New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பொங்கல் - பொங்கல் விழா


Guru

Status: Offline
Posts: 24601
Date:
பொங்கல் - பொங்கல் விழா
Permalink  
 


கல்தோன்றி மண் தோன்றா காலத்திற்கே முன் தோன்றிய மூத்த குடி தமிழ் குடி என்பதில் இருந்தே தமிழ் மக்களின் நீண்ட நெடிய வரலாற்றை தெரிந்து கொள்ளலாம். அந்த அடிப்படையில் தமிழ் மக்கள் கொண்டாடும் திருவிழாவே பொங்கல் பண்டிகையாகும்.
பொங்கல் என்பது உணவின் பெயர். பொங்குதல் என்பதன் வினைப்பெயரே பொங்கல்.
பொங்கு என்ற சொல் கொதித்தல், மிகுதல், சமைத்தல், செழித்தல் எனப் பொருள்படும். பொங்குவதால் பொங்கல். பொங்கல் என்ற சொல்லுக்கு கொதித்தல், மிகுதல், சமைத்தல், மற்றும் செழித்தல் என என்ற பல பொருள் உண்டு.
பொங்கல் பண்டிகையை தைப்பொங்கல், உழவர் திருநாள், தமிழர் திருநாள், அறுவடை திருநாள், தைத்திருநாள் என்று பல பெயர்களில் அழைக்கிறோம்.
பண்பாட்டின் மக்கள் விழாவாகவே பொங்கல் ஒளிர்விட்டுப் பிரகாசிக்கிறது. தமிழகத்தில் வேளாண்மையின் வளர்ச்சியோடும் பேரரசுகளின் வளர்ச்சியோடும் மிகுந்த தொடர்புடைய தாகவே பொங்கல், தமிழ் மக்களின் பண்பாடாக மலர்ந்தது. பொங்கல் விழா காலப் போக்கில் பல வளர்ச்சிகளைக் கடந்து வந்துள்ளது. தமிழகம் முழுவதுமான விவசாயிகளின் ஒற்றுமையை வளமைப் பண்பாட்டை ஒரே சமயத்தில் வெளிப்படுத்தும் வகையில் பொங்கல் திருவிழா உருக் கொண்டது.
தமிழரின் மனிதநேய பண்பாட்டுத் திருவிழா பொங்கல் திருவிழா. உழவர் சமூகத்தின் வளமைத் திருவிழா. பொங்கல் தமிழரின் வாழ்வோடும் வளத்தோடும் செழித்த உயரிய பண்பாட்டின் வெளிப்பாடே பொங்கல். எந்த மத வரையறைக்குள்ளும் அடங்காத வேளாண்மை வாழ்வின் உற்பத்தி சார்ந்த வளமைச் சடங்குகளின் தொகுப்பே பொங்கல். இது தமிழர் கலாச்சாரத்தை உலகுக்கு உணர்த்தும் ஒரு உன்னத திருநாள். இது வேளாண்மையை அடிப்படையாக கொண்ட விவசாய திருநாள்.
தமிழர்கள் உட்பட இந்திய உபகண்ட மக்களின் உணவுத் தேவைகளை நெல்லே அதிகம் பூர்த்தி செய்துள்ளது. நெல்லை, மக்கள் பெரும்போகத்தின் (மானாவாரி) போதே அதிகம் பயிருடுகின்றனர். காரணம் பெரும்பாலும் அவர்களை மழையை எதிர்பார்த்து இப்பயிர் செய்கையை ஆரம்பிப்பதால். இலங்கை மற்றும் தென்னிந்தியா வாழ் தமிழ் மக்கள் வடகீழ் பருவப் பெயர்ச்சிக் காற்றின் மூலமே அதிக மழை வீழ்ச்சியைப் பெறுவதால் புரட்டாசி தொடங்கி மார்கழி வரையான மாரி காலத்தை உள்ளடக்கி நெல்லினைப் பயிருட்டு ஏறத்தாழ தை மாதத்தில் அறுவடை செய்து கொள்கின்றனர்.
சங்க அரசனுடைய பிறந்தநாள் கொண்டாட்டத்தில் வரப்புயர என்கின்ற வார்த்தையைச் சொல்லி வாழ்த்தினார் அவ்வையார். வரப்புயர சொல் எப்படி அரசனுடைய உயர்வுக்கு காரணமாக இருக்கும் என்று புலவர்கள் கேட்க, முழுப்பாடலையும் சொன்னார். அது விவசாயத்தை முக்கியத்துவத்தையும் அதை காக்க வேண்டிய அரசாங்கத்தின் கடமையும் எடுத்துக்காட்டுவதாக அந்த பாடல் அமைந்தது.
“வரப்புயர நீருயரும்
நீருயர நெல்லுயரும்
நெல் உயர குடி உயரும்
குடி உயர கோன் உயரும்”
‘வயலே! நெல்லின் வேலி நீடிய கரும்பின்
பாத்திப் பன் மலர் பூத்த’ - எனப் பாடியுள்ளார். அகநானூற்றுப் பாடலில் நக்கீரர்.
“கள் ஆர் உவகைக் கலிமகிழ் உழவர்
காஞ்சி அம் குறுந்தறி குத்தி, தீம்சுவை
மென்கழைக் கரும்பின் நன் பல மிடைத்து
பெருஞ்செய் நெல்லின் பாசவல் பொத்தி”
என்று நெல்லும் கரும்பும் சுவைத்து மகிழ்ந்த ஊரின் செழுமையை சிறப்பித்துப் பாடியுள்ளார். வருடத்துக்கு எத்தனை நாள்களோ, அத்தனை வகைகள் நெல்லுக்கு இருந்தன என்று பறைசாற்றுகின்றது தமிழ்ப் பழமொழி. இந்த நெல்லை அறுவடை செய்யும் நாள்தான் தைத்திருநாள். அந்த நாளே அறுவடைத்திருநாள் என்றும் போற்றப்படுகின்றது.
இந்த நாளில் தமிழர்களின் இறைவனான சூரியனுக்கு நன்றி செலுத்துவர். ஆற்று ஓரப் பகுதியில் இருக்கும் விவசாய நிலத்தில் வருடத்தில் மூன்று முறை அறுவடை செய்வார்கள், ஆனால் மானாவாரி இடங்களில் மழை பெய்யும் காலங்களில் மட்டுமே விவசாயம் செய்வார்கள். அந்த வகையான நிலங்களில் வருடத்தில் ஆடி மாதத்தில் விதை விதைத்து மார்கழி மாதத்தில் அறுவடை செய்வார்கள். அவ்வாறு அறுவடை செய்த தானியங்களை வைத்து, புதுப்பானையில் பொங்கல் வைத்து பூஜை செய்வர்.
உழவர் திருநாள் என்று போற்றப்படும் இந்த பொங்கல் பண்டிகைகள் தமிழகத்தில் மொத்தம் நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. பொங்கலுக்கு முதல் நாள் போகிப் பொங்கல், தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என நான்கு தினங்கள் கொண்டாடப்படுகிறது.
நெற்பயிர் என்பது சூரிய ஒளியைக் கொண்டு அதன் இலைகளில் உள்ள பச்சையயுருமணிகள் எனும் கலப் புன்னங்கத்ததில் நடக்கும் ஒளித்தொகுப்பு எனும் செயற்பாட்டின் மூலம் சூரிய ஒளிச்சக்தியை இரசாயணசக்தியாக (குளுக்கோஸ் மற்றும் மாப்பொருள்) மாற்றுகிறது. நெல் மணியை அரிசியாக்கி அந்த மாப்பொருளையே நாம் உணவாக்கிக் கொள்கின்றோம். அந்த மாப்பொருளே எமது உடலியக்கத்துக்கு அவசியமான சக்தியின் பிரதான முதலாக உள்ளது.
இதனடிப்படையில்தான் தைத் திங்களில், பயிர் விளைநிலங்களில் நல்ல விளைச்சலைப் பெற்ற மகிழ்ச்சியில் மக்கள் உழவர் திருநாளை புதுத்தானியங்கள் கொண்டு பொங்கலிட்டு சூரியனுக்கு நன்றிசெலுத்தி, உறவுகளுக்கு உணவு பரிமாறி, பாரம்பரிய பொழுதுபோக்கு விளையாட்டுக்களை நடத்திக் கொண்டாடுகின்றனர்.
தை முதல் நாளை மையமாகக் கொண்டு, வேளாண்மை ஆண்டு தொடங்கப்பட்டு அறுவடைத் திருவிழா கொண்டாடப்பட்டது.
புறநானூற்றுப் பாடலிலும், பரிபாடலிலும் பொங்கல் விழா குறிப்பிடப்படுகிறது.
“ஏற்றுக உலையே! ஆக்குக சோறே'' (புறம் 172)
எனும் புறநானூற்றுப் பாடலின் அடி, பொங்கல் விழாவின் தொடக்க கால நிலையை நினைவு கூர்கிறது.
`பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும்' இலட்சியத்தினை வெளிப்படுத்தும் திருவிழாவாகச் சங்க காலத்தில் பொங்கல் விழா சிறப்புற்று விளங்கியது. தங்கள் உழைப்பின் பயனை, அறுவடை செய்து உழவர்கள் வீட்டில் கொண்டு வந்து குவித்தனர்.
புதியதாகக் கொண்டு வந்த செந்நெல்லைப் பொங்கலாக்கிப் பலரோடும் சேர்ந்து பகுத் துண்ணும் திருநாளாக அக்காலத்தில் `பொங்கல் திருநாள்' பொலிவுற்றது. இதனை முந்துவிளையனார் “நாள் புதிது உண்ணும்'' திருநாளாகவே அக்கால அறிஞர்கள் போற்றி உள்ளனர்.
 


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

கூடல் மாநகரில், புலவர் பெருமக்கள் பலர் கூடிப் புதிய இலக்கியப் படைப்புகளைச் சுவைத்து மகிழ்ந்ததைப் புலவர் ஒருவர், உழவர் பெருமக்கள் கொண்டாடும் “புதிதுண்ணும் திருவிழாவாக'' உருவகப்படுத்தியுள்ளமை இக்கருத்தைத் தெளிவுறுத்துகிறது.
“செதுமொழி சீத்த செவி செறுவாக
முதுமொழி நீராப் புலனாவுழவா
புதுமொழி கூட்டுண்ணும் புரசைசூழ் நல்லுர்'' (கலித். 68)
நெற்பல பொலிக! பொன்பெரிது சிறக்க!
விளைக வயலே! வருக இரவலர்!
பால்பல ஊறுக! பகடுபல சிறக்க!
பகைவர் புல்லார்க! பார்ப்பார் ஓதுக!
பசி இல்லாகுக! பிணிசேண் நீங்குக!
வேந்து பகைதணிக! யாண்டுபல நந்துக!
அறம்நனி சிறக்க! அல்லது கெடுக!
அரசுமுறை செய்க! களவு இல்லாகுக!
நன்றுபெரிது சிறக்க! தீது இல்லாகுக!
மாரி வாய்க்க! வளநனி சிறக்க!
வாழிய நலனே! வாழிய நிலனே! – (ஐங்குறுநூறு)
இந்தப் பாடலில் பொங்கல் என்று வரவில்லை என்றாலும், பொங்கல் அடையாளங்கள் அனைத்தும் விளங்கி வாழ்த்துக் கூறுவதைக் காண்கிறோம்
பொலி என்ற சொல்லுக்குப் பொருள் செழித்தல், மங்கலமாதல் வளமடைதல் என்பதாகும். பொலியிடுவது என்பது முதியோர் முதல் சிறார் வரை ஒன்று சேர்ந்து `பொலியோ பொலி’ எனக் கூடி ஒலி எழுப்புவது.
இவ்வாறு சங்ககாலத்தில் தொடங்கிய பொங்கல் விழா, காலப் போக்கில் வழிபடு தெய்வங்களுக்குச் செய்யப்படும் சடங்குகளோடு இணையலாயிற்று. பொங்கலைச் செய்து தெய்வங்களுக்குப் படைக்கும் வழக்கமும் தோன்றியது. இதனை,
“புழுக்கலும் நோலையும் விழுக்குடை மடையும்
பூவும் புகையும் பொங்கலும் சொரிந்து'' (சிலப். 5:68-69)
எனும் இளங்கோவடிகளின் வாக்கால் அறிகிறோம்.
பொங்கல்விழா காலப் போக்கில் பல வளர்ச்சிகளைக் கடந்து வந்துள்ளது.
தமிழகத்தில் வேளாண்மையின் வளர்ச்சியோடும் பேரரசுகளின் வளர்ச்சியோடும் மிகுந்த தொடர்புடையதா கவே, பொங்கல், தமிழ் மக்களின் பண்பாடாக மலர்ந்தது. தமிழகம் முழுவதுமான விவசாயிகளின் ஒற்றுமையை வளமைப்பண்பாட்டை ஒரே சமயத்தில் வெளிப்படுத்தும் வகையில் பொங்கல் திருவிழா உருக்கொண்டது.
தை முதல் நாளை மையமாகக் கொண்டு, வேளாண்மை ஆண்டு தொடங்கப்பட்டு அறுவடைத் திருவிழா கொண்டாடப்பட்டது.
‘தை நீராடல்’
----------------
சங்க இலக்கியங்களில், தை மாதம் முதல் நாள் நோன்பிருந்து நீராடுவதை ‘‘தை நீராடல்” என்று மக்கள் அழைத்தனர். வைகை நதியில் அக் காலத்தில் மக்கள் நதி நீராடியதைப் பற்றிய பல குறிப்புகள் பரிபாடலில் உள்ளன.
“தைஇத்திங்கள் தண்கயம் படியும்” என்று நற்றிணை
“தைஇத் திங்கள் தண்ணிய தரினும்” என்று குறுந்தொகை
“தைஇத் திங்கள் தண்கயம் போல்” என்று புறநானூறு
“தைஇத் திங்கள் தண்கயம் போல” என்று ஐங்குறுநூறு
“தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ” என்று கலித்தொகை முதலிய இலக்கியங்களில் தை நீராடல் பற்றிய பல குறிப்புகள் இருக்கின்றன.
தை மாதத்தை சிறப்பித்துக் கூறியதோடல்லாமல் அம்மாதத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் பெண்கள் ‘தை நீராடல்’ என்னும் விழாவினை கொண்டாடியுள்ளமையும் காணக் கூடியதாக இருக்கிறது.
பல்லவர்களின் ஆட்சியின் போது, திருமணமாகாத பெண்கள் நாட்டின் விவசாய வளர்ச்சிக்காக நோன்பு இருந்தனர். இந்த நோன்பிற்கு தை நீராடல் அல்லது பாவை நோன்பு என்று பெயர். இது தமிழ் மாதமான மார்கழியில் அனுசரிக்கப்பட்டது. இந்த பண்டிகையின் போது, இளம் பெண்கள் நாட்டில் மழை வேண்டியும் மற்றும் விவசாயம் செழிப்புக்காக பிரார்த்தனை செய்தனர். மாதம் முழுவதும், அவர்கள் பால் மற்றும் பால் பொருட்களை தவிர்த்தனர். அவர்கள் தலைமுடிக்கு எண்ணெய் தடவ மாட்டார்கள், பேசும்போது கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்தனர்.
தை மாதத்தில் பாவை செய்து நீராடி வழிபடுவதே தை நீராடல் விழா. இதில் வழிபடப்படும் பாவை மண்ணால் செய்யப்படுவது. மண் என்பது நிலத்திற்கான குறியீடு. உற்பத்திக்கு ஆதாரமாகி வாழ்வளிக்கும் நிலத்தை வழிபடுவதே இவ்விழாவின் நோக்கம். பெண்கள் அதிகாலையில் நீராடினர். ஈரமணலில் செய்யப்பட்ட காத்யாயனி தேவியின் சிலையை வழிபட்டனர். தை மாதம் முதல் நாள் அவர்கள் பாவை நோன்பை முடித்தனர். இவ்விழாவில் பறை இசைத்து ஆடப்படும் குரவைக்கூத்து, வள்ளைக்கூத்து, உலக்கை இடித்து ஆடும் ஆட்டம் போன்றவை இடம் பெற்றன. இதற்கான சான்றுகள் சங்க இலக்கியங்களில் காணக் கிடைக்கின்றன.
“தைஇ நின்ற தண்பெயல் கடைநாள்
வண்டற் பாவைஉணர்ந்துறைத் தரீஇத்
திருநுதற் மகளில் குரவை அயரும்’’ (அகம்., பா.எ., 269)
அதாவது தைத் திங்களிலே குளிர்ந்த பெயலின் கடைப்பட்ட நாட்களிலே பொன்னாலாகிய காசுகளைத் தொடுத்து அணிந்த வண்டல் விளையாட்டிற்கு உரிய பாவையை அழகிய நெற்றியினையுடைய மகளிர், நீர் உண்ணும் துறையிலே கொண்டு வந்து வைப்பர். அப்போது அவர்கள் குரவைக் கூத்து ஆடுவர். இக் காலப் பகுதியிலே பெண்கள் பாவை நோன்பு என்னும் விரதத்தை கடைப்பிடித்ததும் எவ்வாறு என, மேற்கூறப்பட்டுள்ள புறநானுறுப் பாடல் வரிகளான “…தைஇத் திங்கள் ….” என்ற வரிகளில் தைமாத முழு நிலவு நாளே அவர்களது விரதம் முடித்து நுகர்ச்சி கொள்வதற்குரிய உகந்த நாளாகக் கூறப்படுள்ளது. அதாவது தைப்பூச நாள். பூச நட்சத்திரத்தில், முழு நிலா வரும் நாள் தான், தைப்பூசம்.
புதுநெல்லை அரிசியாக்கி தைப்பூசம் அன்றுதான் சமைப்பார்கள். அதைப் பொங்கலாகச் சமைப்பது பழைய மரபு. பொங்கலைத் தமிழில் நெய்ப் புழுக்கல் என்று சொல்வோம். நெய்யுடன் பாலோடு அமுதை சமைத்து அதனைத் தைப்பூச நாளன்று இறைவனுக்குப் படைத்து உண்பார்கள். இலங்கையில் 13 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சரஜதிமாலை என்ற தமிழ் நூலில் தை முதல் அறுவடைத் திருநாளாகவும், தைப்பூச நாளை நெய்யோடு புத்தரிசி பொங்கலைப் படைத்து வழிபாடு நடத்தும் நாளாகவும் குறிப்பிடுகிறார்கள். 15 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் பழைய மரபு மாறியிருக்கிறது.
பிறகு கதிர்களைக் குஞ்சமாக வைக்கோல் பிரியால் கட்டி வீட்டின் முன்பகுதியில் தொங்கவிடுவார்கள். அன்று தொடங்கி அந்த ஆண்டு முழுவதும் சிட்டுக்குருவிகளுக்கு அந்தக் கதிர்கள் உணவாகப் பயன்படும். தாங்கள் மட்டும் உண்பதோடு மட்டுமல்லாமல், அறுவடை நாளில் கொண்டுவருகிற கதிர்களைப் பறவை இனங்களுக்குக் கொண்டுவருகிற மரபு இருந்திருக்கிறது.
பொங்கல் என்ற பெயரே மிகவும் பிற்காலத்தில்தான் வந்திருக்கிறது. தை நீராடல் என்ற நடைமுறைதான் இருந்திருக்கிறது.
ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட நட்சத்திரக் கணத்துடன் சேர்ந்து முழுநிலவு சஞ்சரிக்க நேர்கிற நாளே அந்த மாதத்தின் பெளர்ணமி தினமாகும். எனவே, அந்த மாதத்தை அக்குறிப்பிட்ட நட்சத்திரக் கணத்தின் பெயரால் அழைத்தனர். எடுத்துக்காட்டாகத் துலா ராசியில் இடம்பெறுகின்ற சித்திரை நட்சத்திரக் கூட்டத்துடன் சேர்ந்து வானில் முழுமதி திகழ்கின்ற நாளை அடிப்படையாகக் கொண்டு, அம்மாதம் சித்திரை மாதமென வழங்கப்பட்டது. அதுபோன்றே புஷ்யம் (பூசம்) அல்லது திஷ்ய நட்சத்திரக் கூட்டம் வானில் சஞ்சரிக்கின்ற நாளில் அந்நட்சத்திரக் கூட்டத்துடன் சேர்ந்து முழுமதியும் சஞ்சரிக்கின்ற மாதம் பெளஷ்ய மாதம் அல்லது தைஷ்ய மாதம் எனப்பட்டது. தைஷ்ய மாதம் என்பதே தைஇய திங்கள் என்றும், தைஇத் திங்கள் என்றும் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பூச நட்சத்திரக் கணம் என்பது கடக ராசியில் இடம்பெறும் நட்சத்திரத் தொகுதியாகும். இத்தொகுதியில் மூன்று நட்சத்திரங்கள் அடங்கும். கிரேக்க மொழியில் அமைந்த வானநூல் குறிப்புகளில் இக்குழு Delta, Cancri எனப்படும். கடக ராசியிலிருந்து ஏழாவது ராசியாகிய மகர ராசியில் சூரியன் நின்று, மகர ராசியிலிருந்து 180 பாகைகள் தொலைவில் அமைந்துள்ள கடக ராசியில் இடம்பெற்றுள்ள திஷ்ய நட்சத்திரக் கூட்டத்துடன் நிலவு சஞ்சரிக்கிறபோது அந்நிலவினை நேரெதிர்ப் பார்வையால் பார்க்கின்ற நாளே தை மாத முழுநிலவு நாளாதலால் அந்நாளினை மகர ஞாயிற்றுப் பெளர்ணமி என்றும் குறிப்பிடுவதுண்டு. இது சூரியனை அடிப்படையாகக்கொண்ட செளரமானக் கணிதம் ஆகும். செளரமானக் கணிதத்தைவிட நிலவினையும் நட்சத்திரக்கணங்களையும் அடிப்படையாகக்கொண்ட சாந்திரமானக் கணிதமே பழமையானதாகும்.
புஷ்யம் அல்லது திஷ்ய நட்சத்திரத்துடன் முழுநிலவு சஞ்சரிக்கின்ற நாளில் ஆறுகளிலோ, குளங்களிலோ நீராடுவதென்பது புஷ்யஸ்நானம் அல்லது திஷ்யஸ்நானம் எனக் குறிப்பிடப்படும். இதுவே தைந்நீராடல் ஆகும். 12 மாதங்களிலும் திஷ்ய நட்சத்திரத்துடன் நிலவின் தேய்பிறைத் திதியோ, வளர்பிறைத் திதியோ ஏதாகிலும் ஒரு திதி நிகழ்கிற நாளில் நீராடுதல் ஒரு விசேடச் சடங்காகக் கடைப்பிடிக்கப்பட்டதென்றாலும், ஆண்டுக்கொரு முறை வருகிற முழுநிலவு நாளாகிய தைப்பூச நாளில் அவ்வாறு நீராடுவது மிகுந்த சிறப்புடன் கடைப்பிடிக்கப்பட்டது என்று தர்ம சாஸ்திர நூல்கள் கூறுகின்றன. குறிப்பாக, முழுமதியுடன் ஒரு மாதம் முடிவடைவதாகக் கணக்கிடப்பட்ட பூர்ணிமாந்தக் காலக் கணக்கீட்டினைப் பின்பற்றிய சமூகத்தவரிடையே மார்கழி மாத இறுதி நாளான மிருகஸ்ரீஷம் / மிருகசீரிஷம் நட்சத்திர நாளிலோ ஆதிரை நட்சத்திர நாளிலோ விரதம் தொடங்கி 30 நாள்கள் விரதம் கடைப்பிடித்து விரதத்தின் இறுதி நாளாக வருகிற தைமாத இறுதி நாளான தைப்பூச நாளில் நீராடி விரதத்தை முடிப்பதென்பது மிகுந்த சிறப்புடைய ஒரு சடங்காகக் கடைப்பிடிக்கப்பட்டது. குறிப்பாகப் பெண்டிர் இவ்விரதத்தை மிகுந்த கவனத்துடன் மேற்கொண்டனர் என அறிய முடிகிறது. பன்னிரு ராசிகளுள் நிலவின் ஆட்சி பெற்ற ராசி கடக ராசியாகும். கடக ராசியின் முதன்மையான நட்சத்திரக் கூட்டமாகிய திஷ்ய நட்சத்திரக் கூட்டத்தில் முழுமதி அமைகிற நாள் நிலவின் அதிகபட்சமான ஆற்றலை வழங்குகிற ஒரு நாளாகக் கருதப்பட்டதில் வியப்பில்லை. நிலவு நீரை ஆட்சி செய்கின்ற கோளாகவும், கடக (நண்டு) ராசி ஒரு நீர் ராசியாகவும் கருதப்படுவதால் திஷ்ய நட்சத்திர முழுமதி நாளில் மகளிர் நீராடல் சடங்கு நிகழ்த்துவது, அவர்களின் மனநலனுக்கும், குடும்ப நலன்களுக்கும் உகந்ததாகக் கருதப்பட்டது. திஷ்ய நட்சத்திர கணம் நீர்வளம், பயிர்வளம் ஆகியவற்றுடன் (அவற்றின் மூலமாகக் கன்று காலிகளின் பால் வளத்துடனும்) தொடர்புடையதாகக் கருதப்பட்டமையால் புஷ்யஸ்நானம் அல்லது தைந்நீராடல் என்பது செல்வச் செழிப்பின் உருவகமான குபேர வழிபாட்டு மரபில் முதன்மையான ஒரு நோன்பாக மேற்கொள்ளப்பட்டது.
பழமையான தர்மசூத்திர நூல்களுள் ஒன்றாகிய ஆபஸ்தம்ப தர்ம சூத்திரத்தில் (II: 8:20:3-9; 10-22) புஷ்யவிரதம் என்ற பெயரில் இந்நோன்பு குறிப்பிடப்படுகிறது. குறிப்பாக, உத்தராயனத்தில் சுக்லபட்சத்தில் ஓரிரவு விரதமிருந்து ஸ்தாலிபாகம் (தேன் கலந்த பாற்சோறு) சமைத்துக் குபேரனுக்குப் படைக்க வேண்டும் என்று குறிப்பு காணப்படுகிறது. ஹரிவம்சம் போன்ற பல நூல்களில் புஷ்யஸ்நானம் மிகவும் உயர்ந்த சாந்திச் சடங்காகக் குறிப்பிடப்படுகிறது.
உத்தராயனத்தில் (சூரியனின் வடதிசை நோக்கிய நகர்வுக் காலத்தில்) சுக்லபட்சத்தில் (வளர்பிறையில்) கடைப்பிடிக்கப்படும் புஷ்யவிரதம் என்பது தை மாதம் தொடங்கி ஆனி மாதம் வரை எந்த மாதத்திலும் வளர்பிறைக் காலத்தில் கடைப்பிடிக்கத்தக்கதே எனினும், தை மாதத்தில் கடைப்பிடிக்கப்படும் புஷ்யவிரதம் என்பது முழுநிலவுவுக்கு முதல் நாளில் அனுசரித்து மறுநாளில் விரதம் முடிக்கின்ற நாளாகக் கொள்வதற்கு உகந்ததாதலால் சிறப்பானதாகும். இவ்விரதத்துடன் குபேரனை ஆபஸ்தம்ப சூத்திரம் தொடர்புபடுத்துவது குறிப்பிடத்தக்கது.
சரத்கால விரதம் என்பது மார்கழி மாதம் தொடங்கிப் பங்குனி மாதம் வரை நீடிக்கும். இதில் முதன்மையானது தைந்நீராடல் விரதம் ஆகும். அடுத்தது மாசி மாத சுக்லபட்சப் பஞ்சமி தொடங்கிப் பெளர்ணமி (மாசிமகம்)யுடன் முடிவடையும் சாரதா நவராத்திரி அல்லது சரஸ்வதி நோன்பு ஆகும். இவ்விரு மாதங்களுடன் பங்குனி மாதத்திலும் நோன்பிருந்து பங்குனி உத்தரத்துடன் காமவேள் நோன்பு முடிவடைவதாக திவ்யப் பிரபந்தம் (நாச்சியார் திருமொழி) குறிப்பிடுகிறது. இந்நோன்புகளுள் தைந்நீராடலே ‘தவத் தைந்நீராடுதல்’, ‘தையில் நீராடிய தவம்’ எனச் சங்கஇலக்கியங்களில் குறிப்பிடப்படுகிறது. சரத்காலம் முழுமையுமே தவத்துக்குரிய காலமாகக் கருதப்பட்டது.
சரத்காலம் முடிந்து இளவேனிற்பருவம் தொடங்கிச் செடி, கொடிகள், மரங்கள் அனைத்தும் மலர்கள் மலர்ந்து, வண்டுகள் சூழச் செழிப்புடன் காட்சியளிப்பதைக் குறிப்பிடும் கலித்தொகைப் புலவன், ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காகத் தவம் செய்தவர்கள், அத்தவத்தின் பயனைப் பெற்று அனுபவிப்பதை அதற்கு உவமையாகக் குறிப்பிடுகின்றான்.
(கலித்தொகை 30:1-4.)
மழைக்காலம் முடிந்தபின்னர் வருகின்ற சரத் (பனிக்) காலத்தில் மேகங்களற்ற வானத்தில் தோன்றுகின்ற முழுநிலவு சரத் சந்திரன் எனப் போற்றப்பட்டது. சரஸ், சரத் என்ற சொற்கள் குளம் என்ற பொருளுடையவை.
சரத்சந்திரன், அலைகளற்ற குளத்தில் பிரதிபலிக்கின்ற முழுநிலவே போன்று மனதை மயக்கக்கூடிய தோற்றம் கொண்டதாகும். வடகிழக்குப் பருவக்காற்றால் நேர்கின்ற மழை ஆவணி மாதம் தொடங்கி நான்கு மாதங்கள் நீடித்துக் கார்த்திகை மாதத்துடன் முடிவடையும். அதன் பின்னர், மார்கழி மாதத்திலிருந்து பங்குனி வரை நீடிக்கும் காலம் சரத் காலம் ஆகும். இந்நான்கு மாதங்களையுமே பனிக்காலம் எனத் தமிழிலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. கி.பி. 5ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதத்தக்க பரிபாடலில் (பா. 11) சரத்கால முழுநிலவு பின்வருமாறு வருணிக்கப்படுகிறது:
“கனைக்கும் அதிர்குரல் கார்வானம் நீங்கப்
பனிப்படு பைதல் விதலைப் பருவத்து
ஞாயிறு காயா நளிமாரிப் பின்குளத்து
மாயிருந் திங்கள் மறுநிறை ஆதிரை”
மாரிக் காலத்துக்குப் பின்னர் வருகின்ற சரத் சந்திரன் குளத்துத் திங்கள் என இப்பாடலில் குறிப்பிடப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.
இவ்வாறிருப்பினும், பெண்டிர் தவம் செய்து முடித்தபின் தவத்தின் பயனை நுகரும் நாளாகத் தைப்பூச நாளே சங்க இலக்கியங்களில் முதன்மைப்படுத்தப்படுகிறது. தைப்பூச நாளில் இயற்கையாகவே நிலத்தில் நீர் ஊறும் என்று நம்பப்பட்டது.
தைந்நீராடல் மரபு என்பது ‘புஷ்ய ஸ்நானம்’ எனத் தர்மசூத்ர நூல்கள் குறிப்பிடும் விரதமே என்றும், வருணன், குபேரன், ஐயனார் வழிபாடுகளுடன் தொடர்புடைய விரதமே என்றும் தெளிவாகத் தெரியவருகின்றன. குறிப்பாகத் திஷ்யம், திஸ்ஸம், தைஇய என்ற வழக்குகள் வருணன் வழிபாட்டுடன் தொடர்புடைய இயக்கர் குல அல்லது இலங்கைப் பூர்வகுடி மரபினரின் வழக்குகளாக இருந்து இந்தியச் சிந்தனை மரபில் ஏற்றுக்கொள்ளப்பட்டவையாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இயக்கர்கோன் வழிபாடு அதாவது, யக்ஷர் குல வருணன் - சோமன் வழிபாட்டுத் தொடர்பிலேயே தைந்நீராடல் மரபு சங்க காலத் தமிழகத்தில் நிலவியிருக்க வேண்டும்.
சந்திரனை அடிப்படையாகக் கொண்ட கணக்கீட்டிற்கு, சந்திரமானம் என்றும், சூரியனை அடிப்படையாகக் கொண்ட கணக்கீட்டிற்கு, சவுரமானம் என்றும் பெயர். தை என்ற சொல், திஷ்யம் என்ற சொல்லில் இருந்து வந்தது. திஷ்யம் என்றால் பூச நட்சத்திரம். திஷ்யம்-தைஷ்யம்- தைசம்-தை என, மாற்றம் கொண்டது. தைசம் என்றால் பூச நட்சத்திரம் என, கதிரைவேற்பிள்ளையின் சங்கத்து அகராதி கூறுகிறது. பூச நட்சத்திரத்தில், முழு நிலா வரும் நாள் தான், தைப் பூசம். அந்த நட்சத்திரத்தின் அடிப்படையில் தான், தை மாதத்திற்கு அந்தப் பெயர் வந்தது. சங்க இலக்கியங்களில், 'தைஇயத் திங்கள்' என, தை மாதம் குறிப்பிடப்படுகிறது. தைசப்பூசத்தன்று, முழுநிலா நாளில், நிலத்தில் நீர் ஊறும் என்பது சங்க கால மக்கள் நம்பிக்கை. புஷ்யம் என்ற சொல்லுக்கு புஷ்டி என்று அர்த்தம். அந்த அடிப்படையில், தையில் நீர் வளம் பெருகி, உணவு உற்பத்தி அதிகரித்து நாடு நலமாக இருக்க வேண்டும் என, நோற்பது தான் தைந்நீராடல். பூர்ணிமாந்த கணக்கின்படி, மார்கழிப் பவுர்ணமியில் விரதத்தை துவக்கி, தை பவுர்ணமியில் அதாவது தைசப் பூசத்தன்று முடிப்பது தைந்நீராடல். சங்க இலக்கியம் இதனை 'தவத் தைந்நீராடல்' என, குறிப்பிடுகிறது. இந்த விரதத்தை பெண்கள் தான் இருப்பர். பக்தி இயக்க காலகட்டத்தில், சைவமும், வைணவமும் இதை தத்தமக்கு ஏற்ப மாற்றிக் கொண்டன.
 


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

தைப்பூசம்
-------------
தைப்பூசம் பற்றிய குறிப்பு, மகாவம்சம் என்ற இலங்கை வரலாறு பற்றிய நூலில் முதன்மையாக காணப்படுகிறது. புத்தர் வான்வழியாக இலங்கை சென்ற போது, இலங்கையின் பூர்வ குடிகளான யட்சர்கள், மாவலி கங்கையாற்றின் கரையில், தைப்பூச விழாவைக் கொண்டாடிக் கொண்டிருந்தனர் என, மகாவம்சம் குறிப்பிடுகிறது. யட்சர்கள், மங்கோலிய இனத்தவர்கள். அவர்களின் தலைவன் குபேரன். மிகப் பழமையான, தர்ம சூத்திர நூலான ஆபஸ்தம்ப சூத்திரத்தில், தைப்பூசத்தன்று, குபேரனுக்கு பால் பொங்கல் படைத்து வழிபடுவது பற்றிய குறிப்பு உள்ளது.
தைப்பூச நன்நாளில் நீராடி வழிபாடு செய்வதானது தனியே தமிழகத்தில் மட்டுமல்லாது இலங்கையிலும் அக்காலத்தில் நிகழ்ந்ததாக மகாவம்சத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கைக்கு பௌத்தமதம் வருவதற்கு முன்னர் அங்கே பூர்விகக் குடிகளாக வாழ்ந்த இயக்கர், நாகர் என்ற இரு இனத்தவர்களுள் இயக்கர்குல மக்கள் மகாவலி கங்கை ஆற்றங்கரையில் கூடி தைப்பூச நன்னாளை கொண்டாடிய குறிப்புள்ளது. மகாவம்ச காலம் கி.பி 5 அம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாக அறியப்படுவதால் அக்காலப் பகுதியில் தமிழகத்திலும் இலங்கையிலும் தைப்பூசவிழா கொண்டாடப்பட்டுள்ளது என்பதன் மூலம் இலங்கையில் வாழ்ந்த ஆதிகுடிகள் தமிழரே என்பதும் நிரூபணமாகின்றது.
சங்க கால மகளிர் பாவை நோன்பின் முடிவில் பொங்கல் உண்டதற்கான சான்றுகள் தெளிவுறக் கூறப்படாத போதிலும், பாவைநோன்பு என்பது கடுமையான விரதமாகவும் நல்ல கணவனையடைய வேண்டி கடைப்பிடிக்கபட்டாதாக பிற்கால நூலான ஆண்டாளின் திருப்பாவையூடாக அறியமுடிகிறது.
“….பாலுண்ணோம் நெய்யுண்ணோம்
கோல அணிகலெல்லாம் பூணோம்”
சம்பந்தருடைய தேவாரத்திலும் தைப்பூச நாளன்று;
நெய்ப்பூசும் ஒண் புழுக்கல் நேரிழையார் கொண்டாடும்
தைப் பூசம் காணாதே போதியோ பூம்பாவாய்”
எனக் குறிப்பிடுகிறார். இங்கு புழுகல் என்பது பொங்கல். சிலப்பதிகாரத்தில் கண்ணகியின் குறை தீர அவளுடைய தோழி தேவந்தி, பாசண்டர் சாத்தான் எனும் சிறு தெய்வத்தை வேண்டித் தொழுதபோது,
‘அறுகு சிறுபூளை நெல்லொரு தூய் உச்சென்று
பெறுக கணவனோடு என்றாள்’ (சிலப்பதிகாரம்: 9:43-44)
எனவே, பொங்கல் விழாவின்போது அறுவடைப் பயிரான நெல்லின் ‘ஆவிக்கு’ படைக்கப்படும் ஒரு ‘பலித் தாவரமாக ‘பூளைப்’ பூவைக் குறிபிடுகின்றார். மேலும் சிலப்பதிகாரத்தில் வரும் இந்திரவிழாவின் தொடக்கத்தில் காவல்பூதத்திற்கு, புழுக்கலும் (பொங்கல்), நோடையும், விழுக்குடை மடையும், பூவும் புகையும் பொங்கலும் சொரிந்து வழிபட்டதாக சான்றுள்ளது. இவற்றை எல்லாம் தொகுத்துப் பார்க்கின்ற பொழுது தைமாதத்தில் சங்ககாலத்தமிழர் விரதமிருந்தும், அவ்விரதகாலம் முடியும் வரையும், பாலும், நெய்யும், தவிர்த்தும் இருந்திருப்பார்களேயாயின், கட்டாயமாக அவ்விரதகால நிறைவு நாளான தைப்பூசத்தன்று பொங்கலை (பாலும் நெய்யும் கலந்து) உண்டிருப்பார்கள் என்பதில் ஐயமில்லை.
ஆண்டாளின் திருப்பாவையும் மாணிக்கவாசகரின் திருவெம்பாவையும் தைநீராடல் விழாவையும், பாவைநோன்பு கடைப்பிடிக்கும் சடங்குகளையும் தெளிவாக விவரிக்கின்றன. ஆண்டாளின் திருப்பவையினூடக (8ம் நூற்றாண்டு) பாவைநோன்பு விதரமானது மார்கழியில் முழுநிலா நாளில் தொடங்கி தைமாத முழுநிலா நாளில் நிறைவு பெறுகிறது. இதற்கு ஆதாரமாக திருப்பாவையில்,
“மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்”
என்று தொடங்கி “நெய்யுண்ணோம்.. பாலுண்ணோம்” என்று ஆரம்பித்த நோன்பை, அதன் பின்னே “பால்சோறு, மூட நெய் பெய்து முழங்கை வழிவார..” நெய் பொங்கல் செய்து உண்ண வேண்டும் என்பதுபற்றி திருப்பாவை 27 ஆம் பாடலில் குறிப்பிடுகின்றார். இது அக்கார அடிசில் (சோறு) என்று கூறப்படுகின்றது. இது முதலாம் பராந்தக சோழன் (கி.பி 907-953) காலக் கல்வெட்டுகளிலும் குறிப்பிடப் பட்டிருக்கிறது.
“ஆண்டாள் விவசாயம் செழிக்க வேண்டும், கால்
நடைகள் செழிக்க வேண்டும், நன்கு கால்
நடைகள் பால் கறக்க வேண்டும்
என்கின்ற பிரார்த்தனையை வைக்கின்றார்”.
ஆண்டாளின் பிராத்தனை நிறைவேறிய நாள் தை முதல் நாள்.
“ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம்பாவைக்கு சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரிப் பெய்து
ஓங்கு பெருஞ் செந்நெல்லொடு கயலுகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு
கண்படுத்தத்தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்க குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தாலோர் எம்பாவாய்”
எனவே தான் ஆண்டாளின் பிரார்த்தனை நிறைவேறிய நாள் தை மாதம் 1 ஆம் தேதி பொங்கல் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது.
சூரியப் பொங்கல் வழிபாடு
------------------------------
ஆறு சமயங்களில் ஒன்று, சூரியனை முதன்மைக் கடவுளாக கொண்ட சௌரம். அக்காலத்தில் சூரியனுக்குத் தனிக்கோயில் கட்டப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. ஆனால் பின்னால் சூரிய வழிபாடு வேறு வழிபாட்டோடு இணைந்தது. பழந்தமிழ் காப்பியமான சிலப்பதிகாரம்
“ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்”
என்னும் தமிழர் மரபில் சிறப்புற்றிருந்த சூரிய வழிபாடு குறித்தும் சூரியக் கடவுளை ‘உச்சிக்கிழான்’ என்று ஏத்திக் கூறியுள்ளது.
சூரியவழி நாட்காட்டி
-----------------------
சூரிய உதயத்தை வைத்துத்தான் காலத்தைக் கணக்கிடுகிறோம்.
"திண்ணிலை மருப்பின் ஆடு தலையாக
விண்ணூர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலம்''
என்ற நெடுநல்வாடை வரிகள்(வரிகள் 160 முதல்..) மூலம் சூரிய நாட்காட்டி முறையின் வழக்கம் சங்க காலத்திலேயே பழக்கத்தில் உள்ளதாகத் தெரிகிறது. சூரியவழி நாட்காட்டியில், சூரியனின் வடக்கு - தெற்கு நகர்வுகள் முதன்மையானவை. எனவே சூரியனின் வடக்குச் செல்கையான உத்தராயணம் துவங்கும் மகர சங்கிராந்தி குறிப்பிடத்தக்க இடம் பெற்றிருக்கிறது. சோழர் காலத்தில்தான் சூரியவழிக் கணிப்பு தமிழரிடம் புகழ்பெற்றிருக்க வேண்டும். ஏனெனில் அவர்களின் கல்வெட்டுகளில் தான் சூரியவழி மாதப்பெயர்கள் (விருச்சிக ஞாயறு, மகர நாயிறு) காணக்கிடைக்கின்றன. ஆனால் இந்த மாதப்பெயர்கள் கல்வெட்டுகளோடு நின்றுவிட்டன. அன்றாட வழக்கில் சூரியவழி மாதங்களுக்கும் சந்திரவழி மாதப்பெயர்களான சித்திரை, வைகாசி என்பனவற்றையே தொடர்ந்தும் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். சூரியன் தட்சிணாயனத்திலிருந்து உத்தராயனத்திற்குத் திரும்புகின்ற நாள் என்ற காலக் கணக்கீட்டின் அடிப்படையில் தை மாதம் முதல் தேதிக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவது பிற்காலச் சோழர் ஆட்சியில் நடைமுறைக்கு வந்துவிட்டது என்பது உண்மையே.
'சோழர் காலக் கல்வெட்டு உத்தராயனத் துவக்கம் ‘தை’ முதல்நாள் என்று குறிப்பிடும். இதற்கு திருவலஞ்சுழிக் கல்வெட்டுகள் (முதலாம் இராஜராஜரின் 14ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு) கட்டியங் கூறுகின்றது. திருவலஞ்சுழி தலத்தில் உள்ள ராஜராஜன் காலத்து கல்வெட்டில், இரண்டு விஷூக்களும், இரண்டு அயனங்களும் முதன்முறையாக குறிப்பிடப்படுகின்றன.
பகல் நேரத்திற்கு காரணம் சூரியன். சூரியனால்தான் பயிர்களும் உயிர்களும் செழித்து வளர்கின்றன. சூரியனால்தான் கிழமைகள் ஏற்படுகின்றன. கிழமைகள் ஏழு குறிக்க, ஆதித்யன் தனது ரதத்தில் ஏழு குதிரைகளை பூட்டி உள்ளான். நம் உடலில் தோல், எலும்பு, சதை, ரத்தம் என்ற ஏழு தாதுக்கள் உள்ளன. இவற்றோடு சஞ்சரிக்கும் ரதமே இந்த உடம்பு. இவற்றை இயக்குவது சைதன்ய ஆதித்யன். சாஸ்திரத்தில் மூலாதாரத்திலிருந்து சகஸ்ராரம் வரை நகரும் ஏழு சக்கரங்களே ஏழு குதிரைகள். வேதங்களால் போற்றப்படும் சூரிய சக்தியின் உருவம்தான் ஏழு குதிரைகள்.
சூரியநாராயணர் என்று வைணவத்திலும், சூரியனார் என்று சைவத்திலும் சூரியவழிபாடு இணைந்தது. இப்பொழுதும் சூரியனுக்கு தமிழ்நாட்டில் சூரியனார் கோயிலும் ஒரிசா ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் தனிக்கோயில்களும் உண்டு. கும்பகோணம் அருகிலுள்ள சூரியனார் கோவில்தான் இந்தியாவில் சூரியனுக்காக கட்டப்பட்டு இன்றும் பழுதுபடாத நிலையிலுள்ள கோவில் ஆகும். கும்பகோணம் சூரியனார் கோவிலை கி.பி. 1110 -ம் ஆண்டு முதலாம் குலோத்துங்க சோழன் கட்டினான். தை மாதம் பொங்கல் திருவிழாவையட்டி சூரியனார் கோவிலில் நடைபெறும் திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கும். பத்து நாட்கள் நடைபெறும். இவ்விழாவில் சூரியனாரின் திருமணப் பெருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. தை 1-ம் நாள் சூரியபகவானை சூரியநாராயணராக பாவித்து புதுப்பாலும் புத்தரிசியும் வெல்லமும் இட்ட பொங்கல் படைத்து விழாவை கொண்டாடினர். இத்தகைய பொங்கலை சங்கராந்தியாக - மதம் சார்ந்த பண்டிகைகளில் ஒன்றாக மிகப் பிற்காலத்தில்தான் விளக்கம் கொடுக்கப்பட்டது. இவைகள் எல்லாம் ஆரியர்கள் உருவாக்கிய கற்பனை விடயங்கள் என்று இவற்றை இலக்கிய தகவலாக மட்டும் எடுத்துக் கொள்வது நலம்.
சூரிய வம்சம்
----------------
அக்காலத்தில் மன்னர்கள் சூரிய குல வழி மன்னர்கள், சந்திர குல மன்னர்கள் என்று தங்கள் குல மரபை சொல்வது வழக்கம்.சூரிய குலம் என்று காசியப முனிவருக்கும் அதிதீ தேவிக்கும் பிறந்த விவஸ்வான் என்ற பெயர் கொண்ட சூரியனின் குலமாகும். விவஸ்வான் என்கிற சூரியன் முதல் மனிதனாக அறியப்பெறுகிறார். இவருடைய பெயரனான இக்ஷவாகுவின் வழி வந்த அரச வம்சம் சூரிய குலமாக அறியப்பெறுகிறது. சூரியனின் மறுபெயரான ரகு என்பதிலிருந்து ரகு வம்சம் என்று இந்த வம்சம் அழைக்கப்பட்டது. இந்த வம்சத்தில் பிறந்தவராக பகீரதனும், ராமரும் புகழ்பெற்றவர்கள். தமிழகத்தில் வரலாற்றுக் கால மெய்கீர்த்திகள் சோழரை சூர்ய வம்சம் என்றும், சேரர், பாண்டியர்களை சந்திர வம்சம் என்றும் சொல்கிறார்கள். கலிங்கத்துப்பரணியில் வரும் சோழர் வம்ச வர்ணனை சோழர்களின் முன்னோர்களாக சூர்யவம்ச மன்னர்களையே குறிப்பிடுகின்றன.
உத்தராயணம் பிறக்கும் தை மாதம் முதல் தேதியும் தட்சிணாயனம் பிறக்கும் ஆடி மாதம் முதல் தேதியில் முன்னோர்கள் பூஜை செய்வதற்கு உகந்த காலங்கள். அன்று சூரிய சாளரக் கோயில் வழிபாடு செய்வது சிறந்தது. சாளரக்கோயில் என்றால் மூலஸ்தானம் நுழைவாயில் இல்லாது, எதிரே சுவரில் சில சன்னல்கள் அமைக்கப்பட்டு, பக்கவாட்டு கதவு வழியேதான் சுவாமியை தரிசிக்க செல்லவேண்டும். இத்தகைய சூரிய சாளரக் கோயில்களில் முக்கியமானது திருவலஞ்சுழியில்உள்ள வேத விநாயகர் கோயில். தை முதல் நாளன்று இங்குள்ள தீர்த்தத்தில் தர்ப்பண வழிபாடுகளைச் செய்வதால் பலவிதமான தொந்தரவுகள் நீங்கும். சூரியக் கோயில்கள் அமைந்துள்ள சிவாலயங்களில் மூலவருக்கு சிவப்பு பட்டு வஸ்திரம் சாத்தி சிவனை வழிபட வியாபாரம் முதலியவை நல்ல முறையில் நடக்கும். தொழில் அபிவிருத்தி அடையும். பித்ரு சாபங்கள் தீரும்.
சூரியசக்திதான் பூமியில் அனைத்து வளர்ச்சிக்குமான அடிப்படை. தாவரங்கள் வளரவேண்டும் என்றாலோ, மனிதனின் வாழ்க்கை மற்றும் உற்பத்தி மேம்பட வேண்டும் என்றாலோ சூரிய சக்தி மிகவும் அவசியம். சூரியனின் தன்மையில் மாறுபாடு காரணமாக தை மாதம் பீடை தொலைந்து புது வாழ்க்கை ஆரம்பிக்கும். இந்தக் காலத்தில் சூரிய சக்தியை தனக்குள் சேகரித்து வைத்துக் கொள்ளும் பொருளோ, மனிதனோ வளர்ச்சியை உற்சாகத்தை உருவாக்க முடியும். இதனால் மனிதனுக்கும் பிற உயிர்களுக்கும் தேவையான உணவு உற்பத்தியும் பெருகும். எனவே உணவு உற்பத்திக்கும் பயிர்கள் வளர்வதற்கும் காரணமான சூரியனுக்கு நன்றி தெரிவித்து அர்ப்பணம் செய்கிறோம். உலக வாழ்க்கைக்கு அடிப்படையாக ஆதியாக இருக்கின்ற கண்கண்ட தெய்வமான சூரியனையே, திருவள்ளுவர் `ஆதிபகவான்' என்று போற்றியுள்ளார்.
குறிப்பாக விவசாயக் குடும்பத்தில் உள்ளவர்கள் இதை உணர்வுபூர்வமாக செய்வார்கள். தை முதல் தேதி அதாவது ஜனவரி 14ம் தேதிக்குப் பிறகு பயிர்கள் செழிப்பாக வளர்ச்சி அடைவதால் அதை சூரியனுக்கு அர்ப்பணிக்கும் நாளாகவும் அமைகிறது. சூரியனுக்கு நிவேதனம் என்பதால் வீட்டின் மாடியிலோ அல்லது திறந்த வெளிப்பகுதியிலோ தேரில் சூரியன் வருவது போல் கோலமிட்டு அதற்கு அருகில், நிவேதனப் பொருட்கள் வைக்கப்பட்டு சூரியனுக்கு பூஜையும், நிவேதனமும் நடைபெறும்.
பொங்கலன்று அதிகாலை எழுந்து குளித்து முடித்து, புத்தாடை அணிவார்கள். வீட்டு முற்றத்தில் கோலம் இட்டு அதன் நடுவில் புதுப்பானையில் புது அரிசியிட்டு முற்றத்தில் பொங்கல் வைப்பார்கள். புதிய பானைக்கு புதிய மஞ்சளைக் காப்பாக அணிவர். தலை வாழையிலையில் நிறைகுடம் வைத்து விளக்கேற்றி சூரியனை வணங்கி பொங்கலிடத் தொடங்குவர்.
 


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

போகிப்பண்டிகை
-------------------
பொங்கல் பண்டிகைக்கு முதல் நாள் தட்சணாய காலத்தின், நிறைவு நாள் கொண்டாடப்படும் பண்டிகை போகிப்பண்டிகை. மார்கழியின் நிறைவு நாள் போகிப் பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
போகி என்ற சொல் அளவற்ற இன்பங்களை துய்த்து மகிழும் இந்திரனைக் குறிக்கும். இந்திரன் தமிழகத்தில் மழைக் கடவுளாக குறிக்கப்பெற்றார். வான் மழைக்குத் தலைவன் இந்திரன். இந்திரன் தன் தவறை உணர்ந்து கண்ணனிடம் தன்னையும் மக்கள் வழிபட வேண்டும் என்று வேண்டிக்கொண்டதால் தை 1-ம் நாள் முன்தினம் “இந்திர வழிபாடை (போகி பண்டிகை)” ஆயர்கள் கொண்டாடினர். போகி/ என்ற சொல் இந்திரனை குறிக்கும். போகத்தை (விளைச்சலை) தந்தவன் போகி.
இந்திரனிடமிருந்து, ஆயர்களையும் அவர் தம் ஆநிரைகளையும் கோவர்த்தன மலையை, குடையாய் பிடித்து ஸ்ரீகிருஷ்ணர் காத்தருளிய நாளே “மகரத் திருநாளாகும் தை-1”.
பொங்கல் திருநாளை கர்நாடக ஆந்திரா கேரளா மற்றும் வடமாநிலங்களில் மகர சங்கராந்தி என்று கொண்டாடுகிறார்கள். இதில் “கிரந்தி” என்ற சொல்லே “கிராந்தி” ஆனது. கிராந்தி என்பதுக்கு மாறுதல் என்று பொருள். சங்க என்பதுக்கு நல்லமுறையில் என்று பொருள் சூரியன் மகர ராசியில் நுழையும் நாளே மகர சங்கராந்தி. மகரம் என்ற சொல் சூரியனை குறிக்கும்.
சங்ககாலத்திலிருந்து தமிழகத்தில் தை முதல் நாளை மகரசங்கராந்தி என்றுதான் கொண்டாடியுள்ளனர்.
‘தூங்கெயிலெறிந்த தொடித்தோள் செம்பியன்’ என்ற சோழ மன்னன் இதை தொடங்கினான்.
சிலம்பு, மணிமேகலை காலங்களில் இவ்விழா அரசாங்க விழாவாகவே கொண்டாடப்பட்டது. கற்பகக் கோட்டத்தில் வெள்ளானைக்கொடி ஏற்றப்பட்டது. பல தெய்வங்களுக்கும் பூசையிடப்பட்டு, இசையும் கூத்தும் கலந்து மக்கட்கு இன்பமூட்டின. அறிஞர்கள் குழுமியிருந்து பட்டி மண்டபத்தில் வாதிட்டனர். பல்வேறு சமயத்தவருக்கும் செற்றமும் கலகமும் செய்யாது ஒற்றுமையாய் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். அவ்விதத்தில் இவ்விழா சமய ஒற்றுமையை வலியுறுத்தும் விழாவாக இருந்தது. (ஐங்குறுநூறு 62, மணிமேகலை. 1: 65-72.)
இந்த இந்திரனுக்கு ஆண்டுதோறும் இருபத்தெட்டு நாட்கள் காவிரிப்பூம்பட்டினத்தில் தமிழர் விழா எடுத்துக் கொண்டாடியதை இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரமும், மணிமேகலையும் காட்டுகின்றன.
பூம்புகாரில் இந்திர விழாவின்போது,
“சித்திரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தெனக்
காவற் பூதத்துக் கடை கெழு பீடிகை
புழுக்கலும் நோலையும் விழுக்குடை மடையும்
பூவும் புகையும் பொங்கலும் சொரிந்து”
மூதிற் பெண்டிர் வழிபட்டனர் எனச் சிலப்பதிகாரம், இந்திர விழவூரெடுத்த காதை வரி 64 – 69களில் குறிப்பிடப்படுகிறது.
மழைவளம் தந்த இந்திரனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பொங்கலுக்கு முதல் நாள் பொங்கல் இட்டு இந்திரனுக்கு படையிடுவது இன்றும் மருத நிலப்பகுதியில் நிலவி வருகிறது.
ஆன்மிகச் சிறப்பு வாய்ந்த இந்திரனுக்கு மிகவும் பிடிக்கும் பூசணிப்பூ மார்கழி மாதம் முழுவதுமே வீட்டு வாசலில் பெரிய கோலங்கள் இட்டு, வண்ணப் பொடிகளால் அலங்காரம் செய்து, அதில் நடுவில் சாண உருண்டைகளைப் பிடித்து வைத்து, பூசணிப் பூவை பொருத்தி வைப்பார்கள். பொங்கலின் போது பெரிய சல்லடையில் பூசணி இலைகளில், பொங்கலை வைத்து படைக்கும் வழக்கம் உண்டு. இந்திரனுக்குரிய விழாவாக இந்த விழா இருப்பதால், ஆயிரம் கண்ணுக்கு நிகராக சல்லடையை பயன்படுத்துகின்றனர்.
பூம்புகாரில் நிகழ்ந்து வந்த இந்திர விழாவின் நிறைவு நாளாக போகிப்பண்டிகை அமைந்திருக்கலாம்.
போகியன்று சில கிராமங்களில் ஒப்பாரி வைக்கும் பழக்கம் உள்ளது. அங்ஙனம் அழுவது எதனால், என்பதனை ஆராய்ந்த வரலாற்று அறிஞர்கள், அந்நாளை புத்தர் இறந்த தினமென்று கண்டறிந்துள்ளனர்.
முந்தையக் காலங்களில் எல்லாவிதக் குறிப்புகளும் பனையோலை ஏட்டில்தான் எழுதப்படும். இலக்கியங்களும் புராணங்களும்கூட பனையோலையில்தான் இருந்துவந்தன.
படித்தவர்களின் வீட்டில் பரணெங்கும் கிடந்த இந்தப் பனையோலைகள் யாவும் இந்த போகி நாளில் எடுக்கப்பட்டு, சிதைந்து போன ஏடுகள் நீக்கப்பட்டு, மீதமிருந்த ஓலைகள் புதிதாகக் கட்டப்படும். சிதைந்து போன ஓலைகளில் இருந்த விஷயங்கள் புதிதாக எழுதப்படும். சிதைந்த ஓலைகள் தீயிலிட்டுக் கொளுத்தப்படும். இதுவே போகியன்று தீ மூட்டும் வழக்கமாக மாறியது என்றும் சொல்லப்படுகிறது.
தை மாதம் குளிர்காலத்தின் உச்சபட்ச காலம். எனவே, அந்த மாதத்தின் முந்தின அதிகாலையில் மக்கள் குப்பைகளைக் கொளுத்தி, குளிர் காயும் வழக்கம் இருந்துவருகிறது. சிறுவர்களும் சிறுமிகளும் கூடி பண்டைய வழக்க முறைப்படி, சிறிய பறைகளை வைத்து முழங்குவார்கள். விலங்குகளை விரட்ட முழங்கப்பட்ட பறையொலி இன்று இந்த போகிப்பண்டிகை அன்று மட்டுமே முழங்கப்படுகிறது. மாட்டுத்தோலால் செய்யப்பட்ட சிறிய பறைகளும், உடுக்கைகளும் விற்கப்பட்டு, அவை குழந்தைகளால் வாங்கப்படுவதை இன்றும் எல்லா இடங்களிலும் பார்க்கலாம். போகி அன்று அதிகாலையில் தீயின் முன்பாகக் குழந்தைகள் கூடி, வேகமாகப் பறை முழங்கி உற்சாகக் குரல் எழுப்புவார்கள். தீ அணையும் நேரத்தில் பறைகளை வேகமாக முழக்கி, உடைத்து, தீயில் போடுவதும் உண்டு.
போகிப்பண்டிகை பலராமனுக்கு உரிய விழாவே தவிரப் பரவலாகக் கருதப்படுவது போல இந்திரனுக்கு உரிய விழா அன்று.' 'மார்கழித் திங்களின் இறுதி நாளன்று கொண்டாடப்படும் போகிப் பண்டிகை விவசாயக் கடவுளான பலராமனுக்கு உரிய விழாவே எனவும் கூறப்படுகிறது.
தமிழகத்திலும், சங்க காலத்தில், பலராமன் வழிபாடு, விவசாயிகளின் வழிபாடாகவே இருந்திருக்கிறது. மதுபானப்பிரியனான பலராமனே முன்பு போகி என அழைக்கபட்டதாக பாண்டியர் கல்வெட்டு கூறுகிறது. பலராமனை “புஜங்கம புரஸ்ஸர போகி’ எனக் கி.பி. 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பராந்தக வீர நாராயண பாண்டிய மன்னனின் தளவாய்புரச் செப்பேடு குறிப்பிடுகிறது.
மதுபானப்பிரியனான பலராமனை வணங்கி மதுவைப் படைத்து கொண்டாடப்படும் பொங்கல் மதுப்பொங்கல் என அழைக்கபடும். இன்றைக்கும் பல ஊர்களில் அம்மன் கோயிலில் மதுப்பொங்கல் கொண்டாடப்படுவதைக் காணலாம்.
மார்கழி மாதம் முழுக்க ஆண்டாள் மார்கழி நோன்பு நோற்றாள். மார்கழி நோன்பின் காரணம், கண்ணனை அடைய வேண்டும், கண்ணனை தரிசிக்க வேண்டும் என்பது. இறைவனாகிய கண்ணனைச் சந்திப்பதற்காகப் பாடிய தமிழ் “திருப்பாவை” என்பதால், இதனை சங்கத்தமிழ் என்று சொல்வார்கள். மார்கழி மாதத்தில் நிறைவு நாளான போகிப்பண்டிகை அன்று கண்ணன் ஆண்டாளுக்கு காட்சியளித்தான். ஆண்டாள் விரும்பிய வண்ணம் அவளைத் திருமணம் செய்து கொண்டான். எனவே, ஆண்டாள் திருக்கல்யாண நாளாக போகிப்பண்டிகை இப்பொழுதும் பல வைணவ ஆலயங்களில் கொண்டாடப்படுகிறது.
தற்காலத்தில் பழைய பொருள்களை போக்கும் நாளாக நகரங்களில் போகி என்ற பெயரில் கொண்டாடப்பட்டு வருகிறது. பழைய காலத்தில் பொங்கல் பண்டிகைக்கு வீட்டைச் சுத்தப் படுத்தி வெள்ளை அடிக்கிற வழக்கம் இருந்தது. அப்படி வீட்டைச் சுத்தம் செய்யறப்ப கிழிஞ்சபாய், எண்ணெய்ப்பிசுக்குப் பிடிச்ச தலையணை, கிழிஞ்ச முறம், கட்டையாப்போன விளக்குமாறுன்னு பல சாமாண்களையெல்லாம் கழிக்க இதையெல்லாம் கொளுத்தி யிருப்பார்கள். மார்கழி மாதம், காலையிலே குளிருக்கு இதமா தீமூட்டிக் குளிர்காய புகை மண்டலம் மேலே போகப்போக கருப்பாக மேகக் கூட்டம் மாதிரி தெரிஞ்சிருக்கும். இந்தப் பண்டிகையின் பெயர் (புகை) போக்கிப் பண்டிகை என்பதாகும். மேலும் போகியின் போது பழைய பொருட்களை எரித்து அந்த சாம்பலை உரமாக உபயோகித்து இருக்கலாம். இந்த நாள் பழையன கழித்து, புதியன புகவிடும் நாளாகக் கருதப்படுகிறது.
ஆடி மாதத்தில் பயிரிட்ட அரிசியை மார்கழியில் அறுவடை செய்து, மார்கழி கடைசி நாள் அன்று புதிதாக வீட்டிற்குக் கொண்டு வருவார்கள்.
போகிப்பண்டிகையின் தொடக்கமே வீட்டில் காப்புக் கட்டும் நிகழ்ச்சியாகும். தைத்திருநாளை வரவேற்க, வீட்டின் கூரையில் பூகாப்புக் கட்டிய பிறகே, பொங்கல் கொண்டாட்டம் தொடங்குகிறது. காப்புக் கட்டுவதின் முக்கிய நோக்கம் பாதுகாப்பு, ஆரோக்கியம் கிடைக்கும் எனவும், சுத்தம் செய்த வீட்டிற்குள் கெட்டது எதுவும் வராமல் இருப்பதற்காவும் மாவிலை, வேம்பு இலை, பூளைப்பூ, ஆவாரம் பூ ஆகியவற்றை சேர்த்து காப்பு கட்டும் வழக்கம் உள்ளது. போகி அன்று, வைகறையில் ‘நிலைப்பொங்கல்’ வைக்கப்படும். வீட்டின் முன் வாயில் நிலைக்குப் மஞ்சள் பூசி, திலகமிட்டு, தோகை விரிந்த கரும்பொன்றைச் சாத்தி நிற்கச் செய்து வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, குங்குமம் வைத்து, தேங்காய் உடைத்து, கற்பூரம் காட்டி வணங்குவர். அன்று போளி, வடை, பாயசம், மொச்சை, சிறுதானியங்கள், பருப்பு வகைகள் போன்றவை இறைவனுக்கு படைக்கப்படும். பிறகு, அனைவரும் உண்டுகளிக்க வேண்டும்.
'பழையன கழிதலும் புதியன புகுதலும்' என்ற மிகவும் பழமையான விழாதான் பொங்கல் பண்டிகை என்பதற்கு எடுத்துக்காட்டாக திருத்தக்கதேவர் சீவக சிந்தாமணியில்,
“மதுக்குலாம் அலங்கல் மாலை
மங்கையர் வளர்த்த செந்தீப்
புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்”
என்று குறிப்பிட்டுள்ளார். இதனால், செந்தீ மூட்டிப் புதப்பானையில் இனிய பாலொடு கலந்த சோற்றைப் பொங்கலாகப் பொங்கிடும் பாவையரின் பழக்கம் புலப்படுத்தப்படுகிறது. கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு அளவில் நடைபெற்ற பொங்கல் இடும் முறையாக இதனை கருதலாம்.
சம்பந்தர் தன் மயிலைப் பதிகத்தில் தைப்பூசத்தில் பெண்கள் தயாரிக்கும் "நெய்ப்பூசு ஒண்புழுக்கல்" எனும் உணவு பற்றிப் பாடுகிறார். ஆண்டாள், மார்கழி மாதப் பாவை நோன்பின் இறுதியில் "பாற்சோறு மூட நெய் பெய்து" அது முழங்கையில் வழிய இன்பமாக உண்பதை குறிப்பிடுகிறார். ஆண்டாள் இங்கு பாடிய உணவு, வைணவக்கோவில்களில் இன்றும் படையலிடப்படும் "அக்கார அடிசில்" என்று சொல்கிறார்கள்.
பண்டை நாளில் திருக்கோயில்களில் இறைவனுக்குப் பொங்கல் அமுது படைக்கப்பட்டது பற்றியும், என்னென்ன பொருள்களில் அது தயாரிக்கப்பட்டது என்பது பற்றியும் கல்வெட்டுகள் விரிவாகக் கூறுகின்றன.
சென்னைக் கல்வெட்டுகளில் பருப்புப் பொங்கல் - அரிசி, பயறு, வெல்லம், நெய், தேங்காய் முதலிய பொருள்கள் கொண்டு தயாரிக்கப்பட்டதாக தெரிவிக்கின்றது. வெண் பொங்கல் மற்றும் சர்க்கரைப் பொங்கல்கள். திருச்செந்தூர் கல்வெட்டுகளில் இதைப் பற்றி குறிப்புகள் உள்ளது. சர்க்கரை பொங்கலைத் தவிர,


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

கல்வெட்டுகளில் பொங்கல் - பொங்கல் விழா -3
--------------------------------------------------------
கல்வெட்டு காட்டும் சங்கராந்தி
சங்கராந்தியைப் பற்றிய முதல் குறிப்பு சோழப் பேரரசர்களின் கல்வெட்டுகளில் தான் காணப்படுகிறது. தமிழ் இலக்கியத்தில் இப்பண்டிகையைப் பற்றிய குறிப்பு, கி.பி. பதினோராம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டதாகவே கிடைத்து இருக்கிறது.
பேரரசன் இராஜராஜசோழனுடைய பாட்டன் அரிஞ்சய சோழன் (கி.பி. 956-7) ஆவான். அவனுடைய மனைவி வீமன் குந்தவை எனும் அரசி கல்யாணி, அரிஞ்சயனுக்குப் பிறகு நெடுங்காலம் வாழ்ந்ததாகத் தெரிகிறது. அரசி கல்யாணி பற்றி அறிந்து கொள்ள மூன்று கல்வெட்டுகள் உதவுகின்றன. மூன்றும் அரசி கல்யாணி வழங்கிய அறக்கட்டளைகளைத் தெரிவிக்கின்றன. கி.பி. 968-இல் (இராஜராஜன் தந்தையான சுந்தரசோழனின் ஆட்சிக் காலத்தில்) அவள் உடையார்குடியில் உள்ள சிவன் கோயிலுக்கு ஓர் அறக்கட்டளை வழங்கியுள்ளார். சங்கராந்தி அன்று, உடை யார்க்குடி சிவன் கோயிலில் உள்ள “திரு நந்தீசு வரத்துப் பரம சுவாமி''க்குத் திருமுழுக்கு ஆட்டுவதற்காக ஆயிரம் குடம் நீரினைக் கொண்டு வந்து கோயிலில் சேர்ப்பவருக்கு ஊதியம் அளிப்பதற்கு ஒன்றரை ‘மா’ நிலத்தை மானியமாக அக்கோயிலுக்கு அளித்துள்ளார்.
இதிலிருந்து கி.பி. பத்தாம் நூற்றாண்டு அளவில் சங்கராந்தித் திருநாள் தமிழகத்தின் கோயில்களில் கொண்டாடப்பட்ட செய்தி புலனாகின்றது.
கண்டராதித்த சோழரின் மனைவியான செம்பியன் மாதேவியார், தம் மகன் உத்தம சோழனுடைய ஆட்சிக் காலத்தில் (கி.பி. அளவில்) செம்பியன் மகாதேவி சதுர்வேத மங்கலத்தில் (நாகப்பட்டினத்திற்கு அருகில் உள்ள ஊர்,) “கைலாசமுடைய மகாதேவருக்கு'' ஒரு கற்கோயி லைச் செம்பியன் மாதேவியாரே கட்டினர்.
உத்தம சோழனுடைய இறுதி ஆட்சியாண்டில் அவனுடைய மனைவியருள் பட்டத்தரசியாக விளங்கியவவள். `உரட்டை சரஅபயன்' எனப்படும் திரிபுவன மாதேவி. அக்கோயிலுக்கு ஒரு நிவந்தம் அளித்துள்ளான்.
சங்கராந்தி நன்னாளில், கைலாசமுடைய மகாதேவருக்குத் திருமுழுக்கு (அபிஷேகம்) ஆட்டுவதற்கும், நந்தாவிளக்கு எரிப்பதற்கும், நூறு பிராமணர்களுக்குப் பொங்கல் சோறு அளிப்பதற்கும் தேவையான வருவாயை அளிக்கத் தக்க வகையில், நன்செய் நிலத்தை அக்கோயிலுக்கு அவ்வரசி தானமாகக் கொடுத்து இருக்கிறார்.
இக்கல்வெட்டின் வாசகத்தில் `உத்தராயண சங்கராந்தி' எனும் தொடரும், `பொங்கல் சோறு' எனும் தொடரும் வருகின்றன. சமயப் போர்வையில் `பொங்கல் விழா' கோயில்களில் கொண்டாடப்பட்டதற்கு இக்கல்வெட்டு சான்று பகருகிறது.
`உத்தராயண சங்கராந்தி' சிறப்பித்துப் பேசப்படுவதானால் மாதந்தோறும் `சங்கராந்தி' எனும் ஒருவகை விழா நடைபெற்றதை உய்த்துணரலாம். இதனைச் செம்பியன் மாதேவியினுடைய கல்வெட்டு ஒன்றும் தெரிவிக்கிறது.
இக்கல்வெட்டுச் சான்றுகளால், பத்தாம் நூற்றாண்டின் இடைப் பகுதி முதல், தமிழகத்தின் கோயில்களால் பொங்கல் விழா, `உத்தராயண சங்கராந்தி' பண்டிகையாகக் கொண்டாடப்பட்டமை தெளிவாகிறது. இந்நிலை இந்நூற்றாண்டின் இடைப்பகுதி வரையில் தொடர்ந்து நீடித்ததைக் காணுகின்றோம்.
பஞ்சு போல வெண்மையாக மேலெழுந்து மேகம் நின்றால் அதற்குப் ‘பொங்கலாடுதல்’ என்று பெயர். அரிசியை நீரில் களைந்து நெருப்பில் கொதிக்க வைத்தால் அது வெண்மையாகப் பொங்கும். அது மேகத்தின் பொங்கலாடுதல் போல இருப்பதால், அந்த உணவுக்கும் பொங்கல் என்ற பெயர் வந்தது.
காவிரிபூம்பட்டினத்தில் சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது. இப்போது, தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என்ற மூன்று நாட்கள் மட்டுமே கொண்டாடப்படுகிறது.
ஆனால், அந்த காலத்தில் 28 நாட்கள் நடந்துள்ளதற்கான சான்றுகள் இருக்கிறது.
முதன்முதலாக இந்திர விழா நடத்திய போது அதை நாட்டு மக்களுக்கு முரசறைந்து பொது அறிவிப்பாக அறிவித்தனர். இப்போது பொங்கல் ஊரையும், நாட்டையும் சுத்தம் செய்வது போல அப்போதும் நடந்துள்ளது. நகர வீதிகளில் பழைய மணலை மாற்றி புது மணல் பரப்பினர். காவல் தெய்வங்கள் முதல் சிவன் கோயில்கள் வரை சிறப்பு பூஜை நடைபெற்றது.
இவ்விழா நாளில் பகைமை, பசி, நோய் நீங்க இறைவனிடம் பிரார்த்தனை செய்யப்பட்டது. மழைக்குரிய தெய்வம் இந்திரன், அவனை வழிபட்டால், மாதம் மும்மாரி பெய்து பயிர் செழிக்கும் என மக்கள் நம்பிக்கை.
சோழர் காலத்தில் பொங்கல் பண்டிகைக்கு ‘புதியீடு’ என்று பெயர் இருந்தது. அதாவது, ஆண்டின் முதல் அறுவடை என்று அதற்குப் பொருள். ‘புதியீடு விழா’ என்று ஒரு கல்வெட்டு குறிக்கிறது. அதே போல், விவசாயம் சார்ந்த 'புதுயீடு' / முதல் அறுவடை என்பது ஒரு சடங்காக வளர்ந்திருக்கலாம். தை மாதமே அறுவடை ஆரம்பிக்கும் காலம் என்பதால், அறுவடைத் திருநாள் அம்மாதத்தின் முதல் நாள் கொண்டாடப்பட்டிருக்கலாம். (இன்றும் இலங்கையில், தைப்பூசம் பிறந்தால் தான் அறுவடை என்பதே பொது வழக்காக இருக்கிறது. மாட்டுப்பொங்கலும் அன்று நிகழ்வதுதான்.
ஆரம்ப கால பதிவுகளில் இந்த பொங்கல் என்ற பெயரானது வானகம், போனகம், திருப்போனகம், பொங்கல் போன்ற சொற்களாக கல்வெட்டுகளில் தோன்றுகிறது.
 திருச்சி திருக்கயிலாயமுடையார் கோவில் கருவறை வடக்குப் பட்டியில் காணப்படும் 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டில்,
“சங்கராந்திகளும், கிரஹணமும், மற்றும் திருக் கல்யாணங்கள் உள்ள் போது” பறை முதலிய வாத்தியங்கள் கொட்ட வேண்டிய முறைமையைத் தெரிவிக்கிறது.
 ராஜராஜ சோழன் காலத்தில் (கி.பி. 985 – கி.பி. 1012) ஒவ்வொரு மாதப்பிறப்பன்றும் விழா எடுக்கப்பட்டதற்கான கல்வெட்டு ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. தஞ்சையில் கண்டெடுக்கப்பட்டகல்வெட்டில் “திருச் சதயத் திருவிழா பன்னிரெண்டும், கார்த்திகத் திருநாள் ஒன்றும், சங்கராந்தி பன்னிரெண்டும், பெரிய திரு உற்சவம் நாள் ஒன்பதும் ஆக நாள் முப்பத்து நான்கும்” (“கல்லும் சொல்லும்”, பக் 147, இரா. நாகசாமி) என்று குறிப்பிடப்படிருக்கின்றது.
 மாமன்னன் முதலாம் ராஜராஜசோழனின் கி.பி. 1013-14ம் ஆண்டுக்குரிய 29ம் ஆண்டு கல்வெட்டு ‘‘ஸ்ரீ ராஜராஜதேவர்க்கு யாண்டு இருபத்தொன்பதாவது ராஜேந்திர சிங்க வளநாட்டு மண்ணி நாட்டு பிரமதேயம் வேம்பற்றூராகிய சோழமார்த்தாண்ட சதுர்வேதி மங்கலத்து மகாசபையோம் கையெழுத்து. நம்மை உடைய சக்கரவர்த்தி உடையார் ஸ்ரீ ராஜராஜதேவர் இவ்வூர் திருவிசலூர் மகாதேவர் ஸ்ரீ கோயிலிலேயே துலாபாரம் புக்கருளின அன்று நம்பிராட்டியார் தந்தி சக்திவிடங்கியாரான உலோக மாதேவியார் இரண்ய கர்ப்பம் புக்கருளி இத் திருவிசலூர் மகாதேவர்க்கு அக்காரடலை அமுதுக்கு வேண்டும் நிவந்தங்களுக்கு இக்காசு நானூற்று ஐம்பத்தெட்டும் இத்திருவிசலூர் மகாதேவர் சேனாபதிகள் மூலபரதரான சண்டேஸ்வரர் பக்கல் மகாசபையோம் கொண்ட இக்காசு நானூற்று ஐம்பத்தெட்டும் கொண்டு கடவோம் கொண்ட பரிசாவது...’’ என்று கூறி பின்பு சாசன விளக்கம் விரிவுற எடுத்துரைக்கப் பெற்றுள்ளது.
சோழ சக்கரவர்த்தி ராஜராஜ சோழரின் பட்டத்தரசியான லோகமாதேவியார் தன் கணவர் திருவிசலூர் கோயிலில் துலாபாரம் ஏறியபோதுதான் ஹிரணியகர்ப்பம் புகுந்து சிறப்பு வழிபாடு மேற்கொண்டபோது திருவிசலூர் ஈசனுக்கு அந்நாள் முதல் தொடர்ந்து சந்திரன், சூரியன் உள்ளளவும் நாள்தோறும் அக்காரடிசில் எனப்பெறும் சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்வதற்காக நானூற்று ஐம்பத்தெட்டு பொற்காசுகளை கோயிலில் முதலீடு செய்தார். அத்தேவியார் முதலீடு செய்த பொன்னை வேம்பற்றூர் ஊர்ச்சபை கடனாகப் பெற்றுக் கொண்டு, அதற்குரிய வட்டியிலிருந்து அப்பணியை மேற்கொள்வதாக இந்த சாசனத்தில் கையொப்பமிட்டு உறுதி அளித்துள்ளனர். அக்கார அடிசிலுக்காக (சர்க்கரைப் பொங்கல் நிவேதனத்திற்காக) அளித்த நானூற்று ஐம்பத்தெட்டு பொற்காசுகளுக்குரிய வட்டியிலிருந்து நாள்தோறும் இருநாழி செந்நெல் அரிசி, ஒருநாழி துவரம் பருப்பு, நாலுநாழி பசும்பால், ஒரு உழக்கு நெய், பன்னிரண்டரை பலம் சர்க்கரை மற்றும் நாற்பது வெற்றிலை, பத்து பாக்கு, இருபது வாழைப்பழம் ஆகியவையும் அளிக்கப்பட வேண்டும் என்று இக்கல்வெட்டு குறிப்பிடுகின்றது. இவை தவிர அன்றன்றைக்கு பொங்கல் சமைக்க புதுப்பானை அளிக்கும் குயவர்க்கு உரிய ஊதியம், விறகுக்கு உரிய செலவு, திருவமுது சமைக்கும் ஊழியனுக்கு உரிய ஊதியம் ஆகியவையும் அந்த வட்டிப் பணத்திலிருந்தே அளிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப் பெற்றுள்ளது.
 முதலாம் ராஜேந்திரன் காலத்து திருவொற்றியூர் கல்வெட்டு `புதியீடு விழா’ எனப் பொங்கலைக் குறிக்கிறது. (புதியீடு என்பது முதல் அறுவடை). தமிழக விவசாயத்தில் தொடர்ந்து நிலவும் இருவகை உற்பத்தி முறைகளை (மருதம்/முல்லை வேளாண் முறைகள்) ஒரே பண்பாட்டின் கீழ் பொருத்தமுற இணைப்பதில் தமிழர் அடைந்த வெற்றியின் சின்னமே பொங்கல்விழா.
கங்கைகொண்ட இராஜேந்திரசோழனின் காளத்திக் கல்வெட்டில் மகர சங்க்ரமணப் பெரும் பொங்கல் என்ற குறிப்பு உள்ளது.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தைப்பொங்கல் தினத்தில் ராஜேந்திரசோழன் தனது பரிவாரங்களோடு காவிரியில் புனித நீராடியதற்கான ஆதாரக் கல்வெட்டு கிடைத்திருப்பதாக வரலாற்று ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
“கர்நாடக மாநிலம் கிருஷ்ணராஜசாகர் அணைக்கு அருகில் உள்ளது பெலகோலா. இங்கு ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட சிவாலயம் ஒன்று உள்ளது. காவிரியைத் தழுவிச் செல்லும் இந்த சிவாலயத்தின் தீர்த்தத் துறைக்கு வலம்புரி தீர்த்தம் என்று பெயர். இந்த கோயிலுக்கு தினமும் சிறப்புப் பூஜைகள் நடப்பதற்கு ராஜேந்திர சோழன் நிவந்தங்களை (மானியங்களை) அளித்துள்ளார். அங்கு உள்ள ‘ஹனகன்னட கல்வெட்டு’ இந்தத் தகவல்களைச் சொல்கிறது. இப்பகுதியை, தனது ஆளுமைக்குள் வைத்திருந்த ராஜேந்திரன், இப்பகுதியின் மகாதண்ட நாயகனாக பஞ்சவன் மாராயன் என்ற பட்டத்துடன் விளங்கி இருக்கிறார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தை முதல் நாளானது டிசம்பர் 23-ம் தேதியே வந்திருக்கிறது. மேலை நாட்டவர்களின் வானியல் அடிப்படை நாள்காட்டிகளில் (காலண்டர் முறை) தவறுகள் இருந்ததே இதற்குக் காரணம். 1582-ம் ஆண்டில்தான் மாதத்தின் நாட்களை, கோள்களின் அடிப் படையில் கணக்கிட்டு சரிசெய்தார்கள். இதன்படி, சக வருடம் 934 பரிதாபி ஆண்டு உத்தராயண சங்கராந்தியான தை முதல் நாளில் ராஜேந்திர சோழன் தனது பரிவாரங்களோடு பெலகோலா வலம்புரி தீர்த்தத்தில் புனித நீராடியதாக கல்வெட்டு தகவல் சொல்கிறது. இதற்கு சரியான ஆங்கில ஆண்டுக்குறிப்பானது கி.பி.1012 டிசம்பர் மாதம் 23-ம் தேதி செவ்வாய்கிழமை என்பதாகும். இதேபோல் வங்க தேசத்தை வென்ற ராஜேந்திர சோழன், எந்த இடத்தில் இருந்து கங்கை நீரை எடுத்து தமிழகம் கொண்டு வந்தார் என்பதற்கான ஆதாரமும் தெரியவந்துள்ளது. மூலகங்கை, பாகீரதி என்றெல்லாம் சொல்லப்படும் கங்கை நதியில் இருந்து சரஸ்வதி, யமுனை நதிகள் இணையும் புனிதத் துறைக்கு திரிபேணி (திரிவேணி சங்கமம்) என்று பெயர். இங்கு இருந்துதான், சோழப்படைகள் கங்கை நீரை எடுத்து வந்திருக்கின்றன என்பதற்கான சான்றுகளும் கிடைத்திருக்கின்றன என்கிறார்.
 திருவள்ளூர் வீரராகவ கோவிலில் காணப்படும் கல்வெட்டு ஒன்றின் படி, சோழ மன்னன் குலோத்துங்கன் பொங்கல் விழாவிற்கு சிறப்பாக நிலங்களை கோவிலுக்கு பரிசாக அளித்து வந்தார். கல்வெட்டில் விஷ்ணுக்கு பொங்கல் வரவு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
 சிதம்பர சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோயிலுள்ள கல்வெட்டொன்று இரண்டாம் கோப்பெருஞ்சிங்கன் (கி.பி.1243- கி.பி.1279) காலத்தில் கயிலாயத்தேவன் என்பவன் தைப்பூச நாளில் பொங்கலமுது படைக்க மூலதனமாக பெரும்பற்றப்புலியூர் கீழ்ப் பிடாகை கிடாரங்கொண்ட சோழப்பேரிளமைநாட்டு எருக்காட்டுச் சேரியான சோழ நல்லூர்ப்பால் சோழபாண்டியன் என்ற பெயருள்ள நிலத்தையும், அங்குள்ள கொல்லைக் குளத்தில் செம்பாதி நிலத்தையும் அளித்திருந்தான் என்று கூறுகின்றது.
 கல்வெட்டுகளில் மகர சங்காராந்திப் புண்ணிய காலத்தில் தீர்த்தமாடித் தானங்கள் கொடுத்ததாக விஜயநகரம் கிருஷ்ணதேவராயர் கல்வெட்டு குறிப்பிடுகிறது.
இன்றைய தைப் பொங்கல், சூரியனுக்கு முக்கியத்துவம் கொடுத்து கொண்டாடப்படுவது தெரியும். ஆனால், துவக்க காலகட்டங்களில், சந்திரனுக்குத் தான் தை மாதம் மட்டுமின்றி, பிற மாதங்களிலும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது என்பது வரலாறு.
தமிழகத்தில், துவக்க காலங்களில், சந்திரனின் வளர்ச்சி, தேய்வை அடிப்படையாக வைத்தே, நாள் கணக்கீடு ஏற்பட்டது. அதன் பின், சூரியனின் நகர்வை அடிப்படையாக கொண்ட கணக்கீடு வந்திருக்க வேண்டும்.
சௌரமான கணக்கீட்டில் மகர சங்கராந்தி:
சௌரமானக் கணக்கின்படி, ஓராண்டில், இரண்டு விஷுக்கள், இரண்டு அயனங்கள் வருகின்றன. ஆண்டை, ஒரு வட்டமாக கணக்கிட்டால், முதல் 90 டிகிரி, சித்திரை விஷூ; அடுத்தது ஆடி அயனம்; மூன்றாவது ஐப்பசி விஷூ; நான்காவது மகர சங்கரமணம் அல்லது தைப்பிறப்பு.
வேதத்திலும், உத்தராயனத்தை ஒளிக்காலம் எனவும், தட்சிணாயனத்தை இருட்காலம் எனவும் குறிப்பிடப் பட்டுள்ளது. மகாபாரதத்தில் வேறொரு குறிப்பு காணப்படுகிறது. அதன்படி, ரத சப்தமி என்பது, மாசி மாத வளர்பிறை சப்தமி தான் என்றும், அன்று தான், சூரியன் வடக்கு நோக்கி திரும்புகிறது என்றும் மகாபாரதம் கூறுகிறது. அந்த நாளில்தான் பீஷ்மர் உயிர் துறந்தார். இவற்றின் அடிப்படையில் பார்த்தால், தை மாதப் பிறப்பு எப்போது உத்தராயனத் துவக்கமாக மாறியது எப்போது என, தெரியவில்லை.
பஞ்சாங்கக் கணிப்பாளர்கள் விட்ட தவறு இதுவே. மாதக்கணிப்பில் மட்டும் சூரியவழிக்கு மாறிவிட்டு, சந்திரவழிப் பெயர்களை அப்படியே மாற்றாமல் பயன்படுத்தி வந்தது. ஆனால் சூரியவழி மாதங்களை தவறாக சந்திரவழி மாதங்களின் பெயர் கொண்டு அழைத்ததால் ஏற்பட்ட விபரீதம்.
 


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

இராசிகளில் சூரியனின் நிலையை வைத்துக் கணிக்கும் மாதங்களை இராசிகளின் பெயரிலேயே அழைத்தார்கள். உதாரணமாக, சூரியன் மேட இராசியில் நிற்கும் முப்பது நாட்களும் 'மேட ஞாயிறு' என்று அழைக்கப்பட்டது.
இப்படி, பன்னிரண்டு இராசிக்கும் பன்னிரண்டு ஞாயிறுகள் சேர்ந்தது ஒரு ஆண்டு. ஆனால், சந்திர வழியில் ஒரு பௌர்ணமியிலிருந்து அடுத்த பௌர்ணமி வரை, ஒரு திங்கள். பன்னிரண்டு திங்கள்கள் சேர்ந்தது ஒரு ஆண்டு.
பழைய சந்திர வழியில் பார்த்தால்,தை மாதம் பிறப்பது, தைப்பௌர்ணமியில் - தைப்பூசத்தில்! அன்று தான் பெண்கள் தைந்நீராடல் செய்து, தமது மார்கழித்திங்கள் பாவை நோன்பை நிறைவு செய்கிறார்கள். ஆண்டாள் மார்கழி இறுதியில் பெண்கள் உண்பதாகச் சொல்லும் அதே நெய்ப்பாற்சோற்றையே, தைப்பூசமன்று பெண்கள் 'நெய்ப்பூசும் ஒண்புழுக்கல்' கொண்டாடுவதாக சம்பந்தர் பாடியிருக்கிறார். இப்படிப் போகும் போது தான், சங்க இலக்கியங்கள் புகழும் தைமாதமும், நமது இன்றைய தைமாதமும் வேறுவேறு என்பது தெரியவருகிறது.
இனி காலக்கணிப்புக் குழப்பத்தோடு தை மாதம் சந்திர வழியிலிருந்து சூரியவழிக்கு மாற்றமுற்றதையும் சிந்திக்கவேண்டும்.
சந்திரவழியை நாட்காட்டியாக கைக்கொள்ளும் மரபு இன்றும் ஆந்திரா முதல் பல இடங்களில் உள. ஆனால் அது இன்று ஒரு வளர்பிறை பிரதமை தொட்டு அமாவாசை வரையான காலமாகவே கணிக்கப்படுகிறது. இதை சாந்த்ரமானம் என்கின்றனர். நமது நவராத்திரி, விநாயகசதுர்த்தி இவையெல்லாம் சாந்த்ரமானப்படியே அனுசரிக்கப்படுகின்றன. சந்திரவழிக் காலக்கணிப்பில் அமாந்தம், பூர்ணிமாந்தம் என்று இரு வகை உண்டு. ஒரு அமாவாசைக்கும் அடுத்த அமாவாசைக்கும் இடைப்பட்ட காலத்தை ஒரு மாதமாகக் கணிப்பது அமாந்தம். அதையே இரு பௌர்ணமிகளுக்கு இடையே கணிப்பது பூர்ணிமாந்தம். இன்று பல இடங்களில் அமாந்த முறை நாட்காட்டியே பயன்படுகிறது.
ஆக, காலக்கணிப்பு மாற்றத்தின் ஊடாக,
1. மகர சங்கிராந்தி (சூரிய வழிபாடு),
2. பழைமையான அறுவடைத்திருநாள்
ஆகிய இரு கூறுகளின் ஒன்றித்த வடிவமே இன்றைய தைப்பொங்கல் என்றே நாம் கொள்ளலாம்.
கல்வெட்டுகளில் தைப்பூச நாளுக்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதைப் பார்க்கிறோம். தை மாதத்தில் தைப்பூச நாளை மிகச் சிறந்த நாளாகச் சோழர்கள், பல்லவர்கள் காலத்தில் கொண்டாடியிருக்கிறார்கள். இன்றைய பொங்கல் விழா மரபு 300ஆண்டுகளுக்கு முன்பிருந்து தொடங்கியிருக்கலாம் எனக் கணிக்கலாம்.
பெரியபுராணத்தில், மள்ளர்கள், இந்திர தெய்வத்தை தொழுது நாற்று நட்டதாக, சேக்கிழாரின் குறிப்புகளில் இருந்து தை மாதப் பிறப்பு, சோழர் காலத்தில் பெரிய விழாவாக கொண்டாடப்படவில்லை எனத் தெரிகிறது.
விஜயநகர பேரரசின் காலத்தில், அது பெரிய விழாவாக மாறியிருக்கலாம். தஞ்சை மராட்டியர் காலத்தில், மகர சங்கராந்தி அன்று, வாழை கட்டி, பொங்கல் விட்டு கொண்டாடியதாக, ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.
(கி.பி. பதினாறாம் நூற்றாண்டில் அப்பே ஜே.எ. டுபாய்ஸ் Abbe J.A. Dubois எனும் போர்ச்சுக் கீசியர் இந்தியாவிற்கு வந்தார். அவர் தென்னிந்தியா முழுவதையும் சுற்றிப் பார்த்தார். இந்து மக்களிடையே அவர் கண்டவற்றையும் கேட்டவற்றையும் “இந்துக்களின் பழக்க வழக்கங்களும் வாழ்க்கை முறையும்'' (Manners and Customs of the Hindoor) எனும் நூலினை எழுதியுள்ளார். அதில் தென்னகத்தில் கொண்டாடப்படும் `பொங்கல் விழாவினை' நன்கு சித்திரித்துள்ளார். உழவர்களுடைய அறுவடைத் திருநாளாகவும், சங்கராந்திப் பண்டிகையாகவும் ஊர்கள் தோறும் எவ்வாறு அது கொண்டாடப்பட்டது என்பதை அவர் விரிவாக எடுத்துரைத்துள்ளார்.
இருபது ஆண்டுகளுக்கு முன்புவரை, பொங்கல் விழாவை, நான்கு நாள்கள் கோலாகலமாக நம் மக்கள் கொண்டாடினர். இன்று பெரிதும் `இருநாள் விழா'வாக மாறிவிட்டது. ஆனால், அப்பே டூபாய் வந்த காலத்தில், நான்கு நாள்கள் பொங்கல் விழா தொடங்குவதற்குப் பல நாள்களுக்கு முன்னரே அதற்குரிய ஏற்பாடுகள் ஆர்வத்தோடும் ஆரவாரத்தோடும் செய்யப்பட்டதாம். வீடுகளைப் பழுது பார்த்தல் குடிசைகளில் புதிய கூரை வேய்தல், வெள்ளையடித்தல், வண்ணம் தீட்டுதல், அலங்கரித்தல் போன்ற பணிகளில் மக்கள் ஈடுபட்டனராம். தேவையில்லாத தட்டுமுட்டுச் சாமான்களை எல்லாம் பொங்கல் விழாவின் தொடக்க நாள் அன்று, விடியற்காலையில் வீட்டு முற்றத்தில் தீயிலிட்டுக் கொளுத்தி மகிழ்ச்சி ஆரவாரம் செய்ததை, “சொக்கப்பனை'' கொளுத்தி விழாவினைத் தொடங்கினர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிகழ்ச்சியால், தமிழருடைய `துப்புரவு மனப்பான்மை' வெளிப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். பொங்கல் நாளன்று சூரியனுக்குச் செய்யப்படும் வழிபாட்டையும், பொங்கல் படையலையும் அவர் பாராட்டியுள்ளார். மறுநாள் மாடுகளுக்குச் செய்யப்பட்ட அலங்காரங்களையும், ஊர்ப் பொது இடத்தை மக்கள் கூடி, அவற்றிற்கு வழிபாடு செய்ததையும் சுட்டத் தவறவில்லை. மறுநாள், மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்த மக்கள் காளையாட்டுப் போட்டிகளிலும் `மஞ்சு விரட்டு' போன்ற வீர விளையாட்டுகளிலும் பேரார்வத்தோடு ஈடுபட்டதை அவர் பதிவு செய்துள்ளார். மொத்தத்தில் அவர் கண்ணோட்டப்படி ஏழை எளிய மக்களின் பெருந்திருவிழாவாகப் பொங்கல் திருநாள் விளங்கியமை இனிது புலனாகின்றது.
அதேபோல், 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த “வலங்கை இடங்கை வரலாறு” என்ற நூலில், மகர சங்கராந்தி அன்று, சுவாமி புறப்பாடும், தேவதாசியர் நடனமும் நடந்ததாக குறிப்பு உள்ளது.
இருபதாம் நூற்றாண்டில், பெண்ணாகடத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர், முதன் முதலாக, பொங்கல் வாழ்த்து அட்டை தயாரித்து அச்சிட்டார். அதன் பின், தைப் பொங்கலுக்கு, தமிழர் திருநாள் என்ற அடையாளம் மெல்ல மெல்ல வந்து சேர்ந்தது. ஐரோப்பியர் வருகையால், நமது அன்றாட நடவடிக்கைகள், ஆங்கில காலண்டர் கணக்கின்படி அமைய நேரிட்டது. அதனாலும், தைப் பொங்கலுக்கு முக்கியத்துவம் அதிகரித்தது.
பொங்கல் பண்டிகையின் வேறு பெயர்கள்
• தமிழகத்தில் அறுவடைத் திருநாளை பொங்கல் பண்டிகையாக கொண்டாடுகிறோம். மற்ற மாநிலங்களில் வேறு பெயர்களில் கொண்டாடுகின்றனர்.
• கேரளாவில் – சேர வம்சத்தின் மூலம் தமிழர்களுடன் வரலாற்று கலாச்சாரம் பகிர்ந்து கொள்ளும் கேரளா மாநிலத்தில், பொங்கல் திருவிழா நாளில் பால்-அரிசி-வெல்லம் உணவு சமைத்தல், சமூக வருகைகள் மற்றும் கால்நடைகளுக்கு மரியாதை செலுத்துதல் உள்ளிட்ட சடங்குகள் கேரள சமூகங்களில் கடைபிடிக்கப்படுகின்றன. வயநாடு, இடுக்கி, பத்தனம்திட்டா, பாலக்காடு மற்றும் திருவனந்தபுரம் மாவட்டங்களில் பொங்கல் திருவிழா வரையறுக்கப்பட்ட அரசு விடுமுறை நாள் ஆகும். திருவனந்தபுரம் (கேரளா) அருகே உள்ள ஆட்டுக்கல் பகவதி கோவிலுக்கு வருடாந்திர பெண்களின் மிகப்பெரிய “ஆட்டுக்கல் பொங்கலை யாத்திரை” குறிப்பாக குறிப்பிடத்தக்கது. கின்னஸ் உலக சாதனை புத்தகத்தால் 2.5 மில்லியன் பெண்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய பெண்களின் கூட்டமாக ஆட்டுக்கல் பொங்கலை யாத்திரை அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
• ஆந்திராவில் மகர சங்கராந்தி என்று கொண்டாடப்படுகிறது.
• பஞ்சாப்பில் லோஹ்ரி என்று கொண்டாடப்படுகிறது. அன்று இனிப்பு அரிசி, சோளப் பொரி ஆகியவற்றை தீயிலிட்டு கிராமியப் பாடல்களைப் பாடி மகிழ்வர்.
• குஜராத்தில் மகரசங்கராந்தி அல்லது உத்ராயன் என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.
• மகாராஷ்டிராவில் மகர சங்கராந்தி என்று கொண்டாடப்படுகிறது. எந்தோவன் என்ற மானுடவியல் அறிஞர், தன் பழங்குடிகள் பற்றிய நூல் ஒன்றில், 1927ல் குறிப்பிட்டுள்ளார். அப்போதைய பாம்பே மாகாணத்தில், காந்தேஷ் பகுதியில், பவ்ரா என்ற பழங்குடியினர், 'நாகதீபாவளி' கொண்டாடினர். நள்ளிரவில் மூங்கில் கழியில் தீப்பந்தத்தை ஏந்திக் கொண்டு, ஆடவர் குழு ஊரை வலம் வருகிறது. குழுவை இரண்டு ஆடவர் வழிநடத்துவர். குழு ஒவ்வொரு வீட்டின் முன்பும் போய் நிற்கும். வீட்டின் பெண்கள், ஆடவரின் நெற்றியில், தீப்பந்தத்தின், முனையில் உள்ள கறுப்பு எண்ணெயை. வழித்து, திலகமிட்டு, மதுபானம் அளித்து அனுப்புவர். விடிந்த உடன், மாடுகளுக்கு அரிசி, தானியம் கலந்த பொங்கல் படைப்பர். இன்றும், இரவில் தான் போகி கொண்டாடப்படுகிறது. மாட்டுப் பொங்கலையும் இதன் தொடர்ச்சியாக காணலாம்.
மகாராஷ்டிரத்தில் பொங்கலன்று, இரு நபர்கள் சந்தித்தால், பரஸ்பரம் வண்ண தானியங்களைப் பரிமாறிக் கொள்கின்றனர். மராட்டியர்களும் பொங்கல் திருநாளை மூன்று நாட்கள் கொண்டாடுகிறார்கள். அப்போது மராட்டியர்கள் எள்ளுருண்டைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். முதல் நாள், போகிப் பண்டிகை அன்று மராட்டியர்கள் எள் சேர்த்து கேப்பை மாவில் ரொட்டியுடன் காய்கறி கூட்டும் செய்து இறைவனுக்கு நைவேத்தியம் செய்த பின் சாப்பிடுகிறார்கள். இரண்டாம் நாள், சங்கராந்தி அன்று வெல்லம் சேர்த்து எள்ளுருண்டை செய்கிறார்கள். கூடவே ஏதாவது ஓர் இனிப்பும் செய்து பழம், கரும்பு ஆகியவற்றைப் படைக்கிறார்கள். எல்லோருக்கும் எள்ளுருண்டை கொடுக்கிறார்கள். மனிதர்கள் சமாதானமாக இருக்க உறுதி எடுக்கிறார்கள். மூன்றாம் நாள், கிங்கராந்தி அன்று எண்ணெயில் பொரித்தெடுத்த வடை செய்கிறார்கள். பவுஷ் (தை) மாதம் குளிராக இருக்கும். அதனால் உடலுக்குச் சூடு அளிக்கும் எள்ளைச் சேர்த்துக் கொள்கிறார்கள். மராட்டிய மக்கள் பொங்கலின்போது பெண்களுக்கு குங்குமம் மற்றும் எள்ளுருண்டை வழங்குவது வழக்கம். அப்போது ‘தித்திப்பாகப் பேசு, சண்டை போடாதே!’ என்று கூறுகிறார்கள்.
• ஹிமாச்சலப் பிரதேசதில் மஹா சாஜி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.
• மேற்கு வங்காளத்தில் பௌஷ் என்ற பெயரில் கொண்டாடுகின்றனர்.
• உத்திரப் பிரதேசதில் கிச்செரி என்று கொண்டாடப்படுகிறது.
• கர்நாடகாவில் சுகி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.
• ஜார்க்கண்ட் - டில் சக்ராத் அல்லது கிச்ச்டி என்றும்,
• பீகாரில் பிகு என்றும்,
• ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் உத்தராயன் எனவும்,
• ஹரியானாவில் மாஃஹி எனவும் கொண்டாடப்படுகிறது.
• இலங்கையில், அறுவடை முடிந்த பின் 'களவட்டிப்பொங்கல்' (களம் வெட்டிப் பொங்கல்) வைத்து சூரியனுக்கும் பூமிதேவிக்கும் நன்றி சொல்லும் மரபு உண்டு.
• அஸ்ஸாம் மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் ‘போகாலி பிஹு’ என்ற பெயரில் அறுவடைத் திருவிழா கொண்டாடப்படுகிறது. அறுவடை முடிந்த வயல்களில் கொட்டகைகள் போட்டு, முதல் நாள் இரவு இளைஞர்கள் விருந்து உண்பர். மறு நாள் காலையில் கொட்டகைக்கு தீ வைப்பதுடன் அறுவடைத் திருநாள் ஆரம்பமாகிறது.
• ஜப்பானிலும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. நாம், ‘பொங்கலோ பொங்கல்!’ என்பது போல், ஜப்பானியர் ‘ஹங்கரோ ஹங்கரோ’ என்று குரல் எழுப்புவர். அன்று கோயில்களில் தேர் இழுக்கும் வழக்கமும் உண்டு. நாம் மாட்டுப் பொங்கல் கொண்டாடுவது போல ஜப்பானில் ‘குதிரைப் பொங்கல்’ கொண்டாடுகிறார்கள். அன்று குதிரையை அலங்கரித்து, மலர் மாலைகள் சூட்டி, இனிப்புக் கொடுத்து போற்றுகிறார்கள்


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 
 
கல்வெட்டுகளில் பொங்கல் - பொங்கல் விழா -4
--------------------------------------------------------
சங்கராந்தி என்பது தென் கிழக்காசியா முழுதும், இந்தியாவில் தென் குமரி முதல் வட இமயம் வரை, கொண்டாடப்படுகிறது.
• தாய்லாந்து, லாவோஸ் ஆகிய இரண்டு நாடுகளில் ‘சொங்ராங்’ (சங்கராந்தி) என்ற பெயரில் இதைக் கொண்டாட கதை சொல்லப்படுகிறது.
தர்மாபரணன் என்ற ஒரு அறிவாளி வாழ்ந்து வந்தான். அவன் ஏழு வயது முதலே பேரறிஞன். இளம் வயது மேதை; பறவைகள் மிருகங்கள் பேசுவதை அறிந்தவன். அவன் மீது அந்த நாட்டின் மன்னன் கபிலபிரம்மனுக்கு ஒரே பொறாமை. அவனை போட்டிக்கு அழைத்தான். கபிலனுக்கு ஏழு பெண்கள்/புதல்விகள்.
“நான் ஒரு விடுகதை போடுவேன். நீ சரியான பதில் சொன்னால், நானே என் தலையை வெட்டிக் கொள்வேன்; அப்படிச் சொல்லவில்லையானால் நீயே உன் தலையை வெட்டிக் கொள்ள வேண்டும். சரியா?” என்றான் கபிலன்.
உடனே சரி என்று தலை அசைத்தான் தர்ம ஆபரணன்.
விடுகதை இதுதான்:-
மனிதனுடைய ஜீவன் காலையில், நண்பகலில், மாலையில் எங்கே உளது?
தர்மன் இதைப் பற்றி யோசித்துக் கொண்டே இருந்தான்; அவனுக்குத்தான் பறவைகளின் மொழி தெரியுமே! அவை இது பற்றி என்ன பேசிக்கொள்கின்றன என்று ஒட்டுக் கேட்டான். விடையும் கிடைத்து விட்டது.
நேராக கபிலனிடம் சென்று இதோ தயார் என்றான்
என் கேள்விக்கு என்ன பதில்? என்றான் மன்னன் கபிலன்.
தர்மன் சொன்னான்:–
காலையில், மனிதனின் ஜீவன் முகத்தில் உளது; ஆகையால்தான் நாம் துயில் எழுந்தவுடன் முகத்தைக் கழுவுகிறோம். மதியம், நமது ஜீவன் மார்பில் உளது;ஆகையால்தான் சந்தனம் பூசுகிறோம். மாலையில், நமது ஜீவன் காலில் உள்ளது.
ஆகையால்தான் படுக்கைக்கு போகும் முன் கால் கழுவிவிட்டு படுக்கச் செல்கிறோம்.
இதைக் கேட்டவுடன் கபிலன் தன் தலையை வெட்டிக்கொண்டான். அதைச் சீவிய வேகத்தில் தலை காற்றில் பறந்தது.
கபிலனது ஏழு மகள்கள், இந்தத் தலை பூமியில் விழுந்தால் பூமி எரிந்து கருகிவிடும்; காற்றில் இருந்தால் அனல் காற்றால் பூமி வறண்ட பாலைவனம் ஆகி விடும்; கடலில் விழுந்தால் அது வற்றிப் போய்விடும். ஆகையால் மேருமலை மீதுள்ள குகையில் வைப்போம். ஒவ்வொரு ஆண்டும் முறைவைத்து அதைப் பாது காப்போம் என்று நினைத்தவர்கள் எழுவரும் முடிவு செய்தனர். ஆண்டுக்கு ஒரு முறை சங்கராந்தி தினத்தன்று அதை ஊர்வலமாக எடுத்துச் செல்வோம் என்று முடிவு செய்தனர்.
காலப்போக்கில் அந்த ஏழு பெண்களுக்கும் பிடித்த உடை, உணவு, வாஹனம், தோற்றம் ஆகியவற்றை தாய்லாந்து மக்கள் கற்பித்தனர்; ஏழு நங்கைகளையும் வாரத்தின் ஏழு கிழமைகளுக்கு சொந்தம் ஆக்கினர். அவர்கள் கையில் ஆயுதம் அல்லது ஒரு பொருளைக் கொடுத்தனர்.
சங்கராந்தி நாள் எந்தக் கிழமையில் ஏற்படுகிறதோ அந்த கிழமைக்கு உரிய மங்கையின் கையில் என்ன உள்ளது, அவள் என்ன ஆடை அணிந்திருக்கிறாள்? அதன் வர்ணம் என்ன? போன்ற அம்சங்களை வைத்து அந்த ஆண்டில் என்ன நடக்கும் என்பதை மக்கள் ஆரூடம் கூறினர்.
இந்த வழக்கத்தை இப்பொழுதும் மதுரை சித்திரைத் திருவிழாவில் காணலாம். கள்ள அழகர் (விஷ்ணு) என்ன நிற ஆடை உடுத்தி, வைகை ஆற்றில் இறங்குகிறாரோ அதற்கேற்றவாறு மழை அறுவடை, நாட்டின் வளம் இருக்கும் என்று மக்கள் நம்புகின்றனர். பச்சைப் பட்டு உடுத்தி அழகர் ஆற்றில் இறங்கினால் பசுமை மிக்க அறுவடை இருக்கும் என்பது போல தாய்லாந்தில் கையில் வாளேந்திய சிவப்பு நிற மங்கைக்கு உரிய நாளில் சங்கராந்தி ஏற்பட்டால் யுத்தம் போர் மூளும் என்று தாய் மக்கள் நம்பினர்.
லாவோஸ் நாட்டில் அன்றைய தினம் மேருமலையைப் போல மணற் கோபுரங்களைக் கட்டி, அதற்கு மஞ்சள் ஆடை உடுத்தி, தோரணம் கட்டி, பூஜை புனஸ்காரங்களைச் செய்து நைவேத்யம் படைத்து வணங்குவர். அந்த படைப்புப் பொருட்களை புத்த பிக்ஷுக்களுக்கு வழங்குவர்


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

கல்வெட்டுகளில் பொங்கல் - பொங்கல் விழா - 5
--------------------------------------------------------
மாட்டுப் பொங்கல்
-----------------------
அடுத்த நாள் அன்று தனக்கு உதவிய மாடுகள், ஏற்கலப்பை போன்ற விவசாயத்திற்குப் பயன்பட்ட எல்லா பொருள்களுக்கும் நன்றி செலுத்தும் நாள் மாட்டுப் பொங்கல் ஆகும்.
மாட்டுப் பொங்கலை கன்றுப் பொங்கல் என்றும் பட்டிப் பொங்கல் என்றும் அழைக்கும் வழக்கம் உண்டு. மாடுகளைக் குளிப்பாட்டி, அதன் கொம்புகளை சீவி, பளபளக்கும் வகையில் இயற்கை வண்ணம் பூசி, குஞ்சம் அல்லது சலங்கைகள் கட்டிவிட்டு, தோளில் வார்ப்பட்டையிலும் சலங்கைகள் மாட்டிவிட்டு, மாடு தலையை ஆட்டும் போது ஏற்படும் ஒலியைக் கேட்டு ரசிப்பார்கள். மேலும் நாட்டுச் சர்க்கரை, தேங்காய், பழம் எல்லாம் மாட்டுத் தொழுவத்தில் படையல் வைத்து, பொங்கலை பொங்கச் செய்து மாட்டுக்குப் படைத்து வணங்குவார்கள். மாடு உண்டு முடித்த எச்சில் தண்ணீரை "பொங்கலோ பொங்கல் மாட்டுப் பொங்கல் பட்டிப் பெருக பால் பானை பொங்க நோவும் பிணியும் தெருவோடு போக" எனச் சொல்லி மாட்டுத் தொழுவம் முழுதும் தெளிக்கும் வழக்கத்தை கடைப்பிடித்து வருகிறார்கள்.
மாட்டுப் பொங்கல் என்பதே கால்நடை சமூகத்தின் பொருளாதாரப் பின்னணியை மையப்படுத்திய திருவிழா.
“மென்புலத்து வயலுழவர் வன்புலத்துப் பகடுவிட்டு”
என்றொரு புறநானூறு பாடல்வரி மருத நிலத்து உழவர்கள், முல்லை நிலத்திலிருந்து மாடுகளை ஓட்டிச் செல்வதாகப் பொருள்.
பிற்கால கல்வெட்டு ஒன்று, முதலாம் இராசராசனின் காலத்தில் அவனுக்கு அடங்கிய சிற்றரசன் ஒருவன், தான் வெற்றிகொண்ட பகுதிகளில் இருந்து 900ஆடுகளைக் கவர்ந்துவந்து காஞ்சிபுரத்தில் உள்ள ஐஞ்சந்தி துர்க்கா படாராகிய கோயிலுக்கு தானமாகக் கொடுத்ததை இந்தக் கல்வெட்டுதான் நேரடியாகச் சொல்கிறது. தொடக்கக் காலத்தில் தானமாக கொடுக்கப்பட்ட ஆடு மாடுகள் இதுபோல் வெற்றி கொண்ட பகுதியிலிருந்து கவர்ந்து வரப்பட்டவையாக இருக்கலாம். பல்லவர் காலத்தில் வணிகர்கள் வந்தார்கள். ஆடு மாடு வணிகம் நடந்தது. அதற்கு முன்பு கவரப்பட்ட கால்நடைகள் தானம் கொடுப்பதற்கும், மருத நிலத்தின் பயன்பாட்டுக்கு விற்பதற்கான பண்டமாகவும் இருந்ததென சொல்ல முடியுமே தவிர, உறுதியான சான்றுகள் இல்லை. சில இடங்களில், குறிப்பாக கொங்குப் பகுதியில் ‘பண்டம்’ எனும் சொல்லால் கால்நடைகளை வழக்கில் அழைக்கும் பழக்கம் இன்றுமுள்ளது.
மரியாதைக்குரிய வழக்கு சொல்லாக பண்டம் என்ற பதம் பயன்பாட்டில் இருந்தாலும் உண்மையில் அவை வணிகப்பொருள் என்பதுதான்.
சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி சுற்றுப்புற கிராமங்களில், முத்தரையர் சமுதாயத்தினர் வசிக்கின்றனர். இவர்களது குலதெய்வமான பச்சைநாச்சியம்மன் சாலுாரில் உள்ளது. மதகுபட்டி சமுதாயத்தினர் ஆண்டுதோறும் தை 2ம் தேதி மாட்டு பொங்கல் அன்று விவசாயத்திற்காகவும், தங்கள் குடும்பத்திற்காகவும் உழைக்கும் கால்நடைகளுக்கு மரியாதை செய்வது வழக்கம். சலுகைபுரத்தில் இச்சமூகத்தைச் சேர்ந்த சாமியாடி நேற்று காலை 11:00 மணிக்கு, ஒவ்வொருவர் வீட்டிற்கும் சென்று வீடுகளில் அவருக்கு காணிக்கை கொடுத்து வரவேற்று, பின்னர், வெண்சேலை அணிந்த பெண்கள் வீட்டில் இருந்து ஊர்வலமாக, மேளதாளம், சங்கு ஒலி எழுப்பி பொங்கல் பானைகளை தலையில் சுமந்தவாறே, மாட்டு தொழுவத்தின் முன் கூடி வெண் பொங்கல் வைத்து வழிபாடு நடத்துகின்றனர். குல தெய்வம் பச்சை நாச்சியம்மனுக்கு பிடித்த ஆடை வெண்சேலை. பெண்கள் அதை பாரம்பரியமாக உடுத்திதான், கொலுசு, மெட்டி, வளையல் உட்பட எந்தவித ஆபரணங்களும் அணியாமல் பாரம்பரிய முறைப்படி வெண் பொங்கல் மட்டுமே வைத்து வழிபாடு நடத்துவர். விரத காலங்களில் வீடுகளில் உணவுக்காக தாழிப்பது கிடையாது.தொழுவில் சேர்ந்த கரும்பு, எலுமிச்சை உள்ளிட்ட பொருட்களை ஏலம் விட்டு, அந்த தொகையை கோவில் கணக்கில் செலுத்துவர். அன்று மதியம் அனைவரின் வீட்டிலும் சைவ சாப்பாடு அன்னதானமாக வழங்கப்படும். பிள்ளை வரம் வேண்டி தொட்டில் கட்டியும், திருமண தடை நீங்க வேண்டுதல் வைத்தால், அடுத்த ஆண்டிற்குள் நிறைவேறி விடுமாம்.
வாணியம்பாடி பக்கத்தில் உள்ள கேதாண்டபட்டி ஊரில் நடுகல் இருக்குமிடத்துக்கு, மாட்டுப் பொங்கல் அன்று அல்லது மறுநாள் ஏலகிரி மலைமீது உள்ள மக்கள் தங்களின் கால்நடைகளை ஓட்டி வந்து சடங்குகள் செய்வர். அவ்வாறு செய்வதால் வரக்கூடிய வருடத்தில் கால்நடைகள் நோய்வாய்ப்படாமல் பட்டி பெருகும் என்பது அவர்களின் நம்பிக்கை. தொண்டை மண்டலத்தில் எருதாட்டம், மாடு விடும் விழாக்கள் பொங்கல் நாட்களில் நடப்பவை. குறிப்பாக நடுகற்கள் இருக்கும் மந்தை வெளி / மண்டு பகுதியில் உள்ள மைதானத்தில் இவ்விழா நடைபெறும். பொங்கல் நாட்களில் மற்ற விழாக்களுக்கு முக்கியத்துவம் குறைவு. மாட்டுத் திருவிழா அன்றுதான் பெரும்பான்மையான மக்கள் கூடுவர். கரடிகை போன்ற சில இடங்களில் நடுகல் கல்வெட்டை சுற்றியே மாடுகள் நிறுத்தப்படும். இது வளமை சடங்கின் வெளிப்பாடு. கொங்கு பகுதியில் அதனை பட்டிப் பொங்கல் என்பர். அங்கு ஒவ்வொருவரின் வீட்டிலும் தனித்தனியாக பட்டிப் பொங்கல் வெகு சிறப்பாக சிறிய விழா போலவே நடைபெறும்.
வேளாண்மையோடு பெரிதும் தொடர்பில்லாத அங்குதான் மாடுகளைச் சேற்றில் நடக்கவிடும் முறையும் பின்பற்றப்படுகிறது. தொண்டை மண்டலத்தில் மண்டில் கூடும் விழா தனித்த மேய்ச்சல் சமூக பண்பாட்டின் எச்சம். கால்நடை பொருளாதாரத்தை சார்ந்து இயங்கும் கிராமங்களில் மற்ற பண்டிகைக்கு வருகிறார்களோ, இல்லையோ மாட்டோடு தொடர்புடைய விழாக்களில் தவறாமல் கூடும் வழக்கத்தை இன்றளவும் தமிழகம் கொண்டுள்ளது


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

கல்வெட்டுகளில் பொங்கல் - பொங்கல் விழா - 6
------------------------------------------------------
தமிழகத்தில் நாயக்கர் காலம் (கி.பி. 1532 -கி.பி. 1736) நிலவியபொழுது தைப்பொங்கல் காலப்பகுதியில் ஜல்லிக்கட்டு / சல்லிக்கட்டு என்றழைக்கப்படும் காளையை அடக்கும் விழா அறிமுகப்படுத்தப்பட்டது. சல்லிக்காசுகள் என்னும் காசுகளை நாணயங்களை மாட்டின் கொம்புகளில் அலங்காரமாக கட்டி வைத்து விளையாடும் வீர விளையாட்டு ஆதலால் சல்லி கட்டு என அழைக்கப்பட்டு ஜல்லிக்கட்டு என்று ஆகிவிட்டது.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு விழா வாழையடி வாழையாக நடத்தப்பட்டு வரும் விழா என்பதற்கு ஆதாரமாக, சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு காளையை அடக்கி, அதன் கொம்பில் கட்டப்பட்ட பரிசு பொருளை எடுக்கும் வீரனின் சிலை கிடைத்துள்ளது. கடந்த 1976-ம் ஆண்டு பெத்தநாயக்கனபாளையத்தில் கண்டெடுக்கப்பட்ட இந்த சிலையில், காளை அடக்கும் வீரனின் உருவமும், அந்த வீர விளையாட்டை விவரிக்கும் சொற்றொடர்களும் பொறிக்கப்பட்டுள்ளது. பெத்தநாயக்கன் பாளையத்தில் 400 ஆண்டுகளுக்கு முன்பு ஆண்ட குறு நில மன்னர்கள், ஜல்லிக்கட்டு போட்டி நடத்தி, அதற்கு சான்றாக கல்வெட்டை செதுக்கி வைத்து தமிழர்களின் வீரத்தை பறைசாற்றி சென்றுள்ளனர்.
முன்னோர்களால் நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டியும், காளையை அடக்கும் வீரனும், சேலம் அருங்காட்சியகத்தில் சாட்சியாக பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

கல்வெட்டுகளில் பொங்கல் - பொங்கல் விழா - 7
------------------------------------------------------
கன்னிப் பொங்கல் / கணுப் பொங்கல் / காணும் பொங்கல்
---------------------------------------------------------------
மாட்டுப் பொங்கலுக்கு அடுத்த நாளாம் காணும் பொங்கலை கன்னிப் பொங்கல் அல்லது கணுப் பொங்கல் பண்டிகையும் என்றும் அழைப்பதும் வழக்கம். தை மூன்றாம் நாள் கன்னிப் பொங்கல் எனப்படும் இது இன்று கிராமங்களில் கன்று பொங்கல் என்றும் நகரங்களில் காணும் பொங்கல் என்றும் பலவாறு வேறுபட கொண்டாடப்பட்டு வருகிறது.
‘பண்டைத் தமிழகத்தில் பொங்கலின் 3-ஆம் நாளன்று ‘கன்னிப் பொங்கல்’ கொண்டாடினர்.
அன்று கன்னியர்கள் காலையில் சூரியனையும் மாலையில் அம்மனையும் சிறப்பாக வழிபட்டனர்’ என்று கல்வெட்டுகள் கூறுகின்றன.
மார்கழி 30 நாளும் திருவம்பாவை ஓதி திருப்பாவை திருவம்பாவை ஓதி புலர் காலையில் நீராடி சிவனை வழிபட்டு வந்த கன்னிப் பெண்கள் நல்ல கணவன்மார்களை பெறுதல் பொருட்டு நிகழ்த்தும் நோன்பு திருநாளாகவே இத்திருநாள் அக்காலத்தில் நிகழ்ந்து வந்துள்ளதாகத் தெரிகிறது. மார்கழி 30 நாளும் வாயிலில் கோலமிட்டு அதன் நடு இடங்களில் பசுஞ்சாணத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து, அருகும் பரங்கிப் பூவும் நாட்டி, மறுநாள் அவற்றை விராட்டியாக தட்டி உலர்த்திட, பெண்கள் இந்நாளில் நீர்நிலைகளுக்குச் சென்று அவ்விராட்டிகளை நீரில் விடுத்து, விண்ணோக்கி தலை உயர்த்தி வழிபடும் சடங்கு ஒன்றை “எருவிட்டு இறைஞ்சுதல்” என்று குமரகுருபர சுவாமிகள் குறித்து இருக்கிறார்.
காணும் பொங்கல் பெண்களுக்கு மிக முக்கியமான தினமாகும். அன்று பொங்கல் அன்று வைத்த மஞ்சள் கொத்தை பெரியவர் 5 பெண்களிடம் கொடுத்து ஆசீர்வாதம் பெற்று வாங்கி அரைத்து முகத்திலும், பாதத்திலும் பூசிக் கொள்வர். காணும் பொங்கல் அன்று உறவினர்களை சந்தித்து ஆசீர்வாதம் வாங்குவதும் தொன்றுத் தொட்டு வரும் பழக்கங்களில் ஒன்றாகும்.
மேலும் ஜல்லிக்கட்டு, உரி அடித்தல், வழுக்கு மரம் ஏறுதல் போன்ற வீர விளையாட்டுகளை ஆண்மமகன்களின் வீரத்தையும் அவர்களின் உடல் வலிமை மற்றும் மன வலிமைகளை நிரூபிப்பதற்காக பல காலங்களாக நடைபெற்று வருகிறது.
பொங்கல் கொண்டாட்டங்களில் நான்காவது நாள் இடம்பெறும் விழா காணும் பொங்கல் ஆகும். காணும் பொங்கல் எனப்படும் பொங்கலின் மறுநாள் வரும் இந்தப் பண்டிகை கணுப் பண்டிகை என்றும் சொல்லப்படுகிறது. உடன்பிறந்த சகோதரர்கள் நலமும் வளமுமாய் வாழ சகோதரிகள் பிரார்த்திப்பது. அது ஒருவகை நோன்பு. உடன்பிறந்த சகோதரர்களுக்காய் பெண்கள் செய்யும் நோன்பு.
‘கார்த்திகை எண்ணெயும் கணுப்பிடியும் உடன்பிறந்தானுக்கு’
என்பது பழமொழி. அதாவது, கார்த்திகை மாதம் எண்ணெய் தேய்த்துக் குளித்து, விளக்கு வைப்பதும், பொங்கலில் பொங்கிய பால் சாதத்தை உடன்பிறந்தவர்களின் நலத்திற்காக காணும் பொங்கல்தினம் காக்கா, குருவிகளுக்கு அன்னமிடுவதும் இந்தப் பழமொழியின் விளக்கம். இரண்டு மஞ்சள் இலைகளை அல்லது வாழை இலைகளை கிழக்கு முகமாய் ஆற்றங்கரையிலோ அல்லது வீட்டு மொட்டை மாடியிலோ கோலமிட்டு அதன் மீது வைக்க வேண்டும். முதல் நாள் பொங்கிய சாதத்தில் மஞ்சள் பொடி தூவி மஞ்சள் சாதம் கொஞ்சம், குங்குமம் கலந்த சிவப்பு சாதம் கொஞ்சம், வெள்ளையாய் பால் சாதம் கொஞ்சம், வெல்லம் சேர்த்த சக்கரைப் பொங்கல், கொஞ்சம் லேசாய் தயிர் சேர்த்த தயிர்சாதம் என ஐந்து வகை அன்னங்களை தயாரிக்க வேண்டும். ஒவ்வொன்றிலும் 5 அல்லது 7 பிடி எடுத்து இலைமீது வரிசையாய் வைக்கும்போது,
‘காக்காப்பிடி வச்சேன் கணுப்பிடி வச்சேன்
காக்கைக்கு எல்லாம் கல்யாணம்
கண்டவர்க்கெல்லாம் சந்தோஷம்
கூடப்பிறந்த சகோதரர்கள் எந்நாளும்
குறைவில்லாமல் சந்தோஷமாய் வாழணும்’
என்று சொல்லிக்கொண்டே வைக்க வேண்டும். தீபம் ஏற்றிவிட்டு ஆரத்தி கரைத்து ஆற்றில் விடவேண்டும்.
வீட்டிலென்றால் வாசலில் கொட்டவேண்டும்.
உடன்பிறந்தவர்கள் உள்ளூரில் இருந்தால் அழைத்து கலந்த சாதம் பாயசம் செய்து விருந்து போட வேண்டும். அவர்கள் தரும் அன்பளிப்பை பெற்றுக் கொள்ள வேண்டும்.
சகோதரிகளையும் உடன்பிறந்தவர்கள் அழைத்து விருந்து வைப்பார்கள்.
காணும் பொங்கலை கன்னிப் பொங்கல் அல்லது கணுப் பண்டிகை என்றும் அழைப்பர். உற்றார், உறவினர், நண்பர்களை காணுதல் மற்றும் பெரியோர்களிடம் ஆசி பெறுதல் உள்ளிட்டவையும் காணும் பொங்கல் கொண்டாட்டங்களில் அடங்கும். அனைவரும் அன்று குடும்பத்தில் ஒன்றுகூடி காணப்படுவதால் ஒருவரை ஒருவர் ஒருவருக்கொருவர் கண்டு மகிழ்வதால் காணும் பொங்கல் ஆகி இருக்கலாம்


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

கல்வெட்டுகளில் பொங்கல் - பொங்கல் விழா - 8
---------------------------------------------------------
சமத்துவ பொங்கல்
-------------------------
பொங்கலில் மதங்களுக்கும், சாதிகளுக்கும் என்றுமே முக்கியத்துவம் தரப்பட்டதில்லை.
100க்கு மேற்பட்ட குடும்பங்கள் அனைவரும் சேர்ந்து பாரம்பரிய முறையில் மண்பானை மற்றும் விறகு அடுப்பு முறையில் அனைவரும் ஒரே நேரத்தில் அடுப்பில் தீயை மூட்டி பொங்கிய பின் அனைவரின் பொங்கலையும் பகிர்ந்து அனைவரும் உண்பது வழக்கம்! இதை "சமத்துவப் பொங்கல்" என அழைப்பார்கள்.
சில ஊர்களில், ஊர் பொதுமக்கள் ஒன்றாக கூடி சமத்துவ பொங்கல் வைப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். அங்கு இந்துக்கள், இஸ்லாமியர்கள் மற்றும் கிறித்துவர்கள் ஒன்றாக கூடி பொங்கல் வைத்து, தமிழர் திருநாளை கொண்டாடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். சில நேரங்களில் தேவாலயங்களில் பொங்கல் விழா வெகு விமர்சையாகவும் கொண்டாடப்படும்.
குழந்தைகள், இளைஞர்களுக்கு பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுப் பொருட்கள் தருவதையும் வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் இந்த வழிமுறை மாறி தற்போது அனைவரும் குடும்பத்துடன் பல சுற்றுலா இடங்களுக்கு செல்கின்றனர்.
அதிக மகசூல் தரும் பயிர்களை வளர்க்க விவசாயிகளுக்கு உதவிய சூரிய கடவுள் மற்றும் இந்திரனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இது ஒரு அறுவடை கொண்டாட்டம் அல்லது நன்றி தெரிவிக்கும் பண்டிகையாகும்.
ஆக, தென்னகச்சமூகத்தின் முக்கியமான திரவ உணவான பால், திண்ம உணவான நெல்லரிசிச்சோறு, அந்த உணவைத் தந்த கதிரவன், அந்த உணவு கிடைக்கும் பிரதான வழிவகையான அறுவடை, இவையெல்லாமே இணையும் மையப்புள்ளி தான் தைப்பொங்கல்.
“மாமழை போற்றுதும்! மாமழை போற்றுதும்!''
“திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்
ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்''
என்று இளங்கோவடிகளின் வாக்கால் அறிகிறோம்.
மாமழை போற்றும் திருநாளான பொங்கல் நன்னாளை, ஞாயிறு போற்றும் பொங்கல் திருநாளை சமயவாதிகளால் `சங்கராந்தியாக'க் கொண்டாடப்பட்ட பொங்கல் பண்டிகையை நாகரிகக் கோரிக்கைகளில் ஈடுபடுவதற்கு ஒரு வாய்ப்பாக நகரத்து மக்களால் கருதப்பட்ட பொங்கல் விழாவை, உழவர் திருநாளாக, பாட்டாளி மக்கள் பழங்கணக்கைப் பார்க்கும் பொங்கல் திருநாளாக, அறிஞர்கள் போற்றும் அறிவுத் திருநாளாக, கலைஞர் போற்றும் கலைவிழாவாக, தமிழரிடையே மொழிப்பற்றையும் நாட்டுப்பற்றையும் ஊட்டும் தமிழர் திருநாளாக, தமிழர் தம் தேசியத் திருவிழாவாக மாற்றியமைத்த பெருமை பேராசிரியர் நமசிவாயரையே சாரும்.
இந்நூற்றாண்டின் முற்பகுதியில், சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகக் கா.நமசிவாய முதலியாய் விளங்கினார். தமிழ் மக்கள் இடையே `பல்குழுவும் பாழ் செய்யும் உட்பகையும்' தோன்றி, அவர்களை ஒற்றுமை அற்றவர்களாகவும், பண்பாட்டு பாரம்பரியத்தைப் புறக்கணிப்பவர்களாகவும் செய்து வருவதைக் கண்டு உள்ளம் புழுங்கி, சாதியாலும், சமயத்தாலும், மூட நம்பிக்கைகளாலும் பிளவு பட்டு விளங்கும் தமிழ்ச் சமுதாயத்தை ஒன்றுபடுத்துவதற்கு வழிவகை ஒன்றை அவர் கண்டார்.
“பொங்கல் திருவிழா'' சமயச் சார்பற்ற முறையில் தமிழரின் தேசியத் திருவிழாவாக மாற்றி அமைக்க அவர் முயன்றார்.
சென்னை நகரில் 1934, 1935 -ஆம் ஆண்டுகளில் தமிழரின் தேசியத் திருநாளைச் சீரோடும், சிறப்போடும் பேராசிரியர் முதல் நாள் உழவர் திருநாளாகவும். இரண்டாவது நாள் புலவர் திருநாளாகவும். மூன்றாம் நாள் கலைஞர் திருநாளாகவும் `முப்பெருநாள் விழாவாகக்' கொண்டாடினார். அவர் 1936 இல் எதிர்பாரா வகையில் திடுமென இயற்கை எய்தினார். ஆயினும், அதற்குள் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் எல்லாம் புலவர் பெருமக்களால், `தமிழ்த் தேசியத் திருநாளாக' கொண்டாடும் வழக்கம் பரவிவிட்டது.
1945 அளவில், ஒருவர் மற்றொருவருக்கு அன்பையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் `பொங்கல் வாழ்த்து' முறையை இம்மறுமலர்ச்சி இயக்கமே வழக்கத்திற்குக் கொண்டு வந்தது. தமிழருடைய பண்பாட்டின் சிறப்பை உலகிற்கு அறிவிக்கும் வகையில் மாட்டுப் பொங்கலுக்குரிய விழா நாளினைத் “திருவள்ளுவர் திருநாளாக'' கொண்டாட முன்வந்தனர். இது பொங்கல் திருநாளின் வரலாற்றிலே உண்டான மாபெரும் திருப்பு மையமாகும்.
“சூரியனுக்கு தை முதல் நாள் பொங்கல் படையலிடுவதும், இரண்டாவது நாள் மாட்டுப் பொங்கலும், மூன்றாவது நாள் காணும் பொங்கலும் நடைமுறையில் இருக்கின்றன. 1000 அல்லது 500 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நடைமுறை இல்லை.
தை மாதம் அறுவடையான புது அரிசியை புது மண்பானையில் இட்டு, பொங்கலிட்டு வணங்கி அனைவருக்கும் அளித்து மகிழ்ச்சி அடைகிறோம்.
நம் அன்றாட பயன்பாட்டில் எவ்வளவோ மாற்றங்கள் வந்துவிட்டாலும், பொங்கல் திருநாளின்பொழுது மண்பானை முக்கிய இடம் பெற்று விளங்குகிறது. புதுப்பானை, மஞ்சள்-இஞ்சிக் கொத்து, இனிமை நிறைந்த கரும்புகளுடன் நம் வழிபாடு நடைபெறுகிறது.
---------------------------------------------------------------------------------------------------------------------------
வரலாற்றில் தை பொங்கல், - எஸ்.இராமச்சந்திரன், கட்டுரையாளர், தொல்லியல் அறிஞர், https://www.dinamalar.com/news_detail.asp?id=895112
தைந்நீராடல், எஸ். இராமச்சந்திரன்,http://www.sishri.org/thaineer.html


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 http://www.sishri.org/thaineer.html 

தைந்நீராடல்
எஸ். இராமச்சந்திரன் (ஆய்வாளர், தென்னிந்தியச் சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம்.)

தமிழ்ப் புத்தாண்டு தை மாதத்தில் தொடங்குவதாகத் திராவிட முன்னேற்றக் கழகத்தினரால் 2008ஆம் ஆண்டில் தமிழகச் சட்டமன்றத்தில் சட்ட முன்வரைவு கொணரப்பட்டுச் சட்டமும் நிறைவேற்றப்பட்டது. சற்றொப்ப 88 ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த ஒரு நிகழ்வே இதற்கான நியாயம் எனக் குறிப்பிடப்பட்டது. தை மாதம் முதல் நாளன்று தமிழகம் முழுதும் அறுவடைத் திருநாளாகக் கொண்டாடட்படுகின்ற பொங்கல் விழாவுடன் சங்க இலக்கியங்களில் முதன்மையான சடங்காகக் குறிப்பிடப்படும் தைந்நீராடலைத் தொடர்புபடுத்தி இதற்கு ஒரு தமிழ்த் தேசிய இன அடையாளம் வழங்கும் முயற்சிகள் சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் நடந்தேறின. தைப் பொங்கல் நாள் என்பது தமிழர் திருநாளென்றும், எனவே, அந்நாள்தான் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்க நாளாக இருந்திருக்க வேண்டுமென்றும் 1921ஆம் ஆண்டில் மறைமலையடிகள் தலைமையிற்கூடிய தமிழறிஞர்கள் பலரால் முடிவு செய்யப்பட்டதாகவும் சட்ட மன்றத்தில் சொல்லப்பட்டது. தை மாதம் – தமிழ்ப் புத்தாண்டு சட்டத்திற்கு இதுவே அடிப்படையாகும்.

தைப்பொங்கல் நாளினைத் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்க நாளாகக் கொள்ள முடியுமா? என்ற கேள்வி குறித்துச் ‘சித்திரையில்தான் புத்தாண்டு’ என்ற என்னுடைய கட்டுரையில் ஆராய்ந்துள்ளேன்.1 பக்தி இலக்கியங்களில் பாவை நோன்பாகப் பரிணமித்த சங்ககாலத் தைந்நீராடல் மரபுக்கு அடிப்படையாக இருந்த நம்பிக்கைகள் என்ன என்பது குறித்த என்னுடைய கருத்துகளை இங்குப் பதிவு செய்ய விழைகிறேன்.

தைஷ்யம் -> தைஇயம்

முதலாவதாகத் தை என்ற பெயரின் தோற்றத்தை ஆராய்வோம். மாதம், திங்கள் என்ற பெயர்கள் மதி, அதாவது நிலவு தொடர்பான பெயர்களாகும். நிலவுக்கு உடுபதி என்ற பெயருண்டு. உடுக்கணங்களின் தலைவன் அல்லது நட்சத்திரங்களின் கணவன் என்பது இதன் பொருள். நட்சத்திரக் கணங்கள் மொத்தம் 27 ஆகும். சந்திரன் தேய்ந்து வளர்வதற்கு 30 நாள்கள் ஆகின்றன. 27 நட்சத்திரக் கணங்களை ஒவ்வொன்றும் இரண்டே கால் நட்சத்திரக் கணங்கள் கொண்ட 12 ராசிகளாகப் பிரித்து இந்த 12 ராசிகளையும் நிலவு சுற்றி வருவதற்கு 30 நாள்கள் பிடிப்பதாகக் கணக்கிட்டனர். அதாவது ஒரு ராசியில் அடங்கிய இரண்டேகால் நட்சத்திரக் கணங்களை நிலவு கடப்பதற்கு இரண்டரை நாள்கள் ஆவதாகக் கணக்கிட்டனர். ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட நட்சத்திரக் கணத்துடன் சேர்ந்து முழுநிலவு சஞ்சரிக்க நேர்கிற நாளே அந்த மாதத்தின் பெளர்ணமி தினமாகும். எனவே, அந்த மாதத்தை அக்குறிப்பிட்ட நட்சத்திரக் கணத்தின் பெயரால் அழைத்தனர். எடுத்துக்காட்டாகத் துலா ராசியில் இடம்பெறுகின்ற சித்திரை நட்சத்திரக் கூட்டத்துடன் சேர்ந்து வானில் முழுமதி திகழ்கின்ற நாளை அடிப்படையாகக்கொண்டு, அம்மாதம் சித்திரை மாதமென வழங்கப்பட்டது. அதுபோன்றே புஷ்யம் (பூசம்) அல்லது திஷ்ய நட்சத்திரக் கூட்டம் வானில் சஞ்சரிக்கின்ற நாளில் அந்நட்சத்திரக் கூட்டத்துடன் சேர்ந்து முழுமதியும் சஞ்சரிக்கின்ற மாதம் பெளஷ்ய மாதம் அல்லது தைஷ்ய மாதம் எனப்பட்டது. தைஷ்ய மாதம் என்பதே தைஇய திங்கள் என்றும், தைஇத் திங்கள் என்றும் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பூச நட்சத்திரக் கணம் என்பது கடக ராசியில் இடம்பெறும் நட்சத்திரத் தொகுதியாகும். இத்தொகுதியில் மூன்று நட்சத்திரங்கள் அடங்கும். கிரேக்க மொழியில் அமைந்த வானநூல் குறிப்புகளில் இக்குழு Delta, Cancri எனப்படும். கடக ராசியிலிருந்து ஏழாவது ராசியாகிய மகர ராசியில் சூரியன் நின்று, மகர ராசியிலிருந்து 180 பாகைகள் தொலைவில் அமைந்துள்ள கடக ராசியில் இடம்பெற்றுள்ள திஷ்ய நட்சத்திரக் கூட்டத்துடன் நிலவு சஞ்சரிக்கிறபோது அந்நிலவினை நேரெதிர்ப் பார்வையால் பார்க்கின்ற நாளே தை மாத முழுநிலவு நாளாதலால் அந்நாளினை மகர ஞாயிற்றுப் பெளர்ணமி என்றும் குறிப்பிடுவதுண்டு. இது சூரியனை அடிப்படையாகக்கொண்ட செளரமானக் கணிதம் ஆகும். செளரமானக் கணிதத்தைவிட நிலவினையும் நட்சத்திரக்கணங்களையும் அடிப்படையாகக்கொண்ட சாந்திரமானக் கணிதமே பழமையானதாகும். காரணம், அந்தி மயங்கி இருள் பரவத் தொடங்குகிறபோது நிலவுடன் சேர்ந்து தென்படுகிற நட்சத்திரக் கூட்டத்தினை அடையாளம் கண்டுகொள்வதும் பிறைநிலவோ முழுநிலவோ மதிமறைவோ நிகழ்கிற ஒவ்வொரு நாளிலும் எந்த நட்சத்திரக் கூட்டம் நிலவுடன் சேர்ந்து சஞ்சரிக்கின்றது என்பதைக் கண்டோ, ஊகித்தறிந்தோ அதனை அடிப்படையாகக்கொண்டு காலத்தைக் கணிப்பதும், வானத்தைக் கவனிப்பதில் ஈடுபாடு கொண்டவர்களுக்கு எளிய செயல்களே. மனிதன் குகைகளில் தங்கி வேட்டையாடி வாழ்ந்த காலத்திலேயே சாந்திரமானக் கணிதம் தொடங்கிவிட்டது எனத் தெரிகிறது. எனவே, மேஷ ஞாயிறு, மகர ஞாயிறு போன்ற வழக்காறுகளைவிடச் சித்திரை மாதம், தை மாதம் என்ற வழக்காறுகள் பழமையானவை ஆகும்.

புஷயம் அல்லது திஷ்ய நட்சத்திரத்துடன் முழுநிலவு சஞ்சரிக்கின்ற நாளில் ஆறுகளிலோ, குளங்களிலோ நீராடுவதென்பது புஷ்ய ஸ்நானம் அல்லது திஷ்ய ஸ்நானம் எனக் குறிப்பிடப்படும். இதுவே தைந்நீராடல் ஆகும். 12 மாதங்களிலும் திஷ்ய நட்சத்திரத்துடன் நிலவின் தேய்பிறைத் திதியோ, வளர்பிறைத் திதியோ ஏதாகிலும் ஒரு திதி நிகழ்கிற நாளில் நீராடுதல் ஒரு விசேடச் சடங்காகக் கடைப்பிடிக்கப்பட்டதென்றாலும், ஆண்டுக்கொரு முறை வருகிற முழுநிலவு நாளாகிய தைப்பூச நாளில் அவ்வாறு நீராடுவது மிகுந்த சிறப்புடன் கடைப்பிடிக்கப்பட்டது என்று தர்ம சாஸ்திர நூல்கள் கூறுகின்றன. குறிப்பாக, முழுமதியுடன் ஒரு மாதம் முடிவடைவதாகக் கணக்கிடப்பட்ட பூர்ணிமாந்தக் காலக் கணக்கீட்டினைப் பின்பற்றிய சமூகத்தவரிடையே மார்கழி மாத இறுதி நாளான மிருகசிர நட்சத்திர நாளிலோ ஆதிரை நட்சத்திர நாளிலோ விரதம் தொடங்கி 30 நாள்கள் விரதம் கடைப்பிடித்து விரதத்தின் இறுதி நாளாக வருகிற தை மாத இறுதி நாளான தைப்பூச நாளில் நீராடி விரதத்தை முடிப்பதென்பது மிகுந்த சிறப்புடைய ஒரு சடங்காகக் கடைப்பிடிக்கப்பட்டது. குறிப்பாகப் பெண்டிர் இவ்விரதத்தை மிகுந்த கவனத்துடன் மேற்கொண்டனர் என அறிய முடிகிறது.

இதற்கான காரணங்கள் பல இருந்தாலும் முதன்மையான காரணமாகக் கருதத்தக்கது பெண் உடலில் ஏற்படுகின்ற மாதவிடாய்ச் சுழற்சி என்பது நிலவுடன் தொடர்புபடுத்தப்பட்டதே. மனித மதியின்மீதும் கடலின் அலையின்மீதும் நிலவு ஆட்சி செய்கிறதென்பது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கருத்தே ஆகும். நிலவு என்று பொருள்படும் Lunar என்ற லத்தீன் சொல்லுக்கும், மனநோயாளி என்று பொருள்படும் Lunatic என்ற லத்தீன் சொல்லுக்குமிடையேயுள்ள பொருள் தொடர்பு இவ்விடத்தில் கருத்திற்கொள்ளத்தக்கது. காதலுணர்வு, கற்பனை, கவித்துவம் போன்றவற்றுடன் தொடர்புடையதாகக் கருதப்பட்ட நிலவு, பெண் உடலின் பருவச் சுழற்சியின்மீதும் அதிகாரம் செலுத்துவதாக நம்பப்பட்டது. உலகின் பருவச் சுழற்சியைக் குறிக்கின்ற பருவம், ருது என்ற சொற்களே பெண் பூப்படைவதைக் குறிப்பிடவும் பயன்படுத்தப்படுவது நாம் அறிந்த ஒன்றாகும்.

பெண்டிர் பிறை தொழுகின்ற வழக்கம் தொல்பழங்காலத்திலிருந்தே தமிழகத்தில் நிலவியுள்ளது. வளர்பிறைக் காலத்து மூன்றாம் பிறை மேற்குத் திசைச் செக்கர் வானத்தில் பரவிவருகின்ற இருளினூடே சில நிமிட நேரம் மட்டுமே கண்ணுக்குப் புலப்பட்டு மறைந்துவிடும். மதி மறைவு நாளான அமாஸ்யத்துக்கு அடுத்துக் கண்ணுக்குப் புலப்படுகின்ற பிறை மூன்றாம் பிறையே ஆகும். ஓராண்டில் 12 முறை தோன்றுகின்ற அந்த மூன்றாம் பிறையைப் பெண்டிர் விசேடமாகத் தொழுதனர்.

ஒள்ளிழை மகளிர் உயர்பிறை தொழூஉம்
புல்லென் மாலை

- என அகநானூறு (239) குறிப்பிடுகிறது. இவ்வழிபாடு மிகப் பழமையானது என்பதற்குக் “குடமுதல் தோன்றிய தொன்று தொழுபிறை” எனக் குறிப்பிடுகிற மதுரைக் காஞ்சி (வரி 193)யே சான்றாகும்.

செவ்வாய் வானத்து ஐயெனத் தோன்றி
இன்னம் பிறந்தன்று பிறையே

- எனக் குறுந்தொகை (பா. 307) குறிப்பிடுகின்றது.

நெய்தல் நிலத்தின் தெய்வமாகத் தொல்காப்பியத்தால் குறிப்பிடப்படுபவன் வருணன் ஆவான். நெய்தல் நிலத்துக்குரிய சிறுபொழுதாகத் தொல்காப்பியம் குறிப்பிடுகின்ற எற்படுபொழுதில் செக்கர் வானத்தில் மேலைத் திசையில் சற்று நேரம் தோன்றி மறைகின்ற மூன்றாம் பிறையினை வழிபடுவது வருணன் வழிபாட்டின் முதன்மையான ஒரு கூறாக இருந்திருக்க வேண்டும்.2 சிவன் தன் செஞ்சடையில் மூன்றாம் பிறையைச் சூடியுள்ளான் என்ற புராணகால வர்ணனைகூட, வருணன் குறித்த கற்பிதத்தினைச் சைவம் உள்வாங்கிக்கொண்டதன் விளைவே ஆகும்.3

தேவர்களால் தொழப்படுகின்ற பிள்ளைப் பிறை, சிவன் தனது சடையில் எடுத்துச்சூடியதால் சிறப்புற்றது; ஆயினும், திருமகளோடு பாற்கடலிலிருந்து தோன்றியதால் திருமகளின் மறுவடிவமாகிய கண்ணகியின் உடன்பிறப்பாகின்ற உயர்வும் அடைந்தது எனச் சிலப்பதிகாரம் (2:38-40) குறிப்பிடுகின்றது. உண்மையில், நிலவு வழிபாடு என்பது செல்வச் செழிப்புக்கும், இயற்கை வளத்துக்கும் அடையாளமாகக் கருதப்பட்ட பாற்கடல் தெய்வ வழிபாட்டின் ஓர் அம்சமே ஆகும். தாவரங்கள், மூலிகைகள் (ஓஷதிகள்) ஆகியவற்றின் தெய்வமாக நிலவினை வடமொழி இலக்கியங்கள் வர்ணிக்கின்றன.

பன்னிரு ராசிகளுள் நிலவின் ஆட்சி பெற்ற ராசி கடக ராசியாகும். கடக ராசியின் முதன்மையான நட்சத்திரக் கூட்டமாகிய திஷ்ய நட்சத்திரக் கூட்டத்தில் முழுமதி அமைகிற நாள் நிலவின் அதிகபட்சமான ஆற்றலை வழங்குகிற ஒரு நாளாகக் கருதப்பட்டதில் வியப்பில்லை. நிலவு நீரை ஆட்சி செய்கின்ற கோளாகவும், கடக (நண்டு) ராசி ஒரு நீர் ராசியாகவும் கருதப்படுவதால் திஷ்ய நட்சத்திர முழுமதி நாளில் மகளிர் நீராடல் சடங்கு நிகழ்த்துவது அவர்களின் மனநலனுக்கும் குடும்ப நலன்களுக்கும் உகந்ததாகக் கருதப்பட்டது என்பதை நாம் எளிதில் புரிந்துகொள்ள முடியும். 27 நட்சத்திர கணங்களுமே சந்திரனின் மனைவியராகக் கருதப்பட்டாலும் ரோகிணி நட்சத்திரக் குழுவின்பால் சந்திரன் விசேடமான அன்பு செலுத்தியதாகப் புராணங்கள் குறிப்பிடுகின்றன. நெடுநல்வாடையும் (வரி 159-163) இக்கருத்தினைப் பதிவுசெய்துள்ளது. ரோகிணி நட்சத்திரக் கணம் இடம்பெறுகின்ற ரிஷப ராசி சந்திரனின் உச்ச ராசியாகும். ஆவணி மாதம் ரோகிணி நட்சத்திர நாளில் கண்ணன் பிறந்ததாகக் கருதிக் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடுவது புராண மரபாகும். வருணன் வழிபாடு என்பது புராண மரபுக்கு முற்பட்ட வேத கால மரபாகும். வருணன் ரிதம் என்ற பிரபஞ்ச ஒழுங்கிற்குத் தலைவனாக வேதங்களில் குறிப்பிடப்படுகிறான். க்ஷார-க்ஷீர உததிகள் (உப்புக் கடலும் நன்னீர்க் கடலும்) வருணனின் இரு தொடைகளாக அதர்வண வேதத்தில் குறிப்பிடப்படுகின்றன. நன்னீர்க் கடல் என்றும், பாற்கடல் என்றும் குறிப்பிடப்பட்ட க்ஷீர உததி என்பது வேறெங்கோ இருப்பதன்று; வான மண்டலமே பாற்கடலாக உருவகிக்கப்பட்டது. மீன், ஆரல் என்ற சொற்கள் கடலில் நீந்துகின்ற மீனையும், வானின் திகழ்கின்ற விண்மீனையும் குறிக்கும் தமிழ்ச் சொற்கள் ஆகும்.

முப்புணர் அடுக்கிய முறைமுதற் கட்டின்
நீர்நிலை நிரப்பின் கீழும் மேலது
ஆனிலை உலகத்தானும்

- என்ற புறநானூற்று (பா. 6) வரிகள் பாற்கடல் குறித்த இக்கருத்தோட்டம் தமிழ் மரபுக்கு இணக்கமானதே எனப் புலப்படுத்துகின்றன. (ஆனிலை உலகமென்பது பாற்கடல் உலகமாகும்.) பயிர்களின் செழிப்புக்குக் காரணமாக இருக்கின்ற மழையினை ஆனிலையுலகத்திலிருந்து பொழிகிற பாலாகக் கருதினர். வள்ளுவர் ‘வான் சிறப்பு’ அதிகாரத்தில் வானவர்களின் அமிழ்தமே மழை என்கிறார். (வானின்றுலகம் வழங்கி வருதலால் தானமிழ்தம் என்றுணரற் பாற்று.) வானத்தை அல்லது வானுலகக் கடலினை அமுதக் கடலாக உருவகித்து அமிதாபர் என்ற பெயரில் ஒரு தியானி புத்தராகக் குறிப்பிடுவது பெளத்த மரபாகும். க்ஷீர உததியை, அதாவது பாற்கடல் தெய்வத்தைக் கீரன், குவீரன், குவேரன் எனப் பிராகிருத வழக்கில் குறிப்பிட்டனர்.4 இவ்வழக்கே பின்னர் குபேரன் என இதிகாச, புராண கால சமஸ்கிருதத்தில் வழங்கியிருக்க வேண்டும். திஷ்ய நட்சத்திர கணம் நீர் வளம், பயிர் வளம் ஆகியவற்றுடன் (அவற்றின் மூலமாகக் கன்றுகாலிகளின் பால்வளத்துடனும்) தொடர்புடையதாகக் கருதப்பட்டமையால் புஷ்ய ஸ்நானம் அல்லது தைந்நீராடல் என்பது செல்வச் செழிப்பின் உருவகமான குபேர வழிபாட்டு மரபில் முதன்மையான ஒரு நோன்பாக மேற்கொள்ளப்பட்டது என நாம் உணரலாம். புஷ்யம் என்ற சொல்லே புஷ்டி, போஷித்தல் போன்ற கருத்தோட்டங்களுடன் தொடர்புடைய புஷ் என்ற வேர்ச்சொல்லிலிருந்து தோன்றியதாகும்.

வருணன் வழிபாடும் சரத் கால நோன்பும்

மழைக் காலத்திற்குப் பின்னர் வருகின்ற பனிக் காலத்தினை ‘சரத் காலம்’ என வடமொழியில் குறிப்பிட்டனர். சரத் காலத்தில் நீர் நிலைகள் நிறைந்து ஆம்பல், குவளை, நெய்தல் போன்ற மலர்களுடன் காட்சியளிக்கும். ‘சரதேந்தீவரஸ்யாமம்’ என ஸ்ரீமத்பாகவதம் (3:26:28) குறிப்பிடுகிறது. சியாமஇந்தீவரம் அல்லது கருங்குவளை மலர் சரத் காலத்துக்குரியது என்பது இதன் பொருளாகும். வருணனுக்குரிய மலராகிய நெய்தல் மலர் கருங்குவளை வகையைச் சேர்ந்ததே. எனவே, சரத் காலத்தில் வருணன் வழிபாடும் வருணனின் ஒரு கூறாகிய பாற்கடல் தெய்வ வழிபாடும் சிறப்புற நிகழ்த்தப்பட்டன. இந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கையில், தைப்பூச நாள் விழா வருணன் வழிபாட்டு மரபின் ஓர் அம்சமே என்பது தெளிவாகிறது.

பழமையான தர்மசூத்திர நூல்களுள் ஒன்றாகிய ஆபஸ்தம்ப தர்ம சூத்திரத்தில் (II: 8:20:3-9; 10-22) புஷ்யவிரதம் என்ற பெயரில் இந்நோன்பு குறிப்பிடப்படுகிறது. குறிப்பாக, உத்தராயனத்தில் சுக்லபட்சத்தில் ஓரிரவு விரதமிருந்து ஸ்தாலிபாகம் (தேன் கலந்த பாற்சோறு) சமைத்துக் குபேரனுக்குப் படைக்கவேண்டும் என்று குறிப்பு காணப்படுகிறது. ஹரிவம்சம் போன்ற பல நூல்களில் புஷ்யஸ்நானம் மிகவும் உயர்ந்த சாந்திச் சடங்காகக் குறிப்பிடப்படுகிறது.5 உத்தராயனத்தில் (சூரியனின் வடதிசை நோக்கிய நகர்வுக் காலத்தில்) சுக்லபட்சத்தில் (வளர்பிறையில்) கடைப்பிடிக்கப்படும் புஷ்யவிரதம் என்பது தை மாதம் தொடங்கி ஆனி மாதம் வரை எந்த மாதத்திலும் வளர்பிறைக் காலத்தில் கடைப்பிடிக்கத்தக்கதே எனினும் தை மாதத்தில் கடைப்பிடிக்கப்படும் புஷ்யவிரதம் என்பது முழுநிலவுவுக்கு முதல் நாளில் அனுசரித்து மறுநாளில் விரதம் முடிக்கின்ற நாளாகக் கொள்வதற்கு உகந்ததாதலால் சிறப்பானதாகும். இவ்விரதத்துடன் குபேரனை ஆபஸ்தம்ப சூத்திரம் தொடர்புபடுத்துவது குறிப்பிடத்தக்கது.

நிலவு வழிபாட்டைப் பொருத்தவரை, மூன்றாம் பிறை முதன்மையான வழிபாட்டுக்கு உகந்ததே எனினும் அமிர்த கிரணன் எனப்பட்ட முழுநிலவு மரணமிலாப் பெருவாழ்வைக் குறிப்பதாகவும், அமுதக் குடத்தின் உருவகமாகவும் கருதப்பட்டது.6 முழுநிலா நாளில் கடல் தெய்வத்தை வழிபடுவது சிறப்பானதாகக் கருதப்பட்டது. கொற்கையிலிருந்த பழையர் மகளிர் ஒரு முழுநிலா நாளில் அந்தி நேரத்தில் கடல் தெய்வத்திற்கு வலம்புரிச் சங்குகளையும், முத்துகளையும் படைத்து வழிபட்டனர் என்றும், அதனை ஏற்கும் விதமாக முழுநிலவின் தோற்றமும், கடல் அலைகளின் எழுச்சியும் நிகழ்ந்தன என்றும் மாமூலனாரின் அகநானூற்றுப் பாடல் ஒன்று (பா. 201) குறிப்பிடுவது கடல்-நிலவு-மகளிர் என்ற சடங்குத் தொடர்பைப் புலப்படுத்தும். மழைக்காலம் முடிந்தபின்னர் வருகின்ற சரத் (பனிக்) காலத்தில் மேகங்களற்ற வானத்தில் தோன்றுகின்ற முழுநிலவு சரத் சந்திரன் எனப் போற்றப்பட்டது. சரஸ், சரத் என்ற சொற்கள் குளம் என்ற பொருளுடையவை. சரத் சந்திரன், அலைகளற்ற குளத்தில் பிரதிபலிக்கின்ற முழுநிலவே போன்று மனதை மயக்கக்கூடிய தோற்றம் கொண்டதாகும். வடகிழக்குப் பருவக்காற்றால் நேர்கின்ற மழை ஆவணி மாதம் தொடங்கி நான்கு மாதங்கள் நீடித்துக் கார்த்திகை மாதத்துடன் முடிவடையும். அதன் பின்னர், மார்கழி மாதத்திலிருந்து பங்குனி வரை நீடிக்கும் காலம் சரத் காலம் ஆகும். இந்நான்கு மாதங்களையுமே பனிக்காலம் எனத் தமிழிலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. கி.பி. 5ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதத்தக்க பரிபாடலில் (பா. 11) சரத்கால முழுநிலவு பின்வருமாறு வருணிக்கப்படுகிறது:

கனைக்கும் அதிர்குரல் கார்வானம் நீங்கப்
பனிப்படு பைதல் விதலைப் பருவத்து
ஞாயிறு காயா நளிமாரிப் பின்குளத்து
மாயிருந் திங்கள் மறுநிறை ஆதிரை

மாரிக் காலத்துக்குப் பின்னர் வருகின்ற சரத் சந்திரன் குளத்துத் திங்கள் என இப்பாடலில் குறிப்பிடப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.

சரத்கால விரதம் என்பது மார்கழி மாதம் தொடங்கிப் பங்குனி மாதம் வரை நீடிக்கும். இதில் முதன்மையானது தைந்நீராடல் விரதம் ஆகும். அடுத்தது மாசி மாத சுக்லபட்சப் பஞ்சமி தொடங்கிப் பெளர்ணமி (மாசிமகம்)யுடன் முடிவடையும் சாரதா நவராத்திரி அல்லது சரஸ்வதி நோன்பு ஆகும். இவ்விரு மாதங்களுடன் பங்குனி மாதத்திலும் நோன்பிருந்து பங்குனி உத்தரத்துடன் காமவேள் நோன்பு முடிவடைவதாக திவ்யப் பிரபந்தம் (நாச்சியார் திருமொழி) குறிப்பிடுகிறது.7 இந்நோன்புகளுள் தைந்நீராடலே தவத் தைந்நீராடுதல், தையில் நீராடிய தவம் எனச் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படுகிறது. சரத்காலம் முழுமையுமே தவத்துக்குரிய காலமாகக் கருதப்பட்டது. சரத்காலம் முடிந்து இளவேனிற்பருவம் தொடங்கிச் செடி, கொடிகள், மரங்கள் அனைத்தும் மலர்கள் மலர்ந்து வண்டுகள் சூழச் செழிப்புடன் காட்சியளிப்பதைக் குறிப்பிடும் கலித்தொகைப் புலவன், ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காகத் தவம் செய்தவர்கள் அத்தவத்தின் பயனைப் பெற்று அனுபவிப்பதை அதற்கு உவமையாகக் குறிப்பிடுகின்றான். (கலித்தொகை 30:1-4.)

இவ்வாறிருப்பினும், பெண்டிர் தவம் செய்து முடித்தபின் தவத்தின் பயனை நுகரும் நாளாகத் தைப்பூச நாளே சங்க இலக்கியங்களில் முதன்மைப்படுத்தப்படுகிறது. தைப்பூச நாளில் இயற்கையாகவே நிலத்தில் நீர் ஊறும் என்று நம்பப்பட்டது.

தைஇத் திங்கள் தண்கயம் போலக்
கொளக்கொளக் குறையாக் கூழுடை வியனகர். (புறம். 70:6-7)
- என்ற வரிகளில் இச்செய்தி பதிவுபெற்றுள்ளது. எனவே, அந்நாள் நோன்பு முடித்து நுகர்ச்சி கொள்வதற்குரிய நாளாகக் கருதப்பட்டது. குறிப்பாக, அந்நாளில் நீராடி விரதம் முடித்தல் பெண்டிரின் பாலியல் நலன்களைப் பாதுகாக்கும் என நம்பப்பட்டது.

அணங்குடைப் பனித்துறை கைதொழுதேத்தி
யாயும் ஆய மொடயரும் (அகம். 240)

தைஇத் திங்கள் தண்கயம் படியும்
பெருந்தோட் குறுமகள் (நற்றிணை 80)

நறுவீ ஐம்பால் மகளிர் ஆடும்
தைஇத் தண்கயம் (ஐங்குறுநூறு 84)

கலித்தொகையில் (59:12-13)

”வையெயிற்றவர் நாப்பண் வகையணிப் பொலிந்து நீ
தையில் நீராடிய தவந்தலைப் படுவையோ”

- என்ற வரிகள் இடம்பெற்றுள்ளன. தைந்நீராடிய தவத்தின் பயனாகச் செல்வ வளம் பெருகிக் குடும்ப நலன் சிறப்புறும் என்ற கருத்து இவ்வரிகளில் பொதிந்துள்ளது.8

”மாயிருந் திங்கள் மறுநிறை ஆதிரை” எனக் குறிப்பிடும் மேற்குறித்த பரிபாடலின் (பா. 11) வரிகள் தவத்தைந்நீராடலை விவரிக்கின்ற தொடக்க வரிகளாகும். அவ்வரிகளின் தொடர்ச்சி பின்வருமாறு:

விரிநூல் அந்தணர் விழவு தொடங்கப்
புரிநூல் அந்தணர் பொலங்கல மேற்ப
வெம்பா தாக வியனில வரைப்பென
அம்பா ஆடலின் ஆய்தொடிக் கன்னியர்
முனித்துறை முதல்வியர் முறைமை காட்டப்
பனிப்புலர்பு ஆடி…

தீயெரிப்பாலும் செறிதவம் முன்பற்றியோ
தாயருகா நின்று தவத்தைந்நீராடுதல்
நீ யுரைத்தி வையை நதி

- இப்பாடலில் முனித்துறை முதல்வியர் முறைமை காட்ட மகளிர் தவத்தைந்நீர் ஆடினர் என்ற செய்தி இடம்பெற்றிருப்பது கவனத்துக்குரியது. காளிதாசனின் குமாரசம்பவத்தில் (5:26) உமையன்னை சிவபெருமானைக் கணவனாகப் பெறுவதற்குத் தவம் செய்தது வருணிக்கப்படுகிறது. பெளஷ்ய (தை) மாதம் முழுவதும் இரவில் பொழியும் பனியில் தண்ணீரில் நின்று தவம் செய்ததாகக் குறிப்பிடப்படுகிறது. அதனை இக்குறிப்புடன் ஒப்பிடலாம்.

மார்கழி ஆதிரை நாளன்று மகளிரின் தைந்நீராடல் குறித்த நோன்பு (விரதம்) தொடங்கிற்று என்றும், வையை நதிக்கு மடை (நைவேத்தியம்) படைக்கப்பட்டதென்றும், இன்னும் இதுபோன்ற பல விவரங்களைப் பரிபாடல் தெரிவிக்கின்றது. பரிபாடல் தரும் விவரங்களைத் தொகுத்துப் பார்த்தால் இந்நோன்பு மார்கழி ஆதிரையன்று தொடங்கி 29 நாள்கள் நடைபெற்று 30ஆவது நாளில் வருகின்ற தைப்பூச நாள் நீராடலுடன் முடிவுற்றிருக்க வேண்டும் எனத் தெரியவருகிறது. பெண்டிர் விரதத்தை முடித்த பின்னர், விருந்துண்டு மகிழ்ந்திருப்பர் என்பதை நாம் எளிதில் உணர்ந்துகொள்ளலாம். கி.பி. 7ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்தவரான திருஞானசம்பந்தர் தமது திருமயிலைப் பதிகத்தில் “நெய்ப்பூசும் ஒண் புழுக்கல் நேரிழையார் கொண்டாடும் தைப் பூசம் காணாதே போதியோ பூம்பாவாய்” எனக் குறிப்பிடுகிறார்.9 இப்பாடல் வரிகளில் இடம்பெறுகின்ற நெய்ப்பூசும் ஒண் புழுக்கல் நேரிழையார் என்ற தொடர் கவனத்திற்குரியது. கி.பி. 8ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆண்டாளின் திருப்பாவையில் இடம்பெறுகின்ற “நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி” என்ற வரியில் இடம்பெறுகின்ற பாவை நோன்பு முறையுடனும் “பாற்சோறு மூட நெய் பெய்து முழங்கை வழிவாரக் கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்” என்ற வரியில் இடம்பெறுகின்ற பாவை நோன்பு முடிப்பு முறையுடனும் மேற்குறித்த தேவாரப் பாடல் வரியைத் தொடர்புபடுத்திப் பார்த்தல் தேவை. ஒண்புழுக்கல் என்றும், மூட நெய் பெய்த பாற்சோறு என்றும் குறிப்பிடப்படுவது சர்க்கரைப் பொங்கலே என்பது தெளிவு. இதனையே ‘ஸ்தாலீபாகம்’ – தேன் கலந்த பாற்சோறு – என ஆபஸ்தம்ப தர்மசூத்ரம் குறிப்பிடுகிறது.

மேற்குறித்த பரிபாடலில் (வரிகள் 120-121) தைந்நீராடல் நோன்பு இயற்றும் பெண்டிர் நீடித்த இளமை, குடும்பவளம் ஆகியவற்றைப் பெறுவதற்கு வேண்டுவர் என்ற குறிப்பு காணப்படுகிறது. (”கிழவர் கிழவியரென்னாது ஏழ்காறும் மழவீன்று மல்லற்கோள் மன்னுக”.) மேலும், ”வெம்பாதாக வியனில வரைப்பென அம்பா ஆடலின்” என்ற குறிப்பும் வையை நதிக்கு நைவேத்தியம் படைத்து வழிபட்டனர் என்ற குறிப்பும், இந்நோன்பு தனிப்பட்ட நலன்களுக்காக மட்டுமின்றி நீர்நிலைகள் நிரம்பி, வறட்சியின்றி உலகம் செழித்து வாழவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்திற்காகவும் நீர்வழிபாடு குறித்த இந்நோன்பு கடைப்பிடிக்கப்பட்டது என்பதைப் புலப்படுத்துகிறது.




__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெருஞ் செந்நெலூடு கயல் உகளத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்தமுலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்

- என்ற திருப்பாவை வரிகளில் காணப்படுவது இக்கருத்தோட்டத்தின் தொடர்ச்சியே. பகவத்கீதையில் கண்ணனால் சிறப்பித்துக் கூறப்படுவதும், விஸ்வபுருஷனின் பிரும்ம முகூர்த்தம் (அதிகாலைப் பொழுது) என்று போற்றப்படுவதுமாகிய மார்கழி மாதம், வைணவ சமயத்தாரால் பாவை நோன்புக்குரிய மாதமாகக் கொள்ளப்பட்டது. சிவனுக்குரிய நாளாகிய திருவாதிரை நட்சத்திரத்தன்று முடிவடையும் வண்ணம் சைவ சமயத்தாரால் மார்கழி மாத நோன்புக் காலம் வரையறுக்கப்பட்டது. இவ்விரு சமயத்தவராலும், இவ்வகையில் ‘நீர்வழிபாட்டின்’ கூறுகள் ஈர்த்துத் தன்மயமாக்கிக் கொள்ளப்பட்டன. நீர்நிலைகள் இறைவடிவமாகவே கருதப்பட்டமைக்கு எடுத்துக்காட்டாக, மாணிக்கவாசகரின் திருவெம்பாவையில், “பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்” எனத் தொடங்கும் பாடலில் நீர் நிலையைச் சிவன் – பார்வதியாக உருவகித்து, “எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த பொங்குமடு” என்ற வருணனை இடம்பெறுவதைக் குறிப்பிடலாம். ஆயினும், புஷ்ய (திஷ்ய) நட்சத்திரத்திற்கு நீர்வளத்துடன் உள்ள தொடர்பு இவ்வழிபாட்டு மரபுகளில் முதன்மைப்படுத்தப்படவில்லை.

தைந்நீராடலை வருணிக்கும் மேற்குறித்த பரிபாடலில் பாவை நோன்பு என்பது அம்பா ஆடல் என்று குறிப்பிடப்படுகிறது. அம்பா என்ற சொல்லினை அம்பு - பா என்று பிரித்து நீர் தொடர்பான பாடலென்றும், நீர் விளையாட்டின்போது பாடுகின்ற பாட்டென்றும், நீரில் ஓடம் விடும்போது பாடுகின்ற பாட்டென்றும் பலவிதமாகப் பொருள்விளக்கம் கூற இயலும். மீனவர்களிடையே வழங்குகின்ற ஏஎலோ-ஏலசா என்று முடிகின்ற நாட்டுப்பாடலுக்கு அம்பா என்றே பெயர்.10 இத்தகைய பாடல்களைப் பாடி நீராடுதலே ‘அம்பா ஆடுதல்’ ஆகும். திருப்பாவை, திருவெம்பாவைப் பாடல்கள் ஏலோரெம்பாவாய் என்றே முடிவடைவது வழக்கம். உண்மையில் இவை ஏலோ அம்பாவாய் என்றோ, ஏலோ ரம்பாவாய் என்றோ முடிவடைந்திருக்க வேண்டும்.11 இதற்குச் சான்றாக, ஈரோடு மாவட்டம் கத்தாங்கண்ணியில் உள்ள 14ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு ஒன்றில் திருவம்பாவை என்ற வடிவம் இடம்பெற்றிருப்பதைக் குறிப்பிடலாம்.12

பாவை நோன்பு என்பது சைவத்தாலும், வைணவத்தாலும் ஈர்த்துத் தன்மயமாக்கிக் கொள்ளப்பட்டமையால் தைந்நீராடல் என்பது சரத் காலத்துக்குரிய, குறிப்பாக முன்பனிக் காலத்துக்குரிய வழிபாட்டு மரபு என்பதும் வருணன், குபேரன் ஆகிய நீர்த் தெய்வங்களோடு தொடர்புடைய வழிபாட்டு மரபு என்பதும் மக்கள் நினைவிலிருந்து முற்றிலும் அகன்றுவிட்டன. தொல்காப்பியர் காலத்திலேயே வருணன் வழிபாட்டுக் கூறுகள் பல சிவன், திருமால் ஆகிய இரு தெய்வ வழிபாட்டு மரபுகளில் கலக்கத் தொடங்கிவிட்டன. வருணனின் நெய்தல் உலகத் தலைமைத் தன்மை netherworld எனப்பட்ட தென்புலத்தின் தெய்வக்கூறு மட்டுமே ஆகும். ஒளித் திசையாகக் கருதப்பட்ட உத்தர (வட) திசையின் தெய்வக்கூறு சோமன் அல்லது குவேரன் எனப்பட்டது. இத்தெய்வம் கல்லுக்கு அல்லது மலைக்கு உரிய தெய்வமாகக் கருதப்பட்டது. மலையிலிருந்து ஆறுகள் தோன்றுகின்ற இயற்கை நிகழ்வு இதற்குக் காரணமாக இருந்திருக்க வேண்டும். இந்திர வழிபாட்டுக்கு எதிராகப் புராண புருஷனாகிய கண்ணனால் முன்னிறுத்தப்பட்ட வழிபாடு மலை வழிபாடே என்பது விஷ்ணுபுராணத்திலும், ஸ்ரீமத் பாகவதத்திலும் (கோவர்த்தனகிரிக் கதை) குறிப்பிடப்படுகிறது. சரத் கால மலர்களால் மாடுகளை அலங்கரித்து, அவற்றுடன் மலையைச் சுற்றிவந்து கண்ணனும் பிற ஆயர்களும் வழிபட்டதாகவே விஷ்ணுபுராணம், குறிப்பிடுகின்றது.

வேதங்களில் வருணன் அத்ரிவன் (மலைக்கு இறைவன்) எனக் குறிப்பிடப்படுகிறான். பிரபஞ்ச இயக்கத்தின் சட்டமாகிய ரிதம் என்ற கோட்பாட்டின் காவலன் வருணனேயாதலால் அவனே ஒப்பந்தங்களுக்குரிய தோன்றாத் துணைவனாகவும், சாட்சி பூதமாகவும் இருப்பவன். காதலன் காதலியிடம், ”உன்னைக் கைவிட மாட்டேன்” எனச் சூளுரைக்கும்போது வருணனைச் சுட்டிச் சூளுரைப்பது வழக்கம். கலித்தொகை இவ்வழக்கத்தைக் குறிப்பிடுகிறது. சிலப்பதிகாரம், கானல்வரியிலும் இச்செய்தி குறிப்பிடப்படுகிறது.13 இத்தகைய சூளுரையினை ‘மலையொடு மார்பமைந்த செல்வன் அடியைத் தொட்டும்’ உரைப்பதுண்டு எனக் கலித்தொகை (108:55) குறிப்பிடுவது ‘அத்ரிவன்’ என்ற கருத்தோட்டத்துடன் வருணன் கொண்ட உறவை உணர்த்தும்.. வருணன் சாஸ்திரங்களின் (வாழ்வியற் சட்டங்களின்) தலைவனாதலால் அவனை ‘சாஸ்திர ராஜன்’ என்பர். சாஸ்தா எனப்பட்ட ஐயனார் வருணனின் ஒரு வடிவமே ஆவார். ஐயனாரை ‘மகாசாத்திரன்’ எனச் சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் குறிப்பிடுகிறார். ‘நெய்தல் பூண்டோன்’ என்பது ஐயனாரின் பட்டப்பெயர் என நாமதீப நிகண்டு (நூற்பா 43) கூறுகிறது. இன்றும் ஐயனார் வழிபாட்டில் சரத் காலமாகிய மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்களே முதன்மை பெறுகின்றன. இவற்றுள் தை மாத (மகர ஜோதி) வழிபாடு சிறப்பாகக் குறிப்பிடத்தக்கதாகும்.

திஷ்யம், தைஷ்யம் என்ற வழக்குகளைவிடப் புஷ்யம், பெளஷ்யம் என்ற வழக்குகளே வட இந்திய மரபில் மிகுதியாகக் காணப்படுகின்றன. ‘திஷ்ய’ என்பதன் பாலித் திரிபாகிய ‘திஸ்ஸ’ என்பது பெளத்த மரபில் குறிப்பாகச் சிங்கள பெளத்த மரபில் பரவலாக வழக்கிலிருந்துள்ளது. எனவே, தைந்நீராடல் என்பது யக்ஷர் (இயக்கர்) எனப்பட்ட இலங்கையின் பூர்வகுடி மரபினரிடையே நிலவிப் பின்னர் பிற இனத்தவர்களாலும் பின்பற்றப்பட்ட நோன்பாகலாம். யக்ஷர் எனப்படுவோர் மஞ்சள் நிற மங்கோலிய இனத்தவராகக் கருதப்படுகின்றனர். யக்ஷர் தலைவன் குபேரன் ஆவான். நெய்தல் மலர் தாங்கிய கடவுள் எனப் பொருள்படும் பெயருடைய ‘உத்பல வருணன்’ (உபுல்வன்) சிங்கள பெளத்தத்தில் சிறப்பிடம் பெற்ற இறைவனாவான். வருணனின் இயக்கர் குல வடிவமாகிய குபேரனுக்கு இலங்கை குறித்த புராணங்களில் சிறப்பிடம் உண்டு.

தைந்நீராடலும் மாசிமக நீராடலும்

திஷ்ய நட்சத்திரக் கணம் பிருஹஸ்பதி எனப்படும் வியாழனுக்குரிய நட்சத்திரக் கணம் எனச் சோதிட நூல்கள் குறிப்பிடும். வருணன் அல்லது ஐயனாரின் சாஸ்திர ராஜன் எனப்படும் குருத்தன்மை, பிருஹஸ்பதியுடன் இவ்வாறு இணைத்து இனம் காணப்பட்டிருக்கலாம். எனினும் சந்திரன், குருபத்தினியாகிய தாரையுடன் (தாரை அல்லது தாரகை என்பது நட்சத்திரம் எனப் பொருள்படும்) களவு மணம் புணர்ந்த கதை புராணங்களில் பதிவு பெற்றுள்ளது. இவ்விருவரின் களவு மணத்தில் பிறந்தவனே புதன்.

புராணங்கள் குறிப்பிடும் இத்தகைய கதைகள், சோமனுக்கும் திஷ்ய நட்சத்திரக் கணத்துக்குமிடையே நிலவிய குறிப்பிடத்தக்க தொடர்பையும், தனது முழுமுதல் தன்மையை இழந்துவிட்ட வருணனின் முன்னாளைய குருத்தன்மையையும் இணைத்துப் பிற்காலத்தில் உருவாக்கப்பட்ட கதைகளாகலாம்.

இன்றைய நிலையில் தைப்பூசத் தெப்பம் போன்ற விழாக்களில் மட்டும் நீர்த் தெய்வத்துக்குத் தைஷ்யத்துடன் உள்ள தொடர்பு நீடிக்கிறது எனக் கொள்ளலாம். மாகி அல்லது மாசி மாதப் பூர்ணிமையாகிய மாசி மகமே நீர்த் தெய்வ வழிபாட்டுக்குரிய நாளாக நீடிக்கிறது. ”மாசிக் கடலாடல்” என்றே இதனைச் சம்பந்தர் தமது மயிலைப் பதிகத்தில் குறிப்பிடுகிறார். இது, பாரசீக (ஜொராஸ்ட்ரிய) சமயக் கருத்துகளின் அல்லது ‘மாகி’ மரபின் தாக்கத்தின் விளைவாகலாம். வருணன் வழிபாட்டில் சூரிய வழிபாட்டுக் கூறுகளை முதன்மைப்படுத்துபவர்கள் கார்த்திகை நட்சத்திரக் கணத்தையே முதலாவது உடுக்கணமாகக் கொண்டு 27 நட்சத்திரங்களைக் கணக்கிடும் கார்த்திகாதி கணித முறையினைப் பின்பற்றியிருக்க வாய்ப்புண்டு. இக்கணக்கீட்டினை மணிமேகலையில் காணலாம்.14

அஸ்வினி ஆதியாக நட்சத்திரக் கணங்களைக் கணக்கிட்டால் திஷ்ய நட்சத்திரக் கணம் எட்டாவது உடுக்கணமாகும். கார்த்திகை ஆதியாகக் கணக்கிட்டால் மகம் எட்டாவது உடுக்கணமாகும். எட்டு எட்டாக எண்ணுவதே மிகப் பழமையான கணித மரபாகும்.15 எட்டாவது கடலான கரும்புறக் கடல்16 போல எல்லையாக அல்லது வரம்பாக நிற்கிற தத்துவம் என்ற கண்ணோட்டத்தில், சோம வழிபாட்டு மரபினர் திஷ்யத்தையும் சூரிய வழிபாட்டு மரபினர் மகத்தையும் நீர்த்தெய்வ வழிபாட்டோடு தொடர்புபடுத்தி முதன்மைப்படுத்தியிருக்கலாம். இந்தியச் சிந்தனை மரபில் சூரிய வழிபாட்டு மரபின் செல்வாக்கு வளர்ந்ததன் உடனிகழ்ச்சியாகவே மாசிமக நீராடல் முதன்மை பெற்றதெனத் தோன்றுகிறது.

எப்படியாயினும் தைந்நீராடல் மரபு என்பது ‘புஷ்ய ஸ்நானம்’ எனத் தர்மசூத்ர நூல்கள் குறிப்பிடும் விரதமே என்றும், வருணன், குபேரன், ஐயனார் வழிபாடுகளுடன் தொடர்புடைய விரதமே என்றும் தெளிவாகத் தெரியவருகின்றன. குறிப்பாகத் திஷ்யம், திஸ்ஸம், தைஇய என்ற வழக்குகள் வருணன் வழிபாட்டுடன் தொடர்புடைய இயக்கர் குல அல்லது இலங்கைப் பூர்வகுடி மரபினரின் வழக்குகளாக இருந்து இந்தியச் சிந்தனை மரபில் ஏற்றுக்கொள்ளப்பட்டவையாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

இயக்கர் வழிபாடு, குறிப்பாகக் குபேரன் வழிபாடு தமிழகத்தில் முதன்மையான ஒரு வழிபாடாக இருந்திருக்குமா என்ற ஐயம் எழுவது இயல்பே. யக்ஷர் என்ற சொல்லுக்கு வேர்ச்சொல்லாகக் கருதப்படும் யஹ் என்ற சமஸ்கிருதச் சொல்லுக்கு ‘இயக்கம்’ என்றே பொருள். கோள்களையும் விண்மீன்களையும் அவ்வவற்றுக்குரிய வழியில் செல்லும் வண்ணம் இயக்குகின்ற – கடவுகின்ற – பொருள் அல்லது ஆற்றல் என்ற கருத்தோட்டத்தின் அடிப்படையில் உருவான இயவுள், கடவுள் என்ற சொற்கள் இறைத் தத்துவத்தைக் குறிப்பதற்குரிய சொற்களாகச் சங்க இலக்கியங்களில் இடம்பெறுகின்றன. குறிப்பாக, இயவு என்ற சொல் வழி என்ற பொருளிலும் இயவுள் என்பது வழிநடத்திச் செல்லும் ஆற்றல் என்ற பொருளிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன. பிற யானைகளைத் தலைமைதாங்கி வழிநடத்திச் செல்லும் யானை, ‘இயவுள் யானை’ என அகநானூற்றில் (பா. 29) குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இயக்கர்கோன் வழிபாடு அதாவது, யக்ஷர் குல வருணன் - சோமன் வழிபாட்டுத் தொடர்பிலேயே தைந்நீராடல் மரபு சங்க காலத் தமிழகத்தில் நிலவியிருக்க வேண்டும் என நாம் முடிவுசெய்யலாம்.

அடிக்குறிப்புகள்:

[1] மறையும் மறையவர்கள் முதலிய ஆய்வுக் கட்டுரைகள், எஸ். இராமச்சந்திரன், எனிஇந்தியன் பதிப்பகம், சென்னை-17, 2007.

[2] இன்றும், அந்திப் பொழுதில் மேற்குத் திசை நோக்கி நின்று, வருணசூக்தம் சொல்வது பூணூல் அணிந்தவர்களின் சந்தியாவந்தனச் சடங்காக வழக்கிலுள்ளது.

[3] ‘அணிகலன் பெருக்கும் அக்ஷய த்ரிதியை’, மறையும் மறையவர்கள் முதலிய ஆய்வுக் கட்டுரைகள், எஸ். இராமச்சந்திரன், எனிஇந்தியன் பதிப்பகம், சென்னை-17, 2007.

[4] மிகப் பழமையான தமிழ்ப் பிராமிக் கல்வெட்டுகளில் குவீரன் என்ற வடிவமே காணப்படுகிறது. க்ஷ என்ற ஒலி குவ எனப் பிராகிருதத்திலும், தமிழிலும் ஒலிக்கப்பட்டதற்குப் பல எடுத்துக்காட்டுகள் உண்டு.

[5] p. 346 History of Dharamasastra, Vol V, Part 1., Pandurang Vaman Kane, Bhandarkar Oriental Research Institute, Poona, 411004, 1994. ‘ஸ்தாலீபாகம்’ சடங்கு பற்றி மெய்கண்டார் சந்தானத்தைச் சேர்ந்த மறைஞா சம்பந்தர் குறிப்பிட்டுள்ளார் எனத் தெரிகிறது. பார்க்க: பக். 1849, தமிழ்ப் பேரகராதி, சென்னைப் பல்கலைக்கழகம், 1982.

[6] முழுநிலவு என்பது வடதிசைக்குரிய சோமன் என்ற தெய்வமாகவும் மதிமறைவு என்பது தென்திசைக்குரிய யமன் என்ற தெய்வமாகவும் உருவகிக்கப்பட்டன என்பது வேதங்கள் குறித்த ஆய்வாளர்களின் முடிபு ஆகும். வேதங்களில் யமன் என்பவன் முதன்முதலில் இறந்ததன் மூலம், இறப்பு என்றால் இத்தகையதே எனப் பிறருக்கு வழிகாட்டிய ஒருவனாகவே குறிப்பிடப்படுகிறான். பார்க்க: pp 57-130, Vedic Mythological Tract, R. N. Dandekar, Ajantha Publishers, Delhi, 1979.

[7] தையொரு திங்களும் தரைவிளக்கித் தண்மண்டலமிட்டு மாசி முன்னாள்
ஐயநுண்மணற் கொண்டு தெருவணிந்து அழகினுக்கலங்கரித்து அனங்கதேவா
- எனத் தொடங்கும் நாச்சியார் திருமொழி கண்ணனைக் கணவனாகப் பெறுவதற்காக மன்மதனை வேண்டித் தொடங்குகின்றது. இப்பாசுரம்,

உருவுடையார் இளையார்கள் நல்லார் ஓத்து வல்லார்களைக் கொண்டு வைகல்
தெருவிடை எதிர் கொண்டு பங்குனி நாள் திருந்தவே நோற்கின்றேன் காமதேவா (மேற்படி பாசுரம் பா. 6)
- என்று தொடர்வதால் இந்நோன்பு பங்குனி உத்தரத்துடன் முடிவுற்றது எனத் தெரிகிறது.

[8] இக்கலித்தொகைப் பாடலில் மகளிர் மணலில் வீடு கட்டி விளையாடுவதும், மணலில் சிறுமுத்தன் எனப்படும் பாவை உருவம் செய்து, அதனை அலங்கரித்து, அதற்குச் சோறூட்டிப் பிற பெண்டிருடன் விளையாடி மகிழ்வதும், பிறர் வீடுகளுக்குச் சென்று பாடல்கள் பாடிப் பரிசு பெறுவதும் குறிப்பிடப்படுகின்றன. இச்செயல்பாடுகள் பக்தி இலக்கியக் காலத்துப் பாவை நோன்பில் உரிய வகையில் உட்கிரகிக்கப்பட்டன. இதனைப் பற்றித் தமிழறிஞர்கள் விரிவாக ஆராய்ந்துள்ளனர்.

[9] தென்மேற்குப் பருவமழை பொழிகிற மேலைக் கடற்கரைப் பகுதியில், ஐப்பசி - கார்த்திகை மாதங்களை சரத்காலமாகக் கொள்கிற மரபு உண்டு. ஞானசம்பந்தரின் மயிலைப் பதிகத்தில், “ஐப்பசி ஓண விழாவும் அருந்தவர்கள் துய்ப்பனவும் காணாதே போதியோ பூம்பாவாய்” என்ற இவ்வரிகளில் இம்மரபும் பதிவு பெற்றுள்ளது.

[10] 1978ஆம் ஆண்டில் நான் நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடியில் பணிபுரிந்தபோது மீனவர்களிடையே வழக்கிலுள்ள அம்பாப் பாடல்களைச் சேகரித்து, அதனடிப்படையில் சென்னையிலுள்ள சமஸ்கிருதக் கல்லூரியில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் கலந்து கொண்டு ஓர் ஆய்வுக்கட்டுரை வாசித்தேன். வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா போன்ற ஒரு பாடல் வகையே ‘அம்பா’ என்றும், மீனவர்களின் ஓடப்பாடல் அல்லது நீர்ப்பாடலான ‘அம்பா’ மரபை அடிப்படையாகக் கொண்டே திருப்பாவை, திருவெம்பாவைப் பாடல்கள் தோன்றியிருக்க வேண்டுமென்றும் அக்கட்டுரையில் வாதிட்டேன். அக்கட்டுரை பதிப்பிக்கப்படவில்லை.

[11] வகர, யகரங்கள் போன்றே ரகரமும் உடம்படு மெய்யாகப் பயன்படும் வழக்கம் திராவிட மொழிகள் சிலவற்றில் காணப்படுவதுண்டு.

[12] “கற்றான்காணி..... திருவம்பாவை நாள் பத்துக்கு” கல்வெட்டு, இதழ் 66, பக்கம் 16, ஏப்ரல் 2005, தொல்லியல் துறை, சென்னை-8.

[13] பெருங்கடல் தெய்வம் நீர் நோக்கித் தெளித்தென்
திருந்திழை மென் தோள் மணந்தவர் (கலித்தொகை பா 131:1-2)
கரியமலர் நெடுங்கண் காரிகை முன் கடல்தெய்வம் காட்டிக்காட்டி அரியசூள் பொய்த்தார் (சிலம்பு, கானல்வரி: சார்த்துவரி 1) பூக்கமழ் கானலில் பொய்ச்சூள் பொறுக்கென்று மாக்கடல் தெய்வநின் மலரடி வணங்குதும் (முகமில்வரி 4)

[14] 27 நட்சத்திரக் கணங்களுள் கார்த்திகை தொடங்கி எண்ணும்போது விசாகம் 14ஆவதாக வரும். புத்தர் பரிநிர்வாணம் அடைந்த நாள் வைகாசி விசாகமாகும். இந்நிகழ்வைக் குறிப்பிடும்போது நட்சத்திரக் கணங்களுள் நடுவில் இருக்கின்ற நட்சத்திர நாள் என்று மணிமேகலை குறிப்பிடுகின்றது. தனக்கு முன்னர் 13 நட்சத்திரக் கணமும் தனக்குப் பின்னர் 13 நட்சத்திரக் கணமும் இருக்கின்ற வகையில் அமைவதே நடுவிலுள்ள நட்சத்திரக் கணம் ஆகும். இது கார்த்திகையைத் தொடக்கமாகக் கொள்ளும் சோதிடக் கணிப்புக்கு மட்டுமே பொருந்துவதாகும். மணிமேகலை, புத்தரைப் ‘புத்தஞாயிறு’ என்று குறிப்பிடும் மரபினையே முதன்மைப்படுத்துகிறது.

[15] The Zend-Avesta, F. Max Muller, Motilal Banarsidass, New Delhi.

[16] மலைகள் (குல பர்வதங்கள்) எட்டு என்றும் கடல்கள் ஏழு என்றும் குறிப்பிடும் வழக்கமுண்டு. எட்டாவதாக இருப்பது கரும்புறக் கடல் என்பது வைணவ மரபாகும்.

(நன்றி: தமிழினி, ஜனவரி 2009.)

sr@sishri.org



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard