உலக வரலாற்றில் தொன்மைச் சமுதாயமாய் விளங்கிய இந்திய நாட்டிலுள்ள தமிழகப் பகுதிகளைப் பற்றிய ஆய்வுகளும் பலவாறாக ஆராயப்பட்ட வருகிறது. இச்சூழலில், தமிழகத்தின் முதல் இலக்கண நூலான தொல்காப்பியத்தின் வழி பண்டைய கால சமுதாயக் கட்டமைப்பு முறைகள், போர் முறைகள் தவிர்த்த சூழல்கள் எப்படியிருந்தன? சமுதாயத்தின் பின்புலங்கள், எப்படிப்பட்டவையாக இருந்திருக்கின்றன? என்பதை ஆராயும் விதமாக இக்கட்டுரை அமைகிறது.

சமுதாயம்

        tholkaapiyam 400    மனித குரங்கு மனிதனாக மாறிய வரலாற்றுச் சகாப்தத்திற்குப் பின்னர், கூட்டமைப்பு வாழ்வை மேற்கொண்ட மனிதக் குழுக்கள், உணவுக்காகப் பெரும் போராட்டத்தைச் சந்தித்தன. உணவுப் பற்றாக்குறையால் பல்வேறு குழுக்களுக்கிடையே  ஓயாது சண்டைகள் நிகழ்ந்தன. இக்குழுக்களில் தலைமைகள் உருவாகினர். தலைமைகள் குழுக்களைக் கட்டுப்படுத்தத் தொடங்கினர். நாளடைவில் மக்களை அடிமைகளாக்கி ஆளத்தொடகினர். இச்சூழ்நிலையை,

  “புராதன சமுதாயம் சிதைவுற்று, உற்பத்தியாளர்களுக்குத் தேவையானதற்கு  உபரியாய் இருந்த, உற்பத்தியாளர்களுடைய உழைப்பால் பொருட்களைத் தோற்றுவிக்க முடிந்த பிற்பாடு தான் சுரண்டல் தலை தூக்கிற்று” (ப. 20, லெவ் லியோண்டிவ்) அது முதல் பொருளியல் ஒடுக்கு முறையை உடைமை வர்க்கம் செலுத்தி அரசு, படைப்பிரிவு ஆகியவற்றை உருவாக்கியது.

“வரலாறு கண்டிருக்கும் ஐந்து அடிப்படை உற்பத்தி முறைகள் வருமாறு: புராதன சமுதாய (Primitive-Communal) அமைப்பு, அடிமையுடைமை (Slave-Owing) அமைப்பு, பிரபுத்துவ (Feudal) முதலாளித்துவ அமைப்பு (Capitalist) (பக். 5 லெவ் லியோண்டிவ்) மற்றும் ஏகாதிபத்திய அமைப்பு ஆகும். இத்தகைய அமைப்பு முறைகளே வரலாறு கண்டிருக்கும் சமுதாய அமைப்பு முறைகளாகும்.

            புராதன அமைப்பானது வர்க்கப் பிரிவினை இல்லாதச் சமுதாயமாக இருந்தது. இவ்வமைப்பிற்குப் பின்னர் ஏற்பட்ட அடிமையுடைமை அமைப்பில் அடிமை முறை நிலை கொண்டது. பிரபுத்துவ அமைப்பு முறையானது பொருளாதார ஒடுக்குமுறையை அடித்தளமாக்கி, பின்னர் அதன் கூறுகளாக பல்வேறு வகையான ஒடுக்குமுறைத் தளத்தினை விரிவுபடுத்தி இனம், பால், மொழி, சாதி போன்ற பல்வேறு நிலைகளில் மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை நிகழ்த்தியதை அறிய முடிகிறது. இத்தகைய கட்டமைப்பு முறையே தொல்காப்பியக் காலச் சமுதாயத்தில் நிலவி வந்துள்ளதை உணர முடிகிறது.

தொல்காப்பியர் காலச் சமுதாயம்

            பொருளியல் சார்ந்த ஒடுக்குமுறைகள் நிலை பெற்று, அதன் கூறான குலம் சார்ந்த ஒடுக்குமுறைகளும் நிகழ்ந்துள்ளதை, அந்தணர், அரசர், வணிகர், வேளாளர்களின் தொழில் ரீதியான உறவு முறைகளின் அடிப்டையில் அறிய முடிகிறது. இதன் மூலம் ஏற்றத் தாழ்வு மிகுந்த, வர்ணாசிரமக் கோட்பாடுகளின் அடிப்படையில், மன்னர் சமுதாயக் கட்டமைப்பு நிலை கொண்டிருந்ததைக் காண முடிகிறது.

            அதிகாரத்தில் இருந்தோர்களின் வாழ்வியல் முறை செயல்பாடுகளையே தொல்காப்பியம் முன்னின்று கூறி செல்கிறது. உயர்ந்தோர், தாழ்ந்தோர் இவர்களின் நிலையை வெளிப்படுத்தியும், தலைமைகளின் காதல் வாழ்க்கை, திருமணம்-திருமண முறைகள், இந்நிகழ்வுகளில் அவர்களின் கூற்றுக்கள், அதற்கு துணை புரிந்தவர்கள் முதல், போர்மரபுகள், நிலையாமை கருத்துக்கள் வரை வெளிப்படுத்துகின்றன.

1.உடைமை வர்க்கமும், வர்ணாசிரமக் கோட்பாடுகளின் வெளிப்பாடுகளும்

            மக்கள் பெருக்கம், சமுதாயத்தின் வேலைப் பிரிவினைக்கு அவசியமாய் அமைந்தன. உற்பத்திப் பண்டங்கள் பெருக, பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டதும் இந்நிலை வளர்ந்தது.

            “உற்பத்திப் பண்டங்கள், கடமைகள் வேலைகள் ஆகியவை பல்வகைப்பட்டவையாக வளர்ந்த காரணத்தால், ஆரிய கம்யூனுக்குள் வேலைப் பிரிவினைத் தொடங்கியது. முழு கம்யூனின் உறுப்பினர்கள் வேறுபட்டு, வெவ்வேறு வேலைகளுடன் பிணைக்கப்பட்டு வர்ணங்களாக உருப்பெறுகின்றன” (எஸ்.ஏ.டாங்கே, பக். 118)

            வர்ணப் பாகுபாடு மிகுந்த வளர்ச்சியடைந்த தொல்காப்பியர் கால தமிழகத்தில் “அந்தணர்கள்” அதிகார தலைமைகளாக இருந்துள்ளனர். ஓதல், தூது ஆகிய இரு தொழில்களும் இவர்களுக்குரியதாக இருந்ததை, “ஓதலும், தூதும் உயர்ந்தோர் மேன” (தொல். அகம். 28) என்ற பாடல் சுட்டுகிறது. இத்தொழில்களை உடையவர்களே உயர்ந்தவர்கள் என்று அந்தணர்களை குறிப்பிடுவதைக் காணலாம்.

            “உயர்ந்தோர் பொருள் வயின் ஒழுக்கத்தான” (தொல். அகம். 36) என்று – ஒழுக்கமே இவர்களின் பொருளாகவும், “வேண்டிய கல்வி யாண்டுமுன் றிறவாது” (தொல். கற்பு. 186) என்று கல்வி காரணமாக பிரிவு காலமானது, 3 ஆண்டுகள் ஆகும் என்பதையும் குறிப்பிடுகிறது. “அந்தணாளர்க் கரசுவரை வின்றே” (தொல். மரபு. 627) என்று அரசியல் பூண்டொழுகலும் விலக்கப்படாது என்றும் குறிப்பிடுகிறது. மேலும் அந்தணர்களுக்குரிய பொருட்களாக, “நூலே கரகம் முக்கோல் மணையே / ஆயுங் காலை அந்தணர்க் குரிய” (தொல். மரபு. 615)

நூல், கரகம், முக்கோல், மணை ஆகியவற்றை ஆராயுமிடத்து இவைகள் அந்தணர்க்குரியவை என்றும் குறிப்பிடுகிறது. இதன் மூலம் பண்டைய சமுதாயத்தில் அந்தணர்களே உயர்ந்தோராகவும், அதிகாரத்தில் முதன்மையானவர்களாகவும் இருந்திருப்பதை அறிய முடிகிறது.

அரசர்

            அந்தணர்களுக்கு அடுத்த அதிகார பீடத்தில் இருந்தோர்கள் வேந்தர்களாக இருந்திருக்கின்றனர். இவர்களுக்குரிய தொழிலாக போர்த் தொழிலே இருந்துள்ளது.

“தானே சேறலும் தன்னொடு சிவணி, / ஏனோர் சேறலும் வேந்தன் மேற்றே” (தொல். அகம். 29) என்ற பாடல், வேந்தன் தானே செல்லுதலும், ஏனையோருடன் வேந்தன் செல்லுதலுமாககிய, போர்த் தொழிலே, வேந்தனுக்கு உரியது என்றும், “வேந்துறு தொழிலே யாண்டினது அகமே” (கற்பு. 187) என்று ஓராண்டிற்கு உட்படவே இத்தொழில் அமையும் என்பதையும் குறிப்பிடுகிறது. மேலும்,

“படையுங் கொடியுங் குடியும் முரசும்

நடை நவில் புரவியும் களிறுந் தேறும்

தாரும் முடியும் நேர்வன பிறவும்

தெரிவுகொள் செங்கோல் அரசர்க்குரிய” (தொல். மரபு. 616) என்று படை, கொடி, குடி, முரசு, குதிரை, களிறு, தேர், தார், முடி ஆகிய ஒன்பதையும் வேந்தர்க்கு உரிய பொருட்களாகக் குறிப்பிடுவதைக் காண முடிகிறது.

            அந்தணர்க்குரிய பொருட்கள் சில, அரசர்க்கு உரியனவாக வரும் என்றும், அரசர்க்கு உரியன, அந்தணர்களுக்கும் வரும் என்றும், மரபியல் நூற்பாக்கள் 616, 617 ஆகியன குறிப்பிடுகின்றன. இதன் மூலம் இவர்கள், அதிகாரப் பீடத்தில் இருந்துள்ளதையும், அந்தணர்கள் கட்டமைப்பில் வாழ்ந்திருக்கின்றனர் என்பதையும் அறிய முடிகிறது.

வணிகர் குலம்

            வைசிகர்கள் வாணிகத்தினால் வாழும் வாழ்க்கையை உடையவர்களாக இருந்திருக்கின்றனர். இதனை, “வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை” (தொல். மரபு. 622) என்றும், மேலும்,

“மெய்திரி வகையின் எண்வகை உணவின் / செய்தி வரையர் அப்பா லானே” (தொல். மரபு. 623) என்று “எண்வகை உணவான நெல், காணம், வரகு, சிறுங்கு, திணை, சாமை, புல்லு, கோதுமை (புலியூர் கேசிகன், பக். 451) ஆகிய உணவுகளை செய்து விளைவித்தலும் இவர்களது கடனாகும் என்றும் கூறுவதை காண முடிகிறது.

“கண்ணியும் தாரும் எண்னிர் ஆண்டே” (தொல். மரபு. 624)

என்ற நூற்பா இவர்களுக்குரியப் பொருட்களாக கண்ணி, தார் – எனவும் குறிப்பிடுகன்றன. இதன் மூலம் இவர்கள் வணிகத் தொழிலில் ஈடுபட்டதையும், வேந்தனின் ஏவல் வழியில் வாழ்ந்திருப்பதையும் அறிய முடிகிறது.

வேளாளர்

            மேற்கூறிய மூவர்க்கும் கீழ்நிலையில் இருந்த வேளாளர்களை,

“வேளாண் மாந்தர்க்கு உழுதூண் அல்லது / இல்லேன மொழிப பிறவகை நிகழ்ச்சி” (தொல். மரபு. 625)

என்று வேளாளர்களுக்கு உழுதூண் வாழ்க்கையே உண்டு என்றும், பிற வகையான நிகழ்வுகள் ஏதுமில்லை எனவும் வெளிப்படுத்துகிறது. இவர்களுக்கு உரியப் பொருட்களாக,

“வேந்துவிடு தொழிலிற் படையுங் கண்ணியும் / வாய்ந்தன ரென்ப வவர்பெறும் பொருளே” (தொல். மரபு. 626) என்று, வேந்தரால் ஏவப்பட்ட தொழிலினாளே, படையும், கண்ணியும் வேளாண் மாந்தர்க்கு உரியப் பொருட்களாக, மேற்கூறிய பாடல்கள் குறிப்பிடுவதைக் காண முடிகிறது.

அரசரால், வணிகர், வேளாளர் பெரும் பொருட்கள்

அரசரின் ஏவல் வழி செல்லுபவர்கள் வணிகரும், வேளாளரும் ஆவர்-என்தை, “மன்னோர் பாங்கின் பின்னோர் ஆகுப” (தொல். அகம். 34) என்றும், அரசரால் இருவரும் பெருகின்ற பொருட்களாக, “வில்லும் வேலும் கழலும் கண்ணியும்/தாரும் ஆரமும் தேரும் மாவும்/மன்பெரு மரபின் ஏனோர்க்கு முரிய” (தொல். மரபு. 628) என்று வில், வேல், கழல், கண்ணி, தார், மாலை, தேர், மா, ஆகிய படைப் பொருட்களை பெற்றவர்கள் என்பதையும் விளக்குகிறது. இப்பொருட்கள் அனைத்தும் போர் தளவாடப் பொருட்களாக இருப்பதால் வேந்தரின் ஏவல் வழி, இப்பொருட்களைப் பாதகாப்பது முதல், படை தளபதிகளாகக் கூட இவர்கள் இருந்திருக்க வாய்ப்பிருக்கிறது என்று கருத இடமுண்டு.

            அக்கால சமுதாயத்தில் 4 வர்ணத்தாரில் கீழ்நிலையில் இருந்த வணிகர், வேளாளர் – குலங்களிலே ஏனைய மக்கள் இழிநிலையினராகப் பண்டைய தமிழகத்தில் கருதப்பட்டிருக்கின்றனர். இதனை, “அன்ன ராயினும் இழிந்தோர்க் கில்லை” (தொல். மரபு. 629) என்ற நூற்பாவானது இழிந்தோர்களுக்கு, வணிகர், வேளாளர்களில் உயர்ந்த இடத்தில் இருந்தவர்களுக்கு உரிய தகுதிகள் அக்குலங்களிலேயே உள்ள ஏனையோர்க்கு இல்லை எனவும் குறிப்பிடுவதன் மூலம் அறிய முடிகிறது.