்தை அப்போது வாழ்ந்த யாரும் நேரடியாகக் கண்டிருக்கவில்லை. ஜனநாயக ஆட்சியாக இருந்தாலும் அது எப்படி இருக்கும் என்பது சரியாக யாருக்கும் தெரியாது. படிப்பறிவில்லாத பொது மக்களைப் பற்றிக் கேட்கவேவேண்டாம். விடுதலை என்று சொல்லும்போதெல்லாம் ஒரு சாராருக்கு அச்சம் அதிகமான சமயம் அது. வெள்ளையர்களே ஆட்சியைத் தொடரட்டும் என்று கூடச் சிலர் கருதினர். தமிழகத்திலும் அப்படிப்பட்ட குரல்கள் எழுந்தன. பெரிய அரசியல் அமைப்பான இந்திய தேசிய காங்கிரஸ் வட நாட்டவர் பிடியில் உள்ளது. அதுவும் உயர் சாதியினரே அதை நடத்துகிறார்கள். வெள்ளையரிடமிருந்து விடுதலை கிடைக்கும். ஆனால் இவர்களிடமிருந்து மற்றவர்களுக்கு விடுதலை கிடைக்குமா என்று அவர்கள் கேள்வி எழுப்பினார்கள். தலைவர்களுக்கே இப்படிப்பட்ட அச்சங்கள் எழும்போது பாமர மக்களுக்கு எழாமல் இருக்குமா? முஸ்லிம் லீக் கட்சி இதை மேலும் ஊதிப் பெரிதாக்கியது.

1942ம் ஆண்டு இரண்டாம் உலகப்போர் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது இந்தியாவின் முழு ஒத்துழைப்பு பிரிட்டிஷ் அரசாங்கத்துக்குத் தேவைப்பட்டது. ஜப்பான் படை இந்தியாவின் எல்லைகளைத் தொடும் வேளையில் இந்தியாவில் எந்தவிதமான பெரிய கிளர்ச்சியையும் அரசு விரும்பவில்லை. அதனால் 1942 மார்ச் மாதம் ஒரு தூதுக்குழு இந்தியாவுக்கு அனுப்பப்பட்டது. சர் ஸ்டாஃபோர்ட் கிரிப்ஸ் அக்குழுவுக்குத் தலைமை தாங்கினார். அவர் அப்போது வின்ஸ்டன் சர்ச்சிலின் போர்க்கால மந்திரி சபையில் இருந்தார். இந்திய அரசியல் தலைவர்களைச் சந்தித்து தான் கொண்டு வந்த திட்டத்தை விளக்கினார். மாகாணங்களுக்கு டொமினியன் அந்தஸ்து; அவை தனியாக செயல்படுவதற்கு அதிகாரம்; ஒரு பொது அரசமைப்பு சட்டத்தை உருவாக்குவது போன்ற அம்சங்களைக் கொண்டது கிரிப்ஸ் திட்டம். அந்தப் பொது அரசமைப்பு சட்டத்தை அப்படியே பிரிட்டிஷ் அரசங்கம் ஏற்றுக்கொள்ளும் என்பதற்கு உத்தரவாதமில்லை என்ற நிபந்தனையும் அதில் அடங்கியிருந்தது. அதனால் அதை இந்திய அரசியல் தலைவர்கள் ஏற்கவில்லை. திவாலான வங்கியின் ‘பின் தேதியிட்ட காசோலை’ என்று அதை அவர்கள் வர்ணித்தார்கள். எனவே கிரிப்ஸ் தூதுக்குழுவின் முயற்சி தோல்வியில் முடிந்தது. அதைத் தொடர்ந்து 1942 ஆகஸ்ட் 8 ஆம் தேதி காங்கிரஸ் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை அறிவித்தது. விடுதலையை நோக்கி ஒருமுகப்படுத்தபட்ட நாட்டை காந்தி, கப்பலை இயக்கும் கேப்டனைப் போல வழி நடத்தினார்.

இந்தச் சமயத்தில்தான் ஜின்னாவும் அவருடன் இருந்தவர்களும், முஸ்லிம்களுக்கு தனி நாடு அவசியம் என்று தெளிவாக அறிவித்தார்கள். தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி பிரிட்டிஷாருக்கு மட்டுமல்ல காங்கிரஸுக்கும் அழுத்தம் கொடுத்தார்கள். விடுதலை கைக்கு எட்டும் தொலைவில் இருப்பதை உணர்ந்த ஜின்னா பேரம் சீக்கிரம் முடிய வேண்டும் என்று விரும்பினார். 1946 இல் எல்லாம் முற்றிய நிலையில் ஜின்னா இதற்கு மேல் நாங்கள் பொறுக்க முடியாது என்று அனைவருக்கும் காட்ட முடிவெடுத்தார்.

1946 இல் நடைபெற்ற மாகாணத்தேர்தல்களுக்குப் பிறகு வங்காளத்தில் முஸ்லிம் லீக்கின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதே ஆண்டில் பிரிட்டிஷ் அரசின் கேபினட் மிஷன் பிரிட்டிஷ் ஆட்சியின் அதிகாரங்களை இந்தியாவுக்கு மாற்றும் பெரும் பணியில் ஈடுபட்டது. அது இந்தியாவை தற்போதுள்ள பாகிஸ்தான், வங்க தேசம் சேர்த்து விடுதலை பெற்ற டொமினியனாக அறிவிக்க முடிவு செய்தது. அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றது முஸ்லிம் லீக். அது இந்தியாவும், பாகிஸ்தானும் விடுதலை பெற்ற இரண்டு தனி டொமினியன்களாக அறிவிக்கப்பட வேண்டும் என்றது. ஆனால் முஸ்லிம் லீக் கோரிக்கையை காங்கிரஸ் ஏற்க மறுத்தது. அந்த நிகழ்வுகளின் தொடர்ச்சியாக 1946 ஜூலை 27 ஆம் தேதி முஸ்லிம் லீக் பம்பாயில் கூடியது. பிரிட்டிஷ் அரசின் கேபினட் மிஷன் முடிவை அது நிராகரித்தது. மேலும் 1946 ஆகஸ்ட் 16 ஆம் தேதி மிகப்பெரிய நாடு தழுவிய ஹர்த்தாலை நடத்தப் போவதாக அறிவித்தது. அந்த தினத்துக்கு ‘நேரடி நடவடிக்கை நாள்’என்று பெயரிட்டது.

ஹர்த்தால் என்பது மகாத்மா காந்தியால் அறிமுகப்படுத்தப்பட்டது. ஹர்த்தால் என்பது கடையடைப்பு, வேலை நிறுத்தம் போன்றவற்றைக் குறிக்கும் ஒரு குஜராத்திச் சொல். தென்னாப்பிரிக்காவில் இருந்த கறுப்புச் சட்டத்தை எதிர்க்க அங்கிருந்த இந்தியர்களைத் திரட்டி 1906 ஆம் ஆண்டு உலகின் முதல் ஹர்த்தாலை நடத்திக் காட்டினார் காந்தி. முதல் உலகப் போரில் (1914-18) இந்தியா, பிரிட்டிஷ் அரசுக்கு உதவியது. காந்தி முழு ஒத்துழைப்பு நல்கினார். ராணுவத்தில் இந்தியர்களைச் சேர்ப்பதற்கும் உதவினார். களப்பணியாற்றினார். போருக்குப் பிறகு பிரிட்டிஷ் அரசு இந்திய மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் என்று பலருடன் சேர்ந்து அவரும் நம்பினார்.

1919 இல் ரௌலட் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி சந்தேகத்துக்குள்ளான நபர்களை விசாரணையின்றி இரண்டு வருடங்கள் சிறையில் அடைக்கலாம். அது போன்ற இன்னும் பல அடக்குமுறைகளைச் செயல்படுத்த அந்தச் சட்டம் உதவியது. விடுதலைப் போராட்டக்காரர்களைக் குறி வைத்தே அது கொண்டு வரப்பட்டது. அதனால் காந்தி உள்பட அனைவரும் அந்தச் சட்டத்தை எதிர்த்தனர். 1919 மார்ச் 6 ஆம் தேதி நாடு தழுவிய ஹர்த்தால் நடைபெற்றது. அப்போது இந்தியர்கள் அனைவரும் தங்கள் பணிகளை ஒரு நாள் நிறுத்தி உண்ணாவிரதம் இருக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டார்கள். அதுவே இந்தியாவில் காந்தியால் வெற்றிகரமாக நடத்தப்பட்ட முதல் ஹர்த்தால். அது நாட்டின் விடுதலைக்காக சுகபோக வாழ்வையும், நிம்மதியையும் இழக்கத் தயாராக இருந்த பல தரப்பட்ட மக்களால் நிகழ்த்திக்காட்டப்பட்டது. அத்தகைய ஹர்த்தாலை நேரடி நடவடிக்கை நாளன்று நடத்துவதற்குத்தான் இஸ்லாமியர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. கூட்டம் எவ்வளவு கூடினாலும் முந்தைய ஹர்த்தாலின் அனுபவம் இருப்பதால் மக்களைக் கட்டுப்படுத்துவது எளிதாகத்தான் இருக்கும் என்று பொதுவாக பலரும் நினைத்தார்கள். ஆனால் நடந்தது வேறு.

அப்போது ஒன்றுபட்ட வங்காளத்தின் மொத்த மக்கள்தொகையில் இஸ்லாமியர்கள் 56% பேரும், இந்துக்கள் 42% பேரும் இருந்தார்கள். இஸ்லாமியர்கள் மிகுதியாக கிழக்குப் பகுதியில் தான் வசித்தார்கள். கல்கத்தாவை எடுத்துக்கொண்டால் அதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 63%; இஸ்லாமியர்கள் 33%. ஜின்னா ஆகஸ்ட் 16 ஆம் தேதியை நேரடி நடவடிக்கை நாளாக அறிவித்தவுடன் வங்காளத்தின் முதலமைச்சர் (பிரீமியர்) உசைன் சாகித் சுகர்வாடி துடிப்புடன் செயல்பட்டார். அவர் வங்காளத்தின் தலைமைச் செயலாளர் ஆர்.எல். வாக்கரின் அறிவுரைப்படி, ஆகஸ்ட் 16 ஆம் தேதி பொது விடுமுறை என்று அறிவிக்கும்படி வங்காளத்தின் கவர்னர் சர் ஃப்ரெடரிக் பரோசைக் கேட்டுக்கொண்டார். அன்று அரசாங்க அலுவலகங்கள், வியாபார மையங்கள், கடைகள் எல்லாம் மூடப்படவேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ் இந்த அறிவிப்பைக் கடுமையாக எதிர்த்தது. இது இஸ்லாமியர்கள் மிகுதியாக இல்லாத இடங்களிலும் மக்கள் மீது ஹர்த்தாலைத் திணிக்கிறது என்று கூறியது.

வங்காள சட்டசபை காங்கிரஸ் கட்சித் தலைவர் பிரஃபுல்ல சந்திர கோஷ் ஆகஸ்ட் 14 ஆம் தேதி பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது அவர் இந்துக்கள் ஹர்த்தாலில் கலந்து கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். முஸ்லிம் லீக் ஹர்த்தாலை நடத்துவதில் தீவிரம் காட்டியது. முஸ்லிம் நாளிதழ் ‘ஸ்டார் இண்டியா’ நேரடி நடவடிக்கை தினத்தின் நிகழ்ச்சி நிரலை வெளியிட்டது. அதன்படி அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் சேவைகளைத் தவிர மற்ற எல்லாம் நிறுத்தப்படும். அரசு அலுவலகங்களும் தொழிற்சாலைகளும் மூடப்படும். ஊர்வலங்கள் கல்கத்தா, ஹௌரா, ஹூக்ளி, மெட்டியா புரூஸ், 24 பர்கானாக்கள் ஆகிய இடங்களில் இருந்து புறப்பட்டு ஆக்டெர்லோனி நினைவிடத்தில் வந்து சேர வேண்டும். அங்கே முதலமைச்சர் முன்னிலையில் ஒரு பேரணி நடைபெறும்.

நேரடி நடவடிக்கை நாளான ஆகஸ்ட் 16 ஆம் தேதி எல்லாம் திட்டமிட்டபடி நடந்தன. இந்தியாவின் பல பகுதிகளில் நேரடி நடவடிக்கை நாள் பிரச்னை ஏதுமின்றி கடந்து போனது. ஆனால் அது கல்கத்தாவை உலுக்கி எடுத்தது. பகல் 12 மணிக்கு கல்கத்தாவில் பேரணி நடந்தது. நண்பகல் 2 மணிக்குப் பொதுக்கூட்டம் தொடங்கியது. அதற்கு முன்னரே நண்பகல் தொழுகை முடிந்தபின் பல பகுதிகளிலிருந்து முஸ்லிம் மக்கள் அங்கு வந்து குவியத் தொடங்கிவிட்டார்கள். கவாஜா நாசிமுதினும், முதலமைச்சர் சாகித் சுகர்வாடியும் முக்கியப் பேச்சாளர்கள். கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் அங்கே கூடியிருந்தார்கள். பெரும்பாலானவர்கள் இரும்புத் தடிகளையும் கம்புகளையும் வைத்திருந்தார்கள். மத்தியப் புலனாய்வு அதிகாரிகள் கொடுத்த தகவல்கள் அங்கு நடந்தவை பற்றித் தெரிந்துகொள்ள நமக்கு உதவுகின்றன.

நாசிமுதின் அமைதியைப் போதித்து தன் பேச்சை ஆரம்பித்தாலும் அதன் பின் அன்று காலையில் கல்கத்தாவில் தொடங்கிய மதக்கலவரத்தைப் பற்றிப் பேசலானார். காலை 11 மணி வரை அடிபட்டவர்கள் இஸ்லாமியர்கள்தாம் என்றார். மேலும் இஸ்லாமியர்கள் தற்காப்பு நடவடிக்கையாகச் சில செயல்களைச் செய்யவேண்டியிருந்தது என்று கூறினார். உண்மை நிலவரம் அதுவல்ல. லால் பஜார் போலீஸ் தலைமையகம் காலை பத்து மணிக்கு முன்னதாகவே கலவரம் தொடங்கிவிட்டதாகத் தெரிவித்தது. கடைகளைத் திறந்து வைத்திருந்தவர்களைச் சிலர் மிரட்டி மூட வைத்தார்கள். சண்டைகள், கத்திக்குத்து, கல்வீச்சு அனைத்தும் நடந்தன.

அடுத்த 72 மணி நேரத்தில் கல்கத்தாவில் 4,000 பேர் கொல்லப்பட்டார்கள். ஒரு லட்சம் பேர் தங்கள் வீடுகளை இழந்தார்கள். ஆறு நாள்களுக்கு மதக்கலவரம் தொடர்ந்தது. 21 ஆம் தேதி வங்காளம் வைஸ்ராயின் நேரடி ஆளுமையின் கீழ் வந்தது. அங்கு என்னதான் நடந்தது என்பதைச் சொல்ல வேண்டிய பொறுப்பு கவர்னருக்கு உள்ளது. ராணுவ அதிகாரிகளால் நியமிக்கப்பட்ட மத்தியப் புலனாய்வு அதிகாரி ஒருவர் பொதுக்கூட்டம் நடந்த இடத்தில் இருந்தார். அவருடைய தகவல் நம்பகத்தன்மை வாய்ந்தது என்று கவர்னர் பரோஸ் கருதினார். முதலமைச்சர் சாகித் சுகர்வாடி லட்சக்கணக்கானோர் கூடியிருந்த பொதுக் கூட்டத்தில் பேசிய வரி ஒன்றைப் புலனாய்வு அதிகாரியின் குறிப்பில் கண்டு கவர்னர் உள்பட அதிகாரிகள் பலரும் அதிர்ச்சி அடைந்திருக்க வேண்டும். ‘போலிஸும் ராணுவமும் குறுக்கிடாதபடி நான் பார்த்துக் கொள்கிறேன்.’

இதன்மூலமாக ராணுவத்தையும் போலிஸையும் செயல்படவிடாமல் தன்னால் கட்டுப்படுத்தமுடியும் என்பதையே அவர் தெரிவிக்கிறார். அவர் வேறு ஏதேனும் சொல்ல முற்பட்டிருந்தாலும், அங்கிருந்த கூட்டம் ஒன்றைப் புரிந்துக்கொண்டது. கலகம் செய்வதற்கு வெளிப்படையான அறிவிப்பு வந்துவிட்டது. அங்கிருந்து புறப்பட்டவர்கள் நிகழ்த்தி அனைத்தும் அதை நிரூபிப்பதாகவே இருந்தன. அவற்றைத் தொடர்ந்து ஆயுதம் தாங்கிய குண்டர்கள் டிரக்குகளில் வந்து கல்கத்தாவின் ஹாரிசன் ரோட்டில் இறங்கினார்கள். இந்துக்களின் கடைகளைத் துவம்சம் செய்தார்கள்.

பாதிக்கப்பட்ட இந்துக்களும், சீக்கியர்களும் எதிர் தாக்குதல் நடத்த ஆரம்பித்தவுடன் கலவரம் உச்சக் கட்டத்தை அடைந்தது. எதிர்ப் பிரிவு கும்பலிடம் சிக்கும் மனிதர்கள் துண்டு துண்டாக வெட்டிக் கொல்லப்பட்டார்கள். நேரடி நடவடிக்கை நாளான ஆகஸ்ட் 16 ஆம் தேதி தொடங்கி, ஏழு நாள்களுக்கு வன்முறை வெறியாட்டங்கள் நடைபெற்றன. அதனால்தான் அந்த வாரத்திற்கு ‘நீண்ட கத்திகளின் வாரம்’ என்ற பெயர் கொடுக்கப்பட்டது. ஆரம்பத்தில் இந்துக்களும் சீக்கியர்களும் முஸ்லிம்களுக்கு இணையாக கொலைவெறித் தாண்டவம் ஆடினார்கள்.இந்து வன்முறைக் கும்பல், கண்களில் அகப்படும் இஸ்லாமியர்கள் அனைவரையும் வெட்டிக் கொன்றது. கல்வி நிறுவனங்களில் இருந்த மாணவர்களும் வன்முறையில் இருந்து தப்ப முடியவில்லை. வீடுகளுக்குள் இருந்தவர்களும், கல்விச்சாலையில் இருந்தவர்களும் வெளியே இழுத்து வரப்பட்டு வெட்டிக் கொல்லப்பட்டார்கள்.

தாக்குதல் முற்றிய நிலையில் கல்கத்தாவைவிட்டு முஸ்லிம்கள் பலர், அவர்கள் மிகுதியாக இருக்கும் கிழக்கு வங்காளத்துக்கு இடம் பெயர்ந்தார்கள்.
நேரடி நடவடிக்கை நாளுக்கு அடுத்த நாளான ஆகஸ்ட் 17 ஆம் தேதி மேலும் கொடுமையான தினமாக அமைந்தது. கல்கத்தாவுக்கு அருகில் இருக்கும் தொழிற்சாலைகள் மிகுந்த இடம் மெட்டியா புரூஸ். அப்போது கார்டன் ரீச் துணியாலை ஊழியர் சங்கத்தின் தலைவராக இருந்தவர் அப்துல்லா ஃபரூக்கி. இவர் எலியன் மிஸ்திரி என்ற கொடிய இஸ்லாமிய வன்முறையாளரை அழைத்துக்கொண்டு ஒரு கும்பலோடு பிர்லாவின் கேசோராம் பஞ்சாலைக்குள் நுழைந்தார். ஆலைத் தொழிலாளர்கள் பலர் உள்ளே இருந்தார்கள். அவர்களுள் ஒரிசாவைச் சேர்ந்த பலர் இருந்தனர். ஃபரூக்கியின் தூண்டுதலின் பேரில் அங்கிருந்த இந்துத் தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். இறந்தவர்களின் எண்ணிக்கை 500 முதல் 800 வரை இருக்கும். சில முஸ்லிம் தொழிலாளர்களும் அந்தத் தாக்குதலில் இறந்துபோனார்கள்.

முதலமைச்சர் சாகித் சுகர்வாடி சீல்டா ராணுவ ஓய்வு முகாமில் இருக்கும் ராணுவத்தினரை வரவழைக்குமாறு பிரிட்டிஷ் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார். அவர்கள் சற்று மெதுவாகவே செயல்பட்டார்கள். 16ஆம் தேதி இரவு 1.45 மணிக்கு பிறகுதான் ராணுவத்தினர் அனுப்பி வைக்கப்பட்டார்கள்.

ஒரு கட்டத்தில் மக்கள் கல்கத்தாவைவிட்டு உயிருக்குப் பயந்து ஓட ஆரம்பித்தார்கள். ஹௌரா பாலத்தில் மக்கள் கூட்டம் நிரம்பியது. ஹௌரா ரயில் நிலையத்தை அடைந்து, கல்கத்தாவைவிட்டுப் போவதற்காக மக்கள் பாலத்தைக் கடந்தார்கள். ஆனால் கல்கத்தாவைவிட்டு வெளியேறினாலும் மரணம் அவர்களைத் துரத்தி வந்தது.

சத்தியப் பிடிவாதம் கொண்ட அகிம்சாவாதியான காந்தியை மதக்கலவரம் கடுமையான கவலைக்குள்ளாக்கியது.பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று வந்த காந்தி மனம் உடைந்து போனார். அதனால்தான் வேவல் பிரபு காந்தி தன்னிடம் இப்படி ஒரு கருத்தைக் தெரிவித்தார் என்றார். ‘இந்தியா ரத்தத்தில் நீராட விரும்பினால் அப்படியே ஆகட்டும்.’



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

பாகிஸ்தான் அரசியல் வரலாறு / அத்தியாயம் 3

17 அக்டோபர் 1946 தேதியிடப்பட்ட மனு ஒன்று பேகம்கன்ஜ் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்டது.

திருமதி.பாரமாலா ராய்(மறைந்த மோனோ மோகன் ராயின் மனைவி)
கோவிந்தாபூர்,பேகம்கன்ஜ் காவல் நிலையம், 
நவகாளி மாவட்டம்.

‘கடந்த திங்கள் கிழமை அன்று (14-10–1946) சில மனிதர்கள் எங்கள் வீட்டுக்குள் நுழைந்தார்கள். அவர்களை என்னால் அடையாளம் காட்டமுடியும். ஆனால் அவர்களுடைய பெயர்கள் எனக்குத் தெரியாது. ஒருவனின் பெயர் மூசா என்று அறிந்தேன். அவர்கள் அனைவரும் ஆயுதம் வைத்திருந்தார்கள். அவர்கள் வாசலுக்கு வந்தவுடன் நானும் மற்றவர்களும் நடைக்கதவை மூடிவிட்டோம். அவர்கள் கதவுகளை உடைக்க முற்படும்போது நாங்கள் வீட்டின் கூரை மேல் ஏறிவிட்டோம். மேலே இருந்து பார்க்கும்போது சுற்றியிருந்த அறைகளுக்கு அவர்கள் தீ வைப்பது தெரிந்தது. அவை எரிந்து கொண்டிருந்தன. சில ரவுடிகள் நடையின் கூரையில் இருந்த எங்களில் சிலரை இழுத்துக் கீழே போட்டார்கள். நாங்கள் வீட்டின் கூரைக்கு ஏறிக் கொண்டிருந்தபோது மேலிருந்து எங்கள் வீட்டு ஆண்களைப் பார்த்தோம். அவர்கள் கட்டி வைக்கப்பட்டிருந்தார்கள். அவர்கள் உதைக்கப்பட்டார்கள்; கத்தியால் குத்தப்பட்டார்கள்; ஈட்டியால் தாக்கப்பட்டார்கள்.

கீழே இருந்த பெண்களும் குழந்தைகளும் குளிக்கும் இடத்துக்குக் கொண்டுச் செல்லப்பட்டார்கள். அவர்கள் ஏற்கெனவே என் கணவரின் மூத்த சகோதரரை பலமாகத் தாக்கியிருந்தார்கள். தலையில் அடிபட்ட அவர் எங்களுடன்தான் இருந்தார். அவர் மனைவி அவருக்கு முதலுதவி செய்ய முயன்று கொண்டிருந்தாள். குண்டர்கள் அவரைக் கீழே இழுத்தார்கள். அவரைத் தூக்கிச் சென்று துர்கா பூஜைக்காகப் போடப்பட்டிருந்த சிறிய அலங்கார பந்தலுக்குக் கீழே எரிந்து கொண்டிருந்த தீயில் உயிருடன் வீசினார்கள். இன்னும் பலரை அவ்வாறு கொன்றார்கள். எங்களோடு இருந்த என் கணவரின் தம்பி ரமணி மோகனை அழைத்தார்கள். அவரை லத்தியால் அடித்து நெருப்புக்குள் வீசினார்கள். இப்போது குளிக்கும் இடத்தின் அருகில் படிகளின் மேல் இருந்த எங்களுக்கு துர்கா மண்டபத்தின் முன்பகுதி சரியாகத் தெரியவில்லை. ஒரு பெரிய கும்பல் அங்கு இருந்தது. ஓரளவு எங்களால் அங்கு என்ன நடக்கிறது என்று பார்க்க முடிந்தது. எங்கள் குடும்பத்தினர் பலரும் தீக்குள் எறியப்பட்டார்கள். தீக்காயங்களுடன் வெளியே வந்தவர்களைக் குண்டர்கள் மீண்டும் தீக்குள் தள்ளினார்கள்.

அண்டை வீட்டுக்காரர் பரத் பவுமிக் இழுத்து வரப்பட்டு துர்கா மண்டபத்தின் முன்னே கொலை செய்யப்பட்டார். இந்தப் பேய்த்தனமான அட்டூழியங்களைப் பார்த்து சில பெண்கள் மயக்கமுற்று விழுந்தார்கள். அதன் காரணமாக நாங்கள் பவுமிக்கின் வீட்டுக்கு அழைத்துச் செல்லப் பட்டோம். இதனிடையே எங்கள் நகைகளையும் அணிகலன்களையும் அவர்கள் பறித்துக்கொண்டார்கள். அப்போது எங்களுடைய மூக்கும் காதுகளும் காயமடைந்தன. ஆடைகளும் கிழித்தெறியப் பட்டன. ஒரு பெண் நிர்வாணமாக்கப்பட்டாள். பட்டரிபாரியைச் சேர்ந்தவர்கள் எங்களை பவுமிக்கின் தோட்டத்தில் தங்க வைத்தார்கள். அதன்பின் நாங்கள் பட்டரிபாரியில் தங்க வைக்கப்பட்டோம். நேற்று நண்பகல் நாங்கள் போலீஸாரால் மீட்கப்பட்டு, நவகாளி நகரத்துக்கு அழைத்து வரப்பட்டோம். மற்ற பெண்களின் நிலை பற்றி எங்களுக்குத் தெரியவில்லை. நாங்கள் 17 பேர் பட்டரிபாரியில் இருந்து மீட்கப்பட்டோம். இதில் கொடுக்கப்பட்ட அனைத்தும் என்னிடம் மீண்டும் படித்துக் காட்டப்பட்டது. அதை நான் நன்றாக புரிந்து கொண்ட பிறகு கையொப்பமிட்டேன்.

உண்மையுள்ள,

திருமதி பாரமாலா ராய்
நவகாளி
17-10-1946

இது போன்ற எத்தனையோ புகார்கள் காவல் நிலையங்களில் கொடுக்கப்பட்டன. மதமாற்றம் என்பது மிகவும் கொடிய தண்டனை. அதை பலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஒருவர் மதம் மாற மறுக்கிறார். அவர் புதல்வர்களும் மதம் மாறமுடியாது என்கிறார்கள். உடனே மிரட்டிக் கொண்டிருக்கும் கும்பல் அவர் மகன்களை ஒவ்வொருவராக கழுத்தை அறுத்துக் கொல்கிறது. இவ்வாறு வன்முறையாளர்கள் காட்டுமிராண்டித்தனத்தின் உச்சத்துக்கே சென்றார்கள்.

நவகாளி காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட மற்றொரு புகார்:

“நான் இந்த இடத்துக்கு வருவதற்கு 15 நாள்களுக்கு முன்னதாக இது நடந்தது. ஒரு நாள் இரவு முஸ்லிம் வன்முறைக் கும்பல் ஒன்று என் வீட்டுக்கு வந்து முஸ்லிம் லீகுக்கு நன்கொடை கொடுக்கும்படி கூறியது. கொடுக்கவில்லை என்றால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியது. நான் 100 ரூபாய் கொடுத்து அந்தக் கூட்டத்தை விரட்டிவிட்டேன். அதன் பிறகு ஒரு நாள் அந்தக் கும்பல் என் கடையை சூறையாடியது. அதிலிருந்த அனைத்தையும் எடுத்துச் சென்றுவிட்டது. இனி அங்கு வாழ முடியாது என்ற நிலையில் நான், என் குடும்பத்தை அழைத்துக்கொண்டு கல்கத்தா வந்துவிட்டேன். இதேபோல இன்னும் பல குடும்பங்கள் உடமைகளை முற்றிலுமாக இழந்துவிட்டன. இழப்பீட்டுக்காக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும், துரதிர்ஷ்டவசமாக அவர்கள் எதுவும் செய்யவில்லை.

பக்கத்து கிராமங்களில் இந்துக்கள் எரித்துக் கொல்லப்பட்டார்கள். குழந்தைகள் தீக்குள் உயிரோடு வீசப்பட்டார்கள். பலர் மதமாற்றம் செய்யப்பட்டார்கள். அவர்களுக்கு மாட்டு இறைச்சி உணவாகக் கொடுக்கப்பட்டது. பெண்கள் கடத்தப்பட்டார்கள். வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டார்கள். மேலும் அந்தப் பெண்களின் தொடையின் மேல்பகுதி முதல் வயிறு வரை உள்ள பகுதியும், மார்பகங்களும் வெட்டி எறியப்பட்டன. கடத்திச் செல்லப்பட்ட பெண்களில் எங்கள் உறவினர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. எங்கள் சஹா குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருத்தியை ரவுடிகளிடமிருந்து காப்பாற்ற முற்பட்ட அவள் அண்ணனின் கை,கால் தலை எல்லாம் பலமாக காயம் அடைந்தன. இவற்றையெல்லாம் பார்த்த பின், இன்னும் பலவற்றைக் கேள்விப்பட்டபின் இந்து மகா சபையின் உதவியோடு சந்த்பூர் நிவாரண முகாமுக்கு வந்தோம். இப்போது காங்கிரஸ் கமிட்டி 2 வது வார்டில் இருக்கிறேன்.

உண்மையுள்ள
பிரியா நாத் சென்
உஜியல்பூர் காவல் நிலையம்
சதார், நவகாளி மாவட்டம்.

வீடு வீடாகச் சென்ற வன்முறையாளர்கள் முஸ்லிம் லீகுக்கு நன்கொடை கேட்டு மிரட்டுவது பல இடங்களில் நடந்தது. பேசிக்கொண்டிருக்கும்போது வீட்டில் உள்ள முதியவர் தலை வெட்டப்படுகிறது. அப்போது அங்கிருந்த தன் தந்தையைக் காப்பாற்ற ஓர் இளம் பெண் பணம், நகை ஆகியவற்றை எடுத்துக் கொண்டு வெளியே வருகிறாள். ஒரு கையால் அவளிடம் இருந்தவற்றை வாங்கும் ஒருவன், மறுகையில் வைத்திருந்த ஆயுதத்தால் அவள் தந்தைக்கு மரண அடி கொடுத்து விட்டுப் போகிறான். இப்படி எத்தனையோ நிகழ்ச்சிகள் நடந்தன. தாங்கள் பிறந்து வளர்ந்த ஊரில் அடிமைகளை விட மோசமான நிலையில் மக்கள் அவதிப்பட்டார்கள்.

நவகாளி வன்முறையை எப்படிச் சிலர் திட்டமிட்டு செயல்படுத்தினார்கள் என்பதை மாடர்ன் ரெவ்யூ பத்திரிகை தொகுத்து எழுதியது. அது அதிர்ச்சியளிக்கக்கூடியதாக இருந்தது. கல்கத்தா படுகொலைகளுக்கும் நவகாளி படுகொலைகளுக்கும் வேறுபாடு இருந்தது. அதாவது கல்கத்தா படுகொலைகள் நிகழ்வதற்குக் காரணமானவர்கள் புதிய அணுகுமுறையை நவகாளியில் கையாண்டார்கள். முதலில் முஸ்லிம் லீக் அதிகாரத்தில் இருந்த வங்காள அரசு, பத்திரிகை செய்திகளைக் கடுமையான தணிக்கைக்கு உட்படுத்தியது. ஏனென்றால் கல்கத்தா படுகொலைகள் பற்றி அப்போது பரவலாக செய்திகள் வெளியாயின. அதன்மூலமாக நடந்தவற்றில் பல வெளிச்சத்துக்கு வந்து, நாடு முழுவதும் மக்கள் அவற்றை அறிந்துகொண்டார்கள். வங்காள அரசு பதற்றத்தைத் தவிர்ப்பதற்கும், மதக்கலவரம் தொடராமல் இருப்பதற்கும் பத்திரிகைத் தணிக்கை அவசியம் என்றது. தபால் நிலையங்களுக்கு வந்த கடிதங்கள்கூட ஆய்வுக்கு பின்னே தான் அனுப்பப்பட்டன. இந்தத் தடைகளை எல்லாம் மீறி வங்காளத்தின் கிழக்கு மாவட்டங்களில் இருந்து வன்முறை தொடர்பான செய்திகள் கசிந்து வந்துகொண்டே இருந்தன. ஆட்சியாளர்கள் உண்மையில் மக்களின் அச்சத்தைக் குறைப்பதற்கோ, வன்முறைகளைத் தடுப்பதற்கோ எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்களுக்கு ஆதரவாக சில பிரிட்டிஷ் ஐ.சி.எஸ் அதிகாரிகளும் செயல்பட்டார்கள்.

கல்கத்தாவில் இருந்து நவகாளிக்கு ஒன்றரை மணி நேரத்தில் விமானம் மூலம் சென்று விடலாம்.இருந்த போதும் மீட்புப்பணிகள் நடப்பதற்கும், உதவிகள் கிடைப்பதற்கும் பல நாள்கள் ஆயின. பத்திரிகை ஊடகம் முழுவதுமாகக் கட்டுப்படுத்தப்பட்டது. காவல் துறை அதிகாரிகளும் தற்காலிக நீதிபதியும் முஸ்லிம்கள். அக்டோபர் 10 முதல் 14 ஆம் தேதிவரை வன்முறையாளர்களுக்குப் போதுமான அவகாசம் அளிக்கப்பட்டது. அப்போது அவர்கள் முடிந்த அளவுக்கு எல்லா தடயங்களையும், ஆதாரங்களையும் அழித்துவிட்டார்கள். அவர்களிடம் சிக்கிக்கொண்டவர்கள் வாய் திறக்க முடியாதபடி அடக்கி ஒடுக்கி வைக்கப்பட்டார்கள்.
ஒன்றை நடக்க வைப்பதற்கு சில வாதங்கள் வேண்டும். அந்த வாதங்களுக்கு சில நிரூபணங்கள் தேவைப்படுகின்றன. அவை கண்முன்னே நடந்த நிகழ்வுகளாக இருக்கும்போது யாராலும் மறுக்க முடியாது. பல்லாயிரக்கணக்கான மக்களுக்கும் அவர்களின் ஆழமான உணர்வுகளுக்கும் அவற்றில் தொடர்பு இருக்கும் பட்சத்தில் காரணிகள் நியாயங்கள் ஆகிவிடுகின்றன. எனவே இந்தியா பிரிக்கப் படவேண்டியது தவிர்க்க முடியாததாகிவிட்டது.

நவகாளி, திப்பேரா அட்டூழியங்களுக்குப் பிறகு தலைவர்கள் பலரும் நம்பிக்கை இழந்தார்கள். அவர்களில் பிரிவினையை விரும்பாத முஸ்லிம் தலைவர்களும் அடங்குவார்கள். வங்காள கவர்னர் பரோஸ் இனி இந்துக்களும், முஸ்லிம்களும் இணைந்து வாழ்வது சாத்தியமே இல்லை என்று கருதினார் அதனால் தான் அவர், ‘அங்கு நம்பிக்கையை மீண்டும் கொண்டு வருவதென்பது மிகக்கடுமையான நீண்டகாலம் பிடிக்கும் செயல் என்பதை என்னால் உணர முடிகிறது. முஸ்லிம் சிறுத்தையும், இந்துக் குழந்தையும் அருகருகே இருக்க அந்தப் பகுதியில் இன்னும் ஒரு டஜன் காந்திகள் தேவைப்படுவார்கள்.’ என்று கூறினார்.

ஆனால் ஒருவர் மட்டும் இன்னும் இந்துக்களும் முஸ்லிம்களும் சேர்ந்து வாழமுடியும் என்று நம்பினார். அவர்தான் மகாத்மா காந்தி. 7 நவம்பர் 1946 அன்று காந்தி நவகாளியின் சவுமுஹானி ரயில் நிலையம் வந்து சேர்ந்தார். அது ஒரு வியாபார மையம். அங்கு ஜோகேந்திர மஜும்தார் வீட்டில் இரண்டு நாள்கள் தங்கியிருந்தார். அதன் பிறகு உயிர்களுக்கும், உடைமைகளுக்கும் ஏற்பட்ட மிகப்பெரிய அழிவை நேரடியாகப் பார்த்து அறிவதற்காக தத்தபாராவை நோக்கிப் பயணமானார். கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் அவர் வன்முறைகள் நிகழ்த்தப்பட்ட பகுதிகளில் தங்கியிருந்தார். கிராமம் கிராமமாகச் சென்றார். இந்துக்களுடனும் முஸ்லிம்களுடனும் பேசினார்; பிரார்த்தனை செய்தார். சமாதானத்தை அவர்களிடம் விதைக்க முயன்றார்.
ஏழு வாரங்களில் 116 மைல்கள் செருப்பு அணியாத பாதங்களால் நடந்தே பயணித்து 47 கிராமங்களுக்குச் சென்றார். குடிசை குடிசையாகச் சென்று மக்களைச் சந்தித்தார். வன்முறையின்போது கொலையில் ஈடுபட்ட முஸ்லிம்களின் வீடுகளில் போய் அமர்ந்தார். அவர்களுக்கு தர்மசங்கடம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் அப்போதுதான் புரிந்தது. கத்தியால் குத்தியவர்களை அன்பால் குத்தினார் காந்தி என்றார்கள். ராஜேந்திரலாலின் வீடு கொளுத்தப்பட்டபோது கொல்லப்பட்ட ஆண்களின் தலைகள் கொய்யப்பட்டன. தலையற்ற உடல்கள் கோணிகளில் கட்டப்பட்டு சிற்றாறுகளில் இறக்கப்பட்டன.க õந்தி அங்கு சென்றபோது படகுக்காரர்கள் துணையோடு ஒரு கோணி வெளியே எடுக்கப்பட்டது. அதில் பதினைந்து தலை இல்லாத உடல்கள் இருந்தன.

எரிக்கப்பட்ட ராஜேந்திர லாலின் வீட்டை காந்தி பார்வையிட்டார். அதில் சாம்பலுக்கு அடியிலிருந்து ஒரு குழந்தையின் மண்டை ஓட்டைக் கண்டெடுத்தார். அதுவே இந்தியா பலி கொடுத்த கடைசி உயிராக இருக்கட்டும் என்று அவர் நினைத்திருக்கலாம். ஆனால் தேசப் பிரிவினையின்போது பல லட்சக்கணக்கான உயிர்களை மதக்கலவரம் காவு கொள்ள இருக்கிறது என்பதை அவர் உள்பட பலரும் அப்போது கற்பனை செய்து பார்த்திருக்க மாட்டார்கள்.

விசாரணைக் கமிஷன் அறிக்கைகளைத் தூக்கி வங்காள அரசு கிடப்பில் போட்டது. மத்திய பிரிட்டிஷ் அரசு வன்முறைக்குக் காரணமானவர்கள் அனைவரையும் தண்டிக்கவில்லை. போலீஸ் துறையும், அதிகாரிகளும், ராணுவமும் செய்ய முடியாதவற்றை காந்தி என்ற தனி மனிதர் செய்து காட்டினார். மனிதனின் உள்ளம் தான் அவர் அதிகமாக நம்பிக்கை வைத்த நீதிமன்றம். அங்கே கடவுள் சாட்சியாக ஒருவருடைய மனசாட்சி வெளிப்படையாக உண்மையைப் பேச, மனிதன் ஒருவன் தன் குற்றத்தை ஒப்புக்கொள்ளும்போது வழக்கு முடியும். நவகாளியில் அவருடைய புனிதப்பயணம் முழு வெற்றி அடையவில்லை என்பது ஒரு சாராரின் கருத்து. அவ்வாறு இருக்குமானால் எது மனித வாழ்க்கையின் வெற்றி, எது தோல்வி என்ற கேள்விக்கும் நாம் விடை காணவேண்டும். அப்போதுதான் நாம் தெரிவிக்கும் கருத்துக்கு உண்மையான அர்த்தம் இருக்கும். துவேஷத்தை வளர்ப்பவர்களுக்கு கலவர பூமி பயிற்சிக்களம். இன்னும் பல போர்களை நடத்த அவர்களுக்கு நிறைய சாட்சிகள் கிடைத்தன. காந்தி அந்த கொலைக் களத்தில் சமாதான விதைகளை விதைத்தார். அவை வளர்ந்து இந்தியாவை நேசிப்பவர்களுக்கு ஆதாரமாக உள்ளன.

ஹொரேஸ் அலெக்ஸாண்டர் இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு சமாதானப் போராளி. ஆசிரியர்; எழுத்தாளர் ; பறவையியலாளர் போன்ற பல பரிமாணங்களைக் கொண்டவர். இந்தியாவின் மிகச்சிறந்த நண்பர் என்று காந்தியால் அழைக்கப்பட்டவர். காந்திக்கும், இர்வின் பிரபுவுக்கும் இடையே தூதராக செயல்படுவதற்காக அவர் இந்தியா வந்தார். 1931 ஆம் ஆண்டு காந்தியை இங்கிலாந்தில் நடந்த வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொள்ள வைத்தவர் அவர் தான்.

1947 ஆகஸ்ட் 15 இல் இந்தியாவுக்கு சுதந்தரம் என்று முடிவாகிவிட்ட நிலையில் அதற்குச் சில நாள்களுக்கு முன்னதாக அலெக்ஸாண்டரை தான் சந்திக்க விரும்புவதாக காந்தி கடிதம் எழுதினார். காந்தியின் விருப்பப்படி அவர் இந்தியா வந்து பிகாரில் இருந்த காந்தியைச் சந்தித்தார். இருவரும் அதன் பின் கல்கத்தா சென்றார்கள். அங்கே தன் ஆசிரமத் தொண்டர் ஒருவர் வீட்டில் சில இரவுகள் தங்கி இருக்க காந்தி திட்டமிட்டிருந்தார். ஆகஸ்ட் 14 ஆம் தேதி இருவரும் கிழக்கு வங்காளம் செல்ல முடிவு செய்திருந்தார்கள். ஆனால் கல்கத்தாவில் இருந்த முஸ்லிம்கள் சிலர் காந்தி சுதந்தரம் கிடைக்கும் நாளில் கல்கத்தாவில் இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள். அவர் இருந்தால் இந்து முஸ்லிம் கலவரம் கல்கத்தாவில் மீண்டும் வெடிக்காது என்று அவர்கள் நம்பினார்கள். காந்தி முதலில் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. அதற்குப் பிறகு கிழக்கு வங்காளத்தில் இருக்கும் இந்துக்களுக்கு சில முக்கிய முஸ்லிம் பிரமுகர்கள் பாதுகாப்பு தருவதாக உறுதியளித்த பின் அவர்கள் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டார்.

கல்கத்தாவில் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சியாகத் தன்னை ‘கிழட்டுப் பொய்யர்’ என்று வர்ணித்த சுகர்வாடியை காந்தி அழைத்தார். அப்போது அவர் வங்காளத்தின் முதலமைச்சர் பதவியில் இல்லை. இருவரும் தங்கியிருக்க கல்கத்தா கலவரத்தில் காலி செய்யப்பட்ட முஸ்லிம் ஒருவரின் வீடு தெரிவு செய்யப்பட்டது. அது பெல்காத்தில் இருந்தது.

ஆகஸ்ட் 13ஆம் தேதி நண்பகல், அலெக்ஸாண்டர் ஒரு நண்பரின் உதவியோடு அங்கு சென்றார். வீட்டைச் சுற்றி இந்து இளைஞர்கள் சிலர் கூட்டமாக நின்று கொண்டிருந்தார்கள். காந்தி நண்பர் ஒருவர் வந்திருக்கிறார் என்று அறிந்ததும் அவர்கள் காந்தியை கல்கத்தாவை விட்டு வெளியேறுமாறு கோஷமிட்டார்கள். அவர்களில் சிலர் காந்தியுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்கள். அவர் இந்தியாவில் இருக்கும் முஸ்லிம்கள் வெளியேறி உருவாகயிருக்கும் பாகிஸ்தானுக்குச் செல்ல வேண்டும் என்றார்கள். காந்தி அந்த இளைஞர்களிடம் மலரவிருக்கும் சுதந்தர இந்தியா இவ்வாறு பிறக்கக்கூடாது என்றார். மேலும் இந்தியா சகிப்புத்தன்மையும், பெருந்தன்மையும் கொண்ட பூமி என்று எடுத்துக் கூறி அவர்களை அனுப்பி வைத்தார். அமைதியை ஏற்படுத்தும் அவர் முயற்சிக்கு தாங்கள் முழு ஒத்துழைப்பு நல்குவதாக அவர்கள் கூறிவிட்டுப் போனார்கள்.

மறு நாள் மாலை பிரார்த்தனைக் கூட்டத்தில் சுகர்வாடி இல்லாததை சில இளைஞர்கள் கவனித்து விட்டார்கள். அவர் எப்படியும் வீட்டுக்குள் தான் இருக்க வேண்டும் என்று கருதினார்கள். சுகர்வாடியின் ரத்தம் வேண்டும் என்று அவர்கள் கத்தினார்கள். பிரார்த்தனை முடிந்தபிறகு காந்தி வீட்டுக்குள் ஜன்னலின் அருகே நின்றார். ஜன்னல் கதவுகளைத் திறந்து வெளியே நின்றிருந்தவர்களைப் பார்த்து தாழ்ந்த குரலில் பேசினார். அவர்கள் நடவடிக்கைகளுக்காக கடிந்து கொண்டார். சுகர்வாடியின் பழைய செயல்களைப் பற்றி அவர்கள் என்ன நினைத்தாலும் பரவாயில்லை என்றார். இப்போது சுகர்வாடி அமைதியை ஏற்படுத்தும் முயற்சியில் தன்னை இணைத்துக்கொள்ளத் தயாராக இருப்பதாகக் கூறினார். சுகர்வாடியை காந்தி தன் முன்னே வரவழைத்தார். அப்போது அவர் தோளை காந்தி தன் கையால் பற்றியிருந்தார். கூட்டத்தில் இருந்தவர்கள் ‘கடந்த ஆண்டில் (ஆகஸ்ட் 1946) நடந்த கல்கத்தா படுகொலைகளுக்கு நீங்கள் பொறுப்பேற்றுக் கொள்கிறீர்களா?’ என்று ஆவேசமாகக் கேட்டார்கள்.

அவர் உடனே, ‘ஆமாம். நடந்தவற்றுக்கு நான் பொறுப்பேற்றுக்கொள்கிறேன். மேலும் அவற்றுக்காக நான் வெட்கப்படுகிறேன்’ என்றார்.

அதன் பின்னர் காந்தி, ‘இந்தச் சூழலை தூய்மைப்படுத்த பொது மக்கள் மத்தியில் செய்த குற்றத்தை ஒப்புக்கொள்வதைத் தவிர சிறந்த ஒன்று இருக்கமுடியாது. அந்தக் கணத்தில் சுகர்வாடி அவர்களை வென்று விட்டார்’ என்று அலெக்ஸாண்டரிடம் கூறினார். இவை எல்லாவற்றையும் அலெக்ஸாண்டர் தன் எழுத்தில் விவரித்திருக்கிறார். சுதந்தரத்துக்கு முன்பு மக்களின் மனநிலை எவ்வாறு இருந்தது என்பதை அறிந்து கொள்ள இவை நமக்கு உதவுகின்றன.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

முதல் போர் தொடங்கியது

இந்தியா பாகிஸ்தான் போர்கள் / அத்தியாயம் 4

partition 8இரு மருங்கும் ஊசி இலை மரங்கள் நிறைந்திருக்கும் அந்த  அழகிய சாலை காஷ்மீரின் வாசலான பாரமுல்லாவில் அமைந்துள்ளது. அது பாரமுல்லாவின் கத்தோலிக்கப் பள்ளி, விடுதி, புனித ஜோசப் மருத்துவமனை ஆகியவற்றைக் கொண்ட வளாகத்தை நோக்கி நீள்கிறது. அதில் ஒருவர் மோட்டார் சைக்கிளில் விரைந்து செல்கிறார். அவர் முகத்தில் ஒரு படபடப்பு. அவர் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியிலும் ஏற்படும் விளைவுகளை நினைத்து அவர் இதயம் துடித்தபடி இருக்க, வேகமாக வண்டியைச் செலுத்துகிறார்.

1947 அக்டோபர் 27 ஆம் தேதி பாரமுல்லாவில் ஒரு கொடிய நாளாக விடிந்தது. மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தவர் பெயர் மேஜர் சௌரப் ஹயத் கான். அவர் முன்னாள் பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தின் பதான் அதிகாரி. இன்னும் சில நாள்களில், புதிதாக உருவான பாகிஸ்தானின் ராணுவ அதிகாரியாக பணியமர்த்தப்பட  உள்ளார். வளாகத்துக்குள் நுழைந்து மருத்துவமனை தோட்டத்துக்குச்  செல்கிறார். மோட்டார் சைக்கிளின் என்ஜினை  நிறுத்தி விட்டு அதிலிருந்து இறங்குகிறார். அது ஒரு புறம் விழ  கத்தியபடி வேகமாக ஓடுகிறார். “ நிறுத்துங்கள். நிறுத்துங்கள்.அவர்களைக் கொல்லாதீர்கள்”

அங்கே வரிசையாக பலர் நின்று கொண்டிருக்கிறார்கள். அவர் வருவதற்கு முன்பு அங்கு நுழைந்த இஸ்லாமிய பதான் பழங்குடி முஜாஹிதின் படை துப்பாக்கி முனையில் அவர்களை மிரட்டிக் கொண்டிருக்கிறது. முஜாஹிதின் என்பது பெர்ஷிய அரேபிய  பன்மைச் சொல். இது ஜிஹாத் போரில் பங்கு பெறும் முஸ்லிம் கொரில்லா வீரர்களைக் குறிக்கிறது. பெண் மருத்துவர் திருமதி பேரிடோ, நான்கு  கன்னிகாஸ்திரிகள் ஆகியோர் நடுங்கியபடி அங்கு  நின்று கொண்டிருந்தார்கள். அவர்களிடம் இருந்த கைக்கடிகாரம்,மூக்குக்கண்ணாடி போன்ற பொருள்களை வந்தவர்கள் பிடுங்கிக் கொண்டார்கள்.  அவர்களை எப்படியாவது அந்த மனித வேட்டையாடுபவர்களிடமிருந்து காப்பாற்றுவதே அவர் முதல் வேலை. ஆனால் அவர் அங்கு வருவதற்கு முன்னால் மருத்துவமனையில் இருந்த பலர் கொலை செய்யப்பட்டு விட்டார்கள்.

பழங்குடிப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் மருத்துவரின் கணவர் ஜோஸ் பேரிடோ;மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருமதி கபூர்; திருமதி டைக்ஸ்; அவர் கணவர் கர்னல் டைக்ஸ்; அன்னை திரிசாலினா, பிலோமினா ஆகியோர் அடங்குவார்கள். கர்னல் டைக்ஸ் விடுமுறையின்போது தில்லியிலிருந்து அங்கு வந்திருந்தார். அன்னை திரிசாலினா இருபத்து ஒன்பது வயது நிரம்பியவர். சில வாரங்களுக்கு முன் தான் ஸ்பெயின் நாட்டிலிருந்து அங்கு வந்தார். திருமதி டைக்ஸ் புதிதாக தான் பெற்றெடுத்த ஆண் குழந்தையோடு இங்கிலாந்து புறப்படத் தயாராக இருந்தவர். அந்தக் குழந்தை அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பியது. பாகிஸ்தான் ஏவிய படை மருத்துவமனையில் இருந்த உயிர் காக்கும் பொருள்களைச் சூறையாடிவிட்டு, அதைச் சூழ்ந்து கொண்டிருந்தது. இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான  முதல் போர் தொடங்கி விட்டதை அறிவித்துக் கொண்டிருந்தது அது.

இருபத்து நான்கு மணி நேரத்துக்குப் பிறகு கர்னல் டைக்ஸும், அன்னை திரிசாலினாவும் குண்டடிப்பட்ட காயத்தினால் இறந்து போனார்கள். மேஜர் சௌரப் ஹயத் கான் அட்டகாசம் செய்து கொண்டிருந்தவர்களில் தனது நம்பிக்கைக்குரிய சில பதான் வீரர்களோடு உயிர் பிழைத்தவர்களுக்குப் பாதுகாப்பாக இருந்தார். பெஷாவரில்  பள்ளி நாள்களில் கன்னிகாஸ்திரிகளே அவருக்குக் கல்வி புகட்டினார்கள். அப்போது அவர்கள் காட்டிய அன்பை அவரால்  மறக்க முடியவில்லை . அதனால்தான் கன்னிகாஸ்திரிகளையும், அங்கிருந்த மற்றவர்களையும் தான் காப்பாற்றியதாகப் பின்னாளில் அவர் கூறியிருக்கிறார்.

ஆன்ரூ ஒயிட் ஹெட் , ‘எ மிஷன் இன் காஷ்மீர்’ (2007) என்ற தமது நூலில் இந்திய பாகிஸ்தான் முதல் போர் தொடங்கிய போது பாரமுல்லாவில் நடந்தவற்றை படம் பிடித்துக் காட்டியிருக்கிறார். அங்கு நடந்த  படுகொலைகளைக் கண்டவர்களின் நேரடி வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளார்.  ஒரு பிபிசி நிருபராக 1992 ஆம் ஆண்டு இந்தியா வந்த அவர், பல இடங்களுக்குப் பயணம் செய்து பலரைப் பேட்டி கண்டு உண்மைத் தகவல்களைத் திரட்டி எழுதியுள்ளார்.

பழங்குடிப் படை தாக்குதலின் போது உயிர் பிழைத்தவர் சகோதரி எமிலா. அவர் தாய் தந்தையரை இழந்த குழந்தையை வைத்துக் கொண்டு அதைக் காப்பாற்ற போராடி இருக்கிறார். மேலும் டைக்ஸ் தம்பதியினரின், இரண்டு வயதும், நான்கு வயதும் நிரம்பிய இரண்டு மகன்களையும் காப்பாற்றினார். மேஜர் சௌரப் ஹயத் கான் முதலில் உயிர் தப்பியவர்களுக்குப் பாதுகாப்பாக இருந்துள்ளார். ஆனால் அதற்குப் பிறகும் கொலைகள் தொடர்ந்தன. உயிர் தப்பியவர்களில் செவிலியர்கள், கன்னிகாஸ்திரிகள், போதகர்கள், நோயாளிகள், உள்ளூர் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், குழந்தைகள் என கிட்டத்தட்ட எண்பது பேர் இருந்தார்கள். அவர்களுள் புதிதாகப் பிறந்த குழந்தையும் அடங்கும். அவர்கள் அனைவரும் மருத்துவமனையின் ஒரு சிறிய வார்டில் ஒளிந்திருந்தார்கள். பசியோடும், பயத்தோடும் பதினோரு நாள்களை அங்கே கழித்தார்கள்.

லாரிகளில் பாரமுல்லா வந்து இறங்கிய சுமார் 5000 பேர் கொண்ட  பழங்குடிப் படை  இரண்டு நாள்கள் வீடுகளைச் சூறையாடியது. பலர் கொல்லப்பட்டார்கள். கோயில்கள் உடைக்கப்பட்டன. பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளானார்கள். அவர்களுள் ஐரோப்பிய கன்னிகாஸ்திரிகளும் அடங்குவார்கள். 10,000 பேர் தங்கள் வீடுகளைவிட்டு ஓடினார்கள். கொள்ளையடிப்பதிலும் பெண்களைக் கடத்துவதிலும் ஈடுபட்டிருந்த பழங்குடிப் படை அங்கிருந்து சுமார் 53 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த ஸ்ரீ நகருக்குச் செல்லவில்லை. அவர்கள் அங்கு சென்றிருந்தால் விமான தளம் எளிதாக அவர்கள் வசம் வந்திருக்கும். ஏனென்றால் அங்கு பாதுகாப்புக்கு யாரும் இல்லை.

பாகிஸ்தான் போரில் இறங்குகிறது என்றால் அதற்கான காரணங்களை ஆராய வேண்டியதில்லை. ஏனென்றால் பல சமயங்களில் அந்தக்  காரணங்களை உருவாக்குபவர்களும் அவர்களாகத்தான் இருப்பார்கள். 1947 இல்   சுதந்தரம் பெற்ற சமஸ்தானமாக காஷ்மீர் இருக்கிறது. அதன் விருப்பப்படி இந்தியாவுடனோ அல்லது  பாகிஸ்தானுடனோ  தன்னை இணைத்துக்கொள்ளலாம். காஷ்மீர் அரசர் ஹரி சிங் தனியாக இருக்க விரும்புகிறோம் என்றார். நேரு பொறுமை காத்தார். காஷ்மீரை உடனே இந்தியாவுடன் இணைத்துக்கொள்ள உண்மையிலேயே அவர் அவசரம் காட்டவில்லை. பாகிஸ்தானுக்கு  காஷ்மீர் வேண்டும். காஷ்மீர் அரசர் என்ன நினைக்கிறார் என்று தெளிவாகத் தெரியவில்லை. உடனே காஷ்மீரை முற்றுகையிட வேண்டும். அதுவும் கடுமையானதாக இருக்கவேண்டும். இந்திய ராணுவம் காஷ்மீரில் இறங்கி திருப்பித் தாக்கி விரட்ட வரும் என்பதும் பாகிஸ்தானுக்குத் தெரியும். இருந்தபோதும் சுதந்தரம் வாங்கிய தருணத்தில் குழப்பத்தோடு வெற்றியைக் கொண்டாடும் இந்தியாவுக்கும், வளைந்து கொடுக்காத காஷ்மீருக்கும், ஒரு பாடம் புகட்டியாகவேண்டும். போராளிகளைத் திரட்டுவதற்கு தயாராக எப்போதும் இருக்கிறது ஜிகாத் கோஷம்.

1947 ஆகஸ்டில்  இந்தியாவும், பாகிஸ்தானும் விடுதலை பெற்ற டொமினியன்களாயின. அதற்கு முன்னர் ஜூன் மாதத்தில் மவுண்ட்பேட்டன் காஷ்மீர் அரசர் ஹரி சிங்குடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்தியத் தலைவர்கள் பலர் காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்துவிடுமாறு அழுத்தம் கொடுத்தார்கள். ஹரிசிங்கைச் சுற்றி இருந்தவர்களும், அவர் உறவினர்களும் பாகிஸ்தானுடன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தார்கள். கவர்னர் ஜென்ரல் மவுண்ட் பேட்டன் ஹரிசிங்கிடம் காஷ்மீர், இந்தியா அல்லது பாகிஸ்தானுடன் தன்னை இணைத்துக்கொள்ளலாம் என்றார். அதற்கு முழு சுதந்தரம் உள்ளது என்றார். மேலும் ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்கு முன்னால்  விருப்பத்தைத் தெரிவித்தால் நல்லது என்று அரசரிடம் கூறினார். ஆனால் அவர் எந்தக் கருத்தையும் கவர்னர் ஜென்ரலிடம் கூறாமல் நழுவினார். அதன் காரணமாக இந்திய விடுதலைக்குப் பிறகு காஷ்மீர் தனி சமஸ்தானமாகத் தொடர்ந்து இருந்தது.

வி.கே.  கிருஷ்ணமேனன் 1957 ஆம் ஆண்டு பிப்ரவரி 8 ஆம் தேதி காஷ்மீர் தொடர்பாக ஐ. நா. சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் சில தகவல்களைத் தெரிவித்தார். அதன்படி இந்திய பாகிஸ்தான் விடுதலைக்கு மூன்று நாள்களுக்கு முன்பாக அதாவது  1947 ஆகஸ்ட் 12 ஆம் தேதி ஹரி சிங் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் ஒரே தேதியிட்ட தந்திகளை அனுப்புகிறார். அதில் 12 ஆம் தேதி முதல் தபால், போக்குவரத்து போன்ற  அடிப்படை சேவைகள் தொடர  ‘நிலை தொடரும் ஒப்பந்தம்’ செய்து கொள்ள வேண்டுகோள் வைக்கிறார்.

ஆகஸ்ட் 15 ஆம் தேதி பாகிஸ்தான் காஷ்மீருக்கு சம்மதம் தெரிவித்து தந்தி அனுப்பியது. இந்திய அரசாங்கம், காஷ்மீர் பிரதம மந்திரியோ அல்லது வேறு மந்திரியோ தில்லி வரவேண்டும் என்று தகவல் அனுப்பியது.மேலும் ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு முன் பேச்சுவார்த்தை தேவை என்றது. பாகிஸ்தானுக்குக் காரணம் ஒன்று கிடைத்தாகிவிட்டது. இந்தியா அதில்  நிதானமாக செயல்பட்டது உண்மை. அப்போது இந்தியா தன் ராணுவத்தை காஷ்மீரை நோக்கி நகர்த்தவில்லை. ஆனால் காஷ்மீர் அமைச்சர் ஒருவர் தில்லி வருவதற்கு முன்பாக பாகிஸ்தான் பழங்குடிப் படையை காஷ்மீரை நோக்கி ஏவிவிட்டது.

வரலாற்றுத்  தகவல்களில் உண்மையைக் கண்டறிவது என்பது எப்போதுமே ஒரு சவால்தான். ஒயிட்ஹெட் கடுமையான முயற்சி எடுத்து,  1947 இல் காஷ்மீரில் நடந்த தாக்குதல் பற்றிய தகவல்களை தன் நூலில் தருகிறார். அவர் தன் கருத்துகளை முன் வைக்கும்போது படிப்பவர்களுக்கு சில ஐயப்பாடுகளும் வருகின்றன. இன்னும் முனைப்போடு  படையெடுப்பை பாகிஸ்தான் நடத்தியிருந்தால் காஷ்மீர் சமஸ்தானம் முழுவதும் பாகிஸ்தான் வசம் வந்திருக்கும். அதை ஏன் அவர்கள் செய்யவில்லை என்று ஒரு கேள்வியை தாமே எழுப்பி ஆதங்கப்படுகிறார். மேலும் 1947 அக்டோபர் 22 ஆம் தேதி முதல் பழங்குடியினர் படை தற்போதைய ஆசாத் காஷ்மீரின் தலைநகரான முசாபராபாத் வழியாக பாரமுல்லாவரை வன்முறையை நிகழ்த்திக் கொண்டு வந்தது.  அப்படி இருக்க, அக்டோபர் 27 ஆம் தேதி மவுண்ட்பேட்டன் காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க ஒப்புக்கொண்டார்; அதே தேதியில் இந்தியா ராணுவத்தை விமானத்தில் ஏற்றி ஸ்ரீ நகர் அனுப்பி வைத்தது; அதே தேதியில் தான் பழங்குடிப் படையால் பாரமுல்லா மருத்துவமனை வளாகம் தாக்கப்பட்டது என்று பல முறை தன் நூலில் குறிப்பிட்டுள்ளார். 22 ஆம் தேதி முதல் காஷ்மீரில் பாகிஸ்தான் அனுப்பிய பதானியப் படையின் தாக்குதலும், ஆக்கிரமிப்பும்  நடக்கின்றன. அவற்றின் தொடர் நிகழ்வாக  காஷ்மீர் இணைப்பு நடந்தது என்பதை அவர் அலட்சியம் செய்வது போல் உள்ளது. காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்ட பின்தான், பாகிஸ்தான் பதானியப் படையை காஷ்மீருக்கு அனுப்பியது என்னும் பொருள்பட அவர் எழுதுகிறார்.

உண்மையில்  நடந்தது என்னவென்றால் 24 ஆம் தேதியே அரசர் ஹரிசிங் காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க  முடிவு செய்துவிட்டார். அக்டோபர் 26 ஆம் தேதி ஹரிசிங்  காஷ்மீர் இந்தியாவுடன் இணைவதை உறுதிபடுத்தும் இணைப்பு ஆவணத்தில் கையொப்பமிட்டு, வி.பி. மேனனிடம் கொடுத்து அனுப்பினார். அதை ஒப்புக்கொண்ட கவர்னர் ஜென்ரல் மவுண்ட் பேட்டன் 27 ஆம் தேதி காஷ்மீர் இணைப்பு ஆவணத்தில் தாமும் கையொப்பமிட்டார். ஒயிட்ஹெட் இந்தியா ராணுவத்தை அனுப்புகிறது என்று தெரிந்தவுடன் தான் பாகிஸ்தான் தன் படைகளை பழங்குடியினர் படையுடன் சேர்த்து காஷ்மீருக்கு  அனுப்பியது என்று அழுத்தமாகக் குறிப்பிடுகிறார்.இது முற்றிலும் உண்மைக்கு மாறானது.

நடு நிலையுடன்  ஆய்வை மேற் கொண்டு அதைப் பதிவு செய்த பிறகு தன் விருப்பத்தையும் அவர் வெளிப்படுத்தி இருக்கிறார்.அவர்கள் அவ்வாறு செயல்பட்டிருந்தால், இவ்வாறு நடந்திருக்கும் என்றெல்லாம் கூறுவது உண்மை நிகழ்வுகளை அறிய விரும்பும் சிலரிடம் குழப்பத்தை உண்டாக்கும்.மேலும் ஒயிட்ஹெட் கிளப்பும் சந்தேகங்கள் யாருக்கும் வரலாம்.எனவே அவர் ஐயப்பாடு பற்றியும்,ஆதங்கம் பற்றியும் பார்ப்பது எல்லோருக்கும் பயனுள்ளதாக  இருக்கும். இரண்டு காரணங்களின் அடிப்படையில் இந்தியா காஷ்மீரைத் தன் வசம் வைத்துக்கொண்டது என்கிறார் ஒயிட் ஹெட்.

  1. இந்தியாவுடன் காஷ்மீரை இணைத்துக்கொள்வதற்கு அரசர் ஹரிசிங்கும், ஷேக் அப்துல்லாவும் சம்மதித்தார்கள்.
  2. முறைப்படி காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக ஆன பின் தான் இந்தியப் படை ஸ்ரீ நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இரண்டாவது காரணத்தில் சந்தேகங்கள் இருப்பதாக அவர் கருத்து தெரிவிக்கிறார்.அதற்குக் காரணம் வி.பி மேனனின் காஷ்மீர் இணைப்பு பற்றிய விரிவான அரசாங்க குறிப்பு என்கிறார். காஷ்மீர் அரசரிடம் இணைப்பு ஆவணத்தில் கையொப்பம் வாங்கிய இந்திய ஐ.சி.எஸ். அதிகாரி ராவ் பகதூர் வப்பல பன்குன்னி மேனன் என்ற  வி.பி. மேனன் காஷ்மீர் இணைப்பு பற்றிய அதிகாரபூர்வமான நீண்ட  அரசாங்கக் குறிப்பை அளித்தார். அதில் சில தவறான தகவல்கள் இருக்க வாய்ப்புள்ளது என்கிறார் ஒயிட் ஹெட். மேலும் இந்திய ராணுவம் ஸ்ரீ நகர் விமான தளத்தில் தரை இறங்கிய பின்பு சில மணி நேரம் கழித்து தான்   காஷ்மீர் அரசர் இணைப்பு ஆவணத்தில் கையொப்பம் இட்டிருக்க வேண்டும். அதற்கே வாய்ப்புகள் அதிகம் என்கிறார். இவர் மறைமுகமாக  எதை வலியுறுத்த  முனைகிறார் என்று தெரியவில்லை. அவர் அக்டோபர் 27 ஆம் தேதியைப் பிடித்துக் கொள்கிறார். ஆனால் அக்டோபர் 22 இல் பழங்குடிப் படை  முசாபராபாத்தில் இருந்து ராணுவ லாரிகளில் புறப்படுகிறது. முசாபராபாத்துக்கும்,  பாரமுல்லாவுக்கும் இடையே உள்ள தூரம் சுமார் 82 கிலோமீட்டர்கள்.  வழி நெடுகிலும் பதானியப்படை மக்கள் மீது தாக்குதல் நடத்துகிறது. அக்டோபர் 27 இல்  பாகிஸ்தான் அனுப்பிய அந்தப் படை பாரமுல்லா வந்து சேர்கிறது.

எல்லையில் இருந்த,  இந்திய பிரிட்டிஷ் ராணுவ காலாட்படை  டோக்ரா பிரிவு வீரர்கள் கடுமையாகப் போராடி உள்ளே நுழைய முயன்றவர்களைத் தடுத்தார்கள். ஆனால் பழங்குடியினர் படை அவர்களை வெற்றி கொண்டு முன்னேறியது. வேறு வழி இல்லாமல் காஷ்மீர் அரசர் ஹரி சிங் அக்டோபர் 24 ஆம் தேதி இந்தியாவிடம் ராணுவ உதவி கோருகிறார். அக்டோபர் 25 ஆம் தேதி இந்திய பாதுகாப்புக் குழு கூட்டத்தில் ராணுவத்தை காஷ்மீர் அனுப்ப முடிவு செய்யப்பட்டது. கூட்டத்துக்கு தலைமை வகித்தவர் மவுண்ட் பேட்டன். இந்தத் தகவலை மெக்.ஆர்.ஜான்சன்  ‘நியூயார்க் ஹெரால்டு டைம்ஸில் எழுதியுள்ளார் (1956 மார்ச் 3 ஆம் தேதி).

அந்தக் கூட்டத்தில் மவுண்ட் பேட்டன் காஷ்மீர் முறைப்படி இந்தியாவுடன் தன்னை இணைத்துக்கொள்ளும் வரை பொறுமை காக்க வேண்டும் என்றார். அதன்படி வி.பி. மேனன் ஜம்முவுக்கு விமானம் முலம் சென்றார். ஹரி சிங் ஸ்ரீ நகரில் இருந்து  அங்கு வந்தார். வி.பி. மேனன் இந்தியாவின் நிலையைத் தெளிவுபடுத்தினார். ஹரி சிங் காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்கும் ஆவணத்தில் கையொப்பமிட்டார். மேலும் இந்திய ராணுவத்தை காஷ்மீருக்கு அனுப்பும்படி மவுண்ட் பேட்டனுக்கு வேண்டுகோள் விடுத்து தான் எழுதிய கடிதத்தையும் வி.பி.மேனனிடம் கொடுத்தார். இதற்கு இடையில் ஹரிசிங் ,ஷேக் அப்துல்லாவை காஷ்மீரின் அவசரகால  நிர்வாகத்தின் தலைவர் ஆக்கினார். இணைப்பு ஆவணத்தில் இந்திய அரசின் சார்பாக மவுண்ட் பேட்டன் கையொப்பமிட்டார்.அவசர கால நிர்வாகத்தின் தலைவர் என்ற முறையில் காஷ்மீர் மக்கள் சார்பாகவும், காஷ்மீர் பிரதமர் மெகர்சந் மகாஜன் சார்பாகவும் ஷேக் அப்துல்லா கையொப்பமிட்டார். இந்த மெகர்சந் மகாஜன்  பின்னாளில் இந்தியாவில் சுப்ரீம் கோர்ட்டின் மூன்றாவது நீதிபதியாக பதவி வகித்தார்.

காஷ்மீர் பிரச்னையின் தொடக்கம்  பாகிஸ்தானின் படையெடுப்புத் திட்டத்தில் உள்ளது. அதன் மையம் பாகிஸ்தானில் உள்ள சிலரின் மனப்போக்கிலும், தொடர் செயல்பாட்டிலும் இருக்கிறது. காஷ்மீர் பிரச்னை வேகம் கொள்வதற்கும், இன்றும் அது வெடிப்பதற்குமான காரணங்கள் அவைதாம். இது யூகம் அல்ல.பாகிஸ்தான் ராணுவத்தை வழிநடத்திய சிலரின் வாக்குமூலங்களோடு தெளிவாக  நிறுவப்படும் உண்மை.



-- Edited by Admin on Sunday 11th of September 2016 09:31:53 PM

__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

 

ஆக்கிரமிப்புகளும் தயாரிப்புகளும்

 

 

இந்தியா பாகிஸ்தான் போர்கள் / அத்தியாயம் 5

12241622874161946 அக்டோபர் 30 ஆம் தேதிக்கும் நவம்பர் 7 ஆம் தேதிக்கும் இடையே மிகப்பெரிய இனப்படுகொலைகள் பீகாரில் நடந்தன. இம்முறை மிகுதியாக பாதிக்கப்பட்டவர்கள் இஸ்லாமியர்கள். பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில்  5,000 பேர் கொல்லப்பட்டார்கள் என்று ஓர்  அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. ஸ்டேட்ஸ்மென் பத்திரிகை 10,000 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்றது. கொல்லப்பட்டவர்களில் முஸ்லிம் பெண்களும் குழந்தைகளும் அடங்குவார்கள். ஜின்னா பதறினார். பிரிவினைக்கு முழு அழுத்தம் கொடுத்தார். முக்கியமான விஷயம் என்னவென்றால் கல்கத்தா, நவகாளி படுகொலைகளுக்குப் பழி தீர்ப்பதற்காக பீகார் இனப்படுகொலைகள் நிகழ்த்தப்பட்டன என்ற கருத்து பரவியதுதான்.

இந்தியாவைப் பிரித்து தனி பாகிஸ்தான் கேட்டவர்கள் முஸ்லிம் லீகைச் சேர்ந்தவர்கள். பிரிவினை வேண்டாம் என்றவை  மற்ற பெரிய கட்சிகளான காங்கிரஸும் இந்து மகாசபையும். 1946 ஆம் ஆண்டு நடைபெற்ற மாகாணப் பொதுத் தேர்தல் அறிக்கையில் இரண்டு கட்சிகளும் தங்கள் தேசப்பிரிவினை எதிர்ப்பைத் தெளிவாகக் குறிப்பிட்டன. முஸ்லிம் லீகைத் தவிர மற்ற முஸ்லிம் அமைப்புகளும் வெளிப்படையாகப் பிரிவினையை எதிர்த்தன. முஸ்லிம் லீக் தனி பாகிஸ்தான் என்ற லட்சியத்தை அடைய  பஞ்சாப், வங்காளம் ஆகிய மாகாணங்களைப் பிரிப்பதையே நம்பி இருந்தது. ஏனென்றால் மேற்கு பஞ்சாபிலும், கிழக்கு வங்காளத்திலும் முஸ்லிம்கள் மிகுதியாக உள்ளார்கள். பீகாரில் மூஸ்லிம்கள் சுமார் 10 சதவீதம் தான். அங்கே பெரும்பான்மையினராக இந்துக்கள் இருக்கிறார்கள். அதனால் சிறுபான்மை மக்களாக இருக்கும் முஸ்லிம்களை அவர்கள் மிரட்டிக் கொல்ல ஆரம்பித்தார்கள் என்று நம்புவது எளிது.

பீகாரில் அப்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது. பிரிவினையை விரும்பாத காங்கிரஸ் சுதந்தரத்துக்குப் பிறகு மதச்சார்பற்ற குடியரசை நிறுவுவதைக் கொள்கையாகக் கொண்டிருந்தது. அப்போது பீகாரில் நிறைய முஸ்லிம் போலீஸ் அதிகாரிகள் பணியில் இருந்தார்கள். இந்நிலையில் அங்கு என்னதான் நடந்தது என்பது எல்லோரும் அறிந்துகொள்ள நினைக்கும் ஒன்று. கலவரங்கள் நடந்த இடங்களில் நேரடியாகப் பார்த்த சாட்சிகள் கொடுக்கும் தகவல்கள்தாம் உண்மையை அறிந்து கொள்ள உதவும்.

ஒரு வருடத்துக்கு முன்பாக எந்த வன்முறையையும் சந்திக்காத முங்கெர் கற்பனைக்கு எட்டாத வன்முறைகளை 1946 இல் சந்தித்தது. அகில இந்திய அளவில் இனக்கலவரங்கள் பல இடங்களில் நடைபெறுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். உள்ளூரில் அது எப்படி தொடங்கி வளர்ந்தது என்பதை நாம் இங்கே கண்டு கொள்ளலாம். முங்கெர் எப்போதுமே முஸ்லிம் லீக் துடிப்புடன் செயல்படும் மாவட்டம். இந்தக் கலவரங்கள் நடைபெறுவதற்கு முன்னதாக சாதகமான சூழ்நிலை ஏற்படும்வரை மூஸ்லிம் லீக் காத்திருந்ததாகவே தெரிகிறது. மாவட்ட நிர்வாகத்தில் ஒரு கணிசமான அளவு அதிகாரிகள் இஸ்லாமியர்களாகவும், முஸ்லிம் லீகின் கொள்கைகளை ஆதரிப்பவர்களாகவும் இருந்த காலகட்டத்தை  அது சரியாகப் பயன்படுத்த நினைத்தது. இந்துக்களின் விழாக்களில் இடையூறு செய்வதை வாடிக்கையாக கொண்டது முஸ்லிம் லீக். இதற்கு உள்ளூர் அதிகாரிகள் ஆதரவாக இருந்தார்கள். பீகாரை ஆளும் காங்கிரஸ் அரசு இதைக் கண்டுகொள்ளாமல் இருந்தது.

கல்கத்தா, நவகாளி போன்று  பீகாரிலும் முஸ்லிம் லீக் பாகிஸ்தானை எப்படியாவது அடைந்து விடும் நோக்கில் வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டது. இருந்தபோதும் இடைக்கால அரசாங்கத்துக்குத் தலைமை வகித்த நேரு, ‘வன்முறையில் ஈடுபடும் இந்துக்கள்மீது விமான குண்டு வீச்சு நடத்தக்கூடத் தயங்கமாட்டேன்’ என்றார்.

இந்தியப் பிரிவினையை எதிர்த்த காங்கிரஸின் கொள்கைக்கு எதிராக ஏதும் நடந்துவிடக்கூடாது என்பதே அவருக்கு மிக முக்கியமானதாக இருந்திருக்கவேண்டும். கல்கத்தா, நவகாளி படுகொலைகளுக்குப் பிறகு பெரிய அளவில் கலவரம் நடைபெறக்கூடாது என்பதே அனைவரின் எண்ணம். நேருவும் விடுதலைக்கு முன்பு எத்தகைய கலவரத்தையும்  இந்தியாவில் நடக்க அனுமதிக்கக் கூடாது என்றே நினைத்திருப்பார். அந்தச் சமயத்தில் பீகாரில் இந்துக்கள், இஸ்லாமியர்களை பழி தீர்க்கிறார்கள் என்ற செய்தியாலும் அவர் நேரடியாக பீகாரில்  கண்டவற்றாலும் எரிச்சல் அடைந்திருக்கவேண்டும். பெரும்பான்மை மக்களாக  இந்துக்கள் இருக்கும் இடத்தில்  முஸ்லிம்களுக்கு பாதுகாப்பில்லை என்ற ஜின்னா போன்றவர்களின் குற்றச்சாட்டினால் அவர்  மன நெருக்கடிக்கு ஆளானார். அதைத்தான் முஸ்லிம் லீக் விரும்பியது. படிப்படியாக ஜின்னா தன் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதில் வெற்றி பெற்று வந்தார்.

0

1947 ஆம் ஆண்டு இந்தியாவின் கடைசி பிரிட்டிஷ் வைஸ்ராயாகப் பதவி ஏற்றார் மவுண்ட்பேட்டன். அவர் அறிவித்த ஜூன் 3 ஆம் தேதி திட்டத்தின்படி அல்லது மவுண்ட் பேட்டன் திட்டத்தின்படி பிரிட்டிஷ் இந்தியா என்பது இந்தியா, பாகிஸ்தான் என இரண்டு டொமினியன்களாகப்   பிரிக்கப்பட்டன. 1947 ஜூன் மாதம் 3 ஆம் தேதி பத்திரிகையாளர்கள் கூட்டத்தில்  மவுண்ட்பேட்டன் அந்தத் திட்டத்தை அறிவித்தார். அதன் முக்கிய அம்சம் பஞ்சாப், வங்காள மாகாணங்களின் பிரிவினை பற்றியது. பஞ்சாப், வங்காள சட்டசபைகளில் இந்து, சீக்கிய, முஸ்லிம்  உறுப்பினர்கள்  அனைவரும் பிரிவினை வேண்டுமா, வேண்டாமா என முடிவு செய்ய வாக்களிப்பார்கள்.பெரும்பான்மை உறுப்பினர்கள் பிரிவினைக்கு ஆதரவாக வாக்களித்தால் இரண்டு மாகாணங்களும் பிரிக்கப்படும். சிந்து மாகாணம் எந்த ப்க்கம் இணையவேண்டும் என்பதை அதுவே முடிவு செய்து கொள்ளும். வடமேற்கு எல்லை மாகாணமும், அசாமின் சில்ஹெத் மாவட்டமும்  இந்தியாவுடன் இணைக்கப்பட வேண்டுமா அல்லது பாகிஸ்தானுடன் இணைக்கப்பட வேண்டுமா என்பதை  பொது வாக்கெடுப்பின் மூலம்  முடிவு செய்து கொள்ளலாம். 1947 ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்தியா சுதந்தரம் பெறும்; பிரிவினை இருக்கும் பட்சத்தில் பிரிவினை கமிஷன் ஒன்று அமைக்கப்படும் என்று அந்தத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஜூன் 2 ஆம் தேதியே இந்தியாவின் எல்லா அரசியல் கட்சித் தலைவர்களும் மவுண்ட்பேட்டன் திட்டத்தை ஏற்றுக்கொண்டார்கள். திட்டத்தில் ஐநூறுக்கும் மேலான சமஸ்தானங்கள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆனால் ஜூன் 3 ஆம் தேதி மவுண்ட்பேட்டன் சமஸ்தானங்கள் விடுதலை பெறவுள்ள இரண்டு டொமினியன்களில் ஏதாவது ஒன்றுடன் இணைந்துவிடும்படி அறிவுரை கூறினார்.

மவுண்ட்பேட்டனுக்கு முன்பு  வைஸ்ராயாக பதவி வகித்த வேவல்  இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்கான எல்லைக் கோட்டை ஓரளவு வகுத்திருந்தார். புதிதாகப் பிறக்க இருந்த  இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் உரிய பகுதிகளைப் பிரித்துக் கொடுப்பதற்காக பிரிட்டிஷ் அரசு சர். சிரில் ராட்கிளிஃபை நியமித்தது. அவர் இரண்டு எல்லை கமிஷன்களுக்குத் தலைமை வகிப்பார். ஒன்று வங்காளத்தையும், மற்றொன்று பஞ்சாபையும் பிரிக்கும்.

இஸ்லாமியர்கள் மிகுதியாக  இருக்கும் பகுதி பாகிஸ்தானுக்கும், இஸ்லாமியர் அல்லாதவர்கள் மிகுதியாக இருக்கும் பகுதி இந்தியாவுக்கும் கொடுக்கப்படும். இரண்டு கமிஷன்களிலும் நான்கு பிரதிநிதிகள் இருப்பார்கள். இருவர் இந்திய தேசிய காங்கிரஸைச் சேர்ந்தவர்களாகவும், இருவர் முஸ்லிம் லீக்கைச் சேர்ந்தவர்களாகவும் இருப்பார்கள். இரண்டு கட்சிகளுக்குமிடையே இருக்கும் பகையைக் கருத்தில் கொண்டு பேச்சுவார்த்தை முறியும் நிலை ஏற்பட்டால் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் ராட்கிளிஃப் கையில் கொடுக்கப்படும்.

பிரிவினைக்கு முன்னால் பிரிட்டிஷ் அரசின் கீழ் இருந்த இந்தியாவின் மொத்தப் பரப்பளவு சுமார் 15 லட்சத்து 67 ஆயிரம் சதுர மைல்கள். 1941 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவின் மக்கள் தொகை சுமார் 38 கோடியே 90 லட்சம். தேச விடுதலையின் போது இந்தியாவும் பாகிஸ்தானும் இரண்டு தனி டொமினியன்கள் ஆயின. மதச்சார்பற்ற இந்தியா ‘யூனியன் ஆஃப் இந்தியா’ என்றும்; முஸ்லிம்களின் பாகிஸ்தான் ‘டொமினியன் ஆஃப் பாகிஸ்தான்’ என்றும் அழைக்கப்பட்டன. இந்த இரண்டையும் பிரிக்கும் எல்லைக்கோடுதான் ராட்கிளிப் கோடு. அதை உருவாக்கிய ராட்கிளிப்பின் பெயரால் அது அழைக்கப்பட்டது.

தேசப் பிரிவினையின் அடிப்படை இதுதான். பிரிட்டிஷ் அரசின் கீழ் இருந்த வடமாகாணங்களில் முஸ்லிம்கள் மிகுதியாக வாழும் மாகாணங்கள் தாம் தனி பாகிஸ்தான் என்ற கட்டடத்தின் அஸ்திவாரம். அதன்படி மக்கள் தொகையில் முஸ்லிம்கள் 91.8% இருக்கும் பலுசிஸ்தான் மாகாணமும்,முஸ்லிம்கள் 72.2% இருக்கும் சிந்து மாகாணமும் முழுமையாக பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டன.முஸ்லிம்களின் மக்கள் தொகை மிக அதிகமாக இல்லாத மாகாணங்களான வங்காளமும் பஞ்சாபும் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் பிரித்துக் கொடுக்கப்படவேண்டும்.

வங்காளத்தின் மக்கள்தொகையில் முஸ்லிம்கள் 54.4%; பஞ்சாபின் மக்கள் தொகையில் முஸ்லிம்கள் 55.7%. வட மேற்கு எல்லை மாகாணம் தேச விடுதலைக்குப் பிறகு பொது வாக்கெடுப்பில் கிடைத்த முடிவின்படி பாகிஸ்தானுடன் இணைக்கப்பட்டது. பின்னாளில் அதன் பெயர் கைபர் பக்துன்குவா என்று மாற்றப்பட்டது. அசாம் மாகாணத்தின் சில்ஹெத் மாவட்டமும் பொது வாக்கெடுப்புக்குப் பிறகு பாகிஸ்தானுடன் இணைக்கப்பட்டது.

ராட்கிளிப் கோடு 1947 ஆகஸ்ட் 17 ஆம் தேதி வெளியிடப்பட்டது .அது ஒரு லட்சத்து எழுபத்து ஐந்தாயிரம் சதுர மைல்கள் பரப்பளவு கொண்ட 8.8 கோடி மக்கள் வசிக்கும் பகுதிகளைப் பிரித்தது. இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டபடி பிரிக்கப்பட்ட பகுதிகளில் ங்பஞ்சாப்,வங்காளம்சி இருந்து இந்தியா பக்கம் இருக்கும் முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்கும், பாகிஸ்தான் பகுதியில் இருக்கும் இஸ்லாமியர் அல்லாதவர்கள் இந்தியாவுக்கும் இடம் பெயர வேண்டும்.மொத்தம் ஒரு கோடியே 45 லட்சம் மக்கள் இடம் பெயர்ந்தார்கள்.1951ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி சுமார் 72 லட்சத்து 27 ஆயிரம் முஸ்லிம்கள் இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்குக் குடி பெயர்ந்தார்கள் என்று பாகிஸ்தான் தெரிவித்தது. அதே போல 1951 ஆம் ஆண்டு இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி இந்துக்களையும், சீக்கியர்களையும் சேர்த்து பார்க்கும்போது சுமார் 72 லட்சத்து 96 ஆயிரம் பேர் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குக் குடிபெயர்ந்தார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் விரும்பி இந்த இடப்பெயர்ச்சியை ஏற்றுக்கொள்ளவில்லை. உண்மையைச் சொன்னால் அவர்கள் துரத்தியடிக்கப்பட்டார்கள். பலர் உயிருக்குப் பயந்து ஓடி வந்தார்கள். இது இரு தரப்பு மக்களுக்கும் பொருந்தும்.

இந்தியப் பிரிவினையில் இறந்தவர்கள் 4 லட்சம் பேர் என்று வைத்துக்கொண்டால், அவர்களுள் 2 லட்சம் பேர் முஸ்லிம்கள்; இந்துக்கள்,சீக்கியர்கள், மற்ற மதத்தவர்கள் எல்லோரையும் சேர்த்துக் கணக்கிட்டால் அவர்களின் எண்ணிக்கை 2 லட்சங்கள். சுமார் 75 ஆயிரம் பெண்கள் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டார்கள்.

பிரிவினை பூகம்பம் பஞ்சாபை மிக மோசமாகப் பாதித்து உலுக்கியெடுத்தது. இடம் பெயர்ந்த ஒரு கோடியே 45 லட்சம் பேரில் சுமார் ஒரு கோடி பேர் பஞ்சாபைச் சேர்ந்தவர்கள்.பிரிவினை வன்முறைகளின் போது உயிர் இழந்தவர்களில் மிகுதியானவர்களும் அவர்கள்தாம்.

பிரிட்டிஷ் ஆட்சியின்போது இருந்த பஞ்சாப் என்பது 29 மாவட்டங்களை உள்ளடக்கியது. அது டெல்லி, ஜலந்தர், லாகூர், ராவல்பிண்டி, முல்தான் ஆகிய ஐந்து பிரிவுகளையும், 43 சமஸ்தானங்களையும் கொண்டது. அவற்றுள் 16 சமஸ்தானங்கள் பெரியவை. சமஸ்தானங்களையும் சேர்த்து பஞ்சாப் மாகாணத்தின் மொத்தப் பரப்பளவு சுமார் ஒரு லட்சத்து 34 ஆயிரம் சதுர மைல்கள்.

தேச பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தானுக்குக் கிடைத்த மேற்கு பஞ்சாப் மாகாணம் சுமார் 62 ஆயிரம் சதுர மைல்கள் பரப்பளவு கொண்டது. பின்னாளில் சுமார் 17ஆயிரம் சதுர மைல் பரப்பளவு கொண்ட பகவல்பூர் சமஸ்தானம் அதனோடு இணைக்கப்பட்டது. அப்போது பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தோடு இஸ்லாமாபாத் தலைநகர் பகுதி சேர்ந்திருந்தது. 1955 இல் அது பஞ்சாப் மாகாணத்தில் இருந்து பிரிக்கப்பட்டது. பிரிவினையின் போது 16 மாவட்டங்கள் மேற்கு பஞ்சாபுக்குக் கொடுக்கப்பட்டன. பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த பஞ்சாபின் எஞ்சிய பகுதி கிழக்கு பஞ்சாபாக இந்தியாவுக்குக் கிடைத்தது. அதற்கு 13 மாவட்டங்களும், ஐந்து சமஸ்தானங்களும் கிடைத்தன.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

காஷ்மிர் : இருப்பதும், இழந்ததும்

இந்தியா பாகிஸ்தான் போர்கள் / அத்தியாயம் 1

kashmir_banner

தன் அழகை எல்லாம் ஓரிடத்தில் குவித்துப் பார்க்க எண்ணி, இயற்கை உருவாக்கி வைத்த ஓரிடம் காஷ்மிர். இந்த ரோஜாக்களின் மண்ணில்தான் 1947  அக்டோபர் 22 ஆம் தேதி பகையுணர்வின் விஷம் கொட்டி விதைக்கப்பட்டது. காஷ்மிரின் நுழைவாயில் என்றழைக்கப்படும் சரித்திரப்புகழ் வாய்ந்த பாரமுல்லா நகரம் ஜீலம் நதிக்கரையில் அமைந்திருக்கிறது. அந்த நகரத்தில் இஸ்லாமிய பதான் பழங்குடியினர் படை, பாகிஸ்தான் ராணுவத்தின் ஆசியோடும், உதவியோடும் இரண்டு நாள்கள் நிகழ்த்திய கொடுமை மறக்கமுடியாதது.

1948  ஆம் ஆண்டு பிப்ரவரி 5 ஆம் தேதி ஷேக் அப்துல்லா ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் பின் வருமாறு பேசினார்:

“அந்த ஆக்கிரமிப்பாளர்கள் எங்கள் மண்ணில் நுழைந்தார்கள். ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்று குவித்தார்கள் அவர்களில் பெரும்பாலானவர்கள் இந்துக்களும், சீக்கியர்களும்தாம். அவர்களுள் முஸ்லிம்களும் அடங்குவார்கள். வந்தவர்கள் இந்து, சீக்கிய, முஸ்லிம் இளம் பெண்களைக் கவர்ந்து சென்றார்கள். எங்கள் சொத்துகளைச் சூறையாடிவிட்டு கோடை தலை நகரமான ஸ்ரீ நகரின் எல்லைக் கதவுகள் வரை சென்றுவிட்டார்கள்…”

காஷ்மிரைக் கைப்பற்றுவோம் என்று முழங்கி பாகிஸ்தான் ஆரம்பித்து வைத்த  முதல் போர் இப்படித்தான் தொடங்கியது.  பதான் பழங்குடிப் படையினர் தங்கள் இஷ்டம் போல் பாரமுல்லா நகரத்தைச் சூறையாடத் தொடங்கினார்கள். அவர்களை வழி நடத்திய பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் அடுத்த இலக்கு ஸ்ரீ நகரைக் கைப்பற்றுவதுதான் என்று கூறி இருந்தார்கள். அதை அப்போது அவர்கள் மறந்து விட்டது போலத் தோன்றியது. கொள்ளையடிப்பதிலும், எதிர்படுபவர்களை சுட்டுத் தள்ளுவதிலும், பெண்களைக் கடத்துவதிலும் மும்முரமாக இருந்த அவர்களைப் பற்றி ஓர் இளைஞனுக்கு மட்டும் புதிய கவலை இருந்தது. அவர்கள் ஒரு வேளை திட்டமிட்டபடி  ஸ்ரீ நகர் சென்று விமான தளத்தைக் கைப்பற்றி விட்டால் காஷ்மிர், பகைவர்கள் பிடியில் நிரந்தரமாக சிக்கிவிடும். 1947 அக்டோபர் 25 ஆம் தேதி  மனித வேட்டையில் ஈடுபட்டிருந்த   பழங்குடிப் படையினர், மோட்டார் பைக்கில் வரும் அந்த காஷ்மிர் இளைஞனை ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். அவர் 19 வயது நிரம்பிய முகமத் மக்பூல் ஷெர்வானி. “ வீரர்களே  ஸ்ரீ நகர் நோக்கிச் செல்ல வேண்டாம். பாரமுல்லா நகரின் புற நகர்ப் பகுதிகளில் இந்திய ராணுவத்தினர் இருக்கிறார்கள்”

தனது மோட்டார் பைக்கில் சுற்றிச் சுற்றி வந்து ஊடுருவல்காரர்களிடம் தொடர்ந்து இதை அறிவித்துக் கொண்டே இருந்தார் அவர். அதனால் அவர்கள், எல்லாம் கிடைக்கும் பாரமுல்லாவில் இரண்டு நாள்கள் தங்கி விட்டார்கள். 27 ஆம் தேதி இந்திய ராணுவத்தின்  1வது சீக்கியப்படை  ஸ்ரீ நகர் விமான தளத்தில் தரை இறங்கியது. பழங்குடிப் படையினருக்கு ஷெர்வானியின் தந்திரம் புரிந்துவிட்டது. அவர்கள் ஷெர்வானியைப் பிடித்தார்கள். அதற்குப் பிறகு என்ன நடந்தது என்பதை நேரடி சாட்சியான 93 வயது அலி முகமது பட்டின் வாக்குமூலத்தால் அறிந்து கொள்ளலாம்.

“ ஓர்  இளைஞன் தங்களை முட்டாள்கள் ஆக்கியதை அந்த கபாலிகளால் ஜீரணிக்க முடியவில்லை. ஒரு கபாலியின் மோட்டார் பைக் பெட்ரோல் டேங்கின் குறுக்கே ஷெர்வானி கிட்டத்தட்ட இறந்த நிலையில் கிடந்தான். அவனை சிலுவையில் அறைந்தார்கள்; 10 முதல் 15 முறை சுட்டார்கள். இரண்டு அல்லது முன்று நாள்கள் அவன் உடல் அப்படியே இருந்தது.”

ராணுவம் அங்கு வந்த பிறகு அவர் உடல் நகரத்தின் ஜும்மா மஸ்ஜித் கல்லறையில் முழு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. ஷெர்வானியின் இந்தத் துணிச்சலான செயலால் இந்தியப் படைக்கு விலை மதிப்பில்லாத கால அவகாசம் கிடைத்தது. அதன் காரணமாக  ஸ்ரீ நகர் அருகில் இருக்கும் ஷலாடெங்கில் பழங்குடிப் படையினருடன் நடந்த  சண்டையில் இந்தியப்படை வெற்றியடைந்தது. அதில் 700 பழங்குடிப் படையினர் கொல்லப்பட்டார்கள். முதல் இந்திய பாகிஸ்தான் போரில் ஷலாடெங் சண்டையில்  பங்கு பெற்ற 85 வயதான கர்னல் ஹர்வந் சிங் இவ்வாறு கூறுகிறார். “ஷெர்வானியின் பங்களிப்பு, 1947 போரில் ராணுவ நடவடிக்கைகளின் போக்கையே மாற்றி,  போரை இந்தியாவிற்கு சாதகமாக ஆக்கி விட்டது”

ஷெர்வானியின் தீரச்செயல் பல ஆண்டுகளாக வெளியே தெரியாமல் இருந்தது. அதன் பிறகு இந்திய ராணுவம் ஒரு கோடி ரூபாய் செலவில் ஷெர்வானி நினைவாக ஒரு சமுதாய அரங்கைக் கட்டியது.

0

Indian_soldiers_fighting_in_1947_warமுதல் இந்திய பாகிஸ்தான் போர் 1947 ஆம் ஆண்டு நடந்தது.1965 இல்  இரண்டாவது போரும், 1971 இல் மூன்றாவது போரும் நடந்தன. அதன் பின் வெகுகாலம் கழித்து 1999 இல்  கார்கில் போர் நடந்தது. இந்தப் போர்களின்  பின்னணிகளும், வேர்களும் இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்கு முன்பும், அதன் பின்பும் நடந்த நிகழ்ச்சிகளுக்குள் ஒளிந்து கிடக்கின்றன. பல நூறு ஆண்டுகள் அடிமைத் தளையில் சிக்கிக் கிடந்த  நாடு அகிம்சை என்ற புதிய ஆயுதத்தால் தன்னை விடுவித்துக் கொண்ட தருணம் அது. விடுதலையை முழுமையாக உணர்ந்து, மக்கள் மகிழ்ச்சியில் நீந்தி அதைக் கொண்டாடிக்கொண்டிருந்தனர். தங்கள் முன்னேற்றம் பற்றிய கனவுகள் கண்களில் தெரிய மக்கள் உற்சாகத்தில் திளைத்திருக்கிறார்கள். அவர்கள் தங்கள் உழைப்பால் நாட்டை அலங்கரிக்க விழையும் அற்புதமான நாள்களை வெகு சீக்கிரத்தில் ஒரு பிணி கவ்விக்கொள்கிறது. அது நேற்றுவரை ஒட்டிக் கொண்டிருந்த உறவால் பரவுகிறது. போர் வந்து விட்டது. உயிரிழப்புகள், பொருள்விரயம், அரசின் பணவிரயம் ஆகியவை தொடர்ந்தன. அதை விட முக்கியமாக நாட்டு மக்களின் நிம்மதி தொலைந்தது. அதே வேளையில் ஒவ்வொரு பெரும் சோதனையில் இருந்தும் இந்திய ராணுவம்,  நாட்டு மக்கள் கொடுத்த  ஒத்துழைப்பாலும், உற்சாகத்தாலும் வெற்றியோடு திரும்பி வந்தது.

இந்திய பாகிஸ்தான் போர்களை முழுமையாகக் காண்பதற்கு அவற்றின் பின்னணியை அறிந்து கொள்வது அவசியம். அதற்கு இந்திய வரலாற்றின்  முக்கியமான சில பக்கங்களை நாம் புரட்டிப் பார்க்கவேண்டியிருக்கும்.

இந்திய விடுதலைச் சட்டம் 1947 யுனைட்டெட் கிங்டம் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்துக்கு 1947 ஜூலை மாதம் பிரிட்டிஷ் அரசின் ஒப்புதல் கிடைத்தது. இந்தச் சட்டத்தின் படி ஒரே நாடாக இருந்த இந்தியாவும், பாகிஸ்தானும் இரண்டு டொமினியன்களாக பிரிக்கப்பட்டபிறகு சுதந்தரம் பெற்றன. 1947 ஆகஸ்ட் 14 ஆம் தேதி பாகிஸ்தானும், ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்தியாவும் விடுதலை அடைந்தன. இந்திய விடுதலைச் சட்டம் 1947  இல் இந்தியப் பிரிவினை பற்றிய விஷயங்கள் அடங்கியுள்ளன. அதன் முக்கியமான பிரிவுகளில் ஒன்று வங்காளம், பஞ்சாப் ஆகிய மாகாணங்கள் பிரிக்கப்பட்டு இந்தியா, பாகிஸ்தான் ஆகியவற்றுக்கு அளிக்கப்படுவதை குறிப்பிடுகிறது. பிரிவினை ஒப்பந்தத்தின்படி அனைத்தும் பிரித்துக் கொடுக்கப்பட்டன. அவற்றில் இந்தியக் கருவூலம்; இந்திய அரசுப் பணி; இந்திய ராணுவத்தின் தரைப்படை,  கப்பல் படை, விமான படை; எஞ்சி இருக்கும் அத்தனை நிர்வாக அமைப்புகளும் அடங்கும்.

பரந்து விரிந்து பல விதமான  பழக்க வழக்கங்களையும், மொழிகளையும் கொண்ட மக்கள் வாழும்  நாடு இந்தியா. இது பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் ஒன்றாக  இருந்தது என்பது  மிகவும் வியப்பான ஒரு விஷயம்தான். ஏனென்றால் அப்போது இந்தியாவில் பிரிட்டிஷாரின் நேரடி ஆட்சியின் கீழ் செயல்பட்ட மாகாணங்கள் தவிர, நேரடி கட்டுப்பாட்டில் இல்லாத ஐநூறுக்கும் மேலான  சமஸ்தானங்களும் இருந்தன.

முதலில் இந்தியாவை ஆண்டது கிழக்கிந்திய கம்பெனிதான். ஈஸ்ட் இண்டீஸ் என்ற பெயர் பதினாறாம் நூற்றாண்டு முதல் ஐரோப்பாவில் பிரபலம் அடையத் தொடங்கியது. ஐரோப்பியர்கள் ஆசியாவில் இருக்கும் பல நாடுகளையும், அவற்றைத் தாண்டி பசிபிக் கடலில் இருக்கும் பெரும் தீவுக் கூட்டங்களையும் ஈஸ்ட் இண்டீஸ் என்ற பெயரால் அழைத்தார்கள். அதன் படி ஈஸ்ட் இண்டீஸ் என்பது இந்தியத் துணைக்கண்டம்; தென்கிழக்கு ஆசிய நாடுகள்; பசிபிக் கடலில் இருக்கும் ஆஸ்திரேலியாவோடு இன்னும் பல தீவுக் கூட்டங்கள்; மேலும் சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளையும் குறிக்கும் ஒரு சொல்.

1600 ஆம் ஆண்டு  லண்டனில் தொடங்கப்பட்ட கிழக்கிந்திய கம்பெனி தான் ஐரோப்பாவில் இருந்தவற்றில் மிகவும் பழமையானது. இந்த கிழக்கிந்திய கம்பெனியின் பங்குதாரர்களாக பெரும் வியாபாரிகளும் பிரபுக்களும் இருந்தார்கள். எலிசபெத் அரசி அதற்கு  ராஜ உரிமை அளித்திருந்தார். இருப்பினும் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு  அதில் பங்குகள் எதுவும் இல்லை. அரசாங்கம் மறைமுகமாக அதனை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. 1707 ஆம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனி பிரிட்டிஷ் ஜாயிண்ட் ஸ்டாக் கம்பெனி ஆனது.

கிழக்கிந்திய கம்பெனியார் வியாபாரம் செய்த பொருள்கள் பட்டு, இண்டிகோ டை, உப்பு, வெடி மருந்தாகப் பயன்படும் சால்ட் பீட்டர், தேயிலை, ஓபியம் ஆகியவை. வியாபாரத்தில் வளர்ச்சி கண்ட கிழக்கிந்திய கம்பெனி தன்னுடைய தனிப் படையைப் பயன்படுத்தி இந்தியாவின் பல பகுதிகளைக் கைப்பற்றியது. தன் ராணுவ பலத்தின் மூலமாக  அவற்றை தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு நிர்வாகம் செய்யத் தொடங்கியது.

1757ஆம் ஆண்டில், கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி இந்தியாவில் மேலும் உறுதியானது. 1857 இல் நடந்த சிப்பாய் கலகம் வரை கிழகிந்திய கம்பெனி ஆட்சி தொடர்ந்தது. 1858 இல் இயற்றப்பட்ட இந்திய அரசாங்கச் சட்டத்தின்படி, இந்தியா பிரிட்டிஷ் அரசாங்கத்தின் நேரடி ஆளுமையின் கீழ் வந்தது.

பிரிட்டிஷ் ஆட்சியில் இந்தியாவின் நிலப்பரப்பில் சுமார் 60 % பிரிட்டிஷாரின் நேரடி ஆளுமையில் இருந்தது. எஞ்சிய 40 %  இடமானது  565 சமஸ்தானங்களின் கீழ் இருந்தது. இந்த சமஸ்தானங்களின் அரசர்கள், அரசர்களாக இருக்க அனுமதிக்கப்பட்டாலும் அவர்களைத் தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டது பிரிட்டிஷ் அரசு. சுதந்தரத்துக்குப் பிறகு இவற்றுள் அதிக விவாதத்துக்கு உள்ளான சமஸ்தானங்கள் காஷ்மிர், ஹைதராபாத், தற்போது குஜராத்தில் இருக்கும் ஜுனாகத் ஆகியவை தாம். முஸ்லிம்கள் மிகுதியாக உள்ள காஷ்மீரை ஓர் இந்து அரசர் ஆண்டுவந்தார். இந்துக்கள் மிகுதியாக உள்ள ஹைதராபாத்தையும், ஜுனாகத்தையும்  முஸ்லிம் அரசர்கள் ஆண்டு வந்தனர். இவை விசித்திரமான முரண்பாடுகள். அதே வேளையில் இவை இந்தியாவில் இந்துக்களும், முஸ்லிம் மக்களும் எவ்வாறு கலந்து, கலாசாரத்தால் இணைந்து வாழ்ந்தார்கள் என்பதற்கு சாட்சிகளாகவும் உள்ளன.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் அனைத்து சமஸ்தானங்களும் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கீழ் இருப்பதற்கு  ஒப்பந்தம் செய்துகொண்டன. மொத்த சமஸ்தானங்களில்  21 சமஸ்தானங்களை மட்டுமே  தங்களுக்கென மாநில அரசாங்கம் வைத்திருந்தன. அவற்றிலும் ஹைதராபாத், மைசூர், பரோடா, ஜம்மு-காஷ்மிர் ஆகிய நான்கு மட்டுமே பெரியவை. மற்ற எல்லா சமஸ்தானங்களும் சிறியவை. அவற்றின் அரசர்கள்  இந்திய வைஸ்ராயின் ஒப்பந்தக்காரர்கள் போல செயல்பட்டார்கள்.

சமஸ்தானங்கள் மறைமுகமாக பிரிட்டிஷ் அரசின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கியதற்கு 1798 முதல் 1805 வரை இந்தியாவின் கவர்னர் ஜென்ரலாக இருந்த ரிச்சர்ட் வெல்லஸ்லி  ஒரு முக்கியக் காரணம். முதலில் சமஸ்தானங்களின் ஆட்சியில் தலையிடாமல் விலகி இருக்கும் கொள்கையை கடைப்பிடித்த அவர் பின்னர் ‘சப்ஸிடரி அலையன்ஸை’அறிமுகம் செய்தார். அதன்படி ஒரு சமஸ்தான சிற்றரசர் பிரிட்டிஷ் படையை தன் சமஸ்தானத்துக்குள் இருக்க அனுமதிக்க வேண்டும். அதற்கு ஆகும் செலவை அரசரே ஏற்க வேண்டும். பிரிட்டிஷார் அங்கு தங்குவதற்கு அனுமதிக்க வேண்டும். வேறு யாருடனும் ஒப்பந்தம் செய்து கொள்ளக் கூடாது. சமஸ்தானத்தில் ஆங்கிலேயர்களைத் தவிர வேறு எந்த ஐரோப்பியரையும் வேலைக்கு அமர்த்திக் கொள்ளக் கூடாது. அண்டை சமஸ்தானங்களுடனான எந்தப் பிரச்னையையும் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் பார்வைக்குக் கொண்டு வர வேண்டும். தாங்களாக தீர்வு காண முற்படக் கூடாது. கிழக்கிந்திய கம்பெனியை தலைமை அதிகார மையமாக ஏற்கவேண்டும். இதற்கெல்லாம் ஒப்புக்கொண்டால் அந்நியப் படை எடுப்பின் போது குறிப்பிட்ட சமஸ்தானத்துக்கு அரசு பாதுகாப்பு அளிக்கும். சமஸ்தானத்தின் உள்ளே ஏற்படும் குழப்பங்களைத் தீர்க்கவும் உதவும். ஒப்பந்தப்படி பணம் தர மறுக்கும் சமஸ்தானங்களின் ஒரு பகுதி கம்பெனி அரசால் எடுத்துக் கொள்ளப்படும்.

பெரும்பாலான சமஸ்தான அரசர்கள் கம்பெனி அரசுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு அடங்கி இருந்தார்கள். மறுப்பவர்கள் போரில் ஆட்சியை இழந்தார்கள். அவர்களுள் மைசூரின் திப்பு சுல்தானும் ஒருவர். காஷ்மிர் அரசர் ஹரி சிங் இரண்டாம் உலகப் போரின்போது தன்னுடைய  அறுபதாயிரம் போர் வீரர்களை பிரிட்டிஷ் ராணுவத்துக்கு உதவ அனுப்பி வைத்தார். சிறிய சமஸ்தானங்கள் பலவும் தங்கள் சொந்தப் படைகளைக் கலைத்து விட்டு பிரிட்டிஷ் படையையே வைத்துக் கொண்டன.

தற்போது இந்தியா வசம் உள்ள காஷ்மிர் பகுதிகள் உள்ளடங்கிய ஜம்மு–காஷ்மிர் மாநிலம் என்பது காஷ்மிர் பள்ளத்தாக்கு, ஜம்மு, லடாக் ஆகிய  மூன்று பெரும் பிரிவுகளைக் கொண்டது. காஷ்மிர் பிரிவின் மொத்தப் பரப்பளவு சுமார்  15948 சதுர கிமீ; ஜம்மு பிரிவின் பரப்பளவு 26293 சதுர கிமீ; லடாக்கின் பரப்பளவு 59146 சதுர கிமீ. இந்திய அரசியல் சாசனத்தின்  370 வது பிரிவின் படி சிறப்பு அந்தஸ்து பெற்ற  மாநிலமாக ஜம்மு — காஷ்மிர்  இருக்கிறது. இதன் வடக்கு திசையில் சீன தேசமும், தெற்குப்பக்கம் இந்தியாவின் ஹிமாசல பிரதேசமும், பஞ்சாபும் உள்ளன. கிழக்குப் பக்கம் திபெத்தும், மேற்குப் பக்கம் பாகிஸ்தானின் ராவல்பிண்டியும், எல்லை மாகாணமும் உள்ளன. காஷ்மீரை இவ்வாறும் பிரிக்கலாம்.

  1. தற்போது இந்தியாவிடம் உள்ள ஜம்மு — காஷ்மிர் மாநிலம் : இதன் பரப்பளவு  சுமார் ஒரு லட்சத்து ஆயிரத்து  நானூறு சதுர கிலோ மீட்டர். இதன் மக்கள் தொகை சுமார்  ஒரு கோடியே 25 லட்சம்.
  2. பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மிர் : இதில் ஆசாத் காஷ்மிர், கில்கித்- — பல்திஸ்தான் வடக்குப் பகுதிகள் ஆகியவை அடங்கும். ஆசாத் காஷ்மீரின் பரப்பளவு சுமார் 13 ஆயிரம் சதுர கிலோ மீட்டர். இதன் மக்கள் தொகை சுமார் 45 லட்சம். கில்கித்— பல்திஸ்தானின் பரப்பளவு  சுமார் 72 ஆயிரம் சதுர கிலோ மீட்டர். இதன் மக்கள் தொகை சுமார் 18 லட்சம்.
  1. சீனா ஆக்கிரமித்துள்ள காஷ்மிர் அக்சாய் சின். இதன் பரப்பளவு சுமார் 37 ஆயிரம் சதுர கிலோ மீட்டர். மிக அதிகமான உயரத்தில் அமைந்துள்ள இந்தப் பாலைவனப் பகுதியில் மக்கள் தொகை மிக மிகக்குறைவு.

சாக்சம் பள்ளத்தாக்கு காஷ்மீரின் வடக்குப் பகுதியைச் சேர்ந்தது. வடக்குப் பகுதியை  ஆக்கிரமிப்பு செய்த பாகிஸ்தான் சாக்சம் பள்ளத்தாக்கை சீனாவுக்கு  நட்பு ரீதியில் தானமாக வழங்கியது.

1947 இந்திய பாகிஸ்தான் போருக்கு முன்பாக  அண்டை நாடுகளின் ஆக்கிரமிப்பு இல்லாத  காஷ்மிர் சமஸ்தானத்தின் மொத்தப் பரப்பளவு சுமார் 2லட்சத்து 22 ஆயிரம் சதுர கிலோமீட்டர்கள்.

1947 இல் இந்தியாவுடன் இணைக்கப்பட்ட  காஷ்மிர் சமஸ்தானத்தின்  சுமார் 45% பகுதி  இந்தியாவிடமும் ; 38% பகுதி  பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்டும் ; 17% பகுதி சீனாவால் ஆக்கிரமிக்கப்பட்டும் உள்ளன.

0

kashmir_disputed_2003இந்திய வரைபடத்தை ஒரு மனிதனாக கற்பனை செய்வோம். அண்டை நாடுகளின்  ஆக்கிரமிப்பு இல்லாத காஷ்மிர் ஒரு மகுடம் போல அம்மனிதனின் தலையில் கச்சிதமாக இருக்கிறது. காஷ்மீரின் வடக்குப் பகுதியான கில்கித்- பல்திஸ்தான் மகுடத்தின் இடது பக்கம் உள்ள சரிந்த பகுதியாக இருக்கிறது. அதற்குக் கீழே இணைக்கப்பட்ட சிறிய முத்துச்சரம் போல ஆசாத் காஷ்மிர்  உள்ளது. மகுடத்தின் வலது பக்கம் சரிந்த பகுதியாக அக்சாய் சின்னும், நடுவில் மின்னும் சிறிய இறகாக சாக்சம் பள்ளத்தாக்கும் தெரிகின்றன. இந்த மகுடத்தில் பாகிஸ்தானும் சீனாவும் எடுத்துக் கொண்டது போக இந்தியாவின் தலையில் இருப்பது ஜம்மு—காஷ்மிர் என்ற துணி தலைப்பாகை மட்டும் தான். ஆனால் அண்டை நாடுகளின் ஆக்கிரமிப்பு பகுதிகளோடு ஒப்பிடுகையில்  இந்தியாவின் வசம் அதிக வளமான, மக்கள் தொகை மிகுந்த பகுதிகள் உள்ளன.

ஒரு போருக்கு பேராசை, காழ்புணர்ச்சி, அண்டை நாட்டின் ஆக்கிரமிப்பு ஆகியவை காரணங்களாக இருப்பதில் வியப்பு ஏதுமில்லை. அதே வேளையில் ஒரு நிலப்பகுதியில் உள்ள மக்களின் கலாசாரம், மதம் ஆகியவையும் போருக்கான  காரணிகளாக இருக்கலாம். பல நூற்றாண்டுகளாக உலகம் பார்த்து வரும் இவற்றால் இந்த நூற்றாண்டிலும் நாகரிகங்களின் போர்கள் நடைபெறுகின்றன. போருக்கான காரணிகளின்  வேர்கள் ஒரு  நாட்டின் வரலாற்றில் ஒளிந்து கொண்டிருக்கலாம்.

உலகின் ஒரு பகுதியில் பல காலமாக வசிக்கும் மக்களிடம் மொழி, பண்பாடு, மதம் ஆகியவை வேரூன்றும்போது அவர்கள் தங்களைத் தாங்களே  இனம் காணத் தொடங்குகிறார்கள். அப்போது வழி வழியாக வந்தவற்றில் தங்கள் வாழ்வும், நிம்மதியும் இருப்பதை உணர்கிறார்கள். கலாசாரம் காக்கப்படும்போதே  தங்களின் பாதுகாப்பும், மகிழ்ச்சியும் நிலைக்கும் என்ற எண்ணம் மக்களிடையே ஒரு காலகட்டத்தில் பரவுகிறது. அப்போது இயற்கையாக ஒரு நாடு உருப்பெறுகிறது.

0

காஷ்மீரைச் சேர்ந்த  கல்ஹானா 1148 ஆம் ஆண்டில்  ராஜ தரங்கிணி என்ற மிக முக்கியமான சமஸ்கிருத வரலாற்று நூலை எழுதினார். 7826 செய்யுள்களைக் கொண்ட அதில் மகாபாரத காலத்தில் இருந்து அவர் வாழ்ந்த காலம் வரை காஷ்மீரை ஆண்ட  மூவாயிரம் அரசர்களை வரிசைப்படுத்தி எழுதியுள்ளார். வரிசைப் படுத்துவதில் நேர்ந்த  சில தவறுகளோடு இன்னும் சில சிறிய தவறுகளும் கல்ஹானாவின் நூலில் இருப்பதாக  சில அறிஞர்கள்  கருதுகிறார்கள். இருந்தபோதும்  அது ஒரு தலைசிறந்த வரலாற்று ஆவணமாக எல்லோராலும்  ஏற்றுக்கொள்ளப்படுகிறது. மூவாயிரம் அரசர்களின் வரலாறுகளைத்  தொகுத்து நூலாக கொடுப்பது என்பது சாதாரண வேலையாகத் தெரியவில்லை. தனக்கென வரலாறு சொல்லும் முறையையும், தத்துவத்தையும் வகுத்துக் கொண்டு  ராஜ தரங்கிணியைத் திறம்படப் படைத்திருக்கிறார் கல்ஹானா.

காஷ்மிர் பள்ளத்தாக்கு இமய மலையாலும், பிர் பாஞ்சால் மலைத் தொடர்களாலும் சூழப்பட்டிருக்கிறது. ஆதியில்  காஷ்மிர் பள்ளத்தாக்கு ஒரு பெரும் ஏரியாக இருந்தது. காசிப முனிவர் பாரமுல்லா மலையில் ஒரு சிறு பாதையை வெட்டி ஏரி நீரை வடித்து காஷ்மிர் உருவாகக் காரணமானார் என்று எழுதுகிறார் கல்ஹானா. பாரமுல்லாவின் மற்றொரு பெயர் வராக முல்லா; அதாவது காட்டுப் பன்றியின் பல். இதை ஒரு புராணக்கதை என்று கூறி ஒதுக்கி விட  முடியாது. ஏனென்றால் இந்தப் புராணக் கதை பூமியின் நிலப்பரப்பில் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த பூகோள மாற்றத்தின் குறியீடு. புகழ்பெற்ற எழுத்தாளர் சர் பிரான்சிஸ் யங் ஹஸ்பண்ட் பின் வருமாறு எழுதுகிறார் : “அந்த ஏரியானது ஜெனிவாவின் ஏரியை விட நீளத்தில் இரண்டு மடங்கு பெரியதாகவும் அகலத்தில் மூன்று மடங்கு பெரியதாகவும் இருந்தது. அதைச்சுற்றி மிக உயரமான பனி மலைகள் இருந்தன. கிளேசியல் காலத்தில் மிகப் பெரிய கிளேசியர்கள் இறங்கி சிந்து, லிட்டெர், ஆகியவற்றையும்,மற்ற  பள்ளத்தாக்குகளையும் தொட்டு தண்ணீர் கரைவரை வந்தன”.

அசோகரின் (கிமு 273 — கிமு 232) ஆட்சியின் கீழ் காஷ்மிர்  எல்லா நலன்களும் பெற்றிருந்தது என்று கூறுகிறார் கல்ஹானா. மேலும் அவர் காஷ்மீரின் தலைநகரான ஸ்ரீ நகர்ச செல்வச் செழிப்போடு இருந்தது என்கிறார்.அங்கு பௌத்தத்துக்கு இணையாக சைவமும் வளர்ந்தது. காஷ்மீரில் புத்த விகாரங்களையும், ஸ்தூபிகளையும் கட்டி பௌத்தத்தை வளர்த்த அசோகச் சக்கரவர்த்தி இரண்டு சிவன் கோவில்களை விஜயேஷ்வராவில் கட்டினார். சில கோவில்களை புதுப்பித்தார். அசோகருக்குப் பிறகு காஷ்மீரை  பௌத்த மதத்தைச் சேர்ந்த பல அரசர்கள்; இந்து அரசர்கள்; சில ராணிகள் ஆகியோரும் ஆண்டிருக்கிறார்கள்.

கிபி 1128 இல் இருந்து 1155 வரை 27 ஆண்டுகள் காஷ்மீரை ஆண்ட பேரரசர் ஜெய்சிம்மா. இவருடன்  கல்ஹானாவின்  ராஜதரங்கிணி முடிவடைகிறது. ஜெய்சிம்மாவின் காலத்துக்குப் பிறகு காஷ்மிர் பள்ளத்தாக்கை  ஆண்டு கொண்டிருந்த சிற்றரசர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள். காஷ்மிர் மங்கோலியர்கள், துருக்கியர்கள்,கொள்ளையர்கள் ஆகியோரின் தாக்குதல்களுக்கு இலக்கானது.

14ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மங்கோலியரான துலூச்சா  60 ஆயிரம் வீரர்களுடன் காஷ்மீரை முற்றுகையிட்டார். கொடிய  வன்முறையாளரான அவருடைய படைகள் நகரங்கள், கிராமங்கள் எல்லாவற்றையும் சூறையாடி தீக்கிரையாக்கின. அந்தப் படையெடுப்போடு இந்து அரசர்களின் ஆட்சி காஷ்மீரில் முடிவுக்கு வந்தது என்றுதான் சொல்ல வேண்டும். ஆட்சிகள் பல  வந்தாலும் சில விஷயங்கள் மட்டும்தாம் தொடர்ந்து காஷ்மீரின் அடையாளங்களாக  இருக்கின்றன. பல நூறு வருடங்களாக காஷ்மீரில் சமஸ்கிருத அறிஞர்களும், கவிஞர்களும் வாழ்ந்து  சிறந்த படைப்புகளை உலகுக்கு தந்திருக்கிறார்கள். உலகப்புகழ் பெற்ற பஞ்ச தந்திரக் கதைகள் இங்கு தான் எழுதப்பட்டன.

காஷ்மிரை ஆண்ட கடைசி இந்து அரசர்  உதயன் தேவ். அவருடைய மூத்த அரசியின் பெயர்  கோட்ட ராணி. ஷாமிர் நடத்திய உள் நாட்டுப் போரில் ராணி தோல்வியடைந்தார். வெற்றி பெற்ற ஷாமிர் தன்னைத் திருமணம் செய்து கொள்ள வருகிறார் என்று அறிந்தார் ராணி. அதனால் தன்னைத் தானே கத்தியால் குத்தி உயிரை மாய்த்துக் கொண்டார். அவர் 1339 ஆம் ஆண்டு இறந்தார். அது காஷ்மீரில் முஸ்லிம் ஆட்சி தொடங்க வழிவகுத்தது. ஷா மிர், சுல்தான் ஷமாஸ் உதின் என்ற பெயரில் காஷ்மீரில் தனது ஆட்சியை நிறுவினார். அவர் உருவாக்கிய  அரச வம்சம் 222 வருடங்கள் காஷ்மீரை ஆண்டது. அவை உள்பட சுமார் 500 வருடங்கள் காஷ்மீரை முஸ்லிம் அரசர்கள்  ஆட்சி செய்தார்கள்.

கிபி 1586 முதல் கிபி 1752 வரை காஷ்மிரை  முகலாயர்கள் ஆட்சி செய்தார்கள். கிபி 1752 முதல் 1819 வரை காஷ்மிர் ஆப்கனிஸ்தான் துரானி வம்சத்தின் கீழ் இருந்தது.அது ஆட்சி செய்த  67  வருடகாலமும் மக்கள் அனைவரும் ஆட்சியாளர்களால் வாட்டி வதைக்கப்பட்டாலும் அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள் இந்துக்கள், ஷியா பிரிவைச் சேர்ந்தவர்கள், பாம்பாஸ் மக்கள் ஆகியோர் தாம்.

1819 ஆம் ஆண்டு பஞ்சாபின் அரசர் ரஞ்சித் சிங் 30 ஆயிரம் வீரர்களுடன் காஷ்மீரைத் தாக்கி பதானியர்களை வென்றார். மகாராஜா  ரஞ்சித் சிங் தான் சீக்கியப் பேரரசை உருவாக்கியவர். சீக்கியப் பேரரசின் தலை நகரம் லாகூர்.

27 ஆண்டுகள் காஷ்மீரில் நடந்த சீக்கியர்களின் அரசாட்சி  அனைத்து தரப்பு மக்களுக்கும் நிம்மதியைத் தந்தது என்கிறார் ஆங்கிலப் பயண எழுத்தாளரான சர் வால்டர் ரோப்பர் லாரன்ஸ். 1839 ஆம் ஆண்டு பஞ்சாப் சிங்கம் என்று அழைக்கப்பட்ட ரஞ்சித் சிங் இறந்து போனார். அதற்குப் பிறகு சீக்கிய ராணுவத்தினரிடையே கலவரம் மூண்டு பஞ்சாப் முழுவதும் குழப்பம் நிலவியது.

இரண்டு ஆங்கிலோ சீக்கியப் போர்களிலும் சீக்கியர்கள் கிழக்கிந்தியப் படைகளிடம் தோல்வியடைந்தார்கள். முதல் ஆங்கிலோ சீக்கியப் போர் முடிந்த போது இரு தரப்பினருக்கும் இடையே 1846 ஆம் ஆண்டு மார்ச் 9 ஆம் தேதி ஓர் ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன் பெயர் லாகூர் அமைதி உடன்படிக்கை . அப்போது பிரிட்டிஷ் அரசின் சார்பாக இருந்தவர்கள் கவர்னர் சர் ஹென்றி ஹார்டிங்கும், கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகளும். சீக்கியப் பேரரசின்  சார்பாக இருந்தவர்கள் ஏழு வயது நிரம்பிய மகாராஜா திலீப் சிங் பகதூரும், குட்டி அரசரின் சார்பாக லாகூர் தர்பாரில் இருந்து வந்த ஏழு நபர்களும். அந்த உடன்படிக்கைக்குப் பிறகு சீக்கியப் பேரரசு ஜம்மு, காஷ்மிர், ஹசாரா ஆகிய பகுதிகளை இழந்து சுருங்கிப் போனது. இளவரசர் திலீப் சிங், மகாராஜா ரஞ்சித் சிங்கின் கடைசி மகன்.

இரண்டாவது ஆங்கிலோ சீக்கியப் போர் 1849 இல் முடிவடைந்தபோது சீக்கியப் பேரரசின் கதை  முடிந்து போனது. பஞ்சாப் கிழக்கிந்திய கம்பெனியின் வசம் வந்தது.

1846 ஆம் ஆண்டு மார்ச் 16 ஆம் தேதி மற்றொரு முக்கிய உடன்படிக்கை கையொப்பமானது. அமிர்தசரஸ் உடன்படிக்கை எனப்படும் அது லாகூர் உடன்படிக்கைக்கு வடிவம் கொடுத்து அதை அதிகார பூர்வமாக்கியது. அது  கிழக்கிந்திய கம்பெனிக்கும், ஜம்முவின் அரசர் குலாப் சிங் டோக்ராவுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவானது. அதன்படி குலாப் சிங் 75 லட்சம் பஞ்சாப் அரசின் ரூபாய்களைக் கொடுத்து காஷ்மீரின் பகுதிகளை எல்லாம் விலைக்கு வாங்கி விட்டார். அவை எல்லாம் பஞ்சாப் பேரரசிடம் இருந்து லாகூர் உடன்படிக்கையின்படி கிழக்கிந்திய கம்பெனி பெற்றவை. அந்த உடன்படிக்கைக்குப் பிறகு ஜம்மு- காஷ்மீரில் டோக்ரா ஆட்சி தொடங்கியது. பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த ஜம்மு- காஷ்மிர் சமஸ்தானத்தின் முதல் அரசர் குலாப் சிங் தான். இவர் இந்து ஜம்வால் டோக்ரா ராஜபுத்திர குலத்தைச் சேர்ந்தவர்.

குலாப் சிங்கின் மகன் ரன்பீர் சிங் 1857 ஆம் ஆண்டு அரியணை ஏறி ஜம்மு- காஷ்மீரின் அரசர் ஆனார். அவரே ஜம்வால் ராஜபுத்திர குலத்தின் தலைவரும் ஆவார். அவர் ஆட்சி காலத்தில் கில்கித், அஸ்தோர், ஹன்சா – நகர் ஆகிய பகுதிகள் ஜம்மு- காஷ்மீரோடு இணைக்கப்பட்டன. அவருக்குப் பின் அவருடைய மூத்த மகன் பிரதாப் சிங் காஷ்மிர் அரசரானார். அவருடைய தம்பியான மேஜர் ராஜாஅமர் சிங்கின் மகன் தான் ஜம்மு- காஷ்மிர் சமஸ்தானத்தின் கடைசி அரசராக இருந்த ஹரி சிங் இந்தர் மஹிந்தர் பகதூர்.

1909 இல் அவர் தந்தை அமர் சிங் காலமான பிறகு பிரிட்டிஷ் அரசு வருங்கால காஷ்மிர் அரசருக்கு கல்வி புகட்டி, அவரை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டது. மாயோ கல்லூரியில் பயின்ற அவர் டேரா டூனில் ராணுவப் பயிற்சி பெற்றார். தனது இருபதாவது வயதில் அவர் ஜம்மு- காஷ்மிர் சமஸ்தானத்தின் ராணுவ தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டார். அவருடைய பெரியப்பா  மகா ராஜா பிரதாப் சிங் 1925 ஆம்  ஆண்டு இறந்தார். அவருக்கு குழந்தைகள் இல்லாத காரணத்தால்  ஹரி சிங் ஜம்மு- காஷ்மீரின் அரசரானார். அ

ஹரி சிங் தனது ஆட்சியின் போது பல புரட்சிகரமான திட்டங்களை செயல்படுத்தினார். நாட்டு மக்கள் அனைவருக்கும் ஆரம்பக் கல்வியை கட்டாயமாக்கினார். குழந்தைகள் திருமணத்தைத் தடை செய்தார். அவர் ஆட்சியில் தாழ்த்தப்பட்ட மக்கள் கோவிலுக்கு வந்து வழிபட ஏற்பாடு செய்தார். அரசருக்கு நான்கு முறை திருமணம் நடந்தது. அவருடைய ஒரே மகன் இளவரசர் கரன் சிங் அவருடைய நான்காவது மனைவியான மகாராணி தாரா தேவிக்குப் பிறந்தவர். அரசர் ஹரி சிங்  1961 ஆம் ஆண்டு பம்பாயில் தமது 66 வது  வயதில்  காலமானார்.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

ஒரு சில மணி நேரமும் அறுபது ஆண்டு கால விவாதமும்

இந்தியா பாகிஸ்தான் போர்கள் / அத்தியாயம் 6

hindustan-times-jandk-problem-oct-28-19471947 நவம்பர் 5 ஆம் தேதி பாகிஸ்தானில் இருந்து வெளி வரும் ‘தி டான்’ பத்திரிகையில் பாகிஸ்தானின் முதல் பிரதம மந்திரி லியாகத் அலி கான் காஷ்மீர் இணைப்பு பற்றி கூறிய கடுமையான கருத்து வெளியானது. ‘ நாங்கள் இந்த இணைப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தியாவுடனான காஷ்மீர் இணைப்பு ஒரு மோசடி வேலை. இது காஷ்மீர் மக்கள் மீது அதன் கோழை அரசரால் திணிக்கப்பட்டது. இதற்கு இந்தியாவின் அராஜகப் போக்கு துணை செய்தது.’

இதை முழுமையாக ஆமோதிப்பது போல சில வெளிநாட்டு நூலாசிரியர்களின் கருத்துகள் உள்ளன. அவர்களுள் அலஸ்டர் லாம்ப் மிக முக்கியமானவர். அவர் காஷ்மீர் பிரச்னை தொடர்பாக பல நூல்களை எழுதியவர். இந்தியா, காஷ்மீர் மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டது என்ற கடுமையான விமரிசனத்தை அவர் முன் வைக்கிறார். பாகிஸ்தானுக்கு ஆதரவாக அதனோடு சேர்ந்து ஒலிப்பதாகவே உள்ளது அவர் குரல். இந்தியா மோசடி செய்து காஷ்மீர் இணைப்பு நாடகத்தை நடத்தி தன்னுடைய ராணுவத்தை காஷ்மீரில் இறக்கி அதை ஆக்கிரமிப்பு செய்துள்ளது. கிட்டத்தட்ட ஆன்ரூ ஒயிட்ஹெட் இதைத்தான் கூற வருகிறார்.

அக்டோபர் 26 ஆம் தேதி வி.பி.மேனன் ஜம்மு சென்று காஷ்மீர் அரசரிடம் இணைப்பு ஆவணத்தில் கையொப்பம் வாங்கவில்லை என்று அடித்துக் கூறுகிறார் அலெஸ்டர் லாம்ப். தான் பலரிடம் பேசி இதனைத் தெரிந்து கொண்டதாகக் கூறுகிறார். அது உண்மை என்றால் 26 ஆம் தேதி மாலை மீண்டும் பாதுகாப்பு கமிட்டி கூட்டம் நடந்திருக்க வாய்ப்பில்லை. ஆன்ரூ ஒயிட்ஹெட்டும், லாம்பை வழிமொழிவது போல எழுதுகிறார். அவர்கள் இருவரும் அல்லது அவர்களைப் போன்ற சிலரும் பாகிஸ்தானியர்கள் பலரும் கிளப்பும் சந்தேகங்கள் இவைதாம்.

1. 1947 அக்டோபர் 25 ஆம்தேதி இரவு 2 மணிக்கு அரசர், அவர் குடும்பத்தினர், அவருடன் வந்தவர்கள் ஆகியோருடன் காரில் பயணம் செய்து 26 ஆம்தேதி மாலை ஜம்மு அரண்மனைக்குப் போய்ச் சேர்ந்தாரா?

2. 26 ஆம் தேதி மாலை வி.பி.மேனன் தில்லியில் இருந்து ஜம்மு அரண்மனைக்குச் சென்று இணைப்பு ஆவணத்தில், காஷ்மீர் அரசரிடம் கையொப்பம் வாங்கினாரா?
இந்த ஐயப்பாடுகளை அவர்கள் கிளப்புவதன் மூலமாக அவர்கள் சொல்ல வருவது ஒன்றுதான். இந்திய அரசு, காஷ்மீர் சட்டப்படி இந்தியாவுடன் இணைவதற்கு முன்பாக தன் ராணுவத்தை ஸ்ரீ நகரில் இறக்கிவிட்டது.

இந்தியாவில் அப்போது டகோடா விமானங்கள் பயன் படுத்தப்பட்டு வந்தன. பிரிட்டானிகா கலைக்களஞ்சியம் டகோடா விமானம் பற்றிய அடிப்படைத் தகவல்களை அளிக்கிறது. அமெரிக்காவைச் சேர்ந்த டாக்லஸ் ஏர்கிராஃப்ட் கம்பெனி தெற்கு கலிஃபோர்னியாவில் உள்ளது. அது ராணுவத்துக்கும், பொதுமக்கள் பயணிப்பதற்கும் டகோடா விமானங்களை உற்பத்தி செய்கிறது. முதல் டகோடா விமானம் 1935 இல் பறந்தது. டகோடா டர்போ புரொப்பெல்லர் விமானங்கள் இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டன. டகோடா விமானத்தின் வேகம் ஒரு மணி நேரத்துக்கு சுமார் 185 மைல்கள். அந்த வேகத்தில் அவை 10,000 அடிகள் உயரத்தில் பறக்கும் திறன் வாய்ந்தவை. குறைந்த நீளம் கொண்ட விமான தளத்தில் கூட விமானிகள் அவற்றை இயக்கி மேலே பறப்பதற்கும், தரை இறங்குவதற்கும் வசதியானவை.

புது தில்லியில் இருந்த சாஃப்டார்ஜங் விமான நிலையத்தில் இருந்தோ,அங்கிருந்து ஒன்பது மைல்கள் தொலைவில் இருக்கும் பாலம் விமான நிலையத்தில் இருந்தோ ஜம்முவில் இருக்கும் சத்வாரி விமான நிலையத்துக்கு அதிக பட்சமாக இரண்டு மணி நேரத்தில் வி.பி. மேனன் சென்றிருக்க முடியும். வி.பி. மேனன் 26 ஆம் தேதி ஜம்மு செல்லவில்லை என்று கூறுபவர்கள் அதற்கு ஒரு முக்கியக் காரணத்தைக் கூறுகிறார்கள்.

1947 இல் மாலை தில்லியில் இருந்து விமானத்தில் புறப்பட்டால் இரவில் ஜம்மு சத்வாரி விமான நிலையத்தில் தரை இறங்க வசதி இல்லை. அதாவது விமான ஓடு தளத்தில் மின்சார விளக்கு வசதி அப்போது இல்லை என்கிறார்கள். இரவு நேரத்திலும், அதிகாலையிலும், மாலையிலும் விமான ஓடு தளத்தில் விமானத்தை தரை இறக்கவும்,மேலே பறந்து செல்லவும் விளக்கு வெளிச்சம் அவசியம். ஆனால் மின்சார விளக்குகள் இல்லாமல் விமானத்தைத் தரை இறக்கவும்,மேலே பறக்க அதை செலுத்தவும் மாற்று வழி நிச்சயமாக உள்ளது.

அக்டோபர் 26 ஆம் தேதி அதிகாலை ஸ்ரீ நகர் விமான நிலையத்தில் வி.பி. மேனன், மகாஜன், கர்னல் சாம் மானெக் ஷா, ஏனைய விமானக் குழுவினர் ஆகியோர் தில்லி செல்ல இருக்கிறார்கள். அன்று நடந்தவற்றை நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ளவேண்டும். காலை சுமார் ஐந்தரை மணி அளவில் அவர்கள் அங்கு இருந்திருக்கவேண்டும். விமான ஓடு தளத்தில் இரவு விளக்கு வசதி இல்லை. அதனால் பைன் மரக்கட்டையில் பந்தம் கொளுத்தி வந்து விளக்குகள் ஏற்றி விமானி விமானத்தை ஓட்டி மேலே செலுத்த சிலர் உதவினார்கள். இதனை மானெக் ஷா, மேஜர் ஜெனரல் கே.எஸ்.பஜ்வா வின் ‘ஜம்மு காஷ்மீர் (1947-48) – பொலிட்டிகல் அண்ட் மிலிட்டரி பெர்ஸ்பெக்டிவ்’ என்ற நூலுக்கு எழுதிய அணிந்துரையில் குறிப்பிட்டுள்ளார். சில வருடங்களுக்கு முன்னால் பிரேம் சங்கர் ஜாவுக்கு அளித்த ஒரு பேட்டியிலும் இதைக் கூறியுள்ளார்.

விமான ஓடு தளத்தின் ஓரங்களில் வரிசையாக எளிதில் அணையாத எண்ணெய் விளக்குகள் வைத்து அவற்றை பந்தம் கொண்டு ஏற்றுவார்கள். விமான ஒடு தளத்தில் வெளிச்சம் உண்டாக்குவதற்கு ராணுவத்தில் இப்போது இந்த வழக்கம் கடைபிடிக்கப்படுகிறது.

26 ஆம் தேதி இரவு உணவுக்குப் பிறகு நேரு தில்லியில் இருந்த காஷ்மீர் பிரதம மந்திரி மகாஜனிடம் அவரும் வி.பி. மேனனும் அன்று இரவே மீண்டும் ஜம்முவுக்கு சென்று அரசரை சந்திக்கும்படி கூறியிருக்கிறார். இதன் மூலமாக நமக்கு ஒன்று தெளிவாகிறது. அப்போது இரவில் விமானம் மூலமாக தில்லியில் இருந்து ஜம்மு செல்ல முடியும். மேலும், மகாஜனிடம் வேண்டுகோள் வைப்பவர் சாதாரணமானவர் அல்லர், இந்தியப் பிரதமர் நேரு.

அடுத்த சந்தேகம் காஷ்மீர் அரசர் 1947 அக்டோபர் 26 ஆம் தேதி மாலை ஜம்மு அரண்மனைக்குப் போய் சேர்ந்தாரா என்பது. இன்றைக்கு ஸ்ரீ நகரில் இருந்து ஜம்முவுக்கு செல்ல என் .ஹெச். – 1 தேசிய நெடுஞ்சாலை வழியாக ச் சுமார் 183 மைல்களைக் கடக்க வேண்டும். (பின்னர் என். ஹெச். -44 என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது). என்.ஹெச் -1 தெசிய நெடுஞ்சாலை காஷ்மீர் பள்ளத்தாக்கை இந்தியாவின் மற்ற மாநிலங்களுடன் இணைக்கிறது. இது வடக்கில் ஜம்மு காஷ்மீரின் உர்ரியில் தொடங்கி ஜலந்தர் வரை செல்கிறது.

பிர் பாஞ்சால் மலைத்தொடரில் அமைந்துள்ள பனிஹால் கணவாய் வழியாக அரசரின் கார்கள் சென்றன. இந்தக் கணவாய் காஷ்மீரில் இருக்கும் காசிகுண்டையும், பிர் பாஞ்சால் மலைத் தொடரின் மறுபக்கம் 22 மைல்கள் தொலைவில் ஜம்முவில் இருக்கும் பனிஹால் நகரத்தையும் இணைக்கிறது. என் ஹெச். -1 தேசிய நெடுஞ்சாலையில் தான் இந்தக் கணவாய் அமைந்துள்ளது.

பிர்பாஞ்சால் மலைத் தொடர் என்பது உள் இமாலயப் பகுதியில் உள்ள மலைகளைக் குறிக்கிறது. இது தென் கிழக்கில் தற்போதைய இமாசலப் பிரதேச மாநிலத்தில் தொடங்கி வட மேற்கில் இந்தியாவில் உள்ள காஷ்மீர் பகுதி; பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள ஆசாத் காஷ்மீர் வரை அமைந்துள்ளது.
காஷ்மீர் அல்லது காஷ்மீர் பள்ளத்தாக்கு (அல்லது ஜீலம் பள்ளத்தாக்கு), பிர் பாஞ்சால் மலைத் தொடருக்கும் ஜன்ஸ்கார் மலைத் தொடருக்கும் இடையே சுமார் 15,948 சதுர கிலோ மீட்டர்கள் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்தப் பள்ளத் தாக்கு எல்லாப் பக்கங்களிலும் மலைகளால் சூழப்பட்டுள்ளது. ஜம்மு – காஷ்மீரின் அனந்த் நாக், பாரமுல்லா, குப்வாரா, புல்வாமா ஆகிய மாவட்டங்கள் இதில் அமைந்துள்ளன. ஜீலம் நதி அனந்த் நாக் மாவட்டத்தில் வியரினாக்கில் உள்ள ஊற்றில் தொடங்கி இந்தப் பள்ளத்தாக்கில் பாய்ந்து பாரமுல்லாவில் இருந்து வெளியேறுகிறது. இந்தப் பள்ளத்தாக்கு கடலில் இருந்து சராசரியாக 1850 மீட்டர் உயரத்தில் உள்ளது. இதனைச் சுற்றி உள்ள மலைகளின் சிகரங்கள் எப்போதும் பனி மூடி இருக்கும். அவை சுமார் மூவாயிரம் முதல் நாலாயிரம் மீட்டர் உயரம் கொண்டவை.

பிர்பாஞ்சால் மலைத் தொடர் காஷ்மீர் பள்ளத்தாக்கையும் வெளி இமயமலைப் பகுதியையும் பிரிக்கிறது. இது 2621 கிலோ மீட்டர் நீளமும், 50 கிலோ மீட்டர் அகலமும் கொண்டது. அதில் உள்ள பனிஹால் கணவாய் கடல் மட்டத்தில் இருந்து 2832 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ளது. பனி காலத்தில் வண்டிகள் செல்ல முடியாத அளவுக்கு அங்கே பாதையை பனி மூடிக்கொண்டிருக்கும். அதனால் பனிஹால் கணவாய்க்குக் கீழே மலையைக் குடைந்து ஜவகர் குகைச் சாலை அமைக்கப்பட்டது.

1956 இல் ஜவகர் குகை போக்குவரத்துக்குத் திறந்து விடப்பட்டது. இது கடல் மட்டத்தில் இருந்து 2200 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ளது. அதாவது பனிஹால் கணவாய்க்கு 632 மீட்டர் கீழே மலையைக் குடைந்து இது அமைக்கப்பட்டுள்ளது. ஜவகர் குகைச்சாலையின் நீளம் 1.6 மைல். இந்த குகைக்குள் இரு புறமும் வாகனங்கள் செல்ல இரண்டு இணை சாலைகள் உள்ளன.

2011 ஆம் ஆண்டில் இருந்து 5.25 மைல்கள் நீளம் கொண்ட புதிய இரட்டை குகைச் சாலைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில் அமைய இருப்பவை இணையான இரண்டு குகைகள். ஒவ்வொன்றிலும் இரண்டு சாலைகள் இருக்கும். இரண்டு குகைகளை இணைக்கும் வழிகளும் உள்ளன. இந்தப் புதிய இரட்டை குகைகள் ஜவகர் குகைக்கு சுமார் 400 மீட்டர் கீழே அமைந்துள்ளன.அதனால் பயணத் தொலைவு இன்னும் குறையும்.

2013 ஜூன் 26 ஆம் தேதி அப்போதைய பாரதப் பிரதமர் டாக்டர் மன் மோகன் சிங் ஜம்முவின் பனிஹால் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட முதல் ரயிலை கொடி அசைத்து அனுப்பினார். அந்த ரயில் காஷ்மீரில் உள்ள காசிகுண்ட் சென்றடைந்தது. அது செல்லும் குகை புதிதாக உருவாக்கப்பட்ட பிர் பாஞ்சால் ரயில் பாதை குகை. இதன் மூலமாக இரண்டு நகரங்களுக்கும் இடையே உள்ள தூரம் சாலை வழியாக செல்லும்போது இருக்கும் 35 கிலோமீட்டர்களில் இருந்து 17.5 கிலோமீட்டர்களாகக் குறைந்து விட்டது.

1947 ஆம் ஆண்டு அக்டோபர் 26 ஆம் தேதி காஷ்மீர் அரசரின் கார்கள் அணிவகுத்து பனிஹால் கணவாய் வழியாக சென்ற போது ஜவஹர் குகை கூட உருவாக்கப்படவில்லை. கார்கள் சென்றது மோசமான, கட்டை வண்டிகள் செல்லும் சாலையில். ஸ்ரீ நகருக்கும், ஜம்முவுக்கும் இடையே உள்ள தூரம் சுமார் 183 மைல்கள். இதனை சாலை வழியாக ஒரு மோட்டார் வண்டியில் இப்போது சுமார் 4 மணி நேரத்தில் கடந்துவிடலாம். ஆனால் ஜவகர் குகை மூலமாகக் கிடைக்கும் சீரான சாலை; உயரம் தாழ்ந்த இடத்தில் தூரம் குறைவது இவை எல்லாம் இல்லாத காரணத்தால் அரசரின் கார்கள் ஜம்முவை அடைய அதிக நேரம் எடுத்துக் கொண்டிருக்க வேண்டும். மிகவும் மோசமான விமரிசகர்கள் கூட ஒப்புக்கொள்வது 14 மணி நேரம்.

காஷ்மீர் அரசர் 25 ஆம் தேதி இரவு 2 மணி அளவில் ஸ்ரீ நகர் அரண்மனையில் இருந்து காரில் புறப்படுகிறார். 26 ஆம் தேதி மாலை 4 அல்லது 5 மணி அளவில் அவர் நிச்சயம் ஜம்மு அரண்மனையை அடைந்திருக்க முடியும். அதன் பின் தில்லியில் இருந்து மகாஜனுடன் விமானத்தில் புறப்பட்ட வி.பி. மேனன் ஜம்மு வந்து இணைப்பு ஆவணத்தில் அரசரின் கையொப்பம் வாங்கி இருக்க வாய்ப்பு உள்ளது. அரசரும் அவருடன் சென்றவர்களும் 26 ஆம் தேதி மாலை ஜம்மு அரண்மனைக்கு வந்து சேர்ந்ததை இளவரசர் கரன் சிங் தனது சுய சரிதையான ‘தி ஹேர் அப்பாரன்ட்’ இல் விவரித்துள்ளார்.

‘அரசருடைய வண்டிகளின் அணிவகுப்பு இரவில் நிதானமாக, தேவையான இடங்களில் சற்று நேரம் நிறுத்தப்பட்டு பின்னர் தொடர்ந்தது. 9000 அடிகள் உயரத்தில் அமைந்துள்ள பனிஹால் கணவாய் வழியாக வண்டிகள் ஊர்ந்து சென்றபோது வானத்தில் வெளிச்சம் தெரிந்தது. அரசரின் (எங்கள்) குடும்பம் ஜம்முவில் இருந்து 60 மைல் தொலைவில், குந்த்வில் தங்கி சற்று ஓய்வு எடுத்தது. அதன் பிறகு வண்டிகளின் அணி வகுப்பில் வெளிர் மஞ்சள் நிற கார் ஒன்று இணைந்துகொண்டது. அதில் சுவாமி சந்த் தேவ் இருந்தார். நாங்கள் மாலை ஜம்முவை அடைந்தோம்.’

விவகாரம் இதோடு முடியவில்லை. அறுபது ஆண்டுகள் கடந்த பிறகும் கூட அவிழ்க்கப்படாத சில மர்ம முடிச்சுகள் விமரிசகர்களாலும், நூலாசிரியர்களாலும் இன்றும் முன் வைக்கப்படுகின்றன.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

மர்ம முடிச்சுகள் : 1947 அக்டோபர் 26, 27

இந்தியா பாகிஸ்தான் போர்கள் / அத்தியாயம் 7

kashmir1காஷ்மீர் அரசர் அக்டோபர் 26 ஆம் தேதி மாலை ஜம்மு சென்றிருக்க வாய்ப்பில்லை. இரவு 7 மணிக்குப் பிறகுதான் சென்றிருப்பார். வி.பி. மேனன் 26 ஆம் தேதி ஜம்மு சென்று இணைப்பு ஆவணத்தில் அரசரிடம் கையொப்பம் வாங்கவில்லை. இந்தக் கருத்துகளை அழுத்தமாக எடுத்துவைக்கும் அலெஸ்டர் லாம்ப் போன்ற நூலாசிரியர்கள் அவற்றுக்கு ஆதாரமாக சில வாதங்களை முன்வைக்கிறார்கள். அவை தாம் அந்த மர்ம முடிச்சுகள்.

  1. 1947 அக்டோபர் 26 ஆம் தேதி மாலை 3.45 மணி அளவில் தில்லியில் இருக்கும் பிரிட்டிஷ் துணை கமிஷனர் அலெக்சாண்டர் சைமன் வி.பி. மேனனை பாலம் விமான நிலையத்தில் சந்தித்தார். தான் ஜம்மு செல்லவில்லை என்று வி.பி. மேனன் அவரிடம் கூறினார். 5 மணிக்கு மீண்டும் அவரைச் சந்தித்ததாக தனது நாட்குறிப்பில் சைமன் எழுதியுள்ளார். ஆனால் வி.பி. மேனன் தனது நூலில் பாதுகாப்பு கமிட்டி கூட்டம் முடிந்தவுடன் தான் உடனே மகாஜனோடு ஜம்மு அரண்மனைக்குச் சென்றதாகக் கூறுகிறார். தான் இணைப்பு ஆவணத்தில் அரசரின் கையொப்பத்தை வாங்கிக்கொண்டு தில்லி திரும்பிய போது, வல்லபபாய் படேல் தனக்காக விமான நிலையத்தில் காத்திருந்ததைக் குறிப்பிடுகிறார்.அதன் பிறகு பாதுகாப்பு கமிட்டி கூட்டம் மீண்டும் மாலையில் நடைபெற்றது என்கிறார்.
  2. வல்லபபாய் படேலின் மகள் அவர் காரியதரிசியாகவும் இருந்துள்ளார். அவர் தனது தந்தை தில்லி விமான நிலையத்தில் வி.பி. மேனனுக்காக காத்திருந்த நாள் 1947 அக்டோபர் 26 ஆம் தேதி அல்ல 27 ஆம் தேதி என்கிறார்.
  3. அக்டோபர் 27 ஆம் தேதி பாரதப் பிரதமர் நேரு காஷ்மீர் அரசருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் “வி.பி. மேனன் இன்று மாலை ‘அக்டோபர் 27’ ஜம்முவில் இருந்து தில்லிக்குத் திரும்பி வந்தார். அங்கு நடந்த பேச்சுவார்த்தைகள் பற்றித் தெரிவித்தார். நீங்கள் கையொப்பம் இட்டு, கொடுத்து அனுப்பிய இணைப்பு ஆவணத்தையும், நிலை தொடரும் ஒப்பந்த ஆவணத்தையும் கண்டேன். கவர்னர் ஜெனரலுக்கு அனுப்பிய கடிதத்தையும் பார்த்தேன். உங்களுடைய அறிவார்ந்த முடிவுக்காக உங்களை வாழ்த்த என்னை அனுமதியுங்கள்.”
    இந்தக் கடிதம் ‘செலக்டட் ஒர்க்ஸ் ஆஃப் ஜஹர்லால் நேரு’ நூலில் இடம் பெற்றுள்ளது.

இவற்றை ஆதாரங்களாக வைத்துக்கொண்டுதான் விமரிசகர்கள் எழுதுகிறார்கள். இந்தியா தன்னுடைய ராணுவத்தை அக்டோபர் 27 ஆம் தேதி ஸ்ரீ நகரில் இறக்கிய பிறகுதான் காஷ்மீர் இணைப்பு ஆவணத்தில் அரசரும், மவுண்ட்பேட்டனும் கையொப்பம் இட்டார்கள் என்கிறார்கள்.

இந்தியவுடனான காஷ்மீர் இணைப்பு ஒரு மோசடி என்று கூறும் நூலாசிரியர்கள் அதற்கு ஆதாரமாக எடுத்து வைக்கும் மர்ம முடிச்சுகளை அவிழ்க்க வேண்டியது அவசியம். 1970 ஆம் ஆண்டு இந்தியா, காஷ்மீர் பற்றி வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் காஷ்மீர் இணைப்பு ஆவணம் இடம் பெற்றிருந்தது. அதில் 1947 அக்டோபர் 26 ஆம் தேதி காஷ்மீர் அரசர் ஹரி சிங் கையொப்பம் இட்டுள்ளார். இந்தியாவின் சார்பாக கவர்னர் ஜெனரல் மவுண்ட் பேட்டன் அக்டோபர் 27 ஆம் தேதி கையொப்பம் இட்டுள்ளார். விமரிசகர்களும், நூலாசிரியர்களும் காஷ்மீர் இணைப்பு பற்றி பலவிதமான கருத்துகளை தெரிவிக்கிறார்கள். இப்போது இணையதளத்திலும் வெளியிடப்பட்டிருக்கும், காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்ததற்கான ஆதாரமான இணைப்பு ஆவணம் நூற்றுக்கு நூறு சதவிகிதம் சட்டபூர்வமானது. இதில் எந்தச் சட்டச் சிக்கலும் இல்லை. இதனை நூலாசிரியரான நீதியரசர் ஆனந்த் தெளிவாகக் குறிப்பிடுகிறார். எனவே காஷ்மீர் இணைப்பு ஆவணம் சட்ட ரீதியாகவும், அரசியல் சாசன ரீதியாகவும் மிகச்சரியாக உள்ளது.

1947 அக்டோபர் 27 ஆம் தேதி காலை சுமார் 8.30 மணிக்கு இந்தியா ஸ்ரீ நகரில் தனது ராணுவத்தை முதல் முதலாக தரை இறக்கியது. இது இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் உள்ள காஷ்மீர் போரைப் பற்றி சரித்திரப்பூர்வமாக கருத்து தெரிவிக்கும் 99 சதவிகிதம் பேர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. அது மட்டுமல்ல கிட்டத்தட்ட அனைத்து நூலாசிரியர்களும் இதை ஏற்றுக்கொள்கிறார்கள். மேலும் இதனை மேஜர் ஜென்ரல் வி. கே. சிங் Biographies of Twelve Soldiers என்ற தன்னுடைய நூலில் உறுதி செய்கிறார்.

காஷ்மீர் சட்டப்பூர்வமாக இந்தியாவுடன் இணைக்கப்பட்ட பிறகுதான் ராணுவ ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அப்போது மேஜர் எஸ்.கே. சின்கா தில்லி, கிழக்கு பஞ்சாப் கமாண்டில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அவர் 1947 அக்டோபர் 26 ஆம் தேதி தில்லி ஜிம்கானா கிளப்பில் ஒரு விருந்தில் இருந்தபோது சுமார் 10 மணி அளவில் அவருக்கு ராணுவத் தலைமை அலுவலகத்தில் இருந்து ஓர் அழைப்பு வந்தது. அவர் ஓர் அவசரக் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். இதனை அவரே தெரிவித்துள்ளார்.கூட்டத்தில் லெஃப்டினட் ஜெனரல் டட்லி ரஸெல் ஜம்மு-காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்துவிட்டதைத் தெரிவித்தார். மேலும் அது பழங்குடியினர் படையைத் தடுக்க இந்தியாவிடம் ராணுவ உதவி கோரியுள்ளது என்றார். இதுதான் சரியான அர்த்தமுள்ள ஆதாரம். இந்தக் கூட்டம் பற்றிய தகவல்கள் ராணுவ ஆவணத்தில் இடம் பெற்றிருப்பவை.

அக்டோபர் 26 ஆம் தேதி காலை வி.பி.மேனன், காஷ்மீர் பிரதமர் மகாஜன், ராணுவ அதிகாரி சாம் மானெக் ஷா ஆகியோர் ஸ்ரீ நகரில் இருந்து தில்லி வருகிறார்கள். அக்டோபர் 26 ஆம் தேதி இரண்டு முறை பாதுகாப்பு கமிட்டி கூட்டம் மவுண்ட்பேட்டன் தலைமையில் நடை பெற்றது. காலையில் நடந்த கூட்டத்துக்குப் பிறகு வி. பி. மேனனும் , மகாஜனும் ஜம்முவுக்கு விமானத்தில் சென்று அரண்மனையில் அரசரைச் சந்திக்கிறார்கள். வி. பி. மேனன் காஷ்மீர் இணைப்பு ஆவணத்தில் அரசரின் கையொப்பம் பெறுகிறார். மீண்டும் வி.பி.மேனனும் மகாஜனும் தில்லி வருகிறார்கள். இரவில் இரண்டாவது முறையாக நடந்த பாதுகாப்பு கமிட்டி கூட்டத்தில் வி.பி. மேனன் காஷ்மீர் இணைப்பு ஆவணத்தை சமர்ப்பிக்கிறார். கூட்டத்தில், அடுத்த நாள் அதாவது அக்டோபர் 27 ஆம் தேதி ஸ்ரீ நகருக்கு இந்திய ராணுவத்தை அனுப்ப முடிவு எடுக்கப்படுகிறது. ஆனால் 26 ஆம் தேதி இரவு இரண்டாவது முறையாக பாதுகாப்பு கமிட்டி கூட்டம் நடைபெறவில்லை என்கிறார் ஒயிட் ஹெட். அதாவது அன்று மாலை வி.பி. மேனன் ஜம்மு சென்று இணைப்பு ஆவணத்தில் அரசரின் கையொப்பம் வாங்கவில்லை. அவர் ஜம்மு சென்று வந்திருந்தால் தானே இரண்டாவது முறையாக பாதுகாப்பு கமிட்டி அன்று கூடி இருக்க முடியும்? பாதுகாப்பு கமிட்டி கூட்டம் இரண்டாவது முறை நடைபெறவில்லை என்று சொல்வதன் மூலம், வி.பி. மேனன் அன்று மாலை ஜம்மு செல்லவில்லை என்பதையும் காட்டிவிடலாம். இதுவே ஒயிட் ஹெட்டின் எண்ணம்.

உண்மையில் அக்டோபர் 26 ஆம் தேதி பாதுகாப்பு கமிட்டி கூட்டம் இரண்டாவது முறையாக நடை பெற்றது .இதற்கான ஆதாரத்தை சந்திர சேகர தாஸ் குப்தா ‘வார் அன்ட் டிப்ளமசி இன் காஷ்மீர்’ என்ற தன் நூலில் தருகிறார். அந்தக் கூட்டத்திற்குப் பிறகு ஓர் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அது பிரிட்டிஷ் ராணுவத்தின் ரகசிய ஆவணக் காப்பகத்தில் இருந்து திரட்டப்பட்டுள்ளது.

“1947 அக்டோபர் 22 ஆம் தேதி பழங்குடியினர் படை காஷ்மீரை முற்றுகை இட்டது. அதற்கு முன்பாக இந்திய ராணுவம் அங்கு அனுப்பப்பட்டுவிட்டது என்ற குற்றச்சாட்டு உள்ளது. ஆனால் உண்மை நிலவரம் வேறு. அக்டோபர் 25 ஆம் தேதிக்கு முன்னதாக ராணுவத்தை அனுப்புவது தொடர்பாக எந்தத் திட்டமும் இந்தியாவிடம் இல்லை. அப்படி எந்த ஒரு திட்டமும் பரிசீலிக்கப்படவில்லை.”

அதன் பிறகு அக்டோபர் 25 , 26 ஆகிய தேதிகளில் நடந்தவை பற்றி அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இறுதியில் ஜெனரல் ஆர்.எம்.எம்.லாக் ஹார்ட், ஏர் மார்ஷல் டி.டபுள்யூ. எஹெர்ஸ்ட், ரியர் அட்மிரல் டி.எஸ்.ஹால் ஆகிய பிரிட்டிஷ் ராணுவ அதிகாரிகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அந்த பாதுகாப்பு கமிட்டி கூட்டத்தில்தான் 27 ஆம் தேதி ராணுவத்தை அனுப்பும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அது பின்னர் அமைச்சகத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் இது 26 ஆம் தேதி இரண்டாவதாக நடந்த பாதுகாப்பு கமிட்டி கூட்டம்தான். இதனைத் தான் மகாஜனும் தன்னுடைய நூலில் குறிப்பிட்டுள்ளார்.

மணிபென் படேல், சர்தார் வல்லபபாய் படேலின் மகள். சிறந்த காந்திய வாதியான அவர் 1950 இல் படேல் காலமாகும் வரை அவருடைய காரியதரிசியாக இருந்து அவருக்கு உதவினார். 1947 அக்டோபர் 26 ஆம் தேதி தன்னுடைய தந்தை படேல், வி. பி.மேனனை வரவேற்க விமான நிலையத்துக்குச் செல்லவில்லை என்று அவர் கூறுகிறார். அதனால் வி.பி.மேனன் 26 ஆம் தேதி ஜம்மு செல்லவில்லை. அடுத்து 26 ஆம் தேதி மாலை பிரிட்டிஷ் துணை கமிஷ்னர் அலெக்ஸாண்டர் சைமன் பாலம் விமான நிலையத்தில் வி.பி.மேனனை சந்தித்ததாகக் கூறுகிறார். மேலும் இரவில் விமானம் தரை இறங்கும் வசதி ஜம்முவில் இல்லாத காரணத்தால் 26 ஆம் தேதி மாலை தான் அங்கு செல்ல முடியவில்லை என்று வி.பி.மேனன் சொன்னார் என்கிறார் சைமன். இந்த இரண்டையும் சில நூலாசிரியர்கள் முக்கிய ஆதாரங்களாகக் காட்டுகிறார்கள்.இவர்கள் குறிப்பிடும் இருவருக்கும், காஷ்மீர் இணைப்பு விவகாரத்துக்கும் நேரடியான தொடர்பு இல்லை.

அக்டோபர் 26 ஆம் தேதி வி. பி. மேனன் ஜம்மு சென்று இணைப்பு ஆவணத்தில் காஷ்மீர் அரசரிடம் கையொப்பம் வாங்கினார் என்பதற்கு முதல் ஆதாரமாக வி.பி.மேனின் கூற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். அவர் இந்திய அரசின் உள்துறை செயலர். அடுத்து அவருடன் இருந்த காஷ்மீர் பிரதமர் மகாஜன் தரும் செய்தியைப் பார்க்கவேண்டும். அதற்குப் பிறகுதான் நேரடித் தொடர்பு இல்லாதவர்களின் கருத்தைக் கூடுதல் ஆதாரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் இங்கு பார்த்தவர், சந்தித்தவர் ஆகியோர் கூறுவது முதல் ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்படுவது வியப்பாக உள்ளது.

26 ஆம் தேதி வி. பி. மேனன் பாதுகாப்பு கமிட்டி ‘முதல்’ கூட்டம் முடிந்த பின் மகாஜனுடன் விமானத்தில் ஜம்மு செல்கிறார். அரண்மனையில் நுழைந்ததும் தான் கண்ட காட்சிகளை விவரிக்கிறார். அரசர் பயணக்களைப்பில் தூங்குகிறார். அரசரின் உதவியாளர்களிடம் அவரை எழுப்பச் சொல்கிறார். அதன் பிறகு பாதுகாப்பு கமிட்டி கூட்டத்தின் முடிவுகளைக் கேட்டு அறிந்து கொள்ளும் அரசர் இணைப்பு ஆவணத்தில் கையொப்பம் இடுகிறார். வி.பி.மேனன் விவரிக்கும் விதத்தைப் பார்க்கும்போது இதைக் கட்டுக்கதை என்று சொல்ல முடியவில்லை. மேலும் அங்கு இருந்த சூழல் அது அக்டோபர் 26 ஆம் தேதி என்பதைக் காட்டுகிறது.

ஷேக் அப்துல்லா தனது சுயசரிதையான Flames of Chinar (ஆங்கில மொழி பெயர்ப்பு) என்ற நூலில் வி.பி.மேனன் அக்டோபர் 26 ஆம் தேதி ஜம்மு சென்றதை உறுதி செய்கிறார். அரசர் பயணக்களைப்பில் தூங்கச் செல்லும் முன் “வி.பி. மேனன் வருவார். அவர் வந்தவுடன் என்னை எழுப்புங்கள்”
என்று தன் உதவியாளர்களிடம் கூறினார் என்று அவர் எழுதுகிறார்.

1971 முதல் 1974 வரை ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தின் முதல்வராக இருந்தவர் மீர் காசிம். அவர் தன்னுடைய சுய சரிதையான My Life and Times என்ற நூலில் 1947 அக்டோபர் 26 ஆம் தேதி வி.பி. மேனன் இணைப்பு ஆவணத்துடன் ஜம்மு அனுப்பி வைக்கப்பட்டதைப் பற்றி எழுதியுள்ளார். இணைப்பு ஆவணத்தில் அன்று அரசர் கையொப்பம் இட்டதை அவரும் மறுக்கவில்லை.

அடுத்ததாக பெரும் குழப்பத்தை ஏற்படுத்துவது நேரு காஷ்மீர் அரசருக்கு எழுதிய 1947 அக்டோபர் 27 ஆம் தேதியிட்ட கடிதம். 27 ஆம் தேதி காலை 8.30 மணி அளவில் இந்திய ராணுவம் ஸ்ரீ நகரில் தரை இறங்கியது. இது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படுவது. 26 ஆம் தேதி காஷ்மீர் அரசர் கையொப்பம் இட்ட இணைப்பு ஆவணம் இந்தியாவுக்குக் கிடைக்கிறது. அடுத்த நாள் காஷ்மீருக்கு ராணுவத்தை அனுப்ப அமைச்சகம் ஒப்புதல் தருகிறது. இதற்கு பிரிட்டிஷ் ராணுவ ரகசிய ஆவணம் சாட்சியாக உள்ளது. 27 ஆம் தேதி மாலையில் இணைப்பு ஆவணம் கிடைத்தது என்று பாரத பிரதமர் நேரு கடிதம் எழுதுகிறார். அதாவது இணைப்பு ஆவணத்தில் காஷ்மீர் அரசரும், கவர்னர் ஜென்ரல் மவுண்ட்பேட்டனும் கையொப்பம் இடுவதற்கு முன்பாக இந்திய ராணுவம் ஸ்ரீ நகருக்கு அனுப்பப்பட்டுவிட்டது என்று நேருவே ஓர் ஆதாரத்தை உருவாக்குகிறார். இதற்கு வாய்ப்பே இல்லை.

1948 இல் ஹைதராபாத்தை படேலின் முயற்சியால் இந்தியா தன்னோடு இணைத்துக்கொண்டது. அது போல காஷ்மீரை விரைவாக இணைத்துக் கொள்ள இந்தியா முயற்சிக்கவில்லை. அக்டோபர் 22 ஆம் தேதி பழங்குடியினர் படை காஷ்மீருக்குள் நுழைந்து நாசம் செய்து கொண்டு வருகிறது. 24 ஆம் தேதி காஷ்மீர் அரசர் இந்தியாவுடன் இணைய விருப்பம் தெரிவித்து எழுதிய கடிதம் இந்திய அரசாங்கத்துக்குக் கிடைக்கிறது. அப்போதும் இந்திய அரசு உடனடியாக ராணுவத்தை காஷ்மீருக்கு அனுப்பவில்லை. முறைப்படி காஷ்மீர் இந்தியாவுடன் இணைவதற்கு முன்பாக ராணுவத்தை காஷ்மீருக்கு அனுப்பும் எண்ணம் நேரு தலைமையிலான இந்திய அரசுக்கு இல்லை. அப்படி ஓர் எண்ணம் இருந்திருக்குமானால் அக்டோபர் 25 அல்லது 26 ஆம் தேதியில் இந்தியா ராணுவத்தை ஸ்ரீ நகரில் தரை இறக்கி இருக்கும்.

அக்டோபர் 27 ஆம் தேதி காலை இந்திய ராணுவம் ஸ்ரீ நகரில் தரை இறங்குவதற்கு முன்பாக எப்போது வேண்டுமானாலும் மவுண்ட் பேட்டன் அதில் கையொப்பமிட்டு இருக்கலாம். ஆங்கில முறைப்படி 26 ஆம் தேதி இரவு 12 மணிக்கு மேல் 27 ஆம் தேதி தொடங்கி விடுகிறது. காஷ்மீரில் இந்திய ராணுவம் தரை இறங்கிய பிறகு 27 ஆம் தேதி காலை வி.பி. மேனனும், மகாஜனும் தில்லியில் இருந்து விமானம் மூலம் ஜம்மு சென்றார்கள். 26 ஆம் தேதியே இணைப்பு ஆவணத்தில் காஷ்மீர் அரசர் கையொப்பம் இட்டுவிட்ட போதிலும், அது தொடர்பான சில கூடுதல் ஆவணங்களில் அவர் கையொப்பமிட வேண்டும். அதுவே அவர்கள் பயணத்தின் நோக்கம். அப்படி இருக்கும்போது நேரு காஷ்மீர் அரசருக்கு எழுதிய கடிதத்தில் அன்று மாலை வி. பி. மேனன் வந்தார் என்கிறார். அரசர் கையொப்பம் இட்ட இணைப்பு ஆவணத்தையும், மவுண்ட்பேட்டனுக்கு அவர் அனுப்பிய கடிதத்தையும் பார்த்தேன் என்கிறார். இதில் முரண்பாடு இருக்கிறது.

காஷ்மீர் அரசர் வி.பி. மேனனிடம் கொடுத்து அனுப்பிய இணைப்பு ஆவணமும், அவர் மவுண்ட்பேட்டனுக்கு எழுதிய 26 ஆம் தேதி இட்ட கடிதமும் இந்திய அரசால் மக்கள் பார்வைக்கு மேலும் பல ஆவணங்களோடு வெளியிடப்பட்டுள்ளன. 26 ஆம் தேதி நடந்தவற்றைதான் வி. பி. மேனன் தன்னுடைய நூலில் எழுதியுள்ளார். நேரு எழுதிய கடிதத்தின் தேதியை 27 என்பதற்கு பதிலாக 26 என்று மாற்றிப் பார்த்தால் எந்தக் குழப்பமும் வராது. அது 27ஆம் தேதி தான் என்று வைத்துக்கொள்வோம். 27 ஆம் தேதி காலை 8.30 மணிக்கு இந்திய ராணுவம் ஸ்ரீ நகரில் தரை இறங்குகிறது. அதன் பின் தொடர்ந்து ராணுவ வீரர்களை அன்று அனுப்பிக்கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் இந்தியாவின் பிரதமர், வெகு நிதானமாக அரசருக்கு கடிதம் எழுதுகிறார். அதில் இந்தியாவுடன் அவர் இணைந்ததற்காக வாழ்த்து தெரிவிக்கிறார். நிச்சயமாக இது சாத்தியமில்லாத ஒன்று.  இதில் உள்ள முரண்பாட்டை அறிய நுட்பமான வரலாற்று ஆய்வு கூட தேவை இல்லை.கொஞ்சம் பொது அறிவு இருந்தால் போதும்.

நேருவின் கடிதம் ஒன்றை தெளிவுபடுத்தி விடுகிறது. வி.பி.மேனன் ஜம்மு அரண்மனைக்குச் சென்று அரசரிடம் இணைப்பு ஆவணத்தில் கையொப்பம் வாங்கினார் என்பததான் அது. நேரு எழுதிய கடிதத்தின் தேதியில் தான் குழப்பம் உள்ளது. இல்லை அது அக்டோபர் 27 ஆம் தேதியிட்ட கடிதம் என்று தொடங்கி அதையே முக்கிய ஆதாரமாகக் கொண்டு உலகுக்கு நடந்தவற்றை எல்லாம் திரித்துக் கூற சிலர் முனைகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்போது அவர்கள் வாதம், ராமாயணக் கதையில் அனுமன் இலங்கைக்குப் பறந்து சென்று சீதையின் கணையாழியை வாங்கி வரவில்லை என்று மட்டும் சொல்வது போல் ஆகாது. ராமன் சீதையின் கணவனே அல்ல என்று கூறுவது போல் ஆகும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

பூஞ்ச் கலவரமும் முதல் போரும்

இந்தியா பாகிஸ்தான் போர்கள் / அத்தியாயம் 8

Bangashமுதல் காஷ்மீர் முற்றுகையும் போரும் சிலரால் திடீரென நடத்தப்பட்டவை அல்ல. பாகிஸ்தான் ராணுவத்தினர், பாகிஸ்தானை ஆளும் முஸ்லிம் லீகைச் சேர்ந்தவர்கள், முஸ்லிம் கான்ஃபிரன்ஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள், பதானிய பழங்குடிப் படையினர் ஆகியோரின் கூட்டு முயற்சியால் அவை திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டன.

பாகிஸ்தான் ராணுவமும், முஸ்லிம் லீகும் திட்டம் வகுத்து முக்கியப் பங்காற்றின என்பதற்கு ஆதாரமாக பாகிஸ்தான் ராணுவத்தை வழிநடத்திய மேஜர் அமின் போன்றவர்களின் கூற்றுகள் உள்ளன. காஷ்மீருக்குள் நுழைந்த பழங்குடிப் படையினர் பஷ்டூன் இனத்தைச் சேர்ந்தவர்கள். பஷ்டூன் இனம் ஆப்கனிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் வாழும் ஈரானிய மக்கள் இனம். இந்த இனத்தவர்கள் கிழக்கு ஈரானிய பஷ்டூன் மொழி பேசுபவர்கள்.

1932 இல் ஷேக் அப்துல்லா காஷ்மீரின் முதல் அரசியல் கட்சியான அனைத்து ஜம்மு- காஷ்மீர் முஸ்லிம் கான்ஃபிரன்ஸைத் தொடங்கினார். ஜம்முவையும், காஷ்மீரையும் இந்தியாவுடன் இணைப்பதுதான் அதன் நோக்கம். 1939 ஆம் ஆண்டு ஷேக் அப்துல்லா கட்சியின் பெயரை அனைத்து ஜம்மு- காஷ்மீர் கான்ஃபிரன்ஸ் என்று மாற்றி, மதச்சார்பற்ற ஒரு புது வடிவத்தை அதற்குக் கொடுத்தார். அப்போது கட்சியின் கொள்கையும் மாற்றி அமைக்கப்பட்டு, காஷ்மீர் தனியாக சுதந்திர காஷ்மீராக இயங்கவேண்டும் என்ற முழக்கம் எழுப்பப்பட்டது. 1941 ஜூன் 13 ஆம் தேதி அக்கட்சியிலிருந்து பிரிந்து சிலர் மீண்டும் பழைய முஸ்லிம் கான்ஃபிரன்ஸுக்குப் புத்துயிர் கொடுத்தார்கள். அதற்குத் தலைமை ஏற்றவர் சௌத்ரி குலாம் அப்பாஸ். இந்த முஸ்லிம் கான்ஃபிரன்ஸ் ஆட்கள்தாம் முதல் காஷ்மீர் போருக்காக பாகிஸ்தான் ராணுவத்துடன் சேர்ந்து திட்டமிட்டவர்கள்.

போரை ஒருங்கிணைக்க மிகச் சரியான நபர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் தான் மேஜர் ஜென்ரல் அக்பர் கான். 1947 இந்திய பாகிஸ்தான் போரில் பாகிஸ்தான் படையின் பிரிகேடியராக இருந்த அவர் பஷ்டூன் இனத்தைச் சேர்ந்தவர். அவர் பெஷாவர் இஸ்லாமிய கல்லூரியில் பயின்ற பின் பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்ந்து பல நிலைகளில் பணியாற்றி இருக்கிறார். பல போர்களில் ஆற்றிய சிறந்த பணிகளுக்காக விருதுகள் பெற்றிருக்கிறார். நிலத்தைப் பிரித்துக்கொடுத்த பிரிட்டிஷ் அரசு இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் முப்படைகளையும் பிரித்துக் கொடுத்தது. அந்தப் பிரிவினையின்போது ஏற்படுத்தப்பட்ட துணைக் குழுவின் உறுப்பினராக அக்பர் கான் இருந்தார். காஷ்மீருக்குள் பழங்குடிப் படையினர் நுழைந்தபோது சாதாரண உடையில் பாகிஸ்தான் ராணுவத்தினரும் வந்தார்கள். அதன் பின் நேரடியாக பாகிஸ்தான் ராணுவம் வந்தது. அவர்களை எல்லாம் வழி நடத்தியவர் அகபர்கான்தான். போரின்போது அவருக்குக் கொடுக்கப்பட்ட சங்கேதப் பெயர் ‘ஜென்ரல் டாரிக்’.

1947 இந்திய பாகிஸ்தான் போருக்கான காரணம் பதான் பழங்குடிப் படையின் காஷ்மீர் முற்றுகை என்றால் அதற்கான விதை 1947 செப்டெம்பர் மாதமே விதைக்கப்பட்டுவிட்டது. அது விதைக்கப்பட்ட இடங்கள் இப்போது பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள ஆசாத் காஷ்மீர் பகுதியில் உள்ளன. அவை பூஞ்ச் பிரிவில் உள்ள பாக்கும், ரவலாகோட்டும். காஷ்மீர் சமஸ்தானத்தோடு இருந்த பூஞ்ச் மாவட்டத்தின் ஒரு பகுதி முதல் போருக்குப் பிறகு பாகிஸ்தான் வசமும் மற்றொரு பகுதி இந்தியா வசமும் வந்தன.

பூஞ்ச் என்பது காஷ்மீர் பள்ளத்தாக்கோடு இணைந்த இடம் அல்ல. கிட்டத்தட்ட இரண்டே கால் லட்சம் சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவுள்ள காஷ்மீர் சமஸ்தானத்தோடு ஒப்பிடும்போது, சுமார் நாலாயிரத்து எழுநூறு சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள பூஞ்ச் ஒரு சிறிய இடம்தான். இருந்தபோதும் பூஞ்ச் நீண்ட சரித்திரம் கொண்டது. 1850 ஆம் ஆண்டு கால்சா தர்பாரின் பிரதம மந்திரியும், ராஜா தயான் சிங்கின் மகனுமான ராஜா மோத்தி சிங் பூஞ்சுக்கு தனி அந்தஸ்து வழங்கினார். 1901 ஆம் ஆண்டு ராஜா பல்தேவ் சிங் ஆட்சிக் காலத்தில் பூஞ்சுக்கு சமஸ்தான அந்தஸ்து வழங்கப்பட்டது. 1936 ஆம் ஆண்டு ஜம்முவின் டோக்ரா அரசர் ஹரி சிங் பூஞ்சை காஷ்மீருடன் இணைத்துக் கொண்டார். அதன் பிறகு பூஞ்ச் பகுதிக்கு ‘ஜகிர்’ அந்தஸ்து வழங்கப்பட்டது. பாரசீக மொழியில் ‘ஜ’ என்பது இடத்தைக் குறிக்கும். ‘கிர்’ என்பது வைத்திருப்பதைக் குறிக்கும். அதாவது பூஞ்ச்-ன் ஏழாவது பட்டத்து அரசர் ஜக் தேவ் சிங் வசதிகளை அனுபவித்துக்கொண்டு, காஷ்மீர் அரசர் ஹரிசிங்கின் ஆட்சியின் கீழ் இருக்க வேண்டும்.

தேசப் பிரிவினைக்கு முன்பும் பின்பும் நடந்த வன்முறைகள் காஷ்மீரையும் விட்டு வைக்கவில்லை. 1947 பஞ்சாப் இனப்படுகொலைகளுக்குப் பிறகு பாகிஸ்தானில் இருந்து வந்த இந்து, சீக்கிய அகதிகளும், இந்தியாவிலிருந்து வந்த முஸ்லிம் அகதிகளும் காஷ்மீரில் குவிந்தார்கள். பூஞ்ச் பகுதியை இணைத்துக்கொண்ட காஷ்மீர் அரசர் பூஞ்ச் மக்களைக் கடுமையான வரி விதிப்பால் கொடுமைப்படுத்துகிறார் என்ற புகார் எழுந்தது. காஷ்மீர் பாகிஸ்தானுடன் இணைக்கப்படவேண்டும் என்ற கோஷம் பூஞ்ச் பகுதி முஸ்லிம்களால் எழுப்பப்பட்டது. அரசரை எதிர்த்து மக்கள் கிளர்ச்சி செய்தார்கள்.

காஷ்மீர் அரசர் தன் டோக்ரா படைகளை அனுப்பி கடுமையான தாக்குதல் நடத்தினார். முஸ்லிம் கிராமங்கள் கொளுத்தப்பட்டன. பல்லாயிரம் பேர் படுகொலை செய்யப்பட்டார்கள். பூஞ்ச் பகுதி முஸ்லிம் மக்கள் தங்கள் குடும்பத்தினரோடு ஊரைக் காலி செய்து பாகிஸ்தான் சென்றார்கள். அவர்கள் திரும்பி வரும்போது ஆயுதங்களோடு வந்தார்கள். வந்தவர்கள் இந்துக்களையும் சீக்கியர்களையும் கண்மூடித்தனமாகக் கொல்ல ஆரம்பித்தார்கள். செப்டெம்பர் இரண்டாம் வாரத்தில் சுமார் 60,000 அகதிகள் ஜம்மு போனார்கள். அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்துகொண்டிருந்த இனக்கலவரம் சிலரின் ஒருங்கிணைப்போடு மிகப்பெரிய அளவில் வெடித்தது. இதைத்தான் பாகிஸ்தான் எதிர்பார்த்தது. துப்பாக்கிகளை பாகிஸ்தான் பொது மக்களுக்கு விநியோகம் செய்த பிறகு புரட்சி சூடு பிடிக்க ஆரம்பித்தது என்று கூறுகிறார் பாகிஸ்தானின் முன்னாள் மேஜர் அக்பர்கான்.
பாகிஸ்தானை ஆதரிக்கும் சிலரால் எடுத்து வைக்கப்படும் முக்கியமான வாதம் இதுதான்.

“1947 அக்டோபரில் நடந்த பழங்குடிப் படையினரின் காஷ்மீர் முற்றுகைக்குக் காரணம் பூஞ்ச் கலவரமும் அதைத் தொடர்ந்து நடந்த படுகொலைகளும்தாம். எனவே 1947-48 இந்திய பாகிஸ்தான் போருக்கு பழங்குடிப் படையை ஏவிவிட்டு, அதனைப் பின்தொடர்ந்து வந்த பாகிஸ்தான் ராணுவம் காரணமல்ல. பூஞ்ச் கலவரம் தான் அதற்குக் காரணம்”.

சமீபத்தில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நூலாசிரியர் கிரிஸ்டோபர் ஸ்னீடன்  ‘காஷ்மீர் : தி அன் ரிட்டன் ஹிஸ்ட்டரி’ என்னும் புத்தகத்தை எழுதியிருக்கிறார். இந்தியா கூறுவது போல காஷ்மீர் பிரச்னை பதான் பழங்குடியினரின் படையெடுப்பால் தொடங்கவில்லை. அதன் மூலம் பூஞ்ச் கலவரம்தான். புது தில்லியில் தனது நூலை வெளியிட்ட பின் பாபா உமருக்கு அவர் அளித்த பேட்டி பலரின் கவனத்தை ஈர்த்தது . காஷ்மீர் அரசர் முறைப்படி காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்துக்கொண்டார். அதற்குப் பிறகு இந்திய பாகிஸ்தான் முதல் போர் நடக்கிறது. போரின் போது பாகிஸ்தான் காஷ்மீரின் கணிசமான பகுதிகளை ஆக்கிரமித்துக்கொண்டது. அதில் மேற்குக் பக்கமுள்ளஆசாத் காஷ்மீர் அதிக பிரச்னைகள் நிறைந்த பகுதி. அது உருவாவதற்கு முக்கிய காரணம் 1947 ஆகஸ்ட் 18 ஆம் தேதி காஷ்மீர் அரசருக்கு எதிராக பூஞ்ச் இல் வெடித்த மக்கள் புரட்சி என்கிறார் ஸ்னீடன்.

முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக உள்ள இடம் பூஞ்ச். அங்கு இருந்தவர்களில் 50,000 பேர் பிரிட்டிஷ் ராணுவத்தில் பணியாற்றியவர்கள். அவர்களுக்கு பொருளாதார முன்னேற்றமும், நில உரிமையும் மறுக்கப்பட்டதால் அரசருக்கு எதிராக கிளர்ச்சி செய்தார்கள். காஷ்மீர் அரசர் தன் டோக்ரா படைகளை வைத்து அவர்களுடைய ஆயுதங்களைப் பிடுங்கினார். அதனால் அவர்கள் பாகிஸ்தானின் வட மேற்கு எல்லை மாகாணத்துக்கும், தேரா இஸ்மாயில் கான் நகருக்கும் சென்றார்கள். கிளர்ச்சியாளர்கள் ஆயுத உற்பத்தியாளர்களிடம் இருந்து ஆயுதங்களைப் பெற்று வந்தார்கள். உள்ளூர் மக்களின் ஆதரவோடு மகாராஜாவின் டோக்ரா படைகளை எதிர்த்துப் போராடி தங்கள் மண்ணுக்கு விடுதலை பெற்றார்கள் என்று சொல்கிறார் ஸ்னீடன்.

1947 ஆகஸ்ட் 14 ஆம் தேதி பாகிஸ்தானும், 15 ஆம் தேதி இந்தியாவும் விடுதலை அடைந்து விட்டன.காஷ்மீர் தனியாக இருக்கிறது.பாகிஸ்தான் எல்லையில் இருக்கும் பூஞ்ச் பகுதியில் கலவரம் வெடிக்கிறது.சிலர் பாகிஸ்தானுக்கு வந்து ஆயுத உற்பத்தியாளர்களிடமிருந்து ஆயுதங்களை வாங்கிச் சென்று காஷ்மீரில் மறுபடியும் போராடுகிறார்கள். அப்போது பாகிஸ்தான் அரசும் ராணுவமும் என்ன செய்து கொண்டிருந்தன என்பதைப் பற்றி அவர் தெளிவாக எதுவும் கூறவில்லை.பாகிஸ்தானுக்கு பூஞ்ச் புரட்சியில் நேரடித் தொடர்பு இருந்ததா இல்லையா என்ற கேள்விக்கு அவர் கூறும் பதில் விநோதமாக உள்ளது.

“பாகிஸ்தானின் அதிகாரபூர்வமற்ற ஆதரவும், சில உள்ளூர் குடும்பங்களின் ஆதரவும் இருந்தது என்பதை நான் உறுதியாகக் கூறமுடியும். பூஞ்ச் மக்கள் தங்களை காஷ்மீர் பள்ளத்தாக்கோடு இணைத்துப் பார்ப்பதைவிட பஞ்சாபோடு இணைத்துப் பார்ப்பதையே விரும்புகிறார்கள். ஜீலம் நதியின் மறு கரையில் இருந்த குடும்பங்கள் புரட்சியாளர்களுக்கு உணவும், தங்கும் இடமும் தந்து உதவின. பாகிஸ்தான் அரசாங்கத்தின் ஆதரவு ஓரளவு இருந்தது. ஆனால் அது மிகக்குறைந்த அளவில்தான் இருக்கும் என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால் அதற்கு தீர்க்கப்படவேண்டிய பல பிரச்னைகள் இருந்தன. கராச்சியில் தலைநகரை அமைக்கும் வேலையில் அது ஈடுபட்டிருந்தது. பெரும்பாலும் உள்ளூர் பூஞ்ச் மக்கள் தாம் கலவரத்துக்குக் காரணமானவர்கள். அவர்கள் மகாராஜாவின் ஆட்சியின் மீது அதிருப்தி அடைந்திருந்தார்கள். அவர்கள் காஷ்மீர் பாகிஸ்தானுடன் இணைய வேண்டும் என்று விரும்பினார்கள்.”

பாகிஸ்தான் அரசாங்கத்தின் ஆதரவு ஓரளவுதான் இருந்தது என்று அவர் கூறுவதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆகஸ்ட் 18 ஆம் தேதி பூஞ்ச் இல் கலவரம் நடக்கிறது. செப்டெம்பர் முதல் வாரத்தில் பாகிஸ்தான் காஷ்மீரைக் கைப்பற்ற திட்டம் ஒன்றை தயார் செய்து விட்டது. பாகிஸ்தான் எவ்வாறு திட்டமிட்டது என்பதை மேஜர் ஜென்ரல் முகமத் அக்பர்கான்  டிஃபன்ஸ் ஜர்னல் கராச்சி 1985 ஜூன்-ஜூலை இதழில் வெளியான பேட்டியில் விவரிக்கிறார்.

“இந்தியா பாகிஸ்தான் பிரிவினை முடிந்து சில வாரங்கள் கடந்த பின் பாகிஸ்தான் பிரதம மந்திரி லியாகத் அலி கான் சார்பாக முஸ்லிம் லீக் தலைவர் மியான் இப்திகாருதின் என்னை அணுகினார். காஷ்மீரைக் கைப்பற்ற ஒரு திட்டத்தைத் தயாரிக்கும்படி கூறினார். பாகிஸ்தான் ராணுவம் 4000 துப்பாக்கிகளை உள்ளூர் போலீஸுக்குக் கொடுப்பதற்காக வைத்திருப்பதை நான் அறிந்தேன். அதை உள்ளூர் மக்களிடம் கொடுத்தால் காஷ்மீரில் பல இடங்களில் ஆயுதங்களுடன் கலவரத்தை உண்டாக்க முடியும். அதன் அடிப்படையில் நான் ஒரு திட்டத்தைத் தயாரித்து மியான் இப்திகாருதினிடம் கொடுத்து அனுப்பினேன். அதன் பிறகு லாகூரில் லியாகத் அலிகானுடன் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு வந்தது. அதில் என்னுடைய திட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டு பொறுப்புகள் பலருக்கும் பிரித்துக் கொடுக்கப்பட்டன. ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன. விஷயம் ராணுவத்துக்குத் தெரியாமல் பார்த்துக் கொள்ளப்பட்டது. 1947 செப்டெம்பர் மாதம் 4000 துப்பாக்கிகளும் காஷ்மீரின் பல இடங்களில் விநியோகிக்கப்பட்டன. காஷ்மீர் மகாராஜாவின் படையோடு துப்பாக்கிச் சண்டை தொடங்கியது. புரட்சி சூடு பிடித்தது.”

பாகிஸ்தான் பிரதமர் தலைமையில் காஷ்மீரில் கலகம் தொடங்க வழி செய்யப்பட்டு போருக்கான காரணம் உருவாக்கப்பட்டுவிட்டது. அப்படி இருக்கும்போது பாகிஸ்தான் அரசாங்கத்துக்கு ஓரளவு தெரியும் என்று கூறுவது கேலிக்குரியது. தேச விடுதலைக்கு முன்பாக முஸ்லிம் லீக் தொடங்கி வைத்த இனக்கலவரம் இன்னும் முடியவில்லை. பஞ்சாபில் நடந்த இனக்கலவரத்துக்குப் பிறகு காஷ்மீருக்குள் இந்து, சீக்கிய, முஸ்லிம் அகதிகள் நுழைந்த நேரம் அது. அதனால் பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் தங்கள் வழக்கமான பாணியில் காஷ்மீரில் கலவரத்தை ஏற்படுத்தி, அதை இணைத்துக் கொள்வதற்கு நேரம் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

காஷ்மீரின் ஒரு சிறிய பகுதியில் மக்கள் அவர்களாக கிளர்ந்தெழுந்தார்கள். அதன் காரணமாக காஷ்மீரை இந்தியாவிடமிருந்து காப்பாற்ற பாகிஸ்தான் போர் செய்தது என்று உலகம் நம்பவேண்டும் என்பது பாகிஸ்தானின் எதிர்பார்ப்பு. பாகிஸ்தான் விடுதலைக்குப் பிறகு மிக கவனமாக காஷ்மீரில் காய் நகர்த்த ஆரம்பித்தது. காஷ்மீரைக் கைப்பற்றுவது பாகிஸ்தானின் முக்கியமான நோக்கம். அதற்காகவே பூஞ்ச் கலவரம் பெரிதாக வளர வழி செய்யப்பட்டது. அதன் பின் பதான் படையெடுப்பு நடந்தது. அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீருக்குள் நுழைந்தது.

இந்திய பாகிஸ்தான் விடுதலைக்கு மூன்று நாள்கள் முன்பாக 1947 ஆகஸ்ட் 12ஆம் தேதி காஷ்மீர் அரசர் ஹரி சிங் பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும், அடிப்படை பொருள்கள் வரவு, போக்குவரத்து, தபால் ஆகியவை தொடர வேண்டுகோள் விடுத்து, ‘நிலை தொடரும் ஒப்பந்தம்’ தொடர்பாக தந்தி அனுப்பினார். உடனே சம்மதம் தெரிவித்து பாகிஸ்தான் பதில் தந்தி அனுப்பியது உண்மை. ஆனால் தான் கூறியபடி பாகிஸ்தான் நடந்து கொள்ளவில்லை. அப்போது இருந்த காஷ்மீர் பிரதம மந்திரியின் உதவியோடு காஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைக்க சிலரை அனுப்பி முயற்சி எடுத்தது. காஷ்மீர் அரசர் அதற்கு சம்மதிக்க மறுக்கவே அது  தோல்வியில் முடிந்தது. அதனால் பாகிஸ்தான் செப்டெம்பர் மாதம் முதல் காஷ்மீரின் மீது மறைமுக பொருளாதாரத் தடை விதித்தது. அடிப்படை பொருள்கள் அனுப்பப்படுவது நிறுத்தப்பட்டது. தபால், தந்தி சேவைகள் துண்டிக்கப்பட்டன. இதனை ரோகித் சிங் ‘ஆபரேஷன்ஸ் இன் ஜம்மு அன்ட் காஷ்மீர் 1947-48’ என்ற தன் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

அடிப்படை பொருள்கள் போக்குவரத்து, தகவல் தொடர்புகள் ஆகியவை துண்டிக்கப்பட்டது பற்றி காஷ்மீர் அரசாங்கம் பாகிஸ்தானுக்கும், பிரிடிட்டிஷ் அரசுக்கும் முறையே 1947 அக்டோபர் 15, 18 ,22 ஆகிய தேதிகளில் தந்தி அனுப்பியது. ஆனால் அவற்றால் எந்தப் பயனும் இல்லை. அக்டோபர் மாதத்தின் நடுவில் பூஞ்ச் அருகில் பிம்பர், மங்கலா, பீர்பூர், போர்ட் ஓவென் ஆகிய இடங்களில் ஆக்கிரமிப்பாளர்கள் நிறைய பேர் தென்பட்டார்கள். அவர்களை காஷ்மீர் அரசாங்கப்படை வெளியேற்றியது. பொருளாதாரத் தடை, ஆக்கிரமிப்பாளர்கள் குவிப்பு ஆகியவற்றால் காஷ்மீர் படையெடுப்புக்கு ஏற்ற சூழலை பாகிஸ்தான் உருவாக்கியது. சுதந்தர பாகிஸ்தானின் ஆட்சியாளர்கள் வட மேற்கு எல்லை மாகாணத்தில் பதானியர்களின் விடுதலைப் போராட்டத்தை திசை திருப்பி அடக்க வேண்டும். இல்லை என்றால் மத அடிப்படையில் பாகிஸ்தானைப் பிரித்துப் பெற்றதன் நோக்கத்துக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும். அதனால் பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் பதானிய பழங்குடிப் படையை காஷ்மீரை நோக்கி ஏவி விட்டார்கள்.

பழங்குடியினர் படையெடுப்புக்கான காரணம் ஒரு புதிராக இருக்க அதை அவிழ்த்து உலகுக்கு உண்மைகளை வெளிச்சம் போட்டுக் காட்ட 1947 இல் துணிச்சல் மிக்க ஒரு பெண்மணி முயன்றார். அதில் வெற்றியும் பெற்றார். அவர்தான் மார்கரெட் பர்க் ஒயிட். அவர் அப்போது அமெரிக்காவின் லைஃப் பத்திரிகை செய்தி சேகரிப்பாளராகவும், புகைப்பட கலைஞராகவும் பணியாற்றிக் கொண்டிருந்தார். மேலும் பர்க் ஒயிட் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ரஷ்யா, ஜெர்மனி ஆகிய நாடுகளில் பணியாற்றியபோது கிடைத்த அனுபவங்களை வைத்து பல நூல்களை எழுதியவர். செய்தி சேகரிப்பாளர் என்ற முறையில் 1947–48 போரின் போது,  பழங்குடிப் படையினரின் காஷ்மீர் முற்றுகை முதல், எல்லா தகவல்களையும் பத்திரிகைக்கு சேகரித்து அளித்தார்.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

 

 

1949 இல் நியூயார்க்கில் வெளியானது அவருடைய ‘ஹாஃப் வே டு ஃப்ரீடம்’ என்ற நூல். அதில் காஷ்மீர் போரின் காரணங்களைத் தோண்டி எடுத்து வெளிப்படுத்தினார். தன் உயிரைப் பணயம் வைத்து நேரடியாக பல இடங்களுக்குச் சென்று உண்மைகளைக் கண்டறிந்தார். பதான் பழங்குடி படையெடுப்பு தொடங்கியபோது பர்க் ஒயிட் பாகிஸ்தானில் தான் இருந்தார். பாகிஸ்தான் அரசாங்கம் அவர் காஷ்மீருக்குள் நுழைவதை விரும்பவில்லை. நடு நிலை பத்திரிகை ஒன்றின் செய்தி சேகரிப்பாளர் உலகுக்கு உண்மைகளை வெளிச்சம் போட்டுக் காட்டிவிடுவார் என்று அது அஞ்சியது. ஆனால் பர்க் ஒயிட் பழங்குடிப் படையெடுப்பு தொடங்கிய இடத்தைப் பார்க்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார். வழி நடத்த வந்த பாகிஸ்தான் அதிகாரிகள் அவரை பாதுகாப்பாக, அழகிய இயற்கை காட்சிகள் தெரியும் ஆள் அரவமற்ற காஷ்மீர் எல்லையில் உள்ள சாலைகளுக்கு அழைத்துச் செல்வார்கள். அங்கு சென்று புகைப்படம் எடுப்பதால் எந்தப் பயனும் இல்லை என்பதை பர்க் ஒயிட் அறிவார். அதனால் சில நேரங்களில் அவர் அதிகாரிகளின் பாதுகாப்பிலிருந்து நழுவிச் சென்று பதான் பழங்குடிப் படையினரை சந்தித்து உரையாடினார்.

பழங்குடிப்படையில் பல இனப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் இருந்தார்கள். முகமது பிரிவின் தலைவர் பாட்ஷா குல்லுடன் பர்க் ஒயிட் உரையாடினார். அப்போது அவர் பல தகவல்களைத் தெரிவித்தார். தான் மட்டும் ஓராயிரம் பேரைத் திரட்டியதாகச் சொன்னார்.  மேலும் டிரக்குகள், வெடிகுண்டுகள் ஆகியவற்றை காஷ்மீர் முற்றுகைக்காகக் கொடுத்ததாகவும் கூறினார். காஷ்மீருக்குள் செல்லும் வண்டிகளும் பஸ்களும் ஒன்று அல்லது இரண்டு நாள்களில் கொள்ளையடித்த பொருள்களுடன் திரும்பிவரும். அவற்றில் பழங்குடி ஆள்கள் ஏறிக்கொள்ள மீண்டும் காஷ்மீருக்குப் போகும் என்றார். அவர்கள் காஷ்மீர் சென்று அதன் விடுதலைக்குப் பணியாற்றுவார்கள். அதாவது இந்து, சீக்கிய, முஸ்லிம் மக்கள் வசிக்கும் கிராமங்களுக்குச் சென்று எல்லோரையும் மிரட்டி அச்சுறுத்தி சூறையாடலைத் தொடர்வார்கள். ராவல்பிண்டியில் உள்ள டாக்சி கம்பெனிகள் இரண்டு முதல் இருபது வண்டிகள் வரை காஷ்மீர் முற்றுகைக்கு வழங்கியுள்ளன.

பழங்குடிப் படை கொண்டு வந்த ஆயுதங்கள் எல்லாம் அவர்களுடையவை. அவர்களுக்கு பாகிஸ்தான் எதையும் கொடுக்கவில்லை என்று பாகிஸ்தானைச் சேர்ந்த பலர் கூறி வந்தார்கள். பழங்குடிப் படையினருக்கு ஆயுதங்கள் எப்படிக் கிடைத்தன என்ற புதிரை தாமே உடைத்து, உண்மையை வெளிக்கொணர வேண்டும் என்று முடிவு செய்ததாக பர்க் ஒயிட் எழுதுகிறார்.அதற்காக தான் பல இடங்களுக்குச் சென்று புகைப்படங்கள் எடுத்ததாகக் கூறுகிறார். அப்போது அவர் அப்ரீதி பழங்குடிப் பிரிவின் ஆயுதம் தயாரிக்கும் சில கூடங்களைப் படம் பிடித்திருக்கிறார். சிறிய கொட்டகையின் கீழ் ஐந்து பேர் வேலை செய்யும் அளவுக்கு உள்ள ஆயுதத் தயாரிப்பு கூடங்கள் அவை. பாகிஸ்தானின் வட மேற்கு எல்லை மாகாணத்தில் உள்ள அத்தகைய சிறிய தொழில் கூடங்கள் எல்லாம் சேர்ந்து ஆயுதங்கள் தயாரித்தாலும் பழங்குடிப் படையினர் ஏந்தி வந்த ஆயுதங்களோடு ஒப்பிடும் போது அவை மிகக்குறைவாகத் தான் இருக்கும்.  ஒருவன் அத்தகைய கூடங்களில் ஒரு ரைபிளைத் தயாரிக்க ஒரு மாதம் ஆகும். எனவே பழங்குடிப் படையினர் வைத்திருந்த மோர்டார்களும் (சிறிய பீரங்கி போன்ற ஆயுதம்) கனமான நவீன ஆயுதங்களும், இரண்டு விமானங்களும், சிறிய கொட்டகைகளில் இருந்து வந்தன என்று யாராலும் கூற முடியாது.

விடிவதற்கு முன்பாக பழங்குடிப் படைக்கு, எல்லையை ஒட்டி உள்ள நகரங்களில் ஆயுதங்கள் வழங்கப்பட்டன. முஸ்லிம் லீகின் தலைமையிடங்கள்தாம் அந்த ஆயுதம் வழங்கும் மையங்கள் என்று தெளிவாகக் குறிப்பிடுகிறார் பர்க் ஒயிட். ஒவ்வொரு புதன் கிழமையும் பாகிஸ்தானின் தலை நகரில் இருந்து புறப்படும் ரயிலில் செயல் வீரர்கள் காஷ்மீருக்குச் செல்வார்கள். இந்திய ராணுவத்தினரிடம் பிடிபட்ட ஆசாத் காஷ்மீர் வீரர்கள் பையில் பாகிஸ்தான் ராணுவத்தின் சில ஆவணங்கள் இருந்தன என்று குறிப்பிட்டு, பாகிஸ்தான் ராணுவத்தின் தொடர்பை அவர் அம்பலப்படுத்துகிறார்.

முதல் போர் : பாகிஸ்தானின் மும்முனை தாக்குதல் திட்டம்

பூஞ்ச் கலவரம் வளர்வதற்கும், பழங்குடியினரின் படையெடுப்புக்கும் முழுக்க முழுக்க பாகிஸ்தான் ஆட்சியாளர்கள்தாம் காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை. அவற்றின் மூலமாக பாகிஸ்தான் காஷ்மீரை தனதாக்கிக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டது.

பூஞ்ச் கலவரம் நடை பெற மூளையாக செயல்பட்டவர்கள் இவர்கள்தாம்.

  1. பாகிஸ்தானின் பிரதம மந்திரி லியாகத் அலி கான்
  2. பஞ்சாபின் முக்கிய அரசியல் பிரமுகர் சர்தார் சௌகத் ஹயத் கான்
  3. பாகிஸ்தான் ராணுவத்தின் பிரிகேடியர் அக்பர் கான்
  4. சர்தார் அப்துல்கயம் கான்
  5. சர்தார் முகமத் இப்ராகிம் கான்.

இவர்கள் எல்லோரும் பாகிஸ்தானின் காஷ்மீரைக் கைப்பற்றும் திட்டத்தை நிறைவேற்ற முக்கிய பங்காற்றியவர்கள். எல்லாவற்றுக்கும் பாகிஸ்தானே காரணம் என்பதை அவர்களின் ஆதாரபூர்வமான ஒப்புதல் வாக்குமூலங்கள் உறுதி செய்கின்றன. பிரதம மந்திரி, ஒரு முதலமைச்சர், ராணுவத்தின் ஒரு முக்கிய பிரிவின் நிர்வாக இயக்குனர் இவர்கள் எல்லோரும் சேர்ந்து திட்டம் வகுத்து இன்னும் பலரோடு சரியான ஒருங்கிணைப்போடு செயல்பட்டிருக்கிறார்கள். காஷ்மீரில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் முற்றுகையை நடத்தி ஒரு பெரும் போர் தொடங்க காரணமாகி இருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது இந்திய ராணுவம் காஷ்மீரில் வந்து இறங்கும் வரை பாகிஸ்தான் அரசாங்கத்துக்கு அங்கு நடந்தவற்றோடு நேரடித் தொடர்பு கிடையாது. பாவம் பாகிஸ்தான் ஆட்சியாளர்கள்; அவர்கள் புதிதாக சுதந்தரம் அடைந்த பாகிஸ்தானில் தீர்க்கப்பட வேண்டிய பல பிரச்சனைகளில் மூழ்கி இருந்தார்கள். ரகசியமாக காஷ்மீர் முற்றுகைக்கு ஓரளவு உதவினார்கள் என்றெல்லாம் சிலர் சொல்வதும், எழுதுவதும் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்ளும் செயல்கள்.

ஜின்னா காஷ்மீர் என்ற கனி அதுவாக பாகிஸ்தான் மடியில் விழும் என்று கூறிக்கொண்டிருந்தார். ஆனால் புதிதாகப் பிறந்த பாகிஸ்தானை ஆள வந்தவர்களுக்கு நன்றாகத் தெரியும் அந்தக் கனி தானாக விழாது என்று. ஏற்கனவே காஷ்மீர் அரசருக்கு எதிராக ஒரு சிறிய பகுதியில் உருவாகி இருந்த அதிருப்தியை, வெறுப்பை எரியவிட்டு பதற்றத்தை உருவாக்கியது பாகிஸ்தான்.

பூஞ்ச் கலவரத்தின் சூத்திரதாரியாக விளங்கியவர் சர்தார் அப்துல்கயம் கான். அவர் ஆசாத் காஷ்மீரின் ஜனாதிபதியாக பல முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். 1996 இல் அங்கு பிரதம மந்திரியாகவும் இருந்தவர். அவர் பாகிஸ்தான் அரசியலிலும் முக்கிய நபராக விளங்கியவர். அப்துல்கயம் கான் 1924 ஆம் ஆண்டு ஜம்மு – காஷ்மீர் சமஸ்தானத்தில் உள்ள பாக் (பூஞ்ச்) இல் பிறந்தார். லாகூரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகம் உள்பட இந்தியாவின் பல கல்வி நிறுவனங்களில் அவர் பயின்றுள்ளார். பல நூல்களை எழுதியுள்ள அவர் பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் அதிகாரியாக பணியாற்றியவர். இத்தகைய ஒருவர் பாகிஸ்தான் அரசாங்கத்தோடு நல்ல தொடர்பில்தான் இருந்திருக்க வேண்டும்.

அப்துல்கயம் கான் கிளர்ச்சிப் படையைத் திரட்டி காஷ்மீர் அரசரின் டோக்ரா படையை எதிர்த்துப் போராடுவதை வழக்கமாகக் கொண்டார். இரண்டாம் உலகப் போரில் பிரிட்டிஷ் ராணுவத்தில் பணியாற்றி விட்டு வந்த சுமார் 60000 பேரில் பலரை அவர் பயன்படுத்திக் கொண்டார். அப்துல் கயம் கான் படையில் 75% பேர் பூஞ்சில் வசித்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள்தாம். அப்துல் கயம் கான் கூற்றுப்படி 1947 பிப்ரவரியில் அரசருக்கு எதிராக படை திரட்டுவது தொடங்கப்பட்டுவிட்டது. அதற்குப் பிறகு படையை நகர்த்தி ஆகஸ்டில் அயுதப் புரட்சியை ஆரம்பித்து விட்டோம் என்கிறார் அவர்.

பூஞ்ச் கலவரத்தை நடத்திய மற்றொரு முக்கியமான நபர் முகமத் இப்ராகிம் கான். அவர் முஸ்லிம் லீகின் கொள்கைகளைச் செயல்படுத்துவதில் தீவிரமாக இருந்தவர். காஷ்மீர் சமஸ்தானத்தை பாகிஸ்தானுடன் இணைக்க வேண்டும் என்ற கொள்கையில் அவர் மிகத் தெளிவாக இருந்துள்ளார். அவர் அதற்காக ஆயுதம் தாங்கிய கொரில்லாப் படை கலவரத்தைத் தலைமை தாங்கி நடத்தினார். மேலும் அவர் 1947 இல் தன் வீட்டில் ஆதரவாளர்கள் முன்னிலையில் காஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைக்கும் தீர்மானத்தை நிறைவேற்றினார்.

முதல் இந்திய பாகிஸ்தான் போருக்குப் பிறகு பாகிஸ்தான் ஆக்கிரமித்துக் கொண்ட ஆசாத் காஷ்மீரின் முதல் ஜனாதிபதியாக 32 வயதில் அவர் தேர்வு செய்யப்பட்டார். 1948 முதல் 1971 வரை ஐ .நா சபையில் ஆசாத் காஷ்மீரின் பிரதிநிதியாகவும் அவர் செயலாற்றி இருக்கிறார். ஆசாத் காஷ்மீரை உருவாக்கியவராகக் கருதப்படும் இவர் 1915 ஆம் ஆண்டு பூஞ்சில் ஹோர்னா மிரா கிராமத்தில் பிறந்தார். அவர் 1943 ஆம் ஆண்டு லண்டன் பல்கலைக்கழகத்தில் எல்எல்பி பட்டம் பெற்றார். அதன் பின் மிர்பூரில் வழக்கறிஞராக பணியாற்றுகிறார். அவர் பாரிஸ்டர் பட்டம் பெற்றவுடன் காஷ்மீர் அரசர் அவரை 1944 இல் அசிஸ்டன்ட் அட்வகேட் ஜெனரலாக நியமிக்கிறார். முஸ்லிம்களை வெறுப்பவராக சித்தரிக்கப்படும் காஷ்மீர் அரசரின் இந்தச் செயல் அதனை கேள்விக்கு உள்ளாக்குகிறது.

அதன் பின் முகமத் இப்ராகிம் கான் அரசாங்கப் பணியிலிருந்து விலகி காஷ்மீர் விடுதலைக்குப் படை திரட்டும் வேலையில் இறங்குகிறார். அவர் பாகிஸ்தானின் முஸ்லிம் லீக் கொள்கைகளைக் கொண்ட முஸ்லிம் கான்ஃபரன்ஸ் கட்சியில் செல்வாக்கு மிகுந்தவராகத் திகழ்ந்தார். 1946 இல் ராஜிய சபை தேர்தலில் வெற்றி பெற்றார். முர்ரீக்கு சென்ற அவர் காஷ்மீர் அரசரின் ராணுவத்தில் இருந்து வெளியேறிய சில அதிகாரிகளைத் தன்னோடு இணைத்துக் கொண்டார். ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும் கிளர்ச்சிக்கு ஆட்கள் எடுக்கப்பட்டார்கள். செப்டெம்பரில் ஆயுதங்கள் ஜீலம் நதியைத் தாண்டி காஷ்மீருக்குள் கொண்டு செல்லப்பட்டன என்று அவரே நூலாசிரியர் ஆன்ரூ ஒயிட்ஹெட்டிடம் கூறி இருக்கிறார்.

1947 செப்டெம்பர் மாதத்தில் முர்ரீயில் இருந்தபோது முகமத் இப்ராகிம் கான் பிரிகேடியர் அக்பர் கானுடன் இணைந்து செயல்படத் தொடங்கினார். அந்த சமயத்தில்தான் அக்பர் கானுக்கு பிரதம மந்திரி லியாகத் அலிகானிடம் இருந்து அழைப்பு வந்தது. செப்டெம்பர் 12 ஆம் தேதி பிரதம மந்திரி தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார்.அந்தக் கூட்டத்தில் பஞ்சாபின் முக்கிய அரசியல் பிரமுகர் சர்தார் சௌகத் ஹயத் கானும் கலந்து கொண்டார்.

சர்தார் சௌகத் ஹயத் கான் பஞ்சாபில் இருந்து வந்த சாதாரண அரசியல்வாதியல்ல. அவர் பஞ்சாபில் வசதியான குடும்பத்தில் பிறந்தவர். அட்சிசன் கல்லூரியிலும், அலிகார் பல்கலைக்கழகத்திலும் பயின்றவர். அவர் குடும்பப் பாரம்பரியத்தின்படி தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றினார்.பிரிட்டிஷ் இந்திய ராணுவ அகாடமியில் பயிற்சி பெற்ற பின் பல நாடுகளில் பணியாற்றி இருக்கிறார். பின்னர் கேப்டனாகவும், மேஜராகவும் பதவி உயர்வு பெற்றார். 1942 டிசம்பர் மாதம் அவருடைய தந்தையின் மறைவுக்குப் பிறகு ராணுவப் பணியிலிருந்து விலகுகிறார். பஞ்சாபில் அரசியல் பணியாற்ற களம் இறங்குகிறார். முஸ்லிம் லீக் சார்பில் பஞ்சாப் சட்ட சபை உறுப்பினராகத் தேந்தெடுக்கப்பட்டு முஸ்லிம் லீக் அரசில் பொதுப்பணித் துறை அமைச்சராகப் பணியாற்றுகிறார்.

அதன் பின் அரசில் இருந்து விலக்கப்படும் அளவுக்கு முஸ்லிம் லீக் கொள்கைகளில் தீவிரம் காட்டினார். 1946 ஆகஸ்ட் 16 ஆம் தேதி முஸ்லிம் லீக் நடத்திய நேரடி நடவடிக்கை நாள் பிரசாரத்திலும், நிகழ்வுகளிலும், துடிப்புடன் செயல்பட்டு முஸ்லிம் லீகில் புகழ் பெற்றார். இதன் காரணமாக ஜின்னா அவருக்கு சௌகத் பட்டத்தை அளித்தார். ஜின்னாவுடன் மிக நெருக்கமாக இருந்தவர் சர்தார் சௌகத் ஹயத் கான். எப்படிபட்ட நபரை பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் தெரிவு செய்து பணியை ஒப்படைக்கிறார்கள் பாருங்கள்.

சௌகத் ஹயத் கான் பஞ்சாபில் பிறந்தவர். பிரிட்டிஷ் ராணுவத்தில் பணியாற்றி விட்டு, தந்தை சிக்கந்தர் ஹயத் கான் போன்று பஞ்சாபின் அரசியல் தலைவர் ஆனவர். இவர் பாகிஸ்தான் பிரதம மந்திரியுடன் இணைந்து காஷ்மீரைப் பிடிக்க திட்டமிட்டு செயல்படுகிறார். இவரும் பாரமுல்லாவில் பழங்குடிப் படையோடு காஷ்மீர் முற்றுகைக்கு வந்த சௌரப் ஹயத் கானும் இரு வேறு நபர்கள்.

சௌரப் ஹயத் கான் காஷ்மீரில் பிறந்தவர். அஃப்ரீதி இனத்தைச் சேர்ந்தவரான அவர் இந்திய விமானப் படையில் பணியாற்றிக் கொண்டிருந்தார். பாகிஸ்தான் தனி நாடான போது பாகிஸ்தான் ராணுவத்தில் சேருமாறு அவருக்கு ஆணை வந்தது. ஆனால் அவர் அதை ஏற்கவில்லை. அவர் பாரமுல்லாவுக்கு பழங்குடிப் படையோடு வந்த போது விமானப் படையின் சீருடையில்தான் இருந்தார். எனவே அவர் காஷ்மீர் முற்றுகையில் களப்பணி ஆற்றியவர்.

பஞ்சாப் அரசியல் தலைவரான சௌகத் ஹயத் கான் பெரும்பாலும் திட்டமிடுதலிலும், ஒருங்கிணைப்பதிலும் முழு மூச்சுடன் செயல்பட்டிருக்கிறார். இவர் தனக்குக் கீழே ஜமான் கியானி, மேஜர் குர்ஷித் அன்வர் ஆகிய இரு ராணுவ அதிகாரிகளைத் தளபதிகளாக வைத்துக்கொண்டு காஷ்மீரைப் பிடிக்க ஒரு தனி திட்டத்தைத் தயாரித்து வைத்திருந்தார். காஷ்மீர் அரசருக்கு எதிரான கலவரம், காஷ்மீர் முற்றுகை எல்லாம் பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகள்தாம் என்று வெளியே தெரியாதபடி செயல்படவேண்டும் என்று அவருக்கு மேலே இருந்தவர்கள் ஆணையிட்டார்கள். இதை அவரே பின்னாளில் கூறியிருக்கிறார்.

எல்லாவற்றையும் ரகசியமாக செய்வதை பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் விரும்பினார்கள். பிரிவினைக்கு முன்பும் பின்பும் அவர்கள் நேரடி குற்றவாளிகளாக வெளியுலகுக்குத் தெரியாதபடி இருக்க, அது பல நேரங்களில் உதவியிருக்கிறது. அதனால்தான் உயர்ந்த பதவியில் இருந்த பிரிட்டிஷ் அதிகாரிகள், கவர்னர் போன்றோரின் கருத்துகள் கலவரங்களுக்கும், போருக்கும் காரணமானவர்களை இனங்காட்டும் போது, பல இடங்களில் தெளிவில்லாமல், முரண்பாடுகள் நிறைந்தவையாகக் காணப்படுகின்றன.

இவற்றின் மூலமாக பூஞ்சில் இருந்த மிக முக்கியமான நபர்கள் காஷ்மீர் அரசருக்கு எதிரான கலவரத்தைத் தொடங்கினார்கள் என்பது தெரிய வருகிறது. பாகிஸ்தானின் பிரதம மந்திரி, ராணுவத்தின் ஒரு முக்கிய பிரிவின் நிர்வாக இயக்குனர் இவர்கள் எல்லாம் பூஞ்ச் கலவரம் தொடர்வதற்கு தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஆயுதங்களை வழங்கி இருக்கிறார்கள். மேலும் பூஞ்ச் கலவரம் என்பது பாகிஸ்தான் காஷ்மீரை இணைத்துக் கொள்வதற்காக தீட்டிய மிகப்பெரிய திட்டத்தின் முதல் கட்டம். அதைத் தொடர்ந்துதான் பழங்குடிப்படை காஷ்மீரை முற்றுகையிட்டது.

லாகூர் கூட்டத்துக்கு முன்பாக முஸ்லிம் லீக் தலைவர் மியான் இப்திகாருதின் கேட்டுக் கொண்டதற்கு இணங்க காஷ்மீரைப் பிடிப்பதற்கு அக்பர் கான் தன்னுடைய திட்ட வரைவை அனுப்பியிருந்தார். அந்தத் திட்டம் பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. காஷ்மீரைப் பிடிக்க பிரிகேடியர் அக்பர் கான் தயாரித்துக் கொடுத்த மும்முனைத் திட்டம் இதுதான்.

1. பூஞ்ச் கலவரத்தைத் தொடர்ந்து நடைபெறச் செய்தல்.
2. ஜம்முவுக்கு தெற்கு திசையில், அதனை இந்தியாவின் மற்ற பகுதிகளோடு இணைக்கும் சாலையில் தாக்குதல் நடத்துவது.
3. ஸ்ரீ நகர் விமான தளத்தில் தாக்குதல் நடத்தி அதைக் கைப்பற்றுதல்.

அகபர் கான் தயாரித்துக்கொடுத்த மும்முனைத் திட்டம் என்பது பாகிஸ்தான் ஆட்சியாளர்களால் ஏற்கெனவே உருவான ஒரு பெரும் திட்டத்தின் செயல் வடிவம்தான். அதற்குப் பெயர் ஆபரேஷன் குல்மார்க். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் விடுதலை கிடைத்தவுடனே இது ராவல் பிண்டி பாகிஸ்தான் ராணுவத் தலைமையகத்தில் உதித்து விட்டது. அக்பர் கானின் மும்முனைத் திட்ட வரைவு கிடைத்தவுடன், லாகூர் கூட்டத்தில் ஆபரேஷன் குல் மார்க் தயாராகிவிட்டது.

ஆபரேஷன் குல்மார்க்கின் செயல் திட்ட ஆணைகள் அடங்கிய கடிதங்கள் எல்லாவற்றிலும் பாகிஸ்தான் ராணுவத்தின்அப்போதைய பிரிட்டிஷ் ராணுவத் தலைமை தளபதி ஜெனரல் சர் ஃபிராங் மெசெர்வியின் கையொப்ப இணை குறி முத்திரை இருந்தது. இதனை ரோஹித் சிங் தனது ‘ஆபரேஷன் இன் ஜம்மு அண்ட் காஷ்மீர் 1947-48’ என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.
ஆபரேஷன் குல்மார்க்கின்படி 1947 செப்டெம்பர் மாதம் பாகிஸ்தானில் உள்ள ஒவ்வொரு பழங்குடி இனமும் ஆயிரம் பதான் வீரர்களைச் சேர்க்க வேண்டும். அரசியல் முகவர்கள், துணை கமிஷனர்கள் இந்தப் பணிகளைப் கவனிப்பார்கள். செப்டெம்பர் முதல் வாரத்தில் லஷ்கர்கள் (படைகள்) பாநு, வானா, பெஷாவர், கோஹத், தால், நவுஷெரா ஆகிய இடங்களில் குவிக்கப்படும். அங்கெல்லாம் உள்ள பாகிஸ்தான் ராணுவ பிரிகேடுகள் ஆயுதம், வெடி பொருள்கள், உடைகள் ஆகியவற்றைக் கொடுக்கும். லஷ்கர் என்பது ஜிகாத் நடத்தும் படை வீரர்களின் தொகுப்பு. ஒவ்வொரு லஷ்கருக்கும் அதன் பழங்குடித் தலைவருக்கு மேல் ஒரு பாகிஸ்தான் ராணுவ மேஜர் நியமிக்கப்படுவார். ஒவ்வொரு மேஜருக்கு கீழும் ஒரு கேப்டனும், பத்து துணை அதிகாரிகளும் இருப்பார்கள்.

அக்டோபர் 18 ஆம் தேதி அபோத்தாபாத்தில் வெடி பொருள்கள் குவிக்கப்பட்டு முற்றுகை நாளான 22 ஆம் தேதி அவை முசாபராபாத்துக்கும், டோமலுக்கும் கொண்டு செல்லப்பட்டன.

ஆபரேஷன் குல்மார்க்கின் படி காஷ்மீரை முற்றுகை இடும் படைகள், மேஜர் ஜெனரல் அக்பர் கான் தலைமையில் செயல்படும். அவர் தலைமையகம் ராவல்பிண்டி ராணுவ தலைமையகத்தின் உள்ளே இருக்கும். வீரர்கள் அனைவரும் பிரயாணிகள் பஸ்களில் இரவில் பயணம் செய்து அக்டோபர் 18 ஆம் தேதி அபோத்தாபாத்தில் குவிந்தார்கள். திட்டம் இதுதான்.

1. ஆறு லஷ்கர்கள் டோமலில் இருந்து ஸ்ரீ நகர் செல்லும்.இவை முதன்மைப் படைகள்.
2. முதன்மைப் படைகளுக்கு அரணாக இரண்டு படைகள் ஹஜ்பீர் கணவாய் வழியாக குல்மார்க் செல்லும்.
3. மேலும் இரண்டு படைகள் ஹந்த்வாரா, சோபோர், பந்திபூர் ஆகியவற்றைக் கைப்பற்ற வேண்டும்.
4. 10 படைகள் பிம்பர், ரவல்கோட், பூஞ்ச் ஆகிய பகுதிகளுக்காக ஒதுக்கப்பட்டன. அவற்றின் பணி ரஜவுரி, பூஞ்ச் இரண்டையும் பிடித்துவிட்டு ஜம்முவை நோக்கி முன்னேறுவது.
5. பாகிஸ்தான் ராணுவத்தின் 7 வது காலாட்படைப் பிரிவு படை வீரர்கள் அக்டோபர் 21 ஆம் தேதி இரவு முர்ரியிலும், முசாபராபாத்திலும் குவிய வேண்டும். அவர்கள் பழங்குடிப் படைகளுக்கு உதவியாக ஜம்மு- காஷ்மீருக்குள் சரியான தருணத்தில் நுழைய வேண்டும். மேலும் ஒரு காலாட் படை பிரிகேட் ஜம்முவுக்குள் நுழைய தயாராக இருக்கவேண்டும்.
6.ஆபரேஷன் குல் மார்க்கின் காஷ்மீர் முற்றுகை தினம் 1947 அக்டோபர் 22.

பழங்குடியினர் படையெடுப்பைத்தொடங்கி வைத்தவர்கள்

1. பாகிஸ்தானின் வட மேற்கு எல்லை மாகாண முதலமைச்சர் கான் கயம் கான்.
2. மாங்கி ஷரிஃப் இன் பீர் என்று அழைக்கப்பட்ட அமின் உல் அசனத்.
3. காஷ்மீரை அடைவதற்காக நியமிக்கப்பட்ட வட பகுதியின் படைத் தலைவர் குர்ஷித் அன்வர்.

இந்த மூவரும் பழங்குடியினரின் படையெடுப்பை நடத்திக் காட்டியவர்களில் மிக முக்கியமானவர்கள். பாகிஸ்தானை மிக எளிதாக நான்கு விதமான இன மக்கள் வாழும் நான்கு பகுதிகளாகப் பிரித்துவிடலாம். வட மேற்கில் இருப்பது பஷ்டூன் அல்லது பதான் இன மக்கள் வாழும் பகுதி. வட கிழக்கில் உள்ளது பஞ்சாபிகள் வாழும் பஞ்சாப். தென் மேற்குகில் பலுச்சி இனமக்கள் வாழும் பலுச்சிஸ்தான் இருக்கிறது. தென் கிழக்கில் சிந்தி இன மக்கள் வாழும் சிந்து அமைந்துள்ளது. தேசவிடுதலைக்குப் பிறகு 1947 நிலவரப்படி வங்காளிகள் வாழும் கிழக்கு பாகிஸ்தானையும் (தற்போது வங்க தேசம்) அந்த நான்கு பகுதிகளோடு ஐந்தாவது பகுதியாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும். இது பொதுவாக பாகிஸ்தானைப் பிரித்துப் பார்க்கும் முறை.

தற்போதுள்ள பாகிஸ்தானில் அது ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதிகளையும் சேர்த்து மொத்தம் எட்டு நிர்வாகப் பிரிவுகள் உள்ளன. அவற்றுள் பலுச்சிஸ்தான் பாகிஸ்தானின் மொத்த நிலப் பரப்பில் 39.3% கொண்ட மிகப்பெரிய நிர்வாகப் பிரிவாக விளங்குகிறது. எட்டு நிர்வாகப் பிரிவுகளில் உள்ள மற்றொரு பிரிவுதான் வட மேற்கு எல்லை மாகாணம். தற்போது சில பகுதிகள் அதனோடு இணைக்கப்பட்டு கைபர் பக்துன்குவா (கே. பி.கே) என்ற பெயருடன் அந்தப் பிரதேசம் விளங்குகிறது.

வடமேற்கு எல்லை மாகாணம் சுமார் 70 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. தற்போது உள்ள கே.பி.கே சுமார் 75 ஆயிரம் சதுர கிலோ மீட்டர்கள் பரப்பளவு கொண்டதாக இருக்கிறது. இதற்கும் ஆப்கனிஸ்தானுக்கும் இடையே இருப்பது ‘ஃபெடரலி அட்மினிஸ்டர்ட் ட்ரைபல் ஏரியாஸ்’. இதுவும் பாகிஸ்தானின் ஒரு நிர்வாகப் பிரிவுதான். இது 7220 சதுர கிலோ மீட்டர்கள் பரப்பளவு கொண்டது. இந்தக் கூட்டு நிர்வாக பழங்குடி இனப் பிரதேசத்திலும், வட மேற்கு எல்லை பிரதேசத்திலும் வாழும் மக்கள் பஷ்டூன் இனமக்கள். அவர்கள் தாம் காஷ்மீரை முற்றுகை இட்டவர்கள்.

முஸ்லிம் லீக் தனி பாகிஸ்தான் என்ற மிகப்பெரிய கனவை நானவாக்கியதோடு இன்னும் அடைய வேண்டியது எவ்வளவோ இருக்கிறது என்று செயல்பட்டுக் கொண்டிருந்தது. அந்தச் சூழலில் பாகிஸ்தானில் இருந்த சிலர் இந்து அரசர் ஆண்டு கொண்டிருக்கும் காஷ்மீருக்கு எதிராக ஜிகாத்தை அறிவித்து வீர முழக்கமிட்டார்கள். அவர்களுள் ஒருவர்தான் வானாவின் பீர். இவர் பாகிஸ்தானின் கூட்டு நிர்வாக பழங்குடி பிரதேசத்தின் தெற்கு வாசிரிஸ்தானைச் சேர்ந்தவர். கூட்டு நிர்வாக பழங்குடி இன பிரதேசத்தின் தெற்குப் பகுதிதான் வாசிரிஸ்தான். அது தெற்கு வாசிரிஸ்தான், வடக்கு வாசிரிஸ்தான் என்ற இரண்டு பிரிவுகளைக் கொண்டது. வாசிரிஸ்தானில் இருப்பவர்கள் பதானியர்கள். வாசிர் என்ற பழங்குடி இனத்தின் பெயரால் அந்தப் பகுதி வாசிரிஸ்தான் என்று அழைக்கப்படுகிறது.

தெற்கு வாசிரிஸ்தானைச் சேர்ந்த பழங்குடி இன மதத் தலைவர் வானாவின் பீர், பெஷாவருக்கு வந்து வட மேற்கு எல்லை மாகாணத்தின் முதலமைச்சரை சந்திக்கிறார். இஸ்லாமியர்களின் சரித்திரத்தில் இது மிகவும் முக்கியமான கட்டம். இத்தருணத்தில் தன்னுடைய தொண்டர்களின் சேவையை பாகிஸ்தானுக்கு அளிக்க அவர் முன் வந்தார். அங்கு அவர் நியூயார்க் ஹெரால்டு ட்ரிபியூன் பத்திரிகையின் நிருபர் மார்கரெட் பார்ட்டனுக்குப் பேட்டி அளிக்கிறார். நிருபர் அவர் தோற்றத்தை இவ்வாறு விவரிக்கிறார்.

“சாம்பல் நிற பதானியர்களின் பைஜாமா; சிவப்பு நிறத் தொப்பி; கண்களில் கறுப்புக் கண்ணாடி; தோளில் தோட்டாக்கள் நிறைந்த பெல்ட்; இவற்றோடு தோற்றமளித்தார் நாற்பத்தி ஐந்து வயது நிரம்பிய அந்த வானாவின் பீர்.”

பேட்டியின் போது அவர் காஷ்மீர் பாகிஸ்தானுடன் தான் இணைக்கப்பட வேண்டும் என்கிறார். இந்தப் புனிதப் போருக்காக தான் பத்து லட்சம் பழங்குடி வீரர்களை காஷ்மீருக்குள் அழைத்துச் செல்லத் தயார் என்று வீர வசனம் பேசுகிறார். இதில் கவனிக்கப்பட வேண்டியது, சுதந்திரம் பெற்ற நேரத்தில் பாகிஸ்தானின் ஒரு மாகாண முதல்வர் கெரில்லாத் தாக்குதல் நடத்தத் தயாராக இருக்கும் குழுத் தலைவர்களை அழைத்துப் பேசுகிறார் என்பது தான். பாகிஸ்தானின் மிகப் பெரிய திட்டங்களை எல்லாம் நிறைவேற்ற சரியான நபர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

இறுதியில் காஷ்மீர் ஜிகாத்துக்கு ஏற்ற ஒருவர் கிடைத்துவிட்டார். அவர்தான் மாங்கி ஷரிப் இன் பீர். அவர் முஸ்லிம் லீகின் துடிப்புள்ள இளம் உள்ளூர் உறுப்பினராகத் தான் முதலில் வெளிப்பட்டிருக்கிறார். எல்லை மாகாணத்தில் சிறிய கட்சியாக இருந்த முஸ்லிம் லீக் 1946-47 இல் பெரும் சக்தியாக உருவெடுத்தது. அப்போது அவர் மாகாணத்தின் தனிப் பெரும் தலைவர்களில் ஒருவர் ஆகிவிட்டார்.

தேசப் பிரிவினையின் போது வட மேற்கு எல்லை மாகாணம் பாகிஸ்தான் பக்கம் வர காரணமானவர் மாங்கி ஷரிப் இன் பீர். பிரிவினையை ஒட்டி அந்த மாகாணத்தில் நடந்த மக்கள் கருத்துக் கணிப்பில் பாகிஸ்தானுக்கு வெற்றி கிடைக்க அவர் உதவி செய்தார். அங்கு பல பழங்குடி இனத் தலைவர்கள் இருந்தாலும் மிகுந்த செல்வாக்கு உடையவராக பாகிஸ்தான் ஆட்சியாளர்களால் அறியப்பட்டவர் அவர்தான். அதனால் தான் காஷ்மீரை முற்றுகையிடும் லஷ்கர்களை அனுப்பும் பணிக்கு அவர் தெரிவு செய்யப்பட்டார். இந்த மாங்கி ஷரிப் இன் பீரும் வட மேற்கு எல்லை மாகாண முதலமைச்சர் கான் கயம் கானை சந்தித்து, தனது படையோடு காஷ்மீருக்குள் நுழைந்து ஜிகாத் நடத்த விருப்பம் தெரிவித்திருந்தார்.

1947 செப்டம்பர் 12 ஆம் தேதி லாகூரில், பாகிஸ்தான் பிரதம மந்திரி லியாகத் அலி கான் தலைமையில் நடைபெறுகிறது அந்தக் கூட்டம். அதில் எடுக்கப்பட்ட முடிவின் படி மேஜர் குர்ஷித் அன்வர் காஷ்மீர் முற்றுகைக்கு வடக்கு பகுதி கமாண்டராக நியமிக்கப்படுகிறார். பஞ்சாபைச் சேர்ந்த அவர் முஸ்லிம் லீகின் தனிப்படை கமாண்டராக இருப்பவர். இவருக்கும் சௌகத் ஹயத் கான், அக்பர் கான் ஆகியோருக்கும் பதான் பழங்குடியினர் பற்றி மிக நன்றாகத் தெரியும். பிரிட்டிஷ் ராணுவத்தில் இருந்தபோது 1930 களில் அவர்களுக்கு எதிராக இவர்கள் போர் நடத்தியவர்கள். குர்ஷித் அன்வர் பழங்குடிப் படையை அனுப்ப இருக்கும் மாங்கி ஷரிப் இன் பீர் உடன் இணைந்து முஸ்லிம் லீக்கில் செயல்பட்டவர்.

குர்ஷித் அன்வர் படைத் தலைவராக நியமிக்கப்பட்டவுடன் பெஷாவர் சென்றார். வட மேற்கு எல்லை மாகாண முதலமைச்சர் கான் கயம் கான் உதவியோடு பழங்குடிப் படையைத் திரட்டினார். வீரர்கள் அபோத்தாபாத்தில் குவிந்தார்கள். அவர்கள் அங்கிருந்து முசாபராபாத் சென்று காஷ்மீரை முற்றுகை இட்டார்கள். அப்போது குர்ஷித் அன்வருக்கும், சௌகத் ஹயத் கானுக்கும் கருத்து வேறுபாடு தோன்றியது உண்மை.

“குர்ஷித் அன்வர் வேகமாக செயல்பட்டார். என் ஆணையை மதிக்கவில்லை.  வாசிரிஸ்தான் பழங்குடி இனமான மஹ்சூத்தை ஜிகாத்தில் கலந்து கொள்ள அழைத்தார். பாகிஸ்தான் ராணுவத்தில் இருந்து விலகியிருக்கும்படி நான் கூறியதை அவர் காற்றில் பறக்கவிட்டார்” என்றெல்லாம் பின்னாளில் சௌகத் ஹயத் கான் கூறியது தன் கையை மட்டும் கழுவிக்கொள்ள நினைக்கும் வேலையாகத்தான் தெரிகிறது.

பிரிட்டிஷ் அரசிலிருந்து ஓய்வு பெற்ற அதிகாரி சர் ஜார்ஜ் கன்னிங்ஹம் அப்போதுதான் பெஷாவருக்கு வந்திருந்தார். ஜின்னா கேட்டுக் கொண்டதற்கு இணங்க பாகிஸ்தானின் வட மேற்கு எல்லை மாகாணத்தின் கவர்னராக இருக்க அவர் சம்மதித்தார். அவர் இதற்கு முன்பு அதன் கவர்னராக இருந்தவர் தான். பிரிட்டிஷ் நூலகத்தில் அவர் நாட்குறிப்பு உள்ளது. அவர் 1947 அக்டோபர் மாதம் ஆயுதங்கள் ஏந்திய பழங்குடிப் படை காஷ்மீருக்குள் சென்று கொண்டிருப்பதாக எழுதியுள்ளார். அக்டோபர் 13 ஆம் தேதி ஹசார் பகுதியிலிருந்து காஷ்மீருக்குள் படை செல்கிறது என்பதை தான் அறிந்ததாக குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர்கள் ரைபிள்களை ஏந்திக்கொண்டு ஒரு திட்டத்தோடு ஜீலம் பள்ளத்தாக்கின் ஒரு பகுதியைக் கைப்பற்றச் செல்கிறார்கள். இது இந்திய பாகிஸ்தான் போருக்கு வழிவகுக்கப் போகிறது. அதில் பங்கேற்றவர்களுக்கு ஆபத்து ஏற்படும். அதனால் தான் அஃப்ரீதி, முகமத் உள்பட அனைத்து இனக் குழுக்களையும் தான் எச்சரித்ததாக எழுதுகிறார்.அதற்குப் பிறகு இரண்டு நாள்கள் கழித்து மீண்டும் அவர் இவ்வாறு எழுதுகிறார்.

“காஷ்மீர் விவகாரம் கொதித்துக் கொண்டிருக்கிறது. முஸ்லிம் தேச பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த குர்ஷித் அன்வர் என்ற பஞ்சாபி காஷ்மீருக்கு எதிரான மும்முனை தாக்குதலை ஒருங்கிணைத்துக் கொண்டிருக்கிறார்…
மேலும் முஸ்லிம் லீகின் மாகாண அரசு, ஜிகாத் செய்யும் படைகளுக்கு லாரிகளில் பெட்ரோலும், உணவுக்காக மாவும் அனுப்பிக்கொண்டிருக்கிறது. முதலமைச்சர் கான் கயம் கான் ஆயுதங்களுடன் காஷ்மீர் செல்லும் படையை தான் ஆதரிப்பதாக தனிப்பட்ட முறையில் அறிவித்துவிட்டார். ஆனால் போலீஸும், மற்ற அதிகார வர்க்கத்தினரும் இதில் கலந்து கொள்ளாமல் தான் பார்த்துக்கொள்ளவதாக ஒப்புக் கொண்டார்.”



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

முதல் போர் முற்றுகை வெறியாட்டங்கள்

இந்தியா பாகிஸ்தான் போர்கள் / அத்தியாயம் 9

downloadபாகிஸ்தான் திட்டமிட்டபடி காஷ்மீரை முற்றுகையிட்ட பழங்குடிப் படையின் கமாண்டர் குர்ஷித் அன்வர், படையை அபோத்தாபாத்தில் குவித்து அதனுடன் முசாபராபாத்துக்குள் நுழைந்தார். அபோத்தாபாத் நகரம் தற்போது பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாவட்டத்தில் ஹசாரா பகுதியில் உள்ளது. அபோத்தாபாத்துக்கு வட கிழக்கு திசையில் அமைந்துள்ள முசாபராபாத் தான் தற்போது பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள ஆசாத் காஷ்மீரின் தலை நகரம். இதை அடைய அபோத்தாபாத்தில் இருந்து சாலையில் பயணித்தால் சுமார் 77 கிலோமீட்டர்களைக் கடக்க வேண்டும். முசாபராபாத் நகரம் முசாபராபாத் மாவட்டத்தில் ஜீலம், நீலம் ஆகிய நதிகளின் கரைகளில் அமைந்துள்ளது. குர்ஷித் அன்வர் தலைமையில் நடந்த இந்த காஷ்மீர் முற்றுகையைப் பின்னாளில் அக்பர் கான் உறுதி செய்துள்ளார். குர்ஷித் அன்வரும் முஸ்லிம் லீக்கின் தினசரியான டானில் இதைப்பற்றிக் கூறியுள்ளார்.

“திட்டத்தின்படி அக்டோபர் 21 ஆம் தேதி முற்றுகைக்கான தினமாக முடிவு செய்யப்பட்டது. ஆனால் சில தாமதங்கள் ஏற்பட்டு அடுத்த நாள் காலையில் தான் காஷ்மீர் முற்றுகை நடந்தது. என்னுடன் 4000 பேர் இருந்தார்கள். காஷ்மீருக்குள் நுழையும்வரை எங்களுக்கு அதிக தடைகள் இல்லை. அங்கு சென்ற பிறகே கடுமையான எதிர்ப்பை நாங்கள் சந்தித்தோம்.”

பழங்குடிப் படையினர் பஞ்சாப் வரை செல்லும் பிரதான சாலை வழியாக காஷ்மீரை நோக்கி முன்னேறினார்கள். அப்போது அவர்கள் அடைந்த நகரம் டோமெல். பிரதான சாலையில் பயணித்து ஜீலம் நதியின் குறுக்கே இருந்த முக்கிய பாலத்தைக் கடந்தார்கள். அதற்கு அருகில் ஜீலம் நதியும், நீலம் நதியும் கலக்குமிடத்தில் மிகப்பெரிய நகரமான முசாபராபாத் இருக்கிறது. அப்போது அங்கு முஸ்லிம்கள் மிகுதியாகவும், குறைந்த அளவில் இந்துக்களும் சீக்கியர்களும் இருந்தார்கள். இந்து, சீக்கிய மக்களில் பலர் பழங்குடிப் படை வருவதைக் கேள்விப்பட்டு ஊரைக் காலி செய்து புறப்பட்டு விட்டார்கள். மற்றவர்கள் தாக்குதலை எதிர்கொள்ளத் தயாராக இருந்தார்கள். அவர்களில் பலர் கையில் ரைபிள் வைத்திருந்தார்கள் .அதிகாலை இருளில் முற்றுகை நடந்தது .முசாபராபாத்தில் புதிதாக பதவி ஏற்ற கமிஷனரின் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் துப்பாக்கி முழக்கங்கள் கேட்டு கண் விழித்தார்கள். பின்னாளில் கமிஷ்னரின் மனைவி அன்று நடந்ததை விவரித்தார்.

“அக்டோபர் 22 ஆம் தேதி காலை ஐந்து மணி அளவில் நான் கண் விழித்தேன். துப்பாக்கி முழக்கங்கள் மலையில் எதிரொலித்தன. நானும் என் குழந்தைகளும் வெராண்டாவுக்கு சென்று துப்பாக்கி சத்தம் எங்கிருந்து வருகிறது என்று பார்த்தோம். எங்களுக்கு எதுவும் தெரியவில்லை. ஆனால் தொடர்ந்து துப்பாக்கிகள் வெடித்துக் கொண்டிருந்தன.  சில குண்டுகள் பங்களாவின் வேலியாக இருந்த மரப் பலகைகளைத் துளைத்துக் கொண்டு வந்து விழுந்தன. எதிரிகள் ஏற்கனவே கிருஷ்ண கங்கா பாலத்தைக் கடந்து விட்டார்கள். அவர்கள் நகரை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள்.”

அந்தப் பயங்கரமான படையெடுப்பினால் அமைதியாக இருந்த நகரம் எப்படி பதற்றமடைந்தது என்பதை அவருடைய நேரடி அனுபவம் தெளிவாக  உணர்த்துகிறது. தொடக்கத்தில் இருந்தே சூறையாடல் நடைபெற ஆரம்பித்தது. பிரிகேடியர் அக்பர் கான் பின்னாளில் கூறியபடி படைக்குக் கூலியாக கொள்ளையடிக்கும் பொருள்களை எடுத்துக்கொள்ள படையின் கமாண்டர் குர்ஷித் அன்வரிடம் பழங்குடியினர் ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். அதில் முக்கியமானது என்ன வென்றால், அவர்கள் முஸ்லிம் அல்லாதவர்களின் பொருள்களைத்தான் கொள்ளையடிப்பார்கள்.

காஷ்மீர் சமஸ்தானத்தின் படை எதிர்தாக்குதல் நடத்தி அவர்களை ஓரளவுக்குத்தான் தடுக்க முடிந்தது. ஏனென்றால் சமஸ்தானப் படை வீரர்கள் சிலர் பணிக்கு வராமல் சென்று விட்டார்கள். அவர்கள் பூஞ்சை சேர்ந்த முஸ்லிம்கள். ஒரு பிரிட்டிஷ் தூதுவர் முற்றுகை நடந்த நாளில் கடைசி பஸ்ஸில் ராவல்பிண்டியிலிருந்து பயணித்து ஸ்ரீ நகர் வந்து கொண்டிருந்தார். அவர் முசாபராபாத்தில் சீக்கியர்கள் துப்பாக்கிகளுடன் பழங்குடியினர் படையை எதிர் கொள்ள நின்றிருப்பதைப் பார்த்திருக்கிறார். அவர் கூற்றுப்படி பழங்குடியினர் படை குழுக்களாகப் பிரிந்து செயல்பட்டது. குழுக்களை வழி நடத்தியவர்கள் நிச்சயமாக பழங்குடியினர் அல்ல. குழுக்கள் சில நேரங்களில் குழுவின் தலைவர்களை மீறி செயல்பட்டன. குழுத் தலைவர்களாக செயல்பட்டவர்களில் சிலர் வடமேற்கு எல்லை மாகாணத்திலிருந்தும், மேற்கு பஞ்சாபிலிருந்தும் வந்த முஸ்லிம் லீக் தொண்டர்கள் என்பது பின்னாளில் பலருடைய வாக்குமூலங்கள் மூலம் தெளிவானது.

சூறையாடல்களுக்கு இடையே பலர் கொல்லப்பட்டனர். அவர்களில் மிகுதியானவர்கள் சீக்கியர்களும், இந்துக்களும்தாம். பெண்கள் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப்பட்டார்கள். பல பெண்கள் அவர்களிடம் இருந்து தப்பிக்க தங்கள் குழந்தைகளை ஆற்றில் வீசி விட்டு தாங்களும் அதில் குதித்தார்கள். கமிஷனரின் மனைவி கிருஷ்ணா மேத்தா அப்படி சிலர் தற்கொலை செய்து கொண்டதை நேரில் கண்டிருக்கிறார். அவர்கள் நோக்கம் சூறையாடுவது; கொள்ளையடிப்பது; பெண்களைக் கடத்துவது ஆகியவை தாம். ஆனாலும் இவற்றைத் தாண்டி அவர்களுக்கு உந்து சக்தியாக ஓர் இலக்கு இருந்தது.

1947 அக்டோபர் 26 இல் ஈத் பண்டிகை வருகிறது. அதனை காஷ்மீர் தலை நகர் ஸ்ரீ நகரில் கொண்டாட வேண்டும் என்பது பழங்குடிப் படையினரின் விருப்பம். முசாபராபாத்தில் இருந்து சுமார் 100 மைல்கள் தொலைவில் ஸ்ரீ நகர் உள்ளது. அவர்கள் அக்டோபர் 26 ஆம் தேதி ஸ்ரீ நகர் அடைய வேகமாக செல்ல வேண்டும். ஜீலம் பள்ளத்தாக்கு சாலை பாறைகள் நிறைந்த மலைப் பாங்கான குறுகிய பாதை. அதன் வழியாகத்தான் அவர்கள் செல்ல வேண்டி இருந்தது. குறைவான எதிர்ப்பு இருந்தால் கூட அதில் முன்னேறுவது கடினம்.

இப்போது பழங்குடியினர் படை முசாபராபாத்தில் இருந்து பாரமுல்லாவை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. அங்கிருந்து அவர்கள் ஸ்ரீ நகர் சென்று தங்கள் புனிதப் போரை முடிக்க வேண்டும். வழியில் அவர்கள் கடந்து செல்ல வேண்டிய மலைப்பாங்கான ஊர் உர்ரி. ஜீலம் நதிக்கரையில் உள்ள அழகிய இந்த ஊர் தற்போது பாரமுல்லா மாவட்டத்தில் இந்திய பாகிஸ்தான் எல்லையில் இருந்து 18 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ளது. மேலும் இது கிட்டத்தட்ட முசாபராபாத்துக்கும், பாரமுல்லாவுக்கும் நடுவில் ஜீலம் பள்ளத்தாக்கு சாலையில் அமைந்துள்ளது.

அக்டோபர் 22 ஆம் தேதி பதான் பழங்குடியினர் படை முசாபராபாத்துக்குள் நுழைந்துவிட்டது. 23 ஆம் தேதி அது உர்ரிக்கு வந்துவிடும். தகவல் அறிந்த காஷ்மீர் சமஸ்தானப் படையின் பிரிகேடியர் ராஜிந்தர் சிங் 200 வீரர்களுடன் ஸ்ரீ நகரில் இருந்து புறப்பட்டார். பழங்குடிப் படையின் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்த அவருக்கு ஒரே வழிதான் இருந்தது. உர்ரியில் இருக்கும் முக்கிய பாலத்தை சமஸ்தானப் படை தகர்க்க வேண்டும். அதில் அவர் வெற்றி பெற்றார். அப்போது அங்கு காஷ்மீர் படையுடன் இருந்தவர் டெய்லி எக்ஸ்பிரஸின் நிருபர் சிட்னி ஸ்மித். அவர் தொடர்ந்து போர் பற்றிய செய்திகளை பத்திரிகையின் செய்திப் பிரிவுக்கு அனுப்பிக்கொண்டிருந்தார். அவருடைய விவரிப்பு, காட்சிகளை நம் கண்முன்னே கொண்டு வருகிறது.

“நானும் அரசர் ஹரி சிங் படையின் பிரிகேடியர் ராஜிந்தர் சிங்கும், உடைந்து நொறுங்கிக்கிடந்த உர்ரியின் இரும்புப் பாலத்தைப் பார்த்துக் கொண்டிருந்தோம். அவருடைய படையினர் முன்னேறி வரும் பழங்குடிப் படைக்கு எச்சரிக்கை விடுத்தபடி இருந்தார்கள். பழங்குடிப் படை நகரைக் கைப்பற்றுவதற்காக 4000 அடிகள் கணவாயில் குவிந்திருந்தார்கள். ஒரு மணி நேரம் நடந்த இடைவிடாத துப்பாக்கிச் சண்டைக்கு இடையே உர்ரி நகரத்துக்கு வந்து சேரும் வழியின் கடைசி மூன்று மைல்களைக் கடந்தார்கள். துப்பாக்கிகளின் முழக்கங்கள் தொடர்ந்து ஒலித்து பனி மூடிய 10,000 அடி உயர சிகரங்களில் எதிரொலித்தன. அவர்கள் வந்த வழியில் இருந்த வீடுகள் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தன. பள்ளத்தாக்கு முழுவதும் கரும்புகை சூழ்ந்திருந்தது. தப்பி ஓடாமல் அவர்களை எப்படியும் எதிர்கொள்ளலாம் என்று இருந்த, குறைந்த எண்ணிக்கையிலான சீக்கியர்களையும், இந்துக்களையும் அவர்கள் துவம்சம் செய்தார்கள். துப்பாக்கி வெடிப்பது நின்றவுடன் சூறையாடலைத் தொடங்கினார்கள்.

“நான் பைனாகுலர் வழியாகப் பார்த்தபோது கறுப்புத் தலைப்பாகை அணிந்த நபர்கள் உர்ரியின் பஜார் தெருவில் ஒடிக்கொண்டிருந்தார்கள். பிரிகேடியர் ராஜிந்தர் சிங் ஐந்து லாரிகளில் தன் வீரர்களை அனுப்பினார். தொடர்ந்து மூன்று மணி நேரம் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இரவு வந்ததும் அவர்கள் நகரைச் சுற்றி இருந்த மலைகளில் ரோந்து சுற்ற ஆள்களையும், கொலையாளிகளையும் அனுப்பினார்கள். காஷ்மீர் படையால் அவர்களைத் தடுக்க இயலவில்லை.

“காஷ்மீர் படையினர் வண்டிகளில் முன் விளக்குகளை எரியவிடாமல் தொடர்ந்து எதிரிகள் இருக்கும் திசையில் குத்துமதிப்பாக ரைபிளால் சுட்டபடி நிலவு ஒளி படர்ந்த மலைச் சாலைக்கு வந்தார்கள். சாலை முழுவதும் அகதிகள் ஆங்காங்கே நின்று கொண்டிருந்தார்கள். அவர்களில் இந்துக்கள், சீக்கியர்கள், முஸ்லிம்கள் என்று எல்லோரும் இருந்தார்கள். பல கிராமங்களை மக்கள் காலி செய்து விட்டார்கள். போலீஸாரும், அதிகாரிகளும் உர்ரிக்கும் ஸ்ரீ நகருக்கும் இடையே இருந்த இரண்டு ஊர்களை விட்டுச் சென்று விட்டார்கள்.

“பாலத்தை உடைத்ததன் மூலமாக காஷ்மீர் படை பழங்குடிப் படையின் முன்னேற்றத்தை வெகுவாக குறைத்தது. ஆனால் அதை முழுவதுமாக நிறுத்த முடியவில்லை.காஷ்மீர் படையினர் கடுமையாகப் போராடி எதிரிகளைத் தடுக்க முயன்றார்கள். பழங்குடிப் படை உர்ரியைத் தாண்டி அக்டோபர் 25 ஆம் தேதி மஹூராவை அடைந்தது. மஹூராவில் இருக்கும் புனல் மின் நிலையம் தான் ஸ்ரீ நகருக்கு மின்சாரம் வழங்கிக் கொண்டிருக்கிறது. பழங்குடிப்படை அங்கு சென்ற பிறகு ஸ்ரீ நகருக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டு நகரமே இருளில் மூழ்கியது. காஷ்மீர் அரசர் இதற்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாது என்று உணர்ந்தார். அவரும் அவர் குடும்பத்தாரும், அவருக்கு நெருக்கமானவர்களும் ஸ்ரீ நகரைக் காலி செய்தார்கள். அரசரும், அவரைச் சார்ந்தவர்களும் அதிக விலைமதிப்புள்ள பொருள்களுடன் ஜம்முவுக்குச் சென்றார்கள்.

“மஹுராவை பழங்குடிப்படை கைப்பற்றிய பிறகு பிரிகேடியர் ராஜிந்தர் சிங் கொல்லப்பட்டார்.பூஞ்ச் கலவரத்தை அடக்க காஷ்மீர் படையின் ஒரு பகுதி அங்கு தங்கி விட்டது.இருக்கும் படை வீரர்களும் படைத் தலைவர் கொல்லப்பட்டதால் நம்பிக்கையையும், உற்சாகத்தையும் இழந்தனர். படை மிகவும் மோசமான வலுவிழந்த நிலைக்குத் தள்ளப்பட்டது.”

பழங்குடிப்படையின் காஷ்மீர் முற்றுகைக்கும், பூஞ்ச் கலவரத்துக்கும் நிறைய தொடர்பு உண்டு. அதனால் தான் ஸ்டேட்ஸ்மன் பத்திரிகை, “காஷ்மீர் சமஸ்தானப் படைகளை சிதற வைத்து, பலவீனப்படுத்துவதை உறுதி செய்ய பூஞ்ச் கலவரத்தை விட சிறந்த திட்டம் வேறு எதுவும் இருக்க முடியாது” என்று எழுதியது.

பழங்குடிப் படையின் காஷ்மீர் முற்றுகை நடக்கும் அந்த வேளையில் பாகிஸ்தான் ஆட்சியாளர்களின் திட்டம் பலருக்கும் புரிய ஆரம்பித்தது. பாகிஸ்தானின் பிரதம மந்திரி ராணுவத்தின் முக்கிய அதிகாரிகளுடன் சேர்ந்து செயல்படுத்தும் மும்முனை தாக்குதல் திட்டத்தின் முதல் பகுதி பூஞ்ச் கலவரத்தின் நெருப்பை அணையாமல் பார்த்துக்கொள்வது; மேலும், அதை எரிபொருள் கொட்டி வளர்த்துவிடுவது. காஷ்மீர் அரசு தன் படைகளை அங்கு அனுப்புவதைத் தவிர வேறு வழி இல்லை. அங்கு நிரந்தரமாக ஒரு படையை நிறுத்திவைப்பதால் தலைநகரின் பாதுகாப்பு சற்று பலவீனப்பட்டுவிடுகிறது. இப்போது பழங்குடிப் படையை திடீர் முற்றுகை இட வைத்து சுலபமாக வெற்றி பெறுவதுதான் பாகிஸ்தானின் நோக்கம். இது தெளிவாகும் போது பூஞ்ச் கலவரத்துக்கும் பாகிஸ்தானுக்கும், எந்தத் தொடர்பும் இல்லை என்ற ஸ்னீடன் போன்றவர்களின் வாதம் உடைந்து போகும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

ராணுவம் : இந்தியாவும் பாகிஸ்தானும்

இந்தியா பாகிஸ்தான் போர்கள் / அத்தியாயம் 11

1947 போரில் இந்தியாவின் முதல் தாக்குதல்

Pakistani troops patrol on a hill top post in Ladha, a town in the troubled tribal region of South Waziristan along the Afghan border on November 17, 2009.  Donkeys nibbling on the roadside are the only creatures living in the ruins of war in the hamlet of Ladha, the scenic valley emptied of inhabitants due to fighting between army and Taliban. For five weeks, 30,000 troops backed by warplanes and helicopter gunships have waged battle in South Waziristan, bombing, shelling and fighting in streets against homegrown Taliban militants the military has vowed to crush.  AFP PHOTO/ AAMIR QURESHI (Photo credit should read AAMIR QURESHI/AFP/Getty Images)

Pakistani troops patrol on a hill top post in Ladha, a town in the troubled tribal region of South Waziristan along the Afghan border on November 17, 2009. Donkeys nibbling on the roadside are the only creatures living in the ruins of war in the hamlet of Ladha, the scenic valley emptied of inhabitants due to fighting between army and Taliban. For five weeks, 30,000 troops backed by warplanes and helicopter gunships have waged battle in South Waziristan, bombing, shelling and fighting in streets against homegrown Taliban militants the military has vowed to crush. AFP PHOTO/ AAMIR QURESHI (Photo credit should read AAMIR QURESHI/AFP/Getty Images)

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பூகோள அமைப்பைச் சரியாகப் புரிந்துகொள்வது சற்று கடினமான ஒன்றுதான். இருந்தபோதும் அதன் மலைத் தொடர்களைத் தெரிந்துகொண்டால் எளிதாகிவிடும். வெளி இமயமலை (தெற்கு), உள் இமயமலை, பெரும் இமயமலை (வடக்கு), இன்னும் வடக்கில் காரகோரம் மலைத் தொடர், தென் கிழக்கில் லடாக், சன்ஸ்கார் மலைத் தொடர்கள் ஆகியவை ஜம்மு, காஷ்மீர், லடாக் பகுதிகளின் முக்கியமான மலைத் தொடர்கள்.

தெற்கில் இருந்து சென்றால் முதலில் தென்படுபவை வெளி இமய மலைகள். இவை சிவாலிக் மலைகள் என்றும் ஜம்மு மலைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்த மலைத் தொடர் பஞ்சாபில் இருந்து உயர்ந்து கொண்டு செல்கிறது. கிழக்கில் பாசோஹ்லியில் இருந்து மேற்கில் பூஞ்ச் வரை செல்லும் இது ஓர் உடைந்த மலைத் தொடர். மேலும் இதனை ராவி நதியில் இருந்து ஜீலம் நதி வரை உள்ள மலைத்தொடர் என்றும் சொல்லலாம். இதில் உள்ள மலைகள் 200 கிமீ நீளமும், 20 முதல் 50 கிலோ மீட்டர் வரை அகலமும், 600 முதல் 1200 மீட்டர் வரை உயரமும் கொண்டவை.

உள் இமய மலைகள் சிறிய இமயமலைகள் என்றும் பிர்பாஞ்சால் மலைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. வெளி இமய மலைகளுக்கும், பிர்பாஞ்சால் மலைகளுக்கும் இடையே ஜம்மு பகுதி இருக்கிறது. ஜம்மு, காஷ்மீரின் குளிர்காலத் தலை நகரம்.

காஷ்மீர் பாள்ளத்தாக்கு அல்லது காஷ்மீர், வடக்கில் பெரும் இமய மலைகளுக்கும், தெற்கிலும் மேற்கிலும் உள்ள பிர் பாஞ்சால் மலைகளுக்கும் இடையே அமைந்துள்ளது. கோடைகாலத் தலை நகரான ஸ்ரீ நகர் அங்கு உள்ளது.

வடக்கில் காரகோரம் மலைத்தொடருக்கும் பெரும் இமய மலைகளுக்கும் இடையே உள்ள பகுதிகள் ஜம்மு-காஷ்மீரின் வடக்குப் பகுதிகள் என்று அழைக்கப்படுபவை. சிந்து சமவெளி, கில்கித், ஹன்சா, பல்திஸ்தான் ஆகிய பகுதிகள் இங்கு உள்ளன. இந்த வடக்குப் பகுதிகளுக்கு தென் கிழக்காக அமைந்திருப்பது லடாக் பகுதியாகும். இது வடக்கில் உள்ள குன்லன் மலைத் தொடர்களுக்கும் தெற்கில் உள்ள பெரும் இமயமலைக்கும் இடையில் உள்ளது.

ஜம்மு-காஷ்மீர் சமஸ்தானம் சுமார் 2 லட்சத்து 22 ஆயிரம் சதுர கிமீ பரப்பளவு கொண்டது. இது வடக்கு தெற்காக 640 கிமீ அகலமும், கிழக்கு மேற்காக 380 கிமீ அகலமும் கொண்டது. மேலும் கடல் மட்டத்தில் இருந்து 300 முதல் 7000 மீட்டர்கள் உயரத்தில் இது அமைந்துள்ளது.

தட்ப வெப்ப நிலை ஒரு பகுதியின் உயரத்தைப் பொறுத்து அமைகிறது. ஜம்மு பகுதியின் சராசரி உயரம் கடல் மட்டத்தில் இருந்து 305 மீட்டர்கள். காஷ்மீர் பகுதியின் சராசரி உயரம் 1700 மீட்டர்கள். லடாக் பகுதியின் ச ணராசரி உயரம் 2500 முதல் 3500 மீட்டர்கள்.லடாக் பகுதி மலைப் பாலைவனம் என்று அழைக்கப்படுகிறது.  இத்தகைய மலைப் பகுதிகளைக் கொண்ட ஜம்மு – காஷ்மீரில் போரின் போது விமானத்தில் இருந்து பாராசூட் முலம் வீரர்களை இறக்குவது மிகவும் ஆபத்தானது. மேலும் கடல் மட்டத்தில் இருந்து அதிக உயரத்தில் உள்ள இடங்களில் ஐ சி என்ஜின்கள் பொருத்தப்பட்ட மோட்டார் வாகனங்கள் சரியாகச் செயல்படுவதில்லை. இப்படிப்பட்ட சவாலான குளிர் பிரதேசத்தில் தான் இந்திய பாகிஸ்தான் முதல் போர் தொடங்கியது.

1947 அக்டோபர் 27 ஆம் தேதி அதிகாலை பாலம் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட டகோடா விமானம் காலை 8.30 மணிக்கு ஸ்ரீ நகரில் தரை இறங்குகிறது. அதுவே போருக்காக காஷ்மீரில் இறங்கிய சுதந்தர இந்தியாவின் முதல் ராணுவ விமானம்.  அதை ஓட்டி வந்த விமானி பின் நாளில் ஒரிசாவின் முதல்வராக இருந்த பிஜூ பட்நாயக். அந்த விமானத்தில் 1 வது சீக்கிய ரெஜிமென்ட்டின் 17 ராணுவ வீரர்கள் இருந்தார்கள்.படையைத் தலைமை தாங்கியவர் லெப்டினட் கர்னல் திவான் ரஞ்சித் ராய்.

விமானம் ஸ்ரீ நகர் விமான தளத்தின் மேல் தாழ்வாகப் பறந்து இரண்டு முறை வட்டமடித்தது.பிரதம மந்திரி நேருவின் அலுவலகத்தில் இருந்து வந்த ஆணையின் படி விமான தளம் எதிரிகள் கைவசம் இருக்கும் பட்சத்தில் விமானம் தரை இறங்கக் கூடாது. விமானி,விமான தளத்தில் ஆயுதம் தாங்கியவர்கள் யாரும் இல்லை என்பதை உறுதி செய்த பின் விமானத்தைத் தரை இறக்குகிறார். உள்ளிருந்தவர்கள் வெளியே யாரும் இருக்கிறார்களா என்று மீண்டும் பார்த்துக் கொள்கிறார்கள்.விமான தளம் யாருமே இல்லாமல் வெறிச்சோடிக் கிடக்கிறது.ஆனால் திடீரென்று விமான ஓடு தளத்திலிருந்து மனிதர்கள் முளைத்து எழுவது போல் உள்ளது.சிறிது நேரத்தில் அங்கு மக்கள் மொய்த்திருப்பது தெரிந்தது. அவர்கள் எல்லோரும் ஸ்ரீ நகரில் இருந்து தப்பிச்செல்ல காத்திருந்த பொது மக்கள்.அவர்கள் விமான தளத்தின் அருகே பதுங்கி இருந்தார்கள்.இதனை அந்த விமானத்தில் வந்த பிரிகேடியர் ஹிராலால் அத்தால் தெரிவிக்கிறார்.

அந்த வேளையில் அத்து மீறி உள்ளே புகுந்த பதானியர்கள் பாரமுல்லாவைச் சுற்றி வந்து மனிதர்களை வேட்டையாடுவதில் மும்முரமாக இருந்தார்கள். படை இறங்கிக் கொண்ட பின் விமானி சாமர்த்தியமாக வேறு யாரையும் விமானத்தில் ஏற அனுமதிக்கவில்லை. அவர் விமானத்தை அங்கிருந்து பாரமுல்லா செல்லும் சாலை வரை ஓட்டி சென்று நோட்டமிடுகிறார். அங்கு ஆள் நடமாட்டம் இல்லை. அதே வேளையில் பாரமுல்லாவின் பல இடங்கள் தீப்பற்றி எரிந்து கொண்டும் மற்ற இடங்கள் புகைந்து கொண்டும் இருக்கின்றன என்று அவர் செய்தி அனுப்புகிறார். அப்போது எதிரிகள் சுட்டதால் ஒரு குண்டு பறந்து வந்து எரி பொருள் டேங்கைத் தாக்குகிறது. ஆனால் அது மோசமாக சேதமடையவில்லை. விமானம் அந்த நாள் முழுவதும் பல முறை (28 முறை) பறந்து 300 சீக்கிய ரெஜிமென்ட் வீரர்களை ஸ்ரீ நகருக்குக் கொண்டு வந்து சேர்த்தது.

முதல் முறை விமானம் வந்து இறங்கிய சில மணி நேரத்தில் படைத் தலைவர் ரஞ்சித் ராய் ஒரு சிறிய படையை ஸ்ரீ நகர் விமான தளத்துக்குக் காவலாக இருக்கும்படி ஆணையிட்டார். அவர் ஒரு ரைபிள் படைப் பிரிவுடன் பாரமுல்லாவை நோக்கிச் சென்றார். பாரமுல்லாவில் இருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர்கள் தொலைவில் இருந்த காஷ்மீர் ராணுவப் படைப் பிரிவுகளுடன் (60 வீரர்கள் கொண்ட 2 பிளாட்டூன்கள்) இந்தியப் படைப் பிரிவு சேர்ந்து கொண்டது. அந்தப் படைப் பிரிவுகள் பாரமுல்லாவிற்கு கிழக்கே சுமார் ஐந்து கிலோமீட்டர்கள் தொலைவில் , பாதானியர்களின் முன்னேற்றத்தைத் தடுத்துக் கொண்டிருந்தன. அப்போது இந்திய ராணுவம் காஷ்மீர் போரில் பாகிஸ்தானுக்கு எதிரான தன் முதல் ரைபிள்படை தாக்குதலை நடத்தியது.

இந்தியப் படை வீரர்களால் அதிக நேரம் பதானியர்களின் தாக்குதலை சமாளிக்க முடியவில்லை. அதனால் அவர்கள் சற்று பின் வாங்கி ஸ்ரீநகரில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர்கள் தொலைவில் அரணாக நின்றார்கள். அடுத்த நாள் அக்டோபர் 28 ஆம் தேதி காலை ரஞ்சித் ராய் மேலும் இரண்டு ரைபிள் படைப் பிரிவுகளுடன் சற்று முன்னேறிச் சென்றார். அங்கு மிகுதியான அளவில் பதானியப் படை வீரர்கள் இருப்பதைக் கண்டார். அபாயத்தை உணர்ந்து அங்கிருந்து படைப் பிரிவுகளை பின் வாங்குமாறு கட்டளையிட்டார்.

ஸ்ரீ நகரில் இருந்து சுமார் எட்டு கிலோமீட்டர்கள் தொலைவில் பாதுகாப்புடன் கூடிய வலிமையான இடத்தில் படைப்பிரிவுகள் நிறுத்தப்பட்டன. ஆனால் படை பின்வாங்கும் தருணத்தில் எதிரிகளின் பக்கம் இருந்து வந்த குண்டு ஒன்று ரஞ்சித் ராயின் கழுத்தில் பாய்ந்ததால் அவர் வீர மரணம் அடைந்தார். பாரமுல்லாவில் பதானியப் படையுடன் நடந்த முதல் சண்டையில் இந்திய ராணுவ வீரர்கள் ஆறு பேர் கொல்லப்பட்டார்கள். அதன் பிறகு விமானத்தின் மூலம் கொண்டு வரப்பட்ட வீரர்களாலும், ஆயுதங்களாலும் இந்தியப்படை வலுவடைந்தது.

பாரமுல்லா மாவட்டத்தில் உள்ளது காஷ்மீரின் பதான் நகரம். இது பாரமுல்லாவில் இருந்து கிழக்கு திசையில் சுமார் 27.5 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது. ஒரு சீக்கிய படைப் பிரிவு, மோர்டார்கள் போன்ற வலுவான ஆயுதங்கள் கொண்ட படைப்பிரிவு, ஆறு இயந்திரத் துப்பாக்கிகள் ஏந்திய பஞ்சாப் படைப்பிரிவு ஆகியவை பதான் நகரத்தில் நிறுத்தப்பட்டன. ஒரு குமான் துணை ராணுவப் படைப்பிரிவு ஸ்ரீ நகர் விமான தளத்தைக் காவல் காத்தது.

பிரிட்டிஷார் வளர்த்து விட்டுச்சென்ற இந்திய ராணுவம் 

ஒரு போரை முழுமையாகக் காண அதில் நேரடியாகப் பங்கு கொள்ளும் ராணுவ வீரர்கள், அதிகாரிகள் ஆகியோர் வகித்த பதவிகளின் பெயர்களையும், அதிகாரங்களையும் அறிந்துகொள்ளவேண்டும். ஏனென்றால் ராணுவக் கட்டமைப்பில் உள்ள வெவ்வேறு ராணுவப் பதவிகளின் அதிகாரங்களுக்கும் போரின் போக்குக்கும் நிறைய தொடர்பு இருக்கிறது.

போரில் பங்கு பெரும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள், ராணுவத்தின் கட்டமைப்பு உருவாக்கத்தில் முக்கிய காரணிகளாக உள்ளன. 1947 இல் தேசப் பிரிவினைக்கு முன் இந்தியா ஏழு பெரிய மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. ஒன்றாக இருந்த இந்தியாவின் ஏழு மாகாணங்கள் :

  1. 1.வங்காளம். சுமார் 1.5 லட்சம் சதுர மைல்கள். இது தற்போதைய வங்க தேசம், மேற்கு வங்காளம், பிகார், ஒரிசா, ஜார்கண்ட் ஆகியவை இணைந்த பெரிய மாகாணம்.
  2. மதராஸ். சுமார்1.4 லட்சம் சதுர மைல்கள். இது தற்போதைய தமிழ் நாடு முழுவதையும்,ஆந்திரப் பிரதேசம்,கர்நாடகா, கேரளா ஆகியவற்றின் சில பகுதிகளையும் உள்ளடக்கிய மாகாணம்.
  3. பம்பாய். சுமார் 1.2 லட்சம் சதுர மைல்கள். இது தற்போதைய பாகிஸ்தானின் சிந்துவையும், தற்போதைய மகாராஷ்டிரம், குஜராத், கர்நாடகா ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளையும் உள்ளடக்கியது.
  4. இணைந்த மாகாணங்கள். சுமார் 1.1 லட்சம் சதுர மைல்கள். தற்போதைய உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட்.
  5. மத்திய மாகாணங்கள். சுமார் 1 லட்சம் சதுர மைல். தற்போதைய மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர்.
  6. பஞ்சாப். சுமார் 97 அயிரம் சதுர மைல்கள். இது தற்போதைய பாகிஸ்தானின் பஞ்சாப், இஸ்லாமாபாத், இந்தியாவின் பஞ்சாப், இமாசலப் பிரதேசம், சண்டிகர், தில்லி ஆகியவை இணைந்த மாகாணம்.
  7. அஸ்ஸாம். சுமார் 49 ஆயிரம் சதுர மைல்கள்.

சிறிய மாகாணங்கள் ஐந்து :

  1. வட மேற்கு எல்லை மாகாணம். 16 ஆயிரம் சதுர மைல்கள். இது தற்போதைய பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகளைக் கொண்டது.
  2. பிரிட்டிஷ் பலுசிஸ்தான். 46 ஆயிரம் சதுர மைல்கள்.
  3. கூர்க். 1600 சதுர மைல்கள்.
  4. அஜ்மீர்- மீர்வாரா. 2700 சதுர மைல்கள்சி இது தற்போதைய ராஜஸ்தானின் குறிப்பிட்ட சில பகுதிகளை உள்ளடக்கியது.
  5. அந்தமான் நிக்கோபார் தீவுகள். 30,000 சதுர மைல்கள்.

பிரிட்டிஷ் இந்தியாவின் ஆளுமையில் இருந்த பெரிய மாகாணமான பர்மாவின் பரப்பளவு 1.7 லட்சம் சதுர மைல்கள். பர்மா 1937 இல் இந்தியாவிலிருந்து பிரிக்கப்பட்டு பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் கட்டுப்பாட்டில் தனியாக இயங்கத் தொடங்கியது.

பிரிட்டிஷ் இந்தியாவின் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட சமஸ்தானங்களில் நான்கு பெரியவை.

  1. ஹைதராபாத். 82,698 சதுர மைல்கள். இது சமீபத்தில் பிரிக்கப்பட்ட ஆந்திர மாநிலத்தின் தெலுங்கானா பகுதியையும், மகாராஷ்டிரம், கர்நாடகா ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளையும் உள்ளடக்கியது.
  2. ஜம்மு- காஷ்மீர். 80900 சதுர மைல்கள்.

3 மைசூர். 29,444 சதுர மைல்கள்.

  1. பரோடா. 8099 சதுர மைல்கள்.

சிறிய சமஸ்தானங்கள் :

  1. மத்திய இந்தியா ஏஜென்சி பகுதியைச் சேர்ந்த 148 சமஸ்தானங்கள்
    2. ராஜபுத்தானாவைச் சேர்ந்த 20 சமஸ்தானங்கள்
    3. பலுசிஸ்தான் பகுதியில் 2 சமஸ்தானங்கள்
    4. வங்காளத்தின் 30 சமஸ்தானங்கள்
    5. மதராஸ் பகுதியில் 5 சமஸ்தானங்கள்
    6. பம்பாய் பகுதியில் 354 சமஸ்தானங்கள்
    7. இணைந்த மாகாணத்தின் 15 சமஸ்தானங்கள்
    8. மத்திய மாகாணத்தின் 15 சமஸ்தானங்கள்
    9. பஞ்சாபின் 34 சமஸ்தானங்கள்
    10. அஸ்ஸாமின் 26 சமஸ்தானங்கள்

சமஸ்தானங்களின் எண்ணிக்கை, பர்மாவின் 52 சமஸ்தானங்ளைச் சேர்க்காமல் 640. ஆனால் அதிகாரபூர்வமாக பிரிட்டிஷ் அரசாங்கத்தின் மறைமுக ஆளுமையின் கீழ் இருந்த சமஸ்தானங்கள் 565. பிரிவினைக்கு முன் இந்தியாவின் பெரிய, சிறிய மாகாணங்களின் மொத்த பரப்பளவு சுமார் 8 லட்சத்து 63.3 ஆயிரம் சதுர மைல்கள் (பர்மா நீங்கலாக). அனைத்து சமஸ்தானங்களின் மொத்த பரப்பளவு (பர்மாவின் சமஸ்தானங்கள் நீங்கலாக) சுமார் 7 லட்சத்து 3.3 ஆயிரம் சதுர மைல்கள்.

பிரிவினைக்கு முன்னால் இந்தியாவின் மொத்த பரப்பளவு சுமார் 15 லட்சத்து 66.6 ஆயிரம் சதுர மைல்கள். எனவே 1947 இல் இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் மாகாணங்களின் பரப்பளவு கிட்டத்தட்ட 55 % ஆகவும் சமஸ்தானங்களின் பரப்பளவு 45 % ஆகவும் இருந்துள்ளன. இது பொதுவாக குறிப்பிடப்படும் 60% – 40% என்ற கணக்குக்கு நெருங்கி வருகிறது. மாகாணங்களில் எல்லாம் பிரிட்டிஷ் இந்தியாவின் ராணுவம் முழுமையாக அதிகாரம் செலுத்தமுடியும். சமஸ்தானங்களை அது மறைமுகமாகத் தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளமுடியும்.

உலகின் பல பகுதிகளை ஆண்டு கொண்டிருந்த பிரிட்டிஷ் ராணுவம் என்பது பிரிட்டிஷ் ஆர்மி என்ற தரைப்படை, ராயல் ஏர்ஃபோர்ஸ் என்ற விமானப் படை, ராயல் நேவி என்ற கப்பல் படை ஆகியவற்றைக் கொண்டது. இதே போன்று பிரிட்டிஷ் இந்திய ராணுவமும் முப்படைகளைக் கொண்டிருந்தது. பிரிட்டிஷ் ராணுவத் தரைப்படை கட்டமைப்பு தீ குழு (ஃபையர் டீம்) என்ற நான்கு வீரர்களைக் கொண்ட சிறிய பிரிவில் தொடங்கி தியேட்டர் என்ற பெரும் படையில் முடிகிறது.

இந்த ராணுவக் கட்டமைப்பு உலகின் பெரும்பாலான பெரிய நாடுகளுக்குப் பொருந்தும். பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தின் கட்டமைப்பும் இதைப் பின்பற்றி அமைக்கப்பட்டதுதான்.

இரண்டாம் உலகப் போருக்கு (1939-45) முன்னால் இந்திய ராணுவம் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு ஆகிய நான்கு பெரும் பிரிவுகளைக் (கமாண்ட்) கொண்டிருந்தது. அந்தப் பிரிவுகள் இன்றைய இந்தியா, பாகிஸ்தான், வங்க தேசம் ஆகியவை இணைந்த பெரிய தேசத்தின் வெவ்வேறு பகுதிகளைக் குறிக்கின்றன. ஒவ்வொரு ராணுவப் பெரும் பிரிவும் ஒரு ஜெனரல் அல்லது லெப்டினெண்ட் ஜெனரலின் கீழ் செயல்பட்டது.

நிர்வாக வசதிக்காக ராணுவத்தில் மாற்றங்கள் நிகழ்ந்தன. 1942 மே மாதம் ராணுவத்தின் பெரும் பிரிவுகளில் பெயர் மாற்றமும் சிலவற்றில் முக்கிய மாற்றங்களும் செய்யப்பட்டன.

அப்போது ராணுவம் வடமேற்கு பெரும் பிரிவு,தெற்கு ராணுவப்படை,கிழக்கு ராணுவப்படை,மத்திய பெரும் பிரிவு என்று பிரிக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போர் முடிந்த பின் 1946 இல் மீண்டும் மாற்றம் நடந்தது. மத்திய பெரும் பிரிவு கலைக்கப்பட்டது. வட மேற்கு பெரும் பிரிவு மீண்டும் வடக்குப் பெரும் பிரிவு ஆனது. தெற்கு, கிழக்கு, மேற்கு பெரும் பிரிவுகள் மீண்டும் உருவாயின. இந்திய பாகிஸ்தான் பிரிவினையின்போது வடக்கு ராணுவப் பெரும் பிரிவு சுதந்திர பாகிஸ்தானின் ராணுவத் தலைமையகம் ஆனது. மற்ற ராணுவப் பெரும் பிரிவுகள் இந்திய ராணுவத்தின் பகுதிகளாயின.

ராணுவத்தின் தரைப் படை, விமானப் படை, கப்பல் படை ஆகிய அனைத்திலும் மூன்றில் ஒரு பங்கு பாகிஸ்தானுக்குப் பிரித்துக் கொடுக்கப்பட்டன. அதிகாரிகள், வீரர்கள் ஆகியோரில் மூன்றில் ஒரு பங்கு நபர்கள் பாகிஸ்தானுக்குச் சொந்தம். ஆயுதங்கள்,விமானங்கள், கப்பல்கள் ஆகிய எல்லாவற்றிலும் மூன்றில் ஒரு பங்கு பாகிஸ்தான் வசம் சென்றன.
கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு கமாண்டுகள் ஒவ்வொன்றும் பெரிய ராணுவப் பிரிவைக் குறிக்கின்றன. கமாண்ட் என்பது ஒரு குறிப்பிட்ட பணிக்காகவோ அல்லது தேசத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியின் பாதுகாப்புக்காகோ உருவாக்கப்படுவது. அது கார்ப்ஸ் என்ற பெரும் படையை ஒரு பணிக்காக அனுப்பமுடியும். அதே வேளையில் அது சிறிய படைகளான சில பெட்டாலியன்களையும் பணிக்காக அனுப்பும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

 

ராணுவத்தைப் பொறுத்தவரை ராணுவ வீரர்கள், அதிகாரிகள் ஆகியோரோடு ஆயுதங்கள், ராணுவ வாகனங்கள் இவை எல்லாம் இருந்தால் உடனடியாக ஒரு போரை நடத்திவிட முடியாது. ஒரு குறிப்பிட்ட இடத்தில் போர் நடக்க இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதற்கு பணிக்கப்பட்டது ஆயுதங்கள் கொண்ட ஒரு காலாட்படை ரெஜிமென்ட். பொதுவாக அது நிர்வாகப் பணிகளையும், விழாக்கால பணிகளையும் மேற்கொள்ளும். அதில் சில பெட்டாலியன்கள் இருக்கும். இப்போது போருக்கு அனுப்ப அதில் ஒரு போர்க் குழு உருவாக்கப்படும். ஒரு பிரிகேடியர் தலைமையில் இயங்கும் ஆயுதம் தாங்கிய ரெஜிமென்ட்டைச் சுற்றி உருவாக்கப்படுவது போர் குழு.
போர் செய்யப்போகும் படைகள் எல்லாம் சேர்ந்த ஒரு தொகுப்பை ஒரு கட்டடம் என்றால் இந்தப் போர்க் குழு அதன் அஸ்திவாரத்தின் மேல் எழுந்த முதல் தளம். இனி உயரமான பெரும் கட்டடம் அதன் மேல் எழும். ஒரு பெட்டாலியன் அல்லது ரெஜிமென்ட்டை வைத்து உருவாக்கப்படும் போர்க்குழுவுக்குத் தேவையான ஆள்களை அதுவே கொடுத்துவிடும். இன்னும் அதிகமாகத் தேவைப்படும் ஆட்களையும், ஆயுதங்களையும் மற்ற பிரிவுகள் கொடுக்கும். உதாரணமாக ராணுவ டேங்குகள் படை வீரர்களோடு அதில் இணைக்கப்படும். போர்க்குழு தன் பணியை சரியாகச் செய்து முடிக்க ஒரு தொழில் நுட்பப் பிரிவும் அதனோடு சேர்க்கப்படும். மேலும் போரில் சூழ்நிலைக்குத் தகுந்தவாறு போர்க் குழுவின் வடிவம் மாற்றி அமைக்கப்பட வசதியானதாக இருக்கும். போரில் தாக்குதல் நடத்தும்போது ஆயுதம் தாங்கிய ஒரு ரெஜிமென்ட்டைச் சுற்றி உருவக்கப்படும் போர்க்குழு இரண்டு டேங்கு ஸ்குவாட்ரன்களையும், அதற்கு உதவியாக ஒரு காலாட்படை கம்பெனியையும் பயன்படுத்தலாம். போரில் சற்று பின்வாங்கி பாதுகாப்பாகப் போரிடும் நிலை ஏற்படும்போது ஒரு காலட்படை பெட்டாலியனைச் சுற்றி உருவாக்கப்படும் போர்க்குழு இரண்டு கம்பெனிகளையும், ஆயுதம் தாங்கிய ஒரு ஸ்குவாட் ரனையும் பயன்படுத்தலாம்.
1947 இல் பிரிட்டிஷ் இந்தியாவின் ராணுவம் 4 லட்சத்து 60 ஆயிரம் பேரைக் கொண்டதாக இருந்தது. அதில் 12 ஆயிரம் அதிகாரிகள் இருந்தார்கள். இவர்களைத் தவிர கமிஷனால் நியமிக்கப்படாத அதிகாரிகளும் இருந்தார்கள். மொத்த ராணுவ வீரர்களோடு சமஸ்தானங்களின் 75 ஆயிரம் படை வீரர்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தின் தரைப் படை தலைமை தளபதி முப்படைகளுக்கும் தலைவராக இருப்பார். அவர்தான் பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தின் கமாண்டர் – இன் – சீஃப். அவர் கவர்னர் ஜெனரலின் ஆணைக்கு உட்பட்டு நடப்பவர். அந்தப் பதவியைக் கடைசியாக வகித்த வெள்ளைக்காரர் ஜெனரல் சர் ராய் பச்சர். இந்திய ராணுவத்தின் முதல் இந்திய கமாண்டர் – இன் – சீஃப் ஆக இருந்தவர் ஜென்ரல் கே.எம். கரியப்பா. சுதந்தர இந்தியாவில் 1955 ஆம் ஆண்டுக்குப் பிறகு அந்தப் பதவி குடியரசுத் தலைவர் அலுவலகத்தோடு இணைக்கப்பட்டது. ஆதலால் தனியாக அப்படியொரு பதவி அதற்குப் பிறகு கிடையாது. தரைப்படை தளபதி பதவியின் பெயர் சீப் ஆஃப் ஆர்மி ஸ்டாஃப் என மாற்றப்பட்டது. இந்திய ஜனாதிபதி முப்படைகளின் தலைவர் (கமாண்டர் – இன் – சீஃப்) ஆகிவிட்டார்.

பிரிட்டிஷ் இந்தியாவில் உயர் ராணுவ அதிகாரிகள் எல்லாம் பிரிட்டிஷ்காரர்கள் தாம். கமிஷனால் நியமிக்கப்படும் உயர் அதிகாரிகளில் பிரிட்டிஷாரும், இந்தியர்களும் இருந்தார்கள்.
1920 முதல் பிரிட்டிஷ் அரசரின் கமிஷனால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் என்று ஒரு பிரிவு ஏற்படுத்தப்பட்டது. அதில் உள்ள அதிகாரிகள் இந்தியர்கள். மேலும் அப்போது வைஸ்ராயின் கமிஷனால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் கொண்ட பிரிவு ஒன்றும் ஏற்படுத்தப்பட்டது. இவர்களும் இந்தியர்கள்தாம். முன்னே சொல்லப்பட்டவர்களுக்கும் இவர்களுக்கும் அதிகாரத்தில் வேறுபாடு உண்டு. வைஸ்ராயின் கமிஷனால் நியமிக்கப்பட்ட இந்திய ராணுவ அதிகாரிகள் ராணுவத்தில் உள்ள இந்தியர்களை மட்டும்தான் கட்டுப்படுத்த முடியும். இவர்கள் எல்லோரும் அரசரின் கமிஷனால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளுக்குக் கட்டுப்பட்டு நடக்கவேண்டும். பிரிட்டிஷ் ராணுவ மேஜருக்கு இணையான சுபேதார் மேஜர், பிரிட்டிஷ் ராணுவ கேப்டனுக்கு இணையான சுபேதார், லெப்டினண்ட்டுக்கு இணையான ஜமேதார் ஆகியோர் இவர்களுள் அடங்குவார்கள்.
ராணுவத்தின் கட்டமைப்பில் வெவ்வேறு நிலைகளில் உள்ள அதிகாரிகளின் பதவிப் பெயர்கள் கொண்ட பட்டியல் பிரிட்டிஷ் ராணுவத்தின் கடை நிலை அதிகாரியில் இருந்து நீள்கிறது.

1.ராணுவசி அதிகாரி -பயிற்சி- ஒரு ஸ்டார்
2.இரண்டாம் நிலை லெப்டினண்ட் – 2 ஸ்டார்கள்
3.லெப்டினண்ட் -3 வருடங்கள் வரை
4.கேப்டன் – 3 ஸ்டார்கள்
5.மேஜர் – 8 முதல் 10 ஆண்டுகள் பணிக்குப் பிறகு கிடைப்பது. 120 அதிகாரிகளை இவர் கட்டுப்படுத்த முடியும்.
6. லெப்டினண்ட் கர்னல் – இவர் 650 ராணுவ வீரர்களைக் கட்டுப்படுத்தமுடியும்.
7.கர்னல்- இவர் பெரும்பாலும் களத்தின் தலைவராக இருப்பதில்லை.
8.பிரிகேடியர்
9. மேஜர் ஜெனரல்
10. லெப்டினட் ஜெனரல்
11.ஜெனரல்

இந்தப் பட்டியலில் உள்ள பல நிலைகளில் இந்தியர்கள், பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு இணையாக, கமிஷனால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளாகப் பணியாற்றினார்கள்.
பிரிட்டிஷ் ராணுவ வீரர்கள் ஏற்கும் வெவ்வேறு நிலைகளின் பட்டியல் :

1.முதல் நிலை – ராணுவ வீரர்
2. இரண்டாம் நிலை- லான்ஸ் கார்பொரல்
3. கார்பொரல் – 6 முதல் 8 ஆண்டுகளுக்குப் பிறகு.
4. சார்ஜென்ட் – 12 ஆண்டுகளுக்குப் பிறகு
5. கர்னல் சார்ஜென்ட்
6. வாரன்ட் அதிகாரி – பிரிவு 2
7.வாரன்ட் அதிகாரி- பிரிவு 1

இந்தப் பட்டியலோடு இந்திய ராணுவ அதிகாரிகள் அல்லது வீரர்களின் வெவ்வேறு நிலைகளை ஒப்பிட்டுப் பார்ப்பது நமக்கு உதவியாக இருக்கும்.
1.சிப்பாய்
2.லான்ஸ் நாயக் – லான்ஸ் கார்பொரலுக்கு இணையானது.
3.நாயக்
4.ஹவில் தார் (சார்ஜென்ட்)
5.ஜூனியர் கமிஷன்ட் அதிகாரிகள் : நாயக் சுபேதார், சுபேதார், சுபேதார் மேஜர்.

பிரிட்டிஷ் இந்தியத் தரைப்படை கட்டமைப்பும், அதிகாரிகளின் பதவிப் பெயர்களும் விமானப் படையிலும் (ராயல் இண்டியன் ஏர் ஃபோர்ஸ்), கப்பல் படையிலும் (ராயல் இண்டியன் நேவி) சற்று மாறுபடும். மேலிருந்து கீழ் நிலை வரை இந்திய ராணுவம் விடுதலைக்கு முன்பாக பல ஆண்டுகளாகவே இந்திய மயம் ஆகிக் கொண்டிருந்தது.

ராணுவத்தில் இந்தியர்கள் அதிக அளவில் சேர்ந்து கொண்டே இருந்தார்கள்.
1947 இல் தேசப் பிரிவினைக்குப் பிறகு இந்தியாவில் இருந்த பிரிட்டிஷ் ராணுவ யூனிட்டுகள், யுனைட்டெட் கிங்டத்துக்கும், பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் மற்ற பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. பிரிட்டிஷ் ராணுவம் வெளியேறுவதைக் கவனிக்கும் பொறுப்பை மேஜர் விஸ்லர் ஏற்றார். பிரிட்டிஷ் ராணுவத்தின் கடைசி பிரிவு 1வது பெட்டாலியன் (சாமர்செட்) 1948 பிப்ரவரி 28 ஆம் தேதி வெளியேறியது. ராணுவ தளவாடங்களில் மிகுதியானவற்றை பிரிட்டிஷ் ராணுவம் இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் விட்டுச் சென்றது. அதே வேளையில் பிரிட்டிஷ் ராணுவம் அப்போது முற்றிலுமாக இந்தியாவையும், பாகிஸ்தானையும் விட்டுச் செல்லவில்லை.
1948 ஆம் ஆண்டு சுமார் 800 பிரிட்டிஷ் ராணுவ அதிகாரிகள், பாகிஸ்தானிலும், சுமார் 350 பிரிட்டிஷ் ராணுவ அதிகாரிகள் இந்தியாவிலும் இருந்தார்கள். இந்தியா தனது நாட்டு அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு கொடுப்பதில் அக்கறை காட்டியது. பிரிட்டிஷ் ராணுவ அதிகாரிகள் அனைவரும் தொழில்நுட்பப் பிரிவிலும், அறிவுரை வழங்கும் நிலையிலும் மட்டுமே இந்தியாவில் இருந்தார்கள். தேசப் பிரிவினையின்போது புலனாய்வுத்துறை சேகரித்து வைத்திருந்த தகவல்கள் எல்லாம் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் அழிக்கப்பட்டுவிட்டன என்கிறார் பீட்டர் ஏகிஸ் (தி ஃபர்ஸ்ட் இண்டோ பாகிஸ்தானி வார் 1947—48). அவை கிடைத்திருந்தாலும் இரு நாடுகளுக்கும் லாபம் இல்லை. ஏனென்றால் பிரிட்டிஷ் இந்திய உளவுத்துறை பிரிட்டிஷ் அரசாட்சி இந்தியாவில் தொடர வேண்டும் என்ற நோக்கோடு செயல்பட்டது. அது சேகரித்து வைத்திருந்த தகவல்கள் எல்லாம் விடுதலை கோரும் நபர்கள்; இயக்கங்கள் பற்றியவை.
எல்லாவற்றையும் பிரிக்கும்போது புலனாய்வுத் துறையை இரண்டு நாடுகளுக்கும் பிரித்துக் கொடுப்பதுதான் முறை. ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை 1947 ஆகஸ்ட் 15 ஆம் நாள் கிட்டத்தட்ட எந்தவிதமான புலனாய்வுத் தகவலும் இல்லாமல் புதிதாக எல்லாவற்றையும் தொடங்கும் நிலையில் இருந்தது. புலனாய்வுத் துறையின் இயக்குநராக இருந்த குலாம் அகமதும் அவருடன் இருந்த இஸ்லாமிய அலுவலர்களும் தனி டொமினியனாக மாறிய பாகிஸ்தானுக்குப் பணி புரியப் போய் விட்டார்கள். பெரிய அளவில் அவர்கள் வசம் தகவல்கள் இல்லை என்றாலும் அவர்கள் புலனாய்வுத் துறையில் திறமையும், அனுபவமும் மிக்கவர்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

1947 போரில் இந்தியாவின் முதல் தாக்குதல்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பூகோள அமைப்பைச் சரியாகப் புரிந்துகொள்வது சற்று கடினமான ஒன்றுதான். இருந்தபோதும் அதன் மலைத் தொடர்களைத் தெரிந்துகொண்டால் எளிதாகிவிடும். வெளி இமயமலை (தெற்கு), உள் இமயமலை, பெரும் இமயமலை (வடக்கு), இன்னும் வடக்கில் காரகோரம் மலைத் தொடர், தென் கிழக்கில் லடாக், சன்ஸ்கார் மலைத் தொடர்கள் ஆகியவை ஜம்மு, காஷ்மீர், லடாக் பகுதிகளின் முக்கியமான மலைத் தொடர்கள்.

தெற்கில் இருந்து சென்றால் முதலில் தென்படுபவை வெளி இமய மலைகள். இவை சிவாலிக் மலைகள் என்றும் ஜம்மு மலைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்த மலைத் தொடர் பஞ்சாபில் இருந்து உயர்ந்து கொண்டு செல்கிறது. கிழக்கில் பாசோஹ்லியில் இருந்து மேற்கில் பூஞ்ச் வரை செல்லும் இது ஓர் உடைந்த மலைத் தொடர். மேலும் இதனை ராவி நதியில் இருந்து ஜீலம் நதி வரை உள்ள மலைத்தொடர் என்றும் சொல்லலாம். இதில் உள்ள மலைகள் 200 கிமீ நீளமும், 20 முதல் 50 கிலோ மீட்டர் வரை அகலமும், 600 முதல் 1200 மீட்டர் வரை உயரமும் கொண்டவை.

உள் இமய மலைகள் சிறிய இமயமலைகள் என்றும் பிர்பாஞ்சால் மலைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. வெளி இமய மலைகளுக்கும், பிர்பாஞ்சால் மலைகளுக்கும் இடையே ஜம்மு பகுதி இருக்கிறது. ஜம்மு, காஷ்மீரின் குளிர்காலத் தலை நகரம்.

காஷ்மீர் பாள்ளத்தாக்கு அல்லது காஷ்மீர், வடக்கில் பெரும் இமய மலைகளுக்கும், தெற்கிலும் மேற்கிலும் உள்ள பிர் பாஞ்சால் மலைகளுக்கும் இடையே அமைந்துள்ளது. கோடைகாலத் தலை நகரான ஸ்ரீ நகர் அங்கு உள்ளது.

வடக்கில் காரகோரம் மலைத்தொடருக்கும் பெரும் இமய மலைகளுக்கும் இடையே உள்ள பகுதிகள் ஜம்மு-காஷ்மீரின் வடக்குப் பகுதிகள் என்று அழைக்கப்படுபவை. சிந்து சமவெளி, கில்கித், ஹன்சா, பல்திஸ்தான் ஆகிய பகுதிகள் இங்கு உள்ளன. இந்த வடக்குப் பகுதிகளுக்கு தென் கிழக்காக அமைந்திருப்பது லடாக் பகுதியாகும். இது வடக்கில் உள்ள குன்லன் மலைத் தொடர்களுக்கும் தெற்கில் உள்ள பெரும் இமயமலைக்கும் இடையில் உள்ளது.

ஜம்மு-காஷ்மீர் சமஸ்தானம் சுமார் 2 லட்சத்து 22 ஆயிரம் சதுர கிமீ பரப்பளவு கொண்டது. இது வடக்கு தெற்காக 640 கிமீ அகலமும், கிழக்கு மேற்காக 380 கிமீ அகலமும் கொண்டது. மேலும் கடல் மட்டத்தில் இருந்து 300 முதல் 7000 மீட்டர்கள் உயரத்தில் இது அமைந்துள்ளது.

தட்ப வெப்ப நிலை ஒரு பகுதியின் உயரத்தைப் பொறுத்து அமைகிறது. ஜம்மு பகுதியின் சராசரி உயரம் கடல் மட்டத்தில் இருந்து 305 மீட்டர்கள். காஷ்மீர் பகுதியின் சராசரி உயரம் 1700 மீட்டர்கள். லடாக் பகுதியின் ச ணராசரி உயரம் 2500 முதல் 3500 மீட்டர்கள்.லடாக் பகுதி மலைப் பாலைவனம் என்று அழைக்கப்படுகிறது.  இத்தகைய மலைப் பகுதிகளைக் கொண்ட ஜம்மு – காஷ்மீரில் போரின் போது விமானத்தில் இருந்து பாராசூட் முலம் வீரர்களை இறக்குவது மிகவும் ஆபத்தானது. மேலும் கடல் மட்டத்தில் இருந்து அதிக உயரத்தில் உள்ள இடங்களில் ஐ சி என்ஜின்கள் பொருத்தப்பட்ட மோட்டார் வாகனங்கள் சரியாகச் செயல்படுவதில்லை. இப்படிப்பட்ட சவாலான குளிர் பிரதேசத்தில் தான் இந்திய பாகிஸ்தான் முதல் போர் தொடங்கியது.

1947 அக்டோபர் 27 ஆம் தேதி அதிகாலை பாலம் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட டகோடா விமானம் காலை 8.30 மணிக்கு ஸ்ரீ நகரில் தரை இறங்குகிறது. அதுவே போருக்காக காஷ்மீரில் இறங்கிய சுதந்தர இந்தியாவின் முதல் ராணுவ விமானம்.  அதை ஓட்டி வந்த விமானி பின் நாளில் ஒரிசாவின் முதல்வராக இருந்த பிஜூ பட்நாயக். அந்த விமானத்தில் 1 வது சீக்கிய ரெஜிமென்ட்டின் 17 ராணுவ வீரர்கள் இருந்தார்கள்.படையைத் தலைமை தாங்கியவர் லெப்டினட் கர்னல் திவான் ரஞ்சித் ராய்.

விமானம் ஸ்ரீ நகர் விமான தளத்தின் மேல் தாழ்வாகப் பறந்து இரண்டு முறை வட்டமடித்தது.பிரதம மந்திரி நேருவின் அலுவலகத்தில் இருந்து வந்த ஆணையின் படி விமான தளம் எதிரிகள் கைவசம் இருக்கும் பட்சத்தில் விமானம் தரை இறங்கக் கூடாது. விமானி,விமான தளத்தில் ஆயுதம் தாங்கியவர்கள் யாரும் இல்லை என்பதை உறுதி செய்த பின் விமானத்தைத் தரை இறக்குகிறார். உள்ளிருந்தவர்கள் வெளியே யாரும் இருக்கிறார்களா என்று மீண்டும் பார்த்துக் கொள்கிறார்கள்.விமான தளம் யாருமே இல்லாமல் வெறிச்சோடிக் கிடக்கிறது.ஆனால் திடீரென்று விமான ஓடு தளத்திலிருந்து மனிதர்கள் முளைத்து எழுவது போல் உள்ளது.சிறிது நேரத்தில் அங்கு மக்கள் மொய்த்திருப்பது தெரிந்தது. அவர்கள் எல்லோரும் ஸ்ரீ நகரில் இருந்து தப்பிச்செல்ல காத்திருந்த பொது மக்கள்.அவர்கள் விமான தளத்தின் அருகே பதுங்கி இருந்தார்கள்.இதனை அந்த விமானத்தில் வந்த பிரிகேடியர் ஹிராலால் அத்தால் தெரிவிக்கிறார்.

அந்த வேளையில் அத்து மீறி உள்ளே புகுந்த பதானியர்கள் பாரமுல்லாவைச் சுற்றி வந்து மனிதர்களை வேட்டையாடுவதில் மும்முரமாக இருந்தார்கள். படை இறங்கிக் கொண்ட பின் விமானி சாமர்த்தியமாக வேறு யாரையும் விமானத்தில் ஏற அனுமதிக்கவில்லை. அவர் விமானத்தை அங்கிருந்து பாரமுல்லா செல்லும் சாலை வரை ஓட்டி சென்று நோட்டமிடுகிறார். அங்கு ஆள் நடமாட்டம் இல்லை. அதே வேளையில் பாரமுல்லாவின் பல இடங்கள் தீப்பற்றி எரிந்து கொண்டும் மற்ற இடங்கள் புகைந்து கொண்டும் இருக்கின்றன என்று அவர் செய்தி அனுப்புகிறார். அப்போது எதிரிகள் சுட்டதால் ஒரு குண்டு பறந்து வந்து எரி பொருள் டேங்கைத் தாக்குகிறது. ஆனால் அது மோசமாக சேதமடையவில்லை. விமானம் அந்த நாள் முழுவதும் பல முறை (28 முறை) பறந்து 300 சீக்கிய ரெஜிமென்ட் வீரர்களை ஸ்ரீ நகருக்குக் கொண்டு வந்து சேர்த்தது.

முதல் முறை விமானம் வந்து இறங்கிய சில மணி நேரத்தில் படைத் தலைவர் ரஞ்சித் ராய் ஒரு சிறிய படையை ஸ்ரீ நகர் விமான தளத்துக்குக் காவலாக இருக்கும்படி ஆணையிட்டார். அவர் ஒரு ரைபிள் படைப் பிரிவுடன் பாரமுல்லாவை நோக்கிச் சென்றார். பாரமுல்லாவில் இருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர்கள் தொலைவில் இருந்த காஷ்மீர் ராணுவப் படைப் பிரிவுகளுடன் (60 வீரர்கள் கொண்ட 2 பிளாட்டூன்கள்) இந்தியப் படைப் பிரிவு சேர்ந்து கொண்டது. அந்தப் படைப் பிரிவுகள் பாரமுல்லாவிற்கு கிழக்கே சுமார் ஐந்து கிலோமீட்டர்கள் தொலைவில் , பாதானியர்களின் முன்னேற்றத்தைத் தடுத்துக் கொண்டிருந்தன. அப்போது இந்திய ராணுவம் காஷ்மீர் போரில் பாகிஸ்தானுக்கு எதிரான தன் முதல் ரைபிள்படை தாக்குதலை நடத்தியது.

இந்தியப் படை வீரர்களால் அதிக நேரம் பதானியர்களின் தாக்குதலை சமாளிக்க முடியவில்லை. அதனால் அவர்கள் சற்று பின் வாங்கி ஸ்ரீநகரில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர்கள் தொலைவில் அரணாக நின்றார்கள். அடுத்த நாள் அக்டோபர் 28 ஆம் தேதி காலை ரஞ்சித் ராய் மேலும் இரண்டு ரைபிள் படைப் பிரிவுகளுடன் சற்று முன்னேறிச் சென்றார். அங்கு மிகுதியான அளவில் பதானியப் படை வீரர்கள் இருப்பதைக் கண்டார். அபாயத்தை உணர்ந்து அங்கிருந்து படைப் பிரிவுகளை பின் வாங்குமாறு கட்டளையிட்டார்.

ஸ்ரீ நகரில் இருந்து சுமார் எட்டு கிலோமீட்டர்கள் தொலைவில் பாதுகாப்புடன் கூடிய வலிமையான இடத்தில் படைப்பிரிவுகள் நிறுத்தப்பட்டன. ஆனால் படை பின்வாங்கும் தருணத்தில் எதிரிகளின் பக்கம் இருந்து வந்த குண்டு ஒன்று ரஞ்சித் ராயின் கழுத்தில் பாய்ந்ததால் அவர் வீர மரணம் அடைந்தார். பாரமுல்லாவில் பதானியப் படையுடன் நடந்த முதல் சண்டையில் இந்திய ராணுவ வீரர்கள் ஆறு பேர் கொல்லப்பட்டார்கள். அதன் பிறகு விமானத்தின் மூலம் கொண்டு வரப்பட்ட வீரர்களாலும், ஆயுதங்களாலும் இந்தியப்படை வலுவடைந்தது.

பாரமுல்லா மாவட்டத்தில் உள்ளது காஷ்மீரின் பதான் நகரம். இது பாரமுல்லாவில் இருந்து கிழக்கு திசையில் சுமார் 27.5 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது. ஒரு சீக்கிய படைப் பிரிவு, மோர்டார்கள் போன்ற வலுவான ஆயுதங்கள் கொண்ட படைப்பிரிவு, ஆறு இயந்திரத் துப்பாக்கிகள் ஏந்திய பஞ்சாப் படைப்பிரிவு ஆகியவை பதான் நகரத்தில் நிறுத்தப்பட்டன. ஒரு குமான் துணை ராணுவப் படைப்பிரிவு ஸ்ரீ நகர் விமான தளத்தைக் காவல் காத்தது.

பிரிட்டிஷார் வளர்த்து விட்டுச்சென்ற இந்திய ராணுவம் 

ஒரு போரை முழுமையாகக் காண அதில் நேரடியாகப் பங்கு கொள்ளும் ராணுவ வீரர்கள், அதிகாரிகள் ஆகியோர் வகித்த பதவிகளின் பெயர்களையும், அதிகாரங்களையும் அறிந்துகொள்ளவேண்டும். ஏனென்றால் ராணுவக் கட்டமைப்பில் உள்ள வெவ்வேறு ராணுவப் பதவிகளின் அதிகாரங்களுக்கும் போரின் போக்குக்கும் நிறைய தொடர்பு இருக்கிறது.

போரில் பங்கு பெரும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள், ராணுவத்தின் கட்டமைப்பு உருவாக்கத்தில் முக்கிய காரணிகளாக உள்ளன. 1947 இல் தேசப் பிரிவினைக்கு முன் இந்தியா ஏழு பெரிய மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. ஒன்றாக இருந்த இந்தியாவின் ஏழு மாகாணங்கள் :

  1. 1.வங்காளம். சுமார் 1.5 லட்சம் சதுர மைல்கள். இது தற்போதைய வங்க தேசம், மேற்கு வங்காளம், பிகார், ஒரிசா, ஜார்கண்ட் ஆகியவை இணைந்த பெரிய மாகாணம்.
  2. மதராஸ். சுமார்1.4 லட்சம் சதுர மைல்கள். இது தற்போதைய தமிழ் நாடு முழுவதையும்,ஆந்திரப் பிரதேசம்,கர்நாடகா, கேரளா ஆகியவற்றின் சில பகுதிகளையும் உள்ளடக்கிய மாகாணம்.
  3. பம்பாய். சுமார் 1.2 லட்சம் சதுர மைல்கள். இது தற்போதைய பாகிஸ்தானின் சிந்துவையும், தற்போதைய மகாராஷ்டிரம், குஜராத், கர்நாடகா ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளையும் உள்ளடக்கியது.
  4. இணைந்த மாகாணங்கள். சுமார் 1.1 லட்சம் சதுர மைல்கள். தற்போதைய உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட்.
  5. மத்திய மாகாணங்கள். சுமார் 1 லட்சம் சதுர மைல். தற்போதைய மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர்.
  6. பஞ்சாப். சுமார் 97 அயிரம் சதுர மைல்கள். இது தற்போதைய பாகிஸ்தானின் பஞ்சாப், இஸ்லாமாபாத், இந்தியாவின் பஞ்சாப், இமாசலப் பிரதேசம், சண்டிகர், தில்லி ஆகியவை இணைந்த மாகாணம்.
  7. அஸ்ஸாம். சுமார் 49 ஆயிரம் சதுர மைல்கள்.

சிறிய மாகாணங்கள் ஐந்து :

  1. வட மேற்கு எல்லை மாகாணம். 16 ஆயிரம் சதுர மைல்கள். இது தற்போதைய பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகளைக் கொண்டது.
  2. பிரிட்டிஷ் பலுசிஸ்தான். 46 ஆயிரம் சதுர மைல்கள்.
  3. கூர்க். 1600 சதுர மைல்கள்.
  4. அஜ்மீர்- மீர்வாரா. 2700 சதுர மைல்கள்சி இது தற்போதைய ராஜஸ்தானின் குறிப்பிட்ட சில பகுதிகளை உள்ளடக்கியது.
  5. அந்தமான் நிக்கோபார் தீவுகள். 30,000 சதுர மைல்கள்.

பிரிட்டிஷ் இந்தியாவின் ஆளுமையில் இருந்த பெரிய மாகாணமான பர்மாவின் பரப்பளவு 1.7 லட்சம் சதுர மைல்கள். பர்மா 1937 இல் இந்தியாவிலிருந்து பிரிக்கப்பட்டு பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் கட்டுப்பாட்டில் தனியாக இயங்கத் தொடங்கியது.

பிரிட்டிஷ் இந்தியாவின் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட சமஸ்தானங்களில் நான்கு பெரியவை.

  1. ஹைதராபாத். 82,698 சதுர மைல்கள். இது சமீபத்தில் பிரிக்கப்பட்ட ஆந்திர மாநிலத்தின் தெலுங்கானா பகுதியையும், மகாராஷ்டிரம், கர்நாடகா ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளையும் உள்ளடக்கியது.
  2. ஜம்மு- காஷ்மீர். 80900 சதுர மைல்கள்.

3 மைசூர். 29,444 சதுர மைல்கள்.

  1. பரோடா. 8099 சதுர மைல்கள்.

சிறிய சமஸ்தானங்கள் :

  1. மத்திய இந்தியா ஏஜென்சி பகுதியைச் சேர்ந்த 148 சமஸ்தானங்கள்
    2. ராஜபுத்தானாவைச் சேர்ந்த 20 சமஸ்தானங்கள்
    3. பலுசிஸ்தான் பகுதியில் 2 சமஸ்தானங்கள்
    4. வங்காளத்தின் 30 சமஸ்தானங்கள்
    5. மதராஸ் பகுதியில் 5 சமஸ்தானங்கள்
    6. பம்பாய் பகுதியில் 354 சமஸ்தானங்கள்
    7. இணைந்த மாகாணத்தின் 15 சமஸ்தானங்கள்
    8. மத்திய மாகாணத்தின் 15 சமஸ்தானங்கள்
    9. பஞ்சாபின் 34 சமஸ்தானங்கள்
    10. அஸ்ஸாமின் 26 சமஸ்தானங்கள்

சமஸ்தானங்களின் எண்ணிக்கை, பர்மாவின் 52 சமஸ்தானங்ளைச் சேர்க்காமல் 640. ஆனால் அதிகாரபூர்வமாக பிரிட்டிஷ் அரசாங்கத்தின் மறைமுக ஆளுமையின் கீழ் இருந்த சமஸ்தானங்கள் 565. பிரிவினைக்கு முன் இந்தியாவின் பெரிய, சிறிய மாகாணங்களின் மொத்த பரப்பளவு சுமார் 8 லட்சத்து 63.3 ஆயிரம் சதுர மைல்கள் (பர்மா நீங்கலாக). அனைத்து சமஸ்தானங்களின் மொத்த பரப்பளவு (பர்மாவின் சமஸ்தானங்கள் நீங்கலாக) சுமார் 7 லட்சத்து 3.3 ஆயிரம் சதுர மைல்கள்.

பிரிவினைக்கு முன்னால் இந்தியாவின் மொத்த பரப்பளவு சுமார் 15 லட்சத்து 66.6 ஆயிரம் சதுர மைல்கள். எனவே 1947 இல் இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் மாகாணங்களின் பரப்பளவு கிட்டத்தட்ட 55 % ஆகவும் சமஸ்தானங்களின் பரப்பளவு 45 % ஆகவும் இருந்துள்ளன. இது பொதுவாக குறிப்பிடப்படும் 60% – 40% என்ற கணக்குக்கு நெருங்கி வருகிறது. மாகாணங்களில் எல்லாம் பிரிட்டிஷ் இந்தியாவின் ராணுவம் முழுமையாக அதிகாரம் செலுத்தமுடியும். சமஸ்தானங்களை அது மறைமுகமாகத் தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளமுடியும்.

உலகின் பல பகுதிகளை ஆண்டு கொண்டிருந்த பிரிட்டிஷ் ராணுவம் என்பது பிரிட்டிஷ் ஆர்மி என்ற தரைப்படை, ராயல் ஏர்ஃபோர்ஸ் என்ற விமானப் படை, ராயல் நேவி என்ற கப்பல் படை ஆகியவற்றைக் கொண்டது. இதே போன்று பிரிட்டிஷ் இந்திய ராணுவமும் முப்படைகளைக் கொண்டிருந்தது. பிரிட்டிஷ் ராணுவத் தரைப்படை கட்டமைப்பு தீ குழு (ஃபையர் டீம்) என்ற நான்கு வீரர்களைக் கொண்ட சிறிய பிரிவில் தொடங்கி தியேட்டர் என்ற பெரும் படையில் முடிகிறது.

இந்த ராணுவக் கட்டமைப்பு உலகின் பெரும்பாலான பெரிய நாடுகளுக்குப் பொருந்தும். பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தின் கட்டமைப்பும் இதைப் பின்பற்றி அமைக்கப்பட்டதுதான்.

இரண்டாம் உலகப் போருக்கு (1939-45) முன்னால் இந்திய ராணுவம் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு ஆகிய நான்கு பெரும் பிரிவுகளைக் (கமாண்ட்) கொண்டிருந்தது. அந்தப் பிரிவுகள் இன்றைய இந்தியா, பாகிஸ்தான், வங்க தேசம் ஆகியவை இணைந்த பெரிய தேசத்தின் வெவ்வேறு பகுதிகளைக் குறிக்கின்றன. ஒவ்வொரு ராணுவப் பெரும் பிரிவும் ஒரு ஜெனரல் அல்லது லெப்டினெண்ட் ஜெனரலின் கீழ் செயல்பட்டது.

நிர்வாக வசதிக்காக ராணுவத்தில் மாற்றங்கள் நிகழ்ந்தன. 1942 மே மாதம் ராணுவத்தின் பெரும் பிரிவுகளில் பெயர் மாற்றமும் சிலவற்றில் முக்கிய மாற்றங்களும் செய்யப்பட்டன.

அப்போது ராணுவம் வடமேற்கு பெரும் பிரிவு,தெற்கு ராணுவப்படை,கிழக்கு ராணுவப்படை,மத்திய பெரும் பிரிவு என்று பிரிக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போர் முடிந்த பின் 1946 இல் மீண்டும் மாற்றம் நடந்தது. மத்திய பெரும் பிரிவு கலைக்கப்பட்டது. வட மேற்கு பெரும் பிரிவு மீண்டும் வடக்குப் பெரும் பிரிவு ஆனது. தெற்கு, கிழக்கு, மேற்கு பெரும் பிரிவுகள் மீண்டும் உருவாயின. இந்திய பாகிஸ்தான் பிரிவினையின்போது வடக்கு ராணுவப் பெரும் பிரிவு சுதந்திர பாகிஸ்தானின் ராணுவத் தலைமையகம் ஆனது. மற்ற ராணுவப் பெரும் பிரிவுகள் இந்திய ராணுவத்தின் பகுதிகளாயின.

ராணுவத்தின் தரைப் படை, விமானப் படை, கப்பல் படை ஆகிய அனைத்திலும் மூன்றில் ஒரு பங்கு பாகிஸ்தானுக்குப் பிரித்துக் கொடுக்கப்பட்டன. அதிகாரிகள், வீரர்கள் ஆகியோரில் மூன்றில் ஒரு பங்கு நபர்கள் பாகிஸ்தானுக்குச் சொந்தம். ஆயுதங்கள்,விமானங்கள், கப்பல்கள் ஆகிய எல்லாவற்றிலும் மூன்றில் ஒரு பங்கு பாகிஸ்தான் வசம் சென்றன.

கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு கமாண்டுகள் ஒவ்வொன்றும் பெரிய ராணுவப் பிரிவைக் குறிக்கின்றன. கமாண்ட் என்பது ஒரு குறிப்பிட்ட பணிக்காகவோ அல்லது தேசத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியின் பாதுகாப்புக்காகோ உருவாக்கப்படுவது. அது கார்ப்ஸ் என்ற பெரும் படையை ஒரு பணிக்காக அனுப்பமுடியும். அதே வேளையில் அது சிறிய படைகளான சில பெட்டாலியன்களையும் பணிக்காக அனுப்பும்.

ராணுவத்தைப் பொறுத்தவரை ராணுவ வீரர்கள், அதிகாரிகள் ஆகியோரோடு ஆயுதங்கள், ராணுவ வாகனங்கள் இவை எல்லாம் இருந்தால் உடனடியாக ஒரு போரை நடத்திவிட முடியாது. ஒரு குறிப்பிட்ட இடத்தில் போர் நடக்க இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதற்கு பணிக்கப்பட்டது ஆயுதங்கள் கொண்ட ஒரு காலாட்படை ரெஜிமென்ட். பொதுவாக அது நிர்வாகப் பணிகளையும், விழாக்கால பணிகளையும் மேற்கொள்ளும். அதில் சில பெட்டாலியன்கள் இருக்கும். இப்போது போருக்கு அனுப்ப அதில் ஒரு போர்க் குழு உருவாக்கப்படும். ஒரு பிரிகேடியர் தலைமையில் இயங்கும் ஆயுதம் தாங்கிய ரெஜிமென்ட்டைச் சுற்றி உருவாக்கப்படுவது போர் குழு.

போர் செய்யப்போகும் படைகள் எல்லாம் சேர்ந்த ஒரு தொகுப்பை ஒரு கட்டடம் என்றால் இந்தப் போர்க் குழு அதன் அஸ்திவாரத்தின் மேல் எழுந்த முதல் தளம். இனி உயரமான பெரும் கட்டடம் அதன் மேல் எழும். ஒரு பெட்டாலியன் அல்லது ரெஜிமென்ட்டை வைத்து உருவாக்கப்படும் போர்க்குழுவுக்குத் தேவையான ஆள்களை அதுவே கொடுத்துவிடும். இன்னும் அதிகமாகத் தேவைப்படும் ஆட்களையும், ஆயுதங்களையும் மற்ற பிரிவுகள் கொடுக்கும். உதாரணமாக ராணுவ டேங்குகள் படை வீரர்களோடு அதில் இணைக்கப்படும். போர்க்குழு தன் பணியை சரியாகச் செய்து முடிக்க ஒரு தொழில் நுட்பப் பிரிவும் அதனோடு சேர்க்கப்படும். மேலும் போரில் சூழ்நிலைக்குத் தகுந்தவாறு போர்க் குழுவின் வடிவம் மாற்றி அமைக்கப்பட வசதியானதாக இருக்கும். போரில் தாக்குதல் நடத்தும்போது ஆயுதம் தாங்கிய ஒரு ரெஜிமென்ட்டைச் சுற்றி உருவக்கப்படும் போர்க்குழு இரண்டு டேங்கு ஸ்குவாட்ரன்களையும், அதற்கு உதவியாக ஒரு காலாட்படை கம்பெனியையும் பயன்படுத்தலாம். போரில் சற்று பின்வாங்கி பாதுகாப்பாகப் போரிடும் நிலை ஏற்படும்போது ஒரு காலட்படை பெட்டாலியனைச் சுற்றி உருவாக்கப்படும் போர்க்குழு இரண்டு கம்பெனிகளையும், ஆயுதம் தாங்கிய ஒரு ஸ்குவாட் ரனையும் பயன்படுத்தலாம்.

1947 இல் பிரிட்டிஷ் இந்தியாவின் ராணுவம் 4 லட்சத்து 60 ஆயிரம் பேரைக் கொண்டதாக இருந்தது. அதில் 12 ஆயிரம் அதிகாரிகள் இருந்தார்கள். இவர்களைத் தவிர கமிஷனால் நியமிக்கப்படாத அதிகாரிகளும் இருந்தார்கள். மொத்த ராணுவ வீரர்களோடு சமஸ்தானங்களின் 75 ஆயிரம் படை வீரர்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தின் தரைப் படை தலைமை தளபதி முப்படைகளுக்கும் தலைவராக இருப்பார். அவர்தான் பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தின் கமாண்டர் – இன் – சீஃப். அவர் கவர்னர் ஜெனரலின் ஆணைக்கு உட்பட்டு நடப்பவர். அந்தப் பதவியைக் கடைசியாக வகித்த வெள்ளைக்காரர் ஜெனரல் சர் ராய் பச்சர். இந்திய ராணுவத்தின் முதல் இந்திய கமாண்டர் – இன் – சீஃப் ஆக இருந்தவர் ஜென்ரல் கே.எம். கரியப்பா. சுதந்தர இந்தியாவில் 1955 ஆம் ஆண்டுக்குப் பிறகு அந்தப் பதவி குடியரசுத் தலைவர் அலுவலகத்தோடு இணைக்கப்பட்டது. ஆதலால் தனியாக அப்படியொரு பதவி அதற்குப் பிறகு கிடையாது. தரைப்படை தளபதி பதவியின் பெயர் சீப் ஆஃப் ஆர்மி ஸ்டாஃப் என மாற்றப்பட்டது. இந்திய ஜனாதிபதி முப்படைகளின் தலைவர் (கமாண்டர் – இன் – சீஃப்) ஆகிவிட்டார்.

பிரிட்டிஷ் இந்தியாவில் உயர் ராணுவ அதிகாரிகள் எல்லாம் பிரிட்டிஷ்காரர்கள் தாம். கமிஷனால் நியமிக்கப்படும் உயர் அதிகாரிகளில் பிரிட்டிஷாரும், இந்தியர்களும் இருந்தார்கள்.

1920 முதல் பிரிட்டிஷ் அரசரின் கமிஷனால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் என்று ஒரு பிரிவு ஏற்படுத்தப்பட்டது. அதில் உள்ள அதிகாரிகள் இந்தியர்கள். மேலும் அப்போது வைஸ்ராயின் கமிஷனால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் கொண்ட பிரிவு ஒன்றும் ஏற்படுத்தப்பட்டது. இவர்களும் இந்தியர்கள்தாம். முன்னே சொல்லப்பட்டவர்களுக்கும் இவர்களுக்கும் அதிகாரத்தில் வேறுபாடு உண்டு. வைஸ்ராயின் கமிஷனால் நியமிக்கப்பட்ட இந்திய ராணுவ அதிகாரிகள் ராணுவத்தில் உள்ள இந்தியர்களை மட்டும்தான் கட்டுப்படுத்த முடியும். இவர்கள் எல்லோரும் அரசரின் கமிஷனால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளுக்குக் கட்டுப்பட்டு நடக்கவேண்டும். பிரிட்டிஷ் ராணுவ மேஜருக்கு இணையான சுபேதார் மேஜர், பிரிட்டிஷ் ராணுவ கேப்டனுக்கு இணையான சுபேதார், லெப்டினண்ட்டுக்கு இணையான ஜமேதார் ஆகியோர் இவர்களுள் அடங்குவார்கள்.

ராணுவத்தின் கட்டமைப்பில் வெவ்வேறு நிலைகளில் உள்ள அதிகாரிகளின் பதவிப் பெயர்கள் கொண்ட பட்டியல் பிரிட்டிஷ் ராணுவத்தின் கடை நிலை அதிகாரியில் இருந்து நீள்கிறது.

1.ராணுவசி அதிகாரி -பயிற்சி- ஒரு ஸ்டார்
2.இரண்டாம் நிலை லெப்டினண்ட் – 2 ஸ்டார்கள்
3.லெப்டினண்ட் -3 வருடங்கள் வரை
4.கேப்டன் – 3 ஸ்டார்கள்
5.மேஜர் – 8 முதல் 10 ஆண்டுகள் பணிக்குப் பிறகு கிடைப்பது. 120 அதிகாரிகளை இவர் கட்டுப்படுத்த முடியும்.
6. லெப்டினண்ட் கர்னல் – இவர் 650 ராணுவ வீரர்களைக் கட்டுப்படுத்தமுடியும்.
7.கர்னல்- இவர் பெரும்பாலும் களத்தின் தலைவராக இருப்பதில்லை.
8.பிரிகேடியர்
9. மேஜர் ஜெனரல்
10. லெப்டினட் ஜெனரல்
11.ஜெனரல்

இந்தப் பட்டியலில் உள்ள பல நிலைகளில் இந்தியர்கள், பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு இணையாக, கமிஷனால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளாகப் பணியாற்றினார்கள்.

பிரிட்டிஷ் ராணுவ வீரர்கள் ஏற்கும் வெவ்வேறு நிலைகளின் பட்டியல் :

1.முதல் நிலை – ராணுவ வீரர்
2. இரண்டாம் நிலை- லான்ஸ் கார்பொரல்
3. கார்பொரல் – 6 முதல் 8 ஆண்டுகளுக்குப் பிறகு.
4. சார்ஜென்ட் – 12 ஆண்டுகளுக்குப் பிறகு
5. கர்னல் சார்ஜென்ட்
6. வாரன்ட் அதிகாரி – பிரிவு 2
7.வாரன்ட் அதிகாரி- பிரிவு 1

இந்தப் பட்டியலோடு இந்திய ராணுவ அதிகாரிகள் அல்லது வீரர்களின் வெவ்வேறு நிலைகளை ஒப்பிட்டுப் பார்ப்பது நமக்கு உதவியாக இருக்கும்.

1.சிப்பாய்
2.லான்ஸ் நாயக் – லான்ஸ் கார்பொரலுக்கு இணையானது.
3.நாயக்
4.ஹவில் தார் (சார்ஜென்ட்)
5.ஜூனியர் கமிஷன்ட் அதிகாரிகள் : நாயக் சுபேதார், சுபேதார், சுபேதார் மேஜர்.

பிரிட்டிஷ் இந்தியத் தரைப்படை கட்டமைப்பும், அதிகாரிகளின் பதவிப் பெயர்களும் விமானப் படையிலும் (ராயல் இண்டியன் ஏர் ஃபோர்ஸ்), கப்பல் படையிலும் (ராயல் இண்டியன் நேவி) சற்று மாறுபடும். மேலிருந்து கீழ் நிலை வரை இந்திய ராணுவம் விடுதலைக்கு முன்பாக பல ஆண்டுகளாகவே இந்திய மயம் ஆகிக் கொண்டிருந்தது.

ராணுவத்தில் இந்தியர்கள் அதிக அளவில் சேர்ந்து கொண்டே இருந்தார்கள்.
1947 இல் தேசப் பிரிவினைக்குப் பிறகு இந்தியாவில் இருந்த பிரிட்டிஷ் ராணுவ யூனிட்டுகள், யுனைட்டெட் கிங்டத்துக்கும், பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் மற்ற பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. பிரிட்டிஷ் ராணுவம் வெளியேறுவதைக் கவனிக்கும் பொறுப்பை மேஜர் விஸ்லர் ஏற்றார். பிரிட்டிஷ் ராணுவத்தின் கடைசி பிரிவு 1வது பெட்டாலியன் (சாமர்செட்) 1948 பிப்ரவரி 28 ஆம் தேதி வெளியேறியது. ராணுவ தளவாடங்களில் மிகுதியானவற்றை பிரிட்டிஷ் ராணுவம் இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் விட்டுச் சென்றது. அதே வேளையில் பிரிட்டிஷ் ராணுவம் அப்போது முற்றிலுமாக இந்தியாவையும், பாகிஸ்தானையும் விட்டுச் செல்லவில்லை.
1948 ஆம் ஆண்டு சுமார் 800 பிரிட்டிஷ் ராணுவ அதிகாரிகள், பாகிஸ்தானிலும், சுமார் 350 பிரிட்டிஷ் ராணுவ அதிகாரிகள் இந்தியாவிலும் இருந்தார்கள். இந்தியா தனது நாட்டு அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு கொடுப்பதில் அக்கறை காட்டியது. பிரிட்டிஷ் ராணுவ அதிகாரிகள் அனைவரும் தொழில்நுட்பப் பிரிவிலும், அறிவுரை வழங்கும் நிலையிலும் மட்டுமே இந்தியாவில் இருந்தார்கள். தேசப் பிரிவினையின்போது புலனாய்வுத்துறை சேகரித்து வைத்திருந்த தகவல்கள் எல்லாம் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் அழிக்கப்பட்டுவிட்டன என்கிறார் பீட்டர் ஏகிஸ் (தி ஃபர்ஸ்ட் இண்டோ பாகிஸ்தானி வார் 1947—48). அவை கிடைத்திருந்தாலும் இரு நாடுகளுக்கும் லாபம் இல்லை. ஏனென்றால் பிரிட்டிஷ் இந்திய உளவுத்துறை பிரிட்டிஷ் அரசாட்சி இந்தியாவில் தொடர வேண்டும் என்ற நோக்கோடு செயல்பட்டது. அது சேகரித்து வைத்திருந்த தகவல்கள் எல்லாம் விடுதலை கோரும் நபர்கள்; இயக்கங்கள் பற்றியவை.

எல்லாவற்றையும் பிரிக்கும்போது புலனாய்வுத் துறையை இரண்டு நாடுகளுக்கும் பிரித்துக் கொடுப்பதுதான் முறை. ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை 1947 ஆகஸ்ட் 15 ஆம் நாள் கிட்டத்தட்ட எந்தவிதமான புலனாய்வுத் தகவலும் இல்லாமல் புதிதாக எல்லாவற்றையும் தொடங்கும் நிலையில் இருந்தது. புலனாய்வுத் துறையின் இயக்குநராக இருந்த குலாம் அகமதும் அவருடன் இருந்த இஸ்லாமிய அலுவலர்களும் தனி டொமினியனாக மாறிய பாகிஸ்தானுக்குப் பணி புரியப் போய் விட்டார்கள். பெரிய அளவில் அவர்கள் வசம் தகவல்கள் இல்லை என்றாலும் அவர்கள் புலனாய்வுத் துறையில் திறமையும், அனுபவமும் மிக்கவர்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

பாகிஸ்தானில் ஹிட்லரிய வேர்கள்

ஜனவரி 23, 2002 அன்று பாகிஸ்தானில் டேனியல் பெர்ல் என்கிற பத்திரிகை நிருபர் கடத்தப்பட்டார். ஜனவரி 29-ம் தேதி வால்ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகையைச் சேர்ந்த அந்த நிருபர் கொல்லப்பட்டார். அவரைக் கடத்தியவர்கள் பிப்ரவரி 21-ல் அவரைக் கொன்ற வீடியோவை வெளியிட்டார்கள். வீடியோவின் பெயர், ‘யூத உளவாளியான பத்திரிகை நிருபருக்கு மரண தண்டனை’. பத்திரிகை நிருபர் கழுத்து அறுத்துக் கொல்லப்படும் காட்சி. அதற்கு முன்னால் டேனியர் பெர்ல் தன் குற்றத்தை ஒப்புக்கொள்கிறார். என்ன அவருடைய ஒப்புதல் வாக்குமூலம்? “என் தந்தை யூதர். என் தாய் யூதப்பெண். நான் யூதன்.” மத்தியக் கால கிறிஸ்தவ உலகின் யூத வெறுப்பு வன்முறையுடன் போட்டிபோடும் இந்த வெறுப்பினைக் கண்டு உலகம் அதிர்ந்தது.

இந்நிகழ்ச்சியின் பின்னணியிலிருந்த பயங்கரவாதி ஒமர் ஸயீத் ஷேக். ஒமர் ஷேக் ஏதோ வேலையில்லாமல் அலைந்து பணத்துக்காகத் துப்பாக்கி தூக்கிய மடையன் அல்லன். அல்லது படிப்பறிவற்று யாராலோ மதவெறியூட்டப்பட்ட முட்டாளும் அல்லன். ஒமர் ஷேக் புகழ்பெற்ற லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்னாமிக்ஸில் படித்தவன்; செஸ் விளையாட்டு வீரன். சராசரிக்கும் அதிகமான அறிவுள்ள இளைஞன். சகமனிதனின் கழுத்தை, இத்தனை வெறுப்புடன் வெட்டிக் கொல்லும் அளவுக்கு அவனை மனிதத்தன்மை அற்றவனாக ஆக்கியது எது?

பெர்னார்ட் ஹென்றி லெவி பிரஞ்சு இடதுசாரிச் சிந்தனையாளர். நிச்சயமாக ஜார்ஜ் புஷ்ஷின் ஆதரவாளர் அல்ல. இவருக்கு இந்த ஒமர் ஷேக் விஷயம் உறுத்தியது. இது வெறும் பாலஸ்தீன ஆப்கானிஸ்தானப் பிரச்னை மட்டும் அல்ல. அதைவிட ஆழமான ஓர் யூத வெறுப்பு இதில் இருக்கிறது. பொதுவாக இடதுசாரி அறிவுஜீவிகள் பாலஸ்தீனிய இயக்க ஆதரவாளர்கள். பாலஸ்தீனிய இயக்கங்களில் இருப்பதாகக் கூறப்படும் யூதவெறுப்பு, பாலஸ்தீனியர்களின் வரலாற்றுக் கசப்பின் விளைவு என்று இவர்கள் கருதி வந்தனர். பாலஸ்தீனிய இயக்கங்களில் யூத வெறுப்பு ஒரு மதநம்பிக்கையாக வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது என்பதைத் தொடர்ந்து மறுத்து வந்துள்ளனர். லெவியை இப்போது அது உறுத்தியது.

ஒமர் ஷேக்கின் பயங்கரவாதத்தில் இருக்கும் யூதவெறுப்பின் ஊற்றுக்கண் எது என்பதை அறியப்புகுந்தார் லெவி. இந்த அறிதலில் ஆப்கானிஸ்தான் தொடங்கி பாகிஸ்தான், இந்தியா, பங்களாதேசம் எனப் பரவியுள்ள ஒரு வலைப்பின்னலைக் காண்கிறார். ஹிட்லரிய ஜெர்மனியில் காணப்பட்ட அதே யூத வெறுப்பு, அதன் அனைத்து உச்சங்களும் மறைக்கப்படாமல் பாகிஸ்தானில் பலதளங்களில் வெளிப்படுவதைக் காண்கிறார். அதிர்ச்சியடைகிறார்.

ஆனால் அதிர்ச்சியடையவேண்டிய அவசியமே இல்லை என்பதுதான் உண்மை. இஸ்லாமாபாத் முதல் இடலாக்குடி வரையுள்ள இஸ்லாமிய அரசியலில் யூத வெறுப்பு ஒருங்கிணைந்த அம்சம் என்பதுதான் உண்மை.

விடுதலைக்கு முந்தைய இந்தியாவில் பாகிஸ்தானிய இயக்கம் வளர்ந்து சூறாவளியாக வீசிக்கொண்டிருந்த காலகட்டம். 1930-களின் இறுதிகள் தொடங்கி 1947 வரையில். இக்காலகட்டத்தில் ‘பாலஸ்தீனிய பிரச்னை’யை பாகிஸ்தானிய இயக்கம் தம்மை வளர்க்க நன்றாகவே பயன்படுத்திக்கொண்டது. இதில் முன்னணியில் இருந்தது அரசியல்வாதி ஜின்னா அல்ல. மாறாக கவிஞர் முகமது இக்பால்.

‘Private and Confidential’ என முத்திரையிடப்பட்ட கடிதம் ஒன்றை, 7 அக்டோபர் 1937 அன்று இக்பால் ஜின்னாவுக்கு எழுதினார். அதில் அவர் அளித்திருந்த யோசனை பின்வருமாறு:

“பாலஸ்தீனியப் பிரச்னை முஸ்லீம்களை உணர்ச்சியடைய வைத்துள்ளது. லீகின் வளர்ச்சிக்காகப் பெருமளவில் மக்கள்தொடர்பை ஏற்படுத்த நல்ல வாய்ப்பை இது தருகிறது. லீக் இது குறித்து வலிமையானதொரு முடிவினை தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கும் என்பதிலும், மக்களை ஈடுபடுத்தும் ஒரு செயல்திட்டத்தையும் வகுக்கும் என்பதிலும் எனக்கு எவ்வித ஐயமும் இல்லை.”

விரைவில் நாடு முழுவதும் கூட்டங்கள் நடத்தப்பட்டன. வெறியூட்டும் பேச்சுகளில் யூத வெறுப்பு கொப்பளித்திருக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. கூடவே இதில் ஒரு இணை உள்ளோட்டம் இருந்தது. குறிப்பாக முகமது இக்பால் அதை மிகவும் நன்றாகவே செய்தார். பாகிஸ்தான் கோரப்பட்ட பிரதேசங்களில் வாழும் இந்துக்களைப் பண முதலைகளாகவும், பணத்தாசை கொண்டவர்களாகவும் வர்ணித்து, யூத-பாலஸ்தீனிய பிரச்னைக்கு இணையாக, பாகிஸ்தானிய கோரிக்கையை மாற்றினார். உதாரணமாக, அவரது 28-மே-1937 தேதியிட்ட கடிதம். இக்கடிதத்தில் வடமேற்குப் பகுதி எல்லையில் (இன்றைய பாகிஸ்தானில்) இருக்கும் இடங்களில் ‘பாலஸ்தீனம் உருவாக்கப்படும் சாத்தியத்தையும்’, ‘உள்நாட்டுப் போர்’ குறித்தும் ஜின்னாவுக்கு அறிவுரைகள் வழங்கினார். இவ்விதத்தில் யூதர்களுக்கு எதிரான வெறுப்பு என்பது இந்தியச் சூழலில் இந்துக்களுக்கு எதிரான வெறுப்பாக உருமாற்றம் அடைந்தது.

முதல் உலகப்போர் முடிந்தபிறகு ஐரோப்பாவில் வேறோர் இருள் படர்ந்துகொண்டிருந்தது. யூத வெறுப்பு. பல யூதர்கள் பாலஸ்தீனப் பிரதேசத்துக்கு ஓடிவந்தனர். அப்போது பாலஸ்தீனம் பிரிட்டிஷாரால் ஆளப்பட்டது. பல பிரிட்டிஷ் உயரதிகாரிகள் இனவாதிகள். ஒன்று அரேபியரை வெறுத்தனர் அல்லது யூதர்களை வெறுத்தனர். அல்லது இருவரையும். இந்நிலையில் இங்கு யூதர்களின் குடியேற்றம் அவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. கூடவே பிரித்தாள ஒரு வாய்ப்பாகவும் அதனைப் பார்த்தார்கள்.

ஆனால் உள்ளூர் அராபியர்களுக்கு இவர்களின் குடியேற்றம் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தியது. பாலைவனமாக இருந்த பாலஸ்தீனத்தில் யூத தேசத்தை உருவாக்கும் ஸியோனிஸ முயற்சிகள் வலிமை அடைந்துவந்தன. முடிவில் இது பாலஸ்தீனத்திலிருந்து பிரிட்டிஷ் ஆட்சியினை அகற்றும் என்பதனை பிரிட்டிஷார் அறிவர். எனவே, யூதர்களுக்கு எதிராக உள்ளூர் பாலஸ்தீனியர்களையும் சுற்றியிருந்த அராபியர்களையும், மதவாத அடிப்படையில் தூண்டிவிட பிரிட்டிஷார் முடிவெடுத்தனர். இயல்பாகவே பிரிட்டிஷ் அதிகாரிகள் சிலரிடம் இருந்த யூத வெறுப்புணர்வும்கூட இதற்குக் காரணமாக இருந்திருக்கலாம்.

1921-ல் இஸ்லாமிய அடிப்படைவாதியான முகமது அமின் அல் ஹுசைனி ஜெருசலத்தின் முஃப்தியாக பிரிட்டிஷ் அரசால் நியமிக்கப்பட்டார். ஜெருசலத்தில் அல்-அகூசா மசூதியை உடனடியாகப் புதுப்பிக்கும் பணியில் அவர் ஈடுபட்டார். இதற்கான பணம் கணிசமான அளவு வந்தது. எங்கிருந்து? இந்தியாவிலிருந்து!

1930-களின் இறுதியில் சர்வதேசக் களத்தில் போர் அணிகள் உருக்கொள்ள ஆரம்பித்தபோது ஹிட்லரின் யூத வெறுப்பால் கவரப்பட்டார் ஹுசைனி. யூதர்களின் எதிரி தன் நண்பன் என்ற முறையில் ஹிட்லரை ஹுசைனி ஆதரிக்க ஆரம்பித்தார். பிரிட்டிஷ் அரசு பார்த்தது. 1936-ல் ஹுசைனி ஈடுபட்ட யூத எதிர்ப்புக் கலவரத்தைக் காரணம் காட்டி அவரை முஃப்தி பதவியிலிருந்து நீக்கியது. அல் ஹுசைனி கலவரங்களைத் திட்டமிட்டு நடத்துவதில் தனித்திறம் கொண்டவர். தான் பதவி நீக்கப்பட்டதைத் தொடர்ந்து ஹுசைனி ஹிட்லருக்கு 15 முறை கோரிக்கைகளை அனுப்பினார். ஜெர்மனி போலவே பாலஸ்தீனிலும் ‘யூதப்பிரச்னைக்கு’ தீர்வு காணப்படவேண்டும் என அவர் கோரிக்கை வைத்தார்.

பின்னர் ஹிட்லரை நேரில் சென்று சந்தித்தார் அல் ஹுசைனி. போஸ்னியாவில் வாழும் இஸ்லாமியர்களிலிருந்து 20,000 பேர் கொண்ட ஒரு பிரிவை ஹிட்லரின் எஸ்எஸ் (SS) எனும் ராணுவ அமைப்புக்கு அளிக்க முயற்சி எடுத்துக்கொண்டார். பொதுவாக ஹிட்லரின் யூத எதிர்ப்பு அனைவருக்கும் தெரியும். இந்தியா போன்ற நாடுகளில் உள்ளூர் அரசியல்வாதிகள் பலருக்கு அக்காலகட்டத்தில் ஹிட்லர் வதந்திகள் மூலம் அறிமுகமாகியிருந்தார். ‘ஜெர்மனியை மீட்டவர்.’ ‘சதிகாரர்களிடமிருந்து ஜெர்மனியைக் கட்டி எழுப்பியவர்.’ இப்படியாக.

ஆனால் ஹிட்லரின் காட்டுமிராண்டித்தனமான படுகொலை முகாம்கள் 1944-ல்தான் வெளி உலகுக்கு ஐயந்திரிபறத் தெரியவந்தன. இக்கொடுமைகளை முன்னரே அறிந்திருந்தவர்கள் வெகுசில உள்வட்ட நாஸி தலைவர்கள் மட்டுமே. அத்தகைய உள்வட்டத் தலைவர்களில் ஒருவராக அல் ஹுசைனி கருதப்படுகிறார். எய்க்மான், ஹிம்லர் போன்ற உள்வட்ட நாஸி தலைவர்களுடன் ஹுசைனி நெருக்கமான நட்பு கொண்டிருந்தார். 1942-ல் அல் ஹுசைனியின் யூத-வெறுப்பு வெறியால் கவரப்பட்ட ஹிட்லர், ஹுசைனியை ‘கௌரவ ஆரியன்’ என அறிவித்தார். அல் ஹுசைனி ஆஷ்விச் கொலைமுகாமைக்கூடப் பார்வையிட்டார் என நாஸி தலைவன் எய்க்மானின் ஸ்லோவாக்கிய டெபுடி டெய்ட்டர் விஸ்லென்ஸி தெரிவிக்கிறார்.

இன்னொரு ஆதாரமும்கூட இருக்கிறது. 1943-ல் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்து யூதர்களுக்கு விசா அளித்து பாலஸ்தீனம் செல்ல ஒரு திட்டம் இருந்தது. இதை எதிர்த்து அந்த விசாக்களை ரத்து செய்யவைத்தவர் அல் ஹுசைனி. அல் ஹுசைனியின் தலையீட்டால் விசா மறுக்கப்பட்டு கொலைக்களத்துக்கு அனுப்பப்பட்ட யூதர்களில் பல்கேரியாவைச் சேர்ந்த 4,000 யூதக்குழந்தைகளும், ருமேனியாவைச் சேர்ந்த 1,800 யூதக்குழந்தைகளும், ஹங்கேரியைச் சேர்ந்த 900 யூதக்குழந்தைகளும் அடங்குவர். தொடர்ந்து பெர்லின் வானொலியில் பேசிய முஃப்தி, 1.1 கோடி யூதர்களை தோற்கடிக்க அராபியர்களுக்கு அழைப்பு விடுத்தார். 1939 மக்கள்தொகைக் கணெக்கெடுப்பின்படி யூதர்களின் எண்ணிக்கை 1.70 கோடி என்றிருக்கிறது. சரியாக அறுபது லட்சம் யூதர்கள் குறைவாக அல் ஹுசைனி குறிப்பிட்டுள்ளார். அறுபது லட்சம் யூதர்கள் கொல்லப்பட்டது 1945-க்குப் பின்னரே வெளி உலகுக்கு தெரியவந்தது. அதற்கு முன்னால் ஹிட்லரின் நம்பிக்கைக்குப் பாத்திரமான, இந்தக் கொலையில் ஈடுபட்ட, உள்வட்ட நாஸி உயர் அதிகாரிகளுக்கு மட்டுமே இந்த ‘யூதப்படுகொலை’ தெரியும். எனவே இப்படி அல் ஹுசைனி குறிப்பிட்டது அவருக்கு எத்தனை யூதர்கள் கொல்லப்பட்டார்கள் என்பது தெரிந்திருக்கவேண்டும் என்பதைத் தெளிவுபடுத்துகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

யூதர்களைப் படுகொலை செய்த நாஸி போர்க் குற்றவாளிகளைத் தேடி தண்டனை வாங்கிக்கொடுத்த புலனாய்வாளர் சைமன் வியஸெந்தாலும், அல் ஹூசைனி ஆஸ்ட்விச் கொலைக்களத்தைப் பார்வையிட்ட உயர் நாஸி தலைவர்களுள் ஒருவர் என்பதனை உறுதிப்படுத்துகிறார். ஆஷ்விச் மிகக்கொடூரமான நாசி வதை முகாம். யூதர்களைப் பெரிய அளவில் வாயு அறைகளில் கொன்ற முகாம்.

1944-ல் அல் ஹூசைனி நாடு திரும்பினார்.

ஹிட்லரின் ஆப்தரான அல் ஹுசைனியைத்தான் ஜின்னா சர்வதேச இஸ்லாமிய மாநாட்டில் கெய்ரோவில் சந்தித்தார். இந்த மாநாடும் அல் ஹுசைனியின் இஸ்லாமிய உலகத்தினை உருவாக்கும் முயற்சிதான். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள புகைப்படங்கள் ஜின்னா அல் ஹுசைனியுடன் கொண்டுள்ள நெருக்கத்தைப் பறை சாற்றுகின்றன. எப்படி பாலஸ்தீனிய யூதர்களுக்கு எதிராகக் கலவரங்களை ஒரு போர்முறையாகவே அல் ஹுசைனி பயன்படுத்தினாரோ, அது போலவே 1946-ல், அதேபோன்ற தெளிவான திட்டமிடலுடன் கல்கத்தாவிலும் நவகாளியிலும் எல்லைப் பிரதேசங்களிலும் தமது கட்சியின் மூலம் இந்துக்களுக்கு எதிரான படுகொலைக் கலவரங்களை நடத்தியிருந்தார் ஜின்னா.

ஜின்னாவே தான் ஹிட்லரின் செயல்முறைகளை ஆழமாகப் படித்ததாகச் சொல்லியிருக்கிறார். ஆனால் ஜின்னா கலவரங்களைத் தொடங்குவதற்கு முன்னரே அவரது செயல்முறைகள் ஹிட்லரின் செயல்பாடுகளை ஒத்திருப்பதை இனம் கண்டுகொண்டவர் டாக்டர் அம்பேத்கர்தான். பாபா சாகேப் அம்பேத்கர், வார்த்தைகளைச் சிறிதும் மென்மைப்படுத்தவில்லை. அவர் கூறுகிறார்:

“முஸ்லீம்கள் இன்று ஹிட்லரைப் போலப் பேசுகின்றனர். ஜெர்மனியில் ஹிட்லர் குரல் உயர்த்துவதைப்போல அவர்கள் தங்களைச் சூரியன் அளவுக்கு உயர்த்திப் பார்க்கின்றனர். இன்று அவர்கள் கேட்கும் 50% கோரிக்கை என்பது ஜெர்மானிய தேசத்தின் பெயரில் மற்ற அனைத்து தேசங்களையும் தமக்குக் கேட்பதைப்போலத்தான். அங்குள்ள சிறுபான்மை சமுதாயங்களைக் குறித்து (நாஸிகளைப் போலவே) இவர்களுக்கும் அக்கறை இல்லை.”

ஜின்னா-அல் ஹுசைனி தொடர்பு மிகத்தெளிவாகவே, தனிப்பட்ட நட்புக்கும் அப்பால், பான்-இஸ்லாமிய எதிரிகளைத் துடைத்தொடுக்கும் நடைமுறை வழிகளையும் பகிர்ந்துள்ளதாகவே தெரிகிறது. 1945-ல் குரோவேஷியாவிலும் ஹங்கேரியிலும் படுகொலைகளில் ஈடுபட்ட கொலைப்படைகளை நாஸிகளுக்குத் திரட்டிக் கொடுத்தமைக்காக அல் ஹுசைனிக்கு எதிராக யூகோஸ்லாவியா நடவடிக்கை எடுக்க முயன்றது. அவ்வாறே பிரான்ஸும் முயன்றது. ஹுசைனி அதற்குள் பாலஸ்தீனத்துக்கு வந்துவிட்டார். 1948-ல் இஸ்ரேலுக்கு எதிரான அல் ஹுசைனியின் முயற்சிகள் வீணானதைத் தொடர்ந்தும், அவரது நாஸி தொடர்புகள் வெளியானதைத் தொடர்ந்தும் அவர் பிரபலம் இழந்தார். ஆனால் பாகிஸ்தானில் அவர் வீர நாயகராகவும் யூத எதிர்ப்பாளராகவும் புகழப்பட்டார். 1951-ல் நடைபெற்ற சர்வதேச இஸ்லாமிய மாநாட்டுக்கு அல் ஹுசைனி தலைமை தாங்கி அரியணை போன்றதோர் ஆசனத்தில் அமர்ந்திருக்க, அடக்க ஒடுக்கமாக பாகிஸ்தானிய அன்றைய பிரதமர் லியாகத் அலிகான் பணிவுடன் உரையாற்றுவதை, அம்மாநாட்டுப் புகைப்படங்களில் காணலாம்.

விடுதலை பெற்ற பாகிஸ்தானிலும் யூத-வெறுப்பு வளர்ந்தபடியே இருந்தது. விடுதலை அடைந்த சில காலத்திலேயே ஜின்னா பாகிஸ்தானின் சிறுபான்மையினரிலும் சிறுபான்மையினராக இருந்த 2,000 பெனி-இஸ்ரேல் வகுப்பு யூதர்களின் வாழ்வுரிமைகளை இல்லாமல் ஆக்கினார். பிரிவினைக்கு ஆளாகாத இந்தியாவில் காலம் காலமாக இருந்த யூத வழிபாட்டுத் தலம் தீ வைக்கப்பட்டது. இந்த யூத சமுதாயத்துக்கு இருந்த அரசியல் பிரதிநிதித்துவம் ஒழிக்கப்பட்டது. 1950-களில் இந்த யூதர்களின் தொகை 250 ஆகக் குறைந்தது. சல்மான் ருஷ்டி விவகாரத்தை யூதச் சதியாகக் காட்டும் திரைப்படம் பாகிஸ்தானில் எடுக்கப்பட்டது. இதில் மோசடி ஆவணமான ப்ரோடோகால்ஸ் அடிப்படையில் சல்மான் ருஷ்டியை யூதச் சதிக்கும்பல் இயக்குவதாகக் காட்டப்பட்டது. இந்தப் படத்தில் சல்மான் ருஷ்டி எல்டர்ஸ் ஆஃப் ஸயானிடமிருந்து கட்டளைகளைப் பெற்றுக்கொள்கிறார்.

இந்த யூத-வெறுப்பும் அதனுடன் இணைந்த ஹிந்து வெறுப்பும் பாகிஸ்தானில் இயங்கும் இயக்கங்களில் இயல்பாகவே இருக்கின்றன. உதாரணமாக 2004-ல் ‘Greater Kashmir’ பத்திரிகையில் பாகிஸ்தான் ஆதரவு காஷ்மிர் பயங்கரவாத இயக்கம் வெளியிட்ட அறிக்கை கூறியது: “ஒரே நாணயத்தின் இருபக்கங்களான யூதர்களையும் ஹிந்துக்களையும் நாங்கள் பழி வாங்குவோம்.”

ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளில் மலைவாசிகளுக்கு ‘அன்னிய பயங்கரவாதிகளுக்கு’ துணை போகவேண்டாம் என்று பாகிஸ்தான் அரசு எச்சரிக்கை விடுத்தது. இதுகுறித்த பிரசுரங்களை பாகிஸ்தானிய ராணுவத்தின் பெயரில் பிரசுரித்து, அவற்றை விமானம் மூலம் கிராமங்களில் போட்டது. இதுவரை ஓகே. ஆனால் உருதுவிலும் பஷ்டூன் மொழியிலும் பிரசுரிக்கப்பட்டிருந்த அந்தப் பிரசுரங்களில் இந்த ‘அன்னிய பயங்கரவாதிகள்’ பாகிஸ்தானுக்கு எதிரான ‘ஹிந்து யூத சதியின் அங்கம்’ எனக் கூறப்பட்டிருந்தது.

சர்வதேச அளவில் ஓர் அரசாங்கமே இத்தகைய வெறுப்பைப் பரப்பும் சதிக் கதைகளைப் பரப்புவது மிகவும் கவலை அளிப்பது என்கிறார் வட கலிபோர்னியாவின் அமெரிக்க யூத கவுன்ஸில் தலைவர் எர்ன்ஸ்ட் வெய்னியர். உலக அளவில் பயங்கரவாதத்தின் மிகக் கோரமான விளைவுகளைச் சந்திக்கிறவர்கள் இந்தியாவில் ஹிந்துக்களும் இஸ்ரேலில் யூதர்களுமே என அவர் சுட்டிக் காட்டுகிறார். பாகிஸ்தானிலிருந்து இந்த விஷம் இப்போது உலக இஸ்லாமிய அரசியலிலும் ஓர் அங்கமாக ஆரம்பித்துவிட்டது. உதாரணமாக, பாப்ரி கும்மட்டம் கரசேவகர்களால் தகர்க்கப்பட்டபோது, ஈரான் அதை ‘ஸியோனிஸ (யூத) சதி’ எனக் கூறியது. பாகிஸ்தானில் ஒரு ஷியா தலைவர் கொல்லப்பட்டதும், அவ்வாறே ஹிந்து-யூத சதி எனக் கூறப்பட்டது. தீவிரவாத சுன்னி குழுக்களோ ஷியா பிரிவே ஹிந்து-யூத சதியினால் உருவாக்கப்பட்டதாகக் கூறத் தயங்குவதில்லை. 2006-ல் அல் காயிதா எச்சரிக்கைகளிலும் முஸ்லீம்களுக்கு எதிரான ஹிந்து-யூத சதிகள் பேசப்படுகின்றன.

ஆனால் இணைத்தன்மைகள் இத்துடன் முடிந்துவிடவில்லை. எலி வீஸல் தனது வதைமுகாம் நினைவுகளின் நாவலான ‘இரவு’ என்பதில் பைத்தியக்கார மோசே எனும் ஒரு பாத்திரத்தைக் காட்டுகிறார். அவன், தான் சென்றிருந்த இடங்களில் நாஸிகள் செய்யும் பயங்கரங்களைக் கூறும்போது, அதை நம்பாமல், அந்த வடக்கு டிரான்ஸில்வேனிய ஊரின் யூதர்கள், மோசேயைப் பார்த்துச் சிரிக்கிறார்கள். அந்த யூதர்களைப் போலவே 1947-க்கு முன்னால் பாகிஸ்தானிய சிந்திகள் சிரித்திருக்கக்கூடும். 1971-க்கு முன்னால் பங்களாதேசத்தின் சங்மாக்கள் சிரித்திருக்கக்கூடும். 1988-க்கு முன்னால் காஷ்மீரி பண்டிட்கள் சிரித்திருக்கக்கூடும். 2010-ல் இலவச கலர் டிவிகளுக்கு முன்னால் அமர்ந்து தமிழர்கள் சிரிப்பதுபோல.

மேலதிக விவரங்களுக்கு:

• கன்வர் முகமது அஷ்ரஃப், Overview of Indian Muslim politics, 1920-1947, Manak Publications, 2001
• சர் முகமது இக்பால், (எடிட்டர்: பஷீர் அகமது தார்), Letters of Iqbal, இக்பால் அகாடமி, பாகிஸ்தான், 1978
• டேனியல் பைப்ஸ், The Hidden Hand: Middle East Fears of Conspiracy, Palgrave Macmillan, 1998
• சக் மோர்ஸ், The Nazi Connection to Islamic Terrorism: Adolf Hitler and Haj Amin Al-Husseini, iUniverse, 2003
• பெர்னார்ட் ஹென்றி லெவி, Who killed Daniel Pearl?, Melville House Pub., 2003
• http://bdsays.wordpress.com/2006/03/24/politics-of-hate/



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard