New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: உலகத் தமிழ் மாநாடு 1968 ஜி.யு.போப், கால்டுவெல் சிலை திறப்பு


Guru

Status: Offline
Posts: 24603
Date:
உலகத் தமிழ் மாநாடு 1968 ஜி.யு.போப், கால்டுவெல் சிலை திறப்பு
Permalink  
 


உலகத் தமிழ் மாநாடு: சென்னை கடற்கரையில் 10 சிலைகள் திறப்பு

 

http://123tamilan.blogspot.com/2011/09/ http://123tamilan.blogspot.com/2011/09/10_07.html

உலகத் தமிழ் மாநாட்டையொட்டி, 2_1_1968 அன்று 10 சிலைகள் திறக்கப்பட்டன. இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு, 1968 ஜனவரி 1, 2, 3 ஆகிய தேதிகளில் சென்னையில் சீரும் சிறப்புமாக நடைபெற்றது. விழாவையொட்டி, 11 தமிழ்ச் சான்றோர்கள் சிலைகள் அமைக்கப்பட்டன.

அவற்றில் அண்ணா சிலை, 1_ந்தேதியன்று சென்னை அண்ணா சாலையில் (ரவுண்டானாவில்) திறந்து வைக்கப்பட்டது. மீதி 10 சிலைகளும் கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்தன. திறப்பு விழா 2_ந்தேதி மாலை 6_30 மணிக்கு நடைபெற்றது. சிலை திறப்பு விழாவுக்காக கடற்கரை காந்தி சிலை அருகே 12 அடி உயர மேடை அமைக்கப்பட்டு இருந்தது.

மேடையில் முதல்_அமைச்சர் அண்ணா, சிலை திறப்பாளர்களும், தலைமை தாங்குகிறவர்களும் உட்கார்ந்து இருந்தார்கள். திருவள்ளுவர் சிலை வழங்கிய நடிகர் சிவாஜி கணேசன், நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன், மேயர் அபிபுல்லாபேக் ஆகியோரும் மேடையில் இருந்தனர்.

முதலில் உலகத் தமிழ் மாநாட்டு அமைப்புச் செயலாளர் பெருமாள் முதலியார் வரவேற்றுப் பேசினார். அதன்பின் அமைச்சர் நெடுஞ்செழியன் தலைமையில் திருவள்ளுவர் சிலையை முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் திறந்தார்.

தொடர்ந்து, அவ்வையார், கம்பர், ஜி.யு.போப், கால்டுவெல், பாரதியார், பாரதிதாசன், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார், வீரமாமுனிவர், கண்ணகி ஆகியோர் சிலைகள் திறக்கப்பட்டன. மேடையின் அருகில் இந்த சிலைகளின் படங்கள் மாட்டப்பட்டு இருந்தன.

ஒவ்வொரு சிலையைச் சுற்றிலும் மின்சார விளக்குகள் பொருத்தப்பட்டு இருந்தன. சிலை திறப்பாளர்கள் ஒவ்வொருவரும் பேசி முடித்ததும், மேஜை முன்னால் உள்ள பொத்தானை அழுத்தினார்கள். உடனே குறிப்பிட்ட அந்த சிலையின் படத்தைச்சுற்றி மின்சார விளக்குகள் எரிந்தன.

அதே நேரத்தில் கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள சிலையின் திரை விலகியது. இப்படியே ஒவ்வொரு சிலையும் திறக்கப்பட்டன. சிலையைத் திறந்தவர்களின் பெயரும், தலைமை தாங்கியவர்களின் பெயர்களும் வருமாறு:_

1. திருவள்ளுவர் சிலை (சிவாஜிகணேசன் வழங்கியது. தலைவர்:_ அமைச்சர் இரா.நெடுஞ்செழியன். திறப்பாளர்:_ கி.ஆ.பெ. விசுவநாதம்)

2. அவ்வையார் சிலை. (சென்னை நகரசபை வழங்கியது. தலைவர்:_ அமைச்சர் சத்தியவாணிமுத்து. திறப்பாளர்:_ எஸ்.எஸ்.வாசன்)

3. கம்பர் சிலை. (கோவை மாவட்ட மக்கள் வழங்கியது. தலைவர்:_ அமைச்சர் ஏ.கோவிந்தசாமி. திறப்பாளர்:_ பழைய முதல்_மந்திரி பக்தவச்சலம்)

4. ஜி.யு.போப் சிலை. (தென்னிந்திய திருச்சபை வழங்கியது. தலைவர்:_ சட்டப்பேரவைத் தலைவர் சி.பா.ஆதித்தனார். திறப்பாளர்:_ பிஷப் நியூபிகின்)

5. கால்டுவெல். (தென்னிந்திய திருச்சபை வழங்கியது. தலைவர்:_ மேல்_சபைத் தலைவர் மாணிக்கவேலர். திறப்பாளர்:_ பன்மொழிப்புலவர் கா.அப்பாத்துரையார்)

6. பாரதியார் சிலை. (சென்னை நகரசபை வழங்கியது. தலைவர்:_ அமைச்சர் மாதவன். திறப்பாளர்:_ நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை)

7. பாரதிதாசன் சிலை. (சென்னை நகரசபை வழங்கியது. தலைவர்:_ அமைச்சர் முத்துசாமி. திறப்பாளர்:_ மு.வரதராசனார்)

8. கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் சிலை. (சென்னை நகரசபை வழங்கியது. தலைவர்:_ உணவு அமைச்சர் மதியழகன். திறப்பாளர்:_ பி.டி.ராஜன்)

9. வீரமாமுனிவர் சிலை. (மைலாப்பூர் ஆர்ச் பிஷப் வழங்கியது. தலைவர்:_ சுகாதார அமைச்சர் சாதிக்பாட்சா. திறப்பாளர்:_ ஆர்ச் பிஷப் அருளப்பா)

10. கண்ணகி சிலை. (தமிழக ஆசிரியர்கள் _ மாணவர்கள் அளித்தது. தலைவர்:_ பொதுப்பணித்துறை அமைச்சர் மு.கருணாநிதி. திறப்பாளர்:_ ம.பொ.சிவஞானம்)

முடிவில் தமிழக அரசு தலைமை செயலாளர் சி.ஏ.ராம கிருஷ்ணன் நன்றி தெரிவித்துப் பேசினார். விழா முடிந்ததும் அண்ணாவும், மற்ற தலைவர்களும் ஒவ்வொரு சிலை வைக்கப்பட்டு இருக்கும் இடத்திற்கும் சென்று வணக்கம் செலுத்தினார்கள்.

விழாவைக்காண கடற்கரையில் திரளான கூட்டம் கூடியிருந்தது. கூட்டத்தின் எண்ணிக்கை 3 லட்சத்திற்கும் அதிக மாக இருக்கும் என்று ஒரு பிரமுகர் மதிப்பிட்டார். அமைச்சர்களின் குடும்பத்தினரும், சினிமா நடிகர்_ நடிகைகள் பலரும் விழாவைக்காண வந்திருந்தனர்.

விழா முழுவதும் சினிமா படமாக எடுக்கப்பட்டது. உலகத் தமிழ் மாநாடு தபால் தலை வெளியிடுவது நிறுத்தப்பட்டது உலகத் தமிழ் மாநாட்டையொட்டி, ஒரு தபால் தலை வெளியிடவேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசாங்கம் கேட்டுக்கொண்டது.

அதன் பேரில் மத்திய அரசு ஒரு தபால் தலை வெளியிட சம்மதித்தது. ஆனால், இந்த தபால் தலையில் ஒரு எழுத்துக் கூட தமிழில் இல்லை. இந்தி எழுத்துக்களே பொறிக்கப்பட்டு இருந்தன. இந்த தபால் தலை வெளியீட்டு விழா 3-1-1968 அன்று பல்கலைக்கழக தேர்வு மண்டபத்தில் நடைபெறுவதாக இருந்தது.

ஆனால் தபால் தலை வெளியிடுவது நிறுத்தப்பட்டது. ``மாநாட்டையொட்டி வெளியிடப்பட இருந்த தபால் தலையை வெளியிடாமல் நிறுத்தவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது'' என்று முதல்-அமைச்சர் அண்ணா அறிவித்தார்.

இது குறித்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

``விழாவின் புனித தன்மையை களங்கப்படுத்தும் விதத்தில் இந்த தபால் தலை இருக்கிறது. மாநாட்டுக்கு வந்து இருக்கும் பிரதிநிதிகளுக்கு இது வேதனை உண்டாக்கும். ஆகவே தபால் தலை வெளியிடுவது நிறுத்தப்பட்டு விட்டது.

இவ்வாறு அண்ணா கூறினார்.

உலகத் தமிழ் மாநாட்டு தபால் தலை வெளியிடுவது ரத்து செய்யப்பட்டது பற்றி தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சி.சுப்பிரமணியம் கருத்து தெரிவித்தார்.

``யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற சொற்களை தமிழில் பொறித்து இருக்கவேண்டும். தமிழ் மாநாட்டையொட்டி வெளியிடப்படுகின்ற தபால் தலையில், தமிழ் இருக்கவேண்டும். அப்படி இல்லாததால் தபால் தலையை வெளியிடாதது சரிதான்'' என்று சி.சுப்பிரமணியம் தெரிவித்தார்.
 


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard