New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பிள்ளையார் சுழி


Guru

Status: Offline
Posts: 24601
Date:
பிள்ளையார் சுழி
Permalink  
 


ஆரிய மரபின் பிள்ளையார் சுழி வேறு; தமிழ் மரபின் பிள்ளையார் சுழி வேறு : மகாராசன்

 
FB_IMG_1566498844375.jpg
 
FB_IMG_1545332959803.jpg
 
20180912_232714.jpg
 
FB_IMG_1544062957085.jpg
 
பிள்ளையார் சுழியாகக் கருதப்படும் ‘உ’ என்னும் எழுத்துக் குறியானது, தமிழ் நெடுங்கணக்கில் உள்ள  உயிர்க் குறில் எழுத்தாகிய ‘உ’ எனும் எழுத்துக் குறியை அடையாளப்படுத்துவதாகப் பெரும்பாலோர் கருதுவர். ஆரிய / வைதீகச் சமய மரபில்  அடையாளப்படுத்தப்படும் பிள்ளையார் சுழியானது, தமிழின் ‘உ’ எனும் எழுத்தைக் குறிப்பதாகக் கொள்ளமுடியாது. ஏனெனில், ஆரிய / வைதீகச் சமயத் தொன்மத்தில்  சுட்டப்படும் பிள்ளையாரின் எழுத்துச் செயல்பாடு வடமொழி எனும் சமக்கிருத மொழியோடு தொடர்புடையது. ஆரிய / வைதீகச் சமய மரபின் வழிபாட்டு மொழியாகக் கருதப்படுவதும் சமக்கிருத மொழிதான். சமக்கிருத மொழியிலும் ‘உ’ என்கிற ஒலி / எழுத்து உண்டு. ஆகவே,  பிள்ளையார் சுழி பற்றிய ஆரிய / வைதீகச் சமயத் தொன்மக் கதையாடலானது சமக்கிருத எழுத்துகளில் உள்ள ‘உ’ வரிவடிவம் பற்றியதாகவே இருந்திருக்க வேண்டும்.

சமக்கிருத மொழியை எழுதுவதற்குப் பயன்படுத்திய எழுத்து வரிவடிவத்திற்குக் கிரந்தம் என்று பெயர். அத்தகையச் சமக்கிருதக் கிரந்த எழுத்துகளில் உள்ள ‘உ’ என்னும் எழுத்துக் குறியானது, தமிழ் நெடுங்கணக்கில் உள்ள ‘உ’ எனும் எழுத்துக் குறியைப் போலவே ‘உ’ என்ற வரி வடிவத்தையே கொண்டிருக்கிறது. ஆக, பிள்ளையார் சுழியாகக் குறிக்கப்படும் எழுத்துத் தொன்மம் சமக்கிருதக் கிரந்தத்தில் உள்ள ‘உ’ எனும் எழுத்துக் குறியையே அடையாளப்படுத்துகிறது; அப் பிள்ளையார் சுழியானது, தமிழின் ‘உ’ எழுத்தைக் குறிப்பது அல்ல எனவும் கருதலாம். மேலும், சமக்கிருத மற்றும் ஆரிய / வைதீகச் சமயப் பண்பாட்டு அடையாளத்தையே கிரந்த எழுத்து வரிவடிவத்தில் உள்ள ‘உ’ எனும் பிள்ளையார் சுழி கொண்டிருக்கிறது எனலாம்.

ஆரிய / வைதீகச் சமயச் சார்பான எழுத்துப் பண்பாட்டு மரபில் கிரந்த எழுத்து வரிவடிவத்தில் உள்ள ‘உ’ எனும் எழுத்தைப் பிள்ளையார் சுழியாகக் குறிக்கப்படுவதைப் போலவே, தமிழில் உள்ள ‘உ’ எனும் எழுத்தையும் பிள்ளையார் சுழி என்றே குறிக்கும் வழக்கமும் தமிழ் எழுத்துப் பண்பாட்டு மரபில் இருக்கின்றது. ஆயினும், ஆரிய / வைதீகச் சமயச் சார்பான எழுத்துப் பண்பாட்டு மரபில் உள்ள பிள்ளையார் சுழி என்பது வேறு; தமிழ் எழுத்துப் பண்பாட்டு மரபில் உள்ள பிள்ளையார் சுழி என்பது வேறு ஆகும். ஏனெனில், ஆரிய / வைதீகச் சமய வழிபாட்டு மரபில் இடம்பெறுகிற பிள்ளையாரும் அதைக்குறித்த சமயக் கதையாடல்களும், தமிழர் வழிபாட்டு மரபில் இடம்பெறும் பிள்ளையாரும் அதைக்குறித்த வழக்காறுகளும் வேறு வேறான நிலம், இனம், மொழி, பண்பாட்டு மரபுப் பின்புலங்களைக் கொண்டிருக்கின்றன.

பிள்ளையார், ஆரிய / வைதீகச் சமய வழிபாட்டு மரபில் வழிபடு கடவுளாகக் கருதப்படுவதைப் போலவே, தமிழ்நாட்டுச் சிற்றூர்ப்புறங்களில் நிகழ்த்தப்படும் வழிபாட்டுச் சடங்குகளில் வழிபடு உருவமாகப் பிள்ளையார் இடம்பெறுவதைக் காண முடியும். பொதுவாக, ஆரிய / வைதீகச் சமய வழிபாட்டு மரபுகளிலிருந்து வேறுபட்டும் மாறுபட்டும் முரண்பட்டும் தனித்ததொரு பண்பாட்டு அடையாளங்களைக் கொண்டிருப்பதே தமிழர் நாட்டுப்புறச் சமய மரபாகும். அவ்வகையில், தமிழர் நாட்டுப்புறச் சமய மரபில் காணலாகும் வழிபாட்டுச் சடங்கில் இடம்பெறுகிற பிள்ளையார், ஆரிய / வைதீகச் சமய வழிபாட்டு மரபுகளில் குறிக்கப்படும் பிள்ளையார் என்பதிலிருந்து வேறுபட்டதாகும்.

அதாவது, ஆரிய / வைதீகச் சமய வழிபாட்டு மரபில் பிள்ளையாருக்கு மனிதரும் விலங்கும் இணைந்த பேருருவ அடையாளம் வழங்கப்பட்டிருக்கிறது. யானை உருவும் எலி உருவும் பிள்ளையார் என்பதோடு தொடர்புபடுத்தப்படுகிறது. அதிலும் குறிப்பாக, யானைத் தலையுடன் கூடிய காதுகள், மனிதப் புருவங்களும் கண்களுடன்கூடிய மிகப்பெரிய வயிறு, இரண்டுக்கும் மேற்பட்ட கைகள் எனப் பிள்ளையாருக்கான அடையாளமாக ஆரிய / வைதீகச் சமய மரபு முன்வைத்திருக்கிறது. ஆனால், தமிழக  நாட்டுப்புறத் தமிழர் வழிபாட்டுச் சடங்கில் இடம்பெறும் பிள்ளையார், மனிதர் / விலங்கு என எவ்வித உருவமும் கொண்டிருக்காமல் அங்க அவயங்கள் எதுவுமின்றிச் சிற்றுரு வடிவில் உருவமற்றுக் காணப்படுகிறது.

தமிழக  நாட்டுப்புறத் தமிழர்கள் எந்தவொரு நல்ல செயல்களையும் தொடங்கும்போது, தமது வழிபாட்டுச் சடங்கில் மஞ்சளையோ சந்தனத்தையோ அரிசி மாவையோ களிமண்ணையோ மாட்டுச் சாணியவோ உள்ளங்கையில் பிடித்து வைத்து, அதன்மேல் அருகம் புல்லைச் சொறுகி வைப்பர். இதைப் பிள்ளையார் பிடித்தல் எனக் கூறுவது தமிழர் வழக்காகும். பயிர் நடவுத் தொடக்கத்திலும், பயிர் அறுவடை நிறைவிலும் பிடிப் பிள்ளையாரை வழிபாட்டுப் பொருளாக வைப்பது உண்டு. பெரும்பாலும், தமிழர்களின் நிலம் சார்ந்த உற்பத்திச் செயல்பாடுகளின் தொடக்கத்திலும் அவற்றின் நிறைவிலும் பிள்ளையார் பிடித்து வழிபடும் சடங்கானது, எளிய வழிபாட்டுச் சடங்காக இன்றளவிலும் பெருவழக்காய் இருந்து கொண்டிருக்கிறது.

அரிசி, மஞ்சள், மண், சந்தனம், சாணம், புல் போன்ற பொருட்கள் எளிய மக்கள் வாழ்வியலின் புழங்கு பொருட்களோடு தொடர்புடையவை. இவை வளமை சார்ந்த பொருட்களாகக் கருதப்படுகின்றவை. இந்தப் பொருட்களைக் கொண்டு பிடிக்கப்படும் பிள்ளையார், வளமை என்பதோடு மட்டுமல்லாமல் இளமை என்பதோடும் தொடர்புடையதாய் இருக்கின்றது.
மாற்ற அரும் சிறப்பின் மரபுஇயல் கிளப்பின்
பார்ப்பும் பறழும் குட்டியும் குருளையும்
கன்றும் பிள்ளையும் மகவும் மறியும் என்று
ஒன்பதும் குழவியோடு இளமைப் பெயரே
என, இளமையைக் குறிக்கும் பெயர்களை வரிசைப்படுத்துகிறது தொல்காப்பியம்.

தமிழில் ‘பிள்ளை’ என்ற சொல், தென்னம் பிள்ளை என  இளம் தாவரங்களையும்; அணில் பிள்ளை, கீரிப் பிள்ளை என விலங்குகளின் இளங்குட்டிகளையும் குறிப்பிடப் பயன்படுத்தப்படுவது உண்டு. அதோடு, ஆண் பிள்ளை, பெண் பிள்ளை என மனித இனத்தின் இளங்குழந்தைப் பருவத்தைக் குறிக்கும் சொல்லாகவும் வழக்கத்தில் இருக்கின்றது.  நெல் நாற்று முடியைப் பிள்ளை முடி எனவும் உழவுத்தொழில் மரபினர் குறிப்பர். நெல் நடவுத் தொடக்கத்தில் பிள்ளை முடியை வணங்கிக் குலவையொலி எழுப்பிய பிறகு, பிள்ளை முடியிலிருக்கும் நெல் நாற்றையே தலை நாற்றாக - முதல் நாற்றாக நடவுப் பெண்கள் நடுகை இடுவது உழவுத்தொழில் மரபாக இருந்து கொண்டிருக்கிறது.

சிற்றூர்ப்புறங்களில் தமிழர்களின் எளிய வழிபாட்டு மரபில் இடம்பெற்றுள்ள பிள்ளையார் என்பது, வளமையோடும் இளமையோடும் தொடர்புடைய குறியீட்டு அடையாளமாகவே காட்சி தருவது கவனிக்கத்தக்கது. ஒரு செயலின் தொடக்கம் இளமை நிலையில் இருப்பது. அச்செயலானது நல்முறையில் வளர்ந்து வளம்பெற வேண்டும் என்பதைக் குறியீட்டு நிலையில் உணர்த்துவதன் வடிவமாகப் பிள்ளையாரைக் கருத முடியும்.

மேலும், மனிதர்களின் செயல்பாடுகள் அனைத்தும் நடைபெறக்கூடியவை உலகமெனும் நிலத்தில்தான். இந்த நிலத்தில்தான் மனித இனம், விலங்கினம், பயிரினம் ஆகியன உயிர் வாழ்கின்றன. உயிரினங்களின் உயிர் வாழ்வுக்கு அடிப்படையாகவும் வாழ்வாதாரத் தேவையாகவும் அமைந்திருப்பது நிலம்தான். அதனால்தான், நிலமும் பொழுதும் முதல் பொருள் என்கிற வகையில்
முதல் எனப்படுவது நிலம் பொழுது இரண்டின்
இயல்பு என மொழிப இயல்பு உணர்ந்தோரே
என்கிறது தொல்காப்பியம்.

உயிரினங்களின் வாழ்வுக்கும் இருப்புக்கும் அடிப்படையாகவும் முதல் பொருளாகவும் அமைந்திருக்கிற நிலம்தான் வளமைப் பொருளாக இருக்கின்றது. இவ் வளமைப் பொருளின்மீது நிகழ்கிற செயல்பாட்டுத் தொடக்கம் யாவும் இளமைதான். அவ்வகையில், நிலத்தையும் செயலின் தொடக்கத்தையும் வணங்குதல் பொருட்டே பிடிப் பிள்ளையார் உருவகப்படுத்தப்படுகிறது. அதாவது, அங்க அவயங்கள் எதுவுமின்றி உருவமற்றுப் பிடிக்கப்படும் பிள்ளையார் என்பது நிலம் என்னும் உருவத்தையே குறிக்கிறது. அதன்மேல் சொறுகப்படும் அருகம்புல் நிலத்தின்மேல் வாழ்கிற உயிரினங்களின் வளமையைக் குறிக்கிறது.

இந்நிலையில், சிற்றூர் நாட்டுப்புறத்து உழவுப் பாடலொன்று பிள்ளையார் பிறந்த கதையைப் பற்றிக் கூறுவது நோக்கத்தக்கது.
வடக்கே தெற்கே ஒட்டி
வலதுபுறம் மூரிவச்சு
மூரி ஒழவிலே
முச்சாணி புழுதி பண்ணி
சப்பாணிப் பிள்ளையாருக்கு
என்ன என்ன ஒப்பதமாம்!

முசிறி உழவிலே
முளைச்சாராம் பிள்ளையாரு.

ஒடு முத்தும் தேங்காயை
ஒடைக்கறமாம் பிள்ளையாருக்கு,
குலை நிறைஞ்ச வாழைப்பழம்
கொடுக்கறமாம் பிள்ளையாருக்கு,
இத்தனையும் ஒப்பதமாம்
எங்கள் சப்பாணிப் பிள்ளையாருக்கு!
என, உழவுத்தொழில் மரபினரிடம் வழங்கி வருகிற இந்நாட்டுப்புறப் பாடலானது, உழவர்கள் உழுத புழுதி மண்ணிலிருந்து தோன்றியதாகப் பிள்ளையாரைக் குறிப்பிடுகிறது. நிலத்தோடும் மண்ணோடும் புழுதியோடும்தான் பிள்ளையார் தொடர்புபடுத்தப்படுகிறது என்பது இங்கு கவனிக்கத்தக்கதாகும்.

நிலமெனும் உலகமும், நிலத்துவாழ் உயிரினங்களும் வளமையோடு தழைத்திட வேண்டுகிற அல்லது வழிபடுகிற வகையில்தான் பிடிப் பிள்ளையார் ஒரு குறியீட்டு அடையாளமாக இடம்பெற்றிருக்கிறது. இன்னும் குறிப்பாகச் சொல்வதானால், நிலம் எனும் உலகை வணங்குவதன் மரபு அடையாளமாகவே தமிழர் வழிபாட்டுச் சடங்கில் பிள்ளையார் இடம்பெற்றிருக்கிறது எனலாம். அவ்வகையில்தான், எந்தவொரு செயலைத் தொடங்குவதற்கு முன்பாகப் பிள்ளையாரை வழிபட்டுத் தொடங்குதல் தமிழர் வழிபாட்டுச் சடங்கு மரபாகப் பின்பற்றப்படுகிறது. பிடிப்பிள்ளையார் என்பதைப் பிடி மண் எடுத்தல் என்பதோடும் தொடர்புபடுத்திப் பார்க்க வாய்ப்புண்டு.

தாம் வாழ்ந்த இடத்திலுள்ள தெய்வத்தின் பீடத்திலிருந்து / வாழ்ந்த நிலத்திலிருந்து / வாழ்ந்த ஊரிலிருந்து கொஞ்சம் கைப்பிடியளவு மண்ணை எடுத்துத் தாம் வாழப்போகும் இடத்திற்குக் கொண்டு செல்லுதலே பிடி மண் எடுத்தலாகும். இங்கு மண் என்பது வெறும் மண்ணை மட்டும் குறிப்பதல்ல. மாறாக, அந்நிலத்தில் / அம்மண்ணில் வாழ்ந்த முந்தைய தலைமுறைகளின் வாழ்வையும், இப்போதும் அதே நிலத்தில் / அதே மண்ணில் வாழ்ந்துகொண்டிருக்கிற தலைமுறையின் வாழ்வையும்,  வரும் காலங்களில் இதே நிலத்தில் / இதே மண்ணில் வாழப்போகும் தலைமுறைகளின் வாழ்வையும் வளப்படுத்திய / வளப்படுத்துகிற / வளப்படுத்தப்போகிற ஆற்றல் நிரம்பிய வளமையின் குறியீடாகவே உணரப்படுகிறது.

அவ்வகையில், வாழ்நிலத்துப் பிடி மண்ணைத் தெய்வம் உறைந்திருக்கும் பொருளாகப் பார்க்கப்படுவதில்லை. அந்த மண்ணேதான் தெய்வம் என்பதாகக் கருதப்படுகிறது. அதாவது, மனிதத் தலைமுறையினர் மட்டுமல்லாது விலங்குகள், மரம், செடி கொடி உள்ளிட்ட உணவுப் பயிர்கள் போன்ற அனைத்து உயிரினங்களின் இருப்புக்கும் வாழ்வுக்கும் அடிப்படையான மண்ணை / நிலத்தை / உலகத்தை வளமையின் குறியீடாகக் குறிப்பதே பிடி மண் என்பதுமாகும். இத்தகையப் பிடி மண்ணும் பிடிப் பிள்ளையாரும் உலகத்தை / நிலத்தை / மண்ணையே குறித்து நிற்கின்றன.  ஆக, தமிழர் பண்பாட்டு மரபில் பிள்ளையார் என்பதும் உலகம் என்பதைக் குறிக்கும் குறீயீடாகவே கருதலாம்.

தமிழர்கள் தமது எழுத்துச் செயல்பாடுகளைப் பிள்ளையார் எனும் உலகத்தை வழிபட்டே தொடங்கி இருப்பதின் வெளிப்பாடாகத்தான்,  எழுதத் தொடங்குவதற்கு முன்பு ‘உ’ எனும் தமிழ் எழுத்துக் குறியைப் பயன்படுத்தி வந்துள்ளனர். அவ்வகையில், ‘உ’ எனும் எழுத்துக் குறியும் பிள்ளையார் சுழி என்றே தமிழ் எழுத்துப் பண்பாட்டு மரபில் வழங்கி வருகின்றது.

தமிழர் எழுத்துப் பண்பாட்டு மரபு நூலில் இருந்து..

தமிழர் எழுத்துப் பண்பாட்டு மரபு,
மகாராசன்,

ஆதி பதிப்பக வெளியீடு 2019,
விலை: உரூ 120,

நூல் வேண்டுவோர் தொடர்புக்கு:
பேச : 9994880005


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

ஆரிய வைதீகச் சமய மரபும் பிள்ளையாரும் : மகாராசன்

 
 
FB_IMG_1533310404853.jpg
 
20190508_211917.jpg
 
உ’ எனும் எழுத்துக் குறியைப் பிள்ளையார் எனும் கடவுளோடு தொடர்புபடுத்தியும்,  பிள்ளையாரை ஆரிய / வைதீகச் சமயக் கடவுளராகக் முன்வைப்பதுமான சமய உரையாடல்கள் ஒருபுறம் இருப்பினும், தமிழ்ச் சமூக வரலாற்றிலும் ஆரிய / வைதீகச் சமய மரபிலும் பிள்ளையாருக்கான இடம், அதன் தோற்றப் பின்புலம், அதன் பரவலாக்கம் போன்ற சமூக மற்றும் சமயப் பண்பாட்டு  நோக்கிலான கருத்தாடல்களும் ஆய்வுகளும் வேறுவகையிலான செய்திகளை முன்வைக்கின்றன. அவ்வகையில், பிள்ளையாரைக் குறித்து ஆ.சிவசுப்பிரமணியன் எழுதிய ‘பிள்ளையார் அரசியல்’ எனும் நூல், பிள்ளையாரைப் பற்றிய சமயப் பண்பாட்டுத் தரவுகளைத் தந்திருக்கிறது.

ஆரிய / வைதீகச் சமய அடையாளமாகப் பிள்ளையார் கருதப்பட்டாலும், அச்சமய மரபில் குறிக்கப்படுகிற மற்ற கடவுள்களைப் போலான இடம் வழங்கப்படவில்லை. இதைக் குறித்து ஆ.சிவசுப்பிரமணியன் கூறும்போது, இந்து சமயம் என்று அழைக்கப்பெறும் பிராமணிய சமயத்தில் இரண்டு வகையான தெய்வங்கள் இடம்பெற்றுள்ளன. பிரம்மன், விஷ்ணு, சிவன், முருகன் என மேல்நிலையில் உள்ள தெய்வங்கள் ஒருபுறமும், பரிவார தெய்வங்கள் என்ற பெயரில் அனுமன், சண்டேஸ்வரர் போன்ற தெய்வங்களும் வழிபாட்டில் உள்ளன. இவை இரண்டிலும் இடம்பெறாமலும், பிராமணிய சமயத்திற்கு வெளியிலுள்ள நாட்டார் தெய்வங்கள் வரிசையில் இடம்பெறாமலும், தனக்கெனத் தனியானதோர் இடத்தைப் பெற்றுள்ள தெய்வம் பிள்ளையார் ஆகும் என்கிறார்.

வைதீகச் சமயப் பெருங்கோயில்களில் மட்டுமின்றி, இவருக்கெனத் தனியாகவும் கோயில்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதேவேளையில், ஆற்றங்கரை, குளத்தங்கரை, தெருக்கள், கூரையின்றி வெட்டவெளியிலும்கூட பிள்ளையார் இடம் பெற்றிருக்கிறார். இத்தகைய வழிபாட்டு மரபில் உள்ள பிள்ளையார் எனும் விநாயகரின் உருவம் மனிதன், விலங்கு, தேவர், பூதம் என்கிற நான்கின் இணைப்பாகக் காட்சி தருவதாகக் குறிக்கப்படுகிறது.

யானைத் தலையும் காதுகளும் தும்பிக்கையும் விலங்கு வடிவமாகவும், பேழை போன்ற வயிறும் குறுகிய கால்களும் பூதவடிவமாகவும், புருவமும் கண்களும் மனித வடிவமாகவும், இரண்டிற்கும் மேற்பட்ட கைகள் தேவ வடிவமாகவும் கருதப்படுகிறது. குறிப்பாக, யானைத் தலையுடன் கூடிய இவரது உருவம் மனித விலங்கு உருவ இணைப்பாக அமைந்துள்ளது. இத்தகையப் பிள்ளையாருக்கு வடமொழிச் சுலோகங்கள் கூறி ஆகம முறையிலும் வழிபாடுகள் நிகழ்த்தப்படுவதால், அதன் அடிப்படையில் இவர் உயர்நிலைத் தெய்வமாகவே காட்சியளிக்கிறார். எனினும்,  வேதங்களிலும் பிராமணிய மற்றும் புத்த மத இலக்கியங்களிலும் பிள்ளையார் வழிபாடு குறித்த செய்திகள் இடம் பெறவில்லை என்று அமிதா தாப்பன் குறிப்பிடுகிறார். குப்தர் காலத்திற்கு முந்திய சிற்பங்களில் பிள்ளையார் வடிவம் இல்லை என்று கூறும் ஆனந்தகுமாரசாமி, குப்தர் காலத்தில்தான் பிள்ளையார் உருவங்கள் காட்சி அளிப்பதாகக் குறிப்பிடுகிறார் .

பிள்ளையாரின் தோற்றம் குறித்துப் பல்வேறு கதைகள் வழக்கில் உள்ளன. பிள்ளையாரின் தோற்றம் குறித்த புராணக் கதைகளில் அவர் ஏதாவது ஒரு வகையில் யானையுடன் தொடர்புபடுத்தப்படுகிறார். யானை முகமும் மனித உடலும் இணைந்த பிரமாண்டமான உருவத்தை உடைய பிள்ளையார், எலி ஒன்றின் மீது வீற்றிருக்கிறார். இந்நிலையில், யானையுடன் பிள்ளையார் தொடர்புபடுத்துவதற்கான காரணத்தையும், எலியை வாகனமாகக் கொண்டிருப்பதற்கான காரணத்தையும் ஆ.சிவசுப்பிரமணியன் தமது நூலில் விளக்கப்படுத்தி இருக்கிறார். அது வருமாறு:

பிள்ளையார் வழிபாட்டின் தோற்றம் குறித்து அறிந்துகொள்ள கணபதி என்ற அவரது பெயர் உணர்த்தும் செய்தியைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். கணபதி என்ற சொல்லின் பொருள் கணங்களின் கடவுள் என்பதாகும். கணா + பதி என்ற சொல்லைப் பிரித்து கணங்களின் தலைவன் என்று பொருள் கொள்வர். கணபதியின் மற்றொரு பெயரான கணேசன் என்ற சொல்லைக் கணா + ஈசர் என்று பிரித்து கணங்களின் கடவுள் என்று பொருள் கொள்வர்.

கி.பி.ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தவரான மந்திரர், கணநாயகா என்று பிள்ளையாரைக் குறிப்பிடுகிறார். கணத்தின் தலைவன் என்பது இச்சொல்லின் பொருள். ரிக் வேதத்தில் இடம்பெறும் கணபதி என்ற சொல், ஒரு குழு அல்லது படை அல்லது சபையின் தலைவனைக் குறிப்பதாக மோனியர் வில்லியம்ஸ் கருதுகிறார். கணபதி என்ற சொல்லுக்குக் கணங்களைப் பாதுகாப்பவர் என்று அந்நூலின் உரையாசிரியரான மஹிதார்  குறிப்பிடுகிறார்.

சில மக்கள் குழுவினர், குறிப்பாகப் பழங்குடிகள் தங்களை விலங்கு, தாவரம் போன்ற இயற்கைப் பொருட்களிடமிருந்தோ, புராண மூதாதையர்களிடம் இருந்தோ தோன்றியதாகக் கருதினர். இவ்வாறு தாம் கருதும் தாவரம் அல்லது விலங்கைத் தமது குலக்குறியாகக் கொண்டனர். இவ்வாறு விலங்குகள் தாவரங்கள் இயற்கை பொருட்கள் போன்றவற்றில் இருந்து குறிப்பிட்ட குலம் தோன்றியதாக நம்பியதன் அடிப்படையில் அதன் தோற்றத்திற்குக் காரணமான பொருள் ஒரு குலத்தின் குலக் குறியாக அமைகிறது. இவ்வாறு குலக்குறியானது குலத்தின் சமூக பண்பாட்டு வாழ்வில் முக்கிய இடத்தை வகிக்கிறது.

இனி, யானை எலி ஆகியன குலக்குறியாக விளங்கியதைக் காண்போம். மதங்கர்கள் என்ற வட இந்தியப் பழங்குடிகளின் குலக்குறி யானையாகும். மாதங்கி என்ற சொல் யானையைக் குறிப்பதாகும். குலக் குறியான யானையின் பெயராலேயே இக்குழு மதங்கர்கள் என்று பெயர் பெற்றது. வேத காலம் முடிவதற்கு முன்னரே இக்குழுவினர் ஒரு சாதியாக உருப்பெற்று மௌரியப் பேரரசுக்கு முன்னதாகவே அரசு அதிகாரத்தை நிலை நிறுத்தி இருந்தனர்.

லலிதா விஸ்தாரகா என்ற புத்த மத நூல், பசனாதி என்ற கோசல மன்னனை யானையின் விந்தில் இருந்து தோன்றியவனாகக் குறிப்பிடுகிறது.  இக்கருத்து குலம், குலக்குறியுடன் தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டிய ஒன்று. யானையைக் குலக்குறியாகக் கொண்டிருந்த பழங்குடி வாழ்வின் எச்சமாகவே இதைக் கொள்ளவேண்டும்.

இதுபோன்று மூசிகர் என்ற பிரிவு தென்னிந்தியாவில் இருந்துள்ளது. இவர்களை வனவாசிகள் உடன் இணைத்து மகாபாரதம் குறிப்பிடுகிறது. மூஷிகம் என்ற வடமொழிச் சொல் எலியைக் குறிப்பிடுகிறது. இந்தியப் பழங்குடிகள் பலருக்கு எலி குலக்குறியாக உள்ளது. ஒரு குலக் குழுவினர் மற்றொரு குழுவினருடன் போரிட்டு வென்றால், தோல்வியடைந்த குலத்தின் குலக்குறி அழிக்கப்படும் அல்லது வெற்றி பெற்றதுடன் இணைக்கப்படும். ஆளும் குலமானது தனது அதிகாரத்தை விரிவுபடுத்தும்போது, பிற குலங்களின் குலக்குறிக் கடவுளர்களை இணைத்துக்கொண்டு தன்னுடையதாக மாற்றிக்கொள்ளும் என்று தாம்சன் குறிப்பிடுவார். இக்கருத்தின் பின்புலத்தில் பின்வரும் முடிவுக்கு நாம் வரலாம்.

யானையைக் குலக்குறியாகக் கொண்டிருந்த பழங்குடிக் குலம் ஒன்று, எலியைக் குலக்குறியாகக் கொண்டிருந்த குழுவுடன் போரிட்டு அதை வென்றபோது, அவ்வெற்றியின் அடையாளமாக அக் குலக்குறியைத் தன் குலக் கடவுளின் வாகனமாக மாற்றியுள்ளது. யானையைக் குலக்குறியாகக் கொண்டிருந்த பழங்குடி ஒன்று, விரிவடைந்து அரசு என்ற அமைப்பை உருவாக்கியபோது அதன் குலக்குறியான  யானை கடவுளாக மாற்றமடைந்தது.  ஆயினும், பிராமணிய சமயம் இக்கடவுளை உடனடியாகத் தன்னுள் இணைத்துக் கொள்ளவில்லை. தமது தெய்வங்களுக்கு வெளியிலேயே அதை நிறுத்தி வைத்தது. நான்காவது வருணமான சூத்திரர்களின் கடவுளாகவே அவர் மதிக்கப்பட்டார்.

பல்வேறு பழங்குடி அமைப்புகளை அழித்துப் பேரரசு உருவாகும்போது, தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் வழிமுறைகளில் ஒன்றாகத் தன் சமய வட்டத்திற்குள் பழங்குடிகளின் தெய்வங்களையும் இணைத்துக் கொள்ளும். அந்தவகையில், குப்தப் பேரரசில் ஆளுவோரின் சமயமாக விளங்கிய பிராமணிய சமயம், சூத்திரர்களின் கடவுளான பிள்ளையாரைத் தன்னுள் இணைத்துக் கொண்டது. இதன் விளைவாக விக்னங்களை உருவாக்கும் விநாயகர் விக்னங்களைப் போக்குபவராக மாறினார். பழங்குடிகளின் குலக்குறி என்ற தொடக்ககால அடையாளம் மறைந்து பிராமணிய சமயக் கடவுளர் வரிசையில் இடம் பெற்றார் எனப் பிள்ளையாரின் தோற்றப் பின்புலத்தைக் குறித்து விளக்கியுள்ளார் ஆ.சிவசுப்பிரமணியன்.

மேற்குறித்த தரவுகளின் அடிப்படியில் நோக்கும்போது, கி.பி.3ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில்தான் வேறு வேறு குலக்குறி வழிபாட்டு அடையாளங்களாக இருந்தவை ஆரிய / வைதீகச் சமய மரபில் பிள்ளையார் எனும் வழிபடு கடவுளாகத் தோற்றம் கொண்டிருக்கிறது எனக் கருதமுடிகிறது. அதாவது, அக்கால வட இந்தியாவின் பெரும் பகுதியை உள்ளடக்கி இருந்த பகுதியை கி.பி 320 முதல் 551 வரை  ஆட்சி செய்தது குப்தப் பேரரசுதான்.  இந்தியத் துணைக்கண்டத்தின் பெரும் பகுதிகளை ஆண்ட பேரரசுகளில் ஒன்றாக அது இருந்திருக்கிறது.

குப்தர்கள் காலத்தில்தான் ஆரிய / வைதீகச் சமய உருவாக்கம் ஒரு நிறுவனத் தன்மையை அடைந்திருக்கிறது. குறிப்பாக, ஆரிய / வைதீகச் சமயத் தொன்மங்கள் உருவானது இக்காலகட்டத்தில்தான். மேலும், சமக்கிருத மொழி இலக்கியங்கள் வளர்ந்ததும் அதே காலகட்டம்தான்.

இரண்டாம் சந்திரகுப்தர் ஆட்சிக் காலத்தில் சமக்கிருத மொழியில் புராணங்கள், இராமாயணம் மற்றும் மகாபாரதம் போன்ற இதிகாச இலக்கியங்கள் ஓலைச் சுவடிகளில் எழுத்து வடிவம் பெற்றிருக்கின்றன. அவ்வகையில், அதே காலகட்டத்தில்தான் ஆரிய / வைதீகச் சமய மரபில் பிள்ளையார் வழிபாடானது இந்தியத் துணைக் கண்டத்தின் வடபகுதியில் தோற்றம் கொண்டு நிலவி வந்திருக்கிறது எனக் கருதலாம்.

இந்தியத் துணைக்கண்டத்தின் வடபகுதியில் வழிபடு கடவுளராக இருந்த பிள்ளையாரோடு தொடர்புடைய மற்றொன்று சமக்கிருத மொழியாகும். ரிக், யசூர், சாமம், அதர்வனம் என்கிற நான்கு வேதங்களும் எழுதாக் கிளவியாக இருக்க, வியாசரின் மகாபாரதமே எழுதப்பட்ட கிளவியாக - அய்ந்தாவது வேதமாக எழுத்தில் எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது. அவ்வகையில், வியாசரின் மகாபாரதம் சமக்கிருத மொழியில் எழுதப்பட்டதாகும். வியாசர் சொல்லச் சொல்ல பிள்ளையார் எழுதியதே மகாபாரதம் என்பதாகச் சொல்லப்படுகிறது.

இந்நிலையில்,  பிள்ளையார் வழிபடு கடவுளாகத் தோற்றம் பெற்றதே கி.பி.3ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில்தான் எனும்போது, எழுதாக் கிளவியாக இருந்த சமக்கிருத மொழியில் பிள்ளையார் முதன் முதலாக  எழுதியதான காலமும் கி.பி.3ஆம் நூற்றாண்டு வாக்கில்தான்  இருந்திருக்க வேண்டும். ஆக, பிள்ளையாரும் சமக்கிருத மொழியும் இந்தியத் துணைக் கண்டத்தின் வட பகுதியைச் சார்ந்த ஆரிய / வைதீகச் சமயப் பண்பாட்டின் அடையாளங்கள் என்றே உறுதியாகக் கருத முடியும்.

தமிழர் எழுத்துப் பண்பாட்டு மரபு நூலில் இருந்து..

தமிழர் எழுத்துப் பண்பாட்டு மரபு,
மகாராசன்,

ஆதி பதிப்பக வெளியீடு 2019,
விலை: உரூ 120,

நூல் வேண்டுவோர் தொடர்புக்கு:
பேச : 9994880005


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

தமிழர் எழுத்துப் பண்பாட்டு மரபு: புதிய தேடல்களைத் திறந்துவிட்டிருக்கிறது. :- கதிர் நம்பி, பொறியாளர், பேரா தொ.ப. வாசகர் வட்டம்.

 
FB_IMG_1554384248868.jpg

FB_IMG_1544194074523.jpg

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு
(குறள்:392). திருவள்ளுவர் ஆண்டு எனத் தோராயமாக நாம் ஏற்றுக் கொண்ட 2050 ஆண்டுகளுக்கு முன்பு இக்குறள் படைக்கப்பட்டிருக்கிறது. எண்ணையும் எழுத்தையும் மாந்தர்கள் தங்கள் உயிராகக் கொள்ள வேண்டும் என்பது பொருள். வள்ளுவர் காலத்தில் எழுத்திற்கு முதன்மை அளிக்கப்பட்டிருக்கிறதெனில் அந்த எழுத்தின் தோற்றம், படிநிலை வளர்ச்சி, பரவலாக்கம் எத்தனை ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்திருக்க வேண்டும். 2050 ஆண்டுகளுக்கு முன் எழுத்தை சரளமாக புழங்கிய மேம்பட்ட ஓர் குமுகத்தின் மொழியறிவு ஆய்விற்கு உரியது.

அப்படியொரு ஆய்வினை ஆசிரியர் மகாராசன் 'தமிழர் எழுத்து பண்பாட்டு மரபு' எனும் நூல் வழியே நிகழ்த்தியுள்ளார். பேச்சு  மற்றும் எழுத்தின் தோற்றம், தேவை, படிநிலை வளர்ச்சி, பரவலாக்கம் என விவரிப்பதோடு நிற்காமல் எழுத்து சாமானியர்கள் வாழ்வில் அது  ஆற்றிய பங்களிப்பையும் தொல்லியல் வழிப்பட்டதோடல்லாமல்  மானுட ஆய்வியல் அடிப்படையிலும் சான்றுகளோடு நிறுவுகிறார்.

1. மொழி என்பது ஒரு சிந்தனைக் கருவி
2. மொழி உயிரோடும் உணர்வோடும் இணைந்தது
மேற்சொன்ன இந்த அளவுகோள்களில் தான் மொழியை இந்த குமுகம் இனம் காண்கிறது. ஆனால் மொழி என்பது மானுட  பரிணாம வளர்ச்சியோடு சேர்ந்தே வளர்ந்து வருகிறது. இயங்கியல் அடிப்படையில் அறிவியல் வழிப்பட்ட மொழியின் வளர்ச்சியை ஆசிரியர் தரவுகளோடு விளக்குகிறார்.

பேச்சின் தோற்றம் :

எழுத்து + பேச்சு = மொழி
'தேவையில்லாம பேசாதே' - இந்த சொல்லியத்தை இயல்பாக நாம் கடந்து வந்திருப்போம். உண்மையில் தேவையிலிருந்து தான் பேச்சு பிறக்கிறது. பேச்சு மானுட பரிணாம வளர்ச்சியில் ஒரு மைல்கல். உழைப்பு தான் மாந்தனை பேச வைத்திருக்கிறது. உணவு தேடி உழைப்புச் செலுத்தும் போது சக மாந்தனோடு ஏற்படுத்த வேண்டிய கருத்து பரிமாற்றத்தில் பிறக்கிறது பேச்சு. மாந்தனுக்கு சக மாந்தன் தேவைப்படுகிறான். இதைத் தான் ஏங்கெல்சு உழைப்பதற்கு முன்நிபந்தனையாக வைக்கிறார். கூட்டு உழைப்பின் மூலம் கூட்டுச் சிந்தனை மூலம் சங்கேத ஒலியாக, ஒழுங்கமைக்கப்படாத பேச்சொலியாக மொழி பிறக்கிறது.

ஒழுங்கமைக்கப்பட்ட சத்தத்திலிருந்து சொற்கள் பிறந்து மொழி உருவாகின்றது. குரங்கிலிருந்து பல லட்சம் ஆண்டுகள் கழித்து முன்னங்கால்களை கைகளாக பயன்படுத்தி முதுகெலும்பு நிமிர்த்தி குரல்வளை கொண்டு பேச்சை ஏற்படுத்தியதே மாந்தன் செய்த முதல் புரட்சி என ஏங்கெல்சின் மேற்கோள் காட்டி மொழியின் தோற்றத்தை மானுட பரிணாம வளர்ச்சியோடு மொழி வளர்ச்சி அடைகிறது என ஆசிரியர் விளக்குகிறார்.

எழுத்தின் தோற்றம் :

பேச்சை கேட்க முடிகிறது ஆனால் ஒலியை காண முடிவதில்லை. எழுத்தை காண முடிகிறது ஆனால் கேட்க முடியவில்லை. இவ்விரண்டு செயல்களையும் இணைப்பது தான் மொழி. எழுத்து தகவல் சேர்மையமாக விளங்குகிறது. எப்போது வேண்டுமானால் ஒரு கருத்தை வெளிப்படுத்த எழுத்து உதவுகிறது. எழுத்து உருவான பின் தான் மொழியின் இலக்கணம் பிறக்கிறது. எழுத்து தான் ஒரு மொழியை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துகிறது. பேச்சை தாயெனக் கொண்டால் எழுத்தை சேய் எனக் கொள்ளலாம். தாயைக் காக்கும் சேயாக எழுத்து பரிணமிக்கிறது. எழும் ஒலியை எழுதுவதால் அது எழுத்தெனப்படுகிறது.

எழுத்தின் படிநிலை:

பேசுகின்ற பொழுது எழுந்த தகவல் பரிமாற்ற சிக்கலை ஓவியங்களாக வரைந்து தீர்த்தனர்.பாறைகளில் விலங்கை வேட்டையாடுவது போல ஓவியங்கள் வரைந்தால் அந்த விலங்கு வேட்டையில் நிறைய கிடைக்கும் என நம்பினர். இதை தோழர் ஆ.சி ஒத்த சடங்கு(similarity rituals) என சொல்கிறார். இவ்வாறாக ஓவியங்களாக வரைந்தவை பின்னர் எழுத்துகளாக உருப்பெறுகின்றன.
பாறை ஓவியம் - குறீயிடு - கருத்தெழுத்து - ஒலியெழுத்து என வளர்ச்சி அடைந்ததை ஆசிரியர் விளக்குகிறார்.

தமிழி × பிராமி :

பிராமி எனும் எழுத்து வடிவம் (writing system) அசோகர் கால கல்வெட்டுகளில் பிராகிருத மொழியில் எழுதப்பட்டவை. ஆய்வாளர்கள் தென்னகத்தில் கிடைத்த எழுத்து சான்றுகளை தமிழ் பிராமி எனக் குறிக்கிறார்கள். ஆனால் பிராமியைப் போலவே தமிழி எனும் எழுத்து வடிவம் தனித்து இயங்கக் கூடியது(stand alone), பிராமியினை விட தமிழி மூத்தது என புலிமான் கோம்பை எனும் இடத்தில் கிடைத்த தொல்லியல் சான்றை மேற்கோள் காட்டுகிறார் ஆசிரியர். பிராமிக்குள் தமிழி அடக்கம் என நிறுவும் முயற்சிகள் தவிடு பொடியாகின்றன. இந்தியாவில் கிடைத்த ஒட்டு மொத்த பிராமி எழுத்து பொறிக்கப்பட்ட மட்பாண்டங்களின் எண்ணிக்கையை விட கொடுமணிலில் கிடைத்தவை அதிகம்.

எழுத்து வகைகள் :

கண்ணெழுத்து, சாதியெழுத்து, நாள் எழுத்து, யோனி எழுத்து, தன்மையெழுத்து என எழுத்து வகைகளைப் பற்றி நிறைய தகவல்கள் இந்நூலில் காணலாம்.

எழுத்து பரவலாக்கம் :

இந்த நூலின் மிக முதன்மையான பகுதி இது தான். அசோகர் காலத்து பிராமி எழுத்து அரச மரபெழுத்தாகவே கல்வெட்டுக்களில் உறைந்து கிடக்க தமிழி (தமிழ் பிராமி அல்ல!) எழுத்துகள் சாமானியர்களின் புழங்கு பொருட்களில் பொறிக்கப்பட்ட சான்றுகள் மூலம் தமிழி எழுத்து  சாதி/சமய வேறுபாடற்று பரவலாக்கப்பட்டதை உணர முடிகிறது. தமிழி அரச மரபில்  வட்டெழுத்தாகவும் குமுக பயன்பாட்டில் தமிழ் எழுத்தாகவும் விரவிக் கிடந்திருக்கிறது. இந்த எழுத்து இன்னமும் உயிர்ப்போடு இருக்கிறது என்று சொன்னால் அது சாமானியர்கள் கையில் புழங்கியதால் தான் என ஆசிரியர் ஆணித்தரமாக விளக்குகிறார்.

இலக்கண நூல்களின் பங்கு :

தொல்காப்பியம், நன்னூல், யாப்பருங்கல காரிகை போன்ற இலக்கண நூல்கள் தமிழி எழுத்துகளை மொழியியல் கோட்பாட்டோடு அறிவியல் வழியில் எழுத்து வடிவங்களை விவரிக்கின்றதை மேற்கோளோடு விவரிக்கிறார் ஆசிரியர்.

'மெய்யின் வழியது உயிர் தோன்றும் நிலையே' என தொல்காப்பியம் உயிர் மெய்யெழுத்துகளின் ஒலிப்பில் முதலில் மெய்யெழுத்து ஒலித்து பிறகு உயிரெழுத்து ஒலிக்கும் என ஒலியமைப்பை பேசுகிறது. தொல்காப்பியம், நன்னூல் இலக்கண விதிகள் எல்லா மொழிகளுக்கும் பொருந்தும் வகையில் எழுதப்பட்டவை எனும் செய்தி இன்னும் சிறப்பானது.

இன்னொரு புறம், பாட்டியல், வெண்பா மாலை போன்ற நூல்கள் எழுத்துகளை கடவுளர்களாகவும், வர்ணநிலை கொண்டவை களாகவும், சாதியமாகவும் பால் சார்ந்தவைகளாகவும்(ஆண்பால், பெண்பால், அலிபால்), தன்மை சார்ந்தனவையாகவும் பிற்போக்குத்தனமாக இலக்கணம் எழுதி தமிழ் எழுத்துகளை ஒரு பக்க சார்புடையனவாக ஆக்க முயற்சி செய்தவற்றை குறிப்பிடுகிறார் ஆசிரியர்.

பிள்ளையார் அரசியல் :

எழுதத் தொடங்குமுன் 'உ' போடுவது நம்மிடையே இருக்கும் வழக்கம். இதை பிள்ளையார் சுழி என சொல்கிறோம். ஆரிய/வைதீக மரபு இந்த வழக்கத்தை எவ்வாறு திரித்து தனதாக்கிக் கொண்டது என விளக்கி பிள்ளையார் வேறு! கணபதி வேறு! என காத்திரமான ஆதாரங்களோடு வைதீகத்திற்கு குட்டு வைக்கிறார் ஆசிரியர்.

உலகம் :

உலகம் எனத் தொடங்கும் இலக்கியப் பாடல்களையெல்லாம் சான்றாகக் கொண்டால் தமிழ் இலக்கியம் உலகப் பொதுமையை பேசியிருப்பது திண்ணம். உலகத்தை குறித்த பெயர்கள், ஊரின் பெயர்கள், இடங்களின் பெயர்கள், தெய்வங்களின் பெயர்கள் எல்லாம் வைத்துப் பார்க்கின்ற பொழுது தமிழ் குமுகம் உலகப் பொதுமையை நேசித்தது விளங்கும். எழுதுவதற்கு முன் போடும்  'உ' உலகத்தில் வாழும் அனைத்து உயிர்களும்  இளமையோடும் வளமையோடும் இன்புற்றிருக்க வேண்டும் என்ற குறீயிடாகத் தமிழ் குமுகம் கொண்டிருக்கிறது என சொல்லி ஆசிரியர் நிறைவு செய்கிறார்.

கைலாசபதி, ஆ. சி, ஏங்கெல்சு, ஜார்ஜ் தாம்சன் தொட்டு தொல்காப்பியம் சென்று பொருந்தல், கீழடி வரை தேடித்தேடி சான்றுகளை பகர்ந்து இந்நூலினை படைத்திருப்பதற்கு ஆசிரியருக்கு தமிழ் குமுகம் கடமைப்பட்டிருக்கிறது. தமிழ் எழுத்தை எழுதிக் கொண்டும்,தட்டச்சு செய்து கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய நூல்.

இயல்களாக பிரித்து நூலினை அமைத்திருந்தால் படிப்பதற்கு இலகுவாக இருந்திருக்கும். பிள்ளையார் அரசியல் பற்றி பேசுகிற பொழுது விவரனைகளை குறைத்து இருக்கலாமே எனவும் தோன்றியது. ஏற்கனவே அண்ணன் சுதாகரன் சொன்னது போல அந்த பகுதி கத்தி மேல் நடக்கின்ற பகுதி என்பதாலோ ஆதியிலிருந்து தரவுகள் கொடுத்து விட்டார் ஆசிரியர். துறைசாராத என்னைப் போன்றோர் எளிதில் அணுகும் வண்ணம் நூல் அமைந்துள்ளது. துறை சார்ந்தவர்கள் இந்நூலின் ஏற்பன/மறுப்பன ஆய்ந்தறிந்து ஆரோக்கியமான விவாதம் ஏற்படுத்தினால் சிறப்பாக இருக்கும். எனக்குள் புதிய தேடல்களை திறந்துவிட்டிருக்கிறது இந்நூல் 'உ' போட்டு...


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 தமிழர் - தமிழர் அல்லாதோர் பிரச்சினைகளைப் புரிந்து கொள்வது எப்படி? : மகாராசன்

 

FB_IMG_1532963674690.jpg
ஒரு தேசிய இனம் என்பதற்கான வரையறை என்ன? அதே தேசிய இனம் வாழ்கிற நிலப்பரப்பில் வாழ்கிற வேறு வேறு இனங்களை எவ்வாறு வரையறுப்பது? மொழிச் சிறுபான்மையினர், தேசிய இனச் சிறுபான்மையினர் என்போர் யார் யார் என்பதைக் குறித்தெல்லாம் பேசுவதும் எழுதுவதும் கருத்துரைப்பதும் இனவெறிவாதம் என்று பொத்தாம் பொதுவாக முத்திரை குத்துவது உண்டு.
மேற்குறித்த பொருண்மைகள் குறித்து மார்க்சிய ஆசான்களே தமது நூல்களில் திறம்படவும் தெளிவுடனும் விளக்கப்படுத்தி இருக்கிறார்கள்.
அவ்வகையில், மொழி குறித்தும் தேசிய இனம் குறித்தும் மார்க்சியம் அறிவியல்பூர்வமான விளக்கத்தை மிக விரிவாக முன்வைத்துள்ளது.
சமூகத்தின் இயங்குதலுக்கு மொழியின் இயங்கியல் குறித்து ஜே.வி.ஸ்டாலின் எழுதிய "மார்க்சியமும் மொழியியல் பிரச்சினைகளும்" எனும் நூல் முதன்மையானது. மொழியைக் குறித்து விவரித்த ஸ்டாலின் எழுதிய மற்றொரு நூல் "மார்க்சியமும் தேசிய இனப் பிரச்சினைகளும் " என்பதாகும்.
மார்க்சியம் குறித்துப் பேசக்கூடியவர்களும் அறிவுலகத் தடத்தில் இயங்கக்கூடியவர்களும் திட்டமிட்டே கண்டு கொள்ளப்படாத அல்லது புறக்கணித்த நூல்கள் தான் மேற்குறித்த நூல்கள்.
வரலாற்றுக் கண்ணோட்டத்திலும் மார்க்சியத்தின் அடிப்படையிலும்தான் ஒரு தேசிய இனத்தின் அடையாளங்கள் வரையறுக்கப்படுகின்றன. அதே வேளையில், ஒரு தேசிய இனத்தோடு சமூக உறவு கொண்டிருக்கிற மற்ற இனத்தவரை - மொழியினரையும் எம்மாதிரியான வரையறுப்புக்குள் கொண்டு வருவது என்பதையும் மார்க்சியமே வழிகாட்டுகிறது. இந்தப் பின்புலத்தில் தான் தமிழர் என்கிற தமிழ்த் தேசிய இனம், தமிழ் அல்லாத மொழிச் சிறுபான்மையினர், தமிழர் அல்லாத இனச் சிறுபான்மையினர் பற்றிய கருத்தாடல்கள் அரசியல் வடிவம் பெற்று வருகின்றன. இது போன்ற கருத்தாடல்கள் தமிழ்ச் சமூக அறிவியலின் நீட்சியாகவும் வளர்ச்சியாகவுமே பார்க்கப்பட வேண்டும். இதை நேர்மையாகவும் திறந்த மனதோடும் வரலாற்றுப் புரிதலோடும் கருத்தாடுவதே மார்க்சியத்தின் பக்கம் நிற்பதாகும். எதன் காரணம் கொண்டும் இந்தக் கருத்தாடல்களை எதிர்ப்பதும் நிராகரிப்பதும் என்பது, மார்க்சியத்தை எதிர்ப்பதும் நிராகரிப்பதுமே ஆகும்.
இது போன்ற கருத்தாடல்களுக்கு உதவும் வகையில் மொழி குறித்தும் தேசிய இன விடுதலை குறித்தும் மார்க்சிய அடிப்படையிலான விளக்கத்தையும் புரிதலையும் தரக்கூடிய ஸ்டாலினின் நூல்களை விரிவான முன்னுரைக் குறிப்புகளுடன் தெளிவான உட் தலைப்புகளுடன் ஒரு சேரத் தொகுத்து
"மார்க்சியமும் மொழியியல் தேசிய இனப் பிரச்சினைகளும்" எனும் தலைப்பிலான நூல் எனது தொகுப்பில் தோழமை  வெளியீடாய் வெளி வந்திருக்கிறது.
பின்னிணைப்பு:
தமிழர் தேசிய இன அடையாளம் குறித்த
தமிழர் முன்னணியின் வரைவறிக்கை.
தமிழர்கள், தமிழக தமிழீழத் தாயகங்களில் தோன்றி இன்று உலகம் முழுவதும் பரவி வாழ்ந்து வருகின்றனர். தனித்த மொழி, பண்பாடு, மரபு, கலை இலக்கியம், வரலாறு, சமயம், மெய்யியல் எனத் தனக்கான தனித்தன்மைகள், நாகரிகங்கள் கொண்ட மக்கள் சமூகம் தான் தமிழர்கள். இனங்களின் சமூகமான மாந்த சமூகத்தில் மூத்த இனங்களில் ஒன்றாகவும் மூல மரபினங்களில் ஒன்றாகவும் உள்ளனர். தமிழர்கள் அவர்களின் தாயகங்கள் குறித்த வரலாற்றுக் குறிப்புகளைப் பார்த்தாலே நம் இனத்தைப் புரிந்துகொள்ள உதவும். பாவாணர் முன்வைத்த மாந்தம் பிறந்தகம் குமரிக்கண்டம் என்னும் ஆய்வும், இந்திய தொல்பழங்காலத்தின் தந்தை என்ற வரலாற்று அறிஞர்களால் அழைக்கப்பெறும் ராபர்ட் புரூஸ்பூட்டதால் அன்றைக்கு இருந்த சென்னை மாகாணத்தில் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் மனிதர்கள் வாழ்ந்த 459 பகுதிகள் கண்டு பிடிக்கப்பட்டது. அதில் 42 பகுதிகள் பழைய கற்காலத்தையும் 252 பகுதிகள் புதிய கற்காலத்தையும் சார்ந்தவை. இன்று சென்னையில் உள்ள பல்லாவரம்; திரிசூலம் மலைப்பகுதிளில் பல லட்சம் வருடங்களுக்கு முன்பு கற்கால மனிதர்கள் பயன்படுத்திய கற்கோடாரி களையும்; திருவள்ளுவர் மாவட்டம் பூண்டி நீர்த்தேக்கத்துக்கு அருகே அத்திரப்பாக்கம் ஓடை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு மனிர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்களையும் அவர்கள் வாழ்ந்த குடியம் குகையையும்,  திருநெல்வேலி மாவட்டம் தேரி பகுதியில் நுண் கற்காலக் கருவிகளையும் அதை உருவாக்கும் தொழிற்சாலைகளையும் கண்டு பிடிக்கப்பட்டது. இவர் சேகரித்த பழங்காலப் பொருட்கள் எல்லாம் திருவள்ளுவர் மாவட்டம் பூண்டி அருகே அருங்காட்சியகத்திலே உள்ளது.
தமிழர்கள் மூல மரபினங்களில் ஒன்று என்று அறிவுலகத்துக்கு ஒரு பிரிவினர் தங்கள் ஆய்வுகளை முன்வைத்துள்ளனர். இத்துணைக் கண்டத்தின் தொல்குடிகள் தமிழர்கள்தான் என்பதை நவீன மரபியல் ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்துகின்றன. அதையே அறிஞர் அம்பேத்கார் அவர்களும் தன் ஆய்வில் பதிவு செய்கிறார். தமிழர்களிடம் காணப்படக்கூடிய தாய்வீட்டில் தலைப்பிரசவம் என்ற மரபும்; சேய்வழி அழைத்தல் (பிள்ளையின் பெயர்கூறி அவரின் தந்தை என்று அழைப்பது) அப்பா பெரியப்பா சித்தப்பா என அனைவரையும் ஒரே மாதிரி அழைக்கும் வழக்கம், தமிழ் சமூகத்தில் காணப்படும் உறவு முறைகளும்; தாய்வழிச் சமூகத்தின் எச்சங்களாக, மக்களினங்கள் குறித்து ஆய்வு செய்த மார்கனும், பிரடெரிக் ஏங்கெல்சும் பதிவு செய்கின்றனர். இதன்மூலம் மனித குலத்தின் தொடக்கமான தாய்வழி சமூக நிலையிலிருந்தே தமிழர்கள் நீடித்து வருகின்றனர் என்பது உறுதியாகின்றது.
சிந்து சமவெளி நாகரிகம் தமிழர் நாகரிகம் என்பதை அங்கு கிடைத்த எழுத்துக்கள் சின்னங்கள் பிற ஆதாரங்களைக் கொண்டு அஸ்லோ பர்போலா உறுதிப்படுத்துகிறார். அசோகரின் சமகாலத்தில் வாழ்ந்தவராகக் கருதப்படும் (கி.மு.250) கலிங்க மன்னர் காரவேலனின் அத்திகும்பா கல்வெட்டு 113 ஆண்டுகள் தமிழ் மன்னர்களின் கூட்டமைப்பு நீடித்து வந்ததை சுட்டுகின்றது.
அதுபோலத் தமிழகத்தில் நடைபெற்ற அரிக்கமேடு, ஆதிச்சநல்லூர்..... அகழ்வாராய்ச்சிகள் இங்கு கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகள், சுவடிகள், தமிழர்களின் தொன்மையையும் நாகரிகத்தையும் உறுதிப்படுத்துகின்றன.
நமக்குக் கிடைத்ததிலேயே மிகவும் பழைமையான தேர்ந்த செம்மையான சிந்தனை தொகுப்பாக உள்ள தொல்காப்பியம் அதன் வடிவத்திலேயே ( தமிழ் மொழி, தமிழ் எழுத்து, தமிழ் எண்) தமிழ் வளர்ச்சியின் அடையாளமாக உள்ளது. நிலம், தீ, நீர், வளி, விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் என உலகம் கடவுள் படைப்பு அன்று; தானே தோன்றியது, மண், நெருப்பு, தண்ணீர், காற்று, வானம் ஆகிய ஐந்து இயற்கைப் பொருள்களும் கலந்து உருவாகி இருப்பதே இவ்வுலகம் எனப்பாடும் தொல்காப்பியப் பாடல் இவ்வுலகத் தோற்றம் பற்றியும்,
ஒன்று  அறிவதுவே உற்று அறிவதுவே
இரண்டு அறிவதுவே அதனொடு நாவே
மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே
நான்கு அறிவதுவே அவற்றொடு கண்ணே
ஐந்து அறிவதுவே அவற்றொடு செவியே
ஆறு அறிவதுவே அவற்றொடு மன்னே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே.
என உயிர்களின் அறிதல் வேறுபாடு குறித்த தொல்காப்பியர் பாடலும், சுழன்றும் ஏர்பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை என்ற குறள் மூலம் உலகம் உருண்டை என்பதையும் அது சுழல்கிறது என்பதையும் சுட்டும் குறளும், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான் என்று பிறப்பால் அனைவரும் சமம் என்பதை வலியுறுத்தும் குறளும் தமிழர்களின் அறிவு வளர்ச்சி மற்றும் உலகக் கண்ணோட்டம் குறித்த சான்றுகளாக உள்ளன.
""வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகு'' என்ற தொல்காப்பிய சிறப்புப் பாயிரத்தின் மூலம் வட வேங்கடம் தென் குமரி தமிழ்உலகின் எல்லை என்பதையும், அதில் தமிழ் மொழி பேசப்படுகிறது என்பதையும், அதைப் பேசிய தமிழர்கள் அங்கு வாழ்ந்தனர் என்பதையும் தெளிவு படுத்துகிறது. இதையே பிந்தைய சங்க இலக்கியங்களும் தெளிவுபடுத்துகின்றன.
ஆறாம் நூற்றாண்டில் பாடப்பெற்ற தேவாரத்தில் உள்ள தமிழன் கண்டாய் ஆரியன் கண்டாய் என்ற வரி தமிழர்கள் இருப்பை உறுதி செய்வதோடு ஆரியரின் பரவலையும்; ஆரியர் தமிழருக்கு இடையிலான இனப்போராட்டத்தையும் உறுதிப்படுத்துகிறது.
செப்பு வினாவும் வழா அல் ஓம்பல் என்ற தொல்காப்பிய வரிக்கு 12‡ஆம் நூற்றாண்டில் உரை எழுதிய நச்சினார்க்கினியர் வினாவும் விடையும் தெளிவாக இருக்க வேண்டும் என்பதற்கான உதாரணமாக உன் நாடு எது என்று வினா எழுப்பினால் தமிழ்நாடு என்று கூறுவதே தெளிவான விடையாக இருக்கும் என விடையிறுக்கிறார். இதுவே தமிழ் மக்களின் வரலாறாக உள்ளது.
ஒருபுறம் தமிழர்கள் ஓரினம் என்ற நிலையில், அவர்களின் மொழி, மரபு, பண்பாடு, வரலாறு, கூட்டு நினைவு, பரஸ்பர உறவு, சார்பு என்பது பொது நிலையாகவும், மறுபுறம் அவர்களின் சமூக அரசியல் வாழ்வு பல்வேறு தேச நிலைகளில் கட்டப்பட்டு,  வேறுபட்ட நெருக்கடிகளையும் வேறுபட்ட சமூக அரசியல் அடிப்படைகளையும் கொண்டவர்களாக உள்ளார்கள். வரலாற்று வழியில் ஓர் இனம் என்ற வரையறுப்பு கொண்ட தமிழர்கள் அவர்களின் தேசிய சமூக அரசியல் இருப்பு நிலையைக் கொண்டு ஐந்து வகையாகப் பகுக்கலாம். 1. தமிழ்த்தேசிய இனம், 2. தேசிய இனச் சிறுபான்மையர், 3. மொழிச் சிறுபான்மையினர், 4. அகதிகள், 5. தேசங்கடந்து பணிபுரிவோர். முதல் இரண்டு நிலைகள் நிலைத்ததாகவும் மூன்றாவது நிலை ஒப்பீட்டளவில் நிலைத்ததாகவும், நான்கு மற்றும் ஐந்தாவது நிலைகள் தாயகத்தில் ஏற்படும் சமூக அரசியல் மாற்றங்களைச் சார்ந்தாகவும் உள்ளன.
ஒரு தேசியம், தேசிய இனம் என்பதற்கான தோழர் ஸ்டாலின் 1912இல் வகுத்தபடி 1. ஒரு பொதுமொழி, 2. பொது வரலாற்றுப் பிரதேசம், 3. பொதுப் பொருளாதாரத் தொடர்பு, 4. பொது மன இயல்பு ஆகிய வரைவிலக்கணங்களின்படியும் இதில் மாறுபட்ட, வேறுபட்ட இலக்கணங்களின்படியும் தமிழகத் தமிழர்கள் தமிழீழத் தமிழர்கள் தனித்த தேசிய இனத்திற்குரிய தகுதி நிலையில் உள்ளனர். மலேசியா, சிங்கப்பூர், பர்மா, மொரிசீயஸ், ரீ யூனியன், தென்னாப்பிரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா, அந்தமான், கர்நாடகா, கேரளா, ஆந்திரத்தின் உள்ளகப் பகுதிகள் என பல தேசங்களில்  அத்தேசத்தின் தேசிய இனத்தை விட சிறுபான்மை எண்ணிக்கையில் உள்ளதால் இவர்கள் அத்தேசத்தில் தேசிய இனச் சிறுபான்மையினராக உள்ளனர்.
தமிழர்கள் தாயகத்தோடு கொண்டு கொடுத்தலையும் பொருளாதார உறவுகளையும் தனது தாயகத்தினையே நிலையானதாகக் கருதி வாழும் தேசங்களில் கலக்காமல் தன் மொழி இன அடையாளங்களைக் காத்துக் கொண்டு உலகின் பல பகுதிகளில் வாழும் தமிழர்கள் மொழி இனச் சிறுபான்மையராக வரையறுக்கலாம்.
முதன்மையாக தமிழீழத்தில் நடந்த கட்டமைக்கப்பட்ட இனக்கொலையின் விளைவாக உலகம் முழுவதும் தஞ்சம் கோரி இன்றும் அந்நாடுகளில் குடியுரிமை பெறாத தமிழர்களை அகதி என்றும், இதே நிலையில் உள்ள வேறு தேசத் தமிழர்களையும் குறிக்கவும் இது பொருந்தும்.
தன் பிழைப்பிற்காக தேசம் கடந்து பணிபுரியும் தமிழர்களை தேசம் கடந்து பணிபுரிவோராக அழைக்கலாம்.
இனி ஒவ்வொரு நிலையாகப் பார்ப்போம்.
தமிழக தமிழ்த்தேசிய இனப் போராட்டம்
தமிழர்கள் உலகின் பல இன மக்களோடு வணிகம், அரசியல், பரிமாற்ற உறவுகளைக் கொண்டு இருந்தது போல், பிற இனத்தார்களும் தமிழகத்தோடு இவ்வுறவுகளைக் கொண்டிருந்தனர். இப்படி தமிழர்களும் தமிழகமும் உலகின் தனித் தீவாக இல்லாமல் உறவுகளோடு இருந்தாலும் தனக்கான தனித் தன்மைகளை உருவாக்கி வளர்த்து, பாதுகாத்துக் கொண்டு இருந்தனர். இவர்களோடு வேறுபட்ட எல்லாரோடும் உரையாடி உள்ளனர். இந்த உரையாடலில் சமணம் பவுத்தம், வேத மதத்தின ரோடான உரையாடல் முக்கியமானது. சமண பவுத்த வேத மதத்தினரோடான உரையாடலில் சிலவற்றை ஏற்றும் அடிப்படையில் மறுத்தும் உள்ளனர். வேத மதத்தைச் சேர்ந்த ஆரியர் குடியேற்றமும் அதன் செல்வாக்கும் பெருகும்போது அதற்கு எதிரான கருத்துப் போராட்டம் இனப்போராட்டமாகவும் மாறியது. 12ஆம் நூற்றாண்டு வரை கருத்தாக உலா வந்த ஆரிய பார்ப்பனியம், இசுலாமிய அரசுகளின் தெற்கு நோக்கிய பரவலுக்கு எதிராக ஆரிய பார்ப்பனிய தர்மங்களைக் கட்டிக் காக்க உருவாகிய விஜயநகரப் பேரரசிடம் தன் அரசதிகாரத்தை இழந்த தமிழ் இனமும் தமிழ் நிலமும் இன்றுவரை அரசதிகாரத்திற்காகப் போராடி வருகின்றன.
விஜயநகர ஆட்சி, நாயக்கர்கள் பாளையக் காரர்கள் ஆட்சியில் செழித்து வளர்ந்த பார்ப்பனிய அரசதிகாரத்திற்கு எதிராக இங்கு சித்தர் மரபுகள் தமிழர்களின் இனப்போராட்ட அடையாளமாக உள்ளன. தமிழகம் பிரிட்டிஷ் காலனியாக மாற்றப்பட்ட பிறகு எழுந்த பூலித்தேவன், மருதிருவர், தீரன் சின்னமலை, வேலு நாச்சியார், குயிலி, வ.உ.சி., பாரதி, சுப்பிரமணிய சிவா, சிங்காரவேலர், ஜீவா போன்றோரின் தாயக விடுதலைப் போராட்ட மரபும் இதே காலத்தில் உருவாகி வளர்ந்த ஆரிய பார்ப்பனிய இந்துமத உருவாக்கம், இந்திய உருவாக்கத்திற்கு எதிராக எழுந்த வள்ளலார் மரபும், தமிழ் பவுத்த மரபை முன்னிறுத்திய அயோத்திதாசப் பண்டிதர், நாத்திக பகுத்தறிவு மரபை முன்னிறுத்திய அத்திப்பாக்கம் வெங்கடாசல நாயக்கர், சி.தாமோதரம் பிள்ளை, உ.வே.சா. ஆகியோரின் தமிழ் நூல்கள் தொகுத்து பதிப்பித்த பணியும், தனித்தமிழ் மரபை முன்னிறுத்திய மறைமலை அடிகளின் தனித்தமிழ் இயக்கமும், சாதி ஒழிப்பு, பார்ப்பனிய எதிர்ப்பு, சமூக ஜனநாயகத்தை வலியுறுத்திய சுயமரியாதை இயக்கமும், பகுத்தறிவு நாத்திக இயக்கமும், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், தமிழ் இஸ்லாமியர் உரிமை இயக்கங்கள், விவசாயிகள், தொழிலாளர்களின் விடுதலையையும், காலனிய எதிர்ப்பை முன்வைத்த பொதுவுடமை இயக்கமும் உருவாகி வளர்ந்தன.
வள்ளலார் தொடங்கி... ஈவெரா வரையிலான சமயம் மொழி சமூகத் தளத்தில் நடந்த இயங்குதலும் பூலித்தேவன் தொடங்கி பொதுவுடமை இயக்கங்கள் வரையிலான காலனிய எதிர்ப்பு இயங்குதலையும் தொகுத்து, பகுத்து சாரப்படுத்தினால் அன்று உருவாகி வந்த ஆரிய பார்ப்பனிய, இந்து, இந்திய எதிர்ப்பு என்ற பொதுத்தன்மையை வெளிப்படுத்துவதையும் பல்வேறு சிந்தனைப் போக்கின் முரண் இயக்கத்தில் தமிழ்த்தேசியம் வளர்ந்ததையும் காணலாம்.
இதன் வெளிப்பாடாக நவீன தமிழ்த்தேசிய விடுதலைக் கருத்தாக 1938இல் இந்தி எதிர்ப்பு இனப்போரில் அனைத்து போக்கினராலும் இணைந்து எழுப்பிய தமிழ்நாடு தமிழருக்கே முழக்கம் பிறந்தது. இச்சசூழலையும் அதன் நவீன பொதுத்தன்மையையும் பற்றிப் பிடித்து முன் நகர்த்தியிருந்தால் காலனிய வெளியேற்றத்தின்போதே தமிழ்த்தேசம் மலர்ந்திருக்கும். ஒரு தேசிய இயக்கத்தின் மைய அச்சான தேசிய இன இயக்கம் இல்லாததன் காரணமாக அப்பொதுப்போக்கு அரசியல் அமைப்பு உருவாக்கம் நடந்தேறாமலே உருத்திரிந்தது. இப்பொதுப்போக்கின் துணைக்கூறுகளாக விளங்கிய சில சிந்தனைப் போக்கினரைத் தவிர பல்வேறு சிந்தனைப் போக்கினரும் பங்கு அரசியலில் மூழ்கியதும், திராவிடமாகவும், இந்தியமாகவும் திரிந்து போயினர்.
1942இல் ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் சுய நிர்ணய உரிமை உண்டு என்பதை முன்வைத்து வெள்ளையனே வெளியேறு இயக்கத்திற்கு மக்களைத் திரட்டிய காங்கிரஸ் இயக்கம் பின்பு அதனைக் கைவிட்டது. காங்கிரஸ் தான் சொன்னபடி தேசிய இன அடிப்படையில் இந்தியாவை மறுசீரமைக்கத் தயாராக இருந்தால் தன்னுடைய பாகிஸ்தான் கோரிக்கையை கைவிடத் தயாராக இருந்தார் ஜின்னா. காங்கிரஸ் இக்கோரிக்கையை மறுக்கவே அரசியலாகவும் அமைப்பாகவும் மக்கள் திரட்டப்பட்டு இருந்ததால் பாகிஸ்தான் கோரிக்கை வென்றெடுக்கப்பட்டது. மற்ற இந்தியப் பகுதிகளில் தேசிய இனங்கள், தனித்தனியாக திரட்டப்படாததால் ஆளும், பிரிட்டிஷார் அன்று பல்வேறு அரசுகளாக இந்தியாவைப் பிரிக்கத் தயாராக இருந்தும் ஆரிய பார்ப்பன இந்து மத, இந்தி சக்திகளின் அரசியல், அமைப்பு செல்வாக்கும் நேரு பட்டேலின் தலைமையால், இந்து, இந்தி பெருமுதலாளிகளின் நலன்களுக்காக இந்திய தேசியம் உருவாக்கப்பட்டது.
இத்துணைக் கண்டத்தில் தேசிய இன வழிப்பட்ட பல தேசங்கள் முகிழ்ந்திருக்க வேண்டிய நிலையில் இந்து இஸ்லாமிய மத முரணைக் கட்டமைத்து, சாதி முரணைக் கட்டிக்காத்து ஆரிய பெருமையையும்? இந்தி பெரும்பான்மையையும் பயன்படுத்தி இன்று நிலவும் ஒற்றை ஆதிக்க இந்தியா கட்டமைக்கப்பட்டது. இந்தியாவின் ஒற்றை ஆதிக்கக் கட்டமைப்பை தமிழத்தேசிய இனம் ஏற்றுக் கொண்டதா? 1947 ஆகஸ்ட் 15 (இந்திய விடுதலை நாள்) துக்க நாளாக அறிவிப்பு செய்தார் ஈவெரா இச்சூழலிலேயே தமிழகத்திற்கு சுய நிர்ணய உரிமையும் கூட்டாட்சியும் கோரினார் தமிழரசுக் கழகத்தைச் சேர்ந்த ம.பொ.சி. 1949இல் திராவிடநாடு கோரிக்கையோடு அண்ணா தலைமையில் திமுக தொடங்கப்பட்டு 1967 இல் ஆட்சியைக் கைப்பற்றியது. இதில் தமிழ்த் தேசிய இனத்தின் ஆற்றலே செயல்பட்டது. (திராவிட தத்துவம் மற்றும் அதன் தலைமையின் திரிந்த தன்மையும் இரட்டை குணாம்சமும் இன்றைய சரணாகதி அரசியலாக உள்ளது.) தட்சணப் பிரதேச எதிர்ப்புப் போராட்டம், தேசிய இன அடிப்படையில் தாயகத்தைத் திருத்தி அமைக்கக் கோரிய போராட்டம் ( மொழிவழி மாநில உரிமைக்கான போராட்டம், வடக்கு தெற்கு எல்லை மீட்புப் போராட்டம், தமிழ்நாடு பெயர் மாற்றம் கோரி உண்ணாநோன்பு இருந்து உயிர்நீத்த சங்கரலிங்கனாரின் போராட்டம்,) தமிழரின: முகவரியாக மாறிப்போன பாவேந்தரின் வரிகளும், ஈ.வி.கே.சம்பத்தின் தமிழ்த் தேசியக் கட்சி உருவாக்கமும் சி.பா.ஆதித்தனாரின் நாம் தமிழர் கட்சி உருவாக்கமும், தேசிய மொழிக்கான உரிமைப் போராட்டம் (இந்தி எதிர்ப்புப் போராட்டம்) தேசிய இன சுயநிர்ணய உரிமையைக் கோட்பாட்டு அடிப்படையில் ஏற்ற இ.க.க (மா.லெ) கட்சி உருவாக்கமும், தனித்தமிழ்நாடு கோரிய பெருஞ்சித்திரனாரின் உலகத் தமிழின முன்னேற்றக் கழகமும், தமிழகத்தில் நடந்த அவசர நிலைக்கு எதிரான ஜனநாயகத்திற்கான போராட்டமும், தமிழ்நாடு விடுதலையை முன்னெடுத்த தோழர் தமிழரசன், புலவர் கலியபெருமாள் ஆகியோரால் தொடங்கப்பட்ட தமிழ்நாடு பொதுவுடமைக் கட்சி, தமிழ்நாடு விடுதலைப்படை உருவாக்கமும் அதன் தொடர் செயல்பாடும், அவர்களின் ஈகமும், இந்தியப் படை தமிழீழத்தை ஆக்கிரமித்ததற்கு எதிராக தமிழகத்திலே எழுந்த ஈழ ஆதரவுப் போராட்டமும், சமூக நீதி, இட ஒதுக்கீட்டிற்கான போராட்டமும், அதன் பிறகு தமிழகத்தில் உருவான தன்னுரிமை, தமிழ்த்தேச விடுதலை, தமிழ்த்தேசிய விடுதலைப் புரட்சி ஆகிய லட்சியங்களோடு உருவான தமிழர் தேசிய இயக்கம், (தற்போது தமிழர் தேசிய முன்னணி) தமிழ்த்தேசப் பொதுவுடமைக் கட்சி (தற்போது தமிழ்த்தேசியப் பேரியக்கம்) தமிழ்நாடு மார்க்சிய லெனினியக் கட்சி, தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம், தமிழ் தமிழர் இயக்கம் (தற்போது தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம்) இப்படியாக இந்தியாவின் ஒற்றை ஆதிக்கத்தின் எதிர்ப்பு வரலாறாக தமிழகம் வினையாற்றியது. அதன் தொடர்ச்சியாக தற்காலத் தமிழகத்தில் நடைபெற்ற நடைபெறும் அணுஉலை, மீத்தேன், நியூட்ரினோ எதிர்ப்பு போராட்டங்கள், தமிழர் தாயகத்தில் தமிழர்கள் அனுமதி இல்லாமல் நடக்கும் இந்நாசகர திட்டங்களை தமிழர்கள் அனுமதிக்க மாட்டோம் என்றே போராடி வருகின்றனர். காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு நீர் உரிமைகளுக்கான போராட்டங்கள், தாயகத்துக்கு சேர வேண்டிய ஒவ்வொரு சொட்டு நீரும் தாயகத்தின் பகுதியே என்ற அடிப்படையில் நீர் உரிமைக்கான போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் நடக்கும் தமிழீழத்திற்கான ஆதரவு, இனக்கொலை எதிர்ப்புப் போராட்டங்கள், தமிழர்கள் சார்ந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை தமிழகமே தீர்மானிக்கும் என்ற அடிப்படையிலேயே போராட்டங்கள் நடைபெறுகின்றன. மூன்று தமிழர் மீதான தூக்கு, தமிழர் மீதான இந்தியாவின் தூக்காகவே கருதி, மரண தண்டனையை தமிழகம் முறியடித்தது. தமிழர்கள் அனைவரும் சம தகுதி உரிமை படைத்தவர்களே, அதற்கு மாறாக உள்ள பாகுபாட்டை ஒடுக்குமுறையை ஒழித்து சம தகுதி உரிமை உடைய சமூகமாக தமிழ்ச் சமூகம் விளங்க வேண்டும் என்பதே இங்கு நடக்கும் சாதி ஒழிப்புப் போராட்டங்களின் சாரமாக உள்ளன. கச்சத் தீவு மீட்பு கடல் உரிமைப் போராட்டம்  என தற்போது தமிழக்தின் நிகழ்ச்சி நிரலில் உள்ள அனைத்துப் போராட்டங்களின் சாராம்சமும் தமிழர் தாயகப் பாதுகாப்பு, தேசிய இன உரிமைக்கான, தேசிய விடுதலைக்கான இனப் போராட்டங்களாகவே உள்ளன.
இந்தியக் கட்டமைப்பின் மூல ஆற்றலாக உள்ள ஆர்.எஸ்.எஸ். பி.ஜே.பி வகையறா தான் இன்று ஆட்சியைப் பிடித்து தங்களது ஆரிய ஆரிய, பார்ப்பன, பாசிச நோக்கங்களின் இறுதி அத்தியாயங்களை எழுதிக்கொண்டு இருக்கின்றனர். இதற்கெதிரான தமிழ்த்தேசிய இனத்தின் இனப்போராட்டத்தை தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டமாகக் கட்டமைத்து முன் நகர்த்த வேண்டிய பொறுப்பு தமிழ்த்தேசிய இனத்திற்கும் தமிழர்களுக்கும் அவர்களின் முன்னணி ஆற்றல்களாக விளங்கக் கூடியவர்களிடமுமே தங்கி இருக்கின்றது.
தமிழீழத் தமிழர்களின்
தேசிய இனப் போராட்டம்
தேசிய இன வரைவிலக்கணத்தின்படியும் ஈழத் தேசிய இனம் ஒரு தேசிய இனமாகவும் அதனைத் தன்னுணர்வுடன் முன்னெடுப்பதோடு வலியுறுத்தியும் நிற்கின்றனர். ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழகமும் தமிழீழமும் கடலால் பிரிக்கப்படுவதற்கு முன்பு ஒரே தாயக வரலாற்றையும் கற்கால, இடைக்கால மனித நாகரிகத்தையும் நிலம் கடலால் பிரிக்கப்பட்டாலும் குறிப்பான சில பண்புகளைத்தவிர இவர்கள் வரலாற்றில் இணைந்த பண்புகளைக் கொண்டவர்களாகவே இருக்கின்றனர்.
தமிழகத்திற்கும் தமிழீழத்திற்குமான குறிப்பான வேறுபட்ட பண்பு இலங்கைத் தீவில் சிங்கள பவுத்தம் யீ தமிழர்கள் என்ற வகையில் ஒடுக்கும் இனமும் ஒடுக்கப்படும் இனமும் என முரண்பாடு அமைந்ததும், தன்னுடைய ஆரியப் பார்ப்பனிய இனச்சார்பை மறைத்து மழுப்பலாக பொதுவான அரசு எனக் காட்டிக்கொள்ளும் இந்திய அரசிலிருந்து வேறுபட்டு தான் ஒரு சிங்கள பவுத்த அரசு என்பதை இலங்கை அரசு வெளிப்படையாகக் கொண்டதும்தான் அவ்வேறுபாடு பிரிட்டிஷாரின் கிறித்துவப் பரப்பலுக்கு எதிராக சிங்களப் பகுதியில் உருவான சிங்கள பவுத்தப் பேரினவாதம், தமிழீழப் பகுதியில் உருவான தமிழ்ச்சமயத் தற்காப்பும்தான். இதன் காரணமாக இன முரண்பாடும் இனப் போராட்டமும் தெளிவாக முன்னேறியது. ஈழத் தமிழர்கள் ஒரு தனித் தேசிய இனம் என்பதை அது எப்போதும் பற்றி இருந்தது. (தமிழகத்தில் இருந்தது போன்ற பங்கு அரசியல், திரிந்த திராவிட இந்திய அரசியல் அங்கு இல்லை.)
இலங்கையை விட்டு வெளியேறிய பிரிட்டிஷாரிடம் தமிழர் தரப்பு 50:50 என்ற இன அடிப்படையிலான விகிதாச்சாரத்தை முன்னிறுத்தியதை. இனம் இரண்டென்றால் நாடு ஒன்று இனம் ஒன்றென்றால் நாடு இரண்டு என்ற கருத்தை அப்போதே முன் வைத்தது. ஆனால், சிங்கள் பேரினவாத சக்திகள் தன் கைக்கு அதிகாரம் மாறியபோது தமிழர்களின் தற்காப்புக்காக உருவாக்கப்பட்ட சட்டக் கூறுகளை நீக்கி தன் கட்டமைக்கப்பட்ட இன அழிப்புப் பணியைத் தொடங்கியது. தமிழர்களை மேலும் சிறுபான்மையினராக ஆக்கும் எண்ணத்தோடு மலையகத் தமிழர்களின் குடியுரிமையைப் பறித்து நாடற்றவர்களாக மாற்றி அதன் ஒரு பகுதியினரை இந்தியாவிற்குத் துரத்தியது. சிங்கள மொழிக்கு மட்டும் அரசதிகாரம், வாகனங்களில் ஸ்ரீ எழுத்துப் பொறிப்பு கட்டாயம், இன அடிப்படையில் கல்வியில் தரப்படுத்துதல் கொண்டு வந்தது. தமிழ்ச்சமய ஆலயங்களை அழித்தது, தமிழர் பகுதியில் சிங்கள வன்குடியேற்றங்களை நடத்தியது என அனைத்து வழிகளிலும் இன அழிப்பு வேலையை முன்னெடுத்தது. 50:50 என்ற இன அடிப்படையிலான பிரதிநிதித்துவத்தைக் கோரிய தமிழர் தரப்பு ஒடுக்குமுறை தொடர்ச்சியாகக் கூடவே பெரும்பான்மைத் தமிழீழத் தமிழர்களால் வாக்களிக்கப்பட்டு வெற்றிபெறச் செய்யப்பட்ட 1976 வட்டுக் கோட்டைத் தீர்மானம்தான் தனித் தமிழீழமே ஈழத்தமிழர் சிக்கலுக்கு தீர்வு என்ற அரசியல் மாற்றத்தையும் அமைதி வழியிலான போராட்டம் தீர்வு தராது, ஆயுத வழிப் போரட்டமே தீர்வு என்ற போராட்ட வழி மாற்றத்தையும் கொண்டு வந்தது.
தமிழ் ஈழத்திற்கான ஆயுதப் போராட்டத்தில் பல்வேறு அமைப்புகள் தோன்றினாலும் தமிழீழக் கோரிக்கை மீதான பிடிப்பும் தெளிவும் தியாகமும், போராட்ட ஆற்றலும், ஆகச்சிறந்த தலைமையும் கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகள் மட்டுமே இப்போராட்டத்தின் நாயகர்களாக விளங்கினர். எதிரியைத் தாக்குதல் என்ற எளிய வடிவத்தில் தொடங்கிய இப் போராடடம் தாயகத்தின் பெரும்பகுதியை தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து மாற்று அரசு அதிகார உறுப்புகளையும் முப்படைப் பிரிவுகளையும் உருவாக்கி தற்கால உலகத்தில் நடைபெற்று வரும் தேசிய இன விடுதலைப் போராட்டத்திற்கு முன்னோடியாகவும் முன்மாதிரியாகவும் விளங்கியது.
புதிய இராணுவ அரசியல் கோட்பாட்டு உருவாக்கத்திற்கான மூல வளங்களைக் கொண்டதாக இப்போராட்டம் விளங்கியது. இப்பிராந்திய இந்திய சீன மேலாதிக்கத்தாலும், ஏகாதிபத்திய சக்திகள் சிங்களத்தோடு இணைந்து நடத்திய இன அழிப்புப் போரில் இலட்சக்கணக்கான தமிழர்கள் அழிக்கப்பட்டதன்மூலம் அப்புகழ்ப் பெற்ற தேசிய விடுதலைப் போராட்டம் தமிழீழத் தாயகத்திலிருந்து உலகம் தழுவியதாக மாற்றப்பட்டுள்ளது.
தேசிய இனச் சிறுபான்மையினர், மொழிச்சிறுபான்மையினர்
மலேசியா, சிங்கப்பூர், பர்மா, மொரிசீயஸ், ரீ யூனியன், தென்னாப்பிரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா, அந்தமான், கர்நாடகா, கேரளா, ஆந்திரத்தின் உள்ளகப் பகுதிகள் மற்றும் பல தேசங்களில் குடியேற்றப்பட்ட, குடியேறிய தேசங்களில் நிலைத்து விட்ட தமிழர்கள் அத்தேசங்களில் சமூகப் பொருளியல் அரசியல் வாழ்வில் இணைக்கப்பட்ட பகுதிகளாகவே உள்ளனர். அவர்களின் வரலாற்றுத் தாயகமாக தமிழகம், தமிழீழம் இருந்தாலும் குடிபெயர்க்கப்பட்ட அவர்களின் வாழ்வு அத்தேசங்களில் நிலைத்து விட்டாலும் அத்தேசமோ அவ்வரசுகளோ அவர்களை ஒரு சமூகமாகப் பார்த்து தேசிய இன மற்றும் மொழிச் சிறுபான்மையினராக அங்கீகரித்து அவர்களின் மொழி பண்பாடு சமயம் அரசியல், பொருளியல், உரிமைகள் என எதையும் அங்கீகரிக்காமல் உதிரிகளாக வைத்துள்ளது. இதன் விளைவாக அவர்கள் சிறுபான்மையினருக்குரிய எந்த உரிமைகளையும் பெறாத நிலையிலேயே உள்ளனர். இதன் விளைவாக அவர்கள் வாழும் தேசங்களில் கடைநிலை மக்களாகவே வாழ்ந்து வருகின்றனர்.
அகதிகள் மற்றும் தொழிலாளர்கள்
 


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 சர்வதேச சட்டங்களால் அகதிகளுக்கு வழங்கும் உரிமை மற்றும் பாதுகாப்பு சில நாடுகளில் மட்டுமே கிடைக்கும் நிலையில் உள்ளது. பிற தேசங்களில் அதற்காக நாம் ஒருங்கிணைய வேண்டிய நிலையில் உள்ளோம். அதேபோல் 300 ஆண்டுகளுக்கு முன் கூலி இனமாக பல மணி நேரம் பணிவாக பணி செய்யும் இனமாக அறியப்பட்டது போலவே இன்றும் உலகமெங்கும் தமிழக கிராமங்களிலிருந்து சென்ற தமிழ் இளைஞர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்களுக்கு தொழிலாளர்களுக்கு உரிய உரிமையோ பாதுகாப்போ ஏதுமற்ற நிலையிலேயே உள்ளனர்.

தேசிய இனமாகவும் தேசிய இனச் சிறுபான்மையினராகவும், மொழி இனச் சிறுபான்மையானராகவும் தமிழர்கள் வாழ்ந்தாலும் அவர்கள் தகுதிக்குரிய உரிமையுடன் வாழ்கிறார்களா என்றால் இல்லை. அவர்கள் தேசத்தால் வேறுபட்டு வாழ்ந்தாலும் வேறுபட்ட ஒடுக்குமுறைகளை எதிர்கொண்டாலும் தாயகங்களுக்கு தேசிய விடுதலை, புறத்தில் தேசிய இன சிறுபான்மையினர் உரிமை, மொழி இனச் சிறுபான்மையினர் உரிமை அகதிகளுக்கான உரிமை என தீர்வழிகளிலும் வேறுபட்டிருந்தாலும் அவர்கள் மீதான ஒடுக்குமுறையின் தன்மை இன ஒடுக்குமுறை என்பதும், அதற்கு எதிரான போராட்ட வழி இனப்போராட்டமே என்பதேயாகும்.
மாந்த சமூகம் இனப்போராட்டம் வர்க்கப் போராட்டம் என்ற இரண்டுபோராட்ட வழிகளில் தான் தற்போதைய வளர்ச்சி நிலையை அடைந்துள்ளது. இரண்டு போராட்ட வழிகளில் இனப்போராட்டமே மூத்தது. இயற்கையோடான போராட்டத்திலும் விலங்குகளுக்கு எதிரான வேட்டையிலும் பிற குழுக்களுக்கிடையிலான மோதலிலும் தன் குழுவிற்குள்ளே மொழி உள்ளிட்ட பொதுத்தன்மைகளை உருவாக்கிக் கொள்வதிலும்தான் இனமும் இனப் போராட்டமும் தொடங்கியது.
இப்போராட்டத்தின் அடிப்படை தனக்குப் புறத்திலிருந்து தன் குழுவைப் பாதுகாப்பதே. தன் குழுவைப் பாதுகாப்பதன் மூலம் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதே. தன் குழு என்ற நிலை உருவான பிறகும் அக்குழுவிற்கான மொழி பண்பாடு மரபு, கலை, இலக்கியம், இசை, மருத்துவம், நில எல்லை என ஒவ்வொன்றாக வளர்ந்து ஒரு பொதுத்தன்மை கொண்ட இனமும், அவ்வினத்தால் புழங்கக்கூடிய நில எல்லையாக தேசமும் உருவாகிறது.
இனங்கள் தோன்றி வளர்ந்து, ஆதிப் பொதுமைச் சமூகம் வளர்ந்து, வளர்ச்சியின் விளைவாக அதில் ஆளும் பிரிவு, ஆளப்படும் பிரிவு எனப் பிரிவு படுவதிலும்; போரில் தோற்ற குழுக்களை அடிமைகளாக மாற்றுவதின் வழியாகவும்தான் வர்க்கங்களும் வர்க்கப் போராட்டங்களும் தொடங்குகின்றன. இதிலிருந்து சில தேச நிலைகளில் ஆண்டான் அடிமை முறையும், அதிலிருந்து நிலவுடைமை முறையும், சில தேச நிலைகளில் நேரடியாக நிலவுடைமை அமைப்பு முறையும் தோன்றுகிறது. இனத்தால், மொழியால், தேச எல்லைகளால் இணைக்கப்பட்ட தேசங்கள் உற்பத்தி முறையாலும் தேச அரசாலும் இறுதியாக மையப்படுத்தப்படுவது தேசிய முதலாளிய வகுப்புப் புரட்சி முதலாளியதேச உருவாக்கம் என்பதாக உள்ளது. (இதில் வேறுபட்ட சமூக வளர்ச்சி நிலைகளும் உள்ளன.) இந்த வகையிலேயே பிரெஞ்ச், இத்தாலி, ஜெர்மனி, பிரிட்டன், ருஷ்யா உள்ளிட்ட தேசங்களும் தேசிய அரசுகளும் உருவாகின. வர்க்கப் போராட்டம்தான் இவற்றை மையப்படுத்தப்பட்ட தேசிய அரசாக தேசிய சமூகமாக உருவாக்கினாலும் அதன் மொழி, நிலம், மரபு, பண்பாடு உள்ளிட்ட உள்ளடக்கங்களை இனமே தீர்மானித்தது.
இந்த முன்மாதிரிகள் தடையற்ற புறத் தலையீடற்ற சமூக வளர்ச்சியின் முன் மாதிரிகளாகவும், பிரிட்டனுக்கு எதிரான அயர்லாந்து விடுதலைப் போராட்டமும், வெள்ளை நிறவெறிக்கு எதிரான ஆப்பிரிக்கக் கருப்பினத்தவர்களின் போராட்டமும், ஜப்பானுக்கு எதிரான சீன விடுதலைப் போராட்டமும், பிரெஞ்ச் மற்றும் அமெரிக்காவுக்கு எதிரான வியட்நாமிய விடுதலைப் போராட்டமும் புறத்திலிருந்து வரக்கூடிய இன ஒடுக்குமுறைக்கு எதிரான இனப்போராட்டத்தின் முன்மாதிரிகளாக உள்ளன.
நடைபெறுவது இனப்போராட்டமா, வர்க்கப் போராட்டமா என்பதை அத்தேசிய சமூகத்தின் வளர்ச்சி மற்றும் சுதந்திரத்தை புற மேலாதிக்கம் தடை செய்கிறதா, அக மேலாதிக்கம் தடை செய்கிறதா என்பதிலிருந்தே தெரிவு செய்யப்படுகிறது. இதில் இரண்டில் ஒன்று முன்னெடுக்கப்பட்டாலும் இன்னொன்று இல்லாமல் போய்விடுவதில்லை. மாறாக, முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் ஆளுகைக்கு உட்பட்டதாக அது மாறிவிடுகிறது.
நிலவுடமைக்கும் போர்ப்பிரபுகளுக்கம் எதிரான சீன கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையில் விவசாயிகள், தொழிலாளர்கள், தலைமையில் நடந்த வர்க்கப் போராட்டம் ஜப்பானிய எதிர்ப்பு சீன தேசிய விடுதலைப் போராட்டத்தின்போது முந்தைய வர்க்க விரோதிகளான நிலப்பிரபுக்கள் மற்றும் போர்ப்பிரபுக்களில் ஒரு பிரிவினர் கோமிங்டாங் கட்சி உட்பட தேசிய விடுதலையின் நண்பர்களாக மாறினர். சீன தேசிய விடுதலைப் போராட்டத்தின் ஆளுகைக்கு உட்பட்டதாக அவ்வர்க்கப் போராட்டம் மாறியது.
இப்படிப் புறத்திலிருந்து எழும் முரண் பாட்டிலிருந்து இனப்போராட்டமும், வளர்ச்சியின் விளைவாக அகத்திலிருந்து எழும் வர்க்கப் போராட்டமும்தான் மனித சமூகத்தை வழிநடத்தி இருக்கின்றன.
மேற்கு ஐரோப்பிய முதலாளித்துவத்தின் வளர்ச்சியின் விளைவாக வேறு வகையில் கூறுவதெனில் மேற்கு ஐரோப்பிய பாட்டாளி வர்க்கம் தங்களுடைய முதலாளிகளிடம் தோற்றதின் விளைவாக உருவானது ஏகாதிபத்தியம். அது உருவாகி சுரண்டலை பல தேசங்களுக்கு விரிவாக்கிய பிறகு நடக்கும் போராட்டங்களும் அதன் துணையோடு உருவாக்கப்பட்ட பல்தேசிய நாடுகள் (எ.கா இந்தியா, இலங்கை, பாக்கிஸ்தான்) உருவாகி சுரண்டலை மேலாதிக்கத்தை பல தேசங்களுக்கு விரிவாக்கிய பிறகு நடக்கும் அனைத்து போராட்டங்களும் அயல் மேலாதிக்கத்திற்கு எதிரான தேசிய இனப் போராட்டங்களே. உலக முதலாளிகள், ஏகாதிபத்தியம், பன்னாட்டு முதலாளிகள் தொழிலாளிகளிடமிருந்து சுரண்டப்படும் உபரியை விட தேசங்களிடமிருந்து சூறை யாடப்படும் வளத்திலிருந்தே அவர்களுடைய அமைப்பு முறையைக் காத்து வருகிறார்கள். உபரி அவர்களுக்கு உபரியாக மாறிப்போனது. ஏகாதிபத்தியங்களின் மற்றும் பல்தேசிய நாடுகளின் இருப்பு மற்றும் உயிர் ஒடுக்கப்படும் தேசங்களில்தான் தங்கி இருக்கிறது. அதற்கு எதிரான இனப் போராட்டத்தினால் முதல் மற்றும் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு பல பத்து தேசங்களை உருவாக்கி இருக்கிறது. ஏகாதிபத்திய ஐரோப்பிய முதலாளிகள் நேரடிக் காலணி ஆதிக்கம் சேமநல அரசு, புதுக் காலனியம், நிதி மூலதன ஆதிக்கம், சூறையாடும் முதலாளியம் என உருமாறும் உலக முதலாளியம் இன்று உலகமயம் என்ற பெயரில் மூன்றாவது உலக யுத்தத்தை ஒடுக்கப்படும் இனங்கள் மற்றும்  தேசங்களுக்கு எதிராக நடத்திக்கொண்டு இருக்கிறது.
இப்போரிலேயே நம் இனம் அழிப்பிற்கும் விடுதலைப் போராட்டப் பின்னடைவுக்கும் உள்ளானது. ஈழ விடுதலை அதன் தேசியத் தளத்தில் மட்டும் தீர்மானிக்கப்படுவதில்லை என்பதையும் அது சர்வ தேசத் தளத்திலேயே தீர்மானிக்கப்படுகிறது என்பதையும் நமக்கு மறு உறுதி செய்திருக்கிறது. இந்த உண்மை இந்திய மேலாதிக்கத்திற்கு எதிராகப் போராடும் தமிழ்த்தேசிய விடுதலைக்கும் பிற ஒடுக்கப்பட்ட தேசிய இன விடுதலைக்கும் பொருந்தும்.
தமிழர்கள் உலகம் முழுவதும் பரவியதை வரலாறு தமிழர்களுக்கும் கொடுத்த நல்வாய்ப்பாகக் கருதி தமிழர்கள் தங்களுக்குள் உலக அமைப்பாக உருவாகி பிற ஒடுக்கப்படும் இனங்களோடும் சுரண்டப்படும் மக்களோடும் இணைந்த புதிய அகிலத்தை உருவாக்கி காலமும் சூழலும் நமக்கு வழங்கும் நண்பர்களின் துணையோடு இன ஒடுக்குமுறை உலக அமைப்பிற்கு எதிராக தேசிய இன விடுதலை அரசியலை முன்னெடுப்பதோடு தங்களது தாயகங்களின் விடுதலைக்கும், தமிழர்களின் அரசியல் உரிமைப் போராட்டத்தையும் முன்னெடுக்க வேண்டும்.
ஏகாதிபத்தியங்களை நம் ஒடுக்கப்படும் தேசங் களில் வீழ்த்தி அவர்களின் சொந்த தேசங்களுக்குத் திருப்பி அனுப்பி அவர்களின் சொந்த சகோதரர்களால் சவ அடக்கம் செய்யத் துணை நிற்பதன் மூலமும்; சோசலிச தேசங்களைப் படைப்பதன் மூலமும் உலக சோசலிச சமூகம் படைப்பதற்கான போரட்டத்தை ஒடுக்கப்பட்ட இனங்களும் சுரண்டப்படும் மக்களும் இணைந்து முன் நகர்த்துவோம்.
இதுவே தமிழர் முன்னணியின் பார்வையும் நோக்கமும் ஆகும்.
இயங்கியல் கண்ணோட்டத்தில் இனப்போராட்டக் கோட்பாட்டை ஏற்று மக்கள் திரள் வழியில் தமிழர் பணி முடிக்க அன்போடு அழைக்கிறோம்.
 
செயப்பிரகாசு நாராயணன்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
தமிழர் முன்னணி .
 
ஏர் மகாராசன்
17.03.2019.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 எழுத்தின் மீதான வருணப் பேதங்களும் தமிழின் தனித்த மரபும்: மகாராசன்

 
FB_IMG_1550730034805.jpg

FB_IMG_1545332959803.jpg
மனிதர்களைப் பாலினப் பாகுபாடுகளாக வகைப்படுத்தியதைப்போல எழுத்துகளையும் பாலினப் பாகுபாடு செய்துள்ள பாட்டியல் நூல்கள், வருணப் பொருத்தம் எனும் பெயரில் தமிழ் எழுத்துகளை நான்கு வருணங்களாகவும் பாகுபாடு செய்துள்ளன.

தொழில் நிமித்தமாக நிலவியிருந்த சமூக வேறுபாடுகளின் மீது பிறப்பின் அடிப்படையிலான பாகுபாடுகளாகக் கற்பிதம் செய்து,  பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் எனும் நால் வருணங்களாக முன்மொழிந்த வருணக் கற்பிதங்கள்போல எழுத்துகளுக்கும் வருணப் பாகுபாடுகளைக் கற்பித்துள்ளன பாட்டியல் நூல்கள்.

மறையோர், அரசர், வணிகர், சூத்திரர் என எழுத்துகளை நால் வருணங்களாக / சாதிகளாக அவை வரிசைப்படுத்திக் கொள்கின்றன.

ஒழியா உயிரனைத்தும் ஒற்று முதலாறும்
அழியா மறையோர்க்காம் என்பர்;- மொழியும்
அடைவே ஓராறும் அரசர்க்காம் என்பர்
படையாத சாதிகளின் பண்பு

என்கிறது வெண்பாப் பாட்டியல்.

இதனையே, அந்தண சாதிக்குரிய எழுத்துகள்; அரச சாதிக்குரிய எழுத்துகள் என வருணப்படுத்துகிறது பன்னிரு பாட்டியல்.

நறுமலர்த் திசைமுகன் ஈசன் நாரணன்
அறுமுகன் படைத்தன அந்தணர் சாதி;
இந்திரன் வெங்கதிர் சந்திரன் படைத்தன
துன்னரும் சிறப்பின் மன்னவர் சாதி

என்கிறது அது. அதாவது, அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ ஆகிய உயிர் பன்னிரண்டு எழுத்துகளும், ஒற்று முதல் ஆறும் என்கிற க், ங், ச், ஞ், ட், ண் ஆகிய மெய் எழுத்துகளும் மறையோர் / அந்தணர் / பார்ப்பனர் சாதி எழுத்துகளாகவும், கூறப்படுகிறது. மெய்யெழுத்துகளான த், ந், ப், ம், ய், ர் ஆகியன அரசர் /  மன்னர் / சத்திரியர் எழுத்துகளாகவும் கூறப்படுகிறது.

வணிக சாதிக்குரிய எழுத்துகள், சூத்திர சாதிக்குரிய எழுத்துகள் எனப் பாகுபடுத்தும்போது,

பண்பார் வணிகர்க்காம் பாங்கில் லவறனக்கள்
மண்பாவும் சூத்திரர்க்காம் மற்றையவை- நண்பால்
அரன் அரிசேய் மால் கதிர் கூற்றாய் மழை பொன் மெய்க்கும்
பிரமன் படைப்புயிர்க்குப் பேசு

என்கிறது வெண்பாப் பாட்டியல்.

இதையே, பன்னிரு பாட்டியல் கூறும்போது

திருமிகு நிதிக்கோன் வருணன் படைத்தன
அணி மிகு சிறப்பின் வணிகர் சாதி;
கூற்றுவன் படைத்தன கூற்றன இரண்டும்
ஏத்திய மரபின் சூத்திர சாதி

என்கிறது. அதாவது, ல், வ், ற், ன் என்னும் நான்கு மெய்யும் வணிகர் /  வைசிய சாதி எழுத்துகளாகவும், ழ், ள் என்னும் இரண்டும் சூத்திர சாதி எழுத்துகளாகவும் பாகுபடுத்தப்படுகிறது. இதையே,

பன்னீர் உயிரும் முன்னொற்று ஆறும்
மன்னிய அந்தணர் வருணமாகும்;
தநபமயர எனச் சாற்றிய ஆறும்
மன மகிழ் அரசர் வருணமாகும்;
லவறன என்னும் நான்கு புள்ளியும்
இவர்தரு வணிகர்க்கு எய்தும் என்ப;
ழ ள எனும் இரண்டும் வளமையர்க்காகும்

என்கிறது இலக்கண விளக்கப் பாட்டியல் நூல்.
தமிழ் எழுத்துகள் குறித்தும், அவற்றின் ஒலி மற்றும் வரிவடிவங்கள் குறித்தும், அவற்றின் வகைப்பாடுகள் குறித்தும் தமிழ் இலக்கண இலக்கிய மரபில் உள்ள விவரிப்புகள் காரண காரிய இயல்புகளைக் கொண்டிருப்பவை; மொழியின் இயங்கியல் தன்மையின் இயல்போடு பொருந்திப் போகின்றவை. தமிழ் எழுத்துகளின் ஒலி வடிவங்கள், வரிவடிவங்கள், அவற்றுக்கான பெயர்கள், வேறு வேறான காலங்களில் வேறு வேறான நிலைகளை அடைந்த எழுத்துகளின் பரிணாம வளர்ச்சிகள், தமிழ் எழுத்துகளைக் குறிக்கும் பல்வேறு பெயர்கள், எழுத்து வகைகள், தமிழ் நெடுங்கணக்கில் எழுத்துகளின் பெயர், வகை, தொகை, விரிகள் எனச் சொல்லப்படுகின்றவை அனைத்தும் மொழியியல் எனும் அறிவுப் புலமாய் வடிவமைந்திருப்பவை; பிற்காலத்திய மொழியியல் கோட்பாடுகளுக்கெல்லாம் அடித்தளமாக அமைந்திருப்பவை.

மேலும், தமிழர் வாழ்வியல், தமிழர் பரவிய நிலத்தியல், வரலாற்றியல், தொல்லியல், பண்பாட்டியலோடு ஓர் உயிர்ப்பான உறவையும் அடையாளத்தையும் கொண்டிருப்பதாகவே தமிழ் எழுத்து மரபு இயங்கி வந்திருக்கிறது. இத்தகைய எழுத்து மரபின் வாயிலாகவே, தமிழரின் அறிவு மரபு காலந்தோறும் தம்மைப் புதுப்பித்துக் கொண்டே வந்திருக்கிறது. தமிழரின் எழுத்து மரபு பற்றிய விவரிப்புகளுக்குள் தமிழின் தனித்த பண்பாட்டுத் தன்மை பொதிந்திருப்பதைக் காண முடியும். அதாவது, தமிழ் மக்களின் பேச்சு வழக்காறுகளாலும் எழுத்து வழக்காறுகளாலும்தான் தமிழ் செழிப்படைந்து வந்திருக்கிறது.

தமிழர்கள் பல்வேறு இனக் குழுக்களாகவும், குலங்களாகவும், தொழில் மரபினராகவும், சமயத்தவர்களாகவும், சாதியினராகவும், வட்டாரத்தினராகவும் இருப்பினும், அத்தகைய அடையாளங்களோ சார்புத் தன்மையையோ தமிழின் எழுத்து மரபில் இல்லை. அதிகார மய்யங்களால் தமிழ் அரவணைக்கப்பட்டிருந்தாலும், ஒதுக்கல்களுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தாலும், அதிகாரச் சார்பின்றியும் துணையின்றியும்தான் தமிழால் தனித்து இயங்க முடிந்திருக்கிறது. வலியோருக்கு மட்டுமின்றி எளியோருக்கும் தமிழ் எழுத்துகள் ஓர் அறிவாயுதமாய்ப் பயன்பட்டு வந்திருக்கின்றன. அவ்வகையில், தமிழ் எழுத்து மரபிற்கு அரசதிகாரம் /  சமயம் / சாதி / வர்க்கம் /  பாலினம் /  வட்டாரம் சார்ந்த எவ்வகைச் சார்புத் தன்மைகளும் கிடையாது எனலாம்.

ஓவியங்கள், குறியீடுகள், ஒலி வடிவங்கள், வரிவடிவங்கள் என்பதன் நீட்சியாகவே எழுத்து என்கிற மரபும் ஒரு மொழியின் இயங்குதலுக்கு அடிப்படை. தமிழி, வட்டெழுத்து என வளர்ச்சி அல்லது மாற்ற நிலைகளை அடைந்து வந்த தமிழ் எழுத்து மரபில், பிற மொழி / சமயம் /  பண்பாடு /  அதிகார நுழைவுகளாலும் படையெடுப்புகளாலும் ஆட்சி மாற்றங்களாலும் கிரந்தம் என்கிற எழுத்துமுறை திரிபுகளை ஏற்படுத்தியது. கிரந்தம் செல்வாக்கு பெற்ற அதே இடைக்காலத்தில்தான், தமிழ் எழுத்துகள் குறித்த விவரிப்புகளில் திரிபுநிலைகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.

தமிழ் எழுத்துகளின் ஒலி, வரிவடிவங்களின் காரண காரிய இயல்புகளுக்கு மாறாகவும் புறம்பாகவும் கற்பிதங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. தமிழின் எழுத்து மரபுக்கு முரணான கற்பிதங்கள் பாட்டியல் உள்ளிட்ட பிற்காலத்திய இலக்கணங்கள் வாயிலாகப் புகுத்தப்பட்டிருக்கின்றன.

குறிப்பாக, இடைக்காலத்தில் அரசதிகாரத் துணையுடன் செல்வாக்கு செலுத்திய சாதி / சமய / பாலின / வர்க்கப் பாகுபாடுகளையும் ஏற்றத் தாழ்வுகளையும் எழுத்துகளின் வழியாகப் பரவலாக்கம் செய்வதோடு மட்டுமல்லாமல், தமிழ் எழுத்துகளுக்கும் அத்தகையச் சாதி /  சமய / பாலின /  வர்க்கச் சாயல்களையும் அடையாளங்களையும் புகுத்த முனைந்திருப்பதின் வெளிப்பாடே பாட்டியல் உள்ளிட்ட இடைக்கால இலக்கண நூல்களின் உருவாக்கமாகும்.

அதாவது, தனித்ததோர் எழுத்து மரபாய்த் தமிழ் இருப்பதிலிருந்து, அதற்குச் சார்புத் தன்மையை உருவாக்குவதே அந்நூல்களின் பெருநோக்கமாய் இருந்திருக்கிறது. ஆயினும், தமிழ் எழுத்துகள் பற்றிய அத்தகையக் கற்பிதங்கள் தமிழ் எழுத்து மரபில் சிதைவுகளை ஏற்படுத்த முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மகாராசன் எழுதிய
தமிழர் எழுத்துப் பண்பாட்டு மரபு
நூலில் இருந்து...


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

குலசாமி வழிபாட்டு மரபும் வரலாற்று வழக்காறுகளும்: புரிதலும் போதாமைகளும் :- மகாராசன்

 

FB_IMG_1551720854220.jpg
 
குலசாமி வழிபாடுகள் நிறுவனப்படுத்தப்பட்ட ஆரியப் பெருந்தெய்வ வழிபாட்டு மரபுகளைப் போன்றதல்ல. ஆரியப் பெருந்தெய்வ வழிபாட்டு மரபுகளில் இருந்து வேறுபட்ட எதிர்மரபையும் மாற்று மரபையும் கொண்டிருக்கக் கூடியவை.
குலசாமி வழிபாட்டு மரபுகளைத் தெய்வ வழிபாடு என்பதாக மட்டும் சுருக்கிப் பார்க்கப்படுகிறது. குலசாமிகள் என்பவைதான் இந்த உலகத்தையும் உயிரினங்களையும் படைத்ததாகக் குலசாமி வழிபாட்டினர் கருதுவதில்லை. முன்னொரு காலத்தில் தம் குழுவுக்கோ கூட்டத்திற்கோ குலத்திற்கோ அல்லது இந்தச் சமூகத்திற்கோ ஏதாவது ஒரு வகையில் சமூகப் பங்களிப்பை வழங்கியவர்களாகவே கருதப்படுகிறார்கள்.
அவர்களது சமூகப் பங்களிப்பை மதித்து நினைவஞ்சலி செலுத்தும் எளிய வழிபாட்டுச் சடங்குதான் குலசாமி வழிபாட்டு மரபில் பொதிந்து கிடக்கிறது. சமூகப் பங்களிப்பு செய்த முன்னோர், மூத்தோர், நீத்தார் என்போரைச் சிறப்பிக்கும் வகையில் நிகழ்த்தப்பட்ட நடுகல் வழிபாட்டு மரபின்  நீட்சிதான் குல சாமி வழிபாட்டு மரபும்.
குலசாமி வழிபாட்டு மரபில் பல குலங்களின் கூட்டிணைவு உள்ளடங்கி இருக்கிறது என்பதையும் காண முடியும். குலசாமி வழிபாடு தெய்வ வழிபாடு என்பதைக் காட்டிலும், பூர்வீக நிலத்தோடு பூர்வீக மக்களுக்கிருக்கும் உயிர்ப்பான உறவைப் புதுப்பித்துக் கொள்ளும் ஒரு வகைச் சடங்கு முறை அதற்குள் இருக்கிறது. இன்னும் குறிப்பாக உற்று நோக்கினால், ஒவ்வொரு குலசாமி வழிபாட்டு வழக்காற்றுக்குள்ளும் அந்தந்த வட்டாரத்தின் - குலத்தின் வரலாறும் சடங்கு மரபாய் மாறிக் கிடக்கிறது. இந்த வரலாற்றையும் வழக்காறுகளையும் போகிற போக்கில் உதறித் தள்ளிவிட முடியாது.
குலசாமி வழிபாட்டு மரபைக் கொச்சைப்பொருள் முதல்வாதக் கண்ணோட்டத்தில் அணுகுவதை விடுத்து, வரலாற்றுப் பொருள் முதல்வாத அடிப்படையில் பண்பாட்டு நடத்தைகளை ஆராய்வது தான் இப்போதைய தேவை.  குலசாமி வழிபாட்டு மரபு ஒன்றும் பிற்போக்கானது - தீங்கானது என்ற பொத்தாம் பொதுவான முடிவுக்கு வருதல் என்பதும் ஆரியத்திற்குத் துணை செய்யும் கருதுகோளே ஆகும். ஏனெனில், குலசாமி வழிபாட்டு மரபை ஆரியமும் இழிவானது என்றே முன்மொழிகிறது. பகுத்தறிவுவாதம் எனும் பேரில் குலசாமி வழிபாட்டு மரபுகளைக் கொச்சைப்படுத்துவதும் ஆரியத்தை வலுப்படுத்தவே துணை செய்யும். குலசாமி வழிபாட்டு மரபு போன்ற மக்களின் வழக்காற்று மரபுகளைப் பிற்போக்கானது என ஒதுக்கி வைத்ததன் - வைப்பதன் விளைவாகவே, அவற்றையெல்லாம் ஆரிய மரபு தமதாக்கிக் கொண்டிருக்கிறது என்பதும் கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.

மக்கள் வழக்காறுகள் உழைப்பிலிருந்தும் உற்பத்தியிலிருந்தும் உருவாகி நிற்பவை. குலசாமி வழிபாட்டு மரபில் இருக்கும் மக்கள் வழக்காற்றுக்குள் இருக்கும் வரலாற்றையும் சமூகப் பண்பாட்டியலையும் வரலாற்றுப் பொருள் முதல்வாதக் கண்ணோட்டத்தில் அணுகவேண்டிய தேவை இப்போது அதிகரித்திருக்கிறது.
பண்பாட்டு எடுத்துரைப்பில் இன்னும் போதாமைகள் இருக்கின்றன. பண்பாட்டுப் புரிதலிலும் அத்தகையப் போதாமைகளே நீடிக்கின்றன. மக்களையும் சமூகத்தையும் இன்னும் படிப்பதின் மூலமே இதைச் சரி செய்திட முடியும்.
ஏர் மகாராசன்
ஓவியம்:
ஓவியர் மருது


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

தமிழர் எழுத்துப் பண்பாட்டு மரபு

 
FB_IMG_1546575512166.jpg

பண்டைக் காலத் தமிழகத்தில் எழுத்துக் குறிகளைப் பயன்படுத்தி ஓலைச் சுவடி, நடுகல், கல்வெட்டு, செப்பேடு ஆகியவற்றில் தமிழ்மொழி எழுதப் பெற்று வந்துள்ளது. இவற்றில் காலத்தால் முற்பட்ட தாழை மடல்கள், ஓலைச் சுவடிகள் கிடைக்கப்பெறவில்லை. அண்மைக் காலத்தைச் சார்ந்த ஓலைச் சுவடிகளே  கிடைத்துள்ளன. ஆயினும், பல்லாயிரம் மற்றும் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்வெட்டுகளும் செப்பேடுகளும் கிடைத்துள்ளன. அவற்றில், தமிழ் மொழியை எழுதப் பயன்படுத்திய வெவ்வேறு எழுத்து வடிவங்களைக் காணமுடிகிறது.

எழுதுவதாகிய வரிவடிவங்கள் காலம்தோறும் சிறிது சிறிதாகவும் வெவ்வேறாகவும் மாற்றம் அடைந்து வந்திருக்கின்றன. இத்தகைய எழுத்து வடிவங்கள் பற்றிய எடுத்துரைப்பைத் தொல் வரி வடிவவியல் என்பர் தொல்லியலார்.
தொல் வரி வடிவவியல் சார்ந்த விவரிப்புகள் தமிழ் எழுத்து வரிவடிவங்களுக்கும் இருக்கின்றன. தமிழ் மொழியின் தொன்மையான எழுத்து வடிவங்களைத் தமிழகத்தின் குகைக் கல்வெட்டுகள் வழியாக அறிய முடியும். இக்கல்வெட்டுகளில் எழுதப் பெற்றுள்ள எழுத்து வடிவங்களுக்குப் பெயரிடுவதில் பல்வேறு கருத்து நிலைகள் நிலவுகின்றன.

கி.மு.மூன்றாம் நூற்றாண்டில் இந்தியாவின் வடபகுதியில் மௌரியப் பேரரசர் அசோகர் ஆட்சிக் காலத்தில்  எழுத்து வடிவங்கள் பயன்படுத்தப் பெற்றுள்ளன. பாறைகளிலும் தூண்களிலும் பிராகிருத மொழியில் பொறித்து மக்கள் அறியும்படியாகச் செய்திருக்கிறார் அசோகர். கி.மு.மூன்றாம் நூற்றாண்டைச் சார்ந்த அசோகரின் பாறைக் கல்வெட்டில் உள்ள எழுத்து வடிவைப் பிராமி என முதன் முதலாகப் பெயரிட்டுக் கூறியவர் பியூலர் ஆவார். பிராமி எனும் எழுத்து வடிவம்தான் இந்திய ஒன்றிய நிலப்பகுதியின் எழுத்து முறைக்குத் தாயாகவும், தொன்மையான எழுத்து வடிவச் சான்றாகவும் சொல்லப்படுகிறது.

தமிழகக் குகைக் கல்வெட்டுகளும் இதே காலத்துக்கு உரியவையாகக் கருதப்படுகின்றன. இந்தக் குகைக் கல்வெட்டு எழுத்து வடிவங்களுக்கும் வடநாட்டில் பயன்படுத்தப்பெற்ற பிராமி எழுத்து வடிவங்களுக்கும் சிற்சில ஒற்றுமைகள் இருந்ததினால், பிராமி என்னும் பொது எழுத்து வடிவில் இருந்து தமிழ்நாட்டில் குகைக் கல்வெட்டு எழுத்துகள் உருவாகின என்பர். இக்கருத்தின் அடிப்படையில் வடபிராமி, தென்பிராமி என்று பெயரிட்டு அழைப்பதும் உண்டு. தமிழகக் குகைக் கல்வெட்டு எழுத்துகளைப் பிராமி வரிவடிவத்தின் தென்னக வகை என அழைக்கிறார் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்.  அதேவேளையில், தமிழகக் குகைக் கல்வெட்டு எழுத்து வடிவங்களைத் தமிழ் பிராமி என்று பெயரிட்டு அழைப்பார் ஐராவதம் மகாதேவன்.

பொதுவாகவே, பிராமி எழுத்திலிருந்தே தமிழ் எழுத்துகள் உருவாகி இருக்க வேண்டும் எனும் கருதுகோள்தான் பெரும்பாலும் நிலவுகின்றது. தமிழகக் குகைக் கல்வெட்டெழுத்துகளைத் தமிழ் பிராமி எனக் குறிப்பது தமிழின் தனித் தன்மையை ஏற்க மறுக்கும் நோக்கம் கொண்டதாகக் கருதும் நடன.காசிநாதன், தமிழ் பிராமி என்று அழைப்பதற்கு அவர்கள் கூறும் காரணம் தமிழ் மொழிக்காக உருவாக்கப்பெற்ற பிராமி எழுத்து என்றும், அசோகன் பிராமி அல்லது மௌரியன் பிராமியில் இருந்து இவ்வெழுத்து தோன்றியதே எனினும் அதில் இருந்து வேறுபட்டது என்றும் கூறுகின்றனர். அவ்வாறு எனில், பிராகிருத மொழிக்காக எழுதப்பெற்ற எழுத்தைப் பிராகிருத பிராமி என்று அழைப்பதுதானே சரியாகும். மேலும், அப் பிராமி எவ்விடத்திலிருந்து தோன்றியது? திடீரென்று அவர்கள் உருவாக்கிக் கொள்கையில், மற்ற பகுதிகளில் குறிப்பாகத் தமிழ் மன்னர்கள் தங்களுக்கு என ஒரு எழுத்தை உருவாக்கிக்கொண்டு இருக்க மாட்டார்களா? அவ்வாறு தங்களுக்கு உருவாக்கிக்கொண்ட எழுத்துதான் தமிழ் எழுத்து என, தமிழின் தனித்ததோர் எழுத்து மரபு தனித்து இயங்கியிருப்பதற்கான வாய்ப்புகள் குறித்து விளக்கியுள்ளார்.

தமிழ் மொழியில் எழுதும் வடிவ முறையினைப் பிராமியாகவும், அவ்வெழுத்து வடிவம் வடக்கிருந்து பெறப்பட்ட ஒன்றாகவுமே பெரும்பாலும் கருதப்பட்டது. ஆனால், அசோகர் காலத்திய கல்வெட்டுகளுக்கு முன்பாகவே தமிழ்நாட்டில் தமிழ் எழுத்துகள் வழக்கில் இருந்துள்ளதையும், அவை முறையாக வளர்ச்சி அடைந்து வந்திருப்பதையும் தொல்லியல் வரலாற்றுச் சான்றுகளின் வழியாக அறிய முடிகிறது.

கி.மு.முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த பாலி மொழியில் எழுதப்பட்ட ‘சமவயங்க சுத்தா’ (சமவாயாங்க சூத்திரம்), ‘பன்னவயன சுத்தா’ என்னும் சமண நூல்களில் அக்காலத்தில் வழங்கி வந்த எழுத்து வகைகளுள் 18 வகையான எழுத்துகள் சொல்லப்பட்டுள்ளன. அந்தப் பட்டியலில் பிராமி எழுத்து வகையும் குறிக்கப்பட்டுள்ளது. பிராமி என்பதே பம்பி என்ற பெயராலும் அழைக்கப்படுகின்றது.

மேற்குறித்த சமண நூல்கள் எடுத்துரைக்கும் அதே பட்டியலில்தான் தமிழி எழுத்து வகையும் குறிக்கப்படுகின்றது. தமிழ் எழுத்தைப் பிராகிருத மொழியில் தாமிழி என்று குறிக்கப்பட்டுள்ளது. தமிழ் என்பதை அக்காலச் சமணர் தம்ளி என்றே ஒலித்துள்ளனர். அதன் காரணமாகவே பண்டையத் தமிழ் எழுத்தின் பெயர் தமிழி என ஆகியது. அவ்வகையில், தமிழி மற்றும் பிராமி என்னும் இவ்விரண்டு எழுத்து வகைகளும் ஒரே காலத்தைச் சேர்ந்தவை; தமிழியும் பிராமியும் வேறு வேறானவை  எனத் தெரிகின்றது.

உலகில் உள்ள எழுத்து வடிவங்கள் யாவும் கடவுள் என்பதன் படைப்பு என நம்பப்படுகிறது.  எழுத்து கடவுளின் ஒரு தோற்றம் என்றும், கடவுளே அதைத் தோற்றுவித்தார் என்றும் உலகின் பல பகுதிகளில் வாழ்ந்த பண்டைய மக்கள் கருதினர். எகிப்தியர் தோத் என்ற கடவுளால் எழுத்து தோற்றுவிக்கப்பட்டது எனக் கருதினர். பாபிலோனியர் நேபோ என்னும் தெய்வத்தாலும்; யூதர்கள் மோசஸ் என்பவராலும்; கிரேக்கர்கள் ஹெர்மஸ் என்னும் தெய்வத்தாலும் தோற்றுவிக்கப்பட்டது என்று கருதினார்கள்  என்கிற குறிப்பைத் தருகிறார் இரா.நாகசாமி.

இந்நிலையில், பிராமி எழுத்து வடிவமும் கடவுள் என்பதன் படைப்பு என நம்பப்படுகிறது. அதாவது, பிரமனால் இவ்வெழுத்துக்கள் உண்டாக்கப்பட்டதாகக் கருதப்பெற்றதால் பிராமி எழுத்துக்கள் என்று பெயராயிற்று என்றும், பிராமணரிலிருந்து பிராமி எனும் பெயர் பெற்றது என்றும் கூறுவர். அதேபோல, சமண சமயத்தின் முதல் தீர்த்தங்கரரின் மகள் பெயரான பம்பியிலிருந்தே பிராமி வந்தது என்பர். ஆக, பிராமி எழுத்து வடிவம் சமயம் / சாதி சார்ந்த அடையாளத்தையே பின்புலமாகக் கொண்டிருக்கிறது. அதேவேளையில், பண்டையத் தமிழி எழுத்து வடிவத்திற்கு எந்தவகையான சமய / சாதி அடையாளப் பின்புலங்கள் எதுவும் புலப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பண்டைக் காலத்தில் தமிழ் எழுத்துகளை எழுதப் பயன்படுத்தப்பட்ட எழுத்து முறைமையே தமிழி எனக் குறிக்கப்படுகிறது. அதாவது, தமிழகக் குகைக் கல்வெட்டு எழுத்துகள் வடஇந்தியப் பிராமி எழுத்துகளில் இருந்து சிற்சில நிலைகளில் வேறுபடுகின்றன. அவ்வேறுபாடுகள் தமிழின் தனித்தன்மைக்கு உரியவை ஆகும். இந்த வேறுபாட்டைக் கருத்தில் கொண்டு தமிழி என்று தனிப்பெயர் இடுதலே சிறப்புடைத்து என்பார் இரா.நாகசாமி.

பிராமிக்கும் தமிழிக்கும் பலவகை வேறுபாடுகள் நிறைய இருப்பினும், சில அடிப்படையான வேறுபாடுகளும் இருக்கின்றன. அதாவது, அசோகர் காலத்துப் பிராமியைப்போல் பண்டையத் தமிழியில் கூட்டெழுத்துகள் கிடையாது. மேலும், அசோகப் பிராமியில் காணப்படாத தமிழுக்கே உரிய நான்கு எழுத்துகள் தமிழியில் உள்ளன. அவை ற, ன, ள, ழ என்கிற எழுத்துகள் ஆகும். இந்நான்கு எழுத்துக்களும் அசோகப் பிராமியையும் தமிழியையும் வேறுபடுத்த உதவுகின்றன. அக்காலத்திய இந்த எழுத்து முறைமையைத் தனித்தமிழ் எழுத்து முறைமை எனவும் கூறப்படுகிறது.

குகைப் படுக்கைகள், நடுகற்கள், மட்கல ஓடுகள், முதுமக்கள் தாழிகள், நாணயங்கள், முத்திரை அச்சுக்கள், மோதிரங்கள், இன்னும் இதரப் புழங்கு பொருட்கள் ஆகியவற்றிலிருந்தும் தமிழி எழுத்துகள் கண்டறியப்பட்டுள்ளன. தமிழ்நாடு, கேரளம் இலங்கை, எகிப்து, தாய்லாந்து போன்ற இடங்களிலும் தமிழி எழுத்துப் பொறிப்புத் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தமிழியும் பிராமியும் வேறு வேறு எழுத்து வடிவங்கள் எனினும், பிராமி எழுத்து வடிவம் வழங்கி வந்த கி.மு மூன்றாம் நூற்றாண்டைச் சார்ந்ததே தமிழியின் காலமும் ஆகும் எனப் பொதுவாய்க் கருதப்படுகிறது. அதாவது, பிராமியிலிருந்தே தமிழ் எழுத்து வடிவம் உருக்கொண்டது என்பதற்காகவே தமிழ் பிராமி என்கிற சொல்லால் தமிழி எழுத்து வடிவம் குறிக்கப்படுகிறது. இவ்வாறு குறிப்பது, தமிழியைப் பிராமி எழுத்து வடிவத்தின் உள் வடிவமாக அடையாளப்படுத்துவதாகவே அமைந்திருக்கிறது.

அதேபோலவே, பிராமியின் காலமும் தமிழியின் காலமும் ஒரே காலகட்டமாகக் கணிப்பதிலும் இருக்கிற நோக்கம் என்பதெல்லாம், பிராமிக்கு முந்தியதாகத் தமிழி இருந்துவிடக் கூடாது என்பதுதான். ஆனாலும், பிராமி எழுத்து வடிவத்திற்கு முந்திய எழுத்து வடிவமே தமிழி ஆகும். இவ்வரலாற்று உண்மையைத் தமிழகத்தில் நடைபெற்ற தொல்லியல் அகழாய்வுகள் புலப்படுத்தியுள்ளன.

மகாராசன் எழுதிய
தமிழர் எழுத்துப் பண்பாட்டு மரபு
நூலில் இருந்து...
ஆதி பதிப்பகம் வெளியீடு / 2019.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

எழுத்தின் தோற்றநிலையும் வரலாறும்: மகாராசன்

 
Thamizhar%2BEzhutthu%2Bcover.jpg
எழுத்துகளின் தோற்றத்திற்கு முதல் அடிப்படையாக அமைந்திருப்பன ஓவியங்களே ஆகும் எனத் தொல்லியலாளர்கள் கருதுகின்றனர். தொல் பழங்காலத்தில் வேட்டையாடித் திரிந்த மக்கள் தமது கருத்துக்களை வெளிப்படுத்த சில பல கிறுக்கல்களைக் கீறி, நாளடைவில் ஓவியங்களாகவும் வரைந்துள்ளதைத் தொல்லியல் சான்றுகளின்வழி அறிய முடிகிறது.
 
இத்தகைய ஓவிய நிலை குறித்துக் கூறும்போது, தொல் பழங்கால வேட்டைச் சமூகத்தில் மொழி மற்றும் எழுத்துக்கள் உருவாவதற்கு முன்னர் தகவல் பரிமாற்றத்தில் ஓவியங்களே காட்சி மொழியாக உலகெங்கும் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளன. பின்னர் அது அலங்காரமாகவும் இருந்துள்ளது. இவ்வகை தொன்மையான ஓவியங்கள் உலகின் பல பகுதிகளில் இயற்கையாய் அமைந்துள்ள குகை மற்றும் பாறைகளில் கண்டறியப்பட்டுள்ளன. பாறை ஓவியங்கள் வெறும் வெளிப்பாடு மட்டுமல்ல, வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் வாழ்ந்த சமூகத்தின் வியக்கத்தக்க வாழ்வியல் சூழலைப் பதிவு செய்துள்ள தொல் காட்சி ஆவணம் என்கிறார் காந்திராஜன். 
 
அதாவது, பாறை ஓவியங்கள்தான் தொன்மையான மனிதர்களின் வாழ்வியல் மற்றும் அழகியல் வெளிப்பாடுகளைப் புலப்படுத்தக்கூடிய வடிவமாகத் திகழ்ந்திருக்கின்றன. ஓவியம் வரைதலையே சித்திரம் வரைதல் என்பர். சித்திரமும் கைப்பழக்கம் என்கிற சொல்வழக்கும் ஓவியம் வரைதலைத்தான் குறிக்கிறது.
 
சித்திரம் வரைதலே எழுத்துக்களின் தோற்றத்திற்கு அடிப்படையான காரணம் எனக் கூறும் இரா.நாகசாமி, குழந்தைகள் தாங்கள் கண்ணுறும் விலங்குகளையும் பறவைகளையும் படமாக வரைகின்றனர். அவற்றிற்கு உயிர் இருப்பதாகவே அவர்கள் கருதுவர். காடுகளிலும் மலைகளிலும் வேட்டையாடித் திரிந்த காலத்தில் இவ்வாறுதான் ஓவியங்களை வரைந்துள்ளனர். விலங்குகளின் உருவம் வரைந்து அவற்றை ஈட்டியால் குத்தியதுபோல் வரைந்தால் அது அவனுக்கு மாந்திரீக சக்தியைக் கொடுக்கும் என்றும், அதனால் ஏராளமான விலங்குகளை வேட்டையாட முடியும் என்றும் கருதி இருக்க வேண்டும் என்கிறார்.
 
மேலும், பல குடிமக்கள் சேர்ந்து ஓர் ஊரிலோ நகரிலோ வாழத் தலைப்பட்டபோது அவர்களுடைய பொருள்களைக் குறிக்கக் குறியீடுகள் இட்டுத் தெரிந்து கொண்டனர். ஊர்த் தெய்வத்திற்கு மக்கள் பல பொருள்களை வழிபாடாகக் கொடுப்பது வழக்கம். ஆதலின், ஊர்க் கோயில்களிலும் நகரக் கோயில்களிலும் ஏராளமாகப் பொருள்கள் சேர்ந்தன. இவற்றைக் கணக்கு வைத்துக் கொள்ள பல குறியீடுகள் தேவைப்பட்டன. உதாரணமாக, இவ்வளவு மாடுகள் எனக் குறிக்க மாட்டின் தலை போட்டு அருகில் வேண்டிய புள்ளிகள் இட்டு வைத்தால் அது அவ்வளவு மாடுகள் எனக் குறிக்கும். கலன்களையும் தானியங்களையும் போட்டு அருகில் இட்ட புள்ளி இவ்வளவு கலம் அல்லது தானியம் எனக் குறிக்கும். இவ்வாறு தனிப்பட்ட மனிதர்களிடத்தைக் காட்டிலும் கோயில்களில் கவனத்துடன் கணக்கு வைத்துக் கொள்ளும் தேவை இருந்தது. அதற்குக் குறியீடுகள் தோன்றின. இவற்றைச் சித்திர எழுத்துக்கள் என்பார் இரா. நாகசாமி. 
 
எகிப்து தேசத்தில் காணப்படும் ஓர் ஓவியத்தில் முட்டை வடிவமான ஓர் அடி நிலத்தில் சில செடிகள் காணப்படுகின்றன. அந்த அடி நிலத்திலிருந்து கிளம்புவது போல் ஒரு மனிதன் தலை இருக்கிறது. அவனுடைய தலையை ஒரு கயிற்றினால் பருந்து ஒன்று பற்றிக் கொண்டிருக்கிறது. இத்திரண்ட ஓவியம் பாப்பைரஸ் எனும் கோரைப் புல்லுக்குப் பெயர் போன நைல் ஆற்றுப் பிரதேசத்தில் வாழ்ந்த புராதன மக்களை எவனோ ஒருவன் வென்று அரசனானான் என்னும் கதையைக் கூறுகிறது. இவ்விதம் படத்தில் உள்ள வடிவங்கள் எல்லாம் சேர்ந்து ஒரு நிகழ்வைக் குறிக்கும். இது பாங்குஸ்கேண்டி நேவியா மக்களிடத்திலும் அமெரிக்க ஆதிக்குடிகளிடத்திலும் உண்டு  என்கிற குறிப்பைத் தருகிறார் மணி.மாறன். 
 
மேலும், சிந்து, பாஞ்சால தேசங்களில் உள்ள ஹரப்பா,மொஹஞ்சதரோ என்ற ஊர்களிலே சமீபத்தில் கண்டறியப்பட்ட சுமேரியர் எழுத்துக்களாகக் கூறப்படுபவை, இச்சித்திர சங்கேதக் குறிகளாகும். 5000,6000 ஆண்டுகட்கு முற்பட்டவைகளாகவும் இவை உள்ளன என்பர். இதனால், அக்குறி எழுத்துக்கள் நம் தேசத்துக்கும் புறம்பானவை அல்ல என்பது தெளிவாகின்றது. அம்முறையில், மேலே கூறிய எழுத்து வகைகளை நோக்குமிடத்து அப்புராதன மக்களில் தமிழரும் விலக்கப்பட்டவர் அல்லர் என்று கொள்ளக்கூடியதாம் என்ற மு.இராகவையங்கார் கூற்றும் இங்கு குறிப்பிடத்தக்கது.
 
தொல் பழங்காலத்தியத் தமிழ் மக்கள் ஓவியங்கள் மூலமாகத் தம்முடைய எண்ணங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொண்டதைத் தமிழகப் பாறை ஓவியங்கள்வழி அறிய முடிகிறது. இதைக்குறித்து விவரிக்கும் காந்திராஜன், தமிழகத்தில் காணப்படும் பாறை ஓவியங்களில் வரையப்பட்ட கருப்பொருள்கள் இந்தியாவில் பிற பகுதிகளில் காணப்படும் ஓவியங்கள் போல பல்வேறு காட்சிகளைப் பதிவு செய்துள்ளன. பெரும்பாலான ஓவியங்களில் விலங்குகளை வேட்டையாடுதல், மான்கள், மாடுகள், குதிரைகள், யானை, நாய், ஆடு, பன்றி, புலி, சிறுத்தை, நரி, கழுதை, பாம்பு, மீன், பறவைகள், சண்டைக்காட்சிகள், மரம், சடங்கு மற்றும் சமூக நிகழ்வுகள் அதிகம் காணப்படுகின்றன. அதுபோல கணிசமான அளவில் அடையாளங்களும் குறியீடுகளும் காணப்படுகின்றன. அதேபோல அடையாளம் கண்டுபிடிக்க முடியாத உருவங்களும் எண்ணற்ற அளவில் உள்ளன.
 
தமிழகத்தில் இதுவரை வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்த சுமார் 80க்கும் மேற்பட்ட பாறை ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளன. பாறை ஓவியங்களில் அதிக எண்ணிக்கையில் குறியீடுகளும் சில அடையாளங்களும் காணப்படுகின்றன. மேலும் வடிவியல் சார்ந்த மற்றும் சாராத உருப் படிவங்கள் பெருமளவில் பெருங்கற்காலச் சின்னங்களில் கிடைக்கின்றன. குறிப்பாக கீழ்வாலை, செத்தவரை, மல்லசத்திரம், திருமலை, புறாக்கல் மற்றும் சென்னராயன்பள்ளி  பாறை ஓவியங்களில் இவை தென்படுகின்றன.  பாறை ஓவியங்களில் காணப்படும் சில குறியீடுகள் பெருங்கற்காலப் பானை ஓடுகளில் காணப்படும் கீறல்கள் போல உள்ளன. செத்தவரையில் காணப்படும் ஒரு ஓவியம், விலங்கு ஒன்றினைத் தீயில் வாட்டும் விதம் காட்டப்பட்டுள்ளது. இக்காட்சியின் மூலம் அக்காலத்தில் எவ்வாறு நம் முன்னோர்கள் உணவினைத் தயார் செய்தார்கள் எனத் தெரியவருகிறது. மீன் மற்றும் கடல் வாழ்வியலை கீழ்வாலை மற்றும் காமயகவுண்டன்பட்டி ஓவியங்கள் மூலம் அறிய முடியும் என்கிறார்.
 
தமிழகத்தின்  கீழ்வாலை என்னுமிடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பண்டைய ஓவியத்தில் உருவ எழுத்துக்கள் காணப்படுகின்றன. இதில் ஐந்து எழுத்துக்கள் உள்ளன. முதல் எழுத்து தென்னங்கீற்று போலவும், இரண்டாம் எழுத்து மத்தளம் போன்றும், மூன்றாம் எழுத்து சீப்பு போன்றும், நான்காம் எழுத்து மத்தளம் போன்றும், ஐந்தாம் எழுத்து நான்கு குறுக்குக் கால்களையுடைய சக்கரம் போன்றும் எழுதப்பட்டுள்ளதாகத் தொல்லியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். இவ் ஓவிய எழுத்துகள், சிந்துவெளி எழுத்து வகையைச் சார்ந்திருப்பதாகவே ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அவ்வகையில், கீழ்வாலை ஓவிய எழுத்துகள் ‘நாவாய்த் தேவன்’ என ஓவிய எழுத்தில் குறிக்கப்பட்டிருப்பதாகச் சிந்துவெளி எழுத்துகளோடு தொடர்புபடுத்துகிறார் இரா.மதிவாணன். மேலும், தமிழகத்தின் பழங்காலத்தியப் பாறை ஓவியங்கள் பலவற்றிலும் சிந்துவெளி எழுத்தமைந்த சொற்களை அவர் எடுத்துக்காட்டியிருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
 
குகைகளின் சுவர்களில் ஓர் ஓவியத்தின் மீது மற்றொரு ஓவியம் வரையப்பட்டிருப்பது ஆய்விற்கு உரிய ஒன்றாகும். இது தொடர்ந்து இந்தக் குகைகளில் மனிதர்கள் புழங்கியதைக் காட்டுகிறது. மேலும், இந்தக் குகைப் பகுதிகளில் தேவையான விலங்குகள் அதிக அளவில் கிடைத்திருக்க வேண்டும். இந்தக் குகைகளில் வேட்டையாட விரும்பும் விலங்கின் உருவத்தை வரைந்து சென்றால் அந்த மிருகம் வேட்டையில் கிடைக்கும் என்ற நம்பிக்கையின் காரணமாகவும் இங்கு ஒன்றின் மீது ஒன்றாக ஓவியங்களை வரைந்திருக்கலாம். இதுதவிர, இந்தக்குகை ஓவியங்கள் வரையும் பயிற்சித் தளமாகவும் இருந்திருக்கலாம் என்கிற ஆய்வாளர்களின் கருத்து, ஓவிய உருக்களின்வழி எழுத்துக் குறிக்கான பயில்களம் இருந்திருப்பதையும் சுட்டி நிற்கிறது.
 
மேற்காணும் சான்றுகளின்வழி, ஒவ்வோர் ஓவியமும் ஒவ்வொரு பொருளைக் குறிக்கும் குறிகளாக, அக்குறிகளே அப்பொருட்களைக் குறிக்கும் சொற்களின் அறிகுறிகளாக வளர்ச்சி அடைந்திருப்பதைக் காணமுடிகிறது. அதாவது, ஒரு பொருளின் உருவத்தை வரைந்தெழுதி, அது அப்பொருள் என்பதன் அறிகுறி என்று கருதப்பட்டிருக்கிறது. இவ்வாறாக,  ஒரு சொல்லுக்கு ஒரு ஓவியம் என்று எழுதப்பட்ட காலகட்டத்தில், கருத்துப் புலப்பாடுகளுக்கு  ஓவியங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இத்தகைய ஓவியக் கருத்துப் புலப்பாட்டு வடிவத்தையே ஓவிய எழுத்து (Pictography) என்கின்றனர் தொல்லியல் அறிஞர்கள். இவ் ஓவிய எழுத்தையே சித்திர எழுத்து, படவெழுத்து, உருவெழுத்து, வடிவெழுத்து எனப் பல பெயர்கள் குறிப்பதாகக் கருதலாம்.
 
ஓவியங்களையே எழுத்தாகக் கொள்ள முடியாது. வரைந்த உருவை மட்டும் ஓவியம் குறிக்குமே ஒழிய, வேறு எக்கருத்தையும் குறிக்காது. இவை வரையப்பட்ட பொருளையே குறிக்கும் எனக் கூறுகிறார் இரா.நாகசாமி. மேலும், சித்திர எழுத்துகளையும் உண்மையான எழுத்துகள் என்று கூறமுடியாது. அவை வளர்ச்சி பெற்று கருத்து எழுத்துக்களாக பரிணமித்தன. உதாரணமாக சூரியனின் உரு வரைகிறோம். இது சூரியனை மட்டும் குறிப்பது சித்திர எழுத்து நிலை. இதற்கு அடுத்த நிலை சூரியனுடன் தொடர்பு கொண்ட பகல், வெப்பம் என்ற பொருள்களையும் குறிப்பதாம். இப்போது உருவை மட்டுமின்றி ஒரு கருத்தையும் குறிப்பதால் இதைக் கருத்து எழுத்து என்பர். இதுமட்டுமின்றி முழு உருவும் போடாமல் இரு கொம்புகளும் தலை மட்டும் வரைந்தால் மாடு என்று அறியலாம். இதுவும் ஒரு கருத்தைத் தெரிவிக்கிறது என அவர் விவரிக்கிறார்.
 
ஓவிய எழுத்துக்கள் நாளடைவில் கருத்தெழுத்தாக வளர்ச்சியுற்றன. சூரியனின் ஓவியத்தை எழுதி இது சூரியன் என்று சொல்லப்பட்டால் அது ஓவிய எழுத்து எனப்படும். அந்தச் சூரியனின் ஓவியம் சூரியனோடு தொடர்புடைய பகற்காலத்தையோ சூரிய வெப்பத்தையோ குறிக்கிறதாகக் கொள்ளப்பட்டால் அது கருத்து எழுத்து (Ideogram / Ideography) எனப்படும் என்பர். அதாவது, தமது மனக்கருத்தைப் புலப்படுத்தும் வண்ணம் வரைந்தெழுதியதே கருத்தெழுத்து எனலாம். இதுவே உணர்வெழுத்து எனவும் சுட்டலாம். 
 
கருத்தெழுத்து பற்றி எடுத்துரைக்கும் மணி.மாறன், எழுத்து வளர்ச்சியின் அடுத்த நிலையில் ஒவ்வொரு உருவமும் தனித் தனிப் பொருள்களை நேரிடையாகக் குறிக்க முற்பட்டது எனவும்,  எடுத்துக்காட்டாக, எகிப்து தேசத்தில் அமைந்த ஒருவகை எழுத்தில் கண்ணின் உருவம் கண்ணையும், வட்ட வடிவம் திங்களையும் குறிப்பதாகக் கொள்ளப்பட்டன. இவ்வடிவங்களைக் கண்டவுடன் பொருள் இன்னது என்று அறிந்து கொள்ள முடியும். ஆனால், ஒவ்வொரு படமும் ஒவ்வொரு பொருளின் நிலையை அல்லது செயலைக் காட்டக் கூடுமேயல்லாமல் எண்ணினையோ வேற்றுமையையோ காலத்தையோ காட்டாது. எனவே, பல்வேறு வகையான கருத்துகளைத் தெரிவித்தல் இவ்வகை எழுத்துகளால் இயலாது எனவும் கூறுகிறார். 
 
கருத்தெழுத்துகள் பல காலம் வழக்கில் இருந்ததால் வரைந்துள்ள பொருளைக் குறிக்காமல் சில இடங்களில் கருத்தை மட்டும் குறிக்கவும் உபயோகப்பட்டன. மேலும், சூரியனைக் குறிக்க அதன் உருவம்  வரைகிறோம். அதை சூரியன் என்ற பெயரால் அழைக்கிறோம். பலநாள் வழக்கில் இருந்ததால் அவ்வுருவம் வரைந்தபோது சூரியனைக் குறிப்பதோடு அல்லாமல் சூ என்ற குறுகிய ஒலியையும் குறித்தது. இதேபோன்று முன்னர் பல பொருள்களைக் குறிக்க அவற்றின் உருவங்களை வரைந்தனர். அவை நாளடைவில் சொற்களின் முதல் ஒலியை மட்டும் குறிக்கவும் தலைப்பட்டன. இதுபோன்ற வளர்ச்சிகளால் ஒலி எழுத்துக்கள் தோன்றின.
 
சித்திர எழுத்துக்களிலும் கருத்து எழுத்துகளிலும் இட்டுள்ள குறிக்கும், அது குறிக்கும் பெயருக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. ஆனால், ஒலி எழுத்துகள் பொருளையோ கருத்தையோ குறிக்காமல் குறிப்பிட்ட ஒலியைக் குறித்தன. இந்நிலையில்தான் குறிக்கும் ஒலிக்கும் நேர்முகத் தொடர்பு ஏற்படுகிறது. இப்பொழுதுதான் மொழிவதைக் குறிக்க எழுத்து ஏற்பட்டது என்று கூறமுடியும். இம்முறையில் உருவத்துக்கும் ஒலிக்கும் எவ்விதத்தொடர்பும் இல்லாவிட்டாலும் அவ்வுரு அவ்ஒலியை மட்டும் குறிக்க நிலைத்துவிட்டது என, ஒலி எழுத்துகளின் தோற்றப் பின்புலம் குறித்து விவரிக்கும் இரா.நாகசாமி, ஓவிய எழுத்து, கருத்து எழுத்து போன்றவற்றில் இருந்து தோன்றிய புரட்சிகரமான மாற்றமே ஒலி எழுத்தாகப் பரிணமித்தது என்கிறார்.
 
ஒரு சொல்லுக்கு ஒரு அடையாளமாக எழுதிய ஓவியம், நாளடைவில் அச்சொல்லின் முதல் ஒலிக்கு உரிய அடையாளமாக ஏற்பட்டது. ஒவ்வொரு படமும் ஒவ்வொரு கருத்தினைக் குறித்து நிற்காமல், அந்தந்த வடிவத்திற்கேற்ப ஒலியைக் குறிப்பதாகக் கருதப்பட்டது. அதாவது, முற்காலத்தில் மக்கள் ஓவியத்தின் வழியாகக் கதை சொல்லக் கற்றுப் பிறகு, ஒவ்வொரு வடிவத்தையும் ஒவ்வொரு தனித்தனிப் பொருளைக் குறிக்கப் பயன்படுத்தினர். நாளடைவில், அவ்வடிவானது பொருளைக் குறிக்காமல் ஒலியைக் குறிக்கத் தலைப்பட்டது. இத்தகைய எழுத்து நிலையினையே ஒலி எழுத்து (Acrophony / Phonography) என்கின்றனர் தொல்லியலார்.
 
அவ்வடிவு அல்லது அவ்வடிவின் திரிபு முழு ஒலியையும் குறிப்பிடாமல் முதல் அசை ஒலியை மட்டுமே குறிப்பிடுவதாகிப் பின்னர் முதல் எழுத்தளவிலேயே நின்று விட்டது. இக்காலத்தில் உள்ள எழுத்துகளெல்லாம் இம்முறைப்படி ஒரு காலத்தில் பொருள்களின் ஓவியமாக இருந்தவற்றின் திரிபு வேறுபாடுகளாகக் கருதப்படுகின்றன. இங்ஙனம், ஒரு ஒலிக்கு ஒரு அடையாளம் என்று ஏற்பட்ட நிலையே ஒலி எழுத்தாகும். இவ்வாறாக,  ஓவிய மற்றும் கருத்து எழுத்திலிருந்து ஒலி எழுத்துத் தோன்றிய மாற்றம் என்பது மொழி வளர்ச்சியின் இன்னொரு பரிணாமக் கட்டமாகும்.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

இலக்கணம் கற்றல்: வேர் அறியும் தடம்.

 
FB_IMG_1540651922685.jpg
எழுதப் படிக்கத் தெரியாத எளிய பாமரத் தமிழர்கள் பேசுகிற தமிழில் அச்சு அசலான இலக்கணம் இருக்கிறது. இலக்கணப்படி தான் பேசுகிறார்கள் என்று சொல்வதைக் காட்டிலும், அவர்கள் பேசுவதில் இலக்கணம் இருக்கிறது என்பதே சரியானது.

நாம் பேசுகிற மொழியில் என்னென்ன மாதிரியெல்லாம் இலக்கணம் இருக்கிறது என்பதைத் தான் இலக்கண நூலார் வரையறை செய்தார்கள். மொழியை ஆளாளுக்கு ஒரு மாதிரியாகவும் வேறாகவும் கையாளாமல், மொழியைத் தரப்படுத்தவும் நிலைப்படுத்தவும் உகந்த இலக்கணம் பேருதவி புரிகிறது. சமூகமாகக் கூடி வாழும் மனிதர்களுக்குப் பொதுவான மொழி வரம்பு தேவை.

மொழி ஒழுங்கு, சமூக ஒழுங்கையும் மனித நடத்தை ஒழுங்கையும் வடிவமைக்கக் கூடியது. அவ்வொழுங்கு முறையைப் பள்ளிக் குழந்தைகள் கற்பது வெறும் எழுத்து, சொல், யாப்பு என்ற நிலையினதாக மட்டும் சுருக்கிப் பார்ப்பது கூடாது.

வேறெந்த மொழியினரும் அந்த மொழியின் இலக்கணத்தை ஏன் பள்ளியில் படிக்க வேண்டும் என்கிற கேள்வியை எழுப்பவே மாட்டார்கள். நாம் தான் இப்படிக் கேட்டுக் கொண்டே இருக்கிறோம். மொழி வெறும் மொழி என்பதாக மட்டும் பார்த்தல் கூடாது.

மொழியானது வெறும் பேச்சுக் கருவி மட்டுமல்ல; அம்மொழி பேசுவோரின் அடையாளம், வரலாறு, பண்பாடு, அறிவு, அறம், அரசியல், அழகியல், படைப்பாக்கம் எனப் பன்முக வேர்களையும் கொண்டிருப்பது. மொழியே ஓர் இனத்தின் வேர். வேரை மறுக்கிற, மறந்த, இழக்கிற, இழந்த எந்தவொரு மரமும் செடியும் கொடியும் நிலைத்திருப்பதில்லை என்பதே இயற்கை விதி.

ஆக, ஒரு குழந்தை அல்லது மாணவர் இலக்கணத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பது அதன் வேரை உணர வேண்டும் என்பதே.

இந்நிலையில், ஒரு சாபக்கேடு என்னவெனில், இலக்கணத்தைப் பயமுறுத்தும் பூச்சாண்டி போல கற்றுக் கொடுக்கும் முறையினால்தான், இலக்கணம் என்பது மாணவர்களிடமிருந்து அந்நியப்பட்டுக் கிடக்கிறது.

ஆக, கோளாறு என்பது இலக்கணத்தில் அல்ல; இலக்கணம் பயிற்றுவிக்கும் முறையில் தான் இருக்கிறது.

ஒளிப்படம்:
Palani Nithiyan


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

விடுதலைக் கருத்தியலும் எதிர் மரபும்:- கார்த்திகேயன்

 
FB_IMG_1536978155535.jpg
"தமிழ் நிலமும் புது வன்குடியாதிக்க எதிர் மரபும்" என்ற மகாராசனின் கட்டுரைத் தொகுப்பு நூலை (தோழமை வெளியீடு) வாசித்தேன். நூல் பல்வேறு தருணங்களில் எழுதப்பட்ட 10 கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுப்பு.

விளிம்புநிலை மக்களின் கலகக் குரல் தாங்கிய விடுதலைக் கருத்தியலை எதிர்மரபாகக் கொண்டு வாசிப்பை நிகழ்த்துகிறது. வன்குடியாதிக்க முதலாளித்துவமும் இந்தியத் தரகு முதலாளித்துவமும் இந்திய தமிழக மக்களை எப்படிச் சுரண்டுகிறது என்பது கட்டுரைகளின் உட்கிடக்கை.

இந்திய தேசியம் என்பது ஒரு பெருங்கதையாடல் என்பதனையும் அது எப்படி மொழிவாரித் தேசியங்களை தேக்கநிலைக்கு உட்படுத்தி மீளவிடாதபடி முடக்குகிறது  என்பதையும் தமிழகச் சூழலில் போதிய சன்றாதாரங்களுடன் விவரிக்கிறது.

இந்திய தேசம் என்ற கருத்தியல் இந்து தேசமாகவும் பார்ப்பனியக் கலாச்சாரமே இந்தியக் கலாச்சாரம் என்ற கோணத்தில் அன்றைய அறிவுஜீவிகளால் முன்வைக்கப்பட்டு தொடர்ந்து பரப்பப்பட்டு அவை புனிதப் படுத்தப்பட்டதையும் தெளிவான சான்றாதாரங்களோடு விளக்க முயல்கிறது. 

பின்னைக் காலனித்துவம் மார்க்சியப் பின்புலத்தில் எளிமையாக விளக்கம் பெற்றுள்ளது. பின்காலனியம் என்ற சொல்லுக்கு மாற்றுச் சொல்லாக புது வன்குடியாதிக்கம் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்.

முல்லைப் பெரியாரணையின் மீதான நூலாசிரியரின் வரலாற்றியல் பார்வையிலான வாசிப்பில் பொதுவுடைமைக் கட்சிகளில் தரகுமுதலாளித்தனப் பாங்கு உள்ளார்ந்து இயக்கம் பெற்றுள்ளதை சுட்டிக்காட்டுகிறார்.

கட்டுரைகளில் பேசுபொருளாகியுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான சிங்கள பெளத்த - இந்திய நாட்டின் கூட்டு வல்லாதிக்க நடத்தைகள்மீது வெளிச்சம் பாய்ச்சுகிற எழுத்துகள் ஊன்றி கவனங்கொள்ளப்பட வேண்டியவைகளாக இருக்கின்றன.

ஆசிரியரின் எளிமையனான மொழிநடை வாசிப்பை இலகுவாக்குகிறது. இந்தியச் சூழலில் பின் காலனியத்தை உள்காலனியம் வெளிக்காலனியம் என ந.முத்துமோகனும் ஹெச்.ஜி. ரசூலும்  வகைப்படுத்துவர். இந்தியச் சமூகத்தின் மீதான இந்த இரட்டைக் காலனிய ஒடுக்குமுறைகளையும் பிரதி பேசுபொருளாக்கியிருந்தாலும்  பின்னைக் காலனியக் கோட்பாட்டின் விரிவான பார்வையில் கட்டுரைகளில் வாசிக்கப்பட்ட பொருண்மைகள் நோக்கப்படவில்லை.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

ஏறு தழுவுதல்: பார்ப்பனியத்தை எதிர்க்கும் பண்பைத்தான் உள்ளும் புறமுமாகக் கொண்டிருக்கிறது :- ஆசைத்தம்பி

 
FB_IMG_1532963370327.jpg
மதுரையில் புத்தகக் கண்காட்சியில் நுழைந்த பொழுது இராமனாய் எனது சீதையைத் தேடித் போனேன். ஆனால், திரும்பி வரும்பொழுது ஏகப்பட்ட காதலிகளோடு கோபியர் கண்ணனாய்த் திரும்ப வர வேண்டியதாயிற்று. மனதின் சஞ்சலத்தை வெற்றி கொள்ள இயலவில்லை. கருத்துப் பட்டறை பரமன் என்னைக் கண்டவுடன் ," உங்கள் ஏர் மகராசன் புத்தகம் ஏறு தழுவுதல் புத்தகம் இருக்கிறது என்று கையில் கொடுத்தார்.

புத்தகத்தின் அட்டைப் படமே திமிறி வரும் காளையாகத் தமிழ்ப் பண்பாடும், அதை ஏறு தழுவும் தமிழ் குடியும், ஏர் மகாராசனும்தான் தெரிந்தார்கள். அணிந்துரையில் நுழைந்த பொழுது முனைவர் முரளி ," ஒரு குழுவின் பண்பாட்டுச் செயல் பிறரின் வாழ்க்கையைப்  பாதிக்காதபோது , அக்குழுவின் பண்பாட்டுத் தளத்தில் புகுந்து அடக்குவது கொடுமையான மேலாதிக்கமாகும் " என, இந்தப் புத்தகத்தின் நோக்கத்தை ஒரு வரியில் கூறி ஏர் மகாராசனிடம் நம்மை ஒப்படைத்தார் .

மனிதனின் முதல் உணர்வு பசி. முதல் தேடல் உணவுக்கானது . முதல் உற்பத்தி விவசாயம் . முதல் செல்வம் மாடு . முதல் பண்பாடு உழவர் பண்பாடு  எனப் பெருமை பொங்க உழவர் மகன் ஏர் மகாராசன் பல்வேறு ஆதாரங்களுடன் எடுத்துரைக்கும்போது பிரமிப்புடன் அவர் கையைப் பிடித்துக் கொண்டு நூலினுள் நுழைந்தேன் .

வரலாறு ஓரளவு அறிந்தவன் நான் . நான் அறியாதது இன்னும் நிறைய உள்ளது என்பதை எடுத்துரைத்தது இந்தப் புத்தகம் .

வேட்டையாடுதலால் கிடைத்த அதிகளவிலான விலங்குகள் உபரியாய் இருந்த சூழ்நிலையில், விலங்குகளைப் பழக்கி அவன் எடுத்த முயற்சிகள்தான் கால்நடை வளர்ப்பு . முதலில் அவன் யானை, மான்களை வளர்ப்பு விலங்குகளாக எடுத்த முயற்சிகளைச் சங்க காலப் பாடல்களில் இருந்து எடுத்துக் காட்டினார் .

இனக் குழுக்களின் அடையாளமாகக் குறிஞ்சி, முல்லை , நெய்தல் , பாலை மக்கள் பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்ட போது , மருத நிலத்தின் வேளாண் மக்கள் மட்டும்தான் உழவர், உழத்தி என்னும் பொதுப் பெயர்களில் அழைக்கப்பட்டதைச் சுட்டிக் காட்டினார் .

ஏர் பூட்டி உழுவதே பாவம் என்றார்கள் பார்ப்பனர்கள். பார்ப்பனர்கள் உழவுத் தொழில் செய்தல் பாவம் என்றது மனு சாஸ்திரம் . பசுவை அடையாளமாகக் காண்பார்கள் அவர்கள் . ஆனால் நாமோ காளை மாடுகளைத்தான் பண்பாட்டு அடையாளமாகக் காண்கிறோம் என்கிறார் அவர் . தமிழ் நாட்டு மரபும்  பார்ப்பனியத்தை எதிர்க்கும் , மறுக்கும் பண்பைத்தான்  உள்ளும் புறமும்  கொண்டிருந்தது என்பதை  அழுத்தந் திருத்தமாகப்  பதிவு  செய்திருக்கிறார்.

அறுவடைக் காலம் வரையில் ஓய்விலிருக்கும் காளைகள் தினவுடன் துள்ளலுடன் மிடுக்குடன்தான் இருக்கும் . அந்தத் தினவு வெளிப்பாடுகளை மிக அழகாக விவரித்துள்ள இந்த உழவுப் பேராசிரியர்  அந்தத் தினவையும் துள்ளல்களையும் மனிதர்களின் ஏறு தழுவல்கள் நிறைவு செய்கின்றன என்கிறார் . இதை அவர் மொழியிலேயே கேளுங்களேன்.

" மனிதர்களும் மாடுகளும் மாறி மாறி உழைக்கிறார்கள் .உழைத்துக் கொண்டே இருக்கிறார்கள் . அவர்கள் உழைப்பினால் உடலும் உள்ளமும் தேய்ந்து போகின்றன . சோர்ந்து போகின்றன . இந்தத் தேய்வையும் சோர்வையும் போக்கிக் கொள்ள மனிதர்களுக்கும் மாடுகளுக்கும் ஓய்வு தேவைப்பட்டது . அந்த ஓய்வு என்பது உணவோ உறக்கமோ அல்ல" . உள்ளம் மகிழும்படி , உற்சாகம் ஏற்படும்படியான பொழுது போக்குகள் . அந்தப் பொழுது போக்குகள்தான் மனிதக் காளைகளுக்கும் மிருகக் காளைகளுக்குமான ஏறு தழுவுதல் .

இந்த ஏறு தழுவுதல் என்பது சிந்து சமவெளி நாகரிகத்தில் இருந்திருக்கிறது என்பது அங்கு கண்டெடுக்கப்பட்டுள்ள கல் முத்திரையிலிருந்து தெரிகிறது . கி.மு. 1500 ஆம் காலத்தைச் சேர்ந்த பல்வேறு தடயங்கள் மூலம் ஏறு தழுவுதல்  3000-3500  ஆண்டுக்கான பண்பாடு என்கிறார்.

மாடுகளுக்கும் மனிதருக்கும் இடையே இருக்கும் அன்பை ,பரிவை,  பாசத்தை மாட்டுப்பொங்கலில் காணலாம் என்று அதை விவரிக்கும் நிகழ்ச்சிகள் மனம் நெகிழ வைப்பன.

இறுதியாக நிலவுடைமைச் சமூகத்தில் உழவர் மக்களின் நிலங்கள் பார்ப்பனர்களால் பறிக்கப்பட்ட அவலத்தையும், அவர்களையும் அவர்களின் பண்பாட்டு அடையாளங்களையும் இழிவு செய்யும் போக்கையும் சுட்டிக் காட்டுகிறார் .

இப்போதெல்லாம் கோயிலைப் பார்க்கும்போது அதன் அஸ்திவாரத்தில் புதையுண்ட உழவர் மக்களின் நிலங்களும் பண்பாடும்தான் தெரிகிறது.

மொத்தத்தில் வரலாற்றின் எந்தப் பக்கத்தைத் திருப்பினாலும் பார்ப்பனியத்தின் வஞ்சகமும் துரோகமும் தன்வசம் ஆதிக்கப்படுத்துதலுமே முன் நிற்கின்றன . அவற்றை எதிர்த்து நிற்கும் வீரனாகத் தமிழர் பண்பாடு மட்டும்தான் நிற்கிறது .

இறுதியாக, முரளியின் அணிந்துரையே இந்தப் புத்தகத்துக்கு முடிவுரையாக ஆகிறது . "ஒரு குழுவின் பண்பாட்டுச் செயல் பிறரின் வாழ்க்கையைப் பாதிக்காத போது , அக்குழுவின் பண்பாட்டுத் தளத்தில் புகுந்து அடக்குவது கொடுமையான மேலாதிக்கமாகும்” . இதை எல்லோரும் எப்போதும் நினைவில் வைத்துக் கொள்வது நலம்.

 உழவருக்காகவும் விவசாயத்திற்காகவும் குரல்கள் அதிகம் ஒலிக்கின்ற இந்த சமயத்தில், தமிழ்ப் பண்பாட்டுக்காகக் குரல் கொடுப்போர் அதை முற்றிலும் அறிந்து குரல் கொடுக்க இந்தப் புத்தகம் உதவும் . ஏனெனில், ஏதும் அறியாமல் ஒன்றுக்குக் குரல் கொடுத்தால்  அது நிலைக்காது என்பதை வரலாறு காட்டி இருக்கிறது .

வாழ்த்துக்கள் மகாராசன்.

திரு ஆசைத்தம்பி அய்யாவின் மதிப்புரை.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

வைதீகத்தின் எதிர் மரபே நாட்டுப்புற மரபு:

 
 

20180810_223940.jpg

புதைவிடத்தில் பால் தெளிக்கும் சடங்கைக் குறித்துப் பலதரப்பட்ட எடுத்துரைப்புகள் இருக்கின்றன. சமூகத்தில் உற்பத்தி - மறு உற்பத்தி சார்ந்த சடங்கியல் கூறுகள் எல்லாக் காலத்திய சமூக அமைப்பிலும் நிலவியவைதான். அவை பெரும்பாலும் நம்பிக்கை சார்ந்த அல்லது புரிதல் சார்ந்த அல்லது படிப்பினை சார்ந்த போலச் செய்தல் நிகழ்வுகள்.

அவை அறிவியலாகவோ அல்லது பகுத்தறிவாகவோ கூட இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம். அத்தகைய சடங்குகள் எத்தகைய உற்பத்தி முறையை - உற்பத்தி உறவுகளைக் கொண்டிருக்கிறதோ அல்லது கொண்டிருந்ததோ அதற்கு ஏற்றார் போலவும் அதனைப் போலச் செய்வதாகவும்தான் அமைந்திருக்கும். இத்தகைய உற்பத்தி சார்ந்த சடங்குகள் வைதீகச் சடங்குகளிலிருந்து மாறுபட்டவை; வேறுபட்டவை; எதிர்த்தன்மை கொண்டவை.

வைதீகத்திலிருந்து வேறுபட்டதான இம்மாதிரியான சடங்குகள்தான் நாட்டுப்புறச் சடங்குகள் எனப்படுகின்றன. நாட்டுப்புறச் சடங்குகளைக் கொச்சைப்பொருள் முதல்வாதம் பேசியே அவற்றை வைதீகத்தின் பக்கம் தள்ளுவதும், அவற்றுக்கு வைதீகச் சாயம் பூசுவதும் வைதீகத்தை இன்னும் பலமுள்ளதாகவே மாற்றும். 

வைதீகத்திற்கு எதிர்மரபாக இருந்து கொண்டிருக்கும் நாட்டுப்புற மரபுகளைக் கை கழுவுதல் என்பதும் வைதீகத்திற்கான சேவையே தவிர வேறல்ல. நாட்டுப்புற மரபுகளே வைதீகத்திற்கான எதிர்ப்பு மரபு என்பது இறுதி வாதமல்ல. வைதீகத்தை எதிர்ப்பதற்கு நாட்டுப்புற மரபுகளைத் துணை சக்திகளாகக் கொள்ள வேண்டியதும் பரிசீலிக்க வேண்டிய ஒன்று என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வைதீகத்தையும் நாட்டுப்புற மரபுகளையும் வேறு வேறாகப் புரிந்து கொள்வதில் இன்னும் போதாமைகள் இருப்பதாலேயே நாட்டுப்புற மரபுகளையும் கொச்சையாகவே கருதும் போக்கு இருந்து கொண்டிருக்கிறது. நாட்டுப்புற மரபுகள் பகுத்தறிவு என்றோ அறிவியல் என்றோ முழுமையாக ஏற்க முடியாது. அதே வேளையில், அவை வைதீகத்திற்கான எதிர்மரபாக இருப்பவை என்பதை மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும்.

இறந்து போன ஒருவருக்கு மாலையிடுவதும், நினைவிடம் இருப்பதும், நினைவஞ்சலி செலுத்துவதும் கூட ஒரு சடங்கு தான். அதேபோல, புதைவிடத்தில் பால் தெளிப்பதும் கூட ஒரு சடங்குதான்.

நாட்டுப்புறங்களில் நிகழ்த்தப்படுகிற இறப்புச் சடங்கு வைதீகத்திற்கு எதிராகவும் வேறாகவும் இருக்கிறது. இதைக் குறித்த பெருங்கட்டுரை நிறைவு பெறாமல் இருக்கிறது. கூடிய விரைவில் எழுதி முடிக்கிறேன்.

இறுதியாக ஒன்று, வைதீகத்தையும் நாட்டுப்புற மரபுகளையும் வேறு வேறாகப் பாருங்கள். அறிஞர்கள் தொ.பரமசிவன், ஆ.சிவசுப்பிரமணியன், இ.முத்தையா ஆகியோரது பண்பாட்டியல் நூல்களைப் படியுங்கள்.

பால் தெளிப்புச் சடங்கியலைக் குறித்துப் பேராசிரியர் சே.கோச்சடை அவர்கள் பின் வரும் குறிப்பைத் தருவது கவனிக்கத்தக்கது.

நாடோடிகளாக இருந்த ஆரியர்க்குச் சொந்தமாக நிலமில்லை.எனவே அவர்கள் இறந்தவர்களைப் புதைப்பதில்லை .புதைத்துவிட்டு இடம்பெயர்ந்து சென்றால் நாய் நரி பிணத்தைத் தோண்டித் தின்றுவிடும்.எனவே அவர்கள் பிணத்தை  எரித்துச் சாம்பலை ஓடும் நீரில் கரைத்தனர் .

ஆனால்,திராவிடர்க்கும்,  பழங்குடியினத்துக்கும் சொந்தமாக நிலம் இருந்தது. அதில் தங்கி உழவுத்தொழிலைச் செய்தனர்.எனவே தம் முன்னோர் இறந்தால் அதில் புதைத்து நடுகல் நட்டனர். . அந்த நிலத்தில் தொடர்ந்து வேளாண்மை செய்வது வழக்கம்.  அவ்வப்போது அங்கே சென்று வந்தனர்.

முதல் நாள் புதைத்த இடத்தை நாய் நரி தோண்டியுள்ளதா என்று பார்க்கவே மறுநாள் காடாத்தப் (காடு ஆற்றுதல்) போவது வழக்கம்.அப்போது புதைகுழியை மெழுகி,மேலே நடுவில் பள்ளம் பறித்து, அதில் நவதானியங்களை விதைத்து எண்ணெய், இளநீர்,மஞ்சள் ,பால் தண்ணீர் விட்டு பொறிகடலை,    இளநீர் தேங்காய் வாழைப்பழம்  வைத்துப் படைப்பார்கள். அவ்விதைகள் பழுதின்றி முளைத்தால் நல்லது நடக்கும் என்று நம்பினார்கள்.இரண்டாம் நாள் , தென்காசிப் பக்கம் கோழி அறுத்துச்சமைத்து அங்கேயே சாப்பிடுவார்கள். வீட்டுக்கு வந்ததும் கொள்ளும், கருப்பட்டி  அல்லது வெல்லமும்  சேர்த்துக் காய்ச்சிய கொள்ளுக்கஞ்சியும் பச்சரிசிப் பிட்டும் சாப்பிடுவார்கள். இந்தப் பழக்கம் ஊர்,சாதியைப் பொருத்து அங்கங்கே சிறிது வேறுபட்டாலும்,பொதுவாக உள்ளது நவதானியங்களை விதைத்துப் பால் தெளிப்பதாகும். இந்தப் பழக்கம் பார்ப்பனர் இப்போது நமக்குச்  செய்யும் சடங்குகளிலிருந்து வேறுபட்டதாகும்.இது விதைப்போடும் விளைச்சலோடும் தொடர்புடையது.

முளைப்பாரித் திருவிழா ஆடிமாதம் விதைக்கவுள்ள விதைகளின் முளைப்புத் திறனைச் சோதித்தறிய நடத்தப்படும் சடங்கு. அப்படித்தான் புதைகுழியில் விதை தூவி பால் நீர் ஊற்றுவதும் என்று கருதுகிறேன். மற்றபடி தமிழகச் சிற்றூரில்  நடக்கும்  இறப்புச் சடங்கு ஆன்மா,  சொர்க்கம் தொடர்புடையதில்லை.  இதிலும் மூடநம்பிக்கை இருந்தால் மாற்றவேண்டும். இறப்பு நிகழ்ச்சியில் வெறும் அறிவுத் தளத்தில் நின்று பேசமுடியாது.மூளையும்  மனமும் இணனந்ததே வாழ்க்கை. இறப்பு வீட்டில் மனமே/உணர்வே ஆதிக்கம் செலுத்தும். 

கவிஞர் வைரமுத்து ஓர் உழவர் குடி மனநிலையில் இருந்துதான் கலைஞர் கல்லறையில் பாலூற்றி இருப்பார் என்று நம்பலாம்.

ஏர் மகாராசன்


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

நா.வானமாமலையின் பள்ளுப் பாட்டு ஆராய்ச்சி - நூல் மதிப்புரை :- இரா.முத்துநாகு, இதழியலாளர்.

 
Pallupattu.jpg
 


         தமிழகத்தில் துள்ளிதமாக 306 ஆண்டுகள் ஆண்ட விஜயநகர நாயகர் ஆட்சியில் இசுலாமிய, கிறித்தவ தெலுங்கு, சமற்கிருத இலக்கியம் வளர்ந்தது. ஆனால் தமிழ் இலக்கியம் சுத்தமாக 'இல்லை' என்ற சொல்லை நீக்கியதே பள்ளு இலக்கியம். இந்த இலக்கியம் மன்னனை பாடவில்லை. மக்களுக்கு உணவு கொடுத்த உழுகுடி வேளாண் பெருமக்களை கதை மாந்தர்களாக்கி பாடியுள்ளது.

             பள்ளு இலக்கியத்தை ஆய்வு செய்து பேரா.கேசவன் உள்பட பலரும் எழுதியுள்ளார்கள். ஆனால் பேராசிரியர் அல்லாத சமூக ஆசிரியரான பொதுவுடமை சித்தாந்ததை தமிழ் மண்ணில் இலக்கிய வடிவமாக கொடுத்த வானமாமலை அவர்கள் ''சரஸ்வதி'' என்ற சிற்றிதழில் பள்ளுப்பாடலை பத்துக்கும் மேல் பட்ட தலைப்புகளில் நுண்மான் நுலைபுலமாக ஆய்வு செய்து வடித்துள்ளார். இந்த கட்டுரைகள் இதழிலே முடங்கிக் கிடந்ததை நூல் வடிவமாக்கி வானமாமலைக்கு புகழாரம் சூட்டியுள்ளார் என்பதை விட தமிழுக்கும் அதன் நிலத்தையும் பெருமைப்படுத்தி இருக்கிறார் தேனி மாவட்டம் பெரியகுளம் அரசு பள்ளிப் பள்ளி ஆசிரியர் முனைவர் ஏர். மகாராசன். இவர் பள்ளியில் சிறந்த மாணவர்களை உருவாக்கும் பங்குடன், பத்துக்கு மேல்பட்ட நூல்களை எழுதி நம் போன்ற 'சமூக' மாணவர்களை உருவாக்கி வலம் வருகிறார்.

             ''சங்க இலக்கியமான புறாநானூறு, சிலப்பதிகாரம், சமற்கிருத தழுவல் இலக்கியமான அறியப்படும் கம்பன் எழுதிய ராமாயாணம் தவிரத்து உழவனை பாடிய தமிழ் இலக்கியம் முக்கூடல் பள்ளு மட்டுமே. பள்ளுப் பாடல் முழுக்க முழுக்க உழு குடிகளான வேளாண்மை சமூகத்தை மையமாக வைத்து பாடப்பட்ட இலக்கியம். பாண்டிய மண்டலமாக அறியப்படும் மதுரை நாயக்கர் எல்லையில் உள்ள திருநெல்வேலி சீமையே இதன் களம். வேளாண்குடிகளான உழைக்கும் குலமாக இன்றுவரை அறியப்படும் பள்ளர் குலத்தினரே இந்த பள்ளு இலக்கியத்தின் கதாநாயகர்கள்.''                         'பள்ளு இலக்கியம் உருவாக காரணம், 'நாயக்கர் ஆட்சியில் ஏற்பட்ட பஞ்சத்தாலும் ஆட்சியில் பார்ப்பன ஆதிகம் அதிகமானதாலும் மன்னனை பாடிய புலவர்கள் மக்களை தேடிப் பாடினார்கள். அதிலும் பண்ணை முதலாளியை பாடவில்லை பண்ணையில் வேலை பார்த்த பள்ளனையும், பள்ளியும் பெருமையாக பாடியுள்ளது இலக்கியம். இந்த இலக்கியம் கூத்து வடிவமாக மக்களிடம் செல்வாக்கு அடைந்தது. அதனை எதிர்த்துள்ளது நாயக்கர் அரசு. ஆனாலும் மக்களிடம் இந்த கூத்து வடித்தின் செல்வக்கை குறைக்க முடியாமல் போனதால் இதை வைணவ தளங்களான சீரங்கம், திருகோட்டியூர், சீவிலிபுத்தூரில் பாடி ஆடிட ஆட்சியாளர் மனம்   போன போக்கில் கம்பன் எழுதிய ராமாயாணம் போல் பள்ளுப் பாடலை தழுவி குருகூர் பள்ளு கோயில் ஒழுகு என மாற்றி எழுதியுள்ளனர்' என வானமாமலை குறிப்பிடுவத அச்சுப் பிசுகாமல் தந்துள்ளார் ஏர். மகாராசான்.

                'பள்ளுப்பாட்டின் வளர்ச்சி என்ற கட்டுரையில் பட்டியல் குலத்தினர் கோயில் நுழைவுக்கான கருவே இந்த பள்ளுப்பாடல் தான். சீரங்கத்தில் பள்ளுப்பாடலுக்கு எதிர்பு கிளம்ப சீரங்க பெருமானே அரயர் (நடன மாதர்) என்பவதை பள்ளனிடமும் பள்ளியிடமும் பாடல் கற்றுவரச் சொன்னதாகவும் அதை கற்று வந்த அரயர் சீரங்க பெருமாள் முன் ஆடியதாகவும் கோயில் ஒழுகு சொல்லுகிறது. இதை தனது ஆய்வில் கோயில் நுழைவு போராட்டம் என்பது பிரிட்டீஷ் இந்தியாவுக்கு முன்பே நடந்திருக்கிறது அது தான் பள்ளுப்பாடல்' என விவரிக்கிறார்.

              சோழர் ஆட்சி திராவிட நாடுகள் தாண்டி வளர்ந்த போது இடங்கலை வலங்கலை பிரச்சனை நீடித்தது. இதன் நீட்சியாக விஜயநகர ஆட்சியில் தொடர்ந்தது. இது இருக்க வைணவ சைவ மார்க்க சண்டையும் சோழர் கால ஆட்சியில் போல் நடந்தது. வைணவ சைவ சண்டைகளில் உழு குடிகள் எப்படியெல்லாம் சீப்பாட்டார்கள் என்பதை நூல் விவரிக்கிறது.

                 'பள்ளு இலக்கியத்தில் அரசின் பண்ணையாள் (முதலாளி) ஏச்சு பேச்சாக ஏளமாக உள்ளதை அருமையாக சுட்டிக்காட்டி படிப்பவர்களை பொதுவுடமை சித்தாந்த சிந்தனையை நம் மூளைக்குள் முனைப்பு காட்டுக்கிறார் ஆசிரியர் . முதலாளிகளை நகையாடுவதை   கிராமங்களில் இன்றும் கோயில் விழாக்களில் போடப்படும் ராசா ராணி ஆட்டத்தில் 'ராசா வேடமிட்டவர் தோட்ட முதலாளியாகவும், உழவனாக கோமாளி வேசமிட்டவரும் சிறுகதையாடல் வைத்து பாடலோடு வசனம் இருக்கும் அதில் முதலாளியைப்பார்த்து ''ஏ மாப்பிள்ளை, ஏலே தோட்டகார வெண்ணை உனக்கென்ன பிறங்கையை கட்டிக்கிட்டு வரப்பில போவ ... குனிஞ்சு வேலை செய்தாத்தாண்டா விளையும்' என்றும் நாட்டாமையை 'ஏ மாப்பிள நாட்டாமை லூசு நாட்டாமை செவுட்டு பயலே' இப்படியான வசனங்களை கோமாளி பேசுவார். இந்த வசனங்கள் பள்ளுப்பாட்டின் நீட்சியாகவே கிராமிய கலைகளை ஆய்வு செய்த மறைந்த நாட்டுப்புறவியல் பாடகர் பேரா.குணசேகரன் குறிப்பிடுவார்.

                     அறுபத்தி ஐந்து பக்கத்தில் சமூகத்தின் தேவையை அறிந்து பள்ளுப் பாடலின் ஆழத்தை வழங்கி தமிழை தமிழ் சமூகத்தை செழுமைப் படுத்தியுள்ளது இந்த நூல். நல் பணியை செய்த திரு. ஏர். மகாராசனை எனது ஆசான் தமிழ்குடிமகன் சொல்லில் வாழ்த்துவதென்றால் பெரும்பேராசியர் வாழ்க எம்மான் வையகத்தே என வாழ்த்துவோம்.   

பதிப்பகம் ; ஆதி , 9994880005, விலை உரூபா - 60


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 பிள்ளையார் சுழியும் எழுத்துப் பண்பாட்டு மரபும்.

 
FB_IMG_1533310404853.jpg
எதையும் எழுதத் தொடங்கும் போது " உ" என இடுவது தமிழர்களின் பெரு வழக்காக இருந்து கொண்டிருக்கிறது.
தமிழில் உ என்பதைப் பிள்ளையார் சுழி எனப் பலரும் கருதுகிறார்கள். உண்மை அதுவல்ல.
தமிழ் மரபில் உ என்பது உலகம் என்பதன் சுருக்கக் குறியீடு. தமிழர்கள் தமது சிந்தனை மரபை உலகளாவிய கண்ணோட்டத்தில் தான் பார்த்தனர். உலகியல் வழக்கோடும் உலக மேன்மைக்காகவும் பரந்த கண்ணோட்டத்தோடு தமது சிந்தனை மரபை வெளிப்படுத்தியுள்ளனர். அதனால் தான் தமிழில் தோன்றிய பெரும்பாலான இலக்கியங்கள் உலகம் என்னும் சொல்லை முதலாகக் கொண்டு அமைந்துள்ளன.
குறளும் கூட உலகு என்னும் சொல் முடிகிற முதல் குறளைக் கொண்டிருக்கிறது. கம்பராமாயணம், பெரிய புராணம் போன்ற இலக்கியங்களும் உலகம் யாவையும் தாமுள வாக்கலும் என உலகம் என்னும் சொல்லை முதலாகக் கொண்டு பாடப்பட்டுள்ளன. நிலமும் பொழுதும் முதல் பொருள் என்கிறது தொல்காப்பியம்.
உலகுக்கு அல்லது உலகை முதல் பொருளாகக் கருதும் மரபுத் தொடர்ச்சியின் நீட்சிதான் உ என்பதாகும். நமது முன்னோர் அவ்வாறே கருதினர். அதாவது உலகைக் குறிக்க உ எனப் பொதுவாகத் தொடங்குதல் எழுத்துப் பண்பாட்டியலின் வெளிப்பாடு. இதற்கும் பிள்ளையார் சுழி என்பதற்கும் தொடர்பு கிடையாது.
இன்னும் சொல்லப் போனால் , உ என்பது பிள்ளையார் சுழி அல்ல , உலகம் என்பதன் சுருக்கக் குறி ஆகும்.
இப்பண்பாட்டியல் செய்கையைப் பார்ப்பனியம் பிள்ளையார் சுழியாகப் பறைசாற்றியது. அதாவது , பிள்ளையாரை வணங்கிய பின்பு காரியம் செய் என்னும் பார்ப்பனிய வழிபாட்டு மரபோடு நமது தமிழர் எழுத்தியல் பண்பாட்டு மரபையும் இணைத்து விட்டார்கள்.
ஆகவே , உ என்பது சமயக் குறியோ பிள்ளையார் சுழியோ அல்ல, உலகம் என்பதன் சுருங்கிய குறி. இதுவே தமிழரின் எழுத்துப் பண்பாட்டியலின் குறி என்பதைப் பரவலாக்கம் செய்திட வேண்டும்.
( உ என்பதைக் குறித்துத் திராவிடர் விடுதலைக் கழக முகநூல் பக்கத்தில் பதிவான "பிள்ளையார் சுழி வந்த கதை" கட்டுரை குறித்த எமது பதிவு இது.)
பிற்சேர்க்கை .
‘பிள்ளையார் சுழி’ வந்த கதை !
பல்லவ நாட்டை ஆண்ட நரசிம்மவர்ம பல்லவனுடைய படைத் தலைவன் (சேனாதிபதி) பரஞ்சோதி வாதாபி நகரை வென்று - அந்நாட்டரசன் புலிகேசியைக் கொன்று, நகரச்சொத்துக்களை கொள்ளையடித்து வந்தான். அவன் கொண்டு வந்த பொருள்களின்
மூட்டைகளை பிரித்துப் பார்த்தபோது அதில் யானைத் தலையுடைய ஒரு பொம்மையும்இருந்ததைக் கண்டனர். அந்த பொம்மையை புலிகேசி அரண்மனையில் வேடிக்கைக்காக வைத்திருக்கிறான். அதைத்தான் பிள்ளையார் என்கின்றனர் - முழுமுதற் கடவுள்
என்கின்றனர். இப்போர் கி.பி.641இல் நடந்தது.
அப்பொழுது மூட்டை முடிச்சுகளில் வந்த பொருள்களில் பிள்ளையாரும் ஒன்று. அதன்படி பார்த்தால் பிள்ளைாயர் தமிய்நாட்டிற்கு வந்து 1375 ஆண்டுகள்தான் ஆகிறது. ஆகவே,
இடையில் வந்த பிள்ளையார் - முதல் கடவுளாக எப்படி ஆனார்? அதுதான் போகட்டும்; கல் உருவத்திற்கு சுழி ஏது? அதனால் என்ன நன்மை? ஒரு விஷயம் எழுதுகிறோம் என்றால்பிள்ளையார் சுழி போட்டுத்தான் எழுத வேண்டுமா?
அக்காலத்தில் ஓலைச்சுவடிகளில் எழுத்தாணிகளைக் கொண்டு எழுதினார்கள். அறிவு வளராத காலம் - பேனா, பேப்பர் இல்லாத நேரம், ஆணியைக் கொண்டு ஓலையில் எழுதுவது கடினம். அதற்கு ஏற்றாற்போல் ஓலை பக்குவப்படுத்தப்பட்டதாக இருக்க வேண்டும். எழுத்தாணியும் கூர்மையுள்ளதாக இருக்க வேண்டும். இவை இரண்டும் சரியில்லை என்றால் எழுத முடியாது. பக்குவமற்ற ஓலை முறிந்துவிடும்.
கூர்மையில்லாத எழுத்தாணி ஓலையில் தகுந்தாற்போல் கீறலை விழச் செய்யாது. பொதுவாக எழுத்துக்களை எழுத வேண்டுமென்றால் நேர்க்கோடுகள் - வளைவுக் கோடுகள் சேர்ந்துதான் எழுத்து முழு வடிவம் பெறுகிறது. எனவே வளைவுக் கோடும் - நேர்க்கோடும் சரியாக எழுத ஓலையும் - எழுத்தாணியும்
தகுதியுள்ளதாக இருக்கிறதா? என்று முதலில் சோதிக்க வேண்டியது எழுத்தாளரின்கடமையன்றோ? அதன்படி ஓலையின் முகப்பில் ஓர் வளைவு கோடும் - ஓர் நேர்க்கோடும் இழுத்து, ‘உ’ என்ற வடிவத்தை உண்டாக்குகிறார். அது பிள்ளையார் சுழியும் அல்ல - பிள்ளையாரும் அல்ல. ஓலைச்சுவடியில் எழுத்தாணி கொண்டு எழுதிய காலத்தில் ‘உ’ என்ற தலைப்புக் குறி பயன்பட்டது. இப்பொழுதோ ஊற்றுப் பேனாவும், ‘பால் பாயின்ட்’ பேனாவும், பேப்பரும் வந்த பிறகும் ஏனோ அந்தச் சுழி!
- பெரியார் முழக்கம்.(01.09.2016.)


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 திருக்குறளை ஆரியத்தின் குரலாகக் கட்டமைக்கும் பெரியாரியவாதிகளின் இப்போதையக் குரல் ஆரியத்திற்குத் துணை செய்யும் குரலே: மகாராசன்

 
 
20190511_114454.jpg
திருக்குறளை ஆரியத்தின் குரலாகச் சுட்டும் காட்டாறு பதிவு பின்வருமாறு:

//..தமிழர்களின் பகுத்தறிவுக்கும், சமுதாயக் கேடு நீக்கலுக்கும் அய்ந்து பேர்கள் எதிரிகளாவார்கள்.

1.வள்ளுவன், 2. தொல்காப்பியன், 3. கம்பன், 4. இளங்கோவன், 5. சேக்கிழார். இந்த அய்ந்து பேர்களுக்கும் பகுத்தறிவில்லை என்பதோடு இவர்கள் இனஉணர்ச்சி அற்ற இனவிரோதிகளாக ஆகி விட்டார்கள்.

...வள்ளுவன் அறிவைக் கொண்டு ஒரு நூல் (குறள்) எழுதினான் அதில் மூடநம்பிக்கை, பெண்ணடிமை, ஆரியம் ஆகியவை நல்லவண்ணம் புகுத்தப்பட்டிருக்கின்றன. குறளுக்கு மதிப்புரை கொடுத்தவர்களில் சிலர் “குறள் வேத, சாஸ்திரங்களின் சாரம்” என்று கூறியிருக்கிறார்கள். குறளை ஊன்றிப் பார்த்தால் அது உண்மை என்று புலப்படும்.

...தமிழனுக்கு வேண்டியது மானம், அறிவு, இனஉணர்ச்சி ஆகியவைகளேயாகும். இவற்றிற்கு மேற்சொன்ன திருவள்ளுவன், தொல்காப்பியன், கம்பன், இளங்கோவன், சேக்கிழார் ஆகிய அய்வரும் - இவர்களது நூல்களான குறள், தொல்காப்பியம், கம்பராமாயணம், சிலப்பதிகாரம், பெரியபுராணம் ஆகிய அய்ம்பெரும் இலக்கியங்களும் எந்த அளவுக்குப் பயன்படும் என்று சவால் விட்டுக் கேட்கிறேன்.
- தோழர் பெரியார், விடுதலை 90 வது பிறந்தநாள் மலர் .

குறளைத் தூக்கி எறிய வேண்டியது தான்!
...தமிழனின் வாழ்வு முறைக்குக் குறள்தான் என்று சொல்வார்கள். நாம் காட்டு மனிதனாக இருந்த வரை குறள் சரி. நாட்டு மனிதனான பின், பெண்களுக்குத் தான் அதில் கற்பு நீதி சொல்லப்பட்டிருக்கிறதே தவிர, ஆண்கள் கற்பு நீதி பற்றி அதில் ஒன்றுமில்லை. குறளைத் தூக்கியெறிய வேண்டியது தான். - தோழர் பெரியார் - விடுதலை, 15.06.1968

வள்ளுவன் படத்தைத் தூக்கி எறியுங்கள்!
...நம் அறிஞர்களும், புலவர்களும் நமக்கு மனித தர்மத்திற்குக் குறளைத் தான் எடுத்துக் காட்டுவார்கள். அந்த வள்ளுவன் கூட இருக்கிற மற்றவனைவிடக் கொஞ்சம் பரவாயில்லை என்பதுதானே யொழிய, அவன் தான் எல்லாவற்றிற்கும் என்பது பொருந்தாதது. நேற்று ஒரு பள்ளியில் பாரதிதாசன் படத்தைத் திறந்து வைத்துப் பேசும் போது, வள்ளுவன் படத்தைத் தூக்கி எறிந்து விட்டு பாரதி தாசன் படத்தை வைக்க வேண்டுமென்று சொன்னேன். பாரதி தாசனைப் போல சீர்திருத்தக் கருத்துக்களைச் சொல்ல நம் புலவர்கள் முன்வர வேண்டும். - தோழர் பெரியார் - விடுதலை - 06.08.1968

...நான் குறள் மாநாடு நடத்தியதாலே சிலபேர் என்னைக் கண்டிச்சாங்க. கலைஞர்கூட அதை (குறள்) ஒண்ணையாவது விட்டுவிடக் கூடாதான்ன கேட்டார். குன்றக்குடி அடிகளாரும் கேட்டுக் கிட்டாரு. இரண்டாயிரம் வருஷத்துக்கு முந்தையது குறள். அதை அப்படியே இப்பவும் ஏத்துக்கணும்னா?
- தோழர் பெரியார், கலைமகள் ஏடு, பிப்ரவரி 1973 //.

இப்பதிவைக் குறித்த எம் கண்ணோட்டம் வருமாறு:

ஆரிய மரபுகள் அரசியல் அதிகாரம் செலுத்திக் கொண்டிருக்கும் இந்தச் சூழலில், குறளைக் குறித்த பெரியாரியத்தின் குரலாக இப்போது உயர்த்திப் பிடிப்பதன் நோக்கம் என்ன? இந்தக் குரல் யாருக்குச் சேவகம் செய்யப் போகிறது?

தமிழரின் ஒவ்வொரு சொல்லையும் செயலையும் மரபையும் ஆரியத்திற்கு எதிராகக் கட்டமைக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் இருந்து கொண்டிருக்கும் சூழலில், தமிழ் மரபுகளில் காணலாகும் ஆரியத்திற்கு எதிரான குரலையும் கலகத் தன்மைகளையும் முன்னெடுப்பதை விடுத்துவிட்டு, ஆரியத்திற்கு எதிராக நிற்கும் தமிழர் மரபுகளையெல்லாம் ஆரியத்தின் பக்கமே தள்ளி விடுவது என்பது, தமிழர் மரபுகளைத் தன்வயப்படுத்தத் துடித்தும் காத்தும் கொண்டிருக்கிற ஆரியத்திற்கு வலு சேர்க்கும் நோக்கத்தையே உள்ளீடாகக் கொண்டிருப்பதாகும்.

தமிழர் வரலாறு, பண்பாடு, அறம், அரசியல், அறிவு, கலை, இலக்கிய மரபுகளைக் குறித்த வரலாற்றுப் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தோடு அணுகுவதே பகுத்தறிவு ஆய்வு முறையியல் ஆகும்.

ஆரியத்திற்கான எதிர்மரபையே குறள் கட்டமைத்திருக்கிறது. திருக்குறளை ஆரியத்தின் பக்கம் தள்ளி விடுகிற சூழ்ச்சி இது. வைதீகத்திற்கு எதிராக இருந்த நாட்டுப்புற மரபுகளையெல்லாம் ஆரியத்தின் பக்கம் தள்ளி விட்டது போல, குறளையும் ஆரியம் தன்வயப்படுத்த உதவும் கொச்சைப்பொருள் முதல்வாதக் கண்ணோட்டம் இது.

குறளை விமர்சனமின்றி ஏற்றுக்கொள்ளத் தேவையில்லை. விமர்சனத்தோடு நம் வசப்படுத்தி வைக்க வேண்டியது தமிழர் கடமை.

பெரியாருமே 'நான் சொன்னதையே இன்னும் 50 வருடம் கழித்தும் நீங்கள் பேசிக் கொண்டிருந்தால் நீங்கள் இன்னும் முன்னேறவில்லை என்று பொருள். எனது கருத்தையே தூக்கிச் சுமந்து கொண்டிருக்காதீர்கள். தேவையானதை ஏற்று தேவையற்றதை ஒதுக்கிவிட்டுச் செல்லுங்கள்' என்றார்.

"நான் சாதாரணமானவன்; என் மனதில் பட்டதை எடுத்துச் சொல்லியிருக்கிறேன். இதுதான் உறுதி, இதை நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும் என்று சொல்லவில்லை; ஏற்கக்கூடிய கருத்துக்களை உங்கள் அறிவைக் கொண்டு நன்கு ஆய்ந்து ஏற்றுக் கொள்ளுங்கள்; மற்றதைத் தள்ளிவிடுங்கள்.
எந்தக் காரணத்தைக் கொண்டும் மனிதத் தன்மைக்கு மீறிய எந்தக் குணத்தையும் என் மீது சுமத்தி விடாதீர்கள். நான் தெய்வத் தன்மை பொருங்தியவனாகக் கருதப்பட்டுவிட்டால், மக்கள் என் வார்த்தைகளை ஆராய்ந்து பார்க்க மாட்டார்கள்.
- "நான் சொல்லுவதை நீங்கள் நம்புங்கள்; நான் சொல்லுவது வேதவாக்கு; நம்பாவிட்டால் நரகம் வரும்; நாத்திகர்கள் ஆகி விடுவீர்கள் - "
என்று - வேதம், சாத்திரம், புராணம் கூறுவது போலக் கூறி, நான் உங்களை அடக்கு முறைக்கு ஆளாக்கவில்லை. நான் சொல்லுவது உங்களுடைய அறிவு, ஆராய்ச்சி, உத்தி, அனுபவம் இவைகளுக்கு ஒத்து வராவிட்டால் தள்ளி விடுங்கள்."
"ஒருவனுடைய எங்தக் கருத்தையும் மறுப்பதற்கு, யாருக்கும் உரிமை உண்டு; ஆனால், அதனை வெளியிடக் கூடாது என்பதற்கு எவருக்கும் உரிமை கிடையாது." பெரியார் கூறியிருக்கும் இந்தக் கருத்துகளைப் பெரியாரியவாதிகளாகக் கருதுபவர்கள் கவனிக்க மறந்து போவது மட்டுமல்ல; கவனிக்கவும் மறுக்கிறார்கள்.

குறளைக் குறித்துப் பெரியார் அன்று சொன்னதையே இப்போதும் சொல்ல வேண்டியதில்லை. அவரது கருத்துமேகூட மீள் வாசிப்புக்கு உள்ளாகிக் கொண்டிருக்கிறது. வள்ளுவமும் விதிவிலக்கல்ல.

குறளை விமர்சியுங்கள். பெரியாரும் விமர்சித்திருக்கிறார். விமர்சனம் எனும் பேரில் குறளை ஆரியத்தின் பக்கம் தள்ளுவதுதான் ஆரியத்திற்கு மறைமுகமாக உதவும் போக்காகப் படுகிறது.

வரலாற்றுப் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தில் தமிழ் மரபுகளை அணுகுங்கள் என்பதே எம் வேண்டுகோள். கொச்சைப்பொருள் முதல்வாதக் கண்ணோட்டத்தில் ஆய்வை முன்வைப்பது பகுத்தறிவு அல்ல. நட்பு முரண்களைப் பகை முரணாகக் காட்டுவதும் அறமும் அல்ல.

திருக்குறளை ஆரியத்தின் குரலாகக் கட்டமைக்கும் பெரியாரியவாதிகளின் இப்போதைய குரல் அறமற்றது மட்டுமல்ல; இப்போதைய அவசியமும் அற்றது.


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard