New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 28. சப்தசிந்துவும், சகாப்தங்களும்.


Guru

Status: Offline
Posts: 24601
Date:
28. சப்தசிந்துவும், சகாப்தங்களும்.
Permalink  
 


28. சப்தசிந்துவும், சகாப்தங்களும்.

 


சிந்து நதியை விட சரஸ்வதி நதிக்கே ரிக் வேதம் முக்கியத்துவம் கொடுக்கிறது என்று முந்தின் பகுதியில் பார்த்தோம். இதன் அடிப்படையில் திராவிடவாதிகள் ஒரு வாதத்தை முன்வைக்கலாம்.
சிந்து நதிகரையில் வாழ்ந்தவர்கள் திராவிடர்கள். அவர்களுடன் போரிட்டு, அவர்களை விரட்டிவிட்டு வந்தவர்கள் ஆரியர்கள். அவர்கள் சிந்து நதியை ஏன் போற்ற வேண்டும்? அவர்களது தெய்வம் சரஸ்வதியாக இருக்கும் எனவே அதைப் போற்றி இருக்கலாம். சிந்து நதிக்குத் தனிபாடல் இல்லாததே ஆரியர்கள் அதன் கரையில் இருந்த மக்களை வெறுத்தற்குச் சாட்சி என்றும் திராவிடவாதிகள் வாதிடலாம்.
இந்த மாதிரி ஒரு வாதம் இதுவரை எந்த திராவிடவாதியும் செய்யவில்லை. காரணம், அவர்களுக்கு சிந்து நதி நாகரிகம் பற்றியும், மாக்ஸ் முல்லர் அவர்களே பின்னாளில் ஆரியம் என்பது ஒரு இனமல்ல என்று விளக்கம் கூறியது பற்றியும், அவருக்குப் பின் கடந்த நூறு வருடங்களில் அந்தப் பகுதியில் நடந்த ஆராய்ச்சிகள் பற்றியும் ஒன்றும் தெரியாது. எங்கேயாவது யாராவது திராவிடம் என்று என்ற ஒரு சொல்லைச் சொல்லிவிட்டால் அது போதும். அப்படி ஒருவர் சொன்னார் என்பது மட்டுமே போதும். அவருக்குப் பாராட்டு நிச்சயம். அப்படி சொன்னவர் பெயரைச் சொல்லியே இன்னும் சிறிது காலம் ஓட்டி திராவிடம் பேசி திராவக அரசியல் செய்துவிடுவார்கள்.
இவர்கள் கேட்கவில்லையென்றாலும், நாம் இந்தக் கேள்வியை எடுத்துக் கொள்வோம். சப்தசிந்து என்று சொல்லுமிடத்தே தத்துவக் கருத்து இருக்கிறது என்று சொன்னோம். அந்தக் கருத்துக்கு உறுதுணையாக ஒரு ஆதாரம் இருக்கிறது.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

டில்லியில் உள்ள இரும்புத்தூணைப் பற்றிப் பலரும் அறிந்திருப்பர். இந்தியர்கள் கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டும். இது உலக அதிசயங்களுள் ஒன்றாக இருக்கத் தகுதியுடையது. மழையிலும், வெய்யிலிலும் நின்று கொண்டிருக்கும் இந்த இரும்புத்தூண் துருப்பிடிக்கவேயில்லை. இதை ஸ்தாபித்து ஏறத்தாழ இரண்டாயிரம் வருடங்கள் ஆனாலும், இத்தனை வருட காலம் துருப்பிடிக்காத தொழில் நுட்பத்துடன் அமைக்கப்பட்ட இதைப் போன்ற இரும்பாலான பொருள் உலகில் வேறு எங்குமே இல்லை. அப்படிப்பட்ட தொழில் நுட்பம் இருந்திருந்த நாடு நம் நாடு. இன்று அந்தத் தொழில் நுட்பம் தெரிந்தவர் நம் நாட்டில் இல்லை. காரணம் என்னவென்று நாம் ஊகிக்கலாம். 
iron+pillar.bmp
இந்தத்தூணிலேயே இதை யார், எதற்கு நிர்மாணித்தார் என்ற விவரம் செதுக்கப்பட்டுள்ளது. சந்திரகுப்த விக்கிரமாதித்தன் என்னும் அரசன், பாரத நாட்டுக்கு வெளியே சென்று வாலிகர்கள் என்பவர்களை வென்று திரும்பியதைக் காட்டும் வெற்றிச் சின்னமாக இத்தகைய இரும்புத்தூணை விஷ்ணுபதம் என்னும் குன்றில் அமைத்தான் என்று இந்தத் தூணில் எழுதியுள்ளது. இதைப் பின்னாளில் வந்த முஸ்லீம் அரசன் நாசம் செய்யப் பார்த்திருக்கிறான். இந்தத் தூணைச் சுற்றியிருந்த பழைய அமைப்புகள் எல்லாம் அழிக்கப்பட்டுவிட்டன. இந்தத் தூணை அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை போலிருக்கிறது. ஆனால் இதைச் சுற்றி முஸ்லீம் கல்லறைகளை எழுப்பி விட்டான். இந்த இடத்தைக் குதுப் மினார் என்ற பெயரில் அழைக்கிறார்கள்.
இன்று வரை இந்தியாவை ஆண்டு வரும் ஆட்சியாளர்களும், தொல்பொருள் கழகமும் இங்குள்ள முஸ்லீம் அடக்குமுறைச் சின்னங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவற்றைப் பற்றி உயர்வாக அந்தச் சின்னங்களுக்கு அருகே எழுதி வைத்துள்ளனர். குதுப் மினார் என்னும் முஸ்லீம் சின்னமாகத்தான் இதைப் பிரபலப்படுத்தியுள்ளார்கள். ஆனால் இந்தத் தூணுக்குரிய முக்கியத்துவத்துவத்தைத் தரவில்லை. இந்தத் தூணில் செதுக்கப்பட்டுள்ள வரிகள் கொண்ட கல்வெட்டு ஒன்று எந்தவிதப் பாதுகாப்பும் இல்லாமல் சற்று தள்ளி ஒரு சுவரில் பதிக்கப்பட்டுள்ளது. பாரதத்தின் பெருமையான இந்தத்தூண் ஆட்சியாளர்களுக்கு அலட்சியமான ஒன்று. 
iron+pillar+verse.bmp

சமீபத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா அவர்கள் டில்லிக்கு வந்த போது நம் பாரதத்தின் தொழில் நுட்பத்துக்கும், பகைவரை வெல்லும் வலிமைக்கும் சாட்சியான இந்தத் தூணை அவருக்குக் காட்டவில்லை. எவன் நம்மைக் கணக்கில்லாமல் கொன்று தீர்த்தானோ அந்த முஸ்லீம் அரசர்களுள் ஒருவனான ஹுமாயூனது கல்லறைக்கு அழைத்துச் சென்றார்கள். இப்படிப்படட் ஆட்சியாளர்கள் இருக்கும் வரை, பாரதத்தின் உண்மை உயர்வு நமக்கே தெரியவராது. 

ஏனென்றால், இந்த இரும்புத்தூணில் செதுக்கப்பட்டுள்ள வரிகளில் இரண்டு முக்கிய சங்கதிகள் உள்ளன.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 


சப்தசிந்துவைக் கடந்து செய்யப்பட்ட போர்கள் ரிக் வேதத்தில் சொல்லப்பட்டதைப் போல, இந்த மன்னனும் செய்திருக்கிறான். சப்தசிந்து என்பதற்குப் பதில், சிந்து நதியின் ஏழு முகத்துவாரங்களைக் கடந்து இந்த மன்னன் போர் புரியச் சென்றிருக்கிறான் என்று இந்தத்தூணில் எழுதப்பட்டுள்ளது.
சிந்துநதி நீண்ட தூரம் தனி நதியாகச் செல்கிறது. அதன் முகத்துவாரத்தில் பலவாறாக பிரிந்துள்ளது. ஆனால் குறிப்பாக சப்த முகம் என்று சொல்லும்படி, ஏழு பிரிவுகளாகக் கடலில் கலக்கவில்லை. ஒருவேளை இந்த மன்னன் சென்ற போது ஏழு முகத்துவாரங்களுடன் இருந்திருக்கலாம். மேலும் சிந்து நதியை முகத்துவாரத்தில் கடப்பது எளிதாக இருந்திருக்கலாம்.
எனினும், சிந்து நதியைக் கடந்து சென்றான் என்று பொதுவாகச் சொல்லாமல், ஏழு முகங்களைக் கடந்து சென்றான் என்று ஏன் சொல்ல வேண்டும்? வேத வழியில் சப்த சிந்துவைக் கடத்தல் முக்கியமானதாக இருக்கவே இப்படி சொல்லப்பட்டதா?
முகத்துவாரம் என்று சொல்வதால், நாம் முன்பு சொன்ன தத்துவக் கருத்து வலியுறுத்தப்படுகிறது. ஒரு நதிக்கு மோட்சம் முகத்துவாரத்தில் அமைகிறது. சிந்து நதி மலையில் பிறந்து, நிலத்தில் ஓடி, முடிவில் கடலில் சங்கமிக்கிறது. கடலில் சங்கமிக்கும் இடம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அப்படி சங்கமிக்கும் இடங்களில் கடலில் குளித்து இறைவனை வழிபடுவதும், பித்ருக்களை வழி படுவதும் தமிழ் நிலங்களிலும் நடந்து வந்திருக்கிறது.
சங்கம் இருப்பாற்போல் வந்து தலைப் பெய்தோம் என்று ஆண்டாள்பாடும் பாடல் மூலம் தமிழ் அரசர்களும் சங்க முகத்தில் தலைக்குளித்து வழிபட்டிருக்கின்றனர் என்று தெரிகிறது.
சிலப்பதிகாரத்தில் கோவலன் மாதவியுடன் தங்கியிருந்த காலத்தில், கண்ணகி வருத்தமுற்று இருந்தாள். கணவனைப் பிரிந்து அவள் வருந்துவதைக் கண்ட கண்ணகியின் தோழி தேவந்தி என்பவள், சங்க முகத்தில் விரதமிருந்து குளிப்பதைப் பற்றி வலியுறுத்துகிறாள்.
காவிரி நதி கடலில் கலக்கும் சங்க முகத்தில், சூரிய குண்டம், சோம குண்டம் என்னும் இரண்டு தீர்த்தங்கள் உள்ளன.
அவற்றில் குளித்து விரதமிருந்து, அங்குள்ள மன்மதன் கோவிலிலும், மணிவண்ணன் கோவிலிலும் வழிபட்டால், அடுத்த பிறவியில் துன்பங்கள் இல்லாத போக பூமியில் பிறப்பார்கள் என்று தேவந்தி கூறுகிறாள்.
அந்த மணிவண்ணன் கோவில் இன்று புதக்ஷேத்திரமான திருவெண்காடுகோவிலாக உள்ளது.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

நதி-சங்கமுகம் என்பது இவ்வாறு தமிழ் மண்ணிலும் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. பாரதம் முழுதும் முக்கியத்துவம் பெற்றது.
சங்க முகத்தைத் தாண்டினால், வேறு பகுதிக்கு நாம் செல்வதற்கு ஒப்பாகும்.
சம்சார மார்கத்தில் இருப்பவர்களுக்கு, போக வாழ்க்கைக்கு அது சாதனம். ஞான வழியில் இருப்பவர்களுக்கு அது மோட்ச சாதனம்.
ஏழேழ் பிறப்புகளையும் தாண்டி, ஏழு உலகங்களையும் தாண்டி மனிதன் மோட்சம் என்னும் உன்னத நிலையடைகிறான்.
அதை நினைவுறுத்துவது போல சிந்துவையும் உருவகப்படுத்தி சப்த சிந்துவைக் கடந்து, இந்திரியங்களை வென்று சுதாஸ் போன்றவர்கள் உன்னத நிலை அடைந்திருக்க வேண்டும்.
அந்த சங்க முகம் சிந்துநதியைக் குறித்தது என்றால், அது பாரத நாட்டுக்கு வேறான ஒரு நாட்டுக்கு நம்மை அனுப்புவதற்கு ஒப்பாகும்.
சிந்து நதி பாரத தேசத்துக்கு மேற்கில் உள்ள அரண் போல இருந்தது.அதாவது சிந்து நதிக்கு மேற்கில் காணப்படும் நாடுகள், அங்கு வாழ்ந்த மக்கள் வேறானவர்கள்.
சிந்துநதிச் சமவெளிக்கு அப்பால் வாழ்ந்த மக்கள் வேத வாழ்க்கை வாழ்ந்தவர்கள் இல்லை என்று மஹாபாரதத்தில் பல இடங்களிலும் சொல்லப்படுகிறது.
அப்பாலிருக்கும் பகுதியிலிருந்து வந்தவர்கள் வேதத்தைத் தந்தார்கள் என்று முல்லர்-வாதிகள் சொன்னதற்கு நேர்மாறாக இது உள்ளது.
அங்கிருந்து வந்த மக்கள் என்றால், ஏன் அந்தப் பகுதியை தருமமில்லாதது என்றும், வேத மரபிற்கு மாறான வாழ்க்கை வாழ்ந்தவர்கள் என்றும் ஒதுக்க வேண்டும்.?
இப்படிச் சொன்னவர்களுள் முக்கியமானவர், பகுதி  13  இல் பார்த்தோமே - சோழர் பரம்பரையில் வந்தவரும், ராமன், பாகீரதன் ஆகியோருக்கு முன்னோனாகவும் இருந்த மாந்தாதா என்னும் மன்னன்.
அந்த மன்னன் இந்திரனிடம் அந்தப் பகுதிகளைப் பற்றிக் கேட்கிறான்.(மஹாபாரதம்  12-64).
ஆரிய அரசர்களது நாட்டில் பிராம்மண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திர வர்ணங்களிலிருந்து தோன்றிய பல குடிகள் செய்யும் செயல்களை நான் அறிவேன். ஆனால் சிந்துவுக்கு மேற்கே வாழும் யவனர்கள், கிராதர்கள், கந்தர்வர்கள், சாகர்கள், துஷாரர்கள், கண்கர்கள், பதவர்கள், மத்ரகர்கள், புலிந்தர்கள், ரமதர்கள், காம்போஜர்கள் போன்றோர் செய்யும் செயல்கள் என்ன?" என்று கேட்கிறார்.
இந்த மக்கள் வேத வழியில் வாழ்ந்தவர்கள் இல்லை.
மஹாபாரதத்தில் வேறு இடங்களில் இவர்கள், மாமிசம் உண்ணுதலும், மனம் போன படி ஆண் பெண் உறவு கொள்ளுதலும், திருடு, கயமை போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் என்றும் சொல்லப்படுகிறது.
சிந்துவைத் தாண்டிச் சென்றால் அந்த மக்களைச் சந்திக்கலாம்.  
சிந்துவின் சப்த முகங்களைத் தாண்டிச் சென்ற விக்கிரமாதித்ய மன்னன் வேறு உலகத்துக்குத் தாண்டிய செயலைச் செய்தவனாகிறான்.
அவன் சிந்துவின் ஏழு முகங்களைக் கடந்து அன்னியரை எதிர் கொண்டு, அவர்களை வெற்றி பெற்றான்.
அப்படிப் பெற்ற வெற்றியைக் கொண்டாடியிருக்கிறான்.
அந்த வெற்றியின் நினைவாக இரும்புத் தூணை நாட்டி இருக்கிறான்.
அந்த வெற்றியின் காரணமாக அந்த மன்னன் பெயரில் சகாப்தம் என்று வருடக் கணக்கும் தோற்றுவிக்கப்பட்டது.
இந்த மன்னன் பெயரில் விக்ரம சகாப்தம் என்னும் சகாப்தம் எழுந்தது. இன்றைக்கும் இந்த சகாப்தக் கணக்கை பஞ்சாங்களில் காணலாம்.
நடை பெரும் வருடத்துடன், விக்ரம சகாப்தம் ஆரம்பித்து 2067 வருடங்கள் ஆகியுள்ளன.
அதாவது இந்த அரசன், வெளி நாட்டவர்களை வென்று 2067 வருடங்கள் ஆகி விட்டன.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

ஆனால் நடைமுறையில் இன்று இந்த சகாப்தம் இல்லை.
காரணம் இந்த அரசனுக்குப் பிறகு இவனது பேரனான சாலிவாஹனன்என்பவன் தானும் வெளி நாட்டுக்குப் படையெடுத்துச் சென்று வெற்றியுடன் திரும்பினான்.
அவன் வெற்றி பெற்ற வருடத்திலிருந்து சாலிவாஹன சகாப்தம்என்னும் வருடக் கணக்கை பாரதம் முழுவதும் கடை பிடித்து வருகிறோம்.
இந்த வருடக் கணக்கும் இந்தியப் பஞ்சாங்கங்களில் குறிக்கப்படும்.
இந்த சகாப்தம் ஆரம்பித்து 1932 வருடங்கள் ஆகின்றன.
இந்த வருடக் கணக்குகள் திராவிடவாதிகளுக்குப் பிடிக்காதது.
ஆரிய அரசன், வட இந்திய அரசன்  அவன் பெற்ற வெற்றிச் சின்னமாக வருடக் கணக்கை ஆரம்பிட்துள்ளான்.
அதை நாம் பின்பற்றுவதா?
ஆரியத் திணிப்புக்கு இது ஒரு அத்தாட்சி அல்லவா என்பது அவர்கள் வாதம். அதன் பயனாக திருவள்ளுவர் ஆண்டை இவர்கள் அறிமுகம் செய்துவிட்டனர்.
இந்தச் செயல் அறியாமையின் உச்சக் கட்டம் என்று கூறலாம்.
எதற்காக அப்படி அமைத்தார்கள் என்று தெரிந்து கொண்டால்,மெகஸ்தனிஸ் அவர்கள் கூறினது போல (பகுதி 27) பாரதத்தின் மீது யாரும் படையெடுத்து வந்ததில்லை (அன்றுவரை) என்று தெரிந்து கொள்ளலாம்.
சகாப்தங்களின் உண்மை நிலவரத்தைப் பார்ப்போம்.
விஞ்ஞான சர்வஸ்வம் என்னும் நூலில் இதற்கு விளக்கம் தரப்பட்டுள்ளது. பாரத மண்ணைச் சேர்ந்த மக்கள், பாரதீயம் அல்லாத, மற்றும் பாரதீயத்திற்கு எதிர்மாறான கொள்கைகளை உடைய அன்னிய நாட்டவரைப் படை பலத்தால் வென்றால், எந்த மன்னன் அப்படி வென்றானோ அவன் பெயரில் ஆண்டுகள் சொல்லப்படவேண்டும்.
அதை அந்த மன்னன் பெயரில் சகாப்தம் என்று அழைத்தனர்.
கலி யுகம் பிறந்தது முதல் இன்று வரை மூன்று மன்னர்கள் அவ்வாறு அன்னியர்களை வென்றிருக்கின்றனர்.
கலியுகம் ஆரம்பித்து 5112 வருடங்கள் ஆகின்றன.
இடைவிடாமல் கணக்கிடப்பட்டு வந்திருக்கும் கணக்கு இது.
சிந்து சமவெளி நாகரீகம் என்று சொல்லப்படும் காலத்திற்குச் சற்றுமுன் இது தொடங்கி இருப்பதைக் கவனிக்கவும்.
அதாவது, ஒரு பாரத மன்னன், வேத மரபுக்கு முரணான வாழக்கையை வாழ்ந்தவர்களை வெற்றி கொண்ட பிறகுதான், சிந்து சமவெளி நாகரிகம் ஆரம்பித்திருக்கிறது. 
அதாவது, வேதம் கொடுத்த ஆரியர்கள் வந்தார்கள் என்று சொல்லப்படும் காலத்துக்கு முன்பேயே, திராவிடர்கள் என்று சொல்லப்பட்டவர்கள் வாழ்ந்த பகுதிகளில் வேத- தரும வாழ்க்கை வாழப்பட்டிருக்கிறது.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

அவ்வாறு ஜெயித்த முதல் அரசர், பாரதப் போரில் வெற்றி பெற்ற பாண்டவர்களது மூத்தவரான யுதிஷ்டிரர்.
கலியுகம் பிறந்தது முதல் யுதிஷ்டிர சகாப்தம் ஆரம்பித்தது.
இந்தக் குறிப்பால், பாரதப் போரில் பாண்டவர்கள் அன்னியர்களை முறியடித்திருக்கின்றனர் என்று தெரிகிறது.
பாரதப்போர் முடிந்தபிறகே சிந்து சமவெளி நாகரிகம் என்று இவர்கள் கூறும் நாகரிகத்தின் காலம் (கி-மு-3000) ஆரம்பித்திருக்கிறது.
இதன் மூலம், பாரதப் போரின் விளைவாக, சிந்து நதிப் பகுதியில் வேத தரும வாழ்க்கை வாழாத அன்னியர்கள் விரட்டப்பட்டு, அங்கு பாரதீயர்கள் (வேத- தரும வாழ்க்கை வாழ்பவர்கள்) குடியிருக்க ஏதுவாக சூழ்நிலையை ஏற்படுத்தி இருக்கிறார்கள் என்றும் தெரிகிறது.
யுதிஷ்டிரருக்குப் பிறகு விக்கிரமாதித்யர் என்று மேலே குறிப்பிடப்பட்ட அரசர்,  அரேபியப் பகுதிகளுக்குச் சென்று வெற்றிக் கொடி நாட்டித் திரும்பினார். வாலிகர்கள் என்னும் மக்களை அவர் வெற்றி பெற்றார் என்று இரும்புத் தூணிலும் எழுதி இருக்கிறார். அவர் அரேபியாவை வெற்றி பெற்ற விவரம் அடங்கிய ஒரு பட்டயம் இன்றும் (இன்னும்) முஸ்லீம்களின் முக்கிய இடமான மெக்காவில் உள்ள காபாவில் இருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இந்த அரசனால் அங்கு இந்து மதம் தழைத்தைப் பற்றிக் கூறும் அராபியப்பாடல்கள் இருக்கின்றன. இவை இஸ்லாம் என்னும் மதம் ஸ்தாபிக்கப்படுவத்ற்கு முன்பே பாடப்பட்டவை. இதன் மூலம் விக்கிரமாதித்யன் வென்ற வாலிகர்கள் அரேபியப்பகுதியை சேர்ந்தவர்கள் என்று தெரிகிறது.
இந்த மன்னனது பேரனான சாலிவாஹனன் மத்திய ஐரோப்பியப் பகுதியில் அன்னியர்களை முறியடித்தார். எனவே இவர் பெயரில் சாலிவாஹன சகாப்தம் இன்று வரை 1932 ஆண்டுகளாக இருந்து வந்திருக்கின்றது.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

இவருக்குப் பின் எந்த இந்திய மன்னரும் அன்னியர்களை வெல்லவில்லை. ஆனால் அப்படி ஒரு காலம் வரும் என்றும் கணித்துள்ளார்கள். அதன்படி இன்னும் மூன்று சகாப்தங்கள் பாக்கி இருக்கின்றன.
இப்படி சகாப்தங்களைப் பின்பற்றும் முறை தமிழகத்தையும் சேர்த்து பாரதம் முழுவதும் இருந்திருக்கின்றது.
தமிழ் மூவேந்தர்களும் தாங்கள் செதுக்கிய கல்வெட்டுகளில் ஆண்டு விவரம் குறிக்கையில் சாலிவாஹன சகாப்தம் என்றே குறிப்பிட்டுள்ளனர்.
அவர்களுக்கு இல்லாத தமிழ்ப் பற்று, தமிழ் மானம், சுய மரியாதை இந்தத் திராவிடவாதிகளுக்கு வந்துவிட்டது.
இங்கு ஒரு கேள்வி கேட்கலாம். ராஜராஜன், ராஜேந்திரன் போன்ற சோழ அரசர்கள் கீழை நாடுகளுக்குத் திக் விஜயம் சென்று அவற்றை வெற்றி பெற்றுத் திரும்பவில்லையா? அவர்கள் பெயரில் சகாப்தம் ஆரம்பித்திருக்கலாமே?
அந்த எண்ணம் அவர்களுக்கு வரவில்லை.
காரணம், யாரை வெற்றி பெற்றனர் என்பது முக்கியம்.
இதைக் கவனமாக்ப் படிக்கவும்.
வேதத்தை ஆதாரமாகக் கொண்டு வேத- தரும நெறியில் வாழும் பாரதீயர்கள், அப்படிப்பட்ட வேத- தரும நெறியில் வாழாத மக்களை வென்றால் அது சகாப்தம் என்று கொண்டாடப்படத்தக்கது என்பது இந்த வருடக் கணக்கின் அடிப்படை.
அப்படி வேத- தரும நெறியில் வாழாத மக்களுக்கு ஒரு பெயர் உண்டு.
அது ‘மிலேச்சர்’.
அதாவது ஆரியர்களுக்கு எதிரிகள், அல்லது எதிர்ப்பதம் மிலேச்சர் என்பது.
தஸ்யு அல்ல.

நமக்குப் புரியும் வகையில் சொல்வதென்றால்,
முஸ்லீம்கள் மிலேச்சர்கள்.
கிருஸ்துவர்கள் மிலேச்சர்கள்.
ஆங்கிலேயர்கள் மிலேச்சர்கள். 
நம்மை முஸ்லீம்கள் ஆக்கிரமிப்பு செய்தது முதல், நம் நாடு மிலேச்சர் ஆளுகைக்குக் கீழ் வந்து விட்டது.
சோழர்கள் கீழை நாடுகளை வென்றிருந்தாலும், அந்த நாடுகள் மிலேச்ச நாடுகளாக இல்லை.
மிலேச்ச நாடுகள் என்று சொல்லப்படவில்லை.
ஹிந்து மதத்தைச் சார்ந்து உண்டான புத்த மதமே அந்த நாடுகளில் இருந்தது. எனவே சோழ மன்னர்கள் சகாப்த கர்தாக்களாக ஆகவில்லை. 


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

க்ஷத்திரிய தர்மத்தின் ஒரு பகுதியாக, படை பலத்தால், வேத-தரும வாழ்க்கை வாழாத அன்னியர்களை வென்று அவர்களிடையே வேத தருமத்தை நாட்டியதைக் குறிக்கும் ஒரு வழக்கத்தை, சாத்வீகமான திருவள்ளுவரை முன்னிட்டு துவங்கி இருக்கிறார்கள், இந்தத் திராவிடவாதிகள்.

 

தரும சாத்திரத்தைப் பரப்புவதற்காக, உத்தர வேதம் (திருக்குறளின் மற்றொரு பெயர்) என்று வேதத் தருமக் கருத்துக்களை எழுதியதிருவள்ளுவர் இன்று இருந்திருந்தால், தன் பெயரில் இப்படி வருடக் கணக்கைத் துவக்கியிருப்பதை ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார், சாலிவாஹன சகாப்தத்தை ஒழித்ததை ஒத்துக் கொண்டிருக்க மாட்டார்.
மேலும் அவர் பிறந்த வருடம் யாருக்கும் தெரியாது.
அப்படியிருக்க அவர் பிறந்த வருடம் என்று ஒன்றை இவர்களாகவே முடிவு செய்து வருடக் கணக்கு ஆரம்பித்திருக்கிறார்கள்.
சகாப்தங்களைப் பொருத்தவரை, மன்னனது பிறந்த வருடம் அங்கு கணக்கில் கொள்ளப்படவில்லை.
அவன் அன்னியர்களை வெற்றி பெற்ற வருடம்தான் அங்கே கணக்கிடப்படுகிறது.
அது வேத தருமத்திற்குக் கிடைத்த வெற்றி என்று கருதப்பட்டது.
வேத தருமத்தைப் படை பலத்தால் நாட்டியதற்குக் கிடைத்த வெற்றி என்று கருதப்பட்டது.
அது பாரதம் முழுவதற்கும் கிடைத்த வெற்றி என்று கருதப்பட்டது.
பாரதம் முழுவதும் வேத-தரும வாழ்க்கை பரவி இருந்திருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.
தமிழ் மக்களும் வேத தரும வாழ்க்கையைப் பின் பற்றியிருக்கவே இந்த சகாப்தக் கணக்கை அவர்களும் கடைபிடித்திருக்கின்றனர்.
படையெடுத்து வந்தவனால் விரட்டப்பட்ட மக்களாக இருந்திருந்தால், தமிழர்கள் இதைப் பின்பற்றியிருக்க மாட்டார்கள்.
இந்த வழக்கம் பாரத்தில் மட்டும் இருக்கவே, அதை ஒட்டிய வட மேற்குப் பகுதிகள் மிலேசர்கள் வாழ்ந்த நாடுகள் என்றும் சொல்லப்படவே வேதம் கொடுத்த மக்கள் தோன்றியது இந்தப் பாரத பூமியில் என்றும் புலனாகிறது.
இங்கு சப்த சிந்து ஒரு எல்லை போலக் கருதப்பட்டிருக்கிறது.
சப்த சிந்துவைத் தாண்டினால் கலாச்சாரமே வேறு.
அந்தப் பக்கம் இருந்த மக்களது குணங்களே வேறு.
அந்தக் குணங்கள் உயரிய குணங்கள் அல்ல.
எனவே அந்தப் பகுதியில் நடை பெற்ற சம்பவங்கள், வெவ்வேறு குணங்களுக்கிடையே நடந்த சண்டையைக் குறிப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது.
இந்தப் பின்னணியில், ரிக் வேதத்தில் காணப்படும் ஆரிய  தஸ்யுவேறுபாடுகளை ஆராய வேண்டும்.


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard