New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மொழிப்போர்-ஆர். முத்துக்குமார்


Guru

Status: Offline
Posts: 24601
Date:
மொழிப்போர்-ஆர். முத்துக்குமார்
Permalink  
 


இங்கிலாந்து, இந்தி, இந்திரா!

இந்திய அரசியல் களத்தை — தேசிய அளவிலும் தமிழக அளவிலும் — தொடர்ந்து ஆய்வு செய்துவரும் ஆர். முத்துக்குமாரின் சமீபத்திய புத்தகம், திராவிட இயக்க வரலாறு. பெரியார், அம்பேத்கர், எம்ஜிஆர் தொடங்கி பல வாழ்க்கை வரலாற்று நூல்கள் எழுதியுள்ளார்.  தமிழக அரசியல் இதழில் இவர் எழுதி வரும் ஆடு புலி அரசியல் தொடர் 100 அத்தியாயங்களைக் கடந்து முன்னேறிக்கொண்டிருக்கிறது.

மொழிப்போர் / அத்தியாயம் 1

தமிழக மக்கள் மூன்று முக்கியப் போராட்டங்களைச் சந்தித்துள்ளனர். மூன்றுமே ஆதிக்கத்துக்கு எதிராக நடந்தவை. இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது என்று மக்கள் சக்தி பொங்கி எழுந்ததன் விளைவாக நடந்தவை.  இங்கிலாந்திடம் இருந்து விடுதலை வேண்டி நடந்தது சுதந்தரப் போராட்டம். இந்தியிடம் இருந்து விடுதலை வேண்டி நடந்தது மொழிப் போராட்டம். இந்திராவிடம் இருந்து விடுதலை வேண்டி நடந்தது நெருக்கடி நிலைப் போராட்டம்.

மூன்று போராட்டங்களின்போதும் மக்கள் அடக்குமுறைக்கு ஆளாகியிருக்கிறார்கள். பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். படுகொலைக்கு இலக்காகியிருக்கிறார்கள். மூன்றுமே தியாகங்களால் நிரம்பிய போராட்டங்கள் என்றபோதும் மற்ற இரண்டு போராட்டங்களில் இருந்து மொழிப்போராட்டம் ஒரு முக்கிய விஷயத்தில் வேறுபட்டு நிற்கிறது. சுதந்தரப் போராட்டம் 1947 ஆம் ஆண்டோடு முடிந்துவிட்டது. நெருக்கடி நிலைக்கு எதிரான போராட்டத்துக்கு 1977ல் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது. ஆனால், மொழிப்போராட்டம் மட்டும் இன்னமும் முற்றுப்பெறவில்லை.

1938 ஆம் ஆண்டு தொடங்கிய மொழிப்போராட்டம் ஏறக்குறைய எழுபத்தைந்து ஆண்டுகாலமாக நீடித்துக் கொண்டிருக்கிறது. சீரான கால இடைவெளிகளில்! அவ்வப்போது மூச்சுவிட்டுக் கொள்வதற்குக் கால அவகாசம் கிடைக்கும். பிறகு மீண்டும் தொடங்கிவிடும். முதலாம் கட்ட மொழிப்போர், இரண்டாம் கட்ட மொழிப்போர் என்று இதுவரை பல கட்டங்களாக மொழிப்போர் நடந்துள்ளது. நடந்துவருகிறது.

மொழிப்போர் என்பது இந்தி மொழியைப் பேசுகின்ற வட இந்தியர்களுக்கு எதிராகத் தமிழர்கள் தொடுத்த ஆயுதப்போர் அல்ல; இந்திய அரசுக்கு எதிராக தமிழ்நாடு தொடுத்த யுத்தம் அல்ல. தமிழர்கள் மீது இந்தி மொழியைத் திணிக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் மத்திய, மாநில அரசுகள் வெவ்வேறு காலகட்டங்களில் எடுத்த கடுமையான நடவடிக்கைகளுக்கான எதிர்வினைகளின் தொகுப்பே மொழிப்போர்!

இந்தித் திணிப்பு என்பது இந்தியா சுதந்தரம் அடைவதற்கு முன்பே தொடங்கிவிட்டது. பிரிட்டிஷ் இந்தியா என்பது ஒருமொழி பேசும் தேசம் அல்ல. இந்தி, தமிழ் உள்ளிட்ட ஏராளமான மொழிகள் பேசப்படும் தேசம். அந்தத் தேசத்தை பிரிட்டிஷாரிடம் இருந்து பிரித்தெடுக்கவேண்டும் என்றால் போராட்டத்தில் ஈடுபடவேண்டும். அதற்கு மக்களை ஒன்றிணைக்கவேண்டும். அந்த ஒருங்கிணைப்புப் பணிக்காக காந்தியும் காங்கிரஸும் பயன்படுத்திய கருவியே இந்தி.

இந்தியை இந்தியர்கள் அனைவரும் படிக்கவேண்டும் என்று பேசினார் காந்தி. அதே நோக்கத்துடன் இந்தி பிரசார சபாக்கள் உருவாகின. இந்தியைப் பரப்பும் நோக்கத்துடன் தீவிர பிரசாரம் செய்தார். ஒருகட்டத்தில் இந்தி பேசாத மக்கள் அனைவரும் இந்தியைக் கற்று தேசிய நீரோட்டத்தில் இணையவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆனால் அப்போதெல்லாம் எதிர்ப்புகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தன. பெரிய அளவில் எழவில்லை.

பிரசாரம் என்பது எந்த நொடியில் திணிப்பாக மாறியதோ அப்போதே எதிர்ப்புகள் தொடங்கிவிட்டன. இந்தியைப் படித்தே தீரவேண்டும் என்று வற்புறுத்தப்பட்டபோது போராட்டங்கள் வலுக்கத் தொடங்கின. குறிப்பாக, ராஜாஜி இந்தித் திணிக்க எத்தனித்தபோது. அந்த நொடியில் தொடங்கியதுதான் முதலாம் மொழிப்போராட்டம்.

கருத்து ரீதியாக, கொள்கை ரீதியாக, செயல்பாடு ரீதியாக என்று பல முனைகளில் வேறுபட்டு நின்ற தலைவர்கள் பலரை ஒரணியில் திரட்டியது மொழிப் போராட்டம். சோமசுந்தர பாரதியார், மறைமலையடிகள், பெரியா ஈ.வெ.ரா, தா.வே. உமாமகேசுவரன், டபிள்யூ.பி.ஏ. சௌந்தர பாண்டியன், சி.என். அண்ணாதுரை, கி.ஆ.பெ. விசுவநாதம் என்று பல தலைவர்கள் இந்தித் திணிப்புக்கு எதிராகப் போராடத் தொடங்கினர். மூவலூர் ராமாமிர்தம் அம்மையார், மலர்முகத்தம்மையார், மீனாம்பாள் சிவராஜ் உள்ளிட்ட பல பெண்களும் மொழிப்போரில் கலந்துகொண்டனர்.

இந்தித் திணிப்பால் ஏற்படப்போகும் இழப்புகள், தமிழுக்கு நேரவிருக்கும் ஆபத்துகள், தமிழர்கள் சந்திக்க இருக்கும் பிரச்னைகள் குறித்துப் பேசினர். நடைபயணம் சென்றனர். சாலையில் இறங்கிப் போராடினர். அவர்களைக் கையாள ராஜாஜி அரசாங்கம் அடக்குமுறையை ஏவியபோது போராட்டம் அடுத்தக் கட்டத்தை அடைந்தது. களப்போராளிகள் கைது செய்யப்பட்டனர். சிறைக்குள் தாக்கப்பட்டனர். உயிர்ப்பலியும் நடந்தேறியது.

மொழிப்போரில் முதலில் தனது உயிரைப் பலி கொடுத்தவர் நடராஜன். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். சிறைக்கொடுமை தாங்காமல் மரணம் அடைந்தார். அவரைத் தொடர்ந்து தாலமுத்து என்பவர் மரணம் அடைந்தார். போராட்டம் வலுத்ததைத் தொடர்ந்து இந்தித்திணிப்பு கைவிடப்பட்டது. முதல் மொழிப்போர் முடிவுக்கு வந்தது.

பிரச்னை என்னவென்றால், இந்தித் திணிப்பு என்பது அத்தோடு நின்றுவிடவில்லை. வெவ்வேறு காலகட்டங்களில் மத்திய, மாநில அரசுகள் வெவ்வேறு விதங்களில் இந்தித் திணிப்பை அமல்படுத்திக்கொண்டே இருந்தன. அது நேரு, சாஸ்திரி காலம் தொடங்கி மொரார்ஜி, இந்திரா, ராஜீவ் காலத்திலும் தொடர்ந்தது. தொடர்ந்துகொண்டே இருக்கிறது. எப்போதெல்லாம் திணிப்பு நடவடிக்கைகள் தொடங்குகின்றனவோ அப்போதெல்லாம் தமிழகம் எதிர்ப்பு தெரிவிக்கத் தவறியதில்லை. அடக்குமுறைகளுக்கு அடங்கியதில்லை.

முக்கியமாக, அறுபதுகளின் மத்தியில் நடந்த நான்காவது கட்ட மொழிப்போரைச் சொல்லவேண்டும். ஆட்சி மாற்றத்தையே ஏற்படுத்திய போராட்டம் அது. எத்தனைத் தீக்குளிப்புகள்! எத்தனைத் தற்கொலைகள்! எத்தனை உயிர்ப்பலிகள்! சின்னச்சாமி தொடங்கி ஏராளமான இளைஞர்கள் தீக்குளித்தும் விஷம் சாப்பிட்டும் மரணம் அடைந்தனர். காவல்துறையின் தாக்குதல் காரணமாக மரணம் அடைந்தவர்கள் அநேகம். போராட்டத்தை முன்னெடுத்து, வழிநடத்திய பல தலைவர்களும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

விநோதம் என்னவென்றால் முதல் மொழிப்போருக்குக் காரணகர்த்தாவாக இருந்த ராஜாஜிதான் நான்காவது மொழிப்போரின்போது போராட்டக்காரர்களுக்கு உறுதுணையாக இருந்தவர். அதைப்போலவே, முதல் போராட்டத்தை வழிநடத்தியவர்களுள் ஒருவரான பெரியார் ஈ.வெ.ரா நான்காவது போராட்டத்தை ஆதரிக்கவில்லை. எல். கணேசன், வை. கோபால்சாமி, எஸ்.டி. சோமசுந்தரம், கா. காளிமுத்து, எம். நடராஜன், சேடப்பட்டி முத்தையா, நா. காமராசன், ஆலடி அருணா என்று பின்னாளில் அரசியலில் மின்னிய பலரும் மாணவர்களாகவும் இளைஞர்களாகவும் இருந்த காலத்தில் நான்காம் மொழிப்போரில் ஈடுபட்டவர்கள்தாம்.

மாணவர்களின் ஏகோபித்த எதிர்ப்புகளைச் சம்பாதித்த காங்கிரஸ் அரசு அதன்பிறகு நடந்த தேர்தலில் ஆட்சியை இழந்தது. அன்று தொடங்கி இன்றுவரை காங்கிரஸ் கட்சியால் ஆட்சி அதிகாரத்தின் நிழலைக்கூடத் தொடமுடியவில்லை.

எண்பதுகளில் மத்திய அரசு இந்தித் திணிப்பைக் கொண்டுவர முயற்சித்தபோது திமுக நடத்திய போராட்டங்கள் அநேகம். அதைக்காட்டிலும் அதற்குக் கொடுத்தவிலை அதிகம். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பதினேழாவது பிரிவின் நகலைக் கொளுத்தியதற்காக க. அன்பழகன் உள்ளிட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பத்து பேர் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். அப்போது ஆளுங்கட்சியாக இருந்தது அதிமுக. இதுவும் ஒரு விநோதம்தான். எந்தத் திராவிட இயக்கத்தால் மொழிப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டதோ அதே திராவிட இயக்கத்தைச் சேர்ந்த அதிமுக அரசு, இன்னொரு திராவிட இயக்கக் கட்சியான திமுகவைச் சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்தது.

இன்னமும்கூட இந்தித் திணிப்புப் போராட்டம் தொடர்கிறது. போராட்ட நெருப்பை அணையவிடாமல் பார்த்துக்கொள்ளும் காரியத்தைக் கவனமாகச் செய்துவருகிறது மத்திய அரசு.

கடந்த சில ஆண்டுகளாக இந்தித் திணிப்புப் பணியில் மௌனம் காட்டிவந்த மத்திய அரசு திடீரென சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியது. இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவன ஊழியர்கள் வாரத்தில் ஒருநாள் இந்தியில் கையெழுத்திட வேண்டும் என்பதுதான் அதன் சாரம். இந்தி பேசாத மாநிலங்களைக் குறிவைத்து அனுப்பப்பட்ட இந்தச் சுற்றறிக்கை தமிழக அரசியல் கட்சிகள் மத்தியில் அதிர்வுகளை ஏற்படுத்தியது. கண்டனக்கணைகள் பறந்ததைத் தொடர்ந்து அந்தச் சுற்றறிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்தித் திணிப்பில் மத்திய அரசு மௌனமாக இருந்தது என்று சொல்வதைக் காட்டிலும் மௌனமாகக் காய் நகர்த்தி வருகிறது என்பதுதான் சரியானதாக இருக்கும். அதற்குப் பொருத்தமான உதாரணம், அண்மையில் வெளியான கேலிப்பட சர்ச்சை! என்.சி.இ.ஆர்.டி என்கிற மத்திய அரசின் புத்தக நிறுவனம் வெளியிட்ட பன்னிரண்டாம் வகுப்புப் பாடப்புத்தகத்தில் தமிழகத்தில் நடந்த இந்தித்திணிப்புக்கு எதிரான போராட்டம் பற்றிய பாடம் இடம்பெற்றிருந்தது.

தமிழ் மாணவர்களை வன்முறையாளர்களாகவும் ஆங்கில மொழியை அறியாதவர்களாகவும் சித்திரித்த அந்தக் கேலிச்சித்திரத்தை பல ஆண்டுகள் கழித்து பாடப் புத்தகங்களில் இடம்பெறச்செய்தது ஏன்? வரலாறு குறித்து வருங்காலத் தலைமுறையினருக்குத் தவறான புரிதலை ஏற்படுத்த முயல்வது ஏன்? என்ற கேள்விகளை தமிழ் ஆர்வலர்கள் எழுப்பினர். தமிழ்நாட்டு மக்கள் நடத்திய உணர்வுரீதியான போராட்டத்தைக் கொச்சைப்படுத்த வேண்டும் என்பதுதான் அவர்களுடைய நோக்கம் என்றனர் தமிழ் ஆர்வலர்கள்.

ஆக, இந்தித் திணிப்பு குறித்தும் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளைக் கொச்சைப்படுத்தும் வகையிலும் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டுவருகிறது. இந்தப் போக்கு இன்று உருவானது அல்ல.

திராவிட இயக்க நூற்றாண்டு கொண்டாடப்பட்டு வரும் இன்றைய சூழலில், மொழிப்போராட்டக் களங்களைத் திரும்பி பார்ப்பதும் வரலாற்றை மறுவாசிப்பு செய்வதும் அவசியமாகிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

காந்தி ஏந்திய ஆயுதம்

மொழிப்போர் / அத்தியாயம் 2

விடுதலைப் போராட்டம் வலுத்துக்கொண்டிருந்த சமயம் அது. என்ன செய்தால் இந்தியர்களை ஒருங்கிணைக்க முடியும் என்று காங்கிரஸ் கட்சி யோசித்துக்கொண்டிருந்தது. காரணம், பல மொழிகள் பேசும், பல கலாசாரத்தைப் பேணும், பல இன மக்களை இந்தியா என்ற பெயரில் ஒருங்கிணைத்து ஆட்சி செய்துகொண்டிருந்தனர் ஆங்கிலேயர்கள்.

இனம், மொழி மற்றும் கலாசாரப் பிரிவுகளைப் போல வேறுபல பிரிவுகளும் இந்தியர்களிடம் மண்டிக்கிடந்தன.  பல மதங்கள். பல சாதிகள். வெவ்வேறு பழக்கவழக்கங்கள். ஆளுக்கொரு தெய்வ வழிபாடு. ஆளுக்கொரு அரசியல் நிலைப்பாடு.  ஆம், இந்தியாவில் காங்கிரஸ் கட்சியைப் பின்பற்றியவர்கள் மட்டும் இருக்கவில்லை. இந்துத்துவத் தத்துவத்தைப் பின்பற்றுபவர்கள் இருந்தார்கள். கம்யூனிஸ சிந்தாந்தத்தை ஏற்றுக்கொண்டவர்கள் இருந்தார்கள். கடவுள் மறுப்பாளர்கள் இருந்தனர். பகுத்தறிவுச் சிந்தனையாளர்களும் பரவியிருந்தனர். புரட்சியாளர்கள் பலரும் இருந்தனர். உணவில் தொடங்கி உணர்வு வரை பல வேறுபாடுகள் இருந்தன.

ஆக, பிரிட்டிஷாரிடம் இருந்து இந்தியாவைப் பிரித்தெடுக்க வேண்டும் என்றால் அதற்கு முன்னதாக இந்தியர்கள் ஒருங்கிணைக்கப்படவேண்டும். பல வேற்றுமைகளுக்கு மத்தியில் ஏதேனும் ஒரு ஒற்றுமையைக் கண்டுபிடிக்கவேண்டும் அல்லது கொண்டுவரவேண்டும். அதைக்கொண்டு இந்தியர்கள் அனைவரையும் ஒற்றைக்குடையின்கீழ் கொண்டுவர வேண்டும். இதுதான் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களின் கனவு. பிரிட்டிஷாரிடம் இருந்து சுதந்தரத்தை வலியுறுத்திக் கொண்டிருந்த அவர்களுக்கு அது அத்தியாவசிய தேவையும்கூட.

கனவை நனவாக்க காந்தியின் நினைவுக்கு வந்த ஆயுதம், மொழி. ஆங்கிலேயர்களை காந்தியும் காங்கிரஸும் வெறுத்தபோதும் ஆங்கிலத்தை மட்டும் வெறுக்கவில்லை. காங்கிரஸ் கட்சி நடத்தும் நிர்வாகக் கூட்டங்களில், பொதுக்கூட்டங்களில், மாநாடுகளில் எல்லாம் ஆங்கிலமே பிரதானமாக இருந்தது. ஆங்கிலத்திலேயே பேசினர். ஆங்கிலத்திலேயே தீர்மானங்கள் நிறைவேற்றினர். தமது கருத்துகள் ஆங்கிலேயர்களைச் சென்றடைவதற்கு அதுதான் வசதியாக இருக்கும் என்று அவர்கள் நினைத்தனர்.

ஒரு கட்டத்தில் காங்கிரஸ் தலைவர்களுக்குள் ஒருவித மனமாற்றம் ஏற்பட்டது. இந்தியாவுக்குச் சுதந்தரம் தரமறுக்கும் ஆங்கிலேயர்கள் மீது வெறுப்பு வளரத் தொடங்கியது. அந்த வெறுப்பை ஆங்கிலத்தின்மீதும் காட்டத் தொடங்கினர். அந்நிய மொழியான ஆங்கிலத்துக்குப் பதிலாக அவரவர் பேசும் இந்திய மொழிகளில் காங்கிரஸ் கூட்டங்களை நடத்தவேண்டும் என்று குரலெழுப்பத் தொடங்கினர். அப்போதுதான் காந்திக்குப் புதிய யோசனை பிறந்தது.

ஆங்கிலேயர்களின் மொழியான ஆங்கிலத்துக்குப் பதிலாக இன்னொரு இந்திய மொழி ஒன்றைப் பயன்படுத்தி ஒட்டுமொத்த இந்தியர்களையும் ஓரணியில் திரட்டிவிடலாம் என்று நினைத்தார் காந்தி. இந்தி என்ற ஆயுதத்தைக் கையில் எடுத்துக் கொண்டார். இந்தியாவில் உள்ள அனைவரும் இந்திமொழியைக் கற்றுக்கொண்டு தேசிய நீரோட்டத்தில் இணையவேண்டும் என்று பகிரங்க அழைப்பு விடுத்தார் காந்தி. அந்தக் கருத்தை மெல்ல மெல்ல மக்களிடம் கொண்டுசெல்லத் தொடங்கினார். மேடைகளில் இந்திமொழி பற்றிப் பேசினார். பத்திரிகைகளில் இந்திமொழியின் அவசியம் பற்றி எழுதினார்.

காந்தியைப் பின்பற்றி இதர காங்கிரஸ் தலைவர்களும் இந்தியைப் பரப்பும் பணியில் ஈடுபட்டனர். 1893 ஆம் ஆண்டு காசி நகரில் நகரி பிரச்சாரனி சபா என்ற அமைப்பும் 1910 ஆம் ஆண்டு அலகாபாத் நகரில் இந்தி சாகித்ய சம்மேளன் என்ற அமைப்பும் முன்னதாக உருவாக்கப்பட்டு செயல்பட்டுக்கொண்டிருந்தன. அவற்றைப் பயன்படுத்தி இந்தியைப் பரப்பும் பணியைத் தீவிரப்படுத்தினார் காந்தி. இந்தி மட்டுமே இந்தியாவின் தேசிய மொழியாக இருக்கவேண்டும்; இந்தியாவின் சுய மரியாதை என்பது இந்தியர்கள் அனைவரும் ஒரே இந்திய மொழியைப் பேசுவதில்தான் இருக்கிறது என்ற காந்தியின் வாதங்களுக்கு இந்தி பேசும் மாநிலங்களில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

நாடு தழுவிய அளவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் காந்தி. இந்தி பேசாத மக்கள் அனைவரும் ஆங்கிலத்தைப் புறக்கணித்துவிட்டு இந்தியைக் கற்றுக்கொள்ளவேண்டும் என்று பிரசாரம் செய்தார். 1915 ஆம் ஆண்டு தமிழ்நாட்டுக்கு வந்தார். அப்போது மாயவரத்தில் நடந்த வரவேற்புக்கூட்டத்தில் அவருக்கு ஆங்கிலத்தில் வரவேற்பிதழ் வழங்கப்பட்டது. அதில் காந்திக்குக் கொஞ்சம் அதிருப்தி. அதனை மேடையில் பதிவுசெய்த அவர், இந்தியைக் கற்றுக்கொள்ளுங்கள் என்று வேண்டுகோள் விடுத்துவிட்டுப் புறப்பட்டார்.

காந்தியின் இந்தி ஆதரவுப் பிரசாரத்துக்கு வட இந்தியாவில் இருந்த வரவேற்பு தென்னிந்தியாவில் இல்லை. என்தால், தட்சண பாரத இந்திப் பிரசார சபா உருவாக்கப்பட்டது. பேராவலுடனும் துணிவுடனும் இந்தியைப் பரப்புவதற்காக இந்த அமைப்பைத் தொடங்குகிறோம் என்று 1918 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடந்த தொடக்கவிழாவில்
பேசினார் காந்தி. ஏனென்றால், இந்திக்குத் தென்னிந்தியாவில் ஆதரவு
இருக்காது என்பதும் எதிர்ப்பு இருக்கும் என்பதும் காந்திக்கு மிக நன்றாகவே தெரியும்.

‘துணிவுடன்’ என்ற பதத்தை மேடையில் பயன்படுத்தியதோடு நிறுத்திக்கொள்ளவில்லை. அந்தத் துணிச்சலைத் தன்னுடைய எழுத்திலும் பிரதிபலித்தார் காந்தி. பிரிட்டிஷ் இந்தியாவில் பெரும்பான்மையினராக இருக்கும் வட இந்தியர்கள் தமிழ், தெலுங்கு, கன்னடம் மலையாளம் ஆகிய மொழிகளைக் கற்றுக்கொள்ளவேண்டும் என்று இந்தியாவில் சிறுபான்மையினராக இருக்கும் திராவிடர்கள் எதிர்பார்க்கக்கூடாது. பெரும்பான்மையினர் பேசுகின்ற பொதுவான மொழியைத்தான் திராவிடர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று 1920ஆம் ஆண்டு தனது யங் இந்தியா பத்திரிகையில் எழுதினார் காந்தி.

இந்தியைப் பரப்புவதற்காக நாடு தழுவிய அளவில் நிதிவசூலும் நடந்தது. குறிப்பாக, வட இந்தியர் ஒருவரிடம் இருந்து ஐம்பதாயிரம் ரூபாய் நிதி பெறப்பட்டது. 1920 ஆம் ஆண்டு ஜூன் மாதம் திருநெல்வேலியில் நடைபெற்ற காங்கிரஸ் மாகாண மாநாட்டில் அந்த நிதிவசூலுக்கு ஒப்புதல் பெறப்பட்டது. அதைத் தொடர்ந்து தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்தியாவின் பல பகுதிகளிலும் நிதிவசூல் நடைபெறத் தொடங்கியது.

இந்தியைப் பரப்பும் பணியில் காந்தி மட்டும் ஈடுபடவில்லை. அவருக்கு உதவியாக பி.டி. தாண்டன், கோவிந்த் தாஸ், மதன் மோகன் மாளவியா உள்ளிட்ட பலரும் ஈடுபட்டிருந்தனர். அவர்களில் சென்னை மாகாணத்தைச் சேர்ந்த சத்தியமூர்த்தி அய்யர் முக்கியமானவர். 1924 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற கல்வி மாநாட்டில் கலந்துகொண்ட சத்தியமூர்த்தி அய்யர், இந்தியாவின் தேசிய மொழியாக இந்தியை மாற்றவேண்டும் என்ற காந்தியின் லட்சியத்தைப் பிரதிபலிக்கும் வகையில் பேசினார்.

‘வயதானவர்கள் இந்தியை எளிதாகக் கற்றுக்கொள்வார்கள் என்று நான் நம்பவில்லை. ஆனால், அனைத்து ஆரம்பப் பள்ளிகளிலும் இந்தி இரண்டாவது மொழியாகவும் கட்டாயப் பாடமாகவும் சொல்லித்தரப்படும் பட்சத்தில் அடுத்த பத்தாண்டுகளில் இந்தியாவின் பொதுமொழியாக இந்தியைக் கொண்டுவந்துவிடமுடியும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை!’

இந்தி மொழி குறித்த காந்தியின் கருத்தைப் பிரதிபலித்ததோடு சத்தியமூர்த்தி அய்யர் நிறுத்திக்கொள்ளவில்லை. கூடுதல் வலுவையும் சேர்த்திருந்தார். இந்தியைக் கற்றுக்கொள்ளுங்கள் என்பது காந்தியின் பிரசாரம். இல்லையில்லை, இந்தியைக் கற்றுக்கொள்வது கட்டாயம் என்பது சத்தியமூர்த்தி அய்யரின் கட்டளை. இந்த இடத்தில்தான் நெருடல் தொடங்கியது.

காங்கிரஸ் கட்சியின் தேசிய அளவிலான மாநாடு ஒவ்வொரு ஆண்டிலும் கூடுவது வழக்கம். 1925 ஆம் ஆண்டுக்கான காங்கிரஸ் கட்சி மாநாடு கான்பூர் நகரில் கூடியது. உண்மையில் அந்த மாநாடு இந்தியைப் பொறுத்தவரை ஒரு திருப்புமுனை மாநாடு என்றுதான் சொல்லவேண்டும். அந்த மாநாட்டில்தான் இந்தியைப் பற்றிய தனது எதிர்காலத்திட்டங்களையும் கனவுகளையும் பதிவுசெய்தார் காந்தி.

‘காங்கிரஸ் மாநாடுகளில் ஆங்கிலத்திலேயே விவாதம் செய்துகொண்டிருந்தால் நமது கட்சி இந்தியர்களின் கட்சியாக அங்கீகாரம் பெறவே முடியாது. தவிரவும், ஆங்கிலம் தெரிந்தவர்கள் மட்டுமே மாநாட்டில் தமது கருத்துகளைத் தெரிவிக்க இயலும் என்ற நிலை இன்றுவரை நீடிக்கிறது. சீரிய கருத்துகளைக் கொண்ட தலைவர்கள் பலரும் மாநாடுகளில் கலந்துகொள்வதற்கும் தமது கருத்துகளைத் தெரிவிப்பதற்கும் தடையாக இருப்பது ஆங்கிலம். ஆக, காங்கிரஸ் கட்சி இந்தியர்களின் கட்சியாகச் செயல்படவேண்டும் என்றால்,
காங்கிரஸின் கொள்கைகளும் நோக்கங்களும் கடைக்கோடி இந்தியனுக்கும் சென்று சேரவேண்டும் என்றால், காங்கிரஸ் கூட்டங்களில் பேசப்படும் மொழி ஒரு இந்திய மொழியாக இருக்கவேண்டும். ஆக, ஆங்கிலத்தின் பயன்பாட்டைத் தவிர்த்து, எல்லோரும் இந்தியைப் பயன்படுத்தவேண்டும்!’

காந்தியின் கனவை நனவாக்கும் முயற்சியில் காங்கிரஸ் தலைவர்கள் இறங்கினர். காங்கிரஸ் கட்சி தன்னுடைய அலுவல் மொழி பற்றிய விதியான 33வது பிரிவைத் திருத்தம் செய்வதற்குத் தயாரானது. காங்கிரஸ் கட்சியின் கருத்துகளும் பரிமாற்றங்களும் கூட்டங்களும் ஆங்கில மொழியில் நடத்தப்படவேண்டும் என்பதுதான் 33வது பிரிவு சொல்லும் செய்தி. அந்தப் பிரிவு, ‘இனிமேல் காங்கிரஸ் கட்சியின் கூட்டங்களில் இந்தி மொழியில் நடத்தப்படும். இந்தி தெரியாதவர்கள் ஆங்கிலத்தில் பேசலாம்’ என்று திருத்தம் செய்யப்பட்டது. ஆக, காந்தியின் வழியே காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ஆசியைப் பெற்றது இந்தி.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 இந்திக்கு எதிராக, இந்திக்கு ஆதரவாக

மொழிப்போர் / அத்தியாயம் 3

இந்தியாவின் பொதுமொழியாக இந்தி என்ற காந்தியின் விருப்பத்தை நிறைவேற்ற காங்கிரஸ் செய்த காரியங்களில் ஒன்று இந்தி மாநாடு நடத்துவது. ஒவ்வொரு ஆண்டும் அகில இந்திய காங்கிரஸ் மாநாடு நடக்கும்போது அகில இந்திய இந்தி மாநாட்டையும் சேர்த்து நடத்தும் நடைமுறை 1924ல் இருந்து அமலுக்கு வந்தது. இந்தியின் பெருமை, தேசிய மொழியாக இந்தி ஆகவேண்டியதன் அவசியம் உள்ளிட்டவை பற்றி இந்தி மாநாட்டில் விவாதிக்கப்பட்டன. முக்கியமாக, நாடு தழுவிய இந்திப் பிரசாரம் பற்றி.

அந்த வகையில் நான்காவது அகில இந்திய இந்தி மாநாடு 1927 ஆம் ஆண்டு சென்னையில் கூடியது. மாநாட்டுக்குத் தலைமை வகித்தவர் சரோஜினி நாயுடு. இந்திப் பிரசார இயக்கம் என்பது ஒரு கட்சியின் அல்லது ஒரு வகுப்பாரின் வேலை அல்ல; இது நாட்டிலுள்ள அனைத்து மக்களின் – கட்சிகளின் – வகுப்பாரின் ஒற்றுமை உணர்வின் அடையாளம் என்ற சரோஜினி நாயுடுவின் பேச்சுக்கு மாநாட்டில் நல்ல வரவேற்பு.

காந்தி முன்மொழிந்த இந்தியை இதர காங்கிரஸ் தலைவர்களும் வழிமொழிந்தனர். முக்கியமாக, இந்திய அரசுப்பணி தேர்வாணையத்தின் தலைவராக இருந்த சர். டி. விஜயராகவாச்சாரி. பள்ளி, கல்லூரிகளில் இந்தியை இரண்டாவது மொழிப்பாடமாக வைக்கவேண்டும். அதன்மூலம் இந்தி கற்றுக்கொடுக்கும் பணிகள் கல்வித்துறைக்கு எளிமையாகும்; மக்களுக்கும் பலன் தரும் என்றார் இவர். இந்தி என்பது மிக எளிமையான மொழி. ஆறே மாதங்களில் ஒருவர் வட இந்தியர் புரிந்துகொள்ளும் அளவுக்குக் கற்றுக்கொள்ள முடியும் என்று சொன்ன விஜயராகவாச்சாரி, இந்தித் தேர்வில் ஒருவர் வெற்றிபெற முடியவில்லை என்றால் அவரைப் படித்தவராகவே கருதமுடியாது என்றார்.

இந்தப் பின்னணியில் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் இந்தியைக் கற்பிக்கவேண்டும் என்ற கருத்து எழுந்தது. இந்தியை ஐந்தாம் வகுப்பு தொடங்கி உயர்நிலைப் பள்ளிகளிலும் விருப்பப்பாடமாக வைக்கவேண்டும் என்ற தீர்மானத்தை சென்னை மாநகராட்சி மன்றத்தில் கொண்டுவந்தார் சுயராஜ்ஜியக் கட்சி உறுப்பினர் எஸ். சத்தியமூர்த்தி. இந்திக்குப் பதிலாக இந்துஸ்தானியை வைக்கவேண்டும் என்றார் இஸ்லாமிய வகுப்பைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர். இருப்பினும், சென்னை மாநகராட்சி மன்றத்தில் நீதிக்கட்சி பெரும்பான்மையுடன் இருந்ததால் சத்தியமூர்த்தியின் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது.

ஆனாலும் தன்னுடைய முயற்சிகளை எஸ். சத்தியமூர்த்தி கைவிடவில்லை. இந்தியைக் கற்றுக்கொள்ளுங்கள் என்று பிரசாரம் செய்வது மட்டும் போதாது. இந்தியைக் கற்குமாறு அவர்களைக் கட்டாயப்படுத்தவேண்டும். ஆறாம் வகுப்பில் இருந்து ஒன்பதாம் வகுப்பு வரை இந்தியைக் கட்டாய மொழிப்பாடமாக ஆக்கவேண்டும். அதைச் செய்தால் இன்னும் பதினைந்தே ஆண்டுகளில் இந்தியா இந்தி நாடாகிவிடும் என்று பேசினார்.
இந்தப்பேச்சு 12 ஜூலை 1934 தேதியிட்ட மெட்ரால் மெயில் ஏட்டில் வெளியானது.

காந்தி, சத்தியமூர்த்தியைத் தொடர்ந்து ராஜாஜியும் இந்திப் பிரசாரப் பணியில் ஈடுபடத் தொடங்கினார். இந்தியப் பள்ளிகளில் பிரிட்டிஷாரின் வரலாறு ஆங்கில மொழியில் சொல்லித்தரப்படவேண்டும்; இந்திய வரலாறு இந்தியில் சொல்லித்தரப்படவேண்டும் என்ற கருத்தை திருநெல்வேலியில் நடந்த பள்ளிவிழா ஒன்றில் முன்வைத்த அவர், தென்னிந்தியர்களுக்கு இந்தி அறிவைப் புகட்டுவதன்மூலம் அவர்களுக்கு வேலைவாய்ப்புகள் பெற வழிவகுக்கும் என்றார்.

காந்தி, சத்தியமூர்த்தி, ராஜாஜி உள்ளிட்ட தலைவர்கள் இந்திப் பிரசாரப் பணிகளில் தீவிரமாக இயங்கியபோது இந்திக்கான எதிர்க்குரல்களும் எழுந்துகொண்டிருந்தன. முக்கியமாக, காங்கிரஸ் கட்சியின் அலுவல் மொழியாக இந்தி ஆகவேண்டும் என்ற கருத்து எதிர்க்கப்பட்டது.

‘இந்திக்கு முதலிடம் அளிப்பது நமது அடிமைத்தனத்தை வேறொரு உருவத்தில் நிலைநாட்டுவதாகவே முடியும். ஆங்கிலத்தின் இடத்தை இந்தி பெற்றால் தென்னாட்டவருக்குத்தான் மிகுந்த கேடு உண்டாகும். தாய்மொழியே மக்களின் உயிர்நிலை. வேற்றுமொழி ஒன்றைப் படிக்கவும் அதுவழியாக நமது கருத்துகளைத் தெரிவிக்கவும் நாம் கட்டாயப்படுத்தப்பட்டால் நமது உண்மையான முன்னேற்றத்துக்குத் தடை ஏற்படுவதுடன், நமது மனநிலையும் வளர்ச்சி அடையாது தேய்ந்துவிடும். ஆகவே, இந்தியைப் பொதுமொழி ஆக்குவது பற்றி மிகமிக விழிப்பாக இருக்கவேண்டும் என்று நமது அரசியல்வாதிகளை எச்சரிக்கவேண்டிய காலம் வந்துவிட்டது!’ என்று 1923 ஆம் ஆண்டிலேயே காங்கிரஸ் கட்சியின் செயலாளர்களுள் ஒருவராக இருந்த கோபால கிருஷ்ணமய்யா பேசினார்.

கிருஷ்ணமய்யா எதிர்ப்பு தெரிவித்த இரண்டு ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியின் அலுவல் மொழியாக இந்தி அங்கீகரிக்கப்பட்டது. அப்போது பெரியார் ஈ.வெ.ராவின் குடி அரசு ஏடு கண்டனம் தெரிவித்தது. 1926 மார்ச் மாதம் குடி அரசு இதழில் வெளியான கட்டுரையில், ‘பழையன கழிந்து, புதியன புகுவதாக இருந்தால் நமக்குக் கவலை இல்லை. ஆனால் புதியவைகள் வந்து பலாத்காரமாகப் புகுந்துகொண்டு, பழையவைகளைக் கழுத்தைப் பிடித்துத் தள்ளுவதானால் அதையும் சகித்துக்கொண்டு அதற்கு வக்காலத்து பேசுவது என்பது பாஷைத் துரோகம்; சமூகத்துரோகம்’ என்று எழுதப்பட்டிருந்தது.

தாய்மொழி தவிர்த்த பொதுமொழி என்றால் அது ஆங்கிலமாகத்தான் இருக்கவேண்டும் என்று குடி அரசின் எழுதினார் பெரியார். ‘இன்றைய தினம் மக்களுக்கு அவரவர்கள் சொந்த பாஷை தவிர வேறு பாஷை தெரியவேண்டுமானால் அது ஆங்கில பாஷை என்றே நாம் தைரியாமாகச் சொல்லுவோம். உலகமே தங்கள் கிராமந்தான் என்று எண்ணிக் கொண்டிருந்த காலம் மலையேறி, இப்போது நிலப்பரப்பு, நீர்ப்பரப்பு முழுவதும் தெரிந்து, இருநூறு கோடி மக்களையும் சகோதரர்களாகப் பாவித்து வாழவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்போது உலகச் செலாவணி பாஷை எதுவோ அதை மனிதன் அறியாமல், கபீர்தாஸ் ராமாயணத்தைப் படிக்கவேண்டிய இந்தி பாஷையை எதற்குப் படிக்க வேண்டும் என்று கேட்கின்றோம்.’

காங்கிரஸ் கட்சியின் இந்தி ஆதரவு நடவடிக்கைக்கு பதில் தரும் வகையில் 1931 ஆம் ஆண்டு சுயமரியாதை இயக்கத்தின் மாகாண மாநாடு கூடியது. பழைய புராணக் கதைகளைச் சொல்வதைத்தவிர வேறு அறிவு வளர்ச்சிக்குப் பயன்படாத இந்தி மொழியை நமது மக்கள் படிக்கும்படி செய்வது பார்ப்பனீயத்துக்கு மறைமுகமாக ஆக்கத்தேடும் முயற்சி என்று அறிவித்த சுயமரியாதை மாநாடு (1931), தற்கால விஞ்ஞான அறிவை நமது மக்களிடையே பரப்பவும் புத்தம் புதிய தொழில் முறைகளை நமது நாட்டில் ஏற்படுத்தவும் மற்ற நாடுகளில் எழுந்திருக்கும் சீர்திருத்த உணர்ச்சியை நமது மக்களிடையே தோற்றுவிக்கவும் உலகமொழியாக விளங்கும் ஆங்கிலத்தையே தாய்மொழிக்கு அடுத்தபடியாக நமது இளைஞர்கள் கற்கவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது.

பெரியாரும் சுயமரியாதை இயக்கமும் மட்டும் இந்தித் திணிப்பு முயற்சிகளை எதிர்க்கவில்லை. சுத்தானந்த பாரதியார், மறைமலை அடிகள் உள்ளிட்ட தமிழறிஞர்களும் எதிர்த்தனர். இந்தி மொழியை நாட்டின் முதன்மையான மொழியாக ஆக்க சிலர் முயல்வது போல தமிழ்நாட்டின் முதன்மை மொழியாக தமிழைக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்பது சுத்தானந்த பாரதியாரின் விருப்பம்.

‘பிறமொழிகளின் முன்னேற்றத்துக்குத் தக்கவாறு தமிழ் முன்னேறியாகவேண்டும். அதற்கு மாறாக, நமது பள்ளிச்சிறார் தமிழைப் புறக்கணித்து, வேறொரு மொழிக்கு ஆக்கம் தேடும்படியான எத்தகையை முயற்சியும் தமிழுக்கு ஆக்கம் தராது. முதலில் ஒவ்வொருவரும் தமது தாய்மொழியை நன்கு கற்கவேண்டும். பிறகு தொழில் நடத்துவதற்கும் உலகுடன் பழகுவதற்கும் உலகெங்கும் நன்கறிந்த ஒரு மொழியைக் கற்றறியவேண்டும். அத்தகையை மொழி இப்போது ஆங்கிலமே.. இந்தியை நாம் வெறுக்கவில்லை. கற்பவர் கற்கட்டும்; கட்டாயம் கற்றே தீரவேண்டும். இன்றேல், வாழமுடியாது என்று தடபுடல் செய்யவேண்டாம்’ என்று எழுதினார் சுத்தானந்த பாரதியார்.

பெரியார் ஆங்கிலத்துக்கு ஆதரவாகவும் சுத்தானந்த பாரதியார் தமிழுக்கு ஆதரவாகவும் நிலைப்பாடு எடுத்தபோது, இந்தியாவின் பொதுமொழியாக இருப்பதற்கு இந்திக்குத் தகுதியில்லை என்ற கருத்தை முன்வைத்தார் மறைமலையடிகள்.

‘பொதுமொழி என்பது மக்களால் பேசப்படுகிறது. வாழும் மொழியாக இருந்தால் மட்டும் போதாது. அம்மொழி பண்டைய மொழியாக இருக்கவேண்டும். தொடர்ச்சியாக நெடுங்காலம் பேசப்பட்டு, இப்போதும் பேசும்மொழியாக இருக்கவேண்டும். அந்த மொழி உயரிய இலக்கிய வளம் நிரம்பியதாக இருக்கவேண்டும். அந்த மொழியைப் பேசுகின்ற மக்களின் அரசியல் கொள்கைகள், சிந்தனை சார்ந்த சமயக் கொள்கைகள், சமூக நெறிகள் போன்ற
மக்கள் மனமுவந்து ஏற்கத்தக்க பல்துறை அறிவுசார்ந்த இலக்கியங்கள் சொந்தப் படைப்பிலக்கியங்கள் கொண்டதாக இருக்கவேண்டும். அந்த வகையில் இந்தி மொழிக்கு பழமைச் சிறப்பும் இல்லை; இலக்கிய வளமும் இல்லை. வட இந்தியாவில் இந்தி பேசப்படுவதிலேயே பலவித வேறுபாடுகள் உள்ளபோது தமிழர்களை இந்தியைக் கற்றுக் கொள் என்று வற்புறுத்துவது சக்தியையும் முழு நேரத்தையும் வீணாக்குவதாகும்’ என்றார் மறைமலை அடிகள்.

ஆக, இந்திக்கு ஆதரவாக காந்தி, காங்கிரஸ், சுயராஜ்ஜியக் கட்சியினர் ஆகியோர் ஒருபக்கமும் இந்தித்திணிப்புக்கு எதிராக பெரியார், மறைமலை அடிகள், சுத்தானந்த பாரதியார் உள்ளிட்டோர் இன்னொரு பக்கமும் வாதப் பிரதிவாதங்களில் ஈடுபட்டிருந்த சமயத்தில் தேர்தல் அறிவிப்பு வெளியானது. அந்தத் தேர்தலின் முடிவு மொழிப்போராட்ட வரலாற்றில் ஒரு புதிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 வந்துவிட்டது இந்தி!

மொழிப்போர் / அத்தியாயம் 4

புதிய அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி 1937 பிப்ரவரி மாதம் இந்தியாவில் தேர்தல் நடந்தது. சென்னை மாகாணத்தில் நடந்த தேர்தலில் நீதிக்கட்சியைத் தோற்கடித்து காங்கிரஸ் கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றியது. மொத்தமுள்ள 215 இடங்களில் 152 இடங்களைப் பெற்றது காங்கிரஸ்.  15 ஜூலை 1937 அன்று காங்கிரஸ் கட்சியின் சார்பாக சி. ராஜகோபாலாச்சாரி என்கிற ராஜாஜி சென்னை மாகாண முதல்வராகத் (பிரிமியர்) தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வட இந்தியர்களை அறிந்துகொள்ளவும் புரிந்துகொள்ளவும் தென்னிந்தியர்களுக்கு இந்தி மொழி பற்றிய அறிவு அவசியம். குறிப்பாக, இந்தியாவின் அரசியல் மற்றும் வாணிகத்தை நடத்திச் செல்வதற்கு இந்தி அத்தியாவசியம் என்பது ராஜாஜியின் கருத்து. அதன் காரணமாகவே இந்தி மொழியைப் பள்ளிகளில் கட்டாயப் பாடமொழியாக ஆக்கவேண்டும் என்ற கருத்தை முதலமைச்சர் பொறுப்பை ஏற்பதற்கு முன்பிருந்தே தொடர்ந்து சொல்லிக்கொண்டிருந்தார்.

முதல்வர் பதவியை ஏற்றபிறகு 10 ஆகஸ்டு 1937 அன்று சென்னை ராமகிருஷ்ண மடம் மாணவர் இல்ல விழாவில் கலந்துகொண்டார் ராஜாஜி. இந்தியில் பாடநூல்கள் விரைவில் எழுதப்படவேண்டும். புதிய இந்தி எழுத்துகளைத் தமிழக மாணவர்கள் கற்றுக்கொள்ளத் தொடங்கிவிடுவார்களேயானால் பிறகு இந்தி, சமஸ்கிருதத்தை அவர்கள் எளிதில் பயில வாய்ப்பு ஏற்பட்டுவிடும் என்று அந்த விழாவில் பேசினார்.

பள்ளிகளில் இந்தியைக் கொண்டுவரப்போகிறார் என்பதுதான் அதன் அர்த்தம் என்பது எல்லோருக்கும் புரிந்தது. அப்போது இரண்டு முக்கியப்பத்திரிகைகள் கருத்து வெளியிட்டன. ஒன்று, ஆனந்த விகடன். இந்திப் பாடத்துக்கு வரவேற்பு தெரிவித்த ஆனந்தவிகடன், மேல் வகுப்புகளுக்கும் இந்தியைப் பாடமாக வைக்கவேண்டும் என்றது. இரண்டாவது, மெயில் பத்திரிகை. பதற்றத்தோடு செய்யவேண்டாம் என்ற தலைப்பில் வெளியான கட்டுரை ஒன்றில், ‘பின்விளைவுகளை முழுமையாக ஆராயாமல் புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டாம்’ என்று எச்சரிக்கை செய்தது மெயில் பத்திரிகை.

பத்திரிகைகளைத் தொடர்ந்து தமிழ் உணர்வாளர்கள் எதிர்ப்புக்குரல் எழுப்பத் தொடங்கிவிட்டனர். பல இடங்களில் இந்தித் திணிப்புக்கு எதிரான பொதுக்கூட்டங்களும் ஊர்வலங்களும் நடந்தன. இத்தகைய பணிகளில் ஆங்காங்கே உள்ள தமிழ்ச்சங்கங்கள் ஈடுபட்டன. அந்தக் கூட்டங்களில் தமிழறிஞர்களான த.வே. உமாமகேஸ்வரன் பிள்ளை, நாவலர் சோமசுந்தர பாரதியார், மறைமலை அடிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு ராஜாஜியின் இந்தித் திணிப்பு முயற்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

எதிர்ப்பு தெரிவிப்பதன் ஒருபகுதியாக 26 டிசம்பர் 1937 அன்று சென்னை மாகாணத் தமிழர் மாநாடு  ஒன்று திருச்சி தேவர் மண்டபத்தில் கூடியது. சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்த கி.ஆ.பெ. விசுவநாதம், தி.பொ. வேதாச்சலம், பட்டுக்கோட்டை அழகிரிசாமி உள்ளிட்டோரின் முயற்சியால் கூட்டப்பட்ட மாநாடு அது. கட்சி வேறுபாடுகளை மறந்து, தமிழுக்கு ஆதரவாக – இந்தித்திணிப்புக்கு எதிராகச் செயல்பட விரும்பிய அனைத்து தரப்பினரும் அந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.

மாநாட்டுக்குத் தலைமை வகித்த நாவலர் சோமசுந்தர பாரதியார், ‘பல மொழி இனங்களை உள்ளடக்கிய மிகப்பெரிய நாடான சோவியத் ரஷ்யாவில்கூட பொதுமொழி என்று தனியே இல்லை. ஆனாலும் ஆட்சி நடத்துவதில் அங்கே எந்தச் சிக்கலும் இல்லை என்றபோது இங்கே மட்டும் ஏன் இந்த ஒற்றைமொழித் திணிப்பு?’ என்று கேள்வி எழுப்பினார். இந்த மாநாட்டில்தான் கட்டாய இந்தியைக் கடுமையாக எதிர்க்க வேண்டும் என்ற தீர்மானத்தையும் தமிழ்நாடு தனிநாடாகப் பிரியவேண்டும் என்ற தீர்மானத்தையும் கொண்டுவந்தார் பெரியார்.

இந்தித் திணிப்பை எதிர்த்து மாநாடுகளும் ஊர்வலங்களும் கூட்டங்களும் ஒருபக்கம் நடந்துகொண்டிருக்க, இன்னொரு பக்கம் தனது பணியில் தீவிரம் காட்டிக்கொண்டிருந்தார் முதலமைச்சர் ராஜாஜி. 1938 – 39 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் சென்னை மாகாணத்தில் மொத்தம் 125 உயர்நிலைப் பள்ளிகள் இந்தி கட்டாயப் பாடமொழியாகப் பயிற்றுவிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது. அதாவது, சென்னை மாகாணத்தின் தமிழ்மொழி வழங்கும் பகுதிகளில் 60, தெலுங்கு மொழி வழங்கும் பகுதிகளில் 54, கன்னடம் வழங்கும் பகுதிகளில் 4, மலையாளம் வழங்கும் பகுதிகளில் 7 என்று மொத்தம் 125 இடங்களில் இந்தி மொழி கட்டாய மொழிப்பாடமாக ஆக்கப்பட்டது.

அறிவிப்பு வெளியான உடனேயே எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. நீதிக்கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான எம்.ஏ. முத்தையா செட்டியார் எதிர்ப்பு தெரிவித்தார். அரசின் திட்டமாக இந்தியைக் கட்டாயம் என்று அறிவிப்பதற்குப் பதிலாக விருப்பப் பாடம் என்று அறிவிப்பது நல்ல முடிவாக இருக்கும் என்றார் முத்தையா செட்டியார்.

எதிர்ப்புகளுக்குப் பதிலளித்த முதலமைச்சர் ராஜாஜி, ‘ஆரியத்தை எதிர்ப்பவர்களும் காங்கிரஸைப் பிடிக்காதவர்களும்தான் இந்தியை எதிர்க்கிறார்கள்’ என்று சொன்னதோடு, இந்தி ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக நிதிநிலை அறிக்கையில் இருபதாயிரம் ரூபாய் ஒதுக்கியுள்ளேன் என்றார்.

அறிவிப்பு வெளியாவதற்கு முன்னரே எதிர்ப்புக்குரல்கள் எழுப்பியவர்கள், அரசின் அறிவிப்புக்குப் பிறகு எதிர்ப்பைத் தீவிரப்படுத்தினர். கட்டாய இந்திக்கு எதிராக ஊர்வலங்கள், கண்டனக் கூட்டங்கள் எல்லாம் தொடர்ச்சியாக நடத்தப்பட்டன.

இந்தி கட்டாயப் பாடமாகும் பட்சத்தில் கண்டிப்பாக பிராமணர் அல்லாத பிள்ளைகள் தொண்ணூறு சதவீதத்துக்கு மேல் தோல்வி அடைந்து விடுவார்கள். மாறாக, பிராமணப் பிள்ளைகள் நூறு சதவீதம் தேர்ச்சி அடைந்துவிடுவார்கள். ஆக, பிராமணர் அல்லாத பிள்ளைகளை மேல் படிப்பு இல்லாமல் அழுத்தத்தான் இந்தி ஒரு சாதனமே தவிர மனித வாழ்க்கைக்கோ அறிவுக்கோ தமிழர்களுக்கு எந்த விதத்திலும் இந்தி இன்றியமையாததாகாது என்று குடி அரசு பத்திரிகையில் தலையங்கம் எழுதினார் பெரியார்.

27 பிப்ரவரி 1938 அன்று காஞ்சிபுரத்தில் இந்தி எதிர்ப்பு மாநாடு கூடியது. மாநாட்டுக்குத் தலைமை வகித்தவர் கே. வேங்கட்ட ரெட்டி நாயுடு. மேலும், கான் பகதூர் கலிபுல்லா சாகிப், சோமசுந்தர பாரதியார், கவிஞர் பாரதிதாசன், த.வே. உமா மகேஸ்வரன் பிள்ளை, சிதம்பரம் என். தண்டபாணி பிள்ளை உள்ளிட்ட பலரும் அந்த மாநாட்டில் பங்கேற்றனர்.

‘திராவிடர்களாகிய நமக்கு ஆங்கிலத்தைப் போலவே இந்தியும் அந்நிய மொழியே. ஆனால் இந்தியின் இழிந்த நிலை என்பது அது பழம்பெரும் மொழி என்று உரிமை கொண்டாட முடியாது. வளம் நிறைந்த மொழியும் அல்ல. அந்த மொழியின் பழைமையான இலக்கியமே பதிமூன்றாம் நூற்றாண்டில் உருவானது தான். ஆனால் தமிழின் தொல்காப்பியம் இருபது நூற்றாண்டுகளுக்கு முன்னரே இயற்றப்பட்டு விட்டது’ என்று பேசினார் கே. வேங்கட்ட ரெட்டி நாயுடு.

இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டத்தைத் தீவிரப்படுத்த விரும்பிய பெரியார், ‘எச்சரிக்கை கலந்த கோரிக்கை அறிவிப்பு’ என்ற தலைப்பில் 15 மே 1938 அன்று குடி அரசு பத்திரிகையில் எழுதினார்.

தமிழா என்ன செய்யப்போகிறாய்?
இந்தி வந்துவிட்டது!

பார்ப்பன ஆதிக்கத்தை நிலைநிறுத்த – தமிழனின் தன்மானத்தை அழித்து தமிழனை ஆரியர்க்கு என்றென்றும் நிலையான அடிமையாக்க, இந்தி தமிழ் மக்களுக்குக் கட்டாயப் படிப்பாக ஏற்படுத்தப்பட்டாய்விட்டது.

யாரால்? ஆரியரால்.
எப்படி? தமிழ் மக்களின் ஒன்றுபட்ட கூக்குரலைச் சிறிதும் மதியாமல்

தமிழா இனி என்ன செய்யப்போகிறாய்?

தலைவணங்கி வரவேற்கப் போகிறாயா?
எதிர்த்துநின்று விரட்டியடிக்கப் போகிறாயா?

இதில்தான் தமிழன் இருப்பதா, இறப்பதா என்கின்ற முடிவு இருக்கிறது.

தலை வணங்குவதானால் காங்கிரஸில் இரு. எதிர்த்து நிற்பதானால் உன் பெயரை எதிர்ப்புக் கமிட்டிக்குக் கொடு!

இந்தித்திணிப்புப் போராட்டங்களை எப்படி நடத்துவது என்பது தொடர்பாக ஆலோசனை செய்யும் நோக்கத்துடன் 28 மே 1938 அன்று திருச்சியில் தமிழ்ப்பாசறை அமைப்புக்கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அந்தக் கூட்டத்தில் இந்தி எதிர்ப்பு வாரியம் என்ற பெயரில் போராட்டக்குழு ஒன்று உருவாக்கப்பட்டது. அதன் தலைவராக சோமசுந்தர பாரதியாரும் செயலாளராக கி.ஆ.பெ. விசுவநாதமும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பெரியார், த.வே. உமாமகேஸ்வரன் பிள்ளை, டபிள்யூ.பி.ஏ. சௌந்தர பாண்டிய நாடார், கே.எம். பாலசுப்பிரமணியம் ஆகியோர் அந்தக் குழுவின் இதர உறுப்பினர்கள்.

மாணவர்கள் இந்திப் பாடங்களைப் புறக்கணிக்கும்படி செய்தல், இந்தி மொழியைப் பயிற்றுவிக்கும் பள்ளிகளுக்கு முன்னால் மறியல் போராட்டங்களை நடத்துதல், உண்ணாவிரதம் இருந்தல், காங்கிரஸ் அமைச்சர்களுக்கு எதிராகக் கறுப்புக்கொடி காட்டுதல், முதலமைச்சர் வீட்டுக்கு முன்னால் மறியல் நடத்துதல் என்று பல்வேறு போராட்ட முறைகள் வகுக்கப்பட்டன.

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடத் தயாராக இருப்பவர்கள் சிறைக்குச் செல்லுதல் என்ற நிலையோடும் நினைப்போடும் மட்டும் இருந்துவிடக்கூடாது. தேவைப்பட்டால் ரத்தம் சிந்தவும் செத்து மடியவும் தயாராக இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்ட பெரியார், 29 மே 1938 அன்று முக்கிய அறிவிப்பு ஒன்றையும் குடி அரசு பத்திரிகையில் வெளியிட்டார்.

தமிழர் போர் மூண்டுவிட்டது. எதற்காக? தமிழுக்காக!

தமிழர் தன்மானத்துக்காக, தமிழர் அறிவு, கலை, வீரம் ஆகியவற்றுக்காக!

எனவே, தமிழா உன் கடமை என்ன?

மாதம் 75 ரூபாய் காசுக்கு எதிரியின் காலை நக்குவதா? அற்ப பதவிக்காக சகலத்தையும் உதிர்த்து, தமிழை, தமிழனை, தமிழ்நாட்டைக் காட்டிக்கொடுத்துவிட்டு, வளையல் போட்டுக்கொண்டு, முக்காடிட்டு, மூலையில் குந்தி இருப்பதா? சீச்சீ. இது சிற்றினப் பிழைப்பல்லவா?

மற்றென்ன உன் கடமை?

எதிரியின் கூட்டுறவை ஒழி!
வீரத்துடன் வெளியில் வந்து மார்தட்டு!
கிளர்ச்சிப்போரில் முன்னணியில் நில்லு!
எதிரி வெட்கப்பட, அறிவு பெற, ஓடி ஒழிய,
உன் உயிர்விடத் தயாராகு!

இவை உன்னால் ஆகாவிட்டால் காசுகொடுத்து ஆதரித்து, நீ தமிழன் என்பதையாவது காட்டிக்கொள்!

3 ஜூன் 1938 அன்று முறைப்படி இந்தி எதிர்ப்புப் போராட்டம் தொடங்கியது.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

இந்தியை எதிர்த்தால் கிரிமினல் வழக்கு!

மொழிப்போர் / அத்தியாயம் 5

இந்தித் திணிப்புக்கு எதிரான எங்களுடைய போராட்டம் அறவழியில் நடக்கும். இந்தித் திணிப்பின் ஆபத்து குறித்து மக்களைச் சந்தித்துப் பிரசாரம் செய்வோம். உண்ணாவிரதம் இருந்து கோரிக்கைகளை வலியுறுத்துவோம். ஊர்வலங்கள் செல்வோம். பேரணிகள் நடத்துவோம். தேவைப்பட்டால் ஒத்துழையாமை இயக்கம் நடத்துவோம். இதுதான் போராட்டக்காரர்கள் விடுத்த அறிவிப்பு. ஆனால் அதற்கு காங்கிரஸ் தரப்பில் இருந்து விமரிசனங்கள் எழுந்தன.

சத்தியாக்கிரகம் என்பது புனிதமான, தூய்மையான நோக்கங்களுக்காகப் பயன்படுத்தவேண்டிய கடைசி ஆயுதம். அதனை இந்தி எதிர்ப்புப் போரில் ஈடுபடுபவர்கள் பயன்படுத்தலாமா? என்று கேள்வி எழுப்பினார் முதலமைச்சர் ராஜாஜி. சத்தியாக்கிரகம்கூட காங்கிரஸ்காரர்களுக்கு மட்டுமே சொந்தமானது என்பது ராஜாஜி எழுப்பிய கேள்வியின் உள்ளர்த்தம். ஆனால் அதைப் பற்றிக் கவலைப்படாமல் அறவழியிலான போராட்டங்கள் தொடங்கின.

போராட்டத்தில் ஈடுபடுவதற்கு வசதியாக குழுக்கள் அமைக்கப்பட்டன. ஒவ்வொரு குழுவிலும்
பத்துக்கும் மேற்பட்டோர் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். அவர்களுக்குத் தலைமையேற்க ஒரு சர்வாதிகாரி. செ.தெ. நாயகம் உள்ளிட்ட பதிமூன்று பேர் சர்வாதிகாரிகளாக நியமிக்கப்பட்டனர். அவர்களில் ஈழத்து சண்முகானந்த அடிகள், கே.எம். பாலசுப்ரமணியம், ஜி.என். ராஜூ, குடந்தை எஸ்.கே. சாமி, எம்.எஸ். மொய்தீன் உள்ளிட்டோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

3 ஜூன் 1938 அன்று முதலமைச்சர் ராஜாஜியின் வீட்டுக்கு முன்னால் மறியல் போராட்டம் நடந்தது. அதற்குத் தலைமையேற்றவர் செ.தெ. நாயகம். மறியலில் ஈடுபட்ட அனைவரும் உடனடியாகக் கைதாகினர். அதன்பிறகு ஈழத்தடிகள் தலைமையில் அடுத்த குழுவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களையும் கைது செய்தது காவல்துறை. பின்னர் நடந்த வழக்கு விசாரணையின் முடிவில் செ.தெ. நாயகத்துக்கு ஒரு மாத வெறுங்காவல் தண்டனை – இருநூறு ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. சண்முகானந்த அடிகளுக்கு நான்கு மாதக் கடுங்காவல் தண்டனை தரப்பட்டது.

ஸ்டாலின் ஜெகதீசன் என்பவர் இந்தித் திணிப்பு உத்தரவுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றைத் தொடங்கியிருந்தார். ஆனால் அவருடைய உண்ணாவிரதம் பாதியிலேயே முடிந்தது.

அதன்பிறகு பல்லடம் பொன்னுச்சாமி என்பவர் முதலமைச்சர் ராஜாஜியின் வீட்டுக்கு முன்னால் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். இரண்டு தினங்களில் அவரைக் கைதுசெய்த காவலர்கள் அவர்மீது வழக்கு தொடுத்தனர். அந்த வழக்கில் அவருக்கு ஆறு வாரக் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

கைதுகளும், சிறைத்தண்டனைகளும் தொடர்ந்தபோதும் இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டங்கள் நிற்கவில்லை. தமிழ் ஆதரவாளர்களையும் இந்தித்திணிப்பு எதிர்ப்பாளர்களையும் உள்ளடக்கிய குழுவினர் இந்தித் திணிப்புக்கு எதிரான பிரசாரத்தில் ஈடுபட்டனர். இந்திப் பாடத்தைக் கட்டாயமாக வலியுறுத்தும் பள்ளிகளைப் புறக்கணித்து, வேறு பள்ளிகளுக்குப் பிள்ளைகளை அனுப்புங்கள் என்று பெற்றோரிடம் கேட்டுக் கொண்டனர். முக்கியமாக, இந்தியைக் கட்டாயப் பாடமாக நடத்தவேண்டாம் என்று பள்ளி முதல்வர்களுக்குக் கோரிக்கை விடுத்தனர்.

எந்தெந்த பள்ளிகளில் எல்லாம் கட்டாய இந்தி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பதை அடையாளம் கண்டு, அந்தப் பள்ளிகளுக்கு முன்னால் மறியல் போராட்டங்கள் நடந்தன. அந்த வகையில் சென்னை ஜார்ஜ் டவுன் பகுதியில் உள்ள இந்து தியாலஜிகல் பள்ளிக்குள் ஆசிரியர்கள், மாணவர்கள் நுழையாமல் தடுக்கும் வகையில் குறுக்கே நின்று கொண்டு மறியல் செய்தனர். இந்தித் திணிப்பு ஒழிக! தமிழ் வாழ்க! உடனடியாகக் காவலர்கள் வரவழைக்கப்பட்டு, போராட்டக்காரர்கள் அத்தனை பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள்மீது கிரிமினல் வழக்குகள் தொடுக்கப்பட்டன.

தொண்டர்கள் பல பிரிவுகளாகப் பிரிந்து, ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவர் தலைமையில் மறியலில் ஈடுபட்டனர். ஒரு பிரிவு மறியலில் ஈடுபட்டுக் கைதானதும், அடுத்த பிரிவு களத்தில் இறங்கியது. முதலமைச்சர் ராஜாஜியின் வீட்டுக்கு முன்னால் தினமும் மறியல் போராட்டம் நடைபெற்றது.

அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களும் கைது செய்யப்பட்டனர். அப்போது தமிழன் தன்னுடைய தாய்மொழிக்காகப் போராடினால் கைது செய்வதா என்ற கண்டனக்குரல் எழுந்தது. ஆனால், முதலமைச்சர் ராஜாஜி வீட்டுக்கு முன்னால் மறியல் செய்தவர்களைத்தான் நாங்கள் கைது செய்கிறோம் என்றார்கள் காவல்துறை அதிகாரிகள். உடனடியாக முதலமைச்சர் வீட்டுக்கு முன்னால் மறியல் செய்ய வேண்டாம், அவர்கள் அனைவரும் பொது இடங்களில் மறியல் செய்யுங்கள் என்று கேட்டுக்கொண்டார் பெரியார்.

10 ஜூன் 1938. சென்னை கதீட்ரல் சாலையில் இந்தி எதிர்ப்புக் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் சி.என். அண்ணாதுரை கலந்துகொண்டு பேசினார். அவர் பேசி மூன்று மாதங்கள் கழித்து அந்தப் பேச்சுக்காக அவர்மீது வழக்கு தொடுக்கப்பட்டு, நான்கு மாத சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. தலைவர்கள் கைது செய்யப்பட்டதும் போராட்டத்தைத் தொடரும் பொறுப்பை மாணவர்கள் ஏற்றனர். அவர்கள் இந்தி எதிர்ப்புக் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்து, சிறை செல்லாமல் எஞ்சியிருக்கும் தலைவர்களைக் கொண்டு பேசச் செய்தனர்.

கும்பகோணத்தில் நடந்த இந்தி எதிர்ப்புக்கூட்டத்தில் பேசிய பட்டுக்கோட்டை அழகிரிசாமி, ‘கட்டாய இந்தியை அறிமுகப்படுத்துவதே தமிழர்களின் முன்னேற்றத்தைத் தடுப்பதற்காகத்தான். ஆங்கிலக் கல்வி பார்ப்பனர் அல்லாதாரைப் பகுத்தறிவு வழியில் சுதந்தரமாகச் சிந்திக்கச் செய்வதைத் தடுப்பதற்காக பார்ப்பனர்கள் ஆங்கிலத்தைப் பாடத்திட்டத்தில் இருந்து அகற்றப் பார்க்கிறார்கள். அந்த இடத்தில் இந்தியை நுழைக்கப் பார்க்கிறார்கள்’ என்று பேசினார்.

கட்டாய இந்தியைப் பள்ளிகளில் அறிமுகப்படுத்துவது இந்தியாவைச் சமஸ்கிருத மயமாக மாற்றுவதற்கு பார்ப்பனர்கள் செய்த சதி என்று பேசினார் சென்னை சட்டமன்ற உறுப்பினராக இருந்த பி. கலிபுல்லா சாகிப். ‘திராவிடர்களே, உங்கள் குரல் வளைக்குள் திணிக்கப்படும் இந்தியைத் தோளோடு தோள் நின்று தடுத்து நிறுத்துங்கள்’ என்றார் பெரியார். கட்டாய இந்தியை அறிமுகப்படுத்திய ராஜாஜியின் முக்கிய நோக்கம் திராவிடர்களை வடவர்களிடமும் ஆரியர்களிடமும் ஒப்படைக்கவேண்டும் என்பதுதான் என்று பேசினார் நீதிக்கட்சியின் முக்கியத் தலைவர்களுள் ஒருவரான ஏ.டி. பன்னீர்செல்வம்.

1 ஜுலை 1938 அன்று இந்தி எதிர்ப்பு நாள் அனுசரிக்கப்பட்டது. இந்தி எதிர்ப்பு இயக்கத்தின் சார்பாக தமிழர் பெரும்படை ஒன்றை திருச்சியிலிருந்து சென்னை நோக்கி நடைப்பயணமாக வரவழைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. சற்றேறக்குறைய நூறு பேர் கொண்ட இந்தி எதிர்ப்புப் படைக்கு யுத்த மந்திரியாக சுயமரியாதை இயக்கப் பிரசார இதழான நகரதூதன் பத்திரிகையின் ஆசிரியர் மணப்பாறை திருமலைசாமியும் படைத் தலைவராக பட்டுக்கோட்டை கே.வி. அழகிரிசாமியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அந்தப் படையில் பாவலர் பாலசுந்தரம், திருப்பூர் மொய்தீன், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

1 ஆகஸ்டு 1938 அன்று திருச்சிக்கு அருகே உள்ள உறையூரில் இருந்து இந்தி எதிர்ப்புப் படை புறப்பட்டது. வழிநெடுக பாடல் ஒன்றைப் பாடியபடியே நடந்துவந்தனர். அந்தப் பாடலை எழுதிக் கொடுத்தவர் கவிஞர் பாரதிதாசன். அந்தப் பாடல் இங்கே:

இந்திக்குத் தமிழ்நாட்டில் ஆதிக்கமாம் – நீங்கள் எல்லோரும் வாருங்கள் நாட்டினரே!
செந்தமிழுக்குத் தீமைவந்த பின்னும் இந்தத் தேகம் இருந்தொரு லாபமுண்டோ?
(இந்தி)
விந்தைத் தமிழ்மொழி எங்கள் மொழி! – அது வீரத் தமிழ் மக்கள் ஆவி என்போம்!
இந்திக்குச் சலுகை தந்திடுவார் – அந்த ஈனரைக் காறி உமிழ்ந்திடுவோம்!
(இந்தி)
இப்புவி தோன்றிய நாள் முதலாய் – எங்கள் இன்பத் தமிழ்மொழி உண்டு கண்டீர்!
தப்பிழைத் தாரிங்கு வாழ்ந்த தில்லை – இந்தத் தான்தோன்றி கட்கென்ன ஆணவமோ?
(இந்தி)
எப்பக்கம் வந்து புகுந்துவிடும்? – இந்தி எத்தனைப் பட்டாளம் கூட்டிவரும்?
அற்பமென்போம் அந்த இந்திதனை – அதன் ஆதிக்கந் தன்னைப் புதைத்திடுவோம்!
(இந்தி)
எங்கள் உடல் பொருள் ஆவியெலாம் – எங்கள் இன்பத் தமிழ் மொழிக்கே தருவோம்!
மங்கை ஒருத்தி தரும் சுகமும் – எங்கள் மாத்தமிழ்க் கீடில்லை என்றுரைப்போம்!
(இந்தி)
சிங்கமென்றே இளங் காளைகளே – மிகத் தீவிரங் கொள்ளுவீர் நாட்டினிலே!
பங்கம் விளைத்திடல் தாய்மொழிக்கே – உடற் பச்சை ரத்தம் பரிமாறிடுவோம்!
(இந்தி)
தூங்குதல் போன்றது சாக்காடு! – பின்னர் தூங்கி விழிப்பது நம் பிறப்பு!
தீங்குள்ள இந்தியை நாம் எதிர்ப்போம் – உயிர் தித்திப்பை எண்ணிடப் போவதில்லை!
(இந்தி)
மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை – எமை மாட்ட நினைக்கும் சிறைச்சாலை!
ஏங்கவிடோம் தமிழ்த் தாய்தனையே – உயிர் இவ்வுடலை விட்டு நீங்கும் வரை!
(இந்தி)

மொத்தம் 42 நாள்களுக்கு நீடித்தது அந்தப் பயணம். 11 செப்டெம்பர் 1938 அன்று அந்தப் பெரும்படை சென்னை நகருக்கு வந்தடைந்தது. 234 ஊர்களைக் கடந்து, 87 பொதுக்கூட்டங்களை நடத்தி வந்திருந்தது அந்தப் படை. அப்போது அவர்களை வரவேற்க சென்னைக் கடற்கரையில் எழுபதாயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டிருந்தனர். அவர்களுக்காக திருவல்லிக்கேணி கடற்கரையில் நடத்தப்பட்ட பாராட்டு விழாக் கூட்டத்தில் மறைமலையடிகள், பெரியார், நாவலர் சோமசுந்தர பாரதியார், நீதிக்கட்சித் தலைவர் பி.டி. ராஜன், சௌந்தர பாண்டிய நாடார், அண்ணாதுரை ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

போராட்டம் மெல்ல மெல்ல வலுப்பெற்று வந்த சூழ்நிலையில் போராட்டக்காரர்களை மனவருத்தம் அடையச்செய்யும் வகையில் ஒரு மரணம் நிகழ்ந்தது!



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 டராசனும் தாலமுத்துவும்

மொழிப்போர் / அத்தியாயம் 6

இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் கைதுசெய்யப்பட்டபோது அவர்கள் மீது குற்றவியல் (கிரிமினல்) சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதற்கு சென்னை மாகாண சட்டமன்றத்தில் ஏ.டி. பன்னீர்செல்வம், ராஜா முத்தையா செட்டியார், அப்பாதுரை பிள்ளை உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

‘கிரிமினல் சட்டத்தை சுதந்தரப் போராட்டக்காரர்கள்மீது வெள்ளைக்காரர்கள் ஏவியபோது அதனை அரசியல் மோசடிச் சட்டம் என்றும் முட்டாள்தனமான சட்டம் என்றும் கண்டித்துவிட்டு, இப்போது அதே சட்டத்தைக் கொண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டக்காரர்களை நசுக்குவது சரியான காரியமா?’ என்று கேள்வி எழுப்பினர்.

ஆனால் அதற்கு பதிலளித்த முதலமைச்சர் ராஜாஜி, ‘அந்நிய அரசை எதிர்ப்பது ஒன்று; சொந்த அரசை எதிர்ப்பது வேறு; இரண்டுக்கும் பெரிய வேறுபாடு உண்டு. எதிர்ப்பைச் சமாளிக்க அந்த ஆயுதத்தைத்தான் பயன்படுத்தவேண்டும்; தொடர்ந்து பயன்படுத்துவேன்’ என்று திட்டவட்டமாகப் பேசினார் முதலமைச்சர் ராஜாஜி. கிரிமினல் சட்டத்தைப் பயன்படுத்தி அடக்குமுறைகளைக் கையாளும் ஆட்சியாளர்கள் வருத்தப்படும் காலம் வெகுதூரத்தில் இல்லை என்று ஆவேசப்பட்டார் ஏ.டி. பன்னீர்செல்வம்.

அதன் தொடர்ச்சியாகவே பெண்களும் இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்கவேண்டும் என்றும் மறியல்களில் கலந்துகொள்ள வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார் மீனாம்பாள் சிவராஜ். இவர் சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவர். அந்த இயக்கத்தின் தீவிர பிரச்சாரகர்களுள் ஒருவர். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த இவரைத்தான் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது சென்னை நகரில் பிரசாரம் செய்யும் பொறுப்புக்குத் தேர்வுசெய்திருந்தனர்.

சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு பெண்கள் மாநாட்டில் வைத்து பெண்களுக்கு அழைப்புவிடுத்த மீனாம்பாள் சிவராஜ், தமிழ்மொழி மற்றும் தமிழ்ப்பண்பாட்டுக்காக மன உறுதியோடு போராட முன்வர வேண்டும் என்று பெண்களுக்கு கோரிக்கை விடுத்தார். 13 நவம்பர் 1938 அன்று சென்னை ஒற்றைவாடை அரங்கில் பெண்கள் மாநாடு கூடியது. மறைமலையடிகளின் மகள் நீலாம்பிகை அம்மையார் தலைமையில் கூடிய அந்த மாநாட்டில் பெரியார் சிறப்புரை ஆற்றினார்.

மாநாட்டில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார், டாக்டர் தர்மாம்பாள், அலர்மேலுமங்கை தாயாரம்மாள், மஞ்சுளாபாய் சண்முகம், புவனேசுவரி (என்.வி. நடராசனின் துணைவியார்) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அந்த மாநாட்டுக்குப் பிறகு அதிக அளவிலான பெண்கள் இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டங்களில் கலந்துகொண்டனர். மறியல் ஈடுபட்ட மூவலூர் ராமாமிர்தம் அம்மையார், டாக்டர் தர்மாம்பாள், மலர்முகத்தம்மையார், பட்டம்மாள், சீத்தம்மாள் ஆகிய ஐந்து பெண்களும் கைது செய்யப்பட்டனர்.

போராட்டம் நாளுக்கு நாள் வலுக்கத் தொடங்கியதையடுத்து நீதிக்கட்சி மற்றும் சுயமரியாதை இயக்கப் பத்திரிகைகளுக்குக் கடிவாளம் போடத் தயாரானது மாகாண அரசு. குடி அரசு, விடுதலை, பகுத்தறிவு ஆகிய பத்திரிகைகள் தலா ஆயிரம் ரூபாயை ஜாமீனாகக் கட்டவேண்டும் என்று உத்தரவிட்டப்பட்டது.

அதன்பிறகும் போராட்டம் அடங்குவதாகத் தெரியவில்லை. ஆகவே, சுயமரியாதை இயக்கத் தலைவர் பெரியாரைக் கைதுசெய்ய முடிவுசெய்யப்பட்டது. 8 டிசம்பர் 1938 அன்று பெரியார் கைதானார். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைத் தூண்டினார், பெண்களைப் போராட்டத்துக்குத் தூண்டினார் என்ற இரண்டு குற்றச்சாட்டுகளை அவர் மீது வைக்கப்பட்டன.

சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் நான்காவது நீதிபதியான மாதவராவ் பெரியார் மீதான வழக்கை விசாரித்தார். அப்போது நடந்த விசாரணையின்போது தொடக்கத்திலேயே, ‘நான் எதிர்வழக்காடப் போவதில்லை. எனக்கு யாரும் வக்கீல் இல்லை’ என்று சொல்லிவிட்டார் பெரியார். அதன்பிறகு சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். அப்போது பெரியார் விரிவான வாக்குமூலம் ஒன்றைக் கொடுத்தார்.

நான் சம்பந்தப்பட்டிருக்கும் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியானது காங்கிரஸுக்கு விரோதமானது என்றும் காங்கிரஸ் கட்சியினரைக் கவிழ்ப்பதற்காக என்றும் பார்ப்பன துவேஷம் கொண்டதென்றும் கனம் முதல் மந்திரியாரே (ராஜாஜி) சட்டசபையிலும் பொதுக்கூட்டங்களிலும் தெரிவித்திருக்கிறார். இந்தக் கோர்ட்டு காங்கிரஸ் மந்திரிகள் நிர்வாகத்துக்கு உட்பட்டது. நீதிபதியாகியத் தாங்களும் பார்ப்பன வகுப்பைச் சேர்ந்தவர். இவைதவிர, இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியை ஒழிக்கவேண்டும் என்பதில் காங்கிரஸ் மந்திரிகள் அதிதீவிர உணர்ச்சி கொண்டிருக்கிறார்கள். அது விஷயத்தில் நியாயம், அநியாயம் பார்க்கவேண்டியது இல்லை என்றும் கையில் கிடைத்த ஆயுதத்தை எடுத்து உபயோகித்து ஒழித்தாக வேண்டும் என்றும் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியை திடீரென்று வந்து புகுந்த திருடர்கட்கு ஒப்பிட்டு கனம் முதன்மந்திரியார் கடற்கரைப் பொதுக்கூட்டத்தில் பேசியிருக்கிறார். நான் சம்பந்தப்பட்ட சுயமரியாதை இயக்கமும் தமிழர் இயக்கமும் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியும் ஜஸ்டிஸ் இயக்கமும் எதுவும் சட்டப்படி, சட்டத்துக்கு உட்பட்டு கிளர்ச்சி செய்யவேண்டும் என்ற கொள்கை கொண்டதே ஆகும். இதுவரை அக்கொள்கை மாற்றப்படவே இல்லை… ஆகவே, கோர்ட்டார் அவர்கள் தாங்கள் திருப்தியடையும் வண்ணம் அல்லது மந்திரிமார்கள் திருப்தி அடையும் வண்ணம், எவ்வளவு அதிக தண்டனை கொடுக்க முடியுமோ அவைகளையும், பழிவாங்கும் உணர்ச்சி திருப்தியடையும் வரைக்கும் எவ்வளவு தாழ்ந்த வகுப்பு கொடுக்க உண்டோ அதையும் கொடுத்து, இவ்வழக்கு விசாரணை நாடகத்தை முடித்துவிடும்படி வணக்கமாகக் கேட்டுக்கொள்கிறேன்.

அந்த வழக்கில் பெரியாருக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இரண்டு குற்றங்களுக்கும் தலா ஓராண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை. இரண்டு குற்றங்களுக்கும் தலா ஆயிரம் ரூபாய் அபராதம். அபராதம் செலுத்தவில்லையென்றால் தலா ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை அதிகரிக்கப்படும். வழக்கம்போல அபராதம் செலுத்த பெரியார் விரும்பவில்லை. சென்னை சிறையில் அடைக்கப்பட்டார்.

தண்டனை பெரியாருக்கு மட்டுமல்ல; அவருடன் சேர்ந்து போர்க்களத்துக்கு வந்த பெரும்பாலான போராட்டக்காரர்களுக்கும் சிறைத்தண்டனைகள் தரப்பட்டன. பட்டியல் வெகுநீளமானது. குறிப்பாக, செ.தெ. நாயகத்துக்கு நான்கு மாதங்கள், ஈழத்தடிகளுக்கு 9 மாதங்கள், சி.என். அண்ணாதுரைக்கு 9 மாதங்கள், மறை. திருநாவுக்கரசுக்கு 6 மாதங்கள், டி.ஏ.வி. நாதனுக்கு 4 மாதங்கள், கே.எம். பாலசுப்ரமணியத்துக்கு 6 மாதங்கள், அருணகிரிநாதருக்கு 2 ஆண்டுகள், பாவலர் பாலசுந்தரத்துக்கு மூன்று ஆண்டுகள், ஈ.வெ. கிருஷ்ணசாமிக்கு 6 மாதங்கள், பண்டித எஸ். முத்துசாமி பிள்ளைக்கு 6 மாதங்கள் என்று பலருக்கும் பல்வேறு வகையிலான தண்டனைகள்.

பெரியார் சிறைக்கு வந்துவிட்டதால் போராட்டம் தணிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் போராட்டத்தின் வேகத்தை அதிகப்படுத்தும் வகையில் வந்துசேர்ந்தது ஒரு மரணச் செய்தி. இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட நடராசன் என்ற இளைஞர் 5 டிசம்பர் 1938 அன்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். திடீரென அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. உடனடியாக அவரை விடுவித்து, உரிய மருத்துவ சிகிச்சை கொடுக்கவேண்டும் என்று கோரினர். ஆனால் அதற்கு சிறை நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து 15 ஜனவரி 1939 அன்று சிறையிலேயே மரணம் அடைந்தார் நடராசன். இந்தித் திணிப்புக்கு எதிராக நடந்த மொழிப்போரில் முதல் உயிர்த்தியாகம் இதுவே. மரணம் அடைந்த நடராசன் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்.

நடராசனின் மரணம் மொழிப்போரில் ஈடுபட்ட போராட்டக்காரர்களிடம் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்த சமயத்தில் 12 மார்ச் 1939 அன்று தாலமுத்து என்ற இளைஞரும் சிறைச்சாலைக் கொடுமை காரணமாக மரணம் அடைந்தார். நடராசன் – தாலமுத்து பற்றிப் பேசிய சி.என். அண்ணாதுரை, ‘நாடார் திலகம் தோழர் தாலமுத்து இறந்தது காண மனம் கலங்குகிறது. என்னைப் பொறுத்தவரை தோழர்கள் நடராசன், தாலமுத்து ஆகியோர் மரணத்தை எனது அண்ணன், தம்பி மரணம் என்றே கருதுகிறேன்’ என்றார்.

நடராசன், தாலமுத்துவின் மரணங்களும் பெரியாரின் கைதும் போராட்டத்தை அடுத்தக்கட்டத்துக்கு அழைத்துச் சென்றன. இந்தித் திணிப்பைக் கைவிடக்கோரியும் பெரியாரை விடுதலை செய்யக்கோரியும் போராட்டங்கள் தீவிரமடைந்தன. இந்நிலையில் முன்னறிவிப்பு எதையும் கொடுக்காமல் 22 ஏப்ரல் 1939 அன்று பெரியார் விடுதலை செய்யப்பட்டார். ஆனால் இந்தித் திணிப்பு உத்தரவு திரும்பப்பெறப்படவில்லை.

இந்நிலையில் இரண்டாம் உலகப்போர் தொடங்கியது. நட்பு நாடுகளுக்கு ஆதரவாக இங்கிலாந்துடன் இணைந்து பிரிட்டிஷ் இந்தியாவும் யுத்தத்தில் கலந்துகொள்ளும் என்று அறிவித்தார் இந்திய வைஸ்ராய். ஆனால் அந்த அறிவிப்பில் காங்கிரஸ் தலைவர்களுக்கு விருப்பமில்லை. எங்களைக் கேட்காமல் எங்களை யுத்தத்தில் எப்படித் திணிக்கலாம் என்று கேள்வி எழுப்பினர். அத்துடன் நிறுத்தாமல், தங்களுடைய எதிர்ப்பை வெளிக்காட்டும் வகையில் எட்டு மாகாணங்களில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியினர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். அந்த அடிப்படையில் 28 அக்டோபர் 1939 அன்று சென்னை மாகாண முதலமைச்சர்ர் ராஜாஜியும் பதவி விலகினார்.

சென்னை மாகாணத்தில் அட்வைசரி ஆட்சி (ஆலோசனைக்குழு ஆட்சி: ஆளுநருக்கு ஆலோசனை கொடுக்க அதிகாரிகள் மற்றும் அறிவுஜீவிகளைக் கொண்ட குழு) அமல்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். மேலும், இதுவரை அமல்படுத்தப்பட்ட பள்ளிகளில் இந்தி தொடரும் என்றும் இனி புதிதாக எந்தப் பள்ளியிலும் இந்தி திணிக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டது.

அரசின் அறிவிப்புகள் பெரியாரைத் திருப்திப்படுத்தவில்லை. கட்டாய இந்தியை முழுமையாக அகற்றும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்தார். தனது தலைமையில் மீண்டும் ஒரு போராட்டக்குழுவை உருவாக்கினார். அந்தக் குழுவின் செயலாளர் சி.என். அண்ணாதுரை. இதுவே இறுதி எச்சரிக்கை. இனி பேச்சில்லை. செயலேதான். இந்த் கட்டாயத்தைத் தவிடுபொடி ஆக்குவதே இனி வேலை. கட்டாய இந்தியைத் தொலைப்பாரா, இல்லையா? என்ன சொல்கின்றார் இந்த ஆட்சியாளர்? என்று கேள்வி எழுப்பினார் பெரியார்.

அந்தக் கேள்விக்கான விடை 21 பிப்ரவரி 1940 அன்று அரசிடம் இருந்து வெளியானது.

‘கட்டாய இந்தி முறை பொதுமக்களில் பெரும்பாலோரிடையே எதிர்ப்பையும் அதிருப்தியையும் விளைவித்திருக்கின்றது. முதல் மூன்று படிவங்களில் தேர்வுமின்றி, இந்தியைக் கட்டாயப் பாடமாக மட்டும் போதிப்பதால், மாணவர்களுக்கு அம்மொழியில் போதிய அறிவையோ, திறமையையோ ஏற்படுத்த முடியாது என்று அரசியலாருக்குத் தோன்றுகிறது. ஆகவே, அரசியலார் இந்திக் கட்டாயத்தை உடனே எடுத்துவிடுவது என முடிவுசெய்துவிட்டனர்’

இந்தித் திணிப்புக்கு எதிரான முதல் மொழிப்போராட்டம் வெற்றியடைந்தது. அடுத்த எட்டு ஆண்டுகளில் இரண்டாம் கட்டப் போராட்டம் தொடங்கியது!



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

சர்வாதிகாரி அண்ணாதுரை

மொழிப்போர் / அத்தியாயம் 7

சில ஆண்டுகளாக நின்றுபோயிருந்த இந்தித் திணிப்பு முயற்சிகள் ஓமந்தூர் ராமசாமி முதலமைச்சராக இருந்த காலத்தில்தான் மீண்டும் தொடங்கின. அப்போது சென்னை மாகாண அரசியலில் சில முக்கிய மாற்றங்கள் நடந்திருந்தன. சென்னை மாகாண அரசியலில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த ராஜாஜி இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக ஆகியிருந்தார். அரசியல் கட்சியான நீதிக்கட்சியையும் சமுதாய சீர்திருத்த இயக்கமான சுயமரியாதை இயக்கத்தையும் திராவிடர் கழகம் என்ற பெயரில் ஒன்றாக இணைத்து நடத்திக் கொண்டிருந்தார் பெரியார்.

இந்நிலையில் ஓமந்தூர் ராமசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு மொழிப்பாடம் தொடர்பாக 20 ஜூன் 1948 அன்று உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது. அதன்படி, சென்னை மாகாணத்தின் தமிழ் வழங்கும் பகுதிகளில் இந்தி மொழி விருப்பப் பாடமாகவும் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழி வழங்கும் பகுதிகளில் கட்டாயப் பாடமாகவும் இருக்கும் என்று அறிவித்தது ஓமந்தூரார் அரசு.

இந்த உத்தரவுக்கு கட்டாய இந்திக்கு எதிரானவர்கள் கண்டனம் தெரிவித்த நிலையில் இந்தி ஆதரவாளர்கள் வேறொரு கருத்தை வெளியிட்டனர். தமிழ் வழங்கும் பகுதிகளுக்கு மட்டும் காட்டப்பட்ட இந்தச் சலுகை இந்தி ஆதரவாளர்களை உசுப்பேற்றியது. மற்ற பகுதிகளில் கட்டாயம் என்று சொல்லிவிட்டு, தமிழ் வழங்கும் பகுதிகளுக்கு மட்டும் விருப்பம் என்று சொல்வதை ஏற்கமுடியாது என்றனர். அதனைத் தொடர்ந்து தமிழ் வழங்கும் பகுதிகளிலும் இந்தி கட்டாயப் பாடம் என்று அரசின் உத்தரவு திருத்தப்பட்டது. அந்தத் திருத்தம் நுணுக்கமான திருத்தம்.

இந்தி, சமஸ்கிருதம், அரபி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளை இரண்டாவது பாடமொழியாக மாற்றி, இவற்றில் ஏதேனும் ஒன்றைக் கட்டாயம் படிக்கவேண்டும். அந்த மொழிப் பாடத்தில் நடக்கும் பள்ளித் தேர்வுகளில் மாணவர்கள் கண்டிப்பாகத் தேர்ச்சி பெறவேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் இந்தி தவிர ஏனைய மொழிகளைக் கற்றுக்கொடுப்பதற்குப் போதுமான எண்ணிக்கையில் ஆசிரியர்களை நியமிக்காமல் இப்படியொரு உத்தரவு போட்டிருப்பது இந்தியை மட்டுமே படிக்கச்செய்வதற்கான தந்திரமான முயற்சி என்று கண்டித்தது திராவிடர் கழகம்.

முதலமைச்சர் ஓமந்தூர் ராமசாமியை பெரியார் நேரில் சந்தித்துப் பேசினார். கல்வி அமைச்சர் அவினாசிலிங்கம் செட்டியாரிடமும் பேசினார். எப்படியேனும் இந்தித் திணிப்பு ஆணையை ரத்துசெய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ஆனால் அந்த முயற்சிகள் வெற்றிபெறவில்லை. இனி போராட்டம் நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்ற சூழ்நிலையில் 17 ஜூலை 1948 அன்று சென்னையில் உள்ள புனித மேரி மண்டபத்தில் இந்தித் திணிப்பு எதிர்ப்பாளர்கள் மாநாடு ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

திராவிடர் கழகத்தினர், தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் அந்த மாநாட்டில் கலந்துகொண்டனர். மறைமலை அடிகள் தலைமையில் தொடங்கிய அந்த மாநாட்டில் பெரியார், திரு.வி. கலியாணசுந்தர முதலியார், ம.பொ. சிவஞானம், கவிஞர் பாரதிதாசன், அண்ணா, நாரண. துரைக்கண்ணன், டாக்டர் தர்மாம்பாள், அருணகிரி அடிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்தித் திணிப்புக்கு எதிராக முக்கியத் தலைவர்கள் பலரும் பேசினர். அண்ணா பேசும்போது,
‘மறைமலை அடிகளாரும் திரு.வி.க அவர்களும் இந்தி நுழைவால் தமிழ் கெடும், தமிழ் கலாசாரம் கெடும் என்று அழுந்தம் திருத்தமாகக் கூறிவிட்டபிறகு, அவர்கள் சாட்சியம் நமக்குக் கிடைத்துவிட்ட பிறகு போர் முழக்கம் செய்வது தவிர நமக்கு வேறென்ன வேலையிருக்கிறது?’ என்று கேட்டார்.

பிறகு பேசிய பெரியார், ‘திராவிட நாட்டில் உள்ள ஒவ்வொரு ஆணும் பெண்ணும் சிறுவனும் சிறுமியும் இந்தித் திணிப்பை எதிர்க்க முன்வரவேண்டும்.. நமது பிரிவினை உணர்ச்சியை ஒழிக்கத்தான் அவசர அவசரமாக இந்தியைக் கொண்டுவந்து புகுத்துகிறார்கள். இது எல்லோரும் ஒன்றுசேரக் கூடிய நல்வாய்ப்பாக இருக்கிறது’ என்று பேசினார்.

2 ஆகஸ்டு 1948. திராவிடர் கழகத்தின் செயற்குழு பெரியார் தலைமையில் கூடி இந்தி எதிர்ப்புப் போராட்டங்களை நடத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தியது. அதனைத் தொடர்ந்து சில
முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழ்நாட்டில் ஒன்று முதல் ஆறாம் வகுப்பு வரையில் இந்தி மொழி கட்டாயப் பாடமில்லை என்று முதலில் சொன்ன அரசாங்கம், ஒரு சிலரின் தூண்டுதலால் இப்போது இந்தியைக் கட்டாயப் பாடமாகியிருக்கிறது. இதனை திராவிடர் கழக செயற்குழு கண்டிக்கிறது என்பது ஒரு தீர்மானம்.

இந்தியை விருப்பப் பாடமாகவோ, கட்டாயப் பாடமாகவோ மேற்கண்ட வகுப்புகளில் வைக்கக்கூடாது என்று அரசுக்குக் கோரிக்கை விடுத்தது இன்னொரு தீர்மானம்.

பொதுமக்களின் கோரிக்கையையோ, திராவிடர் கழகத்தினரின் கருத்தையோ, தமிழ் ஆர்வலர்களின் எதிர்ப்பையோ அரசாங்கம் கண்டுகொள்ளாததால் திராவிடர் கழகம் இந்தித் திணிப்புக்கு எதிராக நேரடி நடவடிக்கையில் இறங்குகிறது. பள்ளிகளில் மறியல் செய்வது, படை, ஊர்வலம், பொதுக் கூட்டங்கள், மந்திரிகளைப் புறக்கணித்தல் ஆகியவற்றின்மூலம் மக்களின் எதிர்ப்புணர்வுகளை வெளிப்படுத்த இருக்கிறது என்பது மூன்றாவது தீர்மானம்.

ஒருவேளை, மேற்கூறிய போராட்டங்களை நடத்துவதற்கு அரசாங்கம் தடை விதிக்கும் பட்சத்தில் அந்தத் தடைகளை மீறுவது என்றும் அந்தச் செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி சென்னை முத்தியால்பேட்டை உயர்நிலைப் பள்ளிக்கு எதிரே மறியல் நடத்துவது என்றும் அந்தப் போராட்டத்துக்கு அண்ணா ‘சர்வாதிகாரியாக’ செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டது. திட்டமிட்டபடி 10 ஆகஸ்டு 1948 அன்று போராட்டம் தொடங்கியது. சர்வாதிகாரி அண்ணா, படைத்தலைவர் சி.டி.டி. அரசு உள்ளிட்டோர் மாணவர்களைச் சந்தித்து, ‘கட்டாய இந்தியை எதிர்க்கவேண்டும்’ என்று கேட்டுக் கொண்டனர். காலையிலும் மாலையிலும் தொடர்ச்சியாக மறியல்கள் நடந்தன. மறியலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். கைது மட்டுமல்ல, கண்ணீர்ப்புகை வீச்சும் தடியடியும் துப்பாக்கிச்சூடுகளும் நடந்தன.

இந்தி எதிர்ப்புப் போராட்டம் எழுச்சியுடன் நடந்துகொண்டிருந்த சமயத்தில் 22 ஆகஸ்டு 1948 அன்று சென்னையில் திராவிடர் கழகச் செயற்குழு கூடியது. போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்ட அந்தக் கூட்டத்தில் பெரியார், அண்ணா, ஈ.வெ.கி.சம்பத் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். மறுநாள் சென்னை வரவிருந்த இந்திய கவர்னர் ஜெனரல் ராஜாஜிக்கு எதிராகக் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

‘வடநாட்டு ஆதிக்க, சுரண்டல், முதலாளித்துவ, வர்ணாசிரம ஆட்சியின் கண்காணியாக தென்னாட்டுக்கு நீர் பவனி வருவதால், உயர்தனிச் செம்மைத் தமிழ்மொழியைச் சிதைத்து அதன் மூலம் திராவிட மக்களின் கலை, நாகரிகப் பண்புகளை அழித்தொழித்து, ஆரிய வடவர்க்கு அடிமையாக்கும் திட்டத்தில் இங்கு இந்தி மொழியைப் புகுத்தச் செய்து, அதன் எதிரொலி எப்படியிருக்கிறதென்று வேவு பார்க்க வருவதால், பகிஷ்கரிக்காவிடில் வடநாட்டு ஆட்சி அக்கிரமத்தை ஒப்புக்கொண்டவர்களாவோம்; பயங்காளியாகப் பின்னடைந்தவர்களாக ஆவோம், நாட்டு மக்களுக்குத் துரோகம் செய்தவர்களாவோம்’ என்று போராட்டத்துக்கு ஆதரவாக செய்தி வெளியிட்டது விடுதலை நாளிதழ்.

கறுப்புக்கொடி போராட்டத்தை ஒடுக்கும் வகையில் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட தொண்ணூறுக்கும் மேற்பட்டோரை முன்கூட்டியே கைது செய்தது காவல்துறை. ஆனாலும் தொண்டர்களின் கூட்டுமுயற்சியால், தடியடிகளுக்கும் கண்ணீர்ப்புகை குண்டுகளுக்கும் மத்தியில் கறுப்புக்கொடி போராட்டம் நடத்தப்பட்டது. சென்னையில் வைத்து கவர்னர் ஜெனரல் ராஜாஜி, மாகாண ஆளுநர் பவநகர் மகாராஜா ஆகியோருக்குக் கறுப்புக்கொடிகள் காட்டப்பட்டன.

ராஜாஜிக்குக் கறுப்புக்கொடி காட்டிய தமிழ்ப்புலவர் கா. அப்பாத்துரையும் அவரது மனைவியும் காவலர்களின் கடுமையாக தாக்குதலுக்கு ஆளாகினர்.

காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் ஓமந்தூராருக்கும் காவேரிப்பாக்கத்தில் கல்வி அமைச்சர் அவினாசிலிங்கம் செட்டியாருக்கும் ஆலந்தூரில் அமைச்சர் மாதவனுக்கும் திண்டுக்கல்லில் அமைச்சர் சந்திரமௌலிக்கும் கறுப்புக்கொடிகள் காட்டப்பட்டன. அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கொத்துக்கொத்தாகக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர் காவல்துறையினர். கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடி போராட்ட வேகத்தை மேலும் தீவிரப்படுத்தியது.

15 செப்டெம்பர் 1948 அன்று பள்ளிகளுக்கு முன்னால் மறியல் போராட்டங்கள் தீவிரம் அடைந்தன. முந்நூறுக்கும் மேற்பட்ட ஊர்களில் மறியல் போராட்டங்கள் நடந்துகொண்டிருந்த சமயத்தில் போராட்டக்காரர்களைச் சோர்வடையச் செய்யும் வகையில் மறுநாள் பெரியாரிடம் இருந்து அறிவிப்பு ஒன்று வெளியானது.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 இந்தி விஷயத்தில் வேண்டாம் வீம்பு!

மொழிப்போர் / அத்தியாயம் 8

இந்தித் திணிப்புக்கு எதிரான உணர்வுகள் மெல்ல மெல்லப் பொங்கியெழுந்த சமயத்தில் அண்டைப் பகுதியான ஐதராபாத்தில் போர்ச்சூழல் உருவானது. சமஸ்தான இணைப்பில் மத்திய அரசு தீவிரம் காட்டிவந்த சமயத்தில் ஐதராபாத் சமஸ்தானம் முரண்டு பிடித்தது. விளைவு, ஐதராபாத் நிஜாமின் ரசாக்கர் படைகளுக்கு எதிராக இந்திய ராணுவம் நடவடிக்கையில் இறங்கியிருந்தது.

ஐதராபாத்தில் உள்ள கலவரச் சூழல் வேறு. இங்கே இருக்கும் உணர்ச்சிக் கொந்தளிப்பு வேறு.  இரண்டும் ஒன்றாகி, மிகப்பெரிய கலவரங்கள் ஏதும் ஏற்பட்டுவிடாமல் தடுக்கும் வகையில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் வேகத்தைச் சற்றே குறைத்துக்கொள்வது என்று போராட்டக்குழு முடிவெடுத்தது. 16 செப்டெம்பர் 1948 அன்று போராட்டம் தாற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தார் பெரியார். இது இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்தவர்களை சோர்வடையச் செய்தது. அவர்களைத் தேற்றும் பொறுப்பை அண்ணா கையில் எடுத்துக்கொண்டார்.

‘போராட்டம் தீவிரமாகவும் வெற்றியை நோக்கியும் சென்று கொண்டிருப்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. என்றாலும், ஐதராபாத்தில் நடந்துகொண்டிருக்கும் யுத்தம் முடிவுக்கு வரும்வரைக்கும் நம்முடைய நேரடி நடவடிக்கைகளை நிறுத்திவைக்கச் சொல்லியிருக்கிறார் பெரியார்.’ என்றார். அதன் அர்த்தம், ஹைதராபாத் யுத்தம் முடிந்ததும் மொழிப்போர் மீண்டும் தொடங்கும் என்பதுதான்.

ஹைதரபாத் நிஜாம் சரண் அடைந்து, யுத்தம் முடிவுக்கு வந்தபிறகும்கூட இந்தி விஷயத்தில் இந்திய அரசின் நிலைப்பாடு மாறவில்லை. இதனால் அதிருப்தியடைந்தார் பெரியார். ‘மீண்டும் இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டங்கள் தொடங்கும். அப்போது அரசாங்கம் அதனை ஒடுக்கமுயலும். தடியடிகள், துப்பாக்கிச்சூடு எதுவேண்டுமானாலும் நடக்கலாம். ஆனாலும் எங்கள் அழைப்பு வந்ததும், மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளில் இருந்து வெளியே வாருங்கள். படிப்பைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம். அல்லது சிறையிலேயே பள்ளி நடத்தலாம். ஆசிரியர்களையும் உடன் அழைத்துவாருங்கள்’ என்று அழைப்பு விடுத்தார்.

அதன் தொடர்ச்சியாக 23 அக்டோபர் 1948 அன்று ஈரோட்டில் திராவிடர் கழக மாநாடு கூடியது. மாநாட்டுக்குத் தலைமை வகித்துப் பேசினார் அண்ணா.

‘மறியல் தொடங்குவதற்கு முன்னரே நமது கோரிக்கையிலுள்ள நியாயத்தை எடுத்துச் சொன்னோம். நாடாளும் சர்க்கார் அவற்றைக் கேட்க மறுத்தது. காரணங்கள் பல காட்டினோம். காதுகொடுக்க மறுத்தது. கட்டாயமாக்க வேண்டாம் என்று நாம் கெஞ்சினோம். அவர்கள் மிஞ்சினார்கள். புலவர்களைக் கொண்டு புத்திகூறச் செய்தோம்; புன்மையாளர்கள் மதித்தனர் இல்லை. கலை நிபுணர் கல்யாண சுந்தரனாரும் தமிழ்க்கடல் மறைமலை அடிகளாரும் இந்தியால் தமிழ் கெடும் என்று கூறிவிட்டபின்னர் முதன்மந்திரி ஓமந்தூர் ரெட்டியாரும் அமைச்சர் அவினாசியாரும், ‘கெடாது, கெடாது’ என்று எவ்வளவுதான் கூறினாலும் பொதுமக்களால் இவர்கள் வார்த்தையில் எப்படி நம்பிக்கை கொள்ளமுடியும்? வாதாடிப் பார்த்தோம். பயனில்லை. மறியலைக் கொஞ்சம் நிறுத்தியும் பார்த்தோம். புத்தி வரவில்லை. இந்த நிலையில் ஹைதராபாத் போரும் நின்றுவிட்டது. எனவே, அறப்போர் மீண்டும் தொடங்க வேண்டியதுதான். தொடங்கும் நாளை தலைவர் அறிவிப்பார்’

இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டங்களை மீண்டும் நவம்பர் முதல் தேதி முதல் நடத்துவது என்று மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது. கட்டாய இந்திக்கு எதிராக மறியல் நடத்துங்கள்; அரசு தடைவிதித்தால் அதையும்மீறி மறியல் செய்யுங்கள்; கைது செய்து வழக்கு தொடர்ந்தால் ஜாமீனில் வெளியே வராதீர்கள்; எதிர்வழக்கு ஆடாதீர்கள்; அபராதம் விதித்தால் செலுத்தாதீர்கள் என்பன உள்ளிட்ட அறிவுரைகள் போராட்டக்காரர்களுக்குத் தரப்பட்டன.

30 அக்டோபர் 1948 அன்று சென்னை ஜிம்கானா திடலில் திரு.வி.கலியாண சுந்தரனார் தலைமையில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. ஆட்சியாளர்களே, ஆணவத்தால் அழியாதீர். நாட்டு மக்களின் மனதை நன்கு அறிந்து நான் கூறுகிறேன். இந்தி விஷயத்தில் வீம்பு வேண்டாம். வீண் பிடிவாதம் வேண்டாம். கட்டாயத்தை விட்டுவிடுங்கள். கபடம் வேண்டாம். கர்வம் வேண்டாம். பெரியாரைப் பகைத்துக்கொள்ள வேண்டாம். இன்றிரவே யோசித்து ஒரு முடிவுக்கு வாருங்கள். அறப்போர் தொடங்குவதற்குள் நாளைய தினமே ஒரு உத்தரவை வெளியிடுங்கள், கட்டாய இந்தியைக் கைவிட்டுவிட்டோம் என்று. அறவழி நாடுகள். அன்பு மார்க்கம் தேடுங்கள் என்று அறிவுரை வழங்கினார்.

அறிவித்தபடியே இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டம் மீண்டும் வலுக்கத் தொடங்கியது. பல மாவட்டங்களிலும் போராட்டங்கள் தீவிரம் அடைந்ததைத் தொடர்ந்து, கும்பகோணம், தூத்துக்குடி, மதுரை, கோவில்பட்டி, திருக்கோவிலூர், திருவாரூர், நன்னிலம், கொடவாசல், பேரளம், கல்லக்குறிச்சி, விழுப்புரம், வேலூர் ஆகிய இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்தத் தடை விதித்தது அரசு. என்றாலும், தடையை மீறிப் பொதுக்கூட்டங்களும் மறியல்களும் நடந்தன. அவற்றைத் தடுக்கும் முயற்சியில் காவல்துறை இறங்கியது. தடியடிப் பிரயோகம் நடந்தது.

போராட்டத்தில் ஈடுபட்ட பெரியார், கே.கே. நீலமேகம், என்.வி. நடராசன், கே.ஏ. மணியம்மை உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது வழக்கு தொடர்ப்பட்டு, சிறைத்தண்டனைகள் வழங்கப்பட்டன. இவர்களில் என்.வி. நடராசனைக் கைதுசெய்த காவலர்கள், அவருடைய உடலில் இருந்து ரத்தம் வரும்வரைக்கும் தாக்கியதோடு, அவருக்குக் கைவிலங்கு போட்டபடியே வீதியில் அழைத்துச்சென்றனர். போராட்டத்தில் ஈடுபட்டால் என்ன கதி ஏற்படும் என்பதை போராட்டத்தில் ஈடுபடுவோருக்குப் புரியவைக்க காவலர்கள் பயன்படுத்திய உத்தி அது.

சென்னை மாகாணத்தில் இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டங்கள் நடந்துகொண்டிருந்த சமயத்தில் இந்தி மொழி குறித்து தேசிய அளவிலான விவாதம் எழுந்தது. குறிப்பாக, சுதந்தர இந்தியாவின் ஆட்சி மொழி எது என்பது குறித்த விவாதங்கள் தேசிய அளவில் எழுந்தன. இந்திய அரசியல் நிர்ணய சபை 4 நவம்பர் 1948 அன்று கூடியது. அந்தக் கூட்டத்தில் மொழிப்பிரச்னை குறித்து விவாதிக்கப்பட்டது. அதில் பேசிய எல்.கே. மெய்திரா என்ற உறுப்பினர், ‘நம்முடைய நாடாளுமன்றத்தில் இந்தி மொழியில் பேசாவிட்டால் சுதந்தரம் என்பது அர்த்தமற்ற ஒன்றாக மாறிவிடும்’ என்றார். அவருடைய கருத்துக்கு வேறுசில உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர். ஆனால் இந்தக் கருத்தை தென்னகத்தைச் சேர்ந்த டி.டி. கிருஷ்ணமாச்சாரி ஏற்கவில்லை.

‘தென்னக மக்கள் சார்பாக ஒரு எச்சரிகையைத் தெரிவிக்க விரும்புகிறேன். தென்னாட்டில் ஏற்கெனவே பிரிவினை கேட்கும் சக்திகள் (திராவிடர் கழகம்) உள்ளன. அவற்றின் பலத்தை நாம் முடிந்தவரை கட்டுப்படுத்த முயற்சிசெய்யவேண்டும். உத்தரபிரதேசத்தில் இருந்து வந்துள்ள நண்பர்கள் இதற்கு ஒத்துழைப்பு தருவதற்குப் பதிலாக இந்தி ஏகாதிபத்தியம் என்ற சவுக்கடியைக் கொடுக்கிறார்கள்’ என்றார் டி.டி. கிருஷ்ணமாச்சாரி.

மொழி விவகாரத்தில் அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்கள் இந்தி ஆதரவாளர்கள், ஆங்கில ஆதரவாளர்கள் என்று இரண்டு கூறுகளாகப் பிரிந்துநின்று விவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் கூர்மையடைவதற்குப் பதிலாக கடுமையடைந்தது. அப்போது பேசிய பிரதமர் நேரு, ‘அவசரம் காட்டினால் நமது நோக்கங்கள் நிறைவேறாது. சிறுபான்மையினர் மீது அவர்கள் விரும்பாத ஒன்றை பெரும்பான்மை கொண்டு திணிக்க முற்பட்டால், இந்த அவையோ அல்லது நாடோ எதை அடைய விரும்புகிறதோ அதற்கு வெற்றி கிடைக்காது’ என்றார்.

மொழி விவகாரத்தில் இந்திய அரசியல் நிர்ணய சபையின் தலைவர் ராஜேந்திர பிரசாத்துக்கும் பிரதமர் நேருவுக்கும் இடையே கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டன. சுதந்தர இந்தியாவின் அரசியல் சட்டம் இந்தியில் நிறைவேற்றப்பட்டதாக இருக்கவேண்டும் என்றார் ராஜேந்திர பிரசாத். ஆனால் அரசியல் சட்டம் ஆங்கிலத்தில்தான் இருக்கவேண்டும். இந்தி மொழியாக்கத்தை அங்கீகரித்தால் ஒவ்வொரு
இந்தி சொல்லுக்கும் பொருள் கொள்வது தொடர்பாக அவையில் காரசாரமான விவாதங்கள் ஏற்படும். ஒருமித்த கருத்து ஏற்படாது. நேரம் விரயமாகும் என்றார் பிரதமர் நேரு.

இந்தியா, ஆங்கிலமா என்பது தொடர்பாக ராஜேந்திர பிரசாத்துக்கும் நேருவுக்கும் இடையே கடிதப் பரிவர்த்தனைகள் நடந்தன. ஆனால் இருவருமே தத்தமது நிலையில் உறுதியாக இருந்தனர். அதனைத் தொடர்ந்து 8 ஆகஸ்டு 1949 அன்று இந்திய அரசியல் சட்ட நிர்ணய சபை மீண்டும் கூடியது. அதில் பல்வேறு யோசனைகள் முன்வைக்கப்பட்டன.

முக்கியமாக, முதல் பத்து ஆண்டுகளுக்கு இந்தி அல்லது ஆங்கிலத்தை ஆட்சிமொழியாகப் பயன்படுத்தலாம் என்ற யோசனை சொல்லப்பட்டது. ஆனால் ஆங்கில ஆதரவாளர்களோ, ‘அல்லது’ என்ற பதத்தைப் பயன்படுத்தி ஆங்கிலத்தை அப்புறப்படுத்தப்பார்க்கிறீர்கள் என்று குற்றம்சாட்டினர். மேலும், முதல் பதினைந்து ஆண்டுகளுக்கு ஆங்கிலம் மட்டுமே ஆட்சிமொழியாக இருக்கவேண்டும். இந்தியைத் திணிக்கக்கூடாது. நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் விரும்பினால் ஆங்கிலத்துடன் இந்தியையும் முதல் பதினைந்து ஆண்டுகாலத்துக்கு ஆட்சிமொழியாகப் பயன்படுத்தலாம் என்றனர்.

வாதப் பிரதிவாதங்கள் நீடித்துக்கொண்டே சென்றதையடுத்து, மத்திய ஆட்சிமொழி தொடர்பாகப் பொது உடன்பாடு காண்பதற்கு குழு ஒன்றை அமைக்க முடிவுசெய்யப்பட்டது. இது அரசின் சார்பாக மைக்கப்பட்ட குழு அல்ல; காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் குழுவுக்கு ஆலோசனை கூறுவதற்காக, அவர்களுக்கு இடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட குழு!



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 நிறைவேறிய காந்தி கனவு

மொழிப்போர் / அத்தியாயம் 9

இந்தியாவின் ஆட்சிமொழி எது என்பதில் மத்திய சட்டமன்ற (நாடாளுமன்ற) காங்கிரஸ் உறுப்பினர்கள் இடையே கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டிருந்தன. அவற்றைக் களைந்து ஒரு தீர்க்கமான முடிவுக்கு வரவேண்டும் என்பதற்காகக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. என். கோபாலசாமி அய்யங்கார், டி.டி. கிருஷ்ணமாச்சாரி, அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர், கே.எம். முன்ஷி, டாக்டர் பி.ஆர். அம்பேத்கர், சாதுல்லா, எம்.என்.ராய், அபுல் கலாம் ஆசாத், பண்டித பந்த், புருசோத்தம தாஸ் தாண்டன், பாலகிருஷ்ண சர்மா, சியாமா பிரசாத் முகர்ஜி, கே. சந்தானம் ஆகியோர் இடம்பெற்றனர்.

ஆட்சிமொழி பற்றிய ஆய்வு மற்றும் ஆலோசனைப் பணிகள் முடிந்ததும் அறிக்கை ஒன்றை அளித்தனர் அந்தக் குழுவினர். அந்த அறிக்கைக்கு முன்ஷி – அய்யங்கார் திட்டம் என்று பெயர். அந்தத் திட்டத்தில் பல முக்கியமான பரிந்துரைகள் செய்யப்பட்டிருந்தன. அவற்றின் சுருக்கம் கீழே:

தேவநாகரி எழுத்துகளைக்கொண்ட இந்தி மத்திய அரசின் ஆட்சிமொழி. ஆங்கிலம் பதினைந்து ஆண்டுகளுக்கு ஆட்சிமொழியாக நீடிக்கும். அதற்குப் பின்னரும் ஆங்கிலத்தை ஆட்சிமொழியாகப் பயன்படுத்த நாடாளுமன்றம் சட்டம் இயற்றலாம். இந்தியை நிர்வாகத்துறையில் பயன்படுத்த குடியரசுத் தலைவர் ஆணை பிறப்பிக்கலாம். உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்கள், அரசாங்கச் சட்டங்கள்,

சட்ட முன் வடிவுகள் உள்ளிட்ட அனைத்தும் ஆங்கிலத்தில்தான் இருக்கவேண்டும். மாநில அரசுகள் தங்களுடைய மாநில மொழியையோ அல்லது இந்தியையோ ஆட்சி மொழியாக ஏற்கலாம். அதுவரை ஆங்கிலம் ஆட்சிமொழியாக நீடிக்கவேண்டும்.

முன்ஷி – அய்யங்கார் திட்டம் குறித்து மத்திய சட்டமன்ற காங்கிரஸ் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. ஆனால் இந்தி ஆதரவாளர்கள், ஆங்கில ஆதரவாளர்கள் இடையே கருத்து ஒற்றுமை ஏற்படவில்லை. ஆகவே, அரசியல் நிர்ணய சபையே இறுதி முடிவை எடுக்கட்டும் என்ற முடிவுக்கு காங்கிரஸ் தலைவர்கள் வந்தனர். அதனைத் தொடர்ந்து ராஜேந்திர பிரசாத் தலைமையில் 12 செப்டெம்பர் 1949 அன்று அரசியல் நிர்ணய சபை கூடியது. அதில் ஆட்சிமொழி பற்றிய விவாதங்கள் இரண்டு நாள்களுக்கு நடந்தன.

அந்தக் கூட்டத்தில் டாக்டர் சுப்பராயன், காயிதே மில்லத் இஸ்மாயில் சாஹிப், டி.டி. கிருஷ்ணமாச்சாரி, டி.ஏ. ராமலிங்கம் செட்டியார், பி.டி. சாக்கோ உள்ளிட்ட தென்னகத் தலைவர்கள் – சேத் கோவிந்த தாஸ், அபுல் கலாம் ஆசாத் உள்ளிட்ட வடநாட்டுத் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் இரண்டு அம்சங்கள் குறித்து பேசப்பட்டது. இந்தியாவின் எந்த மொழியை ஆட்சிமொழியாக ஏற்றுக்கொள்வது என்பது முதல் அம்சம். இந்தியா முழுவதும் ஒரே வகையான எண்களைப் பயன்படுத்துவது என்பது இரண்டாவது அம்சம்.

அந்தக் கூட்டத்தில் இந்திக்கு ஆதரவான கருத்துகளும் ஆங்கிலத்துக்கு ஆதரவான கருத்துகளும் திரும்பத்திரும்ப பேசப்பட்டன. சென்னை மாகாணத்தில் பெரும்பான்மையான மக்கள் இந்தியைத்தான் விரும்புகிறார்கள் என்றார் புருஷோத்தம தாஸ் தாண்டன். ஆனால் அந்தக் கருத்துக்குக் கடுமையான எதிர்ப்பு எழுந்தது. ஏனென்றால், இந்தித்திணிப்பு எழுந்த நொடியில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்த மாகாணங்களுள் சென்னை பிரதானமானது.

இந்தியாவின் பழைமையான மொழி ஆட்சிமொழியாக இருக்கவேண்டும் என்றால் தமிழ் அல்லது திராவிட மொழிகள்தான் இந்த மண்ணில் மிகவும் முற்பட்ட காலத்தில் இருந்து பேசப்பட்டு வருகின்ற மொழிகள் என்று பேசினார் காயிதே மில்லத் இஸ்மாயில் சாஹிப். ஒருபகுதியினர் மற்றொரு பகுதியினர் மீது ஆதிக்க எண்ணத்தை வளர்த்துக்கொண்டிருப்பார்கள் என்றால் அதன் விளைவுகள் நம்முடைய முன்னேற்றத்துக்கும் பாதுகாப்புக்கும் ஏற்றவையல்ல. எனவே, இந்தி பேசுபவர்கள் தங்களின் ஆதிக்க எண்ணத்தையும் சர்வாதிகாரப்போக்கையும் கைவிட்டு, ஒத்துழைக்க வேண்டும் என்றார் டி.ஏ. ராமலிங்கம் செட்டியார்.

பலத்த வாதப் பிரதிவாதங்களுக்குப் பிறகு வேறு வழியில்லாமல் 14 செப்டெம்பர் 1949 அன்று சில திருத்தங்களை இரு தரப்பினரும் ஏற்றுக்கொண்டனர். நானூறுக்கும் மேற்பட்ட திருத்தங்கள் திரும்பப்பெறப்பட்டன. அதன்படி, பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்னர் ஆங்கிலத்தைப் பயன்படுத்துவது குறித்தும் தேவநாகரி எண்களைப் பயன்படுத்துவது குறித்தும் சட்டங்கள் இயற்றலாம்; குடியரசுத்தலைவரின் ஒப்புதலுடன் உயர்நீதிமன்றத்தில் இந்தியைப் பயன்படுத்தலாம்; சட்டங்கள், சட்டமுன்வடிவுகள், ஆணைகள் ஆகியவற்றை மாநில மொழிகளில் வெளியிடலாம் என்பன உள்ளிட்ட திருத்தங்கள் ஏற்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து திருத்தப்பட்ட முன்ஷி – அய்யங்கார் திட்டத்தின் அடிப்படையில் மொழிப் பிரிவுகள் அவையில் ஏற்கப்பட்டு, அரசியல் சட்டத்தின் பதினேழாவது பாகத்தில் இணைக்கப்பட்டன. அவற்றில் பிரிவு 343 தொடங்கி பிரிவு 351 வரையிலானவை மத்திய, மாநில அரசுகள், நீதிமன்றங்கள், நாடாளுமன்றம், சட்டமன்றங்கள் ஆகியவற்றில் பயன்படுத்தவேண்டிய மொழிகள் குறித்து விவரிக்கின்றன. அவற்றைக் கொஞ்சம் நுணுக்கமாகக் கவனித்தால் மொழிப்போர் என்பது ஓரிரு பேச்சுவார்த்தைகள் மூலமாக முடிந்துவிடக்கூடிய விஷயமல்ல; எதிர்காலத்தில் வெடித்துக் கிளம்புவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன என்பது புலப்படும்.

343வது விதி தேவநாகரி வடிவத்தில் எழுதப்பட்டுள்ள இந்தி மொழியே மத்திய அரசின் ஆட்சிமொழி என்றும் 1965 வரையில் ஆங்கிலம் தொடர்ந்து ஆட்சிமொழியாகப்பயன்படுத்தப்படலாம் என்று கூறுகிறது. இதன்படி 1965 ஆம் ஆண்டு வரை ஆங்கிலம்தான் ஆட்சிமொழி என்றபோதும் இடைப்பட்ட காலத்தில் மத்திய அரசின் துறைகளில் இந்தியைப் பயன்படுத்துவதற்கு குடியரசுத்தலைவர் ஆணையிடலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்திக்கு மட்டும் குடியரசுத் தலைவர் சிறப்பு ஆணை வழங்கலாம்;, ஆனால் இந்தியாவின் ஏனைய மொழிகளுக்கு அந்தச் சலுகையை குடியரசுத் தலைவர் பயன்படுத்த முடியாது.

343வது விதி ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்தி மொழியின் வளர்ச்சியைக் கண்டறிய, ஆட்சிமொழி ஆணையம் ஒன்றை அமைக்க குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் அளிக்கிறது. இந்த ஆட்சி மொழி ஆணையத்தின் பணிகளில், இந்தியை மத்திய அரசுப் பணிகளுக்குப் பெருவாரியாகப் பயன்படுத்துவது, மத்திய அரசுப் பணிகளில் இயன்றவரைக்கும் ஆங்கிலத்தின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவது ஆகியன பிரதானமானவை. இவற்றின் அர்த்தம், இந்தியை ஆட்சிப்பணிகளில் தீவிரமாக நுழைப்பதற்கான அத்தனை முயற்சிகளும் எடுக்கப்படும் என்பதுதான். ஆம். வளர்ச்சிப் பணிகள் என்றால் அது இந்திக்கு மட்டும்தான் நடக்கவேண்டுமே தவிர, இதர மொழிகளுக்கு அல்ல.

345வதுவிதி அந்தந்த மாநிலங்களில் வழங்கும் மொழிகள் ஆட்சிமொழி ஆவதற்கான வாய்ப்புகளை உருவாக்கித் தருகிறது. 348 வது விதி உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்றங்களில் ஆங்கிலம் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதைத் தெரிவிக்கிறது. முக்கியமாக, இந்திய அரசியமைப்பின்படியோ, நாடாளுமன்ற, சட்டமன்றங்களின்படியோ தரப்படுகின்ற அனைத்து கட்டளைவிதிகள், ஒழுங்குமுறைகள், துணை விதிகள் ஆகியவற்றின் அதிகாரப்பூர்வ மூலப்படிவங்கள் ஆங்கில மொழியிலேயே இருக்கவேண்டும் என்பதை உறுதிசெய்கிறது.

351வது விதி இந்தி மொழியின் வளர்ச்சிக்கு மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. குறிப்பாக, இந்தி மொழியைப் பரப்பி மேம்பாடு அடையச் செய்து, இந்தியக் கூட்டுப்பண்பாட்டின் அனைத்து கூறுகளுக்கும் இந்தியைச் சொல்லமைப்புச் சாதனமாக்கும் வகையில் வளர்த்து, இந்தியைச் செழித்தோங்கச் செய்வது மத்திய அரசின் கடமை என்று கூறுகிறது இந்த விதி.

ஒருவழியாக, இந்தி மொழிக்கு தேசிய மொழி என்ற அந்தஸ்து கிடைத்தது. நாம் இந்தி மொழிக்குத் தேசிய மொழி என்னும் தகுதியை வழங்காவிட்டால் சுதந்தரம் பற்றிப் பேசிவதில் பயனே இல்லை என்று சொன்ன காந்தியின் கனவு நிறைவேறியது.  இந்திய அரசியல் நிர்ணய சபையில் இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தி 14 செப்டெம்பர் 1949 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது . அடுத்த மூன்றாவது நாள் சென்னை மாகாணத்தில் ஒரு மிகப்பெரிய அரசியல் திருப்புமுனை ஏற்பட்டது.

இந்தித் திணிப்பு எதிராகத் தொடர்ச்சியாகப் போராடிக் கொண்டிருந்த திராவிடர் கழகத்தில் கருத்து வேறுபாடுகள் முற்றி, பிளவு ஏற்பட்டது. திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்த சி.என். அண்ணாதுரையும் அவருடைய ஆதரவாளர்களும் இணைந்து 17 செப்டெம்பர் 1949 அன்று திராவிட முன்னேற்றக் கழகம் என்ற புதிய கட்சியைத் தொடங்கினர்.

இந்தியை வளர்க்கிறோம், இந்தியைப் பரப்புகிறோம் என்ற பெயரில் மத்திய அரசு இந்தியாவில் உள்ள இந்தி பேசாத மக்களின் உணர்வுகளின் மீதான தாக்குதல்களுக்கு அரசியல் சட்ட அங்கீகாரம் கிடைத்து விட்ட சமயத்தில் திராவிடர் கழகத்தில் ஏற்பட்ட பிளவு தேசிய அளவில் ஆச்சரியத்துடனும் மாகாண அளவில் கவலையுடனும் பார்க்கப்பட்டது. ஆனால் பின்னாளில் நடந்த இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டங்களில் திராவிடர் கழகமும் திமுகவும் இருமுனைகளில் இருந்து போராடின.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 இந்தியை எதிர்த்து ஆகஸ்டு கிளர்ச்சி

மொழிப்போர் / அத்தியாயம் 10

இந்தி மொழியின் வளர்ச்சிக்கு மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பதினேழாவது பகுதியில் உள்ள 351வது பிரிவு சொல்லும் விஷயம் இது ஒன்றுதான். அரசியலமைப்புச் சட்டமே சொல்லிவிட்டதால் அடுத்தகட்ட வேலைகளைத் தொடங்கியது மத்திய அரசு. இந்த இடத்தில் இந்தி மொழியின் வளர்ச்சிக்காகச் செய்யப்பட்ட சில முக்கிய காரியங்களை மட்டும் பார்க்கலாம்.

இந்தி டெலி பிரிண்டர்கள், தட்டெழுத்துப் பலகைகளைச் சீர்செய்து, முறைப்படுத்தப்பட்டன. இந்தி சுருக்கெழுத்து முறையை உருவாக்கி வளர்க்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இந்தி பேசாத பகுதிகளில் இந்தி ஆசிரியர்களுக்கான பயிற்சிக் கல்லூரிகளை அமைக்கும் திட்டங்கள் தொடங்கின. முக்கியமாக, கேந்த்ரீய இந்தி சம்மேளம் என்ற அமைப்பு இதற்கான பணியில் ஈடுபட்டது. இந்தி கற்றுத்தரும் தனியார் நிறுவனங்களுக்கு மானியங்கள் தரப்பட்டன. இந்தி அகராதிகளைத் தயாரிப்பது, இந்தி மொழியில் லிங்குவாஃபோன் மற்றும் டேப்புகள் தயாரிப்பது ஆகிய பணிகள் வேகமெடுத்தன.

பாஷ என்ற பெயரில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வெளியாகும் இந்தி பத்திரிகை ஒன்றும் இந்தி சமாச்சாட் ஜகத் என்ற பெயரில் மாதப் பத்திரிகை ஒன்றும் தொடங்கப்பட்டது. இந்தி பேசாத பகுதிகளைச் சேர்ந்த இந்தி எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கும் திட்டம், மத்திய அரசு ஊழியர்கள், இந்தி பேசாத பகுதிகள், வெளிநாடுகளிலும் உள்ளவர்களுக்கு அஞ்சல் துறை மூலமாக இந்தியைப் பயிற்றுவிக்கும் திட்டம் ஆகியன செயல்படுத்தப்பட்டன.

தனியார் பதிப்பகங்களுடன் இணைந்து இந்தி புத்தகங்களை வெளியிடுதல், இந்தி பேசாத மாநிலங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் நூலகங்களுக்கும் இந்தி புத்தகங்களை இலவசமாக அனுப்புதல் ஆகிய பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. இந்தியை சுயமாகவும் சுலபமாகவும் கற்றுக்கொள்ளும் புத்தகங்கள் வெளியிடப்பட்டன.

அத்தனைக்குமான செலவுகளும் மத்திய அரசுடையது என்பது கவனிக்கத்தக்கது. ஆட்சி மொழி அந்தஸ்து காரணமாக இந்தி வளர்ச்சித் திட்டங்கள் பெருமளவில் செயல்படுத்தப்பட்ட போது இந்தி பேசாத மக்கள் மத்தியில் இரண்டு கேள்விகள் எழுந்தன.

மொழி வளர்ச்சிக்காக இத்தனைப் பணிகளையும் இனிமேல்தான் செய்யவேண்டும் என்ற நிலையில் இருக்கும் இந்தியை ஏன் இந்தியாவின் ஆட்சிமொழியாக ஆக்கவேண்டும் என்பது முதல் கேள்வி. இந்தி மொழியின் வளர்ச்சிக்காக இந்த அளவுக்கு முயற்சிகள் எடுக்கும் மத்திய அரசு, மற்ற மாநில மொழிகளுக்கு என்ன மாதிரியான முயற்சிகளை எடுக்கப்போகிறது என்பது இரண்டாவது கேள்வி. இந்தக் கேள்விகள்தான் இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ச்சியாக நடப்பதற்குத் தேவையான உந்துசக்தியாக இருந்தன.

மத்திய அரசின் இந்தி வளர்ச்சி நடவடிக்கைகள் எப்போதெல்லாம் இந்தித் திணிப்பு நடவடிக்கையாக எல்லை மீறுகிறதோ அப்போதெல்லாம் இந்தி பேசாத மக்கள் எதிர்க்குரல் எழுப்பினார்கள். குறிப்பாக, தமிழர்கள். நாணயங்கள், ரூபாய் நோட்டுகளில் இந்தி எழுத்துகள் மட்டுமே பொறிக்கப்பட்டபோது எதிர்த்தனர். மத்திய அரசு அலுவலகங்களில் இந்தி தெரிந்தவர்களுக்குக் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்தபோது எதிர்ப்பு தெரிவித்தனர்.

அந்த வகையில் 1952 ஆம் ஆண்டு மத்திய அரசு எடுத்த இந்தித் திணிப்பு நடவடிக்கைகளுள் ஒன்று, ரயில் நிலையங்களில் உள்ள பெயர்ப்பலகைகளில் இந்திக்கு முன்னுரிமை கொடுத்தது. ஆங்கிலம் மற்றும் சம்பந்தப்பட்ட மாநில மொழிக்கு அடுத்த இடங்களே தரப்பட்டன. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு திராவிடர் கழகம் கண்டனம் தெரிவித்தது.

ரயில் நிலையங்களில் இருக்கும் இந்தி எழுத்துகளைத் தார்பூசி அழிக்கவேண்டும் என்று சொன்ன பெரியார், இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவு தருவது என்பது வெறும் அரசியல் பணி அல்ல; இதுவொரு மொழிப் பாதுகாப்புப் பணி என்றே ஒவ்வொரு தமிழரும் கருதவேண்டும் என்றார்.

27 ஜூலை 1952 அன்று விடுதலையில் இந்தி நம் கழுத்துக்குச் சுருக்கு என்ற தலைப்பில் தலையங்கம் எழுதிய பெரியார், 1 ஆகஸ்டு 1952 அன்று ரயில் நிலையங்களின் பெயர்ப்பலகைகளில் உள்ள இந்தி எழுத்துகளைத் தார்பூசி அழிக்கும் போராட்டத்துக்கு அழைப்புவிடுத்தார். அப்போது சென்னை மாகாண முதலமைச்சராக இருந்தவர் ராஜாஜி. ஆம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சென்னை மாகாண அரசு ராஜாஜியின் வசம் வந்துசேர்ந்திருந்தது.

கடந்த காலங்களில் இரண்டு முறை இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டங்கள் நடந்துள்ளபோதும் இந்த மூன்றாவது போராட்டம் சில விஷயங்களில் மிகவும் முக்கியமானது என்று சொன்னார் பெரியார். குறிப்பாக, கடந்த காலங்களில் நடந்த போராட்டங்கள் வர்ணாசிரம எதிர்ப்பின் ஒருபகுதியாக நடந்தவை. ஆனால் இம்முறை நடக்கவிருக்கும் போராட்டங்கள் அதையும் தாண்டியவை என்றார் பெரியார். அந்தக் கருத்தை தலையங்கத்தில் பின்வருமாறு எழுதினார்.

இந்தக் கிளர்ச்சி கட்டாய முறைக்கு மாத்திரம் அல்லாமல் அரசியலிலும் சமுதாய இயலிலும் கல்வி இயலிலும் அரசாங்க ஆதரவில் அரசாங்க நடப்பில் திராவிட நாட்டில் இந்தி தலைகாட்டக்கூடாது என்பதற்கும் ஆகும். ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால், ரயில் பலகைகளில், போஸ்ட் ஆபீசுகளில், கார்டு கவர்களில், போஸ்ட் முத்திரைகளில் கட்டாயமாக இந்தியை சர்க்கார் புகுத்துகிறார்கள். அவர்கள் ஆட்சி முறையில் குழாயில் தண்ணீர் வருவது போல வந்து இந்தி புகுந்துகொண்டிருக்கிறது.

இந்தித் திணிப்புக்கு எதிராக திராவிடர் கழகம் போராட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில் திமுகவும் போராட்டக்களத்தில் இறங்கத் தயாரானது. முன்னதாக, கோவில்பட்டியில் நடந்த திமுக மாநாட்டில் இந்தித் திணிப்புக்கு எதிராக திமுக தொடர்ந்து போராட்டம் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. அதைச் செயல்படுத்தும் வகையில் 26 ஜூலை 1952 அன்று கூடிய திமுக செயற்குழுவில் ஆகஸ்டு மாதம் நடக்கவிருக்கும் போராட்டங்களில் திமுகவும் கலந்துகொள்வது என்று முடிவுசெய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக திமுக சார்பில் அண்ணா அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

நமது எதிரியின் வெறியை அடக்க பெரியார் அவர்களும் ஆகஸ்டு முதல் தேதியைக் குறிப்பிட்டு வெளியிட்டிருக்கிறார்கள். 1950 ஆகஸ்டில் நாம் எச்சரித்தோம். 1952 ஆகஸ்டை அவர் தேர்ந்தெடுக்கிறார்! இரட்டைக்குழல் துப்பாக்கி வடநாட்டு இந்தி ஆதிபத்தியத்தின்மீது தாக்குதல் நடத்தப்போகிறது. மகிழ்கிறோம்!

ஆகஸ்டு முதல் நாள் முதல் கழகக் கொடியை மனத்திலே நினைத்து, அதன் ஒரு பாதியிலே நெளியும் சிகப்பு நாம் சிந்திய ரத்தம் என்பதை மறவாமல் தாரும் பிரஷ்ஷுமாகப் புறப்படுங்கள். இந்தியினை அழியுங்கள்!

திராவிடர் கழகம் சார்பில் யார், யார் எங்கெல்லாம் போராட்டங்களில் ஈடுபடப்போகிறார்கள் என்பது பட்டியல் போட்டு பகிரங்கமாக அறிவிக்கப்பட்டது. அதைப்போலவே திமுக சார்பிலும் அண்ணா, நெடுஞ்செழியன், ஈ.வெ.கி. சம்பத், கருணாநிதி உள்ளிட்டோர் இந்தி எழுத்துகளை அழிக்கும் பணியில் ஈடுபடுவதற்குத் தயாராகினர். கடந்த காலங்களில் நடந்த மொழிப்போராட்டங்கள் துப்பாக்கிச்சூடு, தடியடி என்று பல நாள்களுக்கு நீடித்ததால் இம்முறை நடக்கும் போராட்டத்தை மாகாண அரசு எப்படி அணுகப் போகிறது என்ற கேள்வி எழுந்தது. அந்தக் கேள்வியை சட்டமன்றத்தில் எழுப்பினார் சி.பா. ஆதித்தனார்.

இந்தி எழுத்து அழிப்புப் போராட்டம் நடத்தும் திராவிடர் கழகத்தினருக்கு எதிராக போலீஸ் படையை ஏவப்போவதில்லை என்று பதிலளித்தார் முதலமைச்சர் ராஜாஜி. 1938ல் மொழிப்போராட்டம் நடந்தபோது சென்னை மாகாணத்தை ஆட்சி செய்தவர் ராஜாஜி. அப்போது போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் ஏவப்பட்டதால்தான் போராட்டம் தீவிரமடைந்தது. அந்த அனுபவம் கொடுத்த பாடத்தின் காரணமாகவே இம்முறை காவல்துறையை ஏவாமல் இருப்பதன்மூலம் போராட்டம் தீவிரமடைவதற்கான பாதையை அடைத்திருந்தார் முதலமைச்சர் ராஜாஜி.

திராவிடர் கழகம் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தினர் மாகாணம் தழுவிய அளவில் இந்தி எழுத்து அழிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட திராவிடர் கழகத்தினர் புடைசூழ ஊர்வலமாகச் சென்ற பெரியார், திருச்சி ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகளை அழிக்கும் போராட்டத்தில் கலந்துகொண்டார். திராவிடர் கழகம் சார்பில் பெரியார் தவிர குத்தூசி குருசாமி, தி.பொ. வேதாச்சலம், கே.ஏ. மணியம்மை, டார்பிடோ ஜனார்த்தனம் உள்ளிட்ட தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு ரயில் நிலையத்தில் அண்ணா உள்ளிட்ட திமுகவினர் இந்தி எழுத்துகளை தார்பூசி அழித்தனர். திமுக சார்பாக கோயம்புத்தூரில் ஈ.வெ.கி. சம்பத், மதுரையில் நெடுஞ்செழியன், கடலூரில் கே.ஏ. மதியழகன், திருச்சியில் கருணாநிதி, சென்னையில் என்.வி. நடராசன், சத்தியவாணி முத்து ஆகியோர் தலைமையில் போராட்டங்கள் நடந்தன.

போராட்டம் முடிவடைந்தபிறகு பேசிய பெரியார் ஒரு முக்கியமான செய்தியைப் பகிர்ந்துகொண்டார்.

‘ஸ்டேஷனில் உள்ள எழுத்துகள் போய்விட்டதால் இந்தியே ஒழிந்துவிட்டது என்று நாங்கள் மனப்பால் குடிக்கவில்லை. தமிழ்நாட்டில் இருந்து இந்தி பரிபூரணமாக ஒழிக்கப்பட்டால்தான் வெற்றி.’

இந்தித் திணிப்பு எதிராக 1952 ஆகஸ்டில் நடந்த போராட்டத்தைப் போலவே ஒவ்வொரு ஆண்டும் நடத்த வேண்டும் என்று அறிவித்தார் பெரியார். அதன்படியே 1953 ஆகஸ்டு மாதத்திலும் இந்தி எழுத்து அழிப்புப் போராட்டம் நடந்தது. இம்முறை போராட்டத்துக்கு எதிர்வினை ஒன்று காத்திருந்தது. அதன் பின்னணியில் இருந்தவர் ம.பொ.சி.

தார் சட்டியுடன் திராவிடர் கழகத்தினர் வந்தால் நீங்கள் மண்ணெண்ணெய் புட்டியுடன் செல்லுங்கள் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு அறிவுரைகள் வந்துசேர்ந்தன. திராவிடர் கழகத்தினரால் தார் பூசப்பட்ட பகுதிகளில் காங்கிரஸ் தொண்டர்கள் மண்ணெண்ணெய் கொண்டு தாரை நீக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ம.பொ. சிவஞானத்தின் தமிழரசுக் கழகத்தினர் உதவிகரமாக இருந்தனர். தமிழ்மொழி ஆர்வலராகவும் தமிழ்ப்பற்றாளராகவும் அறியப்பட்ட ம.பொ.சியின் இத்தகையை நடவடிக்கை திராவிட இயக்கத்தினரால் கடுமையான விமரிசனத்துக்கு ஆளானது.

இந்நிலையில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 344 வது பிரிவின்படி ஆட்சிமொழி ஆணையம் அமைக்கப்பட்டது. சிக்கல்களைக் களைவதுதான் நோக்கம் என்று சொல்லி அமைக்கப்பட்ட ஆணையம் அடுத்தடுத்த சிக்கல்களுக்கு அடியெடுத்துக் கொடுத்தது!



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 அதிர்ச்சி கொடுத்த ஆட்சிமொழி ஆணையம்

மொழிப்போர் / அத்தியாயம் 11

இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டங்கள் ஒருபக்கம் நடந்துகொண்டிருக்க, இன்னொரு பக்கம் இந்திய அரசியலமைப்புச் சட்டம் 344வது பிரிவின்படி, குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் 7 ஜூன் 1955 அன்று ஆட்சி மொழி ஆணையம் ஒன்றை அமைத்தார். அதன் தலைவராக பி.ஜி.கேர் நியமிக்கப்பட்டார். அந்தக் குழுவில் மேற்குவங்கத்தைச் சேர்ந்த சுனிதகுமார் சாட்டர்ஜி, தென்னகத்தைச் சேர்ந்த பி. சுப்பராயன் உள்ளிட்ட 21 பேர் இடம்பெற்றனர். அந்த ஆணையம் செய்யவேண்டிய பணிகள் அனைத்தும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திலேயே தெளிவாக வரையறை செய்யப்பட்டிருந்தன.

இந்திய அரசில் உள்ள துறைசார்ந்த பணிகளுக்கு இந்தி மொழியைப் பெருவாரியாகப் பயன்படுத்துதல், ஆங்கிலமொழியின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துதல், உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றச் சட்டங்கள் மற்றும் மசோதாக்களில் பயன்படுத்தவேண்டிய மொழியை அடையாளம் காணுதல் ஆகியன அந்த ஆணையத்தின் பணிகள். முக்கியமாக, இந்திய யூனியனின் ஆட்சிமொழி குறித்தும், மாநிலங்களுக்கு இடையே பரஸ்பரம் தொடர்புகொள்ளவேண்டிய மொழி குறித்தும் குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரை செய்யவேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது.

அந்தப் பரிந்துரைகள் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கும் சில வரையறைகள் இருந்தன. அதாவது, ஆணையம் தனது பரிந்துரைகளைச் செய்யும்போது இந்தியாவின் மொழி, பண்பாடு, அறிவியல் வளர்ச்சி ஆகியவற்றையும் அரசுப் பணிகளைப் பொறுத்தவரை இந்தி பேசாத பகுதிகளைச் சேர்ந்த மக்களின் நியாயமான கோரிக்கைகள் மற்றும் நலன்களையும் கருத்தில் கொள்ளவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

சற்றேறக்குறைய ஓராண்டுகாலத்துக்குத் தனது ஆய்வுப்பணிகளை நடத்தியது இந்த ஆணையம். முதலில் கேள்வித்தாள் ஒன்றைத் தயாரித்து, மாநில அரசுகள், மாநில அரசு அதிகாரிகள், நீதிபதிகள் மற்றும் சில பொது நிறுவனங்கள் ஆகியோருக்கு அனுப்பிவைத்தது. மொத்தமாக, 1094 பேரிடம் இருந்து விடைகள் வந்துசேர்ந்தன. 930 பேரிடம் இருந்து வாய்மொழிச் சான்றுகள் பெறப்பட்டன. ஆக, 2024 பேரின் கருத்துகளையும் பதில்களையும் அடிப்படையாகக் கொண்டு, விரிவான அறிக்கை ஒன்றைத் தயார் செய்த ஆணையம், அந்த அறிக்கையை 6 ஆகஸ்டு 1956 அன்று குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத்திடம் சமர்ப்பித்தது.

கேள்வித்தாள் தயாரிக்கப்பட்ட விதத்தில் தொடங்கி அது யார், யாருக்கெல்லாம் அனுப்பட்டது என்பது வரை அனைத்தையும் இந்தித் திணிப்பு எதிர்ப்பாளர்கள் கேள்வி எழுப்பினர். குறிப்பாக, இந்திக்கு ஆதரவாக இருக்கின்ற காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்கின்ற மாநில அரசுகளுக்கும் அந்த அரசாங்கத்தில் வேலைபார்க்கும் அதிகாரிகளுக்கும் நீதிபதிகளுக்கும் கேள்வித்தாள் அனுப்பிய ஆணையம், இந்தித் திணிப்பைத் தீவிரமாக எதிர்க்கக்கூடிய திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களிடமோ கருத்து கேட்கவில்லை. அவர்களைப் புறக்கணித்துவிட்டது. இந்தி, ஆங்கிலம் ஆதரவாளர்களின் கருத்துகள், வாய்மொழி சாட்சிகளையும் அடிப்படையாக வைத்துத் தயாரிக்கப்பட்ட அறிக்கை இந்தி பேசாத மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்க வாய்ப்பேயில்லை என்றனர்.

ஆட்சி மொழி ஆணையத்தில் இருந்தவர்கள் பலரும் இந்தி மொழிக்கு ஆதரவானவர்கள் என்பதால் அவர்களுடைய கருத்துகள் அனைத்தும் இந்தி மொழிக்கும் சாதகமாகவே இருந்தன. அதேசமயம், சுனிதகுமார் சாட்டர்ஜி, பி. சுப்பராயன் ஆகிய இருவரும் எதிர்க்கருத்துகளைப் பதிவுசெய்தனர்.

“ஆட்சி மொழி ஆணையத்தின் பரிந்துரைகளில் உள்ள கருத்துகள் பெரும்பாலும் இந்திய அரசில் உள்ள இந்தி பேசுவோரின் கருத்துகளே. இந்தப் பரிந்துரைகளால் உடனடியாகவும் நீண்ட கால நோக்கிலும் இந்தி மொழி பேசுவோரே பயன்பெறுவர். இந்தியாவில் இந்திமொழி பேசுவோர் முதல் நிலைக் குடிகளாகவும் இந்திமொழி பேசாதோர் இரண்டாம் நிலைக் குடிகளாகவும் ஆக்கப்படுவர். முக்கியமாக, இந்தி பேசாத மக்கள் தங்கள் மொழி குறித்து என்ன கருதுகிறார்கள் என்பதை அறிந்துகொள்வதற்கு ஆணையம் ஒரு சிறு முயற்சியையும் செய்ததாகத் தெரியவில்லை’ என்று கருத்துவெளியிட்டார் சுனித குமார் சாட்டர்ஜி.

சரி, அப்படியென்ன பரிந்துரைகளைச் செய்திருந்தது ஆட்சிமொழி ஆணையம்?

  • ஆட்சித்துறைக்குத் தேவையான சட்டங்கள், நெறிகள், கையேடுகள், குறிப்பு நூல்கள்
  • ஆகியவற்றை இந்தி மொழியில் மொழிபெயர்க்கவேண்டும்.
  • இந்தி மொழிக்குத் தேவையான எந்திரங்களையும் கருவிகளையும் விரைவாகத் தயாரிக்க வேண்டும்.
  • இந்தி மொழி மீது விருப்பம் உள்ள அரசு ஊழியர்கள் அதனைக் கற்றுக்கொள்ளலாம் என்ற நடைமுறை தகுந்த பயனைக் கொடுக்காத பட்சத்தில் அவர்களுக்கு கால வரையறை நிர்ணயித்து, இந்தியைக் கட்டாயமாகக் கற்றுக்கொள்வதற்கு ஏற்பாடுகள் செய்யவேண்டும்.
  • அரசு ஊழியர்களுக்கு ஆங்கிலத் திறமை எந்த அளவுக்கு வேண்டும் என்று எதிர்பார்க்கிறோமோ, அதே அளவு திறமை இந்தியிலும் இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பதில் தவறில்லை. ஆகவே, குறிப்பிட்ட கால அளவில் தகுந்த அளவு இந்திப் பயிற்சி பெறாதவர்களுக்குத் தண்டனை கொடுப்பது பொருத்தமானதுதான்.
  • மத்திய அரசின் தலைமைச் செயலகப் பணிகள் அனைத்தும் இந்தியிலே நடைபெறும் என்பதால் அங்கு வேலை செய்பவர்கள் இந்தி அறிவு படைத்தவர்களாக இருக்கவேண்டியது அவசியம்.
  • மாநில அரசு ஊழியர்கள் மத்திய அரசுடன் தொடர்புகொள்ள வேண்டியிருப்பதால் அவர்களும் இந்தியில் பயிற்சி பெற்றிருக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்துவது நியாயமானதே.
  • நாடாளுமன்றத்தில் இயற்றப்படும் சட்டங்களும் மாநில சட்டமன்றங்களில் இயற்றப்படும் சட்டங்களும் ஒரே மொழியில் இருக்கவேண்டுமாதலால், நிலையான ஆணைகளும் விதிகளும் இந்தி மொழியிலேயே இருக்கவேண்டும்;
  • மொழிமாற்றத்துக்கு ஏற்ற காலம் வரும்போது உச்சநீதிமன்றம் இந்தி மொழியிலேயே செயல்படவேண்டும்.
  • மொழிமாற்றம் செய்வதற்குரிய காலம் வரும்போது உயர்நீதிமன்றத் தீர்ப்புகள், கட்டளைகள், ஆணைகள் அனைத்தும் இந்தி மொழியிலேயே இருக்கவேண்டும் என்பதற்காக நீதிமன்றங்களில் மொழிபெயர்ப்பு அமைப்புகளை ஏற்படுத்தவேண்டும்.
  • மத்திய, மாநில அரசுகளின் சட்டப்புத்தகங்களை இந்தியில் தயாரிக்கும் பணியை மத்திய அரசு செய்யவேண்டும்.
  • மத்திய அரசுப் பணிகளில் அதிகாரிகளாக வருபவர்களின் மொழியறிவை உத்தேசித்து,
  • இந்தியில் ஒரு கட்டாய வினாத்தாளை ஏற்படுத்துவது தகுதியானது.
  • இந்தி பரப்பும் பணியில் ஈடுபட்டிருக்கும் தனியார் அமைப்புகள் தங்களது பணிகளை விரிவுபடுத்தத் தேவையான நிதியுதவிகளை மத்திய அரசு செய்யவேண்டும்.

இந்தி பேசாத மக்கள் இந்தியையும் கற்றுக்கொள்ளவேண்டும் என்று மத்திய அரசு சொல்லவில்லை. இந்தியைக் கற்றுக்கொண்டே தீரவேண்டும்; அப்படிக் கற்றுக்கொள்வதைத்தவிர வேறு வழியே உங்களுக்கு இல்லை என்று இந்தி பேசாத மக்கள் மீது இந்தியை வலுக்கட்டாயமாகத் திணிக்க முயல்கிறது என்பதற்கு மேலே உள்ள அம்சங்களில் இருக்கும் அழுத்தம்கொடுக்கப்பட்ட அம்சங்கள் பொருத்தமான உதாரணங்கள். அதாவது, கால்வரையறை நிர்ணயித்து இந்தியக் கற்றுக்கொள்ள வேண்டும்; கற்றுக்கொள்ளாதவர்களுக்கு தண்டனை தரவேண்டும்; பணியில் நீடிக்கவேண்டும் என்றால் இந்தியைக் கற்றுக்கொண்டே தீரவேண்டும்.

ஆட்சி மொழி ஆணையத்தின் அறிக்கை 12 ஆகஸ்டு 1957 அன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையைத் தீவிரமாக ஆய்வு செய்து, கருத்து தெரிவிப்பதற்கு வசதியாக நாடாளுமன்றக் குழு ஒன்றை அமைக்கவேண்டும் என்று அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளதை ஏற்கெனவே பார்த்தோம். அப்படிப்பட்ட நாடாளுமன்றக் குழு ஒன்று மத்திய உள்துறை அமைச்சர் கோவிந்த வல்லப பந்த் தலைமையில் அமைக்கப்பட்டது.

அந்தக் குழுவில் மக்களவை உறுப்பினர்கள் இருபது பேரும் மாநிலங்களவை உறுப்பினர்கள் பத்து பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்தப் புதிய நாடாளுமன்றக் குழுவின் உறுப்பினர்கள் மாநில அரசுகள், அதிகாரிகள், மொழியியல் நிபுணர்கள், மொழிப்பண்டிதர்கள், கல்வியாளர்கள், அரசியல் கட்சிகள் ஆகியோரிடம் கருத்துகளைக் கேட்டுத் தெரிந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்தக் குழுவினரோ ஆட்சிமொழி ஆணையம் கொடுத்த பரிந்துரை அறிக்கையை மட்டுமே ஆய்வுசெய்யத் தொடங்கியது.

இதில் என்ன விநோதம் என்றால் நாடாளுமன்றக்குழுவினர் நடத்திய ஆலோசனைக் கூட்டங்கள் அனைத்தும் ரகசியமாகவே நடத்தப்பட்டன. பத்திரிகையாளர்கள், நிருபர்கள் என்று எவரும் அந்தக் கூட்டங்களில் அனுமதிக்கப்படவில்லை. நீண்ட ஆய்வுகளுக்கும் ஆலோசனைகளுக்கும் பிறகு 8 பிப்ரவரி 1959 அன்று நாடாளுமன்றக் குழுவினரின் அறிக்கை குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அந்த அறிக்கை பின்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

அந்த அறிக்கையுடன் நாடாளுமன்ற உறுப்பினர் ஃபிராங்க் அந்தோணியின் மறுப்புக்குறிப்பு ஒன்றும் இணைக்கப்பட்டது. அந்த மறுப்புக்குறிப்பில், ‘இந்தி வெறியர்களின் அடாவடித்தனங்கள் நாட்டைப் பிளவுபடுத்துவதிலும் சிறுபான்மை மொழிகளை நசுக்குவதிலுமே முடியும்’ என்று எச்சரித்திருந்தார் ஃபிராங்க் அந்தோணி,

அப்போது அந்த அறிக்கை தொடர்பாக இந்தி பேசாத நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல சந்தேகங்களை எழுப்பினர். சில உறுப்பினர்கள் முக்கியமான திருத்தங்களைக் கொண்டுவரவேண்டும் என்று விரும்பினர். ஆனால் அப்படியான திருத்தங்களைச் செய்வதற்கு நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்றார் மத்திய உள்துறை அமைச்சர். இந்த இடத்தில்தான் முக்கியமான சர்ச்சை எழுந்தது.

நாடாளுமன்றக் குழுவினர் தமது அறிக்கையை முதலில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருந்தால் அந்த அறிக்கையில் உள்ள குறைபாடுகள், முரண்பாடுகள் குறித்து விரிவாகவும் தீர்க்கமாகவும் விவாதித்து, தேவையான திருத்தங்களைச் செய்து, அதன்பிறகு அந்த அறிக்கையை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்திருக்கவேண்டும். ஆனால் அறிக்கை நேரடியாக குடியரசுத் தலைவருக்குச் சென்றுவிட்டதால் அதில் திருத்தங்கள் செய்ய வேண்டிய உரிமைகளை நாடாளுமன்றம் இழந்துவிட்டது என்ற குற்றச்சாட்டை இந்தி பேசாத நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்தனர்.

குறிப்பாக, ஆந்திராவைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் திருமலைராவ், “அவையில் விவாதிப்பதற்காக அறிக்கை வந்திருக்கிறது. ஆனால் எந்தத் திருத்தத்தையும் அதில் செய்யக்கூடாது என்றால் எதற்காக அந்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல்செய்யவேண்டும்?’ என்று கேள்வி எழுப்பினார். இந்நிலையில் பிரச்னை குறித்துப் பேசிய பிரதமர் ஜவாஹர்லால் நேரு, “நாடாளுமன்றக் குழுவின் உறுப்பினர்கள் சமர்ப்பித்துள்ள அறிக்கையின் ஒவ்வொரு வரியையும் ஏற்றுக்கொள்கிறேன் என்றுகூறி உறுப்பினர்களை ஏமாற்றுவதற்கு நான் விரும்பவில்லை. அதேபோல, ஒவ்வொரு வரியையும் ஒவ்வொருவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும் நான் கூறவில்லை’ என்றார்.

இந்தி பேசாத நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றக் குழுவின் அறிக்கை ஒருதலைப்பட்சமாக இருக்கிறது என்றும் இந்தி பேசாத மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுவிட்டது என்றும் விடாமல் எதிர்க்குரல் எழுப்பினர். இந்நிலையில் இந்தி பேசாத மக்களைச் சமாதானம் செய்யும் வகையில் 7 ஆகஸ்டு 1959 அன்று நாடாளுமன்றத்தில் முக்கியத்துவம் வாய்ந்த வாக்குறுதி ஒன்றைக் கொடுத்தார் பிரதமர் ஜவாஹர்லால் நேரு.

‘எவ்வளவு காலத்துக்கு மக்கள் விரும்புகிறார்களோ, அதுவரையில் ஆங்கிலம் இருக்கவேண்டும். இதற்கான முடிவுகூறும் உரிமையை இந்தி பேசும் மக்களிடம் நான் விடமாட்டேன். இந்தி பேசாத மக்கள்தான் முடிவெடுக்க வேண்டும்.’

பிரதமர் நேரு கொடுத்த வாக்குறுதி இந்தி பேசாத மக்களுக்கு மிகப்பெரிய தெம்பைக் கொடுத்தது!



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 நேருவுக்கு சம்பத் எழுதிய கடிதம்

மொழிப்போர் / அத்தியாயம் 12

7 ஏப்ரல் 1960 அன்று இந்திய குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத்திடம் இருந்து புதிய ஆணை ஒன்று வெளியானது. 1965 ஆம் ஆண்டு முதல் இந்தி மட்டுமே இந்தியாவின் ஆட்சிமொழியாக ஆகிவிடும். அதற்கான ஆயத்த நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்பதுதான் அதன் உள்ளடக்கம்.

இந்தி பேசாத மக்கள் விரும்பும்வரை ஆங்கிலமே இருக்கும் என்ற பிரதமர் நேருவின் வாக்குறுதியை அடித்து நொறுக்கும் வகையில் வெளியான இந்த அறிவிப்பு இந்தி பேசாத மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக, தமிழ்நாட்டு முக்கிய அரசியல் அமைப்புகளான திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியன குடியரசுத் தலைவரின் இந்தித் திணிப்பு அறிவிப்புக்கு எதிராகப் போராட்டம் நடத்துவதற்குத் தயாராகின.

இந்தி என்னும் விஷ விருட்சத்தின் ஆணிவேரைக் கெல்லி எறிய ஒரே வழிதான் இருக்கிறது. அது, நாட்டுப் பிரிவினை. இந்திய யூனியன் வரைபடத்தில் தமிழ்நாடு தவிர்த்த மற்ற பகுதிகளுக்குத் தீவைத்து எரிக்கும் போராட்டத்தை நடத்தவேண்டும் என்று அழைப்பு விடுத்தார் திராவிடர் கழகத் தலைவர் பெரியார். திராவிடர் கழகத்தைப் பின்பற்றி திமுகவும் போராட்டத்தில் இறங்கத் தயாரானது.

18 ஜூன் 1960 அன்று குமாரபாளையத்தில் திமுக பொதுக்குழு கூடியது. இரண்டு நாள்களுக்கு நடந்த ஆலோசனைகளுக்குப் பிறகு மத்திய அரசின் இந்தித் திணிப்பு குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 30 ஆகஸ்டு 1960க்குள் குடியரசுத் தலைவர் தனது உத்தரவைத் திரும்பப்பெறவேண்டும். இந்தி பேசாத மக்களைக் கலந்தாலோசிக்காமல் இந்தி பற்றி முடிவெடுப்பதில்லை என்று அறிவிக்கவேண்டும். தவறினால், மறுநாளில் இருந்து இந்தி ஆதிக்கத்தில் இருந்து தென்னகத்தை விடுவிக்கும் விடுதலைப்போர் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

போராட்டத்தை நடத்துவதற்கு வசதியாக ஈ.வெ.கி. சம்பத் தலைமையில் போராட்டக்குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்தக் குழுவில் இரா. நெடுஞ்செழியன், க. அன்பழகன், மு. கருணாநிதி, கே.ஏ. மதியழகன் உள்ளிட்ட பலரும் இடம்பெற்றனர். போராட்டக்குழுவினர் விளக்கக் கூட்டங்கள், கண்டனக் கூட்டங்கள் ஆகியவற்றுக்கு ஏற்பாடுசெய்து, கலந்துகொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.

திமுகவின் போராட்ட அறிவிப்பு முதலமைச்சர் காமராஜரின் கவனத்துக்குச் சென்றது. திமுகவினர் போராட்டம் நடத்தினால் அரசு கடும் நடவடிக்கைகளை எடுக்கவேண்டியிருக்கும் என்றார். முக்கியமாக, துப்பாக்கி இருக்கிறது. அதில் தோட்டாவும் இருக்கிறது என்று காமராஜர் பேசியதாக அண்ணாவுக்கு செய்தி வந்தது. “1938லே மொழிப்போர் நடந்தபோது மூன்று இளைஞர்கள்தான் தியாகம் செய்தனர். தற்போது திமுகவில் 3300 கிளைகள் இருக்கின்றன. மூன்று லட்சம் தொண்டர்கள் இருக்கிறார்கள்’ என்று காமராஜருக்குப் பதில் கொடுத்தார்.

பின்னர் பொதுக்குழுத் தீர்மானங்களைப் பொதுமக்களுக்கு விளக்கும் வகையில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டன. அப்படியொரு பொதுக்கூட்டத்தில் பேசிய போராட்டக்குழுத் தலைவர் ஈ.வெ.கி. சம்பத்தின் பேச்சு கவனிக்கத்தக்கது.

‘காமராசருக்கு நாட்டு மக்கள் மீது, மொழியின் மீது நல்லெண்ணம் இருக்குமானால், இங்கு நடைபெறுவதை டில்லிக்கு எடுத்துச்சொல்லி, குடியரசுத் தலைவரின் தாக்கீதை நிறுத்திவைக்கச் சொல்லவேண்டும்… ஆனால் அவர் நம்முடைய மைதானத்துக்குள்ளே புகுந்து ஏதாவது செய்ய முடியுமா? என்று பார்க்கிறார். அதுதான் முடியாது’

பொதுக்குழுத் தீர்மானங்களை மக்களுக்கு விளக்கியதோடு நிறுத்திக்கொள்ளாமல் போராட்டக்குழுத் தலைவர் என்ற முறையில் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத்துக்குக் கடிதம் ஒன்றை எழுதினார் ஈ.வெ.கி.சம்பத். ‘தவறான யோசனை அடங்கிய 27 ஏப்ரல் 1960 தேதியிட்ட தங்களுடைய கட்டளையில் அடங்கியிருக்கக்கூடிய, அச்சுறுத்துகின்ற கேடுகளை, திராவிட சமுதாயம் முழுதுமே எதிர்த்துக்கொண்டு இருப்பதுடன், மேற்படி கட்டளையைத் தாங்கள் திரும்பப்பெற்றுக்கொள்வதை பேராதரவுடன் எதிர்நோக்கி இருக்கிறது’ என்று எழுதியிருந்தார் ஈ.வெ.கி. சம்பத்.

திமுக சார்பில் பல பொதுக்கூட்டங்கள் நடந்தன. அவற்றின்மூலம் தமிழ் மக்கள் மத்தியில் இந்தித் திணிப்புக்கு எதிரான உணர்வுகள் மேலோங்கத் தொடங்கின. நிலைமை மோசமடைவதைத் தடுக்கும் வகையில் திமுக நடத்தும் கூட்டங்களுக்கு அனுமதி வழங்க மறுத்தது காமராஜர் தலைமையிலான தமிழக அரசு. ஏற்கெனவே தரப்பட்ட அனுமதிகளும் திரும்பப்பெறப்பட்டன. ஆனாலும் தடையை மீறிப் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டன.

குடியரசுத் தலைவரின் இந்தித் திணிப்பு உத்தரவுக்குக்கு திராவிடர் கழகமும் திமுகவும் பலத்த எதிர்ப்புகளைத் தெரிவித்துக் கொண்டிருந்த சமயத்தில் 14 ஜூலை 1960 அன்று மதுரையில் கூடிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, குடியரசுத் தலைவரின் இந்தித் திணிப்பு உத்தரவுக்கு வரவேற்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியது.

காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்றியதற்கு மறுநாள் ஈ.வெ.கி.சம்பத் தலைமையிலான இந்தி எதிர்ப்புப் போராட்டக்குழு கூடியது. இரா. நெடுஞ்செழியன், என்.வி. நடராசன், கே.ஏ. மதியழகன், க. அன்பழகன், மதுரை முத்து, கோவை. ராசமாணிக்கம், அன்பில் தர்மலிங்கம், கவிஞர் கண்ணதாசன் ஆகியோர் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். அந்தக்கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

  1. சென்னையில் திமுக சார்பாக இந்தி எதிர்ப்பு மாநாட்டை நடத்துவது.
  2. போராட்டத்தில் ஈடுபட விருப்பமுள்ளோரின் பட்டியலைத் தயார்செய்து போராட்டக்குழுத் தலைவருக்கு அனுப்புமாறு கிளைக்கழகச் செயலாளர்களைக் கேட்டுக்கொள்வது.
  3. திமுக ஆதரவு மாணவர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோருக்கு போராட்டத்தில் கலந்துகொள்வதில் இருந்து விலக்களிப்பது.
  4. போராட்ட நிதிக்காக 20 ஜூலை 1960 முதல் 27 ஜூலை 1960 வரை உண்டியல் மூலம் நிதிபெற்று தலைமைக் கழகத்துக்கு அனுப்பிவைக்குமாறு கழக நிர்வாகிகளைக் கேட்டுக்கொள்வது.

திட்டமிட்டபடி இந்தி எதிர்ப்பு மாநாடு ஒன்று சென்னை கோடம்பாக்கத்தில் 1 ஆகஸ்டு 1960 அன்று கூடியது. மாநாட்டுக்கு முன்பாக இந்தி எதிர்ப்பு சுவரொட்டிகளைத் தயார் செய்து சுவர்களில் ஒட்டுவதற்குத் தயாராகினர் திமுக தொண்டர்கள். ஆனால் அவற்றுக்கு அரசு திடீர் தடை விதித்தது. அதுவும், ஆபாச சுவரொட்டித் தடுப்புச் சட்டத்தின்கீழ். அரசின் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் இந்தி எதிர்ப்பு மாநாட்டுக்கு பலத்த ஆதரவு இருந்தது.

விரைவில் தமிழ்நாட்டுக்குச் சுற்றுப்பயணம் வரவிருக்கும் குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத்துக்கு எதிராகக் கறுப்புக்கொடி காட்டவேண்டும் என்றும் இந்தித் திணிப்பு அறிவிப்பைத் திரும்பப் பெறுக என்று கோஷங்களை எழுப்பவேண்டும் என்றும் அந்த மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது. அந்தப் போராட்டத்தின்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் பற்றி அண்ணா பேசினார்.

கறுப்புக்கொடி காட்டுகிற நேரத்தில் குடியரசுத் தலைவரைத் திரும்பிப் போ என்று எவரும் சொல்லக்கூடாது. “இந்தி ஒழிக! கட்டளையைத் திரும்பப் பெறுக!’ என்றுதான் முழங்க வேண்டும். குடியரசுத் தலைவர் செல்லும் காரில் எதையும் எவரும் எறியக்கூடாது. அவர் தங்கியிருக்கும் கட்டிடத்துக்கு அருகில் எவரும் செல்லக்கூடாது. இவற்றை மீறுபவர்களை துரோகிகள் என்று சொல்லமாட்டேன்; மாறாக, அவர்கள் என் தம்பிகளே அல்ல!

போராட்ட தினத்தன்று தொண்டர்கள் ஏந்த வேண்டிய கறுப்புக்கொடிகளை அந்த மாநாட்டில் வைத்தே தலைவர்கள் வழங்கினர் அண்ணா. போராட்டம் பெரிய அளவில் இருக்கும் என்பதை உணர்ந்த மத்திய உள்துறை அமைச்சர், இந்தி ஆட்சி மொழி குறித்த அரசின் நிலைப்பாட்டை விளக்கும் வகையில் பேசினார்.

பிரதமரின் வாக்குறுதியில் இருந்து மாறுபடும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை. அவர் அளித்த உறுதிமொழிக்கு ஏற்பவே அரசின் நடவடிக்கைகள் இருக்கும். இவையெல்லாம் குடியரசுத் தலைவரின் ஆணையிலேயே தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 1965க்குப் பிறகும் ஆங்கிலம் நீடிக்கவேண்டும் என்பதைத் திட்டவட்டமாகத் தீர்மானித்துவிட்டோம். இதை உறுதி செய்யும் வகையில் 1965க்கு முன்பாகவே நாடாளுமன்றத்தில் புதிய மசோதா கொண்டுவரப்படும்.

குடியரசுத் தலைவருக்குக் கறுப்புக்கொடி காட்டும் போராட்டத்தை நடத்துவது என்று முடிவுசெய்துவிட்ட நிலையில், அதுகுறித்து பிரதமர் நேருவுக்குக் கடிதம் எழுதினார் போராட்டக்குழுத் தலைவர் ஈ.வெ.கி. சம்பத். அந்தக் கடிதத்தில், ‘ஏற்க மறுக்கும் மக்கள் மீது இந்தி ஒருபோதும் திணிக்கப்பட மாட்டாது’ என்ற பிரதமர் நேருவின் உறுதிமொழியை நினைவூட்டிய சம்பத், அந்த உறுதிமொழியை உருக்குலைக்கும் வகையில் குடியரசுத் தலைவரின் உத்தரவு அமைந்துவிட்டதைப் பதிவுசெய்தார். மேலும், இந்தி பேசாத மக்ககளுக்கு பிரதமர் நேரு முன்னர் அளித்த உறுதிமொழியை மீண்டும் ஒருமுறை அளிக்கும் பட்சத்தில், இந்தப் பிரச்னையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலையை இந்த சந்தர்ப்பத்தில் தணிக்கும் என்று நம்புவதாக எழுதியிருந்தார்.

அதற்குப் பதில் கடிதம் எழுதினார் பிரதமர் நேரு. அந்தக் கடிதத்தில், ‘மொழிப்பிரச்னை பற்றி நான் மக்களவையில் அளித்த வாக்குறுதிக்குப் புறம்பான காரியங்களை எப்போதும், எந்தச் சந்தர்ப்பத்திலும் அரசாங்கம் நிறைவேற்ற வாய்ப்பில்லை… நாங்கள் அளித்த வாக்குறுதிக்குக் கட்டுப்பட்டே இருக்கிறோம்’ என்று எழுதினார். இத்தனைக்குப் பிறகும் குடியரசுத் தலைவருக்குக் கறுப்புக்கொடி காட்டி அவரை அவமதிப்பது தமக்கு வருத்தத்தை ஏற்படுத்தும் என்றும் நேரு அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

நேருவின் பதில் கடிதம் குறித்து திமுகவின் போராட்டக் குழுவினர் ஆலோசனையில் ஈடுபட்டனர். கிட்டத்தட்ட அதேசமயத்தில், ஐதராபாத் இந்தி பிரசார சபாவில் பேசிய குடியரசுத் தலைவர், ‘எதிர்காலத்தில் மொழிப்பிரச்னை குறித்து பரிசீலிக்கும்போது அல்லது விவாதிக்கும்போது, இந்தி பேசாத சகோதரர்களின் இடர்கள், உணர்ச்சிகள் புறக்கணிக்கப்பட மாட்டாது என்று நான் உறுதியாக நம்புகிறேன். நமது பிரதமர் அடிக்கடி பொதுமக்களிடமும் மக்களவையிலும் கூறியிருப்பது போன்று, இந்தி எவர் மீதும் திணிக்கப்பட மாட்டாது’ என்றார்.

பிரதமர் நேரு எழுதிய வாக்குறுதிக் கடிதம், குடியரசுத் தலைவரின் ஐதராபாத் பேச்சு ஆகிய இரண்டையும் மையமாக வைத்து 4 ஆகஸ்டு 1960 அன்று ஆய்வுசெய்தது திமுக போராட்டக்குழு. எதிர்பார்த்த இடத்தில் இருந்து நம்பிக்கை தரக்கூடிய உறுதிமொழிகள் பிரதமர் நேருவிடம் இருந்து கிடைத்துவிட்டதால் கறுப்புக் கொடி காட்டும் போராட்டம் நிறுத்தப்பட்டுவிட்டது என்று அறிவித்தார் திமுக பொதுச்செயலாளர் இரா. நெடுஞ்செழியன். போராட்டம் முடிவுக்கு வந்தது, அப்போதைக்கு!



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

சின்னச்சாமியின் உயிர்த்தியாகம்

மொழிப்போர் / அத்தியாயம் 13

ஆட்சிமொழி ஆணையம், நாடாளுமன்றக் குழு ஆகியவற்றின் பரிந்துரைகளின் தொடர்ச்சியாக மத்திய உள்துறை அமைச்சர் லால் பகதூர் சாஸ்திரி 13 ஏப்ரல் 1963 அன்று ஆட்சி மொழி மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அந்த மசோதாவின்படி, 26 ஜனவரி 1965 முதல் இந்தி மொழி மட்டுமே இந்தியாவின் ஆட்சிமொழியாக இருக்கும். இந்திக்குத் துணையாக ஆங்கிலத்தைப் பயன்படுத்தலாம். இந்த இடத்தில்தான் சிக்கல் தொடங்கியது. ஷரத்துகளில் May, Shall என்ற இரண்டு ஆங்கில வார்த்தைகள் இடம்பெற்றிருந்தன.

மத்திய அரசின் ஆணைகள், அவசரச் சட்டங்கள், விதிமுறைகள் இந்தியில் மொழிபெயர்க்கப் பட்டால் அவை அதிகாரப்பூர்வமானவையாகக் கருதப்படவேண்டும் (shall be). நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் முன்மொழியப்படும் மசோதாக்கள், திருத்தங்களுக்கு இந்தி மொழிபெயர்ப்பும் இணைக்கப்படவேண்டும் (shall be). மாநில சட்டமன்றங்களில் நிறைவேற்றப்படும் சட்டங்களும்கூட ஆங்கிலத்தோடு இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட வேண்டும் (shall be). அந்த மொழிபெயர்ப்பும் அதிகாரப்பூர்வமானதாகக் கருதப்படும்
(shall be).

அரசியல் சாசனம் தொடங்கி பதினைந்து ஆண்டுகள் கழிந்தபிறகும் மத்திய அரசின் அனைத்து அதிகாரப் பூர்வ நோக்கங்களுக்கும் நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கும் இந்தியோடு சேர்த்து ஆங்கில மொழியும் தொடர்ந்து பயன்படுத்தப்படலாம் (may be).

இந்தி மொழி பற்றிய ஷரத்தில் Shall be என்ற வார்த்தை அழுத்தம் திருத்தமாகப் பயன்படுத்தப்பட்டது. ஆனால் ஆங்கில மொழி பற்றிய ஷரத்தில் Shall be என்ற வார்த்தைக்குப் பதிலாக May be என்ற வார்த்தை மிகுந்த கவனத்துடன் பயன்படுத்தப்பட்டது. ஆம். இந்தியைக் கட்டாயமாகப் பயன்படுத்த வேண்டும் என்று சொன்ன அந்தச் சட்டம், ஆங்கில விஷயத்தில் மட்டும் பயன்படுத்தப்படலாம் என்று பட்டும் படாமல் சொன்னது.

அதன்படி, இந்திய அரசியலமைப்புச் சட்டம் அமலாகி பதினைந்து ஆண்டுகள் கழிந்த பிறகு (26 ஜனவரி 1965) இந்தியாவின் ஒரே ஆட்சி மொழியாக இந்தி மட்டுமே இருக்கும். இணை ஆட்சி மொழியாக ஆங்கிலம் பயன்படுத்தப்படலாம் அல்லது பயன்படுத்தப்படாமலும் போகலாம். இதன்மூலம் இந்தியைத் தவிர மற்ற தேசிய மொழிகளின் எதிர்காலத்துக்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை என்ற சூழல் உருவாக்கப்பட்டது.

அப்படி இந்தியாவின் ஒரே ஆட்சி மொழியாக இந்தி அறிவிக்கப்பட்டால் ஏற்படப்போகும் முக்கியமான பாதிப்பு இதுதான்: மத்திய அரசுப் பணிகளுக்கான தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட தேசிய மொழிகளில் எழுதுவதற்கான கதவுகள் முற்றிலுமாக அடைபட்டுவிடும். இப்படி இன்னும் பல பாதிப்புகள் வரிசைகட்டிக் காத்திருக்கின்றன.

மசோதாவைத் தாக்கல் செய்து பேசிய உள்துறை அமைச்சர் சாஸ்திரி, நாடாளுமன்றக் குழுவால் வழங்கப்பட்ட அறிக்கையை இந்த அவையின் உறுப்பினர்கள் பரிசீலனை செய்திருக்கிறார்கள். நான் அறிந்தவரை இந்தக் குழுவின் பரிந்துரைகளுக்கு இந்த அவை ஒப்புதல் கொடுத்திருக்கிறது என்றார். அமைச்சரின் இந்தக் கருத்துக்குக் கடுமையான எதிர்ப்பு எழுந்தது.

அறிக்கையின் மீது வாக்கெடுப்பு எதுவும் நடத்தப்படவில்லை; திருத்தங்கள் கொடுப்பதற்கு அனுமதி தரப்படவில்லை. இந்நிலையில் அறிக்கையை நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்டது என்ற தவறான தகவலை அமைச்ச்சர் அவைக்குத் தரக்கூடாது என்று ஆவேசமாகக் கூறினார் மக்களவை உறுப்பினர் ஃப்ராங்க் அந்தோனி. சட்டென்று சுதாரித்துக்கொண்ட அமைச்சர் சாஸ்திரி, “நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரைகளுக்கு அனுமதி அளிக்கும் பெரும்பான்மையான உறுப்பினர்கள் இந்த மன்றத்தில் இருந்தார்கள்’ என்று பதிலளித்து, காங்கிரஸ் கட்சிக்குத்தான் பெரும்பான்மை இருக்கிறது, ஆகவே, காங்கிரஸ் கட்சி எடுக்கும் முடிவுதான் இறுதிமுடிவு என்பதை சொல்லாமல் சொல்லிமுடித்தார்.

நேருவின் முந்தைய வாக்குறுதி ஏன் மசோதாவில் இணைக்கப்படவில்லை என்ற கேள்வி நாடாளு மன்றத்தில் பலத்த விவாதத்தைக் கிளப்பியது. மக்களவை உறுப்பினர் ஃப்ராங்க் அந்தோனிக்கும் பிரதமர் நேருவுக்கும் இடையே நேருக்கு நேரான விவாதம் நடந்தது. உச்சக்கட்டமாக, ‘நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டம், மசோதாவுக்கும் உறுதிமொழிக்கும் தொடர்பு இல்லை. நாடாளுமன்றம், சட்டமன்றம் ஆகிய அமைப்புகளின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்துவது முட்டாள்தனம்’ என்று பதில் சொல்லி எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார் பிரதமர் நேரு.

பிரதமர் நேருவின் இந்தப் பேச்சுக்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் நாஞ்சில் மனோகரன் ஆற்றிய எதிர்வினை கவனிக்கத்தக்கது.

‘பிளாரன்ஸ் வணிகன் மாக்கியவல்லி கூறியதை நினைவுபடுத்த விரும்புகிறேன். எவ்வளவு வாக்குறுதிகள் கொடுக்கமுடியுமோ, அவ்வளவு கொடு. ஆனால் அதன்படி நடக்காதே என்றான் மாக்கியவல்லி. பிரதமர் அதனைப் பின்பற்றுவாரானால், அவருக்கு இருபதாம் நூற்றாண்டின் மாக்கியவல்லி என்று பட்டமளிக்கிறேன்.’

ஆட்சிமொழி சட்டத்தில் இருக்கும் May, Shall என்ற வார்த்தைகள் இந்தி பேசாத மக்களை அவமதிக்கிறது; தவிரவும், இந்தி மொழி புழக்கத்தில் இல்லாத பிராந்தியங்களின் மக்கள் விரும்பும்வரை ஆங்கிலத்தை அகற்றமாட்டேன்; ஆங்கிலம் இணை ஆட்சி மொழியாக நீடிக்கும் என்ற நேருவின் வாக்குறுதி காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது என்று விமரிசித்தார் அண்ணா. இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டங்கள் குறித்து ஆலோசனை செய்வதற்காக திமுகவின் செயற்குழு, பொதுக்குழுக் கூட்டங்கள் 8 ஜூன் 1963 தொடங்கி மூன்று நாள்களுக்கு நடந்தன.

ஆலோசனைக்கூட்டங்களின் முடிவில் இந்தித் திணிப்பை எதிர்த்து திமுக நேரடிப் போராட்டத்தில் இறங்குவது என்று தீர்மானிக்கப்பட்டது. போராட்டக்குழுவின் தலைவராக மு. கருணாநிதி தேர்வு செய்யப்பட்டார். அந்தக் குழுவில் என்.வி. நடராசன் உள்ளிட்ட மாவட்டச் செயலாளர்கள், மாநில அமைப்பாளர்கள் இடம்பெற்றனர்.

நான்கு லட்சம் உறுப்பினர்கள், நாலாயிரத்து ஐந்நூறு கிளைகள், மூவாயிரம் துணை மன்றங்கள், ஐம்பது சட்டமன்ற உறுப்பினர்கள், ஏழு தமிழ்நாடு மேலவை உறுப்பினர்கள், ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள், சென்னை மாநகராட்சி உள்ளிட்ட பதினோரு நகராட்சிகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் திமுக இந்தித் திணிப்புப் போராட்டத்துக்குத் தயாராகிவிட்டது என்பது மத்திய ஆட்சியாளர்களின் கவனத்துக்குச் சென்றது. திமுக கிளர்ச்சிகளைக் கைவிடவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார் உள்துறை அமைச்சர் சாஸ்திரி. ஆனால் அதனைப் புறக்கணித்துவிட்டுப் போராட்டத்துக்குத் தயாரானது திமுக.

மு. கருணாநிதி தலைமையிலான போராட்டக்குழுவினர் இந்தித் திணிப்புக்கு எதிரான பிரசாரப் பணிகளில் தீவிரம் காட்டினர். பொதுக்கூட்டங்கள். கண்டனக் கூட்டங்கள். பிரசார நாடகங்கள். சுவரொட்டிகள். துண்டுப்பிரசுரங்கள். கலை நிகழ்ச்சிகள் ஆகியவற்றின் மூலம் மத்திய அரசின் இந்தித் திணிப்பு முயற்சிகள் மக்களுக்கு எடுத்துச்சொல்லப்பட்டன. 13 அக்டோபர் 1963 அன்று சென்னையில் நடந்த இந்தி எதிர்ப்புப் பொதுமாநாட்டில் முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகள் எடுக்கப்பட்டன.

இந்தியை ஆட்சிமொழியாக அறிவிக்கும் இந்திய அரசியல் சாசனத்தின் பதினேழாவது பிரிவை நீக்க வேண்டும்; தமிழ் உள்ளிட்ட இந்தியாவின் பதினான்கு தேசிய மொழிகளையும் ஆட்சிமொழியாக்கும் வகையில் புதிய சட்டப் பிரிவு இணைக்கப்படவேண்டும். இவைதான் எங்களுடைய பிரதான கோரிக்கைகள். அவற்றை வலியுறுத்தி 17 நவம்பர் 1963 தொடங்கி 26 ஜனவரி 1965 வரை இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டங்கள் நடத்தப்படும் என்று அறிவித்தது திமுக.

போராட்டங்கள் என்றால் பொதுக் கூட்டங்கள், பேரணிகள் நடத்துவது, ஊர்வலம் செல்வது, மறியல் செய்வது, கறுப்புக்கொடி காட்டுவது, கறுப்பு பேட்ஜ் அணிவது, கறுப்புக்கொடி ஏற்றுவது, இத்யாதி இத்யாதிகள். முக்கியமாக, ஆட்சிமொழிச் சட்டத்தின் பதினேழாவது பிரிவை நகலெடுத்து எரிப்பது. இந்தித் திணிப்பை அகற்ற நான்கு ஆண்டுகள் என்ன.. நாற்பது ஆண்டுகள் கூட சிறைசெல்லத் தயார் என்ற அண்ணாவின் முழக்கம் திமுகவினரைக் களம் நோக்கி நகர்த்திச் சென்றது.

அண்ணா, கே.ஏ. மதியழகன், மு. கருணாநிதி, க. அன்பழகன் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் நேரடியாகக் களத்தில் இறங்கினர். தலைமை அறிவித்த அத்தனை வகையான போராட்டங்களும் அட்சரம் பிழகாமல் நடந்தன. சட்ட நகல் எரிப்புப் போராட்டம் பெரிய அளவில் நடந்தது. அதில் ஈடுபட்டவர்கள் ஆறுமாதம், ஒருவருடம் என்று சிறைத் தண்டனை பெற்றனர்.

திமுக நடத்திய மொழிப்போரின் தாக்கம் தமிழ் இளைஞர்களை உசுப்பேற்றியது. தமிழ் காக்கும் போராட்டத்தில் தங்களையும் ஈடுபடுத்திக்கொள்ளத் தயாராகினர். அவர்களில் ஒருவர் சின்னச்சாமி. வயது இருப்பத்தியேழு. திருச்சி மாவட்டம் கீழப்பழுவூர்கிராமத்தைச் சேர்ந்தவர். திருமணமானவர். திமுக தொண்டரான இவருக்கு மனைவியும் திராவிடச் செல்வி என்ற இரண்டு வயது மகளும் இருந்தனர். சொந்த வேலை காரணமாக திருச்சியில் இருந்து ரயில் மூலம் சென்னை சென்றிருக்கிறார் சின்னச்சாமி.

முதலமைச்சர் பக்தவத்சலமும் அதே ரயிலில்தான் பயணம் செய்கிறார் என்ற செய்தி காற்றுவாக்கில் காதில் விழுந்தது சின்னச்சாமிக்கு. உற்சாகம் வந்துவிட்டது சின்னச்சாமிக்கு. எப்படியாவது முதலமைச்சரைப் பார்த்துவிடவேண்டும் என்று நினைத்துக் கொண்டார். ரயில் சென்னை மாம்பலம் ரயில் நிலையத்தில் வந்து நின்றதும் முதலமைச்சரை நோக்கி ஓடினார்.

பாதுகாவலர்கள் புடைசூழ எதிரே வந்துகொண்டிருந்தார் முதலமைச்சர் பக்தவத்சலம். அவரைப் பார்த்த மாத்திரத்தில் மனத்துக்குள் எழுந்த கேள்வியைக் கேட்டார் சின்னச்சாமி.

“அய்யா, நீங்கள் தமிழைக் காப்பதற்காக இந்தித் திணிப்பைத் தடுக்கக்கூடாதா?’

ஏற்கெனவே திமுக நடத்திக்கொண்டிருந்த இந்தி எதிர்ப்புப் போராட்டங்களைக் கண்டு எரிச்சலில் இருந்தார் பக்தவத்சலம். இப்போது வழியில் தென்பட்ட யாரோ ஒருவர் இந்தித் திணிப்பு பற்றிக் கேள்வி கேட்டதை அவர் கொஞ்சமும் ரசிக்கவில்லை. சின்னச்சாமியின் கேள்வியை அலட்சியம் செய்துவிட்டு மின்னல் வேகத்தில் நகர்ந்து விட்டார்.

மறுநொடி சின்னச்சாமியை சூழ்ந்துகொண்டனர் காவலர்கள். கையோடு எழும்பூர் காவல்நிலையத்தில் வைத்து விசாரிக்கத் தொடங்கினர். பிறகு விடுவித்துவிட்டனர். இருப்பினும், முதலமைச்சர் காட்டிய அலட்சியம் சின்னச்சாமியை அதிருப்தியில் ஆழ்த்தியது. இந்தித் திணிப்பைத் தடுத்து நிறுத்த வேண்டும். அதற்குத் தன்னால் ஆன காரியத்தைச் செய்யவேண்டும். சட்டென்று ஒரு முடிவுக்கு வந்தவர் தன்னுடைய நண்பருக்குக் கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தின் முக்கியப்பகுதி இதோ:

ஏ, தமிழே! நீ வாழவேண்டும் என்பதற்காக நான் துடியாத் துடித்துச் சாகப்போகிறேன்.. காலை 11 மணிக்குள் என் உடல் மீது பெட்ரோல் ஊற்றிக்கொண்டு செத்துவிடுவேன். இதைப் பார்த்த பிறகாவது ஏன் இந்தி? எதற்காக இந்தி? என்று மக்கள் கேட்கட்டும்.

எழுத்தில் சொன்னதைச் செயலில் காட்டத் தயாரானார் சின்னச்சாமி. 25 ஜனவரி 1964 அன்று காலை திருச்சி ரயில் நிலையத்துக்கு வந்த சின்னச்சாமி தன்னுடைய உடலுக்குத் தீ வைத்துக்கொண்டார். இந்தி ஒழிக! தமிழ் வாழ்க! என்ற கோஷம் எழுப்பியபடியே எரியத் தொடங்கினார். சில நிமிடங்களில் கோஷம் நின்றது. உயிர் பிரிந்தது. இந்தித் திணிப்பைக் கண்டித்து முதல் களபலியாக மாறியிருந்தார் சின்னச்சாமி!



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

தொடரும் மொழிப்போர்

annavum rajajiyumமொழிப்போர் / அத்தியாயம் 14  

சின்னச்சாமியின் மரணம் கனன்று கொண்டிருந்த இந்தி எதிர்ப்பு நெருப்பை வேகமாக விசிறிவிட்டது. மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் என்று பல தரப்பினரும் போராட்டக் களத்துக்கு வந்தனர். இந்தி ஆட்சிமொழியாக மாறவிருக்கும் 26 ஜனவரி 1965 நெருங்க நெருங்க போராட்டத்தின் வேகம் கூடியது. எங்கு பார்த்தாலும் போராட்டம், கோஷம், கறுப்புக்கொடி, கண்டனக்குரல்.

இன்றைய அத்தியாவசியப் பிரச்னை சோற்றுப் பிரச்னைதானே தவிர மொழிப்பிரச்னை அல்ல என்றார் காமராஜர். உடனடியாக எதிர்வினை ஆற்றினார் அண்ணா. சோற்றுப்பிரச்னைதான் பிரதானம் என்றால் எதற்காக பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி இந்தித் திணிப்பு விஷயத்தில் கவனம் செலுத்தவேண்டும்; பேசாமல் தமிழையும் ஆட்சிமொழியாக அறிவித்துவிட்டு, சோற்றுப் பிரச்னையைத் தீர்க்கும் விஷயத்தில் கவனம் செலுத்தலாமே என்றார் அண்ணா.

8 ஜனவரி 1965 அன்று கூடிய திமுக செயற்குழு, ஜனவரி 26 அன்று குடியரசு நாளை துக்க நாளாக அனுசரிக்க முடிவுசெய்தது. சுதந்தர தினத்தை இன்ப நாளாகக் கொண்டாடிய அண்ணா, குடியரசு தினத்தைத் துக்கநாளாக அனுசரிப்பது துரோகச் செயல் இல்லையா? என்று கேள்வி எழுப்பினர் காங்கிரஸ் தலைவர்கள். குடியரசு தினம் முக்கியத்துவம் வாய்ந்த தினம்தான். அந்த நாளில் இந்தி எதிர்ப்பை ஒத்திவைத்தால் என்ன செய்வீர்கள்? இந்திதான் ஆட்சிமொழி என்பதை திமுகவும் தென்னக மக்களும் ஏற்றுக் கொண்டார்கள் என்று மூலைக்கு மூலை பொய்ப் பிரசாரம் செய்வீர்கள். அதைத் தடுக்கவே குடியரசு நாளை அமைதியான முறையில் துக்கநாளாக அனுசரிக்கிறோம் என்றார் அண்ணா!

கடந்த காலங்களில் இந்தியின் காவலராக அடையாளம் காணப்பட்ட ராஜாஜி, தற்போது இந்தியை எதிர்க்கத் தயாராகி இருந்தார். நல்ல நாட்டுப் பற்றுள்ள, நுண்ணறிவுள்ள இந்தியக் குடிமக்கள் மூன்று கோடி பேரை கோபம் கொண்ட பிரிவினைக்காரர்களாக மாற்றும் சட்டமே ஆட்சிமொழி சட்டம் என்று தன்னுடைய சுயராஜ்யா இதழில் எழுதிய ராஜாஜி, இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடும் திமுகவுக்கு நேசக்கரம் நீட்டினார்.

திமுகவின் துக்கள்நாள் அறிவிப்பு குறித்து சட்டமன்றத்தில் பேசிய முதலமைச்சர் பக்தவத்சலம், திமுக குடியரசு தினத்தை அமைதியான முறையில் துக்கநாளாகக் கொண்டாடினாலும் அதனைப் பார்த்துக் கொண்டு அரசாங்கம் சும்மா இருக்காது. திருமண வீட்டில் யாராவது அழுதுகொண்டிருந்தால் அதைத் திருமண வீட்டார் அனுமதிக்கமாட்டார்கள். அழுதுகொண்டிருப்பவர்களை வெளியே பிடித்துத் தள்ளி விடுவார்கள். திமுகவினர் தமது வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றுவதை அரசாங்கம் அனுமதிக்காது. கலவரமே ஏற்பட்டாலும் திமுகவினருக்கு அரசு பாதுகாப்பு தராது. பொதுமக்களே அவர்களுடைய அடாத செயலைத் தடுத்து நிறுத்திவிடுவார்கள் என்றார்.

போராட்டத்தில் இறங்குவது குறித்து சென்னை, மதுரை, தஞ்சை, திருச்சி, கோவை என்று பல இடங்களில் மாணவர்கள் கூடிப்பேசினர். இந்தித் திணிப்புக்கு எதிராக உயிர்த்தியாகம் செய்த கீழப்பழுவூர் சின்னச்சாமியின் முதலாம் ஆண்டு நினைவுநாள் 25 ஜனவரி 1965 அன்று போராட்டத்தைத் தொடங்க முடிவுசெய்தனர் மாணவர்கள். போராட்டங்கள் குறித்த தகவல்கள் கல்லூரி மாணவர்களுக்குக் கடிதம் மூலமாக அனுப்பப்பட்டன. சில மாணவர்கள் கல்லூரிகளுக்கு நேரில் சென்று ஆதரவு திரட்டினர்.

25 ஜனவரி 1965 அன்று போராட்டம் தொடங்கியது. மதுரையைச் சேர்ந்த கா. காளிமுத்துவும் நா. காமராசனும் இந்திய அரசியல் சட்டத்தின் பதினேழாவது பிரிவின் நகல்களை எரித்தனர். பின்னர் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். கண்டன ஊர்வலத்தில் கலந்துகொண்ட மற்ற மாணவர்களும் கைது செய்யப்பட்டனர். இடையில் காங்கிரஸ் கட்சியினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன.

மதுரையில் மட்டுமல்ல, கோவை, திருச்சி, மேலூர், மாயவரம், தஞ்சாவூர், சிதம்பரம், கும்பகோணம், விருதுநகர், திருநெல்வேலி, ஈரோடு, திருப்பூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் மாணவர் போராட்டங்கள் ஆக்கிரமித்தன. மாணவர்கள் தலைவர்கள் முதலமைச்சர் பக்தவத்சலத்தைச் சந்தித்துப் பேச விரும்பினர். ஆனால் அதற்கு மறுத்துவிட்டார் பக்தவத்சலம்.

26 ஜனவரி 1965 அன்று அதிகாலை நான்கு மணிக்கு சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த சிவலிங்கம் என்ற இளைஞர் இந்தித் திணிப்பைக் கண்டித்துத் தீக்குளித்துவிட்டார் என்ற செய்தி பதற்றத்தை ஏற்படுத்தியது. பின்னர் விருகம்பாக்கம் அரங்கநாதன் தீக்குளித்தார். இந்தித் திணிப்பை எதிர்த்து தற்கொலைச் சம்பவங்கள் தொடர்ந்தன. அய்யம்பாளையம் வீரப்பன், சத்தியமங்கலம் முத்து, மயிலாடுதுறை சாரங்கபாணி, விராலிமலை சண்முகம், கீரனூர் முத்து, சிவகங்கை ராஜேந்திரன், பீளமேடு தண்டபாணி என்று தமிழுக்காகத் தம்மைப் பலிகொடுத்தவர்கள் பட்டியல் நீண்டுகொண்டே சென்றது.

ஜனவரி 26 அன்றுதான் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தபோதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் முந்தைய நாளில் இருந்தே திமுகவின் முக்கியத் தலைவர்கள் பலரையும் கைது செய்தது பக்தவத்சலம் அரசு. ஆனாலும் போராட்டம் தடைபடவில்லை. திமுகவினர் தமது வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றினர். சட்டையில் கறுப்பு பேட்ஜ் அணிந்தனர்.

திமுகவினர் ஒருபக்கம் போராட்டம் நடத்திக்கொண்டிருக்க, இன்னொரு பக்கம் மாணவர்களின் போராட்டமும் தொடர்ந்துகொண்டிருந்தது. மாணவர் போராட்டங்களுக்கும் தீக்குளிப்புகளுக்கும் பின்னணியில் திமுகவினரின் கரங்கள் இருக்கின்றன என்றார் சாஸ்திரி. போராட்டத் தேதிக்கு முன்பே திமுகவின் முக்கியத் தலைவர்களையும் தொண்டர்களையும் கைது செய்துவிட்ட சூழலில் மாணவர்களை திமுக தூண்டுகிறது என்பது குற்றச்சாட்டு அல்ல; குழப்பம் விளைவிக்கும் முயற்சி என்றார் அண்ணா.

3 பிப்ரவரி 1965 அன்று தமிழ்நாடு மாணவர் இந்தி ஆதிக்க எதிர்ப்புக் குழு உருவாக்கப்பட்டது. கட்சி சார்புள்ள மாணவர்கள் பலர் அமைப்புக்குள் இருந்தபோதும் எந்தவித கட்சி சாயமும் இல்லாத ரவிச்சந்திரன் குழுவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். உடனடியாகப் போராட்டத் திட்டங்கள் வகுக்கப்பட்டன. பிறகு மாணவர் அமைப்பின் சார்பில் முதலமைச்சர் பக்தவத்சலத்தைச் சந்திக்கச் சென்றனர்.

ஜனவரி மாத இறுதியில் மாணவர்களை சந்திக்க மறுத்த முதலமைச்சர் இப்போது கொஞ்சம் இறங்கி வந்திருந்தார். அப்போதே சந்தித்திருந்தால் எத்தனையோ உயிரிழப்புகளைத் தவிர்த்திருக்கமுடியும். சேதங்களைத் தடுத்திருக்க முடியும். முதல்வர் – மாணவர் சந்திப்பு நடந்தது. ஆனால் அப்படியொரு சந்திப்பே நடந்திருக்க வேண்டாம் என்ற அளவுக்கு மாணவர் தலைவர்களை அவமதித்து அனுப்பினார் முதலவர். போதாக்குறைக்கு, இந்தித் திணிப்பை வாபஸ்பெற முடியாது என்று திட்டவட்டமாக அறிவித்தார் பிரதமர் சாஸ்திரி.

அதைத் தொடர்ந்து மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்தது. ரயில் மறியல் போராட்டம், உண்ணாவிரதப் போராட்டம், இந்தி எழுத்துகள் அழிப்பு, கடையடைப்பு என்று போராட்டம் தொடர்ச்சியாக நடந்து கொண்டிருந்தது. மாணவர்களின் போராட்டத்தை அடக்கும் நோக்கத்துடன் ஏராளமான மாணவர்களைக் கைது செய்தனர். ராணுவம் வரவழைக்கப்பட்டது. தேவைப்பட்டால் துப்பாக்கிச்சூடு நடத்தவும் தயாராக இருங்கள் என்று காவல்துறையினருக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக ஒரு செய்தி அண்ணாவை வந்தடைந்தது.

நிலைமை எல்லை மீறுகிறது என்று தெரிந்ததும் மாணவர்களை அழைத்துப் பேசினார் அண்ணா. ஒரு போராட்டத்துக்குத் தேவையான அனைத்து உத்திகளையும் நீங்கள் பயன்படுத்திவிட்டீர்கள்; உங்கள் ஆயுதக் கிடங்குகளில் இருக்கும் பெரும்பாலான ஆயுதங்கள் தீர்ந்துவிட்டன; எனினும், தமிழுக்கு இழைக்கப்படும் அநீதியை உலகறியச் செய்வதில் மாணவர் போராட்டம் வெற்றிபெற்றுவிட்டது. போதும். போராட்டம் போதும். நேரடி நடவடிக்கையை உடனே நிறுத்துங்கள். இதுதான் அண்ணா கொடுத்த யோசனை.

அண்ணாவின் தலையீட்டுக்குப் பிறகும் மாணவர்கள் அமைதியடையவில்லை. போராட்டம் தொடர்ந்தது. விளைவு, துப்பாக்கியைத் தூக்கினர் காவலர்கள். ஏழு இடங்களில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருபத்தைந்து பேர் கொல்லப்பட்டனர். இது அரசாங்கம் சொன்ன கணக்கு. ஆனால் அசல் கணக்கு இன்னும் அதிகம் என்றனர் மாணவர் தலைவர்கள்.

திடீர் திருப்பமாக இந்தித் திணிப்பைக் கண்டித்தும் ஆங்கில நீட்டிப்பு குறித்த உத்தரவாதத்தைக் கோரியும் 11 பிப்ரவரி 1965 அன்று தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் சி. சுப்ரமணியமும் ஓ.வி. அளகேசனும் தமது பதவியை ராஜினாமா செய்தனர். பின்னர் இருவருமே ராஜினாமா கடிதங்களை வாபஸ் பெற்றனர்.

16 பிப்ரவரி 1965. திடீரென திமுக பொருளாளர் கருணாநிதி இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார். இந்தித் திணிப்புக்கு எதிராகப் போராட்டம் நடத்த மாணவர்களைத் தூண்டிவிட்டவர் கருணாநிதி என்பதுதான் அரசு முன்வைத்த குற்றச்சாட்டு. ஆனால் இந்தித் திணிப்பை எதிர்த்து உயிர்த் தியாகம் செய்தவர்களைப் பார்த்து முதலமைச்சர் பக்தவத்சலம் திருப்திப்படுவதாக முரசொலியில் கார்ட்டூன் வெளியிட்டதுதான் கைதுக்குக் காரணம் என்பது கருணாநிதியின் வாதம்.

கொந்தளிப்பு அதிகரித்திருந்த சூழலில் 22 பிப்ரவரி 1965 அன்று காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூடியது. ஆட்சி மொழிச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்றனர் இந்திரா, பிஜூ பட்நாயக், எஸ்.கே. பாட்டீல் உள்ளிட்டோர். ஆனால் திருத்தத்துக்கான தேவையே எழவில்லை என்றனர் மொரார்ஜி தேசாய், ஜெகஜீவன் ராம் போன்றோர். சிக்கல் நீடித்தது. பிறகு முதல்வர்கள் மாநாட்டுக்கு அழைப்பு விடுத்தார் பிரதமர் சாஸ்திரி. பிரச்னை பற்றி ஆராய்ச்சி செய்ய துணைக்குழு அமைத்ததோடு கடமையை முடித்துக் கொண்டது அந்த மாநாடு.

காங்கிரஸ் கட்சி கூட்டிய செயற்குழு செயலற்றுப் போயிருந்தது; முதலமைச்சர்கள் நடத்திய மாநாட்டிலும் முடிவுகள் எட்டப்படவில்லை. எதிர்பார்ப்புகள் அனைத்தும் பொய்த்துப் போயிருந்தன. அதிருப்திகள் சூழ்ந்த நிலையில் முதலமைச்சர் பக்தவத்சலத்தைச் சந்தித்துப் பேசினார் மாணவர் தலைவர் ரவிச்சந்திரன். இந்தி பேசாத மாநிலங்களின் சம்மதம் இல்லாமல் ஆட்சி மொழி விஷயத்தில் மத்திய அரசு எந்தவித முடிவையும் எடுக்காது; ஆங்கிலம் இணை ஆட்சிமொழியாக நீடிக்கும் என்ற நேருவின் உத்தரவாதம் காப்பாற்றப்படும் என்று பிரதமர் சாஸ்திரி உறுதி கொடுத்துள்ளார். அதை நிறைவேற்ற என்னால் ஆனதைச் செய்வேன் என்று உத்தரவாதம் கொடுத்தார் முதலமைச்சர் பக்தவத்சலம்.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு மிரட்டல் விடுக்கவும் பக்தவத்சலம் தவறவில்லை. ‘இனியும் மாணவர்கள் கூடிநின்று கிளர்ச்சி செய்தால் விமானத்தில் இருந்து துப்பாக்கியால் சுடச்சொல்வேன்!’ அதன் தொடர்ச்சியாக மாணவர் போராட்டம் தாற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது என்று அறிவித்தார் மாணவர் போராட்டக்குழுத் தலைவர் ரவிச்சந்திரன். அந்த முடிவை பல மாணவர்கள் ஏற்கவில்லை. மத்திய அரசு, இந்தித் திணிப்பு விஷயத்தில் மாணவர்களுக்கு மன நிறைவு தரக்கூடிய தீர்வைக் கொடுக்கும் வரையில் போராட்டம் தொடரும் என்று அறிவித்த அந்த மாணவர்கள், ரவிச்சந்திரனுக்குப் பதிலாக விருதுநகர் பெ. சீனிவாசனைத் தலைவராக்கினர்.

மாணவர்களின் போராட்டம் தொடர்ந்ததால் துப்பாக்கிச்சுடுகளும் கைது நடவடிக்கைகளும் தொடர்ந்தன. மொழிப்பிரச்னையைப் பெரியவர்களிடம் விட்டுவிடுங்கள்; கல்வியில் கவனம் செலுத்துங்கள் என்று மீண்டும் கோரிக்கை விடுத்தார் அண்ணா. பத்திரிகைகள், பெற்றோர் ஆகியோரின் ஆதரவு குறைவதை உணர்ந்துகொண்ட மாணவர்கள் 14 மார்ச் 1965 அன்று இந்தித் திணிப்புக்கு எதிரான மாணவர் போராட்டம் தாற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

அளவுக்கு மீறிய அடக்குமுறை காரணமாகப் போராட்டங்கள் நசுக்கப்பட்டன என்றாலும் மனத்துக்குள் எரிந்துகொண்டிருந்த போராட்ட நெருப்பை அரசாங்கத்தால் அணைக்க முடியவில்லை. இரண்டு ஆண்டுகள் கழித்து நடந்த பொதுத்தேர்தலில் அந்த நெருப்பு தனது பலத்தை நிரூபித்தது. ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி அப்புறப்படுத்தப்பட்டது. அன்று முதல் இன்றுவரை சுமார் நாற்பது ஆண்டுகளாக ஆட்சியின் அருகில்கூட வராமல் இருக்கிறது காங்கிரஸ் கட்சி.

(முடிந்தது)

ஆர். முத்துக்குமார் எழுதிய ‘மொழிப்போர்‘ தனிப் புத்தகமாக உருவாகிக்கொண்டிருக்கிறது. நான்கு கட்டங்களாக நடைபெற்ற மொழிப்போராட்டமும், தொடர்ந்து அவ்வப்போது எழுந்த இந்தித் திணிப்பு முயற்சிகளும் மிக விரிவாக இதில் பதிவு செய்யப்பட்டுள்ளன. போராட்டத்தை தமிழகம் எதிர்கொண்ட விதம், எதிரான விமரிசனங்கள், ஆய்வுகள் அனைத்தையும் உள்ளடக்கியுள்ள இந்தப் புத்தகம் விரைவில் வெளியாகவிருக்கிறது. மொழிப்போர் குறித்து கல்கி கிருஷ்ணமூர்த்தி தொடங்கி டி.என். சேஷன் வரை பலரும் முன்வைத்த விமரிசனங்களும் அவற்றுக்கான எதிர்வினைகளும் இந்நூலில் பதிவாகியுள்ளன. சமீபத்தில் எழுந்த பாடப்புத்தகச் சர்ச்சை குறித்த விவாதங்களும் இடம்பெறுகின்றன.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard