New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அண்ணா எழுதிய கட்டுரை : பெரியார் - மணியம்மை திருமணம்


Guru

Status: Offline
Posts: 24601
Date:
அண்ணா எழுதிய கட்டுரை : பெரியார் - மணியம்மை திருமணம்
Permalink  
 


9.7.1949ல் நடந்த பெரியார் - மணியம்மை திருமணத்தை கண்டித்து “ திராவிட நாடு ” பத்திரிகையில் 03.07.1949 அண்ணா எழுதிய கட்டுரை :

சென்ற ஆண்டு நாம் நமது தலைவர் பெரியாரின் 71 ம் ஆண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடினோம். இந்த ஆண்டு அவர் திருமண வைபவத்தைக் காணும்படி நம்மை அழைக்கிறார் – இல்லை – அறிவிக்கிறார்.

கடந்த ஐந்தாறு ஆண்டுகளாக பெரியாருடைய உடலைக் கவனித்துக் கொள்ளும் திருத்தொண்டில் தன்னை ஒப்படைத்துப் பணியாற்றி வந்தார் திருமதி மணி அம்மையார். இந்தத் திருமதிக்கு வயது 26. அவர்கள்தான் பெரியாருக்கு மனைவியாகும் தொண்டில் இப்போது ஈடுபட நேரிட்டிருக்கிறது.

சென்னையில் இவர்கள் பதிவுத் திருமண மனு பதிவு நிலையத்தில் கடந்த ஒருவார காலமாக ஒட்டி வைக்கப்பட்டிருக்கிறது. பலர் பார்த்து திகைப்படைந்துள்ளனர். பெரியாருக்கு வயது 72. மணியம்மைக்கு வயது 26. இவர்களின் பதிவுத் திருமணம் நடைபெற இருக்கிறது.

தலைநிமிர்ந்து தன்மானத் தூதர்களாய், விடுதலை வீரர்களாய், ஏறுநடை நடந்து செல்லும் எண்ணற்ற இளைஞர்கள், இன்று உடைந்த உள்ளத்தைச் சுமந்து கொண்டு, வழியும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு பின்னும் கால்களுடன், பிசையும் கரங்களுடன் யார் பார்த்து என்னவிதமான பரிகாசம் செய்கிறார்களோ என்ற அச்சத்துடன் நடமாடும் நிலையைக் காணும்போது கல்நெஞ்சமும் கரைந்துவிடும்.

திருமணம் சொந்த விஷயம், வயோதிகப் பருவத்திலே திருமணம் செய்வதுகூட சொந்த விஷயந்தான். அதிலும் தனிப்பட்ட ஒருவர் அல்லது வெறும் அரசியல் கட்சித் தலைவராயுள்ள ஒருவர் திருமணம் செய்து கொள்வது வயோதிகத்திலே, செய்து கொண்டாலும் கூடக் கேட்டுத்திடுக்கிடவோ, கேலியாகப் பேசவோ கோபமடைய மட்டுமேதான் தோன்றமே ஒழியக் கண்ணீர் கிளம்பாது. இன்று கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பெரியாரின் திருமணச் சேதி கேட்டு.

நாம் அவரை ஒரு அரசியல் கட்சித் தலைவராக மட்டும் கொண்டிருக்கவில்லை. இயக்கத்தைச் சார்ந்த ஒவ்வொருவரும் அவரைத் தங்கள் குடும்பத் தலைவர் என, வாழ்க்கைக்கு வழிகாட்டியென ஏற்றுக்கொண்டு எந்த இயக்கத்தவரும், எந்தத் தலைவரிடமும் காட்டாத மரியாதை உணர்ச்சியை அன்பைக் காட்டி வந்திருக்கிறோம்.

அவரை நாம், பின்பற்றி வந்தது ஏறத்தாழ ” பக்தர்கள் அவதார புருஷர்களை ” பின்பற்றி வந்தது போலவேதான். இதற்குக் காரணம், நாம் மற்ற எந்தத் தலைவரையும் விட இவரிடம் தனிப்பட்ட தன்மை, பண்பு, இருக்கிறது என்று உளமார எண்ணியதால்தான்.

வயது ஏற ஏற வாழ்க்கையைப் பற்றி, குடும்பத்தைப் பற்றி, சொந்தச் சுகத்தைப் பற்றிக் கவனப்படாமல் துறவிபோல இரவு பகலென்று பாராமல், அலைந்து திரிந்து அரும்பாடுபட்டு, நாம் வாழ, அவர் வாட்டத்தையும் பாடுகளையும் தாங்கிக் கொள்கிறார் என்று தெரிந்ததால் நாம் அவர் பெரியார் எனம் பண்புப் பெயருக்கு முற்றிலும் உரியார், அவர் போன்றோர் வேறு யாரும் இல்லையென்று இறும்பூ தெய்தி வந்தோம் இறுமாந்திருந்தோம்.

திருமண முறையிலேயுள்ள மூடப்பழக்க வழக்கங்களை முறியடிக்கவும், பெண்களைக் கருவிகளாக்கும் கயமைத் தனத்தை ஒழிக்கவும், ஆண்களின் கொடுமையை அடக்கவும் அவர் ஆற்றியதுபோல் வேறு எந்தத் தலைவரும் உரையாற்றியதில்லை.

பொருந்தாத் திருமணத்தை அவர் கண்டித்து கேட்டு, கிழவர்கள் கலங்கினர், குமரிகள் குதூகலித்தனர்.

காமப்பித்துக் கொண்டலையும் ஆண்கள் வயோதிகப் பருவத்திலே வாலிபப் பெண்ணைச் சொத்து சுகம் கிடைக்கும் என்று ஆசைக் காட்டியோ, வேறு எந்தக் காரணம் காட்டியோ திருமணத்துக்குச் சம்மதிக்கச் செய்தால், மானரோஷத்தில் அக்கரையுடைய வாலிபர்கள் அந்தத் திருமணம் நடைபெற இடந்தரலாமா என்று ஆயிரமாயிரம் மேடைகளிலே முழக்கமிட்டார் – நமக்கெல்லாம் புதுமுறுக்கேற்றினார்.

பிள்ளையில்லையென்ற காரணத்துக்காக, சொத்துக்கு வாரிசுயில்லை என்ற காரணத்துக்காக, மனைவியைத் தேடும் கொடுமையை ஆயிரமாயிரம் மேடைகளிலே கண்டித்தார். பொருந்தாத் திருமணம் நாட்டுக்குப் பெரியதோர் சாபத்தீது என்று முழக்கமிட்டார்.

அந்தக் காலத்து தசரதன் முதற்கொண்டு இந்தக் காலத்து ‘தங்கபஸ்பம்’ தேடும் கிழவர் வரையிலே எள்ளி நகையாடினார்.

தன்மான இயக்கம் தழைத்திருக்கும் இடத்திலே ‘பொருந்தாதத் திருமணம்’ யார் வீட்டிலாவது, எந்தக் காரணத்தாலாவது நடைபெற இருந்தால், போலீஸ் பந்தோபஸ்துத் தேடக்கூடிய அளவுக்கு நாட்டு மக்களின் உணர்ச்சி வேகம் உருவெடுத்தது.

ஏற்கனவே பொருந்தாத் திருமணம் செய்து கொண்டவர்கள்கூட வெட்கத்தால் – வேதனையால் தாக்கப்பட்டனர்.

”என் போன்ற வயதானவர்கள், கல்யாணம் செய்து கொள்ள எண்ணக்கூடாது – எப்படியாவது, அப்படி ஓர் எண்ணம் வந்து தொலைந்தால் தும்பு அறுந்ததாக (அதாவது விதவையாக) ஒரு நாற்பது ஐம்பது வயதானதாக, ஒரு கிழத்தைப் பார்த்துக் கல்யாணம் செய்து தொலைக்கட்டுமே –

பச்சைக் கொடிபோல ஒரு பெண்ணை, வாழ்வின் சுகத்தை அறிய வேண்டிய வயதும், பக்குவமும் கொண்ட பெண்ணைக் கலியாணம் செய்து கொள்வதா –

காரணம் ஆயிரம் காட்டட்டுமே, காட்டினாலும் எந்த மானமுள்ளவன், அந்தக் கலியாணத்தைச் சரியென்று கூறுவான்? யாருக்குச் சம்மதம் வரும்?” என்று அவர் பேசிய பேச்சுக் கேட்காத ஊரில்லை.

இப்படிப்பட்ட அறிவுரை புகட்டியவர், தமது 72-ம் வயதில் 26வயதுள்ள பெண்ணை, பதிவுத் திருமணம் செய்து கொள்கிறார் என்றால், கண்ணீரைக் காணிக்கையாகத் தருவது தவிர வேறென்ன நிலைமை இருக்கும்!

”ஏம்பா! திராவிடர் கழகம்! உங்கள் தலைவருக்குத் திருமணமாமே!! என்று கேட்கும் கூரம்பு போல நெஞ்சில் பாய்ந்து தொலைக்கிறதே. சீர்திருத்தம் இயக்கம் இது. இதோ பாரய்யா, ”சீர்திருத்தம் 71-க்கும் 26-க்கும் திருமணம்” என்ற கேலி பேசுகிறார்களே – கேட்டதும் நெஞ்சு வெடிக்கிறதே.

”கையிலே தடி மணமகனுக்கு! கருப்பு உடை மணமகளுக்கு!” என்று பரிகாசம் பேசுகிறார்களே.

”ஊருக்குத்தானய்யா உபதேசம்!” என்று இடித்துரைக்கிறார்களே.

”எனக்கென்ன, வயதோ 70-க்கு மேலாகிறது. ஒரு காலை வீட்டிலும் இன்னொரு காலைச் சுடுகாட்டிலும் வைத்துக்கொண்டிருக்கிறேன். நான் செத்தால் அழ ஆள் இல்லை. நான் அழுகிறபடி சாவதற்கும் ஆள் இல்லை.” என்றெல்லாம் பேசின பெரியார் கலியாணம் செய்து கொள்கிறாரய்யா! என்று கடைவீதி பேசிக் கைகொட்டி சிரிக்கிறதே!

”ஊரிலே நடைபெறும் அக்ரமத்தைக் கண்டிக்கும் அசகாயச் சூரர்களே! சமுதாய இழிவுகளை ஓட்டும் வீரோதி வீரர்களே! பெண் விடுதலைக்குப் பெரும்போர் தொடுக்கும் பெரியவர்களே! பொருந்தாத் திருமணத்தைக் கண்டித்த கண்ணியர்களே,

இதோ உங்கள் தலைவர் துறவிக் கோலத்தில், தள்ளாடும் பருவத்தில், இளம் பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறாரே உங்கள் கொள்கையின் கதி என்ன, எங்கே உங்கள் பிரசார யோக்கியதை, என்ன சொல்லுகிறீர்கள் இதற்கு, எப்படி இந்த அக்ரமத்தை, அநீதியை அருவருக்கத் தக்க ஆபாசத்தைச் சகித்துக் கொள்கிறீர்கள்? என்று சவுக்கடி கொடுக்கிறது போலப் பேசுகிறார்களே- இனியும் பேசப்போகிறார்களே-

என்ன செய்வோம்- என்ன சமாதானம் கூறுவோம்- எப்படி மனப்புண்ணை மாற்ற முடியும்- எப்படி மானத்தைக் காப்பாற்றிக் கொள்வது என்று எண்ணினர்- எண்ணினதும் தாயோ, தகப்பனோ, மனைவியோ, மகளோ, அண்ணன், தம்பியோ உடன் பிறந்தவர்களோ இறந்தால் ஏற்படக்கூடிய துக்கத்தை விட அதிகமான அளவில் துக்கம் பீறிட்டுக் கிளம்பிக் கதறுகின்றனர் – கதறிக்கொண்டேயிருக்கிறோம் –

கண்ணீருக்கிடையேதான், இக்கட்டுரையும் தீட்டப்படுகிறது.

பொருந்தாத் திருமணம்! புனிதத் தலைவரின் பொருந்தாத் திருமணம்! எந்தக் காலத்திலும், எதிரியின் எந்த வீச்சும், சர்க்காரின் எந்த நடவடிக்கையும், இன்று நமது இயக்கத் தோழர்களைத் திகைக்கச் செய்திருப்பது போலச் செய்ததில்லை.

முகத்திலே கரி பூசிவிட்டார். மூக்கறுத்துவிட்டார்! மூலையில் உட்கார்ந்து கதறுகிறோம் – சேதி தெரிந்தது முதல். வெட்கப்படுகிறோம் அயலாரைக் காண! வேதனைப்படுகிறோம் தனிமையிலே! ஒருவர் கண்ணீரை, மற்றவர் துடைக்க முயலுகிறோம் – துடிக்கிறோம் நெஞ்சத்தில் துயரத்தேள் கொட்டியதால். பொருந்தாத் திருமணம் புரிந்து கொள்ளத் துணிபவர்களை, எவ்வளவு காரசாரமாகக் கண்டித்திருக்கிறோம் – எவ்வளவு ஆவேசமாகக் கண்டித்தோம்.

இப்போது, எவ்வளவு சாதாரணமாக நம்மையும் நமது உணர்ச்சிகளையும், கொள்கைகளையும் இயக்கத்தையும் எவ்வளவு அலட்சியமாகக் கருதி, நமது தலைவர் 72-ம் வயதிலே திருமணம் செய்து கொள்வதாக அறிவிக்கிறார். நம்மை நடைப்பிணமாக்குவதாகத் தெரிவிக்கிறார். நாட்டு மக்களின் நகைப்புக்கு இடமாக்கி வெட்கித் தலைகுனிந்து போங்கள் எனக்கென்ன என்று தெரிவித்துவிட்டார்.

எம்மை ஆளாக்கிவிட்ட தலைவரே! இந்தக் கதிக்கு எம்மை ஆளாக்கவா இவ்வளவு உழைப்பும் பயன்படவேண்டும்? உலகின் முன் தலைகாட்ட முடியாத நிலைமையில் எம்மைச் செய்யும் அளவுக்கு நாங்கள் தங்களுக்கு இழைத்த குற்றம் என்ன? நீங்கள் காட்டிய வழி நடந்தோமே, அதற்கா இந்தப் பரிசு?

எத்தனை ஆயிரம் காரணம் காட்டினாலும், சமர்த்தான விளக்கம் உரைத்தாலும், 72-26 இதை மறுக்கமுடியாதே! இது பொருந்தாத் திருமணம் என்பதை மறைக்க முடியாதே!

இதைச் சீர்த்திருத்தச் செம்மலாகிய தாங்கள் செய்வதென்பது காலத்தாலும் துடைக்க முடியாத கறை என்து மறுக்க முடியாதே! ஏன் இதைச் செய்கிறீர், எம்மை ஏளனத்துக்கு ஆளாக்கிவிடுகிறீர்! கண்ணீரைத் துடைத்தப்படி நின்று, ஆயிரமாயிரம் இளைஞர்கள் கேட்டும் கேள்விகள் இல்லை!

இந்தப் பொருந்தாத் திருமணம் நடைபெறக்கூடுமென்று நாம், யாரும் கனவிலும் எண்ணியதில்லை. பெரியாரின் கோலம், வயது, பேச்சு, வாழ்க்கையிலே அவருக்குப்பற்று அற்றது போலிருந்தது காட்டியத்தன்மை ஆகியவை நம்மை அவருடைய மனதிலும் ஒரு ‘மாது’ புகமுடியும் என்று எண்ணச் செய்யவில்லை, அதிலும் எப்படிப்பட்ட மாது?

பெரியாரின் உயிரைப் பாதுகாக்க, உடலைப் பாதுகாக்க தக்கவிதமான உணவு, மருந்து தருதல், பிரயாண காலத்தில் வசதி செய்து தருவது போன்ற காரியத்தைக் கவனிப்பது என்கிற முறையில் இயக்கத்தில் ஜந்தாறு வருஷத்திற்கு முன்பு வந்தவர்கள்தான் மணியம்மையார்.

பெரியாரின் உடற்பாதுகாப்புக் காண பணிபுரிய, நான் நீ யென்று போட்டியிட்டுக் கொண்டு வர நூற்றுக்கணக்கிலே தூய உள்ளம் படைத்தவர்கள் உண்டு. அவர்கள் யாரும் தேவைப்படவில்லை! மணியம்மை வர நேரிட்டது!

புயல் நுழைகிறது என்று கருதியவன் நான். புல்லன் என்று தூற்றப்பட்டேன், அதனால் அந்த அம்மையாரின் அருந்தோண்டு கண்டு, திராவிடர்கள் முதலிலே கொண்டிருந்த அருவருப்பையும் இழந்தனர்.

அப்பா! அப்பா! என்று அம்மை மனம் குளிர வாய் குளிர, கேட்போர் காது குளிரக் கூறவும் அம்மா- அம்மா என்று கேட்போர் பெருமையும் பூரிப்பும் அடையும் விதமாக, பெரியார் அந்த அம்மையாரை அழைக்கவும், இக்காட்சியைக் கண்டு, பெரியாரின் வளர்ப்புப் பெண் இந்த மணியம்மை எனப் பல்லாயிரவர் எண்ணி மகிழவுமான நிலை இருந்தது.

அந்த வளர்ப்புப் பெண்தான், இன்று பெரியாரின் மனைவியாக இருக்கிறார் – பதிவுத் திருமணம்!! இந்த நிலையை யார்த்தான் எந்தக் காரணம் கொண்டுதான், சாதாரணமானதென்று சொல்லமுடியும்.

நூற்றுக்கணக்கான மாநாடுகளிலே, நமது வீட்டுத் தாய்மார்கள் தமது கரம் பற்றி நின்ற குழந்தைகளுக்குப் பெரியாரைப் பெருமையுடன் காட்டி ”இதோ, தாத்தா பார் – வணக்கஞ் சொல்லு” என்று கூறினார் – கேட்டோம் – களித்தோம்!

பக்கத்திலே பணிவிடை செய்து நின்ற மணியம்மையைக் காட்டி ”தாத்தா பொண்ணு” என்று கூறினார்.அந்தத் தாத்தாவுக்குக் கலியாணம் பணிவிடை செய்து வந்த பாவையுடன்.

சரியா? முறையா? என்று உலகம் கேட்கிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
RE: அண்ணா எழுதிய கட்டுரை : பெரியார் - மணியம்மை திருமணம்
Permalink  
 


 

1952ல் இந்தியாவெங்கும் முதல் பொதுத்தேர்தல் நடைபெற்றது.

சட்டமன்றத்திற்கும், நாடாளுமன்றத்திற்குமான தேர்தல். காங்கிரசை எதிர்த்து நடந்த திமுக தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டி இருந்தது !

தி.மு.க. நடத்திய போராட்டமொன்றில் துப்பாக்கிச் சூட்டிற்கு ஆளாகி இறந்த ஒரு தோழரின்மனைவி " கூலி உயர்வு கேட்டான் அத்தான், குண்டடிப்பட்டு செத்தான் " என்று அழுவது போல் பல நூறு சுவரொட்டிகள் ஒட்டப்பெற்றன.

அதை மையமாக வைத்து பெரியார், “ பிரச்சினைக்கு வழி சொல்லாமல் தாலியை அறுத்துவிட்டது அரசாங்கம் என்று சொல்லுகிறாயே. அண்ணாதுரை ஆட்சிக்கு வந்தால் என்ன மறுதாலி போடுவாயா ” என்று கடுமையாய்க் கேட்டார்.

வேறெங்கும் இந்தப் பிரச்சினைக்குப் பதில் சொல்லாத அண்ணா பிரம்மாண்டமான ஈரோடு கூட்டத்தில் பதில் சொன்னார்.

“ மறு தாலி போடுவாயா என்கிறார், என்னுடைய தலைவர் பெரியார், அண்ணாதுரை மறு தாலி போட மாட்டான். அப்படியே போட்டாலும் என்னுடைய தலைவர் பெரியாரைப்போல் அவசரப்பட்டுப் போடமாட்டேன் ” என்றார்.

அக்காலகட்டங்களில் சேலம் மாடர்ன் தியேட்டர் தயாரிக்கும் படங்களுக்கு கதை வசனம் எழுத சம்பளமாக மாதம் 500 ரூ சம்பளத்தில் பணிசெய்துகொண்டே, பெரியாரின் குடியரசு நாளிதழில் கட்டுரையும் எழுதிக்கொண்டு திராவிடர் கழகத்தில் தொடர்ந்தார் கருணாநிதி.

அவரும் தனது பங்கிற்கு அண்ணாவை கடுமையாக சாடி ," அய்யா ஆணையிடுகிறார் ...... அண்ணா ஊளையிடுகிறார் " என்று தலைப்பிட்டு எழுதியவர் கருணாநிதி.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

பெரியார் எப்படிப்பட்ட, " ஜாதி வெறியர் " என்பது பாவம் அவரை நம்பும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தெரியாது.

இதற்கு பல உதாரணங்களை சொல்லலாம். அதிலும் குறிப்பாக டிசம்பர் 1968ல் தாழ்த்தப்பட்ட மக்கள் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 44 பேர், திருவாரூர் அருகில் உள்ள கீழ வெண்மணியில் துடிக்கத்துடிக்க குடிசையில் வைத்து கொளுத்திய காட்டுமிராண்டி சம்பவத்தை சொல்லலாம்.

முன்னேறிய மனித சமுதாயமே வெட்கி, தலைகுனியவேண்டிய சோகமான நிகழ்வு.

இதில் மிகப்பெரிய கொடுமை என்னவென்றால் கொளுத்தப்பட்ட 44 பேர்களில் ஒரு 6 வயது அப்பாவி பெண் குழந்தையும் அடக்கம்.

இந்தச்சம்பவமே சமீபத்தில், " ராமையன் குடிசை " என்று திரைப்படமாக வெளிவந்தது.

கொளுத்திய கோபாலகிருஷ்ண நாயுடு தனது சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதாலும், கருகிய 44 பேர் தலித் சமூகத்தினர் என்பதாலும் பெரியார் அந்த சம்பவத்தை கண்டித்து ஒரு சிறிய ஆர்பாட்டம்கூட நடத்தவில்லை. எதுவுமே நடக்காததுபோல் அமைதியாக இருந்தார்.

அதேபோல இந்த உலகத்தில் மிகப்பெரிய சந்தர்ப்பவாத அரசியல் செய்வதில் மிகப்பெரிய கெட்டிக்காரர் கருணாநிதிதான் என்பது உலகத்திற்கே தெரியும்.

1952 களில் எந்த அளவிற்கு கீழிறங்கி, அண்ணாவை திராவிடர் கழகத்தில் தொடர்ந்துகொண்டு மட்டமாக அர்ஜித்தவர் கருணாநிதி என்பது அனைவருக்கும் தெரியும்.

1959 - 60 களில் தமிழகத்தில் துணிவிலை உயர்ந்ததற்கு காரணம் பள்ளு, பறையர்கள் துணி உடுத்த ஆரம்பித்துவிட்டதுதான் காரணம் என்று ஒரு சந்தர்ப்பத்தில் பெரியார் கூறியிருந்தார்.

அதை கண்டித்து, 1957 தேர்தலில் திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டு, பெரியாரை எதிர்த்து, கருணாநிதி எந்த அளிவிற்கு வசைபாடி அந்தர் பல்டி அடித்தவர் என்பதை உலகம் புரிந்துகொள்ளவேண்டும்.

1960 பொங்கல் மலரில் , தனது முரசொலி இதழில் பெரியாரை ஒரு கேலிச்சித்திரத்தின்மூலம் எந்த அளவு வசைபாடியுள்ளார் பாருங்கள் .

 
No automatic alt text available.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

புரட்சிக்கவியின் சாதிய மனோபாவமும் கழகக் கணக்குகளும்

 

குத்தறிவாளர்கள் சாதியை வைத்து இழிவு செய்யாதவர்கள் என்ற ஒரு பிம்பம் நம் எல்லோரிடமும் உண்டு. ஆனால் பகுத்தறிவாளர்களும் சாதியை வைத்து இழிவு செய்பவர்கள் என்ற உதாரணத்திற்கு ஒரு பகுத்தறிவாளரை சொல்லவேண்டுமென்றால் புகழ்பெற்ற கவிஞர் – திராவிடர் இயக்கக்காரர்களால் பொற்கிழி பெற்ற ஒரே தலைவரை சொல்லலாம்.

யார் அவர்?

புரட்சிக்கவி என்று அழைக்கப்பட்ட பாரதிதாசன் தான்.

திராவிட இயக்கத்தில் அழுத்தமாகத் தடம்பதித்த முதன்மைக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்தான்.

பாரதிதாசன் என்று சொன்னாலே அவர் ஒரு புரட்சிக்கவி; சாதி, மதம், இவற்றை எதிர்த்தவர்; பெண் விடுதலை, தமிழ்ப் பற்று இவற்றை ஆதரித்தவர் என்ற பிம்பம்தான் தோன்றுகிறது.

ஆனால் அவர் கடைபிடித்த கொள்கை அதற்கு எதிராகவே இருந்தது.

அவர் என்னென்ன தத்துவங்களை எழுதினாரோ பாடினாரோ அதைத் தம் வாழ்வில் கடைபிடிக்கவில்லை.

’….. கலப்பு மணம் ஒன்றே

நல்வழிக்குக் கைகாட்டி’

என்று பாடிய கவிஞர் தம் மக்களுக்குக் கலப்பு மணம் செய்விக்க முன்வரவில்லை.அதைக்கூட விட்டுவிடலாம்.

பாரதிதாசன் பகுத்தறிவுவாதி; சாதிக்குத் தீ என்றெல்லாம் சொல்கிறார்களே அது உண்மையா என்றால் இல்லை. திராவிட இயக்க பகுத்தறிவுவாதிகளும் சாதிப் பெயரைச் சொல்லி இழிவாகப் பேசுபவர்கள்தான்.

anna_and_bharatidasan28-7-1946ல் புதுச்சேரி மாகாணத்தின் திராவிடர் கழகத்தலைவர் பாவேந்தர் பாரதிதாசனுக்கு அண்ணாத்துரையால் பொற்கிழி வழங்கப்பட்டது. பொற்கிழியாக ரூ. 25,000 தரப்பட்டது. அந்தக்காலத்தில் இத்தொகை மிகப்பெரிய தொகை. எந்தக் கவிஞனுக்கும் அந்தக் காலகட்டத்தில் இந்த அளவு தொகை வழங்கப்படவில்லை.

பின்னாளில் அண்ணாத்துரைக்கும் பாரதிதாசனுக்கும் முரண்பாடு எழுந்தது. அந்த முரண்பாட்டின் காரணமாக பகுத்தறிவுவாதி பாரதிதாசன் அண்ணாத்துரையை எவ்வளவு கேவலமாக எழுதமுடியுமோ அவ்வளவு கேவலமாக எழுதினார், தான் நடத்திய ’குயில்’ வார இதழில். முரண்பாடு என்று வந்துவிட்டால் சாதி ஒழிப்பாவாது; கண்ணியமாவது – இவற்றை எல்லாம் பகுத்தறிவுவாதிகளிடம் எதிர்பார்க்கமுடியாது.

சரி அப்படி என்னதான் எழுதினார் பாரதிதாசன்?

1958ம் ஆண்டு தான் நடத்திய குயில் வார இதழில்தான் பாரதிதாசன் அண்ணாத்துரையை கேவலமாக விமர்சித்து எழுதினார்.

கட்டுரையின் தலைப்பு : அண்ணாதுரையா எனக்குப் பொற்கிழி அளித்தார்?

இந்தத் தலைப்பில் 4 தொடர்கட்டுரைகளை எழுதினார் பாரதிதாசன். அந்தக் கட்டுரைகளை இப்போது பார்ப்போம்.

1. குயில் இதழ், குரல்– – 1, (30-9-1958), இசை -18

அண்ணாதுரையா எனக்குப் பொற்கிழி அளித்தார்?
…..
அறிவிப்பு உ. :-

இதற்குமுன் அதே முரசொலியில் அண்ணாத்துரை உங்கட்குக் கொடுத்த பொற்கிழிமேல் நீங்கள் நின்றுகொண்டு ஒலிபெருக்கியில் பேசுகின்றது போல் படம் வந்திருந்தது. அண்ணாத்துரை தான் உங்களைப் பொதுமேடையில் ஏற்றினாராம்.

இதற்கும் அடுத்துவரும் அறிவிப்புக்கும் சேர்த்துப் பதில் எழுதுவேன்.

அடுத்த அறிவிப்பு வருமாறு :-

முன் ஒருமுறை, உங்கட்குப் பொற்கிழி தந்து பொன்னாடை போர்த்தினார் அண்ணாத்துரை என்பதாகக் காட்டியிருந்தார் தம் திராவிடனில் என்.வி.நடராசன் அவர்கள். அதுவுமின்றி அண்ணாத்துரையே புதுவையில் பொதுக்கூட்டத்தில் பேசும்போது கவிஞர்க்குப் பொற்கிழி கொடுத்தேன், பொன்னாடை போர்த்தினேன்; அப்படியிருந்தும் என்னை கவிஞர் எதிர்க்கிறார் என்று கூறினார். இதற்கு நீங்கள் பதில் கூற வேண்டாமா?

எனது பதில் :-

எனக்குப் பொன்னாடை போர்த்துப் பொற்கிழி கொடுப்பதற்கென்று அமைந்த குழுவினர் தம் செயலைத் தொடங்கிப் பணியாற்றி வருகையில் அண்ணாத்துரை நிலைமை எப்படி என்பது தெரிந்தால், அண்ணாத்துரை எனக்குப் பொற்கிழி பொன்னாடை தந்திருக்க முடியாது என்பது விளங்கும்.

அதைக் கேளுங்கள்.

அண்ணாத்துரையின் தமக்கையார் மகளை காஞ்சியில் செல்வந்தராயிருக்கும் (இன்னும் இருக்கின்றார்) பொன்னப்பாவிடம் இரவில் அழைத்துச் செல்வதும் இன்ப விளையாட்டு முடியும்வரைக்கும் வெளியில் காத்துக் கொண்டிருப்பதும் அண்ணாத்துரையின் வேலை. துண்டு இருந்தால் சட்டை வேண்டாம், சட்டை இருந்தால் துண்டு வேண்டாம் என்கிறாள் என் தொத்தா – அண்ணாத்துரையின் அப்போதைய புலம்பல் இது!

அன்னையோ சென்னையில் ஐயரோடு! காஞ்சிப் பூஞ்சோலைக்குத் தண்ணீர் இழுப்பும் பறிப்பும்.

பண்ணியம் ஏதேனும் உண்ண ஆசைப்பட்டால் அதற்காக அண்ணாத்துரைக்கு வருமானம் பொன்னப்பா தரும் சிறுதானம்.

இந்த நிலையில் எனக்குப் பொற்கிழியும் பொன்னாடையும் அண்ணாத்துரையா அளித்திருப்பார்? அதற்கு மாறாக அண்ணாத்துரை என்ன முயற்சியில் ஈடுபட்டிருந்தார் தெரியுமா அப்போது?

பெரியாரின் செல்வநிலை கண்டு மலைத்தார். அவரின் தொண்டராகி நிலைத்தார். குடும்பம் குலைத்தார். பெரியாரை அவர் அண்ணாரிடமிருந்தும், மக்களைப் பெற்றவரிடமிருந்தும் கலைத்தார்.

இன்னும் இதைச் சொல்வதென்றால் விரியும், திரு.குருசாமியைக் கேட்டுப் பாருங்கள் தெரியும்.

இந்த முயற்சியில் அண்ணாத்துரைக்குச் சாப்பாட்டுக் குறைவு நிறைவேறிற்று.ஆனால் அவர் கோட்பாட்டுக் குறைபாடு அப்படியே இருந்தது.

தமக்கொரு நல்ல நிலையை ஏற்படுத்துக் கொள்ள எவன் ஏமாறுவான் என்று அண்ணாத்துரைக் கழுகு முகத்தைத் தீட்டிக் கொண்டிருந்தது.

எனக்கு பொன்னாடைப் போர்த்தும் விழாக்குழுவானது மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்தது. அக்குழுவில் நாமக்கல் கருப்பண்ணர், செல்லப்பர் முதலியவர்கள் நாட்டில் செல்வாக்குள்ள புள்ளிகள்.

காலஞ்சென்ற குமாரசாமி இராசாவைத் தலைவராக கொண்ட இராசபாளையத்து மக்கள் என் விழாக்குழுவினர் வாயிலாக என்னைப் பாராட்ட எண்ணாமல் தனியாக என்னை இராசப்பாளையத்திற்கு அழைத்துப் பண முடிப்புக் கொடுக்க எண்ணி என்னை அழைத்தார்கள்.

நான் இராசபாளையம் போக இருப்பது அண்ணாத்துரைக்குத் தெரிந்து நானும் வருகின்றேன் என்று என்னிடம் கெஞ்சினார். அழைத்துப்போனேன். விழா நடந்தது அங்கும் பொற்கிழி அளித்தார்கள். அண்ணாத்துரை ஏதும் கேட்கவில்லை. அவர் எதிர்பார்த்தது சிறிதன்று.

இராசபாளையம் விட்டு வந்த அண்ணாத்துரை, என் விழாக்குழுவினரிடையெல்லாம் சென்று நான் கவிஞருடன் இராசபாளையம் சென்றேன் – சென்றேன்- என்று பறையடித்தார்.விழாக்குழுவில் புகுந்துகொள்ள வேண்டும் என்பது அண்ணாத்துரையின் ஆசை!

விழாக்குழுவினரில் ஒருவர் டி.என்.இராமன்! அவரை அண்ணாத்துரை நெருங்கினார்.தம் ஆசையை மலர்த்தினார். இராமன் ஒப்பினார். மேளம் மேளத்தை ஆதரிக்க என்ன தடை?

அண்ணாத்துரை விழாக்குழுவினரில் ஒருவராகிவிட்டார்.

(தொடரும்)

2. குயில் இதழ், குரல்– – 1, (7-10-58), இசை -19

விழா நாளைக்கு என்னும்போது நான் சென்னையில் தங்குவதெற்கென்றமைத்த வீட்டில் வந்து தங்கிவிட்டேன். அன்றைக்கே சிங்கப்பூர், திருச்சி, சேலம் முதலிய இடங்களினின்று பெருமக்கள் சென்னையில் வந்து நிறைந்துவிட்டார்கள்.

என்னைச் சிலர் நேரில் வந்து கண்டார்கள். அவர்களால் நான் பெற்ற முறையீடுகள் குறிப்பிடத்தக்கவை.

அண்ணாத்துரை வந்து சொன்னது : நான் விழாக்குழுவில் பொருட் காப்பாளனாக இருந்து வேலை செய்யாவிட்டால் இத்தனை சிறப்பாக இந்த விழா அமையாது.என் செலவில் இந்தப் பொன்னாடையை நெய்யச் செய்தேன்.

அண்ணாத்துரை போனபின் மற்றொரு செல்வந்தர் வருகின்றார் அவர் சொன்னது :என் செலவில் என் தறியில் என் ஆளைக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டது, பொன்னாடை.

சேலத்தார் நால்வர் வருகின்றார்கள். அவர்கள் சொன்னது :சேலத்துப் பகுதியில் விழாவுக்கென்று தொகை பெற்றுக் கொண்டவர் இரசீது தருவதாய்ச் சொல்லியும் தரவேயில்லை.

சிங்கப்பூரார் ஒருவர் வருகின்றார் அவர் சொன்னது : பன்முறை பத்தாயிரம் ரூபாய் அனுப்பியிருக்கின்றோம் சிங்கப்பூரினின்று! தொகை பெற்றுக் கொண்டதற்கு இரசீது அனுப்புவதில் சுணக்கம் காட்டுகின்றார்கள் குழுவினர்.

டி.என்.இராமன் வருகின்றார். அவர் சொன்னது: குயில் செய்யுள் வார இதழ் வெளியிடுவதற்கான முற்செலவுக்காக இரண்டாயிரம் ரூபாய் தனியே ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதுபோக மீதியைத்தான் உங்களுக்குப் பொற்கிழியாக அளிக்கப்படும்.

விழா நடந்தது. பொன்னாடை போர்த்தப்பட்டேன், பொற்கிழியை அண்ணாத்துரை கையால் அளிக்கப் பெற்றேன். அதை மிக விழிப்பாக அண்ணாத்துரை முயற்சியால் நிழற்படம் எடுக்கப்பெற்றேன்.

பொற்கிழி பையில் ஐயாயிரம் குறையக் காணப் பெற்றேன். கணக்குப் பின்னால் தருவதாகக் கேட்கப் பெற்றேன். பல விடங்களிலிருந்தும் இருபத்தையாயிரந்தான் சேர்ந்ததென்று கூறப்பெற்றேன். என் வீட்டுக்கு அனுப்பப் பெற்றேன்.

விழா நடந்த பின் அடுத்தவாரத்தில் அண்ணாத்துரை வெளியிடும் திராவிட நாட்டில் ஒரு குறிப்புக் காணப்பட்டது. பாரதிதாசன் பொன்னாடை போர்த்து விழாக்குழுவினர், விழா வரவு செலவுக் கணக்கையெல்லாம் பாரதிதாசன் அவர்களிடம் அனுப்பிவிட்டார்கள். இனிப் பாக்கித் தொகையை அனுப்ப வேண்டியவர்கள் நேரே பாரதிதாசன் அவர்கட்கே அனுப்பிவிடுக என்ற கருத்தமைந்திருந்தது.

அவ்வாறு எனக்குக் கணக்கு அனுப்பப்பட்டதா? இன்றுவரைக்கும் அனுப்பப்படவில்லை. அடுத்தடுத்து அப்போதே கேட்டும் அனுப்பவில்லை. கணக்கைக் கேட்டு வாங்க வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டதால் கேட்டேன் கணக்குத்தரவில்லை. இன்றுவரைக்கும் (7-10-58) தரவில்லை. அண்ணாத்துரை தரவில்லை. கணக்குத் தரக்கூடாது என்பதற்காகத் தரவில்லை அண்ணாத்துரை!

அதன் தகவல் என்ன?

பாரதிதாசனை ஆசிரியராகக் கொண்டு குயில் கவிதை வார இதழ் வெளிவரும் என்ற மறைவான சுற்றறிக்கை பறந்தது, விற்பனையாளரை நோக்கி! ஆறாயிரம் ரூபாய் குயிலுக்கு முற்பணமாக அனுப்பியிருக்கிறார்கள் விற்பனையாளர்கள்.

என்னிடம் டி.என்.இராமன் வந்து குயிலில் வெளிவர வேண்டிய கவிதைகளையெல்லாம் வாங்கிக் கொண்டு, என் அச்சு நிலையத்தையும் சென்னையிலிருக்கட்டும் என்று தூக்கிக்கொண்டு போய்விட்டார். அப்போது அவர் சொன்னது என்னவென்றால் குயில் பற்றி நீங்கள் சென்னைக்கு வர வேண்டாம். நாங்கள் பார்த்துக் கொள்ளுகின்றோம் என்பது.

சில நாட்களின்பின், குயில் வெளிவருநாள் ஆயிற்றே, அது பிழையில்லாமல் வெளிவரவேண்டுமே என்று கருதிச் சென்னை சென்றேன்.

திருத்தம் பார்க்க முதற்குயில் எனக்கு அனுப்பப்படுகிறது. அதன் முதற்பக்கத்தில் குயிலுக்கு உடையவர்கள் டி.என்.இராமன் என்று காணப்படுகின்றது. அவர்களின் உள் எண்ணத்தை
அறிந்தேன். அவர்களே சொன்னார்கள்: குயில் உம்முடையது அன்று. அச்சகம் உம்முடையது அன்று. குயில் எழுதுவதற்குத் திங்கள் ஊதியமாக 200 ரூபாய் உமக்குக் கொடுக்கப்படும் என்று கூறப்பட்டது. அதனோடு, நீர் எம்மை ஒன்றுமே செய்ய முடியாது என்றும் கூறப்பட்டது.

நான் என்ன செய்தேன்?

நான், அந்தக் குயிலுக்கும் எனக்கும் யாதொரு தொடர்புமில்லை,விற்பனையாளரிடம் வாங்கியுள்ள முற்பணத்திற்கு நான் பொறுப்பாளி அல்லேன். இனி நான் என்வாயிலாக வெளியிட இருக்கும் குயிலுக்கு ஆதரவு தருக என்று நாளிதழ் ஒன்றில் அறிக்கை வெளியிட்டு, என் குயிலையும் வெளியிட இருக்கையில் அதன் மேல் இஞ்செக்ஷன் உத்தரவுகோரி ஐகோர்ட்டில் என்மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டது. நானும் வழக்கறிஞரை வைத்து எதிர் வழக்கிட்டேன்.

(தொடரும்)

3. குயில் இதழ், குரல்– – 1, (14-10-58), இசை -20

தீர்ப்பாளர், இந்தக் குயில் எந்தப் பணத்தினின்று தோற்றுவிக்கப்பட்டது?என்று கேட்டார்.

அதற்கு டி.என்.ராமன் சார்பில் வந்திருந்த வழக்கறிஞர் சொன்னார் : இராமன் பணத்தினின்று என்று!

kuyil_bharatidasan_1என்சார்பில் வந்திருந்த வழக்கறிஞர் அதை மறுத்து, பாரதிதாசனுக்கு அளிக்கப்பட்ட தொகையினின்று இந்தக் குயில் தோற்றுவிக்கப்பட்டது என்று பதில் கூறினார்.

தீர்ப்பாளர் : அப்படியானால் நிதி தண்டிய – செலவு செய்த கணக்குக் கொண்டு வாருங்கள் என்றார்.

உடனே அதற்கு டி.என்.ராமனுடைய வழக்கறிஞர் ஆம்!ஆம்! காட்டச் சொல்லுங்கள் கணக்கை என்றார். என் வழக்கறிஞர் உறுதியாகச் சொல்கிறேன் கணக்குக் காட்டுவேன் என்றார்.

அடுத்த ஆய்வுமன்றில் நான் கணக்கைக் காட்ட வேண்டும். அண்ணாத்துரைக்கு ஆள் அனுப்பினேன். இதோ அதோ என்றார். அஞ்சல் எழுதினேன். இதோ அதோ! தஞ்சையில்
நாடகத்தின்போது நேரிற்கேட்டேன். இதோ அதோ!

என் குயிலைப் பறிக்கவும் என் அச்சகத்தைப் பறிக்கவும் முன் எண்ணத்தோடு செய்யப்படும் இந்த வேலைகள் அனைத்தும் அண்ணாத்துரையுடையதே என்று தெரிந்தும் நான் விடாப்பிடியாக அண்ணாத்துரையைக் கேட்டுப் பார்த்தேன். ஏன் எனில், விழாக்குழுவில் உள்ளவர்களுக்கு அஞ்சி அண்ணாத்துரை கணக்குகளை என்னிடம் கொடுக்கத்தானே வேண்டும்! ஆனால் அவர் என்ன செய்தார் தெரியுமா?விழாக்குழுவினரை அழைத்து- கணக்கைப் பாரதிதாசனிடம் கொடுப்போமானால் நாம் எல்லோரும் சிறைக்குப் போக வேண்டும் என்றார்.

குழுவினர் நம்பினார்கள்! ஏன் அவர்களுக்குப் புரிகின்றது. வரவு வந்த பெருந்தொகை கொள்ளையடிக்கப் பட்டிருக்கிறது.

கொள்ளையடித்தக் குற்றத்தை நம தலையில் கட்டிவிடும் ஆற்றல் அண்ணாத்துரைக்கு உண்டு என்று குழுவினர் உறுதியாக நம்பினார்கள்.

இன்றுவரைக்கும் அண்ணாத்துரை வரவு செலவுக் கணக்கைக் கொடுக்கவேயில்லை!

என் வழக்கு என்ன ஆயிற்று – கெடு தள்ளிக் கொண்டே போகிறது. டி.என்.ராமனின் நிலை கீழ்நோக்கிக் கொண்டே போகின்றது. வழக்கைக் கைவிட்டு விடுவதாக என்னைக் கேட்டுக் கொண்டார். நானும் வழக்கைக் கைவிட்டுவிட்டேன். அதன் பயனாகக் குயில் என்னிடமே வந்துவிட்டது. அது சென்னையிலேயே நடந்து கொண்டிருந்தது. அதன்பின் புதுவை வந்தது. அதன்பின் சென்னை அரசினர் அதற்குத் தடைபோட்டார்கள் நின்றது.

அந்தத் தடை நீங்கியது பின் இப்போது புதுவையில் தொடங்கப்பெற்று நடந்து வருகின்றது.

தோழர்கள் எனக்கு அனுப்பிய வினாக்களுக்கு ஒன்று தவிர – விடை சொல்லிவிட்டேன் என்று எண்ணுகின்றேன்.

இன்னும் ஒன்றுக்குத்தான் பதில் சொல்லியாக வேண்டும்.

அந்தக் கேள்வி என்ன?

கருணாநிதி முதலியவர்கள் – கூட்டத்தில் பேசும்போது பாரதிதாசன் பாட்டுக்களைப் பாடுகின்றார்கள். அவ்வாறு பாடியபின், இது மாஜி கவிஞர் பாரதிதாசன் பாட்டு என்கிறார்கள். இது பற்றி உங்கள் கருத்து என்ன – என்பது.

இதற்கு அடுத்த குயிலில் பதில் தெரிவிக்கின்றேன்.

(தொடரும்)

kuyil_bharatidasan_24. குயில் இதழ், குரல்– – 1, (21-10-58), இசை -21

அண்ணாத்துரையா….. என்ற பகுதி கவிஞர் வெளியூர் செல்ல நேர்ந்ததன் காரணமாக இந்த இதழில் வரவில்லை. அடுத்த இதழில் வரும்.

5. குயில் இதழ், குரல்– – 1, (28-10-58), இசை -22

என் பாட்டைக் கூட்டத்தில் பாடி விடுவது! பாடிய பிறகு இது மாசிக் கவிஞர் பாரதிதாசன் சொன்னது என்று கூறுவது இதற்கு நான் பதில் கூறுகிறேன். இந்தக் கற்பனை அவர்கட்கு எங்கிருந்து கிடைத்திருக்கும் என்பதை நாம் ஊன்றி நோக்க வேண்டும்.

பொது மகளின் இல்லத்தில் இதுபோன்ற கருத்துக்கள் செயல்கள் கிடைக்கும்.

ஒரு தந்தை பணம் கொடுக்காத காரணத்தால் வருவதை நிறுத்திக் கொள்ளுகிறான்.அல்லது மறுத்து ஒதுக்கப்படுகிறான். அவன் இறந்துவிட வேண்டும் என்பதில்லை.இன்னொரு தந்தை வந்துவிட்டபின் பையன் முன்னைய தந்தையை மாசித் தந்தை என்பான்.

என்னை மாசிக் கவிஞன் என்பவன் அத்தன்மையை மேற்கொண்டவனாயிருக்கலாம். அல்லது கலப்பில்லாத தே***ள் மகனாயிருக்கலாம். [#]

***********************

[#] – கண்ணியம் கருதி இந்த இணையதளத்தில்  *** பயன்படுத்தப் பட்டுள்ளது.  குயில் இதழில் அந்தச் சொல் அப்படியே அச்சில் வந்திருந்தது.

அண்ணாத்துரைக்கும் பாரதிதாசனுக்கும் அரசியல் ரீதியான முரண்பாடு எழுந்தபோது பாரதிதாசன் தீட்டியிருக்கும் இந்தக் கட்டுரைகள் கண்ணியம் குறைவான,மிக மிக மட்டரகமான, வக்கிரம் பிடித்த விமர்சனங்கள் ஆகும் என்பதைச் சொல்லத் தேவையே இல்லை. இதைப் படிக்கும் எவருக்கும் அது புரியும்.

அண்ணாத்துரை மீதும், பாரதிதாசனின் மீதும் மதிப்பும் மரியாதையையும் யாரேனும் கொண்டிருந்தால் அவர்கள் இதனைப் படித்து அதிர்ச்சியடையக் கூடும்.ஆனால் இவை தான் ‘பேரறிஞரின்’, ‘பாவேந்தரின்’ உண்மை முகங்கள்.

டி.என்.ராமன் இசை வேளாளர் சாதியைச் சார்ந்தவர். ஆகவே அண்ணாத்துரையும் டி.என்.ராமனையும் இணைத்து எழுதினார்.`மேளம் மேளத்தை ஆதரிக்க என்ன தடை?’என்று அண்ணாத்துரையின் சாதிப் பெயரை வைத்து இழிவு நோக்கில் எழுதியிருக்கும் பாரதிதாசன் சாதியை எதிர்த்தார் என்று சொல்வது நல்ல முரண்நகை.

திராவிட இயக்க கொள்கைகளையாகட்டும், தலைவர்களாகட்டும், தொண்டர்களாகட்டும். அவர்களைப் பற்றிக் கட்டமைக்கப் பட்டிருக்கும் பிரசார பிம்பங்களை உண்மைத் தகவல்களின் ஒளியில், மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும்.

சாதி எதிர்ப்பு பற்றிக் கச்சைக் கட்டிப் பாடிய புரட்சி கவிஞரா இப்படி? என்று அதிர்ச்சியைக் காட்ட வேண்டாம். ஏன் என்றால் உள்ளம் முழுக்க அவர்களுக்கு பொய்மையும், போலித்தனமும், கபடமும், வக்கிரமும் தான் இருந்திருக்கிறது. அதோடு உள்ளம் முழுக்க அவர்களுக்கு சாதி இருக்கிறது, அதுதான் இப்படி வெளிவருகிறது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Ananthakrishnan Pakshirajan

I: Periyar said many things unprintable about Brahmins.
Periyar Fans: No your sense of dimensions is wrong. He is multi-dimensional.
2. Periyar kept abusing Gandhi for many years.
PF: No. He is multi-dimensional.
3. I: Periyar spoke about women's liberation, but married a young woman.
PF: No. He is mult-dimensional.
4. I: Periyar didn't believe in democracy and he said 90% of our people were fools.
PF: No. He is multi-dimensional.
5. Periyar was dictatorial and that was the reason why Anna left him.
PF: No. He is multi-dimensional.
6. I: He spoke about Malayalis and others in a language that was not civilized.
PF: No. He is multi-dimensional.
7. I: He spoke in an obnoxious way when the Keezha venmani murders took place.
PF: No. He is multi-dimensional.
8. I: He was against the very idea of India.
PF: No. He is multi-dimensional.
9. I: He said Tamil was a language of Barbarians.

PF: No. He is multi-dimensional.
10. I: His atheism was crude.
PF: No. He is multi-dimensional.
11. I: His rationalism was without any substance.
PF: No. He is multi-dimensional.
12. I: You don't get it, do you? I am also speaking about his dimensions. I can go on and on and speak about his several other dimensions.

PF: You are a Brahmin thug.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard