New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தமிழ் ஆன்மிக மறுமலர்ச்சியின் வரலாறு


Guru

Status: Offline
Posts: 24603
Date:
தமிழ் ஆன்மிக மறுமலர்ச்சியின் வரலாறு
Permalink  
 


தமிழ் ஆன்மிக மறுமலர்ச்சியின் வரலாறு


 
Save
Share28
 

vallalar

அன்புள்ள ஜெ,

அண்மையில் ஷௌக்கத்தின் ‘ஹிமாலயம்’ வாசித்து முடித்தேன். மனதிற்கு நெருக்கமான நூல். அதில் “மதம் ஏதானாலும் மனிதன் நன்றாக இருந்தால் போதும்” எனும் நாராயண குருவின் வரி மனதை ஆழமாக தொந்தரவு செய்தது. நாராயண குரு என்றல்ல காலனிய காலகட்டத்து இந்திய ஆன்மீக மரபுகள் அனைத்தின் பொதுவான கவலை இதுவாகவே இருந்திருக்கும் எனத் தோன்றியது. வள்ளலார், அய்யா வைகுண்டர் என தமிழக மெய்ஞான மரபுகளுடன் சேர்த்து இவ்வரியை விரித்துக்கொள்ள முடியும். பஞ்சத்திலும் பாராமுகத்திலும் மறந்து போகும் முகங்களை கண்டு உருவான ஆன்மீக மரபு மனித மீட்பையே கொள்கையாக கொண்டிருக்க முடியும்.

மெய்வழிச்சாலை, வள்ளலார், அய்யா வைகுண்டர் என காலனிய காலகட்டத்து தமிழக பிராந்திய ஆன்மீக மரபுகள் பற்றி தொடர்ச்சியாக வாசிக்க வேண்டும் எனத் தோன்றுகிறது. அயோத்திதாசரை கூட இதே வரிசையில் வைக்கலாம்.  இயன்றால் ஒரு புத்தகம் எழுத முடியுமா என பார்க்கலாம்.

இவைத் தவிர்த்து வேறு மரபுகள் தமிழகத்தில் உள்ளனவா? இந்திய அளவில் வெவ்வேறு பிராந்தியங்களில் இவற்றுடன் ஒப்பிடத்தக்க அமைப்புகள் வேறு எங்கெங்கு உள்ளன?

சுனீல் கிருஷ்ணன்

 

akila

அன்புள்ள சுனீல் கிருஷ்ணன்,

இந்தக் கடிதம் ஓர் அதிர்ச்சியான எண்ணத்தை உருவாக்கியது. இன்று எவ்வளவு பிரம்மாண்டமான அறிவியக்கப்பணிகள் எஞ்சியிருக்கின்றன! உண்மையில் நம் தலைமுறையில் அறிவியக்கப்பணி என்பது தொடங்கப்படவே இல்லையோ? மெய்யான அறிவியக்கப்பணி என்பது மிகச்சீராக, தொடர்ச்சியாக செய்யப்படுவது. ஒரு முழுவாழ்நாளையும் கோருவது. நம் தலைமுறைக்கு முந்தைய தலைமுறையில் மிகச்சிலரே பெரும்பணிக்கு தங்களை அளித்துக்கொண்டவர்கள். மிஞ்சியவர்கள் வெறுமனே உதிரி ஓசைகளை வெளிப்படுத்தியவர்கள். வெறுமனே புரணியும் அரட்டையும் பேசிக்கொண்டிருந்தவர்கள்.

நம்மில் பெரும்பாலானவர்களுக்கு கடுமையான உழைப்பைக் கோரும் பெரும்பணிகளின் மேல் ஒவ்வாமை உள்ளது. ஏனென்றால் அவர்கள் நம் இயலாமையை, சிறுமையை தங்கள் இருப்பாலேயே சுட்டிக்காட்டுகிறார்கள். ஆகவே பெரும்பணிகளை செய்பவர்களை நாம் பெரும்பாலும் பொருட்படுத்துவதில்லை. அல்லது அவர்களை நம் சிறுமையால் இழிவு செய்கிறோம். நையாண்டிகள், குறைசொல்லல்கள் வழியாக கடந்துசெல்கிறோம்.

சென்ற தலைமுறையில் தமிழ்ச்சூழலில் வாழ்நாள் பணியாக அறிவியக்கத்தில் செயல்பட்டவர்களைப் பற்றி அறிந்துகொள்ள இணையத்தில் தேடினால் பெரும்பாலும் என் தளத்திற்கே திரும்ப வந்து சேர்கிறேன். இதுதான் இன்றைய சூழல். ஆகவே பணியாற்றுவதைவிட அரட்டைகளில் முந்தியிருப்பதே புகழும் இடமும் பெறுவதற்குரியது என்னும் எண்ணம் இங்கே வலுவாக நிறுவப்பட்டுள்ளது.

ஒவ்வொருநாளும் நிகழ்ந்துகொண்டிருக்கும் அரட்டையே அறிவியக்கச் செயல்பாடுகளின் மிகப்பெரிய தடை. ஒரு சூழலில் அத்தனைபேரும் ஒன்றையே பேசிக்கொண்டிருப்பதுபோல அறிவுச்செயல்பாட்டுக்கு எதிரான ஒன்று வேறில்லை. ஆய்வாளர் என்பவர் தன் ஆய்வுக்குள் மட்டுமே ஆழச்செல்பவர். அதன்பொருட்டு பிற வாயில்களை முற்றாக மூடிக்கொள்பவர். எளிய சமூக பொது அலைகளால் பாதிக்கப்படாதவர். அத்தகையோர் எழவேண்டும் இங்கே.

mey
மெய்வழிச்சாலை ஆண்டவர்

தமிழ் ஆன்மிக மறுமலர்ச்சியின் வரலாறு ஒன்றை எழுதுவது எவ்வளவு மகத்தான வேலை! அப்படி ஒன்று எளியமுறையில்கூட எழுதப்படவில்லை. அதை எவரேனும் எழுத முற்பட்டால் அத்துறையில் அவரே முன்னோடி என அறியப்படுவார். என்றேனும் இங்கே ஓர் அறிவியக்கம் மெய்யாகவே தொடங்கும் என்றால் ஒரு வழிகாட்டியாக கருதப்படுவார்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்துமறுமலர்ச்சி உருவாகியது. அதற்கான காரணங்கள் பல. முதன்மையானது மேலைநாட்டுக் கல்வி. அது ‘அனைவருக்கும் பொதுக்கல்வி’ என்னும் ஓரு வழக்கத்தை உருவாக்கியது. ஆங்கிலக் கல்வி நம்மை வெளியுலகுடன் தொடர்புறுத்தியது. இரண்டாவதாக ஐரோப்பிய அறிஞர்கள் நம்மை ஆராய்ந்து நம் மரபின் செய்திகளை தொகுத்து அளித்தது. இந்தியவியல் என்னும் அறிவியக்கத்தின் தொடக்கம்.

புறக்காரணிகள் என போக்குவரத்து, தபால், அச்சு முறைகளின் வளர்ச்சியை சொல்லலாம். இதழ்கள் தொடங்கப்பட்டன. அனைவருக்கும் உரிய நூல் என்னும் வடிவம் உருவாகி வந்தது. அத்துடன் பெரும் பஞ்சங்களால் சமூகக்குலைவு உருவாகி இந்தியச்சூழல் மறு அமைப்புக்கு ஆளானதையும் சேர்த்துக்கொள்ளலாம்.

விளைவாக இந்திய ஆன்மிகம் பல அடிப்படைக் கேள்விகளை கேட்டுக்கொள்ளத் தொடங்கியது. மதம், சடங்குகள், தத்துவம், நம்பிக்கை, யோகம், ஊழ்கம், மெய்யியல் ஆகியவற்றுக்கு இடையேயான வேறுபாடுகள் அக்கேள்விகள் வழியாக உருத்திரளத் தொடங்கின. நெடுநாட்களாக தேக்கமுற்றிருந்த மரபான மதநிறுவனங்களுக்கு மாற்றாக புதிய நிறுவனங்கள் உருவாகி எழுந்தன. ஒட்டுமொத்தமாக உருவான இந்த மறுமலர்ச்சி வெவ்வேறு வகைகளில் நம் ஆன்மிகச்சூழலை மறுகட்டமைப்பு செய்தது.

இந்தியா முழுக்க நிகழ்ந்த இந்து மறுமலர்ச்சியின் விளைவாகவும் அதன் ஒருபகுதியாகவுமே தமிழக ஆன்மிக மறுமலர்ச்சி உருவாகியது. அதன் இயக்கங்களையும் ஆளுமைகளையும் ஒட்டுமொத்தமாக நோக்கி மதிப்பிட்டு ஒற்றைவரலாறாக எழுதும் முயற்சி எதுவும் இன்றுவரை செய்யப்படவில்லை. என் சென்னை உரையில் சுருக்கமாக ஓர் ஒட்டுமொத்த வரைபடத்தை அளிக்கமுடியுமா என்று முயன்றிருந்தேன்.

அவ்வாறு தொகுப்பதற்கு தடையாக உள்ளவை என்னென்ன? ஒன்று, மதம்சார்ந்த உளநிலைதான். ஒவ்வொரு தரப்பும் தங்கள் நம்பிக்கைகளையும் கொள்கைகளையும் ஆளுமைகளையும் மிகைப்படுத்தி, உச்சப்படுத்தி எழுதி வைத்திருக்கிறது. மிகையுணர்ச்சிகள், தொன்மங்கள் என அவை பின்னிப்பிணைந்து கிடக்கின்றன. அவற்றை நவீன ஆய்வுமுறைகளைக் கொண்டு, உண்மையாக ஆராய்ந்து மதிப்பிட்டு எழுதுவது எளிய செயல் அல்ல. குறைநிறைகளுடன் எழுதுவதற்கு மிகப்பெரிய முதிர்ச்சி தேவை. சில்லறை எதிர்ப்புகளை கொசுத்தொல்லை என கடந்துசெல்லவேண்டும்.

இரண்டாவதாக, ஆன்மிக வரலாற்றை பிற அரசியல், பண்பாட்டு வரலாறுகளுடன் பிணைத்து விரிந்த பகைப்புலம் அளித்து எழுதுவதற்கு ஓர் முழுமைநோக்கும் கடுமையான உழைப்பும் தேவை. அதற்கு பல ஆண்டுகளாகலாம். அதற்கான சூழல் இங்கில்லை. ஆனால் அவ்வாறான நோக்கு இல்லாமல் எழுதினால் ஒவ்வொரு பகுதியும் முழுமை பெறாமலேயே இருக்கும்.

ஆனால் முழுத்தகுதி பெற்றபின்னரே எழுதவேண்டும் என்றில்லை. எழுத ஆரம்பிக்கலாம். ஒருவர் எழுத இன்னொருவர் தொடர பல படிகளாகவே வரலாற்றெழுத்து முழுமை அடைகிறது. இன்றாவது எவரேனும் தொடங்குவது நல்லதுதான்.

vaikundar
வைகுண்டர் – உருவகப்படம்

ஆன்மிக வரலாற்றை எழுத முதலில் அவற்றின் ஒட்டுமொத்தத்தையும் அவற்றின் வகைப்பிரிவுகளையும் நிகழ்த்திக்கொள்ள வேண்டியிருக்கிறது. நான் இப்படி வரையறை செய்வேன். எவ்வகையிலேனும் தமிழக ஆன்மிக சிந்தனைகளை பாதித்த, மாற்றியமைத்த, அவற்றுடன் உரையாடிய அனைத்துத் தரப்புகளும் ஆய்வின் ஒட்டுமொத்த வட்டத்திற்குள் வரும். அதன்பின்னரே வகைப்பாடுகள். அவற்றை இப்படி வகுத்துக்கொள்வேன்

அ. மரபார்ந்த ஆன்மிக-மத அமைப்புகள் ஒரு பிரிவு. நம் சைவமடங்கள் போன்றவை உதாரணம். இந்த மடங்கள் இக்காலகட்டத்தில் பல பிரிவுகளாக தனியாட்சி கொண்டன. நிர்வாக அடிப்படையிலும் தத்துவநோக்கிலும் பல மாற்றங்களுக்கு உள்ளாயின. சில மடங்கள் புதிய மாற்றங்களை ஏற்றுக்கொண்டன.

ஆ. புதிதாக எழுந்த மத அமைப்புகள் இன்னொரு பிரிவு. வள்ளலார், வைகுண்ட சாமி, மெய்வழிச்சாலை,  போன்றவை. இவற்றில் அறியப்படாத கடையம் ஆவுடையக்கா மடம் போன்ற பல அமைப்புக்கள் உள்ளன.

இ. மேலைநாட்டு நோக்கு கொண்ட மதச்சீர்திருத்த அமைப்புக்களும் ஆளுமைகளும். சுவாமி சகஜானந்தர் போன்றவர்கள் உதாரணம்.

ஈ. தேசிய அளவிலான புதிய ஆன்மிக இயக்கங்களின் தமிழகச் செல்வாக்கு. ஆரியசமாஜம், ராமகிருஷ்ண இயக்கம், பிரம்மஞான சபை போன்றவை

உ. மதங்களை மறுகட்டமைப்பு செய்யும் இயக்கங்கள். அயோத்திதாசரின் புதிய பௌத்தம் ஓர் உதாரணம்.

ஊ. நவீன ஆன்மிக அமைப்புக்கள். உதாரணம் ஈஷா யோக மையம் போன்றவை.

எ. உதிரிகளான சித்தர்கள், ஆன்மிகச்செல்வர்கள். பல சித்தர்களின் பெயர்கள் ஆங்காங்கே காணக்கிடைக்கின்றன. உதாரணமாக குமரிமாவட்டத்தில் மட்டும் இருபதுக்கும் மேற்பட்ட இருபதாம்நூற்றாண்டு சித்தர்களின் சமாதிகள் உள்ளன.

எ. முழுமையான மதமறுப்பாளர்கள் ஐந்தாம் தரப்பு. ஈ.வெ.ராமசாமி அவர்கள்.

இந்த எல்லையை மேலும் விரித்துக்கொண்டால் தமிழ் இஸ்லாம் பற்றியும் எழுதவேண்டும். சதக்கத்துல்லா அப்பா அவர்களிடமிருந்து தொடங்கிய தமிழ் இஸ்லாமின் பண்பாட்டு- ஆன்மிக தனித்தன்மைகள், வெவ்வேறு சூஃபிகளின் வரலாறுகள். ஆனால் அதை தனியாக எழுதுவதே சிறந்தது.

அதேபோல தமிழ் கிறித்தவத்தின் வரலாறும் எழுதப்படலாம். வீரமாமுனிவர், இரேனியஸ் அய்யர் முதல் தமிழ்த்தன்மை கொள்ளத்தொடங்கிய ஒரு கிறிஸ்தவ மரபு இங்குண்டு. முழுக்கமுழுக்க ஐரோப்பிய நோக்கிலேயே நின்ற மரபு கால்டுவெல் அவர்களில் தொடங்கி நீள்கிறது. அதுவும் தனியாக எழுதப்படவேண்டிய ஒன்று.

இப்படி ஒரு விரிந்த வட்டத்தை பல பிரிவுகளாகப்பிரித்துக்கொண்டால் வரலாற்றெழுத்துக்கான ஒரு கட்டமைப்பு உருவாகிவிடுகிறது. சில தளங்களில் நூல்கள் எழுதப்பட்டுள்ளன. ராமகிருஷ்ண மடத்தின் வரலாறு பெ.சு.மணி போன்றவர்களால் விரிவான செய்திகளுடன் எழுதப்பட்டுள்ளது. வள்ளலாரின் இயக்கத்தின் வரலாறும் நம்மால் நூல்களில் இருந்து தொகுக்கப்படக்கூடியதே. ஆனால் வைகுண்டரின் வரலாறோ மெய்வழிச்சாலை வரலாறோ தேடிச்சென்று அவர்களின் எழுத்துக்களில் இருந்து மீட்டமைக்கப்படவேண்டும்.

வள்ளலாரைப் போன்றவர்கள் இந்தியா எங்கும் வெவ்வேறு மத- பண்பாட்டுச் சூழல்களில் இருந்து உருவாகியிருக்கிறார்கள். உதாரணம் நாராயண குரு, சுவாமி நாராயண் இயக்கத்தின் முதல்வரான சுவாமிநாராயண் [சகஜானந்தர்] அவர்களுக்கிடையே ஒற்றுமை உண்டு, அதேசமயம் அவர்கள் தனித்துவம் கொண்டவர்கள். அந்த ஒற்றுமை, தனித்துவம் இரண்டையுமே நாம் கருத்தில் கொள்ளவேண்டும்.

பெரிய பணி. அக்கனவு உங்களுக்கு எழுந்தமைக்காகவே வாழ்த்துக்கள்.

ஜெ



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

ஆன்மீகம், போலி ஆன்மீகம்,மதம்


 
Save
Share47
 

37858581_2129870427336375_3935955309054394368_n

அன்புள்ள திரு ஜெயமோகனுக்கு

வணக்கம். நலமா? நீண்ட நாட்களுக்கு பிறகு தங்களுக்கு எழுதும் கடிதம்

பாலகுமாரனை பற்றிய தங்கள் பதிவிற்கு வந்த எதிர்வினைகளுக்கு ஒரு எதிர்வினை இந்த கடிதம். இந்த எதிர்வினைகளில் பாலகுமாரனுக்கு ஆதரவாக இரண்டு முக்கிய கருத்துக்கள் சொல்லபட்டிருக்கின்றன என்று நம்புகிறேன்.

முதலாவது, பாலகுமாரனின் எழுத்துக்கள் வாழ்க்கையில் உதவின; அதனால் அவர் எழுத்து இலக்கியம் என்ற கருத்து. இது எப்படி இருக்கிறதென்றால் MGR படங்களை பார்த்து நான் தாய் பாசத்தை கற்று கொண்டேன். எனவே MGR மகா நடிகர் என்று சொல்வதை போல. இந்த வாதத்தில் உள்ள குழந்தை தனத்தை தாங்கள் சுட்டி காட்டாமல் விட்டுருப்பது ஏன் என்று புரியவில்லை.

இரணடாவது, பாலகுமாரன் ஆன்மீகவாதி. எனவே அவர் எழுத்துக்கள் மேலானவை என்ற வாதம்.என்னை பொறுத்தவரையில் அவர் எழுத்துக்களில் எனக்கு மிகவும் எரிச்சலூடுபவை அவரது “ஆன்மீக” எழுத்துக்கள் தாம். அவரது ஆன்மீகம் என்பது ரஜினியின் பாபா படத்தில் வெளிப்படும் ஆன்மிகம் போன்றது தான். ஆன்மீகத்தை வெறும் கண்கட்டு வித்தை என காட்டுபவை அவரது எழுத்துக்கள். இதில் இன்னொரு வெறுப்பூட்டும் அம்சமும் உள்ளது. அது பாலகுமாரன் தன்னை ஒரு பெரும் ஆன்மீகவாதியாக, ஒரு சித்தராக நம்புவது அல்லது மற்றவர்கள் அப்படி நம்ப வேண்டும் என்று எண்ணுவது. சந்தேகம் இருந்தால் http://balakumaranpesukirar.blogspot.com வலைத்தளத்தை பார்க்கலாம். அதன் முகப்பிலேயே ராம் சுரத் குமாரின் முகமும் பாலகுமாரன் முகமும் அருகருகே ஒரே அளவில் ஒரே தோற்றத்தில் இருப்பதை காணலாம். அதாவது இவரும் அவரை போல ஒரு மகான் என்பது போல. அவரது எழுத்துக்களிலும் இந்த தொ னி அவ்வப்போது ஒலிப்பதை கவனிக்கலாம். ஒரே ஒரு எடுத்துக்காட்டு: சீனாவில் நில நடுக்கம் வந்த போது வெளியிடப்பட்ட ஒரு கேள்வி பதில். அதன் உட்கருத்து அல்லது நோக்கம் என்னவென்றால் சீனாவில் நிலநடுக்கம் அல்லது அது போன்ற பேரழிவு வரும் என்று பாலகுமாரனுக்கு முன் கூட்டியே தெரிந்து இருந்தது. இது நடக்கும் என்று அவர் முன்பே சொன்னார். அது நடந்து விட்டது. எப்பேர்பட்ட ஞானி இவர் என்று காட்டுவது. அவரது ஆன்மீகத்தில் உள்ள குழந்தை தனத்தையும் , நடவடிக்கைகளில் உள்ள போலித்தனத்தையும் இன்னும் வெளிப்படையாக தாங்கள் விமரிசிக்காதது எனக்கு ஏமாற்றமே.

பின் குறிப்புகள்  :
இந்த கடிதத்தில் உள்ள தொனி உங்களுக்கு கோபமூட்டலாம். அதற்காக என்னை கண்டித்து நீங்கள் பதில் அளிக்கலாம். அப்படி  நேர்ந்தால் அதை ஏற்றுக்கொள்ள தயாரான மன நிலையில் தான் இந்த கடிதத்தை எழுதுகிறேன்.

சுஜாதாவையும் பாலகுமாரனையும் தாங்கள் ஒரே பட்டியலில் சேர்த்திருப்பதை எப்படி எடுத்து கொள்வது என்றே புரியவில்லை. சரி விடுங்கள். தனியாக பேசப்பட வேண்டிய விஷயம் அது.

 

ராஜேந்திரன்

 

 

 

அன்புள்ள ராஜேந்திரன்

பாலகுமாரனைப்பற்றிய அக்கடிதம் ஓர் இளம் வாசகர் எழுதியது. அவ்வயதில் ஓர் எழுத்தாளர் மேல் தோன்றும் பற்றும் அதன் விளைவான தீவிர நிலைபாடுகளும் இயல்பானவை. தேடல் இருந்தால் அடுத்தடுத்த இடங்களுக்கு கொண்டுசெல்லக்கூடியவை. அதைத்தான் நான் சொன்னேன்.

பாலகுமாரன் சொல்லிக்கொண்டிருக்க்கும் ஆன்மீகத்தைப் பற்றி என்னுடைய கருத்தையும் அக்கடிதத்தில் பதிவுசெய்திருந்தேன். அதற்கு மேல் நான் அவ்விஷயத்தில் சொல்ல ஏதுமில்லை. அவரது படைப்புகளைப் பற்றிய இலக்கிய விமரிசனம் என்றால் விரிவாக எழுதலாம். தனிப்பட்ட விமரிசனங்களுக்கு என் எழுத்தில் இடமில்லை.

ஆகவே நீங்கள் எழுதியதிலும் எனக்கு வருத்தம் ஏதும் இல்லை. அது உங்கள் கருத்து அவ்வளவே. நான் அதை ஒட்டி பேசவிரும்பும் விஷயம் உங்கள் கருத்துடன் ஒட்டிய சில விஷயங்களைத்தான். அது நம் நாட்டில் பரவியிருக்கும் , பரவிக்கொண்டிருக்கும் ஒரு புதுவிதமான மனநிலையை பற்றியது. அதை அனேகமாக தினமும் சந்தித்துக் கொண்டிருக்கிறேன்

கீழ்க்கண்ட பத்தியைப் படியுங்கள். இது பாலகுமாரனின் இணையதளத்தில் இருந்ந்து நான் எடுத்தது.

 

”இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக சோழ சேனாதிபதி கிருஷ்ணன்ராமனான பிரம்மராயர் கட்டிய அமண்குடி கோவிலில் நடந்த நிகழ்ச்சி இன்னும் புதிராகவே உள்ளது.

துர்க்கை அம்மனை வழிபட்டு கோவிலைச் சுற்றி வந்த சமயம் கோவிலின் ஒரு மூலையில், இருளில், கிட்டதட்ட தொண்ணூறு வயதுடைய அந்தணர் ஒருவர் அமர்ந்திருந்தது தெரிந்தது. இருளில் அந்த இடத்தில் அவர் ஏன் அமர்ந்திருக்கிறார் என்று நான் அறிந்து கொள்ள டார்ச் லைட் வீசி பார்த்த போது, அவர் அதை விரும்பாமல் கோயிலின் சுவர் நோக்கி சென்று மறைந்தார். மறுபடியும் பார்க்கும் போது அங்கு வெறும் லிங்கம் மட்டுமே இருந்தது. வெடவெடவென்று பயந்து நடுங்கிக் கொண்டு உங்களைப் பார்த்த போது உங்கள் முகமும் தீர்க்கமாக இருந்தது. ‘இங்கு இப்படித்தான்’ என்று எந்த பதட்டமும் இல்லாமல் நீங்கள் கூறிவிட்டு சென்று விட்டீர்கள்.

‘இது சோழ சேனாதிபதி கிருஷ்ணன்ராமனான பிரம்மராயர் மிகக் காதலாகக் கட்டிய துர்க்கை அம்மன் கோவில். பிரம்மராயர் ஒரு அந்தணர். இந்த கோவிலை விட்டு அவர் வேறு எங்கும் போக மாட்டார்’ என்று எப்போதோ நீங்கள் சொன்னது நினைவிற்கு வந்தது.

சோழர்கள் சம்பந்தப்பட்ட புத்தகங்கள், இடங்கள், கல்வெட்டுகள், சோழ சரித்திரம் மீது மிகப் பெரிய காதல் கொண்ட நண்பர்கள், ஆராய்ச்சியாளர்கள் போன்ற பல உதவிகளோடு, சோழ தேசத்தில் பல நூறு வருடங்களுக்கு முன்பு வாழ்ந்து மறைந்து வேறு ரூபத்தில் இருக்கும் சக்திகளும் உங்களுக்கு பரிச்சயமாக இருக்கின்றன என்பது புரிய, உடையார் வெறும் நாவலல்ல என்பது விளங்கியது.

உங்கள் படைப்புகளில் மகுடமாகத் திகழும் உடையாரை நீங்கள் எழுதவில்லை. ஆயிரம் வருடங்களுக்கு முன்பு, நீங்களும் சோழர்களோடு வாழ்ந்திருக்கிறீர்கள்; அவர்களோடு இப்பொழுதும் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். வாழ்ந்ததை, பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதே உண்மை ”

 

இந்தக் கடிதத்தை எழுதிய மனநிலை என்ன? இதை புராணம்சார்ந்த மனநிலை என்று சொல்லலாம். ஒரு சராசரி இந்துவின் மனநிலை இம்மாதிரியான புராண ஆக்கங்களினால் ஆனது. இது பல நூற்றாண்டுகளாக நம் சூழலில் நீடிப்பது. இதற்கு ஒரு வரலாற்று பின்புலம் உண்டு. ஒரு தத்துவப் பின்புலமும் உண்டு.

இந்த மனநிலை நாம் மெய்மையை அறிவதற்கான ஒரு வழிமுறையாகவே நெடுங்காலமாகக் கொண்டிருக்கிறோம். இதற்கு ஒரு உள் தர்க்கம், அல்லது ஒரு இலக்கண அமைப்பும் நமக்குள்ளது. இந்த மனநிலையின் மிகக்கீழான தளங்களையும் மிக உச்சநிலைகளையும் நம் மதத்தில் காணலாம்.

வரலாற்று ரீதியாக புராண மனநிலை உருவான விதம் இவ்வாறு. இந்திய நிலப்பகுதியில் பல ஆயிரம் பழங்குடிகள் வாழ்ந்தன. அவர்களின் பல்லாயிரம் நம்பிக்கைகளும் குலக்கதைகளும் குறியீடுகளும் இறை உருவகங்களும் இருந்தன. பிரம்மம் என்ற தூய தத்துவக் கருத்துருவத்தால் அவை கோக்கபப்ட்டன. அவ்வாறாக இந்திய நிலத்தில் பெருமதங்கள் உருவாயின. இவ்வாறு கோர்க்கப்பட்டபோது அந்த தொகுப்புக்காக உருவானதே புராணமரபு என்பது. புராணங்களின் பணியே பல்வேறு நம்பிக்கைகளையும் படிமங்களையும் இறைவடிவங்களையும் ஒன்றாகச்சேர்ப்பதே. இந்து ஞானமரபின் முக்கியமான புராணங்கள் அனைத்தும் இவ்வாறு உருவானவையே.

பின்னர் இந்த புராணங்கள் தத்துவ விளக்கத்துக்கான கருவிகளாக அமைந்தன. ஏனென்றால் தத்துவ விளக்கத்துக்கு எப்போதுமே படிமங்கள் தேவை. அப்படிமங்களை நம் புராணங்கள் தொடர்ச்ச்சியாக வழங்கின. ஆகவே பின்னர் புராணங்கள் ஒரு தனிமொழியாக [மெட்டா லாங்வேஜ்] மாறின. அதில் நம் தத்துவம் விரிவாக பேசப்பட்டது. இது புராணங்களின் தத்துவ முகமாக இன்று நீடிக்கிறது.

இப்படிச் சொல்கிறேன். ரத்த பீஜாசுரனை அம்பிகை கொன்ற புராணம். அந்த அசுரனின் ஒவ்வொரு துளி குருதியும் ஒரு தனி ரத்த பீஜாசுரனாக முளைக்கும். அவனிடம் அம்பிகை போர்புரிய புகுந்தபோது அவள் ஆயுதத்தால் அவன் தாக்கப்பட்டபோதெல்லாம் பலவாக வளர்ந்தான். ஆகவே அம்பிகை இரண்டாக பிரிந்தாள். ஒரு அம்பிகை ரத்த தாகம் மிக்க ஒரு பூதமாக ஆனாள். அவள் இன்னொரு தெய்வீக அம்பிகை விட்ட அம்புகளால் ரத்த பீஜாசுரன் கொட்டிய குருதியை தன்  நாவால் நக்கிக் குடித்தாள். அசுரன் அழிந்தான்.

நம் தாய்தெய்வ உருவகத்தில் இருந்து அம்பிகை என்ற பெருந்தெய்வம் உருவாகி வந்தது அதன் வரலாற்றுப்பின்னணி. ஆனால் இக்கதை ஆழமான ஒரு தத்துவக் குறியீடு. தியான மரபில் மிக முக்கியமானது. அடிப்படை இச்சைகளுடன் நேருக்குநேராக நின்று போர் புரிய முடியாது என்று சொல்கிறது இது. போர்புரியும்தோறும் அது பெருகும். ஆகவே நம் போதமே இரண்டாக பிரியவேண்டியிருக்கிறது, அம்பிகையாகவும் பூதமாகவும். தியானம் பழகியவார்களுக்கு மேலும் புரியும்

இப்படித்தான் நாம் புராணங்களைப் பார்க்க வேண்டும். இப்படித்தான் புராணங்கள் சொல்லிக் கொடுக்கப்பட்டன. ஆனால் பத்தொன்பதாம் நூற்றாண்டுடன் நமக்கு பௌராணிக மரபு அழிந்தது. புராணத்தை தத்துவத்துடன் இணைத்து எளிமையாகச் சொல்லிக்கொடுக்கும் பெரும் புராணிக சொற்பொழிவாளர்கள் இல்லாமல் ஆனார்கள்.

விளைவாக புராணங்கள் மிக மேலோட்டமாக , வெறும் அற்புதக் கதைகளாக மட்டுமே வாசிக்கபப்டும் புரிந்துகொள்ளப்படும் சூழல் உருவாகியது. இன்று எந்தக்கோயிலில் சென்றாலும் அங்குள்ள அர்ச்சகர் அவருக்கு தோன்றிய ஓர் அற்புதக் கதையை சொல்வார். பல கதைகள் மக்குத்தனமாகவே இருக்கும்.

இக்கடிதம் இந்த எளிய புராணமனநிலையில் நின்று எழுதப்பட்டிருக்கிறது. இந்த மனநிலை இன்று இந்துக்களிடம் மிகப்பரவலாக உள்ளது. இதைப் பயன்படுத்திக் கொள்ளும் மனிதர்களே இன்று நாம் தொலைக்காட்சிகளில் மேடைகளில் மிக அதிகமாக கண்டுகொண்டிருப்பவர்கள். சொல்லப்போனால் நாம் இந்து மதம் சார்ந்தவர்களாக காண்பவார்கள் அனைவருமே இப்படித்தான் இன்று இருக்கிறார்கள். அவர்கள் தங்களை அற்புத மனிதர்களாக காட்டிக்கொள்கிறார்கள். அருள்வாக்கு சொல்கிறார்கள். ஆசி அளிக்கிறார்கள். நோய் குணமாக்குகிறர்கள். நீர் மேல் நடக்கிறார்கள். நெருப்பில் நீந்துகிறாரர்கள்.

இந்து ஞானமரபின் அனைத்து தத்துவ ஆழங்களையும் இவர்கள் மறைத்து விடுகிறார்கள். இன்றைய பிரபல இந்து மரபில் ராமகிருஷ்ண பரமாகம்சருக்கோ ரமணருக்கோ விவேகானந்தருக்கோ நாராயணகுருவுக்கோ இடமில்லை.  அவர்கள் அற்புதங்கள் செய்தவர்கள் அல்ல. அவர்கள் செய்யாத அற்புதங்களை அவர்கள் தலைமேல் போட்டு அவர்களை அற்புத புருஷர்களாக ஆக்கி அவர்களின் அற்புதங்களின் வாரிசுகளாக தங்களைச் சொல்பவர்கள்தான் அதிகம்.

நான் யோகி ராம் சுரத் குமாரைக் கண்டிருக்கிறேன். பேட்டியும் எடுத்திருக்கிறேன். எனக்கு அவரை தெரியும் என்றே சொல்வேந்- எல்லா வகையிலும்.  அவர் மீது இன்று இந்த மனிதர்கள் ஏற்றிவைக்கும் அற்புதக் கதைகள் அவரது மெய்ஞான இருப்பை கேவலப்படுத்துவன. அவர் மோடி மஸ்தான் அல்ல. அவர் ஞானி.

மிகச் சமீபகாலமாக இத்துடன் இன்னும் பல விஷயங்கள் கலக்க ஆரம்பித்துவிட்டிருக்கின்றன. யோகம் நம் நாட்டில் மிகமிக தொன்மையான காலம் முதலே இருந்துவரக்கூடிய ஒரு ஞான வழி. அதன் மூல நூல் பதஞ்சலி யோக சூத்திரம். அது ஒரு கறாரான அறிவியலையே முன்வைக்கிறது. அது ஆன்மீக நூல் கூட அல்ல. பொருள்முதல்வாத தரிசனமாகிய சாங்கியத்தின் துணை தரிசனம்தான் யோகம்.

சாங்கியம் இப்பிரபஞ்சம் ஒரே பேரிருபபக இருந்தது என்கிறது. அது முக்குணங்களின் சமநிலை இழப்பால் இன்று தோன்றும் இந்த பன்மையை பெற்றது. பிரபஞ்சத்தின் சாட்சியான புருஷன் அதேபோல பன்மையடைந்திருக்கிறான். அந்த பன்மைநிலையை அவன் உதறி தன் ஒருமை நிலையை அடையும்போது அவன் பிரபஞ்சத்தை அதன் முழுமை- ஒருமை நிலையில் அறிகிறான். இதுவே யோகம் சொல்லும் முக்தி. முழுமைநிலை. அல்லது விடுதலை நிலை. இதை தூயநிலை அதாவது கைவல்யம் என்கிறது யோகம்.

இதற்கான வழிமுறைகளை யோகம் பேசுகிறது. பின்னர் யோகம் சமணர்களாலும் பௌத்தர்களாலும் வளர்த்தெடுக்கப்பட்டது. பின்னர் இந்த முறை பல்வேறு தாந்த்ரீகர்களால் விளக்கபப்ட்டது. உண்மையில் இவையெல்லாம் பல்வேறு வழிமுறைகள் அல்லது விளக்க முறைகள் மட்டுமே. தாந்த்ரீகர்கள் எதையுமே குறியீடுகள் மூலம் விளக்குபவர்கள். அவர்களிடம் பல்வேறு குறியீட்டு அமைப்புகள் இருந்தனா. அவற்றை அவர்கள் யோகத்துக்கும் போட்டுப்பார்த்தார்கள்

அவைதான் மூலாதாரம் முதல் சகஸ்ராரம் வரை செல்லும் ஒன்பது சக்தி மையங்கள். யோகத்துக்கு முன்னர் இச்சக்கர மையங்களை தந்த்ரீகர்கள் பிரபஞ்ச உருவகத்துக்கும் போட்டு பார்த்திருக்கிறார்கள். உதாரணமாக மூலாதாரம் என்பது என்ன? காமம்  என்னும் ஆற்றலைத்தான் அபப்டிச் சொல்கிறார்கள். உயிர்கள் அனைத்திலும் உறையும் ஆற்றல் அது. அது குறிக்கு பின்னால் ஓர் புள்ளியில் மையம் கொள்வதாக உருவகித்தார்கள். அதன் பின் பசி என்ற மையம். அதன் பின் மூச்சு…இப்படி ஒன்பது.

இந்த ஆற்றல்மையங்களை தியானித்து இவற்றை அடக்கி வென்று முழுமையை அடைவதுதான் தாந்த்ரீகர்களின் யோக மார்க்கம். அவர்கள் சொல்லும் சித்தி அல்லது முக்தி அல்லது முழுமை என்பதும் பதஞ்சலி சொல்வதும் ஒன்றே. ‘சித்த விருத்தி நிரோதம்’ மனச்செயலை தடுத்தல். அதன்மூலம் அடையப்பெறும் பிரபஞ்ச ஞானம். அல்லது ஞானமே அதுவாதல். ராமகிருஷ்ணரும் ரமணரும் நாராயண குருவும் மீண்டும் மீண்டும் அதை விளக்க முயல்வதைக் காணலாம். ‘தூய அறிவே சிவம்’ என்று பாரதி சொன்ன அதைத்தான் அவர்கள் அவ்வரிகளில் சொல்கிறார்கள். அறிவில் அறிவாய் அமர்தல் என்கிறார் நாராயணகுரு. உப்புப்பொம்மை கடலை அறிவது போல என்கிறார் ராமகிருஷ்ணர்.

குறியீடுகள் மூலம் ஞானத்தையும் அதன் வழிமுறைகளையும் விளக்க எண்ணிய தாந்த்ரீகர்களும் அவர்கள் வழிவந்த சித்தர்களும் பல விஷயங்களைச் சொல்கிறார்கள். அவர்கள் குறியீடுகளாகச் சொன்ன பலவற்றை பாமரர் நேரடியாக எடுத்துக் கொண்டார்கள். உடலில் ஒன்பது தாமரைகள் இருப்பதாகவும் மூலாதாரத்தில் விரியும் குண்டலினி என்ற ஆற்றலை கையால் தொடமுடியும் என்றும் சொல்ல ஆரம்பித்தார்கள். அப்படி ‘ஞானம் ‘ பெற்றவர்கள் அற்புதங்களைச் செய்வார்கள் என்றும் முக்காலங்களையும் அறிந்திருப்பார்கள் என்றும் சொன்னார்கள்.

நம் காலத்து ஞானிகள் எவருமே அற்புதங்கள் செய்தவர்கள் அல்ல என்ற அப்பட்டமான உண்மைகூட இவர்களுக்கு உறைப்பதில்லை. அவர்கள் மேலும் அற்புதங்களை சாத்தித்தான் இவர்களால் புரிந்துகொள்ள முடிகிறது. மெய்ஞானம் என்பது தலையில் கைவத்து வேலை மாற்றம் வாங்கித்தருவது என்று நம்பும் ஒருவரிடம் என்ன பேச முடியும்?

இத்தகையவர்களால் திடீரென நம் சூழல் நிறைந்திருக்கிறது. இவர்களை பயன்படுத்துபவர்கள் பிலுபிலுவென கிளம்பி வருகிறார்கள். நம் சூழலில் இப்போது யோகம் தியானம் பற்றிய பேச்சுகள் அதிகம் கேட்கின்றன. அவற்றை செவிவழியாக கேட்டு குத்து மதிப்பாக சித்தர் குறித்த புராணக்கதைகளுடன் இணைத்து தங்களுக்கு சித்தி கிடைத்திருப்பதாக சொல்லிக் கொள்ளும் ஒருவரையேனும் நான் தினமும் சந்திக்கிறேன். தியானம் செய்தேன் கண் நடுவே ஒளி தெரிந்தது என்கிறார்கள். கைவிரல்களில் மின்சாரம் வந்தது என்கிறார்கள். ஆகாயத்தில் மிதந்தேன் என்கிறார்கள். சிலர் உண்மையாகவே அந்த பிரமை கொண்டு அதை சொல்கிறார்கள்

தியானம், யோகம் என்பதற்கும் இந்த மோடிமஸ்தான் வேலைகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அணிமா முதலிய சித்திகளுக்கும் ஞானம் என்பதற்கும் சம்பந்தமில்லை– அவையெல்லாம் வெற்று தந்திரங்கள் அல்லதுசவடால்கள். மெய்ஞானம் என்பது ‘அதுவாதால்’ அதை சாட்சாத்காரம் என்கிறன நூல்கள். அதற்கான பாதை எளிதல்ல. அதை ஷுரஸ்யதாரா என்கிறது உபநிடதம். சவரக்கத்தியின் நுனிக்கூர்மை மேல் நடப்பது போன்றது அது.

அதை உணர்பவனுக்கு ஒருபோதும் இந்த உலகத்தின் இயற்பியல் விதிகளை மீற முடியும் என்ற பிரமையோ அதற்கான ஆர்வமோ எழாது. இவ்விதிகளுக்கு விதியாக உள்ள ஒன்றைநோக்கி அவன் குவிவான். அதுவே அவனாவான்

ஜெ



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

 கடவுள், மதம், குழந்தைகள் : ஒரு வினா


 
Save
Share96
 

அன்புள்ள ஜெயமோகன்,

நான்  உங்கள் எழுத்துக்களை பலவருடங்களாக விடாமல் வாசித்து வருகிறேன். இப்பொழுது இணையத்திலும் மிகவும் விருப்பத்துடன் உங்கள் எழுத்துக்களை படித்து வருகிறேன். உங்கள் சிறுகதைகள்/நாவல்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. உங்களுடைய பல எழுத்துக்கள் நான் என் வாழ்க்கையை பார்க்கும் விதத்தை பாதித்திருக்கின்றன.

நான் சமீப காலங்களாக ஒரு விதமான மன உறுத்தலில் இருக்கிறேன். அதை உங்களிடம் கூறி உங்கள் ஆலோசனையை பெறலாம் என நினைக்கிறேன். இதை பற்றிய உங்கள் கருத்துக்களை கூறினால் அது மிகவும் பயனுடையதாய் இருக்கும் என நம்புகிறேன்.

நான் படித்து வளர்ந்தது எல்லாம் சென்னையில். தற்பொழுது மென் பொருள் துறையில் லண்டனில் வேலை செய்து வருகிறேன்.  சமீபத்தில் திருமணம் செய்து கொண்டேன். காதல்/கலப்பு திருமணம்.(நான் ஐயர். என் மனைவி நாயுடு). நான் கடவுள் நமபிக்கையை தொலைத்து வெகு நாட்கள் ஆகிறது. ஓஷோ,கிருஷ்ணமூர்த்தி போன்றவர்களின் தன்னை அறிதல் என்ற கோட்பாட்டையே ஆன்மீகம் என்று நம்புகிறேன். கலப்பு திருமணம் என்பதால் சாதி குறித்தும் கவனத்துடன் இருக்கிறேன். அம்பேத்கர் எழுத்துக்கள் மூலமாகவும் இணையத்தில் கிடைக்கும் சில பெரியாரிய எழுத்துக்கள் மூலமாகவும் என் சாதி அடையாளத்திலிருந்து முடிந்த வரையில் மன அளவில் விலகியிருக்க முயல்கிறேன்.

அ)இதனால் குடும்பத்தில் என்ன விதமான அடையாளத்தை பேணுவது என்று சற்று குழப்பமாக தான் உள்ளது. உதாரணமாக குழந்தைகளுக்கு கடவுள் நம்பிக்கையை சொல்லி தர வேண்டுமா? அவர்களுக்கு ஒரு சாதி அடையாளத்தை கொடுக்க வேண்டுமா? சாதி அடையாளம் இல்லா விட்டால் அவர்கள் தனிமைபட்டு போய் விடுவார்களா? மேலும் கடவுள் நம்பிக்கை என்பது பொய்யாகவேனும் ஒரு மன ஆசுவாசத்தை  பல பேருக்கு அளிக்கிறது அல்லவா? இதை சொல்லி தரா விட்டால் அவர்களுக்கு அந்த வசதியை மறுப்பதாகிவிடாதா?

ஆ)உங்களது ஆன்மீகம் என்ன? உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்பது எனக்கு தெரியும். ஆனால் நீங்கள் தியானம் அல்லது வேறு பயிற்சிகள் செய்கிறீர்களா?எனக்கு பரிந்துரைக்க உங்களுக்கு ஏதேனும் குரு அல்லது ஆசிரியர் இருக்கிறார்களா?

 

இதை பற்றி உங்கள் கருத்துக்களை கூற முடியுமா?

அன்புடன்,

G

அன்புள்ள கோகுல்,

உங்கள் கடிதம் கண்டேன்

என்னுடைய மாமனார் இரா.சற்குணம் அவர்கள் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர். அவர் தன் வாழ்க்கையை கடுமையான நாத்திகநோக்கிலேயே அமைத்துக் கொண்டார். தி.க.வுக்குரிய எதிர்மறை நிலைபாடு அவருடையது. இந்துமதம் சார்ந்த எந்தவிழாவையும் கொண்டாடுவதில்லை. தீபாவளி நாட்களில் ஊரே விழாக்கோலத்தில் இருக்கும்போது தன் வீட்டில் வேண்டுமென்றே விளக்குகூட போடாமலிருப்பார். பொங்கல் அன்றுகூட பொங்கலை சமையலறையில் வைத்து செய்து மத்தியான்னம் சாப்பிடுவார்- சூரியனைவழிபடக்கூடாதாம்.

அவரது இந்த மனநிலை என் மனைவியின் மனதில் அழுத்தமான ஒரு வடுவை உருவாக்கிவிட்டது. தன் இளமைப்பருவத்தை தன் தந்தை அவரது பிடிவாதங்கள் காரணமாக நிறங்களில்லாததாகச் செய்துவிட்டதாக அவள் உணர்கிறாள். இந்தியப் பண்பாட்டுடன் உணர்வுபூர்வமான தொடர்பு தனக்கு ஏற்படாது போய்விட்டதாக நினைக்கிறாள். அவளுக்கு ஆர்வமிருந்த மரபிசை, பரதநாட்டியம் முதலியவற்றில் கூட அவளுக்கு அறிமுகம் உருவாகவில்லை. தஞ்சைமண்ணில் பிறந்து வளர்ந்தபோதும்கூட அவள் தஞ்சை பெருவுடையார் ஆலயமன்றி எதையும் பார்த்ததில்லை. அதற்கான இன்றும் அவள் தன் தந்தையை மன்னிக்கவில்லை.

ஆனால் என் மாமனார் என் மகனுக்கு காதுகுத்து உட்பட எல்லா மதச்சடங்குகளையும் செய்தார். அதில் அவருக்கு நம்பிக்கை இருக்கவில்லை. ஆனால் அதில் மென்மையான ஒரு கவித்துவம் இருப்பதை வயோதிகத்தில் மனம் நெகிழ்ந்த நிலையில் அவர் புரிந்ந்துகொண்டார். காசிக்குப்போய் கங்கையை பார்த்துவிட்டு வந்தார், ஏன் வட இந்தியர்கள் கூட்டம் கூட்டமாக ராமேஸ்வரம் வருகிறார்கள் என்பதை புரிந்துகொண்டார்.

என் மனைவிக்கு இப்போதும் மதநம்பிக்கையோ இறை நம்பிக்கையோ இல்லை. பிரார்த்தனை வழிபாடு நோன்பு எதையும் அவள் செய்வதில்லை. அவளே வாசிக்க ஆரம்பித்தபின் உருவான தெளிவு அது. ஆனால் இந்தியப் பண்பாடு என்பது மதமென்னும் வடிவிலேயே உள்ளது என்ற எண்ணம் அவளுக்கு உண்டு. ஆகவே கோயில்களுக்கு சென்றுகொண்டே இருக்கிறோம். விழாக்கள் கொண்டாட்டங்கள் எதையுமே விடுவதில்லை.  கிறிஸ்துமஸ் ஈஸ்டர் உட்பட எல்லா பண்டிகைகளையும் நாங்கள் வீட்டில் குழந்தைகளுடன் விமரிசையாகக் கொண்டாடுவோம்.

நம்முடைய கொள்கைகளை நம் குழந்தைகளிடம் திணிக்கக் கூடாது என்றே நான் எண்ணுகிறேன். நம்மைவிட மேலான சிந்தனையாளர்களாக அவர்கள் இருக்கலாமல்லவா? ஆனால் நம்முடைய சிந்தனைகளை அவர்களிடம் பகிர்ந்து கொள்ளலாம். பொதுவாக குடும்பத்துக்குள் எப்போதும் உரையாடல் இருக்க வேண்டும் என்று நான் மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறேன். தமிழ்நாட்டில் பிராமணக் குடும்பங்கள் தவிர பிறவற்றில் பொதுவாக குடும்பத்தலைவருக்கும் பிறருக்கும் இடையே உரையாடலே இருப்பதில்லை. அதிகாரம் மிக்க ஒரு இடத்தில் குடும்பத்தலைவர் விலக்கி தனிமைப்படுத்தப்பட்டிருப்பார். அவரது ஆளுமையும் அப்படி ஒதுங்கியதாகத்தான் இருக்கும். என் அண்ணா அப்படிப்பட்டவர். அவருக்கு அவரது குடும்பத்தில் ஒரு மாற்று எண்ணம் இருப்பதை அவரால் தாங்கவே முடியாது.நான் கூட அவரிடம் எதையுமே பேசமுடியாது.

இந்த நிலையே குடும்பத்தில் பலவித புரிதல்சிக்கல்களுக்கும் மன அழுத்தங்களுக்கும் குடும்பவன்முறைகளுக்கும் காரணமாகிறது. பிராமணக் குடும்பங்கள் அல்லாத தமிழ் குடும்பங்களில் உக்கிரமான வன்முறை நிகழ்ந்தபடியே இருக்கிறது என்பது ஓர் உண்மை. அதை உரையாடல் மூலம் தளர்த்தவேண்டிய கட்டாயம் அடுத்த தலைமுறையினருக்கு உருவாகிவிட்டிருக்கிறது. ஆகவே குடும்பத்தில் உள்ளவர்களிடம் நேர்மையாகவும் வேடிக்கையாகவும் உங்கள் நம்பிக்கைகளை ஐயங்களை தேடல்களை விவாதியுங்கள், அதுபோதும். அவர்கள் அச்சூழலில் வளரட்டும். உங்கள் நீட்சியாக இயல்பாகவே அவர்கள் உருவெடுப்பார்கள். அவர்களுக்கு ஓர் கருத்துலகை உருவாக்கிக் கொடுக்க வேண்டிய சுமை ஏதும் உங்களுக்கு இல்லை. அது உங்களால் இயலவும் இயலாது. உங்கள் கருத்துலகை அவர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

என் மகனிடமும் மகளிடமும் எனக்குத்தெரிந்த அனைத்தையும், இலக்கியம் முதல் அத்வைதம் வரை, பேசிக்கொண்டிருப்பதே என் பாணியாகும்.அவர்களுக்குப் புரியும்படி பேசமுடிந்தால் அதை நான் எனக்கு அவ்விஷயத்தில் தெளிவிருப்பதற்கான ஆதாரமாகக் கொள்வேன். அது அவர்களுக்கு என் மீதான நெருக்கத்தை உருவாக்கவும், தங்களைப்பற்றிய பெருமித உணர்வை உருவாக்கவும் உதவியாக இருக்கிறது. என் நிழலாக அவர்கள் உருவாக கட்டாயப்படுத்துவதில்லை, என் நீட்சியாக அவர்கள் இயல்பாக மலரக்கூடும்.

மதத்தை நிராகரிப்பதென்பது மரபை நிராகரிப்பதாகும் என்பதே என் எண்ணம். நம்முடைய சிந்தனைகள், கலைகள், வாழ்க்கைமுறைகள் அனைத்தும் மதம் என்ற வடிவிலேயே தொகுக்கப்பட்டிருக்கின்றன. மதத்தை முழுக்க நிராகரிப்பவர்கள் வறண்டதொரு வாழ்க்கையையே தேர்வுசெய்கிறார்கள். மதத்தை குழந்தைகளுக்குக் கொடுப்பதன் மூலம் நாம் ஒரு பெரும் மூதாதையர் சொத்தை அவர்களுக்கு அளிக்கிறோம். ஆனால் நம்பிக்கையை நீங்கள் குழந்தைகளுக்குக் கொடுத்தால் அவர்களுக்கு ஒரு சுமையாகவே இருக்கும். அது அவர்களிடமிருந்து பலவற்றை மறைத்துவிடும். ஆகவே கடவுளை குழந்தை மனதில் நிறுவ வேண்டிய தேவை இல்லை என்பதே என் எண்ணம்.

ஒற்றைப்படையாக கடவுளையோ மதநம்பிக்கையையோ குழந்தைகளுக்கு அளிப்பது தவறானது என்பதே என் எண்ணம். இந்துக்களில் மிகச்சிலர் மட்டுமே அப்படிச் செய்கிறார்கள். மற்றவர்கள் இயல்பாக ஒரு மதச் சூழலில் குழந்தைகளை வளரவிடுவதுடன் நின்றுவிடுகிறார்கள். அது ஆரோக்கியமாகவும் இருக்கிறது. ஆனால் இஸ்லாமிய, கிறித்தவ மதங்களில் தீவிர மத நம்பிக்கைகளுடனும் இறை நம்பிக்கைகளுடனும் குழந்தைகளை வார்த்து அவர்களின் வளர்ச்சிக்கு பன்முக வாய்ப்புகள் இல்லாமல் செய்துவிடுகிறார்கள். மிக வலுவான ஆளுமை கொண்ட குழந்தைகள் மட்டுமே அதிலிருந்து மீறி வெளிவர முடிகிறது. இஸ்லாமியர் உக்கிரமான மதக்காழ்ப்புகளை குழந்தைகளிடம் உருவாக்கி அவர்கள் எத்தனை கற்றாலும் அதிலிருந்து வெளியே வர முடியாமல்செய்துவிடுகிறார்கள். கிறித்தவர்களில் கேரளாவின் தொன்மையான கிறித்தவர்கள் மட்டுமே பெரும்பாலும் சமரச நோக்குள்ளவர்களாக இருக்கிறார்கள்.

குழந்தைகளுக்குச் சாதியை அளிக்க வேண்டுமா என்ற கேள்விக்கே பொருள் இல்லை. நாம் இப்போது சாதி சார்ந்த வாழ்க்கையை வாழ்வதில்லை. என் குடும்பத்தில் சாதி இல்லை. ஏனென்றால் நாங்கள் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள். சாதிபற்றிய விஷயங்களை நாங்கள் எங்கள் குழந்தைகளுக்கு அவர்கள் ஓரளவு வளர்ந்தபின்னர் விளக்கமாகச் சொன்னோம்.

என்னுடைய ஆன்மீகம் பற்றிக் கேட்டிருந்தீர்கள். அதை நான் விளக்கமாக மீண்டும் மீண்டும் எழுதிக் கொண்டிருக்கிறேன். ஆன்மீகம் என்று நான் சொல்வது இதுதான். மனிதனின் ஞானம் என்பது சாதாரணமாக அவனுடைய தேவைகள் சார்ந்து அவன் அடையும் அறிதல்களினால் ஆனது. அடுத்த கட்டத்தில் அவனுடைய இருப்பு சார்ந்து அவன் அடையும் ஞானம் உள்ளது. கற்றல் மூலம் அடையும் ஞானம் இந்த தூரம் வரை மட்டுமே செல்லமுடியும். இதை வைத்து இப்பிரபஞ்சத்தின் முழுமையை அவனால் உணர முடியாது. அது குறைப்பட்டதாகவும் அவனுடைய அகங்காரத்தை வளர்ப்பதாகவுமே இருக்கும். ஏதோ ஒரு புள்ளியில் அதன் போதாமையை அவன் உணர்ந்தபடியே இருப்பதனால் ஏமாற்றம் கொண்டவனாக இருப்பான். ஏதோ ஒரு இடத்தில் அது செயலற்று முறியும்போது அவன் கடும் துயரையும் அடைவான்.

ஆன்மீகம் என்பது முக்தியை அதாவது வீடுபேறை அளிப்பது என்றே நம்முடைய எல்லா நூல்களும் எல்லா தரப்புகளும் சொல்லி வருகின்றன. முக்தி என்பது என்ன என்று அவை விதவிதமாக விளக்குகின்றன. நம் தத்துவ நூல்களின்படி அறியாமை அளிக்கும் துயரில் இருந்து பெறும் விடுதலையே முக்தியாகும். அவ்விடுதலையை அளிப்பதே ஆன்மீகம். அது ஒரு முழுமையான ஞானத்தை அளிக்க வேண்டும். அறிவின் இரு படிகளைக் கடந்துஅடுத்தபடியை அளிப்பதே ஆன்மீகம். அது நம் இருப்பை தவிர்த்து நாம் அடையும் ஞானம் என்று சொல்லலாம். இப்பிரபஞ்சத்தை ஒரு முழுமையாக அறிவதும் அதில் நம்மை அறிவதும் என்று வகுக்கலாம். நம்மை வைத்து பிரபஞ்சத்தை அறியாமல் பிரபஞ்சத்தை மட்டும் அறிவது அது. ஒரு கருத்தாக அதை நம் மனம் உள் வாங்காது. ஓர் அனுபவமாகவே அது நிகழ முடியும். அந்த முழுமையனுபவம் அளிக்கும் அறிவே ஆன்மீக ஞானம். அது பிரபஞ்சத்தை இயற்கையை வாழ்க்கையை நாம் ஒரு முழுமைநோக்கில் அணுக உதவுகிறது.

இதை பௌத்தம் கேவலஞானம் என்கிறது. கைவல்யம் என்ற சொல் அதையே குறிக்கிறது. பௌத்தம் மற்றும் அத்வைதத்தின்படி [நான்X அது] என்ற பேதபுத்தியே அறியாமை. அறியாமையே நரகம். அதிலிருந்து விடுபடுதலே முக்தி. அதை ‘ஒவ்வொன்றாய் தொட்டு எண்ணி எண்ணும் பொருள் ஒடுங்கையில் நின்றிடும் பரம்’ என்கிறார் நாராயணகுரு. அவ்வாறு ஒவ்வொன்றாய் தொட்டு எண்ணுவதையே நான் செய்துவருகிறேன் என்று சொல்லலாம்.

என் குரு நித்ய சைதன்ய யதி. நாராயண குருவின் மூன்றாம் தலைமுறைச் சீடர்.  இப்போது அவர் இல்லை. என் குருவை நான் பத்னெட்டுவருடம் தேடியபின் கண்டடைந்தேன். ஒரு குரு கற்பிப்பதை நூல்கள் கற்பிக்க முடியாது. நூல்களில் ஞானத்தின் பாதை உள்ளது. குரு அப்பாதை சென்றடையும் இடமாகவே இருப்பவர். குருவை அவரவர் தேடிக் கண்டடையலாம். குரு அமையாத போது நூல்களே பாதைகாட்டிகள்.

நாம் இறைநம்பிக்கையை குழந்தைகள் மனதில் நிறுவினாலும்கூட பதின்பருவத்தில் அது முற்றாக உடையும். மறுபடியும் அப்பருவம் கழித்து அவர்களின் ஆளுமைகள் தொகுக்கப்படும்போது அவர்களுக்குக் கிடைத்த வாழ்க்கையனுபவங்கள் மற்றும் அவர்களின் மனஅமைப்பு சார்ந்து அவற்றில் இருந்து அவர்கள் பெற்றுக் கொண்டது  ஆகியவற்றுக்கு ஏற்ப  அவர்கள் நாத்திகர்களாகவோ ஆத்திகர்களாகவோ உருவாகப்போகிறார்கள். நம்முடைய பல நாத்திகர்கள் ஆத்திகக் குடும்பத்தில் பிறந்தவர்களே. அதற்கு என்ன செய்யமுடியும்? மேலும் நீங்கள் நம்பாத ஒன்றை உங்கள் குழந்தைகளுக்கு கொடுக்க முடியுமா என்ன?

ஆனால் பண்பாட்டுக்கூறுகளை ஒரு குழந்தை வளர்ந்தபின்னர் அதற்கு அளிப்பது மிகமிக கஷ்டமானது. என் மனைவியைப்போல முற்றிலும் வேறு சூழலுக்கு அறிமுகமாகி தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டால் ஒழிய. அதுவும் பெண்களுக்கே அது சாத்தியம். ஆண்கள் நம் சூழலில் அத்தனை எளிதாக மறு வார்ப்பு பெறுவதில்லை.

ஆகவே கோயில்களை, சடங்குகளை, விழாக்களை, மதஇலக்கியங்களை, தத்துவங்களை, கலைகளை, இசையை குழந்தைகளுக்கு அளியுங்கள். அவற்றின் மீது உங்களுக்கு இருக்கும் நம்பிக்கைகள் மறுப்புகள் ஐயங்களுடனேயே அளியுங்கள். அவர்களை மரபின் வளமான மண்ணில் ஊன்றி வையுங்கள். அவர்கள் எப்படி வேண்டுமானாலும் வளரட்டும். ஆத்திகரானாலும் நாத்திகரானாலும் அவர்கள் இந்தியப்பண்பாட்டுக்குள்ளேயே இருப்பார்கள். இரண்டுமே இங்கு நிகரான இடமுள்ளவையே. அந்த வேர்நிலம் அவர்களை அசலான ஆளுமையும் சிந்தனையும் கொண்டவர்களாக ஆக்கும்.

ஜெயமோகன்

முதற்பிரசுரம் ஜனவரி 2009 மறுபிரசுரம்



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard