New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம்


Guru

Status: Offline
Posts: 24601
Date:
செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம்
Permalink  
 


செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம்.

 

கடந்த ஓராண்டாக “இஸ்லாம்: கற்பனைக் கோட்டையின் விரிசல்கள் வழியே” எனும் தொடர் செங்கொடி தளத்தில் வெளியிடப்பட்டு வருகிறது. இது பரவலாக கவனம் பெற்ற தொடராக இருந்துவருகிறது. இத் தொடரை தொடங்கும்போது அனைத்து திசைகளிலிருந்தும் இதற்கு எதிர்ப்பும் மறுப்பும் கிளம்பிவரும் என எதிர்பார்த்தேன். ஆனால் நான் அறிந்தவரை குறிப்பிட்டுச் சொல்லும்படியான மறுப்பேதும் வரவில்லை. இத்தொடருக்கு வந்த எதிர்ப்பின் அளவில் கூட மறுப்புரைகள் வரவில்லை. இது என்னில் ஏமாற்றத்தையே உண்டாக்கியது என்றால் அது மிகையான கூற்றல்ல‌.

 

இந்நிலையில் நண்பர் சலாஹுத்தீன் என்பவர் தன்னுடைய தளத்தில் இத்தொடருக்கு மறுப்பு எழுதுவதாக என்னிடம் தெரிவித்தார். அவர் எழுதிய ஓரிரு பகுதிகளில் நானும் சென்று என்னுடைய விளக்கங்களை பின்னூட்டமாக வைத்தேன். (அதை இங்கு காணலாம்)பின்னர் அவர் தன் தொடரை நிறுத்திவிட்டு என்னிடம் விவாதிக்க விரும்புவதாகத்தெரிவித்தார். அந்த விவாதமும் இடையில் நின்றுபோனது. இந்த விவாதம் நூலகம் பகுதியில் விவாதம் எனும் தலைப்பின் கீழ் பிரபஞ்சம் தோன்றியது எப்படி? என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

தற்போது முஹ‌ம்மது இஹ்சாஸ் என்பவர் இஸ்லாம் குறித்த தொடருக்கு மறுப்பு எழுதுவதற்கென்றே தனியாக ஒரு தளத்தை தொடங்கி, முறைப்படி எனக்கு அறிவிக்கவும் செய்திருக்கிறார். இதுவரை அவர் நான்கு பகுதிகளை எழுதியுள்ளார். தொடக்கத்தில் அதை நான் பொருட்படுத்தவில்லை காரணம், அத்தொடர் தொடருமா என்பதில் எனக்கிருந்த ஐயம் தான். ஆனால் மறுப்புகளை எழுத அவர் எடுத்துக்கொள்ளும் முனைப்பு அத்தொடர் தொடர்ந்து வெளிவரும் என்பதை எடுத்துக்காட்டும் விதத்தில் இருந்தது. எனவே அந்த மறுப்பிற்கான விளக்கத்தை அளிக்கவேண்டிய தேவை எழுகிறது. மட்டுமல்லாது, இஸ்லாம் குறித்த தொடரின் கடந்த பதிவுகளை மேலதிக விளக்கங்களுடன் கூர் தீட்டவும் பயன்படும் என்பதாலும் இது இன்றியமையாததாகிறது. நண்பர் முஹம்மது இஹ்சாஸ் தன் தொடரை தொடரும் வரை இதுவும் தொடராக வெளிவரும். தொடக்கத்தில் அவருடைய தளத்திலேயே பின்னூட்டமாக பதிவு செய்யலாம் என எண்ணினேன். ஆனால், இஸ்லாம் குறித்த தொடரை தொடர்ந்து படித்து வருபவர்களுக்கு அதன் மறுப்பையும் அறிமுகம் செய்து வைப்பதுதான் பொருத்தமாக இருக்கும் என்பதாலும் இத்தொடரை தொடங்குகிறேன்.

 

தோழமையுடன்

செங்கொடி

 

இஸ்லாம் கற்பனை: மறுப்புக்கு மறுப்பு பகுதி: ௧

எடுத்துக்கொள்ளப்பட்ட நண்பர் இஹ்சாஸின் பதிவு

 

தம்முடைய முதல் பதிவை நேரடி விவாதம் பற்றிய சுட்டலுடன் தொடங்கியுள்ளார். அதுகுறித்த விளக்கத்துடனே நானும் தொடங்குகிறேன்.

 

“இஸ்லாம்: கற்பனைக் கோட்டையின் விரிசல்கள் வழியே” எனும் இந்தத்தொடர், பிஜேவுடன் நேரடி விவாதத்தில் பங்குகொள்ள வேண்டும் எனும் நோக்கத்தில் தொடங்கப்பட்டதல்ல. நிகழ் உலகின் சுரண்டல்களுக்கு எதிராக, அதிகார வர்க்கங்களுக்கு எதிராக நடக்கும் போராட்டங்களில் இஸ்லாமியர்களின் பங்களிப்பை அதிகரிக்க முடியுமா எனும் எண்ணத்தில், அனைத்து மதங்களுமே வர்க்கச் சுரண்டல்களுக்கு ஆதரவாகவும், அதை எதிர்க்கும் போராட்டங்களுக்கு எதிராகவும் செயல்படுகின்றன என்றாலும், நான் பிறந்த மதம் எனும் அடிப்படையில் இஸ்லாமிய புனிதங்களுக்கு எதிராக உண்மைகளைப் பேசுவதனூடாக சமூகப் போராட்டங்களுக்கு பயணப்படவைக்கும் முயற்சியில் தொடங்கப்பட்டதுதான்.

 

இந்தத்தொடரைத் தொடங்கியது முதலே பிஜே அவர்களுடன் நேரடி விவாதத்தில் பங்குகொள்ளுங்கள் என்று குறைவாகவும் கூடுதலாகவும் பல வடிவங்களில் எதிர்வினைகள் வந்தன. அதில் சில கட்டுரைகள் கடந்தபின் நண்பர் அப்துல் லத்தீப் சென்னையில் நடக்கும் விவாதத்தில் நீங்களும் பங்குகொள்ள முடியுமா என கேட்டிருந்தார். அதற்கு நான் சாத்தியமில்லை என்றும் எழுத்தில் தயார் என்றும் பதிலிறுத்திருந்தேன். இதன்பிறகே ‘இனிமை’ என்பவர் செங்கொடி தளத்திற்கான சுட்டியை இணைத்து, இதற்கு நீங்கள் பதிலளிக்க முடியுமா என பிஜேவிடம் கேட்கிறார். அவர் தன் கடிதத்தை இப்படித் தொடங்குகிறார்,

 

“தயவுசெய்து கீழேயுள்ள லிங்கை பார்வையிடுங்கள். அதில் இஸ்லாம் விஞ்ஞானத்திற்கு எதிரானது என்று சில தமாஷான கட்டுரைகளை வெளியுட்டுள்ளார். முக்கியமாக தங்களுடைய குரான் மொழியாக்கத்தையும் அறிவியல் ஒப்பீட்டையும் தான் அதிகளவில் விமர்சனத்திற்கு எடுத்துள்ளார். நாத்திகர்கள் எடுத்துவைத்த வாதங்கள் போன்று இருந்தாலும் இதற்குப் பதில் கொடுப்பது அவசியம் என்று கருதுகிறேன்”

 

இதுதான் அவரது கடிதத்தின் முக்கியப் பகுதி. அதாவது நான் நேரடி விவாதத்திற்கு வரமுடியாது என மறுத்துவிட்ட நிலையில் என்னுடைய கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் என்பதே அவரது கடிதத்தின் நோக்கம். மேலதிக விபரமாக நேரடி விவாதத்திற்கு அழைத்து, மறுத்த விபரத்தையும் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் இதற்குப் பதிலளித்த பிஜே அவர்கள், கடிதத்தின் நோக்கமான பதிலளிப்பது என்பதை கவனமாக தவிர்த்துவிட்டு, நேரடி விவாதத்திற்கு வரச்சொல்லுங்கள் நாம் தயார் என பதிலளித்திருந்தார். எழுத்தில் தயார் நேரடியாக இயலாது என்பது என் நிலை, எழுத்தில் இயலாது நேரடியாக தயார் என்பது அவர் நிலை. யாருக்கு எதில் வசதிப்படுகிறதோ அதில் பதிலளிப்பது எனும் யதார்த்தமான நிலைக்கான அவர் பதிலின் தொனி எப்படி இருக்கிறது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு \\ஆனால் எழுத்து வடிவிலான விவாதம் மட்டுமே செய்வேன் என்பது கோழைத்தனமானது// இதுபோன்ற அணுகுமுறையின் விளைவாகவும், தொடர்ந்து வந்த பின்னூட்டங்கள் மின்னஞ்சல்களின் விளைவாகவும் நேரடி விவாதத்திற்கு மறுப்பது என்னுடைய வசதியை அனுசரித்துத்தனேயன்றி பயத்தினால் அல்ல என்பதை வெளிக்காட்டவேண்டி நேரடி விவாதத்திற்கு சம்மதித்தேன்.

 

ஆனால் எந்த நோக்கத்திற்காக நான் எழுதத்தொடங்கினேனோ அந்த நோக்கத்திற்கு நேரடி விவாதத்தை விட எழுத்து விவாதமே பொருத்தமானது என்பதோடு மட்டுமல்லாது, நேரடி விவாதத்தை விட எழுத்து விவாதமே சிறந்ததாகவும் இருக்கிறது என்பதை உணர்ந்தேன். என்னுடைய அந்த உணர்தலை வெளிப்படுத்தும் விதமாகவும், எப்போது விவாதம் செய்யப்போகிறீர்கள் என தொடர்ந்துகொண்டே இருக்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாகவும் நான் ஏன் பிஜேவுடன் நேரடி விவாதம் செய்யவேண்டும் எனும் இடுகையாக வெளியிட்டேன். என்னுடைய இந்த முடிவை தோழர்கள் சிலரும் மீளாய்வு செய்யுமாறு கேட்கிறார்கள். எது நோக்கத்திற்கு சரியானது? எது சிறப்பானது? என்பதில் நான் நின்றுகொண்டிருப்பதால் வடிவத்திற்கு முதன்மையளிக்கவில்லை.

 

காலத்துக்கு காலம் இஸ்லாம் மட்டுமே அனைவராலும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக நண்பர் கூறுவது தவறு. உலகின் விமர்சனமின்றி கேள்வியின்றி ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று என்று எதுவுமில்லை. அனைத்தும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டே வருகிறது. ஆனால் விமர்சனத்தை எதிர்த்து வளர்வது சரியான வளர்ச்சியல்ல. விமர்சனத்தை உள்வாங்கி அலசிப் பார்த்து தன்னுள் தகுந்த மாற்றங்களைச் செய்துகொள்வதே சரியான வளர்ச்சி.

 

பிஜே அவர்கள் பதிலில் தென்படுவதாக நான் குறிப்பிட்ட அதே தொனி நண்பரின் மறுப்பிலும் தொழிற்படுகிறது. மாற்றிக்கொண்டால் மகிழ்ச்சி.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் ௨

இஸ்லாம் கற்பனை: மறுப்புக்கு மறுப்பு பகுதி: ௨

நுழைவாயில்

எடுத்துக்கொள்ளப்பட்ட நண்பர் இஹ்சாஸின் பதிவு

நுழைவாயில் பகுதியில் இஸ்லாம் குறித்த தொடரை நான் ஏன் எழுதவிருக்கிறேன் என்பதை விளக்கும் விதமாக, ஒரு தோராயமான முன்னோட்டமாக அமைத்திருந்தேன். அதில் இஸ்லாமியர்கள் மத அடிப்படையில் ஒருங்கிணைவது பயன்தரத்தக்கதாய் இருக்காது என்பதை குறியீட்டுக்காரணமாய் கொண்டிருந்தேன். ஏனென்றால் அது உத்தி ரீதியில் பார்ப்பனீயத்திற்கு உதவிகரமாகவே இருக்கும் என நான் குறிப்பிட்டிருந்தேன். இது நண்பருக்கு விளங்கவில்லை, அதை அவரும் ஒத்துக்கொண்டிருக்கிறார். ஆக மதரீதியில் ஒன்றிணைவது தவறு என எந்த அடிப்படையில் நின்று நான் குறிப்பிட்டிருக்கிறேனோ அந்த அடிப்படை அவருக்கு விளங்கவில்லை. இருந்தாலும் அவர் என்னுடைய நிலைப்பாடுகளை மறுத்திருக்கிறார். ஆக அவருடைய எதிர்ப்பில் மதம் மட்டுமே முன்னிருத்தப்பட்டிருக்கிறது சமூகமல்ல. மெய். மதத்தை ஆராதிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு சமூக நிலைப்படு ஒரு பொருட்டாக இருப்பதில்லை. மதமே அனைத்தையும் தீர்மானிப்பதற்குப் போதுமானது எனும் நம்பிக்கையில் இருப்பவர்கள் அது எதிர்ப்புக்கு உள்ளாகும் போது எதிர்ப்பு மட்டுமே அவர்களின் பார்வையில் தென்படுமேயன்றி எதிர்ப்புக்கான காரணம் தென்படாது.

இந்தியாவைப் பொருத்தவரை பார்ப்பனீயம் என்பது ஒரு குலமோ, ஒரு மதமோ அல்ல, அது ஒரு அடக்குமுறைச் சட்டத்தொகுப்பு. பல்லாயிரம் ஆண்டுகளாக இங்கு அது நடப்பிலிருக்கிறது. அதை எதிர்த்துத்தோன்றிய கொள்கைகளும், கோட்பாடுககளும் பார்ப்பனீயத்தால் உள்வாங்கப்பட்டு தின்று செரிக்கப்பட்டிருக்கிறது. இந்த அடக்குமுறைகளுக்கு பாதிக்கப்பட்ட மக்களை ஈர்க்கும் விதத்தில் இருப்பது தான் இஸ்லாம் இந்தியாவில் பரவியதற்கான காரணி. எனவே பார்ப்பனீயம் யாரை தனக்குக் கீழாக அடக்கிவைக்க விரும்புகிறதோ அவர்களே இந்தியாவில் இஸ்லாத்தின் ஆதாரம். எனவே பார்ப்பனீயம் யாரை அடக்கிவைக்க நினைக்கிறதோ அவர்களுக்கும்; அவர்களை எது ஈர்க்கிறதோ அவற்றுக்கும் இடையே ஒரு தடையை ஏற்படுத்துவது அவசியமாகிறது. இந்த அவசியத்திற்கான உத்தியாகவே இந்து எனும் மதவடிவம் பார்ப்பனியத்திற்கு பயன்படுகிறது. இந்து எனும் மத வடிவத்திற்குள் அனைவரையும் கட்டிப்போட்டால் தான் பார்ப்பனியத்தைப் பாதுகாக்க முடியும். இந்த வகைப்பாட்டில்தான் பௌத்தம் மதலான மதங்களை எதிரியாக சித்தரித்து வந்திருக்கிறது. எதிரி இல்லாவிட்டால் மேடுபள்ளமான அடக்குமுறைச் சட்டத்தொகுப்பில் ஒற்றுமை சாத்தியமில்லை. எனவே பெரும்பகுதி மக்களை அடக்குமுறைக் கொட்டடிக்குள் தக்கவைப்பதற்கு காலகாலமாக அதற்கு எதிரிகள் தேவைப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அந்த எதிரித்ததத்துவத்தின் தற்போதைய பாத்திரம்தான் இஸ்லாம். இஸ்லாமியர்கள் மத ரீதியில் ஒன்றிணைய ஒன்றிணைய அதைக் காட்டி ஒடுக்கப்பட்டவர்களை பார்ப்பனியம் இந்து மதமாய் ஒன்றிணைக்கும். அப்படி ஒன்றிணைப்பதற்கு இஸ்லாமியர்கள் சமூகப் பரப்பைக் கடந்து மதரீதியில் ஒன்றிணைந்திருப்பது அவசியம். பார்ப்பனியத்தை எதிர்த்து வீழ்த்த வேண்டுமென்றால் இந்து மதம் ஒடுக்கி வைத்திருக்கும் மக்கள் இந்து எனும் கூண்டை உடைக்க வேண்டும். அதற்கு இன்னொரு கூண்டு உதவ முடியாது. எல்லாக் கூண்டுக்குள் இருப்பவர்களும் சமூகத்தளத்தில் இணைந்து போராடாதவரை பார்ப்பனீயத்தை ஒழிக்க முடியாது. பார்ப்பனியம் அனைத்து உழைக்கும் மக்களுக்கும் விரோதி என்பதால், இஸ்லாமியர்கள் மதரீதியில் ஒன்றிணைவது அவர்களுக்கே எதிரான ஒன்றாய் அமைந்திருக்கிறது. எந்த மதமும் உழைக்கும் மக்கள் குறித்து கவலைப்பட்டதில்லை, இதற்கு இஸ்லாமும் விதிவிலக்கில்லை. அதனால் தான் துலக்கமான இந்த உண்மை விளங்காமல் மதம் மட்டுமே பிரதானப் படுத்தப்படுகிறது.

இனி அவரின் மறுப்புகளுக்கு வருவோம், கருத்தியலாக மதம் மனிதர்களை ஆதிக்கம் செலுத்தும் போதும் மக்களின் செயல்பாடுகள் சமூகத்தைப் பிரதிபலிப்பதாகவே இருக்கும். வெங்காய விலை நூறைக் கடந்து சென்று கொண்டிருக்கும் போது உழைக்கும் மக்களால் மதவிவகாரங்களில் சிக்கெடுத்துக்கொண்டிருக்க முடியாது. இது அனைத்து மதத்திற்கும் பொருந்தும். மத விளக்கங்களையும், அதன் நுணுக்கங்களையும் கற்க அவர்களுக்கு நேரம் இருப்பதில்லை, ஆனாலும் அவர்கள் மதங்களை ஒதுக்கி விடுவதில்லை. கேள்விபதில் நிகழ்ச்சிகளில் மக்கள் ஆர்வத்துடன் கலந்துகொள்கிறார்கள் என்றால், ஒரு விதத்தில் அது ஹீரோயிச மனப்பான்மை, தான் சார்ந்த மதம் மேலோங்கி நிற்கும் நிகழ்ச்சிகளை விரும்புவது இயல்பு. இதை மதத்தை அறிவதில் முஸ்லீம்கள் காட்டும் ஆர்வம் என புரிந்துகொள்ள முடியாது கூடாது. எப்படியென்றால் தவ்ஹீத் ஜமாத்தில் பிரபலமல்லாத யாரோ ஒருவருக்கு, அவரின் நிகழ்ச்சிக்கு மக்கள் விரும்பிச் செல்ல மாட்டார்கள். ஆக அது மதத்தை அறியும் ஆவலல்ல. தவ்ஹீத் ஜமாத் அல்லது அதன் நிகழ்ச்சிகள் பிரபலமடைந்திருப்பதைக் கொண்டு அது மக்கள் மதத்தை அறிய விரும்புகிறார்கள் என்பதாகவும் கொள்ள முடியாது. ஏனென்றால் தவ்ஹீத் ஜமாத்தின் பிரபலம் என்பது முஸ்லீம்களின் மொத்தத்தில் ஒரு சிறுபகுதி தான். பிற இயக்கங்களோடு ஒப்பிடுகையில் அது பலமானது என்பதால் அது ஒட்டுமொத்தமாக மக்கள் மதத்தை அறிய விரும்புகிறார்கள் என்பதை பிரதிபலிப்பதாக கொள்ளமுடியாது.

நான் இப்படிக் கூறுவதால் மக்கள் இஸ்லாத்தின் மீது பற்றற்று இருப்பதாக பொருளல்ல. மதம் என்பது சிந்தித்து ஏற்றுக்கொண்ட ஒன்றல்ல. அது ஒரு மரபாக, கலாச்சாரமாக இருக்கிறது. ஆனால் அது ஒரு குறிப்பிட்ட எல்லையைத்தாண்டி சமூக வாழ்வில் செல்வாக்கு செலுத்த முடியாது. ஆனால் இந்த எல்லை ஏனைய மதங்களை விட முஸ்லீம்களில் அதிக பரப்பில் இருக்கிறது. ஏனைய மதப்பிரச்சாரங்களைக் கேட்கும் ஒருவன் ஈர்க்கப்படுவதை விட முஸ்லீம் அதிகமாக ஈர்க்கப்படுகிறான். இது ஏனைய மதங்களில் ஒரு பொருட்டாக கருதப்படுவதில்லை. ஏனென்றால் அவர்கள் ஆன்மீகத்தையும் சமூகத்தையும் கலப்பதில்லை. மதத்தை விரோதிப்பது ஏனைய மதங்களில் சமூகக் குற்றமாக பார்க்கப்படுவதில்லை. ஆனால் முஸ்லீம்களில் அது சமூகக் குற்றமாக பார்க்கப்படுகிறது. தொலைக்காட்சி நிகழ்சிகளின் இடையே வரும் விளம்பர நேரங்களில் அலைவரிசைகளை மற்றி மாற்றி தாவிச் செல்கையில் ஒரு மத நிகழ்ச்சி வந்தால் அதியும் ஒரு விளம்பரம்போல் தாவிச்செல்ல ஒரு இந்துவுக்கு மனச் சங்கடம் எதுவும் இருக்காது, ஆனால் ஒரு முஸ்லீம் அப்படி தாவிச் செல்ல சங்கடமடைகிறான், அதைக் கவனிக்கிறான். இஸ்லாமிய பிரச்சார உலகம் கைக்கொண்டிருக்கும் அறிவியல் தர்க்க உத்திகள் இதை மேலும் வலுப்படுத்துகின்றன. அவ்வளவுதான். இந்த வேறுபாட்டை முஸ்லீம்களின் அறிதல் ஆர்வம் என்பதைவிட மரபாக முஸ்லீம்களுக்கு இருக்கும் தாக்கம் என்பது தான் பொருத்தமாக இருக்கும். இந்த அடிப்படையைத்தான் நான் குறிப்பிட்டிருந்தேன். இதைத்தான் நண்பர் இஸ்லாத்தின் உண்மைக்குச் சான்று, இஸ்லாம் மட்டுமே கேட்டவுடன் ஈர்க்கும் என்றெல்லாம் புளகமடைகிறார். மதமே எல்லாமும் என இருப்பவர்களிடம் இதுபோன்ற மிகைகள் தவிர்க்கவியலாதவை.

\\அரசு, பயங்கரவாதத்தினால் பாதிக்கப்படும் போது அவர்களின் மத அடையாளமே முன்னிறுத்தப்படுகிறது. இதனாலும்,அவர்கள் மதத்தின் தழுவலில் கட்டுண்டு கிடக்க ஏதுவாகிறது// இந்த என்னுடைய வாக்கியத்தை அவர் புரிந்து கொண்டதே தவறாக இருக்கிறது. அரசு பயங்கரவாதத்தினால் எல்லோரும் பாதிக்கப்படுகிறார்கள். அரசுகள் கைக்கொண்டிருக்கும் பொருளாதாரக் கொள்கைகள் பேதமின்றி அனைவரையும் பாதிக்கிறது. ஆனால் அதிகாரவர்க்கத்தின் பார்வையில் முஸ்லீம்கள் ஒதுக்கப்படுவதினாலும் அவர்கள் மதரீதியில் இணைவது துரிதப்படுத்தப்படுகிறது என்பது தான் நான் குறிப்பிட்டிருப்பது. எடுத்துக்காட்டாக அணமையில் அரசு வங்கிகள் கடன் கொடுக்கத் தகுதியற்ற பகுதிகள், அதாவது கொடுத்தால் திரும்ப வராது பயனுள்ள வழியில் செலவு செய்யப்படாது என பட்டியலிட்டு ஒதுக்கி வைத்த பகுதிகள் பெரும்பாலும் முஸ்லீம்கள் வசிக்கும் பகுதிகள். நண்பர் மேற்கோளுக்காக எடுத்த வாசகத்தின் முன்னால் உள்ள வாக்கியத்தில் இதை தளிவாக பதிவு செய்திருக்கிறேன், \\இந்தியாவில் இந்துப்பாசிச வெறிக்கு அதிகம் பலியாவது இஸ்லாமியர்கள் தாம்// ஆனாலும் நண்பர் இவர் அறிவோடுதான் எழுதுகிறாரா, விமர்சனம் செய்வதற்கு தகுதியிருக்கிறதா என்றெல்லாம் எகிறிக்குதிக்கிறார். குறைந்தபட்சம் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதைக்கூடவா விளங்கிக் கொள்ளமாட்டார்கள்.

உலக அளவில் முதலாளித்துவம் மக்களை வதைக்கிறது என்பதை உணர்ந்து போராட்டங்கள் பற்பல நாடுகளில் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன. ஆனால் முஸ்லீம் எனும் அடிப்படையில் நின்று முதலாளித்துவத்தை எதிர்க்க முடியுமா? வாழ்க்கைப் போராட்டம் என்பது இடஒதுக்கீடு கோசங்களோடு முடிந்துவிடுபவையல்ல. மக்களைக் கொல்லும் முதலாளித்துவத்தை எதிர்க்க வேண்டுமென்றால் குறைந்த பட்சம் மதக்கொள்கைகளை பரிசீலனைக்கு உள்ளாக்குவது அவசியம். ஏழையையும் பணக்காரனையும் நானே அப்படிப் படைத்தேன் எனக்கூவி அந்த ஏற்றத்தாழ்வை தக்கை வைக்கும் ஒரு கொள்கையை நம்பிக்கொண்டு அதற்கெதிராய் எப்படிப் போராட முடியும்?

\\இதன் மூலம் அரபு தேசிய வாதம், அரபு மார்க்ஸியம் என்பவை இஸ்லாமிய இறையியலாக சித்தரித்து காட்ட முற்படுகிறார். அரபு தேசியவாதம் என்பதும் அரபு மார்க்ஸியம் என்பதும் இஸ்லாமிய இறையியல் கிடையவே கிடையாது என்பதை புரிந்துகொள்ளவேண்டும்// அரபு தேசிய வாதம், அரபு மார்க்ஸியம் போன்றவை இஸ்லாமிய இறையியலாக நான் சித்தரிக்கிறேனா? பொதுவாக முஸ்லீம்கள் இஸ்லாத்தை விமர்சித்தால் அதை எதிர்த்துச் சொல்லப்படும் முதல் வாக்கியமாக இஸ்லாத்தைப்பற்றிய சரியான அறிதல் இல்லாமல் கூறுகிறார் என்பதுதான் இருக்கும். ஆனால் நாம் என்ன சொல்கிறோம்? எதை விமர்சிக்கிறோம் என்பதை அறிவதற்கு குறைந்தபட்ச முயற்சிகளைக்கூட எடுக்க மாட்டார்கள். அரபு மார்க்சியம் என்றால் என்ன? அரபுலக மண்ணில் ஆன்மீகத்திற்கு இஸ்லாமும் சமூகத்திற்கு மார்க்ஸியமும் என்று இரணடையும் இணைத்து, கடவுட் கொள்கையை விட்டுக்கொடுக்காமல் மார்க்ஸிய தத்துவங்களை இஸ்லாத்துடன் இணைத்து உருவானது தான் அரபு மார்க்ஸியம். ஆனால் இவரோ அரபு மார்க்ஸியத்தை இஸ்லாமிய இறையியலாக நான் சித்தரித்துக்காட்டுவதாக கரடி விடுகிறார். அப்படி இணைத்தது பயன்படாது கடவுட்கொள்கையை கடாசிவிட்டு மார்க்ஸியமே இறைய தேவை என்றுதான் நான் குறிப்பிட்டிருக்கிறேன். (மார்க்ஸியம் புரட்சிகர மார்க்ஸியம் இரண்டும் ஒன்றுதான், மார்க்ஸியம் அதன் உள்ளடக்கத்தில் புரட்சிகரமானது)

நுழைவாயில் பகுதியை ஒரு வேண்டுகோளுடன் முடித்திருந்தேன், முன்முடிவுகளைத் தவிர்த்து விட்டு வாருங்கள் என்று. ஆனால் இவர் அதை தூக்கிக் கொண்டு வந்ததோடில்லாமல் அதையே கவசமாகவும் காட்டுகிறார்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் ௩

இஸ்லாம் கற்பனை: மறுப்புக்கு மறுப்பு பகுதி: ௩

இஸ்லாம். பிறப்பும் இருப்பும்: ஓர் எளிய அறிமுகம்

எடுத்துக்கொள்ளப்பட்ட நண்பர் இஹ்சாஸின் பதிவு

 

இந்தப்பகுதியை, இந்தத்தொடரை வாசிக்கவிருக்கும் முஸ்லீமல்லாதவர்களுக்கு, இஸ்லாம் குறித்த போதிய அறிமுகமில்லாதவர்களுக்கு இஸ்லாத்தை அறிமுகப்படுத்தும் நோக்கில் என்னுடைய பார்வையில் அறிமுகம் செய்யும் விதமாக அமைத்திருந்தேன். நான் இஸ்லாத்தை அறிமுகம் செய்ததில் பொருட்பிழை ஏதுமில்லை என்பதை நண்பரின் பதிவு அறிவிக்கிறது. ஆனால் அதை செய்தவிதத்தில் அவருக்கு பேதமிருக்கிறது. அப்படி பேதமிருப்பதாய் அவர் கருதும் இரண்டு இடங்களை குறிப்பிட்டு தம் பதிவை தயாரித்திருக்கிறார்.

 

முதல் பேதமாய் நண்பர் குறிப்பது, சைத்தான் என்பவன் மனிதனின் எதிரி தானேயன்றி ஆண்டவனின் எதிரியல்ல என்பதை. அதற்கு ஆதாரமாக நண்பர் எடுத்துவைத்திருப்பது “சைத்தான் உங்களுக்கு எதிரி” என்று ஆண்டவன் மனிதனுக்கு கூறும் ஒரு குரான் வசனம். தன்னுடைய படைப்பாகிய மனிதனிடம், யார் தான் அறிவுறுத்தியபடி நடக்கவேண்டும் என விரும்புகிறானோ அத்தகைய மனிதனிடம், யாரை தன்னுடைய பிரதிநிதியாக படைத்திருக்கிறானோ அத்தகைய‌ மனிதனிடம் ஆண்டவன் கூறுகிறான் சைத்தான் உனக்கு எதிரி என்று. என்றால் ஆண்டவனுக்கு சைத்தானுடனான உறவு என்ன? தன்னுடைய நண்பனை உனக்கு எதிரி என மனிதனுக்கு அறிவிக்க முடியுமா? தன்னுடைய எதிரியை உனக்கு எதிரி என மனிதனுக்கு அறிவிக்க முடியுமா? இந்த இடத்தில் எல்லாமே ஆண்டவனின் படைப்புகள் எனும் சமன்பாட்டைக் கொண்டுவரவேண்டாம். ஏனென்றால் மலக்குகளும், மனிதனும், மரக்கட்டையும் மூன்றுமே ஆண்டவனின் படைப்பு தான். ஆனால் கொண்டிருக்கும் உறவில் மூன்றின் மதிப்பும் வேறுவேறுதான். எனவே உனக்கு எதிரி என சைத்தானை மனிதனுக்கு ஆண்டவன் காட்டுகிறானென்றால் அதில் உட்கிடக்கையாக இருப்பது தனக்கு எதிரி என்பதுதான்.

 

ஒருவனுக்கு எதிரி என யாரைக் கூறமுடியும்? யார் எதிராக செயல்படுகிறானோ அவனைத்தான் ஒருவனுக்கு எதிரி என்று கூறமுடியும். அந்த வகையில் சைத்தான் மனிதனுக்கு எதிராக செயல்படுகிறானா? இறைவனுக்கு எதிராக செயல்படுகிறானா? மனிதனுக்கு எதிராக செயல்படுகிறான் என்றால் மனிதனை துன்பப்படுத்த முயலவேண்டும், மனிதனுக்கு இன்னல்களை ஏற்படுத்த வேண்டும், மனிதனை நிர்மூலமாக்க வேண்டும். ஆனால் சைத்தான் இவைகளைச் செய்வதில்லை, மாறாக மனிதனுக்கு இன்பங்களைக் காட்டுவதன் மூலம், சொகுசுகளை காட்டுவதன் மூலம், இன்னும் பல்வேறு உத்திகள் மூலம் இறைவனின் நினைப்பை மனிதனிடமிருந்து நீக்க முயல்கிறான். ஆக சைத்தான் மனிதனிடம் செயல்படுகிறான் ஆனால் ஆண்டவனுக்கு எதிராக செயல்படுகிறான். மறுபக்கம் ஆண்டவனோ என் சொல்லைக் கேட்டால் உனக்கு மிட்டாய் தருவேன், சைத்தான் சொல்லைக் கேட்டல் பிரம்படி தருவேன் என்கிறான். என்றால் யாருக்கு யார் எதிரி?

 

சைத்தான் மனிதனை ஆண்டவனின் திசையிலிருந்து திருப்புகிறான், அதாவது மனிதனிடம் தான் செயல்படுகிறான் என்றாலும் அது விளைவுதான், வினையல்ல. வினை என்பது சைத்தான் ஆண்டவனை எதிர்த்தது தான். ஆண்டவனின் சொல்லுக்கு கீழ்படிய மறுத்து எதிர்த்து நின்ற வினையின் விளைவு தான் மனிதனை திசைமாற்றும் சைத்தானின் முயற்சி. மனிதனைக் கெடுக்க வேண்டும் என்பதற்காக சைத்தான் ஆண்டவனை எதிர்க்கவில்லை. ஆண்டவனை எதிர்த்ததால்தான் மனிதனைக் கெடுக்கிறான். எனவே சைத்தானின் நோக்கம் ஆண்டவனை எதிர்த்தது தானேயன்றி, மனிதனைக் கெடுப்பதல்ல. எனவே சைத்தான் ஆண்டவனின் எதிரி என்பதே சரி, மனிதனின் எதிரி என்பது மாத்திரைக் குறைவுதான்.

 

தர்க்கரீதியான(!) ஒன்றையும் இதில் இணைத்திருக்கிறார். அதாவது சைத்தான் மனிதனின் மனதைத்தான் கெடுத்தானாம் மார்க்கத்தைக் கெடுக்கவில்லையாம். மார்க்கம் என்பதென்ன தனியொரு பொருளா? (இங்கு மார்க்கம் என்று அவரது சொல்லாகவே கையாண்டிருக்கிறேன். மதமா மார்க்கமா என்பதை பின்னர் விளக்குகிறேன்) மனிதர்க‌ளை நீக்கிவிட்டால் மார்க்கம் என்பதை எப்படி வரையறுப்பது? மனிதர்களின் மனதிலிருந்து பிரித்து தனித்த ஒன்றாக மார்க்கத்தை அடையாளப்படுத்த முடியாது. எனவே மார்க்கத்தைக் கெடுத்தான் என்பதும், மனதைக் கெடுத்தான் என்பதும் ஒன்றுதான் மாறுபட்டதல்ல. முன்னவர்களின் மன‌திலிருக்கும் மார்க்கத்தைக் கெடுத்து அதையே பின்னவர்களுக்கு அழகாகக் காட்டியதால்தான் அதையே அவர்களும் பின்பற்றும்படியாகிறது. இதில் தர்க்கவியல் குறை ஒன்றுமில்லை.

 

இரண்டாவதாக‌, இஸ்லாத்தை இதுவரை யாரும் ஆதாரபூர்வமாக யாரும் விமர்சித்ததில்லை என்கிறார். குரானிலேயே இதற்குமேல் தர்க்கிக்க வேண்டாம் விட்டுவிடுங்கள் எனும் பொருளுள்ள வசனங்கள் இருக்கின்றன. விமர்சனம் செய்து மீறிப்போகும்போது தாக்குதலில் இறங்குவதற்கு அண்மைக்காலம் வரை எடுத்துக்காட்டுகள் உண்டு. இங்கும் கூட கம்யூனிச அவதூறுகளை கூறியிருக்கிறீர்கள். கொலை, கொலை என்று அலறியவர்களே நாங்கள் காசுக்காகத்தான் அவயமிட்டோம் என ஒதுங்கிவிட்டார்கள், நீங்களோ இன்னும் விடாமல் பிடித்துக்கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு கம்யூனிசம் குறித்த விமர்சனம் இருந்தால் தனித்தொடராக வெளியிடலாம், நான் நீங்கள் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் தெளிவுபடுத்த ஆயத்தமாக இருக்கிறேன். அப்புறம் இஸ்லாத்தில் மாற்றம் செய்ய தேவையிருக்காது என கூறியிருக்கிறீர்கள். அதை உங்கள் நம்பிக்கை என நகர்ந்துவிடலாம். ஆனால் போகிறபோக்கில், \\தவறு எனில் மாற்றுவோம்// என்று கூறியிருக்கிறீர்களே. என்ன விசமம் இது. இஸ்லாத்தில் எந்த ஒன்றையும் கூட்டவோ குறைக்கவோ யாருக்கு அதிகாரம் இருக்கிறது? பொருட்பிழையில்லாமல் சொற்பிழைகளையே பெரும்பேதமாய் பதிவெழுதி எனக்கு விளக்கம் கூறிவிட்டு, இஸ்லாத்தின் அடிமடியிலேயே கைவைத்துவிட்டீர்களே. பலே, பலே.

 

எண்ணைக் கொப்பரை என்பது நரகத்தைக் குறிக்கும் ஒரு குறியீடு அவ்வளவு தான், நேரடியாக நெருப்பில் வாட்டுவது என்றாலும் எண்ணெய் தடவி ஓவனில் வைத்தாலும் அதில் பொருட்பிழை ஒன்றுமில்லை. இந்தப் பதிவில் கூட மிட்டாய், பிரம்படி என்று சொர்க்கம், நரகத்தை குறியீட்டால் குறித்திருக்கிறேன்.

 

அடுத்து, இஸ்லாத்தை விமர்சித்ததற்காக இன்னலுக்கு ஆளான சிலரை நான் என்னுடைய கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். அவர்கள் குறித்த குறிப்புகளை இணையத்தில் தேடித்தந்திருக்கிறீர்கள். இறுதியாக \\உண்மயை மக்கள் மத்தியில் போட்டு உடைக்கும் போது இவர் குறிப்பிட்ட தடங்கள் வருவது இயல்பே// என்று ஒப்புதல் தந்திருக்கிறீர்கள். ஆனால் நான் குறிப்பிட்டிருந்ததற்கும் நீங்கள் இயல்பு என்பதற்கும் இடையில் கொஞ்சம் வித்தியாசமிருக்கிறது. ஏனைய மதங்களைப் பொருத்தவரை மதத்திற்குள் இருந்து கொண்டே அந்த மதக்கொள்கைகளை விமர்சிக்க முடியும், விமர்சித்திருக்கிறார்கள். அதை அந்த மதத்தைச் சார்ந்தவர்கள் விளக்கமாக கருதியிருக்கிறார்களேய‌ன்றி புறக்கணித்ததில்லை. ஆனால் ஆப்ரஹாமிய மதங்களில் அது இயலாது. அதிலும் குறிப்பாக இஸ்லாத்தில் முடியவே முடியாது. ஒரு அரசு இருந்து மதக் கொள்கைகளுக்கு எதிரானவரை தடுப்பது தண்டிப்பது என்பது வேறு, மக்களே புறக்கணிப்பது என்பது வேறு. அதுவரை நெருங்கிய உறவினர்களாக நண்பர்களாக இருந்தாலும் இஸ்லாத்தை விமர்சித்துவிட்டால் அடுத்த கணமே அங்கு ஒரு விலக்கம் வந்து உட்கார்ந்து கொள்ளும். ஏனென்றால் இஸ்லாத்தில் கடமை தான் இருக்கிறதேயன்றி, விமர்சிக்கும் உரிமையில்லை. இதுதான் துன்புறுத்தல் வரை கொண்டு சேர்க்கிறது. தக்கலை கவிஞர் ரசூல், மைலாஞ்சி கவிதைத்தொகுப்பில் ஏன் பெண் நபி இல்லை என்று கேட்டு கவிதை வெளியிட்டதற்காக, கவிதையை நீக்கி மன்னிப்பு கேட்கச் சொன்னார்கள் மறுத்ததால் ஊர் விலக்கம் செய்யப்பட்டர். ஆண்டுகள் பல கடந்தும் அவரால் வீட்டுக்கு அருகிலுள்ள பெட்டிக்கடையில் தாகத்திற்கு மோர் வாங்கி குடிக்கமுடியாது. \\இவ்வாறு அறியாமையினால் ஓரிரு இடங்களில் நடப்பதை எடுத்து காட்டுவது சரியானது அல்ல என்பதை தெரிவித்து கொள்கிறேன்// சரிதான், அப்படி எடுத்துக்கொள்லலாம். ஆனால், இதை இயல்பு என்று எடுத்துக்கொள்ள முடியாதல்லவா?



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் ௪

இஸ்லாம் கற்பனை: மறுப்புக்கு மறுப்பு பகுதி: ௪

அல்லாவின் ஆற்றலிலுள்ள இடர்பாடுகள்

எடுத்துக்கொள்ளப்பட்ட நண்பர் இஹ்சாஸின் பதிவு

 

அல்லாவின் ஆற்றலிலிருக்கும் இடர்பாடுகள் குறித்த விளக்கங்களில் புகுமுன் ஒன்றை தெளிவுபடுத்திவிடலாம் என கருதுகிறேன். \\யாருடைய நம்பிக்கையை விமர்சிப்பதாக இருந்தாலும் அவர்களின் நம்பிக்கை எத்தகையது என்பதை புரிந்து அதில் நின்று தான் விமர்சிக்க வேண்டுமே தவிர அவர்கள் நம்பாத வேறு கிரவுண்டில் இருந்து விமர்சிக்கக் கூடாது// என்று நண்பர் எழுதியிருக்கிறார். அதில் இஸ்லாமியர்களின் நம்பிக்கைக்கு வெளியில் எந்த விமர்சனமும் இடம்பெற்றிருக்கவில்லை. இஸ்லாம் குறித்த விமர்சனத்தை, இஸ்லாமியர்களின் நம்பிக்கைக்கு வெளியிலிருந்து வைக்கவும் முடியாது. எது அவர்களின் நம்பிக்கையோ அதில் தான் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. இஸ்லாமியர்கள் நம்பாத ஒன்றை விமர்சனமாக வைத்தால் “இது இஸ்லாமல்ல” எனும் ஒற்றைச் சொல்லில் அதைக் கடந்துவிட முடியும். ஆனால் எழுப்பப்பட்டுள்ள கேள்விகளுக்கு விடையளிக்க அவர் முயன்றிருக்கிறார் என்பதே இஸ்லாமியர்களின் நம்பிக்கைக்கு வெளியே கேள்வியேதும் எழுப்பப்படவில்லை என்பதற்கு போதுமானதாகும்.

 

குரானில் சொல்லப்பட்டிருக்கும் சுயபாராட்டல்களின் அளவு அதிகம் என்பதை ஒரு தகவலுக்காக குறிப்பிட்டிருந்தேன். ஒரு வார்த்தை கூட தேவையில்லாமல் இருக்காது என இறும்பூறெய்தலாக குறிப்பிடப்படும் ஒரு வேதத்தில், அதன் அளவே பாதியாக குறைந்துவிடும் அளவுக்கு அந்த சுயபாராட்டல்கள் இருக்கின்றன. இதற்கு பகரமாக நண்பர் \\குர்ஆன் இறைவனுடைய வேதம். அதில் அவனைப்பற்றி அவனுக்கே உரிய வேறு யாருக்குமே இல்லாத அவனுடைய வல்லமைகளை கூறுகிறான். அது சில இடங்களில் விரிவாகவும் பல இடங்களில் சுருக்கமாகவும் உள்ளன// என்பதாக கூறுகிறார். அவனுடைய வல்லமைகளை, தன்மைகளை ஒவ்வொன்றையுமேகூட ஓரிரு முறை கூறினால் போதுமானது. ஆனால், சற்றேறக் குறைய‌ எல்லா வசனங்களின் பின்னாலும் ஒரு வாலைப்போல் அது ஒட்டியிருக்கிறது. எனவேதான் சோர்வடையவேண்டாம் என்று ஈறொட்டாக குறிப்பிட்டிருந்தேன்.

 

முதல் இடர்பாடாக நான் குறிப்பிட்டிருந்தது, எல்லாமே எழுதப்பட்ட ஏட்டில் இருப்பது தான் எனும்போது அது மனிதனுக்கு சிந்தனை இருக்கிறது என்பதை மறுக்கிறது என்பதை. அதை தெளிவாக கேள்வியாக எழுப்பியிருந்தேன், \\ஒரு மனிதன் சிந்தித்து செயல் படுகிறான் என்றால் அந்த ஏட்டில் இருக்கும்படியே செயல் படுகிறான் என்பதை மறுக்கவேண்டும், அல்லது ஏட்டில் இருக்கும் படியே எல்லாம் நடக்கிறது என்றால் மனிதன் சிந்தித்து செயல்படுகிறான் என்பதை மறுக்கவேண்டும்// இந்த முரண்பாடான தன்மையை நண்பர் விதிக்கொள்கை என கடந்து செல்கிறார். ஒருவனுக்கு இழப்பு ஏற்பட்டால் விதியின் தொழிற்படுதலால் அவன் ஆறுதலடையவும், செருக்கு கொள்ளாமலிருக்கவும் விதிக்கொள்கை பயன்படுகிறது என அதற்கு விளக்கமும் தருகிறார். இது மேம்போக்கானது. தனிப்பட்ட ஒருவனுக்கு இழப்பு என்பது தனியுடமையிலிருந்து எழுகிறது, வணிகர்களின் நலைனைப் பாதுகாக்க எழுந்த ஒரு கொள்கையால் இப்படித்தான் சிந்தித்திருக்க முடியும். தனக்கு ஏற்பட்ட இழப்பு எதனால் ஏற்பட்டது?, செயலின் பிழைகள் என்ன? என்னென்ன தாக்கங்கள் அந்த செயலில் வினையாற்றின? அவைகளின் எதிர்வினை என்ன? என்பதைக் கண்டுணர்ந்து அடுத்தமுறை அந்த தவறு மீள ஏற்படாமலிருக்க ஆவன செய்யவேண்டுமென்றால் அவன் விதிக்கொள்கையை மறுத்தாக வேண்டும். அல்லா எழுதிவைத்தபடி தான் தமக்கு நேர்ந்திருக்கிறது என ஒருவன் ஆறுதல் கொள்வானாயின், அவனிடம் தேடல் இருக்காது. தேடலிருக்கிற, வெற்றிகரமாக செயல்பட விரும்புகிற, எதிர்வினையாற்ற ஆவலுருகிற‌ எவரும் (முஸ்லீம்கள் உட்பட) சாராம்சத்தில் விதிக்கொள்கையை மறுக்கவே செய்கின்றனர், நம்பிக்கையளவிலேயே அவர்களிடம் விதிக்கொள்கை இருக்கிறது. இதை உணர்ந்துதான் இஸ்லாமும்; விதி இருக்கிறதா? எனும் கேள்விக்கு ஆம் என பதிலளிக்கிறது, அதேநேரம் பின்பாதியை நம்பு முன்பாதியை நம்பாதே என இரட்டை நிலையை மேற்கொள்கிறது.

 

\\விதி உள்ளதெனில் நான் நல்லவனாக,கெட்டவனாக நடப்பதற்கு நான் எவ்வாறு பொறுப்பேற்பது என்ற கேள்வியும் விதி இல்லையெனில் நான் என்ன செய்வேன் என்று தெரியாதவன் எவ்வாறு இறைவனாக இருக்க முடியும் என்ற கேள்வியும் எழும்// கடவுளை நம்புபவர்களுக்கு ஏற்படும் பிரச்சனை இது. கடவுளின் இருப்பையே அசைத்துப்பார்க்கிற இந்தக் கேள்விக்கு விடைகூற முடியாது என்பதாலேயே முகம்மது இதுபற்றி தர்க்கிக்காதீர்கள் என அறிவுறுத்தியிருக்கிறார். அங்கும் இல்லாத, இங்கும் இல்லாத இரட்டை நிலையை மேற்கொண்டிருக்கிறார். இஸ்லாத்தை நம்புகிறவர்களுக்கு விதிக்கொள்கை போதுமானது. ஆனால் அதை எதிர்த்து விமர்சனம் செய்பவர்களுக்கும் அந்த நம்பிக்கையையே பதிலாக கூறுவீர்களென்றால், அது எல்லாருக்கும் பொதுவான மனிதனின் தோல்வியாக இருக்காது. மதத்தை கடவுளை நம்புகிறவர்களின் தோல்வியாக இருக்கும். முரண்பாடான இருவேறு நிலையை புரிந்து கொள்ளும் அறிவு மனிதனுக்கு இல்லை என்றெல்லாம் நீட்டிமுழக்க முடியாது.

 

பொதுவாக இந்த இடர்பாட்டை விதிக்கொள்கை என கடந்து செல்வதும், சரியானதாக இருக்காது. விதிக்கொள்கை என்பது மனிதன் சிந்தித்து செயல்படுகிறான் என்பதை மறுக்கக் கூடியது. மனிதன் மூளை எனும் பொருளைக்கொண்டு சிந்தித்து செயல்படுகிறான் என்பது அதன் எல்லாவித கூறுகளாலும் நிரூபிக்கப்பட்டிருக்கும் காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். மூளையின் செயல்பாடு, அதன் வேதியியல் மாற்றங்கள், இருமடி ரீதியான அதன் நினைவுத்திறன் என அனைத்தும் ஐயந்திரிபற விளக்கப்பட்டிருக்கிறது. கேள்வி எளிமையானது. நிரூபிக்கப்பட்டிருக்கும் மனிதன் சிந்திக்கிறான் என்பதை ஏற்கிறீர்களா? அதை மறுக்கும் விதிக்கொள்கையை ஏற்கிறீர்களா? என்பதுதான். இரண்டையும் ஏற்கிறோம் என்றெல்லாம் பசப்ப முடியாது. ஏனென்றால் ஒன்றை மற்றொன்று மறுக்கக்கூடியது.

 

இரண்டாவது இடர்பாடு, தன்னைத்தவிர ஏனைய அனைத்தும் படைப்புகள் எனும் நிலையில், எதனையும் படைத்திருக்காதபோது முதல் படைப்பை அல்லா எங்கிருந்து செய்திருக்க முடியும்? என்பது. நண்பர் இதை அல்லாவிடம் கேள்வியாக கேட்கும் அதிகாரம் மனிதனுக்கு இல்லை என எடுத்துக்காட்டுகளுடன் சொல்லியிருக்கிறார். அல்லாவின் இருப்பை ஏற்று இந்தக்கேள்வியை அல்லாவிடம் நாம் கேட்கவில்லை. மாறாக அல்லாவின் இருப்பை மறுக்கும் விதமாக மனிதர்களிடம் கேட்கிறோம். அல்லா எங்கிருந்தான் என இடம்சார்ந்த கேள்வியாக மட்டும் இதை கேட்கவில்லை, முழுமையான சாத்தியப்பாட்டின் அடிப்படையிலேயே இந்தக் கேள்வி கேட்க்கப்பட்டிருக்கிறது. இந்த அம்சம் இடர்பாடுகள் குறித்த பதிவில் தெளிவாகவே விளக்கப்பட்டிருக்கிறது. \\எங்கு இருந்திருக்க முடியும் என்பதுதான் கேள்வியின் மையம். மாறாக நம்பர் 24 படைத்தோன் வீதி, நியூரோபிக்டஸ், ஆண்ரோமீடா. என முகவரி கேட்பதாக நினைத்துக்கொள்ளவேண்டாம்// ஆனால் நண்பரோ வெறும் இடம்சார்ந்து முகவரி கேட்பதாக நினைத்துக்கொண்டே பதில் கூறியிருக்கிறார்.

 

அல்லா என்பது பொருளா? கருத்தா? பொருள் என்றால் அது இடம் சார்ந்தே இருந்தாக வேண்டும். கருத்து என்றால் ஒரு பொருளைச் சாராமல் கருத்து மட்டும் தனித்து உலவமுடியாது. இந்த இரண்டுக்கும் அப்பாற்பட்டு வேறொன்று என்றால் அது என்ன? எப்படி? என விளக்கும் கடமை நண்பருக்கு உள்ளது. மனிதனைப்போல் அல்லாவை அற்பமாக நினைக்கிறீர்களா? என நண்பர் விசனப்பட்டு கேள்வி எழுப்புகிறார். நண்பர் மறந்துவிட வேண்டாம், அல்லா என்ற ஒன்று இல்லை என்ற நிலையிலிருந்தே இந்தக் கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அல்லாவின் இருப்பே கேள்விக்குறியாக இருக்கும் நிலையில் \\அவன் எப்படியும் இருக்க முடியும். எந்தப் பொருளீன் துனையும் இல்லாமல் இருக்க முடியும்// என தன் நம்பிக்கையை பதிலாக கூறுகிறார் நண்பர். உங்கள் நம்பிக்கையே போதுமானதாக இருக்கமுடியும் என்றால், இஸ்லாம் கற்பனை எனும் இந்த கட்டுரைத் தொடரே அவசியமில்லை.

 

இரண்டாவது இடர்பாட்டை எளிமையாக ஒரு எடுத்துக்காட்டின் மூலம் விளக்கலாம், ஒருவர் ஒரு பேனாவை உருவாக்குகிறார் எனக் கொள்வோம். ஒருவர் அந்த பேனாவுக்குள் உட்கார்ந்துகொண்டு அந்த பேனாவை உருவாக்க முடியுமா? எந்த மூலப்பொருளுமின்றி ‘குன்’ ஆகுக என்று கூறியே அந்தப் பேனாவை உருவாக்கும் வல்லமை அந்த ஒருவருக்கு இருக்கிறது என்றே கொண்டாலும், பேனாவுக்குள் இருந்துகொண்டே பேனாவை உருவாக்க முடியுமா? இது கட்டுரையில் தெளிவாகவே விளக்கப்பட்டுள்ளது, \\ஒரு பொருளைப் படைப்பதற்கான முக்கியமான நிபந்தனையே படைப்பவன் படைக்கப்படும் பொருளுக்கு வெளியில் இருந்தாக வேண்டும் என்பது// என்று. தன்னைத்தவிர ஏனைய அனைத்தும் தன்னுடைய படைப்பு என்று எந்த ஆற்றலாலும் கூறமுடியாது. தன்னை மட்டுமே சுயம்பு என கூறிக்கொள்ளும் ஒன்று இடமில்லாத ஒரு இடத்தில் எப்படி இருந்திருக்க முடியும் என்பதுதான் கேள்வி. அதை அறிந்து கொள்ளும் அறிவு மனிதனுக்கு இல்லை என இதை ஒடுக்கிக் கொள்ளமுடியாது. ஏனென்றால், இடம்சார்ந்து மட்டுமே இந்தக் கேள்வி கேட்க்கப்படவில்லை. அப்படி இருக்கும் சாத்தியமில்லை என்பதே அந்தக் கேள்வியில் உள்ளார்ந்து இருப்பது.

 

இதை விளக்க நண்பர் அறிவியலையும் துணைக்கழைத்திருக்கிறார். பெருவெடிப்புக்கு முன்னர் என்ன நிலை இருந்தது என்பதை மனிதன் அறிந்து கொள்ள முடியாது என்று கூறியிருக்கிறார். தவறு. பெருவெடிப்புக்கு முந்திய கணம் வரை மனிதன் கண்டறிந்திருக்கிறான். அதற்கு முன்னர் என்ன? என்பது இன்றைய நிலையில் மனிதனுக்கு தெரியாது அவ்வளவுதான். நாளை கண்டறியப்படலாம். இதுதான் அறிவியலின் நிலை. ஆனால் அல்லாவின் நிலை இப்படியல்ல, என்றும் அதற்கு விடைகாண முடியாது என்பதே இஸ்லாத்தின் நிலை. அல்லது, முதல்படைப்பை அல்லா எப்படி படைத்தான் என்பது இன்று தெரியவில்லை, நாளை தெரிந்துகொள்ளும் வாய்ப்பிருக்கிறது என்பதை நண்பர் விளக்கட்டும். அப்போது இந்தக்கேள்வியை திரும்பப்பெற்றுக்கொண்டு தெரிந்து கொள்ளும் அந்த நாளுக்காக காத்திருக்கலாம். இன்னொன்றையும் நண்பர் தெரிந்துகொள்ள வேண்டும் பெருவெடிப்புக் கொள்கை என்பது அறிவியல் யூகம் தான், அறுதியான உண்மையல்ல. நாளை பெருவெடிப்புக் கொள்கையேகூட காணாமல் போகலாம்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் ௫

இஸ்லாம் கற்பனை: மறுப்புக்கு மறுப்பு பகுதி: ௫

குரானின் சவாலுக்கு பதில்

எடுத்துக்கொள்ளப்பட்ட நண்பர் இஹ்சாஸின் பதிவு

“குரானுக்கு சவாலுக்கு பதில்” எனும் கட்டுரையில் குரானில் பயன்படுத்தப்படும் அடைப்புக்குறிகளின் இலக்கு, குரானில் இருக்கும் ஒரு முரண்பாடு, குரானின் வசனங்களுக்கு நிகராக ஒரு குறள் என்று மூன்று குறிப்புகள் எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தன. இந்த மூன்றையுமே நண்பர் மறுத்திருக்கிறார். அவைகளைப் பார்ப்போம்.

குரானில் இடம்பெற்றிருக்கும் அடைப்புக்குறிகள் மொழிபெயர்ப்புச் சிக்கல்களை தீர்ப்பதற்குத்தான் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்கிறார். அப்படித்தான் சொல்லப்படுகிறது. ஆனால் அவை அதற்கானவையல்ல என்பதற்கு அவை பயன்படுத்தப்பட்டிருக்கும் எண்ணிக்கையே சான்றாக அமைந்திருக்கிறது. உலகில் குரான் மட்டுமல்ல ஏராளமான இலக்கியங்களும், புதினங்களும், ஆய்வுகளும், அறிவியல் நூல்களும் மொழிமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றன. கவிதைகளும் கூட வடிவம் மாறாமல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஆனால் எந்த மொழிபெயர்ப்பிலும் பயன்படுத்தப்படாத அளவிற்கு குரானுக்கான மொழிபெயர்ப்புகளில் அடைப்புக்குறிகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. ஏன் அரபு மொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்ட வேறு நூல்களில் இந்த அளவுக்கு அதிகமான‌ அடைப்புக்குறிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறதா? என்றால் குரான் மொழிபெயர்ப்புகளில் மட்டும் ஏன் இவ்வளவு அடைப்புக்குறிகள்? காரணம், அது மொழியியல் சிக்கல்களுக்காக மட்டும் கையாளப்பட்ட‌தில்லை. மேலதிகமாக தேவைப்படும் பொருளைக் கொண்டுவருவதற்காகவே கையாளப்பட்டிருக்கின்றன.

இதற்கு இன்னொரு விளக்கத்தையும் கொடுக்கிறார்கள். ஏனைய மொழிபெயர்ப்புகளெல்லாம் மூல மொழியின் பொருளை உள்வாங்கி அதை மாற்று மொழிக்கு இயைந்து பெயர்த்துக்கொள்வது, குரான் அப்படியல்ல, சொல்லுக்குச் சொல் அப்படியே மொழிபெயர்க்கப்படுவ‌தால் பொருள் புரிவதற்காக அடைப்புக்குறிகள் அதிகம் தேவைப்படுகின்றன. ஆனால் இதுவும் தவறான விளக்கமே. எந்த ஒரு மொழியிலிருந்தும் பிரிதொரு மொழிக்கு சொல்லுக்குச் சொல் அப்படியே மொழிபெயர்க்க முடியாது. ஏனென்றால் ஒவ்வொரு மொழிக்கும் இலக்கணவிதிகள் வேறுபடுகின்றன. அப்படி மொழிபெயர்த்தால் குழப்பமே மிஞ்சும். குரான் வாக்கியங்கள் தமிழுக்கியைந்த கோர்வையுடன் இருப்பதால், குரான் அப்படி சொல்லுக்குச் சொல் மொழிபெயர்க்கப்பட்டதாகவும் இருக்கமுடியாது. மட்டுமல்லாது, பல்வேறு தமிழ் குரான் மொழிபெயர்ப்புகள் ஒரேமாதிரியான வாக்கிய அமைப்பைக் கொண்டதாகவும் இல்லை. எனவே அரபு குரானின் கருத்துகளைத்தான் தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளனர். என்றால் இவ்வளவு அதிகமான அடைப்புக் குறிகளைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் என்ன? அடைப்புக்குறிகளை நீக்கிவிட்டுப்பார்த்தால் வசனங்களின் பொருட்களில் பேதம் வருகிறது. அடைப்புக்குறிகளை குறைப்பதற்கு செய்யப்படும் முயற்சிகள் கூட சமகால அறிவியல் பொருளை உள்வாங்கி வார்த்தைகளில், வாக்கியங்களில் நெகிழ்வுடன்தான் செய்யப்படுகின்றன. எனவே குரானின் பொருளில் அடைப்புக்குறிகள் மிகுந்த பங்களிப்பை கொண்டிருக்கின்றன, அதற்காகவே அவை பயன்படுத்தப்படுகின்றன.

கட்டுரையில் பயன்படுத்தப்பட்ட வசனத்தையே (குரான் 2:178) எடுத்துக்கொள்வோம். “சுதந்திரமானவனுக்காக சுதந்திரமானவன் அடிமைக்காக அடிமை” என்பதன் பொருள் என்ன? சுதந்திரமான ஒருவன் கொல்லப்பட்டால் அதற்கு பகரமாக சுதந்திரமான ஒருவனும், அடிமை ஒருவன் கொல்லப்பட்டால் அதற்குப் பகரமாக அடிமை ஒருவனும் என்று நேரடியாகவும்; அடிமை ஒருவனை சுதந்திரமான ஒருவன் கொலை செய்தால் அதற்குப்பகரமாக கொலை செய்த சுதந்திரமானவனின் அடிமை ஒருவன் என்று மறைமுகமாகவும் பொருள் வருகிறது. இப்படி எதிர்மைறையான வகையில் யாரும் பொருள் கொண்டு விடக்கூடாது என்பதற்காகத்தான் “சுதந்திரமானவனுக்காக (கொலை செய்த) சுதந்திரமானவன் அடிமைக்காக (கொலை செய்த) அடிமை” என்று ‘கொலை செய்த’ என்பதை அடைப்புக்குறிக்குள் இட்டு பயன்படுத்துகின்றனர். ஜான் டிரஸ்ட் வெளியீட்டிலும் இதே வசனத்தில் இதே அடைப்புக்குறி சில சொற்கள் தள்ளி பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே மொழியியல் சிக்கல்களுக்காக மட்டுமே அடைப்புக்குறிகள் பயன்படுத்தபட்டுள்ள‌ன என்பது ஏற்கத்தக்கதன்று.

அடுத்து முரண்பாடான வசனத்திற்கு வருவோம். கட்டுரையில், ஒரு வசனத்தில் முதலில் வானம் பின்னர் பூமி என்றும், வேறொரு வசனத்தில் முதலில் பூமி பின்னர் வானம் என்றும் இருக்கிறது, இது முரண்பாடில்லையா? என்று கேட்க்கப்பட்டிருந்தது. அதற்கு பதிலாக நண்பர், \\பூமியைப்படைத்தான்; பின்னர் வானத்தைப்படைத்தான்; பின்னர் அதை விரித்தான். இதில் எந்த முரண்பாடுமில்லை// என்று எழுதியுள்ளார். குறிப்பிட்ட கட்டுரைக்கு வந்திருக்கும் பின்னூட்டங்களை கவனித்துப்பார்த்தால் இதே கருத்தை வேறொரு நண்பர் ஏற்கனவே கூறியிருக்கிறார் என்பதை அறியலாம். ஆனால் அவர் வானத்தை இரண்டு முறையாகவும் பூமியை ஒரு முறையாகவும் குறிப்பிட்டார். நண்பர் இஹ்சாஸ் பூமியை இரண்டு முறையாகவும் வானத்தை ஒருமுறையாகவும் குறிப்பிடுகிறார். இவைகளெல்லாம் அந்த முரண்பாட்டை நீர்த்துப்போக வைப்பதற்காக சொல்லப்படும் விளக்கங்களேயன்றி வேறில்லை.

குரானில் பல இடங்களில் இந்த பேரண்டத்தை(பிரபஞ்சத்தை) ஆறு நாளில் படைத்தாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த ஆறு நாட்களை 41:9,12 வசனங்கள் விவரிக்கின்றன. முதல் இரண்டு நாட்களில் பூமி நான்கு நாட்களில் ஏனைய தயாரிப்புகள் பின்னர் இரண்டு நாட்கள் வானம். (கணக்கிற்கு எட்டு நாட்கள் வருகிறது  என்பது அப்பாற்பட்ட விசயம்) இதில் முதல் முறை வானத்தை தோராயமாக படைத்து இரண்டாம் முறை சீராக்கியதாகவோ அல்லது முதல் முறை பூமியை மொத்தமாக படைத்து இரண்டாம் முறை விரித்ததாகவோ குறிப்பிடப்படவில்லை. குறிப்பிடவில்லை என்றாலும் அப்படித்தான் விளங்கிக்கொள்ள வேண்டும் என்றால் ஆறு நாட்களைவிட அதிகமாகிறது, தவிரவும் குரானிலேயே எந்தெந்த நாட்களில் என்ன நடந்தது என வரிசைப்படுத்திக் கூறியிருக்கும் போது அதைக் குலைத்து மாறுபட்ட விளக்கங்களை அளிப்பது முரண்பாட்டை மூடிமறைக்கும் வேலையேயன்றி வேறில்லை.

அடுத்ததாக, குரானின் ஒரு வசனத்திற்கு மாற்றாக ஒரு குறள் கூறப்பப்படத்தை கொள்வோம். இந்த இடத்தில் ஒரு குறிப்பை பதிவு செய்து கொள்வது சரியானதாக இருக்கும். திருக்குறள் ஒரு ஆகச்சிறந்த நூல் என்றோ, போற்றப்படத்தக்கது என்றோ கருதுவ‌தால் அதிலிருந்து ஒரு குறளை குரானுக்கு மாற்றாக கூறவில்லை. குறளிலும் அறிவியலுக்கு எதிரான கருத்துகள், ஆணாதிக்கச் சிந்தனைகள் இருக்கின்றன. அதேபோல் குரானிலும் அறிவியலுக்கு எதிரான கருத்துகள், ஆணாதிக்கச் சிந்தனைகள் இருக்கின்றன. ஆனால் இதை இஸ்லாமியர்கள் ஏற்றுக் கொள்வதில்லை என்பது தான் வித்தியாசம். குறளுக்கென்று ஒரு மதமோ, அதன் வேதமாக குறளும் இருந்திருக்குமேயானால் குறளின் தவறுகளை நியாயப்படுத்தவும் ஒரு கூட்டம் உருவாகியிருக்கும். குரான் ஒட்டுமொத்தமாக மாற்றாக ஒரு நூலைக் கொண்டுவரக் கூறவில்லை. ஒரு ‘அத்தியாயத்தையேனும்’ என்று தான் குறிப்பிட்டிருக்கிறது. அந்த அடிப்படையில் ஒரு வசனத்திற்கு மாற்றாக ஒரு குறள் தரப்பட்டது. எனவே தரப்பட்ட குறளை மட்டுமே ஒப்பீட்டுக்கு எடுத்துக்கொள்ள வேண்டுமேயல்லாது, குறளின் தவறுகளை பின்புலத்தில் நிறுத்துவது தேவையற்றது.

எடுத்துக்காட்டப்பட்ட குறள் குரானின் வசனங்களுக்கு ஒப்பாகாது என்பதற்கு நண்பர் கையாண்டிருக்கும் ஒப்பீட்டில் ஒரு நேர்மையும் இல்லை. அந்தக் குறள் மருத்துவத்திற்கான இலக்கணத்தை வகுக்கிறது. நோய் என்னதென்று தெரிந்து, அந்த நோய் வந்ததற்கான காரணத்தை அறிந்து, அதை என்ன முறைமையில் போக்குவது என்பதை அறிந்துகொண்டு, செய்வதற்கு வயப்பட்டதைச் செய்யவேண்டும், என்பது அந்தக் குறளின் பொருள். இதை வெறுமனே நோய் வந்தால் மருத்துவம் பாருங்கள் என்பதாக குறுக்கிவிட முடியாது. குறள் கூறும் மருத்துவத்திற்கான இந்த இலக்கணம் இன்றுவரை பொருத்தமானதாக இருக்கிறது, எதிர்காலத்திலும் இது பொருத்தமானதாகவே இருக்கும்.

இதைக் கூறுவதற்கு கடவுள் எதற்கு என்கிறார். அலிஃப், லாம், மீம் என்று பொருளற்ற அசைச் சொற்களையெல்லாம் குரானில் வசனமாக இடம்பெற்றிருக்கிறது என்பதை நண்பர் மறந்துவிட்டாரா? பொருளற்ற அசைச் சொற்களை வசனமாக கூறமுடிந்த கடவுளுக்கு பொருளுடன் கூடிய ஒரு கருத்தைக் கூறுவது எந்த விதத்தில் தேவையின்றிப் போகமுடியும்? நண்பர் நம்பும் கடவுளே கொசுவையோ அதற்கும் அற்பமானதையோ உதாரணம் கூற தயங்கமாட்டேன் என்று கூறியிருக்கும் போது மருத்துவம் குறித்த ஒன்றை கூறுவதற்கு கடவுள் எதற்கு என்கிறார். இதுதான் என்னவகை ஒப்பீடோ?

இந்தக் குறளில் நோய்குறித்த முன்னறிவிப்பு இல்லையா? நோய் நாடி அதன்முதல் நாடி தணிக்கும் முறைநாடி அதைச் செய்வது என்று மட்டும் கூறியிருந்தால் அதில் முன்னறிவிப்பு ஒன்றுமில்லை. ஆனால் அதில் வாய்ப்பச் செயல் என்றும் கூறப்பட்டிருக்கிறது. நோயைத் தணிக்கும் முறையை அப்படியே செய்துவிடாமல் அதில் வாய்ப்பானதை செய்யவேண்டும் என்பதன் மூலம் ஒவ்வாமை என்னும் நோய் குறித்த முன்னறிவிப்பு அங்கு வருகிறது. நோய்க்கான மருந்தேயானாலும் அந்த மருந்தை உட்கொள்ளும் உடல் அந்த மருந்தை எற்றுக்கொள்கிறதா என்பதையும் கண்டறிந்து அதன் பின்னரே மருத்துவம் செய்ய வேண்டும் எனும் விவரணத்தை அதிலிருந்து பெறலாம். அந்த வகையில் அது ஒவ்வாமை எனும் நோய் குறித்த முன்னறிவிப்பாக இருக்கிறது.

குறளையும் குரானையும் இலக்கிய நயத்தில் எப்படி ஒப்பிட்டுப்பார்த்தார் என்பதை நண்பர் குறிப்பிடவே இல்லை. வெறுமனே அட்ரஸ் இல்லாமல் போய்விடும் என்கிறார். எப்படி என்பதையும் விவரிப்பார் என எதிர்பார்க்கிறேன். இலக்கிய நயம் மட்டுமல்ல இலக்கணக் கட்டும் கொண்டது குறள். அதன் யாப்பை எடுத்துக்கொண்டால் அதிலிருக்கும் 1330 குறட்பாக்களில் எந்த ஒரு குறளும் தளைதட்டாது. அதன் எல்லாக் குறளும் முச்சீர் ஈறாக எழுசீர் விருத்தமாக கட்டியமைக்கப்பட்டிருக்கிறது. இதேபோல் குரானில் இருக்கும் இலக்கிய, இலக்கண நயங்களில் ஒன்றிரண்டை நண்பர் எடுத்துவிட்டால் நாங்களும் தெரிந்து கொள்வோம்.

ஒரு உயர்ந்த இலக்கியப் படைப்பாக இருக்க வேண்டுமென்றால் மிகையான உவமைகளும், உருவகங்களும், பொய்களும், புனைவுகளும் இருக்க வேண்டும் என்கிறார். ஆம் உலக இலக்கியங்களில் இவை இடம்பெற்றிருக்கிறன. அதேநேரம் குரானிலும் இவை இடம்பெற்றிருக்கின்றன. உவமைகள் இருக்கின்றன, உருவகங்கள் மிகைப்படுத்தல்கள் இருக்கின்றன. பொய்கள் இருக்கின்றன. நாங்கள் நம்புகிறோம் அதனால் அத்தனையும் சரி, நாங்கள் நம்பாததால் அத்தனையும் பழுது என்பது சரியான ஒப்பீடல்லவே.

உயர்ந்த தரமுள்ள படைப்புகள் பாமர மக்களை விட்டு விலகும், ஆனால் குரான் அப்படியல்லாமல் உயர்ந்த தரமாகவும், பாமர மக்களுக்கு அணுக்கமாகவும் இருக்கிறது என்கிறார் நண்பர். ஒருவருக்கு ஒன்று எளிமையாய் இருப்பதும் கடினமாய் தெரிவதும் அதில் அவர் காட்டும் ஈடுபாட்டிலேயே இருக்கிறது. குறளில் எளிமையானவையும் இருக்கின்றன, கடினமானவையும் இருக்கின்றன. இது எல்லா இலக்கியங்களுக்கும் பொதுவானது தான், குரானும் இதற்கு விலகில்லை. அரபு தெரிந்த ஆனால் குரான் குறித்து அறிமுகமில்லாத ஒருவரிடம் குரானை வாசித்துக்காட்டி பொருள் கூறச்சொன்னால் அது அவருக்கு கடினமானதாகத்தான் இருக்கும். ஏன் அரபு தெரிந்த முஸ்லீம்களுக்கு கூட விரிவுரைகள் இல்லாமல் குரானை விளங்கிக் கொள்வது கடினம் தான். அவ்வளவு ஏன்? முகம்மது குரானை கூறிக்கொண்டிருக்கும் காலகட்டங்களில் கூட மக்களுக்கு புரியாத இடங்களில் விளக்கம் கேட்டிருக்கிறார்கள், முகம்மதுவும் விளக்கியிருக்கிறார், அது ஹதீஸ்களாக பதிவு செய்யப்பட்டும் இருக்கிறது. மட்டுமல்லாது முஸ்லீம்கள் எல்லோருக்கும் குரானும் அதன் கருத்துகளும் பரவலாக்கம் செய்யப்பட்டிருப்பதுபோல், தமிழர்கள் அனைவருக்கும், குறளும் அதன் கருத்துகளும் பரவலாக்கம் செய்யப்படவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இவைகளையெல்லாம் தெரிந்து கொண்டே பாமரர்களுக்கு புரியும்படி இருக்கும் இலக்கியம் குரான் என்பது பரிசீலனையற்ற உயர்வுந‌விற்சியாக மட்டுமே இருக்க முடியும்.

ஆக எடுத்துக்காட்டப்பட்டிருக்கும் குறள் எல்லா விதத்திலும் ஒரு குரான் வசனத்திற்கு ஈடானதே. குரானுக்கு எதுவும் ஈடாக முடியாது என்பது எங்கள் நம்பிக்கை என்று நண்பர் கூறினால் அதை யாரும் மறுக்கப்போவதில்லை. எல்லா நம்பிக்கைகளும் சரியானதாக இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. ஆனால், அதுதான் உண்மை என்றால் தகுந்த காரணங்கள் வேண்டும். மாறாக நம்பிக்கையையே உண்மைதான் என்று கூறிக்கொண்டிருந்தால் அதற்கு வேறு பெயர்தான் சூட்ட வேண்டும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் ௬

இஸ்லாம் கற்பனை மறுப்புக்கு மறுப்பு பகுதி 6

மெய்யாகவே குரான் பாதுகாக்கப்பட்டது தானா?

குரான் பாதுகாப்பில் விழுந்த கேள்விக்குறிகள்

எடுத்துக்கொள்ளப்பட்ட நண்பர் இஹ்சாஸின் பதிவு

குரானின் பாதுகாப்பு குறித்து எழுதப்பட்டிருந்த இரண்டு கட்டுரைகளுக்கும் நண்பர் ஒன்றாக பதிலளிக்க முயன்றிருக்கிறார். நண்பரின் மறுப்புக்குள் புகுமுன் அவர் முரண்பாடு என குறிப்பிட்ட ஒன்றை சரி செய்துவிடலாம். இறுதி செய்யப்பட்ட குரானின் காலத்தை தவறுதலாக முகம்மது இறந்து இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, கால் நூற்றாண்டுக்குப் பிறகு என்று குறிப்பிட்டிருந்தேன். அது தவறானது தான். 15 ஆண்டுகளுக்குப்பிறகு என்பதே சரியானது. பதினைந்து ஆண்டுகள் என்பதையும் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தாலும் 25 ஆண்டுகள் என எழுதியிருப்பது என்னுடைய கவனக்குறைவினால் நேர்ந்தது தான்.

பிரச்சனை என்று வந்துவிட்டால் ஒப்பிட்டுப்பார்க்க முகம்மது முன்னின்று தொகுத்த குரான் இன்று இல்லை அழிக்கப்பட்டுவிட்டது என நான் குறிப்பிட்டிருந்ததை என்னுடைய அறியாமை என நண்பர் குறிப்பிட்டிருக்கிறார். இது குறித்து நண்பருக்கு அறியாமை ஏதும் இல்லை என்பதில் அவர் உறுதியுடன் இருப்பாராயின், முகம்மது முன்னின்று தொகுத்த குரான் எங்கிருக்கிறது என்பதை தெரிவிக்கட்டும்.

இதுகுறித்து நான் கட்டுரையில் இப்படி குறிப்பிட்டிருந்தேன், “முகம்மதின் மரணத்திற்குப்பிறகான 15 ஆண்டுகளில் குரான் மாறவில்லை என்பதற்கு அப்போது இருந்தவர்கள் நேர்மையானவர்கள் இறை பக்தியுள்ளவர்கள் எனவே தவறு செய்திருக்க மாட்டார்கள் என்று ‘நம்பு’வதை தவிர வேறு ஆதாரம் இருக்கிறதா?” ஆனால் நண்பர் மீண்டும் அவரின் நம்பிக்கையையே பதிலாக கூறியிருக்கிறார். எங்கள் நம்பிக்கை என்று முடித்துவிட்டால் அதில் கேள்வி எழுப்ப ஒன்றுமில்லை. ஆனால், அதுதான் சரியானது அதுமட்டுமே சரியானது எனும் போது தான் அதில் கேள்விகள் எழுப்பவும் ஐயப்படவும் தேவை எழுகிறது. இது ஏதோ நமக்கு புரியவில்லை என்பதுபோல் எண்ணிக்கொண்டு எடுத்துக்காட்டு கூறியிருக்கிறார். ஆனால் இதில் புரியாமல் நின்று கொண்டிருப்பது யார்?

ஒரு எழுத்தாளர் சில கதைகளை எழுதுகிறார். அவரின் காலத்திற்குப் பிறகு அவை தொகுக்கப்பட்டு நூலாக வெளியிடப்படுகிறது. நூலாக வெளிவந்தபின் கவனமாக கையெழுத்துப் பிரதி எரித்து அழிக்கப்படுகிறது. ஆனால் எழுத்தாளருக்கு மிக நெருங்கியவர் ஒருவர் அவர் எழுதியது பதினோரு கதைகள், அவர் உயிருடன் இருக்கும் வரையில் பதினோரு கதைகளும் படிக்கப்பட்டு வந்தன என்கிறார். மற்றொருவரோ அவரின் கதைகளை படித்த ஒருவர்தான் தொகுத்தார் எனவே பத்து கதைகள் தான் என்கிறார். இந்த இரண்டில் எது சரியானது என்பதற்கு வெறும் நம்பிக்கை மட்டும் போதுமா? வேறு ஆதாரங்கள் வேண்டாமா?

பொதுவாக குரான் தொகுக்கப்பட்டதற்கு கூறப்படும் காரணங்களிலேயே சில குழப்பங்கள் இருக்கின்றன. குரானைப் பாதுகாப்பது என்னுடைய பொறுப்பு என்று அந்த குரானிலேயே அல்லா உறுதிகூறுகிறான். அதை அனைத்து முஸ்லீம்களும் நம்புகின்றனர். ஆனால் முகம்மது தன்னுடைய முயற்சியிலேயே அதாவது மனித முயற்சியிலேயே குரானை பாதுகாக்க முயற்சிக்கிறார். தொழுகையின்போது குரான் வசனங்களை ஓதுவதற்கு ஏற்பாடு செய்ததும், அந்த நேரத்து வசதிகளின்படி எழுதி வைத்ததும் மனித முயற்சியினால்தான். ஒருவேளை அல்லா பாதுகாப்பேன் என்று உறுதியளித்தது முகம்மதுவின் இந்த மனித முயற்சியைத்தான் என்றால் தொகுப்பதற்கு கூறப்படும் காரணமான மனனம் செய்தவர்கள் இறந்துவிட்டார்கள் என்பது அல்லாவின் உறுதிமொழிக்கு மனித முயற்சிகளுக்கு அப்பாற்பட்ட மதிப்பேதும் இல்லை என முகம்மதின் தோழர்கள் கருதினார்கள் என பொருள் வருகிறது. மற்றொரு பக்கம் முகம்மது ஏற்பாடு செய்து எழுதிவைத்திருந்த குரான் வசனங்கள் இருக்கும்போது மனனம் செய்திருந்தவர்கள் இறந்துவிட்டனர் எனும் காரணமே மாற்றுக் குறைவானாதாக ஆகிவிடுகிறது.

அபூபக்கர் காலத்தில் தொகுக்கப்பட்ட குரான் இருக்கும்போது உஸ்மான் மீண்டும் தொகுக்க வேண்டிய அவசியமென்ன? பல இடங்களுக்கும் அனுப்பிவைக்க வேண்டுமென்றால் அபுபக்கர் தொகுத்த குரானையே படிகள் எடுத்து அனுப்பியிருக்க முடியும் எனும் நிலையில் உஸ்மான் மீண்டும் தொகுக்க முற்பட்டது ஏன்? வெறுமனே அத்தியாயங்களை வரிசைப்படுத்துதல் எனும் காரணத்தை முகம்மது ஏற்பாடு செய்து தொகுத்த குரானும் அழிக்கப்பட்டிருக்கிறது என்பதோடு பொருத்திப் பார்த்தால் போதுமானதாக இல்லை.

அடுத்து, எழுதுகோல் காகிதம் மை குறித்து நண்பரின் மறுப்பைப் பார்த்தால், நான் கேட்டது ஒரு கோணத்திலும் அவர் மறுத்திருப்பது வேறொரு கோணத்திலும் இருக்கிறது. நான் கேட்டிருப்பது என்ன? வேத வசனங்கள் இறங்கும் போது அதை பாதுகாப்பதற்கு முகம்மது எழுதிவைக்கச் சொன்னபோது பேரீத்தம் மட்டைகளிலும், எலும்புகளிலும் எழுதிவைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதே காலகட்டத்தில் இறங்கிய(!) வசனமோ எழுதுகோலையும் மையையும் பற்றி பேசுகிறது. இந்த முரண்பாட்டை சுட்டித்தான் இந்த வசனம் ஏன் இடைச் செருகலாக இருக்கக்கூடாது எனும் பொருளில் ஐயம் எழுப்பப்பட்டிருக்கிறது. இதற்கு நண்பரின் மறுப்பு என்ன? முகம்மது காலத்தில் மை பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பது தான். ஆம், முகம்மதின் கடைசி காலகட்டத்தில் எழுதப்பட்ட கடிதங்கள் மையைப் பயன்படுத்தி எழுதப்பட்டிருக்கின்றன. ஆனால் அவை மதீனாவில் இஸ்லாமிய அரசு அமைந்தபிறகு. மேற்படி வசனமோ மக்கீ வசனம் அதாவது மக்காவில் இறங்கிய வசனம். வெளிப்படையாக கேட்டால், நடப்பில் மட்டைகளில் எழுதிக்கொண்டிருந்தபோது கனவு வசனங்கள் மையை பயன்படுத்தி எழுதச் சொல்வது எப்படி?

அடுத்து, குரானின் பாதுகாப்பில் மிகப்பெரிய கேள்வியை கேள்வியை எழுப்பியிருக்கும் ஒரு ஹதீஸ் ஆதாரபூர்வமான ஹதீஸ் தொகுப்பான முஸ்லீமில் இடம்பெற்றிருக்கிறது எனக் குறிப்பிட்டிருந்தேன். முகம்மதுவிற்கு மிகவும் விருப்பமான மனைவியான ஆய்சாவினால் அறிவிக்கப்பட்டிருக்கும் அந்த ஹதீஸ் முகம்மது இருக்கும்வரை அந்த வசனம் குரானில் ஓதப்பட்டு வந்தது என்பதையும் பின்னர் நீக்கப்பட்டுவிட்டது என்பதையும் தெளிவாகவே விளக்குகிறது. ஆனால் நண்பரோ இது ஆதாரபூர்வமற்ற ஹதீஸ் எனவே இதற்கு பதில் கூறுவது தேவையற்றது என்று கடந்து செல்கிறார். முஸ்லீமில் இடம்பெற்றிருக்கும் ஒரு ஹதீஸை ஆதாரமற்றது என யார் தீர்ப்பளித்தது? எந்த அடிப்படையில் இது ஆதாரமற்ற ஹதீஸ்? புஹாரியிலும், முஸ்லீமிலும் இடம்பெற்றிருக்கும் ஆதாரமற்ற ஹதீஸ்களின் பட்டியலை தந்தால் பரிசீலிப்பதற்கு ஏதுவாக இருக்கும். பிரச்சனை எழுந்தவுடன் அதாரமற்றது என போகிறபோக்கில் சொல்லிச் செல்வது நேர்மையானவர்களின் செயல் அல்ல. தவிரவும், \\இது தொடர்பான மேலதிகவிபரங்களை அடுத்த தொடரில் எதிர்பாருங்கள்// என்றும் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் இதுவரை அந்த ஹதீஸ் குறித்த விளக்கம் எதையும் அவர் அளிக்கவில்லை.

அடுத்து, நான் எழுதியிருந்தவைகளில் முரண்பாடு என சிலவற்றைச் சுட்டியிருக்கிறார். அவற்றில் முதலாவது, இதுதான் மெய்யான குரான் என பல விதங்களில் உலவத்தொடங்கியது எப்போது? இதில் அபூபக்கர் காலத்திலா, உஸ்மானின் காலத்திலா என்று நுணுகிப் பார்க்கும் அளவுக்கு இதில் பொருள் வேறுபாடு ஒன்றுமில்லை. மனனம் செய்தவர்கள் குறைந்துவிட்டார்கள் என்பதால் முதல்முறையும், வேறுபாடுகள் வந்துவிட்டன என்பதால் இரண்டாம் முறையும் தொகுக்கப்பட்டது என்றால்; முதல் முறை தொகுக்கப்பட்டபோதே முகம்மது ஏற்பாட்டில் தொகுக்கப்பட்ட குரான் இருந்திருக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே முகம்மதுவின் மரணத்திற்கு பின் என பொதுவாக எழுதுவது போதுமானது.

அவர் அடக்கம் செய்யப்பட்ட இடம் இன்று பெரிய மசூதியாக பாதுகாக்கப்படுகிறது. இதுவும் நுணுகிப் பார்க்கும் அளவுக்கு பெரிய வேறுபாடுகள் இல்லாதது. முதலிலிருந்தே மசூதியாக்கப்பட்டாலும், பிறகு விரிவாக்கத்தில் உள்வாங்கப்பட்டாலும் இது இஸ்லாத்திற்கு தேவையில்லாதது என்று விலக்கப்படவில்லையே. மட்டுமல்லாது இது எதற்காக கூறப்பட்டது என்பதை பார்க்க வேண்டாமா? முகம்மது அடக்கம் செய்த இடம் பாதுகாக்கப்படுகிறது, அவர் அணிந்திருந்த செருப்பு பாதுகாக்கப்படுகிறது, அவர் பயன்படுத்திய வாளுறை பாதுகாக்கப்படுகிறது. ஆனால் அவர் முன்னின்று தொகுத்த குரான் மட்டும் எரிக்கப்பட்டுவிட்டது. அந்த குரானை விடவா செருப்பும் மற்றவையும் முக்கியமாய் ஆகிவிட்டது? அல்லது செருப்பும் வாளுறையும் குரானைவிட இஸ்லாத்திற்கு நெருக்கமானதா?

இன்றைய குரான் பிரதிகளுக்கிடையில் வசன எண்களில் வித்தியாசம் இல்லையா? இருக்கிறது ஜான் டிரஸ்ட் வெளியீட்டுக்கும், பிஜே வெளியீட்டுக்கும் இடையில் வசன எண்களில் வித்தியாசம் இருக்கிறது. வசன எண்கள் அடையாளத்திற்குத்தான் என்பதில் மாற்றுக் கருத்து ஒன்றுமில்லை. இப்போது வசன எண்களும் வரிசையும் அவசியமானதல்ல எனக்கூறும் நண்பர் தான் வரிசை சரியாக இருக்காது என்பதால் முகம்மதின் முயற்சியிலான குரான் அழிக்கப்பட்டதையும் சரிகாண்கிறார்.

கடைசியாக தவறுகள் நிறைந்துள்ள கம்யூனிசத்தில் என்றொரு உருவத்தையும் காட்டுகிறார். கம்யூனிசத்தில் தவறுகள் நிறைந்திருக்கிறது என்பது நண்பரின் நம்பிக்கை என்றால் அதில் குறுக்கிடுவதற்கு ஒன்றுமில்லை, ஏனென்றால் அவரின் நம்பிக்கை சரியாக இருக்க வேண்டும் என அவசியமில்லை. மாறாக அது சரியானது என அவர் நினைத்தால், கம்யூனிசத்தின் தவறுகள் குறித்து ஒரு தனிப்பதிவு எழுதட்டும், பதிலளிக்க நாம் தயார்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் 7

இஸ்லாம் கற்பனை மறுப்புக்கு மறுப்பு பகுதி 7

ஹதீஸ்களும் அதன் பிரச்சனைகளும்

எடுத்துக்கொள்ளப்பட்ட நண்பர் இஹ்சாஸின் பதிவு

ஹதீஸ் குறித்த இந்த கட்டுரையில், அது எந்த காலகட்டத்தில் எப்படி தொகுக்கப்பட்டது என்பது குறித்த சுருக்கமாக விவரித்திருந்தேன். அதை நண்பரும் ஒப்பியிருக்கிறார். ஆனால் ஹதீஸின் நம்பகத்தன்மை குறித்தவற்றில் மட்டும் அவரின் மாற்றுக் கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஹதீஸ்கள் என்பது அவை தொகுக்கப்படுவதற்கு முன்னர் வரை செவி வழிச் செய்திகள் தான். முகம்மது இறந்து நூற்றுக்கும் அதிகமான ஆண்டுகளுக்குப் பிறகுதான் ஹதீஸ்களை தொகுக்கும் பணி தொடங்குகிறது. இடைப்பட்ட அந்த ஆண்டுகளில் ஹதீஸ்கள் எப்படி பாதுகாக்கப்பட்டன என்பது முக்கியத்துவம் வாய்ந்த கேள்வி. குரானைத்தவிர நான் கூறும் எதனையும் பதிவு செய்ய வேண்டாம் எனும் முகம்மதின் அறிவுறுத்தலும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். இதன் பிறகும் ஹதீஸ் என்பவைகளை முழு வரலாறுகளாகக் கருத முடியுமா?

இதை மறுக்க நினைக்கும் நண்பர் கூறுவதென்ன? \\முஹம்மது நபி இறந்த பின் வந்த முதல் நூற்றாண்டு காலப் பகுதியில் வாழ்ந்தவர்களின் நம்பகத் தன்மை அவர்களிடமிருந்து அறிவிக்கும் நபரிடமிருந்தும் அவரை அறிந்து வைத்திருந்த நபர்களிடமிருந்தும் அவர்களின் உறவினகளிடமிருந்தும் இன்னும் பல வழிகளில் அறியப்படும். இதற்காக இப்பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் பல ஊர்களுக்கும் சென்று அவர்களது விபரங்களை திரட்டி எடுத்தனர்// அதாவது நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்களைப் பற்றி அவர் ஞாபக சக்தி மிக்கவர், இவர் நேர்மையாளர் என்று நூறு ஆண்டுகளுக்கு பின்னர் உள்ளவர்கள் திரட்டிய தகவல்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டது தான் ஹதீஸ். இதைத்தான் நண்பரும் கூறுகிறார் நானும் கூறுகிறேன். இப்படி திரட்டப்பட்ட திரட்டை தோராயத் தன்மையானது என்று குறிப்பிடுவதில் என்ன தவறு இருந்துவிட முடியும்?

இன்னொரு தகவலையும் பார்க்கலாம். ஹதீஸ் தொகுப்புகளில் ஸிஹாஹ் சித்தா என போற்றப்படும் ஆறு நூல்களில் முதன்மையான நூலைத் தொகுத்தவரான புகாரி என்பவர், ஹதீஸைத் தொகுக்க வேண்டும் என்பதற்காக ரஷ்யப் பகுதியிலிருந்து மக்காவிற்கு வரும்போது அவருக்கு வயது பதிமூன்று. இவர் ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளில் சேகரித்த மொத்த ஹதீஸ்களின் எண்ணிக்கை சுமார் ஆறு லட்சம். அதாவது ஒரு நாள் ஒன்றுக்கு 275 ஹதீஸ் வீதம் சேகரித்திருக்கிறார், அதுவும் பதின்ம வயதுகளில். இந்த செய்தி தரும் நம்பகத்தன்மையின் அளவில், ஹதீஸின் நம்பகத்தன்மையில் என்ன மாறுதல் இருந்துவிட முடியும்?

எடுத்துக்காட்டுக்காக பயன்படுத்தப்பட்ட இரண்டு ஹதீஸ்களில் ஏற்கப்பட்டவை மறுக்கப்பட்டவை என்பது பிரச்சனையே அல்ல. ஏற்பிலும் மறுப்பிலும் ஹதீஸின் உள்ளடக்கமே வினைபுரிகிறது என்பதே முதன்மையானது. அதை நண்பரும் மறுக்கவில்லை என்றாலும் அதற்கு வேறொரு விளக்க, அளிக்கிறார். \\ஹதீஸின் கருத்து மையப்படுத்தப்படுவது உண்மைதான். அந்த கருத்து குர்ஆனுக்கு முரண்படுகிறதா இல்லையா என்றுதான் மையப்படுத்தப்படும். எனது அறிவுக்கு உடன்படுகிறதா இல்லையா என்று மையப்படுத்தப்படுவதில்லை// குரானின் வசனங்களுக்கு காலத்திற்கு தகுந்தவாறு பொருள் வழங்கப்படும் நிலையில் குரானுக்கு முரண்படுகிறதா? என்பதற்கும் அறிவுக்கு முரண்படுகிறதா? என்பதற்கும் இடையில் பாரிய பேதம் எதுவும் இருந்துவிட முடியாது. இதை கட்டுரையில் சுட்டிக்காட்டியிருந்ததைக் கொண்டே விளக்கலாம். \\ஒரு குழுவினர் ‘முகம்மதுவிற்கு சூனியம் வைக்கப்பட்டிருந்தது என்றால் மொத்த குரான் மீதே சந்தேகம் வந்துவிடும் எனவே அதிகாரபூர்வமான ஹதீஸாக இருந்தாலும் குரானோடு முரண்படுவதால் இதை ஏற்றுக்கொள்ளக்கூடாது’ என்றும் மற்றொரு குழுவினரோ ‘ஆதாரபூர்வமான ஹதீஸை மறுக்கக்கூடாது இதில் முரண்பாடு ஒன்றுமில்லை. அல்லாவே குரானின் பாதுகாப்பிற்கு உத்திரவாதம் அளிப்பதால் குரானில் பாதுகாப்பில் சந்தேகம் ஒன்றுமில்லை. அதேநேரம் ஆதாரபூர்வமான ஹதீஸ் முகம்மதுவுக்கு சூனியம் வைக்கப்பட்டதாக கூறுவதால்; முகம்மதுவுக்கு சூனியம் வைக்கப்பட்டு அவர் பாதிக்கப்பட்டார் ஆனால் அது குரானை பாதிக்கும் அளவில் இல்லை என்று எடுத்துக்கொள்ளவேண்டும்’ என்றும் வாதிட்டுக்கொண்டிருக்கின்றனர்// இங்கு ஒரு ஹதீஸை ஒரு பிரிவினர் குரானுக்கு முரணானது என்றும் மற்றொரு பிரிவினர் அது குரானோடு முரண்படவில்லை என்றும் வாதாடுகின்றனர். இரு பிரிவினருமே குரான் வசனங்களை அடிப்படையாகக் கொண்டே தத்தம் வாதங்களைச் செய்கின்றனர். என்றால் இதில் எது மையப்படுத்தப்படுகிறது? குரான் வசனமா? அதற்கான அறிவு விளக்கமா?

குரானுக்கு முரண்படும் ஹதீஸ்களை பொருத்தவரையில் அதுவும் ஹதீஸ்கலையின் விதிதான் என்கிறார் நண்பர். எல்லா ஹதீஸ் தொகுப்புகளை விடவும் காலத்தால் முந்திய முகம்மதுவின் வரலாற்றை எழுதிய தபரி, இபின் இஷாக், இபுன் ஸைத் போன்றோர்கள் குரானுக்கு முரணானதை தள்ளிவிட வேண்டும் என விதி ஏற்படுத்தவில்லை. அதன் பிறகு உள்ளவர்களான இமாம்கள் என போற்றப்படும் ஷாஃபி, ஹனபி, ஹம்பலி, மல்லிக் எனும் நால்வரும் அவ்வாறு எந்த விதியையும் ஏற்படுத்தவில்லை. இதன் பிறகு ஹதீஸ்களைத் தொகுத்தவர்களுள் முக்கியமானவர்களான புஹாரி, திர்மிதி உள்ளிட்ட அறுவரில் எவரும் அப்படி ஒரு விதியை ஏற்படுத்தவில்லை. அதேநேரம் இவர்களில் எவரும் குரானுக்கு முரணான எதுவும் இஸ்லாத்தில் ஏற்கத்தக்கதல்ல எனும் அடிப்படை தெரியாதவர்களும் அல்லர்.  ஆனால் இவர்கள் எல்லோரையும் விட காலத்தால் பிந்தியவர்கள் அவ்வாறு விதியை ஏற்படுத்துகிறார்கள் என்றால் அதன் பொருள் என்ன? மாறிவரும் காலத்திற்கு ஏற்பவும், விரிவடைந்தும் ஆட்சிப்பகுதிகளின் சமூகத்தேவைகளை ஈடுகட்டவும் புதுப்புது ஹதீஸ்களின் தேவையும், அதனை ஒழுங்குபடுத்த புதுப்புது விதிகளும் தேவைப்பட்டிருக்கின்றன என்பதல்லாது வேறு என்ன காரணம் இருந்திருக்க முடியும்? ஹதீஸ்கள் புதிதாக சேர்க்கப்பட்டிருக்குமா? நீக்கப்பட்டிக்குமா? என்பது இப்போதைய கேள்வியல்ல என்றாலும், இதிலிருந்து பெறப்படுவது ஹதீஸ்களின் நம்பகத்தன்மை தோராயமானது என்பதுதான்.

முறையான அறிவிப்பளர்கள் வரிசையைக் கொண்டிருக்கும் ஹதீஸ்களில் சில குரானுடன் முரண்படுகின்றன. என்றால் அதன் பொருள் என்ன? இதை இரண்டு விதமாக கொள்ளலாம். முறையான அறிவிப்பாளர் வரிசையைக் கொண்டிருக்கும் ஹதீஸ்கள் கூட நூறு விழுக்காடு உண்மையானது எனக் கூறவியலாது. சரியான ஹதீஸ்கள் என நம்பப்படுவதற்கு முறையான அறிவிப்பாளர் வரிசை இருக்கிறது என்பது மட்டுமே ஆதாரம் கூற போதுமானதில்லை. ஆக எந்த வகையில் பார்த்தாலும் ஹதீஸ்களின் நம்பகத்தன்மை தோராயமானது எனும் முடிவிற்குத்தான் வரவேண்டியுள்ளது.

அடுத்து நண்பர் ஒரு கேள்வியை இரண்டாக பிரித்து தனித்தனியே பதில் கூற முனைந்திருக்கிறார். \\ குரானின் மொத்த வசனங்களில் சில மக்காவில் அருளப்பட்டவை, சில மதீனாவில் அருளப்பட்டவை; இன்னும் சில வசனங்கள் மக்காவில் அருளப்பட்டதா? மதீனாவிலா என்று முடிவுசெய்ய இயலாதவை. குரான் வசனங்களிலேயே மக்காவிலா மதீனாவிலா எங்கு அருளப்பட்டது என்பதை ஹதீஸ்களின் துணையோடு தீர்க்கமுடியவில்லை எனும்போது நரை முடி என்பதெல்லாம் உயர்வு நவிற்சி தான்// அதாவது எத்தனை நரைமுடி முகம்மதுவிற்கு இருந்தது என்பதைக்கூட துல்லியமாக கூறிவிடும் அளவிற்கு முகம்மதின் வாழ்க்கை ஹதீஸ்களில் படம் பிடிக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுவதற்கு எதிராக இஸ்லாத்தோடு ஒரு தொடர்பும் இல்லாத நரை முடியைவிட நெருக்கமான உறவு கொண்டிருக்கும் எந்த வசனம் எங்கு இறங்கியது என்பதைக் கூட ஹதீஸ்களின் துணையோடு அறிய முடியாதிருக்கும் போது எத்தனை நரை முடி இருந்தது என்பது ஒரு பயனும் இல்லாதது என்பதைத்தான் நான் பதிவு செய்திருந்தேன். ஆனால் நண்பர் இரண்டையும் பிரித்து, நரை முடிக்கு ஒரு ஹதீஸ் இருக்கிறது என்றும், எங்கு இறங்கியது என்பது அவ்வளவு முக்கியத்துவம் இல்லாத ஒன்று என்றும் தனித்தனியே பதிலளித்திருக்கிறார் இரண்டும் தேவையற்ற விசயங்கள் தான் என்பதில் மறுப்பு ஒன்றுமில்லை. ஹதீஸ்கள் துல்லியமாக முகம்மதின் வாழ்க்கையை படப்பிடித்துக் கூறவில்லை என்பது தான் இங்கு முதன்மையான செய்தி.

பொதுவாக முஸ்லீம்கள் ஹதீஸ்களைப் பொருத்தவரை குரானுக்கு அடுத்தபடியாக இருக்கும் புஹாரி, முஸ்லிம் தொகுப்புகளின் கற்பில் ஐயம் ஏதும் கொள்வதில்லை. குரானின் புனிதத்தன்மைக்கு ஈடாக ஹதீஸ்களையும் பேணுகிறார்கள். ஆனால் பிரச்சனை என வந்துவிட்டால் அதில் ஐயத்தன்மை இருப்பதை சுற்றி வளைத்து ஒப்புக் கொள்வார்கள். அதேநேரம் இப்போது எழுந்திருக்கும் கேள்விகளால் மீண்டும் ஹதீஸ்களை சரிபார்த்து மெய்யான ஹதீஸ்களை மட்டும் தொகுத்து இனி இதுதான் உறுதிப்படுத்தப்பட்ட  ஹதீஸ்கள் என அறிவிப்பார்களா? ஒருபோதும் முடியாது. பல்வேறு நாடுகளின் ஆன்மீகத் தலைமைகள், அவர்களின் வர்க்க நலன்கள், பல அமைப்புகளுக்கிடையேயான பகைமைகள் என பல்வேறு நிலமைகளால் அது சத்தியமில்லை. மட்டுமல்லாது சிக்கலான கேள்விகளை நீர்த்துப்போக வைக்கவும் இவைகள் பயன்படுகின்றன. ஆனாலும் அன்றைய நிலையில் ஏற்பட்ட சமூக நெருக்கடிகளை தீர்ப்பதற்காகவே ஹதீஸ்களை தொகுத்ததும் பின்னர் விதிமுறைகளை ஏற்படுத்தி தணிக்கை செய்வதற்கான தெரிவுகள் பயன்படுத்தபட்டதும் நடந்திருக்க முடியும்.

முன்னர் நடந்த ஒரு விவாதத்தில் நண்பர் இப்ராஹிம் ஹதீஸ்கள் வரலாறுதான் என நிருவுவதற்கு கடுமையாக முயன்றார். அவரின் வாதமும் இதுவாகத்தான் இருந்தது. ஹதீஸ்களுக்கு முறையான அறிவிப்பாளர் வரிசை இருந்தது, குரானுக்கு முரணான ஹதீஸ்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டவையல்ல. குரானுக்கு முரணான ஹதீஸ்கள் இட்டுக்கட்டப்பட்டவை என்றால் அவைகளுக்கு முறையான அறிவிப்பாளர் வரிசை வந்தது எப்படி? தவறான ஹதீஸ்களுக்கு முறையான அறிவிப்பாளர் வரிசை இருக்க முடியுமென்றால்; முறையான அறிவிப்பாளர் வரிசை இருக்கிறது என்பதாலேயே ஒரு ஹதீஸ் சரியானது என்று எப்படி ஆகும்?

எனவே, ஹதீஸ்கள் உண்மையான வரலாறு என்பதைவிட 1400 ஆண்களுக்கு முன் வாழ்ந்த ஒரு மனிதரின் வாழ்க்கை நிகழ்வுகளைக் கூறுவதாக கருதப்படும் நம்பகத்தன்மையில் சமரசத்தைக் கொண்டுள்ள தொகுப்பு என்பது தான் அறிவுக்கு பொருத்தமானதாகும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் 8

இஸ்லாம் கற்பனை மறுப்புக்கு மறுப்பு பகுதி 8

நான் ஏன் பிஜேவுடன் நேரடிவிவாதம் செய்ய விரும்பவில்லை?
செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம்
எடுத்துக் கொள்ளப்பட்ட நண்பர் இஹ்சாஸின் பதிவு

 

இது இரண்டாவது சுற்று மறுப்பு. இதில் நண்பர் நேரடி விவாதத்திற்கு நான் ஏன் ஆயத்தமாக இல்லை என்பதை எடுத்துக் கொண்டிருக்கிறார். இது குறித்து பலமுறை விளக்கமளித்த பின்பும், மீண்டும் மீண்டும் இந்தக் கேள்விகள் எழும்பிக் கொண்டே இருக்கின்றன. எனவே, காத்திரமான பதில்களோ, மறுப்புகளோ முன்வைக்காத பட்சத்தில் இனி இந்தத் தலைப்பை எடுத்துக் கொள்வதில்லை என முடிவு செய்திருக்கிறேன். ஆகவே கடைசியாக மீண்டும்.

 

அதற்கு முன்னால் சில விளக்கங்களையும் அளிக்க வேண்டியதிருக்கிறது. நண்பர் இஹ்சாஸ் நான் கடைசி இரண்டு முறையாக என்னுடைய பதிவுகளை முறைப்படி அவரிடம் அவரது தளத்தில் தெரிவிக்கவில்லை என்றொரு குற்றச்சாட்டை வைத்திருந்தார். அது தவறான குற்றச்சாட்டு. நான் எப்போதும் போல் அவருடைய தளத்தில் அதை தெரிவிக்க முயன்றேன். ஆனால் அவருடைய தளத்தில் அது பின்னுட்டமாக ஏற்கப்படவில்லை. பலமுறை முயன்றும் அதுதான் நிலை என்பதால் விட்டுவிட்டேன். இப்படி ஒரு குற்றச்சாட்டு எழக்கூடும் என எதிர்பார்த்ததால் அதை படமாகவும் எடுத்து வைத்திருக்கிறேன். இதோ,

 

அடுத்து, நண்பர் இஹ்சாஸ் முதலில் அவருடைய கட்டுரையிலும், பிறகு இங்கு பின்னூட்டமாகவும், பின்னர் கூகிள் அரட்டையிலும் நேரடி விவாதத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தார். அதற்கு முறைப்படி நான் பின்னுட்டத்திலும், மின்னஞ்சலிலும், அரட்டையிலும் பதில் கூறினேன். ஆனாலும் அவர் தொடர்ந்து நேரடி விவாதத்திற்கு நீங்கள் வர மறுப்பதற்கான காரணங்களை எல்லாம் வீரியமான பதில்கள் மூலம் தகர்த்து விட்டதாகவும், எனவே நேரடி விவாதத்திற்கு வந்தே தீரவேண்டும் என்றும் தொடர்ந்து அழைத்துக் கொண்டே இருந்தார். அதன் பிறகு அவருக்கு இது குறித்து நான் பதில் கூறுவதை நிறுத்தி விட்டேன். அதன் பின்னர் என்னை அம்பலப்படுத்தப் போவதாக குறிப்பிட்டிருந்தார். அதற்கும் நான் பதிலளிக்கவில்லை. இயன்றால் அவர் அம்பலப்படுத்தலாம், நானும் காத்திருக்கிறேன், அவரின் அம்பலப்படுத்தலுக்காக.

நண்பர் இஹ்சாஸ் முதலில் ஒரு தளத்தை நடத்தி வந்தார். அதில் தன்னுடைய மின்னஞ்சல் யாரோ சிலரால் முடக்கப்பட்டு விட்டதாகவும், அதை தொடர்ந்து பயன்படுத்த இயலாததால் வேறொரு மின்னஞ்சலை ஏற்படுத்திக் கொண்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். தற்போது அவருடைய (பழைய) தளமே முடக்கப்பட்டு விட்டதாகவும் தொடர்ந்து பயன்படுத்த இயலாததால் வேறொரு தளத்தில் எழுதுவதாகவும் குறிப்பிட்டு அதே பெயரில் வேறொரு தளத்தில் எழுதிக் கொண்டிருக்கிறார். மட்டுமல்லாது “இஸ்லாம் கற்பனைக் கோட்டையின் விரிசல்கள் வழியே” எனும் தொடருக்கு தான் மறுப்பெழுதப் போவதில்லை என்றும் அவருக்கான என்னுடைய மறுப்பை மட்டுமே கணக்கிலெடுத்துக் கொள்ளப் போவதாகவும் அறிவித்திருக்கிறார். ஆனாலும் அவருடைய இரண்டு தளங்களும் தொடர்ந்து இயக்கத்தில் தான் இருக்கின்றன, யாரும் முடக்கவில்லை. இவைகளையெல்லாம் ஏன் அவர் செய்திருக்கிறார் என்பது தெளிவாக புரியவில்லை என்றாலும், வெளிப்படுத்திவிடுவது நல்லது என்பதால் ஒரு தகவலாக தெரிவித்துக் கொள்கிறேன். மட்டுமல்லாது அவருடைய மறுப்புகள் அனைத்திற்கும் வழக்கம்போல் நான் விளக்கமளிப்பேன் என்பதையும் அறிவித்துக் கொள்கிறேன்.

 

மேலும், அவருடைய கட்டுரைகளில் பல இடங்களில் இறைவன் இருக்கிறானா எனும் தலைப்பில் விவாதம் செய்துவிட்டு அதன் பிறகே விமர்சனங்களைச் செய்ய வேண்டும் எனும் பொருளில் குறிப்பிட்டிருக்கிறார். நான் செய்யும் யூகம் சரியாக இருக்கும் பட்சத்தில் ஓரிரு மாதங்களுக்கு முன்னர் இறைவன் இருக்கிறானா எனும் தலைப்பில் விவாதம் செய்தது நண்பர் இஹ்சாஸாகத்தான் இருக்க வேண்டும். என்னுடைய இந்த யூகம் தவறாகவும் இருக்கலாம். இதை எங்கனமேனும் நான் அறிந்துவிடக் கூடும் என்பதால் தானோ என்னவோ தன்னுடைய மின்னஞ்சல் முகவரி முடக்கப்பட்டு விட்டதாக அறிவித்துக் கொண்டார், இன்னும் அவருடைய பழைய மறுப்புகளுக்கு நான் பதிலளிக்கக் கூடாது எனும் எண்ணத்தில் தளமே முடக்கப்பட்டுவிட்டதாக அறிவித்துக் கொண்டார்.  ஒருவேளை என்னுடைய இந்த யூகங்கள் தவறாக இருக்கும் பட்சத்தில் என்னை நேரடி விவாதத்திற்கு தொடர்ச்சியாக அழைத்துக் கொண்டிருப்பதற்கான எதிர்வினையாக அவரை எழுத்து விவாதம் செய்ய வருமாறு அழைக்கிறேன். இது பிடிவாதமல்ல, ஓர் எதிர்வினை அவ்வளவே, ஏற்றுக் கொள்வதும் மறுப்பதும் அவரின் வசதிகளை, விருப்பத்தைச் சார்ந்தது.

 

இஸ்லாத்தை விமர்சித்து நான் தொடர்கட்டுரைகள் எழுதுகிறேன். இதில் ஏற்பில்லாத யாரும் இக் கட்டுரைகளை மறுத்து தங்கள் விமர்சனங்களை, எதிர்வினைகளை எடுத்துவைக்கலாம். அப்படி எதிர்வினை புரிபவர்களை குறிப்பிட்ட ஒரு வடிவத்தில் தான் நீங்கள் உங்கள் மறுப்புகளை கூறவேண்டும் அப்போது தான் நான் அதற்கு பதிலளிப்பேன் என்று கூறுவது சரியாக இருக்குமா? நான் எனக்கு வசதியான ஒரு வடிவத்தில் எழுத்து வடிவத்தில் என்னுடைய விமர்சனங்களை வைக்கிறேன். இதற்க்கு மறுப்பு தெரிவிக்க விரும்புபவர்கள் எந்த வடிவத்திலும் அதை தெரிவிக்கலாம், மேடைப் பேச்சாக தெரிவிக்கலாம், எழுத்தில் தெரிவிக்கலாம், – கடிதம் எழுதலாம், மின்னஞ்சலில் தெரிவிக்கலாம் – நேரடியாக என்னிடம் கூறலாம், அவரவர்களுக்கு எப்படி வசதிப்படுகிறதோ அதன்படி அவர்கள் தெரிவிப்பார்கள். அது என்னுடைய கவனத்திற்கு வரும் போது என்னுடைய வசதிப்படி அவர்களுக்கு பதிலளிப்பேன். இதில் முக்கியமானது கேள்விக்கு என்ன பதில், விமர்சனத்திற்கு என்ன விளக்கம் என்பதுதான். மாறாக என்ன வடிவத்தில் அந்த பதில் அல்லது விளக்கம் இருக்கிறது என்பதல்ல. எனவே இவர்கள் நேரடி விவாதத்திற்கு வரவேண்டும் என அழைப்பது அடிப்படையிலேயே தவறானது.

 

இனி நண்பரின் மறுப்புகளுக்குள் கடப்போம். இஸ்லாமியர்களின் சமூகப் பங்களிப்பை அதிகப்படுவதற்காக தொடங்கப்பட்டதாக கூறப்படும் “இஸ்லாம் கற்பனைக் கோட்டைகளின் விரிசல்கள் வழியே” எனும் தொடரில் இதுவரை நான் அவ்வாறான கட்டுரைகள் எதையும் எழுதாமல் இஸ்லாத்தை விமர்சிப்பதை மட்டுமே செய்து வந்திருக்கிறேன் என்பதாக தன் மறுப்பை தொடங்குகிறார். \\ இன்னும் சொல்லப்போனால் அது பற்றி இதுவரை வாய்கூட திறக்கவில்லை// என்றும் குறிப்பிட்டிருக்கிறார். இது சரியா? நான் அந்தத் தொடரின் நுழைவாயில் பகுதியிலேயே தெளிவாக இப்படி குறிப்பிட்டிருக்கிறேன். \\ தங்களின் பிரச்சனைகள் இந்த உலகிலிருந்தே எழுந்து வருபவைகள். சிலர் கொழுக்க நினைப்பதாலேயே தமக்கு பிரச்சனைகள் வருகின்றன என்பதும், தம்முடைய உழைப்பு முழுவதும் தமக்கு கிடைப்பதில்லை என்பதும் அவர்களுக்கு தெரியாமலேயே போய்விடுகிறது. அப்படி தெரியவிடாமல் செய்வதில் கடவுள் நம்பிக்கை பெரும்பங்கு வகிக்கிறது என்பதையும் அவர்கள் உணர்வதில்லை ….. அதற்கு அவர்களின் மத நம்பிக்கையை மதப்பிடிப்பை கேள்விக்குள்ளாக்குவது முன்நிபந்தனையாகிறது// எனவே எது முன்நிபந்தனையாக இருக்கிறதோ அதையே தற்போது செய்து கொண்டிருக்கிறேன். உழைக்கும் மக்களாய் தாங்கள் சந்திக்கும் துன்பங்களும் துயரங்களும் இந்த உலகிலிருந்து கிளைத்து வருபவை என்பதை உணர்ந்து வீரியமாய் போராட வரவேண்டுமானால்; இன்பத்திற்கும் துன்பத்திற்கும் நானே காரணம் எனும் கடவுளின் கூற்றை மறுத்தாக வேண்டும். ஏனென்றால் இரண்டும் ஒன்றுக்கொன்று எதிரானவை. இன்னொரு பக்கம், இந்தத் தொடருக்கு வெளியே நான் எழுதிக் கொண்டிருக்கும் கட்டுரைகள் அனைத்தும் மக்களுக்கு போராடவேண்டிய அவசியத்தை, அவசரத்தை உணர்த்தும் வண்ணமே அமைந்திருக்கிறது. இந்தக் கட்டுரைகள் இஸ்லாமியர்களையும் உள்ள‌டக்கியே முன்வைக்கப்பட்டிருக்கின்றன. எனவே நான் வாய் திறக்கவில்லை என்று கூறமுடியாது. மட்டுமல்லாது, குறிப்பாக இஸ்லாமியர்களுக்கென நான் வாய்திறந்தவைகள் கீழே சுட்டிகளாக கொடுக்கப்பட்டிருக்கின்றன.

 

முதலில் நேரடியாக வருகிறேன் என்றும், பின்னர் முடியாது என்றும் கூறியது ஏன்? காலம் கடந்த ஞானமா? என்கிறார். ஆம். அதில் தவறென்ன இருக்கிறது. முதலில் உத்தேசித்த ஒன்று இறுதி இலக்கிற்கு மாற்றமாக போகும் என பின்னர் உணர்ந்தால் முன்னர் அறிவித்ததிலிருந்து மாறிக் கொள்வதில் தவறொன்றுமில்லை. நான் எழுதும் அனைத்திற்கும் பதிலளிக்கப் போகிறேன் என முன்னர் தொடங்கிவிட்டு பின்னர் மறுப்புக்கு மட்டும் மறுப்பு என பின்னர் நண்பர் மாறிக் கொள்ள‌வில்லையா, அந்த வகையிலான காலம் கடந்த ஞானம் தான். அடுத்து வடிவம் குறித்தும் பேசியிருக்கிறார். வடிவம் முதன்மையானதல்ல, பதிலே முதன்மையானது. அதனால் தான் எனக்கு வசதியான வடிவத்தில் பதிலலிக்கிறேன். ஆனால் அவர்களுக்கு வடிவமே முதன்மையானதாக இருக்கிறது, அதனால் தான் நேரடியிலேயே நின்று கொண்டிருக்கிறார்கள்.

 

தொடர்ந்து சில அழகிய பதில்களையும் அபத்தங்களையும் பார்க்கலாம்.

1. உடனுக்குடன் பதில் கூற வேண்டிய தேவை இருப்பதால் துல்லியமான தெளிவான வாதங்களை வைக்க வியலாமல் போகலாம். இது நேரடியில் உள்ள குறைபாடு. நண்பரின் அழகிய பதிலோ, ஐந்தோ பத்தோ நிமிடங்கள் பதில் கூறுவதற்கு அவகாசம் கொடுத்து ஒப்பந்தம் செய்து கொள்லலாமே என்பது. ஆக நேரடியில் குறை இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்கிறார் கூடவே அதை சரி செய்து கொள்ளும் வசதியும் இருக்கிறது என்கிறார். ஐந்தோ பத்தோ நிமிடங்கள் எடுத்துக் கொண்டு பதில் கூறினால் அது விவாதமாக இருக்குமா? சரி அதற்கும் கூடுதலாக அவகாசம் தேவைப்பட்டால், எடுத்துக் காட்டாக அவர்கள் ஒரு ஹதீஸை எடுத்துக் காட்டுகிறார்கள் என்று கொள்வோம் அதற்கு இன்னொரு ஹதீஸையே பதிலாக கூறினால் பொருத்தமாக இருக்கும் என எண்ணுகிறேன். ஆனால் அது முஸ்லிமிலா, புஹாரியிலா, திர்மிதியிலா எதில் இருக்கிறது என்று நினைவில் இல்லை. தேடிப்பார்த்துத்தான் கூறவேண்டும். இதற்கு நேரடியில் வசதி இருக்கிறதா? அப்படியே கூறினாலும் கண்ணுறுபவர்கள் மீது கூறப்படும் பதில் தாக்கம் செலுத்துமா? பதில் கூற எடுத்துக் கொள்ளும் நேரம் தாக்கம் செலுத்துமா?

 

2. நம்பிக்கையோடு ஊடாடி நிற்கும் ஒன்றில் உடனடியாக மாற்றத்தைக் கொண்டு வர முடியாது எனவே குறுகிய காலத்தில் முடிந்துவிடும் என்பதால் நேரடி சிறந்தது என்று கூறமுடியாது காலம் நீண்டாலும் அனைத்து தளங்களிலும் ஊடுருவி செய்யப்படும் விவாதமே சிறந்ததாக இருக்கும் அதற்கு நேரடி சிறந்ததல்ல. நண்பரின் அழகிய பதிலோ, பிரச்சனையை தீர்ப்பதற்கு பல ஆண்டுகள் கழிந்தாலும் கழியுமே தவிர கொள்கை சரியா தவறா என்பதற்கு நீண்ட நாள் தேவைப்படாது என்பது. இங்கு பிரச்சனையே கொள்கை சரியா தவறா என்பது தான். கொள்கையின் அடிப்படையில் பிரச்சனை ஏற்படும் போது பிரச்சனையும் கொள்கையும் வேறு வேறு என்றாகுமா? மீளாய்வுக்கு ஆயத்தமாக இருக்கும் தன்மை எந்த அளவுக்கு இருக்கிறதோ அந்த அளவுக்கு குறைந்த காலம் தேவைப்படும். நேரடிக்கு ஆயத்தமாக இருப்பவர்களுக்கு மீளாய்வு இருக்கிறதா? எனும் கேள்விக்கே இடமில்லை. ஏனென்றால் இஸ்லாத்திலேயே மீளாய்வுக்கு இடமில்லை. இஸ்லாமே அனைத்தையும் விட சிறப்பானது என்று மாளா நம்பிக்கை வைத்திருப்பவர்கள் கூறுகிறார்கள் கொள்கை சரியா தவறா என்பதற்கு நீண்ட நாள் தேவைப்படாது என்று. பிரச்சனையை விட கொள்கையே ஆழமானது. எடுத்துக்காட்டாக குடிக்கும் பானத்தில் ஈ விழுந்துவிட்டால் அதை தொடர்ந்து குடிக்காதே என்று நடைமுறை சார்ந்து பிரச்சனையை எளிதாக புரியவைத்து விடலாம். ஆனால் ஒரு சிறகில் நஞ்சும் மறு சிறகில் அதை தீர்க்கும் மருந்தும் இருக்கிறது எனவே பானத்தில் ஈ விழுந்தால் அதை நன்றாக அந்த பானத்திற்குள் அமுக்கி எடுத்துப் போட்டு விட்டு குடியுங்கள் எனும் ஹதீஸை தவறு என எப்படி புரியவைப்பது?

 

3. இதுவரை அவர்கள் நடத்திய விவாதத்தில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை, எனவே நேரடியே சிறந்தது என்று கூற முடியாது. இதற்கு நண்பரின் அழகிய பதிலோ இங்கு நடந்த எழுத்து விவாதத்திலும் முடிவு எட்டப்படவில்லையே என்பது. இந்த தளத்தில் சில விவாதஙக்ள் நடந்துள்ளன. அவைகளை படித்துப் பார்க்கும் எவரும் எளிதாக உணர்ந்து கொள்ள முடியும், எழுப்பப்டும் கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் திசை திருப்பி, சுற்றி வளைத்து, அவதூறு கூறி விலகி ஓடியவர்கள், குழப்பம் ஏற்படுத்தி தொடரமுடியாமல் செய்தவர்கள் யார்? என்பது. இதற்கு அவர்கள் கூறிய சாக்குப் போக்கு தான் மூன்றாம்வர் எழுதுகிறார், வேறொருவர் விவாதிக்கிறார் என்பது. அதையே நண்பரும் கூறியிருக்கிறார். விவாதத்தில் நேர்மை இல்லாவிட்டால் எங்கும் முடிவை எட்டமுடியாது, நேரடியாக இருந்தாலும் எழுத்து விவாதமாக இருந்தாலும்.

 

4. வெளியில் விமர்சனம் செய்வதற்கு முன்னால் எங்களிடம் விவாதம் செய்ய வரட்டும் என பிஜே தள‌த்தில் இருக்கிறது, இது தவறானது. இதற்கு நண்பரின் அழகிய பதிலோ விவரம் தெரியாத மக்களிடம் செய்வதை விட எங்களிடம் செய்யுங்கள் என்று தான் கூறப்பட்டுள்ளது என்பது. விவாதம் செய்ய முஸ்லீம்கள் தயாராக இருக்கிறார்கள் என்றால் மற்றவர்கள் தயாராக இல்லையா? விவாதம் இங்கு பிரச்சனையல்ல. நேரடியாக என்று வடிவத்தை முதன்மைப்படுத்துவது தான் பிரச்சனை. மட்டுமல்லாது பிஜே தளத்தில் தெளிவாகவே குறிப்பிடப்பட்டிருக்கிறது \\ விவாதம் செய்ய முஸ்லிம்கள் முன்வராத போது தான் வெளியில் விமர்சிக்க வேண்டும்// இதன் பொருள் என்ன? வெளியில் அதாவது வேறு ஊடகங்களில் வேறு வடிவங்களில் விமர்சிப்பதற்கு முன்னால் இவர்களிடம் விவாதம் செய்திருக்க வேண்டும் என்பது தான். அதிலும், பொதுவாக முஸ்லீம்கள் விவாதம் செய்ய முன்வராத போது என்று எழுதி எந்த வடிவத்திலும் விவாதம் செய்வதற்கு தயாராக இருப்பது போல் எழுதிவிட்டு அடுத்த வரியிலேயே பகிரங்க விவாதம் என்று நேரடியை குறிப்பிடுவது எழுத்துச் சித்து.

 

5. நாங்கள் வென்றுவிட்டோம் என மிகைப்படுத்தி கூறுவது, விளம்பர, வியாபார நோக்கங்களுக்காக தான் நேரடிகள் நடத்தப்படுகின்றன. நண்பரின் அழகிய பதிலோ வெல்லாமல் வென்று விட்டோம் என்று கூற முடியாது, வியாபார நோக்கம் இல்லை என்பது. திகவுடன் நடந்த விவாதத்தை எடுத்துக் கொள்வோம். அறிவியலை முன்னறிவிப்பு செய்திருக்கிறது என்று கூறப்படும் வசனங்கள் எல்லாம் வெகு சாதாரணமாக இருக்கின்றன, அறிவியல் விளக்கங்கள் வந்த பின் அவற்றை அந்த வசனங்களில் ஏற்றிக் கூறுகிறீகள் என்பது திக வினரின் ஒரு குற்றச்சாட்டு. ஆனால் பிஜேவினரோ அந்த வசனத்தில் அறிவியல் இருக்கிறது, இந்த வசனத்தில் அறிவியல் இருக்கிறது என்று கூறினார்களேயன்றி திகவினரின் குற்றச்சாட்டை கண்டு கொள்ளவே இல்லை. இதை எப்படி வெற்றி என்று கொள்ள முடியும்? நண்பர் வியாபார நோக்கமல்ல என்கிறார் ஒரு ரியால் பெறாத சிடியை 20 ரியாலுக்கு விற்பது தான் செலவை ஈடுகட்டுவது போல. சாப்பாடு போட்டு தங்க வைத்தோம் என்று வீர வசனம் பேசிய தார்மீகத்தை வளைகுடா நாடுகளிலும், இலங்கையிலும் இந்தியாவிலும் ஆயிரக்கணக்கில் சிடி விற்று வந்த காசில் ஈடுகட்டிக் கொண்டார்கள் போலும்.

 

6. மத அமைப்புகளுடன் விவாதம் செய்வதைவிட உழைக்கும் மக்களிடம் நேரடியாக அவர்களின் வாழ்வியல் நிகழ்ச்சிகளுனூடாக விவாதம் செய்து அம்பலப்படுத்துவதே அவசியமாய் இருக்கிறது. இதற்கு நண்பரின் அழகிய பதிலோ இணைய விவாதத்தை விட நேரடி விவாதமே பொருளாதார ரீதியிலும் உழைக்கும் மக்களுக்கு பொருத்தமானதாக இருக்கும் என்பது. இங்கு இணைய விவாதம் சுட்டப்படவே இல்லை, மத அமைப்புகளிடம் நேரடி விவாதம் செய்வதைவிட உழைக்கும் மக்களிடம் நேரடியாக பேசி அவர்களின் நம்பிக்கைகளின் பிடி வாழ்வோடு எவ்வாறு முரண்பாடாக இருக்கிறது என்பதை அம்பலப்படுத்துவதே சிறப்பானது. அதை தொடராக செய்து வருகிறோம்.

 

இங்கு எது அபத்தமாக இருக்கிறது எது அழகிய பதிலாக இருக்கிறது என்பதை நண்பரே தீர்மானிக்கட்டும். ஆனாலும் அவைகளை தீர்மானிப்பதற்கு முன்னால் எழுத்து விவாதமே சிறந்தது என்பதற்கு முன்வைக்கப்பட்டு நண்பரால் கண்டு கொள்ளாமல் விடப்பட்டவைகளையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளட்டும். \\ தான் நிற்கும் நிலை சரியானதா? தவறானதா? எனும் மீளாய்வுக்கு அப்பாற்பட்டு அது வெல்ல வேண்டும் என்பதே தேவையானது என ஒருவன் நினைத்துவிட்டால் அவனிடம் நேர்மையை எதிர்பார்க்கமுடியாது, அது இணையத்தில் என்றாலும், நேரடியாக என்றாலும் ஒன்றுதான். இதில் முதன்மையாக எடுத்துக்கொள்ள வேண்டியது விவாத நேர்மைதானேயன்றி இணையமா? நேரடியா என்பதல்ல// \\ நேரடியாக விவாதிப்பது அந்த நேரத்தில் நினைவில் இருக்கும் விவரங்கள், குறிப்புகள், சான்றுகள், உணர்ச்சிகள் இவைகளின் அடிப்படையிலேயே இருக்கும். இணையத்தில் புதிதாக குறிப்புகளை விவரங்களை சான்றுகளை தேடித்தேடி சரியான திசையில் விவாதத்தை நடத்தமுடியும். மட்டுமன்றி நடத்தும் விவாதத்தில் உணர்ச்சிக் கலப்பின்றி நிதானமாகவும் அறிவார்த்தமாகவும் விவாதிக்க முடியும். நேரடி விவாதத்தில் பலம் பலவீனங்களைக் குறிப்பறிந்து, பலமான இடங்களைத் தவிர்த்தும் பலவீனமான இடங்களை விரித்தும் விவாதத்தின் போக்கை மாற்ற முடியும். அதாவது எடுத்துக்கொண்ட தலைப்பின் விவரங்களைவிட செயல்படுத்தும் உத்தி அதிகப்பங்காற்றும். அவ்வாறில்லாமல் இணைய விவாதத்தில் ஏனைய எதுவும் முக்கியப்படுத்தப்படாமல் எடுத்துக்கொண்ட தலைப்பிலான விவரங்கள் மட்டுமே விவாதத்தை நகர்த்தும்//

 

இதில் இன்னொரு முக்கியமான விடயமும் இருக்கிறது. என்னுடைய தொடர் குறித்த தகவலை பிஜேவின் தள‌த்திற்கு எடுத்துச் சொன்னவரின் கோரிக்கையே நேரடி விவாதத்திற்கு மறுத்துவிட்ட நிலையில் அவரின் கட்டுரைகளுக்கு பதிலளியுங்கள் என்பது தான். பதிலளிப்பது குறித்து எதுவும் கூறாத பிஜே நேரடியாக வரட்டும் என்கிறார். ஏன்? திக வின் கட்டுரைக்கு மாய்ந்து மாய்ந்து உணர்வில் 17 வாரங்களுக்கு எழுதித்தள்ளிய அவர்கள் இப்போது மட்டும் நேரடி எனும் ஒற்றை திரையில் மறைந்து கொள்வதேன்? எத்தனை முறை விளக்கினாலும் நேரடி நேரடி என்று கூப்பாடு போடும் ரசிகமணிகளுக்கு எதிராக எழுத்தில் பதில் கூறட்டும் என நான் கேட்பதில் ஒன்றும் தவறில்லை.

 

\\ விமர்சனத்தை எதிர்த்துவளர்வதென்றால் அதை ஒதுக்குவது என்பதல்ல! தன்னை நோக்கிவரும் விமர்சனத்தை எதிர்கொண்டு எந்த விமர்சனமும் சரியல்ல என்று நிரூபிப்பதுதான்// இப்படியும் நண்பர் எழுதியிருக்கிறார். வள்ர்ச்சி என்றால் என்ன என்பதே நண்பருக்கு விளங்கவில்லை. இஸ்லாத்திற்கு வளர்ச்சி இருக்கிறதா? எந்த மாற்றத்திற்கு அவசியப்படாமல் 1400 ஆண்டுகளுக்கு முன்பே முடிக்கப்பட்டு விட்ட ஒன்றில் என்ன வளர்ச்சி? எந்த விமர்சனம் என்றாலும் அது தவறு என்று நிரூபிப்பார்களாம். அதாவது விமர்சனம் எழுவதற்கு முன்பே அது தவறாகத்தான் இருக்க முடியும் என்று தீர்மானிக்கப்பட்டு விடுகிறது என்றால் அது தேக்கமாகத்தான் இருக்க முடியும் வளர்ச்சியாக இருக்க முடியாது.

 

\\ பிஜே அவர்கள் பதிலில் தென்படுவதாக நான் குறிப்பிட்ட அதே தொனி நண்பரின் மறுப்பிலும் தொழிற்படுகிறது. மாற்றிக்கொண்டால் மகிழ்ச்சி.

 

தவறாக இருப்பின் மாற்றிக்கொள்வதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. ஒரு விடயம் தனக்கு பிடிக்காவிடின் மற்றவர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும் என்பது அறியாமை//

 

இதில் நான் கூறவருவது என்ன என்பதை நண்பர் விளங்கிக் கொண்டாரா என்பதே புரியவில்லை. நான் குறிப்பிடும் தொனி என்ன? கோழைத்தனமானது, அறிவில்லாமல் இருக்கிறார்கள், முட்டாள்தனமாக உளறுகிறார்கள் என்பதுபோல் எழுதுவதெல்லாம் பிஜேவுடைய பாணி. நாம் ஒரு கருத்தைக் கூறுகிறோம், அதற்கு எதிராக அவர்கள் ஒரு கருத்தைக் கூறுகிறார்கள் எனும் பார்வையே அங்கு இருப்பதில்லை. நாம் மட்டுமே சரியாக கூறுகிறோம் மற்றவர்களெல்லாம் ஒன்றும் தெரியாதவர்கள் எனும் தரத்தில் தான் அவருடைய நடை இருக்கும். அதே போன்றதொரு நடை நண்பரிடத்திலும் தென்படுகிறது அதை மாற்றிக் கொள்ளலாம் என நான் கேட்டுக் கொண்டால் தனக்குப் பிடிக்காவிட்டால் அதை மாற்றக் கோருவது அறியாமை என்கிறார். இதோ இந்தப் பதிவிலும் கூட நண்பர் இப்படி எழுதியிருக்கிறார், \\ முடியாவிட்டால் மூடிக்கொண்டு இருக்க வேண்டும்// இது போன்று எழுதுவதையெல்லாம் தங்களின் அடிப்படை உரிமை என்று கருதுகிறாரா நண்பர். என்றால் வெளிப்படையாக அதை தெரிவிக்கட்டும், நானும் அந்த நாராச நடைக்கு மாறிக் கொள்கிறேன்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் 9

நுழைவாயில்

செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் 2

எடுத்துக் கொள்ளப்பட்ட நண்பர் இஹ்சாஸின் பதிவு

முன்குறிப்பு: இத்தொடரின் கடந்த கட்டுரையில் நண்பர் அம்பலப்படுத்துவதாக கூறியிருந்தார். இதுவரை செய்யவில்லை, அவரின் அம்பலப்படுத்தலுக்காக காத்திருக்கிறேன், எனக் குறிப்பிட்டிருந்தேன். தற்போது அவர் அம்பலப்படுத்துவதாக(!) கருதிக்கொண்டு ஒருபதிவிட்டிருக்கிறார்.  அம்பலப்படுத்தல் என்றால் என்ன?  எனக்கு எதிராக எதை அவர் அம்பலப்படுத்தியிருக்கிறார்?  அம்பலப்படுத்தல் என்றால் நான் வெளிப்படுத்தாமல் மறைத்த ஒன்றை அவர் வெளிப்படுத்தி நான் அதை மறைத்திருக்கிறேன் என்பதை விளக்கினால் அது அம்பலப்படுத்தலாக கொள்ளப்படும்.  அவர் அழைத்ததை நான் மறைக்கவில்லை. அவருக்கு நான் பதிலளித்து விட்டதையும் குறிப்பிட்டிருக்கிறேன். மீண்டும், மீண்டும் அவர் அழைக்கவே அதற்கு பதிலளிக்காமல், வெளியிடாமல், கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டேன் என்பதையும் மறைக்கவில்லை, வெளிப்படையாக கூறியிருக்கிறேன். இப்போது நண்பர் அந்த மின்னஞ்சல் செய்திகளை பதிவாக இட்டிருக்கிறார். இதில் எதை நான் மறைத்திருக்கிறேன், எதை அவர் அம்பலப்படுத்தியிருக்கிறார் என்பது அவருக்கே வெளிச்சம்.

அந்தப் பதிவில் அவர் கூறியிருக்கும் இன்னொன்று, அவர் தொடர்ச்சியாக இப்படி அழைத்ததன் விளைவாகவே கடந்த பதிவை நேரடி விவாதம் குறித்து எழுதியிருப்பதாகவும், அது அவர் அழைப்புக்கு கிடைத்த வெற்றி என்றும் குறிப்பிட்டிருக்கிறார். அவ்வாறல்ல, நண்பர் எந்த வரிசையில் எனக்கான மறுப்பை எழுதியிருக்கிறாரோ அந்த வரிசையிலேயே நான் இத்தொடரை எழுதி வருகிறேன். அந்த வரிசையில் அவர் எழுதிய நேரடி விவாதம் தொடர்பான இடுகை வந்ததால் அதற்கு பதிலெழுதியிருந்தேனேயன்றி, நண்பர் அழைத்திருக்கிறார் என்பதால் வரிசை மீறி அதை எடுத்துக் கொள்ளவில்லை.

இப்போது மட்டும் இதை வரிசை மீறி விளக்கமளிப்பதேன் என்றால், அதில் தனிப்பதிவாக இடுவதற்கான விசயம் ஒன்றும் இல்லை என்பதால் முன்குறிப்பாக தெரிவித்திருக்கிறேன், அவ்வளவு தான்.

 ****************************************

என்னுடைய ’இஸ்லாமே கற்பனைகளின் களம் 2’ பதிவில் இஸ்லாமியர்கள் மத அடிப்படையில் ஒன்றிணைவது எப்படி இந்துப் பாசிசங்களுக்கு உதவுகிறது என்பதை விரிவாக விளக்கியிருந்தேன்.  இதற்கு பதில் தருவதாக இருந்தால், நான் கூறியது தவறு என்பதை விளக்கி சரியானதாக அவர் கருதுவதை கூற வேண்டும். இதை நண்பர் செய்திருக்கிறாரா? குறைந்த பட்சம் நான் கூறியிருப்பதை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளக்கூட இல்லை. மாறாக மேலோட்டமாக எனக்கு நானே முரண்படுவதாக காட்டிக் கொண்டு, உளறுகிறேன்,  லாஜிக் இல்லை, பல்டி அடிக்கிறார், சுயநினைவோடுதான் எழுதினாரா? என்றெல்லாம் வார்த்தைகளைக் கொட்டியிருக்கிறார்.  ஆனாலும் பதிலெழுதுவதாய் காட்டிக்கொள்ள வேண்டும் என்பதால் இரண்டு கேள்விகளையும் கேட்டு வைத்திருக்கிறார்.

\\எதிரி இருந்தால்அழிக்குமே தவிர ஆக்காது! இஸ்லாமியர்கள் ஒண்றினைந்தால் அதைக்காட்டி இந்துக்களும்ஒண்றினந்த்துவிடுவார்களாம். இன்று இஸ்லாமியர்கள்ஒண்றினைந்திருக்கின்றனர்  அதனால் இந்துக்கள்ஒண்றிணைந்துவிட்டனரா?//\\பார்ப்பனியம் அனைத்து உழைக்கும் மக்களுக்கு  விரோதி என்பதால்இஸ்லாமியர்கள் மத ரீதியில் ஒண்றினைவது கூடாது என்கிறார்.பார்ப்பனியத்தை  ஒழிக்க வேண்டும் என்றால்அதற்கு எதிரியாகவிருப்பவர்கள்ஒன்று கூடினால்தான் முடியும் இதனால்  இஸ்லாமியர்கள் ஒன்று கூடுவது அவசியம்//

பார்ப்பனிய பாசிசங்கள் என்றும் ஒடுக்கப்பட்டவர்களை தங்களோடு உள்ளவர்களாய் கருதுவதில்லை. ஒடுக்கப்பட்டவர்களை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அடிமைகளாகவே வைத்திருக்கிறார்கள்.  அதேநேரம் அடிமைகளாய் வைத்திருப்பவர்களையே தேவைப்பட்ட இடங்களில் தங்கள் இராணுவமாகவும் பயன்படுத்துகிறார்கள். இது எப்படி சாத்தியமாயிற்று?  அவர்களை இந்து எனும் மதத்திற்குள் ஒன்றிணைத்து வைத்திருப்பதால். அடிமைகளாக்கி ஒடுக்கப்பட்டிருப்பவர்கள் அவர்களுக்கு எதிராக அல்லவா கிளர்ந்தெழ வேண்டும். அதற்காகத்தான் காலம்தோறும் எதிரிகளை உருவாக்கி வருகிறர்கள். சாங்கியம், பௌத்தம் தொடங்கி இஸ்லாம் ஈறாக எதிரிகள் உருவாக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். இந்த எதிரிகளைக் காட்டியே இந்து ஒற்றுமையை கட்டிக் காக்கிறார்கள்.  இந்துப்பாசிசங்கள் இஸ்லாத்திற்கு எதிராக எப்படி பரப்புரை செய்கிறார்கள் என்பதை கவனித்துப்பார்த்தால் இது எளிதாக விளங்கும்.  இன்றுவரை ஒடுக்கப்பட்டவர்கள் தங்களை இந்து என கருதிக் கொள்வதுதான் பார்ப்பனியத்தின் முதன்மையான பலமாக இருக்கிறது.  அவர்கள் தங்களை இந்துவாக கருதிக் கொண்டிருக்கும்வரை பார்ப்பனியத்தை வீழ்த்துவது கடினம்.

இந்தியாவில் சகல அதிகாரங்களையும் கையில் வைத்திருக்கும் பார்ப்பனியம் வெகு எளிதாக இஸ்லாமியர்களை பிளவுபடுத்திவிட முடியும். இஸ்லாமியர்களில் குறிப்பிட்ட பிரிவினர்களுக்கு சலுகைகள் அளித்து மற்றவர்களை ஒடுக்குவதை தொடர்ந்து செய்து வந்தால் இஸ்லாமியர்கள் வெகு எளிதாக பிரிந்துவிடுவார்கள்.  ஆனால் கவனமாக அவ்வாறு செய்யாமல் தவிர்த்து வருகிறது பார்ப்பனியம்.  பண்டைய இந்தியாவில் சிறுபான்மையினர் என்று ஒதுக்கமுடியாத அளவில் இஸ்லாமியர்கள் இருந்தார்கள். இதை வெகு தந்திரமாக பிரித்தாண்டார்கள். கவனிக்க, பாகிஸ்தான் பிரிவினைக்கான கோரிக்கை முதலில் முஸ்லீம்களிடமிருந்து எழவில்லை. பார்ப்பன பாசிஸ்டுகள் தான் முதலில் இந்த திட்டத்தை முன்மொழிந்து பரப்பினார்கள். தந்திரமாக பெருவாரியான முஸ்லீம்களை தனிநாடாக பிரித்துவிட்டு இந்திய முஸ்லீம்களை ஒன்றிணைத்திருக்கிறார்கள்.

இவர்களை தனிப்பட்ட மதத்திற்கு எதிரானவர்களாக கருதமுடியாது. அனைத்து மதங்களிலும் இருக்கும் உழைக்கும் வர்க்கத்திற்கு எதிரானவர்கள்.  மத அடிப்படையில் இந்து, முஸ்லீம், கிருஸ்தவன் என்று பிரிந்து ஒன்றிணைவது அந்த பாசிசங்களுக்கு ஆதரவாகவும், சொந்த வர்க்க நலனுக்கு எதிராகவும் அமைகிறது.  மலம் அள்ளும் ஒரு ஒடுக்கப்பட்டவனும், மகிந்திராக்களும் இந்து எனும் அடிப்படையில் ஒன்றாகிவிட முடியுமா? ஒரு ஏழை சுமைதூக்கும் தொழிலாளியும் பால் தினகரன்களும் கிருஸ்தவன் எனும் அடிப்படையில் ஒன்றாகிவிடமுடியுமா? அதுபோல் தான் முஸ்லீம்களும். உழைக்கும் வர்க்கமாக இவர்கள் ஒன்றிணைய வேண்டும், மத அடிப்படையில் ஒன்றிணைய ஒன்றிணைய அது பார்ப்பனிய பசிசங்களுக்குத்தான் உதவுமேயன்றி ஒருபோதும் சொந்த வர்க்கத்திற்கு உதவியாய் இருக்காது.  பாட்டாளி வர்க்கத்திற்கு சொந்த மதத்திலிருக்கும் ஆளும்வர்க்கம் எதிரானது தான். இதை புரிந்து கொள்ளாதவரை பாட்டாளிவர்க்கம் பயன்படுத்தப்படுமேயன்றி பலன் பெறாது.

மத பரப்புரை நிகழ்சிகள் ஒருவித ஹீரோயிஸ மனப்பான்மையாகவே அமைகின்றன.  ஒரு அமைப்பின் பிரபலமான தலைவர் ஒருவரின் நிகழ்சிக்கும் அதே அமைப்பின் பிரபலமில்லாத ஒருவரின் நிகழ்ச்சிக்கும் மக்களின் ஆர்வம் ஒரேபோல் இருப்பதில்லை. இது ஏன் என்பதை சிந்தித்தால் மத பரப்புரை நிகழ்சிகளின் உள்ளீடு என்ன என்பது எளிதில் புரிந்து போகும்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கூட மக்கள் ஏன் ஈர்க்கப்படுகிறார்கள் என்பதை நுழைவாயில் பகுதியிலும் எளிதாக காட்டியிருக்கிறேன். \\ இந்து மதத்தில் அதன் ஆன்மீக சாரங்களை யாரும் வாழ்க்கை நெறியாக கொள்வதில்லை. கிருஸ்துவத்திலும் கூட ஆன்மீகத்தையும் சமூகத்தையும் பிரித்துப்பார்க்கும் போக்கு வெளிப்படுகிறது, ஆனால் இஸ்லாத்திலோ அதை பின்பற்றுபவர்களின் மனதில் ஆழமாக பதிந்திருக்கிறது//  இந்நிலை ஆய்வு நோக்கிலிருந்து சரி தவறுகளை உள்வசமாய் பரிசீலித்து பெறப்பட்ட முடிவு அல்ல. நெகிழ்வுத்தன்மையுடன் ஆன்மீகத்தை அணுகுவது போல் காட்டிக் கொள்வது இந்து மதத்தை பின்பற்றும் சாதாரண மக்களிடம் எப்படி இயல்பாக இருக்கிறதோ, அதுபோலவே உறுதித்தன்மையுடன் இருப்பது போல் காட்டிக் கொள்வது சாதாரண முஸ்லீம்களிடம் இயல்பாக இருக்கிறது.  மதவிவகாரங்களைக் கடந்து செல்வது ஒரு இந்துவுக்கு சாதாரணமாக இருப்பது போல் முஸ்லீம்களுக்கு இல்லை என்பது நிறுவனமயமாக்கப்பட்ட மதத்தின் இறுக்கத்தில் இருக்கிறது. இதை இஸ்லாம் உண்மையானது என்பதால் தான் கேட்டவுடன் ஈர்க்கிறது என்று மொழிபெயர்க்க முடியாது.  ஏனென்றால் கேட்கப்படும் எல்லோரையும் அது ஈர்ப்பதில்லை.  இதை முஸ்லீம்களுக்கு மதத்தின் மீதுள்ள ஆர்வம் என்றோ, இஸ்லாத்தின் உண்மையான தன்மையின் சான்று என்றோ கூறமுடியாது. அது முஸ்லீம்களுக்கு கற்பிக்கப்பட்ட வடிவத்தை மட்டுமே காட்டுகிறது.  இந்த வடிவம் இஸ்லாத்தின் உண்மைத்தன்மையல்ல என்பதை விளக்குவதற்கே என்னுடைய தொடரை (இஸ்லாம் கற்பனைக் கோட்டையின் விரிசல்கள் வழியே) எழுதிக் கொண்டிருக்கிறேன்.

இஸ்லாம் முதலாளித்துவத்தை ஆதரிக்கிறது.  ஏனென்றால் இஸ்லாம் என்பது  வணிகர்களின் நிர்வாகத்தை நாடோடி, விவசாய, வணிக அரபுக் குலங்களின் பொதுவான நிர்வாகமாக வளர்த்தெடுக்கும் ஒரு முயற்சியாக தோன்றியது தான்.  இதை தொடரின் இறுதிப் பகுதியில் நான் விளக்கவிருக்கிறேன்.  முதலாளித்துவம் ஒட்டுமொத்த மனித இனத்தை எவ்வாறு பாதிக்கிறது, மக்களைச் சுரண்டி ஒருபக்கம் குவிக்கிறது என்பது பலவாறாக உலகில் விளக்கப்பட்டுள்ளது.  மட்டுமல்லாது உலக மக்கள் வரலாறு சமூக காலகட்டங்களின் வழியாக எப்படி கடந்து வந்துள்ளது என்பதெல்லாம் மக்கள் முன் ஆய்வுரைகளாக உள்ளன. அவைகளை விளக்கினால் அது தனி தலைப்பாக நீண்டு செல்லும்.  முதலாளித்துவத்தின் ஆன்மாவான லாபக்கோட்பாட்டை இஸ்லாம் ஆதரிக்கிறது என்பதால், மக்களின் மனங்களை முதலாளித்துவம் கட்டமைத்திருக்கும் சுய உதவிக் குழுக்கள் எப்படி கட்டுப்படுத்த விரும்புகிறதோ அதே விதத்தில் தான் இஸ்லாமும் மக்களின் மனங்களை கட்டுப்படுத்த விரும்புகிறது என்பதால் முதலாளித்துவத்தின் கொடுமைகளை மக்களிடமிருந்து இஸ்லாத்தால் நீக்க முடியாது. இது போராட்டங்களோடும், வெற்று கோசங்களோடும் முடிந்துவிடும் விசயமல்ல. எனவே இஸ்லாத்தின் இறுக்கங்களை உடைத்து முதலாளித்துவத்திற்கு எதிராக வர்க்க அடிப்படையில் அணிதிரட்ட வேண்டியது அவசியமாகிறது. (இது எல்லா மதங்களுக்கும் பொருந்துவது)

நண்பர் மீண்டும் மீண்டும் இஸ்லாமிய இறையியல் குறித்து நான் கூறுவதாக கூறிக் கொண்டிருக்கிறார். ஒன்று விளங்கவில்லை என்றால் மீண்டும் கேட்கலாம். தவறில்லை. ஆனால், நான் விளக்கமளித்த பிறகும் அதையே தொடர்ந்து கூறிக் கொண்டிருந்தால் அதை பிடிவாதம் என்று தான் வகைப்படுத்த முடியும். \\ அரபு தேசியவாதம், அரபு மார்க்ஸியம் என்று இஸ்லாமிய இறையியலை விட்டுக்கொடுக்காமல் தத்துவம் பேசியவர்களெல்லாம் இன்றைய நிதிமூலதனத்தின் முன் முனை மழுங்கிய வாளாக செயலற்றிருக்கிறார்கள்//  இது தான் நான் நுழைவாயில் பகுதியில் எழுதியிருக்கும் வாக்கியம்.  இதில் அரபு தேசியவாதம், அரபு மார்க்சியம் இவையிரண்டும் இஸ்லாமிய இறையியல் என்று நான் எங்கே குறிப்பிட்டிருக்கிறேன். இஸ்லாமிய இறையியலை அதாவது இஸ்லாத்திலிருக்கும் கடவுள் நம்பிக்கையை விட்டுக் கொடுக்காமல், சமூகத்திற்கு மார்க்சியக் கொள்கைகளையும், ஆன்மீகத்திற்கு இஸ்லாமிய கடவுட் கொள்கையையும் கலந்து அரபு மார்க்சியம் என்று தனி கோட்பாடு ஒன்றை உருவாக்கினார்கள். சில காலம் இது செல்வாக்கிலும் இருந்தது. ஆனாலும் அது முதலாளித்துவத்தின் நிதி மூலதனத்தின் முன்னால் செயலற்றதாகிவிட்டது. இது தான் இந்த வாக்கியத்தின் பொருள் என்பது, தமிழ் தெரிந்த யாருக்கும் எளிதில் விளங்கும். இதைத்தான் என்னுடைய முந்தைய பதிவிலும் சுட்டிக் காட்டியிருந்தேன் \\ அரபுலக மண்ணில் ஆன்மீகத்திற்கு இஸ்லாமும் சமூகத்திற்கு மார்க்ஸியமும் என்று இரணடையும் இணைத்து, கடவுட் கொள்கையை விட்டுக்கொடுக்காமல் மார்க்ஸிய தத்துவங்களை இஸ்லாத்துடன் இணைத்து உருவானது தான் அரபு மார்க்ஸியம்// ஆனால் நண்பர் மீண்டும் தன்னுடைய பதிவில் இப்படி குறிப்பிட்டிருக்கிறார், \\ இவர் இஸ்லாமிய இறையியலாக அரபு தேசியவாதம்,அரபு மார்க்ஸியம் போன்றவற்றை குறிப்பிட்டார். அதை தவறு என்று கூறியதற்கு அவர் அளிக்கும் சமாளிப்பு பதில்தான் இது// \\அரபு மார்க்ஸியம், தேசியவாதம் என்பன இஸ்லாமிய இறையியல் என்று தெளிவாகவே குறிப்பிடுகிறார்// மேற்குறிப்பிட்ட அந்த வாக்கியம் எப்படி அவர் கூறும் பொருளில் இருக்கிறது என்பதை விளக்க வேண்டும்.  அல்லது இதில் அவர் வறட்டு பிடிவாதம் பிடித்ததை ஒப்புக்கொள்ள வேண்டும்.

நுழைவாயில் பகுதியில் நான் ஒரு வேண்டுகோளை வைத்திருந்தேன்.  அதாவது இந்தத்தொடரை முன்முடிவுகளுடன் அணுகாதீர்கள் என்று. ஒருவரின் முன்முடிவு என்பதற்கும், அவரின் நிலைப்பாடு என்பதற்கும் ஒரு வித்தியாசமும் இல்லையா? நண்பருக்கு மெய்யாகவே இரண்டு சொற்களுக்கும் இடையே பொருள் வேறுபாடு ஒன்றும் தெரியவில்லை என்றால், நல்ல தமிழாசிரியரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.  இந்த தொடரில் எனக்கு ஒரு நிலைபாடு இருக்கிறது, நண்பருக்கு ஒரு நிலைபாடு இருக்கிறது. இருவரும் அவரவர் நிலைபாடுகளில் நின்று தான் எழுதிக் கொண்டிருக்கிறோம். அந்த நிலைபாட்டை விட்டுவிட்டு விவாதம் செய்யுங்கள் என்று சொன்னது யார்? நண்பர் இப்படி எழுதியிருக்கிறார், \\இஸ்லாம் சரியானது என்று நம்பாமல் அதைப்பற்றி எழுத வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுப்பது என்பது அறிவுடமையா? சந்தேகத்தில் இருந்தால் அது சரி என்று எந்தவகையில் ஒருவர் வாதிட முன் வருவார்// இஸ்லாத்தை மறுப்பது என்னுடைய நிலைப்பாடு, அதேநேரம் எந்த பரிசீலனையும் இல்லாமல் விமர்சனமாக வைக்கப்படுவது அனைத்தும் தவறானது என்று நான் முடிவு செய்ய இயலுமா? இது என்னுடைய கருத்து அதற்கு எதிராக வைக்கப்படுவது மாற்றுக் கருத்து எனும் அடிப்படையில் தான் என்னுடைய வாதங்கள் அமைந்திருக்கும்.  ஆனால் நண்பரின் வாதங்களைப் பார்த்தால், \\ உளறிக் கொட்டுகிறார், அறிவில்லாமல் எழுதியிருக்கிறார், சமாளிக்கிறார், சுயநினைவோடு இருந்தாரா? மூடிக் கொண்டு போகவேண்டும், தைரியமில்லாத கோழைகள்// இப்படிப் போகும். இவ்வாறு எப்போது ஒருவரால் எழுதமுடியும். எங்கு விமர்சனம், மாற்றுக் கருத்து எனும் எண்ணம் இல்லாமல் தன்னுடைய நிலைப்பாட்டுக்கு எதிராக யார் என்ன சொன்னாலும் அது தவறாக மட்டுமே இருக்கமுடியும் என்ற முன்முடிவு இருக்கும் இடத்தில் தான் இதுபோன்ற சொல்லாடல்கள் பிறக்க முடியும்.  ஒருவேளை என்னுடைய வாதங்கள் நண்பருக்கு உளறலாக தெரிந்தால், அது என்ன விதத்தில் உளறலாக இருக்கிறது என்பதை விளக்க வேண்டுமேயல்லாமல், உளறல் என்று எழுதக்கூடாது. இது போன்றவைகளெல்லாம் கண்ணியமாக, அழகான முறையில் விவாதம் செய்ய விரும்புபவர்கள் செய்ய வேண்டியது.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் 10

குரான் கூறுவது அறிவியலாகுமா?

எடுத்துக் கொள்ளப்பட்ட நண்பர் இஹ்சாஸின் பதிவு

குரான் கூறுவது அறிவியலாகுமா? எனும் பதிவில் முஸ்லீம்கள் இஸ்லாத்தை மதமல்ல மார்க்கம் என்று கூறுவது சரியானதா? என்பது முதலாவதாகவும் குரானில் இருப்பதாக கூறப்படும் அறிவியல் செய்திகள் மெய்யாகவே அறிவியலார்ந்து இருக்கிறதா என்பது முதன்மையானதாகவும் எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது.  இதற்கு மறுப்பெழுதும் ஹோதாவில் குதித்த நண்பர் உள்ளீடில்லாமல் உடைபட்டிருக்கிறார்.  மறுப்பு என்றால் எழுதப்பட்டிருந்ததை உள்வாங்கி மறுத்து தன்னுடைய நிலைப்பாட்டை நிலைப்படுத்த வேண்டும். ஆனால் நண்பர் செய்திருப்பது என்ன? மறுக்க வேண்டும் என நினைத்திருக்கிறார். பாவம் அவரால் முடியவில்லை.

இஸ்லாம் மதமா? மார்க்கமா? என்பதை எடுத்துக் கொள்வோம்.  அது மார்க்கமல்ல மதம் தான் என்பதற்கு சில கருத்துகளை எடுத்துவைத்திருந்தேன்.

  1. எல்லா மதங்களும் நல்லதோ கெட்டதோ தமக்கென்று ஒருவாழ்முறையை நெறிப்படுத்துகின்றன.
  2. எல்லா மதங்களும் இதை செய்ய வேண்டும் இதைச் செய்யக்கூடாது என்று வரையறைகளை கொண்டிருக்கிறது.
  3. எல்லா மதங்களும் தங்களை விட்டு வெளியேறுவோரை எச்சரிக்கின்றன. இணைய விரும்புவோரை வரவேற்கின்றன.
  4. எல்லாமதங்களும் விதிக் கொள்கை மூலம் மக்களை சிந்திக்கும் திறனற்ற பொம்மைகளாகவே கருதுகின்றன.
  5. எல்லா மதங்களும் பரிசீலனைக்கு இடமின்றி ஒற்றைவிதமான சிந்தனையாக இருக்கிறது.

இவைகளில் இஸ்லாமும் ஒன்றுகிறது. பின் எப்படி ஏனையவை எல்லாம் மதம் இஸ்லாம் மட்டும் மார்க்கம் என்பது? இதற்கு மறுப்பாக நண்பர் கூறியது என்ன?

  1. ஏனைய மதங்கள் வாழ்முறையாக சிலவற்றை கூறி சிலவற்றை விட்டிருக்கின்றன.  இஸ்லாம் மட்டுமே எல்லாத் துறைகளுக்குமாக வாழ்முறைகளை கூறியிருக்கிறது.
  1. மதங்கள் மட்டுமல்ல கொள்கைகளும் கூட செய்யவேண்டியவை செய்யக் கூடாதவை என்று வகைப்படுத்துகின்றன. அதில் மெசேஜைத்தான் பார்க்க வேண்டும்.
  2. எல்லா மதங்களையும் போலவா இஸ்லாம் கூறுகிறது (வேறு எப்படி கூறுகிறது என்பது அவருக்கே வெளிச்சம்)
  3. இதில் இஸ்லாம் எப்படி வேறுபடுகிறது என்று கூறவில்லை.
  4. ஆம் அப்படித்தான்.

இந்த ஐந்து கருத்துகளில் முதல் கருத்தில் மட்டுமே ஏனைய மதங்களை விட இஸ்லாம் சற்று அதிகமாக கூறுகிறது என்றிருக்கிறார்.  வாதத்திற்காக அது சரி என்று கொண்டாலுமே கூட, ஏனையவை எல்லாம் மதம் இஸ்லாம் மட்டுமே மார்க்கம் என்பதை அது எப்படி நிரூபிக்கும்? வேண்டுமானால் ஏனையவை சாதா மதம் இஸ்லாம் தூக்கலான மதம் என்று கூறிக் கொள்ளலாம். ஆனால் எந்த அடிப்படையில் மார்க்கம் என்பது? இஸ்லாம் ஒன்றும் தனிச்சிறப்பாக எல்லாத்துறைகள் குறித்தும் கருத்து கூறிடவில்லை. புதிதாக என்ன எழுந்தாலும் ஏற்கனவே இருப்பவற்றில் ஒத்த கருத்துடையவைகளை தேடி அதிலிருந்து ஒரு புரிதலுக்கு வருவார்கள். இதைத்தான் எல்லா மதத்திலும் செய்கிறார்கள்.  அரிசி மாவில் கோலம் போடுவது எறும்பு போன்ற சிறு உயிர்களுக்கு தீனி என்பதில் தொடங்கி கன்ஃபெசன் கூண்டில் மன அமைதி கிடைக்கிறது என்பது வரை தேவைகளுக்கு ஏற்ப வேத வசனங்களை, மதச் சடங்குகளை வாழ்க்கையோடு பொருத்திக் கொள்கிறார்கள்.

இதை, இஸ்லாம் எல்லாவற்றையும் கூறியிருக்கிறது, ஏனைய மதங்கள் கொஞ்சம் குறைவாக கூறியிருக்கிறது என்பது அவரவர் மத நம்பிக்கையைப் பொருத்தது. இவைகளைக் கொண்டு எப்படி இஸ்லாம் மதமல்ல மார்க்கம் என்று கூறுவது? அதுவல்லவா முதன்மையான கேள்வி. இதற்கு மறுப்பு கூறுவதை விடுத்து என்னுடைய கட்டுரையின் பகுதிகளை ஆங்காங்கே எடுத்துப் போட்டு அதற்கு பதில் என்ற போர்வையில் ஏதேதோ எழுதிவைத்தால் அது மறுப்பாகிவிடுமா? இதை எப்படி எடுத்துக் கொள்வது, உளறியிருக்கிறார் என்றா? திணறலை மறைக்க முடியாமல் சமாளித்திருக்கிறார் என்றா? ஒருவேளை ஆணித்தரமான பதில்களின் மூலம் எனக்கு சாட்டையடி கொடுத்திருப்பதாகக் கூட நண்பர் எண்ணியிருக்கக் கூடும்.  என்னசெய்வது மூட நம்பிக்கைகளையே வாழ்க்கையாக கொண்டவர்களல்லவா?

அடுத்து, குரானின் அறிவியலை அறியாமைக்காலம் என்பதிலிருந்து தொடங்கியிருக்கிறார்.  அறியாமைக் காலம் எனும் சொல்லை ஒரு சொல் எனும் அடிப்படையில் இருந்து நண்பர் அணுகியிருக்கிறார், அதனால் தான் ஐரோப்பிய மறுமலர்ச்சிக் காலமா? முகம்மதின் காலம் அறியாமைக் காலம் தான் என்கிறார். ஆனால் நான் அறியாமைக் காலம் என்பதை இஸ்லாமிய கலைச் சொல்லாக பயன்படுத்தியிருக்கிறேன்.  என்னுடைய கட்டுரையை நிதானமாக படித்திருந்தால் இதை அவர் உணர்ந்திருக்க முடியும்? ஆனால் மறுத்து எழுத வேண்டும் என்பதற்காகவே படித்திருப்பார் போலும் அதனால் தான் புரியவில்லை.

எந்தக் காலப் பகுதியையும் அதற்குப் பிந்தைய காலப் பகுதியோடு ஒப்பிட்டால் முந்தைய காலம் அறியாமைக் காலமாகவே இருக்கும். ஏனென்றால், சமூக அறிவியல் வளர்ச்சியடைகிறது. ஆனால் ஒரு சொல்லாக அறியாமைக் காலம் என்பதற்கும் இஸ்லாமிய கலைச் சொல்லாக அறியாமைக் காலம் என்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. முகம்மதின் சமகாலத்தவர்கள் கூட அறியாமைக் காலம் எனும் சொல்லை சரளமாக பயன்படுத்தியிருக்கிறார்கள். குரான் கூட இச்சொல்லை பயன்படுத்தியிருக்கிறது. அதாவது சம காலத்தையே அறியாமைக் காலம் அறிந்த காலம் எனப் பிரித்திருக்கிறார்கள்.  அதாவது ஒருவனின் வாழ்வில் எப்போது இஸ்லாம் நுழைகிறதோ அப்போதிலிருந்து அறியும் காலம் தொடங்குகிறது. அதற்கு முந்திய காலமெல்லாம் அறியாமைக் காலம். முகம்மதின் சமகாலத்தவர்களும், குரானும் இந்தப் பொருளில் தான் அறியாமைக் காலம் எனும் சொல்லை பயன்படுத்தியிருக்கிறார்கள் பயன்படுத்தியிருக்கிறது.  ஆனால் தற்போதைய இஸ்லாமிய மதவாதிகள், பரப்புரையாளர்கள் இஸ்லாத்திற்கு முன்னர் உலகம் எதையும் அறியாதிருந்தது, அந்த அறியாமைக் காலத்தில் வந்த குரானின் வசனங்கள் இன்றைய அறிவியலைப் பேசுகிறது என்று அறியாமைக் காலத்திற்கு புது அழுத்தம் கொடுக்கிறார்கள். இந்த அழுத்தத்திலிருந்து தான் குரானின் அறிவியல் பீறிட்டுக் கிளம்புகிறது.

இதேபோன்று இதனுடன் தொடர்புடைய சொல் தான் ஓதத் தெரியாத உம்மி முகம்மது என்பது. இவ்வளவு அறிவியல் பழுத்து தொங்கிக் கொண்டிருக்கும் குரான் வசனங்களை கூறியது எழுதப் படிக்கத்தெரியாத முகம்மது, எனவே குரானை இறக்கியது அல்லாதான் என்று காட்டுவதற்காக. அதாவது, திரைப்படங்களில் கதைநாயகன் அழகானவனாக தெரியவேண்டும் என்பதற்காக அழகு குறைந்ததான ஒப்பனையில் சிலரை நண்பர்களாக இணைப்பார்களே அது போல. குரானின் அறிவியலை ஜாக்கி வைத்து தூக்குவதற்காக முகம்மதுவுக்கு படிப்பறிவில்லாத பிம்பத்தைப் பூசுகிறார்கள். ஆனால் இன்றைய காலத்தோடு ஒப்பிடுகையில் அன்று கல்வி என்பது எப்படி இருந்தது? இன்று இருப்பது சான்றிதழ் கல்வி, முன்னர் இருந்தது செயற்பாட்டுக் கல்வி.  எழுதப் படிக்கத் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும் என்பது அன்றைய நிலையில் கட்டாயமில்லை.  மிகத் தேவையுள்ளவர்கள் மட்டுமே எழுதப் படிக்கத் தெரிந்திருந்தனர். அன்றைய பொழுதில் எழுதப் படிக்கத் தெரிவது கல்வியின் அடையாளமல்ல, தேவையின் அடையாளம்.  பதினெட்டாம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் தொடங்கிய தொழிற்புரட்சியின் விளைவாகவே கல்வி சான்றிதழ் முக்கியத்துவம் கொண்டதாக, எழுதப் படிக்கத் தெரிவது கல்வியின் அடையாளமாக மாறியது. தெளிவாகச் சொன்னால் இயந்திரங்களை இயக்குவதற்கு நிலப்பிரபுத்துவ கால உழைக்கும் மக்களைப் போல் உடலுழைப்பு மட்டுமே தகுதி என்பது போதுமானதாக இல்லை எனும் தேவை ஏற்பட்ட பிறகே, பரந்துபட்ட மக்களுக்கு படிப்பறிவு புகுத்தப்பட்டது. முகம்மதின் காலத்தில் கல்வி என்பது அனுபவ அறிவாக, செயல்படும் திறனாகத்தான் இருந்தது. அதேநேரம் முகம்மது இன்றைய தகுதியில் ஒரு முதுநிலை செயல் அலுவலர் (சீப் எக்ஸிக்யூடிவ்) போன்று மதிக்கப்பட வேண்டியவர்.  ஒரு பன்னாட்டு வணிக நிறுவனத்தில் (கதீஜாவின் வணிகம் சிரியா, எகிப்து போன்ற நாடுகளோடு தொடர்பு கொண்டிருந்தது என்பதை நினைவில் கொள்க) திறம்பட பணியாற்றி அதன் முதலாளியால் கவரப்பட்டவர் என்பதை கவனம்கொள்ள வேண்டும்.  இதைத்தான் குரானின் அறிவியலை ஊதிப் பெருக்குவதற்காக எழுதப் படிக்கத்தெரியாதவர் என்று பீலா விடுகிறார்கள்.

மறுப்புக்கு திரும்புவோம்,  குரானில் அறிவியல் ததும்பும் வசனங்கள் என்று மதவாதிகள் கூறும் வசனங்களில் எந்த ஒன்றாவது நேரடியாக அறிவியலை அறிவியல் மொழியில் பேசுகிறதா என்றால் இல்லை என்பதே பதில்.  இதற்கு நண்பர் உட்பட எல்லோரும் ஆயத்தமாக கூறும் பதில் குரான் அறிவியல் நூல் அல்ல என்பதே.  அதிலிருக்கும் அறிவியலெல்லாம் அதில் ஏற்றப்பட்டிருக்கும் அறிவியல் தான். எடுத்துக்காட்டாக, “உங்களுக்கு பயன்படுவதற்காக மண்ணாலான பானையை ஆக்கித் தந்திருக்கிறோம். சிந்திக்க மாட்டீர்களா?” என்றொரு வசனம் இருப்பதாக கொண்டால்,இந்த வசனம் 1400 என்ன 2400 ஆண்டுகளுக்கு முன்பிருந்து பயன்பாட்டில் இருந்தாலும் ஒரு சாதாரண வாக்கியமாக இருக்கும். எதுவரை? பின்னர் ஒரு காலத்தில் மண்ணிலிருந்து சிலிகான் என்றொரு பொருளை பிரித்தெடுத்து அந்த சிலிகான் மனிதனின் கணிணி உட்பட பெரும்பாலான செயல்பாட்டிற்கு துணையாகும் வரை. அதன்பிறகு பார்த்தாயா அல்லாவின் மகிமையை! சிலிகான் என்றொரு பொருளை மண்ணிலிருந்து கண்டுபிடித்து அது மனிதனுக்கு பெருமளவில் பயன்படும் என்று குரான் 2400 ஆண்டுகளுக்கு முன்பே கூறிவிட்டது என்று ஜல்லியடிக்க வேண்டும்.  இதுதான் குரானில் இருக்கும் அறிவியல்.

இப்படி குரானில் மட்டும் தான் அறிவியல் இருக்கிறதா? பண்டைய இலக்கியங்கள் அனைத்திலும் அறிவியல் அவர்களையறியாமல் எட்டிப் பார்த்திருக்கிறது. குரானைப் பார்ப்பது போல் உருப்பெருக்கிப் பார்த்தால் தமிழ்வாணன் கதைகளில் கூட முப்பதாம் நூற்றாண்டு அறிவியலை கண்டுபிடிக்க முடியும். அதற்கு சில எடுத்துக்காட்டுகளையும் அந்தக் கட்டுரையில் காட்டியிருந்தேன்.  அதற்கு மறுப்பு எழுதியிருக்கும் நண்பரின் அறிவு கண்டு புளகமடைந்து விட்டேன்.

மண்ணின் மேலவன் தேர் சென்ற சுவடெலா மாய்ந்து விண்ணின் ஓங்கியதொரு நிலை…….  மன்னன் சென்ற தேரின் தடம், சென்று கொண்டேயிருந்து திடீரென விண்ணில் ஏறிச் சென்றது போல் மறைந்துவிட்டது என்று விமானம் குறித்து எந்த அறிவும் இல்லாத காலத்தில் ஒருவரால் எப்படி வர்ணிக்க முடியும்?

ஒரு துகள் துகளாக இருக்கும் அதேநேரம் ஒளியாகவும் இருக்கிறது. குறிப்பிட்ட ஒரு இடத்தில் இருக்கும் அதே நேரம் குறிக்க முடியாதபடி பேரண்டம் முழுவதிலும் இருக்கிறது. எஃகு கூண்டுக்குள் இருக்கும் ஒரு எலி அதற்கு வெளியே இருப்பதாகவும் கொள்ளமுடியும். ஒரு பொருளின் இருப்பையும் அதன் இயக்கத்தையும் இப்படி விளக்குகிறது குவாண்டம் அறிவியல்.  இந்த நூற்றாண்டின் இந்த அறிவியல் ஈசோ உபனிடதத்தில் இடம்பெற்றது எப்படி? அது நகர்கிறது, அது நகரவில்லை, அது தூரத்தில் உள்ளது, அது அருகேயும் உள்ளது அது உள்ளே இருக்கிறது, வெளியேயும் இருக்கிறது. எனக்கு அறிவியல் தெரியுமா என்பது எனக்குத் தெரியாது. முடிந்தவரை முயன்று கொண்டிருக்கிறேன். ஆனால் நண்பர் அளவுக்கு எனக்கு அறிவியல் தெரியாது என்பதை ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும்.

ஒரே அளவில் இருக்கும் ஆபரணத்தில் எது போலி என்பதை துப்பறிய அதன் அடர்த்தியை எப்படி அளப்பது  என குழம்பிக் கொண்டிருந்த ஆர்கிமிடீஸுக்கு தொட்டியில் மூழ்கிக் குளிக்கும் போது தான் மூழ்கியதால் வெளியேறிய நீரின் அளவுடன் அடர்த்திக்கு தொடர்பு இருக்குமோ என்று சிந்தித்தது தான் ஆர்கிமிடீஸின் அடர்த்தி பற்றிய கோட்பாடு. இதைத்தான் அவ்வையாரும் கூறுகிறார் ஆழ அமுக்கி முகக்கினும் என்று. அவ்வையாருக்கு இந்த சிந்தனை வந்தவழி எது?

சதகூறிட்ட கோணிலும் உளன். அணுவைவிட சிறிய பொருள் இருக்க முடியுமா என்று சிந்திப்பதற்கு எந்த வாய்ப்பும் இல்லாத அந்த அறியாமைக் காலத்தில் அணுவை நூறாக உடைத்த அளவில் இருக்கும் அளவிலும் ஒன்று இருக்க முடியும் என யூகித்ததற்கு தூண்டுதலாக இருந்தது எது?

குரானின் வழியில் பார்த்தால் இவைகளையும் அறிவியலாக ஏற்றுக் கொள்ள நேரிடும். ஆனால் இவைகள் மெய்யாக அறிவியலில்லை. அவர்களின் கற்பனை பின்னரான அறிவியல் கூறுகளுடன் ஒன்றிப் போகிறது அவ்வளவுதான். இதே கதை தான் குரானிலும். ஆனால் குரான் இஸ்லாத்திற்கு பசையாக இருப்பதால் அதனை நம்புபவர்களுக்கு அல்லாவையும் அதன் தெய்வீகத்தையும் பிரிக்க முடியாமல் போகிறது. அந்தோ பரிதாபம்! அதை நம்மையும் நம்பச் சொல்கிறார்கள். அது தான் பிரச்சனை.

இந்த நூற்றாண்டு மட்டுமல்ல, இனி மனிதன் வாழப் போகும் அத்தனை நூற்றாண்டுகளின் அறிவியல் நுணுக்கங்களையும் 1400 ஆண்டுகளுக்கு முன்பே தனக்குள்ளே மறைவாக சூல் கொண்டுள்ள குரானில் வெளிப்படையாக கூறப்பட்டிருக்கும் ஜின் போன்ற உயிரினங்கள் இருப்பதற்கு என்ன ஆதாரம் என்றால், நண்பர் ஒரு சமன்பாடு சொல்கிறார் பாருங்கள். என்னே ஒரு கண்டுபிடிப்பு. குரானில் இருக்கும் வசனங்கள் அறிவியல் தான் என நிரூபித்து விட்டால், ஒட்டுமொத்தமாக குரானே இறைவன் இறக்கியது என்று நிரூபணம் ஆகிவிடும், அப்படி நிரூபணம் ஆகிவிட்டால், தனித்தனியாக ஒவ்வொரு வசனமாக நிரூபிக்க வேண்டிய தேவையில்லாமல் அத்தனையும் உண்மை என்றாகிவிடும். என்றால் ஜின் இருப்பது உண்மை தானே. கொக்கு தலையில் வெண்ணை வைத்து கொக்கு பிடிப்பது பற்றி செவியுற்றிருக்கிறீர்களா? அதற்கு விளக்கம் வேண்டுமென்றால் நண்பர் இஹ்சாஸை தொடர்பு கொள்ளலாம் தெளிவாக விளக்கமளிப்பார். குரான் இறைவன் தந்தது என்பதும், அதில் அறிவியல் இருக்கிறது என்பதும் முஸ்லீம்களின் நம்பிக்கைக்கு வெளியே ஒன்றுமில்லை. நண்பரோ குரான் இறைவன் தந்தது என்பது அறிவியல் உண்மை என்பது போல் எண்ணிக் கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார். விரைந்து மயக்கத்திலிருந்துவிடுபட்டால் அவருக்கு நல்லது.

இறுதியாக, கோல்டன் ஏஜ் ஆஃப் இஸ்லாம் பற்றி கூறியிருக்கிறார். முஸ்லீம்கள் மாங்கா மடையர்கள், அவர்களுக்கும் அறிவியலுக்கும் தொடர்பே இல்லை என்று கூறியது யார்? முஸ்லீம்களில் அறிவியலாளர்கள் இருந்திருக்கிறார்கள், கணிதவியலாளர்களாக, வானியலாளர்களாக பல சாதனைகளைப் புரிந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் மதவாதிகள் கூறும் முஸ்லீம்களாக இருந்திருக்கிறார்களா? அல்லது இஸ்லாம் அறிவியலை அரவணைத்ததால் அவர்கள் அறிவியலாளர்களாக இருந்தார்களா? சமூகத்தளத்தில் முஸ்லீம்களாக நடக்கவில்லை என்று யாரை தூற்றுகிறார்களோ அவர்களையே அறிவியல் முஸ்லீம்கள் என்று தூக்கிப் பிடிப்பது வேடிக்கையானது தான்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் 11

பிரபஞ்சமும் அதை கட்டுப்பட அழைத்த குரானும்

எடுத்துக்கொள்ளப்பட்ட நண்பர் இஹ்சாஸின் பதிவு

இந்த பதிவில் நண்பர் இஹ்சாஸ் என்ன சொல்கிறார்? அல்லது என்ன சொல்ல முனைந்திருக்கிறார்? என்று கண்டுபிடித்துத் தருபவர்களுக்கு பரிசு என்று அறிவித்து விடலாமா என்று எண்ணுமளவுக்கு வெறுமையாய் காட்சியளிக்கிறது. மறுக்க வேண்டும் என்பது மட்டும் தான் நண்பருக்கு தெரிந்திருக்கிறது. ஆனால் எப்படி மறுப்பது என்பது கடைசிவரை அவருக்கு பிடிபடவே இல்லை. அதற்காக மறுக்காமல் இருந்துவிட முடியுமா என்ன? அதனால் தான் ஆயுதமின்றியே களத்திற்கு வந்துவிட்டார். வீரர் தான்.

இப்பேரண்டம் பெருவெடிப்பிலிருந்து தொடங்கியிருக்கலாம் என்பது அறிவியல் யூகம். இது அறிவியல் உண்மையல்ல யூகம் தான் அதனால் நாங்கள் ஏற்க மாட்டோம் என்று மதவாதிகள் யாரும் கூறவில்லை. ஏனென்றால் பெருவெடிப்புக் கொள்கையை ஒட்டிவைப்பதற்குத் தோதாக ஓரிரு வசனங்களை குரானில் கண்டடைந்து விட்டார்கள். அந்தோ! ”அறிவியல் உண்மையல்ல யூகம் தான்” என்னும் பெருமையைப் பெறுவதிலிருந்து பெருவெடிப்புக் கொள்கை நூலிழையில் தவறிவிட்டது.

அண்டவெளியில் சீராக பரவியிருக்கும் வெப்பம், பருப்பொருட்களின் விரைவு உள்ளிட்ட சில காரணங்களைக் கொண்டு பெருவெடிப்பை ஊகித்திருக்கிறார்கள். ஆனால் இதை 1400 ஆண்டுகளுக்கு முன்பே முகம்மது கூறியிருக்கிறார் என்று காட்டுவதற்கு கண்டுபிடித்தவை தான் குறிப்பிடப்பட்ட அந்த இரண்டு வசனங்களும். அந்த இரண்டு வசனங்களுமே பெருவெடிப்போடு ஒட்டுறவு எதையும் கொண்டிருக்கவில்லை என்பதை காட்டியிருந்தேன். இதற்கு மொத்தப்பதிவில் நண்பர் எடுத்து வைத்துப்பது இதைத்தான் \\ இதன் மூலம் வானங்களும் பூமியும் முதலில் ஒன்றாக இருந்தது என்றும் அதை பின்னர் பிரித்து பிளந்தெடுத்தோம் என்றும் அல்லாஹ் கூறுகிறான். இது தற்கால விஞ்ஞானிகள் கூறும் பிரபஞ்சத்தின் தோற்றத்தை அப்படியே எடுத்துக்காட்டுகிறது.இதன் பின் உருவான தூசுப்படலத்த்லிருந்துதான் ஏனைய கிரகங்கள் தோன்றின என்று குறிப்பிடுகின்றனர் விஞ்ஞானிகள்// இந்த ஒற்றை வரியை எழுதுவதற்கு ஏன் ஒரு பதிவை வீணாக்கினார் என்பது அவருக்கே வெளிச்சம்.

வானங்களும் பூமியும் ஒன்றாய் இருந்தது என்று எந்த விஞ்ஞானி மதவாதிகளிடம் விளக்கினார் என்று நண்பர் நமக்கு விளக்குவாரா? வானங்களிடமிருந்து பூமி முதலில் பிரித்தெடுக்கப்பட்டது இதன் பின் உருவான தூசுப்படலத்திலிருந்து ஏனைய கிரகங்கள் தோன்றின. இதை நன்கு கவனித்துப் பார்த்தால் புதிய அறிவியல் உண்மையை(!) நண்பர் கண்டுபிடித்து உலகிற்கு அளித்துள்ளார் என்பது விளங்கும். முதலில் வானங்கள் பின்னர் பூமி அதன் பிறகு உருவான தூசுப்படலத்திலிருந்து சூரியன் உள்ளிட்ட விண்மீன்கள் கோள்கள் எல்லாம் பின்னர். இந்த அறிவியல் உண்மை தெரியாமல் உலகின் அறிவியலாளர்களெல்லாம் காலத்தே மிகவும் பிற்பட்டது பூமி என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள்.

இது ஒருபக்கம் இருக்கட்டும், பதிவின் தொடக்கத்தில் நண்பர் ஒரு விளக்கம் தந்திருக்கிறார். அதாவது குரான் வசனங்களில் அறிவியல் உண்மைகள் இருக்கின்றன என்று பலர் கூறித் திரிகிறார்களாம். அப்படி பலர் கூறித் திரிவதில் கலப்படமும் இருக்கிறதாம். எனவே கலப்படமான அறிவியல் உண்மையை எடுத்துக் கொள்ளாமல் அக்மார்க் அறிவியல் உண்மையை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். எனவே செங்கொடி கலப்படமான அறிவியல் உண்மையை எடுத்துக் கொண்டு மறுப்பு கூறியிருந்தால் நண்பர் அக்மார்க் அறிவியல் உண்மையை மட்டுமே கூறி மறுப்புரை வரைவாராம். அந்த விதத்தில் நண்பர் கூறும் அக்மார்க் அறிவியல் உண்மை தான் வானங்கள் பூமி பின்னர் ஏனையவை என்பது. இப்போது உங்களுக்கு எது அக்மார்க் அறிவியல் உண்மை? எது கலப்படமான அறிவியல் உண்மை? என்று குழப்பம் ஏற்பட்டால் அதற்கு நான் பொறுப்பல்ல.

சரி, எது அக்மார்க் அறிவியல் உண்மை, எது கலப்படமான அறிவியல் உண்மை என்று பிரித்தறிவதற்கு அளவுகோல் எதையாவது நண்பர் வைத்திருக்கிறாரா? ஒருவேளை நண்பர் சார்ந்திருக்கும் குழு கூறுவது மட்டும் அக்மார்க் அறிவியல் உண்மை அதற்கு மாற்றமாக கூறப்படுவதெல்லாம் கலப்படமான அறிவியல் உண்மை என்று கூறுகிறாரோ. குரானில் அறிவியல் என்று யார் கூறினாலும் அது கலப்படமில்லாத அக்மார்க் பொய் என்பது ஒருபுறம் இருக்கட்டும். குரானில் அறிவியல் என்று கூற முற்படுபவர்கள் அனைவரின் நோக்கமும் ஒன்றுதான். 1400 ஆண்டுகளுக்கு முன்னர் முகம்மது எனுமொரு மனிதர் எழுதியதை ஆண்டவன் எழுதியது என்று பீஜப்படுத்துவது தான்.

இன்னொன்றையும் நண்பர் குறிப்பிடுகிறார். எடுத்துக் காட்டப்பட்ட இரண்டு வசனங்களில் இரண்டாவது வசனத்தை மட்டும் மறுத்துவிட்டு முதல் வசனத்தை நான் ஏற்றுக் கொண்டு விட்டதைப் போல் பாவனை காட்டுகிறார். நண்பரின் காட்சிப்பிழையை உத்தேசித்து மீண்டும் ஒருமுறை கூறிவிடலாம் \\ வானமும் பூமியும் முன்னர் இணந்திருந்தது இப்போது பிரிந்திருக்கிறது என்பதை மேற்கண்ட வசனங்களின் மூலம் அறியலாம். ஆனால் வானம் என்பது மேலே தெரியும் நீல நிற பின்னணி மட்டுமல்ல எந்தக்கோளின் எல்லையிலிருந்தும் வானம் தொடங்கிவிடுகிறது. இன்னும் தெளிவாகச்சொன்னால் சூழ இருக்கும் வானத்தில் கோள்கள் குறை மூழ்கலில் கிடக்கின்றன. அதாவது நீர் நிரப்பிய பாத்திரத்தில் ஒரு பந்து முழுவதும் மூழ்கி தரை தட்டிவிடாமலும் நீரின் மேற்பரப்பில் மிதக்காமலும் நடுவில் இருப்பதைப்போல் கோள்களின் பூமியின் அனைத்து திசைகளிலும் வானம் சூழ்ந்திருக்கிறது. இந்த அறிவியலை அறியாத குரான், பூமியையும் வானத்தையும் பிரித்துவிட்டதாய் விளம்புகிறது//

ஒன்றுமில்லாத மறுப்பை மறுத்து எழுத வேண்டுமா என நீண்ட நேரம் யோசித்தேன். இது போன்ற குழப்பத்தை மீண்டும் எனக்கு நண்பர் தராதிருக்கட்டும். ஒரு வேளை நண்பரின் எந்த இடுகைக்காவது மறுப்பு எழுதாமல் விட்டுவிட்டேன் என்றால் இப்படியான ஒரு குழப்பத்தில் நகர்ந்து விட்டேன் என்று கொள்க.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் 12

பூமி உருண்டை என யார் சொன்னது அல்லாவா? மனிதனா?

எடுத்துக் கொள்ளப்பட்ட நண்பர் இஹ்சாஸின் பதிவு

பூமியின் வடிவம் குறித்த அந்த பதிவில், உருண்டை என குரான் கூறுவதாக சொல்லப்படும் வசனங்களில் பெரும்பாலான வசனங்கள் பூமியின் வடிவம் குறித்து எதுவும் கூறாமல் இரவு பகலின் காட்சியை விவரிக்கும் வசனங்களாக இருக்கின்றன என்பதையும்; தஹாஹா, துல்கர்னைன் குறித்த வசனங்கள் பொய்யாகவும், வலிந்து ஏற்றப்பட்டதாகவும் இருக்கின்றன என்பதையும்; இன்னும் ஏராளமான வசனங்கள் பூமியின் வடிவத்தை தட்டை எனும் பொருள்பட குறிப்பிட்டுள்ளன என்பதையும் விளக்கியிருந்தேன். இவற்றில் தஹாஹா குறித்து அந்த வசனத்திற்கு ஜாஹிர் நாயக் தவறான விளக்கம் கொடுத்து வருவதாக நண்பரும் சேர்ந்து கூறியிருப்பதால் அந்த வசனத்தை தள்ளுபடி செய்துவிடலாம். ஆனால் ஜாஹிர் நாயக் மட்டும் தான் வசனங்களுக்கு பொருந்தாத அறிவியல் விளக்கம் கூறியிருக்கிறாரா? வேறு யாரும் கூறுவதில்லையா? துல்கர்னைன் வசனத்திற்கு பிஜே அளிக்கும் விளக்கம் எப்படி அறிவியலற்று இருக்கிறது என்பதை கீழே பார்ப்போம்.

முதலில், இரவு பகல் காட்சிகளை விவரிக்கும் வசனங்கள் குறித்து நண்பர் குழப்பமான வாக்கியங்களில் கடந்து செல்கிறார். அந்த வசங்களில் பூமியின் வடிவம் குறித்த விளக்கம் இருக்கிறதா? இல்லையா? நண்பர் அதை சரி காண்கிறாரா? மறுக்கிறாரா? \\அதை தவறு என்று மறுக்கவில்லை. மாறாகஇதை 1400 வருடங்களுக்கு 

முன் என்ன 2800    வருடங்களுக்கு முன்இருந்தவர்களாலும் 

சொல்ல முடியும் என்கிறார். ஆக, இதற்களிக்கும்விளக்கத்தில்

 எந்த மறுப்பும் அன்னாருக்கில்லை என்றாகிவிட்டது// என்று குறிப்பிட்டிருக்கிறார். அதாவது அந்த வசனங்கள் பூமி உருண்டை என விளக்குவது போலவும், அதை நான் தகுந்த முறையில் மறுக்கவில்லை என்பது போலவும் ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முனைந்திருக்கிறார். ஆனால் புளி போட்டு விளக்கும் அளவுக்கு அந்த வசனங்களில் ஒன்றுமில்லை என்பதை அந்த பதிவில் தெளிவு படுத்தியிருக்கிறேன். \\ஏனென்றால் மனிதன் தோன்றிய காலம் முதல் இன்று வரை இரவு பகல் மாற்றம் மெதுவாக கொஞ்சம் கொஞ்சமாகத்தான் நிகழ்கிறது. அறிவியலின் வாசம் கூட இல்லாத இந்த ஒன்றுமற்ற வசனத்தை தான் மாபெரும் அறிவியல் கொண்டதாக புழுகுகிறார்கள்// ஒன்றன்பின் ஒன்றாக வருகிறது, தொடர்கிறது, அடுத்தடுத்து வருகிறது, ஒன்றை ஒன்று மூடுகிறது இதுபோன்று தான் அந்த வசனங்கள் இரவு பகலை விவரிக்கின்றன. மனிதன் தோன்றிய நாள் முதல் இரவு பகல் இப்படித்தான் வந்து கொண்டிருக்கிறது. இதைக் கூறுவதற்கு, ஆண்டவனிடம் டியூசன் படித்தவர்களால் மட்டும் தான் முடியுமா? ஆனால் அந்த வசனங்களில் பூமி உருண்டை என கூறப்பட்டிருப்பதாக ஜல்லியடிப்பதற்கு நிச்சயம் ஆண்டவனிடம் டியூசன் படித்திருக்க வேண்டும். அவ்வாறு டியூசன் எதுவும் படிக்கவில்லை என்பதால் தான் நண்பர் அவைகளில் உருட்டு விளக்கங்கள் கொடுக்காமல் தவிர்த்துக் கொண்டார் போலும்.

துல்கர்னைன் வசனங்களை எடுத்துக் கொண்டால், அந்த வசனங்களில் பிஜே அவர்கள் துப்பறிந்து பூமி உருண்டை என்று கண்டுபிடிப்பதை இதை சொடுக்கி கண்டு களியுங்கள். இந்த விளக்கத்தைத் தான் நண்பரும் தன்னுடைய மறுப்பில் எடுத்து வைத்திருக்கிறார். அதாவது பூமியில் நேர்கோட்டில் பயணம் செய்தால் சூரியன் மறைவதையும் உதிப்பதையும் பார்க்கலாம். அப்படி பார்ப்பதாக குரான் கூறுவதால் பூமி உருண்டை என்று உறுதிப்படுகிறது என்கிறார். இது எப்படி அடிப்படையற்றதாக இருக்கிறது என்பதைப் பார்ப்போம். திசைகள் என்பவை மனிதனுக்கான அடையாளங்கள் தாம், அண்ட வெளியில் திசைகள் இல்லை. சூரியன் உதிக்கும் திசை கிழக்கு, மறையும் திசை மேற்கு என்றால் சூரியன் கிழக்கில் உதித்து மேற்கில் சென்று மறைவதில்லை. பூமி சுழல்வதால் அப்படியான தோற்றம் வருகிறது. இப்போது ஒருவர் பூமியில் கிழக்கு நோக்கி பயணம் மேற்கொள்கிறார்(படம்) என்று கொள்வோம். அவரின் முகத்திற்கு எதிரே சூரியன் இருப்பதால் கிழக்காக செல்கிறார் என்று பொருள். தொடர்ந்து 90 பாகை கடந்ததும் அவர் தன் பாதையில் இயல்பாக மேற்கு நோக்கி திரும்பி விடுவாரா? நிச்சயம் மாட்டார். பூமியின் இரவுப் பகுதியில் நுழையும் போது அவரால் சூரியன் மறைவதை காண முடியாது. ஏனென்றால் சூரியனின் மறைவு அவரது பின் தலையில் நிகழும். 180 பாகை கடந்ததும், மீண்டும் அவர் சூரியன் உதிப்பதை காண முடியும். இப்படி அவர் எத்தனை சுற்றுகள் பூமியை சுற்றி வந்தாலும், சூரியன் உதிப்பதை மட்டுமே திரும்பத் திரும்ப காண முடியுமேயன்றி ஒருபோதும் அவரால் சூரியன் மறைவதை காண முடியாது. சூரியனின் மறைவை காண வேண்டுமென்றால் அவர் திரும்பி தன் திசையை மாற்றுவதைத் தவிர வேறு வழியில்லை. எனவே ஒருவர் கிழக்காகவோ, மேற்காகவோ எந்த திசையில் சென்றாலும் சூரியன் உதிப்பதையோ மறைவதையோ ஏதாவது ஒன்றை தான் காண முடியுமேயன்றி இரண்டையும் காண முடியாது. இரண்டையும் கண்டிருக்கிறார் என்றால், அவர் தன் திசையை மாற்றியிருக்கிறார் என்பதைத்தவிர வேறு ஒரு பொருளும் இல்லை. இதைத்தான் பதிவில் இப்படி \\நேர் கோட்டில் பயணம் செய்யும் ஒருவரால் ஒரே திசையில் சூரியன் உதிப்பதையும் மறைவதையும் காணமுடியாது// சுருக்கமாக குறிப்பிட்டிருந்தேன்.

இதே துல்கர்னைன் வசனத்தில் முதலில் ஒரு பாதை, பின்னர் ஒரு பாதை என்று குறிப்பிடப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி அவர் இருவேறு திசைகளில் பயணம் செய்திருக்கிறார் என்று கூறியிருந்ததை மறுத்து நண்பர் \\அவர் இது வரை பயணம் செய்த வழி தரைவழிப்பயணம் எனபதையும் மேற்குத்திசை நோக்கி பயணம் செய்தார் என்பதையும் ….. பின்னர் ஒருவழியில் சென்றார் என்பதன் அர்த்தம் கடல் மார்க்கமாக அல்லது நீர்மார்க்கமாக பயணம் செய்ததை குறிப்பிடுகிறது என்பதை அறியலாம்// என்று குறிப்பிட்டிருக்கிறார். ஒரு வாதத்திற்காக அப்படியே வைத்துக் கொள்வோம். என்றாலும் அவர் திசையை மாற்றாமல் ஒரே நேர்கோட்டில் சென்றார் என்பதை எப்படி கூறுகிறார்கள்? ஒரே திசையில் தான் சென்றார் என்பதை அந்த வசனத்தில் எந்த சொல்லிலிருந்து எடுத்துக் கொண்டார்கள்? அவர்களுக்கு தேவை என்றால் எப்படி வேண்டுமானலும் வளைத்து, நெளித்து பொருள் சொல்வார்களா?

குரான் 2800 ஆண்டுகளுக்கு முன்பே எல்லாவற்றையும் கூறிவிட்டது என்று வாய்ப்புக் கிடைத்த எல்லோருமே கூறித் திரிகிறார்கள். ஜாஹிர் நாயக் கூறியது தவறு என்று நண்பர் கூறுகிறார். பிஜே கூறியதை என்ன செய்வது? ஆனால் இவர்களுக்கெல்லாம் முன்னால் சௌதி இமாம் ஷேக் இபின் பாஸ் பூமி தட்டை என்பதை ஏற்காதவர்கள் குரானை மறுக்கும் காபிர்கள் என்று வரலாற்று புகழ்மிக்க பத்வாவை வழங்கியிருக்கிறார் என்பது நண்பரின் கவனத்திற்கு.

பூமியின் வடிவம் குறித்து எதுவும் கூறாத வசனங்களை உலையில் பழுக்க வைத்து சம்மட்டியால் அடித்து நீட்டி பூமி உருண்டை என்று கதற வைக்கிறார்கள் என்பது ஒருபுறமிருந்தாலும்; பூமியின் வடிவத்தை தட்டை எனும் பொருளில் குறிப்பிடும் வசனங்களைக் கூட எப்படி உருண்டை என்று பொய் சாட்சி சொல்ல வைத்துவிடுகிறார்கள் என்பதை அந்த பதிவில் விளக்கியிருந்தேன். அதை மறுக்க வேண்டும் என நினைத்த நண்பர் எப்படி மறுப்பது என்பது புரியாததால் அறிவை ஐயப்படுகிறார். பூமியை விரித்தான் என்று கொண்டாலும், பூமியில் விரித்தான் என்று கொண்டாலும் அங்கு பூமி உருண்டை எனும் பொருளை அதிலிருந்து பெறமுடியாது. இதை தெளிவாகவே கேட்டிருக்கிறேன், \\ எந்த வடிவத்தில் அந்த விரிப்பு விரிக்கப்பட்டிருக்கிறது? சமதளத்திலா? அல்லது உருண்டை வடிவத்திலா? என்ற கேள்விக்கு குரானில் விடை இருக்கிறதா? பூமி உருண்டையாக இருப்பதனால் அதன் மேலும் விரிப்பை பரப்ப முடியும் என்ற முடிவுக்கு வரமுடிகிறது. பூமி உருண்டையா தட்டையா என்று தெரியாது எனக்கொண்டால் குரானிய வசனங்களின் படி உருண்டை தான் என எப்படி உறுதிப்படுத்துவது?// சதுரமாக இருந்தாலும், முக்கோணமாக இருந்தாலும் விரிப்பை விரிக்க முடியும். பூமியில் விரிக்கப்பட்டிருக்கும் விரிப்பு எந்த வடிவின் மேல் விரிக்கப்பட்டிருக்கிறது? இதற்கு பதில் சொல்ல இன்னொரு முகம்மதா வருவார்? இருக்கும் முகம்மதுகள் தான் பதில் கூற வேண்டும்.

முகம்மது பிறப்பதற்கு வெகு காலத்திற்கு முன்னதாகவே பூமி உருண்டை என்பது மக்களுக்கு தெரிந்து தான் இருந்தது. கடலாடிகள் தங்கள் பட்டறிவின் மூலமும், அறிவியலாளர்கள் ஆய்வுகள் மூலமும் அதை வெளிப்படுத்தி இருந்தார்கள். இதில் புளகமடையும் விதமாக நண்பர் தன் நேர்மையுணர்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார். ஒரே செய்தியை நானும் அவரும் கூறியிருப்பதை பாருங்கள். \\கிரேக்கர்கள் சீனர்கள் இந்தியர்கள், அராபியர்கள் கடலாடிய செய்திகள் பண்டைய இலக்கியங்களில் விரவிக்கிடக்கின்றன. ….. பூமியின் வடிவம் உருண்டை என்பதை பட்டறிவாகவே விளங்கி வைத்திருந்தனர்// இது நான். \\இந்தியா, சீனா, கிரேக்கம் போன்ற நாடுகளில் குறிப்பிட்டது முகம்மது 

நபிக்குஎப்படித் தெரியும்?// இது நண்பர். அரபியர்களை மட்டும் நேர்மையாக மறைத்து விட்டார். தொடர்ந்து எனக்கு நெத்தியடி, சாட்டையடி முதல் இன்னும் பலவாறான அடிகளை அடிப்பதாக எண்ணிக் கொண்டு கேள்விகளாக அடுக்கியிருக்கிறார். ஸ்ஸ்ஸ்ஸ்யப்பா, முடியல(வடிவேலு பாணியில் படித்துக் கொள்ளவும்)

பூமி உருண்டை என்று குரான் கூறுகிறதா? என்பது எடுத்துக் கொண்ட தலைப்பு. ஆம் கூறுகிறது என்பதாக சுட்டப்படும் வசனங்களை மூன்றாக பிரித்து 1) இரவு பகல் காட்சி வசனங்களில் பூமி உருண்டை என்று கூறப்படவில்லை, 2) தஹாஹா, துல்கர்னைன் வசனங்களில் பூமி உருண்டை என்று கூறப்படவில்லை, 3) தட்டை என்று பொருள் கொள்ளத்தக்க வசனங்களிலும் பூமி உருண்டை என்று கூறப்படவில்லை என்பதை தெளிவுபடுத்தியிருக்கிறேன். மேலதிகமாக முகம்மதின் காலத்திற்கு வெகுமுன்பே பூமி உருண்டை என்பது நிருபணமாகியிருக்கிறது என்பதையும் எடுத்தியம்பி இருக்கிறேன். இதை மறுக்க வேண்டும் என்பதற்காக ஏதேதோ உளறி வைத்திருக்கும் நண்பர், அறிவுடன் தான் எழுதுகிறேனா? என்றும் கேட்டிருக்கிறார். மெய்யாகவே நண்பருக்கு அறிவு முற்றி இருக்கும் துளைகள் வழியாகவெல்லாம் வெளியேறிக் கொண்டிருப்பதாக எண்ணினால் உருப்பெருக்கி கொண்டு குரானின் வரிகளுக்கிடையே தேடி பூமி உருண்டை என்று கூறும் வசனங்களை கூற முயலட்டும், அவரால் முடிந்தால்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் 13

 

கடல்கள் பற்றிய அல்லாவின் புனைகதைகள்

எடுத்துக் கொள்ளப்பட்ட நண்பர் இஹ்சாஸின் பதிவு

 

இதுவரை நண்பர் இஹ்சாஸின் பதிவுகளுக்கு தொடரின் மீதான விமர்சனம், மறுப்புக்கு மறுப்பு என இரண்டையும் எடுத்துக் கொண்டு வரிசையாக பதிலளித்து வந்தேன். ஆனால் இந்தமுறை அவரின் மறுப்புக்கு மறுப்பை விட்டு விட்டு தொடர் மீதான விமர்சனத்தை மட்டும் எடுத்துக் கொண்டிருக்கிறேன். காரணம், இத்தொடரின் கடந்த சில கட்டுரைகளுக்கு நண்பர் இஹ்சாஸ் பதில் எதையும் அளிக்கவில்லை. கைவிட்டுவிடுவதாக அறிவிக்கவும் இல்லை. பதில் கூறுவதிலிருந்து அவர் நழுவிக் கொண்ட பிறகு சாரமற்ற, வெற்றுகளுக்கு விளக்கமளித்து இத்தொடரை நீர்த்துப் போக வைப்பதை விட, இஸ்லாம் குறித்த தொடரின் மீதான விமர்சனங்களை மட்டும் கணக்கில் கொண்டு இத்தொடரை இன்னும் ஆழமாக கொண்டு செல்லலாம் என்று எண்ணியது தான். ஒருவேளை நண்பர் இஹ்சாஸ் மீண்டும் களத்திற்கு வந்து எல்லாவற்றுக்கும் பதிலளிக்க வேண்டும் எனக் கோரினால் அதை பின்னர் பரிசீலிக்கலாம்.

 

கடல்கள் பற்றிய அந்த கட்டுரையில் குரானின் கூற்றுகளான இரண்டு அம்சங்களை எடுத்துக் கொண்டிருந்தேன். 1) கடல்களுக்கு இடையிலான தடை. 2) ஆழ்கடலின் இருள். இந்த இரண்டு அம்சங்களில் நண்பரின் மறுப்பு என்ன? முதல் அம்சத்தில், இரண்டு கடல்களுக்கு இடையே தடுப்பு இல்லையென செங்கொடி மறுக்கவில்லை. மாறாக பண்டைய கடலாடிகளுக்கு தெரிந்திருந்ததை அறைகுறையாக முகம்மது கேட்டு கூறிவிட்டார் என்று நான் கூறியிருப்பதாக அவராகவே முடிவுக்கு வந்துவிட்டார். ஆனால் அவ்வாறன்றி தெளிவாகவே கடல்களுக்கு இடையே தடுப்பு இருக்கிறது என்பதை மறுத்திருகிறேன். இரு கடல்களுக்கிடையே எல்லை இருக்கிறது என்பதே போர்வையில் வடிகட்டிய முட்டாள் தனமாக இருக்கும் போது, அங்கு தடுப்பு இருக்கிறது என்று எப்படி கூற முடியும்? இரு கடல்களுக்கு இடையே ஒரு தடுப்பு இருக்க முடியும் என்றால் முழுமையாக இரண்டு கடல்களும் தனித்தனியே பிரித்து காட்டப்பட வேண்டும். உலகில் இருக்கும் எந்த இரண்டு கடலையாவது தனித்தனியே பிரித்து அடையாளம் காட்ட முடியுமா? அந்தந்த பகுதிகளை முன்னிட்டு தனித்தனியான பெயர்களில் வழங்கி வருகிறோம். நிலங்களால் பிரிக்கப்படாதவரை தனித்தனியான இரண்டு கடல்கள் என உலகில் எதுவுமில்லை.

 

இதையே பர்சக் எனும் அரபுச் சொல்லை திணித்து நான் கூறியதை வேறொன்றாக திரித்திருக்கிறார். முட்டுச் சந்தில் மாட்டிக் கொள்ளும் போது மதவாதிகள் செய்யும் வழக்கமான உத்தி தான் இது. குறிப்பிட்ட அந்த 25:53 வசனத்திற்கு ஜான் டிரஸ்ட் மொழிபெயர்ப்பு பர்சக் எனும் சொல்லுக்கு வரம்பு என்று தப்பாக மொழிபெயர்த்து விட்டார்கள். திரை அல்லது தடுப்பு என்பதுதான் சரியான மொழிபெயர்ப்பு என்கிறார். இந்த வரம்பு என்ற சொல்லைக் கொண்டா கடல்களுக்கு எல்லை இல்லை என கூறுகிறேன். கடல்களுக்கு இடையேயான தடுப்பு என்று தான் நானும் கூறியிருக்கிறேன். ஆனால் குரான் அந்த வசனத்தில் தெளிவாக இரண்டு கடல்கள் என்று தான் கூறியிருக்கிறது. அரபுச் சொல்லுக்கு அருஞ்சொற்பொருள் விளக்க வேண்டுமென்றால், இரண்டு கடல்கள் என்று தப்பாக மொழிபெயர்த்து விட்டார்கள் ஒரு கடல் என்று தான் மூலத்தில் இருக்கிறது என்று அடித்து விட்டிருக்க வேண்டும். ஆனால் அப்படி கூற வேண்டுமென்றால் திரை குறித்த வசனங்களே தேவையற்றுப் போய் குரானிலிருந்து நீக்க வேண்டியதிருக்குமே. அதனால் தான் பர்சக்கை பிடித்துக் கொண்டு பல்டியடித்திருக்கிறார்.

 

கடல்களுக்கிடையே திரையோ தடுப்போ இல்லை என்பதற்கு சில விளக்கங்களையும் அந்த கட்டுரையில் தந்திருந்தேன். கடலடி நீரோட்டங்கள் கண்டங்களைக் கூட கடந்து வெகுதூரம் செல்கின்றன. கடல்கள் கலக்கக் கூடாது என்பதற்குத்தான் தடுப்பு மற்றவற்றுக்கு இல்லை என்று கூறும் நண்பர், நீரோட்டங்கள் கடல் நீரல்ல என்றொரு அரிய அறிவியல் கண்டுபிடிப்பை வெளியிட்டிருக்கலாமே. அருசொற்பொருள் விளக்கமோ, உருட்டி, நழுக்கும் மழுப்பலோ கூட செய்ய முடியாது என்பதால் தான் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டாரோ! ஒரே கடலின் இருவேறு பகுதிகளில் கூட கடல் நீரின் தன்மையில் வித்தியாசங்கள் இருக்கின்றன (எகா தமிழ்நாடு, அந்தமான்) என்பதை எடுத்துக் காட்டியிருந்தேன். அதற்கும் கள்ள மௌனம் தான் பதில். உண்மையிலேயே குரான் அல்லா கொடுத்தது தான் என நண்பர் இஹ்சாஸ் நம்பினால் இதற்கும் பதில் என்ற போரவையில் எதையாவது உளறியிருக்கலாமே. விளக்கம் என்ற பெயரில் உளறிக் கொட்டக் கூட முடியாத அளவில் குரானே உளறிவிட்டது என்பதை அறிந்ததால் தான் மௌனமாகி விட்டாரோ!

 

வெவ்வேறு கடல் பகுதிகளின் தன்மைகள் ஒரே மாதிரி இருப்பதில்லை எனும் அனுபவ அறிவை செவியுற்று, கடல்களுக்கு இடையில் திரை அல்லது தடுப்பு இருக்கிறது என்று உருட்டிப் புரட்டி பொய்யை அரங்கேற்றியது. அதற்கு விளக்கமாக ஒருபுறம் உப்பாகவும் மறுபுறம் இனிமையான சுவையாகவும் இருப்பதாக சிறுபிள்ளையும் நகைக்கக்கூடிய வகையில் பிதற்றியிருப்பது. இவை போதாதா குரானும் அல்லாவும் முகம்மதின் உருவாக்கம் தான் என்பதற்கு?

 

இரண்டாவதாக ஆழ்கடலின் இருள், முகம்மது குரானில் சொல்வதற்கு முன்னால் கடலில் ஆழமாகச் செல்லச் செல்ல வெளிச்சம் குறைந்து இருள் பரவும் என்பது யாருக்குமே தெரியாததா? ஆக்ஸிஜன் சிலிண்டர் இல்லாமல் கடலுக்குள் செல்ல இயலாது என்றொரு அற்புத ஆழிமுத்தை கண்டெடுத்திருக்கிறார் நண்பர். முத்து எடுத்தவர்கள் எல்லாம் கடலின் மேல் மிதந்து கொண்டே தான் முத்தெடுத்தார்களா? கடலின் மேற்பரப்பில் பயணம் செய்தாலும் கூட அடியாழத்தில் வெளிச்சம் ஊடுருவாது என்பதை அறிந்து கொள்ள முடியும். கடலில் தவறி விழும் ஒரு பொருளை கவனித்தாலே தெரிந்துவிடுமே, முதலில் கண்ணாடி போல் தெளிவாக தெரியும் அந்தப் பொருள் கீழே செல்லச் செல்ல படிப்படியாக மங்கி பார்வையிலிருந்து மறைந்து விடும். அவ்வளவு ஏன், கடலின் மேற்பரப்பிலிருந்து பார்த்தால் வெவ்வேறு ஆழங்களில் நீந்தும் மீன்களின் காட்சித் தோற்றத்தைக் கொண்டே கூறிவிடலாமே கடல் நீரின் ஒளி ஊடுருவும் தன்மையை. இதற்கு மேலதிகமாக அந்த வசனத்தில் என்ன இருகிறது?

 

அறிவியல் கண்டுபிடிப்பான நிரப்பிரிகையின் ஒளி ஊடுருவும் தன்மைக்கும் அந்த வசனத்துக்கும் என்ன தொடர்பு? கொஞ்சம் நுணுக்கமாக கேள்வி எழுப்பினால் குரான் ஒன்றும் அறிவியல் நூலல்ல என்று ஜல்லியடிக்கும் நண்பர், அதற்கு முன்னால் நவீன அறிவியலைத்தான் குறிப்பிட்ட வசனங்கள் பேசுகின்றன என்று கூறுவதற்கு அந்த வசனங்களில் தகுதி இருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டாமா? என்னிடம் ஆதாரங்களுடன் நிரூபிக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பியிருக்கும் நண்பர் அதற்கு முன்னால் அந்த வசனம் அறிவியலைத்தான் பேசுகிறது என்பதை ஆதாரத்துடன் நிரூபித்திருக்க வேண்டாமா?

 

மதம் நுழைய நுழைய அறிவு வெளியேறிவிடும் என்று பெரியார் கூறியதற்கான நடப்பு எடுத்துக்காட்டுகள் இது போன்று இஸ்லாத்திற்காக எகிறிக் குதிக்கும் பதிவர்கள் தாம். என்ன கூறப்பட்டிருக்கிறது என்பதை உள்வாங்குவதில்லை, எப்படி அதை மறுக்க வேண்டும் என திட்டமிடுவதில்லை. இருப்பதெல்லாம் இஸ்லாத்தைக் குறை கூறுவதா எனும் உணர்ச்சிக் கொதிப்பு, மறுக்க வேண்டுமெனும் ஆர்வக் கோளாறு, கொஞ்சம் இரவல் தகவல், நிறைய நம்பிக்கை எல்லாவற்றையும் மொத்தமாக வெட்டிக் கலக்கி தாளித்து இறக்கி விடுவது. உண்டாலல்லவா தெரியும் உணவின் தரம்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

//மக்கா நகர் என்ற வரலாற்ரை பிழையாக விழங்கி விட்டீர்ஹ்கள்//
நண்பர் இம்ரான்,
திரு முகமது கி.பி.630 ல் மதினாவில் இருந்து மக்காவை படையோடு வந்து கைப்பற்றிய போது அங்கே(காபாவில்) இருந்தவற்றை இந்த ஹதிது அறிவிக்கிறது.
______________
2478. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் கஅபாவைச் சுற்றிலும் முந்நூற்று அறுபது சிலைகள் இருக்க, மக்கா நகருக்குள் நுழைந்தார்கள். அப்போது அவர்கள், தம் கையிலிருந்த குச்சியால் அவற்றை (குத்தி) அடிக்கத் தொடங்கினார்கள். ‘சத்தியம் வந்துவிட்டது; அசத்தியம் அழிந்துவிட்டது” (திருக்குர்ஆன்- 17-81) என்னும் வசனத்தை கூறத் தொடங்கினார்கள்.
Volume :2 Book :46
____________

என்ன பிழை என்று கூறினீர்கள் என்றால் இன்னும் விள(ழு)ங்க பார்க்கிறேன்.
இந்த இரவு பயணம்(அல்‍இஸ்ரா) நடந்தது கி.பி 621.அப்போது அங்கு சிலை இருந்திருக்குமா இல்லையா?.அதனை எப்படி புனித மசுதி என்று கி.பி 6121 ல் கூற முடியும்.

காபாவில் சிலைகள் அகற்றப் படுதல்(கி.பி 630)
______
4288. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
(மக்கா வெற்றி நாளில்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (மக்காவுக்கு) வந்தபோது, கஅபாவில் சிலைகள் இருந்ததால் உள்ளே நுழைய மறுத்து அவற்றை அப்புறப்படுத்துமாறு கட்டளையிட்டார்கள். உடனே அவை அப்புறப்படுத்தப்பட்டன. அச்சிலைகளில் (குறி பார்ப்பதற்குரிய) அம்புகளைக் கையில் தங்கியவாறு இருந்த (இறைத்தூதர்களான) இப்ராஹீம்(அலை), இஸ்மாயீல்(அலை) ஆகியோரின் உருவங்களும் அகற்றப்பட்டன. அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ் இ(தைச் செய்த)வர்களை தன் கருணையைவிட்டு அப்பாற்படுத்துவானாக! அல்லாஹ்வின் மீது ஆணையாக! இவ்விருவரும் அம்புகளின் மூலம் குறிபார்ப்பவர்களாக ஒருபோதும் இருந்ததில்லை என்பதை இ(தைச் செய்த)வர்கள் அறிந்தே வைத்திருக்கிறார்கள்” என்று கூறினார்கள். பிறகு, கஅபாவில் நுழைந்தார்கள். அதன் மூலைகளில் (நின்று) தக்பீர் கூறினார்கள். ஆனால், அதனுள் தொழாமல் வெளியேறிவிட்டார்கள்.
இன்னோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
Volume :4 Book :64
_________
நிர்வாண்மாக காபாவை வலம் வருவது வலக்கத்தில் இருந்த்து தடை செய்யப்படுகிறது(கி.பி 630)
__________________
369. ஹஜ்ஜத்துல்வதா’விற்கு முந்திய ஆண்டு அபூ பக்ர்(ரலி) (அவர்களின் தலைமையில் நான் ஹஜ்ஜுக்குச் சென்றபோது) என்னை அறிவிப்புச் செய்பவர்களுடன் துல்ஹஜ் மாதம் பத்தாம் நாள் அனுப்பி வைத்தார்கள். நாங்கள் மினாவில் நின்று, ‘அறிந்து கொள்ளுங்கள்! இந்த ஆண்டிற்குப் பிறகு எந்த முஷ்ரிக்கும் ஹஜ் செய்யக் கூடாது. நிர்வாணமாக யாரும் கஅபாவை வலம் வரக்கூடாது’ என்று அறிவித்தோம்.
பின்னர் நபி(ஸல்) அவர்கள் அலீ(ரலி) அவர்களை அனுப்பி, திருக்குர்ஆனின் 9-வது அத்தியாயத்தில் ஒப்பந்த முறிவு பற்றிக் கூறப்படும் (முதல் இருபது வசனங்கள்) விஷயத்தை அறிவிக்குமாறு கட்டளையிட்டார்கள்.
எங்களுடன் அலீ(ரலி) அவர்களும் துல்ஹஜ் மாதம் பத்தாவது நாள் மினாவில் நின்று ‘இந்த ஆண்டிற்குப் பிறகு இணைவைப்பாளர் எவரும் ஹஜ் செய்யக்கூடாது; கஅபாவை எவரும் நிர்வாணமாக வலம் வரக் கூடாது’ என்று அறிவித்தார்கள்” அபூ ஹுரைரா(ரலி) கூறினார்.
Volume :1 Book :8
_____________

கிபி 621ல் மக்கா ஒரு புனித மசுதியா? ஆம் என்றால் ஏஎன் இந்த மாற்றங்களை செய்ய வேண்டும்?

புனித மசுதி இல்லை என்றால் குரானில்(17:1) ஏன் குறிபிட வேண்டும்?

1.முகமது விண்வெளி பயணம் சென்றாரா இல்லையா என்று குரான் தெளிவாக கூறவில்லை.

விண்வெளி பயணத்தை குறிக்கும் குரான் வசனம் 17.1 பல அடைப்புக் குறி வார்த்தைகள் இடப்பட்டு விளங்க படுகிறது.அது ஏன் என்றால் பதில் கிடையாது.

2.ஹதிதுகள் வேறு பட்ட விவரங்களை தருகின்றன.

காபாவில் இந்த பயணம் சென்றதாக கூறப்படும் நாளில் பல உருவ் வழிபாட்டு முறைகள் வழக்கத்தில் இருந்துள்ளது. ஜெருசலேமில் மம‌சுதியோ,யூத ஆலயமோ கிடையாது.

3.இஸ்லமியர்களின் 5 நேர தொழுகை இந்த பயணத்தின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படுகிறது.

அதனால் இதனை ஏற்று கொள்கிறார்கள் என்றே அர்த்தம்.
___________

இதற்கு விளக்கம் அளிப்பது முடியவில்லை(பிடிக்கவில்லை) அது எங்களது நம்பிக்கை என்றால் சரி.இதுவரை 1400 வருடங்களாக யாரும் அளிக்காத விளக்கத்தை எப்படி இப்போது விளக்க முடியும். நம்ம துல்கர்னைன் கதை மாதிரி இது எங்களுக்கு அவசியமில்லை என்று சொல்ல்லப் போகிறீர்கள்.
_______

குரானில் நிரூபிக்க முடியாத ,விளக்கம் அளிக்க முடியாத, நம்பிக்கக் மட்டுமே சார்ந்த விஷயங்கள் இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்கிறீர்கள் என்றால் அதைத்தான்
நாங்களும் சொல்கிறோம்.
___________

இதனை நீங்கள் சொல்லும் பட்சத்தில் பதிவின் தலைப்பில் இருந்து ஒரு புதிய விவாதமாக
1.ஓரிறை கொள்கையின் உண்மை மற்றும் மகத்துவங்கள்.
2.இஸ்லாமிய வங்கியியலின் தத்துவன்,நடைமுறை சிக்கல்கள்
போன்றவற்றை விவாதிக்கலாம்.
அது கூட விவாதம் பக்கத்ஹ்டில்தான்.இப்பக்கத்தில் அல்ல.இப்பக்கத்தில் கூறுவது பதிவின் நோக்கத்தை திசை திருப்பும் முயற்சியாகும்.
__________________
______________

இதையாவது இப்பதிவை

  1. சங்கர் ///முதலில் இந்த வசனத்தின் சரியான மொழி பெயர்ப்பை அடைப்பு குறி இல்லாமல் தெரிந்து கொள்வோம்.///
    அடைப்புக் குறி பயன் படுத்துவது விளங்கிக் கொள்ளும் வண்ணமாகவே .அரபு மொழி நடைக்கும் பிற நடைக்கும் உள்ள வித்தியாசத்தால் விளக்கமே அடைப்புக்குறிக்குள் கொண்டு வரப் படுகிறது.
    ///வேலையாள என்பவர் முகமது என்று எப்படி கூற முடியும்.ஏனெனில்
    17.2 மூஸா பற்றியும் 17.3 நூஹை பற்றியும் பேசுகிறது///
    அந்த வசனத்திற்கு ஹதித்கள் மூலம் விரிவுரையாளர்கள் கூறும் விளக்கத்தை ஆதாரத்தோடு கூறி இருக்கும்போது உமது அறை வேக்காட்டுத்தனத்தை ஒதுக்கி வைப்பதே நல்லது..
    ///அந்த சமயம் மெக்காவில் உள்ள ஆலயத்தில் விக்கிரகங்கள்(360?) இருந்தன.எப்படி புனித மசூதி ஆக முடியும்///
    நேர்மையான அதிகாரி சகதியில் விழுந்தாலும் அவர் மிஸ்டர் கிளீன் தான்

    ///.யூதர்களின் ஆலயமும்(சுலைமான் கட்டியது) இடிக்கப் பட்டு அங்கே இல்லை. எந்த மசூதிக்கு சென்றார்?///
    பாபரி மசூதி இடிக்கப்பட்டாலும் இன்று வரை அது பாபரி மசூதி என்றே கூற பட்டு வருகிறது.

     
  2. சங்கர் \\\விண்வெளி பயணத்தை குறிக்கும் குரான் வசனம் 17.1 பல அடைப்புக் குறி வார்த்தைகள் இடப்பட்டு விளங்க படுகிறது.அது ஏன் என்றால் பதில் கிடையாது///
    ௨௫ ஹதித்கள் முகம்மது நபி[ஸல்] தான் வின் வெளிபயணம் தான் என்பதை தெளிவாக விளக்கும்போது கோமாளித்தனமாக உளற வேண்டாம்

     
  3. //தெளிவாக விளக்கும்போது //
    :)

    அவ்ளோ தெளிவாஆஆஆஆஆஆஆ இருக்கிங்கன்னு தெரியது!

     
  4. /மதங்களுக்கு அதைப்பற்றி ஒன்றும் தெரியது, அவைகள் வெற்று நம்பிக்கைகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவைகள்////

    கலை,
    வெற்று நம்பிக்கைகள் 1400 ஆண்டுகளுக்கு மேலாக கோலாச்சிக்கொண்டு இருக்கின்றன. ஏங்கல்ஸ் ,மார்க்சின் கற்பனை காவியங்களாக சினிமா எடுத்தால்கூட [பண்ணை வாழ்க்கையை ஏ படமாக காட்டினால் கூட] தேறாத கம்யுனிசம் இன்று பரிதாப நிலையில் உள்ளது..

    1. நன்றி நண்பர் இப்ராஹிம்

      இந்த அடைப்புக் குறிக்குள் உள்ள விவரங்கள் மூல மொழியில் இருக்காது.

      அடியார்‍__முகமது
      புனித மசுதி‍__மெக்கா
      தூர மசுதி‍__ஜெருசலேம்

      1. குரான் 17.1 ஐ ஹதிதுகள்(200 ஆண்டுகளுக்கு பிறகு தொகுக்கப் பட்டவை) துணை கொண்டே முகமது என்று கூற முடியும்.ஹதிதுகளின் நம்பகத் தன்மை பொறுத்தே இவ்விவரங்களை நம்ப முடியும்.

      2.//நேர்மையான அதிகாரி சகதியில் விழுந்தாலும் அவர் மிஸ்டர் கிளீன் தான்//

      யார் அந்த நேர்மையான அதிகாரி?

      சகதியில் விழுந்தார் என்றால் என்ன செய்தார்?

      கி.பி 621ல் காபாவில் சிலைகள்,அவற்றின் வழிபாடு, இருந்தாலும் புனித மசூதி என்று சொல்கிறீர்கள் என்று எடுத்துக் கொள்கிறேன்.

      கிரி வலம் முகமது நாள் முதல் இன்றுவரை செய்வதால் இது ஒன்றும் பெரிய விஷயமில்லை.
      _____________
      1647. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
      நபி(ஸல்) அவர்கள் மக்காவுக்கு வந்தபோது, இறையில்லம் கஅபாவை வலம் வந்த பின் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பின்பு ஸஃபா மர்வாவுக்கிடையே ஓடினார்கள்.
      “இதை அறிவித்த பிறகு, ‘நிச்சயமாக, அல்லாஹ்வின் தூதரிடம் உங்களுக்கு அழகிய முன் மாதிரி இருக்கிறது’ என்னும் இறைவசனத்தை இப்னு உமர்(ரலி) ஓதினார்கள்” என அம்ர்ப்னு தீனார்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
      Volume :2 Book :25

      1649. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
      நபி(ஸல்) அவர்கள் இறையில்லம் கஅபாவையும் ஸஃபா மர்வாயையும் வலம் வரும்போது தொங்கோட்டம் ஓடியது இணைவைப்போருக்குத் தம் பலத்தைக் காட்டுவதற்காகத்தான்.
      Volume :2 Book :25
      _____________

      3.//பாபரி மசூதி இடிக்கப்பட்டாலும் இன்று வரை அது பாபரி மசூதி என்றே கூற பட்டு வருகிறது//
      இன்னொரு கோஷ்டி வேறு பெயர் சொல்லுது.அது வேறு விஷயம்.

      ஜெருசலேமில் சுலைமான் கட்டிய ஆலயம் இல்லை.வெற்று இடத்தை பார்த்து மசுதி என்று கூறினார்.

      இப்போது சரியான விளக்கம்

      அழைத்து சென்றவர்‍இறைவன்
      செல்லப்பட்டவர்_முகமது(ஹதிதின் படி மட்டும்)
      புனித மசுதி‍______சிலைகள் உள்ள காபா
      தூர மசூதி____ வெற்று இடம்

      உங்களின் விளக்கப் படி அடைப்புக் குறி போட்டால் எப்படி இருக்கும்?
      ___________

       
    2. ரபி
      ///உண்மையான விண்வெளி பயணம் சென்றுவந்த தினத்தைக் கூட யாரும் உலகில் கொண்டாடுவது இல்லை. ஆனால் ஒரு கற்பனையான டுபாக்கூர் பயணத்திற்கு ஆண்டுதோறும் விழா எடுத்து சிறப்புத் தொழுகை என கொண்டாடி மகிழ்வதுதான் இவர்களின் பகுத்தறிவாம்(?),
      விண்வெளி பயணத்தை காட்டி,இஸ்லாம் ஒன்றும் பூச்சாண்டி காட்டவில்லை.விண்வெளி பயணத்தை உறுதி படுத்தும் ஹதித்கள் அதை வருடந்தோறும் கொண்டாடுவதர்க்கோ தொழுகை நடத்துவதற்கோ சான்றாக இல்லை.
      கம்யுனிசம்தான் உலகதீர்வு என்று சொல்லிக் கொண்டு அரபு பெயர்களையும் இஸ்லாமிய திருமணமாக பதிவு செய்யப்பட்டதையும் மாற்ற திராநியற்றதொடு புரட்சி திருமணம் என்று கொள்கை புரட்டாக நாங்கள் கொண்டாடி கொண்டு இருக்கவில்ல்லை

       
    3. ஹதிதுகள்(புஹாரி) கூறும் இரவு பௌஅண தொடக்கம்
      __________

      1.காபாவில் இருந்து சுத்தம் செய்யப் பட்டு முதல் வானம்
      _______________________________________________‍_
      3207. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
      நான் இறையில்லம் கஅபாவில் இருமனிதர்களுக்கிடையே (பாதி) தூக்கமாகவும் (பாதி) விழிப்பாகவும் இருந்தபோது நுண்ணறிவாலும் இறைநம்பிக்கையாலும் நிரப்பப்பட்ட தங்கத் தட்டு ஒன்று என்னிடம் கொண்டு வரப்பட்டது. என்னுடைய நெஞ்சம் காறையெலும்பிலிருந்து அடி வயிறு வரை பிளக்கப்பட்டது. பிறகு ஸம்ஸம் நீரினால் என் வயிறு கழுவப்பட்டது. பிறகு, (என் இதயம்) நுண்ணறிவாலும் இறைநம்பிக்கையாலும் நிரப்பப்பட்டது. மேலும், கோவேறுக் கழுதையை விடச் சிறியதும் கழுதையை விடப் பெரியதுமான ‘புராக்’ என்னும் (மின்னல் வேக) வாகனம் ஒன்றும் என்னிடம் கொண்டு வரப்பட்டது. நான் (அதில் ஏறி) ஜிப்ரீல்(அலை) அவர்களுடன் சென்றேன். நாங்கள் முதல் வானத்தை அடைந்தோம்…..
      __________________
      2 இங்கு படுதத‌ இடம் கொஞ்சம் குழப்பம் காபாவின் அருகில் எங்கோ
      ‍‍__சுத்தம் செய்யப் பட்டு‍___முதல் வானம்
      ______________
      3887. அப்பாஸ் பின் மாலிக் ரலி அவர்கள் கூறினார்கள்.
      நான் (இறையில்லாம் கஅபா அருகில்) ஹத்தீமில்… அல்லது ஹிஜ்ரில்… படுத்துக் கொண்டிருந்தேன். அப்போது என்னிடம் ஒருவர் (வானவர் ஜிப்ரீல்) வந்து (என் நெஞ்சைப்) பிளந்தார்.பிறகு அ(ந்த வான)வர் (ஜீப்ரீல்) என்னுடைய இதயத்தை வெளியிலெடுத்தார். பிறகு, இறை நம்பிக்கையால் நிரப்பப்பட்ட தங்கத் தட்டு ஒன்று என்னிடம் கொண்டு வரப்பட்டது, என்னுடைய இதயம் கழுவப்பட்டு, (அதில்) அந்த இறை நம்பிக்கை நிரப்பட்டது. பிறகு பழையபடி மீண்டும் (என்னுடைய இதயம், மூடி) வைக்கப்பட்டது. பிறகு கோவேறு கழுதையை விடச் சிறியதும் கழுதையை விடப் பெரியதுமான வெள்ளை நிறத்திலமைந்த (மின்னல் வேக) வாகனம் ஒன்றும் என்னிடம் கொண்டு வரப்பட்டது.
      -(இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அனஸ்(ரலி) அவர்களிடம் ஜாரூத்(ரஹ்), ‘அது புராக் எனும் வாகனம் தானே அபூ ஹம்ஸா அவர்களே!” என்று கேட்டார்கள். அதற்கு அனஸ்(ரலி), ‘ஆம், (அது புராக் தான்.) அந்த வாகனம் பார்வை எட்டுகிற தூரத்திற்கு ஓர் எட்டு வைக்கும்” என்று
      பிறகு நான் அந்த வாகனத்தில் ஏற்றப்பட்டேன். என்னை ஜிப்ரீல் முதல் வானத்திற்கு அழைத்துச் சென்று அதன் கதவைத் திறக்கும்படி கூறினார். அப்போது, ‘யார் அது?’ என்று கேட்கப்பட்டது.
      _______

      3 மூன்று வானவர்கள்.அவர்களுக்கு முகமது யாரென்று தெரியாமல் மற்றவர்களை கேட்கிறார்.
      காபாவில் சுத்தம் செய்து பிறகு பைத்துல் முகத்தஸ்(ஜெருசலேம் மசுதி பிறகு முதல் வானம்
      ______________
      7517. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கஅபா பள்ளிவாசலிலிருந்து (விண் பயணத்திற்கு) இரவில் அழைத்துச் செல்லப்பட்டது பற்றி அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார்:
      நபி(ஸல்) அவர்களுக்கு (சட்டங்கள் தொடர்பாக) வேத அறிவிப்பு (வஹீ) வருவதற்கு முன்பு (ஒரு நாள் இரவு) அவர்கள் புனித (கஅபா) பள்ளிவாசலில் உறங்கிக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களிடம் (வானவர்கள்) மூன்று பேர் வந்தனர். அவர்களில் முதலாமவர், (அங்கு படுத்திருந்த ஹம்ஸா(ரலி), முஹம்மத்(ஸல்), ஜஅஃபர்(ரலி) ஆகியோரை நோக்கி) ‘இவர்களில் அவர் (முஹம்மத் – ஸல்) யார்?’ என்று கேட்டதற்கு நடுவிலிருந்த(வான)வர் ‘இவர்களில் (நடுவில் படுத்திருக்கும்) சிறந்தவரே அவர்’ என்று பதிலளித்தார். அப்போது அம்மூவரில் மூன்றாமவர், ‘இவர்களில் சிறந்தவரை (விண் பயணத்திற்காக) எடுத்து வாருங்கள்’ என்று கூறினார். அன்றிரவு இவ்வளவு தான் நடந்தது. அடுத்த(நாள்) இரவில் நபி(ஸல்) அவர்கள் தங்களின் உள்ளம் பார்க்கிற நிலையில் (-உறக்க நிலையில்) அம்மூவரும் வந்தபோது தான் அவர்களைக் கண்டார்கள். நபி(ஸல்) அவர்களின் கண் மட்டுமே உறங்கும்; அவர்களின் உள்ளம் உறங்குவதில்லை. -இறைத்தூதர்கள் நிலை இவ்வாறுதான்; அவர்களின் கண்கள் மட்டுமே உறங்கும்; அவர்களின் உள்ளங்கள் உறங்கமாட்டா. பிறகு அந்த வானவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் ஏதும் பேசாமல் அவர்களைத் தூக்கிக் கொண்டுவந்து ஸம்ஸம் கிணற்றின் அருகில் இறக்கினர். அவர்களிடமிருந்து நபி(ஸல்) அவர்களின் பொறுப்பை (வானவர்) ஜிப்ரீல்(அலை) ஏற்றார்கள்.158
      அவர் நபி(ஸல்) அவர்களின் காறையெலும்பிலிருந்து நெஞ்சின் நடுப்பகுதி வரை பிளந்து, நெஞ்சிலிருந்தவற்றையும் வயிற்றிலிருந்தவற்றையும் அகற்றினார். பின்னர் தம் கையால் நபியவர்களின் இருதயத்தை ஸம்ஸம் நீரால் கழுவி, அவர்களின் வயிற்றைச் சுத்தப்படுத்தினார். பிறகு தங்கத் தட்டு ஒன்று கொண்டு வரப்பட்டது. அதில் தங்கக் கோப்பை ஒன்று இருந்தது. அது இறைநம்பிக்கையாலும் ஞானத்தாலும் நிரப்பப்பட்டிருந்தது. அதனை நபியவர்களின் இருதயத்திலும் தொண்டை நாளங்களிலும் இட்டு நிரப்பினார் ஜிப்ரீல்; பின்னர் இருதயத்தை மூடிவிட்டார். (பிறகு ‘புராக்’ வாகனம் கொண்டு வரப்பட்டு அதில் ஏற்றப்பட்ட நபியவர்கள் பைத்துல் முகத்தஸை அடைந்தார்கள். அங்கிருந்து) நபி(ஸல்) அவர்களை அழைத்துக்கொண்டு அவர் முதல் வானத்திற்கு உயர்ந்தார்.
      _______________

      ஏன் இந்த் மூறு புஹாரியின் ஹதிதுகளில் வித்தியாசம்.ஜெருசலெம் போனதாக ஒரு ஹதிது மட்டுமே கூறுகிரது.
      எது சரி?
      _______________
      இன்னும் விண்வெளி பயணம் தொடங்கவில்லை
      COMING SOON
      _________________

       
    4. //.யார் அந்த நேர்மையான அதிகாரி?
      சகதியில் விழுந்தார் என்றால் என்ன செய்தார்?/////
      நேர்மையான அதிகாரி[ புனித மக்கா ]யை சங்கர் தள்ளி விட்டதால் சகதியில் விழுந்தாலும் [குறைஷிகள் சிலை வைத்து வணங்கினாலும் ] அவர் மிஸ்டர் கிளீன் தான் .[புனித மசூதிதான் ]
      1647 1648 ஹதித்களை எதற்காக சுற்றி வளைத்துள்ளீர்கள்?
      புனித மசுதி‍______சிலைகள் உள்ள காபா
      தூர மசூதி____ வெற்று இடம்
      நியாயவான்கள் அவர் சதிகாரர்களால் சகதியில் தள்ளி விடப்பட்டு சகதியுடன் வந்தாலும் மிஸ்டர் கிளீன் என்றுதான் சொல்லுவார்கள்.
      நீதிமான்கள் அங்கு பள்ளிவாசல் இடிக்கப்பட்டாலும் அதை பாப்ரி மசூதி என்றே கூறுவார்.சதிகாரர்கள் அதை சர்ச்சைக் குரிய பகுதி என்று ஆக்கிரமிப்பாளர்கள் வேறு பெயரையும் கூறுவார்கள்

       
    5. sankar///ஏன் இந்த் மூறு புஹாரியின் ஹதிதுகளில் வித்தியாசம்.ஜெருசலெம் போனதாக ஒரு ஹதிது மட்டுமே கூறுகிரது.
      எது சரி?////
      கலை>சங்கர் மதுரையிலிருந்து திருச்சி வழியாக சென்னை சென்றார்
      வால்பையன்>சங்கர் சென்னை சென்றார்.
      ரபி>சங்கர் மதுரையிலிருந்து சென்னை சென்றார்

      எது சரி?

       
    6. sankar////இன்னும் விண்வெளி பயணம் தொடங்கவில்லை
      COMING SOON////
      கலகலக்கும் பண்ணை வாழ்க்கை எப்போது வரும்?

       
    7. // சங்கர் தள்ளி விட்டதால் //

      //சதிகாரர்களால் சகதியில் தள்ளி விடப்பட்டு//
      நண்பர் இப்ராஹிம்,

      என்னை சதி செய்பவன் என்று கூறி விட்டீர்களே இப்ராஹிம்.

      ஆனால் சதி செய்பவர்களிலேயெ சிறந்தவர் யார்?

      3:54. (ஈஸாவை நிராகரித்தோர் அவரைக் கொல்லத்) திட்டமிட்டுச் சதி செய்தார்கள்; அல்லாஹ்வும் சதி செய்தான்; தவிர அல்லாஹ் சதி செய்பவர்களில் மிகச் சிறந்தவன் ஆவான்..

       
    8. சங்கர். ////தவிர அல்லாஹ் சதி செய்பவர்களில் மிகச் சிறந்தவன் ஆவான்…/////
      இஸ்லாத்தை எப்படியாவது ஒழித்து விடலாம் .என்று கங்கணம் கட்டிக் கொண்டு சதித்திட்டம் வகுக்கும் சவடால் கம்யுனிச வாதிகளுக்கும் அமெரிக்கரகளுக்கும் அது போன்றே பதிலடி கொடுப்பவன். உங்களது சதிகள் அவனது பதிலடி முன் தூள் தூளாக நொறுங்கி போகும்.
      ஒருகன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை காட்ட இஸ்லாம் சொல்லித்தரவில்லை.

      1. வெள்ளைக் குதிரை(?)யில் விண்வெளி பயணம்

        தொடக்க பாடல்

        திரு நகூர் அனிஃபா அவர்களின் கருணைக் கடலாம் என்ற மெட்டில் பாடவும்.

        _________

        அருமை நபியாம் அண்ணல் முகமது பயணச் சரிதம் கேளுங்கள்
        இணையில்லாத இறைவனின் தூதர் அற்புத பயணம் பாருங்கள்
        _________
        ஒரு நாள் இரவு புனிதப் பள்ளி பைத்துல் ஹராம் அருகினிலே
        இறைவனை தொழுது இனிதே துயின்றார் நல்ல அடியார் முகமதுவே.
        வானவர் வந்து ஜம்ஜம் நீரிலே சுத்தம் செய்தார் உள்ளத்தையே
        வாகனம் வந்தது ஜிப்ரீலோடு வானம் அழைத்து சென்றிடவே
        __
        இறைத்தூதராம் நபி
        அவர் வாகனம்தான் புராக்
        ________

        முன் கதை சுருக்கம்.
        _________________________

        ஜம்ஜம் நீரால் இறைத்தூதரின் உடல் இதயம்(உள்ளம்? நன்றி திரு பி.ஜே)சுத்தம் செய்யப்பட்ட்டு விட்டது.ஒரு வழியாக காபாவில் இருந்தோ அல்லது அருகில் இருந்தோ,ஜெருசலேமுக்கு போயும் போகாமலும் ஜிப்ரீலோடு புராக்கில் ஏறி முதல் வானத்தை அடைகின்றனர்.
        ____________________________
        பயணம் தொடங்கியது

        காட்சி.1. முதல் வானம்
        ________
        புஹாரி 3207. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
        ….
        நாங்கள் முதல் வானத்தை அடைந்தோம். ‘யார் அது?’ என்று கேட்கப்பட்டது. ஜிப்ரீல்(அலை), ‘ஜிப்ரீல்” என்று பதிலளித்தார். ‘உங்களுடன் (வந்திருப்பவர்) யார்?’ என்று கேட்கப்பட்டது. அவர், ‘முஹம்மது” என்று பதிலளித்தார். ‘அவரை அழைத்து வரச் சொல்லி ஆள் அனுப்பப்பட்டிருந்ததா?’ என்று கேட்கப்பட்டது. அவர், ‘ஆம்” என்றார். ‘அவரின் வரவு நல்வரவாகட்டும்! அவரின் வருகை மிக நல்ல வருகை” என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு நான் ஆதம்(அலை) அவர்களிடம் சென்றேன். அவர்களுக்கு சலாம் சொன்னேன். அவர்கள், ‘(என்) மகனும் இறைத் தூதருமான உங்கள் வரவு நல்வரவாகுக!” என்றார்கள். …..
        __________________

        புஹாரி 349

        முதல் வானத்திற்கு என்னை ஏற்றிச் சென்றார்கள். முதல் வானத்தை அடைந்ததும் அந்த வானத்தின் காவலரிடம் ‘திற’ என்றார்கள். அவ்வானவர், ‘யார் அவர்?’ என்று வினவியதற்கு ‘நானே ஜிப்ரீல்’ என்று பதில் கூறினார். அதற்கு அவ்வானவர், ‘உம்முடன் எவரேனும் இருக்கிறார்களா?’ எனக் கேட்டார். ஜிப்ரீல் ஆம்! என்னுடன் முஹம்மத் இருக்கிறார்கள்’ என்று கூறினார்கள். அதற்கு வானவர் ‘அவர் அழைக்கப்பட்டிருக்கிறாரா?’ எனக் கேட்டார். ஜிப்ரீல் ‘ஆம்’ என்றார்கள்.
        வானவர், முதல் வானத்தைத் திறந்ததும் நாங்கள் அவ்வானத்தில் ஏறினோம். அப்போது அங்கு ஒருவர் அமர்ந்திருந்தார். அவரின் வலப்பக்கம் சில மனிதர்களும் இடது மக்களும் சில மனிதர்களும் காணப்பட்டார்கள். அவர் தங்களின் வலப்பக்கமுள்ள மனிதர்களைப் பார்த்தால் சிரிக்கிறார். தங்களின் இடப்பக்கமுள்ளவர்களைப் பார்த்தால் அழுகிறார்.
        இந்நிலையிலுள்ள அவர் ‘நல்ல நபியே! வருக! நல்ல மகனே வருக!’ என்றார். அப்போது ஜிப்ரீல்(அலை) அவர்களிடம் இவர் யார்? என கேட்டேன். ‘இவர் தாம் ஆதம். அவரின் வலப்பக்கமும் இடப்பக்கமும் உள்ளவர்கள் அவரின் சந்ததிகளிலுள்ள மனிதர்கள். வலப்பக்கமுள்ளவர்கள் சுவர்க்கவாசிகள்; இடப்பக்கமுள்ளவர்கள் நரகவாசிகள். (எனவேதான்) அவர் தங்களின் வலப்பக்கம் பார்த்துச் சிரிக்கிறார்; தங்களின் இடப்பக்கம் பார்த்து அழுகிறார்’ என்று கூறினார்கள். …
        ___________
        7517

        (பிறகு ‘புராக்’ வாகனம் கொண்டு வரப்பட்டு அதில் ஏற்றப்பட்ட நபியவர்கள் பைத்துல் முகத்தஸை அடைந்தார்கள். அங்கிருந்து) நபி(ஸல்) அவர்களை அழைத்துக்கொண்டு அவர் முதல் வானத்திற்கு உயர்ந்தார். அந்த வானத்தின் கதவுகளில் ஒன்றை அவர் தட்டினார். அப்போது அந்த வானத்திலிருந்த (வான)வர்கள், ‘யார் அவர்?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர், ‘ஜிப்ரீல்’ என்று பதிலளித்தார். ‘உங்களுடன் வந்திருப்பவர் யார்?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர், ‘என்னுடனிருப்பவர் முஹம்மத்’ என்று பதிலளித்தார். ‘(அவரை அழைத்துவரச் சொல்லி) ஆள் அனுப்பப்பட்டிருந்ததா?’ என்று கேட்டனர். அதற்கு ஜிப்ரீல்(அலை) ‘ஆம்’ என்றார்கள். ‘அவரின் வரவு நல் வரவாகட்டும்! வாழ்த்துகள்!’ என்று கூறினர். நபியவர்களின் வருகையால் வானில் இருபபோர் மகிழ்ச்சியடைகிறார்கள். பூமியில் அல்லாஹ் எதை (நிகழச் செய்ய) நினைக்கிறானோ அதை அவனாக வானவர்களிடம் அறிவிக்காத வரை வானவர்கள் அதை அறிந்து கொள்ளமாட்டார்கள்.
        அந்த முதல் வானத்தில் நபி(ஸல்) அவர்கள் (ஆதி மனிதர்) ஆதம்(அலை) அவர்களைக் கண்டார்கள். அப்போது ஜிப்ரீல்(அலை) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம், ‘இவர்தாம் உங்கள் தந்தை. இவருக்கு நீங்கள் சலாம் (முகமன்) கூறுங்கள்’ என்றார்கள். அவ்வாறே அவருக்கு நபி(ஸல்) அவர்கள் முகமன் கூற, அதற்கு ஆதம்(அலை) அவர்கள் பதில் (முகமன்) சொல்லிவிட்டு, ‘அருமை மகனே! வருக! வருக! நீரே நல்ல புதல்வர். (உங்கள் வரவிற்கு) வாழ்த்துக்கள்’ என்று கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் அந்த முதல் வானத்தில் பாய்ந்தோடும் இரண்டு நதிகளைக் கண்டார்கள். உடனே ‘ஜிப்ரீலே! இவை எந்த நதிகள்?’ என்று கேட்டார்கள். அதற்கு ஜிப்ரீல்(அலை) அவர்கள், ‘இவையிரண்டும் நைல் மற்றம் யூப்ரடீஸ் நதியின் மூலங்கள்’ என்று பதிலளித்தார்கள். பிறகு நபி(ஸல்) அவர்களை அழைத்துக்கொண்டு அந்த வானத்தில் சென்று கொண்டிருந்தபோது இன்னொரு நதியையும் கண்டார்கள். அதன் மீது முத்துகளாலும் பச்சை மரகத்தாலும் ஆன மாளிகை ஒன்று இருந்தது. (அந்த நதியில்) நபி(ஸல்) அவர்கள் தங்களின் கையால் அடித்தார்கள். அ(தன் மண்ணான)து உயர்ந்த நறுமணமிக்க கஸ்தூரியாக இருந்தது. நபி(ஸல்) அவர்கள், ‘இது என்ன நதி ஜிப்ரீலே?’ என்று கேட்டார்கள். ஜிப்ரீல்(அலை) அவர்கள், ‘இது உங்களுக்காக உங்களுடைய இறைவன் ஒதுக்க வைத்துள்ள கவ்ஸர் (எனும் நதி) ஆகும்’ என்று பதிலளித்தார்கள்…
        ________________
        காட்சி 2. ல் இரண்டாம் வானம் இன்னும் வியத்தகு சம்பவங்கள் நிறைந்தது.
        DONT MISS IT

         
      2. Under the Law ( ix ) section iii. News Publication & Duplication and Imitation of Articles Act, Mr.Shankar must pay compensation to Indian@Indian.com for above screenplay & script.

        FYKI

         
      3. நண்பர் இபுறாஹிம்
        //விண்வெளிப் பயணத்தை உறுதிபடுத்தும் ஹதீதுகள்…….//

        குரானோ ஹதீதுகளோ வெறும் புத்தகத்தில் எழுதி வைத்துக் கொண்டால் மட்டும் அது உறுதிபடுத்தப்பட்ட பயணமாகிவிடுமா?புஷ்பக விமானப் பயணம்,முருகனின் மயில் வாகனப் பயணம் இவைகளும் உறுதிபடுத்தப்பட்ட பயணமாக எடுத்துக் கொள்ளலாமா?இப்படித்தானே மாற்று மத நண்பர்களும் நம்பிக்கொண்டிருக்கிறார்கள்?இதுபோல் ஒன்றுக்கும் உதவாத கற்பனைக் கட்டுக்கதைகளையும் மூட நம்பிக்கைகளையும் களைந்துவிட்டு சுயமாக சிந்திக்கத்தான் சொல்கிறோம். தலைப்பு கற்பனையான விண்வெளிப்பயணத்தைப் பற்றித்தான்.கம்யூனிசத்திலும் இஸ்லாத்திலும் உள்ள‌ நல்ல கொள்கைகளில் எது சிறந்தது என்ற தலைப்பு வரும்போது அது பற்றி சிந்திக்கலாம் நண்பரே! தவிர நல்லவைகள் எங்கிருந்து கிடைத்தாலும் நமதாக்கிக் கொள்வோம் என்பதில் எனக்கு உடன்பாடு உண்டு.அதுபோல் பயன்படாத குப்பைகளைக் களைந்தெரிவதிலும் ஆர்வம் உண்டு.
        ஆள் இல்லா வெறும் விண்வெளிக்களம் இன்று பயணம் செய்வதினால் உலகில் உள்ள ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கே பயன் உண்டு.பல்லாயிரமாண்டுகளுக்கு முன் பயணித்ததாகக் கூறிக்கொள்ளும் விண்பயணத்தால் இன்று யாருக்கு பயன்? முன்னவர்களைப்போல் நாமும் விண்வெளிக்கு பயணிக்க வேண்டும் என சிந்திப்பது அறிவின் வளர்ச்சி,அவர்கள் பயணித்ததையே நினைத்துக் கொண்டிருப்பது அறிவின் வீழ்ச்சி.

        முதல் வானத்தின் முதல் பிரச்சினை
        _________________________________________________________

        முதல் வானத்தில் ஆதம் அவர்களை முகமது சந்திக்கிறார். ஆதமுக்கு வலது இடது புறங்களில் சொர்ர்கம்,நரகம் ஆகியவற்றை பார்த்ததாகவும் அதில் மக்கள் இருந்ததாகவும் ஹதிதுகள் கூறுகின்றன.
        _______
        புஹாரி 349

        முதல் வானத்தைத் திறந்ததும் நாங்கள் அவ்வானத்தில் ஏறினோம். அப்போது அங்கு ஒருவர் அமர்ந்திருந்தார். அவரின் வலப்பக்கம் சில மனிதர்களும் இடது மக்களும் சில மனிதர்களும் காணப்பட்டார்கள். அவர் தங்களின் வலப்பக்கமுள்ள மனிதர்களைப் பார்த்தால் சிரிக்கிறார். தங்களின் இடப்பக்கமுள்ளவர்களைப் பார்த்தால் அழுகிறார்.
        இந்நிலையிலுள்ள அவர் ‘நல்ல நபியே! வருக! நல்ல மகனே வருக!’ என்றார். அப்போது ஜிப்ரீல்(அலை) அவர்களிடம் இவர் யார்? என கேட்டேன். ‘இவர் தாம் ஆதம். அவரின் வலப்பக்கமும் இடப்பக்கமும் உள்ளவர்கள் அவரின் சந்ததிகளிலுள்ள மனிதர்கள். வலப்பக்கமுள்ளவர்கள் சுவர்க்கவாசிகள்; இடப்பக்கமுள்ளவர்கள் நரகவாசிகள். (எனவேதான்) அவர் தங்களின் வலப்பக்கம் பார்த்துச் சிரிக்கிறார்; தங்களின் இடப்பக்கம் பார்த்து அழுகிறார்’ என்று கூறினார்கள். …
        _____

        1. கியாமத் நாளில்தான் அனைவரையும் உயிராக்குகிறார் இறைவன்
        __________
        22:7. (கியாம நாளுக்குரிய) அவ்வேளை நிச்சயமாக வரும்; இதில் சந்தேகமே இல்லை; மண்ணறைகளில் இருப்போரை, நிச்சயமாக அல்லாஹ் (உயிர் கொடுத்து) எழுப்புவான்.
        _________

        45:26. “அல்லாஹ் உங்களுக்கு உயிர் கொடுக்கிறான்; பின்னர் அவனே உங்களை மரணம் அடையச் செய்கிறான்; பின்னர் கியாம நாளன்று அவன் உங்களை ஒன்று சேர்ப்பான் – இதில் சந்தேகமேயில்லை” எனினும் மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள் என்று (நபியே!) நீர் கூறும்.
        _____

        கியாமத் நாளுக்கு முன்பே வானங்களில்,சொர்க்கம்,நரகம் ஆகியவற்றில் மனிதர்கள் எப்படி வந்தார்கள்?

        குரானுக்கு முரண்பட்ட ஹதிது வசனங்களை நிராகரிக வேண்டுமல்லவா?

        அப்போது விண்வெளி பயணம் குரானுக்கு முரண்பட்டது. சரியா?

         



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

  1. 17:1] Yusuf Ali
    Glory to (Allah) Who did take His servant for a Journey by night from the Sacred Mosque to the farthest Mosque, whose precincts We did bless,- in order that We might show him some of Our Signs: for He is the One Who heareth and seeth (all things).

    [17:1] Pickthall
    Glorified be He Who carried His servant by night from the Inviolable Place of Worship to the Far distant place of worship the neighbourhood whereof We have blessed, that We might show him of Our tokens! Lo! He, only He, is the Hearer, the Seer.

    17:1. (அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன்; அவன் தன் அடியாரை பைத்துல் ஹராமிலிருந்து (கஃபத்துல்லாஹ்விலிருந்து தொலைவிலிருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான்; (மஸ்ஜிதுல் அக்ஸாவின்) சுற்றெல்லைகளை நாம் அபிவிருத்தி செய்திருக்கின்றோம்; நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காக (அவ்வாறு அழைத்துச் சென்றோம்); நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும்; பார்ப்போனாகவும் இருக்கின்றான்
    ____________

    முதலில் இந்த வசனத்தின் சரியான மொழி பெயர்ப்பை அடைப்பு குறி இல்லாமல் தெரிந்து கொள்வோம்.
    யூசுஃப் அலி மற்றும் பித்கல் இரு அறிஞர்களின் மொழிபெயர்ப்பை எளிய தமிழாக்கம் செய்தால்.

    1.சிறந்த ஒருவர் தன் வேலையாளை(அடிமையை) இரவில் புனித மசுதியில் இருந்து தூரத்தில் உள்ள மசுதிக்கு அழைத்து சென்றார்.

    2.அழைத்து சென்றது வேலையாளுக்கு சில அடையாளங்களை காட்ட.

    3.அழைத்து செல்பவர் பார்ப்பவர்,கேட்பவ‌ர்.
    அடைபுகுறிகள் போட்டு

    அ) அழைத்து சென்றவர் இறைவன்
    ஆ) அழைத்து செல்லப் பட்டவர் முகமது
    இ)புனித மசூதி என்பது மெக்கா மசுதி
    ஈ) தூர மசூதி என்பது அல் அக்சார் மசூதி ஜெருசலேம்

    என்று சொல்கிறார்கள். எப்படி இந்த நான்கு விஷ்யங்களையும் குறிப்பிடுகிறீர்கள்?
    .
    போனால் போகிறது பார்ப்பவர் கேட்பர் என்றால் இறைவன் என்று எடுத்து கொள்வோம்.

    வேலையாள என்பவர் முகமது என்று எப்படி கூற முடியும்.ஏனெனில்
    17.2 மூஸா பற்றியும் 17.3 நூஹை பற்றியும் பேசுகிறது.

    இந்த வசனம் மெக்காவில் கூறப்பட்டது.

    அந்த சமயம் மெக்காவில் உள்ள ஆலயத்தில் விக்கிரகங்கள்(360?) இருந்தன.எப்படி புனித மசூதி ஆக முடியும்.

    சென்ற இடம் ஜ்ருசலேம் அல் அக்சார் மசுதி என்றால் அல் அக்சார் மசுதி முகமதுக்கு பிறகே(705 C.E கட்டப் பட்டது. யூதர்களின் ஆலயமும்(சுலைமான் கட்டியது) இடிக்கப் பட்டு அங்கே இல்லை. எந்த மசூதிக்கு சென்றார்?
    http://en.wikipedia.org/wiki/Al-Aqsa_Mosque

    முதலில் மெக்காவில் இருந்து ஜெருசலேம்(எங்காவது தூரத்தில் உள்ள‌ இடம்) வருங்கள். பிறகு விண்வெளி பயணம் எல்லாரும் போகலாம்.

     
  2. தோழரே சிந்தனைக்கு எட்டாத விடயத்தை கற்பனையில் கண்டு மகிழ்பவர்களே ம(ந்)தவாதிகள். உணர்வில் இதற்காக நேரத்தை வீணடித்து 15 கட்டுரைக்கும் மேலாக எழுதிய ஒரு பெயர்தாங்கி விஞ்ஞானி கண்ட அறிவியல் தத்துவம் என்னவெனில், இது நடந்தது அபவ்திக உலகத்தில் அதனால் இறைவனின் செயல்கள் மனித கண்களுக்குத் தெரியாதாம்! புலப்படாதாம்! நம்புங்கள் அவ்வளவுதான்.

     
  3. புராக் என்னும் மிருக விமானத்தை பார்த்ததாக ஏதேனும் சான்றுகள் உள்ளனவா என்று கேட்டாலும் மௌனமே பதிலாக வருகின்றது.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

சங்கர் ///முதலில் இந்த வசனத்தின் சரியான மொழி பெயர்ப்பை அடைப்பு குறி இல்லாமல் தெரிந்து கொள்வோம்.///
அடைப்புக் குறி பயன் படுத்துவது விளங்கிக் கொள்ளும் வண்ணமாகவே .அரபு மொழி நடைக்கும் பிற நடைக்கும் உள்ள வித்தியாசத்தால் விளக்கமே அடைப்புக்குறிக்குள் கொண்டு வரப் படுகிறது.
///வேலையாள என்பவர் முகமது என்று எப்படி கூற முடியும்.ஏனெனில்
17.2 மூஸா பற்றியும் 17.3 நூஹை பற்றியும் பேசுகிறது///
அந்த வசனத்திற்கு ஹதித்கள் மூலம் விரிவுரையாளர்கள் கூறும் விளக்கத்தை ஆதாரத்தோடு கூறி இருக்கும்போது உமது அறை வேக்காட்டுத்தனத்தை ஒதுக்கி வைப்பதே நல்லது..
///அந்த சமயம் மெக்காவில் உள்ள ஆலயத்தில் விக்கிரகங்கள்(360?) இருந்தன.எப்படி புனித மசூதி ஆக முடியும்///
நேர்மையான அதிகாரி சகதியில் விழுந்தாலும் அவர் மிஸ்டர் கிளீன் தான்

///.யூதர்களின் ஆலயமும்(சுலைமான் கட்டியது) இடிக்கப் பட்டு அங்கே இல்லை. எந்த மசூதிக்கு சென்றார்?///
பாபரி மசூதி இடிக்கப்பட்டாலும் இன்று வரை அது பாபரி மசூதி என்றே கூற பட்டு வருகிறது.

 

  1. 3:54. (ஈஸாவை நிராகரித்தோர் அவரைக் கொல்லத்) திட்டமிட்டுச் சதி செய்தார்கள்; அல்லாஹ்வும் சதி செய்தான்; தவிர அல்லாஹ் சதி செய்பவர்களில் மிகச் சிறந்தவன் ஆவான்..

     
  2. சங்கர். ////தவிர அல்லாஹ் சதி செய்பவர்களில் மிகச் சிறந்தவன் ஆவான்…/////
    இஸ்லாத்தை எப்படியாவது ஒழித்து விடலாம் .என்று கங்கணம் கட்டிக் கொண்டு சதித்திட்டம் வகுக்கும் சவடால் கம்யுனிச வாதிகளுக்கும் அமெரிக்கரகளுக்கும் அது போன்றே பதிலடி கொடுப்பவன். உங்களது சதிகள் அவனது பதிலடி முன் தூள் தூளாக நொறுங்கி போகும்.
    ஒருகன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை காட்ட இஸ்லாம் சொல்லித்தரவில்லை.

     

     

    வெள்ளைக் குதிரை(?)யில் விண்வெளி பயணம்

    தொடக்க பாடல்

    திரு நகூர் அனிஃபா அவர்களின் கருணைக் கடலாம் என்ற மெட்டில் பாடவும்.

    _________

    அருமை நபியாம் அண்ணல் முகமது பயணச் சரிதம் கேளுங்கள்
    இணையில்லாத இறைவனின் தூதர் அற்புத பயணம் பாருங்கள்
    _________
    ஒரு நாள் இரவு புனிதப் பள்ளி பைத்துல் ஹராம் அருகினிலே
    இறைவனை தொழுது இனிதே துயின்றார் நல்ல அடியார் முகமதுவே.
    வானவர் வந்து ஜம்ஜம் நீரிலே சுத்தம் செய்தார் உள்ளத்தையே
    வாகனம் வந்தது ஜிப்ரீலோடு வானம் அழைத்து சென்றிடவே
    __
    இறைத்தூதராம் நபி
    அவர் வாகனம்தான் புராக்
    ________

    முன் கதை சுருக்கம்.
    _________________________

    ஜம்ஜம் நீரால் இறைத்தூதரின் உடல் இதயம்(உள்ளம்? நன்றி திரு பி.ஜே)சுத்தம் செய்யப்பட்ட்டு விட்டது.ஒரு வழியாக காபாவில் இருந்தோ அல்லது அருகில் இருந்தோ,ஜெருசலேமுக்கு போயும் போகாமலும் ஜிப்ரீலோடு புராக்கில் ஏறி முதல் வானத்தை அடைகின்றனர்.
    ____________________________
    பயணம் தொடங்கியது

    காட்சி.1. முதல் வானம்
    ________
    புஹாரி 3207. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
    ….
    நாங்கள் முதல் வானத்தை அடைந்தோம். ‘யார் அது?’ என்று கேட்கப்பட்டது. ஜிப்ரீல்(அலை), ‘ஜிப்ரீல்” என்று பதிலளித்தார். ‘உங்களுடன் (வந்திருப்பவர்) யார்?’ என்று கேட்கப்பட்டது. அவர், ‘முஹம்மது” என்று பதிலளித்தார். ‘அவரை அழைத்து வரச் சொல்லி ஆள் அனுப்பப்பட்டிருந்ததா?’ என்று கேட்கப்பட்டது. அவர், ‘ஆம்” என்றார். ‘அவரின் வரவு நல்வரவாகட்டும்! அவரின் வருகை மிக நல்ல வருகை” என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு நான் ஆதம்(அலை) அவர்களிடம் சென்றேன். அவர்களுக்கு சலாம் சொன்னேன். அவர்கள், ‘(என்) மகனும் இறைத் தூதருமான உங்கள் வரவு நல்வரவாகுக!” என்றார்கள். …..
    __________________

    புஹாரி 349

    முதல் வானத்திற்கு என்னை ஏற்றிச் சென்றார்கள். முதல் வானத்தை அடைந்ததும் அந்த வானத்தின் காவலரிடம் ‘திற’ என்றார்கள். அவ்வானவர், ‘யார் அவர்?’ என்று வினவியதற்கு ‘நானே ஜிப்ரீல்’ என்று பதில் கூறினார். அதற்கு அவ்வானவர், ‘உம்முடன் எவரேனும் இருக்கிறார்களா?’ எனக் கேட்டார். ஜிப்ரீல் ஆம்! என்னுடன் முஹம்மத் இருக்கிறார்கள்’ என்று கூறினார்கள். அதற்கு வானவர் ‘அவர் அழைக்கப்பட்டிருக்கிறாரா?’ எனக் கேட்டார். ஜிப்ரீல் ‘ஆம்’ என்றார்கள்.
    வானவர், முதல் வானத்தைத் திறந்ததும் நாங்கள் அவ்வானத்தில் ஏறினோம். அப்போது அங்கு ஒருவர் அமர்ந்திருந்தார். அவரின் வலப்பக்கம் சில மனிதர்களும் இடது மக்களும் சில மனிதர்களும் காணப்பட்டார்கள். அவர் தங்களின் வலப்பக்கமுள்ள மனிதர்களைப் பார்த்தால் சிரிக்கிறார். தங்களின் இடப்பக்கமுள்ளவர்களைப் பார்த்தால் அழுகிறார்.
    இந்நிலையிலுள்ள அவர் ‘நல்ல நபியே! வருக! நல்ல மகனே வருக!’ என்றார். அப்போது ஜிப்ரீல்(அலை) அவர்களிடம் இவர் யார்? என கேட்டேன். ‘இவர் தாம் ஆதம். அவரின் வலப்பக்கமும் இடப்பக்கமும் உள்ளவர்கள் அவரின் சந்ததிகளிலுள்ள மனிதர்கள். வலப்பக்கமுள்ளவர்கள் சுவர்க்கவாசிகள்; இடப்பக்கமுள்ளவர்கள் நரகவாசிகள். (எனவேதான்) அவர் தங்களின் வலப்பக்கம் பார்த்துச் சிரிக்கிறார்; தங்களின் இடப்பக்கம் பார்த்து அழுகிறார்’ என்று கூறினார்கள். …
    ___________
    7517

    (பிறகு ‘புராக்’ வாகனம் கொண்டு வரப்பட்டு அதில் ஏற்றப்பட்ட நபியவர்கள் பைத்துல் முகத்தஸை அடைந்தார்கள். அங்கிருந்து) நபி(ஸல்) அவர்களை அழைத்துக்கொண்டு அவர் முதல் வானத்திற்கு உயர்ந்தார். அந்த வானத்தின் கதவுகளில் ஒன்றை அவர் தட்டினார். அப்போது அந்த வானத்திலிருந்த (வான)வர்கள், ‘யார் அவர்?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர், ‘ஜிப்ரீல்’ என்று பதிலளித்தார். ‘உங்களுடன் வந்திருப்பவர் யார்?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர், ‘என்னுடனிருப்பவர் முஹம்மத்’ என்று பதிலளித்தார். ‘(அவரை அழைத்துவரச் சொல்லி) ஆள் அனுப்பப்பட்டிருந்ததா?’ என்று கேட்டனர். அதற்கு ஜிப்ரீல்(அலை) ‘ஆம்’ என்றார்கள். ‘அவரின் வரவு நல் வரவாகட்டும்! வாழ்த்துகள்!’ என்று கூறினர். நபியவர்களின் வருகையால் வானில் இருபபோர் மகிழ்ச்சியடைகிறார்கள். பூமியில் அல்லாஹ் எதை (நிகழச் செய்ய) நினைக்கிறானோ அதை அவனாக வானவர்களிடம் அறிவிக்காத வரை வானவர்கள் அதை அறிந்து கொள்ளமாட்டார்கள்.
    அந்த முதல் வானத்தில் நபி(ஸல்) அவர்கள் (ஆதி மனிதர்) ஆதம்(அலை) அவர்களைக் கண்டார்கள். அப்போது ஜிப்ரீல்(அலை) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம், ‘இவர்தாம் உங்கள் தந்தை. இவருக்கு நீங்கள் சலாம் (முகமன்) கூறுங்கள்’ என்றார்கள். அவ்வாறே அவருக்கு நபி(ஸல்) அவர்கள் முகமன் கூற, அதற்கு ஆதம்(அலை) அவர்கள் பதில் (முகமன்) சொல்லிவிட்டு, ‘அருமை மகனே! வருக! வருக! நீரே நல்ல புதல்வர். (உங்கள் வரவிற்கு) வாழ்த்துக்கள்’ என்று கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் அந்த முதல் வானத்தில் பாய்ந்தோடும் இரண்டு நதிகளைக் கண்டார்கள். உடனே ‘ஜிப்ரீலே! இவை எந்த நதிகள்?’ என்று கேட்டார்கள். அதற்கு ஜிப்ரீல்(அலை) அவர்கள், ‘இவையிரண்டும் நைல் மற்றம் யூப்ரடீஸ் நதியின் மூலங்கள்’ என்று பதிலளித்தார்கள். பிறகு நபி(ஸல்) அவர்களை அழைத்துக்கொண்டு அந்த வானத்தில் சென்று கொண்டிருந்தபோது இன்னொரு நதியையும் கண்டார்கள். அதன் மீது முத்துகளாலும் பச்சை மரகத்தாலும் ஆன மாளிகை ஒன்று இருந்தது. (அந்த நதியில்) நபி(ஸல்) அவர்கள் தங்களின் கையால் அடித்தார்கள். அ(தன் மண்ணான)து உயர்ந்த நறுமணமிக்க கஸ்தூரியாக இருந்தது. நபி(ஸல்) அவர்கள், ‘இது என்ன நதி ஜிப்ரீலே?’ என்று கேட்டார்கள். ஜிப்ரீல்(அலை) அவர்கள், ‘இது உங்களுக்காக உங்களுடைய இறைவன் ஒதுக்க வைத்துள்ள கவ்ஸர் (எனும் நதி) ஆகும்’ என்று பதிலளித்தார்கள்…
    ________________
    காட்சி 2. ல் இரண்டாம் வானம் இன்னும் வியத்தகு சம்பவங்கள் நிறைந்தது.
    DONT MISS IT

    பூமியை அரபி மொழி குரானில் பெண்ணாகவே கூறுகிறார்கள்.
    அரபி மொழியில் எல்லா பெயர் சொல்லுக்கும் பால் உண்டு.

    இந்து புராணங்களில் பூமி பெண்ணாகவே உருவக படுத்தப்படுகிறாள்.

    இஸ்லாமிய எமதர்மன் பெயர் அஜ்ஜையர்.

    இஸ்லாமிய அப்சர‌ஸ்களின் பெயர் ஹவுரிஸ்

     

    1. முதல் வானத்தின் முதல் பிரச்சினை
      _________________________________________________________

      முதல் வானத்தில் ஆதம் அவர்களை முகமது சந்திக்கிறார். ஆதமுக்கு வலது இடது புறங்களில் சொர்ர்கம்,நரகம் ஆகியவற்றை பார்த்ததாகவும் அதில் மக்கள் இருந்ததாகவும் ஹதிதுகள் கூறுகின்றன.
      _______
      புஹாரி 349

      முதல் வானத்தைத் திறந்ததும் நாங்கள் அவ்வானத்தில் ஏறினோம். அப்போது அங்கு ஒருவர் அமர்ந்திருந்தார். அவரின் வலப்பக்கம் சில மனிதர்களும் இடது மக்களும் சில மனிதர்களும் காணப்பட்டார்கள். அவர் தங்களின் வலப்பக்கமுள்ள மனிதர்களைப் பார்த்தால் சிரிக்கிறார். தங்களின் இடப்பக்கமுள்ளவர்களைப் பார்த்தால் அழுகிறார்.
      இந்நிலையிலுள்ள அவர் ‘நல்ல நபியே! வருக! நல்ல மகனே வருக!’ என்றார். அப்போது ஜிப்ரீல்(அலை) அவர்களிடம் இவர் யார்? என கேட்டேன். ‘இவர் தாம் ஆதம். அவரின் வலப்பக்கமும் இடப்பக்கமும் உள்ளவர்கள் அவரின் சந்ததிகளிலுள்ள மனிதர்கள். வலப்பக்கமுள்ளவர்கள் சுவர்க்கவாசிகள்; இடப்பக்கமுள்ளவர்கள் நரகவாசிகள். (எனவேதான்) அவர் தங்களின் வலப்பக்கம் பார்த்துச் சிரிக்கிறார்; தங்களின் இடப்பக்கம் பார்த்து அழுகிறார்’ என்று கூறினார்கள். …
      _____

      1. கியாமத் நாளில்தான் அனைவரையும் உயிராக்குகிறார் இறைவன்
      __________
      22:7. (கியாம நாளுக்குரிய) அவ்வேளை நிச்சயமாக வரும்; இதில் சந்தேகமே இல்லை; மண்ணறைகளில் இருப்போரை, நிச்சயமாக அல்லாஹ் (உயிர் கொடுத்து) எழுப்புவான்.
      _________

      45:26. “அல்லாஹ் உங்களுக்கு உயிர் கொடுக்கிறான்; பின்னர் அவனே உங்களை மரணம் அடையச் செய்கிறான்; பின்னர் கியாம நாளன்று அவன் உங்களை ஒன்று சேர்ப்பான் – இதில் சந்தேகமேயில்லை” எனினும் மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள் என்று (நபியே!) நீர் கூறும்.
      _____

      கியாமத் நாளுக்கு முன்பே வானங்களில்,சொர்க்கம்,நரகம் ஆகியவற்றில் மனிதர்கள் எப்படி வந்தார்கள்?

      குரானுக்கு முரண்பட்ட ஹதிது வசனங்களை நிராகரிக வேண்டுமல்லவா?

      அப்போது விண்வெளி பயணம் குரானுக்கு முரண்பட்டது. சரியா?
      ___________

       
    2. அய்யப்பன் கோவிலுக்கு போகிறவர்கள் மகரஜோதிக்காகத்தான் போகிறார்கள் என்று கருதிக்கொள்ளும் உங்களை போன்ற “அறிவுஜீவிகளிடம்” என்ன சொல்லி புரியவைக்க முடியும். மகரஜோதி மனிதன் உருவாக்குவதுதான் என்று 1980இலேயே தெரிந்துவிட்டாலும் அய்யப்பன் கோவிலுக்கு போக்ம் கூட்டம் குறைந்துவிட்டதா?

      இப்ராஹிம் ஏன் உங்களை எதிர்க்கப்போகிறார்? கோவிலை இடித்து மசூதி கட்டினாலும் மசூதிதான் இருக்க வேண்டும் கோவிலை இடிக்கவேண்டும் என்று சொல்லுகிற உங்களை இப்ராஹிம் மட்டுமல்ல, செங்கொடி மட்டுமல்ல, ஜவஹிருல்லா, பின் லாடன் எல்லோருமே ஆதரிக்கத்தானே செய்வாரக்ள்? என்ன ஆச்சரியம் இருக்கிறது?

       
    3. சங்கர் /////இப்பதிவு இஸ்லாமிய மதவாதிகள் எப்படி கருத்துகளை திரித்து கூறுகிறார்கள்.சில மத பழக்க வழக்கங்களுக்கு குரானில் ஆதாரம் இல்லை என்பதையெல்லாம் இப்பதிவு புட்டு புடு வைத்தது.(உ.ம். சுன்னத்,ஐந்து நேர தொழுகை,வெள்ளி கிழமை ஜுமா தொழுகை,ஜகத் 2.5%////
      மதவாதிகள் என்ன கருத்துக்களை திரித்து கூறினார்கள் ,அதை செங்கொடி எப்படி புட்டு,புட்டு வைத்தார்?
      சுன்னத்,ஐந்து நேர தொழுகைக்கு ஜும்மாவுக்கு சக்காத்க்கு ஆதாரம் இல்லையா?இதை எங்கே புட்டு,இடியாப்பம் எல்லாம் வைத்தார்
      ////4.குரானின் வரலாறு,ஹதிது தொகுக்கப்பட்டது எல்லாம் மனிதர்களால் தங்கள் அரசியல் இலாபத்திற்க்காக செய்யப் பட்ட செயல்கள் என்பதும் இப்பதிவில் கூறப்பட்டது////
      ஹதிதுகளில் உமது செங்கொடியின் அரைவேக்காட்டுத் தனத்தை தோலுரித்து காட்டியுள்ளோம் பதிலில்லாமல் பாதியோடு ஓடியதை அறிய மாட்டீரா?
      ////5.மதப் புத்தகங்களில் அறிவியல் என்பது ஒரு வார்த்தை விளையாட்டு என்பதும்,குரானில் கூறப்படும் பல சம்பவங்கள்,அத்தாட்சிகள் ஒன்று கூட இப்போது காட்ட முடியாது என்பதும் குறிப்பிட தக்கவை////
      .சிறுநீர் கழித்ததும்,நீரை விட்டு சுத்தம் செய்வது முதல் தேவையற்ற ரோமங்களை நாற்பது நாட்களுக்கு மேற்படாமல் நீக்கவேண்டும் என்பவை மருத்துவ அறிவியலின் அத்தாட்சிகள் இல்லையா? .
      6. இஸ்லாமும் பிற மதங்களை போன்ற் நம்பிக்கை மட்டுமே சார்ந்த விஷயம் என்பதை விவாதம் செய்த அனைவருமே கூறிவிட்டார்கள்
      .விவாதம் செய்யாதவர்கள் எல்லாம் நம்பிக்கையின் அடிப்படையில் கிடையாது என்றார்களா?
      இஸ்லாத்தின் அடிப்படையே ஈமான் என்று சொல்லப்படும் நம்பிக்கையின் அடிப்படையில் தான், குர்ஆனும் வரிக்கு வரி நம்பிக்கையாளர்களே என்று தான் அழைக்கிறது.
      7.இது இஸ்லாமியர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்று நிச்சயமாக கூற முடியும்.எங்கள் மதகுரு மத கருத்துகள் அனைத்தையும் அறிந்தவர்,விவாதத்தில் வ்ல்லவர்,அவர் கூறுவது எல்லாம் சரியானது என்று இப்போது யாரும் சொல்ல மாட்டார்கள்
      விவாதத்துக்கு பி.ஜே வுடன் வருவதற்கு இயலாமையை வெளிப்படுத்திவிட்டு இப்படி மானகெட்ட சப்பைக்கட்டு வேறா? இஸ்லாமியர்களுக்கு பயனுள்ளதாக இருக்க முடியும் என்பதை சங்கர் எப்படி கூற முடியும்?
      இஸ்லாத்தை நம்புவோர் குரானில் கூறப்பட்ட அற்புதங்களை நம்பட்டும் .இப்போது குரானில் உள்ள அற்புத காட்சிகளை கூறி இஸ்லாத்திற்கு அழைக்க வில்லை.அதனுடைய ஒப்பற்ற சமத்துவம் வாழ்க்கை நெறிமுறைகள் ,தான் இன்று பலரை இஸ்லாத்தின் பக்கம் ஈர்க்கின்றன ,அதை பற்றி விமர்சிக்க திராணி இன்றி சாதாரண மான மடையனும் கேட்க கூடிய கடவுள் கறுப்பா? சிவப்பா?என்ற ரீதியிலான விமர்சனகள் பழைய தில்லுதுரையும் இப்போதைய நிலாவுமான ஆட்களை மட்டுமே கவரும் ,மற்றபடி செங்கோயின் கட்டுரைகள் விழலுக்கு இறைத்த நீரே ,நீவிரும் புரிந்து கொள்வீர் .

     

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

  1. வணக்கம் நண்பர் இப்ராஹிம்,
    //சுன்னத்,ஐந்து நேர தொழுகைக்கு ஜும்மாவுக்கு சக்காத்க்கு ஆதாரம் இல்லையா?//

    1.ஐந்து நேர தொழுகை மிராஜ் பயண உண்மையை பொறுத்தே நிஜம்.குரானில் ஐந்து வேளை தொழுகை எங்கே குறிப்பிடப் பட்டு உள்ளது?.மிராஜ் குறித்து ஹதிதுகள் வேறுபட்ட குறிப்புகளை தருகின்றன.அது மனதளவில் நடந்த ஆன்மீகப் பயணம் என்று கூட சில அறிஞர்கள் கூறுகின்றனர்.
    ஐந்து வேளை தொழுகை குறித்து இறைவன் முகமதுவிடன் சொன்னார் என்றும் ஹதிது கூறுகிறது.அது நிச்சயமாக அப்படியே குரானில் இடம் பெற்று இருக்க வேண்டும்.காட்டுங்கள்.

    புஹாரி 7517
    _____
    அங்கு சர்வ வல்லமை படைத்தவனும் கண்ணியத்தின் அதிபதியுமான (இறை)வன், வில்லின் இரண்டு முனையளவு அல்லது அதைவிட மிக அருகில் நெருங்கி வந்தான். அப்போது அல்லாஹ் நபி(ஸல்) அவர்களுக்கு அறிவித்தவற்றில், ‘நாள் ஒன்றுக்கு ஐம்பது நேரத் தொழுகைகள் உங்கள் சமுதாயத்தார் மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளது’ என்பதும் அடங்கும். பிறகு நபி(ஸல்) அவர்கள் (அங்கிருந்து) இறங்கி மூஸா(அலை) அவர்களிடம் வந்து சேர்ந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களைத் தடுத்து நிறுத்திய மூஸா(அலை) அவர்கள், ‘முஹம்மதே! உங்களுடைய இறைவன் உங்களிடம் என்ன உறுதிமொழி வாங்கினான்?’ என்று கேட்டான்.
    நபி(ஸல்) அவர்கள், ‘நாள் ஒன்றுக்கு ஐம்பது நேரத் தொழுகைகளை (நான் கட்டாயம் தொழ வேண்டுமென) அவன் என்னிடம் உறுதிமொழி வாங்கினான்’ என்று பதிலளித்தார்கள். மூஸா(அலை) அவர்கள், ‘உங்கள் சமுதாயத்தாரால் அதை நிறைவேற்ற முடியாது. எனவே, நீங்கள் திரும்பிச் சென்று, உங்களுடைய இறைவனிடம் உங்களுக்கும் (உங்கள் சமுதாயத்தாரான) அவர்களுக்கும் (தொழுகைகளின் எண்ணிக்கையை) குறைக்குமாறு கேளுங்கள்’ என்று கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் அது தொடர்பாக ஆலோசனை கேட்பதைப் போன்று ஜிப்ரீல்(அலை) அவர்களைத் திரும்பிப் பார்த்தார்கள்.
    ‘நீர் விரும்பினால் ஆகட்டும்’ என்று கூறுவதைப் போன்று ஜிப்ரீல்(அலை) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் சைகை செய்தார்கள்.
    எனவே, நபி(ஸல்) அவர்களுடன் ஜிப்ரீல்(அலை) அவர்கள் சர்வ வல்லமை படைத்த(வனான இறைவ)னிடம் உயர்ந்தார்கள். (முதலில் நாம் நின்றிருந்த) அதே இடத்தில் நின்றவாறு நபி(ஸல்) அவர்கள், ‘என் இறைவா! எங்களுக்காக (தொழுகைகளின் எண்ணிக்கையை) குறைத்திடுவாயாக! ஏனெனில், என் சமுதாயத்தாரால் இதை நிறைவேற்ற இயலாது’ என்றார்கள். அப்போது அல்லாஹ் அவர்களுக்குப் பத்து தொழுகைகளைக் குறைத்தான்.
    பிறகு நபி(ஸல்) அவர்கள் மூஸா(அலை) அவர்களிடம் திரும்பி வந்தார்கள். மீண்டும் அவர்கள் நபி(ஸல்) அவர்களைத் தடுத்து நிறுத்தினார்கள். அவ்வாறே மீண்டும் மீண்டும் நபி(ஸல்) அவர்களை இறைவனிடம் மூஸா(அலை) அவர்கள் திருப்பி அனுப்பிக் கொண்டேயிருந்தார்கள். முடிவில் அந்த (ஐம்பது) தொழுகை (நாள் ஒன்றுக்கு) ஐந்து தொழுகைகளாக மாறியதுழூ ஐந்துக்கு வந்த போதும் மூஸா(அலை) அவர்கள் நபி(ஸல்) அவர்களைத் தடுத்து நிறுத்தி, ‘முஹம்மதே! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் என் சமுதாயத்தாரான பனூஇஸ்ராயீல்களுக்கு இதைவிடக் குறைந்த அளவிலான தொழுகையையே கோரிப்பெற்றேன். ஆனால் அவர்கள் (அதைக் கூட நிறைவேற்றாது) பலவீனமடைந்து கைவிட்டுவிட்டார்கள். உங்கள் சமுதாயத்தாரோ உடலாலும் உள்ளத்தாலும் மேனியாலும் பார்வையாலும் கேள்வியாலும் பலவீனமானவர்கள். எனவே, திரும்பச் சென்று உங்களுக்காக (உங்கள் ஐவேளைத் தொழுகைகளின் எண்ணிக்கையை) குறைத்துக் கேளுங்கள்’ என்று கூறினார்கள்.
    ஒவ்வொரு முறையும் நபி(ஸல்) அவர்கள் ஜிப்ரீல்(அலை) அவர்களிடம் யோசனை பெறுவதற்காக அவர் பக்கம் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவரும் அதை வெறுக்கவில்லை. ஐந்தாவது முறை ஜிப்ரீல்(அலை) அவர்கள் நபிகளாரை மேலே அழைத்துச் சென்றபோது நபி(ஸல்) அவர்கள், ‘என் இறைவா! என் சமுதாயத்தார் உடலாலும், உள்ளத்தாலும், கேள்வியாலும், பார்வையாலும், மேனியாலும் பலவீனமானவர்கள். எனவே, (தொழுகைகளை) குறைத்திடுவாயாக!’ என்று கோரினார்கள். அதற்கு சர்வ வல்லமை படைத்தவ(னான இறைவ)ன ‘முஹம்மதே!’ என்று அழைத்தான். அதற்கு ‘இதோ இறைவா! நான் காத்திருக்கிறேன்; கட்டளையிடு’ என்று பதிலளித்தார்கள்.
    அதற்கு அல்லாஹ், ‘(ஒரு முறை சொல்லப்பட்ட) சொல் என்னிடம் மாற்றப்படுவதில்லை; அதை (-ஐவேளைத் தொழுகையை) நான் உங்களின் மீது ‘லவ்ஹுல் மஹ்ஃபூல்’ எனும் பாதுகாக்கப்பெற்ற பதிவேட்டில் கடமையாக(ப் பதிவு) ஆக்கிவிட்டேன். மேலும், ஒரு நற்செயலுக்குப் பத்து நன்மைகள் உண்டு. எனவே, அவை உங்களுக்கு ஐந்து நேரத் தொழுகைகளாக இருப்பினும், பாதுகாக்கப் பெற்ற பதிவேட்டில் அவை ஐம்பது நேரத் தொழுகைகள் (உடைய நன்மைக்கு நிகர்) ஆகும்’ என்று சொன்னான்.
    _______

    இரு வில்லின் முனை அளவு ஜிப்ரீல்(?) வந்ததாக குரானில்(53.9) குறிப்பிட பட்டு உள்ள‌து.
    இந்த ஹதிதின் படி இவ்வசனத்தை பார்த்தால் ஜிப்ரீலா? அடைப்புக்குறிகளை எடுத்துவிட்டு பாருங்கள்.
    _____
    53:1. விழுகின்ற நட்சத்திரத்தின் மீது சத்தியமாக!
    53:2. உங்கள் தோழர் வழி கெட்டுவிடவுமில்லை; அவர் தவறான வழியில் செல்லவுமில்லை.
    53:3. அவர் தம் இச்சைப்படி (எதையும்) பேசுவதில்லை.
    53:4. அது அவருக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதேயன்றி வேறில்லை.
    53:5. மிக்க வல்லமையுடைவர் (ஜிப்ரீல்) அவருக்குக் கற்றுக் கொடுத்தார்.
    53:6. (அவர்) மிக்க உறுதியானவர்; பின்னர் அவர் (தம் இயற்கை உருவில்) நம் தூதர் முன் தோன்றினார்.
    53:7. அவர் உன்னதமான அடி வானத்தில் இருக்கும் நிலையில்-
    53:8. பின்னர், அவர் நெருங்கி, இன்னும், அருகே வந்தார்.
    53:9. (வளைந்த) வில்லின் இரு முனைகளைப் போல், அல்லது அதினும் நெருக்கமாக வந்தார்.
    53:10. அப்பால், (அல்லாஹ்) அவருக்கு (வஹீ) அறிவித்ததையெல்லாம் அவர், அவனுடைய அடியாருக்கு (வஹீ) அறிவித்தார்.
    53:11. (நபியுடைய) இதயம் அவர் கண்டதைப் பற்றி, பொய்யுரைக்க வில்லை.
    53:12. ஆயினும், அவர் கண்டவற்றின் மீது அவருடன் நீங்கள் தர்க்கிக்கின்றீர்களா?
    53:13. அன்றியும், நிச்சயமாக அவர் மற்றொரு முறையும் (ஜிப்ரீல்) இறங்கக் கண்டார்.
    53:14. ஸித்ரத்துல் முன்தஹா என்னும் (வானெல்லையிலுள்ள) இலந்தை மரத்தருகே.
    53:15. அதன் சமீபத்தில் தான் ஜன்னத்துல் மஃவா என்னும் சுவர்க்கம் இருக்கிறது.
    53:16. ஸித்ரத்துல் முன்தஹா என்னும் அம்மரத்தை சூழ்ந்து கொண்டிருந்த வேளையில்,
    53:17. (அவருடைய) பார்வை விலகவுமில்லை; அதைக் கடந்து (மாறி) விடவுமில்லை.
    53:18. திடமாக, அவர் தம்முடைய இறைவனின் அத்தாட்சிகளில் மிகப் பெரியதைக் கண்டார்.
    __________________
    மிராஜில் கண்ட இலந்தை மரமும் கூறப்பட்டு உள்ளது.ஆனால் பயணம் பற்றியோ தொழுகை பற்றியோ கூறப்படவில்லை.

    பயணம் பூத உட்லோடு நபி குரானின் படி விண்வெளி சென்றாரா? இல்லையா
    _____

    2.ஜுமா தொழுகை கூட யூதர்கள் குரங்காது பற்றி விவாதித்து உள்ளோம்.சனிக்கிழமை எப்போது வெள்ளி ஆனது(?) என்று குரானில் ஆதாரம் காட்ட வேண்டும்.
    3.சகாத் 2.5 % என்று குரானில் குறிப்பிடப் பட்டும் உள்ளதா?

    இஸ்லாமியர்களின் எந்த செயலும் குரானில் குறிப்பிடு உள்ளதா என்று பார்ப்பது என்க்கு அவசியமாக படுகிறது.

    குரானில் குறிப்பிடப் படாதவைகளை ஹதிதில் இருந்து காட்டுவீர்கள்.இந்த விஷயங்கள் ஹதிதுகளை மட்டுமே மட்டுமே ஆதாரமாக கொண்ப்டது,குரானை அல்ல என்பது இஸ்லாமியர்களுக்கு தெரியப் படுத்த வேண்டும்.
    ______

    ஹதிது பற்றியும் அதனை உபயோகப் படுத்துதல்,நம்பகத்தன்மை பற்றியும் விவாதிப்போம்.
    ____

    முதலில் மிராஜ் பற்றி முடிப்போம். ஒவ்வொன்றாக அலசுவோம்.
    __________
    இன்னும் பேசுவோம் நன்றி இப்ராஹிம்.

     
  2. இது நண்பர் இப்ராஹிம்

    //இஸ்லாத்தை நம்புவோர் குரானில் கூறப்பட்ட அற்புதங்களை நம்பட்டும் .இப்போது குரானில் உள்ள அற்புத காட்சிகளை கூறி இஸ்லாத்திற்கு அழைக்க வில்லை.அதனுடைய ஒப்பற்ற சமத்துவம் வாழ்க்கை நெறிமுறைகள் ,தான் இன்று பலரை இஸ்லாத்தின் பக்கம் ஈர்க்கின்றன 

    1. சங்கர் ////கியாமத் நாளுக்கு முன்பே வானங்களில்,சொர்க்கம்,நரகம் ஆகியவற்றில் மனிதர்கள் எப்படி வந்தார்கள்?
      குரானுக்கு முரண்பட்ட ஹதிது வசனங்களை நிராகரிக வேண்டுமல்லவா?
      அப்போது விண்வெளி பயணம் குரானுக்கு முரண்பட்டது. சரியா?///
      முகம்மதுநபி[ஸல்]அவர்களுக்கு விண்ணுலக பயணத்தில் சொர்க்கமும் நரகமும் அவர்களுக்கு எவ்வாறு இருக்கும் என்று எடுத்து காட்ட பட்டதாகவே நீங்கள் குறிப்பிடும் ஹதித் வருகிறது. ஆயின் இதை முன் மாதிரி காட்சியாகத்தான் எடுத்துக்கொள்ளவேண்டும்.

       
    2. sankar[முகம்மதே] உமது இறைவன் மனிதர்களை முழுமையாக அறிகிரானஎன்று நாம் உமக்கு கூறியதை நினைப்பீராக உமக்கு நாம் காட்டிய காட்சியையும் குர் ஆனில் சபிக்கப்பட்ட மரத்தையும் மனிதர்களுக்கு சோதனையாகவே ஆக்கியுள்ளோம்.அவர்களை அச்சுருத்துகிறோம் .அது அவர்களுக்க் பெரிய வழிகேட்டையே அதிகமாக்கியது குர் ஆன் [17 ;60௦

       
    3. சங்கர் ///ஐந்து வேளை தொழுகை குறித்து இறைவன் முகமதுவிடன் சொன்னார் என்றும் ஹதிது கூறுகிறது.அது நிச்சயமாக அப்படியே குரானில் இடம் பெற்று இருக்க வேண்டும்.காட்டுங்கள்///
      ஹதித்கள் அனைத்தும் குர்ஆனில் இருக்க வேண்டும் என்று யார் சொன்னார்கள்? குர்ஆனுக்கு செய்முறை விளக்கமாக நபி[ஸல்] அவர்களின் வாழ்க்கை முறை உள்ளது குர்ஆனில் தொழுகையினை நிறைவேற்றுமாறு கூறப்பட்டுள்ளது .அது எப்படி எத்தனை தடவை என்பதை நபி[ஸல்] அவர்களின் செயலகளிலிருந்து பின்பற்றப் படுகிறது.

       
    4. சங்கர் மேலும் ஐந்து வேளை தொழுகை குறித்து பீ.ஜே.யின் குர்ஆன் தமிழாக்கத்திலும் 17;78-24;58-மற்றும் குறிப்பு எண்கள் 71,226 .பார்த்துகொள்ளுங்கள்

       
    5. sankar 2.ஜுமா தொழுகை கூட யூதர்கள் குரங்காது பற்றி விவாதித்து உள்ளோம்.சனிக்கிழமை எப்போது வெள்ளி ஆனது(?) என்று குரானில் ஆதாரம் காட்ட வேண்டும்.
      3.சகாத் 2.5 % என்று குரானில் குறிப்பிடப் பட்டும் உள்ளதா?
      சனிக்கிழமை என்பது முந்தைய சமுதாயத்திற்கு
      முஸ்லிம்களுக்கு குர் ஆன் 62 ;9 வசனம் வெள்ளிக்கிழமை என்பதை உறுதிபடுத்துகிறது.
      .சக்காத் இரண்டரை சதவீதம் என்பதை ஹதித்கள் தெளிவுபடுத்துகின்றன.
      ///குரானில் குறிப்பிடப் படாதவைகளை ஹதிதில் இருந்து காட்டுவீர்கள்.இந்த விஷயங்கள் ஹதிதுகளை மட்டுமே மட்டுமே ஆதாரமாக கொண்ப்டது,குரானை அல்ல என்பது இஸ்லாமியர்களுக்கு தெரியப் படுத்த வேண்டும்///.
      ஹதீதை ஏற்றுக் கொண்டால்தான் ஒருவன் முஸ்லிமாக இருக்க முடியும் .குர் ஆனில் சிலவிசயங்களில் வழிகாட்டுதல் மட்டுமே இருக்கும் அதன் விளக்கமாக நபி[ஸல்]அவர்களின் செயல்கள் மூலம் விளக்கம் பெற முடியும் .இறைவன் அல்லாவைத் தவிர வேறு யாருமில்லை,முகம்மதுநபி[ஸல்]அவர்கள் அவனின் தூதர் மேலும் அல்லாவுக்கும் கட்டுபடுங்கள் ;அவன் தூதருக்கும் கட்டுபடுங்கள் என்று வற்புறுத்தும் ஏராளமான வசனங்கள் உள்ளன.

       
    6. சங்கர் .///மேலும் இந்து மதத்திலும் புராணங்களும் ஆபிரஹாமிய மதங்களில் இருப்பது போல நேரடியாக பொருள் கொள்ள வேண்டும் என்று எந்த படித்த இந்துவும் சொல்லமாட்டார்.
      //
      இரண்டுக்கும் ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா? எனக்கு ஒரே மாதிரி தெரிகிறது////

      உங்கள் மூக்கும் எனது மூக்கும் ஒன்றுபோல் இருந்தால் மொத்த உருவமும் ஒரே மாதிரி இருக்குமா?

       
    7. நிலா அடிமைகள் பற்றி இந்த லிங்கில் படியுங்கள் மற்றவற்றை பிறகு பார்ப்போம்
      http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/107/



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

  1. இப்ராஹிம்

    அந்த சுட்டியை படித்தேன், முகமது காம்பென்ஷேசன் கொடுக்க வேண்டும் என்பதற்காகவும், மற்ற நாடுகள் தம் மீது படை எடுக்கலாம் என்பதற்காகவும் அடிமை முறையை ஒரேயடியாக ஒழிக்காமல் கொஞ்சம் கொஞ்சமாக ஒழிக்க நினைத்தார் என சொல்கிறது!

    அப்படியானால் குரான் முழுவதும் முகமதுவால் திட்டமிட்டு உருவாக்கபட்டது தானே!, அதை ஏன் ஒப்பு கொள்ள மறுக்கிறீர்கள், எல்லா வல்ல கடவுளால் ஒரு நொடியில் அடிமைத்தனத்தை ஒழிக்க முடியவில்லை என்றால் எப்படி அவர் எல்லாம் வல்லவர்!

    அந்த மாதிரி டுபாக்கூர் கடவுளை எப்படி நம்புவது, அதற்கு முன் வந்த வேதங்கள் ஒரு மாதிரி இருக்கு, அப்புறம் ஒரு மாதிரி இருக்கு, இவ்ளோ குழப்பத்தோட மனிதன் கூட இருக்க மாட்டான்யா!

     
  2. //முகம்மதுநபி[ஸல்]அவர்களுக்கு விண்ணுலக பயணத்தில் சொர்க்கமும் நரகமும் அவர்களுக்கு எவ்வாறு இருக்கும் என்று எடுத்து காட்ட பட்டதாகவே நீங்கள் குறிப்பிடும் ஹதித் வருகிறது. ஆயின் இதை முன் மாதிரி காட்சியாகத்தான் எடுத்துக்கொள்ளவேண்டும்.//

    முன் மாதிரி காட்சி என்றால(இறைவனால் வெளிப்படுத்தப் பட்ட) மனதில் காணும் காட்சி.சரியா?

    சொர்க்கத்தில் பல நபிகள் உட்பட பல்ர்,நரகத்தில் பலர் இருப்பது போல் திரு முகமது பார்த்தது(புஹாரி 349)மனதில் தோன்றிய காட்சியா?.

    இது பல தடவை சொர்க்கம் ,நரகம் திரு முகமது பார்த்தாக பல ஹதிதுகள் கூறு கின்றன.

    விண்வெளி பயணமே மனதில் கண்ட காட்சியா?

    இல்லை பூத உடலோடு வானங்களுக்கு சென்றது நிஜம். சொர்க்கம் ,நரகம் மட்டும் காட்சியா?

    நபிகளை பார்த்ததும் காட்சியா?

    அல்லது தெளிவாக கூற முடியாதா?
    __________

    ஐந்து நேர தொழுகைஇகு ஆதாரமாக‌
    நிங்கள் சொன்ன இரு வசனங்களையும் திரு பி.ஜேவின் மொழி பெயர்ப்பிலேயே பார்ப்போம்.
    ________________

    17.78. சூரியன் சாய்ந்ததிலிருந்து இரவில் இருள் சூழும் வரையில் தொழுகையையும் பஜ்ரு (தொழுகையில்) குர்ஆனையும் நிலை நாட்டுவீராக! பஜ்ரு (தொழுகையில்) குர்ஆன் சாட்சி கூறப்படுவதாக இருக்கிறது.226
    _________________________

    24:58. நம்பிக்கை கொண்டோரே! உங்கள் அடிமைகளும், உங்களில் பருவ வயதை அடையாதோரும் ஃபஜ்ரு தொழுகைக்கு முன்னரும், நண்பகலில் (உபரியான) உங்கள் ஆடைகளைக் களைந்துள்ள நேரத்திலும், இஷா தொழுகைக்குப் பிறகும் ஆகிய முன்று நேரங்களில் (வீட்டுக்குள் நுழைவதற்கு) உங்களிடம் அனுமதி கேட்கட்டும். இம்மூன்றும் உங்களுக்குரிய அந்தரங்க (நேர)ங்கள். இவையல்லாத மற்ற நேரங்களில் (வருவது) அவர்கள் மீதோ, உங்கள் மீதோ எந்தக் குற்றமும் இல்லை. அவர்கள் உங்களைச் சுற்றி வருபவர்கள். உங்களில் ஒருவர் மற்றவரிடம் வந்து செல்பவர்கள். இவ்வாறே அல்லாஹ் வசனங்களைத் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.
    ________

    71. நடுத் தொழுகை எது?

    இவ்வசனத்தில் (2:238) நடுத் தொழுகையைப் பேணுமாறு கூறப் படுகிறது. நடுத் தொழுகை என்பது அஸர் தொழுகை தான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கமளித்துள்ளனர். (நூல்: புகாரி 6396).நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நடுத் தொழுகைக்கு விளக்கம் தந்த பின் மற்றவர்களின் கருத்தை நாம் கவனத்தில் கொள்ளக் கூடாது.
    இவ்வசனம் மற்றொரு விஷயத் தையும் கூறுகிறது.முஸ்லிம்கள் ஐந்து வேளை தொழ வேண்டும் என்பதையும், இதற்கு ஏராளமான நபிமொழிகள் சான்றாகவுள்ள தையும் நாம் அறிவோம். ஆயினும் குர்ஆனில் ஐந்து வேளைத் தொழுகை என்று கூறப்படவில்லை. எனவே ஐந்து வேளைத் தொழுகை என்பது குர்ஆனுக்கு எதிரானது என்று சிலர் நினைக்கின்றனர்.இவ்வசனம் ஐந்து வேளைத் தொழுகை இருப்பதை நேரடியாகக் கூறா விட்டாலும் குறைந்தது ஐந்து வேளைத் தொழுகை இருப்பதை மறைமுகமாகக் கூறுகிறது.
    தொழுகைகளையும், நடுத் தொழுகை யையும் பேணுமாறு இவ்வசனம் கூறுகிறது.
    தொழுகைகள் என்பது பன்மை யாகும். அரபு மொழியில் இரண்டைக் குறிக்க தனிச் சொல் உள்ளதால் பன்மைக்கு குறைந்தது மூன்று இருக்க வேண்டும். மூன்றுக்கும் குறைந்து அரபு மொழியில் பன்மை இல்லை.’(குறைந்தபட்சம் மூன்று) தொழுகை களையும் நடுத் தொழுகையையும்’ என்று கூறும் போது மொத்தம் நான்கு தொழுகைகள் என்றாகி விடுகின்றது.

    நடு என்று கூறுவதாக இருந்தால் அது ஒற்றைப் படையாகத் தான் இருக்க வேண்டும். நான்கில் எதையும் நடு எனக் கூற முடியாது. ஐந்து இருந்தால் தான் அதில் ஒன்றை நடு எனக் கூற முடியும். எனவே மொத்த தொழுகைகள் ஐந்து என்பதை இதிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.
    மூன்று தொழுகைகள் என்று வைத்துக் கொண்டாலும் நடுத் தொழுகை என ஒரு தொழுகையைக் குறிப்பிட முடியுமே என்று சிலர் நினைக்கலாம். மூன்றில் ஒன்றை நடு எனச் சொல்ல முடியும் என்பது உண்மையே. ஆனால் தொழுகைகள் என்று பன்மையாகக் கூறப்படுவதுடன் நடுத் தொழுகை பற்றி தனியாகக் கூறப்படுவதால் நடுத் தொழுகையை நீக்கி விட்டுக் குறைந்தது மூன்று இருந்தாக வேண்டும்.
    பன்மையையும் கவனிக்க வேண்டும்; நடு என்ற சொல்லையும் கவனிக்க வேண்டும். இப்படி இரண்டையும் ஒரு சேரக் கவனிக்கும் போது ஐந்து வேளைத் தொழுகை உண்டு என்பதை அறியலாம்.
    அதிக விபரத்திற்கு 226, 361 ஆகிய குறிப்புகளையும், 30:17,18 வசனங்களையும் காண்க!
    _________

    குரானில் ஐந்து வேளை தொழுகை நேரடியாக குறிப்பிடவில்லை.மறைமுகமாக குறிப்பிடுகிற‌து என்றே இந்த விளக்கம் கூறுகிறது.தொழுகைகள் பன்மை என்றாலும் ஐந்து என்று ஹதிதின் உதவியின்றி கூற முடியாது அல்லவா?
    ____

    பி.ஜே பல விஷ்யங்களில் என் கருத்துக்கு ஒத்து போகிறார்.குரானில் குறிப்பிடாதவற்ரை ,உங்களின் இன்னொரு புனித நூலாக நீங்கள் கருதும் ஹதிதில் இருப்பதை பின் பற்றுவது உங்கள் உரிமை,விருப்பம்.
    ______

    1.விண்வெளி பயணம் பற்றி இந்த மனதில் கண்ட காட்சி என்று எதை சொல்கிறீர்கள் என்று தெளிவாக சொல்லி விடுங்கள்.

    2.வில்லின் இருமுனை அளவு திரு முகமதின் அருகில் வந்தவர் யார்(குரான் அல் நஜிம் 53.9)

    புஹாரி 7517
    _____
    அங்கு சர்வ வல்லமை படைத்தவனும் கண்ணியத்தின் அதிபதியுமான (இறை)வன், வில்லின் இரண்டு முனையளவு அல்லது அதைவிட மிக அருகில் நெருங்கி வந்தான்…
    ____________
    குரான் 53 அல் நஜிம்(நட்சத்திரம்)
    53:6. (அவர்) மிக்க உறுதியானவர்; பின்னர் அவர் (தம் இயற்கை உருவில்) நம் தூதர் முன் தோன்றினார்.
    53:7. அவர் உன்னதமான அடி வானத்தில் இருக்கும் நிலையில்-
    53:8. பின்னர், அவர் நெருங்கி, இன்னும், அருகே வந்தார்.
    53:9. (வளைந்த) வில்லின் இரு முனைகளைப் போல், அல்லது அதினும் நெருக்கமாக வந்தார்.
    ________________________

     
  3. நாங்க நேர வாயில் சாப்பிட்டு பழக்கமில்லாதவர்கள் என்பது போல் ஐந்து வேளை தொழுகை பற்றிய விளக்கம் இருக்கிறது, ஆனால் குரானில் எல்லாம் தெளிவா இருக்குன்னு புருடா விட்டுகிட்டே இருக்காங்களே ஏன்!?

     
  4. இஸ்லாத்தில் அய்ந்து அடிப்படை கடமைகளில் அய்வேளை தொழுகையும் ஒன்று, அதக்கூட ஒழுங்காக உறுதியாக குழப்பமில்லாமல் தெளிவாகச் சொல்லத் தெரியாதவன் அனைத்தும் அறிந்தவனா? ஞானமுள்ளவனா? ஞானசூன்யமா?

    1. sankar ////விண்வெளி பயணமே மனதில் கண்ட காட்சியா?
      இல்லை பூத உடலோடு வானங்களுக்கு சென்றது நிஜம். சொர்க்கம் ,நரகம் மட்டும் காட்சியா?
      நபிகளை பார்த்ததும் காட்சியா?அல்லது தெளிவாக கூற முடியாதா?////
      தெளிவாகவே கூறியுள்ளேன் .மீள் பார்வை [செங்கொடி வாசிப்பதன் விளைவு] செய்க .
      ஐந்து நேர தொழுகைஇகு ஆதாரமாக‌
      நிங்கள் சொன்ன இரு வசனங்களையும் திரு பி.ஜேவின் மொழி பெயர்ப்பிலேயே பார்ப்போம்.
      ////பி.ஜே பல விஷ்யங்களில் என் கருத்துக்கு ஒத்து போகிறார்.குரானில் குறிப்பிடாதவற்ரை ,உங்களின் இன்னொரு புனித நூலாக நீங்கள் கருதும் ஹதிதில் இருப்பதை பின் பற்றுவது உங்கள் உரிமை,விருப்பம்///.
      சங்கர் தீடிரென்று கோமாளி வேஷம் போடுவது ஏன்? நாங்கள் எப்போதும் குர்ஆனை மட்டுமே பின் பற்றுவோம் என்று கூறினோம்.?
      எங்களது பழைய அமைப்பின் பெயரே குர்ஆன் ஹதீத் இயக்கம் என்பதே

       
    2. ரபி //// ஒழுங்காக உறுதியாக குழப்பமில்லாமல் தெளிவாகச் சொல்லத் தெரியாதவன் அனைத்தும் அறிந்தவனா? ஞானமுள்ளவனா? ஞானசூன்யமா///
      குட்டையை குழப்பி மீன் பிடிப்பவர்களுக்கு மட்டுமே குழப்பமாக தெரியும். ஞானமுள்ளவர்களுக்கு எளிதாக புரியும்

       
    3. பன்னியை எவ்வளவுதான் குளிப்பாட்டி சுத்த படுத்தினாலும் மீண்டும் சாக்கடையில்தான் விழும்.
      பன்னி யார் ?அதை அலைய விட்டு வேடிக்கை பார்ப்பது யார்?

       
    4. நண்பர் இப்ராஹிம்,

      முடிவுக்கு வந்து விடுவோம்.

      1.விண்வெளி பயணம் என்பது மனதில் கண்ட காட்சி. இதற்கு மேல் விளக்கம் கிடையாது.

      2.குரானில் குறிப்பிடாத அல்லது நேரடியாக கூறப்படாத விஷயங்களை(உ.ம் 5 நேர தொழுகை,வெள்ளி ஜுமா தொழுகை,2.5 % ஜகாத்,சுன்னத்…) ஹதிதில் இருந்து பின் பற்றுகிறீர்கள்.

      தோழரின் குரான்,மற்றும் ஹதிது மீதான கட்டுரைகளின் மீள்பார்வையின் போது மீண்டும் உரையாடுவோம்.

      நன்றி.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

  1. மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள போராட்டம் சவுதிக்கும் நிச்சயம் வரும்.சவுதியில் ஜனநாயகம் வந்து விட்டால் ,பிறகு சவுதி வஹாபியம் பேசும் இஸ்லாமைய மத பெருமிதம் காணாமல் போய்விடும்.

     
  2. //யாரிடம் புருடா? அல்லாஹின் அருளிலால்தான் நடந்தது என்றுதான் முகம்மதே சொல்கிறார்//

    நீங்கள் கூறிய விஷயம் பல ஹதிதுகளில் கூறப்பட்டு உள்ளது.

    3895. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
    “நான் உன்னைக் கனவில் இரண்டு முறை கண்டேன். உன்னைப் பட்டுத் (துணியின்) துண்டு ஒன்றில் (முக்காடிட்டபடி) கண்டேன். எவரோ, ‘இது உங்கள் மனைவி தான்; (முக்காட்டை) நீக்கிப்பாருங்கள்’ என்று கூற, (நானும் அவ்வாறே பார்த்தேன்.) அது நீயாகவே இருக்கக் கண்டேன். அப்போது நான், ‘இது (நீ எனக்கு மனைவியாவது) அல்லாஹ்வின் தரப்பிலிருந்து (விதிக்கப்பட்டு) உள்ளதெனில் அதை அவன் நடத்தி வைப்பான்’ என்று சொல்லிக் கொண்டேன்” என்று நபி(ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள்.
    Volume :4 Book :63
    5078. ஆயிஷா(ரலி) அறிவித்தார்
    (என்னிடம்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (நான் உன்னை மணப்பதற்கு முன்னால்) இரண்டு முறை உன்னை நான் கனவில் கண்டேன். ஒருவர் (உடைய தோற்றத்திலிருந்த வானவர்) உன்னை ஒரு பட்டுத் துண்டில் எடுத்துச் செல்கிறார். அப்போது அவர் ‘இவர் உங்கள் (வருங்கால) மனைவி” என்று கூறினார். உடனே நான் அந்தப் பட்டுத் துண்டை விலக்கிப் பார்க்கிறேன். அதில் இருந்தது நீதான். அப்போது நான் (என் மனத்திற்குள்) ‘இக்கனவு அல்லாஹ்வின் தரப்பிலிருந்து வந்ததாயின், இதனை அல்லாஹ் நனவாக்குவான்” என்று சொல்லிக்கொண்டேன்.
    Volume :5 Book :67
    5125. ஆயிஷா(ரலி) அறிவித்தார்
    என்னிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘இரண்டு முறை உன்னை நான் கனவில் கண்டுள்ளேன். ஒரு வானவர் உன்னைப் பட்டுத் துணியொன்றில் எடுத்துச் செல்கிறார். அப்போது அவர், ‘இவர் உங்கள் (வருங்கால) மனைவி” என்று கூறினார். உடனே நான் அந்தப் பட்டுத் துணியை விலக்கிப் பார்த்தேன். அதில் இருந்தது நீதான். அப்போது நான் (என் மனத்திற்குள்) ‘இக்கனவு அல்லாஹ்வின் தரப்பிலிருந்து வந்ததாயின், இதனை அல்லாஹ் நனவாக்குவான்” என்று சொல்லிக்கொண்டேன். 65
    Volume :5 Book :67
    _
    நண்பர் நிலா ஜைனப்பின் திருமணம் குரானிலேயே கூறப்பட்டு உள்ளது.
    _
    33:37. (நபியே!) எவருக்கு அல்லாஹ்வும் அருள் புரிந்து, நீரும் அவர் மீது அருள் புரிந்தீரோ, அவரிடத்தில் நீர்: “அல்லாஹ்வுக்குப் பயந்து நீர் உம் மனைவியை (விவாக விலக்குச் செய்து விடாமல்) உம்மிடமே நிறுத்தி வைத்துக் கொள்ளும்” என்று சொன்ன போது அல்லாஹ் வெளியாக்க இருந்ததை, மனிதர்களுக்குப் பயந்து நீர் உம்முடைய மனத்தில் மறைத்து வைத்திருந்தீர்; ஆனால் அல்லாஹ் அவன் தான், நீர் பயப்படுவதற்குத் தகுதியுடையவன்; ஆகவே ஜைது அவளை விவாக விலக்கு செய்துவிட்ட பின்னர் நாம் அவளை உமக்கு மணம் செய்வித்தோம்; ஏனென்றால் முஃமின்களால் (சுவீகரித்து) வளர்க்கப்பட்டவர்கள், தம் மனைவிமார்களை விவாகரத்துச் செய்து விட்டால், அ(வர்களை வளர்த்த)வர்கள் அப்பெண்களை மணந்து கொள்வதில் யாதொரு தடையுமிருக்கக் கூடாது என்பதற்காக (இது) நடைபெற்றே தீர வேண்டிய அல்லாஹ்வின் கட்டளையாகும்.

    1. மனிதநேயன் (மனிதநேயமாம்.. புன்னாக்கு)

      //அடுத்து முகமது நபியின் வழிப்பறி பற்றி ஏதாவது ஒரு ஆதாரம் கொடுக்க முடியுமா நண்பரே.//
      எவ்வளவு ஆதாரம் வேண்டும்?

      இந்தா வச்சிக்கங்க..
      /Whenever they heard of a Meccan caravan setting out for Syria, they intercepted it, and killed everyone they could get a hold of. They tore every caravan to pieces and took the goods.
      Ishaq:508, See Also Tabari VIII:91/


      So Muhammad began seizing their herds and their property bit by bit. He conquered home by home. The Messenger took some of its people captive, including Safiyah and her two cousins. The Prophet chose Safiyah for himself.
      Tabari VIII:116, See Also Ishaq:511


      The Banu Sahm of Aslam [newly recruited Muslim militants] came to the Messenger and complained, ‘Muhammad, we have been hurt by drought and possess nothing.’ Although they had fought for the Prophet they found he had nothing [he was willing] to give them. The Apostle said, ‘O Allah, You know their condition—I have no strength and nothing [I want] to give them [from the booty I have stolen]. So conquer for them the wealthiest of the Khaybar homes, the ones with the most food and fat meat.’
      Tabari VIII:117

      Since the Hawazin and Thaqif had marched with their women, children, and flocks, Allah granted them as booty to His Messenger, who divided the spoils among those Quraysh who had recently embraced Islam.
      Tabari IX:3

      Narrated Ibn ‘Umar that the Prophet (SA) said, “My livelihood is under the shade of my spear,(1) and he who disobeys my orders will be humiliated by paying Jizya”[1]
      Bukhari

      கஜ்வா என்றால் வழிப்பறி கொள்ளை. அதுதான் காரவான்கள் போகும் வழியில் காத்திருந்து தாக்கி அந்த வியாபார காரவான்களை கொள்ளையடித்து முகம்மதுவும் மற்றவர்களும் பங்கு போட்டுக்கொள்வது.

      அரபியர்களிடம் அடகு வைத்த மூளையை திரும்பப்பெற முயற்சி செய்யவும்.

      இந்த மாதிரி ஒரு ஆள் என்கிட்ட கடவுள் வந்து பேசினார் என்று ரீல் விட, அதனை நீங்க நம்பிக்கிட்டு இருக்கிரதுக்கு நாண்டுகிட்டு சாகலாம்

      கொஞ்சம் கூட வெட்கமே இல்லையா உங்களுக்கு?

       
    2. புளுகும்நேயன் (??)

      //இந்த நூற்றாண்டில்உங்கள் மதத்தில் விதவைகள் ஒதுக்கி வைக்க படும் பொது ஆயிரத்து நானூறு வருடங்களுக்கு முன்னால் விதவை திருமணத்தை சிரத்து என வலியுறுத்தி தன்னுடைய வாழ்கையிலும் நடைமுறை படுத்தி காட்டிய முகமது நபியின் நீங்கள் சிந்தித்தால் எங்கள் முன்னோர்கள் இஸ்லாத்தை தழுவியது போல் நீங்களும் மாறலாம் //

      அடக்கண்றாவியே. இந்த பொய்யை இன்னும் எவ்வளவு காலம் சொல்லப்போகிறீர்கள்? கதீஜா பிராட்டிக்கு மூன்றாவது கணவர் முகமம்து. கதீஜா பிராட்டியின் முதல் கணவர் இறந்ததும் இரண்டாவது கணவரை கல்யாணம் செய்துகொணார். இந்த விதவை திருமணத்துக்கும் முகம்மதுவுக்கும் என்ன சம்பந்தம்? கதீஜா பணக்காரர். அவரிடம் வேலை பார்த்தவர் இவர். சரி பணக்கார பெண் தன்னை கல்யாணம் பண்ணிகொள்கிறாரே என்று இரண்டாவது செத்ததும் மூன்றாவதாக கல்யாணம் பண்ணிகொள்கிறார். இதில் என்னவோ அதுவரைக்கும் விதவா விவாகமே நடக்காதது போலவும் இவர்தான் ஆரம்பிது வைத்தார் போலவும் புளுகுவது ஏனோ?

      முஸ்லீம்கள் என்னவேண்டுமானாலும் பொய் சொல்லலாம் என்று முகம்மது சொன்னதை எங்களிடமே போட்டு பார்க்கிறீர்களா?


      முகம்மதுவை பலர் பொய்யர் என்றும் இட்டுக்கட்டுபவர் என்றும் கூறுகிறார்கள் என்பது குரானிலேயே இருக்கிறது. வசனம் வேண்டுமா?

      சொன்ன வாக்கு மீறலாம் என்று முகம்மதுவே சொல்வது
      bu Huraira reported: A person sat late in the night with Allah’s Apostle (may peace be upon him), and then came to his family and found that his children had gone to sleep. His wife brought food for him. but he took an oath that he would not eat because of his children (having gone to sleep without food) He then gave precedence (of breaking the vow and then expiating it) and ate the food He then came to Allah s Messenger (may peace be upon him) and made mention of that to him, whereupon Allah’s Messenger (may peace he upon him) said: He who took an oath and (later on) found something better than that should do that, and expiate for (breaking) his vow.
      Sahih Muslim 15:4052
      Abu Huraira reported Allah’s Messenger (may peace be upon him) as saying: He who took an oath and then found another thing better than (this) should expiate for the oath (broken) by him and do (the better thing).
      Sahih Muslim 15:4053
      Abu Huraira reported Allah’s Messenger (may peace be upon him) as saying: He who took an oath and (later on) found another thing better than that, he should do that which is better, and expiate for the vow (broken by him).
      Sahih Muslim 15:4054
      This hadith is narrated on the authority of Suhail with the same chain of transmitters (with these words): “He should expiate for (breaking) the vow and do that which is better.”
      Sahih Muslim 15:4055
      ‘Adi reported Allah’s Messenger (may peace be upon him) as saying: When anyone amongst you takes an oath, but he finds (something) better than that he should expiate (the breaking of the oath), and do that which is better.
      Sahih Muslim 15:4058
      Abd al-Rahman b. Samura reported that Allah’s Messenger (may peace be upon him) said to me: Abd al-Rahman b. Samura, don’t ask for authority for if it is granted to you for asking for it, you would be commissioned for it (without having the support of Allah), but if you are granted it without your asking for it. You would be helped (by Allah) in it. And when you take an oath and find something else better than that, expiate for (breaking) your oath, and do that which is better. This hadith has also been transmitted on the authority of Ibn Farrukh.
      Sahih Muslim 15:4062
      Muslims often claim lying in Islam is restricted to its use in war, but in the following hadiths, Muhammad permits a Muslim to lie in order to kill Ka’b ibn al-Ashraf, a Jewish poet who wrote an anti-Muslim poem which offended him.

      “Narrated Jabir : The Prophet said, ‘Who is ready to kill Ka’b bin Ashraf (i.e. a Jew).’ Muhammad bin Maslama replied, ‘Do you like me to kill him?’ The Prophet replied in the affirmative. Muhammad bin Maslama said, ‘Then allow me to say what I like.’ [i.e. to lie]. The Prophet replied ‘I do (i.e. allow you).’”
      Sahih Bukhari 4:52:271
      பொய் சொல்ல முகம்மது கொடுக்கும் ஆணை
      “Narrated Jabir : The Prophet said, ‘Who is ready to kill Ka’b bin Ashraf (i.e. a Jew).’ Muhammad bin Maslama replied, ‘Do you like me to kill him?’ The Prophet replied in the affirmative. Muhammad bin Maslama said, ‘Then allow me to say what I like.’ [i.e. to lie]. The Prophet replied ‘I do (i.e. allow you).’”
      Sahih Bukhari 4:52:271



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

  1. முகம்மது செய்த வழிப்பறி கொள்ளைகளையெல்லாம் போர்கள் என்று புளுகுவது இஸ்லாமிஸ்டு முல்லாக்களின் வழக்கம். ஆகவே நீங்கள் இதனை நிச்சயம் போர் என்று சொல்வீர்கள் என்று நன்றாக தெரியும்,.

    /Whenever they heard of a Meccan caravan setting out for Syria, they intercepted it, and killed everyone they could get a hold of. They tore every caravan to pieces and took the goods.
    Ishaq:508, See Also Tabari VIII:91/

    உங்களுக்கு ஆங்கிலம் தெரியுமா என்று தெரியவில்லை. மேலே படிக்கவும்.

    தபரி, இஷாக் ஆகியோர் எழுதியவற்றை படிக்காதவர்களிடம் வேண்டுமானால் நீங்கள் புளுகுவது சரியாக இருக்கும். அவரது வரலாற்றை எழுதிய பல புத்தகங்களில் மிக ஆதிகால புத்தகங்கள் உட்பட, எல்லாவற்றிலும் அவர் மெக்காவிலிருந்து செல்லும் வியாபார காரவான்களை கொள்ளையடித்துத்தான் பிழைப்பு நடத்தினார் என்பது நன்றாகவே தெளிவாகவே பதியப்பட்டுள்ளது.

    வியாபார காரவான்களை கொள்ளையடிப்பது போர் அல்ல. அதன் பெயர் வழிப்பறி கொள்ளை.
    போர் என்றால் ஆயுதம் உள்ள எதிரிகளை ஆயுதம் உள்ளவர்கள் சந்தித்து போர் புரிவதுதான் போர்.

    இப்பொதும் முகம்மதுவின் வழியை பின்பற்றி சோமாலியா வழியாக போகும் வியாபார கப்பல்களை சோமாலிய முஸ்லீம்கள் கொள்ளையடிக்கிறார்கள். அதனை யாரும் போர் என்று சொல்வதில்லை. கடல் கொள்ளையர்கள் என்றுதான் சொல்கிறார்கள்.

    இரண்டாவது போரின் போது குழந்தைகளையும் பெண்களையும் கொல்லக்கூடாது என்பது மனித குலத்தின் மிக ஆதாரமான விதி. அது முகம்மது கொண்டுவந்ததல்ல. ராமாயணத்திலும் மகாபாரதத்திலும் கூட பெண்களையும் குழஃந்தைகளையும் கொன்றதாக பார்க்கமுடியாது. அதுமட்டுமல்ல, நாகரிக மனிதனின் வாடையே படாத பழங்குடிகளிலும் கூட பெண்களையும் குழந்தைகளையும் கொல்வது கேவலமானது பேடித்தனமானது.

    ஆனால், முகம்மதுவே இதனை முதலில் உடைக்கிறார்.

    பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதை ஆதரிக்கிறார். அவர்களும் அவர்களைச் சார்ந்தவர்களே என்று சான்றிதழ் கொடுத்து அவர்களை கொல்வதையும் அனுமதிக்கிறார். ஆதாரம் வேண்டுமா?

    ”இணைவைப்போரான எதிரி நாட்டினரின் பெண்களும் சிறுவர்களும் சேதமடையும் பட்சத்தில் அவர்கள் மீது இரவு நேரத்தில் தாக்குதல் நடத்தலாமா?” என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. ”அவர்களும் அவர்களைச் சார்ந்தவர்களே” என்று பதிலளித்தார்கள். (நூல்கள் – புகாரி, 3012. முஸ்லிம், 3589, 3590)

    முஸ்லிம் நூலில் இடம்பெற்றுள்ள மற்றோர் நபிவழிச் செய்தியில்,

    ”குதிரைப் படையினர் இரவு நேரத்தில் திடீர் தாக்குதல் நடத்தும்போது இணைவைப்பாளர்களின் குழந்தைகளும் பாதிக்கப்பட்டுவிடுவார்களே?” என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு ”அக்குழந்தைகளும் அவர்களின் தந்தையரைச் சார்ந்தவர்களே” என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். (முஸ்லிம், 3591)

    ஆகவே புளுக வேண்டாம்.
    முகம்மதுவை பின்பற்றித்தான் ரெட்டை கோபுரம், ரயில் நிலையங்கள், தீபாவளி சந்தை ஆகிய இடங்களில் காபிர்களின் குழந்தைகளையும் பெண்களையும் இஸ்லாமியர்கள் கொல்கிறார்கள்.

    இதெல்லாம் ஒரு மதம். வெட்கமே இல்லையா உங்களுக்கு?

     
  2. புளுகளின் மொத்த உருவமே உமக்கு குர்ஆன் எது ஹதீத் கிதாப் எது என்பதே தெரியவில்லை நீர் முகம்மது பற்றி சொன்ன குற்ற சாட்டுகள் என்ன ? எடுத்துவைத்த ஹதிகளுக்கும் அதற்கும் என்ன தொடர்பு உள்ளது கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியாமல் உளறுவது எல்லை கடந்து விட்டது நீவிர் பதில் சொல்லதெரியாமல் மற்றவர்களை குறை சொல்லுவதற்கு என்ன யோக்கியதை உள்ளது உமது லட்சியம் பதில் சொல்லுவதில் இல்லை .பள்ளிவாசலில் குண்டுவைக்கவேண்டும் ,பிறகு முஸ்லிம்கள் கோயிலில் குண்டுவைப்பார்கள் அதை காரணம் காட்டி பெரிய கலவரத்தை உருவாக்கி ஹிந்துத்துவாவை வளர்க்கவேண்டும் என்ற பாணியிலே தங்களின் நடவடிக்கை உள்ளது முகலாயர் ஆட்சியில் சாதி கொடுமை வந்தது என்றால் முஸ்லிம்களிடம் இல்லாத சாதி கொடுமை ஏன் இந்துக்களிடம் இன்னும் உள்ளது?உமது நச்சுத்தன்மையை புரிய முடிகிறது உம்மை இங்கே அடையாளம் காட்டவே இதுவரை தொடர்ந்த விவாதன்கால் இனி உமது தவறுகளை சுட்டிகாட்டினால் வரம்பு மீருதல் கடுமையாக இருக்கும் . வேண்டாம்

     

    முஸ்லீம்களிடம் ஜாதிக்கொடுமை இல்லை என்பது நீங்களாக கற்பனை செய்துகொள்வது. அரபியாவில் அடிமைமுறை ஜாதிமுறையை விட கேவலமானது. 1960இல் சவுதி அரேபியாவில் இருந்த அடிமை சந்தை பற்றியும் அதில் அடிமைகளில் ஓலத்தை பற்றியும் ஏராளமானவர்கள் எழுதியிருக்கிறார்கள்.

    இன்னமும் அரபியாவில் tribes களில் மேல் ஜாதி கீழ்ஜாதி உண்டு. மேல்ஜாதி பெண்ணை திருமணம் செய்த கீழ்ஜாதி ஆணுக்கு கட்டாய விவாகரத்து வழங்கப்பட்டது. அது 2006இல் தான். ஆதாரம் வேண்டுமா?

    http://archive.arabnews.com/?page=1&section=0&article=90212&d=20&m=12&y=2006&pix=kingdom.jpg&category=Kingdom

    பாத்திமா என்ற உயர்ஜாதி பெண் மன்சூர் அல்திமானி என்ற கீழ்ஜாதி ஆணை திருமணம் செய்ததை பெண்ணின் சகோதரர்கள் வழக்கு போட்டு நீதிபதியும் அத விவாகத்தை ரத்து செய்தார்.
    இது 2006இல்தான்.

    நீங்கள் சொல்கிறீர்கள் இஸ்லாமில் ஜாதி கிடையாது என்று.

    அறிவுக்கொழுந்து சங்கர்,

    //இன்னும் புத்த இராமயனத்தில் இராமனும்,சீதாவும்,அண்னன் தங்கை தெரியுமா?. ஜைன் இராமாயண்த்தில் 8000 மனைவிகள்.//

    இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது. இஸ்லாமிய ராமாயணம் என்று கூட ஒன்று இருக்கிறது தெரியுமா.?

    அதில் இன்னும் பல கூத்துகள் இருக்கின்றன.
    http://thamilislam.wordpress.com/2008/03/16/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/

    என்சாய்!



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

  1. இப்ராஹிம்,
    முகம்மது ஆறு வயது குழந்தையை கற்பழித்தது பாலியல் வன்முறை.

    தன் மருமகளை கவர்ந்து அவளை புணர்ந்தது பாலியல் குற்றம்

    முஸ்லிம் ஆண்கள் அடிமைப்பெண்களோடு உறவுக்கொள்ளலாம். ஆனால், அடிமை ஆண்களோடு முஸ்லிம் பெண்கள் உறவுகொள்ளக்கூடாது என்று தடுத்தது ஆணாதிக்கம்.

    வழிப்பறி கொள்ளைப்பொருள்களில் தனக்கு ஐந்தில் ஒரு பங்கு என்று எடுத்துகொள்வது தனியுடமை.

    எல்லாம் கூட்டி கழிச்சி பாருங்க. சரியா வரும்.

     
  2. நாங்கள் உங்களுக்கு வேண்டிய செல்வம் தந்துவிடுகிறோம் ,நீங்கள் மக்காவில் பெரும் செல்வந்தராகிவிடலாம் .நீங்கள் விரும்புகிற பெண்ணை உங்களுக்கு மணம் முடித்து வைக்கிறோம்,நாங்கள் உங்களைப் பின்பற்றி நடக்க தயாராக இருக்கிறோம் .நீங்கள் எங்கள் கடவுள்களை குறை கூறுவதை விட்டுவிட வேண்டும் எனும் எங்கள் கோரிக்கையை ஏற்று கொள்ளவேண்டும் .என்று முகம்மது நபி[ஸல்] அவர்களிடம் வற்புறுத்தப் பட்டபோது அதை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை .தனது கடவுள் கொள்கையில் உறுதியாக இருந்தார் .ஏன் ?நீங்கள் கூறுவதைப் போல் பொன்னாசை .பெண்ணாசை என்று இருந்தால் எளிதாக கிடைப்பதை பெற்றிருப்பார்களே.ஏன் போரிட்டு பெறவேண்டும்?

    மேலும் குழந்தைப் பருவத்திலே பெற்றோரை இழந்த தனது வாலிப பருவத்தில் கண்ணியக் குறைவாக நடந்ததாக அவரது எதிரிகள் கூட கூறவில்லை .அவர்கள் தனது நபித்துவத்தை அறிவிக்கும் முன் வரை நபி[ஸல்] அவர்களை முழுமையாக உண்மையாளாராக நம்பினார்கள்
    அடுத்து பாலியல் குற்றங்களுக்கும் திருட்டுக்கும் கடும் விமரசனத்திர்க்குரிய கடுமையாம சட்டங்கள சொல்லியிருப்பதன் மூலம் அவரது எண்ண ஓட்டங்களை அறிய முடிகிறது. காங்கிரஸ் அரசு வந்தால் சட்டங்கள் .திட்டங்கள் எப்படி இருக்கும் ?கம்யுனிச ஆட்சி வந்தால் ,சங்க பரிவார் ஆட்சி வந்தால் எப்படியிருக்கும் என்பதை நாம் எதை வைத்து அறிகிறோமோ ,அதைப்போல் குர் ஆன்கூறும் சட்டங்களின் மூலம் நபி[ஸல்] அவர்கள் எப்படி இருந்திருப்பார்கள் என்பதை யூகிக்க முடியாத? போரில் பொருட்களை கைப்பற்றுவது எதிரிகளின் பொருளாதரத்தை வலுவிழக்க செய்வதுடன் ஆயுதங்கள் இல்லாமார் செய்யவேண்டும் என்பதற்க்காகவே அமெரிக்க இராக்கின் எண்ணெய்யை பகிரங்க திருட்டுக்கு எண்ண பெயர் சொன்னார்கள் ?பேரழிவு ஆயுதம் என்று எமாற்றியதைப்போல் அல்ல.
    .
    அரபுநாட்டில் அந்தசமயத்தில் பெண்கள் பத்து வயதில் தாயாராகவும் இருபத்தொரு வயதில் பாட்டியாகவும் ஆனார்களே ,இது எவ்வாறு நடந்தது? ஆயிசா அவர்கள் ஒன்பது வயது ஆன் பிறகே பருவம் அடைந்தார்கள் அதன் பின்னே அவர்களுடன் இல்வாழ்க்கை நடத்தினார்கள் என்பதை அறிந்தும் மீண்டும் ஆறு வயது என்று ஏன் கூற வேண்டும்?வக்கிரபுத்தியின் உக்கிரமா?
    தனது ஒரே மகளுக்கு கூட சல்லிகாசு வைக்காமல் தனக்குரியதை அரசுடமை யாக்கி சென்ற ஒருமாமனிதரைப்பற்றி மனம் போன போக்கில் எழுத அஞ்ச வேண்டாமா?
    அரபு ஆண்களின் காம உணர்வுகளுக்கு ஒரு பெண் தீர்வாக மாட்டார் .மேலும் ஆளுமை என்னும் ஆணாதிக்கத்தை குரான் ஆண்களுக்கே வழங்கியுள்ளது.

     
  3. நான் அதை படித்து பாருங்கள் என்று நழுவவில்லை .காவிய நாயகரை பற்றி இன்னும் அதிகமாக கேட்க விரும்பவில்லை

     
  4. //ஆயிசா அவர்களை மணப்பதற்கு முன் முகம்மது அவர்கள் இருமுறை கனவு கண்டதாகவும்,அக் கனவு இறைவனிடமிருந்து வந்த‌தால்தான் மணமுடித்தது போலவும் சொல்லப்பட்டிருக்கிறது//

    இல்லற வாழ்க்கை அந்தரங்க விசயங்கள் என்பது அவரவர்களின் சொந்த விருப்பத்திற்கு உட்பட்டது அதை நான் விமர்சிக்க விரும்பவில்லை. இருப்பினும் இதை ஒரு சாதாரண மனிதர் செய்திருந்தால் அக்காலத்தில் இது ஒரு பெரிய விசயமே அல்ல, அரியாத காலம் என விட்டுவிடலாம். ஆனால் ஒரு இறைவன் என்கிற அனைத்தும் அறிந்தவன் என்று பறைசாற்றுகின்றவன் இதை கூறினான் என்பதும்,அதிலும் தான் தேர்வு செய்த தூதருக்கு சிறுமியை மணமுடித்து வைத்து,பிழையான முன்மாதிரியாக்கியது கடவுளின் தவறா இல்லையா? இது நபித்துவம் பெருவதற்கு முன் நடந்திருந்தால் பேசுவதற்கு இடமில்லை.

     
  5. இப்ராஹிம்,

    அறுபது வயதான ஒருவர் ஒன்பது வயது சிறுமியோடு உடல் உறவு கொண்டால், இந்தியாவில் கைது செய்வார்கள். சொல்லபோனால், நாகரிகமடைந்த எல்லா நாடுகளிலும் கைது செய்வார்கள். அப்போது அந்த கிழவர் இப்படி சொல்கிறார் என்று வைத்துகொள்வோம்.
    நான் இளைஞனாக இருந்தபோது பலர் எனக்கு பெண்களை கொடுக்க முன்வந்தார்கள். நான் வேலையில் மும்முரமாக இருந்ததால், நான் அந்த பெண்களை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. இப்போது எனது தொழில் காரணமாக பணக்கார்னாக ஆகிவிட்டேன். ஆகவே நான் ஒன்பது வயது சிறுமியோடு உடல் உறவு கொண்டேன் இதில் என்ன தவறு? ஆகவே என்னை தண்டிக்கக்கூடாத் என்று சொன்னால் நீங்கள் என்ன சொல்வீர்கள்?

    ஆனால் அதே ஆள் முகம்மது நபி என்றால் நீங்கள் எபப்டி உளற ஆரம்பிக்கிறீர்கள் என்று பாருங்கள்.

    ஒரு சமயம் அவர் அழகிய முன்மாதிரி என்று சொல்கிறீர்கள். அவரது முன்மாதிரி எல்லா காலங்களுக்கும் பொருந்தும் என்பீர்கள். ஆனால், ஆயிஷா நாயகியை ஆறுவயதில் திருமணம் செய்து ஒன்பது வயதில் உறவுகொண்டாலும் அதற்கு முன்னர் தொடை வேலை செய்திருக்கிறார். அதெல்லாம் அந்த கால வழக்கம் என்று எங்களிடம் சொல்கிறீர்கள்.

    ஆனால் முஸ்லீம் பெரும்பான்மை ஆனதும், அதுவே சட்டமாகிவிடும். அப்போது மீண்டும் அவர் அழகிய முன்மாதிரி ஆகிவிடுவார். இதன் பெயர் அல்தக்கியா.

    Muhammad placed his penis between the thighs of Aisha and he massaged it to orgasm since he could not have sexual intercourse with her until she was nine.

    [edit]Fatwas
    Praise be to Allah and peace be upon the one after whom there is no [further] prophet.
    After the permanent committee for the scientific research and fatwahs (religious decrees) reviewed the question presented to the grand Mufti Abu Abdullah Muhammad Al-Shemary, the question forwarded to the committee by the grand scholar of the committee with reference number 1809 issued on 3/8/1421 (Islamic calendar). The inquirer asked the following:

    It has become wide spread these days, and especially during weddings, the habit of mufa’khathat of the children (mufa’khathat literally translated means “placing between the thighs” which means placing the male member between the thighs of a child). What is the opinion of scholars knowing full well that the prophet, the peace and prayer of Allah be upon him, also practiced the “thighing” of Aisha – the mother of believers – may Allah be please with her.

    After the committee studied the issue, they gave the following reply:

    It has not been the practice of the Muslims throughout the centuries to resort to this unlawful practice that has come to our countries from pornographic movies that the kufar (infidels) and enemies of Islam send. As for the prophet, peace and prayer of Allah be upon him, thighing his fiancée Aisha. She was six years of age and he could not have intercourse with her due to her small age. That is why [the prophet] peace and prayer of Allah be upon him placed his [male] member between her thighs and massaged it softly, as the apostle of Allah had control of his [male] member not like other believers.[14][15]
    See Also [16] [17] [18] [19]
    “It is not illegal for an adult male to ‘thigh’ or enjoy a young girl who is still in the age of weaning; meaning to place his male member between her thighs, and to kiss her.”
    Ayatu Allah Al Khumaini’s, “Tahrir Al wasila,” p. 241, issue number 12

     
  6. \\\\\ முகம்மது ஆறு வயது குழந்தையை கற்பழித்தது பாலியல் வன்முறை.
    தன் மருமகளை கவர்ந்து அவளை புணர்ந்தது பாலியல் குற்றம்
    முஸ்லிம் ஆண்கள் அடிமைப்பெண்களோடு உறவுக்கொள்ளலாம்.
    ஆனால், அடிமை ஆண்களோடு முஸ்லிம் பெண்கள்
    உறவுகொள்ளக்கூடாது என்று தடுத்தது ஆணாதிக்கம் \\\\\

    எத்தனையோ முறை முகமது நபி ஆயிஷா நாயகியுடன் ஒன்பது
    வயதில் தான் குடும்ப வாழ்க்கை நடத்தினார் என்று விளக்கிய
    பின்னாலும் விளங்காதது போல் எழுதி கொண்டிருக்கும் நிலாவே ,
    முதல் இரண்டு வரிகளிலும் நீங்கள் குறிப்பிட்டது உங்களுடைய RSS
    வெறித்தனத்தின் வெளிப்பாடு.
    மூன்றாவது வரியில் குறிப்பிட்டது உங்களுடைய அறியாமையின்
    வெளிப்பாடு. ஒரு பெண் ஒரு ஆணோடு தான் உறவு கொள்ளலாம் என்பது
    தான் இஸ்லாமிய மற்றும் உலக பொது விதி. இதில் இந்து மதத்தில் உள்ள சில
    சாதிகள் மட்டும் தான் விதி விலக்கு. ஏனெனில் ஒரு ஆண் பல பெண்களுடன் உறவு
    கொண்டாலும் பிறக்கும் குழந்தை அவனுடையது என்று எளிதாக கூறி விடலாம்.
    ஆனால் ஒரு பெண் பல ஆண்களுடன் உறவு கொண்டால் பிள்ளையின் அப்பன்
    யார் என்று என்று எளிதாக கண்டு பிடிக்க முடியாது. அது போல் விஞ்ஞான
    ரீதியாகவும் ஒரு பெண் பல ஆண்களோடு உறவு கொள்ளும் பொது
    தான் எய்ட்ஸ் போன்ற நோய்களும் பரவுகிறது. அதே வேளையில்
    ஒரு ஆண் அவனுக்கு மட்டுமே உரிய பல பெண்களுடன் உறவு
    கொண்டாலும் எந்த நோயும் வருவதில்லை.

    இரண்டாவது அடிமைகளை அந்தஸ்தாக கருதிய அரபு நாட்டிலே
    அடிமைத்தனத்தை ஒழிப்பதற்காக அடிமை பெண்ணை அவளுடைய
    ஆண்டான் மட்டும் உறவுகொள்ளலாம் என்று வரைமுறை விதித்து
    அதன் மூலம் பிறக்கும் குழந்தைகளை அடிமைகள் என கருத
    கூடாது என்று சட்டம் போட்டு இஸ்லாம் அடிமைத்தனத்தை
    ஒளித்தது. இதில் அடிமை பெண் ஒரு ஆணுக்கு மட்டும் தான்
    மனைவியாக இருக்க முடியும் என்பதை உணர்ந்து கொள்ள
    வேண்டும் . இப்போது நீங்கள் சிந்திக்க வேண்டாம் . எப்போதாவது நீங்கள்
    போதையில் இல்லாத சமயமாக பார்த்து சிந்திக்கவும். சில ஆங்கில
    வார்த்தைகளை எங்கிருந்தோ காப்பி செய்து அதை இங்கு பேஸ்ட் செய்து
    விட்டு ” உங்களுக்கு ஆங்கிலம் தெரியுமா என்று ” என்னிடம் நிலா ஒருமுறை
    போதையில் இருக்கும் போது கேட்டிருந்தார். இப்படி காப்பி செய்து அதை
    பேஸ்ட் செய்வதற்கு நிலாவுக்கு ஒருவேளை இப்போது தான் தெரியும் என்று
    நினைக்கிறேன். எனக்கு இருபது வருடத்திற்கு முன்பே அது தெரியும் . முதலில்
    உனக்கு ஆங்கிலம் தெரியும் என்றால் முதலில் அதன் அர்த்தங்களை தமிழில் எழுது .

    நண்பர் இனியவன் ,

    ஆயிஷா நாயகியும் அவரை பெற்ற அபூ பக்கர் சித்திக் ரலி அவர்களும் அந்த திருமணத்தில் சந்தோசம் அடைந்திருக்கும் போது உங்களுக்கு ஏன் இவ்வளவு கவலை என்று புரியவில்லை . அந்த காலத்தில் சிறிய வயதில் திருமணம் செய்யும் பக்குவத்தை பெண்கள் அடைந்திருந்தனர். அது போல் ஆண்களும் அதிக வயது வரை தாம்பத்தியத்தில் ஈடுபடும் சக்தியை பெற்றிருந்தனர் என்பது அந்த கால மக்களின் வரலாறுகளில் இருந்து நமக்கு அறிய முடிகிறது.

    இப்படிக்கு

    மனிதநேயன்

    1. //நாங்கள் உங்களுக்கு வேண்டிய செல்வம் தந்துவிடுகிறோம் ,நீங்கள் மக்காவில் பெரும் செல்வந்தராகிவிடலாம் .நீங்கள் விரும்புகிற பெண்ணை உங்களுக்கு மணம் முடித்து வைக்கிறோம்,நாங்கள் உங்களைப் பின்பற்றி நடக்க தயாராக இருக்கிறோம் .நீங்கள் எங்கள் கடவுள்களை குறை கூறுவதை விட்டுவிட வேண்டும் எனும் எங்கள் கோரிக்கையை ஏற்று கொள்ளவேண்டும் .என்று முகம்மது நபி[ஸல்] அவர்களிடம் வற்புறுத்தப் பட்டபோது அதை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை .தனது கடவுள் கொள்கையில் உறுதியாக இருந்தார் //

      எப்போது,யார் இவையெல்லாம் முகமதுவிற்கு தருவதாக கூறினார்?

      ஆதாரம் அளிக்கவும்.

       
    2. புளுகுநேயன்,
      //ஒரு பெண் ஒரு ஆணோடு தான் உறவு கொள்ளலாம் என்பது தான் இஸ்லாமிய மற்றும் உலக பொது விதி. இதில் இந்து மதத்தில் உள்ள சில சாதிகள் மட்டும் தான் விதி விலக்கு. //
      http://en.wikipedia.org/wiki/Polyandry

      இதில் எத்தனை இந்து ஜாதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன என்று கூறுங்கள்.
      தெற்கு அரேபியாவில் ஏன் இன்னமும் பல கணவர் மணம் இருக்கிறது என்று கூறுங்களேன்.

       
    3. முகமது மெக்காவில் இருந்தவரை அவரை யாரும் மதித்ததாக குரான் கூறவில்லை.அவரை ,பொய்யன்,பைத்தியம்,சூனியக்காரன்,சூனியம் வைக்கப்பட்டவர் என்றே கூறினர்.
      கதிஜா கணவர் ,அபுதாலிப்பின் உறவினர் என்ற இரு காரணங்களினால் உயிர் பிழைக்க முடிந்தது.அதனால் இருவரின் மரணத்திற்கு பின் மதினாவிற்கு தப்பி ஓடிவிட்டார்.மெக்கா காலம் முழுவதும் அவருடைய கொள்கைகளை ஏற்றுக் கொண்டவர்கள் மிக குறைவே.
      குரானில் சில வசன‌ங்கள் அவர் மீது என்ன மதிப்பு இருந்தது என்பதை காட்டும் வண்னம் அளிக்கிறேன்.

      7:184. அவர்கள் சிந்திக்கவில்லையா? (நம் தூதராகிய) அவர்களுடைய தோழருக்கு எவ்வித பைத்தியமுமில்லை. அவர் பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவரேயன்றி வேறில்லை.

      15:6. (நினைவூட்டும்) வேதம் அருளப் பட்ட(தாகக் கூறுப)வரே! நிச்சயமாக நீர் பைத்தியக்காரர்தான் என்றும் கூறுகின்றனர்.

      23:25. “இவர் ஒரு பைத்தியக்கார மனிதரேயன்றி வேறில்லை; எனவே இவருடன் நீங்கள் சிறிது காலம் பொறுத்திருந்து பாருங்கள்” (எனவும் கூறினர்

      38:4. அன்றியும் தங்களிடமிருந்தே அச்சமூட்டி எச்சரிப்பவர் தங்களிடம் வந்ததைப் பற்றி ஆச்சரியமடைந்தனர்; “இவர் ஒரு சூனியக்காரப் பொய்யர்!” என்றும் காஃபிர்கள் கூறினர்

      11:7. மேலும், அவன்தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான் அவனுடைய அர்ஷு நீரின் மேல் இருந்தது. உங்களில் யார் அமலில் (செய்கையில்) மேலானவர் என்பதைச் சோதிக்கும் பொருட்டு (இவற்றைப் படைத்தான்; இன்னும் நபியே! அவர்களிடம்) “நிச்சயமாக நீங்கள் மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவீர்கள்” என்று நீர் கூறினால், (அதற்கு அவர்களிலுள்ள நிராகரிப்பவர்கள்) காஃபிர்கள், “இது தெளிவான சூனியத்தைத் தவிர வேறில்லை” என்று நிச்சயமாகக் கூறுவார்கள்.

      11:12. (நபியே! நம் வசனங்களை அவர்கள் செவிமடுப்பதில்லையே எனச் சடைந்து) வஹீ மூலம் உமக்கு அறிவிக்கப்பட்டவற்றில் சிலவற்றை விட்டுவிட எண்ணவோ, “அவர் மீது ஒரு பொக்கிஷம் இறக்கப்பட வேண்டாமா? அல்லது அவருடன் ஒரு மலக்கு வர வேண்டாமா?” என்று அவர்கள் கூறுவதினால் உம் இதயம் (சஞ்சலத்தால்) இடுங்கியிருக்கவோ கூடும்; நிச்சயமாக நீர் அச்சமூட்டி எச்சரிப்பவரேயன்றி வேறில்லை; அல்லாஹ் எல்லா பொருட்களின் மீதும் பொறுப்பாளனாக இருக்கிறான்

      17:47. (நபியே!) அவர்கள் உமக்குச் செவி சாய்த்தால், என்ன நோக்கத்துடன் செவி சாய்க்கின்றார்கள் என்பதையும் அவர்கள் தமக்குள் இரகசியமாக ஆலோசனை செய்யும் போது, “சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதரையே அன்றி (வேறெவரையும்) நீங்கள் பின்பற்றவில்லை” என்று (தங்களுக்குள்) அந்த அநியாயக்காரர்கள் சொல்வதையும் நாம் நன்கறிவோம்.

      17:48. (நபியே!) உமக்கு அவர்கள் எத்தகைய உவமைகளைச் சொல்கிறார்கள் என்பதை கவனித்துப்பாரும்! ஆகவே, அவர்கள் வழிகெட்டு விட்டார்கள்; (நேரான) வழிக்கு அவர்கள் சக்திப்பெற மாட்டார்கள்.

      25:4. “இன்னும்; இது (அல் குர்ஆன்) பொய்யேயன்றி வேறு இல்லை; இதை இவரே இட்டுக்கட்டிக் கொண்டார்; இன்னும் மற்ற மக்கள் கூட்டத்தாரும் இதில் அவருக்கு உதவிபுரிந்துள்ளார்கள்” என்றும் நிராகரிப்பவர்கள் கூறுகின்றனர்; ஆனால் (இப்படிக் கூறுவதன் மூலம்) திடனாக அவர்களே ஓர் அநியாயத்தையும், பொய்யையும் கொண்டு வந்துள்ளார்கள்

      25:7. மேலும் அவர்கள் கூறுகிறார்கள்: “இந்த ரஸூலுக்கு என்ன? இவர் (மற்றவர்களைப் போலவே) உணவு உண்கிறார்; கடை வீதிகளில் நடக்கிறார். இவருடன் சேர்ந்து அச்சமூட்டி எச்சரிப்பதற்காக, ஒரு மலக்கு (வானவர்) அனுப்பப்படடிருக்க வேண்டாமா?

      25:8. “அல்லது இவருக்கு ஒரு புதையல் அளிக்கப்பட்டிருக்க வேண்டாமா? அல்லது அதிலிருந்து உண்பதற்கு (ஒரு பழத்)தோட்டம் உண்டாயிருக்க வேண்டாமா?” (என்றும் கூறுகின்றனர்;) அன்றியும், இந்த அநியாயக் காரர்கள்; (முஃமின்களை நோக்கி) “சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதரையேயன்றி, வேறெவரையும் நீங்கள் பின்பற்றவில்லை” என்றும் கூறுகிறார்கள்..

      28:48. எனினும் (இப்பொழுது) நம்மிடமிருந்து சத்திய(மார்க்க)ம் அவர்களிடம் வந்த போது, “மூஸாவுக்குக் கொடுக்கப்பட்டது போன்று இவருக்கு ஏன் கொடுக்கப்படவில்லை” என்று கேட்கிறார்கள்; இதற்கு முன்னர், மூஸாவுக்குக் கொடுக்கப்பட்டதையும் அவர்(களின் மூதாதையர்)கள் நிராகரிக்க வில்லையா? இன்னும் அவர்கள் கூறுகிறார்கள்: (திருக் குர்ஆனும், தவ்ராத்தும்) “ஒன்றையொன்று உறுதிப்படுத்தும் இரண்டு சூனிய(மந்திர)ங்களே!” என்று; இன்னும் அவர்கள் கூறுகிறார்கள்: “நிச்சயமாக நாங்கள் (இவை) அனைத்தையும் நிராகரிக்கிறோம்” என்று.

      51:52. இவ்வாறே, இவர்களுக்கு முன்னிருந்தவர்களிடம் (நம்) தூதர்களிலிருந்து ஒருவர் வரும் போதெல்லாம், அவர்கள் (அவரை) சூனியக்காரர், அல்லது பைத்தியக்காரர் என்று கூறாமல் இருந்ததில்லை.

      54:2. எனினும், அவர்கள் ஓர் அத்தாட்சியைப் பார்த்தால், (அதைப்) புறக்கணித்து விடுகிறார்கள்; “இது வழமையாக நடைபெறும் சூனியம் தான்” என்றும் கூறுகிறார்கள்

      ஹதிதுகளில் எதிரிகளும் முகமதுவை புகழ்வது போல் ஹதிதுகளை காட்ட முடியும்.இது அபு சுஃபியான் ரோம அரசர் ஹிராக்ளியஸ் இடம் கூறியது.

      2681. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
      அபூ சுஃப்யான்(ரலி) என்னிடம் கூறினார்:
      (ரோம மன்னர்) ஹிராக்ளியஸ் என்னைப் பார்த்து, ‘உம்மிடம், ‘அவர் (முஹம்மது – ஸல்) எதையெல்லாம் கட்டளையிடுகிறார்?’ என்று கேட்டேன். நீர், ‘அவர் தொழுகை தொழும்படியும், வாய்மையையும் நல்லொழுக்கத்தையும் கைக் கொள்ளும் படியும், ஒப்பந்தத்தையும், வாக்குறுதியையும் நிறைவேற்றும்படியும், நம்பி ஒப்படைக்கப்பட்ட அடைக்கலப் பொருளைச் சரிவரப் பாதுகாத்துத் திரும்பத் தரும்படியும் கட்டளையிடுகிறார்’ என்று சொன்னீர். இதுதான் ஓர் இறைத்தூதரின் பண்பாகும்” என்று கூறினார்.
      Volume :3 Book :52

      _______

      குரானில் அக்கால மெக்காவாசிகள் முகமதுவை கடிந்துரைத்த வசனங்கள் எதற்காக குரானில் இடம் பெற்றன? குரானில் முகமதுவை அவர்க்ள் மதித்தனர் என்பதற்கு ஆதாரம் இல்லையென்றே நினைக்கிறேன்.

      அருளாளனின் அடிமை அவர்களே,
      //நபிகள் நாயகம் செய்ததால் நாங்கள் தாடி வைக்கிறோம், தொப்பி அனிகிறோம், உட்கார்ந்து சிறுநீர் கழிக்க்றோம் என்று. சரி தான் எங்கள் தலைவர்(நபிகள் நாயகம்) சொல்லித்தந்த வழிமுறையில் .//
      நீங்கள் 25 முதல் 30 வயது உட்படவரயிருந்தால் 25வயது வாலிபர் ஒருவர் 40 வயது விதவையை மணமுடிக்கவேண்டும் என்ற நபி வழியின் படி நீங்களும் 40 வயது பெண்ணை (விதவை அல்லது மணவிலக்கு பெட்ரவர் அல்லது கொடுத்தவர் ) மணமுடியுங்கள்.அல்லது உங்கள் 10 வயது மகளையோ , சகோதரியையோ 50 வயதான ஒருவருக்கு மணமுடித்து கொடுங்கள். அப்போழ்து நாங்கள் நம்புகிறோம் . நீங்கள் உண்மையில் நபிவழியை கடைபிடிப்பவர் என்று. இருப்பினும் நாங்கள் அந்த இள வயது பெண்ணின் கோணத்தில் இருந்து ஆராய்வோம். ( இதில் செங்கொடி உட்பட கடவுள் மறுப்பாளர் எவறேனுக்கும் மருப்ரிந்தால் தெரிவிக்கவும்.இங்கு பன்மைஇலேயே குறிப்பிட்டு இருக்கிறேன் )



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 


உலகம் தட்டை என்று அரபி மொழியை தாய்மொழியாக கொண்ட ஈராக்கியர் குரானின் அடிப்படையில் அரபி மொழியிலேயே விளக்குகிறார்.

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=wppjYDj9JUc

 அவர் குரானின் அடிப்படையில், குரானில் இப்படி சொல்லியிருக்கிறது, ஹதீஸில் இப்படி சொல்லியிருக்கிறது. ஆகவே உலகம் தட்டை என்றுதான் குரான் சொல்லுகிறது



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard