New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சங்ககால மக்கள் கொண்டாடிய விழாக்களும் அவற்றின் தன்மைகளும் இல. பிரகாசம்


Guru

Status: Offline
Posts: 24603
Date:
சங்ககால மக்கள் கொண்டாடிய விழாக்களும் அவற்றின் தன்மைகளும் இல. பிரகாசம்
Permalink  
 


 சங்ககால மக்கள் கொண்டாடிய விழாக்களும் அவற்றின் தன்மைகளும்

இல. பிரகாசம் 

Apr 30, 2016

 

sanga kaala vizhakkal15

எல்லாவித மக்களுக்கும் வெவ்வேறு வகையான விழாக்கள் சிறப்புடையதாகப் பார்க்கப்படுகின்றன. அவற்றிற்கு முக்கியக் காரணம் அவ்விழாக்களில் சில அவர்களது சமயம் சார்ந்தும் காணப்படுவதுமாகும். அவைகள் கொண்டாடப்பட்ட காலங்கள், அதன் தன்மைகள் பற்றிய குறிப்புகள் அவர்களது இலக்கியங்கள் மூலமாகவோ அல்லது அவர்களது காலத்திய தொல்லியல் ஆய்வுகள் மூலமாகவோ மற்றும் பயணக் குறிப்புகள் மூலமாகவோ கிடைக்கின்றன. பெரும்பாலும் ஒரு ஆய்விற்கு முக்கிய ஆதாரமாக அம்மக்களின் இலக்கியங்களை ஆராய்ந்து பார்க்கின்ற பொழுது, கிடைக்கின்ற சான்றுகளே முதன்மையானதாகும்.

அதனடிப்படையில் தமிழகத்தில் சங்ககால மக்கள் கொண்டாடிய விழாக்கள் பற்றிய பல குறிப்புகள் காணக்கிடைக்கின்றன. சங்ககால நூல்களான எட்டுத்தொகை மற்றும் பத்துப்பாட்டு நூல்களிலிருந்து ஆய்வு செய்தல் தக்கது என்ற முறையில் அவற்றினுள்ளே புதையுண்டு கிடக்கின்ற, இன்று நமது வாழ்விலிருந்து மறைந்து போயிருக்கின்ற சில விழாக்களின் தன்மைகள் பற்றியும் இங்கே காணலாம்.

கார்த்திகை திருவிழா:

sanga kaala vizhakkal2

தமிழர்கள் கொண்டாடிய விழாக்களில் முக்கிய இடத்தைப் பெறுகின்ற இவ்விழாவானது அடிப்படையில் சமய விழாவாகப் பார்க்கப்படுகிறது. இவ்விழாவினை இன்றும் நாம் கடைபிடித்தும் வருகிறோம். இவ்விழா பற்றிய குறிப்பை சங்ககால நூலான நற்றிணையில் கூறப்பட்டுள்ளது இங்கு கவனிக்கத் தக்கதாகும். ஏனெனில் சங்ககால நூல்களில் முன்னதாக வைத்துப் போற்றக்கூடிய நூல் என்பதாலேயே இத்தகைய முக்கியத்துவம் பெறுகிறது. இவ்விழாவானது கார்த்திகை மாதத்தில் நடைபெற்ற விழாவாகும். கார்த்திகை விண்மீனை “அறுமீன்” என்றும் அழைத்துள்ளனர். கார்த்திகைத் திங்களை “அறஞ்செய்; திங்கள்” (நற்றி-202). என்றும் அழைக்கப்பட்டுள்ளது. வீடுகளும், தெருக்களும் ஒளிவிளக்குகளால் அழகுறுத்தப்பட்டிருத்தல் வேண்டும். அதற்கு ஆதாரமாக அகநானூற்றுப் பாடல் ஒன்றும் நமக்கு சான்று பகர்கிறது.

”மழையால் நீங்கிய மாசு விசும்பின்

குறுமுயல் மறுநிறம் கிளர மதிநிறைந்து

அறுமீன் சேரும் அகலிருள் நடுநாள்

மறுகு விளக்குறுத்து மாலை தூக்கிப்

பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய

விழவுடன் அயர” (அகம்-141)

என்பதன் மூலம் அக்கால மக்கள் இவ்விழாவின்பொழுது தங்களது வீடுகளில் அகல் விளக்குகள் ஏற்றினர் என்பதையும், மேலும் இவ்விழாவானது மதுரையில் பரவலாகக் கொண்டாடப்பட்டுள்ளமைக்கு சான்றாக, “பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய” என்ற வரிகள் நமக்கு சாட்சியாக விளங்குவதைக் காணலாம். மூதூர் என்பது மதுரையைக் குறிக்கும் சொல் ஆகும்.

தை நீராட்டு விழா:

இத்தை நீராட்டு விழாவானது இளம்பெண்கள் தங்களுக்கு கணவனாக வரவேண்டிய ஆண் மகன் நற்பண்புடையவராக இருக்க வேண்டும் என நோன்பிருப்பதாகும். இளம்பெண்கள் தங்களது தோழியர்களுடன் ஊரிலுள்ள குளத்தில் தைத் திங்களில் நீராடி இவ்விழாவினைக் கொண்டாடினர் என்பதை சங்ககால நூலான ஐங்குறுநூறு எடுத்துக்காட்டுகிறது.

“நறுவீ யைம்பான் மகளி ராடும்

தைஇத் தண்கயம் போலப்

பலர்படிந் துண்ணுநின் பரத்தை மார்பே”(ஐங்குறு-84)

மற்றும் புறநானூற்றுப் பாடலிலும் மேற்கண்ட பாடலின் வரியானது இடம் பெற்றுள்ளதைக் காணலாம்.

“தைஇத் திங்கள் தண்கயம் போலக்”(புறம்-70)

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக வைத்துப் போற்றப்படுகின்ற நற்றிணை நூலிலும் இதற்கான சான்றுகள் கிடைப்பதன் மூலமும், மற்றும் கலித்தொகை நூலிலும் காணப்படுவதன் மூலமும் அக்காலத்தில் இவ்விழாவானது சிறப்பாகக் கொண்டாடப்பட்டுள்ளது என்பது இவற்றின்கண் அறியமுடிகிறது. அவை

“தைத் திங்கள் தண்கயம் படியும்

பெருந்தோட் குறுமகள்”(நற்றி-80) மற்றும்

“தையில் நீராடிய தவந்தலைப் படுவாளோ”(கலி-13) ஆகிய வரிகள் பெண்களை பெருமைப்படுத்தும் விதத்தில் அமைந்திருப்பதன் மூலம் நாம் நன்கறியலாம்.

திருவோணம் விழா:

sanga kaala vizhakkal5

திருவோணம் விழா சங்ககாலத்தில் கொண்டாடப்பட்டுள்ளதாக பத்துப்பாட்டு நூலான மதுரைக்காஞ்சியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்விழாவானது தற்போது கேரளத்திலும், தமிழகத்திலும், மற்ற பிற தென் மாநிலங்களிலும் ஆங்காங்கே கொண்டாடப்பட்டுவருவது நாம் அறிந்ததே. இவ்விழாவானது திருமாலுக்கு உரியதாகக் கருதப்படுகிறது.

“கணங்கொள் அவுணர்க் கடந்த பொலந்தார்

மாயோன் மேய ஓண நண்ணாட்” (மதுரைகாஞ்சி-591)

என்ற வரிகளானது கருமை நிறமுடைய திருமாலை குறிப்பிடுவதிலிருந்து ஓணம் விழா திருமாலுக்கென எடுக்கப்பட்டது தெளிவு.

இளவேனில் விழா:

இளவேனிற் காலமானது காமவேளுக்குரியதாகக் கருதப்படுகிறது. இக்காலத்தில் ஊரில் உள்ளவர்கள் கொண்டாடும் விழாவாகும். இவ்விழா பற்றி பரிபாடலில் காமன் கடவுளாகப் போற்றப்பட்டுள்ளது. மேலும் இவ்விழாவானது தொடர்ந்து நடைபெற்றும் வந்ததெனவும் தெரிகிறது. ஆவற்றிற்கு சான்றாக “காமவேள் அம்பின் தொழில் வீற்றிருந்த நகர்” (பரிபாடல்-18:26இ27) என்பதன் மூலம் பெரும் சிறப்போடு கொண்டாடப்பட்டிருத்தல் வேண்டும் என்பதில் ஐயமேதுமிருக்காது.

இவ்விழா நடைபெறுகிறது என்பதனை அறிந்தால் பெண்கள் மிகுந்த வருத்தம் கொள்வர் என

“உறலியா மொளிவாட வுயர்ந்தவன் விழவினுள்

விறலிழை யவரோடு விளையாடு வான்மன்னோ” (கலித்-30)

இவ்வரிகள் காட்டுகின்றன. பரத்தையருடன் இவ்விழாவில் ஆடவர் கூடிடுவர் என்பதனால் பெண் மிகுந்த வருத்தத்திற்குள்ளாவாள் என தோழியானவள் தலைவிக்கு ஆறுதல் கூறும் விதத்தில் கலித்தொகையில் வேறொரு பாடலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவை

“காமவேள் விழாவாயிற் கலங்குவள் பெரிதென

வேமுறு கடுந்திண்டேர் கடவி

நாம்அமர் காதலர் துணைதந்தார் விரைந்தே” (கலி-27)

sanga kaala vizhakkal6

இவ்வரிகள் தோழியானவள் தன் தலைவிக்கு கூறுகிறாள் “தாங்கள் இவ்விழா நடைபெறுவதைக் கண்டு மிகுந்த துன்பம் கொள்வீர்கள் என அறிந்தே தலைவர் தேரினை விரைவாக செலுத்தி வந்ததாக” கூறும்படியாக அமைந்துள்ளதைக் காண்க.

காமவேள் விழாவில் காதலர்கள் களித்து விளையாடியதும் தெரிகிறது. அவை

“ மல்கிய துருத்தியுள் மகிழ்துணைப் புணர்ந்தவர்

வில்லவன் விழவினுள் விளையாடும் பொழுதன்றோ” (கலி-35)

என இவ்வரிகள் எடுத்துக் கூறுவதன் மூலம் நாம் அறியலாம்.

இந்திர விழா:

இந்திரனைப் பற்றிய குறிப்புகளானது சங்க நூல்களில் சொற்ப அளவிலேயே நமக்குக் கிடைக்கின்றன. அவற்றில் இந்திர விழா கொண்டாடப்பட்டதற்குச் சான்று தரும் விதமாக ஐங்குறு நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவ்வரியானது

“இந்திர விழாவிற் பூவின் அன்ன” (ஐங்குறு-62) ஆகும். இவ்வரியின் மூலம் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டுள்ளதற்கு தகுந்த சான்றாகும். மேலும் இவ்விழா பற்றிய செய்திகளை சங்ககாலத்திற்குப் பின் எழுந்த நூலான சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை ஆகியவற்றில் அரசு விழாவாக கொண்டாடப்பட்டிருப்பதால் இவ்விழா தொடர்ந்து நடைபெற்றிருத்தல் வேண்டும்.

நீர் விழா:

நீர் விழா சோழவள நாட்டில் சிறப்பாக நடைபெற்றதென அகநானூற்றுப் பாடலின் வாயிலாக அறியமுடிகிறது.

“கல்லா யானை கடிபுனல் கற்றென

மலிபுனல் பொருத மருதோங்கு படப்பை” (அகம்-376)

இவ்வரிகளானது, இந்நீர் விழா எத்தகைய அழகோடும் சிறப்போடும் நடைபெற்றது என அறியலாம். மேலும் இவ்விழாவின் பொழுது பல்வேறு இசையொலிகளை எழுப்பும் கருவிகளைக் கொண்டு இசைக்கப்பட்டன என பின் வரும் வரியானது காட்டுகிறது. அவை

“தண்பதங் கொண்டு தவிர்ந்த இன்னிசை

ஓண்பொறிப் புனைகழல் சேவடிப் புரள” (அகம்-376)

மேலும் இவ்விழா “கலிகொள் சுற்றமொடு கரிகாலன்” என இதே பாடலின் மற்றொரு வரியில் வந்துள்ளமையால் கரிகாலனது காலத்தில் நடைபெற்றது என இயம்ப இடம் உண்டு. (எனினும் இம்மன்னனின் காலம் கி.மு 120-கி.மு.90 வரை வாழ்ந்தவரென்றும் தொல்லியல் ஆய்வுகள் மூலம் சுட்டிக் காட்டப்பட்டுள்ளதைக் காண்க. மேலும் திருமாவளவன் எனப் பெயர்கொண்ட கரிகாற்பெருவளத்தான் காலம் கி.மு. முதல் நூற்றாண்டு என்பதையும் கருத்திற் கொள்ளுதல் வேண்டும். இம்மன்னனைப் பற்றி பொருநர் ஆற்றுப்படையில் முடத்தாமக் கன்னியார் பாடியுள்ளதையும் காண்க.)

பரிபாடலிலும் நீர் விழா பற்றிய குறிப்பு காணப்படுகிறது.

“ ———- பூநீர் நிறைதலின்

படுகண் இமிழ் கொளை பயின்றனர் ஆடும்

களிநாள் அரங்கின் அணிநலம் புரையும்” (பரிபாடல்-16)

இதன் மூலம் வைகை ஆற்றங்கரையிலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டமை தெளிவு.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
RE: சங்ககால மக்கள் கொண்டாடிய விழாக்களும் அவற்றின் தன்மைகளும் இல. பிரகாசம்
Permalink  
 


திருப்பறங்குன்றத்து விழா:

sanga kaala vizhakkal7

திருமுருகன் வள்ளியை திருமணம் செய்து கொண்ட இடம் திருப்பரங்குன்றம் என பரிபாடலின் வாயிலாக இத்தகவல் தெரியவருகிறது.

“……..தண்பறங் குன்றத்து இயல்அணி நின்மருங்கு

சாறுகொள் துறக்கத்த வளொடு

மாறுகொள்வது போலும் மயிற்கொடி வதுவை” (பரிபாடல்-19)

இவ்வரிகளானது திருமுருகன் மற்றும் வள்ளியினது திருமணம் நடைபெற்றதை விளக்குகிறது. கூடல் நகர் மக்கள் திருப்பரங்குன்றத்தை நோக்கி நடை பயணம் மேற்கொண்டதைப் பற்றியும், பாண்டியன் திருமுருகனை தரிசிக்க வருகை தந்தமையையும் குறிப்பிடுகிறது. இவ்விழாவின் போது இசையுடன் பாடல்கள் பாடப்பட்டிருத்தல் வேண்டும்.

வேங்கட விழா:

sanga kaala vizhakkal8

திருமாலுக்கு விழா எடுக்கப்பட்டது பற்றி அகநானூற்றுப் பாடலில் கூறப்பட்டுள்ளது. “விழவுடை விழுச்சீர் வேங்கடன்”(அகம்-61) திருவேங்கடத்தில் திருமாலுக்கு விழாவானது சிறப்பாக நடைபெற்றமையை இது சுட்டுகிறது. திருமாலைப் பற்றிக் கூறுகிறபொழுது நால்வகை யுகங்களைப் பற்றி பரிபாடல் கூறுகிறது. அவை

“நால் வகை ஊழி என் நவிற்றும் சிறப்பினை” (பரிபாடல்-3) இதன் மூலம் திருமால் தெய்வம் வணங்குதல் சிறப்புற விளங்கியிருந்தது என்பது தெளிவு.

உள்ளி விழா:

sanga kaala vizhakkal9

உள்ளி விழாவானது கொங்கர் எனும் மக்கள் கொண்டாடிய விழாவாகும். இவர்கள் இடைப்பகுதியில் மணியைக் கட்டிக்கொண்டு தெருவில் ஆடுவர்.

“——————கொங்கர்

மணியரை யாத்து மறுகின் ஆடும்

உள்ளி விழவின் அன்ன

அலரா கின்றது பலர்வாய்ப் பட்டே” (அகம்-368)

இதன் மூலம் இதுபோன்ற சில விழாக்கள் குறிப்பிட்ட பகுதி மக்கள் மட்டுமே கொண்டாடிய விழாக்கள் நிறைய இருந்திருக்க வாய்ப்புகள் உண்டு. ஆனால் அவை பற்றிய குறிப்புகள் கிடைக்கப்பெறவில்லை.

பங்குனி விழா:

sanga kaala vizhakkal15

பங்குனி விழா சோழர்களின் தலைநகராக விளங்கிய உறையூரில் கொண்டாடப்பட்டுள்ளது.

“வெள்நெறி முரசின் விரல்போர்ச் சோழர்

இன்கடுங் கள்ளின் உறந்தைட ஆங்கன்

வருபுனல் நெரிதரும் இகுகரை பேரியாற்று

உருவ வெண்மணல் முருகுநாறு தண்பொழில்

பங்குனி முயக்கம் கழிந்த வழிநாள்” (அகம்-137)

இன்றும் பங்குனி விழா தமிழகத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது.

பூந்தொடை விழா:

இவ்விழா படைக்கலப் பயிற்சி பெற்ற வீரர்களின் திறமையை அரங்கேற்றம் செய்யவே கொண்டாடப்பட்டுள்ளது. வில்லில் கணைகளை ஏற்றி குறிபார்த்து எய்தும் விழா என்று கொள்வது பொருத்தமாகும்.

“வார்கழல் பொழிந்த வன்கன் மழவர்

பூந்தொடை விழவின் தலைநாள் அன்ன

தருமணல் ஞெமிரிய திருநகர் முற்றம்” (அகம்-187)

கோடியர் விழா:

ஆடும் கலைஞர்களின் விழாவாகக் கருதப்படுகிறது. இவ்விழாவில் கூத்தர் பாணர் விறலியர் போன்ற கலைஞர்கள் கலந்துகொண்டு ஆடுவதாகும். இவ்விழாவில் பல வகையான இசைக் கருவிகள் வாசித்தனர் என அறியலாம்.

“கோடியர் விழவு கொள் விறலி பின்றை முழவன் போல்” (அகம்-352) என்ற வரியானது பாணர் மற்றும் கூத்தர்களையும், விறலியர்களையும் குறிப்பிடுகிறது. (முழவன்- முழவு என்பது ஒரு வகை தோல் கருவி ஆகும். அக்கருவியை இசைப்பவன் எனப் பொருள் கொள்க)

வெறியாட்டு விழா:

இவ்விழா முருகக் கடவுளுக்கு எடுக்கப்பட்டதாகும். இது சங்க காலத்தில் பரவலாக கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளது. முருகனுக்காக வேலன் கையிலேந்தி ஆடுவான் திணையரிசியை தூவுவான். இதனைப் பற்றி திருமுருகாற்றுப்படை கூறுகிறது. அவை

“சிறுதிணை மலரொடு விரைஇ மறியறுத்து

வாரணக் கொடியோடு வயிற்பட நிறீஇ

ஊரூர் கொண்ட சீர்கெழு விழவினும்” (திருமுருகாற்றுப்படை 218-220)

இவ்வரிகள் முருகனுக்காக எடுக்கப்பட்ட இவ்வெறியாட்டு விழாவின் தன்மை பற்றிக் கூறுகிறது. அதாவது குன்றுகள் இருக்கின்ற இடத்தில் எல்லாம் முருகன் வீற்றிருக்கும் இடம் எனக் கருதி அங்கு மலைப் பகுதியில் விளைந்த சிறுதிணையை மலருடன் சேர்த்து பரப்பி ஆட்டினை பலியிட்டும் கோழிக் கொடியை அங்கே நட்டும் முருகன் குடியிருக்கும் இடம் என அம்மக்கள் இவ்விழாவைக் கொண்டாடினர் என்பது இதன் பொருளாகும். மேலும் ஆட்டினை பலி கொடுத்த செய்தியை குறிஞ்சிப்பாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.

“——–நெடுவேள்

அணங்குறு மகளிர் ஆடுகளங் கடுப்பத்

திணிநிலை” (குறிஞ்சிப்பாட்டு-174-176) இவ்வரியில் ஆட்டினை பலிகொடுத்து வெறியாடியது பற்றிய குறிப்பு கிடைக்கின்றது. எனவே பெண்கள் வெறியாடிது தெளிவு.

“செறிதொடி முன்கை கூப்பிச் செவ்வேள்

வெறியாடு மகளிரொடு செறியத் தாஅய்க்” (பட்டினப்பாலை 154-155)

ஆகிய வரிகள் வெறியாட்டு விழாவின் தன்மையைப் பற்றிக் கூறுகின்றது. இதன் மூலம் வெறியாட்டு விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது என்பது தெளிவாகிறது.

பொங்கல் விழா:

sanga kaala vizhakkal11

இவ்விழா தைத் திங்களில் கொண்டாப்படுகிறது. முதற்கண் அறுவடை விழாவாகத் தொடங்கி பின் வளத்தைக் குறிக்கின்ற விழாவாக மாறியது. ஆனால் பொங்கல் விழா பற்றிய விவரம் கிடைக்கவில்லை. ஆனால் தைத் திங்களில் பெண்கள் நோன்பு இருப்பதுண்டு என முன்னரே நாம் பார்த்தோம். எனவே தை நீராட்டு விழாவோடு மிகுந்த தொடர்பு கொண்டிருத்தல் அல்லது இவ்விழாவின்கண் தைநீராட்டு விழா நடைபெற்றிருத்தல் வேண்டும். இப்பொழுதும் பொங்கல் தென்னிந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது.

முடிவு:

இவ்விழாக்கள் சங்ககால மக்களின் வாழ்வியல்போடு பொருந்தியுள்ளதையும் காணமுடிகிறது. மக்களின் வாழ்வில் விழாக்கள் முக்கியமானதாகவும் இருந்துள்ளன எனவும் அறிய முடிகிறது. ஆனால் இவற்றுள் சில விழாக்கள் தற்போது வழக்கத்தில் இல்லை என்பதும் தெரியவருகிறது. எனினும் சங்ககால மக்களின் சமயம் சார்ந்த விழாக்களும் அவை எத்தகைய தன்மை வாய்ந்தவை என்பதையும் அறியவும் முடிகிறது.

பார்வை நூல்கள்:

  1. தமிழ் இலக்கிய வரலாறு- டாக்டர் மா.இராசமாணிக்கனார்
  2. சோழர் வரலாறு- டாக்டர் மா.இராசமாணிக்கனார்.
  3. தமிழர் நாகரீகமும் பண்பாடும்- அ.தட்சிணாமூர்த்தி
  4. திருமுருகாற்றுபடை மற்றும் பொருநராற்றுபடை மூலமும் உரையும்-டாக்டர் கதிர் முருகு
  1. பட்டினப்பாலை மூலமும் உரையும்- டாக்டர் கதிர் முருகு
  2. மதுரைக்காஞ்சி மூலமும் உரையும்- டாக்டர் கதிர் முருகு
  3. குறிஞ்சிப்பாட்டு-டாக்டர் கதிர் முருகு.
  4. நற்றிணை மூலமும் உரையும-அ.ப.பாலையன்
  5. அகநானூறு மூலமும் உரையும்- புலியூர்க்கேசிகன்
  6. புறநானூறு மூலமும் உரையும்- புலியூர்க்கேசிகன்
  7. ஐங்குறுநூறு மூலமும் உரையும்- புலியூர்க்கேசிகன்
  8. பரிபாடல் மூலமும் உரையும்- புலியூர்க்கேசிகன்
  9. கலித்தொகை மூலமும் உரையும்- புலியூர்க்கேசிகன்


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

தமிழர்களின் தீபாவளி எது தெரியுமா...? #MahaDeepamSpecial

Vikatan Correspondent
தமிழர்களின் தீபாவளி எது தெரியுமா...? #MahaDeepamSpecialதமிழர்களின் தீபாவளி எது தெரியுமா...? #MahaDeepamSpecial

ந்துக்கள் கொண்டாடும் பல பண்டிகைகளில் தீபாவளியும் ஒன்று. தீபாவளி என்றால் ஐப்பசி மாதம் அமாவாசைக்கு முந்தின சதுர்த்தசி அன்று கொண்டாடப்படுவது என்றே நம்மில் பலரும் நினைத்திருப்போம்.
ஆனால், தமிழர்களைப் பொறுத்தவரை  தீபாவளி என்றால் அது விளக்கீடுத் திருவிழா எனப்படும் கார்த்திகை தீபத் திருவிழாதான் ஆகும். அதற்கான எண்ணற்ற சான்றுகள் பல சங்க இலக்கியங்களிலும்,  பிற்கால இலக்கியங்களிலும்கூடக் காணப்படுகின்றன.
தீபாவளி என்றால் தீபம் + ஆவளி = தீபங்களின் வரிசை என்று பொருள்.
தமிழர்கள் தீபங்களை வரிசையாக ஏற்றிக் கொண்டாடும் பண்டிகை திருக்கார்த்திகை தீபத் திருநாள்தான்.


தீபத் திருவிழா பற்றி அகநானூறில்...
இறைவன் அக்னிப் பிழம்பாகத் தோன்றிய திருவண்ணாமலை திருத்தலத்தில்தான் முதன்முதலாக தீபத் திருவிழா நடந்தது என்பதை விளக்கும் ஒரு பாடல் அகநானூறின் 141-வது பாடல் விளக்குகிறது.


மழை கால் நீங்கிய மகா விசும்பில்
குறுமுயல் மறுநிறம் கிளர்மதி நிறைந்த
அறுமீன் சேரும் அகவிருள் நடுநாள்
மறுகு விளக்குறுத்து மாயை தூக்கிப்
பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய
விழவுடன் அயர வருகத்தில் அம்ம !
என்று கூறுகிறது. பழவிறல் மூதூர் என்று இங்கே குறிப்பிடப்பட்டு இருப்பது திருவண்ணாமலை திருத்தலத்தைத்தான். மற்றொரு பாடல்
நலமிகு கார்த்திகை நாட்டவர் இட்ட
தலைநாள் விளக்கின் தகையுடையவாகிப்
புலமெல்லாம் பூத்தன தோன்றி சிலமொழி
தூதொடு வந்த மழை'
என்று விவரிக்கிறது.

"தலை நாள் விளக்கின்' என்று சொல்லப்பட்டு இருப்பதில் இருந்து தீபத் திருவிழா பலநாள் கொண்டாடப்படும் விழா என்றும், இறுதியாக கார்த்திகை மாத நட்சத்திரத்தில் கொண்டாடப்படும் விழாவே கார்த்திகை தீபப் பெருவிழா என்றும் பொருள் கொள்ளலாம்.


நெடுநல்வாடையில்...
இருள் சூழ்ந்திருக்கும் கார்கால மாலைப் பொழுதில் பெண்கள் மாலைப் பொழுதில் தீபங்களை ஏற்றி வழிபடுவது பற்றி நெடுநல்வாடை அழகாக விவரிக்கிறது.
வெள்ளி வள்ளி வீங்கு இறைப் பணைத் தோள்
மெத்தென் சாயல் முத்து உறழ் முறுவல்
பூங்குழைக்கு அமர்ந்த ஏந்து எழில் மழைக்கண்
மடவரல் மகளிர் பிடகைப் பெய்த
செவ்வி அரும்பின் பைங்கால் பித்திகத்து   
அவ்விதழ் அவிழ் பதம் கமழப் பொழுது அறிந்து
இரும்பு செய் விளக்கின் ஈர்ந்திரி கொளீஇ
நெல்லும் மலரும் தூஉய் கைதொழுது
மல்லல் ஆவணம் மாலை அயர
வெண்மை நிற சோழிகளாலும் கிளிஞ்சல்களாலும் ஆன வளையல்களை தங்கள் கைகளில் அணிந்திருக்கும் மங்கையர்கள், மல்லிகை இதழ் விரித்து மணம் பரப்பும் மாலை நேரத்தில் இரும்பினால் ஆன விளக்குகளை, எண்ணெயில் நனைத்த திரிகளைக் கொண்டு ஏற்றி, ஏற்றிய தீபங்களை மலர்களும் நெல்பொரியும் தூவி வழிபடுவார்களாம்.

தேவாரப் பதிகத்தில்
ஞானசம்பந்தர் சென்னை மயிலாப்பூர் தலத்தில் பாடிய பூம்பாவைப் பதிகத்தில் ஒவ்வொரு மாதமும் கொண்டாடப்படும் திருவிழாக்களைப் பற்றிக் குறிப்பிட்டுப் பாடும்போது,
வளைக்கை மடநல்லார் மாமயிலை வண்மறுகில்
துளக்கில் கபாலீச் சரத்தான்தொல் கார்த்திகைநாள்
தளத்தேந் திளமுலையார் தையலார் கொண்டாடும்
விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்.    
என்று பாடி இருக்கிறார். இந்தப் பதிகத்தில் ஒவ்வொரு மாதமும் கொண்டாடப்படும் பண்டிகைகளைப் பற்றிய விவரங்களை நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது.


 'அறுமீன் பயந்த அறஞ்செய் திங்கள் செஞ்சுடர் நெடுங்கொடி என்று நற்றிணையிலும்'அழல் சேர் குட்டம்'; என்று சிலப்பதிகாரத்திலும், 'நலமிகு கார்த்திகை நாட்டவர் இட்ட நாள் விளக்கு' என்று கார் நாற்பதிலும்; 'கார்த்திகை விளக்கு இட்டன்ன கடிகமழ் குவளை பைந்தனர்' என்று சீவக சிந்தாமணியிலும் கார்த்திகை தீபத் திருவிழா பற்றிய பல சான்றுகள் காணப்படுகின்றன.
பிற்காலத்தில் சிவப்பிரகாசரால் இயற்றப்பட்ட சோனசைல மாலை என்ற நூலில்,
கார்த்திகை விளக்கு மணிமுடி சுமந்து
கண்டவர் அகத்து இருள் அனைத்தும்
சாய்த்துநின்று எழுந்து விளங்குறும் சோண
சைலனே கயிலை நாயகனே..  
என்று, உலக விளக்குகள் எல்லாம் புற இருளை மட்டுமே நீக்க, இக்கார்த்திகை விளக்கோ புறத்திருளோடு அகத்திருளையும் அதாவது அஞ்ஞான இருளையும் நீக்க வல்லதாய் இருக்கும் அற்புதத்தைச் சிவப்பிரகாசர் கூறுகிறார்.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

பழந்தமிழர் விழாக்கள்

 
          சங்க காலத் தமிழர்கள் கொண்டாடிய விழாக்கள் பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியங்களில் கிடைக்கின்றன. அவற்றுள் சில சமயம் தொடர்பானவை. வேறு சில சமூகம் தொடர்பானவை. நகரங்கள் சில, ‘விழவு மேம்பட்ட பழவிரல் மூதூர்’ என்று பாராட்டப்பட்டுள்ளன. விழாக்களில் ஆடலும், பாடலும் இடம்பெற்றன. பாணர், கூத்தர் முதலிய கலைஞர்கள் விழாக்களில் ஆடியும் பாடியும் மக்களை மகிழ்வித்தனர்.


விழாக்கள்

மக்களின் வாழ்வில் சோர்வினைப் போக்கி இன்பமும் மலர்ச்சியும், புத்துணர்ச்சியும் ஊட்டுவன விழாக்கள். மனித இனத்தை ஒன்றுபடுத்தி மகிழ்ச்சியில் திளைக்க வைப்பதே விழாக்களின் முக்கிய நோக்கமாகும். ஒரு சமுதாயத்தின் வளர்ச்சி, வீழ்ச்சி மறுமலர்ச்சி ஆகியவற்றை அச்சமுதாயம் காலங்காலமாகப் போற்றிக் கொண்டாடும் விழாக்களின் வழியாக அறியலாம் சங்க காலத்தில் விழாக்கள் சிற்றூரிலும், பேரூரிலும் கொண்டாடப்பட்டதை இலக்கியங்கள் கூறுகின்றன.
 

விழா மரபுகள்

விழாக்களை வளர்பிறை மற்றும் மதி நிறைந்த நாட்களில் தொடங்கியதை அகநானூறு கூறகிறது (அகம்., பா.எ. , 141.) விழாவில் காணப்படும் செயல்முறைகளை ஆற்றுவோரை விழாவாற்றுவோர்; என்பர். வெறியாட்டில் வேலன் விழாவாற்றுவோனாகச் சுட்டப்படுகிறான். சங்ககாலத்தில் குயவர்கள் விழாக்களில் முக்கியப் பங்கு வகித்தனர்; என்பதை,

 

‘‘மணிக்குரல் நொச்சித் தெரியல் சூடி

புலிக்களார் கைப்பார் முது குயவன்

இடுபலி நுவலும் அகன்றலைமன்றத்து

விழவுத் தலைக்கொண்ட பழவிறல் மூதூர்’’ (நற்றிணை, பா.எ., 293)

 

என்று தெரிவிக்கிறது. இக்குயவர்கள் இன்றும் சிறுகோயில்களில் பூசாரிகளாகச் செயல்படும் நிலை உள்ளது. இதனைப் பண்டைய மரபின் தாக்கம் எனக் கருதலாம். விழாவை அறிவிப்பவராக குயவர் இருந்ததையும் நற்றிணை உணர்த்துகிறது.
 
கார்த்திகை விழா
 

சங்க காலத் தமிழர்கள் கொண்டாடிய சமய விழாக்களில் குறிப்பிடத்தகுந்தது கார்த்திகைத் திருவிழாவாகும். கார்த்திகை விண்மீனை, ‘அறுமீன்’ என்று நற்றிணைச் செய்யுள் ஒன்று குறிக்கின்றது. அஃது அறஞ்செய்யத்தக்க சிறப்புடையது. எனவே கார்த்திகைத் திங்களை ‘‘அறஞ்செய் திங்கள்’’ என்றும் நற்றிணை குறிப்பிடுகின்றது (நற்றிணை, பா.எ. , 185). கார்த்திகை விழாக்களின் போது வீடுகளும், தெருக்களும் ஒளிவிளக்குகளால் அழகுறுத்தப் பெற்றமையை,

 

‘‘மழைக்கால் நீங்கிய மாசறு விசும்பின்

குறுமுயல் மறுநிறம் கிளர் மதிநிறைந்து

அறுமீன் சேரும் அகலிருள் நடுநாள்

மறுகு விளக்குறுத்து மாலை தூக்கிப்

பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய

விழவுடன் அயர’’ (அகம்., பா.எ., 141).
 
என்ற அகநானூற்றுப் பாடல் குறிப்பிடுகின்றது
.
images?q=tbn:ANd9GcSod_xwnyoEk68eKwnL0ig


இலவ மரத்தில் நெருக்கமாக மலர்ந்துள்ள பூக்கள் பெரு விழாவில் ஏற்றப்பட்ட விளக்குப் போல் தோன்றியதாக,

 
‘‘அருவி யான்ற உயர்சிமை மருங்கில்

பெருவிழா விளக்கம் போலப் பலவுடன்

இலையில்மலர்ந்த இலவமொடு

நிலையுயர் பிறங்கல்மலையிறந்தோரே’’ 

(அகம்.,பா.எ., 185)

 
என்ற செய்யுள் பேசுகின்றது.
 
திருவோணம்

திருமாலோடு தொடர்புடைய விண்மீன் திருவோணமாகும். இந்நாளில் கொண்டாடிய விழா ஓண விழாவாகும். இதனை,

 

‘‘கணங்கொள் அவுணர்க் கடந்த பொலந்தார்

மாயோன் மேய ஓண நன்னாள்’’ 

(மதுரைக்காஞ்சி. 590-591-வது வரிகள்)

 

என்று மதுரைக்காஞ்சி குறிப்பிடுகின்றது. இந்த நாளில் வீரர்கள் நீலக்கச்சையணிந்து விருந்துண்டு களித்தனர். இவ்விழா ஆவணித் திங்களில் கொண்டாடப்பட்டது. இவ்வோணம் பின்னாளில் கேரள மாநிலத்தில் வசிக்கும் மக்கள் மட்டும் கொண்டாடும் விழாவா இன்று மாறிவிட்டது நோக்கத்தக்கது. கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆழ்வார்கள் இதுபற்றிக் குறிப்பிடுகின்றனர். கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் சைவம் புத்துயிர் பெற்றபோது ஆதிரை நாள் சிறப்பிடம் பெற்றது.
 
பொங்கல்

இது தைத்திங்களில் கொண்டாடும் விழாவாகும். முதற்கண் அறுவடை விழாவாகத் தொடங்கி பின்னர் வளத்தைக் குறித்த விழாவாக மாறியது. 
pongal.jpg
ஆனால் பொங்கல் விழாவினைப் பற்றிய விவரம் கிடைக்கவில்லை. தைத்திங்களில் நோன்பு நோற்பதுண்டு என்று மட்டும் அறிகிறோம். தைத்திங்களில் நோன்பு இயற்றுவார் அமர்ந்திருப்பது போல் குரங்குகள் மழையில் நனைந்து அமரந்திருப்பதாக,

‘‘வான்பெயல் நனைந்த புறத்த நோன்பியர்;

தையூண் இருக்கையில் தோன்றும் நாடன்’’ 

(நற்றிணை, பா.எ., 22)
 
என்ற நற்றிணைச் செய்யுள் குறிப்பிடுகின்றது.
 
தை நீராட்டு
 
தைத் திங்களில் மகளிர் ஆறு, குளங்களில் நீராடுவது சில செய்யுட்களில் குறிப்பு காணப்படுகின்றது. பின்னால் இதனையே மார்கழி நீராட்டு என்றனர்.

‘‘தையில் நீராடிய தவந்தலைப் படுவளோ’’ 
(கலித்தொகை, பா.எ., 13)

மகளிர் கூட்டமாக நீராடுவர் என்பதனை,
 
‘‘நறுவீ ஐம்பால் மகளிர்; ஆடும்

தைஇத் தண்கயம் போலப்

பலர்படிந் துண்ணும் நின்பரத்தை மார்பே’’ 

(ஐங்குறுநூறு, பா.எ., 84.)

 

‘‘தைஇத்திங்கள் தண்கயம் படியும்

பெருந்தோட் குறுமகள்’’ 

(நற்றிணை, பா.எ., 80)

என்னும் குறிப்புகளால் அறியலாம். தமக்கு வாய்க்கும் கணவன்மார் நற்பண்புடையவராதல் வேண்டும் என வேண்டிப் பெண்கள் எடுத்த இந்நோன்பு பிற்காலத்தில் சமயத் தொடர்பு பெற்றதை ஆண்டாள், மாணிக்கவாசகர் பாடல்களால் அறிகின்றோம். அம்பாவாடல் என்று பரிபாடல் இதனைக் குறிப்பிடும்.
 
இளவேனில் விழா
 
இளவேனில் காலம் காமவேளுக்குரியதாகக் கொள்ளப்படும். வில்லவன் விழாவென்பது காமனை வேண்டிச் செய்யும் விழாவாகும். தலைவி ஊரில் காமவேள் விழா நடப்பதைக் கண்டால் கலங்குவாள் எனக் கருதித் தலைவன் திண்டேரேறி வந்தாகத் தோழி குறிப்பிடுகின்றாள். இதனை,
 
‘‘காமவேள் விழாவயின் கலங்குவள் பெரிதென
ஏமுறு கடுந்திண்டேர் கடவி
நாம் அமர் காதலர் துணைதந்தார் விரைந்தே’’ 
(கலித்தொகை, பா.எ., 27)
 
எனக் கலித்தொகை குறிப்பிகின்றது.

காமவேள் விழாவின்போது காதலர்கள் களித்து விளையாடுவர்.
 
‘‘மல்கிய குருத்தியுள் மகிழ்துணைப் புணர்ந்தவர்;
வில்லவன் விழவினுள் விளையாடும் பொழுதன்றோ’’ 
(கலித்தொகை, பா.எ., 35)
 
காமவேள் விழாவின்போது கணவனைப் பிரிந்த மகளிர் வருந்துவர். சில ஆடவர்கள் பரத்தையருடன் கூடியாடுவர்.
 
‘‘உறலியாம் ஒளிவாட உயர்ந்தவன் விழவினுள்
விறலிழை யாவரோடு விளையாடுவான் மன்றே’’ 
(கலித்தொகை, பா.எ., 30)
 
 


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

இந்திர விழா
 
இந்திரனைப் பற்றிய சில குறிப்புகளே சங்கச் செய்யுட்களில் கிடைக்கின்றன. வச்சிரத் தடக்கை நெடியோன் கோயிலுள் முரசம் முழங்குதலைப் புறநானூறு குறிப்பிடுகின்றது (புறம்., பா.எ., 141). ‘இந்திரவிழவிற் பூவின் அன்ன’ என்று உவமையாகப் பயன்படும் அளவுக்கு இந்திர விழா சிறப்புற்றிருந்தது (ஐங்குநுறூறு, பா.எ., 62). சிலம்பு, மணிமேகலை காலத்தில் இந்திரவிழா அரசாங்க விழாவாகவே கொண்டாடப்பட்டது. கற்பகக் கோட்டத்தில் வெள்ளானைக் கொடியேற்றப்பட்டது. பல தெய்வங்கட்கும் பூசையிடப்பட்டது. இசையும், கூத்தும் கலந்து மக்கட்கு இன்பமூட்டின. நகரம் முழுவதும் அணி செய்யப்பட்டதை மணிமேகலை விழாவறைகாதை தெளிவாக்குகிறது.

அறிஞர்கள் குழுமியிருந்து பட்டிமண்டபத்தில் வாதிட்டனர். பல்வேறு சமயத்தவரும் செற்றமும் கலாமும் செய்யாது ஒற்றுமையாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். தூங்கெயிலெறிந்த தொடிதோட்செம்பியன் இதனைத் தொடங்கினான் என்று அறிகின்றோம். இவ்விழா புகாரோடு தொடர்புடையதாக விருந்தாலும் மதுரையிலும் கொண்டாடப்பட்டதாகச் சின்னமனூர்ச் செப்பேட்டாலறிகின்றோம்.
 
நீர் விழா
 
பரிபாடலின் வழியே வைகையில் வெள்ளம் வந்த போது மக்கள் நீராடி மகிழ்ந்ததை அறிகின்றோம் (பரி., 16-வது பாடல், 11-15-வது வரிகள்). மலர்களும் பொன்மீன்களும் கொண்டு வைகையாற்றுக்கு மக்கள் நீராடச் சென்றனர். முற்காலத்தில் மன்னர்களும் இவ்விழாவில் கலந்து கொண்டனர்; என்பதற்கு அகநானூற்றுப் பாடல்கள் சான்றாக அமைகின்றன (அகம்., பா.எ., 222, 376). சிலப்பதிகாரத்து ஆற்றுவரிப் பாடல்கள் வெள்ளத்தைக் கண்டு மக்கள் மகிழ்ந்து கொண்டாடியதைத தெரிவிக்கும்.
 
திருப்பரங்குன்றத்து விழா
 
முருகப்பெருமான் வள்ளியை மணந்து கொண்டதை மணவிழாவாகக் கொண்டாடினர். (பரி., 19-வது பாடல்). பாண்டிய மன்னன் தன் பரிவரத்தோடு இவ்விழாவிற் கலந்து கொண்டான்.
 
திருப்பதியில் விழா
 
நெடியோன் குன்றாகிய திருவேங்கடம், ‘‘விழவுடை விழுச்சீர் வேங்கட’’மெனப் பாராட்டப்பட்டது (அகம்., பா.எ., 61.) திருமாலின் நின்ற கோலம் இப்பதியின் சிறப்பு ஆகும்.
 
 
 
பிறந்தநாள் விழா
 
சங்க காலத்தில் மன்னர்கள் தம் பிறந்த நாளைக் கொண்டாடியதை உணர முடிகிறது. தொல்காப்பியர்; இதனை,
 
‘‘பிறந்த நாள்வயின் பெருமங்கலமும்’’
(தொல்.பொருளதிகாரம், நூற்பா எண், 88: 8-வது வரி)
 
என்று குறிக்கிறார். நன்னனின் பிறந்தநாளை அவனது மக்கள் கொண்டாடியதை மதுரைக்காஞ்சி குறிக்கிறது.
 
புனலாட்டு விழா

மழை பொழிந்து ஆற்றில் நீரோட்டம் ஏற்பட, நீராடி வழிபடுவதே புனலாட்டு விழா எனப்படுகிறது. தங்கள் வாழ்க்கைக்கு அடிப்படையாக உள்ள நீரை வாழ்த்தி, வழிபடுவது வளமை வேண்டிச் செய்யப்பட்ட செயலாகக் கருதலாம். ஆற்றில் புனலாடியதைப் பரிபாடலும் (பரி., 10-வது பாடல், 27-வது வரி) கடலில் புனலாடியதைப் பட்டினப்பாலையும் (பட்டினப்பாலை, 99-வது வரி) கூறுகின்றன. பறையறிவித்துப் புனலாடியதனைப் பரிபாடல் கூறுகிறது (பரி., 20-வது பாடல், 14-வது வரி.) பெண்கள் பொன்னாலான சங்கு, நண்டு, வாளை முதலியவற்றைப் புதுப்புனலில் இட்டு வேண்டியதையும் பரிபாடல் உணர்த்துகிறது (பரி., 10-வது பாடல், 85-வது வரி). ஆட்டனத்தி காவிரி வெள்ளத்தில் நீராடும் போது அடித்துச் செல்லப்பட்டதை அகநானூறு உணர்த்துகிறது (அகம்., பா.எ., 45)

பூந்தொடை விழா

இது வீரர்களின் கலைப்பயிற்சித் தொடக்க விழாவாகும். மாலைகளால் இடத்தை அழகுறுத்துவர். வீரனையும், அழகுறுத்துவர். வில்லில் நாணேற்றி அமைப்பினைக் குறிபார்த்து எய்யும் விழா இதுவெனக் கருதலாம். இதனை,

 

‘‘தெம்முனை சிதைத்த கடும்பரிப்புரவி

வார்கழல் பொலிந்த வன்கண்மழவர்

பூந்தொடை விழவின் தலைநாள் அன்ன

தருமணல் ஞெமிரிய திருநகர் முற்றம்’’ (அகம்., பா.எ., 187)

 

என்று அகநானூறு குறிப்பிடுகிறது.
 
உள்ளி விழா
 
கொங்கர்கள் உள்ளிவிழா கொண்டாடினர். இடுப்பைச் சுற்றிலும் மணியைக் கட்டிக் கொண்டு தெருவில் ஆடுவர். இதனை,

 

‘‘அம்பனை விளைந்த தேக்கட் டேறல்

வண்டுபடு கண்ணியர் மகிழும் சீறூர்

வெண்கால் வாழிதோழி கொங்கர்

மணியரை யாத்து மறுகின் ஆடும்

உள்ளி விழவின் அன்ன

அலராகின்றது பலர் வாய்ப்பட்டே’’ (அகம்., பா.எ., 368)

 

என்ற பாடல் வரிகள் தெளிவுறுத்துகின்றன.


பங்குனி விழா

உறையூரில் பங்குனி விழா நடந்தது. இதனை,

 

‘‘வென்றெறி முரசின் விறற்போர்ச் சோழர்

இன்கடும் கள்ளின் உறையூ ராங்கண்

வருபுனல் நெரிதரும் இடுகரைப் பேரியாற்று

உருவ வெண்மணல் முருகுநாறு தன்பொழில்

பங்குனி முயக்கம் கழிந்த வழிநாள்’’ (அகம்., பா.எ., 137)

 
என்று அகநானூறு குறிப்பிடுகிறது.
 
கோடியர் விழா


ஆடும் கலைஞர்கள் கோடியர் எனப்பட்டனர். விறலியர் மயில் போல அசைந்தாடும் தோறும் கூத்தருள் முழவினை முழக்கிக் கொண்டு பின்னே செல்வர். இதனை, கோடியர் விழவுகொள் முதூர் விறலிபின்றை முழவன் போல்’’ (அகம்., பா.எ., 352). என்னும் உவமை விளக்குகின்றது.

வெறியாட்டு விழா

பண்டைய நாளில் பெருவழக்காக இருந்தது வெறியாட்டு விழாவாகும். முருகனுக்காக எடுக்கப்பட்ட இவ்விழாவில் வேலன் கையில் வேலேந்தி ஆடுவான். இன்னிசைக் கருவிகள் முழக்கப்படும்; தினையரிசியையும் மலர்களையும் தூவுவர். ஆட்டுக்கிடாயை அறுத்துக் குருதியைச் சிந்துவர். இவ்விழாவைப் பற்றிய முழுவிவரம் திருமுருகாற்றுப்படையில் இடம் பெறுகிறது. ஊர்தோறும் இவ்விழாவினைக் கொண்டாடினர்; என்பதனை,

‘‘சிறுதினை மலரொடு சிரைஇ மறியறுத்து

வாரணக் கொடியோடு வயிற்பட நிறீஇ

ஊருர்; கொண்ட சீர்;கெழு விழவினும்’’ 

(திருமுருகாற்றுப்படை 218-220-வது வரிகள்)

 
என்னும் திருமுருகாற்றுப்படைப் பகுதியால் அறியலாம்.

காஞ்சிபுரம் சமய விழாக்கள் பெருகிய நகரமாக விளங்கிற்று. சமயப்பிரிவினர் பலரும் தத்தம் சமயக் கடவுளரை வணங்க விழாவெடுத்தனர் என்பதனை,

‘‘பலர் தொழ விழவுமேம்பட்ட பழவிரல் மூதூர்’’

 
என்னும் பெரும்பாணாற்றுப்படை பகுதியால் அறியலாம். விழா நடத்தும்பொழுது அதற்கெனக் கொடிகள் பல ஏற்றப்பட்டதுண்டு.

 

‘‘சாறு அயர்ந்தெடுத்த உருவப் பல்கொடி’’ (மதுரைக்காஞ்சி 366-வது வரி)


வெறியாட்டின் போதும் பிற விழாக்களின் போதும் இன்னிசைக் கருவிகள் முழங்க ஆடலும் பாடலும் நிகழ்வது வழக்கமாக இருந்தது.

 
‘‘வெறியாடு மகளிரொடு செறியத் தாஅய்க்

குழலகவ யாழ்முரல

முழவதிர முரசியம்ப

விழவயரு வியலாவணத்து’’

( பட்டினப்பாலை, 155-158 வது வரிகள்)

 
என்பது சான்றாக அமைகிறது.

வெறியாடும் இடம் வெறியர் களம் எனப்பட்டது. காலம் நள்ளிரவு, வேலன் என்ற தன் பூசாரி மீது முருகன் ஆவியுருவில் குறி சொல்வான் என்று மக்கள் நம்பினர். இதனை,
 
‘‘களம்நன் கிழைத்துக் கண்ணிசூட்டி

வளநகர; சிலம்பப் பாடி பலிகொடுத்து

உருவச் செந்தினை குருதியோடு தூஉய்

முருகாற்றுப் படுத்த உருகெழு நடுநாள்’’ 

(அகம்., பா.எ., 22)
 

என்று அகநானூறு கூறுகிறது.

புதுமணல் பரப்புதல்
 
விழாக்களிலும் சடங்குகளிலும் புதுமணல் பரப்புதல் வழக்கமாக இன்றும் பல இடங்களில் உள்ளது. இவ்விழாவிற்குப் புதுமணல் பரப்பிய செய்தியை,

 
‘‘பூந்தொடை விழவின் தலைநாளன்ன

தருமணல் நெமிரிய திருநகர்; முற்றம்’’ 

(அகம். , பா.எ. , 187)

 
என்று அகநானூறு கூறுகிறது.

கொடி ஏற்றுதல்


இன்றும் பல கோவில்களில் கொடியேற்றத்துடன் விழாக்கள் ஆரம்பிக்கப்படுகின்றன. சங்க காலத்தில் விழாவின் போது கொடி ஏற்றியதை,
 

‘‘சாறயர்ந் தெடுத்த உருவப் பல்கொடி’’
 (மதுரைக்காஞ்சி., 366-வது வரி)

 

என்று மதுரைக்காஞ்சியும் குறிக்கின்றது. விழாவிற்கு நிமித்தம் பார்த்துப் புறப்பட்ட செய்தியைக் குறுந்தொகை கூறுகிறது (குறுந்தொகை, பா.எ. , 233).

பிறை வழிபாடு
 

அக்காலம் முதல் இக்காலம் வரை பிறை வழிபாடு நிகழ்கின்றது. இந்து மதத்தவர் அன்றி இஸ்லாமியர்களும் வளர்பிறை வழிபாட்டினைச் செய்கின்றனர். இவ்வழிபாடு மணமாகாத பெண்கள் தங்களுக்கு மணம் முடிய வேண்டும் என எண்ணிப் பிறையைத் தொழுதனர். இம்முறை சங்க காலத்தில் இருந்துள்ளமையை அகநானூறு காட்டுகிறது.

 
‘‘ஔஇழை மகளிர் உயர்பிறை தொழுஉம்

புல்லென் மாலை யாம்இவன் ஒழிய’’ 

(அகம்., பா.எ., 239)

 

என்ற வரிகளில் ஒளி மிகுந்த அணிகலன்களை அணிந்த பெண்கள் மாலை நேரங்களில் பிறையினைத் தொழுதனர் என்ற செய்தி தெரியவருகின்றது.

 
கடல் தெய்வ வழிபாடு
 

நான்கு வகை நிலங்களில் கடலும் கடல் சார்ந்த பகுதியாகிய நெய்தற் நில மக்கள் மீன் பிடித்தும், உப்பு விற்றும் வாழ்க்கையை நடத்தினர். இவர்களது வாழ்க்கை கடலை நம்பி இருந்தமையால், இவர்கள் அக்கடலைக் கண்கண்ட தெய்வமாக எண்ணி வழிபடலாயினர்;. இந்நில மகளிர்கள் தங்கள் ஆடவர்கள் நடுக்கடலுக்குச் சென்று மீன்பிடித்து எந்த ஒரு ஆபத்திலும் சிக்காமல் விரைவிலேயே அவர்கள் மீன்களோடு வீடு திரும்ப வேண்டும் என்று கடலையே பெண்ணாகப் பாவித்து, கடல் தாயை வழிபட்டு ஆடவர்கள் வீடு திரும்பும் வரை ஆற்றியிருப்பர்.

சங்க காலத்திலும் இக்கடல் தெய்வ வழிபாடு நிகழ்ந்துள்ளமையை,

 
‘‘பழையர் மகளிர் பனித்துறைப் பரவ

பகலோன் மறைந்த அந்தி ஆர்இடை

உருகெழு பெருங்கடல் உவவுக் கிளர்ந்தாங்கு’’ 

(அகம்., பா.எ., 201)

 
என்ற அகநானூற்றுப் பாடலின் மூலம் அறியலாம். மீனவர்களின் தெய்வமான கடலினை, பெண்கள் யாவரும் கடற்கரையில் ஒன்று கூடி நின்று வழிபாடு நிகழ்த்தினார்;கள் என்பதையும் அறிய முடிகிறது. இவ்வழிபாடு சங்க காலத்தேயன்றி இக்காலத்திலும் நெய்தற் நிலப் பகுதிகளில் மீனவர் வாழ்க்கையில் காண முடிகிறது.

பாவை வழிபாடு
 
பாவை வழிபாடு என்ற ஒரு வழிபாடும் அக்காலத்தில் நிகழ்ந்துள்ளமையை,


‘‘தைஇ நின்ற தண்பெயல் கடைநாள்

வண்டற் பாவைஉணர்;துறைத் தரீஇத்

திருநுதற் மகளில் குரவை அயரும்’’ 

(அகம்., பா.எ., 269)


என்ற பாடலால் அறியலாம். அதாவது தைத் திங்களிலே குளிர்ந்த பெயலின் கடைப்பட்ட நாட்களிலே பொன்னாலாகிய காசுகளைத் தொடுத்து அணிந்த வண்டல் விளையாட்டிற்கு உரிய பாவையை அழிகிய நெறியினையுடைய மகளிர் நீர், உண்ணும் துறையிலே கொண்டு வந்து வைப்பர். அப்போது அவர்கள் குரவைக் கூத்து ஆடுவர். இந்நிகழ்வே பண்டைய பாவை வழிபாடு எனப்பட்டது. இவ்வழிபாடு பிற்காலத்தில் பாவை வழிபாடு, பாவை நோன்பு என்று மாறியது. திருப்பாவை, திருவெம்பாவை ஆகிய பக்தி இலக்கியங்கள் கூட இவை சார்ந்து தோன்றியவை ஆகும்.

பண்டைத் தமிழகத்தில் விழாகட்குப் பஞ்சமில்லை யென்றும், சமய விழாக்களே பெரும்பான்மையாக இருந்தனவென்றும், இவ்விழாக்களின் போது பாட்டும் கூத்தும் விருந்துகளும் நிறைந்து மக்களை மகிழ்ச்சியிலாழ்த்தின என்றும் தெள்ளிதின் உணர்கின்றோம். இயற்கையில் ஆரம்பமாகிய வழிபாடு தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே தொடங்கி இன்றளவும் நிலவுகிறது. இயற்கை வழிபாடானப் பிறையும், கார்த்திகை விழாவும், பங்குனி வழிபாடும், கடல்தெய்வ வழிபாடும், சங்க காலம் தொட்டு இன்றளவும் நிகழ்ந்துள்ளது என்பதனை அகநானூறு காட்டுவதோடு குறிப்பிட்ட தெய்வங்களை அல்லாமல் பல தெய்வங்களையும் வழிபாடு செய்து பக்தியில் சங்ககால மக்கள் மூழ்கி இருந்தனர்; என்ற செய்திகளும் ஆய்வினால் உணர முடிகிறது.


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard