New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 26. சுதாஸும், சம்பூகனும்.


Guru

Status: Offline
Posts: 24601
Date:
26. சுதாஸும், சம்பூகனும்.
Permalink  
 


26. சுதாஸும், சம்பூகனும்.

 


ரிக் வேதத்தில் அதிகமாகச் சொல்லப்படுவது சுதாஸ் என்னும் அரசன் செய்த போர்கள் ஆகும். இந்த அரசனைப் பற்றி பகுதி  23 இல் பார்த்தோம். இவனுக்கு இந்திரனது பரிபூரண ஒத்துழைப்பு கிடைத்தது. இந்த அரசனுக்கு அவன் மந்திரியான வசிஷ்டர் கூடவே இருந்து உதவினார்.
வசிஷ்டர் ஒரு முனிவர். ராமனுடைய குலத்துக்கு குருவாகவும் இருந்தவர். அந்த வசிஷ்டரைப் பற்றியும் ரிக் வேதம் துதி செய்கிறது. வசிஷ்டர் கேட்டுக் கொள்ளவே சுதாஸுக்கு இந்திரன் உதவி செய்தான் என்றும் பாடல் வரிகள் ரிக் வேதத்தில் உள்ளன. வசிஷ்டரது உதவியால் சுதாஸ் பேதம் என்பவனை ஒழித்தான் என்றும் ரிக் வேதம் கூறுகிறது(7-83). பேதம் என்றால் என்ன என்று நமக்குத் தெரியும். பேதம் என்றால் என்றால் வித்தியாசம் என்று பொருள். இதுவரை இந்தத் தொடரில் நாம் அறிந்த இந்திரனைப் பற்றிய கருத்துகளிலிருந்தும், வேதம் தத்துவ ஞானமாக விளங்குகிறது என்னும் ஹிந்து மதக் கோட்பாட்டின்படியும், பேதம் என்றால் நமக்குத் தெரிய்ம் அர்த்தத்தின் படியும், சுதாஸ் பேதத்தை எதிர்த்துச் செய்த ‘யுத்தம்’ எப்படிப்பட்ட யுத்தமாக இருந்திருக்கும் என்று நாம் ஊகிக்கலாம்.
நமது ஊகத்துக்கு உரம் ஊட்டுவது அவன் தச-ராஜர்கள் (தசம் என்றால் பத்து என்று பொருள்)  என்னும் பத்து அரசர்களை அழித்தான் என்று வரும் வர்ணனைகள். இந்த அரசர்களை சப்த சிந்துவைத் தாண்டி வந்து அழித்தான் என்றும் வருகிறது.
இதற்குப் பின் இருக்கும் தத்துவ ஞானத்தைப் பார்ப்போம். இந்திரன் என்பவன் ஐந்து இந்திரியங்களுக்கு, அதாவது ஐம்புலன் நுகர்ச்சிகளுக்குத் தலைவன். இவை தவிர இன்னும் ஐந்து நுகர்ச்சிகள் நம்மை ஆட்டி வைக்கின்றன. இவை யாவை என்று அறிய கீதையில் கிருஷ்ணர்சொல்வதைக் கவனிக்க வேண்டும்.
கீதை இரண்டாவது அத்தியாயத்தில் கிருஷ்ணர், நம் ஐம்புலன்களையும் அடக்க வேண்டியதன் அவசியத்தைக் கூறுகிறார். (கீதை 2- 62 &63).
ஒரு ஆமை எப்படி தன் உறுப்புகளை உள்ளிழுத்து அடக்கிக் கொள்கிறதோ அது போல நாமும் ஐம்புலன்களையும் அடக்கிக் கொள்ளவேண்டும். ஐம்புலன்களும் ஐந்து எதிரிகள் போன்றவர்கள். இந்த ஐந்து எதிரிகளை அடக்கவில்லை என்றால், சங்கிலித் தொடர் போல மேலும் ஐந்து எதிரிகள் உண்டாவார்கள். ஆக மொத்தம் பத்து எதிரிகள் ஒரு மனிதனுக்கு உண்டு.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

ஐம்புலன் நுகர்ச்சியை ஒருவன் அடக்கவிலை என்றால், அவற்றில் - அதாவது போகத்தில் அவன் அமிழ்ந்து விடுவான். அதனால், நுகர்ச்சியில் பற்று ஏற்படும். போகத்தில் உண்டாகும் பற்று 6- வது எதிரி.
பற்று ஏற்படுவதால், இன்னும் வேண்டும் என்று ஆசை ஏற்படும். ஆசை 7-ஆவது எதிரி.
ஆசைப்பட்டது கிடைக்கவில்லை என்றால், அல்லது ஆசைக்கு இடையூறு வந்தால் கோபம் வரும். கோபம் 8-ஆவது எதிரி.
கோபம் வந்தால் அறிவு வேலை செய்யாது. என்ன செய்கிறோம் என்பது தெரியாமல் தவறிழைக்க ஆரம்பித்து விடுவோம். எனவே அறிவு இழப்பு 9- ஆவது எதிரி.
அறிவு இழப்பு ஏற்பட்டால், நினைவு தடுமாறி விடும், எந்த புலன்களை நாம் அடக்க வேண்டுமோ அந்த புலன்கள் நம்மை அடக்க ஆரம்பித்துவிடும். அதனால் எது சரி, எது தவறு என்று ஆராய்ந்து பார்க்கும் விவேக புத்தி அழிந்து விடும். ஆகவே அழிந்துபடும் விவேகம் 10 ஆவது எதிரி.
விவேகம் அழிந்தால் மனிதன் தன் நிலையிலிருந்து வீழ்ச்சி அடைகிறான். முன்பு அசுரன் என்றால் யார் என்று பார்த்தோமே, (பகுதி -21) பிறருக்குத் தீங்கு இழைப்பதில் விருப்பமும், கருணை இல்லாத மனமும் கூடிய அசுர சுபாவம் மனிதனுக்கு வந்து விடும். மனிதனானவன் அங்கு அசுரனாவான். அவன் மனிதனாக ஆவதும், அல்லது தேவனாக ஆவதும், இந்த 10 எதிரிகளை வெல்வதில் இருக்கிறது. அசுர குணத்தைக் கொடுக்கும் இந்தப் பத்து எதிரிகளுக்கும் எதிரி இந்திரன் ஆவான். எனவே இந்திரன் ஆதரவுடன், சுதாஸ் பத்து எதிரிகளை வெற்றி கொண்டான்.
பத்து எதிரிகளை வெற்றி கொள்ளவேண்டிய அவசியத்தை அர்ஜுனனுக்குக் கிருஷ்ணர் கூறினார். அன்று சுதாஸுக்கு அவனது குல குருவான வசிஷ்டர் கூறி இருந்திருக்கிறார். அவரது உபதேசப்படி, இந்திரனைத் துதித்து, சரி  தவறு என்பதற்குள் உள்ள ‘பேதத்தைஅறிந்து, தசராஜர்களான எதிரிகளை சுதாஸ் வென்றிருக்கிறான்.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

இந்திரியங்களால் நமக்கு ஏற்படும் பத்து கெடுதல்களே பத்து எதிரிகள். அந்த எதிரிகள் நம்மைப் பிணைத்து அடிமைப்படுத்தி விடுகின்றன என்று யஜூர் வேதத்தின் பகுதிகளான தைத்திரிய சம்ஹிதையும், வாஜஸனேயி சம்ஹிதையும் கூறுகின்றன.
ரிக் வேதத்தில் தசராஜர்கள் என்ற சொல்லாட்சியைப் பார்க்கிறோம். அதற்கொப்பாக, தைத்திரிய சம்ஹிதையில் ‘ராஜன்யன்’ என்னும் சொல்லாட்சியைப் பார்க்கிறோம். தசராஜன் என்று ரிக் வேதததில் வரும் சொல்லிலும், ராஜன்யன் என்று சம்ஹிதையில் வரும் சொல்லிலும், ‘ராஜன்’ என்னும் சொல் வருகிறது. ராஜன் என்றால் அரசன் என்று என்று எளிதாகப் பொருள் கொண்டுவிடுவோம். ஆனால் ராஜன் என்றால் என்ன பொருள்?
ரஞ்ஜனத்தைத் தருபவன் ராஜன் எனப்படுவான் என்பது இந்த சம்ஸ்க்ருதச் சொல்லின் பொருள். ரஞ்ஜனம் என்றால் சந்தோஷம்அல்லது மகிழ்ச்சி என்பது பொருள். மக்களுக்கு ரஞ்ஜனத்தைத் தருவதால், அரசனை ராஜா என்கிறார்கள். புலன்கள் மூலம் கிடைக்கும் நுகர்ச்சி மனிதனுக்கு சந்தோஷத்தைத் தருகிறது என்பது உண்மை. அதனால் அந்தப் புலன்கள் ராஜாக்களாகச் செயல் படுகின்றன என்கிறார்கள். ஆனால் இப்படிக் கிடைக்கும் மகிழ்ச்சி, நம்மைத்  தளைகளில் சிக்க வைத்து விடும். எனவே இவற்றின் பிடியிலிருந்து தப்ப வேண்டும். இந்தக் கருத்தை தைத்திரிய சம்ஹிதை கூறுகிறது (2-4-13-1)


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

“கர்பத்தில் இந்த ராஜன்யர்கள் இருக்கும் போதே தேவர்களும் இவர்களைப் பார்த்து பயப்படுகிறார்கள். ராஜன்யர்கள் இவனைக் கர்ப்பத்திலேயே கட்டிப் போட்டு விடுகிறார்கள். அதனால் பிறக்கும்போதே ஒருவன் ராஜன்யனது அடிமைத்தளையுடன் பிறக்கிறான். அவன் தளைகள் இல்லாமல் இருக்க  வேண்டும் என்றால், இந்திர- பார்ஹஸ்பத்ய ஹோமம் செய்ய வேண்டும். இந்த ஹோமத்தினால், இந்திரனும், பிருஹஸ்பதி என்னும் குருவும் துணை இருந்து ராஜன்யனது தளையிலிருந்து விடுவிப்பார்கள். இதனால் என்றென்றைக்கும் ஒருவன் தளையிலிருந்து விடுபட்டவனாவான்.
இந்திரியங்களால் நாம் ஆட்டுவிக்கப்பட்டு, அதனால் செயல்களைச் செய்து, கர்ம வினைச் சக்கரத்தில் மாட்டிக் கொள்கிறோம். அதிலிருந்து தப்ப, நமக்கு வழிகாட்ட குருவினது (பிருஹஸ்பதி என்பவர் தேவர்களது குரு ஆவார்.) துணையும், இந்திரனது அருளும் தேவை.
நாம் கருவில் இருக்கும்போதே இந்திரியங்களால் கட்டுப்பட்டவர்களாக இருக்கிறோம். அதனால் இந்த இந்திரியங்களை ராஜன்யன் என்ற பெயரில் அரசன் என்று அழைத்தனர். அரசன் ரஞ்ஜனம் செய்தும் மகிழ்விக்கிறான். தன் சொல்படி நம்மை ஆட்டியும் வைக்கிறான். அரசன் கட்டளையை மீற முடியாது. அதுபோல இந்திரியங்கள் சொல்படி நாம் நடக்கிறோம். அவற்றுக்கு அடிமையாக இருக்கிறோம் என்பதை சம்ஹிதை காட்டுகிறது.
அப்படி கட்டப்பட்டு பிறக்கும் நாம் இந்த இந்திரியங்கள் என்னும் தளையிலிருந்து விடுபட இந்திர- பார்ஹஸ்பத்ய ஹோமம்’ செய்ய வேண்டும். குருவின் உபதேசத்துடன், இந்திரியங்களை அடக்க வேண்டும். அப்படிச் செய்தால் நாம் என்றென்றும் ராஜன்யனது தளையிலிருந்து விடுபட்டவர்கள் ஆவோம்.
தைத்திரிய சம்ஹிதையில், இந்தக் கருத்து குரு முகமான உபதேசமாக வெளிபடையாக உள்ளது. இதையெல்லாம் ஐரோப்பியர்கள் எங்கே புரிந்து கொண்டார்கள்? இந்தக் கருத்தையே பூடகமாக ரிக் வேதம் கூறுகிறது.
பத்து அரசர்கள் என்னும் எதிரிகளை குருவான வசிஷ்டர் துணையுடன், இந்திரன் அருளுடன், பேதம் அறிந்து அதாவது பாகுபடுத்தி அறிந்துசுதாஸ் வெற்றி கொண்டான். அந்த சுதாஸுக்குப் பட்டாபிஷேகம் செய்தவர் வசிஷ்டர் என்று மஹாபாரதத்தில் சொல்லப்படுகிறது. அதே சுதாஸை சூத்திரன் என்றும் மஹாபாரதம் அழைக்கிறது. ஏன்? அவன் ஏராளமான பொன்னும், பொருளூம் கொடுத்து ரிஷிகளையும், கற்றவர்களையும் குஷிப்படுத்த விரும்பினான். அவர்களைக் குளிர்வித்ததன் மூலம் அவனுக்கு ஞானம் கிடைத்துவிடாது. ஞானம் என்பதைப் பொருளால் வாங்க முடியாது. அதை அவனே முயன்று, தவமிருந்துப் பெற வேண்டும். அதைத்தான் சூத்திரன் என்று வரும் சுதாஸ் பற்றிய குறிப்பு தெரிவிக்கிறது.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

பிரம்ம ஞானம் பெற ஆசைகளை அடக்க வேண்டும். மேற்கூறிய பத்து அரசர்களை சுதாஸ் அடக்கியது போல அடக்க வேண்டும். அப்படி அடக்காமல் பிரம்ம ஞானத்தைத் தேடி தவம் புரிந்தவன் சம்பூகன்.அவனை ராமர் அழித்தார் என்பது உத்தர ராமாயணத்தில் வரும் கதை.சம்பூகன் சூத்திரன் என்பதால், சூத்திரன் தவம் செய்யக் கூடாது என்று ராமர் அவனை அழித்தார் என்பது திராவிடவாதிகள் கடுமையாக விமரிசிக்கும் ஒரு கதை. திராவிடவாதிகள், இந்தக் கதையைக் கொண்டே தமிழர்கள் மனத்தைத் திரித்தும், பிராம்மண துவேஷத்தை வளர்த்தும் ஆரிய  திராவிட சண்டையை மெய்ப்பிக்க முயலுகிறார்கள்.
முதலில், ராமர் பிராம்மணன் இல்லை. அவர் க்ஷத்திரிய குல அரசன்.க்ஷத்திரியன் என்றால், க்ஷத்தைப் போக்கிக் காப்பாற்றுபவன் என்பது பொருள். க்ஷத்து என்றால் துன்பம் என்று அர்த்தம். எவன் பிறரது துன்பத்தைப் போக்கி, அவர்களைக் காபாற்ற வேண்டி, அதற்காகத் தன் உயிரையும் கொடுக்கத் தயாராக இருக்கிறானோ அவன் க்ஷத்திரியன்என்ப்படுவான் என்பது க்ஷத்திரியனைப் பற்றி பீஷ்மர் கூறும் விளக்கம்.(மஹாபாரதம், சாந்தி பர்வம், அத்தியாயம் 18.). அதாவது துன்பத்திற்குக் காரணமானவர்களைத் தண்டித்து, மக்களைக் காபாற்றுபவன் க்ஷத்திரிய அரசன் ஆவான். ராஜன் என்னும் சொல்லின் பொருளையும் இங்கே இணைத்துக் கொள்ளவும்.

 

துன்பத்துக்குக் காரணமானவன் சம்பூகன். அதைச் சொல்லி அவனுக்குத் தண்டனை கொடுக்க வேண்டும் என்று சொன்னவர்  நாரத முனிவர்.அவரது பூர்வீகம் என்று பார்த்தால் அவர் ஒரு பணிப்பெண்ணுக்குப் பிறந்தவர். அதனால் இங்கு சூத்திர நிந்தை செய்தவர் என்று எந்த பிராம்மணனையும் சொல்ல இடமில்லை. சம்பூகன் செய்தது தவறு என்று சொன்னது ஒரு பணிப்பெண்ணின் மகன். அதற்குத் தண்டனை கொடுத்தது ஒரு க்ஷத்திரிய அரசன்.
ராமரது ஆட்சியில் நான்கு வர்ணத்தவர்களும் திருப்தியுடனும், மகிழ்ச்சியுடனும் இருந்தனர் என்று ராமாயணம் கூறுகிறது.
மேலும் ராமர் சூத்திரர்களுக்கு எதிரி என்றால், அவர் வேடனானகுகனைக் கட்டித் தழுவி ‘குகனோடு ஐவரானோம் என்று எப்படிச் சொல்லியிருக்க முடியும்?
ராமர் சூத்திரர்களை அழிப்பவராக இருந்தால், வால்மீகி எப்படி ராமாயணத்தை எழுதியிருக்க முடியும்? வால்மீகி வழிப்பறிக் கொள்ளை செய்து வந்தவர். பிறகு தவம் செய்து முனிவரானவர். அவரது ஆசிரமத்தில்தான் ராமனது பிள்ளைகள் பிறந்தனர். அவரிடம்தான் சீதை அடைக்கலம் கொண்டிருந்தாள். திருடனான வால்மீகி ஒரு தபஸ்வியானது எவ்வாறு? ஒரு சம்பூகன் தவம் செய்ததை ராமர் தடுத்தார் என்றால், திருடனான வால்மீகி ஒரு தவ ஞானியானதை ராமர் ஏன் தடுக்க வில்லை? வால்மீகிக்கு ஒரு நீதி? சம்பூகனுக்கு ஒரு நீதியா?
valmiki.bmp
வால்மீகி அவர்கள் தவம் புரிந்து முனிவரானது மட்டுமல்லாமல், ராமாயணக் கதையையே எழுதி இருக்கிறார். அதை வேதப் புத்தகமாக இன்று வரை கருதி வருகிறார்கள். இன்றைக்கும் ராமாயணம் பாராயணம் செய்யும் போது முதலில் வால்மீகியை வணங்கிவிட்டே தொடங்குவர். “வந்தே வால்மீகி கோகிலம்”  மதுரமான மொழியால் ராம காவியம் பாடிய வால்மீகி என்னும் குயிலுக்கு நமஸ்காரம்  என்று ஒரு காலத்தில் திருடனாக இருந்தவனுக்கு இன்றுவரை மரியாதை கொடுக்கப்படுகிறது.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

சம்பூகன் என்னும் சூத்திரன் தவம் செய்கிறான். 
அது தவறு என்று ராமனிடம் ”போட்டுக் கொடுத்தது” நாரதர்.
அந்த நாரதரே தன்னிடம் வழிப்பறி செய்ய முயன்ற ரத்னாகரனுக்கு (வால்மீயின் ஆரம்ப காலப் பெயர்), புத்திமதி சொல்லி, அவனைத் தவம் செய்ய ஊக்குவித்தார்.. 
வால்மீகி தவம் செய்து முனிவரான பின்னும், ராம காதையை அவருக்குச் சொன்னது நாரதரே. 

சம்பூகன் ஒரு வேடன். அவனைச் சூத்திரன் என்று சொல்லி, அதனால் அவன் தவம் செய்வது தவறு என்று சொன்ன நாரதரே, திருட்டுத் தொழிலில் ஈடுபட்டிருந்த ரத்னாகரனை (வால்மீகியை) தவம் செய்யும் படி தூண்டியிருப்பதால், சம்பூகன் தவம் செய்யக்கூடாது என்று தடுத்திருப்பதற்கு வேறு ஒரு காரணம் இருக்க வேண்டும் என்று தெரிகிறது. சூத்திரன் என்பது காரணமாக இருக்க முடியாது.
மேலும் வால்மீகி தவம் புரிந்து முனிவரானதும், சம்பூகன் வாழ்ந்த சமகாலத்திலேயே நடந்திருக்கிறது. எனவே ஒருவன் சூத்திரன் என்று இன்று நாம் நினைக்கும் ஜாதி காரணமாக ராமர் சம்பூகனை வதைக்கவில்லை. அவன் சூத்திரன் என்று கருதப்பட்டது, சுதாஸ், ஜானஸ்ருதியின் கொள்ளுப் பேரன் போன்ற சிறந்த அரசர்களும் சூத்திரன் என்று அழைக்கப்பட்ட காரணத்தைப் போன்றதாகும். ஆசை வயப்பட்டு, பொருளைக் காட்டி குரு உபதேசம் பெற முயன்றவர்கள் சூத்திரர்கள் என்று அழைக்கப்பட்டார்கள்.
இதே கருத்து மஹாபாரதத்தில் பிருகு முனிவரும், பரத்வாஜ முனிவரும்பேசும் உரையாடலிலும் வருகிறது. பிருகு முனிவர் பிராம்மணன், சூத்திரன் என்னும் இரு வர்ணத்தவருக்கிடையே உள்ள வேற்றுமையைஆசை என்னும் இந்திரிய-எதிரி வாயிலாகவே பார்க்கிறார். ஆசைகளை அடக்க முடியாதவன் சூத்திரன் என்று அழைக்கப்படுவான். ஆசைகளை அடக்கினால்தான் தவம் பலன் கொடுக்கும். ஆசைகள் இன்றி, ஞானத்தைத் தேடுபவன் பிராம்மணன் என்று அழைக்கப்படுவான் என்கிறார்.
எனவே சம்பூகன் ஆசைகளை அடக்காத நிலையில் இருந்திருக்க வேண்டும். அப்படிப்பட்டவன் தவம் மேற்கோள்ளக்கூடாது என்று ராமர் அவனை வதைத்திருக்கிறார்.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

ரிக்வேதத்தில் சுதாஸ் என்பவன் தசராஜர்களுடன் செய்த மாபெரும் போர் ஆசைகளை அடக்கச் செய்த உள்-மனப்போர் அல்லது இந்திரியப் போர்ஆகும். அதில் வெற்றி பெற பொருள் உதவி நாடவே அவன் சூத்திரன் என்றழைக்கப்பட்டான். சம்பூகன் அந்த இந்திரியப் போரைச் செய்து வெற்றி கொண்டதில்லை. அதனால் சூத்திரன் என்றழைக்கப்பட்டான். அந்தப் போரைச் செய்யாமல், அதில் வெற்றி கொள்ளாமல் தவம் மேற்கொள்வது கலிகாலத்தில் நடக்கும். ராமர் இருந்த திரேதா யுகத்தில் நடக்க இயலாது. அதனால் சம்பூக வதம் நடந்தது. 

பொதுவாக நாரதர் கலகத்துக்குப் பெயர் போனவர். 
அவர் சம்பூகனைப் பற்றிச் சொன்னது, இன்று தமிழ் மக்களிடையே கலகத்தை மூட்டுவதாக அமைந்து விட்டது.  
நாரதர் கலகம் நன்மையில் முடியும் என்பார்கள். 
திராவிடவாதிகளின் கலகத்தால், இனியாவது மக்கள் ஹிந்து மதம் என்ன சொல்கிறது என்று தேடிக் கண்டுபிடிக்கட்டும். 
மனிதனை மனிதன் அடிமையாக்காத மதம் இது என்று தெரிந்து கொள்ளட்டும். 
ஆரியப் படையெடுப்பு நடந்ததா என்று தேடி, அதன் மூலம் இந்த பாரத நாட்டின் உண்மையான சரித்திரத்தைக் காணட்டும்.
அந்த சரித்திரத்தில், ஹிந்து மதத்தை வாழ வைத்ததில் தமிழகம் ஆற்றிய பங்கைத் தெரிந்து கொள்ளட்டும்.



 


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard