New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஆதவன் தீட்சண்யா- புனையல்கள்


Guru

Status: Offline
Posts: 24601
Date:
ஆதவன் தீட்சண்யா- புனையல்கள்
Permalink  
 


எங்கும் பரவும் மநுவிரோதிகள்
ஆதவன் தீட்சண்யா

1.

1927 டிசம்பர் 25 அன்று மநுஸ்மிருதியை அம்பேத்கர் எரித்தபோது வர்ணாசிரமத்தின் வாரீசுகள் அவரை பீமாசுரன் என்றும் மநுவிரோதன் என்றும் வசைபாடினர். தனது கருத்தியல் எதிராளிகளின் மனநிலையை சமன்குலைத்து சிதறடித்த அந்த இணையற்ற கலகக்காரனோடு ஒருமை கொள்ளும் முகமாகவே நான் ஒரு மநுவிரோதன் என்று என்னை பெருமிதம் பொங்க அறிவித்துக் கொண்டேன். சாதி மறுப்பாளர் என்று தன்னை மனப்பூர்வமாய் நம்பிக் கொள்கிற ஒவ்வொருவரும் இப்படி தம்மைத்தாமே அறிவித்துக்கொள்ள முன்வர வேண்டும் என்ற விழைவும் இதில் அடங்கியிருக்கிறது.

Manuvirothiபெரிய பெரிய தலைவர்களெல்லாம் சும்மா இருக்கும்போது இவனென்ன பெரிய இவனாட்டம் ‘நான் ஒரு மநுவிரோதன்’ என்று பிரகடனம் செய்துகொள்கிறான் என்று தலைப்பைப் பார்த்ததுமே முனகத் தொடங்கியவர்களிடம் மெத்தப் பணிவோடு ஒன்றை கேட்க வேண்டியிருக்கிறது- பெரிய பெரிய தலைவர்களெல்லாம் ஏன் சும்மா இருக்கிறார்கள்? அல்லது சும்மா இருப்பதால் பெரிய பெரிய தலைவர்களாய் இருக்கிறார்களா என்பதே அது. தவிரவும் அவர்களெல்லாம் தம்மை அவ்வாறு முழுமனதோடு அறிவித்துக் கொண்டால் இந்த சமூகம் என்னவாய் உருமாற்றம் கொள்ளும் என்று இத்துனூண்டு கற்பனை செய்துதான் பாருங்களேன்...

மநுஸ்மிருதியால் இன்றளவும் ஆதாயம் அடைந்துகொண்டிருக்கிற சாதியினரைத் தவிர மற்றெல்லோரும் அதை எதிர்ப்பதற்குரிய எல்லா நியாயங்களையும் கொண்டிருக்கின்றனர். பார்ப்பனச் சாதியில் பிறந்திருந்தாலும்கூட தம்மைத்தாமே சிந்தனை மற்றும் செயல்ரீதியாக சாதிநீக்கம் செய்து கொண்டவர்களுக்கும்கூட இந்த நியாயம் இருப்பதாகவே நம்புகிறேன். எனவே தம்மை மநுவிரோதி என்று அறிவித்துக் கொள்ளாதவர்களை மநுவின் சினேகிதர் என்றோ மநுவுக்கே...... (சரி, வேண்டாம் விடுங்கள்....ஆதவன் கடாமுடான்னு பேசறார் என்ற குற்றச்சாட்டில் ஏன் மாட்டிக்கொள்ள வேண்டும்?) என்றோ குறுக்கிப் பார்க்கும் நோக்கம் எதுவும் நமக்கில்லையாயினும், அவ்வாறு தம்மை மநுவிரோதி என்று அறிக்கையிட்டுக் கொள்வதில் ஒருவருக்குள்ள தடைதான் என்ன என்று கேட்க விரும்புகிறேன்.

மநுவை எதிர்ப்பதென்பது, இங்கு நிலவும் சமூக அரசியல் பொருளாதார பண்பாட்டு ஒடுக்குமுறை அமைப்பை எதிர்ப்பதற்கும் புரட்சிகரமாய் மாற்றியமைக்கவுமான ஒரு நெடியப் போராட்டத்தின் தொடக்கமே. உஞ்சவிருத்தி செய்து வயிற்றைக் கழுவும் நிலைக்கு தனது பொருளாதார நிலை- வர்க்கநிலை- தாழ்ந்து கிடக்கும் போதும் தனது சமூக அந்தஸ்தில் பின்னம் ஏதும் ஏற்படாமல் பாதுகாத்த மநுவைக் கொண்டாட ஒரு பார்ப்பனருக்கு நியாயம் இருக்கிறது. எனில், பெரும் கல்வியாளராகவும் செல்வந்தராகவும் சொத்துடமையாளராகவுமாகி தனது வர்க்கநிலையை பார்ப்பனரல்லாத ஒருவர் உயர்த்திக் கொண்டுவிட்டப் பின்னும்கூட, அவரது பிறப்பிலேயே தீர்மானிக்கப்பட்டுவிட்ட சாதியிழிவைத் சுமந்து திரிந்தாக வேண்டிய அவலத்தை உருவாக்கிய மநுவை அவர் எதிர்ப்பதுதானே சுயமரியாதையின் அடையாளம்?

பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார், சுயமரியாதை போன்ற சொற்களைக் கண்ட மாத்திரத்தில் தி.க. வாடை வீசுகிறது என்று மூக்கைப் பிடித்துக் கொண்டு முகத்தை திருப்பிக் கொள்கிறவர்கள், வசக்கி தொழுவத்தில் கட்ட முடியாத ஒரு முரட்டுப்பிராணியைக் குறித்த கவலையை வெளிப்படுத்தும் பாவனையோடு ‘ஆதவனிடம் நிறைய டீவியேஷன் இருக்கிறது’ என்று அபிப்ராயம் தெரிவிக்க கிளம்பியுள்ளனர். ஒட்டுமொத்த மனிதகுலமும் சுயமரியாதையோடு வாழும் உன்னத சமூகத்தை நிறுவுவதற்குத் தடையாக இருக்கும் சகலத்தையும் எதிர்த்துப் போராட வேண்டும் என்ற மார்க்சீயத்தின் வழிகாட்டுதலே, ஒருவர் தம்மை மநுவிரோதி என்றோ மநுவின் பரம/ஜென்ம விரோதி என்றோ அறிவித்துக் கொள்ளத் தூண்டுகிறது.

எனது ஆண்குறியை வெட்டிக் கொண்டாலும் வெட்டிக் கொள்வேனே தவிர எனது பூணூலை அறுத்துக் கொள்ளமாட்டேன் என்று ஒரு மௌனியால் பகிரங்கமாக தனது சாதியகங்காரத்தை வெளிப்படுத்த முடியுமென்றால், உயிர்நிலையான ஆண்குறியை விடவும் பெரிதென கொண்டாடுகிற அந்த பூணூலை அவருக்கு வழங்கிய மநுவை எதிர்ப்பதைத் தவிர பார்ப்பனரல்லாத பிறசாதியாருக்கு வேறு என்னதான் மார்க்கமிருக்கிறது? எனவே இப்போது, மெல்ல உதடு பிரித்து ஒருமுறை உங்களுக்கு நீங்களே ரகசியமாகவேனும் ‘நான் ஒரு மநுவிரோதி’ என்று சொல்லிப் பாருங்கள். அவ்வாறு உச்சரிக்கும்போது நாக்கு அழுகி விழுந்துவிடும் என்று அஞ்சுகிறவர்கள் சற்றே ஓரமாக உட்கார்ந்து தமக்குத்தாமே வாக்கரிசி போட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

2.

நேர்காணல் மீதான விமர்சனங்கள் வெளிவரத் தொடங்கிவிட்டன. விமர்சனம் என்ற பொதுத்தலைப்பின் கீழ் வகைப்படுத்த முடியாத வசவுகளும் குமைச்சல்களும்கூட இதில் அடக்கம்தான். வாழ்வின் பல்வேறு தளங்களை ஊடறுத்துச் செல்வதாய் கேள்விகளும், அக்கேள்விகள் குறித்த எனது புரிந்துணர்வின் வழிகாட்டுதலில் அமைந்த பதில்களுமாய் நேர்காணல் அமைந்திருக்க, அவை எல்லாவற்றையும் விட்டுவிட்டு நான் ஒரு மநுவிரோதன் என்ற தலைப்பினாலேயே தொந்தரவுக்குள்ளாகி, முதல் பக்கத்திற்குள் கூட புக முடியாமல் அட்டையையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். ஏனென்றால் அவர்களைப் பொறுத்தவரை மநு எப்போதோ வாழ்ந்து மடிந்த யாரோ அல்ல, இன்றளவும் மனிதகுலத்தின் ஆகச்சிறந்த அனைத்தையும் அவர்களுக்கு மட்டுமே வாரி வழங்கிக் கொண்டிருக்கிற வள்ளல். எனவே மநுவின் விரோதிகளை தமது சொந்த எதிரிகளாய் வரித்துக்கொண்டு பகைமூட்டம் கொள்ளும் குணம் இயல்பாகவே வந்துவிடுகிறது. ஆனாலும் மநுவை ஆதரித்து வெளிப்படையாய் பேசமுடியாத கடும் மன அழுத்தத்தால், தமது கைகால் நகங்களை ரத்தம் பீறுமளவுக்கு கடித்துக் கொண்டிருக்கிற- கண்டதும் காய்தல் அல்லது கடுப்பாங்காய்ச்சல்- என்ற இந்த புதுவகை வியாதிக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பது பரிதாபம்தான்.

நேர்காணலின் பேசுபொருள்கள் பலவும் வாசகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தபோதும் சாதி வர்க்கம் குறித்த எனது கருத்துக்கள் மட்டுமே விவாதத்திற்குரியதாய் மேலெழுந்துள்ளன. சாதியத்தை ஏன் எதிர்க்க வேண்டும் அல்லது கைவிட வேண்டும் என்பது குறித்த வரலாற்றுப்பூர்வமான தெளிவை எட்டியவர்கள் எனது கருத்துக்களை ஏற்கவும் உடன்நின்று விவாதிக்கவும் தலைப்பட்டுள்ளனர். பிறப்பால் எந்த சாதியினராக இருந்தபோதிலும் தனது உள்ளுணர்வு நிலையில் தங்கியிருக்கும் சாதியக்கூறுகளைக்கூட எதிர்த்து தமக்குள்ளே போராடிக் கொண்டிருக்கிற- அதுகுறித்து வெளிப்படையாய் விவாதிக்கிற பலரை நானறிவேன். சாதியப் பெருமிதத்தை தக்கவைத்துக்கொள்ளும் நோக்கோடு தமக்கு கற்றுத் தரப்பட்ட நடையுடை பாவனைகள், உணவுப் பழக்கவழக்கம், வழிபாடு, நம்பிக்கை, தெய்வங்கள், திருவிழாக்கள், வாழ்க்கைவட்டச் சடங்குகள் எல்லாவற்றையும் சொந்தவாழ்வில் கைவிடுவதற்காக தமக்குள் போராடிக் கொண்டிருக்கின்ற அவர்கள் எனது கருத்தை மேலும் செழுமைப்படுத்த ஆர்வம் கொண்டுள்ளனர். சாதி கடந்ததொரு சமூகத்திற்கான விருப்பத்தை அவர்களோடு பகிர்ந்துகொள்வதில் நமக்கு எவ்வித மனத்தடையும் ஏற்படவில்லை.

ஆனால் தமது சொந்தவாழ்வில் எந்தக் கட்டத்திலும் சாதியை கைவிடாமலே, ஆனால் கைவிட்டதான பாவனையை வெளிக்காட்டிக் கொண்டிருப்பவர்கள், தமது குட்டு வெளிப்பட்டுவிட்ட அவமானத்தில் பெரிதும் மனத் தொந்தரவுக்காளாகியுள்ளனர். தாங்கள் சாதியைக் கைவிட்டு வெகுகாலமாகிவிட்டப் பின்பும் தங்களது அந்தரங்கத்தையும் நேர்மையையும் ஆதவன் சந்தேகிப்பது சரியா என்று புகார் தெரிவிக்கிறார்கள். ‘சொந்த சாதியிலேயே கல்யாணம் செய்துகொண்ட ஒரே காரணத்திற்காக எனக்கு சாதியுணர்வு இருப்பதாக எப்படி சொல்லமுடியும்?’, ‘ஆதிதிராவிடர் அல்லது அருந்ததியர் காலனியில் நான் வசிக்கப்போகவில்லை என்பதற்காக நான் தீண்டாமை பார்க்கிறேன் என்று கூறமுடியுமா?’, ‘அசைவ உணவு சாப்பிடாதது ஒரு குற்றமா?’, ‘மாட்டுக்கறி சாப்பிட்டுவிட்டவுடனே ஒருவர் சாதிமறுப்பாளர் ஆகிவிட முடியுமா?’, ‘பழக்கமில்லாத ஒரு பண்டத்தை சாப்பிட்டாக வேண்டும் என்று வற்புறுத்துவது அராஜகமில்லையா?... மனதுக்கு ஒப்பாததை உண்ணுமாறு வற்புறுத்துவதில் பாசிசத்தின் கூறு பல்லிளிக்கிறது...’ - என்றெல்லாம் இவர்கள் எழுப்பும் பலவாறான வாதங்களின் வழியே தாங்கள் இன்னும் சாதியின் பிடிக்குள் சிக்கியிருப்பதைத்தான் பகிரங்கப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

உணவைப் பற்றி பேசும்போது பலரும் உணர்ச்சிவசப்பட்ட நிலைக்கு சென்றுவிடுகின்றனர். வளர்ப்புமுறை, குடும்பச் சூழல், பழக்கவழக்கம், அதுஇதுவென்று முன்வைக்கும் சால்ஜாப்புகள் ஏராளம். தர்மம்- அதர்மம், நீதி-அநீதி என்பதில் ‘அ’ ஒட்டுடன் வருபவை எல்லாமே கீழானவை என்று அர்த்தம் கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில் சைவம்- அசைவம் என்பது என்னவாக உள்வாங்கப்படுகிறது என்று பிரகதீஸ்வரன் மேடைகளில் எழுப்பும் கேள்வியின் நியாயத்தை எப்போது உணரப் போகிறோம்? ஒருவரது உணவு சைவமா அசைவமா என்பதை சாதியைத் தவிர வேறெது தீர்மானிக்கிறது? (ஜீரணக்கோளாறு போன்ற உடல் உபாதைகளை முன்னிட்டு தாவரவுணவுக்கு மாறியவர்கள் இந்த ஆட்டத்தில் சேர்த்தியில்லை).

வெவ்வேறு வகையான உணவுப் பழக்கவழக்கங்கள் இருப்பதில் தவறொன்றுமில்லை. ஆனால் ஒருசாரார் மற்றொரு சாராரின் உணவுப் பழக்கவழக்கங்கள் குறித்து என்ன மதிப்பீடு கொண்டிருக்கிறார்கள் என்பது முக்கியம். இன்னொருவரை இழிவாக- தீட்டாக- அசூயையாக பார்க்குமாறு வலியுறுத்தும் சாதியம் அடுத்தவரது உணவையும் அவ்வாறே பார்க்குமாறு வலியுறுத்துகிறது என்பதுதானே உண்மை? கறி தின்கிறவர் பருப்புசாம்பாரின் நாற்றம் தாங்காமல் தனக்கு குமட்டிக் கொண்டு வருவதாகச் சொன்னால் அது இயல்பானதுதானே என்று ஒத்துக்கொள்ள முடியாதவர்கள், கறி தின்னும் பழக்கம் இல்லாத ஒருவர் கறியைப் பார்த்ததும் குமட்டிக்கொண்டு எடுப்பது வாந்தியா சாதியா என்று ஏன் சந்தேகிப்பதில்லை?

‘மதியம் மாட்டுக்கறி விருந்து’ என்று மாநாட்டு அழைப்பிதழில் அச்சடித்து தனது தொண்டர்களைத் திரட்டியது தென்சென்னை தமுஎச. மற்ற அமைப்புகளுக்கெல்லாம் என்னவானது? கறி என்றதும் ஆடு, கோழி, மீன் மட்டுமே நினைவுக்கு வருவதும் மாட்டுக்கறி என்பதே நினைவுக்கு வராத செலக்டீவ் அம்னீசியாவால் பீடிக்கப்படுவதையும் எதன் பேரால் நியாயப்படுத்த முடியும்? இந்த நாட்டின் பெரும்பான்மை உழைக்கும் மக்களாகிய தலித்துகளின் உணவை- கறியை இழிவானதென்று பொதுஇடங்களிலும் தனிவாழ்விலும் ஒதுக்கிவைக்குமாறு சாதியம் கற்றுக் கொடுத்ததை மண்டை நிறைய நிரப்பிக்கொண்டு- அதை நியாயப்படுத்த ‘ஆதவன் எல்லாவற்றையும் க்ரூடாக பார்க்கிறான்’ என்று பழிபோடுவது எப்படி சரியாகும்? ‘இப்படி நுணுகி நுணுகி ஒவ்வொன்றிலும் சாதி பார்த்தால் என்னத்துக்கு ஆகும்?’ என்று அலுத்துக்கொள்ளும் கேள்விகள் ஆபத்தானவை. ஏற்கனவே எல்லாம் சாதியாகத்தான் இருக்கிறது என்பதை ஒத்துக்கொள்ளும் நேர்மையின்றி, நாம் க்ரூடாய் பார்ப்பதாக குற்றம்சாட்டுகின்றனர். க்ரூடாய் இருக்கலாம், குருடாய் இருப்பதுதான் சிக்கல் என்று சொற்சிலம்பம் ஆட இது பொருத்தமான தருணமல்ல.

எந்தவொரு கறிக்கடையில் நுழைந்தாலும் ஆட்டுக்கறி, மாட்டுக்கறி, கோழிக்கறி, பன்றிக்கறி, மீன் -என எல்லாமே அடுத்தடுத்து நேர்த்தியாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததையும் மக்கள் எவ்வித அசூயை உணர்வுமின்றி எல்லாவற்றையுமே உண்பதையும் லண்டனில் கண்டபோது எனக்கு நம்மூர் கறி அரசியல்தான் நினைவுக்கு வந்து அலைக்கழித்தது. அங்கே மாட்டுக்கறி தான் விலை அதிகம். ஒரு கிலோ 6 பவுண்ட். மற்றவையெல்லாம் அதைவிட கீழ்தான். விருந்தாளியை மகிழ்விக்கும் பிரியத்தில் தோழர்கள் அழைத்துப்போன பெரிய உணவுவிடுதிகளில் பிரமிப்பூட்டும் வண்ணங்களிலும் வடிவங்களிலும் தொங்கவிடப் பட்டிருந்த மாட்டுக்கறியை ஆவல் பொங்க பார்த்துக்கொண்டேயிருந்தேன். இங்காவது நல்ல மதிப்போடு இருக்கிறாயே... ரொம்ப சந்தோஷம் என்று அங்கே தொங்கிக் கொண்டிருந்த கறிக்கொத்துகளைப் பார்த்து மனசார வாழ்த்தினேன். அங்கே உயர்வாக மதிக்கப்படக்கூடிய ஒன்று இங்கே கீழ்மைப்பட்டிருப்பதற்கு காரணம் சாதியும், அதை நியாயப்படுத்தும் இந்துமதப் புரட்டுக்கதைகளும்தான். பழக்கவழக்கத்தின் பெயரால் சாதியையும் இந்துமதத்தையும் காப்பாற்றுகிறவராக இருக்கிற ஒருவர் எப்படி சாதியைத் துறந்தவராக- மதச் சார்பற்றவராக- பொது மனிதாயப் பண்புகளை போற்றுகிறவராக தன்னை அறிவித்துக் கொள்ள முடியும்? ஆகவே மறுபடி சொல்கிறோம்- சாதியைக் கைவிடுவதென்பது முறி எழுதி கைச்சாத்து வைத்ததும் முடிந்துபோகிற விசயம் இல்லை.

எப்போதோ எழுதப்பட்ட மநுஸ்மிருதியை தூசுதட்டி இப்போது எதற்காக எதிர்க்க வேண்டும் என்கிறவர்களும் நம்மிடையே இருக்கத்தான் செய்கின்றனர். மநுஸ்மிருதி உருவான காலம் அதன் சூழல் ஆகியவற்றுக்குள் இருத்திப் பார்த்தால் அத்தகைய கோட்பாடுகள் உருவானதற்கான நியாயத்தை உணரமுடியும் என்றும்கூட இவர்கள் வாதிடுவதுண்டு. இன்னும் ஒருபடி மேலே போய், அன்றைய தேவையை முன்னிட்டு உருவான மநுஸ்மிருதி, இன்றைக்கும் பொருந்தும் என்று சொல்வது முட்டாள்தனம் என்று மிகவும் முற்போக்கு போல வாய்வேஷமும்கூட கட்டுவார்கள். இன்றைக்கு பொருந்தாது என்ற வாதத்திற்குள் ஒளிந்துகொண்டு, அன்றைக்கு பொருத்தமாயிருந்தது என்ற நிறுவ முயற்சிக்கிற இவர்கள் உண்மையில் மநுவைவிடவும் ஆபத்தானவர்கள். மநுஸ்மிருதி எந்தகாலத்திற்கும் தேவையற்றது- நிராகரிக்கப்பட வேண்டியது என்பதை தெரிந்துகொள்ள இவர்கள் வேறெவரின் தத்துவ விளக்க நூல்களை படிக்காவிட்டாலும்கூட, திருலோக சீதாராராம் அல்லது இராமாநுஜாசாரியார் மொழிபெயர்ப்பிலான மநுதரும சாஸ்திரத்தையாவது படித்துத் தொலைக்கட்டும் என்று இவ்விடத்தில் பரிந்துரைக்கப்படுகிறது. அதன்பிறகாவது, மநுஸ்மிருதி செத்தப்பாம்பல்ல, வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் கொத்தி சமூகத்தையே நீலம்பாரிக்கச் செய்துகொண்டிருக்கிற நச்சுப்பாம்பு என்ற தெளிவு கிட்டும்.

தவிரவும் மநுவை தூசுதட்டி எடுக்கவேண்டிய அவசியம் ஒன்றும் நமக்கு ஏற்படவில்லை. ஏனென்றால் அது இன்றளவும் தன் கொடியபலத்தோடு இந்திய சமூகத்தை அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது என்பதை நிரூபிக்க நடைமுறையில் நூறுநூறு உதாரணங்களைக் காட்ட முடியும். மநுவுக்கு ராஜஸ்தான் உயர்நீதிமன்ற வளாகத்தில் சிலைவைத்தவர்களைப் பார்த்தோ, மநுஸ்மிருதியை தன் உயிரினும் மேலாய் மதிப்பதாகச் சொன்ன காஞ்சி சங்கரர்களைப் பார்த்தோ ‘ஏனிப்படி தூசு தட்டி எடுக்கிறீர்கள்’ என்று கேட்காதவர்கள் நம்மைப் பார்த்து இப்படி குற்றம்சாட்ட என்ன நியாயமிருக்கிறது? ஒருவேளை அவர்களெல்லாம் அவாள்-ளாய் இருப்பதனால் குற்றம்சாட்ட அஞ்சுகிறீர்களோ என்று நாம் கேட்டால், பார்ப்பனீய எதிர்ப்பு பார்ப்பன எதிர்ப்பாய் குறுகிவிட்டது பார்த்தீர்களா என்று சொற்சிலம்பம் காட்டத் தொடங்கிவிடுகிறார்கள்.

இந்த ஆதவன் என்ன சொல்லிவிட்டிருக்கப் போகிறான் என்று முன்முடிவான இளக்காரத்தோடு புத்தகத்தைப் படித்தவர்களையும் நானறிவேன். ‘நீங்கல்லாம் மாடு மேய்க்கத்தான் லாயக்கு, இங்க வந்து ஏன் கழுத்தறுக்கிறீங்க’ என்று பள்ளிக்கூடங்களில் தலித் மாணவர்களைப் பற்றி ஒரு ஆசிரியருக்குள்ள அதே இளக்காரத்தின் மறுபதிப்புதான் இவர்களிடமும் இருக்கிறது. இது ஒருவகையான கெட்டித் தட்டிப்போன சாதியப் பார்வைதான். இவர்களைப் பொறுத்தவரை படிப்பது, இலக்கியத்தில் ஆர்வம் கொள்வது, பேட்டி கொடுப்பதெல்லாம் தலித்துகளின் எல்லை தாண்டிய பயங்கரவாதம். திறந்த மனதோடு நேர்காணலை அணுக இவர்களது முன்முடிவுகள் அனுமதிக்காததால் எனது வார்த்தைகளுக்கு அவர்கள் விரும்பும் பொருளை வருவிக்க பெருமுயற்சி செய்துகொண்டிருக்கின்றனர்.

ஒரு தலித், தன் சொந்தத்துயரை, தன் சமூகத்தின் பாடுகளை சொல்லத் தொடங்கியதுமே அதை சாதியக்குரலாக அடையாளம் காட்டி, தனிமைப்படுத்தத் துணியும் அமைப்புகள்- தலைவர்கள்- தத்துவார்த்த ஆசான்கள், பார்ப்பனர் என்ற வார்த்தையைக்கூட பயன்படுத்தாமல் கவனமாக பிராமணர் என்று தங்களது அமைப்புகளை சொல்லப் பழகியிருப்பதன் பின்னே சாதியம் ஒளிந்திருக்கவிவ்லையா என்ற கேள்வியை எப்போதுதான் எழுப்பப் போகிறோம்? ஒரு தலித் தன் அவலத்தை எவ்வளவு உரக்கச் சொல்லலாம் என்பதைக்கூட நாங்கள்தான் வரையறுத்து இறுதிப்படுத்துவோம் என்று தலித்தல்லாதவர்கள் கூறுவார்களேயானால் அதையும் மேற்சாதி திமிர்த்தனம் என்று குற்றம் சாட்டுவதில் என்ன தவறிருக்க முடியும்? ஒரு தலித்தின் ஓலத்தைக் கேட்டால் கிழிந்து போய்விடுமளவுக்கு மென்மையான காதுச்சவ்வு கொண்டவர்கள் எங்காவது ஓரமாக உட்கார்ந்து ‘குழலூதும் கண்ணனுக்கு...’ என்று எதையாவது கேட்டுத் தொலைக்குமாறு வேண்டப்படுகிறார்கள். எல்லாம் கரெக்ட்தானப்பா, இருந்தாலும் கொஞ்சம் அடக்கி வாசி என்ற குரலுக்குள்ளும் இதே வஞ்சகம்தான் மறைந்திருக்கிறது.




__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

3.

சாதியழிப்புப் போராட்டத்தை வர்க்கப் போராட்டத்திற்கு கீழ்ப்படுத்துவதாயும், சாதியழிப்புப் போராட்டத்திற்கு கூடுதல் அழுத்தம் தந்து வர்க்கப்போராட்டத்தின் கூர்முனையை மழுங்கச் செய்வதாயும் ‘ஒருபொருட் குறித்த இருவித குற்றச்சாட்டுகள்’ வந்துகொண்டிருக்கின்றன. அதாவது, இரண்டும் வெவ்வேறானவை என்ற பிசகான முடிவிலிருந்து இந்த கருத்துகள் வெளிப்படுகின்றன. இந்திய சமூக மாற்றத்திற்கான புரட்சியின் உள்ளடக்கம் வர்ண, வர்க்க ஒடுக்குமுறைகளை எதிர்த்தே நடைபெறும் என்ற உண்மையை ஒத்துக்கொள்ள இவர்களுக்குள்ள மனத்தடையே இவ்வித குற்றச்சாட்டுகளின் அடிப்படை.

நீ எங்கள் பக்கம் இல்லையென்றால், பின்லேடன் பக்கம்தான் என்கிற ஜார்ஜ் புஷ்சைப் போல இங்கும் சிலர் கேலிக்கூத்தான ஒரு வகைப்பிரிப்பை செய்து கொண்டுள்ளனர். ஒருவர் பெரியாரிஸ்டாகவோ அம்பேத்கரிஸ்டாகவோ மார்க்சிஸ்டாகவோ தான் இருக்கமுடியுமே தவிர மூவரது சிந்தனைகளையும் உள்வாங்கிச் செயல்படுகிறவராக இருக்கவே முடியாது என்றும் அவ்வாறு செயல்படத் துணிகிறவர்கள் ‘அதிலொரு கால் இதிலொரு கால் வைத்திருக்கும் ரெண்டாங்கெட்டான்கள்’ என்றும் இவர்கள் அறிவிக்கத் தொடங்கியுள்ளனர். எனவே இம்மூவரது சிந்தனைகளுக்குள்ளும் இருக்கும் பொதுமைப்பண்புகளை உள்வாங்கிச் செயல்படுவது தத்தமது தனித்தன்மையை இழக்கச்செய்துவிடும் என்ற பதற்றத்திலிருந்து அம்பேத்கரையும் பெரியாரையும் மார்க்சையும் எதிரெதிராய் களமிறக்கும் இந்த வித்தைக்காரர்கள் மைதானம் முழுக்க நிரம்பியிருக்கிறார்கள். ஆட்டத்தை இனிமேல்தான் நாம் கவனமாய் தொடர வேண்டியிருக்கிறது.

இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தொடக்ககாலம் தொட்டே மண்ணுக்கேற்ற மார்க்சீயம் என்பதை கண்டடைவதற்கான தேடல் தொடங்கிவிட்டதை பல்வேறு ஆவணங்கள் வழியே உறுதிப்படுத்த முடியும். திட்டவட்டமானச் சூழலில் திட்டவட்டமான பிரயோகம் என்ற உட்செரிப்பும் இளக்கமும் விரிந்து கொடுக்கும் வலுவும் கொண்ட மார்க்சீயம் என்ற அறிவியலை, திடீர் ரசப்பொடிக்கான செயல்முறைக் குறிப்புபோல புரிந்துகொண்டுள்ளக்கூடாது என்ற தவிப்பிலிருந்து தொடங்கிய இத்தேடலை பின்நவீனத்துவத்தின் புதிய கண்டுபிடிப்புபோல சிலர் கொண்டாடுவதும், ஆகவே பின்நவீனத்துவ எதிர்ப்புப்போராளிகள் சிலர் எதிர் நடவடிக்கைகளில் இறங்கி மார்க்சீயத்தின் தூயவடிவத்தை பாதுகாப்பதான பெரும் பொறுப்பு தன்தோளில் சுமத்தப்பட்டிருப்பதான கற்பிதத்தில் அபத்தமாய் கட்டுரை எழுதுவதுமாகிய கேலிக்கூத்துகள் ஓய்ந்தபாடில்லை. மண்ணுக்கேற்ற மார்க்சீயம் என்பதை மார்க்சீயத்தை குறைத்து மதிப்பிடுவதாய்- வீரியத்தைக் குறைப்பதாய்- திரிபாய்- பார்க்கிற மனவியாதியிலிருந்துதான் சாதியடுக்குமுறை பற்றிய விவாதங்களை வர்க்கப் போராட்டத்திற்கு எதிரானவைகளாக கண்டு பதறி ‘தத்துவப் போராட்டத்திற்கு’ களமிறங்குகின்றனர் சிலர். இதன் மறுதலையாக, மார்க்சீயம் போதாமைகளோடு இருப்பதாக கற்பிதம் செய்துகொண்டு, அந்த போதாமையை இட்டுநிரப்பும் இடைப்பொருட்களாக தலித்தியம், பெண்ணியம், சூழலியம் ஆகியவற்றை பரிந்துரைக்கும் போக்கும் நீடிக்கிறது.

ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் விடுதலையைப் பற்றி பேசுவது, ஒடுக்கப்பட்ட சாதிகளின் விடுதலையைப் பற்றியதாகாது என்ற ‘தனி’ தலித்திய குரலுக்கும், ஒடுக்கப்பட்ட சாதியினரின் விடுதலை பற்றி பேசுவது ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் விடுதலைக்கு குந்தகமானது என்ற ‘வறண்ட’ பாட்டாளி வர்க்கக் குரலுக்கும் இடையேயான இடைவெளியை, அம்பேத்கரையும் பெரியாரையும் மார்க்சையும் ஊன்றிப் பயில்வதின் மூலம் கடக்கமுடியும் என்றே நம்புகிறேன். ஊன்றிப் பயில்வது என்பதை அடிக்கோடிட்டு வலியுறுத்துகிறேன். அவ்வாறு பயில்வதன் மூலம், தலித் அணிதிரட்சியை வெறும் சாதிய அடையாளமாகவும், மார்க்சீய இயக்கங்களை பொருளாதாரவாதத்திற்குள் சிக்கிக்கொண்டு தத்தளிப்பவையாகவும் குறுக்கிப் பார்ப்பதிலிருந்து விடுபட முடியும். சாதியத்தை எதிர்த்துப் போராடுவதானது, உழைக்கும் மக்கள் ஒரு வர்க்கமாக அணிசேர்வதை மறிக்கிற ஒரு பெருந்தடையை தகர்த்தெறியும் போராட்டம்தான் என்று புரிந்துகொள்கிறபோதுதான் அம்பேத்கரையும் பெரியாரையும் வெற்று சீர்திருத்தவாதிகளாக தகுதியிறக்கம் செய்கிற அல்லது மார்க்சியம் போதாமையுடன் உள்ளது என்று தீர்ப்பளிக்கிற அதிமேதாவிகள் நிஜமேதாவிகளாகி தரையிறங்க முடியும் என்று ஆசீர்வதிக்கிறோம். (ஆமாய்யா, இப்படி சொல்றது அகங்காரம் தான். இப்ப என்னான்ற...?)

மார்க்சியம் அம்பேத்கரியம் பெரியாரியம் ஆகியவற்றை உள்வாங்கிக் கொள்வது என்பதை, எல்லாம் கலந்து நூறு கிராம் மிக்சர் வாங்கும் ஜனகராஜ் காமெடியாக குறுக்கியும் குதர்க்கமாயும் புரிந்துகொள்ளத் தேவையில்லை. உழைக்கும் அடித்தட்டு மக்கள் மீதான சகல சுரண்டல்களையும் எதிர்ப்பதிலும் முடிவுக்கு கொண்டு வருவதிலும் அக்கறை கொண்ட தத்துவங்கள் என்ற அடிப்படையில் அவற்றுக்கிடையேயுள்ள பொதுப்பண்புகளை உள்வாங்கிக் கொள்ள வேண்டும் என்பதுதான் நமது புரிதலேயன்றி, மூன்றும் ஒன்றுதான் என்பதல்ல. அவற்றுக்குள் இருக்கும் வேறுபாடுகள் பகைமுரண்கள் அல்ல என்றும் இவ்விடத்தில் சொல்ல வேண்டியுள்ளது.

4.

இலங்கை தலித் சமூக மேம்பாட்டு முன்னணியின் இரண்டாவது தலித் மாநாட்டில் பங்கேற்க நான் இலண்டன் சென்றிருந்தததையட்டி இந்நூலின் வெளியீட்டு விழா அங்கே நடந்தது. மாநாட்டிலும் விழாவிலும் பங்கேற்றவர்களில் அநேகமானவர்கள் ஐரோப்பிய நாடுகளைப் புகலிடமாகக் கொண்டவர்கள். இலங்கைச் சமூகத்திலிருந்து வெளியேறி அந்தந்த நாடுகளில் குடியுரிமையும்கூட பெற்றிருக்கிறார்கள். உற்றார் உறவினர் ஆஸ்திபாஸ்தி அத்தனையையும் விட்டுவிட்டு வர முடிந்த இலங்கைத் தமிழர்களால் தத்தமது சாதியை விட்டுத் தொலைக்க முடியவில்லை என்ற துயரத்தை அவர்கள் பகிர்ந்து கொண்டனர். புகலிடத்திற்கேற்றாற்போல சாதிய புறக்கணிப்புகளும் தீண்டாமையும் ஒடுக்குமுறையும் புதுவடிவம் பெற்று நீடித்திருப்பதை அவர்கள் அம்பலப்படுத்தினர். இலங்கையின் சமூக அமைப்பிலிருந்து முற்றாக வேறுபட்டு முதலாளித்துவ அமைப்பின் உச்சத்தை எட்டியிருக்கிற ஐரோப்பிய சமூகத்தில் சாதியம் நீடிப்பதற்கான தேவை என்ன வந்தது? அதேநேரத்தில் இந்திய வம்சாவளியினராய் இருந்தபோதிலும் இந்தியச் சமூகத்துடனான உறவுகளை முறித்துக் கொண்ட பிஜியர்களிடம் சாதி முனைப்பாக இல்லையென்றும் அவர்களிடம் சாதிப்பெயர் குடும்பப்பெயராக மட்டுமே தங்கியுள்ளதென்றும் ஆய்வாளர்கள் சொல்வதையும் இவ்விடத்தில் சேர்த்தே பரிசீலிக்க வேண்டியுள்ளது. பிஜியின் நிலவுறவுகளில் பேரளவிலான மாற்றங்கள் எதுவும் ரகசியமாக நடந்துவிடாத நிலையில் அங்கு சாதி எப்படி மங்கியது என்ற படிப்பினை நமக்குத் தேவையாகிறது.

அடிக்கட்டுமானமா மேல்கட்டுமானமா என்று பிரித்துணர முடியாதபடி சவ்வூடிக் கிடக்கிற சாதியமைப்பை, மேல்கட்டுமானம்தான் என்று திட்டவட்டமாக வரையறுத்துக்கொண்டு, ஆகவே அடிக்கட்டுமானம் மாறிவிட்டால் மேல்கட்டுமானம் தானேயழிந்துவிடும் என்று குடுகுடுப்பையடிக்கிற யாந்திரீக கோடாங்கிகள், வெண்டைக்காயைத் தூக்கி விளக்கெண்ணெய்யில் போட்டு வதக்கியதைப்போல ஏதேனுமொரு வியாக்கியானத்தை இதற்கும் தரக்கூடும். நமது அக்கறை அதுபற்றியதல்ல. அடிக்கட்டுமானம் மாறியதுமே, முந்தைய சமூக அமைப்பின் மேற்கட்டுமானம் தகர்ந்துவிடாது நீடிக்கவே செய்யும் என்றும் அதை எதிர்த்தப் போராட்டத்தையும் தொடர வேண்டியிருக்கும் என்றும் மார்க்சீய மூலவர்கள் சொன்னதை நாம் மறந்துவிடக் கூடாது என்பதே. சொடக்கென்று சுவிட்ச் போட்டு, அதை மாற்றினால் இதுவும் மாறிவிடும் என்று சமூக மாற்றத்தை எளிமைப்படுத்திப் பார்க்கும் போக்குகளை நிராகரிப்பதில்தான் புரட்சிகர இயக்கத்தின் இயங்காற்றல் தங்கியிருக்கிறது என்ற உண்மையைத்தான் நாம் பின்தொடர வேண்டியிருக்கிறது.

சாதியானது அடிக்கட்டுமானமா மேற்கட்டுமானமா என்று துல்லியமாக பிரித்தறிவதில் நீடிக்கும் தத்துவார்த்தக் குழப்பத்தால்தான் புரட்சியை நடத்துவதில் காலதாமதம் ஏற்பட்டிருப்பதைப் போலவும், அதை சரியாக பிரித்தறிந்துவிட்டால் மறுகணமே புரட்சியை நடத்தி முடித்துவிடலாம் என்பது போலவுமான பாவனைகளின் பேரில் இங்கு சிலர் விவாதித்துக் கொண்டுள்ளனர். இவர்களது விவாத அறைக்கு வெளியே முடிவைத் தெரிந்து கொள்வதற்காக சாதியடுக்குமுறையாளர்களும், உழைப்பைச் சுரண்டுகிறவர்களும் விடுமுறை எடுத்துக்கொண்டு பொறுமையோடு காத்திருப்பதைப் போன்ற கற்பிதத்திற்குள் மூழ்கி ‘நாங்கள் முடிவெடுக்கும் வரை எதுவும் நடக்காது என்பது போன்ற இறுமாப்பில் விவாதித்துக் கிடக்கின்றனர். ஐயா அறிவுசால் பெரியவர்களே, உமது அறிவின் ஆழ நீள அகலங்களை அளந்து காட்டும் வித்தைகளை கைவிட்டு எதார்த்தத்துக்கு திரும்புங்கள். நடப்பில், தினசரி வாழ்வில், ஒவ்வொரு கணத்தையும் தீண்டாமை புறக்கணிப்பு ஒடுக்குமுறை அவமானத்தால் குன்றிக் கொண்டிருக்கும் தலித்துகளின் துயரம் கண்டு வெடிக்கிற இதயமும் அந்த நிலைமையை மாற்றியமைக்க வேண்டுமென்ற வைராக்கியமும் போர்க்குணமும் கொண்ட கம்யூனிஸ்ட் இயக்கம், மரணத்தின் வாதையில் எழுகிற ஓலம் எத்தனை டெசிபல் கொண்டது என்று சாவதானமாக விவாதிக்கிற - எதற்கும் பதற்றமடையாத உங்களைப் போன்ற ஆய்வாளப் பெருந்தகைகள் முன்வைக்கும் எல்லா வறட்டுச் சூத்திரங்களையும் நிராகரிக்கிறது.

தலித்துகள் பல்வேறு முதலாளித்துவக் கட்சிகளிலும் சிதறிக் கிடக்கிறார்கள். அங்கெல்லாம் அவர்களது நிலைமை என்ன? முடிவெடுக்கும் அதிகாரமுள்ள பொறுப்புகளுக்கு தலித்துகளால் வர முடிகிறதா? அவர்களது எண்ணிக்கைக்கு ஏற்ப உரிய பிரதிநிதித்துவம் கோருகிற போது, இடஒதுக்கீட்டுக்காக போராடுகிற கட்சிகள்கூட கட்சிக்குள் இடஒதுக்கீடா என்று கலக்கமடைவதைப் பார்க்கமுடிகிறது. தலித்துகளை கவனக்கமுடிகிறது. தலித்துகளை கவனமாய் தவிர்த்துவிட்டு பிறசாதிகள் மட்டும் தலைமைப் பொறுப்புகளை பகிர்ந்துகொள்வது இடஒதுக்கீடுதானே என்று கேட்டால் அப்போது தலைமைப் பண்புகள் பற்றியும் தலைவர்களாக வளர்ந்தெழுவது பற்றியும் இயக்கத்திற்கான உழைப்பு, அர்ப்பணிப்பு, தியாகம் பற்றியும் வாதிடப்படுகிறது. தானே தக்கிமுக்கி தன்னை வளர்த்துக் கொள்கிற யாரும் தலைமைப் பொறுப்புக்கு உயரலாம் என்று வியாக்கியானம் சொல்வார்கள். ஒபாமாவைப் பார்... ஒரு கறுப்பனாய் பிறந்து அமெரிக்க அதிபராகவில்லையா என்பார்கள். செருப்பு தைக்கும் தொழிலாளியின் பிள்ளையான ஸ்டாலின் ரஷ்யாவை ஆளவில்லையா என்பார்கள். இந்தியாவை செருப்பு வேண்டுமானால் ஆளமுடியுமே தவிர செருப்பு தைக்கிறவன் ஆளமுடியாதபடி சாதி தடுக்கிறது என்பதை மறைக்கிறார்கள். இது நெடுங்காலமாய் கேட்டு புளித்துப்போன தகுதி- திறமை என்கிற கட்டுக்கதையின் இன்னொரு வடிவம்தான்.

தவிரவும் இந்த உழைப்பு அர்ப்பணிப்பு தியாகம் என்பதற்கான அர்த்தங்கள் இப்போது மாறிக்கொண்டிருக்கிறது. மக்களுக்காகப் போராடுவதோ அதற்காக சிறைசெல்வதோ அரசின் அல்லது ஆதிக்கசக்திகளின் அடக்குமுறைகளை தாங்கிக்கொள்வதோ இந்த முதலாளித்துவ கட்சிகளின் நிகழ்ச்சி நிரலில் இல்லை. எனவே இவற்றுக்கு தலைவர்கள் தேவையில்லை. கட்சியை நடத்துகிற நிர்வாகிகள் அல்லது மேலாளர்கள் போதும். ஏதேனும் மாநாடு பொதுக்கூட்டம் போட்டு அடுத்தத் தேர்தல்வரை கட்சியின் இருப்பை வெளிப்படுத்திக் கொண்டிருந்தால் போதுமானது. இந்த மாநாடு அல்லது கூட்டத்தில் பங்கேற்பதுதான் தலைமையின் பணி என்றால் அதை தலித்துகளும் செவ்வனே நிறைவேற்றுவார்கள்தானே? ரயிலில் முன்பதிவு கிடைக்காமல் பஸ்ஸில் பயணம் செய்ய நேர்ந்ததும், பயணத்தில் சரியாக தூங்க முடியாததும்கூட தலைவர்களின் தியாகமாக கற்பிதம் செய்யப்படுமானால் அந்த தியாகத்தை தலித்துகளாலும் செய்யமுடியும்தானே?. பிரச்னைகளுக்கு தீர்வை எட்டும் நோக்கத்தை கொண்டிராமல் வெறுமனே எதிர்ப்பு தெரிவிக்கும் ஒரு போராட்டத்தில் கலந்துகொள்வதுதான் உழைப்பு அர்ப்பணிப்பு என்றால் அதை தலித்துகளும் செய்வதில் தடையென்ன இருக்கிறது? அப்படியிருந்தும் இந்தக் கட்சிகளில் எஸ்.சி, எஸ்.டி பிரிவுகளில் தவிர தலித்துகளுக்கு வேறெங்கும் பொறுப்புகள் தரப்படாததில் சாதி ஒளிந்திருக்கிறதா அல்லது ஏன் தரப்படவில்லை என்று கேள்வியெழுப்புவதில் சாதி வெளிப்படுகிறதா?

தரையிலே நீச்சலடித்துப் பழகச் சொல்லி தண்ணிக்குள் கடைசிவரை இறக்கிவிடாத - அல்லது இறக்கிவிட்டாலும் மூச்சுத்திணறி சாக வைக்கிற முதலாளித்துவ கட்சிகளின் தந்திரத்தைப் புரிந்துகொள்கிற தலித்துகள் இடதுசாரி இயக்கங்களில் அணிதிரளத் தொடங்குகின்றனர். உழைக்கும் மக்களை அணிதிரட்டி வர்க்க போதமூட்டி நிலவும் சுரண்டல் அமைப்பை என்றென்றைக்கும் இல்லாததாய் ஒழித்துக்கட்டி புரட்சிகரமாய் மாற்றியமைப்பதை நோக்கமாகக் கொண்ட மார்க்சீய இயக்கங்கள் மற்றெவரைக் காட்டிலும் தலித்துகளுக்கே மிக அதிகமாகத் தேவைப்படுகிறது. எனவேதான் தலித்துகளுக்கென்று தலித்துகளாலேயே நடத்தப்படும் இயக்கங்களில் இருப்பதை விடவும் இடதுசாரி இயக்கங்களில் தலித்துகள் கணிசமாக அணிதிரள்கின்றனர். தலித்துகள் கணிசமாக அணிதிரண்டிருக்கிறார்கள் என்பதற்காக அல்லாது, பன்முகச் சுரண்டலுக்கு ஆளாகும் ஒரு சமூகத்திரள் சுயமரியாதையோடு வாழ்வதற்கான முன்தேவைகளை நிறைவேற்றுவது என்ற அடிப்படையில் இடதுசாரி இயக்கங்களின் உடனடி மற்றும் தொலைநோக்குத் திட்டங்களிலும் செயல்பாட்டிலும் சாதியழிப்பு முன்னுரிமைப் பெற்று வருகிறது. இடதுசாரி இயக்கங்களை வெறும் பொருளாதாரவாதத்திற்குள் அமிழ்த்திவைத்து திணறடிக்க விரும்புகிறவர்கள், ‘நூறுசத புரட்சிக்கு’ குறைவான எல்லா நடவடிக்கைகளையும் திரிபாக தப்பர்த்தம் கொண்டு தலித்துகளுக்கான இடதுசாரி இயக்கங்களின் போராட்டங்களால் அமைதியற்றுப் போயுள்ளனர். அவர்கள் மேலும் அமைதியிழந்து நிம்மதி கெட்டு சீரழிவதை கைவிட்டு, இடதுசாரி இயக்கங்களின் தத்துவம் மற்றும் செயல்பாடுகளை பின்தொடந்து வரும் நல்லறிவை வழங்குமாறு எல்லாம் வல்ல மார்க்சிடம் பிரார்த்திப்போமாக.

சென்னை வெளியீட்டுவிழாவில் பகத்சிங் குறித்து புனிதபாண்டியன் தெரிவித்தக் கருத்துக்கு பதில் சொல்லாதது, பாரதியார் குறித்து இறுதித் தீர்ப்பை வாசிக்காதது ஆகிய மகாகுற்றங்களுக்காக தங்களது குடோனிலிருக்கும் ‘ஒரிஜினல் புரட்சியாளர்’ சான்றிதழை மார்க்சிஸ்டுகளுக்கு வழங்கமுடியாது என்று அறிவித்துள்ள கெட்டிச்சிவப்பர்களுக்கு எதுவும் சொல்லத் தோன்றவில்லை. தோழர் புனிதபாண்டியன் ஒப்பிட்டுத்தான் பேசினாரேயன்றி பகத்சிங்கை இழிவுபடுத்துவது அவரது நோக்கமாக இருக்குமென்று நான் கருதவில்லை. அவர் பொறுப்பில் வெளியாகும் தலித்முரசின் 2008 மார்ச் இதழ் பகத்சிங்கின் நினைவுநாளை உரியமுறையில் கவனப்படுத்தியிருப்பது இதற்கொரு சான்று.

பாப்லோ நெரூடா என்கிற மகத்தான கவிஞனின் படைப்பாளுமை, ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு, சோசலிசத்திற்கு ஆதரவான அரசியல் விருப்புறுதி ஆகியவற்றை புறந்தள்ளி, அவரே தன் கைப்பட எழுதிய நினைவுக்குறிப்புகளிலிருந்து சிலவரிகளை உருவியெடுத்து அவரை காமாந்தகனாக சித்தரித்து கட்டுரை எழுதுவதில் ஒழுக்கவாதிகள் சிலர் முனைப்பு கொண்டுள்ளனர். பெரியாரின் பன்முகப் பங்களிப்புகளை நிராகரித்து- அவரே பகிரங்கமாக வெளிப்படுத்திய தகவல்களிலிருந்து சில வரிகளை உருவியெடுத்து காவிரிக்கரை மைனராக சிறுமைப்படுத்துவதில் சில பத்திரிகைகள் ஆர்வம் கொண்டுள்ளன. வரலாற்றின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் செல்வாக்குடன் திகழ்ந்த ஆளுமைகளும் அவர்களது சிந்தனைகளும் சமூகத்திலிருந்து முற்றிலுமாக வெறுத்தொதுக்கப்பட வேண்டியவை என்கிற ரீதியில் முன்வைக்கப்படும் இம்மதிப்பீடுகள் உள்நோக்கம் கொண்டவைதான். ஆகவே அவ்வாளுமைகளின் செயல்பாட்டின் மீதான விமர்சனத்தையும், தனிமனிதச் சாடலையும் பிரித்தறிய வேண்டிய நிர்ப்பந்தம் நம்முன் நிற்கிறது. இப்புரிதலோடுதான் பாரதியையும் நான் அணுகுகிறேன்.

பாரதியின் கவிதைகள்மீது எனக்கு மயக்கமெதுவும் இல்லையென்றாலும் கூரிய விமர்சனமும் இல்லாமல்தான் இருந்தேன். திரும்பிய பக்கமெல்லாம் தேசியகவி, மகாகவி என்றெல்லாம் கட்டமைக்கப்பட்டிருந்த பிம்பம் எனக்குள்ளும் செல்வாக்கு செலுத்தியிருக்கக்கூடும். காலனிய ஆட்சி, இந்திய தேசியம், விடுதலைப் போராட்டம் ஆகியவை குறித்து அயோத்திதாசர், பெரியார், அம்பேத்கர் முன்வைத்த மாற்று வரலாற்றினூடே பார்க்கிறபோது, இந்துத்துவத்தின் மூலவர்களில் ஒருவரான திலகருடன் பாரதி நட்பு கொண்டிருந்ததும், பசுவதை போன்றவற்றில் அவர் வெளிப்படுத்திய பார்ப்பனீய புனிதக்கோட்பாட்டையும், இன்னும் அகவயமான பார்ப்பனீய சார்பு மனநிலையையும் இயல்பானதாக என்னால் எடுத்துக்கொள்ள முடியவில்லை. ஆனால் இதையே ஞானத்தின் உச்சமென்று அறிவித்துக் கொள்வதால் ஆகப்போவது எதுவுமில்லை என்பதால் அடுத்த வேலைக்கு நகர்கிறேன்.

5.

-இப்படி நான் ஒரு மநுவிரோதியை முன்வைத்து விவாதிப்பதற்கான தளங்கள் விரிந்து கொண்டேயிருக்கிற நிலையில் இரண்டாவது பதிப்பு வெளியாகிறது. ஓர் ஒற்றைச்சொல்லில் ஏன் ஒரேயொரு எழுத்தில்கூட தன்னை வெளிப்படுத்தும் சாதுர்யம் கொண்டதே அதிகாரம். மொழியை கவனமாக கையாள வேண்டும் என்ற பிரக்ஞை நிலையில்தான் நம்முடைய அரசியல் நிலைபாட்டில் வழுவாது நிற்க முடிகிறது. ஆனால் பிரக்ஞைநிலையில் அல்லாமல் தன்னியல்பாக உள்ளுணர்வு நிலையிலேயே சுயஅதிகாரத்தை மறுப்பதற்கான தொடர்போராட்டத்தை எனக்குள் நடத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. நான் ஒரு மநுவிரோதன் என்ற தலைப்பில் உள்ள ஆண் என்கிற பால்நிலை அதிகாரத்தை நான் மிக தாமதமாகவே உணர்ந்தேன். எனவே இனி நான் ஒரு மநுவிரோதி என்றே இந்நூல் அறியப்படட்டும்.

தலித்திய பெரியாரிய மார்க்சீய இயக்கங்களின் பல்வேறு மட்டங்களில் நடைபெற்றுவரும் நுண்மையான அரசியல் விவாதங்களை பின்தொடர்கிறவன் என்ற முறையில் நான் இந்நூல் வழியே வெளிப்படுத்திய கருத்துக்கள் எதன் மீதான தீர்ப்பும் அல்ல. விவாதத்திற்கான முன்குறிப்புகள் என்ற நிலையைக்கூட அவை எட்டாதிருக்கலாம். ஆனாலும் நான் பேசியிருக்கிறேன். இப்போது உங்கள் முறை.


அன்புடன்,
ஆதவன் தீட்சண்யா
13.08.08


இலண்டனில் வெளியீட்டு விழாவை நடத்திட்ட ராகவன், தேசம்நெட் ஜெயபாலன், ரங்கன், சேனன், ஷோபா சக்தி, வேலு, நிர்மலா, காண்டீபன், சபேசன், ராஜேஸ்வரி பாலா, சபாபதி, சபா நாவலன் உள்ளிட்ட தோழர்களை இந்த இரண்டாம் பதிப்பு வெளியாகும் தருணத்தில் நினைத்துக்கொள்கிறேன்.

சென்னையில் நடந்த வெளியீட்டு விழாவில் பங்கேற்று தோழர்கள் பிரளயன், பி.சம்பத், வ.கீதா, புனிதபாண்டியன், கொளத்தூர் மணி, ச.தமிழ்ச்செல்வன், மரு.ஜெயராமன், மினர்வா ஆகியோர் தெரிவித்த ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள் எழுதவும் இயங்குவுமான ஆற்றலைத் தருமென நம்புகிறேன். புதுக்கோட்டை, புதுச்சேரி, சேலம், தஞ்சையில் நடைபெற்ற விமர்சன அரங்குகளிலும் இந்நூல் குறித்து மதிப்புமிக்க விமர்சனங்களை பலரும் முன்வைத்துள்ளனர். நான் பெரிதும் மதிக்கும் தோழர் எஸ்.வி.ஆர், பேரா.ஆ.சிவசுப்பிரமணியம், ந.முத்துமோகன் போன்ற தோழர்கள் பலரும் தனிப்பட்ட முறையில் நூல் குறித்த தமது கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளனர். அவற்றின் வெளிச்சத்தில் எனது போதாமைகளை உணர்ந்து கொள்ள முடிந்தது. திறப்படுத்திக் கொள்ளும் முயற்சி தொடர்கிறது.

விமர்சனக் கட்டுரைகளை வெளியிட்ட விடுதலை, தீக்கதிர், மார்க்சிஸ்ட், புத்தகம் பேசுது இதழ்களுக்கும், இந்நூல் குறித்து இணையதளங்களில் விவாதித்து வரும் நண்பர்களுக்கும் நன்றி. பல்வேறு மட்டங்களிலும் இந்நூல் வாசிக்கப்படுவதற்கான தூண்டுதலாய் இருந்த தோழர். என்.குணசேகரனின் முயற்சி இங்கே தனித்து நினைவுகூரப்படுகிறது. இரண்டாம் பதிப்புக்கு செல்ல வேண்டும் என்று என்னையும் பூபாளம் புத்தகப் பண்ணையினரையும் உந்தித் தள்ளிய தோழர்.சிராஜ், மோகனசுந்தரம், கீற்று.காம் ரமேஷ் ஆகியோரின் கரங்களை மெதுவே பற்றிக் கொள்கிறேன்.

எனக்கு எல்லாவகையிலும் திறப்பாயிருந்த தோழர்.து.சண்முகம் அவர்கள் இந்த புத்தகம் அச்சாகி வந்த அதேநாளில் மறைந்துவிட்ட பெருந்துயரம் என் எழுத்தெங்கும் கசிந்து நிற்கும்.

110 பக்கங்கள், விலை.ரூ.50/-
பூபாளம் புத்தகப்பண்ணை
2027/6 வடக்கு ராஜவீதி,
புதுக்கோட்டை-612001
98416 25373



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

 

ஆன்மீக வியாபாரத்துக்கும் வியாபார ஆன்மீகத்துக்குமிடையே.....
ஆதவன் தீட்சண்யா

1. ராமாயணத்தில் வரும் லங்காபுரி, இன்றைய மத்தியப்பிரதேசத்தின் தண்டகாரண்யப் பகுதியில் ஏரியொன்றினால் சூழப்பட்டுள்ள குன்றின் மீதமைந்த பரப்பாகும். அயோத்தி தொடங்கி இப்பகுதிவரையாக வாழ்ந்த மக்களிடையே வாய்மொழி மரபில் புழங்கி வந்த பழங்கதையொன்றை தன் மொழியையும் கற்பனையும் கலந்துகட்டி வால்மீகி ‘ராமாயணமாக’ உருவாக்கினார். இயற்கைப் பேரழிவுகள், போர், வணிகம் போன்ற காரணங்களை முன்னிட்டு விந்திய மலைகளைத் தாண்டி வடக்கிலிருந்து தெற்கு நோக்கி புலம் பெயர்ந்த மக்கள் கொண்டுவந்த கதைகளில் ஒன்றுதான் ராமாயணம். புலம்பெயர்ந்த மக்கள் அக்கதையை தங்களின் புதிய வாழிடம் சார்ந்ததாக மறுஉருவாக்கம் செய்துகொண்டார்கள்.

Kumaran doss bookபிற்காலத்தில் அது இந்திய இதிகாசங்களில் ஒன்றாக கொண்டாடப்படுமென்றோ மதவாதத்தை விதைத்து இந்திய சமூகத்தை ரத்தத்தில் மூழ்கடிக்க விரும்புகிறவர்களின் கைப்பிள்ளையாக ராமன் மாற்றப்படுவான் என்றோ அப்போது வால்மீகி உட்பட யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் அப்போது இந்தியா என்கிற கருத்தாக்கமே உருவாகியிருக்கவில்லை. பெரும் பிரளயம் உருவாகி உலகமே அழியும்போது ஒரு கப்பல் அல்லது தெப்பம் ஏறி தப்பிப்போகிற சிலரிடமிருந்து மீண்டும் உலகம் உருவானது என்பதான கதை உலகின் எல்லாக் கண்டங்களிலும்- எல்லா மொழியிலும்- எல்லா மதத்திலும் சொல்லப்படுவதைப் போல, இந்த ராமன் கதையும் வடக்கே மக்களிடம் புழக்கத்தில் இருந்திருக்கிறது.

கங்கை கொண்டான், கடாரம் வென்றான், கம்மர்கட் தின்றான் என்று நம்மால் புளகாங்கிதத்தோடு குறிப்பிடப்படும் தமிழ்ப் பேரரசர்கள் தமிழ்நாட்டின் தென்முனையிலுள்ள இலங்கைத்தீவை அடிமைப்படுத்திய காலத்தில் அதை நியாயப்படுத்தியும், அதற்கொரு தெய்வாம்சத்தை நிறுவியும் வடக்கின் ராமாயணம் தெற்கின் கதையாக உல்டா செய்யப்பட்டது. கதைக்களம் லங்காபுரியிலிருந்து இலங்கைக்கு இடம் பெயர்ந்தது இவ்வாறுதான் என்கின்றனர் ஆய்வாளர்கள். எப்படியாயிருப்பினும், கவிச்சக்கரவர்த்திகளும் போர்ச் சக்கரவர்த்திகளும் எங்கோ கிடந்த சனியனை இழுத்துவந்து இங்கே விட்டுவிட்டார்கள் என்பதே உண்மை.

10 ஆயிரம் செய்யுள்களைக் கொண்ட வால்மீகியின் மூலப்பிரதியானது பார்ப்பனீய இடைச்செருகல்களால் பிற்காலத்தில் 24 ஆயிரம் வரிகளாக வீக்கம் கொண்டது. ராமனுக்கு ஆஃப் டிரவுசர் மாட்டி ஆர்.எஸ்.எஸ் கேம்ப்பில் நிறுத்துமளவுக்கு அவன்மீது இந்துத்துவ சாயம் ஏற்றப்பட்ட இருபதாம் நூற்றாண்டின் தொடக்ககால சில்லுண்டி வேலைகளையும் கழித்துப் பார்த்தால் கற்பனைத்திறம் வாய்ந்த ஒரு பழங்கதை நமக்கு கிடைக்கிறது. பாடல் அமைப்பு, மொழி அடிப்படையில் வால்மீகியின் மூலப்பிரதி பிரித்தெடுக்கப்பட்டு அதில் குறிப்பிடப்படும் ராமாயணக் கதைக்களத்திற்கும் இலங்கைக்கும் யாதொரு தொடர்புமில்லை என்பது நிறுவப்பட்டுள்ளது.

2. இலங்கைக்கு மிக அருகாகவும் இலங்கையுடன் நீர்வழித் தொடர்பு கொண்டதுமான ஒரு மீன்பிடித்தீவு ‘ராமேஸ்வர’மாக மாறிய பின்புலங்களை குமரன்தாஸின் இக்கட்டுரைகள் பேசவில்லை. ஆனால் ராமன் வந்து வழிபட்ட சிவஸ்தலம் என்கிற புராண நம்பிக்கையின் மீது அஸ்திவாரம் கொண்டு தீவின் நடுவே 15 ஏக்கர் விஸ்தீரணத்தில் பரவியுள்ள இராமநாதசாமி கோவில் சார்ந்து ஒரு ஊராக மாறிவிட்ட ராமேஸ்வரத்தைப் பற்றியனவாக விரிகின்றன. (இப்போதும் இதுபோல இன்னும் சில புராண, இதிகாச நகரங்களை உருவாக்கும் திட்டம் சங்கபரிவாரிடம் உண்டு. இன்றைய பரூக்காபாத்தில்தான் முன்பு பீஷ்மர் பிறந்தார் என்றும் ஆகவே அதை பீஷ்மநகர் என்று பெயர் மாற்றுவது, சரஸ்வதி நதியை செயற்கைக்கோள் வழியே கண்டறிந்து அதை மீண்டும் உருவாக்குவது என்று அதன் பட்டியல் மிக நீளமானது. இந்தியாவின் கணக்குத் தணிக்கை அதிகாரியாயிருந்து பின் பா.ஜ.க. எம்.பியான யாரோ ஒரு திரிவேதியோ சதுர்வேதியோ, தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, இதுதான் திரௌபதி குளித்த குளம் என்று ஒரு மொட்டைக்குளத்தை புனருத்தாரணம் செய்த கதையை ‘ஆர்கனைசரில்’ படித்திருக்கிறேன். )

மக்களின் ஞாபகங்களிலிருந்தும் அவர்களது அன்றாட வாழ்வியல் செயற்பாடுகளுக்குள் பொதிந்திருக்கும் தரவுகளைக் கொண்டும் ஒரு ஊரின் வரலாறு எழுதப்படுமானால் அது எத்தகையதாய் இருக்கும் என்பதற்கான கைச்சான்றாக இருக்கிறது இந்நூல். தலபுராணங்கள் என்ற கட்டுக்கதைகளில் ராமேஸ்வரம் தீவின் மீது கவிந்திருக்கும் தெய்வாம்சங்களை விலக்கி அந்த மண்ணுக்கேயுரிய மீன்கவிச்சியை முதன்முதலாக நுகரவைத்திருக்கிறார் குமரன்தாஸ்.

ராமேஸ்வரம் தீவின் நிலவியல், அதன் மக்கள் யாவர், அவர்களது வாழ்முறை என்ன, பூர்வகுடிகளாகிய மீனவர்களின் இன்றைய இருப்பின் நிலை குறித்தெல்லாம் நுணுக்கமாக பேசும் கட்டுரைகள், இத்தீவு குறித்து எங்கும் விவாதிக்கப்படாத கருத்துகள் பலவற்றை முதன்முதலாக துணிந்து பேசுவதாயுமிருக்கின்றன. பூர்வகுடிகளாகிய மீனவர்கள் உழைப்பை நம்பி வாழ்கிறவர்களாகவும், அதேவேளையில் அம்மண்ணை ஆக்ரமித்த வெளியாட்கள் (சமவெளி மனிதர்கள்- கடல்புரம் சாராதவர்கள்) வெகுமக்களை ஏமாற்றுகிறவர்களாகவும், மூடநம்பிக்கைகளை தக்கவைப்பவர்களாகவும், சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுகிறவர்களாகவும், வன்முறையாளர்களாகவும் இருக்கின்ற முரணை வாசிக்கும்போது ராமேஸ்வரம் தீவு ஒரு புதுவகை காலனீயத்தால் பங்கிடப்பட்டுவிட்டதைப் போலிருக்கிறது. இந்த தீவுக்கும் அது சார்ந்த மீன்பிடித் தொழிலுக்கும் யாதொரு தொடர்புமற்ற இந்த சமவெளி மனிதர்கள் தீவை ஆக்கிரமித்து அபகரித்துக் கொண்டுள்ள சூதினை விவரிக்கும்போது அதில் சாதியம் வகிக்கும் பங்கு நம்மை அச்சமடைய வைக்கிறது.

ஒரு கோவிலுக்குள் ஒரு சாதியின் இடமாக எது இருக்கிறதோ அதுவே ஊருக்குள் அச்சாதியின் இடத்தையும் அந்தஸ்தையும் தீர்மானிக்கிறது. அவ்வடிப்படையிலேயே கோவிலைச் சுற்றிய முதல்வட்டத்தில் பார்ப்பனர் தொடங்கி அடுத்தடுத்த வட்டத்தில் பிற சாதியினர் வசிப்பது என்ற தமிழக/ இந்திய ஊர்களின் நியமத்திற்கு ராமேஸ்வரமும் விதிவிலக்கானதல்ல என்பதை நிறுவுகிறார். இங்குள்ள ராமநாதசாமி கோயிலை மையமிட்டு சமூக, பொருளாதார அதிகாரப் பகிர்வுகள் நடைபெற்றிருப்பதை வரலாற்றுப்பூர்வமாக விவரிக்கிறார் குமரன்தாஸ்.

பார்ப்பனர்களிலும் தாங்கள் உயர்ந்தவர்கள் என்று பீற்றிக்கொள்ளும் கேரள நம்பூதிரிகளை இந்த ராமநாதசாமிக் கோயிலின் குருக்களாக நியமிப்பதற்காக, அதுவரை பூசாரிகளாயிருந்த பண்டார சன்னிதிகள் என்ற வீரசைவர்கள் கோவிலுக்குள்ளிருந்து பூக்கட்டும் தொழிலுக்கு விரட்டியடிக்கப் பட்டனர். சேதுபதி மன்னர்களுக்கும் நம்பூதிரிகளுக்கும் முரண்பாடு ஏற்பட்டதையடுத்து, மராட்டிய பார்ப்பனர்கள் அழைத்து வரப்பட்டு நம்பூதிரிகள் கைவிடப்பட்டனர். கருவறைக்குள் நுழைய அதிகாரம் பெற்ற ஒரே சாதியினர் இந்த மராட்டிய பார்ப்பனர் மட்டுமே. இக்கோயிலைப் பொறுத்தவரை தமிழ்ப்பார்ப்பனர் தீண்டத்தகாதவர். எனவே அவர்கள் மராட்டியப் பார்ப்பனர்களின் அல்லக்கைகளாக இருந்து பூசைக்கும் திவசங்களுக்குமான எடுபிடி வேலைகளை செய்து வருகின்றனர்.

சமூகத்தை மாசுபடுத்துவதோடு நிறுத்திக் கொள்ளாமல் கடலையும் மாசுபடுத்தி காசுபறிக்கும் உத்திகள் பலவற்றை உலவவிட்டுள்ள பார்ப்பனர்களைப் பின்தொடர்ந்து பலபட்டறை இடைநிலைச்சாதிகளும் செயல்படும் களமே இத்தீவு என்பதற்கான ஆதாரங்கள் வரிக்குவரி கிடைக்கின்றன. வருமானத்தையும் அதிகாரத்தையும் பகிர்ந்துகொள்வதற்காக, கோவிலுடன் தொடர்புடைய குருக்கள், பாராக்காரர் போன்ற வேலைகளைப் பெற்றிட பெருந்தொகை கையூட்டாக செலவிடப்படும் செய்தியை வாசிக்கும்போது இங்கு இறைப்பணி என்று ஒரு வெங்காயமும் இல்லை என்பது புரிகிறது. கோவில் மற்றும் சுற்றுலா சார்ந்த யாத்திரைப் பணியாளர்களாக தலித்துகள் எவரும் அனுமதிக்கப்படாத தீண்டாமைக் கொடுமையையும் நூலாசிரியர் கவனப்படுத்தியிருக்கிறார். யார் வேண்டுமானாலும் எந்தத் தொழிலும் செய்து வாழலாம் என்கிற பசப்பான வார்த்தைகளின் போலித்தனம் மீண்டும் இங்கே அம்பலமாகிறது.

இத்தீவில் இருக்கும் பார்ப்பனர்கள் மற்றும் இடைநிலைச் சாதியினரின் வருமானமும் வாழ்வாதாரமும் கோவில் சார்ந்ததாகவே இருக்கும் நிலையில், ராவணனால் சிறையெடுக்கப்பட்ட சீதையை மீட்டுவரும் ராமனின் நடவடிக்கைகளோடு தொடர்புடைய ஏராளமான கட்டுக்கதைகள் மிகுந்த நம்பகத்தன்மை உள்ளதுபோல இங்கே புழக்கத்தில் இறக்கிவிடப்பட்டுள்ளன. இங்கு கிடைக்கும் ஒவ்வொரு பொருளும் ராமனுடன் தொடர்புபடுத்தப்படுவதால் வடநாட்டிலிருந்து புனித யாத்திரை வரும் எளிய மக்கள் அப்பொருட்களை வெறும் பொருட்களாக மட்டுமே பாவித்து வாங்கிச் செல்வதில்லை. மாறாக, ராமன் என்கிற தெய்வத்தின் அம்சங்களாகவே போற்றுகின்றனர். எனவே தன் படையணிகளோடு இலங்கையைப் பார்த்து கையுயர்த்தும் ராமனின் புகைப்படத்தை விலைகொடுத்து வாங்கிச் செல்கிற ஒருவர், போர் இன்னும் முடியவில்லை என்ற ராமனின் செய்தியையும் சுமந்து செல்கிறார் மனதில்.

அச்சு இயந்திரம் வெகுஜன புழக்கத்திற்கு வந்த இந்த 100 ஆண்டுகளில் இந்த புகைப்படத்தின் கோடிக்கணக்கான பிரதிகளை- அதன் செய்தியோடு வாங்கிச் சென்றிருக்கிற எளிய வடஇந்தியர்கள்தான், ‘ராமர் பாலத்தை இடிக்க விடமாட்டோம்’ என்று சேதுக்கால்வாயைத் தடுக்கிற இந்துத்வாவின் பின்னே பலமான சக்தியாக அணிதிரள்கின்றனர் என்கிற நுண்ணரசியலைப் பேசுகிறார் குமரன்தாஸ்.

ஒரு புகைப்படம் சமூகத்தின் ஆழ்மனதில் உருவாக்கும் இந்த அபாயகரமான விளைவை உணரும்போதுதான், இன்றைக்கு ஆளும் வர்க்கத்தின் ஊடகங்களால் முன்னிறுத்தப்படும் செய்தி மற்றும் காட்சிரூபமான கருத்துகளின் பிடியிலிருந்த உழைப்பாளி மக்களை மீட்டெடுப்பதற்கான கருத்தியல் போராட்டம் எவ்வளவு வீச்சோடு நடத்தப்பட வேண்டும் என்பது உறைக்கும். காட்சி ஊடகம் சமூகத்தின் மீது தன் பிடியை இறுக்கிவரும் இந்நாளில், தொலைக்காட்சிகளில் வரும் புராணத்தொடர்களும், தேர்தல்கால பிரச்சாரப்படங்களும் ஆளும் வர்க்கத்தின் தற்காலிகத் தேவைகளை மட்டுமே நிறைவுசெய்யக்கூடியவை அல்ல. அவை மக்களை கருத்தியல்ரீதியாக தம்பக்கம் சாய்த்துக் கொள்வதில் தொடர் வெற்றியை ஈட்டிக்கொண்டுமிருக்கின்றன. ஆளும் வர்க்கத்துக்கு எதிரான கருத்தியல் போராட்டத்தை மேலெடுத்துச் செல்ல விரும்பும் எவரொருவரும், தமது மரபுவழிப்பட்ட பிரச்சாரக் கருவிகளை விடுத்து தமது தேவைகளை நிறைவேற்றும் புதிய நிலைகளை எய்த வேண்டியுள்ளது என்பதையும்கூட இந்த ‘புகைப்பட’ அரசியல் நமக்கு உணர்த்துகிறது. அல்லது ஒரு சாதாரண புகைப்படத்தையே உண்மை என்று நம்பிவிடக்கூடிய எளிய மக்களிடம் நாம் இதுவரை எதைக் காட்டிக் கொண்டிருக்கிறோம் என்ற கேள்வியாவது எழுகிறது.

4. இன்றைய இலங்கையையே ராமாயணக் களமாகக் கொண்டாலும் ஒரு தர்க்கம் இடிக்கிறது. ராமனும் அவனது குடும்ப உறுப்பினர்களாகிய சீதையும் இட்சுமணனும் தங்கியிருக்கிற பர்ணசாலை அமைந்திருக்கும் காட்டுப்பகுதிக்குள் இலங்கையிலிருந்து எல்லைதாண்டி முதலில் நுழைந்தவள் சூர்ப்பனகை. அவள் மூக்கறுபட்டதும் ரத்தம் சொட்டச் சொட்ட தன் சகோதர்களிடம் சொல்வதற்காக மீண்டும் இலங்கை போகிறாள். ராம லட்சுமணர்களிடம் சண்டைபோட அவளது சகோதரர்கள் 14 கிங்கரர்களை அனுப்புகிறார்கள். அவர்கள் கொல்லப்பட்டதையறிந்து சகோதரர்களே நேரடியாய் வருகிறார்கள். அவர்களும் கொல்லப்பட்ட பின்புதான் தன் மூத்த அண்ணன் ராவணனிடம் சென்று முறையிடுகிறாள். ராவணனும் கிளம்பி வந்து சீதையை சிறையெடுத்துப் போகிறான். சீதை இலங்கையிலே இருப்பதை ராமனின் பக்தனான அனுமன் நேரில் கண்டுவருகிறான் அசோகவனத்தில்.

ஆக, பர்ணசாலை இருந்த காட்டுக்கும் இலங்கைக்கும் ‘அத்தை வீட்டுக்கும் கட்டைப் புளியமரத்துக்கும்’ போய் வருவதைப்போல அடிக்கடி போகவர இருந்திருக்கிறார்கள். இவர்களெல்லாம் எப்படி நினைத்த மாத்திரத்தில் அடிக்கடி போய்வர முடிந்தது எனக் கேட்டால் ‘புஷ்பக விமானத்தில்’ பறந்து வந்ததாக கதைவிடுகிறார்கள். ‘ஒரு கதையில் வில்லி, அவளது அண்ணன்களான வில்லன்கள், ஏவலர்களான கிங்கரர்கள், மெயின் வில்லன் ராவணன், ராமபக்தன் அனுமன் என்ற சாதாரணர்கள் எல்லாம் ஃபிளைட்ல பறக்கறப்ப, எல்லாம் வல்ல - கதாநாயகன் ராமன் மட்டும் ஏன் பாலம் கட்டித்தான் இலங்கைக்குப் போவேன்னு அணிலைக் கூட்டிக்கொண்டு மணல் அள்ளத் திரியணும்?’ என்று புதுகை பூபாளம் கலைக்குழுவினர் கேட்கிற அர்த்தம் பொதிந்த கேள்வியை இவ்விடத்தில் இணைத்துப் பார்க்க வேண்டும்.

சீதையை சிறையெடுக்க ராவணன் சகட வண்டியேறி (மட்டக்குதிரை அல்லது கழுதை பூட்டிய வண்டி) போனான் என்ற குறிப்பை வசதியாக பின்தள்ளிவிட்டு அவனை புஷ்பக விமானத்தில் ஏற்றிவிட்டார்கள் புரட்டர்கள். அணிலையும் குரங்குகளையும் சித்தாளாக வைத்துக்கொண்டு தானே கொத்தனாராக இருந்து இலங்கைக்கு பாலம் கட்டிய ராமன் திரும்பும்போது பாலத்தைப் பயன்படுத்தவில்லை. ராவணனின் புஷ்பக விமானத்தில் தான் திரும்புகிறான். வழியில் பரத்வாஜ முனிவரிடம் ஆசிபெறுகிறார்கள் ராமன் அண்ட் கோ. செல்லும் வழியில் நிழலும் நீரும் கனியும் கிடைப்பதாகுக என்று ஆசி கூறுகிறார் முனிவர். விமானத்தில் செல்கிறவர்களுக்கு நிழலும் கனியும் தரும் மரங்கள் ஆகாயத்தில் விளைந்திருக்குமா என்ற அறிவுப்பூர்வமான கேள்விகளை இவ்விடத்தில் எழுப்பினால், கதையில் அப்படியெல்லாம் வரும் என்பார்கள். சரி, கதைதானே இது, அப்புறம் ஏண்டா உண்மைபோல சித்தரித்து உயிரை வாங்குகிறீர்கள் என்றால் அது எங்கள் நம்பிக்கை என்பார்கள். இந்த நம்பிக்கைகளின் அத்தனை கெடுவிளைவுகளையும் தாங்கியழியும் இடமாக ராமேஸ்வரம் மாற்றப்பட்டுள்ளது.

போஜனாலயாக்களையும் இன்னபிற வணிகநிறுவனங்களையும் நடத்தி வருகிற மார்வாரிகளுக்கும், மடங்களின் தலைவர்களுக்கும், பூசை திவசமென்று தினமும் ஆயிரக்கணக்கில் தேற்றும் பார்ப்பனர்களுக்கும் யாத்திரைப் பணியாளர்களாகிய இடைநிலைச் சாதியினருக்கும், மக்களை ஏமாற்றிச் சுரண்ட ஆதம் பாலம் எனப்படும் அந்த மண்திட்டு ‘ராமர் பாலமாக’ நீடிக்கவேண்டிய தேவை இருக்கிறது. எனவே அவர்கள் சேதுகால்வாய் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இந்துத்வாவின் இயல்பான கூட்டாளிகளாக இருக்கின்றனர்.

எங்கோ உருவான ஒரு கதையை இங்கே நடந்த உண்மையென சொல்லிக் கொண்டு நடந்துவரும் ஆன்மீக வியாபாரமும், வியாபார ஆன்மீகமும் படுத்துவிடக்கூடாது என்ற குயுக்தியை அம்பலப்படுத்தி இந்த பாலம் குறித்த அறிவியல்பூர்வமான அல்லது ஆய்வுநோக்கிலான உண்மைகளை மக்களிடையே கொண்டு சென்றால் அவர்களது மதஉணர்வு புண்படும் என்று மதச்சார்பற்றவர்களும் அறிவுத்துறையினரும் காட்டும் சுணக்கத்தின் விளைவாக ராமாயணம் என்ற ஒரு கதை, இந்த நாட்டின் வரலாறாகவும், ராமன் ஒரு தேசிய வீரனாகவும் முன்னிறுத்தப்படும் அபாயம் உருவாகியுள்ளது. ராமன் அவதாரப்புருஷன் என்றால் அவனது கால்பட்டதால் புனிதமடைந்தவிட்ட இத்தீவின் ஒரு பகுதியான தனுஷ்கோடி ஏன் கடல்கோளுக்கு ஆளாகியது என்கிற கேள்வியைக்கூட நாம் எழுப்புவதில்லை.

இந்துத்துவக் கொட்டத்தை முறியடிப்பதில் ஆளுங்கட்சிகளுக்குள்ள ஊசலாட்டமான அணுகுமுறை காரணமாக இன்று ‘ராமர் பாலத்திற்கு சேதாரமில்லாத மாற்றுப்பாதை’ பற்றிய விவாதங்கள் எழுந்துள்ளதற்கும் இந்நூல் கண்டனத்தை பதிவு செய்கிறது. சேதுகால்வாய்த் திட்டத்தை எதிர்ப்பவர்களின் பின்னுள்ள வகுப்புவாத அரசியலை எதிர்க்கும் பொருட்டு திட்டத்தை ஆதரிக்கும் மனநிலைக்கு குமரன்தாஸ் சென்றாலும், திட்டத்தால் விளையும் சுற்றுச்சூழல் சார்ந்த சீர்கேடுகள் குறித்த கவலையையும் விமர்சனத்தையும் வெளிப்படுத்துகிறார். இவ்விமர்சனம், மீனவர் நலன் சார்ந்த நிலையிலிருந்தும் எழுகிறது.

சேதுகால்வாய்க்கு ஆதரவாகவோ எதிராகவோ பேசிக்கொண்டிருக்கும் யாரும் அத்தீவின் பூர்வகுடிகளாகிய மீனவர்களின் கருத்துகளை பொருட்படுத்தத் தயாரில்லாதது குறித்து கவலையை வெளிப்படுத்தும் நூலாசிரியர், இப்பகுதி மீனவர்களின் மேம்பாட்டிற்கான ஆக்கப்பூர்வமான பல யோசனைகளை முன்வைத்திருக்கிறார். கடல்சார் தொழிலாளர்களான மீனவர்களும், படகோட்டிகளும், சங்கு எடுப்பவர்களும் கடுமையான உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாகியிருப்பதை வெளிக்கொண்டு வந்ததன் மூலம், அவர்கள் மீதான தொழிற்சங்க இயக்கங்களின் முனைப்பான தலையீட்டையும் இந்நூல் கோருவதாயிருக்கிறது. மீன்பாடு இல்லாக் காலங்களில் சீவனத்துக்கு சிரமப்படும் மீனவர்கள் கடுமையான கந்துவட்டிக்கு கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதிலிருந்து அவர்களை மீட்பதற்கும் கண்ணியமானதொரு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கும் குமரன்தாஸ் முன்வைக்கும் திட்டங்கள் பயனளிக்கக்கூடும்.

காடுகளிலிருந்தும் மலைகளிலிருந்தும் அதன் பிள்ளைகளாகிய பழங்குடிகள் அன்னியப்படுத்தப்படுவதைப் போல கடலின் பிள்ளைகள் அதனிடமிருந்து விலக்கப்படும் நிலை குறித்த விசாரணைகள் இந்நூலை முன்வைத்து நடத்தப்பட வேண்டும். கடல் சார்ந்து வாழ்வதன்றி வேறொன்றை கனவிலும் நினைக்கவியலாத மீனவர்களை அவர்களது பாரம்பரிய வாழ்முறை என்ற அளவில் மீன்பிடித் தொழிலிலேயே முங்கிக் கிடக்க விடுவதா அல்லது மாற்றுத் தொழில் பயிற்சி மூலமாக அதிலிருந்து விடுவிப்பதா என்கிற கேள்வியை அவர்களுக்கு வெளியே இருந்து எடுக்க முடியாது. ஆனால் இது குறித்த தீவிரமான விவாதம் மீனவச் சமூகத்திற்குள் நிகழ்வதற்கான வாய்ப்பை இந்நூல் வழங்குகிறது.

கடல் கறுப்பா சிவப்பா என்றுகூட அறியாதவர்கள் எங்கோ இருந்துகொண்டு எல்லைகளை வகுக்குறார்கள். ஆனால் இலங்கை, இந்திய மீனவர்கள் பரஸ்பரம் இருநாட்டு கடலெல்லைகளைத் தாண்டி மீன்பிடிப்பது இயல்பாக கொண்டிருந்திருக்கின்றனர். கடலுக்கு புறத்தே மாறிய அரசியல், கடலையும் மீனவர்களையும் சேர்த்தே பாதிப்படைய வைத்திருக்கிறது. கச்சத்தீவை மீட்டுவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று கரையிலே நின்று முண்டா தட்டுகிறவர்கள் கடலைப் பகிர்ந்துகொண்ட மீனவர்களைத் துண்டாடிவிட்டார்கள் என்பதை உணர முடிகிறது.

1988ல் இந்திராகாந்தி பாலம் திறக்கப்பட்ட பிறகு கடலுக்கும் மீன்பிடி தொழிலுக்கும் எவ்விதத்திலும் தொடர்பற்ற சமவெளி மனிதர்கள் ராமேஸ்வரம் தீவுக்குள் நுழைந்து ஆக்கிரமிக்கும் போக்கு வேகமெடுத்தது என்பதை வாசிப்பினூடாக உணரமுடிகிறது. மட்டுமன்றி தென்மாவட்டங்களில் தலித்துகளான பள்ளர்கள் மீதான வன்கொடுமைகள் அதிகரித்து வந்த நிலையில் 1980களின் பிற்பகுதியில் ஜான்பாண்டியன், மரு.கிருஷ்ணசாமி போன்றவர்களின் தலைமையில் அவர்கள் எழுச்சி பெற்று திருப்பியடிக்கத் தொடங்கியதும், தாக்குபிடிக்க முடியாத மறவர் போன்ற இடைநிலை ஆதிக்கச்சாதியினர், பள்ளர்கள் இல்லாத பகுதியான ராமேஸ்வரம் தீவுக்கு தப்பியோடி வந்துவிட்டனர் என்ற மிக முக்கியமானதொரு மாற்றம் இதில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. மணற்பாங்கான இந்நிலப்பகுதிக்குள் விவசாயம் நடைபெறுவதில்லையாதலால் வேளாண்குடிகளான பள்ளர்கள் அனேகமாக இத்தீவில் இல்லை என்பதும் நுணுகியப் பார்வையிலிருந்து கிடைக்கும் தகவல்தான்.

காரணம் என்னவாக இருந்தாலும், சமவெளி மனிதர்கள் இத்தீவின் கடல்சார் பூர்வகுடி மக்களை ஆதிக்கம் செய்கிறவர்களாக தங்களை வலுவடையச் செய்துகொண்டதும், மீன்பிடித்தொழிலை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததுமாகிய கேடு நிகழ்ந்துவிட்டது. கிறிஸ்தவர்களான பரதவர்களை சுரண்டுவதும் அடக்குவதுமாகிய தங்களது இழிநோக்கங்களுக்கு ஒரு பாதுகாப்பு வளையமாக இந்த வெளியாட்கள் இந்துத்துவ அமைப்புகளில் அணிதிரண்டிருப்பது தற்செயலானதல்ல. கோவிலை மையப்படுத்தி ராமேஸ்வரம் தீவு முழுவதையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர இந்துத்துவ வெறியர்கள் மேற்கொண்டிருக்கும் முயற்சிகள், அங்கு பிற ஜனநாயக இயக்கங்களின் வளர்ச்சிக்குத் தடையாக இருப்பதையும் சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தலாக மாறியிருப்பதையும் சற்றே பதற்றத்துடன் உள்வாங்க வேண்டியுள்ளது. அங்கிருக்கும் இஸ்லாமியர்கூட, தான் இஸ்லாமியர் என்று எளிதில் பிரித்தறிய முடியாதபடி அடையாளமழித்துக் கொண்டவராகவே இருப்பார் என்ற செய்தியை படிக்கும்போதுதான், அப்துல்கலாம் சங்கரமடத்துக்கு செல்வதின் சூட்சுமம் பிடிபடுகிறது.

இப்படி கடலைப்போலவே ஆழமும் விரிவும் கொண்டதாகி அலையலையான விவாதங்களைத் தூண்டும் தன்மையுடையதான இந்நூலுக்கு கடல்சார் வாழ்வின் நுட்பங்கள் அறிந்த வேறொருவர் முன்னுரை எழுதியிருந்தால் பொருத்தமாயிருந்திருக்கும் என்றே கருதுகிறேன். எனவே இதை முன்னுரையாக பொருட்படுத்தாது, ஒரு வாசகனின் பகிர்வாக கணக்கில் வைத்துக்கொள்ள வேண்டுகிறேன்.

அன்புடன்,
ஆதவன் தீட்சண்யா 12.12.08

(நூல் வெளியீடு: கருப்புப் பிரதிகள், பி-74, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் சாலை, சென்னை - 5. பக்கங்கள்: 96. விலை ரூ.50)



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 கடவுளின் மீட்பன் 

ஆதவன் தீட்சண்யா

 

சைரன் அலறப் பதறியோடும்
ஒரு தீயணைப்பு வண்டியின் மணியோசை
கர்ப்பகிரஹத்தையோ தேவாலயத்தையோ
நினைவுபடுத்துமானால்
கடவுளைப்பற்றி அறிந்த அளவுக்கு
உனக்கு மனிதர்களைத் தெரியாதென
குறித்துக் கொள்வேன்

ஒருவேளை
நீயே கடவுளாய் இருக்கும் பட்சம்
உனக்கு மனிதர்களைப் பற்றித்தான் தெரியுமேயொழிய
சடசடத்தெரியும் நெருப்பையும்
கருகி வெடிக்கும் உயிர்களையும்
நீ ஒருபோதும் அறிந்திருக்கவில்லை என்று
தீர்ப்பளித்துவிடுவேன்

நல்வாய்ப்பாய்
கடவுளாகிய நீயே வெந்து கொண்டிருப்பாயானால்
அப்பெருந்தீயின் சுடரொன்றில்
காதோரம் செருகி வைத்திருக்கும்
துண்டு பீடியை சாவகாசமாய் பற்ற வைத்துக் கொண்டு
தகிப்பின் உக்கிரத்தை போதிப்பேன் உனக்கு
(இவ்விடத்தில் அடுப்பங்கரை / நந்தன் /
வெண்மணி / இராக் வீதிகளை
நினைவூட்டுவது எனது நோக்கமல்ல)

ஆனால்
அப்போதாவது
கடவுள் என்ற பீடம் விட்டிறங்கி
ஒரு உயிரைப்போல் கதறுவாயானால்
வென்னீரை ஊற்றினாலும் தீயணையுமாதலால்
என் மூத்திரத்தையும் எச்சிலையும் தெளித்தேனும்
நெருப்பையணைத்து மீட்பேன் உன்னை. 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

மார்க்சீயர் வேடத்தில் அம்பேத்கரை சிறுமைப்படுத்தும் ரங்கநாயகம்மா - ஆதவன் தீட்சண்யா

 
http://aadhavanvisai.blogspot.in/2016/08/blog-post_6.html
தோழர். அதியன் ஆதிரை வாங்கி அனுப்பிய ரங்கநாயகம்மாவின் ‘சாதியப் பிரச்னைக்குத் தீர்வு - புத்தர் போதாது அம்பேத்கரும் போதாது மார்க்ஸ் அவசியத் தேவை’ என்கிற புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறேன். இந்தியாவின் சாதிகள் பற்றி எழுதிய முதல் ஆய்வாளர் தானல்ல என்றும் தனக்கும் முன்பாகவே பலரும் ஆய்ந்து எழுதியிருக்கிறார்கள் என்றும் அம்பேத்கரே பலவிடங்களில் குறிப்பிடுகின்றார். ஆனால் அவர்களில் எவரையும் இந்த ரங்கநாயகியம்மா  தனது ஆய்வுக்கு உட்படுத்தி எழுதியதாக தெரியவில்லை. எனில் அம்பேத்கரை மட்டும் இவ்வளவு வன்மமாகவும் குதர்க்கமாகவும் இளக்காரத்தோடும் அணுகும் புத்தகம் ஒன்றை எழுதியாக வேண்டிய தேவை அவருக்கு என்ன வந்தது?. ‘பள்ளு பறையெல்லாம் புத்தி சொன்னா நாங்க பாத்துக்கிட்டு சும்மா இருப்போம்னு நினைச்சியா?’ என்று பல்லைக் கடிக்கும் அப்பட்டமானதொரு சாதிவெறியரின் உளவியலுக்கு தன்னை முழுமையாக ஒப்புக்கொடுத்த ஒருவரால் மட்டுமே இப்படி எழுத முடியும்.
‘இந்தியாவில் சாதிகள்’ என்கிற  அம்பேத்கரின் ஆய்வுரையை தேவைக்கேற்ப ஒட்டியும் வெட்டியும் வலிந்து பொருள்கொள்ளும் ரங்கநாயகம்மா, அதுதவிர அம்பேத்கரின் கூற்றுக்கு வேறு அர்த்தமில்லை என்று நிறுவும் வெறிகொண்டு ஆடுகிறார். அம்பேத்கர் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரல்ல. ஆனால், ரங்கநாயகியம்மா விமர்சனம் என்கிற பெயரில் அம்பேத்கரை சிறுமைப்படுத்துவதிலேயே முனைப்பாக இயங்கியிருக்கிறார். சாதியம் பற்றிய அம்பேத்கரின் பார்வையை குழந்தைத்தனமானது, மிகையுணர்ச்சி கொண்டது, நகைப்புக்குரியது என்றெல்லாம் பரிகாசம் செய்யத் துணிந்த இவரால் சாதியம் குறித்தோ சாதியொழிப்பு குறித்தோ எதையும் திட்டவட்டமாக கூறமுடியவில்லை என்பதுதான் அவலம்.
அம்பேத்கருக்கு முன்பாகவே அரசியலரங்குக்கு வந்துவிட்ட கம்யூனிஸ்ட்களில் ஒரு சாரார், சாதியத்தால் கட்டமைக்கப்பட்ட தங்களது அகநிலைக்கும் செளகரியங்களுக்கும் குந்தகம் வராமல்தான் இன்றைக்கும் மார்க்சீயம் பேசிவருகின்றனர். சாதியத்திற்கு எதிரான போராட்டம் வர்க்கப்போராட்டத்தை நோக்கிய தங்களது பயணத்தை திசைமாற்றிவிடும் என்று அஞ்சுவதாய் பாசாங்கு செய்யும் இவர்கள், வர்க்கப்போராட்டம் வெற்றியடைந்ததற்கு மக்கியாநாள் அதிகாலையில் தீர்ப்பதற்காக ஒத்திவைக்கப்பட்டுள்ள அநேகப் பிரச்னைகளில் ஒன்றாகவே சாதியையும் கருதுகின்றனர். அதுவரையிலும் சாதியத்திற்கு எதிராக சொந்த வாழ்க்கையிலோ, அமைப்புரீதியிலோ எதையும் செய்துவிட வேண்டியதில்லை என்கிற ‘தத்துவத் தெளிவோடுள்ளவர்களிடையே’  இந்தப் புத்தகம் பெரும் வரவேற்பை பெறுவதற்கான எல்லா சாத்தியங்களையும் கொண்டுள்ளது.
இந்தியாவில் நிலவும் சகலவிதமான ஏற்றத்தாழ்வுகளுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் காரணமாக இருக்கும் சாதியத்திற்கு எந்த பங்கமும் வராமல் பயின்றொழுகிக் கொண்டே புரட்சியாளர்களாகவும் காட்டிக்கொள்கிற மோசடிப் பேர்வழிகளுக்கு இந்நூல் பெருந்தைரியத்தையும் தத்துவபலத்தையும் தரவல்லது. இந்நூலை ஒருமுறை படிப்பதன் மூலம் அவர்கள் தம்மைத்தாமே ஆயுசுக்கும் பாராட்டிக்கொண்டு பெருமிதத்தில் துள்ளக்கூடும். அம்பேத்கரது கண்ணோட்டத்தை அறிவுப்புலத்திலிருந்து அகற்றுவதன் மூலம் சாதியத்திற்கெதிரான போராட்டத்தை மட்டுப்படுத்தவும் மழுங்கடிக்கவும் முடியும் என்று நம்புகிறவர்களின் குரலாக ரங்கநாயகம்மா பேசுகிறார்.  இந்தப் புத்தகத்தோடு ஒப்பிடும்போது, அம்பேத்கரை அவமதிக்கும் தலித் விரோத சாதிவெறியர்கள் மிக கண்ணியவான்களாகத் தெரிகின்றனர். ஒருவேளை அவர்கள் இதுகாறும் அம்பேத்கரது சிலைகளை உடைத்து செருப்பு மாலை போட்டு அவமதிப்பதால் உணரும் மனக்கிளர்ச்சியை இனி இந்நூலை வாசிப்பதன் மூலமே கூட அடையமுடியும். ஆகவே சாதியவாதிகள் பலரும் இந்நூலை மிகத் தாராளமாக வாங்கிப் படித்து கொண்டாடி இன்புறுகிறார்கள் என்கிற செய்தி ஓரிரு நாட்களில் வரக்கூடும்.
சாதியத்திற்கு எதிரான போராட்டத்தையும் வர்க்கப் போராட்டத்தையும் இணைத்து நடத்துவதன் தேவையை உள்வாங்கி மார்க்சீய அமைப்புகளை அது நோக்கி உந்தித்தள்ள பணியாற்றி வருபவர்களை பின்வாங்கச் செய்கிற தந்திரம் இப்புத்தகத்தில் துருத்திக்கொண்டு இளிக்கிறது. அம்பேத்கரையும் மார்க்சையும் எதிரெதிர் பகைமுகாம்களாக நிறுவிக் காட்டுவதன் மூலம் ரங்கநாயகம்மா போன்றவர்கள் யாருக்கு சேவகம் செய்யத் துடிக்கிறார்கள்? நூற்றாண்டைத் தொட்டிருக்கும் ‘இந்தியாவில் சாதிகள்’ என்கிற அம்பேத்கரின் ஆய்வுரை மீதான வெகுஜன கவனத்தை சிதறடிக்கும் நோக்கத்துடனேயே இந்நூல் இப்போது தமிழுக்கு கொண்டுவரப்பட்டிருக்கிறதோ என்கிற சந்தேகமும் எழாமலில்லை. நேர்த்தியான தாளில் ராயல் டம்மி அளவில் 416 பக்கங்களைக் கொண்ட இந்நூலை வெறும் 80 ரூபாய்க்கு வெளியிட்டிருப்பதற்கு வாசகரின் வாங்கும் சக்தி மீதான அக்கறையை விடவும் வாங்கத் தூண்டும் தந்திரமே காரணமாக இருக்க முடியும்.
ம.வெங்கடேசன் என்கிற காவிக்கூலி எழுதிய ‘இந்துத்வ அம்பேத்கர்’ என்கிற நூலைப் படித்தபோது ஏற்பட்ட அதே அவமானமும் ஆத்திரமும் ரங்கநாயகியம்மாவின் இந்தப் புத்தகத்தை வாசிக்கும் போதும் ஏற்படுகிறது. அம்பேத்கரை சிறுமைப்படுத்தும் புள்ளியில் வியக்கத்தக்க வகையில் வலதுசாரிகளோடு கைகோத்திடும் ரங்கநாயகம்மா போன்றவர்கள் எழுதிக் குமிக்கிற இந்தக் குப்பைகளையெல்லாம் வாசித்து என்ன ஆகப்போகிறது என்று எரிச்சலாகி தூக்கி தூர எறிந்துவிட வேண்டும் போலிருக்கிறது. உண்மையில் அப்படி எறிந்துவிட வேண்டும் என்று எதிர்பார்த்துதான் இப்படி எழுதுகிறார்கள். அதற்காகவே எறிந்துவிடாமல் படித்துத் தொலைக்க வேண்டியிருக்கிறது.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 https://biblestars.blogspot.in/

   http://www.pranaviolethealing.com/   

http://charlesmsk.blogspot.in/

http://www.pearlsofdharma.in/   

 http://www.tamilsurangam.com/index.html

http://all-pdf-mags-online.blogspot.in/   

http://enganeshan.blogspot.in/

    http://www.yarl.com/forum3/

http://writerasai.blogspot.in/

https://bishyamala.wordpress.com/

http://www.thamizharkalam.com/#!blank-7/bom69

http://lekhabooks.com/

http://vaazhumvalluvam.blogspot.in/

http://www.tamil.chellamuthu.com/

http://www.compellingtruth.org/

http://sangamstudies.blogspot.in/

http://socratesjr2007.blogspot.in/

http://theekkathir.in/   https://pagadi.wordpress.com/ http://solvanam.com/  



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard