New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 1965ஆம் ஆண்டு மொழிப்போரும்- பெரியாரின் எதிர்ப்பும்


Guru

Status: Offline
Posts: 24601
Date:
1965ஆம் ஆண்டு மொழிப்போரும்- பெரியாரின் எதிர்ப்பும்
Permalink  
 


1965ஆம் ஆண்டு மொழிப்போரும்- பெரியாரின் எதிர்ப்பும்

1965ஆம் ஆண்டு மொழிப்போரும் –  பெரியாரின் எதிர்ப்பும்

“இந்திக்கு முடிசூட்டும் நாள் 

தமிழர்களுக்குத் துக்க நாள்”

– இப்படியொரு முழக்கம் தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் தி.மு.க.வினாராலும் மாணவர்களாலும் எழுப்பப்பட்டது. 

1965ஆம் ஆண்டு சனவரி 26 ஆம் நாள் இந்திய அரசின் இந்தி ஆட்சி மொழிச் சட்டம் நடைமுறைக்கு வந்த போது அதனை எதிர்த்துத் தமிழகமே போர்க்கோலம் பூண்டது.

சனவரி 25 முதலே இந்தியை வலியுறுத்தும் இந்திய அரசமைப்பின் 17 வது பகுதியை கொளுத்திய மதுரை, சென்னை, கோவை மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். அப்போது பல்லாயிரக் கணக்கானோர் நடத்திய ஊர்வலத்தில் மதுரையில் காங்கிரசு குண்டர்கள் கலகம் விளைவித்தனர். காவல்துறையின் குண்டாந்தடிகள், கண்ணீர் புகை வீச்சை போர்க்குணத்தோடு மாணவர்கள் எதிர் கொண்டனர். 

சனவரி 26 விடிவதற்குள்ளாகவே கல்லூரிகள், தி.மு.கழகத்தவர் வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றப்பட்டது. அன்று காலை ஆறு மணியளவில் சென்னை கோடம்பாக்கம் திடலில் தி.மு.க. இளைஞர் சிவலிங்கம் என்பவர் தீக்குளித்து மாண்டார். இச்செய்தி காட்டுத் தீயாய் பரவியது. 

மதுரையில் மாணவர்களைத் தாக்கிய காங்கிரசாரைக் கண்டித்து, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் தன்னெழுச்சியாக அணி திரண்டனர். காவல்துறையின் தடையை மீறி ஊர்வலம் நடத்தினர். தடியடிக்கு அஞ்சாத மாணவர் சமூகத்தின் மீது காவல்துறை துப்பாக்கி சூடு நடத்தியது. அதில் 18 அகவை நிரம்பிய மாணவக் கண்மணி இராசேந்திரன் பலியானான். 1938 முதல் தமிழர்கள் நடத்திவரும் நீண்ட நெடிய போராட்டத்தில், துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியான முதல் தமிழன் இராசேந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரசு முதலமைச்சர் பக்தவச்சலம் கலவரத்தை அடக்கி குடியரசு நாளைக் கொண்டாட முயன்றதில் தோல்வி கண்டார். தமிழகமே கறுப்பு மயமாகியது. தமிழகம் முழுவதும் தமிழ் உணர்வு கொண்டோர் குடியரசு நாளைப் புறக்கணித்துத் துக்க நாளாகக் கொண்டாடினர்.

அதன்பிறகு ஏற்பட்ட தமிழர் எழுச்சியை அடக்க இந்திய இராணுவம் வரவழைக்கப்பட்டது. முந்நூறுக்கும் மேற்பட்டோர் குருவி, காக்கை போல சுடப்பட்டு மாண்டனர். 1000 க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். 5000 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 

1965 சனவரி 25 முதல் மார்ச் 15 வரை , அதாவது 50 நாட்களுக்குப் பிறகே தீரமிக்க மாணவர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது. இந்தியுடன் ஆங்கிலமும் துணை ஆட்சி மொழியாக நீடிக்குமென்று தலைமை அமைச்சர் இலால் பகதூர் சாஸ்திரி வானொலியில் உறுதி கூறினார். அதன்பிறகு, மெல்ல மெல்ல ஓய்ந்தது போராட்டம். எல்லாத் தேசிய மொழிகளும் இந்தியாவின் ஆட்சி மொழிகளாக வேண்டும் எனும் கனவு இதன்மூலம் கலைந்து போனது. 

அந்நாளில் நேருவின் உறுதிமொழியை தி.மு.க. கொண்டாடியதை ஏற்கவியலா விட்டாலும் , இந்தித் திணிப்பிற்கு எதிராக தமிழக மக்களைத் தட்டி எழுப்பியதில் , தி.மு.க.விற்குப் பெரும்பங்கு உண்டென்பதை மறுக்கவியலாது. 

இதில் பெரியாரின் பங்கு நேர் எதிரானது. அவரின் எதிர் நிலைப்பாட்டை  தி.மு.க.வே சொல்லத் தயங்குகின்றது. பெரியாரின் கழகங்களும், முழு உண்மையை சொல்ல மறுத்து, பாதியை மென்று விழுங்குகின்றன. 

1965 ஆம் ஆண்டு மொழிப் போராட்டத்தின் போது காமராசரின் வழிகாட்டுதலில் நடைபெற்ற ஆட்சியின் மீது எரிச்சலடைந்த பார்ப்பனர்களும், பார்ப்பன ஏடுகளும் ஆட்சியை வீழ்த்துவதற்கான ஒரு வாய்ப்பாக இதனைப் பயன்படுத்திக் கொண்டனர் என்றும், மீண்டும் பார்ப்பனர் ஆட்சி அமைக்க இராசாசி தலைமையில் நடந்த முயற்சி என்றும், எந்தவொரு இலக்கும் கொண்டிராத வன்முறைக் கிளர்ச்சி என்றும் பெரியார் கருதினார், எனவே தான் மாணவர் போராட்டத்தை ஆதரிக்க மறுத்தார் என்று பெரியாரிய இயக்கங்கள் கூறி வருகின்றன. எது உண்மை என்று விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். 

1938ஆம் ஆண்டு இராசாசி ஆட்சிக் காலத்தில் ஆதிக்க இந்திமொழி எதிர்ப்புப்  போராட்டம் நடத்தி சிறை சென்றவர்  பெரியார். அதே போல் 1948ஆம் ஆண்டு ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் ஆட்சிக்காலத்திலும் ஆதிக்க இந்திமொழியை எதிர்த்துப் பல மறியல்கள்  பெரியாரால் முன்னெடுக்கப்பட்டன.

1938, 1948 இந்தி  நடந்த  இந்தி எதிர்ப்புப்  போராட்டங்கள் ஆட்சி மொழி இந்தி என்பதை எதிர்த்து நடந்தவை அல்ல. 1965 இல் நடந்ததைப் போல 1938 மற்றும் 1948 இல் இந்தி ஆட்சி மொழியாக்கப் படவில்லை. மாறாகப்  பள்ளிகளில் கட்டாயப் பாடமாக்கப்பட்டதை எதிர்த்துத் தான் அப்போராட்டங்கள் நடத்தப்பட்டன. பெரியார் எதிர்த்ததெல்லாம் பள்ளிகளில் இந்தி கட்டாயப்பாடம் என்பதைத் தான். அது எதிர்க்கப்படவேண்டியதே! 

ஆனால் , 1965ஆம் ஆண்டு  மொழிப்போர் என்பது சற்று மாறுபட்டது. இந்தி தான் இந்திய அரசின் ஆட்சிமொழி என்று அறிவிக்கப்பட்டதை எதிர்த்து நடைபெற்ற போராட்டம். 

 தமிழகப் பள்ளிகளில் இந்தி கூடாது என்று போராடிய பெரியார் , நடுவண் அரசு அலுவலகங்கள், நடுவண் ஆள் தேர்வு நிலையங்கள், மாநில- நடுவண் அரசுகளுக்கிடையே யான தொடர்புகள் ஆகியவற்றில் இந்தி கட்டாயமாக்கப்படும் என்று அறிவித்த போது போராட முன்வரவில்லை. மாறாகத் தில்லி அரசிற்கு ஆதரவாகவும், மாணவர்களுக்கு எதிராகவும் செயல்படத் தொடங்கினார்.

தமிழகத்தில் முதன்முறையாக பக்தவச்சலம் அரசின் காவல் துறையோடு இந்திய இராணுவப் படையும் நுழைந்து தமிழ் மாணவர்களை நரவேட்டையாடிய போது,  பெரியார் நடத்திய ‘விடுதலை’ ஏடு பின் வருமாறு செய்திகள் வெளியிட்டது. 

இன்றும் மாணவர்கள் காலித்தனம். பஸ்ஸைக் கொளுத்தினர் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் (விடுதலை 26.1.1965)

அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர்களின் அத்து மீறிய வன்செயல். 2000 மாணவர்கள் ஊர்வலம். கலைந்து செல்ல கண்ணீர்ப் புகை. மாணவர்கள் கற்களை வீசினர். (விடுதலை  28.1.1965)  

DSP ,  கான்ஸ்டபுள் 20 பேர் காயம். இராசேந்திரன் என்ற மாணவர் குண்டடிப்பட்டு மாண்டார். வி.டி.நெடுமாறன் குண்டடிப்பட்டு படுகாய முற்றதாகவும் தெரிகிறது. (விடுதலை 28.1.1965)

போலீசார் அத்து மீறியதாகக் கூறப்படுபவை அபாண்டமே. ( சனவரி 25, 26 ஆம் நாட்களில்) சட்டத்தையும், ஒழுங்கையும் பராமரிக்க அவர்கள் பாடுபட்டனர். வக்கீல் சங்கத் தீர்மானத்திற்கு ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள் சங்கம் கண்டனம். 

திருச்சியில் மாணவர்கள் காலித்தனம். பஸ்க்கு தீ. தபால் நிலையம் கொள்ளை. (விடுதலை 10.2.1965)

பொள்ளாட்சியில் போராட்டத்தை ராணுவம் அடக்கியது. காலிகள் மீது சுட்டதில் 10 பேர் மாண்டனர் (விடுதலை 13.2.1965)

திருவல்லிக்கேணி பெரிய தெரு, வாலாஜா ரோடு சாலை ஓரங்களில் குடியரசு தினத்திற்காக கட்டப்பட்ட தேசியக் கொடி தோரணங்களை மாணவர்கள் அறுத்து சொக்கப்பனை போல் கொளுத்தி அவமதித்திருக்கின்றனர். 

(7 கல்லூரிகள் மாணவர்கள் கோட்டைக்கு ஊர்வலம் சென்று அமைச்சர் வெங்கட்ராமனை சந்தித்து மகஜர் கொடுக்க புறப்பட்ட வழியில்)

தமிழ் மாணவர்களின் போராட்டத்தை ஆதரித்து துணை நிற்க வேண்டிய பெரியார் தமது “விடுதலை”  ஏடு மூலம் இந்தித் திணிப்பிற்கும் காவல் துறையினர், இராணுவத்தினர் நடத்திய காட்டு மிராண்டித் தனத்திற்கும் ஆதரவு தந்தார். 

மேலும், ‘கிளர்ச்சிக்குத் தயாராவோம்’ என்ற நூலில் ( பக்கம் 6, 10, 14, 15 ) பெரியார் எழுதுகிறார்: 

“இந்தி எதிர்ப்பு என்ற பெயரால் நடத்தப்பட்டக் காலித்தனம்… தமிழ்நாட்டில் எங்கே உள்ளது இந்தி? யார் வீட்டுப் பையனை இந்தி படி என்று எந்தப் பள்ளியில் கட்டாயப்படுத்தினார்கள்? பத்திரிகைக்கார அயோக்கியர்களும், பித்தலாட்ட அரசியல்வாதிகளும் இந்தி கட்டாயம் என்று கட்டி விட்டது கண்டு எல்லா மக்களும் சிந்திக்காமல் இந்தி இந்தி என்று இல்லாத ஒன்றை இருக்கின்றதாக எண்ணிக் கொண்டு மிரள்வதா?

ஆரம்பத்தில் நான்கு காலிகளைச் சுட்டு இருந்தால் இந்த நாசவேலைகளும், இத்தனை உயிர்ச் சேதமும் உடைமைச் சேதமும் ஏற்பட்டிருக்காது. எதற்காக சட்டம்? எதற்காக போலீஸ்? எதற்காக போலீஸ் கையில் தடியடி, துப்பாக்கி? எதற்கு? முத்தம் கொடுக்கவா கொடுத்துள்ளாய்? இது என்ன அரசாங்கம்? வெங்காய அரசாங்கம்” 

இதுதான் பெரியாரின் சனநாயகம்! இதுதான் அவரது தமிழின அரசியல்! 

தமிழக அரசு கொண்டு வரும் கட்டாய இந்திப்பாடம் வேறு., நடுவண் அரசு கொண்டு வரும் இந்தி ஆட்சிமொழி வேறு என்பதை பெரியார் அறியாதவர் அல்லர். ஆயினும், யார் வீட்டுப் பையனை இந்திப்படி என்று எந்தப் பள்ளியில் கட்டாயப்படுத்தினார்கள் என்று ஒருபுறம் கேள்வி எழுப்புவார். மறுபுறம், ” மத்திய சர்க்கார் உத்தியோகம் கிடைக்கிறதுக்கு இந்தியைப் படிச்சிட்டுப் போறேன்” என்று ஆனந்த விகடன் ( 11.4.1965) இதழுக்குப் பதிலும் தருவார். 

பெரியார் முன்னுக்குப்பின் முரணாகப் பேசிவிட்டு, எனக்கு காமராசர் ஆட்சி தான் முக்கியம் என்று கூறியதாகச் சொல்வதை எப்படி ஏற்க முடியும்? காமராசர் ஆட்சிக்காக தமிழினப் பிஞ்சுகளை பலியிடலாமா? தமிழ் மொழியை அழிக்கலாமா?

பெரியாரைப் பொறுத்தமட்டில்,  தமிழ்நாட்டில் தமிழ் பயிற்று மொழியாக மாறக் கூடாது என்பதே அவரின் உள்ளக்கிடக்கை. இதனை 1938 மொழிப் போரிலும், 1965 மொழிப் போரிலும் வெளிப்படுத்தியுள்ளார். 

1939ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போரின் காரணமாக சிறை சென்று வெளியே வந்த பெரியார் கோவையில் உள்ள கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கு கொண்டார். அக்கல்லூரி முதல்வர் கிருட்டிண மூர்த்தி அய்யர் தலைமையில் நடைபெற்ற அந்நிகழ்ச்சியில் நடைபெற்ற மொழியின் பயன் என்ன? பயனுக்கேற்ற மொழி எது? ” எனும் தலைப்பில் உரையாற்றினார். அது வருமாறு: 

“ஆங்கில எழுத்துக்களையே தமிழ் எழுத்துகளுக்கு நெடுங்கணக்காகப், அகர வரிசையாக எடுத்துக் கொள்ளலாம். தமிழ் உச்சரிப்புக்கேற்ற எழுத்து ஆங்கிலத்தில் ஏதாவது ஒன்றிரண்டு குறையுமானால் அதற்கேற்ற தமிழ் எழுத்தை எடுத்துக் கொள்ளலாம். ஆங்கிலமே தமிழனின் பேச்சு மொழியாக  ஆகும்படியான காலம் ஏற்பட்டால் , நான் மிகமிக மகிழ்ச்சியும் திருப்தியும் அடைவேன்.” (ஈ.வெ.ரா.சிந்தனைகள், வே.ஆனைமுத்து தொகுதி)

1965ஆம் ஆண்டு மொழிப்போர் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் 3.3.1965 அன்று “என்னைப் பற்றி” எனும் தலைப்பில் ” விடுதலை” ஏட்டிலே எழுதினார். அது வருமாறு: 

“இந்தியை நான் எதிர்த்ததும் உண்மை. அதுவும் நான் ஒருவனே தான் எதிர்த்தேன். பிறகு தமிழ்ப் புலவர்கள் தமிழ் புத்தகக் கடைக்காரர்கள் கூட்டு சேர்ந்தார்கள். அதிலிருந்து தான் ” தமிழ் உணர்ச்சி” என்பது தோன்றிற்று. தமிழ்ப் புலவர்களும் மதிப்பு பெற்றார்கள். இதனால் தமிழுக்கு தமிழின் பேரால் சிலர் பிழைக்க நேரிட்டதல்லாமல் ஒரு காசுப் பயனும் ஏற்பட்டு விடவில்லை. இந்தி வெறியர்கள் மாதிரி சிலர் வெறியர் ஆனார்கள்.

“இன்றைக்கும் நான் இந்தியை எதிர்க்கிறேன். தமிழ் கெட்டு விடும் என்பதால் அல்ல, தமிழ் கெடுவதற்குத் தமிழில் எதுவும் மீதி இல்லை. ஆங்கிலமே அரசியல் மொழியாக, வரலாற்று மொழியாக, அறிவியல் மொழியாக, சட்டமொழியாக ஆக வேண்டும் என்பதற்காகவே இந்தியை எதிர்க்கிறேன்”.

1960ஆம் ஆண்டு வாக்கில் காமராசர் ஆட்சியில்  கல்வி அமைச்சர் சி.சுப்பிரமணியன் உயர்நிலைக் கல்வியில் தமிழைப் பாடமொழியாக கொண்டு வருவதாக அறிவித்த போது பெரியார் அதனை தீவிரமாக எதிர்த்துப் பேசினார்; எழுதினார்.

தமிழ்ப் பாடமொழி திட்டத்தை ஆதரித்த ம.பொ.சி., பாரதிதாசன் போன்றவர்களை “தாய்ப்பால் பைத்தியங்கள்” என்று கிண்டல் செய்தார். இதன் தொடர்ச்சியாகவே பிடிவாதமான தமிழ்மொழி எதிர்ப்பாளர் என்ற அடிப்படையில் தான் 1965ஆம் ஆண்டு மொழிப் போராட்டத்தை அணுகினார் என்பது தான் உண்மையான காரணமே யொழிய, காமராசர் ஆட்சி முக்கியம் என்பதெல்லாம் பொய்யான நொண்டிச் சமாதானங்களாகும். சண்டித்தனமான சாக்குப்போக்குகளாகும். 

1965 மொழிப்போரில் பங்கேற்ற இராசாசி கூட தமிழுக்காக வாதாட வில்லை. ” தற்போது நடக்கும் யுத்தம் இந்திக்கும் , ஆங்கிலத்துக்கும் இடையேயான யுத்தமே தவிர இந்திக்கும் தமிழுக்கும் இடையில் நடக்கும் யுத்தம் அல்ல” என்று தான் கூறினார். ஆங்கிலத்தை அப்புறப்படுத்தி இந்தியை ஆட்சி மொழியாக நிலைநிறுத்தும் மத்திய அரசின் முயற்சிகளை மட்டுமே கண்டித்துப் பேசினார். Never Hindi Ever English ஒருபோதும் இந்தி வேண்டாம், எப்போதும் ஆங்கிலம் வேண்டும் என்றார் இராசாசி. இதில் பெரியாருக்கும் இராசாசிக்கும் கொள்கை அளவில் எந்த வேறுபாடும் இல்லை.

இந்தியாவின் ஆட்சி மொழிகளுள் ஒன்றாகத் தமிழும் இருக்க வேண்டும் என்ற தமிழின உரிமைக் கோரிக்கையை இராசாசியும் ஏற்க வில்லை. பெரியாரும் ஏற்க வில்லை.

1950ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்திய அரசமைப்பு சட்டத்தின் படி 15 ஆண்டுகள் கழித்து இந்திமொழி ஆட்சிமொழி என்று அறிவிக்கப்பட்டதன் காரணமாக தில்லி அரசு தமிழகத்தில் இந்தியைத் திணிக்கும் முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டது. 

அதனைத் தடுக்கும் முகமாக 1956 க்குப்பின் தமிழ்நாட்டில் பல்வேறு கூட்டங்கள் நடைபெற்று வந்தன. அப்போது ஏற்கெனவே தீவிர இந்தி ஆதரவாளராக அறியப்பட்ட இராசாசி இந்தி எதிர்ப்பாளராக மாறியிருந்தார். பல்வேறு கூட்டங்களில் அண்ணாவோடும், பெரியாரோடும் இந்தித் திணிப்பை எதிர்த்துப் பேசிவந்தார். அப்போதெல்லாம் இராசாசியோடு இணைந்து பணியாற்றிட பெரியாருக்கு எந்தவித சங்கடமும் ஏற்படவில்லை. காமராசர் ஆட்சியைக் கவிழ்க்க முயலும் சூழ்ச்சி என்று முத்திரை குத்தவும் இல்லை.

28.1.1956 அன்று இந்தி ஆட்சிமொழியாவதை எதிர்க்க இராசாசி கூட்டிய கூட்டத்தில் பெரியார் கலந்து கொண்டு பேசினார்.

நுங்கம்பாக்கத்தில் உள்ள  சுப்பையா பிள்ளை என்பவரது வீட்டில் நடைபெற்ற அக்கூட்டத்தில் இராசாசி, பெரியார், அண்ணா, ம.பொ.சி. , இரா.நெடுஞ்செழியன், திருப்புகழ் மணி, கிருஷ்ணசாமி ஐயர், கே.எஸ்.ராமசாமி சாஸ்திரி, வெங்கட்ராம ஐயர், ஆகியோர் கலந்து கொண்டனர். 

அப்போது அக்கூட்டத்தில் பேசிய பெரியார் கூட்டத்தின் தலைப்பிற்கு மாறுபாடாக தமிழ்நாட்டின் கல்வி மொழியாகவும் , ஆட்சி மொழியாகவும் , ஆங்கிலமே இருக்க வேண்டும் என்று பேசினார். அப்போது அங்கிருந்த ம.பொ.சி.க்கும் பெரியாருக்கும் கருத்துப்போர் ஏற்பட்டது. இதுகுறித்து ” நானறிந்த இராசாசி” எனும் நூலில் ம.பொ.சி. கூறுகிறார்: 

“இராசாசி தூண்டியதாலே இந்தக் கூட்டத்திற்கு திரு.சுப்பையா பிள்ளை ஏற்பாடு செய்தார் என்பது அதில் கலந்து கொண்டபோது தான் எனக்குத் தெரிய வந்தது. நுங்கம்பாக்கம் கூட்டத்தில் இராசாசி, அண்ணா, நான் ஆகியோர் மொழிப்பிரச்சினையில் ஒத்த கருத்துடையவர்களாகவே இருந்தோம். 

“பெரியார் ஈ.வெ.ரா. ஆங்கிலம் தமிழ்நாட்டிலும் ஆட்சி மொழியாகவும் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பாடபோதனை மொழியாகவும் நீடிக்க வேண்டும் என்பதிலே தாம் உறுதியாக இருப்பதாகக் கூறினார். இத்துடனன்றி, ஆங்கிலமே தமிழர் வீடுகளில் பேசும் மொழியாகவும் ஆக்கப்பட வேண்டுமென்று கூறினார். 

“இதனால் பெரியாருக்கும் எனக்குமிடையில் சிறிதுநேரம் கடுமையான விவாதம் நிகழ்ந்தது. இராசாசி அடிக்கடி தலையிட்டு எங்களை அமைதிப்படுத்த முயன்றார். 

” மாநிலங்களில் ஆட்சிமொழி பற்றியும், கல்லூரிகளில் போதனா மொழி பற்றியும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கத் தேவையில்லை” என்றும் இராசாசி கூறினார்.

மத்தியில் ஆட்சிமொழியாக 1965 க்குப் பின்னும் ஆங்கில மொழி ஒன்றே நீடிக்க வேண்டும் என்பதிலே நுங்கம்பாக்கம் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இடையே பொதுவான கருத்து ஒற்றுமை ஏற்பட்டது. 

நுங்கம்பாக்கம் கூட்டத்தில் பெரியாருக்கும் எனக்குமிடையே நடந்த விவாதத்தின் போது தமிழ்நாட்டளவில் ஆங்கில ஆதிக்கம் நீடிக்கக் கூடாது என்ற எனது கருத்துக்கு இராசாசி ஆதரவளித்தார். ” தங்கள் கருத்தை ஏற்றுக் கொள்ளும் தெளிவும் துணிவும் தமிழக மக்களுக்கு ஏற்படுவது கஷ்டம் என்று சிரித்துக் கொண்டே கூறினார்.” 

1956 ஆம் ஆண்டு நடைபெற்ற கூட்டத்தில் மேற்கண்ட உரையாடலில் கூட, பெரியார் மத்திய அரசின் தொடர்பு மொழிச் சிக்கலோடு தமிழக பயிற்றுமொழிச் சிக்கலை அணுகுவதை உணர முடிகிறது. 

எங்கும் எதிலும் ஆங்கிலம் வரவேண்டும் என்று விரும்பிய பெரியாரின் மொழிக்கொள்கையை நிராகரிப்பதை விட்டுவிட்டு 1965 ஆம் ஆண்டு மொழிப்போரை இராசாசி எதிர்ப்பு என்றும், காமராசர் ஆதரவு என்றும் பிரித்துப் பார்த்து பெரியாரை நியாயப் படுத்துவது என்பது அநியாயமாக கொல்லப்பட்ட மொழிப்போர் ஈகியர்களை இழிவு படுத்துவதாகும். 

பெரியாரின் தமிழின,  தமிழ்மொழி எதிர்ப்புக் கருத்துகளை விமர்சிக்காமல் , அவற்றைப் புறந்தள்ளாமல் பெரியாரை ஏற்றுக் கொள்வது தமிழ் இனத்திற்கும் தமிழ் மொழிக்கும் இக்காலத்திலும் துரோகம் செய்வதாகவே அமையும்!



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard