New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கருணாநிதி மறுபக்கம் – கண்ணதாசன் பார்வையில்


Guru

Status: Offline
Posts: 24603
Date:
கருணாநிதி மறுபக்கம் – கண்ணதாசன் பார்வையில்
Permalink  
 


கலைஞரின் மறுபக்கம் – கண்ணதாசன் பார்வையில்

Tuesday, June 26th, 2012

ஒரு நாளுக்கு முன்னாடிதான் கவிஞர் கண்ணதாசனின் சுயவரலாறான “வனவாசம்” புத்தகத்தைப் படித்து முடித்தேன். அதில் கண்ணதாசன் கருணாநிதியின் குள்ளநரித்தனத்தை அப்போதே தோலுறித்து காட்டியுள்ளார். அதை விட இது நாள் வரை பண்பாளர், பக்குவமான அரசியல்வாதி என்று நான் படித்து வந்த அண்ணாத்துரையின் நிஜ முகத்தையும் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார். ஆனால் இந்த உண்மைகளை பற்றியெல்லாம் தற்கால பத்திரிகைகள் எதுவும் எழுதுவதில்லை. அதனால், நான் உட்பட இன்றைய தலைமுறையினருக்கு திராவிட தலைவர்களின் உண்மையான உருவங்கள்  தெரியவில்லை. கருணாநிதியும் அண்ணாவும் எப்படி குள்ளநரி தந்திரம் செய்து நேர்மையான திராவிட தலைவர்களையும் பிரமுகர்களையும் கீழே தள்ளிவிட்டு தாங்கள் மட்டும் பதவி ஏணியில் ஏறினார்கள் என்பதை அருமையாகயும் நாசுக்காகவும் விளக்கியுள்ளார் கண்ணதாசன்.

கண்ணதாசன் “வனவாசத்தில்” தன்னை ‘அவன்’ என்றே கூறிப்பிட்டுள்ளார். அவர் கருணாநிதியைப் பற்றி எழுதிய விமர்சனங்களை படிப்பதற்கு முன்பு அவர்கள் இருவரும் ஆரம்பத்தில் எவ்வாறு நட்பாக இருந்தார்கள் என்பதை கீழே காணுங்கள். அதன் மூலம் அவர் ஏதோ காழ்ப்புணர்ச்சியால் கருணாநிதியைப் பற்றி எழுதவில்லை என்பதனை நாம் புரிந்து கொள்ளலாம்.

கருணாநிதியுடனான நட்பு

கண்ணதாசன் எழுதுகிறார்….

சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் இருக்கும்போதுதான் நடிகர் எம்.ஜி. சக்கரபாணியின் தொடர்பு அவனுக்கு கிடைத்தது. அவர்தான் கருணாநிதி என்கிற பெயரை முதலில் அவனுக்கு அறிமுகப்படுத்தினார். கருணாநிதியின் வசனங்களைப் பற்றி, அவனிடம் அடிக்கடி சொல்லுவார். ஒருநாள் சேலம் அம்பிகா தியேட்டருக்கு, அவனும் சக்கரபாணியும் ‘அபிமன்யு’ படம் பார்க்கப் போனார்கள். அந்தப் படத்தின் வசனங்களைக் கருணாநிதி எழுதியதாகச் சக்கரபாணி சொன்னார்.

அந்த வசனங்கள் இன்றுவரை அவனது காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. ஒரு நாளல்ல… ஆறு நாட்கள் சேர்ந்தாற்போல அந்தப் படத்தை அவன் பார்த்தான். “காணாமல் காதல்” என்பார்கள். அந்தக் ‘காதலே’ பிறந்துவிட்டது அவனுக்குக் கருணாநிதியின் மீது…! “மாடர்ன் தியேட்டர்ஸுக்கு அவரை வரவழைக்க வேண்டுமென்று, சக்கரபாணியிடம் சொன்னான்.

அன்று கருணாநிதியை அவன் முதன்முதலாகக் “கோயம்புத்தூர் லாட்ஜில்” சந்தித்ததும், ஒரு காதலியைக் காணும் உணர்ச்சியே அவனுக்கு ஏற்பட்டது. அன்று முதல் கருணாநிதியும் அவனை உயிருக்குயிராக நேசிக்கத் துவங்கினார். ‘மாடர்ன் தியேட்டர்ஸில்’ மாதம் ஐந்நூறு ரூபாய் சம்பளத்தில் அவர் வேலைக்கமர்ந்தார்.

ஒரு நாளாவது ஒருவரை ஒருவர் காணாமலிருந்தால் எதையோ பறிகொடுத்தது போலிருக்கும். ஒருவர் கையில் இன்னொருவர் தலை வைத்துத் தூங்குகிற அளவுக்குப் பாசம் வளர்ந்தது. அவரைப் பற்றி யாராவது தவறாகப் பேசிவிட்டால், அவனால் பொறுக்க முடியாது. அவருக்கும் அப்படியே.

பார்த்தீர்களா, இருவரும் எவ்வாறு ஆரம்பத்தில் நட்பாக இருந்துள்ளார்கள் என்று. தவிர கவிஞர் அக்கால கட்டத்தில் அண்ணாவின்பால் மிகவும் ஈர்க்கப்பட்டார். அவர் மீது மிகுந்த மரியாதை கொண்டார். அதனாலேயே கடவுள் பக்தியை விட்டார், சுயமரியாதை கொள்கைகளை ஏற்றார். தொடர்ந்து திராவிட இயக்க தலைவர்கள் இரவு நேர சாகசங்களை படியுங்கள். எச்சரிக்கை, மனதை திடப்படுத்திக் கொண்டு படியுங்கள்.

கருணாநிதி மற்றும் அண்ணாவின் இரவு நேர சாகசங்கள்

கவிஞரே! நீங்கள் தொடருங்கள்,

அந்நாளில் திராவிட முன்னேற்றக் கழகம் பிரபல இயக்கமாக இல்லை. வாடகைக் கார் டிரைவர்களுக்கும், அந்தக் கழகத்தைப் பற்றியோ, அதன் தலைவர்களைப்  பற்றியோ எதுவும் தெரியாது. அவனும் தலைவனும் ஓர் நாள் இரவு, ஒரு பெரிய வாடகைக் காரை வைத்துக்கொண்டு பெண் வேட்டையில் ஈடுபட்டார்கள்.

ஒரு நாலைந்து பெண்கள் – கிராமத்துப் பெண்கள் – வேறு பெயரில் சொல்வதானால் நாட்டுக்கட்டைகள், மடமடவென்று வந்து காருக்குள் ஏறிக்கொண்டார்கள். காமுகன் பசிக்கு ருசியா தெரியும்?  அத்தனையையும் ஏற்றிக்கொண்ட வாடகைக் கார், நேரே சென்ட்ரல் ஸ்டேஷன் பக்கம் உள்ள ஹோட்டலை நோக்கிப் புறப்பட்டது.

திராவிட விடுதலை வீரர்கள் திராவிட நாடு அந்தப் பெண்களிடம் இருக்கிறதா என்று தேட ஆரம்பித்தார்கள்.  காமக்கடலில் மூழ்கி எழுந்தார்கள். ஆனால் காரில் போவதற்குக்கூட பணம் கொடுக்காமல், அவர்களை வெளியே அனுப்பிவிட்டார்கள்.

அன்றும் அதற்குப் பிறகும், நடைபெற்ற களியாட்டங்களை, ஒவ்வொன்றாக விவரிக்கத் தேவை இல்லை. அது சுவைக்குறைவாகவும் போய்விடக்கூடும்.

ஆனால் சில பெண்கள், அவ்வப்போது நறுக்குத் தெறித்தாற்போல் கேட்ட கேள்விகளை அவனால் மறக்க முடியவில்லை.

“மேடையில் என்னென்னவோ பேசுகிறீர்கள்! அதெல்லாம் ஊருக்குத்தான் உபதேசமா?”

“நீங்களே இப்படி நடப்பதைப் பார்த்தால், யாரை நம்புவதென்றே தெரியவில்லை.”

“உங்கள் கையில் நாடு கிடைத்தால் – சட்டசபையெல்லாம் பெண்களாகவே இருப்பார்கள்.”

இப்படி ஆணித்தரமான பொன்மொழிகள் பலவற்றை அவர்கள் சந்தித்த பெண்கள் உதிர்த்திருந்தார்கள்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர்கள் பலரும், ஒழுக்கமற்றவர்களென்றும் காமுகர்களென்றும் எதிர்க்கட்சியினர் குற்றம் சுமத்தும்போது அவனுக்குக் கொஞ்சம்கூட கோபம் வருவதில்லை!

காரணம் – அதுதான் உண்மை! அரசியலையே அவர்கள் வேடிக்கையாகத்தான் நடத்தினார்கள். கட்சியினுடைய ஆரம்ப காலமான அக்காலத்திலும் ஒரு தலைவர் இன்னொரு தலைவரைக் கேலி செய்வதே வாடிக்கையாக இருந்தது! “நீ இப்படி செய்யலாமா?” என்று ஒருவரைக் கேட்டால், “ஏன் அவர் மட்டும் என்ன யோக்கியராம்?” என்று” பளிச் சென்று பதில் சொல்வார்கள்.

பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்கின்ற தொண்டர்கள் அன்றும் சரி, இன்றும் சரி, அவ்வளவு உத்தமமானவர்கள். அவர்களைப் பார்க்கும்போதெல்லாம் அவனுக்குப் பரிதாபமாக இருக்கும். “இந்தத் தலைவர்களை நம்பியா நீங்கள் இந்த வேலையில் ஈடுபட்டிருக்கிறீர்கள்!” என்று கேட்கத் தோன்றும். தவறுகளையே செய்து கொண்டிருக்கும் தலைவர்கள், அந்த உத்தமமான தொண்டர்களை மிரட்டுவார்கள்.

உள்ளூரிலேயே ‘ஐம்பது ரூபாய் கொடுத்தால்தான் கூட்டத்திற்கு வருவேன்’ என்பார்கள். வாடகைக் காருக்குப் பணம் கொடுக்கும்படி மிரட்டுவார்கள். தன் மனைவியின் தாலிச்சரட்டை விற்றுவிட்டு, தலைவரின் வழிச்செலவுக்குப் பணம் கொடுத்த ஒரு தொண்டனை அவன் அறிவான். ஈட்டிக்காரனிடம் எழுதிக் கொடுத்துக் கடன் வாங்கி ஒரு கூட்டத்தை நடத்தினான் ஒரு தோழன். அந்தக் கூட்டத்தில் பேசுவதாக இருந்த ஒரு பேச்சாளர் பணத்தையும் வாங்கிக்கொண்டு வெளியூருக்குப் போய்விட்டார்.

கூட்டத்திற்கு அவர் வராததால் ஏமாந்த அந்தத் தோழன் ‘கோ’வென்று அலறி அழுது கொடிகளையெல்லாம் பிய்த்துக் கீழே போட்டான். ஜனநாயகத்தின் போலித்தனம் அவனுக்குத் தெரியலாயிற்று.

அவனுடைய நண்பர் (வேறு யார் கருணாநிதி தான்) சரியான அரசியல்வாதி! தமிழ் நாட்டில் பிச்சைக்காரர்கள் இருப்பதுபற்றி அற்புதமான வசனங்கள் எழுதுவார். ஆனால் ஒரு பிச்சைக்காரனுக்குக்கூட கையைவிட்டுக் காலணாக் கொடுத்ததில்லை.

தொழிலாளர்களையும், அவர்கள் ரத்தம், நரம்புகளையும் பற்றித் துள்ளும் தமிழில் கட்டுரைகள் தீட்டுவார். அவரிடம் ஊழியம் பார்ப்பவர்களுக்கு மிகக் குறைந்த அளவு சம்பளமே கொடுப்பார்.

தான் முன்னேறுவதுபோல் இன்னொருவனும் முன்னேறி விடாமல் இருக்க சகலவிதமான வழிகளையும் கையாளுவார். ஏன், வயிற்றுப்பாட்டுக்காக விபச்சாரத் தொழில் புரிந்து கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் பணத்தைக் கொடுத்துக் காரியமும் முடிந்தபின், சத்தம் போட்டு அந்தப் பணத்தையே திருப்பி வாங்கி வந்தவர் அவர்.

சென்னை ராயப்பேட்டையின் குறுகலான சந்து. அந்தச் சந்திலேதான் அந்தப் பெண்ணின் தகப்பனாரான நாட்டு வைத்தியர், தன் மூன்று பெண் மக்களோடு குடியிருந்தார். மூத்த பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள் உண்டு. மற்றும் இருவர் கன்னியர். அவனும் அந்தத் ‘துள்ளுத்தமிழ்த் தோழனும்’ இன்னும் ஒரு தற்கால எம்.எல்.ஏ.யும் இரவு 9 மணிக்கு அந்த வீட்டில் நுழைந்தார்கள்.

மூவருக்குமாக ரூபாய் நூற்றைம்பது தரப்பட்டது. இளைய பெண்ணொருத்தியை அந்தப் பிரமுகர் சேர்த்துக் கொண்டார். அந்தச் சிறிய வீடு, மறைவு தட்டிகளால் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. இரவு பதினொரு மணி இருக்கும். ஒரு பகுதியிலிருந்து பரபரப்பான பேச்சுக்குரல் எழுந்தது. நேரம் ஆக ஆக, அது வாக்குவாதமாக வளர்ந்தது. ‘கலாரசிகர்’ வெளியிலே வந்தார். கையிலிருந்த துண்டைத் தலையிலே கட்டிக்கொண்டார். நாட்டு வைத்தியரைத் தட்டி எழுப்பினார்.

“உன் பெண் சரியாக நடந்துகொள்ளவில்லை. மரியாதையாகப் பணத்தைத் திருப்பிக்கொடு” என்றார். “போலீசைக் கூப்பிடுவேன்” என்று மிரட்டினார். போலீஸ் வந்தால் தன் கதி என்ன என்பதை அந்தக் கலாரசிகர் மறந்தே போனார். இறுதியில் ரூபாய் நூற்றைம்பதையும் பெற்றுக்கொண்டு தான் ஆளை விட்டார். பின், ஒரு வாரம்வரை அதை ஒரு வெற்றி விழாவாகவே அவர் கொண்டாடினார். அந்த ரூபாயும் அன்று மிஞ்சியதுதானே தவிர, அடுத்து அதே மாதிரிக் காரியத்திற்குத்தான் பயன்பட்டது.

விடுதலை இயக்கத்தின் பிரமுகர்களைக் கவனியுங்கள். எப்படியோ அப்பாவிப் பொதுமக்களின் நம்பிக்கையைப் பெற்றுவிட்ட அரசியல்வாதிகளின் யோக்கியதையைக் கவனியுங்கள். சமுதாயத்தின் இருண்ட பகுதியை ஒளிமயமாக்கப் புறப்பட்ட அவர்கள், பொழுது இருண்டபிறகுதான் தங்கள் வாழ்க்கையைத் தொடங்குவார்கள்.

எந்தெந்தத் துயரங்களிலே இந்தச் சமுதாயம் ஆழ்ந்து கிடக்கிறதென்று அவர்கள் புலம்புவார்களோ, அந்தத் துயரங்கள் பலவற்றிற்கு அவர்களே தான் காரணம் ஆனார்கள்.

அந்த நேரத்தில் அவன் அவர்களைப்பற்றி அதிகம் ஆராய விரும்பவில்லை. காரணம் அவனும் உடன்பட்டேதான் அந்தக் காரியங்களில் இறங்கினான். பணக்கார மைனர்களைப் போன்று, பகலிரவு பாராமல் அவர்கள் ஆடினார்கள்.

இந்த நேரத்தில் அவனுக்குச் சில செய்திகள் தரப்பட்டன. நாம் மட்டும் தவறு செய்யவில்லை! முக்கியத் தலைவரே (யாரென்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்) அதைத்தான் செய்கிறார் – என்று அந்தச் செய்திகள் கூறின! கலாரசிகரும், இன்றைய எம்.எல்.ஏ. ஒருவரும், அந்த நிகழ்ச்சியினை அவனுக்கு விரிவாகவே கூறினார்கள். அந்த எம்.எல்.ஏ. முக்கியத் தலைவரின் பத்திரிக்கையிலே வேலை பார்த்தவர். ஆதலின், அவர் சொன்னவற்றை அவன் நம்பினான். அது இது:

ஓர் இரவு, முக்கியத் தலைவர் தூக்கம்  பிடிக்காமல் முன்னும் பின்னும் நடக்கிறார். வெளியிலே இருவர் போயிருக்கிறார்கள். அவர்களை அவர் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறார். மணி பத்தடிக்கிறது. பதினொன்று! கோயிலில் அர்த்த ஜாம மணி அடிக்கிறது. மணி பனிரெண்டு! அதற்குள் தலைவர் ஏழெட்டுத் தடவை வெற்றிலை போட்டுத் துப்பிவிட்டார். அதோ அவர்கள் வரும் சத்தம் கேட்கிறது.

கதவு திறக்கப்படுகிறது. மூன்று ஆடவர்கள் உள்ளே நுழைகிறார்கள். “ஆடவர்கள்தானா? அழகு மயில் வரவில்லையா!” ஓர் ஆடவனின் தலைக்கட்டு அவிழ்க்கப்படுகிறது. ஆண் உடைகள் களையப் பெறுகின்றன. என்ன ஆச்சரியம்! அந்த உடைக்குள் ஓர் அழகிய மயிலல்லவாஅ ஒளிந்து கொண்டிருக்கிறது! அழைத்து வந்தோர் குறிப்பறிந்து வெளியேறுகிறார்கள். பகுத்தறிவுத் தலைவரின் அறை பண்டாரச் சன்னியின் மடமாகிறது. பொழுது விடிவதற்குமுன்னே பூவை திரும்புகிறாள்.

இந்த நிகழ்ச்சியைப்பற்றி அறிந்த கட்சிப்  பிரமுகர்கள் இதற்குக் கொடுத்த பெயரென்ன தெரியுமா? ‘சுந்தரகோஷ்’ என்பதாகும். ‘வேலைக்காரி’ படத்தில் ஆண்வேடம் தாங்கிய பெண்ணொருத்தி ‘சுந்தரகோஷ்’ என்று அழைக்கப்படுவதையே அவர்கள் அப்படிக் குறிப்பிட்டார்கள்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
RE: கருணாநிதி மறுபக்கம் – கண்ணதாசன் பார்வையில்
Permalink  
 


போலி சீர்திருத்தவாதிகள்

அந்த அரசியலிலேயே அவன் ஊர்ந்து சென்றாலும் சில விசயங்களில் அவன் எச்சரிக்கையாக இருந்தான். கழகத்திற்கென்றே ஒரு தனித்தமிழ் நடை உண்டு. அண்ணாத்துரையின் நடையைப் பின்பற்றி, எல்லோருமே ஒரே மாதிரி ‘துள்ளு தமிழ்’ எழுதுவார்கள். எழுதியவரின் பெயரை எடுத்துவிட்டுப் பார்த்தால் யார் எழுதியதென்றே தெரியாது. கதை ஒன்றில் தொடங்கி, பிறகு அதைக் கட்டுரையாக விரிக்கும் அலுத்துப்போன முறையை அனைவருமே கையாண்டார்கள்.

அவற்றில் எதையும் அவன் படிப்பதில்லை. காரணம், அந்த நோய் தன்னையும் பற்றிக்கொள்ளக்கூடாது என்பதுதான். தன்னுடைய எழுத்துக்களை அவன் படிப்பதில்லை என்பதிலே அவனுடைய நண்பர் கருணாநிதிக்கு அசாத்தியக் கோபம் வரும். ஒருநாள் அவர், புதிதாக வெளியாகிருந்த தனது இரண்டு புத்தகங்களை எடுத்து அவன் முன்னல் போட்டு “இதையெல்லாம் படியய்யா” என்றார்.

ஒரு புத்தகத்தை விரித்தான். நல்ல பண்பாடு உள்ள கதை அது! “வாழ முடியாதவர்கள்” என்ற தலைப்பில் வெளியாகிருந்தது. கதையென்ன தெரியுமா? விவரமாக சொல்கிறேன்.

மனைவியை இழந்த ஒரு போலீஸ்காரன். வறுமை தவழ்ந்து விளையாடும் சின்னஞ்சிறு வீடு அவன் குடியிருப்பு. மாண்டுபோன அவன் மனைவி சும்மா போகக்கூடாதென்று ஒரு மகளை விட்டுப் போயிருந்தாள்.  கதையின் ஆரம்பத்திலேயே அந்த மகள், தளதளவென்று வளர்ந்து பளபளவென்று மெருகேறிக் கவர்ச்சிப் பாவையாக விளங்குகிறாள். சின்னஞ்சிறிய வீட்டில் தன்னந்தனியாக இருக்கும் அவள் திருமணத்திற்காகக் காத்துக் கிடக்கிறாள். இரவுகள் வந்துபோகின்றன; திருமணம் வரவில்லை. ஒவ்வொர் இரவிலும், தந்தையும் மகளும் மட்டுமே அந்த வீட்டில் துயில்கின்றனர். அவளோ கல்யாணமாகாதவள்; அப்பனோ மனைவியை இழந்தவன். தந்தை மகளையே மனைவியாக்கிக் கொள்கிறார்.

பண்பாடற்றவர்களெனக் கருதப்படும் வெளிநாட்டவர் கூட, வறுமையைச் சித்தரித்துக் கதையெழும்போது, பண்பாட்டோடு எழுதினார்கள். ஆனால், மகளைக்  கெடுத்த தந்தையை வறுமைக்கு உதாரணமாக்கினார் ‘முற்போக்குக்’ கதாசிரியர்.

தமிழ்ச் சமுதாயத்தின் எதிர்காலத்தைப் பற்றிய பயம் அவன் நெஞ்சில் சூழ்ந்தது. அடுத்தடுத்து ‘குமரிக்கோட்டம்’, ‘ரோமாபுரி ராணிகள்’, ‘கபோதிபுரக் காதல்’ முதலிய நூல்களைப் படித்தான். அந்த நூல்களில், பலரிடம் கெட்ட ஒருத்தியை பளபளப்பாக வருணித்திருந்தார் கட்சியின் மூலத் தலைவர்.

சமுதாயத்தில் தாழ்ந்துகிடப்போர், மேலெழ வேண்டும் என்ற நன் நோக்கத்திற்கு, இவை எவ்வகையில் துணை புரியும்? எழுதுகின்றவனின் வெறித்தனத்தை இவையுணர்த்துமே அல்லாது, நாட்டுக்கு என்ன பயன் தரும்? பொது இடத்திலோ, குலமகளிர் மத்தியிலோ வைக்கக் கூடாத அளவுக்குப் பகுத்தறிவு வீரர்கள் புத்தகம் எழுதுவானேன்?

பண்பு குன்றாத பங்கிம்சந்திரர், சாகாவரம் பெற்ற சரத்சந்திரர், நாடக அமைப்பில் கதையெழுதிய ரவீந்திரநாத் தாகூர் இவர்களெல்லாம், வங்காளம் போற்றிப் புகழும் இலக்கிய மேதைகள். இவர்களுடைய கதைகளையெல்லாம் படிக்கும்போது பண்பாட்டுக்குப் பெயர்போனது உலகத்திலேயே வங்காளம் தான் என்று எண்ணத் தோன்றுகிறது. வங்கத்தின் இருண்ட பகுதியை அவர்கள் காட்டவே இல்லை. ஒளி மிகுந்த குடும்ப வாழ்க்கையையே உன்னதமாகச் சித்தரித்தார்கள்.

கட்டுப்பாடான குடும்ப வாழ்க்கையை மேற்கொள்ள விரும்பும் ஒருவன், தன் குடும்பம் முழுவதும் தன்னிடத்தே பக்தி கொண்டிருக்க வேண்டும் என்று எண்ணும் ஒருவன், தான் வங்காளத்தில் பிறந்திருகக்கூடாதா என்று ஆசை கொள்ளும் அளவுக்கு, வங்க இலக்கிய ஆசிரியர்கள் கதைகளைச் சமைக்கின்றனர்.

மாளிகையைப் பார்க்க வந்தவன் மாட்டுக் கொட்டகையை ரசிப்பதுபோல், ஒளி உலகைக் காணவந்த சீர்திருத்தவாதிகள், இருண்ட பகுதிகளையே சுவைத்து எழுதினார்கள். அவற்றை ‘ஆபாசம்’ என்ற கணக்கில் அவன் சேர்க்க வரவில்லை. அவை என்ன பயன் தரும் என்பது தான் அவன் கேள்வி. அன்றிலிருந்தே, கட்சியின் முக்கியஸ்தர்கள் எழுதும் கதை, கட்டுரைகளை அவன் படிப்பதில்லை.

ஓடிப்போனவள் கதையும், உருப்படாதவள் வாழ்க்கைச் சித்திரமும், ஆட்டங்கண்ட கிழவனுக்கெழுந்த ஆசையும், அந்தி நேரத்துச் சுந்தரியின் தளுக்கும் நிரம்பி வழிந்த கழகப் புத்தகங்கள், ஆயிரக்கணக்கில் விற்பனையாயின.

இளைஞர்களை அந்த மயக்கம் பற்றியது உண்மை. வெளியிலிருந்து வந்த விமர்சனங்களை வெறுத்து ஒதுக்கி அவற்றை இளைஞர்கள் விரும்பிப் படித்தார்கள். நாகரிகம் மிகுந்த ஒரு சமுதாயத்தின், அழிவுக் காலம் அதிலேதான் தொடங்கிற்று என்றும் சொல்லலாம்.

கருணாநிதியின் குள்ளநரி தந்திரம்

நெல்லை மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக விளங்கிய தோழர் கே.வி.கே. சாமி, தனியாகச் சில கூட்டங்களில் பேசவேண்டுமென்று அவனை அழைத்திருந்தார். அவனது திருமணம் முடிந்து சில மாதங்களே ஆகியிருந்தன. பொது வாழ்க்கையில் பிடிப்பில்லாத நிலையிலேயே அவன், அந்தக் கூட்டங்களில் பேச ஒப்புதல் அளித்திருந்தான். நாளை கூட்டம். இன்று அவன் புறப்பட்டாக வேண்டும்.

“இன்று நான் தூத்துக்குடிக்குப் புறப்படுகிறேன்” என்று அவனுடைய நண்பருக்குச் சொன்னான். “நீ தனியாக போய் என்ன பேசமுடியும்? உனக்கு என்ன பேசத் தெரியும்? எதற்கிந்த வீண் வேலை? வர இயலவில்லையென்று தந்தி கொடுத்துவிடு” என்றார் அவர். தன்னைத் தவிர யாருக்கும் பேரும் புகழும் வரக்கூடாதென்பதிலே அவர் மிகுந்த அக்கறை காட்டுவார். இன்னொருவன் முன்னுக்கு வராமலிருப்பதுதான், தான் வாழ வழியென்பது அவரது சித்தாந்தம்.

இவை அவனுக்குத் தெரிந்திருந்தும் கூட, தூத்துக்குடிக்குப் போகாமலிருக்க முடிவு கட்டினான். அந்த முடிவுக்கு இன்னொரு காரணம், அவனது சோம்பலுமாகும். ‘வர இயலவில்லை’ என்று தூத்துக்குடிக்குத் தந்தி கொடுத்தான். கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டன. அன்று மாலை அந்த அரசியல் நண்பர், வடசென்னையில் ஒரு கூட்டத்தில் பேசுவதாக இருந்தது. அதற்கு அவனையும் அழைத்துச் சென்றார்.

கவனித்தீர்களா! அவரை அவர் கூட்டத்துக்கு போகவிடாமல் செய்து விட்டு இவர் கூட்டத்துக்கு அழைத்துச் செல்கிறார். இங்கு இன்னொரு சம்பவத்தை சொல்லியாக வேண்டும். அச்சம்பவத்தை தான் ஜெயலலிதா சில நாட்களுக்கு முன் தன் அறிக்கையில் சொல்லியிருந்தார். புதிதாக தொடங்கப்படவிருந்த தி.மு.க கட்சிக்காக ஒரு கூட்டம் சென்னையில் நடந்தது. அப்போது கண்ணதாசனும் கருணாநிதியும் சேலத்தில் இருந்து சென்னை வந்து, பின் திரும்பி செல்கையில் முதல் வகுப்பு கட்டணத்தில் ரயில் பயணம் செய்தார்கள். இருந்த பணம் ரயில் டிக்கெட்டிற்கும் காப்பி, சிகரெட்டிற்கும் சரியாக இருந்தது. கண்ணதாசனுக்கோ பசியை அடக்க முடியவில்லை. அப்போது இவர்கள் அருகில் இருந்த வயதானவர் கழிவறைக்குச் சென்றார். அப்போது கருணாநிதி வயதானவர் அங்கு வைத்துவிட்டுச் சென்ற பழக்கூடையை காண்பித்து, ‘திருடலாமா’ என்று கேட்டார். தமிழின தலைவனின் யோக்கியத்தை நீங்களே பாருங்கள்!

போலி திராவிடம் – அண்ணாவின் சரிவு

கண்ணதாசன் தொடருகிறார்; 
அவன் மேடை மீது ஏறிவிட்டால் சாமியாடும் பூசாரியைப்போல் ஆடித் தீர்ப்பான். ‘அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு’ – என்ற முழக்கத்தின் ஓசை நயம் அந்தப் பிஞ்சு மனத்தின் ஆசை நயத்துக்கும் தூபம் போட்டது. பின்நாளில் திரு. சம்பத் சொன்னது போல் ‘அது ஒரு பயங்கரமான அரசியல் மோசடி’ என்பதை யாரும் சிந்திக்கக்கூட இல்லை. கட்சியின் மீது நம்பிக்கை; கருத்துக்களின் மீது நம்பிக்கை; தலைவர் மீது பக்தி – அது ஒரு கட்சியாக இல்லை; மதமாகவே இயங்கிற்று.

1957-ல் நடைபெற்ற திருச்சி மாநில மாநாடு அவன் குறிப்பிட வேண்டிய ஒன்றாகும். ஏனென்றால் கட்சியின் சமுதாய சீர்திருத்தக் கருத்துக்கள் சரியத் தொடங்கிய கட்டம் அதுதான். அந்த மாநாட்டிலேதான் – தான் பார்ப்பனர்களுக்கு எதிரி அல்லவென்றும் – பார்பனீயத்துக்கே எதிரியென்றும் அண்ணாத்துரை பேசினார். அந்தப் பேச்சுக்குக் காரணம் உண்டு. முன்னாலெல்லாம் பதவி தேடுவோர் – பட்டுப் பூச்சிக்கள் – வெட்டுக் கிளிகள் என்று பேசி வந்த அவர் – அந்த மாநாட்டில் தேர்தலில் கலந்து கொள்வது பற்றி ஓட்டெடுப்பு நடத்தினார். ‘கலந்துகொள்ள வேண்டும்’ என்பதற்குச் சாதகமாக ஓட்டுகள் கிடைத்தன. அது எதிர்ப்பார்த்ததுதான். அந்த நம்பிக்கையோடுதான் அவர் வாக்கெடுப்பு நடத்தினார். ஆகவே மாநாட்டில் தனது இறுதிப் பேச்சை வாங்கப் போகிற ஓட்டுக்குச் சாதகமாகத் திருப்பினார்.

பார்ப்பனர்கள் என்னதான் ஆதிக்க வெறியர்களாய் இருந்தாலும் – அவர்களுக்கு ஓட்டுரிமை இருக்கிறதல்லவா? அந்த ஓட்டும் அவருக்குத் தேவை அல்லவா? அதுவும் அது கூட்டமாக வந்து விழுகிற ஓட்டு அல்லவா? அதோடு அந்த நேரத்தில் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் காங்கிரசோடு முரண்டுக் கொண்டிருந்தார் அல்லவா!

விடுதலை வீரன் அண்ணாத்துரை ராஜ தந்திரியாகத் தொடங்கினார். சமுதாயக் கருத்துக்கள், நாத்திகக் கருத்துக்கள் மெல்ல அவரிடம் இருந்து விடைபெறத் தொடங்கின. கொள்கையின் முதற்கட்டச் சரிவை துவக்கி வைத்தது திருச்சி மாநில மாநாடு.

அண்ணாவின் ‘நேர்மை’ கருணாநிதியின் ‘சுய’மரியாதை

இந்த நிலையில் சென்னை மாநகர் மன்றத் தேர்தல் வந்தது. பொதுத் தேர்தல் முடிந்து திருக்கோஷ்டியூரில் அவன் தோல்வியுற்று, சென்னைக்குத் திரும்பிய உடனேயே சென்னையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றியைக் கண்டான். அப்போதே ‘தென்றலில்’ ஒரு தலையங்கம் எழுதினான். ‘அடுத்த மாநகர் மன்றத் தேர்தலில் முன்னேற்றக் கழகத்தவரே மேயராக வருவார்’ என்று அதில் அவன் குறிப்பிட்டான்.

அந்த நம்பிக்கையைத் துணைகொண்டு இப்போது தேர்தல் வேலைகளில் இறங்கினான். அந்தத் தேர்தலில் சென்னையில் தி.மு.க.வுக்காக அதிகம் உழைத்தவர்கள் அவனும் நடிகர் டி.வி.நாராயணசாமியாவார். உடலுழைப்பு, வாகன உதவி, பொருள் உதவி அனைத்தும் அவர்கள் இருவருமே செய்தார்கள். சிவகெங்கைச் சீமைப் படம் வெளிவருவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னால் தேர்தல் நடந்ததால் அவன் கையில் அதிகப் பணப்புழக்கம் இருந்தது. பல தொகுதிகளில் இவன் தன் பணத்தைச் செலவழித்தான். காய்கறிகளுக்குப் போடப் பட்டிருந்த வரிகளையே பிரச்சாரத்திற்குப் பொருளாகக் கொண்டான். அவன் எதிர்பார்த்ததுபோல் தி.மு. கழகம் பெரும்பான்மையாக வெற்றி பெற்றது. அண்ணாத்துரையே திகைத்தார். ஏனென்றால் அவர் எதிர்பார்க்கவில்லை. வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் பலர் அவனது கம்பெனிக்கே முதலில் வந்து அவனுக்கு நன்றி தெரிவித்துவிட்டுப் போனார்கள்.

கடற்கரையில் மாபெரும் பாராட்டுக் கூட்டம். வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் வரிசையாக அமர்ந்திருக்கிறார்கள். நடுவிலே அண்ணாத்துரை. அவர் பக்கத்திலே கருணாநிதி. கவுன்சிலர்கள் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள். பலர் பாராட்டிப் பேசுகிறார்கள். தேர்தலில் கடுமையாக உழைத்த அவனும் மற்றவர்களும் அனாதைகள்போல் ஒரு மூலையில் அமர்ந்திருக்கிறார்கள்.  கருணாநிதி பேசுகிறார். அந்த வெற்றிக்குத் தானே கஷ்டப்பட்டவர்போல் பேசுகிறார். இவ்வளவுபேர் ஜெயிப்பார்கள் என்று ஏற்கனவே தனக்குத் தெரிந்ததாகவே பேசுகிறார்.

அடுத்தாற்போல் அண்ணாத்துரை சென்னை மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறார். காங்கிரசை வீழ்த்திவிட்ட பெருமையைப் பேசுகிறார். வெற்றிக்காக உழைத்தவர்கள் பட்டியலைச் சொல்கிறார். அதில் தன் பெயரும் வரும் என்று அவன் காத்துக்கொண்டிருக்கிறான். அந்தோ, அப்படி ஒருவன் உலகத்தில் இருப்பதாகவோ, அவன் தேர்தலில் உழைத்ததாகவோ அவர் சிந்திக்கக்கூடவில்லை; அது மட்டுமா அவர் செய்தார்? வருணனைகளோடு ஒரு விஷயத்தை ஆரம்ப்பித்தார்.

“நான் என் மனைவிக்கு நகை வாங்கக்கூட கடைக்குச் சென்றதில்லை. எனக்கென்றுகூட நான் நகைக் கடை ஏறியதில்லை. இன்று மதியம் வேகாத வெய்யிலில் ஊரெங்கும் அலைந்து கடையெங்கும் தேடி வாங்கி வந்தேன் ஒரு கணையாழி; அந்தக் கணையாழியை இந்த வெற்றியை ஈட்டித்தந்த என் தம்பி கருணாநிதிக்கு அணிவிக்கிறேன்.” கூட்டத்தில் பெருத்த கையொலி. ‘கருணாநிதி வாழ்க!’ என்ற முழக்கம். அவன் கூனிக் குறுகினான். பயன் கருதாத உழைப்பு. அரசியலில் எப்படி அலட்சியமாக ஒதுக்கப்படும் என்பதை அப்போதுதான் அவன் கண்டான்.

பெரிய ஜாதிக்காரனையும் சிறிய ஜாதிக்காரனையும் ஒரே மாதிரியாக எப்படி ஜாதிவெறி ஆட்டி வைக்கிறது என்பதை அன்று அவன் நேருக்கு நேர் பார்த்தான். அண்ணாத்துரை அவன் இதயத்திலிருந்து சரியத் தொடங்கினார். அவரை வரம்புமீறிப் புகழ்ந்துகொண்டிருந்த அவன் உள்ளத்தில் அன்றுதான் அவரைப்பற்றிய கசப்பான எண்ணம் உதயமாயிற்று. ஒரு களங்கமற்ற பக்தனை அன்று அவர் இழக்கத் தொடங்கினார். அவன் இதயம் நெருப்பாகவே எரிந்தது. கூட்டம் முடிந்து அவர் கடற்கரை மரக்கலத்தின் மீது போய் அமர்ந்தார்.

அவன் நேரே அவரிடம் போனான். “என்ன அண்ணா! இப்படிச் சதி செய்துவிட்டீர்கள்?” என்று நேருக்கு நேரே கேட்டான். “அட நீயும் ஒரு மோதிரம் வாங்கிக்கொடு. அடுத்த கூட்டத்தில் போட்டுவிடுகிறேன்” என்றார். “அப்படித்தான் கருணாநிதியும் வாங்கிக் கொடுத்தாரா?” என்று அவன் கேட்டான். “அட சும்மா இரு. அடுத்த தேர்தல் வரட்டும் பார்த்துக் கொள்ளலாம்” என்றார்.

அவன் அவரிடம் சொல்லிக்கொள்ளாமலே நடக்கலானான். அவன் கண்களில் நீர் மல்கிற்று. பயன் கருதி அவன் உழைக்கவில்லை என்றாலும். உழைத்தவனுக்கு ஒரு நன்றி கூட இல்லையே என்று கலங்கினான்.

உட்கட்சிக் குழப்பம் – சுயநல தலைவர்கள்

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் புதிய பொதுச் செயலாளரைத் தேர்ந்தெடுப்பதற்காக லாயிட்ஸ் ரோட்டில் ஒரு கட்டத்தில் கூடினார்கள். அன்றைக்குச் சம்பத்தின் கைதான் வெகுவாக ஓங்கியிருந்தது. அன்று அவர் விரும்பியிருந்தால் – அவர்தான் பொதுச் செயலாளர். அப்படி இருந்தது அன்றைய நிலைமை. அண்ணாத்துரையே நடுங்கிக்கொண்டிருந்தார். துணைக் குழுக்களுக்கான தேர்தல் அங்கு நடந்தபோது எல்லாக் குழுக்களிலும் சம்பத்தின் ஆதரவாளர்களுக்கே ஏராளமான வாக்குகள் கிடைத்த.

மதியழகனைப் பொதுச்செயலாளராக்குவது என்று சம்பத் எடுத்துக்கொண்ட. முடிவிற்கு, அங்கே பெருத்த ஆதரவிருந்தது. கருணாநிதியும் அவரது ஆதரவாளர்களும் கலங்கிப்போய் இருந்தார்கள். எல்லோரும் சம்பத்தையே சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருந்தார்கள். அண்ணாத்துரை சம்பத்தை தனியே அழைத்துக்கொண்டு போனார். உண்மையிலேயே கண்ணீர்விட்டு அழுதார். “இந்தத் தடவை மட்டும் நான் பொதுசெயலாளராக இருந்துவிடுக்கிறேன். நமக்குள்ளே தகராறு இருப்பதாக யாருக்கும் தெரிய வேண்டாம்” என்றார்.

தன்னாலே ஏற்றி வைக்கப்பட்ட ஒரு மனிதர், தன் கையைப் பிடித்துக்கொண்டு அழுகிறார் என்ற உடனேயே சம்பத் செய்த முதற் பெருந்தவறு இதுதான். அவரைச் சுற்றி இருந்த பலபேரும் உறுதியாக நின்றபோது – அவரது இளகிய நெஞ்சம் அண்ணாத்துரையின் கண்ணீருக்குப் பணிந்துவிட்டது. பிறகு சம்பத்தே தன் ஆதரவாளர்களிடம் அண்ணாத்துரைக்கு விட்டுக் கொடுக்குமாறு கூறினார். அண்ணாத்துரை பொதுச்செயலாளராக ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

லாயிட்ஸ் ரோடு பொதுக்குழுவிற்குப் பிறகும் கட்சியில் சம்பத்தின் கையே ஓங்கி இருந்தது. அதைத் தகர்க்க அண்ணாத்துரை ரகசியமாகத் திட்டமிட்டார். திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு முன்னால் பொதுக்குழுவில் கண்ணீரைக் காட்டி தான் பெற்ற வெற்றியை கம்பீரமான வெற்றியாகக் கருதி திராவிடநாடு இதழில் மறைமுகமாக ஒரு கட்டுரை எழுதினார்.

அப்பொழுதும் சரி இப்பொழுதும் சரி, தி.மு.கழகத்தில் ஒருவரையொருவர் மறைமுகமாகத் தாகி எழுதுவது மிகவும் அதிகம். அது தொண்டர்களில் பலபேருக்குப் புரியாது. குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் புரியும். அந்தப் பாணியில் அண்ணாத்துரை சம்பத்தைக் கேலி செய்து ஆப்பிள் கார்ட் என்ற பெர்னாட்ஷா நாடகத்தை மையமாகக் கொண்டு ஒரு கட்டுரை எழுதியிருந்தார். ‘எல்லோரும் இந்நாட்டு மன்னர்’ என்பது அதன் தலைப்பாகும். அதை அவன்கூடப் படிக்கவில்லை. பொதுவாக அவன் அண்ணாத்துரையின் திராவிடநாடு பத்திரிகை உட்பட எந்த தி.மு.க பத்திரிக்கையையும் படிப்பதில்லை. காரணம் – அவர்களில் சத்தற்ற தமிழ்நடை தன்னைப் பற்றிக்கொள்ளக்கூடாதே என்ற பயம்.

அந்தக் கட்டுரை வெளிவந்த திராவிடநாடு இதழை அவன் முதலில் பார்க்கவில்லை. அவனது துணையாசிரியர் தியாகன் அதைப் படித்துவிட்டு அவனிடம் கொண்டுவந்து காட்டினார். “ இந்தப் ‘போனார்ஜியஸ்’ என்ற பாத்திரம் புயலார் என்ற பெயரில் மாற்றப்பட்டு சம்பத்தைக் கேலி செய்வது போல் எனக்குத் தோன்றுகிறது” என்று அவர் சொன்னார். அவன் அதை முழுக்க படித்துப் பார்த்தான். பொதுக்குழுவில் சம்பத் ஏமாந்துவிட்டதாகவும் தான் பெற்றி பெற்றுவிட்டதாகவும் மறைமுகமாக அண்ணாத்துரை அதில் கூறியிடுப்பதைக் கண்டுபிடித்தான்.

அண்ணாவின் ஆசிர்வாதத்துடன் கருணாநிதியின் ரவுடித்தனம்

தீர்மானங்கள் தயாரிப்பதில் சம்பத் கைதேர்ந்தவர். முறையற்ற தலைவர்களை தீர்மானங்கள் மூலமே அவர் சித்ரவதை செய்வார். லாயிட்ஸ் ரோடு பொதுக்குழு நடப்பதற்கு முன் நடைபெற்ற மாயவரம் பொதுக்குழுவில் ஒரு தீர்மானம் கொண்டுவந்து அண்ணாத்துரையையும் கருணாநிதியையும் அலற வைத்தவர் அவர்.  ஆகவே- இந்தத் தடவை வேலூர்ப் பொதுக்குழுவுக்கு தீர்மானம் தயாரிக்கிறார் என்றால்  – அது கண்டிப்பாகப் பரபரப்பை உண்டுபண்ணும் என்பது அவனுக்குத் தெரியும்.

சம்பத்தின் ஆதரவாளர்கள் எல்லாம் வேலூர்ப் பொதுக்குழுவில் இந்தத் தீர்மானங்களை விவாதிப்பது பற்றியே பேசிக்கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்களுக்குத் தெரியாமலேயே கருணாநிதி ரகசியமாக ஒரு வேலை செய்து கொண்டிருந்தார். பொதுக்குழுவில் பெரும் ரகளை செய்வது என்று முடிவு கட்டி அண்ணாத்துரையின் ஆசீர்வாதத்தையும் பெற்றுக்கொண்டு மேல்மட்டத்தில் இருந்த அண்ணாத்துரையின் ஆதரவாளர்களுக்கெல்லாம் தெரிவித்துவிடு, மற்றப் பொதுக்குழு உறுப்பினர்களை ஊர் ஊராகப் போய்ச் ச்ந்தித்து ஒவ்வொருவரையும் தயார் செய்து உருப்பினர் அல்லாத அடியாட்கள் சிலரையும் ஏற்பாடு செய்துகொண்டு பல கார்களில் எல்லோரையும் ஏற்றி முதல்  நாளே வேலூருக்குக் கொண்டுவந்து சேர்த்துவிட்டு – தானும் அங்கேயே வந்துவிட்டார். இந்த ரகளைக்கு அண்ணாத்துரையும் கருணாநிதியும் திட்டமிட்டிருந்தது சம்பத் கோஷ்டியினரில் யாருக்குமே முன்கூட்டித் தெரியாது.

“செயற்குழுவில் அடிதடி நடக்கிறது. சம்பத்தை எல்லோரும் அடிக்கிறார்கள்” என்று சொன்னார். அவன் கலங்கிவிட்டான். அங்கிருந்து காரை எடுத்துக்கொண்டு செய்ற்குழு நடக்குமிடத்திற்குச் சென்றார்கள். செயற்குழுவில் கலந்துகொண்டிருந்த எம்.பி. சுப்பிரமணியன் (எம்.எல்.ஏ) இறங்கி வந்தார். மதுரை சண்டியர் ஒருவர் சம்பத்தின் சட்டையைப் பிடித்ததாகவும் கருணாநிதி சத்தம் போட்டுத் திட்டியதாகவும் இரண்டு நடிகர்கள் முண்டா பனியனோடு வந்து நின்றதாகவும் அண்ணாத்துரை அழுததாகவும் அவர் சொன்னார்.

“உனக்காவது சொத்து சுகம் இருக்கிறது சம்பத். அரசியலை விட்டால் வேறு எங்களுக்கு தொழில் ஏது?” என்று அன்பழகன் பரிதாபமாகக் கேட்டாராம். கட்சியில் இந்தக் குழப்பம் வந்ததனால் ‘வசூல் வேலை’ தடைப்படுகிரது என்று பலபேர் ஆத்திரமாக இருந்தார்களாம்.

“இப்போழுதே கட்சியில் இருந்து எல்லோரும் ராஜிநாமாச் செய்யவேண்டும்” என்றொருவர் கூறினார். மதியழகன்தான் இதில் தீவிரமாக இருந்தார். சம்பத் எல்லோரையும் அமைதிப்படுத்தினார். சம்பத் செய்த இரண்டாவது தவறு இது. தனது ஆதரவாளர்களின் ராஜிநாமா யோசனையை அன்றைக்கே அவர் ஒப்புக்கொண்டிருந்தால் அண்ணாத்துரையும் கருணாநிதியும் சம்பத்திடம் சரணடைய வேண்டியதிருக்கும். காரணம் அன்று பெரும்பான்மையான ஆதரவு சம்பத்துக்கே இருந்தது. நீலிக்கண்ணீர் வடித்து சம்பத்தின் ஆதரவாளர்கள் பலபேரைத் தன்பக்கம் இழுப்பதற்கு அண்ணாத்துரைக்கு ஒரு வாய்ப்பை சம்பத் கொடுத்துவிட்டார்.

கருணாநிதி ஒன்றும் அறியாத கன்னிபோல் உட்கார்ந்திருந்தார்.அண்ணாத்துரை உருக்கமாகவே தனது பேச்சை ஆரம்பித்தார். “கட்சியில் குழப்பம் வந்து ஏதாவது ஆகுமென்றால் என்னை உயிரோடு காண முடியாது” என்று அவர் கூறியதும், “ஐயோ அண்ணா” என்று சிலபேர் அழுதார்கல். அழுதவர்களின் நடிப்பு, அண்ணாத்துரையின் நடிப்பையும் மிஞ்சி நின்றது. அவன் மட்டும் புன்னகை புரிந்துகொண்டிருந்தான் . உண்மைக்கும் நடிப்புக்கும் உள்ள வித்தியாசத்தை ஓரளவு கண்டுகொள்ளக் கூடியவன்தானே அவன். அவன் சிரித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து பலபேர் ஆத்திரமாகக் கத்தினார்கள்.

இந்த அடிதடியெல்லாம் முடிந்து, சம்பத் அமைதியாக போனதால், கட்சியில் தற்காலமாக அமைதி திரும்பிய. பின் கண்ணதாசன் ஒரு முறை திருச்சி கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த போது கருணாநிதி ஆதரவாளன் ஒருவனால் தாக்க முற்பட்டார். அந்த காலிப் பயல் மாலை போடுவது போல் வந்து கண்ணதாசனின் சட்டையைப் பிடித்தான். பின் மறைத்து வைத்திருந்த செருப்பை எடுக்கும் போது, கண்ணதாசன் அவனை உதைத்து மேடைக்கு கீழே தள்ளிவிட்டார். பின் சிரித்துக் கொண்டு அரைமணி நேரம் மேடையில்  பேசினார். இந்தச் சம்பவத்தைக் கண்டித்து சம்பத் உண்ணாவிரதம் இருந்தார். மூன்று நாள் இருந்த உண்ணாவிரதத்தினால் சம்பத் மிகுந்த பலவீனமடைந்தார். அண்ணா பதட்டம் அடைந்தார். எங்கே சம்பத்துக்கு எதாவது நடந்து அது அவர் தலைமையை பாதிக்குமோ என்று எண்ணியோ என்னவோ அண்ணா கட்சியில் நடக்கும் ரவுடித்தனங்களை கண்டிப்பதாகவும் தடுப்பதாகவு உறுதி கூறி சம்பத்தின் உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டுவந்தார்.

இதன் பின் அண்ணாத்துரையின் மனப்போக்கில் மாறுதல் ஏற்பட்டது. கட்சியில் அனைவரையும் அரவணைத்து செல்ல முயற்சி செய்தார். அதற்காக காவலர் கூட்டம் என்பதனை கூட்டினார். அதில் இவ்வளவு கலகம் ஏற்பட்டதற்கு காரணமானவர்கள் தன்னிடம் தனியே வந்து வருத்தம் தெரிவித்தால் கூட போதும் என்று கூறினார். கண்ணதாசன் அந்தச் சூழ்நிலையில் தான் ஒருவன் மன்னிப்பு கேட்டாலே போதுமானது என்று கருதினார். (ஏனெனில் அவர் தான் திருச்சியில் தாக்குதலுக்கு உள்ளானார்). அவர் எழுந்துச் சென்று அண்ணாவின் கையைப் பிடித்துக்கொண்டு “இதில் நான் தவறு செய்திருந்தால் நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்” என்று கண்ணீர் சிந்தினார். அண்ணாவின் கைகளை கண்களில் ஒற்றிக்கொண்டார். அண்ணாவும் அவரது கைகளை முத்தமிட்டார். பின் கண்ணதாசனை தோளில் தூக்கிக்கொண்டு மிட்டாய் கொடுத்து கொண்டாடினார்கள்.

பின் அண்ணா, தொண்டர்கள் மத்தியில் அமைதி ஏற்படுத்துவதற்காக தான், சம்பத், கருணாநிதி மற்றும் கண்ணதாசன் நால்வரும் ஊர்தோறும் சென்று கூட்டம் நடத்தினால் நல்லது என்று ஆலோசனை கூறினார். ஆனால் நடந்தது என்னவோ…..

கண்ணதாசன் எழுதுகிறார்;

அந்த வகையில் அண்ணாத்துரை மிகத் தெளிவாக இருந்தார். ஆனால். கட்சியை எப்படியும் உடைத்தே தீருவது என்று முடிவு கட்டியிருந்த கருணாநிதி அந்தக் கூட்டங்கள் நடைபெறாமல் தடுப்பதில் முனைந்தார்.பலவீனமான அண்ணாத்துரையின் இதயம் மீண்டும் சலனமடையுமாறு மாற்றுவதில் அவர் வெற்றி பெற்றார். சுயமாக சிந்துக்கிற சக்தியையே அவர் அப்போது இழந்திருந்தார். அவரை விஷமாக்குவதில் கருணாநிதி வெற்றி பெற்றார்.

இவ்வளவு நாளாக அனைத்துப் பத்திரிகைகளும் அண்ணா ‘எதையும் தாங்கும் இதயம் கொண்டவர்’ என்று தான் எழுதிகொண்டிருக்கிறார்கள்.

நண்பர்களே! இதற்கு நான் என்ன சொல்ல?  நீங்களே அனைத்தையும் புரிந்து கொண்டிருப்பீர்கள். அண்ணாவையும் கருணாநிதியையும் பற்றி இங்கு படித்து என்னைப் போல் அதிர்ச்சி, ஏமாற்றம், கோபம் என அனைத்தையும் ஒரு சேர அனுபவித்திருப்பீர்கள். இதெல்லாம் நம் போன்ற இளம் தலைமுறைக்கு தெரியாமல் இருந்தது. அல்லது நாம் தெரிந்து கொள்ளாமல் விட்டு விட்டோம். இனியாவது நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். யார் நமது தலைவன் என்பதை தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருக்கவேண்டும்.

இதைப் பற்றி உங்கள் கருத்துக்களை இங்கு எழுதுங்கள். நாம் விவாதிக்கலாம். ஒரு வேண்டுகோள் – தயவு செய்து அனைவரும் படிக்கும் வண்ணம் நாகரீகமாகவும் கண்ணியமாகவும் எழுதுங்கள்.

நன்றி: சைக்கிள் ஓட்டிய தமிழன் 



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

பெரியாரின் மறுபக்கம் – அண்ணாத்துரையின் பார்வையில்

Wednesday, June 27th, 2012

Image

ஈ.வே.ரே. பெரியார் அவர்களின் இரண்டாவது திருமணம் 09-07-1949 ஆம் ஆண்டு நடந்தது. அப்போது ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு வயது 72. மணியம்மைக்கு வயது 26.

பெரியார் அவர்களின் திருமணத்தை எதிர்த்து “திராவிட நாடு” பத்திரிக்கையில் [03.07.1949] அண்ணாத்துரை வரைந்த கட்டுரை இது:

சென்ற ஆண்டு நாம் நமது தலைவர் பெரியாரின் 71 -வத ஆண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடினோம். இந்த ஆண்டு அவர் திருமண வைபவத்தைக் காணும்படி நம்மை அழைக்கிறார் – இல்லை – அறிவிக்கிறார்.

கடந்த ஐந்தாறு அண்டுகளாகப் பெரியாருடைய உடலைக் கவனித்துக் கொள்ளும் திருத்தொண்டிலே தன்னை ஒப்படைத்துப் பணியாற்றி வந்தார் திருமதி மணி அம்மையார். இந்தத் திருமதிக்கு வயது 26. அவர்கள்தான் பெரியாருக்கு மனைவியாகும் தொண்டில் இப்போது ஈடுபட நேரிட்டிருக்கிறது.

சென்னையில் இவர்கள் பதிவுத் திருமண மனு பதிவு நிலையத்தில் கடந்த ஒருவார காலமாக ஒட்டி வைக்கப்பட்டிருக்கிறது. பலர் பார்த்து திகைப்படைந்துள்ளனர். பெரியாருக்கு வயது 72. மணியம்மைக்கு வயது 26. இவர்களின் பதிவுத் திருமணம் நடைபெற இருக்கிறது.
தலைநிமிர்ந்து தன்மானத் தூதர்களாய், விடுதலை வீரர்களாய், ஏறுநடை நடந்து செல்லும் எண்ணற்ற இளைஞர்கள் இன்று உடைந்த உள்ளத்தைச் சுமந்து கொண்டு, வழியும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு பின்னும் கால்களுடன், பிசையும் கரங்களுடன் யார் பார்த்து என்னவிதமான பரிகாசம் செய்கிறார்களோ என்ற அச்சத்துடன் நடமாடும் நிலையைக் காணும்போது கல்நெஞ்சமும் கரைந்துவிடும். திருமணம் சொந்த விஷயம், வயோதிகப் பருவத்திலே திருமணம் செய்வதுகூடச் சொந்த விஷயந்தான். அதிலும் தனிப்பட்ட ஒருவர் அல்லது வெறும் அரசியல் கட்சித் தலைவராயுள்ள ஒருவர் திருமணம் செய்து கொள்வது வயோதிகத்திலே, செய்து கொண்டாலும் கூடக் கேட்டுத்திடுக்கிடவோ, கேலியாகப் பேசவோ கோபமடைய மட்டுமேதான் தோன்றமே ஒழியக் கண்ணீர் கிளம்பாது. இன்று கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பெரியாரின் திருமணச் சேதி கேட்டு.

நாம் அவரை ஒரு அரசியல் கட்சித் தலைவராக மட்டும் கொண்டிருக்கவில்லை. இயக்கத்தைச் சார்ந்த ஒவ்வொருவரும் அவரைத் தங்கள் குடும்பத் தலைவர் என, வாழ்க்கைக்கு வழிகாட்டியென ஏற்றுக்கொண்டு எந்த இயக்கத்தவரும், எந்தத் தலைவரிடமும் காட்டாத அளவு மரியாதை உணர்ச்சியை அன்பைக் காட்டி வந்திருக்கிறோம். அவரை நாம், பின்பற்றி வந்தது ஏறத்தாழ ”பக்தர்கள் அவதார புருஷர்களை”ப் பின்பற்றி வந்தது போலவேதான். இதற்குக் காரணம், நாம் மற்ற எந்தத் தலைவரையும் விட இவரிடம் தனிப்பட்ட தன்மை, பண்பு, இருக்கிறது என்று உளமார எண்ணியதால்தான்.

வயத ஏற ஏற வாழ்க்கையைப் பற்றி, குடும்பத்தைப் பற்றி, சொந்தச் சுகத்தைப் பற்றிக் கவனப்படாமல் துறவிபோல இரவு பகலென்று பாராமல், அலைந்து திரிந்து அரும்பாடுபட்டு, நாம் வாழ, அவர் வாட்டத்தையும் பாடுகளையும் தாங்கிக் கொள்கிறார் என்று தெரிந்ததால் நாம் அவர் பெரியார் எனம் பண்புப் பெயருக்கு முற்றிலும் உரியார், அவர் போன்றோர் வேறு யாரும் இல்லையென்று இறும்பூ தெய்தி வந்தோம் இறுமாந்திருந்தோம்.

திருமண முறையிலேயுள்ள மூடப்பழக்க வழக்கங்களை முறியடிக்கவும், பெண்களைக் கருவிகளாக்கும் கயமைத் தனத்தை ஒழிக்கவும், ஆண்களின் கொடுமையை அடக்கவும் அவர் ஆற்றியதுபோல் வேறு எந்தத் தலைவரும் உரையாற்றியதில்லை. பொருந்தாத் திருமணத்தை அவர் கண்டித்து கேட்டு, கிழவர்கள் கலங்கினர், குமரிகள் குதூகலித்தனர்.

காமப்பித்துக் கொண்டலையும் ஆண்கள் வயோதிகப் பருவத்திலே வாலிபப் பெண்ணைச் சொத்து சுகம் கிடைக்கும் என்று ஆசைக் காட்டியோ, வேறு எந்தக் காரணம் காட்டியோ திருமணத்துக்குச் சம்மதிக்கச் செய்தால், மானரோஷத்தில் அக்கரையுடைய வாலிபர்கள் அந்தத் திருமணம் நடைபெற இடந்தரலாமா என்று ஆயிரமாயிரம் மேடைகளிலே முழக்கமிட்டார் – நமக்கெல்லாம் புதுமுறுக்கேற்றினார்.
பிள்ளையில்லையென்ற காரணத்துக்காக சொத்துக்கு வாரிசுயில்லை என்ற காரணத்துக்காக, மனைவியைத் தேடும் கொடுமையை ஆயிரமாயிரம் மேடைகளிலே கண்டித்தார். பொருந்தாத் திருமணம் நாட்டுக்குப் பெரியதோர் சாபத்தீது என்று முழக்கமிட்டார். அந்தக் காலத்து தசரதன் முதற்கொண்டு இந்தக் காலத்து ‘தங்கபஸ்பம்’ தேடும் கிழவர் வரையிலே எள்ளி நகையாடினார். தன்மான இயக்கம் தழைத்திருக்கும் இடத்திலே ‘பொருந்தாதத் திருமணம்’ யார் வீட்டிலாவது, எந்தக் காரணத்தாலாவது நடைபெற இருந்தால், போலீஸ் பந்தோபஸ்துத் தேடக்கூடிய அளவுக்கு நாட்டு மக்களின் உணர்ச்சி வேகம் உருவெடுத்தது. ஏற்கனவே பொருந்தாத் திருமணம் செய்து கொண்டவர்கள்கூட வெட்கத்தால் – வேதனையால் தாக்கப்பட்டனர்.

”என் போன்ற வயதானவர்கள், கல்யாணம் செய்து கொள்ள எண்ணக்கூடாது – எப்படியாவது, அப்படி ஓர் எண்ணம் வந்து தொலைந்தால் தும்பு அறுந்ததாக (அதாவது விதவையாக) ஒரு நாற்பது ஐம்பது வயதானதாக, ஒரு கிழத்தைப் பார்த்துக் கல்யாணம் செய்து தொலைக்கட்டுமே – பச்சைக் கொடிபோல ஒரு பெண்ணை, வாழ்வின் சுகத்தை அறிய வேண்டிய வயதும், பக்குவமும் கொண்ட பெண்ணைக் கலியாணம் செய்து கொள்வதா – காரணம் ஆயிரம் காட்டட்டுமே, காட்டினாலும் எந்த மானமுள்ளவன், அந்தக் கலியாணத்தைச் சரியென்று கூறுவான்? யாருக்குச் சம்மதம் வரும்?” என்று அவர் பேசிய பேச்சுக் கேட்காத ஊரில்லை. இப்படிப்பட்ட அறிவுரை புகட்டியவர், தமது 72-ம் வயதில் 26வயதுள்ள பெண்ணை, பதிவுத் திருமணம் செய்து கொள்கிறார் என்றால், கண்ணீரைக் காணிக்கையாகத் தருவது தவிர வேறென்ன நிலைமை இருக்கும்!

”ஏம்பா! திராவிடர் கழகம்! உங்கள் தலைவருக்குத் திருமணமாமே!! என்று கேட்கும் கூரம்பு போல நெஞ்சில் பாய்ந்து தொலைக்கிறதே. சீர்திருத்தம் இயக்கம் இது. இதோ பாரய்யா, ”சீர்திருத்தம் 71-க்கும் 26-க்கும் திருமணம்” என்ற கேலி பேசுகிறார்களே – கேட்டதும் நெஞ்சு வெடிக்கிறதே.

”கையிலே தடி மணமகனுக்கு! கருப்பு உடை மணமகளுக்கு!” என்று பரிகாசம் பேசுகிறார்களே.

”ஊருக்குத்தானய்யா உபதேசம்!” என்று இடித்துரைக்கிறார்களே.

”எனக்கென்ன, வயதோ 70-க்கு மேலாகிறது. ஒரு காலை வீட்டிலும் இன்னொரு காலைச் சுடுகாட்டிலும் வைத்துக்கொண்டிருக்கிறேன். நான் செத்தால் அழ ஆள் இல்லை. நான் அழுகிறபடி சாவதற்கும் ஆள் இல்லை.” என்றெல்லாம் பேசின பெரியார் கலியாணம் செய்து கொள்கிறாரய்யா! என்று கடைவீதி பேசிக் கைகொட்டி சிரிக்கிறதே!

”ஊரிலே நடைபெறும் அக்ரமத்தைக் கண்டிக்கும் அசகாயச் சூரர்களே! சமுதாய இழிவுகளை ஓட்டும் வீரோதி வீரர்களே! பெண் விடுதலைக்குப் பெரும்போர் தொடுக்கும் பெரியவர்களே! பொருந்தாத் திருமணத்தைக் கண்டித்த கண்ணியர்களே, இதோ உங்கள் தலைவர் துறவிக் கோலத்தில், தள்ளாடும் பருவத்தில், இளம் பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறாரே உங்கள் கொள்கையின் கதி என்ன, எங்கே உங்கள் பிரசார யோக்கியதை, என்ன சொல்லுகிறீர்கள் இதற்கு, எப்படி இந்த அக்ரமத்தை, அநீதியை அருவருக்கத் தக்க ஆபாசத்தைச் சகித்துக் கொள்கிறீர்கள்? என்று சவுக்கடி கொடுக்கிறது போலப் பேசுகிறார்களே- இனியும் பேசப்போகிறார்களே- என்ன செய்வோம்- என்ன சமாதானம் கூறுவோம்- எப்படி மனப்புண்ணை மாற்ற முடியும்- எப்படி மானத்தைக் காப்பாற்றிக் கொள்வது என்று எண்ணினர்- எண்ணினதும் தாயோ, தகப்பனோ, மனைவியோ, மகளோ, அண்ணன், தம்பியோ உடன் பிறந்தவர்களோ இறந்தால் ஏற்படக்கூடிய துக்கத்தை விட அதிகமான அளவில் துக்கம் பீறிட்டுக் கிளம்பிக் கதறுகின்றனர் – கதறிக்கொண்டேயிருக்கிறோம் – கண்ணீருக்கிடையேதான், இக்கட்டுரையும் தீட்டப்படுகிறது.

பொருந்தாத் திருமணம்! புனிதத் தலைவரின் பொருந்தாத் திருமணம்! எந்தக் காலத்திலும், எதிரியின் எந்த வீச்சும், சர்க்காரின் எந்த நடவடிக்கையும், இன்று நமது இயக்கத் தோழர்களைத் திகைக்கச் செய்திருப்பது போலச் செய்ததில்லை.

முகத்திலே கரி பூசிவிட்டார். மூக்கறுத்துவிட்டார்! மூலையில் உட்கார்ந்து கதறுகிறோம் – சேதி தெரிந்தது முதல். வெட்கப்படுகிறோம் அயலாரைக் காண! வேதனைப்படுகிறோம் தனிமையிலே! ஒருவர் கண்ணீரை, மற்றவர் துடைக்க முயலுகிறோம் – துடிக்கிறோம் நெஞ்சத்தில் துயரத்தேள் கொட்டியதால். பொருந்தாத் திருமணம் புரிந்து கொள்ளத் துணிபவர்களை, எவ்வளவு காரசாரமாகக் கண்டித்திருக்கிறோம் – எவ்வளவு ஆவேசமாகக் கண்டித்தோம்.

இப்போது, எவ்வளவு சாதாரணமாக நம்மையும் நமது உணர்ச்சிகளையும், கொள்கைகளையும் இயக்கத்தையும் எவ்வளவு அலட்சியமாகக் கருதி, நமது தலைவர் 72-ம் வயதிலே திருமணம் செய்து கொள்வதாக அறிவிக்கிறார். நம்மை நடைப்பிணமாக்குவதாகத் தெரிவிக்கிறார். நாட்டு மக்களின் நகைப்புக்கு இடமாக்கி வெட்கித் தலைகுனிந்து போங்கள் எனக்கென்ன என்று தெரிவித்துவிட்டார்.

எம்மை ஆளாக்கிவிட்ட தலைவரே! இந்தக் கதிக்கு எம்மை ஆளாக்கவா இவ்வளவு உழைப்பும் பயன்படவேண்டும்? உலகின் முன் தலைகாட்ட முடியாத நிலைமையில் எம்மைச் செய்யும் அளவுக்கு நாங்கள் தங்களுக்கு இழைத்த குற்றம் என்ன? நீங்கள் காட்டிய வழி நடந்தோமே, அதற்கா இந்தப் பரிசு?

எத்தனை ஆயிரம் காரணம் காட்டினாலும், சமர்த்தான விளக்கம் உரைத்தாலும், 72-26 இதை மறுக்கமுடியாதே! இது பொருந்தாத் திருமணம் என்பதை மறைக்க முடியாதே! இதைச் சீர்த்திருத்தச் செம்மலாகிய தாங்கள் செய்வதென்பது காலத்தாலும் துடைக்க முடியாத கறை என்து மறுக்க முடியாதே! ஏன் இதைச் செய்கிறீர், எம்மை ஏளனத்துக்கு ஆளாக்கிவிடுகிறீர்! கண்ணீரைத் துடைத்தப்படி நின்று, ஆயிரமாயிரம் இளைஞர்கள் கேட்டும் கேள்விகள் இல்லை!

இந்தப் பொருந்தாத் திருமணம் நடைபெறக்கூடுமென்று நாம், யாரும் கனவிலும் எண்ணியதில்லை. பெரியாரின் கோலம், வயது, பேச்சு, வாழ்க்கையிலே அவருக்குப்பற்று அற்றது போலிருந்தது காட்டியத்தன்மை ஆகியவை நம்மை அவருடைய மனதிலும் ஒரு ‘மாது’ புகமுடியும் என்று எண்ணச் செய்யவில்லை, அதிலும் எப்படிப்பட்ட மாது?

பெரியாரின் உயிரைப் பாதுகாக்க, உடலைப் பாதுகாக்க தக்கவிதமான உணவு, மருந்து தருதல், பிரயாண காலத்தில் வசதி செய்து தருவது போன்ற காரியத்தைக் கவனிப்பது என்கிற முறையில் இயக்கத்தில் ஜந்தாறு வருஷத்திற்கு முன்பு வந்தவர்கள்தான் மணியம்மையார்.
பெரியாரின் உடற்பாதுகாப்புக் காண பணிபுரிய, நான் நீ யென்று போட்டியிட்டுக் கொண்டு வர நூற்றுக்கணக்கிலே தூய உள்ளம் படைத்தவர்கள் உண்டு. அவர்கள் யாரும் தேவைப்படவில்லை! மணியம்மை வர நேரிட்டது! புயல் நுழைகிறது என்று கருதியவன் நான். புல்லன் என்று தூற்றப்பட்டேன், அதனால் அந்த அம்மையாரின் அருந்தோண்டு கண்டு, திராவிடர்கள் முதலிலே கொண்டிருந்த அருவருப்பையும் இழந்தனர்.

அப்பா! அப்பா! என்று அம்மை மனம் குளிர வாய் குளிர, கேட்போர் காது குளிரக் கூறவும் அம்மா- அம்மா என்று கேட்போர் பெருமையும் பூரிப்பும் அடையும் விதமாக, பெரியார் அந்த அம்மையாரை அழைக்கவும், இக்காட்சியைக் கண்டு, பெரியாரின் வளர்ப்புப் பெண் இந்த மணியம்மை எனப் பல்லாயிரவர் எண்ணி மகிழவுமான நிலை இருந்தது. அந்த வளர்ப்புப் பெண்தான், இன்று பெரியாரின் மனைவியாக இருக்கிறார் – பதிவுத் திருமணம்!! இந்த நிலையை யார்த்தான் எந்தக் காரணம் கொண்டுதான், சாதாரணமானதென்று சொல்லமுடியும். நூற்றுக்கணக்கான மாநாடுகளிலே, நமது வீட்டுத் தாய்மார்கள் தமது கரம் பற்றி நின்ற குழந்தைகளுக்குப் பெரியாரைப் பெருமையுடன் காட்டி ”இதோ, தாத்தா பார் – வணக்கஞ் சொல்லு” என்று கூறினார் – கேட்டோம் – களித்தோம்! பக்கத்திலே பணிவிடை செய்து நின்ற மணியம்மையைக் காட்டி ”தாத்தா பொண்ணு” என்று கூறினார்.அந்தத் தாத்தாவுக்குக் கலியாணம் பணிவிடை செய்து வந்த பாவையுடன்.
சரியா? முறையா? என்று உலகம் கேட்கிறது.

அன்புள்ள
சி. என். அண்ணாதுரை
(திராவிட நாடு 3-7-49)

 
 


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

உ.வே.சா.வின் மறுபக்கம்

Saturday, July 7th, 2012

 உ.வே.சா. என்று சுருக்கமாக அழைக்கப்பட்ட உ.வே.சாமிநாத அய்யரை, தமிழ்த் தாத்தா என்றும் சுவடிகள் காத்த சுரங்கம் என்று உச்சி மீது வைத்து கொண்டாட தமிழகம் தயங்கியதே இல்லை. ஆனால் இப்பெரியவரின் மறுபக்கம் நம்மை திடுக்கிட வைக்கிறது. தமிழ், தமிழர் என்ற போர்வையில் தமிழ் இனமே வஞ்சிக்கப்பட்ட நடைமுறை நிகழ்வுகளைப் படிக்கும் போது நெஞ்சம் பதறுகிறது.

 உ.வே.சா.வின் கையெழுத்துப் படிகளை சென்னை ஆனந்தபோதினி அச்சகத்தில் அச்சடிப்பது வழக்கம். இதன் உரிமையாளர் முனிசாமி முதலியார். நிர்வாகப் பொறுப்பு – ஜீவா என்று புனை பெயரில் அழைக்கப்பட்ட நாரண துரைக்கண்ணனிடம் இருந்தது. நாரண துரைக்கண்ணன் கள் இறக்கும் மரபில் பிறந்தாலும் தமிழை விரும்பிக் கற்றார். மறைமலை அடிகள், சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், திரு.வி.க. சீனி வேங்கடசாமி, பா.வே.மாணிக்கம், கா.நமச்சிவாயம் போன்ற அறிஞர் பெருமக்களிடம் உறவாடி தமிழ் பயின்றார்.

 பிரசண்ட விகடன் என்ற இதழை ஆனந்த போதினி அச்சகத்தில் அச்சிட்டு, ஆசிரியராக இருந்து வெளியிட்டார். சிறுகதை, நாவல், நாடகங்கள், படைப்பதில் வல்லவர். இவரது உயிரோவியம் என்ற நாவல் அந்தக் காலத்தில் 60,000 படிகள் விற்று சாதனை படைத்தது. அடுப்பூதும் பெண்களுக்கு படிக்கும் பழக்கம் இவரால் ஏற்பட்டது; கல்கிக்கும் இவர் முந்தியவர்.

 உ.வே.சா.வின் கையெழுத்துப் படிகள் என்றும் வழக்கம்போல் ஆனந்த போதினி அச்சகத்திற்கு அச்சுக் கோர்க்கப் போனது. அதில் இருந்த பாடலில் பிழைகண்ட நாரண துரைக்கண்ணன் அதைத்திருத்தியே அச்சடித்தார். தவறை காலதாமமாக உணர்ந்த உ.வே.சா. தன் உதவியாளர் இராசகோபால் அய்யங்காரை விரைந்து அனுப்பி, பிழை திருத்தி அச்சேற்றும்படி அனுப்பி வைத்தார். அதற்கு முன்பே படிகள் அச்சாகி விட்டன. ஆனால் பிழை திருத்தப்பட்டது கண்டு வியந்து போய் உதவியாளர் அய்யங்கார், நாரண துரைக்கண்ணனின் தமிழறிவை வெகுவாகப் பாராட்டியதுடன், அவர் சம்மதித்தால், உ.வே.சா.விடம் மேலும் தமிழ்ப்பாடம் பயின்று, அறிவை பட்டை தீட்ட ஏற்பாடு செய்வதாய் சொல்லிச் சென்றார். அதற்கு உ.வே.சா. ஒப்புதல் தரவில்லை. அதற்கு உ.வே.சா. சொன்ன காரணம் நம்மை சிலிர்க்கவும் வீறு கொண்டு எழவும் செய்கிறது. நான் சூத்திரனுக்கு தமிழ் கற்பிக்க மாட்டேன் என மறுத்துவிட்டார்.ஆனால் அவர் தமிழ் கற்றது மட்டும் கும்பகோணத்தில் இருந்த திருசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களிடம் தான்.

 

இன்னொரு நிகழ்வு. திருவாவடுதுறை ஆதீனம் – சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழுக்கு ஒரு இருக்கை ஏற்படுத்தி நிதி உதவி செய்தார். ஆண்டு தோறும் வித்வான் படிப்பில் முதன்மையாகத் தேர்ந்தவர்களுக்கு ரூபாய் ஆயிரம் பரிசளிப்பதே அந்தத் திட்டத்தின் நோக்கம்.

 1930இல் தெ.பொ.மீ. என்ற மீனாட்சி சுந்தரம் (பின்னை நாளில் மதுரை காமராசர் பல்கலைக் கழகத் துணைவேந்தர் – ஓய்வு பெற்றபின் மேலமருவத்தூரில் ஆன்மிகப் பணி) முதலாவதாக தேறி இருக்க, அவரை ஒதுக்கி விட்டு தனக்கு நெருக்கமான மாணவன் கி.வா.ஜ என்ற ஜகன்நாதனுக்கு அப்பரிசை தந்தார். தமிழ்ப் பற்றாளராக இருப்பதைவிட தன் இனப் பற்றாளராக பார்ப்பனர் இருந்தனர் என்பதற்கு பல நடப்புகள் உண்டு.

 செந்தமிழ்ச் செல்வர் ம.பொ.சி. அவர்களும், சத்தியமூர்த்தி அய்யர் அவர்களும் அமராவதி (ஆந்திரம்) சிறையில் ஆங்கில அரசால் சிறைப்பட்ட போது, ம.பொ.சி. சிறையில் கம்ப இராமாயண வகுப்பு எடுப்பது பொழுதுபோக்கு. சத்தியமூர்த்தி அய்யரும் சொற்பொழிவை கேட்டார். ஆனால் இடையிடையே எழுந்து கம்பனை விட வால்மீகியே உயர்வு என வாதிப்பாராம். ம.பொ.சி. கம்பனே பண்பானவன், உன்னதமான படைப்பாளி எனப் பல சான்றுகள் கூறி, சத்தியமூர்த்தியின் வாயை அடைப்பாராம். இதைத் தாங்க முடியாமல், சத்தியமூர்த்தி ஒரு கட்டடத்தில் கை கலக்கவே முனைந்தாராம்.

 பெரும்பான்மையோர் ம.பொ.சி பக்கம் என்பதால் அடங்கிப் போவாராம். இதெல்லாம் இனப் பற்றுக்கு எடுத்துக்காட்டு.

 புதுவைக் குயில் பாவேந்தர் சிறக்கப் பாடியுள்ளார்:

 வீட்டிலே தூத்தம் என்பார்.

வெளியிலே தண்ணீர் என்பார் – பிழைப்புக்காக.
உன் போல் கிள்ளாய்!

 அடடா! வைர வரிகள்; ஒவ்வொரு எழுத்தும் கோடி பெறும் அண்ணாவே சொன்னாரே – தமிழ் பேசுவோரெல்லாம் தமிழராக முடியாது!

 – சந்தனத் தேவன்

உண்மை மார்ச் 1-15 2009



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard