New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சாதிகள் வக்கிரமடைந்தது எப்படி? -ராம் ஸ்வரூப் தமிழில்: ஜடாயு


Guru

Status: Offline
Posts: 24601
Date:
சாதிகள் வக்கிரமடைந்தது எப்படி? -ராம் ஸ்வரூப் தமிழில்: ஜடாயு
Permalink  
 


 

சாதிகள் வக்கிரமடைந்தது எப்படி?

May 20, 2010
ஜடாயு rss_icon16.jpg

 

மூலம்*: ராம் ஸ்வரூப்
தமிழில்: ஜடாயு

இன்றைக்கு சாதியம் எங்கும் தலைவிரித்தாடுகிறது. இது ஒரு புதுமையான போக்கு. பண்டைய இந்தியாவில் சாதி இருந்தது, ஆனால் சாதியம் இல்லை. தற்போதைய வடிவில் நாம் காணும் சாதியம் காலனிய ஆட்சிக் காலகட்டத்தின் உருவாக்கமே. எதேச்சாதிகார ஆட்சிக் கொள்கைகளும், காலனிய அறிவுஜீவிகளும் விளைவித்த படைப்பு அது. பின்னர் நமது சொந்த “சீர்திருத்தவாதிகளும்” முரசறைந்து அதனை வலுப்படுத்தினர்.

krishna_familyபண்டைய நாட்களில் இந்து சாதி அமைப்பு ஒருங்கிணைக்கும் தத்துவமாக இருந்தது. பொருளாதார பாதுகாப்பை அளிப்பதாக இருந்தது. ஒருவன் பிறந்த உடனேயே அவனுக்கென்று ஒரு தொழில் இருந்தது. கொடும் வேலையில்லாத் திண்டாட்டத்தால் அச்சுறுத்தப் படும் நிலையில் உள்ள மக்களுக்கு கனவில் கூட நினைக்கமுடியாத சாத்தியம் இது. இந்த அமைப்பு சமூகப் பாதுகாப்பும், சுதந்திரமும் இணைந்த ஒன்றாக இருந்தது. ஒரு பரந்த சமுதாய வெளியையும் அதே சமயம் நெருக்கமான சமூக அடையாளங்களையும் உருவாக்க வழிவகை செய்தது. இங்கு தனிமனிதன் ஒற்றைப் படுத்தப் பட்டு, வேரற்றவனாக ஆகி விடவில்லை. அதே சமயம் சமூக நகர்வுகளும் (social mobility) குறைவாக இருக்கவில்லை. ஒட்டுமொத்தமான மக்கள் குழுக்களே கூட சமுதாய அளவுகோலில் மேலேறுவதும், கீழிறங்குவதும் நிகழ்ந்தது. பண்டைய இந்திய சாதி அமைப்பு முற்றாக இறுகியிருந்தது என்று சொல்லப் படுவது கற்பனையே அன்றி வேறில்லை.

குறைந்தது மூன்றில் ஒரு பங்கு மக்கள் தங்கள் பரம்பரையான தொழில்களை விட்டு வேறு தொழில்களைச் செய்பவர்களாக இருந்தார்கள் என்று பிரிட்டிஷ் ஆட்சியின் தொடக்க காலத்தில் வாழ்ந்த சீசன்பால்க் எழுதுகிறார். ”அரசுப் பணிகளும், மற்ற அலுவல் பணிகளும், ஆசிரியர், நகரசபை உறுப்பினர், நிர்வாக அதிகாரி, பூசாரி, கவிஞர் ஆகிய பதவிகளும், ஏன் அரச பதவியே கூட ஒரு குறிப்பிட்ட குழுவினருக்கு மட்டும் உரிமையானதாக இருக்கவில்லை, அனைவருக்கும் அதில் இடம் இருந்தது” என்று அவர் குறிப்பிடுகிறார்.

பிரிட்டிஷ் ஆட்சியின் போது தான் இப்போது உள்ளது போன்ற ஏராளமான சாதிகள் அடையாளம் காணப்பட்டு, அறிவிக்கப் பட்டு அதுவே நடைமுறை வழக்கமாக ஆகியது; அதற்கு முன்பு அப்படி இருக்கவில்லை. கிரேக்க தூதர் மெகஸ்தனிஸ் இந்து சமூகத்தின் ஏழு பாகுபாடுகளைப் பற்றித் தன் நூலில் குறிப்பிடுகிறார். சீன யாத்திரிகர் யுவான் சுவாங் (பொ.பி 650) நான்கு சாதிகளைக் குறிப்பிடுகிறார். அல்பருனி (ஆரம்ப இஸ்லாமிய ஆட்சிக் காலத்தவர்) நான்கு சாதிகளையும், சாதி அமைப்பின் கீழ் வராத ஒருசில குழுக்கள் இருந்ததையும் தன் நூலில் பதிவு செய்கிறார்.

எப்போதும் வசைக்கு உள்ளாகும் மனுவின் பட்டியல் கூட எல்லா கலப்பு சாதிகளையும் சேர்த்து மொத்தம் நாற்பது சாதிகளுக்கு மேல் குறிப்பிடவில்லை. அதிலும், இந்த எல்லா சாதிகளும் ஒன்றுக்கொன்று ரத்த உறவு கொண்டவை – உதாரணமாக, சண்டாளர்கள் என்ற சாதியினர் தந்தை வழியில் பிராமணர்களில் இருந்து வந்தவர்களாக இருப்பார்கள். ஆனால் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் ரிஸ்லி (Risely) 2,378 முக்கிய சாதிகள் மற்றும் 43 இனங்களின் பட்டியலை அளிக்கிறார்! உப-சாதிகளின் எண்ணிக்கையோ கணக்கில் அடங்காதது என்று எழுதிச் செல்கிறார். அதற்கு முன்பு, 1891ம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு நடத்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் படி, சமார் (தோல் தொழிலாளர்கள்) என்ற சாதிக்குள்ளேயே 1156 உபசாதிகள் இருப்பதாக எண்ணிக்கை அளிக்கப் பட்டிருந்தது. ரிஸ்லியைப் பொருத்தவரை, அவர் ஒவ்வொரு சாதியும் தனக்கே உரிய தனி மொழியைப் பேசும் ஒரு தனி “இனம்” என்றே கருதினார்.

இந்தியா பற்றி எழுதிய ஆரம்பகால ஐரோப்பியர்கள் சாதி என்பது இந்தியாவுக்கு மட்டுமே உரித்தான ஒரு அமைப்பு என்று கருதவில்லை. தங்கள் நாடுகளில் இருந்த சாதி அமைப்பை அவர்கள் அறிந்திருந்தார்கள். இந்திய சாதி அமைப்பும் அப்படிப் பட்ட ஒன்று என்றே கருதினார்கள். தனது அரசியல் பொருளாதாரம் (Political Economy) என்ற நூலில் ஜே.எஸ்.மில், ”ஐரோப்பாவின் தொழில்சார்ந்த சமூகக் குழுக்கள் இந்தியாவில் பரம்பரையாக வரும் சாதிக் குழுக்களைப் போன்றவையே” என்று குறிப்பிடுகிறார்.

அவர்களுக்கு, சாதி (caste) என்ற சொல் இன்று உள்ளது போன்ற ஒரு பொருளைத் தருவதாகவும் இருக்கவில்லை. காலனிய வரலாற்று ஆய்வாளரும் மொழியியல் அறிஞருமான கீதா தரம்பால் ஃப்ரிக், இந்திய சமூகம் பற்றி எழுதிய ஆரம்பகால ஐரோப்பியர்கள் சாதியைக் குறிக்க ”பகுதி – பங்கு – பங்களிப்பு” என்ற பொருள் தரும் Meri என்ற கிரேக்கச் சொல்லையே பயன்படுத்தினார்கள் என்கிறார். பிறகு செபஸ்டியன் ஃப்ராங்க் (1534), ”சமூகக் குழு” அல்லது ”தொகுதி” என்ற பொருள் தரும் ஜெர்மன் மொழிச் சொல்லான Rott (rotte) என்ற சொல்லைப் பயன்படுத்தினார். சமூக, பொருளாதார ரீதியாக, அன்றைய ஐரோப்பாவின் பண்ணைகள் சார்ந்த அடுக்குமுறை சமூக அமைப்பு (ordo) போன்று இல்லாமல் சாதிகள் ஒன்றுக்கொன்று நெருக்கமானவையாக இருந்தன என்று அவர்கள் கருதியதையே இந்தச் சொற்கள் உணர்த்துகின்றன.

பிராமணர்களுக்கு சமூகத்தில் மரியாதை இருந்தது என்று பதிவுசெய்யும் இந்த ஆரம்பகால ஐரோப்பிய வரலாற்றாசிரியர்கள் பிராமண ஆளுகை/அதிகாரம் பற்றி எதுவும் கூறவில்லை. 1669ல் குஜராத்தின் சாதிகள் பற்றி ஆவணப் படுத்தியுள்ள ஆண்டர்சன் (Jurgen Anderson) போன்றவர்கள் அங்கு பிராமணர்கள் அல்ல, வைசியர்களே சமூகத்தில் மிக முக்கியமானவர்களும், அதிகாரம் படைத்தவர்களாகவும் இருந்ததைக் கண்டார்கள்.

மேலும் “சம்ஸ்கிருதமயமாக்கல்” (Sanskritization) எதையும் அவர்கள் காணவில்லை. ஒரு சாதி இன்னொரு சாதி போன்று இருக்கவேண்டும் என்று முயலவில்லை. அது தன்னளவில் நிறைவுகொண்டதாக இருந்தது. சமூக அந்தஸ்துக்காக என்று பிராமணர்களையும், மற்ற உயர்சாதியினரையும் நகலெடுக்க மற்ற சாதிகள் முயலவில்லை. தங்களது வாழ்க்கையைப் பற்றிய பெருமிதம் ஒவ்வொரு சாதியிடமும் இருந்தது. ஏரின் சிறப்பைப் பற்றி கம்பனது பழைய தமிழ்ப் பாடல் ஒன்று உள்ளது. “ஏர்பிடித்து உழும் வாழ்க்கையை உடைய உழவனது குடியில் பிறப்பது, பிராமணனாகப் பிறப்பதை விடப் பெருமை வாய்ந்தது” என்கிறது அந்தப் பாடல்.

(குறிப்பு: சமூக அடுக்கில் கீழ் உள்ள சாதிகள், உயர்சாதிகளின் பழக்க வழக்கங்களை மெதுமெதுவாக நகலெடுக்கின்றன; இது சமூக அந்தஸ்து பெரும் முயற்சியில் ஒரு அங்கம் என்பதை ஒரு கோட்பாடாக சமூகவியல் அறிஞர் எம்.என்.ஸ்ரீனிவாஸ் முன்வைத்தார். இந்தக் கோட்பாட்டுக்கு “சம்ஸ்கிருதமயமாக்கல்” (Sanskritization) என்று பெயரிட்டார்).

castes_colonial_pictureசம்ஸ்கிருதமயமாக்கல் இருந்தது. ஆனால் அது வேறு வகையில் இருந்தது. எல்லா மக்களும் பிராமணர்களாக அல்ல, பிரம்மவாதிகளாக (Brahma-Vadin) ஆகவே முயன்றார்கள். எல்லா சாதிகளும், எல்லா மக்களும் தொழக்கூடிய மகான்களையும் பெரியோர்களையும் உருவாக்கின. காசியில் செத்த மாடுகளை அகற்றும் தொழில் செய்யும் குடும்பத்தில் பிறந்தவராயினும், பெருமதிப்புக்குரிய பிராமணர்களும் தன்னைப் போற்றி வணங்குவதாக மாபெரும் சமயகுருவான மகான் ரவிதாஸ் ஒரு பாடலில் குறிப்பிடுகிறார்.

இஸ்லாமிய ஆட்சியின் கீழ் இந்து சமுதாயம் மாபெரும் அழுத்ததிற்கு ஆளாயிற்று. வாழ்வா சாவா என்ற பிரசினையை அது எதிர்கொள்ள நேர்ந்தது. இந்துக்களின் அரசு அதிகாரம் கைவிட்டுப் போனதும், சாதிகள் அந்த இடத்தை எடுத்துக் கொள்ள ஆரம்பித்தன. அவை கேடயங்களாக நின்று சில சமயம் தீவிரமாகவும், பல சமயங்கள் அமைதியாகவும் இஸ்லாமின் பரவலைத் தடுத்தன. ஆனால், இதனூடாக இந்த அமைப்பில் தீண்டாமை போன்ற அருவருக்கத் தக்க நடைமுறைகள் உருவாயின. கஜினி முகமதுவின் படையுடன் இந்தியாவுக்கு வந்த இஸ்லாமிய எழுத்தாளர் அல்பருனி நான்கு சாதிகளைப் பற்றிப் பேசுகிறார்; ஆனால் தீண்டாமை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. ”இந்த சாதிகள் தங்களுக்குள் நிறைய வேறுபாடுகளைக் கொண்டிருந்தாலும், அவர்கள் கிராமங்களிலும், நகரங்களிலும் ஒன்றுபட்டு வாழ்கிறார்கள். வீடுகளிலும், குடியிருப்புகளிலும் கூடக் கலந்தே இருக்கிறார்கள்” என்று பதிவு செய்கிறார்.

இதனூடாகவே இன்னொரு நடைமுறையும் வழக்கத்திற்கு வந்தது. சாதிகள் தங்கள் நகர்வுத் தன்மையை இழந்து இறுக்கமாக ஆயின. பஞ்சாப் மாகாணத்தில் 1901 முதல் 1906 வரை “மக்கள் பரம்பரையியல் ஆணையர்” (Superintendent of Ethnography) ஆக இருந்தவர் ஹெச்.ஏ.ரோஸ். பஞ்சாபின் குலங்கள், சாதிகள் பட்டியல் (Glossary of Punjab Tribes and Castes) என்ற நூலில், முஸ்லிம் ஆட்சிக் காலத்தின் போது ஏராளமான ராஜபுத்திரர்கள் இழிவுபடுத்தப் பட்டு, ஷெட்யூல்டு சாதியினர், பழங்குடியினர் என்று அழைக்கப் பட்ட வகுப்பினராக ஆகி விட்டனர் என்பதை இவர் பதிவு செய்துள்ளார். அவர்களில் பெரும்பாலர் பரிஹர, பரிமர ஆகிய ராஜபுத்திர வமிசப் பெயர்களை இன்னும் தாங்கியுள்ளனர். அதே போன்று, “சமார்கள்” (The Chamars) என்ற நூலில் ஜி.டபிள்யூ.ப்ரிக்ஸ் ஏராளமான சமார்கள் பனௌதியா, உஜ்ஜயினியா, சந்தாரியா, சர்வாரியா, கனௌஜியா, சவுஹான், சந்தேல், சக்சேனா, சகரவார், பாரதரவியா, புந்தேலா போன்ற ராஜபுத்திர கோத்திரங்கள் மற்றும் வமிசங்களின் பெயர்களை இன்றும் சூடியுள்ளனர் என்று குறிப்பிடுகிறார். டாக்டர் கே.எஸ்.லால் ”மத்திய கால இந்தியாவில் ஷெட்யூல்டு சாதிகள், பழங்குடியினர் மக்கள்தொகை வளர்ச்சி” (Growth of Scheduled Tribes and Castes in Medieval India) என்ற நூலில் இது போன்று ஏராளமான சாதிகளில் நிகழ்ந்திருப்பதை விரிவாக ஆவணப் படுத்தியுள்ளார்.

மனிதக் கழிவை அகற்றும் பணியில் தள்ளப்பட்ட ”தோட்டிகள்” (Bhangi – ”பங்கி”) என்ற சாதியார் விஷயத்திலும் இதுவே தான் நிகழ்ந்தது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் வங்காளத்தின் சிவில் சர்வீஸ் அதிகாரியாக இருந்த வில்லியம் க்ரூக் கூறுகிறார் – “தற்போதைய தோட்டி சாதியினரின் பெயர்களையும், அவற்றின் உட்பிரிவுகளையும் வைத்து ஆராய்ந்து பார்க்கையில், இந்த சாதியின் உருவாக்கம் முகமதிய ஆட்சிக் காலத்தின் ஆரம்பத்தில் தான் நிகழ்ந்திருக்க வேண்டும் என்பது உறுதியாகிறது”. பழைய இந்து நூல்களில் Bhangi (”பங்கி”) அல்லது வேறு எந்த சாதியினரும் இந்தப் பணி செய்பவர்களாக சுட்டப் படவில்லை. பழைய வட இந்திய இந்து சமூகங்களில் ”பங்கி” என்ற சாதியினர் தானியத்தை அளந்து தரும் பணி செய்பவர்களாகவும், தலையாரிகளாவும், கிராம எல்லைக் காவலர்களாகவுமே இருந்தனர். அவர்கள் தோட்டிப் பணியில் தள்ளப் பட்டது இஸ்லாமிய ஆட்சிக் காலத்தில் உருவாகி, பின்னர் பிரிட்டிஷ் ஆட்சியிலும் தொடர்ந்து, அவர்களது எண்ணிக்கை அதிகமாகியது. 1901ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, முஸ்லிம் ஆட்சியின் மையங்களாக விளங்கிய பஞ்சாப், ஐக்கிய மாகாணங்கள் ஆகிய பகுதிகளில் தான் ”பங்கி” சாதியினர் மிக அதிக எண்ணிக்கையில் இருந்தார்கள்.

பின்னர் வந்த பிரிட்டிஷ்காரர்கள் எல்லா இந்துக்களையும் சமமாகவே – எல்லா இந்துக்களும் கீழான இனத்தினர் என்றபடி – நடத்தினார்கள். ஆனால் இந்துக்களுக்கிடையே இருந்த வேற்றுமைகளை ஊதிப் பெரிதாக்கினார்கள். (சாதி வேறுபாடுகளுக்காக) இந்துமதத்தைக் கண்டனம் செய்து தாக்குதல் நிகழ்த்தினார்கள்; ஆனால் சாதிக் கோட்பாடுகளைத் தாங்களே நீரூற்றி வளர்த்தார்கள். ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்! எப்படியானாலும் இந்துமதம் தாக்கப் பட வேண்டும், அது தான் முக்கியம். இந்திய ஒற்றுமைக்கான ஆதார தத்துவத்தையும், பண்பாட்டுத் தொடர்ச்சியையும் அளிப்பது அது தான். மிக ஆழமான தளத்தில், இந்தியா என்பதற்கான இலக்கணமே அது தான். இத்தனை சாதிகளையும், இந்த தேசத்தையும் ஒன்றிணைத்து வைத்திருப்பது அது தான். அந்த இந்துமதத்தை அகற்றி விட்டால், தேசத்தை எளிதாக அடிமைப் படுத்திவிடலாம் – இதுவே அவர்களது வழிமுறையாக இருந்தது.

பண்டைய இந்தியாவில் சாதி கூட்டுறவு சித்தாந்தமாகவும், கலாசார அடையாளமாகவும் இருந்தது. ஆனால் இன்று அது மாபெரும் சமூக மோதல்களுக்கான சித்தாந்தமாக உருமாற்றப் பட்டுக் கொண்டிருக்கிறது. பண்டைய சட்டவிதிகளின் படி, சாதிகள் தர்மத்தையும், அதன் அடிப்படையிலான தார்மீக கட்டுப் பாடுகளையும் கடைப்பிடித்தன; வரைமுறைகளை அவை அறிந்திருந்தன. ஆனால் இன்று ஒவ்வொரு சாதியும் தன்னளவில் ஒரு சட்டமாக ஆகிவிட்டிருக்கிறது. அதற்கென்று சுய கட்டுப் பாடு  எதுவும் கிடையாது, தனது சுயலாப, சுய-அதிகார வளர்ச்சியில் முனைந்திருக்கும் இன்னொரு சாதி வந்து அதைக் கட்டுப் படுத்தும் வரை! புதிய சுய-பிரதாப சமூக நீதிப் பாதுகாவலர்களுக்கும், அறிவுஜீவிகளுக்கும், கட்சிகளுக்கும் சாதிகள் வேண்டும், ஆனால் தர்மம் வேண்டாம். குறுகிய காலத்தில் சிலருக்கும், சில குழுக்களுக்கும் இது இலாபகரமாக இருக்கலாம். ஆனால் தொலைநோக்கில் தற்கொலைக்கு ஒப்பானது.

பண்டைய நாட்களில் சாதிகளின் தலைவர்கள் அந்த சாதிகள் வாழும் மண்ணின் கலாசாரத்தைப் பிரதிபலிப்பவர்களாக இருந்தார்கள். அதே மண்ணில் முளைப்பவர்களாகவும், தங்களது மக்களின் இயல்பான தலைவர்களாகவும் இருந்தார்கள். ஆனால் தற்போது வேறு விதமான தலைமைகள் முன்னுக்கு வருகின்றன; வேரற்ற, குழு துவேஷங்களை தூபம் போட்டு வளர்க்கிற, அதிகார ஆசை பிடித்த தலைமைகள். சுயலாப, சுய அதிகார வளர்ச்சிக்காக மட்டுமே சாதி கோஷங்களை இவை பயன்படுத்துகின்றன என்பதே உண்மை.

[* – 1996, செப்டம்பர்-13 இந்தியன் எக்ஸ்பிரஸில் வெளிவந்த Logic Behind Perversion of Caste என்ற கட்டுரை].

ramswarupராம் ஸ்வரூப் (1920-1998) நவீன இந்தியாவின் சிறந்த சமூக, தத்துவ சிந்தனையாளர்களில் ஒருவர். தொடக்க காலத்தில் சுதந்தரப் போராட்ட வீரராக அருணா அசஃப் அலியுடன் இணைந்து பணியாற்றினார். 1944லேயே கம்யூனிசத்தின் உண்மை முகத்தையும், சோவியத் கொடூரங்களையும் பற்றி விமர்சிக்கத் தொடங்கினார். 1949ல் Society for the Defence of Freedom in Asia என்ற அமைப்பைத் தொடங்கினார். கம்யூனிசம் மற்றும் சோவியத் பற்றி இந்த அமைப்பு வெளிக்கொணர்ந்த நூல்கள் அமெரிக்க சிந்தனையாளர்களாலும், ஆட்சியாளர்களாலும் கூட ஆதாரமாகக் காண்பிக்கப் பட்டன. 1982ல் Voice of India என்ற இலாப நோக்கற்ற பதிப்பகத்தைத் தொடங்கினார். இந்து அறிவியக்கத்தை வளர்த்தெடுக்கும் மிக முக்கியமான நூல்களை இந்தப் பதிப்பகம் இன்று வரை பதிப்பித்து வருகிறது. சீதா ராம் கோயல், ஹர்ஷ் நாராயண், கே.எஸ்.லால், கொய்ன்ராட் எல்ஸ்ட் போன்ற இந்து சிந்தனையாளர்களின் கருத்துக்களை வெளிக்கொணர்ந்தது இந்தப் பதிப்பகத்தின் மிகப் பெரிய சாதனை.

தனது வாழ்நாளில் இருபதுக்கும் மேற்பட்ட நூல்களையும், பற்பல பத்திரிகைக் கட்டுரைகளையும் ராம் ஸ்வரூப் எழுதியுள்ளார். 1940 மற்றும் 50களில் அவர் கம்யூனிசம், காந்தியப் பொருளாதாரம் குறித்து எழுதிய நூல்கள் ஸ்ரீஅரவிந்தர், பெட்ரண்ட் ரஸல், ஆர்தர் கோய்ஸ்ட்லர் ஆகியோரால் பாராட்டப் பட்டன. Gandhism and Communism, Foundations of Maoism, Communism and Peasantry: Implications of Collectivist Agriculture for Asian Countries ஆகிய நூல்கள் முக்கியமானவை. பின்னர் கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய ஆபிரகாமிய மதங்களின் கோட்பாடுகளை ஆதாரபூர்வமாக, நவீன ஜனநாயகம் மற்றும் அரசியல் சுதந்திர மதிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்டு இந்துப் பார்வையில் விமர்சிக்கும் பின்வரும் நூல்களை எழுதினார் – Understanding Islam through Hadis (சிறிது காலம் தடைசெய்யப் பட்டிருந்தது), Hinduism vis-à-vis Christianity and Islam, Christianity – an Imperialist Ideology, Woman in Islam. இந்துமதம், பௌத்தம், யோகம் பற்றி போப் ஜான் பால் கூறிய முதிராத கருத்துக்களை விமர்சித்து அவர் எழுதிய விரிவான எதிர்வினை தனி நூலாகவே வெளிவந்துள்ளது. The Word as Revelation: Names of Gods, On Hinduism ஆகிய நூல்களில் இந்து தத்துவங்களின் செழுமையையும், இந்து ஆன்மிகத்தின் உலகளாவிய தன்மையினையும் முன்வைக்கிறார். இந்து மறுமலர்ச்சி, இந்திய தேசிய எழுச்சி, இந்திய சமுதாய ஒருங்கிணைப்பு. காந்திய சமூக, பொருளாதார சிந்தனைகள் ஆகியவற்றைத் தன் மையக் கொள்கைகளாகக் கொண்டிருந்த ராம் ஸ்வரூப் தன் வாழ்நாளின் இறுதிக் காலங்களில் ஆழ்ந்த தியான, யோக சாதனைகளில் முற்றாக ஈடுபட்டு ஒரு மகரிஷியாகவே வாழ்ந்தார்.

ராம் ஸ்வரூப் பற்றி கொய்ன்ராட் எல்ஸ்ட் எழுதிய ஒரு கட்டுரை இங்கே.

Voice of India பதிப்பகத்தின் சில நூல்களை ஆன்லைனில் இங்கே வாசிக்கலாம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
RE: சாதிகள் வக்கிரமடைந்தது எப்படி? -ராம் ஸ்வரூப் தமிழில்: ஜடாயு
Permalink  
 


R.Sridharan on May 21, 2010 at 12:39 am

ஜாதியே எதோ மிகப் பெரிய தவறு என்பது போல் ஒரு பொய்யான பிரச்சாரம் நம் சமூகத்தைப் பற்றிப் புரியாத வெளி நாட்டினர் மற்றும்,கிறித்தவ மதம் பரப்பிகள் இவர்களால் தூபம் போட்டு வளர்க்கப்பட்டது .
அதை இங்கு உள்ள அயோக்கிய அரசியல் வாதிகள் தாங்கள் மக்களை பிரித்து குளிர் காய உபயோகப் படுத்திக் கொள்ள ஆரம்பித்தனர் .
அது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து இன்று வக்கிரத்தின் எல்லைக்கே போய் விட்டது
ஆரம்பத்தில் ஜாதியை ஒழிக்க வேண்டும் என்று கூக்குரல் இட்டவர்கள் இப்போது இன்னும் ஆயிரம் ஜாதிகள் இருந்தால் பரவாயில்லை என்று நினைக்கும் அளவிற்குப் போய் விட்டது

பாரத நாட்டில் வர்ணங்கள் இருந்ததே தவிர அதனால் இழிவு பாராட்ட வேண்டும் என்று எங்கும் எழுதப்படவில்லை
அதனால்தான் பல தொழில்களைச் செய்பவர்களும் வணங்கத்தக்க நிலைக்கு உயர்ந்தனர்
வியாசர் -மீனவர் தொழில், வால்மீகி-வழிப்பறி செய்பவர், ராமர்-ஷத்திரியர் ,கிருஷ்ணர்-யாதவர் ,ரவிதாசர்,கனகதாசர் ,நந்தனார் -புலையர்
குங்கிலியக் கலய நாயனார்-குயவர்,கண்ணப்ப நாயனார்-வேடுவர் ,மெய்ப்பொருள் நாயனார்-மல்லர்,சுந்தரமுர்த்தி நாயனார் -வேளாளர்
திருப்பாண் ஆழ்வார்-பாணர், சேக்கிழார் -வேளாளர் .
மேற்கூறிய அனைவரும் எல்லோராலும் வணங்கத்தக்க நிலையை அடைந்தனர் .

ஆனால் வெள்ளைக்காரர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியால் ஒரு சாதிக்கும் இன்னொரு சாதிக்கும் ஏதோ ஜன்மப் பகை என்பது போல் ஒரு சித்திரம் தீட்டப் பட்டது
அது வரை இல்லாத ஜாதி வாரிக் கணக்கெடுப்பு, பட்டியல் எல்லாம் அவர்கள் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது

முதலில் தங்களுக்கு தங்களுக்கு ஏவல் செய்ய ஏற்கெனவே பாரம்பரியமாக இந்து சமுதாயத்தில் கற்கும் மற்றும் கற்பிக்கும் தொழிலைச் செய்து வந்த பிராமணர்களை ஆங்கிலக் கல்வி படிக்கத் தூண்டினர்
அது ஆங்கிலேயர்களுக்கு ஆட்சி செய்வதில் துணையாக இருக்கும் என்பதற்காகவே அல்லாமல் பிராமணர்களுக்காக அல்ல.

பிராமணர்கள் அதில் ருசி கண்டதும் பெருமளவு ஆங்கிலக் கல்வி கற்கத் தொடங்கினர்
அதனால் நாளடைவில் வக்கீல்,ஜட்ஜ் ,ஐசீஎஸ் என்று எல்லாத எல்லாத் துறைகளிலும் நுழைந்தனர்

ஆனால் வளர்த்த கடா மார்பில் பாய்வது போல் அவர்களது ஆங்கிலக் கல்வியே ஆங்கிலேயர்களுக்கு எதிரி ஆனது
ஆங்கிலக் கல்வியின் மூலமாகக் கிடைத்த மேலை நாட்டு சிந்தனைகள் பல பிராமணர்களை ஆங்கிலேய எதிர்ப்பில் நாட்டம் கொள்ள வைத்தது .அதில் அவர்கள் முன்னிலை வகித்தனர்
திலகர், ரானடே ,அரவிந்தர்,மங்கள் பாண்டே ,சந்திர சேகர் ஆசாத்,வாஞ்சிநாதன், பாரதி,ராஜாஜி, நேரு , வவேசு ஐயர் ,சேலம் விஜயராகவாச்சாரியார் ,மண்டயம் திருமலாச்சாரியார் , சத்தியமுர்த்தி, வீர் சாவர்க்கர் ,சுப்ரமணிய சிவா ,மற்றும் பலர் இதில் அடங்குவர் .

அதனால் அவர்களைப் பழி தீர்க்க ஆங்கிலேயர் கடைப் பிடித்த தந்திரம் தான் பிரித்தாளும் சூழ்ச்சி
அதன் ஒரு அங்கமாக ‘பிராமணர்கள் மட்டும் படித்து விட்டார்கள் ‘என்று மற்ற பிரிவினரிடையே தூண்டி விட்டனர் .
பிராமணர்கள் கடைப் பிடித்து வந்த சில சாதீய வழக்கங்களும் , அதனால் பிராமணர்களுக்கு உடனடியாக அடுத்த ( கீழ்) மட்டத்தில் இருந்த சாதியினருக்கு அவர்கள் மேல் இருந்த வெறுப்பும் சேர்ந்து நன்றாகவே பிடித்துக் கொண்டது .
ஆங்கிலேயருக்கு ஒரே கல்லில் இரண்டு மாங்காய்

பாரத நாட்டில் குழப்பம் விளைவிக்கலாம் ,அதே சமயம் சுதந்திரப் போராட்டத்தை வலு இழக்கச் செய்யலாம் .
ஆங்கிலேயர்களின் அடி வருடிகளான நீதிக் கட்சியினர் ‘பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவில் தொடர வேண்டும் ‘ என்று பிரேரணை செய்ததை நாம் இத்தருணத்தில் நினைவு கூறலாம்
மேலும் பிரிட்டிஷாரின் ஐந்தாம் படையான மிஷனரிகளும் இதே தந்திரத்தைக் கடைப் பிடித்தனர்
அதன் பின் நடந்தது சரித்திரம்

விடுதலைக்குப் பின் வந்த காங்கிரஸ் வெள்ளைக் காரனின் பிரித்தாளும் சூழ்ச்சியை அப்படியே பின்பற்றியது
ஒவ்வொரு தேர்தலிலும் ஒரு தொகுதியில் அதிக அளவில் உள்ள ஜாதிக்காரரை அந்தத் தொகுதியில் நிறுத்துவது என்பதெல்லாம் அவர்கள் உத்தியே .

திமுக போன்ற மற்ற கட்சிகள் இந்த தந்திரத்தை ஒரு அழகான அற்புதமான கலையாக்கி தப்பித் தவறிக் கூட மக்கள் ஜாதியை மறந்து விடக் கூடாது என்று எல்லாவற்றிலும் அதைப் புகுத்தி,ஆனால் அதே சமயம் தாங்கள் சாதிக்கு எதிரானவர்கள் என்பது போல் ஒரு ஏமாற்று வேலையைச் செய்து கொண்டிருக்கின்றன .

முகலாயப் படை எடுப்பின் போது ஜாதி ஒரு பெரிய அரணாக இருந்தது
இல்லை என்றால் முழு பாரதமுமே இஸ்லாமுக்கு மாறி இருக்கும்
ஏனென்றால் ஒரு ஜாதியைச் சேர்ந்தவர்களுக்கு அந்த ஜாதி ஒரு பாதுகாப்பான உணர்வையும், அடையாளத்தையும் ,பெருமிதத்தையும் கொடுக்கிறது
ஆகவே அவர்கள் அதைப் பற்றிக் கொண்டு விட்டால் மத மாற்றம் செய்ய முடியாது

தீண்டாமை என்பதை ஒதுக்கிப் பார்த்தால் ஜாதியே அவ்வளவு பயங்கரமானது அல்ல என்பது புரியும்
ஒரு ஜாதியினர் மற்றொரு ஜாதியினரை மட்டம் தட்டாமல் மரியாதையுடனும் சமமாகவும் நடத்தினால் பிரச்னையே இல்லை
அவரவர்களது சடங்குகள்,சம்பிரதாயங்கள் இவற்றை அவரவர்கள் செய்து ஜாதி வீட்டுக்குள் மட்டும் இருந்தால் தொல்லை இல்லை
வெளியில் வந்ததும் நாம் எல்லாரும் பாரதத்தாயின் மக்கள் என்பதை நினைவு கொள்ள வேண்டும்
ஹிந்து தர்மம் என்ற ஆல மரத்தின் விழுதுகள் தான் நாம் ஒவ்வொருவரும் என்று நினைவு கொள்ள வேண்டும்

ஒருவர் ஜாதியே வேண்டாம் என்றால் தாரளமாக விட்டு விடட்டும்
கலப்பு மணம் புரிந்தால் தாராளமாக செய்து கொள்ளட்டும்
ஒரு பிராமணர் அல்லாதார் மந்திரங்களும்,உச்சாடனங்களும் கற்றுக் கொள்ள வேண்டுமென்றால் தாராளமாகக் கற்றுக் கொள்ளட்டும்
வேதம் ஓத இச்சை இருந்தால் ஓதட்டும் .ஆனால் அதற்குரிய அனுஷ்டானங்களுடன் .

ஆனால் அப்படிச் செய்து தான் ஆக வேண்டும் என்றோ இல்லை என்றால் அவர்கள் சாதி வெறி பிடித்தவர்கள் என்றோ சொல்வது தவறு
அந்த வாதத்தால் தான் இவ்வளவு குழப்பம்

அப்பூதி அடிகள் அந்தணர் ஆன போதும் அப்பர் பாதங்களில் விழுந்தார். தில்லை அந்தணர்கள் திருநாளைப் போவார்
நந்தனாரின் கமல மலர் தொழுதனர் .
அந்த மனப் பாங்கு இன்று வந்து விட்டால் அப்புறம் குறை ஏது நமக்கு ?

மகாகவி பாரதியின் அமர வாக்கியத்தை நினைவு கூர்வோம்
‘ ஜாதி மதங்களைப் பாரோம் ,உயர் ஜன்மம் இத்தேசத்தில் எய்துவராயின்
வேதியராயினும் ஒன்றே ,அன்றி வேறு குலத்தவராயினும் ஒன்றே’
இரா.ஸ்ரீதரன்



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

thooyavan on May 21, 2010 at 7:01 am

முதலில் வர்ணம் என்பதும் சாதி என்பதும் வேறு என்பதை விவரிக்க வேண்டும். ஆங்கிலேயர்கள் வர்ணத்தை சாதி என்று மொழி பெயர்த்தார்கள். நான்கு ஜாதிகள் என்று எங்கும் பார்க்கலாம். ஜாதிகள் ஆயிரம். வர்ணம் நான்கே. வர்ணம் பிறப்பால் மட்டும் வந்ததல்ல. தொழில் குணம் ஒட்டியே வந்தது. கீதை 4‍ 13, வஜ்ரசூசிக உபநிஷத், மாஹாபாரதத்தில் யக்ஷ ப்ரஷ்னம் போன்றவை விளக்குகின்றன. குறிப்பாக பிறப்பால் மட்டுமே வர்ணம் என்பதையும் பிராமணன் என்பது பிறப்பால் மட்டுமே என்பதை கண்டிக்கிறது. ஒழுக்க நெறி கேள்வி கல்வி மிக முக்கியம். குணத்தை ஒட்டிய தொழில் வர்ணத்தை நிர்ணயிக்கும். ஜாதி பிறப்பால் வருவது. ஜாதியிலிருந்து சிறப்பு என்பது இழிவு.இப்போதும் நம் நாட்டினர் ஆங்கில நூல்கள் படித்தே நம் கலாச்சாரம் சமயம் முதலானவற்றை ஆராய்ச்சி செய்கிறார்கள். நம் மொழிகளில் தமிழ் சமஸ்கிருதம் நூல்களை பலர் படிப்பதில்லை. ஆங்கிலேய நூல்களில் வர்ணம் ஜாதி என்றே இருக்கிறது. இதனால் பெருத்த குழப்பம். ஆங்கிலேயனுக்கு ஆங்கிலம் வழியாக நாம் இன்னும் அடிமை! நம் நாட்டில் இருந்து அவனை விரட்டினோம். ஆனால் மனதில் குடிகொண்டது பேய்!

ஜாதிகள் மாநிலம், தொழில், பழ‌க்கங்கள், வழி முறைகள், மொழி இவற்றால் வேறுபட்டன. அவை நாளடைவில் மாறுபடலாம். அவை சமயத்தால் வர வில்லை. எந்த இந்து சாத்திரத்திலும் ஜாதி கூறவில்லை. இவர்தாம் இந்த தொழில் செய்ய வேண்டும் செய்யாக்கூடாது என்று உள்ளதா? யார் செட்டியார், யார் குரும்பர் யார் பார்ப்பனர் என்று பிறப்பால் வகுக்கிறதா? இல்லை

வர்ணம் வாழ்க்கைக்கு வழிகாட்டி. நம் குணத்தை மேன்மை செய்ய அறிவித்தது



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 senthil on September 28, 2010 at 1:29 pm

சாதிகள் அந்த காலத்தில் எப்படி இருந்தது, எந்த வகையில் ஒன்றுக்கொன்று தொடர்புடையது, எப்படி ஒன்றை ஒன்று சார்ந்திருந்தது என்பதை நம் கதைகளிலும் இதிகாசங்களிலும் காணலாம்..

கொங்கு நாட்டில் இன்றளவும் பாடப்படும் ஒரு இதிகாசக் கதை “அண்ணமார் கதை” அல்லது “குன்றுடையான் கதை” .. இது உண்மையாக நடந்த கதை.. கலைஞர் கூட, “பொன்னர் சங்கர்” என்ற நாவலாக அந்த கதையை எழுதி உள்ளார்..

உங்களுக்கு (அதாவது இந்த கட்டுரை ஆசிரியருக்கு) நேரமிருந்தால், இந்த கதையை படிக்கவும்.. சோழ மன்னனில் இருந்து, சோழன் தண்டல், முதலியார், செட்டியார், பறையர், மாதாரி வரை எல்லா ஜாதிகளும் அந்த கதைகளில் வரும்.. ஜாதியை பற்றி புரிந்து கொள்வதற்கு இது ஒரு அருமையாண வரலாற்று ஆவணம்..

இன்றும் அண்ணமார் சுவாமி கோயில், பல சாதிகளுக்கு குலதெய்வமாக உள்ளது.. நான், கொங்கு வெள்ளாள சமூகத்தை சேர்ந்தவன்.. என்னுடைய குல தெய்வம் அண்ணமார் சுவாமி.. அண்ணமார் சுவாமி சிலைக்கு நேரெதிரே சாம்பவர் சிலை, கோளம் அடிக்கும் நிலையில் இருக்கும்… பின், கோயிலுக்கு வெளியே வாயிலில் கருப்பனார் சிலை இருக்கும்.. ஒவ்வொரு முறையும் பூஜை நடக்கும் பொழுது, எல்லா சிலைக்கும் படைத்து, காலில் விழுந்து கும்பிட்டு வருவோம்.. அண்ணமார் கதையில் சாம்பவர் பறையர் சமூகத்தை சேர்ந்தவர்.. அண்ணமாரோடு சேர்ந்து போரில் உயிரை விட்டவர்.. ஆனால், யாரும் கோயிலில் அவரை பறையராக பார்ப்பதில்லை.. கடவுளாகத்தான் பார்க்கிறார்கள்..

சாதி பாகுபாடு கிரஹஸ்தர்களுக்கு மட்டும்தான்.. அது வாழ்க்கை முறை வேறுபாட்டால் வருவது.. ஆன்மிகத்தில் என்றுமே சாதி பாகுபாடு கிடையாது..



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 senthil on November 26, 2011 at 3:40 pm

திரு. ஜடாயு.. உங்கள் கட்டுரையில் ஒன்றை கவனித்தீர்களா? பழைய ஆவணங்களிலிருந்து மட்டுமே நீங்கள் எடுத்தாள்கிறீர்கள்.. அல்லது, யாராவது ஒருவர் புத்தகமாக எதையாவது எழுதியிருக்க வேண்டும்.. ஏன் இந்த குறுகிய வரையறைக்குள் வருகிறீர்கள்..

இன்றைக்கும் ஜாதிகள் அப்படியே தான் இருக்கிறது.. போன தலை முறை வரை, ஒவ்வொரு ஜாதியும் தன்னுடைய தொழிலைதான் செய்து கொண்டிருந்தது.. ஏன் அவர்களிடம் போய் அவர்களுடைய அனுபவங்களையும், கருத்துக்களையும் கேட்க மறுக்கிறீர்கள்.. பழைய சாதிகள் வேறு இன்றைய சாதிகள் வேறு என்று எவ்வாறு நீங்கள் முடிவு செய்தீர்கள்? ஏதாவது ஆராய்ச்சி செய்தீர்களா?

நான் பார்த்த வரையில் ஒவ்வொரு ஹிந்த் சிந்தனையாளரும், புத்தகத்திலும், கற்பனையிலுமே குதிரையை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.. அவர்களை பொருத்தவரை, இந்திய பாரம்பரியம் செத்துவிட்டது.. இன்றைக்கு இருக்கிற மக்களுக்கும், ஆவணங்களில் சொல்லப்பட்டிருக்கிற மக்களுக்கும் சம்பந்தமில்லை என்பது போல எழுதிக்கொண்டிருக்கிறார்கள்..

தயவு செய்து இதை மாற்றிக் கொள்ளுங்கள்..

அடுத்து, சாதியத்துக்கு வருகிறேன்..

ஒவ்வொரு சாதியும் தன்னுடைய குலத்தொழிலை போன தலைமுறை வரை செய்து கொண்டேதான் இருந்தது.. ஹிந்துத்துவ அமைப்புகள் (குறிப்பாக R.S.S) ஆரம்பிக்கப்பட்டு 80 வருடங்கள் ஆகியிருக்கிறது.. யாராவது, இந்த ஜாதிகளின் குலத்தொழில்லுக்கு எந்த விதத்திலாவது உதவி செய்திருக்கிறார்களா? ஜாதிகள் உடைக்கப்படுவதையும், அரச்சங்கத்தால், பிர்த்தாளப்படுவதையும் வேடிக்கை பார்க்க மட்டுமே செய்தார்கள்.. ஊருக்கு (வெளினாட்டு மீடியாவுக்கும், சிந்தனையாளர் மத்தியிலும்) தான் நல்லவர்கள் என்று காட்டுவதற்காக, ஜாதியை விட்டு விலகியே இருந்துள்ளீர்கள்.. இன்னைக்கு வரைக்கும் அப்படியே இருக்குறீர்கள்..

அப்படியிருக்க, சாதிகள் வஞ்சிக்கப்பட்டு, அடக்கப்பட்டு, பிளவுபடுத்தப்பட்டு நிர்கதியில் நிற்கும்போது, நீங்கள் சாதியம் என்று கூப்பாடு போடுகிறீர்கள்.. இத்தனை நாளாக என்ன செய்தீர்கள் உங்கள் ஹிந்துதுவ அமைப்புகள்..

தயவு செய்து சாதியை பத்தி எழுதுவதை நிறுத்திக்கொள்ளுங்கள்.. உங்களுக்கு ( அதாவது, ஹிந்துவவாதிகளுக்கு ) எந்த தகுதியும் இல்லை.. சாதிகளுக்கு உங்கள் ஹிந்து மதத்த்தில் இடமில்லை என்று பகிரங்கமாக அறிவித்து விடுங்கள்..



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 தமிழ -> தமிள -> த்ரமிள -> த்ரமிட -> த்ரவிட என்பது தான் இந்தச் சொல்லின் உருவாக்கம். இதில் இடையில் உள்ள மூன்று வடிவங்களும் பிராகிருத மொழியில் வழக்கில் இருந்தவை. பிராகிருத இலக்கியங்களில் இச்சொல் வடிவங்கள் வருகின்றன.


// கல்ஹனரால் 12ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட "ராஜதரங்கினி" என்ற காஷ்மீர் வரலாற்றைப் பேசும் நூலும்

கர்நாடகாஸ்²ச தைலங்கா³: த்³ரவிடா³: மஹராஷ்ட்ரகா​: |

கு³ர்ஜராஸ்²சேதி பஞ்சைவ த்³ரவிடா³: விந்த்⁴யத³க்ஷிணே ||

என்று தென்னிந்திய மக்களைக் குறிக்க திராவிட என்ற சொல்லைப் பயன்படுத்தி இருக்கிறது. //

என்று புதியமாதவி எழுதுகிறார். இந்த சுலோகம் “தென்னிந்திய மக்களை” பொதுவாகக் குறிக்கவில்லை. “பஞ்ச திராவிடர்” என்று அழைக்கப் பட்ட ஐந்து தென்னிந்திய பிராமணர் குழுக்களைக் குறிக்கிறது. இவர்கள் விந்தியத்திற்குத் தெற்கே வசிப்பவர்கள்.

இதற்கு அடுத்த சுலோகத்தைப் பார்த்தால் இது தெளிவாக விளங்கும். அந்த சுலோகம் “பஞ்ச கௌடர்” என்று அழைக்கப் பட்ட ஐந்து வட இந்திய பிராம்மணர்களைப் பட்டியலிடுகிறது. இவர்கள் விந்தியத்திற்கு வடக்கே வசிப்பவர்கள்.

ஸாரஸ்வதா​: காந்யகுப்³ஜா: கௌ³டா³: உத்கலமைதி²லா​: |

பஞ்சகௌ³டா³: இதி க்²யாதா விந்த்⁴ஸ்யோத்தரவாஸின: ||

(நன்றி: http://en.wikipedia.org/wiki/Brahmin)

இந்த சுலோகத்திலும் முழுக்க முழுக்க பிரதேச வேறுபாடுகள் மட்டுமே சுட்டப் படுகின்றன. இனவேறுபாடுகள் அல்ல.

பிரிட்டிஷார் வர்ண, சாதி வேறுபாடுகளை எங்ஙனம் திரித்தனர் என்பதைப் பற்றிய தவறுதலான பார்வையையே அவரது பதில் அளிக்கிறது... இது பற்றி சிறந்த சிந்தனையாளர்கள் ராம் ஸ்வரூப் எழுதிய the logic behind the perversion of caste என்ற கட்டுரையைப் படிக்கக் கோருகிறேன். இந்தக் கட்டுரையை நான் தமிழில் மொழியாக்கம் செய்துள்ளேன் -

சாதிகள் வக்கிரமடைந்தது எப்படி? - http://www.tamilhindu.com/2010/05/perversion-of-caste-by-ram-swarup/

அன்புடன்,

ஜடாயு



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

புனைவு அறத்தின் வரலாற்று அடிவயிறு: ‘வெள்ளை யானை’யை முன்வைத்து – 1
December 14, 2013
– அரவிந்தன் நீலகண்டன் 
அச்சிட அச்சிட 

http://www.tamilhindu.com/2013/12/vellaiyanai2a/

jayamohan_1எழுத்தாளர் ஜெயமோகனின் ‘வெள்ளை யானை’ தமிழில் இதுவரை வந்த வரலாற்று நாவல்களில் மிக முக்கியமானது. ஒரு காலகட்டம் வரையில் தமிழில் வந்த வரலாற்று நாவல்கள் பெரும்பாலும் சாகசக் கதைகளே. சுஜாதாவின் ‘இரத்தம் ஒரே நிறம்’ முக்கியமான மாறுதல் தோற்றத்தை அளித்தாலும், அடிப்படையில் அதுவும் ஒரு சிக்கலான சாகசக் கதையேதான். பிரபஞ்சனின் ‘மானுடம் வெல்லும்’ அடுத்த மிக
முக்கிய முன்னகர்வு. ஆனால் ஜெயமோகனின் நாவல் அடுத்த தாவலை நிகழ்த்தியுள்ளது. இதுவரை அதிகம் பேசப்படாத ஒரு கதைக்களத்தில் அது இயங்குகிறது. மானுட அறம் குறித்த உணர்வை வாசகனின் அகத்தில் பெரும் கேள்வியாக எழுப்புவது ஜெயமோகனின் அனைத்து நாவல்களின் மைய அம்சம். மானுடம் சந்திக்கும் பேரழிவுகளினூடாக அக்கேள்விகள் எழுப்பப்படும். இங்கும் அதை உக்கிரமாக
நிகழ்த்தியிருக்கிறார் ஜெயமோகன். இந்த படைப்பின் கலை உத்திகளையோ அல்லது அறம் சார்ந்த மையத்தையோ கேள்விக்கோ விமர்சனத்துக்கோ உள்ளாக்குவது இந்த கட்டுரையின் நோக்கமல்ல.

‘வெள்ளையானை’ ஒட்டுமொத்தமாக ஒரு வரலாற்றுணர்வைஅளிக்கிறது. அந்த வரலாற்றுணர்வின் அடிப்படைகளை இப்படி தொகுத்துக் கொள்ளலாம்:

அ) தமிழ்நாட்டில் 1870களில் ஏற்பட்ட பெரும் பஞ்சத்தில் மிகப் பெரிய அளவில் தலித்துகள் மடிந்தனர். அதனை ஒட்டுமொத்த சாதி இந்து சமுதாயமும் பிரிட்டிஷ் அதிகார வர்க்கமும் இணைந்து வேடிக்கை பார்த்தனர்.

ஆ) குறைந்தபட்ச மானுட நீதியுடன் அதை அணுகியவர்கள் தனிப்பட்ட கிறிஸ்தவ மிஷினரிகளும், ஜனநாயகம் துளிர்விடத் தொடங்கியிருந்த ஒரு சில பிரிட்டிஷ் அதிகாரிகளும் அமெரிக்க வர்த்தகர்களுமே. ஆனால் தலித்தல்லாத இந்துத் தரப்பு முழுக்க முழுக்க பஞ்சத்தின்போது சிறிதும் மனிதத்தன்மையில்லாமல் பிரிட்டிஷ் சுரண்டல் வர்க்கத்துடன் இணைந்து கொண்டது.

இ) இந்த பஞ்சமும் அதனைச் சார்ந்த ‘மேல்சாதி’ இந்துக்களின் மனிதத்தன்மையற்ற தன்மையுமே தலித் தலைவரான காத்தவராயனை (அயோத்திதாசரை) பௌத்தத்தின் பக்கம் ஈர்த்தது.

ஈ) கிறிஸ்தவத்தின் தூய சாராம்சத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான குரலே உள்ளது. ஏசுவே ஓர் ஒடுக்கப்பட்ட கறுப்பின மக்களின் மீட்பர். அவரை மீட்டெடுக்கும் கிறிஸ்தவக் குரல்கள் தலித் விடுதலையின் உறுதுணையாக இருந்தன. அதே சமயம் இந்துக் கடவுளரோ ஆதிக்க சக்திகளின் குறியீடுகளாகவே விளங்கி வருகின்றனர்.

இந்த வரலாற்றுத் தோற்றத்தை நாவல் உணர்ச்சிகரமாக நமக்குள் எழுப்புகிறது. இலக்கியமாக வாசகனின் உணர்ச்சியை வெற்றிகரமாகத் தட்டி எழுப்பும் இந்த நாவல் தலித்திய பிரசார ஆயுதமாகவும் திகழ்கிறது..

கிறிஸ்தவ இறையியலாளரான அலெக்ஸ், இஸ்லாமிய அடிப்படைவாத அரசியலாளரான கே.எம்.சரீப் ஆகியோர் இந்த நாவல் குறித்த பரப்புரையில் இணைகிறார்கள். தாது வருட பஞ்ச காலத்தின் தலித்துகளல்லாத இந்துக்களை அற உணர்வற்றவர்களாக இந்த நாவல் காட்டுவது இந்தக் கூட்டணிக்குக் காரணமாக இருக்கலாம். இத்தகைய சூழலில் நாவல் உருவாக்கும் மேற்கூறிய வரலாற்றுணர்வு, எந்த அளவுக்கு உண்மையான
வரலாற்றுத் தரவுகளுடன் பொருந்திச் செல்கிறது என்பதைப் பார்ப்பது அவசியமாகிறது.

உதாரணமாக ஒன்றைப் பார்ப்போம்.

‘வெள்ளையானை’ நாவலில் ஆண்ட்ரூ என்கிற ஒரு பாத்திரம் வருகிறது. பஞ்சத்தின் இறுதி காலகட்டத்தில் – நவம்பர் 1879 – இந்தியாவுக்கு மதப் பிரசாரத்துக்கு வந்தவர் ஆண்ட்ரூ. இவர் ஸ்காட்டிஷ் சுயாதீன சபை எனும் மதப்பிரசார நிறுவனத்தைச் சேர்ந்தவர். அதற்கு ஓர் ஆண்டு முன்னதாக பஞ்சத்தின் உச்சத்தில் இந்த சபை மிஷினரி அனுப்பிய அறிக்கையில், ‘இந்தப் பஞ்சம் விக்கிர ஆராதனை செய்யும்
பாவத்துக்காக ஆண்டவர் கொடுத்த தண்டனை’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. .[1]

தமிழ்நாட்டில் பஞ்சத்தின் வேர்களும் தலித் சமுதாயமும்

மறக்கப்பட்ட முதல் கலகம்:

தமிழ்நாட்டின் பஞ்சத்தின் விதைகள் 1870களுக்கு நூறாண்டுகளுக்கு முன்னரே தூவப்பட்டுவிட்டன. பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி அப்போது ஆட்சி செய்தது என்றாலும், அது உண்மையில் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் அதிகாரத் தரகராகவே தென்னிந்தியாவில் செயல்பட்டு வந்தது. அக்காலகட்டத்தில் விவசாய நிலங்களிலிருந்து மிக அதிக அளவில் வருமானத்தை வரிவசூல் மூலம் உறிஞ்ச பிரிட்டிஷ்
அதிகாரிகளும் அவர்களுக்குத் துணையாக உள்ளூர் அதிகாரிகளும் செயல்பட்டு வந்தனர்.

நில உடைமையாளர்களிடமிருந்து எந்த அளவு உறிஞ்ச முடியுமோ அந்த அளவு செல்வத்தை உறிஞ்சி எடுப்பது பிரிட்டிஷ் எந்திரத்தின் நோக்கமாக இருந்தது. இந்தச் செயல்பாடு விவசாயத்தில் ஈடுபட்டிருக்கும் தொழில்-சமுதாய குழுக்களிடையே நிலவிய உறவுகளையும் பாதித்தது. இந்த உறவுகள் சுரண்டலற்ற சமத்துவ உறவுகள் அல்ல. சமத்துவம் சுரண்டல் இரண்டுக்குமேயான சாத்தியங்களைக் கொண்டவை. ஆனால்
பிரிட்டிஷ சுரண்டல் அந்த உறவுகளின் எதிர்மறைத் தன்மைகளையே பெரிதாகப் பரிணமிக்க வைத்தது.

பிரிட்டிஷ் இங்கு அமல்படுத்திய விவசாயக் கூலிக்கான சட்டங்கள் அன்றைய பிரிட்டிஷ் நிலவுடைமையாளர்-விவசாயக் கூலிகளின் நிலையை இந்தியாவுக்குப் பிரதியெடுத்தன. 1759இல் அதிகபட்சக் கூலி பாரம்பரிய கூலியைக் காட்டிலும் குறைவாக நிர்ணயிக்கப்பட்டது.. இந்த நிர்ணயிக்கப்பட்ட கூலிக்கு அதிகமாகக் கேட்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது. 1802 இல் தஞ்சாவூர்
கலெக்டர் விவசாயத் தொழிலாளர்களுக்குக் கூலியாகக் கொடுக்கப்படும் தானியங்கள் உடை ஆகியவையும் ஒழுங்குப்படுத்தப்பட வேண்டுமென ஆணையிட்டார்.[2]

Madras_famine_1877

இடதுசாரி வரலாற்றாசிரியர்கள் இது அன்றைய நிலவுடைமையாளர்களுக்கு ஆதரவாகவும் (பெரும்பாலும் தலித்துகளான) தொழிலாளர்களுக்கு எதிராகவும் பிரிட்டிஷ் உருவாக்கியது என்கிறார்கள். இந்தச் சட்டங்கள் தலித் சமுதாயங்களுக்கு எதிரானவை என்பதில் ஐயமில்லை. ஆனால் இவை சுதேசிய நிலவுடைமையாளர்களுக்கும் எதிரானவையாகவே இருந்தன. தமிழகத்தின் முதல் கலகத்தின் ஆவணங்கள் அதைத்தான்
காட்டுகின்றன. நிலவுடைமையாளர்களான கொண்டைகட்டி வெள்ளாளர், விவசாயக் கூலிகளான பறையர், ‘பள்ளி’ ஆகிய சமுதாயக் குழுக்கள் ஒருங்கிணைந்து பிரிட்டிஷுக்கு எதிரான கலகத்தில் ஈடுபட்டனர்.

இந்த காலகட்டத்தில் இப்பகுதிகளுக்கு கலெக்டராக இருந்தவர் லயோனெல் பிளேஸ் (Lionel Place) என்பவர். இவரைப் பொருத்தவரையில் சுதேசிகள் நிலங்களின் வரி மதிப்பீட்டைக் குறைக்க சதி செய்துவிட்டார்கள். எனவே இவர் அதிகபட்ச வரிகளை நிலங்களுக்கு நிர்ணயம் செய்யலானார். பூந்தமல்லியில் 1785 மற்றும் 1796களில் பறையர் ‘பள்ளி’ ஆகியோர் அறுவடை செய்ய மறுத்துவிட்டனர். பிரிட்டிஷ் வரி வசூல்
அவர்களின் வருமானத்தைப் பாதித்தது. தங்கள் கூலியான அறுவடைப் பங்கை அவர்கள் அதிகரித்துக் கேட்டனர். ஒவ்வொரு பத்து கலம் நெல்லுக்கும் இரண்டு மரக்காலுக்கு அதிகமான நெல்லை அவர்கள் இப்போது கேட்டனர். அதாவது கிழக்கிந்திய கம்பனியின் வரவுக்கு முன்னால், அவர்களுக்குத் தரப்பட்ட பாரம்பரிய கூலியையே கேட்டார்கள். அப்படி கிடைக்கவில்லையென்றால் தாங்கள் அறுவடை செய்வதில்லை
என வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

விவசாயக்கூலிகளின் இந்தக் கோரிக்கைக்கும் வேலை நிறுத்தத்துக்கும் நில உடைமையாளர்களின் ஆதரவு இருந்தது. ஒட்டுமொத்தமாகப் பறையருக்கான பாரம்பரிய வேலைக் கூலியான ‘கலவசம்’ 10-12 சதவிகித விளைச்சலை எடுத்துவிடுவதாகவும் குறை கூறுகிறது பிரிட்டிஷ் கலெக்டரின் அறிக்கை.[3] ஆனால் இதை சுதேசிய நிலவுடைமையாளர்கள் குறையாகக் கூறவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

1790களில் இந்த பிரச்சினை சோழமண்டலத்துக்கும் பரவியது. பிரிட்டிஷாரின் அதிக வரிவிதிப்பால் விவசாயத்தை கைவிட்டுவிடும் விவசாய மிராசுதார்களைக் கட்டுப்படுத்த அரசு உத்தரவிட்டது. ஆனால் வரி வசூலை குறைக்கக் கூடாது என்பதில் கண்டிப்பாக இருந்தது. அதேபோல வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு தங்கள் நிலவுடைமையாளர்களிடமிருந்து பிரிந்துசெல்லும் பறையர் பள்ளர் மக்களின்
சொத்துகளை நிலவுடைமையாளர்கள் எடுத்துக் கொள்ளலாம் எனும் பிரகடனத்தை பிரிட்டிஷ் கம்பெனி மாயாவரம், கும்பகோணம் பகுதிகளில் 1798 இல் அறிவித்தது. பறையர் பள்ளர் மக்களுக்கு உதவி செய்வோருக்கு மிகக் கடுமையான தண்டனை எல்லோருக்கும் ஒரு பாடமாக இருக்கும் வகையில் கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.[4]

சென்னையையும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் இந்த வேலைநிறுத்தமே மிராசுதார்களால் தூண்டிவிடப்படுவதாக பிரிட்டிஷ் அரசாங்கம் கருதியது. சாதி அமைப்பின் காரணமாக மெட்ராஸ் பிரதேசமெங்கும் இருக்கும் பறையர் சாதியினர் அனைவரும் இப்படி வேலைநிறுத்ததில் ஈடுபடலாம் எனும் அச்சமும் பிரிட்டிஷாருக்கு ஏற்பட்டது. பிற பறையர் சமுதாய மக்களுக்கு கலகச் செய்தியை கொண்டுசெல்லும்
சில பறையர் சமுதாயத் தலைவர்கள் குறித்த செய்தியும் பிளேஸுக்கு கிடைத்தது. திருவள்ளூரில் ஒரு கோவில் அதிகாரியால் ஒரு குமஸ்தாவுக்கு எழுதப்பட்ட கடிதம் பறையர்களுக்கு எதிராக பிரிட்டிஷ் கம்பெனி எடுத்த நடவடிக்கைகளைக் கூறுகிறது. அங்கு வசிப்பவர்கள் பறையர்களுக்கு உதவக்கூடாதென்று கம்பெனி முரசறிந்து அறிவித்ததையும் பறையர்கள் ஒன்றாக இணைந்துவிடக் கூடாதென்பதில்
அதிகாரிகள் கவனமாக இருப்பதாகவும் அது கூறுகிறது.[5]

பிளேஸின் ஆவணங்கள் ஒரு முழுமையான பிரிட்டிஷ் எதிர்ப்பலை வீசியதைக் காட்டுகின்றன. பொன்னேரி பகுதிக்கான பாளையக்காரர், பிளேஸால் தண்டிக்கப்பட்டார். அவரது சம்பளம் தண்டனையாக எடுத்துகொள்ளப்பட்டது. ஆனாலும் அவர் பிளேஸை வந்து சந்திக்க மறுத்துவிட்டார். சென்னை ‘கறுப்பு நகரத்தில்’ பல பாளையக்காரர்கள் கூடி கலந்தாலோசித்ததாகவும் தெரிகிறது.

பிளேசால் கைப்பற்றப்பட்ட மற்றொரு கடிதத்தில் சென்னை நகரிலிருந்த பறையர் சமுதாயத் தலைவர்கள் சென்னைக்கு நாற்பது கல் தொலைவிலிருந்த கருங்குழியில் வாழும் பறையர்களை சென்னைக்கு வந்து கலந்தாலோசனை செய்யச் சொன்னதாகக் கூறப்பட்டிருந்தது. இந்தக் கடிதத்தை எழுதியதாகச் சொல்லப்பட்ட பறையர் சமுதாயத் தலைவர்கள் இருவர் இறந்து ஒரு வருடம் ஆகியிருந்தது. மூன்றாவது நபரோ அது
தான் எழுதியதல்ல என சொல்லிவிட்டார். இந்தக் கடிதம் குறித்து சென்னையில் வாழும் பறையர் சமுதாயத் தலைவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர்கள், ‘இது எங்களை மாட்டவைக்க மேல்சாதியினரின் சதி’ என்று மறுத்தனர்.. இந்த மறுப்புரையை பிளேஸ் ஆவணப்படுத்தியிருக்கிறார். பெரியதம்பி என்கிற பறையர் சமுதாயத் தலைவரின் மறுப்புரை அது:

“பிரிட்டிஷ் அரசாங்கத்தாரின் பூட்ஸ்களைச் சுத்தம் செய்து வாழ்ந்து கொண்டிருக்கும் நாங்கள் இப்படிப்பட்ட வேலைகளில் ஈடுபடுவோமா? பிரிட்டிஷார் எங்கள் கைகளிலும் கால்களிலும் விலங்குகள் மாட்டி எங்களைத் தீவாந்திரம் அனுப்பிவிட மாட்டார்களா? கருங்குழியில் உள்ள பறையர்களைக் கண்டித்து அவர்கள் எவ்விதக் கலகத்திலும் ஈடுபடக்கூடாதென்று நானே சென்று சொல்கிறேன்.”[6]

கலெக்டர் பிளேஸில் தொடங்கி இந்தக் கலகத்தை அண்மையில் ஆவணப்படுத்தும் யூஜீன் இர்ஷிக் (Eugene F. Irschick) வரை இது பறையர்களைப் பயன்படுத்தி நிலவுடைமைச் சாதிகள் செய்த கலகம் என்றே கூறுகின்றனர். ஆனால் இந்த முதல் கலகத்தை மீண்டும் வாசிக்கும்போது சில முக்கிய விஷயங்கள் தெரிகின்றன:

ஒரு குறிப்பிட்ட விவசாய நிலத்துடன் இணைந்திருந்தாலும் பறையர்களுக்கு விவசாயக் கூலி உரிமை இருந்தது. அந்தப் பாரம்பரியக் கூலி உரிமை மகசூலில் பத்து சதவிகிதம் வரை இருந்தது. அதே காலகட்டத்தில் உலகின் வேறெந்தப் பகுதியின் –பிரிட்டிஷ் உட்பட்ட – விவசாயக் கூலிகளின் கூலியைவிட இது உயர்ந்தது. அரசாங்க வரிவசூல் நியதிகளை இந்தப் பாரம்பரியமுறை கண்டுகொள்ளவில்லை என்பதை
கலெக்டரின் ரிப்போர்ட் தெரிவிக்கிறது.
பறையர்கள் வேலை நிறுத்தம் செய்தது மிகத் தெளிவாக தங்கள் கூலி உயர்வை முன்வைத்தே.. பிரிட்டிஷார் கூறுவது போல எஜமான விசுவாசத்தை முன்வைத்து அல்ல.
பறையர்களுக்கும் இதர பிரிட்டிஷ் எதிர்ப்பாளர்களுக்கும் மிகக் கடுமையான தண்டனை அளிக்கப்பட்டது. தீவாந்திர சிட்சை எனப்படும் இந்தத் தண்டனை – சுமத்ரா தீவில் உள்ள பிரிட்டிஷ் தொழிற்சாலை ஒன்றில் அடிமைகளாக வாழ்க்கை முழுவதும் அடிமையாக மடிவது.
இந்தக் கொடூரமான தண்டனைக்கு ஆளான தலித் சமுதாயத்தினரையும் இதர சமுதாயத்தினரையும் குறித்த நினைவுகள் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டன.

farmers_british_india_2விவசாயத் தொழிலாளர்கள் எண்ணிக்கையில் உபரியை அதிகரிப்பதன் மூலம் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க பிரிட்டிஷார் முனைந்தனர். எனவே பிரிட்டிஷ் ராணுவத்திலிருந்த பறையர் சமுதாயத்தினர் முழுமையாக வெளியேற்றப்பட்டனர். 1777 இல் பிரிட்டிஷார் செய்த மற்றொரு விஷயமும் பின்னாள்களில் பஞ்சத்தின்போது தலித்துகளின் இன்னல்களுக்கான முக்கியக் காரணியாகியிருந்தது.

தங்கள் வெடிமருந்து கிடங்கிக்கு எடுத்துகொண்ட நிலத்துக்கான நஷ்டஈடாக, மெட்ராஸில் தலித்துகள் வாழும் ‘பறையர் சேரி’ என அழைக்கப்பட்ட பகுதியில் இருந்து நிலத்தை அபகரித்து வழங்கினர். இதற்கு எதிராகப் பறையர் சமுதாயத் தலைவர்கள் குரல் எழுப்பினர். இது தாங்கள் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வரும் இடம், கணக்கற்ற ஆண்டுகளாகத் தங்களுக்கு பாத்யதைப்பட்டது என்றார்கள். ஆனால்
பிரிட்டிஷார் அதை மறுத்துவிட்டனர். இந்த நிலத்தில் தலித்துகளுக்கு எந்த பாத்யதையும் கிடையாது, அவர்கள் அங்கு வாடகைக்கு இருப்பவர்களாகத்தான் கருதப்பட முடியும், இந்த இடத்தில் இப்போது இருக்கும் குடிசைகளே அவர்களுக்குப் போதுமானது, அவர்கள் மேலதிக குடிசைகளையும் அங்கே கட்டக் கூடாது என்றனர்..[7]

பிரிட்டிஷ் சமுதாயத்தில் இருந்த நிலமற்ற விவசாயத் தொழிலாளிகளின் அடிமைநிலையை ஒத்த இடத்துக்கு தென்னிந்திய தலித் சமுதாயம் தள்ளப்பட்டது இந்தக் காலகட்டத்தில்தான். பறையர் எனும் வார்த்தை மிக மோசமான இழிவான பெயர் கொண்டதாக மாற்றப்பட்டதும் இதே காலகட்டத்திலாகவே இருக்க வேண்டும். இந்திய சமுதாயத்தின் இயற்கை பரிணாமம் தேக்கநிலைக்கு உள்ளாக்கப்பட்டு, இந்திய சமூக
அமைப்பின் உள்-உறவுகள் பிரிட்டிஷ் சமுதாயத்தின் படிநிலைகளைப் பிரதியெடுக்க வைக்கப்பட்டது. 1840 இல் வெளியான விவிலிய இலக்கியக் கலைக்களஞ்சியம் இதைத் தெளிவுப்படுத்துகிறது:

ஆதியாகமத்தில் (3.19) ஆதி சாபத்தின் ஒரு பகுதியாக நீ உன் முகத்தின் வியர்வையால் உன் உணவை உற்பத்தி செய்வாய் எனும் ஆணை அளிக்கப்பட்டது. எனவே உடல் உழைப்பு என்பது ஒரு கடுங்கனமான பாரம் எனும் பார்வை இருக்கிறது… இந்த மனப்பதிவுகள்… பெரிய அளவில் மனிதனுக்குத் தீமையை இழைத்துவிட்டன. எனவே நம் கிறிஸ்தவ தேசங்களிலும் பெரும்பாலான உழைக்கும் மக்கள் பறையர் சாதியாக பரம்பரை
பரம்பரையாக நீரிறைக்கும் மரம் செய்ய வேண்டியவர்களாக நடத்தப்படும் நிலை இருக்கிறது. அது இறை விருப்பமெனவும், இந்த மக்கள் உயர்ந்த சிந்தனைகளை சிந்திக்க இயலாதவர்களென்றும், இவர்கள் மேலெழுந்தால் சமுதாயத்தைக் களங்கப்படுத்திவிடுவார்களென்றும், எனவே இவர்களை வெறுப்புடனும் சுமைகளாலும் கட்டுப்படுத்தி வைப்பது சமுதாயத்தின் பாதுகாப்புக்கு அவசியமென்றும்
கருதப்படுகிறது.[8]

இந்த வரிகளை எழுதியவர் அறிந்திடாத விஷயமென்னவென்றால் உண்மையில் பறையர் சமுதாய மக்களைப் போல ஐரோப்பிய கிறிஸ்தவத் தேச உழைக்கும் மக்கள் நடத்தப்படவில்லை. மாறாக 18 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய கிறிஸ்தவத் தேச உழைக்கும் சமுதாய மக்களின் சுதந்திரமற்ற நிலை இங்குள்ள தலித் சமுதாயங்கள் மீது திணிக்கப்பட்டது. அதற்கு ஒட்டுமொத்த சமுதாய எதிர்ப்பும் இருந்தது. ஏனெனில் தலித்
சமுதாயத்தின் வீழ்ச்சி என்பது தென்னிந்திய விவசாய அமைப்பின் பெரும் வீழ்ச்சியின் ஒரு அங்கமாக அமைந்திருந்தது. அந்த அமைப்பின் ஜனநாயகத்தன்மை கொண்ட சாத்தியங்கள் அழியவும், அந்த அமைப்பின் தேக்கநிலையால் அதில் இயல்பாக இருந்த சுரண்டலும் படிநிலைத்தன்மையும் தீண்டாமையும் அதிகரிக்கவுமான வழியை அது உருவாக்கியது.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 இவற்றில் வெளிப்படும் ஒரு முக்கிய உண்மை என்னவென்றால் பிரிட்டிஷ் சுரண்டலுக்கு முன்னால் நிலவிய ‘நிலவுடைமை சமுதாய’ அமைப்பு நமக்கு கற்பிக்கப்பட்டதைக் காட்டிலும் அதிக ஜனநாயக சாத்தியங்களைக் கொண்ட அமைப்பாக விளங்கியுள்ளது. அதுவும் ஏற்றத்தாழ்வுகளும் சுரண்டலும் கொண்ட அமைப்பாக இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால் பிரிட்டிஷ் சுரண்டலுக்கு எதிராக அந்த

அமைப்பு ஒருங்கிணைந்து ஒரு ஜனநாயக முறை எதிர்ப்பை காட்டியிருக்கிறது. அந்த எதிர்ப்பு மிகத் திறமையுடனும் இரக்கமின்றியும் பிரிட்டிஷாரால் ஒடுக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆவணங்கள்கூட இன்று இல்லை. பெரியதம்பி என்கிற பறையர் தலைவரின் வார்த்தைகள் மட்டுமே அதற்கான ஒரு சிறிய திறப்பை அளிக்கின்றன.

18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் பிரிட்டிஷார் இந்தியாவில் ஏற்படுத்திய சுரண்டல் முறை ஈடு இணையற்றது. 1757 பிளாசி போர் முதல் 1815 வரையிலான காலகட்டத்தில் மட்டும் 2.5 முதல் 5 பில்லியன் டாலர்கள் மதிப்புடைய செல்வம் இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்கு எடுத்து செல்லப்பட்டதாக கணக்கிடப்படுகிறது.[9]

19 ஆம் நூற்றாண்டின் மத்தியக் காலங்களில் தொடங்கி இன்றுவரைக்கும் உருவாக்கப்பட்டுவரும் ‘ஒடுக்கப்பட்ட தலித்துகள்-சுரண்டும் பிரிட்டிஷார்கள்-அவர்களுடன் கூட்டு சேர்ந்து ரத்தம் உறிஞ்சும் மேல்சாதியினர்- மனசாட்சியுடனும் ‘அருட்பணி’ (மதமாற்றம்) செய்து விடுதலைக் குரல் எழுப்பும் மிஷினரிகள்’ எனும் சித்திரத்துக்கு வேறுபட்டது இது. தங்கள் உரிமைகளுக்காக முதல் கலகக்
குரல் எழுப்பிய தலித்துகள் – அவர்களுடன் இணைந்த மிராசுதார்கள் பாளையக்காரர்கள் – இவர்களுக்கு எதிராக இவர்களை சட்ட ஒழுங்குக்கு எதிரானவர்கள் என ஈவிரக்கமின்றி அடக்கி முடிந்தவரை செல்வத்தை சுரண்டி எடுக்கும் பிரிட்டிஷ் அரசு இயந்திரம் – அந்தப் பொருளாதார உபரியின்மீது அமர்ந்தபடி கறுப்புத் தோல் விக்கிரக வழிபாட்டாளர்களுக்கு காருண்யத்தின் உபரித்துளிகளை
அவ்வப்போது அளித்த ஐரோப்பிய மிஷினரிகள் – இந்தச் சித்திரமே வரலாற்றில் மறக்கடிக்கப்பட்ட பக்கங்களிலிருந்து எழுகிறது.

சித்ரவதைகளுக்கு எதிரான முதல் குரல்

farmers_british_india_3

19 ஆம் நூற்றாண்டிலும் விவசாயிகளுக்கு எதிரான சித்ரவதைகள் தொடர்ந்தன. இதனை எதிர்த்து முதல் ஜனநாயகக் குரலை எழுப்பியவர் காசலு லட்சுமிநரசு செட்டி. பிரிட்டிஷாருடன் இணைந்து இந்திய ரத்தத்தை உறிஞ்சிய மேல்சாதி எனும் மனச்சித்திரத்துக்குப் பொருத்தமானவர் நரசு செட்டி. ஆனால் அத்தகைய குற்றச்சாட்டுக்கு ஏற்றவிதமான இடத்தில் இருந்தாலும் அவரது செயல்பாடுகள் அதற்கு நேர்
எதிராக இருந்தன. தனது தொழில் வர்த்தகத்தை அவர் கவனிக்கவில்லை. மாறாக சிறு விவசாயிகளையும் விவசாயக் கூலிகளையும் பிரிட்டிஷ் சித்ரவதை மூலம் சுரண்டுவதைத் தொடர்ந்து கண்டித்து வந்தார். கிழக்கிந்திய கம்பெனிக்கு மேலே பிரிட்டனில் மக்கள் சபை அமைப்பு இருப்பதை அவர் அறிந்தார். தொடர்ந்து பிரிட்டனின் மக்களவைக்கு கடிதங்கள் எழுதி இந்தியாவின் விவசாய சூழலையும் இங்கு
கிழக்கிந்திய கம்பெனி மூலம் செய்யப்படும் சுரண்டல்களையும் சித்ரவதைகளையும் விவரித்தார். மிஷினரிகளின் மதமாற்ற சூழ்ச்சிகள், பிரிட்டிஷாரின் சித்ரவதை சுரண்டல்கள் ஆகிய இரண்டையும் ஒருசேர எதிர்க்க சென்னையில் ஓர் ஆங்கில இதழையும் ஆரம்பித்தார். அதன் பெயர் கிரஸெண்ட் (‘Crescent’). இதன் விளைவாக பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினரான டான்பி செய்முர் (Danby Seymour) என்பவர் தலைமையில்
ஒரு கமிஷன் அமைக்கப்பட்டு அது மெட்ராஸில் வரி வசூல் செய்ய விவசாயிகளிடம் செய்யப்படும் சித்ரவதைகளை குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டது.[10]

இறுதியாக இந்த கமிஷன் ரிப்போர்ட் வந்த போது அது பிரிட்டிஷ் ஆதரவுத்தன்மை கொண்டிருந்தது என்றாலும், மெட்ராஸ் பகுதியில் சித்ரவதை என்பது பெரிய அளவில் நடக்கிறது என்பது பிரிட்டனின் மனசாட்சியை ஓரளவாவது சீண்டியிருந்தது. அதீதமான வரிவசூல் நிர்ப்பந்தம், கம்பெனி ஆட்சியில் காவல்துறைக்குக் கொடுக்கப்பட்ட கட்டற்ற அதிகாரம் ஆகியவை குறித்து கமிஷன் மௌனிப்பதை நிகோலஸ்
டிர்க்ஸ் சுட்டிக் காட்டியுள்ளார்.[11]

பொதுவாக கமிஷனின் போக்கு இந்தியர்கள் மீது பழியை போடுவதாக இருந்தது. ஐரோப்பிய அதிகாரிகளுக்கும் சித்ரவதைக்கும் தொடர்பில்லை என்பது போலக் காட்டும் போக்குக்குக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் ஆதாரங்களை அடுக்கினார் ஜியார்ஜ் தாமஸ் கேப்பல் (George Thomas Keppel) என்கிற உறுப்பினர்.[12] பல கலெக்டர்கள், பிரிட்டிஷ் வர்த்தகர்கள் சித்ரவதை
இல்லாவிட்டால் தாசில்தார்களால் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு வேண்டிய வரி வசூலிக்க முடியாது என சித்ரவதையை நியாயப்படுத்தியிருந்தனர். இங்கு வட ஆர்க்காடு கலெக்டரான பவுர்டில்லான் (J.D.Bourdillon) செய்துள்ள அவதானிப்பு முக்கியமானதாகும். பிரிட்டிஷாரின் நிலம் சார்ந்த வரி வசூல் முறை சொத்தின் மதிப்பை கடுமையாகக் கீழிறக்கிவிட்டது, இது பொதுவாகவே மக்களின் சுயமரியாதையையும்
நடத்தையையும் பாதித்தது என்பதை அவர் பதிவு செய்கிறார். அப்படி ஒரு சூழலில் இத்தகைய கொடூரமான அவமானப்படுத்தும் சித்ரவதைகளுக்கு அவர்கள் தங்களை ஆளாக்க அனுமதித்திருக்க மாட்டார்கள். [13]

இந்த செயல்பாடுகளுக்கான விளைவுகளை நரசு செட்டி அனுபவிக்க வேண்டியதாயிற்று. அரசாங்கம் அவரது பத்திரிகையை முடுக்க கடுமையான நடவடிக்கைகளை எடுத்தது. அவரது வர்த்தகமும் தகர்ந்தது. 1863 இல் அவர் இறந்தார். அத்துடன் அவர் நடத்திய பத்திரிகையும் மூடப்பட்டது. இன்றைய அரசியல் பார்வையில் லட்சுமிநரசு செட்டி ஒரு இந்துத்துவராகவே அறியப்படுவார். அவர் மதமாற்றத்தை கடுமையாக
எதிர்த்தார். ஆனால் ஒடுக்கப்பட்ட விவசாயத் தொழிலாளர்களுக்காக அன்றைய தாசில்தார்கள்-பிரிட்டிஷ் அதிகாரிகள் என்கிற அசுர பலம் பொருந்திய கூட்டணிக்கு எதிராக தனி மனிதராக குரல் கொடுக்கும் ஆன்மபலம் அவருக்கு இருந்தது. அதை அவரது இந்து மதம் அளித்தது. அக்குரல் ஒரு நிறுவனக் குரலாக மாறியிருந்தால் தாதுவருட பஞ்சம் சென்னை மாகாணத்தில் பெரிய அளவில் தடுக்கப்பட்டிருக்கும்.

ஆனால் அப்படி ஒரு நிறுவனம் மக்கள் உரிமைக்காக இந்தியாவில் உருவாகியிருக்க வேண்டுமென்றால் அதற்கு நிதி அவசியம். இந்தியாவில் தொடர்ந்து கலகக் குரல்கள் ஜனநாயக சக்தியுடன் பிரிட்டிஷ் ஆதிக்கத்தை நோக்கி உயர்ந்த அதே காலகட்டத்தில் இந்தியா மிகப் பெரிய வளச் சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்டது. அதே காலகட்டத்தில்தான் பிரிட்டனின் அளப்பரிய உபரியின் மீது மிஷினரி அமைப்புகள்
உருவாக்கப்பட்டன. இன்று அவை அளிக்கும் சித்திரங்கள் மூலமாகவே நாம் பஞ்சத்தையும், அந்த மிஷினரி அமைப்புகளின் வாரிசுகள் அளிக்கும் கருத்தியல் மூலமாகவே நம் வரலாற்றுணர்வையும் பெறும் சாபத்துக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறோம்.

ஒடுக்கப்பட்ட சுதேச நிவாரணங்கள்

அதீத சுரண்டல், உணவு தானியங்கள் பிரிட்டிஷாரின் போர்களுக்காக ஏற்றுமதி செய்யப்படுதல், இந்திய சமுதாயத்தில் குறிப்பாக பாரம்பரிய விவசாய அமைப்பு பரிணமிக்காமல் அடைந்த தேக்கநிலை இத்தனைக்கும் மேலாக கட்டற்ற சந்தை பொருளாதாரத்தின் கண்ணுக்குத் தெரியாத கரத்தின் மீது பிரிட்டிஷ் அரசுக்கு ஏற்பட்ட திடீர் பக்தி – இவை அனைத்துமே பஞ்சத்துக்கான அடித்தளத்தை
உருவாக்கியிருந்தன. இது போதாதென்று 1876-77 இல் பிரிட்டனில் விவசாய உற்பத்தி மோசமாக இருந்தது. எனவே பிரிட்டிஷ் உணவுதானிய சந்தையின் ஸ்திரத்தன்மைக்காக 3.2 லட்சம் மெட்ரிக் டன் உணவுதானியங்கள் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டன. 1876 இல் பஞ்சத்தின் முதல் அதிர்வுகள் சென்னையை எட்டத் தொடங்கியதுமே பாரம்பரிய அன்னதானங்கள் சென்னையில் செய்யப்பட்டன. தொடக்க பஞ்ச நிவாரண
பணிகளில் ஒரு நாளைக்கு 10,000க்கும் மேற்பட்டோருக்கு உணவு அளிக்கப்பட்டது. பிரிட்டிஷ் அரசாங்கம் இதைப் பாராட்டியது. கூடவே உடல்நிலை நன்றாக இல்லாத உழைக்க முடியாதவர்களுக்கு மட்டுமே இந்த நிவாரண உதவி அளிக்கப்பட வேண்டுமென்று எச்சரித்தது. விரைவில் இந்த பஞ்ச நிவாரண சேவைகளை பிரிட்டிஷ் போலிஸ் அதிகாரி ஏற்றெடுத்தார். இச்சமயம் அது நாளைக்கு 22,000 என உயர்ந்திருந்தது. [14]

farmers_british_india_1

ஆனால் விரைவில் பாரம்பரிய பஞ்ச நிவாரண இயக்கங்கள் நிறுத்தப்பட்டுவிடுகின்றன. அன்று இந்திய வைஸ்ராயாக இருந்த லார்ட் லைட்டன் சந்தை பொருளாதார ஆதரவாளர். வலதுசாரி கிறிஸ்தவர். அவர் ஏற்கெனவே தனது ‘சிக்கன நடவடிக்கைகளின்’ ஒரு பகுதியாக பாசனவசதிகளை செப்பனிடுவதை நிறுத்தி வைத்திருந்தார். இதனால் பெரிய அளவில் நீர் சேகரிப்பு என்பது இல்லாமல் போயிற்று.[15] பஞ்சம் பரவ
ஆரம்பித்தபோது சர் ரிச்சர்ட் டெம்பிள் என்பவரை பஞ்சத்தை மேற்பார்வை செய்ய தனது சிறப்பு அதிகாரியாக சென்னைக்கு அனுப்பினார். வைசிராய் லைட்டன் பிரபு டெம்பிளுக்கு பஞ்ச நிவாரண செயல்பாடுகளை இறுக்கிப் பிடிக்குமாறு அறிவுறுத்தினார். ‘செலவைக் குறித்துக் கவலைப்படாமல் உயிரைக் காப்பாற்றுவது என்பதெல்லாம் முடியாத காரியம்.’ என்றார் ரிச்சர்ட் டெம்பிள். பஞ்ச நிவாரணம்
பெறுவோரில் ஐந்து லட்சம் பேருக்கு நிவாரணம் நிறுத்தப்பட்டது டெம்பிளின் முதல் வெற்றி. ‘உடல்வலிமை சர்வ நிச்சயமாக இல்லை; இனி உழைக்கவே முடியாது’ எனச் சான்றிதழ் பெறும்வரை நிவாரண உணவு கிடைக்காது. எவ்வளவுக்கெவ்வளவு குறைவாக உணவு கொடுத்து உயிர் வாழ வைக்க முடியும் என்பதற்கான பரிசோதனையில் ஈடுபட்டார் டெம்பிள். 1877 இல் லைட்டன் பஞ்சம் குறித்து இங்கிலாந்தில் இப்படி
சொன்னார்: இந்திய சமுதாயம் மண்ணிலிருந்து விளைச்சலை உற்பத்தி செய்வதை விட மக்கள்தொகையை அதிகமாக உற்பத்தி செய்யும் தன்மை கொண்டது.[16]

சென்னையில் ‘கொடை பங்களிப்பு எதிர்ப்பு சட்டம்’ (Anti-Charitable Contribution Act) ஒன்றை கொண்டு வந்தார். அரசு நிர்ணயித்த உணவு தானிய விலையை குறைக்கும் விதத்தில் பஞ்சநிவாரணச் செயல்பாடுகளில் ஈடுபடுவது சிறைத் தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டது. பஞ்சத்தினால் ஏற்படும் படுகொலைகள் குறித்துப் பேசுவதும் எழுதுவதும்கூட குற்றமாக கூறப்பட்டது. தொடர்ந்து பஞ்சநிவாரணத்துக்காக உடல்
உழைப்புக்கு உணவு என்கிற ரீதியில் முகாம்கள் ஏற்படுத்தப்பட்டன. இந்த முகாம்கள் வேண்டுமென்றே குடியிருப்புகளிலிருந்து தொலைவுகளில் அமைக்கப்பட்டன. உடல் உழைப்பு முடிந்தவர்கள் என அதிகாரிகளால் கணக்கிடப்பட்டவர்களிடமிருந்து கடும் உழைப்பு உறிஞ்சப்பட்டது. உணவோ மிகவும் சத்து குறைந்ததாக இருந்தது.

நாஜி வதை முகாம்களில் சிறை செய்யப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்ட உணவைக் காட்டிலும் இங்கு அளிக்கப்பட்ட உணவு தரமும் சத்தும் குறைந்ததாக இருந்தது. பொருளாதார ஆரோக்கியம் பஞ்சத்தில் இறப்பவர்களின் ஆரோக்கியத்தைவிட முக்கியமானது என்றார் ரிச்சர்ட் டெம்பிள். எல்லாமே பொருளாதார சமன்பாடுகளுக்கு பிறகுதான் வரவேண்டும், மனித உயிர்களை மிகக் குறைவான அளவு செலவில்
பாதுகாப்பது என்பதுதான் எல்லாவற்றையும் விட முக்கியம் என்றார் அவர்.[17]

மீண்டும் ஒரு எதிர்ப்புக் குரல்:

பஞ்சத்தின் கோரத்தை துணிகரமாக கொண்டுவந்ததிலும் ஆவணப்படுத்தியதிலும் முக்கிய பங்கு வகித்தது ‘மெட்ராஸ் மெயில்’ பத்திரிகை. 1875 இல் ராஜா சர்.டி.மாதவராவ், திவான் பகதூர் ரகுநாத ராவ் மற்றும் ரங்கநாத முதலியார் ஆகியோரால் நிறுவப்பட்ட இந்த செய்தித்தாள் தொடர்ந்து தலையங்கங்கள் கட்டுரைகள் மூலமாக அரசின் கையாலாகத்தனம், நிவாரணப்பணியில் பாரபட்சம், பஞ்சத்தில்
இறந்தவர்களின் எண்ணிக்கையை அரசு குறைத்து கணக்கிடுவது என இவை அனைத்தையும் வெளிக் கொண்டுவந்தபடியே இருந்தது. வைஸ்ராய் லைட்டன் இறந்தவர்களின் எண்ணிக்கை 2,50,000 என கூறிய போது இந்த பத்திரிகை அவர்களின் எண்ணிக்கை அறுபது இலட்சம் என கணக்கிட்டு கூறியது.[18] (அடுத்த நூற்றாண்டில் ஹிட்லரின் வதைமுகாம்களில் இறந்த யூதர்களின் எண்ணிக்கை!) இந்த நாளேட்டின் ஆசிரியராக இருந்த
வில்லியம் டிக்பி இதில் பாராட்டப்பட வேண்டியவர். ஆனால் அவருக்கு வெள்ளையர் என்கிற ஒரு பாதுகாப்பு கவசம் இருந்தது. கூடிக் கூடிப் போனால் அவரை இங்கிலாந்துக்கு மீண்டும் அனுப்பிவிட முடியும். ஆனால் பத்திரிகை நடத்திய இந்தியர்களுக்கோ இது மிகப் பெரிய ஆபத்து. இருந்த போதிலும் அவர்கள் மெட்ராஸ் மெயில் மூலம் தொடர்ந்து அரசாங்கத்தை தாக்கி வந்தார்கள்.

famine_british_india_1

பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட பலவித தொழில் சார்ந்த மக்களுக்கு வெவ்வேறு விதமான நிவாரணங்கள் தேவைப்பட்டன. இவர்களுக்கான குரல்களை இந்திய பிரதிநிதிகளே ஒலித்தனர். பிரிட்டிஷ் அரசினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டவர்களில் ஒரு பகுதியினர் நெசவாளர்கள். சேஷையா சாஸ்திரி திருச்சி பகுதியில் பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட நெசவாளர்களுக்காக அரசிடம் மன்றாடுகிறார். ஒரு முழுமையான
திட்டத்தை முன்வைக்கிறார்

“அவர்களில் பலர் தங்கள் கைத்தறிகளை அடகு வைத்துவிட்டனர். அறுவடைக் காலம் வந்தால் விவசாயத் தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கும். ஆனால் இவர்களுக்கோ அறுவடை செய்ய தெரியாது. தெரியாத தொழிலில் இவர்களை எவரும் பணியமர்த்தவும் மாட்டார்கள். இன்றைக்கு முழுமையான பிச்சைக்காரர்களாக மாற்றப்பட்டு வறுமையில் இவர்கள் உழல்கிறார்கள். அவர்களின் கைத்தறிகள் மீண்டும் இயங்குவதைத்
தவிர அவர்களுக்கு அளிக்கப்படும் பஞ்சநிவாரனம் வேறென்ன இருக்க முடியும்? … இந்த ஏழை நெசவாளர்களுக்கு வாழ ஒரே வழி பஞ்ச நிவாரண நிதியிலிருந்து இவர்களுக்கு பஞ்சு வாங்கி கொடுத்து மீண்டும் கைத்தறிகளுக்கு உயிர் ஊட்டலாம். (திருச்சியில்) நெசவாளர்கள் எல்லா சாதிகளிலுமாக 18000 பேர் இருக்கிறார்கள் 4500 குடும்பங்களில் 50 கிராமங்களில் உள்ளன. இவர்களில் 1500 குடும்பங்கள் ஓரளவு நல்ல
நிலையில் உள்ளன. 3000 குடும்பங்கள் வறுமையின் விளிம்புக்கு வந்துவிட்டன. இவர்களுக்குப் பஞ்சு வாங்கிக் கொடுக்க வேண்டும். ஒரு குடும்பத்துக்கு இருபது ருபாய்க்கு வாங்கிக் கொடுத்தால் சில வாரங்களுக்காவது கைத்தறிகள் ஓடும்”.[19]

ஆனால் இதிலுள்ள கொடூரமான முரண்நகை என்னவென்றால் 1879 இல் இந்திய நெசவுத் தொழிலை நசிக்க வைக்கும்படி, லங்காஷயர் நெசவாலைகளுக்கு சாதகமான வர்த்தக நிலைபாடுகளை உருவாக்கி, அதனைக் கடுமையாகக் கடைப்பிடித்து, இந்திய நெசவுத் தொழில் அழிவின் பிதாமகராகச் செயல்படப் போகிறார் வைஸ்ராய் லைட்டன். அவருடைய அரசிடம்தான் சேஷையா சாஸ்திரி திருச்சி நெசவாளிகளின் பஞ்ச நிவாரணத்துக்காக
ஒரு தொழில் மீட்டெடுப்புத் திட்டத்தை முன்வைத்து மன்றாடிக் கொண்டிருந்திருக்கிறார்.[20]

துரதிர்ஷ்டவசமாக ஒடுக்கப்பட்டோருக்காக எழுந்த இத்தகைய இந்திய குரல்கள் ஆங்காங்கே ஆவணப்படுத்தப்பட்டுள்ளனவே தவிர மிஷினரிகளின் பஞ்ச விவரணம் போல நிறுவனத்தன்மையுடன் ஆவணப்படுத்தப்படவில்லை. காரணம் எளிமையானதுதான். இந்த குரல்கள் காலனிய பொருளாதாரத்துக்கும் ஆட்சி அதிகாரத்துக்கும் எதிரானவை. இருண்ட மூடநம்பிக்கையும் கொடுமையும் நிறைந்த இந்தியாவுக்கு
ஒளியூட்டும் கிறிஸ்தவ ஐரோப்பிய ஆட்சி எனும் மேற்கத்திய பொதுமனச் சித்திரத்துக்கு எதிரானவை. எனவே இவை திட்டமிட்டு அழிக்கப்பட்டன என்பதைவிட தீவிரமாக ஆவணப்படுத்தப்படாமல் புறக்கணிக்கப்பட்டன எனலாம். இன்று நம் அறவுணர்வைச் சீண்ட உருவாக்கப்படும் புனைவுகளுக்கான நாடகீய உச்சங்களைத் தர இந்த இந்தியக் குரல்களைவிட மிஷினரி விவரணங்களே வல்லவையாக இருக்கின்றன.

இறுதியில் பிரிட்டிஷ் அரசு இயந்திரத்துக்கு பஞ்சத்தால் மக்கள்தொகை குறைந்தது நல்லது என்பதுதான அணுகுமுறையாக இருந்தது. இந்த மால்தூஸிய பார்வை 1881 இல் பஞ்சம் குறித்து உருவாக்கப்பட்ட கமிஷன் கூட இந்த மரணங்களைத் தடுப்பதில் எவ்வித லாபமும் இல்லை என்ற தொனியிலேயே தனது அறிக்கையை சமர்ப்பித்தது:

பஞ்சத்தில் இறந்த எண்பது சதவிகித மக்கள் ஆக வறுமையில் வாடும் 20 சதவிகித மக்கள் கூட்டத்தைச் சார்ந்தவர்கள். இவர்கள் காப்பாற்றப்பட்டிருந்தாலும் ஒழுங்கான கட்டுப்பாடில்லாமல் இன்னும் அதிகமாக அதிகரித்து இன்னும் அதிக மக்கள் வறுமையிலும் கஷ்டத்திலும் உழன்றிருப்பார்கள்.[21]



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 எப்போதோ எழுதியது...

"அதிகாலையில் அரசர்கள் பெருமைகள், அவர்களின் முன்னோர் கள் பிரதாபங்கள் குறித்து பாடி துயில் எழுப்புவது சூதர்கள்... தமிழில் வரும் அதே பெயர்தான் கிட்டத்தட்ட " மனு" விலும் வருகிறது..

//மீனாட்சி கோயில் பட்டவர்களில் ஒரு பிரிவினரான குலசேகரர் குறித்தும் தன் பார்வையை முன் வைக்கும் புல்லர் ஓரிடத்தில் விவாதிக்கிறார்.
// குலசேகர பெருமான் என்பது தெளிவாக ஒரு சத்திரிய பெயர்.அதனால் குலசேகரர் அந்தணரல்லாதவரிலிருந்து வந்தவராக இருக்கலாம். ஆனால் இதை என்னிடம் எவரும் திருக்கோயிலில் குறிப்பிடவில்லை.ஆனால் சதாசிவன் என்பது ஒரு பிராமணப்பெயர். அவர் வடக்கிலிருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. அதே போல் வட இந்திய கௌட பிராமணப் பூசகர்கள் மாலிக்காபூருடைய படையெடுப்புக்கு முன்னாள் கோயிலில் பணிபுரிந்த தாக தெரிகிறது. திருக்கோயிலின் கதையிலும் முதலிலிருந்து பூசகர்கள் காசியிலிருந்து வந்தவர்கள் என்றுதான் சொல்லப்பட்டுள்ளது.// 
மனு நீதியில் ஓரிடத்தில் அரசகுலத்தாருக்கும் பிராமணப் பெண்களுக்கும் கலப்பிலான தொடர்பில் 
பிறக்கும் குலத்தினர் சூதன் எனப்படுவதை (தமிழ்ப் பெயர்ப்பு) சுட்டுகிறது. தமிழ் மரபில் அரசர்களின் முன்னோர் பெருமையை- பாடும் சூதர்கள் குறித்து சொல்லப்படுகிறது. வர்ணங்கள் நெகிழ்வானவை. அசைவியக்கம் கொண்டது. எதோ ஒரு நிலையில் இயக்கம் நின்று போய் விட்டது.கற்பின்-இன்ன பிற பண்பாட்டு மேல்நிலை காரண அடிப்படையில் உயர்வு - தாழ்வு நிலைபெற்றுவிட்டது.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Untouchability Came After Islam’s Entry, And ‘Dalit’ After British: RSS Leader Krishna Gopal

 
 

RSS volunteers (Representative Image) (Adarsh Gupta/Hindustan Times via Getty Images)

 

Senior RSS leader Krishna Gopal Sharma has said that the practice of untouchability came to India after the advent of Islam, ANI has reported.

Gopal, who was speaking at a book launch, also said that the term 'dalit' was part of the British conspiracy to divide and rule India and Indians, and was not known before that.

He also termed the Islamic era as dark age and said that India could survive it owing to its deep spiritual roots. "No country has been able to survive Islam except Bharat. It is due to spirituality and sensibility we survived this dark age," he added.

ANI reported him saying, "The first example of untouchability is seen after Islam came. It is seen when at Raja Dahir's household his queens were on the way to commit Johar. They mentioned the word 'Malechcha' and said they need to hurry for the Johar, else the 'Malechcha' would touch them and they will become impure. This is the first example of untouchability in Indian text."

Gopal cited examples from the current social scenario and said the the usage of 'dalit' was rejected by the Constituent assembly.

He also said that there has been anger among the people of Scheduled Caste due to oppression, and the need of the hour was to discuss the thoughts of those people who have contributed towards correcting the wrongs.

He added, "Anger is there and it is very justified. But there are also those who spoke against it and tried to pacify this anger. Phule, Narayan Guru, Dr Hedgewar, Swami Dayanand, Madan Mohan Malviya, Mahatma Gandhi. We should now discuss them."

Popularly known as "Gopal ji", he reiterated Sangh's stand on having a casteless society, ANI said.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard