மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்
1.31 கோடி மகளிருக்கு மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசு எவ்வளவு பணம் தேவைப்படுகிறது.
அதற்கு அரசுக்கு உள்ள வழிகள் என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம். மாதம் 2500 ரூபாய் வழங்க வேண்டும் என்றால் அரசுக்கு 30 ஆயிரம் கோடிக்கு மேல் பணம் தேவைப்படும். அவ்வளவு தொகையை அரசால் திரட்டுவது சாத்தியம் மிக குறைவு... அரசு தற்போதைய நிலையைவிட கூடுதலா 23,580 ஆயிரம் கோடி தேவைப்படும். மதுபானங்கள் விலை உயர்வு, வணிக வரி ஏய்ப்பு தடுப்பு, டாஸ்மாக் முறைகேடுகள் தவிர்ப்பு என ஓரளவு வழிகள் உள்ளன. அதேநேரம் அரசு 50 வயதிற்குமேல் உள்ளவர்களுக்கு 2500 ரூபாயும், அதற்கு கீழ் உள்ளவர்களுக்கு 1500 ரூபாயும் வழங்குவது ஓரளவு சாத்தியமானது ஆகும். இதுபற்றி பார்ப்போம்.
மாதம் ரூ.1,000 வழங்கும் போது ஆண்டுச் செலவு சுமார் ரூ.15,720 கோடியாகும் (1.31 கோடி பெண்களுக்கு). இதனை மாதம் ரூ.2,500 ஆக உயர்த்தினால் ஆண்டுச் செலவு: ரூ.39,300 கோடியாகும். தமிழக அரசு இந்த நிதியாண்டில் 15,720 கோடி ஒதுக்கி உள்ளது. இன்னும் கூடுதலாக 23,580 கோடி ரூபாய் தேவைப்படும். தற்போதைய நிலையில் அரசுக்கு உள்ள வாய்ப்பு என்றால் மதுபானங்கள் விலையை உயர்த்துவது தான். குவாட்டருக்கு 20 ரூபாய் உயர்த்தினால் அரசுக்கு சராசரியாக 20 கோடி ரூபாய் லாபம் கிடைக்கும். ஒரு நாளைக்கு ஒரு கோடி மதுபாட்டில்கள் சராசரியாக அரசுக்கு விற்பனையாகின்றன. குவாட்டருக்கு 20 ரூபாய் உயர்த்தினால் அரசுக்கு ஒரு வருடத்திற்குச் கூடுதலாகச் சுமார் 7,300 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும்.
மீதமுள்ள தொகை 15 ஆயிரம் கோடியில் ஓரளவு திரட்டவும் சில வாய்ப்புகள் உள்ளன. அவற்றையும் பார்ப்போம். அரசு அண்மையில் கொண்டுவந்துள்ள சீர்திருத்தங்கள் மூலம், மதுபான ஆலைகளிடம் இருந்து பெறப்படும் கூடுதல் கட்டணங்கள் மற்றும் MRP-க்கு மேல் விற்கப்படுவதைத் தடுப்பதன் மூலம் ஆண்டுக்குச் சுமார் ரூ.3,600 கோடி வரை முறைகேடுகள் தடுக்கப்பட்டு அரசு கஜானாவிற்கு நேரடியாகச் செல்லும் சூழல் ஏற்படும் என்று கூறியுள்ளது. அந்த வகையில் ஒட்டுமொத்தமாக 10800 கோடி வரை அரசால் ஈட்ட முடியும். இந்த 10 ஆயிரம் கோடி பணம் தான் அரசால் மக்களிடம் வலிக்காமல் எடுக்கக்கூடிய வரிமுறையாகும். மற்ற வகையில் வரிகளை ஏற்றினால் மக்கள் கொந்தளித்துவிடுவார்கள் என்பதால், அரசுக்கு உள்ள பெரிய வாய்ப்பு மதுபானங்கள் விலை உயர்வு தான்.
அடுத்ததாக மத்திய அரசிடமிருந்து வர வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை முறையாகப் பெறுவதும் ஓரளவு அரசின் இழப்பை ஈடுகட்ட வழிவகுக்கும். அதேபோல் வணிக நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்வதைத் அதிநவீன தொழில்நுட்பங்கள் மூலம் கண்காணித்து தடுத்தால் ஆண்டுக்கு ரூ.5,000 கோடிக்கு மேல் கூடுதல் வரி திரட்டிவிட முடியும்.
நான்காவதாக தாது மணல், கிரானைட் மற்றும் ஆற்று மணல் குவாரிகளை அரசே நேரடியாக, வெளிப்படையான முறையில் ஆன்லைன் ஏலம் மூலம் நடத்தினால், இடைத்தரகர்கள் இல்லாமல் அரசுக்கு ஆண்டுக்குச் சுமார் ரூ.3,000 - ரூ.5,000 கோடி வரை கூடுதல் வருவாய் கிடைக்கும். இந்த மூன்று வழிகள் மூலமாக மட்டுமே சுமார் 18 ஆயிரம் கோடிக்கு மேல் பணம் திரட்டிவிட முடியும்.
இதனை வைத்து சுமார் ஒரு கோடிக்கும் அதிகமானோருக்கு 2500 ரூபாய் கொடுத்துவிட முடியும். அதேநேரம் இன்னும் சில மாற்று வழிகள் உள்ளன. 50 வயதிற்கு மேல் உள்ள பெண்களுக்கு 2500 ரூபாயும், அதற்கு கீழ் 21 முதல் 49 வயது வரை உள்ள பெண்களுக்கு 1500 ரூபாயும் வழங்கினால் அரசு ஓரளவு நிதிசுமையில் இருந்து தப்பிக்க முடியும். அதிக மருத்துவச் செலவுகளும், உழைக்க முடியாத சூழலும் கொண்ட 50 வயதிற்கு மேல் உள்ள முதிர்ந்த பெண்களுக்கு மாதம் 2,500 ரூபாயும், ஓரளவிற்குச் சுயதொழில் அல்லது வேலைக்குச் செல்ல வாய்ப்புள்ள 21 முதல் 49 வயது வரை உள்ள பெண்களுக்கு மாதம் 1,500 ரூபாயும் வழங்கினால், அரசுக்கு சுமார் 10 ஆயிரம் கோடி அளவிற்கு தேவை குறையும்.
ஏனெனில் 1.31 கோடி பயனாளிகள் அனைவருக்கும் நேரடியாக 2,500 ரூபாய் வழங்குவதற்குத் தேவைப்படும் 39,300 கோடி ரூபாயோடு ஒப்பிடும்போது, இந்த உத்தியின் மூலம் அரசுக்கு ஆண்டுக்குச் சுமார் 10,000 கோடி ரூபாய் வரை நிதிச்சுமை மிச்சமாகும். அத்துடன் வயதான பெண்களுக்குக் கூடுதல் பாதுகாப்பு தருவதோடு, அரசின் கஜானாவையும் திவாலாகாமல் தடுக்க முடியும்.