New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மொழித் துறையில் ஈ.வே.ரா. வெறும் இராமசாமி தான்! -பெருஞ்சித்திரனார்.


Guru

Status: Offline
Posts: 24614
Date:
மொழித் துறையில் ஈ.வே.ரா. வெறும் இராமசாமி தான்! -பெருஞ்சித்திரனார்.
Permalink  
 


மொழித் துறையில் ஈ.வே.ரா. வெறும் இராமசாமி தான்! -பெருஞ்சித்திரனார்.

மொழித் துறையில் ஈ.வெ.ரா. வெறும் இராமசாமிதான்!

-பெருஞ்சித்திரனார்
பெரியார் ஒரு தமிழ் மொழி எதிர்ப்பாளர் என்று கூறினால் பெரும்பாலான பெரியாரியாவாதிகள் இக்கூற்றை ஒப்புக் கொள்வதில்லை. ஆனால் இக்கூற்றை பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள் ஏற்றுக் கொண்டு  “பெரியார் மொழித் துறையில் வெறும் இராமசாமி” என்று கூறியுள்ளார். பெரியாரை சீர்திருத்தவாதியாக ஒப்புக் கொள்ளும் பெருஞ்சித்திரனார் அக்காலத்தில் தமிழ்மொழியை இழிவாகப் பேசிவந்த பெரியாரை கடுமையாக கண்டித்து

தமது ஏடான தென்மொழியில் எழுதினார்.

 

1967ஆம் ஆண்டு ஏப்ரல் மாத இதழில் “பெரியாரின் தமிழ் ஆராய்ச்சி” எனும் தலைப்பிட்டு  பெருஞ்சித்திரனார் ஒரு கட்டுரை தீட்டினார். அது காலத்தை கடந்து இப்போது புதிதாக எழுதப்பட்டதைப் போல தோற்றம் அளிக்கிறது. இக்காலத்தில் பெரியார் குறித்த மதிப்பீடுகள் விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டு பெரியார் பிம்பம் உடைக்கப்பட்டு வருவதை நாம்அறிவோம். 
ஆனால்  இதை நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே பெருஞ்சித்திரனார் தமக்கே உரிய நடையில் பெரியாரை காயப்படுத்தாமலே விளாசித் தள்ளியிருப்பது வியப்பைத் தருகிறது.
பெரியார் தமது மதிப்பை தமிழ் எதிர்ப்பின் மூலம் இழந்து விட வேண்டாம் என்று பெருஞ்சித்திரனார் கேட்டுக் கொண்டும் பெரியார் தன்னை திருத்திக் கொள்ள வில்லை. ஒரு கூலிப் புலவரை எழுத வைத்து தமது தமிழ் எதிர்ப்பை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்.  “தமிழ் மொழி ஒருகாட்டுமிராண்டி மொழி” என்று பெரியார் திரும்பத் திரும்ப கூறிவந்த நிலையில், பெருஞ்சித்திரனார் “தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழியே” (தென்மொழி, அக்டோபர், 1967) என்று தலைப்பிட்டு மீண்டுமொரு கட்டுரை மூலம் பதிலடி தந்தார். ஆனாலும் பெரியார் சாகும்வரையிலும் தமிழ் எதிர்ப்பை கைவிடவில்லை என்பதே உண்மை.
 பின்வரும் பெருஞ்சித்திரனார் எழுதிய “பெரியாரின் தமிழ் ஆராய்ச்சி” எனும் விரிவான கட்டுரையை படித்துப் பார்த்தாவது பெரியாரியவாதிகள் தமது கருத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.

 

பெரியாரின் தமிழ் ஆராய்ச்சி!
கடந்த மாதம் 16-ஆம் பக்கல் அன்று “விடுதலை” யில்  ‘தமிழ்’ என்ற தலைப்பில் பெரியார் ஈ.வே.இராமசாமி அவர்கள் எழுதிய கட்டுரை கண்டு மிகவும் வருந்தினோம். அண்மையில் நடந்த தேர்தலில் தம் மண்டையில் விழுந்த அடியால் பெரியார் மூளை குழம்பிப் பிதற்றி யுள்ளதாகவே நம்மைக் கருதச் செய்தது அக்கட்டுரை.
அவர் சிற்சில வேளைகளில் எழுதும் அல்லது கூறும் இத்தகைய கருத்துகள் தமிழ் மக்களுக்கிடையில் அவருக்குள்ள மதிப்பை அவர் கெடுத்துக் கொள்ளத்தான் பயன்பட்டிருக்கின்றனவே அன்றி, அவர் உறுதியாகக் கடைப்பிடித்து வரும் பொதுமைக் கொள்கையை வளர்த்துளளதாகத் தெரியவில்லை. 

கடந்த சில ஆண்டுகளாகவே அவர் எல்லாருடைய வெறுப்புக்கும் கசப்புக்கும் ஆளாகி வருவதற்கும், அவருக்குத் துணையாக நின்று பணியாற்றிய பலரும் விலகி போய்க் கொண்டிருப்பதற்கும் அவரின் இத்தகைய மூளை குழப்பமான கருத்துகளை அவ்வப்பொழுது அவிழ்த்து விட்டுக் கொண்டிருப்பதுதான் பெருங்காரணம். 
இந்தத் தேர்தலில் காமராசர் ஒருவர்க்காகத், தாம் மனமார ஆரிய அடிமை, பொதுநலப் பகைவன் என்று கருதிய பக்தவத்சலம் போன்றவர்களைக் கூட கைதூக்கிவிட எப்படித் தம் மானத்தையும் பகுத்தறிவையும் அடகு வைத்துப் பேசிக் கொண்டு திரிந்தாரோ , அப்படியே இதுபோன்ற கருத்துகளை முன்பின் விளைவுகளை எண்ணிப்பாராமல் வெளிப்படுத்துவதும் அவர் இயல்பு.
ஆனால் அவர் போன்று இல்லாமல் நாம் எந்நிலையிலும் அஞ்சாமை , அறிவுடைமை, நேர்மை இவற்றின் அடிப்படையில் உண்மையை உண்மை என்றும், பொய்மையைப் பொய்யென்றும் துணிந்து கூறிவருவதால் அவரைப் பற்றிய சிலவற்றையும் நாம் ஈண்டுக் கூற நேர்ந்தமைக்காக மிகவும் வருந்துகிறோம். அவரைப்போல் இரங்கத்தக்க நிலையில் இருந்து கொண்டு நாம் இதைக் கூறவில்லை. 
தமிழ் மொழியைப் பற்றிய பெரியாரின் கருத்தும் குமுகாயத் தொண்டைப்பற்றிப் பக்தவத்சலம் பேசும் கருத்தும் ஏறத்தாழ ஒன்றுதான். பக்தவத்சலம் ஆரிய அடிமை. பெரியார் திராவிட அடிமை. இன்னுஞ் சொன்னால் குமுகாய அமைப்பில் இராசாசியால் எப்படித் தமிழர் இனம் அழிகின்றதாக இவர் கூறுகின்றாரோ, அப்படியே மொழியியல் துறையில் தமிழ் வளர்ச்சிக்கு இவர் இராசாசியாகவே இருக்கின்றார்…..
 ஈ.வே.இரா. தமிழர்களின் தன்மான உணர்விற்கும் பகுத்தறிவு வளர்ச்சிக்கும் பாடுபட்ட வகையில் போற்றப்பட வேண்டியவர்; புகழப்பட வேண்டியவர்; 

ஆனால், தமிழ் மொழியைப் பொறுத்தவரையில் இவர் அதன் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாகவே இருந்திருக்கின்றார். ஆரியப் பார்ப்பனர்களின் தில்லுமுல்லுகளையும் , அவரால் தமிழுக்கு நேர்ந்த- நேரவிருக்கின்ற கேடுகளையும் புடைத்துத் தூற்றி எடுத்துக் காண்பிக்கும் மதுகை படைத்த இவர், ஆரிய மொழியால் தமிழ் மொழிக்குக் கடந்த மூவாயிரம் ஆண்டுகளாக நேர்ந்த தீங்கை ஒப்புக் கொள்வதில்லை; ஒரோவொருகால் ஒப்புக் கொண்டாலும் அதை விலக்க எவ்வகை முயற்சியும் செய்வதில்லை; ஒரோவொருகால் செய்தாலும் அதைக் கடனுக்காகவே, அவருடன் சேர்ந்திருந்த  உண்மைத் தமிழன்பர் தம் கண்துடைப்புக்காகவே செய்திருக்கின்றார்.
பாவாணர் ஒருகால் தாம் எழுதிய ஓர் அரிய ஆராய்ச்சி நூலை அச்சிட இவர் உதவி கேட்டார். இவரோ “பண உதவி ஏதும் செய்ய முடியாது; வேண்டுமானால் அதை எப்படியாகிலும் அச்சிட்டுக் கொண்டு வாருங்கள்; நான் விற்றுத் தருகின்றேன்.” என்று கூறினாராம். பாவாணர் அவர்களும் அதை மெய்யென்று நம்பி, தம் துணைவியார் கழுத்தில் கிடந்த பொன்தொடரியை விற்று அதை அச்சிட்டுக் கொண்டு போய், விற்றுக் கொடுக்க கேட்டாராம். பெரியார் இரண்டு மூன்று உரூபா மதிக்கப்பெறும் அந்நூலை நாண்கணா மேனி விலைக்குக் கேட்டாராம். இதுபோன்ற நிகழ்ச்சிகள் நிறைய உள.
பகுத்தறிவுக் கொவ்வாத பழங்கொள்கைகளைப் பேசிக் திரியும் பத்தாம் பசலித் தமிழ்ப் புலவர்களை வேண்டுமானால் இவர் வெறுக்கலாம். அவர்களை நாமும் பாராட்டுவதில்லை . அவர்களால் தமிழ்மொழிக்கு என்றும் கேடுதான். ஆனால் தமிழ்ப் பற்றும் , தமிழ்நாட்டுப் பற்றும் தமிழர் முன்னேற்றமுமே தலையாகக் கொண்ட மறைமலையடிகள், திரு.வி.க., பாவாணர் போன்ற மெய்த்தொண்டர்களுக்கும் பேரறிஞர்களுக்கும் , இவர்தம் பகுத்தறிவு கொள்கைகளையே ஆயிரக்கணக்கான தமிழ்ப் பாடல்களாக வடித்தெடுத்த பாவேந்தர் பாரதிதாசன் அவர்களுக்கும் இவர் உதவாதிருந்த காரணமென்ன?

 

உ.வே.சா. , நா.கதிரைவேல் போன்றவர்களை இவர் மதிக்காமற் போனாலும் பாவாணர், பாரதிதாசன், இலக்குவனார் போன்றவர்களைக் கண்ணெடுத்தும் இவர் பார்க்காமல் போனதற்கும் அந்தத் தமிழ்தான் காரணமோ? ஆம்; தமிழ்தான் காரணமென்றால் அந்தத் தமிழ் மொழியைத் தம் தாய் மொழியாகக் கொண்ட தமிழர்கள் பால் மட்டும் எப்படி முழு கருத்துக் கொண்டு இவர் தொண்டாற்றிவிட முடியும்? 
உ.வே.சா. , இவரைப் ‘பிரபு’ வாக மதிக்கவில்லை என்று இவருக்குத் தமிழைப் பிடிக்காமற் போனால், இவரைத் தம் தெய்வமாக கருதிய பாவேந்தருக்காக , தமிழ்மொழி மேல் இவருக்கு ஆராக் காதலன்றோ ஏற்பட்டிருக்க வேண்டும்? 
பாவாணர், பாரதிதாசன் போன்றவர்களையும் இவர் கண்ட சேசாசலம், முத்துச்சாமி, சங்கரதாசு, கதிரைவேல் போன்றவர்களாகவே கருதிக் கொண்டாரோ? இல்லை, தாம் என்ன என்னவற்றை அறிந்திருக்கின்றாறோ அல்லது தமக்கு எவை எவை புரிகின்றனவோ அவையவை மட்டுந்தாம் அறிவுக்குப் பொருந்தியவை; சிறந்தவை; உலகமெல்லாம் பின்பற்றத் தக்கவை என்று கருதிக் கொண்டாரோ?
தமிழில் என்ன இருக்கின்றது? என்று இவர் கேட்கும் வெறுப்புக் கொள்கை ( Cynicism)  தான் இவர் காணும் பகுத்தறிவு என்றால் அப்பகுத்தறிவு நமக்கு வேண்டுவதில்லை. உலகில் உள்ள மாந்த மீமிசைக் (Supernal) கொள்கைக்கு வழிகாட்டாத இவர் குமுகாய அமைப்பு நமக்குத் தேவையில்லை. தமிழிலும் அதில் உள்ள மேலான உளவாழ்விற்கு அடிகோலும் நூல்களிலும் இவர் எதை எதைத் தேடுகின்றாரோ? நமக்குத் தெரியவில்லை.
ஆரிய அடிமைப் புலவர்கள் சிலர் இடைக்காலத்தில் ஆக்கி வைத்த கம்ப இராமாயணம், பெரிய புராணம், வில்லி பாரதம் முதலிய பார்ப்பன அடிமைப் பழங்கதை நூல்களே தமிழ் என்று நினைத்தால் தமிழ்மொழியில் மாந்தவாழ்விற்கான இலக்கிய நூல்களே இல்லை என்பதை நாமும் ஒப்புக் கொள்ளலாம்.

 

ஆனால் இப்பொழுதுள்ள கழக நூற்களையும்,  இறந்துபட்ட   ஆயிரக்கணக்கான மெய்யிலக்கியங்களையும் கண்டும், கேட்டும், உணர்த்தும் கூட  இவர் தமிழைப் பழிப்பதை நம்மால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. வேண்டுமானால் தமிழ்மொழியில் என்னென்ன இல்லை என்று இவர் கூறட்டும்; அதன்பின் நாம் என்னென்ன இருக்கின்றது என்று காட்டுவோம்.
அதை விட்டு விட்டுத் தமிழ்ப் புலவர்களில் உருசிய நாட்டின் இலெனினையும் ; மார்க்சையும்; கிரேக்க நாட்டின் சாக்ரடீசையும் எப்படி இவர் தேடிக் கண்டுபிடிக்க முடியும்? வேண்டுமானால் தொல்காப்பியரைப் போல், வள்ளுவரைப் போல், திருமூலரைப் போல் உலகில் உள்ள நாடுகளில் எந்தெந்த நாடுகளில் உள்ளனர் என்று இவர் காட்டட்டும்! நாமும் இவர் கூறும் – இவர் விரும்பத்தக்க இவர் மதிக்கத்தக்க அறிஞர்களையும், பெரியோர்களையும் தமிழிலும் காட்டுவோம்.
பொதுமக்களின் உணர்வுகளை இவர் நன்கு உணர்ந்தவர் என்பதாலேயே, அறிஞர்களின் அறிவை இவர் நன்கு உணர்ந்தவர் ஆகி விடார். இவரின் கடவுள் வெறுப்புக் கொள்கை இந்நாட்டுச் சூழலில் இவர் கூறும் சீர்திருத்தத்திற்குச் சிறு அளவிலோ, பேரளவிலோ ஒருவாறு பொருந்துவதாகலாம்.  ஆனால் அதுவே மாந்தர்க்கு வேண்டிய நிறைவான கொள்கையாகி விடாது. குமுகாய குப்பைக் குழிகளில் இவர் எண்ணத்திற்கும் கருத்திற்கும் சொற்களுக்கும் வேண்டிய தீனி நிறைய உண்டு. அதனாலேயே அறிவுக்கருவூலம் இவருக்குத் திறந்த கதவாகிவிடாது. ஆரியப் பார்ப்பனரின் கலவைக் கொள்கைகளுக்கு இவர் பெரியதொரு சம்மட்டியாகாலாம். அதனாலேயே தமிழர்களின் உள வளர்ச்சிக்கும் மீமிசை மாந்த வளர்ச்சிக்கும் இவர் ஏணியாகி விடமுடியாது.

 

இவர் சீர்திருத்தம் பாராட்டக் கூடியது; பொதுமைக் கருத்து வரவேற்கக் கூடியது; துணிவு வியக்கக் கூடியது; முயற்சி போற்றக் கூடியது; அதனாலேயே இவருடைய அறிவும் பின்பற்றத்தக்கதாகி விடாது. முட்செடிகளை அகற்றி மலர்ச்செடிகளை வளர்க்கப் பாடுபடும் ஒருவன் நல்ல தோட்டக்காரனாகலாம். அதனால் அவன் அந்த மலர்ச் செடிகளையே படைத்தவன் ஆகிவிடமுடியாது. அதில் மலரும் மலர்களுக்குக் கட்டளையிடவும் முடியாது. 

இவருடைய சீர்திருத்தத்தை – முயற்சியை – தொண்டைக் கொண்டு- மக்கள் இவரைப் பாராட்டுவதைக் கண்டு, அம்மக்கள் எல்லாரும் தம்மையே மீமிசை மாந்தனாகக் கருதிக் கொண்டுள்ளனர் என்று இவர் தவறாக எண்ணிக் கொண்டார் போலும்; அப்படி எண்ணி இவருக்குத் தொடர்பில்லாத செய்திகளில் – மெய்யறிவுணர்வுகளில் இவர் கருத்தறிவிப்பது இவர் பேதைத் தன்மையையே காட்டும்.

 

தமிழ் மொழியில் எழுதப்பட்டுள்ள புகுத்தப்பட்டுள்ள இடைக்காலக் கருத்துகளைப்பற்றி ஆராய்ந்து, அக்கருத்துகள் யாவும் பிறரால் இம்மொழி பேசிய மக்களை ஏமாற்றுவதன் பொருட்டு எழுதி வைக்கப்பட்டதாகும் என்று தெரிந்த இவர், அப்பாழ்வினைக்குத் தமிழ் மொழி மேல் குற்றங்கூறுவது எப்படி சரியாகும்?

தமிழ் மக்களுக்கு ஒவ்வாத கருத்துகளை ஒதுக்கப் புகுந்த இவர் அக்கருத்துகளோடு தமிழர்களுக்கே உயிராகவிருந்த ஒழுகலாறு, மெய்யுணர்வு, உளத்தூய்மை முதலிய உயர்ந்த கொள்கைகளின் உள்ளுக்கங்களையும் ஒரேயடியாகத் துடைத்தெடுக்க முற்பட்டு விட்டார். 
ஆரியக் கடவுள் கொள்கைகளைச் சாடவந்த இவர் தமிழரின் ஒரு தெய்வக் கொள்கையையும் கண்டிக்க – கண்மூடித்தனமாக இவர் செய்த முயற்சி- ஆரிய அழுக்கை ஒருவாறு அகற்றியதேனும் , தமிழர் பண்பாட்டையுமன்றோ சிதைத்தெறிந்து விட்டது. இற்றைத் தமிழகத்தில் நிலவியிருக்கும் பண்பாட்டுத் தாழ்வுக்கு இவரும் இவர் மட்டையடிச் செய்கைகளும் கூட ஓரளவு காரணம் என்று கூறலாம். 

பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடிந்தது போல் தமிழகத்தில் வந்து கலந்த ஆரியரின் பல தெய்வக் கொள்கையை ஒழிக்கப் பாடுபட்டுப் பேய்த் தன்மையை வளர்க்கவே பயன்பட்டது இவரியக்கம் எனினும் மிகையில்லை.
இவ்வளவு அரும்பாடு பட்டும் இவர் எதிர்த்துப் போராடுகின்ற பார்ப்பனரின் ஊடுருவலைத் தடுத்து நிறுத்தாமற் போனதற்கு , இவர் தமிழ் மேலும் தமிழ்ப் பண்பாட்டு மேலும் முழு நம்பிக்கை வைக்காமையே காரணம். எய்தவன் இருக்க அம்பை நோகும் இவர் செய்கைக்கு நாம் மிகவும் வருந்துகின்றோம்.
தமிழில் இதுவரை நல்ல நூல்கள் வெளிவரவில்லை என்று பழி சுமத்தும் இவர் , இவ்வுலகில் உள்ள எந்த மொழியில் வெளிவந்த எந்த நூல் தான் எந்தப்பகுதி மக்களுக்கு என்னென்ன நன்மை செய்தது என்று கூறுதற்கியலுமா? 
உலகில் உள்ள நூல்கள் பலவகைப்பட்ட.ன. ஒரு தோட்டத்தில் உள்ள மலர்களைப் போல் பல்வகை மணங்களும் நிறங்களும் கொண்டன. அதில் மல்லிகை மலருக்கு , முளரி (ரோசா) மலரைப் போல் வண்ணமில்லையே என்றும் , மகிழ மலர் போல் மணமில்லையே என்றும் கூறிக் கொண்டிருப்பது பேதைத்தனமேயன்றி மலரில் உள்ள குறைபாடு ஆகாது.

தமிழ் மொழியில் உள்ள திருக்குறளைப் போன்றதோர் அறநூலும் , சிலப்பதிகாரம் போன்றதோர் இசை நூலும்,  புறநானூறு போன்றதொரு மற (வீர) நூலும் , மணிமேகலை பெருங்கதை போன்றதொரு துறவு நூலும் , அகநானூறு குறுந்தொகை போன்றதொரு காதல் நூலும் , திருமந்திரம் போன்றதொரு மெய்யறிவு நூலும், திருவாசகம் போன்றதொரு வழிபாட்டு நூலும் உலகில் வேறெந்த நாட்டிலும் வேறெந்த மொழியிலும் வேறெந்த மக்களிடையேயும் காண்பது அரிது என்பது நூற்றுக்கணக்கான மேனாட்டுப் பல்துறை அறிஞர்கள் எல்லாரும் ஒருமுகமாக ஒப்புக் கொண்ட பேருண்மையாகும்.

 

இவையன்றி இக்கால அறிவியல் வளர்ச்சிக்குப் பொருந்தும் படியான நூல்கள் எவை எனின், இக்காலத்துச் செய்முறை அறிவு நூலை அக்காலத்திலேயே எப்படி எழுதி வைத்திருக்க முடியும்? என்றாலும் நம் தமிழில் உள்ள நூல்கள் பெரும்பாலும் அழிக்கப்பட்ட ஒரு நிலையில் நாம் இத்தகைய கேள்வியை இரக்க உணர்வோடு கேட்க வேண்டுமே யன்றி, இழிவுணர்வோடு கேட்பதும், தமிழையே காட்டு மிராண்டிக் காலத்து மொழி, நாகரிக காலத்திற்குப் – பகுத்தறிவுக் காலத்திற்குப் பொருந்தாத மொழி என்றும் இடித்துரைப்பதும் ஈ.வே.ரா.வின் பேதைமையையே காட்டும்.
அவர் கருதும் காட்டுமிராண்டித்தனம் என்பது என்ன? நாகரிகம் என்பது எது? பகுத்தறிவு என்பது எது? என்பதைக் தெளிவாகக் கூறட்டும். நாம் அதன்பின் அத்தகைய காட்டுமிராண்டித்தனம் தமிழில் என்ன இருக்கின்றது என்று கேட்போம். அவர் கூறும் நாகரிகமும் பகுத்தறிவும் எந்த நூலில் இல்லை என்று சூளுரைத்துக் கேட்போம்.

 

ஆரியர்களின் சூழ்ச்சியால் இற்றைக் காலத்துள்ள தமிழ் மக்கள் பெரும்பாலாரிடம் தமிழ் மானத்தையும், தமிழ் அறத்தையும், தமிழ்ப் பண்பாட்டையும் எப்படிப் பார்க்க  முடிவதில்லையோ , அப்படியே ஆரியரால் அழிக்கப்பட்டவை போக எஞ்சியுள்ள நூற்களிலும் நாம் முழுவதும் பாராட்டுகின்ற  அளவிற்குத் தமிழ்த் தன்மைகளைப் பார்க்க முடியவில்லை என்பது உண்மையே! ஆனால் அதற்காகத் தமிழ் மொழியையே தாழ்த்திக் கூறுவது எப்படி அறிவுடைமையாகும் .
சீதையின் கற்பாராய்ச்சியையும் இராமனின் கோழைக் கண்டு பிடிப்பையும் ஆரிய தெய்வங்களின் இழிநிலை ஆய்வுகளையும் செய்வதில் “வல்லவர்” என்பதாலேயே , இவர் தமிழ் மொழி ஆராய்ச்சியையும் செய்வதில் வல்லவராகி விடமாட்டார்.

 

கால்டுவேலரும் , போப்பும் , பெசுக்கியும் , சார்லசு கோவரும் , எலிசா ஊலும் , சான்முர்தோக்கும் , செசுப் பெர்சனும் , கிரையர்சனும் , பெரடெரிக் பின்காட்டும் , கிரேயலும் ,எமினோவும் , பரோவும் , சேம்சு ஆலனும், மறைமலையடிகளும்  , திரு.வி.க.வும் , பாவாணரும் தெரிந்து கொண்டவற்றை விடப் பெரியார் ஈ.வே.இரா. தமிழைப் பற்றி மிகுதியாகத் தெரிந்து கொண்டு விட்டார் என்று நாம் கருதிவிட வேண்டா.
அவர் திராவிடர் கழகத் தலைவர் பெரியார் ஈ.வே.இரா. மட்டும் தான். உலக அறிவியல் கழகத்தின் தமிழ் ஆய்வியல் பேராசிரியர் பெரியார் அல்லர்; என்பதைத் தமிழன்பரும் பிறரும் உணர்ந்து கொள்வாராக. எனவே அவர் பட்ட ( அநுபவ) அறிவில் கண்ட உண்மையே தமிழ் என்னும் காரண அறிவுக்கு முடிவாகி விட முடியாது.
இவர் அரசியல்காரர்; அல்லது குமுகாயச் சீர்திருத்தக்காரராக  விருக்கலாம்; ஆனால் ஒரு மொழிப் பேராசிரியராகவோ , வரலாற்றுப் பேராசிரியராகவோ, மக்களியல் பேராசிரியராகவோ , ஆகிவிட  முடியாது. அவர் கூறியிருக்கின்ற தமிழைப் பற்றிய கருத்துகள் தம்மை ஒரு மொழிப் பேராசிரியராக எண்ணிக் கொண்டு கூறிய கருத்துகளாகும்.

 

எனவே அவை அறிவுக்குத் தொடர்பில்லாத கருத்துகளே என்று கருதி விடுக்கவும். எவரும் அதுபற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. இவர் அரசியலைப் பொறுத்தவரை ஓர் இலெனினாக இருக்கலாம்; குமுகாயவியலைப் பொறுத்தவரையில் ஒரு கமால் பாட்சாவாக  இருக்கலாம்; பொருளியலைப் பொறுத்தவரையில் ஒரு மார்க்சாக இருக்கலாம்; சீர்திருத்தத்தைப் பொறுத்தவரை ஒரு பெரியராகவும் இருக்கலாம்.
ஆனால் மொழித்துறையைப் பொறுத்தவரையில் – இவர் வெறும் இராமசாமி தான்.
இவ்விருபதாம் நூற்றாண்டில் வாழ்கின்றார் என்பதற்காகவே வள்ளுவரை விட , தொல்காப்பியரை விட , திருமூலரை விட  , கபிலரை விட , இளங்கோவை விட , முதிர்ந்த அறிவின் ஆகிவிடார் . இறைவன் உண்மையை மறுப்பதாலேயே இவர் முழுமையான அறிவாளாராகி விடமாட்டார். 
நெப்போலியன் ஒரு வீரமறவன் ; ஆனால் மனத்தூய்மையில் அவன் புத்தரைப்போல  வழிபடத்தக்கவனல்லன். சாக்ரடீசு ஓர் அறிஞன்; ஆனால் அவன் இயேசுவைப் போல் பின்பற்றத்தக்கவனல்லன்; மார்க்சு பொதுவுடைமைத் தந்தை; ஆனால் வள்ளுவரைப்போல் மெய்யுணர்வினன் அல்லன்; சீசர் தன்னிகரற்ற ஓர் அரசியல் தலைவன்; ஆனால் அவன் எமர்சனைப் போல் மீமிசை உணர்வு படைத்தவன் அல்லன்; இலெனின் ஒரு நாட்டுக்கே புத்துணர்வூட்டிய வழிகாட்டி; ஆனால் அவன் ஐன்சுடீன் போன்ற அறிவியலறிஞன் அல்லன்; 

அவர்களைப் போலவே ஈ.வே.இரா. ஒரு குமுகாய சீர்திருத்தக்காரர்; பகுத்தறிவு வழிகாட்டி; அவர் ஒரு பேராசிரியரோ அறிவியல் வல்லுநரோ அல்லர். தமிழரின் குமுகாய  அமைப்பைச் சீர்திருத்தியவர் என்பதற்காகத் தமிழையே சீர்திருத்தத் தொடங்குவது அவர் அறியாமையாகும்.
 அது நுனிக்கிளையில் அமர்ந்து அடிக்கிளையை வெட்டுவது போன்ற மடமைச் செயலாகும். பூச்சி அரித்த  இலைகளையும், கிளைகளையும் கழிக்க முற்படுவதுடன் பரந்து வேரோடிய மரத்தையும் வெட்டிச் சிதைக்கும் ஓர் அடாத செயலாகும்.
அண்மையில் ஏப்பிரல் 22, 23, 24-ஆம் பக்கல்களில் இலண்டனில் சேக்சுபியர் பிறந்த நாளை அரசியல் பேரறிஞர்கள் உட்பட்ட எல்லாரும் கொண்டாடுவது, அவர் அறிவியல் அறிஞர், அல்லது நாட்டின் சீர்திருத்தக்காரர் அல்லது பகுத்தறிவு மேதை, அல்லது அந்த நாட்டின் தலைமை அமைச்சராக இருந்தவர் என்னும் காரணங்களுக்காகவா? அவர் ஒரு மொழிப் புலவர்; பாவலர் என்பதற்காகவே ஆகும். நம் நாட்டுப் பழம்பெரும் புலவர்கள் அவரைவிட எவ்வகையில் தாழ்ந்தவர்கள் என்பதைப் பெரியார் கூறட்டும்.
ஆரியர் சூழ்ச்சிகளால் இடைநாட்களில் ஏற்பட்ட சில்லறைப் புலவர்கள்

“புலவர்கள்” என்ற பெருமைக்குரியவர்களே அல்லர். எனவே அவர்களை நாம் பரிந்துரைக்கவும் இல்லை. இவர் மதிக்கின்ற மேலை நாடுகளில் அத்தகைய அளவுக்கு ஆண்டு தோறும் பெரும் புலவர்களுக்கு விழாவெடுத்துப் பாராட்டுத் தெரிவிக்கின்றனர்.
ஆனால் இங்கோ தமிழர்களுக்கு விடுதலை தேடித்தருகின்றேன் என்று கூறும் ஒரு தலைவர், தமிழைப் பற்றியும், உண்மைத் தமிழ்ப் புலவர்களைப் பற்றியும் தரக்குறைவாகப் பேசித் திரிகின்றார் என்றால், அஃது அவர்க்கு மட்டுமன்று; தமிழர் எல்லாருக்கும் வந்த இழிவாகும். தமிழ் நாட்டுக்கே வந்த இழிவு. இஃது அவர் எதிர்த்து வரும் ஆரிய இனத்துக்கு வேண்டுமானால் மகிழ்வூட்டுவதாக இருக்கலாம். உண்மைத் தமிழர்களுக்கு எள்ளளவும் மகிழ்ச்சி ஊட்டாது; மாறாக வெறுப்பையே ஊட்டும் என்று அவரும் அவரைச் சார்ந்தவர்களும் கருதிக் கொள்வார்களாக.
இவர் “தமிழ் படிப்பதால் பயன் ஒன்றுமில்லை” என்ற தம் கருத்துக்கு வலிவாக, எவனோ சொத்தை சோம்பேறிப் பாவலன் (!) ஒருவன் கூட்டி வைத்த உமிப்பாட்டை எடுத்து வைத்துக் கொண்டு அதில் ஒன்றுமில்லை யென்று ஊதிக்காட்டி அவனுடன் அவரும் அழுதிருப்பது அவர் அறிவுக்கு இழுக்கு என்பதை அவர் அறிந்து கொள்ள வேண்டும்.
பிறரை எப்படிக் கண்களை மூடிக்கொண்டு பின்பற்றக் கூடாது என்று இவர் கூறுகின்றாரோ, அப்படியே உண்மைத் தமிழர் கண்களை மூடிக்கொண்டு பின்பற்றக் கூடாது என்று எச்சரிக்கின்றோம். 
தப்பித் தவறித் தன்மானம் கெடாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழரையே, மெய்ம்மைத் தமிழையே தாழ்த்தும் இப்படிப்பட்ட கருத்துரைகளால் , பெரியார் தமக்கிருக்கும் ‘பெரிய’ மதிப்பை இழந்துவிட வேண்டா என்று இவரை பல்லாற்றானும் கேட்டுக் கொள்கின்றோம்.

 

-பெருஞ்சித்திரன் . 

நன்றி: தென்மொழி இதழ், ஏப்ரல் , 1967.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard