New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கருணாநிதியும் மதியிழந்த சமூகமும். ஆபாசமும் வெறுப்பரசியலும்.


Guru

Status: Offline
Posts: 24601
Date:
கருணாநிதியும் மதியிழந்த சமூகமும். ஆபாசமும் வெறுப்பரசியலும்.
Permalink  
 


 

கருணாநிதியும் மதியிழந்த சமூகமும். ஆபாசமும் வெறுப்பரசியலும்.

 
கருணாநிதி என்கிற சகாப்தம் முடிந்துவிட்டது. 70 ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழக மற்றும் இந்திய அரசியலிலும் ஓர் பெரும் சக்தியாக விளங்கியவர் மறைந்துவிட்டார். 94 வயது வரை வாழ்ந்து ஓர் யுகத்தின் அடையாளமாக இருந்தவர் ஓய்ந்துவிட்டார். ஆம் அவர் ஒரு வரலாறு தான். ஆனால் வரலாற்றின் சிக்கலே அவர் வாழ்வின் ஏற்றத் தாழ்வுகளும் அவரின் ஏற்றத் தாழ்வுகளும் தான். கடந்த ஒரு வார காலமாகத் திகட்டத் திகட்ட அவரைப் புனிதராக்கி விட்டார்கள். வாசகர்கள் பயப்பட வேண்டாம் நான் ஒன்றும் அவர் வாழ்வின் ஓவ்வொரு தருணத்தையும் பிரித்து மேய்ந்து வரலாறு எழுதப் போவதில்லை. 2016 மாநிலத் தேர்தலுக்கு முன் எழுதிய பதிவு மிக விரிவானது (சுட்டி கட்டுரையின் முடிவிலுள்ளது) . ஆனால் சில உண்மைகளை மீண்டும் சொல்ல வேண்டும். இந்த மரணம் உறுதிப் படுத்திய உண்மைகளை எடுத்துரைக்க வேண்டும்.

நல்லவை:


முதலில் நல்லவை சில. கருணாநிதி ஊக்கத்தோடு செயல்பட்டிருந்தால் இப்படி நடக்கவிட்டிருப்பாரா என்று எண்ணிய சமீபத்திய தருணம் வைரமுத்துவின் ஆண்டாள் சர்ச்சையின் போது. வைரமுத்து கிட்டத்தட்ட அநாதையாகியிருந்தார் அவரை மிக மிகக் கீழ்த்தரமாக எட்டுத் திக்கிலிருந்தும் பிராமணர்கள் தாக்கினார்கள். சிவாஜியை மரணத்துக்குத் தள்ளியது ஜெயலலிதா அவர் குடும்பத்தைப் படுத்திய பாடு. சிவாஜி இறந்த போது கருணாநிதி ஆட்சியில் இல்லை. இரங்கல் தெரிவிக்க வந்தவர் சிவாஜியை உடலைப் பார்த்து அழுது "போறதுன்னு முடிவாயிடுச்சுன்னா நான் ஆட்சியில் இருக்கும் போது போயிருக்கலாமே" என்றார். ஆம், அவர் ஆட்சியில் இருக்கும் போது சிவாஜி இறந்திருந்தால் அரசு மரியாதையே செய்திருப்பார். சிவாஜிக்கு கொடுத்து வைக்கவில்லை.

கருணாநிதியின் உழைப்பு அசாத்தியமானது. கடவுளோ இயற்கையோ எதுவோ அவருக்கு நீண்ட ஆயுளையும் கிட்டத்தட்ட இறப்பதற்கு ஒரு வருடம் முன்பு வரையிலாவது நல்ல செயல்பாட்டுடன் இருக்கும் அறிவுத் திறன் இருந்தது. அவரின் நினைவாற்றல், கூர்மையான சாதுர்யம், அரசியல் சதுரங்க ஆட்டம், நிர்வாகத் திறன், போராட்ட குணம், தோல்விக் கண்டு துவளாமை என்று எந்தச் சராசரி மனிதனும் வியக்கும் குண நலன்கள் உண்டு அவரிடம். எங்கோ ஒரு கிராமத்தில் மிகத் தாழ்ந்த ஜாதியில் பிறந்து இன்று கோடிக்கணக்கானோர், அதுவும் பல தலைமுறைகள், கண்ணீர் சிந்த வாழ்க்கைப் பயணம் முடிவடைவது மாபெரும் சாதனை.

ஏன் இந்தப் பதிவு:


ஒரு மரணம் என்பது ஒரு வாழ்க்கையின் பயணத்தை நேர்மையோடு தொகுத்துப் பார்க்கத் தூண்டும் நேரம். தமிழ் நாட்டிலோ மரணம் என்பது புனிதர்களை உருவாக்கும் தருணங்களாகிவிட்டது. ஜெயலலிதா இறந்த போது "இரும்பு மனுஷி இறந்தார்" என்று அலறினப் பத்திரிக்கையெல்லாம். இன்று அதே பத்திரிக்கைகள் வேறு விதமாகக் கூவுகின்றன. ஜெயலலிதா பற்றி நீண்ட கட்டுரை எழுதியிருக்கிறேன் அவரின் நல்லவை, அல்லவைகளைப் பட்டியலிட்டு. அது அவர் 2014-இல் கைதானப் போது எழுதியது. அவர் இறந்த போது இப்படிப் பிரத்தியேகமாக எழுதத் தோன்றவில்லை. அதற்கான காரணம் இணையத்தில் திமுகவுக்கு இருப்பது போல் அதிமுகவுக்குக் கம்பு சுத்த அவ்வளவாக யாருமில்லை, மேலும் ஜெயலலிதாவை யாரும் இன்று கருணாநிதியைப் புனிதராக்குவது போல் ஆக்கவில்லை. ஜெயலலிதா இறந்த போது அவர் மீதான ஊழல் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டில் இருந்தது எல்லோர் மனத்திலும் எழுத்திலும் தெரிந்தது. இன்று அப்படியல்ல. அதற்கு மேலாக ஜெயலலிதா இறந்த போது பார்க்காத சில அவலங்களை இப்போது பார்க்க நேர்கிறது ஆகவே எழுதுகிறேன்.

ஒரு விளக்கம்


மேலும் படிப்பதற்கு முன் ஒரு விளக்கம். சிலர் நினைப்பது போல் கருணாநிதி 'மருத்துவர் பிள்ளைகள் மருத்துவர் ஆகக் கூடாது' என்ற பிரகடனத்தோடு கொண்டு வந்த பட்டம் பெறாத பெற்றோறின் பிள்ளைகளுக்கு மொத்த மதிப்பெண்ணோடு 5 மதிப்பெண் இலவசம் என்ற மோசடித் திட்டத்தால் பாதிக்கப்பட்டதால் அவர் மீது வன்மமெல்லாம் இல்லை. இன்று நான் சுபிட்சமாகவே இருக்கிறேன். கனவுக் காணும் உரிமைகளற்ற முன்னேறிய வகுப்பினன் என்பதால் +2 படிக்கும் போதே மருத்துவமோ பொறியியலோ எது கிடைக்கிறதோ அதைப் படிக்க வேண்டும் என்ற தெளிவிருந்தது. ஆகா "நீ சமூக நீதிக்கு எதிரானவன்" என்று யாரும் மூக்கை சிந்த வேண்டாம். சமூக நீதிப் போராளிகளில் எத்தனை பேர் இரண்டாம், மூன்றாம் தலைமுறை பயனாளர்கள், எத்தனை பேர் போலி சான்றிதழளாளர்கள் என்பது ஊரறியும். 1996-இல் கருணாநிதி ஜெயிக்க வேண்டும் என்று எண்ணாதவர்கள் இல்லை. நானும் ஒருவன். கல்லூரி மேடைகளில் அக்காலத்தில் ஜெயலலிதாவை விமர்சித்தே தான் பேசியிருக்கிறேன். 2001-லும் திமுகவே ஜெயிக்க வேண்டும் என்று விரும்பினேன் ஏனென்றால் தர்மபுரி பஸ் எரிப்பெல்லாம் பார்த்ததால். நம்ப முடியாதவர்கள் நம்பத் தேவையில்லை. சரி அந்த 5-மார்க் விவகாரம் தான் காரணம் என்றாலும் என் விமர்சனம் பொய்யாகிவிடுமா? நான் வைக்கும் தர்க்கங்களை முறிக்க என் உந்துதல் பற்றிய ஆராய்ச்சித் தேவையில்லாதது முடிந்தால் உங்கள் பக்கத்துத் தர்க்கங்களை முன் வையுங்கள், தர்க்க ரீதியாக.

தரம் தாழ்ந்த 'தி இந்து' பத்திரிக்கை: 


'தி இந்து' பத்திரிக்கை குறித்து ஜவஹர்லால் நேரு தன் சுயசரிதையில் கூறுகிறார், "இந்தியர்கள் நடத்தும் ஆங்கிலப் பத்திரிக்கைகளி 'தி இந்து' அளவுக்குச் சிறப்பானது வேறில்லை. அப்பத்திரிக்கை வரம்பு மீறிய குறும்பான சொல் ஒன்றைக் கேட்டால் முகம் சுளிக்கும் கண்டிப்பான ஒழுக்கமுடைய மூதாட்டியைப் போன்று எனக்குத் தோன்றும். அது வாழ்வில் மேட்டுக்குடிகளுக்கானது. ஏற்றத் தாழ்வுகள் ஊடைய வாழ்வின் நிழற்பக்கங்கள் அதுக்கு ஒவ்வாதது. வேறு பத்திரிக்கைகளும் இந்த ஒழுக்கமான மூதாட்டி மனநிலையோடு செயல்படுகின்றன ஆனால் அவை 'தி இந்து' போல் சிறப்பாக இல்லை" (roughly translated).

கருணாநிதிக்கும் இந்துப் பத்திரிக்கைக்கும், இன்னும் சொல்லப் போனால் பிராமணர்களுக்கும், என்றும் ஓரு அன்பும்-கடிதலும் மாறி மாறி வரும் உறவுண்டு. அவருக்குப் பிடிக்காதது அல்லது அவரை விமர்சித்தால் இந்துப் பத்திரிக்கையை 'மவுண்ட் ரோடு மஹா விஷ்ணு' என்பார். அவரைப் பாராட்டி இந்துப் பத்திரிக்கை தலையங்கம் தீட்டினால் 'உடன் பிறப்பே இந்துப் பத்திரிக்கையே சொல்கிறது' என்று புளங்காகிதம் அடைவார். அவர் மகள் கனிமொழி ஒரு காலத்தில் இந்துவில் தான் பணியாற்றினார். என்.ராம் அடிக்கடி திமுக மேடைகளில் தோன்றுவார். 'இந்து' பத்திரிக்கை கருணாநிதியை விட ஜெயாவோடு தான் அதிகம் மோதியது.

கருணாநிதி இறந்தவுடன் முரசொலியோடு போட்டிப் போட்டது 'தி இந்து'. 'தமிழ் தி இந்து' சமஸ் புண்ணியத்தில் எப்போதோ முரசொலியை விஞ்சிவிட்டது. மொரார்ஜி, இந்திரா ஆகியோரை சமாளித்த கருணாநிதி என்றொரு கட்டுரை. கர்மம். மிகச் சாதாரணச் சொல்லாடல்களை என்னமோ சாக்ரடீஸ் ரேஞ்சுக்குக் கொண்டாடியிருந்தது. சரி அது தான் தொலயட்டும் என்றால் கருணாநிதி 'நேருவின் மகளே வருக நிலையான ஆட்சித் தருக' என்று அரசியல் ஆதாயத்துக்காக அடித்த அந்தர் பல்டியை அது கேவலமான அரசியல் பிழைப்புவாதம் என்ற விமர்சனம் இல்லாமலே கடந்து சென்றது. ஆனால் அதையெல்லாம் விஞ்சியது ஒரு நிகழ்வைப் பற்றிய நினைவுக் கூறல்.

எமெர்ஜன்ஸி காலத்தின் போது சிறைப்பட்ட திமுகவினர் வீடுகளுக்கு ரூ.200 அனுப்பி வைத்தாராம் மாதா மாதம். பிற்காலத்தில் ஏதோ ஒரு விழாவில் ஆபாச நாராச பேச்சுகளுக்குப் பெயர் போன வெற்றிக் கொண்டான் "என் வீட்டுக்கு மட்டும் ரூ.100 தான் வந்தது என்று என் மனைவி சொன்னாள்" என்றாராம். அடுத்துப் பேசிய முத்தமிழ் அறிஞர் "அதற்குக் காரணம் உன் இரண்டாவது மனைவிக்கு அடுத்தப் பாதி ரூ.100 அனுப்பப்பட்டது. இரண்டு பெண்டாட்டி கஷ்டம் எனக்குத் தெரியும்" என்றாராம். இந்த அசிங்க கர்மத்தை 'தி இந்து' வெளியிட்டுக் கொண்டாடியிருக்கிறது. இதுக்குப் பேசாமல் பத்திரிக்கையை மூடி விட்டு 'வண்ணத் திரை' நடத்தலாம்.

இலங்கைப் பிரச்சினையில் கருணாநிதி வாழ்நாள் போராளி என்றும் கடைசிக் காலத்தில் தவறாகப் புரிந்துக் கொள்ளப்பட்டவர் என்றும் ஒரு கட்டுரைச் சொன்னது. கருணாநிதியைப் பொறுத்தவரை பல விஷயங்கள் 'பொய்யாய், பழங்கதையாய் மெல்ல மெல்லப் போனதுவே தான்'. தமிழ் மொழி, இலங்கைப் பிரச்சினை எல்லாமே ஆரம்பத்தில் கொள்கை, சித்தாந்தம் என்று தான் ஆரம்பிக்கும் அப்புறம் பாதி வழிக்கு மேல் அது வெறும் பிழைப்புவாதமாகி இருக்கும். 1980-களில் இலங்கைப் பர்ச்சினை அவருக்கு அரசியல் சித்து விளையாட்டுக்குத் தான் பயன் பட்டது. அதற்கு மகுடம் வைத்தது அந்த 2009 உண்ணாவிரதம் என்கிற கூத்து. நடப்பதோ இன்னொரு நாட்டின் உள்நாட்டுப் போர். இவரோ மாநில அரசியல் தலைவர். இவர் உண்ணாவிரதம் இருந்தாராம், மத்திய அரசு இலங்கையோடு பேசியதாம், போர் நிறுத்தம் ஏற்பட்டதாம், இவர் உண்ணாவிரதத்தைக் கலைத்தாராம். இதை விட அத்தைக்கு மீசை முளைத்தது பார் என்று சொல்லியிருக்கலாம். இதையெல்லாம் உடன் பிறப்புகள் விடலைத்தனமாக நரம்பு புடைக்கச் சொல்லலாம் ஒரு பத்திரிக்கை அதைச் செய்யலாமா?

கருணாநிதியின் தமிழ் சினிமா வசனத்தின் வசீகரம் போல் கட்டமைக்கப்பட்ட பிம்பம் வேறொன்றுமில்லை. 'மனோகரா' தர்பார் வசனத்தைப் பேப்பரில் எழுதிப் படித்துப் பாருங்கள். வெறும் குப்பை. 'உன் குடலை உருவிடுவேன். உன் எலும்ப நொறுக்கிடுவேன், எங்க ஆத்தா மேல சத்தியம், அந்த அவுசாரிய என்ன பன்றேன் பாரு' இது தான் அந்த நெடிய வசனத்தின் சாரம். குப்பை. இவர் 'நான் தென்றலைத் தீண்டியதில்லை தீயைத் தாண்டியிருக்கிறேன்' என்பார். கண்ணதாசன், 'தென்றலை நாம் தீண்ட முடியாது அதுவாக நம்மைத் தீண்டினால் தான் உண்டு' என்று கிண்டலோடு திருத்துவார். சும்மாவாச்சும் 'விதவை என்று எழுதினால் கூடப் பொட்டு வைக்க முடிவதில்லையே' என்று யாரோ புலம்ப இவர் 'விதவை என்ற வடமொழிச் சொல்லுக்குப் பதிலாகக் கைம்பெண் என்ற தமிழ் சொல் பயன்படுத்தினால் ஒன்றுக்கு இரண்டு பொட்டு வைக்கலாம்' என்று சொன்னதை இன்னமும் கண்ணீர் மல்க உடன் பிறப்புகள் குறிப்பிடுவார்கள். கர்மம். இது தான் நம்மவர்களுக்குத் தமிழ்ப் புலமை.

வெள்ளித் திரைக்குத் திராவிடக் கருத்தியலைக் கொண்டு சென்றாராம். தலையில் அடித்துக் கொள்ள வேண்டும். 'பொறுத்தது போதும் பொங்கி எழு' என்று கண்ணாம்பா உருகிப் பேசும் வசனம் மடமையும் மூட நம்பிக்கையும் போட்டிப் போடும் வசனம். சிலப்பதிகாரத்தைக் கிட்டத்தட்ட மதமாகவே மாற்றினார் கருணாநிதி. அதுவோ அவர் பார்வையில் சொன்னால் மூட நம்பிக்கைகள் கொண்ட சமணக் காவியம். அதை எதிர்த்திருக்க வேண்டியவரே அவர் தான்.

இன்னொரு கட்டுரை கருணாநிதி நடத்திய 2010-ஆம் ஆண்டுச் செம்மொழி மாநாட்டை ஆகா ஓகோவென்று புகழ்கிறது. அது வெறும் தண்டம். மக்கள் வரிப்பணத்தைத் தற்பெருமைக்காக வாரியிறைத்தார் தன் வாழ் நாளெல்லாம் தமிழை வைத்துப் பிழைப்பு நடத்தியவர். அதே நாட்களில் நான் தஞ்சையில் இருந்தேன். எம்ஜியார் கட்டினார் என்பதற்காகவே தஞ்சைத் தமிழ் பல்கலைக் கழகத்தைச் சீரழிய விட்டிருந்தார் இந்தத் தமிழ்ப் போராளி. பல்கலைக் கழகம் சிதிலமடைந்திருந்தது அப்போது. அதெல்லாம் மவுண்ட் ரோடில் உட்கார்ந்து கொண்டு காலாட்டிய படியே கட்டுரை எழுதும் ராமகிருஷ்ணன்களுக்குத் தெரியாது. கருணாநிதியின் பிள்ளைகள் ஆங்கில வழிக் கல்வி தான் பயின்றனர் அதுவும் நகரின் விலையுயர்ந்தப் பள்ளிகளில்.

ஜெயகாந்தன் முன்பு அண்ணாதுரை பற்றிப் பேசியது:

"பாமரத்தனமான நாடகங்களும், மெளடாகத்தனமான பகுத்தறிவு வாதங்களும், தமிழறிவில்லாத, ஆனால் தமிழார்வமுடைய மக்களின் மூடத் தமிழ்ப் பற்றினாலும் பார்ப்பன எதிர்ப்பு என்னும் ஓர் அநாகரிக நடைமுறையினாலும், காங்கிரஸ் எதிர்ப்பு, வடவர் எதிர்ப்பு என்னும் கொச்சை அரசியலினாலும் ஏதோ ஒரு ஜனக்கும்பலை வசீகரிக்கிற அண்ணாதுரை எனது கவனத்தைக் கூடத் தன்பால் இழுத்ததில்லை"

அது இன்றும் கருணாநிதிக்கும் பொருந்தும். கலைஞர் விருதை பின்னாளில் கருணாநிதியிடம் இருந்து பெற்றுக் கொண்ட ஜெயகாந்தன் மேற்சொன்ன எதையும் பின் வாங்கவில்லை. கருணாநிதி கொடுத்தார் ஜெயகாந்தன் வாங்கிக் கொண்டார். அவ்வளவு தான்.

'தி இந்து' பத்திரிக்கை ஆசிரியர் திமுக மாவட்டச் செயலாளர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

கருணாநிதியின் கவித் திறனும் ஆபாச மனமும்: 


கருணாநிதிக்கு இல்லாதது கவித் திறன். அபாரமாக இருப்பதோ இரட்டை அர்த்தம், இல்லையில்லை அதெல்லாம் விடலைகள் செய்வது, நேரடியாக ஆபாசமாகப் பேசுவது. இணையத்தில் பிரபலமாக இருக்கும் அவர் படிக்கும் கவிதை ஒன்றை ஒரு தற்குறி இன்று ஒரு பேட்டியில் பெருமைப் பொங்க குறிப்பிட்டார். மேற்கொண்டு படிப்போருக்கு ஓர் எச்சரிக்கை இது சரோஜா தேவி வகை. கருணாநிதி விவகாரமாச்சே.

கவிதையை, அப்படித்தான் அதைச் சொல்கிறார்கள், கேட்டால் எம்ஜியார் காலத்தில் ஏதோவொரு இடைத் தேர்தலில் தோற்றப் பிறகு நடத்தப்படும் திமுக முப்பெரும் விழாவில் படித்தது, தோற்றவர்கள் ஏன் விழா எடுக்கிறார்கள் என்று யாரோ கிண்டல் செய்திருக்கிறார்கள் அதற்குப் பதில் சொல்லும் விதமாகக் கவிதை என்ற பெயரில் ஒன்றை படிக்கிறார் முத்தமிழ் ஆசான்.

பின்னாளில் இவரும் இவர் மகனும் கட்டவிழ்த்துவிட்ட 'திருமங்கலம் பார்முலா' எம்ஜியார் காலத்து இடைத் தேர்தல் தில்லுமுல்லுவையெல்லாம் சிறு பிள்ளை விளையாட்டாக்கியது. அந்தக் கவிதையில் எம்ஜியார் என்னமோ தில்லாலங்கடிச் செய்துவிட்டார் என்பதைக் குறிப்பிட்டு எம்ஜியாரின் பெயரான ராமச்சந்திரனை சிலேடையாக்கி ராமனின் வாலி வதத்தோடு முடிச்சுப் போட்டிருப்பார். என்ன செய்வது நம்மவர் தரத்துக்கு அது தான் சிலேடை. அதற்குப் பின் தான் கச்சேரி களைக் கட்டும். இப்படித் தோல்வியுற்றப் பின் ஏன் விழா எடுக்கும் மனோபாவம் என்பதற்கு விவரிக்கத் தொடங்குகிறார், "படுக்கையில் இருந்தேன், அப்போது பக்கமது நெருக்கமாகப் படுத்துக் கொண்டு, வெட்கமது சிறிதுமில்லாமல், என்னை ஒருத்தி ஓடி வந்து தழுவிக் கொண்டாள்". அப்போது திமுக விடலைகளின் சீட்டி சத்தமும் கரவொலியும் காதைப் பிளக்கிறது. மேலும், "அவளை அள்ளி அணைப்பதற்கு நான் முயலவில்லை என்றாலும், தள்ளிவிட மனமில்லை, தழுவட்டும் என்றிருந்தேன், அதன் பின்னர் மற்றொருத்தி வந்தாள்". அரங்கம் அதிர்கிறது இப்போது. அநேகமாகப் பல உடன் பிறப்புகள் உச்சம் எய்தியிருப்பார்கள். "என்ன இது இரு மங்கை ஒரு படுக்கை எனக் கேட்பீர், பொறுத்திடுக". கூட்டம் கெக்கலிக்கிறது. "முதலில் வந்தவள் பெயர் தூக்கம், மற்றொருத்தி கனவு மங்கை". ஆஹா இதல்லவோ தமிழ்ப் புலமை. இவனல்லவோ நமக்கு வாய்த்திட்ட 20-ஆம் நூற்றாண்டு கவிச் சக்கரவர்த்தி என்கிறார்கள். அற்பர் கூட்டம். மூடர் கூடம்.

ஒரு வசன வரியை ஒரு முறைக்கு இரு முறை ஒவ்வொரு வரியையும் படித்தால் அதுவே அதைக் கவிதையாக்கிவிடும் என்று எந்தச் சண்டாளனோ அவரிடம் சொல்லிவிட்டான். ஒவ்வொரு வரியையும் இரண்டிரண்டு முறை படிக்கிறார். ஒரு வேளை திமுகத் தற்குறிகளுக்குச் சரோஜா தேவி மேட்டர் என்றாலும் இரண்டு முறை சொன்னால் தான் புரியும் என்று நினைத்தாரோ அந்தப் புண்ணியவான்?

இன்னொரு காணொளி இருக்கிறது. சுந்தர்.சி படத்தைப் பார்த்துவிட்டுப் பேசுவது. 80-களில் இளமைத் துள்ள வேண்டும் என்று மனப்பால் குடிக்கும் ஒருவரின் வயோதிக-வாலிப பேச்சு. அப்போது அவர் முதல்வர். இவர் மட்டும் முழு நேர எழுத்தாளராகியிருந்தால் சரோஜா தேவி என்ற அந்தப் புனைப் பெயர் இவருடையதோ என்று எண்ணும் அளவுக்குக் காத்திரமான படைப்புகள் வந்திருக்கும்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
RE: கருணாநிதியும் மதியிழந்த சமூகமும். ஆபாசமும் வெறுப்பரசியலும்.
Permalink  
 


பகுத்தறிவு மாய்மாலம்:


ஒருவர் எழுதுகிறார் கலைஞரை இந்து மத ஆச்சாரங்கள் எதையும் செய்யாமல் நாத்திகராகவே அனுப்பி வைத்தார்களாம். அந்த அம்மணிக்குத் தெரியாது இறந்த ஒருவருக்கு பூ வைத்து அவரை நோக்கித் தொழுவது நாத்திகம் இல்லை. 'பிணத்தினைப் போற்றேல்' என்கிறான் நம் ஆசான் பாரதி. உடன் பிறப்புகள் 'எழுந்து வா' என்று கூக்குரலிட்டார்களாம் அவர் ஆயுள் நீண்டதாம். இது தான் பகுத்தறிவு மாய்மாலம் என்பது. பகுத்தறிவு என்பது மரணத்தின் நிச்சயம் உணர்வது. அதுவும் 94-வயது முதியவர் இறக்கலாம் எனும் போது வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு ஒப்பாரி வைப்பது பகுத்தறிவு அல்ல. கருணாநிதி நல்ல ஆத்திகர். அவர் கடவுள்கள் ஈ.வெ.ராவும் அண்ணாதுரையும்.

வெறுப்பரசியல்: 


கருணாநிதியை மெரினா கடற்கரையில் புதைப்பதில் சிக்கல். மாநில செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், பிராமணப் பெண், அங்கே புதைக்க அனுமதிப்பு சட்ட சிக்கல்கள் நிறைந்தது என்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அவ்வளவு தான் இணையம் தகித்தது. அவருக்கு நகரின் மையத்தில் இரண்டு ஏக்கர் நிலம் தருவதாகச் சொல்லப்பட்டது. 'கக்கூஸ்' என்ற ஆவணப் படம் எடுத்து அதனாலேயே தனக்குப் பின் ஒரு ஒளிவட்டம் இருப்பதாக நினைத்துக் கொள்ளும் திவ்யா பாரதி என்பவர், "நிங்க ஒதுக்கறதா சொன்ன அந்த இரண்டு ஏக்கர் நிலத்துல எடப்பாடிக்கும் கிரிஜாவுக்கும் வேணும்னா சமாதி கட்டி விளையாடுங்க" என்று எழுதினார். அதற்குப் பின்னூட்டத்தில் வந்தவற்றுள் ஒன்று, "கழுகளுக்குப் பசியாற கொடுக்கலாம்". இங்கே இந்தத் திரியில் வந்து பதவிசாக இப்படியெல்லாம் எழுத வேண்டாமே என்று வருடிக் கொடுத்த நாச்சியாள் சுகந்தி என்பவரின் பேஸ்புக் பக்கமும் அந்த லட்சணத்தில் தான் இருந்தது.

யமுனா ராஜேந்திரன் என்றொருவர் பார்ப்பனர்கள் மற்றும் பார்ப்பன அடிமைகளைத் தவிர எல்லோரும் ஒன்று திரண்டு விட்டார்களாம் கலைஞரின் பின்னால் என்றார். அப்புறம் என்ன தலைமுடிக்கு அந்தக் கட்சி தொடர்ந்து மூன்று தேர்தலில் தோற்றது? இதை மறு பகிர்வு செய்த ஜெயகாந்தனின் பெண் 'Spot the Hyenas' என்கிறார். பாவம் அவருக்கு என்ன பிரச்சனையோ.

எல்லோரும் தத்தம் புகைப்படம் எல்லாம் போட்டு இதையெல்லாம் பகிரங்கமாகவே பேசுகிறார்கள். இன்னொரு பத்திரிக்கையாளர், பிரண்ட்லைனில் வேலைச் செய்பவர், குருமூர்த்தியை ஒரு துளி விஷம் என்றார். சரி அவர் ஒரு துளியென்றால் அவரால் விஷமாக்கப்பட்டதாகச் சித்தரிக்கப்படும் பால் குடம் என்ன பிராமணர்கள் அனைவருமா? அப்படியென்றால் அவர்களை அவர் என்ன செய்வதாக உத்தேசம்? கொலைக் களனா? பிராமணர்களில் சிலராவது கருணாநிதியை நாராசமாகப் பேசியிருக்கிறார்களா? நிச்சயமாக. ஆனால் நான் பார்த்த வரை யாரும் கருணாநிதி ஒரு துளி விஷம் என்று சொல்லி அவர் சார்ந்த ஜாதியினரை ஒட்டு மொத்தமாக விஷம் என்று உருவகிக்கவில்லை.

தமிழ் நாட்டில் பிராமணர்கள் மட்டுமே ஜாதி வெறியர்களாகவும் ஆண்டப் பெருமை பேசுபவர்களாகவும் இருந்திருந்தால் இந்நேரம் தமிழகம் ஜாதியற்ற சமூகமாகியிருக்கும். ஆனால் கீழ் வெண்மணி முதல் தர்மபுரி வரை நிதர்சனமும் உண்மையும் வேறு.

உண்மையிலேயே எந்தக் கூச்சமோ அருவருப்போ இல்லாமல் பிராமணர்களை ஆபாசமாக வசைப் பாடுகிறார்கள். கடந்த ஒரு வாரமாகத் தமிழில் எழுதப் பட்ட பேஸ்புக் குறிப்புகளைத் தொகுத்து அயலான் ஒருவன் ஆராய்ந்தால் தமிழ் நாடு உலகின் மிகப் பெரிய மன நோய் விடுதி என்றும் நாஜி ஜெர்மனி போன்றது என்றும் நினைப்பான். ஐயா வாசகரே, பிராமண வாசகர்களையும் சேர்த்தே சொல்கிறேன், நான் ஒன்றும் பிராமணர்கள் யூதர்கள் என்றோ அவர்களைப் போல் ஒடுக்கப் பட்டார்கள் என்றோ சொல்லவில்லை. இங்கு நான் சொல்வது புழங்கும் வெறுப்பைத் தான்.

சக மனிதன் தன்னைத் தொடக் கூடாது என்று ஒருவன் நினைக்கக் கூடாது அப்படி நினைப்பதும் செய்வதும் வன்முறையே அது கேவலம் என்று நினைப்பவன் நான். அதே மாதிரி ஒருவனின் குலத்தை வைத்து "சமாதியில் போடு" என்பதும் கழுகு தின்னட்டும் என்பதும் மிருக நிலை. இப்படி வெளிப்படையாக ஒரு இனத்தை வெறுப்பதை அவர்களை இப்படிப் பேசுவதையும் பெருமையாக நினைக்கும் மன நோய் வேறெங்கும் இல்லை. இது தான் ஈ.வெ.ராவும், அண்ணாதுரையும், கருணாநிதியும் நெய்யூற்றி வளர்த்த வெறுப்பரசியல்.

பொது வெளியில் கருணாநிதியின் ஜாதியை எள்ளி நகையாடிப் பேசியது வைகோவும் காடுவெட்டி குருவும். பிராமணர்களல்ல. அதையெல்லாம் கண்டிக்கவோ சுட்டிக் காட்டவோ துப்பில்லாதவர்கள் தான் என்னமோ பிராமணக் குலமே ஒன்று திரண்டு கருணாநிதிக்கு எதிராக நிற்பதைப் போல் பிம்பம் உருவாக்குகிறார்கள். தமிழ் நாட்டில் ஒருவன் எத்தகைய கயவனாகவோ முட்டாளாகவோ மூர்க்கனாகவோ இருக்கலாம் ஆனால் அத்தனை பாவத்தையும் கழுவி புண்ணியம் தேடித் தரத்தக்க தாரக மந்திரம் 'பார்ப்பண எதிர்ப்பு'. இரண்டு வரியாவது 'பார்ப்பான்', 'பாப்பாத்தி' என்று எழுதி விட்டால் போதும் ஒருவனோ ஒருத்தியோ எவ்வளவு முட்டாள் தனமான கருத்தையும் சமூக நீதி என்று முலாம் பூசி விற்று விடலாம்.

பிராமணர்கள் சத் புத்திரர்களா என்றால் நிச்சயமாக இல்லை. இன்று மோடிக்கு ஜால்ரா அடிக்காத இந்துத்துவத் தமிழ் பிராமணர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அவர்களுக்கு இரண்டு வரியாவது சிறு பான்மையினரை ஆபாசமாக எழுதி விட்டால் போதும் ஒருவனோ ஒருத்தியோ எவ்வளவு முட்டாள் தனமான கருத்தையும் தேசியம் அல்லது பாரம்பர்யம் என்று முலாம் பூசி விற்று விடலாம். ஆனால் அதைக் கண்டிக்கும் உரிமை திராவிட இயக்க வெறுப்பு வியா

கழகக் கண்மணிகமள் "ஆகா நிலம் எங்கள் உரிமை. இறந்த பிறகும் என் தலைவன் போராட வேண்டியிருக்கிறதே" என்று ஆர்த்தெழுந்தார்கள். சோகமான உண்மை இதற்குச் சில தலித்துகளும், திருமாவளவன் உட்பட, இதில் சேர்ந்துக் கொண்டார்கள். ஐயா நியாயமாரே, அவருக்கு இரண்டு ஏக்கர் நிலம், பல நூறு கோடி பொறுமானுள்ளதை, அரசாங்கம் அளித்தது. நிலம் இங்குப் பிரச்சினையல்ல. பிரச்சனை எந்த இடம் என்பதில். புதைக்க இடமில்லாத ஒடுக்கப்பட்டவர்களையும் கருணாநிதியையும் ஒன்றாக்கி ஒடுக்கப்பட்டவர்களை அவமதிக்காதீர்கள்.

கருணாநிதியை திருமா சிறுது விமர்சித்தாலும் "எங்கள் தலைவர் திருமாவை சமமாக உட்கார வைத்துப் பேசியவர்" என்று உடன் பிறப்புகள் குத்தலாகச் சொல்லும் போதெல்லாம் சினம் கொள்வோர் கூட இரண்டு நாட்களாகக் கலைஞர் அப்படி, கலைஞர் இப்படி என்று உருகுகிறார்கள். அயோத்திதாசர் இருட்டடிப்பு செய்யப்பட்டாரே என்று மனம் வெதும்பியவர்கள் பெரியாரின் தலைமைப் புரோகிதருக்காக நெக்குரிகியது ஆச்சர்யம்.

கருணாநிதி நீண்ட நாள் வாழ்கிறார், அவர் எதிரிகள் பலரும் இறந்து கொண்டிருந்தார்கள் என்பதாலேயே உடன் பிறப்புகள் "அவர் எதிரிகளுக்கு அவர் இரங்கற்பா எழுதுவார்" என்று அருவருப்பாகச் சொல்வார்கள். இப்படிப்பட்ட கேவலமான பேச்சுகள் வேறு எங்கும் நான் கேள்விப்பட்டதில்லை. இது தான் திராவிட இயக்கத்தின் கலாசாரம். இன்று அவர் இல்லை ஆனால் அவரை விமர்சிப்பவர்களில் பலர் இருக்கிறார்கள்.

பெருந்தேவி என்பவர், கவிஞராம், பிராமணர் கூட, தன் பங்குக்கு எதையோ காட்டமாகக் கருணாநிதிக்கு ஆதரவாக எழுதியிருந்தார். இப்போது அவர் பேஸ்புக் பக்கமே இல்லை. போகன் சங்கர், அவரும் கவிஞர், இந்தியாவில் கேரளாவைத் தவிர வேறெங்குச் சென்றாலும் தமிழனாகப் பெருமையாக உணர்கிறாராம் அதற்குக் கலைஞரே காரணம் என்கிறார். ஐயா கவிஞர் கவிதாயினிகளே கடந்த 25 வருடங்களாகத் தமிழ் நாட்டை ஜெயாவும் கருணாவும் மாறி மாறித் தான் ஆண்டிருக்கிறார்கள். ஆகப் பெருமையைச் சரி பாதியாகப் பகிர்ந்துக் கொடுக்கவும். ஒரு வேளை இலக்கியவாதியாகி விட்டால் வரலாறு மறந்து விடுமோ? அல்லது வேறு ஏதும் கஷ்ட காலமோ என்ன எழவோ. 1947-67 20 வருட காங்கிரஸ் ஆட்சி. 1967-77 பத்து வருடம் திமுக. 1977-87 அதிமுக. அப்புறம் 25 வருடத்துக்கு ஒருவர் மாற்றி ஒருவர். இது தான் வரலாறு. பூனைக்குக் கண்ணாடி மாட்டினால் மட்டும் போதாது பூனை கண்ணையும் திறந்துப் பார்த்தால் தான் காட்சித் தெரியும்.

கீழிருக்கும் இந்தப் புகைப்படம் எப்போதும் என்னை உறுத்தும். முன்னர் எழுதிய பதிவில் இருந்து, "கருணாநிதி இடம் பெற்றிருக்கும் புகைப்படங்களிலேயே மிகவும் அருவருக்கத் தக்கது என்றால் நான் தயங்காமல் கீழிருக்கும் படத்தைச் சொல்வேன். கட்சிக்கு நிதி சேர்ப்பது எல்லோரும் செய்வது. பாவம் பல தொண்டர்கள் தங்களிடம் இருக்கும் கடைசிக் காசையும் கட்சி நிதிக்காகக் கரைத்த கதைகள் ஏராளம். அப்படிச் சேகரித்த பணத்தைக் கிரீடமாக்கி தலைவனுக்கு முடி சூட்டி அகமகிழ்ந்து இளித்துக் கொண்டு நிற்கும் இந்த அற்பர்களுக்குத் தெரியுமா இந்தச் சுதந்திரமும் ஜனநாயகமும் கிடைக்க என்ன விலைக் கொடுக்கப் பட்டதென்று? "தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா?" இந்த அற்பர்களின் கட்சியிலா ஜனநாயகம் வாழ்கிறது. ஜனநாயகம் என்பதைப் பற்றிப் பேசும் அருகதையற்றவர்கள்"
 
 
                                              thumb_IMG_1068_1024.jpg
 
 
 

முடிவுரை: 


கருணாநிதி ஒரு பேரியக்கத்தின் தலைவராகவும் அதன் தளகர்த்தராகவும் 50-ஆண்டுகளுக்கு மேலாக இருந்துள்ளார். அவ்வியக்கம் பற்றியோ அவரைப் பற்றியோ நேர்மையாகவும் எல்லா ஏற்றத் தாழ்வுகளையும் தீர்க்கமாகவும் கூற இன்று வரை ஒரு நல்ல நூல் இல்லை. தயவு செய்து யாரும் எனக்கு ஆர்.முத்துகுமாரின் நூலை பரிந்துரைக்க வேண்டாம்.

கருணாநிதி மற்றும் திராவிட இயக்கத்தின் பெரும் பாதிப்பாக நான் பார்ப்பது பொது வாழ்வில் கயமை, அரசியல் பிழைப்புக்காக எதையும் செய்வது, கலாசார அடிப்படைவாதம், பகுத்தறிவு என்ற பெயரில் முட்டாள் தனங்கள். And a culture of mediocrity and crassness. எல்லாவற்றையும் விட அந்த மிக மிக அருவருப்பான வெறுப்பரசியல். என்னால் புரிந்துக் கொள்ளவே முடியாதது அது தான். இதில் துயரம் என்னவென்றால் 'பாப்பாத்திகளுக்குத் தான் பார்ப்பன வெறி அதிகம்" என்று எழுதி விட்டு பிராமண நண்பர்களோடு குலாவுவது. இந்த விஷயத்தில் எனக்கு அப்படிச் சொன்னவரின் பிராமண நண்பர்களையும் புரிந்து கொள்ள முடியவில்லை. இதே மாதிரி மிக மிக அருவருப்பாக எழுதும் இந்துத்துவர்களிடமும் பலர் பேஸ்புக்கிலும் நேரிலும் நட்பாகவே இருக்கிறார்கள். இது எப்படிச் சாத்தியமாகிறது? இது என்ன மன நிலை? எனக்குப் புரியவில்லை.

கருணாநிதியை மெரினாவில் புதைக்க அனுமதி என்ற செய்தி கிடைத்தவுடன் உடைந்து அழும் மு.க.ஸ்டாலின் காட்சி உருக்கமானது. நான் பெற்றோரைப் பிரிந்து தனி வாழ்க்கை ஆரம்பித்து 20 வருடமாகி விட்டது ஆயினும் அப்பா இறந்த பின் அவரைப் புதைத்து விட்டு வீட்டுக்கு வந்ததும் அங்கிருந்த வெறுமையும் புகைப்படத்தில் இருந்து சிரித்த அப்பாவும் மனத்தை வருத்தியது. இன்றும் அவருக்குப் பிடித்த ஏதேனும் பார்க்க நேர்ந்தால் கண நேரத்தில் நினைவு வந்து வெறுமையும் கூடவே வரும். கோபாலபுரத்தில் இத்தனை பல்லாண்டுகள் வளைய வந்த ஒருவர், அவர்கள் அனைவரின் வாழ்வின் அச்சாணி இன்று முதல் இல்லை. அவர் பிள்ளைகளுக்கு நிச்சயமாக இது வருத்தமான நாள் தான். அவர் தொண்டர்களுக்கும் அவரை ஏதோ ஒரு காரணத்துக்காக மாபெரும் ஆளுமையாகப் பார்ப்போருக்கும் இன்று இழப்பு தான்.

ஆனால், ஜெயகாந்தன் அண்ணாதுரையின் இரங்கலில் சொன்னதைப் போல், இறந்தவர் தனிப்பட்ட மனிதர் அல்லவே.
 
"ஒரு கட்சியைச் சேர்ந்த தலைவரின் மரணம் குறித்து பிற கட்சிக்காரர்களும், மக்களும் தெரிவிக்க வேண்டிய அனுதாபம் ஒரு சமூக நாகரிகமேயாகும். ஆனால், அண்ணாதுரை விஷயத்தில் அது ஒரு சமூக அநாகரிகமாக மாறி, எனது உணர்ச்சிகளை வெகுவாகப் பாதித்திருந்தது."  
              "இறந்துபோன ஒருவரைப் பற்றி அவர் நமது எதிரியாக இருந்தாலும் நாலு வார்த்தை நல்லதாகச் சொல்ல வேண்டும் என்பதை நானும் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் அரசியல் நோக்கம் கருதி வரப்போகும் தேர்தலை மனத்துள் கொண்டு தமிழகத்தில் ஒரு மாயையை உருவாக்குகிற மாரீசத்தனத்தைத் தி.மு.க. தொடர்ந்து செய்வதற்கு அண்ணாதுரையின் பிணத்தையும், அந்தச் சமாதியையும் பயன்படுத்துவதை, பயன்படுத்தப் போவதை அனுமதிப்பது நாகரிகமும் அல்ல; நல்லதும் அல்ல. சமூக ரீதியாக, கலாசார ரீதியாக, அரசியல் ரீதியாக அண்ணாதுரை இருந்தாலும் எனக்கு எதிரிதான்; இறந்தாலும் எனக்கு எதிரிதான். தனிப்பட்ட முறையில் அவர் எனக்கு எதிரியும் அல்ல; நண்பரும் அல்ல. அவரைப் பற்றிய எனது முடிவுகளை ஒரு தனிமனிதனின் மரணத்தின் பொருட்டு நான் கைவிட முடியாது."
 

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

TUESDAY, MAY 10, 2016

Karunanidhi: The Original Sin (கருணாநிதி எனும் ஆதிப் பாவம்)

 
திமுகவுக்கும் எங்கள் குடும்பத்திற்கும் நீண்ட உறவுண்டு. என் இளம்பிராயத்தில் எம்ஜியார் பற்றி எங்கள் வீடுகளில் நல்லதாகப் பேசிக் கேட்க முடியாது. கருணாநிதியின் முந்தைய ஆட்சிக் காலங்கள் மறக்கப்பட்டு நெருக்கடிக் காலத்தில் அவர் பதவி இழந்ததும் அப்போது திமுகவினர் அனுபவித்த அடக்கு முறைகளுமே நினைவில் எஞ்சியிருந்த நிலையில் எம்ஜியாரின் மரணத்திற்குப் பின் 13 ஆண்டு வனவாசத்திற்குப் பிறகு ஆட்சியைப் பிடித்தார் கருணாநிதி. ஆனால் மூன்றாண்டுகளுக்குள்ளாகவே திமுக ஆட்சி டிஸ்மிஸ் செய்யப் பட்டது.

"ஜனநாயக படுகொலை" என்று கூக்குரலிட்டனர் உடன் பிறப்புகள். ஆனால் இப்படி மத்திய அரசை நிர்பந்தித்து மாநில அரசை டிஸ்மிஸ் செய்யும் வழக்கத்தைத் தமிழகத்தில் தொடங்கி வைத்தவர் கருணாநிதியே.

தன்னுடைய அரசை டிஸ்மிஸ் செய்ததோடல்லாமல் தன் மகனையும் கைது செய்த இந்திராவோடு பதவிக்காகக் கைக்கோர்த்து "நேருவின் மகளே வருக நிலையான ஆட்சித் தருக" என்று ஆலவட்டமும் சுற்றி ஆட்சியைக் கைப்பிடித்த இந்திராவை நிர்பந்தித்து எம்ஜியாரின் அரசை டிஸ்மிஸ் செய்ய வைத்தார் கருணாநிதி. ஆதிப் பாவம்.

2006-11 கருணாநிதியின் ஆட்சி அவலமானது. ஒரு தேர்தலை ஜெயிப்பதற்காக ஒரு சமூகத்தையே இலவசங்களுக்கு அடிமையாக்கியதில் இருந்து அவர் அடுக்கடுக்காகச் செய்தவை என்னைத் திமுக மீது தீரா வன்மம் கொள்ளச் செய்தது.

wfUbRmSua4pqDKdA07obdM3E_RO38EB8gVL7TK7H

இலவசமோ இலவசம்

இந்திய அரசியலில் இலவசங்கள் தவிர்க்க இயலாதவை அது தமிழகத்திற்கும் பொருந்தும். இலவச வேட்டி, சேலை, காலணி ஆகியன முதல் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு என்று ஒரு நீண்டப் பட்டியல் தமிழகத்தில் இலவசத் திட்டங்களாக இருந்து வந்தன. அவையெல்லாம் அத்தியாவசியத் தேவைகளை ஏழைகளுக்குப் பூர்த்திச் செய்வனவாக இருந்தன, அல்லது அது தான் குறிக்கோள் என்றாவது சொல்லப் பட்டது. கருத்துக் கணிப்புகளில் திமுகப் பின் தங்குகிறது என்பதை அறிந்து தேர்தலில் எப்படி வெற்றிப் பெறுவது என்று தத்தளித்த திமுகவுக் கைக் கொடுத்தார் பொருளாதாரம் படித்தவர் என்று சொல்லப்பட்ட நாகநாதன். தமிழர்களின் சினிமா மோகம் உலகறிந்தது. அந்தச் சினிமா மோகத்தை நெய்யிட்டு வளர்த்து அதனால் ஆட்சியைக் கைப்பற்றிய திமுகவுக்கு அது பற்றித் தெரியாதா என்ன? அனைவருக்கும் இலவச வண்ணத் தொலைக்காட்சி வழங்கும் திட்டம் உருவானது.

இலவசத் தொலைக்காட்சி

தொலைக் காட்சி என்பது ஆடம்பர பொருளாகவே இருந்து வந்தது அது வரை. மேலும் கேளிக்கைகளையே முதன்மை நிகழ்ச்சிகளாகக் கொண்ட தமிழகத்தில் குழந்தைகளுக்குப் படிப்பின் மீதான கவனத்தைச் சிதறடிக்கும் என்பதும் ஒரு கருத்தாக நிலவிய சமூகத்தில் 'இலவசத் தொலைக் காட்சி' என்று அறிவித்துத் தேர்தலில் மொத்தக் கவனத்தையும் திமுகவின் மேல் திருப்பினார் கருணாநிதி. தேர்தல் அறிக்கையில் மேலும் இலவசங்கள். "திமுகவின் தேர்தல் அறிக்கையே இத்தேர்தலின் ஹீரோ" என்று இறும்பூது எய்தினார் கி.வீரமணி.

இன்று ஜெயலலிதா அறிவிக்கும் இலவசங்களுக்காகக் குதிக்கும் உடன் பிறப்புகள் அன்று எங்கே போனார்கள்? ஆதிப் பாவம். இலவசத் தொலைக் காட்சி திட்டத்துக்கான செலவு பல்லாயிரம் கோடிகள். இட ஒதுக்கீட்டினை கண்மூடித்தனமாக ஆதரிக்கும் திமுக ஆதரவளரான என் உறவினரிடம் கேட்டேன் "எத்தனை பள்ளிகள், கல்லூரிகள் அந்தப் பணத்தில் திறக்கப் பட்டிருக்கலாம். இது தவறில்லையா?" அவர் கூலாக "அது தேர்தலை ஜெயிப்பதற்காகச் செய்ய வேண்டியிருந்தது. அது ஒரு tactic" என்றார் அந்த அமெரிக்க வாழ் உடன்பிறப்பு. நான் மேலும் கேட்டேன் "இது போல் நீ ஆதரிக்கும் ஒபாமா செய்தால் ஒப்புக் கொள்வாயா?" அதற்கும் அவர் அசரவில்லை, உடன் பிறப்பாயிற்றே, "தமிழக வாக்காளனுக்கு இலவசங்கள் தான் புரியும்" என்றார். பொதுவாக இணையத்தில் எனக்கு இந்தியாவை வசைப் பாடுபவன் என்று பெயர். அவரோ இந்தியாவுக்குத் திரும்ப வேண்டும் என்று கனவு காண்பவர். என்னை நன்கறிந்தவர்களுக்குத் தெரியும் என் வசைகள் பெரும்பாலும் ஆதங்கங்களே. எனக்குப் புரியாத முரண் இந்தியாவை நேசிக்கிறேன் என்று சொல்லும் பலர் தாங்கள் மேலை நாடுகளில் எந்த அரசியல் மற்றும் கலாசாரப் பண்பாடுகள் நிமித்தம் நிம்மதியாகவும் செழிப்பாகவும் வாழ்கின்றனரோ அதன் சாயல் கூட இந்திய வாக்காளனுக்கோ, குடிமகனுக்கோ கிடைக்க லாயக்கில்லை என்று ஒரு இரட்டை டம்ப்ளர் முறையைக் கொஞ்சமும் கூச்சமில்லாமல் பின்பற்றுவது தான். இலவசத் தொலைக் காட்சிப் பெட்டிகளுக்குத் தமழன் கொடுத்த விலை ரூபாய் நாலாயிரம் கோடி.

சினிமாவுக்கு வரி விலக்குக் கூத்து

கருணாநிதியின் தமிழ் பற்றுக்குத் தமிழகம் கொடுத்த விலை பல நூறு கோடி ரூபாய்கள். தமிழ் சினிமாக்கள் ஒரு கட்டத்தில் பெரும்பாலாக ஆங்கிலப் பெயர்கள் கொண்டே வெளிவந்தன. தமிழினக் காவலர் துடித்துப் போனார். தமிழில் பெயரிட்டால் வரி விலக்கு என்று அறிவித்தார். சினிமாக்களின் வசனமோ, பாடல்களோ நல்ல தமிழில் இருக்க வேண்டுமென்பதெல்லாம் தேவையில்லை. 'காட்பாதர்' என்று பெயரிட்டிருந்த தன் படத்திற்கு 'வரலாறு' என்று பெயரிட்டார் கே.எஸ்.ரவிக்குமார். அரசு கஜானா சில கோடிகளை இழந்தது அப்படத்திற்குக் கொடுக்கப் பட்ட வரி விலக்கால். அத்திட்டத்தையே கொஞ்சம் மாற்றி ஆங்கிலத்தில் பெயர் வைத்தால் கூடுதல் வரி என்று சொல்லி இருக்கலாமே? இதில் வேடிக்கை என்னவென்றால் முத்தமிழ் அறிஞரின் பேரன்கள் நடத்திய சினிமாத் தயாரிப்புக் கம்பெனிகளின் பெயர்கள் 'ரெட் ஜெயண்ட் மூவீஸ்', 'கிளவுட் நைன்'. அவர் மகன் நடத்திய வீடியோ கடையின் பெயர் 'ராயல் கேபிள் விஷன்', பர்னிச்சர் கடையின் பெயர் 'ராயல் பர்னிச்சர்'.

மேற்சொன்ன இரண்டு இலவசத் திட்டங்களின் விலை மட்டுமே நூற்றுக் கணக்கான பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப் போதுமானவை.

செம்மொழி மாநாடுக் கூத்து

முத்தமிழ் காவலரின் தமிழ்த் தாகம் ஊரறிந்தது. தன்னுடைய தமிழ்ப் பற்றை நிலை நாட்டிட உலகத் தமிழ் மாநாடு என்று அறிவித்தார். அப்புறம் அதில் சிக்கல் என்றவுடன் 'செம்மொழி மாநாடு' என்றார். செலவு 500 கோடி ரூபாய். அம்மாநாட்டால் தமிழுக்கு ஒரு எள் முனையளவுக் கூட உபயோகமில்லை. அம்மாநாடு நடந்த சமயத்தில் நான் தஞ்சை செல்ல நேர்ந்தது. கருணாநிதியால் மலையாளத்தான் என்று இகழப்பட்ட எம்ஜியார் நிறுவிய தஞ்சைத் தமிழ் பல்கலைக் கழகம் சிதிலமடைந்த நிலையில் இருந்தது. பல்கலைக் கழகமே நிதி நெருக்கடியில் தத்தளிப்பதை அறிந்தேன். கருணாநிதி நிறுவிய நூலகத்தை ஜெயலலிதா சீரழித்து விட்டாராம். என் உறவினர் ஆதங்கத்துடன் முறையிட்டார் "நீ புத்தகங்களை நேசிப்பவன், ஆராதிப்பவன், இது தவறில்லையா" என்றார். என் பதில் "வேறு யாராவது கேட்டிருந்தால் கட்டாயமாக இது தவறு என்று தயங்காமல் சொல்வேன். ஆனால் கேட்பது உடன்பிறப்பு ஆகையால் என் பதில் 'அதனாலென்ன'". தமிழ்ப் பல்கலைக் கழகத்தைச் சீரழித்த கருணாநிதியைக் கண்டிக்காதவர்கள் இன்று ஜெயலலிதாவை கண்டிக்க வக்கில்லாதவர்கள். ஆதிப் பாவத்தைக் கண்டிக்காமல் விழுதை வசைப் பாடுவது பாரபட்சம்.
thumb_IMG_1326_1024.jpg
தமிழ் பல்கலைக் கழகத்தின் நுழைவாயில் 2010

விவசாயக் கடன் ரத்து 

வாரியிறைக்கப் பட்ட இலவசங்களில் இன்னொன்று 'விவசாயக் கடன் தள்ளுபடி'. 2006 தேர்தலுக்கு முன்பு என் தந்தையோடு பேசிக் கொண்டிருந்த வங்கி அதிகாரி ஒருவர் சொன்னார் "விவசாயக் கடன்களை வசூலிக்க முடியவில்லை. கடன் வாங்கியவர்கள் 'திமுக ஆட்சிக்கு வந்தால் கடன் ரத்தாகும் ஆகவே தேர்தல் வரை நாங்கள் பணம் தருவதாய் இல்லை' என்கிறார்கள்". பதிவியேற்றவுடன் மேடையிலே கையெழுத்திட்ட முதல் உத்தரவு 'விவசாயக் கடன் ரத்து'. அரசுக்கு 5000 கோடி ருபாய் இழப்பு. விவசாயக் கடன் ரத்தின் சாதக-பாதகங்கள் வேறு விவாதம் ஆனால் அதற்குக் கொடுத்த விலை கணிசமானது.

கல்விக் கடன் ரத்து மேளா

இதோ இத்தேர்தலுக்குக் கவர்ச்சியாக அறிவிப்பு வெளியானது கல்விக் கடன் தள்ளுபடியென்று. இந்தியாவில் வழங்கப்படும் கல்விக்கடன்களில் 50% தென் மாநிலங்களில் இருக்கிறதாம். தமிழகம் கல்விக் கடன்களில் முதலில் நிற்கிறது, 16,380 கோடி ரூபாய். அடுத்த நிலையில் கேரளம், 10,487 கோடி ரூபாய். 16,480 கோடி ரூபாயில் சில ஆயிரம் கோடிகளை ரத்துச் செய்தாலும் அது பல கல்லூரிகள் கட்டுவதற்கான பணத்திற்கு ஈடானது. ஏன் திமுக அறிக்கை 10 அரசுக் கல்லூரிகள் திறக்கப் படும் என்று உறுதி அளிக்கலாமே. இலவசம் என்றால் தான் ஓட்டு விழும். பாவ்லோ தன் நாயைப் பழக்கியது போல் இலவசத்திற்குத் தமிழக வாக்காளனை வாய்ப் பிளக்க வைத்ததே திமுகவின் சாதனை.

கலைஞர் காப்பீட்டுத் திட்டமெனும் கூத்து

கலைஞர் காப்பீட்டுத் திட்டம் என்று ஒன்று 2006-இல் அறிமுகப் படுத்தப்பட்டது, எப்போதும் போல், பல நூறு கோடிகள் செலவில். இலவச மருத்துவமனகள் நடத்தும் அரசாங்கமே தன் குடி மக்களிடம் தனியார் மருத்துவமனைக்குச் செல்ல சொல்லியதோடல்லாமல் செலவையும் தானே ஏற்கும் என்று பித்தலாட்டம் ஆடியது. அரசாங்கம் தான் செலவை ஏற்கிறதே என்று நல்ல நாளிலேயே கொள்ளை அடிக்கும் தனியார் மருத்துவமனைகள், மருத்துவர்கள், மருந்தகங்கள் என்று தமிழக மருத்துவத் துறையே கொள்ளையர் கூடாரமானதோடு விலைகளும் விஷமாய் ஏறின. ஏன் அதற்குச் செலவான கோடிகளைக் கொண்டு அரசு மருத்துவமனைகளைச் சீரமைத்திருக்கலாமே? ஒரு வருடத்திற்கு 500 கோடி ரூபாய் என்று மதிப்பிடப்பட்டது. 5 வருடங்களுக்கு 2500 கோடி ரூபாய். பாவ்லோவின் நாய்க்குத் தேவை இலவசம் என்று கட்டுமரத்திற்குத் தெரியும்.

கல்வியைச் சீரழித்தது

கருணாநிதி ஆட்சிக் காலங்களில் கல்வியில் தலையிடுவது எப்போதும் நடக்கும். தமிழ் பாட நூல்களில் ஐன்ஸ்டீன், நியூட்டனின் விதிகள் குறுந்தொகையிலும், கம்ப ராமாயனத்திலும் இருப்பதாகத் திமுக அறிஞர்கள் எழுதிய பாடங்களைப் படித்ததை இன்று நினைத்தாலும் குமட்டுகிறது.

டைம்ஸ் ஆப் இந்தியாவில் வெளி வந்த சமீபத்திய செய்தி சொன்னது தமிழ் நாட்டு சமச்சீர் கல்வி முறையில் பயின்றவர்கள் 9 பேர் ஐஐடிக்குத் தேர்வு செய்யப்பட்டனர் என்று. இது மாபெரும் சாதனை. இந்தச் சாதனையின் பெருமை முழுவதும் கருணாநிதியையும் பள்ளிக் கல்வி அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசுவையுமே சாரும். இது ஏன் சாதனை என்றால் இது நான் நினைத்ததை விட 9 இடங்கள் அதிகம். வருங்காலச் சந்ததியினரின் கல்வியைக் கெடுத்த மகானுபவர் கருணாநிதியே.

1988-இல் மெட்ரிகுலேஷன் கல்வி முறையில் தேர்ச்சிப் பெற்றவன் நான். உயர் நிலைப் பள்ளிக் கல்வி தமிழகப் பாடத்திட்டத்தில் தான். அப்போதே தமிழகப் பாடத்திட்டம், மெட்ரிகுலேஷனை ஒப்பு நோக்கும் போது, மிக எளியதாக இருந்தது. சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தோடு ஒப்பிட்டாலோ தமிழகப் பாடத்திட்டம் ஒன்றுக்கும் உதவாதது. சமச்சீர் கல்விப் பாடத்திட்டமும் அப்பாடத்திட்டத்திற்கான புத்தகங்களும் குப்பைகள் என்றால் மிகையில்லை. மழைக்காகக் கூடப் பள்ளியின் பக்கம் ஒதுங்காத கருணாநிதிக்குப் படிப்பைப் பற்றிக் கவலையுமில்லை அது பற்றிய ஞானமுமில்லை.

ஜெயலலிதா எடுத்தேன் கவிழ்த்தேன் என்று சமச்சீர் கல்வியை நிராகரித்தார் மாணவர்களின் நிலைப் பற்றிக் கவலைப் படாமல். எப்போதும் போல் உடன்பிறப்பு ஒருவர் கொதித்தார் "பார்த்தாயா, உச்ச நீதி மன்றமே கண்டித்து இருக்கிறதே. இது மாணவர்களின் வாழ்க்கை அல்லவா?" என் பதில் அன்றும் இன்றும் ஒன்றே. கருணாநிதி தான் ஆதிப் பாவம். அவர் செய்தது தான் மாணவர்களை இனி பல வருடங்களுக்குப் பாதிக்கும். ஜெயலலிதா இதைப் பக்குவமாகக் கையாண்டிருந்தால் இந்தத் தலைக் குனிவு ஏற்பட்டிருக்காது.

கல்வியைப் பொறுத்தவரை ஜெயலலிதாவும் கருணாநிதியும் கொண்ட பார்வைகள் கவனிக்கத் தக்கவை. ஜெயலலிதா படித்தது சென்னை சர்ச் பார்க் கான்வெண்டில் மெட் ரிகுலேஷன் கல்வி முறையில். அவருக்குத் தெரியும் அக்கல்வி முறையின் சிறப்புகள் பற்றி. கருணாநிதிக்கும் தெரியும். எப்படி என்கிறீர்களா. மு.க.ஸ்டாலினை முதன் முதலில் சேர்க்க நினைத்தது சர்ச் பார்க்கில் தான். அது முடியாமல் போகவே சென்னை கிறித்தவக் கல்லூரியின் பள்ளியில் சேர்த்தார். மாறன் சகோதரர்களூம், கனிமொழியும் முறையே தொன் போஸ்கோ பள்ளியிலும் சர்ச் பார்க்கிலும் பின்னர்ப் பயின்றனர். தன் பிள்ளைகளுக்கு உயர் தர கான்வெண்ட் படிப்பும் ஏழை எளிய தமிழக வாக்காளனுக்குச் சமச்சீர் கல்வியும் என்று இரட்டை டம்ப்ளர் முறையை அறிமுகப் படுத்தியவர் கருணாநிதி. ஆதிப் பாவம்.

1967-77 கழக ஆட்சியில் கல்வியின் இருண்டக் காலம்

இட ஒதுக்கீட்டினைப் பற்றி விரிவாக அலச வேண்டிய இடம் இதுவல்ல ஆனால் சில விவரங்கள் நினைவுக் கூறத் தக்கவை. முதலாவது இட ஒதுக்கீட்டுக் கொள்கை தமிழகத்திற்கு ஜஸ்டிஸ் பார்ட்டியின் கொடை. அதில் ஈ.வெ.ராவின் பங்கு ஒன்றுமில்லை. பின்னர் இந்திய அரசியல் சாசனம் அதை இந்திய அளவில் ஸ்தாபித்தது. இட ஒதுக்கீடு கட்டாயமாகச் சமூக முன்னேற்றத்தில் ஒரு மிக முக்கியமான பங்கினை ஆற்றியுள்ளது. ஆனால் இன்று அது வெறும் ஓட்டு வங்கி அரசியலாக ஆகிவிட்டது மறுக்க முடியாத உண்மை. அதைவிட முக்கியமானது இந்த இட ஒதுக்கீட்டினை என்னமோ சர்வரோக நிவாரணி ரேஞ்சுக்கு திராவிட இயக்கத்தினர் விற்பனை செய்வது சகிக்க முடியாதது. பின் தங்கிய சமூகங்களின் கல்வி முன்னேற்றத்தில் இட ஒதுக்கீடு ஒரு கருவி மட்டுமே அதுவே அல்லது அது மட்டுமே தீர்வல்ல. பின் தங்கிய சமூகங்களின் முக்கியத் தேவை எளிதில் அனுகக் கூடிய கல்விச் சாலைகள். கல்லூரிகள் நகரங்களில் அமைந்துள்ளன அவற்றில் தங்கிப் படிப்பதே பலருக்குப் பொருளாதாரச் சவால்.

"திராவிட இயக்கங்கள் என்ன செய்து கிழித்து விட்டன" என அதன் எதிரிகள் கேட்கிறார்கள் என்று சு.ப.வீர பாண்டியன் கொதித்தார். கொதித்து விட்டு இன்று படித்துப் பட்டம் பெற்ற பலரின் பெற்றோர் படிப்பறியாதவர்கள் இதுவே திராவிட இயக்கதினரின் சாதனை என்று மார் தட்டினார். யாரோ கட்டிய கல்லூரிகளில் யாரோ ஆரம்பித்து வைத்த இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு இவர் சொந்தம் கொண்டாடுகிறார்.

சு.ப.வீயின் பிதற்றலுக்கு மறுமொழி எழுத ஆராய்ந்த போது ஒரு மிகக் கசப்பான அவலம் வெளிவந்தது. 1967 திமுக ஆட்சிக் கட்டில் ஏறியது. 1977-வரை திமுக ஆட்சி. 1967-1977 வரை ஒரு அரசு பொறியியல் கல்லூரியோ அரசு மருத்துவக் கல்லூரியோ கூடத் திறக்கப் படவில்லை. பத்து வருடங்கள் திமுக அரசு, அதில் இரண்டு வருடம் தவிர எட்டு வருடங்களுக்குக் கட்டுமரம் தான் ஆட்சி, எந்த அரசுத் தொழில் நுட்பக் கல்லூரியையும் திறக்கவில்லை. 80-களின் பிற்பகுதியில் ஒன்றிரண்டு தொழிற் கல்லூரிகள் திறக்கப் பட்டன. பிறகு எம்ஜியார் தனியார் கல்லூரிகளுக்கு அனுமதி அளித்து ஒரு கல்விப் புரட்சிக்கும் கல்விக் கொள்ளைக்கும் அடிக்கல் நாட்டினார். கல்லூரிகள் கிராமங்களின் அருகே திறக்கப் பட்டன. தனியார் கல்லூரிகள் அரசாங்கத்தின் உதவியல்லாமல் நடந்தாலும் அவற்றிலும் அரசாங்கத்திற்கென 50% இடம் ஒதுக்கீடு செய்யவும் அப்படி ஒதுக்கிய இடங்களில் அரசின் இட ஒதுக்கீடு விகிதாசாரம் படி இடம் ஒதுக்கவும் ஆணை பிறப்பித்துக் கல்விப் பரவலாக்கத்தின் ஒரு முக்கியமான அத்தியாயத்தைத் தொடங்கி வைத்தார் எம்ஜியார். தொழிற் கல்லூரிகள் மட்டுமல்ல ஒன்றிரண்டு கலைக் கல்லூரிகள் தவிர வேறு கல்லூரிகளோ மற்றும் பல்கலைக் கழகங்களோ 1967-1977வரை திறக்கப் படவில்லை. 1967-1977 தமிழ் நாட்டின் கல்வியைப் பொறுத்தவரை இருண்ட காலம்.

1967-77 கல்விக்கு இருண்ட காலம் என்றால் 2006-11 கல்விக்குச் சாவு மணி அடித்த வருடங்கள் என்பது மிகை ஆகாது. சமச்சீர் கல்வியினால் பள்ளிக் கல்வியைச் சீரழித்தது பத்தாது என்று தமிழகமெங்கும் தனியார் பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகள் புற்றீசலாக முளைத்தன. திமுக அமைச்சரவையில் பலர் 'கல்வித் தந்தை'களாக உருவெடுத்தனர். துணை வேந்தர் நியமனங்களில் ஊழல் தலை விரித்தாடியது. அரசாங்கமே நீதிமன்றத்தில் சில ஊழல் துணை வேந்தர்கள் பற்றி அறிக்கைக் கொடுத்தது. பாவம் அவர்கள் போட்ட முதலை திருப்ப வேண்டி ஊழல் செய்தவர்கள்.

இந்தி எதிர்ப்பு என்ற நாடகத்தை வைத்து கருணாநிதி அடைந்த அரசியல் லாபத்திற்கு அளவேயில்லை. இந்தி எதிர்ப்பு அரசியலை விதைத்தது அண்ணாதுரையும் ராமசாமி நாயக்கரும் ஆனால் முழுவதுமாக அறுவடை செய்தது கருணாநிதி. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் எந்தத் தலவரும் அல்லது தலைவரின் உறவுகளோ தீக்குளிக்கவோ துப்பாக்கி சூடுகளில் இறக்கவோ இல்லை. மாறாக உயிர்த்தியாகம் செய்த பலரின் குடும்பங்கள் இன்றும் வறுமையில் உழல்கின்றன. தலைவர்களின் பிள்ளைகளோ நகரங்களின் உயர்தரக் கான்வெண்டுகளில் இந்தியை இரண்டாம் மொழியாகக் கற்றனர். ராஜீவ் காந்தி ஆட்சிக் காலத்தில் அறிமுகப் படுத்தப்பட்ட 'நவோதயா பள்ளிகள்' கிராமபுறங்களில் உயர்தரப் பள்ளிகளுக்கான திட்டம். இந்தியாவிலேயே நவோதயாப் பள்ளிகள் இல்லாத மாநிலங்கள் இரண்டு அதில் ஒன்று தமிழகம். உபயம் கருணாநிதி. மீண்டும், மீண்டும், மீண்டும், மீண்டும் கருணாநிதி கல்வியில் தமிழகத்தை மோசம் செய்தே வந்துள்ளார். 'படித்துக் கிழித்தது என்ன, கிழித்துத் தைத்தது தான் என்ன என்ன' என்று கல்வியை வசைப் பாடி கவிதை எழுதியவர் வேறெப்படி செயல்படுவார். கல்வியைப் பொறுத்தவரைக் கருணாநிதியும் திமுகவும் செய்த பாவங்களுக்கு விமோசனமே கிடையாது.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 திமுக ஜனநாயக மரபுள்ள கட்சியா

அதிமுகத் தனி மனித கவர்ச்சியை முதலீடாகக் கொண்டே ஆரம்பிக்கப் பட்டது. ஆகவே அக்கட்சியின் நிர்வாகிகளும் அமைச்சர்களும் தாங்கள் அடிமைகள் என்பதை உணர்ந்தே இருக்கின்றனர். திமுக என்பது இயக்கம் அதிமுக என்பது அரசியல் கட்சி என்ற தொனியில் திமுகத் தொண்டர்கள் பேசுவார்கள். அதையாவது பொறுத்துக் கொள்ளலாம் ஆனால் திமுக ஜனநாயக மரபுள்ள கட்சி என்பது தான் திமுகப் பற்றிச் சொல்லப்படும் பொய்களில் தலையாயது.

'தம்பி வா, தலைமை ஏற்க வா' என்று தன்னை அண்ணா அழைத்ததாக அடிக்கடி சொல்லிப் பெருமைப்பட்டுக் கொள்வார் கருணாநிதி. கருணாநிதி அப்படி யாரையும் கடந்த 50 வருடங்களில் அழைத்ததில்லை, அதுவும் தன் குடும்பத்தார் அல்லாதாரை. இது தான் திமுக வகை ஜனநாயகம். தாங்கள் அடிமைகள் என்று உணர்ந்த அதிமுகவினர் தாங்கள் அடிமைகள் என்றே உணராத திமுகவினரை விடப் பல படிகள் உயர்ந்தவர்கள்.

ஜனநாயகம் என்றால் என்ன, ஜனநாயக மரபுகள் என்றால் என்ன என்பதின் அரிச்சுவடி கூடத் தெரியாதவர்கள் திமுகத் தொண்டர்கள். ஜனநாயகப் படுகொலை நிகழ்த்துவதில் திருக்குவளைக்காரருக்கு ஈடு இணையே கிடையாது. எம்ஜியாரின் அரசை டிஸ்மிஸ் செய்தது ஒரு ஸாம்பிள் தான்.

காலில் விழும் வைபவங்களும் திமுகவும்

thumb_IMG_1113_1024.png
ஜெயலலிதா காலில் விழுவதோடல்லாமல் ஹெலிகாப்டரை நோக்கி கரம் கூப்பி வானை நோக்குவது, ஜீப் டயருக்கு வணக்கம் சொல்வது எல்லாம் மிக அருவருப்பானவை. ஆனால் இதற்கும் திமுகவே பிள்ளையாற் சுழி. இதோ வைகோ கருணாநிதி காலில் விழும் புகைப்படம். இப்புகைப்படம் எடுக்கப் பட்ட் காலத்தில் யாரும் ஜெயலலிதா காலில் விழுந்ததாகத் தெரியாது. வயதில் மூத்த கே.என்.நேரு பொது மேடையிலே சமீபத்தில் ஸ்டாலினின் காலில் விழுந்தார். அதெல்லாம் கூடப் பரவாயில்லை புது மணத் தம்பதியர் ஸ்டாலினின் மகன் உதயநிதி காலில் விழுந்த அசிங்கமும் நடந்தது.

thumb_IMG_1350_1024.jpg

நீரா ராடியா டேப், அழகிரி நியமனம்: ஜனநாயகக் கொலைகள்

ஒரு தேசத்தின் அமைச்சரவை என்பது மிக முக்கியமானது. கூட்டணி அமைச்சரவைகளில் பேரங்கள் இருப்பதும் சகஜமே. முக்கிய அமைச்சரவைகள் தன் கட்சிக்குக் கிடைக்க வேண்டும் என்று எல்லாருமே முயல்வது வழக்கம். சிலர் கட்சி நலன் மீறி மாநில நலனையும் யோசிக்கக் கூடும். அது போன்ற சிறு பிள்ளைத் தனங்களைக் கருணாநிதி என்றுமே செய்ததில்லை. அதைக் கூடப் பொறுத்துக் கொள்ளலாம் ஆனால் அரசியல் சாசனத்தையெல்லாம் காற்றில் பறக்க விட்டு நாலாந்தரத் தரகரிடம் காய்கறி வியாபாரம் பேசுவது போல் கனிமொழியும் மற்றவர்களும் பேரம் பேசியது வெளிவந்த போது கருணாநிதியோ, கணிமொழியோ, உடன் பிறப்புகளோ அலட்டிக் கொள்ளவேயில்லை.

இந்தியாவின் ஏழைகள் மட்டுமல்ல ஒவ்வொரு இந்தியனுக்கும் மிக முக்கியமான பிரச்சினை மலிவு விலையில் கிடைக்கும் மருந்துகள். இந்தியாவின் மருந்து தயாரிக்கும் கொள்கை உலக வர்த்தக ஸ்தாபனம் ஒப்புக் கொள்ளாதது. அக்கொள்கை பற்றி மிக முக்கியமான விவாதங்கள் நடைப் பெற்ற சமயத்தில் அந்த இலாகாவுக்கு மந்திரியாக அழகிரியை நியமனம் செய்து தன் தந்தைக்குரிய கடமையைச் செவ்வனே செய்தார் கருணாநிதி. அழகிரிக்கோ கோப்புகளைப் படிப்பது, பாராளுமன்றத்தில் கேள்விகளுக்குப் பதில் சொல்வது என்று எதுவும் அறியாப் பிள்ளை. அவர் பாவம் பொட்டுச் சுரேஷ், அட்டாக் பாண்டி என்று அறிவு ஜீவிகளோடவே வாழ்ந்துவிட்டவர். அழகரி விஷயம் சற்று விரிவாகப் பின்னர்.

தேர்தலில் தன் கட்சி வேட்பாளர் வெற்றிப் பெற வேண்டுமென்று நினைப்பது, தன் கட்சி ஆட்சி அமைக்க வேண்டும் என்று நினைப்பதெல்லாம் எதிர்ப்பார்ப்பதே. ஆனால் கழக உடன் பிறப்பு ஒருவர் பேஸ்புக்கில் எழுதுகிறார் "கந்தவர்வக் கோட்டையை வெற்றிக் கோட்டையாக்கி தலைவர் காலடியில் சமர்பிக்க இருக்கும் என் நண்பன் தமிழ்ராஜாவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்" என்று. தேர்தல் வெற்றியை தலைவரின் காலடியில் சமர்பிக்கச் சொல்வது அருவருக்கத் தக்க அடிமைத்தனம். தேர்தல் வெற்றி என்பது என்னமோ எதிரி நாட்டின் மீது படையெடுத்து வென்ற வெற்றியல்ல. தலைவனும் கொற்றவனல்ல அவன் காலடியில் அந்த வெற்றியை சமர்பிக்க. ஒரு தொகுதியில் வெல்வதென்பது ஒரு வட்டாரத்து மக்களின் பிரதிநிதியாவதற்கே. அந்த வெற்றியை காலடியில் சமர்பிப்பேன் என்பது அத்தொகுதி மக்களை அவமானப் படுத்துவது.
அமெரிக்கத் தேர்தல் குறித்து யோசிக்கும் போது தோன்றியது. இங்கே ஹிலாரியையும், சாண்டர்ஸையும் அவர்கள் ஆதரவாளர்கள் 'என்னுடைய வேட்பாளர்' (my candidate for presidency) என்று தான் கூறுவர். எந்த வாக்காளனும் ஹிலாரியையோ எனையோரையோ 'தலைவர் ஜெயிக்க வேண்டும்' என்று கூறமாட்டார்கள்.

ஜனநாயகம் அறியா பிரபுத்துவச் சீமான்கள்

அதிமுகவுக்கு வந்துவிடுங்கள் என்று ஒரு உடன்பிறப்பிடம் ஒருவர் பேஸ்புக்கில் கிண்டலாகச் சொல்ல உடன்பிறப்பு சிலிர்த்து "நடிகையின் பின்னால் போக மாட்டேன்" என்கிறார். பாவம் அவருக்குத் தெரியாது 1967 முதல் 2011 வரை நடிகர்களின் பிரபலத்தை நம்பியே திமுகத் தேர்தலில் இறங்கியது. வடிவேலுவை வைத்து மக்களை ஏமாற்றிவிடலாம் என்று மனப் பால் குடித்தனர் திமுகவினர். அது தான் ஜனநாயகம் பற்றியும் மக்கள் ஆதரவுப் பற்றியும் கருணாநிதிக்கு இருந்த மதிப்பு. வடிவேலுவைக் காண ஆயிரகணக்கில் கூடிய மக்கள் வெள்ளத்தை உவகையோடு ஒளிபரப்பு செய்தது சன் டீவி. ஆனால் எல்லா மக்களையும் எல்லா நாளும் ஏமாற்ற முடியாதென்பதை மக்கள் நிரூபித்தனர். உடன்பிறப்பு ஜெயலலிதாவை 'நடிகை' என்று குறிப்பிட்டதில் திமுகவினருக்கே உள்ள ஆணாதிக்கச் செருக்கும் உள்ளது.

மக்களின் வெள்ள நிவாரணப் பொருட்களில் ஸ்டிக்கர் ஒட்டியது அராஜகமா என்றால் ஆமாம். ஆனால் அதைச் சொல்லும் அருகதை திமுகவினருக்குக் கிடையாது அவ்வளவே. மக்களின் வரிப் பணத்தில் செல்லும் பேருந்துக்கு 'அன்னை அஞ்சுகம் போக்குவரத்துக் கழகம்' என்று பெயரிட்டது யார்? ரேஷன் அரிசிப் பைகளில் தன் திருமுகப் புகைப்படத்தைக் கருணாநிதி பதிக்கவில்லையா? மக்களின் வரிப் பணத்தில் நடத்தப்படும் திட்டங்களுக்குத் தன் பெயரையே சூட்டி மகிழ்ந்த குழந்தை யார்?

திராவிட இயக்கித்தினர் தான் இந்தப் 'போர்வாள்', 'தளபதி' போன்ற மன்னர் கால வார்த்தைப் பிரயோகங்களுக்குள் இன்னும் சிக்குண்டிருப்பது.

thumb_IMG_1370_1024.jpg


கருணாநிதி இடம் பெற்றிருக்கும் புகைப்படங்களிலேயே மிகவும் அருவருக்கத் தக்கது என்றால் நான் தயங்காமல் கீழிருக்கும் படத்தைச் சொல்வேன். கட்சிக்கு நிதி சேர்ப்பது எல்லோரும் செய்வது. பாவம் பல தொண்டர்கள் தங்களிடம் இருக்கும் கடைசிக் காசையும் கட்சி நிதிக்காகக் கரைத்த கதைகள் ஏராளம். அப்படிச் சேகரித்த பணத்தைக் கிரீடமாக்கி தலைவனுக்கு முடி சூட்டி அகமகிழ்ந்து இளித்துக் கொண்டு நிற்கும் இந்த அற்பர்களுக்குத் தெரியுமா இந்தச் சுதந்திரமும் ஜனநாயகமும் கிடைக்க என்ன விலைக் கொடுக்கப் பட்டதென்று? "தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா?" இந்த அற்பர்களின் கட்சியிலா ஜனநாயகம் வாழ்கிறது. ஜனநாயகம் என்பதைப் பற்றிப் பேசும் அருகதையற்றவர்கள்.

thumb_IMG_1068_1024.jpg

கூட்டணிக் கட்சி தர்மங்கள்

ஜெயலலிதா பேசும் மேடைகளில் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் மட்டுமல்ல அவர் கட்சி வேட்பாளர்களும் கூட்டாக ஒரு படி கீழே அமர்ந்திருப்பதும் ஜெயலலிதா உரையாற்றுவதும் எதேச்சாதிகாரத்தின் உச்சம். ஆனால் உடன்பிறப்புகள் திமுகவில் கூட்டணிக் கட்சியினர் ஏதோ ரத்தினக் கம்பள வரவேற்பில் திளைப்பதாகக் கதை அளப்பது வெறும் கதையே. இம்முறை தலித் கட்சியான விடுதலை சிறுத்தைகள் தன் கூட்டணியில் இருந்தால் தனக்குச் சில ஜாதியினரின் ஓட்டுக் கிடைக்காதென்றெண்ணி அவர்களைக் கழற்றி விட்டார் கருணாநிதி என்னும் சமூக நீதிக் காவலர். ராமதாஸ் தன் ஜாதியினருக்கு தனி இட ஒதுக்கீடு கோரிக்கை வைத்த போது 'அவர் கேட்டு நான் மறுத்ததில்லை' என்று பூரிப்போடு இளகிய கருணாநிதி திருமாவளவன் கட்சி கூட்டணியில் இருந்த போதெல்லாம் உதாசீனமே செய்திருக்கிறார். அது மட்டுமல்ல் தனிப் பெரும்பான்மை கிடைக்காமல் காங்கிரஸ் ஆதரவோடு ஆட்சி அமைத்த போதும் ஆட்சியில் பங்கு தர மறுத்தவர் தான் கருணாநிதி. அடிமைகளை அவர்கள் அடிமைகள் என்று உணராதவாறு நடத்துவதில் ஜெயலலிதா கருணாநிதியிடம் பாலப் பாடம் படிக்க வேண்டும்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

திருமங்கலம் பார்முலா: ஜனநாயகத்தைக் குழித் தோண்டிப் புதைத்தல்

மேற்சொன்ன எல்லாவற்றையும் விட ஜனநாயகம் என்ற கருத்தியலின் ஆணிவேரையே அசைத்துப் பார்த்தது திமுகவின் 'திருமங்கலம் பார்முலா'. தேர்தல் மோசடிகள், கள்ள ஓட்டுப் போடுவது, சில ஓட்டுக்களை விலைக் கொடுத்து வாங்குவது என்பதெல்லாம் சிறு பிள்ளை விளையாட்டு அதையெல்லாம் தூக்கி சாப்பிடுவது போல் திமுக அரங்கேற்றியது வரலாறுக் காணாத தேர்தல் மோசடி. அதன் சிருஷ்டிகர்த்தா கருணாநிதியின் மகனும் மத்திய அமைச்சராக இருந்த அழகிரி. ஒவ்வொரு இடைத் தேர்தலின் போதும் மிகவும் நூதன முறையில் வாக்காளர்களின் வீட்டிற்குப் பணம், ஆயிரக்கணக்கில், பட்டுவாடா செய்யப் பட்டது. இக்கேடுகெட்ட செயலுக்கு உடன்பிறப்புகள் என்னமோ ஐன்ஸ்டீன் பார்முலா ரேஞ்சில் 'திருமங்கலம் பார்முலா' என்று பெயரிட்டு அகமகிழ்ந்தனர். அடுத்தடுத்து வந்த இடைத்தேர்தல்களில் "கேள்வி வெற்றியாத் தோல்வியா என்பது பற்றியல்ல, ஓட்டு வித்தியாசம் எவ்வளவு என்பது தான்" என்று அஞ்சா நெஞ்சன் தம்பட்டம் அடித்தார். பொது மக்கள் தங்கள் தொகுதி வேட்பாளர் இறக்க மாட்டாரா இடைத் தேர்தல் தங்கள் தொகுதிக்கும் வராதா என்று ஏங்கத் தொடங்கினர். இதில் உச்சம் வைத்தார் போல் இந்த இழிச் செயலை அமெரிக்கத் தூதரக அதிகாரியிடம் விலாவாரியாகச் செய்விளக்கம் செய்தும் காண்பித்தனர் உடன் பிறப்பு அல்லக்கைகள். விக்கிலீக்ஸ் வெளிவந்த போது இதுவும் அம்பலமானது.

நவீன திருதிராஷ்டிரன்

இக்காலக் கட்டத்தில் தான் கருணாநிதி நவீன திருதிராஷ்டிரனாகப் பரிணமித்தார். அழகிரியைக் கட்சியை விட்டு 2000-இல் நீக்கிய போது மதுரை வன்முறைக்கு ஆளானது. இப்போதோ அவருக்காகவே புதுப் பதவி ஒன்றை, 'தென் மண்டல செயலாளர்', உருவாக்கி அலங்காரம் செய்து மகிழ்ந்தார் நவீன திருதிராஷ்டிரன். மொகலாயச் சாம்ராஜ்யத்தின் சகோதரச் சண்டைகளுக்கு நிகராக ஸ்டாலின், கணிமொழி, அழகிரி, மாறன் சகோதரர்கள் என்று ஒரு விறுவிறுப்பான திருப்பங்கள் நிறைந்த சினிமா அரங்கேறியது தமிழகத்தில்.

thumb_IMG_1305_1024.jpg


ஜெயலலிதா 2000-இல் கைது செய்யப் பட்ட போது அதிமுக ரௌடிகள் கல்லூரி மாணவர்கள் நிரம்பிய பேருந்தை தீ வைத்துக் கொளுத்தியத்தில் மூன்று மாணவியர் கொல்லப் பட்டனர். வழக்குப் பதியப் பட்டு பின்னர் அவர்களுக்குத் தூக்கு தண்டனையும் தீர்ப்பானது. திமுகவினர் அந்த மாணவிகளுக்காக நீலீக் கண்ணீர் வடிக்கும் போது தினகரன் அலுவலகம் எரிக்கப் பட்டது குறித்துக் கள்ள மௌனம் சாதிப்பர்.

தினகரன் அலுவலகம் எரிக்கப் பட்டு மூவர் இறந்த நிலையில் என் அன்புக்குறிய உடன்பிறப்பு உறவினர் தொலைபேசியில் கூப்பிட்டு மிகுந்த வருத்தம் தொனிக்கும் குரலில் சொன்னார் "இந்த மாறன் சகோதரர்களுக்கு நன்றி உணர்ச்சியே கிடையாது. தலைவர் தான் கருத்துக் கணிப்பை வெளியிட வேண்டாம் என்றாரே இவர்கள் ஏன் வெளியிட்டார்கள்? தாத்தா மனசுக் கஷ்டப்படுமே என்று அவர்கள் நினைக்கவில்லை" என்று குமுறினார். என் காதுகளையே என்னால் நம்ப முடியவில்லை. இப்படியா ஒருவர் கட்சி விசுவாசியாக இருப்பது? "என்னடா இப்படிப் பேசுகிறாயே அங்கே மூன்று உயிர்கள் கொல்லப் பட்டன அதைப் பற்றிக் கொஞ்சமும் கவலை இல்லாமல் 'தாத்தா மனசு' பற்றிப் பேசுகிறாயா" என்றேன். இது தான் திமுகத் தொண்டனுக்கான லட்சணம்.

தர்மபுரி பஸ் எரிப்புக் கண்டிக்கத் தக்கது அவ்விஷயத்தில் தண்டனையும் கொடுக்கப் பட்டது. ஜெயலலிதாவிற்கு அதில் எந்தச் சம்பந்தமுமில்லாததோடு அக்கயவர்கள் தண்டிக்கப் பட்டதில் அவர் தலையிடவுமில்லை. ஆனால் தினகரன் அலுவலக எரிப்பில் சம்பந்தப் பட்டவர் தலைவரின் மகன், திமுகவினர் அந்த அலுவலகத்தை முற்றுகையிட்டுக் கலாட்டா செய்தது எல்லாம் சன் டீவியிலேயே நேரடி ஒளிபரப்பானது. குற்றம் சாட்டப்பட்ட அழகிரியோ கூலாகச் சட்டமன்றத்துக்கே வந்து பார்வையாளர் பகுதியில் அமர்ந்தார்.

அழகிரியின் கொட்டம் அதோடு அடங்கவில்லை. தா.கிருஷ்ணன் கொலை வழக்கு நடக்கும் போதே அமைச்சரானவர் அந்த வழக்கில் இருந்து விடுதலையானார் ஏனெனில் எல்லாச் சாட்சிகளும் பிறழ் சாட்சிகளாயினர். பொட்டு சுரேஷும் அட்டாக் பாண்டியும் ஒருவரோடு ஒருவர் மோதி மதுரையைக் கலங்கடித்தனர். இருவரும் அழகிரிக்கு இடதும் வலதுமாக இருந்தவர்கள். இந்த லட்சணத்தில் திமுக ஜனநாயக கட்சி என்று நாம் நம்ப வேண்டும்.

மாறன் சகோதர்களின் வர்த்தகச் சாம்ராஜ்ஜியத்தை ஒழிக்க வேண்டுமென்பதற்காகவே மக்களின் வரிப் பணத்தில் "அரசு கேபிள் டீவி" என்று தொடங்கினார் கருணாநிதி. அதில் மேலும் கோடிகள் நாசமானதோடு கருணாநிதியே நேரடியாக "கலைஞர் டீவி" என்ற சேனலின் நிகழ்ச்சி நிரல் இயக்குனராகவும் ஆனார். தன் சேனலின் முக்கியமான நிகழ்ச்சிகள், 'மானாட மயிலாட' என்ற ஆபாச நடன நிகழ்ச்சி, ரேட்டிங்கில் முந்துவதற்காகச் சன் டீவியின் நிகழ்ச்சிகள் மோதுகின்றனவா என்றெல்லாம் கவனம் செலுத்தினார். அரசாங்கம் ஸ்தம்பித்தது. பிறகு அவர்களுக்குள் சமாதானமான பின்பு அரசு கேபிள் டீவியைக் கிடப்பில் போட்டார். கோடிகள் அம்போ.

thumb_IMG_1358_1024.jpg
குடும்ப சுற்றுலா அல்லவாம் தேர்தல் பிரசாரமாம்


மக்களின் வரிப் பணத்தை வாரியிறைப்பது, கொலைக் குற்றம் சாட்டப் பட்ட மகனுக்கு மத்திய மந்திரிப் பதவி, மந்திரிப் பதவியை ஏலம் போட்ட மகளின் ஆசைக்காக மேலும் கோடிகளில் கலாசார விழாக்கள், தன் அதிகார மமதைக்காகச் 'செம்மொழி மாநாடு', பல்லாயிரம் கோடிகளை விழுங்கிய இலவசங்கள் என்று 5 வருடத்தில் ஒரு தாண்டவம் ஆடித் தீர்த்தார் கருணாநிதி. ஜனநாயகம் பற்றிப் பேசுவதற்குப் பதிலாக உடன் பிறப்புகள் நாவடக்கம் பயில வேண்டும். நாவடக்கம் என்பது தான் தலைவருக்கே கிடையாதே.

சட்டசபை மாண்பும் திமுகவினரும்

சட்ட சபையில் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் ஜெயலலிதா துதிப் பாடுவதிலேயே நேரம் செலவாகின்றது என்பது கண்டிக்கத் தக்கது. திமுகவினர் சட்டசபை மாண்பு பற்றி அங்கலாய்ப்பது தான் வேடிக்கை. சட்டசபையை இழிவுப் படுத்தியதில் திமுகவின் சாதனை விஞ்சக் கூடியதல்ல.

திமுகவில் இருந்து பிரிந்த எம்ஜியார் சட்டசபியிலேயே திமுகவினரால் தாக்கப் பட்டார். 'சட்டசபை செத்து விட்டது' என்று கூறி வெளியேறினார் எம்ஜியார். அதெல்லாம் சாதாரணம் என்பது போல் பின்னர் அதிமுகத் தலைவரான ஜெயலலிதா தாக்கப் பட்ட சம்பவம் நடந்தது. ஜெயலலிதா தாக்கப் பட்டதோடல்லாமல் மூத்த திமுக அமைச்சர் ஒருவராலேயே சட்டசபைக்குள்ளேயே மானபங்கம் செய்யப் பட்டார். அலங்கோல நிலையிலேயே பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தார் ஜெயலலிதா. சபாநாயகரான தமிழ்குடிமகன் திமுகவினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப் பட்ட சேடப்பட்டி முத்தையா ஜெயலலிதா காலில் விழுந்து வணங்கியது அருவருப்பு ஆனால் தமிழ்குடிமகனின் செயலின்மை அதைவிடக் கீழ்மை.

ஆபாசப் பேச்சுகளும் கருணாநிதியும்

எம்ஜியார் பொது மேடைகளில் பெண்களைக் குறித்து ஆபாசமாகப் பேசியதேயில்லை. கருணாநிதிக்கோ பெண்களைப் பற்றி ஆபாசமாகப் பேசவில்லை என்றால் தூக்கம் வராது. நானறிந்தவரை கருணாநிதி அளவுக்கு வெளிப்படையாக ஆபாசமாகப் பேசும் கட்சித் தலைவர் வேறு யாரும் இந்தியாவில் இருப்பார்களா என்பது சந்தேகமே. சட்டசபையில் பெண் உறுப்பினரிடம் பாவாடை நாடா பற்றி விரசமாகச் சொன்னவர் கருணாநிதி. திமுகவின் வெற்றிக் கொண்டான் ஆபாச நரகலை மேடைப் பேச்சு என்ற பெயரில் கடைப் பரப்புவார். அப்படிப்பட்டவர் இறந்த போது கருணாநிதி மிக வருந்தி எப்போதும் போல் கவிதை எழுதுவதாக நினைத்துக் கொண்டு அந்தக் கேவலமான மனிதரை "ஆண் சிங்கம்", "வார்த்தை சித்தர்" என்றெல்லாம் அரற்றினார். மேடை பேச்சுகளில் எதிர் கட்சியினரை ஆபாசமாகப் பேசுவது திராவிட
அரசியலின், குறிப்பாகக் கருணாநிதியின், கொடை.

திமுக உடன் பிறப்புகள் போல் பெண்களை ஆபாசமாக மற்றவர்கள் பேசி நான் கேட்டதில்லை. ஜெயலலிதா பெண் என்பதாலும் அதுவும் பிராமணப் பெண் என்பதாலும் திமுகவினரின் ஆபாச வசைப் பாடலுக்குத் தப்பியதில்லை. ஒரு உடன் பிறப்பின் பேஸ்புக் நிலைத் தகவலில் நான் பின்னூட்டமாக "ஜெயலலிதா பிராமணப் பெண் என்பதாலேயே இப்படி ஏசப் படுகிறார்" என்றேன். நான் எழுதி ஒரு வாரத்திற்குள்ளாக முரசொலியில் எழுதும் முழுத் தகுதியிருந்தும் தமிழ் இந்துவில் மட்டும் எழுதும் சமஸ் என்பவர் வெற்றிக்கொணடான் எப்படி ஜாதிப் பாசத்தால் சசிகலாவை வசைப்பாட மறுத்து எப்போதும் போல் ஜெயலலிதாவை மட்டும் ஏசினார் என்று எழுதினார். என் பின்னூட்டத்திற்கு மறு மொழி சொல்வதாகப் புகுந்த இன்னொரு உடன்பிறப்பு அன்பழகனை ஜெயலலிதா உதவிப் பேராசிரியர் என்று குறிப்பிட்டு பேசியதற்கு (திமுகவினர் அன்பழகனை 'பேராசிரியர்' என்றே பல காலம் கூறி வந்தனர். சமீபத்தில் தான் ஜெயலலிதா போட்டு உடைத்தார் அவர் கடைசியாக வகித்த பதவி 'உதவிப் பேராசிரியர்' என்று) அன்பழகன் சட்டசபையிலேயே "எனக்கு நான் முன்பு செய்த தொழில் தெரியும் உங்களுக்கு உங்கள் பழைய தொழில் தெரியுமா" என்று விரசமாகப் பேசினார். அன்பழகனை சொந்தம் கொண்டாடும் என் உறவினர்களிடையே அவர் பெரிய பண்பாளர் என்பது போன்ற ஒரு பம்மாத்து இருக்கும். அவரும் திமுக என்ற குட்டையில் ஊறிய மட்டை தான்.

இன்னொரு உடன்பிறப்பு உறவினர் ஒருவர் ஜெயலலிதாவை "அந்தப் பொம்பளை" என்று குறிப்பிட்ட போது நான் "இது முறை தவறிய சொல்" என்றேன். அவருக்கு உண்மையிலேயே ஒரு பெண் முதல்வரை "அந்தப் பொம்பளை" என்று சொல்வதில் உள்ள முறையின்மைத் தெரியவில்லை. என்ன செய்வது கருணாநிதிக்கு வால் பிடித்தால் எது பெண்களை அவமதிப்பது என்று கூடத் தெரியாமல் போவது ஆச்சர்யமல்ல.

அதிமுகவுக்கும் திமுகவுக்கும் உள்ள முக்கிய வேறுபாடு அதிமுகச் சாதாரண அதிகார ஆசைகள் கொண்ட வெகுஜன அரசியல் கட்சி ஆனால் திமுகவோ மக்களிடையே 50 வருடங்களாக வெறுப்பை விதைக்கும் கட்சி. தமிழகத்தில் வேறூண்றிய பிராமணத் துவேஷத்தின் வித்து ஜஸ்டிஸ் கட்சி, ராமசாமி நாயக்கர், அண்ணாத்துரை என்று பலரால் விதைக்கப் பட்டாலும் இன்றும் அதன் கொடிய விஷம் குறையாமல் இருப்பதன் முக்கியக் காரணம் திமுக. மிக விரிவாக அலசி எழுதப் பட வேண்டிய ஒரு விஷயம் இது.

பிராமணத் துவேஷமும், இந்து மத வெறுப்பும் திமுகவின் பாஸிசமும்

திமுகப் பிராமணர்கள் மீதும் இந்துக்கள் மீதும் காண்பிக்கும் காழ்ப்பு ஜனநாயக விரோதம். ஜனநாயகம் என்பது சீர் திருத்தத்திற்கு விரோதியல்ல. சீர் திருத்தங்களை எல்லோரையும் அனுசரித்து அனுக்கமாக ஸ்தாபிக்க உலகுக்குக் கற்றுக் கொடுத்த காந்திப் பிறந்த தேசம் இந்தியா. ஜஸ்டிஸ் கட்சியினரின் பிராமண எதிர்ப்பைக் கண்டித்த காந்தி அன்றே சொன்னார் "நீங்கள் விழைவது சமூக நீதி அல்ல. ஒரு சாராரின் ஆதிக்கத்தைத் துரத்தி விட்டு இன்னொரு சாராரின் ஆதிக்கத்தை நிலை நாட்டவே". தமிழகத்தின் இன்றைய ஜாதி நிலவரம் காந்தியை தீர்க்கதரிசியாக்கி விட்டது.

வைகோ கருணாநிதியின் ஜாதியைக் குறித்து இழிவாகப் பேசிவிட்டார் என்று உடன்பிறப்புகள் கொந்தளித்தனர். வைகோ இன்னும் திமுககாரரே ஆதலால் தான் அப்படிப் பேசினார். தன்னோடு பிணக்குக் கொண்ட கம்யூனிஸ் கட்சித் தலைவர் பிராமணர் என்பதாலேயே அவரைப் பிராமணர் என்று பழித்ததோடல்லாமல் பிராமணர்கள் எல்லோரும் தேள்கள் என்று வழக்கம் போல் அரைகுறை கவிதை ஒன்றை எழுதி வெளியிடவே செய்தார் கருணாநிதி. அப்போது பல உடன்பிறப்புகளும் சரி ஏனையோரும் சரி அதனை ஒரு பொருட்டாகவே கருதவில்லை என்பதுடன் 'இப்படி எழுதியது சரியா' என்று கேட்டால் ராமசாமி நாயக்கரும் அண்ணாதுரையும் விதைத்த பிராமணத் துவேஷத்தின் வேர்கள் பரவிய சமூக உறுப்பினர்கள் 'ஆமாம் சரியாகத் தானே சொன்னார்' என்றனர்.

அவ்வளவு ஏன் திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு விழா என்ற பெயரில் அறிக்கை வெளியிட்ட கருணாநிதி அக்காலத்தில் சொல்லப் பட்ட 'இந்த இயக்கத்தைக் கண்டு பிராமணர்கள் நடு நடுங்க வேண்டும்' என்பதை மேற்கோள் காட்டினார். இவையெல்லாம் ஜனநாயக விரோத பாஸிசம் என்பதே உடன்பிறப்புகளுக்குத் தெரியாது, புரியாது. திராவிட இயக்கத்தினரின் அருவருக்கத் தக்க வார்த்தை விளையாட்டுகளில் ஒன்று 'நாங்கள் பார்ப்பணர்களை வெறுக்கவில்லை பார்ப்பணீயத்தைத் தான் வெறுக்கிறோம்' என்பது. நான் அறுதியிட்டு சொல்வேன் பல பிராமணரல்லாதார் மனங்கள் பிராமணர்கள் மீது அப்பட்டமான வெறுப்பு உடையவர்கள்.

ரம்ஜானுக்குக் குல்லாய் போட்டுக் கொண்டு நோண்புக் கஞ்சியைக் குடித்துவிட்டு காயிதே மில்லத்துடனான தன் நட்பை நினைவுக் கூர்ந்து விம்முவார் கருணாநிதி. திமுகவின் டி.கே.எஸ் இளங்கோவன் சில நாட்களுக்கு முன் தொலைக் காட்சியில் தைரியமாகக் கூறுகிறார் "இந்துப் பண்டிகைகளுக்கு வாழ்த்துக் கூறுவது என்பது திமுகவின் அடிப்படைக் கொள்கை. இந்துக்களுக்கு வாழ்த்து சொல்வது திமுகக் கொள்கைக்கு எதிரானது". இது ஜனநாயக விரோதம், மக்கள் விரோதம். அதிமுகத் திமுகவை விட எவ்வளவோ விஷயங்களில் மோசம் தான் ஆனால் அவர்கள் ஒரு போதும் இப்படிப்பட்ட மடமையைச் செய்ய மாட்டார்கள். தேர்தல் அறிகையிலேயே இன்னொரு இரட்டை டம்ப்ளர் வேலையைத் திமுகச் செய்தது. வக் போர்டுக்கு சொந்தமான நிலங்கள் பராமரிக்கப் படும் என்றும் கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களோ உபயோகத்தில் இல்லையென்றால் ஏலம் விடப் படும் என்றும் திமுக அறிக்கை சொல்கிறது. இத்தேர்தலில் திமுகத் திட்டவட்டமாகத் தன்னை இந்துக்களுக்கு விரோதியாக நிறுத்திக் கொண்டது ஜனநாயக விரோதம். இது போன்ற பித்தலாட்டங்களே மதச் சார்பின்மைக்கு அவப் பெயர் தேடித் தருவதோடு இந்துக்களைப் பாஜகவிடம் தள்ளுகிறது என்பதை உடன் பிறப்புகள் உணர வேண்டும்.

'உங்களுக்கு மூட நம்பிக்கைகள் உள்ளதாமே' என்று அகங்காரத்தோடு கேட்ட கரண் தாபரிடம் சூடாகப் 'பல்லாயிரம் இந்தியர்களைப் போல் எனக்குக் கடவுள் நம்பிக்கையும் சில நம்பிக்கைகளும் உள்ளாது. உங்கள் கேள்வி அவர்கள் எல்லோரையும் அவமதிப்பது' என்ற ஜெயலலிதா நினைவுக்கு வருகிறார்.

அதிமுகவுக்கும் திமுகவுக்கும் ஏன் வெவ்வேறு அளவுக்கோல்கள்

ஜெயலலிதா பேரிடரால் பாதிக்கப் பட்ட நகரத்தை பார்வையிடாதது, அரசாங்கம் அவர் கண்ணசைவிற்காக ஸ்தம்பித்து நின்றது, மக்களிடம் இருந்து விலகி இருப்பது, பத்திரிக்கைகளைச் சந்திக்காது எல்லாம் கண்டணத்துகுரியது. கருணாநிதி மக்களைச் சந்திப்பவர் என்பது போலும் என்னமோ பத்திரிக்கைப் பேட்டிகள் கொடுக்கிறார் என்றெல்லாம் கூறுவது ஏமாற்று வேலை.

தினகரன் அலுவலகம் எரிக்கப் பட்ட போது, 2ஜி, சிபிஐ விசாரணை போன்ற நிகழ்வுகளின் போதெல்லாம் கருணாநிதி எந்தப் பத்திரிக்கையாளர் சந்திப்பும் நடத்தி கேள்விகளுக்குப் பதில் சொல்லவில்லை. கருணாநிதியின் பத்திரிக்கையாளர் சந்திப்பெல்லாம் கடனே என்று கேட்கப் பட்டக் கேள்விகளுக்கு வார்த்தை விளையாட்டுப் பதில்கள் என்ற அளவிலே தான் இருக்கின்றன. மாறாக ஜெயலலிதா கடுமையான அல்லது சங்கடமான கேள்விகள் கொண்ட நீண்ட பேட்டிகள் அளித்துள்ளார்.

ஜெயலலிதா கால வெள்ளத்தால் தள்ளப்பட்டு அரசியலுக்கு வந்ததோடல்லாமல் சந்தர்ப்பவசத்தால் ஆட்சியையும் பிடித்தவர். அரசாங்கம் என்றால் என்ன, ஜனநாயக மரபுகள், ஆட்சி செய்வது போன்ற எது பற்றியும் எந்தப் புரிதலும் இல்லாமல் முதல்வரானார். முதல் முறை நில அபகரிப்புகள், ஆஸிட் வீச்சு, நீதி மன்றங்களில் ஆபாச நடனம் என்று கந்திரகோளமான ஆட்சி. இரண்டாம் முறை கஞ்சா வழக்குகள், நடுநிசி கைது, அரசியல் சாசன நெருக்கடி என்று கறைப் படிந்தாலும் வீரப்பன் கைது, சுனாமையைச் சமாளித்தது என்று சில முன்னேற்றங்கள். மூன்றாவது முறை பெரிய சர்ச்சைகள் இல்லை ஆயினும் தனி மனித வழிபாடு, உடல் நலக் குறைவால் மக்களை நெருங்காமை, ஆட்சியே தனி ஒருவரின் விரலசைப்பிற்காக ஸ்தம்பித்து நிற்பது என்று குறைகள். ஜெயலலிதா மீண்டும் ஆட்சியைக் கைப் பற்றுவதற்கான் நியாயங்கள் இல்லை.

கருணாநிதியும் திமுகவும் நீண்ட அரசியல் பாரம்பர்யத்திற்கு உரியவர்கள். திமுகவினர் தங்களை எப்போதுமே தேர்தல் அரசியலைத் தாண்டிய ஒரு சித்தாந்த நோக்குடைய கட்சி என்றே பெருமைப் பட்டுக்கொள்வர். ஆகவே கருணாநிதியையும் திமுகவையும் நாம் வேறொரு அளவுக் கோல் கொண்டே அளக்க வேண்டும். அப்படி அளக்கும் போது அவர்களது பல சித்தாந்தங்கள் மக்கள் விரோதமானதாகவும் இன்று அக்கட்சியின் நிலை ஜனநாயக விரோதமாகவும் உள்ளது நிதர்சனம். அதோடல்லாமல் இன்று அதிமுக எந்தக் குறைகளுக்காக வசைப் பாடப் படுகிறதோ அவற்றில் பல் திமுகவால் விதைக்கப் பட்டவை. தனி மனித துதி, ஊழல், வரிப் பணத்தை வீணடித்தல், இலவசங்களைக் கொண்டு மக்களைத் திசை திருப்புவது என்று எல்லாமே திமுகவினரின் கொடை. திமுகவுக்கே உரித்தான வெறுப்பரசியில், மொழி, இனம் என்றெல்லாம் ஜிகினா காட்டி சாமான்யனை ஏமாற்றும் செப்பிடு வித்தைகள் எல்லாம் திமுகவையும் அதன் தலைவரான கருணாநிதியையும் ஆதிப் பாவமாக நம் முன் நிறுத்துகின்றன.

thumb_IMG_1366_1024.jpg

thumb_IMG_1357_1024.jpg
இணையத்தில் கிடைத்தவை


கருணாநிதியின் முனைவர் பட்டமும், தங்கப் பதக்கம் சினிமாவில் சோவும் அறவுணர்வும்

தங்கப் பதக்கம் சினிமாவில் சோ ராமசாமி ஊழல் அரசியல்வாதியாகவும் நேர்மையான போலீஸ்காரராகவும் இரட்டை வேடத்தில் வந்து திமுகவை கலாய்த்திருப்பார். அதில் ஒரு காட்சி.ஒருக் குழந்தை மீது காரை மோதிவிட்டதற்காக ஒரு அரசியல் கட்சி உறுப்பினரை லாக்கப்பில் வைத்திருப்பார்கள். விடுவெடுவென உள்ளே நுழையும் அரசியல்வாதி சோ கைது செய்யப் பட்டவரை விடுதலை செய்யச்சொல்லிக் கேட்பார். கார் மோதியதற்குச் சாட்சி இருக்கிறது என்பார் காவலர். குழந்தை சாகவில்லை என்று சாதிப்பார் அரசியல்வாதி சோ. அது எப்படி என்று காவலர் வினவ 'இறந்த குழந்தைத் தங்களுடையதே அல்ல என்று பெற்றோரே எழுதிக் கொடுத்து விட்டார்கள்" என்று சொல்வார் சோ. இது சினிமாவில் சிரிப்புக் காட்சியாக வந்து போகும். மிகச் சமீபத்தில் இக்காட்சி நினைவுக்கு வந்த போது துணுகுற்றேன். அமெரிக்காவில் சிறு சிறு அத்து மீறல்களுக்கே அரசியல்வாதிகளின் அரசியல் வாழ்வு அஸ்தமித்துவிடும். சோ பகடியாக வைத்த காட்சி உண்மையில் நடந்தது.

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் கருணாநிதிக்கு கௌரவ முனைவர் பட்டம் கொடுப்பதென்று தீர்மானித்த போது கல்வி அமைப்பில் அதிர்ச்சிக் கிளப்பியது. ஏனென்றால் அது வரை கௌரவ முனைவர் பட்டங்கள் அரசியல்வாதிகளுக்குக் கொடுத்ததில்லை. இது அப்பட்டத்திற்கான மதிப்பை குறைக்கும் என்று எண்ணிய மாணவர்கள் போராட்டித்தில் குதித்தனர். அதில் ஒரு மாணவர் இறந்தார். இறந்த மாணவனின் பெற்றோர் உடன்பிறப்புகளால் நிர்பந்திக்கப்பட்டதாகவும் அந்நிகழ்ச்சியையே சோ பயன்படுத்தினார் என்றும் கேள்வி. கருணாநிதிக்குப் பிறகு தான் கௌரவ முனைவர் பட்டங்கள் கௌரவத்தை இழந்தன. ஆதிப் பாவம்.

இதில் கவனிக்க வேண்டியது அந்நிகழ்ச்சி அக்காலத்தில் பிரபலம். அப்படியிருந்தும் யாருக்கும், படித்தவர்கள் நிரம்பிய என் குடும்பத்தினருக்குக் கூட, உறுத்தவில்லை. எல்லோரும் கருணாநிதி அபிமானிகளாகவே இருந்தனர். அறவுணர்வு மறத்துப் போன சமூகம் தமிழ் சமூகம். அதற்குக் காரணம் திமுக.

ஏன் திமுக மீண்டும் வரக் கூடாது

2006-2011 ஆட்சியில் என்னென்ன தவறுகள் நடந்தனவோ அவையெல்லாம் மீண்டும் அரங்கேறுவதற்காண அனைத்துக் கூறுகளும் இன்னும் திமுகவில் தென்படுகின்றன. ஆகவே மீண்டும் ஆட்சியை அவர்களிடம் ஒப்படைப்பது பொறுப்பில்லாத்தனம்.

இந்நிலையில் பத்திரிக்கையாளர் ஞானி அவர்கள் மக்கள் நலக் கூட்டணி ஏன் ஆட்சிக்கு வர வேண்டும் என்று எழுதியதை நானும் அதரிக்கிறேன் ( அவர் எழுதியதற்கான சுட்டி இதோ https://www.facebook.com/notes/ஞாநி-சங்கரன்/யாருக்கு-ஓட்டு-போடவேண்டும்-/10207928572084876# ) . தமிழக வாக்காளனாக இல்லாத எனக்கு யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்று சொல்வதில் அவ்வளவாக இஷ்டமில்லை. அதைத் தமிழக வாக்காளர்கள் பார்த்துக் கொள்வார்கள். என் நோக்கம் திமுக எனும் பேரியக்கத்தை விமர்சனத்திற்குட்படுத்துவதே.

திமுகவினருக்கு மக்கள் நலக் கூட்டணியைப் பிடிக்காமல் இருக்கலாம் ஆனால் ம.ந.கூ என்ற அவர்கள் கட்சிப் பெயரை உடன் பிறப்புகள் பலர் மிக ஆபாசமாகக் கே.ந.கூ என்று எழுதுவதே திமுக எனும் பேரியக்கித்தினைப் பீடித்திருக்கும் நோயின் அறிகுறி. மக்கள் பிரதிநிதியாகும் தகுதியை திமுக எனும் ஆதிப் பாவம் இழந்துவிட்டது.


References:

My blogs on related topics:

Jayalaitha: http://contrarianworld.blogspot.com/2014/09/jayalalitha-jayaram-riddle-wrapped-in.html

"திராவிட இயக்கம் என்ன செய்து கிழித்தது!": Tamil Nadu's Debt To Kamaraj And M.G.R On Education. ---- http://contrarianworld.blogspot.com/2013/05/tamil-nadus-debt-to-kamaraj-and-mgr-on.html
 
 

1. Education Loans http://indianexpress.com/article/india/india-others/more-than-half-of-all-education-loans-in-south-india-tn-and-kerala-take-38/
 
2. வெற்றிக் கொண்டான் இரங்கல் http://tamil.oneindia.com/news/2011/01/30/karunanidhi-vetrikondan-death-tribute-aid0091.html
 
 
 
 
 
 
6. பொட்டு சுரெஷ் அட்டாக் பாண்டி https://www.youtube.com/watch?v=cdpULwkle1o
 
 
 
 
 


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Elango Saivam

Eenadu Telugu News Paper (August 9, 2018)
கலைஞர் கருணாநிதியின் மூதாதையர்களின் சொந்த ஊர், ஆந்திராவில் , ஒங்கோலுக்கு அருகே உள்ள செருக்கொம்முபாளையம் என்ற ஊர். இன்றைய (09.08.2018) ஈநாடு பத்திரிகையில் செய்தி. கருணாநிதியின் மூதாதையர்கள், ஒங்கோலுக்கு அருகே உள்ள பெள்ளூர் சமஸ்தானத்தில் ஆஸ்தான பாடகர்கள் ஆக இருந்தார்களாம். இதை கருணாநிதியே 1960 ல் ஒங்கோல் சென்றிருந்த போது கூறியுள்ளார்.

-- Ganesh Sri அவர்களுக்கு நன்றிகள் பல

(தெலுங்கு படிக்க தெரிந்தவர்கள் படித்து கூறவும்.)

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

முரசொலி மாறன் பிண உடல் பெசன்ட் நகர் இடுகாட்டில் எரிக்கப் பட்டது 

https://www.thehindu.com/2003/11/25/stories/2003112506130100.htm

Maran cremated with state honours

By S. Vydhianathan

 

 

 

Photo: Bijoy Ghosh 
2003112506130101.jpg 
The Prime Minister, Atal Bihari Vajpayee, and the former Prime Minister, I.K. Gujral, paying homage to the Union Minister, Murasoli Maran, at the Besant Nagar crematorium in Chennai on Monday.

 

CHENNAI Nov. 24. The Union Minister, Murasoli Maran, was cremated with full state honours at the Besant Nagar crematorium here this evening. The Prime Minister, Atal Bihari Vajpayee, the Defence Minister, George Fernandes, the former Prime Minister, I.K. Gujral, the Tamil Nadu Governor, P.S. Ramamohan Rao, the DMK president, M. Karunanidhi, its general secretary, K. Anbazhagan, and armed services personnel earlier placed wreaths on the body placed at the entrance to the crematorium.

The Public Secretary, T. Pitchandi, placed a wreath on behalf of the State Government. Floral tributes were also placed on behalf of the President, A.P.J. Abdul Kalam. The buglers sounded the Last Post and the service personnel gave a 21-gun salute.

Later, the body was taken inside the crematorium accompanied by Mr. Maran's family members and the DMK general secretary, M.K. Stalin.

The body draped in the Tricolour and the DMK flag was brought in a gun carriage from Mr. Karunanidhi's residence at Gopalapuram.

Mr. Vajpayee, who arrived at the crematorium at 6.35 p.m. along with Mr. Gujral, went straight to Mr. Karunanidhi and Mr. Maran's wife and offered his condolences.

While the Prime Minister left immediately after the body was taken inside, Mr. Karunanidhi and others stayed on.

The Union Ministers, T.R. Baalu, S. Tirunavukkarasar, H. Raja and A.K. Moorthy, the Telugu Desam Parliamentary leader, K. Yerran Naidu, the CPI (M)'s State secretary, N. Varadarajan, the MGR Kazhagam president, Rm.Veerappan, the BJP national secretary, L. Ganesan, the Dalit Panthers' general secretary, T. Tirumavalavan, and hundreds of DMK leaders and workers were present on the occasion. Earlier, the body was kept at Mr. Karunanidhi's residence for the public to pay homage.

The Andhra Pradesh Chief Minister, N. Chandrababu Naidu, the Karnataka Chief Minister, S.M. Krishna, the MDMK general secretary, Vaiko, and members of the diplomatic corps were among those who paid their respects.

 

 

Related Stories:
MURASOLI MARAN, 1934-2003
Murasoli Maran dead
A tenure marked by new initiatives
PM, Sonia condole Maran's death

Printer friendly page   



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

மேடையில் பேசிக்கொண்டிருப்பவர் 
ஈ.வி.கே. சம்பத்..

நாற்காலியில் அமர்ந்திருப்பவர்கள் அண்ணாதுரை, என்.வீ.நடராஜன், இராம.அரங்கண்ணல்

கீழே அமர்ந்திருப்பவர் மு.கருணாநிதி...

Image may contain: 3 people



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 https://video.xx.fbcdn.net/v/t42.9040-2/38613304_1184204831736062_7187133152832258048_n.mp4?_nc_cat=0&efg=eyJybHIiOjMwNywicmxhIjo1MTIsInZlbmNvZGVfdGFnIjoic3ZlX3NkIn0%3D&rl=307&vabr=171&oh=6dd8e4c8984b5998af30ec9765644340&oe=5B6DC28A



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 Image may contain: 1 person, text

Image may contain: one or more people



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

திருவள்ளுவர் நாள் வைகாசி அனுஷம்

 
கருணாநிதியர் தமிழுக்குச் செய்த தொண்டுகள் -01
1) கருணாநிதியர்,மறைமலையடிகள் தலைமையில் கூடிய சபையின் தீர்மானத்துக்கு அமைவாக,திருவள்ளுவர் ஆண்டு,திருவள்ளுவர் நாள் ஆகியவற்றை தையில் கொண்டாட அரச ஆணை பிறப்பித்தார்.
மறைமலையடிகள் தலைமையில் 1935ஆம் ஆண்டு சபைகூடியது உண்மை. அவர்கள் கொண்டாடியது வைகாசி அனுட்டத்தையேயொழிய, தையை அல்ல!!! அதுவும் திருவள்ளுவர் நாளைக் கொண்டாடினரேயொழிய திருவள்ளுவர் ஆண்டையல்ல!!! தையில் திருவள்ளுவர் ஆண்டையும் திருவள்ளுவர் நாளையும் உண்டாக்கியவர் கருணாநிதியரே!!!! ஆனால், தானே தனித்து எடுத்த தீர்மானம் என்பதை தமிழ்கூறு நல்லுலகத்தின்முன் கூறாது; மறைமலையடிகள் தலைமையில் தமிழ்த்தலைவர் எடுத்த தீர்மானம் என்று பொய்மூட்டைகளால் ஊடகங்களை நிரப்பி, மாற்றுக்கருத்துக்கே இடமளிக்காது செய்த கயமை-மறைமலையடிகளால் மட்டுமல்ல, தமிழன்னையாலும் மன்னிக்கமுடியாத துரோகத்தைச் செய்தார் கருணாநிதியர்.
இலங்கையைச் சேர்ந்த திருக்குறள் அறிஞரும் அக்காலத்தில் திருக்குறள் மாநாட்டை நடத்தியவருமான கா.பொ.இரத்தினம் அவர்கள் கருணாநிதியருக்கு அவருடைய பொய்மூட்டைச் செய்திகளை தோலுரிக்குமாறு கடிதம் எழுதினார். ஆனால்; அரசியல் ஊடக பலத்தினால்- மூப்பினாலும் அரசியலாலும் ஒதுங்கியிருந்த கா.பொ,இரத்தினம் அவர்களின் குரல் உலகுக்கு எட்டாது- கருணாநிதியரால் இருட்டடிப்புச்செய்யப்பட்டது.
இங்கு திருவள்ளுவர் ஆண்டின் தொடக்கம் குறித்த வேறுபட்ட கருத்துக்கள் குறித்து விவாதிக்கவிரும்பவில்லை.ஆனால், மறைமலையடிகள்தான் திருவள்ளுவர் ஆண்டை தையில் தொடங்கினாரென்று பொய்ச்செய்திகளைப் பரப்பி; தையில் திருவள்ளுவர் ஆண்டைத் தொடக்கிய கயமைத்தனத்தைத்தான் நாம் சுட்டிக்காட்டுகின்றேன்.
ஆதாரம்:
1955இல் நடந்த மாநாட்டு மலரில் இவை ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இந்நூல் இன்றும் காலத்தால் காக்கப்பட்டு உண்டு.
நன்றிகள்: கத்திவாக்கம் பாசுகரன் மகன் நவீனன்
38868976_10215182540051379_8735015323083 

38783113_10215182540011378_1146868280779

38808256_10215182539811373_1924243531560
 
38774872_10215182540571392_1909778382355


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

கருணாநிதியர் தமிழுக்குச் செய்த தொண்டுகள் -02

திருக்குறளைப் பெண்ணடிமைத்தன நூலென்றும் இந்துமத தெய்வங்களை பாடும் நூலென்றும் ஈ.வே.ரா அவர்கள் கண்டித்து வந்தார். ஆனால், திருகுறள் மன்றங்கள் தமிழரிடம் பெருகியவாறேயிருந்தன. மறைமலையடிகள் தலைமையில் வைகாசி அனுட்டத்தில் திருவள்ளுவர் நாள் கொண்டாடப்பட்டும் வந்தன.

////1935 மேத்திங்கள் 18 ஆம் நாள் அனுடநட்சத்திர நாள் அந்த நாளில் திருநாட்கழகத்தினர் வள்ளுவர் உருவப்படத்துடனும், திருக்குறள் சுவடியுடனும் ஊர்வலமாகச் சென்று மயிலைத் திருவள்ளுவர் கோயிலைச் சேர்ந்து திருவள்ளுவர் திருமேனிக்கு நீராட்டி பூச்சூட்டி பூசைகள் செய்து வழிபாடாற்றினர்.
விழாப் பொதுக்கூட்டம் மே,18, 19 ஆகிய இரண்டு நாட்களிலும் சென்னைப் பச்சையப்பன் கல்லூரி மண்டபத்தில் கூடியது. 
1935 மேத் திங்கள் 18,19 ஆகிய நாட்களில் தமிழகத்தின் பல இடங்களில் திருவள்ளுவர் பிறந்த நாள் விழாக் கொண்டாட்டங்கள் நடைப்பெற்றன. அவற்றில் இன்றியமையாச் சில இடங்கள் 1. சென்னை திருமயிலாப்பூர் திருவள்ளுவர் திருநாட் கோயில் தருமகர்த்தர் திரு. சிவஞானம் பிள்ளை அவர்கள் தலைமையில் கொண்டாட்டம் 2. சென்னை இராயபுரம் திவான்பகதூர் திரு. ஆ.இராமசாமி முதலியார் தலைமை 3. சென்னை, ஏழுகிணறு வாலிப சங்க ஆதரவில் 24, ஏழுகிணறு தெருவில் திரு. சி.என் அண்ணாதுரை தலைமை 4. கோயம்புத்தூர், கோவைத் தமிழ்ச் சங்க ஆதரவில் திரு. சி.எம். இராமச்சந்திர செட்டியார் தலைமை. 
பெங்களூர், பெல்லாரி, புதுச்சேரி, தஞ்சை, திருச்சி, மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி, எனப்பல ஊர்களில் விழா நடைபெற்றது. 
1935 ஆண்டிற் போலவே 1936 ஆண்டில் வைகாசி அனுடநாளைச் சென்னை திருநாட்கழகம் நடத்தியது. அந்நாள் விழாவிற்குத் தலைமையேற்றவர் டாக்டர். உ.வே. சாமிநாதையர். தென்காசித் திருவள்ளுவர் கழகம் நடத்திய விழாவிற்குத் தலைமை தாங்கியவர் அக்காலம் சென்னைத் திருநாட்கழகத் தலைவராக இருந்த திரு.வி.க அவர்கள். கோவையில் துடிசைக்கிழார் அ.சிதம்பரனார் தலைமையேற்றனர். //////

இப்படி திருக்குறள் மன்றங்கள் பெருகி, திருக்குறளை தமிழரின் மூலைமுடுங்கெங்கும் கொண்டுசென்றன. தமிழ் மறைக் கழகம் நடத்திய ஈழத்துக் கா.பொ.இரத்தினம் அவர்களின் பங்கும் இதில் அளப்பரியது. இப்படி திருக்குறள் தமிழரிடம் இருந்து பிரிக்கப்படமுடியாத ஓர் அங்கமாக மாறியதும்- கருணாநிதியரும் திராவிடத்தாரும் திருக்குறளை சமணநூல் என்றனர். 
சைவத்தின் தமிழ் மெய்கண்டசாத்திர நூல்களான நெஞ்சுவிடுதூது முதலிய சைவநூல்கள் போற்றும் நூலுக்கு சமண,பௌத்த அடையாளங்கள் ஆய்வுத்தளத்தில் உருவாக்கப்பட்டன.(எந்த சமண/பௌத்த மூலநூல்களும் திருக்குறளை தமது நூலென்று கூறவில்லை.) வைணவரான பரிமேழலகர்கூட சைவநூலாகவே திருக்குறளைச் சுட்டியிருந்தார். சைவ ஆகம நூலான மெய்கண்ட சாத்திரத்தில் திருக்குறள் சமணநூலாயின் போற்றுதலுக்குள்ளாகியிருக்குமென்ற பகுத்தறிவும் ஆய்வுகளில் மறைக்கப்பட்டன.

எல்லாவற்றிலும் கொடியதாக; திருக்குறளுக்கு இரத்தின ஆபரணமாய் பரிமேழலகர் உரையிருக்க; கடவுள்கொள்கை/பிதிர் கொள்கை என்பவற்றையெல்லாம் நிராகரிக்கும் நாத்தீகக்கொள்கையுடைய கருணாநிதியார், திருக்குறள் சொற்களுக்கு பொருள்களைத் திரித்து எழுதிய உரை!திராவிடக்கொள்கைகளுக்கு ஏற்றாற்போல் போலியுரை எழுதி, அதனை ஊடக/அரசியல் பலத்தினூடாக பாடத்திட்டங்களிலிருந்து சகலதிலும் திருக்குறளுக்குப் பொருளாக இணைத்தமை. திருவள்ளுவர் அவ்வுரைகளை படித்தாரெனின் நிச்சயமாக சபித்தேவிடுவார். - இதில் மாற்றுக்கருத்துடையோர், பரிமேழலகர் உரையையும் கருணாநிதியார் உரையையும் படித்துவிட்டு;கருத்திடுமாறு வேண்டுகிறேன்.

குறிப்பு:-தேவைப்படாதபோது இந்துமத தெய்வங்களைப் புகழும் பெண்ணடிமைத்தனமான நூல்.
தேவைப்பட்டதும் சமண நூல்! இதுதான் திராவிட இயக்கத்தாரும் கருணாநிதியரும் செய்த கூத்தாகும்! இதனை உலகுக்கு உணர்த்தகூடிய ஊடகப்பலம் திராவிட அரசியலைத்தாண்டி தமிழுலகில் எவர்க்கும் இருக்கவில்லை! அதுவே நாம் பெற்ற பெரும் குறையுமாகும்!



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

கருணாநிதியர் தமிழுக்குச் செய்த தொண்டுகள் -03
3:-தமிழுக்குச் செம்மொழி தகுதியைப் பெற்றுக்கொடுத்தார்.

விளக்கம்:-காலத்தால் முந்திய தமிழ்,சமஸ்கிருதம் என்பவற்றுடன் கன்னடம்,தெலுங்கு,மலையாளம் எல்லாமே செம்மொழித்தகுதியை இந்தியாவில் பெற்றுள்ளன. கற்றவனுக்கும் கல்லாதவனுக்கும் விருதென்றால் அதில் கற்றவனுக்கு என்ன தனிப்பெருமைவரும்?

தமிழுக்கு செம்மொழி தகுதி கிடைத்தது தமிழில் இருந்த நூல்களின் தகுதியாலேயேயொழிய கருணாநிதியரென்ற தனிமனிதரால் அல்ல!!!

முதலமைச்சராக கருணாநிதியர் இருந்ததால்த்தான் செம்மொழி கிடைத்ததென்றால்- அதைவிட முட்டாள்த்தனம் வேறொன்றுமில்லை. ஏனெனில் கருணாநிதியார் இந்திக்காரராக இருந்தாலும் அவரால் செம்மொழி தகுதியை இந்திக்கு உருவாக்கமுடியாது.ஏனெனில் காலத்தால் பழமையான நூல்வளம் இந்தியில் இல்லை. எனவே, தமிழுக்குச் செம்மொழிக்குரிய தகுதிகள் இருந்ததாலேயே செம்மொழி தகுதியைப் பெற்றது.

கருணாநிதியரால்த்தான் செம்மொழி தகுதிவந்ததென்றால், அது தமிழுக்குப் எங்கனம் பெருமையாகும்? மலையாளமும் தெலுங்கும் வந்து சேர்ந்துகொண்டதுபோல், அரசியல் யுத்தியால் தமிழும் செம்மொழியாயிற்றென்றால் தமிழுக்குப் பெருமையா? அல்லது சிறுமையா?

நாவலர் பெருமான், சி.வை.தாமோதரம்பிள்ளை, உ.வே.சாமிநாதையர்,மறைமலையடிகள் போன்றோரின் அயராத உழைப்பால்-தமிழ் ஏடுகள் நூலுருவாக்கம் பெற்று அழியாது ஆவணமாகின. தமிழ் செம்மொழியாவதற்கு காரண கர்த்தர் இப்பெரியோர்களே!!! அதை இருட்டடிப்புச் செய்து அரசியல் ஆதாயம் தேடிக்கொண்ட கருணநிதியர் எங்கனம் தமிழ்த்தாய்க்கு பெருமை சேர்த்தவராவார்? சிந்திக்க!!!!

No automatic alt text available.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

கருணாநிதியாரின் தமிழ்த் தொண்டு -04

தமிழ் நாட்டில் ஐந்துதடவைகள் முதலமைச்சராக இருந்தவர். ஆனால், மணிப்பிரவாளமென்று சங்கதமொழியோடு தமிழ்கலந்த மொழியுருவாகிக்கொண்டிருந்த காலத்தில் அதனை மறைமலையடிகள் தடுத்து நிறுத்தி-தனித்தமிழாக்கி தமிழைக் காத்துத்தந்தார்.அவர் எந்த அதிகாரத்திலும் இருந்ததில்லை.எந்த அரசின்பலமும் அவருக்கு இருக்கவில்லை.ஆனால், அவரால் தனித்தமிழ் இயக்கம் என்பதை உருவாக்கி, மணிப்பிரவாள நடையிலிருந்து தமிழைக் காக்க முடிந்தது.

தமிழ்நாட்டில் தனித்தமிழ் இயக்கத்தால் காத்து உருவாக்கப்பட்ட தமிழ்மொழியை தமிங்கிலமாக மாற்றிய சிறப்பு திராவிட இயக்கத்தாருக்கே உரித்தானது. ஈ.வே.ராவும் தமிழ்மொழியை விஞ்ஞான உலகிற்கு ஏற்றதன்று விமர்சனம் செய்தார்.அவர் பாசறையில் வளர்ந்த திமுக,அதிமுக இரண்டுமே கல்வி நிறுவனங்கள்,தொலைக்க்காட்சி ஊடகங்கள் என்று தம்கையில் மொழியாளுமையை சுயமாகக் கொண்டிருந்தும் தமிங்கில வளர்ச்சிக்கே ஒத்தாசையாக நின்றனர்.எந்த தடைகளையும் உருவாக்கவில்லை. பாமாகாவினுடைய மக்கள் தொலைக்காட்சி தமிழுக்குக் கொடுக்கும் முதன்மையில் ஒரு சிறுபங்கையேனும் சன்/கலைஞர் தொலைக்காட்சிகளில் காணமுடியாது. சன் கலைஞர் தொலைக்காட்சிகளில் தமிழ் வெறும் ஊடகமொழி மட்டுமே.அதன் நிகழ்ச்சித்தொகுப்பாளர்கள் பங்குபற்றுநர்கள் என்று எல்லோரும் தமிங்கிலத்தில் கதைப்பதையே ஊக்குவிக்கின்றனர்.மக்கள் தொலைக்காட்சியில் இதற்கு நேர்மாறாக, தமிழையே ஊக்குவிக்கின்றனர்.ஆக;மக்கள் தொலைக்காட்சியை பாமகவால் நடத்தக்கூடியதாக இருக்கும்போது திராவிடக்கட்சிகளின் தொலைக்காட்சிகளால் தமிழை ஊக்குவிக்கமுடியாமல் இருப்பதன் உள்நோக்கம் யாது?

பல நூற்றாண்டுப் பழக்கமான மணிப்பிரவாளத்தை தனித்தமிழ் இயக்கத்தை நடத்தி மறைமலையடிகளால் தடுத்து நிறுத்தியிருக்கும்போது (தடுத்திருக்காவிட்டால் மலையாளம்போல்,மணிப்பிரவாளம் என்ற மொழி தமிழ்நாட்டில் தோன்றியிருக்கும்!),ஏன் வெறும் அரைநூற்றாண்டுக்குரித்தான தமிங்கிலத்தை திராவிட இயக்கங்களால் தடுக்கமுடியவில்லை?

திருவள்ளுவர் சிலையும் திருக்குறள் உரையும் ஏமாளித்தமிழரை கேள்விகேட்காமல் ஆட்சிசெய்வதற்கேயாம்!!!! ஆண்டாண்டு தமிழ்நாட்டில் திராவிடத்தார் உருவாக்கியது தமிங்கிலத்தையாம்!!!

Image may contain: 1 person, text
 
 


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Jagannath Srinivasan

Via: Siva Swaminathan

கருணாநிதிக்கு சிலை வெக்கறதை தடுக்கும் பார்ப்பன சதியை பத்தி ஒரு புலம்பல்...இப்போ இல்லை...1968 ல்.
புலம்பியது ஈ.வே.ரா...அதிலிருந்து சில மணி துளிகள்...
----------------------------------------------------------------------------------

"பார்ப்பனர் தங்கள் ஜாதி வழமைப்படி பொறாமைக்காட்டி விஷமக்கருத்துக்களையும் "சாப"மிடுவதையும் அள்ளிக்கொட்ட ஆரம்பித்து விட் டார்கள்! அதைக் கண்டு பயந்த அமைச்சர் கருணாநிதி அவர்கள் எனக்கு சிலை வேண்டாம் சிலை வைப்புப் பெறும் அளவுக்கு நான் தகுதி பெற்றவனல்ல" என்று அறிக்கைவிட்டிருக்கிறார்.

என்னைப் பொருத்தவரை கலைஞர் கருணாநிதி அவர்கள் பார்ப்பன விஷமத்திற்குப் பயந்து சிலை வைப்பை மறுத்து தனக்கு சிலை வேண்டாம் என்று அறிக்கை விட்டதைக் கண்டிப்பதுடன் சிலை வைப்பு கமிட்டி யார் கலைஞர் அறிக்கையைப் பற்றிக் கவலைபடாமல் சிலை வைப்புக் காரியத்தை வெற்றிகரமாய் நடத்தி முடிக்க வேண்டுமென்று தெரிவித்துக் கொள்கிறேன்."

"இப்படிப்பார்த்தால் இன்றுள்ள, இந்நாட்டிலுள்ள எல்லா சிலைகளையும் உடைத்து எறிய வேண்டியதாகத்தானே ஏற்படும்? மகா அயோக்கியனும் இனத்துரோகியுமான, கம்பனுக்கு சிலை, தமிழனுக்காக ஒருகாசு பயனுள்ள காரியமும் செய்யாத பாரதிக்கு சிலை என்றெல்லாம் வைக்கப்பட்ட காலத்தில் ஒருவரும் ஒருவார்த்தையும் பேசவில்லை! தமிழரின் பச்சைத் துரோகியாகிய சத்திய மூர்த்திக்கு அவர் ஜாதிக்கார்கள் எவ்வளவோ ஆடம் பரமான பாராட்டுதல்கள், நினனவுச்சின்னங்கள் நடத்திய காலத்தில் ஒருவரும் ஒரு சிறு வார்த்தைகூட சொல்ல வில்லை. பெசண்டுக்கு எதற்காக சிலை? அந்த அம்மாள் பார்ப்பனக் கூலியாய் இருந்து பார்ப்பன வேஷம் போட்டு தமிழர் ஸ்தாபனமான, ஜஸ்டிஸ் கட்சியை அழிக்க முற் பட்டார் என்பதல்லாமல் அந்த அம்மாளின் பொதுத் தொண்டு என்ன? அதனால் ஏற்பட்ட நன்மை என்ன?" - விடுதலை 28.05.1968
-------------------------------------------------------------------------------------

கம்பர் மஹா அயோக்கியனாம், இன துரோகியாம்...இந்த யோக்யன் சொல்றான்...



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Jagannath Srinivasan



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 Image may contain: text



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 No automatic alt text available.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

5f.jpg 5fe.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

5i.jpg

38686884_1876388416001414_20533633696032



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

38784263_1631263186984010_58304091321333

38800003_592928934435914_32273533423593738813788_685513961797324_476907966912947 38823681_1761050117345383_23394102531011



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

38840280_1918463071550180_18841035059463

38848731_726517997685674_348049791592169



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

38859537_1879342792372643_62296990432079

 

EVK Sampath Speaking and 

M Karunanithi sitting in Floor, who is down in order

38860174_1108856552597090_21225211176870



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

38867173_1908237152814637_46465269219815



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

38909550_2025348197483719_2883344818639938942534_990020534511096_165000935001974

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 39015415_1358738030895975_86445695395325



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

d23b1dfe-2f6c-4de9-87b4-42ed49320b85.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

page%2B%25281%2529.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

1a7db885-3540-4a64-875f-4d02f8b669d0.jpg5.jpg 5aa.jpg

5aaa.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

5baa.jpg1a7db885-3540-4a64-875f-4d02f8b669d0.jpg5.jpg 5aa.jpg

5aaa.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

5baaa.jpg 

5bb.jpg

5bbb.jpg5c.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 5cb.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

5cbbb.jpg 25e7a608-9f6b-4ba0-914c-8e423d0109a5.jpg 7254dd8c-e57d-4220-83f0-99f36ba3469f.jpg 

page1_02.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

b57a6757-483c-4a14-be3b-df02d316a06e.jpg 

cd1b53d5-36e5-41a9-b114-a4e7608c3c2e.jpgCHN_2018-08-10_maip1_5.jpg CHN_2018-08-10_maip4_5.jpg CHN_2018-08-10_maip4_8.jpg CHN_2018-08-10_maip8_3.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

page2_03.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

5.jpg

5a.jpg zznhzn38758310_10211144523802846_3569.jp page%2B%25286%2529.jpg page2_03.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

page%2B%25285%2529.jpgpage8_02.gif page6_02.gif page11_03.jpg KOC_2018-08-09_maip7_2.jpg 

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
கருணாநிதியும் மதியிழந்த சமூகமும். ஆபாசமும் வெறுப்பரசியலும்.
Permalink  
 


invitation20for20chennai20sangamam.gif fc5effee-cf73-45a0-b4c4-6caf39d7ea2f.jpg f4120d51-5c0f-4a9e-a46b-5e1a4bac32ff.jpg 



-- Edited by Admin on Tuesday 14th of August 2018 10:47:21 AM

__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
RE: கருணாநிதியும் மதியிழந்த சமூகமும். ஆபாசமும் வெறுப்பரசியலும்.
Permalink  
 


 vCHN_2018-08-09_maip2_9.jpgCHN_2018-08-09_maip2_3.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

c2a417e3-4d2c-4a79-b4d7-e72b1d5516e0.jpg b21b8e48-0094-4793-9fb2-a80861db954c.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 b39722b3-6917-4b6f-898b-0c3bf57138c3.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 Image may contain: one or more people, people standing, outdoor and food

 
 
 
Follow · 6 hrs · 
 
 
 
என்னயா இது. 



சத்தியத்தை அறியாமல் இருக்கின்ற மிஞ்சின நீதிமான்கள் என்று சொல்லப்படுகிற 

பிஷப் அவர்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன்!!!

கர்த்தருடைய சமூகத்தில் முழங்காலிட தான் தேவன் நம்மைத் தெரிந்து கொண்டார் !!

அரசியல்வாதி சமாதிகளில் முழங்காலிட அவர் நம்மை தெரிந்து கொள்ளவில்லை!!

எல்லா கணமும் மகிமையும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஒருவருக்கு மட்டும்தான் நாம் செலுத்த வேண்டும்!!

அரசியல்வாதிக்கு. அல்ல!!!

நம்முடைய முழங்கால் இயேசு கிறிஸ்து ஒருவருக்காக மட்டும்தான் முழங்க வேண்டும்!!!

அரசியல்வாதிகள் சாதாரண ஒரு மனிதர்கள் அவ்வளவுதான் !!

மற்றபடி அவர்களை கடவுளாக நினைத்து முழங்காலிட வேண்டிய அவசியம் யாருக்கும் கிடையாது!!!

இந்த மாதிரி காரியங்களை செய்து கொண்டு இருக்கின்ற பிஷப் அவர்களுக்கு சொல்லுகிறேன்! 

ரொம்ப நடிக்காதீர்கள் பிறகு இயேசுவின் வருகையின் வெட்கப்படுவீர்கள். 

தயவுசெய்து இயேசு கிறிஸ்து பெயரை கெடுக்கதீர்கள்!!

தவறை சரி செய்து கொள்ளுங்கள்!!

மனந்திரும்புங்கள்!!!

உலகத்தை நியாயம் தீர்க்க இயேசு வருவார்!!

இயேசுவின் வருகைக்கு ஆயத்தப்படுங்கள்

நம்மை உண்டாக்கின கர்த்தருக்கு முன்பாக நாம் பணிந்து குனிந்து முழங்கால்படியிடக்கடவோம் வாருங்கள்.

சங்கீதம் 95 : 6


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Image may contain: 2 people, people smiling, people sitting, meme and text 

Image may contain: 2 people, meme and text

Image may contain: 2 people, textImage may contain: 4 people, people smiling, text

Image may contain: 1 person, textImage may contain: 2 people, text

Image may contain: 2 people, textImage may contain: 7 people, meme and text



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 Image may contain: 4 people, people standing and outdoor

Image may contain: one or more people and textImage may contain: 4 people, text

Image may contain: 3 people, meme and text

Image may contain: 2 people, people smiling, text

Image may contain: 2 people, text

Image may contain: 2 people, text

Image may contain: 3 people, text

Image may contain: 1 person, smiling, textImage may contain: 3 people, text

Image may contain: 2 people, text



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 Image may contain: 4 people, beard and textImage may contain: 4 people, meme and textImage may contain: 1 person, textImage may contain: 7 people, meme and textImage may contain: 2 people, meme and textImage may contain: 2 people, meme and text

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 Thavouthu Lebbe Mohamed Arsath கருணாநிதிக்கு நரக நெருப்பைக்கொண்டே நன்மாராயம் கூறுங்கள் 

===================
தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மரணத்தை தொடர்ந்து நமது முஸ்லிம்கள் பலர் இஸ்லாத்தின் வரம்பை மீறி சமூக வலைத்தளங்களில் பல கருத்துக்களை வெளியிட்டு வருவதை நாம் காண்கிறோம்.

கருணாநிதியைப் பொறுத்தவரையில் அவர் ஒரு காபிராகவே வாழ்ந்து காபிராகவே மரணித்துவிட்டார். அந்த வகையில் மறுமையில் காபிர்களுக்கு எத்தகைய வாழ்க்கையை சித்தப்படுத்தி வைத்திருப்பதாக அல்லாஹ் அவனுடைய திருமறையில் வாக்களித்தும் எச்சரித்தும் இருக்கிறானோ அந்த வாழ்க்கையை நிச்சயமாக அவர் அடைந்துகொள்வார்.

அதேநேரம் அவர் இந்த உலகில் வாழ்கின்ற காலத்தில் பல நல்ல காரியங்களை மேற்கொண்டதாக முஸ்லிம்கள் பலரும் பலவகையான விடயங்களை சுட்டிக்காட்டி, வெளிப்படுத்தி வருகின்றனர். இறை நிராகரிப்பில் வாழ்கின்ற ஒரு காபிர் இந்த உலகத்தில் எப்பேர்ப்பட்ட நற்காரியங்களை மேற்கொண்டாலும் அதனால் அவருக்கு மறுமை வாழ்க்கையில் யாதொரு பயனும் இருக்கப்போவதில்லை.

ஏனெனில் மறுமை வாழ்வின் விமோசனத்திற்கு அத்திவாரமாக இருப்பது இறைவன் மீதான முறையான நம்பிக்கையாகும். அந்த நம்பிக்கை இல்லாமல் இறைவனை நிராகரித்து யார் யாரெல்லாம் வாழ்கிறார்களோ அவர்கள் இவ்வுலகில் மேற்கொண்ட நற்காரியங்கள் அனைத்துமே இவ்வுலக வாழ்க்கையோடு முற்றுப்பெற்று விடும்.

அவ்வாறு மரணித்த ஒருவர்தான் இந்த கருணாநிதி. அவர் செய்த சேவைகளில் ஊழல், மோசடிகள் இருந்ததா?, இல்லையா? என்பது வேறு விடயம். ஆனால் அவர் எத்தகைய மாபெரும் சேவையை, எவ்வளவு பெரிய சிரமத்திற்கும் தியாகத்திற்கும் மத்தியில் மேற்கொண்டிருந்தாலும் அதனால் அவருக்கு மறுமையில் யாதொரு பலனும் இல்லையென்பதே இஸ்லாத்தின் மிகத்தெளிவானதும் உறுதியானதுமான நிலைப்பாடாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்;
"நீங்கள் இறை நிராகரிப்பாளர்களுடைய அடக்கஸ்தலங்களை கடந்து சென்றால் நரக நெருப்பைக்கொண்டே அவர்களுக்கு நன்மாராயம் கூறுங்கள்"
(ஸுனன் இப்னு மாஜா: 1288)

ஸஹ்றான் பின் ஹாஷிம்,
இஸ்லாமிய அழைப்பாளர்,
காத்தான்குடி,
இலங்கை.
08:08:2018 ==========================

Mufaris Rashadi
August 8 at 8:53 PM · 
அரசியல் வாதி, அறிவாளி, கலாநிதி... மரணித்து விட்டார் மனிதன் என்ற வகையில் நம் எல்லோருக்கும் கவலை தான், உலக மக்கள் அவரது புகழை பல்லாண்டு காலம் பாராட்டி, பேசிக்கொண்டே இருப்பார்கள், நல்ல விடயம் அது தப்புக் கிடையாது,

ஆனால் இவ்வளவு பெரிய அறிஞராக இருந்த அவரால் அல்லாஹ் ஒருவனை நம்பி ஒரு முஸ்லிமாக மரணிக்க முடியாமல் போய் விட்டது. அப்படியாயின் அந்த நிரந்தர மறுமை வாழ்வில் அவரது நிலை என்ன ?

இறைவனின் பரீட்சையில் வெற்றி பெற்றாரா ? தோல்வியுற்றாரா ?

தூய முஸ்லிமாக மரணிப்பதுதான் உலகின் மிகப்பெரும் சாதனை.

========================

Mufaris Rashadi Zafar Ahmed Br

அபூ தாலிப் மரணம் வரை நபிகளாரை அன்பாக அரவணைத்துப் பாதுகாத்தார் அதனால் அவர் ஒரு முஸ்லிமாகிவிடுவாரா ? அல்லது சுவனம் தான் அவருக்கு கிடைத்து விடுமா ?

அவரது பணிகளை பாராட்டுவது வேறு, மனிதன் எதற்காக படைக்கப்பட்டானோ அந்த நோக்கத்தை நிறைவேற்றுவது என்பது வேறு.

அவரது பணி பாராட்டப்பட வேண்டியதுதான் ஆனால் அவரது நிரந்தர மறுமை வாழ்வு ? கலிமாயின்றி செய்த சேவைகளினால் மாத்திரம் ஒருவர் சுவனம் செல்வதாக இருந்தால் இவரைப்போன்ற பல முஷ்ரிக்களும் சுவனம் செல்வார்கள்.

அல்லாஹ்வின் ஏற்பாடு அப்படியானதல்ல...

இதனால் அவரை குறைத்து மதிப்பிட வில்லை, அவர் பற்றிய எனது கவலையை தெரிவிக்கின்றேன்.

அல்லாஹ் நம் எல்லோரையும் மன்னிப்பானாக!



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 Image may contain: 13 people, people smiling, meme and text



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 Shanmuga Nathan

ிந்து சடங்குகளைப் பற்றி அவதூறு செய்வதும் வாடிக்கையாய் போய் விட்டது அவருக்கு. விரோதி என்றால் கையில் கத்தி கபடா வைத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஒரு கருத்துக்கு ஒத்திசையாததும் அதற்கு எதிராக பேசுவதும் விரோதம் (dishormony) தான். 
.
ஏற்கனவே தந்திரமாக கட்டமைக்கப்பட்ட திராவிட சித்தாந்தத்தின் மேல் அமர வைக்கப்பட்ட ஒரு வெருளி (sacrecrow) அவர். திராவிட சித்தாந்தத்தை ஊக்குவிக்கும் ஜிஹாதி மற்றும் மத மாற்ற கும்பலின் அரசியல் பிரதிநிதியோ என்ற ஐயம்/அச்சம் எழுகிறது.
.
ஜிவாஹிருல்லா மற்றும் எஸ்ரா போன்றோரின் தொழில் பங்குதாரர். அவர்கள் சார்ந்த இயக்கத்தின் அரசியல் குரல். பிரிவினை வாதத்தின் அரசியல் முகம். இஸ்லாமிய, கிறிஸ்தவ மத வெறியின் அரசியல் நீட்சி. தமிழ் பிரிவினை வாதத்தின் இன்றைய முகவரி. இவையெல்லாம் சேர்த்து அதற்கிடையில் அங்கங்கே மானே தேனே போட்டால் அந்த வெள்ளை வேட்டி சட்டை போட்ட ஸ்டாலின் வந்துவிடுகிறார்.
.
இந்த ஸ்டாலினிடம் இருந்து எங்களுக்கொன்றும் எந்த பண்டிகைக்கும் வாழ்த்து தேவையில்லை. ஆனால் இதுதான் secularisam என்று சிலர் நம்பி வாழ்வது கண்டுதான் கொஞ்சம் வருத்தம்.
.
ஒரு நல்ல ஆத்திக தி.மு.க அனுதாபியிடம் இது பற்றிக் கேட்டால் ஏதேதோ சொல்லி சமாளிப்பது கொஞ்சம் பரிதாபமாய் இருக்கும். ஒருமத வெறுப்பு மிதமிஞ்சி கிடக்கும் தி.மு.க வின் fasicst தியரியை secularism என்று நம்ப வைப்பது பெரிய நம்பிக்கை துரோகம். ஆனால் அதைப் பற்றி சிந்திக்கக் கூட ஸ்டாலினுக்கு சுதந்திரம் இருக்கிறதா என்று தெரியவில்லை.
.
ரேடாரின் தொழில் நுட்பம் பற்றி பிரதமர் தவறாக சொல்கிறார் என்று 10 நிமிடம் பேசுபவருக்கு ரேடார் என்றே சொல்ல வரவில்லை. என்ன மாதிரி விமர்சனம் இவருடையது! நடக்கவே தெரியாதவன் நாட்டிய மயூரியின் அபிநயம் சரியில்லை என்பதா?
.
வைகோ, வைரமுத்து போன்றவர்கள் ஸ்டாலினை ஒரு பெரிய இனத்தின்/இயக்கத்தின் தலைவனாக முன்னிறுத்துகிறார்கள். அவர் பெரிய ராஜாளி போல் அறிக்கை விடுகிறார்கள். ஆனால் பாவம், ஸ்டாலின் . எடுப்பார் கைப்பிள்ளையாக இருக்கிறார். இவர் ஒரு பெரிய கட்சியின் தலைவராக இருப்பது இந்த மக்களின் துரதிர்ஷ்டம்.
.
ஸ்டாலின், பருந்து படம் வரையப்பட்ட பட்டம். அதற்கென்று சொந்த சிறகுகள் கிடையாது. அந்தப் பட்டம் பறப்பது கீழிருந்து இயக்கும் மிஷனரி மற்றும் மதவெறி எனும் நூலினால். அந்த நூலை நறுக்கி விட்டால் அவர் வெறும் காகிதமாய் கீழே விழுவார்.
.
"வேதனைக் காமம் அந்தோ வேரொடும் கெடுத்தது" என்று ராவணன் வீழ்ச்சியை கம்பன் சொல்வது போல் இந்த தமிழ் பிரிவினை எனும் வேதனைக் காமம் இவர்களை வேரோடு வீழ்த்தும் காலம் வரும்.
.
-ச. சண்முகநாதன்.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 
Image may contain: 3 people, text
Sendhamarai NewsLike Page
 · 

#வள்ளுவர்_வர்ணம்#சுப்பு_சொல்வது_என்ன?

சைவமும் வைணவமும் மோதல் போக்கை கடைபிடித்து வந்த காலத்தில் வாழ்ந்தவர் மகாகவி பாரதியார். வடகலை தென்கலை பிரச்சனை கூட அவர் காலத்தில் இருந்தது. இதை எல்லாம் தவிர்க்க வேண்டும் என்கிற எண்ணத்தில் பாரதியார் தன் நெற்றியில் குங்குமத்தை நேர்கோடாக இட்டுக் கொண்டார்.

பாரதியாரைப் படம் பிடித்ததே மிகக்குறைவு. அப்படி எடுத்துக் கொண்ட ஒன்றிரண்டு படங்களில் அவரது நெற்றியும் குங்குமம் இருக்காது. ஆனால் அதைப் பயன்படுத்திக் கொண்ட கம்யூனிஸ்டுகள் அவரது அனைத்துப் படங்களையும் குங்குமம் இல்லாமல் வரைய ஆரம்பித்து விட்டார்கள்.

இதன் சூட்சுமம் புரியாத மக்களுக்கும் பாரதி என்றால் குங்குமம் இல்லாமல் வரையும் வழக்கம் வந்து விட்டது. இப்படி நம் கண்ணுக்குத் தெரியாத பல சூழ்ச்சிகளை அரங்கேற்றி இருக்கிறார்கள் இந்த கம்யூனிஸ்டுகள்.

இதைப் போன்றதுதான் இந்த திருவள்ளுவர் விவகாரமும். திருவள்ளுவருக்கு ஏற்கனவே உருவம் இருந்திருக்கிறது; உருவப் படங்கள், உருவச் சிலைகள் இருந்திருக்கின்றன; கோவில்களே கூட உண்டு. மயிலாப்பூரில் திருவள்ளூர் கோயில் இருக்கிறது; அவரது திருமேனி இருக்கிறது. கபாலீஸ்வரர் கோயில் ஊர்வலத்தில் நாயன்மார்களோடு சேர்த்து திருவள்ளுவ நாயனார் விக்கிரகத்தையும் ஊர்வலமாக எடுத்துச் செல்கிறார்கள்.

இதையெல்லாம் விட்டுவிட்டு வேணுகோபால் சர்மா என்ற தனிநபர் ஒரு படம் வரைகிறார். அவர் எந்த எண்ணத்தில் படம் வரைந்தாரோ தெரியவில்லை, ஆனால் ஒரு விதத்தில் தப்பு செய்து விட்டார்.

அந்தப் படம் வரையும் காலகட்டத்தில் அண்ணாதுரை, அன்பழகன், பாரதிதாசன், கருணாநிதி என திராவிட இயக்கங்களில் யார் யாரெல்லாம் பெரிய பிரமுகர்களாக இருந்தார்களோ அவர்களை எல்லாம் அழைத்து காட்டி ஒவ்வொருத்தர் சொன்ன படியும் படத்தைத் திருத்துகிறார். எந்த அடிப்படையில் அதைச் செய்தார் என்பது இதுவரையில் நமக்குத் தெரியவில்லை.

பாரதிதாசன் என்ன வரலாற்று ஆய்வாளரா? தமிழ் பண்பாட்டை பற்றி அவருக்குத் தெரியுமா? பண்டைத் தமிழர் வாழ்வியல் பற்றி அவருக்கு பெரிய புரிதல் உண்டா? என்பதை எல்லாம் அந்த வேணுகோபால் சர்மா யோசிக்கவில்லை.

யார் யார் என்னென்ன மாற்றங்களைச் சொன்னார்களோ அத்தனை மாற்றங்களையும் செய்து திருவள்ளுவரின் உருவத்தை மாற்றி அமைக்கிறார். பிறகு அந்த படத்தை வெளியிடும் பொழுது மாற்றத்தைச் சொன்னவர்களே அந்தப் படத்தை ஏற்றுக் கொள்வதாக ஆதரித்து அறிக்கை விடுகிறார்கள். இந்த சூழ்ச்சி புரியாத காங்கிரஸ் காரர்களும் அந்தப் படம் நன்றாக இருப்பதாக ஒத்துக் கொண்டார்கள்.

அந்தப் படம்தான் அரசால் அங்கீகரிக்கப் பட்டது. இதன் பின்னால் இருக்கக்கூடிய அரசியலையும், அதன் விளைவுகளையும் அன்று யாரும் யோசிக்கவில்லை. அது நம்மை இன்று வரை பாதிக்கிறது அவ்வளவு தானே ஒழிய வேணுகோபால் சர்மா வரைந்த படத்திற்கும் திருவள்ளுவர் உருவத்திற்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது.

ஔவையார் என்ற படத்தில் கூட திருவள்ளுவரைக் காட்டியிருக்கிறார்கள். அதில் அவர் நெற்றியில் பட்டையாக விபூதி அணிந்து கொண்டு, சைவ நாயன்மார் போலத்தான் காட்சியளிக்கிறார். ஆனால் என்ன காரணத்தினாலோ அந்தப்படத்தில் வரும் திருவள்ளுவரின் தோற்றத்தை இவர் ஏற்றுக் கொள்ளவில்லை. இவர் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதாலும் பாரதிதாசன் அதை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதாலும் இந்தப் படத்தை நம் தலை மீது சுமத்தி விட்டார்கள். அதன் விளைவுதான் இப்போது நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். இதற்கு முழுப் பொறுப்பு ஏற்க வேண்டியவர் அந்த வேணுகோபால் சர்மா தான்.

#திராவிடமாயை_சுப்பு



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard