New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கல்லும் கலையும் பத்ரி சேஷாத்ரி


Guru

Status: Offline
Posts: 24614
Date:
கல்லும் கலையும் பத்ரி சேஷாத்ரி
Permalink  
 


கல்லும் கலையும் #1 – ஞாயிறு போற்றுதும்

சூரியன்

பத்தாண்டுகளுக்கு மேல் இருக்கும். சென்னையிலிருந்து ஒரு சிறு குழுவாகப் புறப்பட்டு, சமணர் தலங்கள் சிலவற்றைக் காண்பது நோக்கம். ரீச் ஃபவுண்டேஷன் ஏற்பாடு செய்திருந்தது. தமிழகத் தொல்லியல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற திரு ராமச்சந்திரன் வழிகாட்டியாக வந்திருந்தார். திருப்பாண்மலை, திருமலை ஆகிய இடங்களை நோக்கிய பயணம். திருமலையில் குந்தவை ஜினாலயம் என்ற சோழர் கால சமணர் கோவில் உள்ளது. பல சோழ மன்னர்களின் கல்வெட்டுகள் இங்கே உள்ளன. ராஜராஜனின் தமக்கை குந்தவை பெயரால் எழுப்பப்பட்ட ஆலயம். ஆனால் அதற்கு முன்னமே பாறையில் பல்லவர் காலத்தில் செதுக்கப்பட்ட சில புடைப்புச் சிற்பங்களும் இங்கே உள்ளன. பின்னர் அவற்றையும் பார்க்கப் போகிறோம்.

சூரியன்

சூரியன், தமிழ்நாடு

ஆனால் இந்தப் பயணத்தின்போது என் நினைவைவிட்டு நீங்காதது, வழியில், தெருவோரத்தில் நாங்கள் கண்ட சூரியனின் முழுமையான சிற்பம். ஆளுயரத்துக்கும் சற்றே பெரியது. மேலே உள்ள படத்தில் இந்தச் சிற்பத்தையும் அருகில் எங்கள் குழுவில் சிலர் நிற்பதையும் பார்க்கலாம். தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே மிகச் சிறந்த சூரியனின் சிற்பங்களின் முதன்மை இடத்தில் இது வரக்கூடும்.

இதைப் பார்த்த மாத்திரத்திலே இதனைச் சூரியன் என்று எவ்வாறு சொல்வது? மொழிக்கு இலக்கணம் இருப்பதுபோல இந்திய சமயச் சிற்பங்களுக்கும் இலக்கணம் உள்ளது. இதனை சமஸ்கிருதத்தில் பிரதிமா லக்ஷணம் என்று அழைப்பார்கள். ஆங்கிலத்தில் ஐகனோகிராஃபி என்று அழைக்கப்படும். தமிழில் படிம இலக்கணம் அல்லது படிமவியல் எனலாம்.

சூரியனைச் சுட்டிக்காட்ட தலையைச் சுற்றி ஒளிவட்டம் இருக்கும். மேலே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் அற்புதமான வட்டமாக இதனைப் பார்க்கலாம். சிவனுக்கோ விஷ்ணுவுக்கோ வேறு கடவுளர்களுக்கோ இம்மாதிரியான ஒளிவட்டம் பொதுவாக இருக்காது. சூரியனுக்கு உண்டு, சந்திரனுக்கும் உண்டு. நியாயம்தானே? இருவரும்தானே வட்டமாக வானில் ஒளியைத் தருகிறார்கள்? அடுத்து இரண்டு கைகளிலும் தாமரை மலர்கள். தாமரையின் தண்டினை அவ்வளவு நேர்த்தியாகப் பிடித்திருக்குமாறு சிற்பி செதுக்கியுள்ளார். மற்ற இலக்கணங்கள் கிட்டத்தட்ட அனைத்துக் கடவுளர்களுக்கும் பொருந்தக்கூடியதே. தலையில் மகுடம், காதுகளில் குண்டலங்கள், கழுத்தில், கைகளில் அணிகலன்கள். இடுப்பில் உடுப்பு, இதழில் புன்சிரிப்பு. யாரோ ஒருவர் தோளில் வைத்துவிட்டுப்போன காட்டு மஞ்சள் பூ ஒன்று இந்தப் படிமத்துக்கு மேலும் அழகு சேர்க்கிறது.

ஆனால் ஏன் இந்தச் சிலை தெருவோரத்தில் நிற்கிறது? ஏன் இது ஒரு கோவிலுக்குள் இல்லை?

சூரியன் வேதத்திலே வரும் தெய்வம். ஆதி சங்கரர் அறு மதங்கள் என்ற கருத்தை உருவாக்கி அளித்தார். அவை முறையே சிவன் (சைவம்), விஷ்ணு (வைஷ்ணவம்), கணபதி (காணாபத்யம்), குமரன் (கௌமாரம்), சக்தி (சாக்தம்), சூர்யன் (ஸௌரம்) ஆகிய கடவுள்களை வழிபடுவது ஆகும். திருச்சி மலைக்கோட்டையில் இரண்டு குகைக் கோவில்கள் அமையப்பெற்றுள்ளன. பொதுவாக மக்கள் உச்சிப் பிள்ளையார், தாயுமானவர் கோவில்களுக்குச் செல்வார்களே தவிர, இந்த குகைக் கோவில்களுக்குப் போகமாட்டார்கள். இதில் ஒன்று, காலத்தால் முற்பட்டது, ஆறாம் நூற்றாண்டில் மகேந்திரன் செதுக்குவித்த லலிதாங்குர பல்லவேஸ்வர கிருகம் – மிக அழகியது. இதில் அற்புதமான கங்காதரர் சிற்பம் ஒன்று உள்ளது. வானிலிருந்து வீழும் கங்கையை ஒற்றைச் சடைமுடியில் சிவனார் தாங்கும் சிற்பம். அத்துடன் ஒரு சிலேடைப் பாடல். இதனைப் பின்னர் காண உள்ளோம்.

மற்றொரு குகைக் கோவில், எட்டாம் நூற்றாண்டில், பாண்டியர் காலத்தில் செதுக்கப்பட்டது. முத்தரைய மன்னர்கள் செய்திருக்கக்கூடும். இங்கே சங்கரரின் அறு மதங்களுக்கான கடவுள்களை அழகுற உருவாக்கியிருப்பார்கள். எதிரெதிராக சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் சந்நிதிகள். பக்கவாட்டுச் சுவரில் வரிசையாக கணபதி, குமரன், நடுவில் பிரம்மா, பின் சூரியன், துர்கையாகிய சக்தி. இங்கே சூரியனுக்கு மற்ற ஐந்து கடவுளர்களுக்கு இணையான ஓரிடம்தான்.

ஆதித்ய ஹ்ருதயம் என்று தோத்திர வடிவில் சூரியன் இன்றும் வழிபடப்படுகிறார். ஆனால் நாளடைவில் தனித்த கடவுளாக வழிபடப்பட்ட சூரியன், தேவர் குழாமாக, சிவனையும் விஷ்ணுவையும் அடுத்து காணப்படலானார். பல்லவக் குடைவரைக் கோவில்களில், மாமல்லையின் பெருந்தவ சிற்பத் தொகுதியில், வராக மண்டபத்தின் வராக, திரிவிக்கிரம சிற்பத் தொகுதியிலெல்லாம் வானையும் கடந்து செல்லும் விஸ்வரூபத்தைக் குறிப்பிட சூரிய சந்திரர்களை இருபுறமும் வடித்து வைத்திருப்பார்கள்.

சூரியச் சிற்பங்களை இந்தியா முழுவதிலும் காணலாம். நாம் மேலே பார்த்ததுபோல், தலையில் ஒளிவட்டம் கட்டாயம் இருக்கும். இரு கைகளிலும் தாமரை கட்டாயம் இருக்கும். கூடவே, பல சிற்பங்களில் ஏழு குதிரை பூட்டிய ரதத்தில் வருவதாகச் செதுக்கப்பட்டிருக்கும். இந்த ரதத்தின் சாரதி அருணன். இந்த அருணன், விஷ்ணுவின் வாகனமான கருடனின் தமையன். கஷ்யபர் என்ற ரிஷிக்கும் வினதை என்பவளுக்கும் பிறந்த இரு குழந்தைகள் அருணனும் கருடனும். கஷ்யபருக்கு வினதை மட்டுமல்ல, கத்ரு என்ற மனைவியும் இருந்தாள். மனைவிகளுக்குள் போட்டி. கத்ரு தனக்கு ஆயிரம் குழந்தைகள் வேண்டுமென்று கேட்டாள். வினதையோ, இரண்டு போதும், ஆனால் மிகப் பலம் பொருந்தியவர்களாக வேண்டும் என்றாள். கத்ரு ஆயிரம் முட்டைகள் இட்டாள்; அவை அனைத்தும் நாகப் பாம்புகளாகப் பிறந்தன. வினதையின் இரண்டு முட்டைகளோ வெகு காலமாகப் பொரியாமல் இருந்தன.

வினதைக்கு ஆர்வக்கோளாறு, ஒரு முட்டையை லேசாக உடைத்துப் பார்த்தாள். காலம் போதாமையால் கீழ்ப்பகுதியே இல்லாத குறையுடன் பிறந்தான் அருணன். கோபம் கொண்ட அருணன், வினதை கத்ருவின் அடிமையாக ஆவாள் என்றும், மற்றொரு முட்டையிலிருந்து பிறந்துவரும் கருடன் தன் தாயை அடிமைத்தளையிலிருந்து மீட்பான் எனவும் சபித்துவிட்டான். பின்னர் இந்தத் தொடரில் கருடனின் அற்புதமான சிற்பத்தையும் இந்தக் கதையின் தொடர்ச்சியையும் காண உள்ளோம்.

கஷ்யபர் அருணனுக்கு சூரியனின் சாரதியாக ஆகும் வரத்தை அருள்கிறார். இதைத்தான் பல சூரியச் சிற்பங்கள் காண்பிக்கின்றன.

சூரியனை ஒட்டி உஷா, பிரத்யுஷா என்னும் இரு பெண் தெய்வங்கள் கையில் வில்லேந்திக் காணப்படுவதையும் நாம் பல சிற்பங்களில் பார்க்கிறோம். இவர்கள் அம்பெய்து இருட்டைப் போக்குவதையே இந்தச் சிற்பங்கள் உணர்த்துகின்றன.

கீழே, சாளுக்கியர்களின் பட்டதகல்லில் விரூபாக்ஷர் கோவிலில் விதானத்தில் வடிக்கப்பட்டுள்ள சிற்பத்தைக் காணலாம். சூரியனைத் தவிர, அருணன், ஏழு குதிரைகள், உஷா, பிரத்யுஷா என அனைவரையும் காணலாம்.

விரூபாக்ஷர் கோவிலில் சூரியனின் சிற்பம்

விரூபாக்ஷர் கோவிலில் சூரியனின் சிற்பம்

சூரியனுக்கு ஒரு சுவாரசியமான கதையும் உண்டு. இது பெரும்பாலும் எங்கும் காணப்படுவதில்லை; ஆனால் பட்டதகல்லில் மற்றொரு கோவிலில் இது வடிக்கப்பட்டுள்ளது. சிற்பிகளின் கடவுளான விசுவகர்மாவின் மகள் சஞ்சனா சூரியனை மணந்துகொள்கிறாள். அவர்களுக்கு இறப்பின் கடவுள் யமன் மகனாகப் பிறக்கிறான். ஆனால், சூரியனின் கடுமையான வெப்பத்தைத் தாள முடியாத சஞ்சனா, தன் நிழலையே (சாயா) பெண் வடிவாக ஆக்கி, தன்னிடத்தில் விட்டுவிட்டுப் போய்விடுகிறாள். வெகு நாட்கள் இது சூரியனுக்குத் தெரிவதில்லை. பின்னர் சாயாவுக்கும் குழந்தைகள் பிறக்கின்றன. சாயா குழந்தைகளுக்கு இடையே வேறுபாடு காட்டுவதைக் கண்ட சூரியன் தன் சந்தேகத்தை நேரடியாகவே கேட்க, சாயா தான் சஞ்சனா இல்லை என்ற உண்மையைத் தெரிவிக்கிறாள்.

சூரியன், விசுவகர்மாவிடம் சென்று தன் வெப்பத்தைத் தணித்துத் தருமாறு கேட்க, அவர் அங்கே இங்கே கொஞ்சம் செதுக்கி, சூரியனின் வெப்பத்தைத் தணிக்கிறார். இதற்கிடையில் சஞ்சனாவோ குதிரை வடிவில் காடுகளில் சுற்றித் திரிந்துகொண்டிருக்கிறாள். சூரியனும் குதிரை வடிவெடுத்து சஞ்சனாவைத் தேடிச் சென்று அவளைத் திரும்பிவருமாறு கேட்கிறான். அந்நேரத்தில் இருவரும் சேர்ந்து அசுவினி தேவர்கள் எனும் குதிரை வடிவ இரட்டையர்களைப் பிறப்பிக்கிறார்கள்.

சூரிய வழிபாடு உச்சத்தில் இருந்தபோது சூரியனுக்கு என்றே இந்தியா முழுவதும் பல கோவில்கள் இருந்திருக்கின்றன. முக்கியமான மூன்று கோவில்களைச் சொல்லவேண்டும். தீயூழ், இந்தக் கோவில்களில் இன்று வழிபாடு ஏதும் இல்லை. ஒன்று இந்தியாவின் மேற்கில் குஜராத்தில் மோடேரா என்னும் இடத்தில் இருக்கும் கோவில். இரண்டாவது இந்தியாவின் கிழக்கில் ஒடிஷாவில் கோனாரக் என்னும் இடத்தில் கட்டப்பட்ட, பெருமளவு இடிந்துபோன, ஆனால் மீதி இருக்கும் எச்சத்திலேயே மிகப் பிரம்மாண்டமாக இருக்கும் கோவில்.

மோதேரா, குஜராத்

மோடேரா, குஜராத்

மோடேரா சூரியக் கோவிலின் சுற்றுச் சுவர்களில் பன்னிரு ஆதித்தியர்களைக் காண முடியும். சூரியனை ஆதித்தியன் என்று குறிப்பிடுவது உண்டு. ஆதித்ய என்னும் சொல், அதிதியின் மகன் என்பதைக் குறிக்கும். அதிதிக்குப் பன்னிரண்டு மகன்கள். இவர்கள் அனைவரும் சேர்ந்து பன்னிரு ஆதித்தியர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். சூரியனை, இந்தப் பன்னிரு ஆதித்தியர்களுடன் சேர்த்துச் சிற்பமாக வடிப்பதும் உண்டு, அல்லது மோடேரா சூரியக் கோவிலில் உள்ளதுபோல், பன்னிரு ஆதித்தியர்களையும் தனித்தனிச் சிற்பமாகக் கோவிலின் சுற்றுச் சுவரில் வடிப்பதும் உண்டு.

கோனாரக், ஒடிஷா

கோனாரக், ஒடிஷா

கோனாரக்கில் கோவிலின் முக்கியப் பகுதியான கருவறையின்மேல் எழுப்பப்பட்டுள்ள பிராசாதா இடிந்துவிட்டது. ஆயினும் சூரியனின் மூன்று சிற்பங்கள் அங்கே காணக்கிடைக்கின்றன. கிழக்கு நோக்கிய கோவிலின் தெற்கு, மேற்கு, வடக்குச் சுவர்களில் இவை உள்ளன. தெற்குத் திசையில், காலையில் உதிக்கும் உதயசூரியன். மேற்குச் சுவரில் மதியச் சூரியன். வடக்கில் நாள் முழுதும் வேலை செய்து களைப்புற்று அஸ்தமனமாகும் சூரியன்.

மோடேராவும் கோனாரக்கும் மட்டுமல்ல, சூரியனின் மிகப் பிரபலமான மூன்றாவது கோவில் ஜம்மு காஷ்மீரின் மார்த்தாண்டனின் கோவிலாகும். எட்டாம் நூற்றாண்டில் லலிதாதித்யன் என்ற மன்னனால் எழுப்பப்பட்ட இந்தக் கோவில் பதினான்காம் நூற்றாண்டில் சிகந்தர் ஷா மீரி என்ற மன்னனால் இடிக்கப்பட்டது. இன்றும் இந்தக் கோவிலின் இடிபாடுகள் காணக்கிடைக்கின்றன. மிகப் பிரம்மாண்டமான கோவிலின் கருவறையும் சுற்றுச் சுவர்களும் இன்று துண்டு துண்டுகளாகச் சிதைந்துகிடக்கின்றன.

மார்த்தாண்டனின் கோவில், ஜம்மு காஷ்மீர்

மார்த்தாண்டனின் கோவில், ஜம்மு காஷ்மீர்

காலம் செல்லச் செல்ல, சூரியன் சிவனுடனும் விஷ்ணுவுடனும் சேர்ந்து சிவசூரியனாகவும் சூரியநாராயணனாகவும் உருமாற்றம் அடைந்தான். தனியான கோவில்கள் காணாமல் போயின, இடிந்துபோயின. ஸௌரம் என்னும் மதம் சைவத்திலும் வைணவத்திலும் கரைந்துபோயிற்று. இன்று பல கோவில்களில் நவகிருகங்களில் ஒன்றாக மட்டுமே சூரியன் காணப்படுகிறான்.

இந்தியா முழுதும் ஏகப்பட்ட சூரியச் சிற்பங்களைப் பார்த்துள்ளேன். ஆயினும், வட தமிழகத்தில் அருங்குன்றம் என்ற சின்னஞ்சிறு கிராமம் ஒன்றில் தெரு ஓரத்தில் காணப்பட்ட, கடினமான கிரானைட் கல்லில் செதுக்கப்பட்ட, மென்னகை ததும்பும் அந்தச் சூரியனையே மிகச் சிறப்பான சூரியச் சிற்பமாகச் சொல்வேன்.

சூரியனில் தொடங்கி நாம் இந்தியா முழுவதும் பயணம் செய்ய உள்ளோம். பல்வேறு கடவுளர் சிற்பங்களைக் காண உள்ளோம். இந்து மதம் மட்டுமின்றி, பௌத்த, சமணச் சிற்பங்களையும் பார்க்க இருக்கிறோம்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

கல்லும் கலையும் #2 – மௌனகுருவே! 

 

என் பெற்றோர் ஶ்ரீரங்கத்தில் வசிக்கின்ற காரணத்தால் நான் தொடர்ந்து ஶ்ரீரங்கம் சென்றுவருவது உண்டு. சுமார் பத்து ஆண்டுகள் இருக்கும். ஶ்ரீரங்கம் போய்விட்டு வரும்போது அருகில் எங்கெங்கெல்லாம் சென்றுவிட்டு வரலாம் என்று பேராசிரியர் சுவாமிநாதனிடம் கேட்டேன். “சீனிவாசநல்லூர் போய் தக்ஷிணாமூர்த்தி பார்த்துவிட்டு வா” என்றார்.

இந்தியப் பாரம்பரியக் கலைகளைப் பொருத்தமட்டில், பேராசிரியர் சுவாமிநாதன், எங்கள் பலருக்கு வழிகாட்டி. டெல்லி ஐஐடியில் மெக்கானிகல் எஞ்சினியரிங் துறையில் பேராசிரியராகப் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றவர். ஐஐடியில் இருக்கும்போதே இந்தியக் கலைகள் குறித்து ஆய்வுசெய்யத் தொடங்கினார். ஆவணப்படுத்தத் தொடங்கினார். பாடத்துக்கு அப்பால், மாணவர்களிடம் இவைகுறித்து உரையாற்றத் தொடங்கினார். வாய்மொழியாக சமஸ்கிருதம் எவ்வாறு செழித்துவளர்ந்தது, அஜந்தாவின் ஓவியக்கலை, தமிழில் யாப்பு, புதுக்கோட்டையின் கலைச் சின்னங்கள், மாமல்லபுரத்தின் பல்லவர் கலை, சித்தன்னவாசலின் அழியும் ஓவியங்களைப் பாதுகாப்பது எப்படி, மகேந்திரவர்மனின் கலைச் சின்னங்கள், 5000 வருடத்தைய இந்தியக் கலைகள் என்று பல்வேறு தலைப்புகளில் இந்த உரைகள் விரிந்தன. இவற்றை அவர் சிறு கையேடுகளாகவும் பவர்பாயிண்ட் பிரசெண்டேஷன்களாகவும் ஆக்கியிருக்கிறார்.

சீனிவாசநல்லூர் எங்கே இருக்கிறது என்று விசாரித்துக்கொண்டு போனேன். காவிரியின் வடகரையில், திருச்சி-சேலம் சாலையில் முசிறி, தொட்டியம் பகுதியில் இருக்கும் சிறு கிராமம். இப்போதுபோல் கூகிள் மேப்பை அவ்வளவாகப் பயன்படுத்தாத காலம். அங்கே போய் யாரிடம் என்னவென்று கேட்பது என்ற யோசனை. ஆனால் சாலையிலிருந்து பார்க்கும்போதே திடீரென வலதுபுறம் ஒரு பழைய கோவிலின் சிகப்புக்கல் கட்டுமானம் தென்பட்டது. நாம் தேடிச் செல்லும் கோவிலாக இருக்குமோ என்று வண்டியை நிறுத்திவிட்டுச் சென்றால், இந்தியத் தொல்லியல் நிறுவனத்தின் நீலத் தகவல் பலகையும் கம்பிவேலியும் இந்தக் கோவில்தான் என்பதை உறுதிப்படுத்தின. சுற்றிலும் வீடுகள், தோட்டம், நடுவில் கம்பிவேலிக்குள் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாகக் கொரங்கநாதர் கோவில். அந்தக் கோவிலில் நம்மை முதலில் வசீகரித்து இழுப்பது இந்த அபூர்வமான தக்ஷிணாமூர்த்தியின் சிற்பம்.

சீனிவாசநல்லூர் தக்ஷிணாமூர்த்தி

சீனிவாசநல்லூர் தக்ஷிணாமூர்த்தி

கோவில் சுவர்களில் உள்ள கல்வெட்டுகளை அடிப்படையாகக் கொண்டு, டக்ளஸ் பாரெட், இந்தக் கோவில் பொயு 927-ல், பராந்தக சோழனின் 20-வது ஆட்சியாண்டில் கட்டப்பட்டிருக்கவேண்டும் என்கிறார். எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன், இந்தக் கோவில், ஆதித்த சோழனின் காலத்தில் பொயு 894-ல் கட்டப்பட்டிருக்கவேண்டும் என்கிறார். ஆனால் கோவிலின் கட்டுமானத்தைக் கவனமாகப் பார்த்தால் பாரெட் சொல்வதுதான் சரி என்று முடிவு செய்யவேண்டியிருக்கிறது. இந்தத் தொடரில் நாம் பல்வேறு அறிஞர்களைப் பற்றியும் பேசுவோம். அவர்கள் எவ்வாறு ஒரு கோவிலின் காலத்தை நிர்ணயிக்கிறார்கள், என்னமாதிரியான வரலாற்று ஆராய்ச்சிகள் நிகழ்ந்துவருகின்றன என்பதையும் பார்ப்போம்.

பொன்னியின் செல்வன் நாவலைப் படித்தவர்களுக்கும் திரைப்படத்தின் முதல் பாகத்தைப் பார்த்தவர்களுக்கும் சோழர்களின் வரலாறு அத்துப்படியாக இருக்கும். இவன் முதலாம் பராந்தகன். முற்கால சோழ சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய விஜயாலய சோழனின் மகன் ஆதித்த சோழன். அவனுடைய மகனான இந்தப் பராந்தக சோழன் நீண்டகாலம் ஆட்சியில் இருந்தான். இவனுடைய மகனான ராஜாதித்தன்தான் ராட்டிரகூடர்களுக்கு எதிராகத் தக்கோலம் என்னுமிடத்தில் நடந்த போரில் மாண்டான். யானைமேல் துஞ்சிய தேவர் என்று பெயர்பெற்றான். ராஜாதித்தனின் தம்பிகள்தாம் கண்டராதித்தன், அரிஞ்சயன் ஆகியோர். கண்டராதித்தனின் மனைவி செம்பியன்மாதேவி. நாம் மீண்டும் மீண்டும் பார்க்கப்போகும் பெயர். கண்டராதித்தனும் அரிஞ்சயனும் மிகக் குறைவான காலமே ஆட்சி செய்தனர். அரிஞ்சயனின் மகன் இரண்டாம் பராந்தகன் என்னும் பராந்தக சுந்தர சோழனைத்தான், பொன்னியின் செல்வனான ராஜராஜனின் தந்தையைத்தான், திரைப்படத்தில் பார்த்திருப்பீர்கள். இவர்களை வெறும் திரைப்பட உருவங்களாகக் காணாமல் அவர்கள் நிஜமாகவே விட்டுச் சென்ற கோவில்களின் அடிப்படையில் நாம் பார்க்க உள்ளோம்.

முதலாம் பராந்தகன் காலத்தில் உருவான கோவில்கள் ஒவ்வொன்றும் சொக்கத் தங்கத்தை உருக்கி வார்க்கப்பட்டவை என்று சொல்லலாம். கல்லை இப்படியும் செய்யமுடியுமோ என்று சொக்கி அதிசயித்துப் போவதைத்தவிர நமக்கு வேறு வழியில்லை. சோழர்களின் இந்தக் கோவில் கட்டுமானக் கலைக்கு அடித்தளம் இட்டவனே ஆதித்த சோழன்தான். அவனுக்குமுன் விஜயாலயன் ஏதும் கட்டியதாகவோ அல்லது கட்டி அது எஞ்சியதாகவோ நமக்குத் தகவல்கள் இல்லை. திருச்சி-புதுக்கோட்டை சாலையில் இருக்கும் நார்த்தாமலை என்னுமிடத்தில் விஜயாலய சோழீசுவரம் என்ற பெயரில் ஒரு கோவில் இருக்கிறது. ஆனால் இது நிச்சயமாக விஜயாலயன் காலத்தில் எழுப்பப்பட்டது கிடையாது. விஜயாலயன் காலத்தில் மிகச் சிறிதாக முத்தரையர்களால் உருவாக்கப்பட்டு, பாண்டியர் காலத்தில் விரிவாக்கப்பட்டு, விஜயாலயன் பெயர் மட்டும் புழங்குவதாக இந்தக் கோவில் இருக்கவேண்டும்.

ஆதித்தன் தொடங்கி, முதலாம் பராந்தகன் காலத்தில் விரிந்து, இரண்டாம் பராந்தகன், செம்பியன் மாதேவடிகள், மதுராந்தக உத்தம சோழன் ஆகியோர் காலத்தில் சோழ மன்னர்களாலும் அவர்களுடைய ஆட்சிக்குக்கீழ் இருந்த முத்தரையர், இருக்குவேளிர், பழுவேட்டரையர் ஆகியோர்களாலும் கட்டப்பட்டு இன்றும் நாம் அனைவரும் சென்று பார்க்கக்கூடிய அளவில் நூற்றுக்கணக்கில் கற்றளிகள் உள்ளன. இதற்குப் பின்னர்தான் ராஜராஜன் என்னும் அருள்மொழிவர்மனின் ஆட்சி வருகிறது. அவன் சிறிய கோவில்கள் என்று இருந்ததை மாபெரும் கோவில் என்னும் கனவாக மாற்றுகிறான்; தஞ்சைப் பெரியகோவில் உருவாகிறது.

ஆனால் நாம் பெரும்பாலும் முற்காலச் சோழர்களைத் தாண்டிச் செல்லப்போவதில்லை. காரணம் போகப்போக உங்களுக்கே தெரியவரும்.

பராந்தகனிடமிருந்தும் சோழர்களிடமிருந்தும் கொஞ்சம் விலகி, தக்ஷிணாமூர்த்திக்கு வருவோம். கை, கால் இரண்டுமே உடைக்கப்பட்ட சிற்பம். யாரால் உடைக்கப்பட்டது என்று தெரியவில்லை. இன்று இந்தக் கோவில் வழிபாட்டில் இல்லை. அமைதி தவழும் முகம். கோவில் சுவரில், கோஷ்டத்தில், தெற்கு நோக்கி அமர்ந்திருக்கிறார். நான்கு கைகள். முன்னிரு கைகள் உடைந்திருந்தாலும் பின் கை ஒன்றில் அக்கமாலை (ருத்திராக்ஷம்) உள்ளது. இரு கைகளும் ஏதோ ‘முத்திரை’யைக் காண்பிக்கின்றன. காலடியில் ஒரு பாம்பு, ஒரு மான். படுத்திருக்கும் சற்றே குள்ளமான ஓர் உருவத்தின்மீது ஒரு கால். மற்றொரு கால், மடித்துவைக்கப்பட்டுள்ளது.

தலையில் முடி அலங்காரம் மிகச் சுவாரசியமானதாக உள்ளது. சடைகள் விரிந்து, சுருட்டப்பட்டு, சிறு சிறு குழல்களாக, பூக்களை வைத்து அலங்கரிக்கப்பட்டுள்ளது. நெற்றியில் ஒரு பட்டை, அதில் ரத்தினம்போல் அலங்காரம். காதுகளில் குண்டலங்கள். தலைச் சடையில் ஒரு மண்டையோடு அலங்காரமாகச் செருகப்பட்டுள்ளது.

அவர் ஒரு மரத்தின்கீழ் அமர்ந்திருக்கிறார். அந்த மரம் கல்லால மரமாம். அதாவது நாம் பொதுவாகப் பார்க்கும், விழுதுகள் கொண்ட ஆலமரம் அல்ல. உயிரியல் பெயர் முறைப்படி ஆலமரத்துக்கு Ficus religiosa என்று பெயர், ஆங்கிலத்தில் Fig அல்லது Peepal என்றும் அழைப்போம். அதிலிருந்து சற்றே வேறுபட்ட Indian Rock Fig எனப்படும் Ficus arnottiana எனப்படும் மரம் இது. இந்த மரத்தில் பல விஷயங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. மரத்தின் பொந்திலிருந்து ஓர் ஆந்தை எட்டிப்பார்க்கிறது. தேவாங்குபோல் ஏதோ ஒன்று மரத்தில் ஏறிச் சென்றுகொண்டிருக்கிறது. ஓரத்தில் குரங்கு ஒன்று இருப்பதுபோல் தெரிகிறது. மரத்திலிருந்து அக்கமாலை ஒன்று தொங்குகிறது. அருகில் ஒரு பை தொங்குகிறது.

சரி, இந்தச் சிற்பத்தைச் சுற்றிலும் என்ன நடக்கிறது. தக்ஷிணாமூர்த்தி சிலையின் இரு பக்கங்களையும் மும்மூன்றாகப் பிரித்து ஆறு சிற்பத் தொகுதிகள் காணக்கிடைக்கின்றன. மேலே நமக்கு இடதுபுறம் காதுகளை மூடித் துணி அணிந்த இருவர், சற்றே குள்ளமானவர்கள், உட்கார்ந்திருக்கின்றனர். வலதுபுறம், ஓர் இணை – தொடர்ந்து இந்திய சமயக் கலைமரபைப் பின்பற்றிவருவோருக்கு இவர்கள் கின்னரர்கள் என்று புரியவரும். கையில் யாழ் போன்ற இசைக்கருவி வைத்திருக்கிறார்கள். கின்னரர்களுடைய மேலுடம்பு மனிதர்கள் போன்றும் கீழுடம்பு பறவைகள் போன்றும் இருக்கும்.

இடைப்பட்ட பகுதியில் ஒருபக்கம் சிங்கங்கள், இன்னொரு பக்கம் புலிகள், மிக அமைதியாகத் தூங்குகின்றன. கீழே பக்கத்துக்கு இருவராக இருவர் அமர்ந்திருக்கின்றனர். நடுவில் இருக்கும் தக்ஷிணாமூர்த்தி உபதேசம் செய்பவர் என்றால் அருகில் அமர்ந்திருக்கும் இருவரும் அந்த உபதேசத்தைக் கேட்கும் சீடர்கள் எனலாம்.

யார் இந்த தக்ஷிணாமூர்த்தி?

சாட்சாத் சிவனேதான் இந்த தக்ஷிணாமூர்த்தி. அனைத்துக் கலைகளையும் கற்றுக்கொடுக்க வந்த குரு இவர். இவர்தான் ஆதிகுரு என்று அறியப்படுபவர். கலைகள் என்றால், யோகம், இசை, அனைத்துவிதமான வித்தைகள், சாத்திரம் என்று அனைத்தும். இவர் தென்திசைக் கடவுள், தென்முகக் கடவுள் என்றெல்லாம் தமிழில் அழைக்கப்படுகிறார். தக்ஷிணம் என்றால் தெற்கு. ஆலமரத்தின்கீழ் அமர்ந்திருப்பதால், சங்க இலக்கியங்களிலும் சிலப்பதிகாரத்திலும் ஆலமர் செல்வன், ஆலமர் கடவுள் என்றும் அழைக்கப்பட்டார்.

வடமொழியில் ஆதிசங்கரரால் இயற்றப்பட்ட தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்திரம், தக்ஷிணாமூர்த்தியின் பண்புகளை விளக்குவது. மௌனமொழியால் தம் சீடர்களின் மனத்தில் அறிவைப் புகட்டும் ஆசான் என்றே தொடங்குகிறார் சங்கரர். யௌவனம் மிகுந்த குருவின்முன் வயதுமுதிர்ந்த ரிஷிகள் சீடர்களாக அமர்ந்திருப்பது என்னே ஆச்சரியம் என்கிறார் சங்கரர். குரு மௌனமாக இருக்கிறார். மௌனம்தான் அவருடைய விளக்கம். அந்த மௌனமே சீடர்களின் மனத்தில் உள்ள சந்தேகங்களை அறுத்தெறிகிறது என்கிறார் சங்கரர்.

அவர் இருக்கும் இடத்தில் பகை இல்லை. அதனால்தான் எந்தப் பயமுமின்றி மானும் சிங்கம் புலிகளும் அருகருகே அமைதியாகப் படுத்துக்கிடக்கின்றன. அஞ்ஞானத்தின் உருவாகிய முயலகன் (வடமொழியில் அபஸ்மாரன்) அவருடைய காலடியில் கிடக்கிறான். சுற்றி பல ரிஷிகள் அமர்ந்திருக்கவேண்டும். ஆனால் சிற்பத்தில் இரண்டு, நான்கு அல்லது அதற்குமேல் இடம் இருப்பதற்குத் தக்கவாறு காண்பிப்பார்கள். கின்னரர்கள்போல் மறுபக்கம் இருப்போருக்குக் காதுபொத்தர்கள் என்று பெயர் என்கிறார் தொல்லியலாளர் ஶ்ரீதரன். கல்லால மரத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் பையில் என்ன இருக்கிறது? திருநீறுதான். அந்தப் பைக்குப் பொக்கணம் என்று பெயர் என்கிறார் ஶ்ரீதரன்.

தக்ஷிணாமூர்த்தியின் படிமவியலை விரிவாக ஆராய்ந்து எழுதியிருக்கிறார் குடவாயில் பாலசுப்ரமணியன். மாபெரும் அறிஞர் இவர். தக்ஷிணாமூர்த்தியின் இருபுறமும் அமர்ந்திருப்பது சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் என்னும் சனகாதி முனிவர்கள் என்றும் கர்ணபிராவிதர் என்று வடமொழியில் அழைக்கப்படும் தவசீலர்களே தமிழில் காதுபொத்தர் என்று அழைக்கப்பட்டு, காதுகளைத் துணியால் மூடிக் காண்பிக்கப்படுவோர் என்றும் பாலசுப்ரமணியன் குறிப்பிடுகிறார். அவர்கள் சிவ தத்துவம்தவிர வேறு எதையும் கேட்க விரும்பாதவர்களாகத் தங்கள் காதுகளைப் பொத்திக்கொண்டிருக்கிறார்கள். இந்த முக்காடிட்ட உருவங்கள் தமிழகத்தில் சீனிவாசநல்லூரிலும் திருக்கருகாவூரிலும் மட்டும்தான் காணப்படுகின்றன என்னும் இவர், சுந்தரமூர்த்தி நாயனாரின் திருமுறையிலிருந்து மேற்கோள் காட்டுகிறார்:

காது பொத்தரைக் கின்னரர் உழுவை
கடிக்கும் பன்னகம் பிடிப்பருஞ் சீயம்
கோதில் மாதவர் குழுவுடன் கேட்பக்
கோல ஆல்நிழற் கீழறம் பகர
வேதஞ் செய்தவர் எய்திய இன்பம்
யானுங் கேட்டுநின் இணையடி யடைந்தேன்
நீதி வேதியர் நிறை புக ழுலகில்
நிலவு தென்றிரு நின்றியூ ரானே

இந்த வரிகளைப் படித்தாலே போதும். அப்படியே, சீனிவாசநல்லூரின் சிற்பத்துக்குப் பொருந்திப்போகிறதல்லவா? காதுபொத்தர், டிக். கின்னரர், டிக். கடிக்கும் பன்னகம் (பாம்பு), டிக். பிடிக்க முடியாத சீயம் (சிங்கம்), டிக். கோதில் மாதவர் குழு – ரிஷிகள், டிக், ஆல் நிழலின் கீழ் அறம் பகர்பவர் – தக்ஷிணாமூர்த்தியாகிய சிவன்.

சிற்பிகள் எந்த அடிப்படையில் இதுபோன்ற சிற்பங்களை உருவாக்குகிறார்கள்? சுந்தரர் தேவாரத்தைப் படித்தா? சுந்தரரின் காலம் எட்டாம் நூற்றாண்டு. ஆதிசங்கரரின் ஸ்தோத்திரத்தைப் படித்தா? அவருடைய காலமும் எட்டாம் நூற்றாண்டாகத்தான் இருக்கவேண்டும் என்கிறார்கள். அப்படியானால் கோவில்கள் எந்த அடிப்படையில் கட்டப்பட்டன? எட்டாம் நூற்றாண்டுக்குமுன் கோவில் கட்டுமானக் கலை, படிம இலக்கணம் ஆகியவை எங்கே குறிப்பிடப்பட்டுள்ளன?

சிவன் கோவில் கட்டுமானத்துக்கு அடிப்படையாக இருப்பது சைவ ஆகமங்கள் எனப்படும் நூல்கள் ஆகும். காமிகாகமம், காரணாகமம், அஜிதாகமம், சுப்ரபேதாகமம் என்று தொடங்கி 28 ஆகமங்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்த ஆகமங்கள், ஒரு சிவன் கோவில் எவ்வாறு அமைக்கப்படவேண்டும், அக்கோவிலில் என்னென்ன கடவுள் சிலைகளைப் பிரதிஷ்டை செய்யவேண்டும், கோவில்களில் நித்யப்படி பூஜை என்னென்ன, திருவிழாக்கள் எவை எவை என்று அனைத்தையும் குறிப்பிடுகின்றன. ஒரு கோவிலை ஒரு குறிப்பிட்ட ஆகமத்தின் அடிப்படையில் நிர்மாணிப்பார்கள். அக்கோவிலைக் கட்டக்கூடிய ஸ்தபதியானவர் கோவிலின் பூசகராகிய சிவாச்சாரியாருடனும் கோவிலைக் கட்டும் யஜமானனுடனும் சேர்ந்து கோவிலின் விஸ்தீரணம், கோவிலைக் கட்டுவதற்கான நிதி ஆகியவற்றின் அடிப்படையில் கட்டுமானப் பொருள்கள் முதற்கொண்டு கட்டுமானம், சிற்பங்கள் ஆகியவற்றைத் தீர்மானிப்பார்.

ஸ்தபதிகள், கட்டுமானத்தைத் தீர்மானிக்கும் வாஸ்து சாஸ்திரம், படிம இலக்கணங்களைத் தரும் சிற்ப சாஸ்திரம் ஆகியவற்றுக்கெனப் பிரத்யேக நூல்களை வைத்திருப்பார்கள். இது இவர்களுக்கென்றே இருப்பது. அதன் அடிப்படையில் அவர்கள் சிற்பத்தின் கூறுகளையும் அளவுகளையும் தீர்மானிப்பார்கள்.

ஒவ்வொரு கடவுளுக்கும், கடவுளின் வடிவங்களுக்கும் ஆகமங்கள் தியான ஸ்லோகம் என்ற ஒன்றைத் தருகின்றன. தக்ஷிணாமூர்த்திக்கென குறிப்பிட்ட ஆகமத்தில் ஒரு தியான ஸ்லோகம் இருக்கும். சிற்பியானவர், இந்த ஸ்லோகத்தை மனத்தில் இருத்தி தியானம் செய்துகொண்டே இருப்பார். இந்த தியானத்தின் இறுதியாகச் சிற்பியின் மனத்தில் ஓர் உருவம் தோற்றமளிக்கும். அதனை அவர் வடிக்கத் தொடங்கிவிடுவார். இந்தியப் பாரம்பரியத்தில், கோட்டோவியமாகச் சிற்பங்களை வரைந்துவைத்து, அதனைப் பார்த்துச் செதுக்குவது என்பது கிடையாது என்று பாரம்பரியச் சிற்பிகள் சொல்கிறார்கள். மனத்தில் இருப்பதை அப்படியே உளி, சுத்தியல் கொண்டு உருவாக்கிவிடவேண்டியதுதான்.

இவையெல்லாம் பாரம்பரியக் கலைகள் என்றால் தக்ஷிணாமூர்த்தியை எந்த அடிப்படையில் இவர்கள் செதுக்கியுள்ளனர் என்று நாம் எப்படித் தெரிந்துகொள்வது? நம் நல்லூழ், டி.ஏ.கோபிநாத ராவ் என்னும் தொல்லியலாளர் மிகுந்த பிரயாசையுடன் Elements of Hindu Iconography [இந்துப் படிமவியலின் கூறுகள்] என்ற மாபெரும் நூலை நான்கு தொகுதிகளாக எழுதியுள்ளார். இதற்காக அவர் சைவ ஆகமங்கள், வைணவ சம்ஹிதைகள், சாக்த தந்திரங்கள், சிற்ப நூல்கள், வாஸ்து கிரந்தங்கள் ஆகியவற்றைத் தீவிரமாகக் கற்று அவற்றிலிருந்து பெற்றவற்றைத் தொகுத்துக் கொடுத்திருக்கிறார். இந்தப் புத்தகங்கள் இன்று அச்சு நூலாகவும் மின்புத்தகமாகவும் கிடைக்கின்றன.

தக்ஷிணாமூர்த்தி சிற்பம் பற்றி கோபிநாத ராவ் எழுதிய பல்வேறு பக்கங்களைப் படிக்கும்போது ஏகப்பட்ட தகவல்கள் நமக்குக் கிடைக்கின்றன. தக்ஷிணாமூர்த்தி நான்கு வடிவங்களில் சிற்பமாகக் கிடைக்கிறார்: யோக தக்ஷிணாமூர்த்தியாக, வீணாதார தக்ஷிணாமூர்த்தியாக, ஞான தக்ஷிணாமூர்த்தியாக மற்றும் வியாக்கியான தக்ஷிணாமூர்த்தியாக. நாம் சீனிவாச நல்லூரில் காண்பது வியாக்கியான தக்ஷிணாமூர்த்தி – சாத்திரங்களைப் போதிப்பவர். அந்நிலையில்தான் அவரைச் சுற்றிப் பல ரிஷிகள் அமர்ந்திருப்பர். ஆனால் வெவ்வேறு ஆகமங்கள் அவர்களை வெவ்வேறு பெயர்களில் அழைக்கின்றன. நாம் மேலே காண்பதுபோல சனத்குமாரர்கள் என்று ஆகமங்கள் சொல்லவில்லை. அம்சுபேதாகமம், இந்த ரிஷிகளை நாரதர், ஜமதக்னி, வசிஷ்டர், பிருகு, பாரத்வாஜர், சனகர், அகஸ்தியர் என்கிறது. காமிகாகமமோ, இவர்களை கௌசிகர், கஷ்யபர், பாரத்வாஜர், அத்ரி மற்றும் கௌதமர் என்கிறது. காரணாகமமோ, அகஸ்தியர், புலஸ்தியர், விசுவாமித்திரர், ஆங்கீரசர் என்கிறது. வியாக்கின தக்ஷிணாமூர்த்தியாக, அவருடைய கரங்களில் வியாக்கியான முத்திரை காணப்படுகிறது. இந்த முத்திரைகளைப் பற்றியே நாம் தனியாகக் காண இருக்கிறோம்.

ஞான தக்ஷிணாமூர்த்தியாக, இவர் கிட்டத்தட்ட வியாக்கியான தக்ஷிணாமூர்த்தி போன்றே காணப்படுவார். ஆனால் கூடவே அவருடைய பின் வலது கரத்தில் அக்கமாலை (ருத்திராக்‌ஷம்) இருக்கும்.

யோக தக்ஷிணாமூர்த்தியாக அவர் அமர்ந்திருக்கும் நிலையில் கால்களை உயர்த்தி யோகபட்டம் கட்டப்பட்டிருக்கும். அவருடைய முன் வலதுகை யோகமுத்திரையில் இருக்கும்.

இறுதியாக வீணாதார தக்ஷிணாமூர்த்தியாக அவர் கையில் வீணை ஏந்தி வாசித்துக்கொண்டிருப்பார்.

0

முதலாம் பராந்தக சோழனின் சீனிவாச நல்லூருக்கு முன்னதாக தக்ஷிணாமூர்த்தி சிற்பமே நமக்குக் கிடைக்கவில்லையா?

ஏன் இல்லை?

இங்கும் பல்லவர்களே நமக்கு முன்னோடி. மகேந்திரவர்மனின் குகைக்கோவில்கள் ஆறாம் நூற்றாண்டு இறுதிமுதலே நமக்குக் கிடைக்கின்றன. ஆனால் அவை எவற்றிலும் தக்ஷிணாமூர்த்தி வடிவம் நமக்குக் கிடைப்பதில்லை. முதன்முதலில் நமக்குக் கிடைப்பது மாமல்லையில் உழக்கெண்ணை ஈசுவரர் என்ற கட்டுமானக் கோவிலில்தான். இது மகிஷமர்தினி மண்டபத்தின்மேல் கட்டப்பட்டது. இக்கோவிலின் சுவரில் தென்திசையைப் பார்த்துக்கொண்டு கால்களில் யோகபட்டம் கட்டிய யோக தக்ஷிணாமூர்த்தி தென்படுகிறார். ஆலமரத்தின்கீழ் அமர்ந்திருக்கிறார். மற்றபடி பெரும்பாலும் இந்தச் சிற்பம் தேய்ந்துபோய்விட்டது. ஆயினும் பல்லவர் காலத்துக்கே உரிய பேரழகினைக் காணமுடிகிறது. இந்தக் கோவில் ராஜசிம்மப் பல்லவன் எனும் இரண்டாம் நரசிம்மவர்மன் காலத்தையது. ஏழாம் நூற்றாண்டின் இறுதி அல்லது எட்டாம் நூற்றாண்டின் தொடக்கம் என்று எடுத்துக்கொள்ளலாம்.

மாமல்லை உழக்கெண்ணை ஈசுவரர் கோவில் தக்ஷிணாமூர்த்தி

அடுத்து, காஞ்சிபுரத்தில் ராஜசிம்மனால் கட்டப்பட்ட பல சிறு கோவில்களில் தக்ஷிணாமூர்த்தி வடிவங்களைத் தொடர்ச்சியாகக் காணமுடிகிறது. அதன் உச்சகட்டமாகக் காஞ்சி கைலாசநாதர் கோவிலில் மிகப் பிரம்மாண்டமான, மிக அழகான யோக தக்ஷிணாமூர்த்தியைக் காணமுடிகிறது.

காஞ்சி கைலாசநாதர் கோவில் தக்ஷிணாமூர்த்தி

காஞ்சி கைலாசநாதர் கோவில் தக்ஷிணாமூர்த்தி, படம்:வி.கே.ஶ்ரீனிவாசன்

பல்லவர்கள் போன்றே பாண்டியர்களின் குகைக்கோவில்களில் எங்குமே தக்ஷிணாமூர்த்தியைக் காண முடிவதில்லை. ஆனால் பாண்டியர்களின் ஒரேயொரு ஒற்றைக்கல் தளியான கழுகுமலை வெட்டுவான்கோவில் என்னும் மாபெரும் அதிசயத்தில் மிகப் பிரத்யேகமாக, எந்த ஆகமத்திலும் கொடுக்கப்படாத ஒரு தக்ஷிணாமூர்த்தி வடிவம் கிடைக்கிறது. அக்கோவிலின் கிரீவம் எனும் கழுத்துப்பகுதியில், மிருதங்கம் வாசிக்கும் ஒரு தக்ஷிணாமூர்த்தி வடிவம் உள்ளது.

கழுகுமலை வெட்டுவான்கோவில் தக்ஷிணாமூர்த்தி

வெட்டுவான்கோவில் தக்ஷிணாமூர்த்தி, படம்: சீனிவாசன் ராஜகோபாலன்

வீணை வாசிக்கும் தக்ஷிணாமூர்த்தி சிற்பங்கள் சோழர்களின் பல கோவில்களில் காணக்கிடைக்கின்றன. ஆதித்த சோழனும் முதலாம் பராந்தக சோழனும் இணை அரசர்களாக இருந்த காலத்தில் கட்டப்பட்டது நாகேசுவரன் கோவில் என்று அழைக்கப்படும் கும்பகோணத்தில் உள்ள கோவில். இன்று கும்பகோணத்தில் திரும்பிய பக்கமெல்லாம் பல கோவில்கள் இருந்தாலும், நாகேசுவரன் கோவில்தான் காலத்தால் முற்பட்டது. அந்தக் கோவிலின் விமானத்தின் கழுத்துப் பகுதியில் வீணை வாசிக்கும் தக்ஷிணாமூர்த்தியை அமர்ந்த நிலையில் காணலாம்.

நாகேசுவரன் கோவில் தக்ஷிணாமூர்த்தி, படம்: வி.கே.ஶ்ரீனிவாசன்

கொடுத்திருக்கும் இடத்துக்குள்ளாக அமர்ந்த நிலையில் அல்லது நின்ற நிலையில், வீணாதாரராக, யோகமூர்த்தியாக, ஞானமூர்த்தியாக, அல்லது வியாக்கியானமூர்த்தியாக தக்ஷிணாமூர்த்தியை அமைக்கமுடியும். தக்ஷிணாமூர்த்தி மட்டும் தனியாகவா, அல்லது முனிவர்கள், கின்னர, கிம்புருடர்கள், விலங்குகள், பாம்பு, அபஸ்மாரன், அனைத்துவித அலங்காரங்களோடுமான கல்லால மரம் என்று அனைத்தும் சேர்ந்தா என்பதை இருக்கும் இடம்தான் முடிவு செய்யும்.

0

இந்தியா முழுதும் சிவனுக்கான கோவில்கள் பல உண்டு. தக்ஷிணாமூர்த்தி என்ற கருத்தாக்கமும் அதன் உள்ளார்ந்த தத்துவமும் இந்தியா முழுதும் பரவியிருந்தது. ஆனால் ஆச்சரியமாக, தமிழகத்தில் இருக்கும் எண்ணிக்கையில் தக்ஷிணாமூர்த்தி சிற்பங்கள் பிற மாநிலங்களில் இல்லை. சாளுக்கியர்களின் பட்டதகல் விரூபாக்ஷர் கோவிலில் ஒரு தக்ஷிணாமூர்த்தி சிற்பம் உள்ளது. ஆனால் பெரும்பாலும் பிற இடங்களில் காண்பது கடினமே. தமிழகத்தைப் பொருத்தமட்டில் பல்லவர், பாண்டியர் காலம் தொடங்கி (ஆறாம் நூற்றாண்டு இறுதிமுதல்) சோழர் காலம் வழியாக, பின் உருவான எந்தச் சிவன் கோவிலிலும் தென்திசை என்றால் தக்ஷிணாமூர்த்தி என்பது உறுதி. இன்றைக்குக் கட்டப்படும் தமிழக சிவன் கோவில்களிலும் இதுதான் நிலை.

ஆனால் இன்று மிகக் குழப்பமாக தக்ஷிணாமூர்த்தியாகிய சிவன் என்னும் குருவை, குரு என்னும் வியாழன் கிருகத்துடன் கலந்துகட்டி, குருப் பெயர்ச்சியின்போது தக்ஷிணாமூர்த்தியை வழிபடுகிறார்கள். தக்ஷிணாமூர்த்தியை என்றும் வழிபடலாம் என்பது வேறு விஷயம். வடமொழியில் குரு என்றால் அது ஆசிரியரையும் குறிக்கும், கனம் என்பதையும் குறிக்கும். சூரியக் குடும்பக் கோள்களில் மிகக் கனமான கோள் வியாழன் என்பதைக் கணக்கில் எடுத்துக்கொள்ளவும்.

தக்ஷிணாமூர்த்தி என்றாலே தமிழகம்தான் என்று நினைத்துக்கொண்டிருந்த எனக்கு ஆந்திர-தெலுங்கானா எல்லையில் பேரதிர்ச்சி காத்திருந்தது. கர்னூலுக்கு அருகில் ஆலம்பூர் என்ற இடம் உள்ளது. அங்கே நவபிரம்மா கோவில்கள் என்று ஒன்பது கோவில்கள் உள்ளன. சாளுக்கியர்களின் காலத்தில் கட்டப்பட்டது. கிட்டத்தட்ட பட்டதகல் விரூபாக்ஷர் கோவிலுக்கும் சற்றுமுந்தைய காலமாக இருக்கவேண்டும். மிக மோசமான அந்நியத் தாக்குதலுக்கு ஆளாகியுள்ள கோவில்கள் இவை. இங்குள்ள சிலைகள் தேடித் தேடி உடைக்கப்பட்டிருக்கின்றன. அப்படியே அவற்றைப் பார்த்தபடி வந்துகொண்டிருந்த எனக்கு, திடீரெனக் கண்ணில் பட்டது மிக அற்புதமான தக்ஷிணாமூர்த்தியின் சிலை.

ஆலம்பூர் தக்ஷிணாமூர்த்தி

ஆலம்பூர் தக்ஷிணாமூர்த்தி

அப்படியே சீனிவாசநல்லூரை நினைவுபடுத்தியது இந்தச் சிலை. காதுபொத்தர்கள், கின்னரர்கள் சூழ, யௌவனமே வடிவான மிக அழகான தக்ஷிணாமூர்த்தி யோகபட்டம் கட்டிக்கொண்டு யோகத்தில் ஆழ்ந்திருக்கிறார். அவருடைய கைகள் அனைத்தும் சிதைக்கப்பட்டுள்ளன. கீழே நான்கு ‘மா-தவர்கள்’ கைகட்டி ஆர்வமாக அமர்ந்திருக்கிறார்கள். மான் அல்லது அபஸ்மாரன் சிதைக்கப்பட்டிருக்கிறது.

மேலே நான் காண்பித்ததில் யார்தான் அதிக அழகு? சீனிவாசநல்லூரா, காஞ்சி கைலாசநாதரா, ஆலம்பூரா? இல்லை, வெட்டுவான்கோவிலா அல்லது எண்ணற்ற சோழர் கோவில்களில் தென் திசையில் அமர்ந்து யோகம் செய்துகொண்டிருக்கும், வீணை வாசித்துக்கொண்டிருக்கும், வியாக்கியானம் அருளிக்கொண்டிருக்கும் மூர்த்திகளா?

இப்போதைக்கு ஆலம்பூர்தான் என் நம்பர் ஒன்.

_____________

பிகு1: சிவன் கோவில்களில் மட்டுமல்ல, சில வைணவக் கோவில்களிலும் தெற்குத் திசையில் தக்ஷிணாமூர்த்தி சிற்பத்தை வைப்பது வழக்கம்!

பிகு2: எந்தச் சிற்பத்திலும் காண்பிக்கவேமுடியாத தக்ஷிணாமூர்த்தியின் மிக விரிவான ஓவியம் தஞ்சைப் பெரிய கோவிலின் சாந்தார அறையினுள் உள்ள ஓவியங்களில் காணப்படுகிறது. இதனை நம்மால் இன்று நேரில் காணமுடியாது. ஆனால் இந்த ஓவியம் டிஜிட்டல் படமாகக் கிடைக்கிறது. கோட்டோவியமாக மாற்றியும் கிடைக்கிறது. கல்லில் இல்லை என்பதால் இந்தத் தொடரில் நான் காண்பிக்கவில்லை.



__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

 

கல்லும் கலையும் #3 – மானம் இலாப் பன்றி!

மாமல்லபுரத்தின் மிகச் சிறந்த குகைக்கோவில் என்றால் அது வராக மண்டபம்தான். மண்டபத்தின்முன் ஓர் அகழி. இரு யாளித் தூண்கள் நம்மை வரவேற்கின்றன. வெளியிலிருந்து பார்க்கும்போதே ஒற்றைக் கருவறை தெரிகிறது. அதன் உள்ளே யாரும் இல்லை. இரு துவாரபாலகர்கள் தெரிகின்றனர். கருவறைக்கு முன்னர் உள்ள அர்த மண்டபத்தில் சுற்றிலும் பல சிற்பங்கள் தெரிகின்றன. அகழியைத் தாண்டி இடது வலமாகச் சிற்பங்களைப் பார்க்கலாம் என்று உள்ளே நுழைகிறீர்கள். அவ்வளவுதான். உங்களை கண்களை அதற்குமேல் நகர்த்திவிட முடியாதவாறு முதல் சிற்பமே உங்களைக் கவ்வி இழுத்துவிடுகிறது.

சுவரில் கிட்டத்தட்ட சதுர வடிவிலான சட்டகம். அதனுள்ளே ஒன்பது உருவங்கள். மையத்தில் நம் கதையின் நாயகனான வராக மூர்த்தி. அவருடைய இடதுகால் தரையில் அழுந்தப் பதிந்துள்ளது. வலது கால் ஐந்து தலை நாகத்தின்மீது. அந்த நாகம் ஆதிசேஷன்.

வராக மண்டபம், மாமல்லபுரம்

வராக மண்டபம், மாமல்லபுரம்

விஷ்ணுவுக்கு ஆதிசேஷன் எப்படிப்பட்டவன் என்று பொய்கையாழ்வார் தன் பாசுரத்தில் விளக்குகிறார்:

சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம்,
நின்றால் மரவடியாம் நீள்கடலுள் என்றும்
புணையாம் மணி விளக்காம் பூம்பட்டாம் புல்கும்
அணையாம் திருமாற்கு அரவு

விஷ்ணு நடந்துபோனால் ஆதிசேஷன் குடையாகி அவர்மீது வெயிலும் மழையும் வீழாமல் பார்த்துக்கொள்வான். விஷ்ணு உட்காரப்போனால், ஆதிசேஷன் சட்டென்று சிம்மாசனம் எனும் இருக்கை ஆகிவிடுவான். நின்றால் காலில் செருப்பாக ஆவான். பாற்கடலில் விஷ்ணு சயனிக்க நினைத்தால் பூம்பட்டுப் போன்ற பஞ்சு மெத்தையாகிவிடுவான்.

அந்த ஆதிசேஷன்தான் வராகர் விசுவரூபம் எடுக்கும்போது அவர் கால் அழுந்தப் பதியுமாறு தன் தலைகளை விரித்து நிற்கிறான். வராக மூர்த்தியின் காலடியில் அலைகள் தாமரை மலர்களை வீசியடித்தபடி புரண்டுகொண்டிருக்கின்றன. அவரின் பின்னிரு கைகள் சக்கரமும் சங்கும் தாங்கி நிற்கின்றன. சக்கரமானது, பிரயோகச் சக்கரம் எனும்படியாக அவர் கையிலிருந்து விர்ரென்று புறப்பட ஆயத்தமாக நின்றுகொண்டிருக்கிறது. முன்னிரு கைகள் ஒரு பெண்ணை ஆரத் தழுவிக்கொண்டிருக்கின்றன. அந்தப் பெண் அவரது வலது தொடையில் உட்கார்ந்திருக்கிறாள். வராக மூர்த்தியின் ஒரு கை அவள் இடையைச் சுற்றி வளைத்துள்ளது. மற்றொரு கையோ அவளது காலைப் பிடித்து அவள் விழுந்துவிடாமல் பார்த்துக்கொள்கிறது. அவள்தான் பூமித்தாய்.

வராக மூர்த்தியைச் சற்றே கூர்ந்து கவனியுங்கள். கழுத்து வரை மனித உடலாகவும் கழுத்துக்குமேல் காட்டுப் பன்றியின் முகமாகவும் உள்ளது. அந்த முகம் வாஞ்சையுடன் பூமிதேவியின் மார்பை முகர்கிறது. தலையில் மணிகள் பதித்த மகுடம் தெரிகிறது.

வராகத்துக்கு இரு புறமும் சூரிய சந்திரர்கள், நடந்துகொண்டிருப்பது விசுவரூபம் என்பதை அடையாளம் காட்டிக்கொண்டிருக்கிறார்கள். வராகருக்குப் பக்கத்தில் நான்கு தலைகளுடன் பிரம்மா (இங்கே உடைந்துள்ளது). பிரம்மாவுக்கு நான்கு கைகள், ஒன்றில் ஸ்ருக் எனப்படும் நெய்க்கரண்டி. அருகில் ஜடைமுடியுடன் ஒரு ரிஷி. நாரதராக இருக்கலாம் என்று சில அறிஞர்கள் கருதுகிறார்கள். வராகரைப் பார்த்துக் கூப்பிய கரங்களுடன் இருவர்; ஒரு பெண், அவள் ஆதிசேஷனின் மனைவியாக இருக்கலாம். இன்னொரு ரிஷி.

இது ஓர் இயங்கு சிற்பம். ஒருமுறை சிற்பத்தைப் பார்த்துவிட்டு கண்களை மூடிக்கொள்ளுங்கள். இப்போது, நீரைக் கிழித்துக்கொண்டு வராக ரூபம் கையில் பூமிதேவியைப் பற்றிக்கொண்டு அப்படியே உயர உயர விசுவரூபமாக எழுந்துகொண்டிருப்பதாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள். இந்தக் காட்சி முடிந்துவிடவில்லை. விசுவரூபத்துக்கு ஏது முடிவு? இந்நிகழ்வு அப்படியே நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. வராகத்தின் உடலிலிருந்து நீர் தாரை தாரையாக வழிந்துகொண்டிருக்கிறது. பூமிதேவிக்கும் அப்படியே.

ஆண்டாள், நாச்சியார் திருமொழியில் பாடுகிறாள்:

பாசி தூர்த்துக் கிடந்த பார்மகட்குப் பண்டொரு நாள்
மாசுடம்பில் நீர்வார மானமிலாப் பன்றியாம்
தேசுடைய தேவர் திருவரங்கச் செல்வனார்
பேசியிருப்பனகள் பேர்க்கவும் பேராவே

இரணியாட்சன் என்ற அரக்கன் பார்மகளை – பூமிதேவியைச் சுருட்டி எடுத்துச் சென்று பாதாளத்தில் நீரின் அடியில் கொண்டுபோய் வைத்துவிடுகிறான். பாசி தூர்த்துக்கிடக்கிறாள் அவள். பிரமனின் படைப்புத் தொழில் நடைபெறவேண்டும் என்றால் பூமி மீண்டும் வெளியே வரவேண்டும். எனவே திருவரங்கச் செல்வனான விஷ்ணு வராக ரூபம் எடுத்து, கடலுக்கு அடியில் சென்று, இரணியாக்ஷனைக் கொன்று, அழுக்கான உடம்பில் நீர் ஒழுக, ‘மானம் இலாமல்’, தம் உருவம் குறித்த கவலை இலாமல், பூமிதேவியை நீரின் அடியிலிருந்து அள்ளி எடுத்து மேலே கொண்டுவருகிறார்.

0

மாமல்லபுரத்துக்கு நூறுமுறைக்குமேல் சென்றுவந்திருப்பேன். முதன்முதலாக, வெறும் பயணியாக இல்லாமல், ஓரளவு புரிதலோடு சென்றது பேராசிரியர் சுவாமிநாதனோடுதான். காணொளிக் காட்சியின் உதவியோடு மாமல்லபுரத்தில் உள்ள சிற்பங்கள் குறித்தும் கட்டுமானங்கள் குறித்தும் எங்கள் அலுவலக ஊழியர்களுக்கு அவர் பாடம் எடுத்திருந்தார். பின்னர் ஒரு குழுவாக நாங்கள் சிலர் அவருடன் மாமல்லபுரம் சென்றோம். குகைக்கோவில்கள், ஒற்றைக்கல் தளிகள், கட்டுமானக் கோவில்கள், திறந்தவெளிப் புடைப்புச் சிற்பங்கள் என்று பலவற்றைக் குறித்தும் விளக்கினார். அந்த முதல் பயணத்தில் அவர் சொன்னதில் சிறிதுகூட மனத்தில் தங்கவில்லை. ஆனால் இந்த வராகப் பெருஞ்சிற்பத்தைப் பார்த்தது நன்கு ஞாபகம் இருக்கிறது. அதன்பின் ஒவ்வொரு முறை செல்லும்போதும் வேறு எந்த இடத்தைப் பார்த்தாலும் பார்க்காவிட்டாலும், வராக மண்டபத்துக்குப் போகாமல் இருக்கமாட்டேன்.

இந்தியர்கள் உறுப்புமாற்று அறுவை சிகிச்சை செய்யக்கூடிய திறன் பெற்றிருந்தார்களா என்ற கேள்வி, விநாயகர் குறித்து பிரதமர் நரேந்திர மோதி பேசிய ஒரு குறிப்பிட்ட பேச்சின் விளைவாக சர்ச்சை ஆனது. அறிவியல்ரீதியாக இன்றுகூட எளிதில் சாத்தியமாகாத ஒரு துறை இது. ஆனால் கலாபூர்வமாக பல்லவச் சிற்பிகள் இங்கே வெற்றிகண்டிருந்தனர். விஷ்ணுவின் பல்வேறு அவதாரங்களில் இரண்டு, வராகமும் நரசிம்மமும். மனித உடல் – காட்டுப்பன்றியின் தலை சேர்ந்தது நர-வராகம். மனித உடல் – சிங்கத்தின் தலை சேர்ந்தது நர-சிம்மம். பெரும்பாலும் நரசிம்மத்தைக் காண்பிக்கையில் சிங்க முகம் நேராக நம்மைப் பார்ப்பதுபோல் இருக்கும். மனிதக் கழுத்துக்கு நேர்மேல் சிங்க முகத்தை வைப்பது சிக்கலில்லாமல் நடந்துவிடும். ஆனால் வராகப் பன்றியின் முகமோ பக்கவாட்டில் வைக்கப்படவேண்டியிருக்கும். ஏனெனில் அவர் பக்கவாட்டில் உள்ள பூமிதேவியுடன் உறவாடவேண்டும். அப்போது பன்றியின் முகத்தை எந்தக் கோணத்தில் மனித உடலின்மீது பொருத்தவேண்டியிருக்கும்?

வராக அவதாரத்தை இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் சிற்பிகள் செதுக்கியுள்ளனர். ஒவ்வொருவரும் அவரவர் கற்பனையைப் பயன்படுத்தி இதனைச் சாதித்துள்ளனர். இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் காணப்படும் சில வராகங்களையும் அவற்றுக்கு ஒப்பாக மாமல்லையின் வராகத்தையும் கீழே காட்சிப்படுத்தியுள்ளேன். பார்க்கும்போது உங்களுக்கே தெரியும், மாமல்லையில் தனித்துவத்துடன் இதனை எப்படிச் சாத்தியப்படுத்தியுள்ளனர் என்று.

கோபிநாத ராவ், வைகானச ஆகமத்தின் அடிப்படையில் இந்த உருவத்தை பூவராகம் அல்லது ஆதிவராகம் என்கிறார். ஆகமத்தின் அடிப்படையில் இந்த உருவம், மனித உடலும் காட்டுப்பன்றியின் முகமும் சேர்ந்ததாக இருக்கவேண்டும். நான்கு கரங்கள் இருக்கவேண்டும். அதில் சங்கு, சக்கரம். வலது கால் ஆதிசேஷனின் விரிந்த படத்தின்மீது பதிந்திருக்கவேண்டும். ஆதிசேஷனை அவருடைய மனைவியுடன் சேர்ந்தாற்போல் வடித்திருக்கவேண்டும். வராகத்தின் வலதுகை பூமிதேவியின் இடுப்பைச் சுற்றி இருக்கவேண்டும். வராகத்தின் முகம் சற்றே மேலே தூக்கியவாறு பூதேவியின் மார்பகத்தை முகர்வதுபோல் இருக்கவேண்டும். வராகத்தின் நிறம் சூரியன் மறையும் அந்தி நேரத்தின் சாம்பல் நிறத்தில் இருக்கவேண்டும். பூதேவி தன் கைகளை அஞ்சலி முத்திரையில் வைத்திருக்கவேண்டும். அவள் ஆடை உடுத்தி, பூக்களாலும் அணிகளாலும் அலங்கரிக்கப்பட்டவளாக இருக்கவேண்டும். அவளுடைய நிறம் கருமையாக இருக்கவேண்டும். அவள் வராக மூர்த்தியைப் பார்த்தவாறு முகத்தில் வெட்கமும் மகிழ்ச்சியும் ஒருசேர இருந்தாற்போல வடிக்கப்படவேண்டும். அவளது தலையின் உச்சி, வராகத்தின் மார்பளவுக்குமேல் இருக்கக்கூடாது. வராகம் தச தாளத்திலும் பூதேவி பஞ்ச தாளத்திலும் இருக்கவேண்டும்.

இதுதான் கோபிநாத ராவ், வைகானச ஆகமங்களிலிருந்து எடுத்துத் தரும் செய்தி. இது அப்படியே மாமல்லையின் வராக மண்டபத்து வராக மூர்த்தி சிற்பத் தொகுதிக்குக் கச்சிதமாகப் பொருந்திப்போகிறது என்பதைப் பார்க்கலாம்.

சைவ ஆகமங்கள் போன்றே, வைணவக் கோவில்களை நிர்மாணிக்க, வழிபாடு செய்ய வைகானச, பாஞ்சராத்ர சம்ஹிதைகள் எனப்படும் இரு பெரும் பிரிவுகளுக்கான கிரந்தங்கள் உள்ளன. கோபிநாத ராவ் தன் புத்தகத்தை எழுதிப் பதிப்பித்த காலத்தில் பாஞ்சராத்ர கிரந்தங்கள் அவ்வளவாகக் கிடைக்கவில்லை என்றும் கிடைத்தவற்றுள் சிற்பங்கள் குறித்த தகவல்கள் அதிகம் இல்லை என்றும், தான் பெரும்பாலும் வைகானச சம்ஹிதைகளின் அடிப்படையிலேயே சிற்பங்கள் குறித்துத் தகவல்களைக் கொடுத்துள்ளதாகவும் சொல்கிறார்.

மேலும் அவர், அக்னி புராணம், சில்ப ரத்தினம், விஷ்ணு தர்மோத்தரம் ஆகிய புராண, சிற்ப சாத்திர நூல்களிலிருந்தும் வராகச் சிற்பங்கள் எவ்வாறு இருக்கவேண்டும் என்பதற்கான மேலதிகத் தகவல்களைச் சேகரித்துத் தருகிறார். மேலே நான் தந்திருக்கும் சில பிராந்திய வேறுபாடுகளைப் பாருங்கள்.

பாதாமியில் சாளுக்கியர் கால இரு வைணவ குகைகளில் வராகர் தம் உள்ளங்கையில் பூதேவியை ஏந்திக்கொண்டிருக்கிறார். பூதேவியோ வராகத்தின் முகம் அல்லது தோளைக் கையால் பிடித்துக்கொண்டிருக்கிறாள். ஹொய்சாளர் சிற்பமாக நான் கொடுத்துள்ள ஒன்றில், பூதேவி அவருடைய தோளிலேயே உட்கார்ந்திருக்கிறாள். ஹொய்சாளர் சிற்பங்களில், கொல்லப்பட்ட இரணியாக்ஷன்மீது கால்களை வைத்தபடி இருக்கிறார் வராகர். எல்லோரா சிற்பம் பாதாமி சிற்பத்தை ஒத்தபடி உள்ளது. கிழக்குக் கோடி ஒடிஷாவிலும் மேற்குக் கோடி குஜராத்திலும் கிடைக்கும் சிற்பங்களில் வராகத்தின் தூக்கிய முழங்கைமீது உட்கார்ந்திருக்கிறாள் பூதேவி. பஞ்ச தாளத்துக்கும் குறைவான தாளமானத்தில் – அளவுகளில் பூதேவி இந்தப் பல சிற்பங்களில் காணப்படுகிறாள்.

இத்தனை வேறுபாடுகள் இருந்தாலும் வராக ரூபத்தை எடுத்துக்கொண்டால் இந்தியா முழுமையிலும் அடிப்படையில் பெரிய வித்தியாசம் இல்லை எனலாம். மேலும் நீங்கள் வராகத்தைக் காணாத பகுதி என்று இந்தியாவில் ஓரிடமும் இருக்காது.

வைகானச கிரந்தங்களின் அடிப்படையில் கோபிநாத ராவ் வராக ரூபத்தை மூன்றாகப் பிரிக்கிறார். முதலாவதாக நாம் மேலே பார்த்த பூவராகர் அல்லது ஆதிவராகர். இரண்டாவது யக்ஞ வராகர். மூன்றாவது பிரளய வராகர்.

யக்ஞ வராகர், நான்கு கரங்களுடன் பின்னிரு கரங்களில் சங்கு சக்கரத்துடன் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்க, அவரது இரு புறமும் லக்ஷ்மியும் பூதேவியும் உட்கார்ந்திருக்கவேண்டும். லக்ஷ்மி வலதுபுறம், கையில் தாமரையுடனும் பூதேவி இடதுபுறம் கையில் நீலோத்பலத்துடனும் இருப்பர். லக்ஷ்மி தங்கமும் மஞ்சளுமான நிறத்திலும் பூதேவி கருநிறத்திலும் இருப்பார்கள். வராகர் வெள்ளை நிறத்தில் இருப்பார்.

பிரளய வராகர், நீல நிறம் கொண்டவராக, சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பார். நான்கு கரங்கள். சங்கு, சக்கரம். அவரது வலதுபுறம் பூதேவி, முகத்தில் மிகுந்த ஆச்சரியத்துடன் வராகரை நோக்கித் திரும்பி அவரைப் பார்த்தபடி அமர்ந்திருப்பாள். அவள் கையில் அல்லி மலர் இருக்கும்.

இந்தக் கடைசி இரண்டு வடிவங்கள் கருவறையில் வழிபடப்படுமாறு இருப்பதை நீங்கள் சில விஷ்ணு கோவில்களில் பார்த்திருப்பீர்கள். கருவறையில் இருப்பதால் நல்ல படம் உங்களுக்குக் கிடைத்திருக்காது. ஆடை, பூ அலங்காரங்கள் இருப்பதனால் முகம், கைகள் தவிர வேறு எதுவும் உங்களுக்குக் காணக்கிடைக்காது.

விஷ்ணு பல்வேறு வடிவங்களில் வழிபடக் கிடைக்கிறார். அவர் பர-வாசுதேவராக, நான்கு வியூக மூர்த்திகளாக (வாசுதேவர், சங்கர்ஷணர், பிரத்யும்னர், அனிருத்தர்), விபவ அவதாரங்களாக, அர்ச்சாவதார விஷ்ணு மூர்த்திகளாக வழிபடப்படுகிறார்.

விஷ்ணு, நிற்றல் (ஸ்தானக மூர்த்தி), இருத்தல் (ஆசன மூர்த்தி), கிடத்தல் (சயன மூர்த்தி) என்று மூன்று வகைகளில்தான் மிக அதிகமாக வழிபடப்படுகிறார். விபவ அவதாரத்தில், விஷ்ணு ஒரு குறிப்பிட்ட காரணத்துக்காக ஒரு குறிப்பிட்ட வடிவம் எடுத்து அந்த அவதாரக் காரணம் முடிந்தவுடன் தம் உடலை விடுத்து பாற்கடல் சென்றுவிடுவார். மத்ஸ்ய, கூர்ம, வராக என்று தொடங்கும் பத்து அவதாரங்களை புராணங்கள் சொல்கின்றன. கொலு பொம்மையாக இந்தப் பத்து அவதாரங்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால் விஷ்ணுவுக்கு பத்துக்கும் மேற்பட்ட பல அவதாரங்கள் புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது. இவற்றில் மிக அதிகமாக வழிபடப்படுவது, வராக, நரசிம்ம, வாமன-திரிவிக்கிரம அவதாரங்களே.

சிவன் கோவில்களின் கோஷ்டங்கள் பற்றிச் சொல்லும்போது தென் திசையில் தக்ஷிணாமூர்த்தி இருக்கவேண்டும் என்று சென்ற வாரம் குறிப்பிட்டிருந்தேன். அதேபோல விஷ்ணு கோவில்களில் மூன்று கோஷ்டங்கள் இருந்தால் அவற்றில் நரசிம்மம், வாமன-திரிவிக்கிரமம், வராகம் என்று மூர்த்திகளை அமைப்பது வழக்கம். விமானத்தின் கிரீவத்திலும் இதே வடிவங்களைக் காணலாம். தமிழகத்தில் மாமல்லையின் வராக மண்டபத்தைப்போல வராக, நரசிம்ம, வாமன-திரிவிக்கிரவ அவதாரங்களை நாமக்கல் நரசிம்மர் குடைவரையில் காணலாம். பாதாமியில், எல்லோராவில் என்று பல குகைக்கோவில்களில் இந்த அவதாரங்களை விரிவாகக் காணலாம். பின்னர் கட்டுமானக் கோவில்கள் வருகையில், பெருஞ்சிற்பத் தொகுதிகளாக வடிப்பது நின்றுபோய் கருவறை அல்லது கோஷ்ட மூர்த்திகளாக, சிறியதாக ஆகிவிட்டன.

இந்தியாவிலேயே, இந்து மதத்துக்கான சிற்பக் கலை மகத்தாக உருவாகத் தொடங்கியது குப்தர்கள் காலத்தில்தான். தற்போது கிழக்கு டுடேவில் கிருஷ்ணன் எழுதிவரும் குப்தர்கள் வரலாறு குறித்த தொடரைப் படியுங்கள். பேராசிரியர் சுவாமிநாதன் முன்னெடுப்பில் நாங்கள் சிலர் தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை என்ற பெயரில் அமைப்பு ஒன்றை நடத்திவருகிறோம். அதன்கீழ் பல நிகழ்ச்சிகளைச் செய்துவருகிறோம். அதில் ஒன்று, ஆண்டுதோறும் நாங்கள் மேற்கொள்ளும் கலையுலா. இந்தியாவில் முக்கியமான பல இடங்களைக் குறித்துவைத்துக்கொண்டு ஒரு குறிப்பிட்ட கருத்தின் அடிப்படையில் சில இடங்களைத் தேர்ந்தெடுத்து, மூன்று மாதம் அதற்கான தயாரிப்புகளைச் செய்து, நிபுணர்களை உடன் அழைத்துக்கொண்டு இந்த இடங்களுக்குச் சென்றுவருவோம். அவ்வாறு 2019 ஜனவரியில் நாங்கள் சென்றுவந்த இடம் மத்தியப் பிரதேசம். இந்தப் பயணத்தின்போது இரண்டு மிக முக்கியமான வராக வடிவங்களைப் பார்த்தோம். முதலாவது உதயகிரி என்னும் இடத்தில் இருந்த குகையில் காணப்பட்ட மாபெரும் நர-வராகம். அடுத்தது ஏரன் என்ற இடத்தில் வெட்டவெளியில் ஒரு கூரைகூட இல்லாமல் இருந்த, முழுமையான காட்டுப்பன்றி வடிவ வராகம்.

இந்தியா முழுமையிலுமே வராக வடிவங்கள் இருக்கின்றன என்றாலும் இந்த வடிவத்துக்குப் பெயர்போனது மத்தியப் பிரதேசம்தான் என்று உறுதியாகக் கூறமுடியும். உதயகிரியின் ஐந்தாம் எண்ணுள்ள குகையில் மாபெரும் வராக உருவைக் காண முடியும். காலையில் சூரிய உதயத்தைக் காணவேண்டும் என்பதற்காக முன்கூட்டியே வந்து காத்திருந்தோம். சூரியக் கிரணங்கள் அப்படியே எழுந்துவருகையில் குகையே வெளிச்சத்தில் அமிழ்ந்து சுவரில் செதுக்கப்பட்டுள்ள பல்வேறு சிற்பங்கள் உயிர்பெற்று எழுந்துவருகின்றன. துரதிர்ஷ்டவசமாக, மிருதுவான கற்களில் செதுக்கப்பட்ட சிற்பங்கள் சில சிதைந்துபோயுள்ளன.

வராகம், உதயகிரி - குகை எண் 5

வராகம், உதயகிரி – குகை எண் 5, படம்: வி.கே.ஶ்ரீனிவாசன்

வனமாலை அணிந்த பிரம்மாண்டமான வராகர் சுவர் முழுவதையுமே ஆக்கிரமித்து நிற்கிறார். வலது கால் தரையில் அழுந்தப் பதித்து நிற்கிறது. இடதுகால் ஆதிசேஷனின் சுற்றுகளின்மீது. ஆதிசேஷன் தன் இரு கைகளையும் கூப்பி வராகரை வணங்கிக்கொண்டிருக்கிறான். வராகரது முகத்துக்கு அருகில் தாமரை மலரில் நிற்கும் பூதேவி (தலை உடைந்துவிட்டது) வராகரின் வாயைப் பற்றிக்கொண்டிருக்கிறாள். வராகரின் வலது பக்கத்தில் லக்ஷ்மி (சிதைந்துள்ளது), தாமரையின்மீது நின்றபடி கையில் ஒரு தாமரையின் தண்டைப் பற்றியபடி இருக்கிறாள். அந்தத் தாமரை உயரே சென்று வராகத்தின் தலைமீது கவிந்தபடி நிற்கிறது. வராகருக்கு இரண்டே கரங்கள்தாம். வலதுகை தம் இடுப்பைப் பற்றியபடியும், இடதுகை தம் தொடைமீது அழுந்தப் பதிந்தபடியும் உள்ளது. சுற்றி நிற்கும் பலரும் யார்?

அங்கே யார்தான் இல்லை? பிரம்மா, சிவன், அஷ்ட வசுக்கள், பதினொரு ருத்ரர்கள், பன்னிரு ஆதித்தியர்கள், கங்கையும் யமுனையும், ரிஷிகள், கின்னரர்கள், அபசரஸ்கள் என்று தேவர்களும் ரிஷிகளும் கடவுள்களும் கணங்களும் புடைசூழ இந்த வராக விசுவரூபம் நடைபெறுகிறது. ஐந்தாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இந்த மாதிரியான விரிவான சிற்பமாக இதனை உருவாக்கிப் படைத்திருக்கிறார்கள். நீங்கள் நேரில் இந்த வராகத்தின்முன் நிற்கவேண்டும். அதன் வேகம், பலம் இரண்டையும் உணர்வீர்கள்.

குப்த அரசர்களிலேயே மிகவும் புகழ்வாய்ந்த இரண்டாம் சந்திரகுப்தன் காலத்தில் இது உருவாகியிருக்கவேண்டும். சிதைந்த இரு சிற்பங்களில் சந்திரகுப்தனும் அவனுடைய அமைச்சரும் இருப்பதாகச் சில அறிஞர்கள் கருதுகிறார்கள். குப்தப் பேரரசு அதன் உச்சத்தில் இருந்தபோது இந்த வராகம் வடிக்கப்பட்டது. அதைவிடப் புகழ்வாய்ந்தது அடுத்து நாம் பார்க்க இருக்கும் ஏரன் வராகம். இது குப்தப் பேரரசு சிதையும்போது உருவாக்கப்பட்டது.

ஏரன், மக்கள் வசிக்கும் பகுதியே கிடையாது. சின்னஞ்சிறு கிராமங்கள், காட்டுப்பகுதி ஆகியவற்றைத் தாண்டி இந்தியத் தொல்லியல் கழகம் பராமரிக்கும் இந்த இடத்தைத் தேடி வந்தோம். வேறு சில சுற்றுலாப் பயணிகளும் வந்திருந்தனர். உதயகிரி, காலை சூரிய உதயத்தின்போது என்றால், ஏரன், மாலை சூரிய அஸ்தமனத்தின்போது. தூரத்திலிருந்தே அந்த வராக மூர்த்தியைப் பார்க்க முடிந்தது. இது நர-வராகம் அன்று. நான்கு கால்களைத் தரையில் அழுந்தப் பதிந்து தாவி எகிறிச் செல்லும் முழுமையான விலங்கு வராகம்.

வராகம், ஏரரன்

வராகம், ஏரன், படம்: வி.கே.ஶ்ரீனிவாசன்

இதையும் யக்ஞ வராகம் என்றே அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள். தன்யவிஷ்ணு என்பவர், இறந்துபோன தன் சகோதரர் மாத்ரிவிஷ்ணு என்பவரது ஞாபகார்த்தமாக இந்த வராகத்தை நிறுவுகிறார். ஆண்டு பொயு 485 தொடங்கி 500 வரை செல்கிறது. ஆரம்பத்தில் புத்தகுப்தர் என்பவரைக் குறிப்பிட்டு அவர் ஆட்சியின்கீழ் மாத்ரிவிஷ்ணு, தன்யவிஷ்ணு ஆகியோர் குறுநில மன்னர்களாக இருப்பதாக ஆரம்பித்த கல்வெட்டு, சிலை நிறுவப்பட்டதும் ஏற்பட்ட மாற்றத்தையும் குறிக்கிறது. இடையில் குப்தர்களை ஹூனர்கள் தோற்கடித்துவிடுகின்றனர். தோரமானன் என்று ஹூன அரசன் கைக்கு இந்தப் பகுதி வந்துவிடுகிறது. அவனது ஆட்சியாண்டு ஒன்று என்பதை தன்யவிஷ்ணு குறிப்பிடுகிறார். அந்தவிதத்தில் இந்த வராகத்தில் அமைந்த கல்வெட்டுகள் வரலாற்று முக்கியத்துவம் பெறுகின்றன.

ஹரிப்ரியா ரங்கராஜன் என்ற ஆராய்ச்சியாளர் மத்தியப் பிரதேசத்தின் வராகச் சிலைகளை மிக விரிவாக ஆய்வு செய்து அவற்றின் படிமவியல் குறித்து ஒரு புத்தகம் (Varaha Images in Madhya Pradesh: An Iconographic Study) எழுதியிருக்கிறார். இவர் குஜராத்தின் மத்ஸ்ய, கூர்ம, வராக உருவங்கள் குறித்தும் ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். ஏரன் வராகம் குறித்து கேதரைன் பெக்கர் என்பவர் விரிவான ஆராய்ச்சிக் கட்டுரை எழுதியுள்ளார். இவற்றைப் படிப்பதன்மூலம் வராக மூர்த்திகள் குறித்த பல நுண்ணிய தகவல்களை நாம் பெற முடியும். ஏரனின் வராகம், இம்மாதிரியான முழு விலங்குவகை வராகத்தின் ஆரம்பகட்ட சிற்ப வடிவமாக இருக்கவேண்டும். அதன்பின்னர் இதைப்போன்ற பல வராகங்கள் உருவாக்கப்பட்டன. குப்தர்கள் காலம் தொடங்கி, காலச்சூரிகள், பிரதிஹாரர்கள், பரமாரர்கள், சண்டேலர்கள் என்று பல்வேறு ஆட்சியாளர்கள் மத்தியப் பிரதேசப் பகுதிகளில் பல்வேறு வராகங்களை நிறுவியுள்ளார்கள். இந்தியாவிலேயே இந்த எண்ணிக்கையில் நீங்கள் வேறு எங்கும் வராகங்களைக் காண முடியாது!

இந்தக் குறிப்பிட்ட ஏரன் வராகத்தின் உடல்மீது 1000-க்கும் மேற்பட்ட சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அதன் நாவில் வாக்தேவி. அதன் தலைக்குமேல் தூண் வடிவிலான ஒரு பகுதி. இதனை யாகம் செய்யும்போது உருவாக்கப்படும் யூபத் தூண் என்கிறார்கள். அந்தத் தூணின் நான்கு புறங்களிலும் சிற்பங்கள். இவை விஷ்ணுவின் வியூக வடிவங்களாக இருக்கலாம். வராகத்தின் முன் மார்பில், நின்ற நிலையில் விஷ்ணு சிற்பம் உள்ளது. பின்னர் சிவன், பிரம்மா, ஏழு கிருகங்கள் (ராகு, கேது இல்லை), 27 நட்சத்திரங்கள், அக்னி முதலான தேவர்கள், ஏகப்பட்ட ரிஷிகள் என்று உடலில் ஓர் அங்குலம்கூட விட்டுவைக்காமல் செதுக்கியுள்ளனர்.

இந்திய மரபில் பூலோகம் தொடங்கி மேல் நோக்கி ஏழு உலகங்கள் இருப்பதாகச் சொல்வதுண்டு. பூவுலகம், புவருலகம், சுவருலகம் (சுவர்கம்), மஹருலகம், ஜனவுலகம், தபவுலகம், சத்ய உலகம் என்பவை இவை. இவற்றில் பிறப்பு, இறப்பு இல்லா ரிஷிகள் தப, ஜன, மஹர் உலகத்தில் இருக்கிறார்கள். பிரளய காலத்தில் அனைத்து உலகங்களும் நீரால் சூழப்பட்டுவிடுகின்றன. இந்த ரிஷிகள் அப்படியே நீருக்கடியில் இருக்கிறார்கள். ஸ்வயம்புவ மன்வந்தரத்தில் ஸ்வேத வராக கல்பத்தில் வராகர் பூதேவியை மீட்டெடுத்து எழுந்துவரும்போது இந்த மூன்று உலகங்களிலும் உள்ள ரிஷிகள், வராகத்தின் உடலிலுள்ள ரோமத்தைப் பற்றிக்கொண்டு அப்படியே மேலெழும்பி வருகிறார்கள்.

பூதேவி, வராகத்தின் தந்தத்தைப் பற்றியபடி மேலெழும்பி வருகிறாள். ஆதிசேஷனின் பாம்புச் சுற்றுகள் தெரிகின்றன, ஆனால் சிற்பம் உடைந்துபோயுள்ளது, மேல் பகுதி காணவில்லை.

நேரில் ஏரன் சென்றபோது, அருகில் வராகத்தைப் பார்த்தபோது அடைந்த சிலிர்ப்பும் பிரமிப்பும் அபாரமானது. இந்தச் சிறு வீடியோ நண்பர் வி.கே.ஶ்ரீனிவாசன் எடுத்தது.

மல்லை வராகமோ, உதயகிரி வராகமோ, ஏரன் வராகமோ, நம் கற்பனையில் எந்த மாற்றமும் தேவையில்லை. நீரைக் கிழித்துக்கொண்டு மேலெழும்பி வரும் வராக உருவம். அது விலங்கு வடிவமானதாக இருக்கலாம், அல்லது நர-வராகமாக இருக்கலாம். ஒட்டியபடி வரும் பூதேவி. இந்த அரும் காட்சியைக் காண வந்திருக்கும் தேவர்கள், கடவுள்கள், ரிஷிகள். வராகத்தின் ரோமங்களைப் பற்றியபடி மேலெழும்பிவரும் ரிஷிகள்.

இந்திய அரசர்கள் தங்களை வராகத்தின் வடிவமாகவே பார்த்தனர். வராகம் என்பது பிருத்வி என்னும் நிலத்தை மீட்கக்கூடியது. எனவே பெருநிலத்தைக் கைப்பற்றிய அரசர்கள் வராக உருவத்தை நிறுவி வழிபாடு செய்தனர். அவற்றுள் மிகச் சிறந்தவை, மிகப் பிரம்மாண்டமானவை, கற்பனாசக்தியில் சிறந்துவிளங்குபவை என்றால் மத்தியப் பிரதேசப் பகுதியுடையவை என்றே சொல்லவேண்டும். கலாபூர்வமாக, மிக அழகாகவும் நேர்த்தியாகவும் வடிக்கப்பட்டது என்றால் மாமல்லையின் வராக மண்டபத்து மூர்த்தியைத்தான் சொல்லவேண்டும்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

கல்லும் கலையும் #4 – இந்தின் இளம்பிறை போலும் எயிற்றன் 

இந்தின் இளம்பிறை போலும் எயிற்றன்!

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் – கோலம்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்கு
சங்கத்தமிழ் மூன்றும் தா

நான் பேசக் கற்றுக்கொண்ட சில நாட்களிலேயே மழலை மாறாத பருவத்தில் மனப்பாடம் செய்யக் கற்றுக்கொண்ட முதல் பாடல்களில் இதுவும் ஒன்று. பச்சைமா மலைபோல் என்று தொடங்கும் தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் பாசுரம் இன்னொன்று. மேலும் சில தமிழ்ப் பாசுரங்களும், சமஸ்கிருதச் சுலோகங்களும் இவற்றில் உண்டு. அதேபோல என் மகள் பேசக் கற்றுக்கொண்டவுடன் அவளுக்கு மனப்பாடமாகச் சொல்லிக்கொடுத்தவற்றுள் இந்தப் பாடலும் உண்டு.

ஔவையார் இயற்றியதாகச் சொல்லப்படும் இந்தப் பாடல் விநாயகர் மீதானது. விநாயகர், கணேசர், கணபதி, விக்னேஸ்வரர், கஜானனர், பிள்ளையார் என்னும் பல பெயர்களின் வழங்கும் யானைமுகக் கடவுள் மீதானது. துங்கக் கரிமுகம் என்பதன்மூலம் தெளிவாக விளங்குகிறது.

திருமூலரின் திருமந்திரம் பத்தாம் திருமுறையாகத் தொகுக்கப்பட்டுள்ளது. அதன் பாயிரமாகத் தொடங்குவதும் பிள்ளையார்மீதான பாடலே.

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியின் வைத்தடி போற்றுகின் றேனே

இந்த இரண்டு பாடல்களிலுமே அடிப்படையாக உள்ள ஒரு கருத்தைக் காணலாம். பிள்ளையார் ஞானக் கொழுந்து. அவர் இயல், இசை, நாடகம் எனும் சங்கத் தமிழ் மூன்றையும் தர வல்லவர்.

புள்ளமங்கை, படம்: வி.கே.ஶ்ரீனிவாசன்

கடைசி இரண்டு வாரம் நான் எழுதியது தக்ஷிணாமூர்த்தி, வராகர் இருவரையும் பற்றி. ஆழ்வார்கள் வராகருக்கு ஞானப்பிரான் என்றே பெயர்சூட்டினர். நம்மாழ்வார் திருவாய்மொழியில், ‘ஞானப்பிரானை அல்லால் இல்லை நான் கண்டதுவே’ என்கிறார். சைவத்தில் தக்ஷிணாமூர்த்தியே ஆதிகுரு. கலைகள் பயில்விப்பவர். யோகம் பயில்விப்பவர். இசை பயில்விப்பவர். அதன் தொடர்ச்சியாகவே கணபதியையும் எழுத முற்படுகிறேன்.

பிள்ளையார் ஞானம் அருள்பவர் மட்டுமல்ல. இடையூறுகளைக் களைபவர். இடையூறுகளை அளிப்பவரும்கூட! இடையூறு என்பதன் வடமொழிச் சொல்லான விக்னம் என்பதிலிருந்துதான் விக்னேஸ்வரர் என்ற பெயரே வருகிறது. விக்னங்களின் ஈசுவரன்.

பிள்ளையார் குறித்து நமக்குப் பல கதைகள் வருகின்றன. ஒன்று அவர் பிறந்த அல்லது உருவான கதை. அடுத்து அவர் மகாபாரதம் எழுதிய கதை. மூன்றாவது, ஶ்ரீரங்கம் உருவான தல வரலாறு. நான்காவது பிள்ளையாருக்கும் முருகனுக்குமான திருவிளையாடல் புராணத்தில் வரும் மாம்பழப் போட்டி குறித்த கதை. மேலும் எண்ணற்ற கதைகள் புராணங்களிலும் இதிகாசங்களிலும் ஆகமங்களிலும் தல வரலாறுகளிலும் வருகின்றன. ஆனால் நாம் மேலே சொன்ன நான்கு கதைகளோடு நிறுத்திக்கொள்வோம். இவற்றிலுமே பல்வேறு புராணங்களில் பலப்பல மாறுதல்கள் உள்ளன. அவை அனைத்தையும் விரித்தால் நேரமும் இடமும் போதா.

கணபதி தொடக்கத்திலிருந்தே சிவன், பார்வதி ஆகியோரின் மகனாகவேதான் புராணங்களில் தோன்றுகிறார். பார்வதி தனக்கென ஒரு பிரத்யேகமான உதவியாளர் வேண்டுமென்று தன் உடலிலிருந்து அழுக்கைத் திரட்டி ஓர் உருவமாகப் படைத்து, யாரையும் உள்ளே அனுமதிக்கக்கூடாது என்று சொல்லிவிட்டுக் குளிக்கச் சென்றதாகவும், சிவன் அந்நேரம் பார்த்து உள்ளேவர, பார்வதி உருவாக்கிய வடிவம் சிவனைத் தடுத்து நிறுத்த, சிவன் அதன் தலையை அரிய, பார்வதி இதனால் கடும் கோபம் கொள்ள, சிவன் தன் கணங்களை அனுப்பி வடக்குத் திசைவழிச் சென்று கிடைக்கும் முதல் உருவத்தின் தலையைக் கொணர்ந்து அறுபட்ட உடலில் சேர்க்கச் சொல்ல, அப்படியாக யானைத் தலை கிடைத்த உருவம்தான் கணபதி எனும் களிற்றுருவக் கடவுள் என்று படிக்கிறோம். இன்னொரு கதை, சிவனும் பார்வதியும் யானை வடிவில் உறவுகொண்டதன்மூலம் பிறந்த குழந்தைதான் யானைவடிவக் கடவுள் கணபதி என்பது. இந்த யானைக்கு ஒற்றைத் தந்தம் மட்டுமே இருந்ததால், ஏகதந்தம் என்ற பெயரும் கணபதிக்கு வருகிறது. இதோடு ஒத்ததுதான் அடுத்த கதை.

வியாசர் மகாபாரதம் எழுத முற்பட்டபோது அவர் சொல்லும் வேகத்துக்கு எழுத யாருமே இல்லை என்றதாகவும் இறுதியில் கணபதி தான் எழுத ஒப்புக்கொண்டு தன் ஒரு கொம்பையே ஒடித்து, அதைக்கொண்டு எழுதியதாகவும் படிக்கிறோம். இதனால்தான் ஒற்றைக் கொம்புடனும், உடைத்த கொம்பு ஒன்றைக் கையில் பிடித்தவாறும் கணபதி காட்சியளிக்கிறார்.

ஶ்ரீரங்கம் குறித்த தல வரலாற்றில் பிள்ளையார் முக்கியத்துவம் பெறுகிறார். ராம ராவண யுத்தம் முடிந்து விபீஷணனுக்குப் பட்டம் அளித்தன்பின், ராமன் அயோத்தி சென்று பட்டாபிஷேகம் செய்துகொள்கிறான். அப்போது அங்கு வரும் விபீஷணன், ராமனின் முன்னோர்களான இக்ஷுவாகு வம்சத்தினர் வழிவழியாக வழிபட்டுவந்த ரங்கநாதர் சிலையைத் தான் பெற்றுச் செல்கிறான். ஆனால் ஒரு இக்கு உள்ளது. அந்தச் சிலையைத் தரையில் எங்கும் வைத்துவிடக்கூடாது. வைத்தால் மீண்டும் எடுக்க முடியாது. அங்கேயே பிரதிஷ்டை ஆகிவிடும். ஶ்ரீரங்கம் வழியாக விபீஷணன் வரும்போது மாலையில் சந்தியாவந்தனம் செய்வதற்கான நேரம் ஆகிவிடுகிறது. அப்போது அங்கு வரும் சிறுவன் ஒருவன் கையில் சிலையைக் கொடுத்துவிட்டு விபீஷணன் மாலைக்கடனை முடிப்பதற்குள் அந்த விஷமக்காரச் சிறுவன், ரங்கநாதர் சிலையை அங்கேயே காவிரிக்கரையில் வைத்துவிடுகிறான். அப்படி உருவானதுதான் ஶ்ரீரங்கம் எனும் க்ஷேத்திரம். இந்தப் பிள்ளையார்தான் திருச்சி மலைக்கோட்டையில் உச்சிப் பிள்ளையாராக அமர்ந்திருப்பதாக ஐதீகம்.

அடுத்தது திருவிளையாடல் புராணத்தில் வரும் கதை. திரைப்படமாக வந்து தமிழகத்தில் அனைவருக்கும் தெரிந்த கதை. இன்றும் பெற்றோர் தம் குழந்தைகளுக்குச் சொல்லும் கதைகளில் தொடக்கத்திலேயே வருவது. சிவன் பார்வதி தெய்வ தம்பதியினருக்கு அரியதொரு மாம்பழம் நாரதர்மூலம் கிடைக்கிறது. இந்தப் பழத்தை வெட்டித் துண்டாக்கக்கூடாது. முழுதாகத்தான் தரவேண்டும். தம் இரு பிள்ளைகளான பிள்ளையாருக்கா முருகனுக்கா, யாருக்குத் தருவது என்பதைப் போட்டியாக வைக்கிறார் சிவன். யார் உலகத்தை வேகமாகச் சுற்றி முதலில் வந்துசேருகிறார்களோ, அவர்களுக்குத்தான் மாம்பழம் என்கிறார். முருகன் தன் வாகனமான மயிலில் ஏறிக் காற்றைவிடக் கடிதாகச் சுற்றிவர, பிள்ளையாரோ, அம்மை அப்பன் இருவரும் சேர்ந்ததே உலகம் என்று தர்க்கரீதியாகப் பேசி, தாய் தந்தையரைச் சுற்றிவந்து பழத்தைப் பெற்றுக்கொள்கிறார். முருகன் கோபித்துக்கொண்டு மலைமீது ஏறிவிடுகிறார். அவரைப் பார்வதி சமாதானம் செய்வதற்காகச் சிவனின் திருவிளையாடல்கள் அனைத்தையும் எடுத்துச் சொல்கிறார். இதுதான் திருவிளையாடல் புராணத்தின் கதை.

அரிட்டாபட்டி, படம்: VK லக்ஷ்மி, விக்கிமீடியா காமன்ஸ்

‘கணபதி என்னும் களிறு’ ஏதோ தமிழகத்துக்கு அந்நியம் என்றும் முருகன்தான் அக் மார்க் தமிழ்க் கடவுள் என்றும் தமிழகத்தில் பல ஆண்டுகளாகப் பிரசாரம் நடைபெற்று வருகிறது. ஆனால் உண்மைத் தகவல்களைத் தோண்டும்போது நமக்குக் கிடைப்பது பல ஆச்சரியங்கள். தமிழகத்தில் கிடைக்கும் எந்த முருகன் சிலைக்கும் முற்பட்டதாகப் பல விநாயகர் சிற்பங்கள் நமக்குக் கிடைக்கின்றன. தமிழகத்தில் இன்றைக்கு நமக்குக் கிடைப்பது ஐந்தாம் நூற்றாண்டு இறுதி, ஆறாம் நூற்றாண்டு தொடக்கத்தில் பல்லவர்களும் பாண்டியர்களும் வெட்டுவித்த கருங்கற் குகைக்கோவில்கள். இதில் பாண்டியரின் பெரும்பாலான குகைக்கோவில்களில் முருகன் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பிள்ளையார் சிற்பங்கள் இருப்பதைக் காணலாம். பிள்ளையார்பட்டி, அரிட்டாபட்டி, புதுக்கோட்டை திருகோகர்ணம், குன்றாண்டார்கோவில், திருப்பரங்குன்றம், திருமலாபுரம், திருச்சி மலைக்கோட்டை கீழ்க்குகை, இன்னும் பல பாண்டியர் குகைகளில் பிள்ளையார் சிற்பத்தைக் காணலாம்.

மேலே அரிட்டாபட்டியில் காணப்படும் மிக அருமையான பாண்டியர் காலக் கணபதியைப் பாருங்கள். அதற்கும் மேலே புள்ளமங்கையில் சோழர் காலத்தில் உருவாக்கப்பட்ட பிள்ளையார் சிற்பத்தையும் பாருங்கள். பிள்ளையார் சிற்பத்தின் படிமவியல் குறித்தி விரைவில் விரிவாகப் பார்க்க உள்ளோம். ஆனால் இந்த இரண்டையும் முதலில் பார்த்துவிடுவோம். இரண்டிலுமே யானைத் தலை. பெரிய முறம் போன்ற காதுகள். பானை போன்ற பெரிய வயிறு. நான்கு கரங்கள். யானை முகமாதலால் ஒரு தும்பிக்கை. பொதுவாக நான்கு கரங்களும் கூட ஒரு தும்பிக்கையும் இருப்பதால், ‘ஐந்து கரத்தான்’ எனப்படுகிறார் கணபதி. இரு சிற்பங்களிலுமே ஒரு தந்தம் இல்லாமல், ஒரு தந்தம் மட்டும் இருப்பதைக் காணலாம். அதுவும் இடதுபக்கத் தந்தம் உள்ளது. வலது தந்தம் இல்லை. குட்டைக் கால், குட்டைக் கைகள். ஒரு முக்கிய வேறுபாடு, புள்ளமங்கையில் தும்பிக்கை வலது-இடமாகச் சுருண்டிருக்கிறது. இதற்கு இடம்புரி விநாயகர் என்று பெயர். அரிட்டாபட்டி விநாயகர் இடமிருந்து வலமாகச் சுருண்டிருக்கும் தும்பிக்கையைக் கொண்டிருக்கிறார். இவர் வலம்புரி விநாயகர். பொதுவாகப் பெரும்பான்மை விநாயகர் சிற்பங்கள் வலம்புரியாகத்தான் இருக்கும்.

பல்லவர் குகைக்கோவில்களில் வல்லம் என்னும் இடத்தில் மிக அருமையான கணபதி சிற்பத்தைக் காண முடிகிறது. மகாபாரதம் எழுத உடைத்த ‘இந்தின் இளம்பிறை போலும் எயிற்றை’ அதாவது சந்திரனின் இளம்பிறை போன்று வளைந்திருக்கும் தந்தப் பல்லைக் கையில் ஏந்தியபடி இருக்கும் வலம்புரி விநாயகர்.

வல்லம், படம்: வி.கே.ஶ்ரீனிவாசன்

பாண்டியர் குகைக்கோவில்களில் உள்ள எண்ணிக்கையில் பல்லவர்களின் குகைக்கோவில்களில் யில கணபதி இல்லைதான். ராஜசிம்மன் காலத்தில்தான் பெரும் எண்ணிக்கையில் காஞ்சிபுரத்தின் பிறவாஸ்தானம், கைலாசநாதர் கோவில் போன்ற சில இடங்களில் காண முடிகிறது. காஞ்சி கைலாசநாதர் கோவிலில் மட்டுமே பதினைந்துக்கும் மேற்பட்ட கணேசர் சிற்பங்களைக் காண முடிகிறது. ஆனால் மாமல்லபுரத்தில் ஓரிரண்டு மட்டும்தான் தென்படுகின்றன.

0

இன்றைக்குத் தமிழகத்தில் தெருவுக்குத் தெரு பிள்ளையார் கோவில்கள் இருப்பதைக் காணலாம். இவை அனைத்துமே கடந்த இரு நூற்றாண்டுகளுக்குள் கட்டப்பட்ட கோவில்களே. பள்ளிக்கூடங்களுக்குள் ஒரு சிறு கோவில் இருந்தால் அது பெரும்பாலும் பிள்ளையார் கோவிலாகத்தான் இருக்கும். ஓர் அடுக்ககத்தில் ஒரு கோவில் இருந்தால் அதுவும் பெரும்பாலும் பிள்ளையார் கோவிலாகத்தான் இருக்கும்.

ஆனால் தொடக்க காலத்தில் – அதாவது ஆறாம் நூற்றாண்டில் கற்கோவில்கள் உருவாகத் தொடங்கிய நிலையில், தனித்த விநாயகர் கோவில்கள் இருந்தனவா?

அந்தக் காலகட்டத்தில் சிவன், விஷ்ணு ஆகியோருக்குத்தான் முதன்மையாகக் கோவில்கள் உருவாக்கப்பட்டன. அப்படி உருவாக்கப்பட்ட கோவில்களில் விநாயகர், முருகன், துர்கை ஆகியோருக்கும் சிலைகள் செதுக்கப்பட்டன. பிரம்மாவும் பல இடங்களில் இருப்பதைக் காண்கிறோம். பிள்ளையார்பட்டியில் பிள்ளையாருக்கு முதன்மை கொடுக்கப்பட்டாலும் அது அடிப்படையில் சிவனுக்காக உருவாக்கப்பட்ட குகைக் கோவிலே. அதேபோல திருப்பரங்குன்றத்தின் குகைக்கோவில், முதன்மையாக சிவனுக்கும் விஷ்ணுவுக்குமாக உருவாக்கப்பட்டது. திருச்சி மலைக்கோட்டை கீழ்க்குகையில் இதனைத் தெளிவாகக் காணலாம். உள்ளே நுழைந்ததும் இடப்புறம் சிவனுக்கும் வலப்புறம் விஷ்ணுவுக்குமான தனித்தனிக் கருவறைகள். நேராக நாம் பார்க்கும் சுவரில் வரிசையாக கணபதி, முருகன், பிரம்மா, சூரியன், துர்கை ஆகியோருக்கு வரிசையாக ஐந்து சிற்பங்கள். இங்கே நின்ற நிலையில் உள்ள கணபதியைக் காணலாம்.

மலைக்கோட்டை கீழ்க்குகை, படம்: வி.கே.ஶ்ரீனிவாசன்

முறையாக கட்டுமானக் கோவில்கள் உருவாகத் தொடங்கியதும் சிவன் கோவில்களுக்கென ஒரு வடிவம் கொஞ்சம் கொஞ்சமாக முறைப்படத் தொடங்கியது. முதலில் எளிமையான சிறு கருவறை மட்டுமே இருந்தது. இந்தக் கருவறையின் முன்பக்க வாசலைத் தவிர மற்ற மூன்று சுவர்களும் முதற்கட்டத்தில் சமதளமாக, சிலைகள் ஏதும் இன்றி இருந்தன. பின்னர் இந்த மூன்று சுவர்களிலும் கோஷ்டங்கள் எனப்படும் பிறைகள் உருவாகின. ஆக மூன்று கோஷ்டங்கள். கிழக்கு பார்த்த கருவறையில் தெற்கு, வடக்கு, மேற்கு கோஷ்டங்களில் முறையே, சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய கடவுளர்களின் வெவ்வேறு வடிவங்கள் சிற்பங்களாகச் செதுக்கி வைக்கப்பட்டன. தெற்குத் திசையில் சிவனின் வடிவமாக நாம் ஏற்கெனவே பார்த்த தக்ஷிணாமூர்த்தி வரத்தொடங்கினார். மேற்குத் திசையில் விஷ்ணு தனியாகவோ, அல்லது நரசிம்ம வடிவமாகவோ அல்லது சிவனும் விஷ்ணுவும் சேர்ந்த ஹரிஹர வடிவமாகவோ, பின்னர் லிங்கோத்பவ அல்லது அர்தநாரி வடிவங்களும்கூட வரத் தொடங்கின. இந்த வடிவங்களையெல்லாம் விரிவாக இந்தத் தொடரில் காண இருக்கிறோம். வடக்குத் திசையில் பிரம்மா வடிவம் மாற்றமின்றித் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது.

அடுத்து, கட்டுமானக் கோவில்கள் விரிவாகத் தொடங்கின. கருவறைக்குமுன்பாக அர்தமண்டபம் எனப்படும் முன்மண்டபம் ஏற்பட்டது. இப்போது கருவறையைச் சுற்றி மூன்று கோஷ்டங்களும் அர்தமண்டபத்தின் இருபுறமும் – தெற்கிலும் மேற்கிலும் – பக்கத்துக்கு ஒரு கோஷ்டமுமாக ஐந்து கோஷ்டங்கள் உருவாகின. இப்போது மேலும் இரண்டு சிற்பங்களை வைக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டது. அப்படி தெற்கில் அர்தமண்டபக் கோஷ்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதுதான் கணபதியின் சிற்பம். அதற்கு இணையாக வடக்கில் அர்தமண்டபத்தில் துர்கையின் சிற்பம் அறிமுகப்படுத்தப்பட்டது.

கிழக்கு பார்த்த சிவன் கோவிலில் ஐந்து கோஷ்டங்கள் இருக்கும்போது நீங்கள் அக்கோவிலைச் சுற்றிவந்தால், கணபதியையும் தக்ஷிணாமூர்த்தியையும் தெற்கிலும், பெரும்பாலும் லிங்கோத்பவரை மேற்கிலும், பிரம்மாவையும் துர்கையையும் வடக்கிலும் அடுத்தடுத்துக் காணமுடியும். சில சிவன் கோவில்கள் கிழக்கு பார்த்து இல்லாமல் மேற்கு பார்த்து இருக்கக்கூடும். எடுத்துக்காட்டாக மயிலாப்பூரின் கபாலீசுவரர் கோவில். இக்கோவிலைச் சுற்றிவரும்போது நீங்கள் வடக்கு தெற்காகச் சுற்றிவருவீர்கள். இப்போது நீங்கள் துர்கையையும் பிரம்மாவையும் வடக்கில் அடுத்தடுத்தும், கிழக்கில் லிங்கோத்பவரையும், தெற்கில் தக்ஷிணாமூர்த்தியையும் கணபதியையும் அடுத்தடுத்துக் காண்பீர்கள்.

சிவன் கோவில்கள் மேலும் மேலும் பெரிதாகத் தொடங்கியபோது ஒன்பது கோஷ்டங்கள், அதற்குமேலும் எண்ணிக்கையாலன கோஷ்டங்கள் என்று ஏற்பட்டன. ஐந்துக்குமேல் கோஷ்டங்கள் என்றாலே தெற்கில் முதலாவது கோஷ்டத்தில் கணபதி என்பது கட்டாயம் என்ற அளவுக்கு அவருக்கான இடம் உறுதியாகியது. கவனியுங்கள் – முருகனுக்கு இப்படி உறுதியாகச் சொல்ல முடியாது. பல சிவன் கோவில் கோஷ்டங்களில் முருகன் சிற்பம் இல்லாமலேகூடப் போகலாம்; கணபதி இல்லாமல் இருக்காது என்றாகியது.

ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் பெரும் கோவில்கள் எழுப்பப்பட்ட நிலையில் பரிவார தேவதைகளுக்கான ஆலயங்கள் கோவில் சுற்றுச் சுவரை ஒட்டி உட்புறமாக எழுப்பப்பட்டன. இன்று மிகச் சில 



__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

கோவில்களே இப்படியுள்ளன. பரிவார ஆலயங்கள் முற்றிலும் வளர்ந்த நிலையில் சிவனின் மைய ஆலயத்தைச் சுற்றி எட்டு உப ஆலயங்கள் உருவாகின. அவற்றில் ஒன்று அம்பாளுக்கானது. சிவன் கிழக்கு பார்த்து இருந்தால், அம்பாள் தெற்கு பார்த்து இருப்பதாகக் கருவறை இருக்கும். பிற ஏழு ஆலயங்கள், சூரியன், சப்த மாதர்கள், கணபதி, முருகன், ஜ்யேஷ்டா எனும் தவ்வை, சந்திரன், சண்டிகேசர் ஆகியோருக்கானது. இந்த அமைப்பை புதுக்கோட்டையின் திருக்கட்டளை எனும் கோவிலில் முழுமையாகப் பார்க்கலாம். இங்கே நாம் பேசும் பலவற்றை நான் இப்போது முழுமையாக விளக்காவிட்டாலும் விரைவில் இவை ஒவ்வொன்றைப் பற்றியும் பேசப்போகிறேன். பின்னர் பல கோவில்களில் சூரியன், சந்திரன், தவ்வை, சப்த மாதர்கள், தவ்வை ஆகியோருக்குத் தனிச் சன்னிதி என்பது போய்விட்டது. கணபதி, முருகன், சண்டிகேசர் எனும் மூவருக்கு மட்டுமே சன்னிதிகள் எஞ்சின.

இதில் சப்த மாதர்கள் என்பது ஏழு பெண் தெய்வங்களைக் குறிக்கும். சிலர் சப்த கன்னியர் என்றும் சொல்வார்கள். ஆனால் இந்தியாவின் பல பகுதிகளில் இந்தத் தெய்வங்கள் ஒவ்வொன்றும் கையில் குழந்தை ஒன்றை ஏந்தியிருப்பதாகச் செதுக்கப்பட்டிருக்கும். எனவே சப்த மாதர்கள் என்று குறிப்பதே சரியானதாக இருக்கும். இந்த சப்த மாதர்கள் பல்வேறு கடவுளரின் சக்தி வடிவாகக் கருதப்பட்டு, இந்தக் கடவுளர்களிடமிருந்து வெளியே வந்ததாகவும் எடுத்துக்கொள்வர். அப்படியாக பிரம்மாவிடமிருந்து பிராமணி, விஷ்ணுவிடமிருந்து வைஷ்ணவி, மகேசுவரன் எனும் சிவனிடமிருந்து மாகேசுவரி, இந்திரனிடமிருந்து ஐந்திரி, முருகன் எனும் குமரனிடமிருந்து கௌமாரி, வராகத்திடமிருந்து வாராகி, துர்கை எனும் தேவியிடமிருந்து சாமுண்டி என்ற எழுவரும் உருவாகினர். இந்த ஏழு மாதர்களையும் அருகருகே வைக்கும்போது அவர்களின் இருபுறமும் வீரபத்திரர், கணபதி என்ற இருவரையும் வைப்பர். இதில் வீரபத்திரர் என்பது சிவனின் ஓர் அம்சம். தக்ஷனின் யாகத்தை நிர்மூலமாக்கி தக்ஷனை அழிக்க என்று சிவன் உருவாக்கிய வடிவமே வீரபத்திரர். இவ்வாறாக, சப்த மாதர்களுக்கு அருகிலும் கணபதியைக் காண முடியும்.

இவற்றை இப்போது மொத்தமாகத் தொகுத்துக் கொள்வோம்.

1) கணபதிக்குத் தனிக் கோவில்கள், பெரும்பாலும் சிறு கோவில்கள் இருக்கும்.

2) பெரும் சிவன் கோவில்களில் சிவன் சன்னிதியைச் சுற்றி ஐந்து கோஷ்டங்களாவது இருக்கின்றன என்றால், அதில் தெற்குத் திசையில் கட்டாயமாக கணபதிக்கு ஒரு கோஷ்டம் கொடுக்கப்பட்டிருக்கும்.

3) சிவன் கோவிலைச் சுற்றி ஏழு பரிவார ஆலயங்கள் இருக்கும்போது தென்மேற்கு மூலையில் கணபதிக்கான ஆலயம் இருக்கும்.

4) சிவன் கோவிலைச் சுற்றி மூன்றே மூன்று பரிவார ஆலயங்கள்தான் உள்ளன, சிவாலயம் கிழக்கு பார்த்து உள்ளது என்றால், மேற்குத் திசையில் அடுத்தடுத்து கணபதிக்கும் முருகனுக்கும் கிழக்கு பார்த்த ஆலயங்கள் இருக்கும்; சண்டிகேசர் ஆலயம் வடக்குத் திசையில், தெற்கு பார்த்து இருக்கும்.

5) சில பெருஞ்சிற்பத் தொகுதிகளில் சிவன் அல்லது விஷ்ணு முதன்மையாகத் தம் தொழிலைச் செய்துகொண்டிருக்கையில் பிற தெய்வங்கள் அனைவரும் அச்செயலைக் காணக் கூடிவந்திருப்பர். அக்குழுவில் கணபதியும் இருக்கலாம். உதாரணமாக, பாதாமி, ஐஹொளே ஆகிய இடங்களில் சிவன் நர்த்தனம் ஆடிக்கொண்டிருப்பார். அருகில் கணபதியும் நடனம் ஆடிக்கொண்டிருப்பார். சிவன் முப்புரம் எரிக்கும் திரிபுராந்தகச் சிற்பத்தில் கணபதியும் குமரனும் துர்கையும் தத்தம் வாகனத்தில் வந்து நிகழ்வைப் பார்த்துக்கொண்டிருப்பர். விஷ்ணு யோக நித்திரையில் இருந்தபடி மது கைடபனுடன் சண்டை நிகழ்த்திக்கொண்டிருக்கும் சிற்பங்களில் கணபதி, சிவன், குமரன், பிரம்மா ஆகியோருடன் இந்தப் போரைக் காண வந்திருப்பார்.

6) தவிர பெரிய விமானங்களோ கோபுரங்களோ இருக்கையில் ஆங்காங்கே இருக்கும் இடத்துக்கு ஏற்றவாறு கணபதிக்கான ஒரு அல்லது பல சிற்பங்கள் இருக்கும். மயிலாப்பூர் கபாலீசுவரர் ஆலயத்தின் கிழக்கு கோபுரத்தில் ஏழு நிலைகள் உள்ளன. நிலைக்கு ஒன்றாக கணபதியின் ஒரு சிற்பம் வீதம் மொத்தம் ஏழு கணபதிகளைக் காணலாம். இந்த கோபுரம் மிகச் சமீபத்திய காலத்தையதுதான். ஆனால் மிகப் பிரமாதமான ஒன்று. நம் தொடரில் சில வாரங்கள் இந்தக் கோவிலின் கிழக்கு கோபுரத்தின் சிற்பங்களைப் பற்றி மட்டுமே பேசப்போகிறோம்!

0

ஆகமங்களிலும் சிற்ப நூல்களிலும் எத்தனை விதமான கணபதி வடிவங்கள் கொடுக்கப்பட்டுள்ளன? அவர் கையில் என்னென்ன ஆயுதங்கள் அல்லது பொருள்கள் இருக்கும்? நமக்கு வழிகாட்டுபவர் கோபிநாத ராவ்தான்.

1. பால கணபதி
2. தருண கணபதி
3. பக்தி விக்னேஸ்வரர்
4. வீர விக்னேஸ்வரர்
5. சக்தி கணேசர் (லக்ஷ்மி கணபதி, உச்சிஷ்ட கணபதி, மஹா கணபதி, ஊர்த்வ கணபதி, பிங்கள கணபதி)
6. ஹேரம்ப கணபதி
7. பிரசன்ன கணபதி
8. த்வஜ கணபதி
9. உன்மத்த உச்சிஷ்ட கணபதி
10. விக்னராஜ கணபதி
11. புவனேச கணபதி
12. நிருத்த கணபதி
13. ஹரித்ரா கணபதி
14. பாலசந்திர கணபதி
15. சூர்பகர்ண கணபதி
16. ஏகதந்த கணபதி

இவற்றை முழுமையாக விளக்கத் தொடங்கினால் இடம் போதாது. எனவே ஒருசில வடிவங்களைப் பற்றி மட்டும் மேலோட்டமாகப் பார்ப்போம்.

பால கணபதி, தருண கணபதி, பக்தி விக்னேஸ்வரர் எனும் மூன்று வடிவங்களும் நான்கு கரங்களைக் கொண்டதாக இருக்கும். ஒவ்வொரு கரத்திலும் வெவ்வேறு உணவுப்பொருளைக் கொண்டிருக்கும். பால கணபதியின் நான்கு கரங்களில் மாம்பழம், வாழைப்பழம், பலாப்பழம், கரும்பு ஆகியவையும் தும்பிக்கையில் விளாம்பழமும் இருக்கும். தருண கணபதியின் நான்கு கரங்களில் பாசம், அங்குசம் ஆகியவையும் விளாம்பழம், நாவல் பழம், எள்ளுருண்டை, பிரம்பு ஆகியவற்றில் ஏதேனும் இருக்கும். பக்தி விக்னேஸ்வரர் கரங்களில் தேங்காய், மாம்பழம், வெல்லக்கட்டி, பாயசம் ஆகியவை இருக்கும்.

வீர விக்னேஸ்வரர் பதினாறு கரங்கள் கொண்டு, அனைத்திலும் ஆயுதங்களுடன் விளங்குவார். சக்தி ஆயுதம், வில், அம்பு, வாள், கேடயம், சுத்தியல், கதை, பாசம், அங்குசம், மழு, கொடி ஆகியவை கொண்டிருப்பார்.

சக்தி கணேசர், கூட ஒரு தேவியுடன் இருப்பார். இதில் பல வடிவங்கள் இருந்தாலும் மஹா கணபதி என்ற ஒன்றைமட்டும் விளக்குகிறேன். இவர் பத்து கரங்கள் கொண்டவராக இருப்பார். இந்தக் கரங்களில் தாமரை, மாதுளம், கமண்டலம், கதை, உடைந்த தந்தம், கரும்பு, நெற்கதிர், பாசம் ஆகியவை இருக்கும். இவருடைய மடியில் சக்தி அமர்ந்திருப்பாள். இந்தச் சக்திக்கும் விக்னேஸ்வரி என்று பெயர். அவள் கையில் தாமரை ஒன்று இருக்கும்.

இன்னொரு வடிவத்தில், கணபதி, சித்தி, புத்தி என்னும் இரு தேவியருடன் இருப்பதாகக் காட்டப்படுவார். சித்தி என்பது கேட்டது கிடைப்பது. புத்தி என்பது அறிவு. இவ்விரண்டுடன் கூட இருக்கும் கணபதி அறிவையும் கேட்ட வரத்தையும் தருவார்.

ஹேரம்ப கணபதி, மிகப் பிரத்யேகமான வடிவம். சிவனின் சதாசிவ வடிவம் போன்றது. சதாசிவ வடிவத்தைப் பற்றிப் பின்னர் பார்க்க உள்ளோம். ஹேரம்ப கணபதிக்கும் ஐந்து தலைகள். ஆகமங்களின்படி ஐந்துமே யானைத் தலைகள். நான்கு தலைகள் நான்கு திசைகளைப் பார்த்தபடியும் இந்த நான்கின்மேல் ஐந்தாவது தலை வானை நோக்கியபடியுமாக இருத்தல்வேண்டும். இந்த கணபதி வடிவம் சிங்கத்தின்மீது வீற்றிருக்கும். பெரும்பாலும் மற்ற வடிவங்களில் மூஞ்சூறுதான் விநாயகரின் வாகனம். சில இடங்களில் ஹேரம்ப கணபதிக்கான ஐந்து தலைகளில் ஒன்று மட்டும் யானைத் தலையாகவும் மற்றவை வெவ்வேறு மிருகத் தலையாகவும் வடிக்கிறார்கள். ஆனால் கோபிநாத ராவ், ஐந்துமே யானைத் தலை என்றுதான் சொல்கிறார். கையில் பாசம், தந்தம், அக்கமாலை, பரசு, மூன்று தலை கொண்ட சுத்தியல், கொழுக்கட்டை ஆகியவற்றுடன் ஒரு கை அபயஹஸ்தம் (காக்கும் கரம்), மற்றொரு கை வரத ஹஸ்தம் (வரம் தரும் கை) என மொத்தம் எட்டு கரங்களுடன் இருக்கும்.

நர்த்தன கணபதி, பெயருக்கேற்றபடி ஆட்டம் போடுபவர். ஹொய்சளக் கோவில்கள் பலவற்றிலும் நர்த்தன கணபதியைக் காண முடியும்.

ஹோய்சள நர்த்தன கணபதி

பாதாமியில் சிவனுடன் சேர்ந்து நடனமாடும் கணபதியைக் காணலாம்.

பாதாமி, படம்: வி.கே.ஶ்ரீனிவாசன்

தமிழகக் கோவில் கட்டுமானத்தில் கணபதி எங்கெல்லாம் இருப்பார் என்று குறிப்பிட்டிருந்தேன். ஆனால் இந்தியா முழுமையிலும் இவ்வாறு தெளிவான ஆகமக் கட்டுப்பாட்டு விதிகள் இன்றி பலவகையான கணபதி சிற்பங்களைப் பார்க்க முடிகிறது. அவற்றில் இரண்டை மட்டும் உங்களுக்குக் காண்பிக்கிறேன். ஒன்று ஒடிஷாவில் வேதாள தேவன் கோவில் எனப்படும் சிவன் கோவிலில் உள்ள ஒரு பிள்ளையார்.

வேதாள தேவன் கோவில், ஒடிஷா

அடுத்தது ஆந்திராவில் லேபாக்ஷி எனுமிடத்தில் உள்ள விஜயநகர காலக் கோவிலில் மாபெரும் சிற்பமாக ஒற்றைக் கல்லில் செதுக்கப்பட்டிருப்பது.

ஒற்றைக் கல் சிற்பம், லேபாக்ஷி

அழகு என்று வரும்போது தமிழகத்தில் பல பாண்டியர் குடைவரைப் பிள்ளையார்களையும் குறிப்பிடுவேன். திருகோகர்ணம் பிள்ளையார் கருவறையின் சுவரில் இருப்பதால் நல்ல படங்கள் கிடைப்பதில்லை. மிக அழகான சிற்பம் அது. பிள்ளையார்பட்டி பிள்ளையாரின் தரமான படங்கள் கிடைப்பதும் அரிது. அதிலும் அலங்காரங்கள் இன்றிக் கிடைப்பது மிக மிகக் கடினம். வல்லத்துப் பல்லவப் பிள்ளையார் மிக மிக அழகு. ஆனாலும், முதலாம் பராந்தக சோழன் காலத்துப் புள்ளமங்கையின் முழுமையான பிள்ளையார் சிற்பத் தொகுதிக்கு என்று ஒரு பேரழகு உள்ளது. இதனைப் பாருங்கள்.

புள்ளமங்கை, படம்: வி.கே.ஶ்ரீனிவாசன்

பிள்ளையார் பத்மத்தின்மீது வீற்றிருக்கிறார். அவருக்குமேல் அழகான கவிந்த குடை. குடைக்குமேல் இரு கந்தர்வர்கள். சுற்றிலும் மிக அழகான எட்டு கணங்கள். அதில் ஒரு கணம் மூஞ்சூறு வாகனத்துடன் விளையாடிக்கொண்டிருக்கிறது. ஒரு கணம் யாழ் இசைக்கிறது. ஒரு கணம் சாமரம் வீசுகிறது. ஒரு கணம் கையில் கொழுக்கட்டைப் பாத்திரத்தை ஏந்தி, விஸ்மய (ஆச்சரிய) முத்திரையுடன் உள்ளது. இரண்டிரண்டாக இருக்கும் கணங்கள் ஆண்-பெண் கணங்கள். கைகளில் படையல் உணவுடன் அமர்ந்திருக்கின்றனர். அனைவரது தலை அலங்காரங்களும் தனித்துவம் மிக்கவையாக உள்ளன.

கணபதி கரண்ட மகுடம் அணிந்துள்ளார். வயிற்றைச் சுற்றி நாகப் பாம்பை இழுத்துக் கட்டி அணிந்துள்ளார். இடம்புரியாகத் தும்பிக்கை உள்ளது. அதனுள் விளாம்பழம். பின் வலது கை பாசமும் பின் இடது கை கரும்பும் கையில் பிடித்துள்ளன. முன் வலது கையில் இருப்பது ஏதோ உணவுப்பொருள்தான். அது கொழுக்கட்டையா அல்லது ஏதேனும் பழமா என்று தெளிவாகச் சொல்லமுடியவில்லை. முன் இடதுகை இடுப்பில் (கடி ஹஸ்தம்) வைக்கப்பட்டுள்ளது. அளவுகள் அவ்வளவு கச்சிதமாகப் பொருந்தியுள்ளன.

முற்காலச் சோழர் கோவில்களில் ஆதித்தன் – பராந்தகன் காலத்தில்தான் அர்தமண்டபமும் ஐந்து கோஷ்டங்களும் உருவாகத் தொடங்கியிருந்தன. அங்கிருந்து கணபதி இல்லாத சிவன் கோவிலே இல்லை என்பதாக ஆயிற்று. இவற்றில் ஏகப்பட்ட கோவில்களில் மிக நேர்த்தியான, மிக அழகான கணபதி சிற்பங்கள் உள்ளன. ஆனால் ஒரு சிற்பத் தொகுதியாக, புள்ளமங்கை கணபதி நம்மை வெகுவாக ஈர்க்கிறார். மயக்குகிறார்.



__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

கல்லும் கலையும் #5 – கானத்தெருமைக் கருந்தலை மேல் நின்றவள்! 

 

கல்லும் கலையும்

மஹிஷன் என்பவன் அசுரர்களின் தலைவனாக இருந்தான். இந்திரன் தேவர்களின் தலைவன். அவர்கள் இருவருக்கும் இடையே நூறு ஆண்டுகள் கடும் போர் நிகழ்ந்தது. அசுரர்கள் அந்தப் போரில் வென்றனர். மஹிஷன் இந்த உலகம் முழுவதற்கும் அரசன் ஆனான். தோற்றுப்போன தேவர்கள் பிரமனை அழைத்துக்கொண்டு விஷ்ணுவையும் சிவனையும் காணச் சென்றனர்.

மஹிஷன் தங்களைத் தோற்கடித்து, தங்களின் சக்தியையும் அதிகாரத்தையும் கைப்பற்றிக்கொண்டதையும் தாங்கள் பூமியில் சாதாரணர்களாக நடமாடிக்கொண்டிருப்பதையும் சொல்லி தேவர்கள் புலம்பினர். எப்படியாவது தங்கள் பழைய நிலையை மீட்டுத்தரவேண்டும் என்று கதறினர்.

இதைக் கேட்டுக்கொண்டிருந்த விஷ்ணுவும் சிவனும் தங்கள் புருவத்தை நெரித்து, கோபத்தை வெளிக்காட்டினர். விஷ்ணு, சிவன், பிரமன் ஆகியோரது உடல்களிலிருந்து பெரும் ஒளிப்பிழம்பு தோன்றியது. இந்திரன் முதலான தேவர்களின் உடல்களிலிருந்தும் ஒளி தோன்றி ஒன்றாக இணைந்துகொண்டது. இவ்வாறு அனைத்துக் கடவுள்களின் உடலிலிருந்து தோன்றி ஒன்றாகச் சேர்ந்த ஒளிப்பிழம்பு பெண் வடிவம் கொண்டது. தேவி துர்கை தோன்றினாள்.

சிவனின் ஒளி அவள் முகமாகியது. யமனின் ஒளி அவள் கேசமாகியது. விஷ்ணுவின் ஒளி அவள் கரங்களாயின. சந்திரனின் ஒளி அவள் மார்பகங்களாயின. இந்திரனின் ஒளி அவள் வயிறாகியது. வருணனின் ஒளி அவள் கால்கள் ஆயின. பூமியின் ஒளி அவள் இடுப்பாகியது. பிரமனின் ஒளி அவள் பாதங்களாகின. சூரியனின் ஒளி அவள் கால் விரல்களாயின. வசுக்களின் ஒளி அவள் கை விரல்களாயின. குபேரனின் ஒளி அவளுடைய மூக்காகியது. பிரஜாபதியின் ஒளி அவள் பற்களாயின. அக்னியின் ஒளியிலிருந்து அவளுடைய மூன்று கண்கள் உருவாயின. உதயமும் அஸ்தமனமும் அவள் புருவங்களாயின. வாயுவின் ஒளி அவள் காதுகளாயின.

இவ்வாறாக அனைத்துக் கடவுள்களின் கலவையாக துர்கை தோன்றினாள்.

மஹிஷாசுரமர்தினி, காஞ்சி கைலாசநாதர் கோவில், படம்: வி.கே.ஶ்ரீனிவாசன்

மஹிஷாசுரமர்தினி, காஞ்சி கைலாசநாதர் கோவில், படம்: வி.கே.ஶ்ரீனிவாசன்

இப்படித்தான் மார்கண்டேய புராணத்தில் வரும் தேவி மஹாத்மியம் என்னும் பகுதி தேவியின் உற்பத்திக் கதையைச் சொல்கிறது. தேவிக்கு சண்டிகை, அம்பிகை, துர்கை, காத்யாயனி எனும் பெயர்களை தேவி மஹாத்மியம் தருகிறது. அடுத்து, இவ்வாறு உருவான தேவிக்கு ஆயுதங்கள் வேண்டுமே.

சிவன் அவளுக்குத் தன் சூலாயுதத்தை அளித்தார். விஷ்ணு சக்கரத்தைக் கொடுத்தார். வருணன் சங்கைக் கொடுத்தான். அக்னி ஈட்டியைக் கொடுத்தான். வாயு வில்லையும் அம்புறாத் தூணிகளையும் கொடுத்தான். இந்திரன் மின்னலையும் (வஜ்ராயுதம்) தன் யானையான ஐராவதம் அணிந்திருக்கும் மணியையும் கொடுத்தான். யமன் தடி ஒன்றைக் கொடுத்தான். வருணன் பாசக் கயிற்றை அளித்தான். பிரமன் அக்கமாலையையும் கமண்டலத்தையும் அளித்தார். சூரியன், அவளுடைய தோலிலிருந்து வெளிப்படும் வெளிச்சத்தைக் கொடுத்தான். காலம், வாளையும் கேடயத்தையும் அளித்தது. பாற்கடல் முத்து மாலையையும் நல்லாடைகளையும், காதுத் தோட்டையும், மகுடாபரணத்தையும், கை வளைகளையும், நிலாச்சுட்டியையும், கேயூரத்தையும், காற்சிலம்புகளையும், கழுத்துக்கு ஹாரத்தையும், விரல்களுக்கு மோதிரங்களையும் அளித்தது. விஸ்வகர்மா மின்னும் மழுவையும் துளைக்கவே முடியாத உடற்கவசத்தையும் அளித்தார். கடல், வாடாத தாமரை மாலையை அளித்தது. இமயமலை, அவளைத் தாங்கிச் செல்ல சிம்ம வாகனத்தை அளித்தது. குபேரன் குறையாத மதுவர்கத்தைக் கொண்டிருக்கும் பாத்திரத்தை அளித்தான். அனந்தசேஷன் ரத்தினங்கள் ஒளிவீசும் பாம்புகளால் ஆன மாலையை அளித்தான்.

துர்கை ஆஹாவென்று மூவுலகும் நடுங்கச் சிரித்தாள், உறுமினாள், கனைத்தாள். அண்டங்கள் ஆடிப்போயின. அவளுடைய சிரிப்பு, இடி இடிப்பதுபோல் இருந்தது. பாரதி சொல்வானே,

வெடிபடும் அண்டத்து இடி பல தாளம் போட – வெறும்
வெளியில் ரத்தக் களியொடு பூதம் பாட – பாட்டின்
அடிபடு பொருளின் அடிபடும் ஒலியிற் கூட – களித்து
ஆடுங்காளீ! சாமுண்டீ! கங்காளீ!

அதுபோல அவளுடைய கூத்தைத் தாங்க முடியாமல் பூமி நடுங்கியது. மலைகள் குலுங்கின. மஹிஷன் என்ன இது என்று ஆச்சரியம் அடைந்தான். ஒரு புதிய எதிரி தோன்றியிருக்கிறாள் என்றவுடனேயே அவளைத் தாக்கத் தன் படைகளை அனுப்பினான். தேவி மஹாத்மியம் விரிவாக இந்தப் போரைப் பற்றிப் பேசுகிறது. அம்பிகையும் அவளுடைய சிம்மமும், தாக்க வந்த அசுரர்களைத் தவிடுபொடி ஆக்கினர். இறுதியாக மஹிஷனே தன் எருமை உருவத்தில் போருக்கு வந்தான்.

அம்பிகை தன் பாசக்கயிற்றை வீசி அவனைக் கட்டுவித்தாள். உடனே அவன் சிம்ம வடிவம் எடுத்தான். அவள் அவன் தலையைக் கொய்தாள். அவனோ கையில் வாளுடனான மனித உருவம் எடுத்தான். அவளோ தன் அம்புகளால் அவனை நார் நாராகக் கிழித்தாள். அவனோ யானை வடிவம் எடுத்தான். அவளோ அவனுடைய தும்பிக்கையை வெட்டி வீழ்த்தினாள். இப்போது அவன் மீண்டும் எருமை வடிவம் எடுத்து அவள்மீது பாய்ந்தான்.

சண்டிகை தன் பாத்திரத்தில் நிரம்பியிருந்த பானத்தைக் குடித்துவிட்டு கண்கள் சிவக்க இடியென நகைத்தாள். மீண்டும் பாரதி.

பாழாம் வெளியும் பதறிப்போய் மெய் குலைய – சலனம்
பயிலும் சக்திக் குலமும் வழிகள் கலைய – அங்கே
ஊழாம் பேய்தான் ஓஹோஹோவென்றலைய – வெறித்து
உறுமித் திரிவாய், செருவெங்கூத்தே புரிவாய்!

தன் அம்புகளால் மஹிஷனைத் துளைத்தெடுத்த துர்கை, அவனைக் கீழே தள்ளி, அவன் கழுத்தைக் காலால் மிதித்தாள். அப்போது எருமையின் வாயிலிருந்து மனித உருவில் அவன் வெளியே வந்தான். அவள் தன் வாளினால் அவன் கழுத்தை அறுத்துத் தள்ளினாள். பெருத்த சத்தத்துடன் மஹிஷன் வீழ்ந்தான். தேவர்கள் ஆர்ப்பரித்தனர்.

இவ்வாறுதான் அம்பிகை துர்கை, மஹிஷனை அழித்து மஹிஷாசுரமர்தினி என்னும் பெயர் பெற்றாள். இந்த மாபெரும் யுத்தத்தைத்தான் பல்லவர்கள் எக்காலத்துக்கும் அழியாத வகையில் மாமல்லபுரத்தில் சிற்பமாக வடித்துள்ளனர். இந்தியச் சிற்பக்கலை வரலாற்றிலேயே தனித்துப் பாராட்டப்படவேண்டிய மாபெரும் சிற்பம் இதுவாகும்.

மஹிஷாசுரமர்தினி, மாமல்லபுரம், படம்: அசோக் கிருஷ்ணசுவாமி

மஹிஷாசுரமர்தினி, மாமல்லபுரம், படம்: அசோக் கிருஷ்ணசுவாமி

இங்கே தேவி தன் சிம்ம வாகனத்தில் கால்களை இருபுறமும் போட்டு வீற்றிருக்கிறாள். அவளுக்கு எட்டு கரங்கள் காண்பிக்கப்பட்டிருக்கின்றன. சக்கரமும் சங்கும் இரு கரங்களில். வில் ஒரு கரத்தில். அதற்கு இணையான கரத்தில் அம்புறாத் தூணியிலிருந்து அம்பை உருவிக்கொண்டிருக்கிறாள். ஒரு கையில் வாள், இணைக் கையில் கேடயம். ஒரு கையில் மணி. தேவியின் தரப்பில் பல கணங்கள் ஆயுதங்களுடன் முன்னோக்கிச் செல்கின்றனர். ஒரு கணம், அவளுடைய குடையை ஏந்திச் செல்கிறது. தேவியின் படையில் ஒரு பெண் வாளைச் சுழட்டி ஓர் அசுரனைக் கொன்று வீழ்த்திக்கொண்டிருக்கிறாள்.

எதிர்த் தரப்பில் மாபெரும் பலம் பொருந்திய மஹிஷன், கையில் கனமான தடியை ஏந்தி, சற்றே பின்னோக்கி நகர்கிறான். மனித உருவத்தின் கழுத்துக்குமேல் கிரீடம் அணிந்த எருமைத் தலை. அவனுடைய அசுரப் படை வீரர்கள் பின்வாங்கிக்கொண்டிருக்கிறார்கள். ஆயினும் அவனுடைய குடை இன்னமும் சாய்ந்துவிடவில்லை. அவன் இன்னமும் தோற்றுவிடவில்லை.

இது சண்டையின் நடுவிலிருந்து ஒரு படம். பல்லவர்கள் மாமல்லையிலேயே மேலும் இரு இடங்களில் இந்தச் சண்டையின் இருவேறு பகுதியைச் செதுக்கியுள்ளனர். சாளுவன்குப்பம் அதிரணசண்ட மண்டபத்துக்குமுன் சிறு கற்பாறையில் ஒரு சிற்பம். இங்கே மஹிஷன் கிட்டத்தட்ட தோற்றேவிட்டான். அவனுடைய மகுடம் கீழே விழுந்துவிட்டது. அவனுடைய குடை சாய்ந்துவிட்டது. இப்போது அவன் ஓட்டம் எடுக்கப்போகிறான். அவனை வெட்டி வீழ்த்த தன் சிம்மத்திலிருந்து கீழே இறங்கிக்கொண்டிருக்கிறாள் தேவி. சிம்ம முகக் கணம் ஒன்று பாய்ந்து அவன் கையைக் கடிக்கிறது. எருமை முகத்தில் சோர்வு. நாக்கு தள்ளிக்கொண்டு புஸ் புஸ்ஸென்று மூச்சுவிடுகிறது என்பதை ஊகிக்கமுடிகிறது. இப்போது போர் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது.

மஹிஷாசுரமர்தினி, அதிரணசண்ட மண்டபம், சாளுவன்குப்பம், படம்: அசோக் கிருஷ்ணசுவாமி

மஹிஷாசுரமர்தினி, அதிரணசண்ட மண்டபம், சாளுவன்குப்பம், படம்: அசோக் கிருஷ்ணசுவாமி

அடுத்த கட்டத்தை இந்தியாவின் பல்வேறு இடங்களில் பார்க்கலாம். ஐஹொலெயில் எருமை வடிவ மஹிஷனின் பின்புறத்தை சூலத்தால் பிடித்து, கழுத்தை நசுக்கிப் பின்புறமாகத் திருப்பி, முட்டியால் முதுகின்மீது அமர்ந்திருக்கிறாள் துர்கை. எல்லோராவில் காலால் எருமையை மிதித்து கழுத்தை வளைத்துப் பிடித்திருக்கிறாள் துர்கை. சிங்கம் தன் பாட்டுக்கு எருமையைக் கடித்துக்கொண்டிருக்கிறது.

புவனேஸ்வரத்தின் வேதாள தேவன் கோவிலில்தான் பிரமாதமான ஒரு வடிவத்தைப் பார்க்க முடிகிறது. இங்கே மனித உடலும் எருமைத் தலையுமான மஹிஷன். சிற்பத்தில் தன் முதுகைக் காட்டியபடி இருக்கிறான். அவன்மீது ஏறி, மிதித்து, கழுத்தைக் கீழ்நோக்கி அழுத்தி, சூலத்தால் அவன் கழுத்தைக் குத்தும் முயற்சியில் உள்ளாள் துர்கை. அவள் கையில் இருக்கும் பாம்பு மஹிஷனைக் கொத்தச் செல்வதுபோல் உள்ளது. வாகனமான சிம்மமோ அவன்மீது பாய்ந்து அவன் கையைக் கடிக்கிறது!

குஜராத்தின் ராணி கி வாவ் படிக்கிணற்றில் உள்ள சிற்பத்தில் எருமையின் கழுத்தைப் பிளந்துகொண்டு மனித உருவில் மஹிஷன் வெளியேறுகிறான். சிம்மம் எருமையின் பின்புறத்தைக் கடித்துக்கொண்டிருக்கிறது. தேவி அந்த மனித உருவத்தின் தலையைக் கையினால் பற்றிக்கொண்டு, சூலத்தால் குத்தச் செல்கிறாள்.

மஹிஷாசுரமர்தினி - ஐஹொலெ, எல்லோரா, புவனேஸ்வரம், பாடன் - குஜராத்

மஹிஷாசுரமர்தினி – ஐஹொலெ, எல்லோரா, புவனேஸ்வரம், பாடன் – குஜராத்



__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

 

தமிழ்நாட்டில் ஒரு சிலர் தங்களைத் தனியாகப் பிரித்துக் காட்டிப் பேசிக்கொள்வதுண்டு. எங்கள் கொற்றவை வேறு, உங்கள் துர்கை வேறு; எங்கள் மால் வேறு, உங்கள் விஷ்ணு வேறு; எங்கள் முருகன் வேறு, உங்கள் சுப்பிரமணியன் வேறு என்பார்கள். பரிபாடல், திருமுருகாற்றுப்படை, சிலப்பதிகாரம், சங்க இலக்கியங்கள் என்று நீங்கள் என்னதான் ஆதாரம் கொடுத்தாலும் கண்டுகொள்ளவே மாட்டார்கள். இளங்கோவடிகள், சிலப்பதிகாரத்தின் வேட்டுவ வரியில் “வலம்படு கொற்றத்து வாய்வாட் கொற்றவை இரண்டு வேறு உருவில் திரண்ட தோள் அவுணன் தலைமிசை நின்ற தையல்” என்கிறார்.

இரண்டு வேறு உருவில் திரண்ட தோள் அவுணன் என்றால் இருவேறு உருவங்களில் இருந்த அசுரனான மஹிஷாசுரன். அவன் தலையை அரிந்து அந்தத் தலைமீது நிற்கிறாள் கொற்றவை என்று மிகத் தெளிவாக கொற்றவைதான் துர்கை எனும் மஹிஷாசுரமர்தினி என்று அடையாளம் காட்டுகிறார் இளங்கோ. இதே வேட்டுவ வரியில் இன்னும் வெளிப்படையாகவே,

ஆனைத்தோல் போர்த்துப் புலியின் உரியுடுத்துக்
கானத்து எருமைக் கருந்தலை மேல் நின்றாயால்
வானோர் வணங்க மறைமேல் மறையாகி
ஞானக்கொழுந்தாய் நடுக்கின்றியே நிற்பாய்
வரிவளைக்கை வாளேந்தி மாமயிடன் செற்றுக்
கரியதிரி கோட்டுக் கலைமிசை மேல் நின்றாயால்
அரியரன் பூமேலோன் அகமலர்மேல் மன்னும்
விரிகதிர் அம்சோதி விளக்காகியே நிற்பாய்

என்று சொல்கிறார்.

‘மாமயிடன் செற்று’ என்றால் ‘மஹிஷனை வெட்டி’ என்று பொருள். ‘கானத்து எருமைக் கருந்தலைமேல் நிற்பவள்’ என்றால் மஹிஷனின் எருமைத் தலைமீது நிற்பவள். அவளுக்கு சிம்மம் மட்டும் வாகனமில்லை, கரியதிரி கோட்டுக் கலையும், அதாவது சுருள் கொம்புடைய மானும் அவள் அருகில் இருக்கும், அல்லது அவள் அதன்மீது நிற்பாள்.

பல்லவர் தொடங்கி, பாண்டிய, சோழர் காலம் வழியாக, தமிழகத்தில் வழிபடப்படும் துர்கையாக, கொற்றவையாக இவள் நிற்பது மஹிஷனின் தலைமீது. இதன் மிக ஆரம்பகட்ட வடிவம் மாமல்லையின் திரிமூர்த்தி மண்டபத்தை ஒட்டிய சுவரில் உள்ளது. மிக அழகான சிற்பம் இது. எட்டு கரங்கள், சமபங்கமாக நிற்கிறாள். சமபங்கம் என்றால் இரு கால்களும் நேராக, எந்த வளைவுகளும் இல்லாமல் நிற்பது. எட்டு கரங்களில் ஆறில் சங்கு, சக்கரம், வில், அம்பு, வாள், கேடயம் ஆகியவை. ஒரு கை அபய முத்திரையுடனும் ஒரு கை கடி ஹஸ்தம் எனப்படும் இடுப்பில் வைத்த கையுடனும் உள்ளது. மார்புக் கச்சு அணிந்திருக்கிறாள். இரு காதுகளிலும் ஓலைக் குண்டலங்கள் (பத்ர குண்டலம்). தலையில் கரண்ட மகுடம். அவள் பெரும் எருமைத் தலையின்மீது நின்றுகொண்டிருக்கிறாள்.

மஹிஷாசுரமர்தினி, திரிமூர்த்தி மண்டபம், மாமல்லபுரம், படம்: அசோக் கிருஷ்ணசுவாமி

மஹிஷாசுரமர்தினி, திரிமூர்த்தி மண்டபம், மாமல்லபுரம், படம்: அசோக் கிருஷ்ணசுவாமி

பின்னர் காஞ்சி கைலாசநாதர் கோவிலில் திரும்பிய இடமெல்லாம் துர்கை சிலையை வடித்தனர் பல்லவர்கள். சிவன் கோவில்களில் வடக்குத் திசை கோஷ்டத்தில் துர்கையை வடித்தனர். இவற்றில் பலவும் கானத்து எருமைக் கருந்தலைமேல் நிற்பவை. சில, சிம்மத்திலிருந்து கீழே இறங்குவதுபோன்றவை. அதில் ஒன்றைத்தான் இக்கட்டுரையின் தொடக்கத்தில் பார்த்தீர்கள்.

மாமல்லையிலேயே, ஆதிவராஹ மண்டபம் என்ற குகைக்கோவிலில் மிக மிக அழகிய மஹிஷமர்தினியின் வடிவம் ஒன்று உள்ளது. இங்கே அவள் மிக ஒயிலாக, திரிபங்கம் என்னும் வடிவில், எருமைத் தலையின்மீது நிற்கிறாள். மூன்று நேர்கோடுகளில் வளைந்து நிற்பதுதான் திரிபங்கம். தலை, உடல், கால்கள் மூன்றும் வெவ்வேறு திசையில் சென்றுகொண்டிருக்கும்.

மஹிஷாசுரமர்தினி, ஆதிவராஹ மண்டபம், மாமல்லபுரம், படம்: அசோக் கிருஷ்ணசுவாமி

மஹிஷாசுரமர்தினி, ஆதிவராஹ மண்டபம், மாமல்லபுரம், படம்: விஜய் பட்

இருபுறமும் காவல்பெண்டிர். ஒருத்தி வாள் ஏந்தியுள்ளாள், மற்றொருத்தி, வில். இரு பக்தர்கள் காலடியில் மண்டியிட்டு அமர்ந்துள்ளனர். இரு கணங்கள், ஒன்று சாமரம் வீச, இன்னொன்று படையலுடன் வருகிறது. கணங்களுக்கு இருபுறமும் சிம்மம், மான் ஆகியவற்றின் தலை தெரிகிறது. துர்கை கைகளில் சக்கரம், சங்கு, வாள், கேடயம், மணி, வில், ஆகியவை. ஒரு கை இடுப்பின்மீது. சாய்ந்த அவள் முகத்தில் அத்தனை சாந்தம். சற்றுமுன்னர்தான் கோபம் கொப்பளிக்க, மஹிஷனைச் செற்றனள்.

எருமைத் தலைமீது நின்றபடி, திருகு கொம்புகளுடன் கூடிய மானின்மீது சாய்ந்தபடி இருக்கும் பல்லவர் கால மஹிஷாசுரமர்தினி சிற்பம் ஒன்று சென்னை அருங்காட்சியகத்தில் உள்ளது. இதுவும் மிக அழகிய சிற்பமே, ஆனால் முகம் நன்றாகத் தேய்ந்துபோயிருக்கிறது. கைகளில் சங்கு, சக்கரம், வில், அம்பு, வாள், கேடயம் ஆகியவற்றுடன், ஒரு கை அபயஹஸ்தமாகவும் மற்றொன்று இடுப்பின்மீதும் வைத்தபடி உள்ளது.

மஹிஷாசுரமர்தினி, சென்னை அருங்காட்சியகம்

சோழர்களின் மூன்று கோவில் கோஷ்டச் சிற்பங்களை எடுத்துக்கொள்வோம். முதலாவது, முதலாம் பராந்தக சோழன் காலத்தின் புள்ளமங்கைக் கோவில். இரண்டாவது, மதுராந்தக உத்தம சோழன் காலத்தின் கோனேரிராஜபுரம் கோவில். மூன்றாவது, முதலாம் குலோத்துங்கன் காலத்தின் மேலக்கடம்பூரில் உள்ள மிக அழகிய ரத வடிவிலான கோவில். எருமைத் தலையின் வடிவம், அளவு, கொற்றவையின் நிற்கும் கோலம், அவளுடைய ஆயுதங்கள், முகபாவம் என்று பலவற்றில் மாற்றங்களைக் காணலாம்.

மஹிஷாசுரமர்தினி - புள்ளமங்கை, கோனேரிராஜபுரம், மேலக்கடம்பூர்

மஹிஷாசுரமர்தினி – புள்ளமங்கை, கோனேரிராஜபுரம், மேலக்கடம்பூர், படங்கள்: வி.கே.ஶ்ரீனிவாசன்

இன்னொரு மிக அழகான வடிவை பாதாமி சாளுக்கியர்களின் ஆலம்பூரில் ஒரு தூணில் கண்டேன். இதற்கு இணையான வடிவை வேறு எங்கும் பார்த்ததில்லை. இங்கே மஹிஷன் தோற்றுவிட்டான். கையைக் கூப்பிவிட்டான். அவனுடைய காலம் முடியப்போகிறது. அம்பிகை, பாயும் சிம்மத்தின்மீது அமர்ந்தபடி, வில்லை ஏந்தி, அம்புகளைச் சரம் சரமாகத் தொடுத்துக்கொண்டிருக்கிறாள். சிதைந்த
சிற்பம்தான். ஆனால் அதன் வடிவ நேர்த்தியும் இடத்தைப் பயன்படுத்திய திறனும் அசாத்தியமானவை.

மஹிஷாசுரமர்தினி, ஆலம்பூர்

மஹிஷாசுரமர்தினி, நவபிரம்மா, ஆலம்பூர்

0

தேவி மஹாத்மியம் காணும் தேவி, முழுமுதற் கடவுளானவள். பராசக்தி என்று பாரதியார் அழைக்கும் கடவுள். சாக்தம் எனும் தேவி வழிபாடு செய்வோரின் கடவுள். அவள்தான் அரி, அரன் இருவருள்ளும் இருந்து இயக்குபவள். தேவி மஹாத்மியத்தின் முதல் அத்தியாயமே, மது கைடபன் இருவரையும் விஷ்ணு வதம் செய்வதிலிருந்துதான் தொடங்குகிறது.

விஷ்ணு, ஆதிசேஷன்மீது படுத்து, யோக நித்திரையில் இருக்கிறார். அப்போது அவர் காது அழுக்கு மது, கைடபன் எனும் இரு அசுரர்களாக ஆகிறது. அவர்கள் உடனேயே, விஷ்ணுவின் நாபிக் கமலத்தில் அமர்ந்திருக்கும் பிரமனை ஒழித்துக்கட்டவேண்டும் என்று முடிவெடுக்கிறார்கள். பிரமனோ விஷ்ணுவை எப்படி எழுப்புவது என்று தெரியாமல் திகைக்கிறார். எனவே தேவியைத் துதிக்கிறார். தேவிதான் யோகநித்திரையாக விஷ்ணுவின் கண்களில் அமர்ந்திருக்கிறாள்.

பிரமனின் துதியினால் மகிழ்ந்த யோகநித்திரையானவள் விஷ்ணுவிடமிருந்து நீங்க, அவர் விழிப்புறுகிறார். மது கைடபனுடன் ஐயாயிரம் ஆண்டுகள் கடுமையான சண்டையிடுகிறார். ஆனால் வெற்றி யாருக்கும் கிட்டுவதில்லை. மீண்டும் மஹாமாயை தலையிட்டு, மது கைடபர்களைக் குழப்புகிறாள். அவர்கள் வெறியில் விஷ்ணுவிடமே, ‘உனக்கு என்ன வரம் வேண்டுமே தருகிறேன்’ என்கின்றனர். விஷ்ணுவும் தன் கையால் அவர்களைக் கொல்லவேண்டும் என்று வரம் கேட்கிறார். சரி என்னும் மது, கைடபன், பூமியில் நீர் இல்லாத பகுதியில் எங்களை வைத்துக் கொன்றுகொள் என்கிறார்கள். விஷ்ணு அவர்களைத் தன் மடிமீது கிடத்தி, சக்கரத்தால் அவர்கள் தலையை அரிகிறார்.

விஷ்ணுவின் சயன மூர்த்தி வடிவைப் பற்றிப் பார்க்கும்போது இதுகுறித்து மேலும் விவரிக்கிறேன். இப்போதைக்கு இந்தக் கதையைச் சொல்வதன் காரணம், தேவிதான் மாயையாக, உலகில் அனைத்துச் செயல்களுக்கும் காரணமாக இருப்பதாக தேவி மஹாத்மியம் சொல்வதை விளக்குவதற்கே.

மஹிஷனைக் கொன்றபின் தேவியிடம் அனைத்து தேவர்களும் வரம் கேட்கின்றனர். எப்போதெல்லாம் தங்களுக்குப் பிரச்னைகள் வருகின்றனவோ, அப்போது தாங்கள் அழைத்தால் வந்து உதவவேண்டும் என்கின்றனர். தேவியும், அவ்வாறே செய்வதாக வரம் அளிக்கிறாள்.

அப்படியாகத்தான் சும்பன், நிசும்பன் ஆகியோரை தேவி வதம் செய்கிறாள்.

சும்பனும் நிசும்பனும் சகோதரர்கள். அசுரர்கள். இந்திரனைத் தோற்கடித்து, சூரியன், சந்திரன், குபேரன், யமன், வருணன், வாயு, அக்னி ஆகிய தேவர்களின் சக்தியையெல்லாம் பிடுங்கிக்கொண்டு விரட்டிவிடுகின்றனர். அப்போது இந்தத் தேவர்கள் அனைவருக்கும் தேவியின் நினைவு வருகிறது. அவளைத் துதிக்கின்றனர்.

அப்போது அந்தப் பக்கமாக சிவனின் மனைவியாகிய பார்வதி வருகிறாள். அவள் தேவர்களிடம் அவர்கள் யாரைத் துதிக்கின்றனர் என்று கேட்கிறாள். அந்தக் கணத்தில் பார்வதியின் உடலிலிருந்து தேவி அம்பிகை வெளியேறி, அவர்களெல்லாம் தன்னைத்தான் துதிக்கிறார்கள் என்கிறாள். சும்பனையும் நிசும்பனையும் வதம் செய்வதற்காகத்தான் அவ்வாறு அவர்கள் வேண்டிக்கொள்கிறார்கள் என்கிறாள்.

சும்ப நிசும்பனுக்கு சண்டன், முண்டன் என்று இரு தளபதிகள். அவர்கள் அம்பிகையைக் காண்கிறார்கள். அவளுடைய அழகில் மயங்கி, ‘ஆஹா, இவளே நம் தலைவன் சும்பனுக்கு ஏற்ற மனையாள்’ என்று முடிவு செய்து நேராக சும்பனிடம் சென்று அவள் அழகை வருணிக்கிறார்கள். இந்திரன், பிரமன் முதலான தேவர்களிடமிருந்து நீங்கள் அனைத்தையும் பறித்துக்கொண்டவர்கள்; ஏன் பெண்களிலேயே தலையான இந்த ரத்தினத்தை இன்னமும் பறிக்காமல் இருக்கிறீர்கள் என்கிறார்கள்.

இதைக் கேட்ட சும்பன், சுக்ரீவன் எனும் அசுரனை அம்பிகையிடம் தூது அனுப்புகிறான். அம்பிகையோ, சுக்ரீவனிடம், தான் ஒரு சபதம் செய்திருப்பதாகச் சொல்கிறாள். தன்னைப் போரில் எவன் வெல்கிறானோ, தன் கர்வத்தை எவன் அழிக்கிறானோ, அவனைத்தான் தான் திருமணம் செய்துகொள்வேன் என்கிறாள்.

தூதன் சொன்னதைக் கேட்ட சும்பன் கடும் கோபம் கொண்டு தூம்ரலோசனன் என்பவனை அனுப்பி, அம்பிகையைத் தரதரவென்று இழுத்துவரச் சொன்னான். அம்பிகை தூம்ரலோசனனைத் தன் பார்வையாலேயே சாம்பலாக்கினாள். அவனுடன் கூட வந்த அசுர சேனையை நிர்மூலம் செய்தாள். அவளுடைய சிம்ம வாகனமும் தன் பங்குக்குப் பலரைக் கொன்றழித்தது.

சும்பன் அடுத்து சண்டனையும் முண்டனையும் அனுப்பினான். அந்தப் பெண்ணைத் தலைமுடியைப் பற்றி இழுத்துக்கொண்டு வா என்று கட்டளையிட்டான்.

சண்டனையும் முண்டனையும் அவர்களுடன் வந்த பெரும் படையையும் கண்ட தேவி கடும் கோபம் கொண்டாள். அவளுடைய முகம் கருத்தது. அவளுடைய புருவங்கள் நெரிந்தன. நெரிந்த புருவங்களிலிருந்து காளி குதித்திறங்கினாள்.

கையில் வாளும் பாசக்கயிறும் கொண்டவளாக இருந்தாள் அவள். கழியின் முனையில் கபாலத்தைக் கொண்ட கட்வாங்கம் என்ற ஆயுதத்தை அவள் தரித்திருந்தாள். கபால மாலை அணிந்திருந்தாள். புலித்தோலை அணிந்திருந்தாள். அவளுடைய தேகம் எலும்பும் தோலுமாக இருந்தது. அவளுடைய வாய் பிளந்திருந்தது. அதிலிருந்து நாக்கு வெளியே தொங்கிக்கொண்டிருந்தது. அவளுடைய கண்கள் உள்ளடங்கியிருந்தன.

அவள் ஆக்ரோஷமாகக் கத்திக்கொண்டே சண்ட முண்டப் படைகள்மீது பாய்ந்தாள். அசுரர்களை அடித்து நொறுக்கி, வாயிலே போட்டு மென்று தின்னத் தொடங்கினாள் காளி. இதைக் கண்ட சண்டன் அவள்மீது அம்புகளைப் பாய்ச்சினான். முண்டனோ அவளை நோக்கிச் சக்கரங்களை எய்தான். காளியோ தன் வாயைப் பிளந்து அனைத்தையும் விழுங்கினாள். பிறகு சண்டன்மீது பாய்ந்து அவன் தலைமுடியைப் பற்றி, ஒரே வெட்டில் அவன் கழுத்தை அறுத்துத் தள்ளினாள்.

சண்டன் இறந்ததைக் கண்ட முண்டன், அவள்மீது பாய்ந்தான். காளியோ முண்டனையும் கீழே தள்ளி ஒரே வெட்டில் அவனையும் சாய்த்தாள். பின்னர் சண்ட முண்டர்களின் அறுத்த தலையைக் கையில் ஏந்தியபடி தேவியிடம் சென்றாள். ‘இதோ, சண்ட முண்டர்களின் தலைகள். இனி நீயே சும்ப நிசும்பர்களை வதம் செய்துகொள்’ என்றாள். தேவியும் மிக்க மகிழ்ந்து, காளியைப் பார்த்து, சண்ட முண்டர்களை வதம் செய்த நீ, இனி சாமுண்டி என்று அழைக்கப்படுவாய் என்றாள்.

சண்ட முண்டர்கள் அழிந்ததைக் கேள்விப்பட்ட சும்பன், மீதமிருந்த தன் படைகளையெல்லாம் ஒன்று திரட்டினான். ஒரு பக்கம் சும்ப நிசும்பர்கள், அவர்களின் பெரும் படை. மற்றொரு பக்கமோ, தேவியும் அவளது சிம்ம வாகனமும் மட்டும்.

உடனே கடவுள்கள் எல்லோரும் ஒன்றுதிரண்டு, தங்கள் சக்திகளுடன் சண்டிகையை நோக்கிச் சென்றனர்.

பிரமனின் சக்தி, பெண் வடிவாக, கையில் அக்கமாலையையும் கமண்டலத்தையும் ஏந்தியபடி அன்னங்கள் பூட்டிய தேரில் வந்தது. அவளுக்கு பிரஹ்மாணி என்று பெயர்.

மஹேஸ்வரனின் சக்தி, காளையின் மீதேறி, கையில் திரிசூலத்தை ஏந்தி வந்தது. அவள்தான் மாஹேஸ்வரி.

குமரனின் சக்தி, மயில் மீதேறி, கையில் வேலுடன் அசுரர்களை அழிக்க வந்தாள். அவள்தான் கௌமாரி.

விஷ்ணுவின் சக்தி, கருடனின் மீதேறி, கையில் சக்கரம், சங்கு, கதை, வில், அம்பு, வாள் ஆகியவற்றுடன் வந்தாள். அவள்தான் வைஷ்ணவி.

விஷ்ணுவின் வராஹ அவதாரத்தின் சக்தி, காட்டுப்பன்றி முகத்துடன் வாராஹி என வந்தாள்.

விஷ்ணுவின் நரசிம்ம அவதாரத்தின் சக்தி, சிம்ம முகத்துடன், பிடரி மயிர் சிலிர்க்க, நாரசிம்ஹி என வந்தாள்.

இந்திரனின் சக்தி, கையில் வஜ்ராயுதத்துடன் யானைகளின் அரசனான ஐராவதத்தின்மீதேறி ஐந்த்ரி என்று வந்தாள்.

இறுதியில் சண்டிகையின் சக்தியும் தன் முழு பலத்துடன் வெளிவந்தது.

உடனே சண்டிகை, சிவனைப் பார்த்து, ‘என் தூதராக நீங்கள் சும்ப நிசும்பர்களைப் போய்ப் பாருங்கள். அவர்கள் தாம் தேவர்களிடம் கைப்பற்றிய உலகங்களையும் செல்வங்களையும் தந்துவிட்டுச் சென்றுவிடச் சொல்லுங்கள். அப்படி அவர்கள் கேட்கவில்லையாயின் போருக்கு வரச்சொல்லுங்கள். என் நரிகளுக்கு விருந்தாவார்கள்’ என்றாள்.

சிவனையே தூதனாக அனுப்பியதால் அவளுக்கு சிவதூதி என்ற பெயரும் வந்தது.

தூதனாகச் சென்ற சிவனுடைய சொற்களைக் கேட்ட சும்ப நிசும்பர்கள், காத்யாயனி இருக்கும் இடத்துக்கு வந்தனர். அவளுடன் போர் புரியத் தொடங்கினர். பிரஹ்மாணி முதற்கொண்டு சப்த சக்திகளும் அசுரப் படைகள்மீது பாய்ந்து போரிட்டு அவர்களைக் கொன்று குவித்தனர்.

அப்போதுதான் ரக்தபீஜன் என்ற அசுரன் களமிறங்கினான். ரக்தபீஜனுக்கு ஒரு வரம் உண்டு. அவனுடைய ஒவ்வொரு சொட்டு ரத்தமும் தரையில் வீழ்ந்தால், அந்த ரத்தச் சொட்டே மற்றொரு ரக்தபீஜனாக, அவனுடைய அனைத்துச் சக்திகளுடனும் சேர்ந்து உருவாகும். நூறு சொட்டு ரத்தம் என்றால் நூறு ரக்தபீஜன்கள். சப்த சக்திகளும் ரக்தபீஜனை மாறி மாறித் தாக்கினர். ஆனால் அவன் ரத்தம் கீழே சொட்டச் சொட்ட, அவனோ நூறாக, ஆயிரமாக, பலவாகக் கிளைத்தான்.

உடனே தேவி சத்தமாகச் சிரித்தாள். ‘ஓ காளி, ஓ சாமுண்டி, உன் வாயைத் திறந்து கொட்டும் ரத்தத்தையெல்லாம் பருகிவிடு’ என்று ஆணையிட்டாள். தேவி ரக்தபீஜனை அடிக்க அடிக்க, வெட்ட வெட்ட, குத்த குத்த, ரத்தம் பெருகப் பெருக, சாமுண்டி, ஒரு சொட்டு விடாமல் குடித்துத் தீர்த்தாள். இறுதியில் சொட்டு ரத்தம்கூட இல்லாமல் ரக்தபீஜன் வலுவிழந்து வீழ்ந்து இறந்துபோனான்.

அடுத்து தேவி நிசும்பனுடன் கடுமையான போர் புரிந்தாள். அம்புகளால் அவனைத் துளைத்துத் தரையில் வீழ்த்தினாள். நிசும்பன் மயங்கிச் சாய்ந்தான். சும்பனது கோபத்துக்கு அளவே இல்லை. அவன் பாய்ந்து பாய்ந்து பல திசைகளிலிருந்தும் தேவியைத் தாக்கினான். தேவியோ சும்பனைத் தன் ஈட்டியால் தாக்க, அவன் மயங்கிச் சரிந்தான். இதற்கிடையில் நிசும்பன் மயக்கத்திலிருந்து விடுபட்டு, பத்தாயிரம் கைகளை உருவாக்கிக்கொண்டு சண்டிகையை நோக்கி அனைத்துக் கைகளாலும் சக்கரங்களை ஏவினான். மாறி மாறி இருவரும் தாக்கிக்கொண்டனர்.

அப்போது சண்டிகை, ஈட்டியால் அவனது நெஞ்சைப் பிளந்தாள். அவன் கீழே விழுகையில் தன் வாளால் அவன் தலையைக் கொய்தாள்.

சும்பன் இப்போது தேவியை நோக்கி, ‘நான் இப்போது தனி ஆளாக இருக்கிறேன். நீயோ இத்தனை பேருடன் இருக்கிறாய்’ என்றான். அதற்கு தேவி, ‘நான் இவ்வுலகில் எப்போதும் தனியாகவே இருக்கிறேன். இவர்கள் அனைவருமே என் சக்தியின் வெளிப்பாடுகளே’ என்றாள். உடனே பிரஹ்மாணி தொடங்கி அனைத்துச் சக்திகளும் தேவியின் உடலுக்குள் புகுந்தன. அம்பிகை தன்னந்தனியாக நின்றனள்.

தேவர்களும் அசுரர்களும் பார்த்துக்கொண்டிருக்கையில் அம்பிகைக்கும் சும்பனுக்கும் இடையில் பெரும் போர் தொடங்கியது. சும்பன் வீசிய அனைத்து ஆயுதங்களையும் தேவி அழித்துக்கொண்டே வந்தாள். இறுதியாக அவன் மார்பில் ஓங்கி அடித்துக் கீழே தள்ளினாள். கீழே விழுந்த சும்பன் பாய்ந்து எழுந்து தேவியின் தலைமுடியைப் பற்றிக்கொண்டு வானில் எழும்பினான். வானிலேயே அவர்கள் போரிட்டனர். வெகு நேரம் நிகழ்ந்த போருக்குப்பின், தேவி சும்பனைக் கீழே வீழ்த்தி தன் ஈட்டியால் அவனைக் குத்திக் கொன்றாள்.

இவ்வாறாக சும்ப நிசும்பர்களை தேவி வதம் செய்தாள்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

 இந்தக் கதையில் நாம் காளி என்னும் சாமுண்டி, சும்ப நிசும்பனை வதம் செய்த நிசும்பசூதனி, ஏழு கடவுளர்களின் சக்தி வடிவமாகிய சப்த மாதர்கள் ஆகியோரைப் பார்த்தோம். இந்த வடிவங்கள் அனைத்துமே சிற்பங்களாக இந்தியா முழுமைக்கும் கிடைக்கின்றன.

பல்லவர்களின் ஆரம்பகாலக் குகைக்கோவில்களில் சப்த மாதர்கள் இருப்பதில்லை. முதன்முதலில் சப்தமாதர்கள் கிடைப்பது காஞ்சி கைலாசநாதர் கோவிலில்தான். ஆனால் மாமல்லையில் ஓரிடத்தில் பல பின்னணியிலிருந்து வந்த சப்த மாதர் சிலைகள் உள்ளன. அதில் சாமுண்டி ஒருத்திதான் தனிப்பெரும் அழகோடு திகழ்பவள். அவளுடைய சிலையுடன் கூடச் செய்யப்பட்ட சிலைகள் வேறு எங்கோ காணாமல் போய்விட்டன என்று சொல்லலாம்.

சாமுண்டி

மாமல்லை சாமுண்டி, படம்: பாபு மனோ

சாமுண்டியின் காதுகளில் வித்தியாசமான குண்டலங்கள் காணப்படுகின்றன. ஒரு காதில் பொந்தில் இருக்கும் ஆந்தையே குண்டலம். இன்னொரு காதில் பிரேத குண்டலம். செத்த பிணத்தையே குண்டலமாக அணிந்திருக்கிறாள். இதே மாதிரியான குண்டலங்களையே நிசும்பசூதனியும் அணிவதால் பல இடங்களில் சாமுண்டி, நிசும்பசூதனி இரு வடிவங்களையும் பார்ப்போர் குழப்பிக்கொள்கின்றனர். சாமுண்டி கபாலங்களைக் கோத்து பூணூலாக அணிந்துள்ளாள். அவளுடைய கண்கள் உள்ளடங்கியுள்ளன. பல இடங்களில் அவள் உடம்பில் எலும்புகள் தெரியும்வண்ணம் செதுக்கப்படுகிறாள். ஆனால் இங்கே அப்படியல்ல. சாமுண்டியின் தலை அலங்காரமும் மிகவும் வித்தியாசமாக ஜடாபாரமாக உள்ளன.

பல்லவர்களைப்போல் அல்லாமல், முத்தரையர்களும் பாண்டியர்களும் தங்கள் குகைக்கோவில்களிலிருந்தே சப்த மாதர்களைச் சிற்பங்களாகச் செதுக்கிவைக்கத் தொடங்கினர். புதுக்கோட்டையின் திருகோகர்ணம், மலையடிப்பட்டி, குன்றாண்டார்கோவில் ஆகிய இடங்களைச் சொல்லலாம்.

சப்தமாதர்கள், மலையடிப்பட்டி, படம்: விஜெய் பட்

சப்தமாதர்கள், மலையடிப்பட்டி, படம்: விஜய் பட்

மேலே உள்ளது முத்தரையர்கள் வெட்டுவித்த மலையடிப்பட்டியின் குகைச் சுவரிலேயே செதுக்கப்பட்ட சப்தமாதர்கள் சிற்பம். மிக மிக அழகானது. பிரஹ்மாணி, மாஹேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராஹி, ஐந்த்ரி, சாமுண்டி ஆகிய எழுவரும், அவர்களுக்கு இருபுறமும் வீரபத்திரரும் கணேசரும். பல இடங்களில் வீரபத்திரர் வீணை வாசிப்பதுபோலவும் இருக்கும். இங்கே வீரபத்திரர் யோகபட்டம் அணிந்தாற்போல் உள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் ஆஷாபுரி என்ற இடத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் ஒற்றைக்கல்லில் செய்யப்பட்ட கீழ்க்கண்ட சப்தமாதர் சிற்பம் உள்ளது. இங்கே வீரபத்திரர் முதல் கணேசர் வரையில் அனைவருமே நடனமாடிக்கொண்டிருப்பதுபோல் இருக்கக் காண்கிறோம். பல்லவ பாண்டிய சாமுண்டியைப்போல் அல்லாது இங்கே எலும்பும் தோலுமாக, தொங்கும் மார்பகங்களுடன், ஒரு பிரேதத்தைக் காலால் மிதித்தபடிச் சற்றே குரூரமாகக் காட்சியளிக்கிறாள்.

சப்தமாதர்கள், ஆஷாபுரி, படம்: வி.கே.ஶ்ரீனிவாசன்

சப்தமாதர்கள், ஆஷாபுரி, படம்: வி.கே.ஶ்ரீனிவாசன்

சோழ சாம்ராஜ்ஜியத்தைச் ஸ்தாபித்த விஜயாலய சோழன், நிசும்பசூதனிக்குத் தஞ்சையில் கோவில் எழுப்பியதாகத் திருவாலங்காட்டுச் செப்பேட்டில் ராஜேந்திர சோழன் குறிப்பிடுகிறான். ஆனால் இன்று தஞ்சையில் நிசும்பசூதனி கோவில் என்று பழைய கோவில் ஏதும் இல்லை. தஞ்சையில் உள்ள ஒரு கோவிலில் நிசும்பசூதனி சிலை ஒன்று உள்ளது. ஆனால் அது விஜயாலயன் காலத்ததா அல்லது பிற்காலத்ததா என்பது தெரியவில்லை. பத்மா கைமலின் ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றில் இந்தப் படம் கிடைத்தது.

நிசும்பசூதனி, தஞ்சை, படம்: பத்மா கைமல்

நிசும்பசூதனி, தஞ்சை, படம்: பத்மா கைமல்

திருவலஞ்சுழியில் முதலாம் ராஜராஜன் கட்டுவித்த கோவில் ஒன்று உள்ளது. அங்கே ‘ஏகவீரி’ என்ற பெயரில் ஒரு சிற்பம் வழிபாட்டில் உள்ளது. அந்தச் சிற்பம்கூட நிசும்பசூதனியாக இருக்கலாமோ என்ற சந்தேகம் எனக்கு உள்ளது. வழிபாட்டுக் கோவில்களில் தமிழகத்தில் வேறு இடங்களில் நிசும்பசூதனி படிமம் உள்ளதா என்று தெரியவில்லை. ஆனால் சோழர்களுக்கு மிக முக்கியமான கடவுள் வடிவமாக நிசும்பசூதனி ஒரு காலத்தில் இருந்துள்ளது.

சென்னை அருங்காட்சியகத்தில் இரண்டு நிசும்பசூதனி படிமங்கள் உள்ளன. ஒன்று கல்லினால் ஆனது; பிற்காலச் சோழர் கலையாக இருக்கவேண்டும். அடுத்தது 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த செப்புச் சிலை. இரண்டுமே தவறாகப் பெயர் சூட்டப்பெற்றுள்ளன. கற்சிலை காளி என்ற பெயருடனும் செப்புச் சிலை மஹிஷாசுரமர்தினி என்ற பெயருடனும் உள்ளன.

மஹிஷாசுரமர்தினி சிலை வடிவமைப்பில் எருமைத்தலை கட்டாயம் இருக்கவேண்டும். அதன்மீது துர்கை நின்றுகொண்டிருப்பாள், அல்லது மஹிஷனுடன் போர் புரிந்து அவனைக் கொல்லும் நிலையில் இருப்பாள்.

காளியாகவோ அல்லது சாமுண்டியாகவோ இருக்கும்போது அவளுக்கெனத் தனியான படிம இலக்கணம் உண்டு. நிசும்பசூதனியாகக் காண்பிக்கப்படும்போது, காலடியில் பிரேதம் ஒன்று இருக்கும். சாமுண்டிக்கு ஒன்று உடல் எலும்பும் தோலுமாக, மார்பகங்கள் தொங்கியபடி இருக்கும். அல்லது உடல் கட்டுக்கோப்பாக இருந்தால் தலைமுடி ஜடாபாரமாக இருக்கும். காளியாகக் காண்பிக்கப்படும்போது தலையைச் சுற்றித் தீயின் ஜுவாலைபோல முடி இருக்கும்.

நிசும்பசூதனி, சென்னை அருங்காட்சியகம்

நிசும்பசூதனி, சென்னை அருங்காட்சியகம்

மேலே உள்ளது நிசும்பசூதனி வடிவமாகும். துரதிர்ஷ்டவசமாக, இச்சிலையின் கைகள் அனைத்துமே துண்டிக்கப்பட்டுள்ளன. இந்தத் தலையலங்காரத்தை நினைவில் கொள்ளுங்கள். மார்பைச் சுற்றி நாகப்பாம்பை இழுத்துக் கட்டி முடிச்சு போட்டுள்ளாள். இதனையே இளங்கோ அடிகள் சிலப்பதிகாரத்தின் வேட்டுவ வரியில் ‘துளை எயிற்று உரகக் கச்சுடை முலைச்சி’ என்கிறார். உரகத்துக்குப் பல்லில் துளை உள்ளதாம். உரகம் என்றால் நாகம். பல்லில் துளை உள்ள நாகத்தையே கச்சாக அணிந்தவள். இதிலிருந்தே எந்த அளவுக்கு இளங்கோ அடிகளுக்கு கொற்றவை எனும் துர்கையின், நிசும்பசூதனியின் படிம இலக்கணம் தெரிந்துள்ளது என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும். இதே நிசும்பசூதனியை சோழர் காலச் செப்புப் படிமமாகச் சென்னை அருங்காட்சியகத்தில் காணலாம்.

நிசும்பசூதனி, சோழர் காலச் செப்புப் படிமம், சென்னை அருங்காட்சியகம்

நிசும்பசூதனி, சோழர் காலச் செப்புப் படிமம், சென்னை அருங்காட்சியகம்

மேலே உள்ள கற்சிலைக்கும் செப்புப் படிமத்துக்குமான தொடர்பு எளிதில் விளங்கும். தலை அலங்காரம், பிரேத குண்டலம், ஆந்தைக் குண்டலம், காலின்கீழ் பிரேதம், பாம்பை மார்புக் கச்சாக அணிந்தவள். ஒரு கை தவிரப் பிற கைகள் உடையாமல் உள்ளன. பத்மா கைமல் அளித்திருக்கும் நிசும்பசூதனி படிமத்தின் மேம்பட்ட வடிவங்களாக இவை உள்ளன. படிம இலக்கணத்தை நன்கு புரிந்துகொள்ள இன்னொரு படம் எனக்குக் கிடைத்தது.

மார்சுர் மடிவாலாவின் சாமுண்டி என்ற பெயரில் அழைக்கப்படும் தெய்வத்தின் சிலையை நீங்கள் கீழே பார்க்கலாம். மேலே நாம் பார்த்த நிசும்பசூதனியின் வடிவமேதான். கைகள் முழுமையாகவும் அனைத்து ஆயுதங்களுடனும் நமக்குக் கிடைக்கிறது. வலது கைகளில் திரிசூலம், கீழே உள்ள பிரேதத்தைக் குத்துகிறது. பிற வலது கைகளில் ஒன்றில் உடுக்கை, மற்ற இரண்டில் வாள். இடது கைகளில் ஒன்றில் நாகம், ஒன்றில் பாசக்கயிறு, ஒன்றில் கேடயம், ஒன்றில் பாத்திரம். மேலே உள்ள செப்புச் சிலையின் இடது கைகளில் பாத்திரம், கேடயம், மணி ஆகியவை தெரிகின்றன. வலது கைகளில் வாளின் கைப்பிடியும் கிளி ஒன்றும் தென்படுகின்றன. ஒரு கை உடைந்துள்ளது.

மார்சுர் மடிவாலாவின் சாமுண்டி, படம்: The Mythic Society, Bengaluru

மடிவாலா சிலையில், விரிந்த தலை, கோரைப்பற்கள், ஆந்தை-பிரேதக் குண்டலங்கள், பாம்பைக் கச்சாக அணிந்த மார்பகங்கள், கபால மாலையைப் பூணூலாக அணிந்துள்ளது போன்றவை அப்படியே உள்ளன.

துர்கையின் புருவ நெரிப்பிலிருந்து வெளிவந்த காளி இன்று மிகப் பிரபலமான கடவுள். பல இடங்களில் புதிதாக அவளுக்குக் கோவில் கட்டப்பட்டுள்ளது. காளியின் வடிவம் கிட்டத்தட்ட நிசும்பசூதனியையும் சாமுண்டியையும் ஒத்ததாக இருக்கும், சிற்சில மாறுதல்களுடன்.

காளி, சென்னை அருங்காட்சியகம்

காளி, சென்னை அருங்காட்சியகம்

சாமுண்டியின் தலைமுடி ஜடாபாரமாக இருக்கும் அல்லது உடல் சுருங்கி, தோலும் எலும்புமாக இருக்கும். ஆனால் காளி மதர்த்த மார்பகங்களுடன் நிசும்பசூதனி போன்றே இருப்பாள். தலைமுடி தீஜுவாலையாக மேலே செல்லும்படி இருக்கும். சென்னை அருங்காட்சியகத்தில் இருக்கும் இரு உலோகச் சிலைகளைப் பாருங்கள்.

0

ஆகமங்கள் துர்கை, காளி, சாமுண்டி, மஹிஷாசுரமர்தினி, நிசும்பசூதனி, சப்த மாதர்கள் ஆகியோரின் வடிவங்களைக் குறித்து என்ன சொல்கின்றன? கோபிநாத ராவ் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

துர்கையானவள், நான்கு, எட்டு அல்லது அதற்கும் மேற்பட்ட கரங்களைக் கொண்டிருப்பாள். மூன்று கண்கள் உடையவளாக இருப்பாள். கருத்த நிறம் கொண்டவளாக இருப்பாள். மிக அழகிய உருவமும், மதர்த்த மார்பகங்களும், பருத்த தொடையும் கொண்டவளாக இருப்பாள். மஞ்சள் ஆடை அணிந்திருப்பாள். கரண்ட மகுடம் அணிந்து உடல் முழுதும் அணிகலன் பூட்டியவளாக இருப்பாள். நான்கு கரங்கள் மட்டும் இருக்கையில் சக்கரம், சங்கு, அபய முத்திரை, கடக முத்திரையுடன் இருப்பாள். பத்மத்தின்மீது நேராக நெடுக்காக நிற்பாள், அல்லது எருமைத் தலையின்மீது அவ்வாறு நிற்பாள் அல்லது சிம்மத்தின்மீது வீற்றிருப்பாள். அவளது மார்பகங்கள்மீது பாம்பால் முடிச்சிடப்பட்டிருக்கும். சிவப்பு மார்க்கச்சு அணிந்திருப்பாள். சுப்ரபேதாகமம், துர்கைக்கு எட்டு கரங்கள் இருந்தால் அவற்றில் சக்கரம், சங்கு, சூலம், வில், அம்பு, வாள், கேடயம், பாசம் ஆகியவை இருக்கும் என்கிறது.

ஆகமங்களில் ஒன்பது விதமான துர்கைகள் சொல்லப்பட்டிருப்பதாக கோபிநாத ராவ் கூறுகிறார்: அவையாவன: (1) நீலகண்டி (2) க்ஷேமசங்கரி (3) ஹரசித்தி (4) ருத்ராம்ச துர்கை (5) வனதுர்கை (6) அக்னிதுர்கை (7) ஜயதுர்கை (8) விந்தியாவாசி துர்கை (9) ரிபுமாரி துர்கை.

இவை ஒவ்வொன்றும் படிம இலக்கணமும் எப்படி இருக்கும் என்றும் கோபிநாத ராவ் சொல்கிறார். விருப்பம் உள்ளவர்கள் அவருடைய புத்தகத்தைப் படித்துத் தெளிந்துகொள்ளவும்.

0

துர்கையானவள் மஹிஷாசுரமர்தினி வடிவத்தில் இருக்கும்போது அவளுக்குப் பத்து கரங்கள் இருக்கவேண்டும் என்கிறது சில்பரத்தினம். அவளுக்கு மூன்று கண்கள் இருக்கவேண்டும். ஜடாமகுடம் கொண்டவளாக இருத்தல் வேண்டும். அந்த ஜடையில் பிறை சூடியிருக்கவேண்டும். நீல நிறத்தவளாக இருத்தல் வேண்டும். அவளுடைய கண்கள் நீலோத்பல மலர் நிறத்தில் இருக்கவேண்டும். மார்பகங்கள் உயர்ந்தும், மெல்லிய இடையுடனும், திரிபங்கமாக (மூன்று வெட்டுகளுடன்) நிற்கவேண்டும். வலது கைகளில் திரிசூலம், வாள், சக்தி, சக்கரம், வில், இடக்கைகளில் பாசம், அங்குசம், கேடயம், மழு, மணி ஆகியவை இருக்கவேண்டும். கழுத்திலிருந்து ரத்தம் பெருகும் எருமைத் தலைமீது அவள் காலை வைத்திருக்கவேண்டும். இந்த எருமைக் கழுத்திலிருந்து மனித உரு அசுரன் வெளியே வருமாறு இருக்கவேண்டும். அந்த அசுரனை தேவி பாசத்தால் கட்டியிருக்கவேண்டும். அசுரன் கையில் வாளும் கேடயமும் இருத்தல் வேண்டும். தேவியின் திரிசூலம் அவனுடைய கழுத்தில் செருகி அங்கிருந்து ரத்தம் பெருகவேண்டும். தேவியின் வலது கால் சிங்கத்தின்மீதும், இடது கால் எருமைத் தலைமீதும் படவேண்டும்.

விஷ்ணுதர்மோத்தரம், மஹிஷமர்தினி தங்க நிறத்தில் இருக்கவேண்டும் என்கிறது. அழகிய இளம் பெண்ணாக, கோபத்தில் இருப்பவளாக, சிம்மத்தின்மீது வீற்றிருப்பவளாக அவள் இருக்கவேண்டும். அவளுக்கு இருபது கரங்கள் இருக்கவேண்டும். வலக்கைகளில் சூலம், வாள், சங்கு, சக்கரம், அம்பு, சக்தி, வஜ்ரம், உடுக்கை, குடை ஆகியவற்றுடன் அபய முத்திரை. இடக்கைகளில் பாசம், கேடயம், மழு, அங்குசம், வில், மணி, கொடி, கதை, கண்ணாடி, சுத்தியல் ஆகியவை. வெட்டப்பட்ட எருமைத் தலையிலிருந்து மனித உருவில் அசுரன் வெளிப்படவேண்டும். அவன் வாயிலிருந்து ரத்தம் கொட்டவேண்டும். தேவியின் சிங்கம் அவனைக் கடிக்கவேண்டும். தேவியின் திரிசூலம் அவனுடைய கழுத்தில் குத்தவேண்டும். பாசக்கயிற்றால் அசுரன் கட்டப்பட்டிருக்கவேண்டும். அவன் கையில் வாளும் கேடயமும் இருக்கவேண்டும்.

0

பத்ரகாளி அல்லது காளி, பதினெட்டு கரங்கள் கொண்டவளாகவும் அழகிய வனப்புடையவளாகவும் இருப்பாள். அவளுக்கு மூன்று கண்கள் இருக்கும். அவள் கைகளில் அக்கமாலை, திரிசூலம், வாள், பிறைச் சந்திரன், அம்பு, வில், சங்கு, தாமரை, ஸ்ருக், ஸ்ருவா (யாகம் வளர்க்க நெய் வார்க்க உதவும் மரக்கரண்டிகள்), கமண்டலம், கழி, சக்தி, நெருப்பு, மான்தோல், நீர், பாத்திரம் ஆகியவையும் ஒரு கரம் அபய முத்திரையுடனும் இருக்கும். நான்கு சிங்கங்கள் பூட்டிய தேரில் அவள் அமர்ந்திருப்பாள்.

இவளே மஹாகாளி என்ற வடிவில் இருந்தால், கருத்த நிறத்தில் இருப்பாள். வாயில் கோரைப்பல் இருக்கும். கண்கள் விரிந்திருக்கும். இடை சிறுத்திருக்கும். நான்கு கைகள் இருக்கும். அவற்றில் வாள், கேடயம், பாத்திரம், கபாலம் ஆகியவை இருக்கும். அல்லது பருத்த உடலும் எட்டு கரங்களும் கொண்டவளாக இருப்பாள். இக்கரங்களில் சக்கரம், சங்கு, கதை, பாத்திரம், சிற்றுலக்கை, அங்குசம், பாசம், வஜ்ரம் ஆகியவை இருக்கும்.

0

சாமுண்டி நான்கு கரங்கள் கொண்டவளாக இருப்பாள். அவளுக்கு மூன்று கண்கள். சிவப்பு வண்ணத்தில் இருப்பாள். அவளுக்கு நிறையத் தலைமுடி இருக்கும். அது மேல் நோக்கிச் செல்லும். அவளது ஒரு கையில் கபாலமும் இன்னொரு கையில் சூலமும் இருக்கும். மற்ற இரு கைகள், அபய, வரத முத்திரையுடன் இருக்கும். அவள் கபாலங்கள் கோத்த பூணூலை அணிந்திருப்பாள். புலித்தோல் அணிந்திருப்பாள்.

விஷ்ணுதர்மோத்திரம், அவளுடைய உடல் ஒட்டிச் சுருங்கி எலும்பு தெரிவதுபோல் இருக்கும், அவள் பிரேதம் ஒன்றின்மீது உட்கார்ந்திருப்பாள், அவளுக்குப் பத்துக் கரங்கள் இருக்கும் என்றும் சொல்கிறது. கண்கள் குழிவிழுந்து, வயிறு ஒட்டி இருப்பாள். கைகளில் தடி, மழு, பாசம், அங்குசம், வாள், கேடயம், வில், அம்பு ஆகியவை வைத்திருப்பாள் என்கிறது.

பூர்வகாரணாகமம், சாமுண்டி சிவனைப் போன்றே தலையில் பிறை சூடியிருப்பாள், அவளுடைய வாகனம் ஆந்தை, அவளுடைய கொடி கருடன், ஒரு கையில் கபாலம், ஒரு கையில் நெருப்பு, ஒரு கையில் பாம்பு ஆகியவற்றை வைத்திருப்பாள் என்கிறது.

0

தேவி மஹாத்மியம் சப்த மாதர்கள் குறித்த தோற்றக் கதையைக் கூறுவதிலிருந்து விலகி வேறு கதையைச் சொல்கின்றன பிற புராணங்கள். சிவன் அந்தகாசுரனை வதம் செய்யும்போது இந்த சப்த மாதர்கள் உருவானதாக வராஹ புராணம் சொல்கிறது. பிரமன், மஹேஸ்வரன், குமரன், விஷ்ணு, வராஹம், இந்திரன், யமன் ஆகியோரின் சக்தி வடிவங்களான பிரஹ்மாணி, மாஹேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராஹி, ஐந்த்ரி (அல்லது இந்திராணி), சாமுண்டி ஆகியோர்தான் சப்த மாதர்கள் என்கிறது இந்தப் புராணம். இந்த எழுவருடன் சிவனின் வாயிலிருந்து யோகேஸ்வரி என்ற சக்தி தோன்றி எட்டானதாகவும் வராஹ புராணம் சொல்கிறது.

சப்த மாதர் வடிவங்கள் இந்தியா முழுமையிலும் கிட்டத்தட்ட ஒரேமாதிரியாகவே உள்ளன. நின்ற நிலையில் அல்லது அமர்ந்த நிலையில் இவர்களைக் காணலாம். இவர்கள் அந்தந்தக் கடவுளர்களின் வாகனங்களின்மீது அமர்ந்தவாறும் இருக்கலாம், அல்லது அந்தந்த வாகனங்கள் அவர்களது இருக்கையின்கீழ் செதுக்கப்பட்டிருக்கலாம். ஒவ்வொரு சக்தியும் அந்தந்தக் கடவுளரின் ஆயுதங்களைக் கையில் ஏந்தியிருப்பர். சாமுண்டியைத் தவிர மற்ற அனைவரும் அழகாகவும் சாமுண்டி மட்டும் பயமுறுத்தக்கூடியவகையிலும் இருப்பர். பிரஹ்மாணி பல இடங்களிலும் பிரமனைப் போன்றே நான்கு தலைகளைக் கொண்டவளாக இருப்பாள். சில இடங்களில் ஒற்றைத் தலையுடன் இருக்கலாம். சில இடங்களில் கௌமாரி ஆறு தலையுடனும் பன்னிரு கரங்களுடனும் இருக்கக்கூடும்.

சில இடங்களில் சப்த மாதர்கள் கையில் ஒரு குழந்தையைத் தாங்கியிருப்பதுபோல செதுக்கப்பட்டுள்ளனர். எழுவரும் எப்போதும் வீரபத்திரருக்கும் கணேசருக்கும் இடையில் இருப்பதுபோலவே காட்டப்பட்டிருப்பார்கள். சில இடங்களில் சாமுண்டியின் அருகில் எலும்புக்கூட்டுப் பேயுருவங்கள் ஆடிக்கொண்டிருப்பதுபோலவும் செதுக்கப்பட்டிருக்கும்.

கோபிநாத ராவ், தம் கையாலேயே வரைந்து ஒரு படத்தைத் தன் புத்தகத்தில் சேர்த்திருக்கிறார். அதில் சப்த மாதர்களைச் சிற்பமாகச் செதுக்காமல் வெறும் பீடங்களாக ஏழு + இரண்டு என்று செய்வதுண்டு என்று சுட்டிக்காட்டுகிறார்.

இதனை நான் நேரில் பார்த்ததில்லை. ஆனால் என் நண்பர் கிருஷ்ணகுமார், இந்தப் படத்தை அனுப்பிவைத்தார்.

கோபிநாத ராவ், நிசும்பசூதனி வடிவம் குறித்து அவருடைய புத்தகத்தில் எதையும் சொல்லவில்லை.

0

தேவி, தனிப்பெரும் கடவுளாக, சாக்தத்தின் சக்தியாக வரும்போது அவளுடைய சில வடிவங்கள் குறித்து மட்டும்தான் நாம் இங்கே பார்த்திருக்கிறோம். இன்னும் நாம் பார்க்காமல் இருப்பது சிவன், விஷ்ணு, பிரமன் ஆகியோரின் தேவிகளாக வரும் பார்வதி, லக்ஷ்மி, சரஸ்வதி ஆகியோரை. கூடவே ஜ்யேஷ்டா எனப்படும் தவ்வை பற்றியும் தனியாகப் பார்க்க இருக்கிறோம்.

யோகினிகள் என்பது மற்றுமொரு தேவி வடிவம். அறுபத்து நான்கு யோகினிகள் வழிபாடு என்பது மத்தியப் பிரதேசம், ஒடிஷா போன்ற இடங்களில் நடைபெற்றது. இன்னமுமே அங்கே சில கோவில்கள் எஞ்சியுள்ளன. முடிந்தால், அவர்களைப் பற்றியும் பார்த்துவிடுவோம்.

0

தேவி படிமங்களில் எது மிக அழகு வாய்ந்தது என்று எப்படிச் சொல்வது? பல்லவர்கள், பாண்டியர்கள், சோழர்கள் மட்டுமின்றி இந்தியா முழுவதுமே தேவியின் சிலைகள் அதி அற்புதமாக உருவாக்கப்பட்டுள்ளன. தனிப்பெரும் பெண் தெய்வம் அவள். இங்கும் சீர்தூக்கிப் பார்க்கையில் பல்லவர்களும் சோழர்களுமே முன்னிலை வகிக்கிறார்கள். கல் என்றால் பல்லவர்கள். உலோகம் என்றால் சோழர்கள்.

பல்லவர்களின் காஞ்சி கைலாசநாதர் துர்கையா, சோழர்களின் புள்ளமங்கை துர்கையா? பட்டிமன்றம் வைத்தாலும் முடிவு இருவருமே சிறந்தவர்கள் என்பதாகத்தான் இருக்கும். குறிப்பிட்டுச் சொல்லவேண்டும் என்றால் நான் இரு சிற்பங்களைச் சொல்வேன். மாமல்லையில் சப்தமாதர் குழுவில் பிற சிலைகளோடு சேராமல் தனித்திருக்கும் சாமுண்டி. அவளுடைய முகத்தில் இருக்கும் ஏளனச் சிரிப்பை வேறு எந்தக் கலைஞனும் இதுவரை நெருங்கவில்லை. கிட்டத்தட்ட இணையான ஒன்றை சென்னை அருங்காட்சியகத்தில் உள்ள உலோகக் காளி சிற்பத்தில் சோழக் கலைஞன் ஒருவன் நெருங்கிவிட்டான்.

சோழர் காலக் காளி, செப்புச் சிலை, சென்னை அருங்காட்சியகம்

 



__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

 

 கல்லும் கலையும் #6 – மாய அவுணர் மருங்கறத் தபுத்த வேல்!

 

கல்லும் கலையும்

வேல் என்றால் முருகன். வேலை வைத்திருப்பதால் வேலவன். முருகன் என்றால் அழகன். அவன் குமரன். சிவ பார்வதியின் குமரன். ஆறு முகம் கொண்ட ஷண்முகன். வள்ளி தெய்வயானை மணாளன். குமரனுடைய பிறப்பு மிக விஸ்தாரமாக ஸ்கந்த புராணத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்குமுன், தாரகாசுரனுடைய பிறப்பு குறித்துப் பார்க்கவேண்டும்.

கஷ்யபருக்கு திதி, அதிதி, தனு முதலாகப் பதினான்கு மனைவிகள். அதிதியின் மகன்கள் ஆதித்யர்கள் என அழைக்கப்படுகிறார்கள். திதியின் மகன்கள் தைத்யர்கள். தனுவின் மகன்கள் தானவர்கள். அதிதிக்குப் பிறந்த ஒரு மகன் இந்திரன். திதிக்குப் பிறந்தவர்களில் இருவர் ஹிரண்யாக்ஷன், ஹிரண்யகஷிபு. இருவருமே விஷ்ணுவின் கையால் கொல்லப்படுகிறார்கள். எனவே திதி கஷ்யபரிடம் சென்று,  இந்திரனைப் போரில் கொல்லக்கூடிய ஒரு மகன் தனக்கு வேண்டும் என்று கேட்கிறாள். கஷ்யபர் அவளைக் கடுமையான தவம் புரியச் சொல்கிறார்.

திதி ஆயிரம் ஆண்டுகள் தவம் புரிகிறாள். அப்போது இந்திரனே அவள் தவத்தைக் கண்டு மெச்சி அவளுக்குச் சேவகம் புரிய வருகிறான். தவம் விரைவில் முடிய இருக்கிறது. திதி அப்போது இந்திரனிடம், ‘உனக்கு ஒரு தம்பி பிறக்கப்போகிறான். அவன் உன்னுடனேயே இருந்து, இந்த மூவுலகங்களையும் உன்னோடு பங்கிட்டுக் கொள்வான்’ என்கிறாள். ஒரு நாள் அவள் தூங்கிக்கொண்டிருக்கும்போது இந்திரன் அவள் உடம்புக்குள் புகுந்து அவள் வயிற்றில் வளர்ந்துகொண்டுவரும் கருவைத் தன் வஜ்ராயுதத்தால் ஏழாகக் கூறு போட்டு, ஒவ்வொன்றையும் மேலும் ஏழாகக் கூறுபோடுகிறான்.

பின் அவள் உடலிலிருந்து வெளியே வந்து, ‘உங்கள் பிள்ளை என்னுடனேயே இருப்பான் என்றீர்கள்; இந்த நாற்பத்தொன்பது பேரும் என்னுடனேயே இருக்குமாறு நான் அழைத்துச் செல்கிறேன்’ என்று சொல்லி அவர்களை அழைத்துச் சென்றுவிடுகிறான். அவர்களுக்கு மருத் என்று பெயர்.

திதி தன் முயற்சியில் சற்றும் மனம் தளராமல், மீண்டும் கஷ்யபரிடம் சென்று ‘இந்திரனைக் கொல்லக்கூடிய மகன் வேண்டும், அவனை தேவலோக ஆயுதங்கள் ஒன்றும் செய்யக்கூடாது’ என்று வேண்டுகிறாள். கஷ்யபர் அவளை மேலும் கடுமையான தவம் செய்யச் சொல்கிறார். இப்போது பத்தாயிரம் ஆண்டுகள் தவம் புரிகிறாள் திதி. விளைவாக, வஜ்ராங்கன் என்ற பெயருடைய பிள்ளை அவளுக்குப் பிறக்கிறான். அவனுடைய உடலை இரும்பினாலும் அறுக்க முடியாது.

திதி வஜ்ராங்கனிடம், இந்திரன் தனக்கு இழைத்த அநீதியைச் சொல்லி, பழிவாங்கச் சொல்கிறாள். வஜ்ராங்கனும் பெரிய படையோடு சென்று தேவர்களை வென்று இந்திரனைக் கட்டி இழுத்துவருகிறான். உடனே பிரம்மாவும் கஷ்யபரும் வஜ்ராங்கனிடம் சென்று இந்திரனை விட்டுவிடும்படிக் கேட்டுக்கொள்கிறார்கள். வஜ்ராங்கனும், தனக்கு இந்திரனிடம் எந்தப் பிரச்னையுமில்லை, தாய் கேட்டதால்தான் செய்தேன், மேலும் இந்த உலகங்களை ஆள்வதில் தனக்கு விருப்பமில்லை என்று சொல்லி இந்திரனை விட்டுவிடுகிறான்.

பிரம்மா வராங்கி என்ற அழகான பெண்ணை உருவாக்கி, வஜ்ராங்கனுக்குத் திருமணம் செய்விக்கிறார். வஜ்ராங்கனும் வராங்கியும் காட்டுக்குச் சென்று தனித்தனியாகக் கடும் தவத்தில் ஈடுபடுகின்றனர்.

வராங்கியின் தவத்தைக் கலைக்க இந்திரன் முற்படுகிறான். ஒரு குரங்கு வடிவத்தில் சென்று அவளுடைய ஆடைகளைப் பற்றி இழுத்து, தலைமுடியைப் பிடித்து இழுத்து, முகத்தைப் பிறாண்டித் தொல்லை கொடுக்கிறான். ஓர் ஆட்டின் வடிவம் எடுத்து முட்டுகிறான். பாம்பாக மாறி அவள் காலைச் சுற்றிக் கடிக்கிறான். நரி வடிவமெடுத்து அவளுடைய ஆஸ்ரமத்தைச் சேதப்படுத்துகிறான். நெருப்பாக ஆகி, ஆஸ்ரமத்தை எரிக்கிறான். காற்றாகி, அவளை அலைக்கழிக்கிறான். சிங்கம், ஓநாய் போன்ற வடிவங்களை எடுத்துத் தொல்லை கொடுக்கிறான். ஆனால் அவளுடைய கற்பின் காரணமாகவும் தவவலிமையின் காரணமாகவும் இந்திரனால் அவளைக் கொல்ல முடியவில்லை.

இதற்கிடையில் வஜ்ராங்கனின் தவம் நிறைவுபெறுகிறது. பிரம்மா அவன்முன் தோன்றுகிறார். ஆனால் வஜ்ராங்கன், தனக்கு இந்திர பதவி வேண்டாம், பக்தி, நல்லெண்ணம், தவம் ஆகியவையே போதும் என்று சொல்லிவிட்டுத் தன் மனைவியைத் தேடி வருகிறான். வராங்கி வஜ்ராங்கனிடம், இந்திரன் தனக்குச் செய்த அவமானங்களையெல்லாம் எடுத்துச் சொல்கிறாள். தன் மனைவியின் நிலையைக் கண்டு வஜ்ராங்கன் கடும் கோபம் கொள்கிறான்.

மீண்டும் தவத்தில் இறங்குகிறான். பிரம்மா அவன்முன் வருகிறார். அவரிடம், தேவர்களின் பெருமையை அழிக்கக்கூடியதான மகன் தனக்கு வேண்டும் என்று கேட்கிறான். வரத்தைப் பெறுகிறான். வராங்கி கர்ப்பம் தரிக்கிறாள். ஆயிரம் ஆண்டுகள் கழித்து அந்தக் குழந்தை பிறக்கிறது. அதன் பெயர் தாரகன்.

தாரகன் தன் பங்குக்குக் கடுமையான தவம் புரிகிறான். பிரம்மா மகிழ்ந்து அவன்முன் தோன்றுகிறார். தாரகன், இறப்பே இருக்கக்கூடாது என்று கேட்கிறான். ‘அதற்குச் சாத்தியமே இல்லை, பிறந்தோர் அனைவரும் இறந்தே ஆகவேண்டும், எனவே சரியான வரமாகக் கேள்’ என்கிறார் பிரம்மா. சற்று யோசித்தபின், ‘பிறந்து ஏழு நாளே ஆன ஒரு குழந்தையைத் தவிர வேறு யாராலும் தனக்கு இறப்பு வரக்கூடாது. எந்தத் தேவராலும் இறக்கக்கூடாது’ என்ற வரத்தைக் கேட்கிறான். பெறுகிறான்.

அடுத்து என்ன நேர்ந்தது என்பதை நீங்கள் எளிதில் ஊகிக்கலாம். ஸ்கந்த புராணம் மிக விரிவாக தாரகனுக்கும் இந்திரனுக்கும் நடந்த யுத்தத்தை விளக்குகிறது. இந்தப் போரில் சென்ற வாரம் நாம் பார்த்த மஹிஷாசுரன், சும்பன் ஆகியோர் அசுரர் தரப்பிலும் விஷ்ணு தேவர் தரப்பிலும் போரிடுவதாக ஸ்கந்த புராணம் சொல்கிறது. மஹிஷன், சும்பன் ஆகியோர் விஷ்ணுவிடம் அடிபட்டுக் கீழே விழும்போது விஷ்ணு அவர்களை எழுப்பி, உங்களையெல்லாம் கொல்ல நான் தேவையில்லை, ஒரு பெண் வந்து உங்களைக் கொல்வாள் என்று சொல்வதாக இந்தப் புராணம் கூறுகிறது. இப்படி விஷ்ணுவே தேவர்கள் பக்கமிருந்து சண்டையிட்டாலும் இறுதியில் தாரகன் தலைமையிலான அசுரப் படையே வெல்கிறது. தாரகன் அனைத்துலகங்களுக்கும் அதிபதி ஆகிறான்.

0

இந்தக் கட்டத்தில் சிவபெருமான், தக்ஷனின் மகளான சதி என்னும் தன் மனைவியை இழந்து தனிமையில் இருக்கிறார். தேவர்கள் மீண்டும் இழந்த இடத்தைப் பிடிக்கவேண்டுமென்றால், ஏழு நாளே ஆன குழந்தை ஒன்று போருக்கு வந்து தாரகனின் கதையை முடிக்கவேண்டும். அந்தக் குழந்தை சிவபெருமானுடைய குழந்தையாகத்தான் இருக்கவேண்டும் என்று தேவர்களும் பிற கடவுள்களும் முடிவு செய்கின்றனர். அதன் விளைவாகத்தான் பார்வதி அவதரிக்கிறாள். சிவ பார்வதி திருமணம் நடக்கிறது. இவற்றையெல்லாம் நாம் வெவ்வேறு சிற்பங்களைப் பற்றிப் பார்க்கையில் சற்றே விரிவாகக் காண உள்ளோம்.

சிவனும் பார்வதியும் இணைவதன்மூலம் குமரன் பிறக்கிறான் என்பதுதான் கதை. ஆனால் இதற்கான மூலக்கதை மகாபாரதத்தில் உள்ளது. அதிலிருந்து ஸ்கந்த புராணம் வெகுவாக நகர்கிறது. ஆனால் குறிப்பிட்ட புள்ளிகள் இரண்டிலும் ஒன்றுதான்; வழிமுறையில்தான் மாற்றம். தமிழில் பரிபாடல் மகாபாரதத்துக்கும் ஸ்கந்த புராணத்துக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் தோன்றியது. அது மகாபாரதத்தை அடியொற்றியே இருப்பதைக் காணலாம்.

சிவன் பார்வதி இணையும்போது சிவனின் விந்து வெளியேறுகிறது. அது அக்னியின் வழியாக சப்தரிஷிகளின் மனைவிகளில் அருந்ததி தவிர்த்துப் பிற அறுவருடைய கருப்பைக்குள் செல்கிறது. இந்த அறுவரும் அவர்தம் கணவரால் சந்தேகிக்கப்படுகின்றனர். ஆறு பேரும் தம் வயிற்றுப் பிண்டத்தை வெளியேற்றுகின்றனர். வெளியேறியும் ஆறு கருக்களும் வளர்கின்றன. ஆறு கார்த்திகைப் பெண்களால் எடுத்து வளர்க்கப்படும் இந்தக் கருக்கள் ஒன்று சேர்ந்து ஆறுமுகன் உருவாகிறான்.

குழந்தை முதல் நாள் வெறும் பிண்டமாக இருந்தது. இரண்டாம் நாள் மனித உருவானது. மூன்றாம் நாள் பச்சிளங்குழந்தை. நான்காம் நாள் முழுதும் வளர்ந்த இளைஞன். ஐந்தாம் நாள் அபிஷேகம் செய்யப்பட்டு, அக்னியிடமிருந்து சக்தி ஆயுதம் பெறுகிறான். அந்தச் சக்தி ஆயுதத்தால் குமாரன் மலைகளைப் பிளக்கிறான். இதனால் உலகமே நடுங்குகிறது. இந்திரன், தேவர்களுடன் வந்து அந்த தெய்வக் குழந்தையுடன் சண்டையிடுகிறான். வஜ்ராயுதத்தால் முருகனைத் தாக்குகிறான். ஆனால் பலனில்லை. இந்திரன் முருகனிடம் தோற்றுப்போகிறான். சரணடைகிறான்.

இந்திரனும் பிற தேவர்களும் கடவுள்களும் சுப்ரமணியனைத் தங்கள் படைகளுக்குத் தலைமை ஏற்று, தாரகனைக் கொல்லவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றனர். முருகன், தேவ சேனாபதி ஆகிறார்.

சிவன், பார்வதி, விஷ்ணு முதலாக அனைத்து தேவர்களும் குமாரனுக்கு ஆயுதங்களையும் அணிகலன்களையும் அளிக்கின்றனர்.

குமாரன், பெரும் படையுடன் தாரகாசுரன் இருக்கும் இடம் நோக்கிச் செல்கிறார். இது ஏழாவது நாள். பெரும் போருக்குப்பின், தன் சக்தி ஆயுதத்தை எறிந்து, தாரகனைக் கொல்கிறார் கார்த்திகேயன்.

தேவர்களைத் தொல்லை செய்துவந்த பாணன் என்னும் அசுரன் கிரௌஞ்ச மலையில் இருப்பதாக விஷ்ணு குமாரனிடம் சொல்கிறார். அந்த மலையைப் பிளக்கச் சொல்கிறார். முருகனும் அவ்வாறே செய்கிறார். கிரௌஞ்ச மலை பொடிப்பொடியாகிறது.

இவ்வாறாக சுப்ரமணியரின் பிறப்புக் காரணம் நிறைவுறுகிறது.

0

சுப்ரமணியன் – ஒடிஷா

முருகனின் சிலையுருவங்கள் இந்தியா முழுதும் கிடைக்கின்றன. சிலைகளின் காலத்தைக் கணக்கில் எடுத்தால் வட இந்தியப் பகுதியிலேயே காலத்தால் மிகவும் முற்பட்ட சிலைகள் கிடைத்துள்ளன.

தமிழகத்தில் முருகன் சங்க இலக்கியத்தில் சேயோன் என்று குறிப்பிடப்படுகிறான். தமிழ் நிலங்களை ஐந்து நிலங்களாக, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று தொல்காப்பியம் வகுக்கிறது. அதில் மலையும் மலை சார்ந்த இடமுமான குறிஞ்சிக்குரிய கடவுளாக சேயோன் எனும் முருகன் வருகிறான். அகத்திணைப் பாடல்களில் அங்கும் இங்குமாக முருகன் காணப்படுகிறான். ஆனால் பரிபாடல் என்னும் சங்க இலக்கியத்தில்தான் முருகன் குறித்த முழுமையான சித்திரம் நமக்குக் கிடைக்கிறது.

பரிபாடல் பலரால் ஆக்கப்பட்ட பாடல்களின் தொகுப்பு. நமக்குக் கிடைத்துள்ளவற்றில் பெரும்பகுதி அழிந்துவிட்டது. மதுரை நகரைச் சுற்றியுள்ள விஷ்ணு கோவிலான அழகர் கோவில், முருகன் கோவிலான திருப்பரங்குன்றம், வைகை ஆறு ஆகியவற்றையும் விஷ்ணுவையும் முருகனையும் புகழும் பாடல்களுடன் சில அக இலக்கியக் காதல் பாடல்களும் கலந்ததுதான் பரிபாடல்.

பாயிரும் பனிக்கடல் பார்துகள் படப்புக்குச்
சேயுயர் பிணிமுகம் ஊர்ந்தமர் உழக்கித்
தீயழல் துவைப்பத் திரிய விட்டெறிந்து
நோயுடை நுடங்குசூர் மாமுதல் தடிந்து
வென்றியின் மக்களுள் ஒருமையொடு பெயரிய
கொன்றுணல் அஞ்சாக் கொடுவினைக் கொல்தகை
மாய அவுணர் மருங்கறத் தபுத்த வேல்

என்கிறார் கடுவன் இளவெயினனார். மாயப் போரில் வல்ல அவுணர்களை முற்றுமாக அழித்தது உன்னுடைய வேல் என்று முருகனைப் புகழ்கிறார். பரிபாடலின் பல்வேறு இடங்களில் முருகனின் பிறப்புக் காரணம், அவன் வள்ளி, தெய்வானையை மணம் செய்துகொண்டது, தாரகன், சூரபத்மன் முதலானோரைக் கொன்றது போன்ற பலவும் வருகின்றன.

நக்கீரரின் திருமுருகாற்றுப்படை, திருப்பரங்குன்றத்தில் தொடங்கி, திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்), திரு ஆவினன்குடி (பழநி), திரு ஏரகம் (சுவாமிமலை), குன்றுதோராடல் (திருத்தணி), பழமுதிர்ச்சோலை என்னும் ஆறு நகரங்களில் அமைந்துள்ள முருகன் கோவில்களையும் முருகன் தொடர்பான பல்வேறு கதைகளையும் சொல்கிறது. பரிபாடலும் திருமுருகாற்றுப்படையும் சங்க நூல்களில் அடங்குபவை.

தமிழகத்தில் கந்தன் கதை பிரபலமானது கச்சியப்ப சிவாச்சாரியார் எழுதிய கந்தபுராணத்தின்மூலம். கந்தபுராணம், 14-ம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது. இது சமஸ்கிருத ஸ்கந்த புராணத்திலிருந்து பல இடங்களில் நகர்ந்துசெல்கிறது. அக்கதையில் தாரகன் வருகிறான். ஆனால் முதன்மை வில்லன் தாரகன் அல்லன்; சூரபத்மனே இங்கே முதன்மை எதிரி. கந்தபுராணத்தின்படி, சூரபத்மன் தாரகனின் சகோதரன். கஷ்யபருக்கும் மாயைக்கும் பிறந்தவர்கள் சூரபத்மன், தாரகன், சிங்கமுகன் ஆகியோர். இவர்களுக்கிடையிலான போர் நடப்பது திருச்செந்தூரிலே என்கிறார் கச்சியப்ப சிவாச்சாரியார். இன்றும் தமிழகத்தில் கொண்டாடப்படும் கந்த சஷ்டி விழா முருகன் சூரபத்மனை வதம் செய்ததைக் கொண்டாடும் நிகழ்வு.

0தமிழகத்தில் இன்று கிடைத்துள்ளவற்றிலேயே பழமையான கோவில்கள் பல்லவர்களும் பாண்டியர்களும் எழுப்பியுள்ள குகைக்கோவில்கள். இதில் பல்லவர்கள் குகைகளை ஓரளவுக்குக் காலவரிசைப்படுத்த முடியும். பாண்டியர் குகைக் கோவில்களை வரிசைப்படுத்துவது மிகக் கடினம். ஆக்கியோர் குறித்த தகவல்கள் அவற்றில் மிகக் குறைவு. மேலும் பல்லவர் குகைகள் பெரும்பாலும் மாற்றமின்றிக் கிடைக்கின்றன. பாண்டியர் குகைகளோ பிற்கால அரசர்களாலும் பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டு அதிகாரிகளாலும் உள்ளூர் மக்களாலும் பெரும் மாற்றம் கண்டுள்ளன. பாண்டியர், பல்லவருக்குச் சிற்றரசர்களாக இருந்து, பின்னர் சோழர்கள் ஆட்சியிலும் சிற்றரசர்களாக இருந்த முத்தரையர்களும் சில குகைக்கோவில்களை வெட்டுவித்தனர். தொடர்ந்து பல்லவரும் பாண்டியரும் கட்டுமானக் கோவில்களைக் கட்ட ஆரம்பித்தனர். பாண்டிய, பல்லவ கட்டுமானங்கள் ஐந்தாம் நூற்றாண்டு இறுதியிலிருந்து ஒன்பதாம் நூற்றாண்டு மையப்பகுதி வரை சென்றது. அதன்பின் பல்லவர் ஆட்சி முடிவுக்கு வந்து சோழர் ஆட்சி ஏற்பட்டது. சோழர்களும் பாண்டியர்களும் கட்டுமானக் கோவில்களைத் தொடர்ந்தனர். பின் சோழர்கள் கிட்டத்தட்ட தமிழகம் முழுவதையும் தம் ஆளுகைக்குள் கொண்டுவந்தபின் ஒன்பது முதல் பதிமூன்றாம் நூற்றாண்டின் பாதிவரை சோழர் காலக் கலை மட்டும்தான் தமிழகத்தின் பல பகுதிகளிலும் தனித்து நின்றது. மாபெரும் கோவில்கள் இக்காலத்தில்தான் கட்டப்பட்டன. பதிமூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் பாண்டியர்கள் சோழர்களை முழுவதுமாக வெற்றிகண்டனர். மீண்டும் பாண்டியர்கள் கோவில்களை உருவாக்கத் தொடங்கினார்கள்.

இவற்றை மனத்தில் கொண்டு கிடைத்திருக்கும் கோவில்களையும் அவற்றில் காணப்படும் முருகன் சிலைகளையும் பார்ப்போம்.

பரிபாடல் திருப்பரங்குன்றத்தை முருகன் வசிக்கும் இடமாக வெகுவாகப் புகழ்கிறது. பரிபாடல் காலத்தில் முருகனுக்கு மட்டுமே தனியாக ஒரு கோவில் இங்கு இருந்திருக்கலாம். ஆனால் இப்போதுள்ள பெரும் கோவிலுக்கு உள்ளே குகைக் கோவில் ஒன்று உள்ளது. எட்டாம் நூற்றாண்டு இறுதியில் பராந்தக நெடுஞ்சடையன் என்ற பாண்டிய மன்னனின் தளபதி சாத்தன் கணபதி என்பவனால் வெட்டுவிக்கப்பட்டது. இதில் முதன்மை முருகன் அல்லன். சிவன், விஷ்ணு ஆகியோருக்கான கோவில்களே முதன்மையானவை. கூடவே முருகன், விநாயகர், துர்கை ஆகியோருக்கும் சுவரில் சிற்பங்கள் எழுப்பப்பட்டுள்ளன. தவிர, ஜேஷ்டா என்ற தவ்வையும் வேறு சில சிற்பங்களும் வெட்டப்பட்டுள்ளன. இன்று நீங்கள் முருகனைக் காணச் செல்லும்போது இந்தப் பிற தெய்வங்களையும் காணலாம். திருப்பரங்குன்றத்தில் உமையாண்டார் கோவில் என்று இன்னொரு குகைக்கோவில் உள்ளது. இதுவும் அதே எட்டாம் நூற்றாண்டின் இறுதிக் காலம்தான். இங்கே சிவ அர்தநாரி, பைரவர் ஆகிய சிற்பங்களுடன் முருகனும் வள்ளி தெய்வானையும் சேதமான நிலையில் உள்ள சிற்பம் ஒன்று கிடைக்கிறது.

இதே பராந்தகன் நெடுஞ்சடையன் காலத்தில்தான் கழுகுமலை எனுமிடத்தில் வெட்டுவான்கோவில் என்ற மிக அருமையான ஒற்றைக்கல் தளி உருவாக்கப்பட்டது. அந்தக் கோவில் பாதியிலேயே முற்றுப்பெறாமல் கைவிடப்பட்டது. அதில் மிக அழகிய சுப்ரமணியர் சிலை உள்ளது.

வீற்றிருந்த கோலத்தில் முருகன் - வெட்டுவான்கோவில், படம்: ஶ்ரீனி ராஜகோபாலன்

வீற்றிருந்த கோலத்தில் முருகன் – வெட்டுவான்கோவில், படம்: ஶ்ரீனிவாசன் ராஜகோபாலன்

இங்கே முருகன் சுகாசனம் எனும் வீற்றிருந்த கோலத்தில் உட்கார்ந்திருக்கிறார். தலையில் கரண்ட மகுடம். முக்கியமாக, மகுடத்தின் வடிவத்தைக் கவனியுங்கள். தமிழகத்தில் முருகன் சிலை என்றாலே இந்த மகுடத்தின் வடிவுதான் என்ற அளவுக்கு ஒற்றுமை காணப்படுகிறது. ஒரு கையில் அக்க மாலை. இன்னொரு கையில் சக்தி ஆயுதம். சூரியன் விஸ்வகர்மாவிடம் சென்று தன் கடுமையான வெளிச்சத்தைக் குறைத்துக்கொள்ளுமாறு கேட்டான் என்றும் விஸ்வகர்மா அதனைச் செய்தார் என்றும் பார்த்தோம். அப்போது சூரியனின் ஒரு சிறு பகுதியை உடைத்து அவர் உருவாக்கியதே இந்தச் சக்தி ஆயுதம். இதைக் கொண்டுதான் முருகன் மலைகளைப் பிளக்கிறார்; எதிரிகளை அழிக்கிறார். முருகன் சன்னவீரம் என்ற குறுக்காகச் செல்லும் மார்புப் பட்டைகளை அணிந்திருக்கிறார். பாண்டியர்களின் கலைப்படைப்பில் மிக மிக அழகிய சிற்பங்களைக் கொண்டது வெட்டுவான்கோவில். சிரித்த முகத்துடனான இந்த முருகன் அக்கலைப்பாணிக்கு ஒரு சான்று.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

 லாடன் கோவில் என்ற குகைக்கோவிலில் முருகன் தெய்வானையுடன் இருப்பதுபோன்ற சிற்பம் கிடைக்கிறது. இதுவும் பராந்தக நெடுஞ்சடையன் காலமே. திருச்சி மலைக்கோட்டையில் சிவன், விஷ்ணு ஆகியோருக்கு முதன்மைக் கருவறைகளும் பக்கச் சுவரில் விநாயகர், முருகன், பிரம்மா, சூரியன், துர்கை ஆகியோருக்குச் சிற்பங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. திருச்சி மலைக்கோட்டை கீழ்க்குகையின் காலமும் எட்டாம் நூற்றாண்டுக்குப் பின்னானதே. இங்கே முருகனின் முகம் வெகுவாகச் சிதைந்துள்ளது. மார்பில் சன்ன வீரம் அணியவில்லை, ஆனால் பூணூலை நிவீதமாக, வலது கைக்கு மேல் வருமாறு அணிந்துள்ளார். இருந்தும் தலையில் வைத்துள்ள கிரீடம், முருகனைக் குறிப்பால் உணர்த்திவிடுகிறது.

முருகன் - திருச்சி மலைக்கோட்டை, படம்: வி.கே.ஶ்ரீனிவாசன்

முருகன் – திருச்சி மலைக்கோட்டை, படம்: வி.கே.ஶ்ரீனிவாசன்

நமக்குத் தெரிந்தவரை எட்டாம் நூற்றாண்டின் இறுதிக் காற்பகுதிக்கு முன்பாக பாண்டியர் கலையில் முருகன் சிற்பம் கிடைப்பதில்லை.

பல்லவர்களை எடுத்துக்கொண்டால், மகேந்திரவர்மன் காலம் முழுவதிலும் முருகன் சிற்பங்கள் கிடைப்பதில்லை. முதன்முதலில் முருகன் சிற்பங்கள் கிடைப்பது மாமல்லபுரத்தில்தான். வெவ்வேறு வரலாற்றாசிரியர்கள் மாமல்லபுரம் சிற்பங்கள் யார் காலத்திலிருந்து உருவாக்கப்பட்டன என்பதில் மாற்றுக் கருத்துகளை வைக்கிறார்கள். பெரும்பாலானோர் கருத்து, முதலாம் நரசிம்மவர்மன் காலத்திலிருந்தே மாமல்லை தொடங்கப்பட்டது என்பது. அப்படியானால் 630-ம் ஆண்டு முதலே. முனைவர் நாகசாமி மட்டும், ஒட்டுமொத்த மாமல்லை இரண்டாம் நரசிம்மவர்மன் காலத்தது என்கிறார். அப்படியானால் 700-ம் ஆண்டு முதல்.

மாமல்லையில் பல இடங்களில் மிக அழகிய சோமாஸ்கந்தச் சிற்பங்கள் காணக்கிடைக்கின்றன. சோமாஸ்கந்தர் எனும் வடிவம் பல்லவர்களுக்கே பிரத்யேகமானது. பின்னர் சோழர்களால் உலோகத்தில் முன்னெடுக்கப்பட்டது. சோமாஸ்கந்தர் என்றால் உமை, ஸ்கந்தன் ஆகியோருடன் கூடிய சிவன். அருகருகே சிவனும் உமையும் அமர்ந்திருக்க, இடையில் குழந்தை வடிவக் குமரன் விளையாடுவதுபோல் இந்தச் சிற்பங்கள் இருக்கும். முருகன் ஏழே நாள்களில் வளர்ந்தவன். அவன் குழந்தையாக இருந்தது மூன்றாவது நாள். நான்காவது நாள் இளைஞனாகிவிட்டான். எனவே சோமாஸ்கந்த வடிவில் நீங்கள் பார்ப்பது மூன்று நாட்களே ஆன குழந்தையை!

சோமாஸ்கந்தர் - மாமல்லபுரம், படம்: அசோக் கிருஷ்ணசுவாமி

சோமாஸ்கந்தர் – மாமல்லபுரம், படம்: அசோக் கிருஷ்ணசுவாமி

இந்தக் குழந்தை வடிவக் குமரனுடைய தலைக் கிரீடத்தைப் பாருங்கள். அப்படியே குமரன் சிலைகளின் வடிவத்துக்கு மாற்றமில்லாமல் இருப்பதை!

குழந்தைப் பருவம் அல்லாமல் இரண்டு வெவ்வேறு வடிவங்களில் நீங்கள் முருகனைக் காண முடியும். பிணிமுகம் என்ற யானையின்மீதேறி இருக்கும் குமரனை அர்ஜுன ரதத்தில் காண முடியும். இது தேவ சேனாபதி வடிவமாகும். தாரகன், சூரபத்மன் ஆகியோருடன் சண்டை செய்யத் தயாராக இருக்கும் நிலையாக இதனை எடுத்துக்கொள்ளலாம்.

முருகன் - அர்ஜுன ரதம், மாமல்லபுரம், படம்: அசோக் கிருஷ்ணசுவாமி

முருகன் – அர்ஜுன ரதம், மாமல்லபுரம், படம்: அசோக் கிருஷ்ணசுவாமி

பிரம்ம சாஸ்தா என்னும் வடிவில் சுப்ரமணியரை மாமல்லையின் திரிமூர்த்தி மண்டபத்தில் காண முடியும். இது தொடர்பான கதை கச்சியப்பரின் கந்தபுராணத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. தகப்பனுக்குப் பாடம் சொன்னவர் என்ற பெயர் கந்தனுக்கு ஏற்பட்டது இந்த நிகழ்வின் போதுதான்.

பிரமன் ஒருமுறை பிற தேவர்கள் சூழ கைலாயம் வந்து சிவனைத் தரிசித்துவிட்டு வெளியேறும்போது, கந்தன் அவரிடம் அவரது தொழில் குறித்துக் கேட்கிறார். பிரமன், தான் படைப்புத் தொழில் செய்வதாகச் சொல்ல, கந்தன், வேதம் தெரியுமா என்று வினவுகிறார். தெரியும் என்று பிரமன் சொல்ல, அதன் தொடக்க எழுத்தான ஓம் எனும் பிரணவ மந்திரத்துக்குப் பொருள் கேட்கிறார் கந்தன். பிரமனால் பதில் சொல்ல முடியவில்லை. பிரணவத்துக்கே பதில் தெரியவில்லை என்றால் வேதத்தின் பொருள் தெரியாது. அப்படிப்பட்ட ஒருவர் படைப்புத் தொழில் செய்யலாகாது என்று சொல்லி, அவரைத் தலையில் குட்டி, காலால் உதைத்து, தன் படையினரைக் கொண்டு கைது செய்து சிறையில் அடைந்துவிடுகிறார் கந்தன். பின்னர், பிரமனது வேலையைத் தான் கையில் கொண்டு படைப்புத் தொழிலையும் தானே செய்யத் தொடங்குகிறார்.

கூட வந்த தேவர்கள் விஷ்ணுவிடம் சென்று சொல்ல, அவர் தேவர்களுடன் வந்து சிவனிடம் முறையிடுகிறார். சிவன் நந்தி தேவரை அனுப்பி, பிரமனை விடுதலை செய்துவா என்று கட்டளையிட, முருகனோ பிரமனைச் சிறையிலிருந்து அனுப்ப மறுக்கிறார். பிறகு சிவன் தானே வருகிறார். வாக்குவாதத்துக்குப் பிறகு முருகன் பிரமனை விடுதலை செய்ய ஒப்புக்கொள்கிறார். சிவன், முருகனைத் தன் தொடையில் அமர்த்தி, பிரணவத்தின் பொருளை விளக்கு என்கிறார். அதனை வெளிப்படையாகப் பலரும் கேட்கச் சொல்லலாகாது என்று கடிந்துகொள்ளும் முருகன் தன் தந்தைக்குக் காதில் ரகசியமாக உரைக்கிறார்.

இவ்வாறு பிரமனைச் சிறையிலிட்டு, பிரமனின் படைப்புத் தொழிலைத் தான் கையிலெடுத்ததைக் காண்பிப்பதுதான் முருகனின் பிரம்ம சாஸ்தா வடிவம்.

முருகன் – திரிமூர்த்தி மண்டபம், மாமல்லபுரம், படம்: அசோக் கிருஷ்ணசுவாமி

மேலே நீங்கள் பார்க்கும் மாமல்லையின் இந்த வடிவத்திலும் தனித்துத் தெரியும் தலைக் கிரீடமும் சன்ன வீரமும் முருகனைக் காட்டிக்கொடுத்துவிடுகிறது. பல்லவர்கள் சில இடங்களில் பிரமேஸ்வரவிஷ்ணு கிருகங்கள் என்று பிரம்மா, ஈஸ்வரன் எனும் சிவன், விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளுக்கும் இணைந்த கோவில்களை எழுப்பியுள்ளனர். அதில் விசேஷமாக பிரம்மாவை எடுத்துவிட்டு, பிரம்மாவுக்கே பாடம் கற்பித்த முருகனைச் சேர்த்திருப்பது நல்லதொரு சுவாரசியம்!

இவற்றிலிருந்து, தமிழகத்தில் கிடைக்கும் மிகப் பழமையான முருகனின் சிலைகள் மாமல்லையிருந்தே ஆரம்பிக்கின்றன என்ற முடிவுக்கு நாம் வரவேண்டியிருக்கிறது. மாமல்லையைத் தொடர்ந்து, ராஜசிம்மன் காஞ்சிபுரத்தில் பல கோவில்களை அமைத்தான். அதில் ஒன்று முக்தேசுவரர் கோவில். அதில் கீழ்க்கண்ட அழகிய முருகன் சிலையை நாம் காணலாம். இந்தக் கட்டத்தில் தமிழகத்தைப் பொருத்தவரை சுப்ரமணிய வடிவில் மாற்றம் அதிகம் இல்லை என்பதைப் புரிந்துகொள்ளலாம். ஒரு முகம் மட்டுமே. இரு அல்லது நான்கு கைகள். தனித்துவம் வாய்ந்த கரண்ட மகுடம். பெரும்பாலும் சன்ன வீரம்; சில இடங்களில் அது இல்லாமலும் போகிறது. ஆயுதங்கள் என்றால் கட்டாயம் சக்தி ஆயுதம். சில இடங்களில் வஜ்ராயுதமும். வாகனம் என்றால் யானை. இக்கட்டத்தில் மயில், சேவல் ஆகியவற்றை நம்மால் பார்க்க முடியவில்லை.

குமாரன் - காஞ்சி முக்தேசுவரர் கோவில்; மலையடிப்பட்டி முத்தரையர் குகைக்கோவில், படம்: விஜய் பட்

குமாரன் – காஞ்சி முக்தேசுவரர் கோவில்; மலையடிப்பட்டி முத்தரையர் குகைக்கோவில், படம்: விஜய் பட்

மலையடிப்பட்டி முத்தரையர் குகைக்கோவிலின் சப்த மாதர்கள் சிலையைச் சென்ற வாரம் பார்த்தீர்கள். அதே குகைக்கோவிலில் சுப்ரமணியர், மஹிஷாசுரமர்தினி ஆகியோர் சிலைகளும் உள்ளன. ஆனால் வெகுவாக அழிந்துபோய்விட்டன. இந்தக் குகை, நந்திவர்மனின் காலம் ஆகும். எட்டாம் நூற்றாண்டின் இறுதி அல்லது ஒன்பதாம் நூற்றாண்டின் தொடக்கம் எனலாம்.

இதற்கடுத்து சோழர்களின் கலை தொடங்குகிறது. அவர்கள் கட்டியுள்ள கோவில்கள் அனைத்திலுமே சுப்ரமணியர் சிலைகளை வைத்தார்கள் என்று சொல்லமுடியாது. இதில் நான் மாதிரிக்குச் சில கோவில்களை மட்டுமே எடுத்துள்ளேன். முக்கியமாகச் சொல்லவேண்டியது திருச்சிக்கு அருகில் கீழையூர் என்னுமிடத்தில் கட்டப்பட்ட அவனிகந்தர்ப ஈசுவரம். சுமார் 884 ஆம் ஆண்டு கட்டப்பட்டவை. இரு கோவில்கள் அடுத்தடுத்து உள்ளன. அவற்றில் கோஷ்டம், விமானம் என்று பார்த்தால் நான்கு முருகன் சிலைகள் கிடைக்கின்றன. அவற்றைப் பக்கம் பக்கமாகக் கொடுத்திருக்கிறேன்.

குமாரன் - அவனிகந்தர்ப ஈசுவரம், கீழையூர், படம்: ஶ்ரீனி ராஜகோபாலன்

குமாரன் – அவனிகந்தர்ப ஈசுவரம், கீழையூர், படம்: ஶ்ரீனிவாசன் ராஜகோபாலன்

இவை நான்கும் ஆதித்த சோழனின் காலத்தில், பழுவேட்டரையர்களால் கட்டப்பட்டது. முதல் இரண்டிலும் தெளிவாகக் கைகளில் இரண்டு ஆயுதங்கள் இருப்பதைக் காணலாம். ஒன்று சக்தி ஆயுதம், இன்னொன்று வஜ்ராயுதம். முதல் சிற்பத்தில் வஜ்ரம் வலது பின்கையிலும் சக்தி இடது பின்கையிலும் உள்ளது. இரண்டாவது சிற்பத்திலோ, அப்படியே மாறியுள்ளது. நான்கு சிற்பங்களிலுமே தலை மகுடம் மிகத் தெளிவாக, குமரனுக்கு உரிய வகையில் உள்ளதைப் பாருங்கள். நான்கிலும் சன்னவீரம்.

இதுவரை நாம் பார்த்த அனைத்தையும்விட மிக அழகு வாய்ந்தது என்றால் அது முதலாம் பராந்தக சோழனின் புள்ளமங்கைக் கோவிலின் விமானத்தில் உள்ளதுதான். இத்தனைக்கும் அந்தச் சிலையின் ஒரு பகுதியை முன்மண்டபம் அமைப்பதற்காகச் சிதைத்துவிட்டனர்.

குமாரன் - புள்ளமங்கை, படம்: வி.கே.ஶ்ரீனிவாசன்

அழகிளங்குமரன் – புள்ளமங்கை, படம்: வி.கே.ஶ்ரீனிவாசன்

காதுகள் இரண்டிலும் பத்ர குண்டலங்கள், மார்பில் சன்னவீரம், ஒரு கையில் அக்கமாலை, இன்னொன்றில் ஆயுதம் அழிந்துவிட்டது, முன் கை அபயம், ஒரு கை மடிமீது, இளமை ததும்பும் அழகிய முகம், தலையில் ரத்தினம் பதித்த பிரத்யேகக் கரண்ட மகுடம், கழுத்தில் ரத்தினங்கள் பதித்த ஒரு ஹாரம், தோளில் கேயூரம், கைகளில் கங்கணங்கள், வில்லென வளைந்த புருவம். பாண்டியர், பல்லவர் படைப்புகளில் நாம் இதுவரை கண்டதைவிட, சோழர்களிலேயே பிறர் செய்தவற்றைவிட, பராந்தகன் காலத்தின் புள்ளமங்கைச் சிற்பம் தனித்த அழகு கொண்டதாக உள்ளது.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

அடுத்தடுத்த நூற்றாண்டுகளில் சோழச் சிற்பங்களில் தரம் சற்றே குறைந்துவிடுகிறது என்பதைச் சொல்லத்தான் வேண்டும். மிக கம்பீரமான, பெரிய சிற்பமாக ராஜேந்திரனின் கங்கைகொண்ட சோழபுரத்தின் பெரும் கோவிலில் உள்ள முருகனைச் சொல்லலாம். அதேபோல், தென் பாண்டி நாட்டில் திருவாலீசுவரம் என்னும் இடத்தில் பாண்டி நாட்டுச் சிற்பிகளைக் கொண்டு ராஜராஜன் அல்லது ராஜேந்திரன் காலத்தில் உருவாக்கப்பட்ட கோவிலில் உள்ள முருகன் சிற்பத்தைக் காண்போம்.

முருகன் - கங்கைகொண்ட சோழபுரம்; திருவாலீசுவரம், படம்: விஜய் பட்

முருகன் – கங்கைகொண்ட சோழபுரம்; திருவாலீசுவரம், படம்: விஜய் பட்

இரண்டையும் பார்த்த உடனேயே நாம் இதுவரை பார்த்துவந்த படிம இலக்கங்களின்படியான முருகன் என்று சொல்லிவிடுவோம். இப்போது நாம் பன்னிரண்டாம் நூற்றாண்டில் இருக்கிறோம். இன்னமும் தமிழகத்தில் நாம் பார்ப்பது ஒரு முகம், நான்கு கைகள், யானை வாகனம் ஆகியவையே. அல்லது நேராக எந்த வாகனமும் இன்று சமபங்கமாக நிற்கும் வடிவம். அல்லது ஆசனம் ஒன்றில் அமர்ந்திருக்கும் வடிவம்.

0

இதே காலகட்டத்தில் இந்தியா முழுமையிலும் என்ன நடந்துகொண்டிருந்தது? பொயுமு ஒன்றாம் நூற்றாண்டிலிருந்தே முருகனின் சிற்பங்கள் இந்தியாவின் பல்வேறு பகுதியிலும் கிடைத்துள்ளன. இன்று இவை இருந்த கோவில்கள் பெரும்பாலும் சிதைந்துபோய்விட்டன. இவை கிடைப்பது பல்வேறு அருங்காட்சியகங்களில்தாம்.

சில இடங்களில், கோஷ்டம் அல்லது கருவறையில் இல்லாமல், வேறு சிற்பத் தொகுதிகளில் முருகனும் இருப்பதைப் பார்க்கிறோம். உதாரணமாக, பாதாமியில் சாளுக்கியர்களின் சிவன் குகை. இங்கு மயில்மீது இருபக்கமும் கால் போட்டபடி அமர்ந்த முருகனைக் காண்கிறோம். இது சுமார் ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. தமிழ்நாட்டில் கிடைக்கும் எந்த முருகனைவிடவும் ஒரு நூற்றாண்டுக்கு முன்.

அதேபோல உத்தரப் பிரதேசத்தில் தேவ்கர் எனும் இடத்தில் மிக மிக அருமையான ஒரு விஷ்ணு கோவில் உள்ளது. குப்தர் காலத்தையது. 5-6ம் நூற்றாண்டு. அதில் ஒரு சிற்பம், அனந்தசயனம் எனும் சயனித்திருக்கும் விஷ்ணு. அவரைத் தாக்க மது, கைடபன் எனும் இரு அசுரர்கள் வருகிறார்கள். விரைவில் விஷ்ணுவுக்கு அந்த அசுரர்களுக்கும் இடையில் மாபெரும் யுத்தம் நடைபெற உள்ளது. அந்த யுத்தத்தைப் பார்க்க சிவன், பிரம்மா, இந்திரன் முதலானோருடன் முருகனும் மயில்மீதேறி வந்திருக்கிறார்.

அதேபோல, எல்லோராவில் கைலாசநாதர் ஒற்றைக்கல் மாபெரும் தளி மிக மிகச் சிறப்பு வாய்ந்தது. அந்தக் கோவிலின் உள்ளே நுழையும் முன்பாகவே வாசலில் அதே ஒற்றைக்கல் மாபெரும் மலையின் முகப்பில் பல்வேறு தேவர்கள் அவரவர் வாகனத்தில் இருப்பதாகக் காண்பிக்கப்படுகிறார்கள். அங்கே முருகன் மயில்மீது அமர்ந்துள்ளார். சிற்பம் சிதைந்துள்ளது. இது எட்டாம் நூற்றாண்டு. பல்லவருக்குப் பின், பாண்டியர்களுக்குமுன். இவை மூன்றையும் பார்ப்போம்.

மயில்மீது முருகன் - தேவ்கர்; எல்லோரா; பாதாமி

மயில்மீது முருகன்

மேலே, முதலாவது தேவ்கர், இரண்டாவது எல்லோரா, மூன்றாவது பாதாமி. தமிழகத்தில், மயில்மீது முருகன் எனும் சிற்பம் தோன்றுவது மிகப் பின்னாலேதான். அதேபோலக் கையில் வேல் ஏந்திய முருகன் என்பதும் மிகப் பிற்காலத்திலேதான். வட இந்தியா எனும் பெருநிலப் பரப்பில் வெவ்வேறு வகைகளில் முருகன் எனும் கார்த்திகேயன் சிற்பங்கள் காணப்படுகின்றன. அதில் தொடக்கம் முதலாகவே வேல் ஏந்திய வேலவன் வந்துவிடுகிறான்.

கார்த்திகேயன் - உதயகிரி, படம்: வி.கே.ஶ்ரீனிவாசன்

கார்த்திகேயன் – உதயகிரி, படம்: வி.கே.ஶ்ரீனிவாசன்

மேலே நீங்கள் காண்பது மத்தியப் பிரதேசத்தின் உதயகிரிக் குகையில் காணப்படும் முருகனின் வடிவம். கையில் நீண்ட வேல் ஏந்தியிருப்பதை நீங்கள் காணலாம். இந்தக் குகையின் காலம் ஐந்தாம் நூற்றாண்டின் தொடக்கம் ஆகும். இதில் மட்டுமல்ல, குஷாணர்கள் காலத்திலிருந்தே கையில் இவ்வாறு வேல் ஏந்திய கம்பீர கார்த்திகேய வடிவத்தை நாம் காண முடிகிறது.

ஒடிஷாவில் நாம் காணும் கார்த்திகேய வடிவம், வேலையும் மயிலையும் இணைத்தது.

கார்த்திகேயன் - ஒடிஷா, படம்: வி.கே.ஶ்ரீனிவாசன்

கார்த்திகேயன் – ஒடிஷா, படம்: வி.கே.ஶ்ரீனிவாசன்

இவற்றில் முதல் இரண்டும் புவனேஸ்வரத்தில் வழிபடும் கோவில்களில் உள்ளவை. அடுத்த இரண்டும் அருங்காட்சியகங்களில் உள்ளவை. காலகட்டம் ஏழு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு ஆகும். கையில் வேல், கழுத்தில் புலிநகம் கோர்த்த சங்கிலி. வாகனமான மயிலின் அழகு கூடிக்கொண்டே செல்கிறது. இடக்கையிலோ வலக்கையிலோ வேல். தலையின் ஜடாமுடி அலங்காரம் மிகத் தனித்தன்மை கொண்டதாக உள்ளது. சன்னவீரம் இல்லை. ஆனால் மூன்றில் பூணூல் உள்ளது, ஒன்றில் இல்லை.

கார்த்திகேயன் - ஒடிஷா, படம்: வி.கே.ஶ்ரீனிவாசன்

கார்த்திகேயன் – ஒடிஷா, படம்: வி.கே.ஶ்ரீனிவாசன்

அடுத்து, மயிலையும் சேவலையும் பாசத்துடன் தடவிக்கொடுக்கும் அல்லது அணைத்துக்கொள்ளும் முருகன் சிலைகளும் ஒடிஷாவில் கிடைக்கின்றன. இவையும் மேலே சொன்ன அதே 7-9 நூற்றாண்டுக் காலகட்டம்.

தமிழகத்தில் 12-ம் நூற்றாண்டின் இறுதி அல்லது அதற்குப்பிறகுதான் ஆறு தலையும் பன்னிரு கைகளும் மயிலும் முருகன் படிமத்தில் நுழைகின்றன. பின்னர் விஜயநகர, நாயக்கர் காலத்தில் மாபெரும் அறுமுகனை மயில்மீது அமர்ந்த கோலத்தில் காணமுடிகிறது. தில்லி தேசிய அருங்காட்சியகத்தில் உள்ள இச்சிலை சோழர் கலைப்பாணியில் அமைந்ததாகும். பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.

மயில்மீது அமர்ந்த ஆறுமுகன் - புவனேஸ்வரம் அருங்காட்சியகம், படம்: வி.கே.ஶ்ரீனிவாசன்

மயில்மீது அமர்ந்த ஆறுமுகன் – தில்லி தேசிய அருங்காட்சியகம், படம்: வி.கே.ஶ்ரீனிவாசன்

இதேபோன்ற, ஆனால் மயில்மீது இருபுறமும் கால்கள் போட்டு அமர்ந்த வடிவில் நுக்கேஹள்ளி எனும் இடத்தில் உள்ள ஹொய்சளர் கலைப்பாணி முருகன் சிலையைக் கீழே காணலாம். பொதுவாக ஹொய்சளர்கள் மிக அரிதாகவே முருகன் சிலையை உருவாக்கியுள்ளனர். இது 13-ம் நூற்றாண்டுச் சிலையாகும். இங்கே நமக்கு மிகவும் பரிச்சயமான அழகான வேலை முதன்முறையாகக் காண முடிகிறது. மறு கையில் பாசக்கயிறு. மற்றொரு கையில் அக்கமாலை. நான்காம் கையில் ஹொய்சளர் சிலைகள் அனைத்திலும் இருக்கும் ஒருவித எலுமிச்சைவகைப் பழம். ஆறு முகம், அதில் மூன்று காணக்கிடைக்கிறது. மயிலை, அதன் தோகைகளுடன் மிக மிக அழகாக உருவாக்கியுள்ளனர்.

மயில்மீது அமர்ந்த குமரன் - நுக்கேஹல்லி, படம்: வி.கே.ஶ்ரீனிவாசன்

மயில்மீது அமர்ந்த குமரன் – நுக்கேஹள்ளி, படம்: வி.கே.ஶ்ரீனிவாசன்

0

இவ்வாறாக நாம் முருகனைப் பலவித வடிவங்களில் காண்கிறோம். இவை குறித்து ஆகமங்கள் என்ன சொல்கின்றன?

கோபிநாத ராவ், குமாரதந்த்ரம், ஶ்ரீதத்வநிதி ஆகியவற்றை அடிப்படையாக வைத்து குமார மூர்த்தங்கள் எப்படியெல்லாம் இருக்கலாம் என்று விவரிக்கிறார். முருகன், தனித்து இருக்கலாம், ஒரு அல்லது இரு தேவியருடன் இருக்கலாம். ஒரு முகம், ஆறு முகம் என இருவகையிலும் இருக்கலாம். ஒரு முகம் என்றால் இரு அல்லது நான்கு கைகள். உட்கார்ந்திருந்தால் இரு கரங்கள். நின்றுகொண்டிருந்தால் நான்கு கரங்கள். மயில்மீது அமர்ந்திருந்தால் ஆறு, எட்டு அல்லது பன்னிரு கரங்கள். கைகளில் சக்தி, வஜ்ரம், தண்டம், சேவல் என்று தொடங்கி என்னவெல்லாம் இருக்கலாம் என்பதற்கும் இலக்கணங்கள் உள்ளன. நாட்டின் தலைநகரமாக இருந்தால் எப்படிப்பட்ட முருகன் சிலை இருக்கவேண்டும், கிராமமாக இருந்தால் அல்லது வனத்தை ஒட்டி அமைந்தால் எவ்வாறு இருக்கவேண்டும் என்பன பற்றியும் ஆகமங்கள் விரிவாகக் கூறுகின்றன.

குமாரதந்த்ரம், பதினாறு வகையான குமார மூர்த்தங்களைக் குறித்துப் பேசுகிறது. அவையாவன:

(1) சக்திதரன்
(2) ஸ்கந்தன்
(3) சேனாபதி
(4) சுப்ரமணியன்
(5) கஜவாஹனன்
(6) சரவணபவன்
(7) கார்த்திகேயன்
(8) குமாரன்
(9) ஷண்முகன்
(10) தாராகாரி
(11) சேனானி
(12) பிரம்ம சாஸ்தா
(13) வள்ளி கல்யாண சுந்தரமூர்த்தி
(14) பாலஸ்வாமி
(15) கிரௌஞ்சபேட்டா
(16) ஷிகிவாஹனன்

சக்திதரன் வடிவத்தில் ஒரு முகமும் இரண்டு கைகளும் இருக்கவேண்டும் என்கிறது குமாரதந்த்ரம். இரு கரங்களிலும் வஜ்ரம், சக்தி ஆகிய ஆயுதங்கள் இருக்கவேண்டும். நான்கு கரங்கள் இருக்கவேண்டும் என்கிறது ஶ்ரீதத்வநிதி. அவற்றில் வஜ்ரம், சக்தி, சேவல் ஆகியவையும் நான்காவது கரம் அபயமுத்திரையிலும் இருக்கவேண்டும். தலையில் ரத்தினம் பதித்த ஜடாமகுடம் இருக்கவேண்டும். மார்பில் வெண்ணிறப் பூணூல் இருக்கவேண்டும். உடலில் சந்தனம் பூசப்பட்டிருக்கவேண்டும். இந்த வடிவம், சுப்ரமணியரின் ஞான சக்தியை உள்ளடக்கியது.

ஸ்கந்தன் வடிவில் ஒரு தலை, இரு கரங்கள் என்கிறது குமாரதந்த்ரம். தாமரையின் நிறத்தில் இருக்கவேண்டும். கோமணம் மட்டுமே கட்டியிருக்கவேண்டும். கையில் ஒரு தண்டம். மற்றொரு கை, இடுப்பின்மீது. இதுதான் பழனியாண்டவர் வடிவம்.

ஆனால் ஶ்ரீதத்வநிதி, மேலே சொல்லப்பட்ட வடிவத்தை வேலாயுத சுப்ரமணியர் என்கிறது. ஸ்கந்தன் வடிவத்துக்கு அது வேறு இலக்கணத்தைச் சொல்கிறது. ஒரு முகம், நான்கு கரங்கள். புகையின் வண்ணத்தில் சிற்பம் இருக்கவேண்டும். தாமரை மலர்மீது அமர்ந்திருக்கவேண்டும். தலையில் கரண்ட மகுடம். அதில் மலர்களால் ஆன வளையம். ஒரு கையில் வஜ்ரம், மறு கையில் சேவல். மற்ற இரு கைகள் அபய, வரத ஹஸ்தத்துடன்.

சேனாபதி வடிவில் ஆறு முகம், அருகில் ஒரு தேவி. அவளை அணைத்து இடது மடியில் அமர்த்தியிருக்கவேண்டும். கைகளில் தாமரை, சூலம், கேடயம், வஜ்ரம், வில், கதை, மணி, சேவல் ஆகியவையும் அபய முத்திரையும் இருக்கவேண்டும்.

சுப்ரமணியர் எனும் வடிவம் குங்கும நிறத்தில் இருக்கவேண்டும். உடலெங்கும் கேயூரம், ஹாரம் முதலான ஆபரணங்கள் அணிந்திருக்கவேண்டும். இரு கைகள் இருந்தால் இடுப்பில் ஒரு கை, அபய ஹஸ்தம். நான்கு கைகள் இருந்தால் சக்தி ஆயுதம், தாமரை, சேவல், அபய ஹஸ்தம்.

கஜவாஹனர் எனும் வடிவம் ஒரு முகம், நான்கு கரங்கள் கொண்டது. சக்தி, சேவல் இரு கைகளில். மற்ற இரு கைகள் அபய ஹஸ்தம், வரத ஹஸ்தம்.

சரவணபவன், ஆறு முகம், பன்னிரு கரங்கள் கொண்டதாக இருக்கவேண்டும். இரு கரங்கள் அபய, வரத ஹஸ்தம். மற்றவற்றில் சக்தி, மணி, கொடி, தாமரை, சேவல், பாசம், தண்டம், உளி (ஆம்!), வில், அம்பு ஆகியவை இருக்கும்.

ஶ்ரீதத்வநிதி, சரவணபவன் வடிவத்துக்கு வேறு இலக்கணத்தைச் சொல்கிறது. ஒரு முகம், மூன்று கண்கள், ஆறு கைகள், சிங்கத்தின்மீது அமர்ந்திருக்கவேண்டும். உடல் விபூதியால் பூசப்பட்டிருக்கவேண்டும். கைகளில் அம்பு, கரும்பினால் ஆன வில், வாள், கேடயம், வஜ்ரம், சேவல் ஆகியவை இருக்கவேண்டும்.

கார்த்திகேயன் வடிவத்துக்கு ஆறு முகம், ஆறு கரங்கள், உதயசூரியன் வண்ணம். கரங்களில் வஜ்ரம், சக்தி, வாள், கேடயம், அபய, வரத முத்திரைகள். ஶ்ரீதத்வநிதியின்படி, ஒரு முகம், மூன்று கண்கள், பத்து கரங்கள், உதயசூரியன் வண்ணம். வில்வ இலை அல்லது பழம் தலைமீது இருக்கவேண்டும். கைகளில் சூலம், சக்கரம், அங்குசம், அபய முத்திரை, வேல், பாசம், சங்கு, வஜ்ரம், வரத முத்திரை.

ஷண்முக வடிவம், மயில்மீது அமர்ந்த கோலமாகும். ஆறு முகம், பன்னிரு கரங்கள். குங்கும நிறம். கைகளில் சக்தி, அம்பு, வாள், கொடி, கதை, அபய முத்திரை, வஜ்ரம், வில், கேடயம், தாமரை, கடக முத்திரை, வரத முத்திரை ஆகியவை. ஷண்முகன், ‘மால் மருகன்’ என்று குறிப்பிடப்படுகிறார்.

ஶ்ரீதத்வநிதி, ஷண்முகனின் இருபுறமும் ஜயா, விஜயா எனும் இரு பெண் தேவியர் நிற்கவேண்டும் என்கிறது. கைகளில் சங்கு, சக்கரம், சேவல், பாசம், கலப்பை ஆகியவை இருக்கவேண்டும் என்கிறது.

பிரம்ம சாஸ்தா குறித்த கதையை ஏற்கெனவே பார்த்துவிட்டோம். இவ்வடிவில் முருகனுக்கு ஒரு முகம், நான்கு கரங்கள். கைகளில் அக்கமாலை, கமண்டலம், அபய, வரத முத்திரைகள். தாமரையின் சிவப்பு வண்ணத்தில் சிற்பம் இருக்கவேண்டும்.

பாலஸ்வாமி வடிவில் அவர், சோமாஸ்கந்தராக சிவன் பார்வதியுடன் குழந்தையாக இருக்கவேண்டும். இரு கையிலும் தாமரை மலர் இருக்கவேண்டும். அல்லது தனித்து இருந்தால், ஒரு கையில் தாமரையும் மறு கை இடுப்பின்மீதும் இருக்கவேண்டும். சிவப்பு நிறம் உடையவராக இருக்கவேண்டும்.

வள்ளி கல்யாணசுந்தரராக வள்ளியை மணக்கும் கோலத்தில் இருக்கவேண்டும். கையில் அக்கமாலை, கமண்டலம், அபய, வரத முத்திரைகளுடன் இருக்கவேண்டும். பிரமன் கையில் ஸ்ருவத்தைக் கொண்டு அக்னி வளர்க்கவேண்டும். விஷ்ணு நீர் விட்டு வள்ளியைக் கன்னிகாதானம் செய்யும் நிலையில் இருக்கவேண்டும். அனைத்துக் கடவுள்களும் தேவர்களும் மணமக்களை வாழ்த்தும்வண்ணம் அமைக்கப்பட்டிருக்கவேண்டும்.

ஶ்ரீதத்வநிதியில் மேலும் பல வடிவங்கள் சொல்லப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றை மட்டும் பார்ப்போம்.

தேசிக சுப்ரமணியன் எனும் வடிவம் முருகன் ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் உட்பொருளை சிவனுக்கு உபதேசிப்பதாகும். மயிலில் அமர்ந்திருக்கவேண்டும். ஒரு முகம், ஆறு கரங்கள். கரண்ட மகுடம். சக்தி ஆயுதம், அக்க மாலை, வரத, அபய முத்திரை, ஆகியவற்றுடன் ஒரு கரம் சின் முத்திரையில் இருக்கவேண்டும். சிவன் ஒரு சீடராக – சிஷ்ய பாவத்தில் அமர்ந்திருக்கவேண்டும். மானசாரத்தில் சிவனது இந்த வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது. சுப்ரமணியருக்கு முன் கால்களை மடக்கி, ஒரு வலது கையால் வாய்மூடி, மற்றொன்றை இதயத்தின்மீது ஞான முத்திரையாக வைத்திருக்கவேண்டும். மற்ற இரு கைகளில் மழுவும் மானும் வைத்திருக்கவேண்டும். அவரது ஜடாமுடியில் பிறைநிலவு இருக்கவேண்டும். அருகில் பார்வதி நின்றுகொண்டிருக்கவேண்டும்.

தமிழகத்தில் காணப்படும் வடிவங்கள், பிரம்ம சாஸ்தா அல்லது சக்திதரன் என்றுதான் சொல்லவேண்டும். ஏழாம் நூற்றாண்டு தொடங்கி பல நூற்றாண்டுகள் கையில் சேவலைப் பிடித்திருக்கும் முருகன் வடிவங்கள் தமிழ்நாட்டில் கிடைத்ததாகத் தெரியவில்லை. மாறாக, நாம் ஏற்கெனவே பார்த்ததுபோல் ஒடிஷாவில் கிடைக்கின்றன. ஆனால் அங்கே தலையில் கரண்ட மகுடம் இல்லை.

முருகன் என்றால் அழகு. முருகன் என்றால் வீரமும். அழகு என்றால் சோழர்களுடையது. வீரம் என்றால் ஒடிஷாவின் வடிவங்களில் ஒருவித ஆவேசமும் போருக்குச் செல்லும் வீரமும் நன்கு தெரிகின்றன. சோழர் காலக் கலையில் ஒருவித அமைதியும் சாந்தமும் காணக்கிடைக்கின்றன. கீழே உள்ள செப்புச் சிலையுடன் இந்தக் கட்டுரையை முடித்துக்கொள்கிறேன். நான்கு கைகள், இரண்டில் வஜ்ரமும் சக்தியும். முன்னுள்ள கைகள் வில்லையும் அம்பையும் பற்றிக்கொள்ளும் வடிவத்தில். சோழர் காலச் செப்புப் படிமமான இது சென்னை அருங்காட்சியகத்தில் உள்ளது.

kk-ch06-17.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

 

கல்லும் கலையும் #7 – மாலொடு தண்தாமரையானும் நீணுதல் செய்தொழிய நிமிர்ந்தான்

கல்லும் கலையும்

இந்தத் தொடரின் ஆரம்பத்தில் ஞானகுருவாகிய தக்ஷிணாமூர்த்தி பற்றிப் பார்த்தோம். சிவனின் ஒரு வடிவம்தான் தக்ஷிணாமூர்த்தி எனும் தென்திசைக் கடவுள், சிவனுடைய கருவறை சுற்றுச் சுவரில் தெற்குக் கோஷ்டத்தில் தக்ஷிணாமூர்த்தியின் சிலை வைக்கப்படும் என்றும் பார்த்தோம்.

சிவன் கோவிலில் கருவறையில் வழிபடப்படுவது யார்?

விதிவிலக்குகள் மிகச்சில தவிர்த்து, சிவ வழிபாடு என்பது லிங்க வடிவில் சிவனை வழிபடுவதே. இந்தியா முழுமையிலும் சிவன் கோவில்கள் என்றாலே கருவறையில் லிங்க வடிவத்தைத்தான் நீங்கள் காண்பீர்கள்.

லிங்க வடிவில் சிவன் - பாதாமி, கடம்பர் மலை, பைரவகோனா

லிங்க வடிவில் சிவன் – பாதாமி, கடம்பர் மலை, பைரவகோனா

மேலே உள்ள படங்களைப் பாருங்கள். முதலாவது, வட கர்நாடகத்தின் பாதாமியில் சாளுக்கிய குகைக் கோவில்களைத் தாண்டி, அருகில் உள்ள மாபெரும் குளத்தைச் சுற்றிச் சென்றால் ஒரு சிறு குன்று தென்படும். அந்தக் குன்றின் ஒருபுறத்தில் பல சிற்பங்கள் செதுக்கப்பட்டிருக்கும். அதில் சிறு பிறை ஒன்றில் எந்தவித அலங்காரங்களும் இல்லாமல் ஒரு லிங்கம் செதுக்கப்பட்டிருக்கிறது.

இரண்டாவது, புதுக்கோட்டையின் நார்த்தாமலைக்கு அருகில் உள்ள கடம்பர் மலை. அருகருகாக மூன்று கோவில்கள். ஒன்று சோழர் காலக் கட்டுமானக் கோவில், மற்ற இரண்டு பாண்டியர் காலக் கட்டுமானக் கோவில்கள். ஒட்டிய குன்றின்மீது சிறு பிறையில் பீடத்தின்மீது லிங்கம். அந்தப் பிறையைச் சுற்றி கோவில் போல ஒரு கட்டுமானத்தைச் செதுக்கியுள்ளனர்.

அதற்கு அருகில் நீங்கள் பார்ப்பது ஆந்திராவில் உள்ள பைரவகோனா என்னும் இடம். அங்கே அடுத்தடுத்து குகைக்கோவில்கள் வெட்டப்பட்டுள்ளன. அதில் ஒரு சுவரில் கோவில் போன்ற புடைப்புச் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. பாதாமியில் பார்த்ததிலிருந்து கடம்பர் மலை சற்று முன்னேற்றம் என்றால், பைரவகோனாவில் முழு விமானத்தைப் பார்க்க முடிகிறது. அதிஷ்டானம், பாதவர்கம், பிரஸ்தரம், கண்டம், சிகரம், ஸ்தூபி எனப்படும் ஆற அங்கக் கோவில் கட்டுமானத்தையும் கருவறையில் மிகத் தோராயமாக ஒரு லிங்கத்தையும் செதுக்கியுள்ளனர்.

கோவில்கள் முதலில் குகைக் கோவில்களாகவும் பின்னர் ஒற்றைக்கல் தளிகளாகவும் அடுத்து கட்டுமானக் கோவில்களாகவும் உருப்பெற்றன. தமிழகத்தைப் பொருத்தமட்டில் குகைக்கோவில்களையும் ஒற்றைக்கல் தளிகளையும் பல்லவர்களும் பாண்டியர்களும் மட்டுமே அமைத்தனர். பின்னர் கட்டுமானக் கோவில்களைக் கட்டத் தொடங்கினர். சோழர்கள் அதே முறையைப் பின்பற்றி கட்டுமானக் கோவில்களை மட்டுமே கட்டினர்.

பல்லவர்கள் தாம் வெட்டுவித்த சிவன் கோவில் கருவறைகளில் அடிப்பாறையில் சிவலிங்கங்களை உருவாக்கவில்லை. பின்சுவரில் நேரடி ஓவியங்களாக, அல்லது மரப்பலகையில் செதுக்கி, அல்லது மரச்சட்டகம் பொருத்திய துணியில் சுவரில் பொருத்தி வழிபட்டுள்ளனர். கைலாசநாதர் கோவில் சுற்றுப்பாதையில் உள்ள சில சன்னிதிகளில் ஓவிய வடிவம் சிதைந்த நிலையில் நமக்குக் கிடைக்கிறது.

கைலாசநாதர் கோவில்

காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில்

கற்சுவரில் சிற்பமாகச் செதுக்கியும் வழிபட்டுள்ளனர். உதாரணத்துக்கு மாமல்லபுரத்தின் பல கோவில்களை எடுத்துக்கொள்ளலாம். கீழே சாளுவன்குப்பம், அதிரணசண்ட மண்டபத்தைப் பாருங்கள்.

அதிரணசண்ட மண்டபம் - சாளுவன்குப்பம், படம்: அசோக் கிருஷ்ணசுவாமி

சாளுவன்குப்பம் அதிரணசண்ட மண்டபம், படம்: அசோக் கிருஷ்ணசுவாமி

இங்கே தாய்ப்பாறையிலேயே கருவறை வெட்டப்பட்டு, வாயிலில் துவாரபாலகர்களும் உள்ளே பின்சுவரில் சோமாஸ்கந்த வடிவமும் செதுக்கப்பட்டுள்ளது. ஆனால் லிங்கம் மட்டும் வேறு கல்லில் (கரிய பஸால்ட்) தனியாகச் செய்து பொருத்தப்பட்டிருக்கிறது. பல பட்டைகளால் ஆன லிங்கம். இதற்குத் தாரா லிங்கம் (Dhārā liṅga) என்று பெயர். இதுகுறித்துப் பின்னர் பார்ப்போம்.

மாறாக, பாண்டியர்கள் தாய்ப்பாறையிலேயே லிங்கத்தை வெட்டினார்கள். பாண்டியர்களின் குகைக் கோவில்கள் காவிரிக்குத் தெற்கே திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களிலிருந்து தொடங்கி காரைக்குடி, சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்யாகுமரி என்று பரவியுள்ளவை. உதாரணத்துக்கு புதுக்கோட்டை நார்த்தாமலையில் திருச்சுனை ஈசுவரம் என்ற பெயருடைய ஒரு சுவாரசியமான குகைக்கோவிலை எடுத்துக்கொள்வோம். இது பெரும்பாலும் ஒரு நீர்ச்சுனைக்கு அடியில் இருக்கும் குகை. தூரத்திலிருந்து சிலமுறை நீருக்கடியில் இருக்கையில் பார்த்துள்ளேன். மிகச் சமீபத்தில்தான் இந்த குகையின் உள்ளே சென்று பார்த்தேன். நான் நினைத்ததைவிடப் பெரிய குகை. சில இளைஞர்கள் இந்தச் சுனையின் நீரை இறைத்து வெளியேற்றி கருவறையை சுத்தப்படுத்தியுள்ளனர்.

திருச்சுனை ஈசுவரம் - நார்த்தாமலை

திருச்சுனை ஈசுவரம் – நார்த்தாமலை

தாய்ப்பாறையிலேயே செதுக்கப்பட்ட பீடமும் லிங்கமும். லிங்கத்தைப் பார்க்கும்போது இது வேறு கல்லோ என்று உங்களுக்குத் தோன்றலாம். இல்லை. அதே பாறைதான். தேய்த்துத் தேய்த்து மெருகேற்றப்பட்டிருக்கிறது. மீண்டும் மழை பெய்தால் இந்த முழுக் குகையும் நீரில் மூழ்கிவிடும்.

0

லிங்க வழிபாடு எங்கிருந்து தொடங்குகிறது? லிங்க வழிபாடு எதனைக் குறிக்கிறது?

தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை குறித்தும் பேராசிரியர் சுவாமிநாதன் குறித்தும் முன்னமேயே நான் குறிப்பிட்டுள்ளேன். ஒவ்வோர் ஆண்டும் தொல்லியல் பார்வையில் முக்கியமான இடங்களுக்கு ஒரு வாரக் கலையுலா ஒன்றை நாங்கள் நடத்துகிறோம். 2015-ல் குஜராத் சென்றிருந்தோம். குஜராத்தில் மோதேரா சூரியக் கோவில், ராணி கி வாவ் படிக்கிணறு முதலாகப் பல இடங்களுக்குப் போனோம். ஆனால் அந்தப் பயணத்தில் முக்கியமானவை லோதல், தோலாவீரா எனும் சிந்து சரஸ்வதி நாகரிகத்தின் இரு நகரங்கள்.

தோலாவீரா கிட்டத்தட்ட பாகிஸ்தானை ஒட்டிய, ஆள் அரவமே இல்லாத, சௌராஷ்டிரா பகுதியில் உள்ளது. இங்குள்ள செங்கல் கட்டுமான எச்சங்களைப் பார்வையிட்டபடி வந்த நாங்கள் கீழ்க்காணும் கம்ப வடிவிலான பொருளைக் கண்டோம்.

தோலாவீரா

தோலாவீரா

இது வெறும் கட்டுமானப் பொருள் அல்ல என்பது தெளிவு. மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஒரு கல்லை மிக அழகாகச் செதுக்கி, அதற்கு ஒரு குறிப்பிட்ட முனையைக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் இதுகுறித்து நாம் மேலே எதுவும் சொல்ல முடியாததற்குக் காரணம், சிந்து நாகரிகம் குறித்து எழுதப்பட்ட தகவல்கள் என்று நாம் எதையும் பெறாததே. ஆனால் மேலே உள்ள பொருள் ஆண் குறியை ஒத்ததாக இருப்பதை மட்டும் கணக்கில் வைத்துக்கொள்ளுங்கள்.

அடுத்து நாம் பார்க்கவேண்டியது ஆந்திராவில் குடிமல்லம் என்ற இடத்தில் கிடைத்துள்ள லிங்கத்தை. தோலாவீராவில் கிடைத்ததை லிங்கம் என்று எப்படிச் சொல்லலாம் என்று ஒருவர் கேட்கலாம். ஆனால் குடிமல்லம் லிங்கத்தில் அப்படிப்பட்ட பிரச்னையே வராது.

செதுக்கப்பட்டிருப்பது ஆண்குறிதான் என்பதைத் தெளிவாகக் காட்டும் சிற்பம். அதன் முன்புறத்தில் ஓர் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. மிக அழகான தலைப்பாகை. குறைவான ஆனால் நிறைவான அணிகலன்கள். இடது கையில் நிச்சயமாக மழு. வலது கையில் சுருள் கொம்புகளைக் கொண்ட செம்மறி ஆடு. அந்த உருவத்துக்கு மேலாடை இல்லை. கீழாடை அணிந்திருந்தாலும் அந்த உருவத்தின் ஆண்குறி தெளிவாக மேல் நோக்கி எழும்பியுள்ளது. இந்த உருவம், பூதகணம் போன்ற ஒரு குள்ள உருவத்தின் தோளின்மீது நின்றுகொண்டிருக்கிறது.

இது லிங்கத்தின்மீது சிவனின் முழு உருவத்தைச் செதுக்கிய வடிவம் என்றே நிபுணர்கள் அனைவரும் சொல்கின்றனர். குடிமல்லத்தில் கிடைத்த இந்த லிங்க வடிவைக் கொண்டு பின்னர் பரசுராமேஷ்வரா ஆலயம் எழுப்பப்பட்டுள்ளது. இந்த லிங்கத்தின் காலக் கணக்கீட்டில் நிறையக் குழப்பங்கள் உள்ளன. பொயுமு 1-ம் நூற்றாண்டு என்பதிலிருந்து பொயு 7-ம் நூற்றாண்டு என்கிறார்கள். என் கணிப்பில் இது நிச்சயமாக பொயு 3-ம் நூற்றாண்டுக்கு முற்பட்டதாக இருக்கவேண்டும். சாதவாகனர்கள் காலத்தில் உருவாக்கப்பட்டதாக இருக்கலாம். குப்தர்களின் காலத்துக்குக் கட்டாயம் முற்பட்டதாக இருக்கவேண்டும். கீழே பரசுராமேஷ்வரா ஆலயத்தில் உள்ள சிற்பம், அருகிலேயே சந்திரகிரி கோட்டையில் வைக்கப்பட்டிருக்கும் இந்தச் சிற்பத்தின் நகலின் படம், இரண்டையும் இணைத்துள்ளேன்.

அசல் - பரசுராமேஷ்வரா கோவில், குடிமல்லம்; நகல் - சந்திரகிரி கோட்டை அருங்காட்சியகம், படம் : முரளி நடராஜன்

அசல் – பரசுராமேஷ்வரா கோவில், குடிமல்லம்; நகல் – சந்திரகிரி கோட்டை அருங்காட்சியகம், படம் : முரளி நடராஜன்

கோபிநாத ராவ், பிதா (Bhitā) என்ற இடத்தில் கிடைத்த, தற்போது லக்னோ அருங்காட்சியகத்தில் உள்ள, எழுத்துகள் பொறிக்கப்பட்ட ஒரு லிங்கத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறார். இது குடிமல்லம் லிங்கத்தின் காலத்துக்கு முற்பட்டதாக, பொயுமு இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக, அதன் எழுத்தமைதியைக் கொண்டு அறியப்படுகிறது. ‘கஜஹுதி புதனம் லிங்கோ பதிடாபிதோ வாசேதி புதேன நாகசிரினா பிய இதம் தேவதா’ என்கிறது பிராகிருத மொழி, பிராமி எழுத்துக் கல்வெட்டு. ‘வாசேதியின் மகன் நாகசிரி, கஜஹுதியின் லிங்கத்தை நிர்மாணித்தான். கடவுள் மகிழ்ச்சி அடையட்டும்’ என்பது இதன் பொருள்.

லிங்கம் என்ற சொல்லுக்கு வடமொழியில் ஒரு பொருள் ஆண்குறி. யோனி என்பதற்கான பொருள் பெண்குறி. நிச்சயமாக சிவன் வழிபாடு ஆண்குறி வழிபாட்டுடன் இணைந்தது என்பதையே குடிமல்லம் சிற்பம் நமக்குக் காட்டுகிறது. இந்த அடிப்படையில்தான் தோலாவீரா சிற்பம் நமக்கு ஒரு காட்சியைக் கொடுக்கிறது.

இந்தியாவில் லிங்க வழிபாடு பல மாறுதல்களை அடைந்துள்ளது. இன்று கோவிலுக்குச் செல்வோர் எல்லோருமே ‘ஆண் குறியை வணங்கப் போவோம், வா!’ என்று சொல்லிவிட்டுச் செல்வதில்லை. அப்படித்தான் இந்து மதத்தைக் கேவலப்படுத்த முற்படுவோர் கேலி செய்கின்றனர். இந்து மதம் விரிவடைந்தபடியும் மாறியபடியுமே இருந்துவந்துள்ளது. தாய் தெய்வ வழிபாடு, பெண்குறி வழிபாடு, ஆண்குறி வழிபாடு போன்றவை கருவளம் (fertility), செழிப்பு ஆகியவற்றுடன் தொடர்புடையவை. இந்தியாவில் லஜ்ஜா கௌரி வழிபாடு என்பதும் புழக்கத்தில் இருந்தது. இன்று சில கோவில்களின் அருகில் அல்லது அருங்காட்சியகங்களில் இந்தச் சிற்பங்கள் இருப்பதை நீங்கள் பார்க்கலாம், லஜ்ஜா கௌரி என்பது தலை இல்லாத, முழுமையான பெண் உடலைக் கொண்ட சிற்பம். இந்தச் சிற்பத்தில் பெண்ணின் யோனி முதன்மைப்படுத்தப்பட்டு, யோனி விரித்தபடி, கால்களை அகட்டி அமர்ந்திருக்கும். தலை இருக்கும் இடத்தில் தாமரை மலர் இருக்கும். உடலில் ஆடைகள் ஏதும் இருக்காது.

லஜ்ஜா கௌரி - ஆலம்பூர் அருங்காட்சியகம் ; நியூயார்க் மெட் அருங்காட்சியகம், படம் வி.கே. ஸ்ரீனிவாசன்

லஜ்ஜா கௌரி – ஆலம்பூர் அருங்காட்சியகம்; நியூயார்க் மெட் அருங்காட்சியகம், படம் வி.கே. ஸ்ரீனிவாசன்

லிங்க வழிபாடு ஆரியர்களுக்கானதல்ல என்றும் ஆரியர்களின் வேதமானது, லிங்க வழிபாட்டை ஆரம்பத்தில் எதிர்த்து, பின்னர் ஏற்றுக்கொண்டது என்றும் சிலர் கருதுகிறார்கள். அதற்குச் சான்றாக, ரிக் வேதத்தில் இந்திரன் கூறும் கூற்றாக, ‘எவரெல்லாம்  ஆண்குறியை (ஶிஶ்ந) வழிபடுகிறார்களோ, அவர்களை நம் புனிதச் சடங்குகள் நடக்கும் இடத்தில் அனுமதிக்காதீர்கள்’ என்று வருவதை எடுத்துக்காட்டுகிறார்கள். இதனைச் சுட்டிக்காட்டும் கோபிநாத ராவ், வேதங்களுக்கு உரை எழுதிய யாஸ்கர் (பொயுமு 4-ம் நூற்றாண்டு), சாயணர் (பொயு 14-ம் நூற்றாண்டு) ஆகியோர் ஶிஶ்ந என்பதற்கு ஆண்குறி என்பதைவிட, கெட்ட பழக்கம் உடையவர்கள் என்றும், துர்காசார்ய என்பவர், விலைமாதருடன் உறவு வைத்திருப்பவர்கள் என்றும் பொருள் கொள்வதைச் சுட்டிக்காட்டுகிறார்.

ஒன்று தெளிவு. காலம் செல்லச்செல்ல, வழிபடும் சிற்பமான லிங்கம் பெரும் மாற்றம் அடையத்தொடங்கியது. ஆகமங்கள் இந்தச் சிற்பத்தில் பல சிக்கலான அளவுக் கணக்குகளை அறிமுகப்படுத்தின. தொடக்ககாலச் சிற்பங்கள் இயல்பாக, வட்டார வழக்குகளாக இருப்பதிலிருந்து, தெளிவான வரைமுறைகளுக்கு உட்பட்டதாக ஆகத் தொடங்கியது.

0

லிங்கம் இரு வகைப்படும். சல லிங்கம், அசல லிங்கம். அசல லிங்கம் என்பது நகராதது. கருவறையில் நிறுவப்படுவது. பெரும்பாலும் கல்லால் ஆனது. சல லிங்கம் என்பது பல்வேறு பொருள்களால், பல்வேறு காரணங்களுக்காக உருவாக்கப்படுவது. சுட்ட மண், உலோகம், ரத்தினக் கற்கள், மரம், கருங்கல் போன்றவற்றினால் இந்த லிங்கம் இருக்கலாம். லிங்காயத்துகள், வீரசைவர்கள் எனும் கர்நாடக மாநில சைவப் பிரிவினர் தம் உடலில் அணிந்து செல்லும் லிங்கம் இந்த வகையே.

ஆகமங்கள் பல்வேறு விதமான லிங்கப் பிரதிஷ்டைகள் குறித்துப் பேசுகின்றன. ஸ்வயம்பு லிங்கம் என்றால் தானாக உருவான லிங்கம். அதேபோல கணங்கள், தேவர்கள், ரிஷிகள் ஆகியோர் நிர்மாணித்து வழிபடும் லிங்கங்கள் குறித்தும் ஆகமங்கள் பேசுகின்றன. நாம் மனிதர்கள் உருவாக்கி வழிபடும் மானுஷ லிங்கங்களை மட்டும் பார்ப்போம். கருவறையில் வைக்கப்படும் மானுஷ லிங்கத்துக்கு மூன்று பாகங்கள் இருப்பதாக ஆகமங்கள் சொல்கின்றன. அவையாவன, பிரம்ம பாகம், விஷ்ணு பாகம், ருத்ர பாகம். பிரம்ம பாகமானது அடிப்பகுதி. இதன் குறுக்குவெட்டு சதுரமாக இருக்கும். அதற்கு அடுத்தது நடுப்பகுதியான விஷ்ணு பாகம், எண்கோண வடிவு கொண்டது. அதற்கு மேற்பட்ட ருத்ர பாகத்தின் குறுக்குவெட்டு வட்ட வடிவமானது. இது மேலே ஒரு கோளத்தைப் போல வளைவானதாக இருக்கும். இந்த ருத்ர பாகத்துக்கு பூஜா பாகம் என்றும் பெயர். இந்த ருத்ர பாகத்தில் பிரம்ம சூத்திரம் எனப்படும் கோடுகள் வரையப்பட்டிருக்கும்.

ஆகமங்களில் இந்த ஒவ்வொரு பாகத்தின் ஒப்பீட்டு நீளம், இவை ஒவ்வொன்றின் சுற்றளவு ஆகியவை குறித்துப் பல்வேறு விவரங்கள் வருகின்றன. உதாரணத்துக்கு மட்டும் ஒருசில தகவல்களைப் பார்ப்போம்.

பிரம்ம பாகம், விஷ்ணு பாகம், ருத்ர பாகம் ஆகியவை சம நீளங்கள் கொண்டவையாக இருந்தால் அதற்குச் சர்வசம லிங்கம் என்று பெயர்.

விஷ்ணு பாகம், பிரம்ம பாகத்தைவிட நீளமாகவும், ருத்ர பாகம், விஷ்ணு பாகத்தைவிட நீளமாகவும் இருக்கும் லிங்கங்களுக்கு வர்த்தமான லிங்கம் என்று பெயர். இவற்றின் நீளங்கள் முறையே 4:5:6 அல்லது 5:6:7 அல்லது 6:7:8 அல்லது 7:8:9 என்ற விகிதங்களில் இருக்கலாம்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

சைவாதிக லிங்கம் என்றால், அதில் பிரம்ம பாகமும் விஷ்ணு பாகமும் ஒரே அளவு கொண்டவையாக இருக்கும்; ருத்ர பாகம் மட்டும் இவ்விரண்டையும்விட நீளமாக இருக்கும். அதாவது, 3:3:4 அல்லது 4:4:5 அல்லது 5:5:6 அல்லது 7:7:8 என்று இருக்கலாம்.

சரி, நீளம் பற்றிய விகிதங்கள் தரப்பட்டுள்ளன. அகலம் அல்லது சுற்றளவு?

லிங்கத்தின் மொத்த நீளத்தைப் பதினாறு பாகங்களாகப் பிரித்துக்கொள்ளவேண்டும். அதில் ஆறு பாகம் அகலம் இருந்தால் அதற்கு ஆத்ய லிங்கம் என்று பெயர். அகலம் ஐந்து பாகமாக இருந்தால் அனாத்ய லிங்கம். நான்கு பாகமாக இருந்தால் சுரேத்ய லிங்கம். இவை தவிர ஆகமங்கள் இன்னொரு விதமான லிங்கத்தைக் குறிப்பிடுகின்றன.

மொத்த லிங்கத்தின் நீளத்தை ஒன்பது பங்குகளாகப் பிரித்துக்கொள்ளுங்கள். அதில் எட்டு பங்குதான் பிரம்ம பாகத்தின் குறுக்குவெட்டான சதுரத்தின் சுற்றளவு. விஷ்ணு பாகத்தின் குறுக்குவெட்டான எண்கோணத்தின் சுற்றளவு ஏழு பங்கு. ருத்ர பாகத்தின் குறுக்குவெட்டான சுற்றளவு ஆறு. இப்படிப்பட்ட லிங்கத்தை திரைராசிக லிங்கம் என்று ஆகமங்கள் குறிப்பிடுகின்றன.

ஆனால், இவை தோராயமான கணக்கீடுகளே. உதாரணமாக, லிங்கத்தின் நீளம் ஒன்பது அடி என்றால், சதுரத்தின் சுற்றளவு எட்டு அடி. அப்படியானால் சதுரத்தின் ஒரு பக்கத்தின் நீளம் இரண்டு அடி. இதற்குள் பொருந்தும் சமபக்க எண்கோணத்தின் சுற்றளவு என்னவாக இருக்கும்? இதற்குள் பொருந்தக்கூடிய சமபக்க எண்கோணத்தின் ஒரு பக்கத்தின் நீளம்21+2=0.82841+22=0.8284

அப்படியானால் எண்கோணத்தின் சுற்றளவு 6.63 ஆகும். இதனை ஆகமங்கள் தோராயமாக 7 என்கின்றன. அதேபோல வட்டத்தின் சுற்றளவு2�=6.32π=6.3

இதனை ஆகமங்கள் 6 என்று தோராயமாகச் சொல்கின்றன.

ருத்ர பாகத்தின் மேல்பகுதியின் வளைவு, பலவிதங்களில் அமைக்கப்பெறுகின்றன. இவற்றுக்கு, குடைபோன்றது (சாத்ராகார), வெள்ளரிபோன்றது (திரிபுஷாகார), கோழிமுட்டைபோன்றது (குக்குடாண்டாகார), அரைநிலவுபோன்றது (அர்த சந்த்ராகார) மற்றும் நீர்க்குமிழிபோன்றது (புத்புத சத்ரிஷா) என்று பெயர்கள் தரப்பட்டுள்ளன. இவற்றை அமைப்பதற்கான கணித வரைமுறைகள் மிக விரிவாகத் தரப்பட்டுள்ளன என்றும் அவை மிகவும் சிக்கலான கணக்குகள் என்பதால் அவற்றைத் தன் புத்தகத்தில் சேர்க்கவில்லை என்றும் கோபிநாத ராவ் குறிப்பிடுகிறார்.

இந்தக் கணக்குகளிலும் பெயர்கள் தருவதிலும் வெவ்வேறு ஆகமங்களில் பல வேறுபாடுகளும் உள்ளன. இவற்றை இங்கே விவரமாகப் பேசுவதன் காரணம், இந்த லிங்க மூர்த்தங்கள் இஷ்டத்துக்கு உருவாக்கப்படுபவை அல்ல, மிகத் தெளிவான வடிவ கணித அடிப்படையில் உருவாக்கப்படுபவை என்பதைக் குறிப்பிடத்தான்.

பிரம்ம சூத்திரம் என்ற கோடுகளைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். இந்தக் கோடுகள் இல்லாவிட்டால், ஒரு லிங்கம் வழிபட ஏற்றதல்ல என்கிறார் கோபிநாத ராவ். இதில் வரும் நேர்கோடுகளின் நீளம், அவற்றுக்கிடையேயான இடைவெளி, வளைகோடுகளின் பாதை என அனைத்துக்கும் கணக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த வளைகோடுகளுக்கு பார்ஸ்வ சூத்திரங்கள் என்று பெயர்.

மானுஷ லிங்கங்களில் வேறு சில வகைப்பாடுகளும் உள்ளன. அவையாவன: அஷ்டோத்தர சத லிங்கம், சஹஸ்ர லிங்கம், தாரா லிங்கம் மற்றும் முக லிங்கம்.

லிங்கத்தின் ருத்ர பாகத்தில் 108 லிங்கங்களைச் சிறிது சிறிதாகச் செதுக்கி உருவாக்குவது அஷ்டோத்தர சத லிங்கம். இதற்கும் கணக்கு உண்டு. கிடைமட்டமாக பூஜாபாகத்தில் நான்கு கோடுகளை சம தூரத்தில் வரைந்துகொள்ளவேண்டும். இவற்றுக்குச் செங்குத்தாக நீளவாக்கில் 27 கோடுகளைச் சம இடைவெளியில் வரைந்தால் (27 x 4 = 108) கிடைக்கும் ஒவ்வொரு பகுதியிலும் ஒரு லிங்கத்தைச் செதுக்கவேண்டும்.

அதே பூஜா பாகத்தில் 1001 லிங்கங்களை உருவாக்கினால் கிடைப்பது சஹஸ்ர லிங்கம். ஆகமம் இதற்குத் தருவது 11 x 99 = 1089 என்னும் கணக்கு. அதாவது தோராயமாக 1001 லிங்கங்களுக்கான இடங்கள். புவனேஸ்வரத்தின் பரசுராமேஸ்வரா ஆலயத்தில் இதனைக் காணலாம். ஆனால், ஆகமக் கணக்குகளில் இல்லாத வகையில் 20 கிடைமட்ட வரிசைகளில் வரிசைக்கு 50-ஆக வெட்டப்பட்டுள்ளது. வரிசைக்கு 50 இருக்கும் என்பது ஒரு யூகம்தான். நான் அங்கே சென்றபோது பொறுமையாக எண்ணவில்லை.

சஹஸ்ர லிங்கம் - பரசுராமேஸ்வரா கோவில், புவனேஸ்வர்

சஹஸ்ர லிங்கம் – பரசுராமேஸ்வரா கோவில், புவனேஸ்வர்

அடுத்தது, தாரா லிங்கம். மாமல்லபுரத்தின் அதிரணசண்ட மண்டபத்தைப் பற்றிப் பேசும்போது அங்கே கருவறையில் உள்ள லிங்கம் தாரா லிங்கம் என்று சொல்லியிருந்தேன். ருத்ர பாகத்தின் குறுக்குவெட்டு வட்டமாக இல்லாமல் பட்டை பட்டையாக வெட்டப்பட்டிருந்தால் அதற்குப் பெயர்தான் தாரா லிங்கம். இது ஐந்து முதல் அறுபத்து நான்கு பட்டைகளாக வெட்டப்படலாம். ஒவ்வொரு ஆகமமும் ஒவ்வொரு கணக்கைக் கொடுக்கின்றன. அதிரணசண்ட மண்டபத்தின் தாரா லிங்கம் பதினாறு பட்டைகள் கொண்டதாக உள்ளது.

அடுத்து முகலிங்கம். பிதா, குடிமல்லம் போன்ற இடங்களில் கிடைத்த மிகப் பழமையான லிங்கங்கள் எல்லாமே உருவம் பொறித்த லிங்கங்களே. ஆனால் ஆகம காலத்துக்கு முந்தையவை என்று தெரிகிறது. ஆகமங்கள் வரையறுக்கப்பட்ட காலத்தில் முகலிங்க உருவாக்கத்துக்கும் கட்டுப்பாடுகள் உருவாகின்றன.

முதலில் லிங்கம், சர்வசம லிங்கமாக இருக்கவேண்டும், அதாவது அதன் பிரம்ம, விஷ்ணு, ருத்ர பாகங்கள் சம நீளம் கொண்டவையாக. இதன் ருத்ர பாகத்தில் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு அல்லது ஐந்து முகங்கள் புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்டிருக்கவேண்டும். இந்த ஐந்து முகங்களும் சிவனின் ஐந்து அம்சங்களான தத்புருஷ (கிழக்கு), அகோர (தெற்கு), வாமதேவ (வடக்கு), சத்யோஜாத (மேற்கு) மற்றும் ஈசான (வானம்) வடிவங்களைக் குறிக்கும்.

கருவறையில் கிழக்கு நோக்கி ஒரே ஒரு கதவு மட்டும் இருந்தால் ஒற்றை முகலிங்கமாக, கிழக்கு நோக்கிய தத்புருஷ வடிவமாக இருக்கும். கிழக்கு, மேற்கு இருபுறமும் கதவுகள் இருந்தால், இருமுக லிங்கமாக தத்புருஷ, சத்யோஜாத வடிவங்கள் இருக்கும். மூன்று கதவுகள் இருந்தால், அவை மேற்கு தவிர்த்த மூன்று திசைகளில் தத்புருஷ, அகோர, வாமதேவ வடிவங்கள் கொண்ட மூன்றுமுக லிங்கமாக இருக்கும். நான்கு திசைகளிலும் கதவுகள் இருந்தால், நான்கு முகங்கள் கொண்ட லிங்கமாக இருக்கும். அல்லது நான்குடன் சேர்த்து, ஐந்தாவது முகமாக, கிழக்கு பார்த்த ஈசானம் நான்கு முகங்களுக்கும் மேலே இருக்கும்.

வட இந்தியாவில் முக லிங்கங்கள் ஏகப்பட்டவை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. அதே எண்ணிக்கையில் தென்னிந்தியாவில் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஐந்தாம் நூற்றாண்டு குப்தர்களின் உதயகிரிக் குகையில் தாய்ப்பாறையிலேயே செதுக்கப்பட்ட ஒற்றைமுக லிங்கத்தைக் காணலாம்.

ஒற்றைமுக லிங்கம் - உதயகிரி, படம் வி.கே. ஸ்ரீனிவாசன்

ஒற்றைமுக லிங்கம் – உதயகிரி, படம் வி.கே. ஸ்ரீனிவாசன்

பீடத்துக்கு மேல் தெரியும் ருத்ர பாகத்தில் அருமையான ஒற்றைமுக லிங்கம். கூர்ந்து பார்த்தால் பிரம்ம்ம சூத்திரக் கோடு ஓரத்தில் போவதைக் காண்பீர்கள். ஜடாமுடி, நெற்றியில் மூன்றாவது கண் போன்றவற்றைக் காணலாம்.

கர்நாடகத்தில் சாளுக்கியர் கட்டுமானத்தில் உருவான மஹாகூடா என்ற கோவில் உள்ளது. இன்றும் வழிபாட்டில் உள்ள கோவில் இது. இந்தக் கோவிலுக்குள் ஒரு குளம். அந்தக் குளத்தில் நான்கு கால் மண்டபம். இந்த மண்டபத்தில் நடுவில் அழகிய சதுர்முக லிங்கம் ஒன்று உள்ளது. மத்தியப் பிரதேசத்தின் பன்னா மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் சௌமுக்நாத் கோவில் என்று அழைக்கப்படும் கோவிலில் கீழே நீங்கள் பார்க்கும் நான்குமுக லிங்கச் சிலை உள்ளது. எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது. வட இந்தியாவில் பல இடங்களில் சதுர்முக லிங்கங்கள் உள்ளன என்றாலும் கீழே உள்ள இந்த ஒரு லிங்கத்துக்கு அவை யாவும் ஈடாகமாட்டா.

படம்: சப்யசாசி கோஷ்

லிங்கம் பெரும்பாலும் ஒரு பீடத்தின்மீதே அமைக்கப்பட்டிருக்கும். இந்தப் பீடத்துக்குப் பிண்டிகை என்றும் பெயர். இவை பற்பல வடிவங்களில் இருக்கலாம். சதுரமாக, செவ்வகமாக, எண்கோணமாக, நீண்ட எண்கோணமாக, அறுகோணமாக, நீண்ட அறுகோணமாக, பன்னிரு கோணமாக, நீண்ட பன்னிரு கோணமாக, பதினாறு கோணமாக, நீண்ட பதினாறு கோணமாக, வட்டமாக, நீள்வட்டமாக, அரைவட்டமாக, முக்கோணமாக இருக்கலாம். உயரவாக்கில் மிக எளிமையாக இருந்த பீடங்கள் நாளடைவில் திராவிடக் கட்டுமானக் கலையின் அதிஷ்டானங்களை ஒத்து உருவாக்கப்பட்டன. கோபிநாத ராவ், சில வடிவங்களைப் படமாகக் கொடுக்கிறார். லிங்கப் பிரதிஷ்டையின்போது, பிரம்ம பாகம், விஷ்ணு பாகம் ஆகியவை பீடத்துக்கு உள்ளே சென்றுவிடும். ருத்ர பாகம் மட்டுமே பீடத்துக்கு வெளியே நம் பார்வைக்குத் தெரியவரும்.

லிங்கபீடத்தின்மீது நாளம் எனும் நீர் போவதற்கான பாதை இருக்கும். லிங்கத்தின்மீது அபிஷேகம் செய்யும் நீர் வெளியேறும் பாதை இது. கிழக்கு, மேற்கு என்று லிங்கம் எந்தத் திசையைப் பார்த்து இருந்தாலும், இந்த நாளம் வடக்கு திசை நோக்கி இருக்குமாறு பிரதிஷ்டை செய்யப்படும்.

அதேபோல இதே திசை நோக்கியே கருவறையிலிருந்து அபிஷேக நீர் வெளியேறும் பாதையான ‘பிரநாளம்’ என்பதும் அமைக்கப்பட்டிருக்கும். ஆரம்பகாலக் கோவில்கள் சிலவற்றில் கட்டுமான காலத்திலேயே பிரநாளம் அமைக்கப்படாமையால், பிற்காலத்தில் மோசமாக உடைத்துக் கட்டப்பட்டிருப்பதைக் காண்பீர்கள். மிக அழகிய பிரநாளங்கள் கொண்ட அமைப்பைப் பின்னர் காணமுடிகிறது. பூதம் தாங்கி நிற்பதுபோல, பூதம் அபிஷேக ஜலத்தை அருந்துவதுபோல, யானையின் துதிக்கைபோலவெல்லாம் இவற்றை நீங்கள் காணலாம்.

0

லிங்கம் என்பது ஆண்குறி வடிவம் என்பதிலிருந்து, சிவனைக் குறிக்கும் வடிவ உருவமாக, பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகிய மூவரையும் உள்ளடக்கியதாக, சிவனின் ஐந்து அம்சங்களைக் குறிக்கும் முகலிங்க வடிவமாக ஆகியிருப்பதைப் பார்க்கிறோம். இதே லிங்கத்துக்கு இன்னொரு பொருளைத் தரும் கதையும் புராணங்களில் உண்டு. அதுதான் அடிமுடி காணமுடியா அண்ணாமலையார் உருவம். லிங்க புராணம், சிவ புராணம், கூர்ம புராணம், வாயு புராணம் போன்றவற்றில் இந்தக் கதை காணக் கிடைக்கிறது.

கல்பத்தின் முடிவில் விஷ்ணு நீருக்கடியில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். அப்போது அவருக்கருகில் ஒரு பெரும் ஒளிப்பிழம்பு தோன்றியது. அதிலிருந்து பிரம்மா வெளிவந்தார். அவர் விஷ்ணுவிடம் சென்று தான்தான் உலகைப் படைப்பவர் என்று அறிமுகம் செய்துகொண்டு அவர் யார் என்று வினவினார். விஷ்ணு அவரிடம், தான்தான் உலகைப் படைப்பவர் என்றார். இருவருக்குமிடையே சண்டை மூண்டது. அப்போது அங்கே பெரும் நெருப்புப் பிழம்பு நீள் உருளை வடிவில் தோன்றியது. அதிலிருந்து தீச்சுடர்கள் தெறித்தன.

தங்களுக்குள் சண்டையிடுவதை நிறுத்திவிட்டு பிரம்மாவும் விஷ்ணுவும் அந்த நெருப்புப் பிழம்பின் முடியையும் அடியையும் கண்டுபிடிக்க முற்பட்டனர். பிரம்மா அன்னத்தின் உருவை எடுத்துக்கொண்டு மேல்நோக்கிப் பறக்க ஆரம்பித்தார். விஷ்ணு வராக உருக்கொண்டு தரையைத் தோண்டியபடி கீழ்நோக்கிச் சென்றார். ஆனால் இருவராலும் அந்த நெருப்புப் பிழம்பின் உச்சியை அடைய முடியவில்லை. இருவரது தலைக்கனமும் அடங்கிற்று. அவர்கள் அந்த நெருப்புப் பிழம்பை நோக்கித் துதிக்கலாயினர்.

சிவன் மகிழ்ந்து அந்த நெருப்புப் பிழம்பினூடே ஆயிரம் கரங்களுடனும் கால்களுடனும் தோன்றினார். சூரியன், சந்திரன், அக்னி ஆகியோர் அவருடைய கண்களாக இருந்தனர். கையில் பினாகம் என்னும் வில், திரிசூலம் ஆகியவற்றுடன் கரியின் தோலுடுத்து, அரவத்தைப் பூணூலாக அணிந்து, இடி போன்ற குரலுடன் அவர் பேசினார். ‘நீங்கள் இருவருமே என்னிடமிருந்து தோன்றியவர்கள். பிரமன் என் வலது தொடையிடுக்கிலிருந்தும் விஷ்ணு என் இடது தொடையிடுக்கிலிருந்தும் வெளிவந்தவர்கள். நாம் மூவருமே ஒருவரே. ஆனால் வெவ்வேறு காரியங்களை ஆற்ற மூன்றாக, பிரமன், விஷ்ணு, மஹேஷ்வரன் என்று பிரிந்திருக்கிறோம். பிற்காலத்தில் பிரமன் விஷ்ணுவிடமிருந்து தோன்றுவார். நான் விஷ்ணுவின் புருவம் கோபத்தால் நெரிக்கப்படும்போது தோன்றுவேன்’ என்று சொல்லிவிட்டு மறைந்துபோனார். அப்போதிலிருந்து லிங்க வடிவம் மக்களால் வழிபடப்பட்டது என்று இந்தப் புராணங்கள் கூறுகின்றன.

இந்தக் கதையில் மேலும் ஒன்றும் உண்டு. பிரம்மா மேலே சென்றுகொண்டிருக்கும்போது மேல் உச்சியிலிருந்து ஒரு தாழம்பூ கீழே விழுந்துகொண்டிருந்தது. பிரம்மா அதனிடம் விசாரிக்க, அந்தப் பூ, தான் சிவனின் ஜடாமுடியிலிருந்து விழுவதாகக் கூறியது. உடனே பிரம்மா, அந்தப் பூவை எடுத்துக்கொண்டு சிவனிடம் சென்று, தான் உச்சியை அடைந்துவிட்டதாகவும் தாழம்பூவே அதற்கான சாட்சி என்றும் சொன்னார். தாழம்பூவும் பொய் சாட்சி சொன்னது. இந்தப் பொய்யைச் சொன்னதற்காக, பிரம்மாவுக்குத் தனிக்கோவில் இல்லை என்றானது. மேலும் சிவன் கோவில்களில் தாழம்பூ அர்ச்சனைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதில்லை.

இந்தக் கதையின்படி உருவான மூர்த்தி வடிவமே லிங்கோத்பவர் – லிங்கத்திலிருந்து சிவன் வெளிப்படும் தோற்றம். தென்னகத்தில் மட்டுமே இந்த வடிவம் காணப்படுகிறது. தமிழகத்தில் பெரும்பாலான சிவன் கோவில்களில், பின் சுவர் கோஷ்டத்தில் லிங்கோத்பவ வடிவத்தைக் காணலாம்.

கோபிநாத ராவ், பல ஆகமங்களின் அடிப்படையில் இந்த வடிவத்தின் இலக்கணத்தைத் தருகிறார். லிங்கத்தின் முன்புறம் சிவன், சந்திரசேகர மூர்த்தி வடிவமாக இருக்கவேண்டும். லிங்கத்தின் மேலும் கீழும் ஒன்றில் ஐந்து பாகம், தனியாக விடப்படவேண்டும். சந்திரசேகர வடிவத்தின் முழங்காலுக்குக் கீழ்ப்பகுதியும் ஜடாமுடியின் உச்சிப் பகுதியும் செதுக்கப்படக்கூடாது. லிங்கத்துக்கு வலப்புறம் மேற்பகுதியில் பிரம்மா அன்ன வடிவிலும் இடப்புறம் கீழ்ப்பகுதியில் விஷ்ணு வராக வடிவிலும் அமைக்கப்படவேண்டும். லிங்கத்துக்கு இருபுறமும் பிரம்மா வலப்புறத்திலும் விஷ்ணு இடப்புறத்திலும் நின்ற நிலையில் கூப்பிய கரங்களுடன் (அஞ்சலி ஹஸ்தம்) இருக்கவேண்டும். சிவன் செந்நிறத்திலும், பிரம்மா தங்க நிறத்திலும் விஷ்ணு கரிய நிறத்திலும் இருக்கவேண்டும். பிரம்மாவும் விஷ்ணுவும் இல்லாமல் இருக்கலாம்; ஆனால் அன்னமும் வராகமும் கட்டாயம் இடம்பெறவேண்டும். காமிகாகமம், அன்னம், சிவனின் முகத்தின் அளவும், வராகம் சிவனின் முகத்தளவைப் போல இருமடங்கும் இருக்கவேண்டும் என்கிறது. காரணாகமம், சிவனுக்கு நான்கு கரங்கள்; அவற்றில் மழு, மான், அபய, வரத முத்திரைகள் இருக்கவேண்டும் என்கிறது. சில்பரத்னம், சிவனின் கையில் சூலம் இருக்கவேண்டும் என்கிறது.

லிங்கோத்பவர் - காஞ்சி கைலாசநாதர் கோவில், படம் வி.கே. ஸ்ரீனிவாசன்

லிங்கோத்பவர் – காஞ்சி கைலாசநாதர் கோவில், படம் வி.கே. ஸ்ரீனிவாசன்

மேலே நீங்கள் பார்ப்பது ராஜசிம்மப் பல்லவனின் காஞ்சி கைலாசநாதர் கோவிலில் காணப்படும் லிங்கோத்பவர் வடிவம். ஆறு கரங்கள் கொண்டவராக, பிறைநிலவைச் சூடியவராக சந்திரசேகர மூர்த்தி லிங்கத்திலிருந்து வெளிப்படுகிறார். கீழே வராகம் (சிதைந்த நிலையில்) காணப்படுகிறது. ஆனால் மேலே அன்னம் இல்லை. மாறாக வலது மேல்புறத்தில் பிரமன் கால்களை மடக்கி மேல் நோக்கிப் பறப்பதாகத் தெரிகிறது. அதற்கு இணையாக இடதுபுறம் சூரியனும் சந்திரனும் ஒருவர் அஞ்சலி முத்திரையுடனும் இன்னொருவர் விஸ்மய (ஆச்சரிய) முத்திரையுடனும் பறப்பதாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளனர். தவிர, வலப்புறம் பிரம்மாவும் இடப்புறம் விஷ்ணுவும் நின்ற நிலையில் அஞ்சலி முத்திரையாக இல்லாமல் விஸ்மய முத்திரையில் இந்த விஸ்வரூபத்தைக் கண்டு நிற்கின்றனர்.

திருஞானசம்பந்தர் இந்த வடிவை இவ்வாறு போற்றுகிறார்:

தாள் நுதல் செய்து, இறை காணிய, மாலொடு தண்தாமரை யானும்,
நீணுதல் செய்து ஒழிய நிமிர்ந்தான், எனது உள்ளம் கவர் கள்வன்

திருமூலர் இவ்வாறு பாடுகிறார்:

மண் அளந்தான் மலரோன் முதல் தேவர்கள்
எண் அளந்து இன்ன நினைக்கிலார் ஈசனை
விண் அளந்தான் தன்னை மேல் அளந்தார் இல்லை
கண் அளந்து எங்கும் கடந்து நின்றானே

 



__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

பாண்டியர்களின் குடைவரையான திருமெய்யம் சத்யகிரீசுவரர் கோவிலில் மிக வித்தியாசமான லிங்கோத்பவர் சிற்பம் குகைச் சுவரில், சன்னிதிக்கு நேர் எதிரே லிங்கத்தைப் பார்த்தபடி செதுக்கப்பட்டுள்ளது. இங்கே நெருப்புப் பிழம்புத் தூண் ஒன்று குகையின் அடியிலிருந்து மேற்பகுதிவரை செல்கிறது. இருபுறமும் தீ ஜுவாலைகள் தெரியுமாறு செதுக்கப்பட்டுள்ளது. இந்த லிங்கத்தில் கீழ்ப்பாதியில் வேறு ஒன்றுமே இல்லை. மேல் பாதியில் இரு கரங்களுடன் சிவன் லிங்கத்திலிருந்து வெளிப்படுகிறார். ஒரு கை வரத ஹஸ்தம். மற்றொன்று இடுப்பில் வைத்த கடி ஹஸ்தம்.

லிங்கோத்பவர் – திருமெய்யம்

திருமுறைகளில் லிங்கோத்பவ வடிவம் குறித்த குறிப்புகள் தொடர்ந்து வருகின்றன. பிரமன், விஷ்ணுவைவிட மேலான சக்தி கொண்டவர் சிவன் என்பதை நிரூபிக்கும் வடிவமாக இருப்பதனால் சிவன் கோவில்களில் இந்த வடிவம் சிறப்பான இடத்தைப் பெறுகிறது. சோழர் காலக் கலையில் லிங்கோத்பவ வடிவம் உச்சத்தைத் தொட்டது என்று சொல்லலாம்.

லிங்கோத்பவர் - புள்ளமங்கை

லிங்கோத்பவர் – புள்ளமங்கை

மேலே நீங்கள் காண்பது புள்ளமங்கையின் லிங்கோத்பவர். சிவனுடைய உருவம் சிதைந்துள்ளது. இருபுறமும் மிக அழகாகக் காட்சி தரும் பிரம்மாவும் விஷ்ணுவும். மேலே பிரம்மா அன்ன வடிவில் இல்லை, ஆனால் பறந்து செல்கிறார். கீழே வராக வடிவில் விஷ்ணு.

லிங்கோத்பவர் - பொன்செய் மற்றும் கோனேரிராஜபுரம் கோவில்

லிங்கோத்பவர் – பொன்செய் மற்றும் கோனேரிராஜபுரம், படம் வி.கே.ஶ்ரீனிவாசன்

மேலே நீங்கள் பார்ப்பது, பொன்செய் மற்றும் கோனேரிராஜபுரம் கோவில்களில் இருக்கும் லிங்கோத்பவ மூர்த்தங்களை. பொன்செய், பராந்தக சோழன் காலத்தது. கோஷ்டத்துக்கு இருபுறமும் பிரம்மாவும் விஷ்ணுவும் கிடையாது. லிங்கத்தைப் பிளந்துகொண்டு சிவன் தோன்றும் இடங்களில் தீஜுவாலைகள் இருப்பதை புள்ளமங்கையிலும் பார்க்கலாம். பொன்செய், கோனேரிராஜபுரத்திலும் பார்க்கலாம். இந்த ஜுவாலைகள், திருமெய்யத்தில் ஒட்டுமொத்த லிங்கத்துக்கும் வெளியே இருந்தன. ஆனால் சோழர் கலையில் இவை சிவன் தோற்றமளிக்கும் பகுதியைச் சுற்றியே தெரிகின்றன. கைலாசநாதர் கோவில் சிற்பத்தில் தீ ஜுவாலைகள் காணப்படவில்லை.

பொன்செய்யில் பிரம்மா மேல் நோக்கிப் பறக்கிறார். அன்ன வடிவில் இல்லை. கோனேரிராஜபுரம் உத்தம சோழன் காலக் கோவிலில் பிரம்மா, அன்னத்தின்மீது அமர்ந்தபடிப் பறக்கிறார். இருபுறமும் பிரம்மாவும் விஷ்ணுவும் நின்றுகொண்டிருக்கிறார்கள். இருவர் கைகளிலும் அஞ்சலி முத்திரையும் இல்லை, விஸ்மய முத்திரையும் இல்லை. சிவன் கைகளில் மானும் மழுவும் அபய ஹஸ்தமும் கடி ஹஸ்தமும் கிட்டத்தட்ட தரப்படுத்தப்பட்டுக் கிடைக்கின்றன.

தக்ஷிணாமூர்த்தியைப் போன்றே, தமிழகத்துக்கு வெளியே அவ்வளவாகக் கிடைக்காத ஒரு வடிவமாகவே லிங்கோத்பவ வடிவம் உள்ளது. கர்நாடகம், ஆந்திரம் போன்ற மாநிலங்களில் மிகச் சில இடங்களில் கிடைக்கலாம். ஆலம்பூர் நவபிரம்மா கோவில்களில் ஒரேயோர் இடத்தில் மட்டுமே லிங்கோத்பவர் சிற்பம் உள்ளது. மற்ற சாளுக்கியர் கோவில்களிலோ ஹொய்சளர் கோவில்களிலோ ஒன்றைக்கூடப் பார்த்த நினைவில்லை. எல்லோராவில் ஓரிடத்தில் இருக்கிறது.

0

இந்தியாவில் மட்டுமல்ல, தென்னகத்தில் மட்டுமல்ல, தமிழ்நாட்டிலேயேகூட மிகவும் குறைவான எண்ணிக்கையில் கிடைக்கக்கூடிய ஒரு தனித்துவமான சிவமும் லிங்கமும் இணைந்த வடிவை நாம் காணமுடியும். சிவன், தன் தோளில் தானே லிங்கத்தைத் தூக்கிச் சுமக்கும் ஒரு வடிவம். இது பேசுபொருளானது பாகுபலி என்ற திரைப்படம் வந்தபோது. அதில் நாயகன் ஒருவர் பெரிய சிவலிங்கத்தைத் தூக்கிச் சுமந்து செல்வதுபோல வரும். அப்போது ஒரு பத்திரிகைப் பேட்டியில் முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன், சிவன் தன் லிங்கத்தைத் தானே சுமந்த வடிவம் இரண்டு இடங்களில், கொடும்பாளூர் மூவர் கோவிலும் கீழையூர் இரட்டைக் கோவிலான அவனிகந்தர்ப ஈசுவரத்திலும் இருப்பதாகச் சொல்லியிருந்தார். இவை இரண்டுமே முதலாம் பராந்தகன் காலத்தில் இருக்குவேளிர், பழுவேட்டரையர்கள் ஆகிய சிற்றரசர்களால் கட்டப்பட்டவை. கீழே நீங்கள் பார்ப்பது கொடும்பாளூர் படம்.

கொடும்பாளூர், படம்: மது ஜகதீஷ்

கொடும்பாளூர் மூவர் கோவில், பூதி விக்ரமகேசரி காலத்தில், அவராலும் அவரது இரு மனைவியராலும் கட்டப்பட்டது. இப்போது இரண்டு கோவில்கள்தான் நின்றுகொண்டிருக்கின்றன. கோவிலில் வழிபாடு கிடையாது. மிகச் சிறந்த பல சிற்பங்கள் இந்தக் கோவில்களில் இருக்கின்றன. இவற்றில் மேலே நீங்கள் காணும் சிற்பம், தனித்துவம் வாய்ந்தது. ரிஷபாந்திகராக, காளை மாட்டின்மீது ஒரு கைவைத்துச் சாய்ந்து, ராஜலீலாசனத்தில் அமர்ந்திருக்கிறார் சிவன். பின் கைகளில் பொதுவாக மானும் மழுவும் ஏந்தியிருப்பார். மான் உள்ளது. ஆனால் மழுவுக்கு பதில், தோளின்மீது உருளையான வடிவத்தைத் தாங்கி நிற்கிறார்.

இந்த உருளையான வடிவம், லிங்கமே என்பதைக் குடவாயில் பாலசுப்ரமணியன் போன்றோர் உறுதி செய்தனர். இதேபோன்ற வடிவம் கீழையூரில் கிடைக்கிறது. பாலசுப்ரமணியன் இந்த வடிவம் காளாமுக சைவத்தவர்கள் வணங்கிய வடிவம் என்கிறார்.

கீழையூர், படம்: ஸ்ரீனிவாசன் ராஜகோபாலன்

அகில் குட்டு மேலும் தேடுகையில், இதேபோன்ற ஒரு வடிவம் திருவாவடுதுறையில் கோஷ்டத்தின்மேல் இருக்கும் தோரணத்திற்குள் சிறு சிற்பமாகக் கிடைக்கிறது என்று கண்டுபிடித்தார். பாபு மனோ, காஞ்சிபுரம் முக்தேஸ்வரர் கோவிலில் ராவண அனுக்கிரக மூர்த்தி சிற்பத்தில், கைலாயத்தில் சிவனும் பார்வதியும் அமர்ந்திருக்கும் காட்சியில், சிவன் தோளில் லிங்கம் இருப்பதைச் சுட்டிக்காட்டினார்.

அகில் குட்டு, தன் முகநூல் பதிவில் திருமூலர் திருமந்திரத்திலிருந்து இந்த வடிவிற்கான தரவுகளைத் தருகிறார்.

தன்மேனி தற்சிவலிங்கமாய் நின்றிடுந்
தன்மேனி தானுஞ் சதாசிவமாய் நிற்குந்
தன்மேனி தற்சிவன் தற்சிவானந்த மாந்
தன்மேனி தானாகுந் தற்பரந்தானே (1750)

உருவும் அருவும் உருவோடருவும்
மருவு பரசிவன் மன்பல்லுயிர்க்குங்
குருவுமென நிற்குங் கொள்கையனாகுந்
தருவென நல்குஞ் சதாசிவன்தானே (1763)

தன்னைத் தானே அர்ச்சிக்கும் சதாசிவ வடிவமே இந்த வடிவம். இதனைக் காளாமுக சைவர்கள் போற்றி வழிபட்டிருக்கலாம். தேடித் தேடிக் காணினும் மிகக் குறைவான இடங்களிலேயே இந்த வடிவம் கிடைக்கிறது.

0

லிங்கம் என்பது ஆண்குறியைக் குறிக்கும் வடிவமா, அடியும் முடியும் கண்டறியமுடியாத அருட்பெருஞ்சோதி வடிவா, சிவன் தன்னைத்தானே வழிபடும் சதாசிவத் தோற்றமா, சிவனை உருவாக, அருவாக, அருவுருவாக வழிபடுவதற்கான வழிமுறையா? அல்லது அனைத்தும் சேர்ந்ததா?

சிவன் வேத முதல்வனா? அக்னிதான் ருத்ர சிவனா? ஶிஶ்ன வழிபாடு செய்வோர் என்று ஏளனம் செய்யப்பட்டு ஒதுக்கிவைக்கப்பட்டோரின் கடவுளா? அவிர்பாகம் தரப்படாமல் தள்ளிவைக்கப்பட்ட கடவுளா? வேதத்துக்கு வெளியிலிருந்து வேதம் உள்ளிழுத்துக்கொண்ட கடவுள்களில் ஒருவரா? தென்னாட்டுக்கு மட்டும் உரியவரா? எந்நாட்டவர்க்கும் இறைவனா?

இன்று இந்தியப் பரப்பு முழுமையிலும் சிவ வழிபாட்டின் தன்மை வெகுவாக மாறியுள்ளது. சிவனின் வடிவங்களாக வணங்கப்படுபவை எண்ணற்றவை. அவற்றில் தக்ஷிணாமூர்த்தி, லிங்கம், லிங்கோத்பவர் ஆகியவற்றை மட்டும்தான் இதுவரை பார்த்திருக்கிறோம். இந்தத் தொடரில் மேலும் பலவற்றைத் தொடர்ந்து பார்ப்போம்.

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard