"'உலகப் பொதுமறை' என்று நாம் பீற்றிக் கொள்ளும் திருக்குறளும் பெண்களுக்கு என்று வரும்போது 'கற்பு' என்ற பெயரால் ஆணுக்குப் பெண்ணை அடிமையாக வைக்கும் ஆணாதிக்கச் சமுதாயத்தின் குரலாகவே வெளிப்படுகிறது! திருக்குறளை 'உலக ஆண்களுக்கான பொதுமறை' என்பதே சரி!" என்று படபடத்தார் நண்பர்.
"இப்ப என்ன சொல்லிட்டேன்னு கோவிச்சுட்டுப் போற? குறள் சொன்னியே தவிர பொருள் சொல்லலியே! பொருள் சொன்னாத்தான எனக்குப் புரியும்!" என்றேன் நான்.
கணவனை மட்டுமே தொழும் பெண் 'பெய்' என்றால் மழை பெய்யுமா?
"பரிமேழகர் தொடங்கி பேராசிரியர் சாலமன் பாப்பையா வர எல்லோரும் சொன்ன பொருளை மறுபடியும் இப்பச் சொல்றேன்! கேளு!" என்ற நண்பர் மொபைல்ல கூகுளத் தட்டிக் காட்டினார்: " மணக்குடவர்(சமணர்) உரை: தெய்வத்தைத் தெய்வமென்று தொழாளாய், எல்லாத் தெய்வமுந் தன்கணவனென்றே கருதி, அவனை நாடோறுந் தொழுதெழுமவள் பெய்யென்று சொல்ல மழை பெய்யும்.
பரிமேலழகர்(வைணவர்) உரை: தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள் பெய்என - பிற தெய்வம் தொழாது தன் தெய்வம் ஆகிய கொழுநனைத் தொழாநின்று துயிலெழுவாள் 'பெய்' என்று சொல்ல; மழை பெய்யும்-மழை பெய்யும். (தெய்வம் தொழுதற்கு மனம் தெளிவது துயிலெழும் காலத்தாகலின், 'தொழுது எழுவாள்' என்றார். 'தொழாநின்று' என்பது, 'தொழுது' எனத் திரிந்து நின்றது. தெய்வம்ந்தான் ஏவல் செய்யும் என்பதாகும். இதனால் கற்புடையவளது ஆற்றல் கூறப்பட்டது.).
கலைஞர் மு.கருணாநிதி(கடவுள் மறுப்பாளர்) உரை: கணவன் வாக்கினைக் கடவுள் வாக்கினை விட மேலானதாகக் கருதி அவனையே தொழுதிடும் மனைவி பெய் என ஆணையிட்டவுடன் அஞ்சி நடுங்கிப் பெய்கின்ற மழையைப் போலத் தன்னை அடிமையாக எண்ணிக் கொள்பவளாவாள்.
மு.வரதராசனார்(தமிழறிஞர்) உரை: வேறு தெய்வம் தொழாதவளாய்த் தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு தொழுது துயிலெழுகின்றவள் பெய் என்றால் மழை பெய்யும்!.
சாலமன் பாப்பையா(தமிழறிஞர்) உரை: பிற தெய்வங்களைத் தொழாமல் கணவனையே தெய்வமாகத் தொழுது வாழும் மனைவி, பெய் என்று சொன்னால் மழை பெய்யும்.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை: தெய்வத்தினைத் தொழுதாதவளாகிக் கணவனைத் தொழுது துயில்விட்டு எழுபவள் 'பெய்' என்று சொல்ல மழை பெய்யும்."
"இப்ப என்ன சொல்ல வர்ற?" என்றேன் நான்.
பெண்ணடிமைத்தனமான உரை எழுதிய உரையாசிரியர்கள்!
"இக்குறளுக்கு, சமணரான மணக்குடவர், வைணவரான பரிமேலழகர், கடவுள் மறுப்புக் கொள்கையாளரான கலைஞர், தமிழறிஞர்கள் மு.வ., சாலமன் பாப்பையா உள்ளிட்ட பல அறிவாளிகளும் சொல்லும் பொருள் பெண்ணடிமைத்தனமான கருத்தில்லாமல் வேறென்ன?", என்று கொதித்தார் நண்பர்.
"திருவள்ளுவர் அப்படிச் சொல்றாரா என்பதுதான் என்னோட கேள்வி" என்றேன் நான் சலனமில்லாமல்.
"விதண்டாவாதம் பண்ணனும்னா எப்பிடி வேணா பேசலாம். திருவள்ளுவர் திருக்குறள் எழுதுனாரே தவிர திருக்குறளுக்கு உரை எழுதலன்னு உனக்குத் தெரியாதா? உரையாசிரியர்கள் எழுதுனத வைச்சித்தான் நாம பொருள் சொல்ல முடியுமே தவிர நாமளா எத வேணாச் சொல்றதுன்னு ஆரம்பிச்சா அதுக்கு முடிவே இல்ல!" என்றார் நண்பர் கோபமாக.
மெய்ப்பொருள் காண்பது அறிவு!
"இந்த மாதிரி சூழ்நிலைகள் வரும்னு வள்ளுவருக்கே தெரியும்பா! அதான் உரையாசிரியர்கள் உதவி தேவைப்படாத இரண்டு குறட்பாக்களை நமக்காக எழுதிவைச்சிட்டுப் போயிருக்காரு வள்ளுவர்.
இந்த இரண்டு குறட்பாக்களும் நேரடியா சொல்ற பொருள் ஒண்ணுதான். ஒன்றைக் குறித்து அறிவுக்குச் சரி என்று படவில்லை என்று தோன்றினால், சொல்பவர் மிகப்பெரிய ஆளாச்சே என்றோ, சொல்லப்படும் பொருளின் தன்மை எப்படியிருக்கின்றது என்றோ மயங்க வேண்டாம்! உன் அறிவைச் செலுத்தி, அதன் மெய்ப்பொருளைக் கண்டுகொள்! அப்படிக் காண்பதுதான் அறிவு என்று வள்ளுவர் வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார் அல்லவா? அதன்படி சிந்திப்போமே!" என்றேன் நான்.
வேர்களைத் தேடி...
"என்னமோ நாம பெரிய தமிழறிஞர்கள்-னு நெனப்பா? நடக்குறதப் பேசப்பா" என்றார் நண்பர் வெறுப்புடன்.
"நாம தமிழறிஞர்கள் இல்லதான்! அதுக்காக ஏற்கனவே மழையைப் பற்றி உவமை சொன்ன சங்கப்பாடல்கள் ஏதாச்சும் இருக்கான்னு தேடிப் பாக்கலாம்ல", என்றேன் நாம் நம்பிக்கையுடன்.
"ஆயிரம் ஆண்டுகளா அறிஞர்கள் தேடாததா!. இதெல்லாம் சரிப்பட்டு வராது!" என்றார் நண்பர்.
"சரிப்பா! பத்தாங்கிளாஸ்-ல எங்க தமிழ் சார் சொன்ன பாரி பாரி என்று-ன்னு ஒரு கபிலர் பாட்டு நெனவுல இருக்கு! அதுல பாரிய மழைக்கு உவமிச்சு சொல்லியிருக்குன்னு நினைக்கிறேன்! அதச் சொல்றேன் கேளு!" என்ற நண்பர்,
இதன் பொருள், “பாரி பாரி என்று கூறி அவனுடைய பலவகைப்பட்ட புகழையும் வாழ்த்திச் சிறந்த புலமை மிக்க புலவர் அவன் ஒருவனையே போற்றுவர். பாரி ஒருவனே பெரிய வள்ளல் தன்மை உடையவன் அல்லன்; இவ்வுலகைப் பாதுகாப்பதற்கு மாரியும்(மழையும்) இருக்கின்றது.”
பாரியின் கொடைமடம்!
மேகத்தைப் போன்றவன் பாரின்னுட்டு நேராகக் கூறாமல், மறைமுகமாகக் கூறிய சங்கப்புலவர் கபிலரின் உத்தி நினைதற்குரியது. எந்தப் பயனும் கருதாமல் பொழியும் மழையின்(மாரியின்) இயல்பு போலப் பாரியும் பயன்கருதாக் கொடை சுரந்து உலகு உயிர் பேணும் இயல்பு உடையவன் என்பதால் பாரியை, மடத்தனமாகக் கொடையளிப்பவன் என்ற பொருளில் "பாரியின் கொடைமடம்" என்று சொல்லுவார்கள் என்றும் எங்கள் தமிழாசான் சொல்லியது இப்ப நினைவுக்கு வருகிறது", என்றார் நண்பர்.
இறைவனின் கருணையைப்போன்ற பாரியின் கருணை!
ஆகா! என்ன அருமையான பாடல். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், வறியவரின் துன்பம் நீக்கவேண்டும் என்னும் கருணை ஒன்றினால் மட்டுமே கொடை பொழிந்த பாரியை மாரிக்கு (மழைக்கு) ஒப்பாகப் புகழ்ந்து பாடிய கபிலரின் பாடலுக்கு முற்றிலும் தகுதியுடையவன்தான் பாரி. நாடு ஆண்ட பாரியின் கருணையும், இறைவனின் கருணையைப்போல சிறப்பானதுதான்.
பக்தி நிலையில் நின்ற அருளாளர்கள் இறைவன்பால் கொண்ட அன்பு, இறைவன் உயிர்களிடம் காட்டும் வரம்பிலாத கருணையை விஞ்சும் வகையில் இருந்ததைத் பின்வரும் திருவாசகம் உணர்த்துகின்றது.
உற்றாரை யான் வேண்டேன்; ஊர் வேண்டேன்; பேர் வேண்டேன்; கற்றாரை யான் வேண்டேன்; கற்பனவும் இனி அமையும்; குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தா! உன் குரை கழற்கே, கற்றாவின் மனம் போல, கசிந்து, உருக வேண்டுவனே! - திருவாசகம்: திருப்புலம்பல்:3
இறைவா! கன்றை ஈன்ற பசுவின் மனம் எவ்வாறு தான் ஈன்ற கன்றினை நினைந்து பால் சுரக்குமோ, அதுபோல, சிலம்பொலி ஒலிக்கின்ற நினது திருவடிகளின்பால் எனக்கு அன்பு சுரக்குமாறு அருள் தருக! என்னும் பொருளில் "கற்றாவின் மனம்போலக் கசிந்துருக வேண்டுவனே!" என்கிறார்.
ஏன் கற்றாவின் மனம் போல, கசிந்து, உருக வேண்டுகின்றார்?
இங்கு ஏன் குழந்தையைப் பெற்ற தாயின் மனத்தை உவமையாகக் காட்டாமல், கன்றை ஈன்ற பசுவின் மனத்தை உவமிக்கிறார் என்பது சிந்தனைக்குரியது.
தான் ஈன்ற குழந்தைக்குப் பாலூட்டும் தாய்க்குக் கூட, தன் முதுமைக்காலத்தில் அக்குழந்தை தன்னைப் போற்றிப் பாதுகாக்கும் என்ற எதிர்பார்ப்பு ஒருவேளை இருக்க வாய்ப்புண்டு. ஆனால், கன்றை ஈன்ற பசுவுக்கு அத்தகைய எதிர்பார்ப்பு எதுவும் இருக்க வாய்ப்பே இல்லை. ஆதலால்தான் "கற்றாவின் மனம்போல" என்று வேண்டுகிறார் மணிவாசகப் பெருமான்.
"திருக்கூட்டத்து அடியார்கள், இறைவன்பால் கொண்ட அன்பு ஒன்றினால் மட்டுமே இறைவனைக் கும்பிடும் பிறப்பே போதும் என்று விரும்புவார்களே அன்றி, இறைவனை வழிபட்டால் கிடைக்கும் மிக உயர்ந்த பயனான பிறவித்துன்பத்திலிருந்து விடுபடும் 'வீடுபேறு' என்னும் உயர்ந்த நிலைத்த இடம் கூட தமக்கு வேண்டும் என்று விரும்பாத இயல்புடையவர்கள்" என்கிறார் சேக்கிழார் பெருமான்.
கூடும் அன்பினிற் கும்பிடல் என்பது -
"குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயில் குமிழ் சிரிப்பும், பனித்த சடையும், பவளம்போல் மேனியில் பால் வெண்ணீறும், இனித்தமுடன் எடுத்த பொற்பாதமும், காணப் பெற்றால், மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே"
என்று அப்பர் சுவாமிகள் அருளியதும்.
“நின் திருவடிக்காம் பவமே அருளு கண்டாய்“
என்று மாணிக்கவாசக சுவாமிகள் விண்ணப்பித்ததும்,
“கும்பிடப் பெற்று மண்ணிலே வந்த பிறவியே எனக்கு வாலிதாம் இன்பமாம்“
என்று இறைவனின் தோழர் சுந்தரமூர்த்தி நாயனார் வேண்டியதும்
"ஆடும் பரிவேல் அணிசேவல் எனப் பாடும் பணியே பணியாய் அருள்வாய்"
என்று அருணகிரிநாதர் கந்தர் அநுபூதியில் வேண்டியதும்
“பச்சை மாமலை போல் மேனி! பவளவாய் கமலச் செங்கண்! அச்சுதா! அமரர் ஏறே! ஆயர்தம் கொழுந்தே! என்னும் இச்சுவை தவிர, யான் போய் இந்திரலோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன்! அரங்கமா நகருளானே.”
என்று தொண்டரடிப்பொடியாழ்வார் திருவரங்கன்பால் அன்பு மேலீட்டால் கதறியதும் "கூடும் அன்பினில் கும்பிடல்" என்பதே.
கணவன்பால் மனைவி கொள்ளும் தூய அன்பு!
கணவன்பால் மனைவி கொண்ட அன்பும், திருக்கூட்டத்து அடியார்கள் அடியார்கள் இறைவன்பால் கொண்ட அன்புபோல, எத்தகைய எதிர்பார்ப்பும் இல்லாத தூய அன்பாகும் என்பதையே "தெய்வம் தொழாள்! கொழுநன் தொழுதெழுவாள்" என்ற சொற்றொடர் விளக்குகிறது!
பெய்யெனப் பெய்யும் மழை"யாய்ப் பொழியும் மனைவியின் பயன் கருதா அன்பு மழை!
'களர்நிலம், பாலைநிலம், நன்செய் விளைநிலம், புன்செய் விளைநிலம் என்ற வேறுபாடெல்லாம் பார்க்காமல் "பெய்யெனப் பெய்யும் மழை" போல், கணவனிடம் மனைவி செலுத்தும் அன்பு, களர்நிலத்தில், பாலைவனத்தில் பெய்தால் வீணாகிவிடுமோ என்றெல்லாம் கவலைப்படாமல் "பெய்யெனப் பெய்யும் மழை"போல், பயன் கருதாமல் பொழியும் அன்பு மழையாகும் என்பதே பொருளாக இருக்க வேண்டும் என்பதே அறிவுக்குப் பொருத்தமாகப்படுகின்றது.
இறைவன் கொடுத்த அருட்கொடையே மனைவி!
"ஏ ஆண் வர்க்கமே!! உங்கள் வாழ்க்கைத் துணைநலமாக இறைவன் கொடுத்த அருட்கொடையே உங்கள் மனைவியர்! அவர்கள் உங்களிடம் செலுத்தும் அன்பு எவ்வித பயனும் கருதாத, "பெய்யெனப் பெய்யும் மழை" போன்று தூய்மையானது! திருக்கூட்டத்தார் இறைவனிடம் செலுத்தும் தூய அன்பைப்போல், மனைவியர் அவரவர் கணவன்மார்களிடம் தூய அன்பைப் பொழிகிறார்கள்! வாழ்க்கைத் துணைநலமாகிய நும் மனைவியர், இறைவனால் நுமக்கு அருளப்பட்ட "பெய்யெனப் பெய்யும் அன்பு மழை" ஆவர்." என்னும் பொருளே
என்னும் திருக்குறளின் மெய்ப்பொருளாக என் சிற்றறிவுக்குப் படுகின்றது!
மேற்கண்ட சிந்தனைகள் புறநானூற்றுப் பாடல் தந்த சங்ககாலக் கவிஞர் கபிலரின் சிந்தனை மரபிலிருந்தும், பக்தி இலக்கியங்கள் அருளிய சைவ நாயன்மார்கள், வைணவ ஆழ்வார்கள் மரபிலிருந்தும் யாம் பெற்றவை. காலத்தால், இச்சிந்தனை மரபுகள் மணக்குடவர் உள்ளிட்ட உரையாசிரியர்களின் காலங்களுக்கு முந்தியவை.
மேலும், நாமறிந்த திருக்குறள் உரையாசிரியர்கள் சமணம், வைணவம், கடவுள் மறுப்பு, கிறித்துவம் போன்ற தத்துவப் பின்புலம் கொண்டவராயினும், பெண்களையும், சூத்திரர்களையும் கீழ்மக்களாகக் கருதும் வேதகால ஆரியத்தத்துவ மரபுகளின் பாதிப்புகளுக்கு ஏதேனும் ஒரு வகையில் தம்மையறியாமல் ஆட்பட்டவர்கள்.
செக்குமாடுபோல, இவர்களையே நாம் சுற்றிச்சுற்றி வந்தால், ஆரிய முடைநாற்றமடிக்கும் மனிதகுலத்துக்கே எதிரான மனுநீதி உள்ளிட்ட சாத்திரக்குப்பைகளிலேயே நாம் நாறிக்கிடக்க வேண்டியதுதான்!
திருக்குறளின் மெய்ப்பொருள் காண, தமிழர் மரபுகளின் வேர்களைத் தேடி, தொல்காப்பியத்துக்கும், அடுத்தபடியாக, சங்க இலக்கியங்களுக்கும், அதற்கு அடுத்தபடியாக, பன்னிரு திருமுறைகள், திருநாலாயிரம் உள்ளிட்ட பனுவல்களுக்கும் நாம் செல்ல வேண்டியது அவசியமாகின்றது.
திருக்குறள் கூறும் பெண்ணியம், ஆரிய தரும சாத்திரங்கள் கூறும் பெண்ணியம் குறித்த ஒப்பீட்டை இக்கட்டுரையின் இரண்டாம் பகுதியில் விரிவாகக் காண்போம்.
வெள்ளம் போல் தமிழர் கூட்டம்! வீரங்கொள் கூட்டம்! அன்னார் உள்ளத்தால் ஒருவரே! மற் றுடலினால் பலராய்க் காண்பார்! கள்ளத்தால் நெருங்கொணாதே எனவையம் கலங்கக் கண்டு துள்ளும் நாள் எந்நாளோ! - புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்!
ஆரியம் கூறும் பெண்ணியம் மற்றும் வள்ளுவம் கூறும் பெண்ணியம், குறித்த ஒப்பீட்டை இக்கட்டுரையில் சற்று விரிவாகக் காணலாம். திருக்குறள் ஆரிய சாத்திரங்களின் சுருக்க நூல் என்று தொல்லியல் ஆய்வாளர் முனைவர் நாகசாமியின் நூல் (Tirukkural - an Abridgement of Sastras by Dr.R.Nagaswamy) முறையான தரவுகள் எதுவும் இன்றி, பொத்தாம் பொதுவாக அறுதியிட்டுச் சொல்வதால், பெண்களைக் குறித்து ஆரிய தரும சாத்திர நூல்கள் கொண்டுள்ள கோட்பாடுகளைத் திருக்குறள் கோட்பாடுகளுடன் ஒப்பிட்டு, இரண்டு கோட்பாடுகளும் ஒன்றுதானா என்று ஆய்வது அவசியமாகிறது.
சநாதன தருமம் விளக்கும் ஆரிய தரும சாத்திரங்களின் பிழிவான மனுநீதி நூல் பெண்களைப் பற்றிக் கொண்டுள்ள கோட்பாடுகளை முதலில் காணலாம்.
பெண்ணைச் சுதந்திரமாகச் செயல்படவிடக்கூடாது என்று கட்டளையிடும் மனுசாத்திரம்!
பெண் எச்சூழ்நிலையிலும், அவளது வீட்டில்கூடச் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்க கூடாது என்று அறையும் மனுசாத்திரத்தின் சமற்கிருத வடிவம், திரு.கங்காநாத் ஜா அவர்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு மற்றும் எனது தமிழ் மொழி பெயர்ப்பு ஆகிய மூன்றும் இங்கு தரப்பட்டுள்ளன.
बाल्ये पिटोर वाशे बालया वा युवत्या वा वृद्धया वाऽपि योषिता ।
न स्वातन्त्र्येण कर्तव्यं किं चिद् कार्यं गृहेष्वपि ॥ १४५ ॥
bālayā vā yuvatyā vā vṛddhayā vā'pi yoṣitā |
na svātantryeṇa kartavyaṃ kiṃ cid kāryaṃ gṛheṣvapi || 145 ||
Whether she be a child, or a young woman, or an aged woman, she should not do any act by herself, even in the house.—(145).
பெண்ணானவள், குழந்தை, இளம்பெண், அல்லது வயதான பெண்மணி என்ற எந்நிலையிலும், அவளாகவே எந்தச் செயலையும், தன் வீடாகவே இருந்தாலும், செய்யக்கூடாது - மனுசாத்திரம்-145.
வல்லமை அனைத்தும் கொண்டவளாகப் பெண்ணைக் கொண்டாடும் திருக்குறள்!
இவ்வாறு பெண்ணடிமைக் கொடுமை சொல்லும் மனுசாத்திரம்-145வது விதிக்கு நேர்மாறாக, திருக்குறள் காணும் பெண், தன்னைக்காத்துக்கொள்ளும் வல்லமையுள்ள சுதந்திரமானவளாகத் தன் கணவனுக்கும் குடும்பத்துக்கும் அரணாக விளங்குகிறாள்.
தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண் - குறள் 56.
Transliteration of English Couplet 56:
thaRkaaththuth thaRkoNtaaR paeNith thakaisaandra
soRkaaththuch soarvilaaL peN.
Meaning of English Couplet 56:
A woman is one Who unwearied-ly guards herself, takes care of her husband's comfort, preserves an unsullied fame and name of her household by upholding virtues through her untiring soul.
உடலாலும் உள்ளத்தாலும் தன்னைக் காத்து, தன் கணவனின் நலன்களில் கவனம் வைத்து, தன் குடும்பத்திற்கு நலம் தரும் புகழையும் பெயரையும் காத்து, அறத்தைக் கடைப்பிடிப்பதில் சோர்வடையாமல் இருப்பவள் பெண் என்கிறார் திருவள்ளுவர்.
ஆரிய மனுசாத்திரம் பெண்ணை அடிமைக்கொட்டிலில் அடைத்துத் துன்புறுத்துகின்றது.
திருக்குறளோ, தன்னைத் தானே காத்துக்கொள்ளும் திறம் பெற்றவளாக, தன் கணவனையும் குடும்பத்தையும் பேணிக் காக்கும் வல்லமை பெற்ற ஆளுமையாகப் பெண்ணைக் காண்கிறது.
தந்தைவழி ஆரிய சமூகத்தின் கோரமுகமே மனுசாத்திரம்!
பெண்ணடிமை கொள்ளும் ஆணாதிக்கத் தந்தைவழி ஆரிய சமூகத்தின் கோரமுகமே சநாதன தர்மம் என்றழைக்கப்படும் மனுசாத்திரம். பெண் தலைமையேற்ற தொன்மைச் தமிழ்ச் சமூகத்தின் பதிவே திருக்குறள். இவ்வேறுபாட்டை இன்னும் நுட்பமாகக் காண மனுசாத்திரம் - 146-ஐயும், திருக்குறள்-57ஐயும் ஒப்பிடலாம்.
பெண்ணை பிறப்பிலிருந்து இறப்புவரை ஆண் கட்டுப்படுத்திவைக்க வேண்டும்! - மனுசாத்திரம்
பெண் எப்போதுமே, பிறப்பிலிருந்து இறப்புவரை அடிமையாய் ஆணுக்கு கட்டுப்பட்டே வாழவேண்டும் என்று அறையும் மனுசாத்திரத்தின் சமற்கிருத வடிவம், திரு.கங்காநாத் ஜா அவர்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு மற்றும் எனது தமிழ் மொழி பெயர்ப்பு ஆகிய மூன்றும் இங்கு தரப்பட்டுள்ளன.
बाल्ये पितुर्वशे तिष्ठेत् पाणिग्राहस्य यौवने ।
पुत्राणां भर्तरि प्रेते न भजेत् स्त्री स्वतन्त्रताम् ॥ १४६ ॥
bālye piturvaśe tiṣṭhet pāṇigrāhasya yauvane |
putrāṇāṃ bhartari prete na bhajet strī svatantratām || 146 ||
In childhood she should remain under the control of her father, in youth under that of her husband, and on the husband’s death under that of her sons; the woman should never have recourse to independence.
(In no circumstances, at any stage of her life, is she allowed to assert herself independently.—(146).
பெண், குழந்தைப்பருவத்தில் தந்தையின் கட்டுப்பாட்டிலும், திருமணமானபின் கணவனின் கட்டுப்பாட்டிலும், கணவன் இறந்தபிறகு, மகன்களின் கட்டுப்பாட்டிலும் இருக்கவேண்டும். எந்த வயதிலும், எச்சூழ்நிலையிலும், பெண் சுதந்திரமாகச் செயல்பட அநுமதிக்கக் கூடாது - மனுசாத்திரம்-146.
பெண்ணை எவனாலும் சிறைவைக்க முடியாது - திருக்குறள்
இதற்கு நேர் மாறான கருத்தை ஆரியத்தின் முகத்தில் அறைந்து முன் வைக்கும் திருக்குறள் இதோ!
சிறைகாக்கும் காப்பு எவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை - குறள் 57.
Transliteration(Tamil to English):
siRaikaakkum kaappevan seyyum makaLir
niRaikaakkum kaappae thalai
English Couplet :
Of what avail is watch and ward?
Honour's woman's safest guard
ஆரிய மூர்க்க மனுதர்மத்தின் தலையில் ஓங்கி அடிக்கும் திருக்குறள்!
மகளிரைக் காவல் வைத்துக் காக்கும் காப்பு முறை என்ன பயனை உண்டாக்கும்? பெண்கள் நிறை என்னும் பண்பால் தம்மைத் தாமே தம் மன அடக்கத்தால் காக்கும் காவலே முதன்மையானது என்று ஆரிய மூர்க்க மனுதர்மத்திற்குத் தலையில் ஓங்கி ஒரே போடாகப் போடுகின்றார் திருவள்ளுவர்.
தாம் சொன்ன பொய்யால் ஆடையிழந்து நிற்கும் பொய்யர்கள்!
புரட்சிகரமான சம நீதி அறத்தைக் கைக்கொள்ளும் திருக்குறளை பெண்ணுக்குச் சிறைவைத்து அநீதி சொல்லும் மனுதர்ம நூலின் மொழிபெயர்ப்பு என்று கூசாமல் பொய் சொல்லும் பரிமேல்அழகரும், முனைவர் நாகசாமியும் இப்போது ஆடையின்றி நாணமின்றி நிற்கின்றனர்.
உலகப் பெண்ணியத்திற்கு முழுவடிவம் தந்தது திருக்குறளே!
வள்ளுவர் பெண்களுக்குக் கொடுத்த உயர்வும் மதிப்பும் எந்நாட்டு இலக்கியமும் எக்காலத்தும் தாராதது. அறிவின் வடிவமாகவே பெண்களைக் கண்டார் திருவள்ளுவர். 'சிறுவயதில் தந்தைக்கும், திருமணத்துக்குப்பின் கணவனுக்கும், பின்னர் மகன்களுக்கும் கட்டுப்பட்டவள் பெண்' என்ற ஆரியக்கருத்துக்கு நேர் எதிராக, 'பெண்ணே தன்னைத் தான் காத்து, கணவனையும் காத்து, உலகின் பண்பையும் காப்பவள்' என்கிறார் திருவள்ளுவர். பெண்ணுக்கு வள்ளுவர் கொடுத்த இத்தகுதிப்பாடு கடவுளுக்கு நாம் கொடுக்கும் சிறப்புக்கு இணையானது என்ற காரணம் பற்றியே 'தெய்வந் தொழாஅள்' என்று பெண்ணைக் குறித்து வள்ளுவர் சிறப்பித்துக் கூறியதின் குறிப்பாகும்.
பெண் குறித்த இக்கருத்தியல் ஆரியக்கருத்துக்கு எதிரானது. அடாத செயல்களைச் செய்யும் ஆண்களைக் கண்டிப்பதற்குப் பதிலாக, 'சம உரிமை' என்ற பெயரால் அதே அடாத செயல்களைச் செய்யப் பெண்களுக்கும் உரிமை உண்டு என்னும் மேலை ஆரியரின் சமூகச் சீரழிவுக் கருத்தும் வள்ளுவருக்கு உடன்பாடானதன்று.
திருமணத்துக்கு வெளியே உறவு வைத்துக்கொள்ளும் ஆண்மகனுக்குத் தண்டனை தரும் சட்டத் திருத்தத்தை பரிந்துரைக்காமல், 'திருமணத்துக்கு வெளியே உறவு வைத்துக்கொள்ள ஆணைப்போல் பெண்ணுக்கும் உரிமை உண்டு' என்று அண்மையில் வந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு மேலை ஆரியத்தின் 'சமூகச் சீரழிவுக்கான சமஉரிமை'க் கொள்கையின் பாதிப்பினால் ஏற்பட்ட விளைவாகும்.
பெண்ணின் தன்னாளுமைக்கு மதிப்பளிக்கும் சமூகத்தளமே வள்ளுவரின் பெண்ணியம்!
பெண்ணுக்குக் காதல் தரும் இயற்கைப் பாதுகாப்பையும், கற்பு தரும் சமூகப் பாதுகாப்பையும் பெண்ணின் உரிமையாக்கினார் திருவள்ளுவர். இது பெண்ணின் தன்னாளுமையை ஏற்றுக் கொண்டு மதிப்பளிக்கும் சமூகத்தை உருவாக்கும் தளமாக அமைகின்றது.
திருமணம் என்னும் சமூக அமைப்புக்குள் வாராது, பொருளுக்காக ஆண்கள் பலரிடம் தன் உடலைப் புணரத்தந்து வாழும் பெண்களை, ஏனைய தமிழ் இலக்கியங்கள் 'பரத்தையர்கள்' என்றே அழைத்தன. அதாவது, கட்டுப்பாடுகள் இன்றிப் பல ஆண்களுடன் பரந்துபட்டு ஒழுகும் பெண்ணைக் குறிக்க 'பரத்தை' என்ற சொல் வழங்கப்பட்டது.
'பரத்தை' என்ற சொல்லைத் தவிர்த்த திருவள்ளுவர்!
'பரத்தமை' கொண்டொழும் பெண்களில் பலரும் 'பரத்தைகள்' ஆனது ஆண்களால் என்பதை வள்ளுவர் உணர்ந்தே இருந்தார்.
எனவே, 'பரத்தமை' சமூகத்தீங்காகக் கட்டமைக்கப்பட்ட காலத்தில்கூட, பெண்ணின் மீது அவர்கால ஆண் வர்க்கம் கட்டமைத்த 'பரத்தையர்', 'விலைமகளிர்', 'பொதுமகளிர்' போன்ற இழிசொற்களைத் திருக்குறளில் கவனமாகத் தவிர்க்கின்றார் திருவள்ளுவர்.
'பரத்தை' என்ற சொல்லைத் திருக்குறளில் முற்றுமாகத் தவிர்த்தது பெண்குலத்தின்பால் திருவள்ளுவர் கொண்டிருந்த பெருமதிப்புக்குச் சான்றாக அமைகின்றது.
'வரைவின் மகளிர்' - பெண்களின் தனிமனித உரிமை பேண வள்ளுவர் கட்டமைத்த சொல்!
பெண்ணின் உடல் மீதான உரிமை அப்பெண்ணுக்கே உரியது என்று வள்ளுவர் கருதியதால், 'திருமணம் என்னும் வரைவு'க் கோட்டுக்குள் வாராத இப்பெண்களின் தனிமனித உரிமைக்குப் பெருமதிப்புக் கொடுத்து, இவர்களைக் குறிக்க 'வரைவின் மகளிர்' (திருமணம் என்னும் வரைவு இல்(லாத) மகளிர்) என்ற நாகரிகமான புதிய சொல்லையே உருவாக்கினார்.
பொருள் ஈட்டும் பொருட்டு வாழ்க்கைத் துணைவியான மனைவியைப் பிரிந்து புலம் பெயர்ந்த இல்லறம் கைக்கொண்ட ஆண்கள், இல்லறத்துக்கு வரையறுக்கப்பட்ட அறம் பிறழ்ந்து, தம் மனக் கட்டுப்பாட்டை இழந்து, தறிகெட்டுப் போகாமல் நெறிப்படுத்துவதற்காகவே, 'வரைவின் மகளிர்' என்னும் இவ்வதிகாரத்தைக் கூட, பொருட்பால் நட்பியலில் வைத்தாரேயன்றி பெண்ணினத்தை பழிப்பதற்காக அன்று என்று எண்ணும்போது வள்ளுவரின் மாட்சிமையை வியக்காமல் இருக்க முடியவில்லை.
என் சிற்றறிவுக்கு எட்டியவரை, 'வரைவின் மகளிர்' என்னும் சொல் திருக்குறளுக்கு முந்தைய சங்க இலக்கியங்கள் எதிலும் காணப்படவில்லை.
அண்மையில் இந்திய உச்சநீதிமன்றம் அளித்த ஒரு தீர்ப்பில் 'ADULTERY' என்னும் செயல் மணமுறிவுக்கான காரணமாக இருக்கலாமே தவிர, அதைக் குற்றமாகக் கருதவியலாது என்று அளித்த தீர்ப்பில், "பெண் உடலின் மீதான உரிமை அப்பெண்ணுக்கே உரியது என்றும், மனைவியின் உடல் மீதான உரிமையை கணவனின் உடைமையாக ஏற்க இயலாது", என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது இங்கு நினைவுக்கு வருகின்றது.
திருமணத்துக்கு வெளியே பெண்-தொடர்புள்ள ஆணைப் 'பரத்தன்' என்ற வள்ளுவர்!
தாம் இழிவாகக் கருதிய 'பரத்தை' என்னும் சொல்லை திருக்குறளில் எங்குமே பெண்ணைச் சுட்டப் பயன்படுத்தாத திருவள்ளுவர், திருமணத்துக்கு வெளியே, வேறு பெண்களுடன் தொடர்பு கொண்ட ஆண்மகனைப் 'பரத்த(ன்)' என்று காமத்துப்பால்-கற்பியல்-புலவி நுணுக்கம் அதிகாரம், குறள் 1311ல் துணிந்து கண்டிக்கிறார் என்பதுவும் இங்கு குறிப்பிடத்தக்கது..
பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர்
நண்ணேன் பரத்த நின் மார்பு. - குறள் 1311.
"பரத்தமை உடையாய்! 'வரைவின் மகளிர்' அனைவரும் தம்தம் கண்களால் நின்னைப் பொதுப்பொருளாகக் கொண்டு நுகர்கின்றார்கள்; ஆகையால் உன் மார்பைப் பொருந்தேன்.", என்று தலைவி(மனைவி)யின் கூற்றாகக் கொண்டு, தலைவ(கணவ)னைக் கண்டிக்கிறார். புலவி நுணுக்கம் என்னும் அதிகாரத்தில் கூறப்பட்டதாக இருந்தாலும், மனம் போல் பல பெண்களுடன் வாழும் போக்குடைய ஆண்மகனின் செயலுக்கு அவனே பொறுப்பாவான் என்பதால் 'பரத்தன்' என்ற சொல்லால் கண்டிக்கத் துணிகிறார் வள்ளுவர். இச் சொல்லாட்சி திருக்குறளுக்கு முந்தைய கழக(சங்க) இலக்கியங்களில் ஆளப்பட்டுள்ளதா என்ற ஆர்வம் தொற்றிக்கொண்டது.
கண்டேன் 'பரத்தனை' அகநானூறு 146ல்!
கழக(சங்க) இலக்கியங்களில் தேடியதில், அகநானூறு 146ல் மட்டுமே 'மாயப் பரத்தன் வாய்மொழி நம்பி'க் கெட்டதாகத் தலைவி, தலைவனை வசவுமாரி பொழியும் பாடல் ஒன்று அகப்பட்டது. 'வரைவின் மகளிர்'களின் வீடுகளுக்குச் சென்றுவிட்டு, தலைவியிடம் மன்னிப்பு வேண்டிப் பாணனைத் தூது அனுப்பிய தலைவனை வெறுத்து, 'பரத்தன்' என்று வசவுச் சொல்லை வீசித் தலைவனுக்குத் தலைவி வாயில் மறுத்ததாகப் பதிவு செய்கின்றார் உவர்க்கண்ணூர்ப் புல்லங்கீரனார் என்னும் அகநானூற்றுப் புலவர்.
பொதுவாகவே ஒரு நபரின் இழிகுணத்தைச் சாட, அவரின் ஊரையே பழிக்கும் போக்கு மனித இயல்பு. இப்பாடலில், தலைவனின் 'பரத்தமை' இழிகுணத்தை அவன் வாழும் ஊரிலுள்ள ஒரு எருமைக்கிடாவுக்கு ஏற்றி ஏசுகிறாள் தலைவி.
"என் தலைவன் எப்பேர்ப்பட்ட ஊரைச் சார்ந்தவன் தெரியுமா? அவன் ஊர் எருமைக் கிடா சிறந்த வலிமை வலிமை மிகுந்த உடலுரம் பெற்றது; பகல் முழுவதும், பூத்திருக்கும் பொய்கையில் புகுந்து, சேற்றில் கிடந்து புரண்டு, உடலெல்லாம் சேற்றைப் பூசிக்கொண்டு திரும்பிய பின்னர் தன் பெண்-எருமையைத் தழுவி அழைத்துக்கொண்டு தோட்டத்தில் உள்ள சோலையில் தங்கி மகிழ்ச்சிகொள்ளும் ஊர் அவன் ஊர்.
வரைவின் மகளிர் என்னும் பூத்திருக்கும் சேற்றுப் பொய்கையில் மேய்ந்து, புரண்டு, சேற்றைப் பூசிக்கொண்ட எருமைக்கடாவான என் தலைவன் உன்னைத் தூது அனுப்பி என் வீடு புகப் பார்க்கிறான். அதெல்லாம் என்னிடம் நடக்காது" என்ற தொனியில் வன்மம் கொண்ட நயமான சாடை பேசும் வர்ணனை.
பிறகு, நேரடியாகவே தலைவனைத் தாக்குகிறாள் சமாதானத்தூது வந்த பாணனிடம்.
மாயப் பரத்தனை நம்பி ஏமார்ந்தது போதும்!
"ஒலிக்கும் மணியுடன் கூடிய இவனின் தேரானது, ஆடை-அணியழகால் மேனிமினுக்கும் மகளிர் சேரியின் பக்கம் பல நாள் சென்றது என்றால், என்னைப் போல் இரக்கம் கொள்ளத் தக்க ஏமாளி வேறு இருப்பார்கள்? இந்த மாயம் செய்யும் பரத்தனின் வாயில் வந்த சொற்களை நம்பி ஏமார்ந்து போய், எனது தாய் போற்றிக் காத்த என் உடல் நலத்தைப் பேணாமல், தோழிமாரும் அயலாரும் அஞ்சுமாறு, காற்றுமழையில் ஆடும் மலரில் நீர் சொட்டுவது போலக் கண்ணீரும் கம்பலையுமாக வாழும் பேதை என்னைப் போல் வேறு யார்?" என்கிறாள் தலைவி.
வலி மிகு முன்பின் அண்ணல் ஏஎறு
பனி மலர்ப் பொய்கைப் பகல் செல மறுகி,
மடக் கண் எருமை மாண் நாகு தழீஇ,
படப்பை நண்ணி, பழனத்து அல்கும் 5
கலி மகிழ் ஊரன் ஒலி மணி நெடுந் தேர்,
ஒள் இழை மகளிர் சேரி, பல் நாள்
இயங்கல் ஆனாதுஆயின்; வயங்கிழை
யார்கொல் அளியள்தானே எம் போல்
மாயப் பரத்தன் வாய்மொழி நம்பி, 10
வளி பொரத் துயல்வரும் தளி பொழி மலரின்
கண்பனி ஆகத்து உறைப்ப, கண் பசந்து,
ஆயமும் அயலும் மருள,
தாய் ஓம்பு ஆய்நலம் வேண்டாதோளே? - புறநானூறு: 146 (உவர்க்கண்ணூர்ப் புல்லங்கீரனார்)
ஆணைப் 'பரத்தன்' என்ற வள்ளுவர் பெண்ணைப் 'பரத்தி' என்று ஏன் சொல்லவில்லை?
பெரும்பாலும் ஆணாதிக்க சமூகத்தின் அறமற்ற கொடூரத்தின் விளைவாகவே 'பரத்தமை' நிலைக்குத் தள்ளப்பட்ட பெண்களைப் 'பரத்தையர்' என்றழைக்கத் திருவள்ளுவரின் அறச்சிந்தனை ஒப்பவில்லை. எனவேதான் 'வரைவின் மகளிர்' என்ற மென்மையான சொல்லைக் கட்டமைக்கின்றார். இந்நுட்பத்தை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.
'வரைவின் மகளிர்' என்ற சொல்லைப்போலவே, வள்ளுவர் உருவாக்கிய, பெண்ணுக்கு மிகுந்த மதிப்புதரும் மற்றொரு சொல் 'வாழ்க்கைத் துணை' என்பதாகும்.
இச்சொல் சமுதாயம் ஏற்றுக்கொண்ட திருமணம் என்னும் வரைவுக்கு உட்பட்ட ஆண்-பெண் (கணவன்-மனைவி) உறவுக்கும், தற்காலச் சமுதாயம் இன்னமும்கூட ஏற்றுக்கொள்ளாத 'Living Together' என்று ஆங்கிலத்தில் நாம் அழைக்கும், ஒரு தகுதியான ஆணும் பெண்ணும், திருமணம் புரியாமல் 'சேர்ந்து வாழும்' வாழ்க்கைக்கும் பொதுவான சொல்லாக 'வாழ்க்கைத் துணைவி' அமைந்துவிட்டது.
காலம் கடந்து நிற்கும் பொதுமறை 'திருக்குறள்' ஒன்றே என்பதற்கும் 'வாழ்க்கைத்துணை' என்னும் இப்பொதுமைச்சொல் சான்றாக அமைகின்றது. பெண்ணுக்குச் சிறுமைதரும் கருத்தியல் கொண்ட மனுசாத்திரத்தை நேரடியாக எதிர்க்காமல், பெண்ணுக்குப் பெருமையும் மதிப்பும் தரும் இமயம்போல் ஓங்கி உயர்ந்த சீரிய கருத்தியலை நேர்த்தியாகக் கட்டமைத்துள்ளார் திருவள்ளுவர்.
ஆரிய மனுசாத்திரத்தின் சுருங்கிய வடிவே திருக்குறள் என்று பொய்யுரைப்பதன் மூலம், திருக்குறளின் உயரத்திற்கு முன் புள்ளியாய்த் தேய்ந்துபோன மனுசாத்திரத்தைக் கொண்டே, திருக்குறளை விழுங்கிச் செரிக்க முயல்கின்றது ஆரியம்.
புள்ளி இமயத்தை ஒருக்காலும் விழுங்க இயலாதென்றாலும், 'சிவப்பாக இருப்பவன் பொய்சொல்ல மாட்டான்' என்னும் தமிழனின் முட்டாள்தனத்தின்மீது அசைக்க முடியாத நம்பிக்கைகொண்ட ஆரியர்கள் தங்கள் தாக்குதலைத் தொடர்ந்துகொண்டேதான் இருப்பார்கள். எம்போன்றோர் தடுத்துக்கொண்டேதான் இருப்பார்கள்.
'மனுசாத்திரம் மற்றும் திருக்குறள் பார்வையில் பெண்ணியம்' அடுத்த கட்டுரையில் இன்னும் தொடர்வோம்!
வெள்ளம் போல் தமிழர் கூட்டம்! வீரங்கொள் கூட்டம்! அன்னார்
திருக்குறள் ஆரிய சாத்திரங்களின் சுருக்க நூல் என்று தொல்லியல் ஆய்வாளர் முனைவர் நாகசாமியின் நூல் (Tirukkural - an Abridgement of Sastras by Dr.R.Nagaswamy) எழுதிய நூலுக்கு மறுமொழியாக நான் யாழ் இணைய இதழில் எழுதிவரும் 'திருக்குறள் ஆய்வு' தொடர்கட்டுரைகளில் ஒன்றான "பெய்யெனப் பெய்யும் மழை" என்னும் கட்டுரைக்கு, யாழ் இணையதளத்தில் அறிவார்ந்த பங்களிப்பைப் பின்னூட்டமாக நல்கிய திருவாளர்கள் சுவி மற்றும் சோமசுந்தரனார் இருவருக்கும் என் உளம்கனிந்த நன்றிகள்.
எதற்காக என்று கேட்க மாட்டீர்களா? "தெய்வம் தொழாள்; கொழுநன் தொழுதெழுவாள்!" என்று திருவள்ளுவர் கூறவேண்டிய அவசியம் ஏன் வந்தது என்று என்னைத் துளைத்தெடுத்த பெண்ணியவாதிகளின் நியாயமான கேள்வியை வசதியாக ஓரம் கட்டிவிட்டே "பெய்யெனப் பெய்யும் மழை!" என்ற ஒற்றைக் கருத்தை மையமாகக் கொண்டே முந்தைய கட்டுரை கட்டமைக்கப்பட்டது.
சுவி அவர்களின் கவித்துவமான பின்னூட்டத்தைப் போகிற போக்கில் படித்துவிட்டுப் போயிருப்பேன். நல்ல வேளை, திருவாளர் சோமசுந்தரனார் அவர்கள், திருவாளர் சுவியின் "அகத்துறை உரைநடைக் கவிதை"க்கு, அருமையான "சீவக சிந்தாமணி" பார்வையில் உரையெழுதி பின்னூட்டம் இட்டாரோ இல்லையோ, நான் ஓரம் கட்டி வைத்திருந்த "தெய்வம் தொழாள்; கொழுநன் தொழுதெழுவாள்!" கேள்விக்கான விடையின் கரு உதயமாகி, நன்கு வளர்ந்து இப்போது முழுக்கட்டுரையாகிவிட்டது.
இத் திருக்குறளுக்கான மறைதிறவை (ரகசியத்தை) உணராமல், பல்லாண்டுகளாகப் பெண்ணியவாதிகளால் 'கொலைவெறி வெறுப்புடன்' இக்குறள் பார்க்கப்பட்ட வரலாற்றுப் பிழையை நேர் செய்யும் விடை கிடைத்துவிட்டது. நன்றி.
இத்தொடரின் இக்கட்டுரை திருவாளர்கள் சுவி மற்றும் சோமசுந்தரனார் இருவருக்கும் சமர்ப்பணம்!
'தெய்வம் தொழாள்' என்பதன் மறைபொருள் என்ன?
'கற்றதனால் ஆயபயன் என்கொல்? வாலறிவன் நற்றாள் தொழார் எனின்!' என்று இரண்டாம் குறளிலேயே இறைவணக்கம் செய்யாதாரை இடித்துரைத்த வள்ளுவர், எதன்பொருட்டு "தெய்வம் தொழாள்; கொழுநன் தொழுதெழுவாள்" என்ற தொடரைப் மனைவிக்குரிய சிறப்புப் பண்பாகத் தரவேண்டும்?
இல்லறத்துக்குரிய பெண் தெய்வத்தைத் தொழமாட்டாள் என்று வள்ளுவர் குறிப்பிட்டுக் கூறவேண்டிய தேவையென்ன? இங்கு 'தெய்வம் தொழாள்' என்று வள்ளுவர் குறிப்பிட்டது எல்லாம் வல்ல இறைவனை அன்று என்பதும், வேறு எதையோ மறைபொருளாகச் சொல்கிறார் என்பதும் மனதில்பட்டது; எதைக் குறிக்க வள்ளுவர் 'தெய்வம் தொழாள்' என்னும் மறைபொருளால் குறிப்பிட்டார் என்ற வினாவிற்கான விடை காணாமல், மனம் நிலைகொள்ளவில்லை.
தமிழர் பண்பாட்டைச் சீர்கெடுக்க வந்த ஆரிய மணச்சடங்கியல்!
வாழ்க்கைத்துணை என்னும் அதிகாரத்தில் கொடுக்கப்பட்டிருப்பதால், 'மறை'வாகச் சுட்டப்பட்ட இத்தொடருக்கான மெய்ப்பொருள், வள்ளுவர் காலத்திலேயே தமிழரின் வாழ்வியலில் ஊடுருவத் தொடங்கிவிட்ட ஆரியவியலின் திருமணச் சடங்கியல் முறைகளின் மூலம் நேர்ந்துவிட்ட ஏதேனும் பண்பாட்டுச் சீர்கேடுகள் குறித்து இருக்கலாமோ என்ற ஐயம் மனதில் உதயமானது. (நன்றி:சுவி)
நான்கு வேதங்கள், உபநிஷத்துக்கள், வேதாந்தம், மனுசாத்திரம் உள்ளிட்ட ஆரிய சாத்திரங்களின் கரைகண்டவரும், காஞ்சி சங்கரமடத்தின் மகாப்பெரியவா அவர்களின் அணுக்கத் தொண்டருமான அக்னிஹோத்திரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் எழுதிய "எங்கே போகிறது இந்துமதம்" என்னும் நூலில் ஆரியவேதத் திருமண மந்திரங்களின் கீழ்த்தரமான பொருளைக் குறித்து மிக விரிவாக எழுதியுள்ளது நினைவுக்கு வர, அந்நூலை மறுவாசிப்பு செய்தேன்.
ஆரியவியல் திருமணச் சடங்குகள் குறித்த சமற்கிருத நூற்களில் உள்ள ஆரியவியல் திருமணச் சடங்கியலில் உள்ள ஒரு சமற்கிருத மந்திரம் ஒன்று இங்கே தரப்பட்டுள்ளது.
மணமகளுக்கு நான்கு தெய்வங்களைத் திருமணம் செய்விக்கும் ஆரியமந்திரம்!
திருமணச் சடங்கின்போது மணப்பெண்ணைத் தூய்மைப்படுத்த(?!?) ஆரியப் பிராமணப் புரோஹிதன் கூறும் ஒரு மந்திரம்:.
"சோமஹ ப்ரதமோ
விவிதே கந்தர்வ
விவிதே உத்ரஹ
த்ருதியோ அக்னிஸ்டே
பதிஸ தூயஸ்தே
மனுஷ்ய ஜாஹ" - ரிக்வேதம் - 10.85.40.41.
மணப்பெண்ணான இவளை (புனிதப்படுத்துவதற்காக), திருமணத்தின் முதலாம் நாள் இரவு சோமன் (சந்திரன் என்னும் தெய்வமும்), இரண்டாம் நாள் இரவு கந்தர்வன் (என்னும் தெய்வமும்), மூன்றாம் நாள் இரவு உத்திர தேவன் (என்னும் தெய்வமும்), நான்காம் நாள் இரவு அக்னிதேவன் (என்னும் தெய்வமும்) மணந்து கலந்த பிறகு, ஐந்தாம் நாள் இரவு இவளை மணந்தவனான கணவன் கலக்க வேண்டும் என்பது இம்மந்திரத்தின் விரிவான பொருள்.
இம்மந்திரத்தில் முக்கியமாக கவனிக்க வேண்டியது கடைசி வரியான "மனுஷ்ய ஜாஹ" என்பதாகும். இக்கடைசி வரிக்கு, "இம்மந்திரத்தில் குறிப்பிட்ட தெய்வங்களெல்லாம், இரவு நேரத்தில், மனிதவடிவில்(பிராமண வடிவில் என்று வாசிக்கவும்) மணப்பெண் தங்கியிருக்கும் தனி அறைக்கு வருவார்கள்." என்று இம்மந்திரங்களுக்கு விளக்கம் தருவதுதான் பதுதான் ஆரியப்பிராமணத் திருமணச் சடங்குகளின் முறைபிறழ்ந்த கயமைத்தனத்தின் உச்சகட்டமாகும்.
இத்தகைய சடங்கின் மூலம், நான்கு ஆரியப் பிராமணர்கள் ஒருவர் பின் ஒருவராக இந்நான்கு நாட்களில் இரவுப் பொழுதில் 'தெய்வம்' என்னும் பெயரில் வருவதால், அவர்களை மணப்பெண் 'தொழ(?!)வேண்டும்' (ஆரியப் பிராமணனுடன் படுக்கையைப் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்பதற்கான மறுப்புக் குறியீட்டை மனதில் கொண்டே இங்கு 'தெய்வம் தொழாள்' என்று வள்ளுவர் குறித்திருக்க வேண்டும்) என்ற கொடுவழக்கை திருமணச் சடங்கு என்ற பெயரால், மணப்பெண்ணின் 'நிறை'யை நான்கு ஆரியப் பிராமணர்கள் சூறையாடுவர்.
மணமகளை விட்டு விலகுமாறு கந்தர்வனிடம் கணவன் கெஞ்சும் மந்திரங்கள்!
இம்மந்திரத்துக்குச் சப்பைக்கட்டு கட்டும் ஆரிய அடிவருடித் தமிழர்கள் சிலர் 'பதி' என்றது கணவன் என்ற பொருளில் சொல்லப்படுவது இல்லை; பதி என்றால் பாதுகாவலன் என்பதே பொருள் என்பார்கள். அப்படியானால்,
"உதீர்ஷ்வாதோ விஷ்வாவஸேர் நம ஸேடா மஹேத்வா
அந்யா ப்ரபர்வ்யகும் ஸஞ்ஜாயாம் பத்யா ஸ்குஜ"
விஷ்வாவஸ் என்னும் கந்தர்வனே! இந்தப் படுக்கையில் இருந்து எழுவாயாக! உன்னை வணங்கிக் கேட்டுக் கொள்கிறேன். நீ வேறு கன்னிகையை விரும்புவாயாக! என் மனைவியை அவளுடைய கணவனான என்னுடன் சேர்த்து வைப்பாயாக! என்ற மந்திரத்துக்குப் பொருள்தான் என்ன?
"இந்தப் படுக்கையில் இருந்து எழுந்திருப்பாயாக! இந்தப் பெண்ணுக்கு கணவன் இருக்கிறான் அல்லவா! விஷ்வாவஸாகிய உன்னை வணங்கிக் கேட்டுக் கொள்கிறோம். தகப்பன் வீட்டில் இருப்பவளும், இதுவரை திருமணம் ஆகாதவளுமான கன்னிகையை நீ விரும்பவாயாக! உன்னுடைய அந்தப் பங்கு பிறவியினால் ஆகிவிட்டது என்று அறிவாயாக!" என்னும் மந்திரத்தின் பொருள்தான் என்ன?
பித்தலாட்டப் பொருள் சொல்லும் ஆரியர்கள்!
இப்பொழுது சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்! ஆரியப்பிராமணர்கள் சப்பைக்கட்டு கட்டுவதுபோல, இந்தத் தேவர்கள் மணமகளின் தந்தை ஸ்தானத்தில் இருந்து பாதுகாவலர்களாக இருந்திருந்தால், இவர்களுக்கு மணப்பெண்ணின் படுக்கையில் என்ன வேலை?
சோமன், அக்னி, கந்தர்வன் போன்ற தெய்வங்களை மணமகளின் கணவர்கள் என்றுதான் மந்திரம் சொல்கிறது. இவற்றை விட இழிவானது, மணமகளை முப்பது முக்கோடி தேவர்களுக்கும் மனைவியாக்கி, பின்பு புரோகிதம் சொல்லும் ஆரியப்பிராமணனுக்கு மனைவியாக்கி, இத்தனை கயமைத்தனத்துக்கும் மணமகனின் சம்மதம் பெற்று என்றெல்லாம் ஆரியப் பிராமணர்களின் வேதமந்திரங்கள் முழங்கப்படுகின்றன. இம்மந்திரங்களில் சொல்லப்படும் வேத தெய்வங்கள் அனைவரும் ஆரியப்பிராமணர்கள் உருவில் வருவார்கள் என்னும் பித்தலாட்டம் வேறு!
தமிழ் மணமகள் "தெய்வம் தொழாள்!" என்று வள்ளுவர் கூறியதன் காரணம் இதுதான்!
இப்பழக்கத்தைக் கண்டு கொதித்துப்போன திருவள்ளுவர், மணமகளான தமிழ்ப் பெண், இத்தகைய ஆரியப் பிராமணத் 'தெய்வம் தொழாள்(புணராள்)"; அவள் தன்னை மனைவியாக ஏற்றுக்கொண்ட 'கொழுநன் (மட்டுமே) தொழுதெழுவாள்'; கணவனுக்கு மனைவியாகக் கிடைத்த இத்தகைய நிறையுடைய பெண்ணரசி, பயன் கருதாது 'சோ'வெனப் பெய்யும் மழைபோன்ற அன்பின் திருவுருவம் (பெய்யெனப் பெய்யும் மழை) என்று போற்றுகின்றார் வள்ளுவர்.
தெய்வங்களின் பெயரால் நம் பெண்களின் 'நிறை' கெடுக்கும் ஆரியவியல் சடங்கியல்களை உடனே துரத்துங்கள் என்று வள்ளுவர் மறைமொழியாகச் சொன்னதுதான் "தெய்வம் தொழாள்! கொழுநன் தொழுதெழுவாள்!" என்னும் மறைபொருள் பொதிந்த மந்திரமாகும்! அவ்வாறு (தங்களைத்) "தெய்வம் (என்று பொய்யுரைக்கும் ஆரியப் பிராமணர்களைத்) தொழாள்! (தன்னை மட்டுமே மனைவியாக ஏற்றுக்கொண்ட)கொழுநன் தொழுதெழுவாள்! "அத்தகைய பெண்ணே தன் எல்லையற்ற அன்பை கொழுநனுக்கு வரையாது வழங்கும் 'சோ'வெனப் பெய்யும் மழைபோன்ற தேவதை!" என்னும் பொருளில் "பெய்யெனப் பெய்யும் மழை!" என்றும் முழங்கியது இத்திருக்குறள்!
இங்கு 'தொழுதல்' என்பது 'கணவனுடன் கலத்தல்' என்னும் சொல்லுக்கான மங்கல வழக்காகவே திருவள்ளுவர் குறித்துள்ளார் என்ற மறைதிறவு (ரகசியம்) சுவி-சோமசுந்தரனார் விளக்கங்களினால் வெளிச்சம் பெற்ற என் சிற்றறிவுக்குப்படுகின்றது. இவ்விடத்தில் வள்ளுவர் 'தெய்வம் தொழாள்' என்ற சொல்லால் குறித்தது 'சாமி'யை அன்று; ஆசாமியான, நயவஞ்சக ஆரியப்பிராமணப் புரோகிதனையே என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும். திருமணச்சடங்கு என்ற பெயராலும், தெய்வம் என்ற பெயராலும் ஆரியப்பிராமணர்கள் நடத்திவந்த அடாவடித்தனத்தை எதிர்த்தே நேர்மறையில் இக்குறள் எழுதப்பட்டது என்பதை எண்ணும்போதுதான் வள்ளுவர் தந்த இமாலயப் பங்களிப்பின் உயரம் விளங்குகின்றது!
சமற்கிருத வேதமந்திரத்தில் சொல்லப்பட்டவாறு, இத்தகைய பண்பாட்டுச் சீரழிவுகளைத் தமிழகத்தில் ஆரியர்கள் நிகழ்த்தியிருக்க வாய்ப்பில்லை. ஆனால், பெரும்பான்மையான தமிழர்கள் அறியாத ஆரியமொழியில் கீழ்த்தரமான பொருள்கொண்ட மந்திரங்கள் மறைவாக உள்ளன.
இத்தகைய கீழ்த்தரமான செயல்களைச் செய்ய ஆரியர்கள் முனைந்திருப்பார்களேயானால், புலியையே முறத்தால் அடித்துத் துரத்திய தமிழச்சிகள் கொடுக்கும் அடிதாங்க முடியாமல் என்றோ தமிழகத்தைவிட்டு ஓடியிருப்பார்கள்.
தமிழர்கள் அனைவரும் சூத்திரர்கள் என்று ஆரியர்கள் சொல்வதால், தமிழர்களுக்கு வேதக் கல்வி மறுக்கப்பட்டது. கீழ்த்தரமான செயல்களைப் புரியுமாறு கூறும் சமற்கிருத திருமணச் சடங்கியல் வேதமந்திரங்களுக்குப் பொருள் அறியாமல், 'வேதம் நல்லது' என்ற நம்பிக்கையில் ஏற்றுக்கொண்ட தமிழர்களுக்கு, மறைபொருளாக 'தெய்வம் தொழாள்; கொழுநன் தொழுதெழுவாள்" என்று வள்ளுவர் கூறியுள்ளார் என்பது தெளிவு.
திருவள்ளுவர் ஏன் ஆரியவியலை வெளிப்படையாக எதிர்க்கவில்லை?
ஒருவேளை திருவள்ளுவர் ஆரியவியல் சடங்கியல்களுக்கு எதிரான கருத்துக்களை வெளிப்படையாகக் கூறியிருந்தால், திருக்குறளே இவ்வுலகில் இல்லாமல் செய்திருப்பர் ஆரியப் பிராமணர்கள். மன்னர்களிடம் அவர்களுக்கிருந்த எல்லையற்ற செல்வாக்கு அதைச் சாதித்து இருக்கும்.
எங்கும் ஆரியச் சடங்கியல்களை நேராக மறுக்காமல், மறைபொருளாக, ஆரியவியலுக்கு மாறான கருத்துக்களை நேர்மறை குறட்பாக்களில் அமைத்த வள்ளுவரின் கூரிய அறிவார்ந்த தொலைநோக்கு வியக்கத்தக்கது. இமாலய அளவுக்கு மாண்பில் உயர்ந்த உலகப்பொதுமறையான திருக்குறளை மறுக்க முடியாததால், திருக்குறளுக்கு, ஆரியவியல் பொருள் திணித்துச் செரித்து விழுங்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆரியர்கள் உள்ளாகியிருக்கிறார்கள்.
திருப்பதியில் லட்டுக்குப் பதிலாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கேசரி போட்டார் என்று ஒருவனை முட்டாளாக்கும் நகைச்சுவையை ரசிக்கும் தமிழ் உள்ளங்களுக்கு, பரிமேல்அழகர்களும், நாகசாமிகளும் ஏன் திருக்குறளை ஆரிய சாத்திரங்களின் சுருங்கிய வடிவம் என்று நிலைநிறுத்தப் போராடுகிறார்கள் என்பது இப்போது நன்கு விளங்கும்.
ஆரிய வேதமந்திரங்கள் ஓதி திருமணம் செய்விப்பது எத்துணை அவமானமான செயல்!
நம் பெண்களை அவமானப்படுத்தும் சமற்கிருத ஆரிய வேதமந்திரங்களின் பொருள் அறியாமல் நாம் மகிழ்ச்சியுடன் இம்மந்திரங்களைப் பெருமையுடன் ஓதி, திருமணம் செய்விப்பது எத்துணை மானக்கேடான செயல் என்பதை இனியாவது உணர்வோம்!
எத்தனை நூற்றாண்டுகளாக, நம்மை முட்டாளாக்கியிருக்கும் ஆரியச் சடங்கியல் அவமானத்திலிருந்து வள்ளுவர்வழி பற்றி, விரைந்து விடுதலை அடைவோம்.
காற்றில் பறக்கும் உச்சநீதிமன்றத் தீர்ப்பு!
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி பெண்களை சபரிமலைக் கோவிலுக்குள் அனுமதிப்போம், தீர்ப்பை நிச்சயம் நடைமுறைப்படுத்துவோம் என்று கூறிவிட்டு, மற்ற அரசியல்வாதிகளுடன் கைகோர்த்துக்கொண்டு மதவாதிகள் அரங்கேற்றிய பெண்களுக்கெதிரான வன்முறையை முறியடிக்க இயலாமல் கேரள அரசு விழி பிதுங்குமானால், பண்டைக்கால ஆரியப் பிராமணர்களின் மதவாதக் கொடுங்கோன்மை எப்படி இருந்திருக்கும் என்பதை ஊகித்து உணரலாம்.
அரசியல்வாதிகளுக்குப் பெண்கள் பொது எதிரிகள்!
மதவாத அரசியல்வாதிகளுக்கும், மதச்சார்பற்ற பொதுவுடைமை அரசியல்வாதிகளுக்கும் பெண்கள் பொது எதிரிகள் என்பதை மக்களவை, மாநிலங்களவைகளில் பெண்களுக்கான தனி இட ஒதுக்கீடில் இவர்கள் அனைவரும் சேர்ந்து ஆடிய நாடகத்தில் இருந்து வெட்ட வெளிச்சமாகியது.
பரசுராமன் பூமியில் பெண்கள் தீண்டத்தகாதவர்கள்!
இப்போது சபரிமலை வழிபாட்டுரிமையை பெண்களுக்கு மறுக்கும் மதவாதிகளுடன், பொதுவுடமைவாதிகள் கைகோர்த்துக்கொண்டு நடத்திய நாடகம், இவர்கள் அனைவருக்கும் பெண்கள் பொது எதிரிகள் என்பது மீண்டும் நிறுவப்பட்டுள்ளது.
பெண்களை அவமதிக்கும் ஆரியர்கள்!
மாதவிலக்கு வரு பெண்கள் தூய்மையற்றவர்கள், நைஷ்டிக பிரமச்சாரியான சுவாமி ஐயப்பனின் பிரமச்சரியம் இப்பெண்களைக் கோவிலுக்குள் அனுமதித்தால் திருக்கோயில் களங்கப்பட்டுவிடும் என்று கூக்குரலிடும் பரசுராமன் வாரிசுகள் என்று தங்களை அழைத்துக்கொள்ளும் ஆரியபிராமண நம்பூதிரிகளிடம் மண்டியிடும் கேரள அரசின் இரட்டைவேடம் அம்பலமாகியது.
நைஷ்டிக பிரமச்சாரியான அனுமனைப் பெண்கள் இனி வணங்கக்கூடாது என இனி ஆரியப்பிராமணர்கள் உத்தரவு இடலாம்!
இனி, இன்னொரு நைஷ்டிகப் பிரமச்சாரியான அனுமன் கோவிலிலும் விரைவில் மாதவிலக்கு வரும் பெண்களை அனுமதிக்கப் போவதில்லை என்ற புதிய முடிவை ஆரியப் பிராமணர்கள் எடுக்கலாம். சிவன் கோயிலிலும், பெருமாள் கோயிலிலும் உள்ள தூண்களில் காட்சிதரும் நைஷ்டிக பிரமச்சாரியான அனுமன் சிலைகளை, வாஞ்சையோடு வெண்ணெய் சார்த்தி, வலம்வந்து வணங்கும் பெண் பக்தர்கள், இனி அத்தூண்கள் அருகில் செல்ல அநுமதிக்கப்பட மாட்டார்கள் என்னும் அறிவிப்பை ஆரியப் பிராமணர்கள் உலக நலம்கருதி எந்நேரமும் அறிவிக்கலாம்!
'மார்புக்கச்சை' அணிய வரி விதித்த வன்கொடுமை ஆரிய நம்பூதிரிகள்!
கடந்த ஆயிரம் ஆண்டுகளில், ஆரிய நம்பூதிரிப் பிராமணர்கள், திருவாங்கூர் மன்னர்களை, பத்மநாபக் கடவுளின் தாசன், மன்னன் இல்லை என்று அறிவித்து, கடவுளின் சார்பாகச் சொல்லுவதாகக் கூறி, நம்பூதிரிகள் மன்னனை ஆட்டிப்படைத்து நாட்டை ஆண்டனர். ஆரிய நம்பூதிரிகளே அரசை வலியுறுத்தி, ஏனைய பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த பெண்களிடம் 'மார்புக்கச்சு அணிந்துகொள்ள' வரிவிதித்து வன்கொடுமை செய்தனர்.
இவ்வரி, அப்பெண்களின் மார்பகங்களின் அளவுகளைப் பொருத்து விதிக்கப்பட்டது. கேரளத்தின் ஆலப்புழையைச் சார்ந்த நாஞ்ஜெலா என்ற பெண்ணிடம் அடாவடியாக இருமடங்கு 'முலைவரி' வசூலிக்க வந்த திருவாங்கூர் அரசின் வரிவசூலிப்பவர்களிடம், தனது இரு மார்பகங்களையும் கத்தியால் அறுத்துக் கொடுத்துவிட்டு, உயிரை விட்டார். இச்சம்பவம் சேர்த்தலா என்னும் ஊரின் அருகே நடந்து நூறு ஆண்டுகளைக் கடந்துவிட்டன. அவ்வூர் மக்கள் இச்சம்பவம் நடந்த இடத்தை 'முலைச்சிப் பரம்பு அல்லது முலைச்சிபுரம்' என்றழைத்தனர். (காண்க காணொளி: https://www.youtube.com/watch?v=2hVwuToW-Y0https://www.youtube.com/watch?v=NU44GI2l11Y). செல்வாக்குமிக்க ஆரியப் பிராமணர்கள், இப்பெயரை மாற்றிவிட்டார்கள்; இச்சம்பவம் வரலாற்று நூலில் இடம்பெறாமலும் பார்த்துக்கொண்டார்கள். கேரளாவில் ஸ்ரீநாராயணகுருவும், தமிழ்நாட்டில் அய்யா வைகுண்டரும் வீறுகொண்டு போராடி இம்முறையை ஒழித்தனர்.
ஆரிய நம்பூதிரிகளின் சபரிமலை நாடகம்!
'பெண்கள் சபரிமலை சுவாமி ஐயப்பனைத் தரிசிக்கலாம்' என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பை அவமதித்து, கோயிலைப் பூட்டுவோம் என்று மிரட்டிய ஆரிய நம்பூதிரிப் பிராமணர்களின் சங்கம், இப்போது கேரள அரசை மண்டியிட வைத்ததோடு நில்லாமல், 'மறுசீராய்வு மனு'வையும் உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.
திருமேனி என்னும் வெறும்மேனி அடாவடிகள்!
அக்கால கட்டங்களில், திருமேனி என்றழைக்கப்படும் நம்பூதிரியின் முன்பு, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட இனங்களைச் சார்ந்த பெண்கள் மார்பகங்களைக் காட்டிக்கொண்டுதான் நிற்கவேண்டும். மார்பை மறைத்து நின்றால், நம்பூதிரிகளின் திருமேனியை அவமதித்ததாகக் கருதப்பட்டு, கொடும் தண்டனைகள் விதிக்கப்பட்டன.
ஆரிய நம்பூதிரிப் பிராமணன் தான் விரும்பிய பெண்ணை அடையலாம்; அப்பெண்ணின் கணவன் தன் இல்லத்துக்கு வந்த நம்பூதிரியின் செருப்புக்குக் காவலாக இருக்கவேண்டும். நம்பூதிரி இல்லம்விட்டு நீங்கிய பிறகே, அப்பெண்ணின் கணவன் வீட்டுக்குள் செல்ல இயலும் என்ற விதியையும் உருவாக்கினார்கள்.
இம்முறைக்குத் 'தெய்வசம்பந்தம்' என்ற பெயரும் கொடுக்கப்பட்டது. ஒரு பெண்ணுக்கு எத்தனை தெய்வசம்பந்தம் உள்ளது என்பதைப் பொருத்து, அப்பெண்ணின் கணவனுக்குப் பெருமை என்றும் மூளைச்சலவை செய்தனர் ஆரிய நம்பூதிரிகள். இவை அனைத்தும் சநாதன தருமத்தை நிலை நிறுத்துவதற்காகவே என்று சாதித்தனர் ஆரியப் பிராமண நம்பூதிரிகள்!
கேரள ஆரிய நம்பூதிரிகளின் பாலியல் கொடுமைகளிலிருந்து தப்பிக்கவே பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் வேற்று மதங்களுக்குப் பெருமளவில் மாறினார்கள்.
சுவாமி விவேகானந்தா பெண்களை அவமானப்படுத்தும் கேரளத்தைக் கண்டு, "பைத்தியக்காரர்களின் கூடாரம்" என்று மனம் கொதித்துச் சாபமிட்டார்.
அடிமைகளைக் கட்டுப்படுத்துவதைவிட எளிதானது, மூளைச்சலவை அவர்களை செய்வதுதான் என்ற தந்திரத்தை ஆரியப் பிராமணர்கள் கடைப்பிடித்து வருகிறார்கள்.
பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, மலைவாழ் பெண்களை மூளைச்சலவை செய்த ஆரிய நம்பூதிரிகள்!
பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பைச்சார்ந்த பெண்களை மூளைச்சலவை செய்து, அவர்களைகொண்டே, "மாதவிடாய்வரும் 10-50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் சபரிமலைக்கு வந்தால், ஆகமக் கோவிலான சபரிமலை ஐயப்பன் கோவிலின் தூய்மை கெடும், நைஷ்டிக பிரம்மச்சாரியான சுவாமி ஐயப்பனின் பிரம்மச்சரியம் கெடும்" என்று தொலைகாட்சி விவாதங்களில் ஆவேசமாகப் பேச வைக்கிறார்கள் ஆரியப் பிராமண நம்பூதிரிகள்.
பெண்கள் கோவிலுக்குள் அனுமதிப்பதை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மலைவாழ் பெண்களும் இதே கருத்தை ஆவேசமாகக் கூறுகின்றனர். (தொலைக்காட்சி விவாதத்தில் கலந்துகொண்ட மதவாதிகள் சிலர் கூறியதுபோல், சபரிமலை ஐயப்பன் கோவில் ஆகமக்கோயில் அன்று; 'தாந்த்ரீகம்' என்னும் முறைக்கு உட்பட்டது. ஆகம விதிகளின்படி, எந்த ஒரு ஆரியப் பிராமணரும் திருக்கோயில் பூசகராக முடியாது என்பதை அறிதல் நலம்.)
சநாதன தர்மத்தின் உண்மையான நிறத்தை அறிவோம்!
'தாழ்த்தப்பட்ட, பிறபடுத்தப்பட்ட பெண்களுக்கு, சநாதன தருமத்தின் பெயரால் 'முலைவரி' விதித்து வன்கொடுமை செய்த திருவாங்கூர் அரச குடும்பத்தைச் சார்ந்த திருவாங்கூர் அரசியார், சபரிமலையில் பெண்கள் நுழைவது "சநாதன தர்மத்துக்கு விடுக்கப்பட்ட சவால்" என்று இந்நாளில் கூறுவது "இந்தியக் குடியரசின் இறையாண்மைக்கும், பெண்களின் தன்மானத்திற்கும் விடுக்கப்பட்ட சவால்" என்பதைக் கேரள மக்கள் உணரவில்லை என்பது கவலைக்குரியது.
தமிழக ஆகமக்கோயில்களில் ஆரியப்பிராமணர்கள் பூசைசெய்ய இயலாது!
தமிழக 'ஆகமக் கோவில்'களில் ஆரியப்பார்ப்பனர்கள் பூசைசெய்வது ஆகமவிதிகளுக்குப் புறம்பானது என்பதை, திருமூலர் அருளிய தமிழாகமத் திருமுறையான 'திருமந்திரம்' தெளிவாகக் குறிப்பிடுகின்றது. தமிழ்நாட்டில் 'பார்ப்பனர்' என்ற சொல், திருக்கோயில் பூசகர்களான, சிவாச்சாரியார்கள், பட்டாச்சாரியர்கள் என்றழைக்கப்படும் ஆதித்தமிழர்களைக மட்டுமே குறிக்கும்.
ஆரியப் பிராமணர்களைத் திருமூலர் "பேர்கொண்ட பார்ப்பான்' என்றழைத்தார். இச்சொல்லின் பொருள், ஆரியப்பிராமணர்கள் பார்ப்பனர்கள் அல்லர்; ஆயினும், திருக்கோயில் பூசனை செய்வதன்மூலம், ஆன்மீகத்தலைமையைக் கைப்பற்றிவிடலாம் என்னும் பேராசையோடு, ஆரியப்பிராமணர்கள் தங்களையும் "பார்ப்பனர்கள்" என்று அழைக்கத் துணிந்தனர்.
இத்தகைய ஆரியப் பிராமணர்களைத் திருக்கோயில் பூசனை செய்ய அனுமதித்தால், போர்புரிந்து நாட்டைக்காக்கும் வேந்தர்களுக்குப் பொல்லாத வியாதி வரும்; நாட்டில் பெரும் பஞ்சம் வந்து சேரும் என்று சிவபெருமானின் அருள்பெற்ற நந்தியம்பெருமான் ஆராய்ந்து உரைத்துள்ளான். எனவே அத்தகைய தவறுகளைத் தவிர்க்கவேண்டும் என்பது திருமூலர் அருளிய பத்தாம் திருமுறையாம் திருமந்திரம் ஆய்ந்து சொல்கின்றது.
பேர்கொண்ட பார்ப்பான் பிரான்தன்னை அர்ச்சித்தால்
போர்கொண்ட வேந்தர்க்குப் பொல்லா வியாதியாம்
பார்கொண்ட நாட்டுக்குப் பஞ்சமுமாம் என்றே
சீர்க்கொண்ட நந்தி தெரிந்து உரைத்தானே. : திருமந்திரம்-519.
திருமூலர் போன்ற தமிழ்ப் பண்பாட்டுப் புரவலர்களின் வழிகாட்டுதல் மூலம் தமிழகக் கோயில்களும், தமிழர்களும் ஆரியப் பிராமணர்களின் கட்டுப்பாட்டுக்குள் சிக்கி அடிமைபடாமல் தப்பிவிட்டனர். எனவே, நம் அண்டை மாநிலமான கேரளம்போல அல்லாமல், தமிழக சமூக அரசியல், ஆரியப்பார்ப்பனர்களின் தாக்கத்தில் சில-பல மாற்றங்களைச் சந்தித்திருந்தாலும், தமிழ்நாட்டில் வந்தேறிய ஆரியப்பார்ப்பனர்களால் செல்வாக்குடன் வாழ முடிந்ததே தவிர, தமிழர்களை முழுமையாக அடிமைகொள்ள இயலவில்லை.
'மனுசாத்திரம் மற்றும் திருக்குறள் பார்வையில் பெண்ணியம்' குறித்து அடுத்த கட்டுரையில் இன்னும் தொடர்வோம்!
வெள்ளம் போல் தமிழர் கூட்டம்! வீரங்கொள் கூட்டம்! அன்னார்