New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சிந்துவெளி: அண்மைக் கால முயற்சிகள்


Guru

Status: Offline
Posts: 24603
Date:
சிந்துவெளி: அண்மைக் கால முயற்சிகள்
Permalink  
 


சிந்துவெளி: அண்மைக் கால முயற்சிகள்

Kamil Zvelebil(இந்த ஆண்டின் தொடக்கத்தில் மறைந்த அறிஞர் கமில் சுவலபில் (Kamil V. Zvelebil) செக்கொஸ்லொவாக்யா நாட்டில் பிறந்தவர். ப்ரேக் நகரின் சார்ல்ஸ் பல்கலைக்கழகத்தில் இந்தியவியலை முக்கியப் பாடமாகப் பயின்று முனைவர் பட்டம் பெற்றவர். பின்னர், அதே பல்கலைக்கழகத்தில் தமிழ் மற்றும் திராவிட மொழியியல் சொல்லித்தரும் இணைப் பேராசிரியராகப் பணியாற்றி வந்தார்.

 

1968ஆம் ஆண்டு செக் குடியரசை சோவியத் யூனியன் ஆக்கிரமித்தபோது, இவர் குடும்பத்துடன் நாட்டைவிட்டு வெளியேறி அமெரிக்கா, யூரோப்பா போன்றவற்றில் வசிக்க நேர்ந்தது. சிகாகோ பல்கலைக்கழகம், ஹெய்டெல்பெர்க் பல்கலைக்கழகம், காலேஜ் டி ஃப்ரான்ஸ் மற்றும் வேறு சில யூரோப்பிய பல்கலைக்கழகங்களில் சுவலபில் பேராசிரியராகப் பணியாற்றினார். இறுதியாக, நெதர்லாந்து நாட்டின் யுட்ரெக்ட் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து, 1992ஆம் ஆண்டில் ஓய்வுபெற்றார்.

 

மொழியியல் மற்றும் இலக்கியம் பற்றி இவர் எழுதியுள்ள நூல்கள், ஆய்வுக் கட்டுரைகள், விமர்சனங்கள், மொழிபெயர்ப்புகள் ஆகியவற்றின் எண்ணிக்கை 500க்கும் அதிகமாகும்.

 

சிந்துவெளி எழுத்துகள் பற்றி, 1983ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற ஆய்வரங்கம் ஒன்றில் கமில் சுவலபில் வாசித்தளித்த கட்டுரையின் தமிழாக்கத்தை வெளியிடுவதில் சொல்வனம் மகிழ்ச்சியடைகிறது. இதன் இரண்டாம் பகுதி அடுத்த இதழில் வெளிவரும். – ஆசிரியர் குழு)

தமிழில்: எஸ்.ஆர். சந்திரன்

 

 

இந்த ஆய்வுரையை இரண்டு மேற்கோள்களோடு தொடங்குகிறேன்.

 ஒன்று, கீழைத் தேயத்தைச் சேர்ந்தது. ‘சோய்கு ஷிகேமத்சு’ வின் தொகுப்பிலுள்ள ஜென் புத்தமத ‘ஜகுகோ’ ஆகும். அம்மேற்கோளின் பொருள்: “ஒருவர் தனது மலத்தை, அதன் நாற்றத்தை வைத்துக் கண்டுபிடித்துவிட முடியாது.” மற்றொரு மேற்கோள் மேலைத் தேயத்தைச் சேர்ந்தது; ட்வைட் எல். போலிங்கர் 1976இல் கூறியதாகும் “மனிதப்பிறவி என்பது சிக்கல்களை, புதிர்களை அவிழ்ப்பதற்காகவே தோன்றியதாகும். மனிதர்கள், அவையவை (சிக்கலின்றி) அப்படியப்படியே இருந்துவிட்டுப் போகட்டும் என்று விட்டுவிட மாட்டார்கள்.”

 இவ்விரு மேற்கோள்களும் இந்த உரையைத் தயாரிக்கும்போது என் மனத்தில் இடைவிடாது தோன்றிக்கொண்டே இருந்தன. நான் ஏன் இவ்வாறு மரியாதை இல்லாமல் என் ஆய்வுரையைத் தொடங்குகிறேன் என்பதற்குத் தக்க காரணம் உள்ளது.

 இந்த உரையில் நான் விவாதிக்க இருக்கிற அனைத்து அறிஞர்களுமே, உண்மையில் தங்களால் சாதிக்க முடியாததைத் தாங்கள் சாதித்துவிட்டதாக அடக்கமின்றிப் பறைசாற்றியுள்ளார்கள். ஹரப்பன் எழுத்து, மொழி ஆகியவற்றைப் ‘படித்து விளக்கப்பட்டுள்ள ‘முறை’களில் ஒன்றுகூட, எல்லா அறிஞர்களுக்கும் நிறைவு தரும் வகையில் விளக்கப்படவில்லை. இவ்வாறு நான் கூறும்போது மனித வரலாற்றின், மிக விரக்தி தரும் ஒரு பிரச்சினையைத் தீர்ப்பதில், அதாவது, ஹரப்பன் நாகரிக மூதாதையர்களை நம்முடன் பேசவைத்து அவர்களின் அடையாளத்தை வெளிப்படுத்தும் முயற்சியில் இவ் அறிஞர்கள் காட்டியுள்ள கற்பனையையும், ஆற்றலையும் அவர்களின் கடும் உழைப்பையும், இம்முயற்சியில் செலவிடப்பட்டுள்ளன பெரும் நிதியையும் காலத்தையும் குறைத்து மதிப்பிடுகிறேன் என்று எண்ணிவிடாதீர்கள்.

 தொடக்கத்திலேயே ஒன்றைக் கூறிவிடுகிறேன்.முதலாவதாக நேரமின்மை காரணமாக, மிகச்சில ஆய்வுகளையே நான் எனது விமரிசனத்துக்குத் தேர்ந்தெடுத்துள்ளேன். கி.பி. 1965க்குப் பின்னர் இவ்விஷயத்தில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளே பொருத்தமும் தகுதியும் உடைய தீவிரமான ஆய்வுகள் என்பது அனைவரும் ஏற்கக்கூடிய கருத்தாகும்.

 எனவே, அவற்றையே தேர்ந்தெடுத்துள்ளேன். இரண்டாவதாக மிகச்சில விதிவிலக்குகள் தவிர ஹரப்பன் எழுத்தினைப் படித்து விளக்கப்பட்டுள்ள எந்தக் குறிப்பிட்ட பாடம் பற்றியும் நான் விவாதிக்கப்போவதில்லை. மாறாக, இவ் அறிஞர்களின் அணுகுமுறை, பிரச்சினையைத் தீர்ப்பதில் அவர்கள் பயன்படுத்திய அளவைகள், நுட்பங்கள், அவர்களின் முடிபுகள் – ஆகியவை பற்றி மட்டுமே விவாதிக்க இருக்கிறேன்.

 இறுதியாக ஒன்று: சிந்து வெளி முத்திரைகளில் இதுவரை இருமொழி முத்திரை எதுவுமே கிடைக்காததால் இவ்வெழுத்துகளைப் படிப்பதற்கான முயற்சி என்பதே வரையறையற்ற – ஒரு கட்டுக்குள் அடங்காத – முயற்சியாக உள்ளது. டேல்ஸ் (1976இல்) குறிப்பிட்டுள்ளபடி, குறைந்தபட்சம் 42 வகையான படிப்பு வாசகங்கள் இதுவரை வெளிவந்துள்ளன.

 இருப்பினும், இந்த நிமிடத்தில்கூட, இருமொழி முத்திரையொன்று அகழாய்வில் கிடைக்கக்கூடும். அல்லது யாராவதொரு அறிஞர், சிந்து வெளி எழுத்தினைச் சரியாக ஊகித்து அறிந்துவிடவும் முடியும். இருக்கும் தடயங்களைத் தவிர ஒன்றைப் புதிதாக நாமாகச் சேர்த்துவிடவும் முடியாது. இருப்பனவற்றில் ஒரு சிறிய தடயத்தையும் நீக்கிவிடவும் முடியாது. இவ்வாறு கூறிக்கொள்வதைத் தவிர நாம் வேறொன்றும் செய்ய இயலாது.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

 சில அடிப்படையான செய்திகளை முதலில் தெரிந்து கொள்வோம்.

 1. அவந்திப் பிரதேசத்தின் ஆணையாளராக இருந்த மேஜர் ஜெனரல் கிளார்க்கால் ஹரப்பாவில் கண்டுபிடிக்கப்பட்ட, மிக விசித்திரமான ஒரு பொருள் பற்றிய செய்தியினைக் கி.பி. 1875இல் சர். அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் அறிவித்தார். அது ஒரு கரும்பழுப்பு நிற மாக்கல் (ஜேஸ்பர்) முத்திரை. அம்முத்திரையில், வலப்புறம் நோக்கி நிற்கும் திமிலில்லாத ஒரு காளையின் உருவமும், அக்காளையின் கழுத்தின் கீழ் இரு நட்சத்திரங்களும் பொறிக்கப்பட்டிருந்தன. காளை உருவத்தின் மேலே ஜந்து ‘எழுத்துகள்’ பொறிக்கப்பட்டிருந்தன. அவ்வெழுத்துகள் கன்னிங்ஹாமுக்குப் புரியாவிடினும் புதுமையானவையாகத் தோன்றின. எனவே, இம்முத்திரை இந்தியத் தன்மை உடையதன்று எனவும் அயல்நாட்டுத் தன்மையுடையதென்றும் அவர் முடிவு செய்தார். ஹரப்பன் முத்திரையுடைய முதல் கண்டுபிடிப்பு இதுவே எனத் தோன்றுகிறது. (கி.பி. 1872-73க்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட இந்த மாக்கல் முத்திரை தற்போது லண்டனில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகிறது.) கி.பி. 1886இல் மேலும் சில முத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால், பல ஆண்டுகள் கழிந்த பின்னரும் அம்முத்திரைகளின் காலம், முக்கியத்துவம், அவை தோற்றுவிக்கப்பட்ட பின்னணி, ஆகியவை அறிஞர்களுக்கு மறைபொருளாகவே இருந்தன.

 கி.பி. 1920-21இல் ராய் பகதூர் தயாராம் சாஹ்னி, ஹரப்பாவில் அகழ்வாராய்ச்சியை முறையாகத் தொடங்கிய பின்னரே பல்வேறு முத்திரை வாசகங்களும் கிடைக்கத் தொடங்கின.

 கி.பி. 1924இல் ஆர்.டி. பானர்ஜி மொகஞ்சதாரோவைக் கண்டுபிடித்த பின்னர் சர். ஜான் மார்ஷலும் அவருடன் பணிபுரிந்தோரும் மெகே, காட், ஸ்மித் ஆகியோருமே இம்முத்திரைகளின் வரலாற்றுக்கு முற்பட்ட தன்மையை நிறுவினர்.

 2. வீலர் அவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்னரே குறிப்பிட்டது போல, ஹரப்பன் நாகரிகம் என்பது பழங்கால நாகரிகங்கள் அனைத்தையும்விட, இடங்களின் அடிப்படையில் மிக விரிந்து பரந்த நாகரிகமாகும். இந்நாகரிகத்தின் முதிர்ந்த காலகட்டம் எனக் கி.மு. 2200இலிருந்து கி.மு. 1700 வரையிலான காலகட்டத்தைச் சொல்லலாம். ஆயினும் பெரும்பாலான ஹரப்பன் நாகரிக அகழ்விடங்கள் சற்றொப்ப 200 ஆண்டுகள் மட்டுமே குடியிருப்பு நகரங்களாக இருந்துள்ளன. சில பெரிய நகரங்கள் வேண்டுமானால் இதற்கு விதிவிலக்காக இருக்கலாம்.

 கி.மு. 1300 அளவிலான காலகட்டத்தைச் சேர்ந்த ஹரப்பன் நாகரிகச் சாயல் குஜராத், மகாராஷ்டிர அகழ்விடங்களில் தென்படுகிறது. சற்றொப்ப 1000 ஹரப்பன் நாகரிக அகழ்விடங்கள் மிகப் பரந்த நிலப்பரப்பில் இதுவரை கண்டறியப்பட்டுள்ளன. மத்திய ஆசியாவில், ஆக்ஸஸ் நதிக்கு அருகில் ஒரு ஹரப்பன் நாகரிகக் குடியிருப்பு இருப்பது பிரெஞ்சு அறிஞர்களால் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 ஆல்டின் டெபே எனுமிடத்தில் முன்னிலை இந்திய முத்திரைகள் எனச் சொல்லத்தக்க சிலவற்றை ரஷ்ய நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். இவை ஒருபுறம் ஹரப்பன் நாகரிகத்துக்கு ஆல்டைக் பகுதியுடன் இருந்திருக்கக்கூடிய தொடர்பு பற்றிய கேள்விகளையும், மறுபுறம் ஹரப்பன் மக்கள் பேசிய மொழியில் கலந்திருந்த இந்தோ ஐரோப்பிய மொழிச் சொற்கள் பற்றிய கேள்விகளையும் எழுப்புகின்றன. இப்போதைக்கு நாம் சிந்துவெளி முத்திரைகள் பற்றிய பிரச்சினைக்குத் திரும்புவோம்.

 3. இம்முத்திரைகள் பொதுவாக ஸ்டியடைற் எனவும் சோப்புக்கல் எனவும் குறிப்பிடப்படும் மிக மென்மையான மாக்கல்லால் செய்யப்பட்டவை. ஈரப்பதம் மிகுந்தால் இக்கல் கரையத் தொடங்கிவிடும். சிந்து வெளி மக்களிடையே, முத்திரை செய்தல் என்பது மிகச் சிறந்த ஒரு தொழில்நுட்பமாக இருந்திருக்க வேண்டும்.

 வால்டர் ஏ. ஃபேர்சர்விஸ் ஜுனியர் கருதுவது போல, முத்திரை செய்வோரும் முத்திரை வைத்திருப்போரும் ஹரப்பன் நாகரிக மக்கள் தொகையில் மிகச் சிறிய சதவிதத்தினரே எனலாம். எனினும், சிறிய ஹரப்பன் குடியிருப்புகளிலும் முத்திரை வைத்திருப்போர் ஒரு சிறு அளவிலேனும் இருந்துள்ளனர்.

 படித்துப் புரிந்து கொள்ளப்பட்டுவிட்ட சுமேரிய நாகரிக முத்திரைகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, ஹரப்பன் நாகரிக முத்திரைகளை இரு பிரிவாகப் பிரிக்கலாம்.

அ. முத்திரைக்குரியவரின் பெயர், பொறிக்கப்பட்ட முத்திரைகள். இவை நிர்வாக நோக்கிலும் வணிக நோக்கிலும் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். இம்முத்திரைகளில் உள்ள பெயர்ச் சொற்களில்,  உரியவரின் தகுதி, பணி, பட்டம் போன்றவற்றைக் குறிக்கும் பகுதிகள் இடம் பெற்றிருக்கலாம்; பெறாமலும் இருக்கலாம்.

 ஆ. கோயில், தெய்வம், தெய்வத்தின் பிரதிநிதிகளான ஆட்சியாளர் ஆகியோருக்குக் காணிக்கையாகப் படைக்கப்பட்ட முத்திரைகள்.

 4. இம்முத்திரைகளில் காணப்படும் சின்னங்கள், கருத்துத் தெரிவிக்கும் ஒரு முறையினை, அதாவது எழுத்து வகையினைச் சேர்ந்தவை என்பது ஐயத்துக்கிடமற்ற உண்மையாகும்.

 இவ்வெழுத்துகள் முதன்முதலில் வெளியிடப்பட்ட போதிலிருந்து இன்றுவரை அறிவுலகத்திற்கு ஒரு சவாலாகவே இருந்து வருகின்றன. இதற்குக் காரணம், புரியாத மொழியிலும் புரியாத எழுத்திலும் இவை எழுதப்பட்டிருப்பதுதான். இரு மொழி வாசகம் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.

 2290 தனி வாசகங்கள் இதுவரை கிடைத்துள்ளன. இவற்றுள் 8 வாசகங்கள்தாம் ஒவ்வொன்றும் 15க்கு மேல் எழுத்துகள் கொண்டவையாகும். முத்திரை ஒன்றில் மூன்று புறங்களிலும் எழுத்துக்களால் ஆன வாசகம் காணப்படுகிறது. மிக நீண்ட வாசகம் என்பது, தொடர்ச்சியாக மூன்று வரிகளில் பொறிக்கப்பட்டுள்ள 17 எழுத்துகள் கொண்ட வாசகம் ஆகும்.

 சில வாசகங்கள் ஒன்று அல்லது இரண்டு முத்திரைகளோடு முடிந்துவிடுகின்றன. சராசரியாக இம்முத்திரை வாசகங்களில் ஐந்து எழுத்துகள் காணப்படுகின்றன எனலாம். மொத்தம் 419 வகையான எழுத்துகள் உள்ளன. 113 வகை எழுத்துகள் ஒரே ஒரு முறைதான் முத்திரைகளில் இடம்பெற்றுள்ளன. 47 வகை எழுத்துகள் இருமுறை மட்டும் இடம்பெற்றுள்ளன. 59 வகை எழுத்துகள் ஐந்து முறைக்கும் குறைவாக இடம்பெற்றுள்ளன.

 ஆக, இந்த 219 வகை எழுத்துகளைக் கழித்துவிட்டுப் பார்த்தால், 200 வகை எழுத்துகளே பலமுறை மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட்டுள்ளமை தெரியவருகிறது. இவற்றில் 35 வகையின, முன்னிலை எலாமைட் (தென் கிழக்குப் பாரசீக) முத்திரைகளில் காணப்படுகின்றன.

 நாமறிந்தவரை கி.மு. 2000-3000 ஆண்டுகளில் வழக்கிலிருந்த எழுதும் முறைகளுடன் சிந்துவெளி எழுத்து முறை பெருமளவு ஒத்துக் காணப்படுகிறது என்ற உண்மை இதனால் விளக்கமடைகிறது. அதாவது, உருவப் படங்கள் (சித்திரங்கள்) அந்தந்த உருவத்துக்குரிய பெயரையும், அவ்வுருவத்தோடு சற்றும் தொடர்பில்லாத, ஆனால் அதே சொல்லால் குறிப்பிடப்படும் வேறொரு கருத்தையும் குறிக்கும் நிலையின் தொடக்கத்தை இவ்வெழுதும் முறை காட்டுவதாகக் கொள்ளலாம். இதனை ஒலிக் குறிப்புகளின் முதல் கட்டமாகக் கருதலாம்.

 கி.மு. 2900இல் முன்னிலை சுமேரிய மொழியிலும் எழுதும் முறையிலும், கி.மு. 2800இல் முன்னிலை எலாமைட் மொழியிலும் எழுதும் முறையிலும், கி.மு. 2500-2300இல் ஹரப்பன் மொழியிலும் எழுதும் முறையிலும் இந்நிலை காணப்படுகிறது. ஆயினும், சுமேரியப் பொறிப்புகளில் 600 வகைச் சித்திரங்களும், எகிப்தியப் பொறிப்புகளில் 700 சித்திரங்களும், சீனப் பொறிப்புகளில் 3500 சித்திரங்களும் காணப்படுகின்றன. அவற்றை ஒப்பிடுகையில் ஹரப்பன் பொறிப்புகளில் காணப்படும் 419 வகையான சித்திரங்கள் குறைவானவையே.

 முத்திரைகள் மிகச் சிறியவையாதலின் சொல்ல வேண்டிய அதிகபட்ச விவரத்தை மிகச் சுருக்கமாகப் பொறிக்கும் நிர்ப்பந்தம் முத்திரை செதுக்குவோருக்கு இருந்தது. எனவே வெவ்வேறான நான்கு சித்திரங்களை ஒன்றாக இணைத்தும் பொறித்துள்ளனர். அடிப்படையான 200 சித்திரங்களே பரவலாகவும் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதையும், சில முத்திரை வாசகங்கள் ஒன்று அல்லது இரண்டு சித்திரங்களுடன் முடிவடைந்துவிடுகின்றன என்பதையும் முன்னரே வலியுறுத்தினேன்.

 இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் ஹரப்பன் எழுத்து என்பது அகரவரிசை (ஓர் ஒலிக்கு ஓர் எழுத்து) முறையோ, ஒரு சித்திரத்துக்கு ஒரு சொல் என்ற அடிப்படையில் பயன்படுத்தப்பட்ட சுருக்கெழுத்து (logograph) முறையோ அன்று என்பதுதான். மாறாகச் சில சித்திரங்கள் சொற்களைக் குறித்தன என்றும், சில சித்திரங்கள் சொல்லின் விகுதிகள், வேற்றுமையுருபுகள் போன்ற அசை பற்றிய பொருளைக் குறித்தன என்றும்தான் கருத வேண்டியிருக்கிறது. சீன, ஜப்பானிய எழுத்து முறையை ஓரளவிற்கு இதற்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.

 5. உலகின் மற்ற பழமையான எழுத்து முறைகளுடன் சிந்து சமவெளி எழுத்துக்கு நெருக்கமான உறவு இருந்தது என்று நம்மால் நிறுவ முடியாது. எலாமைட் எழுத்திலிருந்து ஊக்கம் பெற்றுச் சிந்து சமவெளி மக்கள் தாங்களே வகுத்துக் கொண்ட எழுத்துமுறை என்று வேண்டுமானால் கூறலாம்.

 ஏற்கெனவே ஹண்ட்டர் (1934இல்), கெல்பு (1963இல்) ஆகியோர் முன்னிலை சுமேரியன், முன்னிலை எலாமைட், ஹரப்பன் எழுத்துகளில் உள்ள சில வடிவங்களில் காணப்படும் ஒப்புமையைக் கருத்தில் கொண்டு, அவை ஒரே மூல எழுத்து முறையிலிருந்து தோன்றியிருக்கக்கூடும் எனக் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

 ஹரப்பன் நாகரிகத்தைவிட மற்ற இரு நாகரிகங்களும் காலத்தால் முந்தியவை என்பதால் அவ்வெழுத்து முறைகள் ஹரப்பன் எழுத்துகளின் வடிவமைப்பிற்கு ஊக்கமளித்திருக்கக்கூடும் என்பதே சரியான முடிவாக இருக்க முடியும். எவ்வாறிருப்பினும், இக்கருதுகோள்கள் எவையுமே, ஹரப்பன் எழுத்துகளைப் படிப்பதற்கு உதவி புரியனவாக இல்லை.

 6. சிந்துவெளி எழுத்துகளைப் படிப்பதற்கு இதுவரை மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளைப் பற்றி விமரிசிப்பதற்கு முன், ஹரப்பன் எழுத்துப் பிரச்சனையில் தீர்க்க முடியாத சிக்கல்களை வரிசைப்படுத்திக் காணலாம்.

 அ) புரியாத எழுத்தில் எழுதப்பட்ட புரியாத மொழிச் சொற்கள்

 ஆ) இருமொழி வாசகங்கள் இல்லாத நிலை

 இ) மிகச்சிறிய, குறுகிய அளவிலான வாசகங்கள்

 ஈ) ஆட்பெயர், இடப்பெயர் போன்று ஊகிக்கத்தக்க ‘துப்பு’கள் எவையும் கிடைக்காத நிலை.

 உ) மற்ற பழங்கால நாகரிகங்களிலிருந்து இட அளவில் மிகவும் தொலைவில் அமைந்திருப்பது

 ஊ) இந்தியாவில் வரலாற்றுக்கால நாகரிகத்துடன் சிந்து வெளி நாகரிகத்துக்குள்ள கால இடைவெளி

 7. கி.பி. 1965க்குப் பின் ஹரப்பன் எழுத்துக்களைப் படிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பற்றி மட்டுமே இனி நாம் கவனிக்க இருக்கிறோம். இதற்குக் காரணம் என்னவெனில் சூனியத்திலிருந்து எதையும் நாம் படித்தறிய முடியாது, ஒப்புநோக்கும் முயற்சி அல்லது ‘துப்பு’ எதனையும் துணைக் கொள்ளுதல் இல்லாவிட்டால் வெறும் கற்பனையை மட்டுமே ஆய்வாளன் துணைக் கொள்ள வேண்டி இருக்கும். இம்முயற்சிகளின் விளைவாகப் ‘படித்தளிக்கப்பட்ட’ விளக்கங்களை நாம் ஏற்றுக்கொள்ளுவது நமது நம்பிக்கையை மட்டுமே பொருத்த விஷயமாகும். இருமொழித்துப்பு, பூகோளப் பெயர்கள் மற்றும் நீண்ட வாசகங்கள் இல்லாதது. சிந்து வெளி எழுத்தையும் மொழியையும் புரிந்துகொள்வதைக் கடினமாக்குகிறது.

 எனவே, ஹண்ட்டர் 1934இல் மிகவும் நேர்மையுடன் மேற்கொண்ட முயற்சியாகட்டும், 1943-1948  ஆண்டுகளில் ஆழ்ந்த கற்பனையாற்றலுடன் ஹரோஸ்னி மேற்கொண்ட அணுகு முறையாகட்டும் இவையெல்லாம், பயனற்ற முயற்சிகளாகவே முடிந்தன. கால அடிப்படையிலான இந்திய நாகரிகத்தின் படிமுறை வளர்ச்சி போன்ற நுட்பமான விடயங்களையும் மொழியியலின் கூறுகளையும் கருத்தில் கொள்ளாமல், ஏற்றுக்கொள்ள இயலாத காரண காரியவிளக்கங்களைக் கூறிய, அமெச்சூர் தன்மையின் வெளிப்பாடாகவே இவ்விளக்கங்கள் திகழ்கின்றன.

 மொத்தத்தில், நாம் மேலே குறிப்பிட்ட (எண் 6இல் கண்ட) தீர்க்க முடியாத சிக்கல்களை இவ் அறிஞர்கள் கவனத்தில் கொள்ளாததாலும், திட்பநுட்பமான ஓர் அணுகுமுறையைக் கையாளாததாலும், தம் முயற்சியில் தோல்வியடைந்தனர்.

 8. கி.பி. 1965க்கு முன் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளில் ஹண்ட்டர், ஹீராஸ் ஆகிய இருவரின் முயற்சிகள் மட்டுமே குறிப்பிடத்தக்க முயற்சிகள் எனலாம். 1960க்குப் பின் சோவியத் நிபுணர்களும், பின்லாந்து அறிஞர்களும் கணினியை இம்முயற்சியில் அறிமுகப்படுத்திய பின்னர் ஹரப்பன் பிரச்சினையைத் தீர்க்கும் முயற்சியில் புதுயுகம் உதயமாயிற்று. 1965இல் சோவியத் நிபுணர் குழு தனது முடிவுகளை அறிவித்தது. அதன் பின்னர் பின்லாந்து அறிஞர்களின் ஆய்வுகளும், ஐ. மகாதேவன், ஃபேர்சர்விஸ், கின்னியர் வில்சன், எஸ்.ஆர். ராவ் ஆகியோரின் ஆய்வுகளும் வெளிவந்துள்ளன. இவை பற்றி விமரிசனபூர்வமான சில கருத்துகளைத் தெளிவான, ஆனால் சுருக்கமான அளவில் இங்குத் தெரிவிப்பேன்.

 சிந்து வெளி முத்திரைகளிலுள்ள சின்னங்களின் பட்டியல், அவற்றின் வரிசை முறை ஆகியவை இதற்கு முன்னரும் வெளிவந்துள்ளன. எஸ்.லாங்டன் (1931 இல்) கி.ஜே. காட் மற்றும் எஸ். ஸ்மித் (1931 இல்), எம். எஸ். வாட்ஸ் (1940 இல்) ஆகியோர் இத்தகைய பட்டியல்களை வெளியிட்டுள்ளனர்.

 கணினி உதவியின்றி மேற்கொள்ளப்பட்ட இம்முயற்சிகளில் மிகவும் போற்றுதலுக்குரிய முயற்சி ஜி. ஆர். ஹண்ட்டரின் The Script of Harappa and Mohenjo Daro and its Connection with other Scripts (லண்டன் 1934) என்ற வெளியீடே ஆகும். ரத்தினச் சுருக்கமாகவும், நேர்மையுடன்கூடிய கடும் உழைப்பின் வெளிப்பாடாகவும் இவ்வெளியீடு அமைந்துள்ளது.

 ஸ்பானிய ஏசு சபை மதப் பிரச்சாரகராக பம்பாயில் பணிபுரிந்த ஹீராஸின் முயற்சியும் போற்றத்தக்கதே. படிப்படியாகவும் முழுமையாகவும் ஹரப்பன் மொழியைப் படித்தறியும் முயற்சியில் இறங்கியவருள் முதல் அறிஞரும் இவரே. ஹரப்பன் மொழி பழந்தமிழின் ஒரு வகை வடிவமே என அவர் முடிவு செய்தார்.

 அவருடைய உள்ளுணர்வு அடிப்படையில் எடுக்கப்பட்ட சில முடிவுகளை, இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் சோவியத் மற்றும் பின்லாந்து அறிஞர்கள் ஏற்றுக் கொண்டனர். மிக அண்மைக் காலத்திய ஹரப்பன் எழுத்துப் படிப்பு விளக்க முயற்சிகள்கூட, ஹீராஸ் தமது உள்ளுணர்வை மட்டுமே நம்பிக் கூறிய விளக்கங்களுக்கு விரிவுரைகளாகவே உள்ளன.

 ஹரப்பன் முத்திரை எழுத்துகளை வகைப் படுத்தித்தொகுக்கும் முறையிலும் அவ்வெழுத்துகளின் செயற்பாடு மற்றும் அவற்றின் பொருள் பற்றி விளக்கும் முறையிலும் சோவியத் மற்றும் பின்லாந்து அறிஞர்கள் ஹீராஸின் முயற்சியையே முன்னுதாரணமாகக் கொண்டுள்ளனர். ரீபஸ் முறை (அதாவது ஒரு சொல்லின் பகுதி, விகுதி, இடைநிலை போன்றவற்றைப் பலவிதக் குறியீடுகளால் எழுதுதல்) பற்றி ஹீராஸ் குறிப்பிட்டுள்ளார்.

 9. யூரிஜ் வி. க்னொரோசாவ் தலைமையிலான சோவியத் அறிஞர்களால் முதன் முறையாகக் கணினி பயன்படுத்தப்பட்டது. முத்திரை வாசகங்களில் இடம்பெற்றுள்ள எழுத்துகளை வகைப்படுத்தி, எந்த எழுத்து எத்தனை முறை பயன்படுத்தப்பட்டது; எந்த எழுத்தையடுத்து எந்த எழுத்தினை எழுதுவது வழக்கம்¡க இருந்தது என்பன போன்ற புள்ளி விவரங்களைத் தொகுக்கக் கணினி உதவியது. கணினியின் பயன்பாட்டை நாம் மெச்சுகிற அதே நேரத்தில், அதன் செயல் திறமைக்கு உள்ள வரையறைகள் பற்றியும், அதன் நம்பகத்தன்மை பற்றியும் மிகைப்படுத்தாமல் சிந்தித்துப் பார்க்க வேண்டுவது அவசியம்.

 இன்றுவரை, மனித அறிவின் துணையின்றி அல்லது மனித உள்ளுணர்வின், கற்பனையாற்றலின் வழிகாட்டுதலின்றி, சுயமாகச் சாதனைகள் படைக்கும் மின்னணுக் கருவி – கணினி கண்டு பிடிக்கப்படவில்லை. கணினியைப் பயன்படுத்தியதன் மூலம், ஹரப்பன் எழுத்துகளைப் புரிந்துகொள்ளும் முயற்சியில் வெகுவாக முன்னேறியிருக்கிறோம் என்பது உண்மைதான் எனினும், மனித நாகரிகம் தொடர்பான இப்பிரச்சினையைத் தீர்ப்பதில் மனித அறிவும் உழைப்பும்தான் முதன்மையான பங்கு வகிக்க முடியும். கணினியன்று; எனவேதான் டபிள்யூ.ஏ. ஃபேர்செர்விஸ் போன்ற அறிஞர்கள் கணினியின் துணையின்றியே தமது முயற்சியைத் தொடங்கினர்.

 ஹரப்பன் எழுத்துகளின் வாசகங்களின் அமைப்பு முறை பற்றியும் எந்த எழுத்தையடுத்து எந்த எழுத்து வழக்கமாக எழுதப்படுகிறது; எந்த எழுத்து ஒரு சொல்லின் தொடக்க எழுத்தாக அமைகிறது, எந்த எழுத்து சொல்லின் இறுதி எழுத்தாக அமைகிறது – போன்ற புள்ளிவிவரங்கள் பற்றியும் ஆராய்ந்து அறிந்து கொள்வது என்பது இந்த ஆய்வின் முதல்படிதான்.

 இதற்கு அடுத்த படி, எந்த எழுத்து எந்த ஒலியோடு தொடர்புடையது என்ற ஆய்வு. இந்த இரண்டாவது படிதான், ஹரப்பன் எழுத்துகளைப் படிக்கும் முயற்சியின் முக்கியமான படி. இந்த இரண்டு படிகளும் இரண்டு வேறுபட்ட நடைமுறைகளைக் குறிக்கின்றன. இவ்வேறுபாட்டைப் புரிந்து கொண்டால்தான் இவ்விடயத்தில் இதுவரை என்ன சாதிக்கப்பட்டுள்ளது; என்ன சாதிக்கப்படவில்லை என்பதை நாம் கணக்கிட முடியும். முதல்படியில் நாம் குறிப்பிடதக்க அளவு முன்னேறியுள்ளோம், இரண்டாவது படியில் நாம் காலடி எடுத்து வைக்கவே இல்லை.

  

படம் 1
படம் 1

சித்திர வகையைச் சேர்ந்த எழுத்துகளை இரண்டு விதமாகப் ‘படிக்க’ முடியும். சித்திரம் எதனைக் குறிக்கிறது என்பதை, நாம் நமக்குத் தெரிந்த மொழியில் புரிந்து கொள்வது ஒரு விதம். சான்றாக, ஜப்பானிய எழுத்தில் படம் 1இல் காட்டப்பட்டுள்ள வடிவம் மூன்று மரங்களைக் குறிக்கிறது.

 

ஜப்பானிய மொழி தெரியாவிட்டால்கூட, ‘பல மரங்கள்’, அதாவது பல மரங்களைக் கொண்ட ‘காடு’ என்று இதற்கு நாம் ஊகித்துப் பொருள் கூறிட முடியும். ஆயினும் ஜப்பானிய மொழியும் நமக்குத் தெரிந்திருப்பின் ‘மொரி’ என்ற ஜப்பானியச் சொல்லை இந்தச் சித்திர எழுத்து குறிக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

 முதல் வகை அதாவது சித்திர எழுத்தின் கருத்தை மட்டும் புரிந்து கொள்வது என்பது (சில விதிவிலக்குகள் தவிர) அத்துணை கடினமல்ல; ஆனால் அச்சித்திர எழுத்துக்கு, எழுதப்பட்ட காலத்தில் பேச்சு மொழியில் வழங்கிய ஒலியினையும் (அல்லது சொல்லையும்) சேர்த்துப் புரிந்து கொள்வது கடினம். இந்த இரண்டாம் வகைப் ‘படிப்பு’ சரியானதுதானா என்று சோதித்து அறிவதற்கும் வழியில்லை. ஒவ்வோர் அறிஞரும் ஒவ்வொரு வேறுபட்ட ஒலியை, ஒரே சித்திர எழுத்துக்கு உரியதாகக் கருதும் நிலை ஏற்படுகிறது. மொழியியலாளர்களால் இவர்களின் கருத்து ஏற்கப்படுவதில்லை. தற்சார்பும் தன் கருத்தேற்றமும் இன்றி, கடுமையான சோதனைக்கு ஆட்படுத்தி இக்கருத்துகளைப் புடம் போடவும் இயலுவதில்லை.

 ஹரப்பன் எழுத்துகளில், அதிகமாக மீண்டும் மீண்டும் ஒரு குறிப்பிட்ட ஒழுங்கு முறைப்படி பயிலும் சித்திர எழுத்துகளின் இலக்கணச் செயல்பாடு அல்லது பொருள் மதிப்பீடு பற்றிக்கூட உறுதியாக ஏதும் சொல்வதற்கில்லை. அதாவது அவை உருபுகளா, சொற்களா, அவை மொழி வளர்ச்சியின் எந்தக் காலகட்டத்தைச் சார்ந்தவை போன்ற அடிப்படையான கேள்விகளுக்குக்கூட விடை கிடைக்கவில்லை.

 இதே கருத்தை வேறு விதத்தில் சொல்வதானால், கணினியின் துணையின்றியேகூட, எந்தச் சித்திர எழுத்து ஹரப்பன் முத்திரைகளில் அதிகமாக மீண்டும் மீண்டும் எழுதப்பட்டுள்ளது என்று நாம் கணித்துவிட முடியும். அடுத்ததாக, ஓர் எழுத்தையடுத்து மற்றோர் எழுத்து எழுதப்படும்போது குறிப்பிட்ட மரபுப்படிதானே இணைத்து எழுதப்பட்டிருக்க வேண்டும்? சொல்லாக்க மரபுகள் அல்லது சொற்றொடரமைப்பு விதிகள் போன்ற சில மரபுகளுக்கு உட்பட்டோ, ஹரப்பன் முத்திரை வாசகங்களுக்கென்றே வகுக்கப்பட்டிருகக்கூடிய ஏதாவது இலக்கணத்துக்கு உட்பட்டோதான் இச்சித்திர எழுத்துகள் ஒன்றையடுத்து ஒன்று எழுதப்பட்டிருக்க வேண்டும்.

 எனவே எந்த எழுத்து, எந்த எழுத்தைப் பெரும்பாலும் சார்ந்து நிற்கிறது என்ற புள்ளிவிவரக் கணக்கை நாம் ஆதாரமாகக் கொள்ளலாம். மேலும், அதிகமாக இணைந்து காணப்படும் எழுத்துகளின் குழுக்களைத் தொகுத்து வகைப்படுத்தினால்தான் இன்னின்ன எழுத்துகள் இன்னின்ன எழுத்துகளுடன் கலந்தோ அடுத்தடுத்தோ வருவது வழக்கம் என அறிய இயலும்.

 இத்தகைய பகுப்பாய்வினை ஒவ்வொரு நிபுணர் குழுவும் ஒவ்வொரு விதத்தில் மேற்கொண்டுள்ளது. சான்றாகச் சோவியத் நிபுணர் குழு, ஹரப்பன் முத்திரைப் பொறிப்புகளை (அல்லது வாசகங்களை) மொத்தமாக எடுத்துக்கொண்டு, அவற்றுள் தனித்தனித் தொகுதிகளாகச் சில பல எழுத்துகளைப் பிரித்து எடுத்து, இறுதியாக இவையிவை வேர்ச்சொற்கள் என்றும், இவையிவை பின்னொட்டுகள் (விகுதிகள்) என்றும் பிரித்து இனம் கண்டுள்ளது.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

பின்லாந்து நிபுணர் குழுவும் இதுபோன்ற ஒரு நடைமுறையையே கையாண்டுள்ளது. ஃபேர் செர்விஸ், 14 அணிவரிசை கொண்ட ஒரு குழுவினைத் தெரிவு செய்து புனரமைத்தார். ஐ. மகாதேவன், ஒத்த வடிவ எழுத்துகளைத் தொகுத்து, அடிப்படை வடிவத்துடன் பின்னொட்டுகள் ஒரே விதிப்படி சேர்கின்றன என்ற கருதுகோளின் அடிப்படையில் குழுக்களைப் புனரமைத்தார்.

 ஹரப்பன் எழுத்துகளைப் பொறித்தவர்கள், ஒரு சித்திர வடிவத்திற்கு ஓர் ஒலிவடிவம் அல்லது சொல் என்ற அடிப்படையில் பொறித்தனர் என இவ் அறிஞர்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டனர். அதாவது அந்தச் சித்திர வடிவம் தனக்குத் தொடர்பில்லாத (அதே ஒலி வடிவில் சுட்டப்படும்) வேறு ஒரு பொருளையும் குறிக்கக்கூடும். (இது ரீபஸ் கோட்பாடு எனக் குறிப்பிடப்படுவது வழக்கம்.) இவர்கள் அனைவருமே ஹரப்பன் மொழி என்பது ஒருவகைப் பழந்திராவிட மொழியே எனக் கருதினாலும்கூட, ஹரப்பன் எழுத்துகளைப் ‘படிப்பதில்’ வெகுவாக வேறுபடுகின்றனர். வெகுவாக என்பதற்கு என்ன பொருள் என்றால், ஹரப்பன் எழுத்து என்பது எந்த வகையைச் சேர்ந்தது (சுருக்கெழுத்து போன்றதா, கருத்து எழுத்தா) என்று நிர்ணயிப்பதில்கூட இவர்கள் வேறுபடுகின்றனர்.

 10. சோவியத் நிபுணர்களின் குழுக்கள் பல, சிந்துவெளி எழுத்துகளைப் பகுத்தாய்வு செய்வதில் கணினியை அறிமுகப்படுத்திய பெருமையைப் பெறுகின்றன. கி.பி. 1964இன் இடைப்பகுதியில் இம்முயற்சியை அவர்கள் தொடங்கினர். இம்முயற்சியால் கண்டறிந்த முடிபுகளை Proto Indica என்ற தொகுப்பில் 1965, 1968, 1970, 1973, 1979 ஆண்டுகளில் வெளியிட்டனர் என்று பேராசிரியர் ஓல்ட்ரோக் தெரிவித்துள்ளார். இதற்கான செயல்திட்டம், மிகக் கவனமாக எம்.ஏ. ப்ரோப்ஸ்ட்டால் உருவாக்கப்பட்டது.

 பகுப்பாய்வின் மற்றும் பொருள் விளக்குதலின் பெரும் பகுதி க்னோரோசோவ், வோல்சோக், அலெக்சீவ் கொந்த்ரதோவ் மற்றும் குரோவ் ஆகியோரால் மேற்கொள்ளப்பட்டது. சோவியத் நிபுணர் குழுவின் ஆய்வு நெறிமுறையும் பின்லாந்து நிபுணர் குழுவின் ஆய்வு நெறிமுறையும் பெருமளவு ஒத்திருக்கின்றன.

 அதாவது, (அ) கண்டிப்பான ஒழுங்கு முறையுடன் கணினி உதவியால் தயாரிக்கப்பட்ட ஆணைத் தொடர்கள். (ஆ) ஒவ்வொரு சித்திர எழுத்தும் அது இடம்பெறும் சொற்றொடரின் முதலில் வருகிறதா, இறுதியில் வருகிறதா; எந்த எழுத்தினை அடுத்து எந்த எழுத்து வருகிறது; ஒரு சொற்றொடரில் சொற்கள் என்று எந்த எந்த எழுத்துத் தொகுதிகளைக் கொள்ளலாம் போன்ற புள்ளிவிவரங்களின் அடிப்படையில் ஒவ்வொரு எழுத்தின் செயல்பாட்டுத்தன்மை (அது வினையா, பெயரா, பகுதியா, விகுதியா, உருபா போன்ற இலக்கணக்குறிப்பு) (இ) இந்தச் சொற்றொடரால் தெரிவிக்கப்படும் கருத்து இதுதான் என்பதைத் திராவிட மொழிச் சொற்களைக் கொண்டு மொழியியல் அடிப்படையில் புனரமைத்து அதன் மூலம் ஒவ்வொரு சித்திர எழுத்துக்கும் ஓர் ஒலி மதிப்பீட்டினை நிர்ணயித்தல் (ஒத்த உருவமுடைய சித்திர எழுத்துகளுக்கும் ஒத்த ஒலி மதிப்பீடு ஆயினும் பொருளில் வேறுபாடு.)

 இதேபோல, சோவியத் மற்றும் பின்லாந்து நிபுணர் குழுக்கள் தமது விரிவுரைகளில் பெருமளவு வேறுபட்டாலும், அடிப்படையான மூன்று முடிபுகளில் ஒத்துப் போகின்றன. அவையாவன (அ) ஹரப்பன் முத்திரைப் பொறிப்புகள் வலப்புறத்திலிருந்து இடப்புறம் நோக்கி எழுதப்பட்டுள்ளன. (இப்போது நாம் எழுதுவதற்கு நேர் எதிர்மறையாக.) (ஆ) ஒவ்வொரு சித்திர எழுத்தும் ஒரு கருத்தினை உணர்த்தும் அடையாளக் குறியீட்டு (Logographic) முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளது; சுருக்கெழுத்து போலக் குறியீடாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது (ரீபஸ் கோட்பாடு) (இ) திராவிட மொழிச் சொற்கள்தாம் இப்பொறிப்புகளில் எழுதப்பட்டுள்ளன.

 இவ்வாறு, பிழையற்ற கண்டிப்பான சட்ட திட்டங்களுடன் தயாரிக்கப்பட்ட பகுத்தல் மற்றும் தொகுத்தல்கள், எழுத்துகளின் வரிசைக் கிரமம் பற்றிய நுட்பமான புள்ளிவிவரம் இவையெல்லாம் இருந்தும் இந்நிபுணர் குழுவினரின் முடிவுகள், முற்றிலும் உள்ளுணர்வு சார்ந்த ஊகங்களாகவே முடிந்துவிடுகின்றன. இம்முடிபுகள் நம்பத்தகாதவையல்ல வாயினும், எவ்விதத்திலும் சரி பார்த்து மதிப்பிட வழியில்லாத வகையில் வெறும் கருதுகோள்களாகவே நிற்கின்றன.

 ஃபேர்செர்விஸ் முன்னரே குறிப்பிட்டுள்ள ஒரு திறனாய்வுக் குறிப்பினை இங்கு நான் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறேன். சோவியத் நிபுணர் குழுவும் சரி, ஃபின்லாந்து அறிஞர் அஸ்கோ பர்போலாவும் சரி, அளவு கடந்த உற்சாகத்தின் விளைவாகவும் ஆரம்ப சூரத்தனத்தினாலும் தெளிவற்ற, சிக்கலான ஊகங்களில் இறங்கி, கற்பனையைப் பறக்கவிட்டுத் திசை மாறிவிட்டனர்.

 அது மட்டுமின்றி, பிற்காலத்திய இந்து சமய – இந்தியப் பண்பாட்டின் – நுணுக்கமான விடயங்களுக்கெல்லாம் மூலமான ஏதோ ஓர் அபூர்வமான – பூடகமான – உலகக் கண்ணோட்டம் ஹரப்பன் மக்களிடையே நிலவியிருக்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டு இந்த ஆய்வில் இறங்கியதால் இந்நிபுணர்கள் குழுவினர் தடுமாற்றமடைந்தனர். ஆனால் ஃபேர்செர்விஸ் போன்றே நானும், ஹரப்பன் மக்களின் உலகக் கண்ணோட்டம் என்பது மிகவும் யதார்த்தமானது என்று கருதுகிறேன். உலக வாழ்வு சீராக நடைபெறுதற்குத் தேவையான கிராம விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட, படிமுறைத் தகுதிகள் நிர்ணயிக்கப்பட்ட சமூகக் கட்டமைப்பை உடையது ஹரப்பன் சமூகம் என்றும் நம்புகிறேன்.

 அதாவது ‘கிராமிய இந்தியாவைப் பெரிய பரிமாணத்தில் பார்ப்பது’ போன்ற ஒரு காட்சியே ஃபோசெர்விஸின் மனக் காட்சியாகும். சோவியத் நிபுணர் குழு ஹரப்பன் எழுத்துகளைப் ‘படித்து’ விளக்கியுள்ள ஆய்வுரை பற்றி இங்கு நான் ஒன்றும் கூறப் போவதில்லை.1

 அக்குழுவின் முயற்சி ஒரு முன்னோடி முயற்சி என்பதும், கணினியை முதன் முதலாகவும் திறம்படவும் பயன்படுத்தி ஹரப்பன் முத்திரை வாசகங்களைப் பகுப்பாய்வு செய்துள்ளமையும், மிகச் சிறந்த கணிதவியல் முறைகளால் உருவாக்கப்பட்டுள்ள கணினி ஆணைத் தொடர்களும் பாராட்டத்தக்கவை. ஆயினும் நிறைவளிக்கும் வகையில் ஒரு சிறு ஹரப்பன் முத்திரைப் பொறிப்பினைக்கூட அவர்களால் வாசித்துக்காட்ட இயலவில்லை. ஒப்பிட்டோ, வேறு விதத்திலோ சரிபார்க்கும் வண்ணமும் அதனைச் செய்ய அவர்களால் இயலவில்லை.

 11. சோவியத் நிபுணர் குழுவின் முயற்சிக்குச் சற்றொப்பச் சம காலத்தில், கோபன்ஹேகனிலும் ஹெல்சிங்க்கியிலும் பின்லாந்து நிபுணர் குழு, செப்போகோஸ் கென்னிமியால் தயாரிக்கப்பட்ட கணினி ஆணைத் தொடர்களைப் பயன்படுத்திற்று. இக்குழுவில் அஸ்கோ பர்போலாவும் சீமோ பர்போலாவும் முதன்மையான ஆய்வாளர்களாகப் பங்கேற்றனர்.

 அண்மையில் (1982இல்) கிம்மோ கோஸ்கென்னிமி ஒரு கணினி ஆணைத் தொடரைத் தயாரித்தார். இத்திட்டத்தின்படி, ஹரப்பன் முத்திரை வாசகங்களின் தொகுதியும், இருமுறை இடம் பெற்ற ஒரே வாசகங்களின் பகுப்பாய்வும், ஒரு வாசகத்தில் ஒருமுறை மட்டும் இடம் பெறும் சித்திர எழுத்துகளின் (மற்ற சித்திர எழுத்துகளுடனான பிணைப்பு வரிசை முதலான விவரங்கடங்கிய) பட்டியலும் உருவாக்கப்பட்டன.

 ஒட்டு மொத்தமாகப் பார்க்கையில், கணினியைப் பயன்படுத்துவதில் சிறப்பான, முன்னோடியான முயற்சியும் தனது முடிவுகளை ஹீராஸ் பாதிரியாரின் நுண்மாண் நுழைபுலத்தைப் பின்பற்றி விளக்கி உரைத்தமையும், அதன் மூலம் திராவிட மொழியே ஹரப்பன் முத்திரைகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற தமது கருதுகோளினை உறுதிப்படுத்தியமையும் சோவியத் நிபுணர் குழுவின் சிறப்பான பங்களிப்பு எனலாம்.

 பின்லாந்து நிபுணர் குழுவின் சிறப்பான பங்களிப்பு என்று கூறத்தக்கவை ஹரப்பன் முத்திரை வாசகங்களின் தொகுதி (1979இல் தயாரிக்கப்பட்டது) சித்திர எழுத்துகளின் (பிணைப்பு வரிசை முதலான விவரங்களடங்கிய) பட்டியல் (1973இல் ஒன்றும், 1982இல் ஒன்றும் என 2 தொகுதிகள்) துணிச்சலான அதிரடியான – ஆனால் ஆராய்ச்சியுணர்வைத் தூண்டுகிற – அஸ்கோ பர்போலாவின் விளக்கவுரைகள் – ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

 முத்திரை எழுத்துகளின் பட்டியலைத் தொகுக்கும் போது இந்நிபுணர் குழுக்கள் அனைத்துமே (குறிப்பாகப் பினலாந்து நிபுணர்குழு) இரண்டு முதன்மையான பிரச்சினைகளை எதிர்கொண்டன. வெவ்வேறு எழுத்துகள் என்று எந்த அடிப்படையில் வேறுபடுத்திக் காண்பது? எந்த அடிப்படையில் எழுத்துகளை வரிசைப்படுத்துவது? என்பவையே இப்பிரச்சினைகள்.

 1979ஆம் ஆண்டைய வெளியீட்டில் (பக். 13) அவர்கள் குறிப்பிட்டுள்ளது போல, வடிவ ஒற்றுமையுடைய (ஒத்த சாயலுடைய) இரு வேறு எழுத்துகளை ஒன்றெனக் கொள்ளும் மயக்கமும், வெவ்வேறு சாயலுடைய – ஆனால் ஒத்த பொருள் தரக்கூடிய இரு வேறு எழுத்துகளைத் தனித் தனியாகப் பிரித்துக் காணும் தடுமாற்றமும் ஆய்வில் குழப்பத்தை விளைவித்துவிடும் என்பது உண்மையே.

 ஒவ்வோர் எழுத்தும், எளிதில் வேறுபடுத்திக் காணக்கூடிய வகையில் தனித்தன்மையுடைய வடிவில் எழுதப்பட்டிருந்தால் இப்பிரச்னை எழ வாய்ப்பில்லை. ஆனால் சிந்துவெளி எழுத்துகளில் பல எழுத்துகள் ஒன்றுடன் ஒன்று வேறுபடுத்திக் காண இயலுமாயினும் அவற்றின் உருவ ஒற்றுமை நமக்குக் குழப்பத்தைத் தோற்றுவிக்கும்.

 உருவ ஒற்றுமை என்பதற்கும், வேறுபடுத்திக் காண இயலும் என்பதற்கும் வரையறை ஏதாவது உண்டா? ஒரே சித்திர எழுத்தின் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வேறு வடிவங்களை அடையாளம் காண்பதற்கெனப் பின்லாந்து அறிஞர்கள் இயன்றவரை நேரிய முறையிலும் மிகக் கவனமாகவும் சில அளவு கோல்களை வகுத்துக் கொண்டமைக்காக நாம் அவர்களைப் பாராட்ட வேண்டியது அவசியம்தான் எனினும் இதன் விளைவாக அவர்கள் கண்ட ‘முடிவு’களை நாம் முடிந்த முடிவாகக் கொள்வதற்கிலை. ஐ. மகாதேவன் தயாரித்த சித்திர எழுத்துப் பட்டியல் பற்றிப் பின்லாந்து அறிஞர்கள் செய்துள்ள விமரிசனம், தமக்கும் பொருந்துவதை அவர்கள் உணரவேண்டும்.

 படம் 2படம் 2

படம் 3
படம் 3

 

சான்றாக, படம் 2இல் காணப்படும் எழுத்தினைத் தனியாகவும், படம் 3இல் காணப்படும் எழுத்தினைத் தனியாகவும் மகாதேவன் பட்டியலிட்டுள்ளார். (இவ்விரண்டு எழுத்துகளுமே ஏழு என்பதைக் குறிக்கக்கூடும்.)

  

படம் 4
படம் 4

 

படம் 5
படம் 5

பின்லாந்து நிபுணர்களும், ஃபேர்செர்வீசும் படம் 4இல் காணப்படும் எழுத்தையும், படம் 5இல் காணப்படும் எழுத்தையும் ஒரே மாதிரியான வடிவங்கள் எனப் பட்டியலிட்டுள்ளனர். இவ்வாறு பட்டியலிட்டுள்ளது சரியானதுதானா என்ற ஐயம் எழுகிறது.

  

படம் 6
படம் 6

 

 

படம் 7படம் 7

வெவ்வேறு இடங்களிலிருந்து கிடைத்த இருவேறு முத்திரைகளில் இவ்வெழுத்துகள் பொறிக்கப்பட்டிருப்பதால், ஒரே எழுத்தினை எழுதும் முறைகளில் நிலவிய பிரதேச வேறுபாடாக இது இருக்கலாம். அல்லது இவ்விரு முத்திரைகளுக்குமிடையே பொறிக்கப்பட்ட கால வேறுபாட்டால் நேர்ந்த எழுத்து வளர்ச்சியாகவும் இதனைக் கொள்ளலாம். ஒலியாலோ, தாம் வெளிப்படுத்தும் கருத்தாலோ அடிப்படையில் ஒரே பொருளின் இருவேறு உட்பிரிவுகளைக் குறிக்கும் இரு எழுத்துகளாகவும் இவற்றைக் கொள்ளலாம். என்னைக் கேட்டால் இரண்டும் வேறு வேறு எழுத்துகள் என்று கூறுவதற்கு நான் தயங்கமாட்டேன். படம் 6இல் காட்டப்பட்டுள்ளது கோதுமையைக் குறிக்கிறது என்றும், படம் 7இல் காட்டப்பட்டுள்ளது வால்கோதுமை (பார்லி)யைக் குறிக்கிறது என்றும் நான் சொல்வேன்.

 1982ஆம் ஆண்டில் வெளிவந்த ‘ஹரப்பன் எழுத்துப் பட்டியல்’ (ஆங்கிலம்) முதலிய தமது அண்மைக்கால வெளியீடுகளில் பின்லாந்து நிபுணர்கள், சிந்து வெளி எழுத்தென்பது, உருபன் எழுத்து (அதாவது ஒரு சொல்லினை ஒரு சித்திரத்தால் குறிப்பிடும் முறை) என்ற தமது கருத்தினைத் தெரிவித்துள்ளனர். ஐ.மகாதேவனும் ஏறத்தாழ இக்கருத்தையே கொண்டுள்ளார். நானும் இதனை ஏற்கிறேன்.

  படம் 8படம் 8

ஆயினும், பின்லாந்து நிபுணர்களின் அணுகுமுறையில் அடிப்படையில் ஒரு முரண்பாடு உள்ளது. அவர்கள் ஹரப்பன் எழுத்துகள் சுருக்கமும் செறியும் மிக்கவை என்பதனை மீண்டும் மீண்டும் முதன்மையாகவும் வலியுறுத்துகின்றனர். அப்படியிருக்குமாயின், ஒரே பொருள் குறித்து, ஹரப்பன் எழுத்துகளின் படம் 8இல் காட்டப்படும் மூன்று எழுத்து வடிவங்கள் ஏன் பயன்படுத்தப்பட்டன? ஓர் எழுத்து முறையென்பது செறிவும் சுருக்கமும் உடையதாக இருப்பின், ஒரு பொருள் குறித்த பல எழுத்து வடிவங்கள் தன்னிடம் இருப்பதை அது பறைசாற்றாது. அதாவது, எழுத்து வடிவின் சிறு வேறுபாட்டுக்கும் பொருள் வேறுபாடும் இருந்ததாக வேண்டும்.

 முத்திரைகள் செய்யப்பட்ட நோக்கம் என்னவாக இருக்கலாம் என்பதை விவாதிக்கும்போது பின்லாந்து நிபுணர்கள் ஒரு கருத்தினை தெரிவிக்கிறார்கள். முத்திரைக்குரிய உடைமையாளரின் பெயர் பொறிக்கப்பட்ட முத்திரைகள் எனச் சிலவற்றையும், ஆட்சியாளர், தெய்வம் போன்றவர்கட்குக் காணிக்கையாக வழங்கப்பட்ட குறியீடுகள் எனச் சிலவற்றையும் இவர்கள் அடையாளம் காட்டுகின்றனர்.

படம் 9படம் 9

அதாவது, படம் 9இல் காட்டப்பட்டுள்ள எழுத்து (‘அது’ அல்லது ‘உடைய’ எனப்பொருள்படும்) ஆறாம் வேற்றுமையுருபு எனக்கொண்டு, இவ்வெழுத்து பொறிக்கப்பட்ட முத்திரை ஒருவருடைய உடைமைப் பொருளாகும் என முடிவு செய்கின்றனர்.

படம் 10படம் 10

மாறாக படம் 10இல் காட்டப்பட்டுள்ள எழுத்து (‘கு’ எனப் பொருள்படும்) நான்காம் வேற்றுமையுருபு எனக் கொண்டு இவ்வெழுத்து பொறிக்கப்பட்ட முத்திரை ஒருவருக்குக் கொடுக்கப்பட்டது என முடிவு செய்கின்றனர். இவ்வெழுத்துகள் பற்றி நாம் பின்னர் விவாதிக்கலாம்.

 திருமதி ஜைடும் நானும், பின்லாந்து நிபுணர்களின் தொடக்ககால முயற்சிகளைத் தொடர்ச்சியாக விமர்சித்து வந்துள்ளோம். (தற்போது நான் மட்டும் விமர்சித்து வருகிறேன்.) சுய மதிப்பீட்டில் விளைந்த கரைகடந்த உற்சாகம் காரணமாக, திராவிட மொழியில் எழுதப்பட்டுள்ள ஹரப்பன் எழுத்துகளைத் தாங்கள் ஐயந்திரிபற வாசித்தறிந்துவிட்டதாக அவர்கள் நம்பினர்.

 அந்நம்பிக்கையென்னும் அடித்தளத்தின் மீது பின்னாளைய திராவிட மதத் தத்துவங்களுக்கு மூலமான விண்மீன்களை வழிபட்ட ஹரப்பன் சமயம் எனும் கட்டுமானத்தையே புனைந்துவிட்டனர்.2 அவசரமான முடிவுகளை மேற்கொண்டனர்; அதே அவசரத்துடன் அம்முடிவுகளை கைவிடவும் செய்தனர். முரட்டுத்தனமான வேர்ச்சொல் உருவாக்க விளையாட்டிலும் ஈடுபட்டனர். ஆயினும், தமது கற்பனைக் குதிரையைத் துள்ளிக் குதிக்க அனுமதிக்காததால்தான் அஸ்கோ பார்போலாவால் இந்த அளவுக்குத் தமது முயற்சியில் முன்னேற முடிந்தது என்பதை நாம் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். மனமாரப் பாராட்ட வேண்டிய ஒரு சாதனை பின்லாந்து அறிஞர்கள் முயன்று உழைத்துத் தயாரித்த ‘ஹரப்பன் எழுத்துப் பட்டியல்’ ஆகும். அது ஹரப்பன் எழுத்துகளை வாசிக்கும் ஆய்வு முயற்சிகளுக்கு உறுதுணையான ஒரு கலங்கரை விளக்காக விளங்கும். இந்த விஷயத்தில் ஆய்வு முயற்சி என்பதே, கரையை அடைவதற்கு “மீண்டும் மீண்டும் தளராமல் முயற்சி செய்வது; தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்வது” என்ற கோட்பாடுதான். பின்லாந்து நிபுணர்களுக்கும் இக்கோட்பாடு பொருந்தும். இத்தனை முயற்சிகளுக்குப் பிறகும், சிந்துவெளி முத்திரை வாசகம் என்பது முத்திரையிட்டு மூடப்பட்ட வாசகமாகவே (நூலாகவே) இருக்கிறது என்பதுதான் தற்போதைய நிலை. இதனைப் பின்லாந்து நிபுணர்களும் ஒப்புக்கொள்வதே நேர்மை.

 அடிக்குறிப்புகள்:

 1. திருமதி ஏ.ஆர்.கே. ஜைடும், கமில் வி. சுவலபில்லும் (நானும்) இணைந்து பதித்துள்ள ‘The Soviet Decipherment of the Indus Valley Script, Translation and Critique (Mouton, 1976) என்ற நூலில் சோவியத் நிபுணர்களின் ஆய்வு முறைமையும், அவர்களின் தொடக்க கால முடிவுகளும் எங்களால் விரிவாகத் திறனாய்வு செய்யப்பட்டுள்ளன. மேலும், சோவியத் நிபுணர்கள் ரஷ்ய மொழியில் எழுதியுள்ள ஹரப்பன் பொறிப்பு வாசகங்கள் பற்றிய விளக்கங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, உரிய விமரிசன உரையுடன் அந்நூலில் பதிப்பித்துள்ளோம்.

 2. இது பற்றிய விளக்கத்திற்குப் பார்க்க: Decipherment. . .and Progress. . . I I J – XII 2 (1970) by A .R.K. Zide, and K. Zvelelil, pp.126-34; ‘Review of works on Indus Valley Scvipt’ by A.R.K. Zide and K. Zvelebit, Edited by Knorozoy) in Language 46 (1970) 4. pp. 952-68.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard