New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: உலகை ஆள ஒரு சிறு கும்பல் யூதர்கள் சதி - அரவிந்தன் நீலகண்டன்


Guru

Status: Offline
Posts: 24601
Date:
உலகை ஆள ஒரு சிறு கும்பல் யூதர்கள் சதி - அரவிந்தன் நீலகண்டன்
Permalink  
 


உலகை ஆள ஒரு சிறு கும்பல் சதி செய்கிறது. எப்படி உலகத்தின் அமைதியைக் குலைப்பது? எப்படிக் கலகங்களை உருவாக்குவது? எப்படி எப்போதும் ஒருவரோடு ஒருவரை மோத விடுவது? சமுதாயத்தில் ஒழுக்கக்கேடுகளை விளைவிப்பது?

வெளியே பார்க்க சாதாரணப் பிரச்னைகளாகத் தோன்றக்கூடிய விஷயங்களெல்லாம் உண்மையில் மிகப்பெரிய சதியின் விளைவுகளே. ஏன் கம்யூனிஸ்டுகள் கூடுகிறார்கள்? ஏன் இறை நம்பிக்கை குறைகிறது? இதற்கெல்லாம் பின்னால் ‘அவர்கள்’ இருக்கிறார்கள். ‘அவர்கள்’ ரகசியமாகக் கூடுகிறார்கள். நம்மையெல்லாம் அடிமைகளாக்கத் திட்டம் தீட்டுகிறார்கள். இதுவரை வெறும் ஊகங்களாகப் பேசப்பட்டுவந்த இந்த விஷயத்துக்கு இதோ ஆவண ஆதாரங்கள் கிடைத்துவிட்டன. ‘அவர்கள்’ விரிவாக உருவாக்கிய சதித் திட்டத்தின் ஆவணங்கள் – உலகப் பத்திரிகை வரலாற்றில் முதன்முதலாக!

‘அவர்கள்’ – யூதர்கள் – யூத மதக்குருக்கள்!

ஆவணம்- ஸயானின் அறிவுச் சான்றோர்களின் விதிமுறை அறிக்கைகள் –  ‘ப்ரோடோகால்ஸ் ஆஃப் தி எல்டர்ஸ் ஆஃப் ஸயான்’ (Protocols of the Learned Elders of Zion.)

‘எல்டர்ஸ் ஆஃப் ஸயான்’ என்பது 12 யூத குருமார்களைக் கொண்ட ரகசிய அமைப்பாம். அதன் உள்வட்டம் ஒன்று இருக்கிறது. அதன் பெயர் ‘ரூலர்ஸ் ஆஃப் ஸயான்.’ எல்டர்ஸ் அமைப்பு ரூலர்ஸ்களுக்குக் கொடுத்த ஒரு திட்டத்தின் அறிக்கைதான் ‘ப்ரோடோகால்ஸ்.’ எதற்கு இந்தத் திட்டம்? உலகத்தை எப்படிக் கட்டுப்படுத்தி அரசாள்வது என்பதற்கு.

உலக ஆட்சியைப் பிடிக்க முதலில் அரசியலைக் கட்டுப்படுத்தவேண்டும். அதற்கு ஐரோப்பிய சமுதாயத்தைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவேண்டும். இதற்காக யூதத் தலைவர்கள் ரகசியமாக, விரிவாக ஒரு திட்டத்தை உருவாக்குகிறார்கள். அதைத் தங்கள் தலைமைக்கு அளிக்கிறார்கள். 24 தலைப்புகளில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவேண்டும். உலகெங்கும் பரவியிருக்கும் யூத ரகசியக் குழுக்களுக்கு இந்தத் திட்ட நகல்கள் அனுப்பப்படுகின்றன. அவர்கள் அதைச் செயல்படுத்த ஆரம்பிக்கின்றனர். ஆனால் தற்செயலாக அவற்றின் நகல் ஒன்று ஒரு ரஷ்யப் பத்திரிகையாளனின் கையில் கிடைத்துவிடுகிறது. முதன்முதலாக இது ஒரு ரஷ்யப் பத்திரிகையில் 1903-ல் பிரசுரிக்கப்பட்டது. மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து 1905-களில் இது ரஷ்யப் பத்திரிகை ஒன்றில் தொடராக வெளியிடப்பட்டது.

இங்கு ஒரு விஷயத்தை நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும். மேற்கத்திய உலகமே குழப்பங்களில் ஆழ்ந்திருந்த காலகட்டம் அது. தொழில் புரட்சியின் சமூக விளைவுகள் உச்சகட்டத்தை எட்டிக்கொண்டிருந்தன. மத அறிஞர்கள், சமூகத்தின் மேல்தட்டு மக்கள், நடுத்தர வர்க்கம் என அனைவரும் கலக்கமடைந்திருந்தனர். தொழிலாளர்கள் அரசியல் பேச ஆரம்பித்திருந்த காலகட்டம். இவையெல்லாம் ஏன் நடக்கின்றன என்பதை ‘ப்ரோடோகால்ஸ்’ விளக்கியது. யாருக்கும் தெரியாமல் ஒரு சிறு குழு நடத்தும் சதி வேலை. படித்துப்பாருங்கள். உங்களைச் சுற்றி நடக்கும் குழப்பங்கள் எந்த அளவுக்கு இதில் இருக்கும் விஷத்திட்டங்களுடன் பொருந்திப்போகிறதென்று தெரியும்.

ரஷ்ய கிறிஸ்தவ மறைஞானி செர்ஜி நைலஸ் (1862-1929) ‘அந்தி கிறிஸ்துவின் வருகையும் பூமியில் சைத்தானின் ஆட்சியும்’ எனும் நூலில் சைத்தானின் சதி உலகமெங்கும் பரப்பப்படுவதாகச் சொன்னார். இதற்கு ஆதாரமான ஆவணமாக ‘ப்ரோடோகால்ஸை’ தன் நூலில் ஒரு பகுதியாக வெளியிட்டார்.

அப்படி என்னதான் சொல்கிறது இந்த ‘ப்ரோடோகால்ஸ்’? டார்வீனியப் பரிணாமம், நீட்ஷேயியத் தத்துவம், மார்க்சிஸம் – எல்லாம் யூதர்களால் மக்களைக் குழப்பப் பரப்பப்படும் விஷயங்கள். கிறிஸ்தவப் பண்பாட்டைக் குலைத்து, யூத மேலாதிக்கத்தை நிலைப்படுத்துவதற்காக யூதர்கள் செய்யும் சதி என ‘ப்ரோடோகால்ஸ்’ கூறுகிறது. கிறிஸ்தவத்தையும் இஸ்லாமையும் அழிக்க ஒரு இடைப்பட்ட காலக் கருவியாக நாத்திகத்தை யூதர்கள் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளனர். பேச்சு சுதந்தரம் இருப்பதுபோல் தோன்றுவதெல்லாம் உண்மையில் திட்டமிட்ட யூத மாயை. உலக வர்த்தகத்தில்கூட யூதர்களின் சதி உள்ளது. கிறிஸ்தவ இளைஞர்களிடம் ஆபாச இலக்கியத்தைப் பரப்பி, உயர்ந்த நம் பண்பாட்டினை அழிக்க யூதத் தலைவர்கள் திட்டமிடுகின்றனர். எங்கும் யூத சதி! எதிலும் யூத சதி!

“இந்துக் கடவுளான விஷ்ணுவின் பல கரங்களைப் போல நம் பல கரங்கள் ஒவ்வொன்றும் அரசின் ஒவ்வொரு அமைப்பையும் துறையையும் கட்டுப்படுத்தவேண்டும்” என்று யூத மதகுருக்கள் சொல்கின்றனர். சுருக்கமாக கிறிஸ்தவப் பண்பாட்டினை அழித்து (ரஷ்யா உள்ளடக்கிய) ஐரோப்பாவை அடக்கி ஆள யூதர்களால் தீட்டப்பட்ட ஒரு பெரிய சதித்திட்டத்தின் நகல் யூதர் அல்லாதவரிடம் கிடைத்து அது வெளிவந்துவிட்டது.

1917-ல் அக்டோபர் கலகத்துக்குப் பின்னர் ‘ப்ரோடோகால்ஸ்’ இதர ஐரோப்பிய நாடுகளில் பிரபலமாக ஆரம்பித்தது.  “ரஷியாவை கம்யூனிஸ்டுகளிடம் ஒப்புவித்த துரோகிகள் யார் தெரியுமா? யூதர்கள்தான். இதோ இந்த ஆவணத்தைப் படித்துப் பாருங்கள் தெரியும்” என்கிற முணுமுணுப்புடன் ஐரோப்பிய பார்களில் தொடங்கி மதக்கூட்டங்கள் வரை ப்ரோடோகால்ஸ் அடுத்த வெறுப்புச் சுழலைத் தொடங்கியது.

இந்த ஆவணம் போலி என்று பலருக்கும் ஐயம் இருந்தது. உதாரணமாக யூத மதகுருக்கள் எப்படி உருவ வழிபாடு செய்யும் ஹிந்துக் கடவுளின் கரங்களைத் தங்கள் திட்டத்துக்கு உவமையாகக் கூறுவார்கள்? மேலும் இந்த ஆவணத்தை முதலில் வெளியிட்ட ரஷ்யப் பத்திரிகை தங்களுக்கு இது கிடைத்த விதத்தைக் குறித்து முன்னுக்கு பின் முரணாகச் சொல்லியிருந்தது. இது வெளிவந்தபோது ரஷ்யப் பேரரசராக இருந்த இரண்டாம் நிகோலஸ் யூத வெறுப்பாளர்தான். ஆனால் அவருக்கு இந்த ப்ரோடோகால்ஸ் விஷயத்தில் ஏதோ ஒன்று சங்கடத்தை உருவாக்கியது. ரஷ்யாவை நவீனப்படுத்துவதை எதிர்த்தவர்கள் நிகோலஸிடம் ‘நவீனமயமாக்குவது என்பதே யூத சதி’ என நிரூபிக்க ப்ரோடோகால்ஸைப் பயன்படுத்தினார்கள். ஆனால் நிகோலஸின் அமைச்சர்களில் ஒருவர் இந்த விஷயத்தை ஆராய்ந்து பார்த்துவிட்டு நிகோலஸிடம் ‘இந்த ஆவணம் ஒரு மோசடி’ எனச் சொன்னார். நிகோலஸும், “ஒரு நல்ல காரியத்தைச் செய்ய எதற்கு இப்படி மோசமான உக்தியைப் பயன்படுத்தவேண்டும்?” என்று ஆச்சரியப்பட்டார். ஆனால் யூதவெறுப்பு என்கிற ‘நல்ல காரிய’த்தில் அவருக்கு இருந்த ஆர்வம் இந்த ‘மோசமான உத்தி’ தடையின்றிப் பரவ வழிவகுத்துவிட்டது.

1921-ல் பிலிப் கிரேவ்ஸ் என்கிற டைம்ஸ் நிருபர் ப்ரோடோகால்ஸ் பொய் என்பதையும் அது எந்த இலக்கியத்திலிருந்து உருவி எடுத்து உருவாக்கப்பட்டது என்பதையும் நிரூபித்தார். 1868-ல் மவுரிஸ் ஜாலி என்கிற ஒரு பிரெஞ்சுப் பகடி எழுத்தாளர், ‘நரகத்தில் மாக்கியவெல்லிக்கும் மாண்டேஸ்க்யூவுக்கு நடக்கும் உரையாடல்’ என ஒரு பகடியை உருவாக்கியிருந்தார். இதையும் ஒரு ஜெர்மானிய யூதவெறுப்பு நாவலின் ஓர் அத்தியாயத்தையும் குழைத்து உருவாக்கப்பட்டதுதான் இந்த ஏமாற்று வேலை. விஷ்ணு சமாசாரம் உட்பட இந்தப் பகடிக்கும் ப்ரோடோகால்ஸுக்குமான ஒற்றுமைகளை கிரேவ்ஸ் பிட்டுப் பிட்டு வைத்தார். ஆனால் அதற்கு முன்பாக ப்ரோடோகால்ஸ் இங்கிலாந்தில் மட்டும் ஐந்து பதிப்புகள் வந்துவிட்டன.

ஆனால் அதோடு இந்த அளவுக்கு வெளிப்படுத்தப்பட்ட மோசடி முடிந்து போயிருக்கும் என்று நினைத்தீர்கள் என்றால் உங்களுக்கு பாஸ் மார்க் கிடையாது.

நாசி கட்சி அதிகாரிகளில் ஒருவனான ஆல்ஃப்ரெட் ரோசன்பெர்க் இந்த வெறுப்புமிழும் ஃபோர்ஜரியை ஹிட்லரிடம் அறிமுகப்படுத்தினான். தமது அரசியல் பார்வையை அப்போது உருவாக்கிக்கொண்டிருந்த ஹிட்லருக்கு இது ஒரு வரப்பிரசாதமாகத் தோன்றியது. நாசி பிரசாரத்தில் ப்ரோடோகால்ஸ் ஒரு முக்கிய இடத்தை வகித்தது. ஹிட்லர் தனது ‘மெயின் காம்ப்’ புத்தகத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

“யூத இனமே தொடர்ந்து வஞ்சனைகளால் வாழும் இனம் என்பதனை இந்த நூல் வெளிக்காட்டுவதால் இந்த நூலை யூதர்கள் வெறுக்கின்றனர்… இந்த நூல் (ப்ரோடாகால்ஸ்) உலகத்துக்கே தெரியவரும்போது யூதச் சதிகாரர்களின் முதுகெலும்பு ஒடிந்துவிடும்.”

கெப்பெல்ஸுக்கு ப்ரோடோகால்ஸ் போலி ஆவணம் எனத் தெரிந்திருந்தது. ஆனாலும், ‘அதன் தரவுகள் பொய்யாக இருந்தாலும் அதன் உள்ளார்ந்த உண்மையை’ தான் நம்புவதாகத் தன் நாட்குறிப்பில் அவர் குறிப்பிடுகிறார். ஜெர்மனியில் இவை 1,20,000 பிரதிகள் விற்றன. 1930-களில் மட்டும் நாசி கட்சி ப்ரோடோகால்ஸை 23 பதிப்புகள் வெளியிட்டது.

1930-களில் போலந்திலும் இந்த ஏமாற்று வேலை பெரும் ஆதிக்கம் செலுத்தியது. யூத வெறுப்பியலில் புகழ்பெற்ற கத்தோலிக்கப் பாதிரியாரான ஸ்தானிஸ்லா த்ரேசியாக் (Stanislaw Trzeciak) ப்ரோட்டோகால்ஸை போலிஷுக்கு மொழிபெயர்த்தார்.

அமெரிக்காவில் 1919-ல் இது வெளிவந்தபோது இதில் ‘யூதர்கள்’ என இருக்கும் இடங்களிலெல்லாம் ‘போல்ஷ்விக்குகள்’ என மாற்றி, அமெரிக்கப் பத்திரிகையாளர் கண்டுபிடித்த ஓர் ஆவணமாக இதனை வெளியிட்டார்கள். இதனை வெளியிட்டவர் அன்றைய காலத்தில் மிகவும் மதிக்கப்பட்ட கொலம்பியா பல்கலைக்கழகப் பத்திரிகையியல் துறைத் தலைவர் கார்ல் ஏக்கர்மான் என்பவர். டைம்ஸ் பத்திரிகை இந்த ஆவணம் ஒரு போலி எனத் தோலுரித்துக் காட்டிய அதே காலகட்டத்தில் (1920-22) அமெரிக்க கார் உற்பத்தியாளர் ஹென்றி ஃபோர்ட் 5,00,000 பிரதிகளை வெளியிடுவதற்கான செலவை ஏற்றுக்கொண்டார்.

வாட்டிக்கனில் வணக்கத்துக்குரிய போப்பாண்டவர் பத்தாம் பத்தியப்பரின் ஒற்றர்கள் துறைத் தலைவராக இருந்த அருட்பணி சங்கைக்குரிய பெனிக்னி (Monsignor Umberto Benigni) ப்ரோடோகால்ஸ் விஷயங்களைத் தமது பங்கு மக்களுக்கு அறிவிக்கலானார். 1921-ல் அவர் இதனை இத்தாலியில் மொழிபெயர்த்து வெளியிட்டார். இதனை அடுத்து வாட்டிக்கனில் இருந்து வெளிவரும் கத்தோலிக்க நாளேடு, “யூதர்களிடம் கத்தோலிக்கர்களுக்கு வெறுப்பு இல்லை. ஆனால் யூதர்கள் நடந்துகொள்ளும் விதம்தான் தவறு. அவர்கள் இனத் துவேஷத்தையும் மேலாதிக்க உணர்வையும் விட்டுவிடவேண்டும்” என்று அறிவுரை வழங்கியது.

பிரான்ஸில் அருட்பணித் தந்தை எர்னஸ்ட் ஜோயின், ப்ரோடோகால்ஸை மொழிபெயர்த்தார். வணக்கத்துக்குரிய போப்பாண்டவர் பதினைந்தாம் ஆசிர்வாதப்பர் ‘Prelate’ எனும் பட்டத்தை அவருக்கு வழங்கி கிறிஸ்தவத்தின் பாதுகாப்புக்காகப் பணியாற்றியதற்காக அருளாசி வழங்கியிருந்தார். வணக்கத்துக்குரிய பதினைந்தாம் ஆசிர்வாதப்பர் ஜோயினுக்கு ஒரு தனிக் கடிதமே எழுதினார்: “உங்கள் அருட்பணியை நீங்கள் ஒரு உதாரணத்தன்மையுடன் செய்கிறீர்கள்.”

அருட்பணியாளர் ஜோயின் அடுத்ததாக ஒரு பத்திரிகையையே ஆரம்பித்தார். ‘ரகசியக் குழுக்கள் குறித்த சர்வதேச ஆராய்ச்சிப் பத்திரிகை.’ யூத சதிகளைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டியிருக்கிறது. வெளிப்படுத்த வேண்டியிருக்கிறது. இப்போது வணக்கத்துக்குரிய போப்பாண்டவராகச் சிம்மாசனம் ஏறியிருந்தவர் பதினொன்றாம் பத்தியப்பர். இவர் ஜோயினை அழைத்து, “உங்கள் பத்திரிகை அருமை. நிதி நெருக்கடி ஏற்பட்டால்கூட பத்திரிகையை நிறுத்திவிடாதீர்கள். நம்முடைய மிக மோசமான பயங்கர எதிரியுடன் போராடிக்கொண்டிருக்கிறீர்கள்” என அருளாசி வழங்கினார். ‘Prelate’ என அவருக்கு ஆசிர்வாதப்பர் அளித்த பட்டத்திலிருந்து பத்தியப்பர் அவருக்கு ‘Apostolic Protonotary’ என்கிற இன்னும் உயர்வான பட்ட ஆசியை வழங்கினார். அருட்தந்தை ஜோயினும் அவர் பங்குக்கு, முஸோலினியை ‘மேஸானிய-யூத சதியான சோவியத்தியத்திலிருந்து’ இத்தாலியை மீட்ட சுந்தர பாசிசன் என புகழ்ந்து தள்ளினார். 30,000 நூல்கள் கொண்ட தனது நூலகத்தில் வாழ்நாள் முழுவதும் ஆராய்ச்சி செய்த இந்த அருட்தந்தை, மேஸான்கள் என்கிற ரகசியக் குழுவும் யூதர்களும் இணைந்து கத்தோலிக்க சபைக்கு எதிராக உருவாக்கிய சதியே கம்யூனிஸம் என்பதைக் கண்டுபிடித்திருந்தார்.

1930-களில் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதாரth தேக்க நிலையை அடுத்து ஏற்பட்ட மக்களின் அச்சத்தால் பிரபலமடைந்தவர் வானொலி மதப்பிரசாரகர் ஃபாதர் சார்ல்ஸ் கவ்லின். இவர் தமது பத்திரிகையில் ப்ரோடோகால்ஸை வெளியிட்டுப் பிரபலப்படுத்தினார்.

அமெரிக்க எவாஞ்சலிக்க கிறிஸ்தவர்களில் மிகவும் முக்கியமானவர் வில்லியம் பெல் ரில்லே. தீவிர மதப்பிரசாரகரான பில்லி கிரகாமின் ஆசிரியர். அமெரிக்காவின் முதன்மையான கிறிஸ்தவப் பல்கலைக்கழகமான நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தை நிறுவியவர். ப்ரோடோகால்ஸை இவர் அமெரிக்காவில் தீவிரமாகப் பிரசாரம் செய்தார்.

யூதர்கள் ப்ரோடோகால்ஸில் திட்டமிட்டிருக்கும் வேலையைத்தான் கம்யூனிஸ ரஷ்யா இன்றைக்கு நிச்சயமாகச் செய்கிறது என அவர் கருதினார். 81 சதவிகித ரஷ்யத் தலைவர்கள் யூதர்கள் எனக் கூசாமல் சொன்ன ரில்லே, யூதரல்லாதவர்களை சைத்தானுக்குப் பணிய வைக்க யூதர்கள் செய்யும் சதியை எதிர்க்க அமெரிக்கக் கிறிஸ்தவர்களுக்கு அழைப்பு விடுத்தார். அது மட்டுமல்ல. இந்த யூதர்களுக்கு ஓர் அரசன் இருக்கிறான். அவன் யார் என்பது யாருக்கும் தெரியாது. ரகசியத் தலைவன். அவன்தான் இதையெல்லாம் மேற்பார்வை பார்க்கிறான். அவனது உண்மையான அடையாளம் ரில்லேக்கு மட்டும் தெரியும். அவன்தான் சைத்தான். ஆனால் கம்யூனிச ரஷ்யா மட்டுமல்ல, முதலாளித்துவ அமெரிக்காவும் யூதச் சதி வலையால்தான் இயக்கப்படுகிறது என அவர் கண்டுபிடித்தார். ப்ராங்க்ளின் ரூஸ்வெல்ட் அப்போது அமெரிக்க அதிபராகியிருந்தார். “சந்தேகமே இல்லை.” ரில்லே தமது தேவ ஆராதனைக் கூட்டங்களில் முழங்கினார். “ரூஸ்வெல்ட், யூதர்களின் கைப்பொம்மைதான். அமெரிக்காவும் ப்ரோடோகால்ஸ் சதிக்கு இலக்காகிவிட்டது.”

1935-ல் ப்ரோடோகால்ஸைக் குறித்து சுவிட்சர்லாந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தீர்ப்பளித்த நீதிபதி ப்ரோடோகால்ஸை ‘சிரிப்பூட்டக்கூடிய முட்டாள்தனமான உளறல்’ எனக் குறிப்பிட்டார். 1964-ல் அமெரிக்க செனட்டின் நீதிக்குழு ப்ரோடோகால்ஸை ‘போர்ஜரி’ என அறிவித்தது.

இறுதியாக எங்கு இந்த மோசடி தொடங்கியதோ அங்கேயே இதற்கு அடி விழுந்தது. 1993-ல் ரஷ்ய நீதிமன்றமும் இது மோசடி எனத் தீர்ப்பு வழங்கியது.

ஆனால் இன்றைக்கும் இந்த வெறுப்புப்பரப்பி உயிரோடு இருக்கிறது. அது மேற்கில் உயிரோடு இருப்பது மட்டுமின்றி கிழக்கு நோக்கியும் பரவுகிறது.

தெள்ளத்தெளிவாக மீண்டும் மீண்டும் போலி ஆவணம் என நிரூபிக்கப்பட்ட ப்ரோடோகால்ஸ் எப்படி இந்த அளவு செல்வாக்குடன் திகழ்கிறது?

பொதுவாக ஒரு மக்கள் குழுவை இனரீதியாகவும் மத நம்பிக்கையின் அடிப்படையிலும் முத்திரை குத்தி அந்நியராக்குவதிலிருந்து இது தொடங்குகிறது; அவ்வாறு முத்திரை குத்தப்பட்ட சமுதாயம் அதன் இயல்பிலேயே பாம்பைக் காட்டிலும் கொடிய நஞ்சுடையதாக இருப்பதாகப் பிரசாரம் செய்வது அடுத்த கட்டம்; இந்தச் சிறுகுழுவே உழைக்கும் பெரும்பான்மை மக்களின் பணத்தைத் தமது தந்திரங்கள் மூலம் உறிஞ்சி அனுபவிக்கிறது; அத்துடன் சமுதாயத்தில் எல்லாத் தீமைகளுக்கும் அக்குழுவைச் சேர்ந்தவர்களே காரணம் என்று அனைவரையும் நம்பச் செய்துவிட்டால் போதும். உங்கள் பிரச்னைகளுக்குக் காரணம் நீங்கள் அல்ல; உங்கள் சமுதாயம் அல்ல; மாறாக உங்கள் சமுதாயத்துக்குள் ஊடுருவியிருக்கும் ஒரு தீய சக்தி செய்யும் ரகசியச் சதியே காரணம். அந்தச் சதிக்கும்பல் ஓர் அன்னிய இனக்குழு என நம்புவதில் ஒரு சுகம் இருக்கிறதுபோலும். அந்தச் சுகத்தில் திளைக்கச் செய்துவிட்டால் அப்புறம் எத்தனை மோசமான மோசடி ஆவணங்களையும் உண்மை என்று நம்பவைத்துவிட முடியும். இந்தப் பிரசார மாயையே ஐரோப்பாவையும் அமெரிக்காவையும் ப்ரோடோகால்ஸை நம்ப வைத்தது. அந்த வெறுப்புக்கு விலையாக 60 லட்சம் உயிர்களை உலகம் கொடுத்தபின்னும் இந்த வெறுப்பு மோசடிகள் தொடரத்தான் செய்கின்றன.

மேலதிக விவரங்களுக்கு:

* William Nicholls, Christian Antisemitism: A History of Hate, Jason Aronson, 1995
* David I Kertzer, The Popes against the Jews, Vintage Books 2002
* William Vance Trollinger, God’s empire: William Bell Riley and Midwestern fundamentalism, Univ of Wisconsin Press, 1990
சுட்டிகள்:
* http://www.ushmm.org/wlc/en/article.php?ModuleId=10007058
* http://www.ushmm.org/wlc/en/article.php?ModuleId=10007244



-- Edited by Admin on Wednesday 3rd of June 2015 01:22:39 PM

__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
RE: உலகை ஆள ஒரு சிறு கும்பல் சதி - அரவிந்தன் நீலகண்டன்
Permalink  
 


சேக்கிழான் 

#2


அருமையான கட்டுரை.
இந்தியாவில் பரப்பப்படும் ஆரிய- திராவிட மாயாவாதமும், பிராமணர் ஆதிக்கம் குறித்த மிகைப்படுத்தல்களும் நினைவில் வந்தன. ஒரு சமுதாயத்தை நிலைகுலையச் செய்ய அதன் வரலாற்றை மாற்றி எழுதினால் போதும். ஐரோப்பாவில் யூதர்களுக்கு நிகழ்ந்த கொடுமை, இந்தியாவில் ”ஆரியர்”களுக்கு நிகழ்கிறது. ஐரோப்பாவில் உண்மையாகவே யூதர்கள் இருந்தார்கள். அவர்களது ‘ப்ரோட்டாகால்’ மட்டுமே போர்ஜரி. இந்தியாவிலோ, ஆரியர்- திராவிடர் என்ற அடிப்படைப் பிரிவினையே போர்ஜரி. அதன் தாக்கம் அரசியலில் கண்ட கபட வெற்றியின் சுவடுகள் தமிழகத்தில் நன்றாகவே கால் பாவியிருக்கின்றன. அரவிந்தன் நீலகண்டன் அந்த கபட வேடதாரிகளையும் தோலுரிக்க வேண்டும்.
-சேக்கிழான்

திருச்செல்வன்

யூதர்களுக்கெதிராக நாசிகள் பரப்பியதும், பிராமணர்களுக்கெதிராக திராவிடர் கழகம் பரப்பியதும் திட்டமிட்ட வெறுப்புணர்வுப் பிரசாரம். அந்த பிரசாரம் சொல்வதெல்லாம் முழுப் பொய். அதற்கு எந்த ஆதாரமும் கிடையாது..

ஆனால் இன்று, உலகம் முழுவதும் இஸ்லாம் மீதும், குரான் மீதும், ஜிகாத் மீதும் வைக்கப் படும் விமர்சனங்கள் அப்படியா?

பாகிஸ்தான், ப்ங்களாதேஷ் தொடங்கி எல்லா இஸ்லாமிய ஆதிக்கம் உள்ள நாடுகளிலும் மற்ற சிறுபான்மையினர் பாரபட்சமாக நடத்தப் படுவது மட்டுமல்ல, வன்கொடுமைகளுக்கும் ஆளாகிறார்கள்.. குண்டுவெடிப்பு, கடத்தல் படுகொலைகள் செய்பவர்கள் வெளிப்படையாக அல்லாவின் பெயரா, இஸ்லாமின் பெயரால் அப்படி செய்வதாக் சொல்கிறார்கள். சீனா முதல் சின்னஞ்சிறூ தீவுகள் வரை எல்லா நாடுகளிலும் இஸ்லாமிய பயங்கரவாதிகள் உருவாகி வருகிறார்கள். வன்முறைகளில் ஈடுபடுகிறார்கள்.. நம் கண்முன்னே அதற்கு ஆதாரம் உள்ளது.

எனவே இஸ்லாம் மீதான விமர்சனம் வெறுப்புணர்வுப் பிரசாரம் அல்ல. It is backed by solid facts. Many scholars have written books about i. News correspondents and columnists all over the world are writing abt it.

Dont divert and confuse both the things.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

ப்ரோடோகால்ஸ் போன்ற போலி ஆவணம் எவ்விதக் கேள்வியுமின்றிப் பெரும்பாலான ஐரோப்பியர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் அந்த எண்ணிக்கை குறைந்தது. நீதிமன்றங்களும் அறிவுலகமும் அதனைப் பொய் எனச் சொன்னார்கள். ஆனால், இன்றைக்கும் கணிசமான ஐரோப்பியர்களும் அமெரிக்கர்களும் அதை உண்மை என்றுதான் நம்புகிறார்கள். பொதுஜன கலாசாரத்தில் ப்ரோடோகால்ஸ் அழுத்தமான ஒரு நம்பிக்கையாகப் பதிந்துவிட்டது. இதற்குக் காரணம் ஐரோப்பிய கிறிஸ்தவப் பண்பாட்டில் அழுத்தமாக வேரூன்றியிருக்கும் யூத வெறுப்பு.

யூதர்கள் மீதான வெறுப்புக்குத் தெளிவான மதக் காரணங்கள் இருக்கின்றன. கிறிஸ்தவத்தில் யூத விவிலியமே ‘பழைய ஏற்பாடு’ என மாற்றப்படுகிறது. அதாவது, ஏதோ ஒரு விதத்தில் யூதர்களுடன் இறைவன் செய்துகொண்ட ஒப்பந்தம் பழையதாகிவிட்டது. இறைவன் புதிய ஏற்பாட்டை தனது ஒரே குமாரனை நம்புகிற மக்களான கிறிஸ்தவர்களிடம் செய்துகொண்டார். இத்தோடு நின்றால் பரவாயில்லை. யூதர்கள்மீதும் அவர்கள் சந்ததிகள் மீதும் ஏசுவின் ரத்தப்பழி வேறு விழுந்துவிட்டது. இத்தனைக்கும் ஏசு உயிரோடு வாழ்ந்த ஒரு மனிதரா என்பதே கேள்விக்குரியது. அப்படியே அவர் வாழ்ந்திருந்தாலும், அவரது வாழ்க்கை, கிறிஸ்தவப் புனிதநூல்கள் சொல்லுவது போல நடந்திருக்க வாய்ப்பில்லை என்பது வரலாற்றாராய்ச்சிகள் நிரூபிக்கும் மற்றொரு விஷயம். ஆனால் இந்தப் பழி மட்டும் வரலாற்றுச் சத்தியமாக யூதர்கள்மீது சுமத்தப்பட்டது. ஐரோப்பா முழுக்க யூதர்கள் ரத்தப்பழியுடன் அலையவிடப்பட்டனர்.

இது மட்டுமில்லாமல் யூதச் சடங்குகளில் கிறிஸ்தவக் குழந்தைகளின் ரத்தம் பயன்படுத்தப்படுவதாகவும் கூறப்பட்டது. அதைப் போலவே கிறிஸ்தவப் பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள் ஆகியோரின் ரத்தமும் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்பட்டது. இவை வெறும் வதந்திகளாக இருக்கவில்லை. உண்மை என நம்பப்பட்டது. ஊரில் ஏதாவது ஒரு குழந்தை காணாமல் போனால் முதலில் அது யூதர்களால் கட்த்தப்பட்டுவிட்டதாக வதந்தி பரவும். விரைவில் அது செய்தியாக மாறிவிடும். யூதக்குடியிருப்புகள் சோதனை செய்யப்படும். அவர்களின் சொத்துக்கள் அபகரிக்கப்படும். வன்முறைத் தாக்குதல்களும் அரங்கேறும்.

யூதர்களை மதம் மாற்றுவது கிறிஸ்தவக் கடமையாக இருந்தது. ஏதாவது யூதக்குழந்தை கிறிஸ்தவத்தில் ஈடுபாடு காட்டினால், நீதிமன்ற உதவியுடன் யூதப் பெற்றோர்களிடமிருந்து அக்குழந்தை பிரித்து எடுக்கப்பட்டு, கிறிஸ்தவ கான்வெண்ட்களில் விடப்படும். இவையெல்லாம் சென்ற நூற்றாண்டுவரை நடந்த விஷயங்கள். மதம் மாறிய யூதர்களும்கூட கிறிஸ்தவர்களால் ஐயத்துடன்தான் பார்க்கப்பட்டனர். இவர்கள் ஊடுருவல்காரர்களோ? மதம் மாறிய ஒரு யூதன் ஏசுசபை போன்ற அமைப்புகளில் சேர்ந்துவிட முடியாது. சில தலைமுறைகள் காத்திருக்கவேண்டும்.

இத்தகைய ஒரு பண்பாட்டுச் சூழல்தான் ப்ரோடோகால்ஸை எளிதாக ஏற்றுக்கொள்ளும் மனநிலையை உருவாக்குகிறது.

இச்சூழல் இப்போது அரேபியா மூலமாக ஆசியாவுக்குள் பரவுகிறது.

பல இஸ்லாமிய நாடுகளிலும் ப்ரோடோகால்ஸ் பிரபலமாக இருக்கிறது. இது உண்மை எனப் பெரும்பாலான இஸ்லாமியர்கள் நம்புகிறார்கள். முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் சவுதி அரேபிய அரசர் தன் வெளிநாட்டு விருந்தினர்களுக்கு இதனைப் பரிசாக வழங்கும் வழக்கம் இருந்தது. 2000-ல் ஈரான் இதை வெளியிட்டது. தொடர்ந்து ஓர் எகிப்திய இஸ்லாமிய பத்திரிகை அதனைத் தொடராக வெளியிட்டது. 2001-ல் டர்பனில் நடந்த இனவாதத்துக்கு எதிரான சர்வதேச மாநாட்டில் ஒரு பாலஸ்தீனிய ஆதரவு அமைப்பு ப்ரோடோகால்ஸை விநியோகித்தது. எகிப்தில் ப்ரோடோகால்ஸின் அடிப்படையில் டிவி தொடர்களும் உருவாக்கப்பட்டுள்ளன. யூதர்கள் சதி செய்வதும் யூதரல்லாத குழந்தைகளைக் கொன்று ரத்தச்சடங்குகள் செய்வதும் இதில் காட்டப்படுகின்றன. சிரியாவில் 2005-ல் ப்ரோடோகால்ஸ் வெளியிடப்பட்டது. இதில் கூடுதலாக ‘9/11 யூத சதி’ என்பது சேர்க்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் ப்ரோடோகால்ஸ் அதன் யூதவெறுப்புப் பின்னணியில் பேசப்படவேண்டும். அதைப் பிறகு தனியாகவே காணலாம்.

இந்தியாவில் ப்ரோடோகால்ஸ் ஓர் அமைப்பினால் வெளிப்படையாகவே விற்பனை செய்யப்படுகிறது. அது பெங்களூரில் இருந்து வெளியாகும் ‘தலித் வாய்ஸ்’ பத்திரிகை. இதன் ஆசிரியர் வி.டி.ராஜசேகர். உதாரணமாக,  2001 தலித் வாய்ஸ் இதழில் ப்ரோடோகால்ஸ் தங்கள் அலுவலகத்தில் கிடைக்கும் என்று விளம்பரம் வெளியானது. டிசம்பர் 2005 தலித் வாய்ஸ் இதழில் ராஜசேகர் இதனை மேலும் விளக்குகிறார்: “ப்ரோடோகால்ஸ் உலகை அடக்கி ஆள்வதற்காக உருவாக்கப்பட்ட யூத அர்த்த சாஸ்திரமாம். கிறிஸ்தவர்களைப் பச்சைப்படுகொலைகள் மூலம் அழித்துவிட செய்யப்பட்ட இந்த யூதச் சதித்திட்டம்  இப்போது இஸ்லாமியர்கள் பக்கம் திரும்பியுள்ளதாம். கம்யூனிஸத்தின் உருவாக்கம், ஜனநாயகம், இஸ்ரேல், உலகமயமாக்கல், ஈராக் மீதான இன்றைய போர், வாட்டர்கேட், கிளிண்டனின் வீழ்ச்சி, புஷ் எதிர்நோக்கும் பிரச்னைகள் – இவை எல்லாமே ப்ரோடோகால்ஸ் சதியின் அங்கங்கள்தான். சீனாவும் இந்தச் சதித்திட்டத்தால் சூழப்பட்டுள்ளது. இதனை ‘இந்தியாவின் யூதர்கள்’ (இது பிராம்மணர்களை) இந்தியாவில் நிறுவியுள்ள சர்வாதிகாரத்தின் மூலம் செயல்படுத்துகிறார்கள்.”

130 பக்கங்கள் கொண்ட இந்த நூல் ரூபாய் 50-க்கு தலித் வாய்ஸ் அலுவலகத்தில் கிடைக்கும் என இப்பத்திரிகை தெரிவிக்கிறது.

இதில் முக்கியமாகக் கவனிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால் வி.டி.ராஜசேகர் ஒரு தலித் அல்ல. ஆனால் தலித்துகளின் குரலாக முன்வைக்கப்படுகிறார். யாரால்? PFI போன்ற இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கங்களால். கிறிஸ்தவ மதப்பிரசார அமைப்புகளால். அம்பேத்கர் அவரது வாழ்க்கையில் எத்தகைய இயக்கப் போக்குகளுக்கு எதிராக நின்றாரோ, அத்தகைய இயக்கப் போக்குகளைக் கொண்ட மனிதர்தான் வி.டி.ராஜசேகர். அப்படிப்பட்ட ஒருவர், அம்பேத்கர் பெயரைப் பயன்படுத்தி அரசியல் செய்வது ஆபாசமானது. அதுவும், ஒரு மானுடகுல அழிவு மோசடியை, சமூக நீதியின் பெயரால் இந்தியாவில் பரப்புவது, திட்டமிட்டு எயிட்ஸைப் பரப்புவதைவிடக் கீழ்த்தரமானது.

இஸ்லாமிய – கிறிஸ்தவ இறையியல் வெறுப்பும் இனவாதமும் சேரும்போது ஏற்படும் விபரீத விளைவு ப்ரோடோகால்ஸ் என்றால், பிற சச்சரவுகளும்கூட ஐரோப்பாவில் இத்தகைய வெறுப்பு ஆவணங்களை உருவாக்கியுள்ளது.

ப்ரோடோகால்ஸ் போன்ற பிறிதொரு வெறுப்பு ஆவணம்  ‘ஏசுசபை பாதிரியார்களின் ரகசியப் பிரமாணம்.’  அமெரிக்க தெற்குப் பிராந்தியங்களில் பிரபலமாக்கப்பட்ட இந்த ஆவணம் முழுக்க முழுக்கப் போலியானது. ஏசு சபை பாதிரியார்கள் கொலை செய்யத் தயங்கமாட்டோம் என இறுதிப் பிரமாணம் எடுத்துக் கொள்வார்களாம். போப்பைத் தவிர பிற அரசர்களையெல்லாம் தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டுவார்களாம். அவிசுவாசி பெண்கள் கர்ப்பமாக இருக்கும்போது, அவர்களைக் கொன்று, அவர்கள் கருவிலிருக்கும் சிசுவை எடுத்து சுவரில் மோதிக் கொல்வதாகப் பிரமாணம் எடுத்துக் கொள்வார்களாம்.

சில நூற்றாண்டுகள் முன்னர் புராட்டஸ்டண்ட்- கத்தோலிக்க பரஸ்பர வெறுப்பு உச்சகட்டத்தை அடைந்திருந்தது. கத்தோலிக்கம் பெரும் பின்னடைவைச் சந்தித்தது. அந்தக் காலகட்டத்தில் இக்னேசியஸ் லயோலா, தீவிர மிஷினரி சேவையின் மூலம் கத்தோலிக்கம் ஐரோப்பிய பொதுப்புத்தியில் இழந்துவிட்ட நன்மதிப்பைப் பெற முடியும் என நினைத்து ஆரம்பித்த அமைப்புதான் ஏசுசபை. கத்தோலிக்கப் பெரும் அமைப்பில் ஏசுசபையினரே தனிச் சுதந்தரத்துடன் பணிபுரிகிறார்கள். அவர்களுக்கென்று  தனி அதிகார அமைப்பு இருக்கிறது.  அவர்களது மிஷினரி வேலைகளால் கத்தோலிக்கம் மீண்டும் தலையெடுப்பதைக் கண்டு எரிச்சலடைந்தவர்கள் புராட்டஸ்டண்ட் மதவாதிகளும் அரசியல்வாதிகளும் மட்டுமல்ல. இதர கத்தோலிக்க மத உட்பிரிவினரும்கூட. அவர்கள் ஏசுசபையினர்மீது பல பழிகளையும் அபாண்டங்களையும் சுமத்தினர்.  மோசடி ஆவணங்கள்மூலம் மக்களுக்குச் சந்தேகங்களையும் எழுப்பினர். பிரான்ஸ் போன்ற கத்தோலிக்க தேசங்களில்கூட ஏசுசபையினர்மீது பலவிதப் பழிகள் சுமத்தப்பட்டன. இந்த வெறுப்பின் விளைவாக எழுந்ததே ‘ஏசுசபையினரின் ரகசிய உறுதிமொழி’ எனும் போலி ஆவணம். ஆனால் 1972 வரையில் புராட்டஸ்டண்ட் அரசுகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட ஓர் உறுதிமொழி இருந்தது என்பதாகவும் அது தற்போது நீக்க்கப்பட்டு, தடைப்படுத்தப்பட்டு விட்டதாகவும் பிரான்ஸ் வரலாற்றாசிரியர் ஜீன் லகோந்தே தெரிவிக்கிறார்.

இருபதாம் நூற்றாண்டிலும்கூட அமெரிக்காவில் கத்தோலிக்கர்கள் அரசியல் செல்வாக்கு பெறும் நேரமெல்லாம், இந்த ரகசியப் பிரமாணப் பிரதிகள் வீடுகளுக்கு பெயரில்லாத் தபால்களில் வரும். போட்டியிடும் கத்தோலிக்க அரசியல்வாதி இந்த ஏசுசபை சதியின் அங்கத்தினர் எனக் கூறும். 1912 முதல் கென்னடி தேர்தல் வரை அமெரிக்கத் தேர்தல் அரசியலில் இந்த மோசடி பயன்படுத்தப்பட்டுள்ளது.

1984-ல் போப் இந்தியா வந்தபோது, தமிழக ஹிந்துத்துவர்களால் இந்தப் போலி ரகசியப் பிரமாணம்,  ‘போப்புக்குச் சில கேள்விகள்’ என்ற பெயரில் மொழிபெயர்த்து பிரசுரிக்கப்பட்டது. 2003 ஜனவரியில் அன்றைய பாரதக் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், ஏசுசபையினர் நடத்திய ஒரு விழாவில் கலந்துகொண்டபோது, சில ஹிந்துத்துவர்கள் இந்த ’ரகசியப் பிரமாணத்தை’ காரணமாகக் காட்டி, கலாம் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளக்கூடாது எனக் கூறினார்கள். ஆனால், பிற ஹிந்துத்துவவாதிகள், இந்தப் பிரமாணம் போலி என்பதைக் கூறி, அதனை ஹிந்துத்துவப் பிரசாரத்தில் பயன்படுத்துவதைக் கடுமையாக எதிர்க்கின்றனர்.

இதுவரை நாம் பார்த்த அனைத்துமே மேற்கில் உருவான போலி வெறுப்பு ஆவணங்கள். இவற்றில் இருக்கும் பொதுத்தன்மை: ஒரு குழுவினரால் மனிதத் தன்மையற்ற திட்டங்கள் தீட்டப்படுகின்றன. அவை எழுதி வைக்கப்படுகின்றன. அது எப்படியோ வெளியாகிவிடுகிறது. இத்தகைய போலி வெறுப்பு ஆவணங்களுக்கு ஒப்பாக இந்தியாவில் உருவாக்கப்பட்ட ஆவணம் ‘பால்காட் பிராமண சமாஜத்தின் ரகசிய அறிக்கை’ மற்றும் ‘ஆர்.எஸ்.எஸ்ஸின் ரகசியச் சுற்றறிக்கை.’

இவற்றின் உள்ளீடு அப்படியே ப்ரோடோகால்ஸை ஒத்துள்ளது. ஆனால் இன்னும் கொடூரமாக உள்ளது. உதாரணமாக இந்தச் சுற்றறிக்கைகள் கூறுகின்றன: ‘தாழ்த்தப்பட்ட சாதிப் பெண்கள் விபசாரத்தில் ஈடுபடுத்தப்படவேண்டும். மருந்து என்கிற பெயரில் தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சார்ந்த குழந்தைகளுக்கு மன-உடல் வளர்ச்சியைச் சிதைக்கும் மருந்துகளையும் விஷங்களையும் தன்னார்வத் தொண்டர்களும் மருந்து வியாபாரிகளும் கொடுக்கவேண்டும். குடிப்பழக்கம் மூலம் தாழ்த்தப்பட்ட சாதி மக்களை நாசமாக்க வேண்டும்.’ இத்யாதி. வடகிழக்கு மாநிலங்களில் சில வனவாசிகளுக்கிடையே இந்தச் சுற்றறிக்கைகள் ஜெராக்ஸ் பிரதிகளாக இந்திய விரோதச் சக்திகளால் விநியோகிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

தெய்வநாயகம்-தேவகலா என்கிற கிறிஸ்தவப் பிரசாரக கோஷ்டியினரால் தமிழ்நாட்டில் இந்தச் சுற்றறிக்கைகள் பரப்பப்பட்டு வருகின்றன. இவை இப்போது மேலும் பல கிறிஸ்தவப் பிரசுரங்களிலும் இடம்பிடிக்கத் தொடங்கியுள்ளன. இந்தச் சுற்றறிக்கைகள் இடம்பெற்ற பிரசுரங்களை, கத்தோலிக்க சர்ச்சை சார்ந்த பெரிய சாமியார்கள் உட்பட, பெந்தகோஸ்தே சபைகளைச் சேர்ந்த போதகர்கள் வரை, தங்கள் விசுவாச மந்தைகளுக்கு சிபாரிசு செய்கிறார்கள்.

ஒன்று தெளிவாகிறது. மதப்பிரசாரம் எனும் மதம் பிடித்து அலையும் மூளைகள் வரலாற்றிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்வதில்லை. சமூக நீதியின் பெயரால் இத்தகைய வெறுப்பு மோசடிகள் செய்வது, அய்யா வைகுண்டர், அம்பேத்கர் என நீளும் இந்திய சமூகநீதிப் பாரம்பரியத்தையே மிக மோசமாக அவமதிக்கும் செயல்.

மேலதிக விவரங்களுக்கு:

* ·         வி.டி.ராஜசேகர், Blue Print to Dominate the World: Zionist Arthasastra , Dalit Voice, Dec-2005.
* ·         Steven L. Jacobs, Mark Weitzman, Dismantling the big lie: the Protocols of the elders of Zion, KTAV Publishing House, Inc., 2003



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard