திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் எந்தவொரு குறிப்பிட்ட சமயம் சார்ந்த நூலாகவும் இல்லை. ஏனெனில், திருவள்ளுவர் தான் வாழ்ந்த காலத்தில் இருந்த ஒரு இனத்தையோ, சாதியையோ, சமயத்தையோ, அரசையோ, ஆளும் வர்க்கத்தையோ அவர் இயற்றிய திருக்குறளில் எங்கும் குறிப்பிடவில்லை. ஆனால், திருவள்ளுவரைத் தங்கள் சமயத்தவர் என்றும், திருக்குறளைத் தங்கள் சமயம் சார்ந்த நூலென்றும் சில குறிப்புகளைக் காண்பித்துத் தவறான கருத்துக்களைச் சிலர் அவ்வப்போது வெளியிட்டு வருகின்றனர்.
சமண புத்த சமயங்கள்
திருக்குறளின் முதல் அதிகாரமான கடவுள் வாழ்த்து எனும் அதிகாரத்தில் இடம் பெற்றுள்ள கடவுள் குறித்த விளக்கங்கள் சமண சமயக் கடவுளுக்கும், பௌத்த சமயப் பெரியோர்களுக்கும் பெரிதும் பொருந்துகின்றன என்று சமண, புத்த சமயத்தினர் கூறுகின்றனர். கடவுள் வாழ்த்து எனும் அதிகாரத்தில் இடம் பெற்றிருக்கும் குறள்களில் இடம் பெற்றிருக்கும் கடவுள் என்று பொருள்படும் ஆதிபகவன், வாலறிவன், மலர்மிசை ஏகினான், வேண்டுதல் வேண்டாமை இலான், இறைவன், பொறிவாயில் ஐந்தவித்தான், தனக்கு உவமை இல்லாதான், அறவாழி அந்தணன், எண்குணத்தான் எனும் சொற்கள் சமணம் மற்றும் புத்த சமயம் தொடர்பிலான பெரியோர்களையே குறிக்கின்றன என்றும், இந்தச் சொற்கள் குறிப்பிடும் கருத்துகள் அனைத்தும் தங்கள் சமய நூல்களில் இடம் பெற்றிருக்கின்றன என்றும் சில குறிப்புகளைக் குறிப்பிடுகின்றனர்.
இந்து சமயம்
கடவுள் வாழ்த்தில் முதல் குறளில் இடம் பெற்றிருக்கும் ஆதிபகவன் என்ற சொல் அரனையும், இரண்டாம் குறளில் இடம் பெற்றிருக்கும் வாலறிவன் என்ற சொல் மாலவனையும், மூன்றாம் குறளில் இடம் பெற்றிருக்கும் மலர்மிசை ஏகினோன் என்ற சொல் அயனையும் குறிப்பிடுகிறது. திருவள்ளுவர் இங்கு சிவன், திருமால், பிரம்மா எனும் இந்து சமயத்தின் முப்பெரும் கடவுள்களை மறைவாகக் குறித்து இருக்கிறார் என்று இந்து சமயத்தினர் குறிப்பிடுகின்றனர். இந்து சமயத்தினரில் சிவன் வழிபாட்டை முதன்மையாகக் கொண்ட சைவ சமயப் பிரிவினர் சிலர் திருக்குறளின் கடவுள் வாழ்த்துப் பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்துக் கருத்துகளும் சைவ சமயம் தொடர்புடையவை என்கின்றனர். மற்றொரு பிரிவினரான வைணவர்கள் இதை மறுப்பதுடன், கடவுள் தொடர்பான சொற்களும், அதில் இடம் பெற்றிருக்கும் கருத்துகளும் வைணவத்திலேயே அதிகமாக இருக்கிறது என்கின்றனர்.
சைவ சமயப் பிரிவினர் திருவள்ளுவரைத் திருவள்ளுவ நாயனார் என்றே அழைக்கின்றனர். திருவள்ளுவரை சைவர் என்றும், திருக்குறளைச் சைவ நூல் என்றும் குறிப்பிடுகின்றனர். திருவாவடுதுறை ஆதீனமான கொரடாச்சேரி வாலையானந்த அடிகள் என்பவர் “திருவள்ளுவர் சித்தாந்த சைவர்” எனும் நூலை எழுதியுள்ளார். இந்நூலில் திருவள்ளுவரின் சமயம் சார்ந்த கருத்துகள் அனைத்தும் சைவ சித்தாந்தத்தினை விளக்குவதாக எழுதியுள்ளார். சோ. சண்முகம் என்பவர் எழுதிய “திருக்குறளில் சைவ சமயம்” எனும் கட்டுரையில் திருக்குறளில் சைவ சமயக் கருத்துகளே அதிகம் நிரம்பியிருக்கின்றன என்கிறார்.
சமயச் சார்புடையதா?
இந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில் தமிழ் மொழி பேசுபவர்கள் சார்ந்திருக்கும் சமயங்களில் புத்தம், சமணம், இந்து சமயம் போன்றவைகளே திருவள்ளுவர் வாழ்ந்த காலத்திற்கு முன்பிருந்து இருப்பதாகக் கருதப்படுகின்றன. பிற சமயங்கள் திருவள்ளுவர் வாழ்ந்ததாகக் கருதப்படும் காலத்திற்குப் பின் தோன்றியவைகளாக இருக்கின்றன. இல்லையெனில், திருக்குறளிலுள்ள கருத்துகள் தங்களுடைய சமயம் சார்ந்த கருத்துகளாக இருக்கின்றன என்கிற சான்றுகளும் முன் வைக்கப்பட்டிருக்கும். உண்மையில் திருக்குறளில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துகள் அனைத்தும் பொதுவானதாக இருக்கின்றன. இந்தக் கருத்துகள் அனைத்துச் சமயப் பிரிவினருக்கும் பொருந்துவதாக இருக்கின்றன. இதனால்தான் திருக்குறளைச் சமயப் பாகுபாடின்றி, கருத்து வேறுபாடுகளின்றி அனைவரும் போற்றுகின்றனர். திருக்குறளில் இடம் பெற்றிருக்கும் சமயம், கடவுள் தொடர்பான கருத்துகள் எந்தவொரு சமயத்தையும் சார்ந்ததாக இல்லை என்பதைத் திருக்குறளை முழுமையாகப் புரிந்து கொண்டால் உணர முடியும்.
இங்கு திருக்குறள் சமய சார்பற்றது என்பதை அறிந்து கொள்ள, ஒரு சில குறள்களை மட்டும் நாம் எடுத்துக்காட்டாக எடுத்துக் கொள்ளலாம்.
முதல் குறள்
திருக்குறளின் முதல் அதிகாரமான கடவுள் வாழ்த்து பகுதியில் முதல் குறளாய் இருக்கும் திருக்குறளையே இங்கு முதலில் எடுத்துக் கொள்வோம்.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு. (குறள் -1)
அகர ஒலியே எல்லா எழுத்துக்களுக்கும் முதலாவதாக இருக்கிறது. இது போல் ஆதிபகவன் உலகிலுள்ள உயிர்கள் அனைத்திற்கும் முதல்வனாக இருக்கிறான் என்பதே... இதன் பொருள்.
தமிழில் முதன்மையாக இருக்கும் எழுத்து “அ” என்பதுதான். அகரத்திற்குத் தமிழ் எழுத்துக்களில் முதல் மரியாதை உண்டு. இந்த எழுத்துக்கு இன்னொரு சிறப்பும் இருக்கிறது. அதாவது, தமிழில் உள்ள அனைத்து எழுத்துக்களிலும் உள்ள கோடுகள், வளைவுகள் எல்லாம் “அ” எனும் எழுத்து ஒன்றிலேயே அடங்கியிருக்கின்றன. அகரத்திலுள்ள மேற்சுழி, குறுக்குக்கோடு (-), நேர்கோடு (|), கீழ்வளைவு ஆகிய இந்த நான்கு குறியீடுகளையும் வைத்துத்தான் தமிழின் ஏனைய எழுத்துக்கள் அனைத்தும் உருவாகியுள்ளன என்ற கருத்தைச் சேதுரகுநாதன் என்பவர் குறிப்பிடுகிறார்.
இது போல், உலகத் தோற்றம் கதிரவனிடமிருந்து தோன்றியதென்பர். அவ்வாறு தோன்றி தொங்கிய நிலையில் ஞாலம் என்ற பெயர் அமைந்தது என்றும் கூறுவர். இவ்வாறு தோன்றி நிலைத்த நிலப்பரப்பில், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் கழிந்த பின்னர் உயிர்த்தோற்றம் ஏற்படலாயிற்று என்று சொல்வதுண்டு. உயிர்த் தோற்றத்தின் முதன்மையாகக் கூறப்படும் கதிரவனைத்தான் ஆதிபகவன் என்கிற பெயரில் திருவள்ளுவர் குறிப்பிட்டுள்ளார். இக்குறளில் திருவள்ளுவர் இயற்கையை வலியுறுத்திச் சிறப்பித்திருக்கிறார். இங்கு அவர் எந்தவொரு சமயத்தையும் முன்னிறுத்திப் பார்க்கவில்லை என்பதை உணர வேண்டும்.
தூய அறிவு வடிவானவனின் நன்மை தரும் திருவடிகளைத் தொழாதவர் என்றால், அவர் கற்றதனால் உண்டான பயன் யாதுமில்லை என்பது இதன் பொருள்.
மனிதன் கல்வி கற்று அறிவைப் பெருக்கிக் கொள்கிறான். கல்வியும் அறிவும் எவ்வளவு வளர்ந்தாலும் மனிதன் அந்தத் துறைகளில் முழுத்தூய்மை பெறுவது இல்லை. மனித அளவில் மூன்று குறைகள் குறிப்பிடத்தக்கனவாக உள்ளன. அறிவு பெருகப் பெருக அறியாமையும் நிழல் போல் தொடருகிறது. அறிவுப் பெருகப் பெருக ஐயமும் விடாமல் தொடருகிறது. அறிவு பெருகப் பெருக ஒன்றை வேறொன்றாகக் கொள்ளும் மருட்சி தோன்றுகிறது. இருள், ஐயம், மருள் ஆகிய மூன்றும் நீங்கிய ஒருவன் “வாலறிவன்” என்று இக்குறளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள வாலறிவன் என்பதை, எந்தச் சமயத்தின் கடவுளோடும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியதில்லை. எந்த சமயத்தின் தனிக் கருத்துகளும் இங்கு இடம் பெறவில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
எண் வகைக் குணங்களில் உருவான மேன்மையானவன் திருவடிகளை வணங்காத் தலை, கேளாக் காதும், காணாக் கண்ணும் போலப் பயனில்லாதது என்பது இக்குறளின் பொருள்.
கடவுளுக்கு குணமுண்டா? அதுவும் எட்டு வகையான குணமுண்டா? இக்குறளில் கடவுள் எண்குணத்தான் என்று எப்படி சுட்டிக்காட்டப்படுகிறார்? எண்குணத்தான் என்பதற்கு, எண்ணியபடி குணம் கொண்டவன் என்றும் கூட பொருள் கொள்ளலாம். இப்படியிருக்க, எண்குணத்தான் என்பது தங்கள் சமயத்தின் இறைவனையே குறிப்பிடுகிறது என்று சொல்லிக் கொள்வதில் பொருள் எதுவுமில்லை.
எட்டு வகையான குணங்கள் மனிதனின் எட்டு வகையான மெய்ப்பாடுகளையே குறிப்பிடுகிறது. தொல்காப்பியத்தில் ஒரு பாடல் இருக்கிறது.
சிரிப்பு, அழுகை, துன்பம், மயக்கம், அச்சம், பெருமிதம், சினம், மகிழ்ச்சி என மெய்ப்பாடுகள் எட்டாகும் என்பதே இந்தத் தொல்காப்பியப் பாடலின் பொருள். இந்த எட்டு வகையான மெய்ப்பாடுகளும் எட்டு வகையான குணங்களின் அடிப்படைகளாக இருக்கின்றன. எட்டு மெய்ப்பாடுகளில் சிறப்புற்று விளங்குபவன் மனிதன் எனும் நிலையிலிருந்து மேம்பட்டவனாக இருக்கிறான். அவனின் திருவடிகளை வணங்கி, அவன் வழியாக நல்லவைகளைப் பார்த்திட வேண்டும், நல்ல செய்திகளை அறிந்திட வேண்டும், அப்படியே அவன் வழியைக் கடைப்பிடித்து நாமும் நல்வாழ்க்கையினை அடைந்திட வேண்டும் என்பதையே திருவள்ளுவர் வலியுறுத்தி இருக்கிறார் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். தவறான பொருள் கொண்டு, தவறாகச் சிந்திப்பதைத் தவிர்த்திட வேண்டும்.
நான்காவதாக ஒரு குறள்
பற்றுக பற்றுஅற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு. (குறள் -350)
இந்த உலகிலுள்ள பற்றிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்வதற்கு உரிய ஒரே வழி, எந்தப் பற்றும் இல்லாதவனைப் பற்ற வேண்டும் என்பதே இதன் பொருள்.
உலகிலுள்ள உயிரினங்கள் அனைத்தும் ஏதாவது ஒன்றின் மீது பற்று கொண்டிருக்கின்றன. இல்லற வாழ்க்கையைத் துறந்து வாழும் துறவிக்குக் கூட, துறவறத்தின் மீது தனிப் பற்று இருக்கத்தான் செய்கிறது. எந்தவிதப் பற்றும் இல்லாத ஒருவன் மனிதனை விட மேலான நிலையிலிருப்பவனாகத்தான் இருக்க முடியும். அவனைப் பின்பற்றுங்கள், அவனை வழிபடுங்கள் என்று பொதுவாக இந்தத் திருக்குறள் குறிப்பிடுகிறது. இந்தத் திருக்குறளில் எந்தச் சமய சார்புடைய கடவுளைப் பற்றிய குறிப்பும் இல்லை என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
உலகில் வாழ வேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன் வானில் வாழ்வதாகச் சொல்லப்படும் தெய்வத்துக்கு இணையாக வைத்து மதிக்கப்படுவான் என்பது இதன் பொருள்.
இந்த உலகம் துன்பம் நிறைந்தது. இது நிலை இல்லாதது, பொய்யானது, மாயமானது என்றுதான் அனைத்து சமயங்களும் குறிப்பிடுகின்றன. ஆனால், இந்த உலக வாழ்க்கையைக் கண்டு அஞ்சக் கூடாது. நல்ல நெறியை, நல்ல ஒழுக்கத்தைப் பின்பற்றி வாழ்கின்றவர்களுக்கு எந்தத் துன்பமுமில்லை. இந்த உலக வாழ்வில், நல்ல வழிமுறைகளைப் பின்பற்றி வாழ்கின்றவர்களுக்கு நன்மையும், நல்ல வளமையும் கிடைக்கும் என்பதில் ஐயமுமில்லை. மேல் உலகம் எனும் வீடு பேற்றில் எத்தகைய சிறப்பு, இன்பம் போன்றவை கிடைக்கும் என்று நாம் நம்புகிறோமோ அவை அனைத்தும் இந்த உலகத்திலேயே கிடைக்கிறது. உலக வாழ்வை வெறுக்காமல், இந்த உலகில் பற்று கொண்டு, நல்லெண்ணத்துடன் நல்வாழ்க்கை வாழ வேண்டும் என்று புதியதொரு கருத்தைக் குறிப்பிடும் திருவள்ளுவர், சமயக் கருத்தாளர்களுக்கு மாறுபட்ட கருத்தினைக் கொண்டவர். அவரைக் குறிப்பிட்ட சமயத்தவர் என்றும், அவர் இயற்றிய திருக்குறள் நூலைக் குறிப்பிட்ட சமயத்தைச் சார்ந்தது என்றும் கருதுகிற பார்வையை மாற்றிட வேண்டும். திருக்குறளை உலகப் பொதுமறையாகப் போற்றிட வேண்டும்.
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, இலயோலா கல்லூரி, மெட்டாலா, நாமக்கல் மாவட்டம்.
முன்னுரை
மனிதன் மனிதனாக வாழ மனிதன் மனிதனுக்கு கூறிய அறிவுரை நூல் தான் திருக்குறளாகும். இது நாடு, மொழி, இனம், சமயம் கடந்த எக்காலத்திற்கு பொருந்துவனாய் அமைந்ததால் திருக்குறள் உலகப் பொதுமறை என அழைக்கப்பட்டது. திருக்குறள் என்னும் ஒரு நூல் தோன்றியிறாவிட்டால் தமிழ்மொழி என்னும் ஒருமொழி இருப்பதாக உலகத்தார்க்கு தெரிந்திருக்காது என்று கி.ஆ.பெ. விஸ்வநாதம் குறிப்பிடுகின்றார். ஆனால் இலக்கியங்களை அகவிலக்கியம், புறவிலக்கியம் எனப் பகுப்பது ஒரு மரபு. அவை அறம், பொருள், இன்பம் என்னும் உறுதிப்பொருள் மூன்றனையும் உணர்த்தும். திருக்குறள் இம் மூன்றனையும் கூறுதலின் முப்பால் என்னும் பெயரையும் பெற்றுள்ளது. பொருளும், இன்பமும் அறத்தின் அடிப்படையில் வந்தால்தான் போற்றப்பெறும். அறத்தின் வழியில் வாராத பொருளும் இன்பமும் பழிக்கப்பெறும். இதனை;
“சிறப்புடை மரபிற் பொருள் மின்பமும் அறத்து வழிப்படுஉந் தோற்றம் போல” (புறம்-31)
என்னும் குறளில் அறவழியில் வாழ்வதால் வரும் பயனே இன்பம். பிறவழிகளில் வரும் பயன் இன்பம் இல்லாததும் புகழற்றுதும் ஆகும்.
“அறனீனும் இன்பமும் ஈனும் திறனறிந்து தீதின்றி வந்த பொருள்” (குறள்-754)
என்னும் குறளில் சேர்க்கும் திறம் அறிந்து தீமையற்ற முறையில் சேர்த்த பொருள் ஒருவனுக்கு அறத்தையும் இன்பத்தையும் கொடுக்கும். ஆதலால் தான் திருக்குறள் அறநூல் என்னும் பெயரும் பெறுவதாயிற்று என்பதன் வாயிலாகக் குறிப்பிடுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
அறத்தின் பொருள்
அறம் என்ற சொல்லினை அறு + அம் எனப் பகுத்து அறு என்பதற்கு அறுதி - வரையறை - வாழ்க்கையில் மேற்கொள்ளத்தக்க கொள்கைகள் எனச் சிலர் பொருள் கூறுவர். சிலர் அறு என்னும் பகுதிக்குத் தீமையை அறுப்பதுஎன்று பொருள் தருவர். ஆனால், திருவள்ளுவர் அறத்துப்பாலில் அறன் வலியுறுத்தல் என்று ஓர் அதிகாரம் கூறியுள்ளார். அதன்கண் ஈதல், இனியவை கூறுதல் போன்ற அறச்செயல்களைக் குறிப்பிடாமல் பொதுவாக அறத்தைக் குறிப்பிட்டுள்ளார். அவ்வதிகாரத்தில்தான்;
என்னும் குறளில் பொறாமை, ஆசை, சினம், கடுஞ் சொல் ஆகிய நான்கையும் நீக்கிச் செய்கின்ற செயலே அறச்செயல் என்று கூறுவர். ஆனால் அறன் வலியுறுத்தலில் வரும் இது போன்ற குறள்களைக் காணும் போது, தீமை நீக்கமே அறம் என்னும் சொல்லுக்குப் பொருளாகலாம் என்று எண்ண இடமுண்டு.
அறத்தின் பண்புகள்
அறம் என்பது பல நற்பண்புகளை அகத்தடக்கிய ஒரு சொல்லாகக் கொள்ளல் வேண்டும்.
என்னும் இக்குறள்கள் இனியவை கூறலையும், பிறர் மனை விழையாமையையும், கொல்லாமையையும் அறமெனக் கூறுதல் ஆகும்.
அறம் என்பதற்கு இலக்கணம் கூற வந்த பரிமேலழகர் “மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும் விலக்கியன ஒழிதலுமாம்” என்பர். எனவே, தீமைகளை விலக்கி, நல்லன செய்தலே அறம் என்பதை;
“நல்லது செய்தல் ஆற்றீராயீனும் அல்லது செய்தல் ஒம்புமின் அதுதான் எல்லாரும் உவப்ப தன்றியும் நல்லாற்றுப் படுஉம் நெறியுமா ரதுவே” (புறம் - 195)
என்னும் புறநானூற்றுப்பாடல் “நல்லது செய்யா விடினும் தீயது செய்தலாகாது” என்று அறத்தை எடுத்துரைக்கின்றது.
நல்லது செய்தல் ஆற்றீராயினும் என்பதிலுள்ள உம்மை நல்லது செய்ய வேண்டியதான இன்றியமையாமையைச் சுட்டும். தீமையை விலக்குதல் மட்டுமன்றி நல்லது செய்தலும் அறத்தின் பாற்படும். வயலிலுள்ள பயிர் செழிக்க வேண்டும் எனின் அதன் கண் உள்ள களையை களைந்து எறிதல் வேண்டும். அதுபோல மனத்தில் அறம் தழைக்க வேண்டும் எனின், அதில் உள்ள மாசு மறுக்களை அகற்றல் வேண்டும். திருக்குறளில் வரும் அறத்துப்பாலில் வரும் இன்னா செய்யாமை, கள்ளாமை, பயனிலசொல்லாமை, புறங்கூறாமை, வெகுளாமை, வெஃகாமை முதலிய அதிகாரங்கள் இடம் பெறுகின்றன. மேலும், செய்தல் ஆகாது என்ற அடிப்படையில் விலக்கறங்கள் கூறுகின்றன. இனியவை கூறல், ஈகை, செய்நன்றியறிதல், விருந்தோம்பல், நடுவுநிலைமை முதலிய அதிகாரங்கள் நல்லது செய்தல் வேண்டும் என்ற அடிப்படையில் (செயலறங்கள்) கூறுகின்றன.
அறத்திற்கு அடிப்படை அன்பே. அறத்திற்குச் சிறந்தது அன்பாகும். அன்பின் முதிர்ச்சியில் பிறப்பது அருளாகும். அருளின்றிச் செய்யும் அறவினை பயன்படாது இதனை;
“தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின் அருளாதான் செய்யும் அறம்” (குறள் - 249)
என்னும் குறளில் அருள் சிந்தை இல்லாதவன் அறத்தை ஆராய்ந்தால் அது, அறிவுத் தெளிவில்லாதவன் நூலின் மெய்ப் பொருள் தெரிந்தது போலாகும். ஆனால் அறத்திற்கு அடிப்படையாய் விளங்குவது அருள் என்பது கருதத்தாகும். இதில் திருமாலின் பல பண்புகளைக் கூற வந்த பரிபாடற் புலவர் கடுவனிள வெயினனார். இதனை;
“அறத்தினுள் அன்பு நீ மறத்தினுள் மைந்து நீ” (பரிபாடல் - 3.65)
என்னும் பாடல் அடியில் அறத்தினுள் அன்பு நீ என்று கூறுதலின் பல்வகை அறப்பண்புகளுக்கும், அன்பே தலையாயது என்பதின் பொருளாகும். எனவே, அன்பின் முதிர்ச்சியாகிய அருள் என்னும் அறத்தின் அடிப்படையில்தான் வேறு பல அறங்களும் தோன்றுகின்றன.
“மெல்லென் அருளிற் பிறக்கும் அறநெறி” (நான்மணிக்கடிகை -7)
என்னும் சிறுபஞ்சமூல அடிகளும் இக்கருத்தை வலியுறுத்தும்.
ஒருவர் மற்றொருவரை நம்புதலால்தான் உலகம் இயங்குகிறது. ஒருவர் பிறரிடம் பேசும்போது, வாய்மை மொழியாது அன்பின்றி வஞ்சகமாகப் பொய்மொழியின் அது காரணமாகப் பல தீமைகள் நிகழும். ஆதலால் தான் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் பொய்மை கடிந்து வாய்மையினை வலியுறுத்துவர் வள்ளுவர்.
என்னும் குறளில் தனக்கு இணையில்லாத நல்ல அறம் கொல்லாமை, அதற்கு அடுத்துவைக்கத் தகுந்தது பொய் பேசாதிருத்தல்.
மேலும், பிறரை வஞ்சித்து ஏமாற்றி ஒழுகலாகாது என்னும் அன்பின் அடிப்படையில் வாய்மை அறமும், பிற உயிர்கள் ஊறின்றி வாழ வேண்டும் என்னும் அன்பின் அடிப்படையில் கொல்லாமையறமும் அமைய வேண்டும். எனவே, விழுமிய அறங்களாகக் கூறப்பெற்றுள்ள கொல்லாமை, வாய்மை என்னும் இரண்டும் அன்பின் அடிப்படையில் எழுந்தனவேயாம் என்று தெளிதல் வேண்டும். ஆகவே அறத்தில் தலையாயது அன்பு என்னும் கருத்து ஆழமாக எடுத்துரைக்கப்படுகின்றன.
அறத்தின் வழி மனத்தூய்மை
“பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை” (குறள்- 322)
என்னும் குறளில் இருப்பதைப் பகிர்ந்து தானும் உண்டு பல உயிர்களையும் காத்தல் அறநூலோர் தொகுத்துக் கூறிய அறங்களில் எல்லாம் முதன்மையானது. எனவே உயிரோம்பலைச் சிறந்த அறமாக வள்ளுவர் கூறுகிறார். எச்செயல் செய்தாலும், எம்மொழி பேசினாலும் அடிப்படையான மனம் தூய்மையாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் தூய மனத்தின்வழி வரும் மொழியும் செயலும் தூயனவாக இருக்கும். வினைத்தூய்மை, மொழித் தூய்மைகளைக் காப்பதற்காகத்தான் மனத்தூய்மையைப் பெரிதும் வற்புறுத்துகின்றார் வள்ளுவர். ஆகவே, மனத்தை எவ்வகை மாசும் படியாமல் காக்க வேண்டும். இல்லறமாயினும், துறவறமாயினும் திருவள்ளுவர் மனத்தூய்மையையே வற்புறுத்துகின்றார். இதனை;
“மனத்துக்கண் மாசிலனாதல்” (குறள் -36)
“உள்ளத்தால் பொய்யா தொழுகின்” (குறள் -294)
“தன்னெஞ்சறிவது பொய்யற்க” (குறள் -293)
“மனத்தொடு வாய்மை மொழியின்” (குறள் - 295)
“மனத்தது மாசாக மாண்டார் நீராடி” (குறள் -278)
என்னும் பல குறளால் வள்ளுவர் மனமாசு கூடாது என்பதை வலியுறுத்தல்.
முடிவுரை
திருக்குறள் தமிழர்களுக்கு மட்டுமல்லாது, உலக மக்கள் அனைவருக்குமே நல்வழி காட்டும் ஒப்பற்ற ஒரே நூல். உலகின் பல்வேறு மொழிகளில் அதிகமான அளவில் மொழிபெயர்க்கப்பட்ட தமிழ் இலக்கிய நூல் என்ற பெருமை திருக்குறளுக்கேப் பொருந்தும். மேலும், “தமிழர் வாழ்வே திருக்குறள்; திருக்குறளே தமிழர் வாழ்வு” எனும்படியான இன்றியமையாச் சிறப்பினையுடைய நூல் திருக்குறள். திருக்குறளின் நோக்கம் என்பது உள்ளதை உள்ளபடியே உயரிய முறையில் எடுத்துரைக்கும் உண்மையான நூல். திருக்குறளில் அறத்துப்பாலில் உணர்த்து அறிவுரைகளைத் தொகுத்துப் பார்க்கும் பொழுது, மனமாசின்றி அன்பு அடிப்படையில் பகுத்துண்டு, பல்லுயிரோம்பி, தமக்குரிய வாழ்வியற் கடமைகளை நன்றாற்றி, வாய்மைமொழிந்து, அருள் கனிந்து ஒழுகுதலே அறம் எனக் கூறலாம்.
துணை நின்ற நூல்கள்
1. சங்க இலக்கியம் புறநானூறு தொகுதி 1, (உரையாசிரியர்) கு.வெ.ப பாலசுப்ரமணியன்,
2. திருக்குறள், தமிழ் வேட்பன்,
3. பரிபாடல் மூலமும் பரிமேலழகர் உரையும், உ.வே. சாமிநாதையர்,
4. செம்மொழி இலக்கியம், பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் பாகம் 1, பாலசங்கர்,
(குறிப்பு: கட்டுரை வழங்குபவர்கள், கட்டுரைக்கான துணைநூற்பட்டியல் அளிக்கும் போது, நூலின் பெயர், நூலாசிரியர், பதிப்பகத்தின் பெயர், பதிப்பகத்தின் முகவரி, பதிப்பு ஆண்டு எனும் வரிசையில் தொகுத்து வழங்கிட வேண்டும். அப்போதுதான் கட்டுரை முழுமையடையும் - ஆசிரியர்)