New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ராமசாமி நாயக்கர் தாழ்த்தப்பட்டோருக்குப் பாடுபட்டவரா ??


Guru

Status: Offline
Posts: 24601
Date:
ராமசாமி நாயக்கர் தாழ்த்தப்பட்டோருக்குப் பாடுபட்டவரா ??
Permalink  
 


பெரியாரின் மறுபக்கம் – பாகம் 15: தாழ்த்தப்பட்டோருக்குப் பாடுபட்டவரா ஈ.வே.ராமசாமி நாயக்கர்?

 

தாழ்த்தப்பட்டவர்கள் – மிருகங்களைவிடக் கேவலமாக நடத்தப்பட்ட காலத்தில் – ஊமைகளாக இருந்த அவர்களுக்கு பாடுபட்ட தலைவர் ஈ.வே.ராமசாமி நாயக்கர்தான். ஈ.வே.ராமசாமி நாயக்கர் இல்லையேல் தாழ்த்தப்பட்டவர்கள் முன்னேறி இருக்கமுடியாது. தாழ்த்தப்ட்டவர்களையும் ஈ.வே.ராமசாமி நாயக்கரையும் பிரித்துப்பேசமுடியாது என்றெல்லாம் பகுத்தறிவுவாதிகள் பிதற்றிக் கொண்டுவருகிறார்கள்.

ஆனால் உண்மை என்ன தெரியுமா?

ஈ.வே.ராமசாமி நாயக்கர் சாதி இந்துக்களிடமிருந்து தாழ்த்தப்பட்டவர்களைப் பிரித்தே பார்த்திருக்கிறார். சாதி இந்துக்களைவிட தாழ்ந்தவர்கள்தான் தாழ்த்தப்பட்டவர்கள். அவர்களுக்கு நிகராக தாழ்த்தப்பட்டவர்கள் வரமுடியாது, வரவும் கூடாது என்பதுதான் ஈ.வே.ராமசாமி நாயக்கரின் கருத்து.

காந்திஜி, ”கோவிலுக்குள் தாழ்த்தப்பட்ட மக்கள் செல்வதில் எந்தக் கோவிலிலும் சூத்திரர்கள் எதுவரையில் செல்லமுடியுமோ அந்த அளவுவரையில்தான் தாழ்த்தப்பட்ட மக்கள் (அரிஜனங்கள்) செல்லலாம்” என்று சொன்னபோது அதன் மீது ஆத்திரப்பட்டு ஈ.வே.ராமசாமி நாயக்கர் கூறியது என்ன தெரியுமா?

”தீண்டாமை விலக்கு என்பதும் கோவில் பிரவேசம் என்பதும் சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதுதானா? பறையன் கீழ்சாதி என்பது மாற்றப்படவில்லையானால் அதற்காக சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதா? இந்த அனுமதியானது இதுவரை நடுசாதியாக இருந்த சூத்திரர் என்பவர்கள் இப்போது கீழ்சாதியாகவே ஆக்கப்பட்டுவிட்டார்கள். ஆனதால் இதை நாம் அனுமதிக்கக்கூடாது” என்று ஈ.வே.ராமசாமி நாயக்கர் கூறுகிறார்.

(நூல்: வைக்கம்போராட்ட வரலாறு – வீரமணி)

தாழ்த்தப்பட்டவர்களுக்காக உழைத்தவர் என்று சொல்லுகின்ற ஈ.வே.ராமசாமி நாயக்கர்தான், பறையர்களை சூத்திரர்களோடு ஒன்றிணைக்கக்கூடாது என்று சொல்கின்றார். காரணம் சூத்திரர்களோடு சேர்த்தால் நடுசாதியாக இருந்த சூத்திரர் கீழ்ச்சாதியாக ஆக்கப்பட்டுவிடுவார்களாம். இதுதான் ஈ.வே.ராமசாமி நாயக்கரின் சாதிப்பற்று.

தாழ்த்தப்பட்டவர்களை சூத்திரர்களோடு சேர்த்ததை அனுமதிக்கக்கூடாது என்று ஆத்திரத்தோடு சொன்ன ஈ.வே.ராமசாமி நாயக்கர்தானா தாழ்த்தப்பட்டவர்களுக்காகப் பாடுபட்டவர்? தாழ்த்தப்பட்டவர்களை கொடுமைப்படுத்துவது சாதி இந்துக்கள்தான். பிராமணர்கள் அல்ல என்று தாழ்த்தப்பட்டவர்களே சொல்லுகின்றனர். ஆனால் இந்த உண்மையை மறைத்து தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரி பிராமணர்கள்தான் என்று அடையாளம் காட்டியவர் ஈ.வே.ராமசாமி நாயக்கர்.

ஏனென்றால் சாதி இந்துக்கள் தாழ்த்தப்பட்டவர்களை கொடுமைப்படுத்துவது தெரியக்கூடாது. தாழ்த்தப்பட்டவர்கள் சாதி இந்துக்களுக்கு எதிராகக் கிளம்பிவிடக்கூடாது. அதனால்தான் பிராமணர்களை எதிரியாகக் காட்டினார்.

எஸ்.வி. ராஜதுரை கூறுகிறார்:-

s-v-rajaduraiபார்ப்பன ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் இந்திய அரசியலமைப்புச் சட்ட உருவாக்க விஷயத்தில் அம்பேத்கர் ஏமாந்து போய்விட்டார் என்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஓதுக்கீட்டினை அரசியல் ரீதியாக ஏற்பாடு செய்வதில் அவர் உதவி புரியவில்லை என்றும் ஒரு மனத் தாங்கல் பெரியாரிடம் கடைசிவரை இருந்தது.

அம்பேத்கர் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீட்டினை அரசியல் சட்ட ரீதியாக ஏற்பாடு செய்து தந்ததில் ஈ.வே.ராமசாமி நாயக்கருக்கு அக்கறையில்லை. மாறாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஓதுக்கீட்டினை அரசியல் சட்ட ரீதியாக ஏற்பாடு செய்வதில் அவர் உதவி புரியவில்லை என்ற கவலை மட்டும் இருந்தது இருக்கிறது என்ற சொன்னால் ஈ.வே.ராமசாமி நாயக்கருடைய எண்ணம் சாதி இந்துக்கள் நலனில் மட்டுமே குறியாய் இருந்திருக்கிறது என்று தலித் எழுத்தாளர்கள் சொல்வதில் என்ன தவறு இருக்க முடியும்?

ஈ.வே.ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:-

சிலர் கூறுவார்கள், சாதி ஓழிய வேண்டுமானால் ஒவ்வொருவரும் தம் சாதியில் திருமணம் செய்யக்கூடாது! அது தப்பு! நம்மில் சாதி இல்லை. பார்ப்பான் ஒரு சாதி! மற்ற நாம் எல்லோரும் ஒரு சாதி! இந்த இரண்டுக்குள் நடப்பதுதான் கலப்பு மணம் எனலாம்.
(விடுதலை 06-04-1959)

 

நாமெல்லாம் ஒரே சாதி. நம்மில் சாதி இல்லை என்று சொன்ன ஈ.வே.ராமசாமி நாயக்கர்தான், தாழ்த்தப்பட்டவர்களை சாதி இந்துக்களோடு சூத்திரர்களோடு சேர்க்கக்கூடாது என்று கூறுகிறார். ஏன் இந்த முரண்பாடு தெரியுமா?

‘தாழ்த்தப்பட்டவர்கள் – சாதி இந்துக்கள்’ என்று வரும்போது தன்னோடு தாழ்த்தப்பட்டவர்களை சேர்த்துக்கொள்ளமாட்டார். ‘சாதி இந்துக்கள் – பிராணர்கள்‘ என்று வரும்போது போராட்டம் சூடுபிடிக்க தாழ்த்தப்பட்ட மக்களையும் சேர்த்துக்கொள்வார். இதுதான் ஈ.வே.ராமசாமி நாயக்கரின் தந்திரம்.

சாதி இந்துக்களோடு தாழ்த்தப்பட்டவர்கள் திருமணம் செய்தால் அது கலப்பு மணம் இல்லையா? இது எவ்வளவு பெரிய ஏமாற்றுத்தனம்? தம் சாதியில் திருமணம் செய்யக்கூடாது. வேறு வேறு சாதியில் திருமணம் செய்யச் சொன்னால் அது தப்பாம் – இதுதான் ஈ.வே.ராமசாமி நாயக்கரின் சாதிப்பற்று.

48வயது வரை ‘நாயக்கர்’ என்ற சாதிப்பெயரை விடாமல், தன்னுடைய நாயக்க சாதிப்பற்றை காண்பித்தவர்தான் இந்த ஈ.வே.ராமசாமி நாயக்கர்.

நாம் இப்படிச் சொன்னால் உடனே பகுத்தறிவுவாதிகள் 1924ல் நடந்த வைக்கம் போராட்டத்தைச் சொல்லுவார்கள்.

இந்த வைக்கம் போராட்டம் ஈ.வே.ராமசாமி நாயக்கரின் தனிப்பட்ட முயற்சியால் – சுயமரியாதை இயக்கத்தால் நடத்தப்பட்டப் போராட்டம் அல்ல. அந்தப் போராட்டம் நடத்த ஏற்பட்ட செலவும், ஈ.வே.ராமசாமி நாயக்கரோ அல்லது அவருடைய இயக்கமோ கொடுத்தது அல்ல. அப்போது அவருடைய இயக்கமே தோன்றவில்லை. அந்தப் போராட்டம் தேசிய காங்கிரஸ் சபை வழிகாட்டுதலினால் கேரள காங்கிரஸால் நடத்தப்பட்ட போராட்டம் என்பதை ஏற்கனவே பார்த்தோம். ஈ.வே.ராமசாமி நாயக்கரும் காங்கிரஸில் இருக்கும்போதுதான் காங்கிரஸ் சார்பாக அங்கு சென்று போராடினார். அதனால் வைக்கம்போராட்ட வெற்றிக்கு ஈ.வே.ராமசாமி நாயக்கரை மட்டும் உரித்தாக்குவது மிகையாகும்.

ஆனால் இங்கு ஒரு கேள்வி தாழ்த்தப்பட்டவர்களிடையே எழுகிறது. அதாவது வைக்கம் போராட்டம் போல் தமிழ் நாட்டில் ஈ.வே.ராமசாமி நாயக்கர் தலைமையேற்று ஏன் நடத்தவில்லை?

ஈ.வே.ராமசாமி நாயக்கர் தாழ்த்தப்பட்டவர்களைப் பற்றி நிறைய பேசினார். நிறைய எழுதினார். மாநாடுகளில் தீர்மானங்களை இயற்றினார். ஆனால் செயலில் காட்டவில்லையே ஏன்?

தாழ்த்தப்பட்டவர்களுக்காக போராட்டங்கள் நடத்தத் தயார் என்று சொன்ன ஈ.வே.ராமசாமி நாயக்கர் தாழ்த்தப்பட்டவர்களுக்காக என்னென்ன போராட்டங்களை நடத்தினார்?

பட்டியலிடத் தயாரா?

keezhavenmaniமுதுகொளத்தூர், கீழ்வெண்மணி போன்ற இடங்களில் சாதி இந்துக்களால் தாழ்த்தப்பட்டவர்களுக்கு கொடுமை ஏற்பட்டபோது அதை எதிர்த்து ஈ.வே.ராமசாமி நாயக்கர் ஏதாவது போராட்டங்களை நடத்தினாரா? இதுபோன்ற சாதி இந்துக்களால் தாழ்த்தப்பட்டவர்கள் தாக்கப்பட்டபோது அவர்களுக்கு ஆதரவாக ஈ.வே.ராமசாமி நாயக்கர் ஏதாவது போராட்டங்களை நடத்தினாரா? இதுபோன்ற சம்பவங்களில் ஈ.வே.ராமசாமி நாயக்கருடைய பங்கு என்ன என்பதைத் தெளிவுபடுத்துவார்களா பகுத்தறிவுவாதிகள்?

ஈ.வே.ராமசாமி நாயக்கர் சாதி இந்துக்களைக் கண்டித்து, எதிராக, எதுவுமே செய்யவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. இது பற்றி தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அறிவியல் களஞ்சிய முன்னாள் பதிப்பாசிரியர் டாக்டர் சாமி. சண்முகம் கூறுகிறார்:-

தமிழகத்தில் சீர்திருத்தவாதி என்று கூறிக்கொண்ட, வாழ்ந்து வந்த ஈ.வே.ரா அவர்கள், தீண்டாமையை ஒழிப்பேன் என்று கூறிக்கொண்டு பிராமணர்களைத் திட்டியே தன் பொதுவாழ்வை சிறப்பாகக் கழித்தவர். தீண்டாமை எங்கு தலைவிரித்தாடியதோ அங்கு தன் பிரச்சாரத்தைச் செய்யாமல் மிரட்டினால் அஞ்சி ஓடும் பிராமணர்களைத் தாக்கியே வாழ்ந்தார். இன்று கேரளாவில் உள்ள வைக்கத்தில் அரிஜனங்களை ஆலயத்தில் நுழையவும், வழிபடவும் செய்தவர் ஏன் தீண்டாமை தலைவிரித்தாடிய, இன்னும் விரித்தாடும் பரமக்குடி, முதுகுளத்தூர், மானாமதுரை பகுதிகளில் ஆலய பிரவேசம் செய்யவில்லை? வைக்கத்தில் நம்பூதிரி பிராமணர்களை எதிர்த்து நுழைந்தார். இங்கே முக்குலத்தோரை எதிர்க்கவேண்டும். இங்கே முயன்று இருந்தால் ரத்த ஆறு ஓடும். அங்கே நம்பூதிரிகள் அஞ்சி ஓடுவர் இதுதான் உண்மை.

ஈ.வே.ரா அவர்கள் 1967வரை தீண்டாமை ஓழிப்பதாக தீவிரமாக பேசிவந்தார். திருவரங்கத்தில் பிராமணர்களின் பூணூல் அறுக்கப்பட்டது. பூணூல் போடுவது பிராமணர்களுக்கு மட்டும் உரிய பழக்கம் இல்லை. செட்டியார், கம்மா, பலிஜா, வள்ளுவர், தச்சர், கொல்லர், ரெட்டியார் ஆகிய பிரிவினரிடையே இன்றும் சிறப்பாக விழாவைத்து நூல் அணிவிக்கப்பட்டுவரும் ஒரு சம்பிரதாயமாகும். மற்றவர்களைத் தொடாமல் பயந்தோடும் பிராணமர்களை மட்டும் அச்சுறுத்தி வந்தார். 1967-ல் அவருடைய கொள்கையில், ஊறிப்போய், பிரிந்து ஆட்சி அமைத்த தி.மு.க. ஆட்சிக்கு வந்தபின் தீண்டாமை ஓழிப்பை தீவிரப்படுத்தியிருந்தால் அன்றைய தி.மு.க. அரசு ஓரளவுக்காவது தீண்டாமையை ஓழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும். ஈ.வே.ரா. இதை ஏன் செய்யவில்லை என்பது ஒரு மர்மமான செயலாகும்.

ஈ.வே.ரா.வின் நடவடிக்கைகள் எந்த வகையிலும் தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பயன்படவில்லை என்பது உண்மை.

(நூல்:- தலித்துகள்)

டாக்டர் சாமி. சண்முகம் ஆர்.எஸ்.எஸ்.காரோ, இந்து முன்னணிகாரரோ, விசுவ ஹிந்து பரிஷத் காரரோ அல்ல. தன்னுடைய பல ஆண்டு கால அனுபவம் மற்றும் ஆராய்ச்சியின் அடிப்படையில் ஈ.வே.ராமசாமி நாயக்கர் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதுவுமே செய்யவில்லை என்று கூறுகிறார். பலரின் அனுபவம் மற்றும் ஆராய்ச்சியின் முடிவும் இதுதான்.

தாழ்த்தப்பட்டவர்களைக் கேவலப்படுத்திய ஈ.வே.ரா!

தாழ்த்தப்பட்டவர்களுக்காக என்ன போராடினார் ஈ.வே.ராமசாமி நாயக்கர்? என்ற கேள்வி ஒருபுறம் இருக்கட்டும். ஈ.வே.ராமசாமி நாயக்கர் தாழ்த்தப்பட்டவர்களை எவ்வளவு கேவலமாக பேசினார் தெரியுமா?

வட ஆற்காடு பசுமந்தூரில் 1948 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் நடைபெற்ற திராவிடர் கழக கூட்டமொன்றில் பெரியார் பேசிய போது, கூட்டத்திலிருந்து ஒருவர் ஆதிதிராவிடர் திராவிடர் கழகத்தில் சேருவதால் ஆதிதிராவிடர்களுக்கு என்ன நன்மை? எனக்கேட்ட கேள்விக்கு, ஆதிதிராவிடர்கள் திராவிடர்கழகத்தில் சேருவதால் திராவிடர் கழகத்துக்குத்தான் என்ன நன்மை? என்று எதிர்க் கேள்வி கேட்டார் பெரியார். அதாவது ஆதிதிராவிடரால் ஒரு நன்மையும் இல்லை என்று இலைமறையாகச் சொல்லிவிட்டார். இதை எதிர்த்து அன்றைய சென்னை மாகாணத்தின் சட்டசபை எம்.எல்.ஏ அவர்களின் ”உரிமை’‘ இதழின் ஜூலை 1949 பதிப்பில் பெரியாரின் கூற்றை தலைப்பாக வெளியிட்டு சேரிமக்கள் ஆதரவால் பெரியாரான ஈ.வே.ரா. ஆதிதிராவிடனை தனித்து ஓதுக்கிவிட்டதால் இனி அவன் தன் சுயபலத்தால் நின்றாலன்றி வாழ்வில்லை என்பதை விளக்கி, தலையங்கம் எழுதினார்.
(நூல்: கோலார் தங்கவயல் வரலாறு, கே.எஸ்.சீதாராமன்)

அதே போல, துணி விலை ஏறிவிட்டதற்குக் காரணம் இப்போது பறைச்சிகளெல்லாம் ரவிக்கைப் போடுவதுதான். வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிப்பதற்கு காரணம் பறையன்களெல்லாம் படித்துவிட்டதுதான் என்று ஈ.வே.ராமசாமி நாயக்கர் கூறியதாக தாழ்த்தப்பட்ட தலைவர்கள் இன்றும் கூறுகின்றனர். இது உண்மை இல்லை என்று இதுவரை திராவிடர்க் கழகம் தெளிவுப்படுத்தவில்லை.

ஆனால் இது உண்மைதான் என்று ஓர் ஆதாரம் கூறுகிறது. சென்னையில் சில அம்பேத்கர்வாதிகளால் நடத்தப்பட்டு வந்த ‘அம்பேத்கர்‘ இதழின் ‘சூட்டுக்கோல்‘ என்ற பகுதியில் இவ்வாறு எழுதப்பட்டிருக்கிறது.

”ஓரு முறை ஈ.வே.ரா. துணி விலை ஏறிவிட்டதற்குக் காரணம் இப்போது பறைச்சிகளெல்லாம் ரவிக்கைப் போடுவதுதான். வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிப்பதற்குக் காரணம் பறையன்களெல்லாம் படித்துவிட்டதுதான் என்று கூறினார். அதற்கு அன்று மறுப்புக் கூறினோம்”.

(அம்பேத்கர் மாத இதழ் – நவம்பர் – டிசம்பர் – 1963)

இதிலிருந்து தெரிவதென்ன?

ஈ.வே.ராமசாமி நாயக்கர் பறையர்களை எவ்வளவு கேவலமாகப் பேசியிருக்கிறார் என்பது தெரிகிறதல்லவா! தாழ்த்தப்பட்டவர்களை கேவலமாகப் பேசிய ஈ.வே.ராமசாமி நாயக்கரைத்தான் இன்று தாழ்த்தப்பட்டவர்களுக்காக உழைத்தவர் என்று பாராட்டுகிறார்கள். ஈ.வே.ராமசாமி நாயக்கர் தாழ்த்தப்பட்டவர்களை மட்டுமல்ல, அண்ணல் அம்பேத்கரையே கேவலமாகப் பேசியிருக்கிறார்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
RE: ராமசாமி நாயக்கர் தாழ்த்தப்பட்டோருக்குப் பாடுபட்டவரா ??
Permalink  
 


அம்பேத்கரைக் கேவலப்படுத்திய ஈ.வே.ரா!

ஈ.வே.ராமசாமி நாயக்கரை ஒருவர் கேள்வி கேட்கிறார். சாதியை ஒழிக்க வேண்டுமென்றால் அரசாங்கத்தை ஒழிக்கவேண்டுமென்று சொல்லுகிறீர்களே, இது அரசியல் பிரச்சனையாகாதா? அரசியல் கட்சியாக இருந்தால்தானே இந்த அரசியல் பிரச்சனையைத் தீர்க்கமுடியும்?

இதற்கு ஈ.வே.ராமசாமி நாயக்கர் பதில் சொல்கிறார்:

”நல்ல கேள்வி, அரசியலில் ஒருவன் நுழைகிறான் என்றாலே, அவன் எப்படிப்பட்ட யோக்கியனாக இருந்தாலும் உடனே அவனது நாணயம் ஒழுக்கம் கெட்டுப்போய்விடுகிறது! அவன் புரட்டு பித்தலாட்டம் செய்ய வேண்டிய அவசியத்திற்கு ஆளாக்கப்படுகிறான். அது நானாக இருந்தாலும், பாபா சாகிப் அம்பேத்கராக இருந்தாலும் சரி அப்படித்தான் ஆகிவிடுவோம். அது அப்படி ஆக்கிவிடும்.
(விடுதலை 16-02-1959)


dr-ambedkarஈ.வே.ராமசாமி நாயக்கரின் இந்த பதில் 1959-ம் ஆண்டு சொல்லப்பட்டது. டாக்டர் அம்பேத்கர் இறக்கும்வரை அதாவது 1956-ம் ஆண்டு அரசியலிலே எப்படியிருந்தார் என்பது அனைவருக்கும் தெரியும். தன்னுடைய கொள்கைக்காக பதவியையே ராஜினாமா செய்தவர். இப்படிப்பட்ட அம்பேத்கரை – கடைசிவரை அரசியலியே ஒழுக்கமாக, நாணயமாக இருந்த அம்பேத்கரை – அரசியல் மாற்றிவிடும் என்ற அவர் இறந்தபிறகு சொல்வது அம்பேத்கரைக் கேவலப்படுத்துவதுதானே!

அம்பேத்கர்தான் ஒழுக்கமாக, நாணயமாக இருந்தாரே பின் ஏன் அம்பேத்கரை இழுக்க வேண்டும்? அம்பேத்கர் அப்படி மாறி இருந்தால் சொல்லலாம். அவர்தான் மாறவில்லையே! இவரைப் பொருத்தவரையில் மாறிவிடுவோம் என்று சொன்னது இவருக்கு மட்டும் பொருத்தமாக இருக்கலாம். ஆனால் தேவையில்லாமல் அம்பேத்கர் பெயரைச் சொல்லுகின்றார். காரணம் அம்பேத்கர் அரசியலில் நல்லவரல்ல என்பதை சொல்லுவதற்காகதான்.

அம்பேத்கரை அடக்கிவிட்டதா காங்கிரஸ்?

மேலும் அம்பேத்கரைப் பற்றி ஈ.வே.ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:-

……….தாழ்த்தப்பட்டோர் சங்கத்திற்கு எனது அருமை நண்பரும் அறிஞருமான அம்பேத்கர் தலைவராக இருந்து வருகிறார். தாழ்த்தப்பட்டோர் இந்துக்களல்ல என்ற மிக ஆதாரத்தோடு ஆரியத்தின் முதுகில் தட்டி ஆணவத்தைக் குறைத்தவர்களில் அவரும் ஒரு முக்கியஸ்தர்; பேரறிஞர், நான் எதிர்பார்த்திருந்தேன், அவர் ஒத்துழைப்பை இவ்வாரியத்தின் கொடுமைகளை ஒழிக்க, ஆனால் எதிர்பாராத விதமாக எந்த ஆரியத்தின் ஆணிவேரை அசைத்து ஆட்டங்கொடுக்கும்படி செய்தாரோ அந்த ஆரியத்தின் ஸ்தாபனமாகிய, இந்துக்களின் ஸ்தாபனமாகிய காங்கிரஸ் இன்று நமது அம்பேத்கரை அடக்கிவிட்டது. இவரும் அத்துடன் உறவு கொண்டுவிட்டார். இன்னும் கூற வேண்டுமானால் இந்தியநாடு பிரிக்கப்படக்கூடாதென்ற வடநாட்டின் வறண்ட தத்துவத்தை இன்றைய நிலையில் அவர் பேசுவதைக் கண்டு என் மனம் வருந்துகிறது. இன்னும் சில நாட்களில் திராவிட நாடு பிரிவினையை அவர் எதிர்ப்பாரோ என்று அஞ்சுகிறேன்.
(குடியரசு 08-07-1947)

மேலும் அம்பேத்கரைப் பற்றி ஈ.வே.ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:-

…………டாக்டர் அம்பேத்கரை சுவாதீனம் செய்து கொண்டுவிட்டார்கள். பிராமணர்கள், சூத்திரன், பஞ்சமன் என்ற பிரிவு இருக்கக்கூடாது என்று அரசியல் நிர்ணய சபையில் வாதாடமல் செய்து விட்டார்கள்……. தனித் தொகுதியை ஓழிப்பதற்குக் கூட அவரால் தொல்லை நேராமல் பார்த்துக் கொண்டார்கள்.
(விடுதலை 10-07-1947)

இந்த விமர்சனத்தைக் கூர்ந்து படியுங்கள்.

அதாவது அம்பேத்கர் காங்கிரஸ் மந்திரி சபையில் இடம் பெற்றதைத்தான் ஈ.வே.ராமசாமி நாயக்கர் காங்கிரஸ் இன்று நமது அம்பேத்கரை அடக்கிவிட்டது என்று கூறுகிறார்.

கோழைகளைத்தான் அடக்க முடியும். தைரியம் மிக்கவர்களை அடக்க முடியாது. கோழைகள்தான் அடங்கி போவார்கள். தைரியம் மிக்கவர்கள் அடங்கி போகமாட்டார்கள். இதுதான் நடைமுறை உண்மை, இது எல்லோருக்கும் தெரியும்.

காங்கிரஸ் இன்று நமது அம்பேத்கரை அடக்கிவிட்டது என்று சொன்னால் என்ன அர்த்தம்? அம்பேத்கர் கோழை என்பதால் காங்கிரஸ் அடக்கிவிட்டது என்றுதானே அர்த்தம்?

அம்பேத்கர் காங்கிரசுடன் உறவு கொண்டுவிட்டார் என்பதாலேயே காங்கிரஸ் அம்பேத்கரை அடக்கிவிட்டது என்று கூறுவது உண்மையிலேயே அம்பேத்கரை இழிவுபடுத்துவதாகும்.

அம்பேத்கர் காங்கிரசுடன் உறவு கொள்ளக் காரணம் தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களின் நலனுக்காகவே, அம்பேத்கர் காங்கிரஸ் மந்திரி சபையில் இடம் பெற்றிருந்தாலும்கூட தன்னுடைய கொள்கைகளை எப்போதுமே விட்டுக்கொடுத்ததில்லை.

இங்கே ஒன்றை நினைவுபடுத்துகிறோம்.

ஈ.வே.ராமசாமி நாயக்கர் 1920, 1921, 1922, 1923, 1924, 1925 – ஆகிய ஆண்டுகளில் வகுப்புரிமைத் தீர்மானங்கள் கொண்டுவந்தபோது காங்கிரஸ் அதை ஆதரிக்க மறுத்தது. 1925-ம் ஆண்டு இனி காங்கிரஸை ஒழிப்பதே என் வேலை என்று அதிலிருந்து வெளியேறினார் என்று சொல்லப்படுகிறது.

நான் கேட்கிறேன்.

  • 1920-ம் ஆண்டு காங்கிரஸ் வகுப்புரிமைத் தீர்மானங்களை ஆதரிக்க மறுத்தபோது ஏன் காங்கிரஸை விட்டு வெளியேறவில்லையே? தொடர்ந்து ஏன் காங்கிரஸில் இருந்தார்? காங்கிரஸ் அடக்கிவிட்டது என்றா அர்த்தம்?
  • 1921-ம் ஆண்டு காங்கிரஸ் வகுப்புரிமைத் தீர்மானங்களை ஆதரிக்க மறுத்தபோதும் ஏன் காங்கிரஸை விட்டு வெளியேறவில்லை? தொடர்ந்து ஏன் காங்கிரஸில் இருந்தார்? காங்கிரஸ் அடக்கிவிட்டது என்றா அர்த்தம்?
  • 1922-ம் ஆண்டு காங்கிரஸ் வகுப்புரிமைத் தீர்மானங்களை ஆதரிக்க மறுத்தபோதும் ஏன் காங்கிரஸை விட்டு வெளியேறவில்லை? தொடர்ந்து ஏன் காங்கிரஸில் இருந்தார்? காங்கிரஸ் அடக்கிவிட்டது என்றா அர்த்தம்?
  • 1923-ம் ஆண்டு காங்கிரஸ் வகுப்புரிமைத் தீர்மானங்களை ஆதரிக்க மறுத்தபோதும் ஏன் காங்கிரஸை விட்டு வெளியேறவில்லை? தொடர்ந்து ஏன் காங்கிரஸில் இருந்தார்? காங்கிரஸ் அடக்கிவிட்டது என்றா அர்த்தம்?
  • 1924-ம் ஆண்டு காங்கிரஸ் வகுப்புரிமைத் தீர்மானங்களை ஆதரிக்க மறுத்தபோதும் ஏன் காங்கிரஸை விட்டு வெளியேறவில்லை? தொடர்ந்து ஏன் காங்கிரஸில் இருந்தார்? காங்கிரஸ் அடக்கிவிட்டது என்றா அர்த்தம்?

இவர்கள் சொல்கிறபடி ஆமாம் என்றுதான் சொல்லவேண்டும்.

அம்பேத்கர் காங்கிரசுடன் உறவு கொண்டுவிட்டார் என்பதாலேயே காங்கிரஸ் அம்பேத்கரை அடக்கிவிட்டது என்று சொன்னால் வகுப்புரிமைத் தீர்மானங்கள் தோல்வியடைந்த நிலையிலும் ஈ.வே.ராமசாமி நாயக்கர் காங்கிரசுடன் உறவு கொண்டுவிட்டார் என்பதாலேயே காங்கிரஸ் ஈ.வே.ராமசாமி நாயக்கரை அடக்கிவிட்டது என்று சொல்லலாம் அல்லவா?

இவர்கள் அகராதிப்படி உண்மையிலேயே ஈ.வே.ராமசாமி நாயக்கரை காங்கிரஸ் அடக்கிவிட்டதுதான்.

மேலும் ஒரு சம்பவம்.

ஈ.வே.ராமசாமி நாயக்கர்– எந்த காங்கிரஸை ஒழிப்பதே என் வேலை என்றுசொல்லி சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்தாரோ அதே காங்கிரசுக்கு– தங்களுடைய கொள்கைகளை ஏற்றுக்கொண்டால், தான் காங்கிரசுக்கு ஆதரவு தருவதாகத் தூது அனுப்பினார். ஐந்து வருடங்களாக வகுப்புரிமைத் தீர்மானங்களையே ஏற்றுக்கொள்ளாத காங்கிரசுக்கு எதற்காகத் தூது அனுப்ப வேண்டும்? எதற்காக காங்கிரசுக்கு உறவு கொள்ள ஆசைப்பட வேண்டும்?

ஒருவேளை காங்கிரஸ் அந்தத் திட்டத்தை ஏற்றுக்கொண்டால் நல்லதுதானே – என்று பகுத்தறிவாளர் சொல்கிறார்கள்.

அம்பேத்கரும் காங்கிரஸில் மந்திரி சபையில் பங்குகொண்டு மக்களுக்கு நன்மை செய்யவே சேர்ந்தார். பதவிக்காக அல்ல.

ஈ.வே.ராமசாமி நாயக்கர் எந்த காங்கிரஸை ஓழிப்பதே என் வேலை என்று சொல்லி சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்தாரோ அதே காங்கிரசுக்கு பிற்காலத்தில் ஆதரவு கொடுத்தார்.

எந்த காங்கிரஸை ஒழிப்பதே என் வேலை என்றுச் சொல்லி சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்தாரோ அதே காங்கிரசுக்கு பிற்காலத்தில் ஆதரவு கொடுத்தது சரியென்று சொன்னால் அம்பேத்கரும் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு காங்கிரசுடன் உறவுகொண்டதில் என்ன தவறு இருக்க முடியும்?

ஈ.வே.ராமசாமி நாயக்கருக்கு ஒரு நியாயம், அம்பேத்கருக்கு ஒரு நியாயமா?

எஸ்.வி. ராஜதுரை கூறுகிறார்:-

பெரியாருக்கு அம்பேத்கர் அரசியலமைப்பு அவையில் சேர்ந்ததும் அதிகாரங்கள் குறைக்கப்பட்ட மாகாணங்களையும் வலுப்படுத்தப்பட்ட மய்ய அரசாங்கத்தையும் கொண்ட ஏக இந்தியாவிற்கு ஆதரவாகப் பேசத் தொடங்கியிருந்ததும் ஏமாற்றத்தையும் மன வேதனையையும் அளித்தது.

பெரியாருக்கு அம்பேத்கர் அரசியலமைப்பு அவையில் சேர்ந்தது ஏமாற்றத்தையும் மன வேதனையையும் அளித்ததாம்.

உண்மையிலேயே சந்தோஷம் அல்லவா அடைய வேண்டும்? எதற்காக மன வேதனை அடைய வேண்டும்? ஒருவேளை தாழ்த்தப்பட்டவர் வந்துவிட்டார் என்பதினாலா?

அம்பேத்கர் ஏக இந்தியாவிற்கு ஆதரவாகப் பேசத் தொடங்கியிருந்ததும் ஏமாற்றத்தையும் மன வேதனையையும் அளித்தது நியாயம் என்றால் ஈ.வே.ராமசாமி நாயக்கர் அதே ஏக திராவிடஸ்தானுக்கு ஆதரவாகப் பேசத் தொடங்கியிருந்ததும் ஏமாற்றத்தையும் மன வேதனையையும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு அளித்தது நியாயம் ஆகும்.

இந்தியத் தூதர்கள் பதவியிலும் ஆதிதிராவிடர்களையே நியமிக்க வேண்டுமென்றும் தென்னிந்தியாவில் திராவிடஸ்தான் ஏற்படுவதானால் ஹரிஜனங்களுக்கு ஆதிதிராவிடஸ்தான் தனியாகக் கொடுக்கப்பட வேண்டும் என்றும் தாழ்த்தப்பட்டவர்களின் தலைவராக விளங்கிய வி.ஐ. முனுசாமிப்பிள்ளை கூறினார்.

அதை விமர்சித்த ‘விடுதலை‘ தலையங்கம் சொன்னது என்ன தெரியுமா?

ஆதிதிராவிடஸ்தான் வேண்டும் என்று பிதற்றியிருக்கிறார்………… வெறும் பதவிகள் மட்டுமே ஒரு இனத்தையோ, சமுதாயத்தையோ உயர்த்திவிட முடியாது என்பதை அனுபவத்தில் கண்டிருக்கிறோம்………………. எனவே பழங்குடி மக்கள் முழு உரிமையுடன் வாழ வேண்டுமானால் ஒரு சிலர் பெரிய பதவிகளைப் பெறுவதால் மட்டுமே முடியாது. திராவிடர்களுடன் இரண்டறக் கலந்துவிட வேண்டும்.
(விடுதலை 10-07-1947)

ஏக இந்தியாவிற்குப் பதில் திராவிடஸ்தான் தீர்வு என்றால் சாதி இந்துக்களின் ஏக திராவிடஸ்தானுக்குப் பதில் ஆதிதிராவிடஸ்தான்தான் தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தீர்வாக இருக்க முடியும் அல்லவா? திராவிடஸ்தான் கேட்டால் அது கொள்கையாம்! ஆதிதிராவிடஸ்தான் கேட்டால் அது பிதற்றலாம்! இதில் என்ன நியாயம் இருக்கிறது என்பது நமக்குப் புரியவில்லை!

ஈ.வே.ராமசாமி நாயக்கர் மட்டும் அம்பேத்கரை கேவலப்படுத்தவில்லை.

மணியம்மையாரும் கூட கேவலப்படுத்தியிருக்கிறார்.

அய்யா வழியில் அம்பேத்கரா?

‘அய்யா வழியில் அம்பேத்கர்’ என்று தலைப்பிட்டு மணியம்மை எழுதுகிறார்:-

டாக்டர் அம்பேத்கர் வடநாட்டிலே பிறந்தவராக இருந்தும் தந்தை பெரியாரின் பெரும்பாலான கருத்துகளை ஏற்று, தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களின் நலனுக்காகப் பாடுபட்டார். வட நாட்டிலே நமது பணியைச் செய்து தந்தை பெரியார் கருத்துக்கு ஆதரவாக இருந்த காரணத்தினால் தந்தை பெரியார் அவரை அடையாளம் கண்டு அவரைத் தமிழகத்துக்கு அறிமுகப்படுத்தினார்… புத்தமதத்திற்கு சென்ற பிறகு அம்பேத்கர் பெருமை குறைந்து போய்விட்டது.

(விடுதலை 06-01-1976)

மணியம்மையார் என்ன சொல்கிறார் தெரியுமா?

maniammaiyarஅம்பேத்கருக்கு என்று தனிப்பட்ட கருத்து இல்லை. ஈ.வே.ராமசாமி நாயக்கருடைய கருத்தைத்தான் எதிரொலித்தார் என்று மறைமுகமாக கூறுகிறார். அம்பேத்கருடைய அறிவும், ஆராய்ச்சித் திறனும் ஈ.வே.ராமசாமி நாயக்கருக்கு இருந்ததா?

உலக அறிஞராக போற்றப்பட்ட அம்பேத்கரை ஈ.வே.ராமசாமி நாயக்கரின் கருத்துக்களைத்தான் வடநாட்டிலே பரப்பினார் என்று கூறுவது இவருடைய அறிவின்மையையே காட்டுகிறது.

அம்பேத்கரை ஈ.வே.ராமசாமி நாயக்கரா தமிழகத்துக்கு அறிமுகப்படுத்தினார்?

இல்லவே இல்லை.

1927-ல் நடந்த மஹாட் போராட்டத்தின் போதே இந்தியா அம்பேத்கரைக் கண்டுகொண்டது. 1930-ல் முதல் வட்ட மேசை மாநாட்டில் அம்பேத்கர் தலித்துக்களின் சார்பாகக் கலந்து கொண்டாரே, அப்போதே தமிழகம் அம்பேத்கரை நன்கு அறியும். 19-04-1931 ஆம் ஆண்டு பம்பாய் பரேல் பகுதியில் தலித் தலைவர்களின் கூட்டத்தை அம்பேத்கர் நடத்தினார். தமிழ்நாட்டைச் சேர்ந்த என்.சிவராஜ் அவர்கள்தான் தலைமை வகித்தார். அம்பேத்கர் பம்பாயில் கூட்டிய கூட்டத்திற்கு தமிழகத்தைச் சார்ந்த ஒருவர் தலைமை வகிக்கிறார் என்றால் அம்பேத்கர் தமிழகத்தை எவ்வளவு தெரிந்துவைத்திருப்பார் என்பதையும் அம்பேத்கருடைய கூட்டத்திற்கு தமிழகத்திலிருந்து ஒருவர் போகிறார் என்றால் தமிழகம் அம்பேத்கரை எவ்வளவு தெரிந்துவைத்திருக்கும் என்பதையும் அறியலாம். என்.சிவராஜ் மட்டும் போகவில்லை, அவர்கூட இன்னும் பலரும் சென்றனர். இந்த விஷயமெல்லாம் மணியம்மைக்கு தெரியாததல்ல. இந்த விஷயத்தில்கூட ஈ.வே.ராமசாமி நாயக்கருக்குத்தான் பாராட்டு கிடைக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள்.

அடிப்படையிலேயே ஈ.வே.ராமசாமி நாயக்கருக்கும் அம்பேத்கருக்கும் ஒரு வேறுபாடு இருந்தது. ஈ.வே.ராமசாமி நாயக்கர் அரசியல் போராட்டம் மூலம் விடுதலை பெற முடியாது என்றார். அம்பேத்கரோ அரசியல் போராட்டமே விடுதலை அளிக்கும் என்றார், அம்பேத்கர் சொன்ன அரசியலுக்குச் சென்று தாழ்த்தப்பட்டவர்களுக்காக போராட்டம் நடத்துவதுதான் இன்று வெற்றி பெற்று இருக்கிறது என்பதை வரலாறு காட்டுகிறது.

இதுபோல பல விஷயங்களில் ஈ.வே.ராமசாமி நாயக்கருக்கும், அம்பேத்கருக்கும் கருத்து வேறுபாடு இருந்திருக்கிறது.

ஒரே ஒரு உதாரணம்.

ஈ.வே.ராமசாமி நாயக்கர், ‘ஆரியர்கள் வெளிநாட்டவர்’ என்றார். அம்பேத்கரோ, ‘ஆரியர்கள் இந்நாட்டவர்களே’ என்றார். இதுபோல சொல்லிக் கொண்டே போகலாம்.

ஈ.வே.ராமசாமி நாயக்கர்தான் அம்பேத்கரை அறிமுகப்படுத்தினார் என்று சொல்வது சூரியனுக்கு வெளிச்சம் கொடுத்தது நாங்கள்தான் என்று கூறுவது போல் உள்ளது.

அடுத்து,

புத்தமதத்திற்குச் சென்ற பிறகு அம்பேத்கர் பெருமை குறைந்து போய்விட்டதா?

அம்பேத்கர் புத்தமதத்திற்கு மாறிய ஆண்டு 14-10-1956.

அவர் இறந்தது 06-12-1956.

இடைப்பட்ட காலம் 53 நாட்கள் தான்.

இந்த 53 நாட்களிலா அம்பேத்கருடைய பெருமை குறைந்துபோய்விட்டது? இன்றும் உலகத்திலேயே அம்பேத்கருக்குதான் அதிக மன்றங்கள் இருக்கின்றன என்பதை இவர்கள் மறுக்கமுடியுமா? அம்பேத்கர் பெருமை எப்படிக் குறைந்து போய்விட்டது என்பதை இவர்களால் ஆதாரத்தோடு விளக்கமுடியுமா?

மணியம்மை இவ்வாறு சொல்லக் காரணம் என்ன தெரியுமா?

ஈ.வே.ராமசாமி நாயக்கர் புத்த மதத்திலே மூட நம்பிக்கை இருக்கிறது. அதில் மாறமாட்டேன் என்று சொல்லிவிட்டாராம். அம்பேத்கர் புத்தமதத்திற்கு மாறிவிட்டாராம்.

அம்பேத்கர் தெரியாமல் புத்த மதத்திற்கு மாறிவிட்டார். அதனால் அவருடைய பெருமை குன்றிவிட்டது. ஈ.வே.ராமசாமி நாயக்கர் மாறவில்லை. அதனால் ஈ.வே.ராமசாமி நாயக்கருடைய பெருமை குறையவில்லை என்று சொல்கிறார்.

இதில் கூட ஈ.வே.ராமசாமி நாயக்கர் செய்ததுதான் சரி என்று சொல்லவருகிறார்கள். இவர்களுடைய ஈ.வே.ராமசாமி நாயக்கர் பக்தி அறிவின்மையால் ஏற்பட்டது என்பதை விளக்க இதைவிட ஆதாரம் வேறு வேண்டாம்.

இவர்களுடைய ஆதரவு, சாதி இந்துக்களுக்கு மட்டும்தான் என்பதைப் பார்த்தோம். அதுபோல அறிவுரை சொல்வதாக இருந்தாலும் கூட அது தாழ்த்தப்பட்டவர்களுக்குத்தான் சொல்வார்கள்.

வீரமணி கூறுகிறார்:-

தாழ்த்தப்பட்ட சமூகத் தோழர்களுக்கு –

அவர்கள் இன்று கூறியுள்ள இந்த நல்லெண்ணத்தை விரிவாக்க எனது அருமை தாழ்த்தப்பட்ட சமூதாய சகோதரத் தலைவர்கள் முயலவேண்டும் என்று மன்றாடி கேட்டுக்கொள்கிறேன்.
(விடுதலை 20-07-1997)

இந்த அறிவுரை சாதி இந்துக்களுக்கு இல்லை. மாறாக தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டும்தான். இது தான் இவர்களுடைய சாதிப்பற்று.

ஹோட்டல்களிலோ அல்லது கடைகளிலோ பிராமணாள் என்று இருந்தால் அதை அழிக்கவேண்டும் என்று போராட்டம் நடத்தினார்களே திராவிடர் கழகம்- அதே திராவிடர் கழகம் நாயுடு, கவுண்டர், முதலியார் என்று தமது கடைகளுக்கும் ஹோட்டால்களுக்கும் பெயர் வைத்துள்ளார்களே அதை எதிர்த்து அதை அழிக்கவேண்டும் என்று இதுவரை ஏன் ஒரு போராட்டம் கூட நடத்தவில்லை?

ஆதிதிராவிடன் – திராவிடன் என்ற பிரிவையே நாங்கள் ஒப்புக்கொள்ள முடியாது. எல்லோரும் திராவிடர்கள் என்பதே எங்களது திட்டமாகும். திராவிடர்களில் ஜாதி ஆணவம் படைத்த உயர் ஜாதிக்காரர்களுமில்லாமலில்லை. இனி அவர்களை எப்படி வழிக்குக்கொண்டு வருவது என்பதும் எனக்குத் தெரியும்.
(குடியரசு: 08-07-1947)

திராவிடர்களில் ஜாதி ஆணவம் படைத்த உயர் ஜாதிக்கார்களுமில்லாமலில்லை. இனி அவர்களை எப்படி வழிக்குக் கொண்டு வருவது என்பதும் எனக்குத் தெரியும் என்று சொன்னார்களே – அந்த ஜாதி ஆணவம் படைத்த உயர் ஜாதிக்காரர்களை எதிர்த்து என்னென்னப் போராட்டங்களை ஈ.வே.ராமசாமி நாயக்கர் நடத்தினார்? 1947-க்குப் பிறகுதானே முதுகொளத்தூர், கீழ்வெண்மணி போன்ற இடங்களில் தாழ்த்தப்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்?

1947லேயே ஆணவம் படைத்த உயர் ஜாதிக்காரர்களை எதிர்த்து போராட்டங்களை நடத்தியிருந்தால் முதுகொளத்தூர், கீழ்வெண்மணி போன்ற இடங்களில் தாழத்தப்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டது நடந்திருக்குமா? ஜாதி ஆணவம் படைத்த உயர் ஜாதிக்காரர்களை வழிக்குக் கொண்டு வர ஈ.வே.ராமசாமி நாயக்கர் என்ன செய்தார்? ஜாதி இந்துக்களின் ஒரு சாதிவெறிச் செயலையாவது வன்மையாகக் கண்டித்தாரா? இல்லை. இல்லவே இல்லை. ஆங்காங்கே தற்பெருமைக்காக செல்லமாய் சாதி இந்துக்களைக் கடிந்துள்ளார் என்பதே பொருத்தமாகும்.

ஈ.வே.ராவைப்பற்றி அம்பேத்கர்வாதிகள்:

இவர்களுடைய சாதி ஓழியவேண்டும் என்ற கொள்கை வெறும் கோஷம் மட்டுமே! இதை மனதில் வைத்துதான் அம்பேத்கர்வாதிகள் அன்றே சொல்லிவிட்டார்கள்.
அது என்ன தெரியுமா?

எல்லாத் துறைகளிலும் சாதி ஓழிய வேண்டும். ஒழித்துவிட்டேன், ஒழித்துவிடுவேன் என்று வாய்கிழியப் பேசிவந்த ஈ.வே.ரா… இதுவரை கூறிவந்தது ஏமாற்றுத்தனம், துரோகத்தனம், சமுதாய அரசியலில் வெறுக்கத்தக்க வேசித்தனம் என்றால் அதில் என்ன தவறு காணமுடியும்?

இன்றுவரை சாதியை ஒழித்து சமத்துவம் காணுவார் என்று ஏமாந்து ஈ.வே.ராவிற்கு கொடிதூக்கிகளாக, கூலிகளாக மாறி உழைத்த தாழ்த்தப்பட்டோர்கள் இப்போதாவது உணர்வார்களா? அல்லது சாதி இந்துக்களுக்காகப் போராடப் போகும் ஈ.வே.ராமசாமி நாயக்கருக்கு துணை செய்யப்போகிறார்களா?
(அம்பேத்கர் மாத இதழ் -நவம்பர்-டிசம்பர்-1963)

ஈ.வே.ராமசாமி நாயக்கரைப் பற்றிய இந்தக் கடுமையான விமர்சனம் அம்பேத்கர்வாதிகளால் எழுப்பப்பட்டதாகும். ஆதலால் தாழ்த்தப்பட்டவர்கள் இதை உணர்ந்து திராவிடர் கழகம் தாழ்த்தப்பட்டவர்களுக்காக அல்ல என்பதை அறிந்து அதில் இருந்து வெளிவரவேண்டும்.

சில குறிப்புகள்:

தாழ்த்தப்பட்டவர்களைப் பற்றி ஈ.வே.ராமசாமி நாயக்கர்

நம்மில் கீழ்த்தரமான மக்கள் (தலித்துகள்) நம்முடைய இழிநிலையினைப் பற்றியோ, அல்லது அவர்களது இழிநிலை பற்றியோ கவலை இல்லாமல் சோறு, சீலை, காசு ஆகிய மூன்றையே வாழ்க்கை இலட்சியமாகக் கொண்டவர்களாக உள்ளனர்.
(பெரியார் யாருக்குப் பெரியார், புதியகோடங்கி; ஜூலை – 2004)

ராமசாமியின் குறி

ராமசாமியின் குறி என்னவெனில், இடைநிலை ஜாதிகளான சூத்திரர்களுக்கு மேலே பிராமணர் ஆளுமை இருக்கலாகாது. ஆனால் சூத்திரர்கள் உயர்த்திக்கொண்டிருப்பதை அடையாளம் காட்ட தமக்குக் கீழே (தாம் சதுர் வர்ணத்தில் இருந்ததைப் போல்) ஒரு பணிவிடைக் குடி இருக்க வேண்டும் என்பதே. இதற்காக இந்துயிஸத்தை விட்டுவிட்டு தாம் வெளியேறி விட்டால் இதைச் சாதிக்க முடியாது என்றெண்ணி ஹிந்துயிஸத்திற்கு உள்ளிருந்த படியே ஹிந்துயிஸத்தை ஒழிக்கப் போவதாகக் கூறி, புரட்சியாளர் அம்பேத்கரை ஏமாற்றினார். அவரின் மக்களை ஏமாற்றினார். ஹிந்துயிஸத்திலேயே இருந்தால் அதில் ஒவ்வொருவருக்கும் இருக்கும் ஜாதி அடையாளங்கள் மாறாத் தன்மை உடையனவாகவே இருக்கும். ஜாதி வேண்டாம் எனச் சொன்னால் ஈ.வே.ராமசாமிக்கும் இது பொருந்தும். ஜாதிய சமூகம் கழிவறைக்குச் சமம் எனக் கூறிவிட்டு கழிவறைக்குள் எப்படி இருந்தார் ஈ.வே.ரா? எண்ணிப்பாருங்கள்!
(புதிய கோடங்கி – அக்டோபர் – 2003)

ஆதித் திராவிடம் என்ற சொல்லுக்கு சரித்திர ஆதாரம் இல்லை

திராவிடம், திராவிடர் என்பவை சரித்திரச் சான்றுகளைக் கொண்ட சொற்கள். ஆதித் திராவிடம் என்று சொல்லுக்கு சரித்திர ஆதாரம் இல்லை.
(விடுதலை 10-07-1947)

ஈ.வே.ராமசாமி நாயக்கரைப் பற்றி கோ.கேசவன்

சமீன்தார்களின் சாணிப்பால் கொடுத்தல், சவுக்கடி, அடித்தல் என்பனவற்றை கண்டுகொள்ளாமல் கனப் பொருத்தமற்ற முறையில் தீண்டாமை ஒழிப்புப் பிரச்சாரம் செய்தார். பிராமண கபே எழுத்துகளை அழிப்பதில் இருந்த நியாயமான முனைப்பு தலித்துகளுக்கு பிராமணரல்லாதார்களால் ஏற்பட்ட கொடுமைகளான பொது இடப் பயன் மறுப்பு, தனிக்குவளை என்பனவற்றை எதிர்த்துப் பேசவோ போராடவோ இல்லை.

(கோ. கேசவன், தலித் அரசியல். நன்றி; புதிய கோடங்கி, ஜூலை – 2004.)


தி.க. தலித் இயக்கமா?

கேள்வி: கல்பாஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ள தலித் என்சைக்ளோபீடியா எனும் ரூ.1000 விலை கொண்ட பதினொரு தொகுதிகள் பயனுள்ளவையாக இருக்கின்றனவா?

பதில்: இவ்வளவு செலவில் பதினொரு தொகுதியையும் பன்னாட்டு தலித் ஆய்வு மய்யம் வாங்கி வைத்திருந்ததைப் பார்த்தேன். தலித் இயக்கங்கள் பற்றிய ஒரு தொகுதியை மட்டும் படித்தேன். தமிழ்நாட்டில் உள்ள தலித் இயக்கம் பற்றி ஒரு சிறிய தகவல் கூட அதில் இல்லை. தமிழ்நாட்டில் உள்ள திராவிடர் இயக்கம் அதன் தலைவர் கி. வீரமணி பற்றிய குறிப்பு மட்டுமே உள்ளது. பிராமணரல்லாதார் இயக்கம் தலித் இயக்கமாகக் காட்டப்பட்டுள்ளது வேடிக்கைதான்.
(புதியகோடங்கி – அக்டோபர் 2003)



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

//தி.க.விற்கு தலைவர்களாக இருந்தவர்கள் பெரியார் ,மணியம்மையார், வீரமணி . இதில் பெரியார் மட்டுமே தத்துவத்தின் தலைவர். மற்றவர்கள் பெரியாரின் கொள்கையை பரப்பும் தி.க.என்ற அமைப்பிற்கு தலைவர் பொறுப்பு வகிப்பவர்கள். இதில் யார் வேண்டுமானாலும் தலைவராக வரலாம். மற்ற கட்சிகளில் உள்ளது போல் தலித் பிரிவு என்பதெல்லாம் கிடையாது. இங்கு எல்லாரும் ஜாதியைத் துறந்து விட்டுத்தான் தி.க.வில் இணைகிறோம். அதன் பிறகும் தலித்-தலித் அல்லாதார் என்று தி.க. என்ற அமைப்பில் பேதம் பார்ப்பது கிடையாது.//

ஓ தத்துவம் சித்தாந்தம் எல்லாம் ஈவெரா…மற்றவர்கள் அதில் தலையிட மாட்டார்கள். அதாவது திராவிட கழகத்தின் தலை ஈவெரா வீரமணியும் மணியம்மையும் இன்னபிற உறுப்புகள். இந்த வர்ணாஸிரமத்தை ஏற்று திராவிடர் கழகத்துக்குள் வரும் போது பழைய சாதியை தலை முழுகிவிடவேண்டும். அடப்பாவிகளா ஏமாற்றுவித்தையிலேயே பெரிய ஏமாற்றுவித்தையாக அல்லவா இருக்கிறது இது….ஒருவன் திராவிடர் கழகத்துக்குள் வரும் போது அவன் தன் சாதியை அழித்துவிட்டால் அவனது வரலாற்றுக்கொடுமை போய்விடுமா? காலம் காலமாக நிலச்சுவாந்தார் குடும்பங்களிலிருந்து வந்த வீரமணிக்கும் வீரமணியின் பாட்டன் முப்பாட்டன் அப்பன் குடும்பங்களால் கூலியில்லா கொத்தடிமைகளாக நடத்தப்பட்டு கூலி கேட்டதற்கு கீழ் வெண்மணியில் கொளுத்தப்பட்ட தலித் குடும்பங்களிலிருந்து ஒருவன் திராவிட கழகத்துக்குள் வந்தால் அந்த திராவிட கழகத்தவருக்கும் வீரமணிக்கும் தலைமைக்கான போட்டியில் அல்லது தகுதிப்பார்ப்பதில் ஒரே அளவுகோலைத்தான் வைப்பீர்களா? அட இடஒதுக்கீடு எல்லாம் ஊருக்குத்தான் உபதேசமா? நான் நினைத்ததை விட கேவலமான கேலிக்கூத்தடிப்பு போல திராவிட கழக ஆபாசங்கள்…



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

//இந்தக் கதையைப் பதிவு செய்துள்ளவர் யார் தெரியுமா? காந்தி ஓர் அகிம்சாவாதி, வீரசாவர்க்கர் என்ற நூல்களை எழுதிய தனஞ்செய்கீர் என்ற பார்ப்பனர்தான்.//

இதோ தெள்ளத்தெளிவாக மற்றொரு பொய். தனஞ்சய் கீர் பார்ப்பனரல்லர். அவரும் தலித்தான். (http://www.sepiamutiny.com/sepia/archives/003868.html) இது கூடத்தெரியாமல் பேசுவோரை என்ன செய்ய? கீழே உள்ளது பகுஜன் சமாஜ் கட்சியின் இணையதளத்திலிருந்து: “Of his brothers and sisters, only Ambedkar succeeded in passing his examinations and graduating to a bigger school. His native village name was “Ambavade” in Ratnagiri District so he changed his name from “Sakpal” to “Ambedkar” with the recommendation and faith of Mahadev Ambedkar, a Deshasta Brahmin teacher who believed in him.” இதுவும் பிராம்மண சூழ்ச்சியாகத்தான் இருக்கவேண்டும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Paanjasanyan on September 11, 2009 at 10:41 am

தமிழ் ஓவியா போன்ற மூளை சலவை செய்யப்பட்டவர்களை யாராலும் திருத்த முடியாது. பிராமணர்கள்தான் ஜாதி முறையயை வளர்த்தார்கள் என்றால், அவர்கள் ஏன் பிராமணர்களுக்கு அவ்வளவு நிபந்தனைகள் விதித்தனர். பிச்சை எடுத்து உண்ண வேண்டும், தனக்கு என்று சொத்து சேர்க்க கூடாது, வேதம் கூறுவதும், கற்பிப்பது மட்டுமே தொழிலாக இருக்க வேண்டும்.

பிராமணர்களுக்கு தண்டனை தரும் உரிமையும் இல்லை. பாரதத்தில் வரும் ஒரு வாசகம் “நன்கு கற்று அறிந்த பிராமண்னை விட சிறந்த அரசன் மேலானவன்”. பிராமணர்கள்தான் ஜாதியை உண்டாக்கினார்கள், பிராமணர்கள் மேலானவர்கள் என்று இந்து மதம் கூறுகின்றது என்பது, ஈ.வெ.ராவும் அம்பேத்கரும் ஒன்று என்பதை விட பெரிய பிதற்றல்

ஆங்கிலேயன் வரும் வரை, புரோகிதம் செய்து அதில் வருவதை கொண்டு வாழ்ந்து வந்தனர், அன்று இருந்த அரசர்களுக் அவர்களுக்கு உதவி வந்தனர். ஆங்கிலேயன் வந்த பின் அவர்களுக்கு பிழைக்க வழி இன்றி கோட்டையில் கால் வைத்தனர், ஹோட்டல் வைத்தனர். இன்று பிராமண்த்துவம் ஏதுமின்றி அனைவரையும் போலத்தான் உள்ளனர்.

அம்பேத்கர், ஜாதி முறையை ஒழிக்க போராடினார். ஈ.வெ.ரா, ஜாதி முறையயை வலுவாக்கினார். உயர்சாதியினர், தாழ்த்தப்பட்டவர்கள் என்ற பிரிவை, பிராம்ணர்கள், பிராமணரல்லாத்வர், தாழ்த்தப்பட்டவர்கள் என்று பிரித்த புண்ணியம் அவருக்கே. அதோடு, ஒரு ஜாதியினர் மற்ற ஜாதியினர் மீது வன்முறை பிரோயகமும் செய்யலாம் என்றும் காட்டியது அவர்தான். பிராமண்ர்கள் மீது வன்முறையை தூண்டினார், அது தாழ்த்தப்பட்டவர்கள் மீதும் பாய்ந்தது.

தமிழ் ஓவியா,பின் வரும் கேள்விகளுக்கு நேர்மையாக பதில் சொல்வாரா (முதலில் பதில் சொல்வார என்பது சந்தேகம், நேர்மை என்பது ஈ.வெ.ரா விற்கே கிடையாது, அவரின் தொண்டர்களிடம் ,,,,)

1. பிராமண்ர்களின் பூணூலை அறுக்க புறப்பட்ட வீரப்படை ஏன் ஆசாரிகள், செட்டியார்களிடம் போக வில்லை

2. சிலையை வணங்குவது முட்டாள்த்தனம் என்று பேசும் கூட்டம், ராமசாமியார்கு சிலை வைக்கும் முட்டாள்த்தனத்தை ஏன் செய்ய வேண்டும்

3. விக்கிரகங்களுக்கு பாலபிஷேகம் செய்வது வீண் செலவு என்றால், ராமசாமியாரின் கல்லுக்கு மாலை அணிவிப்பது??

4. ஸ்ரீரங்கத்தில் ஒரு கல்லை உடைத்தால், அதற்கு சம்பந்தமே இல்லாமல், சென்னை அயோந்தியா மண்டபத்தில் உள்ள அப்பாவிகளை உதைப்பது என்ன பகுத்தறிவு

5. சிதம்பரத்தில் கோவிலில் நுழைந்து ரவுடித்தனம் செய்யும் கும்பலுக்கு, கண்டதேவி கோவிலில் சென்று போராட மனம் மறுப்பதேன்.

6. கிறிஸ்துவ, இஸ்லாமிய மதங்களில் உள்ள மூடத்தனங்களை எதிர்த்து இது வரை ஒரு போராட்டமும் நடந்தமாதிரி தெரியவில்லையே?

7. எக்மோரில் உள்ள பெரியார் திடலில், கிறிஸ்துவ ஜெபகூட்டங்களுக்கு மட்டும் அனுமதி தருவதேன், எப்படியாவது பணம் சம்பாதிக்கும் நோக்கமன்றி வேறென்ன

8. கோவில்களில் தமிழில் வழிபாடு நடத்த போரடும் நீங்கள் ஏன் மசூதியில் அதை கடைபிடிக்க போராடவில்லை. அரபு மொழி தோன்றது இந்தியாவில் என்ற எண்ணமா?

இதற்கு எல்லாம் பதில் தந்தால் நீங்கள் விவாதிக்க தகுதியானவர் என்று எண்ணலாம், இல்லாவிடில் விதண்டாவதம் புரியும் கும்பலை சேர்ந்த ஒரு பிறவி என்று உங்கள் உளறலை மறந்து உருப்படியான் வேலை பார்க்கலாம்

எப்படியும் பதிலுக்கு கேள்வி கேட்பீர்கள், இதற்கு பதிலை கூறிவிட்டு பிறகு ஆரம்பியுங்கள் நேர்மையாக



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

ம.வெங்கடேசன் on September 12, 2009 at 8:15 pm

தமிழ் ஓவியா அவர்களுக்கு
எனக்காக நீங்கள் ஒரு கேள்வியை வைத்துள்ளீர்கள். சரியான கேள்விதான்.
அருண்சோரியின் புத்தகம் 1997ஆம் ஆண்டு வெளிவந்தது. அப்போது நான் பதினோறாம் வகுப்பு படித்து வந்தேன். (நான் பிறந்தது 1980) இந்த புத்தகம் அப்போது வெளிவந்ததே எனக்குத் தெரியாது. எனக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டில் பல வெகுஜன மக்களுக்கும், சேரிவாழ் மக்களுக்கும் இன்றும் கூட இந்தப் புத்தகத்தைப் பற்றி தெரியாது. ஏனென்றால் அந்த புத்தகம் யாரிடமும் ஒரு சிறு சலனத்தைக்கூட ஏற்படுத்தவில்லை.
சரி தெரிந்தபின் எழுதியிருக்கலாமே என்று நீங்கள் கேட்பீர்கள்.
எழுத நான் தயார்; யார் வெளியிடுவார்கள்?
எழுதி சொந்தமாக வெளியிடும் அளவுக்கு(வீரமணி அளவுக்கு) நான் பணம் உள்ளவனும் அல்ல.

அம்பேத்கரைப் பற்றி எழுதிவிட்டதால் அம்பேத்கர்வாதியாகவிட முடியாது.

நீங்கள் விமர்சிக்கும் ஆர்எஸ்எஸ்கூட 24-10-1997 , தங்களுடைய அதிகாரப்பூர்வமான இதழான விஜயபாரதம் இதழில் ‘அருண்சோரியின் அம்பேத்கரும் தேசபக்தர்களின் அம்பேத்கரும்’ என்ற தலைப்பில் ஐந்து பக்க கட்டுரையை எழுதி வெளியிட்டு அருண்சோரியின் பித்தலாட்டத்தை வெளியிட்டது.

உங்கள் வாதப்படி அம்பேத்கரை புகழ்ந்து எழுதியதால் ஆர்எஸ்எஸ்கூட அம்பேத்கரிடம் ஆயிரம் மடங்கு அக்கறை உள்ளதாக நீங்கள் கருத வேண்டும்.

எனக்கு ஒரு கேள்வி என்னவென்றால்
நீங்கள் அந்த புத்தகத்துக்கு மறுப்புரை எழுதியிருக்கிறீர்களா? எழுதவில்லை என்றால் ஏன் எழுதவில்லை?

மேலே உள்ள கட்டுரைக்கு பதிலே சொல்லவில்லையே , எப்பொழுது சொல்வீர்கள்?

பெரியார் பிற்படுத்தப்பட்டவர்களுக்காக போராடினார். தாழ்த்தப்பட்டவர்களுக்காக அல்ல என்பதை என்னால் ஆதாரப்பூர்வமாக, உறுதியாகச் சொல்ல முடியும்.
தாழ்த்தப்பட்டவர்களுக்காக போராடினார் என்று உங்களால் ஆதாரப்பூர்வமாக சொல்ல முடியுமா?

மாநாடுகளில் இப்படிப் பேசினார், குடியரசு, விடுதலையில் இப்படி எழுதினார் என்று வாய்ஜாலங்களை எல்லாம் சொல்லாதீர்கள். ஏனென்றால் இதை பார்த்து ஏமாற நான் ஒன்றும் கருப்புச்சட்டைக்காரன் அல்ல;
இதுபோல் மாநாடுகளில்பேசியவர்கள், பத்திரிகைகளில் எழுதியவர்கள் நிறைய பேர் உண்டு.
களத்திலே நின்று போராடினாரா? தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைக்காக என்ன போராட்டங்களை நடத்தினார்? எந்தெந்த உரிமைகளைப் பெற்றுத் தந்தார்?
தமிழ் ஓவியாவின் பதிலை எதிர்பார்க்கிறேன்.\

தமிழ் ஓவியா on September 18, 2009 at 12:21 pm

பெரியார் தாழ்த்தப்பட்டவர்களுக்கு பாடுபட்டாரா? இது குறித்து பேராசிரியர் அ.மார்க்ஸ் தரும் தகவல் இதோ:-

பெரியார் தலித்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரியா? – அ.மார்க்ஸ்

பெரியார் இறந்து கால் நூற்றாண்டுகளுக்கு மேலாகியும் அவர் மீதான தாக்குதல்களும் அவதூறுகளும் தொடர்கின்றன. கன்னடர், தமிழ்த் தேசத்துரோகி, மார்வார்களிடமிருந்து காசு வாங்கியவர் என்றெல்லாம் சில ஆண்டுகளுக்கு முன் பெரியாரை அவதூறு செய்த பெங்களுர் குணா இன்று முகவரி இன்றி முடங்கிக் கிடக்கிறார். இப்போது புதுச்சேரி ரவிக்குமார் முஸ்லிம்களுக்கும் தலித்களுக்கும் எதிராகப் பெரியாரை நிறுத்துகிறார்.

இதற்கு ஆதாரமாக அவர் முன் வைப்பது ஆனைமுத்து அவர்கள் தொகுத்தள்ள பெரியார் சிந்தனைகளிலிருந்து இரு கட்டுரைகள்: ‘சதியை முறியடிப்போம்’ (பக்கம்- 1950-1953)’மைனாரிட்டி சமுதாயம்’ (பக்கம்- 46-48) – என்பன அவ்விரு கட்டுரைகள்.இப்படியான அவதூறு பேசுவோர் வழக்கமாகச் செய்யும் இரண்டு தந்திரங்கள் இங்கும் செயல்படுகின்றன.

1- முழுக்கட்டுரையில் இருந்து தனக்கு வேண்டிய வரிகளை மட்டும் பீறாய்ந்து போடுவது.
2- எந்தச் சூழலில் இப்படி பேச நேர்ந்தது என்கிற பின்னணியை முற்றாக மறைப்பது.

சுமார் 50-ஆண்டு காலம் தமிழக அரசியலில் ஒரு மாபெரும் சக்தியாக ஓய்வின்றி இயங்கியவர் பெரியார். தேர்வு செய்யப்பட்ட அவர் பேச்சுக்களே இரண்டாயிரம் பக்கத்துக்கு மேல் வருகின்றன. ஒரு நீண்ட காலகட்டத்தில் பல்வேறு அரசியல் சூழல்களில் செயல்பட்ட ஒருவரின் ஒரு குறிப்பிட்ட கால உரையை மட்டும் வைத்து அவரை மதிப்பிட இயலாது. மேற்சொன்ன இரு கட்டுரைகளும் 1962-63 என்கின்ற ஒரே காலகட்டத்தில் எழுதப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அவதூறு பேசுகிறவர்கள் எந்தக் கூற்றை மேற்கோள் காட்டுகின்றனர்? திராவிட சமுதாய எதிரிகள் எனப் பார்ப்பனரோடு தாழ்த்தப்பட்டவர்கள்- முஸ்லிம்கள்- கிறிஸ்தவர்கள் ஆகியோரையும் பெரியார் சுட்டிக்காட்டுகிறார். அப்புறம் மைனாரிட்டிகளின் ஆதிக்கம் ஒரு நாட்டுக்கு நல்லதல்ல என்றும் அவர்களுக்கு சலுகைகள் அளிப்பது நாட்டுக்குக் கேடு என்றும் அவர் சொல்லுகிறார்.

பெரியார் இப்படிச் சொல்லியுள்ளது உண்மைதான். எந்தச் சூழலில் இப்படிச் சொன்னார் என்பதைக் காணும் முன் தலித்கள் மற்றும் சிறுபான்மையோர் குறித்து அவர் என்னவெல்லாம் சொல்லியுள்ளார்- செய்துள்ளார் என சிந்திப்பது அவசியம்.

தீண்டாமை ஒழிப்பு- தாழ்த்தப்பட்டோர் விடுதலை என்பன தொடர்ந்து அவர் கரிசனமாக இருந்தது. முதல் சுயமரியாதை மாநாட்டில் (1929) போடப்பட்ட தீர்மானங்கள் சில:

சாலைகள்-குளங்கள்- கோயில்கள் முதலான பொது இடங்களில் தாழ்த்தப்பட்டவர்களுக்குச் சம உரிமை அளிக்க வேண்டும்.அதற்கான சட்டங்கள் இயற்ற வேண்டும்.

யாரும் தம் பெயருடன் சாதியை இணைத்துக் கொள்ளக் கூடாது என்பதற்குச் சட்டம் வேணடும்.

தலித்குழந்தைகளுக்கு இலவசகல்வி- உணவு- உடை- புத்தகங்கள்- வழங்க வேண்டும்.

புறம்போக்கு நிலங்களைத் தலித் மக்களுக்குப் பிரித்தளிக்க வேண்டும்.

காலியாகும் அரசுப் பணியிடங்களை தலித்களைக் கொண்டு நிரப்ப வேண்டும்

வெறும் தீர்மானங்களோடு நில்லாமல் தீண்டாமைக்கெதிரான போராட்டங்களைத் தமிழகத்திலும் புதுவையிலும் முன்னெடுத்து சிறை செல்லவும் பெரியாரும் அவரது தொண்டர்களும் தயங்கவில்லை. தமிழகம் முழுவதும் ஆதிதிராவிடர் மாநாடுகள் நடத்தி தலித் பிரச்சினைகளை நோக்கி மக்களின் கவனத்தை ஈர்க்கவும் பெரியார் தயங்கவில்லை.

பறையருக்கு மேலாக இருந்தால் போதும் என நினைக்காதீர்கள். தீண்டாமையைக் கைவிடாமல் உங்கள் ஜாதி இழிவு ஒழியும் என்று நினைக்காதீர்கள் எனப் பிற்படுத்தப்பட்ட மக்களைப் பார்த்து கடிந்து கொண்டார். உயர்சாதி எனச் சொல்லிக் கொண்டு எவன் குறுக்கே வந்தாலும் பாம்பை அடிப்பது போல அடியுங்கள் என தாழ்த்தப்பட்டவர்களை ஊக்குவித்தார்.

வாழ்வின் இறுதியாக அவர் நடத்திய தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாட்டிலும் கூட(1973) அரசியல் சட்டத்தில் வெறுமனே தீண்டாமையை ஒழித்தால் போதாது. சாதியையே ஒழிக்க வேண்டும் எனத் தீர்மானம் இயற்றினார்.

தொடாந்து தலித் அரசியலுக்கும் ஆதரவாகவே நின்றார். அம்பேத்கர் முன் வைத்த தாழ்த்தப்பட்டோருக்கான தனித் தொகுதிக் கோரிக்கையை ராஜா போன்ற தலித் தலைவர்களே
கைவிட்ட போதும் பெரியார் தொடர்ந்து ஆதரித்து வந்தார். அம்பேத்கருக்கு எதிராக ஜெகஜீவன்ராமைக் காங்கிரஸ் முன் நிறுத்தியபோது அதை எதிர்த்தார்.

பாகிஸ்தான் பிரிவினைக் கோரிக்கைக்கு ஆதரவாக இருந்தார். முஸ்லிம்கள் திராவிடர் கழகத்தில் சேர வேண்டும் என ஜின்னா சொல்லும் அளவிற்கு பெரியார், முஸ்லிம்களின்
அரசியலுக்குத் துணை நின்றார். சூத்திரர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் இழிவு நீங்க ஒரே மருந்து தான் உண்டு. அதுதான் இஸ்லாம் என்றார்.

எர்ணாகுளத்தில் மாநாடு ஒன்று நடத்திப் பலரை முஸ்லிமாக மாற்றினார். முஸ்லிம்கள் அன்னியர் அல்லர் திராவிடர் என்றார். இந்த நாட்டை இந்துஸ்தான் ஆக்குவதைவிட திராவிட நாட்டுக் கொள்கையை உடைய பாகிஸ்தான் என ஆக்க வேண்டும் என்ற அளவிற்குப் பேசினார்.

தலித் முஸ்லிம் ஆதரவை அவர் தொடர்ந்து மேற்கொண்டு வந்த போதும் அதற்காக அவர் உரிமைக் கோரியதில்லை. என் மக்கள் விடுதலைக்காக நான் செய்வது உங்களுக்கும் நன்மையைப் பயக்கிறது அவ்வளவு தான் என்றார். இவ்வளவும் சொன்ன அவர் 1962-63 கால கட்டத்தில் மைனாரிட்டிகளையும் தாழ்த்தப்பட்டோரையும் எதிரிகள் எனச் சொன்னதின் பின்னணி என்ன?

சென்ற நூற்றாண்டு தொடக்கம் முதல் ரெட்டமலை சீனிவாசன்- சிவராஜ் முதலிய தலைவர்கள் நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம் ஆகியவற்றில் இருந்து செயல்பட்டனர்.
பார்ப்பன எதிர்ப்பு அரசியலுக்கு ஆதரவாக தலித் மக்கள் இருந்தனர். 1940-களின் இறுதியில் தி.மு.க. பிரிந்தது. இளம்பரிதி- சக்திதாசன் முதலானோர் தி.மு.க.வில் இருந்து செயல்பட்டனர். சிவராஜ் போன்றவர்கள் குடிஅரசு கட்சியில் இணைந்தனர். பின்னர் அவர் அக்கட்சியின் அகில இந்தியத் தலைவரானார்.

பிரிவினைக்குப் பிந்திய இந்தியாவில் முஸ்லிம்கள் தமது தேசபக்தியை நிறுவும் நோக்கில்
அகில இந்திய ஒற்றுமை பற்றி அதிகம் பேசினார்.பார்ப்பன எதிர்ப்பு அரசியலில் சற்றே பின் வாங்கினர். முஸ்லிம் லீக் கட்சி என்பது முஸ்லிம் வணிக நலனை முதன்மைப்படுத்தியதாக அமைந்தது. அம்பேத்கரே கூட இந்திய தேசிய ஒற்றுமையை வலியுறுத்திப் பேசத்தொடங்கியது பெரியாருக்கு வருத்தத்தை அளித்தது.

பார்ப்பனர் நலன்களை முன்னிறுத்தி 1950-களின் இறுதியில் சுதந்திராக் கட்சியைத் தொடங்கிய ராஜாஜி கடுமையாகக் காங்கிரஸை எதிர்த்தார். தமிழ்நாட்டில் பார்ப்பனரே இடம் பெறாத ஒரு அமைச்சரவையைத் தொடக்கத்தில் அமைத்த காமராசரை கடுமையாகத் தாக்கினார். தி.மு.க. வையும் பின்னர் முஸ்லிம் லீக்கையும் கூடத் தன்னுடன் அணி சேர்த்தார்.

பேராசிரியர் ரத்தினசாமி பிள்ளை- டாக்டர்.மத்தியாஸ் போன்ற கிறிஸ்துவ மைனாரிட்டிகளும் சுதந்திராவில் இணைந்தனர். நான் இராமன், இவர்கள் எனது குரங்குப் படைகள் எனப் பெருமையோடு மேடையில் கூறினார் இராஜாஜி. தி.மு.க. வின் வழியாகத் தாழ்த்தப்பட்டவர்களின் ஆதரவும் இந்தக் கூட்டணிக்கு அமைந்தது. சிவராஜ் போன்றவர்களின் காங்கிரஸ் எதிர்ப்பு அரசியலும் தி.மு.க. விற்கு ஆதரவாகவே முடிந்தது.

இராஜாஜி தலைமையிலான இக்கூட்டை பெரியார் கவலையோடு நோக்கினார். அவர் கவலை உண்மையானது. 1962-தேர்தலில் தி.மு.க. 50- இடங்களைப் பிடித்தது. தமிழக வரலாற்றை மாற்றி அமைத்த திருச்செங்கோடு பாராளுமன்ற மற்றும் திருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் (1963) தி.மு.க. வென்றது.

வெற்றிவிழாக் கூட்டங்களில் இராஜாஜிக்கும் காயிதேமில்லத் இஸ்மாயில் அவர்களுக்கும் அண்ணா நன்றி சொன்னார். இந்த சூழலில் தான் தாழ்த்தப்பட்டோரும் மைனாரிட்டியினரும் பார்ப்பனருக்கு ஆதரவாக உள்ளனரே எனப் புலம்பினார் பெரியார்.

1967-தேர்தலில் மாநிலக் கட்சிகள் மேலுக்கு வந்ததை நாம் வரவேற்ற போதிலும் பின்னாளில் இத்தகையக் கட்சிகளே மாநிலங்களில் பா.ஜ.க. காலூன்றுவதற்குக் காரணமாயின என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது.

தாங்களும் மைனாரிட்டிகள்தான், எங்களுக்கும் சலுகைகள் வேண்டும் எனப் பார்ப்பனர்களும் உரிமை கோரிய நிலையில் தான் பெரியார் மைனாரிட்டி ஆதிக்கத்தை எதிர்த்துப் பேச நேர்ந்தது. பெரியாரின் முழுக் கட்டுரையையும் வாசித்தால் இது விளங்கும்.

1962-63 காலகட்டத்தில் பெரியார் இப்படிப் பேசிய போதும் அடுத்த பத்தாண்டுகளில் தனது இறுதி மூச்சுவரை இத்தகைய நிலையை அவர் தொடர்ந்ததில்லை என்பது சிந்திக்கத்தக்கது. தலித்கள் மற்றும் மைனாரிட்டிகளுக்கு ஆதரவாகவே அவரது செயல்பாடுகள் அமைந்தன.

1925-க்கு முன் காங்கிரசில் இருந்தார், 1954- 1967- காலகட்டத்தில் காங்கிரசை ஆதரித்தார் என்பதற்காகப் பெரியாரைக் காங்கிரஸ்காரர் என்று சொல்லுவது எத்தனை அபத்தமோ அத்தனை அபத்தம் 1962-63 காலகட்டத்தில் அவர் பேசிய பேச்சை வைத்து அவரை தாழ்த்தப்பட்டவர்களுக்கும் இஸ்லாமியருக்கும் எதிராக நிறுத்துவது. இந்துத்துவ அரசியலுக்கு துணைபோகவே இது உதவும்.

(நன்றி: கருப்புப்பிரதிகள்)

வாசகர்கள் ஊன்றிப்படித்து உண்மையை உணர வேண்டுகிறேன்.
நன்றி

—————-விவாதிப்போம்

தமிழ் ஓவியா on September 18, 2009 at 12:50 pm

பெரியார் பற்றி ஆதவன்தீட்சண்யா அவர்கள் தரும் தகவல்களை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். படியுங்கள்! உண்மையை உணருங்கள்!!

ஒடுக்குகிறவர்களிடம் தாக்குதல் நடத்திய பெரியார்

நீங்கள் தொடர்ந்து பெரியாரை முன்னிறுத்தி எழுதுகிறீர்கள். சாதி ஒழிப்பில் அவரின் பங்களிப்பு மிக முக்கியம் என்பது தான் காரணமா அல்லது அவர் கொண்டாடப்பட வேண்டிய மிக முக்கியமான ஆளுமை என்று நீங்கள் கருதுகிறீர்களா?

இடஒதுக்கீடு, நாத்திகம் போன்றவற்றுக்காக பெரியாரைக் கொண்டாடுபவர்களும் இருக்கிறார்கள், அவரை விமர்சிப்பவர்களும் இருக்கிறார்கள். பெரியார் கடவுளை மறுத்ததால் மட்டும் தான் ஆதிக்க சாதிக்காரர்கள் அவரை விமர்சிக்கிறார்களா என்றால் இல்லை. அவர்களிலும் கடவுள் மறுப்பாளர்கள் இருக்கிறார்கள். ‘இந்திய சமூகம் சமத்துவமின்மையின் மீது கட்டப்பட்டிருக்கிறது’ என்று அம்பேத்கர் குறிப்பிட்டார். அதே அலைவரிசையில் தான் பெரியாரும் செயல்பட்டார். அதுதான் ஆதிக்க சாதியினரின் விமர்சனத்திற்குக் காரணம்.ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபட்ட தலைவர்கள், இயக்கங்கள் எல்லாமே ஒடுக்கப்பட்டவர்களிடம் மட்டும்தான் பேசின. ஆனால் ஒடுக்குகிறவர்களிடமே தாக்குதல் நடத்தியவர் பெரியார் ஒருவர்தான். கஷ்டப்படுபவனை பார்த்து நீ கஷ்டப்படுகிறாய் என்பதும், அதை அவன் ஏற்றுக்கொள்வதும் மிக இயல்பானது. ஆனால் ஒடுக்குகிறவனைப் பார்த்து, ‘நீ அவனை ஒடுக்குகிறாய்’ என்று சொல்லும் தைரியம் பெரியாருக்கு மட்டும்தான் இருந்தது.ஒடுக்குமுறைகளின் அடிப்படைகளைக் கண்டறிந்து அதை நீக்குவது தான் மார்க்சிய தத்துவம். இந்தியாவில் ஒடுக்குமுறையின் அடிப்படையாக சாதியம் இருக்கிறது. அந்த அடிப்படைகளின் மீது கைவைக்கிற நிகழ்வாக பெரியாரின் பேச்சும் செயல்பாடும் இருந்தது. சாதி ஒழிப்பு என்பதிலும், வருணாசிரம எதிர்ப்பு என்பதிலும் பெரியார் அம்பேத்கரோடு ஒன்றுபட்டார். இந்த விஷயங்கள் தான் அவர்களுக்குள் தொடர்பு ஏற்படக் காரணமாக இருந்தது.பெரியாரை ஆதரிப்பதற்கும், அவரை முன்னோடியாக நிறுத்துவதற்கும் பல்வேறு காரணங்களை சொல்லலாம். அதில் சிலவற்றையாவது வாசிப்பின் வழியாகத் தெரிந்து கொண்டதால் அவரை முழுவதுமாக ஆதரித்துப் பேசுகிறேன். அதனால் அவரை நான் என் முன்னோடியாகவும் கருதுகிறேன். பெரியார் மீது சில இடங்களில் இடதுசாரிகளுக்கு விமர்சனம் உண்டு. அதற்காக அவர்கள் பெரியாரை எந்த இடத்திலும் நிராகரிக்கவேயில்லை.வகுப்புவாதப் பிரச்சனைகள் தலைதூக்கும்போது நாம் போராட்டங்களை முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு கட்டம் வரைக்கும் பெரியார் நடத்தியிருக்கிறார். அதன் தொடர்ச்சியைத்தான் நாம் மேற்கொண்டாக வேண்டும். கேரளாவில் நாராயணகுருவை உள்வாங்கிக் கொண்டு இடதுசாரிகள் செயல்படுவதுபோல் தமிழ்நாட்டிலும் பெரியாரை உள்வாங்கிக் கொண்டு செயல்படலாம்.

பெரியார் பேசியது வறட்டுத்தனமான நாத்திகம் என்றும், பெரியார் ஒரு பிள்ளையார் சிலையை உடைக்கப்போய் தெருவுக்குத் தெரு பிள்ளையார் கோவில்கள் வந்துவிட்டதாகவும் சிலர் கூறுகிறார்களே, உண்மையா?

பிள்ளையார் சிலையை பெரியார் உடைத்ததை அந்தக் காலத்தோடு ஒப்பிட்டுப் பார்த்து, சிலையை பெரியார் உடைத்ததற்கான சமூகக் காரணத்தைத்தான் விளக்கவேண்டுமே தவிர பெரியாரை அல்ல. மூடநம்பிக்கை கரைபுரண்டோடி, மொத்த சமூகத்தையும் அடித்துப் புரட்டுகிறபோது, அதைத் தடுத்த நிறுத்த, கைக்கு கிடைத்ததையெல்லாம் பயன்படுத்துகிற பதற்றம் பெரியாருக்கிருந்தது.மக்களிடம் மூடநம்பிக்கை எந்த மட்டத்தில் இருக்கிறதோ அந்த மட்டத்தில் போய் பெரியார் அதை மறுத்துக் காட்டினார். ‘கடவுளுக்கு எல்லாவற்றையும் காப்பாற்றும் சக்தி இருக்கிறதென்றால், நான் கடவுளை உடைக்கிறேன், முடிந்தால் அவர் அவரையாவது காப்பாற்றிக்கொள்ளட்டும்’ என்று சொல்லும் விதமாகத் தான் பிள்ளையார் சிலையை உடைத்தார். ‘என்னை கடவுள் படைத்தார், அவர் தான் என் தலையெழுத்தை எழுதி என்னைக் காப்பாற்றுகிறார்’ என்ற மக்களின் நம்பிக்கையை உடைப்பதற்காகத் தான் அவர் அதைச் செய்தார்.எந்த ஒரு தத்துவமும் மக்களைக் காப்பாற்ற வேண்டும். ஆனால் கடவுள் என்கிற தத்துவம் மட்டும் மக்களை பயமுறுத்தி மூடனாக மாற்றுகிறது. எனவே அதிலிருந்து மக்களை மீட்பதற்கு தன்னாலான வழிகளை அவர் செய்தார். அதை வறட்டு நாத்திகவாதம் என்று ஒதுக்கிவிட முடியாது. தெருவுக்குத்தெரு பிள்ளையார் வைத்தவர்கள் யார்? ஏற்கனவே பிள்ளையாரை வைத்து பிழைப்பு நடத்தியவர்கள்தானே? பெரியார் செயல்பாட்டில் கடுப்பாகிப் போய் எந்த நாத்திகனும் ஆத்திகனாகிவிடவில்லையே? பெரியாரே சொல்வதுபோல், வேறெவரும் இந்தக் காரியங்களை செய்வதற்கு முன்வராததால்தானே அவர் செய்ய வேண்டியதாயிருந்தது?பெரியார் பேசியது வறட்டுத்தனமான நாத்திகம் என்றே வைத்துக்கொள்வோம். அதை நிராகரித்துவிட்டு விஞ்ஞானப்பூர்வமான நாத்திகத்தை மக்களிடம் பரப்புவதை யார் தடுத்தார்கள்? ஒவ்வொரு அரசாங்க அலுவலகமும் இந்துமதத்தினருக்கு மட்டுமேயானது மாதிரி பூசை, புனஸ்காரங்கள் அங்கே நடக்கிறது. இந்துக்கடவுள்களின் விக்கிரகங்களும் சிலைகளும் இல்லாத அலுவலகமே கிடையாது. ஆயுத பூஜை சரஸ்வதி பூஜை நடக்கிறது. அங்கிருக்கிற தொழிற்சங்கங்கள் உணர்வுமட்டம் தாழ்ந்துபோய் இதிலெல்லாம் பங்கெடுப்பதாய் மாறிவரும் கொடுமை நடக்கிறது. மத உணர்வுகள் பாதிக்கப்படும்னு சொல்லி எந்த இடத்திலும் நாம் நாத்திகம் பேசுவதில்லை, பகுத்தறிவு பற்றியும் பேசுவதில்லை, விஞ்ஞானக் கண்ணோட்டத்தை வலியுறுத்துவதில்லை. இப்போது யோசித்துப் பாருங்கள், பெரியார் செய்தளவுக்கு நாம் ஏதாவது செய்திருக்கிறோமா என்று

————-கீற்று இணையதளத்தில் திரு.ஆதவன்தீட்சண்யா அளித்த நேர்காணலின் ஒரு பகுதி.

நன்றி…………….விவாதிப்போம்



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard