New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பாரதத்தின் ஒருமைப்பாடு: சங்க இலக்கியச் சான்றுகள்


Guru

Status: Online
Posts: 24603
Date:
பாரதத்தின் ஒருமைப்பாடு: சங்க இலக்கியச் சான்றுகள்
Permalink  
 


 பாரதத்தின் ஒருமைப்பாடு: சங்க இலக்கியச் சான்றுகள்! (Post No.3625)

ff046-bhartmata2btricolor2bflag.jpg?w=60

Written by S NAGARAJAN

 https://tamilandvedas.com/tag/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/

Date: 11 February 2017

  contact: swami_48@yahoo.com

 சங்க இலக்கிய ஆய்வு – கட்டுரை எண் 21

இரண்டாம் பாகம் – முதல் கட்டுரை

இந்தக் கட்டுரை சுமார் 42 ஆண்டுகளுக்கு முன்னர் 2-12-1973 தினமணி சுடர் இதழில் வெளியான எனது கட்டுரை.

 பாரதத்தின் பழம்பெரும் ஒருமைப்பாடு: சங்க இலக்கியச் சான்றுகள்!                       by ச.நாகராஜன்

 மனிதர்கள் கூட்டமைப்பாக ஓரிடத்திலே தங்கி வாழ்ந்து தமக்கெனச் சிறப்பான பழக்க வழக்கங்களையும், பண்பாட்டையும் என்று ஏற்படுத்திக் கொண்டார்களோ, அன்றே தேசம் பிறந்தது. இயற்கையான எல்லைகளைக் கொண்டு, பொதுவான இலக்கியம், பண்பாடு, பழக்க வழக்கங்கள், வழிபாட்டு முறைகள், கருத்துக்கள் ஆகியவற்றைக் கொண்ட மனிதத் தொகுதியையே தேசம் என்று ஹோலி காம்ப் (Hole Combe) பர்கெஸ் (Burgess), கெட்டல் (Gettell) போன்ற மேனாட்டறிஞர் உரைப்பர். பூகோள எல்லையை வெறும் உடலாகவும், பழம் பெரும் பண்பாடு, மரபு, பழக்க வழக்கங்களை ஆன்மாகவும் உருவ்கப்படுத்துகிறார் சர் எர்னஸ்ட் பார்கர் (Sir Ernest Barrmer) என்ற தற்கால அறிஞர்.

இந்த நோக்கில் பாரதம் ஒன்றுபட்ட தனிப்பெரும் நாடாக பண்டு தொட்டு இலங்கி வந்திருக்கிறது. இதற்கான சான்றுகளை சங்க இலக்கியத்தில் பரக்கக் காணலாம்.

நாட்டு எல்லைகள்

இமயம் முதல் குமரி வரை பரவியுள்ள பூமியே பாரதம் என்று விஷ்ணு புராணம், மகாபாரதம், பாகவதம் ஆகிய நூல்கள் கூறுகின்றன. சங்க நூல்களிலும் நம் எல்லை பற்றிய இத் தெளிவான கருத்தைப் பல இடங்களில் காண்லாம்.

தென் குமரி, வட பெருங்கல்

 குண குட கடலா எல்லை”  (புறம் 17)

 

வடா அது பனிபடு நெடுவரை வடக்கும்

தெனா அது உருகெழு குமரியின் தெற்கும்

குணா அது க்ரைபொரு தொடுகடற் குணக்கும்

குடா அது தொன்று முதிர் பௌவத்தின் குடக்கும் (புறம் 5)

என்று புறநானூற்று அடிகளும்,

“ஆரியர் துவன்றிய பேரிசை இமயம்

தென்னங்  குமரியொ யாயிடை” (பதிற்றுப்பத்து 11)

“நெடுவரை

வடதிசை எல்லை இமயமாகத்

தென்னங் குமரியொடு ஆயிடை அரசர் (பதி-43)

என்ற பதிற்றுப்பத்து அடிகளாலும், பண்டாட்டால் ஒன்று பட்டிருந்த நாடு, பல அரசர்களால் ஆளப்பட்டதென்றாலும், அதை ஒவ்வொரு அரசனும் தன் ஆளுகைக்குக் கீழ்க் கொணர முயற்சித்து வெற்றி பெருவதைப் பெருமையாகக் கொள்வது வழக்கம் என்றும் அறிகிறோம்.

இலக்கிய ஒருமை

தேசம் முழுவதெற்கும் பொதுவான இலக்கியமெனத் திகழும் இராமாயண, மகாபாரதக் கதை நிகழ்ச்சிகள் சங்க இலக்கியம் முழுதும் காணப்படுகின்றன.

பீமன் அரக்கு மாளிகைத் தீயிலிருந்து பாண்டவர்களைக் காப்பாற்றியது (கல்-25), பீமன் துரியோதனன் தொடையை முறித்தது (கலி-52), துச்சாதனன் திரௌபதியின் கூந்தலைப் பற்றி இழுத்தது (கலி 101) ஆகிய பாரதக் கதை நிகழ்ச்சிகளையும் சீதையின் ஆபரணங்களைக் குரங்குகள் அணிந்தது, சீதையை இராவணன் தூக்கிச் சென்றது (புறம் 378), தனுஷ்கோடியில் இராமன் தன் கை கவித்துப் பறவைகளின் ஒலியை அடக்கியது (அகம் 70) ஆகிய இராமாயணக் கதை நிகழ்ச்சிகளையும் சங்க இலக்கியம் கூறுவதிலிருந்து இந்தப் பொதுவான இலக்கியம் பற்றிய உணர்வு பழங் காலத்திலேயே இருந்தது என்று தெரிகிறது..சுமார் நூற்றிற்கும் மேற்பட்ட புராணச் செய்திகளை சங்க இலக்கியம் கூறுகிறது.

 

b0a28-2-books252c2bbl.jpg?w=600

பண்பாட்டு ஒருமை

பாரதப் பண்பாடு வலியுறுத்தும் உருவ வழிபாடு, இம்மை, மறுமை பற்றிய எண்ணம், மறுபிறப்பில் நம்பிக்கை, கங்கை, காவிரி, இமயம் போன்ற ஆறு, மலைகளைப் பற்றிய புனித உணர்வு, கற்பிற்கு அருந்ததியைக் காட்டல், வேள்வி இயற்றல் போன்றவற்றை சங்க இலக்கியத்தில் காண்கிறோம்.

திருமுருகாற்றுப்படையில் ஆறு முகங்களைப் பற்றி வரும் அருமையான விளக்கமும், பதிற்றுப்பத்தில் வரும் ‘க்டவுள் பத்தினிக் கற்கோள் வேண்டி’ (5ஆம் பதிகம்) என்ற வரியும் உருவ வழிபாட்டைச் சங்க கால மக்கள் ஏற்றிருந்தமையை வலியுறுத்துகின்றன. மேலும் க்டவுளை வாழ்த்தல், கடவுளுக்குப் பலி கொடுத்தல், கோவில் அமைத்தல் முதலானவற்றைப் பெரும்பாணாற்றுப்படை (வரி 39), நற்றிணை (358), பட்டினப்பாலை (வரி 286-287) ஆகியவற்றில் காண்கிறோம்.

தவறான வழியில் ஈட்டும் பொருள் இம்மைக்கும், மறுமைக்கும் பகையாக இருக்கும் என்ற நம்பிக்கையைக் கலித்தொகை (14) கூறுகிறது.

“இம்மை உலகத்து இசையொடும் விளங்கி

மறுமை உலகமும் மறு இன்றி எய்துப”

என்ற அகநானூற்று (66) அடிகள் சங்க கால மக்களின் மறு உலக நம்பிக்கையை வலியுறுத்துகிறது.

“தேய்தல் உண்மையும் பெருகல் உண்மையும்

   மாய்தல் உண்மையும் பிறத்தல் உண்மையும்:” (புறம் 27)

  “உயர்ந்த வேட்டத்து  உயர்ந்தி சினோர்க்கு

   செய்வினை மருங்கின் எய்தல் உண்டு எனின்

   தொய்யா உலகத்து நுகர்ச்சியும் கூடும்

   தொய்யா உலகத்து நுகர்ச்சி இல் எனின்

   மாறிப் பிறப்பின் இன்மையுங் கூடும்” (புறம் 214)

என்கின்ற புறநானூற்று அடிகளால் சங்க காலத்தில் பாரதப் பண்பாட்டின் அடிப்படையான மறுபிறப்பு நம்பிக்கையையும், வினைப்பயன் பற்றிய எண்ணமும் இருந்தது என்பது விளங்குகிறது.

சிவன் உறைந்திருப்பதால் புனிதம் பெற்ற இமயம் என்ற பொருளில் ‘கடவுள் உறைய கல்லோங்கு நெடுவரை’என்ற அடியைப் பதிற்றுப் பத்தில் காண்கிறோம். பத்தினித் தெய்வமான கண்ணகிக்கு இமயத்தில் கல் எடுத்து புனிதமான் கங்கையிலே நீராட்டலை ‘ பேரிசை இன்பல் அருவிக் கங்கை மண்ணி; என்று பதிற்றுப்பத்து (பதிகம் 5) குறிப்பிடுகிறது.

 

e0a54-panchchuli2bhimalayas.jpg?w=600

‘வடமீன் புரையும் கற்பின் மடமொழி’ என்று புறநானூறும் (122), ’வட்மீன் போல் தொழுதேத்தும் வயங்கிய கற்பினாள்’ என்று கலித்தொகையும் (2) கற்பிற்கு எடுத்துக்காட்டாக அருந்ததியைக் கூறுகின்றன.

பாரதம் முழுதும் வேள்வி இயற்றல் பண்டைக் காலத்தில் பரவி இருந்தது. பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி  என்ற பாண்டிய மன்னம் பெயராலும், சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி என்ற சோழன் பெயராலும் சங்ககால் மன்னர்கள்  வேள்வி இயற்றிய செய்தியை உணரலாம்.

பிணத்தைப் பாடையில் கொண்டு செல்லல் (புறம் 286) போன்ற பழக்க வழக்கங்களும் இறந்த கணவனுக்குக் காதலி பிண்டம் வைத்தல் போன்ற ச்டங்குகளும் நாடு முழுவ்தற்கும் பொதுவானவையாக இருந்தவை தான்.

 

ஒரே நாடு பாரதம்

இப்படி இயற்கையான பூகோள எல்லையால் பொதுவான உடலையும், ஒரே பண்பாடு, மரபு, பழக்க வழக்கங்கள் ஆகியவற்றால் பொதுவான ஆன்மாவையும் பாரதம் கொண்டிருந்தது என்பது சங்க இலக்கியம் கூறும் உண்மை. அதாவது ஒரே தேசம் என்ற எண்ணம் சங்க இலக்கியம் எவ்வளவு பழமையானதோ அவ்வளவு பழமையானதாகும்.

****

 



__________________


Guru

Status: Online
Posts: 24603
Date:
RE: பாரதத்தின் ஒருமைப்பாடு: சங்க இலக்கியச் சான்றுகள்
Permalink  
 


http://www.tamilvu.org/courses/degree/a031/a0311/html/a0311223.htm

 

2.3 இலக்கியச் சான்றுகள்

இலக்கியத்தைப் படைக்கின்ற ஆசிரியர்கள் தாங்கள் இயற்றும் இலக்கியங்களில் தங்கள் கருத்தை வெளிக் கொண்டு வரும்போது அவற்றுடன் தமது காலத்துக்கு முன் நிகழ்ந்த நிகழ்சசிகளையும், தமது காலத்தில் நிகழும் நிகழ்ச்சிகளையும் நன்கு அறிந்து எழுதுகிறார்கள். இவ்வகையான இலக்கியங்கள் ஒரு நாட்டின் வரலாற்றில் இடம் பெற்றுள்ள நிகழ்வுகளைச் சுட்டுவதால் இலக்கியங்கள் இன்றையளவும் தமிழக வரலாற்றை அறிய உதவும் முக்கியச் சான்றுகளாக விளங்குகின்றன.

தமிழக வரலாற்றுக்கான இலக்கியச் சான்றுகளை நாம் இரு பிரிவுகளாகப் பிரித்துக் காணலாம். அவையாவன:

1. தமிழ் இலக்கியச் சான்றுகள்
2. பிற இந்திய மொழி இலக்கியச் சான்றுகள்

2.3.1 தமிழ் இலக்கியச் சான்றுகள்

பொதுவாகச் சங்க காலத்தைப் பற்றி இன்றும் அறிஞர்களிடையே பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. இருப்பினும் நாம் இங்குக் கி.பி. முதலாம், இரண்டாம், மூன்றாம் நூற்றாண்டுகளைச் சங்க காலமாகக் கருதலாம். இச்சங்க காலத்தை மூன்றாவது சங்க காலம் என்பர். அதாவது கடைச் சங்க காலம் எனலாம். இதற்கு முன்னர் முதல் இரண்டு சங்கங்கள் இருந்ததாக முன்னரே படித்திருக்கிறோம்.

தொல்காப்பியம் என்னும் இலக்கண நூல் இரண்டாவது சங்க காலத்தில் எழுந்த நூல் என்பது பல அறிஞர்களின் கருத்து. இந்நூலில் தமிழ்ச் சமுதாயத்தை விளக்கும்வண்ணம் எண்ணற்ற கருத்துகள் காணப்படுகின்றன.

சான்று:

ஆயர், வேட்டுவர், ஆடூஉத் திணைப்பெயர் 
ஆவயின் வரூஉம் கிழவரும் உளரே

(தொல்காப்பியம்–பொருள்-அகத்திணையியல்-23)

(ஆயர்-முல்லை நில மக்கள் பெயர்; வேட்டுவர்-குறிஞ்சி நில மக்கள் பெயர்; ஆடுஉ-ஆண்; கிழவர்-தலைவர்.)

தொல்காப்பியர் காலத்திற்கு முன்னர் ஆயர், வேட்டுவர் போன்ற பிரிவினர் வாழ்ந்து வந்தனர் என்பது இதன் வழியாக நமக்குக் கிடைக்கின்றது.

சங்க காலத்தில் எழுந்த பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்கள் அக்கால அரசியல், சமுதாய, பொருளாதார வரலாறுகளைப் படம் பிடித்துக் காட்டுகின்றன. சில சான்றுகள் காண்போம்.



__________________


Guru

Status: Online
Posts: 24603
Date:
Permalink  
 

 
NAL_VEDAM

நான்கு வேதங்கள் என்பது வடமொழி மற்றும் ஆரியர்களுக்கு உரியது என்றும், தமிழர்களுக்கும், தமிழுக்கும் தொடர்பற்றது என்றும் கருத்து உள்ளது. நமது இலக்கியம் மற்றும் புராணங்களை உற்று நோக்கும்பொழுது அதில் காணக்கிடைக்கும் தகவல்கள் வேறுவிதமான கருத்தை முன் வைக்கின்றன.
 தமிழகத்தின் வரலாறு, பண்பாடு இவற்றை எடுத்தியம்பும் சங்க நூல்களில் பதிற்றுப்பத்தும், புறநானூறும் காட்டும் தகவல்கள் ஒரு தெளிவான பார்வையை ஏற்படுத்துகின்றன. பதிற்றுப்பத்து இலக்கியம் தமிழகத்தின் எல்லைகள் பற்றிக்கூறும்பொழுது, "வடதிசை எல்லாம் இமயம் ஆக' என்கிறது. அதாவது, வடக்கு எல்லை இமயம் என்று கூறுகிறது. இப்படிக் கூறும் அதே நூல் குமரிக்கண்டம் பற்றிப் பேசும்பொழுதும் அதன் வடக்கு எல்லை இமயம் (ஆரியர் துவன்றியபேரிசை இமயம் / தென்னம்குமரியோடு ஆயிடை) என்றே குறிப்பிடுகிறது.
 இப்படி இமயத்தைத் தன்னுள் கொண்டதாகவே சங்க இலக்கியம் தமிழகத்தைக் காட்டுகிறது. இமயம் நமக்கானதாய் இருந்தபொழுது வேதம் மட்டும் வேறுபட்டது என்று எப்படி ஒதுக்க முடியும்? தொல்காப்பியத்தின் சிறப்புப் பாயிரத்தின் முதல் செய்யுளில், "அறங்கரை நாவின் நான்மறை முற்றிய / அதங்கோட்டு ஆசாற்கு அரில்தபத் தெரிந்து' என்று நான்மறை பற்றிய செய்தி உள்ளது.
 அதாவது, நான்கு வேதங்களை முற்றிலும் அறிந்த அறம் பேசும் அதங்கோடு என்னும் ஊரில் இருக்கும் ஆசிரியரிடம் முதலில் தொல்காப்பியத்தைப் படித்துக்காட்டிய பின்னரே அதனை அரங்கேற்றம் செய்ததாகக் கூறுகிறது தொல்காப்பியம்.
 பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் பாரதப் போரில் வீரர்களுக்குச் சோறிட்டான் என்று புறநானூறு (புறம்-2 ) கூறுகிறது.
 தமிழ் இலக்கியத்தின் வேர்கள், நம் நிலப்பரப்பு, வரலாற்றின் காலம் இவற்றின் ஆழ அகலங்களைச் சொல்லிக் கொண்டிருக்கின்றன. அதே நேரத்தில், பத்ம புராணம், மச்சபுராணம் போன்ற புராணங்கள் நமது பழந்தமிழ் ஊர்களைக் களமாகக்கொண்டு அமைந்துள்ளன. திருப்பரங்குன்றம், மதுரை முதலிய ஊர்கள் பற்றி அவை பேசுகின்றன. இவற்றை எல்லாம் மனத்தில் கொண்டு பார்த்தால் வேதம் பற்றிய கருத்திலும் சற்று தெளிவு ஏற்படும்.
 புறநானூற்றின் பல பாடல்களில் வேதம் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன. இறைவணக்கச் செய்யுளான முதல் பாடலிலேயே சிவபெருமானைப் பற்றிப் பாடுகிறார் பெருந்தேவனார். சிவனை வர்ணிக்கும் புலவர், வேதம் உணர்ந்த அந்தணர்கள் சிவனைத் தொழுது ஏத்துவார்கள் (கறைமிடறுஅணியலும்அணிந்தன்று; அக்கறை / மறைநவில்அந்தணர் நுவலவும்படுமே) என்கின்றார்.
 பெருஞ்சோற்று உதியன் சேரலாதனை வாழ்த்தும் புலவர் முரஞ்சியூர் முடிநாகராயர், "பால் புளித்தாலும், பகல் இருளானாலும் நான்கு வேதங்களின் நெறிமுறை மாறினாலும் திரிபில்லாச் சுற்றத்தாருடன் நீ வாழ்வாயாக' என்கிறார்.
 "பாஅல் புளிப்பினும் பகல் இருளினும்
 நாஅல் வேத நெறிதிரியினும்
 திரியாச் சுற்றமொடு முழுது சேண்விளங்கி' (புறம்-2)
 இப்பாடலில் நால்வேதம் பற்றி மட்டும் புலவர் குறிப்புத் தரவில்லை. அந்தணர் வளர்க்கும் வேள்வித் தீ பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.
 "நடுக்கின்றி நிலியரோ அத்தை; அடுக்கத்துச்
 சிறுதலை நவ்விப்பெருங்கண் மாப்பிணை,
 அந்தி அந்தணர் அருங்கடன் இறுக்கும்
 முத்தீ விளக்கிற்றுஞ்சும் பொற்கோட்டு
 இமயமும்,பொதியமும் போன்றே' (புறம்-2 )
 "இமயம், பொதியம் ஆகிய மலை அடுக்கத்தில் அந்தணர் வளர்க்கும் முத்தீ விளக்கொளியில் நவ்வி-மான்கள் உறங்குவது போல அச்சமின்றி உன் மக்கள்-சுற்றம் நிலை கொள்வதாகுக' என்கிறார். இப்பாடல் வேதம் மற்றும் ஆரியக் கருத்துகள் பற்றிய தெளிவைத் தருகிறது. இதேபோல,
 "... ... ... நால் வேதத்து
 அருஞ் சீர்த்திப்பெருங் கண்ணுறை
 நெய்ம் மலி ஆவுதிபொங்கப், பன்மாண்
 வீயாச் சிறப்பின் வேள்வி முற்றி' (புறம் -15)
 "முழவினை முழக்கிக்கொண்டு உன்னைப் பாடும் பாடினியின் வஞ்சிப் பாடலை விரும்பும் வலிமை மிக்கவனே! நால்வேத சிறப்புமிக்க, குழியில் நெய் ஊற்றி, ஆவி பொங்க வேள்வி செய்து, தூண் நட்டுச் சிறப்பெய்தியவனே' எனக் கபிலர், சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதனை வாழ்த்துகின்றார். இங்கும் வேதம் மற்றும் வேள்வி பற்றிய குறிப்பைக் காண்கிறோம்.
 "பணியியர் அத்தைநின் குடையே; முனிவர்
 முக்கண் செல்வர் நகர்வலஞ் செயற்கே
 இறைஞ்சுக, பெருமநின் சென்னி; சிறந்த
 நான்மறை முனிவர் ஏந்துகை எதிரே' (புறம்-5)
 அதாவது, "நகர்வலம் வரும் முக்கண்ணரான சிவபெருமான் முன் மட்டுமே உன் குடை தாழ்வு கொள்ளட்டும், நான்மறைகளை ஓதும் முனிவர்கள் முன் மட்டுமே உன் சிரம் தாழ்த்துவாயாக!' என்று பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி மன்னனை வாழ்த்தும்பொழுது பாடுகிறார் புலவர் காரிகிழார். இவை தவிர, நால்வேதங்கள் பற்றிய குறிப்புகள் பல சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன.
 மொழியை மேன்மை செய்த நம் பெரியோர் ஒரே நிலப்பரப்பில் விளங்கிய இரு வேறுபட்ட தனிச் சிறப்பு வாய்ந்த மொழிகளை அவற்றின் செறிவுமிக்க கருத்துகளை ஒன்றுக்கொன்று பெருமை சேர்க்கும் வகையில் பயன்படுத்தினார்களேயன்றி, எவ்விதக் காழ்ப்புணர்ச்சியும் அவர்களுக்கு இருக்கவில்லை. புறநானூறு நம் பண்பாடு, நாகரிகம், வாழ்வியல் முறை சொல்லும் நூல் எனில், அது சொல்லும் வேதம் பற்றிய செய்திகளும் நம்முடையவைதானே!
 -கோதை ஜோதிலட்சுமி



__________________


Guru

Status: Online
Posts: 24603
Date:
Permalink  
 

சங்க இலக்கியங்கள் போற்றும் .....
தமிழர் எல்லை இமயம் .

மூவேந்தரும் இமயத்தில் தமது வெற்றிச் சின்னத்தைப் பொறித்ததை ‘இமயநெற்றியில் விளங்கு வில்-புலி-கயல் பொறித்த நாள்’ என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.

இமயம் வரை வெற்றி கண்ட சேரலாதன் மற்றும் செங்குட்டுவன் பற்றி,
அகநானூறு 127,
புறநானூனு 39,
சிறுபாணாற்றுப்படை 48,
பதிற்றுப்பத்து பதிகம் 2,
பதிற்றுப்பத்து 2-11,
பதிற்றுப்பத்து 43,
சிலப்பதிகாரம் வாழ்த்துப்பாடல் --
ஆகிய இடங்களில் வருகிறது.


*கரிகாலன் இமயம் வரை வெற்றி கண்டது பற்றி,
கலிங்கத்துப்பரணியில் ‘இமயத்தில் புலிக்கொடி’ எனும் பகுதி,
*சிலப்பதிகாரத்தில் இந்திரவிழவூரெடுத்த காதை 88-97, வஞ்சிக் காண்டம் 24 மற்றும் மதுரைக் காண்டம் 17,
*பெரியபுராணத்தில் திருக்குறிப்புத்தொண்ட நாயனார் புராணம், செய்யுள் 85
மற்றும் அதே நூலில் எறிபத்தர் கதை ஆகிய கூறுகின்றன.

 

நெடியோன் பாண்டியன் இமய மலையையும் கங்கையையும் கைப்பற்றி ஆண்டதை சிலப்பதிகாரம் 11:17-22 கூறுகிறது.

ஏதோ பக்கத்து ஊர் குன்றினைக் குறிப்பிடுவது போல இமய மலையைச் சுட்டிக் காட்டும் குறிப்புகள் இலக்கியம் முழுவதும் கொட்டிக் கிடக்கின்றன.

திருக்குறள் 969 இமயமலையில் வாழும் கவரிமா முடியை நீக்கினால் (குளிரில்) இறக்கும் என்று கூறுகிறது.

இமய மலையில் மூங்கில் மரங்கள், நெல்லி மரங்கள், கொன்றை மரங்கள் இருப்பது பற்றியும் இமயமலை மான்கள் வறட்சியின் போது நெல்லிக் காயைத் தின்னும் என அகநானூறு 399 கூறுகிறது.

நவ்வி மான்கள் அந்தணர் வளர்த்த தீயின் வெளிச்சத்தில் (கதகதப்பில்) வந்து உறங்கும் என்று புறநானூறு 2 கூறுகிறது.

சிவந்த கால்களுடன் வெண்ணிற அலகு கொண்ட பறவை இமய மலையில் ஏரிகளில் திரிவது பற்றி நற்றிணை 356 கூறுகிறது.

இமயமலை அருவிகள் கங்கை ஆற்றுடன் கலப்பதையும் இமய மலையில் உள்ள ஞெமை மரங்கள் பற்றியும் மாலை வேளையில் கொக்குகளும் இதர பறவைகளும் கூட்டாகப் பறப்பதையும் முல்லைகொடி மொட்டுகள் மலர்வதையும் நற்றிணை 369 விவரிக்கிறது.

இமயமலையின் பறவைகள் பகலில் மேகங்களைக் கொத்துமளவு உயரப் பறந்து மாலை கூடடைவதை கலித்தொகை 92 கூறுகிறது.

இமயமலை மாலை நேரத்தில் பனியில் செவ்வானக் கதிர்கள் பட்டு தங்கம்போல மின்னும். இதனை தங்கம் என்று புறநானூறு 39 மற்றும் 369, அகநானூறு 398, மற்றும் பெரும்பாணாற்றுப்படை ஆகியன வர்ணிக்கின்றன.

*இமயமலையின் இருக்கும் மூங்கில் மரங்கள் பற்றி புறநானூறு 166,
*முருக்க மரங்களையும் நரந்தைப் புற்களையும் கவரிமான்களையும் பற்றி பதிற்றுப்பத்து 11,
*மாமரங்களைப் பற்றி அகநானூறு 127 ஆகிய பாடல்கள் கூறுகின்றன.

இமய மலையின் தகர மரங்கள், எலுமிச்சை மணமுடைய நரந்தை புல், நீர்ச்சுனைகளில் மலர்ந்திருந்த குவளை மலர்கள், புல்லைத் தின்றுவிட்டு ஓய்வெடுக்கும் கவரிமா ஆகியன புறநானூறு 132 இல் குறிக்கப்படுகின்றன.

இமயமலையில் மேகங்கள் மோதி (கொண்டல்) மழை பொழியும் என்கிறது புறநானூறு 34.

இதுபோக இமயமலையை போகிற போக்கில் குறிப்பிடுவதை புறநானூறு 166, குறுந்தொகை 158, கலித்தொகை 105, அகநானூறு 265, பரிபாடல் 8 ஆகியவற்றில் பார்க்கிறோம்.

எந்தவொரு மொழியிலும் இமய மலை பற்றி இத்தனை விரிவாக ஆவணங்கள் இல்லை.

“இமயம் எமது எல்லை” என்று எந்த இனமும் எழுதி வைக்கவும் இல்லை.

நியாயப்படி இலக்கியச் சான்றுகள் காட்டி தமிழர்களாகிய நாம் இமய மலை வரை திருப்பிக் கேட்டாலும் 'ஹி'ந்தியர் மறு கேள்வி கேட்காமல் தரவேண்டும்.

தனி =

*கைப்பற்றி என்பது புற நாட்டு அல்லது அயல் நாட்டு மக்களின் அல்லது ஆரிய = பிராமண ஆட்சியை அல்ல ; (ஆரிய = ஆர கற்ற (எ .கா) பாணர் குல மக்கள் ; ஆரிய என்றவுடன் இன்றைய பிராமணர் அதற்குள் தங்கள் ஆட்சி என்று ஊடுருவி கொள்கிறர் )
*தமக்கு கட்டுப்படாத உள்நாடு ... உள்ளூர் குல மக்கள் ஆட்சியையே கைப்பற்றினர் ... 
*பின் சமரசம் செய்து கொள்வர் என கருத வேண்டும்.

நன்றி:-
kalappal இணையம்,
திருத்தம் பொன்.சரவணன், மற்றும் விக்கிபீடியா



__________________


Guru

Status: Online
Posts: 24603
Date:
Permalink  
 

சங்க இலக்கியங்களில் ஆரியர் – திராவிடர்

 https://aryandravidian.wordpress.com/2010/04/04/3/

சங்க இலக்கியங்களில் ஆரியர் – திராவிடர்

கே. வி. ராமகிருஷ்ண ராவ்[1]

திராவிடச் சான்றோர் பேரவை மார்ச் 25 முதல் 27, 2009 வரை சென்னையில் “மதம் மற்றும் தத்துவங்களில் தென்னிந்தியாவின் பங்கு” என்ற தலைப்பில் ஒரு தேசிய கருத்தரங்கத்தை ஏற்பாடு செய்து, ஆய்வுக்கோவையை வெளியிட்டுள்ளது.

 

அதிலிருக்கும், இக்கட்டுரை இங்கு விவாதத்திற்காகப் பதிவு செய்யப்படுகிறது.

பக்கங்கள் 11-44ல் பார்க்கலாம்.

இந்திய சரித்திரத்தில் “ஆரியர்கள்” எப்பொழுது அறிமுகப் படுத்தப் பட்டார்களோ, அப்பொழுதிலிருந்தே “ஆரியர்” ஒரு முக்கியத்துவத்தை அடைந்ததோடல்லாமல், மொழியியல் (linguistic) மற்றும் இனரீதியிலான (racial) திரிபுவாதங்களுக்கும் (interpretations) உட்பட்டது. பிறகு வந்த கால்ட்வெல்லுடைய மொழியியல் ரீதியில்[2] கண்டு பிடிக்கப்பட்ட “திராவிடர்”, மொழி மற்றும் இனம் வெவ்வேறானவை என்றறிந்திருந்தும், மேற்கத்தைய மற்றும் இந்திய வல்லுனர்களால் இனவாத சித்தாந்தத்திற்கு படுத்தப் பட்டது.

இந்த கருதுகோள்கள்-சித்தாந்தங்களை விடுத்து, தமிழர்களுடைய “சங்க இலக்கியம்” எனப்படுகின்ற தொன்மையான இலக்கியங்களில் “ஆரியர்” என்ற வார்த்தை இருப்பதைப் பற்றி இக்கட்டுரை விவாதிக்கிறது[3]. பிறகு “திராவிடர்” பற்றி ஆராயப் படுகிறது. கடந்த காலத்தை அறியும் முயற்ச்சிகளில், பிற்கால கருத்துகளை கடந்தகால நிகழ்வுகளின் மீதேற்றி ஒவ்வாததாகவும் முரண்பாடாகவும்Bishop Robert Caldwell
1814 – 1891

இருப்பினும், பிடிவாதமாக விவாதிக்கும் போக்கும் முறைகளும் இன்றைய சரித்திரவரைவியலில் காணப்படுகின்றன. இதனால்தான் பலதரப்பட்ட மாற்று கருத்துகள், எதிர்-எதிரான வாதங்கள் உருவாகின்றன. ஆகையால், இங்கு தமிழர்களின் தொன்மையான இலக்கியங்களில் “ஆரியர்” என்ற சொல்லிற்கு என்ன பொருள், எவ்வாறு அது உபயோகப் படுத்தப் பட்டது என்ற நிலையில் ஆராயப்படுகிறது.

“ஆரிய”, “ஆரியர்”, “ஆரியன்” முதலிய வார்த்தைகள், சொற்றொடர்கள் பெயர்ச்சொல் மற்றும் உரிச்சொல் வடிவங்களில் உபயோகப்படுத்தப் பட்டுள்ளன. சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை “சங்க இலக்கியம்” என்ற தொகுப்பில் வருமா வராதா என்று எதிர்-எதிரான கருத்துகள்[4] வெளிவந்துள்ளதால் ஆய்வு “பத்துபாட்டு” மற்றும் “எட்டுத்தொகை” நூற்தொகுப்புகளில் மேற்கொள்ளப்படுகிறது. இப்பொழுது “ஆரியர்” சொல் எங்கெங்கெல்லாம் காணப்படுகிறது என்பதனைப் பார்ப்போம்.

நற்றிணை: காதலை அடக்கிய இது “எட்டுத்தொகை” நூல்களில் முதலாகக் குறிப்பிடப் படுகின்றது. பெயர் அறியப்படாத ஒரு புலவரால் பாடப்பட்ட 170வது பாடலில் “ஆரியர்” என்ற வார்த்தைக் காணப்படுகிறது:

ஆரியர் துவன்றிய பேரிசை முள்ளூர்

பலருடன் கழிந்த ஒள்வாள் மலையனது (170:6-7)

“ஆரியர் நெருங்கிச் செய்த போரின் கண்ணே பெரிய புகழை உடைய முள்ளூர்ப் போர்களத்து பலருடன் போர்க்குச் சென்று உறையினின்றும் எடுத்த ஒள்ளிய வாட்படையை உடைய மலையனது.. ..” என்று உரையெழுதப் பட்டுள்ளது[5]. தலையியின் தோழி தலைவிக்கு நடனமாடும் அழகி தலைவனை மயக்கிவிடுவானோ என எச்சரிக்கிறாள். இங்கு “ஆரியர்” என்பவர் வந்து போரிட்டது தெரிகின்றது.

குறுந்தொகை: இங்கு “ஆரியர்”, அடிக்கும் பறை-மேளத்தின் ஓசைக்கேற்றவாறு, எப்படி ஒரு கயிற்றின் மீது ஆடுகின்றனர் எனக்குறிக்கப்படுகிறது.

……………………..…………………..ஆரியர்

கயிறாடு பறையிற் கால்பொரக் கலங்கி

வாகைவெண்நெற் றொலிக்கும். (குறுந்தொகை.7:3-5)

காடு முழுவதும் மூங்கில் மரங்கள் நிறைந்துள்ளன. அவை வாகை மரத்தின் (Sirisa tree) முற்றிய விதைகள், அம்மரம் சிலிர்த்து உதிரும்போது காற்றினால் எடுத்துச் செல்லப்பட்டு, அம்மூங்லில்களின் மேற்பட்டு, பறைகளை அடித்து உருவாகும் ஓசைபோல, சப்தம் உண்டாகிறது. எனவே இங்கு “ஆரியர்” என்பவர் கயிறு மேல் ஆடுபவர் என்று தெரிகிறது.

பதிற்றுப்பத்துக் கூறும் “ஆரியர்” : சேர அரசர்களின் வீரச்செயல்களை விளக்கும் இந்நூல், சரித்திர ரீதியில், இது “ஆரியரை”ப்பற்றி சிறிது அதிகமான தகவலைத் தருகிறது. முதல் மற்றும் கடைப் பதிகங்கள் கிடைக்கப்படவில்லை, என்று ஆராய்ச்சியாளர்கள் கூறி வருகின்றனர்[6]. இரண்டாவது பதிகத்தில் (வரிகள்: 4-7) கீழ்காணும் விவரங்கள் கிடைக்கின்றன:

அமைவரல் அருவி இமையம்விற் பொறித்து

 

இமிழ்கடல் வேலித் தமிழகம் விளங்கத்

தன்கோல் நிறீஇத் தகைசால் சிறப்பொடு

பேரிசை மரபின் ஆரியர் வணக்கி

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைக் குமட்டூர்க் கண்ணனார் பாடியது.

 

இரண்டாம் பத்து, பதிகம் (4-7)

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் இமயத்தின் மீது தனது அரசு சின்னம் மற்றும் கொடியிலிருக்கும் இலச்சினையான வில்லைப் பொறிக்கிறான். முழங்குகின்ற அலைகளையுடய கடலையே எல்லையாகக் கொண்டு தமிழகத்தை மற்ற நாடுகளையும் மிஞ்சும் வண்ணம் ஆண்டுவந்தான். மிக்கச் சிறப்பும் வழிமுறையும் உடைய “ஆரியரை” வென்று தன்னை வணங்கச் செய்தான்.

மேலும், 11வது பாடலில் (21-24 வரிகள்),

கவிர்தகை சிலம்பில் துஞ்சும் கவரி

பரந்திலங்கு அருவியொடு நரந்தம் கனவும்

ஆரியர் துவன்றிய பேரிசை யிமயம்

தென்னங் குமரியொ டாயிடை

இமயமலை “ஆரியர்”களால் நிரைந்துக் காணப்படுகின்றது. இங்கு ஆராய்ச்சியாளர்கள், “ஆரியர்” என்பதற்கு கீழ்கண்டவாறு பொருள் கொள்கின்றனர்:

  1. ஆரியர் = முனிவர், துறவியர் (ரிஷிக்கள்)
  2. ஆரியர் = ஆரிய மன்னர்

மலைப்பக்கங்கள் நன்கு வளர்ந்த முள்ளுமுருக்க மரங்களால் அடர்ந்து காணப்படுகின்றது. அம்மலைச் சாரலில் படுத்துறங்கும் மான்கள் நீர்வீழ்ச்சிகளையும் வாசமிகு நரந்தை புற்களையும் நினைவு கொண்டு கனவு காண்கின்றன. அத்தகைய இமயமலைச் சாரல்கள் ஆரியர்களால் / ரிஷிகளால் நிரைந்துள்ளன. வடக்கில் இருக்கும் இந்த இமயமலை மற்றும் தெற்கில் இருக்கும் குமரி இவைகளுக்கு இடைபட்டு ஆண்டு வந்த தற்புகழ்ச்சிக் கொண்ட மன்னர்களை வெற்றிக்கொண்டான்.

இனி, ஐந்தாம் பத்தில், “வடவர்” (வரி.1) மற்றும் “ஆரிய அண்ணல்” (வரி.1) என்ற சொற்றொடர்கள் காணப்படுகின்றன.

வடவர் உட்கும் வாள்தோய் வெல்கொடி (வரி.1)

ஆரிய அண்ணலை வீட்டிப் பேரிசை (வரி.6)

வட-இந்திய மன்னர்கள் எவ்வாறு கடல்பிரகோட்டிய செங்குட்டுவனிடம் பயந்து வந்தனர், எனக்குறிப்பிடுகிறது. அவன் கற்புக்கரசிக்கு சிலையெடுக்க, தன் படையுடன் செல்கிறான். காடுகளிடையே செல்லும்போது, ஆரிய அரசர்களின் அண்ணல் / தலைவனை எதிர்க்கொண்டு அவனை தோற்க்கடிக்கிறான். பிறகு, கல்லை எடுத்து வந்து, கங்கை நீரில் கழுவி சுத்தம் செய்விக்கிறான். திரும்பி வரும்போது இரும்பில் என்ற இடத்தில் தங்கி வியவூர் மற்றும் கொடுங்கூர் முதலியவற்றை அழிக்கிறான். பழையோன் என்ற அரசனையும் கொல்கிறான்.

ஐந்தாம் பத்திலும் (43: 6-9) வடக்கு-இமயம், தென்குமரி இடைப்பட்ட அரசர்களை வென்றதாக குறிப்புள்ளது.

கடவுள் நிலைய கல்லொங்கு நெடுவரை

வடதிசை எல்லை இமய மாகத்

தென்னங்குமரியொடு ஆயிடை அரசர்

முரசுடைப் பெருஞ்சமம் ததைய ஆர்ப்பெழச்

……………………

ஆனால், வென்றதாகக் கூறப்படும் அரசர்களின் அல்லது நாடுகளின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை. பதிகத்தில், அரசர்கள் “வடவர்” என்றும், ஆரிய அரசர்களின் தலைவன் “ஆரிய அன்ணல்” எனவும், பிறகு இமயம்-குமரி இடைப்பட்ட பகுதிகளை ஆண்ட மன்னர் “ஆரிய அரசர்”, இங்கு “ஆயிடை அரசர்” என்றும் குறிப்பிடப்படுகின்றனர்.

ஏழாவது பத்து, 68வது பாட்டில், “வடக்கில் இருப்பவர்கள்” (வடபுல வாழ்னர்) எவ்வாறு பயமில்லாத, மகிழ்ச்சியான வாழ்க்கையினை வாழ்கின்றனர், எனக்குறிப்பிடுகின்றது.

நாமம் அறியா ஏம வாழ்க்கை

வடபுல வாழ்நரின்…………….

அகவே, பத்துப்பாட்டிலிருந்து, “ஆரியர்” என்பவரைப்பற்றி அறிவதாவது-

ó வடநாட்டரசர்

ó இமயமலையில் வாழ்கின்றவர்

ó பேரிசை மரபின் ஆரியர்

ó இமய மாகத் தென்னங்குமரியொடு ஆயிடை அரசர்

ó தமிழகத்திற்கு வடதிசையிலுள்ள மக்கள் மற்றும் அரசர்.

குறுந்தொகையில் வரும் “ஆரியரை”, “கழைக்கூத்தாடிகள்” என்று சிலர் பொருள்கொள்கின்றனர். அவ்வாறான “கழைக்கூத்தாடிகளும்” பதிற்றுப்பத்தின், “பேரிசை மரபின் ஆரியரும்” ஒன்றாகுமா, என்று பார்க்க வேண்டும்.

அகநானூறு (நெடுந்தொகை): இங்கு “ஆரியர்” பெண் யானைகளைப் பிடிப்பவர்களாகச் சித்திரிக்கப் படுகின்றனர் (அகம்.276:9-10).

………………………………….ஆரியர்

பிடிபயின்று தரூஉம் பெருங்களளிறு போல

குறிப்பாக, ஆரியர் பெண் யானை கொண்டு – அதாவது, அவ்வாறு பழக்கி, ஆண்யானையை எளிதாகப் பிடிப்பர் எனத் தெரிகிறது[7]. முல்லைப்பாட்டு, தமிழக அரசர்கள், இத்தகையவரை யானைகள் பழக்க பணிக்கு அமர்த்துகிறார்கள் எனக் கூறுகிறது.

தேம் படு கவுள சிறு கண் யானை……..31

ஓங்கு நிலைக் கரும்பொடுகதிர் மிடைந்து யாத்த,

வயல் விளைஇன் குளகு உண்ணாதுநுதல் துடைத்து,

அயில் நுனை மருப்பின் தம் கையிடைக் கொண்டென,

கவை முட் கருவியின்வடமொழி பயிற்றி,  ………………………..35

கல்லா இளைஞர்கவளம் கைப்ப…………………………………… (முல்லைப்பாட்டு.31-36)

யானைப்பாகர் யானைப் பேச்சாகிய வடமொழியைச் சொல்லிக் கவர் உடைய பரிக்கோலால் கவளத்தை உண்ணும்படி குத்தினார்கள்[8]. இங்கு வடமொழி பேசும் பாகர் “ஆரியர்” என்றுக் குறிப்பிடப்படவில்லை.

மத்திகை வளைஇய, மறிந்து வீங்கு செறிவு உடை,

மெய்ப்பை புக்க வெரு வரும் தோற்றத்து, …………60

வலி புணர் யாக்கைவன்கண் யவனர்……………61

புலித் தொடர் விட்ட புனை மாண் நல் இல்,

திரு மணி விளக்கம் காட்டிதிண் ஞாண்

எழினி வாங்கிய ஈர் அறைப் பள்ளியுள்

உடம்பின் உரைக்கும்உரையா நாவின்,

படம் புகு மிலேச்சர் உழையர் ஆக, ……………   (முல்லைப்பாட்டு.59-66)

வலிமையான உடல், அதனை இருக ஒட்டிய உடையணிந்த கொடுமையான கண்பார்வை கொண்ட யவனர் காவல் காத்தனர்………..நன்கு உடையணிந்த பேச்சுத்திறனற்ற மிலேச்சர் சுற்றிவந்து (காவல் காத்துக்) கொண்டிருந்தனர். இங்கு “யவனர்” மற்றும் “மிலேச்சர்” இருவித குழுமங்களும் தமிழரசருக்கு காவல் காத்ததாக குறிப்பிட்டிருந்ததால், அவர்கள் மிகவும் விசுவாசம் மிக்கவராக, நம்பிக்கைக்குயுகந்தவராக  இருந்திருக்க வேண்டும்.

] இன்னொரு அகநானூறு பாடலில் (அகம். 336:21-23), சோழர்கீழ் போராடிய விற்களை உபயோகிப்பதில் வல்லவராகிய குறும்பர்களிடம் எவ்வாறு “ஆரியர்”படை, வல்லம் என்ற இடத்தில் தோற்று சிதறுண்டது என்பதை, தனது முன்கை வீங்கி வளையல்கள் உடைந்து சிதறியதுடன் ஒரு பரத்தை ஒப்பிடுகிறாள்.

……………………………வல்லத்துப் புறமிளை

யாரியர் படையினுடைகவென

னேநிறை முன்கை வீங்கிய வளையே

இங்கும் “ஆரியர்”படை என்றுள்ளதே தவிர, யாரெனக் குறிப்பாகச் சொல்லப் படவில்லை.

] இன்னொரு பாட்டு (அகம்.386:3-5) எவ்வாறு, “ஆரியபொருநன்”, என்பான் பாணனிடம் மற்போரில் போரிட்டுத் தனது வலிமையான தோள் மற்றும் கைகள் சோர்ந்து, தோற்கிறான் எனக் காட்டுகிறது. இதைப் பார்த்த “கணையன்” என்ற சேரப்படையின் தளபதி நாணித் தலைக் குனிகிறான்.

………………………..……………பாணன்

மல்லடு மார்பின் வலியுற வருந்தி

எதிர்தலைக் கொண்ட வாரியப் பொருநன்

] மற்றொரு பாடல் (அகம்.396:16-18), எவ்வாறு செங்குட்டுவன் “ஆரியர்” அலறத் தாக்கி, மிக்கப் புகழ் கொண்ட தொன்மையான வளர்ந்த வடக்கில் இருக்கும் மலையில், தனது வில்சின்னத்தை பதித்து, பிறகு மற்ற வெஞ்சினம் கொண்ட மன்னர்களையும் பிடிக்கிறான், என விவரிக்கப் படுகிறது.

ஆரியர் அலறத் தாக்கிப் பேரிசைத்

தொன்றுமுதிர் வடவரை வணங்குவிற் பொறித்து

வெஞ்சின வேந்தரைப் பிணித்தோன்

இங்கும் “ஆரியர்” யார் எனக் குறிப்பிட்டு சொல்லப் படவில்லை, வடக்கில் இருக்கும் மலையைப் பற்றி சிறப்பித்துக் கூறினாலும், “இமயமலை” என்று குறிப்பிடவில்லை. எனவே, இம்மலை இமயத்தை (பனியிலாலான) மலைக்குறிக்கிறதா அல்லது, தமிழகத்திற்கு வடக்கில் இருந்த ஒரு “தொன்மையான வளர்ந்த மலை”யைக் குறிக்கிறதா எனத்தெரியவில்லை.

] மற்றுமொரு பாடலில் (அகம்: 398:18-19), ஆரியருடைய பொன்னிறம் படுகின்ற நீண்ட மலை என குறிப்புள்ளது.

………………………..…………..நந்தி ஆரியர்

பொன்படு நெடுவரை..

இதை, “ஆரியரது பொன் பொருந்திய நீண்ட இமயமலை” என உரையாசிரியர் பொருள் தருகின்றனர்.

இதிலிருந்து, அகநானூறு சொல்லும் “ஆரியர்”, –

ó யானைகளைப் பிடிப்பவர், பிடித்துப் பயிற்ச்சி அளிப்பவர்

ó சோழர்களால் வல்லத்தில் தோற்கடிக்கப் பட்டவர்.

ó வடக்கிக்கிலிருந்த மன்னர்கள், செங்குட்டுவனால் தோற்கடிக்கப் பட்டவர், பிணைக்கப்பட்டவர்.

ó ஒரு தொன்மையான வளர்ந்த பொன்னிறம் படுகின்ற / பொன் பொருந்திய நீண்ட மலையைக் கொண்டிருந்தவர்.

புறநானூறு கூறும் “வடபுல அரசர்”: வடக்கில் இருக்கும் மன்னர் எவ்வாறு சோழன் நலங்கிள்ளிற்கு பயந்து தமது இரவுகளை கண்ணுறக்கமின்றிக் கழித்து வந்தனர் (புறம்.31.17), என கோவூர்கிழார் என்ற புலவர் குறிப்பிடுகின்றார்.

.. .. .. .. .. .. ..

நெஞ்சு நடுங்கு அவலம் பாயத்

துஞ்சாக் கண்ண வடபுலத்துஅரசே

நெஞ்சங்கள் நடுங்க அவலம் பாய்ந்தநிலையில் கண்கள் துஞ்சாமல் வடபுலத்து அரசர்கள் இருந்தார்கள்.

] பாண்டியன் கூடாரத்துத் துஞ்சிய மாறன் வழுதியை நினைந்து வடபுல மன்னர் மனம் வாடுகின்றனர் (புறம் 52:5), என்று மருதநில நாகனார் குறிப்பிடுகின்றார்.

வடபுல மன்னர் வாட அடல்குறித்து

இன்ன வெம்போர் இயல்தேர் வழுதி

வடநாட்டரசர் வாட அவரைக் கொல்லும் எண்ணத்துடன் கொடிய போரைச் செய்யும் தேரையுடையவர் வழுதி, எனச் சுட்டிக் காட்டப் படுகிறது

புறநானூறு பாடல்கள் வடக்கில் இருக்கும் மன்னர்களை பல இடங்களில் இவ்வாறுக் குறிப்பிடபடுகின்றனர்:

] சோழன் தென்னாட்டில் புகுந்து குறும்பு செய்த பரதவரின் வன்மயினை சாய்த்து, வடநாட்டிலிருந்து வந்த வடுகரின் வாளையும் அடக்கினான் (புறம். 378:2), என ஊன்பொதி பசுங்குடையார் குறிப்பிடுகின்றார்.

தென்பரதவர் மிடல் சாய

வட வடுகர் வாள் ஓட்டிய

இங்கு “வடுகர்” என்றாலே வடக்கிலிருந்து வந்தவர்கள் எனும்போது, “வடவடுகர்” என்றபோது, “வடவடுகர்”, “தென்வடுகர்” என்ற பிரிவுகள் இருந்தனவோ எனத் தோன்றுகிறது. “தென்பரதவர்”, “வடவடுகர்” இருவரையும் அடக்கியதால், சோழன் இருவருக்கும் இடையில் (பூகோளரீதியாக) இருந்திருக்க வேண்டும். என்னெனில் “வடவாரியர்” எனகுறிக்கும் போது, “வடவாரியர்”, “தென்னாரியர்” எனக்கொள்ளல் வேண்டும். மேலும் கோசர், நந்தர், மோரியர், தொண்டையர் மற்றும் வடுகர் வடக்கிலிருந்து வந்தவர்கள், வடதிசையைச் சார்ந்தவர் என்றுக் குறிப்பிடப் படுகிறார்கள். எனவே இவர்கள் அப்பொதைய தமிழகத்திற்கு வடக்கில் இருந்திருக்கலாம், வாழ்ந்திருக்கலாம்.

ஆர்ய மற்றும் ஆரிய உரிச்சொற்கள்: கல்வெட்டுகளில், நாணயங்களில் மற்றும் இலக்கிய ஆதாரங்களின் மூலம் சாதவாஹனர்கள் தமிழகத்தின் வடக்கில் ஆண்டுவந்தனர் எனவும் அவர்களது ஆளுகையின் தாக்கம் கடலூர் வரையிலும் இருந்தது எனத் தெரிகிறது. கிருஷ்ணா நதிக்கு தென்பகுதியில், கொண்டமுடி, மாயடவோலு, ஹீரஹடகல்லி, கந்தனேரு நந்திவர்மன் – I மற்றும் மட்டபாடு தானம் கொடுக்க பொறிக்கப்பட்ட கல்வெட்டுகளில் “ஆர்ய” என்ற சொல் மதிப்பிக்குறியதாக பெயர்களுக்குக் கடைசியில் உபயோகிக்கப் பட்டது. மேலும் “ஆர்ய / ஆரிய” சொல் பெயருக்கு முன்பாக, ஜைன-புத்த துறவியர், குருக்கள், ஆசிரியர்களுக்கு உபயோகிக்கப் பட்டுள்ளதை இந்தியா முழுவதிலும் உள்ள கல்வெட்டுகள் எடுத்துக் காட்டுகின்றன. குறிப்பிட்டு சொல்லவேண்டுமானால், மணிமேகலையே புத்தனை “ஆரியன்” (25:6) எனவே கூறுகிறது. ஹதிகும்ப கல்வெட்டு, காரவேலனையும்[9] (ஐர மஹராஜ காரவேல), ஜுன்னார் கல்வெட்டில்[10] பெயர்களுக்கு முன்பும் (அயம), நாகார்ஜுனகொண்ட கல்வெட்டுகளில்[11] ராஜவம்ச பெண்கள் “அயகோடிஸ்ரீ” (ஆரியகோடிஸ்ரீ), “அயஸ்ரீ” (ஆரியஸ்ரீ) என்று விளிக்கப்படுகின்றனர். ஆந்திரதேசத்திலியே தனத் வாழ்நாளை கழித்த நாகார்ஜுனரின் சீடரான ஒருவர், “ஆரியதேவ” என்றேக் குறிப்பிடப் படுகிறார்[12]. ஆனால் ஜயவர்மனின் கொண்டமுடி (3வது cent.CE) கல்வெட்டு தானம் பெற்றவர்களுடைய பெயர்கள் “அஜ” என்று முடிவடைகிறது. மாயவோலு மற்றும் மட்டப்பட் கல்வெட்டுகளும் அவ்வாறேக் குறிக்கின்றன.

“அஜ” என்பது “ஆர்ய” என்ற ப்ராகிருத சொல்லின் வடிவம், இது சமஸ்கிருத “ஆர்ய” மற்றும் தமிழ் “அய்ய”, “ஐய”, “ஐயர்”, “ஆரியர்” சொற்களுக்கு சமமாகும். “அயகோடிஸ்ரீ” (ஆரியகோடிஸ்ரீ), “அயஸ்ரீ” (ஆரியஸ்ரீ) என்று எப்படி பெயருக்கு பின் உபயோகிக்கப் பட்டத்தோ, அம்மாதிரியே “ஆரிய அண்ணல்”, “ஆரிய பொருணன்”, “ஆரிய அரசன் ப்ரகதத்தன்” என்று தமிழ் புலவர்கள் உபயோகித்துள்ளதை இங்கு நோக்கத்தக்கது. தமிழ் இலக்கியங்களில் “அய்யர்” அல்லது  “ஐயர்” என்ற சொல்வடிவம் ஆசிரியர், தமையன், முனிவர், துறவி, அந்தணன், உயர்ந்தவன், அரசன், முதலியோரை மரியாதையாகக் குறிக்கும் சொல்லாகக் குறிப்பிடப்பட்டது, என்பதனை தொல்காப்பியம் முதல் இதர நூல்களில் காணலாம்.

“அரியெகே”, “தமிரிகே” முதலியவை: பெரிப்ளஸின் “அரியகா” மற்றும் தாலமியின் “அரியகே” முதலியவற்றைப் பற்றி பல கருத்துகளைக் கொண்டுள்ளனர். W.H . ஸ்காஃப் (W. H. Scoff) குறிப்பிடுவதாவது, “இந்த வார்த்தை மிகவும் தெளிவற்றதாகக் குறிப்பிடப் பட்டுள்ளது”. லேஸன் (Lassen) என்பவர் சமச்கிருத சொல்லான “லதிகா” அல்லது “லரிகா” என்ற இடம் காம்பேயின் இரு பக்கங்களிலும் குறிப்பிடப் பட்டுள்ளது[13]. வடக்கிலிருந்து தெற்காக செல்லும்போது, முதலாக குறிக்கும் பிரதேசத்தை “லிமிரெசே” அல்லது “லிமிரிகே” என தாலமி (c. 140 CE) அழைக்கிறார். இவரும் பெர்ப்ளஸின் ஆசிரியரும் இதை “சேரனுடைய” நாடாகக் கொள்கின்றனர். “அரியகே சடினோன்”, அதாவது “அரியகேவின் கடற்கொள்ளைக்காரர்கள்” எனும்போது, பிறகு “மஹாரஷ்டிரம்” என வழங்கப்பட்ட, சாதவாஹனர்களால் ஆளப்பட்ட இடமாக கொள்ளலாம்[14]. இச்சொற்றொடர்கள் “ஆரியரகம்”, “தமிழகம்” எனக்கொண்டால், “ஆரியரது அகம்”, “தமிழரது அகம்” என எளிதில் பொருள் கொள்ளலாம். இங்கு இவ்வார்த்தைகள் பூகோளரீதியில் குறிப்பிட்டுள்ளதை காணலாம்.

காரவேலன் தோற்கடித்த “த்ரமிரதேச சங்கடனம்”: கலிங்கத்தை ஆண்ட காரவேலன் தனது எல்லைகளுக்கு அச்சுருத்தலாக 113 / 1300 வருடங்களாக இருந்து வந்த ஒரு “த்ரமிரதேச சங்கடனம்” – தமிழ் / திராவிட அரசர்களின் கூட்ட்டணி – பற்றிய குறிப்புள்ளது. சாதவாஹனர்கள் –  சிமுக (சுமார் 230 BCE), கண்ஹ (c.207-189 BCE), ஸ்ரீ சதகர்ணி-I, ஸ்ரீ சதகர்ணி- II (c.166 CE), ஹல (c. 20-24 CE), ஸ்ரீ ய்ஜ்ன சதகர்ணி (c. 170-199) முதலியோர் தமிழகத்திற்கு வடக்கே ஆட்சி புரிந்து வந்துள்ளனர். அதரற்கு முன்பு அசோகனது மௌரிய பேரரசு ஸ்ரவணபெலகோல மற்றும் சேரர்களின் எல்லைகளைத் தொட்டுக் கொண்டிருந்தது. அவன் 232 BCEல் இறந்த பிறகு, பிறகு வந்த ப்ரஹத்ரத புஸ்யமித்திர சுங்கனால் 185 BCEல் கொல்லப்படுகிறான். அதனால் சுங்க அரசு 73 BCE வரைக்கும் தொடர்ந்தது. ஆகவே, இந்த காலகட்டத்தில் எந்த தமிழ் மன்னனும் இவர்களைத் தாண்டி வடஇந்தியாவிற்கு சென்றிருக்க முடியாது மற்றும் அவர்கள் வடஅரசர்களையும் வென்றிருக்க முடியாது. மேலும் “சங்கத்தமிழ்” இலக்கியத்தைக் கூர்ந்து கவனமாக ஆய்ந்தால், “தமிழகம்” – “வடவேங்கடத்து தென்குமரி ஆயிடை”யில் தான் இருந்திருக்க வேண்டும். மேலும் வடக்கிலிருந்து அரசுபுரிந்த அரசர்களுக்கு அவர் காலத்தைய கல்வெட்டு, நாணயங்கள் முதலியன உள்ளன மற்றும் அவர்களின் பெயர்களையும் குறிப்பாக அறியலாம். ஆனால் சமகாலத்தைய தமிழ் அரசர்களது பெய்ர்களை அறிய அத்தகைய சரித்திர-ஆதாரங்கள் இல்லை. அதனால்தான் “சங்க இலக்கியம்” ஆதாரமாகக் கொள்ளப்படுகிறது. எனவே, இதிலிருந்து “ஆரியர்” யார் எனப் பார்க்கலாம்.

“ஆரியர்” எனக்குறிக்கப் பட்டவர் யார்? மேற்விவரித்தபடி, சங்க இலக்கிய ஆதாரங்களிலிருந்து, ‘ஆரியர்” என்போர் யாராக இருக்கும் என கீழ்கண்டவாறு பட்டியல் இடலாம்:

  1. தமிழகத்தின் வடக்கில் அல்லது வடவேங்கடத்தின் எல்லை வரையிலும் வாழ்ந்த மக்கள்.
  2. தமிழகத்தின் வடக்கில் அல்லது வடவேங்கடத்தின் எல்லை வரையிலும் ஆண்ட அரசர்.
  3. கயிற்றின் மீது ஆடும் கூத்தாடிகள், வேடிக்கைக் காட்டும் கூட்டத்தவர்.
  4. வடக்கிலிருக்கும் மலையில் அல்லது இமயமலையில் வாழும் முனிவர், தவசியர்.
  5. யானைகளைப் பிடிப்பவர் மற்றும் யானைகளுக்கு பயிற்ச்சி அளிப்பவர்.
  6. வடக்கிலிருந்து தமிழ் மன்னர்களின் மீது போர் தொடுத்த அரசர்கள்.
  7. மரியாதை நிமித்தமாக உபயோகப்படுத்திய இவ்வார்த்தை மல்யுத்தம் செய்பவர், புலவர் மற்றும் புலவர்-மன்னர் முதலியோருக்கும் உபயோகிக்கப்பட்டது.

“ஆரியர்” அந்நியவரா? வடக்கிலிருந்து வந்த தமிழ்-அல்லாதோர் குழுமங்கள் கோசர், மோரியர், நந்தர், தொண்டையர் மற்றும் வடுகர், என்று குறிப்பிடப்பட்டதைக் கண்டோம். “யவனர்” என்றுக் கருதப்பட்டவர் ரோம் அல்லது கிரேக்க நாட்டைச் சார்ந்தவராக / சேர்ந்தவராக இருக்கலாம். அவர்கள் பழக்க-வழக்கங்கள், உடை நடத்தை முதலியனவற்றிலிருந்து அவர்கள் இந்தியர் அல்லர் என்பதனை அறியலாம். முல்லைப்பாட்டில் “மிலேச்சர்” (66-67) என்ற வார்த்தை காணப்படுகிறது. அவர்கள் நன்கு உடை அணிந்த ஊமையர் அல்லது சைகைகளால் பேசும் மக்களாக[15] இரவிலே (அரசனுக்குப் பாதுகாப்பாக)ச் சூழ்ந்து திரிபவராகச் சித்தரிக்கப் படுகின்றனர்.

உடம்பி னுரைக்கு முரையா நாவின்

படம்புகு மிலேச்ச ருழைய ராக

முன்பே குறிப்பிட்டபடி, “யவனர்-மிலேச்சர்” இந்தியர் அல்லாதவராக இருந்திருப்பின், தமிழரசருக்கு ஒவ்வாதவராகயிருப்பின், அவர்கள் காவல் காக்க அமர்த்தியிருக்க மாட்டார்கள். சமஸ்கிருத இலக்கியங்களின் படி “யவனர்” தகுதியிழந்த சத்திரியர்கள் ஆவர். “மிலேச்சர்” என்பவர் அயல்நாட்டவராகவும் இருக்கலாம் அல்லது வேதநெறிகளுக்கு எதிராக இருக்கலாம். ஆகவே அத்தகைய சத்திரியர்கள் அரசாளும் உரிமை இழந்ததால், காவலாளிகளாக பணியேற்று அந்நிலையில் இருந்திருக்கக் கூடும். சங்க-இலக்கியங்களிலேயே எப்படி அந்தணர் / பார்ப்பர் சங்கறுப்பது, மாமிச உணவு உண்பது முதலிய செயல்களில் ஈடுபட்டிருந்தனர் என்பதனைக் காணலாம்[16]. ஒருவேளை அவர் பேசும் மொழி மற்றவருக்குப் புரியவில்லை எனலாம். உள்ள விஷயங்களை மற்றவருக்கு வெளிப்படுத்தக் கூடாது என்பதற்காக அவரது நாக்குகள் அறுக்கப் பட்டிருக்கலாம் என்ற விளக்கம்[17], அவர் செய்யும் முக்கியமான வேலையுடன் பொருத்தமாகப் படவில்லை.

இந்த “மிலேச்சர் ஆரியர்” என்று சங்க இலக்கியங்களில் எங்கும் குறிப்பில்லை. அவ்வாறே முன்பு குறிப்பிட்ட “ஆரியர் மிலேச்சர்” என்பதிற்கும் குறிப்பில்லை. “மிலேச்ச ராரியர்” என்று பிங்கலந்தை (ரு. ஆடவர் வகை) என்ற பிங்கல நிகண்டு பிற்காலத்தில் கூறுகிறது[18]. எனவே, அத்தகைய பிற்காலத்தை விளக்கத்தை சங்ககாலத்தின் மீது எற்றிச் சொல்வது சரியாகாது. மேலும் சங்க இலக்கியங்களில் “ஆரியர்” இந்நாட்டவரில்லை என எங்கும் சொல்லப்படவில்லை. இந்நாட்டு எல்லைகளைக் குறிக்குக்போது, திரும்ப-திரும்ப வடக்கே இமயம், தெற்கே குமரி (ஆறு, கோடு), கிழக்கில் கடல், மேற்கில் கடல் என்றுதான் எல்லைகள் குறிப்பிடப் படுகின்றன.

வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்

தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்

குணாஅது கரைபொரு தொடுகடல் குணக்கும்

குடாஅது தொன்றுமுதிர் பௌத்தின் குடக்கும் (புறம்.6: 1-4).

தென்குமரி வடபெருங்கல்

குணகுட லாவெல்லை (புறம்.17:1-2)

இத்தகைய விளக்கம் தொடைச்சியாக பல பாடல்களில் காணப்படுகின்றன. ஆகவே சங்ககால புலவர்கள் தான் இருந்த நாட்டின் எல்லைகளை நன்றாகவே அறிந்திருந்தனர் எனத்தெரிகிறது. எனவே அத்தகைய நிலையில் “அந்நியர்” யார் என அவர்களுக்குத் தெரிந்தேயிருக்கும்.

மேற்குறிப்பிட்டப்படி ஆரியர் தமிழ் எல்லைகளிலும், இந்த நாட்டு (இந்திய) எல்லைகளுக்கும் உள்ளேயே இருந்ததை தெளிவாகக் காட்டுகிறது[19]. எனவே ஆரியர் அந்நியர் என்ற வாதம் சங்க இலக்கிய உள்ளாத்தாட்சி மூலம் ஆயும்போது ஒவ்வாததாகிறது. மேலும் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் சோழனுடன் போரிட்டபோது, இரு மன்னர்களும் களத்தில் இறந்ததினால், இருவர் மனைவியரும் உடன்கட்டையேறுகின்றனர்[20]. பொதுவாக, நவீன ஆராய்ச்சியாளர், சதியாகி இறத்தல் / உடன் கட்டை ஏறுதல் “ஆரிய பண்பாடு” என்று விளக்க முற்படுகின்றனர். ஆனால், அத்தகைய பழக்கம் பழந்தமிழரிடையே இருந்தது[21]. ஆகவே, “மிலேச்சர் ஆரியர்” என்ற வாதமும் செல்லாதது.



__________________


Guru

Status: Online
Posts: 24603
Date:
Permalink  
 

 சங்க இலக்கியங்களில் “திராவிடர்”: இனி, சங்க இலக்கியங்களில் “திராவிடர்” உள்ளனரா எனத் தேடி பார்த்தால், அச்சொல்லேக் காணப்படவில்லை. அதுமட்டுமல்லாது அதன் மற்ற திரவிட, திரவிடி, திரவிடம், திராவிடம், தமிள, திரமிள, முதலிய வடிவங்களும் காணப்படவில்லை. எட்டுத்தொகை, பத்துப்பாட்டு மற்றும் பதினென்கீழ்கணக்கு நூற்களில் இல்லாமல், தேவாரத்திலும், “தமிழன்” என்ற சொல்லே “ஆரியன்” என்ற சொல்லோடு காணப்படுகிறது. “ஆரியன் கண்டாய், தமிழன் கண்டாய்”, “தமிழோடு ஆரியமும் கலந்து” என்ற தொடர்களில் “ஆரியன்”, “தமிழன்” இரண்டுமே சிவனைக் குறிப்பதாகும்[22].

18ம் நூற்றாண்டில் தான், தாயுமானவர் “திரவிடம்” என்ற சொல்லை தமிழைக் குறிக்க உபயோகப் படுத்துகிறார்[23].

………………………………வடமொழியிலே

வல்லான் ஒருத்தன் வரவும் திராவிடத்திலே

வந்ததாவிவகரிப்பேன்.

ஆகவே, திராவிடம் என்றா வார்த்தை அதுவரை தமிழ் புலவர்களால் அறியப்படவில்லை, உபயோகப்படுத்தவில்லை. 7, 8 அல்லது 11ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப் படும் நாமதீப நிகண்டு, “தமிழ்” என்பதற்கு “திரவிடம்” என்ற சொல்லைக் காட்டுகிறது[24]. 9வது நூற்றாண்டைச் சேர்ந்த, சேந்தன் திவாகரம் பேசப்படுகின்ற, 18 மொழிகளுள் ஒன்றாக “திரவிடத்தை”க் குறிப்பிடுகிறது. பிறகு வந்த “காந்தத்து உபதேசக் காண்டம்” என்ற நூல் சிவபெருமான் எப்படி அகத்தியருக்கு திரவிடத்தினுடைய இலக்கணத்தை வெளிப்படுத்தினார் என்ற குறிப்பைக் கொண்டுள்ளது. “பிரயோக விவேகம்” என்ற நூலின் ஆசிரியர் சமஸ்கிருத வார்த்தை “திரமிளம்” என்பதுதான் “தமிழ்” என்றாகியிருக்க வேண்டும் என்று விளக்குகின்றனர். ஆனால், “தமிழ்” என்பத்துதான் சமஸ்கிருதத்தில் “திரவிடம்” என்று வழங்கப் படுகிறது என்கின்றனர். சிவஞானயோகியும் திரவிடம் என்பது தென்மொழி என்பதனைக் குறிக்க உபயோகப்படுத்த படுகிறது என்கிறார்[25]. எனவே நிச்சயமாக, இச்சொல் மற்றும் இச்சொல்லின் பிரயோகம் தமிழருக்குத் தெரியாது என்பது மட்டுமல்ல, அவர் அதனை உபயோகப் படுத்தவில்லை எனத் தெரிகிறது.

தமிழ் இலக்கியங்களில் “தமிழ்”: ஆகவே “திராவிடம்” என்பதுதான் “தமிழி”லிருந்துப் பெறப்பட்டது என்பதது தெளிவானதாகும். சங்க இலக்கியங்களில் தமிழ் கீழ்கண்ட பொருட்களில் உபயோகிக்கப் பட்டுள்ளது:

  1. தமிழ் மொழி (புறம்.50: 50: 9-10; 58: 12-13);
  2. தமிழ் படை (சிறும்பாணாற்றுப்படை. 66-67);
  3. தமிழ்நாடு (பரிபாடல்.6:60)

தமிழ் என்ற வார்த்தை பிரபலமாகி பிறகு அதிக அளவில் உபயோகிக்கப்பட்டது என்பது எத்த்னை முறை அவ்வார்த்தை தமிழ் இல்க்கியங்களில் உபயோகப்படுத்தப் பட்டுள்ளது என்று அட்டவணை-1 லிருந்து அறியலாம்[26].

[ தொல்கப்பியத்தில் ஐந்து முறையும்,

[ சங்க-இலக்கியத்தில் 21,

[ 200-500 CE காலத்தில் 45,

[ 500-900 CE 475,

[ 900-1200 CE 381,

[ 1200-1900 CE 341 முறை

உபயோகப்படுத்தப் பட்டுள்ளது. ஆகவே, தமிழருக்கு தமது மொழி மற்றும் அதன் உபயோகத்தை அறிந்திருக்கும்போது, அவர்கள் சமஸ்கிருத- “திராவிட்” என்ற சொல்லினின்று பெறவேண்டிய அவசியம் இல்லை. மேலும் இங்கு இனரீதியில் (racial connotation) இவ்வார்த்தை எங்குமே உபயோகப்பட / படுத்தப்படவில்லை என்பது நோக்கத்தக்கது.

சங்கத் தமிழிலக்கியத்தில் “ஆரியர்”: சங்க-இலக்கியத்தில் இருந்த “ஆரியரை”ப் பற்றி உள்ளது உள்ளபடி மேலே பார்த்தோம். எனவே தமிழர் “ஆரியரை அறிந்திருந்தபோது, ஏன் திராவிடரை அறியவில்லை?” என்ற முக்கியமான வினா எழுகிறது. “ஆரிய” என்ற வார்த்தை தமிழல்ல என்றால் சமஸ்கிருதத்திலிருந்துதான் பெற்றிருந்திருக்க வேண்டும். அவ்வாறான சமஸ்கிருதத்திலிருந்து பெற்றபோது, “திராவிட” என்ற வார்த்தை தமிழில் வர-உபயோகிக்க ஏன் 18வது நூற்றாண்டு வரைக் காத்திருக்க வேண்டும்? எனவே தமிழ் பேசிய மக்கள் அவ்வாறு “ஆரியரை” இனரீதியில் காணவில்லை, மேலும் அத்தகைய போக்கு ஐரோப்பியரால் 19வது நூற்றாண்டில் தான் மக்களைப் பிரித்துப் பார்க்க ஆரம்பித்தனர். மாக்ஸ்முல்லர் “ஆரியர்” என இனத்தைக் கண்டுபித்தது சமஸ்கிருத இலக்கியத்தில் தான், ஆனால் “திராவிடர்” என்ற இனம் இலக்கண ஒப்பியலில் உருவாக்கினர். பிறகு மானிடவியல் வல்லுனர்கள் அதற்கேற்றவாறு, இந்தியவியல் வல்லுனர்களால் கொடுக்கப்பட்ட தஸா, தஸ்யூஸ், பணி முதலியோரின் விவரங்களை, அவ்விதமாக வர்ண, அனஸ், ம்ருத்வாச முதலிய வர்ணனைகளுடன் ஒப்புமைப் படுத்தி, தம்முடைய மண்டைவோடு (Caranial index), மூக்கு (nasal index), உயரம் (stature) முதலிய காரணிகளுடன் சரிபார்த்து இனரீதியிலான “திராவிடர்”களை உருவாக்கினர்.

 “திராவிடர்களின்” மானுடவியல்-அளவுகள்: ஹக்ஸ்லி (1871), ஹெக்கேல் (), டர்னர் (1900), ஓப்பர்ட், ரிஸ்லி (1908), தரஸ்டன் (1909), ஸெலிக்மன், ஸ்க்லேடர் முதலியோர் “திராவிடர்களை”ப்பற்றி கொடுத்துள்ள பல மற்றும் வேறுபட்ட மானுட-அளவுகளையும் (Anthropometry), விவரங்களையும் அட்டவணை-2ல் காணலாம்.

அவர்கள் மத்தியதரைகடல், ஆப்பிரிக்க-நீக்ரோ (negrito) மற்றும் ஆஸ்ட்ரேலிய (Australoid) பழங்குடி இனங்களோடு ஒப்பிட்டு இணைக்க முயன்றனர். இவ்விதமாக திராவிடர்களின் –

N  உயரம் – நெட்டை, குட்டை மற்றும் இடைப்பட்டது

N  தோல் நிறம் – மஞ்சலான மரக்கலர் (Yelloish-brown) முதல், மரக்கலர் (brown), கருப்பு வரைக் காணப்பட்டது.

N  மண்டைவோடு – இடைப்பட்ட உருண்டை (mesocephalic)லிருந்து நீண்ட உருண்டை (dolicocephalic) வரை இருந்தது.

N  மூக்கு – அகன்றும் குறுகியும் மற்றும் தட்டையாகவும் குறுகியதாகவும் காணப்பட்டது.

N  கருவிழி நிறம் – மரக்க்கலரிருந்து கருப்பு வரை இருந்தது.

N  முடி – நீண்டதாகவும் / அலை-அலையாக / சுருண்டும் இருந்தது, ஆனால் ஆட்டு-ரோமத்தைப் போன்றும் (woolly) அடர்த்தியாகவும் (frizzy) இல்லை.

N  உதடு – தடித்தும், நீண்டும் இருந்தது.

மண்டையோட்டை அளத்தல்இவ்விதமாக “திராவிடர்” மேனாட்டவரின் ஆராய்ச்சியின் ஆதாரங்கொண்டு இருந்தனர் என்றால், சங்க-இலக்கியம், அம்மக்களை எவ்வாறு விவரிக்கிறது என்பதனை காணலாம்.மூக்கை அளத்தல்

சங்க-இலக்கியம் கூறும் தமிழரது உருவமைப்பு: சங்க கால புலவர்களும் தமிழரது தலை, கண்கள், முடி, காதுகள், உதடுகள், கைகள், கால்கள் மற்றும் உருவ அமைப்பை நன்கு விவரித்துள்ளனர், ஆனால், எங்குமே அவர்கள் “கருப்பர்” என்று, இந்த மேனாட்டு இனவாத பண்டிதர்கள் போல குறிப்பிடவில்லை. தமிழ் புலவர்கள் –

உச்சி, தலை, சிரம் எனவும்,

குடுமி, மயிர், கூந்தல், முடி, ஓரி, அளகம், உலை எனவும்,

அடி, சீரடி, சிவந்த அடி, கால் எனவும்,

மேனி, உருவம், உடல், அகம், சரீரம், உரு

எயிறு, முருவல், பல்

நுதல், நெற்றி

கவுள், தாடை, மோவாய்

கண்ணிதழ், இமை

இதழ், அதரம், உதடு

என்றெல்லாம் ஒரே அங்கத்தை / உறுப்பை பல வார்த்தைகள் மூலம் குறிப்பிட்டு அதன் தன்மையினை எடுத்துக் காட்டியுள்ளார்கள். அதுமட்டுமல்லாது, அவர்கள் எந்த அளவிற்கு அங்க மற்றும் உடல் உறுப்புகளுக்குத் தனி சிறப்பு செய்கிறார்கள் என்பது, தனி நபர்களுடையே பெயரே அந்த நபர்களின் சிறப்பு அம்சமாகக் கொண்டு அமைந்திதிருந்தன என்பதைக் காணலாம்.

[ ஆசிரியர் பெருங்கண்ணன்

 

[ பெருங்கண்ணன்

[ இளங்கண்ணன்

[ செங்கண்ணன்

[ நெட்டிமையார்

[ பேயனார்

[ பூதனார்

[ பூதம் தேவனார்

[ நிரைமுடி நெட்டையார்

 

[ இரும்பிடத்தலையார்

[ சீத்தலைசாத்தனார்

[ பெருந்தலையார்

[ புல்லாற்று எயிற்றனார்

[ கழார்கீரன் எயிற்றனார்

[ தேவனார்

[ காமக்கண்ணியார்

குறிப்பாக பெண்களின் தோலின் நிறம் – மாநிறம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அம்மாமேனி (அகம்.270:10), மாயோள், மாமையோள் என பல இடங்களில் உள்ளன. அரசர்கள் சூரியனைபோல நிறங்கொண்டிருந்ததாக வுள்ளது.

………………………………………………………….ஞாயிற்

றொண்கதிர் தெறாமைச் சிறகிற் கோலி

நிழல்செய் து..

ஞாயிற்றினது ஒள்ளிய கதிர் அவன் உடலைக் காய்தல் செல்லாது பறவைகள் பலவும் கூடித் தம் சிறகுகளால் பந்தரிட்டு நிழலைச் செய்து சுழன்று கொண்டிருந்தன எனவுள்ளது, அவனது தோல் கருக்கக்கூடாது என்ற எண்ணம் இருந்ததைக் காட்டுகிறது.

ஒரு வீரனின் உடல் வர்ணன: செருப்பணிந்த கால்கள் கல்லைப் போன்று கடினமாக உள்ளன; அதற்கு மேல் கணுக்கால் வரை திரட்சியாக உள்ளது; மேலே வயிறும் அழகாக் உள்ளது; அதற்கும் மேலே மார்பு அகறுள்லது; கண்கள் பசுமையாக உள்ளன; மோவாயில் முடி உள்ளது; செவிகள் உயர்ந்துள்ளன; கவுள் தாழ்ந்துள்ளது.

¦ºÕôÒþ¨¼î º¢ÚÀÃø «ýÉý; ¸¨½ì¸¡ø,

«ùÅ¢üÚ «¸ýÈ Á¡÷À¢ý, ¨Àí¸ñ,

Ìý ¿¢¨Ãò¾ Ìå¯Á¢÷ §Á¡Å¡öî,

¦ºÅ¢þÈóÐ ¾¡ú¾Õõ ¸×Çý,.. (புறம்.257)

பெண்களின் தோல் நிறம் உறையிலிருந்து எடுக்கப் பட்ட கத்தியைபோல இருளினின்று வெளிவரும் ஒளிபோல இருந்தது (அகம்,136:24, உறைகழி வாளின் உருவு பெயர்ந்து.. ..). பெண்களின் உறுப்புகள் எப்படியிருக்க வேண்டும் என்றால், அல்குல், தோள், கண் மூன்றும் அகன்று பெரிதாகவும், நுதல், அடி, நுசுப்பு மூன்றும் சிறுத்தும் இருக்கவேண்டும் என்று பொருள்பட தலைவியின் அழகை விவரிக்கும் ரீதியில் குறிக்கப் படுகின்றன (கலித்தொகை.108:2-3).

அகல் அல்குல், தோள், கண் என மூவழிப் பெருகி,

நுதல், அடி, நுசுப்பு என மூவழிச் சிறுகி..

இத்தகைய பல விவரங்கள் தமிழர்களின் உருவமைப்பு, உடல் கட்டமைப்பு இனரீதியிலான சித்தாந்தங்களின் வரையரைக்கு உட்படவில்லை என நன்றாகத் தெரிகிறது.

 மேலும் கரூரில் அமராவதி நதிக்கரையில் கிடைத்த தங்க மோதிரத்தில் ஆண்-பெண் இருவர் தமது கால்களை ஒய்யாரமாக குறுக்காக மடக்கி (கண்ணனைப் போல) நின்றிருப்பது போலச் சித்தரிக்கப்பட்டுள்ளது. ஆண் தனது வலது கையை பெண்ணின் தோளின் மீது போட்டுள்ளான், அதே மாதிரி பெண் தனது இடது கையை ஆணின் தோளின் மீது போட்டுள்ளாள். அங்க அளவுகள், வெளிப்புற உடலமைப்புகள் முதலியன அவர்கள் சொல்வது போல இல்லை. அவர்களின் உடலமைப்பு இனவாத ஆராய்ச்சியாளர் சித்தரித்தது மாதிரி இல்லவே இல்லை. மாறாக,

சாதாரண இந்தியர்களைப் போலவே, நகைகள் அணிந்து காணப்படுகிறார்கள். எனவே அத்தகைய இனவாத சித்தாந்தங்கள், சங்க-இலக்கிய விவரங்களுடன் முழுவதுமாக மாறுபடுகின்றன. இம்மோதிரம் சுமார் 2ம் BCEலிருந்து 1ம் CEவரையிலுள்ள காலத்தைச் சேர்ந்தது என அகழ்வாராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இது எற்றுக்கொள்ளப்பட்ட சங்க-காலத்திற்குள் வருகின்றது. எனவே, சங்க-காலத் தமிழர் இவ்வாறுதான் இருந்திருப்பர் எனத் தெரிகின்றது.

மேலும் இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால், மேனாட்டு இந்தியவியல் ஆராய்ச்சியாளர்கள் “திராவிடர்களை” வேதங்களில் காணப்படுகின்றதான விவரங்களுடன் தான் தமது மானுடவியல் காரணிகளை ஒப்பிட்டு தமிழர் “திராவிட இனத்தைச் சேர்ந்தவர்” எனக் காட்டினர். ஆனால், தமிழர்களுடைய சங்க-இலக்கிய விவரங்களுடன் தமது வெளியுடல் அமைப்புகளை (morphological features) ஒப்பிட்டு அவ்வாறான “திராவிடர்களை” அடையாளங் காணவில்லை. எப்படியிருப்பினும், கருத்த தோல் நிறங்கொண்ட, சப்பை மூக்குகொண்ட (அனஸ்), பேச்சுத்திரனற்ற (ம்ருத்வாச) மற்ற வேத-விவரங்களுடன் ஒத்துபோகின்ற “திராவிடர்களை” சங்க-இலக்கியங்களில் காணமுடியவில்லை.

முன்னுக்கு முரணான இனவாத சித்தாந்தங்கள்: இனரீதியிலாக மனித இனத்தை பிரித்து அடையாளங் காணும் போது, எவ்வாறு அத்தகைய அடையாளங் காணப்பட்ட இனங்கள் (races) மற்றும் இன-உட்பிரிவுகள் (sub-races) பெருகுகின்றன மற்றும் ஒன்றின் மீது ஒன்று படருகின்றன என்பதனைக் காணலாம்.

N    லின்னேயஸின் (1735) படி நான்கு இனங்கள் – ஐரொப்பிய, ஆசிய, ஆப்பிரிக்க, அமெரிக்க வகைகள்;

N    புளுமென்பேக் (1781) படி ஐந்து இனங்கள் – காகசிய, மங்கோலிய, எத்தியோப்பிய, அமெரிக்க, மலாய் வகைகள்;

N    ஹக்ஸ்லி என்பார் ஐந்து முதன்மை மற்றும் 14 இரண்டாம் வகை இனங்களை அடையாளங் காணுகிறார்.

N    டெனிகர் (1900) மானுடத்தை 17 வகைகளாகப் பிரித்து அதில் 25 இனங்கள் மற்றும் இன-உட்பிரிவுகளுக்கு இடமளிக்கிறார்.

N    ஜே. எஸ். ஹக்ஸ்லி மற்றும் ஏ.சி. ஹட்டன் – வெள்ளை, மஞ்சள், கருப்பு என மூன்றே இனங்கள் உள்ளதாக கூறினர்.

 இவையெல்லாம் முன்பு கிரேக்க போர்வையில் மனித இனத்தை பல காரணிகளாகப் பிரித்து dolicocephalic, mesocephalic, brachycephalic, leiotrichi, cymotrichi, lechoderms, xanthoderms என்றெல்லாம் கூறியவை திடீரென்று மறைந்து

போனதுடன், அவை பொய்மை-விஞ்ஞான (pseudo-scientific) ரீதியாலானது என்று அவர்களே ஒப்புக் கொண்டனர்! அதுமட்டுமல்ல, “திராவிடர்”களையே அவர்கள் ஹோமோ-திராவிடர் (Homo-Dravidians), புரோட்டோ-திராவிடர் (Proto-Dravidians), பிரி-திராவிடர் (Pre-Dravidians), மங்கோல்-திராவிடர் (Mongol-Dravidians), ஸ்கைத்தோ-திராவிடர் (Scytho-Dravidians) மற்றும் ஆரிய-திராவிடர் (Arya-Dravidians) என்றெல்லாம் பிரித்தனர்! ஆனால், பழந்தமிழரோ நல்ல வேளை, அவர்கள் தம்மை அவ்வாறு விவரித்துக் கொள்ளவும் இல்லை, பிரிவுகளாகப் பிரித்துக் கொள்ளவும் இல்லை. ஆகவே, “திராவிடர்”, ஒரு இனம் என்பது பொய்யாகிறது.



__________________


Guru

Status: Online
Posts: 24603
Date:
Permalink  
 

திராவிடர் தோற்றத்தைப் பற்றிய சித்தாந்தங்கள்: கீன்ஸ் (Keans), மோரீஸ் (Morries), ஸ்க்லேட்டர் (Sclater), டர்னர் (Turner), ரகோஸின் (Ragozin), கால்ட்வெல் (Caldwell), பெர்ரி (Perry), ஸ்மித் (Smith), ஹார்னல் (Hornell) முதலிய மேனாட்டவர் முதல் நமது கனகசபை வரை “திராவிடருடைய” தோற்ற இடத்தைப் பற்றி பல ஆர்வமூட்டக் கூடிய, வித்தியாசமான கருதுகோள்களையும், சித்தாந்தங்களையும் புராணங்கள் (mythology), மானுடவியல்-அளகுமுறை (Anthropometry), வார்த்தை-விளக்கம் (philology), ரத்ததின் தூய்மை (purity of blood), நன்றான தூய்மையான இனத்தை உருவாக்குவது (Eugenics) முதலியவற்றின் ஆதாரமாக, வைத்தனர். அவை சுருக்கமாக இங்கு கொடுக்கப்படுகின்றன:

1.  மத்திய-ஆசிய தோற்றம்: உடல் வெளியமைப்பு மற்றும் மொழியியல் ஒப்புமைகளின் ஆதாரமாக, “திராவிடர்கள்” மத்திய ஆசியாவிலிருந்து வந்திருக்கக் கூடும் என்ற வாதம். கால்ட்வெல் “ஸ்கைத்தியர்” மூலமாகத்தான் “திராவிடர்” பிறந்திருக்க / தோன்றியிருக்க வேண்டும் என பிடிவாதமாக வாதித்தார். ஆனால், இவ்வாதம், “ஆரியர்களும்” அங்கிருந்துதான் வந்துள்ளனர் எனப்படுகின்ற கருதுகோள்களையும், சித்தாந்தங்களையும் அவர்கள் மறந்து வாதிப்பது போன்றுள்ளது. இருகூட்டக்களும் இங்கிருந்துதான் இந்தியாவில் நுழைந்தன என்றால், பிறகு எதற்க்காக அந்த இரண்டு குழுமங்கள் எல்லா சரித்திர நிகழ்வுகளிலும் மோதிக்கொள்ள வேண்டும் எனத்தெரியவில்லை.

2.  மேற்காசிய தோற்றம்: மேற்காசியாவில் பல தொன்மையான நாகரிகங்கள் தோன்றியதால், திராவிடர்களும் அந்த நாகரிகங்களின் கலப்பினால் (intermixing) அல்லது மக்களின் புணர்ச்சியினால் (interbreeding) உருவாகியிருக்கவேண்டும் என்ற வாதம்[27].

3.  பரவும் சித்தாந்தம்: எல்லா நாகரிகங்களும் – எகிப்து மற்றும் மத்தியத்தரைகடல் பகுதியிலிருந்துதான் தோன்றியிருக்கவேண்டும் எனக்கொண்டு, “திராவிடர்” மத்தியத்தரைகடல் இனம் மற்றும் ஆசியகூறுகள் கலந்து (miscegenation), ஒரு கலப்பினமாக உருவாகியிருக்கவேண்டும் என்ற வாதம்[28].

4.  வட-இந்திய மற்றும் ஹிமாலயமலைகளுக்கு அப்பாற்பட்ட இடங்களில் தோன்றியமை: “ஆரியர்களுக்கு” முன்பு, “திராவிடர்” வட-இந்தியா முழுவதும் வடமேற்கு-வடகிழக்கு பகுதிகளில் பரவியிருந்தனர். “ஆரியர்கள்” வந்து அவ்விடங்களை ஆக்கிரமிக்க ஆரம்பித்தபோது, அவர்கள் தெற்கு நோக்க்கி செல்ல வேண்டியதாயிற்று. “ஹிமாலயமலைகளுக்கு அப்பாற்பட்ட இடங்களில் தோன்றியமை” என்ற சித்தாந்தத்தின்படி “திராவிடர்”, திபெத்து பகுதியில் தோன்றி இந்தியாவின் வடகிழக்கு திசை வழியாக இந்தியாவில் நுழைந்தனர். இங்கு “ஆரியர்” வடமேற்கு திசை வழியாக வந்த சித்தாந்தத்தை மனதில் வைத்துக் கொண்டு, “திராவிடர்” வடகிழக்கு திசைவழியாக நுழைந்தனர் என்றதை நோக்கத்தக்கது. எனவே இந்த நான்கு சித்தாந்தங்களின் படி, “திராவிடரும்” வெளியிலிருந்து இந்தியாவிற்குள் நுழைந்தவர் என்று ஆகின்றனர்.

5.  லெமூரியன் அல்லது குமரிக்கண்டம்: “இந்தியாவிற்கு வெளியிலிருந்து வந்தவர்”, “அந்நியர்” என்ற மேற்கண்ட சித்தாந்தங்களுக்கு மாறாக, “திராவிடர்கள்” கடல் கொண்ட குமரிக்கண்டத்தில் தோன்றி, பிறகு, அது மூழ்கியபிறகு, தமிழ்நாட்டிற்கு வந்தனர் என்ற வாதம்.

முதல் மூன்றும் செமித்தியமத நூல்கள் மற்றும் மேனாட்டுப் புராணங்களின் மீது ஆதாரமாகக் கொண்ட வாதங்கள். நான்காவது, ஆரியருக்கு எதிர் திசையில் நுழைந்தனர் மற்றும் இறுதியான வாதத்திற்கு சங்க-இலக்கியங்களில் கடல்கோள்களினால் நிலம் மூழ்கிய குறிப்புகள் மீது ஆதாரமாகக் கொண்டவை என அறியலாம். ஆனால் “தமிழர்” முன்பே குறிப்பிடப்பட்டபடி, வடக்கு-இமயம், தெற்கு-குமரி, குண-குடகடலால் – என்ற எல்லைகளுக்கு அப்பாலிருந்து வந்ததாக எந்த குறிப்பும் இல்லை. எனவே, இச்சித்தாந்தங்கள் சங்க-இலக்கிய குறிப்புகளுக்கு எதிராக உள்ளன.

மானுட-அளவியலில் முரண்பாடுகள்: மானுடவியல் வல்லுனர் என்ற தகுதியிலிருந்து இனவாத-விஞ்ஞானிகளாக மாறியவர், மண்டைவோடுமானி (craniometers), வளைந்த-பாகைமானிகள் (Spheroidal-hooks), மூக்களவுமானி (nasal-index meters) முதலிய கருவிகளைக்கொண்டு ஒத்துப்போகாத, முரண்பட்ட பலதரப்பட்ட அளவுகள் தங்களது “வெளியுடல்-அளவியல்” (Morphometry), “மண்டையோடு-அளவியல்” (Craniometry) என்ற புதிய விஞ்ஞான-ஞானத்தோடு “திராவிடரை”, “ஆரியரிடமிருந்தே” உருவாக்கியதை நன்றாக அறிந்து கொள்ளலாம். தங்களுடைய “விஞ்ஞான” ஆய்வுகளில், மூதாதையர்வழி-கூறுகள் மற்றும் சுற்றுப்புறசூழல், இவற்றின் தாக்கம் மற்றும் சீதோஷ்ணநிலை, உணவுமுறை, ஜீன்ஸ், குரோமோஸோம்களின் இணைப்புகள் முதலியவற்றைக் கருத்திற் கொள்ளவில்லை. ஆராய்ச்சிகள், உயரம், உடல் அமைப்பு முதலியன வாழும் முறை, செய்யும் தொழில் மற்றும் மூதாதையர்-கூறுகளால் மாற்றமடைகின்றன, எனக் காட்டுகின்றன. அதனால் தான், நடைமுறையில் உருண்டைதலை பெற்றோர்கள் நீண்டதலை குழந்தைகள் பெற்றெடுக்கின்றனர்; நீண்டதலை பெற்றோர்களுக்கு நடுத்தர-வடிவான தலையுள்ள குழந்தைகள் பிறக்கின்றன, என்றவற்றைக் காண்கிறோம். குட்டை-உயரம், கருப்பு-சிவப்பு முதலியனவும் அப்படியே.

எட்கார் த்ரஸ்டன் கொடுத்துள்ள மானுடவியல் – அளவு அட்டவணைகளில் பல முரண்பாடுகள் உள்ளதைக் காணலாம்[29]. 23 நீணடத்தலை காதிர்களில், ஒரு நடுத்தர தலையைக் காண்கிறோம்; அதேமாதிரி 40 கம்மாளர்களில் 5 உள்ளனர்; 6/50 பள்ளர்கள்; 5/42 இடையர்; 5/24 புலையர்; 8/40 மாதிக; 6/30 மால; 11/60 பேஸ்த; 10/40 கொல்ல; 14/50 போய; 12/40 பன்ட்; 16/40 காப்பு; 19/50 குறும்ப; 23/50  பம்ஹல; 

27/50 ஹொக்கலிக. இவ்வாறு, தென்னிந்தியாவைச் சேர்ந்த பழங்குடிகள் அல்லது “திராவிடர்” எவ்வாறு இனரீதியிலாகவும், மானுடவியல்-அளவீட்டு காரணிகளுக்கும் தமது இனம் (race), இனவாதம் / இனவெறி (racism) மற்றும் இன-சித்தாந்தங்களுக்கு (racialism) ஒத்துப்போகவில்லை என்பதனை காணலாம்.

“திராவிடர்” என்ற நிலையில் “பிராமணர்” என்றுமே “ஆரியர்”தாம். ஆனால், வேடிக்கை என்னவென்றால், மேற்கண்ட அளவு முறைகள் அவர்களை “திராவிடர்”களாக்குகிறது. 20 நீண்டத்தலை பிராமணர்களில் ஒரு உருண்டைத்தலை காணப்படுகிறது! அதே மாதிரி பத்தர் பிராமணர் 2/25; தேஸ்தா 4/24; மாத்வ – 60 நடுத்தர உருண்டைகளில், 18 உருண்டை;  கர்நாடக ஸ்மார்த – 50 நடுத்தர உருண்டைகளில், 9 உருண்டை; மாண்டியா – 50 உருண்டைகளில், 31 நடுத்தர உருண்டைகள்; சிவள்ளி – 30 உருண்டைகளில், 17 நடுத்தர உருண்டைகள். இதேமாதிரி மூக்களவுகளும் வேறுபடுகின்றன. “திராவிடரி”டையே, பல “ஆரியர்” காணப்பட்டு, ஒரு நிலையில், “திராவிடரு”க்கும் “ஆரியருக்கும்” உள்ள வித்தியாசங்கள் மறைகின்றன, அதாவது “விஞ்ஞான”அளவுகள் அத்தகைய “இனப்பிரிவினையைக் காட்டுவதில்லை.

மொழியியல் ரீதியில் “திராவிட” மற்றும் “திராவிட இனம்” தோன்றியது: இவ்விதமாக, “இனவாத-விஞ்ஞானிகள்” சுறுசுறுப்பாக எப்படியாகிலும் “திராவிடர்”களை உருவாக்கியேத் தீரவே வேண்டும் என தமது விஞ்ஞான ஆய்வுக்கூடங்களில் தீவிர-முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, “மொழியியல்-விஞ்ஞானிகளும்” அத்தகைய வேலையில் கண்ணும் கருத்துமாக இருந்தார்கள். ஃப்ரான்ஸிஸ் W. எல்லிஸ் (Francis W. Ellis) தமிழ், கன்னடம், மலயாளம் முதலிய மொழிகளை ஒப்பிடும்போது அவற்றை, “தென்னிந்திய மொழிகள்” (South Indian dialects) என்று குறிப்பிட்டார். ஏ.டி. காம்ப்பெல் (A. D. Campbell) தமது, “தெலுகு மொழியின் இலக்கணம்” (1816)ல் எழுதும்போது அவற்றை அவ்வாறே குறிப்பிட்டார். லாஸென் (Lassen) “டெக்கான் மொழி”கள் என்று வகை படுத்தினார். ஹாக்ஸன் (Hackson) என்பார் 1848 மற்றும் 1856 ஆண்டுகளில் நீலகிரி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தமது ஆய்வு மேற்கொண்டு, இப்பகுதி மக்கள் பேசிய மொழிகளுக்கு “தமுளியன்” (Tamulian) என பெயரிட்டார். முதன் முதாலாக கால்ட்வெல் தான் “திராவிட மொழிகள்” என்று கூறினார். பிறகு டி. பரௌ (T. Burrow), எம்.பி.எமனௌ M. B. Emeneau), காமில் வி. ஸெலெபில் (Kamil V. Zvelebil), எம். அந்த்ரொபோவ் (M. Anthropov) முதலிய நவீன பண்டிதர்கள் தமது மொழியியல் யுக்திகளின் மூலம், அவ்வாறு “கண்டுபிடித்த திராவிட இனத்தை” உறுதி செய்தனர். தமது நூல்களில் மொழியியல் ஆராய்ச்சி என்ற போர்வையில், மொழியைவிட “இனம்” என்ற கருத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது, அவர்களது “திராவிடஇனம்” உபயோகத்திலிருந்து தெரிகின்றது.

“திராவிட”: சமஸ்கிருத மூலங்கள்: மனுவின் படி “திராவிடர்” தகுதியிழந்த / விலக்கப் பட்ட சத்திரியர் மற்றும் அவர்கள் விர்ஸபனுடைய மகனான “திராவிட” என்பவனது வழிவந்தவர்கள்[30] எனக்குறிப்பிடுகின்றார். மஹாபாரதத்தில் கொடுக்கப்பட்டுள்ள, இரண்டு தகுதியிழந்த சத்திரியர்களின் பட்டியல்களில் “திராவிட” என்போர் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பாகவத புராணம் சத்தியவிரதனை “திராவிடரின் அரசன்” என்று குறிக்கிறது. ஆதிசங்கரர், சௌந்தர்யலஹரி 75வது சுலோகத்தில் தம்மை “திராவிட சிசு” என்றுக் குறிப்பிட்டுக்கொள்கிறார்[31]. சந்திரகுப்தனின் அமைச்சராக இருந்த சாணக்கியன், திராவிட நாட்டை அதாவது காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவன் என்றே குறிப்பிடப்படுகிறான். அதுமட்டுமல்லாது, அவனது பல பெயர்களில் “திரமிள” என்பதும் உள்ளது – வாத்யாயன, மல்லங்க, குடில, த்ரமிள, பக்சிலஸ்வாமி, விஷ்ணுகுப்த, அங்குல முதலியன்.  CE 7ம் நூற்றாண்டைச் சேர்ந்த குமாரில பட்டர் “ஆந்திய திராவிட பாஷா” என்ற சொற்றொடரை உபயோகித்துள்ளார். விசிஸ்டாதுவைத இலக்கியங்களில் (சுமார் 7வது நூற்றாண்டு CE) “திரமிடாச்சாரியார்” என்பவர் காணப்படுகிறார்[32]. வராஹமிஹிரருடைய பிரஹத்சம்ஹிதை, யோகயாத்ரம், வராஹபுராணம், வராஹிதந்த்ரம், மஹாபாரதம் முதலிய நூல்கள் ஆந்திரர், கருநாடகர், கூர்ஜர், தைலிங்கர், மஹாரஷ்டிரர் என்பவர்களை “திராவிடர்” என்றே குறிக்கின்றன. இவர்கள் “பஞ்ச திராவிடர்” என்றே குறிப்பிடப்படுகின்றனர். இங்கு, “பஞ்ச திராவிடர்” மற்றும் “பஞ்ச கௌடர்” இரண்டு சொற்றொடர்களும் பிராமணருக்கு உபயோகப்படுத்தப் பட்டுள்ளது. அந்த “பஞ்ச கௌடர்” கீழ்கண்ட பகுதிகளைச் சேந்தவராக உள்ளனர்:

  1. சாரஸ்வஸ்த்தர் (காஷ்மீரத்தைச் சேர்ந்தவர்)
  2. கன்யகுப்ஜர் (பஞ்சாப்)
  3. முக்கிய கௌடர் (வங்காளம்)
  4. உத்கலர் (ஒரிஸா)
  5. மைதிலர் (மிஸ்ரா எனப்படுவர்) (நேபாளம், பீஹார்)

மார்க்கண்டேய, கருட, விஷ்ணு-தர்மோத்திர புராணங்கள் மற்றும் பிரஹத்சம்ஹிதை தென்மேற்கு இந்தியாவில் உள்ள மக்களாக காம்போஜர், ஸ்ரீமுகர், அனர்த்தர் முதலியோருடன் “திராவிடரையும்” சேர்க்கின்றன. தசகுமார சரித்திரம்[33]“திராவிட”நாட்டைக் குறிப்பிட்டு, அதில் காஞ்சி என்ற நகரம் உள்ளதாகக் குறிக்கிறது. காதம்பரி[34] அந்நாட்டைச் சேர்ந்தவர் அல்லது அங்கு வசிப்பவர் “திராவிடர்” எனக்குறிப்பிடுகிறது. ஒரு முனிவர் “திராவிட-கௌடகர்” என்றும், ஒரு உபநிஷதம் “திராவிட-உபநிஷதம்” என்றும் குறிக்கப்படுகின்றன. பரதமுனி நாட்டிய சாஸ்திரத்தில் “திராவிட” என்றும், பாணர் ஒரு “திராவிட மார்க்கம்” என்பதனையும் குறிப்பிடுகின்றனர். பில்ஹணருடைய “விக்ரமாத்தித்யனுடைய திக்விஜயம்” என்ற நூலில் சோழனின் படை “திராவிடப் படை” என்றும், சோழமன்னன் “திராவிட மன்னன்” என்றும் குறிப்பிடுகின்றது. மியூர் மற்றும் கால்ட்வெல் முதலியோரே 1854ல், பாபு ராஜேந்திரலால் மிஸ்ரா என்ற இந்திய மொழியியல் வல்லுனர் பிராக்ருத மொழிகளுள் “திராவிடி” ஒன்று மற்றும் அது “சௌரஸேனி”ற்கு சமம் என்று குறிப்பிட்டதாக ஒப்புக் கொண்டுள்ளனர். எனவே, இங்கு, “திராவிட” என்பது பூகோளரீதியில் தென்னிந்தியா அல்லது தென்னிந்திய பகுதி மற்றும் தென்னிந்திய மொழி, குறிப்பாக தமிழைக் குறிக்க உபயோகிக்கப் பட்டது என்றதனை அறியலாம்.

ஜைனர்களின் “திரமிள” மற்றும் “திரவிட”: ஜைனர்களின் சம்வாங்க சூத்திரம் c.300 BCE), பன்னவன்ன சூத்திரம் (c.168 BCE) முதலிய நூல்கள் நமது நாட்டில் இருந்த மற்றும் உபயோகப்படுத்தப்பட்ட 18 மொழி-வரிவடிவங்களில் (script) “தமிலி” என்பது ஒன்றாகும், என கூறுகின்றன. ஜைன மதத்தை தெற்கில் பரப்ப வஜ்ரநந்தி என்ற திகம்பர ஜைன குரு, மதுரையில் (470 CE) ஒரு “திராவிட சங்கத்தை” ஏற்படுத்தினார். சதுரன்காய புராணத்தில் (421 அல்லது 605 CE) “திராவிட-வலிக்கில்ல-சைத்திரத்ரிதோவார” என்று குறிப்பிடும்போது, விரிஸபஸ்வாமியின் மகனாக “திராவிட” என்று உள்ளது, ஆனால் இவர் ஜைனர்[35]. ஹேமசந்திரருடைய “ஸ்தவீரவலி சரித்ர” என்ற நூலில் “தமிள” என்று குறிப்பிடுகின்றார், ஆனால், ஃப்லீட் (John Faithful Fleet) என்பார் “திரமில” பல்லவர்களுடைய “திராவிட நாடு” என்றும் மற்றும் அதன் தலைநகர் காஞ்சி, அது கிழக்குக்கடற்கரையில் இருந்தது என்று விவரிக்கிறார்.

பௌத்த நூல்களிலுள்ள “தமிள”: பாலி வம்சாவளிகள் “தமிள” என்பரைப்பற்றி பல குறிப்புகளை கொடுக்கின்றன. லலிதாவிஸ்தார என்ற சமஸ்கிருத நூல் (c.2ndcent.CE) உத்தன் என்பவரின் காலத்தில் உபயோகப்படுத்தப்பட்ட 64 மொழி-வரிவடிவங்களில் “திராவிட லிபியும்” ஒன்று என்று கூறுகிறது. “தமிள” நாட்டைச் சேர்ந்தவர் கஸ்ஸப தேர என்ற ஆசிரியர் வினய நூற்களுக்கு ‘விமதிவினாதினி’ என்ற பெயரில் உரை எழுதியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. புத்த நூல்களின்படி – தீபவம்ஸம், மஹாவம்சம் – இலங்கையில் சிங்களவருடன் சதா சண்டைப் போட்டுக் கொண்டிருக்கும் மக்கள் – “தமிளர்கள்”. அதுமட்டுமல்லாது, அவர்கள் “அநாரியர்கள்” என்றும் குறிப்பிடப்படுகின்றனர். பௌத்தர்கள் தங்களை “ஆரியர்” என்றே குறிப்பிட்டுக் கொண்டனர். ஆகையால் தமக்கு எதிராகவுள்ளவர்களை “ஆரியர்”-அல்ல என்ற பொருள்படும் “அநாரியர்கள்’ என்ற சொற்றொடரை உபயோகப்படுத்தினர், எனத் தெரிகிறது. அவ்வாறு கூறும்போது அத்தகைய “தமிளர்” யார், இந்தியாவின் எப்பகுதியினின்று வந்தனர் என்று கூறப்படுவதில்லை, ஆனால் பாண்டிய-சோழ பிரதேசங்களை வித்தியாசப் படுத்திக் காட்டுகின்றன. தீபவம்ஸத்தில், “தமிளர்” 8 முறை குறிப்பிடப் படுகின்றனர்[36]. இதே மாதிரி, புத்தகோஸரும் “தமிளர்”களை யவனர் மற்றும் கிராதர்களினின்று ஒரு பக்கமும், ஆந்திரர்களினின்று மறுபக்கமும் வேறுபடுத்திக் காண்பிக்கிறார். யுவான் சுவாங் (Yuan Chwang) 637 CEல் தமிழகத்திற்கு வந்தபோது தனது குறிப்புகளில் காஞ்சியை (Kan-chih-pulo) “திராவிட” (Tolo-pi-la) நாட்டின் தலைநகராக குறிப்பிட்டுள்ளார். பெய்டிங்கர் அட்டவணையின்படி (Peutinger Tables), அவர் தில, திமிர், சிம்போ முதலிய வார்த்தைகளை “திராவிட”நாட்டைக் குறிக்க உபயோகப்படுத்தியதாகத் தெரிகிறது. பராக்கிரம பாஹு – I (1153-86 CE) “தமிளாதிகாரின் ரக்க” என்பனின் சேவையைப் பெற்றிருந்ததாக உள்ளது.

கல்வெட்டுகளிலுள்ள திரவிட, த்ரமில, தமில முதலியவை: இருக்கின்ற பழங்காலதிலிருந்து 18ம் நூற்றாண்டு வரை தேதியிட்டுள்ள கல்வெட்டுகள் மற்றும் தாமிரபட்டயங்களில் காணப்படுகின்ற சமஸ்கிருத- திரவிட, திராவிட, திரமிட; மற்றும் பிராக்ருத- தமில, தமிள, த்ரமிட, திரமிள முதலியன பொதுப்பெயர் மற்றும் உரிசொல்லாக உபயோகபடுத்தினாலும், அவை “தமிழ்” மொழியைத்தான் காட்டுகின்றன என்று நன்றாகத் தெரிகின்றது. பல இடங்களில் திரவிடர் / திரமிடர் மற்ற தென்னிந்திய மன்னர்களான சேர, சோழ, பாண்டிய, ஆந்திரர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டியுள்ளன. பாரம்பரியமாகக் குறிப்பிடப்படுகின்ற 56 அரசர்கள் மற்றும் அரசுகளில் “திராவிடம் / திராவிடர்” ஒன்றாகவுள்ளது / உள்ளனர். கல்வெட்டுகள் மொழிரீதியில் கலிங்கர், ஆந்திரர், கருநாடகர், கேரளர் மற்றவரை “திராவிடருடன்” அல்லது “தமிளர்களை” சேர, சோழ, பாண்டிய குழுமங்களுடன் சேர்க்கவில்லை. ஆகவே இவ்வார்த்தைகள் தமிழ் மொழியைத்தான் குறிக்கும், இனரீதியில் இல்லை எனத்தெளிவாகிறது.

நவீனகால வல்லுனர்களின் “திராவிடர்”: மேற்கண்ட விவரங்களினின்று, எவ்வாறு திரவிட, திராவிட, தமிள, திரமிள, முதலிய சொற்களினின்று “திராவிடர்கள்” உருவாக்கப்பட்டனர் என்றும், அவர்கள் மானிடவியல்-மானுட-அளவியல் காரணிகளுட்பட்டு வரவில்லை என்பதனையும் பார்த்தோம். இருப்பினும் திராவிட இனம், திராவிட ரத்தம், திராவிட மண்டையோடு, திராவிட எலும்புகள் என்றெல்லாம் பேசப்பட்டு வருகின்றன. மேலும் “திராவிட”த்தோற்றங்களின் கருதுகோள்களும் அவர்கள் எகிப்து, மத்திய-ஆசியா, மத்திரத் தரைகடல் பகுதி, திபெத் முதலிய பகுதிகளினின்று வந்திருக்கலாம் என்பது, நிச்சயமாக சங்க இலக்கிய பாரம்பரியம், கலாச்சாரம், நாகரிகம் முதலியவற்றிற்கு எதிராகவே உள்ளன. சங்க-இலக்கியங்களில் கங்கை, யமுனை நதிகள் குறிப்பிடப்பட்டாலும், சிந்து நதியின் பெயர் இல்லை. பாடலி(புத்திரம்), அயோத்யா முதலியன குறிப்பிட்டிருந்தாலும், சிந்து சமவெளி நாகரிகத்தின் நகரங்கள் குறிப்பிடப்படவில்லை. எனவே தமிழர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர் மற்றும் பாரத தேசத்தவர் என்று தெரிகிறது. அவர்கள் “ஆரியர்களால்” வடஇந்தியாவிலிருந்து தென்னிந்தியாவிற்கு விரட்டியடிக்கப்படவில்லை மாறாக, சங்க-இலக்கியம் அவர்களைத்தான் வென்றதாக கூறுவதை பார்த்தோம்.

முடிவுரை: “ஆரிய இன”த்தைக் கண்டுபிடித்த மாக்ஸ் முல்லர்[37], “நான் ஆரியன் என்று சொன்னால், நான் அவர்களது ரத்தம், எலும்புகள், முடி, அல்லது மண்டைவோடு முதலியவற்றைக் குறிக்கவில்லை, அம்மொழி பேசுபவர்களைத்தான் குறிக்கிறேன் என்று மறுபடி, மறுபடி அறிவித்து

 விட்டேன்.………………... என்னைப் பொருத்த வரைக்கும் ஒரு மானிட வல்லுனர் ஆரிய இனம், ஆரிய ரத்தம், ஆரிய கண்கள் மற்றும் ஆரிய முடி என்றெல்லாம் பேசுபவரும் சரி, ஒரு மொழிவல்லுனர் நீள்தலை-அகராதி, அல்லது உருண்டைத்தலை-இலக்கணம் என்றெல்லாம் பேசுபவரும் சரி, இருவருமே மிகப் பெரிய பாவியாவர்”, என “பாவ மன்னிப்பு” கேட்டார்.

ஆனால், “திராவிடஇனத்தின்” கண்டுபிடிப்பாளிகள், சித்தாந்திகள், ஆதரவாளிகள் முதலியோர் அத்தகைய சரித்திர-விஞ்ஞான ஆதாரமில்லாத தமது கருதுகோள்கள், கோட்பாடுகள் பொய் என்று அறிவிக்கவில்லை. மாக்ஸ் முல்லர் சொன்னது மாதிரி, சொல்லி “பாவ மன்னிப்பும்” கேட்கவில்லை.

நான் திராவிடன் என்று சொன்னால், நான் அவர்களது ரத்தம், எலும்புகள், முடி, அல்லது மண்டைவோடு முதலியவற்றைக் குறிக்கவில்லை, அம்மொழி பேசுபவர்களைத்தான் குறிக்கிறேன் என்று மறுபடி, மறுபடி அறிவித்து விட்டேன்.………………... என்னைப் பொருத்த வரைக்கும் ஒரு மானிட வல்லுனர் திராவிட இனம், திராவிட ரத்தம், திராவிட கண்கள் மற்றும் திராவிட முடி என்றெல்லாம் பேசுபவரும் சரி, ஒரு மொழிவல்லுனர் நீள்தலை-அகராதி, அல்லது உருண்டைத்தலை-இலக்கணம் என்றெல்லாம் பேசுபவரும் சரி, இருவருமே மிகப் பெரிய பாவியாவர்”, என்று யாரும் சொல்லவில்லை.

இதில் வேடிக்கையென்னவென்றால், அரசியல்வாதிகள் மட்டுமல்ல சரித்திர ஆசிரியர்களும் முன்னுக்கு முரணாகவும் மற்றும் திரிபுவாதங்களையும் பேசி-எழுதி வருகின்றனர். மேனாட்டவர் “ஆரியர்” என்ற வார்த்தையினை சரியாக புரிந்து கொள்ளாமல், மிகத் தூய்மையான இனத்தைக் குறிக்கும் என்று பொருள்கொண்டதால், இனவெறி பிடித்து, அதனால் இரு உலகப்போர்கள் உருவாகி, ஒரு குறிப்பிட்ட சமூகமக்கள் அதற்கு பலியாக நேரிட்டது. அந்த இனவெறி பயங்கரவாதத்தின் கொடுமையான விளைவுகளை அறிந்து, அத்தகைய இனவாதங்கள், பொய், மாயை, கட்டுக்கதைகள் என அறிவிக்கப்பட்டு அத்தகைய சரித்திர-விஞ்ஞான ஆதாரமில்லாத கருதுகோள்கள், கோட்பாடுகள், சித்தாந்தங்கள் குப்பைத்தொட்டியில் போடப்பட்டன. ஆனால், இங்கோ அவற்றை இன்றும் பிடித்து வைத்துக் கொண்டுள்ளனர்.

கால்ட்வெல்லின் மொழியியல் கண்டுபிடிப்பு, மேனாட்டு மற்றும் இந்திய பண்டிதர்கள் இனவாத திரிபுவாதங்களைத் தமது சுயநலத்திற்காக உபயோகப் படுத்தினர். இதுதான் இன்றய திராவிட இயக்கங்கள் தோன்ற யாதுவாகி ஒரு குறிப்பிட்ட சமூகமக்களுக்கு எதிராக வெறுப்பு, துவேஷம் என்ற ரீதியில் வளர்ந்தன. “திராவிடர்” என்ற வார்த்தையும், “ஆரியர்” போன்றே ஒரு நோக்கத்துடன், அதாவது “ஆரிய-இனத்தை விட உயர்ந்த இனம்” என்ற கருதுகோளின் அதாரமாக உருவாக்கப் பட்டது. இது இனங்கள், மக்கள் குழுமங்கள் குழுக்களைப் பற்றிய அறியாமையோ, குழப்பங்களோ இல்லை, ஆனால் இந்தியர்களை அரசியல் ரீதியில் பிரித்து வைக்க ஐரோப்பிய-ஆங்கிலேய – இந்தியவியல் வல்லுனர்களாக, “சரித்திர ஆசிரியர்களாக” மாறிய கிருத்துவமதபோதகர்களின் சூழ்ச்சியே ஆகும். எனவேதான், இன்றைய இந்திய அரசியல்வாதிகளும் அத்தகைய சூழ்ச்சியைப் பின்பற்றி தமது அரசியல் ஆதாரங்களுக்காக உபயோகிக்கின்றனர். இன்றைய “திராவிட-இனவாத” சித்தாந்திகள், தமது “திராவிட மாயையை” நிலைநிறுத்த சங்க-இலக்கியங்கள் உதவுவதில்லை என்பதனை உணரவேண்டும்.

இனம் மற்றும் மொழி என்பன இரு தனியான நிலைகள், கூறுகள் மற்றும் படிப்புகள் ஆகும். ஒரு குறிப்பிட்ட மக்கள் ஒரு குறிப்பிட்ட மொழியை பேசுவதால் அவர் குறிபிட்ட “இனத்தவராக” மாட்டார்கள். மொழியியல் மற்றும் மானுடவியல், இரண்டும் தனித்தனியானவை. “திராவிடர்” என்று தம்மை பிரகடனப் படுத்திக் கொள்பவர், சொல்லப்படுபவர் எல்லோரும் அச்சடித்த நகல்கள் போன்று எல்லா மானுட-வெளிப்புற அமைப்பு, உடல்வாகு, வனப்புக் கொண்டு ஒரே மாதிரியாகக் காணப்பட மாட்டார்கள், இருக்கமாட்டார்கள். கருப்பானவர் எல்லாம் “திராவிடர்” இல்லை, வெளுப்பானவர் “திராவிடர்” அல்லாதவராகி விடமட்டார். மேலே குறிப்பிட்டபடி, பாரம்பரிய கூறுகள் மற்றும் சுற்றுப்புற சூழல்கள் மனிதர்களின் உடலமைப்பை மாற்றுகின்றன, அம்மாற்றங்கள் தொடர்ந்து நிகழ்கின்றன. எனவே இனம், இனவெறி மற்றும் இனவாத சித்தாந்தங்களிலுள்ள அபாயத்தைக் கருத்தில் கொண்டு, அத்தகைய வெறுப்பு, காழ்ப்பு மற்றும் துவேஷம் முதலியவற்றை வளர்ப்பதை விட ஒற்றுமையை வளர்ப்பது நல்லது.



__________________


Guru

Status: Online
Posts: 24603
Date:
Permalink  
 

TABLE – A

The number of times the word ‘Tamil’ occurs in the Tamil literature
PeriodWorkTotal no.
From earlier times to 300 BCE – 300 CETolkappiyam5
300 BCESangam literature21
300 – 500 CESilappatikaram

 

Manimekhalai

Tiruvalluvamalai

Tirumantiram

24

 

5

6

10

45
500 – 900 CEAppar Tevaram

 

Sambandar

Sundarar

Nalayira Divya Prabandam

Nandi kalambagam

Pandikkovai

Perungathai

Mottollayiram

Sivaga Chintamani

Kamba Ramayanam

Tiruvacagam

Tirukkovaiyar

7

 

260

48

93

4

30

2

5

6

18

1

1

475
900 -1200 CEKalladam

 

Padinonram Tirumarai

Periya Puranam

Ambigapati Kovai

22

 

43

313

3

381
1200 – 1900 CETiruvarur Kovai

 

Madurai Kovai

Tanjavur Kovai

Kulottunga Chozhan Kovai

Vilibharata

Kumaragurubarar

Kurala kuravanchi

Tamizh vidu thuthu

Tiruarutpa

Tituvilanji Murugan Pillaittamizh

Kulattur Arumuthambigai Pillaittamizh

Komatiyambigai Pillai Tamizh

17

 

25

9

7

18

105

10

15

24

35

8

5

341
TOTAL1268

Taken from Tamizh Nulgalil Tamizh Mozhi, Inam, Tamizhnadu, by P. Krishnan, Ilan Tamzhar Pathiupagam, 28, II Madley Street, I. Nagar, Madras – 600 017.

TABLE – B

Anthropological features of Dravidian race as propounded by different scholars

Name of the scholarStature / heightSkin / complexionHeadNoseEye colourHairLipsReference
Sir Herbert RiselyShort or below meanVery dark, approaching blackLongVery broad, some times depressed at the root, but not so as to make the face appear flatDarkPlentiful, with an occasional tendency to curlThe People of India, 1908.
Sir William TurnerUsually low, but shorter than the AustraliansDark approaching Low nose with wide nostrilsDarkBlack – either straight, wavy or curly but not woolly or frizzy rThickContributions to the Craniology of the People of the Empire of India, Part – II.

 

The Aborigines of Chota Nagpur and of the cEntral Provnces, the People of Orissa, Veddah and Negritos, 1900.

HuxleyDark skinEvidently long prognathous skull with well developed brow-ridgesDarkDark, wavy black hairAnatomy of Vertebrate Animals, 1871.
HaeckalLight or dark brown colour some yellowish brownForehead is generally highProminent and narrowMore or less curlyslightly

 

protruding

History of creation
Mihail NestruhMediumBrown to blackLongSlightly slanting, broadBrown to blackWavy thinThickHuman Races, Mir Publishers, Moscow, 1974, p.130.
Srinivasa IyengarTallBrownReceding foreheadThick prominentTamil Studies (He says that pure Dravidians have hair body, well-propotioned limbs besides noted features), p.15.

TABLE – C

‘Dravidian’ Origins

AuthorTheoryLocated place
Keane and MorrisIndo-African-AustralSubmerged continent under the Indian ocean
SclaterIndo-African-AustralEntered into India before submergence
William TurnerEmployment of certain words and use of boomerang.Australia
William TurnerDravidians, the Kolarian speaking languages similar to Mundari.Entered into India from the north-east
William TurnerDravidians, the proper language similar to ‘Tamil’Entered into India from the north-east
CaldwellScythiansEntered into India through north-eastern passes
KanakasabhaiMongolian (Trans-Himalayan) – philogical comparisonsTibet
Several enthnologistsCacasinian stockCentral Asia
Z. A. RagozinElamiteMiddle east
W. J. PerryDiffusion theory. Migrated into India at a remote date from their original home.Egyptian and Mediterranean.
Grafton Elliot SmithMixing of old and pre-Dravidian populationsMiddle-east
James HornellDiffusion theoryFrom Mediterranean to Egypt to India
Tamil scholars – one groupDisplaced from Indus valleyIndus valley
Tamil scholars – other groupMany references in the ancient Tamil literature point to the submergence of land massesKumarikkandam i.e, Kumari continent

 

 

Various classification of  Homo sapiens

 

Geographical –

 

according to Garn (1961)

Genetical –

 

according to Boyd (1964)

Amerindian

 

Polynesian

Micronesian

Melanesian-Papuan

Australian

Asiatic

Indian

European

African

American group

 

American Indian race

Pacific group

Indonesian race

Melanesian race

Polynesian race

Australian (aboriginal race)

Asian group

Asian race

Indo-Dravidian race

European group

 

Early Europeans

Lapps

Northwest Europeans

Eastern and Central Europeans

Mediterranean

African group

African race

Further divisions based on local variations noted:

Local –

 

According to Garn (1961)

Local –

 

according to Dobzhansky (1962)

Northwest European

 

Northeast European

Alpine

Mediterranean

Iranian

East African

Sudanese

Forest Negro

Bantu

Turkic

Tibetan

North Chinese

ExtremeMongoloid

Southeast Asiatic

Hindu

Dravidian

North American

 

Central American

South American

Fuegian

Lapp

Pacific “Negrito”

African Pygmy

Eskimo

Ainu

Murrayian Australian

Capenterian Australian

Bushman and Hottentot

North American coloured

South African coloured

Ladino

Neo-Hawaiian

Northwest European

 

Northeast European

Alpine

Mediterranean

Hindu

Turkic

Tibetan

North Chinese

Classic Mongoloid

Eskimo

Southeast Asiatic

Ainu

Lapp

North American Indian

Central American Indian

South American Indian

Sudanese

Forest Negro

 

Bantu

Bushman and Hottentot

African Pigmy

Dravidian

Negrito

Melanesian-Papuan

Murrayian

Carpenterian

Micrinesian

Polynesian

Neo-Hawaiian

Ladino

North American coloured

South American coloured

 

    

Note the classification of “races of India” under different categories.


[1] இக்கட்டுரை ஆசிரியர் ஆங்கிலத்தில் பல மாநாடுகளில் சமர்ப்பித்த-வெளிவந்த ஆங்கில கட்டுரைகளின் தமிழ் மொழிபெயர்ப்பு-தொகுப்பாகும்.

 

K. V. Ramakrishna Rao, ‘Ariyar” in Ancient Tamil Literature, Proceedings of Indian History Congress, Calcutta, 1990, p.165.

……………………………………………………, ‘Ariyar” in Ancient Tamil Literature, in S. B. Deo and Suryanaath Kamath (Ed.), in The Aryan Problem, Bharatiya Itihasa Sankalana samiti, Pune, 1993, pp.75-80.

……………………………………………………, Dravidians – a Literary and anthropological Study, a paper presented during the IHC session held at New Delhi from Feb.21-23, 1992.

……………………………………………………, The Dravidian Problem, Proceedings of the Bharatiya Iitihasa Sankalana Samiti, Warangal, 1992, pp. 38-45.

……………………………………………………, Racial Myths, Politics and Human Unity, in Make History, Madras, Oct-Dec.1993.

[2] Robert Caldwell, A Comparative Grammar of the Dravidian or South-Indian Family of Languages, University of Madras, 1976, pp. 108-120, 636.

[3] சங்கம் இருந்ததா இல்லையா என்ற விவாதத்திற்கு செல்லாமல், “சங்க காலம்” என ஒப்புக்கொண்டுள்ள c.500 / 300 BCE – 300 CE காலத்தை சரித்திர ரீதியில் எடுத்துக் கொள்ளப்படுகின்றது.

[4] V. R. Ramachandra Dikskitar, P. T. Srinivasa Iyengar, K. A. Nilakanta Sastri முதலியோரது புத்தகங்களைப்  பார்க்கவும்.

[5] வித்துவான் H. வேங்கடராமன் (பதிப்பாசிரியர்), நற்றிணை மூலமும் உரையும், மகாமகோபாத்தியாய டாக்டர் உ. வே. சாமிநாதையர் நூல்நிலையம், பெசன்ட் நகர், சென்னை-90, 1989, ப.309-310.

[6] இதில் வியப்பிற்கு உரிய விஷயம் என்னவென்றால், பதிற்றுப்பத்துதான், ஓரளவிற்கு சரித்திர செய்திகளை அதிகமாகக் கொண்டுள்ளது. பதிகங்களில், குறிப்பாக, சேர மன்னனது வெற்றிகள், சிறப்புகள் முதலியன கொடுக்கப்படுகின்றன. ஆகையால், “முதல் மற்றும் கடைசி பத்து” பாடல்கள், கிடைக்கவில்லை என்பது வியப்பாக உள்ளது. ஆதன் முக்கியத்துவம் அறிந்து, அவற்றை எடுத்து விட்டனர் என்பது திண்ணம். பாபர் நாமா என்ற நூலில், சரியாக, பாபர் அயோத்திக்கு சென்று அங்கிருந்த போதைய நிகழ்ச்சிகள் கொண்ட பக்கங்கள் தாம் காணாது இருக்கின்றன, என்பதைப் போன்று இருக்கிறது!

[7] மயிலம் வே. சிவசுப்பிரமணியன், அகநானூறு மணிமிடைபவளம் மூலமும் உரையும், மகாமகோபாத்தியாய டாக்டர் உ. வே. சாமிநாதையர் நூல்நிலையம், பெசன்ட் நகர், சென்னை-90, 1990, ப.376.

[8] க.சி. கந்தையா பிள்ளை, பத்துப் பாட்டு உரைநடை, புரோகிரெசிவ் அச்சகம், சென்னை, 1949, ப.64.

[9] இவனது காலம் சுமாராக 2வது BCE யாக இருக்கலாம் என்று கருதப் பட்டது. ஆனால், இப்பொழுது காரவேல ஹதிகும்ப கல்வெட்டில் காணும்”தேரச வச சத கடம்” (பாலிமொழி) மற்றும் “த்ரதோஸ வர்ஸ சத” (சமஸ்கிருதம்) 1300 வருடங்கள் எனக் கொண்டு அவனது காலம் 1700 அல்லது 1400 BCE எனக்கொள்ளப்படுகிறது.

Nabin Kumar Sahu, Kharavela, Orissa State Museuem, 1984, Bhubaneswar, p.341.

K. V. Ramakrishna Rao, Internal Evidences for Furthering the Tamil Historigraphy and Chronology, PSIHC, Calicut University, Calicut, 2004, pp.442-450.

[10] Archaeological Survey of Western India, No.18, Vol.IV, p.103.

[11] Inscriptions L.E.T, Vol.xxi.

[12] K. a. Nilakanta sastri has interpreted “Ayamani” as “Aryadeva”,  Journal of Oriental Research, X-13, p.96, ff.

[13] Quoted by K. N. Sivaraja Pillai, The Chronology of the Early Tamils, University of Madras, Madras, 1932.

K. A. Nilakanda Sastri, op.cit., p.115.

[14] P. T. Srinivasa Iyengar, op.cit., p.318.

[15] J. M. Somasundara Pillai, A History of Tamil Literature, Annamalainagar, 1967, p.240.

[16] K. V. Ramakrishna Rao, Beef Eating in the Ancient Tamizhagam, a paper presented during the 57th session of  Indian History Congress held at Madras, Dec.27-29, 1996.

கபிலர் பறம்பு நாட்டை விட்டுச் செல்லும்போது, “மதுகலங்கள் திறக்கவும், ஆடுகள் வெட்டித்தள்ளி, அதன் ஊணை எடுத்து சோற்றுடன் கலந்து, துவலையுடன்து கொடுத்து நட்பு செய்தாய் என”, வேள்பாரியை நினைவு கூர்கிறார். புறம்.113.

[17] N. Subramanian, Pre-Pallavan Tamil Index, University of Madras, 1990, p.680.

[18] பிங்கல முனிவர், பிங்கலந்தை என்ற பிங்கல நிகண்டு, திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, (ரு. ஆடவர் வகை), 1978, ப.131.

[19] K. V. Ramakrishna Rao, Great Poets are Cementing force, in Factors in National Integration, Vivekananda Kendra Patrika,  Vol.26, No.1, Feb.1997, pp.117-131.

[20] K. A. Nilakanda Sastri, op.cit., p.115.

[21] K. V. Ramakrishna Rao, Sati in the Ancient Tamil Literature, A paper presented at South Indian History Congress held at Calicut from February 1-3, 1991.

[22] Tevaram of Tirugnana Sambandar, 6th Tirumarai, 23rd Padigam, Tirumaraikkadu-6479.

In another place, he says, “Aryan with chaste Tamil” – 46th Padigam, Tirumarakkadu-6710.

Here, both ‘Aryan’ and ‘Tamizhan’ refer to God Shiva.

[23] சித்தர்கணம்.10:9.

[24] Sivasubramanya Kavirayar, NamaThipa Nikandu, Thanjavur University, 1985.

[25] Sabapathy Navalar, Dravida Prakasikai, Madras, 1899, p.7.

[26] ப. கிருஷ்ணன், தமிழ்நூல்களில் தமிழ் மொழி, தமிழ் இனம், தமிழ்நாடு, தமிழர் பதிப்பகம், 28, || மேட்லி ரோட், சென்னை – 600 017.

[27] திராவிட சித்ததாந்திகள் தங்கள் மூதாதையர் அவ்விதமான “கலப்பினமாக” இருந்தனர், பிறகு இந்தியாவில் நுழைந்தனர் என்பதனையெல்லாம் ஒப்புக்கொள்வார்களா?

[28] இங்கு மேனாட்டவரேத் தெளிவாக “திராவிடர்கள்” ஒரு கலப்பினம் என்கிறார்கள். “ஆரியர்களை”த் தோற்றுவித்து அவர்கள் “தூய்மையானவர்”, “அறிவுஜீவிகள்” என்றெல்லாம் உயர்வான இடத்தில் வைத்து விட்டு, ஏன் தாம் கண்டு பிடித்த “திராவிடர்களை”, இவ்வாறெல்லாம் எதிர்மறையாகச் சித்தரிக்கின்றனர்? இதையும் “திராவிட ஆதரவாளர்கள்’, சித்தாந்திகள் மற்றவர்கள் கவனமாக பார்க்க வேண்டும்.

[29] Edgar Thruston, Castes and Tribes of Southern India, Vol. I, Madras, 1909, pp.lxi-lxxii.

[30] அம்பேத்கரும் தமது “சூத்திரர்கள் யார்?” என்ற புத்தகத்தில் இக்கருத்தையே வெளியிட்டுள்ளதை நோக்கத்தக்கது.

[31] இதனை, திருஞானசம்பந்தருடன் இணைத்து நவீனகால பண்டிதர்கள் குழப்புகின்றனர். ஆதிசங்கரர், காலத்தினால் முற்பட்டவர் என்ற சிறிய உண்மையினை மறந்து அத்தகைய தமக்கு பிடித்தமான தலைப்புகளில் ஆரய்ச்சிகளை செய்கிறார்கள்.

[32] “The progenitor of Tamuna spoke of a ‘Dravidabhasyakara’ as the great expounder of the Brahmasutra and of ‘Srivatsankamisra’ as a great commentator and as an expounder of Nyaya…..‘Dravidabhasyakara’ spoken of by Yamuna superficially appears to be the same Dravidabhasyakara due to the similarity of name. but, we have shown in the pages of the book that he is none other than Shri Satakopa (Nammalvar) who sang the hymns in Taml (Tiruvaimozhi)  and who has been extolled by Yamuna in his ‘Stotraratna’ (117-119). Hence, it is that instead of saying ‘written by ‘Dravidabhasyakara’, Yamuna says in his ‘Atma Siddhi’, Dramidabhashya krta’. Dramida should ordinarily be referred to an Dramida himself”. Polaham Rama Sastri, Dravidatreya Darsanam, Madras, 1957, p.ix.

[33] Verse – 130.

[34] Verse – 229.

[35] Indian Antiquary, Vol. 30, 1901, p.250.

விர்ஸபனுடைய மகனான திராவிட என்பவனது வழிவந்தவர்கள் “திராவிடர்” என்று மனுவில் சொல்லப்பட்டது இங்கு நோக்க்கத்தக்கது.

[36] Herman Oldenberg (Translator), Dipavamsa, asian Educational Services, New Delhi, 1982, 18-47; 19-16; 20-15; 17, 18, 27, 29, 21-45.

[37] Max Mueller, Biographies of Words and the Home of Aryans, London, 1888, p. 120.

https://aryandravidian.wordpress.com/2010/04/04/3/



__________________


Guru

Status: Online
Posts: 24603
Date:
Permalink  
 

ஒரு சமூகத்தின் தொல்பிரதிகள் பெரும்பாலும் நாட்டார் பிரதிகளாகவே இருக்கும். அல்லது நாட்டார்த்தன்மை மேலோங்கிய பிரதிகளாக இருக்கும். நாட்டார்கலைகள் வழியாக ஒருசமூகம் இலக்கியத்த்துக்கும் நுண்கலைகளுக்கும் வந்த பின்னர்தான் மெல்ல மெல்ல செவ்வியல் அங்கெ உருவம் கொள்கிறது. நாட்டார் கலைகளின் வழியாக திரண்டு வரும் சில சாராம்சங்கள் விரிவான விவாதக்களத்தில் செம்மைப்படுத்தப்பட்டு செவ்வியலின் அடிப்படைகளாக ஆகின்றன.

ரிக்வேதத்தை ஒரு நாட்டார் பிரதி என்று சொல்லலாம். வேறு சொற்களில் அதை பண்படாபிரதி என்றும் சொல்வதுண்டு. மிகத்தொன்மையான ஒரு சமூகம் தன் பண்பாட்டுநினைவுகளை மொழிவடிவில் அழியாமல் பாதுகாக்கமுடிந்ததனால் அவை நமக்குக் கிடைக்கின்றன. ரிக்வேதத்தை ஒரு நூல் என்று சொல்வதைவிட ஒரு தொகுப்பு என்றே சொல்லவேண்டும்

ரிக்வேதத்தின் ஆரம்பகாலச் செய்யுட்கள் மிகநேரடியான பிரார்த்தனைகள் மட்டுமே. ஆனால் அதன் பிற்பகுதிகள் மெல்லமெல்ல செவ்வியல்த்தன்மை கொள்கின்றன. அதன் பத்தாவது மண்டலம் ஒரு பெரும் செவ்வியல் படைப்பா¡க உள்ளது. அந்த பரிணாமத்தை நாம் ரிக்வேதம் முழுக்க காண்கிறோம். வேதங்களுக்குப் பின்னர் சம்ஸ்கிருத இலக்கியத்தில் உள்ள எல்லா ஆக்கங்களும் செவ்வியல்தன்மை கொண்டவைதான்.

தமிழ் மரபை எடுத்துப் பார்ப்போம். நமக்கு கிடைக்கும் ஆகப்பழைய இலக்கியப்பிரதி என்றால் அது நற்றிணை,புறநாநூறு, குறுந்தொகை ஆகிய மூன்றும் ஆக இருக்கலாம். [தொல்காப்பியம் காலத்தால் பிற்பட்டது என்பதே இன்றைய ஆய்வாளர் பலரின் கருத்தாகும்] இப்பிரதிகள் மூன்றுமே தூய செவ்வியல் பிரதிகள். செவ்வியலின் எல்லா இலக்கணங்களும் கொண்டவை என்பதுடன் சிறிதளவுகூட நாட்டார் கூறுகள் இல்லாதவை என்பதும் நம் கவனத்தைக் கவர்கிறது. செவ்வியல் இலக்கியம் உருவாகி பல நூற்றாண்டுகள் வழியாக முதிர்ச்சி அடைந்து முழுமை பெற்றபின் உருவான படைப்புகள் இவை.

சமீபத்தில் ஐராவதம் மகாதேவன் போன்றவர்களின் தொல்பொருள் ஆய்வுகளின் முடிவுகள்கூட இந்த எண்ணத்தை உறுதிசெய்வதாகவே உள்லன. சங்க காலத்துக்கும் வெகுவாக முந்தைய தாழிகளில் உள்ள எழுத்துருக்கள் அன்று கல்வி மிகப்பரவலாக இருந்ததை காட்டுகின்றன என்கிறார் ஐராவதம் மகாதேவன். அத்தகைய முழுமையான கல்விகொண்ட சமூகம் இயல்பாகவே செவ்வியலை உருவாக்கும் என்று சொல்லலாம்.

https://www.jeyamohan.in/2134#.XWZdSOMzbIU



__________________


Guru

Status: Online
Posts: 24603
Date:
Permalink  
 

http://www.diamondtamil.com/education/sangam_literature/index.html#.XWZd5OMzbIU

சங்க இலக்கியங்கள்

சங்க இலக்கியம் என்பது கிறிஸ்துக்கு முற்பட்ட காலம் முதல் கி.பி. ஆறாம் நூற்றாண்டு வரையில் தமிழில் எழுதப்பட்ட பத்துப்பாட்டு, எட்டுத்தொகை மற்றும் பதினெண் கீழ்க்கணக்கு ஆகியவை ஆகும். இதன் மூலமாக பண்டைய தமிழ் மக்களின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

பாட்டும் தொகையும் எனச் சங்க இலக்கியத்தினை இருபெரும் பிரிவாகப் பகுப்பர். அவற்றுள் பாட்டு என்பது பத்துப் பாட்டினைக் குறிக்கும். 

பத்துப் பாட்டு நூல்களை கீழ்வரும் பாடல் மூலமாக அறிந்து கொள்ளலாம். 

முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை
பெருகு வளமதுரைக் காஞ்சி - மருவினிய
கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சி பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து.



இந்த பத்துப் பாட்டு நூல்களை மூன்று வகையாகப் பிரித்துக்கொள்ளலாம். 

1.அகப்பொருள் பற்றிய நூல்கள்: 

இப்பிரிவில், 

ஆகிய ஆறு நூல்களும், 

2.புறப்பொருள் பற்றிய நூல்கள்: 

இப்பிரிவில், 

ஆகிய மூன்றும், 

3.அகப்பொருள், புறப்பொருள் பற்றிய நூல்கள்: 

இப்பிரிவில், 

ஆகிய ஒன்றும் அடங்கும். சிலர் இதனை அகப்பாட்டே என்று கூறுவர்.

 

கி.பி. 3 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலத்தினைச் சங்க காலம் என்பர்.இக்காலத்தில் வாழ்ந்த புலவர்களே சங்கப் புலவர்கள். 

இவர்களால் இயற்றப்பெற்றவை சங்கப் பாடல்கள் எனப்படும். இப் பாடல்களை தமிழ் அறிஞர்கள் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என்று இரு பெரும் பிரிவாகப் பிரித்துள்ளனர்.









எட்டுத்தொகை நூல்களை கீழ்வரும் பாடல் மூலமாக அறிந்து கொள்ளலாம். 

நற்றிணை நல்ல குறுந்தொகை ஐந்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்று
இத்திறத்த எட்டுத் தொகை.



இவ்வெட்டுத் தொகை நூல்களை மூன்று வகையாகப் பிரித்துக்கொள்ளலாம். 

1.அகப்பொருள் பற்றிய நூல்கள்: 

இப்பிரிவில், 

ஆகிய ஆறு நூல்களும், 

2.புறப்பொருள் பற்றிய நூல்கள்: 

இப்பிரிவில், 

ஆகிய மூன்றும், 

3.அகப்பொருள், புறப்பொருள் பற்றிய நூல்கள்: 

இப்பிரிவில், 

ஆகிய ஒன்றும் அடங்கும். 

எட்டுத்தொகை நூல்களைப் பாடிய புலவர்கள் ஏறத்தாழ ஐந்நூற்றுவர். இதில் பெண்பாற் புலவர்களும் அடக்கம், இவர்கள் பல ஊர்களில் வாழ்ந்தவர்கள். பல்வேறு காலத்தவர்கள். பல்வேறு பிரிவினர்கள். இவர்களுடைய பாடல்களில் பெருநில வேந்தர்களின் வெற்றிச் சிறப்புகளையும், போர்த்திறமையையும் விவரித்துக் கூறும் பாக்கள் பல; போரைத் தடுத்து அறிவு புகட்டுவன சில; வள்ளல் தன்மையை பாராட்டுவன பல; வருமையின் கொடுமையினை வருணிப்பன சில; மாண்பதை வாழ வழிகாட்டுவன பல; ஆணும் பெண்ணும் மனம் இணைந்து ஒழுகும் அன்பொழுக்கங்களை எடுத்துரைப்பன சில; வரலாற்றுக் குறிப்பினையும் புராண இதிகாச செய்திகளை குறிப்பிடுவன சில, பொதுவாக பழந்தமிழ் நாட்டின் வரலாற்றினை இதன் மூலமாக அறிகின்றோம். 

 



__________________


Guru

Status: Online
Posts: 24603
Date:
Permalink  
 

யவனச் சேரியும் மதுரைக் காஞ்சியும் – அமெரிக்காவில் சங்கத் தமிழ் பயிலரங்கம் நடத்தும் வைதேகி By Shankar | Updated: Monday, November 24, 2014, 13:50 [IST] டல்லாஸ்(யு.எஸ்): அறிஞர்கள் மட்டுமே படித்து வந்த சங்க இலங்கியங்களை சாமானியத் தமிழர்களும் படிக்க வழி செய்யும் வகையில், இரண்டு நாள் பயிலரங்கம், டல்லாஸ் நகரில் நடைபெற்றது. புரவலர் பால் பாண்டியன் ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சியில் வைதேகி ஹெர்பர்ட், சங்க இலக்கியங்களை எளிதாக எப்படி கற்று தெரிந்து கொள்வது என்று பயிற்சி அளித்தார். மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கம், சாஸ்தா தமிழ் அறக்கட்டளை மற்றும் அவ்வை தமிழ் மையம் ஆகிய மூன்று தமிழ் அமைப்புகள் இணைந்து நடத்தினார்கள்.. கடுங்குளிர், மழை என்பதையும் பொருட்படுத்தாமல் வார இறுதி நாட்களிலும் சுமார் 70 பேர் வரை இதில் பங்கேற்றனர். 18 நூல்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு பதினெண்மேல் கணக்கு என்றழைக்கப்படும் பதினெட்டு சங்க இலக்கிய நூல்களையும் வைதேகி ஹெர்பர்ட் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். அனைத்து சங்க இலக்கிய நூலகளையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த முதல் நபர் இவர் ஒருவர்தான். தமிழிலோ, ஆங்கிலத்திலோ ஆராய்ச்சி பட்டம் ஏதும் பெறாத இவர், தமிழர்களின் வரலாற்றின் மீது கொண்ட ஆர்வத்தினாலேயே, அதைப் படித்து பின் மொழி பெயர்த்துள்ளதாக கூறினார். இத்தனைக்கும் இவர் பள்ளியிலும், கல்லூரியிலும் ஆங்கில மொழியில் பயின்றவர். யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் தமிழை இரண்டாம் பாடமாக படித்தவர் என்பதால், மிகவும் சிரமபபட்டுத்தான் தமிழைப் படிக்க முடிந்தது என்றும், சங்க நூல்கள் இன்னும் கடினமாக இருந்தது என்றும் தெரிவித்தார். ஆனாலும் தமிழராக பிறந்து தமிழர் வரலாற்றை முழுமையாக படிக்காமல் விடப்போவதில்லை என்ற வைராக்கியத்துடன் படித்ததாகவும், அதை தமிழர் அல்லாதவர்களுக்குடனும் பகிர்ந்து கொள்ளும் நோக்கத்துடன் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததாகவும் தெரிவித்தார். மேலும் தன்னைப்போல் சாமானியத் தமிழர்களுக்கு, சங்க இலக்கியங்களை எப்படி கற்றுக்கொள்வது என்பதற்காக இந்த பயிலரங்கங்கள் நடத்துவதாகவும் குறிப்பிட்டார். சாதிகள் இல்லாமல் வாழ்ந்த முன்னோடித் தமிழர்கள் முப்பதுக்கும் மேற்பட்ட சங்க இலக்கியப் பாடல்களை எளிய தமிழ் - ஆங்கில விளக்கத்துடன் படித்து விவரித்தார். முல்லைப் பாட்டு முழுவதையும் பங்கேற்பாளர்கள் அவருடன் இணைந்து படித்து அறிந்தனர். இடையிடையே பல்வேறு கேள்விகளையும் எழுப்பினர். அவற்றுள் முக்கியமானது ‘ சங்க காலத்தில் சாதிகள் இருந்ததா?' என்பதாகும். நம் முன்னோடித் தமிழர்கள் காலத்தில் சாதிகள் என்ற ஒன்றே கிடையாது. வெவேறு தொழில்கள் செய்து வந்த அனைவரும் சமமாகவே வாழ்ந்தனர் என்பது பாடல்கள் மூலம் தெளிவாகிறது என்று வைதேகி எடுத்துரைத்தார். சாதிகளே இல்லையென்றால் தீண்டாமை என்ற கேள்விக்கே இடமில்லை தானே! யவனச்சேரியும் மதுரைக் காஞ்சியும் கிரேக்க நாட்டவர்கள் 'பொன்' (தங்கம் என்ற சொல் சங்க இலக்கியத்தில் இல்லை என்பதை நினைவு கொள்ள வேண்டும்) கொண்டு வந்து, 'மிளகு' வாங்கிச் சென்ற வரலாறு விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது. தொடர் வணிகங்களுக்காக தமிழ் நாட்டிலேயே தங்கியிருந்த யவனர்கள், கூட்டமாக வசித்த பகுதி 'யவனச்சேரி' என்று அழைக்கப்பட்டுள்ளது. சேரி என்பது மக்கள் சேர்ந்து வாழும் குடியிருப்பு என்றே அர்த்தம் கொள்ளப்பட்டுள்ளது. மதுரைக் காஞ்சி முழுவதும் மதுரை நகரை சித்தரித்துள்ளது, சங்க காலத்திலேயே மதுரை தூங்கா நகரமாக விளங்கியதும் தெரிய வருகிறது. அதைப் போல் காவிரிப்பூம்பட்டினம் நகரம், துறைமுகம் என அனைத்தும் பட்டினப்பாலை நூலில் சிறப்பாக இடம்பெற்றுள்ளது. நம் முன்னோர்கள் ஏற்றுமதிப் பொருட்களுக்கு சாவடி அமைத்து சுங்கம் வசூலித்திருக்கிறார்கள். இது போன்ற தகவல்களை அந்தந்த பாடல்களை படித்து விவரித்தபோது அனைவருக்கும் சங்க காலத்திற்கே சென்ற வந்த உணர்வும், முன்னோர்கள் பற்றி பெருமிதமும் ஏற்பட்டது சங்கத் தமிழர்கள் சைவமா? அசைவமா? ஆர்வத்துடன் பங்கேற்ற டல்லாஸ் தமிழர்கள் எழுப்பிய கேள்விகளில் ஒன்று ‘சங்கத் தமிழர்கள் சைவமா அசைவமா? என்பதாகும். இதற்கு பதிலளித்த வைதேகி,, பாடலகளில் மீன், கோழி உள்ளிட்ட மாமிச உணவுகள் குறிப்பிடப்பட்டிருப்பதாக தெரிவித்தார். மேலும் அவரைக்காய், சுரைக்காய், கத்திரிக்காய், பீர்க்கங்காய், முருங்கைக்காய் உள்ளிட்ட நாம் இன்றும் உண்ணும் காய்கறிகளையும் நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். கெண்டைமீன், அயிரைமீன், வாளைமீன், சுறாமீன் போன்ற பலவகை மீன்களையும் அவர்கள் உணவில் இடம்பெற்றுள்ளன.. முக்கனிகளும் அப்போதே உண்டு என சங்கத் தமிழர்களின் உணவு முறையை பாடல்கள் மேற்கோளுடன் குறிப்பிட்டார். தமிழகத்தில் ஒரு சங்க காலத் தோட்டம் அப்போது உள்ள மரங்கள், பூக்கள் பற்றிய விவரங்களை புத்தகத்தில் தனியாக பட்டியலிட்டுள்ளார். குறிஞ்சிப் பாட்டில் மட்டுமே 99 வகையான பூக்கள் இடம்பெற்றுள்ளன. சந்தனம், ஆலமரம், ஆத்தி, இலஞ்சி, இலவம் மரங்கள் உட்பட பல்வேறு வகையான மரங்களும் உண்டு. அங்கே வசித்து வந்த பறவைகளையும் பட்டியலிட்டுள்ளார். வைதேகியை தொடர்பு கொண்ட தமிழகத்தின் ஒரு கட்டிட நிறுவனம், அவரது வழிகாட்டுதலுடன், சங்க கால மரங்கள், செடிகளைக் கொண்ட ஒரு குடியிருப்பு பகுதியை, உருவாக்கி வருவதாகவும் குறிப்பிட்டார். மலிவு விலை - இலவச புத்தகங்கள். பதினெட்டு நூல்களையும் உள்ளடக்கிய வைதேகியின் ஆங்கில மொழிபெயர்ப்பை பத்து புத்தகங்களாக, அமெரிக்காவில் உள்ள digitalmaxim என்ற புத்தக பதிப்பகத்தார் வெளியிட்டுள்ளனர். தமிழ் ஆர்வலருமான பதிப்பாளர் திருமூர்த்தி இந்த புத்தகங்களை அடக்க விலைக்கே வழங்கி வருகிறார். டல்லாஸ் பயிலரங்கத்தில் புத்தகங்கள் அடக்க விலையை விட குறைவான விலையில் கிடைக்க புரவலர் பால்பாண்டியன் ஏற்பாடுகள் செய்து இருந்தார். திருமூர்த்தியும், வைதேகியும் தமிழகத்தின் கல்லூரிகள், நூலகங்கள் போன்றவைகளுக்கு இதுவரையிலும் இருநூறு பிரதிகள் வரை சுமார் இரண்டாயிரம் புத்தகங்களை இலவசமாக வழங்கியுள்ளனர், நவீன டிஜிட்டல் வடிவத்தில் வெளியிடுவதற்கும் பதிப்பாளர் திருமூர்த்தி முயற்சி எடுத்துவருகிறார். தமிழ் நாட்டுக்கு வெளியே சங்க இலக்கியம் நிகழ்ச்சியை வழங்கிய புரவலர் பால்பாண்டியனுக்கு சங்க இலக்கியத்தின் மீது தணியாத காதல் உண்டு. வைதேகியின் மொழிபெயர்ப்பு மூலம் அனைத்து சங்க நூல்களும் ஆங்கிலத்தில் தற்போது கிடைக்கப் பெற்றுள்ளோம். இது அரும்பெரும் பொக்கிஷமாகும். இதை தமிழர் அல்லாத தென்னிந்திய வட இந்திய மக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். இதைப் படிப்பதன் மூலம் மற்ற இனத்தவர்களுக்கு தமிழர்களின் தொன்மையான நாகரீக வாழ்க்கை நெறிகள் தெரியவரும், ஒவ்வொரு தமிழரும் ஒரு வேற்று மொழியினருக்காவது இந்த சங்க இலக்கிய ஆங்கில மொழியாக்க நூல்களை வழங்க வேண்டும் என்று பால்பாண்டியன் விருப்பம் தெரிவித்தார். தமிழகத்தில் இந்த புத்தகங்கள் பரவலாக கிடைக்கச் செய்வதற்கு தேவையான உதவிகளை செய்வதாகவும் கூறினார். உலகெங்கும் பயிலரங்கங்கள் டல்லாஸில் நடைபெற்ற பயிலரங்கள் போல் உலகம் முழுவதும் நடத்துவதற்கு தயாராக இருப்பதாக வைதேகி தெரிவித்தார். இதுவரையிலும் அறிஞர்களின் ஆராய்ச்சிக்கூடத்தில் மட்டுமே முடங்கிகிடந்த சங்க இலக்கிய நூல்களை அனைத்து தமிழர்களும் படித்து, நம் முன்னோர்கள் வாழ்ந்த இன்றளவும் சிறந்த வாழ்க்கையை அறிந்து கொள்ளவேண்டும். தன்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாக குறிப்பிட்டார்.www.learnsangamtamil.com என்ற இணையத் தளத்தில் அவருடைய அனைத்து புத்தகங்களும் இலவசமாக கிடைக்கின்றன. தூத்துக்குடியிலிருந்து தன்னார்வத்துடன் தமிழ்ப்பணி ஆற்றிவரும் வைதேகி ஹெர்பர்ட் தூத்துக்குடி நகரின் பாரம்பரியமிக்க 'ஸ்பின்னிங் மில்' குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். அவரது தந்தை தூத்துக்குடியில் பிரபல கல்வி நிறுவனங்களை நிறுவியவர் ஆவார். அமெரிக்காவில் குடியேறினாலும், தந்தை வழியில் வைதேகியும், தூத்துக்குடி அருகே ஒரு கிராமத்தில் உலகத்தரம் வாய்ந்த ஒரு பள்ளியை நிறுவியுள்ளார்.

Read more at: https://tamil.oneindia.com/art-culture/essays/sangam-tamil-work-shop-at-dallas-215541.html



__________________


Guru

Status: Online
Posts: 24603
Date:
Permalink  
 

தமிழகத்தின் எல்லை இவ்வளவு பெரியதா? சங்க இலக்கியம் தரும் தகவல்கள்

0
181
 
Facebook
 
Twitter
 
Linkedin
 
Print

தொன்று நிகழ்ந்த  தனைத்தும் அறிந்த

                                             சூழ்கலை வானர்களும் இவள் என்று பிறந்தவள்

என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய் 

என்று புகழப்படும் தமிழன்னையின் தோற்றம் குறித்து இதுவரை தெளிவான தகவல்கள் கிடைக்கவில்லை. தற்போதைய தரவுகளிலும் பல முரண்பாடுகள் இருப்பதாக மொழியறிஞர்கள் தெரிவிக்கின்றனர். முதற்சங்கம் அமைத்ததாகச் சொல்லப்படும் காய்சினவழுதி என்னும் பாண்டிய மன்னரின் காலத்திற்கு முன்பே தமிழ் இருந்திருக்க வேண்டும்.

தேவநேயப் பாவாணர் போன்ற அறிஞர்கள் தமிழ் மொழி 10,000 வருடங்களுக்குப் பழமையானது என்ற கருத்தை முன்வைக்கின்றனர். ஒரு மொழியின் காலத்தினை அறிந்து கொள்ள அம்மொழியின் பயன்பாட்டுக் களத்தினைத் தெரிந்து கொள்தல் அவசியம். அதனாலேயே தமிழகத்தின் அழியாச் சொத்துக்களான சங்க இலக்கியத்தில் தமிழகத்தினைப் பற்றிய குறிப்புகள் மிக முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன.

ancient tamilCredit: Ancient Origins

சங்க இலக்கியம்

தமிழ் இலக்கியத்தில் பதினெண்மேற்கணக்கு நூல்கள் அனைத்தும் சங்க இலக்கிய வகையினைச் சார்ந்தவை. அவற்றில் பல மன்னர்களைப் பற்றிய குறிப்புகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் தமிழகத்தின் எல்லைகளைக் குறிக்கும் ஏராளமான பாடல்களும் உள்ளன. பெரும்பாலும் எல்லா பாடல்களும் வடக்கே வேங்கட மலையையும், தெற்கில் இந்தியப் பெருங்கடலையும் தமிழகம் எல்லையாகக் கொண்டிருந்ததை உறுதி செய்கின்றன. மேலும், கிழக்கில் வங்கக்கடல் துவங்கி மேற்கே அரபிக்கடல் வரையிலும் தமிழ் பேசும் மக்கள் பரவியிருந்திருக்கின்றனர்.

எழில் குன்றம் எனப்பட்ட ஏழுமலை அல்லது திருப்பதி வரையிலும் தமிழ் பேசப்பட்டிருக்கிறது.

பனிபடு வேங்கடத்தும்பர் 

                    மொழி பெயர் தேஎத்தராயினும்   (அகநானூறு 211)

இராயல சீமாவிற்கு வடக்கே தெலுங்கு பேசும் மக்கள் இருந்ததாக, வேங்கடத்தும்பர் வடுகர் தேஎத்து  (அகம் 213) என்னும் பாடல் மூலம் அறிந்துகொள்ளலாம். மேலும் இக்கருத்துக்கு வலுச்சேர்க்கும் விதத்தில் வேங்கட மலையைச் சுற்றிய ஆறு மலைகளையும் புல்லி, திரையன்போன்ற தமிழ் மன்னர்கள் ஆண்டுவந்தனர் என்கிறது அகநானூறு. (83 மற்றும் 85 வது பாடல்கள்).

தமிழ்நாடு

தொல்காப்பியர் தமிழகத்தினைப் பற்றியும் தமிழ் மக்களையும் குறிப்பிடும் போது,

வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின் 

                         நாற்பெயர் எல்லை அகத்தவர் (தொல் 1336) 

 என்கிறார். இந்திய நாட்டைத் தமிழ் இலக்கியம் நாவலந் தண்பொழில்  என்று அழைக்கும் வழக்காறு இருந்தது. ( பெரும்பாணாற்றுப்படை 465, சிலம்பு 25 – 173) அதனாலேயே வண்புகழ் மூவர் தண்பொழில் எனக் குறிப்பிட்டார் தொல்காப்பியர்.

ancient tamil borderCredit: Wikipedia

தென்கடல்

கனக விசயரை அடக்கி கல் சுமக்க வைத்த சேரன் செங்குட்டுவனைப் பாடும் போது பின்வருமாறு குறிப்பிடப்படுகிறது.

         குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள 

வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு 

               தென்திசை ஆண்ட தென்னவன் (சிலம்பு 11)

மேலும், யானைக்கட்செய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையைக் குறுகோழியூர் கிழார் பாடும்போது,

தென்குமரி வடபெருங்கல் 

குண குட கடலா எல்லை 

குன்று மலை காடு நாடு 

                       ஒன்றுபட்டு வழிமொழிய   ( புறம் 17)

எனப் புகழ்கிறார். இதன்மூலம் தமிழகத்தின் தெற்கு எல்லையாக இந்து மாக்கடல் இருந்தது தெளிவாகிறது. (சங்க காலத்தில் குமரிக்கண்டத்திற்கும் தெற்கே கடல் இருந்தது. கடற்கோளுக்குப் பின்னர் தெற்கு எல்லை சுருங்கியது)

இப்படி ஏராளமான பாடல்களின் மூலம் தமிழ்நாட்டின் அளவு இப்போதைய அளவை விட மிகப் பெரியதாக இருந்திருக்கிறது என்பது தெளிவாகிறது. பழந்தமிழகம் தென்னிந்தியா முழுவதும் பரவி விரிந்திருக்கிறது. பிற்பாடு பிறமொழிக் கலப்பினாலும், தமிழ் அரசர்கள் தமக்குள் போர்தொடுத்ததினாலும் தமிழ் மொழியின் பரப்பு விரிவடைய முடியாமல் போனது துரதிர்ஷ்டம் தான்.



__________________


Guru

Status: Online
Posts: 24603
Date:
Permalink  
 

 

ங்க இலக்கியத்தில் பழங்கால இந்தியா!

TM-7.jpg
 
நாட்டுப் பெயர்
சங்கப் புலவர்கள் பழங்கால இந்தியாவை "நாவலந் தண்பொழில்' என்றே குறிப்பிட்டுள்ளனர்.
""மாய அவுணர் மருங்கறத் தபுத்த வேல் /
நாவலம் தண்பொழில் வடபொழில் ஆயிடை'' (பரிபாடல்- 5: 7-8), (அவுணர்களைச் சுற்றத்தோடு தன் வேலால் அழித்த நாவலந் தீவு வட பகுதியில்), ""நாவலந் தண் பொழில் வீவின்றி விளங்க'' (பெரும்பாண்-465). (நாவல் மரத்தால் பெயர் பெற்ற குளிர்ந்த நாடு).
நாவலந் தீவு என்ற தொடர் ஏலாதியில் (56) வந்துள்ளது. அதற்குச் சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதி "ஏழ் கடலுள் உப்புக்கடல் சூழ்ந்த தீவு'' என்று பொருள் கூறியுள்ளது.
நாட்டு எல்லை
காரிகிழார் என்ற புலவர் பாண்டிய அரசனைப் புகழும்போது,
வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்
தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்
குணாஅது கரைபொரு தொடுகடற் குணக்கும்
குடாஅது தொன்றுமுதிர் பெளவத்தின் குடக்கு
என்று கூறுகையில் (புறம்.6.1-4) இந்திய நாட்டின் அன்றைய நாவலந் தீவின் எல்லைகளையே குறிப்பிடுகிறார்.
மாங்குடி மருதனார் இன்னொரு பாண்டிய மன்னனைப் புகழும்போது அந்த எல்லைகளைத் ""தென்குமரி வடபெருங்கல் / குணகுட கடலா எல்லை'' (மதுரைக் காஞ்சி. 71-72) என்று கூறுவதும், குறுங்கோழியூர் கிழார் என்ற புலவர் சேரனைப் புகழும்போது, ""தென்குமரி வடபெருங்கல் குணகுட கடலா எல்லை'' (புறம்-17.1-2) என்று கூறுவதும் அறியத்தக்கது.
"வட பெருங்கல்' என்பது இமய மலையே.
பதிற்றுப்பத்தில் குமட்டூர் கண்ணனார் வட எல்லையை இமயம் என்றும், தென் எல்லையைக் குமரி என்றும் குறிப்பிட்டுள்ளார். ""ஆரியர் துவன்றிய பேரிசை இமயம்/ தென் குமரியொடு ஆயிடை''(11. 23-24). பரணர் தொன்மத்தைப் பற்றிப் பேசும்போது இமயம் என்ற சொல்லையும், ""அன்னம்.... இமயத்து உச்சி வானர மகளிர்க்கு மேவல் ஆகும்'' (நற்றி.386.3). தமிழ் அரசரின் வீரத்தைப் பேசும்போது இன உணர்ச்சியை வலியுறுத்தி உள்நிலை ஆக்கமாகத் "தொன்முதிர் வடவரை' (ஆரிய அலறத் தாக்கிப் பேரிசை / தொன்முதிர் வடவரை வணங்கு விற் பொறித்து / வெஞ்சின வேந்தனை பிணித்தோன்'' (அகம்.396. 16-19) என்ற தொடரையும் பயன்படுத்தியுள்ளது மொழிப் பயன்பாடு, சூழலை (இங்கு கருத்துச் சூழலை) ஒட்டியது என்பது சமூக மொழியியல் நோக்கு ஆகும். காரிக் கிழார் பயன்படுத்திய "பனி படு நெடு வரை' என்பது கடன் மொழிபெயர்ப்பு (கர்ஹய் ற்ழ்ஹய்ள்ப்ஹற்ண்ர்ய்) என்று கருதத் தகுந்தது. அதையே (வட) பெருங்கல் (புறம்17.1, ம. கா.71) என்று குறுங்கோழியூர் கிழாரும், மாங்குடி மருதனாரும் குறிப்பிட்டுள்ளது உள்நிலை ஆக்கம் (கர்ஹய் ஸ்ரீழ்ங்ஹற்ண்ர்ய்) என்றாகும்.
மக்கள்
வட இந்திய மக்கள் "ஆரியர்' என்று சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டாலும் அவர்களில் பல வகையினர் இருப்பதும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
1. பொது - (மாரி புரந்தர நந்தி) ஆரியர் / பொன்படு நெடுவரை (அகம்.398,18-19).
2. யானைப் பாகர் - ஆரியர் / பிடிபயின்று தரூஉம் பெருங்களிறு (அகம் 276, 9-10).
3. கழைக் கூத்தாடிகள் - ஆரியர் / கயிறாடு பறை (குறுந்.7.3.)
4. பொருநன் - ஆரியப் பொருநன் (அகம். 386.10)
5. போர் வீரர் - ஆரியப்படை (அகம். 336.22),
6. அரசர் - ஆரியர் அலறத் தாக்கி (அகம். 396,16).
"வடவர்' என்ற பொதுச் சொல்லும் சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது. அது வட இந்தியரையும் தமிழகத்தில் வட பகுதியில் உள்ள (அருவா வட தலை) மக்களையும் குறிக்கக் கையாளப்பட்டுள்ளது.
""வடவர் தந்த வான் கேழ் வட்டம் / குட புல உறுப்பின் (அகம். 340.16-17-வடநாட்டில் உள்ளவர் கொண்டு வந்த வெண்ணிற வட்டக் கல்லில் மேற்கே உள்ள பொதிகை மலை)
""வடவர் தந்த வான் கேழ் வட்டம் / தென்புல மருங்கில் சாந்தொடு பெயர'' (நெடுநல்வாடை, 51 வடவர் -52 - வடநாட்டில் உள்ளவர் கொண்டு வந்த வெண்ணிற வட்டக் கல்லும் தென்னாட்டில் விளையும் சந்தனக்கட்டைகளும் பயனற்றுக் கிடக்க)
""வடவர் வாட குடவர் கூம்ப தென்னவன் திறல் கெட'' (பட்டினப்பாலை 276-277 - வடவர் (தமிழ்நாட்டு வடவர் அருவா வடதலை) துன்பப்பட, குடவர் (தமிழகத்தின் மேற்குப் பகுதியில் உள்ளவர்) எழுச்சிக் குன்ற, தென் பகுதியில் உள்ளவர்கள் சுற்றம் கெட) என்பவை சான்றாகத் திகழ்கின்றன.
செ.வை.ண்முகம்,தமிழ்மணி, தினமணி,


__________________


Guru

Status: Online
Posts: 24603
Date:
Permalink  
 

நகரக் கோட்டங்கள்

அர்த்த சாஸ்த்ரத்தில் நகரில் வைக்க வேண்டிய கோயில்களைப் பற்றிக் குறிப்பிடும் போது

अपराजिताप्रतिहतजयन्तवैजयन्तकोष्ठान् शिववैश्रवणअश्विश्रीमदिरागृहाणि च पुरमध्ये कारयेत् ॥
அபராஜிதாப்ரதிஹதஜயந்தவைஜயந்தகோஷ்டா²ன் ஶிவவைஶ்ரவணஅஶ்விஶ்ரீமதி³ராக்³ருஹாணி ச புரமத்⁴யே காரயேத் ॥

கொற்றவை, முருகன், திருமால், இந்திரன் ஆகியோரின் கோஷ்டங்களும் சிவன், குபேரன், அச்வினி, திருமகள் ஆகியோருக்கான க்ருஹங்களும் எடுப்பிக்க வேண்டும் எனக் கூறுகிறது.

மதுரைக்காஞ்சி சிலம்பு முதலிய பண்டைத் தமிழ் இலக்கியங்களில் கொற்றவை சிவன் திருமால் முருகன் இந்திரன் ஆகியோருக்கான கோட்டங்கள் மதுரை புகார் முதலிய நகரங்களில் இருந்தது தெரியவருகிறது. இரண்டுக்கும் இடையில் உள்ள தொடர்பு பற்றி மேற்கொண்டு ஆய்வுகள் செய்யவேண்டும். கோஷ்டம் என்று அர்த்தசாஸ்த்ரம் குறிப்பிடுவதையே கோட்டம் என்று தமிழிலும் குறிப்பிட்டிருப்பது நோக்கற்பாலது.



__________________


Guru

Status: Online
Posts: 24603
Date:
Permalink  
 

 358 Puram

: வான்மீகியார்
திணை: காஞ்சி 
துறை: மனையறம், துறவறம் 

பருதி சூழ்ந்தஇப் பயங்கெழு மாநிலம்
ஒருபகல் எழுவர் எய்தி யற்றே;
வையமும் தவமும் தூக்கின், தவத்துக்கு
ஐயவி யனைத்தும் ஆற்றாது ஆகலின்,
கைவிட் டனரே காதலர்; அதனால்

5

விட்டோரை விடாஅள், திருவே;
விடாஅ தோர்இவள் விடப்பட் டோரே.

 



உலகை ஆளும் பேற்றினையும், தவத்தினையும் சீர்தூக்கி நிறுத்துப் பார்த்தால் தவத்திற்கு ஆட்சிப் பேறானது கடுகளவு கூட ஈடாகாது. (ஐயவி = வெண்சிறு கடுகு) காரணம், இந்தப் பெருநிலம் ஒரு பகல்-பொழுதில் எழுவர் ஆளுகைக்கு மாறக்கூடியது. அதனால், உலகப் பற்றை விட்டவரைத் திருமகள் கைவிடமாட்டாள். உலகின்மீது பற்றுடையவர்களைத் திருமகள் கைவிட்டுவிடுவாள்
 

சிறுவெண்தேரையர்.song 363 of Purananuru

இருங்கடல் உடுத்தஇப் பெருங்கண் மாநிலம்
உடைஇலை நடுவணது இடைபிறர்க்கு இன்றித்,
தாமே ஆண்ட ஏமம் காவலர்
இடுதிரை மணலினும் பலரே; சுடுபிணக்
காடுபதி யாகப் போகித், தத்தம்

5

நாடு பிறர்கொளச் சென்றுமாய்ந் தனரே;
அதனால் நீயும் கேண்மதி அத்தை ! வீயாது
உடம்பொடு நின்ற உயிரும் இல்லை;
மடங்கல் உண்மை மாயமோ அன்றே;
கள்ளி ஏய்ந்த முள்ளியம் புறங்காட்டு.

10

வெள்ளில் போகிய வியலுள் ஆங்கண்,
உப்பிலாஅ அவிப் புழுக்கல்
கைக் கொண்டு, பிறக்கு நோக்காது,
இழி பிறப்பினோன் ஈயப் பெற்று,
நிலங்கல னாக, இலங்குபலி மிசையும்

15

இன்னா வைகல் வாரா முன்னே,
செய்ந்நீ முன்னிய வினையே,
முந்நீர் வரைப்பகம் முழுதுடன் துறந்தே.

 



இறப்பதற்கு முன் எண்ணிய செயலை நிறைவேற்றிவிடு என்று இந்தப் பாடல் அறிவுறுத்துகின்றது. எண்ணும் செயல் எதுவாக இருக்கவேண்டும் என்று இது சுட்டவில்லை. என்றாலும் உலகையெல்லாம் கட்டி ஆள்வது அன்று என்று தெளிவுபடுத்துகிறது. பிறருக்குத் தராமல் உலகம் முழுவதையும் தாமே பாதுகாத்து ஆண்ட காவலர் கடல் திரை இட்ட மணலின் எண்ணிக்கையைக் காட்டிலும் பலர். அவர்கள் எல்லாம் சுட்டெரித்த பிணமாயினர். அவர்களின் நாட்டைப் பிறர் கைக்கொண்டனர். அதனால் நான் சொல்வதைக் கேள். உயிரானது உடம்பில் இருந்துகொண்டே இருப்பதிலை. கணந்தோறும் உயிர்க் காற்றானது சென்று மடங்கிக்கொண்டிருக்கிறது. இது மாயம் இல்லை. உண்மை. பாடையில் சென்று இழிபிறப்பாளன் மண்ணில் இட்டுத் தரும் உப்பில்லாப் பொங்கலைச் சுடுகாட்டில் உண்ணுவதற்கு முன்னர் ஆளும் உலகினைத் துறந்து நீ எண்ணியதை நிறைவேற்றிக்கொள்
 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard