New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 3 (திருக்குறளைப் பற்றிய முரண்பாடு)


Guru

Status: Offline
Posts: 24601
Date:
3 (திருக்குறளைப் பற்றிய முரண்பாடு)
Permalink  
 


பெரியாரின் மறுபக்கம் – பாகம்3 (திருக்குறளைப் பற்றிய முரண்பாடு)

 

திருக்குறளைப் பற்றிய முரண்பாடு:

‘திருவள்ளுவர் திருக்குறளில் ஆரியக்கருத்துக்கு ஆதரவு கொடுக்கும் அளவில் எழுதியிருக்கிறார். பகுத்தறிவை பற்றிக் கவலைப்படாமல் எழுதியிருக்கிறார். தனது மத உணர்ச்சியோடு எழுதியிருக்கிறார்’’ என்று விமர்சனம் செய்த அதே ஈ.வே. ராமசாமி நாயக்கர், இதற்கு முரண்பட்ட வகையிலும் பேசியிருக்கிறார். முரண்பட்ட வகையில் பேசுவது ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு நிகர் ஈ.வே. ராமசாமி நாயக்கரேதான். அப்படி என்ன முரண்பாடு ஏற்படும் வகையில் பேசினார் தெரியுமா? இதோ!

14.03.1948, மூன்றாவது திருவள்ளுவர் மாநாட்டில் ஈ. வே. ராமசாமி நாயக்கர் ‘‘(திருக்குறளில்) எத்தகைய பகுத்தறிவுக்கு புறம்பான ஆபாசக் கருத்துக்களுக்கும் அதில் இடமில்லை’’ என்றும்

‘‘திருக்குறள் ஆரிய தர்மத்தை – மனு தர்மத்தை அடியோடு கண்டிப்பதற்காகவே ஏற்பட்ட நூல் என்பதை நீங்கள் உணர வேண்டும்’’ என்றும் கூறுகிறார்.

23, 24-10-1948 அன்று ஈ. வே. ராமசாமி நாயக்கர்,

‘‘குறள் ஹிந்து மதக் கண்டன புத்தகம் என்பதையும், அது சர்வ மதத்திலுள்ள சத்துக்களை எல்லாம் சேர்த்து எழுதப்பட்டுள்ள மனித தர்ம நூல் என்பதையும் எல்லோரும் உணர வேண்டும்’’ என்றும் கூறுகிறார்.

முதலில், திருக்குறள் ஆரியக் கருத்துக்கு ஆதரவு கொடுக்கும் நூல் என்று கூறிய ஈ.வே. ராமசாமி நாயக்கர் அதற்கு முரணாக திருக்குறளில் ஆரிய தர்மத்தை கண்டிப்பதற்காக ஏற்பட்ட நூல் என்று பல்டி அடித்தார்.

இரண்டாவது, திருக்குறள் பகுத்தறிவைப் பற்றி கவலைப்படாமல் எழுதப்பட்டது என்று கூறிய ஈ.வே. ராமசாமி நாயக்கர் அதற்கு முரணாக திருக்குறளில் பகுத்தறிவுக்கு புறம்பான கருத்துக்களுக்கு அதில் இடமில்லை என்று கூறி பல்டி அடித்தார்.

மூன்றாவது, தனது மத உணர்ச்சியோடு எழுதினார் என்று கூறிய ஈ.வே. ராமசாமி நாயக்கர் அதற்கு முரணாக குறள் இந்து மதக் கண்டன நூல் என்று கூறி பல்டி அடித்தார்.

20.01.1929 குடியரசு இதழில் ஈ. வே. ராமசாமி நாயக்கர், ‘‘அவரது குறளில் இந்திரன், பிரம்மா, விஷ்ணு முதலிய தெய்வங்களையும், மறுபிறப்பு, சுவர்க்கம், நரகம், மேலோகம், பிதுர், தேவர்கள் முதலிய ஆரிய மத சம்பிரதாயங்களையும், மூட நம்பிக்கைகளையும் கொண்ட விஷயங்களைப் பரக்கக் காணலாம்’’ என்று கூறுகிறார்.

இவ்வாறு கூறிய ஈ.வே. ராமசாமி நாயக்கர் தான் திருக்குறள் ஹிந்து மதக் கண்டன நூல் என்று முரண்படக் கூறுகிறார்.

முரண்பாட்டின் மொத்த உருவம் ஈ.வே. ராமசாமி நாயக்கர் தான் என்று சொன்னால் அது மிகையாகாது.

மேலும் ஈ. வே. ராமசாமி நாயக்கர்,

‘‘நாம் பின்பற்றத் தகுந்த முறையில், நமக்கு பயன்படுகிற முறையில் எந்த இலக்கியம் இருக்கிறது? தொல்காப்பியம் என்று சொல்லுவார்கள். மொழிப்பற்று காரணமாக சொல்வார்கள். ஆரியத்திலிருந்து விலகி, ஆரியக்கருத்துக்களை எதிர்த்து சொன்னார் என்ற முறையில் அதில் ஒன்றுமே இல்லை’’ என்று 1958 டிசம்பர் மாதம் வள்ளுவர் மன்றத்திலே கூறுகிறார். இதுதான் இவருடைய இலக்கிய ஆராய்ச்சி!

ஈ.வே. ராமசாமி நாயக்கருடைய இலக்கிய ஆராய்ச்சியின் முடிவு என்ன தெரியுமா?

‘‘உண்மையாகப் பார்ப்போமானால் நமக்கு இலக்கியமே இல்லை. இலக்கியங்கள் என்று பாராட்டத் தகுந்த இலக்கியங்கள் இருக்கின்றன. நாம் பின்பற்றத் தகுந்த முறையில் நமக்குப் பயன்படுகிற முறையில் எந்த இலக்கியம் இருக்கிறது?’’ என்று கேட்கிறார்.

இதுதான் இவருடைய இலக்கிய ஆராய்ச்சியின் முடிவு.

சங்க இலக்கியங்கள் இருக்கின்றனவே! அந்த இலக்கியங்களில் புறநானூறு இருக்கின்றனவே! அதில் ‘‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’’ என்ற கணியன் பூங்குன்றனாரின் பாடல் பின்பற்றத் தகுந்தவையாக இருக்கின்றதே. இனியவை நாற்பது, இன்னா நாற்பது, நாலடியார் இருக்கின்றதே! இதையெல்லாம் ஈ.வே. ராமசாமி நாயக்கர் படித்திருக்க மாட்டாரா? நிச்சயம் படித்திருப்பார். ஆனால் அவருடைய நோக்கமே தமிழரை, தமிழைக் கேவலப்படுத்துவதுதானே! சரி நமக்கு இலக்கியங்களே இல்லை என்று வைத்துக்கொள்வோம். ஈ.வே. ராமசாமி நாயக்கராவது ஒரு இலக்கியத்தைக் கொடுத்திருக்கலாமே! அல்லது அவரது கழகத் தோழர்களாவது ஒரு இலக்கியத்தைக் கொடுத்திருக்கலாமே. அப்படி ஒரு இலக்கியம் இருந்தால் காட்டுங்கள் பார்க்கலாம். ஏன் அவ்வாறு செய்யவில்லை? நாம் பின்பற்றும் முறையில், நமக்குப் பயன்படுகிற முறையில் ஒரு இலக்கியத்தை ஈ.வே. ராமசாமி நாயக்கர் கொடுத்திருக்கலாமே! இதிலிருந்தே தமிழ் மொழி பழிப்புதான் ஈ.வே. ராமசாமி நாயக்கருடைய நோக்கம் என்று நாம் தெரிந்துகொள்ள வேண்டும். தமிழ் வளர பகுத்தறிவுவாதிகளின் பங்கு என்ன? தமிழை வளர்ப்பதற்கு பதில் ஆங்கிலம் வளர்வதற்கு மாநாடு நடத்தியவர்கள்தானே இந்த பகுத்தறிவுவாதிகள்!

திருக்குறளை முஸ்லீம்கள் ஏற்றுக் கொள்கிறார்களா?

திருக்குறள் ஹிந்து மதக் கண்டன நூல் என்று கூறிய ஈ.வே. ராமசாமி நாயக்கர் 23,24.10.1948 திராவிடர் கழக 19-வது மாநாட்டில்,

‘‘முகம்மது நபியவர்களால் கூறப்பட்டுள்ள பல கருத்துக்களை குறளில் அப்படியே காணலாம். முஸ்லிம்களுக்கு எதிராக அதில் ஒன்றுமே காணமுடியாது’’ என்றும் ‘‘குறளை முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் உள்பட யாரும் ஆட்சேபிக்க மாட்டார்கள். நீங்களும் (கிறிஸ்தவர்கள்) குறள் மதக்காரர்கள். பைபிளுக்கு விரோதமாகக் குறளில் ஒன்றும் கிடையாது’’ என்றும் கூறுகிறார்.

முஸ்லிம்களை குறள் மதத்துக்காரர் என்று சொன்னாரே ஈ.வே. ராமசாமி நாயக்கர் – அதை முஸ்லிம்கள் ஏற்றுக்கொண்டார்களா? அல்லது திருக்குறளைத்தான் முஸ்லிம்கள் மதித்தார்களா? இல்லவே இல்லை என்பதுதான் வரலாறு காட்டும் உண்மை!

1968-டிசம்பர் மாதம், மதனீ என்பவர், திருச்சியிலே ஒரு புத்தகத்தை எழுதி வெளியிட்டு இருக்கிறார். அந்த புத்தகத்தினுடைய தலைப்பு ‘‘முஸ்லீம்களுக்குப் பொதுமறை எது? குறளா? குர் ஆனா?’’ என்பதுதான். இந்தப் புத்தகத்திலே அவர் திருக்குறளையும், குரானையும் ஒப்பிட்டு ஆராய்ந்து கூறியுள்ளார். அவர் என்ன கூறியுள்ளார் என்பதைப் பார்ப்போம்.

‘‘…அத்தகைய தகுதி திருக்குர்ஆனுக்கே உண்டு. குறளுக்கில்லை. திருக்குரான் இறைவன் அமைப்பு. குறள் மனித அமைப்பு. ஒப்பிட்டு பேசுவதோ, போட்டி மனப்பான்மையில் வாதிடுவதோ பெருந்தவறு, கூடாத வினையாகும். ஐந்து வயதுச் சிறுவன், போலு பயில்வானிடம் மல்லுக்கு நிற்பது போலாகும்.’’ (பக்.2)

‘‘இஸ்லாமியனுக்கு இது ஏற்புடையத்தன்று’’ (பக்.3)

‘‘குறள் ஒன்றே பொதுமறை என்று எவர் கூறியிருந்தாலும் சரி; கூறிக்கொண்டிருந்தாலும் சரி, அனைவரெல்லாம் திருகுரானை கற்றுணராதவர்கள் என்றே துணிவுபடக் கூறலாம்.’’ (பக்.5)

‘‘உருப்படியான ஒழுக்க நூல் திருகுரானைத் தவிர உலகில் வேறு எந்த நூலும் இல்லை. இருக்க முடியாது என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் இருந்து வருபவர்கள் இஸ்லாமியர்கள். இறுதி மூச்சுப் பிரியும் வரை இதே நம்பிக்கையில் தான் இருப்பார்கள், இறப்பார்கள்.’’ (பக்.6)

‘‘களங்கமுள்ள ஓர் ஏடு எப்படிப்புனித இலக்கியமாகும்? வாழ்க்கை நூலாகும்? பொது மறையாகும்? எல்லார்க்கும், எல்லாக் காலத்திற்கும் ஏற்புடையதாகும்? திருக்குரானைத் தேன் நிலாவாகக் கருதிடும் சீலர்கள் சிறிதேனும் சிந்தித்தால் நல்ல தெளிவேற்படும்-உண்மை பல பளிச்சிடும்.’’ (பக்.8)

‘‘குறள்நெறி, குரானின் நெறி கொண்டதல்ல. இரண்டின் வழியும் விழியும் வேறு. குரலும் கோட்பாடும் வேறு. (பக்.23)

‘‘வள்ளுவர்க்கு ஒரு கொள்கை இல்லை. ஒரு குறிக்கோள் இல்லை. அதனால் மக்களைத் தன் கொடியின் கீழ் கொண்டு வரமுடியவில்லை’’ (பக்.30)

‘‘திருக்குறளை பாலுக்கு ஓப்பிட்டால், திருக்குரானை தண்ணீருக்கு ஒப்பிடலாம். பால் எல்லோருக்கும், எல்லாச் சந்தர்ப்பங்களிலும் பயன்படக்கூடியதல்ல. பொது உணவுப் பொருளாகவும் அது இருந்திட முடியாது. விரும்பக் கூடியதும் அல்ல. தண்ணீரோ அப்படியல்ல. எல்லோருக்கும் எல்லாக் காலத்துக்கம் எல்லாச் சந்தர்ப்பத்திலும் பயன்படக் கூடியதாகும்.’’ (பக்.139)

இவ்வாறு 144 பக்கம் கொண்ட இந்த புத்தகத்தில் ஒவ்வொரு பக்கத்திலும் திருக்குறளைத் தாழ்த்தி திருக்குரானை உயர்த்தி சொல்லப்பட்டிருக்கிறது. திருக்குறளை முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று ஈ. வே. ராமசாமி நாயக்கர் உயிரோடு இருக்கும் போதே – அதுவும் திராவிடர் கழகம் நிலை கொண்ட திருச்சியிலேயே ஆணி அடித்தாற் போல் சொல்லப்பட்டு இருக்கிறது.

குறளை முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று திருச்சியிலே, முஸ்லிமின் குரல் ஒலித்ததே – அப்படியானால் முஸ்லிம்கள் குறள் மதக்காரர்கள் என்று ஈ.வே. ராமசாமி நாயக்கர் சொன்னாரே – அது ஏன்? அப்படிச் சொன்ன மதனீக்காவது கண்டனம் தெரிவித்தாரா? அந்த புத்தகத்துக்கு எதிராக விடுதலையில் ஒரு வரியாவது கண்டித்து எழுதினாரா? இல்லையே ஏன்?

ஒருவேளை முஸ்லிம்களின் இந்த கருத்தை ஏற்றுக்கொண்டாரோ என்னவோ! முஸ்லிம்கள் திருக்குறளை ஏற்றுக்கொண்டார்களா, இல்லையா என்பது கூட விமர்சனம்தான். ஆனால் அந்த புத்தகத்திலே திருக்குறளை கண்டபடி திட்டியிருக்கிறார்களே அதைப் பற்றி ஈ.வே. ராமசாமி நாயக்கரோ அல்லது அவரது அடியார் வீரமணியோ கண்டித்தார்களா? களங்கமுள்ள ஏடு என்றெல்லாம் திருக்குறளை முஸ்லிம்கள் சொன்ன போது – திருக்குறள் வழியில் நடக்கும் கழகம் திராவிடர் கழகம் என்று சொன்ன ஈ.வே. ராமசாமி நாயக்கரோ அல்லது வீரமணியோ எங்கு போனார்கள்? திருக்குறள் திராவிடர்களின் வா¡க்கை நூல் என்று சொன்ன ஈ. வே. ராமசாமி நாயக்கர் – அதை கேவலப்படுத்திய முஸ்லிமையோ அந்த புத்தகத்துக்கோ கண்டனம் தெரிவிக்காதது ஏன்? – இதுதான் திருக்குறளுக்கு திராவிடர் கழகம் செய்த தொண்டா?

ஒருவேளை இந்த புத்தகம் வந்ததே தெரியாது என்று சொல்லி விடுவார்கள். ஆனால் இந்து முன்னணி இந்த புத்தகங்களை வாங்கி பதிவுத் தபாலில் திராவிடர் கழகம் முதல் பகுத்தறிவுவாதிகள் அனைவருக்கும் அனுப்பியதே – அப்போது கூட வீரமணியோ அல்லது பகுத்தறிவுவாதிகளோ அல்லது தமிழறிஞர்களோ கூட கண்டிக்க வில்லையே ஏன்? இதுதான் தமிழ்ப் பற்றா? இவர்கள்தான் தமிழைக் காக்க புறப்பட்ட வீரர்களா? சரி அப்போதுதான் கண்டிக்கவில்லை. இப்பொழுதாவது கண்டிக்கத் துணிவு உண்டா? ‘தடை செய் இராமாயணத்தை’ என்று சொன்னார்களே? – அதே போல ‘தடை செய் மதனீயின் புத்தகத்தை’ என்று சொல்லத் தயாரா? பதில் சொல்வார்களா பகுத்தறிவுவாதிகள்!

ஈ.வே. ராமசாமி நாயக்கரின் காலத்திலிருந்தே தமிழில் வழிபாடு நடத்தப்பட வேண்டும் என்ற குரல்கள் ஓலித்துக்கொண்டு வருகின்றன. தமிழில் வழிபாடு நடத்தப்பட வேண்டும் என்று நாங்கள் தான் போராடுகிறோம் என்று தி.க.வினர் சொல்கின்றனர், ஆனால்முதன் முதலில் தமிழில் வழிபாடு நடத்தப்பட வேண்டும் என்று கூறியவர்கள் ஈ.வே. ராமசாமி நாயக்கரோ அல்லது நாத்திகர்களோ அல்ல. ஆத்திகர்கள்தான்.

மறைமலை அடிகள் முதல் தனித் தமிழ் இயக்க ஆத்திகர்கள் அதற்காக போராடினார்கள். இதில் தி.க.வினர் சொந்தம் கொண்டாட உரிமையில்லை. ஏனென்றால் கடவுளும் வேண்டாம், கோயிலும் வேண்டாம் என்று சொல்லுகின்ற தி.க.வினர் கோயிலில் எந்த மொழியில் வழிபாடு நடத்த வேண்டும் என்று சொல்ல உரிமையில்லைதானே!

— தொடரும்



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

பெரியாரின் மறுபக்கம் – பாகம் 4 (திருக்குறளைப் பற்றிய முரண்பாடு – தொடர்ச்சி)

 

periyar_marubakkamமசூதியில் தமிழ்: ஈ.வே. ரா போராடதது ஏன்?

சரி, வழிபாடு எந்த மொழியில் நடத்தப்பட வேண்டும் என்று ஹிந்துக் கோயிலுக்கு மட்டும்தானா? மற்ற மதக்காரர்களுக்கு இந்த அறிவுரை இல்லையா? முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் தமிழர்கள்தான் என்று ஈ.வே. ராமசாமி நாயக்கரே சொல்லியிருக்கிறார். அப்படியிருக்கும்போது அந்தத் தமிழர்களுக்கு தி.கவினர் போராட முன்வர வேண்டும் அல்லவா! எப்பொழுதுதாவது மசூதியில் தமிழில் குரான் ஓதப்பட வேண்டும் என்று ஈ.வே. ராமசாமி நாயக்கர் சொன்னதுண்டா? அல்லது வீரமணிதான் சொன்னதுண்டா? இல்லையே ஏன்?

இதோ, நெல்லை மேலப்பாளையம் ரகுமானியாபுரம் வடக்குத் தெருவில் வசிக்கும் முஸ்லிம் மக்களில் 11 குடும்பங்களை சேர்ந்த சுமார் 75 பேர், பள்ளிவாசலில் தமிழில் குரான் வாசித்ததற்காகவும், மார்க்க விளக்கக்கூட்டம் போட்டதற்காகவும் ஜமாத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளனர். (குமுதம் ரிப்போர்ட்டர் 18.05.2003) தமிழுக்காக ஏங்கும் அந்த முஸ்லிம்களின் அழுகுரல் கேட்கிறதே! அந்த அழுகுரல் தமிழர் தலைவரான உங்கள் காதுகளில் விழவில்லையா? அல்லது விழுந்தும் பயத்தில் வேர்த்து இருக்கிறீர்களா?

கோயிலில் தமிழ் அர்ச்சனை வேண்டுமா, வேண்டாமா என்று பட்டிமன்றம் முதல் மாநாடு வரை கூடி விவாதிக்கும் தமிழ் அறிஞர்கள் மற்றும் தி.க. வினர் இந்த சமயத்தில் மட்டும் எங்கு தொலைந்து போனார்களோ தெரியவில்லை!

தமிழில் மசூதியில் வழிபாடு நடத்தக்கூடாது என்று சொன்ன முஸ்லிம்களை இதுவரை வீரமணி கண்டிக்காதது ஏன்? இதுவரை அதைக் கண்டித்துப் போராட்டம் நடத்தாதது ஏன்? தமிழில் வழிபாடு நடத்தியதால் ஜமாத்திலிருந்தே விலக்கி வைக்கப்பட்டுள்ளனர் என்றால் விலக்கியவர்கள் தமிழ்மேல் எவ்வளவு வெறுப்பு கொண்ட முஸ்லிம்களாக இருக்கவேண்டும்? அவ்வளவு வெறுப்புக் கொண்ட முஸ்லிம்களை இதுநாள்வரை வீரமணியோ, மற்ற தமிழறிஞர்களோ கண்டிக்க முன்வரவில்லையே! இதுதான் தமிழ்பற்றா? இதுதான் தி.க.வினர் தமிழுக்கு ஆற்றும் தொண்டா?

ஈ.வே. ராமசாமி நாயக்கரின் கருத்துகளைத் தாங்கிவரும் இதழ் ‘நந்தன் இதழ்.’ ஈ.வே. ராமசாமி நாயக்கரை யாராவது விமர்சித்ததால் உடனே ‘நந்தன்’ இதழில் மறுப்புரை வரும். தலையங்கத்திலேயே ஈ.வே. ராமசாமி நாயக்கரின் படம் போட்டுதான் வரும். அந்த அளவுக்கு ஈ.வே. ராமசாமி நாயக்கரை துணைகொண்டு வரும் ‘நந்தன்’ (99 நவம்பர் 1-15) இதழ், ‘குழப்பவாதிகள்’ என்னும் தலையங்கத்தை எழுதியிருக்கிறது.

இதோ அந்தத் தலையங்கம்:-

‘முதல் மாதம் என்பதற்காகச் சித்திரையில் விதைப்பதில்லை. மூத்தவர்கள் சொல்வதெல்லாம் தத்துவங்கள் ஆவதில்லை.

அண்மையில் ஆந்திர மாநிலம் குப்பத்தில் உள்ள திராவிடப் பல்கலைக்கழகக் கருத்தரங்கம் ஒன்றில் உரையாற்றிய முன்னாள் ஆளுநர் சி. சுப்ரமணியம் அவர்கள் இந்தியாவின் இரண்டாவது ஆட்சிமொழியாக ஆங்கிலம் நிரந்தரமாக ஆக்கப்படவேண்டும் என்ற கருத்தை வெளியிட்டிருக்கிறார்.

இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளும் ஆட்சி மொழிகளாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுவரும் இந்நேரத்தில், இத்தகைய குழப்பமான, பிற்போக்கான கருத்துக்களை சி. சுப்ரமணியம் போன்றவர்கள் வெளியிடுவது அவர்களை மூத்த அறிஞர்களாகக் காட்டவில்லை. முதிர்ந்த குழப்பவாதிகளாகத்தான் காட்டுகிறது. தினமணி போன்ற ஏடுகள் இக்கருத்தை ஆதரிப்பது ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கின்றது.

கால் நூற்றாண்டுக்கு முன்னால் நடந்த மொழிப்போராட்டத்தின்போது ஒரு வரலாற்றுப் பிழை நேர்ந்தது. இந்தி மொழியை எதிர்த்த அதே நேரத்தில் ஆங்கிலத்தையும் ஒரு சேர எதிர்க்கத் தவறியதால் நேர்ந்த பிழை அது! இந்தி எப்படி நமக்கு அந்நிய மொழியோ ஆங்கிலமும் அப்படித்தான். இதனை நாம் கணிக்கத் தவறிய காரணமத்தினால்தான் ‘பேச்சுத் தமிழ்’ ஆங்கிலத்தின் ஆக்கிரமிரப்பால் சீரழிந்து போய்விட்டது. ‘மணிப்பிரவாள’ நடையில் இருந்து தமிழை மீட்டு தமிங்கில நடைக்குத் தாரை வார்த்துவிட்டோம். இந்த வரலாற்றுப் பிழையை நேர் செய்தாக வேண்டும். ‘தொடர்பு மொழியாக’ ஆங்கிலம் வேண்டும் என்பதெல்லாம் இந்த விஞ்ஞான யுகத்தில் அறியாமையின் விளைவால் எழும் வீண்வாதங்கள். ஒலியின் வேகத்தையும் விஞ்சுகிறது கணினிகளின் மொழிமாற்றும் திறன்வேகம்!

இந்நிலையில் இந்தி, ஆங்கிலம், இந்த இரண்டு அந்நிய மொழிகளின் ஆதிக்கங்களையும் அகற்றிவிட்டுத் தமிழைத் தமிழ்நாட்டின் ஒரே பயிற்று மொழியாக தமிழ்நாட்டில் ஒரே ஆட்சி மொழியாக, இந்தியாவின் ஆட்சி மொழிகளில் தமிழையும் ஒன்றாக ஆக்குவது ஒன்றே தமிழை வாழ்விக்கும், தமிழரை வாழ்விக்கும் ஒரே வழியாகும்.

இன்று இந்திதான் இந்தியாவின் ஆட்சிமொழியாக இருந்து வருகிறது. இரண்டாவது ஆட்சிமொழியாக ஆங்கிலத்தையும் அரியணையில் ஏற்றிவிட்டால் தமிழ் மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுவிடும்.

தமிழைத் தமிழ்நாட்டின் பயிற்று மொழியாகவும் இந்தியாவின் ஆட்சிமொழிகளில் ஒன்றாகவும் கொண்டுவருவதற்காக, தமிழ் உணர்வாளர்கள் போராடுவது மட்டும் போதாது. ஆங்காங்கே முளைவிடும் இத்தகைய அடிமைச் சிந்தனைகளையும் நாம் மூர்க்கமாக எதிர்த்திட வேண்டும்.
இல்லையென்றால் எதிர்வரும் நூற்றாண்டிலும் தமிழர்கள் இரண்டாந்தரக் குடிமக்களாகக்கூட அல்ல, மூன்றாந்தரக் குடிமக்களாகத்தான் வாழநேரும்.’’

இந்தத் தலையங்கத்தில் ‘நந்தன்’ இதழ், இரண்டு முக்கிய விஷயங்களை தெளிவுபடுத்துகிறது.

1. ஹிந்தியை எதிர்த்த அதே நேரத்தில் ஆங்கிலத்தையும் எதிர்க்க தவறிவிட்டோம்.

2. தமிழ் ஆங்கிலத்தின் ஆக்கிரமிப்பால் சீரழிந்து விட்டது. அதனால் ஆங்கிலம் வேண்டாம்.

இந்த இரண்டு விஷயங்களை ஆராயும் முன் ஒரு முக்கியமான விஷயத்தைப் பார்ப்போம்.
‘தமிழ்நாட்டில் ஹிந்தியைத் திணிக்காதே’ என்ற கோஷம் 1926-ப் பிறகுதான் ஈ.வே. ராமசாமி நாயக்கரால் எழுதப்பட்டது.

ஆனால் தமிழ்நாட்டில் ஹிந்தியை வித்திட்டவர் யார் தெரியுமா? சொன்னால் ஆச்சரியமாக இருக்கும். தமிழ்நாட்டில் இந்தியைத் திணிக்காதே என்று எந்த ஈ.வே. ராமசாமி நாயக்கர் சொன்னாரோ அந்த ஈ.வே. ராமசாமி நாயக்கர்தான் தமிழ்நாட்டில் இந்திக்கு வித்திட்டார்.

கவிஞர் கலைக் களஞ்சியம் இதைப்பற்றி ஆராய்ந்து ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். இதோ அந்தக் கட்டுரை!

‘பெரியார் ஈ.வே. ராமசாமி நாயக்கர் தான் தென்னாட்டில் முதன்முதலில் ஹிந்திக்கு வித்திட்டவர். இவர் 1922-ல் ஈரோட்டில் ஹிந்திப் பள்ளி ஒன்றை ஆரம்பிக்க இலவசமாக இடம் கொடுத்தார்.

‘திரு.வி.க. வின் வாழ்க்கை குறிப்புகள்’ என்ற நூலில் பக்கம் 436-ல் ‘ராமசாமி நாயக்கர் காங்கிரசில் தொண்டாற்றிய காலத்தில் அவர் முயற்சியால் ஈரோட்டில் ஹிந்தி வகுப்பொன்று நடைபெற்றது. திறப்பு விழாவுக்கு யானுஞ் சென்றிருந்தேன். தென்னாட்டில் ஹிந்திக்கு விதை இட்டவர் நாயக்கரே’ என்ற திரு.வி.க. அவர்கள் எழுதியுள்ளார்.

1917-ஆம் ஆண்டிலிருந்து 1925-ஆம் ஆண்டு வரை பார்ப்பனர்களின் தாசனாக விளங்கி வந்த பெரியார் ஈ.வே. ரா. 1925-க்குப் பிறகு அவர் பார்ப்பனர்களின் சிம்ம சொப்பனமாய் விளங்கி அவர்களின் எதிரியானார். அவர் தனது முதல்கட்டமாக அவரால் வித்திடப்பட்ட இந்தி மொழியை எதிர்க்க ஆரம்பித்தார்.

‘சித்திர புத்திரன்’ என்ற புனைபெயரில் பெரியார் ஈ.வே.ரா. 07-03-1926-ல் தனது குடியரசு இதழில் ‘தமிழுக்குத் துரோகமும் இந்தி மொழியின் ரகசியமும்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டார்.

அரசுப் பணியாளர்கள்தான் அரசுக்குப் பயந்து தங்கள் கட்டுரைகளை இதழ்களில் புனைபெயர்களில் வெளியிடுவார்கள். ஆனால் பெரியார் ஈ.வே.ரா. அவர்களோ அரசு பணியாளர் அல்ல. அப்படியிருக்க அவர் சித்திரபுத்திரன் என்ற புனைபெயரில் அக்கட்டுரையை எழுத வேண்டிய அவசியம்தான் என்ன?

பெரியார் ஈ.வே.ரா. இந்தி எதிர்ப்புக் கட்டுரையை தனது பெயரில் வெளியிடாமல் புனைபெயரில் வெளியிட்டமைக்குக் காரணம், பெரியார் ஈ.வே.ராதான் அக்கட்டுரையை எழுதினார் என்ற உண்மையை பார்ப்பனர்கள் அறிவார்களேயானால் அவர்கள் பெரியார் ஈ.வே.ராவைப் பார்த்து ‘நீதானே தென்னாட்டில் இந்திக்கு வித்திட்டாய்’ என்று பரிகாசம் செய்வார்களே என்பதற்குப் பயந்தே அவர் அவ்வாறு செய்தார்.

1917-ல் ஹிந்தியை காந்தி ஆதரிக்க, அதை நீதிக் கட்சியினர் எதிர்த்த போது நீதிக்கட்சிக்கு ஆதரவாக அந்நாளில் ஹிந்தியை எதிர்க்காத பெரியார் ஈ.வே.ரா. 1926-ல் ஹிந்தியை எதிர்க்க அப்படி என்ன அவசியம் வந்தது?

மூன்றாம் வகுப்புவரை திண்ணைப் பள்ளியில் படித்துவிட்டு இரண்டு ஆண்டுகள் ஆங்கிலம் கற்று 11 வயதில் நான்காவது வகுப்பு தேறியதும் படிப்பை நிறுத்திவிட்டு தனது தந்தையாரின் மண்டியில் வேலை செய்ய ஆரம்பித்த கன்னடத்துக்காரரான பெரியார் ஈ.வே.ராவுக்கு தமிழர்களில் எவருக்குமே இல்லாத அளவிற்கு தமிழர்களின் மீதும், தமிழ்மொழியின் மீதும் திடீரென்று அவரது 47-வயதில் பாசமும், பற்றும், பீறிட்டுவரக் காரணம்தான் என்ன? அவருக்கு ஆகாத பார்ப்பனர்களுக்கு எதிராக தமிழர்கள் கொந்தளித்தெழ வேண்டும் என்பதுதான் அவர் நோக்கம்.

தமிழர்கள் மீதும் தமிழ் மொழி மீதும் பற்றுடையவர் போல நடந்து கொண்டு வந்த பெரியார் ஈ.வே.ரா நாளடைவில் அவரது சுயரூபத்தைக் காட்ட ஆரம்பித்தார்.

1.6.1954-ல் வெளியான ‘விடுதலை’ இதழில் பெரியார் ஈ.வே.ரா, ‘நீ ஒரு கன்னடியன். எப்படித் தமிழனுக்குத் தலைவனாக இருக்கலாம் என்று என்னைக் கூடக்கேட்டார்கள். தமிழன் எவனுக்கும் யோக்கியதை இல்லையப்பா என்றேன். இதற்குக் காரணம் ஒரு தமிழன் இன்னொரு தமிழன் உயர்ந்தவனாக இருப்பதைப் பார்த்துச் சகித்துக்கொண்டிருக்கவே மாட்டான்’ என்கிறார்.

‘‘தமிழ் மொழி நம்முடைய தாய்மொழி; அஃது எல்லா வல்லமையும் பொருந்திய மொழி, சமயத்தை வளர்க்கும் மொழி; பழமையின் மொழி; உலகத்திலேயே சிறந்த மொழி என்று சொல்லப்படுகின்ற காரணத்தால் நான் ஹிந்தியை எதிர்த்துப் போராடவில்லை’’ என்றும் “ஹிந்தி எதிர்ப்புத் தமிழுக்காக அல்ல’’ என்றும் ‘‘என்னைப் பொருத்தவரையிலும் ஹிந்தியைப் பற்றிக் கவலை இல்லை. தமிழைப் பற்றிய பிடிவாதமும் இல்லை’’ என்றும் அவர் பலமேடைகளில் பேசியும், கட்டுரைகளாக பல்வேறு ஏடுகளில் எழுதியும் வந்தார் என்று டாக்டர் ந. சுப்பு ரெட்டியார் ‘தந்தை பெரியார் சிந்தனைகள்’ என்ற தனது நூலில் வெளியிட்டு இருக்கிறார்.

1965-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் மாணவர்களின் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது பெரியார் ஈ.வே.ரா. அவர்கள் 03.03.1965-ல் ‘‘விடுதலை’’ இதழின் தலையங்கத்தில் ‘‘இந்தி விஷயத்தில் நீதானே எதிர்ப்பு உண்டாக்கினாய். இப்போது இந்திக்கு அடிமையாகிவிட்டாயே என்று பலவாறாக எனக்கு வசவுக் கடிதம் (மிரட்டல் கடிதம்) எழுதிவருகிறார்கள். நேரிலும் கேட்டார்கள். எனது நண்பர்கள் பலரும் இதே கருத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும், தமிழ் கெட்டு விடுமே என்கின்ற எண்ணத்தில் நான் இந்தியை எதிர்க்கவில்லை. தமிழ் கெடுவதற்கு தமிழில் எதுவும் இல்லை. புலவர்களே தமிழை கெடுத்துவிட்டார்கள்” என்றும், “காமராஜர் ஆட்சி அவசியமா, இந்தி ஓழியவேண்டியது அவசியமா என்று என்னை யாராவது கேட்டால் காமராஜர் ஆட்சிதான் அவசியம் என்று பலமாகச் சொல்வேன்’’ என்றும், 08-03-1965-ல் ‘விடுதலை’ இதழின் தலையங்கத்தில் ‘‘தமிழ் நூல்களே அதிக கேடுபயப்பவை, தமிழில் படிக்கும் கம்பராமாயணத்தால் ஏற்பட்ட, ஏற்படும் முட்டாள்தனமும், கேடும் இந்தி படிக்கும் துளசிதாஸ் ராமாயணத்தாலோ, வங்காள ராமாயணத்தாலோ, வால்மீகி ராமாயணத்தாலோ ஏற்படாது என்பது உறுதி’’ என்றும் அவரது கையொப்பமிட்டு வெளியிட்டிருக்கிறார்.

1965-ல் தமிழ்நாட்டில் நடந்தேறிய மாணவர்களது ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தின் விளைவே 1967ல் நடந்த பொதுத் தேர்தலில் தமிழ் நாட்டில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியுற்று அத்தோடு அக்கட்சி தமிழ்நாட்டில் தலைதூக்க முடியாமல் வீழ்ச்சியுற்றது.

kamarajar-anna1967-ல் நடந்த தேர்தலில்போது பெரியார் ஈ.வே.ரா ஆதரித்து வந்த காங்கிரசும், காமராஜரும் தோற்று, அறிஞர் அண்ணா முதல்வரானதை விரும்பாத பெரியார் ஈ.வே.ரா. 01.10.1967ல் ‘விடுதலை’ .இதழில் ‘‘தமிழனுக்கு இன உணர்ச்சி இல்லை. ஒருவரை ஒருவர் காலை வாரிவிடும் துரோகச் செயல், ஒருவன் மீது ஒருவன் பொறாமை கொள்ளும் இழிசெயல் இல்லாத தமிழன் அரசியலிலோ, மத இயலிலோ, தமிழ் இயலிலோ, தமிழனில் நூற்றுக்கு பத்து பேர் இருக்கிறார்கள் என்று யாராவது காட்டமுடியுமா?’’ என்று வெளியிட்டுள்ளார். அதன் பொருள் தமிழனாகிய அறிஞர் அண்ணா மற்றொரு தமிழனாகிய காமராஜரை காலைவாரிவிட்டார் என்பதுதான்.

“பெரியார் ஈ.வே.ராவின் பேச்சுக்களையும் செயல்களையும் வைத்துப் பார்க்கும்போது அவர் தமிழர் மீதும், தமிழ் மொழி மீதும் வைத்திருந்த பற்றும், பாசமும் உண்மை இல்லை என்பதும், இந்தியை அவர் உள உணர்வோடு எதிர்க்கவில்லை என்பதும், பார்ப்பனர்கள் மீது அவர் கொண்டிருந்த வெறுப்புதான் இந்தியை அவர் எதிர்க்க காரணம் என்ற உண்மையுமன்றோ புலப்படுகிறது’’
(புதிய கோடாங்கி, ஏப்ரல்-2003)

கவிஞர் கலைக்களஞ்சியம் சொல்வதுபோல ஈ.வே. ராமசாமி நாயக்கருடைய ஹிந்தி மொழி எதிர்ப்புக்குக் காரணம் பார்ப்பனர்களின் மேல் இருந்த வெறுப்புதான் என்பதை அறியலாம்.

மேலும் ஒரு கருத்தை மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணரும் கூறுகிறார்.

paavaanar1பாவாணர், ‘‘(பெரியார்)… இந்தியையும் தமிழ்ப்பற்றால் எதிர்க்கவில்லை. பேராயத்தைத் தாக்க இந்தியெதிர்ப்பு ஒரு நல்ல கருவியாய்க் கிடைத்ததென்றே வெளிப்படையாய்ச் சொன்னார்’’ என்று கூறுகிறார். (நூல்: பாவாணர் வரலாறு)

ஆக இந்தியெதிர்ப்பு தமிழ்ப் பற்றால் அல்ல என்பது தெளிவாகிறது.

இனி நந்தன் இதழ் விஷயத்திற்கு வருவோம். ஹிந்தியை எதிர்த்த அதே நேரத்தில் ஆங்கிலத்தையும் எதிர்க்க தவறிவிட்டதற்கு காரணம் ஈ.வே. ராமசாமி நாயக்கர்தான். ஆம். அந்த வரலாற்றுப் பிழையைச் செய்து ஈ.வே.ராமசாமி நாயக்கர்தான். ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு இருந்த ஆங்கிலப் பற்றுதான், அதை எதிர்க்க தவறிவட்டதற்கு காரணம். நாம் ஏற்கனவே ஈ.வே. ராமசாமி நாயக்கரின் ஆங்கிலமோகம் பற்றி பார்த்தோமல்லவா!

மேலும், நந்தன் இதழ் கொண்டாடுகிற ஈ.வே. ராமசாமி நாயக்கரின் ஆங்கில மோகத்தைப் பார்ப்போம்.

ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:-

*நான் கல்லூரியில் ஆங்கிலத்தில் பாடம் சொல்லித்தர வேண்டும் என்றும் மூன்றாம் வகுப்பிலிருந்து மாத்திரமல்லாமல் எழுத்தாணிப் பால் குடிக்க வைக்கும் போதே ஆங்கிலத்தில் துவைத்துக் கொடுக்க வேண்டும் என்றும் சொல்லுகிறேன்.
(விடுதலை. 18-10-1962)

*ஆங்கிலம் சீர்திருத்தத்திற்கு ஏற்ற பொருள் உள்ள மொழி, எளிதில் மக்கள் புரிந்து கொள்ளக்கூடிய மொழி. ஆங்கிலம் எந்த அளவுக்கு வளர்கிறதோ அந்த அளவுக்கு நாம் அறிவு பெற முடியும். ஆகையால் ஆங்கிலம் வளர வேண்டும்.
(விடுதலை. 06-07-1968)

*மற்ற உலக நாடுகள் பெற்றுள்ள வளர்ச்சியும் விஞ்ஞான அறிவும் நமக்கு வேண்டாமா? தமிழையும் இந்தியையும் பார்த்துக் கொண்டிருந்தால் எந்த அறிவுதான் நமக்கு வரும்? உலக அறிவைப் பங்கு போட்டுக் கொள்ள ஆங்கிலமொழி அவசியம் நமக்குத் தேவை.
(விடுதலை. 29-06-1968)

*ஆங்கில மொழியை அறிந்தவன் உலகத்தின் எந்தக் கோடிக்கும் சென்று அறிவைப் பெற்றுத் திரும்பிவர இயலும்.
(பெரியார் ஈ.வே.ரா. சிந்தனைகள் தொகுதி-II)

இதிலிருந்து தெரிவதென்ன? ஆங்கிலத்தை எதிர்க்காததற்குக் காரணம் ஈ.வே. ராமசாமி நாயக்கருடைய ஆங்கில மோகம்தான் என்பது தெளிவாகிறதல்லவா!

ஈ.வே. ராமசாமி நாயக்கர் கருத்துக்களைத் தாங்கி வரும் நந்தன் இதழ், ஆங்கிலம் வேண்டும் என்று சி. சுப்பிரமணியம் சொன்னதால் அவரை முதிர்ந்த குழப்பவாதி என்கிறது. ‘நந்தன்’ வழிப்படிப் பார்த்தால் ஆங்கிலம் வேண்டும் என்று சொன்ன ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூட முதிர்ந்த குழப்பவாதிகள்! ஆம். ‘நந்தன்’ கொள்கைப்படி ஈ.வே. ராமசாமி நாயக்கர் குழப்பவாதிதான்.

நந்தன் இதழ், ஆங்காங்கே முளைவிடும் இத்தகைய (ஆங்கிலம் வேண்டும்) அடிமைச் சிந்தனைகளையும் நாம் மூர்க்கமாக எதிர்த்திட வேண்டும் என்று சொல்கிறது. ‘நந்தன்’ வழிப்படி, முதலில் எதிர்க்க வேண்டியது ஆங்கிலம் பற்றிய ஈ.வே. ராமசாமி நாயக்கரின் அடிமைச் சிந்தனைகளைத்தான்.

ஏனென்றால் ஈ.வே. ராமசாமி நாயக்கருடைய ஆங்கிலமோகம் பற்றியக் கருத்துக்களை தமிழர்கள் படிக்கும்போது அந்த அடிமைச் சிந்தனையில் அகப்பட்டுக்கொள்ள நிறைய வாய்ப்பு இருக்கிறது. அதனால் ஈ.வே. ராமசாமி நாயக்கர் சொன்ன ஆங்கில மோகம் பற்றியக் கருத்துக்கள் ஈ.வே. ராமசாமி நாயக்கருடைய அறியாமையின் விளைவால் எழும் வீண்வாதங்கள் என்று கருதி தமிழர்கள் அதை ஒதுக்கித் தள்ளிவிட வேண்டும்.

நந்தன் சொன்னபடி, எதிர்வரும் நூற்றாண்டிலும் தமிழர்கள் இரண்டாந்தரக் குடிமக்களாகக் கூட அல்ல, மூன்றாந்தரக் குடிமக்களாக வாழ நேரிடும் அவலநிலைக்கு வராமல் தடுக்க வேண்டுமென்றால் ஈ.வே. ராமசாமி நாயக்கருடைய ஆங்கிலமோகம் பற்றியக் கருத்துக்களை தமிழர்கள் முதிர்ந்த குழப்பவாதியின் கருத்தாகக் கருதி அதை ஒதுக்கிவிட வேண்டும்.

(‘நந்தன்’ இதழின்படிப் பார்த்தால், ‘நந்தன்’ இதழ் எதிர்க்க வேண்டியது ஈ.வே. ராமசாமி நாயக்கரைத்தான், சி. சுப்பிரமணியத்தை அல்ல. ஆங்கிலம் வேண்டும் என்று சொன்ன சி. சுப்பிரமணியம் மட்டும் முதிர்ந்த குழப்பவாதியாம். ஆனால் ஆங்கிலம் வீட்டுமொழியாக, நாட்டுமொழியாக ஆக வேண்டும் என்று சொன்ன ஈ.வே. ராமசாமி நாயக்கர் மட்டும் தமிழுக்காக பாடுபட்டவராம். ‘நந்தன்’ இதழின் இந்த ஓரவஞ்சனையை என்னவென்று சொல்லுவது?

ஈ.வே.ராவைப் பற்றி பாவாணர்:

ஈ.வே. ராமசாமி நாயக்கர் தமிழுக்காக என்ன செய்தார் என்ற கேள்வி நமது உள்ளங்களிலே எழுமானால் அதற்கு விடையாக ஒன்றுமில்லை என்ற பதில்தான் வரும். ஆனால் தமிழுக்காக ஒன்றுமே செய்யாத ஈ.வே. ராமசாமி நாயக்கர் ஆங்கிலத்திற்காக நிறைய செய்திருக்கிறார். இதை நாம் ஆதாரம் இல்லாமல் சொல்லவில்லை. மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு ஒரு கடிதம் எழுதினார். அதிலிருந்து பல தகவல்களை நாம் அறிந்து கொள்ளலாம். இதோ அந்த கடிதம்!

தமிழ் நாட்டுத் தந்தை ஈ.வே.ரா. பெரியார் அவர்கட்கு ஞா. தேவநேயன் எழுதுவது, வேண்டுகோள்.

அன்பார்ந்த ஐயா,

வணக்கம்.

தாங்கள் இதுவரை அரை நூற்றாண்டாகக் குமுகாயத்(சமுதாய) துறையிலும் மதத்துறையிலும் தமிழ்நாட்டிற்கு செய்து வந்த அரும்பெருந்தொண்டு அனைவரும் அறிந்ததே. ஆயின் மொழித்துறையில் ஒன்றும் செய்யவில்லை. ஒரு நாட்டு மக்கள் முன்னேறும் ஒரேவழி அவர் தாய்மொழியே. ஆசிரியப் பயிற்சிக் கலைக்கல்லூரி தாங்களே ஒன்று நிறுவினீர்கள். ஆங்கிலக் கலைக்கல்லூரி ஒன்றிற்கு ஐந்திலக்கம் உரூபா மானியமாக உதவினீர்கள். இந்நாட்டு மொழியாகிய தமிழை வளர்க்க ஒரு கல்லூரியும் நிறுவவில்லை.

ஆதலால், தாங்கள் பெயர் என்றும் மறையாமலும் தங்கள் தொண்டின் பயன் சிறிதும் குறையாமலும் இருத்தற்குக் கீழ்க்காணுமாறு பெரியார் தென்மொழிக் கல்லூரி எனச் சென்னையில் ஒரு கல்வி நிலையம் இயன்ற விரைவில் நிறுவுமாறு தங்களை வேண்டுகிறேன்.

அன்பன்
ஞா. தேவநேயன்.

குறிப்பு:- திருவள்ளுவர் ஆண்டு 2000 ஆடவை கங-ஆம் பக்கத்தில் 25-06-1969 அன்று இதன் சுருக்கம் வேலூர் நகர சபைத்தலைவர் திரு.மா.பா.சாரதி அவர்களின் தம்பி மகன் திரு.அன்பழகன் திருமண விழாவிற்குத் தலைமை தாங்கிய பெரியார் அவர்களிடம் என்னால் நேரிற் கொடுக்கப்பெற்றது. இன்னும் மறுமொழியில்லை.

ஞா.தே.
(தென் மொழி. 7:10, 11 பக்கம்-22-24)
(நூல்:- பாவாணர் வரலாறு)

இந்த கடிதத்திலிருந்து நமக்கு தெரிவதென்ன? ஈ.வே. ராமசாமி நாயக்கர் மொழித்துறையில் அதாவது, தமிழுக்காக ஒன்றும் செய்யவில்லை என்று, நாம் கூறவில்லை; தமிழுக்காக தன் வாழ்நாள் எல்லாம் உழைத்திட்ட பாவாணர் கூறுகிறார். இத்தனைக்கும் பல ஆண்டுகள் பாவாணர் ஈ.வே. ராமசாமி நாயக்கருடன் இணைந்து சமூகப் பணியாற்றியவர். ஈ.வே. ராமசாமி நாயக்கர்தான் தமிழக மக்களின் மூடநம்பிக்கைகளை ஒழித்திட்டவர் என்றெல்லாம் பாராட்டிய பாவாணர் தான் ஈ.வே.ரா. மொழித்துறையில் ஒன்றுமே செய்யவில்லை என்று கூறுகிறார்.

மேலும் ஆங்கில கலைக்கல்லூரிக்கு ஈ.வே.ரா ஐந்திலக்கம் ரூபாய் கொடுத்துள்ளார். தமிழ்வழிக் கல்லூரிக்கு அல்ல. தமிழுக்கு ஒன்றுமே செய்யாத ஈ.வே.ராவைத்தான் தமிழுக்காகப் பாடுபட்டவர் என்று சொல்லித் திரிகின்றோம். இது வெட்கக்கேடான விஷயமல்லவா!

இதிலே கவனிக்கப்பட வேண்டிய மற்றொரு விஷயம், பாவாணர் கடிதத்தை நேரில் கொடுத்தும் ஈ.வே. ராமசாமி நாயக்கரிடமிருந்து பதில் இல்லை. ஈ.வே.ராவுக்கு தமிழ்மொழிமேல் பற்று இருந்தால்தானே பதில் கடிதம் அனுப்புவார்? அவரிடமிருந்து பதில் எதிர்பார்த்தது மலடியிடம் பிள்ளையை எதிர்ப்பார்ப்பது போல்.

ஈ.வே. ராமசாமி நாயக்கர் தமிழ்மொழியை மட்டும் வெறுக்கவில்லை. தமிழ்ப் புலவர்களைக் கூட வெறுத்தார். சங்ககாலப் புலவராகட்டும் அல்லது அவருடன் வாழ்ந்த பகுத்தறிவுப் பாசறையில் வளர்ந்த கவிஞர்களாகட்டும் – அவர்கள் தமிழ் புலவர்களாக, கவிஞர்களாக இருந்தால் அவர்களின் மேல் ஈ.வே.ராக்கு வெறுப்புத்தான் இருக்கும்.

தொல்காப்பியர், திருவள்ளுவர், கம்பர் போன்ற சங்ககாலப் புலவர்களை ஈ.வே.ரா. எப்படியெல்லாம் திட்டினார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

அதேப்போல் பாரதிதாசனும், பட்டுக்கோட்டை அழகிரிசாமியும் ம. பொ. சிவஞானமும் ஈ.வே. ராமசாமி நாயக்கரின் வெறுப்புக்குத் தப்பவில்லை. இவர்கள் ஆதரிப்பவர்களையும் ஈ.வே. ராமசாமி நாயக்கர் வெறுத்தார். அந்த உண்மைகளைச் சற்றுப் பார்ப்போம்.

பாரதிதாசனுக்குப் பணம் எதற்கு?

bharathidasan_01பாட்டின் மூலம் நாட்டின் மறுமலர்ச்சிக்குத் தேவையான பகுத்தறிவுச் சிந்தனையையும், தனித்தமிழ்ப் பற்றையும் வளர்த்த பெருமை பாவேந்தர் பாரதிதாசனையே சாரும். அவரை சிறப்பிப்பது தமிழன்னையைச் சிறப்பிப்பது போன்றதாகும் என்று அண்ணா கருதினார். ஆகவே தோழர்கள் முல்லை முத்தையா, டி.என். இராமன் முதலானோரின் ஓத்துழைப்புடன் கவிஞருக்கென ரூ. 25,000 ரூபாய் திரட்டப்பட்டது.

28.07.1946 ஆம் ஆண்டு ஞாயிறு அன்று நாவலர் ச. சோமசுந்தர பாரதியார் தலைமையில் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் பாரதிதாசனுக்கு பொற்கிழி வழங்கப்பட்டது.

பகுத்தறிவுவாதிகளுக்கெல்லாம் அன்று ஒரே சந்தோஷம்.

ஏன் தெரியுமா?

சுயமரியாதை இயக்கத்தின் புரட்சிக்கவி என்று பாராட்டப்பட்ட பாரதிதாசன் அவர்களது தமிழுக்கு அங்கீகாரம் பெற்ற விழா எனலாம் இதனை! அதோடு மாற்றார் எவ்வளவு இருட்டடிப்புச் செய்திடினும் எங்களாலும் பணம் சேர்த்து முடிப்பு அளிக்க முடியும் என்பதை உணர்த்திய விழா.. சுயமரியாதைக்காரன், நாஸ்திகன் என்று ஏளனமாகக் கருதப்பட்டவர்களுக்கும் ஒரு கவிஞன் உண்டு. அவன் புரட்சிக் கவிஞன் என்றெல்லாம் சொல்லி ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.

ஆனால் ஒரே ஒரு தலைவருக்கு மட்டும் இதில் உடன்பாடு இல்லை. அவர் யார் தெரியுமா?

ஈ.வே. ராமசாமி நாயக்கர்தான்.

அவருக்குத்தான் இதில் சற்றும் உடன்பாடு இல்லை. ஈ.வே. ராமசாமி நாயக்கர் ‘‘பாரதிதாசனுக்கு என்ன வந்தது? இரண்டு பாட்டுப் பாடிவிட்டால் ஒரு புலவர். அவருக்கெல்லாம் பண முடிப்பு. இதற்கெல்லாம் அண்ணாத்துரையின் முயற்சி. எதற்கும் கேட்டுச் செய்ய வேண்டாமோ’’ என்று கண்டித்தார்.

(நூல்: பேரறிஞர் அண்ணாவின் பெருவாழ்வு – மறைமலையான்)

பாரதிதாசனுக்கு பணமுடிப்பு என்று சொன்னவுடன் ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு எவ்வளவு வெறுப்புப் பாருங்கள். இவருக்கு பணமுடிப்பு கொடுத்தால் சந்தோஷமாக ஏற்றுக் கொள்வார். ஆனால் பாரதிதாசனுக்கு பணமுடிப்புக் கொடுத்தால் வெறுப்பைக் கக்குவார்.

கேட்டுச் செய்ய வேண்டாமோ என்று கேட்கிறார். கேட்டிருந்தால் கண்டிப்பாக ஓத்துக் கொண்டிருக்கமாட்டார் என்பதை அவரது பேச்சிலிருந்தே தெரிந்து கொள்ளலாம். மேலும் ஈ.வே. ராமசாமி நாயக்கரும் பல விஷயங்களை கழகத்தவரை, முக்கியமாக அப்போது பொதுச் செயலாளராக இருந்த அண்ணாதுரையை, கேட்காமலேயே செய்திருக்கிறார். 1947-ஆகஸ்ட்டு 15ம் நாள் திராவிடருக்குத் துக்கநாள் என்று ஈ.வே. ராமசாமி நாயக்கர் எவரையும் கலக்காமல் அறிக்கைவிட்டார். தன்னுடைய திருமணம் போன்ற விஷயங்களில் கூட கழகத்தவரை கேட்காமலேயே செய்திருக்கிறார்.

அதனால் கேட்டு, செய்ய வேண்டாமோ என்ற கேள்வியை கேட்க ஈ.வே. ராமசாமி நாயக்கருக்குத் தகுதியில்லைதானே!



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

ஈவேரா அரைகுறை மனிதர் என்பதே உண்மை. குறுகிய பார்வையும், அனைத்தையும் பார்ப்பன எதிரிக் கண்ணோட்டதிலுமே பார்க்கத் தெரிந்தவருக்கு நேர்மை, நியாயமான பார்வை என்பது கிஞ்சிற்றும் இல்லை என்பதே அவரது தமிழ், வள்ளுவர், கண்ணகி, பாரதி, இஸ்லாம் போன்ற கருத்துக்களில் தெளிவாகின்றது.

இன்றைக்கு ’மச்சி அவ துப்புனா எச்சி’ என்று பேசிய டி. ராஜேந்தருக்கு கை தட்டியவர்களைப் போலவே பெரியாருக்கும் தட்டினார்கள் என்பதே உண்மை.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

பெரியசாமி on June 22, 2013 at 6:18 am

பெரியார் ஒரு குழப்ப வாதி. கள்ளுக்கடை மறியல், மதுவிலக்கு என்று சொல்லிக்கொண்டு , காங்கிரஸ் என்ற கட்சியில் இருந்தபோது , தனக்கு சொந்தமான தோப்புக்களில் இருந்த தென்னை மற்றும் பனை மரங்களை ஆயிரக்கணக்கில் வெட்டி சாய்த்தவர். அவை என்ன பாவம் செய்தன ? தென்னை மரம் தேங்காய், ஓலை, இளநீர் ஆகிய பலனுள்ள பொருட்களை தருகிறது. பனைமரத்தில் இருந்து நுங்கு, பனை வெள்ளை, கருப்பெட்டி, பனங்கற்கண்டு ஆகியவை கிடைக்கின்றன. ஆனால் இவற்றை எல்லாம் கருதிப்பார்க்காமல் , பெரியார் என்ன சொன்னார் என்ன செய்தார் ? மரம் இருந்தால் தான் கள்ளு இறக்குவான் : எனவே மரத்தை எல்லாம் வெட்டு என்றார். எவ்வளவு அறிவுக்களஞ்சியம் ? அது சரி மனிதர்களில் சிலரோ பலரோ அடிக்கடி தவறு செய்கிறார்கள் என்பதற்காக , மனித இனம் இருந்தால் தானே தவறு செய்ய முடியும்? எல்லா மனிதர்களையும் கொன்று விடு என்று சொல்வது சரியா ? பெரியார் ஒரு பெர்வெர்ட். மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போட்ட கோமாளி. அவ்வளவு தான். திருவள்ளுவரைப்பற்றி சஞ்சய் மேலே கூறியுள்ள பெரியாரின் கட்டுரை ஒரு கோமாளியின் குழப்பமே ஆகும். இந்து மதத்தில் பல நீதிக்கதைகள் உள்ளன. நீதிக்கதைகள் உண்மை நிகழ்ச்சியா என்று யாருக்கும் தெரியாது. சஞ்சய் போன்றோர் சுயமாக சிந்திக்க வேண்டும். இந்து மதத்தின் சிறப்பு என்ன வென்றால் , நீங்களே உங்களுக்கு தேவையானவற்றை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம் என்பது தான். நீங்கள் அடிமை அல்ல. உங்களுக்கு சரியானதை, சிந்தித்து தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். நீங்களே புதிய முறைகளை உருவாக்கலாம் என்று நமது உபநிஷதத்தில் சொல்லப்பட்டுள்ளது. நிற்க, பெரியார் எனக்கு மூடர்கள், முட்டாள்கள் மட்டுமே தேவை என்றார், நீங்கள் முட்டாளா அல்லது மூடரா ? அவர் கருத்தை படித்தால் நீங்கள் மூடரே என்று நீங்களே முத்திரை குத்திக்கொள்வது போலாகும். தெளிவு பெறவேண்டுமானால் தமிழ் இந்துவில் வெளியாகியுள்ள அரவிந்தன் நீலகண்டன், ஜடாயு, அம்மா ஜெயஸ்ரீ சாரநாதன், வெங்கடேசன் ஆகியோரின் அனைத்து கட்டுரைகளையும் படித்துவிட்டு, நீங்களே உண்மையை தேடுங்கள். உங்களுக்கு உண்மையை அறியும் பாக்கியம் கிடைக்கும். வாழ்க்கை மிக மிக இனிமையானது. ஆனால் மனித வாழ்க்கை மிக மிக கேவலமானது என்ற கண்ணோட்டத்திலேயே பெரியார் பார்க்கிறார். அவர் எப்போதுமே தவறான பாதைகளை காட்டி சமுதாயத்தை கெடுத்தவர். குளம் ஊரில் உள்ள பொதுமக்கள் எல்லோரும் பயன்படுத்துகிறார்கள். குளத்தில் பாசியும், குப்பை கூளங்களும் அதிகம் பிளாஸ்டிக் பைகளும் மிதக்கின்றன என்றால் நாம் என்ன செய்யவேண்டும் ? ஒரு பத்து பேரை சேர்த்துக்கொண்டு, குளத்தில் இறங்கி பாசி , குப்பைகள், மற்றும் உள்ள அசுத்தங்களை சுத்தம் செய்ய வெளியே எடுத்து எறியவேண்டும். அதை செய்யாமல் குளக்கரையில் நின்று கொண்டு , இந்த குளம் ஒரே குப்பையாக இருக்கு என்று சொல்லிக்கொண்டு ஒரு 94 வருடகாலத்தி வீண் செய்தவர் தான் பெரியார். சஞ்சய் தயவு செய்து சிந்தியுங்கள் என்று இருகரம் கூப்பி வேண்டுகிறேன்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

sanjay on June 25, 2013 at 12:33 pm

முகம்மது நபியும் – வள்ளுவப் பெரியாரும்

1400 ஆண்டுகளுக்கு முன் அரபு நாட்டில் தோன்றிய முகமது நபி அவர்களும், 2000 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் தோன்றிய வள்ளுவப் பெரியாரும் அடிப்படைத் தத்துவத்தில் சமமான சீர்திருத்தவாதிகளேயாவர்.

நபிகள் நாயகம் அவர்கள் மக்களுக்குப் போதித்த நல்லறிவுக் கருத்துகளும், வள்ளுவப் பெருந்தகையார் மக்களுக்குப் போதித்த அறிவுக் கருத்துகளும், ஒரே தன்மையுடையன என்றே கூறலாம். நபிகள் நாயகம் அரபு மக்களின் காட்டுமிராண்டித்தன்மையை எதிர்த்துப் போராடி, அறிவுக் கருத்துக்களை நாட்டில் பரப்பினார்.

வள்ளுவப் பெருந்தகை ஆரிய மக்களால் தமிழகத்தில் புகுத்தப்பட்ட காட்டுமிராண்டித் தன்மைகளை எதிர்த்துப் போராடி அறிவுக் கருத்துகளை மக்களிடையே பரப்பினார்.

நபிகள் நாயகம் அவர்கள் கடவுள் நம்பிக்கை கொண்டவர். வள்ளுவப் பெருத்தகையார் அறிவு நம்பிக்கை கொண்டவர். நபிகள் நாயகம்கடவுளால் தனது கொள்கைகளை மக்களுக்கு அறிவுறுத்த தூதராக அனுப்பப்பட்டவர் என்று சொல்லப் பட்டவர்.

வள்ளுவப் பெருந்தகையார் கடவுள் ஒருவர் இருப்பதாகவோ, கடவுளுக்கும் தனக்கும் யாதாவதொரு சம்பந்தம் இருப்பதாகவோ சொல்லவேயில்லை; கருத்துக் கொண்டிருப்பதாகக் காட்டவும் இல்லை.

நபிகள் நாயகம் தன் கருத்தில், தனது உபதேசத்தில் வெற்றி பெற்றார். பல கோடி மக்களைத் தன்னைப் பின்பற்றுபவர்களாகவும், சிஷ்யர்களாகவும் கொண்டு ஒரு மாபெரும் மதத் தலைவராகவும் ஆனார்.

வள்ளுவப் பெருந்தகையோ எவருக்குமே சமயத் தலைவராகவில்லை. தன்னைப் பின்பற்ற தனக்கு சிஷ்யர்களாக ஒருவருமே இல்லாதவரானார்; இதன் காரணம் என்ன என்றால் அரபு நாட்டில் ஆரியன் (பார்ப்பனன்) இல்லை; தமிழகத்தில் (இந்திய நாட்டில்) பார்ப்பனன் எல்லாத் துறையிலும், மற்ற மக்களை அடிமைப்படுத்தி ஆதிக்கங் கொண்டு இருந்ததே, இருப்பதே ஆகும். தமிழ் நாட்டில் மாத்திரமே வள்ளுவரைப் பாராட்டுவோர் சிலர் (இப்போது சற்று அதிகமானவர்கள்) உண்டு என்றாலும், அவர்கள் வள்ளுவரைப் பின்பற்றுபவர் என்று சொல்லி விட முடியாது.

பாராட்டுகிறவர் என்று வேண்டுமானால் சொல்லலாம். நபிகள் நாகயக்தை முஸ்லிம் மக்கள் எல்லோரும் கடவுளின் தூதர் என்றே கருதி பக்தியும், பயமும் மரியாதையும் காட்டி வருவதோடு, நாயகத்தைப் பின்பற்றி வழிபடுவதாகவே கூறுகிறார்கள்.

வள்ளுவப் பெருந்தகையாரைத் தமிழகத்தில் வள்ளுவர் கொள்கைக்கு எதிரியான சைவன், தன் சமயத்தவர் என்று சொல்லி அவரது பெருமையைக் கெடுத்தான்.

வள்ளுவப் பெருந்தகையாகரைத் தமிழகத்தில் சைவனாவது – வைணவனாவது நாயன்மார்களைப் போன்றோ, ஆழ்வார்களைப் போன்றோ கூட எவனும் கருதுவதில்லை. சைவனுக்குத் தேவாரம், திருவாசம், பெரியபுராணம் முதலிய பக்தி நூல்களும் புராணங்களும்தான் சமய ஆதாரமாகவும், சமய வழிபடு நூல்களாகவும், வைணவனுக்கு இராமாயணம், பாரதம், பாகவதம், நாலாயிரப் பிரபந்தம் முதலிய பக்தி நூல்களும், புராணங்களும்தான் சமய ஆதாரங்களாகவும், சமய நூல்களாகவும் இருக்கின்றனவே ஒழிய, இவர்களுக்குச் சமயத் தலைவரோ, சமயத் தலைவர் கூறிய ஒழுக்க நூல்களோ காண்பதற்கு இல்லை; மற்றும் நபிகள் நாயகத்தைப் பின்பற்றுவோருக்குக் கடவுள் உண்டு; கடவுள் கட்டளை உண்டு; அக்கடவுளிடம் ஒழுக்கம், உயர்வு உண்டு.

சைவர், வைணவர் ஆகியோருக்கும், வள்ளுவப் பெருந்தகையைப் பாராட்டுவோருக்கும் ஒரே கடவுள் இல்லை; ஆனால் பல கடவுள்கள் உண்டு; அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு தன்மையும், பெயரும், நடப்பும் கொண்டதாகும் என்பதோடு, கடவுள்களுக்கும், ஒழுக்கம் என்பவற்றிற்கும் சிறிதும் சம்பந்தமே இல்லாத தன்மை உடையனவாகவே இருக்கும். கடவுளிடம் ஒழுக்கம் இருப்பதாகச் சொல்லலாம்; ஆனால் நடத்தையில் இருக்காது.

நபிகள் நாயகம், ஒரே ஆண்டவன் உண்டு; அவன் ஊர்பேர் உருவம்,பிறப்பு இறப்பு,விருப்பு வெறுப்பு வேண்டியது வேண்டாதது இல்லாதவன் என்று சொன்னதோடு, இருப்பதாகச் சொல்லுவது, பாபம்,தவறு, அறியாமை மடமை என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்.

சைவனும், வைணவனும், வள்ளுவரைப் பாராட்டுகிறவனும் நபிகள் நாயகம் சொன்ன கடவுள் தன்மைக்கு மாறாகப் பல கடவுள்களையும், அவற்றிற்குப் பல உருவங்களையும், பல பிறப்புகளையும், இறப்புகளையும், விருப்பு வெறுப்புகளையும், மனைவி மக்களையும், மற்றபடி கொலை, கூடாஒழுக்கம் முதலிய பாதகச் செயல்களையும், மற்றும் பல காட்டுமிராண்டித்தனமான குணங்களையும், நடப்புகளையும் கொண்டவைகளாகக் கற்பித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

சிவனோ, விஷ்ணுவோ, பிரம்மாவோ மற்றும் சைவ, வைணவ சமயத்தவர் கடவுள்களாகக் கருதும் மற்றவர்களோ கடவுள்கள் அல்ல; தேவர்களே ஆவார்கள் என்பதுதான் அவர்களைப் பற்றிய ஆதாரங்கள், வேத, சாஸ்திரங்கள் கூறுவனவாகும்.

ஏனெனில், இவர்கள் எல்லோரும் மேற்கண்ட ஒரு கடவுளை ஒரு கடவுள் வணங்கியதாகவும், அவைகளைக் குறித்து தவம் செய்ததாகவும், ஒருவரிடம் ஒருவர் வரம் பெற்றதாகவும், ஒருவரிடமிருந்து ஒருவர் தோன்றியதாகவும், ஒருவரை ஒருவர் தோற்றுவித்ததாகவும், மற்றும் பல ஆபாச காரியங்கள் செய்ததாகவும் கூறப்பட்டிருக்கின்றன. இப்படிக் கூறி இருப்பதானது வேத, சாஸ்திர, உபநிஷத், புராண இதிகாசங்களிலேயே ஒழிய, சமய விரோதிகளாலோ, வேறு சமயத்தார்களாலோ அல்ல; நபிகள் நாயகத்தைப் பின்பற்றுவதாகக் கூறி இஸ்லாம்களாக இருக்கிற மக்கள் யாவரும் நபிகள் நாயகம் சொன்னபடி நடப்பதாகவும், நாயகம் நடந்தபடி நடப்பதாகவும் சொல்லி நடித்து வருகிறார்கள். ஆனால் சைவனோ, வைணவனோ, வள்ளுவப் பெருந்தகையாரைப் பாராட்டிப் போற்றுபவனோ, அவரவர் கடவுள்கள் சொன்னது போலவோ, நடந்தது போலவோ நடப்பது கிடையாது; நடிப்பதும் கிடையாது. சாம்பலைப் பூசிக் கொண்டால் சைவன் செம்மன், களி மண் பூசிக் கொண்டால் வைணவன்; குறளில் இரண்டு பாட்டைப் பாடிவிட்டால் குறளன் என்று ஆகிவிடுகிறார்கள்.

ஆனால், அதோடு கூடவே சிவன், விஷ்ணு முதலான கடவுள்களை அடைய எப்படிப்பட்ட கொலைபாதகச் செயலையும், ஒழுக்கம் கெட்ட செயலையும் செய்யலாம் என்கின்ற எண்ணத்தையும், நடத்தையையும் கொண்டவர்களாகவே பெரும்பாலான சைவர்கள், வைணவர்கள் நடந்து வருகிறார்கள்; நடக்க ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.

நபிகள் நாயகம் அவர்கள் பக்தி, அன்பு, – ஒழுக்கம் ஆகிய மூன்றையும் ஆண்டவன் கட்டளையாக அறி-வுறுத்தியிருக்கிறார். இன்று பெரும்பாலாக நாம் காணும் முஸ்லிம்களிடம் பக்திதான் அதிகமாக இருக்கிறது. அன்பும் ஒழுக்கமும் இருக்கின்றது என்றாலும், பக்தி இருக்கின்ற அளவில் 10 இல் 100 இல் ஒரு பங்கு கூட காண முடியாது. இப்படி இருப்பது முஸ்லிம்களிடையே மாத்திரம் அல்ல; இது மனித ஜீவ இயற்கையே ஆகும். எப்படி எனில் பக்திக்காகப் பொருள் நட்டமோ, ஆசை பங்கமோ அவசியமில்லை. உதாரணமாக 5 வேளைத் தொழுகையின் மூலம் பெரிய பக்தியைக் காட்டி விடலாம். இதற்குப் பொருள் நட்டம் அடைய வேண்டிய அவசியமில்லை; ஆனால் விவகாரம் கூடாது; திருட்டு கூடாது; மோசடி கூடாது; பொய் கூடாது; பித்தலாட்டம் கூடாது; உபகாரம் செய்ய வேண்டும்; அன்பு காட்ட வேண்டும் என்பன போன்ற விஷயங்களைக் கடைப் பிடிப்பதனால் இதில் பொருள் நட்டமும், லாபக் குறைவும், ஆசைப் பங்கமும், மனக்குறையும் (முதலிய பல) ஏற்படுகின்றன. இதனாலேயே உலகில் ஒழுக்கமுடையவர்களை விட பக்தர்களும், பக்திமான்களும் உலகில் மலிந்து கிடக்கிறார்கள். ஒழுக்க உபதேசிகளைவிட பக்தி உபதேசிகள் ஏராளமாய் கிளம்பிவிடுகிறார்கள். முஸ்லிம்களும் மனிதர்களே ஆதலால் மனிதத் தன்மையை அவர்களுக்கும் புகுத்தினேன்.

வள்ளுவப் பெருந்தகையார் கடவுளையோ, பக்தியையோ காட்டவில்லை; ஒழுக்கத்தையும், அறிவையுமே அதிகமாக முக்கியமாகக் காட்டியுள்ளார். நபிகள் நாயகம் அவர்களும் அறிவைப் பெருமைப்படுத்தி இருக்கிறார்; என்றாலும், தான் சொன்னவற்றை எல்லாம், அறிவைக் கொண்டு ஆராய்ந்து பார்; அறிவுக்கு ஏற்றால் ஏற்றுக்கொள்; இல்லாவிட்டால் தள்ளிவிடு என்று சொல்லவில்லை. ஏனெனில், நாயகம் தாம் சொல்லுவதாக எதையும் சொல்லவில்லை. எல்லாம் பெரிதும் ஆண்டவன் சொல்லச் சொன்னதாகப் பொருள்படும்படியாகவே சொல்லியிருக்கிறார். ஆண்டவனால் சொல்லச் செய்தவைகளை மனிதன் அறிவைக் கொண்டு ஆராய்ந்து பார்ப்பது என்றால், அப்போது ஆண்டவனின் கருத்து என்ன ஆவது? என்கின்ற பிரச்சினை எழும்.

ஆதலாலேயே இஸ்லாத்தில் அறிவுக்கு மதிப்பு இருந்தாலும், நபிகள் நாயகம் சொன்னவற்றிலும், குர் ஆனில் சொல்லப்படுபவைகளிலும் அய்யம் கொண்டோ, தெளிவு ஏற்படவில்லை என்றோ, ஆராய்ச்சி செய்ய எந்த முஸ்லிமும் கருதக்கூடாது; அல்லது முயலக்கூடாது என்பது முஸ்லிம்களின் கொள்கைகளில் ஒன்று; (அது) அமலில் இருக்கிறது. அதற்கு மற்றும் ஒரு காரணம் என்னவென்றால் ஆண்டவன் சொன்னதாகச் சொல்லப்படுபவை எல்லாம் அறிவுக்குப் பொருத்தமானது என்பது மாத்திரமல்லாமல், எக்காலத்திற்கும் பொருத்தமானது என்றும் கருதப்படுகிறது.

அவை இன்றைக்கு யாருக்கு எப்படிப்பட்டாலும், அவை நல்ல எண்ணத்தோடும், உண்மையான நம்பிக்கையோடும், மக்கள் பால் உள்ள மெய் அன்போடும் சொல்லப்பட்டவை என்பதை எந்த அறிவாளியும் ஒப்புக் கொண்டே தீருவான். வள்ளுவப் பெருந்தகையார் ஆண்டவன் எனக்குச் சொல்லி உனக்குச் சொல்லச் சொன்னான் என்று சொல்லாவிட்டாலும், அவர் தமக்குச் சரி என்று பட்டதையும், (தாம்) உண்மை என்று கருதியதையும் மக்களுக்கு நலம் பயக்க வேண்டும் என்ற எண்ணத்தின் மீதே பல கூறியிருக்கிறார். என்றாலும்,

யார் யார் வாய்க் கேட்பினும், அவற்றின் மெய்ப் பொருள் காண்பது மனிதன் கடமை என்றும், எது பற்றியதாயினும் மெய்ப்பொருள் காணவேண்டியது மனிதனின் கடமை என்றும் கூறியிருக்கிறார். இவர் மாத்திரம் அல்லாமல் புத்தர் பெருமான், நான் சொல்வதைக் கூட நம்பி ஏற்றுக் கொள்ள வேண்டாம்; உன் ஆராய்ச்சி, அறிவு, என்ன சொல்லுகிறதோ அதை ஏற்றுக் கொள்; நம்பு என்றார். இவர்கள் ஏன் இப்படிச் சொன்னார்கள் என்றால், இவ்விருவரும் தாங்கள் மனிதர்கள் என்று தங்களை முடிவு செய்து கொண்டதோடு, மனிதத் தன்மையை உணர்ந்தவர்கள். ஆதலால் தங்கள் கருத்து என்கின்ற தன்மையில் பேசி இருக்கிறார்கள். அன்றியும் தங்களுக்கு மேற்பட்ட ஒரு கடவுள் இருந்து கொண்டு தங்களை நடத்துகிறார்; தங்களைச் சொல்லச் சொல்லுகிறார் என்கின்ற நம்பிக்கை இல்லாதவர்கள்; இருப்பதாகக் கூறாதவர்கள்.

எப்படி இருந்தாலும், நபிகள் பெருமானும், வள்ளுவப் பெருந்தகையாரும் மக்கள் நல்வாழ்வுக்கு ஆகவேண்டிய கருத்துகளை – காரியங்களை நல்ல எண்ணத்துடன் எடுத்துக் கூறியவர்களேயாவார்கள். மதவேறுபாட்டால் பெரியோர்கள் எல்லாம் மதவாதிகளாகக் கருதப்படுபவர்களாக ஆகிவிட்டதால், மக்கள் யாவருமே மதக்காரர்களாகப் பிரிவினைப்பட்டவர்களாகி விட்டதால், ஒருவர் சொன்னதை அவர் மதக்காரர் அல்லாதவர் சரியானபடி மதிப்பதில்லை; கொள்ளுவதும் இல்லை. இதற்கு மற்றொரு இயற்-கைச் சங்கடம் என்னவென்றால், இப் பெரியார்கள் சொன்னவை எல்லா மக்களுக்கும், எக் காலத்திற்கும் பொருத்தமானது; ஏற்றுக் கொள்ளத் தக்கது என்கின்ற வாதமாகும். இந்த வாதம் இயற்கைக்கு முரண்பட்டதாகும். காலம் மாறுதல் அடையத்தக்கது; இயற்கை சக்திகள் என்பவை எல்லாம் மாறுதல் அடையத் தக்கவையாகும்; அவற்றிற்கு ஏற்பக் கருத்துகளும் மாறும் இயல்புடையதாகும்.

எனவே, மாற்றம் ஏற்படவேண்டும் என்று சொல்லப்படுவதாலேயே பெரியார்களுடைய கருத்துகள் தவறுடையதாக ஆகிவிடாது.

– தந்தை பெரியார் ,”விடுதலை”, 19-8-1955



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard