New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வார்த்தை என்பது வசவு அல்ல! நாஞ்சில் நாடன்


Guru

Status: Offline
Posts: 24601
Date:
வார்த்தை என்பது வசவு அல்ல! நாஞ்சில் நாடன்
Permalink  
 


வார்த்தை என்பது வசவு அல்ல!

இற்றைக்குச் சற்றொப்ப 45 ஆண்டுகட்கு முன்பு, யாம் மும்பையில் வேர் பிடிக்க முயன்று கொண்டிருந்த காலை, ஒரு சனிக்கிழமை பின்மாலையில், அப்போது மும்பையில் வருமான வரித்துறை அதிகாரியாகப் பணி புரிந்த, பின்னாளில் கேரள மாநில கேடர் I.A.S. அதிகாரியான, ‘மோகமுள்’, ‘பாரதி’, ‘பெரியார்’, ‘இராமானுசன்’ ஆகிய திரைப்படங்கள் இயக்கிய, நண்பர் ஞான. ராஜசேகரன், எம்மை B.A.R.C. குடியிருப்புக்கு அழைத்துச் சென்றார். BARC என்றால் பாபா அடாமிக் ரிசர்ச் செண்டர் (Bhaba Atomic Research Centre). அதில் பணி புரிவோருக்கான குடியிருப்பு. அணுசக்தி நகர். அப்போது நான் தமிழ் எழுத்தாளனாகும் முயற்சியில் முனைந்திருந்தேன்.

BARC யில் பணி புரிந்த, தமிழ் இலக்கிய வாசிப்பில் ஆர்வமுடைய இரு பாலருமான இளைய விஞ்ஞானிகள் சிலர், மாதம் ஒரு முறை, குறிப்பாக சனிக்கிழமை முன்மாலையில் கூடி, அதிகாலை வரை நவீன இலக்கியம் பேசுவார்கள். முதலும் கடைசியுமாக, அன்று ஞான. ராஜசேகரனுடன் கலந்து கொண்டேன். நான் போயிருந்த இரவின் பாடுபொருள் பூமணியின் படைப்புகள்.

பூமணியின் கதைகளில் ஒன்றை வாசிக்க ஆரம்பித்த இளைஞர்- நானும் அந்தக் காலகட்டத்தில் 27 வயதான இளைஞன் தான் – பூமணியின் கதாபாத்திரம் ஒன்று குசு விட்ட இடத்தில் நிறுத்தினார். அங்கிருந்து தொடங்கியது, இலக்கியத் தர மதிப்பீடு உரையாடல். ‘இப்படியா அசிங்க அசிங்கமா எழுதறது? குசு, பீ, மயிருன்னு எல்லாம்?’ என்பதுவே உரையாடலின் சாராம்சம்.

அதிர்ச்சி மதிப்பீட்டுக்காக எழுத்தாளர்கள் அத்தகு சொற்களைக் கையாள்கிறார்கள் என்பதவர் தீர்மானம். பெரும்பாலும் அவர்கள் சிறு நகரங்களில் பிறந்து வளர்ந்திருக்கலாம், பெற்றோர் அரசு, தனியார் நிறுவன ஊழியராக இருக்கலாம். இல்லங்களில் சில சொற்கள் அனுமதி மறுக்கப்பட்டிருக்கலாம். அன்றாடப் பயன்பாட்டில் குசு என்பது அபான வாயு எனவும், Gas எனவும், பீ மலமாகவும், குண்டி பிருஷ்டமாகவும், முத்தம் சும்பனமாகவும், தழுவுதல் ஆலிங்கனமாகவும், எச்சி உச்சிஷ்டமாகவும் மாட்டு மூத்திரம் கோமயமாகவும் இருக்கலாம்.

எம்மொழிச் சொல் பயன்படுத்தினாலும்- அபான வாயு, Gas, குசு எதானாலும்- அந்தச் சொல் சுட்டும் பொருள் ஒன்றுதானே! குசு என்றால் நாறவும், அபான வாயு என்றால் மணக்கவுமா செய்யும்? எம்மூரில் ஒரு பெரியவர், அம்மன் கோயில் கொடைக்கு நாதசுரம் வாசிக்கும் கம்பர், வசமானதோர் சங்கதி போடும்போது ‘ஓழ்!’ என்பார். அவருக்கு ஓழ் என்பது பேஷ், சபாஷ், பலே, அப்பிடி என்பது போல் ஒரு ரசனை ஒலி மட்டுமே. இன்னும் உற்சாகமானதாக இருந்தால் ‘ஓழ்! ஓழ்!’ என்று அடுக்குத் தொடராக அல்லது இரட்டைக் கிளவியாகச் சொல்வார். ஓழ் எனும் சொல் நாகரீகமான, மேம்பட்ட சமூக தளத்தில் புழங்கு மொழியாக இல்லை. கெட்ட வார்த்தை என்று ஒதுக்கப்பட்ட சொல். ஆனால் அலுவலகங்களில், மால்களில், உயர்தரத்து உணவு விடுதிகளில், கல்லூரி வராந்தாக்களில், ‘**** Yaar”, “**** yaar” என்றால் அது சட்டையில் தெளித்துக் கொள்ளும் வாசனைத் திரவியம்.

கிராமத்தான் பல நூற்றாண்டுகளாக, தனது மூதாயின் மூதாயின் மூதாய் பயன்படுத்திய சொற்களை இயல்பாக இன்னும் பயன்படுத்துகிறான். அதை எழுத்து வடிவில் கையாண்டால் கெட்ட சொல், கொச்சை, slang, வட்டார வழக்கு, and what not? ஆனால் வேற்று மொழிச் சொல்லாக, அதே பொருளில் எழுதினால், அது பண்பாட்டின் செம்மணிப் பூண். ஈதென்ன ஓர வஞ்சனை? “டேய் ஊம்பி!” என்றால் அது கெட்ட வார்த்தை, “சும்பப் பயலே!” என்றால் அரிதாரம்.

வெகு சாதாரணமாக சமூகத்தில் இன்றும் வழங்கப் பெறும் சொல், ‘பொச்செரிப்பு’. பொறாமை என்ற பொருளில் பயன்படுத்துகிறோம். பேரகராதி பொச்செரிப்பு எனும் சொல்லை பொச்சு+எரிப்பு என்று பிரித்துத் தருகிறது. எரிப்பு எனில் எரிச்சல், பொச்சு என்றால் என்ன? பொச்சு எனும் சொல்லைத் தெலுங்கும் கன்னடமும் பயன்படுத்துகின்றன, நாம் கொள்ளும் பொருளிலேயே. பேரகராதி பொச்சு என்றால் பெண்குறி மயிர், பெண்குறி, மலத்துவாரம், மயிர்க்கொத்து என்கிறது. மூலத்திலே கடுப்பு, குண்டி காந்தல், குண்டி எரிச்சல் என்று அன்றாடம் சாதாரண மக்கள் பயன்படுத்துகிறார்கள். உனக்கு என்னத்துக்குப் பொறாமை என்று கேட்பதுவே பொருள். மாற்றுச் சொற்கள், அவ்வளவே! மயிர் கொத்து, பெண்குறி மயிர், பெண்குறி, மலத்துவாரம் என்பன எங்ஙனம் கெட்ட சொல் ஆகும்? பொச்செரிப்பு என்பதைப் பொச்சரிப்பு என்றும் சொல்கிறோம். பொச்சு+அரிப்பு என்றே அச்சொல் பிரியும். பொச்சு எனும் சொல்லுக்கு பலாப்பழம், மாம்பழம் போன்ற பழங்களின் சேதாரமான பகுதி என்றும் பொருள் தரப்படுகிறது.

பொச்சம் என்றும் சொல்லுண்டு நம்மிடம். பொய், குற்றம், அவா, தேங்காய் மட்டை, உணவு என்னும் பொருள்கள். பொச்சாத்தல் என்றால் மறதி. அவையறிதல் அதிகாரத்துக் குறள் பேசுகிறது.

‘புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்

நன்கு செலச் சொல்லுவார்’

என்று. நல்லோர் வீற்றிருக்கும் அவையில் நயம்பட உரைக்க வல்லவர்கள், மறந்தும் புல்லோர் இருக்கும் அவையில் வாய் திறக்கக் கூடாது என்பது பொருள். பொச்சாவாமை என்றோர் அதிகாரமே உண்டு குறளில். பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான ஆசாரக் கோவை, பொச்சாவார் என்ற சொல்லை, மறந்து போகார் எனும் பொருளில் ஆள்கிறது. மறதி உடைய மாந்தரை, பொச்சாப்பன் என்றார். பொச்சை என்றால் குற்றம் என்றும், தொப்பை, வயிறு என்றும் அகராதிகள் கூறுகின்றன.

என்றாலும் பொச்சு என்றால் கெட்ட வார்த்தை நமக்கு. பெண்குறியும், ஆசன வாயும் உறுப்புகள் தாமே! அவற்றுள் கேவலம் எங்கே வந்தது? ‘பொச்சை மூடிக்கிட்டுப் போ!’ என்றால் அது வசவு. கொங்கு நாட்டில் தாராளமாகப் புழங்கப்படும் வசவு அது. உண்மையில் பொச்செரிச்சல் என்றாலும் வசவுதான். எனினும் வசவு வேறு, வார்த்தை வேறு அல்லவா?

‘பொச்சு’ போல, பொது இடங்களில் மக்கள் புழங்கக் கூசும் மற்றொரு சொல், குண்டி. எனதாச்சரியம், குண்டி என்ற சொல் ஏன், எதனால், எப்போது கெட்ட சொல் ஆயிற்று என்பதில். ஊர்களும், சிற்றூர்களும் எவ்விதமான அறைப்பும், கூச்சமும் இன்றி சர்வ சாதாரணமாகப் புழங்கும் சொல். ‘குடிச்சுக் குண்டி வெடிச்சுச் செத்தான்’, ‘குளத்துக்கிட்டே கத்தீட்டுக் குண்டி கழுவாமல் போனான்’, ‘அண்டி உறைப்பும் இல்லே, குண்டி உறைப்பும் இல்லே’, ‘பணக்காரக் குண்டிக்குத் தடுப்புப் போடுவான்’, ‘குண்டீலே ரெண்டு மிதி மிதிச்சாத்தான் சரிப்பட்டு வருவான்’, ‘ஒழுங்காக் குண்டி கழுவத் தெரியாது, அவன் நாயம் பேச வாறான்’ என்று எத்தனை வழக்குகள்! மலையாள சினிமாவில் அடிக்கடி கேட்கும் வாசகம், “குளம் எத்தற குண்டி கண்டிற்றுண்டு, குண்டி எத்தற குளம் கண்டிற்றுண்டு?” என்பது. பசி எடுத்தால் தெரியும் என்பதற்கு, “குண்டி காஞ்சால் வருவான்!” என்பார்கள்.

இறுமாப்பைச் சொல்ல, குண்டிக் கொழுப்பு என்றோம். இந்தியில்  ‘காண்ட் மேம் ஜர்பி ஹை’ என்பார்கள். காண்ட் என்றால் குண்டி, ஜர்பி என்றால் கொழுப்பு. உடுக்கத் துணிக்குப் போக்கில்லை என்று சொல்ல, குண்டித் துணிக்கு வழியில்லை என்றோம். ஆசன எலும்பைக் குண்டி எலும்பு என்றோம். ஆசிரியர்கள், ‘குண்டித் தோலியை உரிச்சுருவேன்’ என்றார்கள் நான் பள்ளியில் வாசிக்கையில். ‘கஞ்சிக்கு வழியில்லே, குண்டிக்குப் பட்டு கேட்கிறது! என்றார்கள் பெண்கள். Buttocks என்ற சொல்லை குண்டிப் பட்டை, சூத்தாம் பட்டை என்றோம்.

என்ன விந்தை என்றால் பிருஷ்டம், புட்டம், buttocks எனும் சொற்களைப் புழங்க நமக்கு எந்த நாணமும் இல்லை. குண்டி என்று சொல்ல அவமானப்படுகிறோம். தமிழ் எழுத்தாளர்களே கூட, குண்டி எனும் சொல்லை சோப்புப் போட்டு, அலசி, காய வைத்து, மடித்து, ஆசனவாய், அடிப்பக்கம், பின் பக்கம் என்று மழுப்புகிறார்கள்.

பேரகராதி, குண்டிக்காய் என்ற சொல்லுக்கு, buttocks என்றே பொருள் சொல்கிறது. குண்டம், குண்டி எனும் சொற்களுக்குப் பன்றி என்று பொருள். குண்டலி எனும் சொல், மயிர், மான், பாம்பு இவற்றைக் குறித்தது. குண்டிகம் என்றால் துகள். குண்டிகை என்றாலோ கமண்டலம், குடுக்கை மற்றும் தேங்காய்ச் சிரட்டை. சிரட்டை என்ற சொல்லுக்கு தொட்டி, கொட்டாங்கச்சி என்று நான் பொருள் சொல்ல வேண்டும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

திருமழிசை ஆழ்வாரின் ‘நான்முகன் திருவந்தாதி’யில் ஒரு பாடல், ‘நான்முகன் குண்டிகை நீர் பெய்து, மறை கொண்ட மந்திரத்தால் வாழ்த்தி’ என்று நீளும். குண்டிகை எனும் சொல்லை, குண்டி, கை என எவரும் பிரித்துப் பொருள் சொன்னால் நாமதற்குப் பொறுப்பில்லை. குண்டிகை என்றால் கமண்டலம் என்று பொருள். கமண்டலத்தின் தூர்ப்பகுதியின் வடிவத்தை நீங்கள் மனக்கண்ணில் கொணர்ந்தால், குண்டிகையில் இருந்தே குண்டி பிறந்திருக்குமோ என எண்ணத் தோன்றும். பேருந்தின் மூன்று பேர் அமரும் இருக்கையில், பகல் நேர பாசஞ்சர் ரயிலில், கூட்ட நெரிசல் காரணமாக, அரைக் குண்டி வைத்து உட்கார்ந்து பயணம் செய்கிற எனக்கு, குண்டியின் வருத்தம் தெரியும்.

குண்டியின் வலி உணர்ந்ததால் எனது இந்த வழக்கு. பிருஷ்டம் என்னும் சமற்கிருதம் சொல்லும், தொல்காப்பிய இலக்கண விதிகளின்படி அதனைத் தமிழாக்கிய புட்டம் எனும் சொல்லும், buttocks எனும் ஆங்கிலச் சொல்லும் எந்த அவமதிப்புக்கும் ஆளாவது இல்லை. ஆனால் குண்டி, கெட்ட வார்த்தை. ஈதென்ன சமூக நீதி, ‘இனமானத் தலைவர்களே மொழிப் பறம்பின் வேங்கைகாள்’!

குண்டியைக் குறித்த மற்றொரு சொல் சூத்து. இதுவும் இழிவென்று ஒதுக்கப்பட்ட சொல்லே! எனினும் தந்தை தந்தையும், அவன் தந்தையும் அவனது தந்தை தந்தையும் பயன்படுத்திய சொல். சூத்து என்றால் குண்டி, பிருஷ்டம், buttocks என்றே அகராதிகள் பொருள் தருகின்றன. சூத்தாம்பட்டை என்றாலும் குண்டிதான். Homo sexual எனும் ஓரினப் புணர்ச்சியில் ஈடுபடுவோர், to commit sodomy, சூத்தடித்தல் என்றொரு சொல் பயன்படுத்துகிறார்கள். அஃதோர் technical term. சூத்தழகி என்றால் அதுவோர் மாம்பழ வகை. சூத்தாட்டுக் குருவி என்றால் சூத்தாட்டி உள்ளான் அல்லது வலியன் என்றொரு பறவை இனம். மலவாயிலில் ஏற்படும் தடிப்புக்கு, சூத்தாங்கரடு என்பார்கள். தகுதி ஆராயாமல், யாவற்றுக்கும் ஆமாம் சாமி போட்டு, தன் காரியம் சாதித்துச் சம்பாதிப்பவனைக் குறிக்க ‘சூத்தாட்டி’ என்றொரு வசை உண்டு. கூத்தாட்டுவான் என்பதோர் தேவாரச் சொல். சூத்தாட்டுவான் என்றால் சமகால அரசியல் சொல். சமீப காலமாகத் தமிழக அரசியல் தலைவர்களை ‘டயர் நக்கி’ என்றொரு சிறப்பு அடைமொழியால் அடையாளப்படுத்துவார்கள். அதனினும் சிறந்த தமிழ்ச்சொல் என ‘சூத்து நக்கி’ என்பதை நாம் பரிந்துரைக்கலாம்.

பொச்சும், குண்டியும், சூத்தும் பேசிவிட்டு, பீ எனும் சொல்லைத் தாண்டிப் போவது அறம் இல்லை. பீ என்றால் மலம் என்று பன்னிரண்டு கோடித் தமிழருக்கும் தெரியும். தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்தாலும், தெரியாவிட்டாலும்! ஆனால் எவரும் மனத்தடையின்றி பீ பயன்படுத்துவது இல்லை. மலம் செய்த புண்ணியம் என்ன, பீ செய்த பாவம் என்ன? பெருமாள் முருகன் ஒருவர்தான், ‘பீக் கதைகள்’ எழுதினார். மலம் என்ற சொல் புனிதமாகப் பண்டு தொட்டு இன்றுவரை ஆளப்படுகிறது. ஆணவம், கன்மம், மாயை என்று மும்மலங்களாகப் பேசுகிறார்கள். மும்மலம் எனும் சொல், சொல்ல நயமாக இருக்கிறது என்றால், முப்பீயும் ஒலிநயம் குறைந்ததல்ல. முத்தீ சொல்லத்தானே செய்கிறோம். இடது கையை இன்றும் பீக்கை, பீச்சக்கை, பீச்சாங்கை என்கிறார்கள். பீச்சாங்கால் என்றும் சொல்வதுண்டு, எனினும் இடதுசாரித் தோழர்களும் பீ என்றுரைக்கக் கூசுகிறார்கள். பயந்து நடுங்குபவரை பயந்தாங்கொள்ளி என்று சொல்வதை ஒத்து, பீச்சாங்கொள்ளி, பீச்சி என்பர் சில பிரதேசங்களில்.

வயிற்றுக் கழிச்சலைப் பீச்சல் என்பார்கள். காய்ச்சல் போலப் பீய்ச்சல். மலக் குடலைப் பீக்குடல் என்றும் சொல்லலாம்தானே! கரிய நிறமுடைய ஒரு வகைப் பறவையைப் பீக்காக்கை என்றும், பன்றிக் குருவியைப் பீக்குருவி என்றும் வழங்குகிறார்கள். ஆனால் திருக்கார்த்திகைக்கு அடுத்த நாளைப் பீக்கார்த்திகை என்று வழங்குவதாகப் பேரகராதி குறிக்கிறது. எனக்கதன் காரணம் தெரியாது. மாறைவாக நிறையப் பேர் வழக்கமாக உட்கார்ந்து மலம் கழிக்கும் இடத்தைப் பீக்காடு என்பார்கள். பீக்குழி என்றும் சொல்வதுண்டு. தீமிதித் திருவிழாவைக் குண்டம் என்பர் கொங்கு நாட்டில். பூக்குழி என்றும் சொல்லப்படுவதுண்டு. பல்லாங்குழி விளையாடும் போது பல்லாங்குழியில் இடுவதற்குக் காய் இல்லாமல் வெறுமையாக விடப்படும் குழியையும் பீக்குழி என்றே சொல்வார்களாம்.

பீ எனும் எழுத்து ஒரு சொல்லும் ஆகும். Excrement, Ordure, Faeces, மலம் என்று பொருள் தருகிறது பேரகராதி. அச்சம் என்றும் பொருள் சொல்கிறது யாழ் அகராதி. பெருமரம், Toothed-leaved Tree of Heaven என்றும் பொருள் தரப்படுகிறது. பீ நாறிச் செடி என்றும் பெருங்கள்லி என்றும் பொருள்கள் உள்ளன. பெருமலம் எனில் புன்கு எனும் மரம் என்கிறது சங்க அகராதி. அறிஞர் பெருமக்கள் கட்டுரை எழுதும்போது, பீ என்று நேரடியாகச் சொல்லி வெட்கி, பகர வீ என்றார்கள். ஒரு வேளை தீ என்பதைக் கூட தகர வீ என்பார் போலும்!

கார்த்திகை மாதம் முதல் நாள் விரதம் பிடித்து, மகர விளக்கு வரை, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு, கூட்டம் கூட்டமாக, சாரி சாரியாக, தனியார் மகிழுந்து, சிற்றுந்து, பேருந்துகளில் செல்லும் ஐயப்பன் மார், போம் வழியில் அல்லது திரும்புகையில் கன்னியா குமரி பகவதி கோயிலில் தரிசிக்க வருவார்கள். குமரித் துறையில் நீராடுவார்கள். கடற்கரை மணலில், மணல் தேரியில் நடப்பார்கள். இயற்கை உபாதைகள் கழிக்கப் போதுமான வசதிகள் இல்லாத காரணத்தால், அல்லது தேடிக் கண்டு பிடிக்கப் பொறுமை இன்றி, ஐயப்ப சாமிகள் கடற்கரை மணலில் மலம் கழித்துக் கடலில் கழுவிச் செல்வார்கள். ஐயப்ப சாமிகள் கழித்த மலத்தை பூச்சாமி என்று இளக்காரம் செய்வார்கள் நாஞ்சில் நாட்டார். தினமும் நூற்றுக்கணக்கில் சிற்றுந்து, பேருந்து வருவதால், பூச்சாமிகளுக்கு அருவருத்து, கார்த்திகை-மார்கழி மாதங்களில், எம்மக்கள் கடற்கரைக்குச் செல்வதைக் கூசுவார்கள்.

பீக்கும் மலத்துக்கும் பகரமாக, நரகல் என்றொரு சொல்லைக் கேள்விப்படிருக்கலாம். எங்களூரில் நரகலைத் தவிர்த்து நரவல் என்பார்கள். ஆனால், பேரகராதி, நரகல் என்றே பதிவிடுகிறது. மாட்டுச் சாணம், நாய்ப்பீ, கோழிக்காரம், பறவை எச்சம், ஆட்டுப் புழுக்கை, குதிரை விட்டை, யானை லொத்தி என்பதைப் போல மனிதக் கழிவு நரகல் எனப்பட்டது போலும்.

எல்லாருக்கும் தெரியும், நரன் எனில் மனிதன் என்று. நரன் என்றால், மனிதப் பிறவி. நரவரி என்றால் நர+அரி. அதாவது ஆளரி, ஆள்+அரி. அதுவே நரசிங்கம், அல்லது நரசிம்மம். நரனின் பெண்பால் நாரி. அர்த்தநாரி அறிவீர்கள் தானே!

ஆனால் நாரி எனும் சொல்லுக்குப் பேரகராதி, பத்துப் பொருள் பட்டியலிடுகிறது. 1. வில்லின் நாண் 2.பன்னாடை 3.யாழ் நரம்பு 4.இடுப்பு 5. கள் 6. தேன் 7.பெண் 8.பார்வதி 9.சேனை (சேனை எனில் சேனைக் கிழங்கு அல்ல, படை) 10.வாசனை (நன்னாரி வேர், நன்னாரி சர்பத் நினைவில் கொள்க.)

இந்தப் பத்துப் பொருளும் நாரி எனும் சொல்லுக்கு வடமொழியில் உண்டா என்றெனக்குத் தெரியாது. எனது அனுமானம், நாரி எனும் சொல் தமிழிலும் சமற்கிருதத்திலும் வெவ்வேறு பொருள்களில் வழங்குகிறது என்பது.

நரகல் எனும் சொல்லுக்கு – மலம், அசுத்தம் என்று பொருள் தருகிறது பேரகராதி. நரகல் வாய் எனில் குதம், ஆசனவாய். ஆக நர மாமிசம், நரஸ்துதி, நர பலி என்றும் சொற்கள் உண்டு நம்மிடம். நரகலும் உண்டு, பீ அல்லது மலம் என்ற பொருளில். 

பலரும் தவிர்க்கும் இன்னொரு சொல், கொட்டை. கொட்டைப் பாக்கு, கொட்டைத் தேங்காய், பனங்கொட்டை, மாங்கொட்டை என்பன விலக்கு. கொட்டையும் விதைதான் என்றாலும் எல்லா விதையும் கொட்டை அல்ல. எடுத்துக் காட்டுக்கு விதை நெல், கீரை விதை, வெண்டை விதை, கத்திரி விதை. கொட்டைகளும் முளைக்கும். புளியங்கொட்டை, வேப்பங்கொட்டை, கொல்லாங்கொட்டை என்ற முந்திரிக் கொட்டை என்பன. விதையை வித்து என்றும் சொன்னோம்! ‘வித்து அட்டு உண்டனை!’ என்பார் ஔவை, புறநானூற்றில், யமனைப் பார்த்து, அதியன் இறப்புக்கு இரங்கி.

கொட்டை என்று கேட்ட உடனேயே, அதை testicles -வுடன் தொடர்பு படுத்தி, சிலர் முகம் சுழிக்கிறார்கள். பேரகராதி கொட்டை எனும் சொல்லுக்கு இருபது பொருள் சொல்கிறது. 1. விதை (பிங்கல நிகண்டு) 2. அண்டம், Testicles. 3.தாமரைக் கொட்டை 4.பலா, பூசணி முதலானவற்றின் பூம்பிஞ்சு 5. உருண்டை வடிவம், கொட்டை எழுத்து. 6. மகளிர் தலையணி 7.கொட்டை இலந்தை 8.ஆமணக்கு 9.கொட்டைக் கரந்தை 10. பாதக் குறட்டின் குமிழ் 11. ஆடைத் தும்பு முடிச்சு 12. ஆடைத் தும்பு.

ஆமணக்கு விதையை, கொட்டை முத்து என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். விதைப் பையைக் குறிக்க விதைக் கொட்டை என்பார்கள்.  குறுக்கி, வெறுமனே கொட்டை என்றும் சொல்வதுண்டு. ‘கொட்டையிலே சவுண்டீற்றான்’, ‘கொட்டை வீங்கிப் போச்சு’, ‘கொட்டையைக் கசக்கீடுவேன்’ என்பார்கள். ‘கொட்டை செத்தவன்’ என்றொரு வசவுச் சொல் உண்டு. An emasculate person, coward, nerveless man, அண்டத்தில் வீரியமற்றவன், கையாலாகாதவன் என்றெல்லாம் பொருள் சொல்கிறது Lexicon.

பருவகாலங்களில் வடசேரி கனகமூலம் சந்தையில் இருந்து, மலிவாக அப்பா மாம்பழம் வாங்கி வருவார். 7 பிள்ளைகள், அப்பா, அம்மா, அப்பாவைப் பெத்த ஆத்தா, பறக்கை நெடுந்தெரு வள்ளியம்மை, அம்மாவைப் பெற்ற நெடுமங்காடு- குற்றிச்சல்-ஆரிய நாட்டு ஆச்சி மாடிப் பிள்ளை. மாம்பழப் புளிசேரி வைத்தால் குறைந்தது பன்னிரண்டு முழு மாம்பழம் குழம்பில் போடவேண்டும். பானையின் அளவு உங்கள் கற்பனைக்கு. அவனவன் வெகுசுவாரசியமாக மாம்பழத்துக் கொட்டைகளை மூஞ்சி சுகித்திருப்பான். ஏழு பேரில் ஒருத்தனுக்கு மாங்கொட்டை மூஞ்சி என்பது பட்டப் பெயர்.

மூஞ்சிப் போட்ட மாங்கொட்டை போல, மூஞ்சிப் போட்ட பனங்கொட்டை போல என்று எண்ணெய் காணாத எங்கள் தலைமயிரைக் குற்றம் சொல்வார்கள். ஆண்களின் தலைமயிரைக் குஞ்சி என்றது தமிழ் இலக்கியம். ‘குஞ்சி அழகும் கோட்டானைத் தாரழகும்’ என்று தொடங்கி நாலடியார் பாடல் ஒன்றுண்டு. இன்று குஞ்சி, குஞ்சு, குஞ்சான், குஞ்சாமணி எல்லாம் ஆண் குறியைக் குறித்த செல்லமான சொற்கள்.குஞ்சாலாடு என்றால் நாவூறும் நமக்கு, குஞ்சாமணி என்றால் நாக்கூசும்.

மறுபடியும் கொட்டைக்கு வந்தால், புன்னைக் கொட்டை, இலுப்பைக் கொட்டை, ஈச்சங்கொட்டை போல ஆணின் விதைப்பையை விதைக் கொட்டை என்றோம். இதில் மனத் துளக்கத்துக்கு ஏதுவுண்டா? கொட்டையைப் பேசும்போது பிடுக்கு எனும் சொல் இடையூறு செய்கிறது. பிடுக்கு எனும் சுத்தமான தமிழ்ச் சொல்லை, பேச்சு வழக்கு புடுக்கு என்கிறது. புடுக்கு எனும் சொல்லுக்குப் பேரகராதி, பிடுக்கு, அண்டம், Testicles என்று பொருள் தருகிறது. பிடுக்கு என்ற சொல்லுக்கும், பீசம், Testicles என்கிறது. பிடுகு என்றால் இடி- thunder என்று பொருள். பெரும் பிடுகு என்றால் பேரிடி. கல்கியின் கதாபாத்திரம் ஒன்றின் பெயர் பெரும்பிடுகு முத்தரையர். பேரிடி என்ற பொருளில் இருக்கலாம். அல்லது பிடுக்கு இடை குறைந்து பிடுகு ஆகியிருக்கலாம். பெரிய பீஜங்களை உடையவர் என்ற பொருளில். முத்தரையரின் வம்சாவளிகள் நம்முடன் வழக்குக்கு வந்து விடப் போகிறார்கள்! மலையாளம் testicles என்பதைக் குறிக்க, பிடுக்கு என்கிறது. துளு பிட்டு என்னும்.

மாங்கொட்டையின் உள்ளிருக்கும் வெண்மையான, துவர்ப்புச் சுவை உடைய பருப்பைக் குறிக்க நாம் அண்டி என்றோம். ஐயத்துக்கு இடமில்லாமல் மாங்காய் அண்டி என்பார்கள். நாஞ்சில் நாட்டில் அண்டிப் பருப்பு, என்றால் முந்திரிப் பருப்பு. முந்திரிக் கொட்டையைப் பிளந்து பருப்பு எடுக்கும் சின்ன தொழிற்கூடங்களை அண்டி ஆபீஸ் என்போம். மலையாளத்தில் அண்டி என்றால் முந்திரிப் பருப்பு. கஷூ அண்டி என்பார்கள். உங்களுக்கு Cashew Nut நினைவுக்கு வரலாம். விதைக் கொட்டை அல்லது விதைப்பையைக் குறிக்க மலையாளம் அண்டி என்ற சொல்லைப் பயன்படுத்துகிறது.

 ‘எந்தாடோ? அண்டி வீங்கிப் போயோ?’ என்றும், “அண்டி உதைப்புண்டோ?” என்றும், ‘அண்டி களஞ்ச அண்ணான்’ என்றும் அன்றாடம் கேட்கலாம். அண்ணான் என்றால் அங்கு அணில். மண்ணான் என்றால் வண்ணான். உவர் மண் எடுத்துத் துணி வெளுப்பவன், எனவே மண்ணான். ‘அண்ணான் சாடி எந்து, மண்ணான் சாடியால் பற்றுவோ?’ என்பார்கள். அணில் குதித்தது என்று வண்ணான் குதித்தால் விளங்குமா என்பது பொருள்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, இரவுறக்கம் கெட்ட ஒரு நாளில், இரவு பதினொன்றரை மணிக்கு, இந்தியனின் தனிப்பெரும் சம்பத்தான தூர்தர்ஷனில், ஒரு டாக்குமெண்டரி பார்த்துக் கொண்டிருந்தேன். முப்பது நிமிடப் படம். மூவேந்தர்களின் தார் பற்றிய ஆவணப்படம். தார் எனில் மாலை. தார் வேந்தன் எனில் மாலையணிந்த மன்னன், தார் பாய்ச்சிக் கட்டியவன் என்பதல்ல. ஒருவன் வேப்பம்பூ மாலையணிந்து வந்து அமர்ந்தான். தமிழ்த் திரைப்படங்கள், நமது முடி மன்னர் எல்லாம் கர்ணன், வீர பாண்டிய கட்ட பொம்மன் போல ஆடை ஆபரணங்கள் அணிந்திருப்பார் என்று நம்ப வைத்து விட்டன. இரண்டாயிரம்  ஆண்டுகளுக்கு முன்பு மன்னரின் தோற்றம் எப்படி ருந்திருக்கும் என்பதறிய இந்தியாவின் சிறந்த நவீன ஓவியர்களில் ஒருவரான ட்ராட்ஸ்கி மருதுவின் ‘வாளோர் ஆடும் அமலை’ நூல் கிடைத்தால் பாருங்கள்.

வேப்பம்பூ மாலை அணிந்தவன் போன பின்பு, ஆர் அல்லது ஆத்தி மாலை அணிந்தவன் வந்து காட்சி கொடுத்தான். அவனும் போன பின்பு, கழுத்தில் ஒன்றரையங்குல கனமும் இரண்டரை அடி நீளமும் கொண்ட பனங்கதிர் கொத்தாக அணிந்த மன்னன் வந்தான். எனக்கு அர்த்தமாயிற்று. ஆவணப் படமெடுத்தவருக்கு பனங்கதிருக்கும், பனம் பூவுக்கும் வேறுபாடு தெரியவில்லை என்று. ஆண்பனையில் முதலில் பனங்கதிர் வரும் கொத்தாக. பனங்கதிரில் இருந்து சிறிய வேப்பம்பூ அளவில் ஆனாக திடமாக, வெளிறிய மஞ்சள் நிறத்தில் பனம்பூக்கள் மலரும். தென்னம் பாளை, கமுகம் பாளை, ஈச்சம் பாளை போல் பனம் பாளை வெடித்து வருவது பனங்கதிர். கதிரில் நூற்றுக் கணக்கில் முகைப்பது பனம்பூ. கதிர் வேறு, பூ வேறு என்று மானங்கெட்டவன்களுக்குத் தெரியவில்லை.

பனங்கதிர் சூடி அணிந்திருந்தவனைப் பார்க்க இரக்கமாக இருந்தது. நாள் பூரா ஒரு மன்னன் இப்படிப் பனங்கொத்து சுமக்க வேண்டுமானால்- உம் மீது ஆணை, அம்மாவனே- எனக்கு இலவசமாகக் கிடைத்தாலும் மன்னர் பதவி வேண்டாம். மாற்றாக வட்டாட்சியர் அலுவலகத்தின் எழுத்தர் பதவி போதும். நமது அரசாங்க மேன்மை தங்கிய அதிகாரிகளுக்கும், பனங்கதிர் எது, பனம்பூ எது என அறிவில்லை.

நான் சொல்ல வருவது, பனம் கதிரைக் குறிக்க, பனம்பிடுக்கு என்றனர். ஆண் பனையில் மட்டுமே பணம் பிடுக்கு வரும். ஆண்பனைக்கும் பெண் பனைக்கும் என்ன வேறுபாடு? பெண்பனையில் நுங்கு காய்க்கும், பனம்பழம் ஆக அது மாறும்.

மலையாள சினிமா அடிக்கடி பார்ப்பவர் கேட்டிருப்பார். ஒரு கதா பாத்திரம் சொல்லும், ‘அவன் அதைச் செய்வான், இதைச் செய்வான்’ என்று. மற்றொரு கதாபாத்திரம் எதிர் பேசும், ‘அவன் புளுத்தினான்’ என்று. எனக்கு இன்னும் ஐயப்பாடு உண்டு, ‘புளுத்தி’ என்று எழுதுவதா அல்லது ‘புழுத்தி’ என்று எழுதுவதா என்று. எப்படிச் சொன்னாலும், எழுதினாலும் அதன் பொருள் ஒன்றே. நம்மிடையேயும், நாட்டுப் புறங்களில் உரையாடலின் போது இன்னும் பயன்படுத்துவது உண்டு, ‘போடா, புளுத்தி!’ என்றும், ‘ஆமா! அவன் பெரிய புளுத்தி’ என்றும்.

சரி! புளுத்துவது அல்லது புழுத்துவது என்றால் என்ன? எவரிடமாவது சென்று ஒரு உதவியோ, ஐம்பது நூறு கைமாற்றோ கேட்டால் கீழுதட்டை மாலர்த்திக் காட்டுவார்கள், இல்லை என்று சொல்வதற்கு. அதைத்தான் நாஞ்சில் நாட்டாரும், மலையாளிகளும், ‘சுண்டைப் புளுத்திக் காட்டினான்’ என்பார்கள். சுண்டு என்றால் உதடு. சில குழந்தைகள், அழுவதற்கான முஸ்தீபாக, அனிச்சையாகக் கீழுதடு மலர்த்திக் காட்டி நிற்கும். பார்க்கும் முதியோர் கேட்பார்கள், “ஏன் இந்தக் குட்டி சுண்டைப் புளுத்தீட்டு நிக்கு?” என்று.

ஆண் குறியின் முன் தோலைப் பின்புறமாகத் தள்ளி, உரித்த சின்ன வெங்காயம் போல் முன்பக்க மொட்டைக் காட்டிக் கொண்டு நிற்பதைப் புளுத்துதல் என்போம். புளுத்தினவன், புளுத்திக் காட்டினான் என்பர். ஆக, அங்கு புளுத்தி என்றால் அது பெயர்ச்சொல். ஆண் குறியின் முன் தோல் புறந்தள்ளப்பட்ட மொட்டுப் போன்ற பகுதி. இன்று மக்கள் வழக்கில், ‘அவன் பெரிய புடுங்கியா?” என்பார்கள். நாங்கள் கேட்டோம், ‘அவன் என்ன பெரிய புளுத்தியா?’ என்று. நமது ஆயாசம், புடுங்கி என்றால் இயல்பு வழக்கு, புளுத்தி என்றால் கெட்ட வழக்கு என்பதில்தான்.

எவ்வாறாயினும் புளுத்தி என்ற சொல்லோ, புழுத்தி என்ற சொல்லோ, இரண்டுமே எந்த அகராதியிலும் இல்லை. அகராதிகளில் இல்லாத சொல், தமிழில் இல்லை என்றும் ஆகாது. எப்போதுமே சிலருக்கு குறியின் முன் தோல் பின் நகர்ந்து சுருங்கி, மொட்டு முந்திக் கொண்டு புளுத்தியபடியே கிடக்கும். அவருக்கு ‘புளுத்திமான்’ என்ற பட்டப் பெயரும் உண்டு, ஸ்பைடர்மான் என்பதைப் போல.

ஓதம் என்றொரு சொல் உண்டு நம்மிடம். ஈரம், வெள்ளம், கடலலை என்பன பொருள்கள். ஆண்களின் விதைக் கொட்டையில் வரும் வாதம் – அண்ட வாதம்- ஓதம் எனப்படும். Affection of the testicles, hydrocele hernia போன்ற நோய்கள். ஓதம் இறங்குதல் என்றால் அண்டம் இறங்குதல். ஓத நோய் வந்த புடுக்கு, ஓதப் புடுக்கு எனப்படும். ஓதப் புடுக்கு உடையவர் ஓதப் புடுக்கன், அதாவது ஓதப் பிடுக்கன்.

சுண்ணி எனும் சொல், அன்றாடம் பல்லாயிரக் கணக்கானோர் பயன்படுத்தும் சொல். ஆண் குறி என்று பதிவிடுகிறது பேரகராதி. ஆண் குறியைக் குறிக்க, பூள் என்றொரு சொல்லையும் பதிவிட்டுள்ளது. பூலு என்றொரு சொல்லையும் காணலாம். அது மலையாளச் சொல் என்றும் குதம் என்று பொருள் என்றும் குறிப்பு இருக்கிறது.

பூழ் எனும் சொல்லும் பேரகராதியில் காணக் கிடைக்கிறது. Hole, புழை, துவாரம் எனப் பொருள் தந்துள்ளனர். பூழியன் என்றால் பூழி நாட்டுக்குத் தலைவன் என்றும், பூழி நாடு என்பது the region where a vulgar dialect of Tamil was spoken என்றும் குறிப்பு உண்டு. இன்றைய தமிழ் நாட்டில் vulgar மொழி பேசும் பிரதேசம் எது என்பதை நீங்கள் தீர்மானித்துக் கொள்ளலாம். பூழை என்றாலும் துவாரம் என்று பொருள் தந்துள்ளனர். ஆனால் பூழியன் என்றால் விபூதி அணிந்தவன், சிவன் என்ற பொருளும் தரப்பட்டுள்ளது. ‘த்வஜ’ எனும் சமற்கிருதச் சொல்லை நாம் துவசம் என்று தமிழாக்கினோம். த்வஜ எனும் சமற்கிருதச் சொல்லுக்கு கொடி, அடையாளம், ஆண்குறி என்று பொருள். ஆண்குறியைக் குறிக்க, கம்பம், கம்பு, கோல், தண்டு போன்ற சொற்களை மக்கள் பயன்படுத்துவதையும் சேர்த்து எண்ணிப் பார்க்கலாம்.  

குய்யம் என்றொரு சொல் கிடக்கிறது பேரகராதியில். நான்கு பொருள்கள் தரப்பட்டுள்ளன. 1.That which is secret, mystical, hidden, private, மறைவானது. 2. Genetic origin, especially of women, உபஸ்தம். 3. Anus, அபான வாயில். 4. Dissimulation, deceitfulness, hypocrisy, வஞ்சகம். குய்யம் எனும் சொல் குஹ்ய எனும் வட சொற்பிறப்பு என்கிறார்கள். குஹ்ய என்றால் உட்கரத்தல், இரகசியமான, மர்மமான என்று பொருள்.

குய்யம் எனும் சொல்லை, வஞ்சனை எனும் பொருளில் திருத்தக்க தேவர், சீவக சிந்தாமணி ஆள்கிறது.  முதல் இலம்பகமான நாமகள் இலம்பகத்தின் பாடல் சொல்கிறது:

‘நட்பிடைக் குய்யம் வைத்தான்; பிறர் மனை நலத்தைச் சேர்த்தான்

கட்டழல் காமத் தீயில் கன்னியைக் கலக்கினானும்

அட்டுயிர் உடலம் தின்றான் அமைச்சனாய் அரசு கொன்றான்

குட்டநோய் நரகம் தம்முள் குளிப்பவர் இவர்கள் கண்டாய்’ என்று.

நட்பு பூண்ட இடத்து வஞ்சனை வைத்தவனும், பிறர் மனையாளைச் சேர்ந்தவனும், மிகுந்த அழல் போன்ற காமத் தீயில் கன்னியைச் சீர் குலைத்து அவளை மணம் செய்து கொள்ளாதவனும், உயிரைக் கொன்று உடலம் தனைத் தின்றவனும், அமைச்சனாக இருந்தே அரசனைக் கொன்றவனும், இம்மையில் குட்ட நோயிலும் மறுமையில் நரகத்திலும் அழுந்துவார்கள் என்பது பாடலின் பொருள். இன்றைய கணக்கெடுப்பில், பாடல் சொல்லும் பட்டியலில் இருப்போர்தான் அரசியலில், அதிகாரத்தில், சமூகத்தில் செல்வாக்கு உடையவராய் பட்டொளி வீசி நடக்கிறார்கள்.

குய்ய ரோகம் எனில் பெண்குறியில் வரும் பாலியல் நோய் என்கிறார்கள். அதாவது STD, Sexually Transmitted Disease.

பெண்குறியைச் சொல்ல கூதி என்றொரு சொல்லும் ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது. மலையாளத்திலும் துளுவிலும் கூட, கூதி என்றால் பெண்குறி. நிதம்பம் என்றொரு சொல்லும் உண்டு. இடம், பொருள், ஏவல் உணர்ந்து, அதனைக் குண்டி என்ற பொருளிலும், அல்குல் அல்லது பெண்குறி என்ற பொருளிலும் கையாள்கிறார்கள்.

பேரகராதி, நிதம்பம் எனும் சொல்லுக்கு ஏழு பொருள் தருகிறது.

  1. Buttocks or hind quarters, posterior, especially of a woman; பிருஷ்டம்
  2. Pubic region. அல்குல் (பிங்கல நிகண்டு)
  3. Side or swell of a mountain, மலைப் பக்கம் (பிங்கல நிகண்டு)
  4. Bank or shore, as of a river. கரை (யாழ் அகராதி)
  5. A hand-pose. நிருத்தக் கை வகை. நாட்டிய முத்திரை வகை.
  6. A mineral poison. கற்பரி பாஷாணம். (சங்க அகராதி)
  7. Shoulder. தோள் (யாழ் அகராதி)

எனவே நிதம்பம் எனில் புட்டமும் ஆகும், பெண்குறியும் ஆகும். நிதம்ப சூலை என்றும் ஒரு சொல் காணக் கிடைக்கிறது. பிரசவத்தின் முறை கேட்டால் உண்டாகும் நோய்வகை என்கிறார்கள். பேராசிரியர் அருளி அவர்களின் ‘அயற்சொல் அகராதி’ நிதம்பம் எனும் சொல்லை சமற்கிருதம் என்றும், புட்டம், அல்குல், மலைப்பக்கம், கரை, தோள் என்பன பொருள்கள் என்றும் வரையறுக்கிறது.



__________________


Newbie

Status: Offline
Posts: 4
Date:
Permalink  
 

எழுத, பேசக் கூசும்
சொற்களின் உண்மைப்
பொருளையும், அவற்றை
சமூகமும், இலக்கியமும்
எவ்விதம், எச்சூழலில்
கையாளுகின்றன
என்பதையும் துணிந்து
ஆவணப் படுத்தி
யிருக்கிறீர்கள். ஒரே
பொருள் கொண்ட வார்த்தைகளில்
இது பிடிக்கும், இது பிடிக்காது
என நாம் ஒதுக்கும் அபத்தத்தையும்
விளக்கியிருந்தது போற்றத்தக்கது.

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard