thirukkural_vanigaviyal01

1.0நுழைவாயில்

                எல்லார்க்கும் எல்லாமும் [0582] சொல்ல வேண்டியவற்றை நல்ல வகையில்- வெல்லும் வகையில் சொல்லும் சொல்லாற்றல் மிக்கவர் அருந்திறல் பெருந்தகையர் திருவள்ளுவர். தனிமனிதனுக்கும் குடும்பத்திற்கும் நாட்டிற்கும் உலகிற்கும் சொல்ல வேண்டிய இன்றியமையா அனைத்தையும் சொல்லியுள்ளார். அவற்றுள் ஒரு தலைப்பே உலகு தழீஇய பொதுமைச் சிறப்பு மிக்க தலைப்பாகிய ‘வணிகவியல் மேலாண்மைக் கோட்பாடுகள்’ என்பது. இத் தலைப்பும், திருவள்ளுவர் எத்துணைப் பெரிய பெருமையும் அருமையும் பொலியும் தொலைநோக்குப் பார்வையர் என்பதைப் புலப்படுத்தும். இனி அவை பற்றி நீடு நினைந்து ஆழச் சிந்திப்பது இவ் ஆய்வுக் கட்டுரையின் நோக்கு.

2.0. பொருளின் இன்றியமையாமை    

            நீர்இன்றி அமையாது உலகு [0120] என்பது போலப், பொருள்இன்றி அமையாது உலகு. பொருள் இல்லார்க்கு இவ்உலகு இல் [0247] என்பதும் திருவள்ளுவரின் பெருவாக்கு. பொருளின் இன்றியமையாமையைத் தொலைநோக்கால் நனிஉணர்ந்த திருவள்ளுவர் பொருள் செயல் வகை [076] என்னும் அதிகாரத்தைப் பொருள்பொதிய வரைந்தார்.

3.0. பொருள் உள்ள வாழ்க்கை

      உழவுத் தொழில், நெசவுத் தொழில், வணிகத் தொழில், முதலான பல்வேறு தொழில்கள், பதவி, வேலை, கூலி வேலை முதலான எண்ணரிய வழிகளில் பொருளைத் திரட்டலாம்.

     பொருள் உள்ள வாழ்க்கை வணிகத்திலும் இருத்தல் வேண்டும். பொருளுக்காக வணிகம் செய்யலாம்; பொருளுக்காவே வணிகம் செய்தால், அதில் பொருள் இருக்காது. இதைச் சிந்தித்த பொருள்வள்ளல் திருவள்ளுவர் உலகப் பொதுமையை உள்ளடக்கிய வகையில், வணிகவியல் மேலாண்மைக்கோட்பாடுகளைத் தொகுத்தும் பகுத்தும் வகுத்தும் வழங்கியுள்ளார்.

4.0வணிகம் – ஒரு விளக்கம்

   மனிதனுடைய தேவைகளையும் விருப்பங்களையும் நிறைவேற்றுவது வணிகம். அது ஆதாய(இலாப) நோக்கு உள்ளதாகவும் இருக்கலாம்; இல்லதாகவும் இருக்கலாம். இவ் வகைப் பொருளாதார நடவடிக்கையே வணிகம் [TRADE, COMMERCE, BUSINESS]  எனப்படும்.

5.0. எத் தொழிலும் எவ் வணிகமும் சிறப்பினதே

     பிறப்[பு]ஒக்கும் எல்லா உயிர்க்கும்; சிறப்[பு]ஒவ்வா

    செய்தொழில் வேற்றுமை யான்.           [0972]

  •      செய்யும் தொழிலில், வணிகத்தில் சிறப்பு உள்ளது, சிறப்பு இல்லது என வேறுபாடுகள் ஏதும் இல்லை.
  •   செய்யும் தொழிலில் / வணிகத்தில் காட்டும் வேறுபாட்டுத் திறன்களால்தான் சிறப்புக்களும், சிறப்பு இன்மைகளும் ஏற்படுகின்றன.

6.0முதற்கட்ட வணிகவியல் ஆய்வு மேலாண்மை

       வினை [வணிகம்செயல் வகை

    பொருள்கருவி காலம் வினைஇடனொ[டுஐந்தும்

      இருள்தீர எண்ணிச் செயல்.       [0675]

     இத் திருக்குறட்பா பொதுமைக் கருத்தாக்கத்தைக் கொண்டது.. அனைத்து வகைத் தொழில்களுக்கும் பொருந்தும் திருக்குறட் பா.

இதில் ஒரு வணிகத்தைத் தொடங்கும்முன் எவற்றையெல்லாம் அடிப்படை ஆய்வுகளாகச் செய்ய வேண்டும் என்பதைத் திருவள்ளுவர் ஆழமாக ஆராய்ந்து வரிசைப்படுத்தியிருக்கிறார்.

6.1வினை: என்ன வணிகம் செய்தால் தமக்குப் பொருந்தும் என்பதை ஆராய்ந்து, அதைத் தெளிந்து தேர்வு செய்தல் வேண்டும்.

  •  தெரிந்த வணிகத்தை விட்டவனும் கெட்டான்

         தெரியாத வணிகத்தை தொட்டவனும் கெட்டான்.

         ஒல்வ[துஅறிவ[துஅறிந்[து]அதன் கண்தங்கிச்

         செல்வார்க்குச் செல்லாத[துஇல்.     [0472]

எது முடியுமோ அது பற்றி அறிய வேண்டியன அறிந்து, அதிலேயே உறுதியாக நின்று நடத்திச் செல்வார்க்கு எல்லாம் வெற்றியாகும்.

6.2பொருள்: தம்மால் எவ்வளவு தொகையை முதலீடாகப் போட முடியும் என்பதை நீள நினைந்து ஆழ ஆராய வேண்டும்.

        அள[வு]அறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல

        இல்ஆகித் தோன்றாக் கெடும்   [0479]

      தம் பொருள் அளவை நன்கு ஆராய்ந்த பின்னரே, முதலீடு பற்றிச் சிந்திக்க வேண்டும்;

6.3காலம்கோடைக் காலம், மழைக் காலம், ஐப்பசி அடைமழைக் காலம் முதலான கால நேரங்களை ஆராய்ந்து அவ்அவ் காலத்திற்கும் நேரத்திற்கும் ஏற்ற வணிகத்தைத் தொடங்க வேண்டும்.

         பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்

         தீராமை ஆர்க்கும் கயிறு       [0482]

      காலத்தோடு பொருந்தும் வணிகம் செய்க. அதுவே பொருள் செய்யும்.

6.4. கருவிவணிகத்தோடு தொடர்புடைய கருவிகள் பற்றிச் சிந்திக்க வேண்டும். அவை கிடைக்கும் இடம், அவற்றின் விலை, உழைக்கும் காலம் செயல்திறன் முதலானவற்றை ஆய்வு செய்தல் வேண்டும்.

        அறி[வு]அற்றம் காக்கும் கருவிசெறுவார்க்கும்

         உள்அழிக்கல் ஆகா அரண்.         [0421]

      அறிவு எனும் கருவிக்கு அழிவைத் தடுக்கும் ஆற்றல் உண்டு. பகைவராலும் / போட்டி வணிகராலும் அழிக்க முடியாத உள்பாதுகாப்புக் கருவியாகும் அறிவு.

     அறிவோடு சிந்தித்து அறச் செறிவோடு வணிகம் செய்வார் வெல்வர்.

6.5இடம்: இடத் தேர்வு மிகவும் இன்றியமையாதது. மக்கள் எளிதில் வந்து செல்லும் இடமாக இருக்க வேண்டும்.

            காலம் கருதினும் கைகூடும் காலம்

            கருதி இடத்தால் செயின்.   [0484]

     எக் காலத்தில் எவ் வணிகத்தைச் செய்ய வேண்டும் என ஆராய்ந்து, அதை இடத்தொடு பொருந்தச் செய்வார்க்கு உலகமே கிடைக்கும்.

  •         இருள்தீர எண்ணிச் செயல்
  •       செய்ய இருக்கும் வணிகத்தில் உள்ளிருக்கும் இருட்பகுதிகள் ஆகிய தோல்வி வாய்ப்புக்கள், இழப்புக்கள், நடைமுறைச் சிக்கல்கள் உதவிகள் போன்ற அனைத்துக் கூறுகளையும் ஆராய்ந்து வணிகத்தைச் தொடங்க வேண்டும்.