New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கடவுள் எங்கே? உன் கடவுள், எனக்குக் காட்டு!


Guru

Status: Offline
Posts: 24603
Date:
கடவுள் எங்கே? உன் கடவுள், எனக்குக் காட்டு!
Permalink  
 








எங்கே? உன் கடவுள், எனக்குக் காட்டு!

நமக்கு வெளியே கடவுள் என்றொருவர் இருப்பதாகவும், ஆக்கல் காத்தல் அழித்தல் என்ற முத்தொழில்களையும் ஏதோ ஒரு நோக்கத்தில் அவர் தொடர்ந்து செய்து வருவதாகவும் கூறுகின்றார்கள் மதவாதிகள். கடவுளை "வெளியே தேடாதே உன்னுள்ளே தேடு' என்றார்கள் சித்தர்கள். இறை நம்பிக்கையாளர்களின் இந்தத் தேடல் பல நூற்றாண்டு காலமாக நடந்துவருகிறதெனினும், "கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்' என்பதுதான் இதில் கிடைத்திருக்கும் கடைசி ரிசல்ட்.

இந்தப் பூவுலகில் கடவுள் மிகவும் பத்திரமாகப் பதுங்கியிருந்த ஒவ்வொரு மூடநம்பிக்கைக் குகையிலிருந்தும் புகை போட்டு அவரை வெளியேற்றி வருகின்றது அறிவியல். எனினும், இரண்டு இடங்களிலிருந்து மட்டும் அறிவியலால் "கடவுளை' அப்புறப்படுத்த முடியவில்லை.

எல்லா வாதங்களிலும் தோற்ற பிறகு ஒரு பக்தன் முன்வைக்கும் கடைசி இரண்டு வாதங்கள் இந்த இடங்களை அடையாளம் காட்டுகின்றன. "நீங்க நம்பினா நம்புங்க நம்பாட்டி போங்க, அந்த கோயிலுக்குப் போனா எனக்குள்ள ஒரு ஃபீலிங் வருது பாருங்க, அதாங்க கடவுள்!'' "என்ன வேணா சொல்லுங்க, நமக்கு மேல ஏதோ ஒரு பவர் இல்லாம இந்த உலகம் உருவாகியிருக்க முடியுமா?'' ஒன்று உள்ளே, இன்னொன்று வெளியே.

புறவய உலகத்தின் "தோற்றம்' குறித்த புதிரையும், அகவயமாக மனித மூளையில் தோன்றும் "உணர்வு' குறித்த புதிரையும் விடுவிக்கும் முயற்சியில் பெரும் முன்னேற்றத்தைக் கண்டிருக்கிறது அறிவியல். மதவாதிகளின் மொழியில் சொல்வதென்றால் பிரம்ம ரகசியத்தையும் ஆன்ம ரகசியத்தையும் "கண்டு', பிறகு அதனை "விண்டு' உலகத்திற்குச் சொல்லவும் முனைந்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.

முதலில் "படைப்பு ரகசியம்' பற்றிப் பார்ப்போம். கடந்த செப் 10 ம் தேதியன்று பிரான்சு நாட்டின் எல்லையில் பூமியின் 300 அடி ஆழத்தில், 17 கிலோ மீட்டர் நீளம் கொண்ட குறுக்கு நெடுக்கான குழாய்ப்பாதையினுள் (Large Hydron Collider) அணுத்துகள்களை மோதவிட்டு பிரம்மாண்டமான ஆராய்ச்சி ஒன்றைத் துவக்கியிருக்கின்றார்கள் உலக விஞ்ஞானிகள்.

"இந்த ஆராய்ச்சி தொடங்கினால் அந்தக் கணமே உலகம் அழிந்துவிடும்'' என்று ஐரோப்பாவில் உள்ள அல்லேலுயா கூட்டத்தினர் முதல் ஒரிசாவில் உள்ள இந்துக்கள் வரை பலரும் தத்தம் தெய்வங்களைச் சரணடைந்தனர். இதனைப் பரபரப்புச் செய்தியாக்கிய ஊடகங்கள், "உலகம் அழியுமா, அழியாதா?'' என்று அப்துல் கலாமிடம் விளக்கம் கேட்க, நவீன இந்தியாவின் அழித்தல் கடவுளான அப்துல் கலாம் "அழியாது' என்று அருள்வாக்கு கொடுத்தார். அதன் பின்னர்தான் கோயிலை விட்டு வெளியே வந்தார்களாம் சிவபக்தர்கள். நாம் விசயத்துக்கு வருவோம்.

நாம் வாழும் இந்தப் பிரபஞ்சம் சுமார் 1300 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பெருவெடிப்பினூடாக (Big bang) நிகழ்ந்திருக்க வேண்டும் என்பது இயற்பியல் விஞ்ஞானிகளின் கருத்து. இந்தக் கோட்பாட்டு முடிவை, அதாவது பெருவெடிப்பை, சிறிய அளவில் ஒரு சோதனைச் சாலையில் நடைமுறையில் நிகழ்த்திப் பார்ப்பதுதான் இந்த ஆய்வின் நோக்கம்.

கிறிஸ்துவுக்கு முந்தையவரும் அணுக்கோட்பாட்டின் தந்தையுமான கிரேக்க தத்துவஞானி டெமாக்ரைடஸின் காலம் முதல் இன்று வரை இயற்பியல் ஆய்வு வெகு தூரம் வளர்ந்து விட்டது. மூலக்கூறுகள் அணுக்களால் ஆனவை; அணுக்கள் புரோட்டான், நியூட்ரான், எலக்ட்ரான் போன்ற துகள்களால் ஆனவை. புரோட்டான்களும் நியூட்ரான்களும் குவார்க், குளுவான்களால் ஆனவை என்கிறது இயற்பியல். குவார்க்குகள்தான் அடிப்படைத் துகள்களா, அல்லது அவை அதனினும் நுண்ணிய வேறொன்றினால் ஆனவையா? இந்தத் துகள்களுக்குப் பொருண்மையையும், கனத்தையும் (mass and weight) வழங்கியது எது? என்ற கேள்விகளுக்கும் விஞ்ஞானிகள் விடை தேடி வருகின்றார்கள்.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
RE: கடவுள் மாத்திரை-எங்கே? உன் கடவுள், எனக்குக் காட்டு!
Permalink  
 


புரோட்டான் உள்ளிட்ட துகள்களுக்கு வேறொரு துகள்தான் பொருண்மையை அளித்திருக்க வேண்டும் என்பது இங்கிலாந்தைச் சேர்ந்த இயற்பியல் விஞ்ஞானி பீட்டர் ஹிக்ஸ் என்பவர் 40 ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட கணிப்பு. இனிமேல்தான் கண்டுபிடிக்கப்பட வேண்டிய அந்தத் துகள் அவருடைய பெயரால் "ஹிக்ஸ் துகள்' என்று அழைக்கப்படுகிறது. நாம் காணும் இந்த உலகத்திற்கு இந்த ஹிக்ஸ் துகள் பொருண்மையை (ட்ச்ண்ண்) வழங்கியிருக்கக்கூடும் என்பதால் அதனை "கடவுள் துகள்' (எணிஞீ ணீச்ணூtடிஞிடூஞு) என்றும் வேடிக்கையாக அழைக்கிறார்கள் விஞ்ஞானிகள். தற்போது நடைபெற்றுவரும் ஆய்வு அந்த கடவுள் துகளைக் கண்டறிய விழைகிறது.

களிமண்ணை உருட்டினால் கடவுள்!கடவுளை உருட்டுகிறார்கள் விஞ்ஞானிகள்!

"ஆற்றலும் பருப்பொருளும் ஒன்றின் இரு வடிவங்களே' என்ற ஐன்ஸ்டினின் கோட்பாட்டின் அடிப்படையில் இந்தச் சோதனை நடைபெறுகிறது. புரோட்டான் துகள்கள் இந்த 20 கி.மீ நீளக் குழாய்க்குள் கிட்டத்தட்ட ஒளியின் வேகத்தில் மோதவிடப்படுகின்றன. இவ்வாறு மோதும்போது உருவாகக் கூடிய வரம்பற்ற ஆற்றலும், வெப்பமும் குளிரும், பிரபஞ்சம் தோன்றிய அந்தத் தருணத்திற்குப் பின் நாம் எப்போதும் காணாதவை. நம் பிரபஞ்சத்தின் விதிகளை எழுதிய துகள்களும் இந்த மோதுகையின் விளைவாக (collision) வெளிப்படக் கூடும். அத்துகள்களில் பல நாம் இதுவரை கண்டறியாதவையாக இருக்கக் கூடும். பல கோடி முறை நிகழவிருக்கும் இந்த மோதுகைகளில் ஏதேனும் ஒன்று அந்தக் "கடவுள் துகளை'த் தோற்றுவிக்கவும் கூடும். ஆயின், "இந்த உலகம் என்பது என்ன, நாம் ஏன் இங்கு வந்தோம்?'' என்று தத்துவஞானிகள் பலர் எழுப்பிய கேள்விக்கான விடையை, அதாவது "பிரம்ம ரகசியத்தை'க் கண்டறிந்து விட முடியும்.

ஒருவேளை தோற்றுவிட்டால்? "40 ஆண்டுகளுக்கு முன் ஊகிக்கப்பட்ட ஒரு துகளைக் கண்டறிவதைக் காட்டிலும் எங்களைப் போன்ற விஞ்ஞானிகளுக்கு தோல்விதான் சுவையானதாக இருக்கும். எறும்புக் கூட்டத்திலிருந்து மனிதர்களாகிய நம்மைப் பிரிப்பது எது? அறிவுத் தேட்டம்தானே!'' என்கிறார்கள் இந்த ஆய்வில் ஈடுபட்டிருக்கும் விஞ்ஞானிகள்.

"எறும்பையும் மனிதனையும் கடவுள்தான் படைத்தான்'' என்று கூறும் மதவாதிகளோ, கொஞ்சம் கூடக் கூச்சமே இல்லாமல், "அவிசுவாசிகள்' உருவாக்கிய கணினியின் வழியே, "தேவனாகப்பட்டவன் களிமண்ணை உருட்டி ஆதாமைப் படைத்த செய்தி'யையும், இத்தகைய சோதனைகளால் தேவன் படைத்த உலகம் அழிந்து போகக்கூடிய அபாயத்தையும் இணையத்தில் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

சித்தத்தினுள்ளே சதாசிவம் எங்கே?

வளி மண்டலத்திலிருந்து கடவுளை விரட்டும் முயற்சியில் விஞ்ஞானிகள் வெற்றி பெற்று விட்டாலும், மனிதனின் நரம்பு மண்டலத்திலிருந்து கடவுள் தானாக வெளியேறிவிடப் போவதில்லை. பக்தர்களின் மூளையில் எந்த இடத்தில் கடவுள் குடியிருக்கிறார்? மூளையின் எந்தப் பகுதி நரம்புகள் தூண்டப்படும்போது அவர்களின் கண் முன்னே கடவுள் "காட்சி' தருகிறார் அல்லது இயேசு அவர்களுக்குள் "இறங்குகிறார்' ? இந்தக் கேள்விகளுக்கு விடை கண்டு வருகின்றது நரம்பியல் மருத்துவம்.

"மனிதனின் பேசும் திறன், கேட்கும் திறன், மற்றும் நினைவாற்றலைக் கட்டுப்படுத்துகின்ற மூளையின் "டெம்பரல் லோப்' என்ற பகுதி, காதுகளின் அருகே அமைந்திருக்கிறது. மூளையின் இந்தப் பகுதி வலிப்பு நோயால் பாதிக்கப்படும் போதோ அல்லது ஏறுக்கு மாறாக செயல்படும்போதோ சம்பந்தப்பட்ட நோயாளிகளுக்கு விசித்திரமான "ஆன்மீக அனுபவங்கள்' ஏற்படுகின்றன'' என்கிறார் கனடா நாட்டின் நரம்பியல் விஞ்ஞானி டாக்டர் பெர்சிங்கர்.

இந்த வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்த ருடி அபால்டர் என்ற நாத்திகர், உயிரோடு இருக்கும்போதே தான் இறந்துவிட்டது போன்ற நினைப்புக்கு ஆளானார். இன்னொரு நோயாளியான வென் திகே என்ற கிறித்தவப் பெண்ணோ, "தான் ஏசுவைப் பெற்றெடுத்திருப்பதாக'க் கூறினாள். மோசஸ், புனித பால் முதலானோர் "கண்ட' காட்சிகளாக விவிலியத்தில் கூறப்படுபவை, வென் திகேயின் "அனுபவத்தை' ஒத்திருப்பதால், இறைத்தூதர்கள், தீர்க்கதரிசிகள் என்று கூறப்படுவோர் இந்த மூளை வலிப்பினால் பாதிக்கப் பட்டவர்களாக இருக்கக் கூடும் என்கிறார் பெர்சிங்கர்.

"செவன்த் டே அட்வன்டிஸ்ட் பிரிவைத் தோற்றுவித்தவர்களில் ஒருவரான எல்லன் ஒயிட் என்ற பெண்ணுக்கு (1836 இல்) 9 வது வயதில் மண்டையில் அடிபட்டு, மூளையில் காயம் ஏற்பட்டது. இதற்கு ஆதாரமும் உள்ளது. இதன் பிறகுதான் "ஏசு அவர் முன் "தோன்றத்' தொடங்கினார்'' என்கிறார் நரம்பியல் விஞ்ஞானி கிரகரி ஹோம்ஸ். மண்டையில் குறிப்பிட்ட இடத்தில் தாக்கப்படுபவர்களுக்கு மட்டும்தான் இத்தகைய "இறையருள்' கிட்டும் என்பதில்லை. தொடர்ந்து ஆன்மீக சிந்தனையால் தாக்கப்படுபவர்களுக்கும் இத்தகைய "உள்காயம்' ஏற்படக்கூடும்.

"இந்த வலிப்பு தோற்றுவிக்கும் மின் அதிர்வுகள் "டெம்பரல் லோப்' என்ற பகுதிக்கும், உணர்ச்சியையும் உணர்ச்சி சார் நினைவுகளையும் ஆளுகின்ற மூளையின் பகுதிகளுக்கும் உள்ள இணைப்புகளை வலுப்படுத்துவதால், மத உணர்வுகள் பொங்குகின்றன'' என்கிறார் கலிபோர்னியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த நரம்பியல் விஞ்ஞானி, விலயனூர் ராமச்சந்திரன்.

"ஒருவேளை மூளையில் கடவுள் "குடியிருக்கும்' இந்தப் பகுதியை (God spot) அறுத்து அகற்றுவோமாகில், அந்த அறுவை சிகிச்சைக்கு என்ன பெயரிடலாம்? அதனை காடோக்டமி (வாசக்டமி போல) என்று அழைக்கலாமா?'' என இரு மாதங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் வேடிக்கையாக அவர் குறிப்பிட்டார். இதையெல்லாம் சகித்துக்கொண்டு சும்மாயிருப்பார்களா மதவாதிகள்? இப்படிப்பட்ட ஆய்வுகள் தங்களது மத உணர்வைப் புண்படுத்துவதாக இங்கிலாந்தைச் சேர்ந்த கிறித்தவ அமைப்புகள் கூக்குரல் எழுப்பின. "கடவுளை விரைவாகத் தொடர்பு கொள்வதற்கான ஆன்டனாவாக எங்களுடைய கண்டுபிடிப்புகளை நீங்கள் ஏன் கருதக்கூடாது?'' என்று அவர்களை "சமாதானப்படுத்தினார்' ராமச்சந்திரன். அப்படியொரு "ஆன்மீக ஆன்டனா'வை டாக்டர் பெர்சிங்கர் தயாரித்தும் விட்டார்.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

கோவில் கனெக்சன் இல்லாமலேயே கடவுளை ஒளிபரப்பும் ஆன்டனா!


Image and video hosting by TinyPicகாட் ஹெல்மெட் கடவுள் தலைக்கவசம்! இதுதான் அவரது தயாரிப்பின் பெயர்.மின்சாரத்தில் இயங்கும் இந்தக் கவசம், இதனை அணிந்திருப்பவரின் மூளையில் உள்ள டெம்பரல் லோப் பகுதியைக் குறி வைத்து காந்தப்புலங்களை உருவாக்க வல்லது. எவ்வித நரம்பியல் நோயும் இல்லாத நூற்றுக்கணக்கான மனிதர்கள், கண்கள் கட்டப்பட்ட நிலையில் ஒரு தனியறையில் இந்தக் "கவச' சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். பல்வேறு நாடுகளையும் மதங்களையும் சார்ந்த அந்த நபர்கள் இந்த மூன்று நிமிடச் சோதனையின்போது தத்தம் கலாச்சாரத்துக்கு ஏற்ப, தாங்கள் ஏசுவையோ புத்தனையோ கண்டதாகக் கூறினர்.

டேவிட்சன் என்ற விஞ்ஞானி, கிறித்தவ ஜெபக்கூட்டங்களில், ஜெபித்துக் கொண்டிருக்கும்போதே, திடீரென்று உளறத் தொடங்கும் பெண்களின் மூளைகளை ஸ்கேன் (MRI scan) செய்தார். அத்தருணத்தில் அவர்களது மூளையுடைய முன்பகுதி ஏறத்தாழ செயலிழந்திருப்பதைக் கண்டார். தன் மீதான சுயகட்டுப்பாட்டை மனிதனுக்கு வழங்கும் மூளையின் முன்பகுதி செயலிழப்பதால், மொழி பிறழ்ந்து வரும் இந்த உளறலைத்தான், "அந்நிய பாஷை' என்று கிறித்தவர்கள் கூறுகின்றர்.

தியானத்தில் ஈடுபடும்போது, "தான்' என்ற உணர்வு மறைந்து பிரபஞ்சத்துடன் இரண்டறக் கலந்து விடுவதாகக் கூறும் புத்த பிக்குகளும் ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டனர். ஒரு குறிப்பிட்ட பொருள் அல்லது சிந்தனையின் மீது மட்டுமே மூளை ஒன்று குவிக்கப்படும்போது, திசை மற்றும் வெளி குறித்த பிரக்ஞையை வழங்குகின்ற "பாரிடல் லோப்' செயலிழப்பதையும், அதன் காரணமாகவே இவர்கள் இத்தகைய பிரமைக்கு ஆளாவதையும் விஞ்ஞானிகள் சுட்டிக் காட்டினர்.

இவையன்றி, பட்டினி கிடத்தல் (விரதம்), இரத்தச் சர்க்கரையின் அளவு அலைபாய்தல், திரும்பத் திரும்ப ஒரே சொல்லை உச்சரிக்கும் மந்திர உச்சாடனங்கள், ஒரே விதமான அசைவு கொண்ட நடனம் ஆகியவையும் "அமானுஷ்யமானவை' என்று சொல்லப்படும் அனுபவத்தைத் தரவல்லவை. மிக உயர்ந்த சிகரங்களுக்கு (அமர்நாத்) செல்லும்போது மூளைக்கு பிராணவாயு செல்வது குறைவதும், கஞ்சாவும், வேகமாகப் பக்கவாட்டில் சுழலும் குடைராட்டினமும் கூட "ஆன்மீக அனுபவங்களை'த் தூண்டக்கூடும் என்கிறது நரம்பியல் விஞ்ஞானம்.

மூளையின் உட்பகுதியில் உள்ள பீனியல் சுரப்பியிலிருந்து வெளியாகும் டைமெதில் டிரிப்டாமைன் என்ற வேதிப்பொருள்தான் இது போன்ற மாயத்தோற்றங்களை உருவாக்குகிறது என்று "ஆன்மீக மூலக்கூறு' என்ற தனது நூலில் குறிப்பிடுகிறார் ரிக் ஸ்டிராஸ்மேன். மொத்தத்தில் பக்தர்கள் துரும்பில் தேடிய இறைவனை நரம்பில் கண்டுபிடித்ததுடன், "இறை நரம்பியல்' (neuro theology) ) என்றொரு துறையையும் உருவாக்கிவிட்டது அறிவியல்.

எனினும், தூக்க மாத்திரை சாப்பிட்டுத் தூக்கத்தை வரவழைப்பது போல கடவுள் மாத்திரை சாப்பிட்டுக் கடவுளை வரவழைக்கலாம் என்றோ, பேதி மாத்திரை போன்றதொரு மாத்திரையால் மூளையிலிருந்து சுமுகமாகக் கடவுளை வெளியேற்றி விடலாம் என்றோ அறிவியல் கூறவில்லை. "மனித மூளையின் உள்ளே தோன்றும் மாயத்தோற்றங்களோ, விவரிக்கமுடியாத "பரவச உணர்வுகளோ', வெளியே கடவுள் என்பவர் இருப்பதற்கான ஆதாரமாக முடியாது'' என்பதையே இந்த ஆய்வுகள் நிறுவுகின்றன.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

ஏசு இறங்கினாரா? எம்.ஆர்.ஐ.ஸ்கேன் வழங்கும் தேவ சாட்சியம்!

மதம் என்பது ஒரு நம்பிக்கை. அந்த நம்பிக்கையைத் தோற்றுவிக்கும் சிந்தனைக்கான காரணத்தையும் அதற்கான சமூக அடிப்படைகளையும் நரம்பியல் ஆராயவில்லை; ஆராயவும் முடியாது. மாறாக, அந்த நம்பிக்கை தோற்றுவிக்கும் உணர்வை, நமது நரம்பு மண்டலம் உயிர் வேதியல் மொழியில் எவ்வாறு மொழிபெயர்த்துள்ளது என்பதை, அதாவது மத உணர்வின் பொருள் வடிவத்தைக் கண்டறியவே நரம்பியல் முயல்கின்றது.


பெர்சிங்கரின் ஹெல்மெட்டால் நாத்திகரின் மூளையில் கடவுள் நம்பிக்கையை வரவழைக்க முடியாது; ஆத்திகரின் மூளையிலிருந்து நம்பிக்கையை அகற்றவும் முடியாது. அவருடைய ஹெல்மெட் சோதனையில் பங்கேற்ற ஒரு கன்னியாஸ்திரீ, "ஏசு எனக்குள் இறங்கினாரா டாக்டர்? ஸ்கேன் ரிப்போர்ட்டைப் பார்த்து கொஞ்சம் சொல்லுங்களேன்'' என்று சோதனை முடிந்தபின் பெர்சிங்கரிடம் கேட்டாராம். இறை நம்பிக்கையை ஒழிக்கும் என்று நாம் எண்ணிக்கொண்டிருக்கும் ஒரு அறிவியல் கண்டுபிடிப்பு, அதற்கு நேரெதிரான விளைவை அந்த கன்னியாஸ்திரீயிடம் ஏற்படுத்தியிருக்கின்றது.

பொருளும் சிந்தனையும்: புரட்சி எனும் ஹைட்ரஜன் கொலைடர்!

இயற்பியல் கடவுள் துகளைக் கண்டறிந்தாலும், மத உணர்வின் உயிர் வேதியல் சங்கேதங்களை நரம்பியல் கண்டுபிடித்தாலும் இவற்றின் விளைவாகவெல்லாம் மத நம்பிக்கை தானே ஒழிந்து விடாது. மதம் என்ற அபினை மனித மூளைக்குள் உற்பத்தி செய்யும் அடித்தளம் சமூகத்தில் இருப்பதால், ஒரு சமூகப் புரட்சியின் மூலம் மட்டுமே மனித மூளையிலிருந்து "கடவுளை' அகற்ற முடியும் என்றார் மாமேதை மார்க்ஸ். அத்தகையதொரு புரட்சியை சாதிக்கும் பொருட்டு, மனித சமூகம் எனும் சோதனைச்சாலையில் நடத்த வேண்டியிருக்கும் ஆய்வும், மனிதர்களின் சிந்தனையை மாற்றியமைக்கும் இந்தச் "சோதனையும்' ஒப்பீட்டளவில் கடினமானவை.

உலக முதலாளித்துவத்தின் சுரண்டலுக்கு மென்மேலும் ஆட்படுத்தப்படும் மக்கள், அந்தத் துயரத்திலிருந்து விடுபடவும் முடியாமல், காரணமும் விளங்காமல், கடவுளிடமும் மதத்திடமும் சரணடைகிறார்கள். இந்தச் சுரண்டலால் ஆதாயமடையும் ஆளும் வர்க்கமோ மக்களை இந்த மடமைப் படுகுழியில் ஆழ அமிழ்த்துகிறது.

எந்த மேலை நாடுகளில் நடைபெறும் அறிவியல் ஆய்வுகள் கடவுளைத் துரத்துகின்றனவோ, அதே அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் கடவுள் அரியணையில் ஏற்றப்படுகின்றார். அமெரிக்காவின் 5 மாநிலங்களில் பள்ளி மாணவர்களுக்கு விவிலியம் கற்பிக்கப்படுகிறது. மதச்சார்பற்ற நாட்டில் பள்ளிகளில் மதக்கல்வி அளிக்க சட்டரீதியான தடை இருப்பதால், "கல்விச் சுதந்திரம்' என்ற பெயரில் அறிவியல் வகுப்புக்குள் விவிலியம் நுழைக்கப்பட்டு விட்டது.

"டார்வினின் பரிணாமக் கோட்பாட்டுடன் விவிலியத்தின் படைப்புக் கோட்பாட்டையும் கற்பிக்க வேண்டும்' என்பதை ஒரு இயக்கமாகவே நடத்திவர், புஷ் கட்சியின் சார்பில் தற்போது குடியரசுத் துணைத்தலைவர் பதவிக்குப் போட்டியிடும் சாரா பாலின். அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் கிறித்தவ தீவிரவாதக் குழுக்கள், கோடிக்கணக்கில் டாலரை இறைத்து ஐரோப்பிய நாடுகளின் பள்ளிகளிலும் ஏசுவை இறக்கி வருகின்றன.

பரிணாமக் கோட்பாட்டை உருவாக்கிய சார்லஸ் டார்வின் பணியாற்றிய இடமும், உலகின் புகழ் பெற்ற அறிவியல் மையமுமான, பிரிட்டிஷ் ராயல் சொசைட்டி என்ற நிறுவனமே பள்ளிகளின் அறிவியல் வகுப்புகளில் பைபிளின் படைப்புக் கோட்பாட்டைச் சேர்ப்பதற்கு ஒப்புதல் அளித்திருக்கின்றது (தி இந்து, செப், 18).

விவிலியக் கோட்பாடே அறிவியல் பூர்வமானது என்று சித்தரித்து, டார்வினைக் கேவலப்படுத்தும் குறுந்தகடுகளை இலட்சக்கணக்கில் இங்கிலாந்தின் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக விநியோகிக்கின்றன அமெரிக்க இவான்ஜெலிகல் குழுக்கள். "குரங்குக்கும் மனிதனுக்கும் மூதாதை ஒன்று என்றால் மிச்சமுள்ள குரங்கெல்லாம் இன்னும் ஏன் மனிதனாகவில்லை?'' என்று 1860 ஆம் ஆண்டில் டார்வினுக்கு எதிராக மூடப்பாதிரிகள் எழுப்பிய அதே நைந்துபோன கேள்வியை மீண்டும் எழுப்புகின்றன இந்தக் குறுந்தகடுகள். ஒவ்வொரு பள்ளியாகச் சென்று பைபிளுக்குப் பலியான மாணவர்கள் மத்தியில் இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பொறுமையாக விளக்கமளித்துக் கொண்டிருக்கிறார் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தின் பேராசிரியரும், பிரிட்டனின் புகழ் பெற்ற பகுத்தறிவாளருமான ரிச்சர்டு டாகின்ஸ்.

"அடுத்தது என்ன, உயிரியல் வகுப்பில் ஆதாமின் விலா எலும்பை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள வேண்டுமா?'' என்று குமுறியிருக்கிறார் ஒரு அறிவியலாளர். இல்லை, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் விலா எலும்பை முறிக்க வேண்டும். அதுதான் டார்வினுக்கு நாம் செலுத்தும் அஞ்சலி. அறிவியல் பார்வை வளர்வதற்கும் கூட அதுதான் வழி.

நன்றி: http://www.tamilcircle.net/



__________________


Veteran Member

Status: Offline
Posts: 52
Date:
RE: கடவுள் எங்கே? உன் கடவுள், எனக்குக் காட்டு!
Permalink  
 


A human being is comparable with Computer

1. Hardware - Body
2. OS or System software - Soul
3. Application software - Mind

Body, Soul and Mind forms the Trinity of a human being called Spirit

Body and Soul comes by Birth which has influence of parent, race and place
The Mind (Application software) was downloaded, installed and used over a period of life time

Some of the downloaded Application software (Mind) act as 'virus' which can damage the OS (Soul) and subsequently the Hardware (Body)

There is no direct medicine available in the drug store for the Mind related issues. Here, Religion scores more than Science
Some uses emotional methods, Some uses repeated blind task, Some uses anti-virus etc

In a simple note, People do not have a direct remedy through Science hence going behind Religion

__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

Comparisons are Ok

 

But Jesus stories are the Opium for world.



__________________


Veteran Member

Status: Offline
Posts: 52
Date:
Permalink  
 

Admin wrote:

Comparisons are Ok

 But Jesus stories are the Opium for world.


 

Not sure, but your quote 'Opium' may be correct in the way it has been practiced by its followers nowadays

Outside God/Religion, Jesus is the 1st character fighting/rising against the elite priest communities for their wrong doings. The situation in India was not much different, even Periyar in Tamilnadu did the same hence it fits well within Indian minds.

For the suppressed/oppressed common people, it gives mental positive strength to overcome their weakness wrt the elites. This is one of the reason for many of the SC/ST are migrating towards Christianity in India in the recent times despite heavy objections from elite groups through various forms including restriction in reservation etc



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

//For the suppressed/oppressed common people, it gives mental positive strength to overcome their weakness wrt the elites. This is one of the reason for many of the SC/ST are migrating towards Christianity in India in the recent times despite heavy objections from elite groups through various forms including restriction in reservation etc//

 

why then reservation for Dalit Christians?

 

Jesus fight was not against Jewish Pastors but Roman oppressing force- if your read gospels along with History of First century Israel



__________________


Veteran Member

Status: Offline
Posts: 52
Date:
Permalink  
 

Admin wrote:
why then reservation for Dalit Christians?

Jesus fight was not against Jewish Pastors but Roman oppressing force- if your read gospels along with History of First century Israel


To my knowledge, Dalit Christians are not given with SC/ST reservation,

Roman force executed Israel around 70 AD (70 years after crucification), not sure how you link this with his gospel !!!

First you should understand, who was very particular about his crucification and why?

To my knowledge, anwer was the elite priest community...He was preaching to the common and lower class people/masses by passing the elite priest community

Both Jesus & Bhudda has a commonality in the target masses for their preachings



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

Jesus that Jewish Patriot who said all people other than Jews are Dogs and Pigs, wanted to throw Roman rule out and tried to build a Armed force and was arrested by Roman Force with commander. The Punishment Hang in Stake is Roman.

Read the John's Gospel- Pilate wrote the proven Guilt- "Nazareyan Jesus- King of Jews". The Jewish Pastors and their chief Bishop objected this, saying that Jesus claimed himself as King and he did not prove it are does not deserve it.

Jesus was killed because he fought Romans.



__________________


Veteran Member

Status: Offline
Posts: 52
Date:
Permalink  
 

The very basic reason for Jews did not accept Jesus as savior, because they were expecting a strong political ruler who can defeat Romans and get freedom which is understandable.

I seriously doubt that Jesus was fighting against Romans...In my opinion, he had a confrontation with the elite priest groups and said he came as a middle man communication(satellite) between Men and God, also said all prayer request to God should be routed thru him, which implies a virtual removal of priest groups and their stake, so it is clear that priest groups played a greater role in accusing Jesus and not Romans

For an argument sake, let us assume that Jesus was killed because, he fought Romans. It is clear that Roman were the one who adopted Christianity first (Roman Catholics) and spread to the world, which implies, Roman were defeated by Jesus as they accepted Jesus where as not Jews :) Is it so?



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

Please understand facts based on truths and not your mad beliefs.

Biblical Israel, Jews and Hebrews are all myths.

Dead Sea Scrolls tell that Mt.Gerizim is the place of god of Israel temple. Whereas entire Old Testament says Jerusalem and Zion myths.

Abraham, Moses, David, Solomon, Solomon Temple, Second Temple all are Proven never existed.

http://www.amazon.com/The-Mythic-Past-Biblical-Archaeology/dp/0465006493

  



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

கடவுளுக்கு உருவம் உண்டா

உருவ வழிபாட்டைப்பற்றி ஒருமுறை சுவாமி விவேகானந்தரிடம் கேட்கப்பட்டது. ’அத்வைதியான நான் உருவ வழிபாட்டை கண்டிக்கவேண்டுமென்று நீங்கள் எதிர்பார்ப்பீர்கள். ஆனால் உருவ வழிபாடு வழியாக அனைத்தையும் அடைந்த ஒருவரின் கால்களில் அமர்ந்துதான் நான் அனைத்தையும் கற்றுக்கொண்டேன் என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது’ என்று அவர் பதில் சொன்னார்.

உருவ வழிபாடைப்பற்றிப் பேசும்போதெல்லாம் நான் நினைவில்கொள்ளவேண்டிய விஷயம் இதுதான், நாமறிந்த மாபெரும் மெய்ஞானியர் பலர் உருவ வழிபாட்டாளார்களே. அவர்களை ஞானமறியா மூடர்கள் என்று சொல்லவேண்டுமென்றால் நமக்கு அன்றாடமூடத்தனத்தை கடுகுமணியாகச் சிறுக்கவைக்குமளவுக்கு அதிபிரம்மாண்டமான மூடத்தனம் தேவை. கண்மூடித்தனமான மதம் அல்லது கோட்பாட்டு நம்பிக்கையால் மட்டுமே அந்த அளவு மாபெரும் மூடத்தனத்தை மனித மனத்தில் உருவாக்க முடியும். இயல்பாக அவனில் அது உருவாக வழியில்லை.

நான் உருவ வழிபாடு செய்வதில்லை. என் ஆசிரியர்களும் உருவ வழிபாட்டாளர்கள் அல்ல. ஆனால் அவர்கள் உருவ வழிபாட்டின் எதிர்ப்பாளர்களும் அல்ல. உருவவழிபாடு அவர்களுக்கு தேவையில்லை என உணர்ந்தார்கள், அவ்வளவுதான். உருவ வழிபாடு எவ்வாறு உருவானது எவ்வாறுசெயல்படுகிறது என்பதை அறிந்தவர்களாக இருந்தார்கள். ஆகவே அதன் இடத்தையும் பங்களிப்பையும் அங்கீகரித்தார்கள், மதித்தார்கள்.

இரு விஷயங்களை முதலில் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும். ஒன்று இந்துமதம் உருவவழிபாட்டை மட்டும் முன்வைக்கும் மதம் அல்ல. இந்துமரபின் ஒரு வழிமுறைதான் உருவவழிபாடு. இந்துமரபு மூன்று அடுக்குகள் கொண்டது என்று புரிந்துகொள்வது தெளிவை உருவாக்கும். முதல்தளத்தில் பழங்குடிப்பண்பாட்டில் வேருள்ள வழிபாட்டுமுறைகள் உள்ளன. செயல்தெய்வ வழிபாடுகள், குலதெய்வ வழிபாடுகள், மூத்தார் வழிபாடுகள், நீத்தார் வழிபாடுகள் என அதன் முகங்கள் பல. நாட்டார் பாடல்கள் இவற்றின் இலக்கியம். இறைவனை இவை அன்றாடவாழ்வுடன் நேரடி தொடர்புள்ள இருப்புநிலைகளாக உருவகம்செய்தன. உண்மையில் இதுவே பிற இரண்டுக்கும் விளைநிலம்.

இரண்டாம் தளத்தில் உள்ளது நிறுவன மதங்கள். மையத்தெய்வமும் ஒருங்கிணைவுள்ள வழிபாட்டுமுறையும் தத்துவக் கட்டுமானமும் கொண்டவை. முன்பு ஆறுமதங்களாக இருந்தவை இன்று சைவம் வைணவம் என இரு பெரும் மதங்களாக உள்ளன. புராணங்கள் இவற்றின் இலக்கியங்கள். மூலதத்துவநூல்களுக்கு தத்தம் மதநோக்கில் எழுதப்பட்ட உரைகள் இரண்டாம் கட்ட இலக்கியங்கள். இறைவனை இவை ஆக்கி அழித்து காக்கும் அனைத்துவல்லமை கொண்ட ஆளுமைகளாக உருவகித்தன.

மூன்றாம் தளத்தை தத்துவத்தளம் எனலாம். உபநிடதங்கள் முதலிய மூல தத்துவ நூல்கள் இவற்றின் இலக்கியங்கள். இறைவனை தூய தத்துவ உருவகமாகவே இவை பார்க்கின்றன. இன்றைய அறிவியல் பிரபஞ்சப்பெருவெளி [காஸ்மோஸ்] என்று சொல்லும் உருவகத்துக்கும் வேதாந்தத்தின் பிரம்மம் என்ற உருவகத்துக்கும் பெரிய வேறுபாடு இல்லை.இன்றைய அறிவியல் ஊகங்களை விட இன்னும் பிரம்மாண்டமானதாக , அறியவோ விளக்கவோ வரையறை சொல்லவோ முடியாத ஒன்றாக, அது பெருவெளியை வகுக்கிறது. அந்தப்பெருவெளி ‘அங்கே’ இருப்பது அல்ல. ‘எங்கும்’ இருப்பது. அதுவே நான் உணரும் நிலையே முக்திநிலை என்கிறது வேதாந்தம்.

உயர்தத்துவத் தளம் கொண்ட இந்திய மதங்களான இந்து,பௌத்தம்,சமணம் ஆகியவை ஞானத்தை சாமானியம் விசேஷம் என இரண்டாகப் பகுத்துவிடுகின்றன. சாமானியம் என்பது நம் அன்றாடத்தளம் சார்ந்தது. அதாவது புழக்க உண்மை. விசேஷம் என்பது தூய கருத்தியல் உண்மை. நுண்ணுணர்வாலும் தர்க்கத்தாலும் அறியப்படுவது.

இந்து மரபின் மூன்று படிகளில் மூன்றாம் படியான வேதாந்தம் முழுக்கமுழுக்க விசேஷ தளத்தைச் சார்ந்தது. அது தூய தர்க்கமாகவும் தரிசனமாகவும் பிரபஞ்சத்தை அறிய முயல்கிறது. முதல்படியான பழங்குடிமரபு முழுக்க முழுக்க சாமானியதளத்தைச் சார்ந்தது. முழுக்கமுழுக்க அன்றாடச் செயல்பாடுகளாக அது பிரபஞ்சத்தை அறிய முயல்கிறது. இரண்டாம் படியான மதங்கள் இவ்விரு தளங்களையும் இணைக்கக்கூடியதாக உள்ளன.

சைவம், வைணவம் என்ற இரு பெருமதங்களை எடுத்துக்கொண்டோமென்றால் அவற்றில் ஏராளமான பழங்குடி வழிபாட்டுக்கூறுகள் இருப்பதைக் காணலாம். பல வழிபாட்டுமுறைகள் காலப்போக்கில் உருமாறியிருக்கும், சண்டீஸ்வரர் போல. பல வழிபாட்டுமுறைகள் அப்படியே நீடிக்கும், காலபைரவன் போல. இவற்றை சிவ-சக்தி என்ற மையத்தரிசனத்தில் அல்லது மையப்படிமத்தில் சைவம் தொகுக்கிறது. இதற்காக புராணங்களை அது உருவாக்கிக் கொள்கிறது. அதன்பின்னர் அந்த மையத்துக்கு தத்துவ அடிப்படை அமைக்க அது இந்து ஞானமரபின் தூய தத்துவத்தளத்தை எடுத்தாள்கிறது. சைவ சித்தாந்தம், விசிஷ்டாத்வைதம் போன்றவை இவ்வாறு உருவானவை. இவ்வாறு பெருமதங்கள் மூன்று முகம் கொண்டவையாக அமைகின்றன.

இந்து மரபின் முதல் அடுக்கான பழங்குடிப்பண்பாடு என்பது முழுக்க முழுக்க உருவ வழிபாடு சார்ந்தது. சொல்லப்போனால் உருவத்தை வழிபடுவதாகவே அது ஆரம்பித்தது. பழங்குடிமதங்களின் தோற்றம் குறித்த ஆய்வுகள் பழங்குடித் தெய்வங்கள் நான்கு வகைகளில் தோன்றுகின்றன என்று சொல்கின்றன. ஒன்று இறந்துபட்ட மூதாதையரை வழிபடுதல். அவர்கள் கனவுகளில் வருவதனால் அவர்கள் வேறெங்கோ இருப்பதாக பழங்குடி மனம் நினைக்கிறது. ஆகவே அவர்களை நுண்வழிவ இருப்புகளாக உருவகிக்கிறது. அவர்களை மகிழ்விக்கவும் அவர்களின் உதவிகளை நாடவும் அது வழிபாடுகளை நிகழ்த்துகிறது.

இரண்டாவதாக குல அடையாளங்களாக சில மிருகங்கள் மரங்கள் போன்றவற்றை பழங்குடிகள் கொண்டிருக்கிறார்கள். அவற்றை புனிதமானவையாக எண்ணுகிறார்கள். காலப்போக்கில் அவை தெய்வங்களாக ஆகின்றன. மூன்றாவதாக உயிருள்ள மூத்த தாய்தந்தையரை அவர்கள் தெய்வங்களாக எண்ணி வழிபட ஆரம்பிக்கிறார்கள். நான்காவதாக குறிப்பிட்ட சில செயல்களுக்கான வல்லமைகளை அளிப்பதற்காக அச்செயலுடன் தொடர்புடைய ஒன்றை தெய்வமாக வழிபடுகிறார்கள். விளைச்சலை அளிப்பதற்காக கலப்பையை வழிபடுவதைப்போல.

இந்த நான்கு நிலைகளிலும் முதலில் உருவம்தான் வழிபடப்படுகிறது, அதன் பின்னரே அந்த உருவம் ஒரு கருத்துருவாக மாற்றம் பெறுகிறது. அந்த உருவத்தின் இயல்புகள் மெல்ல மெல்ல திரட்டப்பட்டு ஒரு கருத்துருவமாக அவர்கள் அனைவராலும் உணரப்படுகின்றன. அந்த உருவம் அந்த கருத்துருவத்தின் அடையாளமாக ஆகிறது. அந்த உருவத்தைப்பார்த்தாலே அந்த கருத்துநிலைகள் மனதில் உருவாகின்றன. அதுவன்றி ஏற்கனவே மனதில் உருவான ஒரு கருத்துக்கு பருவடிவப் பிரதிநிதியாக உருவம் கற்பனைசெய்யப்படவில்லை. இதுவே மானுட மனத்தின் இயல்பான செயல்பாடு.

பெருமதங்களாக மாறியவை பழங்குடிப் பண்பாட்டில் உதித்த வழிபாட்டுமுறைகளே. அவை காலப்போக்கில் வளர்ந்து வேறுபல வழிபாட்டுமுறைகளை இணைத்துக்கொண்டு தத்துவ விளக்கம் பெற்று பெருமதங்களாகின்றன. அதாவது ஒரு கருத்துருவமாக மாறிய உருவமே அதன் மையம். ஆனால் அக்கருத்துருவம் வலிமையாக நிலைநாட்டப்பட்ட பின்னர் அதை விளக்கும்பொருட்டும் வேறு பலவற்றுடன் இணைக்கும் பொருட்டும் அதில் இருந்து புதிய உருவங்கள் ஏராளமாக உருவாக்கப்படுகின்றன. உதாரணமாக சைவம் உருவாவதற்கு முன்னரே சிவலிங்கம் உருவாகி விட்டது. சிவநடனம் என்ற கருத்துருவில் இருந்தே நடராஜர் உருவம் பெற்றார்.

ஆகவே உருவ வழிபாடு இந்து மரபின் இரு அடுக்குகளில் மிக முக்கியமானதாக உள்ளது. சைவ வைணவ மதங்களில் உருவ வழிபாடுதான் அடிப்படை. ஆனால் அவற்றின் தத்துவத்தளம் நோக்கி நகரும் தோறும் நாம் உருவ வழிபாட்டை விட்டு வெளியே செல்ல அவற்றில் வழி உள்ளது. மிகச்சிறந்த உதாரணம் காந்திதான். அவர் ஒரு வைணவர், ஆனால் உருவ வழிபாடு செய்தவர் அல்ல.

ஒரு சைவசித்தாந்தி சிவன் என்ற உருவை வழிபட்டுத்தான் ஆகவேண்டியதில்லை. பிரபஞ்ச பேரியக்கமான சிவசக்தி நடனத்தை அவர் மலத்தைச் சுற்றி பறக்கும் ஈக்களிலும் காண முடியும். உங்களால் அப்படி காண முடியுமென்றால், அந்த இடத்துக்கு கற்றும் உணர்ந்தும் செல்லும் சிந்தனையாற்றல் உங்களிடம் இருக்கும் என்றால் தாராளமாக சிவலிங்கங்களை காகிதஎடையாக பயன்படுத்தலாம். எந்த பிழையும் இல்லை.

மதங்களுக்கு அடுத்த அடுக்கு என்பது வேதாந்தம். வேதாந்திக்குரிய மூல வாக்கியங்கள் அனைத்துமே உருவ வழிபாட்டுக்கு எதிரானவை. ‘இவையனைத்திலும் இறை உறைகிறது’ [ஈஸோவாஸ்யம் இதம் சர்வம்] என்றும் ‘தன்னுணர்வே இறை’ [பிரக்ஞானம் பிரம்மாஸ்மி] என்றும் ‘அது நீதான்’ [தத்வ மசி] என்றும் ‘அகம் பிரம்மாஸ்மி’ [நானே கடவுள்] என்றும் அவன் உணர்கிறான். அந்த உணர்வே அவனாக ஆகும்போது அவன் விடுதலை பெறுகிறான்.

உருவங்கள் சாமானியதளத்தைச் சேர்ந்தவை. அதாவது அவை நம்மில் இருந்து நாம் பிரபஞ்சத்தை பார்க்கையில் உருவாகி வரக்கூடியவை. விக்ரஹம் என்றான் வி+கிரகம் என்று பிரித்து நித்ய சைதன்ய யதி பொருள்கொள்கிறார். கிரகிப்பதற்கும் கிரகித்ததைச் சொல்வதற்குமான வழி அது. என்னுடைய அறிதலை பிறருக்குச் சொல்லி பொதுவான அறிவாக ஆக்குவதற்கான வழிமுறைதான் அது.

ஏன் அது தேவைப்படுகிறது என்றால் நம் உடல் பருவடிவம்கொண்டது என்பதனால்தான். நமக்கு உருவம் இருப்பதனால்தான் நாம் கடவுளுக்கும் ஓர் உருவத்தை அமைத்துக்கொள்கிறோம். அது ’நம்’ கடவுள். ஒரு வைணவரிடம் எறும்புக்கு பரந்தாமன் எப்படி தோற்றமளிப்பார் என்று கேட்டால் ஒளிவடிவான ஒர் எறும்பு வடிவில் என அவர் சொல்லக்கூடும்.

நாம் உடலில் இருக்கிறோம். உருவில் இருக்கிறோம். நம் உடலால் நம் புலன்களால் நாம் இந்த புற உலகை பருவடிவாக, உருவங்களின் பெருவெளியாக அறிந்துகொண்டிருக்கிறோம். அந்த உருவங்களே நம்முடைய அகத்தை கட்டமைக்கின்றன.எல்லா கருத்துருவங்களும் உருவங்களாக ஆகின்றன. கருத்துக்களைச் சுமந்த உருவங்களையே நாம் படிமங்கள் என்கிறோம். நம்முள் மனம் என்பது முடிவில்லாத படிமவெளியாகத்தான் ஓடிக்கொண்டிருக்கிறது. எல்லா கவிஞர்களும் எல்லா கலைஞர்களும் படிமங்களையே உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அறிவியல் அதற்கான படிமங்களை உருவாக்குகிறது. சொல்லப்போனால் சிந்தனை என்பதே படிம உருவாக்கம்தான்.

ஆகவேதான் மதங்களும் பிறஅமைப்புகளும் அடிப்படையான தரிசனங்களை பொதுவான படிமங்களாக ஆக்குகின்றன . சிவலிங்கமும், சிலுவையும், சுத்தியல்அரிவாளும், கைராட்டையும் எல்லாம் மிகவிரிவான கருத்துருவங்களைச் சுட்டியபடி கண்முன் நிற்கும் பருவடிவங்கள் மட்டுமே. அந்த உருவங்கள் வழியாக நம் ஆழ்மனத்துக்குள் அக்கருத்துருவம் சென்று சேர்கிறது. படிமங்களின் தனித்தன்மையே அதுதான். அவை நம் தர்க்கமனத்துடன் உரையாடுவதில்லை. நம் ஆழ்மனத்தில் அவை நம்மையறியாமலேயே சென்று தொட்டு அங்கே அலைகளாக ஆகின்றன.

ஒரு கருத்துருவம் தர்க்கபூர்வமாக முன்வைக்கப்பட்டால் அதை அந்த தருக்கத்தை அறிந்த ஒருவர் மட்டுமே உள்வாங்க முடியும். ஒரு படிமம் அதை அந்தப் பண்பாட்டில் இருக்கும் ஒருவருக்குள் இயல்பாகக் கொண்டுசென்று சேர்த்துவிடும். சைவசித்தாந்தத்தின் விரிவான தர்க்கமுறையை விட ஒரு அழகிய நடராஜர் சிலை அந்த தரிசனத்தை சைவனின் அகத்தில் நிறுவிவிடும். ஆகவேதான் உருவ வழிபாடு தேவையாக ஆகிறது. சிவலிங்கத்தை உங்களுக்குக் கொடுத்த உங்கள் தந்தை உங்களுக்கு பல நூற்றாண்டு வரலாறு கொண்ட ஒரு கருத்துருவைத்தான் அளித்திருக்கிறார். அந்தக்கருத்துருவை உள்வாங்கி வளர்த்துக்கொள்ளும் ஒரு முறையையும் அளித்திருக்கிறார்.

சென்ற காலங்களில் பழங்குடி மரபு என்பதை மேலோட்டமாக அணுகி தூக்கி வீசும் ஒரு மனநிலை சிந்தனையாளார்களிடம் இருந்தது. பழங்குடி மரபு என்பது நவீனச்சிந்தனைகளுக்கு எதிர்நிலை என்று கொள்ளப்பட்டது. காட்டுமிராண்டித்தனம் என்ற சொல்லாட்சி அந்த மனநிலையின் விளைவு. இந்த மனநிலையை அதிகமும் ஐரோப்பிய கிறித்தவச் சிந்தனையாளர்களிடம் காண்கிறோம். உலகம் முழுக்க பழங்குடிகளை கிறித்தவம் வேட்டையாடி அழித்தமைக்கு இந்த மனநிலையே காரணம்.

ஒருவர் கிறித்தவராக ஆகும்போது அவரது பழங்குடிப் பிரக்ஞைக்கு எதிராக ஆகிறார். அதை மறக்க முனைகிறார். அதன்பொருட்டு அதன் மேல் வெறுப்பை உருவாக்கிக் கொள்கிறார். தான் அதை விட மேம்பட்டவர் என்று எண்ணிக்கொள்கிறார். ஆனால் உண்மையில் செமிட்டிக் பழங்குடி மரபின் நீட்சியான கிறித்தவத்தை அவர் ஏற்றுக்கொள்கிறார். அவர் அதன் பின் பேசுவதெல்லாமே யூதப்பழங்குடிகளின் குலக்கதைகளையும் படிமங்களையும்தான்.

கிறித்தவத்தை அதி தீவிரமாக எதிர்த்த ஐரோப்பிய நாத்திகவாதச் சிந்தனைகள் பழங்குடிமரபுகளைப்பற்றிய கிறித்தவத்தின் கொள்கைகளை தாங்களும் ஏற்றுக்கொண்டன. நாகரீகம் என்பது பழங்குடிப்பண்பாட்டுக்கு எதிரானது என்று நம்பின. கிறித்தவத்தையும் அந்த பழங்குடி நம்பிக்கைகளில் ஒன்றாக அவை வரையறை செய்தன. அந்த நாத்திகப்பின்புலத்தில் இருந்து உதித்த மார்க்ஸியமும் அந்த நம்பிக்கையையே கொண்டிருக்கிறது. சோவியத் கம்யூனிசம் பழங்குடிகளை மிருகத்தனமான அடக்குமுறைகள் மூலம் ‘நாகரீக’ப்படுத்தியது. பழங்குடிப் பண்பாட்டை அவர்கள் நெஞ்சில் இருந்து அகழ்ந்தெடுக்க அது முயன்றது.

காட்டுமிராண்டித்தனம் என்ற ஒற்றைச்சொல் வழியாக நீங்கள் கூறும் விமரிசனம் இந்த வரலாற்றுப்பின்புலம் உள்ளது. ஐரோப்பிய சிந்தனையில் எப்போது சி.ஜி.யுங் நனவிலி குறித்தும் கூட்டுநனவிலி குறித்தும் எழுத ஆரம்பித்தாரோ அப்போதே இந்த வகையான வாதங்கள் பொருளிழந்து போக ஆரம்பித்தன. பழங்குடி மனம் என்பது எந்த ஒரு நவீன மனிதனின் ஆழத்திலும் உறையக்கூடிய ஒன்று. பண்பாடுகள் அனைத்துமே தொன்மையான பழங்குடிவாழ்க்கையில் இருந்து வளார்ச்சிபெற்றவை. மனிதமனத்தையும் பண்பாட்டையும் கட்டமைத்துள்ள ஆழ்படிமங்கள் [ஆர்க்கிடைப்புகள்] பழங்குடி வாழ்க்கையில் இருந்து முளைத்தவை.

நாம் மதங்களில் காணும் உருவங்களும் சடங்குகளும் பழங்குடி வாழ்க்கையில் இருந்து இந்தக் காலம் வரை வந்த ஆழ்படிமங்கள்தான். ஆகவே கண்டிப்பாக சிவலிங்கம் நம் ’காட்டுமிராண்டி’க்கால வாழ்க்கையின் நீட்சிதான். ஆனால் அந்தக் காட்டுமிராண்டிக்காலமே நம்முடைய அனைத்துச் சிந்தனைகளையும் அனைத்துக்கற்பனைகளையும் தீர்மானிக்கிறது. அந்தக் காட்டுமிராண்டிக்காலத்தின் ஆழ்படிமங்கள்தான் நம் பண்பாட்டின் கட்டுமானப்பொருட்கள்.

பக்தி என்பது என்ன? அந்தப் படிமத்தை நம் அகத்தில் மேலும் மேலும் வளரவிடுவதே. பிரபஞ்ச ஆற்றலை சின்னக் கண்ணனாக உருவகித்துக்கொண்டு பாலூட்டி சோறூட்டி தொட்டிலில் ஆட்டி மடியிலிட்டுக் கொஞ்சி கண்கசியும் ஒரு பக்தன் அந்த படிமத்தை பேருருவம் கொள்ளச் செய்கிறான். அவனுக்கு மட்டும் அனைத்து அர்த்தங்களையும் அளிக்கும் ஒரு படிமப்பெருவெளி உருவாகிவிடுகிறது. அதனூடாக அவன் அறியும் தரிசனங்களும் ஞானங்களும் பிரம்மாண்டமானவை. அதற்கு வெளியே நின்று கொண்டு அதை நாம் விமர்சிக்க முடியாது.

ஆனால் அந்த வகையில் நெகிழ்ந்து உருகி ஒரு படிமத்தை விதையாகக் கொண்டு ஒரு படிமப்பெருவெளியை உருவாக்கிக் கொள்ள முடியாத ஒருவருக்கு அந்த வழி பயன்படாது. அவருக்கு உரியது தர்க்கமே. ஆனால் வேதாந்தம் அறிந்து முன்வைக்கும் அதே மையத்தை நோக்கியே பக்தி வழியாகவும் வந்துகொண்டிருக்கிறார்கள் என்ற தெளிவு அவருக்கு இருக்க வேண்டும். ஆகவே வேதாந்தி ஒருபோதும் ஒரு உருவ வழிபாட்டாளனை நிராகரிக்க மாட்டான்.

பக்தியும் உருவவழிபாடுமே எளிமையான வழிகள் என்று மீண்டும் மீண்டும் இந்து மரபில் சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு மாபெரும் கட்டுரை உணர்த்தாத உண்மையை ஒரு நல்ல கவிதை உணர்த்திவிடுமல்லவா அதைப்போல. கட்டுரை தர்க்கம் வழியாக படிகளில் ஏறி மேலே வரும்போது கவிதை படிமம் வழியாக பறந்து அங்கே சென்று விடுகிறது. நம் ஆழ்மனம் நம்முடைய பண்பாட்டில் ஊறி உருவான ஒன்று. படிமங்கள் முளைப்பதற்கான ஈர நிலம் நம்முள் ஏற்கனவே உள்ளது.

ஆனால் நாம் இன்று மேலைச் சிந்தனையின் தர்க்கங்களால் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறோம். மெல்லமெல்ல நம்முடைய உள்ளுணர்வை விட தர்க்கம் அதிக அழுத்தம் கொண்டதாக ஆகிவிட்டிருக்கிறது. ஆகவே நமக்கு இன்று உருவ வழிபாடுமீது மனத்தடை உள்ளது. அந்த மனத்தடையை வெல்ல முடிந்தவர்களுக்கு, அதில் உண்மையாக உள்ளம் தோய முடிபவர்களுக்கு கண்டிப்பாக அதுவே மிகச்சிறந்த வழியாகும்.

இந்து மரபில் இந்த இருபாதைகளும் முறையே சகுணபிரம்ம உபாசனை என்றும் நிர்க்குணபிரம்ம உபாசனை என்றும் சொல்லப்பட்டிருக்கின்றன. இரண்டுமே பிரம்மம்தான். ஒன்று உருவம் உடையது. இன்னொன்று உருவம் அற்றது. ஒன்று சாமானிய தளத்தைச் சேர்ந்தது இன்னொன்று விசேஷ தளத்தைச் சேர்ந்தது. ஒன்று நம்மில் இருந்து அதை பார்ப்பது, இன்னொன்று அதை மட்டும் பார்க்க முயல்வது. இரண்டுமே நம்முடைய உருவகங்கள் மட்டுமே. . ஒன்றுக்கு கற்பனை ஆயுதம் பிறிதுக்கு தர்க்கமே ஆயுதம். நம்முடைய ஆளுமை எப்படி கோருகிறதோ அப்படி நாம் உருவகித்துக்கொள்பவை.

அந்தப்படிமங்களின் ஊடாக நாம் கடைசியில் அறியும் அது ஒர் அக அனுபவம். அதை அறிந்தவன் அதுவாக ஆகிறான். அவனால் அதை பிறருக்குச் சொல்லிப்புரியவைக்க முடியாது. ஆகவே எப்போதும் அது சொல்லப்படமுடியாதது [அநிர்வசனீயம்] என்றே சொல்லப்படுகிறது.

இரண்டு வழிகளுக்குமே இந்துமரபில் இணையான இடம்தான். ஒன்றுமேல் இன்னொன்று கீழ் அல்ல. ‘உருவாய் அருவாய் உளதாய் இலதாய்’ என எல்லா நிலைகளிலும் இருப்பது இறையே என்பதே இந்து மரபின் புரிதலாகும்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard