New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பண்டைய இசைத்தமிழ் - கணியன் பாலன்


Guru

Status: Offline
Posts: 24603
Date:
பண்டைய இசைத்தமிழ் - கணியன் பாலன்
Permalink  
 


 பண்டைய இசைத்தமிழ் - 1

நல்லிசை நிறுத்த நயம்வரு பனுவல்

தொல்லிசை நிறீஇய உரைசால் பாண்மகன்

எண்ணுமுறை நிறுத்த பண்ணி னுள்ளும்

புதுவது புனைந்த திறத்தினும்                        -அகம்: 352, வரி: 13-16.

           murasu 300 பண்டைய காலத்திய பாண்மகன் நல்லிசைகளை நன்கு வரையறுத்துணர்த்திய இசைநூலின்கண் கூறப்பட்ட முறைகளையெல்லாம் நன்கு உணர்ந்து நிலை நிறுத்திப்பண்கள் செய்ததோடு அவற்றிலுள்ள இராகத்திறங்களைப் புதுவதாகப் புணைந்தான் என்கிறார் அஞ்சியத்தை நாகை என்கிற கி.மு. 3ஆம் நூற்றாண்டுகால அகநானூற்றுப்புலவர். இவர் அதியமானின் உறவினர். அன்றே நல்லிசைகளை நன்கு வரையறுத்துணர்த்திய இசைநூல் இருந்தது என்பதையும், பண்ணும் திறமும் நன்கு அறியப்பெற்று வழக்கிழிருந்தன என்பதையும் அறிய முடிகிறது.

            தமிழ் இசை இலக்கிய வரலாறு, தமிழ் இசை இலக்கண வரலாறு ஆகிய இருபெரும் நூல்களை(இரண்டும் சேர்ந்து சுமார் 1500 பக்கங்கள்) மு. அருணாசலம் அவர்கள் எழுதியுள்ளார்.

            “இசைத்தமிழ்தான் இந்தியாவின் ஆதி இசை; வடமொழியில் இருப்பதெல்லாம் இசைத்தமிழ்தான்; பிற்காலத்தில் தான் வேற்றிசைகள் உருவாகி வளர்ந்தன; பரதாசாரியரின் பரதநாட்டிய சாத்திரம் தமிழ் மரபிற்கே உரிய முத்திரையை அடிப்படையாகக்கொண்டது; பரதர் தமது வடமொழி நூலில் இது தட்சிணாத்தியமாகிய தென்னாட்டு நெறி எனக் கூறியுள்ளதால் அது தமிழர் நெறியே; தமிழ்ப்பரதமே வடமொழியில் பெயர்க்கப்பட்டுள்ளது; மேலும் தமிழ்நாடு கலைகளின் பிறப்பிடம்; கலைகளின் புராதனத் தொன்மையும் அவற்றின் சான்றுகளும், சாத்திர அடிப்படையிலான மூல கலைநெறிகளும் தமிழகத்தில் மட்டும்தான் உண்டு; இந்தியாவின் பிற இடங்களில் அவைகள் இல்லை; கலைகளுக்கு மூலமாய் அமைந்த சாத்திர நெறிகள் அனைத்தும் ஆகமங்களில்தான் உண்டு; ஆகம நெறிகள் தமிழர் நெறிகளே அன்றி வடபுலத்துக்கு உரியன அல்ல: வேதவழிபாடும் வேள்வி வழிபாடும் ஆகுதி வழிபாடே ஒழிய உருவ வழிபாடு அல்ல;

            ஆகமங்களின் அடிப்படையிலான சிற்ப, சாத்திர வழிபாடுகள் தமிழர் நெறி சார்ந்தவை; இந்த ஆகமங்கள் தமிழ்ச் சான்றோர்களால் வடமொழியில் ஆக்கப்பட்டுள்ளன; அவை மூலாகமம்-28, உபாகமம்-127 எனக் கடல்போன்ற பரந்த நூற்பரப்புடையவை; அதுபோன்ற ஒரு சாத்திர அடிப்படையிலமைந்த கலைதான் தமிழிசைக்கலை; தமிழரின் கலையும் பண்பாடும் ஆரியமயமாக்கப்பட்டதோடு, ஆரியத்திற்குரியது எனச்சொல்லும் அறியாமை இருக்கிறது; சாமகானம் மட்டுமே இருந்த வடமொழியில் சாத்திர நெறிப்பட்ட இசை இல்லை என்பதால் வடமொழிவாணர்களின் இசை இலக்கண நூல்களுக்கு எல்லாம் மூலமாக இருந்தது தமிழ்ச் சாகித்தியம்தான்; கருநாடக இசை என்பது இசைத்தமிழ்தான் என அவர் இங்கு குறிப்பிட்ட பலவற்றையும் இந்நூல்களின் மூலம் நிறுவுகிறார்”

            என இந்த இருபெரும் நூல்களையும் தொகுத்து வெளியிட்ட உல. பாலசுப்பிரமணியன் அவர்கள் தனது பதிப்புரையில் குறிப்பிட்ட ஒருபகுதி கருத்தின் சுருக்கத்தை நான் இங்கு தந்துள்ளேன். ஆகமங்கள் வடமொழியில் இருப்பதால் அவைகளை வடநாடு சார்ந்ததாகக் கருத இயலாது. தமிழில் இருந்த ஆகமங்கள்தான் பிற்காலத்தில்(கி.பி. 6ஆம் 7ஆம் நூற்றாண்டுகளில்) வடமொழியில் ஆக்கப்பட்டன. அதில் பல இடைச்செருகல்களும், பிற் சேர்க்கைகளும், திருத்தங்களும் ஏற்படுத்தப்பட்டன. சிற்ப சாத்திர வழிபாடுகள் தென்னிந்தியாவிலும் அதனை ஒட்டியுள்ள மராட்டிய ஒரியப் பகுதியிலும் மட்டுமே உண்டு. வட இந்தியாவில் இந்த சிற்ப, சாத்திர வழிபாடுகள் இல்லை. தமிழகமே இதற்கான மூலம் ஆகும். மேலே கண்ட இரு இசை நூல்களில் தரப்பட்டுள்ள பண்டைய சங்ககால இசைத்தமிழ் பற்றிய செய்திகளை இங்கு நான் கீழே சுருக்கித் தந்துள்ளேன்.

தொல்காப்பியம்:

            தொல்காப்பியம் இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழில் இயலை மட்டுமே பேசுகிறது. ஆதலால் இசை குறித்து தொல்காப்பியத்தில் அதிகம் சொல்லப்படவில்லை. எழுத்துக்களின் ஓசையளவைக்கூறும்பொழுது உயிரெழுத்துக்களும், மெய்யெழுத்துக்களும் இசையோடு பொருந்திவரும் பொழுது அவ்வெழுத்துக்கள் தமக்கியல்பாக உரிய ஓசையினும்மிகுந்து ஒலிக்கும் என்கிறார் தொல்காப்பியர்-(1). ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, பரிபாடல் ஆகிய நால்வகை பாக்களுள் கலிப்பாவும், பரிபாடலும் இசைத்தமிழுக்குச் சிறப்பாய் உரியன. இசைத்தமிழானது இசைத்தமிழுக்கே உரியதாக வரும்பொழுது செந்துறை மார்க்கம் எனப்படும். இசைத்தமிழுக்கும் நாடகத்தமிழுக்கும் உரியதாக வரும்பொழுது வெண்துறை மார்க்கம் எனப்படும். தொல்காப்பியர் இலக்கணம் கூறும் பலவகை கலிப்பாக்களுக்குள் ஒத்தாழிசைக்கலிப்பா ஒன்று.

            தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம் முதலிய அதன் உறுப்புகளுக்கு அவர்தரும் விளக்கம் பிற்காலத்தைய இசைப்பாட்டின் அமைப்போடு ஒற்றுமை கொண்டுள்ளது. தொல்காப்பியர் செய்யுளுக்குரிய எட்டு வனப்புகள் குறித்துக் குறிப்பிட்டுள்ளார். அவைகளின் பொருளும் கருத்தும் இன்று மறைந்து விட்டன. எனினும் பிற்காலத்து உரையாசிரியர் தரும் விளக்கங்களிலிருந்து புலன் என்ற வனப்பு நாடகத்தமிழாகிய வெண்துறை மார்க்கத்தையும், இயைபு என்ற வனப்பு இசைத்தமிழாகிய செந்துறை மார்க்கத்தையும் சுட்டும் எனலாம். தொல்காப்பியர் குறிப்பிடும் ‘பண்ணத்தி’ என்பது இசைப்பாட்டு ஆகும் அதன் இலக்கியங்கள் தான் சிற்றிசை, பேரிசை என்பனவாகும். தேவபாணி என்பது பண்டைக்காலத்தில் தெய்வத்தைப் போற்றும் இசைப்பாட்டு ஆகும். பாட்டுமடை, வஞ்சிப்பாட்டு, மோதிரப்பாட்டு, கடகண்டு முதலியனவும் இசைப் பாட்டுக்கள்தான். ஆனால் அவை இன்று இல்லை. செய்யுள்களில், வண்ணம் என்கிற இசைக்குரிய ஒரு தன்மையை தொல்காப்பியர் 20 வகையாகப் பாகுபாடு செய்துள்ளார்.

            அவை பதிற்றுப்பத்தில் மட்டுமே உள்ளது. அதன் கருத்தும், பொருளும் இன்று மறைந்துவிட்டன. அவ்வண்ணம், பிற்காலத்திய சந்தப்பாடல் என்பதைக் குறிக்கவில்லை. வனப்பு, வண்ணம், பண்ணத்தி போன்றவற்றின் இசை சார்ந்த விளக்கங்கள் இன்று மறைந்துவிட்டன. அனைத்துப் பண்டைய இசைப் பாட்டுக்களும் சிற்றிசை, பேரிசை போன்ற அனைத்து இசை நூல்களும் மறைந்துவிட்டன. இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழில் ‘இயல்’ பிரிவில் சில பகுதிகளே கிடைத்துள்ளன. பிற இல்லாது மறைந்துபோயின. இவை மறைந்து போனதற்கு கி.பி. 3ஆம் நூற்றாண்டு முதல் தமிழகத்தில் நிலவிய 300 ஆண்டுகால களப்பிரர் ஆட்சியே காரணம் என மு. அருணாசலம் அவர்கள் கருதுகிறார். களப்பிரர் ஆட்சிக்காலத்தில் செல்வாக்கு பெற்ற சமண, பௌத்த மதங்களும், கி.பி. 3ஆம் நூற்றாண்டு முதல் இந்தியா முழுவதும் உருவான வைதீகச் சார்பான சமற்கிருதமயமாக்கலும் மிக முக்கியக் காரணம் என்பதை இங்கு சேர்த்துக்கொள்ளலாம்.

பத்துப் பாட்டுக்கள்:

            திருமுருகாற்றுப்படையில் ‘முருகியம்’ என்கிற சிறப்பு இசைக்கருவி பேசப்படுகிறது. பத்துப்பாட்டினுள் திருமுருகாற்றுப்படை தவிர்த்த ஏனைய நான்கு ஆற்றுப்படைகளும் யாழைத்திருத்தமாகப் பேசுகின்றன. இந்த நான்கினுள் பொருநராற்றுப்படை மிகவும் திருத்தமாக யாழ் உறுப்புகளை உவமைகூறி விளக்குகிறது. பாலையாழ் கொண்டு தேவபாணிகளைப் பாடுவது பொருநராற்றுப்படையில் சொல்லப்படுகிறது. பொருநர் என்போர் யாழுடன், ‘தடாரி’ என்கிற பறையைக் கொண்டுள்ளனர். ஏர்க்களம் பாடுவோர், போர்க்களம் பாடுவோர் என்கிற இருவகைப்பொருநர்கள் இருந்தனர். கொம்பு ஊதி இசை எழுப்புவோர் ‘கோடியர்’ எனப்படுகின்றனர். பலவகையான கொம்புக்கருவிகள் இருந்ததால் அவர்கள் பல்லியக் கோடியர் எனப்பட்டனர். ‘வயிர்’ என்கிற ஊதுகருவியை இசைக்கிற கூத்தர் வயிரியர் எனப்பட்டனர். சிறுபாணாற்றுப்படையில் தும்பி ‘காமரம்’ பாடுகிறது(76,77). ‘காமரம்’ என்பது ‘சீகாமரம்’ என்கிற பண் ஆகும். இந்தச் சீகாமரம் என்பது தேவாரங்களில் பயிலும் பண் ஆகும்.

            பெரும்பாணாற்றுப்படையில் உருத்திரங்கண்ணனாரும், பொருநராற்றுப் படையில் முடத்தாமக்கண்ணியாரும் முழுமையாக யாழாகிய இசைக் கருவியை அதன் உறுப்புகளுக்குப் பல உவமைகளைக்கூறி நன்கு விளக்கியிருப்பது அக்காலத்து இயற்புலவர்கள் கூட இசைத்திறன் அல்லது இசை அறிவு மிகுதியாகப் பெற்றிருந்தார்கள் என்பதையும் பொதுவாகச் சமூகத்தில் இசை அறிவு மிகுந்திருந்தது என்பதையும் அறிய முடிகிறது. இதில் முடத்தாமக்கண்ணியார் பெண்பாற் புலவர் ஆவார். இவர்களின் காலம் கி.மு. 2ஆம் நூற்றாண்டு ஆகும். வேய்ங்குழலில் பாலைப்பண்ணும், வில்யாழில் குறிஞ்சிப்பண்ணும் வாசிக்கப்படுவதை பெரும்பாணாற்றுப்படை பேசுகிறது. மதுரைக்காஞ்சியில் யாமம் தோறும் இசைகள் வேறுபடுகின்றன என்பதும், அதற்கேற்ப முழவுகள் தாழ்ந்து ஒலிக்கின்றன என்பதும் பேசப்படுகிறது(559-560). பட்டினப்பாலையில் குழல் அகவுகின்றது, யாழ் முரலுகின்றது, முழவு அதிர்கின்றது, முரசு இயம்புகின்றது(155 - 158).

            மலைபடுகடாமில், கூத்தர் பலவகை வாத்தியங்களை ‘கலப்பை’ என்கிற பையில் எடுத்துச் செல்கின்றனர். மத்தளங்கள், கஞ்சத்தாளம், ஊதுகருவி, நெடுவங்கியம் எனும் தூம்பு, குறிய தூம்பு, குழல், எல்லரி என்கிற தாளக்கருவி(சல்லிகை), பதலை, பேரியாழ் போன்ற கருவிகள் அதில் உள்ளன. பேரியாழின் திவவு, நரம்பு, பச்சை, உந்தி, மருப்பு முதலியன மலைபடுகடாமில் விளக்கப்படுகின்றன(21-37). இந்தப்பத்துப் பாட்டுகளில் காணும் விளக்கத்தையும் சிலப்பதிகாரத்தையும் வைத்துத்தான் விபுலானந்த அடிகள் ‘யாழ்நூல்’ என்ற பெருநூலைச் செய்தார். அக்காலத்தில் இயற்புலவர்களும் இசையை நன்கு அறிந்திருந்தார்கள் என்பதைப் பத்துப் பாட்டுகள் உறுதிப்படுத்துகின்றன.

எட்டுத்தொகை நூல்கள்:

அகநானூறு:

            அகநானூறில் யாழ், தண்ணுமை, துடி, தூம்பு, முரசு, முழவம், சில்லரி, தெண்கிணை, குழல் ஆகிய கருவிகள் பேசப்படுகின்றன. நகரங்களுள் முழவு எந்நேரமும் வெவ்வேறு இடங்களில் ஒலித்துக்கொண்டிருப்பதால் அது துஞ்சா முழவு எனவும், முழவு முகம் புலராது எனவும் பேசப்படுகிறது. கபிலர் தனது அகம் 82ஆம் பாடலில், மூங்கில் துளையில் காற்றுப்புகுந்து ஒலிப்பது ‘குழல்’ இசையை ஒத்துள்ளது எனவும், அருவிவீழ் ஓசை முழவோசையை ஒத்துள்ளது எனவும், தாழ ஒலிக்கும் கலைமானின் கடுங்குரல் பெருவங்கியத்தின் ஒலியையும், வண்டின் ஓசை யாழோசையையும் ஒத்துள்ளன எனவும் கூறுகிறார்(வரி:1-7). கிணை என்ற பறையின் பேதம் பலமுறை சொல்லப்படுகிறது. ஆயரும், கள்வரும் தண்ணுமையை அறைகிறார்கள். பாணி, தூக்கு, சீர் என்ற மூன்றில் சீர் என்பது தாளம் என்பது சொல்லப்படுகிறது. சிறு, பெரு வங்கியம் பேசப்படுகிறது. ‘சில்லரி’ தாளம் அமைத்துக் கறங்குவது தேரை ஒலியைப்போல் உள்ளது(301:16-20). வெற்றி முரசு சிறப்பாகச் சொல்லப்படுகிறது. மருங்கூர்ப்பட்டினத்தில் எழும் முரசு ஒலி தமிழகம் முழுவதும் கேட்கும் என்கிறார் நக்கீரர்(227:14). இந்நூலில் இளி, விளரி, பாலை, செவ்வழி, குறிஞ்சி ஆகியவற்றின் இசைக்கருத்துகள் பேசப்படுகின்றன.

            ‘இளி’ என்பது குரல் துத்தம் முதலான ஏழு இசைகளில்(சுரங்களில்) ஒன்று. சேவலானது தன் பெடையை அழைக்கும் ஒலி, ‘இளி’ எனும் இசையொலி போல் இருக்கும்(33:5-7). இளியின் இசை மயிலின் குரலை, தவளையின் கத்தலை ஒத்திருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. ‘விளரி’ என்பது ஒரு சுரமும்(ரிசபம்), ஒரு பண்ணும் ஆகும். வண்டினது ஒலியானது விளரி நரம்பில் எழும் ஒலி போல இம்மென ஒலிக்கும் எனப் படுகிறது(317:12-13). ‘பாலை’ என்பது பெரும்பண்களில் முதற்பண் ஆகும். யாழ்கொண்டு இசைக்கும் பாலைப்பண்ணின் இசை, வண்டுகள் முரலுவதை ஒத்திருக்கும்(355:4-5). ‘செவ்வழிப்பண்’ பிரிந்திருக்கும் தலைவிக்கு எப்போதும் துன்பம் தரக்கூடியதாகும். ஒக்கூர் மாசாத்தனார் என்ற புலவர், தலைவன் தன்துன்பத்தைத் தன்மெய்யில் தேக்கி செவ்வழிப்பண்ணை இசைத்துக் கடவுளை வாழ்த்தினான் என்கிறார்(14:15-16).

            குறிஞ்சிப்பண் குறித்து அகநானூறு கூறும் ஒரு செய்தி மிகப் புகழ்பெற்றதாகும். தினைப்புனப் பரணிலே கானவன் மனைவி குறிஞ்சிப்பண் பாடினாள். அதைகேட்ட யானை தான் எடுத்தத் தினைக்கதிரினை மென்று விழுங்காது, நிலை பெயராது துயில்வரப்பெற்று அவ்விடத்திலேயே உறங்கியதாம்(102:5-9). குறிஞ்சிப் பண்ணின் கவர்ச்சி அத்தகையது என்கிறார் புலவர். பண்டைய காலத்திய பாண்மகன் நல்லிசைகளை நன்கு வரையறுத்துணர்த்திய இசைநூலின்கண் கூறப்பட்ட முறைகளையெல்லாம் நன்கு உணர்ந்து நிலை நிறுத்திப் பண்கள் செய்ததோடு அவற்றிலுள்ள இராகத்திறங்களைப் புதுவதாகப் புணைந்தான் என அஞ்சியத்தை நாகை என்கிற கி.மு. 3ஆம் நூற்றாண்டுகால அகநானூற்றுப்புலவர் கூறியது முன்பே சொல்லப்பட்டது(352:13-16).

ஐங்குறுநூறு:

            பஞ்சுரம் என்பது ஒரு பாலைப்பண். வேங்கை மரம் குறிஞ்சிக்குரியது. ஆனால் குறிஞ்சிக்குரிய வேங்கை மலர் கொய்வோர் பாலைப்பண் ஆகிய பஞ்சுரம் பண் பாடுகிறார்கள். ஆதலால் பஞ்சுரம் பண் மிகவும் பழமையானது. முல்லைப்பண் என்பது சாதாரிப்பண் ஆகும். முல்லை நிலத்துக்குரிய பண் செவ்வழிப்பண் ஆகும். சீறியாழ் என்பது சிறு யாழ் ஆகும். இதுவே செங்கோட்டு யாழும் ஆகும். ‘தட்டை’ என்பது மெல்லோசையுடைய ஒருவகைக்கரடிப்பறை ஆகும். தட்டையும், தண்ணுமையும் இசைக்க அதன்பின் வாச்சியக்காரர் தும்பிகள் ஒலிப்பது போன்ற ஆம்பற்குழல் இசைக்கிறார்(215). சிலப்பதிகாரமும் ஆம்பற்குழல் குறித்துப் பேசுகிறது. ஆகவே ஆம்பற்குழல் இருந்தது உறுதிப்படுகிறது. தொண்டித்துறைமுகத்தில் கடல் திரையின் ஓசையோடு முழவின் ஓசையும் கலந்து ஒலிக்கிறது(171).

குறுந்தொகை:

            இதன் 401 பாடல்களை 205 புலவர்கள் பாடியுள்ளனர். குறுமகள் வள்ளைப்பாட்டுப் பாடுகிறாள். பதலை, முழவு, யாழ், தண்ணுமை, பல்லியங்கள் சொல்லப்படுகின்றன. ‘பதலைப்பாணி’என்கிற இடத்துத்தாளம் குறிப்பிடப்படுகிறது. பணிலமும்(சங்கு), பறையும் குறிப்பிடப்படுகின்றன(15:1). தட்டைப்பறை சொல்லப்படுகிறது. ஆறலைப்போர் வணிகச்சாத்தை தண்ணுமை முழங்கி தாக்குகிறார்கள்(390:5). விளரிப்பண் நெய்தலுக்குரிய இரங்கற்பண். தலைவன் வரும் தேரிற் கட்டிய சிறுமணிகள் விளரிப்பண்ணாக ஒலிக்கின்றன(336:3). பாணர் இசைக்கும் படுமலைப்பாலை உச்ச ஒலியை உண்டாக்குகிறது(323:2). படுமலைப்பாலை என்பது பாலைப்பண்ணின் 12 திறங்களில் ஒன்று.

நற்றிணை:

            இதன் 400பாடல்களை 192 புலவர்கள் பாடியுள்ளனர். யாழ், முழவு, தண்ணுமை முதலியன பலமுறை சொல்லப் படுகின்றன. சிறியயாழில் பாடுவது குருகுகளின் குரல்போல் ஒலிக்கிறது(189). ஆம்பலங்குழலும்(113), கொன்றையங்குழலும்(364) சொல்லப்படுகின்றன.

செவ்வரிப்பறை(58), தொண்டகச்சிறுபறை(104) சொல்லப்படுகின்றன. முரசும் முழவும் பலமுறை சொல்லப்படுகின்றன. தண்ணுமையின் உள்ளே ஒன்றுமில்லை, மேலே போர்வை போர்த்தியிருக்கிறது என்பது சொல்லப் படுகிறது. மெல்லிசை விளரிசை எனப்படுகின்றது(172). படுமலைப்பாலை குறிப்பிடப்படுகின்றது(139). ‘கழைபாடு இரங்க பல்லியம் கறங்க’ என குழல் ஒலிப்பப் பல வாத்தியங்களும் முழங்கின என்கிறார் ஒரு புலவர்(95).

பதிற்றுப்பத்து:

            100 பாடல்கள் 10 பேர் பாடியுள்ளனர். தற்பொழுது 80 பாடல்களே உள்ளன. இப்பாடல்களில் ஒவ்வொன்றுக்கும் அது இன்ன பாட்டு, இன்ன வண்ணம், இன்ன தூக்கு, பாட்டின் பெயர் என்பன சொல்லப்பட்டுள்ளன. சொல்லப்பட்ட வண்ணங்கள் ஒழுகு வண்ணமும், ஒழுகுவண்ணமும்-சொற்சீர் வண்ணமும் ஆகும். சொல்லப்பட்ட தூக்கு, செந்தூக்கு, செந்தூக்கும்-வஞ்சித்தூக்கும் ஆகும். வண்ணம் என்பது பாடலின் சீர்களில் வரும் சந்த வேறுபாடு ஆகும். திருப்புகழ் போன்ற பிற்கால சந்தப்பாக்களில் வரும் வண்ணம்தான் இன்று அறியப்பட்டுள்ளது. பண்டைய ஆசிரியப்பாவுக்குப் பொருந்துகிற வண்ணங்கள் இன்று அறியப்படவில்லை. தூக்கு என்பது பாடலுக்குரிய ஏழு உறுப்புகளில் ஒன்றாகும். தூக்கு என்பது தாளங்களின் வழிவரும் செந்தூக்கு, மதலைத்தூக்கு, துணிபுத்தூக்கு, கோயில்தூக்கு, நிவப்புத்தூக்கு, கழால்தூக்கு, நெடுந்தூக்கு என சிலப்பதிகார உரை ஏழு தூக்குகளைக் குறிப்பிடும். இவை முறையே ஒருசீர், இருசீர், முச்சீர், நாற்சீர், ஐஞ்சீர், அறுசீர், எழுசீர் என்றும் சொல்லப்படும். இவைகளுக்கு மேற்கோளும் தரப்பட்டுள்ளன. எனினும் வண்ணம் போன்றே தூக்கின் இலக்கணமும், பொருளும், ஆட்சியும் மறைந்துவிட்டன. சங்ககாலத்திற்குப்பின் இந்த வண்ணம், தூக்கு ஆகிய இசைக்கருத்துக்கள் மறைந்துவிட்டன. வண்ணம், தூக்கு என்கிற இரு குறிப்புகளால் தனியான ஒரு சிறப்பு இசைமுறை பண்டைய காலத்தில் இருந்துள்ளது. பின் அந்தச் சிறப்பு இசைமுறை வழக்கிழந்து போயுள்ளது என்பது தெளிவாகிறது.

            வண்ணம் என்பது இசைப்பாடலுக்குரிய அமைதி என வன்பரணரின் புறநானூற்றுப்பாடல் தெரிவிக்கிறது.

            பாடுவல் விறலி ஓர் வண்ணம், நீரும்

            மண்முழா அமைமின் பண்யாழ் நிறுமின் (152:13-14).

            வண்ணம் பாடுதல் இருந்துள்ளது என்கிற உண்மையை இப்பாடல் உறுதிப்படுத்துகிறது. பண்டைய வண்ணம் மறைந்து போனாலும், அருணகிரிநாதர் தொடங்கி வண்ணப்பாட்டு அல்லது சந்தப்பாட்டு என்கிற கருத்து இலக்கிய மரபில் ஒரு நிலையான இடம் பெற்றுவிட்டது. பதிற்றுப் பத்தில் ஐந்தாம்பத்தைப்பாடிய இசைவாணர், வரலாற்றுப்பெரும்புலவர் பரணர் மிக அதிகளவான இசைச் செய்திகளைக் குறிப்பிட்டுள்ளார்.

            முறுக்கிய நரம்பின் மத்தளத்தின் தாளத்தோடு கூடிய இனிதாகிய கட்டு முதிர்ந்த வளைவுபெற்ற நல்யாழை இளைய மகளிர் தாங்குகிறார்கள் எனவும், பண்ணோடு பொருந்துமாறமைந்த முழாவும், பதலையும், பிற இசைக்கருவிகளும், மூங்கிற்கணுவை இடைவிட்டறுத்துச் செய்யப்படும் பெருவங்கியம் எனப்படும் வாச்சியித்தோடு(நாகசுரம்) ஒருங்கே சேர்த்து ஒரு புறத்தே கட்டின காவடியின் மறுபக்கத்தே பாடற்துறைக்கு வேண்டிய கருவிகளையெல்லாம் சேர்ந்த மூடையைச் சுமந்தவாறு செல்கின்றனர் இசைத்துறையில் வல்ல இளையவர்கள்(41:1-6) எனவும், நரம்புக்கட்டுப் பொருந்திய பேரியாழில் பாலைப்பண்ணை அமைத்து, பகைவர்க்குப் பணியாத இயல்பையுடைய உழிஞைத் திணையை இவர்கள் புகழ்ந்து பாடுகிறார்கள் (46:5-6) எனவும் பாடுகிறார் பரணர். பேரியாழில் பாலைப்பண்ணை இசைப்பதைப் பல புலவர்கள் கூறுகிறார்கள். சங்கநூல் தொகுதிகளில் இதுவே காலத்தால் பழமையான தொகுப்பு ஆகும். இந்தப்பாடல்களுக்குச் சொல்லப்பட்டுள்ள தூக்கு, வண்ணம் முதலியன யாப்பைக்குறித்தன ஆகும். பண்ணைக் குறித்தன அல்ல!

            இதன் பாடல்களுக்கு வைக்கப்பட்டுள்ள கூந்தல் விறலியர், நன்னுதல் விறலியர், சில்வளைவிறலி, பறைக்குரல் அருவி முதலியன இசைத்தொடர்பு உடையன ஆகும். பதலை, முழவு, யாழ், தண்ணுமை, தெண்கினை, பெருவங்கியம், பேரியாழ் முதலிய இசைக்கருவிகள் சொல்லப்படுகின்றன. பாணர்கள், பேரியாழில் பாலைப்பண்ணை அமைத்து ‘தழிஞ்சி’ என்ற புறத்துறைப்பாடலைப் பாடுகிறார்கள்(57). கின்னரப்பறவைகள் தங்கள் சிறகுகளை அசைக்கும்போது இசை பிறக்கிறது. அந்த இசையை வென்றுள்ளது இவர்களுடைய யாழ்நரம்பின் இசை(43).

புறநானூறு:

            இதன் 400 பாடல்களை 156 புலவர்கள் பாடியுள்ளனர். முரசும் போர்ப்பறையும் மிகுதியாகச் சொல்லப்படுகின்றன. இடியென முழங்கும் முரசு என முரசின் ஓசை வர்ணிக்கப்படுகிறது. முரசை அடிக்கிற கடிப்பு ‘குணில்’ எனப்படும். முரசு தோலால் செய்யப்பட்ட ஒரு இசைக்கருவி ஆகும். அரசர் இறந்த காலத்து முரசு ஒலிக்காது. ஒலித்தால் அது மந்த ஓசையாக இரங்கற்பண் ஓசையாக இருக்கும். போர்ப்பறை ‘கிணை’ எனப்பட்டது. கிணை ஒரு கட்பறை ஆகும். கிணை இசைப்பவன் கிணை மகன், அதனை இசைக்கும் விறலி கிணை மகள்(111) எனப்படுவர். கிணை ஆர்த்தெழும் ஓசை உடையதால் அரிக்கூடு மாக்கிணை(378) எனவும், ஒருகட்பறை எனவும் சொல்லப்படும். இது ஒரு கண்ணில் மட்டும் அடிக்கப்படுவதால் ஒருகண் மாக்கிணை எனப்படும்(392). தடாரி என்ற இசைக்கருவி பலமுறை சொல்லப்படுகிறது. இதுவும் ஒரு பறை ஆகும்.

            பாணரின் கையில் உள்ள யாழை புறநானூறு விளக்கமாகப் பல இடங்களில் குறிப்பிடுகிறது. சீறியாழ், கருங்கோட்டுச்சீறியாழ், வாங்கு மறுப்புயாழ் எனப் பலவிதமாகக் கூறுகிறது. அதன் நரம்பும் சுகிர்புரி நரம்பு, பொன்வார்த்தன்ன புரியடங்கு நரம்பு(135, 308), பண்ணமை நரம்பு(164) எனப் பலமுறை சொல்லப்படுகிறது. முழவு, யாழ், பெருவங்கியம்(கண்விடு தூம்பின் களிற்றுஉயிர்), பதலை, ஆகுளி(விரலால் அடித்திசைக்கும் தோற்கருவி), எல்லரி(சல்லிகை) ஆகியவற்றை வன்பரணரின் வல்வில் ஓரி குறித்தப் பாட்டு குறிப்பிடுகிறது.

            மண்முழா அமைமின்; பண்யாழ் நிறுமின்

            கண்விடு தூம்பின் களிற்றுஉயிர் தொடுமின்

            எல்லரி தொடுமின்; ஆகுளி தொடுமின்;

            பதலை ஒருகண் பையென இயக்குமின்; (152: 16-17)

            முதல் தானமாகிய குரலிலே வந்து பொருந்தும் அளவையுடைய பாட்டைவல்ல பாணன்(11:15) எனவும், உழைக்குரற்கூகை(261:12) எனவும், இரங்கற்பண்ணாகிய விளரியைச் சென்று உறுகின்ற இனிய நரம்புத் தொடை(260) எனவும், புண்பட்டு வீழ்ந்த தலைவனைச் சூழ்ந்து வரும் நரிக்குழாத்தை, தாம் விளரி என்னும் இரங்கற்பண்னைப் பருந்தின் சுழற்சிபோல வட்டமிட்டுப்பாடுவதால் ஓட்டிவிடுவேன் எனவும்(291, நெடுங் கழுத்துப்பரணர்) இயல் நூலான புறநானூறு பாடுவதன் மூலம் ஏழு சுரங்களில் குரல், உழை, விளரி ஆகிய மூன்றைச் சுட்டுகிறது. ஆதலால் ஏழிசை வழக்காறு அன்று பரவலாக இருந்தது என முடிவு செய்யலாம்.

            அரிசில்கிழார் ஒரு வீரன் புண்பட்டு வீழ்ந்த போது அவனுக்கு ஏற்பட்ட புண்ணை காஞ்சிப்பண் பாடி நறைபுகை வைத்துக்காப்போம் என்கிறார்(281). இதுபோலச் சில வேறு பண்களையும் புலவர் சுட்டிப்பாடுகிறார்கள். முடமோசியார் படுமலைப்பாலை என்கிற பெரும் பண்ணாகிய பாலையில் தோன்றிய திறம் பற்றிக் குறிப்பிடுகிறார்(135). நெய்தற்பண் இரங்கற்பண் என்றே பல இடங்களில் சொல்லப்படுகிறது. ‘ஓரில் நெய்தல் கறங்க’ என்றவிடத்து நெய்தற்பறை சாக்காட்டுப்பறை எனப்படுகிறது(194). பெருநள்ளியைப்பாடிய வன்பரணர், “உனது காக்கின்ற தன்மையால் எம்மவர் இசைமரபை மறந்தனர். காலையில் மருதப்பண் பாடி மாலையில் செவ்வழிப் பண் பாடுவது மரபு. ஆனால் எம்மவர் தங்களை மறந்த நிலையில் காலையில் செவ்வழிப்பண்ணும், மாலையில் மருதப்பண்ணும் பாடுகின்றனர் என்கிறார்”(149). இவைகளின் மூலம் புறநானூறு பாலை, மருதம் நெய்தல் ஆகிய திணைப்பண்களைத் திட்டமாகக் குறிப்பிடுகிறது எனலாம்.

            ‘மூவேழ் துறையும் முறையுளிக் கழிப்பி’(152) என்பதற்கு உரைகாரர், “மூவேழ் துறையுமென்றது வலிவு, மெலிவு, சமம் என்னும் மூன்று தானத்திலும் ஒவ்வொன்றில் ஏழு தானம் முடித்துப்பாடும் பாடற்றுறையை: அன்றி இருபத்தொரு நரம்பாற்றொடுக்கப்படும் பேரியாழெனினும் அமையும்” என்கிறார். நெடும்பல்லியத்தனார் என்கிற புலவர் கி.மு. 4ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். அவர் பெயருக்கு நீண்ட பல வாத்தியங்களை வாசிப்பவர் என்பது பொருள் ஆகும். பெயருக்கேற்றவாறு தனது பாடல் ஒன்றில் ‘நல்யாழ் ஆகுளி பதலையோடு’ எனச்சில இசைக்கருவிகளைப் பாடியுள்ளார்(64). நெடும்பல்லியத்தை என்கிற ஒரு பெண்பாற் புலவர் குறுந்தொகையில் இரு பாடல்கள் பாடியுள்ளார். இவர் அவரது மனைவியாக இருக்கலாம். இவைகளின் மூலம் புறநானூற்றில் ஏழிசை மரபு, பெரும்பண் மரபு முதலியன குறிக்கப்படுகின்றன எனலாம்.

கலித்தொகை:

            கலித்தொகையும் பரிபாடலும் சங்கம் மருவிய காலத்தைச் சேர்ந்தனவாகும். அதாவது இவைகளின் காலம் கி.மு. 50-கி.பி 250 ஆகும். மேலே கண்ட ஆறு நூல்களும் கி.மு. 50க்கு முன் வரையான சங்கச் செவ்வியல் காலத்தைச் சேர்ந்தனவாகும். இக்காலகட்டத்தைச் சேர்ந்த இசைப்பாடல்கள் கிடைக்கவில்லை. அழிந்து போயின. இசைக்குரிய கலித்தொகையில் 150 பாடல்கள் உள்ளன. முதல் பாடலின் இடையில் வரும் தாழிசை தாழம்பட்ட ஓசை உடையது. முதல் பாடலில் கொடுகொட்டி, பாண்டரங்கம், காபாலம் ஆகிய மூன்று கூத்துக்கள் சொல்லப்படுகின்றன. தாளத்தின் முதல், இடை, இறுதிக்கூறுகளான பாணி, தூக்கு, சீர் ஆகியன இப்பாடலில் சொல்லப்படுகின்றன(1:5-17). அசுணமாவைப் பிடிக்கும் வேடர்கள் முதலில் நல்ல இசையை யாழில் எழுப்பி அவ்விசையில் அசுணம் மயங்கி இருக்கும்பொழுது திடீரென பறையை ஒலித்து அவ்வோசைக்கு ஆற்றாது அதனை உயிர்விடச்செய்து அதனைப்பிடிப்பார்கள்(143:10-12) என்கிற செய்தி சொல்லப்பட்டுள்ளது. இச்செய்தி வேறு நூல்களிலும் உள்ளது.

            பாணர்கள் தலைவி இன்புறும்படி அவள் இல்லத்தில் சென்று யாழ் வாசிக்கமாட்டார்கள். அவர்கள் தலைவனும் பரத்தையும் மகிழும்படி பரத்தையின் இல்லத்திற்குச் சென்று யாழ் வாசிப்பார்கள்(71, 72). தலைவன் எந்தப் பரத்தையின் இல்லத்திற்குச் சென்றுள்ளான் என்பதைத் தலைவி வினவி அறியும்பொருட்டு தலைவியின் இல்லத்திற்கு பாணன் வருவான்(77:18-19). கலித்தொகையின் பாலைப்பாடல்களில் இசைக்குறிப்புகள் அதிகமாகவும், குறிஞ்சியில் எதுவும் இல்லாமலும், பிற மூன்றிலும் மிகக்குறைவாகவும் உள்ளது. சில பாடல்களில் ஏழிசையும் தொகுப்பாகச் சொல்லப்படுகிறது(8, 9). முரசு, தண்ணுமை, குழல், யாழ், கோடு என்ற ஊதுகருவி முதலியன பல இடங்களில் சொல்லப்படுகிறது. யாழுக்குள் ஏழிசை பிறந்தாலும் அவை முரல்பவர்க்குப் பயன்தருமே தவிர யாழுக்குப் பயனில்லை என்பதுபோல் பெண் பிறந்த வீட்டுக்கு இல்லாமல் அவளது கணவனுக்குத்தான் உரியவளாவாள் என்கிற அன்றைய உலகநீதி சொல்லப்படுகிறது. பாகற்கும், அங்குசத்துக்கும் அடங்காத யானை யாழோசைக்கு அடங்கும் என்கிற இலக்கியமரபு பாலைக்கலியில் சொல்லப்படுகிறது(2:26-27).

            செவ்வழிப்பண் இரங்கற்பண் என்பதால் அது மாலை நேரத்திற்குரியது என்பது சொல்லப்படுகிறது(118, 143). யாழ் பாணர்களுக்குத் தெய்வம்போல் என்பதால் பாணன் யாழ் வைத்துச் சூழ் உரைக்கிறான்(71). பாணன் தலைவனுடைய கூடா ஒழுக்கத்திற்குத் துணை போகிறான். தலைவன் பரத்தையினிடத்தே ஒழுகுவதற்கு வேண்டுவனவற்றைச் செய்வதாக தலைவி பாணனைக் குறை கூறுகிறாள்(72). பாணன் தலைவன் சார்பில் பரத்தையிடம் தூது செல்லும் வாயிலாக இருக்கிறான் எனவும், அவன் பாடுகிற பாட்டையும் திருந்தக் கற்றவன் அல்லன் எனவும் தலைவி அவனைப் பழிக்கிறாள்(70). ஆயினும் பாணன் தலைவிக்கு இரங்கி பாசறையுள் தங்கியுள்ள தலைவனிடம் சென்று தலைவி நிலையை உரைக்கிறான். இவை போன்று பாணனின் வேறுபட்ட பலவகை இயல்புகள் சொல்லப்படுகின்றன.

பார்வை:

1.தொல்காப்பியம், எழுத்ததிகாரம், நூன்மரபு-33.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

 

பரிபாடல்:

            ஆசிரியம், வெண்பா, வஞ்சி, கலிப்பா ஆகிய நான்கு பாக்களைக்கூறும் தொல்காப்பியர் அவற்றையும் வஞ்சி ஆசிரியப்பா நடையுடையது எனவும், கலிப்பா வெண்பா நடையுடையது எனவும் கூறி நான்கையும் முதல் இரண்டினுள் அடக்கிவிடுகிறார். மேலும் மருட்பா, பரிபாடல் என இரண்டைக்கூறுகிறார். ஆசிரியமும் வெண்பாவும் கொண்டு அகப்பொருட் கைக்கிளையாக வருவது மருட்பா எனவும், அதுபோன்றே பரிபாடலும் கலந்து வருவது எனவும் கூறுகிறார். தொல்காப்பியர் கூறும் எண்வகை வனப்பினுள் பரிபாடல் ‘இழைபு’ என்ற வனப்புக்குரியது என்பது மரபாகும். பரிபாடலானது உருக்கமுடைய பரிந்துவரும் பாட்டகும். புகழை ஏற்று வருவது, நெகிழ்ந்து வருவது எனவும் பொருள்படும். பரிபாடல் என்பது இசைப்பாடலாகும். இப்பாடல்கள் இன்பத்தையே பொருளாகக்கொண்டு கடவுள் வாழ்த்து, மலை விளையாட்டு, புனல் விளையாட்டு முதலியனவற்றை உரைக்கின்றன. அடியார்க்கு நல்லார் எத்தனையோ பரிபாடல்கள் இருந்து இறந்து போயின எனக்கூறுவதால் சங்ககாலத்திலும் அதற்கு முன்னரும் பல பரிபாடல்கள் இருந்து அழிந்து போயின எனலாம். 70 பரிபாடல்களில் இன்று 22 பரிபாடல்கள் மட்டுமே முழுமையாகக் கிடைத்துள்ளன. இந்த பரிபாடல்களுள் தை நீராடல் குறித்தும், முருகனிடத்துப் பொன்வேண்டாது அருள்வேண்டுவது குறித்தும் பேசுகிற இரண்டு பாடல்கள் சிறப்பானவை.

          yaazh  2000 ஆண்டுகளுக்கு முன்பே பாடலைப்பாடியவர் ஒருவராகவும், அப்பாடலுக்கு இசையமைத்தவர் வேறு ஒருவராகவும் இருந்தனர் என்பதைப் பரிபாடல் நமக்குத் தெரிவிக்கிறது. இது பரிபாடலின் சிறப்பம்சமாகும். இசையில் இது ஒரு வளர்ந்த நிலையாகும். சிலப்பதிகாரத்துக்கு உரைதந்த அடியார்க்கு நல்லார் எத்தனையோ பரிபாடல்கள் இருந்து அழிந்து போயின எனக் கூறுவதாலும், பரிபாடலில் பலவகைகள் தொல்காப்பியர் காலத்திற்கு முன்பிருந்தே இருந்து வந்துள்ளது என்பதாலும் தமிழகம் பண்டைய காலத்திலேயே இசையில் மிக உயர்ந்த உன்னத நிலையை அடைந்திருந்தது என்பது உறுதியாகிறது.

எண்&பாட்டுவகை இசை - பாடலாசிரியர் - இசை வகுத்தோர்

2 கடவுள்வாழ்த்து பண்ணுப்- கீரந்தையார் - நன்னாகனார்

3 ‘’ -பாலையாழ் கடுவன் இள- பெட்டாகனார்

4 ‘’ ‘’ -வெயினார் ‘’

5 ‘’ “ “ கண்ணனாகனார்

6 அகப்பாட்டு “ ஆ.நல்லந்துவனார் ம.நல்லச்சுதனார்

7 “ “ மையோடக் கோவனார் பித்தாமத்தர்

8 கடவுள்வாழ்த்து “ ஆ.நல்லந்துவனார் ம.நல்லச்சுதனார்

9 “ “ குன்றம் பூதனார் “

10 அகப்பாட்டு “ கரும்பிள்ளை பூதனார் “

11 “ “ ஆ.நல்லந்துவனார் நாகனார்

12 “ “ நல்வழுதியார் நன்னாகனார்

13 கடவுள்வாழ்த்து நோதிறம் நல்லெழுனியார் -இல்லை-

14 அகப்பாட்டு நோதிறம் கேசவனார் கேசவனார்

15 கடவுள்வாழ்த்து “ இளம்பெருவழுதியார் ம.நல்லச்சுதனார்

16 அகப்பாட்டு “ நல்லழிசியார் நல்லச்சுதனார்

17 கடவுள்வாழ்த்து “ “ “

18 “ காந்தாரம் குன்றம் பூதனார் “

19 “ “ நப்பண்ணனார் ம.நல்லச்சுதனார்

20 அகப்பாட்டு “ ஆ.நல்லந்துவனார் நல்லச்சுதனார்

21 கடவுள்வாழ்த்து “ நல்லச்சுதனார் கண்ணகனார்

குறிப்பு:

            மேற்கண்ட அட்டவணையில் 20 பரிபாடல்களுக்கான தரவுகள் மட்டுமே தரப்பட்டுள்ளன. அதில் உள்ள ஆ.நல்லந்துவனார் என்பதில் உள்ள ஆ என்பது ஆசிரியர் ஆகும். ம.நல்லச்சுதனார் என்பதில் உள்ள ம என்பது மருத்துவர் ஆகும். மொத்தம் உள்ள 70 பாடல்களில் திருமால் குறித்து 8 பாடல்களும், செவ்வேள் குறித்து 31 பாடல்களும் ஆகிய இந்த 39 பாடல்களும் கடவுள் வாழ்த்துப்பாடல்களாகும். வையை குறித்து 26 பாடல்களும் மதுரை குறித்து 4 பாடல்களும் காடுகாள் குறித்து 1 பாடலும் ஆகிய 31 பாடல்களும் அகப்பாட்டுகளாகும். பரிபாடலில் திருமால், செவ்வேள் ஆகிய இரு தெய்வங்கள் மட்டுமே பாடப்பட்டுள்ளன. பண்டைய குமரி நிலப்பரப்பில் கந்தன் கோயிலும், திருமால் கோயிலும் மட்டுமே இருந்தன என ஆகமங்கள் கூறுகின்றன. பண்டைய தமிழர்கள் இந்த இரு தெய்வங்களையும் போர் தெய்வமாகவும், காக்கும் தெய்வமாகவும் வணங்கினர்.

            பண்ணுப்பாலையாழ் என்பது பாலைப்பண் ஆகும். அது மங்கலப்பண் என சிலப்பதிகாரம் கூறும். நோதிறம் என்பது நொந்ததிறம் ஆகும். அது பாலைப்பண்ணின் திறம் ஐந்தினுள் ஒன்று ஆகும். கலித்தொகை பாடல் 77 இதனை நோய் செய்ததிறம் எனக் குறிப்பிடுகிறது. கேசவனார், நல்லச்சுதனார் ஆகிய இருவரும் பாடலாசிரியராகவும், இசையாசிரியராகவும் இருந்துள்ளனர். ஒருவரே பலரின் பாடல்களுக்கு இசை அமைத்துள்ளார். ஆதலால் இசைப்பாடல் பாடுவதும் அதற்கு இசை அமைப்பதும் மிகுதியாக நடந்திருக்கவேண்டும். பரிபாடலின் பெரும்பாலான பாடல்கள் அழிந்து விட்டன என்பதால் பரிபாடல் போன்ற பல இசைப்பாடல் நூல்கள் அழிந்து விட்டன எனலாம். இவற்றின் காலம் சங்கம் மருவிய காலமாகும். அதாவது கி.மு. 50 முதல் கி.பி 250 வரையான காலமாகும். இப்பரிபாடலுக்கு மிகச் சிறப்பானதோர் உரையை பரிமேலழகர் செய்துள்ளார்.

            பரிபாடலில் உள்ள இசைகளின் பெயர்கள் தெரிகின்றனவே ஒழிய தேவாரப்பண்களைப் பாடுவதுபோல் அதனைப்பாட இயலவில்லை. பரிபாடலைப்பாடும் முறை இன்று மறைந்துவிட்டது. இதுவரை அதனை அறிந்து யாரும் பாடவில்லை. அதுபோன்றே பரிபாடல் இலக்கியம் செய்ய யாரும் முயன்றதும் இல்லை. பரிபாடல் இசையை அடிப்படையாகக் கொண்டது என்பதும் அவ்விசை மறைந்து போனது என்பதுமே அதன் காரணமாகும். ஆனால் பாப்பாவினம் என்ற நூலில்(16ஆம் நூற்றாண்டு) திருக்குருகைப் பெருமான் கவிராயர் என்பவர் பலவகையான யாப்புகளுக்கு இலக்கணம் கூறியுள்ளார். அதில்பண்டைய பரிபாடல் இலக்கணத்தை மேற்கோள் காட்டி ஐந்து பாடல் செய்துள்ளார். ஆனால் அவைகளுக்கு அவர் இசை கூறவில்லை. இப்பாடல்களில் பெரும்பகுதி கலிப்பாக்களே ஆகும். சங்கம் மருவிய காலத்திற்குப்பின் ஆட்சிக்கு வந்த களப்பிரர் காலத்தில் இசை அடக்கப்பட்டதால் பரிபாடல் போன்ற இசைப்பாடல்கள் அழிந்து போயின. பிற்காலத்தில் பரிபாடல் வழக்கிற்கு வந்தபோது கந்தியாருடை இடைச்செருகல்களும், எழுதினோர் பிழைகளும் சேர்ந்துகொண்டன எனலாம். களப்பிரர் காலத்திற்குப்பின் கந்தியார் தான் பரிபாடலை வெளி உலகிற்கு கொண்டுவந்தவர் ஆவார் எனவும், இந்நூல் களப்பிரர் காலத்திற்கு முந்தைய நூல் எனவும் கூறுகிறார் மு. அருணாசலம் அவர்கள்-(2).

            பரிபாடலின் இசையை அறிய முடியாதிருப்பதும், தேவாரப் பண்களைப்பாடுவதுபோல் இன்று பரிபாடலைப்பாடுவது இயலாதிருப்பதும், பாடும்முறை மறைந்து போயிருப்பதும், பரிபாடல்கள் பக்திக்காலத்திற்குப் பலநூற்றாண்டுகளுக்கு முந்தியன என்பதை உறுதிப்படுத்துகின்றன. களப்பிரர்கள் காலத்தில் அரசு நிலை திரிந்து பரிபாடல் போன்ற இசைப்பாடல்கள் பாடுவது அழிந்து போய்விட்டது எனவும் அதன்பின் வந்த கந்தியார்தான் இதனை வெளிக்கொண்டு வந்தார் எனவும் கருதப்படுவதால் இந்நூல் களப்பிரர் காலத்திற்கு முந்திய படைப்பாகும் என உறுதிபடக் கூறலாம். மு. அருணாசலம் அவர்களும் இந்நூல் களப்பிரர் காலத்திற்கு முந்தையது என்றே கருதுகிறார்.

            பரிபாடலில் மிடற்றுப்பாடல், வாத்தியம், சுருதியாகப்பயன்பட்ட குழல் ஆகிய செய்திகள் சொல்லப்பட்டுள்ளன. வங்கியம் என்கிற குழல் ஏழு துளை, ஐந்து துளை என இருவகைப்படும். விளம்பித நடையுடைய தாளகதி மென்னடையாகச்செல்லும் என்பது சொல்லப்படுகிறது(10:24-25). பாணி எனும் தாளம் சொல்லப்படுகிறது. குரல், உழை, இளி ஆகியவற்றின் இலக்கணமும் உறவும் சிலப்பதிகாரத்தில் உள்ளதுபோல் கூறப்பட்டுள்ளது. இடமுறையால் குரலுக்கு ஐந்தாவதாக வரும் உழை இளிக்கு கிளையாயிற்று என்பது சொல்லப்பட்டுள்ளது. விளரியாழ், யாமயாழ் முதலியன சொல்லப்படுகிறது. யாமயாழ் என்பது இரவின் முதல் யாமத்தில் இசைப்பதற்குரியது. குழல், முழவு, மத்தரி, தடாரி, தண்ணுமை, மகுளி(தாளம்) முதலிய இசைக் கருவிகள் ஓரிடத்தில் சொல்லப்பட்டுள்ளது(12:40-42). நைவளம்(நட்டபாடை) என்ற பண் குறிப்பிடப்படுகிறது. குழலொழியும் மிடற்றுப்பாடலும் குயில் கூவுவதற்கும் அதன் எதிரொலிக்கும் உவமை என்பதும் தாள ஒலியும், முழவொலியும் மயில் கூவுவதற்கும் அதன் எதிரொலிக்கும் உவமை என்பதும் சொல்லப்படுகிறது(15:42-43).

சிலப்பதிகாரம்:

            இதன் காலம் சங்கம் மருவிய காலமாகும். சிலப்பதிகாரம் அரங்கேற்றுகாதை இசைத்தமிழுக்கும் நாடகத்தமிழுக்கும் ஒரு பெருங்கருவூலம். தமிழிசைக்கு இன்றுள்ள ஒரே ஆதார நூலாகவும், பெரியதோர் இசைச்சுரங்கமாகவும் பொருட்களஞ்சியமாகவும் இன்றும் விளங்கிவரும் இயல்பு வாய்ந்தது சிலப்பதிகாரம். இப்பகுதிக்கான அரும்பதவுரையும், அடியார்க்கு நல்லார் உரையும் முழுமையாகக் கிடைத்துள்ளன. நாடகத்தமிழ் என்பது இன்று நாம் கருதுகிற நாடகம் அல்ல. அது நாட்டியம். அரங்கேற்று காதையில் கூத்து ஆடுகிற கூத்தியினுடைய அமைதி, ஆடலாசிரியன் அமைதி, இசையாசிரியன் அமைதி, கவிஞன் அமைதி, தண்ணுமையாசிரியன் அமைதி, குழலோன் அமைதி, யாழாசிரியன் அமைதி, அரங்கின் அமைதி, அரங்கிலே புகுந்து ஆடுகிற இயல்பு ஆகிய அனைத்தையும் குறித்தான தரவுகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் நாட்டியத்திற்கானது என்பன கூத்து ஆடுகிற கூத்தியினுடைய அமைதி, ஆடலாசிரியன் அமைதி, அரங்கின் அமைதி, அரங்கிலே புகுந்து ஆடுகிற இயல்பு ஆகியன ஆகும். பிற அமைதிகள் இசை நூலுக்கான அமைதிகள் ஆகும். சான்றாக இசை நூலுக்கான கவிஞன் அமைதி குறித்து மட்டும் இங்கு காண்போம். அமைதி என்பது இலக்கணம் என்கிற பொருளை உடையதாகும்.

            நூலாசிரியர் எட்டு அடிகளால் கவிஞன் அமைதி கூறுகிறார். இசைக்குப் பாடல் மொழி தேவையில்லை, எந்த மொழியிலும் பாடலாம் என்ற கருத்தை நமது தமிழ் இசைமரபு ஏற்றுக்கொள்ளவில்லை. ஆடலுக்கும் பாடலுக்கும் சாகித்தியம் முக்கியம் என்பதும் கவிஞன் தமிழ் முழுவதும் அறிந்த தன்மையனாதல் வேண்டும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.

“இமிழ்கடல் வரைப்பில் தமிழகம்      

அறியத் தமிழ்முழு தறிந்த தன்மைய னாகி   

வேத்தியல் பொதுவியல் என்றிரு திறத்தின்              

நாட்டிய நன்னூல் நன்கு கடைப் பிடித்து                   

இசையோன் வக்கிரித் திட்டத்தை உணர்ந்தாங்கு                

அசையா மரபி னதுபட வைத்து                     

மாற்றோர் செய்த வசைமொழி யறிந்து                     

நாத்தொல்லை வில்லா நன்னூற் புலவனும்”

            கவிஞனின் அமைதியாக இவைகளை இளங்கோவடிகள் கூறியுள்ளார்(3:37-44). இதில் கவிஞன் தமிழ் முழுதறிந்த தன்மையனாக இருந்தாகவேண்டும் எனவும், வேத்தியல், பொதுவியல் என்கிற இரு திறத்தினை உடைய நாட்டிய நன்னூலை நன்கு அறிந்து அதனைக் கடைப்படிப்பவனாக இருந்தாக வேண்டும் எனவும் கூறுகிறார். வேத்தியல் என்பது அகம் எனவும் பொதுவியல் என்பது புறம் எனவும் சிலரால் சொல்லப்படும். இசைப்புலவன், முதலும் முறையும் முடிவும் நிறையும் குறையும் கிழமையும் வலிவும் மெலிவும் சமனும் வரையறையும் நீர்மையும் ஆகிய பதினொரு பாகுபாட்டினையும் அறிந்து, அறிந்தவண்ணம் அவன் தாள நிலையில் எய்துவித்த நிறம் தன்கவியினிடத்தே தோன்றவைக்க வல்லவனாய் இருக்கவேண்டும். மற்றவரால் செய்யப்பட்ட வசையின் அளவறிந்து அவை தோன்றாதபடி வசையின் மொழிகளால் நாடகக் கவி செய்யவல்ல நல்ல நூல்வல்ல புலவனாகவும் அவன் இருந்தாகவேண்டும் என்கிறார் ஆசிரியர்.

            சிலப்பதிகாரம் ஒரு இயல்நூல் எனினும் அது இசை, நாட்டியம் குறித்தப் பல விரிவான விளக்கங்களை வழங்குகிறது. ஆகவேதான் அது பண்டையதமிழகத்தின் இசை, நாட்டியம் குறித்த ஒரு “பெருங்கருவூலம்” எனக்கருதப்படுகிறது. சிலப்பதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ள இசை நாட்டியக் குறிப்புகள் ஒரு பெரு நூலுக்குரிய அளவு உள்ளன எனப்பலர் கருதுகின்றனர். ஆகவே அவை குறித்து இங்கு அதிகம் பேசவில்லை. தொல்காப்பியம் முதல் சிலப்பதிகாரம் வரையான இசைத் தரவுகள் அனைத்தும் மு. அருணாசலம் அவர்கள் எழுதிய நூலிலிருந்து எடுக்கப் பட்டவைகளாகும்-(3).

            எழுத்தாளர் சுஜாதா, ‘பாரதி, நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்று சொன்னது மிகப் பொருத்தமான வருணனை...... இசை, நடனம் போன்றவற்றில் இளங்கோவடிகளின் அறிவு பிரமிக்க வைக்கிறது. சிலப்பதிகாரத்தில் வரும் இசைக்கருவிகள், யாழ்வகைகள், குழல்வகைகள், தோல்கருவிகள் நூற்றுக்கணக்கானவை. நடனக்கலை பற்றி, நடன அரங்கு அமைப்பு பற்றி, இந்திரவிழா வரிப்பாடல்கள், குரவை ஆட்டங்கள்....ஒரு நூலில் இத்தனை விபரங்கள் உலக இலக்கியம் எதிலும் இல்லை என்று சொல்லலாம்......மேலும் சிலப்பதிகாரம் அதன் காலத்தைக் கடந்த நவீனம், CONTEMPORANEITY, இன்றும் புதிதாக இருக்கும் கதையும், கதை சொல்லும் முறையும்’ என்கிறார்-(4). ஆக, சிலப்பதிகாரம் என்பது ஒரு மிகச்சிறந்தநூல் என்பதில் ஐயம் இல்லை.

            எட்டுத்தொகை நூல்கள், பத்துப்பாட்டு நூல்கள், சிலப்பதிகாரம் ஆகியவற்றில் இசை பற்றிக் குறிப்பிட்டுள்ள கருத்துக்களை நாம் இதுவரை ஓரளவு முழுமையாகப் பார்த்தோம். அவைகளின் மூலம் சங்ககாலத்தில் மிகப் பரந்த அளவில் தமிழ்ச்சமூகம் முழுமையும் இசை, நாட்டியம் முதலியன ஆழமாகவும், விரிந்த அளவிலும் பரவியிருந்தன என்பது உறுதியாகிறது. அன்றே இசை, நாட்டியம் முதலியன நிறைய நூல்களைக் கொண்டிருந்ததோடு அவை ஒரு உன்னத நிலையை, ஒரு சாத்திரத் தன்மையை அடைந்திருந்தன. அக்காலகட்டத்தில் சமற்கிருதத்தில் மட்டுமல்ல பாலி, பிராகிருதம் போன்ற பிற வடமொழிகளிலும் இசை, நாட்டியம் சார்ந்த நூல்கள் எவையும் இருக்கவில்லை.

            அந்தப் பண்டைய தமிழ் இசை, நாட்டிய நூல்கள் அனைத்தும் அழிந்து போயின என்பதோடு, கிடைக்கும் ‘பரிபாடல்’ போன்ற இசைப்பாடல்களைக்கொண்டு, அந்த இசைப்பாடல்களைப் படைக்கும் முறைமையும், அதனைப்பாடும் முறைமையும், வண்ணம், தூக்கு, வனப்பு, பண்ணத்தி போன்ற அன்றைய இசைக்கருத்துக்களும் அதன் விளக்கங்களும் இன்று இல்லாது அழிந்து போயின. சான்றாக பரிபாடலில் உள்ள இசைகளின் பெயர்கள் தெரிகின்றனவே ஒழிய தேவாரப்பண்களைப் பாடுவதுபோல் அவைகளைப்பாட இயலவில்லை. பரிபாடலைப்பாடும் முறைமை இன்று முழுமையாக மறைந்துவிட்டது.

இசை, நாட்டிய நூல்கள்:

            சிலப்பதிகாரகாலத்தில் நாட்டிய நன்னூல் இருந்தது என்பதை சிலப்பதிகாரம் தெரிவிக்கிறது. கி.மு. 3ஆம் நூற்றாண்டிலேயே இசைநூல் இருந்ததாக அகம்-352ஆம் பாடல் தெரிவிக்கிறது. கவிஞன் இசை நூலுக்குரியவன். அவன் நாட்டிய நூலையும் தெரிந்திருக்கவேண்டும் என்பதாக இசை நூல் இலக்கணம் கூறுவதால், இசைநூல் தோன்றிய போதே நாட்டிய நூலும் தோன்றியிருக்க வேண்டும். ஆகவே கி.மு. 3ஆம் நூற்றாண்டிலேயே நாட்டிய நூலும் இருந்திருக்கவேண்டும். பரதர் எழுதிய பரதம் என்கிற நாட்டியத்தமிழ் நூல் இருந்ததாகவும் அது தொன்மையான நூல் எனவும் அது இன்று அழிந்து விட்டதாகவும் சிலப்பதிகாரத்துக்கு உரைதந்த அடியார்க்கு நல்லார் கூறுகிறார். அடியார்க்கு நல்லார் இந்த நூலைத் தொன்மையானது எனக் குறிப்பிடுவதால், இந்த பரதம் என்கிற நாட்டியத்தமிழ் நூல் கி.மு. 3ஆம் நூற்றாண்டு அளவிலேயே இருந்திருக்க வேண்டும் எனலாம். இசை இலக்கணம் குறித்த கட்டுரையில் இந்நூல் குறித்து விரிவாகப் பேசப்பட்டுள்ளது.

            கூத்து என்பதுதான் நாட்டியம் ஆகும். கூத்து மிகவும் பண்டைய காலத்திலிருந்து தமிழகத்தில் இருந்து வருவதாகச் சொல்லப்பட்டுள்ளது. ஆகவே கூத்து நூல்தான் நாட்டிய நூல் ஆகும். சிலப்பதிகாரப்படி மாதவி ஒரு கூத்தி ஆவாள். கூத்து என்பதற்கு இன்றைய பொருளில் பார்க்கக் கூடாது. அன்று கூத்து என்கிற நாட்டியம் மிகவும் புகழ்பெற்றதாக இருந்தது. அன்று கூத்தி என்கிற நாட்டியக்காரிகள் பெரும் செல்வந்தர்களாகவும், அதிக செல்வாக்கு உடையவர்களாகவும் இருந்தனர். சங்கம் மருவிய காலத்தில் இந்த இசையும் நாட்டியமும் உச்சநிலையை அடைந்தன. கி.பி. 3ஆம் நூற்றாண்டுக்குப்பின் இந்த இசையும் நாட்டியமும் இல்லாதொழிந்தன. பொதுமகளிர் நிறுவனங்கள் போன்ற பல்வேறு வகை நிறுவனங்கள் இந்தக் கூத்தையும் இசையையும் வளர்த்து ஓர் உச்சநிலைக்குக் கொண்டு வந்தன. கி.பி. 3ஆம் நூற்றாண்டுக்குப்பின் இந்நிறுவனங்களும் அழிந்துபோயின. ஆதலால் அதோடு தொடர்புடைய இசை, நாட்டிய நூல்களும் இல்லாதொழிந்தன.

            சங்ககாலத்தில் மிகப் பரவலான அளவில் இசை, நாட்டியம் ஆகியன பொதுமக்களிடத்தில் பரவியிருந்தன என்பதை இயல் நூல்களான சங்க இலக்கியங்களில் தரப்பட்டுள்ள இசைசார்ந்த பலவகையான குறிப்புகள் மூலம் நாம் அறிந்துகொள்ள முடிகிறது. கி.மு. 3ஆம் நூற்றாண்டிலேயே அல்லது அதற்கு முன்னரே இசை, நாட்டிய நூல்கள் சங்ககாலத்தில் இருந்துள்ளன என்பதையும் நாம் அறிய முடிகிறது. சங்ககாலத்திலும் சங்கம் மருவிய காலத்திலும் இருந்த இசை, நாட்டிய நூல்கள் அனைத்தும் அழிந்து போயின.

தமிழ் இசை இலக்கிய வரலாறு:

1.பண்டைக்காலம்(கி.மு. முதல் கி.பி. 600வரை):

            கால அடிப்படையில் தமிழ் இசை வரலாற்றை ஏழு பாகங்களாகப் பிரித்து மு. அருணாசலம் அவர்கள் தனது தமிழ் இசை இலக்கிய வரலாறு என்ற பெருநூலில் ஆய்வு செய்துள்ளார்(750 பக்கம்). ஒவ்வொரு காலகட்டத்திலும் இருந்த எல்லா நூல்களையும், இசை குறித்த எல்லா செய்திகளையும் ஆய்வு செய்துள்ளார். தொல்காப்பியம் தொடங்கி களப்பிரர் காலம் வரை பண்டைக்காலம்(கி.மு. முதல் கி.பி. 600வரை) என்கிற தலைப்பில் முதல் காலகட்டத்தை ஆய்வு செய்துள்ளார்-(5). மிகப்பழங்காலம் முதல் களப்பிரர் காலம் வரை என இதனைக்கொள்ளலாம். இதில் தொல்காப்பியம், சங்க இலக்கியங்களான எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், சிலப்பதிகாரம் ஆகியன வருகின்றன. பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் தவிர பிறவற்றின் செய்திகளை நாம் ஓரளவு சுருக்கித் தந்துள்ளோம். சிலப்பதிகாரத்தின் சில செய்திகள் மட்டுமே இங்கு தரப்பட்டுள்ளது.

2.பாசுரகாலம்-1(கி.பி. 600-900):

            ஐந்தாம் நூற்றாண்டு காரைக்கால் அம்மையார், ஆறாம் நூற்றாண்டு முதலாழ்வார் ஆகியோரின் பாடல்களை பொருத்தம் கருதி இக்காலத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. சைவசமயாசாரியர் நால்வரும், ஆழ்வார் அனைவரும் இதில் அடங்குவர். பெரியபுராணம் தவிர்த்த பிற திருமுறைகள் அனைத்தும் இதில் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. சைவ வைணவ ஆகமங்கள், அபூர்வமாகக்கிடைத்த பஞ்சமரபு, இறையனார் களவியல் உரை, திவாகரம், பிங்கல நிகண்டு, புறப்பொருள் வெண்பாமாலை, யாப்பருங்கல விருத்தி முதலியன ஆய்வு செய்யப்படுகின்றன-(6).

3.பாசுர காலம்-2(கி.பி. 900-1250):

            பெரும்காப்பியங்களும் மணிமேகலையும் திருவிசைப்பாவும், பெரியபுராணமும் இதில் ஆய்வு செய்யப்படுகின்றன. இக்காலம் பண்டைய இசைவாணர்கள் பாணர் நிலையிலிருந்து வளர்ந்து மேளக்காரர் என்ற நிலையை அடையும் காலமாகும். பெருங்கதை, கம்ப இராமாயணம் போன்றவைகளும் இதில் ஆய்வு செய்யப்படுகின்றன-(7).

4.அருணகிரி நாதர் காலம்(கி.பி. 1250-1550):

            தமிழிசை உலகில் பெருஞ்சிறப்புப்பெற்ற தேவார காலத்தையும், கீர்த்தன காலத்தையும் இணைக்கும் இசைப்பாலமாக இருந்தவர் அருணகிரி நாதர் ஆவார். அவரது காலம் சுமார் கி.பி 1350-1450 க்குள் அடங்கும். அவருக்கு முன் இருந்த நம்பிதிருவிளையாடல் பல இசைச்செய்திகளைச் சொல்லியவர் ஆவார். புதுமையான பல இசை வடிவங்களை உருவாக்கிய சித்தர் காலமும் இக்காலம் தான் ஆகும்-(8).

5.தமிழ் கீர்த்தனைகாலம்(கி.பி. 1550-1800):

            இசைத்தமிழுக்கு மூன்று காலங்களைப் பொற்காலம் எனக்கூற முடியும். அவை 1. சிலப்பதிகார காலம், 2.தேவாரகாலம், 3.கீர்த்தனை காலம் ஆகியனவாகும். கீர்த்தனை காலத்தில் முத்துத்தாண்டவர்(கி.பி. 1525-1605) தோன்றி முதன்முதலாகத் தமிழில் புது உருவங்களை அமைக்கிறார். பல்லவி, அனுபல்லவி, சரணம் என்ற அமைப்பில் கீர்த்தனமாகவும், பதமாகவும் அமைக்கிறார். இவை தமிழுக்கு மட்டுமல்ல இசைக்கே புதியனவாகும். இக்காலப்பகுதி இசைத்தமிழுக்கு ஒரு புதிய சகாப்தத்தைத் தோற்றுவிக்கிறது. முத்துத்தாண்டவர் மேளக்காரர் மரபு ஆவார். தமிழிசையான கர்நாடக இசைக்கும் அவர் ஒரு புதிய சகாப்தத்தைத் தோற்றுவிக்கிறார். இந்த கீர்த்தனைக் காலத்தில் சீகாழி முத்துத்தாண்டவர், பாபநாச முதலியார், அருணாசலக் கவிராயர், மாரிமுத்துப்பிள்ளை ஆகிய நால்வர் மிகவும் புகழ்பெற்றவர்கள் ஆவர்-(9).

6.தியாகராசர் சுவாமிகள் காலம்(கி.பி. 1800-1920):

                தியாகராசர் சுவாமிகள்(1767-1847) தமிழிசையுலகில் இன்னும் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கினார். அவர் இணையற்ற ஒரு மகான். அவர் தமிழிசையைத் தனது தாய்மொழியாம் தெலுங்கில் பாடினார். தியாகராசர் சுவாமிகள், சியாம சாத்திரி, முத்துசாமி தீட்சிதர் ஆகிய மூவரையும் சேர்த்து மும்மூர்த்திகள் என்பர். இவர்கள் மூன்று பேரும் தமிழ் நாட்டில் இருந்து கொண்டு தமிழிசையில்தான் பாடினார்கள். ஆனால் பாடிய மொழிதான் தெலுங்கு. அதனால் அவர்கள் வழி வந்தவர்கள் தெலுங்கைப் பிடித்துக் கொண்டு தமிழைப் புறக்கணித்தார்கள். தெலுங்கின் ஆட்சி தமிழுக்கும், தமிழிசைக்கும் வீழ்ச்சியாயிற்று. இதன் விளைவாக வளர்ச்சிமிக்க ‘பாவ’ சங்கீதம் செத்தது. அதன் இடத்தில் வறட்டுச் ‘சுரசங்கீதம்’ தான் இன்றுள்ளது. இது தியாகராசர் சுவாமிகளுக்குச்செய்த பெருந்துரோகம் ஆகும்-(10).

7.தற்காலம்(கி.பி. 1920க்குப் பின்):

            தமிழிசை தோன்றிய காலம் இதுவாகும். தமிழிசைக்கு வித்திட்ட பாரதியாரோடு இது தொடங்குகிறது. கல்கியும், டி.கே.சி யும் முளைத்த பயிருக்கு நீர் வார்த்தார்கள். தமிழிசைச்சங்கம் அதனைப் பயிராக்கி வளர்த்தது. இன்னும் பாவ சங்கீதம் வளரவில்லை. சிறந்த சங்கீதம் என்பது பொருளோடும் பாவத்தோடும் பின்னிப்பிணைந்துள்ளது. அது இனித்தான் வளர வேண்டும்.

சங்க காலத்தில் கீர்த்தனை வடிவம்:

            சங்க இலக்கியத்தொகுப்புகளில் ஆசிரியப்பாக்கள் 6 தொகை நூல்களாகவும் ஒரு பத்துப்பாட்டாகவும் தொகுக்கப்பட்டன. கலிப்பாவும் பரிபாடல்களும் வேறு இரு தனி நூல்களாகத் தொகுக்கப்பட்டன. பிறவகை இசைப்பாக்களும் அக்காலத்தில் இருந்திருக்க வேண்டும். ‘அற்றைத்திங்கள்’ எனத்தொடங்கும் பாரிமகளிர்களுடைய 112ஆம் புறப்பாடலை நாம் அறிவோம். அது ஆசிரியப்பா ஆகும். அவர்கள் வேறுவகை இசைப்பாடலையும் பாடியிருப்பர். அவை எட்டுத்தொகை தொகுப்பில் வரவில்லை. வேறுவகை இசைப்பாடல் தொகுப்பில் வந்திருக்கலாம். அவை அழிந்துவிட்டன.

யாப்பருங்கால விருத்தியுரையில் உள்ள ஒரு பாடல்,

                                                                                                            “எந்தை குன்றம் –

மாலை மணங்கமழும் மௌவல் முகைவிரியு              -எந்தை குன்றம்

காலை மணிக்குவளை காதலர்போற் கண்விழிக்கும் -எந்தை குன்றம்

நீல மழைமுழங்கி நின்று சிலம்பதிரும்                                    -எந்தை குன்றம்

மாலை மயிலகவ வந்தண்டு வணமே                         -எந்தை குன்றம்

ஆடு கழைகிழிக்கும் அந்தண் புயலிற்றே                               -எந்தன் குன்றம்

நீடு கழைமேல் நிலாமதியம் நிற்குமே                                    -எந்தன் குன்றம்

கூடு மழைதவழும் கோடுயர் சந்தமே                         -எந்தன் குன்றம்”-(11).

            என உள்ளது. ‘எந்தையும் எம்குன்றும்’ பாடிய அதே இளம்பெண்கள் உள்ளம் இந்தப் பாடலையும் பாடியுள்ளது. காலம் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பு, கி.மு. 3ஆம் நூற்றாண்டு. இந்தப்பாடலில் அனுபல்லவி இல்லை. ஆனால் சரணமும் பல்லவியும் அமைந்துள்ளன. இன்றுகூட பல வித்துவான்கள் பல்லவியும் சரணமும் மட்டுமே அமைக்கிறார்கள். ‘எந்தை குன்றம்’ என்பது இங்கு பல்லவியாகவுள்ளது. ‘மாலை மணங்கமழும் மௌவல் முகைவிரியும்’ என்பது சரணமாகிறது. அதுபோன்று இப்பாடலில் மொத்தம் ஏழு சரணங்கள் அமைந்துள்ளன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இவ்வகைப்பாடல் இருந்துள்ளது. அன்று இவ்வகைப் பாடல்களுக்கு தரப்பட்டிருந்த பெயரை அறிய இயலவில்லை. இவ்வகைப்பாடல்களை ஒரு தொகுப்பாகக் கருதும்பொழுது கீர்த்தனை வடிவம் சங்ககாலத்தில் இருந்திருக்கக் கூடும் எனலாம். அவைபோன்ற இசைப்பாடல் தொகுப்புகள் பல அழிந்து விட்டன. அதன்பின் அப்பர் சுவாமிகள், சித்தர்கள், தத்துவராயர் போன்றவர்கள் இதே அமைப்பில் சாகித்தியங்கள் செய்திருக்கிறார்கள். சங்க காலத்தில் அவ்வடிவம் துயரத்தை வெளியிடுவதற்காகப் பயன்பட்டது. அதன்பின் தெய்வத்தின் கீர்த்தியைப் புகழும் கீர்த்தனை வடிவம் பெற்றது. இவைகளின் மூலம் சங்க காலத்தில் ஆசிரியப்பா தவிர வேறுவகை இசைப்பாடல்களும் இருந்துள்ளன என்பது உறுதியாகிறது.

பார்வை:

2.தமிழ் இசை இலக்கிய வரலாறு, மு. அருணாசலம், பதிப்பாசிரியர் உல.பாலசுப்ரமணியன், கடவு பதிப்பகம், அக்டோபர்-2009, பக்: 57.

3. “ “ பக்:31-67, 81-85.

4.சிலப்பதிகாரம் ஓர் எளிய அறிமுகம், சுஜாதாவின் முன்னுரை, உயிர்மை, டிசம்பர்-2005.

5. தமிழ் இசை இலக்கிய வரலாறு, மு. அருணாசலம், பதிப்பாசிரியர் உல.பாலசுப்ரமணியன், கடவு பதிப்பகம், அக்டோபர்-2009, பக்: 19-94.

6. “ “ பக்: 95-196.

7. “ “ பக்:197-228.

8. “ “ பக்:229-258.

9. “ “ பக்:259-350.

10. “ “ பக்:351-400.

11. “ “ பக்;192-193.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

மு. அருணாசலம் அவர்களின் தமிழ் இசை இலக்கண வரலாறு எனும் நூல் 16 அத்தியாயங்களை உடையது. இந்நூல் இசை இலக்கண நூல்களை, தமிழ் இசை இலக்கண நூல்கள், வடமொழி இசை இலக்கண நூல்கள், பரதம் கூறும் நூல்கள், தாளம் கூறும் நூல்கள் என நான்காகப் பிரித்து ஆய்வு செய்கிறது. வேத இசையாகிய சாமகானம் தவிர வேறு எந்த இசையும் வடமொழியில் உருவாகவில்லை. ஆதலால் தமிழ் சாகித்தியத்தை அடிப்படையாகக் கொண்டுதான் வடமொழி இசை இலக்கண நூல்கள் உருவாகின. பல தமிழ்ப்பண் பெயர்கள் வடமொழி இசை இலக்கண நூல்களில் சொல்லப் பட்டிருப்பது இதனை விளக்கும். மேலும் இசை இலக்கண வரலாறு சொன்ன இவர்கள் இசை இலக்கிய வரலாறு குறித்து எதுவும் சொல்லவில்லை. இசை இலக்கியம் இன்றி இசை இலக்கணம் இல்லை. இசை இலக்கியங்கள் அதாவது சாகித்தியங்கள் எல்லாம் தமிழில்தான் இருந்தன. அதனைச் சொல்ல அவர்களுக்கு மனம் வரவில்லை. தங்களின் இசை இலக்கண நூல்களிலும் தமிழ் சாகித்தியங்களைக் கூறுவதையோ, தமிழ் இசை இலக்கண நூல்களைக் கூறுவதையோ திட்டமிட்டு மறைத்தார்கள். வடமொழிதான் அனைத்துக்கும் மூலம் என்ற கருத்தை நிலை நிறுத்திட விரும்பினார்கள். ஆதலால் தமிழ் சாகித்தியங்களையோ, தமிழ் இசை இலக்கண நூல்களையோ சொல்ல விரும்பவில்லை. மதங்க முனிவருடைய இலட்சணக்கிரந்த நூலாகிய பிருகத்தேசி முதல் பிற சிறப்பான வடமொழி இலக்கணநூல்கள் எல்லாம் கி.பி. 8ஆம் 9ஆம் நூற்றாண்டுக்கு பிற்பட்டவையே ஆகும்-(1).

பரத சாத்திரம்:

          mu arunasalam book  “நாடகத்தமிழ் நூலாகிய பரதம் முதலான தொன்னூல்களும் இறந்தன” என்கிற அடியார்க்கு நல்லார் அவர்களின் கூற்று பரதர் என்பவரால் செய்யப்பட்ட பரதம் என்கிற நாடகத் தமிழ்நூல் இருந்துள்ளது என்பதையும் அது மிகவும் தொன்மையான நூல் என்பதையும் உறுதி செய்கிறது. அடியார்க்கு நல்லார் குறிப்பிடுகிற பரதம் என்கிற நாடகத்தமிழ் நூல் எழுதிய பரதர், இலக்கிய வரலாற்று செய்திகளின்படி கி.மு. வுக்குச் சில நூற்றாண்டுகள் முந்தையவர் ஆவார். இந்தப் பரதம் என்கிற நாடகத் தமிழ்நூல்தான் பரத நாட்டிய சாத்திரம் என்ற பெயரில் வடமொழியில் மொழி பெயர்க்கப் பட்டுள்ளது. மேலும் அந்த வடமொழிநூலில் “இது தட்சிணாத்தியமாகிய தென்னாட்டு நெறி” என்பது சொல்லப்பட்டுள்ளது-(2). ஆதலால் பரதாசாரியாரின் ‘பரத நாட்டிய சாத்திரம்’ தமிழ் மரபை அடிப்படையாகக் கொண்டு தமிழில் தோன்றிய நூலாகும். அதன் காலத்தை, கி.மு. 3ஆம், 4ஆம் நூற்றாண்டு எனலாம். அது பின்னாளில் கி.பி. 3ஆம் நூற்றாண்டுக்குப்பின் வடமொழியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. வடமொழிக்கான கிரந்த எழுத்து கி.பி. 3ஆம் நூற்றாண்டுக்குப் பின்னரே தோன்றுகிறது. அதன் பின்னரே பல நூல்கள் வடமொழியில் தோன்றுகின்றன. ஆகவே சிலப்பதிகாரத்திற்கு பிற்பட்டே ‘பரத நாட்டிய சாத்திரம்’ மொழி பெயர்க்கப்பட்டிருக்க வேண்டும். பரதம் என்கிற மூலத் தமிழ் நாட்டிய நூல் அழிந்துவிட்டது. ஆனால் அதன் வழிநூலான வடமொழியில் மொழிபெயர்க்கப் பட்ட ‘பரத நாட்டிய சாத்திரம்’ இன்றும் இருக்கிறது. இந்த வடமொழி நூலுக்கு அபிநவகுப்தர் எனும் காசுமீர்க்காரர் உரை எழுதியுள்ளார்-(3).

            தாய்லாந்தில் பேராசிரியராகவுள்ள இந்துசேகர் என்பவருடைய வடமொழி நாடகம் பற்றிய ஒரு நூல் நெதர்லாந்து தேசத்தில் ‘இளேன்’ நகரில் ‘பிரில்’ என்பவரால் அச்சிட்டு வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்ட ‘பரத நாட்டிய சாத்திரம்’ குறித்தச் சில கருத்துக்களைக் காண்போம்.

            ‘பரதர் என்பவர் ஆரியர் அல்லாத ஒர் இசைக்கலைஞர் குடும்பத்தில் தோன்றியவர். அவர் தனது நாடகக் குழுவின் உறுப்பினரைத் தம்முடைய பிள்ளைகள் என்றே கூறிக்கொள்கிறார். பரதநாட்டியம் என்ற கலைக்கு மிகவும் புகழடைந்த ஒரு மரபு இருப்பது இது தமிழ் நாட்டுக்கேயுரியது என்பதைக்காட்டுகிறது. அந்த நாட்டியத்தை நாம் ஊன்றிப் பார்க்கும்பொழுது அது புராதனமான பரதசாத்திரத்தில் உரைக்கப்பட்ட பொருளே என்று தெரிகிறது. இது தென்னாட்டில்தான் தோன்றி வளர்ந்திருக்கிறது......ஏழாம் நூற்றாண்டுக்கு முன்பு இந்த நூலைக் குறிப்பிட்டவர் இல்லை. தந்திர சாத்திரங்கள், முத்திரை குறித்துச் சொல்லும் கருத்துக்களைக்கொண்ட பரத சாத்திரம் ஆரிய நாகரிகத்துக்குப் புறம்பானது என்று தெரிகிறது. தந்திர சாத்திரம் திராவிட நாடுகளில்தான் பழமையாக விளங்கிற்று. வங்காளத்திலும் அசாமிலும் அதன் ஆட்சி மிகவும் பிற்காலத்தில்தான்.......தந்திர சாத்திரம் ஆட்சி பெற்றிருந்தது தென்னாட்டில். ஆகவே இதுவே பரத நாட்டியத்திற்கு தாயகம். கேரளத்தில் வழக்கிலுள்ள கதகளி ஆட்டமும் முத்திரையை அடிப்படையாகக் கொண்டது. இலக்கியத்தால் இந்த அரிய கலைகள் தமிழ் நாட்டில் காணப்பட்டிருந்தன என்று அறிகிறோம். சங்க இலக்கியத்திலும் இதைக்காண்கிறோம்”-(4). பிரில் என்பவரின் இக்கருத்து ‘பரத நாட்டிய சாத்திரம்’ தமிழில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டது என்பதையும், பரத நாட்டிய சாத்திரத்தின் காலம் கி.பி. 4ஆம் நூற்றாண்டுக்குப்பின் என்கிற கருத்தையும் உறுதிப்படுத்துகிறது.

            தமிழில்தான் இயல், இசை, நாடகம்(நாட்டியம்) ஆகியவைகளைச் சேர்த்து முத்தமிழ் என்கிற கருத்து ஆதிகாலத்திலேயே உருவாகி வளர்ந்து வந்துள்ளது. தமிழில் இருந்த இசை, நாட்டிய நூல்கள் அழிந்து போய், இயல் நூல்கள் மட்டுமே இன்று கிடைத்துள்ளன. இசை, நாட்டிய நூல்கள் தமிழில் இருந்துள்ளன என்பதைச் சங்க இலக்கியங்கள் உறுதிப்படுத்துகின்றன. சைவ ஆகம வரிசையில் உள்ள புரோக்கீதம் என்ற 21 ஆவது மூலாகமத்தில் 16 உப ஆகமங்கள் உள்ளன. அதில் ஒன்று பரதம் ஆகும். இந்த ‘பரதம்’ பரத சாத்திரம் பற்றிய ஆகமமாகும்-(5). ஆகமங்கள் தமிழ் நெறி சார்ந்தவை என்பதால் பரத சாத்திரமும் தமிழ்நெறி சார்ந்தது ஆகும். இத்தரவுகள் வடமொழியில் உள்ள ‘பரத நாட்டிய சாத்திரம்’ என்கிற நூல், பரதம் என்கிற நாடகத்தமிழ் நூலின் மொழிபெயர்ப்புதான் என்பதை உறுதி செய்கின்றன.

தமிழில் இசை இலக்கண நூல்கள்:

            சங்ககாலத்திலும், பின் 7ஆம், 8ஆம், 9ஆம் நூற்றாண்டுகளிலும் தோன்றிய தமிழ் இசை இலக்கண நூல்கள் அழிந்து போயின. 9ஆம் நூற்றாண்டிலும் அதன் பின்னரும் வந்த வடமொழியாளர்கள் தமிழ் நாட்டிலிருந்த மேளக்காரரிடம் இசையையும் நாட்டியங்களையும் நன்கு கற்று, இவைபற்றி வடமொழியில் இலக்கணம் எழுதினார்கள். நாளடைவில் வடமொழிதான் இவற்றைச் சொல்வதற்கு ஏற்ற மொழி என்ற கருத்து உருவாகியது. தமிழ் நாட்டில் இருந்தவர்களும் நாளடைவில் வடமொழியில் எழுதுவதே சிறப்பு எனக் கருதி வடமொழியில் அனைத்தையும் எழுதினார்கள். அன்று தமிழைத்தவிர பிற மொழிகளில் சாகித்தியங்கள் இல்லை என்பதால் தமிழ் சாகித்தியங்களைக்கொண்டுதான் இந்த வடமொழி இசை இலக்கண நூல்கள் அனைத்தும் உருவாகின. கி.பி. 9ஆம் நூற்றாண்டுக்குப்பின் தமிழில் இசை இலக்கண நூல்கள் அதிகம் உருவாகவில்லை. பழைய நூல்கள் பல அழிந்துபோயின. பண்டைய இசைத்தமிழ் நூல்கள் குறித்து, இறையனார் களவியல் உரையாசிரியரும், சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லாரும் சில செய்திகளைத் தந்துள்ளார்கள்.

            பரிபாடல், பெருநாரை, பெருங்குருகு, முதுநாரை, முதுகுருகு, குருகு, வெண்டாளி, வியாழமாலை அகவல், சிற்றிசை, பேரிசை முதலியன இசை நூல்கள் ஆகும். அகத்தியம், இசை நுணுக்கம் ஆகியன இசை இலக்கண நூல்கள் ஆகும். கூத்துவரி என்பது நாடகத்தமிழ்(நாட்டியம்) நூல் ஆகும். இவை சங்ககால நூல்கள் என இறையனார் களவியல் உரையாசிரியர் கூறுகிறார்(முச்சங்கம் வாரியாக இவைகளை அவர் கூறுகிறார்). இவ்வாசிரியர் காலம் கி.பி. 7ஆம் நூற்றாண்டு ஆகும்.

            அடியார்க்கு நல்லார்(கி.பி. 9ஆம் நூற்றாண்டு), குறிப்பிடும் பரிபாடல், முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை, பெருநாரை, பெருங்குருகு ஆகியன இசை நூல்கள், பரதம் நாடகத்தமிழ் நூல், அகத்தியம் என்பது இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழும் தழுவிய இலக்கண நூல். நாரதர் எழுதியதாக பஞ்ச பாரதீயம் என்ற ஒரு நூலையும் குறிப்பிடுகிறார். இவைகளை இவர் முச்சங்க நூல்களாகக் குறிப்பிட்டுள்ளார். இவைபோக சயந்தம், குணநூல், செயிற்றியம் ஆகியன நாடகத் தமிழ் நூல்கள் ஆகும். முறுவல் என்ற நூல் குறித்து அறிய இயலவில்லை. இவைபோக பிற்காலத்துக்குரிய இசை நுணுக்கம், மதிவாணர் செய்த நாடகத்தமிழ் நூல், இந்திர காளியம், பஞ்சமரபு, பரத சேனாபதியம் ஆகிய ஐந்து நூல்களைக் குறிப்பிட்டு இவை சிலப்பதிகாரத்துக்கு உரை எழுதத் தகுதி அற்றவை எனவும் வேறுநூல் இல்லாததால் இவைகளைக் கொண்டு உரை எழுதுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். பிற அன்றே அழிந்து போயின. கடைசி ஐந்துநூல்கள் மட்டுமே அவர்காலத்தில் இருந்துள்ளன. அந்த ஐந்துநூல்களிலும் இன்று ‘பஞ்சமரபு’ மட்டுமே கிடைத்துள்ளது.

            சிலப்பதிகார அரும்பத உரைகாரர்(கி.பி.11ஆம் நூற்றாண்டு), ‘இசைத்தமிழ் பதினாறு படலம்’ என்ற நூலைக் குறிப்பிடுகிறார். இது இசைத்தமிழுக்கே உரிய 16 பகுதிகளைக்கொண்டதாகும். இது குறித்து எதுவும் அறிய இயலவில்லை. தொல்காப்பியர் கூறிய புறப்பொருள் ஏழு திணைகளையும் 12ஆக ஆக்கி பன்னிரு படலம் என்ற ஒரு இயல் இலக்கண நூல் தோன்றியது. இதன்வழி தோன்றிய ‘புறப்பொருள் வெண்பாமாலை’ என்ற நூலின் காலம் கி.பி. 9ஆம் நூற்றாண்டு ஆகும். ஆதலால் ‘பன்னிரு படலம்’ நூலின் காலம் சுமார் கி.பி. எட்டாம் நூற்றாண்டு எனலாம். படலம் என்பதுபோல ஓத்து என்பது ஒரு பெருநூலின் ஒரு பகுதி ஆகும். ஆதலால் ‘தாளவோத்தினுள் காணலாம்” என சிலப்பதிகார அரும்பத உரைகாரர் குறிப்பது ‘இசைத்தமிழ் 16 படலம்’ என்ற நூலின் தாள இலக்கணம் குறித்த ஒரு பகுதி ஆகும். தாளம் பற்றி மிகவும் பிற்காலத்தில்தான் தமிழில் தாள இலக்கண நூல்கள் தோன்றின. அவைகளுக்கு முன் தாளம் குறித்துத் தனிப்பகுதி ஒதுக்கி இசைத்தமிழ் 16 படலம் என்ற நூலில் தாளம் குறித்த இலக்கணம் செய்யப்பட்டுள்ளது-(6).

பஞ்ச மரபு:

            தொலைந்து போன நூல்களில் ஒன்றாகக் கருதப்பட்ட பஞ்ச மரபு என்ற நூல், ஈரோடு வேலம்பாளையம் வித்துவான் திரு. வே.ரா. தெய்வசிகாமணிக் கவுண்டரிடம் ஏடு கிடைத்து, குடந்தை பண்ணாராய்ச்சி வித்தகர் ப. சுந்தரேசனாரால் நன்கு பரிசோதித்து முதல் பகுதி 1973 அக்டோபரிலும், இரண்டாம் பகுதி 1975 அக்டோபரிலும் வெளியிடப் பட்டுள்ளன. பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்கள் இதன் வெளியீட்டுக்கு உதவி செய்துள்ளார். இந்நூல் உரையோடு அச்சிடப்பட்டுள்ளது. இந்நூல் குறித்து, திருப்பூர் மாவட்டம், காங்கயம் வட்டம், பாப்பினி பச்சோட்டு ஆவுடையார் கோயிலில் நடராசர் பாதத்தில் ஏடு கிடைத்தது. ஏட்டுச்சுவடி கோயில் பணிப்பெண்(மாணிக்கத்தி) வெள்ளச்சி மகன் தம்பான் எழுதியது எனக் கூறுகிறார் புலவர் இராசு அவர்கள். உரையாசிரியர் 240 வெண்பாக்களை இது உடையது என்கிறார். நரம்பு, குழல், கண்டம், தோல், கூத்து ஆகிய ஐந்து மரபு உறுப்புகளையும், இசை, முழவு, கூத்து, தாளம், அபிநயம் ஆகிய ஐந்தையும் உடையதால் பஞ்ச மரபு எனப்பெயராயிற்று.

            இந்நூல் ஆசிரியர் பெயர் அறிவனார் ஆகும். ஐந்தியலும் உணர்ந்த அறிவனாரால் இந்நூல் செய்யப்பட்டது என உரைகாரர் கூறுகிறார். முந்தையோர் கருத்தை எடுத்து மொழிவதாகவே ஆசிரியர் கூறுகிறார். முந்தையவர்களை முத்தமிழோர், முற்றுணர்ந்த மெய்த்தமிழோர் என்கிறார். இசைக்கலை மரபு என்பது ‘இசை, வாச்சியம், நிருத்தம், அவிநயம், தாளம்’ ஆகிய ஐந்து மரபுகளைக் கொண்டது.

            இசை மரபானது யாழ், வங்கியம், கண்டம், நிருத்தம், வகையொழிமரபு ஆகிய ஐந்து உட்பிரிவுகளை உடையது. இதில் 87 வெண்பாக்கள் உள்ளன. இரண்டாவதாகிய வாச்சிய மரபு என்பது முழவு, பிண்டம், எழுத்து ஆகிய மூன்று பிரிவுகளை உடையது. இதில் 30 வெண்பாக்கள் உள்ளன. மூன்றாவதாக உள்ள நிருத்த மரபு என்பதும் 30 வெண்பாக்களை உடையது. நான்காவதாக உள்ள அவிநய மரபு என்பது 21 வெண்பாக்களை உடையது. ஐந்தாவதாக உள்ள தாளமரபு என்பது 30 வெண்பாக்களைக்கொண்டு 108 தாளங்களையும் பிற செய்திகளையும் கூறுகிறது. நூலின் காலம் கி.பி. 9ஆம் நூற்றாண்டின் இறுதி எனலாம். சிறப்பான பல இசைச்செய்திகள் இந்நூலுள் உணர்த்தப்படுகின்றன. இந்நூலை முழுமையாகக் காணும்பொழுது நூலாசிரியருக்கு முற்பட்ட காலத்தில் யாழ், குழல், முழவு என்பன எவ்வளவு அருங்கலைகளாக விரிந்து வளர்ந்திருந்தன என்பது நன்கு விளங்கும். பஞ்ச மரபு முழுமையும் கிடைத்து அச்சில் வெளி வந்திருப்பது தமிழ் இசை உலகத்துக்குக் கிடைத்த பெரும்பேறு எனலாம்.

            புலவர் வே.ரா. தெய்வசிகாமணிக் கவுண்டர் அன்பு நிறைந்த இதயம் கொண்டவர். இவர் தமிழ் வித்துவானே ஒழிய இசை அறிந்தவர் அல்லர். குடந்தை ப. சுந்தரேசனார் இசையும் தமிழும் அறிந்தவர். வே.ரா. தெய்வசிகாமணிக் கவுண்டரிடம் ஏடுகள் பெற்ற பலர் உரிய மதிப்பை அவருக்குத் தரவில்லை. ஆதலால் வே.ரா. தெய்வசிகாமணிக் கவுண்டரின் வேலம்பாளையம் வீட்டிலேயே குடந்தை ப. சுந்தரேசனார் ஆறுமாதம் தங்கை பதிப்பில் உதவி செய்தார் என்கிறார் புலவர் இராசு அவர்கள். இருந்த போதிலும் நூல் பிழைகளோடு அச்சாகியுள்ளது. இதனை நாம் உள்வாங்கிக்கொள்வது அவசியம்-(7).

வடமொழி இசை இலக்கண நூல்கள்:

            பரதநாட்டிய சாத்திரம் தான் முதல் வட மொழி நாட்டிய, இசை இலக்கண நூல் எனலாம். இதற்கு முந்தைய வேறு நூல்கள் இல்லை. இது நாட்டிய நூல் எனினும் இசை இலக்கணம் குறித்தும் கூறுகிறது. இதன் காலம் கி.பி. 4ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் ஆகும். பரதம் என்ற நாடகத்தமிழ் நூலின் மொழிபெயர்ப்பே இந்நூலாகும். இவருடைய நூல் நாட்டியத்துக்கான அங்கமாக இசையைப்பார்த்தது. பிற நூல் ஆசிரியர்கள் இசையை முக்கியமானதாகக் கொண்டார்கள். சில முக்கிய வடமொழி இசை இலக்கண நூல்கள் வருமாறு, மதங்கரின் பிருகத்தேசி, நாரதரின் சங்கீத மகரந்தம், பூலோகமல்லன் சோமேசுவரனின் மானசோல்லாசம், சோமநாத கவியின் இராக விபோதம், இராமமாத்தியரின் சுரமேள கலாநிதி, கோவிந்த தீட்சதரின் சங்கீத சுதா, அவர் புதல்வர் வேங்கட மகியின் சதுர்தண்டிப் பிரகாசிகை ஆகியன அவையாகும்-(8). சான்றாக, இதில் இரு நூல்கள் குறித்து மட்டும் சுருக்கமாகக் காண்போம்.

            பரதநாட்டிய சாத்திரத்துக்கு அடுத்த நிலையில் இருப்பது பிருகத்தேசி ஆகும். பிருகத்தேசி(கி.பி. 9ஆம் நூற்றாண்டு) செய்ததெல்லாம் பழந்தமிழ் மதுவை(இசையை) புதிய வடமொழிக்கிண்ணத்தில் வார்த்துத்தந்ததுதான் ஆகும். இவர் காலத்தில் வடமொழியில் இசை இல்லை. தமிழில் தான் இருந்தது. இவர் தனது நூலில் தக்கராகம், நாட்டராகம், காந்தார பஞ்சமம், சாதாரி ஆகிய தேவாரப்பண்களை இராகங்களாகக் குறிப்பிடுவதும் தேவார வர்த்தினி என்ற தொடரில் தேவாரத்தையே குறிப்பிடுவதும் இவர் தமிழ் சாகித்தியத்தைகொண்டுதான் தனது இசை இலக்கணத்தை எழுதினார் என்பதை உறுதிப்படுத்துகிறது-(9). தமிழை வைத்தே மதங்கர் பிருகத்தேசி செய்தார் என இரங்க இராமானுஜ ஐயங்கார் கூறியுள்ளார்-(10). இதே தன்மையை சாரங்கதேவரின் (கி.பி. 1210-1247)சங்கீத இரத்நாகரம் என்ற நூலிலும் காணமுடிகிறது.

            பூலோகமல்லன் சோமேசுவரன்(கி.பி. 1126-1138) என்பவன் கல்யாணியைத் தலைநகராகக் கொண்ட மேலைச் சாளுக்கிய மன்னன். இவன் மானசோல்லாசம் என்ற பெருநூல் செய்துள்ளான். இப்பெருநூலில் கூறப்படும் பொருள்கள் அரசகுலத்தார் அறிவதற்கென்றே ஆக்கப்பட்டன. அதில் பல நதிகளைக்குறிப்பிடும் இவன் வேண்டுமென்றே காவிரிநதியைக் குறிப்பிடவில்லை. காவிரி பாயும் சோழ நாடு, பகை நாடு என்பதே காரணமாகும். இவன்தான் இசைத்தமிழுக்குக் கர்நாடக சங்கீதம் எனப்பெயர் வைத்தவன் ஆவான். தெரிந்தோ, தெரியாமலோ, வேண்டுமென்றோ இவன் வைத்தபெயர் நிலைத்துவிட்டது. இசை இலக்கணத்தில் இவன் நூல் சொல்லாத பொருள் இல்லை எனலாம். இதில் மொத்தம் 8022 சுலோகங்கள் உள்ளன. ஐந்து பெரும்பாகங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் 20 அத்தியாயங்கள் என மொத்தம் 100 பொருள்கள் பற்றிக்கூறும் 100 அத்தியாயங்கள் உள்ளன. இந்நூல் பேசாத பொருளே இல்லை எனலாம். ஒரு அரசன் அறியவேண்டிய அனைத்தும் இதில் சொல்லப்பட்டுள்ளன. இந்நூல் முதல் எல்லா வடமொழி இசைஇலக்கண நூல்களும் தமிழ் சாகித்தியங்களைக்கொண்டு உருவானவை களேயாகும். தமிழ் இசையே இவைகளுக்கு அடிப்படை. ஆனால் தமிழிசை இலக்கிய, இலக்கண நூல்கள் குறித்து இவை எதுவும் பேசுவதில்லை.

தாள இலக்கண நூல்கள்:

            இசை வரலாற்றில் தாளம் ஒரு விரிந்த பொருளுடையது; தாளத்தின் இலக்கணம் அளந்தறிய இயலாதது; அதிக அளவு நுட்பமும் விரிவும் பொருந்தியது; என ஒரு பழைய தமிழ்ப்பாட்டு கூறுகிறது. இசையில் காலப் பரிமாணம் மிக முக்கியமானது. இசையில் ஒலியை அளவு படுத்துவது ஸ்தாயி ஆகும். காலத்தை அளவு படுத்துவது தாளம் ஆகும். பலர் சேர்ந்து இசைக்கும்போது மத்தளம், குழல், நாகசுரம், வீணை, வயலின் ஆகிய கருவிகள் சேர்ந்து இசை எழுப்புவதற்கான ஒலிக்கணக்கே தாளம் ஆகும். முதல் முதலாகத் தாளத்தைக்கூறும் நூல் சிலப்பதிகாரமே ஆகும். வடமொழி நூல்களுக்கு எவ்வளவுதான் பழமை கற்பித்தாலும் இதற்குமுன் தாளம் கூறும் நூல்கள் வடமொழியில் இல்லை. சிலப்பதிகார உரையில் அடியார்க்கு நல்லார் தாளவகையோத்து என்ற ஒரு நூற்பிரிவைச் சொல்கிறார். இந்த நூற்பிரிவு அரும்பதவுரைகாரர் கூறும் இசைத்தமிழ் 16 படலத்தில் ஒரு படலமாக இருக்கலாம். சில முக்கிய தாள நூல்கள், தத்திலம்(வடமொழி), பரத சித்தாந்தம்(வடமொழியும், தமிழும்), தாளசமுத்திரம், சச்சபுட வெண்பா(பண்டைய நூல்கள்), தாள தருப்பணம், தாளக் கலிவெண்பா(இக்கால நூல்கள்), கோமதி சங்கரையர் எழுதிய தாளக்கடல்(4 பாகம்) ஆகியன ஆகும். முதல் இரண்டு தவிர மீதி அனைத்தும் தமிழ் நூல்களே-(11).

சில சொற்பொருள்கள்:

            மேளம் என்பது தமிழ்ச் சொல். இது தொடர்பான பல பொருள்கள் தமிழில் உள்ளன. மேளக்காரர் என்றால் நாகசுரம் வாசிக்கும் குலத்தார் ஆவார். மேளம் என்றால் நாகசுர இசை ஆகும். மேளமாகிய வாத்தியத்தை அடிப்பவர், தவில் வாசிக்கிறவர் ஆவார். நாகசுர இசையானது நால்வரைக்கொண்டதாகும். நாகசுரம் வாசிக்கிறவர், மேளம் அடிக்கிறவர், சுதி கூட்டுவதற்காக ஒத்து ஊதுபவர், தாளம்போடுகிறவர் ஆகிய நால்வரும் சேர்ந்தே மேளம் எனப்பெயர் பெறுகிறார்கள். மேளம் என்பது சின்னமேளம், பெரிய மேளம் என இருவகைப்படும். சின்னமேளம் என்பது நாட்டியத்தைக் குறிக்கும். நாட்டியம் ஆடுகிற கணிகை, கையில் தாளம் ஏந்தி அவளை ஆட்டுவிக்கிற நட்டுவனார், தம்பூரா ஏந்தி நாட்டியத்துக்கான சாங்கியத்தைப்பாடுகிற பாடகி ஆகிய மூவரும் சேர்ந்தது நாட்டியமாகும். பெரிய மேளம் இசைத்தமிழையும், சின்னமேளம் நாடகத் தமிழையும் குறிக்கும். ஆகவே மேளம் என்பதற்கு இசை, நாட்டியம் எனவும் பொருள் உண்டு. ‘மேளம் கட்டுதல்’ என்பது நன்கு அமைந்துள்ள கச்சேரி நடக்கும் இடம் ஆகும். நன்கு இசை அமைதிபெற்ற அரங்கு ‘மேளம் கட்டிய அரங்கு’ ஆகும். வாத்தியங்களுக்குச் சுருதி சேர்த்தல் என்பது மேளம் கட்டுதல் ஆகும். மேளம் என்ற சொல் பழங்காலம் முதல் தமிழில் பல பொருள்களில் ஆட்சி பெற்று விளங்கியுள்ளது. எனவே மேளம் என்பது தமிழ்ச் சொல் ஆகும்-(12).

            இராகம் என்ற சொல்லும் தமிழ் சொல்லே. வடமொழியில் இராகம் என்ற சொல் வருவதற்கு முன்பே தமிழில் இராகம் வழக்கிலிருந்தது. நட்டராகம், தக்கராகம், பழந்தக்கராகம், மேகராகக் குறிஞ்சி போன்ற பல பண்கள் தேவாரப் பண்ணாக இருந்தன. இதன் காலம் ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதி. இதற்கு முன்பிருந்தே இவை தமிழ்ப் பண்களாக இருந்துள்ளன. அக்காலத்தில் வடமொழியில் இராகம் என்பது இல்லை. இராகம் என்ற சொல்லுக்கு வடமொழியில் முதலில் ஆசை என்ற பொருள்தான் இருந்தது. அதற்கு இசை, இன்னபிற பொருள்கள் எல்லாம் பிற்காலத்தில் வந்தவையே. பழங்காலத்திலேயே தமிழ்ப் பண்களின் ஒரு பகுதியாக ‘இராகம்’ என்ற சொல் இருந்துள்ளது. அதைக்கொண்டுதான் வடமொழியில் இராகம் என்ற சொல் உருவாகி அதற்கு இசை என்ற பொருளும் உருவாகியுள்ளது. தமிழ் சாகித்தியங்களைக் கொண்டு வடமொழி இசை இலக்கண நூல்களை உருவாக்கியவர்கள் நட்டராகம், தக்கராகம், பழந்தக்கராகம், மேகராகக் குறிஞ்சி போன்ற தேவாரப்பண்களை மொழி பெயர்த்தபோது அதில் உள்ள இராகம் என்ற சொல்லை வடமொழிக்கு கொண்டுசென்று அதற்கு இசை என்ற பொருளைத்தந்துள்ளனர். இராகத்திற்கு இசை என்ற பொருளும் தமிழில் இருந்துள்ளது. ஆகவே இராகம் என்ற சொல்லும் தமிழ்ச் சொல்லே. அது தமிழில் இருந்துதான் வட மொழிக்குச் சென்றுள்ளது-(13).

            கருமண் உடையதால் தக்காணப்பகுதி கருநாடக நாடாக ஆகியது. கருநாடகத்திலிருந்து வந்த இசை என்பதால் கருநாடக சங்கீதம் எனப் பெயர் ஏற்பட்டது. கருநாடக சங்கீதம் என்பது தென்னாட்டுச்சங்கீதம் எனவும் பொருள்படும். கருநாடகம் என்பது வடமொழிச்சொல் அன்று. கருநாடகம் என்பது பழமையான என்ற பொருளில் தமிழ் மக்களிடத்தில் புழக்கத்தில் உள்ளது. ஆகவே பழமையான இசை என்ற பொருளில் கருநாடக சங்கீதம் என்ற பெயர் வந்துள்ளது எனவும் கொள்ளலாம். இன்றைய தக்காணப்பகுதி மக்களை, அதாவது கருநாடகப் பகுதி மக்களை சிலப்பதிகாரம் ‘கொடுங்கருநாடர்’ என்றே குறிப்பிடுகிறது. களப்பிரர்கள் தமிழகத்தைக்கைப்பற்றியதை கல்லாடம் மதுரை வவ்விய கருநட வேந்தன் என்கிறது. ஆகவே கருநாடம் என்ற சொல் சங்கம் மருவிய காலம் முதல் இன்றைய கன்னடப்பகுதியை குறிக்கப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. ஆதலால் ‘கருநாடம்’ என்பது தமிழ் மூலம்கொண்ட சொல்லே ஆகும்-(14). அது வடசொல் அல்ல. இசைத்தமிழ் கருநாடகத்தில் இருந்து வந்ததாகக் கருதிய மேலைச் சாளுக்கிய மன்னன் பூலோகமல்லன் சோமேசுவரன்(கி.பி.1126-1138) அவ்விசைக்கு கர்நாடக சங்கீதம் என்ற பெயரை வைத்தான். அவனது காலத்தில் இசைத்தமிழ் மட்டுமே இருந்தது. அவன் இசைத்தமிழ் என்ற பெயரை வைக்க விரும்பாது இப்பெயரை வைத்தான் எனவும் கொள்ளலாம். ஆதலால் மேளம், இராகம், கர்நாடகம் ஆகிய பெயர்கள் அனைத்தும் தமிழ்ப்பெயர்கள் அல்லது தமிழை மூலமாகக்கொண்ட பெயர்கள் என உறுதிபடக் கூறலாம்.

பார்வை:

1.தமிழ் இசை இலக்கண வரலாறு, மு. அருணாசலம், பதிப்பாசிரியர் உல.பாலசுப்ரமணியன், கடவு பதிப்பகம், அக்டோபர்-2009, முன்னுரை-பக்:2.

2.  “  “  பதிப்புரை-பக்:vi.

3.  “  “  பக்:120-122.

4.   “    “     பக்:121.

5.  “  “  பக்:120.

6.  “  “  பக்:13-17.   

7.  “  “  பக்:22-27.

8.  “  “  பக்:37-47.

9.  “  “  பக்:41 & பிருகத்தேசி, 1928, பாசாலட்சணம், பக்:133.    

10.தமிழ் இசை இலக்கண வரலாறு, மு. அருணாசலம், பதிப்பாசிரியர் உல.பாலசுப்ரமணியன், கடவு பதிப்பகம், அக்டோபர்-2009, பக்:38.

11.  “     “   பக்:79-82.

12, 13. “     “   பக்:446-450.

14.  “     “   பக்:443,444.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard