New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஒ பக்கங்கள், ஞாநி


Guru

Status: Offline
Posts: 24603
Date:
ஒ பக்கங்கள், ஞாநி
Permalink  
 


எம்.ஆர்.ராதாவுக்கு என் அஞ்சலி! - ஒ பக்கங்கள், ஞாநி

 
Radha.jpg
நான் பிறந்த 1954ஆம் வருடத்தில் பிறப்பிக்கப்பட்ட ஒரு சட்டத்தை நீக்கக் கோரி இந்த வாரம் சென்னை உயர் நீதிமன்றத்தில் நான் ஒரு வழக்கு தொடுத்திருக்கிறேன். நாடகங்களை அரசு முன்தணிக்கை செய்த பின்னர் தான் நடத்த முடியும் என்ற நிலையை ஏற்படுத்தியிருக்கும் சட்டம் இது.சுமார் 32 வருடங்களாகவே பலமுறை இந்தச் சட்டத்தை விமர்சித்து எழுதியும் பேசியும் வந்திருக்கிறேன். நாடகத் துறையில் இருக்கும் பல நண்பர்களுடன் இதை எதிர்த்து வழக்கு தொடுப்பது பற்றிப் பேசியதுண்டு. இப்போதுதான் முடிந்திருக்கிறது. சென்னையில் நாடகம் போடுவதற்கு ஏற்ற பல அரங்கங்கள் உள்ளன. மியூசியம் தியேட்டர், மியூசிக் அகாதமி, நாரத கான சபா, கிருஷ்ண கான சபா, ஆர்.ஆர்.சபா, மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ், வாணி மஹால், தட்சிணாமூர்த்தி ஹால், ஆர்.கே. சுவாமி அரங்கு, ராணி சீதை அரங்கு, சிவகாமி பெத்தாச்சி அரங்கு என்று வகை வகையாக உள்ளன. ஆனால், இவை எதில் நாடகம் நடத்த அரங்கை வாடகைக்கு எடுப்பதாயிருந்தாலும், அரங்கின் நிர்வாகி முதலில் கேட்கும் கேள்வி போலீஸ் அனுமதி வாங்கிவிட்டீர்களா, லைசன்ஸ் நம்பர் என்ன என்பதுதான்.டிராமாடிக் பர்ஃபார்மன்சஸ் ஆக்ஸ்ட் 1954ன் படி இந்த லைசன்ஸ் தரப்படுவதாகக் கருதப்படுகிறது. லைசன்சுக்கு விண்ணப்பிக்க, நாடகம் நடத்தப்போகும் நாளுக்கு 21 நாட்கள் முன்பாக முழு நாடகத்தின் இரண்டு பிரதிகளை சென்னை நகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அதற்குரிய கட்டணத்துடன் தரவேண்டும். நாடகத்தை காவல்துறையின் ஓர் ஆய்வாளரோ, துணை ஆய்வாளரோ படித்துப் பார்த்து அதில் ஆட்சேபகரமான எதுவும் இல்லை என்று ஒவ்வொரு பக்கத்திலும் சீல் அடித்துக் கையெழுத்திட்டுக் கொடுத்தால்தான் நாடகத்தை அரங்கில் நடத்த முடியும்.
சென்னைக்கு வெளியே மாவட்டங்களில் இந்த அதிகாரம் கலெக்டருடையது. சென்னையில் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரும் இதர ஊர்களில் கலெக்டர் அலுவலக குமாஸ்தாவும்தான் நாடகத்தைப் படித்துப் பார்த்து மதிப்பிடும் கலையறிவுக்குச் சொந்தக்காரர்கள்.  
இதில் விசித்திரம் என்னவென்றால் சட்டத்தின் எந்த இடத்திலும் முன்கூட்டியே நாடகப் பிரதியைக் கேட்டு வாங்கி தணிக்கை செய்ய வேண்டுமென்று சொல்லப்படவே இல்லை. ஒரு நாடகம் ஆட்சேபத்துக்குரியது என்று போலீஸ் கமிஷனருக்கோ கலெக்டருக்கோ தெரியவந்தால், அப்போது அதன் பிரதியைக் கேட்டுப் பெற்று ஆய்வு செயலாமென்றுதான் சட்டத்தில் இருக்கிறது. முன்தணிக்கை செய்யும்படி சொல்லவில்லை. ஆனால் நடைமுறையில் எல்லா நாடகங்களுக்கும் முன் தணிக்கை செய்து முன் அனுமதி, லைசன்ஸ் எண் பெறவில்லையென்றால் அரங்க நிர்வாகிகள் அனுமதிக்கமாட்டார்கள்.
போலீஸ் சொல்லும் வெட்டுகளை ஏற்றுக் கொண்டால்தான் லைசன்ஸ் கிடைக்கும். மறைந்த நாடகாசிரியரும் என் நண்பருமான கோமல் சுவாமிநாதனின் புகழ் பெற்ற நாடகமான ‘தண்ணீர் தண்ணீர்’ நாடகத்தில் பல இடங்கள் வெட்டப்பட்டன. அப்போது நான் எங்கள் பரீக்ஷா குழுவை நடத்த ஆரம்பித்து சுமார் மூன்று வருடங்கள் ஆகியிருந்தன. தணிக்கைச் சட்டத்தை எதிர்த்து வழக்கு போடும்படி கோமலை நான் கேட்டுக்கொண்டேன். சில நடைமுறை சிக்கல்களினால் அவரால் அதைச் செய்யமுடியாமல் போயிற்று. ‘தண்ணீர் தண்ணீர்’ நாடகத்துக்கு சுமார் 30 சபாக்களில் தேதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன. லைசன்ஸ் பிரச்னையில் வழக்கு போட்டால், அந்தத் தேதிகள் எல்லாம் ரத்தாகி மாற்றப்பட வேண்டிவரும்.எனவே கோமல் போலீசார் தெரிவித்த வெட்டுகளை அவர்களுடன் விவாதித்து சில வெட்டுகளை ஏற்றுக்கொண்டு லைசன்ஸ் பெற்றார். அப்போது திருப்பத்தூர், வாணியம்பாடி பகுதிகளில் போலீசார் நக்சல் பாரி வேட்டைகளில் ஈடுபட்டிருந்தனர். நாடகத்தில் திருப்பத்தூர் பெயர், அதனருகே ஒரு கிராமம் என்றிருந்ததை மாற்றச் சொன்னார்கள். அப்படித்தான் அது தென்மாவட்ட கிராமமாக நாடகத்தில் மாறியது.அதே சமயம் எங்கள் பரீக்ஷா குழு என் ‘பலூன்’ நாடகத்தை நடத்த இருந்தது. அதற்கும் பல வெட்டுகள் விழலாம் என்று எதிர்பார்த்து நாடக தினத்தன்றே புத்தகத்தை வெளியிட ஏற்பாடு செய்திருந்தோம் (இன்னும் இந்தியாவில் புத்தகங்களுக்கு முன்தணிக்கை வரவில்லை).‘பலூன்’ நாடகத்துக்கு தணிக்கைப் பிரச்னைகள் வரவில்லை. ஆனால் நாடகம் முடிந்ததும் நாடகத்துக்கு வந்திருந்த காவல்துறை உளவுப் பிரிவின் அறிக்கை அடிப்படையில் நாடக அரங்கின் நிர்வாகி காவல் ஆணையர் அலுவலகத்துக்கு அழைத்து விசாரிக்கப்பட்டார். அதையடுத்து எங்கள் அடுத்த நாடகம் ‘கமலா’வுக்குச் சிக்கல் தரப்பட்டது. மராத்தி நாடகாசிரியர் விஜய் டெண்டுல்கர் எழுதியதன் தமிழ் வடிவம் கமலா. ராணி சீதை அரங்கினை நாடகத்துக்கு வாடகைக்கு எடுத்திருந்தோம். லைசன்ஸ் வராமல் நாடகம் நடத்த அனுமதிக்கமாட்டேன் என்று அரங்க நிர்வாகி சொல்லியிருந்தார். 21 நாட்கள் முன்பு விண்ணப்பித்திருந்தும் லைசன்ஸ் வரவில்லை. முன்தினம் கேட்டபோது நாடக தினத்தன்று காலை வரச்சொன்னார்கள். காலையில் சென்றபோது மதியம் வரச் சொன்னார்கள். மாலை 6.45க்கு நாடகம் தொடங்கவேண்டும். 
 
நான் கமிஷனர் அலுவலகத்துக்குச் சென்று டி.சி.யைச் சந்தித்துக் கேட்டேன். எங்கள் நாடகப் பிரதியை எடுத்து வைத்துக் கொண்டு, நீங்கள்தானே ‘முட்டை’ நாடகம் போட்டது, நீங்கள்தானே ‘பலூன்’ நாடகம் போட்டது... இதில் நிறைய வெட்டவேண்டியிருக்கிறது," என்று ஆரம்பித்தார். அதிலெல்லாம் வெட்டவில்லையே," என்றேன். படிக்காமலே லைசன்ஸ் குடுத்துட்டாங்க," என்று சிரித்தார். இதை 21 நாள் முன்பே கொடுத்துவிட்டோமே, ஏன் முன்பே படித்து எங்களிடம் சொல்லவில்லை," என்று கேட்டேன். வேற வேலை இருக்கு இல்ல, மெதுவாத்தான் படிப்போம்," என்றார். இப்போது கமலாவில் பத்துப் பதினைந்து வெட்டுகளைச் சொன்னார். எல்லாம் சாதாரண வரிகள். வாதிட்டு அவற்றை மூன்றாகக் குறைத்தேன். அப்போது மாலை மணி 6.45. பின் நாளை காலை வந்து ரப்பர் ஸ்டாம்ப் சீல் போட்டு லைசன்ஸ் வாங்கிக்கொண்டு போங்கள். குமாஸ்தா வீட்டுக்குப் போய்விட்டார்," என்றார் அந்தக் காவல் அதிகாரி. இன்று நாடகம் நடத்த வேண்டுமே," என்றேன். அதைப் பற்றி தமக்குக் கவலையில்லை," என்றார். எனக்குப் பெரும் கோபம் வந்தது. ஸ்க்ரிப்ட்டை அவர் மேசை மீதே வீசிவிட்டு, இப்போதே சீல் போட்டுத் தருவது உங்கள் பொறுப்பு. இல்லாவிட்டாலும் நாடகம் நடக்கும்," என்று கடுமையாகச் சொன்னேன். அவரே வந்து சீல் எடுத்துப் போட்டுக் கொடுத்தார், நாங்கள் நாடகம் தொடங்கும் போது அன்று இரவு எட்டு மணி. பார்வையாளர்கள் 400 பேரும் காத்திருந்தார்கள். தாமதம் ஏன் என்று அவர்களுக்கு விளக்கிச் சொல்லிவிட்டு நாடகம் நடத்தினோம். இது போன்ற அனுபவங்கள் என் நண்பர்கள் சிலருக்கும் உண்டு.இவையெல்லாம் நாடக நடிகனாக இருந்து சினிமாவுக்குப் போய் முதலமைச்சரான எம்.ஜி.ஆர் ஆட்சியில் நடந்தவை.நம் நாடகத்தை முன் தணிக்கைக்கு உட்படுத்துவது என்பதே எங்களுக்குப் பிடிக்காத நிலையில் சென்னையில் எந்த முக்கிய நாடக அரங்கிலும் எங்களால் நாடகம் நடத்த முடியவில்லை. மாக்ஸ் முல்லர் பவன், பிரிட்டிஷ் கவுன்சில், அலையன்ஸ் பிரான்சேஸ் முதலிய ஜெர்மன், பிரிட்டிஷ், பிரெஞ்ச் நாட்டு கலாசார நிலையங்களின் அரங்கில் தான் லைசன்ஸ் பெறாமல் நாடகம் நடத்த முடியும். ஏனென்றால் அவை அன்னிய அரசுகளின் இடங்கள் என்பதால், நம் நாட்டு சட்டங்களிலிருந்து அவற்றுக்கு விலக்கு (டிப்ளமேட்டிக் இம்யூனிட்டி) உண்டு. எனவே, கடந்த சில வருடங்களாகவே அலையன்ஸ் பிரான்சேஸ் அரங்கில் நாடகம் நடத்தி வந்திருக்கிறோம்.
 
சபாக்களில் எங்களை நாடகம் நடத்த அழைத்தாலும் இந்த முன்தணிக்கை லைசன்ஸ் முறைக்கு நாங்கள் உடன்பட விரும்பாததால் எந்த முக்கிய அரங்கிலும் நாடகம் போட முடிவதில்லை.இந்த நாடகத்துக்கான முன் தணிக்கைச் சட்டம் 1954ல் (காமராஜரின்) காங்கிரஸ் ஆட்சியால் கொண்டு வரப்பட்டதன் அசல் நோக்கம் அப்போது அந்த ஆட்சிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய எம்.ஆர்.ராதாவை ஒடுக்குவதுதான். ராதாவின் நாடகங்கள் மூட நம்பிக்கைகளை மட்டுமன்றி சமகால அரசியலை நையாண்டி செய்யும் விதத்திலும் இருந்தன.முன் தணிக்கையும் லைசன்ஸ் வாங்கும் முறையும் வந்ததும் ராதா அதைப் பல விதங்களில் சமாளித்தார். லைசன்ஸ் வாங்கி வைத்திருக்கும் நாடகத்தின் பெயரிலேயே வேறு நாடகத்தை நடத்தினார். உளவு பார்க்க வரும் போலீஸ் சி.ஐ.டி.கள் குறிப்பெடுக்க வசதியாக உட்கார விரும்பிய முன் வரிசை டிக்கட் விலையைப் பல மடங்கு உயர்த்தி அரசிடம் அபராதம் வசூலித்தார். இப்போதைய என் வழக்கு எம்.ஆர். ராதாவின் நூற்றாண்டில் அவருக்கு என் அஞ்சலி.காங்கிரஸ் ஆட்சி, சோவின் ‘சம்பவாமி யுகே யுகே’வுக்கு அனுமதி மறுத்தது. அவர் அதை எதிர்த்து வழக்குதொடுக்க முற்பட்ட போது, அட்வகேட் ஜெனரலின் ஆலோசனைப்படி தடையை நீக்கியது. திராவிட இயக்கமான தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் நியாயப்படி நாடக நிகழ்ச்சிகள் சட்டத்தை ரத்து செய்திருக்க வேண்டும். செய்யவில்லை. சோவின் ‘துக்ளக்’ நாடகத்துக்கும் இன்னும் பல நாடகங்களுக்கும் எதிராகத் தொல்லை கொடுத்தது.இந்தச் சட்டம் சுதந்திர இந்தியாவின் கண்டுபிடிப்பு அல்ல. இது பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்க எடுத்த பல நடவடிக்கைகளில் ஒன்று. பத்திரிகைகளை ஒடுக்குவதற்கான சட்டமும் நாடகத் தணிக்கைச் சட்டமும் அடுத்தடுத்து போடப்பட்டவை. இந்தச் சட்டத்தால் பாதிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியே இதைத் தமிழ்நாட்டில் புதுப்பித்தது. இதனால் பாதிக்கப்பட்ட திராவிட இயக்கமே இதை நீக்காமல் இன்னும் தொடர்கிறது. காரணம் அதிகாரத்துக்கு வந்ததும் தங்களுக்கு எதிராக எந்தக் கருத்தும் உருவாகி விடக்கூடாது என்ற பயம்தான்.இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் இந்தச் சட்டம் இப்போது இல்லை.
 
மக்கள் முன்னால் நேரடியாக நிகழ்த்தக் கூடிய கலைகள் பல. தெருக்கூத்து, பரதநாட்டியம், கர்நாடக இசைக் கச்சேரி முதல் மெல்லிசைக் கச்சேரிகள் வரை. இவற்றில் நாடகமும் ஒன்று. ஆனால், முன்தணிக்கை பாரபட்சமாக நாடகத்துக்கு மட்டுமே விதிக்கப்பட்டிருக்கிறது. ஆட்சேபத்துக்குரியது என்று ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரும் ஒரு கலெக்டர் ஆபீஸ் குமாஸ்தாவும் கருதக் கூடியவை நாடகத்தில் மட்டும்தான் இருக்கமுடியுமா என்ன? கச்சேரிக்கு நடுவே அரசுக்குப் பிடிக்காத ஒரு சாகித்யத்தைப் பாட முடியாதா என்ன? நடன அபிநயத்தில் ஆபாசமாக என்னவெல்லாம் சாத்தியம் உண்டு என்பது சினிமா பார்க்கும் எல்லாருக்கும் தெரியுமே? மேடையில் இவற்றுக்கெல்லாம் முன் தணிக்கை லைசன்ஸ் விதிகள் இல்லாத போது ஏன் நாடகம் மட்டும் நசுக்கப்படுகிறது?உலகெங்கும் வீதி நாடகம் என்பது முன் கூட்டி எழுதிய அல்லது எழுதாத நாடகப் பிரதியைக் கொண்டு நடத்தப்படுவதாகும். பெரும்பாலும் அவை எழுதப்பட்டதில்லை. நடிகர்கள் கூடிப் பேசி அப்படியே மனோ தர்மப்படி நடத்தும் படைப்பாற்றல் உடையவை வீதி நாடகங்கள். அவ்வாறு நாங்கள் ‘வீதி’ என்ற இயக்கத்தை உருவாக்கி பல தெருநாடகங்களை 1978-79களில் சென்னை மெரீனா கடற்கரையில் நடத்தியிருக்கிறோம். இன்று அவ்வாறு எந்தக் கடற்கரையிலும் பூங்காவிலும் தெரு நாடகம் நடத்த இயலாது. போலீஸ் அனுமதிப்பதில்லை. கருணாநிதி ஆட்சியில் எல்லா பூங்காக்களும் சங்கமத்துக்காகத் திறந்து விடப்பட்டன. ஆனால் தெருநாடகம் நடத்துவோருக்கு அனுமதியில்லை.அண்மையில் 2000மாவது ஆண்டில் நாதுராம் கோட்சே நாடக வாசிப்புக்கு விதித்த தடையை எதிர்த்துப் போடப்பட்ட வழக்கில் மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி சந்திரசூட் அளித்த தீர்ப்பில் - அரசியல் சட்டத்தின் 21வது பிரிவு உயிர் வாழ்வதற்கான உரிமையை மட்டும் அளிக்கவில்லை. அப்படி வாழ்வது என்பது உடலளவில் ஜீவித்திருப்பது மட்டுமாகாது. அர்த்தமுள்ள பூரண மகிழ்ச்சியுடனான வாழ்க்கைக்கே சட்டம் உறுதியளிக்கிறது. அதற்குத் தேவையான எல்லா நடவடிக்கைகளையும் இந்தப் பிரிவு காப்பாற்றவேண்டும். கலை, இலக்கியச் செயல்பாடுகள் எல்லாம் அதற்கு உட்பட்டவை. தகவலறியும் உரிமையும் கருத்துச் சுதந்திரமும், மாறுபட்ட கருத்துகளைச் சொல்லவும் கேட்கவும் இருக்கும் உரிமையும் எல்லாமே இதே பிரிவினால் உறுதி செய்யப்பட்டுள்ளன. இவற்றைத் தடுத்தால் ஒரு படைப்பாளியின் படைப்பு சாரமிழந்து சக்கையாகிவிடும்" என்று கூறி தடையை ரத்து செய்தார். 
 
கருத்துச் சுதந்திரத்துக்கும் சிவில் அரசியல் உரிமைகளுக்கும் அரசியல் சட்டம் கொடுத்திருக்கும் உரிமைகளான பிரிவுகள் 14, 19 முதலியவற்றுக்கெல்லாம் விரோதமான நாடக நிகழ்ச்சிகள் சட்டத்தை ரத்து செய்யவேண்டுமென்று கோரி இப்போது வழக்கு தொடுத்திருக்கிறேன். முப்பதாண்டு காலக்கனவு இந்த முறை நனவாகும் என்று நம்புகிறேன்


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

இரு மாணவர்கள் தற்கொலை - ஓ பக்கங்கள், ஞாநி

 
3.jpg
காதல் வந்தால் சொல்லியனுப்பு.... உயிரோடிருந்தால் வருகிறேன்’, - இது ஒரு பிரபலமான சினிமாப் பாடல். காதலுக்கும் உயிருக்கும் இருக்கும் தொடர்புதான் இந்த வாரம் என் கவலைக்குரிய விஷயமாக இருக்கிறது.சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்திலும் அடுத்து ஐ.ஐ.டி.யிலும் இரு மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணங்களில் காதல் பிரச்னையும் ஒன்று என்று செய்திகள் சொல்கின்றன. காதல் ஏன் எப்படிப் பிரச்னையாகிறது?
என் காதல் அனுபவங்களைப் பற்றி பதினெட்டு வருடங்களுக்கு முன்னர் நான் எழுதிய ஒரு கட்டுரையில் ஒருபகுதி இப்படிப் போகிறது - சிறந்த காதலர்களால்தான் சிறந்த நட்பைப் புரிந்து கொள்ளமுடியும். காதலைக் கண்டு பயப்படுகிறவர்கள்தான் ஆண்- பெண் நட்பைக் கண்டும் அஞ்சி அஞ்சி சாவார்கள். எல்லா நட்பும் காதலாக மலரவேண்டியது இல்லை என்பது அவர்களுக்குப் புரியாது. எல்லா ஆண்- பெண் நட்பும் காமத்திலேயே சென்று முடியும் என்பது அவர்களின் நிரந்தர பயம். உறவுகளைத் தவறாகப் புரிந்துகொள்ளுதல் என்பது நம் சமூகத்தில் புரையோடியிருக்கிற நோய். செக்ஸ், காதல் பற்றியெல்லாம் ஆரோக்கியமான சூழல் இல்லாமல் வக்கரிப்பான சினிமாக்களே இதற்கு ஆசானாக விளங்குவது இந்த நோயின் இன்னொரு அறிகுறி."படிப்பறிவு இல்லாத அரைகுறை எழுத்தறிவு உள்ள இளைஞர்களும் காதல் ‘தோல்வி’யில் தற்கொலை செய்கிறார்கள். உயர்படிப்பு படிக்கும் அறிவார்ந்த இளைஞர்களும் அதையே செய்கிறார்கள். எனவே காதல் என்றால் என்ன என்பது பற்றிய புரிதல் இரு சாராருக்கும் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.
காதலில் ‘தோல்வி’ என்பது என்ன?
ஒருதலைக் காதலைத் தோல்வி என்கிறார்கள். எனக்குப் பிடித்த பெண்ணுக்கு என்னைப் பிடிக்கவில்லை என்றால் அது காதல் தோல்வியாம். உடனே தற்கொலை. இந்த ‘தோல்வி’ லாஜிக்படி பார்த்தால் காதலிக்காமல், ஏற்பாடு செய்யும் திருமண முயற்சிகளில் பெண் பார்க்கப் போகிறவனுக்குப் பெண்ணைப் பிடித்திருக்கிறது; பெண்ணுக்குப் பிடிக்கவில்லை என்றால் அவன் தற்கொலை செய்துகொள்ள வேண்டுமா? அல்லது அவளுக்குத் தன்னைப் பிடிக்கச் செய்ய வேண்டும் என்று டார்ச்சர் செய்யமுடியுமா?காதல் ஹார்மோன்களின் தூண்டுதலினால், உடலின் தேவைகளுடன் மனத்தின் தேவைகளும் சேர்ந்துகொண்டு உசுப்பிவிடும் ஓர் உணர்வு. இதைப் பக்குவமாக வசப்படுத்தத் தவறினால் பழத்தை வெட்டுவதற்கு பதில் கையை வெட்டும் கத்தியாகிவிடும்.
காதலில் இறுதி வெற்றி என்பது என்ன?
அப்போது சொன்னதைத்தான் இப்போதும் சொல்லத் தோன்றுகிறது. காதலின் இயல்பான முற்றுப்புள்ளி காமம்தான் என்றே பொதுவாக நம்பப்படுகிறது. கல்யாணத்தில் முடிவதுதான் நிஜக் காதல் என்றும் சொல்லப்படுகிறது. என்னைப் பொறுத்த வரையில் காதலின் இறுதி வெற்றி என்பது அதில் வயப்பட்டிருந்த இருவருக்குமே அந்த அனுபவம் எந்தக் காலத்தில் நினைத்துப் பார்த்தாலும், துளியும் வலிகளற்ற இனிமையாகவே இருக்க முடியுமானால் அதுதான் வெற்றி பெற்ற காதல். இந்த இனிமையைத் தொடர்ந்து நீடிப்பதற்கான கருவியாக திருமணமும் அமைந்தால் அது போனஸ் வெற்றி. திருமணத்துக்குப் பிறகு காதலைத் தொலைத்துவிட்டவர்கள் வாய்ப்பை நழுவவிட்ட முட்டாள்கள்; சபிக்கப்பட்டவர்கள்."ஆனால், நம் சமூகத்தில் இன்று காதல் என்பது ஆணும் பெண்ணும் சாமர்த்தியமாகத் தமக்கான, தமது இச்சைகளைப் பூர்த்தி செவதற்குத் தோதான அடிமையை வடிவமைத்து வசப்படுத்தும் சூழ்ச்சியாக மாற்றப்பட்டிருக்கிறது. காதல் ஒருவர் தன்னையும் அழித்துக் கொள்ளாமல், எதிர் நபரையும் அழிக்காமல் இருவரையும் வளப்படுத்தும் பகிர்தல். ஆனால் இன்னொரு நபரைத் தன் விருப்பப்படி மாற்றியமைத்து, தம் உடமையாக்கிக் கொள்ளும் மனநிலையாகவே காதல் பயன்படுத் தப்படுகிறது. அப்படி முடியாவிட்டால், இருவரில் ஒருவர் மற்றவரை அழிப்பதாகவோ தன்னையே அழித்துக் கொள்வதாகவோ முடிகிறது.தன்னைக் காதலிக்க மறுத்த பெண்ணின் முகத்தில் ஆசிட் ஊற்றும் ஒருவன் எப்படி காதலனாவான்? அதில் எங்கே இருக்கிறது காதல்? தன் அன்பை ஒருவர் ஏற்காவிட்டால், அந்த அன்பை இனி யாருக்குமே காட்ட முடியாது என்று சொல்லி தன்னையே அழித்துக் கொள்ளும் மனத்தில் ஏது காதல்? என்னைக் காதலிக்க மறுத்தால் நான் கையைக் கிழித்துக் கொள்வேன், சாவேன் என்று மிரட்டி எதிராளை அன்பு செலுத்தக் கட்டாயப்படுத்துவது பிளாக்மெயில்தானே?
ஆனால், காதல் என்பது என்னவென்றே தெரியாமலே தாங்கள் காதலிலிருப்பதாக நம்பும் பலரை சினிமாவும் ஊடகங்களும் உருவாக்கிக்கொண்டே இருக்கின்றன. இன்றைய வாழ்க்கை முறையின் விளைவாக உடல் முதிர்ச்சி பத்து பதினோரு வயதிலேயே ஏற்படத் தொடங்கிவிடுகிறது. பெண்கள் பருவமெதும் வயது 14லிருந்து இன்று பத்தைத் தொட்டுவிட்டது.ஆனால், மன முதிர்ச்சிக்குக் குறைந்தபட்ச வயது தேவை. கல்லூரிப் படிப்பை முடித்து வேலை தேடி அலைந்து ஒரு வேலை கிடைத்து அதில் பல மனிதர்களுடன் உறவாடும் வேளையில்தான் மனப்பக்குவம் தொடங்குவது சாத்தியமாகிறது. இது பொதுவிதி. விதிவிலக்குகள் மிகக் குறைவாக எப்போதும் இருப்பார்கள். சுமார் 22, 23 வயதுக்குப் பிறகு தோன்றும் காதலில்தான் உடல் தேவையும் மனத்தேவையும் இணைந்த தேடல் இருப்பதற்கு வாய்ப்பு அதிகம். அதற்கு முன்பு நம் மனத்தின் தேவைகள் என்ன என்று யோசித்துத் தேர்ந்தெடுத்துத் தொகுத்து வாழ்க்கையின் குறிக்கோள்களை வகுத்துவிடும் வாய்ப்பு குறைவு. உடலின் தேவைகள் மட்டுமே உறைக்கக்கூடிய வயதாகவும் மனம் எப்போதும் குழம்பிக் குழம்பித் தெளிவைத் தேடும் முயற்சியிலுமாக இருக்கும்.ஆனால், நம் சினிமாக்காரர்கள் எந்த சமூகப் பொறுப்பும் இல்லாதவர்கள்.அறியாத வயசு, புரியாத மனசு, ரெண்டும் சேர்ந்து காதல் செயும் நேரம் என்று நட்பையும் காதலையும் குழப்பியடித்து, தங்கள் கல்லாவை நிரப்புவதிலேயே குறியாக இருப்பார்கள். சுமார் இருபது வருடம் முன்னர், பள்ளி இறுதி வகுப்பிலேயே கமர்ஷியலாக நுழைத்த காதலை இப்போது எட்டாங் கிளாசுக்குக் கொண்டு போய்விட்டார்கள்.பொறுக்கியாக இருந்தால்தான் பெண்கள் விரும்புவார்கள் என்று ஒரு சூத்திரத்தை சினிமா விடாப்பிடியாகக் கையாண்டு வருகிறது. அசல் வாழ்க்கையில் காதல் இப்படியெல்லாம் இல்லை. இவனை நியாயமாக வெறுப்பதற்குப் பதிலாக ஏன் எனக்குப் பிடித்திருக்கிறது என்று சொல்லத் தெரியாமலே மயங்கும் பெண்களும்,ஏன் இவளுக்கு என்னைப் பிடிக்கவில்லை என்பதைப் புரிந்துகொள்ளவே கஷ்டப்படும் பையன்களும் பெருகிக்கொண்டே இருக்கிறார்கள்.
ஒரு பள்ளி மாணவன் ‘காதல் தோல்வியால்’ தற்கொலை செய்து கொண்டபோது அவன் ஒருதலையாக காதலித்த மாணவியிடம் விசாரித்தார்கள். ‘நிறைய பசங்க எனக்கு லவ் லெட்டர் கொடுத்திருக்காங்க. நான் எல்லார் கிட்டயும் நோதான் சொல்லியிருக்கேன். மத்தவங்கள்லாம் ஒண்ணும் செத்துப் போகலே. இவன் செத்துப் போனா அதுக்கு நான் என்ன செய்யமுடியும்?’ -மாணவி கேட்ட நியாயத்தை யாரும் பரிசீலிப்பதில்லை.குழந்தைகள் சைட்டடிப்பது, பெற்றோருக்குத் தெரியாமல் ரகசியமாக நெருக்கமாக உட்கார்ந்து கிசுகிசுப்பது என்று விடலைச் செயல்களைச் செய்வதை கமர்ஷியல் விளம்பரங்கள் பாலியல் தொனியுடன் காட்ட ஆரம்பித்துவிட்டன.சினிமாவை முன்தணிக்கை செய்யும் அரசு, டி.வி. விளம்பரங்களுக்கு முன்தணிக்கை பற்றி யோசிப்பது கூட இல்லை.வணிகச் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்த வேண்டிய அரசின் பிரதமர், கொலை வெறிப்பாட்டின் கமர்ஷியல் வெற்றியையடுத்து அதன் நடிகரை சர்வதேச பிரமுகருடன் விருந்து சாப்பிட அழைப்பதென்பது அரசு வணிகத் துறையின் தரகராக மாறிவிட்ட சூழலின் அடையாளம்தான்.இந்தச் சூழலில் சராசரி இளைஞர்கள் எப்படி தங்களுக்கான பக்குவத்தை அடைவார்கள்?தேர்வுக்கான பாடங்கள், அவற்றை வசப்படுத்துவதற்கான உத்திகள் இவற்றையெல்லாம் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் நேர்த்தியாகவும் திறமையாகவும் சொல்லித்தர ஏற்பாடுகள் செய்திருக்கிறோம்.ஆனால் விடலைப் பருவத்துப் பெண்ணுக்கோ ஆணுக்கோ தன் உடலையும் தன் மனத்தையும் தன் வசப்படுத்தி வைத்திருப்பதற்கான கல்வி இல்லை.அதற்கான வழிகாட்டுதல் இன்று குடும்பத்திடம் கிடைப்பது இல்லை. மிடில் க்ளாஸ் குடும்பமும் அரசைப் போலவே பன்னாட்டு கம்பெனிகள் சார்ந்த கனவுலகில் திளைத்துக் கொண்டிருக்கின்றன.படிப்போடு சேர்த்து வாழ்க்கைக்கான திறன்களையும் வளரிளம் பருவத்திலேயே நம் சிறுவர்களுக்கு தரத் தவறினால் அதிகம் படித்தவன், கொஞ்சம் படித்தவன் என்று எல்லா தரப்பு இளைஞர்களிடையிலும் காதல் தோல்வி தற்கொலைகள், பரீட்சைத் தோல்வி தற்கொலைகள் பெருகுவது உறுதி.
பள்ளிப்படிப்போடு முடித்துவிட்டு மேலே படிக்க வசதியில்லாமல், குடும்பச் சூழலினால் வேலைகளுக்குச் செல்லும் இளைஞர் கூட்டம் இன்று மிகப் பெரிது. டீன் ஏஜில் இருக்கும் அந்தப் பிரிவினர் வாழ்க்கை என்பது கையில் கொஞ்சம் காசு புரள்வதாகவும், அன்றாட அலுவல் நிமித்தம் ஆண், பெண் சேர்ந்து உறவாடும் சூழலுடையதாகவும் இருக்கிறது. ஆனால் மனப்பக்குவம் இன்னும் வரப்பெறாத நிலையில் அந்த உறவுகளில் கடும் சிக்கல்கள் உருவாகின்றன. காத்திருக்கின்றன.இனி தாமதிக்காமல் பள்ளிப்பருவத்திலேயே வாழ்க்கைத் திறன்களுக்கான கல்வியை தினசரி பாடத் திட்டத்தின் ஒரு பகுதியாக ஆக்காவிட்டால், நாம் பல அருமையான உயிர்களை அபத்தமான காரணங்களுக்காக பலி கொடுக்கும் சமூகமாகி விடுவோம்.கல்லூரிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் அலுவலகங்களிலும் தொழிற்சாலைகளிலும் உளவியல் ஆலோசகர்களை நியமிப்பது என்பது தும்பை விட்டு வாலைப்பிடித்த கதையாகவே மாறும். ஒவ்வொரு சிறுவனும் சிறுமியும் தன் உடலையும் மனத்தையும் புரிந்துகொண்டு தம்வசத்தில் வைத்திருக்கும் சமூகமே நம் கனவாக இருக்கவேண்டும். அது நனவாக பள்ளிக் கூடத்திலேயே பணிகளைத் தொடங்க வேண்டும். ஆரோக்கியமான இளம் மனங்களைச் சிதைத்து நச்சாக்கிக் கொண்டிருக்கும் ஊடகங்கள், விளம்பரங்கள், சினிமாக்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கைகள் வேண்டும். சில கோடி ரூபா லாபங்களுக்காக பல கோடி மனிதர்களை பலி கொடுக்க முடியாது.
இந்த வாரக் கேள்வி: தோழர் நல்லக்கண்ணுவுக்கு...
கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டம் கடந்த 200 நாட்களாக உறுதியுடன் நடந்தபோது, அதை இழிவு படுத்தியும் கண்டித்தும் உலையைத் திறந்தே தீரவேண்டும் என்றும் உங்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முழங்கிவந்தது. இப்போது திடீர் ஞானம் வந்து இடிந்தகரைக்குப் போய் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறீர்கள். இப்போதாவது செய்தீர்களே என்று மகிழ்ச்சியடைய முடிய வில்லையே. இதை உங்கள் கட்சி மார்ச் 18க்கு முன்னரே செய்திருந்தால் போராட்டம் வலிமையடைந்திருக்கும். பெரும் படைகளைக் கொண்டு அரசுகள் மக்களை மிரட்டி ஒடுக்கியபோது மௌனமாக இருந்தது துரோகம் இல்லையா? இப்போது ஆதரவு காட்டுவதன் மர்மம் என்ன? நிஜமான மனமாற்றமா? அல்லது அடுத்த தேர்தலுக்காக மக்களுடன் சமரசமா? உண்மையான சுய விமர்சனம் என்றால், போராட்டத்தைக் கொச்சைப்படுத்திய தோழர் தா.பாண்டியன் மீது கட்சி நடவடிக்கை எடுக்குமா?
அடுத்த குடியரசுத் தலைவர்?
வாசகர்கள் ஆலோசனைகள் வந்த வண்ணம் உள்ளன. நான் பரிந்துரைத்த கோபால கிருஷ்ண காந்தி மம்தா ஆதரவாளர், இடதுசாரி எதிர்ப்பாளர் என்று இடதுசாரி நண்பர் ஒருவர் ஆட்சேபித்திருக்கிறார். இப்போதைய துணை ஜனாதிபதி அன்சாரியே நல்ல சாய்ஸ் என்பது அவர் கருத்து. இன்னொரு வாசகர் தலைமைத் தேர்தல் அதிகாரியாக இருந்த நரேஷ் குப்தாவைப் பரிந்துரைத்துள்ளார். சில வருடங்கள் முன்னர் நான் பரிந்துரைத்த ஆர்.நல்லகண்ணு, இரா. செழியன் ஆகியோரை ஏன் இப்போது விட்டுவிட்டேன் என்று ஒருவர் கேட்கிறார். பிரதமரின் வயது 60க்குக் கீழும் கனவு ஜனாதிபதியின் வயது 70க்குக் கீழுமிருக்க வேண்டும் என்பது என் கனவு. அதனால் 80க்கு மேற்பட்டவர்களை இந்த முறை ஆட்டத்தில் சேர்க்கவில்லை.   


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

ஊழலுக்கு வெள்ளி விழா! - ஓ பக்கங்கள், ஞாநி

 
1.jpg
சரியாக 25 வருடங்களுக்கு முன்னால் ஏப்ரல் 16 அன்று ஸ்வீடன் வானொலி போஃபர்ஸ் பீரங்கி பேர ஊழலை அம்பலப்படுத்தியது. இந்தியாவின் இளம் நம்பிக்கை நட்சத்திரம் என்று வர்ணிக்கப்பட்ட ராஜீவ்காந்தியின் ஆட்சியைத் தூக்கி எறிந்தது போஃபர்ஸ் ஊழல். இந்தியாவில் இந்த ஊழலை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் சித்ரா சுப்ரமணியம் ஊழலின் வெள்ளி விழா ஆண்டில் தமக்கு ஊழல் தொடர்பான அத்தனை முக்கிய ஆவணங்களையும் கொடுத்த ரகசிய மனிதர் யார் என்பதை இப்போது வெளிப்படுத்தியிருக்கிறார்.ஸ்வீடன் நாட்டு போலீஸ் துறைத் தலைவரான ஸ்டென் லிண்ட்ஸ்ட்ராம் தான் சித்ராவுக்கு முக்கியமான 350 ஆவணங்களின் பிரதிகளையும் கொடுத்தவர். 25 வருட காலமாக இதை வெளிப்படுத்திக் கொள்ளாமல் இருந்தவர், இப்போது பகிரங்கமாகத் தாமே முன்வந்து சித்ரா மூலமாக ஒரு பேட்டியில் எல்லாவற்றையும் சொல்லியிருக்கிறார். ஸ்டென் போன்ற அரசு, காவல்துறை சார்ந்த மனசாட்சியுள்ள அதிகாரிகள் ரகசியமாக தகவல் தருவதன் மூலம்தான் உலகில் பல ஊழல்கள், முறைகேடுகள் அம்பலத்துக்கு வருகின்றன. தகவல் தந்தவர் யார் என்பதை வெளிப்படுத்தாமல் ரகசியமாக வைத்துக் கொள்வது பத்திரிகையாளரின் முக்கியமான அறம். 
எழுபதுகளில் அமெரிக்க அதிபர் நிக்சன் ஆட்சி கவிழக் காரணமாக இருந்தது வாட்டர்கேட் ஊழல். நிக்சன் தன் எதிர்க் கட்சியான ஜனநாயகக் கட்சியின் தேர்தல் அலுவலகம் இருந்த வாட்டர்கேட் ஹோட்டல் அறைகளை ஒட்டுக் கேட்பதற்குக் கருவிகள் பொருத்த ஆட்களை அனுப்பியது தான் வாட்டர்கேட் ஊழல். அவர்கள் அறையை உடைத்து நுழைந்தபோது சிக்கிக் கொண்டார்கள். இவர்கள் வெறும் திருடர்கள் அல்ல, நிக்சனின் உளவாளிகள் என்பதை வாஷிங்டன் போஸ்ட் நிருபர்கள் பாப் உட்வர்ட், கார்ல் பெர்ன்ஸ்டென் தொடர்ந்து பல கட்டுரைகளின் மூலம் அம்பலப்படுத்தினார்கள். கடைசியில் நிக்சன் பதவி விலகவேண்டியதாயிற்று. அவருடைய அதிகாரிகள் பலர் சிறைக்கு அனுப்பப்பட்டார்கள்.நிருபர் உட்வர்ட் தன் கட்டுரைகளில் இந்த விவகாரம் பற்றிய முழுத் தகவல்களைத் தனக்குக் கொடுத்தவருக்கு ‘டீப் த்ரோட்’ என்று பெயர் சூட்டி எழுதி வந்தார். அடித்தொண்டையிலிருந்து தகவல்களை ரகசியமாகக் கிசுகிசுத்து வந்ததால் இந்தப் பெயர் என்று வைத்துக் கொள்ளலாம். உட்வர்டின் டீப் த்ரோட் அமெரிக்க விசாரணை அமைப்பான எஃப்.பி.ஐ.யின் இணை இயக்குனராக இருந்த வில்லியம் மார்க் ஃபெல்ட். அவரைப் போலவே ஸ்வீடிஷ் காவல்துறையின் உயர் அதிகாரிதான் சித்ரா சுப்ரமணியத்தின் டீப் த்ரோட் ஸ்டென்.ஏன் ஸ்டென் இந்த ஊழலை அம்பலப்படுத்தினார்? ஸ்வீடன் நாட்டில் பொது வாழ்க்கையில் - அரசியலில், வர்த்தகத்தில்- பல உயர்ந்த தரமான அளவுகோல்களை நாங்கள் ஏற்படுத்தி, பல வருடங்களாகின்றன. ஊழல் என்றால் எங்கோ தொலைவில் ஆப்ரிக்கா, ஆசியாவில்தான் நடக்கும் என்ற நினைப்பில் இருந்த எங்களுக்கு ஸ்வீடன் அரசின், அரசியலின் உயர்நிலையிலேயே இப்படி ஊழல் நடப்பது தெரியவந்ததும் அதிர்ச்சியடைந்தேன். இதை மூடி மறைக்க எங்கள் நாட்டுத் தலைமை முயற்சித்ததும், எனக்கு இதை எப்படியாவது அம்பலப்படுத்துவதைத் தவிர வேறு நியாயமான வழி எதுவும் இல்லை" என்கிறார் ஸ்டென்.
3.jpg
இந்தியாவிலும் ஊழலை மூடி மறைக்க பெரும்முயற்சி நடந்ததை ஸ்டென் குறிப்பிடுகிறார். ராஜீவ்காந்தி, அருண் நேரு, இத்தாலிய தரகர் கொட்ரோச்சி மூவரின் பெயரும் வெளிவராமல் பார்க்க என்னென்னவோ செய்தார்கள் என்கிறார் ஸ்டென். குறிப்பாக அருண் நேரு பெயர் அம்பலமானாலும் பரவாயில்லை, கொட்ரோச்சி பெயர் வெளியாகக் கூடாது என்று கடுமையாக வேலை செய்தார்கள் என்று சொல்லும் ஸ்டென், ராஜீவ்காந்தி லஞ்சம் வாங்கியதற்கு எந்த சாட்சியமும் இல்லை,ஆனால், கொட்ரோச்சி குற்றவாளி என்பதற்கு பலமான சாட்சியம் உள்ளது என்கிறார். கொட்ரோச்சியைக் காப்பாற்ற ராஜீவ் ஆட்சி கடைசி வரை முயற்சி செய்ததையும் கடைசியில் கொட்ரோச்சி மீது ஒரு குற்றமும் இல்லை என்று இந்திய நீதிமன்றங்களிலேயே சொல்லப்பட்டதையும் ஸ்டென் சுட்டிக் காட்டுகிறார்.போஃபர்ஸ் பீரங்கி பேரத்தில் ஊழல் நடந்தது எவ்வளவு நிஜமோ அவ்வளவு பொய் அந்த பீரங்கி தரமில்லாதது என்பது என்று ஸ்டென் சொல்கிறார். நல்ல சரக்கு. நல்ல கம்பெனி. வியாபார ஆசையில் ஊழலில் இறங்கிவிட்டதுதான் குற்றம் என்பது ஸ்டென் கருத்து. போஃபர்ஸ் பீரங்கிகள் தரமானவை என்பதை நானும் நேரில் கார்கில் யுத்த களத்தில் பார்த்தேன். அந்தப் போரில் இந்தியா வெல்ல, அவை முக்கிய பங்காற்றின.போஃபர்ஸ் பீரங்கி பேர ஊழல் தொகை அன்று பெரியது. கொட்ரோச்சி சுருட்டியது சுமார் 21 கோடி என்கிறார்கள். மொத்த ஊழல் தொகை 50 கோடி இருக்கலாம். இன்றைய மதிப்பில் அது அதிகபட்சம் 500 கோடி என்றே மிகைப்படுத்தினாலும் கூட, ஸ்பெக்ட்ரம் ஊழலுடன் ஒப்பிட்டால் ரொம்பச் சின்னது.ஆனால் ஸ்பெக்ட்ரம் ஊழலை விடக் கூடுதலாக போஃபர்ஸ் பீரங்கி பேர ஊழல், இந்திய அரசியலையும் பலருடைய வாழ்க்கையையும் புரட்டிப் போட்டிருக்கிறது.
ஆனால் ஸ்பெக்ட்ரம் ஊழலை விடக் கூடுதலாக போஃபர்ஸ் பீரங்கி பேர ஊழல், இந்திய அரசியலையும் பலருடைய வாழ்க்கையையும் புரட்டிப் போட்டிருக்கிறது.ஒற்றைப் பெரும் கட்சி ஆட்சி நடத்துவது என்ற நிலையில் இருந்த தில்லி அரசியல் இனி கூட்டணி அரசியல்தான், மாநிலக் கட்சிகளுக்கு தில்லியில் பங்கு கொடுத்தால் தான் ஆட்சி நடத்த முடியும் என்ற நிலையைத் தொடங்கி வைத்தது போஃபர்ஸ் பீரங்கி பேர ஊழல் விவகாரம். அதை எதிர்த்து காங்கிரசிலிருந்து வெளியேறிய வி.பி.சிங், ஜன் மோர்ச்சாவை உருவாக்கி, பின்னர் அதை ஜனதா தளமாக்கினார். தி.மு.க., அசாம் கணபரீஷத் உள்ளிட்ட மாநிலக் கட்சிகளுடன் சேர்ந்து தேசிய முன்னணியைத் தொடங்கினார். அதன் பின்னர் இன்று வரை தில்லி அரசியல், மாநிலக் கட்சிகள் ஆதரவுடனான கூட்டணி அரசியல் பாதையை விட்டு பழைய பாதைக்குப் போகவே முடியாத நிலையை அடைந்துவிட்டது.இன்று போஃபர்ஸ் பீரங்கி பேர ஊழல் பற்றி இடதுசாரிகள் தவிர வேறு எந்தக் கட்சியும் பேச விரும்புவதில்லை. பாரதிய ஜனதா, சோனியாகாந்தியை எரிச்சலூட்டுவதற்காக அவ்வப்போது கொட்ரோச்சி பற்றிப் பேசும். ஆனால் கொட்ரோச்சி, ராஜீவுக்கு நிகராக போஃபர்ஸ் கம்பெனி தலைவர் அர்ட்போவின் டயரியில் குறிப்பிடப்பட்ட அருண் நேருவைப் பற்றி வாயைத் திறக்காது. காரணம் அருண் நேரு வி.பி. சிங்கிடமிருந்தும் விலகி பாரதிய ஜனதாவில் ஐக்கியமானவர். அயோத்தி பாபர் மசூதியில் 1948லிருந்து பூட்டி வைக்கப்பட்டிருந்த பகுதியை ஹிந்துக்கள் வழிபாட்டுக்குத் திறந்துவிடும்படி ராஜீவ் ஆட்சியில் உத்தரவிட்டு, பாபர் மசூதி இடிப்புக்கு வழிவகுத்துக் கொடுத்தவர் அருண் நேருதான்.தி.மு.க.வின் நிலை இன்னும் மோசம். 1975ல் இந்திராவின் ஒடுக்குமுறைக்கு உள்ளாகி தமிழக ஆட்சியை இழந்த தி.மு.க. அதன்பின் 1989 வரை ஆட்சிக்கு வர முடியவே இல்லை. 1989ல் ஆட்சிக்கு வர உதவியது போஃபர்ஸ் பீரங்கி பேர ஊழல் எதிர்ப்புதான். தெருமுனைகளிலெல்லாம் பீரங்கி பொம்மை வைத்து பிரசாரம் செய்த தி.மு.க.வுக்காக ராஜீவ் ஊழல் எதிர்ப்பு நாயகன் வி.பி.சிங் தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்தார். இன்று ஸ்பெக்ட்ரம் ஊழலையடுத்து காங்கிரஸ் அணியை விட்டுவிட்டு வெளியேறவே முடியாமல் அதை ஆரக் கட்டித் தழுவிக் கொண்டிருக்கும் தி.மு.க.வால் நெருக்கடி காலம், போஃபர்ஸ் இரண்டைப் பற்றியும் பேசவே முடிவதில்லை.போஃபர்ஸ் ஊழல் பத்திரிகைத் துறைக்கு பெரும் ஊக்கத்தைக் கொடுத்தது. ஹிந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் இரண்டு பத்திரிகைகளும் போட்டி போட்டுக் கொண்டு ஊழலை அம்பலப்படுத்தின. உண்மையில் இதற்கான முழு பெருமை பத்திரிகைகளை விட நிருபர் சித்ரா சுப்ரமணியத்துக்கே உரியது. அவர் ஹிந்துவில் இருந்தபோது அது போஃபர்ஸ் பற்றி வெளியிட்டது. கருத்து வேறுபாட்டால் அவர் எக்ஸ்பிரஸுக்குச் சென்றதும் அங்கேயும் அவர் தம் புலனாவைத் தொடர்ந்தார். அவரை இரு ஏடுகளும் சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டன.
2.jpg
ஸ்வீடனில் இருந்தசித்ரா, போஃபர்ஸ் ஊழலைத் துப்பறிந்தபோது கருவுற்றிருந்தார். சில மாதங்களில் குழந்தை பிறந்தது. உடல் நிலையைப் பொருட்படுத்தாமல் சித்ரா தொடர்ந்து தீவிரமாகப் பணியாற்றினார். அவரையும் குழந்தைகளையும் கடத்தப் போவதாக மிரட்டல்கள் வந்தன. அவருக்கு அன்னிய நிதி உதவி வருவதாகக் காட்ட, அவரது வங்கிக் கணக்கில் அநாம தேயமாக பணம் போடும் முயற்சிகள் நடந்தன. அவர் அதையெல்லாம் முறியடித்தார்.சித்ராவுக்கும் ஹிந்துவுக்கும் இருந்த உறவு முறியக் காரணம் என்ன என்பதை இப்போது ஸ்டென் தெரிவிக்கும் தகவல் சொல்கிறது. முக்கியமான ஆவணங்கள் சிலவற்றை ஸ்டென் கொடுத்தும் கூட, அவற்றை ஹிந்து பல மாதங்கள் வெளியிடாமல் தாமதம் செய்தது. ஸ்டென்தான் லீக் செய்கிறார் என்ற சந்தேகம் அரசியல் வட்டாரத்தில் பரவியது. இது அவருக்கு சிக்கலை ஏற்படுத்தியது. சித்ரா, ஹிந்துவை விட்டு எக்ஸ்பிரசுக்கு மாறினார். ஸ்டென் இப்போது சித்ராவுக்கு அளித்திருக்கும் பேட்டியில், ‘சித்ரா மீது இருந்த நம்பிக்கையால்தான் ஆவணங்களைக் கொடுத்ததாகவும்; பத்திரிகை பெயருக்காக அல்ல என்றும்; சித்ரா எந்தப் பத்திரிகையில் இருந்தாலும் கொடுத்திருப்பேன்’ என்றும் சொல்கிறார்.என் வாழ்க்கை திசையை மாற்றியதிலும் போஃபர்ஸ் ஊழலுக்கு ஒரு முக்கியமான பங்கு உள்ளது. கல்லூரி நாட்களுக்குப் பின் 16 வருடங்களாக நேரடி அரசியலில் பங்கேற்காத நான், வி.பி.சிங், ஜன் மோர்ச்சா, தேசிய முன்னணிகளைத் தொடங்கியதும் காங்கிரசுக்கு மாற்று அணி உருவாவதில் அக்கறையுடன் அவரை ஆதரித்து தமிழகத்தில் அவருடைய மேடைப்பேச்சு மொழி பெயர்ப்பாளனாக செயல்பட்டேன். 1988ல் மறைமலை நகரில் ராஜீவ் தலைமையில் காங்கிரஸ் மாநாடு நடந்தபோது, நானும் நண்பர் எழுத்தாளர் நாகார் ஜுனனும் அதைக் கிண்டல் செய்து அகில இந்திய போஃபர்ஸ் பீரங்கி ஊழல் ரசிகர் மன்ற மாநாட்டுச் சிறப்பு மலர் என்று ஒன்றை வெளியிட்டோம். அது முரசொலியின் இணைப்பாக வெளிவந்து பின்னர் அதுவே முரசொலியின் ‘புதையல்’ ஞாயிறு மலராயிற்று. ஓராண்டு காலம் அதில் காங்கிரஸ் எதிர்ப்புப் பிரசாரம் செய்தேன். தமிழகத்தில் தி.மு.க.வும் தில்லியில் வி.பி.சிங் தலைமையில் தேசிய முன்னணியும் ஆட்சிக்கு வந்ததும் நான் நேரடி அரசியலிலிருந்து விலகிக் கொண்டேன்.என்னைப் பொறுத்தமட்டில் போஃபர்ஸ் பீரங்கி பேர ஊழலில் தொடர்புடையவர்கள் யாரும் தண்டிக்கப்படாமல் போய்விட்டது வருத்தமாக இருந்தாலும், இரு காரணங்களுக்காக அந்த நிகழ்வை முக்கியமானதாக என்றும் கருதுவேன். இந்தியாவில் தில்லி அரசியலில் ஃபெடரலிசம் கொஞ்சமேனும் ஏற்பட அதுவே தூண்டுதலாக இருந்தது முதல் அம்சம். இன்று போல அன்று டெலிவிஷன் சேனல்கள் இல்லை. ஆனால் அச்சு ஊடகங்களான பத்திரிகைகளின் சக்தி எத்தகையது என்பதை சுதந்திர இந்தியாவில் காட்டிய முதல் நிகழ்வு அதுதான். எமர்ஜென்சியில் களங்கத்துக்குள்ளான பத்திரிகைத்துறை அதைத் துடைத்தெறிந்து தன் அசல் வலிமையை கடமையை போஃபர்சில் செய்தது.
இதிலிருந்தெல்லாம் நாம் கற்ற பாடங்கள் என்ன என்பதன் அடையாளங்கள் ஏதேனும் 25 வருடம் கழித்து நிலவும் இன்றைய அரசியல் சூழலில் தெரிகிறதா என்று யோசித்துப் பார்க்க வேண்டும்.


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

இனி உங்கள் பொறுப்பு! - ஓ பக்கங்கள் , ஞாநி

 
அன்புள்ள அணு உலை ஆதரிப்பாளர்களான பொதுமக்களுக்கு,
1.jpg
வணக்கம். உங்கள் அனைவருக்கும் ஏப்ரல் 1 வாழ்த்துகள். முட்டாள்கள் தின வாழ்த்து என்று தப்பாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அன்றைய தினம் நம்மை யாரும் ஏமாற்றிவிடக் கூடாது என்று காலையிலிருந்தே நாம் விழிப்பாக இருப்பதால் ஏப்ரல் 1 ஐ நான் சுமார் 20 வருடங்களாக விழிப்புணர்வு தினமாகவே கொண்டாடி வருகிறேன்.அன்றைய ஒரு நாள் காலை மட்டுமல்ல, 365 நாட்களும் 24 X 7, நாம் விழிப்பாக இருக்க வேண்டும் என்று விரும்புவோர்தான் கூடங்குளம் அணு உலையைக் கடுமையாக எதிர்த்து வந்தோம்.இப்போது அணு உலையை இயக்குவதற்கான பணிகள் படுவேகமாக நடக்கின்றன. அணு உலை எதிர்ப்புப் போராட்டம் நசுக்கப்பட்டுவிட்டது. மின்சாரம்தான் முக்கியம், அதற்காக கூடங்கூளம் அணு உலை தேவை என்று நம்பிய உங்களில் பலரும் மகிழ்ச்சியாக இருக்கக் கூடும். மகிழ்ச்சியடைய உங்களுக்கு எதுவும் இல்லை. வருத்தப்படவும் எங்களுக்கு எதுவும் இல்லை என்பதை தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள்.
இருநூறு நாட்களுக்கும் மேலாக துளி வன்முறை இல்லாமல் அமைதியாகப் போராடிய கூடங்குளம் இடிந்தகரை மக்களை போலீஸ், ராணுவம், கடற்படைகளைக் கொண்டு முற்றுகை நடத்தி, சோறு, தண்ணீர், பால்,மருந்து எதுவும் போக விடாமல் தடுத்து அரசுகள் செய்த நடவடிக்கை உங்களுக்கு மெய்யாகவே மகிழ்ச்சிதானா? நாளை தமிழ்நாட்டில் எந்தப் பகுதியிலும் எந்த மக்களும் எந்தக் கோரிக்கைக்காகவும், அமைதியாக வன்முறை இல்லாமல் அகிம்சை வழியில் போராடினால், இதே நடவடிக்கையை அரசுகள் எடுத்தால் சம்மதிப்பீர்களா? அந்த நம்பிக்கை இனியும் உங்களுக்கு இருக்க முடியுமா?போராட்டக் குழுவில் சிலரை முதலில் போலீஸ் கைது செய்த தகவல் கேட்டதும் கூட்டப்புளி என்ற கிராம மக்கள் தங்கள் கிராம சாலைக்கு வந்து சாலையில் அமர்ந்து மறியல் செய்தார்கள். அதில் 178 பேரைக் கைது செய்த போலீஸ் என்னென்ன குற்றச்சாட்டு களைப் பதிவு செய்தார்கள் தெரியுமா? இ.பி.கோ 143, 188, 353, 294-ஆ, 506(2), 7 1(அ) ஆகியவை. கோர்ட்டில் போலீஸ் சொன்னது இதுதான். 178 பேரும், அரசுக்கு எதிராகப் போர் தொடுப்பது (பிரிவு 121), அதற்காக சதி செய்வது (பிரிவு 121-அ), ரகசியமாக மறைந்திருப்பது (பிரிவு -123)" ஆகிய குற்றங்களில் ஈடுபட்டிருப்பதால், ஜாமீனே தரக்கூடாது என்றார்கள். இ.பி.கோ 121 க்கான அதிகபட்ச தண்டனை தூக்கு. இ.பி.கோ 121அ, 123 க்கு அதிகபட்சம் ஆயுள் தண்டனை தரலாம். இதெல்லாம் யார் மீது? 30 சிறுவர்கள், 42 பெண்கள்,106 பேர் ஆண்கள் மீது!இதற்காக நீங்கள் மகிழ்ச்சியடைவீர்களா? இந்தப் போராட்டத்தில் அம்பலமானது அரசு மட்டுமல்ல; நமது ஜனநாயகத்தின் மிக முக்கியமான ஒவ்வொரு தூணும்தான். அரசு இடிந்தகரைப் பந்தலுக்கு எல்லா கிராமங்களிலிருந்தும் மக்கள் திரண்டு வந்து அறப்போராட்டத்தில் கலந்து கொள்வதைத் தடுக்கவும் உணவுப் பொருள் வழங்கலை வெட்டவும் 144 தடை உத்தரவு போட்டது. இந்த உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தபோது நீதிபதிகள் விசித்திரமான காரணம் சொல்லி தடை உத்தரவுக்குத் தடை கொடுக்க மறுத்தார்கள். அரசின் நிர்வாக முடிவுகளில் தலையிட விரும்பவில்லையாம். அப்படியானால், அரசின் நிர்வாக முடிவான அண்ணா நூலக இட மாற்றத்துக்கு மட்டும் தடை விதித்தது எப்படி?அரசியல்வாதிகள், அறிவுஜீவிகள், ஊடகங்கள் என்று மூன்று முக்கிய பிரிவினரும் மேலும் மேலும் பொய்களை உங்களிடம் அள்ளி அள்ளி வீசினார்கள். ஒரு பொய் அம்பலமானதும் அடுத்த பொய்யை வீசுவார்கள். உதயகுமார் தலைமையிலான போராட்டக் குழுவுக்குத் தொண்டு நிறுவனம் வழியே வெளிநாட்டு உதவி என்ற பொய்யை ஓயாமல் டி.வி.யில் சொன்ன நாராயணசாமி, நாடாளுமன்றத்தில் அதற்கான எந்த ஆதாரமும் இதுவரை இல்லை என்று ஒப்புக் கொண்டார். சாதாரண ஜெர்மன் சுற்றுச்சூழல் ஆர்வலரை ஒரு குற்றமும் சாட்டாமல் வழக்கும் போடாமல் நாடு கடத்தினார்கள். இவையெல்லாம் அம்பலமானதும் நக்சல் தொடர்பு என்று ஆரம்பித்தார்கள். இடிந்தகரை பந்தலிலே நக்சல்கள் உட்கார்ந்திருப்பதாக சொன்னார்கள். நந்திகிராம் விவசாயிகள் போராட்டம் போல இதிலும் நக்சல்கள் என்றார்கள். நந்திகிராமில் ஆரம்பம் முதல் போராட்டம் முத்தரப்பினரின் வன்முறை மோதலாக இருந்தது. கூடங்குளத்தில் துளி வன்முறையும் இல்லை. ஆயுதம் வைத் திருந்தது போலீஸ் மட்டும்தான்.
சில தினசரிகளும் டி.வி. சேனல்களும் சொன்ன பொய்கள் படுமோசமானவை. அயோக்கியத்தனமானவை. அரசின் அராஜகம், அறிஞர்களின் மழுப்பல், ஊடகங்களின் பொய்கள் பற்றியெல்லாம் இப்போது ஏன் உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன் தெரியுமா? அணு உலையைத் திறக்கக்கூடாது என்று போராடிய எங்களுக்கு எதிராக மட்டும் நடந்தவை அல்ல இவை. மின்சாரத்துக்காக அணு உலை வேண்டும் என்று விரும்புகிற உங்களுக்கு எதிராகவும் இவை இனி தொடரப் போகின்றன என்பதனால்தான்.எங்களைப் பொறுத்தவரையில் இந்தப் போராட்டம் தோல்வியே அல்ல. அறவழியில் இருந்த ஆயிரக்கணக்கான மக்களில் ஒருவர் கூட அரசின் தடியடியிலும் துப்பாக்கிச் சூட்டிலும் ரத்தம் சிந்த விடாமல் காப்பாற்றியது உதயகுமார் தலைமையிலான போராட்டக் குழுவினரின் மிகப் பெரிய வெற்றி. போராட்டக் குழுவினருக்கு மனிதக் கேடயமாக இருந்த மக்கள், முள்ளிவாக் கால் நிலையை அடையவிடாமல் காப்பாற்றியது சாதாரண சாதனை அல்ல.எல்லாவற்றையும்விட மிகப் பெரிய வெற்றி, கடந்த 50 வருடமாக அணுசக்தித் துறையிடம் என்ன கேட்டாலும் பதில் சொல்ல மாட்டோம் என்ற மமதையுடன் அஃபிஷியல் சீக்ரெட்ஸ் ஆக்டின் கீழ் அராஜகம் செய்து வந்த அணுசக்தித் தலைமை முதல் முறையாக தன்னிலை விளக்க அறிக்கைகளையும் விளம்பரங்களையும் தரும் நிலைக்கு இறக்கப்பட்டிருக்கிறது. மக்கள் கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல் அலட்சியப்படுத்திவிட்டு இனி ஓர் அடி கூட எடுத்து வைக்க முடியாது என்ற நிலையை உருவாக்கியவர்கள் கூடங்குளம் மக்கள்.உண்ணாவிரதம் இருக்கும் உதயகுமார் தினமும் சுடு சோறு சாப்பிடுகிறார். கூடு விட்டுக் கூடு பாவது போல தினமும் ஒரு இடத்தில் படுக்க பயந்து வீடு வீடாக ஓடுகிறார். போராட்டத்துக்கு மக்கள் ஆதரவு குறைந்து விட்டது. பல கிராம மக்கள் வருவதில்லை. இப்படி வரிசையாகப் பொய்கள். உலை வரக்கூடாது என்று நாங்கள் சொன்னோம். போலீஸ், ராணுவ உதவியுடன் எங்கள் மீது உலையைத் திணித்திருக்கிறது அரசாங்கம். உலை வேண்டும் என்று சொன்னவர்கள் நீங்கள். எனவே இனி அதன் பாதுகாப்புப் பற்றி எங்களைவிட அதிக அக்கறையும் எச்சரிக்கையும் உங்களுக்குத்தான் தேவை. ஏனென்றால் நாங்கள் அதைப் பற்றி முன்பே எச்சரித்து விட்டோம். எல்லாம் முறையாக நடக்கும் என்று நம்பியவர்கள் நீங்கள். முறையாக நடக்கிறதா என்று இனி கவனிக்க வேண்டியதும் நீங்கள்தான். இப்போது அணு உலையில் ஆபத்தான யுரேனியம் எரிபொருள் கோல்களை பொருத்தத் தயார் நிலை வந்துவிட்டது என்று சொல்கிறது அரசு. அப்படிப் பொருத்தும் முன்பு என்னென்ன செய்ய வேண்டும் என்று தெளிவான விதிகளை (அரசு சார்பான) அணுசக்திக் கட்டுப்பாட்டு வாரி யமும், சர்வதேச அணுசக்தி முகமையும் நிர்ணயித்திருக்கின்றன. அந்த விதியில் மிக முக்கியமான விதியைப் பின்பற்றாமலே யுரேனியம் கோல்களைப் பொருத்தினால், விளைவுகளுக்கு அரசு மட்டுமல்ல; நண்பர்களே, அணு உலை ஆதரவாளர்களான நீங்களும்தான் பொறுப்பு.
அணு உலையைச் சுற்றிலும் 30 கிலோ மீட்டர் பகுதியில் உள்ள மக்களுடன் பாதுகாப்பு ஒத்திகைகள், பேரிடர் ஏற்பட்டால் அவர்களை அகற்றுவதற்கான பயிற்சிகள் இவற்றை மேற்கொள்ளாமல், யுரேனியம் எரிபொருளை உலையில் ஏற்றக்கூடாது எனபது முக்கியமான விதி. அந்த விதியைப் பின்பற்றச் செய்வது உங்கள் பொறுப்பு. முப்பது கிலோ மீட்டர் சுற்றளவில் 15 லட்சம் மக்கள் இருக்கிறார்கள். இதுவே விதிக்கு முரணானது. இவ்வளவு மக்கள் நெருக்கம் இருக்கும் இடத்தில் உலை இருக்கக்கூடாது என்பது விதி. நீங்கள் மின்சாரம் வேண்டும் என்று கூச்சலிட்டதால் இந்த விதியை மீறி உலையை எங்கள் மீது திணித்திருக்கிறது அரசு. பேரிடர் ஒத்திகை எப்போது நடக்கும்? 15 லட்சம் மக்களை ஆபத்தென்றால் இன்னோர் இடத்துக்கு விரைந்து அழைத்துச் செல்வதற்கான ஒத்திகை எப்போது? எப்படி?அடுத்து மூன்றாவது உலை கட்டுவதற்கான விண்ணப்பத்துக்கு அமைச்சர் ஜெயராம் ரமேஷின் தலைமையில் இயங்கும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி மறுத்திருக்கிறது. காரணம் கடலோரக் கட்டுப்பாட்டு விதியை அது மீறுவதுதான். முதல் இரு உலைகளுமே அந்த விதியை மீறியவை தான்.பேரிடர் தயார் நிலை ஒத்திகை இருக்கட்டும். விபத்து நடந்தால் இழப்பீடு பற்றிய விதி என்ன என்று அரசிடம் கேட்டுத் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். இந்திய அரசின் இழப்பீடு சட்டம் செல்லாது என்கிறது ரஷ்யா. தானும் இந்திய அரசும் 2008ல் போட்ட ஒப்பந்தப்படிதான் இழப்பீட்டுப் பொறுப்பு என்கிறது. அந்த ஒப்பந்த விவரம் ரகசியமாக வைக்கப்பட்டிருக்கிறது. அதன்படி முழுப் பொறுப்பும் இந்திய அரசுடையதுதான் என்கிறார்கள். ஒப்பந்தத்தை வெளியிட்டால்தான் உண்மை தெரியும். முழு பாதுகாப்பு உள்ள உலை என்று மார்க்ஸ், லெனின், கோர்பசேவ் மீதெல்லாம் சத்தியம் செய்யும் ரஷ்யா ஏன் இழப்பீட்டுக்கு பயப்படுகிறது என்று நீங்கள்தான் இனி விசாரிக்க வேண்டும். இதையெல்லாம் இனி இந்த முகவரிகளுக்குக் கடிதம் எழுதி நீங்கள் கேட்டுத் தெரிந்துகொண்டு எங்களுக்கும் சொன்னால் மகிழ்ச்சியடைவேன். 1. The Chairman Atomic Energy Regulatory Board, Niyamak Bhavan, Anushaktinagar, Mumbai 400 094, 2. International Atomic Energy Agency,Vienna International Centre, P.O. Box 100 A& 1400 Vienna Austria Email : Official.Mail@iaea.org 3.The Head, Safety Research Institute, IGCAR Campus, Kalpakkam 603 102, Tamil Nadu Email: ycm@igcar.gov.in, ksm@igcar.gov.in. இது தவிர அப்துல் கலாம், மன்மோகன் சிங், ஜெயலலிதா மின்னஞ்சல் முகவரிகளெல்லாம் ஏற்கெனவே உங்களிடம் இருக்கும்தானே.
அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தின் இந்தச் சுற்று முடிவில் கூடங்குளம் உலையை மூடச் செய்ய எங்களால் முடியாமல் போய் இருக்கலாம். ஆனால் மக்கள் வாயை இனி மூட முடியாது என்ற நிலையை கூடங்குளம் போராளிகள் அரசுகளுக்கு ஏற்படுத்தியிருக்கிறார்கள். நமக்கு மின்சாரம் தேவை. அதற்கு அணு உலை தேவையில்லை என்றோம் நாங்கள். நீங்களோ அணு உலை வந்தால்தான் மின்சாரம் கிடைக்கும் என்று அரசு செய்த பிரசாரத்தை நம்பினீர்கள். உங்கள் கருத்தை உருவாக்கிய அரசுகள் போலீஸ் துணையுடன் உங்கள் விருப்பப்படி உலையை இயக்கப் போகிறார்கள். இனி அந்த உலை பாதுகாப்பாக நடக்கிறது, விதிகள் முறையாகப் பின்பற்றப்படுகின்றன என்பதையெல்லாம் உறுதி செய்யும் பொறுப்பு எங்களுடையதல்ல. உங்களுடையதுதான். இதுவரை நீங்கள் வேடிக்கை பார்த்தீர்கள். இனி நாங்கள் வேடிக்கை பார்க்கட்டுமா?


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே...ஓ பக்கங்கள் , ஞாநி

1.jpg
 
சென்ற வாரம் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஒபாமாவின் வெள்ளை மாளிகையில் நடந்த ஒரு நிகழ்வை என் கவனத்துக்குக் கொண்டுவந்தார் அமெரிக்க வாழ் நண்பர் அருள். ஒரு சிறுவன் விளையாட்டு பீரங்கி போன்ற ஒன்றை இயக்கிக் கொண்டிருக்கிறான். அதிலிருந்து வீசப்படும் மிட்டாய்கள் எங்கே எவ்வளவு தொலைவு போகின்றன என்று கண்ணை அகல விரித்துக் கொண்டு குழந்தை போல ஆவலோடு பார்த்துக் கொண்டிருக்கிறார் ஒபாமா.வெள்ளை மாளிகையில் இரண்டாவது வருடமாக நடக்கும் சிறுவர் - இளைஞர்களின் அறிவியல் கண்டுபிடிப்புக் கண்காட்சியின்போது நடந்த நிகழ்ச்சி அது. அமெரிக்காவின் பல மாநிலங்களிலிருந்து சுமார் 100 இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுடைய கண்டுபிடிப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டன. இது பள்ளிக்கூடங்களில் வழக்கமாக மாணவர்களுக்குப் பயிற்சிக்காக நடத்தப்படும் அறிவியல் கண்காட்சி போன்றது அல்ல.
 
மாணவர்களின் கண்டுபிடிப்புகள் வியப்பூட்டுகின்றன. லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த ஹேலீ, அமெரிக்காவின் காஃபிக் கடைகளில் சர்க்கரைப் பொடிகளை அடைத்துத் தரும் காகிதப் பாக்கெட்டுகளுக்கு மாற்றைக் கண்டுபிடித்திருக்கிறாள். “ஸ்டார்பக்ஸ் கம்பெனியின் காஃபிக் கடைகளில் மட்டுமே வருடத்துக்கு 20 லட்சம் பவுண்ட் குப்பை சேர்கிறது. இதை ஒழிக்க இந்தக் கண்டுபிடிப்பு உதவும். அதனால்தான் ஹேலீக்கு இந்த ஐடியாவை வியாபாரமாக மாற்ற மாஸ்டர் கார்ட் கம்பெனி பத்தாயிரம் டாலர் பரிசு அளித்திருக்கிறது” என்று சொன்னார் ஒபாமா. ஹேலீ கண்டுபிடித்தது கரையக் கூடிய சர்க்கரைப் பை. உருளைக் கிழங்கு ஸ்டார்ச்சிலிருந்து தயாரித்தது. ஹேலீக்கு வயது 16! கான்சாஸ் நகரில் ஆறாவது படிக்கும் வெஸ்லியும் தாம்ப்சனும் மதிய சாப்பாடு எடுத்துச் செல்லும் டிபன் பாக்ஸை உருவாக்கியிருக்கிறார்கள். இது வெறும் டிபன் பாக்ஸ் அல்ல. இதில் காலையில் வைத்த சாப்பாட்டை மதியம் எடுக்கும்போது சாப்பாடு கெடாமல் இருப்பதற்காக அல்ட்ரா வயலட் கதிர்கள் செயல்பட்டு உணவில் கிருமிகள் இல்லாமல் அழித்துவிடும். டென்னசி மாநிலத்தைச் சேர்ந்த மேரியானா ஆடு வளர்ப்பில் மரபியல் அறிவியலைப் பயன்படுத்தியிருக்கிறாள். தங்கள் பண்ணையில் வளர்க்கும் ஆடுகளின் ரோமம் செயற்கையான நிறத்தில் வளர்க்கப்படுவதை மாற்றி இயற்கையான நிறத்தில் வளர்வதற்கு மரபியல் கூறை ஆராய்ந்து மாற்றங்களைச் செய்திருக்கும் மேரியானாவுக்கு வயது 18.அறிவியல் ஆய்வுகள் செய்து புதுக் கண்டுபிடிப்புகளைச் செய்ய மாணவர்களுக்குத் தேவையான நிதியை அவர்கள் பல விதங்களில் திரட்டியிருப்பதை ஒபாமா தன் பேச்சில் சுட்டிக்காட்டுகிறார். டெக்சாஸ் மாநிலத்திலேயே வசதி குறைவான பகுதியான பிரசிடோவில் மாணவர்கள் ராக்கெட் தொழில்நுட்ப ஆய்வு செய்தார்கள். “இதற்குப் பணம் திரட்டுவதற்கு, ஆசிரியர்கள் தின்பண்டங்கள் சமைத்து சர்ச் வாசலில் விற்றார்கள். ஒரு ஆட்டை ஏலம் விட்டார்கள். 200 மைல் தொலைவில் போய் மலிவாக உணவு வாங்கிவந்து லாபத்துக்கு விற்றார்கள்” என்று ஒபாமா சொன்னார். கடலில் எண்ணெய்க் கசிவுகள் ஏற்படுவதால் கடல் நாசமாவதைத் தடுக்க, ஒரு மாணவன் ஒரு படகைக் கண்டுபிடித்திருக்கிறான். இந்த ஆளில்லாத படகை எண்ணெய்ப் படலம் உள்ள கடல்பரப்பில் இயக்கினால், அது அந்தப் படலத்தை நீரின் மேற்பரப்பிலேயே துடைத்து எடுத்துவிடும்.இன்னொரு மாணவன் நியூயார்க்கைச் சேர்ந்த ஏய்டன் டையர். சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும்போது அதிக நேரம் சூரிய ஒளியைப் பெறுவது எப்படி என்று ஆய்வு செய்தான். மரங்களின் கிளைகள் மிக அதிக அளவு சூரிய ஒளியைப் பெற வசதியான வடிவத்தில் வளர்வதைக் கவனித்து அதைப் பின்பற்றி, சோலார் பேனல்களை அமைத்தால் அதிக சூரிய ஒளி பெறமுடியும் என்று நிரூபித்திருக்கிறான். கிளைகளின் அமைப்புகள் கணிதமுறையில் Fibonacci (ஃபிபனாச்சி) எண் அடிப்படையில் இருப்பதே அவன் ஆய்வுக்கு அடிப்படை. (முதல் இரு எண்களின் கூட்டுத் தொகையாக அடுத்த எண் இருப்பதே Fibonacci எண் வரிசை 0,1,1,2,3, 5,8, 13,21,34,55..... என்று போகும்.) இந்தச் சிறுவனுக்கு வயது 13.
2.jpg
 
கலிபோர்னியா மாணவி ஏஞ்செலா புற்றுநோயைக் குணப்படுத்தும் மருந்து நேரடியாக புற்றுநோய்க்கான ஸ்டெம் செல்களுக்கே சென்று வேலை செய்ய வைப்பதற்கு நானோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் ஆய்வு செய்திருக்கிறாள். இந்த ஆய்வைத் தொடர்வதற்காக அவளுக்கு சீமென்ஸ் நிறுவனம் ஒரு லட்சம் டாலர் பரிசளித்திருக்கிறது. ஏஞ்செலாவின் வயது 17.ஜார்ஜியாவில் படிக்கும் இந்தியச் சிறுவன் ஆனந்த் சீனிவாசன், தம் மூளையின் மின்னலைப் பதிவுகளிலிருந்து (EEG) எடுத்த தகவல்களை வைத்து, கணினிக்கு ஒரு செயல் நிரலியை எழுதி அதைக் கொண்டு ஒரு ரோபோ கையை இயக்கமுடியுமா என்று ஆய்வு செய்திருக்கிறான். கை, கால், துண்டிக்கப்பட்டவர்கள், முடக்குவாதத்தில் செயலிழந்தவர்களுக்கு இந்தக் கண்டுபிடிப்பு பயன் தரக் கூடும். ஆனந்தின் வயது 15. விரல்களில்லாத ஒரு சிறுமி எழுத உதவுவதற்காக, செயற்கைக் கையை உருவாக்கியிருக்கும் அயோவாவைச் சேர்ந்த கேபி, மெக்கன்சி, கேட் மூவரும் நடுநிலைப்பள்ளி மாணவர்கள்.நெவாடாவைச் சேர்ந்த டெய்லர் வில்சன், சிறு அளவில் அணுக்கதிரியக்கமுள்ள பொருள்களை யாரேனும் எடுத்துச் சென்றால் கண்டறியக்கூடிய மானிட்டரை உருவாக்கியிருக்கிறான். துறைமுகங்களில் சரக்கு கண்ட்டெய்னர்களில் யுரேனியம் 234, ஆயுதத்துக்கான புளூட்டோனியம், செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருந்தால் இந்த மானிட்டர் சொல்லிவிடும். டெய்லரின் வயது 17.ஜெசிகா, காட்டன், ஆனா மூவரும் உருவாக்கியிருப்பது புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வீடிழந்தோரை, தங்க வைப்பதற்கான குடில். இதில் சுத்தமான குடிநீர், விளக்கொளி எல்லாம் மறுசுழற்சி முறையில் அமைக்கப்பட்டுள்ளன. கலிபோர்னியா மாணவன் பெனெடிக்ட் விளையாட்டு வீரர்களின் ஹெல்மெட்டில் பொருத்த கண்டுபிடித்துள்ள கருவி, விளையாடும்போது ஹெல்மெட்டில் அடிபட்டால், அந்த அடி விளையாட்டு வீரரின் மூளையைப் பாதிக்கும் அளவு பலமானதா என்பதை உடனே கண்டறிந்து தெரிவித்து விடும். உடனே வீரரைக் களத்திலிருந்து வெளியேற்றி, சிகிச்சைக்கு அனுப்ப முடியும். இதே போல ராணுவ வீரர்களுக்கான ஹெல்மெட்டுக்கான கருவியை வர்ஜீனியாவைச் சேர்ந்த ஜாக் டட்லியும் சிட்னி டயானியும் உருவாக்கியிருக்கிறார்கள். எல்லாரும் எட்டாவது படிக்கும் மாணவர்கள். பென்சில்வேனியா மாணவன் மரியன் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிப்பதற்காக விலை மலிவான கருவியை உருவாக்கியிருக்கிறான். இவன் வயது 17.
 
3.jpg
 
அமெரிக்காவில் ஸ்டெம் எனப்படும் சயன்ஸ் (எஸ்), டெக்னாலஜி ( டி) , இன்ஜினீயரிங் (ஈ), மேதமேட்டிக்ஸ் ( எம்) ஆகியவற்றைப் பயிற்றுவதற்கான ஒரு லட்சம் பள்ளி ஆசிரியர்களை உருவாக்க, ஒபாமா எட்டுக் கோடி டாலர்களையும் இந்தத் துறைக் கல்வியை மேம்படுத்த இன்னொரு 10 கோடி டாலர்களையும் ஒதுக்கியிருக்கிறார்.பணம் மட்டுமே இதில் விஷயம் அல்ல. இந்தியாவில் சில சமயங்களில் இதை விட அதிக பணம் கூட ஒதுக்கப்படுகிறது. அணுகுமுறையே முக்கியமானது. கல்வித் துறையின் அமைச்சர்கள், அதிகாரிகள், ஆசிரியர்கள் ஆகியோரின மன நிலை பெரும்பாலும் கூலிக்கு மாரடிப்பதாகவே இருக்கிறது. விதிவிலக்கானவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.குழந்தைகளின் வாசிப்புப் பழக்கத்தை எடுத்துக் கொள்வோம். அமெரிக்காவில் பொது வாழ்க்கையில் இருக்கும் பல பிரபலங்கள் ஆரம்பப் பள்ளிக்கூடங்களுக்குச் சென்று குழந்தைகளுக்கு, புத்தகம் வாசித்துக் காட்டி அவர்களையும் கூடவே படிக்கச் செய்யும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்கள். இது ஓர் இயக்கமாகவே அங்கே செயல்படுகிறது. பல குடியரசுத் தலைவர்கள், அவர்களுடைய மனைவிகள், எழுத்தாளர்கள் இதைச் செய்கிறார்கள். அண்மையில் கூட ஒபாமா, டெக்சாஸ் கல்லூரியில் உரையாற்ற சென்றபோது, அதற்கு முன்னர் ஒரு மழலையர் பள்ளியில் குழந்தைகளுக்குக் கதை படித்துக் காட்டினார். அவர்களின் வயது 5க்குக் கீழே. மொத்தம் எட்டே குழந்தைகள். அவரைச் சுற்றிலும் அரைவட்டமாக உட்கார, படக்கதையைப் படித்தார். நம் நாட்டில் எண்ணூறு மாணவர்களை, தம்மைச் சுற்றி உட்காரவைத்துக் கொண்டு போஸ் கொடுத்து இமேஜ் காட்டும் வேலை மட்டும்தான் நடந்திருக்கிறது. குடியரசு மாளிகையில் அறிவியல் கண்காட்சி ஏதும் நடந்ததும் இல்லை.இந்தியாவிலும் இளம் விஞ்ஞானிகளுக்கான விருதுகள், பரிசுகள் எல்லாம் இருக்கின்றன. ஆனால் அவை அரசின் விஞ்ஞானத்துறையின் கீழ் உள்ள ஆய்வகங்கள் சார்ந்ததாகவும் உயர்கல்வி முடித்தவர்களுக்கானவையுமாகவே இருக்கின்றன. பெரும்பாலும் பெலோஷிப் எனப்படும் உபகாரத் தொகைகள். அவை பள்ளி மட்டத்திலேயே ஆய்வை ஊக்குவிக்கவும் உதவவும் கூடிய சூழல் இங்கு இல்லை. சென்ற வருடம் மத்திய அரசின் கவுன்சில் ஃபார் சயன்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரியல் ரிசர்ச்சின் பொன்விழா விருதுகள் சிறுவர்களுக்கானவை அறிவிக்கப்பட்டன. மொத்தம் வந்த கண்டுபிடிப்புகள் 353. இரண்டே பரிசுகள்தான் தரப்பட்டன. ரூபாய் பத்தாயிரம் பரிசுகள், பார்வையற்றோருக்கான இன்ஃப்ரா ரெட் கதிர் பயன்படுத்தி வழிகாட்டும் ஸ்மார்ட் கம்புகளை உருவாக்கிய தில்லி மாணவன் சந்தனுவும், பைகள்,ஜெர்கின்களில் இருக்கும் சிப்புகளைப் பூட்டுவதற்குப் புது மாடல் பூட்டை உருவாக்கியதற்காக பஞ்சாபைச் சேர்ந்த அன்கித் குமாரும் பெற்றனர். முதல் பரிசான ஐம்பதாயிரத்துக்குத் தகுதியாக எந்தக் கண்டுபிடிப்பும் இல்லை என்று அறிவிக்கப்பட்டது.
 
வெளிநாடுகளுக்கு நாம் ஏற்றுமதி செய்யும் மெத்தப் படித்த இளைஞர்களில் கூடப் பெரும்பாலோர் ஒரே வேலையைத் திரும்பத் திரும்ப சலிக்காமல் நேர்த்தியாகச் செய்து தரும் நல்ல வேலையாட்களாகவே தயாரிக்கப்பட்டிருக்கிறார்கள். உயர் ஆய்வுகள் செய்வதற்கான மனநிலை, துடிப்பு, உழைப்பு, அதற்கேற்ற வசதிகள், நெளிவு சுளிவான விதிமுறைகள் முதலியவற்றுடன் நம் இளைஞர்கள் உருவாவதற்கேற்ற சுழல் இங்கே நம் பள்ளிகள் தொடங்கி, பல்கலைக்கழகங்கள் வரை இல்லை. இவற்றில் அக்கறை காட்டக்கூடிய அதிகாரிகள், அரசியல்வாதிகள் எண்ணிக்கை மிக மிகக் குறைவாகவே இருக்கிறது. இன்னொரு பக்கம் நம்மிடம் இல்லாததே இல்லை; எல்லாம் இருந்தது என்று கற்காலப் பெருமைகள் பற்றிப் புலம்புவோரும் அதையும் மெய்யென நம்புவோருமாக ஒரு கூட்டம் இருக்கிறது. எப்போது, எப்படி மாற்றம் வரும்? உங்களோடு சேர்ந்து நானும் ஏங்குகிறேன்.
 
இந்த வாரக் கேள்வி!
 
அடையாறு புற்று நோய் நிலையத்தைப் பல வருடங்களாக நிர்வகித்துவரும் புகழ் பெற்ற மருத்துவர் வி. சாந்தாவை தங்கள் பிரசாரத்துக்கு அணுசக்தித்துறை பயன்படுத்துகிறது. ‘ கதிரியக்கத்தால் புற்று நோய் வராது’ என்று சாந்தா சொல்லும் டி.வி. விளம்பரங்களை அணுசக்தித் துறை வெளியிட்டுள்ளது. இதே சாந்தாவின் அடையாறு புற்று நோய் நிலையத்தின் இணையதளத்தில் புற்று நோய்க்கான காரணங்கள் பட்டியலில் ‘அயனைசிங் ரேடியேஷன்’ குறிப்பிடப்பட்டிருக்கிறது ! (http://www.cancerinstitutewia.org/abtcancer.htm)எது உண்மை ? சாந்தா அணுசக்தி விளம்பரத்தில் சொல்வதா? தம்முடைய கேன்சர் சென்ட்டரின் இணையதளத்தில் சொல்வதா? இரண்டில் ஒன்றுதானே உண்மையாக இருக்க முடியும் ?


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

எழுத்து அரசியல்! - ஓ பக்கங்கள்

 
1.jpg
அண்மைக்காலமாகக் கடுமையாகத் தாக்கிப் பேசுவது, நையாண்டி செய்வது, போட்டி விளம்பர உத்திகளைக் கையாள்வது என்று சில எழுத்தாளர்களும் அவர்களுக்குக் களம் அமைத்துக் கொடுப்பது வியாபாரத்துக்கு உதவும் என்று கருதும் சில பதிப்பாளர்களும் களமிறங்கியிருக்கிறார்கள். இந்தச் சர்ச்சைகளில் இப்போது அடிபடும் பெயர்கள் எஸ்.ராம கிருஷ்ணன், சாரு நிவேதிதா, சு.வெங்கடேசன், மனுஷ்ய புத்திரன், பத்ரி சேஷாத்ரி (ஜெயமோகன் சமண தலயாத்திரை போய் விட்டதால், அவர் தொடர்பான சர்ச்சை எதுவும் இந்த சீசனில் எழவில்லை).இந்த சீசனில் அதிக சர்ச்சைகளுக்கு உள்ளாகியிருக்கக்கூடியவர் இதுவரை சர்ச்சைகளில் சிக்காத எஸ்.ராமகிருஷ்ணன்தான் (எஸ்ரா). சங்கீத சீசனுக்கு முன்பாக இலக்கிய சீசன் ஒன்றைச் சென்னையில் ஸ்தாபிக்க வேண்டும் என்ற கருத்தில் அவர் உலகப் புகழ்பெற்ற சில படைப்புகள் பற்றிய இலக்கியப் பேருரையை ஒரு வாரம் தொடர்ந்து நடத்தினார். அதில் அவர் காந்தி- டால்ஸ்டாய் பற்றிச் சொன்னதில் சர்ச்சை ஏற்பட்டது. டால்ஸ்டாய், காந்திக்கு எழுதிய கடிதத்தில் திருக்குறளையும் வள்ளுவரையும் குறிப்பிட்டிருப்பதாகவும் அதிலிருந்து தான் காந்திக்கு குறள் மீது கவனம் ஏற்பட்டதாகவும் எஸ்ரா பேசியிருந்தார். அடுத்து காந்திக்கு கணிதத்தில் பேரார்வம் இருந்ததாகச் சொல்லியிருந்தார். தன் வாழ்நாளில் காந்தி சத்திய சோதனை, ஹிந்த் ஸ்வராஜ் இரு நூல்கள் மட்டுமே எழுதியதாகவும் தெரிவித்தார்.இந்த மூன்று கருத்துக்களுக்கும் கடுமையான மறுப்புகள் வந்தன. ஆனால் எஸ்ரா பல வாரம் பதில் சொல்லவே இல்லை.
2.jpg
கடைசியாக தம் இணைய தளத்தில், “பொதுவாக நான் அவதூறுகள், அருவருப்பான கேலிகளுக்குப் பதில் சொல்வதே கிடையாது, ஒரு நண்பர் தினமணியில் காந்தி பற்றிய எனது உரை தவறானது என்று வெளியிடப்பட்டுள்ள செய்தியைச் சுட்டிக்காட்டி இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று கேட்டிருந்தார். இது போன்ற அவதூறுகள் எதையும் ஆழ்ந்து படிக்காதவர்களால் உருவாக்கப்படுவது என்று பதில் சொல்லத் தயங்கி விட்டு விட்டேன். அதே அவதூறு தற்போது மறுபடியும் கிளம்பும்போது பதில் சொல்லியாக வேண்டிய அவசியமிருக்கிறது,” என்று எழுதி பதில் சொன்னார். தான் வாசித்த ஒரு கட்டுரையில் இருந்துதான் டால்ஸ்டாய் திருக்குறளை வாசித்த தகவலைத் தெரிவித்ததாகச் சொன்னவர், அது என்ன கட்டுரை, யார் எழுதியது, எப்போது எழுதியது என்பதையெல்லாம் சொல்லவில்லை. ஆனால் தம் மீதான அவதூறுகள் “எதையும் ஆழ்ந்து படிக்காதவர்களால் உருவாக்கப்படுவது என்று பதில் சொல்லத் தயங்கி விட்டுவிட்டேன்” என்று எஸ்ரா சொன்னது மிகவும் தவறானது. ஏனென்றால் தினமணியில் எஸ்ராவை மறுத்து விவரமாக எழுதியவர் காந்தியின் எழுத்துகள் அனைத்தையும் தொகுக்கும் பணியில் பல்லாண்டுகள் பணியாற்றிய ஆசிரியர் குழு உறுப்பினர் லா.சு.ரங்க ராஜன். காந்தியும் டால்ஸ்டாயும் பரிமாறிக் கொண்ட கடிதங்கள் எத்தனை, ஒவ்வொன்றிலும் என்ன எழுதப்பட்டிருந்தது என்ற விவரங்களுடன், ஒரு இடத்தில் கூட டால்ஸ்டாய் வள்ளுவரையோ, குறளையோ சொல்லவில்லை என்பதை நிறுவியிருந்தார் லா.சு.ரா. காந்தியின் கணித ஆர்வத்துக்கு ஆதாரமாக எஸ்ரா காட்டிய ஒரே சான்று 1944ல் வீட்டுச் சிறையில் இருந்தபோது மனு காந்திக்குக் கற்பிப்பதற்காக காந்தி வரைந்த ஜியாமெட்ரி படம். இந்த லாஜிக்படி ஒவ்வொரு நடுத்தர வர்க்கக் குடும் பத்திலும் கணிதத்தில் பேரார்வம் உடையவர்கள் நிறைந்திருப்பதாகச் சொல்லி விடலாம்.எஸ்.ராமகிருஷ்ணன் தன் எழுத்திலும் பேச்சிலும் உலகின் பல மூலைகளிலும் இருக்கக்கூடிய நூல்கள், சினிமாக்கள் ஆகியவற்றில் இருந்து மேற்கோள்களை அள்ளிக் குவிப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பவர். அது அவர் எழுத்துக்கு மெருகூட்டுபவை. எனவே அதில் ஒரு சிலவற்றில் கடும் தவறுகள் ஏற்படும்போது, அவர் எழுத்தின் முழு நம்பகத்தன்மையே குலைந்து போய்விடுகிறது. இந்த ஆபத்தை அவர் சரியாக உணரவில்லை என்பதையே காந்திடால்ஸ்டாய் சர்ச்சையில் அவர் எதிர்வினை காட்டுகிறது. இலக்கியப் பேருரை சீசன் முடிந்து சென்னைப் புத்தகக் காட்சி தொடங்கிய சமயத்தில் சாகித்ய அகாதமி விருது அறிவிக்கப்பட்டது.
3.jpg
தம் முதல் நாவலான காவல் கோட்டத்துக்காகப் பரிசைப் பெற்ற சு.வெங்கடேசன், எஸ்ராவின் பழைய நண்பர். நாவல் வெளியான சமயத்தில் அதைக் குப்பை என்று கடுமையாக விமர்சித்தார் எஸ்ரா. இல்லை, அது ஒரு முக்கியமான படைப்பு என்று பதில் கட்டுரை எழுதினார் ஜெயமோகன். அது ஒரு திருட்டுப் படைப்பு என்று சிலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். தன்னுடன் சுற்றிக் கொண்டிருந்த நண்பனும் எழுத்தாளனாக மாறி பெரிய நாவல் எழுதிவிட்டான் என்பதைத் தாங்கமுடியாத உளவியல் சிக்கலில் எஸ்ரா இருப்பதாக வெங்கடேசன் சொன்னார்.உளவியல் சிக்கலில் எழுத்தாளர்கள் இருப்பது உண்மைதான். பல எழுத்தாளர்கள் இப்போது பாராட்டு விழாக்கள், வெளியீட்டு விழாக்களை பிரம்மாண்டமாகவும் கட் அவுட், ப்ளெக்ஸ் பலகைகளோடும், சினிமா மீடியா பிரபலங்களின் ஆசியோடும் நடத்துவது என்பது வாடிக்கையாகிவிட்டது. மதுரையில் வெங்கடேசனுக்கு நடத்திய பாராட்டில் மலர் கிரீடம் சூட்டப்பட்டு கையில் வீரவாள் தரப்பட்டதாக அதைக் கண்டித்து பெத்தானியாபுரம் முருகானந்தம் என்பவர் இணையதளத்தில் எழுதியிருக்கிறார். ஒரு மார்க்சிஸ்ட் இப்படியெல்லாம் செய்யலாமா என்பது அவர் கேள்வி. இன்னொரு பக்கம் சென்னையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், கவிப்பேரரசு வைரமுத்து முதலிய பிரபலங்கள் இயல் விருது பெற்றதற்காக எஸ்ராவைப் பாராட்ட அழைக்கப்பட்டனர். எஸ்ராவைப் பாராட்ட ரஜினி அழைக்கப்பட்டது பெரும் சர்ச்சையை இணையதளத்தில் ஏற்படுத்தியது. ரஜினியை அழைப்பதில் எனக்கு எந்த எதிர்ப்புமில்லை. ஒரு எழுத்தாளனை சமூகத்தில் யார் வேண்டுமானாலும் பாராட்டலாம். ரஜினியும் பாராட்டலாம். ஆனால் அழைப்பிதழில் ரஜினி படத்தைப் பெரிதாகப் போட்டு எஸ்ரா படத்தைச் சிறியதாக அச்சடித்தது எழுத்தாளனைச் செருப்பாலடிப்பது போல அவமானப்படுத்துவதாகும் என்று நான் எழுதியிருந்தேன். ரஜினியை அழைத்து எஸ்ராவைப் பாராட்டியதை சாரு நிவேதிதாவால் தாங்கவே முடியவில்லை. நான் கலந்து கொண்ட அவருடைய எக்ஸைல் புத்தக விமர்சனக் கூட்டத்தில் அவர் தன் நாவல் பற்றிப் பேசாமல் இதைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார். இணையதளத்திலும் எழுதித் தள்ளினார். “ரஜினி... இயல் விருதை சர்வதேச விருது என்கிறார்களே, இதைப் பற்றி விசாரித்து அறிந்தீர்களா? கனடாவில் உள்ள ஒரு தமிழ் அமைப்பு, தமிழ் எழுத்தாளருக்கு ஒரு விருது கொடுத்தால் அதற்குப் பெயர் சர்வதேச விருதா? மெல்பேர்ன் நகரில் (ஆஸ்திரேலியா) உள்ள தமிழர்கள் ஒரு ரெக்ரியேஷன் கிளப் வைத்திருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்கள் என்னுடைய நண்பர்கள். என்னை அங்கே அழைத்து ஒரு பொங்கல் தினத்தில் முயல் படம் ஸாரி... கங்காரு படம் போட்ட ஒரு மெமண்டோவைக் கொடுக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். உடனே நான் சர்வதேச விருது கொடுத்து விட்டதாகச் சொல்லிக் கொள்ளலாமா? கொண்டு, பாராட்டு விழா நடத்திக் கொள்ளும் அளவுக்கு, தமிழ் இலக்கியவாதிகள் தரம் தாழ்ந்து வருகிறார்கள். இலக்கியம் சார்ந்த அறம் வீழ்ச்சியடைந்துவிட் டது.”
4.jpg
பதிலுக்கு மனுஷ்யபுத்திரன் எழுதினார், “ஜோதிர்மயி என்று ஒரு கவிஞர் ஒரு முறை சாருவின் ஒரு கூட்டத்தில் கலந்துகொண்டு இலக்கியச் சொற்பொழிவாற்றினார். குஷ்பு என்ற ஒரு நாவலாசிரியர் சாருவின் ஒரு புத்தக வெளியீட்டுக் கூட்டத்தில் கலந்துகொள்வதாக ஊரெல்லாம் பத்திரிகை வைத்து, கடைசி நிமிடத்தில் வராமல் போனார். சாரு நிவேதிதா என்ற நடிகர் ஒரு படத்தில் தனது விரல்கள் பத்து செகண்டுகள் நடித்ததற்காக அந்த இயக்குனரைப் புகழ்ந்து பத்துப் பதிவுகள் எழுதினார்...அதிகப்படியான குடி மட்டுமல்ல, அதிகப்படியான வயிற்றெரிச்சலும் கடும் memory loss ஏற்படுத்தும்...”சர்ச்சைகளும் விழாக்களும் எழுத்தாளர்கள் திட்டமிட்டே விளம்பரம் தேடுகிறார்கள் என்பதன் அடையாளம்தான். ஏன் இப்படி? இது பற்றிப் பதிப்பாளர்கள் தெளிவாக இருக்கிறார்கள். கவிஞர் அய்யனார் கேட்டார்: “கவிஞர் தேவதச்சனுக்கு விளக்கு விருது மதுரையில் ரகசியமாகக் கொடுக்கப்பட உள்ளது. கவிஞர் தேவதச்சன் நூல்களை வெளியிட்டு வருவது மனுஷ்யபுத்திரனின் வெளியீட்டு நிறுவனம்தான். அவருக்கும் ஒரு பிரபல சினிமா நடிகரின் தலைமையில் பாராட்டு விழா நடத்தலாமே.” எஸ்ராவின் பதிப்பாளர் உயிர்மை மனுஷ்யபுத்திரன் பதில்: “இதுவும் வெளி நாட்டு விருதுதான். ஆனால் அதைக் கொடுப்பவர்கள் பிரபலமில்லாதவர்கள். தேவதச்சனும் பிரபலமில்லாதவர். அவருக்கு எந்த சினிமா நடிகரையும் தெரியாது. கூட்டம் போட்டால் 50 பேருக்குமேல் வரமாட்டார்கள். என் பதிப்பக நூல்களை விற்க முடியாது. ராமகிருஷ்ணன் ஸ்டார் எழுத்தாளர். அவர் புத்தகம் மட்டுமல்லாது, என் பதிப்பக நூல்கள் எல்லாவற்றையும் விற்க ஒரு வாய்ப்பு.”சாருவின் பதிப்பாளர் கிழக்கு பத்ரி சேஷாத்ரி எழுதிய ஒரு கட்டுரையில் அப்பட்டமாகவே சொல்கிறார்: “நான் புத்தகங்களை வெறும் பண்டமாகத் தான் பார்க்கிறேன். இதை வெளிப்படையாகச் சொல்வதில் எனக்கு வெட்கமே இல்லை. புத்தகம் உருவாக்கி விற்பது எனக்கு ஒரு தொழில் மட்டுமே. நான் ஒரு வணிகன். எல்லாவிதமான புத்தகங்களையும் பதிப்பிக்க விரும்புகிறேன். அவை நன்றாக விற்கும் என்றால். காசு கொடுத்துப் பெரும் பத்திரிகைகளில் விளம்பரம் செய்வது ஒரு பதிப்பாளனுக்கு இயலாத காரியம். அப்படிச் செய்யும் செலவை, விற்பனையால் ஈடுகட்டவே முடியாது. எனவே வேறு வழிகளையே ஒரு பதிப்பாளனும் எழுத்தாளனும் கையாள வேண்டியுள்ளது.அங்குதான் இணையம் வருகிறது. தமிழின் சில எழுத்தாளர்களே இதனை ஒழுங்காகப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். ஜெயமோகன், சாரு நிவேதிதா, எஸ்.ராம கிருஷ்ணன் ஆகியோரைச் சொல்வேன். அதிலும் சாரு நிவேதிதா, ஃபேஸ்புக் தளத்தை மிக அற்புதமாகப் பயன்படுத்திவருகிறார். அவருடைய வாசகர்கள் தம் சொந்த செலவில் சமீபத்தில் அவருடைய எக்ஸைல் நாவல் வெளியீட்டை காமராஜர் அரங்கத்தில் வைத்துக்கொண்டாடினார்கள். அதேபோல ஜெயமோகன் வாசகர்கள் தீவிரமான ஒரு குழுவாக இயங்குகிறார்கள். இலக்கியக் கூட்டங்கள், விருது வழங்கும் விழா என்று அமர்க்களப்படுத்துகிறார்கள். இம்மாதிரியான நிகழ்வுகளே நாற்பது, ஐம்பது என்பதிலிருந்து நானூறு, ஐந்நூறு என்று வாசகர் வட்டத்தை விரிவாக்குபவை. நான் பதிப்பிக்கும் சில எழுத்தாளர்களை (சேத்தன் பகத் போன்ற) பிராண்டுகளாக ஆக்குவதற்கு எந்த வகையில் பங்களிக்கலாம் என்று முயற்சி செய்வதே என் வேலை. அப்போதுதான் தமிழில் 25,000 அல்லது 50,000 என்று புத்தகங்களை விற்க வைக்க முடியும். நானும் பணம் பண்ணமுடியும்.”
நாற்பது வருடங்களுக்கு முன்பு இந்தச் சிக்கல்கள் இல்லை. சர்ச்சைகள் இருந்தன. ஜெயகாந்தன் கதையையும் இந்திரா பார்த்த சாரதி கதையையும் பத்திரிகைகள் பாதியில் நிறுத்தியபோது நடந்த சமரசங்கள் பற்றி வெங்கட் சாமிநாதன் “யாருக்காக அழுவது ?” என்று எழுதினார். அதற்கு அசோகமித்திரன் “யாருக்காகவும் அழவேண்டாம். வாயை மூடிக்கொண்டு இருந்தால் போதும்” என்று பதில் எழுதினார். பிரமிளும், செல்லப்பாவும், வெ.சாவும் க.நா.சு.வும் ஜெய காந்தனும் நிறைய சர்ச்சித்திருக்கிறார்கள். அவையெல்லாம் கோட்பாடு, மதிப்பீடு, ரசனை பற்றிய விவாதங்கள். இப்போது நடப்பவை முழுக்க முழுக்க வணிக நோக்கம் சார்ந்தவை. ஏனென்றால் இப்போது எந்தக் கோட்பாடு, கொள்கை பிரச்னைகளும் எழுத்தாளர்களுக்கு முக்கியமாக இல்லை. உலகமயமாக்கலும் தாராளப் பொருளாதார அமைப்பும் சினிமா உலகப் பிரவேசமும்தான் இந்தச் சிக்கலை ஏற்படுத்தியிருக்கின்றன. அவற்றின் அரசியல் கலாசாரம் எழுத்துலகின் அரசியலைப் பாதித்திருக்கிறது.


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

தேவைப்படும் 3 சட்டத் தீர்வுகள்! - ஓ பக்கங்கள், ஞாநி

 
1. அரசியல்:
4.jpg
இந்தியாவில் ஊழலை ஒழிக்கவோ கட்டுப்படுத்தவோ லோக்பால் மாதிரி புதிய சட்டங்கள் தேவையில்லை; இருக்கும் சட்டங்களில் போதிய திருத்தங்கள் செய்தாலே போதுமானது என்ற என் கருத்தை மறுபடியும் வலுப்படுத்தியிருக்கிறது உச்ச நீதிமன்றம். அரசு அதிகாரிகள் மீது ஊழல் வழக்குப் பதிவு செய்ய அரசின் முன் அனுமதி தேவை என்ற விதி தொடர்பாக மிக முக்கியமான தீர்ப்பை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கொடுத்துள்ளனர்.இதுவரை இந்த விதியின் கீழ் அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் எதிராக வழக்குப் பதிவு செய்ய லேசில் அனுமதி தரமாட்டார்கள். சி.பி.ஐ. மட்டும் 169 அதிகாரிகள் மீது வழக்குப் போட அனுமதி கேட்டுக் காத்திருக்கிறது. அனுமதியை இழுத்தடிக்கும் அமைச்சகங்களிலேயே முதன்மையானது நிதி அமைச்சகம் தான். மத்திய அரசின் அனுமதிக்காக டிசம்பர் 2010 வரையிலும் முடிவு தெரியாமல் காத்திருந்த விண்ணப்பங்கள் மட்டும் 236. இதே போல வெவ்வேறு மாநில அரசுகளின் முன்பும் நூற்றுக்கணக்கில் விண்ணப்பங்கள் காத்திருக்கின்றன.இந்தச் சூழலில்தான் அரசியல் பிரமுகர் சுப்பிரமணியன் சுவாமி போட்ட வழக்கில் நீதிபதிகள் சிங்வியும் கங்குலியும் எந்த விண்ணப்பத்தையும் நான்கு மாதங்களுக்கு மேல் பதில் சொல்லாமல் வைத்திருக்கக்கூடாது என்றும் அப்படி வைத்திருந்தால், வழக்குத் தொடுக்க அனுமதி தரப்பட்டு விட்டதாகவே சட்டப்படி எடுத்துக் கொள்ளப்படும் என்றும் கூறியுள்ளனர். தேவைப்பட்டால் இதற்கான சட்டத் திருத்தங்களை ஊழல் தடுப்புச் சட்டத்தில் நாடாளுமன்றம் மூலம் செய்யும்படி அரசுக்கு ஆலோசனை தெரிவித்திருக்கிறார் கங்குலி. ஒரு அதிகாரி மீதோ அமைச்சர் மீதோ ஊழல் வழக்குத் தொடுக்க அனுமதி கேட்டால், அதுபற்றிப் பூர்வாங்க விசாரணை நடத்தியபின்தான் முடி வெடுக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை. மனுவில் உள்ள விவரங்களின் அடிப்படையில் முடிவெடுக்கவேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் அதற்குப் பின் அட்டர்னி ஜெனரல் ஆலோசனையும் கேட்கத் தேவையிருந்தால் இன்னும் ஒருமாதம் எடுத்துக் கொள்ளலாம். சுப்ரமணியன் சுவாமி 2008 நவம்பர் 29ந் தேதி பிரதமர் மன்மோகன்சிங்குக்கு அனுப்பிய கடிதத்தில் அமைச்சர் ராசா மீது ஸ்பெக்ட்ரம் ஊழலுக்காக வழக்கு பதிவு செய்ய அனுமதி கேட்டார். மன் மோகன்சிங் இதற்குப் பதிலளிக்கவே 16 மாதங்கள் ஆயிற்று. இதை எதிர்த்து சுவாமி தில்லி உயர்நீதி மன்றத்தில் போட்ட வழக்கு, தள்ளுபடி செய்யப்பட்டது. அதன் மீது சுவாமி உச்ச நீதிமன்றத்தில் செய்த முறையீட்டில்தான் இப்போது இந்த வரலாற்று முக்கியத்துவம் உள்ள தீர்ப்பு வந்திருக்கிறது. சுவாமியின் கடிதத்தை பிரதமர் அலுவலகம் ராசாவுக்கே அனுப்பி வைத்ததையும் நீதிமன்றம் கண்டித்திருக்கிறது. ஊழல் வழக்குப் பதிவு செய்யும் அனுமதி மூன்று மாதங்களுக்குள் தரப்பட வேண்டும் என்பது லோக்பால் மசோதாவில் ஓர் அம்சம். இன்னும் லோக்பால் சட்டமாகவில்லை. அதே விஷயத்தை எளிதாக இப்போது உள்ள சட்டத்திலேயே ஒரு திருத்தம் மூலம் செய்து விடலாம் என்பதை இப்போதைய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு காட்டுகிறது. இதுபோல பல லோக்பால் அம்சங்களை இருக்கும் சட்டங்களின் திருத்தம் மூலமே கொண்டு வர முடியும். ஒரு வழக்கை எத்தனை காலத்துக்குள் விசாரித்து முடிவு தெரிவிக்க வேண்டும் என்ற வரையறையையும் கொண்டு வர வேண்டும்.சுப்பிரமணியன் சுவாமி தமக்கென்று கட்டுக்கோப்பான ஒரு கட்சியோ தொண்டர்களோ வோட்டோ ( கொள்கையோ ?!) இல்லாத ஒரு அரசியல்வாதியானபோதும், மக்கள் நலனுக்குரிய இந்தத் தீர்ப்பைப் பெற்றிருப்பதற்காக அவருக்கு இ.வா.பூ.
2.கல்வி:
1.jpg
கல்லால் அடித்து சிவனை வழிபட்ட கதைக்குரிய சாக்கிய நாயனாரின் வம்சாவளியாக சென்னைக் கல்லூரி மாணவர்கள் சிலர் புறப்பட்டிருக்கிறார்கள். பஸ் டே, பேருந்து விழா என்றெல்லாம் அடிக்கடி சென்னையிலும் சில ஊர்களிலும் நடக்கும் தெருவிழாக்கள் முதன்முதலில் ஆரம்பித்தது, அண்ணாவின் ஆட்சியில் நடந்த ஒரு மோதலுக்குப் பின்னர்தான். அப்போது சென்னையில் பேருந்து ஊழியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே வன்முறை மோதல் ஏற்பட்டபோது, அண்ணா மிகுந்த மனவேதனைக்குள்ளானார். பதற்றமான சூழல் தணிந்தபின்னர், சில மாதங்கள் கழித்து, சில காவல் அதிகாரிகளும், சில போக்குவரத்து அதிகாரிகளும் சேர்ந்து மாணவர்- பஸ் ஊழியர் நல்லெண்ணத்தை வளர்க்க முக்கியமான பஸ் ரூட்களில் மாணவர்களைக் கொண்டு ‘பஸ் டே’ கொண்டாடும் வழக்கத்தை அறிமுகப்படுத்தினார்கள். இதெல்லாம் சுமார் 40 வருடப் பழைய கதை.டிரைவருக்கும் கண்டக்டருக்கும் மாலை போடுவது, பஸ் பயணிகள் எல்லாருக்கும் இனிப்பு வழங்குவது, பஸ்சில் தோரணங்களும் வாழை மரமும் கட்டுவது என்றெல்லாம் உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் ‘பஸ் டே’ நடந்தது சில வருடங்களில்; சில சந்தர்ப்பங்களில் மட்டும்தான். ஆரம்பித்த ஒரு சில வருடங்களிலேயே ‘பஸ் டே’ அதன் அசல் நோக்கத்தையும் உணர்வையும் இழந்தது. கும்பல் மனோ பாவத்தில் தெருவில் ரகளை செய்வதும், குறிப்பாக பஸ்சில் வரும் பெண்களை சீண்டி கேலி செய்வதுமாக அது சீரழிந்தது. இதில் போட்டி வேறு உருவாகி ஒரு கல்லூரியின் ரவுடிகளுக்கும் இன்னொரு கல்லூரியின் ரவுடிகளுக்குமான மோதலாக அது பல இடங்களில் மாறியது. இப்படிப்பட்ட சூழலில் ‘பஸ் டே’ நடக்காமல் இருந்தாலே தேவலை என்ற மனநிலைக்கு ரெகுலர் பஸ் பயணிகளும் பஸ் ஊழியர்களும் வந்துவிட்டார்கள். காவல்துறை பஸ் தினக் கொண்டாட்டங்களுக்குத் தடை விதித்துவிட்டது. இந்த நிலையில் இந்த வாரம் ஒரு கல்லூரி மாணவர்கள் பஸ்சை மறித்து ‘பஸ் டே’ பதாகையைக் கட்டி ரகளை செய்ததும் போலீஸ் அவர்களை வந்து தடுத்தது. பஸ்சைக் கல்லால் அடித்து உடைத்து, பஸ் பயணிகளைத் தாக்கி வழிபாடு நடத்தி பஸ் டே - சாக்கிய நாயனார் பாணியில் நடந்து முடிந்தது. எந்த பஸ்சுக்குத் தோரணமும் வாழை மரமும் கட்டி ஆராதிக்கப் போவதாகச் சொன்னார்களோ அதையே கல்லால் அடித்ததுதான் அவர்களின் அசல் மனநிலை. தமிழக அரசு அதிகாரபூர்வமாக இந்த ‘பஸ் டே’ கொண்டாட்டங்களை ஒட்டுமொத்தமாகத் தடை செய்து அறிவிக்க வேண்டும்.பஸ்சில் மாணவர்கள் உள்ளிட்ட பயணிகளுக்கும் பஸ் ஊழியர்களுக்கும் இடையே நல்லுறவைப் பேணுவதற்கு, போக்குவரத்துக் கொள்கைகளில் மாற்றம் தேவை. நியாயமான கட்டணங்கள், படிக்கட்டில் நிற்கத் தேவையில்லாத அளவுக்கு - போதுமான பஸ்கள், வாசற்கதவு பூட்டப்படும் வசதியுடையதாக எல்லா பஸ்களையும் மாற்றுதல், ஊழியர்களிடம் தினமும் போதுமான சில்லறைக் காசுகளை டெப்போவிலேயே கொடுத்து அனுப்புதல் என்று நடவடிக்கைகளை எடுத்தால் நல்லுறவுதானே வரும்.
3.சினிமா:
2.jpg
தமிழ் சினிமா படப்பிடிப்புகள் மறுபடியும் நின்றுவிட்டன. காரணம் வழக்கமான சம்பளப் பிரச்னைதான்சினிமாக்காரர்கள் எதையும் தப்புத்தப்பாகவும் மிகைப்படுத்தியுமே சித்திரித்து பழக்கப்பட்டவர்கள். இப்போதைய பிரச்னையிலும் நடப்பது வேலை நிறுத்தம் அல்ல. தொழிலாளி வேலை செய்ய மறுத்தால் அதற்குப் பெயர் ஸ்டிரைக்- வேலை நிறுத்தம். முதலாளி, தொழிலை நடத்த முடியாது, நிறுத்திக் கொள்கிறேன் என்று சொன்னால் அதற்குப் பெயர் ஸ்டிரைக் அல்ல; லாக் அவுட்- கதவடைப்பு. இப்போது நடப்பது முதலாளிகளான தயாரிப்பாளர்கள் அறிவித்திருக்கும் லாக் அவுட். இது ஸ்டிரைக் அல்ல. எஸ்.ஏ.சந்திரசேகரன் முதல் சேரன் வரை ஆளுக்கு ஆள் உளறிக் கொட்டுவதை நிறுத்திவிட்டு, தொழிலாளர் நல ஆணையர் முன்பு பிரச்னையைக் கொண்டு போனால், ஒரே நாளில் தீர்ந்துவிடக் கூடியது இது. மூன்று வருடங்களுக்கு ஒரு முறை தயரிப்பாளர்களும் தொழிலாளர் கூட்டமைப்பான பெப்சியும் சம்பள ஒப்பந்தம் போடுகிறார்கள். கடைசியாகப் போட்ட ஒப்பந்தம் டிசம்பர் 2010ல் முடிந்துவிட்டது. ஜனவரி 2011 முதல் டிசம்பர் 2013 வரை நடைமுறைக்கு வரவேண்டிய சம்பள விகிதம் தீர்மானித்து ஒப்பந்தம் போடாமலேயே ஒரு வருடம் ஓடி விட்டது. பழைய சம்பளத்திலேயே பெரும்பாலோர் வேலை செய்தார்கள். இப்போது புது சம்பள விகிதம் போட்டால் கூட, சினிமா தொழிலாளருக்கு அரசு ஊழியர் மாதிரி பழைய அரியர்ஸ் கணிசமாகக் கிடைக்கும் நடைமுறையோ சாத்தியமோ கிடையாது. போன சம்பளம் போனதுதான். ஒரு சிலர் மட்டும் கடந்த ஓராண்டில் தங்கள் சங்கம் உயர்த்திக் கேட்ட சம்பளத்தை ஒப்பந்தம் இல்லாமலேயே பெற்றிருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலோரின் சம்பளம் என்பது மாதச் சம்பளம் அல்ல. இது தினக் கூலிதான். கேட்கப்பட்டிருக்கும் பேட்டா என்ற கூலி உயர்வு விவரங்கள் இதோ: லைட்மேன் - ரூ 350லிருந்து 530. ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் - 250லிருந்து 320. மகளிர் ஊழியர் யூனியன் - 290 லிருந்து 400. செட் அஸிஸ்டெண்ட் - 350 லிருந்து 625. டிரைவர்ஸ் யூனியன் - 270 லிருந்து 415. காஸ்ட்யூம் அஸிஸ்டெண்ட்ஸ் - 700 லிருந்து 850. புரடெக்ஷன் அஸிஸ்டெண்ட்ஸ் - 350 லிருந்து 550.மூன்று வருடத்துக்குப் பிறகு இவர்கள் கூடுதலாகக் கேட்டிருக்கும் தொகை 180,70,110,275,145,150,200 ரூபாய் என்ற அளவில்தான். இதைத் தர மறுப்பதில் எந்த நியாயமுமில்லை. ஆறுமாத காலம் ஒரு முழுப் படத்தில் சுமார் 60 நாள் வேலை செய்தாலும் இதில் ஒருவர் புதிய சம்பள விகிதத்திலேயே அதிக பட்சமாகப் பெறப் போகும் சம்பளம் மொத்தமாக 50 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வரையில் தான். இப்போது தொழிலாளர் நல அதிகாரி செய்ய வேண்டியதெல்லாம், சென்ற வருடத்தில் சிலருக்கு மட்டும் உயர்த்தித் தந்த விகிதம் எவ்வளவு, யூனியன் கேட்பது எவ்வளவு, தயாரிப்பாளர் தர விரும்புவது எவ்வளவு என்பதை விசாரித்து சமரசம் செய்வது தான். மூன்றாண்டுகளில் பணவீக்கத்தினால் விலைவாசி கடுமையாக உயர்ந்திருக்கிறது. ஒரு வருடம் சம்பள உயர்வு இல்லாமலே போய்விட்டது. இதையெல்லாம் கணக்கிட்டு, புதிய விகிதம் நிர்ணயிக்கப்பட வேண்டும். அவ்வளவுதான். மற்றபடி ஒரு படத்தில் எத்தனை தொழிலாளர் வேலை பார்க்க வேண்டும், பட பட்ஜெட்டுக்கு ஏற்ற மாதிரி ஒரே வேலைக்கு வெவ்வேறு சம்பளம் தரமுடியுமா, ஸ்டார் நடிகர் -ஸ்டார் டைரக்டர் சம்பளம் மட்டும் 200 சதவிகிதம் உயர்வது முறையா, வேலை வாங்கும் இயக்குனர், ஒளிப்பதிவாளரும் அவர்கள் கீழ் வேலை செய்யும் உதவி இயக்குனர், உதவி ஒளிப்பதிவாளர்களுக்கெல்லாம் தனித்தனி யூனியன்கள் வேண்டாமா, பெப்சி யூனியன்களில் இல்லாதவர்கள் சினிமாவில் வேலை செய்ய அடிப்படை உரிமை இந்திய அரசியல் சட்டத்தின் கீழ் உண்டா இல்லையா, யூனியன் உறுப்பினராக கார்டு வாங்க ஏன் லட்சக்கணக்கில் கட்டணம் விதிக்கவேண்டும் போன்ற நீண்ட காலமாக இருக்கும் அடிப்படைச் சிக்கல்கள் எதையும் இப்போது சேர்த்துத் தீர்த்துவிடமுடியாது. அதற்குத் தனியே சினிமா துறை நிலை பற்றி ஆராய நீதிபதிகள், நிபுணர்கள் குழு அமைத்து, சட்டத்திருத்தங்களைக் கொண்டு வரவேண்டும் என்று நீண்ட காலமாக நான் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.
ஐ.ஏ.எஸ்.அதிகாரி உமாசங்கர் அறிக்கையிலிருந்து:
3.jpg
எனக்கும் என் குடும்பத்துக்கும் இயேசு கிறிஸ்து தமது தேவ தூதர்கள் பட்டாளத்தைப் பாதுகாப்புக்கு நியமித்துள்ளார். இது இந்தியப் பிரதமருக்கு வழங்கப்படும் இசட் ப்ளஸ் பாதுகாப்பைவிட 100 மடங்கு உறுதியானது. போலீஸ் தரும் இசட் ப்ளஸ் பாதுகாப்பு இருக்கும்போதுதான் திருமதி இந்திரா காந்தி, திரு ராஜீவ் காந்தி போன்றோர் கொலை செய்யப்பட்டனர். அதுபோன்ற தவறுகள் கிறிஸ்து இயேசுவின் தேவ தூதர்கள் தரும் பாதுகாப்பில் நிகழ்வதில்லை... 2012ல் உலக அளவிலும் தமிழ்நாட்டிலும் சுனாமி, பூகம்பம், பெரிய தொற்று வியாதிகள், கடும் புயல் போன்ற பெரும் அழிவுகள் நிகழவிருப்பதாக வெளிப்பாடுகள் இருப்பதால் நான் கிறிஸ்தவர்களை எச்சரிக்க வேண்டியது என் கடமை. இதற்காக எல்லா இடங்களுக்கும் சென்று கிறிஸ்தவர்களுக்கு அறிவுரை வழங்குகிறேன். கிறிஸ்தவர்கள் இந்த கோபாக்கினை யிலிருந்து தப்ப வேண்டும் என்பது என்னுடைய ஆவல்...


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

கல்பாக்கத்துக்கு எரிமலை ஆபத்து?, ஓ பக்கங்கள் , ஞாநி

 
1.jpg
 
கடலோரம் அமைக்கப்பட்டிருக்கும் கல்பாக்கம் அணு உலைகளுக்கு சுமார் நூறு கிலோமீட்டர் தொலைவில் கடலுக்கடியில் உறங்கும் எரிமலை இருப்பது பற்றிய தகவல்கள் இப்போது வெளியாகி இருக்கின்றன. வழக்கம்போல இந்திய அணு சக்தித் துறைக்கு இதைப் பற்றி எதுவும் தெரியாது என்பதும் அக்கறையில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.சுமார் 25 வருடங்களாக அணு உலை ஆபத்துகள் பற்றி ஆய்வும் பிரசாரமும் செய்துவரும் மருத்துவர்கள் சதுரங்கப்பட்டினம் வி.புகழேந்தி, கோவை ரா.ரமேஷ் இருவரும் இது தொடர்பாக ஆய்வு செய்து திரட்டியிருக்கும் பல அரிய தகவல்களை ‘பூவுலகின் நண்பர்கள் சூழல் பாதுகாப்பு அமைப்பு’ இப்போது நூலாக வெளியிட்டிருக்கிறது.பத்து மாதங்களுக்கு முன்னால் மே 2011ல் சர்வதேச அணுசக்திக் கழகம் உலக அளவில் எரிமலைகளும் அவற்றால் அணு உலைகளுக்கு ஏற்படக்கூடிய ஆபத்துகளைப் பற்றியும் ஒரு நூலை வெளியிட்டிருக்கிறது. அதில் கல்பாக்கம் அருகே இருக்கும் எரிமலை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் கல்பாக்கத்துக்கு என்ன ஆபத்து நேரலாம், எப்படி பாதுகாத்துக் கொள்ளலாம் என்பதை நிலவியல், காலவியல், கடலியல் அடிப்படைகளில் ஆராயும்படி சர்வதேச அணுசக்திக் கழகம் அறிவுறுத்துகிறது. ஆனால் அவை எதையும் இந்திய அணுசக்தித் துறை மேற்கொண்டதாகத் தெரியவில்லை. புகழேந்தியும் ரமேஷும் மூன்று அடிப்படைகளிலும் நடந்துள்ள பல்வேறு தனி ஆய்வுகளைத் திரட்டி அவற்றின் அடிப்படையில் சில எச்சரிக்கைகளை முன்வைத்திருக்கிறார்கள்.
 
கல்பாக்கம் அருகே இருக்கும் கடல் எரிமலை பற்றி இந்திய அணுசக்தித் துறைக்குத்தான் தெரியவில்லையே ஒழிய உலகின் மாபெரும் விஞ்ஞானிகள், ஆவாளர்கள் எல்லாருக்கும் தெரிந்திருக்கிறது. கடைசியாக 1757ஆம் ஆண்டு ஜனவரி 20 அன்று இந்த எரிமலை வெடித்திருக்கிறது. அந்த நிகழ்வு பற்றி உலகின் பரிணாமக் கொள்கையை வகுத்த அறிஞர் சார்லஸ் டார்வின் முதல் எரிமலை வெடிப்பை கடலில் நேரில் பார்த்த மாலுமிகள் சிலர் வரை எழுதிய பதிவுகளையெல்லாம் புகழேந்தியும் ரமேஷும் தேடி எடுத்துத் தொகுத்துள்ளனர்.அதுமட்டுமல்ல கல்பாக்கத்தை ஒட்டிய கடற்பகுதியில் நிலவியல் அமைப்பு, ஏற்பட்ட பூகம்பங்கள், சுனாமிகள், அவை பற்றி நடந்த ஆவுகள் எல்லாவற்றையும் தங்கள் நூலில் விவரமாக அலசியிருக்கின்றனர். இந்த அலசலில் தெரியவரும் முக்கியமான விவரங்கள் மூன்று.
 
1. கல்பாக்கம் முதல் வேதாரண்யம் வரையிலான நிலப்பிளவு பகுதியின் காந்த மண்டலம் குறைந்து காணப்படுவதற்குக் காரணம் கடல்தரையிலிருந்து பிதுங்கி எழுந்திருக்கக்கூடிய அமைப்புதான். இதுதான் எரிமலைப் பகுதி. இதில் ஏற்படும் மாற்றங்கள் கல்பாக்கம் அணு உலையின் கீழாக செல்லும் நிலப்பிளவுடன் நேரடியாக சம்பந்தப்பட்டிருக்கின்றன. இதைப்பற்றி இந்திய அணுசக்தித் துறை இதுவரை எந்த அக்கறையும் காட்டவில்லை.
 
2. கல்பாக்கம் பகுதி சுனாமிகள், பூகம்பங்கள் பற்றிய அணு சக்தித் துறையின் ஆவுகளும் மிகுந்த குறைபாடுகளுடனே இருக்கின்றன. சுனாமி 2004ல் வந்தபோது அங்கே சீஸ்மோகிராஃப் வேலை செயவே இல்லை. 24 மணி நேர எமர்ஜன்சிக் கட்டுப்பாட்டு அறை இயங்காமல் பூட்டியே கிடந்தது.
 
3. கல்பாக்கம் அருகே கடலில் இருக்கும் பாலாற்றுப் பள்ளம் சுனாமி அலை வேகத்தை அதிகரிக்கக்கூடியது. இங்கிருந்து சுனாமி, உலையை அடைய பத்து நிமிடம் போதுமானது.
 
கூடங்குளம் பகுதியிலும் நிலவியல், கடல்சார்ந்த சுனாமி பூகம்ப ஆவுகள் அணுசக்தி துறையால் முறையாகச் செய்யப்படவில்லை. அங்கே பழைய எரிமலைக் குழம்புகள் இளகிய நிலையில் பாறைகளாக உள்ளது பற்றிய ஆவை அணுசக்தித் துறை பொருட்படுத்தவே இல்லை. 2004ல் சுனாமி வரும் வரை, அந்தப் பகுதியில் சுனாமி வரவே வராது என்றுதான் அணுசக்தித் துறை சொல்லிக் கொண்டிருந்தது. வந்தபிறகு இனிமேல் 9 மீட்டருக்கு மேல் அலை வராது என்று சொல்லிக் கொண்டிருக்கிறது.செர்னோபில், புகொஷிமா விபத்துகள் சுற்றிலும் 10 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பை முழுமையாக சிதைத்தவை. கல்பாக்கத்திலிருந்து அதே சுற்றளவில் இருப்பவை சென்னை நகரம், மணலி, புழலேரி, திருப்போரூர், செம்பரம்பாக்கம், தரமணி, கோயம்பேடு, எழும்பூர், கோவளம், மகாபலிபுரம், அம்பத்தூர், ஸ்ரீபெரும்புதூர், சென்னை துறைமுகம், சென்னை விமான நிலையம், காஞ்சிபுரம், செங்கற்பட்டு, திருக்கழுக்குன்றம், மதுராந்தகம், மேல்மருவத்தூர், திண்டிவனம் விழுப்புரம், பாண்டிச்சேரி ஆகியவை மட்டுமல்ல. தமிழ்நாட்டில் 75 சதவிகித தொழிற்சாலைகள் இங்கேதான் இருக்கின்றன. செர்னொபிலை விட 50 மடங்கு அதிக மக்கள் இங்கே வசிக்கிறார்கள்.தென்மாவட்டங்களைக் காப்பாற்றுவதற்காக கூடங்குளத்தைத் தொடங்காதே என்று சொல்வது மட்டும் போதாது. வட தமிழகத்தைக் காப்பாற்றுவதற்காக கல்பாக்கத்தை மூடு என்றும் இனி அழுத்திச் சொல்ல வேண்டும் என்ற அவசரத்தை உணர்த்துகிறது புகழேந்தி- ரமேஷின் அற்புதமான ஆய்வு நூல். இந்த வாரப் பூச்செண்டு இவர்களுக்கே.


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

எச்சரிக்கை,சர்ச்சை,வருத்தம்... - ஓ பக்கங்கள், ஞாநி

 
1.jpg
 
மணல் அல்ல வாழ்க்கை அது.இலங்கைப் போர்க் குற்றங்கள் தொடர்பாக தில்லியில் இப்போது குரல் கொடுக்காத தமிழகக் கட்சியே இல்லை. இந்த ஒற்றுமை ஒரு பக்கம் மகிழ்ச்சியைத் தந்தாலும், இன்னொரு பக்கம் இதே பிரதான கட்சிகள் இன்னொரு பிரச்னையில் கூட்டாக மௌனம் காட்டுவது கவலை தருகிறது. தமிழ் நாட்டில் தமிழ் மண்ணை விற்று காசாக்குவதற்காக தமிழரை, தமிழரே கொல்லும் கொடூரத்தைப் பற்றி இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் நல்லகண்ணுவைத் தவிர வேறு ஒரு பிரதான அரசியல்வாதியும் வாய் திறப்பதில்லை.திருநெல்வேலி மாவட்டத்தில் வள்ளியூர் அருகே நம்பியாற்றில் சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரியை உள்ளூர் பொதுமக்கள் தடுத்தார்கள். லாரி அவர்கள் மீதே ஏற்றப்பட்டுத் தப்பிச் சென்றிருக்கிறது. இதில் சதீஷ் குமார் என்ற இளைஞர் லாரியில் நசுங்கிக் கொல்லப்பட்டிருக்கிறார்.மணல் கொள்ளையைத் தடுக்க வருபவர்களை அவர்கள் பொதுமக்களானாலும், அதிகாரிகளானாலும் தாக்குவது, கொல்வது என்பது தமிழ்நாட்டில் இது முதல்முறையல்ல. கடந்த மூன்றாண்டுகளில் எட்டு நிகழ்ச்சிகள் நடந்திருக்கின்றன. கோவை கவுண்டம்பாளையத்தில் நொய்யல் ஆற்றில் மணல் எடுத்ததைத் தடுத்த கிராம அதிகாரி. 2009 மார்ச் 15 அன்று தாக்கப்பட்டார். மயிலாடுதுறை அருகே கொள்ளிடத்தில் பொதுப்பணித்துறை ஊழியர் பாலகிருஷ்ணனை மூவர் 2010 டிசம்பர் 3 அன்று தாக்கினார்கள். திண்டுக்கல் வேடந்தூரில் வெட்டியப்பட்டி கிராமத்தில் மணல் திருடி ஏற்றிச் சென்ற தி.மு.க பிரமுகரின் லாரியை 2011 ஜனவரி 14 அன்று மக்கள் பிடித்து அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அதே வருடம் மே 2 அன்று காஞ்சிபுரம் மாவட்டம் வேகவதி ஆற்றில் மணல் திருடிய லாரியைத் தடுத்த வருவாய் துறை ஆய்வாளர் சங்கரை லாரி டிரைவர் தாக்கினார். மே 12 அன்று நெல்லை செய்திங்கநல்லூரில் தாமிரபரணி ஆற்றங்கரையில் கிராம அதிகாரி பால கிருஷ்ணன் தாக்கப்பட்டார். ஜூன் 8 அன்று வேலூர் காட்பாடியில் தாசில்தார் மனோகரன் தாக்கப்பட்டார். ஜூலை 7 அன்று கடலாடியில் மலட்டாற்றுக் கரையில் மணல் திருடிய டிராக்டரை வழிமறித்த வருவாய் ஆய்வாளர் மாரியும் சுரங்க துணை இயக்குனர் சொக்கலிங்கமும் தாக்கப்பட்டார்கள். ஆகஸ்ட் மாதத்தில் குமரி மாவட்டத்தில் விளனவங்கோடு அருகே செக்போஸ்ட்டில் வண்டியைத் தடுத்த காவல் அதிகாரி மனோகரன் தாக்கப்பட்டார்.மணல் கொள்ளையைத் தடுக்க வருபவர்களை அவர்கள் பொதுமக்களானாலும், அதிகாரிகளானாலும் தாக்குவது, கொல்வது என்பது தமிழ்நாட்டில் இது முதல்முறையல்ல. கடந்த மூன்றாண்டுகளில் எட்டு நிகழ்ச்சிகள் நடந்திருக்கின்றன. கோவை கவுண்டம்பாளையத்தில் நொய்யல் ஆற்றில் மணல் எடுத்ததைத் தடுத்த கிராம அதிகாரி. 2009 மார்ச் 15 அன்று தாக்கப்பட்டார். மயிலாடுதுறை அருகே கொள்ளிடத்தில் பொதுப்பணித்துறை ஊழியர் பாலகிருஷ்ணனை மூவர் 2010 டிசம்பர் 3 அன்று தாக்கினார்கள். திண்டுக்கல் வேடந்தூரில் வெட்டியப்பட்டி கிராமத்தில் மணல் திருடி ஏற்றிச் சென்ற தி.மு.க பிரமுகரின் லாரியை 2011 ஜனவரி 14 அன்று மக்கள் பிடித்து அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அதே வருடம் மே 2 அன்று காஞ்சிபுரம் மாவட்டம் வேகவதி ஆற்றில் மணல் திருடிய லாரியைத் தடுத்த வருவாய் துறை ஆய்வாளர் சங்கரை லாரி டிரைவர் தாக்கினார். மே 12 அன்று நெல்லை செய்திங்கநல்லூரில் தாமிரபரணி ஆற்றங்கரையில் கிராம அதிகாரி பால கிருஷ்ணன் தாக்கப்பட்டார். ஜூன் 8 அன்று வேலூர் காட்பாடியில் தாசில்தார் மனோகரன் தாக்கப்பட்டார். ஜூலை 7 அன்று கடலாடியில் மலட்டாற்றுக் கரையில் மணல் திருடிய டிராக்டரை வழிமறித்த வருவாய் ஆய்வாளர் மாரியும் சுரங்க துணை இயக்குனர் சொக்கலிங்கமும் தாக்கப்பட்டார்கள். ஆகஸ்ட் மாதத்தில் குமரி மாவட்டத்தில் விளனவங்கோடு அருகே செக்போஸ்ட்டில் வண்டியைத் தடுத்த காவல் அதிகாரி மனோகரன் தாக்கப்பட்டார்.
 
தி.மு.க ஆட்சியிலும் சரி, அ.தி. மு.க.ஆட்சியிலும் சரி மணல் திருட்டிலிருந்து வரும் வசூலைக் கட்சி மேலிடங்களுக்கு அனுப்பி வைக்கும் பொறுப்பு கரூர் பகுதியைச் சேர்ந்த பிரமுகர்களிடமே மாறி மாறி ஒப்படைக்கப்படுகிறது என்பது பத்திரிகையாளர்களுக்கும் ஊடக நிருபர்களுக்கும் நன்றாகவே தெரியும். இதில் பெரும் பணம் சம்பந்தப் பட்டிருக்கிறது. ஒரு லாரியில் ஏற்றப் படும் ஒரு யூனிட் மணலுக்கு அரசுக்குத் தரப்படும் தொகை வெறும் ரூ300தான். வெளியில் விற்கும் விலை ஆயிரத்து இருநூறு. தமிழ்நாடு முழுவதும் இந்த உபரி 900ல் பாதி அவ்வப்போதைய ஆளுங்கட்சிப் பிரமுகர் தொடர்பானவர்களுக்கு கணக்கிடப்பட்டு அனுப்பப்படுகிறது என்பதும் அதைக் கவனிக்கும் பொறுப்புதான் கரூர் பிரமுகர்களுடையது என்பதும் அரசியல் வட்டாரங்களிலும் எல்லாருக்கும் தெரியும். இந்த பிரம்மாண்டமான மணல் கொள்ளையில் கோடிக்கணக்கில் பணம் புழங்குகிறது. தமிழக ஆறுகள் சூறையாடப் பட்டு சூழல் முற்றிலும் பாழாகி வருகிறது. தடுக்கச் செல்லும் கடமையுணர்வுள்ள அதிகாரிகளும், மக்களும் தங்கள் மண்ணைக் காப்பாற்ற முற்பட்டதற்காகக் கொல்லப்படுகிறார்கள். தாக்கப்படுகிறார்கள். சுரங்க மாஃபியாவால் அண்மையில் மத்தியப்பிர தேசத்தில் ஐ.பி.எஸ்.அதிகாரி கொல்லப் பட்டதை பரவலாக இந்தியா முழுவதும் சித்திரித்த ஊடகங்கள் தமிழ்நாட்டில் தொடர்ந்து நடக்கும் மணல் கொள்ளைக, கொலைகளைக் கவனிப்பதே இல்லை.தமிழ்நாட்டிலிருந்து மணல் திருடப்பட்டு கேரளாவுக்கும் இதர மாநிலங்களுக்கும் மட்டுமல்ல, இந்தியாவுக்கு வெளியேயும் அனுப் பப்படுகிறது. மலேசியா, சிங்கப்பூர், மாலத்தீவுக்கெல்லாம் நாம் ஏன் மணல் ஏற்றுமதி செய்வது அனு மதிக்கப்பட வேண்டும் என்று புரிய வில்லை. மாலத்தீவுக்கு மட்டும் சென்ற வருடம் 12 லட்சம் டன் மணல் ஏற்றுமதி செய்யப்பட்டி ருக்கிறது.நீதிமன்றம் தடை செய்தபிறகும் தாமிரபரணி ஆற்றில் மணல் அள்ளப்படுகிறது. அரசிடம் நிர்வா கத்திடம் நீதி கிடைக்காமல்தான் ஒருவர் நீதிமன்றத்திடம் போக வேண்டியிருக்கிறது. அங்கே போட்ட உத்தரவையும் அரசும் அரசியல் கட்சிகளும் மதிக்கப்போவதில்லை என்றால் ஒருவர் அடுத்து எங்கே செல்ல முடியும்? திரண்டு வந்து போராடும் மக்கள் மீதே வண்டியை ஏற்றிக் கொல்லும் துணிச்சல் மணல் திருடர்களுக்கு எங்கிருந்து கிடைக்கிறது? அவர்கள் அரசியல் கட்சிகளின் கூட்டாளிகளாக இருப்பதால்தான்.கூடங்குளத்தில் போராடும் மக்களைக் கொச்சைப்படுத்த அவர்களுக்கு தொண்டு நிறுவனங்களின் வெளிநாட்டுப் பணம் வருவதாக அவதூறு செய்யும் அரசியல் வாதிகள் யாரும் தங்கள் கட்சிக் கணக்குகளைக் காட்டுவதே இல்லை. ஒரு பஞ்சாயத்து உறுப்பினர் கூட குவாலிஸ் காரிலும் எம்.எல்.ஏ. ஆடி காரிலும் பவனி வருவதற் கான பணம் எங்கிருந்து வருகிறது என்று ஆராயவேண்டும். தமிழ்நாட்டில் மணல் கொள்ளையிலிருந்து மட்டும் இதுவரை வந்திருக்கும் பணம் யார் யாருக்கு எவ்வளவு போயிருக்கிறது என்பதை கரூர் பிரமுகர்களை சி.பி.ஐ. விசாரணைக் குட்படுத்தினால் அம்பலமாகிவிடும்.
 
தமிழகத்தில் நடக்கும் மணல் கொள் ளையும் இன அழிப்பு வேலைதான். தன் இனத்தை, தானே அழிக்கும் வேலை. மணல் இல்லாவிட்டால் ஆற்றில் நீர் இல்லை. நீர் இல்லாவிட்டால் இந்தச் சமூகமே பாலையாகி அழியும் என்பதே வரலாறு. உலகின் மிகப் பெரிய நாகரிகங்கள் நீர் இல் லாமல்தான் அழிந்தன.இப்போதைய மணல் கொள்ளை இன்னும் இருபதாண்டுகள் நீடித்தால் கூட, தமிழகம் பாலையாகி அழியத் தொடங்கும். இதைக் கண்டிக்கவும் ஐ.நா சபையில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வரும்வரை காத்திருக்கப்போகிறோமா?
 
இந்த வார சர்ச்சை:
 
அமெரிக்கத் தீர்மானம் உதவுமா?
 
2.jpg
 
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சில் மாநாட்டில் அமெரிக்கா இலங்கை நிலை பற்றிக் கொண்டு வந்திருக் கும் தீர்மானம் குறித்த விவாதம் உலகெங்கும் சூடு பறக்கிறது. இந்தத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவேண்டுமென்று தமிழகத்தின் அனைத்துக் கட்சி எம்.பிகளும் (முதன்முறையாக ? ) ஒருமித்த ஆவேசக் குரலில் நாடாளுமன்றத்தில் வற்புறுத்து கிறார்கள்.
 
இந்தப் பிரச்னையில் எனக்குத் தோன்றும் கருத்துகளை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
 
1. இலங்கை அரசின் போர்க் குற்றங்களைப் பற்றிப் பேசும் தகுதி இல்லாத நாடு அமெரிக்கா. உலகெங்கும் போர்க் குற்றங் களைக் கூசாமல் செய்துவந்திருக்கும் நாடு அமெரிக்கா. இப்போதும் அதன் அசல் அக்கறை ஈழத்தமிழர்கள் மீது அல்ல என்பதே என் கருத்து. தெற்காசியாவில் சீனாவுக்கு எதிரான காய் நகர்த்தலில் இலங்கை அரசியலை அது பயன்படுத்துகிறது. அமெரிக்காவை அங்கிருக்கும் ஈழத்தமிழர்கள் வேண்டுமானால் நம்பிக் கொள்ளலாம். ஈழத்தில் இருக்கும் தமிழர்கள் நம்புவதில் ஒரு பயனும் அவர்களுக்கு இல்லை.
 
2. தில்லியில் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பும் தமிழக அரசியல்வாதிகள் நம்பத் தகுந்தவர்களே அல்ல. போர் நடந்து கொண்டிருந்தபோது இதே ஒற்றுமையை இதே ஆவேசத்தை அவர்கள் தில்லியில் காட்டவில்லை. காட்டியிருந்தால் போரை நிறுத்தி, பேச்சு வார்த்தைக்கு நகர்த்த பாடுபட்டிருந்தால், ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளும், பொருட் சேதமும் தவிர்க்கப்பட்டிருக்க முடியும். அப்போதும் முதலமைச்சராக இருந்த கருணாநிதி தம் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக மிரட்டியிருந்தாலே தில்லி கேட்டிருக்கும். இப்போது பல்லில்லாத தண்ணிப் பாம்பாக அவர் இருக்கும் நிலையில் அவர் மிரட்டல் களுக்கு அர்த்தமே இல்லை.
 
3. ஐந்து மாநிலத் தேர்தல்களுக்குப் பிறகு தில்லியில் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்த்து இடைத்தேர்தல் வரவழைக்க பி.ஜே.பி அயராமல் செய்துவரும் முயற்சியின் ஒரு பகுதியாகவே இப்போதைய சலசலப்பும் தெரிகிறது.
 
4. காங்கிரசும் இந்திய அரசும் இலங்கை அரசைக் கண்டிக்காமல் அரசியல் செய்தால் தான் அங்கே சீனாவின் செல்வாக்கை சமன்படுத்த முடியும் என்று உறுதியாக நம்புகின்றன. இந்த அணுகுமுறையில் உடனடியாக எந்த மாற்றமும் வரப் போவதாகத் தெரியவில்லை. தமிழகக் காங்கிரஸ் எம்.பிகள் தமிழ்நாட்டு உணர்ச்சிகளை சமாளிக்க வளைத்து வளைத்துப் பேசும் உத்தியைப் பின்பற்றுகிறார்களே தவிர, அவர்கள் கையில் எந்த பலமும் இருப்பதாகத் தெரியவில்லை.
 
5. அமெரிக்காவின் தீர்மானமே ஒரு சரியான தீர்மானம் அல்ல என்று விமர்சகர் அ.மார்க்சும், அதைவிட அழுத்தமாகக் தமிழ் தேசிய இயக்கத் தலைவர் தியாகுவும் முன் வைக்கும் கருத்துகளே எனக்குச் சரியென்று தோன்றுகிறது.“ஐ.நா தீர்மானத்தை தி.மு.க., அ.தி.மு.க., ஆதரிப்பதனால் அது தமிழர் களுக்கு நல்ல தீர்மானமாகி விடாது. காங்கிரஸ் எதிர்ப்பதனால் அது இலங்கைக்கு எதிரான தீர்மானமாகி விடாது. இந்தத் தீர் மானத்தின் உள்ளடக்கம் என்ன என்பதை பொறுத்துதான் இந்தத் தீர்மானத்தின் சாதக பாதகம் அலசப்பட வேண்டும். இந்தியா, இலங்கை , அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளும் சேர்ந்து செய்யும் சூழ்ச்சியாகவே இந்தத் தீர்மானத்தை“தான் பார்ப்ப தாக தியாகு ஒரு நேர்காணலில் விரிவாகவே தெரிவித் திருக்கிறார். போர்க்குற்றங்கள் பற்றிய சுயேச்சையான சர்வ தேசக் குழு விசார ணையை வரவிடாமல் தடுக்கவே இந்தத் தீர்மானம் பயன்படும் என்ற தியாகுவின் கருத்து சரியென்றே எனக்கும் படுகிறது.
 
ஒட்டுமொத்தமாக இந்த விஷயத்தில் எப்போதும் போல உணர்ச்சிவசப்படுவது தீர்வுகளைத் தராது. அறிவுபூர்வமாக அலசி காய்களை நகர்த்தித் தீர்வுகளைத் தேடுவதே சரியான வழி என்ற என் கருத்து மறுபடியும் உறுதியாகிறது.
 
இந்த வார வருத்தம்/மகிழ்ச்சி:

அரவாணி வாரியத்தின் உறக்கம்

தி.மு.க ஆட்சியில் அரவாணிகள் என்ப்படும் மூன்றாம் பாலினருக்கான நல வாரியம் தொடங்கப்பட்டது. இதன் நோக்கம் அரவாணிகளுக்கு கல்வியறிவும் வேலை வாய்ப்பும் பெருக உதவிகள் செய்து அதன் வழியே அவர்கள் வறுமையிலிருந்தும் இழி தொழில்களிலிருந்தும் விடுதலை அடையச் செய்வதாகும். வாரியம் உதவும் என்று தொடர்ந்து வாக்குறுதிகளை அதிகாரிகள் தெரிவித்ததை நம்பி திருச்சியில் பிரியங்கா என்ற அரவாணி செவிலியருக்கான ஓராண்டு படிப்பில் சேர்ந்தார். அவரது கல்விக்கட்டணத்தை வாரியம் தரும் என்று முதலில் கூறப்பட்டது. ஆட்சி மாற்றத்தில் வாரியம் முடங்கியது. தேர்வு நெருங்கியும் கல்விக் கட்டணம் கட்டாததால், பிரியங்காவை தேர்வு எழுத அனுமதிக்க செவிலியர் கல்வி நிலையம் மறுத்தது. கடைசி நொடியில் லயன் சங்க ஆளுநர் ராமராஜனிடம் பிரியங்காவின் பிரச்னை தெரிவிக்கப் பட்டதும், லயன் சங்கம் 18 ஆயிரம் ரூபாய் செலுத்தி பிரியங்கா தேர்வு எழுத உதவியிருக்கிறது. அரவாணிகள் நல வாரியம் போல, பல நல வாரியங்கள் ஆட்சி மாற்றத்தில் முடங்கியிருப்பது வருத்தமாகவும் கண்டனத்துக்குரியதாகவும் உள்ளது. லயன் சங்கம் உதவியது மகிழ்ச்சியென்றாலும், ஒவ்வொரு முறையும் இப்படிப்பட்ட தீர்வுகளை ஒருவர் நம்பியிருக்க முடியாது. எனவே வாரியங்கள் செயல்பட வேண்டும்.


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

இடிந்த கரை... இடியாத நம்பிக்கை!, ஓ பக்கங்கள் - ஞாநி

 
1.jpg
 
இதை நான் எழுதும் கடைசி ஓ பக்கமாக அறிவித்துவிடலாமா என்ற மனநிலையில்தான் எழுத ஆரம்பிக்கிறேன். என்ன எழுதி என்ன பயன் என்ற அலுப்பே காரணம். அலுப்புக்குக் காரணம் கூடங்குளம்.பிப்ரவரி கடைசி வாரத்தில் இதே ஓ பக்கங்களில் நான் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எழுதிய பகிரங்க கடிதத்திலிருந்து சில பகுதிகள் இதோ :
 
உங்கள் முன்னால் தெளிவாக இரண்டு வழிகள் இருக்கின்றன. முதல் வழி அணு உலைகளை எதிர்க்கும் இயக்கங்களின் விஞ்ஞானிகள் குழுவைச் சந்தியுங்கள். அணு உலையை ஆதரிக்கும் அரசு விஞ்ஞானிகள் குழுவை அவர்களுடன் பயப்படாமல் உரையாடச் சொல்லுங்கள். சங்கரன்கோவில் தேர்தலுக்கு அனுப்பும் 31 அமைச்சர்களை இடிந்தகரைக்கு அனுப்பி மக்களிடம் பேசச் சொல்லுங்கள். சிறுமியாக நடிக்கப் போன காலத்திலிருந்து செட்டில்கூட புத்தகம் படிக்கும் பழக்கம் உடையவர் நீங்கள். வாசிப்பு ருசியும் பழக்கமும் உடைய நீங்களே ஒரே ஒரு நாளை ஒதுக்கி இருதரப்பு நூல்களையும் வாசியுங்கள். நமக்கு ஒருபோதும் அணு உலை வேண்டாம் என்ற முடிவுக்கு நிச்சயம் வருவீர்கள். கேரளத்தைப் போல, மேற்கு வங்கத்தைப் போல தமிழகமும் அணு உலை மறுப்பு மாநிலமாக உங்களால் அறிவிக்கப்படட்டும். தமிழர்கள் பல தலைமுறைகளுக்கு உங்களைப் போற்றுவார்கள். ஒரு பென்னிகுவிக்கை நினைவு கூர்வது போல, தமிழகத்தில் செர்னோபில்லும் புகொஷிமாவும் வராமல் தடுத்த பெருமைக்குரியவராக நீங்கள் வரலாற்றில் இடம் பெறுவீர்கள்.இரண்டாவது வழியை மேற்கொண்டாலும் வரலாற்றில் இடம் உண்டு. சீனிவாசன் குழு அறிக்கையை ஏற்று அணு உலையை அனுமதிக்கலாம். போராடும் மக்களை போலீஸ், ராணுவ உதவியுடன் ஒடுக்கலாம். ஓரிரு துப்பாக்கிச் சூடுகளும் சில நூறு உயிர் சேதமும் ஏற்பட்டாலும் பொருட்படுத்தாமல் இருக்கலாம். இவ்வாறெல்லாம் செய்வதன் மூலம் மத்திய அரசின் அன்புக்கும் ரஷ்ய, அமெரிக்க, பிரெஞ்ச் முதலாளிகளின் அன்புக்கும் உரியவர் ஆகலாம். ஆனால், தமிழக மக்களின் துரோகி என்ற பெயருடன் வரலாற்றில் இடம் இருக்கத்தான் செய்யும். ஏற்கெனவே அந்த இடம் உங்கள் சக அரசியல்வாதி கலைஞர் கருணாநிதிக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது. என்ன செய்ய, நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் உங்கள் இருவருக்கும் வரலாற்றின் ஒரே வரிசையில்தான் இடம் கிடைக்கும். அவர்தான் கேரளம் ஏற்க மறுத்த கூடங்குளம் அணு உலையை முதலில் தானும் வேண்டாம் என்று சொல்லிவிட்டு, பிறகு வரவேற்று பல்டி அடித்த துரோகத்துக்குரியவர். மத்திய அரசின் நிர்பந்தத்தால் அணு உலையை எங்கள் மீதும், தமிழர்கள் துரோகி பட்டத்தை உங்கள் மீதும் திணித்து விடாதீர்கள். அணு உலை எதிர்ப்புக் குழுவைச் சந்தியுங்கள். அந்த முதல் வழி மட்டுமே உங்களை நிஜமான தமிழக அன்னையாக்கும்."
 
ஜெயலலிதா புரட்சித் தலைவி அல்ல, மக்கள் விரோதத் தலைவி என்பதை நிரூபித்துவிட்டார். இந்தக் கட்டுரையை நான் எழுதிக் கொண்டிருக்கும் புதன்கிழமை மதிய நேரத்தில் இடிந்தகரை கிராமத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் மீது ஜெயலலிதாவின் அரசும் மன்மோகன் அரசும் கூட்டாக ஒரு யுத்தம் நடத்திக் கொண்டிருக்கின்றன. ராஜபட்சே இலங்கையில் பின்பற்றிய எல்லா உத்திகளையும் ஜெ-மன்மோகன் கூட்டணி இங்கே பின்பற்றிக் கொண்டிருக்கிறது. போராடும் மக்களுக்கு மின்சாரம், தண்ணீர், பால், உணவு, காய்கறிகள் எதுவும் செல்ல முடியாமல் வழிகளை அடைத்து அவர்கள் மீது ஒரு முற்றுகை யுத்தம் நடத்திக் கொண்டிருக்கிறது.இந்தக் கட்டுரை அச்சாகி உங்கள் கைக்கு வரும் நேரத்துக்குள் இடிந்தகரையில் தடியடியோ, துப்பாக்கிச்சூடோ கூட நடத்தப்பட்டிருக்கலாம். அங்கே என்ன வன்முறை நடந்தாலும் அதற்கு அரசுதான் பொறுப்பேற்றாக வேண்டும்.சுமார் 200 நாட்களுக்கு மேலாக ஐயாயிரம் முதல் நாற்பதாயிரம் வரை மக்கள் தினசரி கலந்துகொண்டு நடத்தி வந்த அறவழிப் போராட்டத்தில் துளிகூட வன்முறை கிடையாது. இந்தியாவில் 1947க்குப் பின் இது போல ஓர் அற்புதம் நிகழ்ந்ததே இல்லை. அணு உலையை பலமாக ஆதரிக்கும் தி.மு.க.வும் அ.தி.மு.க.வும்தான் கடந்த 45 வருடங்களாக தமிழகத்தை ஆள்பவர்கள். அவர்களுடைய தலைவர்களைக் கைது செய்தால் அடுத்த நொடியில் தெருவில் இறங்கி பஸ்களை உடைப்பது, எரிப்பது, கடைகளைச் சூறையாடுவது என்பதுதான் அவர்களுடைய அரசியல் கலாசாரம். ஒரு சிறு கல்லைக்கூட எடுத்து வீசாமல், 200 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்த கூடங்குளம் இடிந்தகரை மக்கள் மீது ஜெ-மன்மோகன் அரசுகள் பயங்கரவாதிகள் மீது போர் தொடுப்பது போல போர் தொடுத்துள்ளனர்.ஒரு நிமிடம் யோசித்துப் பார்ப்போம். மார்ச் 18 அன்று சங்கரன்கோவில் வாக்குப் பதிவு முடிந்ததும் பெரும் போலீஸ் படை, துணை ராணுவப் படை எல்லாம் கூடங்குளத்தைச் சூழ்ந்து கொள்கின்றன. கூடங்குளம் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் 40 ஆயிரம் மக்கள் நினைத்திருந்தால் மார்ச் 15ஆம் தேதியே அணு உலைக்குள் நுழைந்து அதை உடைத்து நொறுக்கியிருக்க முடியாதா? அற வழியில் போராடும் மக்களுக்கு அப்படி ஒரு சிந்தனையே வரவில்லை. இத்தனை பேர் கூடி அமைதியாக உண்ணாவிரதம் இருக்கிறோம். நாம் சொல்வதை அரசு செவி கொடுத்துக் கேட்கும் என்று நம்பினார்கள்.
 
அவர்கள் கேட்டது என்ன?
உலை பாதுகாப்பானது அல்ல என்று எங்கள் சார்பில் சொல்லும் விஞ்ஞானிகளின் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள் என்று கேட்டார்கள். கடைசிவரை மக்களின் விஞ்ஞானிகளைச் சந்திக்க அரசுகளின் விஞ்ஞானிகள் முன்வரவே இல்லை.விபத்து ஏற்பட்டால் இழப்பீடு தருவது பற்றி, உலையை விற்ற ரஷ்யாவுடன் போட்ட ஒப்பந்தத்தை வெளியிடுங்கள் என்று கேட்டார்கள். அரசு கடைசிவரை வெளியிடவே இல்லை.மக்களின் கோரிக்கையை அரசு கேட்கும் என்று நம்பி போராட்டத்தை அறவழியில் கடைசி நொடி வரையில் மக்கள் தொடர்ந்தார்கள். ஆனால் மக்கள் சொல்வதைக் கேட்கவே போவதில்லை என்பதில் இரு அரசுகளும் ஆரம்பத்திலிருந்தே பிடிவாதமாக இருந்தன. மன்மோகன் அரசு அதை பகிரங்கமாகவே நாராயணசாமி மூலம் சொல்லிக் கொண்டிருந்தது. ஜெயலலிதாவின் அரசு நடித்தே ஏமாற்றியது.ஆனால், ஜெயலலிதாவின் அரசு இதைத்தான் செய்யும் என்பதற்கு எல்லா அறிகுறிகளும் இருந்தன. உள்ளாட்சித் தேர்தல் சமயத்தில் போராடுவோருக்கு சாதகம் போன்ற ஒரு தீர்மானத்தைப் போட்டு முதல் சீனில் நடித்தது. ஆனால் அதில் மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும் என்று மட்டுமே சொல்லப்பட்டது. அச்சம் போகாவிட்டால் அணு உலை வேண்டாம் என்று சொல்லப்படவே இல்லை. அடுத்து மத்திய அரசு நியமித்த குழு முழுக்க முழுக்க அணு விஞ்ஞானிகளின் லாபியாகவே இருந்தது. அது அம்பலமானதும் அதை சமாளிக்க ஜெயலலிதா அரசு நியமித்த நால்வர் குழு மிகத் தெளிவாக ஜெ. கடைசியில் என்ன செய்யப் போகிறார் என்பதைக் காட்டிவிட்டது. எம்.ஆர்.சீனிவாசன் அதில் இடம் பெறுவதைப் போராட்டக் குழுவினர் ஆட்சேபித்ததை ஜெ. கண்டுகொள்ளவே இல்லை. சாகித்ய அகாதமி விருது பெற்ற நான்கு எழுத்தாளர்கள் தம்மைச் சந்தித்து அணு உலை எதிர்ப்பை விளக்க நேரம் கேட்டதற்கு ஒரு மரியாதைக்குக் கூட அவர் பதில் கடிதம் போடவில்லை.நடுவில் சங்கரன்கோவில் இடைத்தேர்தல் தேதி வராமல் இருந்திருந்தால், ஜெ. அணு உலை திறப்பையும் மக்களுக்கு எதிரான யுத்தத்தையும் ஒரு மாதம் முன்பே செய்திருப்பார். இப்போது நாம் செய்யக்கூடிய ஆராய்ச்சியெல்லாம் ஒன்றே ஒன்றுதான். ஜெ.யின் சோந்த புத்தியிலேயே அணு உலை நல்லது என்று படுவதால் இப்படி செய்கிறாரா அல்லது அதிகாரிகள் சொல்படி ஆடுகிறாரா அல்லது மத்திய அரசின் ‘நிர்பந்தத்துக்கு’ பணிகிறாரா என்றெல்லாம் ஆராயலாம். எல்லாம் வெற்று ஆராய்ச்சிதான்.
 
அசல் யதார்த்தம் என்னவென்றால் கூடங்குளத்தில் போராடிய ஆயிரக்கணக்கான மக்களை மன்மோகன் அரசு பகிரங்கமாகவும் ஜெயலலிதா அரசு நயவஞ்சகமாகவும் ஏமாற்றியுள்ளன என்பது மட்டும்தான். இதை வெற்றிகரமாக நிறைவேற்றும் பணியில் ஈடுபட்டவர்கள் அப்துல் கலாம், டாக்டர் சாந்தா, இனியன், சீனிவாசன், பாலு என்று ஒரு பக்கம் மெத்தப் படித்தவர்கள் பட்டியலும் இன்னொரு பக்கம் போராட்டத்தை ஒடுக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்ட போலீஸ் அதிகாரிகள் பட்டியலும் நீளமானவை. படித்தவன் சூதும் வாதும் பண்ணினால், படிக்காதவன் போவான் போவான் அயோவென்று போவான் என்றுதான் இதைச் சொல்ல வேண்டும்.உண்மையில் ஏமாந்திருப்பது மக்கள் மட்டுமல்ல; ஜெ., மன்மோகன் வகையறாக்களும்தான். எல்லாரையும் ஏமாற்றியிருப்பது அணு சக்தித் துறையும் உலக அணு உலை வியாபாரிகளும்தான். குறித்து வைத்துக் கொள்ளுங்கள். இன்னும் சரியாக ஒரு வருடம் கழித்து ஏப்ரல் 1, 2013ல் முட்டாள்கள் தினத்தன்று, கூடங்குளம் உலைகளிலிருந்து எத்தனை ஆயிரம் மெகாவாட் பொங்கி பிரவாகித்து தமிழகத்தில் பாலும் தேனும் ஓடச் செய்தன என்ற கணக்கைப் பார்க்கும்போது, எப்படி ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்பது புரியும். இந்தியாவில் ஒரு செர்னோபில்லோ புகோஷிமாவோ நடக்கவே நடக்காது என்ற மயக்கத்தில் இருப்பவர்களை யாரும் திருத்த முடியாது. அப்படி ஒரு கொடுமை என் ஆயுட்காலத்துக்குள் நடக்க வேண்டாமென்று மட்டுமே, நான் நம்பாத கடவுளை பிரார்த்தித்துக் கொள்கிறேன்!இந்தக் கணத்தில் என்னுடைய மிகப் பெரிய வேதனையெல்லாம் கூடங்குளம் மக்கள், காந்தி போன்ற ஒரு தலைமை இல்லாமலே நடத்திய அற்புதமான காந்திய போராட்டத்தை மன்மோகனும் ஜெயலலிதாவும் அரசு இயந்திரத்தைக் கொண்டு வன்முறையால் நசுக்கிக் கொண்டிருப்பதைப் பற்றித்தான். வாஜ்பாயியும் கருணாநிதியும் இருந்தாலும் இதையேதான் செய்வார்கள் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. தோழர்கள் (!) ஜி.ஆரும் தா.பாவும் கூட ஆட்சியில் இருந்தால் (நல்லவேளை அவர்கள் ஆயுட்காலம் முழுவதும் அவர்கள் ஆட்சிக்கு வரும் வாய்ப்பே இல்லை) இதையேதான் செய்வார்கள் என்று கணிக்க வேண்டிய சூழல் இருப்பதைப் பார்க்கும்போது, என் வேதனை பல மடங்கு அதிகமாகிறது.உலையை அனுமதிப்பது என்ற முடிவை எடுத்த ஜெயலலிதா ஏன் திரும்பவும் தம்மை சந்திக்க உதயகுமார் தலைமையிலான போராட்டக் குழுவினரை அழைத்திருக்கக் கூடாது? ஏன் அவர்களுடைய விஞ்ஞானிகளையும் அழைத்திருக்கக் கூடாது? ஏன் அவர்களிடம் தமக்கு உலை திறப்பதைத் தவிர வேறு தீர்வு இல்லை என்பதைப் பேசியிருக்கக் கூடாது? வோட்டு கேட்க மக்களைச் சந்திக்க ஓடும் ஜெவும், மகளுக்காக வீல் சேரில் தில்லிக்கே செல்லும் கருணாநிதியும் ஏன் அமைதியாகக் கூடி உட்கார்ந்திருக்கும் ஆயிரக்கணக்கான கூடங்குளம் மக்களை ஒரு முறைகூட போய் பார்க்க முன்வரவில்லை?
 
இதுவே கூடங்குளம் மக்கள் சத்தீஸ்கர் மாவோயிஸ்டுகள் போல ஆயுதந்தாங்கி போராடியிருந்தால், காவல்துறை உயர் அதிகாரிகள் வள்ளியூர் வரை கூட போயிருக்க மாட்டார்களே? களத்தில் கடைநிலை சிப்பாய்களை நிறுத்திவிட்டு சென்னையில் இருந்தபடியே அல்லவா உத்தரவிட்டுக் கொண்டிருப்பார்கள்? இடிந்தகரைக்கு மின்சாரத்தையும் தண்ணீரையும் உணவையும் அவர்கள் நிறுத்தியிருக்க முடியுமா? ஜெயலலிதாவும் மன்மோகனும் சிதம்பரமும் அவர்களை, பேச்சுவார்த்தைக்கு வரும்படி கெஞ்சியிருக்க மாட்டார்களா?காந்திய அறவழியில் போராடும் மக்களிடம் தாமும் அறவழியில் பேசுவதே சரியென்று ஏன் அரசுகளுக்கு உறைப்பதே இல்லை? அமைதியாக வாழவும் அமைதியாகப் போராடவும் விரும்பும் மக்களை ஆயுதக் கலாசாரத்தை நோக்கித் தள்ளுவது அரசுதானே? அதுதானா அரசின் உண்மை விருப்பம்? காந்தியைக் கொல்வதுதான் அரசின் நிரந்தர திட்டமா? காந்தி இந்தியாவில் ஒரு முறை மட்டும் கொல்லப்பட்டவர் அல்ல. திரும்பத் திரும்பக் கொல்லப்படுகிறார். இந்த முறை கோட்சேவின் இடத்தில் மன்மோகனும் ஜெயலலிதாவும்.அணு உலைகள் ஆபத்தானவை. அவற்றால் எந்தப் பெரும் பயனும் வளர்ச்சியும் நடப்பதில்லை என்ற உண்மையை, கூடங்குளத்தின் பாமர மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். படித்தவர்களின் சூது அவர்களை இப்போது முறியடித்துவிட்டது. தருமத்தின் வாழ்வதனை சூது கவ்வும். தருமம் மறுபடியும் வெல்லக் காண்போம். அந்த நம்பிக்கையில்தான் நான் இன்னும் எழுதிக் கொண்டிருக்கிறேன். இல்லையென்றால் கூடங்குளத்தில் மன்மோகன், ஜெ. நடத்தும் யுத்தம் இந்த ஜனநாயகத்தின் மீது எனக்கு 35 வருடங்களாக இருந்து வந்த நம்பிக்கையை தகர்த்துவிட்டது. இனி எல்லா தேர்தலிலும் என் வோட்டு 49ஓதான்.
 
இன்னமும் எனக்கு இந்த நாட்டு ஜனநாயகத்தின் மீது கொஞ்சம் நம்பிக்கை எஞ்சியிருப்பதற்கு ஒரே காரணம், இதை எழுதும் இந்த நொடியிலும், துளிகூட வன்முறை இல்லாமல், அறவழியில் நம்பிக்கையுடன் இடிந்தகரையில் கூடியிருக்கும் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் குறிப்பாக மீனவர்களும்தான். அவர்கள் என்றோ ஒரு நாள் அதிகரிப்பார்கள், வெல்வார்கள் என்ற நம்பிக்கையில்தான் இந்த வாரத்துடன் எழுதுவதை நிறுத்திக் கொள்ளாமல் தொடர்கிறேன்...


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

‘ஜெ’ நிஜமான தமிழக அன்னையாவது எப்படி? - ஓ பக்கங்கள்,ஞாநி

 
மாண்புமிகு முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களுக்கு,
1.jpg
வணக்கம். அன்புள்ள என்று விளித்து எழுதத்தான் ஆசை. ஆனால், மெய்யாகவே உங்களுக்கு தமிழக மக்கள் மீது அன்பிருக்கிறதா என்பதை, இந்தக் கடிதத்தின் மீது என்ன நடவடிக்கை நீங்கள் எடுக்கப்போகிறீர்கள் என்பதைப் பொறுத்துத்தான் முடிவு செய்ய வேண்டியிருக்கும் என்று தோன்றுகிறது. நீங்கள் முதலமைச்சர் பொறுப்பை ஏற்றபின் உங்களுக்கு நான் எழுதும் நான்காவது கடிதம் இது. முதல் கடிதம் பகிரங்கமாக இதே ‘ஓ பக்கங்களி’ல் செப்டம்பர் 24, 2011 அன்று எழுதினேன். அந்தக் கடிதத்தில் கூடங்குளம் அணு உலையை எதிர்த்துப் போராடி வரும் மக்களின் அச்சத்தைப் போக்காமல் உலையைத் தொடங்கக் கூடாது என்று உங்கள் அமைச்சரவை தீர்மானம் போட்டு பிரதமருக்கு நீங்கள் கடிதம் எழுதியதைப் பாராட்டியிருந்தேன். அணு உலை எதிர்ப்பில் தொடர்ந்து பிடிவாதமாக இருக்கும்படி உங்களைக் கேட்டுக் கொண்டேன்.அடுத்த இரு கடிதங்களும் பகிரங்க கடிதங்கள் அல்ல. முறையாக உங்கள் அலுவலகத்தில் அளிக்கப்பட்டவை. ஜூலை 11,2011 அன்று அனுப்பிய கடிதத்தில் இந்தியாவிலேயே ப்ளஸ் டூவில் புகைப்படம் கற்றுத் தந்த பெருமைக்குரிய ஒரே பள்ளியான சூளைமேடு நகராட்சிப் பள்ளியில் அந்தத் தொழில் பாடப் பிரிவு நிறுத்தப்பட்டதை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வந்தேன். ஸ்டாலின் அமைச்சராக இருந்தபோதே, அந்தப் பாடப் பிரிவை மூடவேண்டாமென்று சென்ற வருடம் நான் இந்த ஓ பக்கங்களில் அவருக்கு வேண்டுகோள் விடுத்தேன். நிறுத்தப் போவதில்லை என்று மேயர் மா.சுப்பிரமணியன் எனக்குத் தெரிவித்தார். ஆனால், இந்த வருட கல்வியாண்டு ஆரம்பத்தில் பாடப்பிரிவு மூடப்பட்டது தெரிந்ததும், உங்களுக்குக் கடிதம் எழுதினேன். ஜூலை 11 அன்று அனுப்பிய கடிதத்துக்கு ஆகஸ்ட் 10 அன்று சென்னை மாநகராட்சியிலிருந்து பதில் வந்தது. என் கோரிக்கை ஏற்கப்படவில்லையாம். காரணம் என்ன? 26.10.2009ல் போட்ட அரசாணை எண் 277ன்படி இந்தப் பாடப்பிரிவு தொழிற்கல்விப் பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்பது தான் காரணமாம்.
1.jpg
இதுதான் அரசு இயந்திரத்தின் அசட்டுத்தனம். 2009ஆம் வருட ஆணைதான் ஸ்டாலின் காலத்தில் போடப்பட்டது. அதை மாற்றும்படிதான் நான் உங்களுக்கு வேண்டுகோள் விடுத்தேன். ஏன் மாற்றமுடியாது என்பதற்கு எந்தக் காரணமும் சொல்லாமல், அதே ஆணையைக் காட்டி இப்போது கடிதம் அனுப்புகிறது அரசு இயந்திரம்.இந்த மாதிரி அதிகார வர்க்கத்தை வைத்துக்கொண்டு இங்கே ஒரு சின்ன மாற்றம் கூட வராது. நியாயப்படி என்ன செய்திருக்க வேண்டும்? உங்கள் அலுவலகம் என் கடிதத்தை மாநகராட்சிக்கு அனுப்பி காரணம் கேட்டிருக்க வேண்டும். காரணம் தெரிந்ததும் அதைப் பரிசீலித்து முடிவெடுத்து எனக்குப் பதிலை உங்கள் அலுவலகம்தான் அனுப்ப வேண்டும். ஆனால், என் கடிதத்தை உங்கள் அலுவலகம் மாநகராட்சிக்கு அனுப்பியதும் அதுவே நேரடியாக எனக்குப் பதில் அனுப்பிவிட்டது. முதலமைச்சரான நீங்கள் என் கடிதத்தைப் பார்க்கவே இல்லை என்று தோன்றுகிறது.எனவேதான் உங்களுக்கு நான் அனுப்பிய மூன்றாவது கடிதத்தை, கோட்டையில் உங்கள் அலுவலகத்துக்கே வந்து உரிய உயர் அதிகாரியிடம் நேரில் கொடுத்தேன். பிப்ரவரி 7ந் தேதி கொடுக்கப்பட்ட அந்தக் கடிதத்துக்கு, ஒரு வாரம் கழித்து நினைவூட்டல் மின்னஞ்சல் அனுப்பியும் இன்றுவரை எந்தப் பதிலும் இல்லை. இந்தக் கடிதம் என் தனிப்பட்ட கடிதம் அல்ல. அணு உலைகளுக்கு எதிரான எழுத்தாளர்கள், படைப்பாளிகள் இயக்கத்தின் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர்களான நானும், எழுத்தாளர்கள் அருள் எழிலன், சந்திரா, யுவபாரதி ஆகியோர்களும் அனுப்பியது. உங்களை நேரில் சந்திக்க எங்கள் இயக்கத்தின் சார்பில், சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர்கள்: இந்திரா பார்த்தசாரதி, பிரபஞ்சன், பொன்னீலன், நாஞ்சில் நாடன் ஆகியோரும் மற்றும் பா.செயப் பிரகாசம், எஸ்.ராமகிருஷ்ணன், மனுஷ்யபுத்திரன், தேவதேவன், ஜெயபாஸ்கரன், பாஸ்கர் சக்தி, அழகிய பெரியவன், சுகிர்தராணி, அஜயன் பாலா, அருள் எழிலன், முத்துகிருஷ்ணன், யாழன் ஆதி, குறும்பனை பெர்லின், சந்திரா, யுவபாரதி, திரைப்பட இயக்குனர்கள் அமீர், ஜனநாதன் எனப் பலரும் விரும்புவதைத் தெரிவித்து நேரம் ஒதுக்கித் தரும்படி வேண்டி தரப்பட்ட கடிதம் அது. நம் மாநிலத்தையும் மக்களையும் பல தலைமுறைகளுக்குப் பெரும் பாதிப்புக்குள்ளாக்கக்கூடிய இந்தப் பிரச்னையில் உடனடி கவனம் செலுத்துவது ஒவ்வொரு எழுத்தாளருக்கும் படைப்பாளிக்குமான சமூகக் கடமை என்ற அடிப்படையில் உங்களை நாங்கள் சந்திக்க விரும்பினோம். கேரள, மேற்கு வங்க மாநில அரசுகள் அணு உலை தங்கள் மாநிலத்தில் வேண்டவே வேண்டாம் என்று எடுத்துள்ள சரியான நிலைப்பாட்டை, தமிழக அரசும் உடனடியாக எடுக்க வேண்டும் என்ற கருத்தை நேரில் உங்களுக்குத் தகுந்த காரணங்களுடன் விளக்கித் தெரிவிக்க சுமார் 20 நிமிட பவர் பாய்ண்ட் விளக்கத்துடன் உங்களைச் சந்திக்க விரும்பினோம். ஏனோ நீங்கள் நேரம் ஒதுக்கவில்லை. தினசரி கட்சித் தொண்டர்கள் தங்கள் குடும்பத்தினரின் திருமண நாள், பிறந்த நாட்களுக்கெல்லாம் வாழ்த்து பெற உங்களைச் சந்திக்க முடிகிறது. எனவே தமிழகத்தின் வாழ்வா, சாவா பிரச்னை பற்றி எடுத்துரைக்க விரும்பும் எழுத்தாளர்களைச் சந்திக்க முடியாத அளவு உங்களுக்கு வேலைச் சுமை இருக்கிறது என்று புரிந்துகொள்கிறேன்.
2.jpg
சந்திப்பதைவிடச் சிந்திப்பதுதான் முக்கியம். எங்கள் கடிதத்துடன், ஏன் அணு உலை கூடாது என்பதை விளக்கும் 48 பக்க கேள்வி பதில் தொகுப்பையும் கொடுத்திருந்தேன். அதைப் படித்துவிட்டு நீங்கள் சிந்தித்திருந்தாலே போதுமானது. அணு உலைகள் பாதுகாப்பானவை, அணுமின்சாரம் விலை மலிவானது, அணு மின்சாரத்தை விட்டால் வேறு வழியில்லை, அணுமின்சாரம் தமிழக மின் பஞ்சத்தைத் தீர்த்துவிடும் என்ற நான்கு பொய்களை மத்திய அரசும் காங்கிரஸ் கட்சியும் பரப்பி வருகின்றன. இவை நான்குமே பொய்கள்தான் என்பதை போதுமான புள்ளிவிவரங்களுடன் அந்தக் கட்டுரைத் தொகுப்பில் விளக்கியிருக்கிறேன். கூடங்குளம் அணு உலையைத் தொடங்கக் கூடாது என்று போராடும் மக்கள் பக்கம் நீங்கள் இறுதி வரை நிற்பீர்கள் என்று கடந்த நான்கு மாதங்களாக இருந்து வந்த நம்பிக்கை அண்மையில் எனக்குக் குறைந்துவிட்டது. காரணங்கள் உண்டு. மத்திய அரசின் நிபுணர் குழு மக்களைச் சந்திக்க மறுத்தது. போராடுவோர் சார்பில் அனுப்ப முன்வந்த விஞ்ஞானிகளையும் சந்திக்க மறுத்தது. இந்த நிலையில் நீங்கள் ஒரு மாநில அரசுக் குழுவை நியமித்தீர்கள். யாரை? கூடங்குளம் உலைப்பகுதியில் மக்களே வாழவில்லை என்று உலைக்கான இடம் தேடிய போதே ஒரு சார்பாக அடித்துப் பேசிய அணு விஞ்ஞானி எம்.ஆர்.சீனிவாசன், அணுசக்தி துறையின் நிதி உதவியுடன் ஆய்வுகளும் கருத்தரங்குகளும் நடத்தும் அண்ணா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் இருவர். எப்படி விளங்கும்?! இந்தக் குழுவும் மக் களைச் சந்திக்க மறுத்தது. மக்கள் சார்பான விஞ்ஞானிகளைச் சந்திக்கவும் மறுத்தது. இந்தக் கடிதத்தை நீங்கள் (படித்தால்...) படிக்கிற வேளையில் அந்தக் குழு உலை பாதுகாப்பானது என்று அறிக்கையே உங்களிடம் கொடுத்துவிட்டிருக்கக்கூடும். அந்தக் குழுவின் தலைவர் இனியன் என்பவர் என்று உங்கள் அரசுதான் சொல்கிறதே ஒழிய மத்திய காங்கிரஸ் அமைச்சரும் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள் மீது தொடர்ந்து அவதூறு செய்துவருபவருமான நாராயணசாமி, அந்தக் குழுவை சீனிவாசன் குழு, சீனிவாசன் தலைமையிலான குழு என்றேதான் டி.வி.பேட்டிகளில் சொல்லிவருகிறார். நீங்கள் ஆட்சிக்கு வந்ததும் மின்வெட்டைப் போக்குவேன் என்று பிரசாரம் செய்துதான் ஆட்சியைப் பிடித்தீர்கள். ஆனால், உங்கள் ஆட்சியில் ஏன் மின்வெட்டு வீராசாமி காலத்தை விட அதிகமாக இருக்கிறது? காரணம் இந்த மின்வெட்டு செயற்கையானது என்று நம்புவதற்கு இடமிருக்கிறது. மத்திய அரசால் நிர்ப்பந்திக்கப்பட்ட மின்வெட்டு என்று முடிவுக்கு வரத் தோன்றுகிறது. பழையது வீராசாமி பவர் கட். இது நாராயணசாமி பவர் கட். கூடங்குளம் அணு உலையை மக்கள் ஏற்க வைப்பதற்காகச் செயற்கையாக மத்திய அரசால் எடுக்கப்படும் நடவடிக்கை என்று நம்புவதற்கு நிறையவே இடம் இருக்கிறது. காரணம், மாநிலத் தொகுப்புக்குத் தர வேண்டிய அளவில் ஆயிரம் மெகாவாட்டைக் குறைத்தே மத்திய அரசு கொடுத்து வருகிறது. அரசுக்கு மின்சாரம் தரமுடியாது என்று சொல்லும் நான்கு தனியார் நிறுவனங்களை நீங்கள் நினைத்தால் எஸ்மா சட்டத்தின் கீழ் நாட்டுடமையாக்க முடியாதா? அல்லது அவர்களுக்குத் தரவேண்டிய பண பாக்கியை செலுத்த, மேற்கு வங்க மம்தா அரசுக்கு மத்திய அரசு சிறப்பு நிதி கொடுத்தது போல இங்கேயும் கேட்டு வாங்க முடியாதா?
1.jpg
கூடங்குளம் இயங்கினால்கூட கிடைக்கப் போவது வெறும் 400 மெகாவாட்தானே. தமிழகத்தில் தற்காலிகமாக இருக்கும் மின் பற்றாக்குறையைத் தீர்க்க அது உதவவே உதவாது. நமது மின்பற்றாக்குறையைத் தீர்க்க மாற்றுவழிகளையே நாம் மேற்கொள்ள வேண்டும். அணு உலையை நாடுவது என்பது வாணலியிலிருந்து அடுப்பில் குதிப்பதற்குச் சமமாகும். குண்டு பல்புகளை சி.எஃப்.எல். குழல்பல்புகளாக மாற்றினாலே 500 மெகாவாட் மின்சாரம் மிச்சமாகுமே. மழை நீர் சேகரிப்பு போல ஒரே ஆணையில் இதை நீங்கள் உடனடியாக நிறைவேற்றிவிட முடியும். தொலை நோக்கில் பார்க்கும்போது மின் கடத்து வதில் விரயமாகும் 40 சதவிகிதத்தைப் பாதி குறைத்தாலே புதிய மின் உற்பத்தியே நமக்குத் தேவைப்படாது. உங்கள் நண்பர் நரேந்திர மோடி இந்த வாரம் கூட அவர் மாநிலத்தில் சூரிய மின்சக்தி நிலையத்தைத் தொடங்கி வைத்திருக்கிறார். ஆறே மாதங்களில் 100 மெகாவாட் அவர் இலக்கு.என்ன செய்யப் போகிறீர்கள்? உங்கள் முன்னால் தெளிவாக இரண்டு வழிகள் இருக்கின்றன. முதல் வழி அணு உலைகளை எதிர்க்கும் இயக்கங்களின் விஞ்ஞானிகள் குழுவைச் சந்தியுங்கள். அணு உலையை ஆதரிக்கும் அரசு விஞ்ஞானிகள் குழுவை அவர்களுடன் பயப்படாமல் உரையாடச் சொல்லுங்கள். சங்கரன்கோவில் தேர்தலுக்கு அனுப்பும் 31 அமைச்சர்களை இடிந்தகரைக்கு அனுப்பி மக்களிடம் பேசச் சொல்லுங்கள். சிறுமியாக நடிக்கப்போன காலத்திலிருந்து செட்டில்கூட புத்தகம் படிக்கும் பழக்கம் உடையவர் நீங்கள். வாசிப்பு ருசியும் பழக்கமும் உடைய நீங்களே ஒரே ஒரு நாளை ஒதுக்கி இரு தரப்பு நூல்களையும் வாசியுங்கள். நமக்கு ஒருபோதும் அணு உலை வேண்டாம் என்ற முடிவுக்கு நிச்சயம் வருவீர்கள். கேரளத்தைப் போல, மேற்கு வங்கத்தைப் போல தமிழகமும் அணு உலை மறுப்பு மாநிலமாக உங்களால அறிவிக்கப்படட்டும். தமிழர்கள் பல தலைமுறைகளுக்கு உங்களைப் போற்றுவார்கள். ஒரு பென்னி குக்கை நினைவுகூர்வது போல தமிழகத்தில் செர்னோபில்லும் புகொஷிமாவும் வராமல் தடுத்த பெருமைக்குரியவராக நீங்கள் வரலாற்றில் இடம் பெறுவீர்கள்.இரண்டாவது வழியை மேற்கொண்டாலும் வரலாற்றில் இடம் உண்டு. சீனிவாசன் குழு அறிக்கையை ஏற்று அணு உலையை அனுமதிக்கலாம். போராடும் மக்களை போலீஸ், ராணுவ உதவியுடன் ஒடுக்கலாம். ஓரிரு துப்பாக்கிச்சூடுகளும் சில நூறு உயிர் சேதமும் ஏற்பட்டாலும் பொருட்படுத்தாமல் இருக்கலாம். இவ்வாறெல்லாம் செய்வதன் மூலம் மத்திய அரசின் அன்புக்கும் ரஷ்ய, அமெரிக்க, பிரெஞ்ச் முதலாளிகளின் அன்புக்கும் உரியவர் ஆகலாம்.
ஆனால், தமிழக மக்களின் துரோகி என்ற பெயருடன் வரலாற்றில் இடம் இருக்கத்தான் செய்யும். ஏற்கெனவே அந்த இடம் உங்கள் சக அரசியல்வாதி கலைஞர் கருணாநிதிக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது. என்ன செய்ய, நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் உங்கள் இருவருக்கும் வரலாற்றின் ஒரே வரிசையில்தான் இடம் கிடைக்கும். அவர்தான் கேரளம் ஏற்க மறுத்த கூடங்குளம் அணு உலையை முதலில் தானும் வேண்டாம் என்று சொல்லிவிட்டு, பிறகு வரவேற்று பல்டி அடித்த துரோகத்துக்குரியவர்.
மத்திய அரசின் நிர்ப்பந்தத்தால் அணு உலையை எங்கள் மீதும், தமிழர்கள் துரோகி பட்டத்தை உங்கள் மீதும் திணித்து விடாதீர்கள்.
அணு உலை எதிர்ப்புக் குழுவைச் சந்தியுங்கள். அந்த முதல் வழி மட்டுமே உங்களை நிஜமான தமிழக அன்னையாக்கும்.
அன்புள்ள
ஞாநி


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

மூழ்கும் உண்மைகள்! - ஓ பக்கங்கள், ஞாநி

 
1.jpg
இந்திய அரசின் வல்லரசுக் கனவில் இன்னோர் அத்தியாயம் நனவாகிறது. கோடிக்கணக்கான ரூபாய்கள் அணு உலைகளிலும் நீர்மூழ்கிகளிலும் மூழ்கும்போது கூடவே பல கசப்பான உண்மைகளையும் சேர்த்து மூழ்கடிக்கப் பார்க்கிறது அரசு. அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலை தம் கடற்படையில் வைத்திருக்கும் உலக நாடுகள் இதுவரை ஐந்துதான். அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், பிரிட்டன், சீனா. ஆறாவதாக இந்தியாவும் இந்த அணுகுண்டர்கள் க்ளப்பில் சேர்கிறது. இந்தப் ‘பெருமை’ இப்போதைக்கு வாடகைப் பெருமைதான். ஏனென்றால் இந்தியா இந்த நீர்மூழ்கிக் கப்பலைக் கட்டவில்லை. ரஷ்யா கட்டிய நெர்ப்பா என்ற கப்பலை வாடகைக்கு வாங்கி ஐ.என்.எஸ் சக்ரா-2 என்று பெயர் மாற்றிவிட்டது. வாடகை ரொம்ப அதிகமில்லை ஜெண்ட்டில்மேன். ஐயாயிரம் கோடி ரூபாய்கள்தான். பத்து வருடத்துக்கான வாடகை. இதற்கு முன்னாலும் இந்தியா வாடகைப் பெருமையை அடைந்ததுண்டு. இதே ரஷ்யாவிடமிருந்து (அப்ப சோவியத் யூனியன்!) 1988ல் மூன்று வருடம் குத்தகையில் ஓர் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலை வாடகைக்கு எடுத்துப் பயன்படுத்தி அதற்கு ஐ.என்.எஸ். சக்ரா -1 என்று பெயர் வைத்திருந்தது. அதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. அதை மீறி சோவியத் யூனியன் அந்த நீர் மூழ்கியை இந்தியாவுக்குக் கொடுத்தபோது, கூடவே போட்ட ஒப்பந்தம்தான் கூடங்குளம் அணு உலை ஒப்பந்தம். எங்கக்கிட்ட அணு உலை வாங்கினா, நீர்மூழ்கியும் வாடகைக்குத் தருவேன் என்று சொல்லித்தான் அந்த பேரம் நடந்தது. நாமும் 1974ல பொக்ரான்ல அணுகுண்டு வெடிச்சதுலருந்தே சொந்தமா அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் தயாரிக்க, கல்பாக்கத்துலயும் விசாகப்பட்டினத்துலயும் மண்டையை மோதிக்கிட்டு, கோடிகோடியா கொட்டி முயற்சி பண்றோம். இன்னும் முடியலியே. அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் எப்படி இருக்கும்னு யாராவது ஒரு சேம்பிள் காண்பிச்சா நல்லாயிருக்குமேன்னு அப்போது வாடகைக்கு எடுத்துப் பார்த்தது இந்திய அரசு. இப்போது பத்து வருட வாடகைக்கு எடுத்திருக்கும் நெர்ப்பர் என்கிற ஐ.என்.எஸ் சக்ரா -2 நீர்மூழ்கிப் போர்க் கப்பலில் எந்த அணு ஆயுத ஏவுகணைகளையும் இந்தியா எடுத்துச் செல்ல முடியாது. அதற்கு அமெரிக்காவின் எதிர்ப்பும் உலக நாடுகளின் தடை ஒப்பந்தமும் காரணம். அப்துல் கலாம் தயாரித்துக் கொடுத்திருக்கும் மீதி அக்கினிச் சிறகுகளையெல்லாம் இதில் எடுத்துச் செல்லலாம். நெர்ப்பாவுடைய சுவாரசியமான வரலாற்றைப் பார்க்கலாம்.
இந்த நீர் மூழ்கியை 1991ல் ரஷ்யாவின் அமுர் கப்பல் துறையில் கட்ட ஆரம்பித்தார்கள். 1995 வரையில் வேலை நடந்தது. அந்தக் கப்பல் துறை அதுவரை வருடத்துக்கு ஒரு நீர்மூழ்கிக் கப்பல் கட்டுவது என்கிற வேகத்தில் இயங்கி வந்தது. சோவியத் யூனியன் உடைந்து ரஷ்யா திவால் நிலையை அடைந்ததால், பணம் இல்லாமல் எல்லாம் முடங்கிவிட்டன. அடுத்த 10 வருடங்களுக்கு இங்கே பெரிய வேலை எதுவும் நடக்கவில்லை. நெர்ப்பா அரைகுறையாகக் கட்டின நிலைமையில் கிடந்தது. அதற்குத் திரும்ப மறுவாழ்வு கிடைத்தது 2004ல் இந்தியா ரஷ்யாவுடன் ஒப்பந்தம் போட்டபோதுதான். இந்தியாவிலிருந்து அட்வான்ஸ் பணம் வந்ததும் மறுபடி கப்பலைக் கட்ட ஆரம்பித்தார்கள். இதற்குள் கப்பல்துறையில் இருந்த பழைய அனுபவம் வாய்ந்த மூத்த தொழிலாளர்கள் பலரும் வேறு வேலை தேடிப் போய்விட்டார்கள். மீதி கப்பலைக் கட்டி முடித்தவர்கள் புது ஆட்கள்தான். இந்தத் துறையில் கடைசியாகக் கட்டிய நீர்மூழ்கிக் கப்பல் நெர்ப்பாதான்.கப்பலை முதல் வெள்ளோட்டம் பார்க்கும்போதே ஒழுக ஆரம்பித்தது! துருப்பிடிக்காமல் தடுக்கும் பெயிண்ட்டின் தரம் சரியில்லை என்று கருதப்பட்டது. பின்னர் அது சரி செய்யப்பட்டது. கட்டும் பணி பாதியில் நிறுத்தி வைத்திருந்ததால், உபயோகிக்காமல் பல பாகங்கள் பலவீனமாகிவிட்டன என்றும் சிலர் கருதினார்கள்.ஒருவழியாகக் கட்டி முடித்த பிறகு 2008ல் நெர்ப்பாவில் ஒரு பெரிய விபத்து ஏற்பட்டது.நீர்மூழ்கிக் கப்பல் என்பதில் விபத்து ஏற்பட்டு, கதவுகள் அடைபட்டால், ஜலசமாதி தான். ஜன்னல் வழியே தப்பித்துவரும் சமாசாரம் எதுவும் கிடையாது. எழுபதுகளில் இந்தியன் எக்ஸ்பிரஸ் நிருபராக இருந்தபோது இந்தியக் கடற்படையின் ஒரு நீர்மூழ்கிக் கப்பலில் பயணம் செய்யும் வாய்ப்புக் கிடைத்தது. கடினமான அனுபவம்தான். நெர்ப்பாவில் தீ விபத்து ஏற்பட்டது. நீர் மூழ்கிக் கப்பல்களில் தீவிபத்துகள் ஏற்படுவது சகஜம். எனவே தீயணைப்புக்கான வழி முறைகள் முக்கியமானவை. தீ ஏற்பட்டதும், அலார்ம் பெல் ஒலித்து ஆட்டொமேடிக்காக நீர்மூழ்கிக் கப்பலில் பல்வேறு அறைகளின் கனமான இரும்புக் கதவுகளும் தானே பூட்டிக் கொண்டுவிடும். ஆக்ஸிஜன் இல்லாமல் தீ எரியாது. பரவாது என்பதால், ஒவ்வோர் அறையிலும் இருக்கும் ஆக்ஸிஜனை உறிஞ்சி எடுத்துவிடும் சாதனம் இயங்க ஆரம்பித்து விடும். ஆக்ஸிஜனை உறிஞ்சிவிட்டு, தீயை அணைப்பதற்கான ஃப்ரியான் வாயுவைச் செலுத்தும். இது விஷ வாயு. அலார்ம் மணி ஒலித்ததுமே நீர்மூழ்கிக் கப்பலில் இருப்போர் எல்லோரும் அவரவருக்கென்று தரப்பட்டிருக்கும் ஆக்ஸிஜன் முகமூடிகளை முகத்தில் மாட்டிக் கொண்டுவிட வேண்டும். இல்லாவிட்டால், சுவாசிக்க ஆக்ஸிஜனும் இல்லாமல் விஷ வாயுவைச் சுவாசித்து மூச்சுத் திணறிச் சாவார்கள். நவம்பர் 2008ல் நெர்ப்பாவில் நடந்த விபத்தின்போது கப்பல் கடலில் சோதனை ஓட்டத்தில் இருந்தது. தீ விபத்து அலாரம் ஒலித்து சாதனங்கள் தானே இயங்கத் தொடங்கியதும் பலரும் ஆக்ஸிஜன் மாஸ்க் அணியமுடியவில்லை. கப்பலில் மொத்தம் 208 பேர் இருந்தார்கள். 20 பேர் இறந்தனர். கொடுமை என்னவென்றால் தீவிபத்தே நடக்கவில்லை. ஆனால் தீயணைப்பு அலாரம் ஒலித்து, தானியங்கி சாதனம் வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது. இது சாதனக் கோளாறா, அல்லது யாரேனும் ஊழியர்களின் தவறுதலா என்று விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. கேப்டன் லாரெண்ட்டொவ், இன்ஜினீயர் குரோபோவ் இருவரின் அலட்சியத்தால் விபத்து நடந்தது என்ற குற்றச்சாட்டை நீதி மன்ற ஜூரிகள் நிராகரித்துவிட்டார்கள். இதை அரசு எதிர்த்து முறையீடு செய்துள்ளது. பாதி கட்டிய நிலையில் பத்து வருடங்கள் கப்பலைத் துருப்பிடிக்க விட்டது, அனுபவ மற்ற ஊழியர்களைக் கொண்டு கப்பலைக் கட்டியது, ரஷ்யாவின் அணுசக்தித் துறையான ரோசாட்டமில் இருக்கும் ஊழல்கள் எல்லாம்தான் விபத்துக்குக் காரணம். அதை மறைக்க இந்த இருவர் மீது வழக்குப் போடப்பட்டிருக்கிறது என்று ரஷ்யாவின் அணு எதிர்ப்பு இயக்கங்கள் சொல்கின்றன. (கூடங்குளம் உலையைக் கட்டியிருக்கும் ரோசாட்டத்தின் ஊழல்கள் பற்றி, கல்கி இதழின் ஓ பக்கங்களில் முன்பே எழுதியிருக்கிறேன்).
2.jpg
இந்த விபத்துக்குள்ளான நெர்ப்பா கப்பலைத்தான் ஐயாயிரம் கோடி ரூபாய் வாடகையில் இப்போது இந்திய அரசு இங்கே கொண்டு வருகிறது. தரை, வானம், கடல் மூன்று வழிகளிலும் அணு ஆயுதங்களை வீசுவதற்கான திறமையை அடைவதுதான் இந்திய அரசின் நோக்கம். இப்போது தரை, வான் வழியே வீசுவதற்கான திறன் இருக்கிறது. கடல் வழியே சென்று அணு ஆயுதத் தாக்குதல் நடத்த நீர்மூழ்கிக் கப்பல் தேவைப்படுகிறது. ரஷ்யாவிடம் வாடகைக்கு எடுக்கும் கப்பல் அணுசக்தியில் இயங்கும் என்பதால் அடிக்கடி கரைக்கு வந்து சார்ஜ் செய்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் இதில் அணு ஆயுதம் எடுத்துச் செல்ல முடியாது என்ற தடை இருக்கிறது. அப்படியானால் அணு ஆயுதமும் எடுத்துச் செல்லக்கூடிய அணுசக்தியிலும் இயங்கக்கூடிய நம்முடைய சுதேசி நீர்மூழ்கிக் கப்பல் எப்போது வரும்? முப்பதாயிரம் கோடி ரூபாய்களைக் கொட்டியிருக்கிறோம். முப்பது வருடமாக முயற்சித்திருக்கிறோம். ஒருவழியாக இந்த வருடம் கடலுக்கு அனுப்பி சோதனை வெள்ளோட்டம் செய்து பார்த்துவிடும் என்று சொல்லப்படுகிறது. ஐ.என்.எஸ்.அரிஹாந்த் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கும் இந்த நீர்மூழ்கிக் கப்பலை பிரதமர் மன்மோகன்சிங்கின் மனைவி 2009ல் விசாகப்பட்டினம் துறை முகத்தில் முறைப்படி தொடங்கி வைத்தார். (நீர்மூழ்கிக் கப்பல்களை, பெண்கள்தான் தொடங்கிவைக்கவேண்டும் என்பது ஒரு விசித்திரமான மரபு.)இந்தக் கப்பலைப் பற்றிய ஒரு செய்தியைப் பார்க்கலாம். சுமார் ஒன்பது மாதங்களுக்கு முன்பு மே 2011ல், விசாகப்பட்டினத்தில் கப்பல்துறைக்குள் இந்த நீர் மூழ்கிக் கப்பலைக் கொண்டு செல்ல முயற்சித்த போது ஏற்பட்ட விபத்தில் நான்கு பேர் பலியானார்கள். கப்பலைச் சூழ்ந்து நின்று அதைக் கரைசேர்க்கப் பயன்படுத்தப்படும் ஒரு பெரிய இரும்புக் கூண்டு போன்ற அமைப்புக்கு கய்சான் என்று பெயர். இதைக் கொண்டு அரிஹாந்த்தைக் கரை சேர்த்தபோது, கய்சான் நொறுங்கிவிழுந்து கமாண்டர் அஸ்வினி குமார், கமாண்டர் ரன்பிர் ரஞ்சன், மாலுமிகள் மது பாபு, ராஜேஷ் ஆகியோர் படுகாயமடைந்து இறந்தனர். மிகப் பெரிய சாதனைகளை நோக்கிச் செல்லும்போது சின்ன விபத்துகளைக் கண்டு துவண்டுவிடக் கூடாது என்பதுதான் லேட்டஸ்ட் அப்துல் கலாம் பொன்மொழி. (கூடங்குளம் பாதுகாப்பானது என்ற அவர் அறிக்கையில் உதிர்த்த இன்னொரு பொன்மொழி: விபத்துகளிலிருந்து நாம் கற்றுக் கொள்கிறோம்.) அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களில் அணு ஆயுதங்களை எடுத்துச் செல்லும் வல்லமையினால் நாம் சாதிக்கப் போகும் சாதனை என்ன? ஆயிரம் கிலோ அணு ஆயுதத்தைச் சுமந்துகொண்டு 700 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் சகரிகா ஏவுகணைகளை இந்த அரிஹந்த் நீர்மூழ்கியிலிருந்து நீருக்கடியிலேயே வீசலாம். அடுத்து மூவாயிரம் கிலோமீட்டர் தூரம் செல்லக்கூடிய ஏவுகணையை நீருக்கடியிலிருந்தே வீசுவதற்கான சோதனைகள் நடந்துவருகின்றன. இந்தியப் பெருங்கடலிலும் அரபிக் கடலிலும் இந்த நீர்மூழ்கிகள் வலம் வந்தால் பாகிஸ்தானும் வங்கதேசமும் இந்தியாவிடம் பயப்பட்டுத்தான் ஆக வேண்டும்.
ஆனால் ஸ்ரீலங்கா? நிச்சயம் பயப்படப் போவதில்லை. ஓர் அணு உலையும் கிடையாது. ஓர் அணு ஆயுதமும் கிடையாது. இந்தியாவிலிருந்து வெறும் முப்பது கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் நாடு இதுவரை எழுநூற்றுக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களைக் கொன்று குவித்திருக்கிறது. நெருப்புக் கோழி தலையை மண்ணில் புதைத்துக் கொள்வது போல, இந்தியா தலையைத் தண்ணீருக்குள் புதைத்து வைத்துக் கொண்டிருக்கிறது என்பது அதற்கு நன்றாகவே தெரியும். நமக்கு பாகிஸ்தான்தானே எதிரி. ஸ்ரீலங்கா நண்பன். அப்படித்தானே பாடப் புத்தகங்களில் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள்?
இ.வா.பூச்செண்டு!
தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வு விடைத்தாள்களை தேர்வெழுதி யோர் பார்க்கவும் நேர்காணல் வீடியோ பதிவு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்திருப்பதற்காக புதிய தலைவர் நட்ராஜுக்கும் செயலர் உதய சந்திரனுக்கும் இந்த வாரப் பூச்செண்டு.
இ.வா. கேள்வி
கூடங்குளம் அணு உலை எதிர்ப்புக் குழுவினர் பல மாதங்களாக முதலமைச்சர் ஜெயலலிதாவைச் சந்திக்க நேரம் கேட்டும் ஒதுக்காத நிலையில், அணு உலை ஆதரவுப் பிரசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் டாக்டர் சாந்தாவை மட்டும் முதலமைச்சர் சந்திக்க நேரம் ஒதுக்கியதன் மர்மம் என்ன? மத்திய அரசின் வற்புறுத்தலா?
இ.வா.கண்டனம்

 

ஓர் இலக்கிய விழாவில் பேசவருவதற்குக்கூட எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு மறைமுகத் தடைகள் விதித்திருக்கும் இந்திய அரசுக்கு இந்த வாரக் கண்டனம்.


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

ஏன் இந்த உலைவெறி? - ஓ பக்கங்கள், ஞாநி

 

1.jpg
 
கூடங்குளத்தில் அணு உலை நிறுவியே தீருவோம் என்ற உலைவெறியில் இருக்கும் இந்திய அரசும் அதன் அணு சக்தித் துறையும் எதிர்பார்த்தபடியே மீடியா மூலம் பெரும் பொய்ப்பிரசாரத்தை அவிழ்த்துவிட்டிருக்கின்றன. தொலைக் காட்சிகளில் அவை தரும் விளம்பரங்களில் அணுமின் நிலையம் இல்லாத இடங்களில் தான் புற்றுநோய் அதிகம் என்றும் அணு மின் நிலையம் இருந்தால் புற்றுநோய் அந்த வட்டாரத்தில் குறைந்துவிடுவதாகவும் தெரிகிறது. உலக அளவில் இப்படி ஒரு கண்டுபிடிப்பை யாரும் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள்.புற்றுநோய்த் துறையில் பிரபலமான டாக்டர் சாந்தா, ‘புற்றுநோய்க்கும் கதிரியக்கத்துக்கும் தொடர்பு இல்லை’ என்று அரசின் டி.வி. விளம்பரத்தில் சொல்லி இருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது. கதிரியக்கம் புற்றுநோயை உண்டாக்கும் என்பது உலகம் முழுவதும் நிரூபிக்கப்பட்ட விஷயம். இந்திய அரசு தூண்டிவிட்டிருக்கும் இன்னொரு பொய்ப் பிரசாரம், கூடங்குளம் அணுமின் நிலையம் வராவிட்டால் தமிழகமே இருண்டுவிடும் என்பதாகும். கூடங்குளம் உலையிலிருந்து தமிழகத்துக்கு மட்டும் ஆயிரம் மெகாவாட் வருமாம். முதலில் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். அணு சக்தித் துறை ஆயிரம் மெகாவாட் தயாரிக்கும் திறனுடன் ஒரு உலையை நிறுவினால் அதில் பாதி அளவுகூட உற்பத்தியைச் செய்வதில்லை. கல்பாக்கம் உலைகளே கடந்த நான்கைந்து வருடங்களாகத்தான் மொத்த உற்பத்தித் திறனில் 40 முதல் 50 சதவிகிதத்துக்கு மின்சாரம் தயாரிக்கும் நிலைக்கு வந்திருக்கின்றன.ஆய்வாளர் மோகன் சர்மா கணக்கிட்டுள்ளபடி கூடங்குளத்தில் உள்ள இரண்டு உலைகளும் இயங்க ஆரம்பித்து மொத்த உற்பத்தித் திறனாகிய 2 ஆயிரம் மெகாவாட்டில் 60 சதவிகித மின்சாரம் தயாரித்தாலும், 1200 மெகாவாட்தான் வரும். இதில் பத்து சதவிகிதம் கூடங்குளம் வளாகத்துக்கே செலவாகிவிடும். (வழக்கமாக அணு உலைகள் தங்கள் உபயோகத்துக்கே 12.5 சதம் செலவழிக்கின்றன.) மீதம் 1080 மெகாவாட்தான். இதில் தமிழகத்தின் பங்கு 50 சதவிகிதம் எனப்படுகிறது (இதுவும் வழக்கமாக 30 சதவிகிதம்தான்.) ஐம்பது என்றே வைத்தாலும் கிடைக்கப் போவது 540 மெகாவாட். இதில் 25 சதவிகிதம் வழக்கமாக தமிழகத்தில் மின் கடத்துவதில் ஏற்படும் டிரான்ஸ்மிஷன் இழப்பு. எனவே நிகர மின்சாரம் கிடைக்கக் கூடியது 405 மெகா வாட்தான்.
 
2.jpg
 
இதற்கு இத்தனை கோடி செலவு செய்து படு ஆபத்தான வம்பை விலைக்கு வாங்கத் தேவையே இல்லை. தமிழகம் முழுக்கவும் இருக்கும் குண்டு பல்புகளை மாற்றி, குழல் பல்புகளாக்கினாலே 500 மெகாவாட்டுக்கும் மேலே மின்சாரம் மிச்சமாகிவிடும். இப்போது டிரான்ஸ்மிஷன்லாஸ் எனப்படும் மின் கடத்துதலில் ஏற்படும் இழப்பால் இந்தியாவில் நாம் தயாரிக்கும் மின்சாரத்தில் 25 முதல் 40 சதவிகிதத்தை சுமார் 72 ஆயிரம் மெகாவாட்டை விநியோகிக்கும்போதே இழந்து கொண்டிருக்கிறோம். ஸ்வீடன் நாட்டில் இந்த இழப்பு வெறும் 7 சதவிகிதம்தான். அதுதான் உலக சராசரி. விநியோகத்தில் இழப்பைக் குறைக்க விஞ்ஞானிகள் வேலை செய் தாலே, சுமார் 60 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் நமக்குக் கிடைத்துவிடும். வெறும் பத்து சதவிகிதமாகக் குறைத்தாலே தமிழகத்தில் 1575 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும்.இந்த மாதிரி நடை முறைக்கேற்ற மாற்றுவழிகள் இன்னும் நிறையவே இருக்கின்றன. தமிழ் நாட்டில் மொத்தம் 5500 மெகாவாட் மின்சாரத்தை, காற்றாலைகளிலிருந்து தயாரிக்கலாம். ஆனால், இதில் 4700 மெகாவாட்தான் இப்போது தயாரிக்கிறோம். தமிழ்நாட்டில் இருக்கும் மொத்த வீடுகளில் வெறும் 25 சதவிகித வீடுகளின் கூரைகளில் மட்டும் இரண்டு கிலோவாட் மின்சாரம் தயாரிக்கும் சக்தியுடைய சூரிய ஒளி பேனல்கள் அமைத்தால் அதிலிருந்தே மொத்தம் ஏழாயிரம் மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். இதையே பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள், வணிக வளாகங்கள், மருத்துவமனைகள் என்று பெரிய பெரிய கட்டடங்களின் மேற்கூரைகளில் அமைத்தால் தமிழகத்தில் மின்சாரம் உபரியாகிவிடும்.காற்றாலைகளிலிருந்து மட்டும் மொத்தம் ஒரு லட்சம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் வாய்ப்பு இந்தியாவில் உள்ளது. நீர் சக்தியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பதற்கான அரசின் தேசியப் புனல்மின் கழகம் இந்தியாவில் மொத்தமாக ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 700 மெகாவாட் தயாரிக்க முடியும் என்றும் இப்போது அதில் வெறும் 19 சதவிகிதம் மட்டுமே தயாரிக்கிறோம் என்றும் தெரிவித்திருக்கிறது. சூரியசக்தி பல மடங்கு பிரம்மாண்டமானது. மொத்தம் நான்கு லட்சம் மெகாவாட் தயாரிக்க முடியும். வருடத்தில் நான்கே மாதம் மட்டும் வெயில் அடிக்கக் கூடிய ஜெர்மனி, நார்வே போன்ற நாடுகளில் ஏற்கெனவே மொத்த மின்சாரத்தில் 20 சதவிகிதத்தை சூரியசக்தியிலிருந்து தயாரிக்கிறார்கள். இந்தியாவில் வருடத்தில் 300 நாட்களுக்கு மொத்தம் 2500 மணி நேரம் தெளிவான வெயில் இருக்கிறது. சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் போட்டோவோல்டேய்க் செல் பேனல்கள் தனது முழுத் திறனில் வெறும் பத்து சதவிகிதம் மட்டுமே இயங்கினால் கூட, கிடைக்கும் மின்சாரம் 2015ல் இந்தியாவில் வீட்டுத் தேவைக்கான மின்சாரத்தை விட ஆயிரம் மடங்கு அதிகம்! சூரியசக்தி மின்சாரம் தயாரிக்க செலவு அதிகம் என்று அணு ஆதரவாளர்கள் பிரசாரம் செய்வது இன்னொரு பொய். எதை விட இது செலவு அதிகம் ? அணு மின்சாரத்தின் அசல் விலையை அவர்கள் மூடி மறைத்துவிட்டு மற்றவற்றை விலை அதிகம் என்று பொய்ப் பிரசாரம்தான் செய்கிறார்கள். ஜெய்தாபூரில் பிரெஞ்ச்கம் பெனியிடமிருந்து அணு உலை வாங்கி நிறுவுவதற்கு அவர்கள் போட்டிருக்கும் மதிப்பீடு ஒரு கிலோவாட்டுக்கு 21 கோடி ரூபாய். ஆனால் ஏழு இடங்களில் சூரிய சக்தி மின் நிலையங்கள் அமைக்க, தனி யாருக்கு இந்திய அரசு அனுமதி கொடுத்திருக்கிறது. அங்கே நிறுவும் செலவு ஒரு கிலோ வாட்டுக்கு 12 கோடி ரூபாய்தான். நிறுவிய பின்னர் பராமரிப்புச் செலவும் அணு உலையை விடக் குறைவு. ஆபத்து துளியும் இல்லை. அணு உலையை லட்சக்கணக்கான வருடத்துக்குப் பாதுகாத்தே திவாலாகிவிடுவோம்.
 
இப்போது சூரிய சக்தியில் மின்சாரம் தயாரிக்கத் தேவைப்படும் பொருட்களின் விலை படு வேகமாகச் சரிந்து வருகிறது. சோலார் போட்டோவோல்டேய்க் செல் தயாரிக்கத் தேவைப்படும் பாலி-சிலிக்கான் விலை கடந்த மூன்று வருடங்களில் 93 சதவிகிதம் குறைந்துவிட்டது. அதனால் இந்த மின்சாரம் தயாரிக்க முன்வரும் தனியார் கம்பெனிகள், அரசுக்கு மின்சாரத்தை முன்பைவிடக் குறைந்த விலையில் தர முன்வந்துவிட்டன. டிசம்பர் 2011ல் நடந்த ஏலத்தில் இந்திய அரசு ஒரு மெகாவாட்/மணி அளவு மின்சாரத்தை 15,390 ரூபாய்க்கு வாங்கத் தயார் என்று அறிவித்திருந்தது. ஆனால், பிரான்சின் இரண்டாவது பெரிய சூரிய மின்சக்தி உற்பத்தி நிறுவனமான சோலேர் டைரக்ட் 7,490 ரூபாய்க்கே விற்ப தாக ஏலம் எடுத்திருக்கிறது. இது ஒரு வருடம் முன்பு இருந்த விலையை விட 34 சதவிகிதம் குறைவு. எனவே 2015க்குள் சூரிய மின்சாரத்தின் விலையும் இப்போது நிலக்கரியால் தயாரிக்கும் அனல் மின்சாரத்தின் விலையும் சமமாகிவிடும் என்று கருதுகிறார்கள்.காற்று, சூரியசக்தி மின்சாரத்தையெல்லாம் தேசிய கிரிட்டில் இணைப்பது கடினம் என்றும் அவற்றைக் கொண்டு 500, 1000, 2000 மெகாவாட் நிலையங்களை நடத்த முடியாது என்பது அவர்களின் இன்னொரு வாதம். முதலில் ஏன் எல்லா மின்நிலையங்களையும் ஆயிரக்கணக்கான மெகாவாட் உற்பத்தி நிலையமாக வைக்கவேண்டும் என்பதையே நாம் கேள்வி கேட்கவேண்டும். போக்குவரத்துக்குப் பயன்படும் வாகனங்களை எடுத்துக் கொள்வோம். சைக்கிள், டூ வீலர், கார், ஆட்டோ, பஸ், ரயில், விமானம், கப்பல் என்று வகைவகையாக இருக்கின்றன. அடுத்த தெருவுக்குச் செல்வதற்கு விமான சர்வீஸ் நடத்தச் சொல்வோமா ? இதே போல மின் உபயோகமும் பலதரப்பட்டது. வீட்டு உபயோகம், விவசாய உபயோகம், தொழிற்சாலை உபயோகம், பொது உபயோகம், கிராமத் தேவை, நகரத் தேவை என்று மாறுபட்டவை. எல்லாவற்றையும் கிரிட் மூலம்தான் செய்ய வேண்டும் என்ற அணுகுமுறையே தவறானது. இதனால்தான் மின்சாரத்தை அனுப்புவதில் டிரான்ஸ்மிஷன்லாஸ் என்பதே பெருமளவு ஏற்படுகிறது. இப்போதுள்ள அனல், புனல் மின் நிலையங்களைக் கொண்டு தொழிற்சாலை தேவைகளைப் பூர்த்தி செய்யலாம். வீட்டுத் தேவைகள், விவசாயத் தேவைகளில் பெரும்பகுதி எல்லாம் சிறு மின் நிலையங்களாலேயே பூர்த்தி செய்யக்கூடியவை. கிரிட் மின்சாரம் இல்லாதபோது மின்வெட்டைச் சமாளிக்க ஒவ்வொரு வீட்டிலும் இன்வர்ட்டர் வைத்துக் கொள்வதை விட, சூரியசக்தியில் மின்சாரம் தயாரிக்கும் கருவிகளைப் பொருத்திக் கொள்ளலாம். மின்சார விநியோக கண்ட்ரோல் அதிகாரத்தை ஒரே இடத்தில் குவித்துவைத்துக் கொள்ளத்தான் கிரிட் முறை பயன்படுகிறது. சென்னையில் ஒரு மணி நேரம்தான் பவர்கட். அத்திப்பட்டில் ஆறு மணி நேரம் பவர்கட் என்பது கிரிட் அதிகாரத்தால் நடப்பது. அத்திப்பட்டில் சூரியசக்தி, காற்றாலை மின்சாரம் இருந்தால் அங்கே ஒரு மணி நேரம் கூட பவர் கட் இருக்காது.சூரியசக்தி மின்சாரத்தைப் பல விதமாகத் தயாரிக்கலாம். போட்டொவோல்டேய்க் செல்பேனல் முறை ஒன்று. இன்னொன்று குவிசக்தி முறை. கண்ணாடிகள், லென்சுகளைப் பயன்படுத்தி, தீவிரமான ஒளிக்கற்றை மூலம் உருக்கிய உப்பை சூடாக்கி அந்த வெப்பத்திலிருந்து தயாரிப்பதாகும். இந்தியாவில் எல்லா முறைகளையும் பயன்படுத்த வசதி இருக்கிறது. ராஜஸ்தான் தார் பாலைவனத்தில் 50 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பு இருக்கிறது. அங்கே மட்டும் பிரம்மாண்டமான சூரியசக்தி மின் நிலையங்களை ஏற்படுத்தினால் 15 ஆயிரம் மெகாவாட் வரை தயாரித்து கிரிட்டுக்கே அனுப்பலாம். வெளிநாடுகளில் சூரியசக்தி மின்சாரம் நிலை எப்படித் தெரியுமா? இந்தியாவைப் போல வருடம் முழுவதும் வெயில் இல்லாத நாடுகள் கூட முன்பே இதில் இறங்கி விட்டன. ஸ்பெயினில் இப்போதே 12 சதவிகிதம் சூரிய மின்சாரம்தான். இஸ்ரேலில் 90 சதவிகித வீடுகளில் சூரிய சக்தி ஹீட்டர் வந்துவிட்டது. சீனா போட்டோவோல்டேய்க் செல் தயாரிப்பில் உலகத்தில் முதலிடத்தில் இருக்கிறது. உலக அளவில் 3800 மெகா வாட்டுக்கான சோலார் பேனல்களில் சரி பாதியைத் தயாரித்து ஏற்றுமதி செய்திருப்பது சீனாதான். சில மாதங்களே வெயில் அடிக்கும் ஜெர்மனியில் மொத்த மின்சாரத்தில் 25 சதவிகிதத்தை சூரியசக்தியில் தயாரிப்பதை 2050க்குள் சாதிக்க நடவடிக்கை எடுக்கப் படுகிறது. இப்போது உலகம் முழுவதும் உற்பத்தியாகும் சூரியசக்தி மின்சாரத்தில் சரிபாதி அமெரிக்காவில்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. கலிபோர்னியா மாநிலத்தில் மட்டும் 2020க்குள் அதன் மொத்த மின் தேவையில் 33 சதவிகிதம் சூரியசக்தியிலிருந்து பெறுவது என்ற இலக்குடன் திட்டங்கள் நடக்கின்றன. கிரிட்டுக்கே மின்சாரம் அனுப்பும் திட்டங்களையும் அமெரிக்கா மேற்கொண்டிருக்கிறது. மூன்றாண்டுகளுக்கு முன்பாகவே சுமார் 500 மெகாவாட் சூரிய மின்சாரத்தை, கிரிட்டுடன் இணைத்துவிட்டது.
 
இன்னொரு பக்கம் தனியார் வீடுகளிலும் அவரவர் அலுவலகங்களிலும் சுயதேவைக்காக போட்டோவோல்டேய்க் செல் பேனல் அமைத்து மின்சாரம் தயாரித்துக் கொள்வதை ஊக்குவிக்கிறது. தங்கள் தேவைக்குப் போக உபரி சூரிய மின்சாரத்தை கம்பெனிக்கு விற்கும் வீடுகள் பெருகிவருகின்றன. மின் கட்டணமாக 2400 டாலர் வரை செலுத்திய ஒரு வீட்டில் 25 ஆயிரம் டாலர் செலவில் சூரிய மின்சாரத் தயாரிப்பு பேனல் பொருத்தியதும் அந்த முழு மின்கட்டணம் மிச்சமாகிவிடுகிறது. அமெரிக்காவில் கடந்த 30 வருடங்களாக ஒரு புதிய அணு உலை கூடத் தொடங்கவில்லை என்பதை இத்துடன் சேர்த்துக் கவனிக்க வேண்டும். ஏன் இந்திய அரசுக்கு மட்டும் இந்த கொலைவெறியான உலைவெறி?


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

மோதலில் சொதப்புவது எப்படி? - ஓ பக்கங்கள் , ஞாநி

 
1.jpg
சினிமாவில் காதல், காமெடி, சோகம், குடும்பம், வரலாறு, இசைச் சித்திரம் என்று பல வகைகள் இருப்பது போல போலீசின் ஒடுக்குமுறையில் ஒரு புதிய வகையாக ‘மோதல் கொலைகள்’ இந்தியாவில் உருவாகிப் பல பத்தாண்டுகள் ஆகிவிட்டன. குறிப்பாக 1975-76 நெருக்கடி காலகட்டத்தில் இந்த மோதல் கொலைக்கு அரசின் முழுமையான ஆசிகள் தரப்பட்டன. தமிழகத்தில் சுமார் 30 வருடங்களாக ‘மோதல் கொலைகள்’ நடைமுறையில் இருக்கின்றன.வேளச்சேரியில் பிப்ரவரி இறுதியில் ஐந்து வடமாநிலத்தவர்களை, குடியிருப்புப் பகுதியில் நள்ளிரவில் போலீசார் சுட்டுக் கொன்ற நிகழ்ச்சி பற்றிய போலீஸ் தரப்புச் செய்திகளில் இருக்கும் ஓட்டைகளை தமிழ் சினிமாவில் புத்தம்புதுசாக வேலைக்குச் சேர்ந்திருக்கிற துணை இயக்குனர் கூட எளிதாகப் பட்டியல் இட்டுவிடமுடியும். சந்தேகத்துக்குரிய நபரின் வீடியோ என்று ஒன்றை போலீஸ் விளம்பரப்படுத்திய பத்தே மணி நேரத்தில் அந்த நபர் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து அங்கே போய் அவரையும் இன்னும் நான்கு பேரையும் சுட்டுக் கொன்றுவிடவே முடிந்திருக்கிறது. ராஜீவ் கொலை வழக்கில் சிவராஜன், சுபா படங்களை ஊர் ஊராக போஸ்டர் அடித்து ஒட்டி, தினசரி டி.வி.யில் காட்டியும் மாதக் கணக்கில் அவர்களைக் கண்டுபிடிக்க முடியாமல் அலைந்ததுடன் ஒப்பிட்டால், காவல் துறையின் திறமை பல்லாயிரம் மடங்கு உயர்ந்துவிட்டதாகவே நம்பவேண்டியிருக்கிறது.முதல் ஓட்டை வீடியோவில் காட்டிய காட்சி. பணம் கொள்ளையடிக்கப்பட்ட இரண்டு வங்கிகளிலும் கேமராக்கள் இயங்கவில்லை. இந்த வீடியோ சென்னையில் இருக்கும் இதர நூற்றுக்கணக்கான கொள்ளையடிக்கப்படாத வங்கிகளில் இயங்கிய கேமராக்களில் பதிவான காட்சிகளைப் பல மணி நேரம் பார்த்து துருவி எடுத்ததாம். வங்கி கவுன்ட்டர்களுக்கு எதிரே மக்கள் நடமாடும் பகுதியில் ஒருவர் குறுக்கும் நெடுக்கும் நடமாடும் காட்சி. அதில் சுற்றிலும் இருக்கும் மக்களை மறைத்து விட்டு இந்த நபரை மட்டுமே காட்டியிருக்கிறது. நானும் நண்பரும் வெளியே சினிமாவுக்குப் போகிற வழியில் நண்பர் பாங்க்கில் ஒரு சின்ன வேலையை முடித்து விட்டு போகலாம் என்றால் நானும் கூடப் போவேனல்லவா. அப்போது நண்பர் கவுன்ட்டரில் தன் வேலையை முடிக்க மும்முரமாக இருக்கும்போது, வெட்டியாக இருக்கும் நான் என்ன செய்வேன்? அந்தக் கூடத்தில் குறுக்கும் நெடுக்கும்தான் உலாத்துவேன். யாராவது ஒருவரை கொஞ்சம் வேடிக்கை பார்ப்பேன். திடீரென்று ஏதாவது சத்தம் என் கவனத்தை ஈர்த்தால் அந்த கவுண்ட்டரை நோக்கி உற்றுப் பார்ப்பேன். வங்கி கேமராவில் பதிவான காட்சியில் என்னை மட்டும் பிரித்துப் பார்த்தால், நான் சந்தேகத்துக்குரிய விதத்தில் நடமாடுவதாகத்தான் தோன்றும்.இந்த மாதிரி வீடியோ நறுக்குகளைத் தேர்ந்தெடுப்பதானால், ஒவ்வொரு வங்கியிலும் தினசரி பத்து பேராவது சந்தேகத்துக்குரிய முறையில் நடமாடுவதாகவே தோன்றும்.
 
2.jpg
 
எனவே இந்தக் குறிப்பிட்ட நபரை வீடியோ க்ளிப்பில் தேர்வு செய்ய போலீசிடம் முன் தகவல் ஏதாவது இருந்தாக வேண்டும். கொள்ளையடிக்கப்பட்ட வங்கிகளில் கொள்ளையர்களைப் பார்த்தவர்கள் சொன்ன அடையாளங்களின் அடிப்படையில் இந்த நபரை சரியாக பல மணி நேர வீடியோ க்ளிப்புகளிலிருந்து சலித்து எடுத்திருக்க முடிந்ததா? முன்தகவல்கள் பற்றி போலீஸ் எதுவும் சொல்ல வில்லை. கொல்லப்பட்ட ஐந்து பேரின் பிணங்களைப் போய் பார்த்த வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் இந்த ஐந்து பேரும்தான் எங்கள் வங்கியில் வந்து கொள்ளையடித்தார்கள் என்று அடையாளம் சொன்னதால் அது மட்டும்தான், இந்த வழக்கில் அந்த ஐவர்தான் கொள்ளையர்கள் என்பதற்கு ஒரே சாட்சியம்.சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் இருந்த வீட்டிலிருந்து சில லட்சம் பணம் மட்டும் கைப்பற்றப்பட்டதாக போலீஸ் சொல்லியது. ஆனால் தரையில் கிடக்கும் பிணங்கள், ரத்தக் கறை, துப்பாக்கிகள், வீடியோவில் காட்டியவர் அணிந்த சட்டை ஆகியவற்றையெல்லாம் படம் எடுத்துக் காட்ட அனுமதித்த போலீஸ், பணத்தை இதுவரை காட்டவில்லை. பொதுவாகக் கைப்பற்றிய நகைகள், பொருட்கள், பணம் இவற்றையெல்லாம் நிருபர்கள் முன்பு காட்சிக்கு வைப்பது போலீஸ் வழக்கம்.குடியிருப்புப் பகுதியில் தரை தளத்தில் தங்கியிருந்த ஐவரை விசாரிக்கத்தான் இரவு 12.30க்குச் சென்றோம் என்று போலீஸ் சொல்கிறது. கதவைத் தட்டியதும் திறக்காமல், ஐவரும் உள்ளிருந்து ஜன்னல் வழியே சுட்டதாகவும் அதில் இரு அதிகாரிகள் காயமடைந்ததாகவும் அதன்பின்னர் எச்சரித்தும் சரணடையாததால், வேறு வழியின்றி கதவை உடைத்துக் கொண்டு போய் சுட்டதில் ஐவரும் செத்ததாகவும் போலீஸ் கதை நீள்கிறது. பொது மக்களுக்கு ஆபத்து ஏற்படக்கூடாது என்பதற்காகவும் தங்களைக் காத்துக் கொள்ளவும் சுட வேண்டியதாயிற்றாம். நள்ளிரவு 12.30 மணிக்கு அவரவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பொது மக்களுக்கு எங்கே ஆபத்து வந்தது? தூங்காமல் எட்டிப் பார்த்த ஓரிரு வீட்டினரையும் போலீஸ் வந்த உடனே எச்சரித்து உள்ளே போகச் சொல்லிவிட்டது. இனி போலீஸ் கதவைத் தட்டியதும் ஜன்னல் வழியே போலீசை நோக்கி ஐவர் சுட்டார்கள் என்ற கதையைப் பார்ப்போம். டி.வி.யில் காட்டப்பட்ட அந்த வீட்டுக் கதவுகள், ஜன்னல், சுவர்கள், எதிர்ப்பக்கம் இருக்கும் சுவர்கள் எதைப் பார்த்தாலும் இருதரப்புக்கும் இடையே பெரிய துப்பாக்கிச் சண்டை நடந்ததற்கான அடையாளங்களே இல்லை.
 
3.jpg
வங்கிகளில் லட்சக்கணக்கான ரூபாய்களை திட்டமிட்டுப் பட்டப் பகலில் போய் துணிச்சலுடன் கொள்ளையடிப்பவர்கள்தான் உள்ளே இருந்தவர்கள் என்றால், அவர்களுக்கு அடிப்படை காமன்சென்ஸ் கூட இருக்காதா என்ன? வந்திருப்பது போலீஸ். அதை ஜன்னல் வழியே சுட்டுவிட்டு தாங்கள் தப்பித்துப் போவது எப்படி என்று யோசிக்க மாட்டார்களா? ஜன்னல் வழியே ஒருவன் சுட்டபடி போலீஸ் கவனத்தை ஈர்க்கும்போதே, அதைப் பயன்படுத்தி மற்றவர்கள் கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்து இன்னொரு பக்கத்திலிருந்து தாங்களும் போலீசை நோக்கிச் சுட்டபடி தெருவுக்கு ஓடி தப்பிக்கத்தானே பார்ப்பார்கள்? எந்த மசாலா சினிமா பார்த்திருந்தாலும் இந்த அறிவு அவர்களுக்கு இருந்திருக்குமே? அப்போது போலீஸ் அவர்களை நோக்கிச் சுட்டதில் ஐவரும் இறந்திருந்தால், ஒவ்வொரு பிணமும் வீட்டுக்கு வெளியே, நடையில், வாசற் கதவருகில் அப்படித்தானே விழுந்திருக்க முடியும்? ஆனால் ஐவரும் உள்ளே ஒரே அறையில் செத்துக் கிடந்ததாகக் காட்டப்பட்டது. அப்படியானால், உள்ளிருந்துகொண்டு ஜன்னல் வழியே சுட்டுக் கொண்டே இருந்தால், போலீஸ் கொஞ்ச நேரம் கழித்துப் போய்விடும், அப்புறம் நாம் போகலாம் என்று நினைத்துச் சுட்டார்களா? அவ்வளவு முட்டாள்களாக இருந்தால் அவர்களால் எப்படி பட்டப்பகலில் வங்கியைக் கொள்ளையடிக்க முடிந்திருக்கும்? உள்ளேயிருந்து வெளியேறவும் வாய்ப்பில்லை, தப்பவும் முடியாது என்று உணர்ந்திருந்தால் ஏன் ஜன்னல் வழியே சுடப் போகிறார்கள்? ஒன்று சரண்டைவார்கள். அல்லது தற்கொலை செய்துகொள்வார்கள்.போலீஸ் சொன்னதாக பத்திரிகைகளில் வந்த இன்னொரு செய்தியின்படி அன்றிரவே அவர்கள் ஊரை விட்டு ஓட திட்டமிட்டிருந்தார்களாம். வாடகைக்கு வீடு கொடுத்தவரிடம் ஊருக்குப் போகிறோம். அட்வான்சை திருப்பிக் கொடுங்கள் என்று கேட்டார்களாம். சுமார் 40 லட்சம் ரூபாய் கொள்ளையடித்து வைத்திருக்கிறவன் வீட்டை காலி பண்ணுகிறேன் என்று ஏன் சொல்லிவிட்டுப் போக வேண்டும்? அட்வான்ஸ் பணம் வெறும் 20 ஆயிரத்தை திரும்ப வாங்குவதற்கா?வங்கிக் கொள்ளையர்கள் வேளச்சேரி வீட்டில் இருக்கிறார்கள் என்ற தகவல் உறுதியானதும் போலீஸ் அவர்களை உயிருடன் பிடிக்கத்தான் முயற்சித்திருக்க வேண்டும். அது கடினமானதல்ல. வீட்டுக்குப் போய் கதவைத் தட்டியதும் ஜன்னல் வழியே உள்ளிருந்து சுட்டிருந்தால், போலீஸ் செய்திருக்க வேண்டிய எளிய வழி அதே ஜன்னல் வழியே ஏழெட்டு கண்ணீர்ப்புகை குண்டுகளை உள்ளே வீசுவதுதான். நிச்சயம் ஐவரையும் உயிரோடு கைது செய்திருக்க முடியும். தொடர்ந்து சந்தேகத்துக்குரியதாகவே ஒவ்வொரு என்கவுண்ட்டர் கொலையும் இருக்கிறது. இதனால்தான் தெளிவாக உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் என்கவுண்ட்டர் டெத் நடந்தால், சுட்ட போலீஸார் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரித்தாக வேண்டும் என்பதை வற்புறுத்துகின்றன. நிச்சயம் தவிர்க்க முடியாத சூழலில், தற்காப்புக்காகவும் பிற உயிர்களைக் காப்பாற்றவும்தான் போலீஸ் சுடவேண்டி வந்தது என்று நிரூபிக்காதவரை அதுவும் கொலைதான் என்பதே உச்ச நீதிமன்றக் கருத்து.வங்கிக் கொள்ளைகளின் பின்னணி என்ன? தனி நபர் கொள்ளையர்களா? தீவிரவாத இயக்கங்களா? இந்த ஐந்து பேர் மட்டும்தான் சம்பந்தப்பட்டவர்களா? அல்லது இன்னும் பலர் இருக்கிறார்களா? கொள்ளையடித்த பணத்தில் ஒரு பகுதிதானே மீட்கப்பட்டது ? மீதி எங்கே யாரிடம் போயிற்று ? இவையெல்லாம் கண்டறியப்பட வேண்டிய முக்கியமான விஷயங்கள். ஆனால் ஐவரும் கொல்லப்பட்டதால், பல தகவல்களும் அவர்களோடே மறைந்துவிடும். அப்படி மறைப்பதற்காகத்தான் கொல்லப்பட்டார்களா? இந்தக் கேள்விகள் எல்லாமே முக்கியமானவை. மனித உரிமை காப்புக் குழுவினர் பலரும் கோருவது போல ஒரு சி.பி.ஐ விசாரணை நடந்தால் மட்டுமே இதிலெல்லாம் கொஞ்சமாவது தெளிவு கிடைக்கும்.
 
4.jpg
இந்த மோதல் கொலைகளையடுத்து நடக்கும் சில ஆபத்தான போக்குகள் ஆரம்பத்திலேயே கண்டிக்கப்பட வேண்டியவை. முதலாவது போலீசார் கொள்ளையர்களைக் கொன்று மக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்திவிட்டார்கள் என்று வரிசையாக வங்கி அதிகாரிகள், வணிகர்கள், பொதுமக்கள் என்ற பெயரில் சில குழுக்கள் பாராட்டு அறிக்கை வெளியிடுவதும் கமிஷனரை சென்று பாராட்டுவதும், கடற்கரையில் போர்டு வைத்துக் கையெழுத்திடுவதும் செய்யப்பட்டது. எந்தக் குற்றவாளியையும் கொலை செய்யும் அதிகாரம் எந்தச் சட்டத்தின் கீழும் போலீசுக்கு இல்லை. சட்டம் தரும் விதிவிலக்கையே சட்டமாக்கிவிட முடியாது. குற்றவாளியை நீதிமன்றம் முன் கொண்டு வந்து நிறுத்துவதுதான் போலீசின் திறமை. தானே கொன்று தண்டனை தருவது திறமையின்மையின் அடையாளமேயாகும். உண்மை நிலையைக் கண்டறிய வந்த பேராசிரியர் மார்க்ஸ் தலைமையிலான குழுவினரை பொது மக்கள் என்ற போர்வையில் சிலர் தடுத்தது அராஜகமானது. எண்பதுகளிலும் இதே போலத்தான் திருப்பத்தூர் பகுதியில் நடந்த நக்சலை-போலீஸ் மோதல்கள் பற்றி விசாரிக்க வந்த கிளாட் ஆல்வாரிஸ், வி.எம்.தார்குண்டே ஆகியோர் மிரட்டப்பட்டு தாக்கப்பட்டார்கள். இரண்டாவதாக வட இந்தியர்கள் தமிழகத்துக்கு வந்து இங்கே குற்றங்களில் ஈடுபடுகிறார்கள் என்று ஒட்டுமொத்தமாக இங்கே வாழும் வட இந்தியர்களுக்கு, குறிப்பாக ஏழைத்தொழிலாளர்களுக்கு எதிராக ஒரு வெறுப்புக் கருத்தை சில ஊடகங்களும் சில பத்திரிகைகளும் சில அமைப்புகளும் பிரசாரம் செய்கின்றன. இதன் விளைவாக மனநிலை சரியில்லாத ஒரு ஆந்திர இளைஞரை, பொதுமக்கள் கண்மூடித்தனமாகத் தாக்கும் நிலை ஏற்பட்டது. உண்மையில் இங்கே வரும் இந்தியத் தொழிலாளிகள் நம்மால் சுரண்டப்படுகிறார்கள். தி.மு.க ஆட்சியில் அரசு கட்டிய அத்தனை மேம் பாலங்கள், அண்ணா நூலகம், சட்டமன்றக் கட்டிடம் அனைத்துக்கும் வடமாநிலங்களிலிருந்து கட்டடத் தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டார்கள். இரவு பகலாக வேலை செய்ய வைக்கப்பட்டு தங்குமிடம், கழிப்பிடம் முதலிய வசதிகள் ஒழுங்காக இல்லாமல் சுரண்டப்பட்டார்கள். (சட்டமன்ற தண்ணீர் தொட்டி கட்டடம் முடிந்ததும் கடைசி நாள் கருணாநிதி அவர்களுக்கு அரசு செலவில் பிரியாணி விருந்து போட்டு ஹிந்திப் பாடல் இசை நிகழ்ச்சி நடத்தி வழியனுப்பிவைத்தார்!) இதேபோல பிற மாநிலங்களுக்கு பல ஏழைத் தமிழர்கள் சென்று பிழைக்கிறார்கள். ஒரு இன மக்களுக்கு இன்னொரு இன மக்கள் மீது வெறுப்பை ஊட்டி வளர்ப்பது தொலைநோக்கில் மிக மிக ஆபத்தானது. ஒரு சில கொள்ளையர்கள் வட இந்தியர்களாக இருக்கலாம். அவர்களைச் சுட்டுக் கொன்ற சென்னை போலீஸ் துறையின் கமிஷனரும் வட இந்தியர்தானே! மூன்றாவதாக, பொதுமக்களில் சிலர் பேச்சுலர்களுக்கு வீடு வாடகைக்குக் கொடுக்கக்கூடாது என்று பேசுவதை சில ஊடகங்கள் பெரிதுபடுத்திக் காட்டின. இன்றைய வாழ்க்கை நிலையில் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு ஆணோ ஒரு பெண்ணோ குடும்பத்தை விட்டுப் பிரிந்து வெளியூருக்குச் சென்று தன்னைப் போன்ற நால்வருடன் தனியே வீடு எடுத்துத் தங்கிப் பிழைப்பது சகஜமாகி விட்டது. இந்நிலையில் பேச்சுலர்களுக்கு வாடகை வீடு தரக்கூடாது என்ற மனநிலையை ஊக்குவிப்பது அபத்தமானது. வேளச்சேரி நிகழ்ச்சி, நம் சமூகம் வரலாற்றிலிருந்து இன்னும் பல பாடங்களைக் கற்கவில்லை என்பதையே காட்டுகிறது.


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

தண்ணீர்...தண்ணீர்... - ஓ பக்கங்கள், ஞாநி

 
1.jpg
‘மூன்றாவது உலக யுத்தம் வெடித் தால் அதற்குக் காரணமாக இருக்கப் போவது தண்ணீர்தான்’ என்று பல வருடங்களாக உலகெங்கும் அறிஞர்கள் எச்சரித்து வருகிறார்கள். மனித வரலாற்றில் பல நாகரிகச் சமூகங்கள் அடியோடு அழிந்ததற்குக் காரணம் தண்ணீர் இல்லாமல் வறட்சி ஏற்பட்டதால்தான்.ஏற்கெனவே தண்ணீருக்காக இந்தியாவில் பல மாநிலங்களுக்கிடையே குட்டி யுத்தங்கள் நடந்து வருகின்றன. இதற்கெல்லாம் தீர்வு நதிகள் இணைப்பு என்ற தவறான பிரசாரம் ஒரு பக்கம் நடக்கிறது. நதிகளை இணைப்பதால் பாதிக்கப்படும் நிலங்கள், மக்கள் சந்திக்கக்கூடிய பிரச்னைகள், தண்ணீர் பற்றாக்குறை பிரச்னையை விட பிரம்மாண்டமானவை. எனவே ஆறு, குளம், ஏரிகளை மாசுபடுத்தாமல் காப்பது, மணற் கொள்ளையை நிறுத்துவது, மழைநீர் சேகரிப்பு, கடலில் வீணாகக் கலக்கும் நீரை மிச்சப்படுத்துவது, இப்போது நீரைப் பயன்படுத்தும் முறைகளில் சிக்கனத்தைக் கொண்டு வருவது முதலியவைதான் அசல் தீர்வுகள்.இந்த வாரம் வந்துள்ள செய்திகளின்படி சென்னை நகரின் பல பகுதிகளில் - மயிலாப்பூர், தண்டையார்பேட்டை, சிந்தாதிரிப்பேட்டை, பெசன்ட் நகர், திருவான்மியூர், கொளத்தூர், மகாகவி பாரதி நகர், புளியந்தோப்பு, அண்ணாநகர், தியாகராயநகர், விருகம்பாக்கம், கருணாநிதிநகர், சைதாப்பேட்டை,வேளச்சேரி, கிண்டி, தரமணி - சென்ற ஏப்ரலில் இருந்த அளவை விட இந்த வருட ஏப்ரலில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்திருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் பாசனத்துக்கான நீர் அளவு சிக்கலாகிக் கொண்டே வருகிறது. பேச்சிப்பாறை அணையிலிருந்து தண்ணீரை, கூடங்குளம் அணுஉலைக்கு அனுப்பியாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், குமரி மாவட்டத்தில் விவசாயமும் குடிநீரும் கடுமையாகப் பாதிக்கப்படும்.நிலத்தடி நீரைப் பொறுத்த மட்டில் தமிழ்நாட்டில் இருக்கும் மொத்தம் 386 வட்டங்களில் (பிளாக்குகளில்), 139 வட்டங்களில் ஏற்கெனவே அளவுக்கு மேல் உறிஞ்சியாகிவிட்டது. அடுத்து 33 வட்டங்கள் வற்றிப் போகும் ஆபத்தான நிலையில் உள்ளன. இன்னொரு 67 வட்டங்கள் முக்கால் ஆபத்தில் இருக்கின்றன. இன்னொரு 11 வட்டங்களில் தண்ணீர் எதற்கும் தரமற்றது. மொத்தத்தில் தமிழகத்தில் மூன்றில் இரண்டு பங்கு பகுதியில் நிலத்தடிநீர் சிக்கல்தான். இந்தச் சூழ்நிலையில்தான் மத்திய அரசின் தண்ணீர் கொள்கை வெளியிடப்பட்டிருக்கிறது. தண்ணீர் மாநில அதிகார வரம்புக்கு உட்பட்ட விஷயம் எனினும் மத்திய அரசு அறிவிக்கும் கொள்கை அடிப்படையில் தான் மாநிலங்கள் தங்கள் கொள்கை பிரகடனங்களையும் சட்டங்களையும் உருவாக்குகின்றன.கடைசியாக மத்திய அரசு தண்ணீர் கொள்கையை வெளியிட்டு 25 வருடமாகிறது (1987)! அதன் அடிப்படையில் தன் கொள்கையை அறிவிக்க தமிழக அரசுக்கு ஏழு வருடம் தேவைப்பட்டது (1994). 
மத்திய அரசு இப்போது அறிவித்திருக்கும் தண்ணீர் கொள்கையின் பல அம்சங்களுக்கு பல விவசாயிகள் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன. முக்கியமான காரணம் தண்ணீரை, தனியார் எடுத்து விற்கக்கூடிய ஒரு பொருளாக மத்திய அரசு மாற்ற முயற்சிப்பதுதான்.இதுவரையிலும் இந்தியாவில் தண்ணீர் என்பது அது இருக்கும் நிலத்தின் 13052012ந் தக்காரரின் உரிமைப் பொருளாகும். இந்த உரிமையைக் கடைசியாக கேரளத்தில் பிளச்சிமாடா மக்களுக்கும் கோகோ கோலா கம்பெனிக்கும் இடையே நடந்த வழக்கின் தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியிருக்கிறது. ஆனால் மத்திய அரசின் புதிய தண்ணீர் கொள்கையின்படி இனி எல்லா தண்ணீரும் பொதுச் 13052012 சொத்தாகக் கருதப்படும். அடிப்படை மனிதத் தேவைகளுக்கும், ஆறுகள் வற்றாமல் தக்கவைக்கவும் போதுமான நீர் அளவு நிர்ணயிக்கப்பட்டு, மீதமுள்ள தண்ணீரை விலைக்கு விற்று பொருள் ஈட்டக்கூடிய ஒரு சரக்காகக் கருத மத்திய அரசின் கொள்கை அறிவிப்பு வகை செய்கிறது. மக்களுக்கு குடிநீர், பாசனநீர் விநியோகிக்கும் வேலைகளை அரசுப் பொறுப்பிலிருந்து எடுத்துவிட்டு அதை தனியார் அமைப்புகளிடம் ஒப்படைப்பது இன்னொரு கொள்கை அறிவிப்பாகும். மின்சார விநியோகத்தை தனியாரிடம் ஒப்படைத்து அவர்கள் அதற்கான சந்தை விலையை நிர்ணயிக்க விடுவதைப் போல, தண்ணீரிலும் செய்வதே மத்திய அரசின் நோக்கம். இப்படியெல்லாம் செய்ய வேண்டும் என்று நீண்ட காலமாக உலக வங்கி இந்திய அரசுக்குச் 13052012ல்லி வருகிறது. அதைத்தான் இப்போது அரசு தன் கொள்கை அறிவிப்பாக வெளியிட்டுள்ளது.எல்லா தண்ணீரையும் பொதுச்13052012 சொத்து என்று அறிவித்து அதில் ஒரு பகுதியை மட்டும் மக்களின் அன்றாட உபயோகத்துக்கு ஒதுக்கிவிட்டு, அதையும் மீதியையும் விற்கவும் விநியோகிக்கவும் தனியார் அமைப்பிடம் அளிப்பதற்கு என்ன அர்த்தம்? நந்திகிராம், சிங்கூர் போன்ற இடங்களில் மக்களின் நிலங்களை அரசு குறைந்த விலையில் கையகப்படுத்தி அவற்றை பெருமுதலாளிகள் தொழிற்சாலை அமைக்க சலுகை விலையில் தருவது போலவே, தண்ணீரிலும் அரசு செய்ய விரும்புகிறது. மின்சாரம், தண்ணீர் எல்லாம் பெரு முதலாளி நிறுவனங்களுக்கு சலுகை விலையிலும், பொதுமக்களுக்கு அதிக விலையிலும், அப்படி அதிக விலையில் மக்களுக்கு விற்று லாபம் சம்பாதிக்கும் வாப்பையும் அந்த கம்பெனிகளுக்கே ஏற்படுத்தித் தருவதுதான் உலக வங்கியின் நோக்கம். அதற்கு இசைவாகவே மன்மோகன் அரசு கொள்கை பிரகடனங்களைச் செய்கிறது.தண்ணீருக்கு விலை நிர்ணயம் செய்யும் பொறுப்பு யாருடையது - அரசுடையதா, விநியோகிக்கும் தனியாருடையதா என்பது நிச்சயம் சிக்கல்களை ஏற்படுத்தும். பெரும் தொழிற்சாலைகள் கிராமப்பகுதிகளில் பெரும் அளவில் நீரைப் பயன்படுத்தினால் அதனால் பாதிக்கப்படும் நிலத்தடி நீரின் அளவைக் கணக்கிட்டு விலை நிர்ணயிக்கப்படுமா? நிர்ணயிக்கும் பொறுப்பே தனியார் நிறுவனத்தின் கையில் சென்றால் அது குடிநீர் விலையை சாதாரண மக்களுக்கு கட்டுப்படியாகாத அளவுக்கு ஏற்றிவிடாதா?விவசாயத்தையே எடுத்துக் கொண்டால் மிக அதிகமாக தண்ணீர் செலவாகக்கூடிய பயிர்கள் நெல், கோதுமை. ஒரு கிலோ அரிசி உற்பத்திக்கு 4 ஆயிரம் லிட்டர் நீர் தேவைப்படுகிறது. இந்தியாவில் மொத்த உணவு விளைச்சல் நடக்கும் நிலத்தில் 57 சதவிகித நிலத்தில் அரிசியும் கோதுமையும்தான் பயிர்கள். இவற்றுக்கான நீர் கட்டணம் ஒன்றாகவும் கம்பு, ராகி போன்ற நீர் குறைவாகத் தேவைப்படும் பயிர்களுக்கான நீர் கட்டணம் வேறாகவும் நிர்ணயிக்கப்படுமா? விவசாயமே பெருமளவில் நசிந்துவரும் நிலையில் இந்தக் கட்டணங்கள் சாத்தியம்தானா?
நீர் விநியோகத்தையும் நிர்வாகத்தையும் அரசுகளிடமிருந்து எடுத்து, தனியாரிடம் ஒப்படைப்பதற்கு வசதியாக, ஒவ்வொரு வட்டாரத்திலும் நீர் பயன்படுத்துவோர் அமைப்புகளை ஏற்படுத்தி அவையும் தனியார் கம்பெனிகளும் சேர்ந்து விநியோக நிர்வாகத்தைக் கூட்டாக மேற்கொள்ள வேண்டும் என்று கொள்கை பிரகடனம் 13052012 சொல்கிறது. இதில் பல சாதக பாதகங்கள் இருக்கின்றன. விவசாயத்தில் பாசன நீர் பயன்படுத்துவோர் யார் என்பது ஆயக்கட்டின் அடிப்படையில் தீர்மானிக்கப்படலாம். ஆனால் குடிநீர் என்று வரும்போது உபயோகிப்போர் அமைப்பு என்பதை எப்படி உருவாக்குவது? குடிநீர் பெறும் மக்கள் வசிக்கும் கிராமத்தின் பஞ்சாயத்திடமா? அல்லது பால் 13052012சைட்டிகள் மாதிரி ஊழலுக்கு வாகான இன்னொரு போட்டி அமைப்பாகவா?  தமிழ்நாட்டில் மாநில அரசு ஏற்கெனவே பாசனத்துறையில் நீர் உபயோகிப்போர் அமைப்புகளை ஏற்படுத்திவிட்டது. இருபது மாவட்டங்களில் 1566 பயன்படுத்துவோர் சங்கங்களும், 161 விநியோக கமிட்டிகளும், 9 திட்டக் குழுக்களும் 2004ல் உருவாக்கப்பட்டுவிட்டன. ஐந்து வருடம் கழித்து 2009ல் இவற்றுக்கு அடுத்த தேர்தலும் நடத்தப்பட்டன. இவற்றின் செயல்பாடுகள் குறித்து விரிவான ஆய்வு எதுவும் இன்னும் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை.நிலத்தடி நீர் நிர்வாகம், கட்டுப்பாட்டுக்காக தமிழகத்தில் 2003லேயே ஒரு தனிச்சட்டம் போடப்பட்டது. ஆனால் அது நடைமுறைக்கு இன்னும் கொண்டுவரப்படவில்லை. இப்போது மத்திய அரசு தண்ணீர் கொள்கையை அறிவித்ததையடுத்து தானும் தன் கொள்கையைத் தயாரித்துவருவதாக தமிழக அரசு 13052012ல்லியிருக்கிறது. ஆனால் 2012-13க்காக வெளியிடப்பட்ட பாலிசி நோட் என்பது 1994ன் கொள்கை அடிப்படையிலேயே உள்ளது. மத்திய அரசின் புதிய தண்ணீர் கொள்கை நாடு முழுவதும் நகரங்கள், கிராமங்கள் எல்லா இடங்களிலும் விவாதிக்கப்பட வேண்டியதாகும். அப்படி விவாதித்து கருத்துகளைத் தெரிவிக்க நிச்சயம் ஒரு மாதம் போதாது.ஆனால், மத்திய அரசு இந்த வருடம் ஜனவரி மாதத்தில் தண்ணீர் கொள்கையை அறிவித்துவிட்டு அது தொடர்பான கருத்துகளை மக்களும் மாநில அரசுகளும் தெரிவிக்க, கடைசி நாள் பிப்ரவரி 29 என்று 13052012ல்லிவிட்டது. எதற்கெடுத்தாலும் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதும் ஜெயலலிதா இன்னும் இதற்கு எந்தக் கடிதமும் எழுதியதாகத் தெரியவில்லை.
ஒவ்வொரு பஞ்சாயத்திலும் ஒவ்வொரு பெருநகரத்திலும் விவாதிக்கப்பட வேண்டிய இந்த விஷயத்தை விவாதிக்க ஏற்பாடு செய்யவேண்டிய அரசியல் கட்சிகள் எல்லாம் இதைப் பற்றிக் கவலைப்படவே இல்லை. நுகர்வோர் அமைப்புகள், விஞ்ஞானிகள், பொறியாளர்கள் என்று பலரும் கூடிப் பேச வேண்டிய விஷயம் யாரும் கவனிப்பாரில்லாமல் அரசுகளால் மக்கள் மீது திணிக்கப்பட்டுவிடும் ஆபத்துதான் நடக்கிறது.சட்டமன்றம் முதல் டி.வி சேனல்வரை உருப்படாத விஷயங்களே நேரத்தை ஆக்கிரமிக்கின்றன. ஒவ்வொரு பிரச்னையையும் அது யாரோ இன்னொருவருடையது என்று பார்க்கும் பார்வை நம் சமூகத்தில் அதிகமாகிவிட்டது. அணுஉலை பிரச்னையை தமிழகத்தின் பிரச்னையாகப் பார்க்காமல் அது இடிந்தகரை மீனவர்கள் மட்டுமே கவலைப்படுகிற விஷயமாகத் தவறாகப் பார்க்கப்பட்டது. தண்ணீரையும் அப்படி கருதினால் தவிச்ச வாய்க்கு தண்ணீர் கிடைக்காமல் செத்துப் போவோம். 
இந்த வாரக் கேள்விகள்:
 
1.கலைஞர் கருணாநிதிக்கு:
நீங்களே கொன்ற டெசோவுக்கு, நீங்களே இப்போது உயிர் கொடுத்து எழுப்பி, தனி ஈழத்துக்கான மக்கள் வாக்கெடுப்பு கோரிக்கையை முன்வைத்திருக்கிறீர்களே? ஏன் இந்தக் கோரிக்கையைக் கடந்த 29 வருடங்களில் சுமார் 11 வருடங்கள் ஆட்சியில் இருந்தபோதும் ஒரு முறை கூட முன்வைக்கவில்லை? பிரபாகரனையும் இலங்கை அரசையும் போரை நிறுத்திவிட்டு பொதுவாக்கெடுப்பு நடத்தும்படி அப்போதே சொல்லியிருக்கலாமே? ஏன் சொல்லவில்லை ? 
2.அப்துல் கலாமுக்கும் நாராயணசாமிக்கும்:
சுனாமி வந்தாலும் கூடங்குளம் அணு உலைக்கு எந்தப் பாதிப்பும் வராது என்று சொன்னீர்களே, அப்படியானால் ஏன், இப்போது இந்தோனேஷிய பூமி அதிர்ச்சியால் சுனாமி எச்சரிக்கை வந்த உடனே கூடங்குளம் அணு உலையில் வேலை செய்து கொண்டிருந்த அதிகாரிகள், பொறியாளர்கள், ஊழியர்களை மட்டும் அவசர அவசரமாக பஸ்களில் ஏற்றி ‘பாதுகாப்பான’ இடத்துக்கு அனுப்பினார்கள்? ஏன் அங்கே சுற்றி வசிக்கும் மக்களை அப்புறப்படுத்தவில்லை? 
3.ஜெயலலிதாவுக்கு:
சித்திரைத் திருநாள் உழவர் விழாக்களுக்கு வந்தவர்களுக்கு போட்ட விருந்தின் மெனுவில் காட்டிய அக்கறையை என்றாவது பள்ளிக்கூட சத்துணவு மெனுவில் காட்டியிருக்கிறீர்களா? ஏராளமான ஊர்களில் சரி பாதி முட்டைகளை பொது மார்க்கெட்டுக்கு விற்றுவிட்டுக் குழந்தைகளை ஏமாற்றும் வேலையில் சில முட்டை காண்ட்ராக்டர்களும் உங்கள் கட்சிக்காரர்களும் ஈடுபட்டிருப்பது உங்களுக்குத் தெரியாதா?


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

மெய்ப்புலக் கூவலர் அறையிலிருந்து..., ஓ பக்கங்கள் - ஞாநி

 
1.jpg
 
ஒரு சொல் சமயங்களில் ஒரு புதிய உலகத்தையே நமக்குத் திறந்துவிட்டு விடும் என்பதை இந்த வாரம் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உணர்ந்தேன்.நூலகத்தில் நுழைந்ததுமே தரை தளத்தில் நாமே கொண்டு வரும் நூல்களைப் படிப்பதற்கான அறைக்குப் பக்கத்து அறையின் சுவரில் ‘மெப்புலக் கூவலர் அறை’ என்று போட்டிருந்தது.என் தமிழ் சிற்றறிவுக்கு அதன் பொருள் சுத்தமாக விளங்கவில்லை. எனவே அந்த அறைக்குள் நுழைந்து முதலில் கண்ணில் பட்டவரிடம் அதற்குப் பொருள் கேட்டேன். பொருள் சொன்ன அவர் கண்ணில் நான் படவில்லை. காரணம் அவர் கண் பார்வையற்றவர். மெய்ப்புலம் என்றால் ‘ஃபிஸிக்கலி’ என்றும் கூவலர் என்றால் ‘சேலஞ்ச்ட்’ என்றும் பொருளாம்.பொதுவாக ஒரு நூலகத்தில் எல்லா ‘ஃபிஸிக்கலி சேலஞ்ச்ட்’ எனப்படும் மாற்றுத் திறனாளிகளுக்குப் பெரிதாக நிறைய தனி வசதிகள் தேவைப்படாது. காது கேளாதோர், வாய் பேசாதோர், கை கால் முடமுற்றோர் எல்லாருமே பார்வையுடையவர்கள் என்பதால் நூல்களை எடுத்துப் படித்துவிட முடியும். ஆனால் பார்வை யற்றோருக்கு யாராவது படித்துக் காட்ட வேண்டும். அல்லது அது ஆடியோ புத்தக வடிவில் இருக்க வேண்டும். அல்லது தடவிப் படிக்கும் வடிவமான பிரெலியில் அச்சிட்ட நூலாக இருக்க வேண்டும்.பிரெலியில் நூல்களை அச்சிடுவது பெரிய தொழில்நுட்பம் அல்ல என்றாலும் அதில் வேறு சிக்கல் உள்ளது. சாதாரணமாக 100 பக்கம் அச்சிடப்பட்ட புத்தகத்தை பிரெலி முறையில் அச்சிட்டால் ஆயிரம் பக்கமாகி விடும். தனி நபர்கள் விலை கொடுத்து வீட்டில் வாங்கி வைத்துப் பயன்படுத்தவும் முடியாது. கல்லூரி, பல்கலைக் கழக நூலகங்கள் மட்டுமே அந்த நூல்களை வாங்கி வைத்தால்தான் உண்டு. இந்த நூல்களில் பெரும்பாலானவை பாட நூல்கள். அறிவியல் நூல்களில் வரை படங்களைக் கூட பிரெலியில் தந்திருக்கிறார்கள்.
 
2.jpg
 
தமிழ்நாட்டில் பல தொண்டு நிறுவனங்கள் பிரெலி நூல்களைத் தயாரித்து இப்படி நூலகங்களுக்கு அளிக்கின்றன. சென்னையில் ஒர்த் டிரஸ்ட், கிறிஸ்டியன் பவுண்டேஷன் ஃபார் ப்ளைன்ட், இண்டியன் அசோசியேஷன் ஃபார் பிளைண்ட், சி.டி.எஸ் நிறுவன ஆதரவில் நடக்கும் தேர்ட் ஐ டிரஸ்ட், கோவை ராமகிருஷ்ணா வித்யாலயா எனப் பல அமைப்புகள் பிரெல் புத்தகங்களைத் தயாரித்து வழங்குகின்றன. நேரடியாக ஆடியோ புத்தகங்களாக வெளியிடப்படுபவை மிகவும் குறைவு.இந்தச் சூழ்நிலையில் எழுத்திலிருந்து ஒலிக்கு மாற்றம் (‘டெக்ஸ்ட் டு சவுண்ட்’) செய்யும் நவீன தொழில் நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டு மேலை நாடுகளில் செயல்படுத்தப்பட்டு விட்டது. ‘ஈ ஸ்பீக்’ எனப்படும் பேச்சுக் கலப்பான் (‘சிந்தஸைசர்’) 2006ல் ஜோனாதன் டட்டிங்டன் என்பவரால் உருவாக்கப்பட்டது. இவர் ஆங்கிலம் தவிர, ஹிந்தி, தமிழ், மலையாளம், பஞ்சாபி, கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளையும் சிந்தஸைசரில் அளித்தார்.இன்னொரு பக்கம் பார்வையற்றோர் கணினியைப் பயன்படுத்துவதற்கான தொழில்நுட்பத்தை ஆஸ்திரேலியாவில் இருக்கும் ஜேம்ஸ் தே(ஹ்) உருவாக்கினார். ‘நான் விஷுவல் டெஸ்க்டாப் ஆக்செஸ் டெக்னாலஜி’ (என்.வி.டி.ஏ.) எனப்படும் இதை உருவாக்க ஒரு குழுவுடன் 4 வருடம் உழைத்த ஜேம்சின் வயது 27. பிறவியிலேயே பார்வையற்றவர். இந்த வருடம் ஆஸ்திரேலியாவின் சிறந்த மனிதர் விருதுக்கு ஜேம்ஸ் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.இந்த மென்பொருளை கணினியில் பதியத் தேவையில்லை. ஒரு யூ.எஸ்.பி. போர்ட் மூலமே இணைத்துப் பயன்படுத்தலாம்.
 
3.jpg
 
டட்டிங்டனும் ஜேம்சும் அளித்திருக்கும் தொழில்நுட்பத்தை, பார்வையற்ற தமிழர்கள் பயன்படுத்தும் விதத்தில் செம்மைப்படுத்துவதில், தமிழகத்தில் கோவையில் பிறந்து வளர்ந்து படித்த ஒரு பார்வையற்றவர் தொடர்ந்து பங்காற்றி வருகிறார்.அவர் பெயர் டி.டி. தினகர். தற்போது 43 வயதாகும் தினகரின் வாழ்க்கையே பெரும் போராட்டம்தான். இந்தியாவிலேயே முதன்முறையாக 2002ல் ஐ.ஏ.எஸ். தேறிய பார்வையற்றவர் தினகர். ஆனால் அவருக்கு ஐ.ஏ.எஸ் பதவி எதுவும் தரப்படவில்லை. அவருக்கு அடுத்த நிலையில் தேறியவர்களுக்கெல்லாம் தரப்பட்டது. தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துப் போராடினார் தினகர். வழக்கின் இறுதியில் 2007ல் பார்வையற்றவர்களுக்கான ஐ.ஏ.எஸ். பதவிகள் எவை என்று இன்னமும் வரையறுக்கப்படவில்லை என்று அரசு தெரிவித்தது. நீதிமன்ற உத்தரவின் பேரில் ரயில்வே துறையில் மனிதவளப் பிரிவில் அதிகாரி வேலை தரப்பட்டது.தற்போது சென்னையில் பணிபுரிந்து வரும் தினகர் எழுத்தை ஒலியாக்கும் தொழில்நுட்பத்தில், ஒலியின் தன்மையை மேம்படுத்த தொடர்ந்து உதவி வருகிறார். முன்னர் 20 என்று அச்சிட்டிருந்தால் அதை சிந்தஸைசர் ‘இரண்டு பூஜ்யம்’ என்று படிக்கும். அதை ‘இருபது’ என்று உச்சரிக்க வேண்டும்; ப எழுத்துக்கு முன்னால் ஃ இருந்தால் அதை ஆங்கில ஊ ஒலியில் உச்சரிக்க வேண்டும் என்பது போன்ற நுட்பமான முக்கியமான பல திருத்தங்களை தினகர் கொண்டு வந்தார். 
 
இதன் விளைவாக இன்று அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இருக்கும் மெய்ப்புலக் கூவலர் அறை என்று பலகையிலும் பிரெயில் செக்ஷன் என்று பேச்சிலும் கூறப்படும் பகுதியில், மகிழ்ச்சி ததும்பும் பல பார்வையற்றோர் முகங்களை என்னால் பார்க்க முடிந்தது.அவர்கள் எல்லாரும் கணினிகள் முன்பு அமர்ந்து தாம் விரும்பும் தமிழ் நூல்களை திரைவாசிப்பான் எனப்படும் ஸ்க்ரீன் ரீடர் உதவியுடன் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.தமிழ்நாட்டில் பெரும்பாலான பார்வையற்ற மாணவர்கள் கல்லூரியிலும் பல்கலைக்கழகத்திலும் படிப்பது தமிழ் இலக்கியப் பாடம்தான். (ஏன் இதர பாடங்களில் இவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பது தனியே ஆய்வுக்குரியது.)அண்ணா நூலகத்தில் சங்க இலக்கிய நூல்கள் அனைத்தும் இப்போது ஒலி வடிவில் அவர்களுக்குக் கிடைக்கின்றன. கல்கியின் பொன்னியின் செல்வன் முதல் நான் எழுதும் ‘ஓ’ பக்கம் வரை அவர்கள் ஒலி வடிவில் மாற்றிக் கொள்ளமுடியும்.அதற்குக் காரணம் இவையெல்லாம் யூனிகோட் எழுத்துரு வடிவில் இருப்பது தான். அந்த வடிவில் இருந்தால்தான், என்.வி.டி.ஏ தொழில் நுட்பத்தால் அதை ஒலியாக மாற்றிக் கொள்ள முடியும்.சில பதிப்பாளர்கள் தங்கள் நூல்களை யூனிகோட் வடிவில் கொடுத்து உதவி வருகிறார்கள். இன்று பார்வையற்றோருக்கு மிக முக்கியமான தேவை அரசு தன் எல்லா அறிவிப்புகளையும் ஆணைகளையும் இணையதளங்களையும் தமிழில் யூனிகோட் வடிவில் வெளியிட வேண்டும் என்பதாகும். அப்படி அரசு செய்துவிட்டால், மற்றவர் படித்துக் காட்ட வேண்டிய அவசியம் இல்லாமல், கணினியில் ஒலி வடிவில் அவற்றைக் கேட்டுவிடமுடியும்.
 
இந்த என்.வி.டி.ஏ தொழில்நுட்பமும் கணினிகளும் அண்ணா நூலகத்தில் மட்டும்தான் இருக்கமுடியும் என்பதில்லை. தமிழகத்தின் எல்லா பெரிய நூலகங்களிலும் அரசு கொஞ்சம் பணம் ஒதுக்கினாலே வைத்துவிடலாம்.இப்போதே ஒவ்வொரு கல்லூரியிலும் ஒவ்வொரு பல்கலைக் கழகத்திலும் அனைத்துத் துறைகளிலும் இவை இருக்க முடியும். ஏனென்றால் யூ.ஜி.சி எனப்படும் பல்கலைக்கழக மான்யக் குழு வருடந்தோறும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான வசதிகளைச் செய்வதற்கென்றே கல்லூரிகளுக்கும் பல்கலைக் கழகங்களுக்கும் கோடிக்கணக்கான ரூபாய் சிறப்பு நிதியை ஹெப்ஃபென் என்ற திட்டத்தின் கீழ் ஒதுக்குகிறது. ஆனால் தமிழகக் கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் இதை சரியாகவோ முழுமையாகவோ பயன்படுத்துவதாகத் தெரியவில்லை. பார்வையற்றவர்கள் இன்னொருவரை சார்ந்திருக்காமல் விடுதலை செய்யும் கணினி தொழில்நுட்பத்துக்கு முன்னுரிமை கொடுத்து அந்த வசதிகளை ஏற்படுத்த வேண்டும். பத்திரிகைகள் தங்கள் இணைய தளங்களை முற்றிலும் யூனிகோட் முறைக்கு மாற்றியமைத்தால், பார்வையற்றவர் எளிதாக அவற்றை ஒலிமாற்றம் செய்து படிக்க இயலும். அரசோ தனியார் அமைப்புகளோ தமிழில் யூனிகோட் முறைக்கு முற்றாக மாறுவது என்பது கடினமான வேலையே அல்ல.இவற்றுக்குப் பொறுப்பான அரசு அதிகாரிகளும் ஊடக அலுவலர்களும் ஒரு முறை அண்ணா நூலகத்தின் மெய்ப்புலக் கூவலர் அறைக்குச் சென்று பார்த்தால், அங்கே இருக்கும் இளம் பார்வையற்ற மாணவர்களின் முகங்களில் தெரியும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் கண்டால், அதே மகிழ்ச்சியை அதே உற்சாகத்தை தமிழகம் எங்கும் இருக்கும், எல்லா பார்வையற்ற மாணவர் முகங்களிலும் ஏற்படுத்த தேவைப்படுவதெல்லாம், தங்களின் ஒரு கையெழுத்துதான் என்பதை உணர்வார்கள்.
 
ஐந்தாவது முறையாக உலக செஸ் சாம்பியனாகிப் பெரும் சாதனை படைத்திருக்கும் ஆனந்துக்குத்தான் இ.வா.பூ. விளையாட்டு வீரர்களுக்கு பாரத் ரத்னா தரலாமென்று முடிவெடுத்தால் நிச்சயம் ஆனந்துக்குத் தரலாம். எனக்கு இரண்டு சந்தேகங்கள்: இந்தியாவின் அடுத்த ஆனந்த்கள் யார்? அவர்களை உருவாக்க ஏதாவது உருப்படியாக நடக்கிறதா? அப்புறம் ஏன் இந்த செஸ் ஆட்டக்காரர்கள் கேமில் ஜெயித்ததும், சட்டையைக் கழற்றிப் போட்டுவிட்டுக் கத்தி கொண்டு அறையைச் சுற்றி ஓடுவதே இல்லை?!கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கிரிக்கெட் அணிக்கும் வங்காளிகளுக்கும் என்ன சம்பந்தம்? கேப்டன் முதல் ஓனர் வரை வங்காளி இல்லை. அது மாநில கிரிக்கெட் அணியும் இல்லை. தனியார் வர்த்தக அணி. இதில் மம்தாவுக்கு எப்படி வங்காளப் பெருமை கிட்டமுடியும்? அணியின் பெயரில் கொல்கத்தா என்றிருந்தால் போதுமா? நான் கூட கொல்கத்தா டுபாக்கூர் என்று ஒரு படைப்பை எழுதியிருக்கிறேன். அதற்கு லொள்ளு என்ற சிற்றிதழ் பரிசு கொடுத்திருக்கிறது. மம்தா எனக்கும் ஒரு பத்து பவுன் சங்கிலி போடுவாரா?சென்னையில் மட்டும் ஐந்தே மாதங்களில் கணவர்கள் மது குடித்துவிட்டு மனைவியரை அடிக்கும் வழக்குகள் 675 பதிவாகியிருக்கின்றன. புகார் வரை வராதவை இன்னும் பல மடங்கு இருக்கலாம் என்கின்றனர் சமூகப் பணியாளர்கள்.


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

மீடியா என்ற கத்தி (அ) ரியாலிட்டி ஷோ! - ஓ பக்கங்கள், ஞாநி

 
 
p91.jpg
இரண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இந்த வாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. ஒன்று தமிழில் ஸீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிர்மலா பெரியசாமி வழங்கும் சொல்வதெல்லாம் உண்மை. இன்னொன்று ஹிந்தியில் செய்யப்பட்டு பல மொழிகளில் ஒலி மாற்றம் செயப்பட்டு ஸ்டார் டி.வி. சேனல்களில் ஒளிபரப்பாகும் நடிகர் அமீர்கான் வழங்கும் சத்யமேவ ஜெயதே.அசட்டுத்தனமான சீரியல்கள், அரை ஆபாசமான திரைப்படங்கள் இவற்றையே ஒளிபரப்பிக் கொண்டிருக்கும் போக்கிலிருந்து சற்று விலகி ரியாலிட்டி ஷோ எனப்படும் உண்மை நிகழ்ச்சிகளை தொலைக்காட்சிகள் ஒளிபரப்பத் தொடங்கியதற்கு இரு காரணங்கள் உண்டு. ஒன்று முதல் இரண்டுடன் பார்வையாளருக்கு அலுப்பு ஏற்பட்டது. இரண்டாவது புதிய நிகழ்ச்சிகள் ஏதாவது செய்யவேண்டுமென்றால், சினிமாவைப் போலவே டி.வி.யிலும் கற்பனை வறட்சி அதிகம். வெளிநாட்டுப்படங்களின் ‘இன்ஸ்பிரேஷனி’ல் படம் எடுப்பது போலவே வெளிநாட்டு டி.வி. நிகழ்ச்சிகளின் இன்ஸ்பிரேஷனில்தான் இங்கேயும் புது நிகழ்ச்சிகள் உருவாக்கப்படுகின்றன. ரியாலிட்டி ஷோக்களும் அப்படி வந்தவைதான். உலக அளவில் ஓரளவு தரமும் பரபரப்பும் கலந்து வணிக வெற்றி பெற்ற ஷோ, ஓப்ரா வின்ஃபிரேவுடையதுதான். வேறு பல ஷோக்கள் பிரபலமானாலும் அவை பெரும்பாலும் சென்சேஷனையே அடிப்படையாகக் கொண்டவை.
 
தமிழில் ஓரளவு ஓப்ரா ஷோவைப் பின்பற்றி அமைக்கப்பட்டு பிரபலமான முதல் ஷோ நடிகை லட்சுமியை வழங்க வைத்து மின்பிம்பங்கள் பாலகைலாசம் உருவாக்கிய ‘கதை அல்ல நிஜம்’ ஆகும். அதில் ஆரம்பத்தில் நான் ஸ்கிரிப்ட் கன்சல்டண்ட்டாகப் பணியாற்றினேன். ஷோவின் தயாரிப்புக் குழுவுக்கான நெறிமுறைகளை கைலாசம் கடுமையாக வகுத்தார். நிகழ்ச்சியை ஒளிபரப்பும் சேனலுடைய நெறிமுறைகள் அதிலிருந்து வேறுபட்டிருந்தன. பல பரஸ்பர சமரசங்களுடனே அதை தொடரவேண்டியிருந்தது. இந்த விளையாட்டின் ஆரம்ப சுவாரஸ்யமும் என்னவென்று கற்கும் ஆர்வமும் தணிந்ததும் 40 எபிசோடுகளுடன் நான் விலகிக் கொண்டேன்.
 
பல வருடங்கள் பிரபலமாகத் தொடர்ந்தது அந்த ஷோ. அதன்பின் அதே போல விதவிதமான ஷோக்கள் வந்துவிட்டன.ரியாலிட்டி ஷோ என்ற இந்த வடிவமும் மீடியாவைப் போலவே கத்தி மாதிரியானது. ஆப்பிளும் வெட்டலாம். ஆளையும் வெட்டலாம்.பல சமூகப் பிரச்னைகளை அம்பலப்படுத்தலாம். சாதாரண மக்கள் படும் துயரங்களை வீட்டு அறைக்குள் வசதியாக டி.வி. பார்ப்பவருக்கு உறைக்கச் செய்யலாம். மனித உறவுகளில் இருக்கும் சிக்கல்களைப் புரிந்துகொள்ளச் செய்ய உதவலாம்.அதெல்லாம் ஆப்பிள் வெட்டுவது போல. இன்னொரு பக்கம், தனிப்பட்டவர்கள் தங்கள் பகைகளைப் பழி தீர்க்கும் இடமாக இது மாற்றப்பட முடியும். பரபரப்புக்காக பல வீண் அவதூறுகள் துளியும் தயக்கம் இல்லாமல் அள்ளி வீசப்படும்.டி.ஆர்.பி. ரேட்டிங் எனப்படும் பார்ப்போர் எண்ணிக்கை அளவுகோல்தான் அதிக விளம்பர வருவாக்கான உத்தரவாதம் என்பதால், அந்த ஒற்றை நோக்கம் மட்டுமே நிகழ்ச்சியின் தன்மையை மாற்றத் தொடங்கிவிடும். அண்மைக்காலமாக பாட்டு, நடனப் போட்டி நிகழ்ச்சிகளில் தோற்ற குழந்தையை அழவிட்டு, அதன் உறவினர்களின் முகங்களைக் கலங்கச் செய்து அதைப் பதிவு செய்து ஒளிபரப்பி, ஷோவை அழுகாச்சி சீரியல் மாதிரி ஆக்கி அந்த ஆடியன்சையும் சம்பாதிக்கப் பார்க்கும் கேவலமான வணிக உத்திகள் சகஜமாகிவிட்டன.

ரியாலிட்டி ஷோவில் வந்தால் குடும்பப் பிரச்னை தீர்க்கப்பட்டுவிடும் என்ற பொய்யான நம்பிக்கையை அளிப்பதும் ஒரு வணிக உத்தியாக இந்த ஷோக்களில் பின்பற்றப்படுகிறது. ஒரு சில பிரச்னைகள் மெய்யாகவே தீர்க்கப்படுகின்றன என்பது உண்மைதான். ஆனால் சில பிரச்னைகள் ஷோவுக்கு வந்ததாலேயே தீராமலும் போயிருக்கும்.
  
இப்போது இந்த ஷோக்களுக்கு பலர் தாமாகவே தங்கள் பிரச்னைகளுடன் முன்வருவது ஒருபக்கம். இன்னொரு பக்கம், சுவையான பிரச்னை உடையவர்களைத் தேடிப் பிடித்துக்கொண்டு வர தயாரிப்புக் குழுவில் இருக்கும் நிருபர்கள் படும்பாடு, சினிமாவில் நல்ல சீன் சொல்ல உதவி இயக்குனர்கள்  படும்பாட்டுக்கு நிகரானது. 
 
 
இப்படிப்பட்ட சூழலில் சர்ச்சைகளை உருவாக்கியிருக்கும் இரு நிகழ்வுகளைப் பார்ப்போம். ஸீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் சொல்வதெல்லாம் உண்மையின் மூலமாக நான்கு ஆண்டுகளுக்கு முன்பு விழுப்புரம் அருகே ஒரு கிராமத்தில் நடந்த மூன்று கொலைகள் அம்பலமாகியிருக்கின்றன.


காதல் திருமணம் செய்ய முயற்சிப்பதால் தனக்கு தம் தந்தை முருகனாலேயே உயிருக்கு ஆபத்து என்று நிகழ்ச்சியில் சொல்ல வந்த டீன்ஏஜ் மகள் பார்கவி, இதற்கு முன்பே தன் தந்தை மூன்று கொலைகள் செய்திருப்பதாகச் சொல்லிப் பரபரப்பை ஏற்படுத்தினாள். தன் தந்தையின் நண்பர் மகள் காதல் திருமணம் செய்ததாகவும் அவளுக்கும் அவர் கணவருக்கும் அடைக்கலம் தரும்படி கேட்டு அவர்கள் வந்து தங்கள் வீட்டில் தங்கியதாகவும் அப்போது அவர்களை தம் தந்தை கொலை செய்து தோட்டத்தில் புதைத்தாகவும் பார்கவி விவரித்தது பரபரப்பாக இருந்தது. தம் மகளையும் மருமகனையும் தேடி வந்த நண்பரையும் தம் தந்தை கொன்று புதைத்துவிட்டதாக பார்கவி தெரிவித்தாள். இதையெல்லாம் அவளுடைய அம்மாவும் அதை நிகழ்ச்சியிலேயே உறுதிப்படுத்தினார். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தந்தை மறுத்தார்.

நிகழ்ச்சி முடிந்தபின் தொலைக்காட்சியினர் கொல்லப்பட்டதாகச் சொல்லப்பட்ட மூவர் அவர்களுடைய கிராமத்தில் நெடு நாட்களாக இல்லை என்பதை விசாரித்து உறுதி செய்து கொண்டபின் நிகழ்ச்சியை ஒளிபரப்பினார்களாம்.


ஒளிபரப்பைப் பார்த்தபோதுதான் நான்கு ஆண்டுகளாகக் ‘காணாமற்’ போன தம் மகள், மருமகன், கணவர் எல்லாம் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்று தெரியவந்ததாம் கிராமத்திலிருக்கும் ஜீவா என்பவருக்கு. நான்கு வருடமாக போலீசிடம் புகாரே அவர் கொடுக்கவில்லை. தம் கணவர், மகள், மருமகன் எல்லாரும் தம்மை விட்டுப் போய் எங்கேயோ தனியே வாழ்ந்துவருவதாக அவர் நினைத்துக் கொண்டிருந்தாராம்!


இந்தக் கதையில் நிறைய ஓட்டைகள் உள்ளன. அவற்றை போலீஸ் விசாரணை அடைக்கக் கூடும். பல அரை உண்மைகளுக்கு நடுவேதான் முழு உண்மைகள் எப்போதும் ஒளிந்திருக்கும்.


நம் கவலை மீடியா இதை எப்படிக் கையாண்டது என்பதில்தான். நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு அல்ல. முன்பதிவு செய்யப்பட்டது. பதிவு செய்த அன்றே ஒரு டீன் ஏஜ் பெண் கொலைப் புகார் சொல்கிறார் என்கிற நிலையில், அல்லது கிராமத்தில் மூவர் மிஸ்ஸிங் என்று தெரிந்த நிலையில், டி.வி. நிறுவனம் ஒளிபரப்புக்கு முன்பே போலீசிடம் இந்த விஷயத்தைத் தெரிவித்து வழக்கை ஒப்படைத்திருக்க வேண்டும். அப்படிச் செய்ததாக எந்தச் செய்தியிலும் காணப்படவில்லை.


அல்லது ஆரம்பத்திலிருந்தே போலீசிடம் எல்லாவற்றையும் தெரிவித்துவிட்டு அவர்கள் உதவி பெற்றுத்தான் மேலும் தகவல்களைத் திரட்டி அதன்பின்தான் நிகழ்ச்சியையே பதிவு செய்து ஒளிபரப்பினார்கள் என்றால், அதை நேயர்களுக்குத் தெரிவித்திருக்க வேண்டும். அப்படியும் எதுவும் செய்யப்பட்டதாகத் தெரியவில்லை.


எனவே இந்த மாதிரி நிகழ்ச்சிகளைத் தயாரிப்பதிலும் ஒளிபரப்புவதிலும் பின்பற்றவேண்டிய நெறிமுறைகள் முக்கியமானவையாகின்றன.இதே நெறிமுறை பிரச்னைதான் அமீர்கானின் சத்யமேவ ஜெயதேவிலும் இப்போது ஏற்பட்டிருக்கிறது. தம் மனைவிக்கு முறையான சம்மதம் பெறாமலே அறுவை சிகிச்சை செய்து அலட்சியமான சிகிச்சையினால் அவரை சாகடித்து விட்டதாகப் பெங்களூர் தனியார் மருத்துவமனை மீதும் குறிப்பிட்ட டாக்டர்கள் மீதும் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ராய் என்பவர் அமீர்கான் நிகழ்ச்சியில் குற்றம் சாட்டினார். மாற்று உறுப்பு சிகிச்சைகள் பற்றிய நிகழ்ச்சி அது. மருத்துவத்துறையில் இருக்கும் அலட்சியம், ஊழல்கள், பற்றி அமீர்கான் கடுமையாகக் கவலை தெரிவித்துப் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் அதிகாரி ராய் குற்றம் சாட்டிய மருத்துவர்கள் ராம்சரண் தியாகராஜனும் ஸ்ரீதராவும் விரிவான கடிதம் ஒன்றை அமீர்கானுக்கு எழுதியிருக்கிறார்கள். அதில் நோயாளியின் சம்மதம், உறவினர்களின் சம்மதம் எல்லாம் பெறப்பட்ட சான்றுகளை இணைக்கிறார்கள். நிகழ்ச்சியில் ராய் தெரிவிக்காத சில தகவல்களைக் குறிப்பிடுகிறார்கள். தங்கள் மீது மருத்துவ அலட்சியத்துக்காக நஷ்ட ஈடு கேட்டு ராய் தொடுத்த வழக்கில் கூட அவர் சம்மதக் கடிதப் பிரச்னையை எழுப்பவே இல்லை என்று சுட்டிக் காட்டுகிறார்கள்.

ராய் சொல்வது எவ்வளவு உண்மை, மருத்துவர்கள் சொல்வது எவ்வளவு உண்மை என்பதெல்லாம் நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கில் மேலும் விசாரிக்கப்பட்டு முடிவாகலாம்.

மீடியா நடந்துகொண்ட விதம்தான் இப்போது நம் கவனத்துக்குரியது. ஏன் அமீர்கான், தங்கள் கருத்தைச் சொல்லும்படி குற்றம் சாட்டப்பட்ட மருத்துவர்களை நிகழ்ச்சிக்கு அழைக்கவே இல்லை? இப்போது அவர்கள் கடிதம் அனுப்பியதையடுத்து அடுத்த வாரம் அழைக்கலாம். ஆனால் அது முறையாகாது.

இதழியலின் அடிப்படைக் கோட்பாடே, ஒரு சர்ச்சைக்குரிய செய்தியை வெளியிடும்போது அதில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினரின் கருத்தையும் ஒரே நேரத்தில் கேட்டு வெளியிடுவதாகும். ஒரு தரப்பைத் தொடர்பு கொள்ள முடியாமல் போனாலோ, அல்லது அதை அடுத்து வெளியிட இருந்தாலோ, அதையும் முதல் செய்தியிலேயே அறிவிக்க வேண்டும்.

இந்த அடிப்படை நெறியைப் பின்பற்றாமல் போனால், ஒட்டுமொத்தமாக ஒரு மீடியாவில் வரும் செய்திகளின் நம்பகத்தன்மையே சந்தேகத்துக்குரியதாகிவிடும். அந்தச் சிக்கலைத்தான் இப்போது சத்யமேவ ஜெயதே சந்தித்திருக்கிறது.

நம் சமூகத்தில் அரசியல், அரசு நிர்வாகம், கல்வி-மருத்துவம் போன்ற துறைகள், நீதித்துறை அனைத்திலும் பல கோளாறுகள் உள்ளன. ஒன்றில் இருக்கும் கோளாறுக்கு இன்னொன்றின் மூலம் தீர்வைத் தேடுகிறோம். எல்லாவற்றுக்கும் மீடியா மூலம் தீர்வுகள் தேடப்படுகின்றன. எனவே மீடியா எப்படிச் செயல்படுகிறது என்பதையும் கூடவே கவனிப்பது முக்கியமாகிறது.

வெளிநாடுகளில் மீடியா வாச் ஓரளவு நிலை பெற்றிருக்கிறது. இங்கே இன்னும் இல்லை. மிகச் சில அமைப்புகளே இதில் இயங்கி வருகின்றன. ஆங்கிலத்தில் இயங்கி வரும் ஹூட்.ஆர்க் அதில் ஒன்று. தமிழிலும் இப்படிப்பட்ட அமைப்பு தேவை என்று உணர்ந்த நண்பர்கள் பலர் கூடி அண்மையில் ‘கவனிக்கிறோம் - வி ஆர் வாச்சிங்’ என்ற அமைப்பைத் தொடங்கியுள்ளோம்.

பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் இன்றைய சமூகத்தில் வெறும் வணிகம் மட்டும் அல்ல. அவற்றுக்கு மிகப்பெரும் சமூகப் பொறுப்புகளும் உள்ளன. அந்தப் பொறுப்புகளை நினைவுபடுத்திக் கொண்டே இருக்க மீடியா வாச் அமைப்புகள் தேவை - யானைக்கு அங்குசம் போல.


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

ஓ பக்கங்கள் - ‘கடல்’ படத்தின் ஒரு முத்தம்; பல கேள்விகள்! ஞாநி

 
p92a.jpg
 
‘பம்பாய்’ படத்துக்குப் பின் மறுபடியும் மணிரத்னம், ராஜீவ்மேனன், ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி, எழுத ‘அறம்’ புகழ் எழுத்தாளர் ஜெயமோகன், நடிக்க கார்த்திக்கின் மகன், ராதாவின் மகள், மறுபடியும் அரவிந்த்சாமி, முதல் முறையாக மணிரத்னம் படத்தில் அர்ஜுன் என்று ரசிகர்களின் எதிர்பார்ப்பைத் தூண்டும் பல விளம்பர அம்சங்களுடன் வரவிருக்கும் ‘கடல்’ படத்தின் முதல் டிரெய்லர் பார்த்தேன்.
 
பார்க்கச் சொன்னவர் திரையுலகில் பணிபுரியும் ஒரு நண்பர்தான். படத்தில் நடிக்கும் ராதாவின் மகள் துளசிக்கு 15 வயதுதான் ஆகிறது. அந்தச் சிறுமியை இப்படி முத்தமிடும் காட்சியில் பயன்படுத்தியிருப்பது சரிதானா என்ற கேள்வியை அவர் ஃபேஸ்புக், சமூக இணையதளத்தில் எழுப்பியதாகவும் யாருமே அதைக் கண்டுகொள்ளவில்லை என்றும் அந்த நண்பர் சொன்னார். அதனால் நானும் பார்த்துவிட்டு ஃபேஸ்புக்கில் இவ்வாறு எழுதினேன்.
 
நாம் எல்லாரும் சிந்திக்க சில கேள்விகள் : 15 வயது சிறுமியை லிப் கிஸ் அடிக்கும் காட்சியில் நடிக்க வைத்து படம் தயாரித்து வெளியிடுவது மணிரத்னத்துக்கு நல்ல வியாபாரமாக இருக்கலாம். ஆனால் அது ‘அறமா’குமா? படத்துக்கான கடல் படக் குழுவின் நிருபர் சந்திப்பைத் தொகுத்து வழங்கிய சுஹாசினி லட்சக்கணக்கில் பணம் திரட்டி மகளிர் நல அமைப்பு நடத்தி வருகிறாரே, அவரும் அந்த அமைப்பும் பெண்கள் பாதிக்கப்பட்ட பிறகு தான் உதவி செய்வது, மெழுகுவர்த்தி கொளுத்துவதெல்லாம் செய்வார்களா? பாதிப்பை ஏற்படுத்தும் அம்சங்களைப் பற்றிக் கவலைப்பட மாட்டார்களா? இன்றைய சினிமாக்களில் சிறுமியை வைத்து உருவாக்கிக் காட்டும் இத்தகைய காட்சிகள் விடலை மனங்களில் எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன என்பது பற்றி யாருக்கும் கவலையில்லையா? தில்லி, ஸ்ரீவைகுண்ட நிகழ்வுகளுக்கெல்லாம் பொங்கி எழுந்த ஃபேஸ்புக் வீரர்களில் சிலர் சினிமா துறை என்று வரும்போது மட்டும் பம்மிப் பதுங்கிக் காணாமற் போவது ஏன்?"
 
இந்தக் கருத்தை உடனடியாக 120 பேர் எடுத்து தத்தம் ஃபேஸ்புக் சுவர்களில் பதிந்து பரப்பியிருக்கிறார்கள். இதற்கு முன் என் வேறு பதிவு எதுவும் இவ்வளவு பகிரப்பட்டதில்லை. என் இழையில் வந்து விவாதித்த பலரும் தெரிவித்த கருத்துகளில் முக்கியமானவற்றை மட்டும் பார்க்கலாம்.
 
இது காலம் காலமாக நம் சினிமாவில் நடப்பதுதானே என்பது ஒரு கருத்து. பதினைந்து வயதில் இதழ் முத்தம் இடக் கூடாதா என்பது இன்னொரு கருத்து. ஒவ்வொன்றாகப் பார்ப்போம். 
 
உண்மைதான். கதாநாயகியாக நடிக்க 14 வயது சிறுமிகளை அழைத்து வருவது பல வருடங்களாக நடக்கிறது. மஞ்சுளா, ரேவதி, குஷ்பு போன்றோர் கதாநாயகிகளாக அறிமுகமாகும்போது வயது 16லிருந்து 18 தான். சட்டப்படி மேஜர் வயது எனப்படும் 18க்கும் முன்பாகவே இந்த மைனர்கள் நடிக்க வைக்கப்படுவது அவர்கள் சம்மதத்தின் அடிப்படையிலேயே அல்ல. பெற்றோரின் விருப்பமும் சம்மதமும் அதிகாரமும்தான் செயல்படுகின்றன. 15 வயது துளசியை முகத்தில் காதலையும் காமத்தையும் விரக உணர்ச்சியையும் காட்டி நடிக்க வைப்பதில் முதல் பொறுப்பு அவருடைய அம்மா ராதாவுடையதுதான்.
 
இப்படி வளர் இளம்பருவத்தில் இருக்கும் சிறுமிகளை சினிமாவில் எப்போதுமே காதல், காமக் காட்சிகளில்தான் நடிக்க வைத்து இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் காசு பண்ணி வந்திருக்கிறார்கள். எனவே இது ஒன்றும் மணிரத்னம் கண்டுபிடித்த புது விஷயம் அல்ல. அவரது முன்னோடிகள் செய்ததை அவர் இன்னும் சிறந்த தொழில்நுட்ப நேர்த்தியுடன் செய்யக் கற்றிருக்கலாம். ஆனால் தமிழ் சினிமாவில் வேறு எந்தப் படைப்பாளியை விடவும் அதிகமாகக் கொண்டாடப்படுபவர் அவர். அனைத்திந்திய அளவில் ஆராதிக்கப்படுபவர். அப்படிப்பட்டவர்கள்தான் மற்றவர்களுக்கு ரோல் மாடலாக இருக்க வேண்டிய பொறுப்புள்ளவர்கள். எப்படிப்பட்ட ரோல் மாடல் என்பது எனவே விமர்சிக்கப்பட வேண்டும்.

அது மட்டுமல்ல, தில்லியில் நடந்த பாலியல் வன்முறைக் கொடூரத்துக்குப் பிறகு நாடெங்கும் நாம் நம் பெண்களை எப்படி நடத்துகிறோம் என்ற கேள்வி பரவலாக தீவிரமாக இன்று விவாதிக்கப்படுகிறது. பெண்களைப் பற்றிய நம் பார்வையை உருவாக்கும் எல்லா சக்திகள் பற்றியும் பேசியாக வேண்டியிருக்கிறது. மதம், சாதி, குடும்பம், கல்வி, மீடியா, வணிகம் ஆகியவை எப்படி ஆணைப் பற்றியும் பெண்ணைப் பற்றியும் நம் கருத்துகளை உருவாக்கி வருகின்றன என்பதை முன்னெப்போதையும் விட தில்லி நிகழ்வுக்குப் பிறகு அதிக கவனம் செலுத்தும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

அதில் சினிமா நம் சமூகத்தின் விடலைச் சிறுவர்கள் மனங்களில் ஏற்படுத்தும் பாதிப்புகள் முக்கியமானவை. கடந்த பத்தாண்டுகளில் தமிழ் சினிமாவில் பொறுக்கிப் பாத்திரங்களே ஹீரோவாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த வாரம் வெளியான அலெக்ஸ் பாண்டியன் படத்தின் பெரும் பகுதி ஆபாச வசனங்களும் காட்சிகளுமாக இருக்கும் நிலையில் என் நண்பர் நடிகர் சிவகுமாருக்கு ஒரு மெசேஜ் அனுப்பும்படி ஆயிற்று. தன் மகன்களை ஆடம்பரமில்லாமல் ஒழுக்கமாக வளர்த்த தந்தை என்ற புகழுடையவர் அவர். ஒழுக்கமாக வளர்த்த பிள்ளையை ஆபாசப் படத்தில் நடிக்க விட்டுவிட்டீர்களே என்று உங்களைப் பலரும் திட்டுகிறார்கள்" என்று செய்தி அனுப்பினேன்.எனக்கும் செய்தி வந்தது. இனி இந்தத் தவறு நிகழாமல் பார்த்துக் கொள் என்று சொல்லியுள்ளேன்" என்று உடனே பதில் அனுப்பியிருக்கிறார்.
 
சினிமா, சமூகத்தில் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது; குற்றம் செய்யவும், தவறு செய்யவும் தூண்டுகிறது என்ற கருத்தை ஒருபோதும் சினிமாக்காரர்கள் ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள். ஆனால் அதன் பாதிப்பு சமூகத்தில் கடுமையாக இருக்கிறது என்பதை சமூகவியலாளர் களும் ஆசிரியர்களும் நடைமுறையில் நன்றாகவே அறிவார்கள். பெண்ணைப் பற்றி சமூகத்தில் ஏற்கெனவே இருந்து வரும் மோசமான பார்வைகளை சினிமா, பத்திரிகை, தொலைக்காட்சி போன்ற மீடியாக்கள் கலைப்பதற்குப் பதிலாக பலப்படுத்துகின்றன.
 
தொடர்ந்து தன்னைச் சுற்றிலும் பெண் பிம்பங்கள் உணர்ச்சியைத் தூண்டும் விதத்தில் மீடியாவால் தன் மீது வீசப்பட்டுக் கொண்டே இருக்கும் சூழலில் ஒரு பெண்ணைத் தொட்டுப் பார்ப்பதற்கான வாய்ப்புக்காக ஏங்கும் மனமாக வளர் இளம்பருவச் சிறுவனின் மனம் தவிக்கிறது. ஐம்பதுகளில், அறுபதுகளில், எழுபதுகளில், எண்பதுகளில் இருந்ததைவிட பல மடங்கு அதிகமான மீடியாவின் பெண் மோகத் தூண்டுதல் சூழல் இன்றைய சிறுவருக்கு இருக்கிறது. வழிகாட்டுவோர் இல்லை. எதிர்பாலினத்துடன் ஆரோக்கியமாக உறவாடி ஒருவரையொருவர் புரிந்துகொள்ள உதவும் சூழல் குடும்பத்திலும் இல்லை, கல்விக் கூடத்திலும் இல்லை. எங்கும் இல்லை. இந்த நிலையில் இருக்கும் விடலைப் பருவத்தினரில் இன்னும் அதிகம் பேர் இன்னும் அதிக பாலியல் குற்றங்களை நோக்கித் தள்ளப்படாமல் இருப்பதே ஆச்சர்யமானதுதான்.
 
இந்தப் பின்னணியில்தான் 15 வயது சிறுமியை இதழ் முத்தக் காட்சியில் மணிரத்னம் பயன்படுத்துவதன் தவறை, ஆபத்தைப் பார்க்க வேண்டும்.
 
அதை அலசுவதற்கு முன்பு, பதினைந்து வயதில் ஒருவர் முத்தமிடக் கூடாதா என்ற கருத்தைப் பார்ப்போம். எந்த வயதிலும் முத்தமிடலாம், யாரும் முத்தமிடலாம். ஆனால் அந்த ஒவ்வொரு முத்தமும் வெவ்வேறானவை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். எது வெறும் உடல் கவர்ச்சி, எது தற்காலிக ஆசை, எது காதல், எது பரஸ்பர அன்பு, எது பரஸ்பர மதிப்பு என்பதையெல்லாம் தன் உடலை இன்னொரு உடலுடன் பகிரும்போதெல்லாம் தெரிந்தே பகிரக் கற்காமல் பகிர்ந்தால் மனநல பாதிப்புதான் ஏற்படும்.
 
என்னுடன் மிகுந்த வாஞ்சையுடன் பழகிய பல இளைஞர்களின் திருமணங்களுக்குச் செல்லும் போது நான் மணமகனுக்கும் மணமகளுக்கும் நெற்றியில் முத்தமிட்டு வாழ்த்துகிறேன். எல்லா முத்தமும் ஒன்றென்று வாதிட்டு, நான் அவர்களை இதழில் முத்தமிட்டு வாழ்த்த முடியாது.
 
குழந்தையைக் கையில் எடுத்துக் கொஞ்சும்போது, அதன் கன்னத்தில் முத்தமிடுவதுதான் சரி. உதட்டில் முத்தமிடுவது அல்ல. உதட்டு முத்தம் காமத்தின் வெளிப்பாடு. குழந்தைகளை ஒருவருக்கொருவர் முத்தமிடச் சொல்லி பழக்குவது சில பெற்றோரின் அசட்டுத்தனம். பாலியல் தொடுதல்களில், குட் டச், பேட் டச் என்பவை எப்படி முக்கியமோ அதே போலத்தான் முத்தங்களும்.
 
எனவே சினிமாவில் 15 வயது சிறுமி இதழ் முத்தத்தில் ஈடுபடுவதைப் பார்க்கும் 15 வயது சிறுவர்கள் மனத்தில் அது எப்படிப்பட்ட கிளர்ச்சிகளை ஏற்படுத்தும் என்பது பற்றிப் படைப்பாளிகளுக்குப் பொறுப்புணர்ச்சி வேண்டும். நம் சமூகத்தில் திரைப்படங்கள், யு, ஏ, யுஏ என்றெல்லாம் வகைப்படுத்தப்பட்டாலும் தணிக்கை முறை சீராகவோ நேர்மையாகவோ இல்லை. எல்லா படங்களும் தொலைக்காட்சியில் யாரும் பார்க்கும்விதம் கிடைக்கும் சூழலே இருக்கிறது. மேலைநாடுகளில் இருக்கும் வரையறுக்கப்பட்ட சூழல் இதில் இங்கே நம்மிடம் இல்லை.
 
பாலியல் வன்முறைகள், சீண்டல்கள் பற்றி நம் சமூகத்தில் முன்பு எப்போதும் இருந்ததை விட கூடுதல் அக்கறை இப்போது ஏற்பட்டுள்ள நிலையில், சினிமா துறையினரும் பத்திரிகைத் துறையினரும் தம்மை கடும் சுயவிமர்சனத்துக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். அற உபதேசங்கள் எல்லாம் அரசியல்வாதிக்கும் அதிகாரிகளுக்கும் வாசகர்களுக்கும் மட்டுமென்று தனக்குத் தானே விலக்குக் கொடுத்துக் கொண்டு எழுத்தாளனும் இயக்குனரும் இனியும் இருக்க முடியாது. அக்கறை என்பது வெறுமே மெழுகுவர்த்தி ஏற்றுவது அல்ல. மீடியாவும் சினிமாவும் வெறுமே ‘டைம்பாஸ்’தான் என்று சொல்லி இனியும் தப்பிக்க முடியாது.
 
காதல் என்றால் என்ன என்று நம் சிறுவர்களுக்குச் சொல்லித் தருவதில் பெரும் பங்கு வகிப்பது நம் சினிமாதான். அது காட்டும் காதல் ரவுடித்தனத்தையும் விடலைத்தனத்தையும் பெண் சீண்டலையும் ஊக்குவிப்பதாகவே இருக்கிறது. இது மாறியாக வேண்டும். மாற வேண்டுமானால் நாம் அனைத்தையும் விமர்சித்து விவாதித்தாக வேண்டும். அதை மணிரத்னத்தின் விடலை முத்தத்திலிருந்தே தொடங்கலாம்.


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

ஓ பக்கங்கள் - ஸ்டாலின் தி.மு.க.வைக் காப்பாற்றுவாரா? ஞாநி

 
ஒருவழியாக கலைஞர் கருணாநிதி தாம் ஓய்வெடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதைத் தாமதமாகவேனும் உணர்ந்துள்ளார். அடுத்த தி.மு.க. தலைவர் பதவிக்கு ஸ்டாலினைத்தான் முன்மொழிவேன் என்று பகிரங்கமாக உறுதியாக அவர் சொல்லி விட்டது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. இதை அவர் 1996ல் தி.மு.க தேர்தலில் ஜெயித்த போதே செய்திருக்க வேண்டும். அப்போதே அவருக்கு வயது 72. ஸ்டாலினுக்கு அன்று வயது 43. கருணாநிதி 45 வயதில் முதலமைச்சர் ஆனவர். அந்த வாய்ப்பை அன்றே மகனுக்குக் கொடுத்துவிட்டு தாம் கட்சித் தலைவர் பதவியை மட்டும் வைத்திருந்தால், மூப்பனார் மறுத்ததால், தேவகவுடாவுக்குச் சென்ற பிரதமர் பதவியைக் கூடக் கலைஞர் அடைந்து இருக்கலாம்.
 
ஸ்டாலினை தி.மு.க.வின் தலைவராக்குவதற்கோ, முதலமைச்சராக்குவதற்கோ தி.மு.க. கட்சிக்குள் இருந்து பெரும் எதிர்ப்பு எப்போதும் வந்தது இல்லை. ஒரே எதிர்ப்பு வைகோவுடையது. அதைக் கையாளத் தெரியாமல் கலைஞர் கையாண்டதில், வைகோவை ஸ்டாலினுக்குச் சமமான தலைவராக்காமல் தமக்குச் சமமான தலைவர் அந்தஸ்துக்கு உயர்த்திவிட்டார். (அந்த வாய்ப்பைக் கையாளத் தெரியாமல் வைகோவும் வீணடித்தது இன்னொரு தனிக்கதை.) அப்படியே ஸ்டாலினுக்குச் சமமான தலைவர்தான் ஜெயலலிதா என்று ஆக்கும் வாய்ப்பையும் நழுவவிட்டு தம்மை ஜெயலலிதாவுக்குச் சமமாக தாமே குறுக்கிக் கொண்டார்.
 
p92.jpg

ஸ்டாலினுக்கு வந்த எதிர்ப்பெல்லாம் கருணாநிதியின் குடும்பத்துக்குள்ளே இருந்து அழகிரி வடிவில் வந்த எதிர்ப்பு மட்டும்தான். ஸ்டாலினைவிட மூத்தவரான அழகிரியோ, இளையவரான தமிழரசோ தொடக்கத்தில் அரசியலில் ஆர்வம் காட்டவில்லை. சொந்தமாகத் தொழில் செய்யும் முயற்சிகளில் இருந்தார்கள். ஸ்டாலின்தான் மாணவராகவே கட்சியில் இறங்கி வேலை செய்தவர். அதனால் தான் 1976ல் நெருக்கடி நிலையின்போது மிசாவில் கைது செய்யும்போது கலைஞர் குடும்பத்தில் அவரை மட்டுமே கைது செய்தது அன்றைய அரசியல் எதிரியான காங்கிரஸ்.
 
ஸ்டாலின்தான் அடுத்தகட்டத்தில் கலைஞரின் இடத்துக்குக் கட்சியில் வரக்கூடியவர் என்ற நிலை எண்பதுகளிலேயே வந்துவிட்டது. அதை முரசொலி மாறனும் ஆதரித்தார். அவர் தம் மகன்களை கட்சிப் பதவிகளுக்குக் கொண்டு வர முயற்சித்ததே இல்லை. பேராசிரியர் அன்பழகனும் ஸ்டாலினை ஆதரித்தார். கட்சிக்குள் ஸ்டாலின் ஆதரவு நிலைதான் பெரும்பான்மை.
 
ஆனால் சொந்தத் தொழில் முயற்சிகளில் தோற்றுப்போன அழகிரி, அரசியலுக்குள் தாமதமாக நுழைந்தார். குடும்பத்துக்குள் இருந்துவந்த இந்த நெருக்கடியைத்தான் கலைஞரால் சுமார் 15 வருடங்களாகச் சமாளிக்க முடியாமல் இருந்திருக்கிறது. அழகிரி, அரசியலுக்குள் நுழையாமல் இருந்திருந்தால் கனிமொழி கூட நுழையாமல் இருந்திருக்கும் வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லலாம். கலைஞரின் இலக்கிய கலாசாரத்துறை ஆர்வங்களுக்கு குடும்பத்தில் ஒரே வாரிசான கனிமொழி அதே துறையில் தொடர்ந்திருக்கக் கூடும். 
 
அழகிரிக்கு அரசியல் செல்வாக்கு, கட்சி, ஆட்சி பதவிகள் தரப்படவேண்டும் என்று கலைஞரின் ஒரு குடும்பத்துக்குள் இருந்து நிர்பந்தங்கள் தொடங்கியபிறகு கனிமொழிக்காகவும் இன்னொரு குடும்பத்தின் நிர்பந்தங்களை கலைஞர் சந்திக்க வேண்டியதாயிற்று. தங்கள் பிள்ளைகளுக்காக அன்பால் செய்த நிர்பந்தங்கள் இரு பிள்ளைகளுக்கும் உண்மையில் பயன் தரவில்லை. 
 
p93.jpg

தி.மு.கவின் மத்திய அமைச்சர்களிலேயே கட்சிக்கு மோசமான பெயரை தில்லியில் சம்பாதித்துக் கொடுத்திருப்பது அழகிரிதான். நிர்வாகத் திறமையற்றவர் என்று அவர் பழிக்கப்படுவதுதான் மிச்சம். கனிமொழியோ ஊழல் குற்றச்சாட்டில் சிறைக்குப் போக வேண்டியதாயிற்று.
குடும்ப நிர்பந்தங்களை நம்பியிராமல் சொந்த அரசியல் செயல்பாட்டால் கட்சிக்குல் தன் செல்வாக்கைப் பெருக்கிக் கொண்டு இன்று இருக்கும் இடத்தை அடைந்த கலைஞரின் ஒரே பிள்ளை ஸ்டாலின்தான். ஆனால் கட்சித் தலைவர் கலைஞர் அவரை ஆதரித்தபோதும் குடும்பத் தலைவர் கருணாநிதியின் பலவீனங்களால் தமக்கான இடத்தை அடைய முடியாமல் ஸ்டாலினுக்கு சுமார் 14 வருடங்கள் வீணாகியிருக்கின்றன.
 
எழுபதுகளிலும் எண்பதுகளிலும் ஸ்டாலினுக்குப் பொது மக்களிடம் பெரிய நற்பெயர் இருந்ததாகச் சொல்ல முடியாது. பணக்கார வீட்டுப் பிள்ளைகளின் ஆடம்பரமும், ஷோக்கும் அதிகார மையத்தில் இருப்பதால் வரும் அகங்காரமும் உடையவராகவே அவர் அன்று கணிக்கப்பட்டார். அப்போது அவர் தம்மை டி.வி. நடிகராக இலக்கிய கலையார்வம் உடையவராகக் காட்ட எடுத்த முயற்சிகளெல்லாம் படு தோல்வி அடைந்தன. 
 
ஆனால் ஸ்டாலின் அதே பாதையைத் தொடராமல், வெளியே வந்து தப்பித்து விட்டார். தொண்ணூறுகளின் இறுதியில் சென்னை மேயர் பதவிக்கு வந்தபோது புதிய இமேஜ் அவருக்கு உருவாயிற்று. நகரப் பிரச்னைகளில் நேரடி அக்கறை காட்டி நடுத்தர வர்க்கத்தின் கவனத்தைக் கவர்ந்து நல்ல நிர்வாகியாக இவர் இருப்பார் என்ற நம்பிக்கையை அப்போது அவர் ஏற்படுத்த முயற்சித்தார்.
 
இப்போது ஒருவழியாக அவரைத்தான் தி.மு.க.வின் அடுத்த தலைவராகத் தாமே முன்மொழிவேன் என்று கலைஞர் சொல்லி விட்டதால், அவர்தான் இனி தி.மு.க ஆட்சிக்கு வந்தால் முதல்வராகவும் இருப்பார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. உட் கட்சி ஜனநாயகம் உள்ள இயக்கம், ஸ்டாலினை எதிர்த்து யாரும் போட்டியிடலாம் என்றெல்லாம் கலைஞரும் அன்பழகனும் சொன்னாலும், தி.மு.க.வில் இதுவரை கலைஞரை எதிர்த்து யாரும் வேட்பு மனு கூட தாக்கல் செய்ததில்லை. அதே நிலைதான் தொடரும். 
 
p93a.jpg

அழகிரி எதிர்த்துப் போட்டியிட்டால், கட்சி இன்று இருக்கும் நிலையில் அவருக்குத்தான் அது அவமானமாக முடியும். அந்தத் தப்பை அவர் செய்ய மாட்டார் என்று எதிர்பார்க்கலாம். ஸ்டாலினுடன் சமரசம், அல்லது அதிரடியாக அ.தி.மு.க.வுக்குப் போய் ஜெயலலிதாவின் வாரிசாக இடம் பிடிக்க முயற்சிப்பது என்ற இரு வழிகளைத் தவிர அவருக்கு வேறு சாய்ஸ் இனி இல்லை. 
 
அழகிரி செகண்ட் சாய்ஸை எடுப்பதை, கலைஞருக்குப் பின் தி.மு.க.வைப் பலவீனப்படுத்த விரும்பும் தில்லி காங்கிரஸ் தலைமையும் உளவுத்துறையினரும் நிச்சயம் விரும்புவார்கள். எழுபதுகளில் எம்.ஜி.ஆரைப் பயன்படுத்திய மாதிரி இப்போது அழகிரியைப் பயன்படுத்த முடியுமா என்று முயற்சிக்கலாம். 
 
ஆனால், அழகிரி, எம்.ஜி.ஆர் அல்ல. எனவே சினிமாவில் முத்துவுக்கு ஏற்பட்ட கதியே அவருக்கும் அரசியலில் ஏற்படும். குடும்பத்துக்குள் சமரசம் என்பதுதான் ஒரே தீர்வு.
 
கலைஞர் இனி தம் முடிவை வீட்டு நிர்பந்தங்களால் மாற்றிக் கொள்ளும் வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை.
 
அடுத்த உட்கட்சி தேர்தல் எப்போது? அதில் ஸ்டாலினை முன்மொழிவாரா, யாரேனும் எதிர்த்தால் என்ன செய்வார் என்ற நிருபர்கள் கேள்விகளுக்குப் பதில் சொல்லும்போது, ‘கட்சி தேர்தல் எப்போது நடக்கிறதோ, அப்போது நான் உயிரோடு இருந்தால்’ ஸ்டாலினையே முன் மொழிவேன்’ என்று சோல்லி இருக்கிறார். 
 
தம் காலம் முடிவதற்கு முன் இந்தப் பிரச்னைக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்துவிட்டே தாம் விடைபெறவேண்டும் என்ற மன உறுதி அவருக்கு இப்போது வந்திருப்பதையே இதுகாட்டுகிறது. எனவே தி.மு.க.வின் அடுத்த தலைவர் ஸ்டாலின் தான். அடுத்த தேர்தலில் ஆட்சியைப் பிடித்தால் அடுத்த முதல்வரும் அவர்தான். இப்போது முக்கியமான கேள்விக்கு வருவோம். ஸ்டாலினால் தி.மு.க.வைக் கட்டிக் காப்பாற்ற முடியுமா?
 
‘தி.மு.க. முடிந்து போன கதை’ என்று அண்மையில் ஜெயலலிதா தம் கட்சிப் பொதுக் குழுவில் அலட்சியமாக அறிவித்தார். அது அவரது ஆசை. ஆனால் அவ்வளவு சுலபத்தில் தி.மு.க. முடிந்த கதையா காது. வலுவான கட்சி அமைப்பும் மீடியா பலமும், சுமார் 25 சதவிகித வோட்டு ஆதரவும், சமூகத்தில் காலத்தின் தேவையால் உருவான சரித்திரப் பின்னணியும் உள்ள அமைப்பு அது.
 
 
அண்ணா 1949ல் தி.மு.க.வை ஆரம்பித்த போது அவருக்கு வயது நாற்பதுதான். கட்சியின் அடுத்த நிலைத் தலைவர்கள் பெரும்பாலோரின் வயது 30 லிருந்து 40க்குள் இருந்தது. அத்தனை இளமையான இயக்கமாக அது தொடங்கியது. ஆனால் 88 வயது வரை பதவியை விட்டு இறங்க மறுத்த பிடிவாதத்தால், கலைஞர் இன்று அந்தக் கட்சியை முதியோர் இல்லமாக மாற்றிவிட்டார். கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவர்கள் வயது 75. அடுத்த நிலையினருக்கு வயது 60க்கு மேல். ஸ்டாலின் தலைவராகும்போது அவருக்கும் வயது 60ஐக் கடந்து விட்டிருக்கும். இன்றைய 20லிருந்து 35 வயது வரையிலான இளைஞர்களைக் கட்சிக்குள்ளும் அதற்கு ஆதரவாகவும் ஈர்க்க ஸ்டாலினால் இயலுமா என்பதே கேள்வி. இன்றைய தமிழ் இளைஞர்களில் பெரும்பாலோர் ஈழத் தமிழர் பிரச்னையில் தி.மு.க. பெரும் துரோகம் செய்த கட்சி என்ற கருத்திலேயே இருக்கிறார்கள். நடுவயதினர் ஊழலை விஞ்ஞானப்பூர்வமாகச் செய்ய எல்லா கட்சிகளுக்கும் வழிகாட்டிய கட்சி என்றே கருதுகிறார்கள்.
 
இந்தச் சூழலில் கடுமையான மாற்றங்களைச் செய்யவும் தம்மையும் கட்சியையும் சுயவிமர்சனம் செய்து கொள்ளவும் ஸ்டாலின் முன்வந்தால்தான் தி.மு.க.வைப் பழையபடி இளைஞர் கட்சியாக, கோட்பாடுகள், லட்சியங்களுக்கான இயக்கமாகப் புதுப்பிக்கமுடியும். அதற்கான ஆற்றல் அவரிடம் இருக்கிறதா?
 
கலைஞரிடம் இருக்கும் பல ஆற்றல்கள் பேச்சுத் திறமை, எழுத்துத் திறமை, அரசியல் வியூகம் கட்டுவது போன்றவை ஸ்டாலினிடம் இல்லை. அதே போல கலைஞரின் பல பலவீனங்களும் ஸ்டாலினுக்கு இல்லை. வாராவாரம் பாராட்டு விழாக்கள், சினிமா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது, பத்திரிகை நிருபர்களிடம் எரிந்து விழுவது, இதழாசிரியர்களுக்கு போன் செய்து கடிந்து கொள்வது, நேரடி பதில் சொல்லாமல் மழுப்புவது, வார்த்தை விளையாட்டு எல்லாம் இல்லை. கலைஞர் அளவு புகழாரம், ஆடம்பர கட்அவுட் கலாசாரம் ஆகியவற்றில் ஸ்டாலின் அதிக ஈடுபாடு காட்டவில்லை. அதிலிருந்து முற்றாக வெளியே வந்தால் கூட நல்லது. 
 
எம்.ஜி.ஆர் காலத்திலேயே தொடங்கி ஜெயலலிதா காலத்தில் உச்சத்துக்குச் சென்ற கலைஞரின் விரோத பாவம், நேரில் சந்திப்பதைத் தவிர்ப்பது போன்றவை ஸ்டாலினிடம் இல்லை. நேரில் ஜெயலலிதாவைச் சந்திக்க அவர் தயங்கியதில்லை.
 
தி.மு.க. என்ற பழைய ஜமீன் வீடு ஸ்டாலின் கைக்கு வந்துவிட்டது. அதை ஒட்டடை அடித்து, சுத்தப்படுத்தி விரிசல்களுக்கு ஒட்டுப் போட்டு கூரை ஓட்டைகளை அடைத்து வைத்துப் பயன்படுத்தப் போகிறாரா, அல்லது இது உதவாது, இது இருக்கும் திராவிட இயக்க சுயமரியாதை மனை மட்டும்தான் தேறும், முற்றாக இடித்துவிட்டு புது வீடாகக் கட்டுவோம் என்று கட்டப் போகிறாரா என்பது ஸ்டாலின் கையில்தான் இருக்கிறது.


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard