New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கலித்தொகை


Guru

Status: Offline
Posts: 24603
Date:
கலித்தொகை
Permalink  
 


கலித்தொகை

http://sangacholai.in/8.6.html

#1 கடவுள் வாழ்த்து - மதுரை ஆசிரியர் நல்லந்துவனார்

ஆறு அறி அந்தணர்க்கு அரு மறை பல பகர்ந்து
தேறு நீர் சடை கரந்து திரிபுரம் தீமடுத்து
கூறாமல் குறித்ததன் மேற்செல்லும் கடும் கூளி
மாறா போர் மணி மிடற்று எண் கையாய் கேள் இனி
படு பறை பல இயம்ப பல் உருவம் பெயர்த்து நீ	5
கொடுகொட்டி ஆடும்-கால் கோடு உயர் அகல் அல்குல்
கொடி புரை நுசுப்பினாள் கொண்ட சீர் தருவாளோ
மண்டு அமர் பல கடந்து மதுகையால் நீறு அணிந்து
பண்டரங்கம் ஆடும்-கால் பணை எழில் அணை மென் தோள்
வண்டு அரற்றும் கூந்தலாள் வளர் தூக்கு தருவாளோ	10
கொலை உழுவை தோல் அசைஇ கொன்றை தார் சுவல் புரள
தலை அங்கை கொண்டு நீ காபாலம் ஆடும்-கால்
முலை அணிந்த முறுவலாள் முன் பாணி தருவாளோ
என ஆங்கு
பாணியும் தூக்கும் சீரும் என்று இவை		15
மாண் இழை அரிவை காப்ப
ஆணம் இல் பொருள் எமக்கு அமர்ந்தனை ஆடி

#1 கடவுள் வாழ்த்து - அடிநேர் உரை

ஆறு அங்கங்களையும் அறிந்த அந்தணர்களுக்கு அரிய வேதங்கள் பலவற்றையும் அறிவித்து,
தெளிந்த நீரைக்கொண்ட கங்கையைத் தன் சடையில் அடக்கிக்கொண்டு, முப்புரங்களையும் தீயூட்டி,
சொல்லாமலேயே மனத்தால் நினைத்த எப்பொருளுக்கும் எட்டாமல் நிற்கும் கடிய கூளியின்
புறமுதுகிடாத போரினையும், நீலமணி போன்ற கழுத்தினையும், எட்டுக்கைகளையும் உடையவனே! கேட்பாயாக!
ஒலிக்கின்ற பறைகள் பல முழங்க, பல்வேறு உருவங்களையும் உன்னுள்ளே அடக்கிக்கொண்டு நீ
கொடுங்கொட்டி என்னும் கூத்தினை ஆடும்போது வளைவாக உயர்ந்த பின்பக்கத்தையும்,
கொடி போன்ற இடையும் கொண்ட இறைவி, தாளம் முடியுங் காலத்தைக் கொண்ட சீரைத் தருவாளோ?
மிக்குச் செல்கிற போர்கள் பலவற்றையும் வென்று, அதன் வலிமையால் பகைவர் வெந்த சாம்பலை அணிந்து,
பாண்டரங்கம் என்னும் கூத்தினை ஆடும்போது, மூங்கில் போன்ற அழகும், அணை போன்ற மெல்லிய தோள்களும்,
வண்டுகள் ஒலிக்கும் கூந்தலும் உடைய இறைவி, தாளத்தின் இடையில் அமையும் தூக்கினைத் தருவாளோ?
கொலைக்குணமுடைய புலியைக் கொன்று அதன் தோலை அணிந்து, கொன்றை மாலை தோளில் அசைய,
அயன் தலையைக் கையில் ஏந்திக்கொண்டு காபாலம் என்னும் கூத்தினை ஆடும்பொழுது,
முல்லையைப் போன்ற முறுவலையுடைய இறைவி தாளத்தின் முதலில் அமையும் பாணியைத் தருவாளோ?
என்று சொல்லும்படியாக,
பாணி, தூக்கு, சீர் என்ற இவற்றை
மாட்சிமை பொருந்திய அணிகலன்களையுடைய இறைவி காக்க,
அன்பற்ற பொருளான எம்மிடத்தும் வந்து பொருந்தி நின்றாய்!


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

# முதலாவது - பாலைக்கலி
பாடியவர் : பாலைபாடிய பெருங்கடுங்கோ
#2
தொடங்கல்_கண் தோன்றிய முதியவன் முதலாக
அடங்காதார் மிடல் சாய அமரர் வந்து இரத்தலின்
மடங்கல் போல் சினைஇ மாயம் செய் அவுணரை
கடந்து அடு முன்பொடு முக்கண்ணான் மூ எயிலும்
உடன்ற_கால் முகம் போல ஒண் கதிர் தெறுதலின்	5
சீறு அரும் கணிச்சியோன் சினவலின் அ எயில்
ஏறு பெற்று உதிர்வன போல் வரை பிளந்து இயங்குநர்
ஆறு கெட விலங்கிய அழல் அவிர் ஆரிடை
மறப்ப அரும் காதல் இவள் ஈண்டு ஒழிய
இறப்ப துணிந்தனிர் கேண்-மின் மற்று ஐஇய		10
தொலைவு ஆகி இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இழிவு என
மலை இறந்து செயல் சூழ்ந்த பொருள் பொருள் ஆகுமோ
நிலைஇய கற்பினாள் நீ நீப்பின் வாழாதாள்
முலை ஆகம் பிரியாமை பொருள் ஆயின் அல்லதை
இல் என இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இழிவு என	15
கல் இறந்து செயல் சூழ்ந்த பொருள் பொருள் ஆகுமோ
தொல் இயல் வழாஅமை துணை என புணர்ந்தவள்
புல் ஆகம் பிரியாமை பொருள் ஆயின் அல்லதை
இடன் இன்றி இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இழிவு என	
கடன் இறந்து செயல் சூழ்ந்த பொருள் பொருள் ஆகுமோ	20
வட_மீன் போல் தொழுது ஏத்த வயங்கிய கற்பினாள்
தட மென் தோள் பிரியாமை பொருள் ஆயின் அல்லதை
என இவள்
புன்கண் கொண்டு இனையவும் பொருள்_வயின் அகறல்
அன்பு அன்று என்று யான் கூற அன்பு உற்று		25
காழ் வரை நில்லா கடும் களிற்று ஒருத்தல்
யாழ் வரை தங்கிய ஆங்கு தாழ்பு நின்
தொல் கவின் தொலைதல் அஞ்சி என்
சொல் வரை தங்கினர் காதலோரே

#3
அறன் இன்றி அயல் தூற்றும் அம்பலை நாணியும்
வறன் நீந்தி நீ செல்லும் நீள் இடை நினைப்பவும்
இறை நில்லா வளை ஓட இதழ் சோர்பு பனி மல்க
பொறை நில்லா நோயோடு புல்லென்ற நுதல் இவள்
விறல் நலன் இழப்பவும் வினை வேட்டாய் கேஎள் இனி	5
உடை இவள் உயிர் வாழாள் நீ நீப்பின் என பல
இடை கொண்டு யாம் இரப்பவும் எம கொள்ளாய் ஆயினை
கடைஇய ஆற்று இடை நீர் நீத்த வறும் சுனை
அடையொடு வாடிய அணி மலர் தகைப்பன
வல்லை நீ துறப்பாயேல் வகை வாடும் இவள் என	10
ஒல் ஆங்கு யாம் இரப்பவும் உணர்ந்தீயாய் ஆயினை
செல்லு நீள் ஆற்று இடை சேர்ந்து எழுந்த மரம் வாட
புல்லு விட்டு இறைஞ்சிய பூ_கொடி தகைப்பன
பிணிபு நீ விடல் சூழின் பிறழ்தரும் இவள் என
பணிபு வந்து இரப்பவும் பல சூழ்வாய் ஆயினை	15
துணிபு நீ செல கண்ட ஆற்று இடை அ மரத்து
அணி செல வாடிய அம் தளிர் தகைப்பன
என ஆங்கு
யாம் நின் கூறவும் எம கொள்ளாய் ஆயினை
ஆனாது இவள் போல் அருள் வந்தவை காட்டி	20
மேல் நின்று மெய் கூறும் கேளிர் போல் நீ செல்லும்
கானம் தகைப்ப செலவு

#4
வலி முன்பின் வல்லென்ற யாக்கை புலி நோக்கின்
சுற்று அமை வில்லர் சுரி வளர் பித்தையர்
அற்றம் பார்த்து அல்கும் கடுங்கண் மறவர் தாம்
கொள்ளும் பொருள் இலர் ஆயினும் வம்பலர்
துள்ளுநர் காண்-மார் தொடர்ந்து உயிர் வௌவலின்	5
புள்ளும் வழங்கா புலம்பு கொள் ஆரிடை
வெள் வேல் வலத்திர் பொருள் தரல் வேட்கையின்
உள்ளினிர் என்பது அறிந்தனள் என் தோழி
காழ் விரி கவை ஆரம் மீ வரும் இள முலை
போழ்து இடைப்படாஅமல் முயங்கியும் அமையார் என்	10
தாழ் கதுப்பு அணிகுவர் காதலர் மற்று அவர்
சூழ்வதை எவன்-கொல் அறியேன் என்னும்
முள் உறழ் முளை எயிற்று அமிழ்து ஊறும் தீ நீரை
கள்ளினும் மகிழ்செயும் என உரைத்தும் அமையார் என்
ஒள் இழை திருத்துவர் காதலர் மற்று அவர்		15
உள்ளுவது எவன்-கொல் அறியேன் என்னும்
நுண் எழில் மாமை சுணங்கு அணி ஆகம் தம்
கண்ணொடு தொடுத்து என நோக்கியும் அமையார் என்
ஒண் நுதல் நீவுவர் காதலர் மற்று அவர்
எண்ணுவது எவன்-கொல் அறியேன் என்னும்		20
என ஆங்கு
கழி பெரு நல்கல் ஒன்று உடைத்து என என் தோழி
அழிவொடு கலங்கிய எவ்வத்தள் ஒரு நாள் நீர்
பொழுது இடைப்பட நீப்பின் வாழ்வாளோ
ஒழிக இனி பெரும நின் பொருள்_பிணி செலவே	25

#5
பாஅல் அம் செவி பணை தாள் மா நிரை
மாஅல் யானையொடு மறவர் மயங்கி
தூறு அதர்பட்ட ஆறு மயங்கு அரும் சுரம்
இறந்து நீர் செய்யும் பொருளினும் யாம் நுமக்கு
சிறந்தனம் ஆதல் அறிந்தனிர் ஆயின்		5
நீள் இரு முந்நீர் வளி கலன் வௌவலின்
ஆள்வினைக்கு அழிந்தோர் போறல் அல்லதை
கேள் பெருந்தகையோடு எவன் பல மொழிகுவம்
நாளும் கோள்_மீன் தகைத்தலும் தகைமே
கல்லென கவின் பெற்ற விழவு ஆற்றுப்படுத்த பின்	10
புல்லென்ற களம் போல புலம்பு கொண்டு அமைவாளோ
ஆள்பவர் கலக்கு_உற அலைபெற்ற நாடு போல்
பாழ்பட்ட முகத்தோடு பைதல் கொண்டு அமைவாளோ
ஓர் இரா வைகலுள் தாமரை பொய்கையுள்
நீர் நீத்த மலர் போல நீ நீப்பின் வாழ்வாளோ		15
என ஆங்கு
பொய் நல்கல் புரிந்தனை புறந்தரல் கைவிட்டு
எ நாளோ நெடுந்தகாய் நீ செல்வது
அ நாள் கொண்டு இறக்கும் இவள் அரும் பெறல் உயிரே

#6
மரையா மரல் கவர மாரி வறப்ப
வரை ஓங்கு அரும் சுரத்து ஆரிடை செல்வோர்
சுரை அம்பு மூழ்க சுருங்கி புரையோர் தம்
உள் நீர் வறப்ப புலர் வாடு நாவிற்கு
தண்ணீர் பெறாஅ தடுமாற்று அரும் துயரம்		5
கண்ணீர் நனைக்கும் கடுமைய காடு என்றால்
என் நீர் அறியாதீர் போல இவை கூறல்
நின் நீர அல்ல நெடுந்தகாய் எம்மையும்
அன்பு அற சூழாதே ஆற்று இடை நும்மொடு
துன்பம் துணை ஆக நாடின் அது அல்லது		10
இன்பமும் உண்டோ எமக்கு  

#7
வேனில் உழந்த வறிது உயங்கு ஓய் களிறு
வான் நீங்கு வைப்பின் வழங்கா தேர் நீர்க்கு அவாஅம்
கானம் கடத்திர் என கேட்பின் யான் ஒன்று
உசாவுகோ ஐய சிறிது
நீயே செய்_வினை மருங்கில் செலவு அயர்ந்து யாழ நின்	5
கை புனை வல் வில் ஞாண் உளர்தீயே
இவட்கே செய்வு_உறு மண்டிலம் மையாப்பது போல்
மை இல் வாள் முகம் பசப்பு ஊரும்மே
நீயே வினை மாண் காழகம் வீங்க கட்டி
புனை மாண் மரீஇய அம்பு தெரிதியே		10
இவட்கே சுனை மாண் நீலம் கார் எதிர்பவை போல்
இனை நோக்கு உண்கண் நீர் நில்லாவே
நீயே புலம்பு இல் உள்ளமொடு பொருள்_வயின் செலீஇய
வலம் படு திகிரி வாய் நீவுதியே
இவட்கே அலங்கு இதழ் கோடல் வீ உகுபவை போல்	15
இலங்கு ஏர் எல் வளை இறை ஊரும்மே
என நின்
செல் நவை அரவத்தும் இனையவள் நீ நீப்பின்
தன் நலம் கடைகொளப்படுதலின் மற்று இவள்
இன் உயிர் தருதலும் ஆற்றுமோ			20
முன்னிய தேஎத்து முயன்று செய் பொருளே

#8
நடுவு இகந்து ஒரீஇ நயன் இல்லான் வினை வாங்க
கொடிது ஓர்த்த மன்னவன் கோல் போல ஞாயிறு
கடுகுபு கதிர் மூட்டி காய் சினம் தெறுதலின்
உறல் ஊறு கமழ் கடாத்து ஒல்கிய எழில் வேழம்
வறன் உழு நாஞ்சில் போல் மருப்பு ஊன்றி நிலம் சேர	5
விறல் மலை வெம்பிய போக்கு அரு வெம் சுரம்
சொல்லாது இறப்ப துணிந்தனிர்க்கு ஒரு பொருள்
சொல்லுவது உடையேன் கேண்-மின் மற்று ஐஇய
வீழுநர்க்கு இறைச்சியாய் விரல் கவர்பு இசைக்கும் கோல்
ஏழும் தம் பயன் கெட இடை நின்ற நரம்பு அறூஉம்	10
யாழினும் நிலை இல்லா பொருளையும் நச்சுபவோ
மரீஇ தாம் கொண்டாரை கொண்ட_கால் போலாது
பிரியும்_கால் பிறர் எள்ள பீடு இன்றி புறம்மாறும்
திருவினும் நிலை இல்லா பொருளையும் நச்சுபவோ
புரை தவ பயன் நோக்கார் தம் ஆக்கம் முயல்வாரை	15
வரைவு இன்றி செறும் பொழுதில் கண்ணோடாது உயிர் வௌவும்
அரைசினும் நிலை இல்லா பொருளையும் நச்சுபவோ
என ஆங்கு
நச்சல் கூடாது பெரும இ செலவு
ஒழிதல் வேண்டுவல் சூழின் பழி இன்று		20
மன்னவன் புறந்தர வரு விருந்து ஓம்பி
தன் நகர் விழைய கூடின்
இன் உறல் வியன் மார்ப அது மனும் பொருளே

#9
எறித்தரு கதிர் தாங்கி ஏந்திய குடை நீழல்
உறி தாழ்ந்த கரகமும் உரை சான்ற முக்கோலும்
நெறிப்பட சுவல் அசைஇ வேறு ஓரா நெஞ்சத்து
குறிப்பு ஏவல் செயல் மாலை கொளை நடை அந்தணீர்
வெவ் இடை செலல் மாலை ஒழுக்கத்தீர் இ இடை	5
என் மகள் ஒருத்தியும் பிறள் மகன் ஒருவனும்
தம் உளே புணர்ந்த தாம் அறி புணர்ச்சியர்
அன்னார் இருவரை காணிரோ பெரும
காணேம் அல்லேம் கண்டனம் கடத்து இடை
ஆண் எழில் அண்ணலோடு அரும் சுரம் முன்னிய	10
மாண் இழை மடவரல் தாயிர் நீர் போறிர்
பல உறு நறும் சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை
மலையுளே பிறப்பினும் மலைக்கு அவை தாம் என் செய்யும்
நினையும்_கால் நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே
சீர் கெழு வெண் முத்தம் அணிபவர்க்கு அல்லதை	15
நீருளே பிறப்பினும் நீர்க்கு அவை தாம் என் செய்யும்
தேரும்_கால் நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே
ஏழ் புணர் இன் இசை முரல்பவர்க்கு அல்லதை
யாழுளே பிறப்பினும் யாழ்க்கு அவை தாம் என் செய்யும்
சூழும்_கால் நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே	20
என ஆங்கு
இறந்த கற்பினாட்கு எவ்வம் படரன்-மின்
சிறந்தானை வழிபடீஇ சென்றனள்
அறம் தலைபிரியா ஆறும் மற்று அதுவே

#10
வறியவன் இளமை போல் வாடிய சினையவாய்
சிறியவன் செல்வம் போல் சேர்ந்தார்க்கு நிழல் இன்றி
யார் கண்ணும் இகந்து செய்து இசை கெட்டான் இறுதி போல்
வேரொடு மரம் வெம்ப விரி கதிர் தெறுதலின்
அலவு_உற்று குடி கூவ ஆறு இன்றி பொருள் வெஃகி	5
கொலை அஞ்சா வினைவரால் கோல் கோடியவன் நிழல்
உலகு போல் உலறிய உயர் மர வெம் சுரம்
இடை கொண்டு பொருள்_வயின் இறத்தி நீ என கேட்பின்
உடைபு நெஞ்சு உக ஆங்கே ஒளி ஓடற்பாள்-மன்னோ
படை அமை சேக்கையுள் பாயலின் அறியாய் நீ		10
புடைபெயர்வாய் ஆயினும் புலம்பு கொண்டு இனைபவள்
முனிவு இன்றி முயல் பொருட்கு இறத்தி நீ என கேட்பின்
பனிய கண்படல் ஒல்லா படர் கூர்கிற்பாள்-மன்னோ
நனி கொண்ட சாயலாள் நயந்து நீ நகை ஆக
துனி செய்து நீடினும் துறப்பு அஞ்சி கலுழ்பவள்		15
பொருள் நோக்கி பிரிந்து நீ போகுதி என கேட்பின்
மருள் நோக்கம் மடிந்து ஆங்கே மயல் கூர்கிற்பாள்-மன்னோ
இருள் நோக்கம் இடை இன்றி ஈரத்தின் இயன்ற நின்
அருள் நோக்கம் அழியினும் அவலம் கொண்டு அழிபவள்
என ஆங்கு						20
வினை வெஃகி நீ செலின் விடும் இவள் உயிர் என
புனை_இழாய் நின் நிலை யான் கூற பையென
நிலவு வேல் நெடுந்தகை நீள் இடை
செலவு ஒழிந்தனனால் செறிக நின் வளையே

#11
அரிது ஆய அறன் எய்தி அருளியோர்க்கு அளித்தலும்
பெரிது ஆய பகை வென்று பேணாரை தெறுதலும்
புரிவு அமர் காதலின் புணர்ச்சியும் தரும் என
பிரிவு எண்ணி பொருள்_வயின் சென்ற நம் காதலர்
வருவர்-கொல் வயங்கு_இழாஅய் வலிப்பல் யான் கேஎள் இனி5
அடி தாங்கும் அளவு இன்றி அழல் அன்ன வெம்மையால்
கடியவே கனம்_குழாஅய் காடு என்றார் அ காட்டுள்
துடி அடி கயந்தலை கலக்கிய சில் நீரை
பிடி ஊட்டி பின் உண்ணும் களிறு எனவும் உரைத்தனரே
இன்பத்தின் இகந்து ஒரீஇ இலை தீந்த உலவையால்	10
துன்புறூஉம் தகையவே காடு என்றார் அ காட்டுள்
அன்பு கொள் மட பெடை அசைஇய வருத்தத்தை
மென் சிறகரால் ஆற்றும் புறவு எனவும் உரைத்தனரே
கல் மிசை வேய் வாட கனை கதிர் தெறுதலான்
துன் அரூஉம் தகையவே காடு என்றார் அ காட்டுள்	15
இன் நிழல் இன்மையான் வருந்திய மட பிணைக்கு
தன் நிழலை கொடுத்து அளிக்கும் கலை எனவும் உரைத்தனரே
என ஆங்கு
இனை நலம் உடைய கானம் சென்றோர்
புனை நலம் வாட்டுநர் அல்லர் மனை_வயின்		20
பல்லியும் பாங்கு ஒத்து இசைத்தன
நல் எழில் உண்கணும் ஆடுமால் இடனே

#12
இடு முள் நெடு வேலி போல கொலைவர்
கொடுமரம் தேய்த்தார் பதுக்கை நிரைத்த
கடு நவை ஆர் ஆற்று அறு சுனை முற்றி
உடங்கு நீர் வேட்ட உடம்பு உயங்கு யானை
கடும் தாம் பதிபு ஆங்கு கை தெறப்பட்டு		5
வெறி நிரை வேறு ஆக சார் சாரல் ஓடி
நெறி மயக்கு_உற்ற நிரம்பா நீடு அத்தம்
சிறு நனி நீ துஞ்சி ஏற்பினும் அஞ்சும்
நறு_நுதல் நீத்து பொருள்_வயின் செல்வோய்
உரன் உடை உள்ளத்தை செய்_பொருள் முற்றிய	10
வளமையான் ஆகும் பொருள் இது என்பாய்
இளமையும் காமமும் நின் பாணி நில்லா
இடை முலை கோதை குழைய முயங்கும்
முறை நாள் கழிதல் உறாஅமை காண்டை
கடை நாள் இது என்று அறிந்தாரும் இல்லை		15
போற்றாய் பெரும நீ காமம் புகர்பட
வேற்றுமை கொண்டு பொருள்_வயின் போகுவாய்
கூற்றமும் மூப்பும் மறந்தாரோடு ஓராஅங்கு
மாற்றுமை கொண்ட வழி

#13
செரு மிகு சின வேந்தன் சிவந்து இறுத்த புலம் போல
எரி மேய்ந்த கரி வறல் வாய் புகவு காணாவாய்
பொரி மலர்ந்து அன்ன பொறிய மட மான்
திரி மருப்பு ஏறொடு தேர் அறற்கு ஓட
மரல் சாய மலை வெம்ப மந்தி உயங்க		5
உரல் போல் அடிய உடம்பு உயங்கு யானை
ஊறு நீர் அடங்கலின் உண் கயம் காணாது
சேறு சுவைத்து தம் செல் உயிர் தாங்கும்
புயல் துளி மாறிய போக்கு அரு வெம் சுரம்
எல்_வளை எம்மொடு நீ வரின் யாழ நின்		10
மெல் இயல் மே வந்த சீறடி தாமரை
அல்லி சேர் ஆய் இதழ் அரக்கு தோய்ந்தவை போல
கல் உறின் அ அடி கறுக்குந அல்லவோ
நலம் பெறும் சுடர்_நுதால் எம்மொடு நீ வரின்
இலங்கு மாண் அவிர் தூவி அன்ன மென் சேக்கையுள்	15
துலங்கு மான் மேல் ஊர்தி துயில் ஏற்பாய் மற்று ஆண்டை
விலங்கு மான் குரல் கேட்பின் வெருவுவை அல்லையோ
கிளி புரை கிளவியாய் எம்மொடு நீ வரின்
தளி பொழி தளிர் அன்ன எழில் மேனி தகை வாட
முளி அரில் பொத்திய முழங்கு அழல் இடை போழ்ந்த	20
வளி உறின் அ எழில் வாடுவை அல்லையோ
என ஆங்கு
அனையவை காதலர் கூறலின் வினை_வயின்
பிரிகுவர் என பெரிது அழியாது திரிபு உறீஇ
கடும்-குரை அருமைய காடு எனின் அல்லது		25
கொடும்_குழாய் துறக்குநர் அல்லர்
நடுங்குதல் காண்-மார் நகை குறித்தனரே

#14
அணை மருள் இன் துயில் அம் பணை தட மென் தோள்
துணை மலர் எழில் நீலத்து ஏந்து எழில் மலர் உண்கண்
மண மௌவல் முகை அன்ன மா வீழ் வார் நிரை வெண் பல்
மணம் நாறு நறு நுதல் மாரி வீழ் இரும் கூந்தல்
அலர் முலை ஆகத்து அகன்ற அல்குல்		5
சில நிரை வால் வளை செய்யாயோ என
பல பல கட்டுரை பண்டையின் பாராட்டி
இனிய சொல்லி இன்_ஆங்கு பெயர்ப்பது
இனி அறிந்தேன் அது துனி ஆகுதலே
பொருள் அல்லால் பொருளும் உண்டோ என யாழ நின்	10
மருளி கொள் மட நோக்கம் மயக்கப்பட்டு அயர்த்தாயோ
காதலார் எவன் செய்ப பொருள் இல்லாதார்க்கு என
ஏதிலார் கூறும் சொல் பொருள் ஆக மதித்தாயோ
செம்மையின் இகந்து ஒரீஇ பொருள் செய்வார்க்கு அ பொருள்
இம்மையும் மறுமையும் பகை ஆவது அறியாயோ	15
அதனால்
எம்மையும் பொருள் ஆக மதித்தீத்தை நம்முள் நாம்
கவவு கை விட பெறும் பொருள் திறத்து
அவவு கைவிடுதல் அது மனும் பொருளே

#15
அரி மான் இடித்து அன்ன அம் சிலை வல் வில்
புரி நாண் புடையின் புறங்காண்டல் அல்லால்
இணை படை தானை அரசோடு உறினும்
கணை தொடை நாணும் கடும் துடி ஆர்ப்பின்
எருத்து வலிய எறுழ் நோக்கு இரலை			5
மருப்பின் திரிந்து மறிந்து வீழ் தாடி
உருத்த கடும் சினத்து ஓடா மறவர்
பொருள் கொண்டு புண் செயின் அல்லதை அன்போடு
அருள் புறம்மாறிய ஆரிடை அத்தம்
புரிபு நீ புறம்மாறி போக்கு எண்ணி புதிது ஈண்டி		10
பெருகிய செல்வத்தான் பெயர்த்தரல் ஒல்வதோ
செயலை அம் தளிர் ஏய்க்கும் எழில் நலம் அ நலம்
பயலையால் உணப்பட்டு பண்டை நீர் ஒழிந்த_கால்
பொய் அற்ற கேள்வியால் புரையோரை படர்ந்து நீ
மை அற்ற படிவத்தான் மறுத்தரல் ஒல்வதோ		15
தீம் கதிர் மதி ஏய்க்கும் திரு முகம் அம் முகம்
பாம்பு சேர் மதி போல பசப்பு ஊர்ந்து தொலைந்த_கால்
பின்னிய தொடர் நீவி பிறர் நாட்டு படர்ந்து நீ
மன்னிய புணர்ச்சியான் மறுத்தரல் ஒல்வதோ
புரி அவிழ் நறு நீலம் புரை உண்கண் கலுழ்பு ஆனா	20
திரி உமிழ் நெய்யே போல் தெண் பனி உறைக்கும்_கால்
என ஆங்கு
அனையவை போற்றி நினைஇயன நாடி காண்
வளமையோ வைகலும் செயல் ஆகும் மற்று இவள்
முளை நிரை முறுவலார் ஆயத்துள் எடுத்து ஆய்ந்த	25
இளமையும் தருவதோ இறந்த பின்னே


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

#16
பாடு இன்றி பசந்த கண் பைதல பனி மல்க
வாடுபு வனப்பு ஓடி வணங்கு இறை வளை ஊர
ஆடு எழில் அழிவு அஞ்சாது அகன்றவர் திறத்து இனி
நாடும்_கால் நினைப்பது ஒன்று உடையேன்-மன் அதுவும் தான்
தொல் நலம் தொலைபு ஈங்கு யாம் துயர் உழப்ப துறந்து உள்ளார்
துன்னி நம் காதலர் துறந்து ஏகும் ஆரிடை
கல் மிசை உருப்பு அற கனை துளி சிதறு என
இன் இசை எழிலியை இரப்பவும் இயைவதோ
புனை_இழாய் ஈங்கு நாம் புலம்பு உற பொருள் வெஃகி
முனை என்னார் காதலர் முன்னிய ஆரிடை		10
சினை வாட சிறக்கும் நின் சினம் தணிந்தீக என
கனை கதிர் கனலியை காமுறல் இயைவதோ
ஒளி_இழாய் ஈங்கு நாம் துயர் கூர பொருள்_வயின்
அளி ஒரீஇ காதலர் அகன்று ஏகும் ஆரிடை
முளி முதல் மூழ்கிய வெம்மை தீர்ந்து உறுக என	15
வளி_தரும்_செல்வனை வாழ்த்தவும் இயைவதோ
என ஆங்கு
செய்_பொருள் சிறப்பு எண்ணி செல்வார் மாட்டு இனையன
தெய்வத்து திறன் நோக்கி தெருமரல் தே_மொழி
வறன் ஓடின் வையகத்து வான் தரும் கற்பினாள்	20
நிறன் ஓடி பசப்பு ஊர்தல் உண்டு என
அறன் ஓடி விலங்கின்று அவர் ஆள்வினை திறத்தே

#17
படை பண்ணி புனையவும் பா மாண்ட பல அணை
புடைபெயர்ந்து ஒடுங்கவும் புறம் சேர உயிர்ப்பவும்
உடையதை எவன்-கொல் என்று ஊறு அளந்தவர்_வயின்
நடை செல்லாய் நனி ஏங்கி நடுங்கல் காண் நறு_நுதால்
தொல் எழில் தொலைபு இவள் துயர் உழப்ப துறந்து நீ	5
வல் வினை வயக்குதல் வலித்தி-மன் வலிப்பளவை
நீள் கதிர் அவிர் மதி நிறைவு போல் நிலையாது
நாளினும் நெகிழ்பு ஓடும் நலன் உடன் நிலையுமோ
ஆற்றல் நோய் அட இவள் அணி வாட அகன்று நீ
தோற்றம் சால் தொகு பொருள் முயறி-மன் முயல்வு அளவை
நாற்றம் சால் நளி பொய்கை அடை முதிர் முகையிற்கு
கூற்று ஊழ் போல் குறைபடூஉம் வாழ்நாளும் நிலையுமோ
வகை எழில் வனப்பு எஞ்ச வரை போக வலித்து நீ
பகை அறு பய வினை முயறி-மன் முயல்வு அளவை
தகை வண்டு புதிது உண்ண தாது அவிழ் தண் போதின்	15
முகை வாய்த்த தடம் போலும் இளமையும் நிலையுமோ
என ஆங்கு
பொருந்தி யான் தான் வேட்ட பொருள்_வயின் நினைந்த சொல்
திருந்திய யாக்கையுள் மருத்துவன் ஊட்டிய
மருந்து போல் மருந்து ஆகி மனன் உவப்ப		20
பெரும் பெயர் மீளி பெயர்ந்தனன் செலவே

#18
அரும் பொருள் வேட்கையின் உள்ளம் துரப்ப
பிரிந்து உறை சூழாதி ஐய விரும்பி நீ
என் தோள் எழுதிய தொய்யிலும் யாழ நின்
மைந்து உடை மார்பில் சுணங்கும் நினைத்து காண்
சென்றோர் முகப்ப பொருளும் கிடவாது		5
ஒழிந்தவர் எல்லாரும் உண்ணாதும் செல்லார்
இளமையும் காமமும் ஓராங்கு பெற்றார்
வளமை விழை_தக்கது உண்டோ உள நாள்
ஒரோஒ கை தம்முள் தழீஇ ஒரோஒ கை
ஒன்றன் கூறு ஆடை உடுப்பவரே ஆயினும்		10
ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை அரிது அரோ
சென்ற இளமை தரற்கு

#19
செவ்விய தீவிய சொல்லி அவற்றொடு
பைய முயங்கிய அ ஞான்று அவை எல்லாம்
பொய் ஆதல் யான் யாங்கு அறிகோ மற்று ஐய
அகல் நகர் கொள்ளா அலர் தலைத்தந்து
பகல் முனி வெம் சுரம் உள்ளல் அறிந்தேன்		5
மகன் அல்லை மன்ற இனி
செல் இனி சென்று நீ செய்யும் வினை முற்றி
அன்பு அற மாறி யாம் உள்ள துறந்தவள்
பண்பும் அறிதிரோ என்று வருவாரை
என் திறம் யாதும் வினவல் வினவின்		10
பகலின் விளங்கு நின் செம்மல் சிதைய
தவல் அரும் செய்_வினை முற்றாமல் ஆண்டு ஓர்
அவலம் படுதலும் உண்டு
#20 பல் வளம் பகர்பு ஊட்டும் பயன் நிலம் பைது அற செல் கதிர் ஞாயிறு செயிர் சினம் சொரிதலின் தணிவு இல் வெம் கோடைக்கு தண் நயந்து அணி கொள்ளும் பிணி தெறல் உயக்கத்த பெரும் களிற்று இனம் தாங்கும் மணி திகழ் விறல் மலை வெம்ப மண் பக 5 துணி கயம் துகள் பட்ட தூங்கு அழல் வெம் சுரம் கிளி புரை கிளவியாய் நின் அடிக்கு எளியவோ தளி உறுபு அறியாவே காடு என கூறுவீர் வளியினும் வரை நில்லா வாழு நாள் நும் ஆகத்து அளி என உடையேன் யான் அவலம் கொண்டு அழிவலோ 10 ஊறு நீர் அமிழ்து ஏய்க்கும் எயிற்றாய் நீ உணல் வேட்பின் ஆறு நீர் இல என அறன் நோக்கி கூறுவீர் யாறு நீர் கழிந்து அன்ன இளமை நும் நெஞ்சு என்னும் தேறு நீர் உடையேன் யான் தெருமந்து ஈங்கு ஒழிவலோ மாண் எழில் வேய் வென்ற தோளாய் நீ வரின் தாங்கும் 15 மாண் நிழல் இல ஆண்டை மரம் என கூறுவீர் நீள் நிழல் தளிர் போல நிறன் ஊழ்த்தல் அறிவேன் நும் தாள் நிழல் கைவிட்டு யான் தவிர்தலை சூழ்வலோ என ஆங்கு அணை அரும் வெம்மைய காடு என கூறுவீர் 20 கணை கழிகல்லாத கல் பிறங்கு ஆரிடை பணை எருத்து எழில் ஏற்றின் பின்னர் பிணையும் காணிரோ பிரியுமோ அவையே #21 பால் மருள் மருப்பின் உரல் புரை பாவு அடி ஈர் நறும் கமழ் கடாஅத்து இனம் பிரி ஒருத்தல் ஆறு கடி கொள்ளும் வேறு புலம் படர்ந்து பொருள்_வயின் பிரிதல் வேண்டும் என்னும் அருள் இல் சொல்லும் நீ சொல்லினையே 5 நன்னர் நறு நுதல் நயந்தனை நீவி நின்னின் பிரியலன் அஞ்சல் ஓம்பு என்னும் நன்னர் மொழியும் நீ மொழிந்தனையே அவற்றுள் யாவோ வாயின மாஅல் மகனே கிழவர் இன்னோர் என்னாது பொருள் தான் 10 பழ வினை மருங்கின் பெயர்பு பெயர்பு உறையும் அன்ன பொருள்_வயின் பிரிவோய் நின் இன்று இமைப்பு வரை வாழாள் மடவோள் அமை கவின் கொண்ட தோள் இணை மறந்தே #22 உண் கடன் வழிமொழிந்து இரக்கும்_கால் முகனும் தாம் கொண்டது கொடுக்கும்_கால் முகனும் வேறு ஆகுதல் பண்டும் இ உலகத்து இயற்கை அஃது இன்றும் புதுவது அன்றே புலன் உடை மாந்திர் தாய் உயிர் பெய்த பாவை போல 5 நலன் உடையார் மொழி-கண் தாவார் தாம் தம் நலம் தாது தேர் பறவையின் அருந்து இறல் கொடுக்கும்_கால் ஏதிலார் கூறுவது எவனோ நின் பொருள் வேட்கை நறு முல்லை நேர் முகை ஒப்ப நிரைத்த செறி முறை பாராட்டினாய் மற்று எம் பல்லின் 10 பறிமுறை பாராட்டினையோ ஐய நெய் இடை நீவி மணி ஒளி விட்டு அன்ன ஐவகை பாராட்டினாய் மற்று எம் கூந்தல் செய்_வினை பாராட்டினையோ ஐய குளன் அணி தாமரை பாசரும்பு ஏய்க்கும் 15 இள முலை பாராட்டினாய் மற்று எம் மார்பில் தளர் முலை பாராட்டினையோ ஐய என ஆங்கு அடர் பொன் அவிர் ஏய்க்கும் அம் வரி வாட சுடர் காய் சுரம் போகும் நும்மை யாம் எம்_கண் 20 படர் கூற நின்றதும் உண்டோ தொடர் கூர துவ்வாமை வந்த கடை #23 இலங்கு ஒளி மருப்பின் கைம்_மா உளம்புநர் புலம் கடி கவணையின் பூ சினை உதிர்க்கும் விலங்கு மலை வெம்பிய போக்கு அரு வெம் சுரம் தனியே இறப்ப யான் ஒழிந்து இருத்தல் நகு_தக்கு அன்று இ அழுங்கல் ஊர்க்கே 5 இனி யான் உண்ணலும் உண்ணேன் வாழலும் வாழேன் தோள் நலம் உண்டு துறக்கப்பட்டோர் வேள் நீர் உண்ட குடை ஓர் அன்னர் நல்குநர் புரிந்து நலன் உணப்பட்டோர் 10 அல்குநர் போகிய ஊர் ஓர் அன்னர் கூடினர் புரிந்து குணன் உணப்பட்டோர் சூடினர் இட்ட பூ ஓர் அன்னர் என ஆங்கு யானும் நின் அகத்து அனையேன் ஆனாது 15 கொலை வெம் கொள்கையொடு நாய் அகப்படுப்ப வலைவர்க்கு அமர்ந்த மட மான் போல நின் ஆங்கு வரூஉம் என் நெஞ்சினை என் ஆங்கு வாராது ஓம்பினை கொண்மே #24 நெஞ்சு நடுக்கு_உற கேட்டும் கடுத்தும் தாம் அஞ்சியது ஆங்கே அணங்கு_ஆகும் என்னும் சொல் இன் தீம் கிளவியாய் வாய் மன்ற நின் கேள் புதுவது பல் நாளும் பாராட்ட யானும் இது ஒன்று உடைத்து என எண்ணி அது தேர 5 மாசு இல் வண் சேக்கை மணந்த புணர்ச்சியுள் பாயல் கொண்டு என் தோள் கனவுவார் ஆய் கோல் தொடி நிரை முன்கையாள் கையாறு கொள்ளாள் கடி மனை காத்து ஓம்ப வல்லுவள்-கொல்லோ இடு மருப்பு யானை இலங்கு தேர்க்கு ஓடும் 10 நெடு மலை வெம் சுரம் போகி நடு நின்று செய்_பொருள் முற்றும் அளவு என்றார் ஆய்_இழாய் தாம் இடை கொண்டது அது ஆயின் தம் இன்றி யாம் உயிர் வாழும் மதுகை இலேம் ஆயின் தொய்யில் துறந்தார் அவர் என தம்_வயின் 15 நொய்யார் நுவலும் பழி நிற்ப தம்மொடு போயின்று சொல் என் உயிர் #25 வயக்கு_உறு மண்டிலம் வட_மொழி பெயர் பெற்ற முகத்தவன் மக்களுள் முதியவன் புணர்ப்பினால் ஐவர் என்று உலகு ஏத்தும் அரசர்கள் அகத்தரா கை புனை அரக்கு இல்லை கதழ் எரி சூழ்ந்து ஆங்கு களி திகழ் கடாஅத்த கடும் களிறு அகத்தவா 5 முளி கழை உயர் மலை முற்றிய முழங்கு அழல் ஒள் உரு அரக்கு இல்லை வளி_மகன் உடைத்து தன் உள்ளத்து கிளைகளோடு உய போகுவான் போல எழு உறழ் தட கையின் இனம் காக்கும் எழில் வேழம் அழுவம் சூழ் புகை அழல் அதர்பட மிதித்து தம் 10 குழுவொடு புணர்ந்து போம் குன்று அழல் வெம் சுரம் இறத்திரால் ஐய மற்று இவள் நிலைமை கேட்டீ-மின் மணக்கும்_கால் மலர் அன்ன தகையவாய் சிறிது நீர் தணக்கும்_கால் கலுழ்பு ஆனா கண் எனவும் உள அன்றோ சிறப்பு செய்து உழையரா புகழ்பு ஏத்தி மற்று அவர் 15 புறக்கொடையே பழி தூற்றும் புல்லியார் தொடர்பு போல் ஈங்கு நீர் அளிக்கும்_கால் இறை சிறந்து ஒரு நாள் நீர் நீங்கும்_கால் நெகிழ்பு ஓடும் வளை எனவும் உள அன்றோ செல்வத்துள் சேர்ந்தவர் வளன் உண்டு மற்று அவர் ஒல்கத்து நல்கிலா உணர்வு இலார் தொடர்பு போல் 20 ஒரு நாள் நீர் அளிக்கும்_கால் ஒளி சிறந்து ஒரு நாள் நீர் பாராட்டா_கால் பசக்கும் நுதல் எனவும் உள அன்றோ பொருந்திய கேண்மையின் மறை உணர்ந்து அ மறை பிரிந்த_கால் பிறர்க்கு உரைக்கும் பீடு இலார் தொடர்பு போல் என ஆங்கு 25 யாம் நின் கூறுவது எவன் உண்டு எம்மினும் நீ நற்கு அறிந்தனை நெடுந்தகை வானம் துளி மாறு பொழுதின் இ உலகம் போலும் நின் அளி மாறு பொழுதின் இ ஆய்_இழை கவினே #26 ஒரு_குழை_ஒருவன் போல் இணர் சேர்ந்த மராஅமும் பருதி_அம்_செல்வன் போல் நனை ஊழ்த்த செருந்தியும் மீன் ஏற்று கொடியோன் போல் மிஞிறு ஆர்க்கும் காஞ்சியும் ஏனோன் போல் நிறம் கிளர்பு கஞலிய ஞாழலும் ஆன்_ஏற்று_கொடியோன் போல் எதிரிய இலவமும் ஆங்கு 5 தீது தீர் சிறப்பின் ஐவர்கள் நிலை போல போது அவிழ் மரத்தொடு பொரு கரை கவின் பெற நோ_தக வந்தன்றால் இளவேனில் மே தக பல் வரி இன வண்டு புதிது உண்ணும் பருவத்து தொல் கவின் தொலைந்த என் தட மென் தோள் உள்ளுவார் 10 ஒல்குபு நிழல் சேர்ந்தார்க்கு உலையாது காத்து ஓம்பி வெல் புகழ் உலகு ஏத்த விருந்து நாட்டு உறைபவர் திசை_திசை தேன் ஆர்க்கும் திருமருத முன்துறை வசை தீர்ந்த என் நலம் வாடுவது அருளுவார் நசை கொண்டு தம் நீழல் சேர்ந்தாரை தாங்கி தம் 15 இசை பரந்து உலகு ஏத்த ஏதில் நாட்டு உறைபவர் அறல் சாஅய் பொழுதோடு எம் அணி நுதல் வேறு ஆகி திறல் சான்ற பெரு வனப்பு இழப்பதை அருளுவார் ஊறு அஞ்சி நிழல் சேர்ந்தார்க்கு உலையாது காத்து ஓம்பி ஆறு இன்றி பொருள் வெஃகி அகன்ற நாட்டு உறைபவர் 20 என நீ தெருமரல் வாழி தோழி நம் காதலர் பொரு முரண் யானையர் போர் மலைந்து எழுந்தவர் செரு மேம்பட்ட வென்றியர் வரும் என வந்தன்று அவர் வாய்மொழி தூதே 25 #27 ஈதலில் குறை காட்டாது அறன் அறிந்து ஒழுகிய தீது இலான் செல்வம் போல் தீம் கரை மரம் நந்த பேது உறு மட மொழி பிணை எழில் மான் நோக்கின் மாதரார் முறுவல் போல் மண மௌவல் முகை ஊழ்ப்ப காதலர் புணர்ந்தவர் கதுப்பு போல் கழல்குபு 5 தாதொடும் தளிரொடும் தண் அறல் தகைபெற பேதையோன் வினை வாங்க பீடு இலா அரசன் நாட்டு ஏதிலான் படை போல இறுத்தந்தது இளவேனில் நிலம் பூத்த மரம் மிசை நிமிர்பு ஆலும் குயில் எள்ள நலம் பூத்த நிறம் சாய நம்மையோ மறந்தைக்க 10 கலம் பூத்த அணியவர் காரிகை மகிழ் செய்ய புலம் பூத்து புகழ்பு ஆனா கூடலும் உள்ளார்-கொல் கல் மிசை மயில் ஆல கறங்கி ஊர் அலர் தூற்ற தொல் நலம் நனி சாய நம்மையோ மறந்தைக்க ஒன்னாதார் கடந்து அடூஉம் உரவு நீர் மா கொன்ற 15 வென் வேலான் குன்றின் மேல் விளையாட்டும் விரும்பார்-கொல் மை எழில் மலர் உண்கண் மரு ஊட்டி மகிழ் கொள்ள பொய்யினால் புரிவுண்ட நம்மையோ மறந்தைக்க தைஇய மகளிர் தம் ஆயமோடு அமர்ந்து ஆடும் வையை வார் உயர் எக்கர் நுகர்ச்சியும் உள்ளார்-கொல் 20 என ஆங்கு நோய் மலி நெஞ்சமோடு இனையல் தோழி நாம் இல்லா புலம்பு ஆயின் நடுக்கம் செய் பொழுது ஆயின் காமவேள் விழவு ஆயின் கலங்குவள் பெரிது என ஏமுறு கடும் திண் தேர் கடவி 25 நாம் அமர் காதலர் துணை தந்தார் விரைந்தே #28 பாடல் சால் சிறப்பின் சினையவும் சுனையவும் நாடினர் கொயல் வேண்டா நயந்து தாம் கொடுப்ப போல் தோடு அவிழ் கமழ் கண்ணி தையுபு புனைவார் கண் தோடு உற தாழ்ந்து துறை_துறை கவின் பெற செய்யவள் அணி அகலத்து ஆரமொடு அணி கொள்பு 5 தொய்யகம் தாழ்ந்த கதுப்பு போல் துவர் மணல் வையை வார் அவிர் அறல் இடை போழும் பொழுதினான் விரிந்து ஆனா மலர் ஆயின் விளித்து ஆலும் குயில் ஆயின் பிரிந்து உள்ளார் அவர் ஆயின் பேது உறூஉம் பொழுது ஆயின் அரும் படர் அவல நோய் ஆற்றுவள் என்னாது 10 வருந்த நோய் மிகும் ஆயின் வணங்கு இறை அளி என்னோ புதலவை மலர் ஆயின் பொங்கர் இன வண்டு ஆயின் அயலதை அலர் ஆயின் அகன்று உள்ளார் அவர் ஆயின் மதலை இல் நெஞ்சொடு மதன் இலள் என்னாது நுதல் ஊரும் பசப்பு ஆயின் நுணங்கு_இறை அளி என்னோ 15 தோயின அறல் ஆயின் சுரும்பு ஆர்க்கும் சினை ஆயின் மாவின தளிர் ஆயின் மறந்து உள்ளார் அவர் ஆயின் பூ எழில் இழந்த கண் புலம்பு கொண்டு அமையாது பாயல் நோய் மிகும் ஆயின் பைம்_தொடி அளி என்னோ என ஆங்கு 20 ஆய்_இழாய் ஆங்கனம் உரையாதி சேயார்க்கு நாம் தூது மொழிந்தனம் விடல் வேண்டா நம்மினும் தாம் பிரிந்து உறைதல் ஆற்றலர் பரிந்து எவன் செய்தி வருகுவர் விரைந்தே #29 தொல் எழில் வரைத்து அன்றி வயவு நோய் நலிதலின் அல்லாந்தார் அலவு_உற ஈன்றவள் கிடக்கை போல் பல் பயம் உதவிய பசுமை தீர் அகல் ஞாலம் புல்லிய புனிறு ஒரீஇ புது நலம் ஏர்தர வளையவர் வண்டல் போல் வார் மணல் வடு கொள 5 இளையவர் ஐம்பால் போல் எக்கர் போழ்ந்து அறல் வார மா ஈன்ற தளிர் மிசை மாயவள் திதலை போல் ஆய் இதழ் பன் மலர் ஐய கொங்கு உறைத்தர மே தக இளவேனில் இறுத்தந்த பொழுதின் கண் சேயார் கண் சென்ற என் நெஞ்சினை சில்_மொழி 10 நீ கூறும் வரைத்து அன்றி நிறுப்பென்-மன் நிறை நீவி வாய் விரிபு பனி ஏற்ற விரவு பன் மலர் தீண்டி நோய் சேர்ந்த வைகலான் வாடை வந்து அலைத்தரூஉம் போழ்து உள்ளார் துறந்தார் கண் புரி வாடும் கொள்கையை சூழ்பு ஆங்கே சுட்ட_இழாய் கரப்பென்-மன் கை நீவி 15 வீழ் கதிர் விடுத்த பூ விருந்து உண்ணும் இரும் தும்பி யாழ் கொண்ட இமிழ் இசை இயல் மாலை அலைத்தரூஉம் தொடி நிலை நெகிழ்த்தார் கண் தோயும் என் ஆர் உயிர் வடு நீங்கு கிளவியாய் வலிப்பென்-மன் வலிப்பவும் நெடு நிலா திறந்து உண்ண நிரை இதழ் வாய் விட்ட 20 கடி மலர் கமழ் நாற்றம் கங்குல் வந்து அலைத்தரூஉம் என ஆங்கு வருந்தினை வதிந்த நின் வளை நீங்க சேய் நாட்டு பிரிந்து செய்_பொருள்_பிணி பின் நோக்காது ஏகி நம் அரும் துயர் களைஞர் வந்தனர் 25 திருந்து எயிறு இலங்கு நின் தே மொழி படர்ந்தே #30 அரும் தவம் ஆற்றியார் நுகர்ச்சி போல் அணி கொள விரிந்து ஆனா சினை-தொறூஉம் வேண்டும் தாது அமர்ந்து ஆடி புரிந்து ஆர்க்கும் வண்டொடு புலம்பு தீர்ந்து எ வாயும் இரும் தும்பி இறைகொள எதிரிய வேனிலான் துயில் இன்றி யாம் நீந்த தொழுவை அம் புனல் ஆடி 5 மயில் இயலார் மரு உண்டு மறந்து அமைகுவான்-மன்னோ வெயில் ஒளி அறியாத விரி மலர் தண் காவில் குயில் ஆலும் பொழுது என கூறுநர் உளர் ஆயின் பானாள் யாம் படர் கூர பணை எழில் அணை மென் தோள் மான் நோக்கினவரோடு மறந்து அமைகுவான்-மன்னோ 10 ஆனா சீர் கூடலுள் அரும்பு அவிழ் நறு முல்லை தேன் ஆர்க்கும் பொழுது என தெளிக்குநர் உளர் ஆயின் உறல் யாம் ஒளி வாட உயர்ந்தவன் விழவினுள் விறல் இழையவரோடு விளையாடுவான்-மன்னோ பெறல் அரும் பொழுதோடு பிறங்கு இணர் துருத்தி சூழ்ந்து 15 அறல் வாரும் வையை என்று அறையுநர் உளர் ஆயின் என ஆங்கு தணியா நோய் உழந்து ஆனா தகையவள் தகைபெற அணி கிளர் நெடும் திண் தேர் அயர்-மதி பணிபு நின் காமர் கழல் அடி சேரா 20 நாமம் சால் தெவ்வரின் நடுங்கினள் பெரிதே #31 கடும் புனல் கால் பட்டு கலுழ் தேறி கவின் பெற நெடும் கயத்து அயல்_அயல் அயிர் தோன்ற அம் மணல் வடுத்து ஊர வரிப்ப போல் ஈங்கை வாடு உதிர்பு உக பிரிந்தவர் நுதல் போல பீர் வீய காதலர் புணர்ந்தவர் முகம் போல பொய்கை பூ புதிது ஈன 5 மெய் கூர்ந்த பனியொடு மேல் நின்ற வாடையால் கையாறு கடைக்கூட்ட கலக்கு_உறூஉம் பொழுது-மன் பொய்யேம் என்று ஆய்_இழாய் புணர்ந்தவர் உரைத்ததை மயங்கு அமர் மாறு அட்டு மண் வௌவி வருபவர் தயங்கிய களிற்றின் மேல் தகை காண விடுவதோ 10 பயம் கெழு பல் கதிர் பால் போலும் பொழுதொடு வயங்கு இழை தண்ணென வந்த இ அசை வாடை தாள் வலம்பட வென்று தகை நன் மா மேல்கொண்டு வாள் வென்று வருபவர் வனப்பு ஆர விடுவதோ நீள் கழை நிவந்த பூ நிறம் வாட தூற்றுபு 15 தோள் அதிர்பு அகம் சேர துவற்றும் இ சில் மழை பகை வென்று திறை கொண்ட பாய் திண் தேர் மிசையவர் வகை கொண்ட செம்மல் நாம் வனப்பு ஆர விடுவதோ புகை என புதல் சூழ்ந்து பூ அம் கள் பொதி செய்யா முகை வெண் பல் நுதி பொர முற்றிய கடும் பனி 20 என ஆங்கு வாளாதி வயங்கு_இழாய் வருந்துவள் இவள் என நாள் வரை நிறுத்து தாம் சொல்லிய பொய் அன்றி மீளி வேல் தானையர் புகுதந்தார் நீள் உயர் கூடல் நெடும் கொடி எழவே 25 #32 எஃகு இடை தொட்ட கார் கவின் பெற்ற ஐம்பால் போல் மை அற விளங்கிய துவர் மணல் அது அது ஐது ஆக நெறித்து அன்ன அறல் அவிர் நீள் ஐம்பால் அணி நகை இடையிட்ட ஈகை அம் கண்ணி போல் பிணி நெகிழ் அலர் வேங்கை விரிந்த பூ வெறி கொள 5 துணி நீரால் தூ மதி_நாளால் அணிபெற ஈன்றவள் திதலை போல் ஈர் பெய்யும் தளிரொடும் ஆன்றவர் அடக்கம் போல் அலர் செல்லா சினையொடும் வல்லவர் யாழ் போல வண்டு ஆர்க்கும் புதலொடும் நல்லவர் நுடக்கம் போல் நயம் வந்த கொம்பொடும் 10 உணர்ந்தவர் ஈகை போல் இணர் ஊழ்த்த மரத்தொடும் புணர்ந்தவர் முயக்கம் போல் புரிவு உற்ற கொடியொடும் நயந்தார்க்கோ நல்லை-மன் இளவேனில் எம் போல பசந்தவர் பைதல் நோய் பகை என தணித்து நம் இன் உயிர் செய்யும் மருந்து ஆகி பின்னிய 15 காதலர் எயிறு ஏய்க்கும் தண் அருவி நறு முல்லை போது ஆர கொள்ளும் கமழ் குரற்கு என்னும் தூது வந்தன்றே தோழி துயர் அறு கிளவியோடு அயர்ந்தீகம் விருந்தே #33 வீறு சால் ஞாலத்து வியல் அணி காணிய யாறு கண் விழித்த போல் கயம் நந்தி கவின் பெற மணி புரை வயங்கலுள் துப்பு எறிந்தவை போல பிணி விடு முருக்கு இதழ் அணி கயத்து உதிர்ந்து உக துணி கய நிழல் நோக்கி துதைபு உடன் வண்டு ஆர்ப்ப 5 மணி போல அரும்பு ஊழ்த்து மரம் எல்லாம் மலர் வேய காதலர் புணர்ந்தவர் கவவு கை நெகிழாது தாது அவிழ் வேனிலோ வந்தன்று வாரார் நம் போது எழில் உண்கண் புலம்ப நீத்தவர் எரி உரு உறழ இலவம் மலர 10 பொரி உரு உறழ புன்கு பூ உதிர புது மலர் கோங்கம் பொன் என தாது ஊழ்ப்ப தமியார் புறத்து எறிந்து எள்ளி முனிய வந்து ஆர்ப்பது போலும் பொழுது என் அணி நலம் போர்ப்பது போலும் பசப்பு 15 நொந்து நகுவன போல் நந்தின கொம்பு நைந்து உள்ளி உகுவது போலும் என் நெஞ்சு எள்ளி தொகுபு உடன் ஆடுவ போலும் மயில் கையில் உகுவன போலும் வளை என் கண் போல் இகுபு அறல் வாரும் பருவத்தும் வாரார் 20 மிகுவது போலும் இ நோய் நரம்பின் தீம் குரல் நிறுக்கும் குழல் போல் இரங்கு இசை மிஞிறொடு தும்பி தாது ஊத தூது அவர் விடுதரார் துறப்பார்-கொல் நோ_தக இரும் குயில் ஆலும் அரோ 25 என ஆங்கு புரிந்து நீ எள்ளும் குயிலையும் அவரையும் புலவாதி நீல் இதழ் உண்கணாய் நெறி கூந்தல் பிணி விட நாள் வரை நிறுத்து தாம் சொல்லிய பொய் அன்றி மாலை தாழ் வியன் மார்பர் துனைதந்தார் 30 கால் உறழ் கடும் திண் தேர் கடவினர் விரைந்தே #34 மன் உயிர் ஏமுற மலர் ஞாலம் புரவு ஈன்று பல் நீரால் பாய் புனல் பரந்து ஊட்டி இறந்த பின் சில் நீரால் அறல் வார அகல் யாறு கவின் பெற முன் ஒன்று தமக்கு ஆற்றி முயன்றவர் இறுதி_கண் பின் ஒன்று பெயர்த்து ஆற்றும் பீடு உடையாளர் போல் 5 பன் மலர் சினை உக சுரும்பு இமிர்ந்து வண்டு ஆர்ப்ப இன் அமர் இளவேனில் இறுத்தந்த பொழுதினான் விரி காஞ்சி தாது ஆடி இரும் குயில் விளிப்பவும் பிரிவு அஞ்சாதவர் தீமை மறைப்பென்-மன் மறைப்பவும் கரி பொய்த்தான் கீழ் இருந்த மரம் போல கவின் வாடி 10 எரி பொத்தி என் நெஞ்சம் சுடும் ஆயின் எவன் செய்கோ பொறை தளர் கொம்பின் மேல் சிதர் இனம் இறைகொள நிறை தளராதவர் தீமை மறைப்பென்-மன் மறைப்பவும் முறை தளர்ந்த மன்னவன் கீழ் குடி போல கலங்குபு பொறை தளர்பு பனி வாரும் கண் ஆயின் எவன் செய்கோ 15 தளை அவிழ் பூ சினை சுரும்பு யாழ் போல இசைப்பவும் கொளை தளராதவர் தீமை மறைப்பென்-மன் மறைப்பவும் கிளை அழிய வாழ்பவன் ஆக்கம் போல் புல்லென்று வளை ஆனா நெகிழ்பு ஓடும் தோள் ஆயின் எவன் செய்கோ என ஆங்கு 20 நின்னுள் நோய் நீ உரைத்து அலமரல் எல்லா நாம் எண்ணிய நாள் வரை இறவாது காதலர் பண்ணிய மாவினர் புகுதந்தார் கண் உறு பூசல் கை களைந்த ஆங்கே #35 மடி இலான் செல்வம் போல் மரன் நந்த அ செல்வம் படி உண்பார் நுகர்ச்சி போல் பல் சினை மிஞிறு ஆர்ப்ப மாயவள் மேனி போல் தளிர் ஈன அ மேனி தாய சுணங்கு போல் தளிர் மிசை தாது உக மலர் தாய பொழில் நண்ணி மணி நீர கயம் நிற்ப 5 அலர் தாய துறை நண்ணி அயிர் வரித்து அறல் வார நனி எள்ளும் குயில் நோக்கி இனைபு உகு நெஞ்சத்தால் துறந்து உள்ளார் அவர் என துனி கொள்ளல் எல்லா நீ வண்ண வண்டு இமிர்ந்து ஆனா வையை வார் உயர் எக்கர் தண் அருவி நறு முல்லை தாது உண்ணும் பொழுது அன்றோ 10 கண் நிலா நீர் மல்க கவவி நாம் விடுத்த_கால் ஒண்_நுதால் நமக்கு அவர் வருதும் என்று உரைத்ததை மல்கிய துருத்தியுள் மகிழ் துணை புணர்ந்து அவர் வில்லவன் விழவினுள் விளையாடும் பொழுது அன்றோ வலன் ஆக வினை என்று வணங்கி நாம் விடுத்த_கால் 15 ஒளி_இழாய் நமக்கு அவர் வருதும் என்று உரைத்ததை நிலன் நாவில் திரிதரூஉம் நீள் மாட கூடலார் புலன் நாவில் பிறந்த சொல் புதிது உண்ணும் பொழுது அன்றோ பல நாடு நெஞ்சினேம் பரிந்து நாம் விடுத்த_கால் சுடர்_இழாய் நமக்கு அவர் வருதும் என்று உரைத்ததை 20 என ஆங்கு உள்ளு-தொறு உடையும் நின் உயவு நோய்க்கு உயிர்ப்பு ஆகி எள் அறு காதலர் இயைதந்தார் புள் இயல் காமர் கடும் திண் தேர் பொருப்பன் வாய்மை அன்ன வைகலொடு புணர்ந்தே 25 #36 கொடு மிடல் நாஞ்சிலான் தார் போல் மராத்து நெடு மிசை சூழும் மயில் ஆலும் சீர வடி நரம்பு இசைப்ப போல் வண்டொடு சுரும்பு ஆர்ப்ப தொடி_மகள் முரற்சி போல் தும்பி வந்து இமிர்தர இயன் எழீஇயவை போல எ வாயும் இம்மென 5 கயன் அணி பொதும்பருள் கடி மலர் தேன் ஊத மலர் ஆய்ந்து வயின்_வயின் விளிப்ப போல் மரன் ஊழ்ப்ப இரும் குயில் ஆல பெரும் துறை கவின் பெற குழவி வேனில் விழவு எதிர்கொள்ளும் சீரார் செவ்வியும் வந்தன்று 10 வாரார் தோழி நம் காதலோரே பாஅய் பாஅய் பசந்தன்று நுதல் சாஅய் சாஅய் நெகிழ்ந்தன தோள் நனி அறல் வாரும் பொழுது என வெய்ய பனி அறல் வாரும் என் கண் 15 மலை இடை போயினர் வரல் நசைஇ நோயொடு முலை இடை கனலும் என் நெஞ்சு காதலின் பிரிந்தார்-கொல்லோ வறிது ஓர் தூதொடு மறந்தார்-கொல்லோ நோ_தக காதலர் காதலும் காண்பாம்-கொல்லோ 20 துறந்தவர் ஆண்டு_ஆண்டு உறைகுவர்-கொல்லோ யாவது நீள் இடைப்படுதலும் ஒல்லும் யாழ நின் வாள் இடைப்படுத்த வயங்கு ஈர் ஓதி நாள்_அணி சிதைத்தலும் உண்டு என நயவந்து கேள்வி அந்தணர் கடவும் 25 வேள்வி ஆவியின் உயிர்க்கும் என் நெஞ்சே


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

முதலாவது - பாலைக்கலி
அடிநேர் உரை
#2
உலகம் உருவாகும் காலத்தில் தோன்றிய முதியோனாகிய நான்முகன் முதலாக,
அடங்காத அவுணர்களின் ஆணவத்தை அழிக்குமாறு, தேவர்கள் வந்து வேண்டியதால்,
கூற்றுவன் போல் சினங்கொண்டு, அழிவு செய்யும் அந்த அரக்கர்களைக்
கொன்று அழிக்கும் ஆற்றலோடு, முக்கண்ணனாகிய சிவன் அந்த அரக்கர் வாழும் திரிபுரக் கோட்டைகளைச்
சினந்து நோக்கிய பொழுது இருந்த பொறி பறக்கும் முகத்தினைப் போல, வெண் கதிர் வீசும் ஞாயிறு சுட்டுப்பொசுக்குவதால்,
பிறரால் சினந்து அழிப்பதற்கு முடியாத, மழுவினை ஏந்திய அந்தச் சிவன் சினந்து நோக்கியதும், அந்தக் கோட்டைகள்
இடியால் தாக்கப்பட்டு பொடிப்பொடியானது போல மலைகள் வெப்பத்தால் வெடிபட்டு, வழிச்செல்வார்
செல்வதற்கு இயலாதவாறு பாதையை அடைத்துக்கொண்டு கிடக்கும் அனல் வீசும் செல்வதற்கரிய வழியில்,
உன்னை மறக்கமுடியாத காதலையுடைய இவள் இங்கு வருந்தித் தனித்திருக்க,
இவளை விட்டுச் செல்ல துணிந்துவிட்டாய், நான் சொல்வதைக் கேட்பாயாக, ஐயனே!
இருக்கும் செல்வம் தீர்ந்துவிட்டதால், இனி கேட்பவர்க்கு ஒன்றுமே கொடுக்க முடியாதிருப்பது இழிவு என்று எண்ணி
மலைகளைக் கடந்து சென்று தேடக் கருதிய செல்வம் சிறந்த செல்வம் ஆகுமோ?
நிலைபெற்ற கற்பினையுடையவளும், நீ பிரிந்தால் உயிர்வாழ மாட்டாதவளுமாகிய இவளின்
முலைகளையுடைய மார்பினை விட்டுப் பிரியாதிருப்பதே செல்வம் ஆகுமே அல்லாமல் -
'இல்லை' என்று கேட்டுவந்தோர்க்கு ஒன்றுமே கொடுக்க முடியாதிருப்பது இழிவு என்று எண்ணி
மலைகளைக் கடந்து சென்று தேடக் கருதிய செல்வம் சிறந்த செல்வம் ஆகுமோ?
தொன்மையான நெறிகளினின்றும் வழுவாமல், நீயே துணை என்று நின்னை மணந்த இவளின்
தழுவுதற்கு இனிய மார்பினை விட்டுப் பிரியாதிருப்பதே செல்வம் ஆகுமே அல்லாமல் -
போக்கிடமின்றி உன்னிடம் பொருள் கேட்டு வருபவர்க்கு ஒன்றுமே கொடுக்க முடியாதிருப்பது இழிவு என்று எண்ணி
காட்டுவழிகளைக் கடந்து சென்று தேடக் கருதிய செல்வம் சிறந்த செல்வம் ஆகுமோ?
அருந்ததி போல் வணங்கி வழிபடக்கூடிய பிறரால் போற்றுதற்குரிய கற்பினையுடைய இவளின்
பருத்த மென்மையான தோள்களை விட்டுப் பிரியாதிருப்பதே செல்வம் ஆகுமே அல்லாமல் -
என்று நான் உனக்குச் சொல்லும்படியாக, இவள்
துன்பம் கொண்டு வருந்தவும், நீ பொருளை நாடிச் செல்வது
அன்புடைய செயல் ஆகாது என்று நான் சொல்ல, உன்மேல் அன்புகொண்டு
குத்துக்கோலுக்கும் அடங்காமல் செல்லும் களிற்றியானை
யாழின் இசைக்கு அடங்கி நிற்பது போல, தலை தாழ்த்தி, உன்
மாறாப் பேரழகு பாழாகிப்போவிடுமோ என்று அச்சங்கொண்டு, என்னுடைய
சொல்லுக்குக் கட்டுப்பட்டுப் போவதை விடுத்து இங்கேயே தங்கிவிட்டார் உன் காதலர்.
#3
அறஉணர்வு சிறிதும் இன்றி அயலார் தூற்றும் பழிச்சொற்களைக் கேட்க நாணியும்,
வறண்ட பாலை நிலத்தைக் கடப்பதற்காக நீ செல்லும் நீண்ட வழியை நினைந்தும்,
முன்கையில் நிற்காமல் வளையல்கள் கழன்று விழவும், இமைகளினின்றும் வடியுமாறு கண்ணீர் பெருகவும்,
தாங்க முடியாத காம நோயோடு பொலிவிழந்த நெற்றியைக் கொண்ட இவள்
தனது சிறந்த பேரழகை இழந்துபோகுமாறு, பொருளீட்டும் வினைமேற்கொண்டாய், கேட்பாயாக இப்போது,
உன்னையே உயிராக உடைய இவள் உயிர் வாழாள் நீ பிரிந்து சென்றால் என்று பலவாறாக
ஏற்ற காலம் அறிந்து நான் வேண்டிக்கொள்ளவும், நான் கூறுவதை ஏற்காதவன் ஆனாய்;
நீ கடந்து செல்லும் வழியில், நீர் வற்றிப்போன வறிய சுனைகளிலுள்ள
இலைகளோடு வாடிப்போன அழகிய மலர்களே உன்னைத் தடுத்து நிறுத்தும்;
விரைவில் இவளை நீ பிரிந்துசென்றால், இவளின் அழகிய உறுப்புகள் களையிழந்துபோகும் என்று
நீ ஏற்கும் வகையில் நான் வேண்டிக்கொள்ளவும் அதை நீ உணராதவன் ஆனாய்;
நீ செல்லும் நீண்ட வழியில், சுற்றி ஏறிய மரமும் பட்டுப்போக,
பற்றிப் படர்வதை விட்டுக் கீழே விழுந்துகிடக்கும் பூங்கொடிகளே உன்னைத் தடுத்து நிறுத்தும்;
இவளுடன் சேர்ந்திருப்பதை நீ விட்டுவிட எண்ணினால், இறந்துவிடுவாள் இவள் என்று
மிகவும் பணிந்து நின்று வேண்டிக்கொள்ளவும், பிரிவதற்குரிய பல வழிகளை ஆராய்ந்து பார்க்கிறாய்;
துணிந்து நீ செல்லும் அந்த வழியில் முன்னர் நீ கண்ட அழகிய மரமும்
தன் அழகினை இழக்க, வாடிப்போயிருக்கும் அதன் அழகிய தளிர்களே உன்னைத் தடுத்து நிறுத்தும்; 
இவ்வாறாக
நான் உன்னிடம் கூறவும், என் கூற்றினை ஏற்காதவன் ஆனாய்;
இத்துடன் நில்லாது, இவளைப் போலவே, இரக்கத்தை எழுப்பக்கூடிய காட்சிகளைக் காட்டி,
உனக்கு மேலாய் நின்று உண்மைகளை இடித்துக்கூறும் நண்பர்களைப் போல, நீ செல்லும்
காட்டு வழியே தடுத்துநிறுத்தும் உன் பயணத்தை.
 
#4 அளவிறந்த உடல் வலிமையும், உறுதியான உடம்பும், புலிப் பார்வையும் கொண்ட, முறுக்கிக்கட்டிய வில்லினையுடய, சுருண்டு வளர்ந்த மயிரையுடைய, சரியான சமயத்தை எதிர்நோக்கிக் காத்துக்கிடக்கும் கொடிய மறவர்கள், தாம் கவர்ந்து கொள்ளக்கூடிய பொருள் இல்லாதவரெனினும், அவ்வழி வரும் புதியவர் துடித்து வருந்துவதைக் கண்டு மகிழ்வதற்காக, அவரை விரட்டி அவரின் உயிரைக் கவர்வதால், பறவைகளும் பறக்காத, துயரம் நிறைந்த கடப்பதற்கரிய தனிவழியில் வெண்மை நிறங்கொண்ட வேலை வலக் கையில் ஏந்தியவராய், பொருளீட்டும் ஆசையால் போக எண்ணியுள்ளாய் என்பதனை அறிந்தனள் என் தோழி; "முத்துக்களும், மணிகளும் பரவலாகப் பதிக்கப்பட்ட மாலை கிடந்து அசையும் என் இளம் முலைகளைப் பொழுதிடைப்படாமல் தழுவியும் தம் வேட்கை அடங்காதவராய், என்னுடைய அவிழ்ந்துவிழுந்த கூந்தலைச் சரிசெய்வார் காதலர்; ஆனால் அவர் உள்ளத்தில் இருப்பது என்னவென்று நான் அறியேன்" என்கிறாள் என் தோழி; "முள்ளைப் போன்ற கூரிய முனையைக் கொண்ட என் பற்களிடையே அமிழ்தாக ஊறும் இனிய நீரை 'தேனினும் இனியது' எனப் பாராட்டியும் தம் வேட்கை அடங்காதவராய், என்னுடைய ஒளிவீசும் அணிகலன்கள் கலைந்து கிடப்பதைச் சரிசெய்வார் காதலர்; ஆனால் அவர் உள்ளத்தில் இருப்பது என்னவென்று நான் அறியேன்" என்கிறாள் என் தோழி; சிறந்த பேரழகும், மாந்தளிர் நிற அழகுத்தேமலும் உடைய என் மார்பை, அவர் தன் கண்ணுடன் சேர்த்துக் கட்டிவைத்தது போல் விடாது பார்த்துக்கொண்டிருந்தும் தம் வேட்கை அடங்காதவராய், என்னுடைய ஒளி வீசும் நெற்றியை நீவிக்கொடுப்பார் காதலர்; ஆனால் அவர் எண்ணுவது என்னவென்று நான் அறியேன்" என்கிறாள் என் தோழி; என்று அவள் கூறுபடியாக, மிகப்பெரிய இந்த அன்புகாட்டலுக்குப் பின்புலமாக ஏதோ ஒன்று உள்ளது என்று என் தோழி வருத்தத்தோடு கலங்கிய துயரத்தை உடையவளாய், ஒருநாள் நீர் சிறிது காலம் இடையில் பிரிந்து சென்றாலும் உயிர்கொண்டு வாழ்வாளோ? கைவிட்டுவிடுவாயாக, இப்போது, பெருமானே! உன் பொருளீட்டும் பயணத்தை. #5 பெரிய உறுப்புக்களாகிய அழகிய செவிகளையும், பருத்த கால்களையும் உடைய விலங்குக் கூட்டமான மதம்பிடித்து மயங்கித்திரியும் யானைகளோடு, பாலைநில வேட்டுவர்களும் நெருக்கமாகத் திரிதலால் சிறு புதர்கள் அழிந்து வழியாகிப்போய், பழைய வழிகளுடன் கலந்து குழம்பவைக்கும் அரிய காட்டுவழியைக் கடந்து சென்று நீர் ஈட்டும் பொருளைக் காட்டிலும் நாங்கள் உமக்கு சிறந்தவர்களாவோம் என்பதனை நீர் அறிந்திருப்பீராயின், நீண்ட பெரிய கடலில் பெருங்காற்று மரக்கலத்தைத் தாக்கும்போது அதனைக் காப்பாற்றும் முயற்சியில் தோற்றுப்போனோர் போன்ற நிலையிலுள்ளதைத் தவிர எம் உறவான பெருந்தகையான உம்மோடு எவ்வாறு பலவற்றைச் சொல்லி உம்மைத் தடுப்போம்? நாளும் கோளுமே உம்மைத் தடைசெய்தல் வேண்டும்! 'கல்'லென்ற பேரொலியுடன் அழகுபெற்ற திருவிழா நடந்துமுடிந்த பின்னர் 'புல்'லென்று பொலிவிழந்து போன களம் போல தனிமைத் துயர்கொண்டு வாழ்வாளோ? நாட்டை ஆள்பவர் அழிவு பல செய்ய, அவரால் அலைக்கழிக்கப்பட்ட நாட்டு மக்கள் போல பாழ்பட்டுப்போன முகத்தோடு பரிதவித்து இருப்பாளோ? ஒரே ஒரு இரவுக்குள், தாமரைப் பொய்கையின் நீரிலிருந்து பிடுங்கி எறியப்பட்ட மலரைப் போல, நீ பிரிந்து சென்றால் இவள் வாழ்வாளோ? என்று நான் கூறித் தடை செய்யவும், பொய்யன்பு காட்டி, இவளைப் பாதுகாத்தலைக் கைவிட்டு எந்த நாளில், நெடுந்தகையே! நீ செல்கின்றாயோ அந்த நாளிலேயே பிரிந்துவிடும் இவளின் பெறுதற்கரிய உயிர். #6 காட்டுப்பசுக்கள் கற்றாழையைத் தின்னும்படியாக மழை வறண்டுபோக, பாறைகள் உயர்ந்து நிற்கும் கடப்பதற்கரிய பாலை நிலத்தின் நடக்க முடியாத பாதையில் செல்வோர், கள்வர் ஏவிய சுரையுடன் கூடிய அம்பு தைத்தலினால் உடல் தளர்ந்து, உடலுக்குள் உள்ள நீர்ப்பசை வற்றி, புலர்ந்து வாடிய நாவுக்குத் தண்ணீர் கிடைக்காமல் தடுமாறிப்போய் அடையும் பெரும் துயரத்தினால் பெருகும் கண்ணீரினால் தம் நாவினை நனைத்துக்கொள்ளும் கொடுமையையுடையது காட்டு வழி என்று கூறினால் என்னுடைய இயல்பை அறியாதவர் போல இவற்றைக் கூறுவது உமக்குத் தகுதி உடையதன்று, பெருந்தகையே! என்னையும், நம்மிடையே உள்ள அன்பு அழிந்துவிட நினையாது, போகும் வழியில் உம்முடன் துன்பகாலத்தில் துணையாக நான் கூட இருப்பதை விரும்பினால், அதைத் தவிர இன்பமான செய்தி வேறு உண்டோ எனக்கு. #7 வேனில்காலத்து வெம்மையால் துன்பமடைந்து உடல் சுருங்கி வருந்தி ஓய்ந்துபோன களிறுகள் மழை வற்றிப்போன பாலைக் காட்டில் கானல் நீரைப் பார்த்து ஏக்கத்துடன் நோக்கும் காட்டுவழியைக் கடந்து செல்கிறீர் என்று கேள்வியுற்றதால், நான் ஒன்று கேட்கிறேன், ஐயனே, கொஞ்சம்; நீயோ, இங்கு பொருளீட்டும் காரியத்திற்காகப் பயணம் மேற்கொள்வதை விரும்பி, உன்னுடைய கையால் செய்த வலிமையான வில்லின் நாணை நீவிவிட்டுப் பார்க்கிறாய்; ஆனால் இவளுக்கோ, செம்மையாகச் செய்யப்பட்டது போன்ற முழுநிலவில் மேகம் படர்வது போல் மறு இல்லாத ஒளியையுடைய முகத்தில் பசப்பு பரவத் தொடங்கிற்று; நீயோ, சிறப்பாகச் செய்யப்பட்ட கையுறையை இறுகக் கட்டி, பூவும் சாந்தும் பூசிச் சிறந்த அம்புகளை ஆராய்ந்து தெரிகின்றாய்; ஆனால் இவளுக்கோ, சுனையில் சிறப்பாக வளர்ந்த கருநீல மலர்கள் மழைநீரை ஏற்று வடிப்பதைப் போல, துயரப் பார்வை கொண்ட மையுண்ட கண்களில் கண்ணீர் நிற்காமல் வடியத் தொடங்கிற்று; நீயோ, பிரிவின் தனிமையைப் பற்றி நினைக்காத நெஞ்சத்தோடு, பொருள் தேடப் புறப்பட்டுப்போக வெற்றியைத் தரும் சக்கர ஆயுதத்தின் ஓரங்களின் கூர்மையைத் தடவிப்பார்க்கிறாய்; ஆனால் இவளுக்கோ, அசைகின்ற இதழ்கள் கோடல் பூவினின்றும் வாடி உதிர்வன போல ஒளிவிடும் அழகினையுடைய பளபளப்பான வளையல்கள் முன்கையிலிருந்து கழன்றுவிழத் தொடங்கின; இவ்வாறாக, உனது பிரிந்து செல்வது என்ற தவறான செய்கைக்கான ஏற்பாடுகளின்போதே இவ்வாறு வருந்துபவள், நீ சென்றுவிட்டால் இவளுடைய நலம் அனைத்தும் அழிந்துவிடுமாதலால், போய்விட்ட இவளின் இனிய உயிரை மீட்டுத் தர இயலுமோ, முனைந்து செல்லும் நாட்டில் நீ முயன்று ஈட்டும் பொருளால்? #8 நடுவுநிலைமையைத் துறந்து, அதனை அகற்றிப்போட்ட அருளற்ற அமைச்சன் வழிகாட்ட, கொடுமை செய்வதையே மேற்கொண்ட மன்னனின் கொடுங்கோலாட்சியைப் போல, ஞாயிறு மிகுந்த அனல் பரக்கும் கதிர்களைச் செலுத்திக் காய்கின்ற வெப்பத்தால் சுடுதலால் வண்டுகள் நெருங்கிச் சேர, ஒழுகுகின்ற கமழும் மதநீரையுடைய, இப்பொழுது கெட்டுப்போன அழகையுடைய யானை, வறண்ட நிலத்தை உழுகின்ற கலப்பையைப் போல் தன் கொம்புகளை ஊன்றி நிலத்தில் கிடக்க, எதற்கும் நிலை கலங்காத மலைகளும் மிகுந்த சூடாகி வெதும்பிநிற்க, செல்வதற்கு அரிய கொடிய காட்டு வழியில், என்னிடம் சொல்லாமல் போகத் துணிந்த உமக்கு ஒரு மொழி சொல்வதற்கு உள்ளேன், கேளுங்கள், ஐயனே! கேட்பவர்க்கு இன்பம் பயப்பதாய், விரலால் இயக்கப்பெற்று இசைக்கும் யாழ்த்தண்டின் ஏழு நரம்புகளும் தம்முடைய பயன் கெட்டுப்போகுமாறு இடையிலிருக்கும் ஒரு நரம்பு அறுந்துபோகும் யாழின் இசையைக்காட்டிலும் விரைந்து அழியும் நிலையற்ற பொருளையா விரும்பிச் செல்கிறாய்? விரும்பித் தான் சேர்ந்தாரைச் சேர்ந்திருக்கும்போது இன்புறச் செய்வதைப் போலல்லாமல், அவரை விட்டுச் செல்லும்போது மற்றவர் அவரை இகழ்ந்துபேசும்படி, தமக்கும் ஒரு பெருமையின்றிக் கைமாறிச் செல்லும் செல்வத்தைக்காட்டிலும் விரைந்து அழியும் நிலையற்ற பொருளையா விரும்பிச் செல்கிறாய்? தமக்கு உயர்ச்சி மிகும்படியாகத் தாம் பெறும் பயனைப் பாராமல், அரசரின் ஆக்கத்திற்காகவே முயலும் அமைச்சரை ஒரு வரையின்றிக் கோபிக்கும் பொழுதில் கருணையின்றி அவரின் உயிரைப் பறிக்கும் அரசனின் வாழ்வு அழிந்துபோவதைக்காட்டிலும் விரைந்து அழியும் நிலையற்ற பொருளையா விரும்பிச் செல்கிறாய்? என்று நான் சொல்ல, பொருள் மீது ஆசை கூடாது பெருமானே!, இந்தப் பயணத்தைக் கைவிடும்படி வேண்டுகிறேன், ஆராய்ந்து பார்த்தால் இது தவறல்ல, மன்னவன் பேணிப்பாதுகாக்க, வீட்டுக்கு வரும் விருந்தினரை உபசரித்து, தன் மனைவி மக்கள் விரும்பும்படி, அவருடன் சேர்ந்திருப்பது, இனிய நெருக்கமான உறவினுக்குரிய அகன்ற மார்பினையுடையவனே! அதுவே நிலைத்த பொருளும் ஆகும். #9 எறிக்கின்ற ஞாயிற்றின் கதிர்களைத் தாங்கும் ஏந்திய குடையின் நிழலில், உறியில் தொங்கும் கமண்டலத்தையும், புகழ் பெற்ற முக்கோலினையும், முறையாகத் தோளில் சுமந்து, நன்மையைத் தவிரே வேறு ஒன்றனையும் நினைக்காத நெஞ்சத்துடன், ஐம்பொறிகளும் தமக்கு ஏவல் செய்தலை இயல்பாக உடைய கொள்கையையும் ஒழுக்கத்தையும் உடைய அந்தணர்களே! வெப்பம் மிக்க இந்தக் காட்டு வழியில் செல்வதை இயல்பாகக் கொண்டு ஒழுகிநடப்பவர்களே! இந்த வழியில் என் மகள் ஒருத்தியும், வேறொருத்தியின் மகன் ஒருவனும் தமக்குத்தாமே காதல் கொண்டு, இப்போது பிறர் அறியும்படி ஒன்றுசேர்ந்தனர், அன்னார் இருவரைக் கண்டீரோ பெருமக்களே! நாங்கள் காணாதிருக்கவில்லை, கண்டோம், காட்டு வழியில்; ஆணழகனான ஒரு சிறந்தவனோடு, கடப்பதற்கு அரிய காட்டு வழியில் செல்லத் துணிந்த மாட்சிமைபெற்ற குணத்தை அணிகலனாகப் பெற்ற இளம்பெண்ணின் தாய்தான் நீர் போலும்! பற்பல வகைகளில் பயன்படும் நறிய சந்தனக் கட்டைகள் தன்னை அரைத்துப் பூசிக்கொள்பவர்க்கன்றி, அவை மலையிலே பிறந்தாலும் மலைக்கு அவை தாம் என்ன செய்யும்? நினைத்துப்பார்த்தால் உமது மகள் உமக்கும் அதனைப் போன்றவள்தான்; சிறப்புப் பொருந்திய வெண்மையான முத்துக்கள் அவற்றை அணிபவர்க்கன்றி, அவை நீருக்குள்ளே பிறந்தாலும் நீருக்கு அவை தாம் என்ன செய்யும்? ஆராய்ந்துபார்த்தால் உமது மகள் உமக்கும் அதனைப் போன்றவள்தான்; ஏழு நரம்பால் கூட்டி எழுப்பிய இனிய ஓசைகள், இசைப்பவர்க்கன்றி அவை யாழினுள்ளே பிறந்தாலும் யாழுக்கு அவை தாம் என்ன செய்யும்? எண்ணிப்பார்த்தால் உமது மகள் உமக்கும் அதனைப் போன்றவள்தான்; என்று நாங்கள் சொல்ல, மிக உயர்ந்த கற்பினையுடையவளுக்காக வருத்தம் கொள்ளாதீர்! தலைசிறந்தவனைப் பின்பற்றிச் சென்றாள், அறநெறி தவறாத ஒழுக்கமும் அதுவேயாம். #10 வறுமைப்பட்டவனின் இளமை வீணே கழிவதுபோல, வாட்டும் கோடையால் மரக்கிளைகள் வெறுமையுற்றுக் கிடக்க, அறிவற்ற ஒருவனின் செல்வம் பிறர்க்குப் பயன்படாதது போல, தம்மை அண்டினோர்க்கு நிழலைத் தரமுடியாமல், யாரையும் மதியாமல் நடந்து தன் நல்ல பெயரைக் கெடுத்துக்கொண்டவனின் இறுதிக்காலம் போல, வேரோடு மரம் வாடிப்போகுமாறு ஞாயிற்றின் விரிந்த கதிர்கள் சுடுதலால், வருத்தமுற்றுக் குடிமக்கள் கூக்குரலிட, அறநெறி கெட்டுப் பொருளின்மேல் ஆசைகொண்டு, கொலைக்கு அஞ்சாத கொடிய அமைச்சரால் தனது நல்லாட்சியில் பிறழ்ந்த அரசனின் ஆட்சியின் கீழ் வாழும் நாட்டு மக்களின் உள்ளங்களைப் போல் வற்றிக் காய்ந்துபோன உயர்ந்த மரங்களைக் கொண்ட கொடிய பாலை வழியில் பிரிவினை மேற்கொண்டு, பொருளுக்காகப் போகிறாய் நீ என்று கேள்விப்பட்டால் உடைந்த நெஞ்சம் வருந்திச் சோர்வுற, தன் அழகு கெடுவாள் அன்றோ! சீராகப் பரப்பப்பெற்ற படுக்கையில் உறங்கும்போது உன்னை அறியாமல் நீ சற்று விலகிப் படுத்தாலும் தனிமையுணர்வுகொண்டு தவித்துப்போகின்றவள்; மிக்க வருத்தமின்றி ஈட்டமுடிகின்ற பொருளுக்காகப் போகிறாய் நீ என்று கேள்விப்பட்டால் நீர் நிறைந்த கண்கள் உறக்கம் கொள்ளாமல் துன்பம் மிகுவாள் அன்றோ! மிகவும் அதிமான மெல்லியல்பு கொண்டவளான இவள், விருப்பத்துடன் நீ விளையாட்டாகப் பொய்க்கோபம் கொண்டு மறைந்திருந்தாலும், அந்தச் சிறு பிரிவிற்கே அஞ்சி நடுங்குகின்றவளாயிற்றே; பொருளின் மீது நோக்கம்கொண்டு இவளை விட்டுப் பிரிந்து நீ போகிறாய் என்று கேள்விப்பட்டால் மருண்ட தன் பார்வை மடிந்துபோக, மயக்கம் கொண்டுவிடுவாள் அன்றோ? வெறுப்பான பார்வை இடையே இல்லாமல், அன்பின் வயப்பட்ட உன் அருட்பார்வை சிறிதளவு அழிந்து போனாலும் அவலம் கொண்டு நெஞ்சழிகின்றவளான இவள்; என்று நான் கூற, பொருள்தேடும் தொழிலை நாடி நீ பிரிந்து சென்றால் இவள் உயிரை விட்டுவிடுவாள் என்று, சிறப்பாகச் செய்த அணிகலன்களைச் சூடியவளே! உன்னுடைய நிலையை நான் எடுத்துக்கூற, நன்கு சிந்தித்து ஒளிவீசும் வேலையுடைய நெடுந்தகையாளர், நீண்ட அந்தப் பாலைவழியில் பயணம் செய்வதைத் தவிர்த்துவிட்டார், கழன்றுபோகாமல் செறிந்து நிற்கட்டும் உன் வளையல்கள்.


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

#11
கடைப்பிடிப்பதற்கு அரிய அறநெறியில் நின்று, அருள் உள்ளத்தோடு தன்னிடம் வந்தவர்க்கு அள்ளிக்கொடுப்பதுவும்,
பெரிதாக எதிர்த்துவந்த பகைவரை வென்று, தன்னை வழிபடாதோரை அழிப்பதுவும்,
அன்பும் ஆசையும் கொண்ட காதலினால் வாழ்வில் ஒன்றுபட்டிருப்பதுவும் பொருளினால் ஆகும் என்று
பிரிந்து செல்லக் கருதி பொருள் தேடிச் சென்ற நம் தலைவர்
வந்துவிடுவாரோ? ஒளிவீசும் அணிகலன்களை அணிந்த தோழியே! உறுதியாகச் சொல்கிறேன், கேட்பாயாக இப்போது;
பாதங்கள் பொறுத்துக்கொள்ளும் அளவினையும் மீறி, நெருப்புப்போன்ற வெம்மையுடைய
கொடுமையை உடையது, பொன்னாலான குழையை அணிந்தவளே! பாலைக்காடு என்றார், அந்தக் காட்டில்
உடுக்கை போன்ற கால்களையுடைய கன்று கலக்கிய சிறிது நீரைத்
தன் பெண்யானைக்கு முதலில் ஊட்டிவிட்டுப் பின்னரே தான் உண்ணும் களிறு என்றும் சொல்லிச் சென்றார்;
வீட்டின் இன்பமான சூழ்நிலையைக் கைவிட்டுப் பிரிந்துசென்று, இலைகள் தீய்ந்துபோன உலர்ந்த மரக் கிளைகளால்
நிழலின்றித் துன்புறும் தன்மை கொண்டது பாலைக்காடு என்றார், அந்தக் காட்டில்
தான் அன்புகொண்ட இளம் பேடை தளர்வுற்று வருந்தும் வருத்தத்தை,
தன் மெல்லிய சிறகை விரித்து நிழல்கொடுத்துப் போக்கும் ஆண்புறா என்றும் சொல்லிச் சென்றார்;
மலையின் மேல் மூங்கில்கள் பட்டுப்போகும்படி ஞாயிற்றின் மிகுதியான கதிர்கள் சுடுதலால்
கிட்டே நெருங்கவும் முடியாத தன்மை கொண்டது பாலைக் காடு என்றார், அந்தக் காட்டில்
இனிய நிழல் இல்லாததினால் வருந்திய தன் இளம் பெண்மானுக்குத்
தன்னுடைய நிழலைக் கொடுத்து உதவும் ஆண்மான் என்றும் சொல்லிச் சென்றார்;
எனவே,
இவை போன்ற தன்மைகள் கொண்ட காட்டுவழியில் சென்றவர்
நம்முடைய மேனி அலங்காரங்களைக் குலைத்துப்போடுபவர் அல்லர்; வீட்டில்
பல்லியும் நல்ல இடத்தில் இருந்து ஒலித்து நல்வாக்குச் சொல்கிறது;
நல்ல அழகினைக்கொண்ட மைதீட்டிய கண்ணும் துடிக்கின்றது இடப்பக்கம்.
 
#12
முள்ளால் செய்த நீண்ட வேலியைப் போல, கொலைகாரக் கள்வர்
தம்முடைய வில்லால் கொல்லப்பட்டவர்களின் உடலை இலைகளால் மூடிய குவியல்கள் வரிசையாகக் கிடக்கும்
கொடுங் குற்றங்கள் நடைபெறும் கடத்தற்கரிய காட்டுவழியில், நீர் வற்றிப்போன சுனையைச் சுற்றிநின்று,
ஒருசேர நீர்வேட்கை கொண்டதால், உடல் வருந்திய யானைகள்
விரைவாகத் தம் துதிக்கைகளை நீரில் பதிக்க, அதனால் தம் கைகள் சுடப்பட்டு
வெறிகொண்ட யானைக் கூட்டம் மூலைக்குஒன்றாய் மலைச் சாரல்கள்தோறும் ஓடுவதால்
பழைய வழிகள் பாழ்பட்டுப்போகும் கடந்து செல்ல முடியாத நீண்ட கடினமான பாதையில்,
சிறிது அதிகமாக நீ உறங்கி எழுந்தாலும், அதை எண்ணி அஞ்சுகின்ற
நறிய நெற்றியையுடைய இவளை விட்டுப் பிரிந்து பொருள்தேடுவதற்காகச் செல்கின்றவனே!
மிக்க வலிமைபொருந்திய நெஞ்சினையுடையவனே! தேடும் பொருளை ஈட்டிய பின்னர் அதனால் கிடைக்கும்
வளமான வாழ்வினால் பெறுவதே இந்த இன்பம் என்கிறாய்!
இளமையும் இன்பநுகர்வும் உன் சொல்கேட்டு உனக்காகக் காத்திருக்கமாட்டா!
முலையிடையே கிடக்கும் மாலை குழைந்துபோகும்படி தழுவிக்கொள்ளும்
முறைமையினையுடைய நாட்கள் வீணே கழிந்துபோகாமல் பார்த்துக்கொள்வாய்!
தம் வாழ்வின் இறுதிநாள் இதுவென்று அறிந்தவர் யாருமில்லை!
பின்பற்றாதிருப்பாயாக, பெருமானே நீ! காம இன்பம் கெட்டுப்போகும்படி
அதனுடன் மாறுபட்டு பொருளைத் தேடிச் செல்கின்றவனே!
இறப்பும் முதுமையும் எல்லாருக்கும் உண்டு என்பதனை மறந்துவிட்டவரோடு ஒன்றுசேர்ந்து
உலகியலுக்கு ஒவ்வாத மாறுபட்ட வழியை -
 
#13
போர்க்குணம் மிக்க, சினத்தையுடைய வேந்தன் தன் கண்கள் சிவக்கத் தங்கியிருக்கும் பகைவரின் நிலத்தைப் போல,
நெருப்பு பரவலாய்ச் சுட்டதினால் கரியாகி வறண்டு போன நிலத்தில் பசித்த வாய்க்குப் பச்சை இலை கிடைக்காதவையாய்
பொரிகள் விரிந்து கிடப்பதைப் போன்ற புள்ளிகளையுடைய இளைய மான்
முறுக்கிய கொம்புகளையுடைய தன் ஆண்மானோடு பொய்த்தேர் எனப்படும் கானல் நீரைப் பார்த்து ஓட,
கற்றாழைகளும் வாடிப்போக, மலைகள் புழுங்கி நிற்க, மந்திகள் சோர்ந்துபோக,
உரல் போன்ற கால்களைக் கொண்ட உடம்பு தளர்ந்த யானை
ஊற்று நீர் அடங்கிப்போய்விட்டதால் நீருண்ணக்கூடிய நீர்நிலைகளைக் காணாமல்,
சேற்றினைச் சுவைத்து, தம்முடைய போகின்ற உயிரைப் போக்காது தாங்கிக்கொள்ளும்
மழைத்துளியே இல்லையாகிப்போன, போவதற்கு அரிய கொடிய காட்டு வழியில்,
ஒளிவீசும் வளையல்களை அணிந்தவளே! என்னோடு நீ வந்தால், உன்
மென்மையான தன்மை பொருந்திய சின்னஞ்சிறு காலடிகள் - தாமரை மலரின்
நடுவிலிருக்கும் கொட்டையைச் சூழ்ந்திருக்கும் அழகிய இதழ்கள் செவ்வரக்குப் பூசியதைப் போல் சிவந்தவை -
கற்களின் மீது படும்போது, அந்த அழகிய அடிகள் கறுத்துப்போய்விடும் அல்லவா!
நலம் மிக்க ஒளிவீசும் நெற்றியையுடையவளே! என்னோடு நீ வந்தால்,
வெண்மை ஒளிவீசும் மாட்சிமை விளங்கும் அன்னத்தூவி பரப்பிய மென்மையான படுக்கையில்,
சிறந்த விலங்காகிய சிங்கத்தின் அமைப்பினைக் கால்களாகக் கொண்ட கட்டிலின்மேல் படுத்துத் துயில்பவளே!, அங்கே
வழியில் வந்து நிற்கும் சிங்கத்தின் குரலைக் கேட்டால் அஞ்சி நடுங்குவாய் அல்லவா!
கிளியைப் போன்ற இனிமையான மொழியினை உடையவளே! என்னோடு நீ வந்தால்,
மழைத்துளிகள் பொழிவதால் வளர்ந்த மென் தளிர் போன்ற அழகு மிக்க உன் மேனி அழகிழந்து போகும்படி,
காய்ந்துபோன புதரில் பற்றிச் 'சடசட'வென்று எரியும் காட்டுத்தீயினிடையே புகுந்து வந்த
அனல் காற்று உன் மேனியில் பட்டால், அந்த அழகு வாடிப்போய்விடும் அல்லவா!
என்று பலப்பலவாக
இத்தகைய மொழிகளைக் காதலர் கூறுவதால், பொருள்தேடும் தொழிலை மேற்கொண்டு
பிரிந்துசெல்வார் என்று மிகவும் மனம் வருந்தாதே! உண்மையைத் திரித்துக்கூற எண்ணி
கடுமையானதும், கடத்தற்கு அரியதும் ஆனது காட்டுவழி என்று சொல்கிறாரே ஒழிய
வளைவான காதணிகளை அணிந்தவளே! உன்னைவிட்டுப் பிரிந்துசெல்லமாட்டார்,
நீ அவற்றைக் கேட்டு நடுநடுங்கிப்போவதைக் காண்பதற்காக விளையாட்டாக அவ்வாறு செய்தார்.
 
#14
தலையணை தருவதைப் போன்ற இன் துயிலைத் தரும், அழகிய மூங்கில் போன்ற பெரிய மென்மையான தோள்களையும்,
இரட்டையான அழகிய நீலமலர்களின் சிறந்த அழகுவாய்ந்த மலர்ந்த மைதீட்டிய கண்களையும்,
மணக்கும் மல்லியின் மொட்டுகளைப் போன்ற, வண்டுகள் விரும்பும், ஒழுங்குபட்ட வரிசையான வெண்ணிறப் பற்களையும்,
மணங்கமழும் நறிய நெற்றியினையும், கார்மேகங்களும் விரும்பும் கருங்கூந்தலையும்,
பருத்த முலைகளைக் கொண்ட மார்பினையும், அகன்ற அல்குலினையும்,
சிலவே வரிசையாக நிற்கும் வெண்சங்கு வளையல்களையும் கொண்ட சிவந்தவளே! என்று
பலவாறாகப் புகழுரைகளை முன்பெல்லாம் கூறிவிட்டு,
இனிய மொழிகளைக் கூறி என்னை இன்னலுக்குள் ஆழ்த்துவது
இப்போது அறிந்தேன், அது என்பால் ஏற்பட்ட மனக்கசப்பால் ஆனது;
பொருள் இல்லாவிட்டால் நாம் ஒரு பொருட்டாக இருக்கமாட்டோம் என்ற உன்
மாயத்தோற்றம் கொண்ட அறியாமை வயப்பட்ட எண்ணத்தால் மயக்கப்பட்டு உணர்விழந்தாயோ?
காதலைவைத்துக்கொண்டு என்ன செய்ய, பொருள் இல்லாவிட்டால்? என்று
ஊரார் கூறும் சொற்களை ஒரு பொருட்டாக மதித்தாயோ?
அறநெறியைக் கைவிட்டு, அதினின்று அகன்று பொருள் ஈட்டுவார்க்கு, அந்தப் பொருளே
இம்மையிலும், மறுமையிலும் பகையாக விளங்கும் என்பதை அறியாயோ?
அதனால்,
நானும் உமக்குச் செல்வமே என்று மதித்துநடப்பாயாக! நம்முள் நாம்
தழுவிக்கொண்டிருக்கும் கைகளைப் பிரித்துவிட்டுச் சென்று பெறுகின்ற பொருளிடத்தில்
ஆசை கொண்டிருப்பதை அறவே நீக்குக, அதுவே நிலைத்த செல்வமாகும்.
 
#15
சிங்கம் முழங்குவதைப் போன்று முழங்கும், அழகிய சிலைமரத்தால் செய்யப்பட்ட வலிய வில்லின்
முறுக்குடைய நாணைச் சுண்டிவிட்டு ஒலியெழுப்பினாலே பகைவர் தோற்றோடக் காண்பது அன்றி,
ஒன்றுசேர்ந்த நால்வகைப்படைகளும் கூடிய பெரும் சேனையைக் கொண்ட அரசனோடு போர்புரினும்
அம்பு தொடுப்பதைக் கேவலமாக நினைக்கின்ற, விரைந்து ஒலிக்கும் துடியின் பேரொலியுடன் வருகின்ற,
வலிமை மிகுந்த கழுத்தினையும், வன்மையான பார்வையினையும், கலைமானின்
கொம்பு போல திருக்குண்டும் முறுக்குண்டதுமாய் விழுகின்ற தாடியையும்,
வெம்மையான கடும் சினத்தையும் உடைய, புறங்கொடுத்து ஓடாத ஆறலைக் கள்வர்
கைப்பொருளைப் பறித்துக்கொண்டு காயமும் ஏற்படுத்துகிறதன்றி, அன்புடன்
அருளும் முற்றிலும் இல்லாத கடத்தற்கரியது காட்டுப் பாதை;
பொருள்மீது விருப்பம் கொண்டு, நீ இவளைக் கைவிட்டுப் போக எண்ணி, புதிதாகச் சேர்த்துப்
பெருகிய செல்வத்தால் மீட்டுத்தருவது இயலுமோ?
அசோக மரத்தின் அழகிய தளிரைப் போன்றது இவளின் எழில் நலம், அந்த நலம்
பசலை நோயால் பாழடிக்கப்பட்டு அதன் பண்டைய இயல்பு அழிந்தபோது -
பொய்யற்ற கேள்வியறிவால் உயர்ந்த சான்றோரைச் சார்ந்து நீ பெறப்பொகும்
மாசற்ற நோன்புநெறிகளால் திருப்பித்தர முடியுமா?
தண்ணொளி வீசும் முழுத்திங்களைப் போன்றது இவளின் அழகிய முகம், அந்த முகம்
பாம்பின் வாய்ப்பட்ட மதியினைப் போல பசலை படர்ந்து தொலைந்துபோகும்போது -
நெருக்கமான அன்புத்தொடர்பை அறுத்துக்கொண்டு, பிறர் நாட்டுக்குச் சென்று நீ அங்கே பெறும்
நிலையான புதிய தொடர்புகளால் திருப்பித்தர முடியுமா?
கட்டு அவிழ்ந்த நறிய நீல மலர்களைப் போன்ற மைதீட்டிய கண்கள் கலங்கிப்போய், கட்டுக்கடங்காமல்,
எரியும் திரியிலிருந்து ஒழிகும் எண்ணெய் போலச் சுடுகின்ற தெளிந்த நீரை உகுக்கின்றபோது -
ஆகவே,
நான் கூறியவற்றின் நன்மைகளைக் கருத்திற்கொண்டு, நீ நினைக்கின்றவற்றையும் எண்ணிப் பார்! 
செல்வத்தை எந்த நாளிலும் சேர்த்துக்கொள்ளலாம், ஆனால் இவளின்
முளை போன்ற வரிசையான பற்களையுடைய தோழியருள்ளும் சிறந்தவள் என்று தேர்ந்த
இவளின் இளமையை மீட்டுக்கொள்ள முடியுமா, அது கழிந்த பின்னர்?

#16
உறக்கம் இன்றி, பசலை பாய்ந்த கண்கள் வருந்தி நீர் சொரிய,
வாடிப்போய் அழகெல்லாம் கெட்டு, வளைந்த என் கைகளினின்றும் வளையல்கள் கழன்று விழ,
சிறந்த என் எழில் அழிந்துபோவதைக் கண்டும் அஞ்சாமல் நம்மைவிட்டுப் பிரிந்துசென்றவருக்காக, இனிமேல்
அவரை நினைக்கும்போது ஒன்று செய்ய எண்ணங்கொண்டேன்; அதுதான்,
என்னுடைய பண்டை அழகெல்லாம் தொலைய, இங்கு நான் துயர்ப்படும்படி, நம்மைத் துறந்து சென்றவர்,
பொருள்மேல் ஆசைகொண்டவராய் நம் காதலர் நம்மைப் பிரிந்து செல்லும் அரிய காட்டு வழியில்
பாறைகளின் மேலுள்ள வெம்மை அற்றுப்போகும்படி மிகுதியான துளிகளைப் பொழிவாயாக என்று
இனியதாய் முழங்கும் மேகத்தை இரந்து கேட்டுக்கொள்வதும் சரியாக இருக்குமோ?
அழகாகச் செய்த அணிகலன்களைப் பூண்டவளே! இங்கே நாம் தனியே கிடந்து வாட, பொருளின் மீது ஆசைகொண்டு
கொடிய வழி என்றும் எண்ணாமல் நம் காதலர் போகக் கருதிய அரிய காட்டு வழியில்
மரக்கிளைகள் வாடிப்போகும்படி மிகுதியாகக் காயும் உன் சினம் தணிவதாக என்று
மிகுதியாய்ச் செறிந்த கதிர்களையுடைய ஞாயிற்றை விரும்பி வேண்டிக்கொள்வது சரியாக இருக்குமோ?
ஒளிமிகுந்த அணிகலன்களை அணிந்தவளே! இங்கு நாம் துன்பப்பட்டிருக்க, பொருளைத் தேடி
கொஞ்சமும் இரக்கமின்றி நம் காதலர் நம்மைப் பிரிந்து செல்லும் அரிய காட்டுவழியில்
காய்ந்துலர்ந்த புதர் வழியாகப் புகுந்து வருவதால் பெற்ற வெப்பம் தணிந்து வீசுக என்று
காற்றுக் கடவுளை வாழ்த்தி வேண்டுவது சரியாக இருக்குமோ?
என்று இவ்வாறு
தேடிச் சேர்க்கும் பொருளின் சிறப்பினை எண்ணிச் சென்றுள்ள காதலருக்காக, இத்தகைய
தெய்வங்களை வழிபடுவோமா என்று மனம் கலங்கவேண்டாம், இனிய மொழியையுடையவளே!
வறட்சி பரவினால் உலகத்தில் மழையைக் கொண்டுவரக்கூடிய கற்பினையுடையவள்
தன் அழகிழந்து பசலை பாய ஆவாளே என்று
அறக்கடவுளே ஓடிச்சென்று துன்பங்களை விலக்கிவிடும் அவரின் பொருள்தேடும் முயற்சியில்.
 
#17
தலைவன் தன் படைக்கலங்களைச் செப்பம் செய்து அலங்கரிக்கவும், பலவகையிலும் சிறப்புடைய பலவான மெத்தைகளில்
ஒரு பக்கம் திரும்பிப் படுத்துக்கொள்ளவும், நீ அவன் முதுகினைத் தழுவும்போது பெருமூச்சுவிடவும்,
இவர் உள்ளத்தில் உள்ளது யாதோ என்ற உன் துயரத்தை மனத்தில் ஆராய்ந்து காணும் அவரிடம்
அவரின் போக்குப்படி நடந்துகொள்ளாமல் மிகவும் ஏங்கி நடுங்குகிறாயே, நறிய நெற்றியையுடையவளே!
தன் முந்தைய அழகு தொலைந்துபோய், இவள் துயரில் உழல, இவளைத் துறந்து நீ
நாடு காக்கும் வலிய செயலால் புகழ்பெறத் துணிந்தாய்! அதைச் செய்து முடிக்கும் வரை
நீண்ட கதிர்களையுடைய ஒளிவீசும் திங்களின் முழுநிலவு பின்னர் தேய்வதைப் போல, நிலைத்துநிற்காமல்
ஒவ்வொரு நாளும் தேய்ந்து அழியும் இவள் மேனி நலன் அவளுடன் நிலைபெற்றிருக்குமோ?
ஆற்றல் மிக்க காம நோய் இவளை வருத்த, இவளின் அழகு வாடிப்போக, இவளை விட்டுப் பிரிந்து நீ
பெருமை தரும் தோற்றம் கொண்ட அரச செல்வத்தைப் பெற முயலுகின்றாய்! அவ்வாறு முயலும் வரை
மணம் மிக்க, நீர் நிறைந்த குளத்தில் இலைகளுக்கு மேல் உயர்ந்து நிற்கும் மொட்டுகளுக்கு
மலர்ச்சியே அதற்குக் கூற்றமாக இருப்பது போல், குறைந்துகொண்டுவரும் இவள் கற்பு வாழ்க்கை நிலைபெறுமோ?
வகைவகையான இவளின் அழகிய இளமை தேய்ந்துபோக, மலைகளைக் கடந்து போகத் துணிந்து நீ
பகைவரை அழிக்கும் பயனுள்ள வினையை மேற்கொள்ள முயலுகின்றாய்! அவ்வாறு முயலும் வரை
அழகிய வண்டுகள் புதிய தேனை உண்ண அன்றாடம் பூந்தாதுக்களைக் கொட்டும் குளிர்ச்சியான மலர்களின்
மொட்டுக்களைப் பெற்ற குளம் நாளும் வற்றுவதைப் போல இவளின் இளமையும் வற்றாமல் நிற்குமோ?
என்று
பொருத்தமாக, நான் அவன் விரும்பிய செயல் ஆர்வத்தினால் விளையும் கேடுகளை நினைந்து கூறிய சொற்கள்,
சீர்படுத்தும் நிலையிலுள்ள உடம்பிற்கு மருத்துவன் ஊட்டிய
மருந்தினைப் போல் நல்ல மருந்தாக வேலைசெய்ய, உன் மனம் களிக்கும்படி,
பெரும் புகழ் கொண்ட நம் தலைவன் கைவிட்டுவிட்டான் தன் பயணத்தை.

#18
பெறுவதற்கரிய பொருள் மீது கொண்ட வேட்கையால் உள்ளம் வலிந்து துரத்த
பிரிந்து வாழ்வதை எண்ணாதே, ஐயனே! விருப்பத்துடன் நீ
என் தலைவியின் தோளில் வரைந்த தொய்யிலின் அழகையும், உன்மேல் கொண்ட
காம மயக்கத்தால் இவள் மார்பில் தோன்றியிருக்கும் சுணங்கின் அழகையும் நினைத்துப்பார்;
சென்றவர்களெல்லாம் வாரிக்கொண்டு வருவதற்கு அங்கே பொருளும் குவிந்துகிடக்கவில்லை,
அப்படிச் செல்லாதவர்கள் எல்லாரும் பட்டினி கிடப்பதும் இல்லை,
இளமை நலத்தையும், காம நுகர்ச்சியையும் ஒருசேரப் பெற்றவர்கள்
செல்வத்தை நாடிச் செல்லும் அளவுக்கு அதில் அத்துணை சிறப்பு இருக்கிறதா? இருக்கின்ற நாளெல்லாம்
ஒரு கையால் தம் உடம்பை மூடிக்கொண்டு, மறுகையால்
ஓர் ஆடையை இரண்டாக்கிப் பெற்ற ஒரு பகுதியினால் உடுத்திக்கொள்ளும் வறியவரானாலும்
ஒன்றாகச் சேர்ந்து வாழ்பவர்கள் வாழும் வாழ்க்கையே வாழ்க்கை, அரிதினும் அரிது
சென்ற இளமையை மீண்டும் பெறுவது.
 
#19
வஞ்சனை கலவாத, இனிய மொழிகளைக் கூறி, அவற்றோடு
என்னை மெதுவாகத் தழுவிக்கொண்ட அந்த நாள்களில் அவை எல்லாம்
பொய்யே என்பதை நான் எவ்வாறு அறிவேன்? ஐயனே!
இந்தப் பெரிய ஊரே கொள்ளாத அளவுக்குப் பழிச்சொற்கள் உருவாகச் செய்து,
ஞாயிறு காயும் கொடிய காட்டுவழியில் செல்ல எண்ணிக்கொண்டிருப்பதை அறிந்தேன்,
நீ நல்லவன் இல்லை, நிச்சயமாக, இப்போது
போ, இப்போது போய் நீ மேற்கொள்ளும் பொருளீட்டும் தொழில் முடியுந்தறுவாயில்
அன்பு அற்றுப்போகுமாறு மாறுபட்டு, நான் வேண்டுமென்றே பிரிந்துவந்த என் மனைவி
எப்படி இருக்கிறாள் என்று தெரியுமா? என்று இங்கிருந்து அங்கு வருவாரிடம்
என்னுடைய நிலைமை பற்றி ஒன்றும் கேட்கவேண்டாம்; அப்படிக் கேட்டால்,
ஞாயிற்றைப் போல விளங்கும் உன் தலைமைச் சிறப்பெல்லாம் அழிந்துபோகுமாறு
உன்னுடைய குற்றமற்ற அருமையான பணிகள் முற்றுப்பெறாமல், அங்கு ஓர்
அவலநிலை உருவாகக் கூடும்.
 
#20
பலவிதமான வளங்களை விளைந்துகொடுத்து வாழச்செய்யும் பயன் நிறைந்த நிலங்களின் பசுமை அற்றுப்போக,
கடிதாய்ச் செல்கின்ற கதிர்களையுடைய ஞாயிறு, வருத்துகின்ற நெருப்பைக் கக்குவதால்,
தணியாத கொடுமையையுடைய கோடையிலும் குளிர்ச்சியை விரும்பி வரிசையாகத் திரண்டு வரும்
பசிப்பிணியின் கொடுமையால் வருந்திய பெரிய களிற்றுக் கூட்டத்தையும் தாங்கும்
மணிகள் விளங்கும் சிறந்த மலைகள் வெம்மையால் புழுங்க, நிலம் வெடிக்க,
தெளிந்த நீரையுடைய நீர்நிலைகள் புலர்ந்து புழுதிபட இருக்குமாறு மிகுந்த அனலையுடையது கொடுமையான பாலைக்காடு;
"கிளியின் மொழியைப் போன்ற இனிய மொழியையுடையவளே! உன் பாதங்களுக்கு அந்தப் பாதை எளிதானதோ?
மழை பெய்தலையே அறியாததே அந்தக் காடு" என்று கூறுகின்றீர்,
நிலையின்றி வீசும் காற்றினும் வரம்புகட்டிக் கூறமுடியாத அளவுக்கு நிலையற்ற இந்த வாழ்நாளில் உம் மார்பு அளிக்கும்
அருளையே நம்பி இருக்கும் நான் அவலம் கொண்டு அழிந்துபோகவோ?
"வாயில் ஊறுகின்ற நீர் அமிழ்தைப் போல் இனிக்கும் பற்களைக் கொண்டவளே! நீ குடிப்பதற்கு விரும்பினால்
அங்கே ஆற்றில் நீர் இருக்காது என்று தாகத்துக்குத் தண்ணீர் தருகின்ற அறத்தைச் செய்யமுடியாதே என்று கூறுகிறீர்,
ஆற்று நீர் சென்றுவிட்டால் அதனை மீண்டும் பெறமுடியாதது போன்ற இந்த இளமைக்காலத்தில், உம் நிலைத்த அன்பு என்னும்
தெளிவான தன்மையைக் கொண்டுள்ள நான் மனத்தடுமாற்றத்தோடு மாண்டுபோகவோ?
மாட்சிமைப்பட்ட அழகுள்ள, மூங்கிலை வெல்லும் தோளினையுடையவளே! நீ வந்தால் உன்னத் தாங்குவதற்குத்
தகுதியான நிழல் இல்லை அங்குள்ள மரங்களில் என்று கூறுகிறீர்!
நீண்ட நாள் நிழலில் இருக்கும் தளிர் வெளுத்துப்போவதைப் போல என்னுடைய மேனியழகும் ஆகுமென்று அறிவேன், உம்
காலடி நிழலைக் கைவிட்டுத் நான் தனித்திருக்க நினைப்பேனோ?
என்று நான் கூறினும்
அணைபோட முடியாத அளவுக்கு அனல் வீசும் காடு என்று கூறுகிறீர்,
அம்புகளும் உயரச் சென்று பாயமுடியாத அளவுக்கு உயர்ந்த பாறைகளைக் கொண்ட அந்த அரிய காட்டுவழியிலும்
பருத்த கழுத்தினை உடைய அழகிய ஆண்மானின் பின்னர்
அதன் பெண்மானும் இருப்பதைக் காணவில்லையோ? அவை ஒன்றைவிட்டு ஒன்று பிரியுமோ?


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

#21
பாலைப் போன்ற வெண்மையான கொம்புகளையும், உரலைப் போன்ற பரந்த அடிகளையும்,
ஈரத்துடன் நறுமணம் கமழும் மதநீரினையும் உடைய, தன் இனத்தை விட்டுப் பிரிந்த ஒற்றையானை
யார் வருவார் என்று பாதைநடுவில் காத்துநிற்கும் வேற்று நாட்டிற்குச் சென்று
பொருளீட்டுவதற்காகப் பிரிந்து செல்ல வேண்டும் என்ற
இரக்கமற்ற சொற்களை நீ சொல்லுகின்றாய்!
முன்னொருநாள், நலமிக்க என் நறிய நெற்றியை விருப்பத்துடன் நீவிவிட்டு
உன்னைவிட்டுப் பிரியேன், அஞ்சுவதை விலக்கு என்ற
நலமிக்க மொழிகளையும் நீ சொன்னாயே!
இவற்றுள் எதுதான் உண்மையாயிருக்கும்? அறிவுமயங்கிப் போனவனே!
தமக்குரியவர் இவர்தான் என்றுகொள்ளாமல், செல்வமானது
அவரவரின் பழைய வினைகளையொட்டி ஆள்விட்டு ஆள் மாறிச் சென்று தங்கியிருக்கும்,
அப்படிப்பட்ட பொருளுக்காக என்னைப் பிரிந்துசெல்கின்றாய், உன்னை இப்பொழுது
இமைமூடித் திறக்குமளவும் பிரிந்து வாழமாட்டாத இந்த மடவோளுடைய
மூங்கில் போன்ற அழகினைக் கொண்ட தோளிரண்டையும் மறந்து -
 
மேல்



#22
உண்பதற்குரிய பொருளைப் கடனாகப் பெறப் பணிந்து பேசி, இரந்து கேட்கும்போது இருக்கும் முகமும், தாம்
வாங்கிக் கொண்டதைத் திருப்பிக் கொடுக்கும்போது இருக்கும் முகமும் வேறுபடுதல்
பண்டைக் காலத்திலும் இந்த உலகத்துக்கு இயற்கை, அது இக்காலத்தவர்க்கும்
புதியது அன்று, அறிவுடைய பெரியீரே!
சிலையை உருவாக்கிய சிற்பி அதற்கு உயிரூட்டிய கண்மணியின் உயிரோட்டம் என்றும் நிற்பது போல,
நற்குணம் உடையவர் தாம் கூறிய மொழியினின்றும் மாறுபடார், நீ மகளிரின் நலத்தைத்
தேனைத் தேடிச் செல்லும் தேனீக்கள் போல் நுகர்ந்து, அதற்குக் கைம்மாறாக இறப்பினைக் கொடுக்கும்போது,
வேறு யாரோ என்றாகிவிட்ட நாங்கள் என்ன கூறமுடியும், உம் பொருளாசை குறித்து?
நறிய முல்லையின் அழகிய மொட்டுக்களைப் போன்று வரிசையாக அமைந்து
செறிந்து நிற்கும் பற்களைப் அன்று பாராட்டினாய்! இப்போது எம் பற்கள்
உதிர்ந்துபோகும் எம் முதுமை அழகையும் பாராட்டினாயோ? ஐயனே!
நெய்யைக் கூந்தலில் இடைச்செறித்து நீவிவிட்டு, நீல மணி ஒளிர்ந்ததைப் போன்றிருக்கும்
ஐவகையாகப் பின்னிவிடப்பட்ட எம் கூந்தலின் இயற்கை அழகைப் பாராட்டினாய், எம் கூந்தலில்
நாம் இன்று செய்திருக்கும் செயற்கையான ஒப்பனையைப் பாராட்டினாயோ? ஐயனே!
குளத்திற்கு அழகுசெய்யும் தாமரையின் இளம் மொட்டைப் போன்ற
எம் இளம் முலைகளை அன்று பாராட்டினாய்! இன்று எம் மார்பில்
தளர்ந்து கிடக்கும் அந்த முலைகளைப் பாராட்டினாயோ? ஐயனே!
என்று நான் கூற
அடித்து நீட்டப்பட்ட பொன் தகட்டைப் போல் ஒளி வீசும் எம் அழகிய தேமல் தம் அழகு கெட
ஞாயிறு காய்கின்ற காட்டுவழியைக் கடந்து போக எண்ணும் உம்மை, நான் என்னிடத்துள்ள
துன்பத்தைக் கூறி தடுத்து நிறுத்தியதும் உண்டோ? உம்முடன் கொண்ட பிணிப்பு வலிமை பெறுங்காலத்தில்
பிரிவு என்னும் தீவினை வந்து சேர்ந்த பொழுது -
 
மேல்



#23
பளிச்சென்று ஒளிவீசும் கொம்புகளையுடைய யானையை ஓசையெழுப்பி விரட்டுபவர்கள்
தினைப்புனங்களிலிருந்து வீசியெறியும் கவண்கற்கள், பூக்களைக் கிளைகளிலிருந்து உதிர்க்கும்
மலைகள் வழிமறித்து வெம்பிப்போய் நிற்கும் செல்வதற்கு அரிய கொடிய பாலைநிலத்தில்
தனியே நடந்து செல்ல, நான் இங்கே உன்னைவிட்டுப் பிரிந்து இருத்தல்
நகைப்பிற்கிடமாகும் இந்த ஆரவாரம் மிகுந்த ஊர் மக்களுக்கு;
இனிமேல் நான்
உண்ணவும் மாட்டேன், வாழவும் வாழேன்;
தோள்களை அணைத்துச் சுகம் கண்டபின் கைவிடப்பட்டவர்கள்
மிக்க அவாவுடன் நீர் குடித்துவிட்டுத் தூக்கியெறிந்துவிட்ட பனையோலைக் குடைக்கு ஒப்பானவர்கள்;
அன்புசெய்பவர்களால் விருப்பத்துடன் பயன்துய்க்கப்பட்டோர்
வாழ்வோர் வெளியேறிவிட்ட பாழ்பட்ட ஊரைப் போன்றவர்கள்;
ஒன்றாகச் சேர்ந்து விருப்பத்துடன் தம் பெண்மையை நுகரக்கொடுத்தவர்கள்
சூடிவிட்டுப் பின்னர் தூக்கிப்போட்ட பூவைப் போன்றவர்கள்;
என்று கூறுவதைப் போல
நானும் உன்னைப்பொருத்த அளவில் அப்படிப்பட்டவள் ஆகிவிட்டேன், சற்றும் குறையாமல்
கொன்றுபோடும் கொடிய எண்ணத்துடன் நாய்களால் சுற்றிவளைக்கப்பட,
வேடனின் வலையில் சென்று விழுந்த இளம் மானைப் போல
உன்னிடமே ஓடிவரும் என் நெஞ்சினை
என்னிடம் வராமல் உன்னுடன் பேணி வைத்துக்கொள்வாய்!
 
மேல்



#24
மனம் நடுங்குமாறு ஒரு செய்தியைக் கேட்டும், அதைப் பற்றி ஐயப்பட்டும், தாம்
அஞ்சிக்கொண்டிருந்த ஒரு நிகழ்ச்சி உண்மையாகி நம்மைக் கொடுமைப்படுத்தும் என்று கூறும் பழமொழி,
இனிய, சுவை மிக்க சொற்களையுடையவளே! மெய்யே முக்காலும்; உன்னுடைய உறவான என் கணவன்
புதுப்புதிதாக பலமுறை என்னைப் பாராட்டிப் பேச, நானும்
இதற்கு ஏதோ ஒரு காரணம் இருக்கிறது என்று எண்ணி, அதை ஆராய்ந்துகொண்டிருக்க,
மாசற்ற செல்வச் சிறப்பு மிக்க படுக்கையில் தழுவிக்கிடந்த உறவுக்குப் பின்னர்
உறக்கம் கொண்டு என் தோளில் படுத்துக்கிடப்பார் தம் கனவில், "ஆய்ந்த சித்திரத் தொழிலினையுடைய
வளையல்களை வரிசையாகத் தன் முன்கையில் அணிந்திருப்பவள் மிகுந்த துன்பத்துக்கு ஆளாகாமல்,
சிறந்த இல்லறக் கடமைகளைக் காத்துப் பேணிக்கொள்ளும் திறமையுள்ளவளாயிருப்பாளோ,
குத்தும் கொம்புகளையுடைய யானை தூரத்தே ஒளிர்கின்ற கானல்நீருக்காக ஓடும்
நீண்ட மலைவழியே செல்லும் கொடிய பாலைவழியில் சென்று அறவழியில் நின்று
பொருளீட்டும் பணி முற்றுப்பெறும் வரை" என்று குழறினார்; அழகிய அணிகலன்களை அணிந்தவளே!
தாம் கருதிய கருத்து அதுவாயின், அவரின்றி
நான் உயிர் வாழும் ஆற்றல் எனக்கில்லை என்பதால்,
என் தோளின் கோலத்தைத் துறந்து சென்றார் அவர் என்று அவரைப் பார்த்து
அறிவிலார் சொல்கின்ற பழி அவரோடே கூட நிற்க, அவரோடே
போய்விடும் என் உயிர் என்பதை அவரிடம் சொல்லிவிடு.
 
மேல்



#25
ஒளிமிக்க ஞாயிற்று மண்டிலத்துக்குரிய வடமொழிப் பெயரான பகன் என்ற கண்ணற்றவனின்
முகத்தைக்கொண்டவனான திருதராட்டிரனின் மக்களுள் மூத்தவனின் சூழ்ச்சியால்
ஐவர் என்று உலகம் போற்றும் அரசர்கள் உள்ளேயிருக்க,
வேலைப்பாடு மிக்க அரக்கு மாளிகையைக் கட்டுக்கடங்காத நெருப்பு சூழ்ந்துகொண்டதைப் போல்,
கிளர்ச்சியூட்டும் மதநீரைச் சொரிகின்ற, விரைந்து சுழலும் களிறுகள் உள்ளே அகப்படுக்கொள்ள
காய்ந்துபோன மூங்கில்களைக் கொண்ட உயர்ந்த மலையைச் சூழ்ந்து வெடிக்கும் பெருந்தீயை,
தீயினால் ஒளிவிடும் உருவத்தையுடைய அரக்கு மாளிகையை காற்றின் மகனான வீமன் உடைத்துத் தன்
உள்ளத்துக்கு நெருங்கிய உடன்பிறப்புகளோடு பிழைத்து வெளியேறியது போல
கணைமரத்தைப் போன்ற பருத்த துதிக்கையினால் தன் இனத்தைக் காக்கும் அழகிய வேழம்
பரந்தும் சூழ்ந்துகொண்டும் புகையுடன் எரியும் நெருப்பை, வழியேற்படுமாறு மிதித்து, தன்னுடைய
இனத்தோடு சேர்ந்து போகும் குன்றும் கொதிக்கும் கொடிய காட்டுவழியைக்
கடந்து சென்றால், ஐயனே!, இவளின் நிலைமை என்னாகும் என்று கேளுங்கள்;
ஒன்றாகக் கூடியிருக்கும்போது மலர் போன்ற மலர்ச்சியுள்ளதாய் இருந்துவிட்டு, சிறிதளவு நீர்
விலகியிருக்கும்போது கலங்கி அழுவதை நிறுத்தாத கண்கள் என்றும் இருக்கின்றனவே!
சிறப்புகள் பல செய்து அருகிலிருந்து புகழ்ந்து பாராட்டிவிட்டு, அவர்
புறத்தே அகன்றவுடன் பழி தூற்றுகின்ற புன்மையாளர் போல -
அருகிருந்து நீர் அன்புசெய்யும் காலத்தில் கைகளில் செறிந்திருந்து, ஒரே ஒரு நாள் நீர்
பிரிந்திருக்கும்போதும் உடல் மெலிய கைகளினின்றும் கழன்றோடும் வளைகள் என்றும் இருக்கின்றனவே!
ஒருவர் செல்வத்துடன் வாழுங்காலத்தில் அவருடன் சேர்ந்து அவருடைய வளத்தை உண்டுவிட்டு, அவர்
வறுமையுற்ற காலத்தில் எந்த வித உதவியும் செய்யாத உணர்வில்லாதவரின் தொடர்பு போல -
ஒருநாள் நீர் அன்புசெய்யும்போது சிறந்த ஒளியுடன் விளங்கி, ஒருநாள் நீர்
பாராட்டாமல் இருக்கும்போதும் ஒளியிழந்து பசந்துபோகும் நெற்றி என்றும் இருக்கின்றதே!
உள்ளம் பொருந்திய நட்பினால் ஒருவரின் அந்தரங்கமான செய்தியைத் தெரிந்துகொண்டு, அதனை
அவரை விட்டுப் பிரிந்துவிட்ட போது பிறர்க்கு உரைக்கும் பண்பில்லாதவர்கள் போல் -
என்றெல்லாம் இங்கே
நான் உன்னிடம் கூறுவதால் என்ன பயன்? என்னைக்காட்டிலும்
நீ நன்கு அறிந்தவன், நெடுந்தகையே! மேகமானது
மழைபொழிவதினின்றும் மாறுபட்டிருக்கும்போது இந்த உலகம் எப்படிப் போய்விடுமோ, அப்படி ஆகும், உன்
அன்புகாட்டலும் மாறுபட்டிருக்கும்போது இந்த ஆய்ந்த அணிகலன்களை அணிந்தவளின் வனப்பு.
 
மேல்



#26
ஒற்றைக் குழல் அணிந்த பலராமனின் வெள்ளை நிறம்போன்ற கொத்துக்களைக் கொண்ட வெண்கடம்பும்,
ஒளிவட்டமுள்ள செல்வனான ஞாயிற்றின் நிறம் போன்ற அரும்புகள் மலர்ந்த செருந்தியும்,
சுறாமீன் கொடியைக் கொண்ட காமனின் நிறம் போன்ற வண்டுகள் மொய்க்கும் காஞ்சியும்,
அவனது இளையோனாகிய சாமனின் நிறம் போன்ற நெருக்கமாய் மலர்ந்த புலிநகக் கொன்றையும்,
எருதுக் கொடியையுடைய சிவனின் நிறம் போன்று மலர்ந்த இலவமும், அங்கே
குற்றமற்ற சிறப்பையுடைய இந்த ஐவரும் நிற்பது போல
மொட்டுக்கள் மலர்ந்து விளங்கும் மரங்களால், நீர் வந்து மோதும் ஆற்றங்கரை அழகுபெற,
வருத்தத்தை உண்டுபண்ணும் வகையில் வந்தது இளவேனில் மேன்மையுடன்;
பல புள்ளிகளையுடைய கூட்டமான வண்டுகள், புதிதான மலர்களில் தேனை உண்ணும் இளவேனில் பருவத்தில்,
தன்னுடைய முந்தைய அழகைத் தொலைத்த என் பருத்த மென்மையான தோள் அழகை எண்ணிப் பார்ப்பாரோ,
பகைவரால் அலைக்கப்பெற்றுத் தம்மை அண்டினோர்க்கு, அவர் வருந்தாமல் அவரைக் காத்துப் பேணி,
தமது வெற்றிப்புகழை உலகத்தவர் பாராட்டப் புதிய நாட்டில் தங்கியிருக்கும் காதலர்?
எத்திசையிலும் தேனீக்கள் ஆரவாரிக்கும் திருமருத முன்துறையில்
பழிச்சொல் அற்ற என் அழகு வாட்டமுறுவதைத் தடுத்து நிறுத்தி அருள்செய்வாரோ,
அன்புகொண்டு தம்மை அண்டினோரைத் தாங்கித் தம்முடைய
புகழ் பரவ, உலகெல்லாம் அதனைப் போற்ற வேற்று நாட்டில் தங்கியிருக்கும் காதலர்?
ஆற்றில் நீர் அறலாய் ஒழுகும் இளவேனிற்காலத்தில் என் அழகிய நெற்றி மாறுபட்டு
ஒளிவீசும் தனது பெரும் வனப்பை இழந்துபோவதைக் காத்து அருள்செய்வாரோ,
தமக்கு வரும் கேட்டினை அஞ்சித் தன்னை அண்டினோரை, அவர் வருந்தாமல் காத்துப் பேணி,
முறைமையின்றிப் பொருளுக்கு ஆசைப்பட்டுப் பிரிந்துசென்ற அந்த நாட்டில் தங்கியிருக்கும் காதலர்?
என்று சொல்லி நீ
வருந்தவேண்டாம், வாழ்க, தோழியே!, நம் காதலர்
போரிட்டு எதிர்த்து நிற்கும் யானைப்படையுடன் போரினை எதிர்கொண்டு எழுந்துவந்த பகைவருடனான
போரில் மேலான ஆற்றல்காட்டி வெற்றிசூடியவராய்த்
திரும்பி வருகிறார் என்று வந்து கூறுகின்றனர் அவர் செய்தியைத் தாங்கிவரும் தூதுவர்.
 
மேல்



#27
பிறருக்குக் கொடுப்பதில் குறைகாட்டாமல், அறநெறிகளை அறிந்து அவற்றின்படி ஒழுகுகின்ற
தீதற்றவனின் செல்வம் படிப்படியாக வளர்வது போல் இனிய கரைகளில் மரங்கள் சிறிதுசிறிதாகத் துளிர்க்கவும்,
மயங்க வைக்கும் மென்மையான மொழியும், பெண்மான் போன்ற அழகிய பார்வையும் கொண்ட
மகளிரின் பற்கள் போல் மணக்கின்ற காட்டு முல்லை அரும்புகள் மலரவும்,
காதலரைக் கூடிக் களித்த பெண்களின் கழன்று விழுந்த கருங்கூந்தல் போல்
பூந்தாதுக்களோடும், தளிர்களோடும் அரித்துக்கொண்டு ஓடும் குளிர்ந்த ஆற்றுநீர் அழகாகக் காட்சியளிக்கவும்,
அறிவற்ற அமைச்சன் ஆலோசனை கூற ஆளுகின்ற, தன் பெருமை குன்றிய அரசனின் நாட்டுக்குள்
வேற்றுநாட்டவன் படைகள் கொஞ்சங்கொஞ்சமாய் ஆக்கிரமிப்பது போல் வந்து தங்கியது இளவேனில்;
நிலத்திற்கு அழகுசெய்யும் மரத்தின் மேலிருந்து நிமிர்ந்து கூவும் குயில்கள் என்னை எள்ளி நகையாட,
நலம் சிறந்த என் மேனியழகு தன் பொலிவு குன்ற, நம்மைத்தான் அவர் மறந்துவிட்டுப்போகட்டும்,
அணிகளால் அழகுபெற்ற மகளிர் கண்ணுக்கு இனிதாய்த் தோன்றி மகிழ்ச்சியூட்ட,
நாடே பொலிவுபெறுகின்ற, புகழ்ந்து முடியாத கூடல்விழாவையும் அவர் நினைத்துப்பாராரோ?
மலையில் மயில்கள் மகிழ்ந்து ஆட, பேரொலியுடன் ஊர்மக்கள் பழிச்சொற்கள் கூற,
என்னிடம் முன்பு இருந்த அழகு மொத்தமும் அழிந்துபோக, நம்மைத்தான் அவர் மறந்துவிட்டுப்போகட்டும்,
பகைவரை வென்று அழிப்பவனும், கடலில் நின்ற மா மரத்தை அழிப்பவனும் ஆகிய
வெற்றியையுடைய முருகன் இருக்கும் திருப்பரங்குன்றத்தில் நிகழும் வேனில் விளையாட்டையும் விரும்பி வாராரோ?
கருமையான அழகிய மலர் போன்ற மைதீட்டிய என் கண்களில் மயக்கத்தை ஊட்டி, அவை மகிழும்படி
கூறிய பொய் மொழிகளால் நெஞ்சைப் பறிகொடுத்த நம்மைத்தான் அவர் மறந்துவிட்டுப்போகட்டும்,
அழகு செய்துகொண்ட மகளிர் தம் தோழியருடன் சேர்ந்து ஆடுகின்ற,
வையையில் நீண்டுயர்ந்த மணல்மேட்டு இன்ப நுகர்ச்சியையும் அவர் நினைத்துப்பாராரோ?
என்று பலவாறாக
நோய் மிகுந்த நெஞ்சத்துடன் வருந்தவேண்டாம் தோழியே!
நாம் இல்லாத தனிமைத் துயருடன், தனிமையில் மனத்தை நடுங்கவைக்கும் இளவேனிற்காலத்தில்,
காமவேளுக்குரிய விழா நடக்கும்போது கலங்கிப்போவாளே பெரிதும் என்று
பகைவர் மயக்கமுறும் வகையில் விரைவாக ஓடும் திண்ணிய தேரினை ஓட்டிக்கொண்டு
நாம் விரும்பும் காதலர் நமக்குத் துணையாக இருக்க விரைந்து வருகின்றார்.
 
மேல்



#28
பாடிப் போற்றத்தக்க சிறப்பினையுடைய கிளைகளிலும், சுனைகளிலும்,
மிகுந்த சிரமப்பட்டுக் கொய்யவேண்டாத அளவுக்கு விரும்பித் தாமே கொடுப்பவை போல்,
மலர்ந்த பூக்கள் மணக்கும் மாலைகளைக் கட்டிச் சூடிக்கொள்வாருக்காக,
அவர்களின் காதணிகளைத் தொடுமாறு மலர்க்கொத்துக்கள் தாழ்ந்து துறைகள்தோறும் அழகு செய்ய,
திருமகளின் அழகிய மார்பில் உள்ள முத்தாரம் போல் அழகு கொண்டு,
தலைக்கோலம் என்ற அணியைத் தாழ்வாக அணிந்த கூந்தலைப் போல், சிவந்த மணலினிடையே
வையையின் ஒழுகுகின்ற ஒளிவிடும் சிறிய நீரோடை ஆற்றை ஊடறுத்துச் செல்லும் இளவேனிற்காலத்தில்,
மலர்ந்து எங்கெணும் நிறைந்திருந்தன மலர்கள், தம் துணையைக் கூவி அழைக்கின்றன குயில்கள்,
அவரோ என்னை விட்டுப் பிரிந்து இருக்கிறார், அதை எண்ணி மனம் பித்துப்பிடிக்கிறது இந்த இளவேனிலில்,
தாங்கொணாத் துன்பத்தையும் அவலத்தையும் தரும் பிரிவுநோயை எப்படித் தாங்கிக்கொள்வாள் என்னாமல்,
வருந்தும்படியாக அந் நோய் மிகுமானால், வளைந்திறங்கும் தோளினாய்! அவரின் அன்பால் என்ன பயன்?
புதர்கள்தோறும் மலர்கள் பூத்தன, பூஞ்சோலைகள்தோறும் கூட்டமான வண்டுகள் மொய்க்கின்றன,
நம்மைச் சுற்றிப் பழிச்சொற்கள் மிகுந்தன, அவரோ என்னை விட்டுப் பிரிந்து இருக்கிறார்,
துணையில்லாத நெஞ்சுடன் இவள் துயர் தாங்கும் ஆற்றல் இல்லாதவள் என்றிராமல்,
என் நெற்றியில் பசலை படர்கின்றது, நொடித்திறங்கும் தோளினாய்! அவரின் அன்பால் என்ன பயன்?
ஆற்றில் வரும் நீரும் மெல்ல மறைகின்றது, வண்டுகள் கிளைகளில் மொய்த்து ஆரவாரிக்கின்றன,
மாமரங்கள் தளிர்விடுகின்றன, அவரோ நம்மை மறந்து, நம்மைப்பற்றி நினைக்கவும்மாட்டார்,
நீலமலர் போன்ற அழகினைக் கொண்ட கண்கள் தனிமைத்துயரைத் தாங்கமாட்டாமல்,
தூங்காமல் கிடக்கின்ற நோய் மிகுந்து நிற்க, புதிய வளையணிந்தவளே! அவரின் அன்பால் என்ன பயன்?
என்று பலவாறாக
ஆராய்ந்த அணிகளை அணிந்தவளே! அவ்வாறு உரைக்காதே! தொலைவிலிருக்கும் காதலர்க்கு
நாம் செய்தி அனுப்பத் தேவையில்லை, அவரைப் பிரிந்திருக்கும் நம்மைக்காட்டிலும்
நம்மைப் பிரிந்து வாழ்வதை அவர் பொறுக்கமாட்டார்,
வருந்தி என்ன செய்யப்போகிறாய்? வந்துவிடுவார் விரைவில்.
 
மேல்



#29
ஒரு பெண்ணின் பழைய அழகை, அளவுக்கு மீறி அவளின் மசக்கைநோய் நலிவுறச்செய்வதால்
அவளுக்கு வேண்டியோர் நொந்துபோக, பின்னர் அவள் பிள்ளைபெற்றுப் படுத்துக்கிடப்பதைப் போல்
பலவாறாகப் பயனைத் தந்த பசுமையற்றுக் கிடக்கும் அகன்ற நிலவெளி
புன்மையான இளங்கதிர்விடும் தூய்மையற்ற நிலை தீர்ந்து கதிர்விட்டுப் புது அழகினால் பொலிவுற,
மகளிர் மணலில் கோடுபோட்டு விளையாடியதைப் போல், மணலில் ஆற்றுநீர் சென்ற வடுக்கள் விளங்க,
இளம்பெண்களின் ஐந்தாகப் பிளந்த கூந்தல் போல் மணல்மேட்டை ஊடறுத்து நீரோடை வழிந்தோட,
மா மரம் துளிர்விட்ட தளிரின் மேல், மாமை நிற மகளிரின் அழகுத் தேமல் போல,
அழகிய இதழ்களைக் கொண்ட பலவான மலர்களின் மென்மையான மகரந்தப்பொடிகள் படிந்திருக்க,
சிறப்பு மிக்க இளவேனில் பருவம் வந்து தங்கிய இக் காலத்தில்,
தொலைநாட்டில் இருப்பவரிடம் சென்ற என் நெஞ்சினை, சிறிதளவே பேசுபவளே!
நீ கூறும் அளவுக்கும் மேல் தடுத்து நிறுத்துகின்றேன், இந்த மன அடக்கத்தையும் மீறிக்கொண்டு
இதழ் விரிந்து பனித்துளிகளை ஏற்றுக்கொள்ளும் வகைவகையான பல மலர்களை வருடிக்கொண்டு
பிரிவுத்துன்பம் மிகுந்திருக்கும் வேளையில் வாடைக் காற்று வந்து வருத்துகின்றதே!
இளவேனிற்பருவம் வருமே என்றும் எண்ணிப்பாராமல், பிரிந்துசென்றவரிடம் பற்றுக்கொண்டு மனம் வாடும் நிலையை
மனத்தால் எண்ணி, நெருப்பிலிட்டுச் சுட்ட பொன்னாலான அணிகளை அணிந்தவளே! மறைத்துவைத்தேன், அதை மீறி
விழுகின்ற ஞாயிற்றின் கதிர்களால் மலர்ந்த பூக்களின் புதிய தேனை உண்ணும் கரிய தும்பிகள்
யாழோசை போன்று ஒலிக்கும் இன்னிசை எழுப்புகின்ற மாலைக்காலம் வந்து வருத்துகின்றதே!
என் வளையல்களைக் கழன்றோடச் செய்த அவரையே நோக்கிச் செல்லும் என் ஆருயிரை,
குற்றமற்ற சொற்களையுடையவளே! இழுத்து நிறுத்துகின்றேன், அவ்வாறு நிறுத்தினாலும்
நீண்டிருக்கும் நிலவொளி விரித்துவிட்டுத் தன் கதிர்களைப் பரப்ப, அதனால் வரிசையான இதழ்கள் மலர்ந்து
மணமிக்க மலர்கள் வீசும் நறுமணம் இரவில் வந்து வருத்துகின்றதே!
என்று சொல்லி
வருந்துகின்றாய்! செறிந்திருந்த உன் கைவளையல்கள் கழன்று விழ, தொலைநாட்டுக்குப்
பிரிந்து சென்று ஈட்டும் பொருளிடத்தில் ஆசைகொண்டு, திரும்பிப் பாராமல் சென்று, இப்போது நம்
களைதற்கரிய துயரத்தைப் போக்குபவராய்த் திரும்பி வந்துவிட்டார்,
திருத்தமான பற்கள் பளிச்சிடும் உன் வாயிலிருந்து வெளிப்படும் இனிய சொற்களை விரும்பி.
 
மேல்


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

#30
அரிய தவத்தைச் செய்தவர்கள் வேண்டியதை வேண்டிய அளவு பெற்றுக்கொள்வது போல, அழகாக
மலர்ந்து கொள்ளாத கிளைகள்தோறும் வேண்டிய அளவு தேனை அமர்ந்து உண்டு
களித்து ஆரவாரிக்கும் வண்டுகளோடு, தம் பசித்துன்பம் நீங்கி, எல்லாப் பக்கங்களிலும்
கரிய தும்பிகள் மலர்களில் மொய்த்துக்கொண்டிருக்க எதிர்கொண்டுவந்த இளவேனிற்காலத்தில்,
தியுல் இன்றி நான் இரவைக் கழிக்க, நீர்நிலைகளில் இனிமையாக நீர்விளையாட்டு ஆடி
மயிலின் தன்மையுள்ள பரத்தையரின் நறுமணத்தை நுகர்ந்துகொண்டு நம்மை மறந்திருப்பாரோ -
வெயில் ஒளி நுழையமுடியாத விரிந்த மலர்கள் உள்ள குளிர்ந்த சோலையில்
குயில்கள் கூவிக் களித்திருக்கும் இன்பமான பொழுது என்று அவரிடம் கூறுவார் இருந்தால்?
நள்ளிரவிலும் நான் துயர்ப்பட்டு வருந்த, பருத்த அழகிய அணை போன்ற மென்மையான தோள்களும்
மான் போன்ற பார்வையும் கொண்ட பரத்தையரோடு கூடி நம்மை மறந்திருப்பாரோ -
குன்றாத புகழையுடைய கூடல்மா நகரில் அரும்புகள் மலரும் நறிய முல்லைப் பூக்களில்
தேனீக்கள் களிப்புடன் ஆரவாரிக்கும் இன்பமான பொழுது என்று அவரிடம் தெளிவுபடுத்துவார் இருந்தால்?
அவரை அடைவதற்குரிய நான் இங்கே அழகிழந்து வாட, காமன் விழாவில்
சிறந்த அணிகலன் அணிந்த பரத்தையரோடு விளையாடி மகிழ்ந்திருப்பாரோ -
பெறுவதற்கரிய இனிய இளவேனிற்காலத்தில் ஒளிவிடும் பூங்கொத்துக்கள் நிறைந்த மணல்மேடுகளைச் சுற்றி
நீரோடையாய் ஓடுகிறது வையைநீர் என்று அவரிடம் உரைப்பவர் இருந்தால்?
என்று கூறி,
தணியாத பிரிவுத்துயரத்தில் அழுந்திக்கிடக்கும் அந்தப் பேரழகி தன் அழகை மீண்டும் பெற
உன் அழகு ததும்பும் நீண்ட தேரினை ஊரை நோக்கி ஓட்டுவாயாக, பணிந்து உன்
அழகிய கழல்களை அணிந்த கால்களைப் பணியாத
அச்சங்கொண்ட பகைவரைப் போன்று நடுங்கித் துடிக்கிறாள் பெரிதும்.
 
மேல்



#31
முன்பு பெருகி வந்த வெள்ளம் வற்றிப்போய் வாய்க்காலளவாய் மாறி, கலங்கல் தெளிந்து, அழகுடன்
நெடிய குளங்களின் அயல்புறமெல்லாம் நுண்மணல் படிந்திருக்க, அம் மணலின்
அறல் மறையும்படி, கோலம்செய்வன போல் ஈங்கையின் வாடிய பூக்கள் கழன்று கீழே விழ,
பிரிந்தவரின் நெற்றியைப் போல் பூத்த பீர்க்கம் பூக்கள் மறைந்துபோக, காதலரைக்
கூடிக்களித்த மகளிரின் முகம் போல பொய்கையானது பூக்களைப் புதிதாய்த் தோற்றுவிக்க,
மெய்யை நடுக்கும் பின்பனிக்காலப் பனியுடன், முன்பனிக்கால வாடையும் சேர்ந்து
நம்மைச் செயலிழக்கும் நிலைக்குத் தள்ள, நெஞ்சத்தைக் கலக்கும் இளவேனில் இது,
தப்பாமல் வருவேன் என்று, அழகிய அணிகலன்களை அணிந்தவளே! நம்மைச் சேர்ந்தவர் உரைத்துச் சென்ற காலம்;
படைகள் ஒன்றோடொன்று மோத, பகைவரை வென்று, அவரின் நாட்டைக் கைப்பற்றி மீளும் தலைவர்
அசைந்தாடிவரும் களிற்றின்மேல் வரும் அழகைக் காண விடுமோ,
பயன் மிக்க திங்களின் பல கதிர்கள் பாலைப் போல் பொழியும் இரவில்
என் ஒளிவிடும் அணிகலன்களும் சில்லிட்டுப்போகும்படி குளிர்ச்சியாக உலா வரும் இந்த வாடை?
தன் முயற்சி சிறக்க வென்று, அழகிய நல்ல குதிரையின் மேலேறி
தன் வாள் திறத்தால் வெற்றியை ஈட்டிவரும் நம் தலைவரின் வனப்பினைக் காண விடுமோ,
நீண்ட கரும்பில் உயர்ந்து நிற்கும் பூவின் நிறம் வாடிப்போக, தூறிக்கொண்டு
தோள்கள் நடுங்கி மார்பில் குறுக்காக அணைத்துக்கொள்ள தூவுகின்ற இந்தத் தூறல்?
பகைவரை வென்று, அவரின் திறைப்பொருளைக் கைக்கொண்டு, பாய்ந்துவரும் திண்ணிய தேரில் வருபவரின்
பல்வகையான தலைமைச் சிறப்பின் அழகை நாம் காண விடுமோ,
புகையைப் போல் புதரைச் சுழ்ந்து, பூவாய் அழகிய கள் பொதிந்திருக்காத
முகை போன்ற வெள்ளிய பற்களின் முனை ஒன்றோடொன்று அடித்துக்கொள்ளும்படி சூழ்ந்துகொண்ட கடும் பனி?
என்று
வீணான சொற்களை வழங்காதே! ஒளிவிடும் அணிகலன்களை அணிந்தவளே! வருந்துவாள் இவள் என்று
தாம் குறித்த நாளின் எல்லையை எண்ணிப்பார்த்து, தாம் சொல்லியது பொய்யாகிப்போகாமல்
வீரம் மிக்க வேல் படையையுடையவர் புகுந்துவிட்டார்
நீண்டு உயர்ந்த மாடங்களைக் கொண்ட கூடல்நகரின் வாயிலில் தம் நெடிய கொடியை உயர்த்திக்கொண்டு.
 
மேல்



#32
கத்தரிக்கோலால் இடையிடையே வெட்டப்பட்ட கார்மேகத்தின் அழகினைப் பெற்ற கூந்தலைப் போல்
அழுக்குகள் இன்றி விளங்கிய உலர்ந்த மணல் அது, அம் மணலை
மெல்லிதாகப் பிடித்துவிட்டதைப் போன்று கருமணல் ஒளிர, அதன் மேல், நீண்ட கூந்தலில் சூடிய
அழகிய அணிகலன்களை நடுவிலிட்டுச் செய்த பொன்னாலான அழகிய தலைமாலை போல
கட்டுவிட்டு மலர்ந்த வேங்கையின் விரிந்த பூக்கள் உதிர்ந்து மணம் பரப்ப,
தெளிந்த நீராலும், தூய முழுமதி நாளாலும் அழகுபெற,
பிள்ளைபெற்றவள் மேனியில் காணப்படும் தேமல் போல் பளபளப்பான தளிரோடும்,
சான்றோரின் அடக்கத்தைப் போன்று, அரும்புகளை மலரவிடாமல் அடக்கிவைத்திருக்கும் கிளைகளோடும்,
இசைவல்லார் இசைக்கும் இனிய யாழிசை போன்று வண்டுகள் ஒலிக்கும் புதர்களோடும்,
நல்ல கூத்தாடுபவரின் ஆட்டம் போன்று நயமாக ஆடும் மலர்க்கொடிகளோடும்,
செல்வம் நிலையாது என்று உணர்ந்தவரின் ஈகையைப் போன்று பூங்கொத்துக்களைச் சொரியும் மரங்களோடும்,
காதலனும் காதலியும் தழுவிக்கிடப்பதைப் போன்று பின்னிக்கிடக்கும் கொடிகளோடும், வருகின்ற இளவேனிலே!
உன்னை விரும்புபவருக்கு நீ மிகவும் நல்லவள்! எம்மைப் போல
பிரிவினால் பசலை பாய்ந்தவரின் துன்பமாகிய நோயைத் தனது பகையாகக் கொண்டு அதைத் தணிவித்து, எம்
இன் உயிரை மீட்டுத்தரும் மருந்தாகி, 'தழுவிக்கிடக்கும்
காதலரின் பற்களைப் போன்று குளிர்ந்த அருவியருகே பூத்த நறிய முல்லையின்
மலரும் நிலையிலுள்ள மொட்டுக்களை நிறைய அணிந்துகொள்ளுங்கள், மணங்கமழும் கூந்தலில்' என்கிற
தூதினைச் சுமந்து வந்திருக்கிறது அந்த இளவேனில், தோழியே!
துயர் தீர்ந்த இனிய மொழிகளோடு ஏற்பாடுசெய்வோம் விருந்துக்கு.
 
மேல்



#33
பெருமிதம் நிறைந்த இந்த உலகத்தின் சிறந்த அழகைக் காண்பதற்காக
ஆறு கண்விழித்துப் பார்ப்பதைப் போல, குளங்கள் நிறைந்து மலர்களால் அழகுபெற,
பளிங்கு மணி போன்ற கண்ணாடிக்குள் பவளத்தைப் பதித்துவைத்ததைப் போல்,
முறுக்கு அவிழ்ந்த முருக்க மரத்தின் இதழ்கள் அழகிய குளத்தில் காம்பவிழ்ந்து உதிர,
தெளிந்த குளத்து நீருக்குள் தெரியும் பூக்களின் உருவத்தைக் கண்டு, அவற்றைச் சுற்றி வண்டுகள் ஒலியெழுப்ப,
மணிமணியான அரும்புகள் மலர்ந்து மரத்தையெல்லாம் மலர்களால் வேய்ந்துநிற்க,
காதலர்கள் கூடிக்களித்தவராய், தழுவிய கைகளை நெகிழவிடாமல் இருக்க,
மலர்களில் மகரந்தங்களை மலர்விக்கும் இளவேனில் வந்துவிட்டது! இன்னும் வரவில்லை, நம்முடைய,
மலர்போல் அழகுவாய்ந்த மைதீட்டிய கண்கள் புலம்பி அழுமாறு நம்மைப் பிரிந்து சென்றவர்;
செந்தழல் போன்ற செந்நிறப் பூக்களை இலவமரங்கள் பூக்கவும்,
நெற்பொரி போன்ற வெண்ணிறப்பூக்களைப் புங்கமரங்கள் உதிர்க்கவும்,
கோங்கத்தின் புதிய மலர்கள் பொன் துகளைப் போன்று மகரந்தங்களை உதிர்க்கவும்,
தனித்திருப்பாரை வெளியே தள்ளி, எள்ளி நகையாடி, வெறுப்புடன் வந்து
கைதட்டிச் சிரிப்பது போல் வந்தது இளவேனில்; அழிந்துவிடுமோ என் அழகிய பெண்மைநலம் என்று
அதனைப் போர்ப்பது போலும் என் மேனியில் படர்கிறது பசப்பு;
இதுகாறும் நொந்திருந்த மரக்கிளைகள் இப்போது நம்மைப்பார்த்துச் சிரிப்பது போல் மலர்களால் நிறைந்துள்ளன,
வருத்ததுடன் அதை நினைந்து உடைந்து சிதறுவது போல் ஆனது என் நெஞ்சம்; என் நிலைகண்டு, நகையாடிக்
கூட்டமாய்ச் சேர்ந்து ஆடுகின்றன போலும் மயில்கள், கையிலிருந்து
கழன்று கீழே விழுவது போன்றிருக்கின்றன வளையல்கள், என் கண்ணிலிருந்து ஒழுகுவது போல்
ஒழுகுகின்ற நீர் ஆற்றில் ஓடுகின்ற இந்த இளவேனில் பருவத்திலும் அவர் வரவில்லை,
இன்னும் மிகும் போலும் இந்தக் காதல்நோய்!
யாழ் நரம்பின் இனிய இசையைத் தாளம் கெடாதவாறு நிறுத்த உதவும் குழலோசை போல்
இனிதாய் இசைக்கும் தேனீக்களோடு தும்பிகளும் ஒலித்தபடியே தேனை அருந்த,
ஒரு தூதுச் செய்தியையாவது அவர் அனுப்பவில்லை, நம்மைத் துறந்துவிடுவாரோ? நாம் நொந்துபோகுமாறு
கரிய குயிலும் கானம் பாடுகிறதே! அந்தோ!
என்று கூறி,
மனம் வேறுபட்டு, நீ உன்னை இகழும் குயிலையும், அவரையும் கோபிக்காதே!
நீல மலர் போன்று மைதீட்டிய கண்களையுடையவளே! அள்ளியெடுத்த கூந்தலை அப்படியே விட்டுவிட்டு நாம் எழ,
குறித்து சென்ற காலத்திற்குள், தாம் கூறியது பொய்த்துப்போகாமல்,
மாலை தொங்கும் அகன்ற மார்பினையுடைய அவர் விரைந்து வருகிறார்,
காற்றைப் போன்று கடுமையாய் விரையும் தன் திண்ணிய தேரினைச் செலுத்திக்கொண்டு.
 
மேல்



#34
பெருமையையுடைய உயிர்களெல்லாம் மகிழ்ச்சியுற, இந்த அகன்ற உலகத்தைப் பாதுகாத்து,
பெரும் வெள்ளமாய்ப் பாய்கின்ற நீரை எங்கும் பரப்பி உயிர்களை வாழச்செய்து, நீர் வற்றிய பின்
சிறிதளவு நீருடன் அறல்பட்டு ஒழுகினாற்போல் ஓடும்போது, அந்த அகன்ற ஆறு அழகுபெற,
முன்னர் ஓர் உதவியைத் தமக்குச் செய்து முனைப்புடன் செயலாற்றியர் கெட்டுப்போன காலத்தில்
பின்னர் ஓர் உதவியை அவருக்குத் திருப்பிச் செய்யும் பெரும் பண்பாளரைப் போன்று,
நீரூட்டி வளர்த்த ஆற்றின்மீது பல மலர்களை மரங்கள் தூவிவிட, தேனீக்கள் பாட, வண்டுகள் ஒலியெழுப்ப,
இனிமை பொருந்தின இளவேனில் வந்துவிட்ட பொழுதில்,
மலர்ந்த காஞ்சிமரப் பூக்களில் மகரந்தங்களைக் குடைந்து கரிய குயில்கள் குரலெடுத்துக் கூவும்போதும்,
எம்மைப் பிரிந்து செல்ல அஞ்சாதாவர் எமக்கிழைத்த தீமையை மறைத்துக்கொண்டேன், அப்படி மறைத்தாலும்
பொய்ச்சாட்சி சொன்னவன் கீழே இருந்தால் அந்த மரம் பட்டுப்போவதைப் போல, அழகெல்லாம் வாடி
உள்ளே தீயை மூட்டியதைப் போல் என் நெஞ்சம் சுடுகின்றதே! நான் என்ன செய்வேன்?
மலர்களின் பாரம் தாங்கமாட்டாத மரக்கிளைகள் மீது வண்டினம் வந்து மொய்க்கின்றபோதும்,
பிரிவு என்ற உறுதிப்பாட்டில் தளராதவர் எமக்கிழைத்த தீமையை மறைத்துக்கொண்டேன், அப்படி மறைத்தாலும்
நல்லாட்சியினின்றும் நழுவிப்போன மன்னவனின் கீழுள்ள குடிமக்கள் போலக் கலங்கி,
பொறுமை இழந்து கண்ணீரை உகுக்கின்றனவே கண்கள், நான் என்ன செய்வேன்?
மொட்டுவிட்டு மலர்ந்திருக்கும் பூஞ்சினைகளில் சுரும்புகள் யாழிசையைப் போல் இசைக்கின்றபோதும் 
பொருளீட்டம் என்ற கொள்கையில் தளராதவர் இழைத்த தீமையை மறைத்துக்கொண்டேன், அப்படி மறைத்தாலும்
தன் சுற்றத்தார் அழிந்துபோக அவர் அழிவின்மீது வாழ்பவனின் செல்வம் தேய்ந்து அழிவது போல, பொலிவிழந்து
தோள்வளைகள் நிற்காமல் கழன்று விழுகின்றன என் தோள்களினின்றும், நான் என்ன செய்வேன்?
என்று கூறி,
உன்னுள்ளே இருக்கும் நோயை உரைக்கின்றாய், பெண்ணே! நாம்
எண்ணிக்கொண்டிருக்கும் நாள்வரையில் இல்லாமல், காதலர்
குதிரையைப் பூட்டிக்கொண்டு வந்துவிட்டார்,
கண்ணுக்குற்ற வருத்தத்தைக் கைகள் விரைந்து சென்று துடைப்பது போல்.
 
மேல்



#35
சோம்பல் இல்லாதவனின் செல்வத்தைப் போல் மரங்கள் தழைத்துச் சிறக்க, அந்தச் செல்வத்தை
அவனால் படியளக்கப்பட்டார் உண்பதுபோல், பலவான கிளைகளிலும் வண்டுகள் ஆரவாரிக்க,
மாமை நிறத்தவளின் மேனியைப் போல தளிர்கள் துளிர்க்க, அந்த மேனியில்
பரவிக்கிடக்கும் அழகுத்தேமல் போல் தளிர்களின் மீது பூந்தாதுகள் உதிர்ந்துகிடக்க,
மலர்கள் நிறைந்த பூஞ்சோலையை அடுத்துப் பளிங்கு போன்ற நீரைக்கொண்ட குளங்கள் நிறைந்திருக்க,
மலர்கள் பரவிக்கிடக்கும் நீர்த்துறைகளை அடுத்து நுண்மணலை அரித்துக்கொண்டு சிறிதுநீர் ஓடிக்கொண்டிருக்க,
எள்ளி நகைப்பது போல் மிகுதியாகக் கூவுகின்ற குயிலின் குரலைக் கேட்டு வருந்தியழியும் நெஞ்சத்தால்
நம்மைப் பிரிந்து மறந்து வாழ்கிறாரே அவர் என்று துயரம் கொள்ளவேண்டாம், பெண்ணே, நீ!
வண்ணமயமான வண்டுகள் ஓயாமல் ஒலித்துக்கொண்டு, வையையின் நீண்டுயர்ந்த மணல்மேட்டில்
குளிர்ச்சியாகவும் ஒழுங்குபடவும் படர்ந்திருக்கின்ற நறிய முல்லையின் தேனை உண்ணும் காலம் அன்றோ?
கண்ணுக்குள் நிற்காத அளவு நீர் பெருக, அவரைத் தழுவியபின் நாம் அவரைச் செல்ல விடுத்தபோது,
ஒளிபடைத்த நெற்றியையுடையவளே! நம்மிடம் அவர் வருவதாகச் சொல்லிச் சென்றது;
பெருகிய நீர்நடுவேயுள்ள ஆற்றுமேட்டில், தாம் மகிழும் துணையான எம்முடன் கூடிக்கலந்து, அவர்
வில்லவனான காமன் திருவிழாவில் விளையாடும் காலம் அன்றோ?
வெற்றிபெறட்டும் நீர் மேற்கொண்ட வினை என்று தொழுது நாம் அவரைச் செல்ல விடுத்தபோது,
ஒளிரும் அணிகலன்களை அணிந்தவளே! நம்மிடம் அவர் வருவதாகச் சொல்லிச் சென்றது;
நிலத்தின் பெருமை உலகோர் நாவில் நடமாடும் நீண்ட மாடங்களைக் கொண்ட கூடல்மாநகரத்தவர்
புலவர் நாவில் பிறந்த பாடல்களைப் புதிதுபுதிதாய்க் கேட்டு இன்புறும் காலம் அன்றோ?
பலவற்றையும் நினைந்த நெஞ்சினளாய், துயரத்துடன் நாம் அவரைச் செல்ல விடுத்தபோது,
சுடர்விடும் அணிகலன்களை அணிந்தவளே! நம்மிடம் அவர் வருவதாகச் சொல்லிச் சென்றது;
என்று பலகூறி,
நினைத்து நினைத்து நெஞ்சுடைந்துபோகும் உன் பிரிவுத்துன்பத்தைத் தீர்க்கும் மருந்தாகி
நாம் கடிந்துகூறத் தேவையற்ற காதலர் வந்துசேர்ந்தார்! பறவை பறப்பதைப் போன்ற வேகத்தில் செல்கின்ற
அழகிய விரைவான திண்ணிய தேரையுடைய பாண்டியனின்
மாறாத வாய்ச்சொல்லைபோன்று குறித்தநாளுக்குள்.
 
மேல்



#36
கொடிய ஆற்றல் வாய்ந்த கலப்பையை உடைய பலதேவன் மாலை அணிந்தது போல் வெண்கடம்பமரத்தின்
நீண்டுயர்ந்த உச்சியில் சூழ அமர்ந்திருக்கும் மயில்கள் ஆரவாரிக்கும் அழகு உண்டாகவும்,
மீட்டிய யாழின் நரம்பு இசைப்பது போல வண்டுகளுடன் சுரும்புகளும் பேரொலியெழுப்பவும்,
வளையணிந்த விறலியின் வாய்ப்பாட்டு போல தும்பிகள் மலரைச் சுற்றி ரீங்காரிக்கவும்,
இன்னிசைக் கருவிகள் ஒன்றுகூடி இசை எழுப்பியது போல எல்லாப்பக்கங்களிலும் இம்மென்ற ஓசையுடன்
குளத்தின் அருகிலுள்ள பூஞ்சோலையில் மணமிக்க மலர்களில் தேனீக்கள் மொய்க்கவும்,
மலர்களை ஆயும் வண்டுகளை இடங்கள்தோறும் வாருங்கள் என்று அழைப்பது போல் மரங்கள் மலர்ந்திருக்கவும்,
கரிய குயில்கள் கூவவும், பெரிய நீர்த்துறைகள் அழகுபெறவும்,
இளவேனிற்பருவத்தில் வேனில்விழாக் கொண்டாடுதற்குரிய
சிறந்த காலமும் வந்துவிட்டது!
வரவில்லையே தோழி! நம் காதலர்!
கொஞ்சங்கொஞ்சமாய்ப் பரவி முழுவதும் பசந்துவிட்டது நெற்றி;
கொஞ்சங்கொஞ்சமாய் மெலிந்து முழுவதும் தளர்ந்துவிட்டது தோள்;
சிறுத்தோடும் நீர் மிகுதியாய் ஓடும் பொழுதில், சூடாகக்
கண்ணீர் ஒழுக்கைச் சொரியத்தொடங்கிவிட்டது என் கண்;
மலையிடையே செல்லும் வழிகளைக் கடந்து சென்றவர் திரும்பி வரவேண்டும் என விரும்பி, ஏக்கத்தோடு
முலைகளினிடையே கொதிக்கிறது என் நெஞ்சு;
என் மீது கொண்ட காதலைக் கைவிட்டுவிட்டாரோ? வராவிட்டாலும், வெறும்
செய்தியையும் அனுப்ப மறந்துவிட்டாரோ? நாம் நொந்துபோயிருப்பதற்கு
அவரின் காதல் இன்பத்தைக் காணக்கொடுத்து வைப்போமோ?
நம்மைவிட்டுப் பிரிந்தவர் போன இடத்திலேயே தங்கிவிடுவாரோ? எப்படியோ,
நீண்டநாள் இவ்வாறு பிரிந்திருத்தல் உலகத்துக்குவேண்டுமானால் ஒத்துவரலாம், உன்
கத்தரிக்கோலால் ஒழுங்காக வெட்டிவிடப்பட்ட, ஒளிவிடும் நெய்ப்புள்ள கூந்தல்
தன் நாள் அலங்காரத்தையும் சிதைத்துவிடுமே என்று, மிக்க விருப்பத்துடன்
கேள்விஞானமுள்ள அந்தணர் செய்யும்
வேள்விப் புகையைப் போல் பெருமூச்செறிகிறது என் நெஞ்சம்.


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard