New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நான் பரட்டை


Guru

Status: Offline
Posts: 24603
Date:
நான் பரட்டை
Permalink  
 


டாஷ் மூஷ் காஷ் தலித்தாஷ் !

 

பெயர்:                                   பரட்டை
இயற் பெயர்:                    ஜேம்ஸ் தியோபிலஸ் அப்பாவு
புனைப்பெயர்கள்:        சைந்தவி ப்ரியன்
கடலூரான்
டாரத்தி மணாளன்
இறைநேயன்
ஜோதிட சிகாமணி
சிலேத்துப்பாட்டி
சிலுக்கு ரசிகன்

பெற்றோர்:        மெர்சி கிளாரா, ஜேம்ஸ் டேவிட்

குடும்பம்:
மனைவி – டாரத்தி கிரேஸ் வித்வ சிரோன்மணி

மகள்கள்  
1. அட்ரினா சயிந்தவி அருண்மொழி
2. நீனா பாகேஸ்வரி
3. பானுமதி மெர்சி கிளாரா

பிறந்த நாள்:        09.03.1940

பேராசிரியர்  (தொடர்பியல், பண்பாடு, தலித் சமயம், இறையியல்)
தமிழ்நாடு இறையியல் கல்லுரி, மதுரை

தேசிய இனம்:        தமிழன் – இந்தியன்

சாதியற்றவனின் .மதம்       தலித் கிறித்துவன்

கல்வித்தகுதி-பட்டங்கள்    :
1.    எஸ்.பி.ஜி. தொடக்கப்பள்ளி. கடலூர் (1-5)
2.    நகராட்சி உயர்நிலைப்பள்ளி கடலூர்  (6-10) 1956
3.    ஊரிஸ் கல்லூரி, வேலூர்(பி.யு.சி.) 1957
4.    அரசு ஆசிரியர் பயிற்சிப்பள்ளி, வடலூர் 1959
5.    கலையிளம் வரலாறு (B.A.) 1963,    சென்னைப் பல்கலைக்கழகம்
6.    முதுகலை சமயம், சமயம் (M.A.) 1975, மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
7.    கலையிளம் இளந்தேவியல் (B. D), செராம்பூர் பல்கலைக்கழகம் 1978
8.    முதுகலை இறையியல் (M. Th), எடின்பரோ பல்கலைக்கழகம், இங்கிலாந்து

அருட்பொழிவு:  05.05.1991. தென்னிந்திய திருச்சபை, சென்னைப் பேராயம்

டாக்டர் பட்டம்: 2005 மார்ச் (சென்னை குருக்குள் இறையியல் கல்லூரி)

பணி அனுபவங்கள்:
1.    எழுத்தர், ஈ.ஐ.டி. பாரி சர்க்கரை ஆலை, நெல்லிக்குப்பம் (1958-1961)
2.    ஆசிரியர் (1996-1970), சி, பகண்டை, திருக்காண்டேஸ்வரம், கீழ்ப்பட்டாம்பாக்கம் (கடலூர் மாவட்டம்)
3.    திட்ட அலுலவர் (1979), கிராமிய இறையியல் நிறுவனம், சின்ன உடைப்பு, மதுரை
4.    இயக்குனர் (1989), கிராமிய இறையியல் நிறுவனம்
5.    இயக்குனர், கிறிஸ்துவ ஒப்படைப்பு செயற்பாட்டுக் கல்வி (டெக்கா)

வருகைதரு பேராசிரியர்:
1.    அருட்கடல், சென்னை (6 ஆணடுகள்)
2.    திருவரங்கம் அமலாஸ்ரமம், திருவரங்கம்-திருச்சி(4 ஆணடுகள்)
3.    தூய பவுல் இறையியல் கல்லூரி, திருச்சி (5 ஆண்டுகள்)
4.    பாப்பல் இறையியல் கல்லூரி, பூனா (1 ஆண்டு)
5.    தர்மாஸ்வரம், பெங்களூரு (1 ஆண்டு)

1.    தலைமை தேர்வு ஆணையர், மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
2.   துறைத் தலைவர் (மதிப்பு)  தலித் திறந்தவெளிப் பல்கலைக் கழகம், ஆந்திரப் பிரதேசம்

பிரதிநிதியாக பங்கேற்றவை:
1.    உப்சலா பல்கலைக்கழகம், சுவீடன் 1979
2.    இளைஞர் இயக்கம், மெதடிஸ்ட் திருச்சபை, இலங்கை
3.    தலித் இறையியல் பட்டறை, குயின்ஸ் கல்லூரி, இங்கிலாந்து
4.    இசைப்பயிற்சி இயக்கம், இலங்கை

நாடகப்பட்டறை பயிற்சி ஆசிரியர்:
1.    தொடர்புத்துறை, இயேசுசங்க இறையியல் கல்லூரி, சென்னை
2.    இதழியல் பயிற்சி, கிறித்துவ இலக்கிய சங்கம், சென்னை
3.    நாடகப்பயிற்சி நிறுவனம், தீனபந்துபுரம், வேலூர்
4.    கத்தோலிக்க அருட்சகோதரிகள் பயிற்சி மையம், கொடைக்கானல்
5.    வாலிபர் இயக்கம்,தமிழ் சுவிசேஷ லுத்திரன் திருச்சபை, மதுரை
6.    எல்.ஆர்.எஸ்.எ. செங்கல்பட்டு
7.    அதேகம் (Adecom), திண்டுக்கல்
8.    ஆ.லு.தி. ஆதார மையம், ஆற்காடு லுத்திரன் திருச்சபை, கடலூர்
9.    Watts Institution

பாடத்திட்டக்குழு    :
1.    இணைந்து கற்போம், முறைசாராக் கல்வி வளர்ச்சி, செராம்பூர் பல்கலைக்கழகம்

ஆய்வேடுகள்:
1.    Communication for Dalit Liberation
2.    Asian Theology according to pires
3.    Emotion Elements of culture in Tamil women’s Communication , (Edinbaro University, England 1993)
4.    The Religion of the people and Evangelism (ORU ULAI an India) WCC, Geneva 1993
5.    Nova (Folklore-Drama) Evaluation in CCA-Japan (Koyoto)
6.    Church and Social Communication in India, Thailand 1998
7.    College of Assension (6 months)
Queens college, Burmingham, England 1991

ஆய்வேடுகள் (இந்தியா)  
1.    The dalit Culture
2.    The Culture of the oppressed in Tamilnadu, Bible Seminary, Poonamally-Chennai
3.    Struggles for Social change and Art (TTS. Workshop)
4.    Dalit Religion and Culture Indegeneious  People, ISPCK 1989, Delhi
5.    Communicating Health
6.    Folklore as change agent and Educational Media
7.    தென்னிந்திய வாய்மொழி சமயத்தில் சாமி அனுபவம்
8.    தலித் சமயம் (தஇக. 1999)

பட்டத்திற்கான ஆய்வுகள்:
1.    அத்வைதக் கருத்தமைவுகளை இந்தியாவிற்கு பொருத்தமுடைய கிறிஸ்தியலுக்காக (பி.டி. ஆய்வேடு)
2.    The Communication for Dalit Liberation (M.Th. Thesis)

பரட்டையைப்பற்றிய‌ ஆய்வுகள்
1.    பரட்டையின் பாடல்களில் விடுதலைக் கருத்துகள், ஜோன்ஸ் அற்புதராஜ், தமிழ்நாடு இறையியல் கல்லூரி, மதுரை (B.Th. Thesis) 1997
2.    The indegenisation Tamil Christian Music:
3.    Folk Music as Liberative Transmission System
4.    Ms. Zoe Carey Sherinien
5.    Wesleyan University
6.    Ann Asrbor USA (Ph.D. Thesis) 1998

வெளியீடுகள்:
1.    நடிக்க நாடகம் எழுதுவது எப்படி?, வைகறை பதிப்பகம், திண்டுக்கல் 1988
2.    Folklore for change
3.    TTS Publication, Madurai (1985)

நூல் தொகுப்புப் பங்கேற்பு 
1.    தலித் பார்வையில் அருளுரைகள்

ஒலி நாடாக்கள்:
1.    நிமிந்து நட (த.இ.க. 1987)
2.    மாட்டுக்கொட்டில் ரெடியாச்சு (கி.இ.நி. 1999)
3.    தலித் முழக்கம் (த.ஆ.மை)

நாடகங்கள்: (அகில் இந்திய வானொலி நிலையம் ஒலிபரப்பிய நாடகங்கள்)
1.    யாருங்க கொல்லப்போறது?
2.    கிறிஸ்துமஸ் பரிசு
3.    ஒரு சீட்டித்துணி பட்டாகிறது

(லண்டன் பி.பி.சி-யில்)
4.    சத்திரக்காரன் நல்லவன், (புதுவை வானொலி நிலையம்)
5.    இறைவன் இருக்கின்றானா?
6.    முன்னணியில் (விஜய் டிவி)
7.    கல்வாரியை நோக்கி 1996

வீதி நாடகங்கள்:
1.    சங்கிலிராமன்
2.    கல்லோவியம்
3.    மனுசங்கடா
4.    வில்லியம் கேரி
5.    நரஹரி (1983)

தெருக்கூத்து:
1.    கூலி உயர்வு சுந்தரி
2.    பிச்சை எடுத்த ராணி (1979) கி.இ.நி.

மேடை நாடகங்கள்:
1.    ஒரு ரோமன் கத்தோலிக்க லுத்திரன்
2.    நிறமற்ற பூக்கள்
3.    யாருங்க கொல்லப்போறது?
4.    ஒரு விதை முளைக்கிறது
5.    ஒரு சிலுவை சுடப்படுகிறது
6.    நரஹ‌ரி (அத்வைத நாடகம்)
7.    சத்திரக்காரன் நல்லவன்
8.    ஏமாத்துப்பெட்டி எலும்புக்கூடு
9.    ஒரு சீட்டித்துணி பட்டாகிறது
10.    டாக்டர் டாக்டர் டாக்டர்
11.    அம்மா பசிக்குது
12.    தேவனுக்கே மகிமை
13.    அங்க பாக்காதீங்க! இங்க பாருங்க!
14.    சங்கிலிராமன்
15.    கல்
16.    ஒன்றுபட்டால்
17.    ஒன்றுமில்லை நான்
18.    உயிர்த்தெழுந்த ஆண்டவர்

சிறுகதைகள்:
1.    எப்போ வருவாரோ? (குங்குமம் 1980)
2.    அவளுக்கு கற்பு ஒரு ஆடம்பரப்பொருள் (பசுமை செய்திகள் 1982)
3.    தழும்பு
4.    நானொரு முட்டாளுங்க (பசுமை செயதிகள் 1983)
5.    சாமியப்பன் வுட்ட ரீலு (பசுமை செய்திகள 1984)
6.    தரையில் நின்ற படகு ஆடுவதில்லை (இறையியல் மலர் 1987)
7.    பேய்க்கதை (இறையியல் மலர் 1987)
8.    மறைந்திருந்து தாக்கும் மர்ம்ப்பேய், (த.இ.க. வெள்ளிவிழா மலர்)
9.    மல்லிகைப்பூ சிரிக்கிறது
10.    திருமலை மெச்சன்
11.    நகரத்தின் நகங்கள்
12.    ரிக்சா ரங்கன்
13.     சிலேத்துப்பாட்டி சொன்ன கதை
14.    லோன் வாங்க லோல்பட்டது
15.    நானொரு முட்டாளுங்க

பாடல்கள்:
1.    நிமிந்து நட
2.    புத்துயிர்ப்பாடல்கள்
3.    கிறிஸ்து பிறப்புப்பாடல்கள்
4.    தலித் விடுதலைப் பாடல்கள்
5.    கிராமியப்பாடல்கள் 115
6.    கர்நாடக இசைப்பாடல்கள் 65
7.    ஆங்கிலப்பாடல்கள் 3

வழிபாடு:    கிராமிய இசை வழிபாடு

விருதுகள்:
1.    அருட்கலைஞர், உலக கிறிஸ்துவ தமிழ்ச்சங்கம்
2.    அம்பேத்க‌ர் தேசிய விருது, தலித் திறந்தவெளிப் பல்கலைக்கழகம், ஆந்திரபிரதேசம்

————————————————————————————————————————–

பரட்டை: சமூக மாற்றத்துக்கான‌ ஒரு பண்பாடு

அன்புசெல்வம்

மானுட வாழ்வின் மய்யத்தில்,  தலித்துகளின் இன்றைய சரிபாதி வாழ்க்கை தன் அடையாளம் இழந்து வருகின்றது. தொல்குடிச் சமூகமாக பாதுகாக்கப்பட்ட மூலாம்பர பண்பாட்டுத் தொன்மங்கள், ஆதிக்கத்தின் உள்ளீடுகளால் உள்ளேயும், வெளியேயும் தொடர்ந்து விலங்கிடப்படுகின்றன. இந்து வருணதர்ம, சாதியச் சூழலில் பார்ப்பனியமும், உலகமயமும் உருவம் தெரியாத மலட்டு எதிரிகளுடன் கூட்டு சேர்ந்து, தலித் மீதான தாக்குதலை திட்டமிட்டுத் தொடங்கியுள்ளது.  தலித் விடுதலையின் குழு அடையாளங்கள் பலமிழந்து கொண்டிருக்கின்றன. நடைமுறைக் கற்பிதங்களால் நம் மீது திணிக்கப்பட்ட அடிமைக் காயங்களில் இருந்து விடுபட, இந்து வருணதர்மத்தின் பிறவி முதலாளித்துவ மேடு பள்ளங்களை  இன்னும் தகர்க்க வேண்டியுள்ளது.  இருட்டடிப்பு செய்யப்பட்ட எல்லாவற்றிலூம் தலித்துகளின் எல்லாமும் சிக்குண்டு கிடக்கின்றன.  இதிலிருந்து  மீளுதல் என்பது ஒடுக்கப்பட்ட மக்கள் கூட்டம் மட்டும் அல்ல. தொல்குடிச் சமுகமாகப் பாதுகாக்கப்பட்ட மூலாம்பரப் பண்பாட்டு அடையாளங்களின் மீளுதலூம் உள்ளடங்கி இருக்கின்றது. இருப்பினும், பன்னெடுங்காலமாக சிறை நிரப்பிய சாதியக் கொடுமைகளுக்கு எதிராகவும், இந்து மனுதர்ம வீழ்த்தலலுக்கான தன் அடையாள மீட்டுருவாக்கத்திற்காகவும், சமுகப் போராட்டங்களை தலித்துகள் வரலாற்றில் எப்போதோ தொடங்கி விட்டார்கள்.
 
குறிப்பாக, எண்பதுகளில் பேசத் தொடங்கிய சமூக அறிவியல் வளர்ச்சியின் சிந்தனைகள் தலித் விடுதலைக்கான கருத்தியல் திசைகளில் நீண்ட விவாதங்களைத் தொடங்கி வைத்தன.  சேரியின் உழைக்கும் வர்க்க உப்புக் கலவைகளும், அறிவுசார் தலித் சிந்தனையாளர்களும் ஒரே களத்தில் நின்று மய்ய நீரோட்டத்தில் பதுக்கப்பட்டப் பொய்மைகளைப் பதறடித்தார்கள்.  தலித் கலை, இலக்கியம், பண்பாடு, நாட்டுப்புறவியல், தலித் நாடக அரங்கு, தலித் இயக்க அரசியல் என நீட்சி பெற்றவை அனைத்தும் இதன் தொடக்கம்தான்.

தமிழக தலித் கலை, இலக்கிய, அரசியல் எழுச்சியில் இது பல வேதியியல் மாற்றங்களை உண்டாக்கியது. தலித்துகளிடம் இருந்து களவாடப்பட்டவைகள் ஒவ்வொன்றாக அடையாளம் காணப்பட்டன.  மய்ய நீரோட்டத்தில் பதுக்கிய தலித் குறியீடுகள் தனித்தனியாக பிரித்து எடுக்கப்பட்டன.  சேரி மக்களின் பண்பாட்டு அழகியல் புத்தொளியை நோக்கி வீறுகொண்டது.  விடுதலை உணர்வுகளால் மண் பிசையப்பட்ட தலித் விடுதலைக்கான கருத்தியல், ஒப்பனை இல்லாமல் தன் ஊடுருவலைப் பண்பாட்டுத் தளங்களில் தொடங்கிய இச்சூழலில், தென் தமிழகச் சமவெளியில் ஆளரவம் இல்லாமல், தனக்கே விதிக்கப்பட்ட தீண்டாமை எல்லைக் கோடுகளை உடைத்தெறிந்து தானும் ஒருவனாய் ஒரு எதிர்க் கலாச்சார காந்தப்புயலை உருவாக்கியவர் பண்பாட்டு அறிஞர் பரட்டை. ம‌துரை தமிழ்நாடு இறையியல் கல்லூரியின் தொடர்புத் துறை பேராசிரியராகப் பணியாற்றியவர். 35 ஆண்டுகளுக்கு முன் நாட்டுப்புறவியல் பாடல்களையும், நாடகங்களையும், நாட்டுப்புற இசை மரபையும் மதுரை மண்ணில் உலவ விட்டவர். அதன் தொடக்கம் தான் தலித் கலை விழா என்பதெல்லாம். தஞ்சையிலும், பாளையங்கோட்டை நாட்டார் வழக்காற்றியல் மய்யத்திலும், மதுரை காமராசர் பல்கலைக்கழக நாட்டுப்புறவியல் துறையிலும், தமிழ்நாடு இறையியல் கல்லூரியிலும் கிராமியம் என்கிற சொல்லாடலை காயடித்து விட்டு, நாட்டார் என்கிற சொல்லாடலை தனக்கான அடையாளமாக  ஆதிக்கம் செய்ய முற்பட்ட மேற்படியாள்களின் தமிழ்ச்சாதி விசுவாசத்தை கடுமையாக விமர்சித்தார், எதிர்த்தார் என்கிற ஒரே காரணத்துக்காக நாட்டுப்புறவியல் வரலாற்றில் இருந்தே தூக்கி வீசப்பட்டவர் பரட்டை.

இளமைப்பருவம்

கடலூர் நகரின் சொரக்கல்பட்டு கிராமத்தில் 1940 -ஆம் ஆணடு மார்ச் 9 -ஆம் நாள் பரட்டை பிறந்தார்.  இயற்பெயர் ஜேம்ஸ் தியோபிலசு அப்பாவு. சேரி மக்களின் உறவாடல்களில் பிரிக்க முடியாத வெத்தலை பாக்கு எச்சிலில் தியோபிலசு அப்பாவின் மயிர் பரட்டையை அடையாளம் கண்டது. 5 சகோதர்ர்கள், 2 சகோதரிகள் உட்பட இவருடன் பிறந்தவர்கள் 7 பேர்.  தந்தை ஜேம்ஸ் டேவிட்.  இவர் ஒரு இராணுவ வீரர். இரண்டாம் உலகப்போரின் கரடு முரடான முரண்பாடுகளில் வெளியேறிய சிப்பாய்களில் இவரும் ஒருவர்.  தாயார் மெர்சி கிளாரா.  ஒடுக்கப்பட்ட சேரிக் குழந்தைகளின் கல்விக்காக தொடங்கப்பட்ட எஸ்.பி.ஜி. மிஷன் தொடக்கப்பள்ளியின் இடைநிலை ஆசிரியர்.

பரட்டையின் குழந்தைப்பருவமும், இளமைப்பருவமும் தந்தையின் முறுக்கேறிய இராணுவத் திமிரில் உருக் கொண்டது. பெற்றோரின் கிறித்துவப் பாரம்பரிய ஈடுபாட்டின் இசை நரம்புகளால் அறிவுத்திறன் இளமையிலேயே நுட்பம் பெற்றது.  இதன் வழியாக தானும் ஒரு சராசரி கிறித்துவனாய் ஆர்மோனியம், தபேலா, வயலின் கற்கத் தொடங்கினார்.  தாயாரிடம் ஆரம்பக் கல்வியைத் தளமாக்கினார்.  கடலூர் நகராட்சிப் பள்ளி இறுதியாண்டிலும் (1956), வேலூர் ஊரிசு கல்லூரியின் உயர் கல்வியிலும் (1957), வடலூர் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியிலும் (1959) முதல் மாணவராக முன் நின்று தங்க விருதுகளை அறுவடை செய்தார்.

கல்வியில் ஆன்ற புலமை பெற்றவர் என்பதற்கு இவர் பெற்ற முதன்மைத் தரவரிசை மேலூம் இவரை உயர் கல்விக்கு ஊக்குவித்தது. எப்படியாவது மருத்துவராகப் படிக்க வேண்டும் என விரும்பினார்.  எஸ்.பி.ஜி. மிஷன் மருத்துவ அருட்தொண்டர்களும் மருத்துவமே படிக்கட்டும் என முனைப்பு காட்டினர். மருத்துவத் துறையின் தேர்வு வரிசையில் அப்போதே லஞ்சம் முதன்மை பெற்றிருந்த‌தை அம்பலப்படுத்தி, மருத்துவ கனவுக்கோட்டையை தானே உடைத்தெறிந்தார்.

1957 -ல் வேலூர் ஊரிசு கல்லூரியின் அனுபவங்கள் பரட்டையை தன் அடையாளம் பெற வைத்தது எனலாம். அவரிடம் என்னென்ன திறன்கள் இளமையில் அடைகாக்கப்பட்டதோ அவை எரி நெருப்பக பீறிட்டு எழுந்த காலம் அது. புரட்சியாளர் அம்பேத்கரின் மறைவையொட்டிய எழுச்சிகள் வேலூரில் குறுக்கு வெட்டாக அணியமாகிய தட்பவெப்பத்தில் மெருகேறினார்.  தனது படைப்பாக்கத் திறனில் ஒரு விழிப்பு நிலை மின்னல் கீற்றாய் வெளிப்பட்டது.  கல்லூரிப்படிப்பு முடியும்போது சுயமரியாதை உணர்வுகள் மேலிட்டன.  செலவுக்கு யாரிடமும் கெஞ்சி நிற்க விரும்பாத துடுக்கு அவரை வேலைக்கு செல்ல‌த் துண்டியது.

1958 -ல் தன் தந்தையார் பணியாற்றிய நெல்லிக்குப்பம் ஈ.ஐ.டி. பாரி சர்க்கரை ஆலையில் எழுத்தராகப் பணியில் அமர்ந்தார்.  சில மாதங்கள் பணியாற்றினார்.  இளமையின் ஈரக்காற்று தன்னைச் சுற்றிய கிறித்துவ வட்டாரங்களை எடுத்துக்காட்டியது. எல்லோரும் மெத்தப்படித்து வாத்தியார்களாக இருக்கிறார்கள்,  நாம் மட்டும் எழுத்தராக இருக்க வேண்டுமா? என்கிற எண்ணம் தலை தூக்கியது. வேலையை பாதிலேயே உதறிவிட்டு 1959 -ல் வடலூர் ஆசிரியப் பயிற்சிப்பள்ளியில் தனது பயிற்சியை முடித்து 1966 முதல் 1970 வரையிலூம் நெல்லிகுப்பத்துக்கு அருகே உள்ள சி. பகண்டை, திருக்காண்டேஸ்வரம், கீழ்ப்பட்டாம்பாக்கம் ஆகிய கிராமங்களில் ஆசிரியராகப் பணியாற்றினார்.

ஆசிரியரான போது அவர் வாழ்வில் பல மாற்றங்களும், முன்னேற்றங்களும் வளம் பெற்றன.   தனது பெற்றோருக்கு இணையாக தன்னை பக்குவப்படுத்திக் கொண்டார். தனது ஊதியத்தின் சிதறல்களில் உறவுகளைக் கொண்டாடினார். நண்பர்களின் பெருக்கமும்,  உறவினர்களின் கிளைகளும் மகிழ்ச்சியாகத் துளிர் விட்டன.  தான் மகிழ்ச்சியாக இருந்தால் தானே தன்னைச் சுற்றியவர்களை ஒருவர் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள‌ முடியும் என்கிற நட்பு வட்ட இலக்கணத்தை நடைமுறைப் படுத்தினார்.

குடும்ப இயக்கம்

கிறித்துவ திருச்சபைகளின் உறவு வட்டமும், திருச்சபையின் வாலிபர் குழு இளசுகளும் தன்னுடைய நட்புப் பாசறைகளும் அவரை இல்வாழ்க்கைத் துறவு மேற்கொள்ளச் செய்தன. இருப்பினும், இளமையின் வசந்த காலத்தை செய் நேர்த்தியோடு பயன்படுத்திக் கொண்டார். 1969 -ம் ஆண்டு மே 26 ஆம் நாள் தன்னுடைய முறைமாமன் மகளான டாரத்தி கிரேஸ் வித்வ சிரோன்மணியை இல்வாழ்வு இயக்கத்தின் தலைவராக்கினார்,

திருமணத்திற்குப் பின் பரிணமித்த பரட்டையின் 36 ஆண்டு கால ரசனைகளை, இன்று அனுபவித்து மகிழ்ந்தவர் பலர் இருக்கலாம்.  ஆனால் அவருக்குள்ளிருந்து அசைவாடி அவரை சிகரமாக்கிய பெருமை, அவரது துணைவியார் டாரத்தி அம்மையாரையேச் சாரும்.  ஏற்கனவே இச்சமுகத்தில் நிலை கொண்டு விட்ட குடும்ப அமைப்புகளின் நடுத்தர மேலாண்மையைத் துளியும் ஏற்காமல் திறந்து வைக்கப்பட்ட சேரிகளின் கூடாரமாகவே இவர் குடும்பம் அமைந்தது. அதற்கேற்றாற்போல் அவருடைய மகள்கள் அட்ரினா சயிந்தவி அருண்மொழி, நீனா பாகேஸ்வரி, இது போக வளர்ப்பு மகள் பானுமதி மெர்சி கிளாரா ஆகியோரின் கூட்டு உடன்படிக்கைகள் அவருக்கு பலமாக அமைந்தன.  தன்னில் குடி கொண்ட கருத்தியல் அமைவுகளை முதலில் ஏற்று, பரட்டையின் கருத்தைப் பரப்ப ஊக்கமளித்தவர் இவர்கள்தான்.

இறையியலுக்கான அத்துமீறல்

1963 -ல் சென்னை பல்கலைக்கழகத்தில் இளங்கலை வரலாற்றை முடித்து, மதுரை தமிழ்நாடு இறையியல் கல்லூரியின்  இறையியலை நோக்கி விலாசம் பெற்றது ஒரு பறைக்காலம் என்றே வார்த்தை இட வேண்டும்.  பொதுவாக கிறித்துவப் பள்ளிகளில் வாத்தியார்களாகப் பணியாற்றிக் கொண்டு, திருச்சபைப் பணிகளில் ஈடுபாடு கொள்கிறவர்கள் தங்கள் பிள்ளைகளில், தலைப்பிள்ளையை ஆயராக வளர்த்தெடுக்க ஒப்புக் கொடுக்கும் மரபு கிறித்துவப் பராம்பரியங்களில் இன்றளவும் உண்டு. இதே நேர்த்திக் கடன் இவருக்கும் விதிக்கப்பட்டது.  தனது தாயார் அவரை ஜெபத்தில் ஒப்புக் கொடுக்க விண்ணப்பங்கள் ஏறெடுத்துப் பார்த்தார். ஆனால் பரட்டைக்கு இறையியல் நாட்டம் வீரியம் பெறவில்லை.

1970 -ல் கடலூரில் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது தென்னிந்திய திருச்சபையின் ஆயராகப் பணியாற்றிய அருள்திரு. ஆனஸ்ட் சின்னயா என்பவரின் வழி காட்டுதலில் 1975 -ஆம் ஆண்டு முதுகலைப் பட்டப்படிப்புட‌ன் இணைந்த இறையியலைக் கற்க மதுரை அரசரடி தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் காலடி வைத்தார்.   இங்கேயும் முதுகலை இறையியலில் தங்கம் வென்று தனக்கான தனித்தன்மையை நிலைப்படுத்திக் கொண்டார்.  1979 -ல் தனது இறையியல் கல்வியை முடித்து, சின்ன உடைப்பில் உள்ள கிராமிய இறையியல் நிறுவத்தில் திட்ட அலூவராகப் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றார்.  இதே ஆண்டில் சுவீடன் நாட்டில் உள்ள உப்சலா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாநாட்டிலூம் பங்கேற்றார்.

சமுக அறிவியல் கண்டுபிடிப்பில்-தலித்

பரட்டையின் இறையியல் கல்வியும், அதைத் தொடர்ந்து 1979 -ல் கிராமிய இறையியல் நிறுவனத்தின் மூலம் கிராமங்களில் மேற்கொண்ட பணி அனுபவங்களும், தலித் விடுதலைக்காக, தான் முன்னின்று நிகழ்த்திய போராட்டங்களும், வழக்குகளும், பரட்டை என்கிற பண்பாட்டுப் போராளியைக் கட்டி எழுப்பியது. நூலகங்களின் அறிவாயுதத்தை நாடினார்.  தமிழ் வரலாறு, தமிழர் பண்பாடு, தமிழகக் கல்வெட்டுகள், சுவடிகள், சித்தர் வரலாறு, மனுதர்மம், இந்து இதிகாசங்கள் ஆகியவற்றை முழுமையாகப் புரட்டினார்.  இவற்றுள் தலித் என்கிற சுற்று வட்டங்களின் ஆழ, அகலங்களை அளவு கண்டார்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்கான விடுதலையின் உள் உணர்வுகளை மீட்பதற்காக சமூக அறிவியலின் கண்டுபிடிப்புகளில் வாய் மொழியிடப்பட்ட தலித் என்கிற முதன்மைக் காலகட்டங்களில் பல விவாதங்கள் எழுந்தன. அவர்பாட்டுக்கு வருவார், போவார் எல்லாம் தலித் அணிவகுப்பில் அல்லது திராவிடப் பாரம்பரியங்களின் முன் மொழிதலிலே தலித்துகளின் விடுதலைக்கும் தலைமை ஏற்க விரும்பினர்.  ஜெயகாந்தனை அப்போதுதான் அடையாளம் கண்டார்.  தன் வரலாறு படைப்புகளில் ஒடுக்கப்படுகின்ற அனுபவக் கீறல் கொஞ்ச‌ம் வெளிப்பட்டமைக்காக ஜெயகாந்தன் அன்று தலித்துகளால் வரவேற்கப்பட்டார்.  படைப்பிலக்கிய விவாதங்களில் சிலவற்றை நேர் செய்ய கிராமிய இறையியல்  நிறுவன‌த்தில் பல அரங்குகளை உருவாக்கினார்.  ஜெயகாந்தனைப் போல் தலித் அல்லாதோர் பலரையும் இவரின் தலித் அரங்குகள் அன்றைக்கு அறிமுகம் செய்தன. பின் நாளில் ஜெயகாந்தனின் இந்துப் பரிவார புகலிடத்தையும் அவரால் நன்கு உணர்ந்து கொள்ள முடிந்தது.

1981 -ல் தமிழ்நாடு இறையியல் கல்லூரியின் இணை பணியாளராக பணி செய்யத் தொடங்கிய காலக் கட்டத்தில் தலித் என்பதன் அறிமுகம் ஒரு வலூவான தாக்கத்தை உண்டு பண்ணியது.  மராட்டிய மாநில தலித் சிறுத்தைகளின் தீ மூட்டம் அப்போது மதுரையில் உருவானது.  இதன்  விளைவாக தலித் விடுதலைக்கான கருத்தியல் பின்புலங்களை தலித் இயக்கப்பார்வையிலூம், தலித் இலக்கியப் பார்வையிலூம் பார்க்கின்ற முன்னோட்டங்களே அன்று முன் நின்றன. தமிழ்நாடு இறையியல் கல்லூரியின் தலித் கருத்தியலானது, தலித் இறையியல் பார்வையில் வெளிப்பட்டாலூம்  இவரின் தலித் அணுகுமுறையானது சமுக அறிவியல் தளத்தில் இருந்து  தனித்த அழகியல் பெற்றது.

குறிப்பாக, அவர் தலித் மக்களின்  ப‌ண்பாட்டை ஆழம் காண்பதற்கு இந்த‌ பார்வையே அவரை உந்தித் தள்ளியது. தலித் தொடர்பு முறைகளும், தலித் பண்பாட்டு அணுகுமுறைகளும், தலித் உடல்மொழி வெளிப்படுகளும், தலித் இறை நம்பிக்கைகளும் பரட்டைக்குள் உள்ளொளி பெற்றது இதன் வழியே. இதன் ஒவ்வொரு வெளிப்பாடுகளிலும் இவரின் பரிமாணங்கள் கிறித்துவ வட்டாரங்களைக் கடந்து தலித்தியத் தளங்களில் அதிர்வுகளை ஏற்படுத்தின.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

மாற்றத்துக்கன நாட்டுப்புறவியல் (சேரிப்புறவியல்)

1980 -களில் தமிழகச் சூழலில் நாட்டுப்புறவியலை கலை, இலக்கியத் தளங்களில் அறிமுகப்படுத்தியவர்.  இதில் இவர் முன்னோடி என்பது நாட்டுப்புறவியல் வரலாற்றில் மறைக்கப்பட்ட உண்மைகளில் ஒன்று.  இதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு 79 -களில் அவர் எழுதிய நிமுந்து நட பாடல் தொகுப்பு.  1985 -ல் நூலாக‌ வெளியிடப்பட்டாலும், பரட்டையின் பாட்டு நாட்டுப்புறவியலுக்கு ஓர் இலக்கணச் சான்று.  பட்டி, தொட்டிகள் அனைத்திலும், தலித் இயக்கங்களின் பயிற்சிப் பட்டறைகளிலும், தலித் தன்னார்வக் குழுக்களிலும் இவர் பாடலே தலித் வாழ்த்தாக பாடப் பெற்றன.

பண்பாட்டுத் தொடர்பியலில் பரட்டையின் மக்கள் மொழி (வட்டார மொழிநடை, நடப்புச் சொல்லாடல்) அவர் தொடங்கிய கிராமிய முயற்சிகளில் ஆழமான வேரை ஊன்றியது.  ஒரு வகையில் அவர் பேசிய, எழுதி உரையாற்றிய முற்றிலும் மாற்றிக் கொள்ள மறுத்த சென்னை வட்டாரத் தமிழ் அவரின் த‌னித்தன்மையை பதிவு செய்தது.

மொழி தெரியாத ஒருவர் இன்னொரு மொழியைக் கற்றுக்கொண்டு அதில் ஆன்ற புலமையாற்ற முடியும். அதற்கென மின்னணு கலப்பைகளும், அகராதிகளும் கூட இப்போது வந்துவிட்டன.  அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் உட்கார்ந்து கொண்டு தமிழை தலைமுறைத் தலைமுறையாக   இலக்கண முறைப்படி பேசுபவர்களின் சாதுர்யம் இதுதான். மக்கள் தமிழை அவசர கதியில் அழித்த சைவத்தமிழை யார் வேண்டுமானாலும், எங்கிருந்தும் கற்கலாம்.  ஆனால், சேரித் தமிழை கற்க வேண்டுமானால் இன்னாப்பா படு பேஜாரா கீது என்று சொல்லுகின்ற மக்கள் கூட்டத்தோடு வாழ வேண்டும் அல்லது வாழ்ந்த அனுபவம் இருக்க வேண்டும்.  பரட்டைக்கு இரண்டுமே உண்டு.

கடலூர் மாவட்டத்தைச்  சேர்ந்தவராக இருந்தாலூம் தனது இறையியல் கல்விக்குப் பின் அவருடைய போக்குவரத்து நெரிசல் சென்னை மாநகரைத் தழுவியது.  அவரது நட்பு வட்டத்தில் கூட வட தமிழக வாடைதான் அதிகம்.  பிறகு தனக்கான திருச்சபைப் பணி அடையாளங்களை தென்னிந்திய திருச்சபையின் சென்னை பேராயத்தில் எற்றார். 1991 -ல் மே 5 -ஆம் நாள் ஆயர்  அருட்பொழிவைப் பெற்று, திருச்சபைப் பணிகளில் இருந்து தன்னை விதிவிலக்காக்கிக் கொண்டார்.

பரட்டையின் எழுத்துக்களில் நாட்டுப்புறவிலின் அசைவுகள் அதிகம் இருக்கும். 1980 -ல் எப்போ வருவாரோ என்கிற முதல் சிறுகதையை குங்குமம் இதழில் இழுதிய போது இவர் சிறந்த எழுத்தாளர் என்பது புலனாகிய‌து. இதனைத் தொடர்ந்து அவளுக்கு கற்பு ஒரு ஆடம்பரப் பொருள் (பசுமை செய்திகள்-1982), தழும்பு,  நானொரு முட்டாளுங்க,    (பசுமை செய்திகள்-1983), சாமியப்பன் வுட்ட ரீலு, (பசுமை செய்திகள்-1984), தரையில் நின்ற படகு ஆடுவதில்லை (இறையியல் மலர்-1987), பேய்க்கதை, மறைந்திருந்து தாக்கும் மருமப்பேய், மல்லிகைப் பூ சிரிக்கிறது, திருமலை மெச்சன், நகரத்தின் நகரங்கள், ரிக்ஷா ரங்கன், சிலேத்துப்பாட்டி சொன்ன கதை, லோன் பாஙக் லோல்பட்டது போன்ற பல சிறுகதைகளை, சயிந்தவி ப்ரியன், கடலூரான், டாரத்தி மணாளன், இறைநேயன், ஜோதிட சிகாமணி, சிலேத்துப்பாட்டி, சிலூக்கு ரசிகன் என பல புனைப்பெயர்களில் எழுதினார்.

நாட்டுப்புறவியலின் உட்கூறுகளான, மொழிநடை, குறியீடு, அடையாளம், பதிவுகள் என்பவை எதை நோக்கியதாக இருக்க வேண்டும் எனப‌தில் கவனம்  கொண்டார். அது தொடரபான ஆய்வுகளில் களம்  இறங்கினார்.  அவருக்குப் பின்புலமாக பண்பாட்டுத் தாக்கங்களும், மதுரை பக்கத்து பண்பாட்டு நிகழ்வுகளும் அவரின் ஆய்வை கூர்மைப்படுத்தி சேரிகளை நோக்கி நடைபோடச் செய்த‌து.  உசிலம்பட்டி, இராஜபாளையம், காரியாப்பட்டி, இராமன் குளம், குசவன்குண்டு, தின்னானேரி, கல்வராயன் மலைத் தொடர் ஆகிய பகுதிகளில் சுற்றித் திரிந்து மக்களிடம் புதைந்து கிடக்கின்ற வாய் மொழிப்பதிவுகளைத் திரட்டினார். எல்லாவற்றிலூம் வித்தியாசமான அனுபவங்கள். தலித்துகளின் வாய்மொழிப்பதிவுகள் என்றால் வெறும் வார்த்தைகள் மட்டுமல்ல.  பதிவு செய்ய முடியாத உணர்வுகளையும் இரவல் பெற்றார்.

இசை, பாடல், குலசாமி வழிபாடு, கிடாவெட்டு, கறிசோறு, எச்சில் கலயம், அரை டவுசர் சகிதமாக அனுபவம் பெற்றுத் திரும்பினார்.  மிக கவனமாகப் பதிவு செய்து ஆய்வுக்கு உட்படுத்தியவைகளைத்தான் அவர் மாற்றத்துக்கான நாட்டுப்புறவியல் Folklore for Change என ஆங்கிலத்தில் நுலாக வெளியீடு செய்தார். 1985 -ல் நாட்டுப்புறவியலின் உள்ளீடுகளை சமுக மாற்றத்திற்காக பரிணமிக்க வைத்த வேலையைத் தொடங்கியவர் இவரே.  இதன் தொடர்ச்சியாக நாட்டுப்புறக் கதையாடல், தெருக்கூத்து, நாட்டுப்புற கலை வடிவங்கள் ஆகியவற்றின் ஊடாக தனது சமுகப் பணியை மய்யமாக்கினார்.  1989 -ல் மீண்டும் கிராமிய இறையியல் நிறுவத்தின் இயக்குனராக இருந்து கொண்டு, தமிழ்நாடு இறையியல் கல்லூரியின் தொடர்புத் துறையின் ஆசிரியராகப் பொறுப்பேற்றுத் தொடர்புத் துறையை நாட்டுப்புறவியல் சோதனைக் கூடமாக்கினார்.

கூலி உயர்வு சுந்தரி, பிச்சை எடுத்த ராணி என்கிற இரண்டு தெருக்கூத்துகளை சின்ன உடைப்பில் அரங்கேற்றினார்.  1979 – ல் நேரடியாக தலித் பிரச்சனைகளைத் தொட்டு நிகழ்ந்தவை என்றலூம், அன்றைய சமகால சமுக அழுத்தங்களின் மதிப்பீடுகளை இவை நேர் செய்தது.   நாட்டுப்புறவிய‌லை ஆக்கிரமித்திருந்த செவ்வியல் கூறுகள் அறுத்தெறியப்பட்டன.  ஓடுக்கப்படுகின்ற மக்களின் தொழில்முறை, வாழ்வியல் அனுபவம், சாதிய அடையாளம், குழு அடையாள அரசியல், மக்கள் சமய நம்பிக்கையின் வெளிப்பாடு ஆகியவை இதன் வெளிச்சத்தில் எரியூட்டப்பட்டன.  நாட்டுப்புற பண்பாட்டு வடிவங்கள் மீட்கப்பட்டு விடுதலைக்கு எதிரான வணிக அடையாளங்களும், பொழுதுபோக்குக் கற்பிதங்களும் விரட்டப்பட்டன. இந்த வேலை பரட்டையால் தொடங்கப்பட்டது என்பதை நெஞ்சு நிமிர்த்திப் பதிவு செய்ய, பல நாட்டுப்புறவியல் ஆய்வுக் கூடங்களுக்கு தீண்டாமையைக் கடந்த பார்வை தென்படவில்லை.  ஆனால் அவர்களின் ஆய்வுக்கான கருத்தியலும், உள்ளீடுகளும் இங்கிருந்து களவாடப்பட்டவை என்ப‌தை, பறிகொடுத்தவர்களால் மிக எளிதாக அடையாளம் காண முடியும்.

தலித் நாடகக்கலைஞன்

பரட்டையின் நாட்டுப்புறத் தேடலில் அவரிடம் மிஞ்சி நின்றது எதுவென்றல் அவர் ஒரு கலைஞன், நடிகன், ரசிகன், இயக்குனர் என்கிற குணாம்சங்கள். 1985 -ல் மாற்றத்துக்கான நாட்டுப்புறவியல் நூல் வெளியான அதே வேகத்தோடு ஜப்பானில் உள்ள கொயோடோ சி.சி.ஏ. அரங்கில் நோவா என்கிற நாட்டுப்புற நாடகத்தை நிகழ்த்தினார்.  தொடர்புத் துறையின் வழியாக நாடகப் பயிற்சிப் பட்டறைகளையும், மக்கள் தொடர்பு ஊடக யுக்திகளையும் இரு பாதையில் ஒன்றோடோன்று பயணிக்கச் செய்தார்.  சென்னையில் உள்ள இயேசு சங்க இறையியல் கல்லூரி, கிறித்துவ இலக்கியச் சங்கம், கொடைக்கானல் கத்தோலிக்க அருட் சகோதரிகள் பயிற்சி மய்யம், கடலூர் ஆற்காடு லூத்த‌ரன் திருச்சபையின் தலித் ஆதார மய்யம் மற்றும் பல தன்னார்வ, இயக்கச் செயல்பாட்டாளர்களுக்கு நாடகப் பட்டறைகளை நடத்தியுள்ளார்.

இவர் எழுதிய யாருஙக் கொல்லப் போறது?, கிறித்துமஸ் பரிசு, ஒரு சீட்டித்துணி பட்டாகிறது, சத்திரக்காரன் நல்லவன் போன்ற பல குறுநாடகங்கள் அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பப்பட்டவை.  The must not talker என்கிற ஒலிச்சித்திரத் தொடரை லண்டன் பி.பி.சி,யிலூம் இறைவன் இருக்கின்றானா, முன்னணையில் ஆகிய நாடகங்கள் புதுவை வானொலியிலும் ஒலிபரப்பப்பட்டன. இதுபோக விஜய் டிவியில் கல்வாரியை நோக்கி என்கிற நாடகத்தொடரை 1996 -ல் நிகழ்த்தினார்.  ஒருவகையில் இவை மய்ய நீரோட்டக் காட்சி ஊடகங்களில் வழியாக ஒலி-ஒளிபரப்பப்பட்டாலூம், தமிழ் நாடகச் சூழலில் ஒரு அறிமுகம் கிடைக்க இவை வாய்ப்பாக அமைந்தன.

தான் நெறிப்படுத்துகின்ற நாட்டுப்புறவியல் கருத்தமைவுகளை நாடக வடிவில் நிகழ்த்தும்போது தன் நாடகத்துக்கான பார்வையாளர்-பங்கேற்பாளர் யார்? எனத் தெளிவாகத் திட்டமிட்டிருந்தார்.  அதனை முதன்மையான நோக்கமாகக் கொண்டிருந்தார்.  1981 -ல் நடத்திய சங்கிலிராமன், கல்லோவியம், மனுசங்கடா, வில்லியம் கேரி, நரகரி போன்ற வீதி நாடகங்கள் சில மணித்துளிகளில் திட்டமிடுகிற மக்கள் முன் ஒரு கருத்தைப் பரப்பிச் செல்லும் ஊடக வலிமையைப் பெற்றிருந்தன.  தொடர்புத் துறையின் மூலமாக நடமாடும் நாடக அரங்கு ஒன்றை உருவாக்கி லட்சக்கணக்கான ருபாய் மதிப்புள்ள நாடக செட்டுக்கான கருவிகளை வாங்கிப் போட்டு தெருத் தெருவாக தலித் பண்பாட்டு விழிப்பு நிலையைப் பரப்பி வந்தார்.

1995 -ல் தலித் கலைவிழா தொடங்கிய ஆண்டில் இருந்து பரட்டையின் நாடகங்கள் தலித் கலைவிழா மேடையில் அரங்கேறி வருகின்றன.  இவரின் நாடகங்கள் மிக எளிமையான அரங்கையும், பொருளாதாரச் செலவையும் பெற்றிருக்கும். ஒவ்வொரு நாடகமும் சமகால பிரச்சனைகளைக் கணக்கில் கொண்டு அமைந்திருக்கும்.  மார்க்சியம், பெண்ணியம், பெரியாரியம் மூன்றையும் நாடக்க் கருவின் ஊடாக ஓட விடுவார்.  அந்த விழிப்புநிலை அவருக்கு இயல்பாகவே இருந்த‌து.  தலித்-பிற்படுத்தப்பட்டவர் இணைப்பு, தலித் ஒருஙகிணைப்பு என்பதில் மிகக் கவனமாக செயல்படுவார். 2002 -ல் நிகழ்த்திய விடாது சிவப்பு நாடகத்தில் இவை அனைத்தையும் பின்னிப் பிணித்திருப்பார்.  தொழிலாளார் விவசாயிகள் கூட்டமைப்பின் கலை இலக்கிய பண்பாட்டுப் பிரச்சாரக் குழுவான நிதர்சனம் குழுவைக் கொண்டு சில நாடகங்களை அரங்கேற்றியுள்ளார்.  சிட்டிங் பட்டாங்வே, கட்ட அவுறு கயித்த வுடு, பிச்சி எறிங்கடா போன்ற நாடகங்கள் இவரைக் கொண்டு நிகழ்த்தப்பட்டவை. 2005 -ஆம் ஆண்டு தலித் கலை விழாவில் சென்னை துடி குழுவினர் நிகழ்த்திய பாப்பாபட்டியை மறந்த பராசக்தி நாடகமும் இவரின் நெறியாளுகையில் உருவானவை.

கிறித்துவத் திருச்சபைகளின் கிறித்துமஸ், உயிர்த்தெழுதல் நிகழ்ச்சிகளை சமகாலச் சூழலுக்குட்படுத்தி நய்யாண்டித் தாக்குடன் நாடகமாக்குவது முக்கிய பணியாகும்.  பாரம்பரியமாகப் பின்பற்றப்படும் திருவிவிலிய சிந்தனைகள், கிறித்துவ வழிபாடுகளை, பகுத்தறிவுக்குட்படுத்தி பல மேடை நாடகங்களை உருவாக்கியுள்ளார்.

ரோமன் கத்தோலிக்க லூத்திரன், நிறமற்றப் பூக்கள், யாருங்க கொல்லப் போறது? ஒரு விதை முளைக்கிறது, ஒரு சிலலுவை சுடப்படுகிறது, சத்திரக்காரன் நல்லவன், ஏமாத்துப் பெட்டி எலும்புகூடு, டாக்டர் டாக்டர் டாக்டர், அம்மா பசிக்குது, தேவனுக்கே மகிமை, அங்க பாக்கதீங்க-இங்க பாருங்க, கல், ஒன்றுபட்டால், ஒன்றுமில்லை நான், உயிர்த்தெழுந்த ஆண்டவர் ஆகிய நாடகங்கள் அனைத்தும் கிறித்துவ நிறுவனங்களின், திருச்சபைகளின் மேடைகளை தீட்டுப்படுத்தி, தலித் அரங்கியலின் அழகியலை திருவிவிலியப் பார்வையில் இருந்து, கிறித்துவ உலகுக்கு அறிமுகப்படுத்தின.  குறு நாடகங்களாக இவை வழிபாடுகளில் நிகழும்போது முகம் சுளித்தவர் பலர். உள்ளேயிருந்து வெளி நடப்புச் செய்தவர்கள் இன்னும் பலர். ஆமை புகுந்த வூடு உருப்படாது எனறு சாதி இந்துக்கள் சொல்வது போலவே பரட்ட நொழஞ்ச கோயிலு உருப்படாது என்று சாதிக் கிறித்துவர்களும் ஒப்பாரி வைக்கத் தவறியதில்லை. அவர் வாழ்ந்த காலத்தில் தலித் விடுதலைக்காக கிறித்துவத் திருச்சபைகளின், புனிதத் திருவிவிலியத்தின் எல்லா உள்ளீடுகளையும். மீண்டும் புனிதமாக்கிய பெருமை பரட்டையைச் சாரும்.

தலித் நாடகத் துறையில் பல அனுபவங்களைப் பெற்று திரைப்படத் துறைக்கும் அழைக்கப்பட்டார். கோமல் சுவாமிநாதனின் புதினங்கள் திரைப்படத்துக்கு கதையாகும் போது அதனை திரைக்கதையாக்கும் உதவிகளை அவ்வப்போது செய்து கொடுத்துள்ளார்.  பரட்டையும்-கோமல் சுவாமிநானும் பிரிக்க முடியாத நட்பு சக்திகளாக தமிழ் நாடகச்சூழலில் எழுந்து வந்தார்கள்.  இதன் விளைவாக 1988 -ல் நடிக்க நாடகம் எழுதுவது எப்படி? என்கிற நூலை வெளியீடு செய்து தலித் நாடக அரங்கியலில் தனக்கான முத்திரையைப் பதித்தார்.  இதற்கு அடையாளமாகத் தொடர்புத் துறையின் சார்பில், தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் நிரந்தர மாந்தோப்பு மேடை ஒன்று உருவாகக் காரணமானார்.

பரட்டைக் கலாச்சாரம்

1975 -ல் இறையியல் கல்வி கற்கும் போது சமயங்களில் தன்னுடைய ஆய்வை மேற்கொண்டார்.  அத்வைதக் கருத்தமைவுகள் இந்திய சூழலுக்குப் பொருத்தமுடையதா என்பதை கிறிஸ்தியல் பார்வையில் அணுகினார்.  அதனைத் தொடர்ந்து 1992 -ல் இங்கிலாந்தில் உள்ள எடின்பர்க் பல்கலைக் கழகத்தில் தனது முதுகலை இறையியலைத் தொடர்ந்தார். தலித் விடுதலைக்கான தொடர்பியல் The Communication for Dalit Liberation என்கிற ஆய்வை செய்து முடித்தார். அவருடைய நெருங்கிய நண்பரான நூலகர்  அகஸ்டின் கூறுவது போன்று வெள்ளைக்கார முடி, கொஞ்சம் அய்ன்ஸ்டின் மாதிரி அறிவாளித் தாடி, கொஞ்சம் வட இந்தியன் மாதிரி தாம்பூலம் அசைபோடும் வாய், கொஞ்சம் கிராமத்தான் மாதிரி கசங்கிய சட்டை, கொஞ்சம்   Y2K -வை விட்டேனா பார் என்கிற மாதிரி கணிப்பொறியின் விசை வில்லைகளைத் சொடுக்குகிற கைகள், அந்த மௌஸ் மாதிரியே உடலைக் கொஞ்சம் குப்புறப்படுத்துக் கொண்டு எழுதுகிற முறை, கொஞ்சம் அட! போயா என்கிற மாதிரி காலை விரித்துப் போட்டு உட்காருகிற முறை இதெல்லாம் காட்சியாகக் கொண்டவர் பரட்டை.

இறையியல் கல்வி ஆசிரியராக, முறைசாராக் கல்வி வளர்ச்சியின் பாடத்திட்டக்குழு உறுப்பினராக, எழுத்தாளராக, நடிகராக, கவிஞராக, இசையமைப்பாளராக, தொடர்புத்துறை இயக்குனராக, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தலைமைத் தேர்வு ஆணையராக, தலித் திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தின் துறைத் தலைவராக, மருத்துவராக, நடிகராக, சயைல் கலைஞராக, ஒரு ஆயராக கல்லூரியின் வளாகத்தை வளைத்துப் போட்டு ஒரு தனிப் பல்கலைக்கழக பண்பாடாக நடமாடினார். அவர் நடையும், உருவமும், கழுத்தில் தொங்கும் பேனாவும், கடிகாரமும், கண்ணாடியும் அவரைப் பல கோணங்களில் எலேய் பேசிக் கொண்டே இருங்கடா என்றது.  சிந்தித்துப் பார்த்தால் இப்படியாக ஒருவர் ஓரிரு நாளைக்கு நடித்துப் பார்க்கலாம். ஆனால் காலம் முழுவதும் தீண்டப்படாதவனுக்கு விதிக்கப்பட்ட சாதிய‌ இழிவுகளோடு ஒருவர் இப்படி வாழ வேண்டுமெனில் கற்பனையில் கூட ஒரு கதாபாத்திரத்தை உருவாக்க முடியுமா என்று தெரியவில்லை.  ஆனாலும் அவரைப் போல நாமும் குட்டிப் பரட்டைகளாக வாழ்ந்து பார்க்க வேண்டும் என்கிற குட்டிக்கரண அனுபவங்கள் கல்லூரி மாணவர்களுக்கு நேர்ந்ததுண்டு.

பரட்டை வீடு திறந்து கிடக்கும். பசிக்கு சோறு இல்லை என்றாலும் மாட்டுக்கறி வகையறா இல்லாத சட்டிமுட்டி சாமான் எதுவும் இருக்காது.  தன் விடுதலை ஆய்வில் மனிதர்களுக்கு நிகராக மாடுகளையும் பகுத்தாய்ந்து மாட்டுக்க‌றியின் மகத்துவத்தை உணர்த்தியவர்.  மாட்டுக்கறியை எல்லோரும் சாப்பிட்டு விட முடியாது.  அதற்கென்று ஒரு தனி வலிமை தேவை.  சுருக்கமாகச் சொன்னால் உலகில் அறிவாளிகளாக இருப்பவர்கள் மாட்டுக்கறியை உண்ணாமல் இருக்க மாட்டார்கள் என்று சொல்வார்கள்.  மாட்டு வால் சூப், கணுக்கால் பகோடா, பால்மடி பாயா போன்ற மாட்டு உடல் பகுதிகளின் மருத்துவ குணங்களை விளக்குவார்.  ஒவ்வொரு ஆண்டும் நிகழ்கின்ற கிறித்துவக் கொண்டாட்டங்களில் இவரின் தலித் உணவு மணம் கமழும்.  நான் உட்பட கல்லூரியில் படித்த பல மாணவர்கள் உணவு விடுதிக்குரிய பணத்தை கல்லூரியில் கட்டிவிட்டு பரட்டை வீட்டில் பசியாறியதுதான் அதிகம்.  கல்லூரியின் எல்லா நிகழ்வுகளிலும் பரட்டையின் பிரசன்னம் தனித்துவமாக இருக்கும்.

கல்லூரியின் Faculty என்கிற அதிகார பீடத்தை பேய்கல்டி என்று கிண்டலடிப்பார்.  காரணம் அவர் எப்போதும் பாதிக்கப்படுகின்ற மாணவர்கள் பக்கம் நின்று குரல் எழுப்புவதில் குறியாக இருப்பார்.  அதுவும் தலித் மாணவர் பாதிக்கப்படுவாரேயானால் கொஞ்சமும் யோசிக்காமல் பணியில் இருந்து வெளியேறுவேன் என கடிதம் கொடுப்பார்.  ஒழுக்கமான ஒரு மாணவர் தவறு செய்யும்போது அவர் மேலும் தவறு செய்யாமல்  தடுத்து அறிவுரை கூற பல ஆசிரியர்கள் முனைப்பு காட்டுவர்.  ஆனால் ஒரு மாணவர் பல காரணங்களுக்காகத் தொடர்ந்து தவறிக் கொண்டிருக்கிறார் என்றால் அவரை ஒருமுறை, இருமுறைக் கண்டித்து விட்டு கல்லூரியை விட்டு வெளியேற்றி விடுகிற மரபு இன்னும் கல்லூரிகளில் இருக்கின்றது. ஆனால் தொடர்ந்து தவறுகின்ற மாணவர்களுக்காகவே குரல் எழுப்பக் கூடியவர்.  தவறுகின்றவர்களை, பலவீனமானவர்களை விழிப்பு நெறிப்படுத்துவதே முதல் வேலை என நோக்கமாகக் கொண்டார்.  இவரால் காப்பாற்றப்பட்டு நெறிப்படுத்தப்பட்ட பல இறையியல் மாணவர்கள், இன்றைய கிறித்துவத் திருச்சபைகளில் இவரின் பண்பாட்டுக் கலகத்தைத் தோற்றுவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரே உலை

பல திருச்சபைகளில் அய்க்கிய‌ உணவாகப் பரிணமிக்கின்ற ஓருலை எனப‌து இச்சமுக அறிவியல் அறிஞனின் அரிய கண்டுபிடிப்புகளில் ஒன்று. கல்லூரியில் ஒவ்வொரு மாதமும் இறுதி புதன்கிழமை, மாலைப்பொழுதில் பத்து பேர் கொண்ட பல குழுக்கள், ஆளுக்கொரு பானை, அகப்பை, அரைப்படி அரிசி, பருப்பு, தேங்காய் எடுத்துக்கொண்டு, கஞ்சி காய்ச்சி பறையாட்டம் ஆடி,
அண்ணன்மாரே, அக்காமாரே, மாமன்மாரே, மதனிமாரே
இதனால உங்களுக்கு சொல்றது இன்னான்னா
இன்னக்கி ராத்திரி யார் வூட்லயும்
அடுப்பு முட்டாதீங்க
மாந்தோப்புல கஞ்சி கீது
குடும்பத்தோட வந்து சேருங்க,
என்று கூறி, சேரி வலம் வந்து மக்களை அழைத்துச் செல்லுகிற மரபு இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.  சாப்பாடு இல்லாத சாமி கும்பிடு இல்லை.  சாப்பாடு என்றால், பத்துபேரின் உறவு கிடைக்குது என்று அர்த்தப்படுத்துவார்.  உணவில் ஒரு உறவு இருப்பதை உணர்ந்து, சமூகக் குழுக்களின் தொன்மங்களை நினைவூட்டும் வகையில் இதனை அறிமுகப்படுத்தினார்.  மானுட விடுதலைக்கான சமத்துவக் குறியீடு இதுதான்.  என்னை நினைவு கூறும்படி இதை நீங்கள் செய்யுங்கள் என்று பரட்டையாலலும் எழுப்பப்பட்ட விடுதலைக் குரல் இன்று எல்லா சேரிகளிலும், கிராமங்களிலும், திருச்சபைகளிலும் விடுதலைக்க்ன ஊடுருவலைத் தொடங்கியுள்ளது.

தான் கணடுபிடித்த ஓருலையின் சமத்துவப் பண்பாடுகளை உலகத் திருச்சபைகளும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் 1993 -ஆம் ஆண்டு ஜெனிவாவில் நடைபெற்ற உலகக் கிறித்துவ மாமன்ற மாநாட்டில் The Religion of the People and Evangelism-Oru Ulai an India என்கிற சிறிய ஆய்வேட்டை சமர்ப்பித்தார்.  மாற்றுக்கல்விப் பயிற்சி பெற இந்தியாவிற்கு வெளியே இருந்து வருபவர்கள் இவரின் ஓருலையைப் பற்றி அறியாமல் திரும்ப வாய்ப்பில்லை.

பி.யு.சி. முடித்ததும் மருத்துவராக முடியாத தணியாத தாகம் அவருக்குள்ளிருந்த‌து.  எனவே, மாற்று வைத்தியத்தில் ஈடுபாடு கொண்டார்.  பேருந்தில் இருந்து இறங்கும்போது ஏற்ப‌ட்ட விபத்தில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.  தனக்கான மருத்துவராக மாறினார்.  கூடவே வளாக சித்த மருத்துவரானார். இயற்கை வைத்திய முறைகளையும், மூலிகை வைத்திய முறைகளையும் பாரம்பரிய வைத்தியமான அக்குபிரஷர், சீன வைத்திய முறையான அக்குபஞ்சர் போன்ற வைத்திய முறைகளையும் அறிமுகப்படுத்தினார்.  இதனை அவர் முழுமையாக நம்பி ஏற்றார்.  கிராமிய இறையியல் நிறுவனத்தில் பணி செய்யும்போது மூலிகை வளர்ப்பில் கவனம் செலலுத்தினார்.  வீட்டிற்கு வரும் நண்பர்களை ஓம இலை நீர், செம்பருத்தி தேனீர் கொடுத்து வரவேற்பார்.  பலருக்கு வைத்தியம் பார்க்கிற தொண்டூழியப் பண்புகள் இவரிடம் இருந்தாலும் தன் உடலைப் பாதுகாத்துக் கொள்ளவில்லை என்கிற விமர்சனமும் உண்டு.  உணவுக் கட்டுப்பாட்டில் அவருடைய தாராளமயத்தைப் பற்றி சிலர், வயித்துக்காக இவர் சாப்பிடுவது இல்லை.  வாயிக்காக சாப்பிடுவார் என்றும் கூறுவர்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

சேரி இசைச் சிகரம்

இசை அனுபவங்களைக் குறித்து பேசும்போது, இசைஞானி இளையராஜா ஒரு தலித்தாக மட்டும் இல்லாமற் போயிருந்தால் அந்த இடத்தை நன்தான் பூர்த்தி செய்திருப்பேன் என்று நகைச்சுவையாகக் கூறினாலும், இயல்பிலேயே அவர் சேரி இசைச் சிகரமாக விளங்கினார்.

இசையில் புதிதாக ஒன்றைப் படைக்கிறார் என்பது ஒருபுறம் இருந்தாலூம் ஏற்கனவே செவ்வியலாக வரையறுக்கப்பட்ட இசை மரபை உடைக்கின்ற சித்து வேலையைத் தன் இசையில் பதிவு செய்துள்ளார்.  மேற்கத்திய கர்நாடக இசைக்கலப்பில் கூத்து நிகழ்த்தும் இன்னிசை விழாக்களில் மேடையில் கிராமியப் பணப்ட்டு அருவியைப் பாய்ச்சினார். பறையும், உடுக்கையும், தகர டப்பாக்களும், பம்பை, உறுமி மேளங்களும் இவரின் எடக்கு மடக்குப் பாடல்களை மெருகூட்டின.  இவரால் எழுதப்பட்ட சமுக விழிப்புணர்வுப் பாட‌ல்களும். தலித் விடுதலைப் பாடல்களும், கிறித்துவப் பாடல்களும் புதிய, புதிய இசை வடிவங்களைக் கொண்டிருந்தன.

கிராமங்களில் உள்ள கிறித்துவத் திருச்சபைகளில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான பார்வையில் திருவிவிலியத்தைப் போதிக்க கிராமிய கிறிஸ்துவ ஒப்படைப்பு செயற்பாட்டுக் கல்வி Rural TECCA என்கிற நிகழ்வைத் தொடங்கினார்.  அதன் இயக்குனராக இவர் பொறுப்பேற்கும் போது கிராம திருச்சபைகளில் நடத்தப்படும் வழிபாடுகள் அனைத்தும் மேற்கத்திய பண்பாட்டு ஆலாபனைகளுக்குத் தூபம் போடுவதைக் கண்டு வெறுப்புற்றார்.  எப்படியாவது கிராமிய டெக்காவின் முலமாக ஒரு கிராமிய இசை வழிபாட்டைத் தயாரித்து அதில் பல பயிற்சிகளைப் பெற்று திருச்சபைகளில் அறிமுகப்படுத்த விரும்பினார். இன்றைக்கு ஓருலையைப் போல பல கிராமத் திருச்சபைகளில் கிராமிய இசை வழிபாடுகள் அரங்கேறியுள்ளன.

பரட்டையின் இசையும், பாடலும் ஒன்றோடொன்று தொடர்புடையவை.  ஒவ்வொன்றுக்கும் ஒரு நிகழ்வோ, பின்னணியோ வரலாறாக இருக்கும்.  இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை இயற்றியுள்ளார். கிறித்துவ வட்டாரங்களுக்கு என்று புத்துயிர்ப் பாடல்கள்,  கிறித்து பிறப்புப் பாடல்கள், ஆங்கிலப் பாடல்கள் என பல எழுதி, இசையமைத்து, பாடற்பயிற்சியும் கொடுத்துள்ளார். 115 கிராமியப் பாடல்களும், 65 தமிழ் இசைப்பாடல்களும், 12 தலித் விடுதலைப் பாடல்களும் இயற்றியுள்ளார்.  இதில் பல பாடல்கள் ஒலிப் பேழைகளாக வெளிவந்துள்ளன.

நிமுந்து நட, மாட்டுக்கொட்டில் ரெடியாச்சு, ஆசய‌ அள்ளித் தருவாரு, ஒண்டி வீரன் ஆகிய ஒலிநாடாக்கள் இவரின் இசை ஞானத்திற்கு மிகச் சிறந்த சான்றுகள். இதில் ஒண்டி வீரன் ஒலி நாடாவை வில்லூப்பாட்டு வடிவில் இசையமைத்திருப்பார். 1980 -ல் இலங்கையில் என்.சி.சி.அய். உருவாக்கிய இசைப்பயிற்சி இயக்கத்தின் பயிற்சியாளராகவும், இயக்குனராகவும் பொறுப்பேற்று தன் படைப்பாக்க இசைக் கருவூலங்களை ஈழ மண்ணிலூம் விதைத்தார்.  இங்கிலாந்தின் பர்மிங்காமில் உள்ள குயின்ஸ் கல்லூரியில் நடந்த தலித் இறையியல் பட்டறையில் முதன்முதலாக தலித்திய பார்வையிலான கிராமிய இசை வழிபாட்டை அறிமுகப்படுத்தினார்.

பரட்டையின் இசைப் புலமை அமெரிக்காவிலூம் வேரூன்றியது. அமெரிக்காவின் ஆன் அஸ்போரில் உள்ள வெஸ்லியன் பல்கலைக்கழகத்தின் முனைவர் பட்ட ஆய்வு மாணவர் ஜோயி கேரி ஷெரின‌ன் என்பவர், தன்னுடைய இசை ஆராய்ச்சிக் கட்டுரையின் உட்கருவாக பரட்டையின் நாட்டுப்புற இசை வடிவங்களை ஆய்வு செய்தார். “The Indegenisation Tamil Christian Musical Folk Music as Liberative Transmission System-Special Reference to Paratai” என்கிற ஆய்வு 1998-ல் இறுதி வடிவம் பெற்றது. அமெரிக்கவின் தேசிய இசை விழாவில் இவரின் நாட்டுப்புற இசையை ஜோயி அறிமுகப்படுத்தி, பரட்டையையும் அறிமுகப்படுத்தினார். இன்று மரணத்தைத் தழுவிய பரட்டை இதே நிகழ்வுக்காகத்தான் ஜோயி கேரியால் அக்டாபர் 2005 -ல் அமெரிக்கா அழைக்கப்பட்டார்.

மக்கள் தொடர்பியல் வீச்சு

பரட்டையின் உருவத்தையும், முகத்தையும் பார்க்கும் போது உடனே சிரிக்க வேண்டும் என்கிற மனநிலை பார்ப்பவர்க்கு உருவாகும்.  சிரித்தும் பேசத் தூண்டும்.  இது அவருக்கே உரித்தான உடல் மொழிப்பண்பு.  பரட்டைக்கு ஆல் போல் நட்பு வட்டம் தழைத்தற்கு இதுவே காரணம்.  இதன் மூலம் பலரும் அவருடன் நட்பு கொள்ள, பழக, உறவாட ஒரு தொடர்ப்பு பின்னல் உருவானது.  பரட்டை அதையும் தன் விழிப்புநிலைப் பரப்பலுக்கு சாதகமாக்கிக் கொண்டார்.  கிராமங்களுக்குச் சென்றால் பெண்களுடன் அமர்ந்து கொணடு, வெற்றிலை-பாக்கு கேட்டு அவராகவே பேச்சு கொடுப்பார்.  அவருடைய பேச்சு எளிதில் வித்தியாசகமாகக் கவரக் கூடிய தனித்துவம் கொண்டிருப்பதால் நொடியில் ஒரு கூட்டத்தை கண்முன் அமர்த்தி விடுவார்.  இவ்வாறான சிறப்பு குணாம்சங்கள் இவரிடம் இருக்கிறது என்று அவரிடம் சொன்னால் எல்லா கிராமத்து மக்களிடத்திலூம் இந்த‌ தொடர்பு அம்சம் இருக்கிறது எனறு கூறுவார். அவ்வறு கூறியதன் சுழற்சியில் உருவானதுதான அவரது மக்கள் தொடர்பு ஊடக யுக்தி.

மக்கள் திரள் ஊடகங்களில் வெகு மக்களை கவன ஈர்ப்பு செய்து வருகின்ற காட்சி ஊடகம், அச்சு ஊடகம் மட்டுமே முதன்மை பெற்றதல்ல.  இந்த ஊடகங்களின் இயஙகியலுக்கு ஒரு எல்லை வரையறை, காட்சி வரையறை, பாகுபாட்டு அணுகுமுறை இருக்கின்றது.  இதைவிட மக்களிடம் வலிமை பெற்று நிற்பது மக்கள் தொடர்பு முறை.  இதன் ஆற்றலுக்கு அளவில்லை.  நடைமுறையில் சிக்கல் இல்லை.  பொருளாதார முடக்கத்திற்கும், ஆளுமைக்கும் வேலை இல்லை.  கருத்தியல் முடிச்சுகளுக்கு வாய்ப்பில்லை என்று அடுக்கிக் கொண்டே போகிறார்.

தமிழ்நாடு இறையியல் கல்லூரியின் தொடர்புத்துறையில்  இயக்குனராக இருந்து மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் மக்கள் திரள் தொடர்பியல் (Mass Communication) பாடத்தைக் கற்றுத் தந்தார்.  இதன் தலைமைத் தேர்வு ஆணையராகவும் பொறுப்பு வகித்தார்.  முதுகலையில் இவர் செய்த தலித் விடுதலைக்கான தொடர்பியல் என்கிற ஆய்வின் மூலமாக மக்கள் மரபியலை அடித்தளமாக‌க் கொண்டு தொடர்பியலை அணுகினார்.  தொடர்பியலின் வெளிச்சத்தில் தமிழ் வரலாறு, தமிழகத்தில் மனுதர்ம நடப்பியல் ஆகியவைகளின் ஆழம் கண்டார்.

உலக அளவில் ஒடுக்கப்படுகின்ற மக்கள் தங்களுக்கான மரபியல்-மானுடவியல் எழுச்சியை எவ்வாறு பார்க்க முற்படுகிறார்கள் என்கிற நுட்பங்களோடு, தமிழக மக்கள் தொடர்பியலின் வேரைக் கணடுபிடித்தார்.  இதனைக் கண்டுபிடிக்க இவரை வழி நடத்தியவர்கள் சிங்களப் பேராசிரியரான‌ முனைவர்.  நெவில் ஜெயவீரா மற்றும் அய்ரோப்பிய மானுடவியல் பேராசிரியர் மைக்கேல் ட்ரேவர் ஆவர்.

எடின்ரோ பல்கலைக்கழக நுலகத்தில் கேட்பாரற்றுக் கிடந்த இந்திய கல்வெட்டு மற்றும் அகழாய்வு நுல்களைப் புரட்டி அங்கேயே உடகார்ந்து பிற்காலச் சோழர்களின் தொடர்பயில் என்று ஒரு சிறிய கட்டுரையை உருவாக்கி, பின்னாளில் அதாவது 2005 -ல் தமிழக வரலாற்றில் மனுதர்மிகளின் தொடர்பியல் சதி என்கிற நூலாக வெளியீடு செய்தார். தொடர்பியலில் இன்றளவும் கோலோச்சும் பார்ப்பனிய, இந்து வருணதர்ம கூட்டுச் சதியின் பலம், எதன் பின்னணியில் இருக்கின்றது என்பதை இந்நூல் கட்டுடைத்துள்ளது.

பல ஆய்வுக் கட்டுரைகளை உலக நாடுகளில் சமர்ப்பித்துள்ளார்.  1993-ல் ‘Emotion Elements of Culture in Tamil Women’s Commuinication’ என்கிற கட்டுரையை தாய்லாந்திலூம், 1999-ல் ‘Folklore as Change Agent and Educational Media’ என்கிற கட்டுரையை மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலூம் வாசித்துள்ளார்.

பரட்டையின் தொடர்பியல் யுக்தி பெண்களையும், குழந்தைகளையும் எளிதில் கவரக் கூடியதாக இருக்கும்.  இருவருக்குமான விடுதலை உணர்வுகள் இதில் புதைந்து கிடக்கும். அதற்கேற்றார்போல் வித்தைகள் காட்டுவார்.  தொடர்புத்துறையில் ‘Com-Ex’ என்கிற கண்காட்சியை நடத்தி மயான நடனம், பேய் நடனம், எலும்புக்கூடு நடனம் போன்ற நடனங்களை இன்றைக்கு நாம் சொல்கிற கிராபிக்ஸ் கலை மூலம் நிகழ்த்தினார்.  இவரின் இந்த யுக்தி ஒரு கண்கட்டு வித்தை போலத் தெரியம்.  அதே சமயம் அறிவியல் தொழில்நுட்பங்களைக் கற்று அதனை கேலியும், கிண்டலூமாக்குவார்.

பரட்டையின் டாவு

பரட்டையின் தொடர்பியல் யுக்தியின் எல்லையில் இருந்து பரட்டையின் டாவு வெளியானது.  மூளையில் குடிகொண்டுள்ள இந்து வருணதர்ம-சாதிய மதிப்பீடுகள், கருத்தமைவுகள், உணர்ச்சிக் காரணிகள், கதைகள் ஆகியவற்றில் இருந்து விடுபட்டு, ஒரு மாற்றுக் கதையாடலை பரட்டையின் டாவு பரப்பியுள்ளது.  இந்து மத்த்தில் எதற்கெடுத்தாலும் பொய்யாகப் புனையப்பட்ட ராமாயணம், மகாபாரதக் கதைகள் நிறைய உண்டு.  அதற்கேற்றாற்போல் கணக்கிலடஙகாத கதை சொல்லிகளும் இந்து சமயத்தில் இருக்கிறார்கள். வரலாற்றில் இது நேரடியாகவும், மறைமுகமாகவும் அடிமைத்தனக் கருத்தியலை மூளைக்குள் புகுத்தியுள்ளது.  இதனை விடுதலை நோக்கி திசை திருப்ப பரட்டையைப் போன்ற கதை சொல்லிகளும் தலித் பண்பாட்டுத் தளத்தில் உருவாக வேண்டும் என பரட்டையின் டாவு வற்புறுத்துகின்றது.  தலித் ஆதார மய்யத்தின் மாத இதழான தமுக்கு இதழில் 1996-சனவரி தொடங்கி 2005 வரையிலூம் இவர் எழுதி வந்த பரட்டையின் டாவு 2005 -ல் நூலாக வெளிவந்தது.

சமய-இறையியல் கலகம்

மக்கள் மரபியல், மாற்றத்துக்கான நாட்டுப்புறவியல், மக்கள் தொடர்பியல் ஆகியவற்றில் பரட்டை பெற்ற அனுபவங்கள் சமய அணுகுமுறைகளில்  நிறைய மாற்றங்களை உருவாக்கியது. பிறப்பால் அவர் ஒரு கிறித்துவர் என்றாலூம் தலித் அடையாளத்தை ஏற்கும்போது கிறித்துவ மரபுளையும் மீறி அவரால் செயல்பட முடிந்த‌து.  அதற்குக் காரணம் சமயம் மற்றும் இறையியல் செயல்பாடுகளில் பாமர தலித் மக்களின் நம்பிக்கை அனுபவங்களைக் கொண்டிருந்தார்.

சமயம் குறித்து சிந்திக்கும் போது தலித் சமயம் என்று ஒன்றிருப்பதை உணர்த்தினார். ஏற்கனவே நிறுவனமயமாக்கப்பட்டு இருக்கின்ற கிறித்துவ, இசுலாம், இந்து நடைமுறைகளில் தலித்துகளை பங்கு போட்டுப் பார்ப்பதை அவரின் தலித் சமயம் மறுக்கின்றது.  ஒரு குறிப்பிட்ட மக்கள் கூட்டம் தன்னை நிறுவனச் சமயத்தில் அடைத்துக் கொள்ள விரும்பவில்லை என்றால் உடனே அதை நாட்டுப்புறச் சமயம் அல்லது மக்கள் சமயம் என்று பொதுவில் வைத்துப் பார்ப்பதை தலித் சமயம் ஏற்கவில்லை. மக்கள் சமயம் என்று பொதுவில் வைக்கின்றவைகளில் சாதி-தீண்டாமைப் பாகுபாடுகள் இன்னமும் கிராமங்களில் நடைமுறையில் உள்ளது என்பதை தலித் சமயம் அம்பலப்படுத்தியுள்ளது. இது குறித்த மிக முக்கியமான கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

1.    தென்னிந்திய வாய்மொழி சமயத்தில் சாமி அனுபவம்-செராம்பூர் பல்கலைக்கழகம்
2.    தலித் சமயம் (1999-தமிழ்நாடு இறையியல் கல்லூரி)
3.    Dalit Religion and Culture Indegenois People; ISPCK 1989, Delhi.
4.    The Dalit Culture
5.    The Culture f the Oppressed in Tamilnadu.  (பூந்தமல்லி இறையியல் கல்லூரி-சென்னை)

நேரடியாக மக்கள் கூட்டத்தோடு தன்னை அடையாளப்படுத்திக் கொணடிருக்கின்ற இவரின் இக்கருத்துக்கள் அவர் சார்ந்துள்ள கிறித்துவ நம்பிக்கைகளுக்கு, முற்றிலும் பொருந்திப் போகவில்லை என்றாலும் அதனை செயலளவில் நடைமுறைப் படுத்தத் துணிந்தார்.  திருவிவிலியமும், திருச்சபையின் பாரம்பரிய ஒழுங்குகளும், கிறித்துவ கலாச்சாரமும் இவரின் கருத்துக்களால் புதுமை பெற்றன.  வழிபாடுகளும், அருளுரைகளும், சடங்குகளும், தலித் சமய நம்பிக்கைகளை வெளிப்படுத்தின.  ஒருவகையில் விடுதலை இறையியல் நோக்கில் எழுச்சியடைந்த தலித் இறையியல் தளத்தில் பரட்டையின் அருளுரைகளும், திருவிவிலிய விளக்க உரைகளும், வழிபாடுகளும் இந்திய கிறிஸ்துவ‌ இறையியலின் கட்டுமானங்களில் ஒரு உடைப்பு ஏற்படுத்தியது என்றால் மிகையாகாது. தலித் ஆதார மய்யத்தின் வெளியீடுகளில் ஒன்றான தலித் பார்வையில் அருளுரைகள் என்ற நூலில் உள்ள பல அருளுரைகளில் உள்ள தலித் கண்ணோக்குகளை இதன் வழியே அடையாளம் காண முடியும்.

இந்தியா முழுவதிலூம் உள்ள செராம்பூர் பல்கலைக்கழக இறையியல் கல்லூரிகளில் பரட்டையின் இறையியல் ஈர்ப்புக்கு ஒரு தனி விசை உண்டு.  இதை உணர்ந்த பிற இறையியல் கல்லூரிகள் அவரை சிறப்புப் பேராசிரியராக அழைத்து கவுரவித்தன.  குறிப்பாக, கத்தோலிக்க வட்டாரங்களில் உள்ள சென்னை-அருட்கடல், திருச்சி-கப்புச்சின் இறையியல் கல்லூரி, துய பவுல் இறையியல் கல்லூரி, பூனா-பாப்பல் இறையியல் கல்லூரி ஆகியவை பரட்டையின் இறையியல் கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளித்து, தலித் இறையியல் தடத்தில் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டன.

பரட்டையைப் பற்றிய ஆய்வுகள்

போராட்ட வராலாறுகளில் சமூகத்தை நேசித்த தலைவர்களை மக்கள் நேசிக்கத் தவறியதில்லை.  ஒரு வகையில் தலைவர் வழிபாட்டை துதிபாடுவதில் இருந்து சற்று விலகி, மாவீரர்களையும், போராளிகளையும் தலைவர்களாக‌க் கொண்டு நேசிக்கும் பற்று இது. பரட்டை இந்த சமூகத்தைக் காதலித்தவர். அதன் அழகியலை தன் உள்முக அரங்கில் உறைய வைத்து, மானுட உலகுக்கு இன்சுவையோடு வழங்கியவர்.

கருத்தியல் தளத்தில் நிரம்பியிருக்கின்ற இவரை அறிவுசார் உலகம் கல்வியியல் சார்ந்து அடையாளப்படுத்தியது. பலவற்றை பகுப்பாயவு செய்த பரட்டையை, பலரும் பகுத்தாய்ந்தார்கள். இந்தியாவுக்குள்ளும், வெளியேயும் அவரைப் பற்றிய கருத்தியல் விமர்சனங்கள், சமகால சிந்தனைக் கூடங்களில் நேர்முக, மறைமுகத் தாக்கங்களை ஏற்படுத்தின. உடல் இயங்கியலில் நாளமில்லாச் சுரப்பிகள் உடல் வளர்ச்சியைக் கூட்டுவது போல தலித் இயங்கியலில் பரட்டை தைத்துப் போட்ட தலித் சுரப்பிகள் (Dalit Glands) அவரைப் பற்றிய ஆய்வுகளின் பரிமாணங்களை ஒரு இயக்கமாக மாற்றியது. பரட்டை சிந்தனைக் கூடம்  (School of Parattai Thought) அவருடைய மாணவர்களால், ஆசிரியர்களால், பற்றாளர்களால் ஒரு நடமாடும் தலிம் பல்கலைக்கழகமாக எழுச்சியடைந்தது.

1.    பரட்டையில் பாடல்களில் விடுதலைக் கருத்துகள்
ஜோன்ஸ் அற்புதராஜ் (தமிழ்நாடு இறையியல் கல்லூரி 1997)
2. The Indegenisation Tamil Christian Music:
Folk Music as Liberative Transmission System,
special reference to Parattai.
Ms. Zoe Carey Sherinen, Wesleyen University
Ann Asrbor-USA (Ph. D-1998)

தலித் இயக்க அடையாளம்

பரட்டை தன் அனைத்து அனுபவங்களையும் தலித் இயக்கங்களின் வளர்ச்சிக்கு உரமாக்கினார். தான் பேசுகின்ற செயல்படுத்துகின்ற கருத்துகளை ஒடுக்கப்படுகின்ற மக்களின் விடுதலைக்கு சாத்தியப்படுத்த தலித் இயக்கங்களால் மட்டுமே முடியும் என நம்பினார். தலித் விடுதலை இயக்கம்.  விடுதலைச் சிறுத்தைகள், தியாகி இமானுவேல் பேரவை, அருந்ததியர் சனநாயக முன்னணி, துடி ஆகிய இயக்கங்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார்.  கிராமிய இறையியல் நிறுவனத்தில் பணியாற்றியபோது தலித் நில மீட்புப் பிரச்சனைகளை எதிர் கொண்டு போராடியுள்ளர்.  தன்னுடைய பண்பாட்டு அடையாளத்தின் எழுச்சிகளை தலித் இயக்கங்களின் கருத்துப் பரப்பலூக்கு ஆதாரமாக்கினார்.

பரட்டைக்குப் பாராட்டு

பரட்டை பிறரைப் பாராட்டத் தெரிந்தவர்.  பிறரைப் பாராட்டுதல் என்பது அவரவர் தன் முனைப்புக் காட்டும் பொறுப்பில் மென்மேலூம் வளர்ச்சி பெற ஊக்கப்படுத்துவதற்கான மாத்திரை.  இதில் வேடிக்கை என்னவென்றால் தன்னிடம் கருத்தியல் முரண்பாடு காண்பவர்களையும் பாராட்டுவார்.  கேட்டால் வுடுறா, ஒரு வார்த்தை-சிரிப்பு அவ்ளோதான், காசா, பணமா என்பார்.  இதன் நன்றி மறவாப் பண்பாக அவரைப் பாராட்டாதவரும் இல்லை. பாராட்டியவர்கள் விருதும் கொடுத்துள்ளார்க‌ள்.

உலக கிறித்துவ தமிழ்ச் சங்கத்தின் சார்பில் பரட்டையின் கலை, இலக்கிய செயல்பாடுகளை அங்கீக‌ரித்து அருட்கலைஞர் என்கிற விருதும் அவருடைய தலித் பங்களிப்பைப் பாராட்டி ஆந்திரமாநில தலித் திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தின் சார்பில் அம்பேத்க‌ர் தேசிய விருதும் அளித்து கவுரவிக்கப்பட்டன.  தலித் கலை, இலக்கிய, நாடக உலகில் விடுதலைக்கான விவாதங்களையும், செயல்பாடுகளையும் தொடங்கி வைத்த பரட்டைக்கு 2003 -ஆம் ஆண்டில் அய்யா அழகர்சாமி வாத்தியார் விருதை, தலித் ஆதார மய்யம் வழங்கியது.  2005 -ஆம் ஆண்டு மார்ச் திங்களில் சென்னை குருக்கள் இறையியல் கல்லூரி கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தது. எத்தனை விருதுகள், பட்டங்கள் பெற்றாலும் கிராமத்தில் உள்ள சராசரி பாமரன் இவரைக் கட்டித் தழுவும் பூரிப்புக்கு இவை ஈடாகாது.

வானத்துல வாழுகிற பெத்தவரே சாமி

வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டு வாழ்ந்தவர் பரட்டை. இது பல போராட்ட அனுபவங்களை அவருக்கு கற்றுக் கொடுத்துள்ளது.  1997 டிசம்பர் 16 -ல் ஒரு சிறப்பு இறைவேண்டல் நிகழ்த்தப்பட்டது. பெங்களூரு மணிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பரட்டை நினைவிழந்து விட்டார். அதிலிருந்து மீண்டு நலம் பெற நடத்தப்பட்ட இறைவேண்டலின் போதுதான் அவரின் முதல் மரணக்காட்சி  அனைவர் மனதிலும் நிழலாடியது. அதன் பின்னர் ஓரிரு முறை தலைப்புச் செய்தியாக மிரட்டிவிட்டு மருத்துவமனையில் படுத்துக் கொள்வார்.

ஒவ்வொரு முறை மருத்துவமனையில் இருந்து திரும்பும் போதும் அலோபதி மருத்துவத்துக்கு ஒத்துக் கொள்ளவில்லை.  அறுவை சிகிச்சை வேண்டாம் என சொல்லிவிட்டார் என்று அவருடைய நண்பர்கள் உட்பட ஒரு கீரல் விழுந்த இசைத்தட்டு வாசிப்பார்கள்.  உண்மையில் அவரிடம் உட்கார்ந்து பேசினால் வைத்தியத்துக்கு நமக்கு ஏதுடா அம்மாங்காசி என்று பாராங்கல்லைச் சுமந்த வேதனையை விழுங்கியபடி தாடியைத் தடவுவார். எவ்வளவு உயரத்துக்கு பேசப்பட்டாரோ. அவ்வளவு உயரத்துக்கு அவர் பலரால் கவனிக்கப்பட்டார் என்று சொல்லி விட முடியாது.

வெத்தலை பாக்கு வாங்குவதற்கான இரண்டரை ரூபாய் கையிருப்போடு தன் வழ்நாளை நிறைவு செய்தவர்.  இந்த சமூகத்தை விடுதலைக் கண்ணோட்டத்தில் பார்க்கிற ஒவ்வொரு தலித்தின்  உள்ளிருப்பு நிலையும் இதுதான்.  இதைக் கடந்து வேறெங்கும் அவரின் சிந்தனை அகதியாகப் பறந்ததில்லை.

2000 -ஆம் ஆணடு மார்ச் 9 -ஆம் நாள் பரட்டையின் டாவு -60 என்று மாந்தோப்பில் பரட்டையின் அறுபதாவது பிறந்தநாள் நிறைவு விழா விடுதலைச் சிறுத்தைகளின் வெப்பச் சூறாவளி தொல். திருமாவளவன் தலைமையில் அவரின் இன்னொரு பிறவி விடுதலைக்காற்றை சுவாசிக்க வெளிவந்த‌து.  அம்பேத்கருக்கும் எனக்கும் இரண்டு ஒற்றுமை உண்டு.  அதாவது, அவருக்கு இருந்த விடுதலைப்  பார்வை எனக்கும் உண்டு. அவர் சந்த்தித்த உடல் வருத்தப் போராட்டமும் எனக்கு உண்டு என்பார். வறுமையோடும், விடுதலை தாகத்தோடும் யுத்தம் நிகழ்த்தியவர், மக்கிக் கிடக்கும் மானுட உணர்வுகளை அதிர் வேட்டுகளாய் கண் முன் வீசச் செய்தவர். அவரின் அபாரத் திறன்களைக் கண்டு அக்டோபர் 2005 –ல் ஜோயி ஷெரின‌ன் என்பவர் அமெரிக்கா அழைத்து அவரை கவுரவித்தார்.

அடிமைக் காயங்களாலூம், வீரத் தழும்புளாலூம், தலித் அனுபவங்களாலூம் தன்னில் தானே கருக் கொணடு மானுடத்தின் மய்யத்தில் ஈர்ப்பு விசையைப் பாய்ச்சிய பரட்டை, 2005 நவம்பர் 4 -ஆம் நாள் அமெரிக்காவில் உள்ள ஒக்லகாமா (நாரம்ன் ஸ்டேட்) நகரில், தன் இறுதி மூச்சை மறைத்துக்  கொணடார்.  தலித் விடுதலையில் புதிய அதிகாரத்தையும், புரட்சிகர அலைகளையும் உருவாக்கி, தனி மனித வரலாற்றில் ஒரு சமூகமாக, பண்பாடாக இலக்கியமாக வாழ்ந்த பரட்டை நேர்முகக் காட்சிகளின் நிகழ்கால விடுதலை வரலாற்றில் வந்து கொண்டேயிருப்பார்.

துணை நின்ற ஆதாரங்கள்

1.    பரட்டையின் பாடல்களில் விடுதலைக் கருத்துகள்
2.    பரட்டை…..
3.    பரட்டையின் டாவு-தலி ஆதார மய்யம்
4.    தமிழக வரலாற்றில் மனுதர்மிகளின் தொடர்பியல் சதி – தலித் ஆதார மய்யம்
5.    Folklore for change – பரட்டை
6.    நடிக்க நாடகம் எழுதுவது எப்படி-பரட்டை



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

பூணூல் நரியும் புத்தி கெட்ட ராசாவும்

டாவு – 7

தலித் அவதாரம் டாவுல‌ தலித் மக்களின் சக்தி பற்றி “PA 10 RAT 100 TAI 1000″ என்ற கம்ப்யூட்டரின் கணிப்பினை படித்தோம். அது எவ்வளவு பெரிய உண்மைன்னு தெரிஞ்சு போச்சு.
ஆகஸ்ட் ஆறாம் தேதி தலித் மக்கள் ஊர்வலம் போகிறதாக அறிக்கை விட்டாங்க.  உடனே தமிழக அரசுக்கு பயம் வந்துருச்சி. இயந்திர துப்பாக்கியில் இருந்து, இன்டெலிபிள் இங்க் (அதான் அழியாத மை) வரைக்கும் தயார் பண்ணிட்டாங்க. சாதிக் கலவரம் நடக்கும்போது கூப்புடாத வெளி மாநில போலீசை கூப்புட்டாங்க. நெறைய பேரை கைது பண்ணினாங்க.
இப்படி அரசாங்கமே பயப்படுகிற அளவுக்கு தலித் மக்கள் சக்தி வாய்ந்தவங்கன்னு தெரியுது. சில பேரு அரசாங்கம் தலித் இயக்கங்களை வன்முறை இயக்கமின்னு கொச்சைப்படுத்தத்தான் இப்படி செஞ்சிருக்காங்கன்னு சொல்றாங்க.
நான் தமிழக அரசு ஏன் இப்படி நடந்திடுச்சு? யின்னு “PA 10 RAT 100 TAI 1000″ கிட்ட கேட்டேன்.  உடனே அது ஒரு கதை சொல்லிச்சு.
முன்னொரு காலத்துல ஒரு ராசா இருந்தாராம்.  அவரு பட்டத்துக்கு வரும்போது நாடு நகரங்க எல்லாம், முன்னால ஆண்ட ராணி தயவால காடுகளா மாறிடுச்சாம். ராசா ஆட்சிக்கு வந்த கொஞ்ச நாளு தெக்கு பக்கத்துல இருக்கிற காடுகள்ல ஒரே கலவரம்
ஏஞ்சாமி, இந்த பக்கம் ஒரே கலவரமாயிருக்குதே ஏன்?ன்னு ஒரு பூணூல் போட்ட நரிகிட்ட கேட்டாராம்.
நரிக்கு ஒரே சந்தோஷம். நம்மளை பார்த்தாலே அடியின்னு சொன்ன விரோதியோட ஆளு, நம்மளை கும்பிடுறானே இவனை ஒரு வழி பண்ணிடுவோம்-ன்னு நெனச்சி, பேரை மாத்துடா அம்பி, கோயில்ல சமபந்தி வைய்யி.  நாக்கு ருசியா சாப்பிட்டு ரொம்ப நாளாகுதுன்னு நரி சொல்ல, ராசா பேருகளை எல்லாம் மாத்னாராம்.  கோயில்ல சமபந்தி வைச்சாராம்.  மகாநாடு, கருத்தரங்கு எல்லாம் நடத்துனாராம்.  கலவரம் நிக்கலயாம்.
குழம்பிப் போன ராசா மறுபடியும் அந்த பூணூல் போட்ட நரிகிட்ட வந்து, சாமி கலவரம் நிக்கலியேன்னு புலம்பினாராம்.
நரி பெரியவா, சாம, பேத, தண்டம்-ம்பாங்கோ.  நீ கடைசி ஆயித‌த்தை எடு.  சுட்டுத்தள்ளு-ன்னு சொல்லிச்சாம்.
யாரை சாமி சுட்டுத் தள்ளறது? ன்னு ராசா கேட்டாரம். உடனே நரி, பலமுள்ளவனைச் சுட்டுத் தள்ளுடா அம்பி, உடன்பிறப்பு, கிடன் பிறப்புன்னு பார்க்காதே-ன்னு சொல்ல, ராசா தனக்கு ஓட்டுப் போட்ட மக்களைச் சுட்டு கொடுமை படுத்தினாராம்.
நரிக்கு ரொம்ப சந்தோஷம்.  இவன் ஓட்டு வங்கி காலி.  இனி நம்மவா தாராளமா ராசா ஆகலாம்-ன்னு ஆவலோட காத்துகிட்டு இருக்குதாம்.
இந்த கதைய “PA 10 RAT 100 TAI 1000″ ன்ற கம்ப்யூட்டர் சொல்லிட்டு, என்ன புரியுதா-ன்னு கேட்டிச்சி.
எனக்கு ஒரு எழவும் புரியல.  உங்களுக்கு புரியுதா? ஏன் இந்த அரசு இப்படி நடக்குதுன்னு.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

தலித் அவதாரம்

டாவு – 6

மகாவிஷ்ணு பத்து அவதாரம் எடுத்தாரம். பன்னி, பாப்பான்ல இருந்து பொம்பளை வரைக்கும் அவதாரமா வந்திருக்காரு.  ஆனா ஒரு தலித்தா அவதாரம் எடுக்கலை.
அதனால ம.க.இ.க.வினர் பாட்டுல, அரிசன அவதாரம் எங்கடா நாயே? ன்னு கேட்டாங்க.
இந்த கேள்விய  உலகத்திலேயே மிக பெரிய  அதிக ஆற்றலுள்ள “PA 10 RAT 100 TAI 1000″  என்ற கம்ப்யூட்டர் கிட்ட கேட்டாங்களாம்.  அதுக்கு அந்த கம்ப்யூட்டர் உலகத்திலேயே அதிக ஆற்றல் உள்ளவர் தலித் தான். மகாவிஷ்ணுவுக்கு அவ்வளவு  ஆற்றல் இல்லாத்தால் அவரால தலித் அவதாரம் எடுக்க முடியலயின்னு சொல்லிச்சாம்.
மகாவிஷ்ணுவை விட அதிக ஆற்றல் கொண்ட தலித்தை கொடுமைப்படுத்துறாங்க, கொலை செய்யுறாங்களே, அது பாவமில்லியா? யின்னு கேட்டாங்களாம்.
அதுக்கு “PA 10 RAT 100 TAI 1000″
ஆமா, அதனாலதான் பருவமழை தவறுது. தொத்து வியாதி வருது. உணவு விஷமாவுது. அரசியல்ல‌ ஊழல் வளருது.  வறுமைக்கும் பத்தாக் கொறைக்கும் காரணமே இந்த பாவந்தான்யின்னு சொல்லிச்சாம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

அணு குண்டாஸ்திரம்

டாவு – 11

காட்சி-1

இடம்: சாக்கடை சூழ்ந்த குடிசைப்பகுதி
கதாபாத்திரங்கள்:  கருப்பாயி, மாரி, முனி

கருப்பாயி    : மாரியக்கா, உனக்கு சேதி தெரியுமா? நம்ம பேட்டையில அணு குண்டாஸ்திர சோதனை பண்ணியிருக்காங்களாமே.
மாரி: ஆமாடி, அதைக் கேட்டவுடனே எனக்கு எவ்வளவு பெருமையா இருந்திச்சி தெரியுமா? இரண்டு நாளு பசி பறந்து போச்சிடி.
முனி: நான் 3 நாளா பட்டினி.  உன்னிய போலவே சேதி கேட்டதும் பசி இருந்த எடம் தெரியல.
கருப்பாயி: ஆமாக்கா. அந்த பேமானி மேஸ்திரி என்னிய, ஈனசாதி நாயே-ன்னு திட்டினது கூட மறந்து போச்சி
மாரி: அமெரிக்கா பேட்டையோட, நம்ப பேட்டையும் சமமாயில்ல போயிரிச்சி.
முனி: அப்படின்னா நம்ப பேட்டை அமெரிக்க பேட்டை ஆயிருமா?  அந்த பேட்டையில தர்ற மாதிரி இங்க                 கூலி தருவாங்களா?
கருப்பாயி: கூலியின்னதும் தான் ஞாபகம் வருது.  எனக்கு ரெண்டு நாளா வேல கிடைக்கல.  புள்ளங்க ப‌ட்டினியா கெடக்குதுங்க. அரிசி, கிரிசி இருந்தா கடனா குடேன்.
மாரி: கொடுமை கொடுமைன்னு கோயிலுக்கு போனாளாம். அங்க ரெண்டு கொடுமை எதிர்க்க ஆடிகிட்டு    வந்திச்சாம்.  உங்கிட்ட கடன் கேட்க வந்தேன்,  நீ எங்கிட்ட கேக்கிற.  கொடுமையடியம்மா.
முனி: என்னக்கா கொடுமை,  அணு குண்டாஸ்திர சோதனை பேட்டையில நடந்திருக்கு.  அதப்பத்தி பேசாம பசி, பட்டினி, கடன்னு பேசிறீங்களே.  அதுதான் சூப்பர் கொடுமை.  நம்ப பேட்டை அமெரிக்காவா ஆவப் போவுது.  1மணிக்கு கலரு டி.வி. வாங்கி கேபிள் கனெக்சன் கூட    வாங்கிடலாம் (எல்லோரும் கேபிள் டி.வி. கனவு காண திரை)

காட்சி 2

இடம்:  இந்திய பேட்டை ரவுடியின் வீடு
கதாபாத்திரங்கள்: பேட்டை ரவுடி காஜ்பாய், கத்வானி

நிருபர்:  நீங்க அணுகுண்டாஸ்திர சோதனை நடத்தியது பத்தி நெறய எதிர்ப்பு இருக்குதே
காஜ்பாய்:    மத்த பேட்டைகாரங்களுக்கு நம்ம முன்னேற்றத்தைப் பார்த்து பொறாமை.
கத்வானி:    நமக்கு பெருமை.
காஜ்பாய்: அந்த பொறாமையால அப்டி பேசுறாங்க
நிருபர்: ஆமா இப்ப எதுக்கு இந்த சோதனையை நடத்தினீங்க?
காஜ்பாய்: அது அரசாங்க ரகசியம்
கத்வானி:    அணுசக்தி பத்தின எல்லாமே டாப் சீக்கிரட்தான். அதனால சொல்லக்கூடாது.  மன்னிச்சிருங்க
நிருபர்: நன்றி, நான் வர்றேன் (போகிறார்)

கத்வானி: டேய், நம்ம ரெண்டு பேரு மட்டும் இருக்கிறதால கேக்கறேன்.  அது என்ன அரசாங்க ரகசியம்? ஏன் நாம அணு குண்டாஸ்திர சோதனை நடத்தினோம்?
காஜ்பாய்: அந்த கூட்டை கலைச்சிருங்க, இல்ல, இந்த கூட்டை கலைக்கணுமின்னு நம்ப கூட்டணியிலே ஒரே சண்டை.  குழப்பம்.  வெலவாசி ஏறிப் போனதாலயும்,    வேலையில்லா திண்டாட்டத்தாலேயும், இலவச மின்சாரத்தை நிறுத்த சொன்னதாலயும் மக்களுக்கு நம் மீது வெறுப்பு.  இதயெல்லாம் சமாளிக்கத்தான் இந்த சோதனை.  இப்ப எல்லோரும் க‌வலைய மறந்து அணு குண்டாஸ்திர சோதனையைத்தானே பேசுறாங்க.
கத்வானி:    பலே, பலே இது பாபிரி மசூதியை விட‌, கோயம்புத்தூர் குண்டுவெடிப்பை விட அற்புதமான திட்டம்.  எப்படியும் 3 மாசம் ஓட்டிடலாம்.
காஜ்பாய்: அதுக்கப்புறம் ஏதாவது ஐடியா வரும்.  பாத்துக்கலாம்
கத்வானி: இந்த தலித்துங்க பெரிய பிரச்சனையா போயிட்டாங்க. நாங்க ஹிந்து இல்லன்னு பேசுறாங்களாம். இந்த         தலித்துகளும், சூத்திராளும் ஒண்ணா சேந்திட்டா நம்ம கதி அதோ கதிதான்.
காஜ்பாய்:     இதுக்கெல்லாம் பயப்பட வேணாம்.  இந்த சோதனையைப் பத்தி இன்னும் பெருமையா சனங்களைப் பேச வைக்கணும்.  அத்தோட     ஹிந்துத்துவா வெஷத்தை வெவ்வேற பேருல விக்கணும்.  அப்புறம் அவிங்களும் அடங்கிடுவாங்க.
கத்வானி: சோதனையை எதுக்கிற அமெரிக்கா பேட்டை, கிறிஸ்துவ பேட்டை. சீனா பேட்டை, நாஸ்தீக பேட்டை. நம்ப பேட்டை ஹிந்துபேட்டையின்னு ரீலு உடலாமா?
காஜ்பாய்:     ஓவராப் போயிடாதீங்க.  சனங்களுக்கும் கொஞ்சம் அறிவு இருக்குது,

(சவசேனா தலைவர் பாடியபடி உள்ளே வருதல்)
(ஹய்ர ஹய்ர ஹய்ரப்பா என்ற மெட்டு)

சவசேனா:     ஐயோ! ஐயோ! ஐயப்பா!  (25 தடவை) தலித் இயக்க டேன்ஜரெல்லாம் எனக்கே எனக்கா? வலுத்துப் போச்சே என்ன செய்வேன் தலைவா சொல்லுவாய்?  (ஹய்ர)
காஜ்பாய்: யோவ், அதுக்குதான் அணு குண்டாஸ்திரம் போட்ரிக்கமுல்ல.
சவசேனா: ஓ! அதுக்குதான் அணு குண்டாஸ்திரமா?  நல்ல திட்டந்தான்,  ஆனா எவ்வளவு நாளைக்கி அதைப் பேசுறது?
கத்வானி:    முடிஞ்ச வரைக்கும் பேசுங்க.  அப்புறம் தமிழ்நாட்டுல, ‘போடா சட்டம்’ போட்ட மாதிரி உஙக‌ ஊருல வாடா     அல்லது டாடா சட்டம் போட்டு உள்ள தள்ளி ஒதைங்க.
காஜ்பாய்: திஸ் தேஷ் மே மிசா ஹ , தடாஹ  போடா ஹ, தும்கோ தோ
சவசேனா: அச்சா அச்சா (என்ற படி செல்ல திரை)

காட்சி -3

இடம்: சாக்கடை சூழ்ந்த குடிசைப்பகுதி
கதாபாத்திரங்கள்:  கருப்பாயி, மாரி, முனி

மாரி: என்னடி அணு குண்டாஸ்திரம் போட்டப்ப நம்ப     பேட்டை அமரிக்க பேட்டை மாதிரி ஆயிரும்.  அங்க குடுக்கிற மாதிரி மணிக்கு 50 ரூபா கூலி கெடைக்குமின்னியே?  என்ன ஆச்சி பாத்தியா? கூலி அப்படியே இருக்கு.  வெலவாசி ப‌சியும் பட்டினியுந்தான் மிச்சம்.
கருப்பாயி: நான் கூட இனிமே மேஸ்திரி நம்பள சாதி பேரு சொல்லி திட்டமாட்டான்னு நெனைச்சேன். ஆனா நேத்திக்கு என்னிய சாதி பேரு சொல்லித் திட்டினான்.
முனி: என்னியுந்தான் திட்டினான்,  இனிமே நாம இந்த “டகல்     பாச்சா அஸ்திர பகட்டுக்கெல்லாம்” ஏமாறக் கூடாது.
மாரி: என்ன பண்ணுறது? நம்ப தலைவிதி.  கீழ்சாதியில ஏழைகளாப் பொறந்துட்டோம். கஷ்டப்படுகிறோம்.
கருப்பாயி: தலைவிதியா, வெங்காயம், நம்ப முட்டாத்தனந்தாண்டி     காரணம் நாமெல்லாம் ஒண்னாத் திரண்டாத் தாண்டி நமக்கு நல்லது கெடைக்கும்.

(சவசேனா தலைவர் எட்டிப் பார்த்தல்)

மாரி: இந்த அணு குண்டாஸ்திரத்துக் கெல்லாம் ஏமாறாம நாம ஒண்ணு சேர்ந்து இயக்காஸ்திரம் போடணும்.
முனி: ஆமாக்கா, நம்ப பேட்டை தலித்து இயக்கத்துல     சேந்திருவோம்.
சவசேனா:     ஐயோ இயக்காஸ்திரமா, அதுக்கிட்ட நம்ப அஸ்திரம்     எதுவும் செல்லாதே, தலைவா, தலைவா (என்று        அல‌றியபடி ஓட, திரை)



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

தலித் சாமியின் சக்தி !

டாவு – 10

ஒரு ஊருல ஒரு தலித் குடும்பம் இருந்திச்சு.  கல்யாணம் ஆயி ஒரு புள்ள பொறக்குற வரைக்கும் புருசங்காரன் ஒழுங்கா இருந்தான்.  பொறவு குடிக்க ஆரம்பிச்சான்.  கூலிய வாங்கி சாராயக் கடையில குடுப்பான்.  குடிச்சிட்டு வந்து பொண்டாட்டிய அடிப்பான்.
ஒரு நாளு அடி தாங்க மாட்டாம அந்த பொண்ணு அலற, பக்கத்து ஊட்டு பாட்டி, இப்புடி குடிச்சிட்டு வந்து அடிக்கிறானே பாவி, இவனுக்கு சாமிதான் நல்ல புத்தி குடுக்கனும்-யின்னு சொல்லிச்சு.
மறுநாளு காலையில அந்த பொண்ணு சாமிக்கிட்ட மொறையிடலான்னு புறப்பட்டுச்சி.  அப்ப பக்கத்து ஊட்டு பாட்டி வந்து, அடியேய், ஆம்பள சாமிகிட்ட போகாதே. பொம்பள சாமிகிட்ட போ,  அவுங்களுக்குதான் நம்ம கசுட்டம் புரியும்-ன்னு சொல்லிச்சு.
அதே போல அந்த பொண்ணு முதல்ல லட்சுமிகிட்ட போலாம்னு தீர்மானிச்சி, பால்கடல் நடுவுல போயி லட்சுமியப் பார்த்து தங்கொறைய எடுத்துச் சொல்லிச்சு. அந்த அம்மா, என்னால ஒண்ணும் முடியாதும்மா.  எங்க ஆத்துக்கார்ரு கால அமுக்கவே நேரம் போதல.  உனக்கு எங்க உதவி செய்யறது.  பேசாம வீட்டுக்குப் போயி ‘கல்லானாலும் கணவன்.  ஃபுல்லானானும் புருஷன்’ -தான்னு பொறுமையா இரு -ன்னு சொல்லிடுச்சு.
அப்புறம் சரசுவதிக்கிட்ட போச்சி.  அந்தம்மா, நானே தக்கையாட்டம் தாமரைப் பூவுல மிதக்குறேன்.  உம் புருஷனை எப்படி தடுத்து நிறுத்த முடியும் -ன்னு சொல்லிச்சு.
பூமாதேவிக்கிட்ட போனா, என்னைப் போல அடிச்சாலும், உதைச்சாலும் பொறுமையா இரு -ன்னு சொல்லிருச்சி.
அப்போ ஒரு சித்தரு, அடி பாவி, அதெல்லாம் புருஷனுக்கு அட‌ங்குன தெய்வங்க.  அதுங்ககிட்ட போயா சொன்ன?  உங்க சாமிங்ககிட்ட போயி சொல்லு -ன்னாரு.
அதுக்கு  அந்த பொண்ணு எங்க சாமியெல்லாம் மட்டமான சாமியின்னு சொல்லுறாங்களே -யின்னு சொல்ல
எந்த மடப்பய மவன் சொன்னான். உங்க சாமிதான் ஒசந்த தெய்வம். சக்தி வாய்ந்த தெய்வம்.  போயி அதுகிட்ட மொறையிடு.  பலன் உடனே கிடைக்கும்-ன்னு சித்தர் சொன்னாரு.
அப்படியே அந்த பொண்ணு அந்த கிராமத்து தலித்சாமி பெரியாயிகிட்ட போயி மொறையிட,
ஆத்தா!
அப்படியா அந்த பையன் செய்யறான்? அவனை நான் கவனிக்கிறேன் -ன்னு சொல்லி, சூலாயுத‌த்தை எடுத்துக்கிட்டு சிங்கத்துமேலே ஏறி பொறப்பட்டுச்சி.
ஆத்தா வர்றதைப் பாத்து அழுத புள்ள வாய மூடுது.  அண்ட சராசரமெல்லாம் கிடுகிடுன்னு நடுங்குது. புருசங்காரன் பயந்து போயி ஆத்தா காலுல உழுந்தான்.
ஆத்தா, ஏண்டா பொம்ளைய அடிக்கிற, நானும் பொம்பளைதாண்டா.  என்னிய அடிடா பாப்போம் -னின்னு சீற
புருசன்காரன் இனிமே ஒளுங்கா இருப்பேன் ஆத்தா -யின்னு கெஞ்ச, ஆத்தா அவனை மன்னிசிட்டு மலையேறி போச்சி.  அப்ப அந்த விஞ்ஞான சித்தர் அந்த பொண்ணப் பாத்து,
அம்மா, நீ அந்த பாப்பார சாமிங்க சரசுவதி, லட்சுமி, பூமாதேவி போலயிருந்தா புருசன்காரன் ஒதைப்பான்தான்.  பெரியாயி போல வீரமாயிரு. அப்ப புருசன் ஒழுங்காயிருப்பான்னு சொல்லி மறஞ்சி போனாரு.
அதுல இருந்து புருசன் குடிக்கறதில்ல.  அந்த பொண்ணை அடிக்கறதுமில்ல.

அம்பேத்கார் ஆவி !

டாவு – 9

சீனு, ரகுன்னு ரெண்டு பாப்பார பாடகர்களும், மாடசாமி, கருப்பசாமின்னு ரெண்டு தலித் பாடகர்களும் இருந்தாங்க.  இவுங்கள்ல மாடசாமி, ரகு ரெண்டுபேரும் ‘காம்போதி’ ராகத்த நல்லா பாடுவாங்க.
‘கல்யாணி’ ராகத்த கருப்பசாமி, சீனு ரெண்டுபேரும் நல்லா பாடுவாங்க.  யாராவது ரகுகிட்ட போயி சீனு எப்படி பாடுவார்னு கேட்டா
சீனு கல்யாணிய பிச்சு எடுத்துடுவாங்க.  சீனுக்கு நிகரா பாட யார் இருக்கா லோகத்துல! அப்படின்னு சொல்லுவான்.
சீனுகிட்ட போயி ரகு எப்படி பாடுவார்னு கேட்டா,
ரகுவா, காம்போதிய ப்ரமாதமாவுல்ல பாடுவார்.  அவருக்கு நிகர் அவர்தான் -ம்பான்.
இதே போல
மாடசாமிகிட்ட போயி கருப்பசாமி எப்படி பாடுவார்னு கேட்டா
அவனுக்கு என்னாத் தெரியும், என்ன மாதிரி காம்போதிய சுதி பிசகாமல் பாட முடியுமா? அப்படிம்பான்.
இதே போல
க‌ருப்பசாமிகிட்ட போயி மாடசாமி எப்படி பாடுவார்னு கேட்டா
மட, மாடசாமி, அவனுக்கு என்னாத் தெரியும்? என்ன மாதிரி கல்யாணிய பாட முடியுமா? அப்படின்னு சொல்லுவான்.
இதனால மாடசாமி, கருப்பசாமி ரெண்டு பேருக்கும் கச்சேரி எதுவுமே வர்றதில்ல. ஆனா சீனு, ரகு ரெண்டு பேருக்குமே நெறய கச்சேரிக்கு அழைப்பு வரும்.
போன டிசம்பர் மாச‌ம்.  கருப்பசாமி, மாடசாமி ரெண்டு பேருக்கும் மும்பையில கச்சேரி.  மும்பைல்ல தாதர் -ங்கற எடத்துல ஒரு ஓட்டல்ல தனித்தனி அறையில தங்கினாங்க.
அவுங்க தங்கியிருந்த அறையில் இருந்த அம்பேத்கார் படத்திலேர்ந்து ‘அம்பேத்கர் ஆவி’ எறங்க, ஒரே தரிசனத்த ரெண்டு பேரும் கண்டாங்க.
அந்த தரிசனத்துல
ரெண்டு நாய்ங்க ஒரு எலும்புக்காக சண்டை போட்டு செத்துப் போதுங்க.  இன்னும் ரெண்டு நாய்ங்க ஒரு எலும்புத் துண்டை ஆளுக்கு பாதியா தின்னுட்டு, வலாட்டிட்டு சந்தோஷமா போகுதுங்க.  கருப்பசாமி, மாடசாமி ரெண்டு பேரும் கச்சேரிய முடிச்சிட்டு ஊருக்குத் திரும்பினாங்க.
அன்னையில இருந்து யாராவது மாடசாமிகிட்ட போயி கருப்பசாமி எப்படி பாடுவார்னு கேட்டா, அவர் காம்போதிய ரொம்ப நல்லா பாடுவார்ங்க.  நான் கல்யாணிய பாடுவேன்னு சொல்வாரு.
கருப்ப‌சாமிகிட்ட போயி மாடசாமி எப்படி பாடுவார்னு கேட்டா, அவரு கல்யாணிய ரொம்ப நல்லா பாடுவாரு.  நான் காம்போதிய பாடுவேன்னு சொல்வாரு.  அதுக்கப்புறம்
ரெண்டு பேருக்கும் கச்சேரி மேல கச்சேரின்னு நெறய அழைப்பு வர ஆரம்பிச்சிச்சு.
அம்பேத்கர் ஆவி தரிசனமா எறங்குனதுனால கருப்பசாமி, மாடசாமி வாழ்வு மாறுச்சு.
உங்க வாழ்க்கையும் மாறனும்னா?
‘அம்பேத்கர் ஆவி’ எறங்கனுங்க.

படியளக்கிற சாமி

டாவு – 8

ஒரு ஊருல ஒரு தாழ்த்தப்பட்ட சாதியச் சேர்ந்த ஒரு விதவை இருந்தாங்க.  அவங்களுக்கு ஒரே ஒரு மகன்.  இந்த விதவை ஒரு நாளைக்கி ஒரு நெல்லு கூலி தர்ற ஒரு பண்ணையாருகிட்ட வேலை செய்ஞ்சி வந்தாங்க. தெனந்தோறும் அந்தம்மா அந்த ஒரு நெல்லு கூலிய வாங்கி அதைக் குத்தி, பொடச்சி, சோறு ஆக்கி, பாதிய மகனுக்கும் மீதிய தானும் சாப்பிடும். பையன் வளர வளர அவனுக்கு இந்த பாதி நெல்லுச்சோறு பத்தல.  அதை அம்மாகிட்ட சொன்னான்,
அம்மா! தம்பி நேத்து ஒரு சாமியாரு படி அளக்கிற சாமி -யின்னு ஏதோ சொன்னாரு.  நீ உடனே போயி அவரை விசாரி -ன்னு சொல்ல, பையன் ஒடனே பொறப்பட்டு அந்த சாமியாரைத் தேடிப் பிடிச்சி, சாமி எனக்கு ஒரு நெல்லு சோறு கூட கிடைக்கல.  நீங்க யாரோ படி படியா அளக்கிற சாமியப் பத்தி சொன்னீங்களாம்.  அவுரு யாரு? எங்க இருக்காரு? -ன்னு கேட்டான்.
சாமியாரு! தம்பி ஊருக்கு தெக்கால ஒரு காடு இருக்குதில்ல.  அங்க நடுக் காட்டுல படி அளக்கிற சாமி இருக்குன்னு நான்  கேள்விப்பட்டேன். நீ போயி பாரு -ன்னு சொன்னாரு.
பையன் அம்மாகிட்ட போயி படியளக்கிற சாமி நடுக்காட்டுல‌ இருக்குதாம்.  நான் போயி பாக்குறேன் -ன்னு சொல்ல, அம்மாகாரி அன்னைக்கி கெடச்ச ஒரு நெல்லைக் குத்தி பொடச்சி, சோறாக்கி கட்டுச்சோறு கட்டிக் கொடுத்து அவனைக் காட்டுக்கு அனுப்பி வைச்சது.
பையன் காட்டுக்குள்ள கொஞ்ச தூரம் போனான். அப்ப அங்க இன்னொரு தாழ்த்தப்பட்ட சாதியச் சேர்ந்த ஒரு பொண்ணைப் பார்த்தான். இவனைப் போலவே அந்த பொண்ணோட அம்மாவுக்கும் தெனம் ஒரு நெல்லுதான் கூலியாம்.  அதனால அந்த பொண்ணும் படியளக்கிற சாமிய தேடிக்கிட்டு காட்டுக்கு வந்திருக்கு.
பையனும், பொண்ணும் ஒன்னா சேந்து படியளக்கிற சாமியத் தேடிப் போக, வழியில‌ இன்னொரு தாழ்த்தப்பட்ட சாதியச் சேந்த பையனைப் பாத்தாங்க.  அவனும் “தெனம் ஒரு நெல்லு கூலி கேசு” தான். அவனையும் சேத்துக்கிட்டாங்க.  அப்புறம் ஒரு பிற்படுத்தப்பட்ட சாதியச் சேந்த பொண்ணு ஒரு நெல்லு கேட்டு சோத்தைத் தூக்கிக்கிட்டு  படியளக்கிற சாமியத் தேடிக்கிட்டு வர அதையும் கூட  சேத்துக்கிட்டாங்க.  இப்படி தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட  சாதியச் சேந்த ஒரு நெல்லு தெனக்கூலிகளோட புள்ளைங்க ஆணும், பெண்ணுமா இருபத்தி மூணு பேரு ஒண்ணா சேந்து காட்டை அதாகதம் பண்ணிட்டு படியளக்கிற சாமியத் தேடி நடுக்காட்டுக்கு போறாங்க.
அங்க படியளக்கிற சாமி கல்லுக்குள்ள இருக்கிற தேரைக்கு தண்ணி அளந்துக்கிட்டு இருக்காரு.  ஒரு பையன் சாமியப் பாத்து,
யோவ்! நீதானே படியளக்கிற சாமி?  என்னாயா நீ படியளக்கிற?  எங்களுக்கு ஒரு நெல்லு சோறு கூட கெடைக்கலியே -யின்னு கேட்க,
சாமி, போடா முண்டம்.  நான் ஒளுங்காதான் படியளக்கிறேன்.  நீங்க ஒரு நெல்லை வெதச்சா அதை நூறு நெல்லா ஆக்கிறது நான்தான்.  தப்பு எங்ககிட்ட இல்ல.  உங்ககிட்டதான இருக்குது -ன்னு சொல்லி மறைஞ்சிபுட்டாரு.
புள்ளங்க எல்லாம், என்ன இப்புடி சாமி சொல்லுது, நம்பக்கிட்ட என்ன தப்பு? -ன்னு யோசிக்க, ஒரு பொண்ணு
டேய்! தப்பு பண்ணையாருங்ககிட்டதான். அவிங்கதான் நமக்கு சாமி அளந்த படிய குடுக்காம, ஒரு நெல்லு தெனக்கூலி குடுக்கறாங்க -ன்னு சொல்ல, ஒரு பையன்,
நாமெல்லாம் ஒண்ணாக் கூடி அந்த பண்ணையாருங்களை வெரட்டிடுவோம் -ன்னு சொல்ல, இன்னொரு பையன்,
நம்ம அப்பா – அம்மா எல்லாரும் ஒண்ணா சேருவாங்களா? சாதி – கீதியின்னு தகராறு பண்ணுவாங்களே? -ன்னு சொல்ல, ஒரு பொண்ணு.
கிழங்கட்டைங்க அப்புடிதான் பேசும். அதுங்களை விஞ்ஞான யுகத்தை சேர்ந்த நாமதான் திருத்தணும் -ன்னு சொல்லிச்சு.  அப்போ எல்லோருமா சேர்ந்து,
முதல்ல சாதிய ஒழிப்போம்.  அப்புறமா ஒண்ணாக்கூடி பண்ணையாருங்களை விரட்டிருவோம் -ன்னு தீர்மானம் பண்ணி சாதிய அழிச்சி, பண்ணையாருங்களை வெரட்டிட்டு எல்லோரும் வயிராற சாப்பிடுறாங்களாம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

மணி காய்க்கும் மரம்

டாவு – 5

சிவகாசியில ஒரு மரம் இருக்குதாம். அது காய் காய்க்காதாம்.  மணிகளா – அதான் டிங்! டாங்! மணிகளா காய்க்குமாம்.  சுண்டைக்காய் சைசுல சின்னமணி, கத்தரிக்காய் சைசுல மணி, பூசணிக்காய் சைசுல பெரிய மணி இப்படி பல சைசுல மணிகளா காய்க்குமாம்.
இந்த மரத்தடியில நின்னு யாராவது பொய் சொன்னா உடனே மணியடிக்குமாம்.  சின்ன பொய்யின்னா சின்ன மணி, பெரிய பொய்யின்னா பெரிய மணின்னு பொய் சைசுக்கு ஏத்தபடி மணி அடிக்குமாம்.
காந்தி சிவகாசி வந்த போது அந்த மரத்தடிக்குப் போயி அரிஜன மக்களின் நலமே என் வாழ்வு-ன்னு சொன்னாராம்.  உடனே ஒரு நெல்லிக்காய் சைசு மணி டிங்-ன்னு அடிச்சதாம்.
அப்புறம் ஒரு அரசியல் கட்சித் தலைவி போயி தலித் மக்களுக்காகவே நான் உயிர் வாழ்கிறேன்-ன்னு சொல்ல, அந்த அம்மா சைசுல ஒரு பெரிய்ய மணி டிங் டாங் -ன்னு அடிச்சதாம்.
இப்ப சமீபத்துல ஒரு நாளு எல்லா மணிகளும் டிங், டிங், டங், டங், டாங், டாங் -ன்னு பயங்கர சத்தம் போட்டு அடிக்க
சிவகாசிக்காரங்க எல்லோரும், யார்ரா இப்படி பொய்களை சரமாரியா அள்ளி விடுறது -ன்னு ஓடி வந்து பார்த்திருக்காங்க.
ஒரு பதினைஞ்சு வயசு பையன் மரத்தடியில நிக்குறானாம்,  என்னடா பண்ணே? இப்படி எல்லா மணிகளும் அடிக்குது? -ன்னு கேட்டாங்களாம்.
அவன், ஐய்யய்யோ, நான் ஒண்ணுமே பண்ணலிங்க.  தினமலர் பேப்பருல தென்மாவட்ட சாதிக் கலவரத்தால பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு செய்த உதவிகள் பற்றிய செய்திய படிச்சேன்.  அம்புட்டுதான் -ன்னு சொல்லி ஓ -ன்னு அழுவறானாம்.

காக்காயும் நரியும்

டாவு – 4

 

ஒரு தலித்துக்கும், ஒரு பிராமணருக்கும் யாரு பெரிய அறிவாளின்னு சண்டை வந்திருச்சாம்!
பிராமணர் சொன்னாராம், நான் காக்காவா ஆயிடுறேன். நீ நரியா இரு.  நான் பாட்டிக்கிட்ட இருந்து திருடிக்கிட்டு வர்ற வடைய வந்து எங்கிட்ட இருந்து வாங்கிடு பாப்போம்-ன்னு சொன்னாராம்!
அப்படியே இந்த பிராமண காக்கா வடையோட மரத்து மேலே வந்து ஒக்காந்திச்சு.  தலித் நரி வந்து
காக்கா, காக்கா நீ ‘தபு’ மாதிரி ரொம்ப அழகாயிருக்கியே, ஒரு பாட்டு பாடேன்-ன்னு கேக்க, பிராமண காக்கா வாயில் இருந்த வடையை கால்ல வச்சிக்கிட்டு பாட, தலித் நரிக்கு வடை கெடைக்கல.
மறுபடியும் அது, உன்ன பாத்தா ‘பிரபுதேவா’ மாதிரி அப்படியே இருக்கிற, ஒரு டான்ஸ் ஆடேன்-யின்னு கேக்க
பிராமண காக்கா கால்லயிருந்த வடைய வாயில வச்சிகிட்டு ஆடிச்சாம்.
தலித் நரி, அய்யா, பிரபுதேவா மாதிரி அப்படியே ஆடுற, ஆனா பிரபுதேவா ஆடும்போது ஆய், ஊய்-ன்னு சவுண்டு குடுப்பாரே, அது உனக்கு தெரியாதா? ன்னு கேக்க பிராமண காக்கா, ஓ தெரியுமேன்னு சொல்ல வடை கீழே விழ, தலித் நரி அதைத் தின்னுட்டு, உங்கிட்ட இருந்த ஹீரோ மோகத்த வெச்சி உன்னை ஜெயிச்சிட்டேன் பாத்தியா, இப்ப நான்தான் அறிவாளி-யின்னு சொல்ல,
பிராமண காக்கா அதெப்படி? போட்டியின்னும் முடியலியே, நீ காக்காவாவும், நான் நரியாயும் இருக்க வேணாமா? இதுல யாரு ஜெயிக்கிறாங்கன்னு பாப்போம்-ன்னு சொல்ல, பிராமணர் நரியாகவும், தலித் காக்காவாகவும் மாறிட்டாங்க.
கொஞ்ச நேரம் கழிச்சி தலித் காக்கா அந்த பலான மரத்திலே வந்து உக்கார, பிராமண நரி, ஏய் காக்கா வடை எங்கே, வாயிலேயும் காணோம்.  கால்லேயும் காணோமே-ன்னு கேக்க
தலித் காக்கா, வயித்துல இருக்குது. நான் என்ன முட்டாளா? நீ என்னை ஏமாத்துனாலும் ஏமாத்துவன்னு நெனச்சி பாட்டி கடையிலேயே வடைய சட்னியோட தின்னுட்டு வந்திட்டேன்.  இப்ப சொல்லு.  நான் பாடணுமா, ஆடணுமா? ன்னு கேக்க பிராமண நரி அசந்து போயி நின்னிருச்சாம்.

மங்கள இசை

டாவு – 3

ஒரு அயல்நாட்டு அறிஞர் உலகத்துல உள்ள எல்லா இசைகளையும் பத்தி ஆராய்ச்சி செஞ்சாராம். அதுல ஒரு பரிசோதனை செய்ய தமிழ்நாட்டுக்கு வந்தாராம். ஒரு இருபது, முப்பது ஆளுங்களை கூட்டி வயல்ல வேலை செய்ய வெச்சிட்டு அவுங்க முன்னால பல இசைக் கருவிங்களை அதான் வாத்தியங்களை வாசிக்க வச்சாராம்.
கிறிஸ்துவ கோயில் ஆர்கன் சத்தத்தைக் கேட்டதும் வேலை செய்கிறவர்களுக்கு கொட்டாவி வந்திரிச்சாம்!  மிருதங்க வித்வானு வாசிக்க, லேசா கண்ணை சொருகிடுச்சாம்!
அப்புறம் வீணையில கர்நாடக சங்கீதம் வாசிச்சாங்களாம்.  எல்லோரும் தூங்கிப் போயிட்டாங்களாம்!
அப்புறம் நம்ப ஆளுங்க கொட்டு (வட்டத் தப்பு) அடிச்சாங்களாம்.  தூங்கிகிட்டு இருந்தவனெல்லாம் எந்திரிச்சு ரொம்ப சுறுசுறுப்பா வேலை செஞ்சாங்களாம்.
அறிஞருக்கு ரொம்ப ஆச்சரியம்.  இந்த வாத்தியம் பேரு என்ன?ன்னு கேட்டாரம்.  ‘தப்பு’ ன்னு சொன்னாங்களாம்,  நோ! நோ! இது தப்பில்ல‌, ரைட்டு. சரியான சிறந்த வாத்தியம்-ன்னு சொன்னாராம்.
அறிஞருக்கு உதவியா வந்த ஐயங்காரு இல்லிங்கோ, இது ரைட்டில்ல தப்புதான்,  அமங்கல வாத்தியம், சாவுக்கு அடிப்பாங்கோ-ன்னாராம்!
அப்ப ஒருத்தரு, உண்மையிலே செத்துப் போச்சா, இல்ல தூக்கமான்னு பாக்கறதுக்காகத் தான் சாவுல அடிக்கிறோமுங்க. மயக்கம், கியக்கமா இருந்தா எந்திரிச்சுடும்.  இல்ல அப்படியே கெடக்கும்-ன்னாராம்.
இன்னொருத்தரு, கொளுத்தரதுக்கு முன்னால கடேசியா ரொம்ப பலமா அடிச்சி பாத்துட்டுத்தான் கொளுத்துவாங்க-ன்னாராம்
அறிஞரு ஐயங்காரைப் பார்த்து யூ ஆர் ராங் மேன்.  இது அமங்கல வாத்தியமில்ல, மங்கள வாத்தியம்-ன்னாராம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

தியாகிகள்

டாவு – 2

ஒரு விமானத்துல ஒரு தலித், ஒரு முஸ்லீமு, ஒரு பிற்படுத்தப்பட்டவரு, ஒரு பிராமணர் ஆக மொத்தம் நாலு பேரு போய்க்கிட்டு இருந்தாங்க.
திடீர்னு விமானத்துல ஏதோ கோளாறு.  அது தரைய நோக்கிப் போவுது.  உடனே விமானி வந்து,

விமானத்துல கோளாறு ஆயிருச்சி.  நாலு பேரும் போக முடியாது.  மூணு பேருதான் போகலாம்.  அதனால யாராவது ஒருத்தர் வெளியே குதிச்சி தியாகம் செஞ்சா, மூணு பேராவது பொழைக்கலாம்னு சொன்னாரு.

பிற்படுத்தப்பட்டவர் நம்ம குதிச்சிடலாமுன்னு நெனச்சி எந்திரிக்கிறதுக்கு முன்னால
தலித் எந்திரிச்சி ஜெய்பீம் -மின்னு சொல்லிட்டு குதிச்சிட்டாரு.  விமானம் சரியா ஆயிருச்சி!

கொஞ்ச நேரம் கழிச்சி மறுபடியும் விமானம் தரைய நோக்கிப் போவுது.
விமானி வந்து யாராவது ஒருத்தர் குதிச்சுடுங்க.  இரண்டு பேராவது பொழைக்கலாம் -ன்னாரு. பிற்படுத்தப்பட்டவர் எந்திரிக்கிறதுக்கு முன்னால முஸ்லீம் எந்திரிச்சி அல்லாஹூ அக்பர் –ன்னு சொல்லிட்டு குதிச்சிட்டாரு.
விமானம் சரியா ஆயிருச்சி!

மறுபடியும் விமானம் தகறாறு பண்ணிச்சு. விமானி வந்து, யாராவது ஒருத்தர் குதிச்சுடுங்க.  ஒருத்தராவது பொழைக்கலாம் -னாரு.  பிற்படுத்தப்பட்டவர் எந்திரிக்கிறதுக்கு முன்னால பிராமணர் எந்திரிச்சி, ஜெய ஜெய சங்கர –ன்னு சொல்லிட்டு பிற்படுத்தப்பட்டவரைப் பிடிச்சி கீழே தள்ளிட்டு உட்கார்ந்துட்டாரு!

கொஞ்ச நேரம் கழிச்சி விமானம் சரியாயிடுச்சு.  அந்த நல்ல சேதியை சொல்ல விமானி வந்தாரு.  மறுபடியும் ஒருத்தர குதிக்கச் சொல்லத்தான் விமானி வராருன்னு பிராமண குரு நெனச்சிக்கிட்டு
ஜெய ஜெய சங்கரா –ன்னு சொல்லி, விமானியப் புடிச்சி தள்ளிட்டாரு.
அப்புறம் என்ன?  விமானியில்லாத விமானம் மலையில‌ மோதி தூள் தூளா போயிடுச்சி!

எது கொல பாதகம்? (அகிம்சை)

டாவு – 1

வெண்டக்காய திங்கறவன் ஒரு ஆளு மூணு தின்னான்னா கொறஞ்சது அறுவது உசுறக் கொல்றான்.
கொல பாதகன்.
எப்படின்னா?
ஒரு வெண்டக்காயில இருவது வெத இருக்குதுன்னு வச்சுகிட்டா கணக்கு என்னாச்சு?
அப்படின்னா மத்தத சொல்றேன் கேட்டுக்க!

‘கோழி திங்கறவன் நல்லவன்’
‘பத்து பேரு சேர்ந்துதான் ஒரு கோழியை திங்கறான்’
பத்து பேருக்கு ஒரு கொலை!
‘ஆடு திங்கறவன் ரொம்ப நல்லவன்’
எப்படின்னாக்கா, எழுபது, எம்பது பேரு சேந்து
ஒரு ஆட்டத் திங்கறான்!

மாடு திங்கறவன் ரொம்ப ரொம்ப நல்லவன்!
ஏன்னாக்கா, நூத்தம்பது, எரநூறு பேரு சேர்ந்து
கூட்டமா ஒரு மாட்டத் திங்கறாங்க!

அப்ப, அகிம்சாவாதி யார்னு கேக்குறீங்களா?
‘செத்த மாட்டத் திங்கறவன் தான்’

ஏன்னா அவன் உசுறக் கொல்றதே இல்ல!

PARATTAI: A FOLKLORE CULTURE FOR SOCIAL CHANGE

Dalit community is losing its identity in the mainstream. The in and out of the age old traditions preserved from time immemorial are being handcuffed by the powerful. The Hindu Varnashradarma – Brahminical castes society jointly with globalization and other invisible forces are posing a planned attack on Dalit life. The Dalit liberation movement groups are being weakened. The get freed from the enforced enslavement and the wounds, we still need to go back to the roots of the Hindu capitalistic Ideology and demolish it. The Dalit identities are entangled in all that are being blacked out. To come out from this, is not merely for the oppressed people alone, but the traditional identities of the age old too. In spite of it, Dalit had rejuvenated their history in their struggle against caste atrocities and in redeeming their identities against the Hindu Manu Code. Particularly, in the 1980,s the emergence of various social sciences, had paved the way for Dalit ideology and discussion. The working class of the slums and the Dalit intellectuals stand in one line in combating the falsehood of the mainstream. The Dalit art and literature, tradition, folklore, theatre, movement and politics are thus an expansion of this. The stolen identities of Dalits were brought back to the limelight. Dalit symbols and uniqueness were separated out from the mainstream. The Dalit aesthetic traction of the slums headed towards a new light of renaissance. The Dalit liberation concepts molded with the cravings for liberations, while started its route bluntly in bringing about a change in the cultural platform, a silent revolutionist, who breakthrough all evils posed on him in the name of baste, stepped into the stream creating his own style of cultural initiatives – and he is the folklore scholar – PARATTAI alias Dr.James Theophilus Appavu.
Young Age:
Parattai was born on March 9th, 1940 at the Sorakalpattu village of Cudallore District. The name given by his parents at birth was James Theophilus Appavu. His close relationship with the village slum people and the betel chewing mouth with unkempt appearance identified him as Parattai. He had two sisters and five brothers. His father, James David was an army soldier. He came out of the army services since he had conflicting ideologies with the World War II modalities. His mother, Mercy Clara, a secondary grade teacher, who taught at the S.P.G. Mission primary school, started for the oppressed children’s education in Cuddalore in the old South Arcot district.

Parattai’s childhood days and youth period were oriented with his father’s army idols. His music knowledge was fine-tuned with the Christian church tradition of his parents. Following any other Christian boy, he started learning harmonium, tabela and violin. He had his primary education from his mother. He stood first in his higher secondary education in Cuddalore Corporation School (1956), collegiate education (1957) at Voorhees College, Vellore and in the Teacher Training Institute (1959) and bagged up gold medals in all the three. His proven records in education motivated him to go for further education and he wanted to go for medical education. The S.P.G. Mission too encouraged him to apply for his medical degree education. Later, he learnt about the prevalence of corruption in getting admission and gave up his dream to become a medical graduate.

He experiences he gained at the Vellore Voorhees College in the year 1957, earned an identity to him. All his incubated talents of the childhood were set into a burning flame at this period. Contemporarily, Dr. Ambedkar’s demise created an upsurge at the Vellore district which also molded him a new thinker. Striking changes in his creations were found. At the end of his collegiate education his thoughts and feeling on self-respect started working within him. He does not want to depend on someone to meet his needs; instead he took up a job as a clerk in the E.I.T. Parry’s Sugar mill, Nellikuppam in the year 1958, where his father was employed earlier. He worked there for a while. His young age compared himself with his own close circle. He thought why we alone should be clerk, and to gain an equal status, he joined the Vadalore Teacher Training Institute in 1959. After completion of the training he worked as a teacher in the villages near Nellikuppam viz., C.Pagandai, Thirukkaandeswaram, Keezhpattambakkam between 1966 and 1970.

While he was a teacher, many changes and developments came into. He was matured enough as his parents do. He hosted all his guests and relatives with his income. He was surrounded with friends and relatives. He instilled the formula of, only if a person’s self is happy he can make his surroundings happy.

Family Movement:

He led a bachelor’s life with his friends and young circle around him. Later, in 1969, he married his own maternal uncle’s daughter – Dorathy Grace Vidhva Sironmani and entered into the family life.

Though many had witnessed his aesthetic expressions, of his 40 years marriage life, the credit of his popularity goes to his wife Dorathy. His family structure does not confine to the existing middle class family structure, but was opened to all, like the one in structure of village slum. Her daughters Adrina Saindhavi Arunmozhi, Neena Bageshwari and his theologizing daughter Banumathi Mercy Clara, supported his style of living. The family members first imbibed Parattai’s conceptual liberation ideologies and it was them who motivated him.

Theological Transgression:

After completing his under graduation in history from Madras University, he came to Tamil Nadu Theological Seminary for his theological training. Till today, the Christian family tradition is to offer their first child to dedicate for gospel mission. Parattai too, had been offered by his mother to serve God. His mother expressed her wish through prayers, but at the initial stages, Parattai does not show any interest for this.

In 1970 while he was working as teacher at Cuddalore, the CSI Bishop Rev. Earnest Chinnaiah mentored him and in 1975, he entered the Madurai, Arasaradi Theological Institute and got admitted for B.D. In the year 1979 he completed his studies and started his career as Project Officer at Chinna Udaipu, Rural Theological Institute. The same year he participated in the Conference at Upsala University, Sweden.

Dalit Ideology in Social Sciences:

The theological education, his career at the RTI, related activities in the villages in 1979, his contributions to Dalit liberation, related court action identified him as an activist. He sharpened his knowledge using the library. He is a voracious reader of Tamil literature, culture, inscriptions, manuscripts and the writings of Siddha medicine, Manu Code and the Hindu epics. He searched for the Dalit perspective in all this.

Dalit is an ideology developed by social sciences field, to spell out the liberation struggle of the oppressed and their inner feelings. Many discussions around this happened during this time. All who comes and goes with some thoughts on social sciences and oppressed people liberation wants to get identified in the Dalit banner. The non-Brahmins or the advocates of Dravidian traditions want to be in the forefront of Dalit liberation struggles and lead the movement. One of the Sanskrit fundamentalist writers Jeyakanthan was identified at that time. Jeyakanthan was known for the expressions of the oppressed in his characters and themes. Parattai opened up many avenues to at the RTI to augment certain issues in the literary realm. In those days, he introduced many non-Dalits like Jeyakanthan into the Dalit field. Later, he came to understand Jeyakanthan’s Hindutva orientations. While he took charge as a professor in Tamilnadu Theological Seminary, his Dalit identity gave him a new introduction. The impact of Dalit Panthers movement of Maharashtra set afire in Madurai too. As a result, the Dalit liberation was viewed in two perspectives – Dalit Movement and Dalit literature perspective. Though TTS mission towards Dalit liberation was spelt out in Dalit theological perspective, Parattai fine-tuned it with the foundation of social sciences. It is this approach that helped him to discover the deepness of the Dalit culture. Thus, Parattai was intuited towards Dalit communication patterns, Dalit cultural approaches, body language and Dalit theological faith. He thus made many vibrations in Dalit spheres leaving out the Christian orientation.

Parattai’s Folklore for Social Change:

He introduced the folklore in art and literary works in Tamil Nadu in 1979’s. He was a pioneer in the history of folklore, which was often kept in the dark. The best example of this is his “Nimundhu Nada” compilation. Though this compilation was published in the year 1985, it was sung as a Dalit honor song in almost all the trainings, seminars, workshops and in Dalit movements. He made an impressive attempt by using the vernacular language in the traditional communication. The Chennai vernacular speech, which he often refused to change, gave him a unique identity and he developed it as a style in his dialogues, writings, orations and speeches.

Nowadays, it is easy to learn and speak a popular linguistics through the Web and Compact Discs. It is how the NRIs in America, Australia and Canada speak Tamil and their mother tongue accurately. One can learn the ecstatic Tamil, spoken by the upper middle class, which replaced the local vernacular. But, learning to speak the people’s vernacular is hard. If somebody does wants to learn, then they must dwell with the people of such groups, or should have experience of living with them. Parratai, do had the two.

Though belonged to the Cuddalore District, after completing his theological orientation his attention fell into the Chennai metropolitan. His friend’s circle too was hailed from North Chennai. He had his Ordained as Pastor on May 5th 1991 from Madras Diocese of Church of South India (CSI). He followed his own style and differentiated himself from the traditional church activities.

One can sense the glimpses of folklore in his writings, his short story “Eppo Varuvaroo” was published in the Kungumam weekly magazine and that depicts him as a writer. After that, he wrote, “Avalukhu Karpu Oru Aadampara Porul”(Pasumai Seithigal-1982)—– and many others in the pen name – Saindhavi Piriyan, Kadalooraan, Dorothy Manaalan, Irai Neyan, Jothida Sigamani, Sileththu Paatti, Siluku Rasigan.

He paid attention on the content, style, notations, symbols and documents of the folklore in the context of the purpose. He did a lot of research on this. The impact of traditional culture and the Madurai living tuned him to deepen his works. He traveled Usilampatti, Rajapalayam, Kariyapatti, Ramankulam, Kusavankundu, Thinnaneri, Kalvarayan Hills regions and collected the oral scriptures from the people. He had assorted experiences each time. He not only documented the folk literary but also the most valid expressions and emotions of the people. He gained experience in music, song, deity worship and related functions and came back. These experiences with utmost care were compiled and published as a book – Folklore for Change. It is him, who utilized the content of the folklore for social change. Then he started using the various forms of folk arts as instruments in his fieldwork for social change. In 1989 he again took up the directorship of Rural Theological Institute and also served as the professor in the department of communication of TTS and set the department as a folklore laboratory.

“Coolie Uyarvu Sundari”, “Pitchai Edutha Rani”, the two street plays forms were staged at Chinna Udaippu village. Though the main theme is Dalit, it addressed the social issues of those years (1979). The occupied state of the classicalism was removed. The work ethics of the oppressed, life experiences, caste identity, politics, people religious beliefs, were exposed at this time. The traditional folk art forms were thus redeemed from the consumerist-entertainment features that were against the liberation of the oppressed. Parattai had made this initiative possible, but many folklore institutes do not want to admit this fact, since they don’t have the guts to come out from the frame of castes and practice of untouchability. But the other side knows that whichever elements they lose and that were used by the other group for research purposes were grabbed from them.

Folk Artist of Dalit Theatre:

In his search for the folklore content, he discovered himself as an artist, actor, connoisseur and director. While his book on “Folklore for Change” was published, he staged the new play NOVA in C.C.A stage at Japan. He linked the workshop on theatre art as well the strategies for mass media communication at the same time through the communication department. He has contributed theatre art workshops to the Chennai Jesuit Theological Seminary, Christian Literary Society, Catholic Sisters Training Institute, Kodaikanal, Cuddalore Arcot Lutheran Church Resource Centre and many other NGOs and people movements.

His plays, “Yarunga Kolla Porathu”, “Christmas Gift”, “Oru Cheettithuni Pattagirathu”, “Chaththirakaran Nallavan” were broadcasted in All India Radio. “They must not talker” was broadcasted as a series in BBC, London. His other plays – “Iraivan Irukkirana”, “Munnanaiyil” were broadcasted in Pondicherry radio station. In 1996, Vijay T.V telecasted his serial – “Kalvaariyai Nokki”. Though all these were broad and telecasted in the mainstream media, it also opened up a good and new avenue in the Tamil dramatic field.

While he performs his folklore-based concepts in the drama form, he plans ahead about the audience and the artist ahead. He keeps it as a prime objective while he scripts such events. His street plays – “Sangili Raman”, “Kallovium”, “Manusangada”, “William Kerry”, “Narahari” were planned in few minutes, which had a strong impact on the audience minds. He built a mobile stage, necessary instruments and a cultural troupe and staged Dalit awareness plays street by street.

Since 1995, Parratai’s plays were performed in the Dalit Kalai Vizha stages. His plays cost very simple sets and finance. His plays were oriented on the contemporary issues. He builds his theme around Marxist, feminist and Periyaristic perspectives. He will be too conscious on the solidarity building process between Dalit and Backward class and among Dalits themselves. This is evident in his play “Vidaathu Sigapu” staged in the year 2002. He had also contributed to the Nitharsanam troupe of Worker – Peasants Coordination (WPC). “Sitting Patangvae”, Katta Avuru… Kayithae Vudu…” “Pichchi Yeringada” is some plays to name. The play – “Pappapatiya Maranda Parasakthi” staged in the year 2005 by Chennai Thudi Troupe was directed and facilitated by Parattai. During the Advent Carol service and Easter season, Parrattai writes plays ridiculing the Biblical theology and liturgies with the contemporary routines.

Roman Catholic Lutheran, Niramattra Pookkal, Yarunga Kollaporathu, Oru Vidhai Mulaikirathu, Oru Siluvai Sudappadukirathu, Chaththirakaaran Nallavan, Emathu Paatti Elumbu koodu, Doctor Doctor Doctor, Amma Pasikudhu, Devanuke Mahimai, Anga Parkatheenga – Inga Parunga, Kall, Onrupattal, Onrumillai Naan, Uyirthezhuntha Andavar, are some of the plays staged in the churches in a different perspective of bible. While this was enacted during the liturgies, many murmured and few walked out in between liturgy. As the caste Hindus says, “The house entered by tortoise will not prosper”, so says the caste Christian’s cries, “the church entered by Parattai will not prosper”. He rejuvenated and reinterpreted the contents of church and the Holy Bible for the cause of Dalit Liberation during his lifetime.

His rich experience in the drama field opened up the avenues for cinema field. Being the close associate of Komal Swaminathan and while the latter’s novels were filmed, Parattai helped in the screenplay. In the year 1988, Parattai published a book – Script Writing for Acting (Nadikka Nadagam Ezhuthuvathu Eppadi?). Remembering this, a permanent stage was built at the Mango trees (Maanthoppu) of TTS.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

The Parattai Culture:

In 1975, while he was in his B.D., he did a research work in Religion. The topic was, “Advaitha concepts and Indian situation” – Christian perspective. In the year 1992, he did his M.Th., in Edinburgh University, England. He undertook a research study on “The communication for Dalit Liberation”.

As his close friend, Librarian Augustine says, “Gray hair, beard resembling the intellectuality of Einstein, wrinkled shirt resembling the rural folk, little amount of computer literacy, writing while lying upside down and a casual sitting pose – altogether is Parattai. He impressed the campus as a Theology professor, Planning Committee Member – Non Formal Education, Director of the Communication Department, Chief Examination Officer, Madurai Kamaraj University, Head of the Department-Dalit Open University, Teacher, Lecturer, Reader, Folk Priest, Orator, Dalit Theologian, Archeological Surveyor, Sculptured, EPSIPEGS Researcher, Dalit Activist, Writer, Linguistic Scholar, Screen Play Director, Musician, Singer, Dancer, Funny Cartoonist, Artist, Feminist, Sound Engineer, Transmission Media Communicator, Social Scientist, Village Software Engineer, Acupuncturist, Naattu Vaithiyar, Betel-nut Chewer, Hair Designer, Cooker, Beef Eater in the TTS campus. His attire, style and the pose create attention among others. If one wants to imitate him, can do that in one or two instances, but to survive bearing with all the negatives posed on him in the name of untouchability is a rare personality. In spite of it, many students in the college wanted to become a miniature of him.

Parattai’s house will be kept open always. Though no rice was found sometime, one can have some form of beef food item at the house. He is a man who equally revered cows and profess about its specialty. He says, “All cannot eat beef. It needs an exclusive strength and the intellectual or scientist never misses it”. He also explains the medicinal value of cow’s tail, ankle and the udder of cows. During the Christmas and other functions in the college, his catering skills excel. Many students pay the fees to the mess and eat at Parattai’s house.

He often ridicules the designation “Faculty”. He used to voice out for the cause of the student welfare and the affected students especially. If he finds a Dalit student in such distress, he immediately submits his resignation without second thought.

Normally, faculty would advice students who found to need some mentoring, and will help two or three times, and if the student was found guilty of the same, they may be let loose, but Parattai, is a kind of mentor who support till the end to such weak students. He had it as his prime objective. The students, who thus supported and mentored by him are now servicing as Pastors and carrying the seed of renaissance in Parattai’s path.

Common Meal (Oru Ulai):

Today in many churches, the common meal theology was evolved from this social scientist – Parattai. Each month, on the last Wednesday, evening fellowship team in ten start their journey of cooking with the necessary utensils and items and with the Parai, they come round the campus, informing –

Annanmarae, Akkamarae, Mamanmarae, Mathanimarae,

Idhannal Ungalukku Solrathu Ennanaa

Innakki Rathiri Yaar Vootlayuum

Aduppu Moottaatheenga!

Maanthoopula Kanchikeethu

Kudumbathooda vandu serunga!

(Brothers and sisters, Uncles and Aunties don’t lit fire in your kitchen today; a common porridge is served at the mango trees platform. All are welcome), is still followed in the TTS community. He links this for relationship development. He meant this, and created this system. It’s a symbol of liberation and equality. As a way of remembering him, this was still being practiced among the slum dwellers, villages and churches.

With a vision of replicating the egalitarian aspects of Common Meal Oru Ulai by the world churches in the year 1993, at the World Christian Conference, held at Geneva, he submitted a small research paper – “The Religion of People and Evangelism- Oru Ulai in India”. The persons, who come to India for exchange study and exposure, will definitely learn about his concept of Oru Ulai (Ore Ulai).

Since his long felt dream of becoming doctor was not happened, he started learning about alternative medicine and practiced it. Once he got fracture in his leg in an accident. He treated on his own and also becomes the Siddha doctor of the campus. He introduced the naturopathy, herbal medicine, traditional medical practices like acupressure, and Chinese medical practice of acupuncture. He believed this medical system and accepted it. While he worked at the Rural Theological Institute, he concentrated on the herbal plant nursery.

He welcomed the guests by giving Omam leaf (Bishop’s weed) water, and hibiscus flower tea. Though he has augmented efforts towards treating and giving medical advises many, he doesn’t care for his own body is an often-raised critic on him. Many had commented that he was eating for taste and not for hungriness, looking at his passion for food items.

Crown of Dalit Musician:

Parattai used to say, “If Ilayaraja has not been a Dalit, and I would have filled his place”. Though he says this humorously, he was one of the best music scorers.

Apart from the new creations in the ethno musicology, he also breaks over the tradition of classical music too and documented it. In the midst of fashioning the Western and Karnatic music scores in many stages, he introduced the folk music and songs. Parai, Udukkai, Tins, Pambai, Urumi all set his music trivia’s. All the awareness songs, Dalit liberation songs, and the Christian songs had new musical forms.

He initiated Rural TECCA for teaching and preaching Bible in the oppressed people perspectives in the village churches. While he took charge as the director of this program he hated the western liturgies followed in the village churches. He wants to create an indigenous Dalit liturgy and introduce in the churches. Like Oru Ulai, this attempt on the Dalit liturgy too was successful and followed in many churches in the villages.

It’s in his village liturgies one can hear the Parai sound. Each year in the Christmas carols, his songs will have a new connotation in the lyrics as well in the tune. He changed the tradition of Christian songs. He made us to enjoy the classics of the Tamil Music against the myth of classical Karnatic. If December comes one can witness a large group of people gathered at the mango trees platform to enjoy Parattai’s songs.

Parattai’s musical score and the lyrics will have an inter link amongst it. Each will have a backdrop of some event or history. He has written many redemption songs, Christmas songs and English songs for the churches and has given training too. He had written 115 folk songs, 65 Tamil songs and 12 Dalit liberation songs. Amongst this, many songs were released as audiocassettes.

“Nimundhu Nadda”, “Mattu Kottil Readyachu”, “Asaiyai Allitharuvaru”, “Ondi Veeran” are those songs that proves his wisdom. The Ondi Veeran was scored in villupattu pattern. In the 1980s he took up the role of trainer for NCCI movement in Sri Lanka and seeds his musical talents in that country too. He introduced the rural liturgy in Dalit perspective in the Queens College of England. His musical talents rooted in America too. Zoe Sherienian, a research scholar of Wesley University, Ann Osborne, USA, researched on the Parattai’s folk music. In the year 1988, he submitted his research work – “The Indigenization Tamil Christian Music: Folk Music as Liberative Transmission System – Special Reference to Parattai”. Joe introduced Parattai and his folk music in the American National Music Festival. Parattai, who was dead today, had been called to America in October 2005 to the same festival.

Human Transmission Communicator:

Whoever sees Parattai, his face and structure, immediately they want to laugh and then they’ll start talking with him. This is the positive body language exclusive to him. This is how he got a wider friends circle. Through this, many find it easy to make friendship with him and thus he created a communication network. He uses that too to his awareness building process. If he were at the villages, he sat with the women and initiates a dialogue with them by chewing the betel leaf. Since his approach and vernacular was unique, they feel ease and thus he creates his audience. When we talk to him about this peculiarity, he says this was quite seen among the village folk commonly, and he named this as human transmission strategy.

Parattai says that, it’s not a fact that the electronic and the press media alone is the prime in the mass media, it has got its own limitations and distortions, whereas, human transmission strategy does not have any distortions in its routine, financial commitments, personality profiles and ideology.

He positioned the Directorship of the Communication Department in TTS, and taught Mass Communication to the Madurai Kamaraj University students. He also took the responsibility of the chief examination officer. He approached the mass communication teaching on the basis of the “Communication for Dalit liberation” research paper he submitted for his Master degree in Theology. He had an in-depth understanding of the history of Tamil and the practice of Manu Code in Tamil Nadu in the light of communication strategies. He searched the Tamil folk’s communication roots with the perspective of the oppressed peoples’ liberation struggles globally. He did this under the guidance of the Singhalese Professor Dr. Nevil Jeyaveera and the Sociology Professor, Michael Trafere from Europe.

He referred the books on Indian stone inscription and archeology at the Edinburgh University Library and prepared an essay on “the inscription of Cholas”. Later this was used in publishing his book “Thamilaga Varalatril Manudharmigalin Thodarbiyal Sathi” (The Communicative Conspiracy of Manu Encoders in Tamil History) in the year 2005. This book reveals on how the Brahminical and Varnashramadharma code’s back roots.

He had made submitted many research reports in many countries. In 1993, he presented the essay “Emotion Elements of Culture in Tamil Women’s Communication” in Thailand. In 1999, he presented the essay “Folklore as Change Agent and Educational Media” in Madurai Kamarajar University, Madurai.

His communication strategy easily attracts women and children. The liberation aspect for both the sects will be explicitly spoken in his works. He launched an exhibition “Com-Ex” through the communication department and depicted various forms of dances, viz., Ghost dance, Graveyard dance, skeleton dance through graphics. He also ridicules the latest technologies as well learn it and use it meaningfully.

Parattai’s Miming (Parattaiyin Daavu):

This is again another masterpiece from Parattai’s communication strategy. Parattai’s daavu had disseminated an alternative story against the Hindu Brahminical – Varnashradarma values, ideologies, emotions and stories and myths and created a liberated thought. One can find many myths in the Hindu epics of Ramayana and Mahabharatha and the storytellers who profess those. These mostly have lead directly or indirectly to a life of servitude. Parattai’s Daavu, emphasize that people like Parattai is need to reveal and relieve the people from such myths that are against the liberation of the oppressed. Parattai’s Daavu was published as a book in 2005, which is a compilation of his writings in the Thamukku Tamil magazine from January 1996 to 2005.

Theological and Religious Mutiny:

The experiences of Parattai in People’s Culture, folklore for change and human transmission communication provided him lots of changes in his theological and religious approaches. Though he was a born Christian his Dalit identity made him to act extraordinarily. The reason behind is, he imparted the Dalit experiences in his religious and theological rites.

He revealed the existence of “Dalit Religion” while he explores on the religion. His Dalit Religion protested the existing institutionalized Hindu, Christian and Islam religions perspective about Dalits. Dalit Religion proposed by Parattai, does not confer with the stand that, communities not coming under the religious institution will be called as commonality. Instead, it revealed that the commonality advocated as people’s religion still with hold the caste attitude within it. He had also written important essays on this –

The Godly experience in Southern religion – Serampore University

Dalit Religion (1999, Tamil Nadu Theological Seminary)

Dalit Religion, Culture and Indigenous People, ISPCK, 1989, New Delhi

The Dalit Culture

The Culture of the Oppressed in Tamil Nadu – Poonmalle Theological Institute.

Though his religious faith (Christian) does not match with his identity with the group he was associated with, he dared to practice in reality. The Holy Bible, Church traditions, doctrines and Christian culture get renewed with his revolutionary thoughts. In the realm of Dalit Liberation Theology, Parattai’s spiritual messages, Biblical explanation and liturgies definitely had made a remarkable breaking open in the Indian Christian Theology and infrastructure. One of the publications on “Spiritual Messages in Dalit Liberation Perspective” of Dalit Resource Centre is good evidence on this.

All the Theological Seminaries under the Serampore University in India had a special attraction for Parattai’s Theology. Many Universities honored him by inviting him as a special faculty. Particularly, among the Roman Catholic Dioceses – Arutkadal, Chennai, Capuchins, Trichy, St. Paul’s Theological Institute, Pune, Papal Theological Institute, Dharmashramam – Bangalore, Poonmalle Theological Seminary, Chennai are the institutes, which signifies his contributions.

Research Studies and Theologizing on Parattai:

In the history of struggle for liberation, people had not forgotten the leaders who fought for their cause. This is a blooming cult of admiring and revering the leaders of the struggle against the hero worship in political parties. Paratttai was the one who loved this society. Internally he admired its Dalit aesthetic values, and practiced them.

The educationists admired this man of intellect and many had researched about him, his theories and values. The critical conceptual works about Parattai, made indirect inputs in the contemporary school of thought both inside and outside India. As the ductless glands help the physical growth of the body, so the Dalit glands created by Parattai had evolved the research studies about him to a movement. The school of Parattai thought, had been rose to a university grade by his faculties, students, teachers and friends. The research work done on Parattai’s work:

The liberation Perspectives in Parattai’s songs (Jones Arputharaj, TTS, 1997)

The Indigenization Tamil Christian Music: Folk Music as Liberative Transmission System, Special Reference to Parattai (Ms. Zoe Sherinen, Wesleyan University, Annsbor, USA (Ph.D-1998).

The Dalit Movement Identity:

Parattai manures all his experiences for the development of Dalit Movements. He strongly believed that all his thinking and deeds would be made possible only through the Dalit movements. He had close associations with Dalit Liberation Movement (DLM), Viduthalai Chiruththaigal (DPI), Thiyagi Immanuel Peravai and Thudi Movement. While he was at the Rural Theological Institute, he worked and struggled for the land rights and land reclamation. The abundance experiences of him were used as resources for the Dalit Movement Development.

Applauds / Commendations to Parattai:

Parattai was a man who applauds people generously. He believes commendations will encourage a person’s growth. The laudable character of Parattai was he congratulates people who confronts with his ideologies. Accordingly, he was honored, revered and rewarded by many duly.

World Christian Tamil Society honored him with the reward – “Arul Kalaignar” for his contribution in art and literature. Revering his contributions for Dalits, he was conferred with the reward “Ambedkar National Award by Dalit Open University, Andhra Pradesh. In the year 2003, Dalit Resource Centre awarded him “Ayya Alagarsamy Vaathiyar Viruthu”, for his initiatives in bringing out the liberation concepts in the Dalit arts and forms. The Chennai Gurukul Theological College, honored him with honorary Doctorate in the year 2005. The awards and rewards earned will not be as equal to him to the hug of a village man.

The Living Legend:

Parattai is a man who swims against the current in his lifetime. This gained him many experiences. In the year 1997, December 16th a special prayer was called for, as Parattai was told hospitalized and remains unconscious. But then he reclaimed and was admitted in the hospital one or two times.

Every time he returns from hospital, his close associates would say, he is not convinced with allopathic medical system and refused for surgery. In reality, his economic position does not allowed him to go for a surgery. He has not been supported financially, as he was applauded.

He was a person who died with the money for buying betel leaf (Rupees.2.50). This was the state of each Dalit who looks at the society in liberation perspective. Parattai’s 60th Birthday was celebrated in the Manthoppu, TTS. Thol. Thirumavalavan, General Secretary, Viduthalai Chiruthtaigal presided the function. Parattai spoke in the function. He said, “Me and Ambedkar had one thing common, both has liberation perspectives and I am also suffering from the same ailments as he was. Parattai is a man who lived poor with a rich energy to liberation struggle. He is a man with exemplary qualities of humanity. In recognition of his extraordinary skills and to honor him, Zoe Sherinian called him to Oklahoma, USA in 2005.

This man of brave, with Dalit identity and experiences, who attracted the mankind towards him, died on 4th Nov. 2005 at the Oklahoma (Norman State) city, USA. He lived as a legend

Written by

ANBUSELVAM

Published in Tamil

PARATTAI ORU PANBAADU (Parattai: A Culture – 2005)

Dalit Resource Centre, Arasaradi, Madurai – 625 016

Should Religious Leaders Thank Ms Jayalalithaa?

Ramankulam is a Dalit Village near  the Rural Theological Institute. I had very good relationship with that village since 1975.  It so happened that I was made the Director of the Institute in 1989.

One day the Dalit elders from that village came to my house at RTI.  I found my old friend Pitchai among them.  He was one of the respected elders of the village.  He said, “We are going to worship our village deity and have come to invite you”.

I said to Pitchai, “Usually you just inform me about the worship. But today you have come with almost all the elders to invite me.  Is that a special honor for the director of this Institute?”

He replied with his usual laugh, “That is not just the reason. We have decided to include you as a member of our village. I said, “Oh! what does that mean? You want me to live in your village?”

Pitchai once again presented me his laugh and said, “We will be happy to have you in our village. But we came here to get your share of worship expenses”. I was so glad that they had owned me and gave two hundred rupees.

Pitchai returned back hundred rupees and said, “The share is only hundred.” I said, “Oh! But what is wrong in giving more?” Pitchai said, “We don’t want anybody to pay more than their share.  If any body pays more he will demand more.  Isn’t it?”
I was taken aback by the reply.  Pitchai has taught me that the Dalit worship does not allow inequality even in sharing expenses.  I realized that if someone had paid more he would demand more power.

In other religions including Hinduism and Christianity those who pay more get more respect and power. How come these religions call themselves as major religions? Is it because they allow inequality?

It so happened that I could not attend the worship but they had sent me my share of the offerings. Once again I found equality.  Like all other shares my share also had equal pieces of every thing including the meat. It is not a quantitative equality but qualitative.  My share of meat had everything, from a piece of intestine to liver.

The so-called great religions say that Dalits offer blood to their deity and their religion is bloody. But as I was looking at my share I thought, “What are these Dalits really offering to their deity? Is it a bird or animal? Or Sharing? Solidarity? Equality?” I think the true God will be happy to receive these offerings of sharing, solidarity and equality than materials such as candles, coconuts etc.

Religious leaders should thank Ms.Jayalalithaa.  True humans who study Dalit Religion would have left their religion if there is no Anti Conversion Bill!

Thamukku, English, Jan 2003


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

 

நிமுந்து நட

நிமுந்து நட   –   (எழுச்சிப் பாடல்கள்) – 1985

பரட்டையின் டாவு

வணக்கம்பா!

இன்னா நைனா, பாட்டு பஷ்டா கீதா?

இல்லியாபா? அப்படின்னா ஒண்ணு செய்யி, ஒனக்கு எப்டி வோணுமோ, அப்படி சைஸ் பண்ணிக்கோ!
தா பாரு! இந்த காப்பி ரைட், டீ ரைட், நாஷ்டா ரைட், ஐசா! எதுவும் இதுக்கில்லப்பா! ஆர் வோண்ணாலும் பாட்லாம். எப்டி வோண்ணாலும் பாட்லாம்.
இன்னா ஒண்ணு.  ராங் சைட்ல போய்டாதே!

சனத்துக்கு முய்ப்பு வர்ரா மாரி, நீ எப்டி பாட்னாலும் சர்தான்.
ஐசா! நாங் கூட ட்யூனு சைஸ் பண்ணிகீறாம்பா, அல்லாம் கிராமத்து ட்யூனுங்க!

நிமுந்து நடன்னு ஒரு காசெட்டு, அதுல கீது.
அத்தை வோணுங்கிறவ அத்தை எடுத்துக்கோ. மாத்த வோணுங்கிவற மாத்தி எடுத்துக்கோ.
இன்னா, ரைட்டாப்பா?

பரட்டை
என்கிற
சிலேத்து பாட்டி
என்கிற
ஜேம்ஸ் தியாப்பிலசு அப்பாவு

——————————————————————————————————–

பொருளடக்கம்
1.    பரட்டையின் டாவு !
2.    நிமுந்து நட
3.    உருப்படியா ஒரு காரியம் . . .
4.    தீரவேயில்ல !
5.    சாமிக்கில்லாத சாதி !
6.    சாதியும் நீதியும்
7.    நீதி கெட்டு நாறுது
8.    பெண்டுகள் கூட . . .
9.    படா பேசாராகீது !
10.    பேச்சு தந்திரமா ?
11.    ஒயில் பாட்டு
12.    எப்படி வாழப் போற ?
13.    பச்சை உண்மை !
14.    மண்ணும் மனிதனும்

——————————————————————————————————–

நிமுந்து நட – 1

வயக்காட்டுலே மலை மோட்டுலே – நெதம்
வேலை செஙச வாடுற –
ஏ அண்ணே! ஏ அக்கா !
நீ நிமிந்து நட
உனக்கென்ன தடை?

நம்ப பேச்சி தப்பு பேச்சாம் ! – பட்டிக்
காட்டு மணம் வீச்சாம் ! – நம்ப
ஏச்சி உசுரு வாழுகிற
முதலை சொல்லுறத – பணமுதலை சொல்லுறத – கேட்டு
கவலை கொள்ளுறியே !     (ஏ அண்ணே ! ஏ அக்கா !)

நம்ப சாதி கீழ் சாதி – யின்னு
மூதி மவன் ஏச – அட
பாதியாக உடலை வளைச்சி
கைய கட்டுறிய ! அவன்
பைய ரொப்புறியே (ஏ அண்ணே ! ஏ அக்கா !)

நம்ப வயித்தைப் பசி கொளுத்த – தலை
எளுத்தை நம்பும் மொணத்தை – நீ
களுத்தைப் புடிச்சி தள்ளியே போடு
எளுந்து நடந்திட – தலை
எளுத்தை மாத்திட  (ஏ அண்ணே ! ஏ அக்கா !)

——————————————————————————————————–

உருப்படியா ஒரு காரியம் . . .  – 2

புறப்படு புறப்படு தோழா ! நீ
புறப்படு புறப்படு தோழி ! – நாம
உருப்படியா ஒரு காரியம் செய்யணும்    (புறப்படு)

1.    கம்மாக்கரை அடுத்து இருக்குது வயலு
சும்மா போட்டு வச்சா கிடைக்குமோ நெல்லு ?
அம்மாவாக இருந்தாலும் – அட
அம்மாவாக இருந்தாலும் – புள்ளை
சும்மா கிடந்தாக்கா கொடுப்பாளோ பாலும் ?  (புறப்படு)

2.    முட்டாத மாட்டுக்கு முதுகில மூட்டை
கட்டாத கைகளை எடு வாய்பூட்டை
கேட்டா கிடைக்கும் பல உரிமை – அட
கேட்டா கிடைக்கும் பல உரிமை – மக்கள்
போராட்டம் வந்தாதானே கிட்டும் பல நன்மை  (புறப்படு)

3.    மனுக்களைப் போட்டோம், மந்திரியைப் பாத்தோம்
மாலையும் போட்டோம், பல்லிளிச்சி நின்னோம்
போட்டாங்க நெத்தியிலே நாமம் – அட
போட்டாங்க நெத்தியிலே நாமம் – இனி
போராட வேணுமய்யா புறப்படு நீயும்    (புறப்படு)

——————————————————————————————————–

தீரவேயில்ல !  –  3

பொன் வெளையும் நெலமிருந்தும்
மண்ணுருக மளை பொழிஞ்சும்
நன்மை தரும் திட்டங்கள் வந்தும் என்னம்மா ? – நம்ப
கிராமத்தின் தொல்லை, இன்னும் தீரவேயில்லை

ஐ.ஆர். எட்டு, அஞ்சுகம், பொன்னி,
மெய்யா நல்லா வௌஞ்சிருக்கு
மிச்சமேயில்லை – அட
பிச்சை தான் எல்லை    (நம்ப கிராமத்தின்)

பேங்கில லோனு வாங்கிடலான்னு
நாங்களும் போனோம், கிடைக்க காணோம்
பெரிய பண்ணைப் பணக்கார‌ரு
போனா போடுறாங்க சேர்ரு
எளிய வெவசாயி போனா, சின்னம்மா ! – அங்கே
சொத்தோட மானம் – நாம
சேத்து வைக்கோணும்  (நம்ப கிராமத்தின்)

சோப்புக்கு வெலை நிர்ணயஞ் செஞ்சி
பேப்பரு சுத்தி, அச்சி அடிச்சி
போட்ட விலைக்கஞ்சு காசு
கூட்டி விக்கிறான் தமாசு !
பாடுபட்டுப்பயிர் வெளைச்சா, சின்னம்மா ! – அது
விக்கிற வெலை-என்னைக்கும்
நிர்ணயமில்லை     (நம்ப கிராமத்தின்)

——————————————————————————————————–

சாமிக்கில்லாத சாதி !  –  4

1.    வில்லாவரம் சந்தையிலே – நான்
எள்ளு விக்க போகையிலே
பல்லைப் புடிச்சி பாத்து
நல்லதின்னு வாங்கி வந்தேன்

காளை எந்தன் மயிலைக்காளை – தில்லாலங்கடி ஏலே !
வாளவேணும் ஒலகமெல்லாம் ஆலமரம் போலே !

2.    ஒங்கப்பா காங்கேய மாடு !
ஒங்காத்தா பாண்டி நாடு !
பொல்லா சாதிக் கட்டுப்பாடு !
ஏதுனக்கு நல்லா ஓடு !

மனுசனைப் போல் மாறிடாதே, தில்லாலங்கடி ஏலே !
மனசு வச்சி செரசா போடா, காள மயில காளே !

3.    மருதையிலே காப்பிக்கடை – அட
இருக்குதடா முன்னே நட !
மாமன் மச்சான் போல வடை
சேந்து தின்ன இல்ல தடை !

மந்தையிலே மட்டுத்தாண்டா –  தில்லாலங்கடி ஏலே !
மட்டம் ஒசத்திப் பேச்சி, காள மயில காளே !

4.    தாழ்ந்த சாதி மருத வீரன் – அட
சந்த்ர கொலம் பொம்மியம்மா !
த‌ளுவிக் கொண்டு பக்கத்திலே
தாலி மின்ன நிக்குறாளே !

சாமிக்கில்லா சாதி – தில்லாலங்கடி ஏலே !
சனங்களுக்கு வந்த தென்ன? காள மயில காளே !

5.    ஆதியிலே ரெண்டு பேரு
ஆதாம் ஏவாள் அவுங்க பேரு
அவுங்க பெத்த மக்க (ள்) நாம
யின்னு வேதம் சொல்லுதாமே !

ஆதியில் இல்லாத சாதி – தில்லாலங்கடி ஏலே !
பாதியிலே வந்த தென்ன, காள மயில காளே?

6.    முள்ளுக் குத்தினா கடுப்பு – வர்ர‘
எல்லா ரத்தமும் செவப்பு
தாழ்த்தப்பட்டவன் செருப்பு
போட்டு வந்தா என்ன தப்பு ?

நீதியோட நேர்மையெல்லாம் – தில்லாலங்கடி ஏலே !
சாதி வந்தாலே போச்சி, காள மயிலே காளே !

7.    மல்லியப்பூ வாடிப்போவும் – நாம
எல்லாருந்தான் சாவப்போறோம்
உல்லாசமாக நாமும்
ஒத்துப் போனா என்ன் ஆவும் ?

நல்லாவே இருப்போமின்னு – தில்லாலங்கடி ஏலே !
நாடறிய நீயே சொல்லுமா, காள மயில காளே !

——————————————————————————————————–

சாதியும், நீதியும்  –  5

யாருங்கையா தாழ்ந்த சாதி? – பரட்டை பாட்டை
நல்லா கேட்டு சொல்லு நீதி !

1.    உளைப்பைச் சுரண்டி மக்கள்
பொழைப்பிலே மண்ணைப் போடும்
பொல்லாதவன் தாழ்ந்த சாதி !
நிலத்தில் தன் வியர்வை சிந்தி
உலகத்தை வாளவைக்கும்
உத்தமரா தாழ்ந்த சாதி ?     (யாருங்கையா)

2.    ஆளுக்கொரு வேஷம் போட்டு
நாளுக்கொரு கட்சி மாறும்
நரிப்பைய ஈன சாதி !
தோள் கொடுத்து நம் பிணத்தை
தூக்கிச் செல்லும் நல்லவனா
இவ்வுலகில் ஈன சாதி ?  (யாருங்கையா)

3. சிலுக்கு சிலுக்கிக்கிட்டு
சினிமாவிலே உடம்பைக் கட்டும்
பொம்பளைங்க தாழ்ந்த சாதி !
குளிச்சிட்டுக் கட்ட வேறே
பொடவை இல்லாத ஏழை
பொண்ணுங்களா தாழ்ந்த சாதி ?  (யாருங்கையா)

——————————————————————————————————–

நீதி கெட்டு நாறுது  –  6

அட நாறுது, நாறுது – ஐய‌ய்யய்ய, ஐய‌ய்யய்ய
நாறுது, நாறுது
நாட்டுல, ரோட்டுல, கோர்ட்டு வழக்கில
கழனிக் காட்டுல, கூலி கொடுப்புல
மார்க்கெட்டு ரேட்டுல, மந்திரி பேச்சில
பார்லி மென்ட்டுல !
ஏ, தம்பி ! நீதி கெட்டுத்தான் நாறுதே !

1.    இளைச்சவன் தோளில் ஏறி
குத்துறாண்டா காதுல ஊசி !
உளைச்சவன் கூலி கேட்டா
உதைக்கிறானே உள்ளே தள்ளி !  (அட)

2.    பணக்காரன் வக்கில் வச்சி
வெளியே வாரானே தப்பிச்சி !
வளக்குல ஏழை பேச்சி
அம்பலம் ஏறாம போச்சி !  (அட)

3.    உளைப்பவனைச் சுரண்ட
சொத்துரிமையின்னு  கொள்ளை
பொளைப்புலே மண்ணைப் போட
பணக்காரங்க பெத்த புள்ளை   (அட)

4.    ரத்தத்தைச் சரக்காக்கி
வித்திடப் போனேன் கடைக்கி
பத்தில் ஒண்ணு கமிஷன்
கொள்ளைக்கும் சர்க்கார் பர்மிஷன்   (அட)

5.    வறுமை ஒழிப்போமிண்டு
மந்திரி சொன்னாரு அன்று
அருமையான காருல
அதோ போறாரு பாருல    (அட)

6.    நம்நாட்டில் மக்கள் ஆட்சி
பார்லிமென்ட்டே அதுக்கு சாட்சி
எம்.எல்.ஏ., எம். பி., எல்லாம்
மொத‌லாளிங்க அடிமையாச்சி !  (அட)

——————————————————————————————————–

பெண்கள் கூட  . . .    –   7

ஒத்தச் சடை ரெட்டைச் சடை
சாட்டைப் போல சீற நட !
ஒலகைத் திருத்தும் நம் படை – பெண்டுகள் கூட
கிடைக்குமடி நல்ல விடை – நம்மை

மட்டமென்று சொல்லி ஆட்டம்
போடுகிற காலிக் கூட்டம்
வெக்கப்பட்டுத் தலைகுனியும் – நம்பச்சிறப்பு
அப்பத்தான எல்லோர்க்கும் புரியும்

தையலே ! இந்த சமூகம்
கிழிச்சிருக்குது எங்கும்
தைச்சிப் போட முடியாது – புதுசா ஒண்ணை
தைச்சிட வாடிப் பெண்மாது – அது
ஊசிப்போன பலகாரம்
வீசிப்போடு தெருவோரம்
சமத்துவ சமுதாயம் – சமைப்போம் வாடி
நமக்குத்தான் வகை தெரியும்

பட்டுச்சேலை, சாயச்சேலை
கட்டி, நகை நட்டைப் பூட்டி
கொட்டுப்பட்டதுப் போதுமடி – சனத்தை மாத்த‌
விட்டு விட்டு வா அடுப்படி ! அடி
சிங்கத்தில் பெண் வீரமடி
சீறி எடுத்து வை அடி
குலுக்கி நடப்பதை விடு – அடிமை செய்யும்
கொ(கு)ணங்களை தள்ளியே போடு !

——————————————————————————————————–

படா பேசாராகீது  –  8

வாத்தியாரே இன்னாப்பா படா பேசாராகீது – நம்ப
நாடு போற சைஸப் பாத்தா பய்மாகீது !

வெசவாய்வு தொட்டி ஒடைஞ்ச சனங்க சாவுது – அந்த
வெவரம் தெரிஞ்ச பொறவும் சர்க்கார் பர்மிட் கொடுக்குது
அமெரிக்கன் தடை செஞ்ச மருந்து இங்கே விக்குது – அதை
அமட்டச் சொன்னா மருந்து உற்பத்தி படுக்கும் எங்குது
சர்க்காரு படுக்கும் எங்குது      (தே ! வாத்யாரே)

சாராயக்கடை ராவுல கூட தொறந்து வைக்குறான் -அது
போதாதின்னு படத்தில செக்சு போதைய கூட்டுறான்
சாதி, மதம் பேரைச் சொல்லி வெறிய ஊட்டுறான் – சனம்
சலிச்சி போயிடக் கூடாதுன்னு லாட்டரி சீட் விக்குறான்
லட்சம் கோடி லாட்ரி சீட் விக்குறான்  (தே ! வாத்யாரே)

மொதலாளிக்கு வரி சலுகை அள்ளி வீசுறான் – நாம
பயன்படுத்தும் பொருளுக்கெல்லாம் வரியை போடுறான்
அதுல வந்த காசைக் கொண்டு டுப்பாக்கி வாங்குறான் – மக்கள்
நாயம் கேட்டுப் போராடுனா டோப்புன்னு சுடுறான்
டுப்பாக்கியால டொப்புன்னு சுடுறான்  –      (தே ! வாத்யாரே)

——————————————————————————————————–

பேச்சு தந்திரமா ?   –  9

வண்ணக்கொடிப் பறக்க, வந்த சனம் கூடி நிக்க
தின்ன முட்டாயி தர, சுதந்திரத் தினக் கூட்டத்திலே
பாடுறேங்க பாட்டு – நீங்க
சிந்திக்கணும் கேட்டு

1.    சுதந்திரம் வந்தென்னங்க ? சுத்தமா பட்டினிதாங்க !
பதராம கேக்குறேங்க பக்கமேளத்தோடே – இதுக்கு
பேரு சுதந்திரமா ? இல்லை
பேச்சு தந்திரமா ?

2.    பட்டணத்துச் சீமையிலே பறக்குறாங்க காரினிலே !
பாடுபட்டா பலனுமில்ல பளைய கஞ்சி சோறுமில்ல !
அறுத்தடுச்ச நெல்லு – அது
எங்கே போச்சு ? சொல்லு

3.    நெத்தியாலே தண்ணி பாச்சி, நெல் விளைச்சேன் முத்திப் போச்சி
நாத்துத் தொடா பண்ணையாரு கொத்திக்கிட்டு போறான் பாரு
சொத்துரிமை கொள்ளை – அதை
கேக்க யாரும் இல்லை

4.    மாடா உளைச்சோமடா, ஓடாக தேய்ஞ்சோமடா ?
போடா ! டேய் வாடா ! -யின்னு பேசுறாண்டா ! ஏசுறாண்டா !
சுதந்திரம் ஒரு கேடா ? – நாங்க
மனுசரா ? இல்லை மாடா ?

5.    தேர்தல் நேரத்தில் மதிப்பு வோட்டுப்  போட்டா போச்சி அப்பு
தேர்ந்தெடுத்த உறுப்பினர்க்கு நம்மைக் கண்டாலே கசப்பு
ஏமாத்த ஒரு சூள்ச்சி – பேரு
மக்கள் ஆளும் ஆட்சி

6.    மதுரை கடற்கரையில் மூணு காலு முசல் புடிச்சி
குதிரைக் கொம்பு வெற(கு) எரிச்சி
கொதிக்க வச்ச‌ கொளம்பு ருசி !
சுதந்திரத்தில பாரு – அதை
தின்னு பசி யாறு !

——————————————————————————————————–

ஒயில் பாட்டு  –  10

தன்னே நானே தனம் தன்னே நானே நானே – தனம்
தன்னே நன்னே தனம் தானே நன்னே

தனம் தன்னன்னன்னா தனன் தன்னன்னன்னே
தனம் தன்னன்னன்னா தனன் தன்னன்னன்னே

ஒயிலாட்டம் ஆடுறோம் நாங்க‌
ஒத்துமையா பாடுறோம்
பயிலு பயிலு பயிலு பயிலு
பயிலு பயிலு ஒயிலு ஒயிலு
ஒயிலு ஒயிலு ஒயிலு ஒயிலு
ஒத்துமைக்காக ஒயிலு ஒயிலு  (ஒயிலாட்டம்)

1.   ஐயோ ! நல்வழியை விட்டு ஆணவத்துக் கடிமைப்பட்டு
அநியாய சாதிகட்டு பாடதினால் பிரிஞ்சிகிட்டு
சண்டையிட்டு வாளுறோமே வெக்கங் கெட்டு
சாதி சண்டை அவிங்களுக்குப் பரிசு சீட்டு !  –  ப‌யிலு

2.  உயிரை விதையாயிட்டு உரமதாய் உடலையிட்டு
உழைச்சோமே கஷ்டப்பட்டு விளைச்சல் மூடை முப்பத்தெட்டு
வந்தாலும் தீரவில்லை எம் கவலை !
வட்டி கட்ட போதாமலே செப்புத்தவலை
வந்தெடுத்து போறானந்த வட்டி முதலை !

——————————————————————————————————–

எப்படி வாழப் போற ?  –  11

சின்ன இதழைப் பிரிச்சி – மிகச்
சிங்காரமா சிரிச்சி  – அட‌
என்னக் கட்டிப் பிடிச்சி நிக்கும் தம்பி ! – நீ
எப்படி வாழப்போற ஒலகை நம்பி ?

ஒழைச்சிப் பொழைக்க யாரு – உனக்கு
ஒதவப்போறான் கூறு ! – உன்
ஒழைப்பைச் சுரண்டக் காத்திருக்குது கூட்டம் – உன்னை
விழுங்க நேரம் பாத்திருக்கு பேயாட்டம்  –  (சின்ன‌)

எத்தனை மணி நேரம் – பாடு
பட்டா என்ன யாரும்  – கூலி
பத்து பைசா கூட்டிடப்போறதில்லை ! பரட்டை
பாட்டைப்போல ஒளைப்புக்குப் பலனில்லை  –  (சின்ன‌)

சமத்துவமில்லாத இந்த
சமூக அமைப்பு சொத்தை ! – இதை
மாத்த யாரு முன் வருவார் நாட்டில் ? – சனம்
பயந்து போயி முடங்கி கிடக்கு வீட்டில்    –  (சின்ன‌)

பாட்டைக் கேட்கும் பாப்பா ! – நீ
பயப்படாமல் வாப்பா ! மத்த
பாப்பாக்களை கூட்டி செய் போராட்டம்  – என்றும்
பொதுவுடைமையில் இருக்கட்டும் உன் நாட்டம்   –  (சின்ன‌)

——————————————————————————————————–

பச்சை உண்மை  –  12

கேள் அப்பு ! ஏ பெருசு !
பொய்யில்ல, பச்சை உண்மை ! அவிங்க
அரிச்சந்திரன் வூட்டுக்கு அடுத்த வூடு – அதை
தெரிஞ்சி நீ வோட்டைப் போடு !

மருமவன் போட்டானாம் வெத்தலை பாக்கு
மாமிக்கு வந்திச்சாம் பல் சுளுக்கு !
வாயில்லா ஊமையின் பாட்டையும் கேட்டு
வட்டியில்லா கடன் தந்தாராம், சேட்டு
ஆமாத்தே ! ஆமாக்கா !  –  (பொய்யில்ல‌)

உரிமையை ஒளைச்சவன் கேட்டதினாலே
வெலைவாசி ஏறியே போச்சில்லே !
வறுமையை ஒளிச்சிடும் லாட்டரிச்சீட்டு
வாங்குற எல்லார்க்கும் கிடைக்கும் நோட்டு
ஆமா ஓய் !ஆமாண்டோய் !  –  (பொய்யில்ல)

குடியை ஒளிச்சிட சாராய புட்டி – அதில்
குடியைக் கெடுக்குமென்னு எளுதி ஒட்டி
படிக்காத முண்டத்தைப் படிக்க வச்சி – வித்தோம்
குடிப்பழக்கம் நாட்டில் அத்துப்போச்சி  – (பொய்யில்ல‌)

ஏ நைனா ! வாத்யாரே !
பொய்யில்ல பச்சை பிராடு – அவிங்க
அரிச்சந்திரன் ஊட்டுக்கு அடுத்த வூடு – அதை
தெரிஞ்சி நீ ஓட்டைப்போடு

——————————————————————————————————–

மண்ணும் மனிதனும்   –   13
(கும்மிப்பாட்டு)

1.     கரிசல் மண்ணு காட்டிலே – பெண்ணே
கலந்து ஓடுதாம் வேர்(வை) தண்ணீ !
கரிசல் மண்ணுல குத்தமில்லை – அந்த
கடவுள் மேலேயும் குத்தமில்லே

2.     செவல மண்ணு காட்டினிலே – பெண்ணே
சிரித்து பூத்ததாம் மல்லியப்பூ !
மல்லியப் பூவுலே குத்தமில்லே – ஆனா
மண்டிக்கடையிலே பாதி வெலை

3.    தங்க மண்ணு காட்டினிலே – பெண்ணே
தவழ்ந்த பூசணி ரெண்டு வண்டி
வண்டியிலே கூட குத்தமில்லே – ஆனா
வட்டிக்கட்ட பணம் பத்தவில்லை

4.    கரிசல் மண்ணு காட்டினிலே – நானு
கலக்க யூரியா உப்புமில்லே !
யூரியா வெலைய குறைக்கவில்லை – சர்க்கார்
ஆரியபட்டா பார் வானத்திலே !

5.    செவல மண்ணு காட்டினிலே – வேர்வை
சிந்திட ஏரு கலப்பையில்லை
ஏருக்கு வழியை பண்ணவில்லை – சர்க்கார்
போருக்கு வாங்குதாம் ஏரோபிளான் !

6.    கரிசல் மண்ணு காடும் போச்சி – ஏங்க
கலப்பை ஏரு மாடும் போச்சி !
செவல மண்ணு காடும் போச்சி – எங்க
செப்புத்தவலையும் கூட போச்சி

7.    போனது போகட்டும் போடுங்க வோட்டுன்னு
பேச வாரானையா கட்சிக்காரன்
பேசுற பேச்சுக்கு ஆசைப்பட்டு வோட்டு
போட்டு மயங்காதீர் சேடியரே !

8.    கட்சிக்காரனாலே புண்யமில்லே-எந்தக்
கட்சி வந்தா என்ன ? வாழ்வுயில்லை
காசு பணம் நாட்டை ஆளும்போது – அம்மி
கூட பறந்திடும் காத்தினிலே

9.    ஒட்டுமொத்தமாக சேரவேணும் – நாம
ஊக்கமுடனே போராட வேணும்
சொத்து பத்து யாரும் சேக்கக் கூடாதின்று
சட்டம் போட்டு நிறைவேத்திடணும்

10.    சொத்து உழைப்புச் சுரண்டலய்யா – அந்த
சொல்லை கெட்டவார்த்தை ஆக்குங்கைய்யா
ஒத்துமையா உழைப்போமே கிடைப்பதை
கத்தும் காக்கா போல சேந்து திண்போம் !



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard