New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தேசப்பற்று இல்லாத ராமசாமி நாயக்கர்!


Guru

Status: Offline
Posts: 24601
Date:
தேசப்பற்று இல்லாத ராமசாமி நாயக்கர்!
Permalink  
 


பெரியாரின் மறுபக்கம் – பாகம் 18: தேசப்பற்று இல்லாத ஈ.வே. ராமசாமி நாயக்கர்!

 

‘விடுதலை வேளிவியில் தமிழகம்’ என்ற புத்தகத்தில் ஈ.வே. ராமசாமி நாயக்கரையும் விடுதலைப்போராட்ட வீரராக ஒருவர் கட்டுரை எழுதியிருக்கிறார். இது எவ்வளவு பெரிய அப்பத்தம் தெரியுமா?

1935மார்ச் 10-ம் நாள் குடி அரசு மூலம் மானங்கெட்டதனமான ஒரு அறிக்கையை வெளியிட்டார். அறிக்கையின் இறுதிப் பகுதியை கீழே தருகிறோம்.

காங்கிரஸை எதிர்ப்பதற்காக எவ்வளவு வேண்டுமானாலும் ஏகாதிபத்திய அரசாங்கத்தோடு ஒத்துழைக்கத் தயாரென்பது ஈரோட்டுப் பாதையின் அரசியல் கொள்கை என்று ப.ஜீவானந்தம் தமது ’ஈரோட்டுப் பாதை சரியா?’ என்ற நூலில் கூறுகிறார்.

மேலும் 12-04-1936ல் திருச்சி தென்னூரில் வல்லத்தரசு தலைமையில் சுயமரியாதை சமதர்மக்கட்சி அமைப்புக்கூட்டம் நடைபெற்றது. அதில் நிறைவேறிய தீர்மானங்களில் மிக முக்கியமான தீர்மானம் என்ன தெரியுமா? இதோ!

”சுயமரியாதை இயக்கம் ஏகாதிபத்ய ஆட்சி முறையையும் முதலாளித்துவம் பொருந்திய கட்சிகளையும் ஆதரித்து வருவதை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது. ”
(அறிவு -1936 மே இதழ்)

ஈ.வே. ராமசாமிநாயக்கர் உயிருடன் இருந்தபோதுதான் இந்த தீர்மானம் போடப்பட்டது. ஆகவே ஈ.வே. ராமசாமிநாயக்கர் சுதந்திரப் போராட்டவீரர் என்று சொல்வது கடைந்தெடுந்தப் பொய்யாகும்.

மேலும் ஒரு ஆதாரத்தைப் பார்ப்போம்.

கவிஞர் கண்ணதாசன் கூறுகிறார்:-

kannadasanபெரியார் ராமசாமி அவர்கள் காங்கிரஸிலே இருந்து பிரிந்த பிற்பாடு, பிராமணர்களை எதிர்க்கிறேன் என்கிற போக்கிலே அவர் இந்தியாவையே எதிர்க்கத் தலைப்பட்டார்.

இந்தியாவை விடுதலைக்கு விரோதமாகப் போகவும் தலைப்பட்டார். இந்தியாவுக்கு விடுதலை கிடைக்கக்கூடாது என்பதிலே அவர் முன்னணியிலே நின்றார்.

பாகிஸ்தான் பிரிவினைக் கோரிக்கை ஆரம்பமான போது திராவிடஸ்தான் பிரிவினையையும் அவர் ஆரம்பித்தார்.

பிராமணர்கள்தான் இந்திய தேசிய காங்கிரஸ்; பிராமணர்களுடைய ஆதிக்கம்தான் இந்தியாவில் இருக்கிறது என்பது போல் ஒரு கற்பனையைச் செய்து கொண்டு தென்னாட்டில் அவர்களை ஓழிப்பதற்காகவே வெள்ளைக்காரர்கள், இருக்கவேண்டுமென்ற ஆசையை அவர்கள் மக்கள் மனதில் வளர்க்கத் தொடங்கினார்கள்.

……….. இந்தியாவுக்கு சுதந்திரம் வருவதற்கு முன்னால், ”இந்தியாவுக்குச் சுதந்திரம் கொடுக்கக் கூடாது” என்று தந்தி கொடுத்தவர்கள் தமிழகத்தில் மட்டும் தான் இருந்தார்கள்.

அதைப் பற்றி பெரியார் அவர்கள் ஒரு கூட்டத்தில் பேசும்போது நான் போய் இந்த வெள்ளைக்காரனைப் பார்த்தேன். அவனிடம் சொன்னேன். ”என்னய்யா யோக்கிதை இது! நீ பாகிஸ்தான் கொடுத்ததுபோல, திராவிடஸ்தான் கொடுத்துவிட்டல்லவா விடுதலை கொடுத்திருக்க வேண்டும்’ என்றேன். ஆனால் வெள்ளைக்காரனுடைய யோக்கியதைப் பாருங்கள். அதை அவன் ஏற்றுக்கொள்ளவே இல்லை” என்று அவரே பேசியிருக்கிறார்.
(நூல்: நான் பார்த்த அரசியல்)

ஆகவே ஈ.வே. ராமசாமிநாயக்கர் சுதந்திரப்போராட்டவீரர் என்று சொல்வது கடைந்தெடுத்தப் பொய்யாகும்.

cho-ramaswamy‘துக்ளக்’ ஆசிரியர் சோ கூறுகிறார்:-

…. பிரிட்டிஷ் ஆட்சிக்கு ஆதரவு கொடுத்த இந்த சிந்தனை பிற்காலத்தில் திராவிடர் கழகம் ஆரம்பிக்கப்பட்டபோதும் நீடித்தது. ”இந்தியாவின் எந்தப் பகுதியை வேண்டுமானாலும்விட்டுவிட்டுச் செல்லுங்கள். ஆனால் சென்னை மாகாணத்தை மட்டும்விட்டுவிட்டுப் போகாதீர்கள்! என்று ஆங்கிலேயர்களிடம் கோரிக்கைவிடும் அளவுக்குச் சென்றது.
(குமுதம்: 03-02-2000)

உடனே இதற்கு சின்னக்குத்தூசி பதில் கூறுகிறார்:-

வெள்ளைக்காரனை விரட்ட சுதந்திரப்போராட்டம் நடத்தப்பட்டபோது, பெரியார் சுதந்திரம் வேண்டாம் என்று தீர்மானம் போட்டார். நாட்டின் மற்ற பகுதிகளுக்கெல்லாம் நீங்கள் சுதந்திரம் கொடுத்தாலும், எங்கள் பகதிக்குத் தர வேண்டாம் என்று பெரியார் கூறியதாக எழுதியிருக்கிறார் சோ.

சோ- எது எழுதினாலும் அதற்கான ஆதாரம் எதையும் காட்டும் வழக்கம் அவருக்கு ஒருபோதும் இருந்ததில்லை. அதனால் தான் பெரியார் தீர்மானம் போட்டார் என்கிறாரே – எந்த வருடம், எந்த மாநாட்டில், எப்போது அப்படிச் சொன்னார் பெரியார் என்று அவர் சொல்லவில்லை. சொன்னால் அவரது தகவல் எவ்வளவு அபத்தம் என்பது அம்பலமாகிவிடும்.
(குமுதம்-03-02-2000)

இந்த இருவரில் யார் சொல்வது உண்மையாக இருக்கும்?

‘துக்ளக்’ ஆசிரியர் சோ சொல்வதுதான் உண்மை.

ஆதாரம் இதோ!

27-08-44ல் சேலம் நகரில் கூடிய திராவிடர் கழக மாநாட்டிலே, கீழ்வரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

”திராவிடர் கழகத்தின் முக்கிய கொள்கைகளில் திராவிட நாடு என்ற பெயருடன் நம் சென்னை மாகாணம் மத்திய அரசாங்கம் நிர்வாகத்தின் ஆதிக்கம் இல்லாததும், நேரே பிரிட்டிஷ் செக்கரடரி ஆப் ஸ்டேட்டின் நிர்வாகத்திற்குக் கட்டுப்பட்டதுமான ஒரு தனி (ஸ்டேட்) நாடாக பிரிக்கப்பட வேண்டுமென்ற கொள்கையை முதற்கொள்கையாக சேர்க்கப்பட்டிருக்கிறது என்று இந்த மாநாடு தீர்மானிக்கிறது”.
நமது குறிக்கோள் ‘விடுதலை’ வெளியீடு :- 1948
(நூல்:- புதிய தமிழகம் படைத்த வரலாறு)

இந்த ஆதாரம் சின்னக்குத்தூசிக்கு போதும் அல்லவா! மேலும் ஓர் ஆதாரம்

தான் சுதந்திரத்திற்கு துரோகம் செய்ததை ஈ.வே. ராமசாமிநாயக்கரே ஒத்துக்கொள்கிறார்.

ஈ.வே. ராமசாமிநாயக்கர் கூறுகிறார்:-

”நான் வெள்ளையன் வெளியேறுவதற்குக் குறுக்கே இருந்திருந்தாலும் இந்திய சுதந்திரத்திற்கு நான் துரோகம் செய்தது உண்மையாக இருந்திருந்தாலும் இந்தப் பாவிகள் மாபாவிகள் பார்ப்பான் ஆதிக்கத்திற்கும், அதனால் ஏற்பட்ட வடநாட்டான் சுரண்டல் ஆட்சிக்கும் இடம் கொடுத்து, அடிமையாகி அதனால் பணமும், பதவியும், பெருமையும் சம்பாதிக்கும் சுயநலம் கொண்டல்ல. ”
(தமிழர் தலைவர் பக். 14)

தான் சுதந்திரத்திற்கு துரோகம் செய்ததை ஈ.வே. ராமசாமிநாயக்கரே ஒத்துக்கொள்கிறபோது ஈ.வே. ராமசாமி நாயக்கர் சுதந்திரப்போராட்டவீரர் என்று சொல்வது கடைந்தெடுத்தப் பொய்யாகுமல்லவா!

ஈ.வே. ராமசாமிநாயக்கர் எப்போதாவது சுதந்திரப்போராட்டத்தில் கலந்துகொடு போராடியிருக்கிறாரா?

இல்லை!

சுதந்திரப் போராட்டத்திற்காக சிறை சென்றிருக்கிறாரா?

இல்லை!

சுதந்திரப்போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக வெள்ளையர்கள் ஈ.வே. ராமசாமி நாயக்கரை கைது செய்து இருக்கிறார்களா?

இல்லை!

இல்லை! இல்லை!! இல்லவே இல்லை!!!

பின் எப்படி ஈ.வே. ராமசாமி நாயக்கர் சுதந்திரப் போராட்டவீரர்?



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

RV on October 10, 2009 at 10:18 pm

இது பெரியாரின் மீது குறை கண்டுபிடிக்கும் முயற்சி மட்டுமே.

பெரியார் காங்கிரசை விட்டு வெளியேறிய பிறகு பார்ப்பன எதிர்ப்பு, இடைப்பட்ட ஜாதியினர் ஆதிக்கத்துக்கு போராட்டம் ஆகியவற்றில்தீவிரமாக இறங்கி அதற்காக ஆங்கிலேய அரசு பக்கம் சார்ந்தார் என்று சொல்வது வேறு; ஆனால் பெரியார் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடவே இல்லை என்று சொல்வது வேறு. காங்கிரசை தமிழ்நாட்டில் வளர்த்தவர்கள் (திரு.வி. கல்யாணசுந்தர) முதலியார்-(வரதராஜுலு) நாயுடு-(ஈ.வே.ராமசாமி) நாயக்கர் என்று சொல்வார்கள். மூவருமே காங்கிரசை விட்டு வெளியேறினார்கள். அதனால் அவர்கள் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடவில்லை என்று சொல்லி விடுவீர்களா? ராஜாஜி 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் ஈடுபடவில்லை, காங்கிரசை விட்டு வெளியேறினார் என்பதற்காக அவர் தேசத்துரோகி ஆகிவிடுவாரா?அம்பேத்கார் தலித் முன்னேற்றம் என்ற நோக்கத்துக்காக சுதந்திரத்தை பின்னே தள்ளி காங்கிரசுக்கு எதிராக, ஆங்கில அரசுக்கு சாதகமாக பல சமயங்களில் செயல்பட்டார். அவர் துரோகியா? திருவிதாங்கூர் சமஸ்தானம் சுதந்திரம் அடையவேண்டும் என்று தீவிர முயற்சியில் ஈடுபட்ட சர சி.பி. ராமசாமி ஐயர் தேசத்துரோகியா? சிறை செல்வது மட்டும்தான் அளவுகோல் என்றால் கோகலேவும், பாரதியாரும் தேசபக்தர்கள் இல்லையா?

பெரியார் பல குறைகள் உள்ளவர். அவரது அணுகுமுறை வெறுப்புணர்ச்சியின் மேல் கட்டப்பட்டது என்ற விமர்சனத்தில் உண்மை உள்ளது. அப்படி இருக்கும்போது வீணான மிகைப்படுத்தல் தேவை இல்லையே?



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

M.Mannaaru on October 11, 2009 at 2:19 pm

அட இன்னாங்க இது ஒரே ரோதனையா பூட்சு! ஈ.வெ.ராமசாமி 1919-ல காஙிரஸ்ல சேர ஸொல்ல அவுருக்கு வய்ஸு 40. அதுக்கு மின்னாடி வரெக்கும் ஸொம்மா ஊர சுத்தினுர்ந்தாரு. 6 வர்ஸம் தான் காங்கிரஸ் கச்சில இருந்தாரு. அப்பாலிகா 1925-ல கச்சி புடிக்கல, காந்தியும் புடிக்கலன்னு வெள்ள கயண்டுக்குனாரு. அந்த ஆறு வர்ஸம் கச்சில இருக்க ஸொல்லோ, ஒரே ஒரு தபா ஒத்துயையாம இயக்கத்துல கலந்துக்குனாரு. அவ்லோ தான், அஆங்!

அதுவுங்கூட கச்சில இருக்க ஸொல்ல போராட்டத்துல கல்ந்துக்க மாட்டேன்னு ஸொல்ல முடீல. இஸ்டம் இல்லாம வேண்டா வெறுப்பா கல்ந்துக்குனாரு. வெள்ளகாரனுக்கு எயுத்தாப்புல போராட்டம் செய்னும், அவனாண்டர்ந்து நம்ம நாட்டுக்கு விடுதல வேனூன்னெல்லாம் அந்தாளுக்கு ஒரு நெனப்பும் கடியாது. காங்கிரஸ் கச்சிய வுட்டு கயண்டுக்குன ஒட்னே, நேரா வெள்ளகாரன் கால்ல போய் வுயுந்துக்கானுரு. அவன் நம்ம நாட்ட வுட்டு போவ ஸொல்ல கூட, அவன் கால புட்சுக்குனு, “போவாத, போவாத, எங்க ஊர வுட்டு போவாத; எங்க ஊர மட்டுமாச்சும் ஒன்னோட கண்ட்ரோல்லயே வச்சுக்க” அப்டீன்னு பொலம்புனாரு, அஆங்!

இப்டி இருக்ல்க ஸொல்ல, அவுர எப்டிங்க சொதந்தரத்துக்காவ பாடு பட்டாருன்னு ஸொல்ல முடியும்? அவுரு விடுதல வீரரு இல்ல நைனா, ”விடாத வீரரு”! இன்னா புர்ல? வெள்ளகாரன விடாத வீரரு! இப்ப புர்தா?

சரி வர்டா…

மன்னாரு.

விஜயராகவன் on October 11, 2009 at 11:16 pm

இந்த கட்டுரையின் தலைப்பு சரி இல்லை.
”தேசப்பற்று இல்லாத ஈ.வே. ராமசாமி நாயக்கர்!” என்பது “ஆங்கில கலோனியத்தின், ஏகாதிபத்தியத்தின் அடிவருடி ஈவேரா” என எழுதப்பட வேண்டும்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

RV on October 11, 2009 at 11:46 pm

தமிழ் ஓவியா,

பெரியார் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர் என்பது எந்த அளவுக்கு உண்மையோ அதே அளவுக்கு அவர் விடுதலைக்கு முற்றிலும் எதிராக மாறினார் என்பது உண்மை. சுதந்திரம் கிடைத்த நாளை கருப்பு தினமாக கொண்டாடும்படி சொன்ன ஒரே தலைவர் அவர்தான். திராவிடஸ்தான் வேண்டும் என்று ரொம்ப நாளாக சொல்லிக்கொண்டிருந்தார். ஜின்னாவிடம் பேசி எல்லாம் பார்த்தார்.

நீங்கள் கொடுத்திருக்கும் மேற்கொளிலே அவர் சொல்வது என்ன? வேறு பலரும் துரோகிகள் என்றுதான் சொல்கிறார். அவர் சொல்லும் கருத்து சரியா தவறா என்ற விஷயத்துக்கே நான் இங்கே வரவில்லை. ஆனால் தனது ஆங்கிலேய அரசு சார்பு குறித்து ஒரு வார்த்தை கூட இல்லை என்பது கண்ணுக்கு தெரியாமலா போய்விடும்? அவரது நிலை – பார்ப்பன எதிர்ப்பு, “இடைப்பட்ட” ஜாதிகள் அதிகாரத்தை கைப்பற்றுதல் ஆகியவை ஆங்கில ஆதிக்கத்தை விட முக்கியாமனவை, அதற்காக ஆங்கில அரசுக்கு ஆதரவு கொடுக்கலாம் – அவருக்கு சரியாக இருக்கலாம், அதற்கு அவருக்கு ஆயிரம் காரணங்கள் – சில நியாயம்னா காரணங்கள் உட்பட – இருக்கலாம். ஆனால் ஆங்கில அரசுக்கு ஆதரவு தெரிவித்தார் என்பது மறைக்க முடியாத உண்மை.

வரலாறு எனபது நம் முன் முடிவுகளுக்கு ஏற்க எழுதப்படுவது இல்லை.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

தமிழ் ஓவியா on October 13, 2009 at 7:26 pm

ஆர்.வி அவர்களின் பார்வைக்கு பெரியாரின் கருத்தை சமர்பிக்கிறேன்.படியுங்கள்.

இதுவா விடுதலை முயற்சி? – பெரியாரின் தொலைநோக்கு!

சுதந்திரப் போராட்டம் அல்ல; ஆரியர், திராவிடர் போராட்டமே!

“இந்தியாவை விட்டு பிரிட்டிஷ் ஆட்சி அடியோடு விலகப்போகிறதா, இல்லையா என்பது நமக்குத் தெரியாது. சீக்கிரத்தில் நாடு கழுதை புரண்ட களம் என்பது போல் சீரழியப் போகிறது என்பதுதான் காணக்கூடியதாக இருக்கிறது. தூது கோஷ்டி தோல்வி அடையப் போகிறது; அடைந்து விட்டது என்கிறார்கள் -பத்திரிகை செய்திக்காரர்கள். காங்கிரசார் பதவி ஏற்ற இந்தக் காலத்துக்குள்ளாகவே மக்களுக்கிடையே ஒரு சமரச முடிவு இல்லையானால், நாடு சீரழியப் போவது நிச்சயம். இதனால் பிரிட்டிஷ்காரர்களுக்கு நஷ்டமில்லை. அவர்கள் ஆதிக்கம் இன்னும் பல நாளைக்குப் பலப்படத்தான் இடமாகும். ஆரியர்களுக்கும் கஷ்டமில்லை.

ஆரியர் பிரிட்டிஷாருடன் இன்னும் பலமான ஒப்பந்தம் செய்து கொள்ளுவர். காந்தியாருக்கும் குறைவு வராது. அவர் அவதாரக் கடவுள் தன்மை மாறி உண்மைக் கடவுளாகி விடுவார். தொல்லைப்படப் போவது நாம்தான். முஸ்லிம், திராவிடர், ஷெட்யூல்டு வகுப்பார் ஆகியவர்களும் இக்கூட்டத்தில் உள்ள ஏழை, எளியவர், தொழிலாளர் கூலியாட்கள் ஆகிய பாட்டாளி மக்களும்தான்.அதோடு மாத்திரமல்ல. கண்டிப்பாக இந்து -முஸ்லிம் ரத்தம் சிந்துதலும், மேல் ஜாதி, கீழ் ஜாதி ரத்தம் சிந்துதலும், சோம்பேறி பாட்டாளி ரத்தம் சிந்துதலும், முதலாளி, தொழிலாளி ரத்தம் சிந்துதலும் நடந்துதான் தீரும்.

இந்த முப்பது வருஷ காலமாக நம் மக்கள், நான் முதல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்பட பொது நலனுக்கு என்று பாடுபட்ட, கஷ்ட நஷ்டமனுபவித்த தியாகம் என்பதற்கு இதுதானா பலன் என்று பாருங்கள். இந்த சந்தர்ப்பத்தில் பார்ப்பனப் பத்திரிகையில் செய்து வரும் அட்டூழியம் கொஞ்ச நஞ்சமல்ல. அவை இந்து முஸ்லிம் கலகத்தையும், கீழ் ஜாதி மேல் ஜாதி கலகத்தையும், திராவிடர்களுக்குள் ஒருவருக்கொருவர் குத்து, வெட்டு, அடி, உதை, கொளுத்து ஆகிய போராட்டங்களையும் வளர்த்து விடுகின்றன.

இன்றைய அரசியல் போராட்டம் என்பது என்ன? இந்தியன் வெள்ளையன் போராட்டமா? இல்லையே. இன்றைய இந்தியப் பிரச்சினை, சுயராஜ்யப் பிரச்சினை அல்லவே; சுதந்திரப் பிரச்சினை அல்லவே, ஆங்கிலேயே
அந்நியன் பிரச்சினை அல்லவே. இந்து, முஸ்லிம் பிரச்சினையாகத்தானே காணப்படுகின்றன. இந்து முஸ்லிம் ஆதிக்கத்தில் இருந்து விடுபடுவதும், இந்து மதம் காப்பாற்றப்படுவதும், இஸ்லாம் காப்பாற்றப்படுவதுதானே இன்று சுதந்திரப் போராக ஆகிவிட்டது. இதே நிலையில்தானே ஆரியம், திராவிடம் என்கின்ற பிரச்சினையும் இருக்கிறது.
திராவிடன் ஆரிய ஆதிக்கத்தில் இருந்து மீண்டு தனித்தன்மை பெறுவதை சுயராஜ்யம் என்கிறான். ஆரியன் திராவிடரை அடக்கி அழுத்தி வைப்பதை, மனு ஆட்சி புரிவதை சுயராஜ்யம், தர்மராஜ்யம், ராமராஜ்யம் என்கின்றான்.
தோழர்களே! தூது கோஷ்டி வெற்றி பெற்றாலும் நாம் சூத்திரர், பறையர், 4ஆவது 5ஆவது ஜாதியாகத்தான் இருப்போம். தூது கோஷ்டி தோல்வியுற்றாலும் நாம் 4ஆவது 5ஆவது ஜாதிதான். காங்கிரசுக்கும் நமக்கும் என்ன பேதம்? காங்கிரஸ் அந்நியன் ஆதிக்கத்தில் இருந்து விலக வேண்டும் என்கின்றது. நாமும், ஆம் அது சரி அதுதான் முதல் வேலை என்கிறோம். ஆனால் அந்நியர் என்கின்ற பட்டியில் திராவிடனல்லாதவன் எவனும் அந்நியன் என்று விளக்கம் எழுதிக்கொள் என்கின்றோம். ஒப்புக் கொள்ளுகிறதா காங்கிரஸ்? ஆங்கிலேயன் தவிர மற்றபடி இந்தியன் என்ற பெயரால் எவன் பிழைத்தாலும், எவன் திராவிட நாட்டைக் கொள்ளை கொண்டாலும் சரி என்கிறது காங்கிரஸ்.

நாம் திராவிட நாட்டை திராவிடத்தில் நிரந்தரமாய் வாழும் திராவிட
நாட்டுக் குடிகள் தவிர, பிர்லா, பஜாஜ், காந்தி, நேரு, பட்டேல், பட்டானி, குஜராத்தி, மார்வாரி, பனியா, சிந்தி, காஷ்மீரி, பட்டான், மேமன் எல்லைப்புறக்காரன் எவரும் சுரண்டக்கூடாது என்கின்றோம். இந்தியன்
மட்ட ஜாதியல்ல; வெள்ளையன் உயர்ந்த ஜாதி அல்ல. இருவருக்கும் மாத்திரமல்ல. மூவருக்கும் அதாவது திராவிடன், ஆரியன், வெள்ளையன் ஆகிய மூவருக்கும் சம உரிமை வேண்டும்.
திராவிடன் சூத்திரனல்ல; பறையன் அல்ல; தீண்டப்படாதவன் அல்ல;
ஆரியன் பிராமணன் அல்ல,மேல் ஜாதி அல்ல; பூதேவன் அல்ல. சம உரிமையில் சம விகிதாசாரத்தில் சம போக போக்கியத்தில், சம உழைப்பில் இருக்க வேண்டிய மக்கள் என்கின்றது திராவிடர் கழகம். இந்தியா முழுமைக்கும் ஒரு சுயராஜ்யம் போதும் என்கிறது காங்கிரஸ். பிரிக்கப்பட்ட ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்தனி சுயராஜ்யம் வேண்டும். ஜின்னா
பிரிவினை கேட்டால் -அவர் தேசத்துரோகி, முட்டுக் கட்டைவாதி.
அம்பேத்கர் மனிதத்தன்மை, சம உரிமை கேட்டால் -அவர் தேசத்துரோகி, முட்டுக் கட்டைவாதி; கம்யூனிஸ்டுகாரர்கள் கேட்டால் அவர்கள் ஒழிக்கப்பட வேண்டிய இழிமக்கள்; திராவிடர்கள் பாதுகாப்பு சமுதாய உரிமை கேட்டால் -அவர்கள் தேசத்துரோகி!

தோழர்களே! கலகத்தில் காலித்தனத்தில் ஆரியன் எவனாவது சிக்கிக் கொள்கிறானா? திராவிடன் கையில் சாணி உருண்டையும் கல்லையும் கொடுத்து திராவிடன் மீதே எறியச் சொல்லிவிட்டு, மறைவில் இருந்து வேடிக்கை பார்க்கிறானே! இதுவா விடுதலை முயற்சி?’

—————— பள்ளிகொண்டாவில் நடைபெற்ற கூட்டத்தில் தந்தைபெரியார் அவர்கள் ஆற்றிய உரை – ‘விடுதலை’ 15.06.1946



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Madhavan on October 14, 2009 at 12:51 am

தமிழ் ஓவியாவுக்கு
திரும்ப திரும்ப ஈ வே ரா அவர்களின் பேச்சுகளை போட்டு கொண்டே இருந்தால் ஒன்றும் ஆக போவதில்லை… நீங்கள் அவருடைய சீடராக இருந்தால் பகுத்தறியுங்கள்… மேலே நீங்கள் போட்டிருக்கும் பேச்சில் அவர் ஆரியர் திராவிடர் என்று இரு சாராரை பற்றி பேசுகிறார். இது அவர் வாழ்ந்த காலத்தில் இருந்த ஆரிய இன கோட்பாட்டை வைத்து அவர் பேசியது.. இன்று 2009 இல் இந்த கோட்பாட்டை பல ஆராய்ச்சியாளர்கள் கை விட்டு விட்டனர். இப்பொழுது அது Aryan Migration theory என்று மாற்ற பட்டுள்ளது… என்னை பொறுத்த வரையில் இதுவும் செத்து போகும் நாள் வெகு தூரத்தில் இல்லை…
இதில் ஒரு வேடிக்கை என்ன வென்றால் திராவிடம் என்னும் சொல்ல தமிழ் சொல் அல்லவே ! அது தென் இந்தியாவை குறிக்கும் வட மொழி சொல் அன்றோ? இதை எல்லாம் அப்பொழுது அவர் பகுத்து அறியாமல் விட்டு விட்டாரா? இதை தவிர அவர் திராவிடர்கள் என்று கூறுவது யார் யாரை? தமிழகத்தில் இருக்கும் பார்பனர் அல்லாதோர் எல்லாரையுமா? இதில் பிற்படுத்த பட்டோரை அவர் சேர்த்தார் என்பதில் உங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறதா?
ஒரு ஸ்ரீ வைஷ்ணவனான எனக்கு அழ்வார்களின் திவ்ய பிரபந்தங்கள் “திராவிட வேதம்” ! எங்களுடைய குல குரு வாக கருத படுபவர் நம்மாழ்வார் … இவர் பிராமணராக பிறக்காவிட்டாலும் இவருடைய வாழி திருநாமத்தில் “காசினியில் ஆரியனாய் காட்டினான் வாழியே!” என்று போற்றுகிறோம்.. மொத்தத்தில் நீங்கள் பகுத்தறிய நிறைய விஷயங்கள் உள்ளன … ஆரியன் என்னும் சொல் முற்காலத்தில் வேள்வி செய்து அக்னியை வணங்குபவர்கள் என்றும், பிற் காலத்தில் நன் நடத்தை உள்ளவர் என்றும் இந்த சொல்லுக்கே பொருள் வேறு வேறாக மாறி இருக்கும் பொது, நீங்கள் யாரை ஆரியர் என்று சொல்லுகிறீர்கள்? யாரை திராவிடர்கள் என்று சொல்லுகிறீர்கள்?
எனக்கு தெரிந்து தமிழகத்தில் எல்லாரும் தமிழர் என்று தான் மற்றவர்களிடம் அறிமுக படுத்தி கொள்கிறார்களே தவிர திராவிடர் என்று அல்ல… திராவிடர் என்னும் சொல் கழகங்களில் தான் வாழ்ந்து வருகிறது…
சரி அவர் அப்போது ஏதோ பேசி விட்டார்.. நீங்கள் அவரை தெய்வம் என்றும் அவர் சொல்லை வேத வாக்கு என்றும் கருதுகிறீர்களா ? உண்மையான பகுத்தறிவாளருக்கு இது அழகல்லவே? நீங்கள் இப்போது சொல்லுங்கள் யார் ஆரியர் யார் திராவிடர் என்று?



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

  1. RV on October 14, 2009 at 5:52 am

    தமிழ் ஓவியா,

    இந்த பதிவை எழுதிய ம. வெங்கடேசன் பெரியார் சுதந்திர போராட்டத்துக்கு எதிரானவர் என்று எழுதி இருக்கிறார். நீங்கள் கொடுத்திருக்கும் மேற்கோள் பெரியார் ஏன் சுதந்திரப் போராட்டத்துக்கு எதிரான நிலை எடுத்தார் என்று விளக்குகிறது. பெரியாரின் நிலை சரியா தவறா என்பது அடுத்த கேள்வி; ஆனால் பெரியார் சுதந்திரப் போராட்டத்துக்கு எதிர்ப்பு நிலை எடுத்தார் என்பதில் ம. வெங்கடேசனுக்கும், எனக்கும், உங்களுக்கும், பெரியாருக்கும் எந்த வேறுபாடும் இல்லையே!

    நீங்கள் பெரியாரின் காரணங்கள் பற்றி பேச விரும்பினால் தாரளமாக பேசுங்கள்.

    ம. வெங்கடேசனுடன் எனக்கு இருக்கும் கருத்து வேறுபாடு மிக சிம்பிள். வெங்கடேசன் பெரியார் எப்போதுமே சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதில்லை என்று எழுதி இருப்பது தகவல் பிழை; ஜெயிலுக்கு போவது மட்டுமே விடுதலை போராட்ட வீரருக்கான தகுதி இல்லை. பெரியார் மட்டுமல்ல, பின்னாளில் காங்கிரசை விட்டு விலகிய, காங்க்ரசுக்கு எதிராக போராடிய, ஜின்னா, வரதராஜுலு நாயுடு போன்றவர்களும் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்தான்.

    கணக்கில் ஒரு மாணவன் ஃபெயில், தமிழில் பாஸ் என்றால் அவன் எல்லாவற்றிலும் ஃபெயில் என்ற பிம்பத்தை இந்த பதிவு உருவாக்க முயற்சிக்கிறது. உங்கள் கருத்தோ அவன் எல்லாவற்றிலும் பாஸ் என்ற பிம்பத்தை உருவாக்க முயற்சிக்கிறது. உங்கள் பதிவுகள், பல தளங்களில் உங்கள் மறுமொழிகள் வைத்து சொல்கிறேன் – பெரியாரின் தலைக்கு பின்னால் ஒரு ஒளி வட்டம் (halo) உருவாக்க நீங்கள் முயற்சி செய்கிறீர்கள். இது எனக்கு இசைவான விஷயம் இல்லை. எனக்கு தெரிந்த வரைக்கும் பெரியார் தன்னை உத்தமன் என்று நினைத்ததில்லை, இப்படி ஒளி வட்டம் உருவாக்கும் முயற்சியைக் கண்டால் அவர் போங்கடா வெங்காயம் என்றுதான் சொல்வார் என்று தோன்றுகிறது.

    ம. வேங்கடேசனைப் பற்றி இந்த ஒரு பதிவை வைத்து நான் எந்த முடிவுக்கும் வருவதிர்கில்லை. இந்த பதிவு மிகைப்படுத்துகிறது என்றுதான் சொல்ல முடியும்.

     
  2. தமிழ் ஓவியா on October 14, 2009 at 5:47 pm

    //உங்கள் பதிவுகள், பல தளங்களில் உங்கள் மறுமொழிகள் வைத்து சொல்கிறேன் – பெரியாரின் தலைக்கு பின்னால் ஒரு ஒளி வட்டம் (halo) உருவாக்க நீங்கள் முயற்சி செய்கிறீர்கள்.//

    ஆர்.வி.

    பெரியார் என்றால் பெரியார் மட்டுமே.
    அவருக்கு எந்த ஒளிவட்டமும் தேவையில்லை.
    அவர் ஓரு சாதாரண மனிதன்

    பெரியாரைப் பற்றி அவதூறாக,தவறாக விமர்சிப்பவர்களுக்கு பெரியாரின் கருத்தைக் கொண்டே பதில் அளிக்கிறேனேயல்லாது நீங்கள் நினைப்பது போல் எந்த வட்டத்தையும் உருவாக்க அல்ல
    ஆர்.வி.

     
  3. RV on October 14, 2009 at 10:00 pm

    தமிழ் ஓவியா,

    பெரியார் சாதாரண மனிதன் என்கிறீர்கள். சரி. அவரது கருத்துகளை ஊர்ந்து கவனித்திருக்கிறீர்கள். இந்த சாதாரண மனிதனின் கருத்துகளில் ஏதாவது ஒன்று உங்களுக்கு தவறு என்று படுகிறதா? இந்த கேள்வியை பார்த்தவுடன் யோசிக்காமல் உங்களால் அடுத்த ஒரு நொடியில் பெரியாரின் இந்த கருத்து தவறானது என்று சொல்ல முடியுமா?

    சாதாரண மனிதனின் எல்லா கருத்துகளும் – 100% கருத்துகளும் – உங்களுக்கு சரி என்று படப்போவதில்லை. அப்படி தோன்றினால் அவர் சாதாரண மனிதன் இல்லை. உண்மையில் அசாதாரண மனிதர்கள், மாபெரும் தலைவர்கள் என்று கருதுபவர்கள் மீதும் கூட நமக்கு விமர்சனம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் பெரியார் உங்களை பொறுத்த வரையில் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர் என்பது தெளிவாக தெரிகிறது.

    உங்களுக்கு பெரியார் மேல் ஒரு மகத்தான பிம்பம் இருக்கிறது. அவரை விமர்சிக்கும் எந்த கருத்தும் – எந்த கருத்தும் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன் – உங்களுக்கு இசைவானது இல்லை. இது அதிசயமான விஷயம் இல்லை. ஆனால் இதைத்தான் நீங்கள் அவர் தலைக்கு பின் ஒழி வட்டம் எழுப்ப முயற்சிக்கிறீர்கள் என்று சொல்கிறேன். நீங்கள் பெரியாரை உணர்வுபூர்வமாக – “எங்களை” உயர்த்த வந்த உத்தமர் – அணுகுபவர். ஏறக்குறைய அவருடைய பக்தர். உங்களுடன் பெரியாரைப் பற்றி எப்படி அறிவுபூர்வமாக விவாதிக்க முடியும்?

    பாருங்கள் இங்கே ம. வெங்கடேசன் பெரியார் சுதந்திரப் போராட்டத்துக்கு எதிர்நிலை எடுத்தவர் என்று வாதிடுகிறார். பெரியாரின் பேச்சுகளிலிருந்து இதற்கு மேற்கோள் தருகிறார். நீங்கள் இதை மறுக்கிறீர்கள்; ஆனால் நீங்கள் இது வரை தந்த இரண்டு மேற்கோளும் ம. வெங்கடேசனின் நிலையைத்தான் உறுதிப்படுத்துகிறது. நீங்கள் ம. வெங்கடேசனின் நிலையை மறுக்க வேண்டும் என்றால் அவர் எப்போதும் சுதந்திரப் போராட்டத்தை எதிர்க்கவில்லை என்று காட்ட வேண்டும். அவர் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டபொது பேசிய எதையாவது மேற்கோள் காட்ட வேண்டும். அதற்கான ஆவணங்கள் இன்று கிடைக்குமா என்று எனக்கு தெரியாது. பெரியார் பக்தரான உங்களுக்கு தெரியலாம். இல்லை கோவை அய்யாமுத்து போன்றவர்களின் நினைவுகளில் கிடைக்கலாம்.

    இல்லை என்றால் ஆமாம் பெரியார் எதிர்நிலை எடுத்தார் என்று தெளிவாக சொல்லிவிட வேண்டும். பிறகு அவர் அப்படி செய்தது சரிதான், இந்த இந்த காரணங்கள் இருக்கின்றன, பெரியார் தன நிலையை இப்படி இப்படி விளக்கி இருக்கிறார் என்று சொல்ல வேண்டும். பெரியார் உயிரோடு இருந்திருந்தால் அப்படித்தான் செய்திருப்பார் என்று தோன்றுகிறது. அவர் தனி ஆளாக இருந்தாலும், தன கருத்து அனேகமாக ஒத்துக்கொள்ளப்படாது என்று தெரிந்தாலும், தன கருத்தை எடுத்து சொல்ல அவர் தயங்கியதே இல்லை. ஆமாம் ஒரு ஐந்தாறு வருஷம் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டாலும், கடைசி இருபது சொச்சம் வருஷம் சுதந்திரப் போராட்டத்துக்கு எதிர்நிலை எடுத்தேன் என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்லி இருப்பார். அதுதானே உண்மை!



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard