New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சோழர் சமயம் -மோசடி முனைவர் டாக்டர் பத்மா


Guru

Status: Offline
Posts: 24603
Date:
சோழர் சமயம் -மோசடி முனைவர் டாக்டர் பத்மா
Permalink  
 


சோழர் காலத்திய சமயம்-- பகுதி 1

 
 
 

 சோழர் காலச் சமயம்


எழுத்து: மோசடி முனைவர் டாக்டர் பத்மா

http://www.heritagewiki.org/index.php?title=%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D--_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF_1
கி.பி. 5 ஆம் நூற்றாண்டில் ஆந்திராவின் ஒரு பகுதியை ஆண்டவன் பல்லவ மன்னன் திரிலோசன பல்லவன். இவன் சமணர்களை அழித்தான். வேதமல்லாச் சடங்குகளை நீக்கிவிட்டு வேதச் சடங்குகளையே கடைப்பிடித்தான். கோயில்களில் வழிபாடு செய்து கொண்டிருந்த பிராமணர் அல்லாதவரை நீக்கிவிட்டு வட நாட்டிலிருந்து அழைத்து வந்த பிராமணர்களை நியமித்தான்.*1 இந்த வடநாட்டு பிராமணர் என்பவர்கள் காளாமுக, பாசுபத, காபாலிக சைவத்தைச் சேர்ந்தவர்கள். கி.பி. 5-ஆம் நூற்றாண்டில் ஆந்திராவில் பரவிய இம்மதங்கள் அங்கு இருந்ததற்கான சான்றுகள் ஏராளமாக உள்ளன. கி.பி. 5-ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு அச்சைவம் தமிழகத்தில் நுழைந்தது. கி.பி. 7-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சேர்ந்த அப்பர் பாடல்களில் நாகப்பட்டினம் கோயிலை நாகைக் காரோகணம் என்று பாடுகிறார்.*2 இவரது காலம் மகேந்திர வர்மனின் காலம். அதாவது கி.பி. 600--630 ஆகும். திரிலோசன பல்லவன் கல்வெட்டுகள் ஆந்திராவில் கி.பி. 470 முதல் 490 வரை கிடைத்துள்ளன*3 எனவே. திரிலோசன பல்லவன் காலத்திற்குப் பின்னரும் மகேந்திர வர்மன் காலத்திற்கு முன்னரும் சற்றேறக் குறைய கி.பி. 500 முதல் 600-க்குள் வடநாட்டு சைவம் தமிழகத்திற்குள் நுழைந்திருக்க வேண்டும்.

 

அப்பர் நாகப்பட்டினத்தை நாகைக் காரோகணம் என்றும் குடந்தைக் காரோகணம் என்றும் கச்சிக் காரோகணம் என்றும் பாடியுள்ளார். வட நாட்டில் காரோகணம் என்ற இடத்தில் பிறந்த லகுளீசரின் சித்தாந்தத்தைப் பின்பற்றும் மதம் பாசுபதம். இந்த லகுளீசர் பிறந்த இடமான காரோகணம் ஒரு தலையாய பாசுபதர்களின் மையமாகத் திகழ்ந்தது. எனவே மேற்கூறிய தமிழ்நாட்டுக் காரோகணங்கள் லகுளீச சித்தாந்தத்தைப் பின்பற்றும் பாசுபத சைவத்தின் அடிப்படையில் அமைந்திருந்தன. அப்பர் தம் திருவாரூர்ப் பதிகத்தில் பாசுபத, காளாமுக, காபாலிகர் உலவும் திருவாரூர் வீதியைப் பாடுகிறார். அவரது சமகால மகேந்திரவர்மனும் காபாலிகர்களையும் பெளத்தர்களையும் தமது மத்த விலாச பிரகடனம் என்ற நூலில் கேலி செய்து எழுதியுள்ளார்.

 

சைவ வேளாளர் குடும்பத்தில் பிறந்து சமண மதத்தைத் தழுவிப் பின்னர் தீவிர சைவ சமயத்தவராக மாறிய அப்பர் தாம் தழுவியிருந்த சமண மதத்தைக் கடுமையாகத் தாக்குகின்றார்.*4 சம்பந்தரும் அவ்வாறே தாக்கியிருக்கின்றார். ஒரு மதத்திலிருந்து இன்னொரு மதத்திற்கு மாறுகின்ற போது தீவிரமாவது மனித இயல்பு. அதுபோல வயதில் மூத்த அப்பர் மிகவும் தீவிர பக்தராக மாறுகிறார். சமண பெளத்த பாழிகள் இடிக்கப் பட்டிருக்கின்றன. சொத்துக்கள் பறிமுதல் செய்யப் பட்டிருக்கின்றன. *5 அப்பரின் பாடல்கள் காபாலிக சைவர்களின் சிவ உருவ வழிபாடுகளும், சிவன் கபாலத்தை கையிலேந்தியவனாக, கால காலனாக, பைரவனாக, பிக்‌ஷாடனராக, மேனியெங்கும் திருநீறு பூசியவனாகக் கூறுவதிலிருந்து தீவிர சைவர்களான காபாலிகர்களின் சைவ சமயத் தாக்கம் அப்பரிடம் அதிகமிருந்திருக்கிறது. மனித உயிர்பலி செய்யும் காபாலிகத்தைப் பின் பற்றியதால் தான் மதுரை, திருவோத்தூர் போன்ற இடங்களில் சமணர்களைக் கழுவேற்றிக் கொல்லப் பட்டனரோ என எண்ண வேண்டியுள்ளது. *6

 

இவ்வாறு நாயன்மார், ஆழ்வார்கள் காலத்தில் தோன்றிய பக்தி இயக்கத்தால் சமண, பெளத்தர்களின் ஆதிக்கம் பொருளாதாரத்திலும், கல்வி, மருத்துவ, சமூக சேவைகளிலும் கட்டாயமாகப் பறிக்கப் பட்டது. அதற்கு மாற்றாக சைவ வைணவ மதங்கள் மக்கள் மத்தியில் முன் வைக்கப் பட்டு அவ்விடங்களை நிரப்ப முயற்சி செய்தன. முடிவில் வெற்றியும் பெற்றன என்பதில் யாருக்கும் ஐயமிருக்க வாய்ப்பில்லை. இவ்வாறு சைவ சமய மறுமலர்ச்சியில் வேளாளரான அப்பரும் பிராமணரான சம்பந்தரும்,பங்கு பெற்றிருந்தனர். இவர்களுக்குப் பின்னர் வந்த பிராமணராகிய சுந்தரரும், எனவே. வேளாளர்களும், அந்தணர்களும் ஒன்று சேர்ந்து சமணர்களின் பொருளாதார சமய ஆதிக்கத்தைக் குறைத்துக் கைப்பற்றி இருக்கின்றார்கள் என்பதை கி.பி. 9-ஆம் நூற்றாண்டில் நிறுவப் பட்ட பிற்காலச் சோழராட்சியில், வேளாள அந்தணர்களின் பொருளாதார, சமய ஆதிக்கத்தையும் அரசியல் செல்வாக்கையும் கொண்டு அறியலாம். சமணர்களின் செல்வாக்கும் செல்வமும் வணிகர்களின் வியாபார ரீதியில் அமைந்தது.வணிகர்கள் ஆதரித்த மதம் சமண மதம். சமண முனிவர்கள் நல்லவர்களாக இருந்தும் சமூகத் தொண்டுகள் பல செய்தும் நீர்ப் பாசனத்திற்கு வேண்டிய குளம், தூம்பு, போன்றவை செய்து கொடுத்தும் நல்ல மனத்தவர்களாக இருந்திருந்தும், விவசாயத்தை முன்னிலைப் படுத்தித் தங்கள் பொருளாதாரத்தையும் நாட்டின் பொருளாதாரத்தையும் வளர்த்தார்களில்லை. தமிழ்நாடோ ஒரு சிறந்த முழு விவசாய நாடு. விவசாய வளர்ச்சியில் தான் உழுகுடி மக்களின், பிற தொழிலாளிகளின் வாழ்வும் உயர்வும் அடங்கியிருந்தது. எனவே சமண மதத்தின் ஆதிக்கத்தைக் குறைத்து--விவசாய நாடாக நிலவுடமைச் சமுதாயமாக அச்சமுதாயத்தின் கருவூலமாகக் கோவில்களை அமைத்து மக்களின் அன்றாட வாழ்வில் கோயிலோடு அதாவது சைவ மதத்தோடு தொடர்பு படுத்தியதாகவும் அமைக்கப் பட்ட அரசமைப்பே பிற்காலச் சோழ வரலாற்றின் சாராம்சமாகும்.விவசாயத்தைப் பெருக்க எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப் பட்டன என்பதை நோக்கினால் மிகவும் பிரமிப்பாக இருக்கும். நீர்ப்பாசனத்திற்கு அவர்கள் செய்த செயல்களைக் கல்வெட்டுக்களில் படிக்கும்போது பெரு வியப்பை ஏற்படுத்தும்.

 

பிற்காலச் சோழராட்சியில், கி.பி. 9--ஆம் நூற்றாண்டில் அந்தணர்களும், வேளாளர்களும் மிக உயர்ந்த பதவியை வகித்தனர் எனச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. கி.பி. 6--ஆம் நூற்றாண்டில் அவர்கள் நடத்திய போராட்டத்தின் பலனை 9-ஆம் நூற்றாண்டில் மிக நன்றாகவே அனுபவித்தார்கள்.அமைச்சர்களாகவும் பிரமதேய சதுர்வேதி மங்கலங்களின் சபை நிர்வாகிகளாகவும் படைத் தளபதிகளாகவும் கோயில் அதிகாரிகளாகவும் நீதி வழங்குபவர்களாகவும் முக்கிய பதவிகளில் அமர்ந்திருந்த அவர்கள் மிகுந்த செல்வந்தர்களாக வாழ்ந்தனர்.அவர்கள் சைவக் கோயில்களுக்குத் தங்கள் செல்வத்தின் காரணமாக ஏராளமான பொன்னையும், பொருளையும் வாரி வழங்கினர். செப்புத் திருமேனிகளை எழுந்தருளிவித்தனர். ஏன் கோயில் பலவும் கட்டியிருக்கின்றனர். நல்ல வளமிக்க ஊர்கள் பிரமதாயமாகவும் சதுர்வேதி மங்கலங்களாகவும் அந்தணர்களுக்கு அளிக்கப் பட்டன.

 

இந்த இரு குலத்தவரும் அதிக செல்வாக்குப் பெற்றிருந்தாலும் கல்வி கேள்விகளிலும் நாட்டின் கருவூலங்களாக ஆங்காங்கே நிறுவப் பட்டிருக்கும் கோயில்களின் கருவூலத்திலும், நிர்வாக அமைப்புக்களிலும் முதன்மை பெற்று விளங்கியவர்கள் அந்தணர்கள்.இறையிலியாக பிரமதேய சதுர்வேதி மங்கல நிலங்கள் வழங்கப் பட்டது அந்தணர்களுக்குத் தான். வளமிக்க அவ்வூர்களுக்கு சபை அதிகாரிகள் அல்லது அங்கத்தினர்கள் அவர்கள் தாம். இந்த அளவுக்கு வேளாளர்கள் செல்வாக்குப் பெற்றிருக்க வில்லை. அரசர்களிடம் அமைச்சர்களாகவும், மிகவும் குறைந்த அளவில் ஆங்காங்கே கி.பி. 11--ஆம் நூற்றாண்டின் சித்ரமேழி பெரிய நாடு என்னும் அமைப்பிலும் அவர்கள் அதிகாரிகளாக இருந்தார்களே தவிர, ஊர் நிர்வாகத்தில் அந்தணர்களைப்போல அதிகமான செல்வாக்குப் பெற்றிருக்கவில்லை என்பதை அறிய முடிகிறது. முதலாம் இராஜ இராஜ சோழன் காலத்தில் அமணகுடியைச் சேர்ந்த கிருஷ்ணன் ராமன் குடும்பத்தார் எந்த அளவுக்கு பரம்பரை பரம்பரையாக சோழர்களுக்கு அதிகாரிகளாக இருந்தார்கள் என்பதை திரு ஒய். சுப்பராயலு அவர்கள் எழுதிய கட்டுரையின் மூலம் அறிந்து கொள்ளலாம். *7

 

அந்தணர்களின் இந்த வளர்ச்சியும், செல்வாக்கும் நிலவுடமைச் சமுதாய வளர்ச்சியின் உச்சகட்டத்தை எய்திய முதலாம் இராஜராஜனின் செல்வாக்கிற்கு ஏற்றாற்போல அவன் காலத்தில் உயர்ந்திருந்தது. அந்தண சமூகத்தினரின் இந்த வளர்ச்சி ராஜராஜ சோழனின் போக்கையே திசை திருப்புமளவு காணப்பட்டது. ராஜராஜ சோழனின் கல்வெட்டுகளை ஊன்றிப் பார்க்கின்றபோது அவன் அந்தணர்களின் செல்வாக்கினைக் குறைக்க அவர்களே அறியாத வகையில் புத்திசாலித் தனமாகப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றான். தந்தை சுந்தர சோழன் காலத்தில் பிரம்மாதிராயர்களாகிய அந்தண உயர் அதிகாரிகளால் தமையன் ஆதித்த கரிகாலன் கொலையுண்ட செய்தி அந்தணர்களின் ஆதிக்கத்தின் உச்ச கட்டமாக இருந்திருக்க வேண்டும். இத்தகைய காலகட்டத்தில் தான் ராஜராஜ சோழனின் சிந்தை வேறுவிதமாகச் செயல் பட்டது.

 

இச்சமயத்தில்--சமணர்களின் பொருளாதார சமய ஆதிக்கத்தைக் குறைக்க அப்பர், சம்பந்தர் எடுத்த நடவடிக்கைகளை நினைவு கூர வேண்டும். சமணத்தை அழிக்க அப்பருக்குக் காபாலிகம் தேவைப் பட்டது. இவர் காலத்தில் வாழ்ந்த மகேந்திரவர்மன் எடுத்த கோயில்களிலோ பாண்டிய நாட்டிலோ அகோர உருவங்கள் இல்லை. இக்கால கட்டங்களில் எடுத்த கோயில்களே நமக்குக் கிடக்கும் காலத்தால் முந்திய கோயிலும் உருவங்களுமாகும். அப்பர் பாடலுக்குப் பின் கட்டப்பட்ட கற்கோயில்களில் தான் சிவனின் பல்வேறு உருவங்களுடன் அகோர மூர்த்தங்கள் இடம் பெறுகின்றன.சமணர்களை அழிக்க எழுச்சி செய்ய அப்பர்--சம்பந்தர், அழிக்கும் கடவுளான சிவனின் அகோர உருவங்களைத் தானே வருணிக்க முடியும்.

 

அப்பர், சம்பந்தரின் இந்த நடவடிக்கைகள் ராஜராஜனைக் கவர்ந்திருக்கின்றன. அவனது மனப்போக்கு திசை திரும்பியது என்பதற்கான ஆதாரங்கள் பல. அவை;

 

1. ராஜராஜன் திருமுறைகளைத் தேடி எடுத்துத் தொகுக்கச் செய்தான். இதனால் ராஜராஜ சோழனுக்குத் தேவாரத் திருமுறைச் சுவடிகள் தில்லையில் இருக்கும் செய்தி முன்பே தெரிந்திருக்கிறது. புதிதாகக் கண்டு பிடிக்கவில்லை எனத் தெரிகிறது. தெரிந்த செய்தியாக இருந்திருந்தும் ராஜராஜனுக்கு வரலாற்றுக்குத் தேவையான ஒரு சூழ்நிலை அப்போது தான் ஏற்பட்டது. நம்பியாண்டார் நம்பியைக் கொண்டு திருமுறைகளைத் தொகுக்கச் செய்ததின் மூலம் சைவ சமயத்தின் அடிப்படையில் மலர்ந்த காபாலிக பாசுபத காளாமுக மதங்களுக்குத் தமிழகத்தில் மீண்டும் புத்துணர்ச்சியைக் கொடுத்தான்.

 

2. மூவர் முதலிகளின் சிலைகளைக் கோயிலில் எடுக்கச் செய்தான். *8

 

3. மூவர் பாடிய பாடல்களுக்குத் தேவாரம் என்ற பெயர் சூட்டித் தான் வணங்குவதற்கென்றே தேவாரதேவர் என்ற சந்திரசேகரரைப் பிரதிஷ்டை செய்தான். *9

 

4. தான் கட்டிய பெரிய கோயிலில் வேதங்களை ஓதி வழிபாடு செய்யாது மூவரின் தேவாரங்களை ஓதி வழிபாடு செய்ய 48 ஓதுவார்களை நியமித்தான். *10

 

5. ராஜராஜ சோழன் காலம் முதல் அனைத்துக் கோயில்களிலும் தேவாரம் பாட ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தது. மூவர் முதலிகளின் சிலைகள் பிரதிஷ்டைச் செய்யும் வழக்கம் பரவியது.

 

6. பெரிய கோயிலைக் கட்டும்போது அவனுக்கு ராஜகுருவாக இருந்தவர் ஈசான சிவ பண்டிதர். தஞ்சைக் கோயிலின் கலசத்தை தானமளித்தவர். இவர் வடநாட்டைச் சேர்ந்தவர். இவரது தத்துவ ஆலோசனைப் படியே ராஜராஜ சோழன் தஞ்சைக் கோயிலை எடுத்திருத்தல் வேண்டும்.*11

 

7. பெரிய கோயிலுக்கு முன்பே ராஜராஜன் கட்டிய கோயில் நெல்லை மாவட்டம் திருவாலீஸ்வரத்திலுள்ள கோயிலாகும். இக்கோயிலைக் கட்டிய ராஜராஜன் இக்கோயில் கருவூலத்தை மூன்று கை மகா*12 சேனை என்னும் படையைக் காவல் காக்கும்படிச் செய்தான். இக்கோயில் கட்டிய ஊர் ராஜராஜ சதுர்வேதி மங்கலமாகும். இந்த ஊரில் உள்ள நிலங்கள் படிப்படியாக வெள்ளான் வகை நிலமாக மாற்றப் பட்டிருக்கிறது என்பதை இவனுக்குப் பின்னர் ஆண்ட மன்னர்களின் கல்வெட்டுக்களை ஆய்ந்தால் புரிந்து கொள்ளலாம்.*13 எனவே இம்முயற்சி ராஜராஜசோழன் காலத்திலேயே இப்பகுதியில் எடுக்கப் பட்டிருந்தது எனலாம். இக்கோயிலிலுள்ள சிற்பங்களை இக்கட்டுரையாசிரியர் ஆய்வு செய்தபோது, இவை காளாமுக பாசுபத சமயங்களின் அடிப்படையில் தத் புருஷம், அகோரம், வாமனம் ஆகிய தத்துவத்தின் அடிப்படையில் அமைக்கப் பட்டிருப்பதாகத் தெரிய வந்தது. இக்கருத்துக்கு உதவுவது போல் இவ்வூரில் ராஜராஜ சோழனால் கோளகி மடம் என்றொரு மடம் நிறுவப் பட்ட செய்தியும் இவ்வூர்க் கல்வெட்டில் காணப்படுகின்றது. அப்பர் தம் தேவாரப் பதிகமொன்றில்,

"பாசுபதம் பார்த்தர்க்கு அளித்தார் போலும்"*14

எனப் பாடியிருப்பது இங்கு நினைவு கூரத்தக்கது.

 

8. ராஜராஜ சோழன் காலம் முதல்தான் வட நாட்டு சைவர்கள் ராஜகுருக்களாக இருந்தனர். அதற்கு முன் இல்லை என்கிறார். கே. கே.பிள்ளை.*15

 

9. K.R. சேதுராமன் என்பவர் தஞ்சைப் பெரிய கோயிலைத் தென்னாட்டு சோமநாதபுரம் என்கிறார்.*16 கர்நாடக நாட்டிலுள்ள சோமநாதபுரக் கோயில் காளாமுக பாசுபதர்களின் மையம் என்பது யாவரும் அறிந்த செய்தியாகும்.

 

10. வைதீக சமயத்தின் செல்வாக்கைக்குறைக்க, காளாமுக, பாசுபத, காபாலிகத்திற்கு மீண்டும் புத்துயிர் அளித்த இராஜராஜன் வைதீகர்களின் எதிரிமதங்களாகிய சமண, பெளத்த மதத்திற்கும் ஏராளமான நன்கொடைகள் அளித்து ஆதரித்தான். அவன் கட்டிய பெரிய கோயிலில் சமணச் சிற்பமும், பெளத்தச் சிற்பமும் மிகச் சிறிதாக இடம் பெற்றிருக்கின்றன.

 

11. நாகப்பட்டினத்தில் கடாரத்து அரசனால் எடுக்கப்ப்பட்ட பெளத்த விகாரத்திற்கு ஆனை மங்கலம் என்ற ஊரையே தானமளித்தான். தன் ஆட்சியில் தமக்கை குந்தவையாரைக் கொண்டு திருமலையிலும் அச்சிறுபாக்கம் அருகே ராஜராஜபுரம் என்ற ஊரிலும் சமணக் கோயிலை எடுக்கச் செய்து மகிழ்ந்தான்.

 

12. அந்தணர்களின் செல்வாக்கைக் குறைக்க, அவர்கள் உணராத வண்ணம் மிக புத்திசாலித்தனமாக ராஜராஜன் எடுத்துக் கொண்ட நடவடிக்கைகளின் காரணமாகத் தான் இவனுக்குப் பிற்காலத்தில் அந்தணர்களின் ஆதிக்கம் குறைந்து வேளாளர்களின் ஆதிக்கம் அதிகமாகக் காணப்பட்டது. இக்கருத்து கல்வெட்டுக்களை ஆய்வு செய்கின்ற அறிஞர்களுக்கு உடன்பாடான ஒன்றேயாகும்.

 

13. ராஜராஜனைத் தொடர்ந்து மகன் ராஜேந்திரனுக்கு சர்வசிவ பண்டிதர் குருவாக இருந்ததோடு லகுளீச பண்டிதர் என்பவரும் குறிக்கப் படுகிறார்.*17 சென்னை திருவொற்றியூரிலுள்ள கற்கோயில் ராஜேந்திர சோழனால் கட்டப் பட்டது. இக்கோயில் காளாமுக, பாசுபத, காபாலிகர்களின் மையமாகச் செயல்பட்டது. இங்குள்ள லகுளீசர் உருவம் சிறப்பு வாய்ந்தது. இங்கு காபாலிகர்களது சித்தாந்தமாகிய சோமசித்தாந்தம் எடுத்துரைக்கப் பட்டதற்கு ஆதாரமாகக் கல்வெட்டுள்ளது.*18 எனவே இக்கோயிலில் பாசுபத, காளாமுகக் கடவுளான லகுளீசர் உருவமும், காபாலிகர் சித்தாந்தமும் காணப் படுவதால் கி.பி. 10 ஆம் நூற்றாண்டளவில், தனித்தனியாகச் செயல்பட்டு வந்த அம்மதங்கள் ஒன்று கலந்திருந்தன என்பது தெரிய வருகிறது.

 

14. சோழர் காலத்தில் ராஜ ராஜ சோழன் காலத்திற்குப் பிறகு தான் மடங்கள் காணப்படுகின்றன. அதற்குப் பின்னர் ஏராளமான மடங்களைக் காணலாம்.ராஜராஜன் காலத்திற்கு முன் மடங்களைக் காண்பது அரிதாக உள்ளது.வடநாட்டிலிருந்து அதாவது வாரணாசி, கெளடதேசம், ராட தேசம்(ஒரிஸ்ஸா)மடங்களிலிருந்து தென்னகம் வந்த சைவ மதத்தினர் தமிழக்த்திலும் மடங்களை நிறுவி தம் மதங்களை வளர்த்தனர். மடங்களே மத நிர்வாக மையமாகவும் கல்விச் சாலைகளாகவும், அன்னதானச்சத்திரங்களாகவும் அதூல சாலைகளாகவும் இயங்கின. இத்தகைய மடங்கள் ராஜ ராஜன் காலத்திலும், அவனுக்குப் பின்னர் ஆட்சி புரிந்தோர் காலத்திலும் ஏராளமாகக் காணப்படுகின்றன.

 

மேற்கூறிய இக்காரணங்கள் மட்டுமல்ல ராஜராஜன் எடுத்த பெரிய கோயிலே காபாலிக, காளாமுக மதங்களின் அடிப்படையில் எடுத்த கோயிலாகவே தோன்றுகிறது.

 

கி.பி. 6-ஆம் நூற்றாண்டளவிலேயே தமிழகத்தில் காபாலிக, காளாமுகத் தாக்கம் அதிகமிருந்தது என்பதைக் கண்டோம். கி.பி.10 ஆம் நூற்றாண்டளவில் ஒன்றுக்கொன்று கலந்து விட்டன. ராஜராஜ சோழன் எடுத்த கோயிலையே இதற்கு உதாரணமாகக் காட்டலாம். பிரதிஷ்டை செய்த லிங்கத்திற்கு முகங்கள் உள்ளதாகத் தத்துவம். லிங்கத்திற்கு ஐந்து முகங்களை வைப்பதற்குப் பதிலாகக் கருவறையைச் சுற்றியுள்ள உள் பிரகாரத்தில் முழு உருவங்களாக அதே தத்துவ அடிப்படையில் சிற்பங்கள் வைக்கப் பட்டிருக்கின்றன. மேலும் இங்குள்ள சிற்பங்களையும் செப்புச் சிலைகளையும் காண்கின்றபோது இக்கோயிலில் பிக்ஷாடனர், பைரவ, க்ஷேத்ரபாலர், சிறுத் தொண்டர், சீராள தேவர் ஆகியோர் உருவங்களைப் பிரதிஷ்டை செய்யப் படவேண்டிய காரணமென்ன? பைரவர்--காபாலிகர்களின் கடவுள். பிள்ளைக்கறி சமைத்து இறைவனுக்குக் கொடுத்தவர் சிறுத் தொண்டர். நரபலியிடும் காபாலிக சமய இறைவனுக்குப் பிள்ளையைக் கறியாக்கிக்கொடுத்தார் அவர்.இம்மதங்களை ஆதரித்த அப்பர், சம்பந்தருக்குச் சிலை வைத்து அவர்கள் இயற்றிய பாடல்களையே கோயிலில் பாட வைக்க 48 ஓதுவார்களை நியமித்த ராஜராஜன், வேதங்களுக்குப் பதிலாக தேவாரப் பாடல்களையும் அந்தணர்களுக்குப் பதிலாக ஓதுவார்களையும் நியமித்திருக்கின்றான்.இதோடு பைரவர், க்ஷேத்ரபாலர் ஆடையின்றி உலவும் காபாலிகக் கடவுளான பிக்ஷாடனர் ஆகியோரைப் பிரதிஷ்டை செய்து வணங்கிய ராஜராஜனின் சமயக் கொள்கையைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். பைரவர் வழிபாடு ராஜராஜன் காலத்திற்கு முன் சோழநாட்டில் இருந்ததா என்பது கேள்விக்குறியாகும். இருந்ததற்கான ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை. காபாலிகர்கள் நரபலி நம்பிக்கை உடையவர்கள். சுடுகாட்டில் ஆடும் இறைவனைப் பிணத்தின் சாம்பலைப் பூசி, மண்டையோடுகளை அணிந்து திரியும் இறைவனை வணங்குபவர்கள்.காபாலிகர்களும் கபாலத்திலேயே உண்பர். உடலெங்கும் நீறு பூசிக் கொள்வர். இக்கருத்தோடு பிக்ஷாடனரை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் மண்டையோட்டு மாலையையும் பிணத்தினைத் தோளிலும் இட்டுக் கொண்டு முனிவர் பத்தினிகள் புடை சூழ அதாவது தாந்திரிகத் தத்துவத்தோடு நடந்து வரும் அந்த உருவத்தைக் காபாலிகத் தத்துவத்தோடு ஒப்பிட வேண்டும். காபாலிகர்கள் வழிபாட்டில் பெண்களுக்கு முக்கியப் பங்குண்டு; அவர்கள் மது, மாமிசம், பெண்கள் இவற்றோடு தான் வழிபாடு நடத்துவர். ரிஷிபத்தினியர் இறைவனின் பின்னால் ஆடையின்றிச் செல்லுதலை நோக்க பிக்ஷாடனர் முழுக்க முழுக்கக் காபாலிக மதக் கடவுள் என்பது தெளிவாகும்.

 

முதலாம் ராஜராஜ சோழனுக்கு ராஜகுருவாக இருந்து கோயிற்பணியை முடித்து வைத்தவர் வடநாட்டிலிருந்து இங்கு வந்து பணி புரிந்த ஈசான சிவ பண்டிதர் ஆவார். இவர் முற்றிலும் சைவத் தொடர்புடையவர்.

 

காந்தளூர்ச் சாலை என்னும் கடிகையை (கல்லூரி) ராஜராஜ சோழன் வென்றான். சேர நாட்டிலும் தொண்டை மண்டலத்திலும் கடிகை என்னும் சாலைகள் வைதீகச் சமயத்தினரின் உயர்கல்விக்கூடங்களாகச் செயல்பட்டன.

 

கி.பி. எட்டாம் நூற்றாண்டில் கருநன் தடக்கன் என்ற ஆயகுல மன்னன் ஒருவன் பார்த்திவ சேகரபுரத்தில் ஒரு விஷ்ணு கோயில் கட்டி, அதற்கு ஏராளமான நிலங்களை தானமளித்தான். அக்கோயிலில் கடிகை அமைத்து, அதில் ரிக், யஜுர், சாம வேதங்களும், அது தொடர்பான மீமாக்சம், வியாகரணம் போன்றவைகள் கற்றுத் தர ஏற்பாடு செய்தான். இங்குள்ள கடிகை அல்லது சாலை காந்தளூர்ச் சாலையைப் போல அமைந்ததாகவும் ஆய் மன்னன் தனது பாரத்திவேந்திரபுரச் செப்பேட்டில் கூறுகிறான். இக்கடிகையில் படிக்கும் சட்டரக்ள் (மாணவர்கள்) தங்கள் ஆயுதங்களால் ஒருவரை ஒருவர் புண்படுத்திக் கொள்ளக் கூடாது. கூட்டமாக உள்ள இடங்களுக்கு ஆயுதந்தாங்கிச் செல்லக் கூடாது என்றும் நிபந்தனை விதித்திருந்தமை அச்செப்பேட்டின் மூலம் தெரிகிறது. எனவே கல்வியும் ஆயுதப் பயிற்சியும் தரப்பட்டு, வீரர்களை உருவாக்கிக் கொண்டிருந்தன கடிகைகள்.

 

அதனால் கடிகைகள் அரசியலில் மிகவும் செல்வாக்குப் பெற்றிருந்தன. அரசனை ஆக்குவதில் முக்கியப் பங்கு பெற்றிருக்கும் அரசின் (state) அங்கமாகத் திகழ்ந்தன.

 

அதன் கொட்டத்தை அடக்கி, அச்சாலையைக் கைப்பற்ற நினைத்தான் ராஜராஜன்.

 

தமது முன்னோர்கள் பலமுறை சேரநாட்டையும், பாண்டிய நாட்டையும் வென்றும் அரசாள முடியாமற் போனதற்குக் காரணம் இந்தக் கடிகையின் வலிமை தான்.தம் தந்தை காலத்தில் தம் தமையன் இறப்பிற்கும் அவர்கள் நினைத்தபடி ஒரு அரசனைச் சோழ அரியணையில் அமர்த்தியதும் இந்தக் கடிகைகளும், கடிகைகளில் கற்று அதன்படி நடந்த உயர் அதிகாரிகளும் தான் என்பதால் கடிகையை வென்று, அங்கு பயிற்சி பெற்ற அந்தண அதிகாரிகளையும், பிரமதேயங்களையும் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொணர்ந்து பேரரசனாக உயர்ந்தான் ராஜராஜன்.

 

கன்னிப்போர் செய்தருளிக் காந்தளூர்ச் சாலையை கலமறுத்தருளினான் ராஜராஜன். சமய நிறுவனத்தின் உயர்ந்த பீடமாக விளங்கிய ராஜகுரு அந்தஸ்தில் ஒரு வைதீக பிராமணரை அல்ல, ஒரு சிவ பண்டிதரை அமர்த்தி ஆலோசனையைப் பெற்று நாட்டை ஆட்சி செய்தான் இராஜராஜன்.

 

அடிக்குறிப்பு:

1. Religion of Andhra, B.S.C. Hanumantharao, 1973.

2. 4: 7: 1--10

3. E.g., Vpl. XXIX p. 229

4. 4:5:1--10; 4:102; 1--10

5. சமணமும் தமிழும்---மயிலை சீனி வேங்கட சாமி

6. மேற்படி நூல் மற்றும் தக்கயாகப் ப்ரணி.

7.Sidelight on chola official dom---Y. Subbarayalu p. 357 SRINIDHI--Shri, K.R. Srinivasan, Fest Shrift (1983)

8. S.I.I.Vol. II Part II no. 38

9. Ibid

10. Ibid No. 65

11. Are 24/1897

12. Are 120/1905 & Thd Colas, K.A.N. Sastri, p. 455.

13.முதலாம் இராசேந்திர சோழனின் எசாலம் செப்பேடு மற்றும் மன்னர் கோயில் கல்வெட்டைக்காண்க.

14. அப்பர் தேவாரம் 6: 242: 2

15. தமிழக மக்கள் வரலாறும் பண்பாடும் கே.கே. பிள்ளை: பக் 298.

16. செளராஷ்ட்ர மணி--தீபாவளி மலர் (1982) 14..11..1982

17.S.I.I. Vol. III No. 18

18. ARE 1912/300 & Introduction p.67

19. S.I.I. Vol. II part I No. 3

 



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

சோழர் காலத்திய சமயம்-- பகுதி 2 கோயிலில் தமிழ் வழிபாடு

 
 
 

சோழர் கால சமயம்

டாக்டர் அ.பத்மாவதி

கோயிலில் தமிழ் வழிபாடு


தமிழ்நாட்டுக் கோயில்களில் வழிபாட்டிற்குரிய மொழி தமிழா?வடமொழியா? என்கிற பிரச்னை எழுந்து வடமொழிக்குத் தான் வழிபாட்டுத் தகுதி உண்டு என்று கூறி நீதி மன்றத்தில் வழக்குத் தொடரப் பட்டது. தமிழில் குடமுழுக்குச் செய்யலாமா என்ற விவாதம் அவ்வப்போது தலை தூக்குகிறது.

 

தமிழ் மக்களின் நாகரிகப் பண்பாட்டு வாழ்க்கை முறைகளை சங்க கால இலக்கியங்களிலிருந்து தெளிவாகத் தெரிந்து கொள்ள முடிகிறது.

 

சங்க காலத்திற்குப் பின்னர் தமிழரின் சமய வாழ்வில் முக்கிய கால கட்டம் தேவார கால கட்டமே. இன்றைக்குத் தமிழ்நாட்டில் வழிபாடுகளில் இடம் பெற்றுள்ள கற்கோயில்கள் எல்லாம் இதன் அடிப்படையில் எழுந்தவைகளேயாகும். அதற்கு முன்னர் தமிழ்நாட்டுக் கோயில்கள் கூரைக்கோயில்களாகவும், செங்கற் கோயில்களாகவும், திறந்தவெளிக் கோயில்களாகவுமே இருந்தன. எனவே இன்றுள்ள கோயில்கள் பற்றிய வாதங்களை, "சைவ மறுமலர்ச்சிக் காலம்" எனக் கூறப்படும் கால கட்டத்திலிருந்து தான் தொடங்க வேண்டும்.

 

"செந்தமிழர், தெய்வமறை நாவர், செழுநற்கலை தெரிந்தவரோடு 
அந்தமில் குணத்தவர்கள் அர்ச்சனைகள் செய்ய அமர்கின்ற அரனூர்...
"

 

என்று ஞானசம்பந்தர் பாடி இருக்கிறார். இவர் பாடியிருப்பதிலிருந்து செந்தமிழர் முதலிய நான்கு வகையினரும் அர்ச்சனை செய்தார்கள் என்றுதானே பொருள். இவர்களில் "தெய்வமறை நாவர்" என்பவர்கள் வேதம் பயின்ற தமிழர். எனவே வேதம் பயின்ற தமிழரும் அர்ச்சனை செய்திருக்கிறார்கள் என்று தான் பொருளே தவிர வேதம் பயின்றவர் மட்டுமே அர்ச்சனை செய்தார்கள் என்பது பொருளல்ல.

 

திருநாவுக்கரசர் என்ற அப்பரும்,

"....ஆரூர் இனிதமர்ந்தார்
தாம் படிமக் கலம் வேண்டுவரேல் தமிழ்
மாலைகளால்
நாம் படிமக் கலம் செய்து தொழுதுய் மட
நெஞ்சமே"

என்று தமிழில் பாட வேண்டும் என்று தானே கூறுகிறார். மாணிக்க வாசகரின் போற்றித் திருவகவலைப் புரட்டிப் பார்த்தால்,

 

"ஆடக மதுரை யரசே போற்றி
கூடல் இலங்கு குருமணி போற்றி
தென்றில்லை மன்றினுள் ஆடி போற்றி"

என சிவனை அர்ச்சனைச் செய்வதற்கென்றே பாடிய பாடல் என்பது தெளிவாகப் புரிகிறதல்லவா?

 

இவ்வாறு நாயன்மார்கள், பாடிய காலத்திற்குப் பின்னர் கட்டப் பட்ட கோயில்கள் தாம் இன்று நாம் காணும் கோயில்கள் அனைத்தும் ஆகும். இக்கோயில்களிலெல்லாம் நாயன்மார்கள் கூறிய முறையிலேயே வழிபாடு செய்யப் பட்டதை கல்வெட்டுகள் உணர்த்துகின்றன. சில கல்வெட்டுச் சான்றுகளை இங்கு காணலாம்.

 

இந்தியாவிலுள்ள மிகப் பெரிய கோயில்களுள் முதலாம் இராஜராஜ சோழன் கட்டிய தஞ்சைப் பெருவுடையார்க் கோயிலும் ஒன்று. இக்கோயிலில் திருப்பதியம் எனக் கூறப்படும் தேவாரப் பாடல்கள் பாடப்பட்டதற்கான கல்வெட்டுச் சான்று இருப்பதைக் காண்பது சுவையான செய்தி.

 

"உடையார் ஶ்ரீ ராஜராஜீச்வரம் உடையார்க்குத் திருப்பதியம் விண்ணப்பஞ்செய்ய உடையார் ஶ்ரீராஜ ராஜ தேவர் குடுத்த பிடாரர்கள் நாற்பத் தெண்மரும், இவர்களிலே நிலையாய் உடுக்கை வாசிப்பான் ஒருவனும், இவர்களிலே நிலையாய் கொட்டி மத்தளம் வாசிப்பான் ஒருவனும் ஆக ஐம்பதின்மருக்குப் பேரால் நிசதம் நெல்லு முக்குறுணி..."

 

நாற்பது ஓதுவார்கள் பாட, அவர்களுக்குப் பக்க வாத்தியமாக உடுக்கையும் கொட்டி மத்தளமும் வாசிக்கப் பட்டது என்பதை அறிய முடிகிறது. தேவாரம் பாடிய மூவருக்கும், அதாவது, அப்பர், ஞானசம்பந்தர், சுந்தரர் ஆகியோருக்குப் பெரிய கோயிலில் சிலைகள் எடுத்து வழிபட்டான். தேவாரத்தைக் கண்டு பிடித்துத் தொகுத்து உலகிற்கு அளித்தான். சுந்தரர் பாடிய திருத்தொண்டத் தொகைக்கு இணங்க சுந்தரர் வரலாற்றையும், சேரமான் பெருமாள் நாயனார் வரலாற்றையும் தஞ்சைக் கோயிலில் வரைந்து இன்புற்றவனும் இராஜராஜன் தான். திருப்பதியங்களைத் தேவாரம் என அழைத்து, தான் வணங்கிய சந்திரசேகரர் திருமேனியை, "தேவார தேவர்" என அழைத்தான் என்பதும் எண்ணி மகிழத்தக்கது. இது போன்று கோயில்களில் எல்லாம் ராஜராஜன் திருப்பதியம் பாடிய நாயன்மார்களுக்குச் சிலை எடுத்தும் அவர்கள் தேவாரப் பாடல்களைப் பாடச் செய்தும் வந்ததை ஏராளமான கல்வெட்டுச் சான்றுகள் கூறுகின்றன.

 

வீரராஜேந்திர சோழன் (கி.பி. 1063--1070) உடல் நலம் குன்றியிருந்த போது அவன் உடல் நலம் பெறவும் தனது மகனுக்கு வாரிசு உருவாக வேண்டும் என்றும், தன் மாங்கல்ய பாக்யத்திற்காகவும் சோழ அரசி திருவொற்றியூர் கோயிலுக்கு நிவந்தமளித்தாள். அக்கோயிலில் "திருப்பள்ளி எழுச்சியும் திருவாதிரை நாளில் திருவெம்பாவையும் தேவாரமும் பதினாறு பெண்களால் பாடப்பட வேண்டும் என்றும் அப்போது இருபது பெண்கள் ஆடவேண்டும் என்றும் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. அதன்படியே ஆடலும் பாடலும், தேவார, திருவெம்பாவைப் பாடல்கள் இசையுடன் நிகழ்த்தப் பெற்றதை அக்கோயில் கல்வெட்டுகள் சான்றளிக்கின்றன.

 

திருவொற்றியூர் கோயிலில் பங்குனி உத்திரத்திருவிழா சிறப்பாக நடைபெறுவதை,

 

"ஒத்தமைந்த உத்திரநாள் தீர்த்தமாக வொளி
திகழும் ஒற்றியூர்"

என அப்பர் பாடியுள்ளார்.

 

அதே விழா தொடர்ந்து நடைபெற்று வந்ததை இரண்டாம் இராஜாதிராஜ சோழனின் (கி.பி. 1166--1181) கல்வெட்டு ஒன்று தெரிவிக்கிறது. அதாவது பங்குனி உத்திரத் திருவிழாவின் போது அக்கோயிலில் உள்ள மடத்தின் மடாதிபதியாகிய வாகீஸ்வர பண்டிதர் என்பவர் ஆளுடை நம்பியாகிய சுந்தரரின் ஶ்ரீபுராணத்தை (பெரிய புராணம்) வாசித்தார். அப்போது அக்கோயில் இறைவன் மகிழ மரத்தின் கீழ் எழுந்தருளியிருந்து கேட்டார் என்கிறது அக்கல்வெட்டு. அந்த மகிழ மரத்தீனடியில் தான் சுந்தரர் சங்கிலி நாச்சியாரை மணம் முடித்தார் என்று கூறப்படுகிறது. அதனால் தான் அதே மகிழ மரத்தடியில் சுந்தரர் கதை படிக்கப் பட்டது எனத் தெரிகிறது. அப்பர் பாடிய "வடிவுடை மங்கை" என்ற பெயரைத் தான் திருவொற்றியூர் இறைவிக்குச் சூட்டிக் கோயிலெடுத்தான் இரண்டாம் குலோத்துங்க சோழன். (1133--1150)

 

நரலோக வீரன் என்றொரு சிற்றரசன், சிதம்பரம் கோயிலில் மூவரும் பாடிய தேவாரப் பாடல்களை செப்பேட்டில் எழுதி வைத்தான். சிதம்பரம் கோயிலில் இருந்துதான் ராஜராஜன் தேவாரப் பாடல்களை எடுத்துத் தொகுத்தான். ஏராளமான பாடல்கள் செல்லரித்து அழிந்து விட்டன. இனியும் அது போல ஒரு கொடிய சம்பவம் நிகழாதிருக்க வேண்டுமென்றுதான் அவ்வாறு செப்பேட்டில் எழுதி வைக்கப் பட்டிருத்தல் வேண்டும். இது போல நெல்லை மாவட்டத்து ஆத்தூரிலும் தேவாரப் பாடல்கள் செப்பேட்டில் எழுதி வைக்கப் பட்டிருந்தன என்று கூறுகிறது அங்குள்ள கல்வெட்டு ஒன்று.

 

இவ்வாறு தமிழ்நாட்டுக் கோயில்களிலும் பிற இடங்களிலும் கிடைக்கும் கல்வெட்டுக்களில் 95 விழுக்காட்டிற்கும் மேல் தமிழ்க் கல்வெட்டுக்களேயாகும். இக்கல்வெட்டுகள் மூலம் கோயில்களின் பெயர்களை அறிய முடிகிறது. அப்பெயர்கள் தூய தமிழிலேயே அமைந்திருந்தன. ஆனால் அப்பெயர்கள் பிற்காலத்தில் வடமொழியாக்கம் செய்யப்பட்டுவிட்டன. சான்றாக,

 

வெள்ளானை விடங்கர்--- ஐராவதேஸ்வரர்

திருமுதுகுன்றமுடையார்--- விருத்தகிரீஸ்வரர்

மாம்பழமுடையார்----ஆமரவனேஸ்வரர்

திருமறைக்காடுடையார்---வேதாரண்யேஸ்வரர்

திருவையாறுடையார்---பஞ்சநதீஸ்வரர்

சொன்ன வாறறிவார்---யதோத்காரி

திருவருட்துறை ஆழ்வார்--- கிருபாபுரீஸ்வரர்

 

என்று பெயர் மாற்றம் செய்யப் பட்டிருப்பதைக் காணலாம்.

 

நடராஜருக்குப் பெயர், 'கொட்டமைந்த ஆடலான்", கேள்விப் பட்டிருக்கின்றோமா? திருக்கோடிக்கா கல்வெட்டில் கண்டு வியந்தேன். தேவாரத்தைப் புரட்டியபோது, ஞானசம்பந்தர்,.

 

"தட்டொடு தழை மயிற்பீலி கொள் சமணரும்
பட்டுடை விரிதுகிலினார்கள் சொற் பயனிலை
விட்ட புன் சடையினான் மேதகும் முழவொடும்
கொட்டமைந்த ஆடலான் கோடி காவு சேர்மினே."

 

என்று கெட்டு என்ற தாளவிசைக் கருவிக்கேற்ப ஆடவல்லவர் ஆடவல்லார் என்பதை எவ்வளவு அழகாகக் கூறி இருக்கிறார்.

 

அதே போல, திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் அம்மனின் பெயர் தேவாரத்திலும் கல்வெட்டிலும், "கதிர்நிலா" என்று அழைக்கப் பட்டிருந்தது. ஆனால் இன்றோ, "காந்திமதி"யாகிவிட்டது.திருக்காட்டுப்பள்ளிக் கோயில் இறைவியின் பெயர், "அழகர் மங்கை." ஆனால் இன்றோ செளந்தரநாயகி. இது போல அடுக்கிக் கொண்டே போகலாம்.

 

இவ்வாறு தமிழ்ப் பெயர்களும் தமிழ் வழிபாடும் வடமொழிமயமாக்கப் பட்ட காலம், தமிழரல்லாத மன்னர்கள் தமிழ்நாட்டில் ஆட்சி செய்த காலமாக இருக்கலாம். சேக்கிழாரின் பெரிய புராணம் தெலுங்கில் மொழி பெயர்க்கப் பட்ட கல்வெட்டுச் செய்தியை காஞ்சிபுரத்திலுள்ள சர்வதீர்த்தேஸ்வரர் கோயிலில் காணமுடியும். பழனி முருகன் கோயிலில் தமிழ் அர்ச்சனை மாற்றப் பட்டு வடமொழி ஓதப்பட்ட வரலாற்றை நாடறியும். வழிபாட்டுத் துறையில் மட்டுமின்றி பிற துறைகளிலும் இத்தகைய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்பதற்குச் சான்றாக, தமிழிசையில், இருந்த "பாலை" அடிப்படையிலான இசையிலக்கணம் வழக்கொழிந்து வடமொழியிலான 'மேளகர்த்தா" முறை அரங்கேறியதும் இவ்வகையில் தான்.

 

எனவே, தேவாரத் தமிழ்ப் பாடல்களின் அடிப்படையில் அமைந்த கோயில்களும், அதில் தேவார திருவாசகங்களின் பங்கும், இறைவன் இறைவியர் பெயர்களும், கோயில்கள் தமிழ் மக்களின் அன்றாட வாழ்க்கையில் பல விதங்களிலும் பின்னிப் பிணைக்கப் பட்டிருந்த வரலாற்றுச் செய்திகளையும் காண்கின்ற போது, தேவார, திருவாசகங்களின் வெளித்தோற்றமே மன்னர்கள் எழுப்பிய கோயில்கள் என்பது புரிகிறதல்லவா?

 

"மறை இலங்கு தமிழ்"
மறை வளரும் தமிழ்'

 

என்று சம்பந்தர் பாடிய தமிழில் தான் அவர் கூறியபடி செந்தமிழர் அர்ச்சனை செய்தனர் என்ற அகச்சான்று உள்ளதையும் மக்கள் கவனத்திற்குக் கொண்டு வருவதைக் கடமை என எண்ணுகிறேன்.

 

உதவிய நூல்கள்:


1. திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர்---தேவாரப் பதிகங்கள்

2. S.I.I. Vol. II

3. ARE 1912

4. ARE 1911

5. S.I.I. Vol. V

6.திருக்கோடிக்கா கல்வெட்டுக்கள்--த.நா.அ. தொல்லியல் துறை வெளியீடு



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

 சோழர் காலத்திய சமயம்-- பகுதி 6 களப்பிரரும் பிரமதேய நிலங்களும்

 
 
 

 எழுத்து: டாக்டர் அ.பத்மாவதி

 

களப்பிரரும் பிரமதேய நிலங்களும்

பிரம்மதேயம் -- என்பதில் பிரம்ம/பிரம --என்பது பிராமணர்களையும், தாயம் என்பது உரிமையையும் குறிக்கிறது. பிராமணர்களுக்கு உரிமையுடைய நிலம் அல்லது ஊர் பிரமதாயம் ஆயிற்று. பெரும்பாலும் பிரம்மதேய ஊர்கள், ஏற்கெனவே அமைந்திருக்கும் நீர்நில வளமிக்க ஆற்றுப் படுகைகளில் உள்ள ஊர் அல்லது அதற்கு நிகரான நீர் ஆதாரமுள்ள ஊரை ஒட்டியே அமைந்திருந்தன.


பிரம்மதாயமாக நிலக்கொடை அளிக்கும் வழக்கம் வட இந்தியாவில் மெளரிய ஆட்சிக்காலத்திற்கு முன்னரே ஏற்பட்டிருந்தது. கோசல நாட்டு மன்னர்களும், மகத நாட்டு மன்னர்களும் அந்தணர்களுக்கு கிராமங்களை பிரமதாயமாக அளித்திருந்த செய்திகளைப் பழைய பாலி நூல்கள் குறிப்பிடுகின்றன.*1


ஏறத்தாழ அதே கால கட்டத்தில் தமிழகத்திலும் பிராமணர்களுக்கு நிலக்கொடை அளிக்கப் பட்டிருந்தது என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. கி.பி. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த பாண்டிய மன்னன் ஒருவனால் வெளியிடப் பெற்றுள்ள வேள்விக்குடிச் செப்பேட்டில், சங்ககால பாண்டிய மன்னனாகிய பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி என்னும் பாண்டியன், பிராமணன் ஒருவனுக்கு அவனது சிறந்த கல்வியினைப் பாராட்டி வேள்விக்குடி என்னும் பெயரில் ஒரு ஊரை தானமளித்திருந்தான் என்ற செய்தி காணப்படுகிறது.*2 சங்ககாலப் பாடல்களாகிய பதிற்றுப் பத்தின் 2-ஆம் பத்துக் கொளுவில் சேரமன்னன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்பவன் அவனைப் பாடிய புலவராகிய குமட்டூர் கண்ணனாருக்கு, உடம்பற்காட்டு ஐந்நூறூர் பிரம்மதாயம் கொடுத்து, முப்பத்தெட்டுயாண்டு தென்னாட்டுள் வருவதனிற் பாகம் கொடுத்தான் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் சங்க கால மன்னர்களில் ராஜ சூயம் வேட்ட பெரு நற்கிள்ளி போன்ற பல வைதீகம் சார்ந்த மன்னர்கள் வாழ்ந்திருக்கின்றனர். பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் என்ற நிலவுடமையாளர் மேல் பாடப்பட்ட பாடல் ஒன்றும் சங்கத் தொகுப்பில் உள்ளது. எனவே சங்க கால மன்னர்கள் பிராமணர்க்கு தாராளமாக நிலக்கொடைகள் அளித்திருத்தல் வேண்டும். தானம் செய்த அரசர்கள் அந்நிலங்களின் விளைச்சல் அல்லது அதன்மேல் விதிக்கக் கூடிய வரிகளையும், அதன் மேல் செலுத்தக் கூடிய அதிகாரத்தையும் சேர்த்து தானம் செய்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது.


கல்வெட்டுச் சான்றுகள்


இவ்வாறு அளிக்கப்பட்ட நிலக்கொடையைப் பற்றி நமக்குக் கிடைத்திருக்கின்ற மிகப் பழைய கல்வெட்டுச் சான்று, கி.மு. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த சாதவாகன மன்னர் ஆட்சி காலத்தில் அசுவமேத யாகம் ஒன்று செய்த போது அளித்த நிலக்கொடையைக் குறிப்பிடும் சான்றாகும்.*3


குப்தர்கள் ஆட்சியில் நிலவிய நிலமானிய வளர்ச்சிப் போக்கில் குறிப்பிடத் தக்க அம்சமாக பிராமணர்களுக்கு நிலக்கொடை தரும் வழக்கம் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. இவ்வகைத் தானங்கள் மிக உயர்ந்த புனிதத் தன்மை வாய்ந்தவை என்பதை தர்ம சாஸ்திரங்களும், இதிகாசங்களும், புராணங்களும் கூறுகின்றன என்பதை திரு ஆர்.எஸ்.சர்மா சுட்டிக் காட்டுகின்றார்.*4


தமிழ்நாட்டில் பிரம்மதேயம் பற்றிக் குறிப்பிடுகின்ற மிகப் பழைய கல்வெட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் உள்ளது. பொன்னமராவதிக்கு அருகிலுள்ள பூலாங்குறிச்சியின் மலைச் சரிவில்மூன்று கல்வெட்டுகள் உள்ளன. அவற்றுள் வடக்கு ஓரமுள்ள முதல் கல்வெட்டு மிகவும் சிதைவுடனும், 2-ஆம் கல்வெட்டு முழுதும் சிதைவுடனும், மூன்றாம் கல்வெட்டு முழுவதும் நல்ல நிலையிலும் கிடைத்துள்ளன. இவற்றுள் மூன்றாம் கல்வெட்டின் மூலமாகத் தான் மன்னன் பெயர்--கோச்சேந்தன் கூற்றன் என்று அறிய முடிகிறது. எனவே பிற இரு கல்வெட்டுகளும் இம்மன்னன் காலத்தையோ அக்காலத்தையொட்டியோ எழுதப் பட்டிருத்தல் வேண்டும். இக்கல்வெட்டு கி.பி. 5-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. கூற்றன் என்று மன்னன் பெயர் உள்ளதாலும், இப்பெயர் களப்பிர மன்னர்களுக்கு உரியது என்பதாலும் இக்கல்வெட்டுகள் களப்பிர மன்னர்கள் காலத்தைச் சேர்ந்தவை என உறுதியாகக் கூறலாம்.*5


இக்கல்வெட்டுகளுள் முதல் கல்வெட்டில் தான் பிரம்மதாயம் பற்றிய அரிய குறிப்புகள் கிடைக்கின்றன. பிரம்மதாயம் பற்றிய இலக்கிய, செப்பேட்டு ஆதாரங்களுக்கு வலுவூட்டத்தக்கதாக விளங்குகின்ற ஒரே கல்வெட்டுச் சான்றும் இதுதான். இக்கல்வெட்டு "கூடலூர் நாட்டுப் பிரம்மதாயம் சிற்றையூரும்மவ்வூர் படும் கடைய வயல்" --என்று சிற்றையூரையும் கடைய வயலையும் பிரம்மதாயமாகக் குறிப்பிடுகின்றது. பிரம்மதாயம் சிற்றையூரைத் தொடர்கின்ற சில எழுத்துக்கள் சிதைந்து, பின்னர் "அவ்வூருபடுங் கடைய வயல்" என்று உள்ளது. இதைத் தொடர்ந்து, --"விற்றுக் குடுத்துக் கொண்ட--என்ற பகுதியும் கிடைக்கின்றது. இப்பிரம்மதேய ஊர்கள் புன்செய் நிலங்களையும் நீர் நிலங்களையும் உள்ளடக்கியிருந்தன என்பதையும் அக்கல்வெட்டு குறிப்பிடுகின்றது. *6 மேலும் இவ்வூர்கள் காராண்மை, மீயாட்சியுடன் பிரம்மதேயக் கிழவர்களாகிய பிரம்மதேய உரிமையாளர்கள் அனுபவித்து வந்தனர் என்பதையும் கல்வெட்டு குறிப்பிடத் தவறவில்லை.


பிரம்மதாயத்துட் பிரம்மதாயக்கிழவர்... என்ற தொடரும் காணப்படுகின்றது. அதாவது பிரம்மதாயமாக நிலப்பங்கு பெற்றிருந்தவர்களுள் ஒருவர் --எனக் கொள்ளலாம். ஒரு ஊர் பிரம்மதேயமாகக் கொடுக்கப்படும்போது அவ்வூர் பிராமணர் பலருக்கு நிலம் பங்கிட்டு அளிக்கப் படும். அவ்வாறு பங்கு பெற்றவருள் ஒருவரே--பிரம்மதாயத்துட் பிரம்ம தாயக் கிழவர்--என்பதாகும்.


வெள்கூரு பச்செறிச்சில் என்று அன்று கூறப்பட்ட இன்றைய பூலாங்குறிச்சி மலை மேல் கட்டப்பட்ட புதிய தேவகுலம் பற்றியும், அதற்குக் கொடுக்கப்பட்ட நிலக்கொடை பற்றியும், அத்தேவகுலத்தை யார் நிர்வாகம் செய்ய வேண்டும், யார் பாதுகாக்க வேண்டும் என்றும் அங்குள்ள 3-ஆம் கல்வெட்டால் கூறப்படும்போது, நிலக்கொடைகள் பற்றி அதில் கூறப்படவில்லை. நிலக்கொடை பற்றிக் கூறுகின்ற கல்வெட்டு இந்த முதல் கல்வெட்டுத்தான். இத்தகைய சூழலில் பிரம்மதேவ ஊரை, அதுவும் நீர்நில வளமிக்க ஊர்களைப் பற்றிக் குறிப்பிடும்போது, அந்நிலங்களைப் புதிதாகக் கட்டப்பட்ட கோயிலுக்குத் தொடர்பு படுத்தித் தானே கூறியிருக்க வேண்டும்--விற்றுக் கொண்டு குடுத்த--என்ற தொடரும் கிடைப்பதால், பிரம்மதாயம் சிற்றையூரும் அவ்வூர் படுங் கடைய வயல் என்னும் பகுதியும் இப்புதிய தேவகுலத்திற்கு விற்றுக் கொடுக்கப்பட்டிருக்கின்றன என்று கொள்வதே பொருத்தமுடையதாகும்.


இப்பகுதியை அடுத்து அதே கல்வெட்டில் பாண்டி நாட்டு, கொங்கு நாட்டு காராண்கிழமை, கலக்கிழமை மீயாட்சி, மேலாண்மை ஆகிய உரிமை பெற்ற பிரம்மதேய ஊர்களைக் குறிப்பிடுகின்றன. அவ்வாறு குறிப்பிட்ட பின்,

 

".....அவருடைய காலாசமும் தோட்டங்களும் மவரு
தமரையும் மவரு குடிகளையும்....


,,,," என்று கூறிய பின் சில எழுத்துக்கள் சிதைந்திருக்கின்றன. பின்னர்"

 

....வேறு வேறு ஆயிரத்து இருநூறு...."

 

என்று கூறியவுடன் பல்வேறு அதிகாரிகளைக் குறிப்பிடுகிறது கல்வெட்டு. இக்கல்வெட்டு மூலம் இப்புதிய தேவகுலம் கட்டுவதற்கு முன்பே இயங்கிக் கொண்டிருக்கின்ற பாண்டி நாட்டுக் கொங்கு நாட்டு பிரம்மதேய ஊர்கள் தான் குறிப்பிடப் படுகின்றன என்பது தெளிவாகத் தெரிகிறது. இப்பகுதியைத் தொடர்ந்து அவருடைய காலாசமும் தோட்டமும் அவருடைய தமரையும் அவருடைய குடிகளையும்...என்ன செய்யச் சொல்கிறது இக்கல்வெட்டு?? இக்கல்வெட்டில் கூறப்பட்ட அதிகாரிகள் பலரும் அப்பிரம்மதேயங்களை இறக்கவேண்டுமென்றோ அல்லது வரியாக வசூலிக்கப் பட்டு புதிய தேவகுலத்திற்கு அதன் பராமரிப்பிற்குத் தர வேண்டும் என்றோ ஆணையிட்டதையே அப்பகுதி தெரிவிக்கிறது எனக் கொள்ளலே பொருத்தமுடையதாகும்.


புத்தருடைய நிர்வாணத்திற்குப் பிறகு அரசர்களும் மூத்த குடிமக்களும், புத்தமதத்தைத் தழுவிய குடும்பத் தலைவர்களும், பெளத்த துறவிகளுக்காக மடங்களைக் கட்டித் தந்ததோடு அவர்களுடைய வசதிக்காகத் தோட்டங்களையும், வயல்களையும் மானியமாய்க் கொடுத்தார்களென்றும், அந்த விளை நிலங்களில் வேலை செய்வதற்காகக் குடியானவர்களையும் கால்நடைகளையும் அளித்து உதவினார்கள் என்றும் சீன யாத்திரிகர் பாஹியான் எழுதியிருக்கின்றார்--என்பதை ஆர்.எஸ். சர்மா குறிப்பிட்டுள்ளார்.*7

 

இத்தகைய நடவடிக்கையாகத் தான் பூலாங்குறிச்சி கல்வெட்டுக் குறிப்பிடும் தகவல்கள் இருத்தல் வேண்டும். பாஹியான் காலமும் இக்கல்வெட்டின் காலமும் கி.பி. 5-ஆம் நூற்றாண்டு என்பது குறிப்பிடத்தக்கது வட இந்தியாவில் பரவலாக பெளத்த மடத்திற்கும் கோயிலுக்கும் அளிக்கப்பட்ட தானங்களைப் போலவே வடக்கிலிருந்து வந்து தமிழகத்தில் ஆட்சி புரிந்த பெளத்த ஆதரவு களப்பிர அரசர்களும், படைத்தலைவர்களும் பெளத்த கோயிலுக்குத் தானமளித்தனர் எனக் கொள்வதில் தவறில்லை.


பேராசிரியர் ஒய்.சுப்பராயலு அவர்கள் இது பற்றிக் கருத்துத் தெரிவிக்கையில், பாண்டி நாட்டிலும் கொங்கு நாட்டிலும் பிரம்மதேய ஊர்களில் கொடையளிக்கப்பட்ட நிலங்களைச் சரியாகப் பராமரிக்க வேண்டும் என்று மன்னன் ஆணையிட்ட செய்தியாகவே இச்செய்தி பெரும்பாலும் இருத்தல் வேண்டும் என்கிறார். வரிக்குறைப்பு செய்திருக்கலாம் என்றும் உறுதியாகக் கூற முடியவில்லை என்று கூறுகின்ற அவர், வேள்விக்குடிச் செப்பேட்டில், சங்க கால மன்னன் கொடுத்த பிரம்மதேய ஊரைக் களப்பிரர்கள் இறக்கிவிட்டுக் குடிமக்கள் நிலமாக்கியச் செய்தியையும் கூறுகிறார். ஆனால் இக்கல்வெட்டில் களப்பிரர் பிராமணர்க்கு எதிராக வன்முறைச் செயலில் ஈடுபடவில்லை என்றும், பூலாங்குறிச்சி பச்செறிச்சின் மலை மேல் கட்டப்பட்டக் கோயில் பிராமணீயக் கடவுள்களாகிய சிவன் அல்லது விஷ்ணுவுக்கே எடுக்கப் பட்டிருதல் வேண்டும் என்றும் கூறுகிறார்.


ஆனால் களப்பிர மன்னர்கள் பிராம்மணீயத்திற்கு எதிரானவர்கள் என்பதற்கு இரண்டு பாண்டியர் செப்பேடுகளும் ஒரு பல்லவர் செப்பேடும் ஆதாரங்களாக உள்ளன. முதலாவது செப்பேடு வேள்விக்குடிச் செப்பேடு. அச்செப்பேடு பற்றி முன்னர் கூறப்பட்டது. திரு.சுப்பராயலு அவர்களும் களப்பிரர் பிரம்மதேய நிலத்தைக் குடிமக்கள் நிலமாக்கினர் என்பதைக் குறிப்பிட்டுள்ளார்.*8


இரண்டாவது செப்பேடு தளவாய்புரச் செப்பேடு. இச்செப்பேடு பராந்தக வீரநாராயணன் என்ற பாண்டிய மன்னன் காலத்தைச் சேர்ந்தது. திருமங்கலம், சோமாசிக் குறிச்சி என்ற இரு பிரம்மதேய ஊர்களின் சாசனங்கள் மறக்கோட்டால் தொலைந்து போயிற்று என்றும், கடத்திருக்கைக் கிழவன் என்பவன் இந்நிலங்களைப் பறித்துக் கொண்டு மதுரதர நல்லூர் என்று பெயரிட்டுக் குடி நிலனாக மாற்றிக் கொண்டான் என்றும் அதைத் தவிர்த்து மேற்கூறிய இரு ஊர்களையும் ஒரே ஊராக்கி எல்லையிட்டு, பிடி சூழ்ந்து சாசனம் செய்து தரவேண்டுமென்று அப்பிரமதேய ஊர்களைச் சேர்ந்த பிராமணர் சார்பாக ஶ்ரீநாராயணன் கேசவன் என்பவன் மன்னனிடம் முறையிட, மன்னன் மீண்டும் அவ்வூர்களைப் பிரம்தேயமாக வழங்கினான் என்கிறது தளவாய்புரச் செப்பேடு.*9 முன்னர் இப்பிரம்மதேய ஊர்கள் எதற்காக யாரால் கொடுக்கப்பட்டது என்பதையும் இச்செப்பேடு கூறுகிறது.


"கற்றறிந்தோர் திறல் பரவ களப்பாழரைக் களை கட்ட
மற்றிரடோண் மாக்கடுங்கோன் மானம்
பேர்த்தருளிய கோன்
............

............
அறு தொழில்கள் மேம்பட்ட மறையோர் பன்னிருவர்க்கு
காராண்மை மீயாட்சி உள்ளடங்கக் கண்டமைத்துச் 
செப்பேடு செய்து கொடுத்தருளின்......."
 என்கிறது. *10


களப்பிரரை அடக்கி ஆட்சியை மீட்ட பாண்டியன் கடுங்கோன் கற்றோராகிய பிராமணரின் மேம்பாட்டிற்காகவும் களப்பாளரைத் தொடர்ந்து களையெடுப்பதில் உதவுவதற்காகவும் இப்பிரம்மதேயத்தை தானமளித்திருந்தான். அதோடு காடக சோமயாஜி என்பவருக்கும் ஏகபோக பிரம்மதேயமாக நிலமளித்திருந்தான். ஆகவே, களப்பிரரை அடக்கியது, அடக்குவது தொடர்பாகக் கொடுக்கப்பட்ட பிரம்மதேயமே கடற்றிருக்கைக் கிழவன் என்பவந்தலைமையில் சூத்ரர்களால் கைப்பற்றப் பட்டிருந்தது. இப்பிரம்மதேயம் மீண்டும் முன்னர் பிரம்மதேயம் பெற்றிருந்தோர் வம்சத்திற்கே கொடுக்கப் பட்டது.


தளவாய்புரச் செப்பேட்டின் மூலமாக இரண்டு செய்திகள் தெரிய வந்திருக்கின்றன. 1. களப்பிரரை ஒழித்துக் கட்டியதற்காக, மேலும் களை கட்டுவதற்காகப் பாண்டியன் கடுங்கோன் பிராமணர்களுக்கு பிரம்மதேயமாக நிலமளித்தான். 2. அந்நிலம் சூத்ரர்களாகிய களப்பிர ஆதரவாளர்களால் கைப்பற்றப்பட்டுக் குடிமக்கள் நிலமாக்கப் பட்டது. ஆனால் மீண்டும் தங்கள் குடும்பத்திற்கே அந்த பிரம்மதேயமாக அளிக்கப்பட்ட நிலத்தைத் தர வேண்டும் என்று சம்பந்தப் பட்டவர்கள் மன்னனிடம் விண்ணப்பித்துப் பெற்றுக் கொண்டு விட்டார்கள். கி.பி. 9-ஆம் நூற்றாண்டில் கூட முற்றிலும் களப்பிரர் அடங்கிவிடவில்லை. களப்பிரர் காலத்தில் அவர்களுக்கு ஆதரவளித்த ஊர்த்தலைவர்கள், பிரம்மதேய எதிர்ப்பாளர்களாகவே இருந்திருக்கின்றனர் என்பது தெரிகிறது.


மூன்றாவது ஆதாரம் பல்லவர் காலச் செப்பேடாகும். இச்செப்பேடு சிம்மவிஷ்ணு வெளியிட்டுள்ள ஹொசக் கோட்டைச் செப்பேடாகும். இச்சம்ஸ்கிருதச் செப்பேட்டின் 13, 14-வது வரிகள் ஒரு அரிய செய்தியைக் கூறுகின்றன. அதாவது இம்மன்னனது பல அரிய திறன்களை எடுத்துக் கூறும்போது தான் இச் செய்தியைக் கூறுகிறது. அச்செய்தியாவது,


"நீண்ட காலமாக மறைந்திருந்த அனேகம் ஆயிரம்
பிரம்மதேயங்களை விடுவித்தலென்ற
ஆக்ரயணம் என்னும் யாகத்தைச் செய்தவன்,*11"


--என்பதுதான்.


நீண்ட காலமாக பிரம்மதேயங்கள் மறைந்திருக்க வேண்டிய காரணம் என்ன? அதை விடுவித்தவனோ குருவையும் பசுவையும் பிராமணரையும் பூஜிக்கிற பல்லவர் குலத்தினன். இச்செப்பேட்டை வெளியிட்ட சிம்மவிஷ்ணு களப்பிர மாளவ சோழ பாண்டியர்களை வென்றவன் எனக் காசாக்குடிச் செப்பேடு கூறுகிறது. இவன் களப்பிரரை வென்று, அவர்களால் மாற்றப்பட்ட பல ஆயிரம் பிரம்ம தேய நிலங்களை மீட்டு பிராமணர்களுக்கு அளித்திருக்கின்றான்.


பெரும்பாலான பல்லவர் செப்பேடுகள் பிராமணர்க்குப் பிரம்மதேயமாக நிலமளித்த செய்திகளையே கூறுகின்றன. அச்செப்பேடுகளுள் பல--


"கலியுக தோஷத்தினால் அபகரிக்கப்பட்ட தர்மத்தைத் தூக்கி நிறுத்த எப்போதும் சன்னத்தமாய் இருப்பவன்"*12 என்று மன்னர்களைப் பற்றிக் குறிப்பிடுகின்றன.


கலியரசர் என்ற களப்பிர அரசரை வேள்விக்குடி செப்பேடும், கோவை அருகேயுள்ள வெள்ளலூர் கல்வெட்டும் கூறுவதைக் காணலாம். கலியுக தோஷத்தில் அபகரிக்கப்பட்ட தர்மம்--என்பது களப்பிரர் காலத்தில் அபகரிக்கப்பட்ட பிரம்மதேயம் என்ற நிலதானமேயாகும் என்பது வெளிப்படை.


இத்தனை சான்றுகள் இருக்க பூலாங்குறிச்சியிலுள்ள களப்பிரர் கல்வெட்டு, பிரம்மதேயங்களைப் பராமரித்தது என்றும், களப்பிர அரசர் பிரமதேய நிலம் பெற்றிருந்த பிராமணர்க்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறுவது எவ்வகையில் பொருந்தும்? இதுவரை இங்கு கூறப்பட்டுள்ள ஆதாரங்களின் அடிப்படையிலும், தெரிந்ததிலிருந்து தெரியாததற்கு--என்பதன் அடிப்படையிலும் அச்சிதைந்த கல்வெட்டை அணுகிப் பொருள் காண முயல்வோமானால் அக்கல்வெட்டுக் கூறும் உண்மைச் செய்திகளை அறிய ஏதுவாகும். பூலாங்குறிச்சி மலைமேல் கட்டப்பட்ட பெளத்த தேவகுலத்திற்குப் பிரம்மதேயங்களை விலை கொண்டு உரிமையாக்கிய செய்தியையும், வரியாகவோ அல்லது விற்றுப் பணமாகவோ அளித்தல் வேண்டும் என்ற தகவல்களையும் தான் அக்கல்வெட்டுக் கூறுகிறது எனக் கொள்வதே பொருத்தமானதாகும்.


கிழக்கு வங்கத்தைச் சேர்ந்த, கி.பி. 7,8-ஆம் நூற்றாண்டில் வெளியிடப்பட்ட இரு செப்பேடுகள், மான்யமாக நிலம் பெற்றிருந்த சிலரிடமிருந்து நிலத்தைப் பறித்து பெளத்த மடத்திற்கு அளித்த செய்தியைத் தெரிவிக்கின்றன. இவ்வாறு பறிக்கப்பட்ட நிலங்களுள், அரசிக்கும், அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், சாமந்தனல் அவனது தலைவனுக்கு அளிக்கப்பட்ட நிலங்களும் அடங்கும்.*13


எனவே முந்தைய ஆட்சியில் கொடுக்கப்பட்ட நிலக்கொடைகள் பறிக்கப்பட்டு பெளத்தக் கோயிலுக்கு உரிமையாக்கப்பட்டதன் மூலம் மாற்றியமைக்கப்பட்ட தகவல் இங்கு ஒப்புநோக்கத் தக்கது.


பிரம்மதேயம் சிற்றையூர்--கி.பி. 9-ஆம் நூற்றாண்டிலும் பின்னரும்


பிற்காலச் சோழர்கள் முத்தரையரை வென்று தஞ்சையில் சோழராட்சியை நிறுவிய பின்னர் புதுக்கோட்டைப் பகுதியும் அவர்களின் ஆளுகையின் கீழ் வரத் தொடங்கிவிட்டது. விஜயாலயன் பெயரில் முத்தரையர்களால் விஜயாலய சோழீஸ்வரம் எடுக்கப்பட்டதும், முதலாம் ஆதித்தனின் கல்வெட்டுக்களும் அவனைத் தொடர்ந்து ஆட்சி செய்த சோழர்களின் கல்வெட்டுகளும் இங்கு கிடைப்பதே இதற்குச் சான்று.


முதலாம் ஆதித்த சோழனின் வெள்ளனூர் கல்வெட்டொன்று, "கூடலூர் நாட்டுப் பிரம்மதேயம் சிறையூரைக்*14 குறிப்பிடுகின்றது. இவ்வூரைக் கேட்டவுடனே பூலாங்குறிச்சிக் கல்வெட்டு கூறிய ஊர் நினைவிற்கு வரும். உண்மைதான். அதே ஊரைத்தான் வெள்ளனூர் கல்வெட்டு குறிப்பிடுகின்றது. ஆதித்த சோழன் காலத்தில் இருக்கு வேளான் என்பவன் தம் பெயரால் சிற்றையூர் கோயிலுக்கு தேவதானமாக நிலமளித்திருக்கின்றான். அவன் தேவதானமாக அளித்த நிலம் வேறெதுவுமில்ல, பூலாங்குறிச்சிக் கல்வெட்டுக் கூறும் அதே கடைய வயலைத்தான் கொடுத்திருக்கின்றான்.


..............சிற்றையூர் தி
ருவக்னீஸ்வரத்து ப்ரமேஸ்வரர்க்கு தேவதான்
மாக அட்டிக் குடுத்த நில(ம்) இவ்வூர்ப்பால் கடை
ய வயலை........


என்கிறது அக்கல்வெட்டு. கடைய வயல் என்பது ஒரு நிலப்பகுதி. அதனால்தான் கடைய வயலைத் தம் பேரால் உத்தம சீல மங்கலம் என்று பெயரிட்டு அழைத்திருக்கின்றான். பூலாங்குறிச்சிக் கல்வெட்டும் 'கடைய வயலென்னும்" என்று கூறுகிறது. கடைய வயல் பகுதிக்கு வேறோர் பெயரும் இருந்திருக்கிறது, என்பது பூலாங்குறிச்சிக் கல்வெட்டிலும் வெளிப்படுகிறது. சோழர் கல்வெட்டின் மூலம் அது ஒரு நிலப்பகுதி என்பது தெளிவாகிறது. ஆகவே, திருநடன காசிநாதன் அவர்கள் கூறியது போல் அது ஒரு துண்டு நிலமல்ல என்பது பெறப்படுகிறது. கடைய வயல் பற்றி இரு கல்வெட்டுகளும் கூறுகின்ற தொடர்கள் சுவை பயப்பன.பூலாங்க்குறிச்சிக் கல்வெட்டு,

 

அவூருப் படுங் கடைய வயல்--என்றும்

 

வெள்ளனூர்க் கல்வெட்டு,

 

இவ்வூர்ப் பால் கடைய வயல்--என்றும்

 

கூறுகின்ற சொற்றொடர்கள் தாம் அவை. கடைய வயல் என்ற நிலப்பகுதி, சிற்றையூரை ஒட்டி அமைந்து அவ்வூரைச் சேர்ந்ததாக இருந்திருக்கிறது.

 

 

இத்தனைப் புகழ் பெற்ற சிற்றையூர்தான் இன்று சித்தூர் என்று அழைக்கப்படும் ஊராகும், என்று அவ்வூர்க் கல்வெட்டுக்களால் அறிய முடிகின்றது. இக்கல்வெட்டுகளும், "கூடலூர் நாட்டுப் பிரமதேயம் சிற்றையூர்" என்று குறிப்பிடுகின்றன. ஆதலால் இன்றைய சித்தூரே அன்றைய சிற்றையூர் என்பது தெளிவாகிறது. இவ்வூரில் முதலாம் இராஜராஜ சோழன், முதலாம் இராஜேந்திர சோழன், முதலாம் இராஜாதிராஜ சோழன் ஆகியோர் காலக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.


களப்பிர மன்னனாகிய கோச்சேந்தன் கூற்றன் காலத்தில் பிரம்மதேயமாகிய சிற்றையூரும், கடையவயலும் விற்றுக் கொடுக்கப்பட்டு விட்டது. அதாவது பிரம்மதேயம் இறக்கப்பட்டுவிட்டது. ஆனால் கி.பி. 9, 10-ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகள் மீண்டும் சிற்றையூரை பிரம்மதேயமாகக் குறிப்பிடுவதால், இறங்கல் மீட்கப் பட்டு விட்டது தெரிகிறது. அதாவது மீண்டும் பிரம்மதேயமாக்கப் பட்டிருக்கிறது.


பிரம்மதேயம் அளித்தது, அதை இறக்கியது, மீண்டும் நிறுவியது என்ற வரலாற்று நிகழ்ச்சிகளை அடுத்து, பொருளாதார வரலாற்றின் வளர்ச்சிப் போக்கில் ஏற்பட்ட மாற்றம், கோயில் பொருளாதாரமாகும். சோழர் காலங்களில் கோயில்கள் நிலவுடைமை நிறுவனமாகவும், அதனால் பொருளாதார மையமாகவும் செயல்பட்டன. அந்த வளர்ச்சியின் தேவையாக, மையப் பகுதிகளிலும் பிற பகுதிகளிலும் கோயில்களைக் கட்டி அப்பகுதி நிலங்களைக் கோயிலுக்குச் சொந்தமாக்கினர், சோழர். அப்போது பிரம்மதேய நிலங்களும், ஊர் நிலங்களும் கோயிலுக்குச் சொந்தமான தேவதான--நிலங்களாயின. அதைப் போல் சிற்றையூரின் பகுதியான கடையவயலை முதலாம் ஆதித்த சோழன் காலத்து அதிகாரி ஒருவன் தன் பெயரால் உத்தமசீல மங்கலம் என்று பெயரிட்டு தேவதானமாக அளித்திருக்கின்றான். இவ்வூரே மேற்கூறிய பொருளாதார மாற்றத்திற்கான சிறந்த உதாரணமாகத் திகழ்கின்றது.


1.பிரம்மதேயமாக சிற்றையூரும் கடைய வயலும் களப்பிரர் காலத்திற்கு முன்னர் பிரம்மதேயமாகவும்,


2. களப்பிரர் காலத்தில் பூலாங்குறிச்சிக் கோயிலுக்கு விற்றுக் கொடுக்கப்பட்டதால் பெளத்தக் கோயிலுக்குச் சொந்தமான நிலமாகவும்,


3. சோழர் காலத்தில் சிவன் கோயிலுக்குச் சொந்தமான தேவதான நிலமாகவும் மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது.


அரசியல், சமய மாற்றங்கள் நிலவுடமைமைப் பொருளாதாரத்தை எவ்வாறெல்லாம் கட்டுப்படுத்தியிருக்கிறது என்பதற்கு நமக்குக் கிடைத்துள்ள மிக முக்கியமான சான்றாக, இதைக் கொள்ளலாம்.


பிராமணரும் பெளத்தரும்


ஆட்சியாளர்கள் பிராமணர்களையோ அல்லது பெளத்தர்களையோ ஆதரிப்பதன் மூலம் தான் தங்கள் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டிருந்தனர் என்பது தெரிகிறது. கெளடில்யர் என்ற அரசியல் வித்தகர், புதிய குடியேற்றங்களில் பிரம்மதேய உரிமையுடன் பிராமணர்க்கு நிலக்கொடையளிக்க வேண்டும் என்கிறார். பிராமண ஆதரவு அரசுகள் அவ்வாறே செய்தன. பூமிதானத்தின் உயர்வைப்புகழ்ந்து கூறுகிற பகுதி மகாபாரத அனுசாசன பருவத்தில் கூறப்பட்டுள்ளதைக் காணலாம். அதே கெளடில்யர், பெளத்தர்கள் பற்றிக் கூறும்போது,


பெளத்தத் துறவிகளை நகருக்கு வெளியில்தான் தங்குவதற்கு அனுமதிக்க வேண்டுமென்றும், அவர்கள் நடவடிக்கைகள் மீது எப்போதும் அரசு கண்காணித்துக் கொண்டிருக்க வேண்டும் என்றும் பெளத்த மடாலயங்களில் அதிக சொத்துக்கள் சேராதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறுகிறார். *15 அரசியல் ஞானமும், விவேகமும், தந்திரமும் மிக்க பெளத்தத் துறவிகள் ஒற்றர்களாகச் செயல்பட்டிருக்கின்றனர் என்பது தெரிகிறது.


வைதீகத்தை ஆதரித்துப் பின் பற்றி அசுவமேத யாகம் போன்ற யாகங்கள் பலவற்றைச் செய்து பிராமணர்களுக்குப் பிரமதேயங்கள் அளித்து மகிழ்ந்த சாதவாகன அரச வம்சத்து மன்னன் கெளதமி புத்ர சதகர்ணி என்பவன் கி.பி. 2-ஆம் நூறாண்டில் ஆட்சி செய்தவன். இவன் பெளத்த துறவிகளுக்கு நிலக்கொடையளித்து, அந்நிலத்தில் நாட்டின் போர் வீரர் முதலிய காவல் துறையினர் உள்ளே நுழையக் கூடாது என்றும் ஆணையிட்டிருந்தான்.*17 ஒற்றர்களாகத் திறம்பட செயல்பட்டு அரசியல் மாற்றத்திற்குக் காரணமாக விளங்குகின்ற பெளத்தத் துறவிகளுக்கு நிலதானமளித்துத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தான் போலும்.


பிராமணர்கள் எந்த அளவு அரசு அதிகாரத்தில் தலையீடு செய்தனர் என்பதற்கும் சான்று கிடைத்துள்ளது. சாதவாகன மன்னர் வழிவந்த வாகாடகர்களும், சாதவாகனர் போன்ற பிராமண ஆதரவு அரசர்கள், பிராமணர்க்கு பிரம்மதேயம் அளித்த செய்தி உள்ளது. இம்மன்னன் வெளியிட்டுள்ள ஒரு செப்பேடு பிராமணர்க்குச் சில நிபந்தனைகளை அளித்துள்ளது. பிராமணர்கள் அரசனுக்கும் நாட்டிற்கும் எதிராய் சதி செய்தல், திருடுதல், பிறன்மனை விழைதல், பார்ப்பனரைக் கொலை செய்தல், அரசனுக்கு நஞ்சூட்டல் முதலிய செயல்களிலும், போரிடுதல், பிற கிராமங்களுக்குத் துன்பம் விளைவித்தல் போன்ற செயல்களிலும் ஈடுபடுதல் கூடாது என்பதே அந்நிபந்தனைகளாகும்.*16 பிராமண ஆதரவு அரசே இத்தனை நிபந்தனைகள் விதித்ததால் மேற்கூறிய நடவடிக்கைகளில் பிராமணர் ஈடுபட்டிருந்தனர் என்பது வெளிப்படை. பிராமணர்களும் ராஜதந்திரிகளாகவும் படை நடத்திப் போர் புரியும் படை வீரர்களாகவும் விளங்கினர் என்பதால் தான் அரசர்கள் பிராமணர்களை ஆதரித்தனர்.


அரசர்கள் பிரம்மதேயம் என்ற பெயரில் அவ்வூரின் வருவாயையும் நிர்வாகத்தையும் அதன் மேல் ஆட்சி செலுத்தும் அதிகாரத்தையும் பிராமணர்க்கு விட்டுக் கொடுத்திருந்தனர். இத்தனை சுகபோகங்களை அனுபவித்துக் கொண்டிருந்த பிராமணரை வேற்று ஆட்சியினர் அதே அதிகாரம் தந்து வாளா விட்டிருபபரா? வருவாயையும் அதிகாரத்தையும் கைப்பற்றத் தானே நினைப்பார்கள். அத்தகைய செயல்தான் பிரம்மதேய இறக்கம் என்பது.

 

 

 

அடிக்குறிப்புகள்

 

1. ராம் கரண்சர்மா--இந்திய நில மானிய முறை பக்.3

 

2. பாண்டியர் செப்பேடுகள் பத்து--வேள்விக்குடி செப்பேடு(ஜடில வர்மன் பராந்தக நெடுஞ்சடையனால் வெளியிடப் பெற்றது)

 

3. ராம்கரண் சர்மா--மேற்குறிப்பிட்ட நூல்--பக்3

 

4. ராம்கரண் சர்மா--மேற்குறிப்பிட்ட நூல்--பக். 3

 

5.N. Sethuraman--Date of Pulankurichchi Inscription, Srinithi P. 285--292

 

6. Dr.R. Nagaswamy--An outstanding Epigraphical discovery in Tamil Nadu--Proceeding of the 5th International Conference Seminar of Tamil Studies Vol.I Page 67--71 and Natana Kasinathan--Pulankurichchi Inscription--a Relook--Dept of Archaeology, Govt. of Tamil Nadu, Madras--28.

 

7. ராம் கரண் சர்மா-- பக். 54--55

 

8. Kaveri--Studies in Epigraphy, Archaeology and History Professor, Y. Subbarayalu Felicitation Volume--Editor. S. Rajagopal..2001

No.1 The Pulangurichi Inscriptions. p.1 to 7

 


9. பாண்டியர் செப்பேடுகள் பத்து.
பராந்தக வீர நாராயணனின் தளவாய்புரச் செப்பேடு பக். 124--130

 

10. மேற்படி நூல்.. பக் 124--130

 

11. பல்லவர் செப்பேடுகள் முப்பது: ஹொசக் கோட்டைச் செப்பேடு வரிகள் 13-14

 

12. ரேயூருச் செப்பேடு, உருவப்பள்ளி நெடுங்கராய, சேந்தலூர், ஒங்கோடு, சுரா, உதயேந்திரம், ஹொசக்கோட்டை ஹல்லகிரே போன்ற செப்பேடுகள்.

 

13. ராம் கரண் சர்மா--பக் 18

 

14.Pudukkottai State Inscriptions. No. 26

 

15. ராம்கரண் சர்மா, பக்.3

 

16. மேற்படி நூல் பக் 10



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

 சோழர் காலத்திய சமயம்-- பகுதி 5 இராஜேந்திர சோழனும் காதல் பரவையும்

 
 
 

எழுத்து: டாக்டர் பத்மா

 

இராஜேந்திர சோழனும் காதல் பரவையும்

 

ஒரு காலத்திலே, சோழ நாட்டிலே புகழ் மிக்க வணிகன் கோவலன் என்பவனுக்கும் நாட்டியப் பேரொளி மாதவி என்னும் ஆடலழகி மாதவிக்கும் இடையே உள்ள காதலைப் பாடுகிறது சிலப்பதிகாரமென்னும் மகாகாவியம். அவர்கள் காதலைப் போற்றிப் புகழாதார் இல்லை. பேசாதார் இல்லை. முழங்காத பட்டிமன்றங்களில்லை. இலக்கியத்தில் கூறப்படும் இக்காதலர்கள் உண்மையில் வாழ்ந்தனரா என்பது கேள்விக்குறியாகும். ஆனால் இதோ கி.பி. 11-ஆம் நூற்றாண்டிலே இடைக்காலச் சோழர் வரலாற்றிலே ஒரு மன்னனும் ஆடலழகி ஒருத்தியும் காதல் கொண்டு காதலுக்கோர் இலக்கணம் வகுத்திருக்கின்றனர்.

 

சிலப்பதிகார மாதவியோ ஆடலிலும் பாடலிலும் அழகிலும் சிறந்தவள். திருவாரூர் பரவையோ--ஆடல் பாடல் அழகு இவற்றில் மட்டுமின்றி திருப்பணிகள் பல செய்வதிலும் ஆலயங்களுக்குப் பொன்னையும் பொருளையும் வாரி வழங்குவதில் நிகரற்றவள். சிலப்பதிகாரத்தில் மணிமேகலை பிறந்தவுடன் தானம் செய்யப்பட்டதாகக் கூறப்படுவது கோவலனின் கொடைத்தன்மையைப் புகழவே அன்றி மாதவியைப் புகழுவதற்கு அன்று. திருவாரூர் பரவை எடுத்த கற்றளிக்குக் குடமுழுக்கு விழா நடந்த போது அவள் காதலன் சோழ மன்னன் முதலாம் இராஜேந்திரன் அவளைத் தன் அருகில் வீற்றிருக்கச் செய்து தேரில் பவனி வந்தான். அக்காதலர்கள் இருவரும் இறைவனை தரிசித்த இடத்தில் அவர்கள் காதல் என்றென்றும் அமரஜோதியாக நின்று நிலவ மன்னன் குத்துவிளக்கு இரண்டினைக் காதல் தீபமாக எரிய வைத்தான்.

 

திருவாரூர் வீதிவிடங்கர் கோயிலக் கற்றறியாக்கி அக்கோயில் குடத்திலும் வாய்மடையிலும் நாலு நாசியிலும் உள் குடத்திலும் பொன் வேய்ந்ததோடு நின்று விடவில்லை. கற்ப அறையின் கதவுகளுக்கும் மண்டபத் தூண்களுக்கும் 42000 பலம் எடையுள்ள செம்பினால் தகடு சாத்தி அழுகு படுத்தினான். 155579 பலம் எடையுள்ள பிரம்மாண்டமான 28 குத்து விளக்குகள் வைத்தான். ஏராளமான ஆயிரக்கணக்கான எடைகளுள்ள ஆபரணங்கள் 428 முத்துக்கள் 7 மாணிக்கக் கற்கள் 36 வைரக் கற்கள், எண்ணற்ற மரகதக் கற்கள், வெள்ளிப் பாத்திரங்கள் ஆகியவற்றைப் பரிசளித்தான். பாவை விளக்குகள்--ஒன்றின் பெயர் பச்சைப் பாவை உமை நங்கை என்றும் மற்றொன்றின் பெயர்--பாவை சரியா முலை நங்கை எனப் பெயர் கூறப்பட்டிருக்கிறது. அன்னதானத்திற்குப் பல வேலி நிலங்கள் அளித்தான். சிலப்பதிகார மாதவியோ மன்னன் முன் நடனமாடி தன் முத்துமாலையை விலைக்கு வாங்கிய கோவலனைக் காதலித்தாள். ஆனால் இராஜேந்திரன் பரவை ஆகியோர் காதலோ காதலிக்குக் கோயில் கட்டுமளவு உயர்ந்திருந்தது. விழுப்புரம் அருகே --பரவை ஈஸ்வரமுடையார் ஆலயம் அமைத்து அவ்வூருக்குப் பரவைபுரம் என்றும் பெயர் வைத்தான். இவர்கள் காதல் விலைக்கு வாங்கப் பட்டதல்லவே. அந்தோ! காதலின் மேன்மையைக் கூறுதற்குச் சிலப்பதிகாரம் வரைப் போகிறோம். வேண்டாம். பரவைபுரம் வரை சென்றாலே போதும்.

 

காதலின் சின்னமாகத் தாஜ்மஹாலைக் கூறுகிறோம். இறந்து போன தன் காதலிக்கு எழுப்பிய சமாதியல்ல--அவள் உயிருடன் இருக்கும்போதே தன் உண்மைக் காதலை அவள் கண்டு களிக்குமாறு அழியாக் கோயில் கட்டினான் இராஜேந்திரன்.

 

காதலுக்கோர் கோவில்--பரவை ஈஸ்வரமுடையார் கோயிலென்றான். சிலப்பதிகார மாதவிக்கு அவள் காதலன் கோயில் கட்டவில்லை. மாறாகக் கண்ணகிக்குத் தான் ஒரு சேர மன்னன் கோயில் கட்டினான்.ஆனால் திருவாரூர் மாதவிக்கோ (பரவை) அவள் காதலனே கோயில் கட்டிக் கும்பிட்டிருக்கின்றான். அது மட்டுமா இராஜேந்திரன் இறந்த பின்னர் அவன் பெயரில் திருவாரூர் ஆலயத்தில் 'இராஜேந்திர சோழன் திருமண்டபம்' அமைத்துப் பரவை தன் காதலனின் கற்பனையில் மிதந்தாள்.

 

இராஜேந்திரனும் பரவையும் மட்டும் தங்கள் காதலைப் பரிமாறி அழியாச் சின்னமாக ஆக்கவில்லை. இவனுக்குப் பின் வந்த மன்னர்கள் எல்லாம் இவர்கள் காதலைப் போற்றினர். புகழ்ந்தனர். அதனால் இவர்கள் காதல் எவ்வளவு உயர்ந்ததாக இருந்தது என்பதை நன்குணர முடியும். தேவரடியார் பெண் ஒருத்தியிடம் மன்னன் கொண்ட காதலை அம்மன்னன் மட்டுமின்றி அவன் வழி வந்தோரெல்லாம் ஏற்றுக் கொண்டு வரலாற்றுச் சின்னமாக ஆக்க நினைத்திருக்கின்றனர் என்றால் இதை விடச் சிறந்ததோ சிலப்பதிகாரக் காதல்??

 

இராஜேந்திரனுக்குப் பின் ஆட்சிக்கு வந்த அவன் மகன் முதலாம் இராஜாதிராஜன் தன் தந்தைக்கும் அவர் காதலி பரவைக்கும், திருவாரூர் ஆலயத்தில் திருமேனிகள் எடுப்பித்துச் சிறப்பித்து வழிபாட்டிற்கு நிவந்தங்கள் அளித்தான். அவனுக்குப் பின் ஆட்சிக்கு வந்தவன் தம்பி 2-ஆம் இராஜேந்திரனும் தன் தந்தைக்கும் பரவைக்கும் திருமேனிகள் எடுத்துப் பரவைபுரத்தில் பரவை ஈஸ்வரமுடையார் ஆலயத்தில் எழுந்தருளுவித்து வழிபாட்டிற்கும் திருவிழாவிற்கும் நிவந்தங்கள் அளித்திருக்கின்றான் என்பதெல்லாம் வரலாற்றில் ஆர்வமுள்ள அனைவரும் அறிவர்.

 

இராஜேந்திரன், பரவை காதலுக்கோர் கோயிலாக -பரவை ஈஸ்வரமுடையார் கோயில் மட்டுமல்ல. அவர்கள் காதலைப் போற்றியவர்கள்--மதித்தவர்கள் இராஜேந்திரனின் மக்கள் இருவர் மட்டுமல்ல, இன்னும் சில கோயில்களுமுண்டு, மன்னர்களுமுண்டு என்பதைக் கூற விரும்புகிறார் இக்கட்டுரையாசிரியர்.

 

இராஜேந்திரனின் மற்றொரு மகனான அதிராஜேந்திரனின் கல்வெட்டு இவ்வூரில் சிவதர்ம மடம் ஏற்படுத்தி, அபூர்விகளும் மஹான்களும் உணவுண்ண நிவந்தங்கள் அளித்ததைக் கூறுகிறது. அச்சிதைந்த கல்வெட்டில் இராஜேந்திர சோழ விண்ணகராழ்வார் கோயிலிலும் குறிக்கப் பட்டிருக்கிறது. எனவே பரவைபுரத்தில் இராஜேந்திர சோழனால் எடுக்கப் பட்ட பரவை ஈஸ்வரமுடையார் கோயில் மட்டுமல்ல, இராஜேந்திர சோழனுக்காக எடுக்கப் பட்ட கோயிலும் பரவைபுரத்தில் இருந்திருக்கிறது. இக்கோயில் அதிராஜேந்திரன் காலத்தில், அவனாலோ--அவ்வூர் நகரத்தாராலோ எடுக்கப் பட்டிருக்கலாம்.

 

எனவே இராஜேந்திர சோழனின் மக்கள் நால்வரும் தன் தந்தை ராஜேந்திர சோழன்,--பரவை காதலை ஆதரித்ததோடு மட்டுமின்றி வரலாற்றிலும் நின்று நிலவும்படி செய்திருக்கின்றனர்.

 

அவர்கள் நால்வருக்குப் பின் பட்டத்திற்கு வந்தவன் முதலாம் குலோத்துங்கன். இராஜேந்திரனின் மகள் வயிற்றுப் பேரன். இவன் கீழைச் சாளுக்கிய மன்னன் மகன் என்றாலும் வளர்ந்தது சோழ நாட்டில் தன் தாய்வழிப் பாட்டன் அரண்மனையில் தான் என கலிங்கத்துப் பரணி மூலம் தெரிய வருகிறது. இவனுக்கும் தன் தாய்வழிப்பாட்டனின் பெயரான இராஜேந்திரன் என்ற பெயர் உண்டு என்பதைப் பல கல்வெட்டுக்கள் கூறுகின்றன. இவனும் இராஜேந்திரன் --பரவை--காதலைப் போற்றினான்--மதித்தான் என்பதற்குத் தக்க ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

 

தஞ்சை மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் அமைந்துள்ள ஊர் திருப்பனையூர். இவ்வூர்க் கோயில் முதலாம் குலோத்துங்க சோழனால் எடுக்கப் பட்டது. அதுவும் இராஜேந்திரன் --பரவை காதலின் நினைவாக எடுக்கப்பட்டதே எனக் கட்டுரையாசிரியரால் கருதப் படுகிறது. இவ்வூர்க் கல்வெட்டுக்களில் முக்கியமானதும் பெரும்பாலானதும் காலத்தால் முந்தியதுமான கல்வெட்டுக்கள் முதலாம் குலோத்துங்கனுடையதே. மேலும் வளநாட்டுப் பிரிவு இவன் பெயரால் குலோத்துங்க சோழ வளநாடு என அமைந்திருத்தலும் இவ்வூர் ஆறு குலோத்துங்க சோழப் பேராறு என அழைக்கப்பட்டிருப்பதும் இவ்வூர் முதலாம் குலோத்துங்கனால் சிறப்பிக்கப் பட்டது என்பதை உறுதிப் படுத்துகிறது.

 

திருப்பனையூர் என்ற இவ்வூர், கங்கை கொண்ட சோழப் பனையூர் எனக் கல்வெட்டுக்களில் காணப்படுகிறது, விக்ரம சோழன் குற்றாலம் என்பது போல.

 

இவ்வூர்க் கல்வெட்டுக்களில் குறிக்கப் பெறும் நாட்டுப் பிரிவு இராஜேந்திர சோழப் பனையூர் நாடு என்று வழங்கப் பெற்றிருந்தது. இவ்வூர் வாய்க்கால்களின் பெயர்கள் கூட இராஜேந்திர சோழன் வாய்க்கால் என்றும், கங்கை கொண்ட சோழன் வாய்க்கால் என்றும் தான் அழைக்கப்பட்டன. இவ்வூர்க் கல்வெட்டுக்கள் அனைத்தும் இவ்வூர் உடையார் அழகிய தேவர் கோயிலில் காணப்படுகின்றன. அழகிய சோழன் என்பது முதலாம் இராஜேந்திர சோழனின் பெயர்.

 

இவ்வூர் குலோத்துங்கன் கல்வெட்டுகள் அனைத்தும் ஊராரும் சபையாரும் இறையிலியாக நிலம் கொடுக்கப் பட்ட செய்திகளைக் கூறுகின்றன. எனவே ஊராரும் சபையாரும் இத்தனை முக்கியத்துவம் கொடுத்துள்ளனர் என்றால் அது ஒரு மன்னனால் இன்னொரு மன்னனுக்காக எடுக்கப் பட்ட கோயில் என்பதால் இருக்கலாம்.

 

இவ்வூரில் உள்ள விக்ரம பாண்டியன் கல்வெட்டொன்று உடையார் ஶ்ரீ அணுக்கீஸ்வர முடையார் திருநாமத்துக்காணியைக் குறிப்பிடுகிறது. எனவே அவ்வூரில் ஶ்ரீ அணுக்கீஸ்வரமுடையார் கோயிலும் இருந்தது. அணுக்கி-பரவையாராக இருத்தல் வேண்டும். கங்கை கொண்ட சோழப் பனையூரிலே உடையார் அழகிய தேவராகிய--இராஜேந்திர சோழனுக்கும்-- அணுக்கி பரவையாருக்கும் தான் முதலாம் குலோத்துங்க சோழனால் கோயில் எடுக்கப்பட்டது என்பதில் ஐயமில்லை. முதலாம் குலோத்துங்கன் கல்வெட்டில் கிடைக்காமல் விக்ரம பாண்டியன் கல்வெட்டில் ஶ்ரீ அணுக்கிஸ்வரமுடையார் பற்றித் தெரிந்து கொள்ளக் காரணம் இவ்வூரில் சிதைந்த கல்வெட்டுகள் ஏராளம். அவற்றில் அணுக்கீஸ்வர முடையார் குறிக்கப் பட்டுக் கிடைக்காமல் போயிருக்கலாம்.

 

ஊரின் பெயர் கங்கை கொண்ட சோழப் பனையூர் என வழங்கப் பட்டிருத்தலாலும், அங்கு ஶ்ரீ அணுக்கீஸ்வர முடையார் கோயில் அமைந்திருத்தலாலும், பரவைபுர இறைவன் பெயராகிய பனை மரத்தின் பெயரால் ஊர் அமைந்திருத்தலாலும் இவ்வூர்க் கோயில்கள் இராஜேந்திர சோழன், அணுக்கி பரவையார் நினைவாக அவர்கள் காதலின் சின்னமாக ஏற்படுத்தப்பட்டதாக இருக்கலாம். எனவே தஞ்சை மாவட்ட திருப்பனையூர்--முதலாம் குலோத்துங்கனால் முதலாம் இராஜேந்திர சோழன்-பரவை நினவாக அமைக்கப்பட்ட ஊராக இருக்கலாம்.

 

வட ஆற்காடு மாவட்டத்தில் காஞ்சிபுரத்திற்கு அருகில் உள்ள ஊர் திருப்பனங்காடு. இவ்வூர் இறைவன் பெயரும், திருபனங்காடுடையார் என்பதே ஆகும். இவ்வூர் கல்வெட்டுக்களுள் காலத்தால் முந்தியது முதலாம் இராஜேந்திர சோழனுடையதே. இவ்வூர்க் கல்வெட்டொன்றில் நீட்டலளவை ஒன்றின் நீளம் குறியிட்டுக் காட்டப்பட்டிருக்கிறது. அதன் இரு ஓரங்களிலும் பனைமரம் வரையப் பட்டுள்ளது. இன்னொரு கல்வெட்டில், உயிருள்ள பனைமரத்தை வெட்டுபவர்கள் தண்டனைக்குள்ளாவார்கள் என்ற அரச ஆணையைக் குறிப்பிடுகிறது. மேற்கூறிய இரு கல்வெட்டுகளும், எவர் காலத்தில் பொறிக்கப்பட்டதெனத் தெரியவில்லை.

 

இம்மூன்று ஊர்களிலும் பனை மரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பதாலும், பனைமரத்தை வெட்டுதல் கூடாது என அரச ஆணை பிறப்பித்திருப்பதாலும் திருப்பனங்காடு என்ற இந்த ஊரும் இராஜேந்திரன் பரவை நினவாக இராஜேந்திரனாலோ, அவன் காலத்தில் பிறராலோ ஏற்படுத்தப்பட்ட ஊராக இருக்கலாம். மேற்கூறிய இம்மூன்று ஊர்களிலும் பனைமரம் முக்கியப் பங்கு வகிப்பதும் அம்மரத்தை வெட்டுதல் கூடாது என அரச ஆணை பிறப்பித்திருப்பதும் எக்காரணத்தால் என்பது தெரியவில்லை. காதலுக்கும் பனைமரத்திற்கும் அல்லது இராஜேந்திரன் பரவைக்கும்--பனை மரத்திற்கும் ஏதோ தொடர்பிருத்தல் வேண்டும்.

 

புற நானூற்றில் நக்கண்ணையார் என்றவொரு பெண்பாற்புலவரால் பாடப்பட்ட பாடல்கள் காணப்படுகின்றன. இவர் அதன் தலைவன் மல்யுத்தமிடுவதைக் கண்டு ரசிப்பதாக ஒரு பாடல் அமைந்திருக்கிறது. அதில்,

 

"அஞ்சிலம் பொலிப்ப எம்மில்
முழாவரைப் போந்தை பொருந்தி நின்று
யான் கண்டனனே அவன் ஆடாகுதலே!*1

 

என முடிகிறது, அப்பாடல்.புறநானூற்றுப் பாடல் என்றாலும் தன் தலைவன் மல்லிடுவதைக் காதலுடன் நின்று ரசிக்கிறாள் தலைவி.

 

தனிப்பாடல் ஒன்று திருப்பனங்காட்டம்மைச்சி பற்றிக் கூறுகிறது.

 

"கலைமகளு நாணி நின்று கைகட்டிப் போற்றச்
சிலை மதவேள் முன் கணையே தாங்கக் குலமருவு
கொம்மைச் சிங்கார முலைக் கோதிறிருப்பனங்காட்
டம்மைச்சி வந்தாளதோ.*2

 

எனப்பாடப்பட்டிருக்கும் இப்பெண் பரவையாகவே இருத்தல் வேண்டும். திருப்பனங்காட்டுக் கோயிலில் பரவைக்கு மற்ற ஊர்களில் சிலை எடுத்திருப்பதைப் போல எடுக்கப் பட்டிருத்தல் வேண்டும். அச்சிலையைப் பற்றிய பாடலாகவே மேற்கூறிய இப்பாடல் அமைந்திருத்தல் வேண்டும்.

 

ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளை*3 ஒரு தனிப்பாடல் வில்லிப்புத்தூரம்மை எனக் கூறி வர்ணித்திருப்பது போலப் பனங்காட்டில் கோயில் கொண்டிருக்கும் பரவையை ஏன் அத்தனிப்பாடல் வர்ணித்திருத்தல் கூடாது. அப்படியாயின் கலைமகளும் நாணி நின்று போற்றும்படியும், சிலை மதவேள் இவள் முன் கணையைத் தாங்குமளவும் அழகிய உருவம் பொருந்திய திருபனங்காட்டம்மைச்சியை வர்ணித்திருப்பதிலிருந்து தெய்வமாகிவிட்ட ஒரு மானிடப் பெண்ணைத்தான் எனத் தெரிய வருகிறது.

 

எனவே--திருப்பனங்காட்டம்மைச்சி--கல்வி கேள்விகளில் சிறந்த காதலின் மேன்மையை உணர்ந்த அழகிய பரவையாக இருக்கலாம்.

 

பரவைபுரம் என்ற பனயாவரத்தைப் போலவே திருப்பனையூர், திருப்பனங்காடு ஆகிய ஊர்களும் இராஜேந்திரன் --பரவை காதலின் நினைவாக--காதல் சின்னமாக அமைக்கப்பட்ட ஊர்களாக இருக்கலாம்.

 


அடிக்குறிப்புகள்:


1. புறநானூறு பாடல் எண்; 85


2. பெருந்தொகை பக். 387 பாடல் எண்: 1685

 

3. மெல்லிய பஞ்சவடியுந் துவராடையும் மேகலையும்
வல்லியை வென்ற மருங்கு முத்தார வன முலையும்
சொல்லியல் வன்மையும் வில்லிப் புத்தூரம்மை தோளழகும்
முல்லை வென்ற நாகையுமெல்லா மென்றன் முன்னிற்குமே.

பெருந்தொகை பக். 430 பாடல் எண்: 1884



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

சோழர் கால சமயம்--பகுதி 4--சோழ கிரந்தம்

 
 
 

எழுத்து: டாக்டர் பத்மாவதி


சோழ கிரந்தம்


கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்கு முன்பிருந்தே தமிழகத்தில் உள்ள குகைத் தளங்களிலும் காசுகளிலும் பானை ஓடுகளிலும் களிமண் தகடுகளிலும் பழங்காலத் தமிழ் வரிவடிவ எழுத்துக்கள் கிடைத்துள்ளன. இதனை பிராமி என்றும் தமிழி என்றும் அழைப்பர். இந்த வரிவடிவத்திலிருந்து தான் காலம் செல்லச் செல்ல மாற்றங்கள் ஏற்பட்டு இன்றைய வளர்ச்சி நிலையை அடைந்துள்ளது தமிழ் எழுத்து. பழந்தமிழ் எழுத்தாகிய தமிழ் வடிவத்தில் வளர்ச்சியடைந்து மாற்றம் ஏற்பட்டபோது அதிலிருந்து தமிழ் எழுத்து வடிவமும், வட்டெழுத்து வரி வடிவமும் தோன்றியது.


வடமொழியை எழுத கிரந்த எழுத்துக்களும் நாகரி எழுத்துக்களும் பயன்படுத்தப் பட்டு வந்தன. இந்த எழுத்து வடிவங்களும் பிராமி என்ற பழந்தமிழ் வரி வடிவத்திலிருந்து தான் தோன்றி வளர்ந்தன. கிரந்த எழுத்து தமிழ் நாட்டில் வளர்ந்தது.நாகரி எழுத்து வட இந்தியாவில் தோன்றி வளர்ந்தது என்கிறார் திரு. டி.வி. மகாலிங்கம். நாகரி என்ற புதிய எழுத்தின் வரவிற்குப் பிறகு இம்மண்ணில் தோன்றி வளர்ந்த கிரந்தம் மெல்ல மெல்ல மறையலாயிற்று.


தமிழ் பிராமி வரி வடிவம் தமிழ் மொழிக்காக உருவானது; வடமொழி எழுதுவதற்காக உருவானதல்ல.பின்னர் வடமொழியும் பிறமொழிகளும் தமிழ் எழுத்தைப் பயன்படுத்தத் துவங்கிய போது அந்தமொழிகளுக்குள்ள சிறப்பான ஒரு வடிவமும் தமிழில் தோன்றியது.*2


அசோகன் பிராமி எழுத்துக்களில் தான் அவனது பிராகிருத மொழி கல்வெட்டுகள் எழுதப் பட்டன. அந்த எழுத்தில் வர்க்க எழுத்துக்கள் உண்டு. அசோகனது கல்வெட்டுகள் தென்னிந்தியாவிலும், மாங்கி, சித்தாபுரம், பிரம்மிகிரி, ஏற்றகுடி, ராஜூல மந்தகிரி போன்ற இடங்களில் பிராகிருத மொழியிலேயே கிடைத்துள்ளன. காஞ்சியை ஆண்ட பல்லவர்களின் ஆரம்ப காலச் செப்பேடுகள் கூட பிராகிருத மொழியிலேயே உள்ளதால் அவர்களது நிர்வாக மொழி பிராகிருதமாகவே இருந்திருக்கிறது. சமஸ்கிருத மொழி கி.பி. முதல் அல்லது இரண்டாம் நூற்றாண்டில் தான் இந்தியாவின் வடமேற்குப் பகுதிகளில் காணப்பட்டது என்றும் பின்னர் படிப்படியாக பிற இடங்களுக்கும் பரவியது. இதன் பிறகும் நீண்ட நாட்களாக பிராகிருத மொழியின் தாக்கம் முற்கால சமஸ்கிருத மொழி கல்வெட்டுகளில் இடம் பெற்றிருந்தது. இறுதியாக கி.பி. 4-ஆம் நூற்றாண்டில் முற்றிலும் மறைந்தது. *3


பிராகிருத மொழி இலக்கணம் மிகவும் எளிதான அமைப்பை உடையது.அதனை உள்ளடக்கிய வடமொழி பிராகிருதம் ஆட்சி மொழியாக இருந்ததையும் நிறுத்தியது.*4


அசோகன் பிராமி எழுத்துக்களில் உள்ள "ம" என்ற எழுத்தின் வரிவடிவம் பல்லவனது மாமண்டூர் கல்வெட்டிலுள்ள "ம' என்ற கிரந்த எழுத்தின் வரி வடிவத்தோடு ஒத்துள்ளது. கி.பி. 7,8-ஆம் நூற்றாண்டுகளில் மிக அதிகமாகக் கிரந்தக் கல்வெட்டுகள் கிடைக்கின்றன. இக்கல்வெட்டுக்களிலும் இந்த வரிவடிவமே காணப்படுகின்றது.*5


தற்போது திராவிட மொழிகளுக்கும் ஆரிய மொழிகளுக்கும் எழுத்துமுறை அரிச்சுவடி, (Alphabet) ஒன்றாகவே உள்ளதற்குக் காரணம் ஆரியர்கள் இந்தியாவுக்கு வந்த பின்னர் ஆரிய--திராவிட கலப்பிற்குப் பின்னர் தோன்றியதே இவ்வெழுத்து முறையாகும் என்கிறார், திரு மு.க. ஜகந்நாதராஜா.


ஆரிய--திராவிடக் கலப்பின் விளைவாக வேத மொழியில் திரிபுகள் ஏற்பட்டு மக்கள் பேசும் மொழி வேறாகவும் வேதம் ஓதி வந்த பிராமணரின் பண்டித மொழி வேறாகவும் ஆகி விட்டது. இன்றைக்கு 3,000 ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் பேசிய மொழியினின்றும் பிரித்தறிய செம்மைப் படுத்திய வேதமொழிக்கு சமஸ்கிருதம் எனப் பெயரிட்டனர்.


வேதமொழி மக்கள் மொழியாகத் திரிந்தபோது பிராகிருதம் ஆயிற்று.


வேதமொழி அறிஞர் மொழியாக அமைந்த போது சமஸ்கிருதமாகியது.


இது பொதுவாக எல்லோராலும் ஏற்கப் பட்ட கருத்து. பாலி மொழி பிராகிருதத்தின் ஒரு முன் வடிவம், என்று கூறும் மு.க. ஜகந்நாத ராஜ, கி.மு. 100 முதல் கி.பி. முதல் நூற்றாண்டு வரை இருந்த பிராகிருத மொழிக்குப் பாலி என்று பெயர் என்றும் இது புத்தர் கால மொழி என்றும் கூறுகிறார்.*6


திரு தி. நா. சுப்பிரமணியன் அவர்கள் கிரந்த எழுத்துக்கள் பற்றிக் கூறுகையில், தமிழகத்தில் சமஸ்கிருத மொழியை எழுதுவதற்குப் பயன்படுத்தப்பட்டு வரும் எழுத்திற்கு கிரந்தம் என்று பெயர். அம்மொழியில் கிரந்தம் என்றால் ஒரு இலக்கிய நூல் என்றும் பொருள் என்கிறார். மேலும், ஒரு காலத்தில் தென்னிந்தியா முழுவதும் கிரந்த எழுத்து வழக்கத்தில் இருந்தது. பின்னர் மலையாளம், துளு போன்ற மொழிகள் சமஸ்கிருத மொழி இலக்கணங்களையும் சொற்களையும் எடுத்துக் கொண்டு தனி எழுத்துக்களாகி விட்டன. தொடர்ந்து தமிழ்நாட்டில் பயன்படுத்தப் பட்டு வந்தது என்றும் கூறுகிறார்.*7


தென்னிந்தியாவில் கிரந்த எழுத்துக்களின் வளர்ச்சியை நான்கு கட்டமாகப் பிரிக்கிறார் தி.ந. சுப்ரமணியம்.


1. பழைய கால எழுத்துக்கள் (Archaic) கி.பி. 7-ஆம் நூற்றாண்டிற்கு முந்தியவை.


2. வரிவடிவம் வேறுபடும் கால எழுத்துக்கள் மாற்றத்திற்குட்பட்ட காலம் (Transition) கி.பி. 650--950


3. இடைக்கால எழுத்துக்கள் (Mediaeval) கி.பி. 950--1250


4. தற்கால எழுத்துக்கள் (Modern Period)


முதலாம் மகேந்திரவர்மன் கிரந்த எழுத்துக்களை மண்டகப் பட்டு, மகேந்திரவாடி, சீயமங்கலம், தனவானூர் ஆகிய ஊர்களில் சாதாரண முறையிலும், திருச்சி மலைக்கோட்டையில் அழகுபடுத்தப்பட்ட முறையிலும் எழுதினான்.*9


மாமல்லை தர்மராஜரதம், காஞ்சி கைலாச நாதர் கோயில் போன்றவற்றில் பலவகையாக அழகுபடுத்தப் பட்ட கிரந்த எழுத்துக்கள் காணப்படுகின்றன.


பின்னர் கிரந்த எழுத்து வடிவங்களில் மாற்றம் ஏற்படத் தொடங்கியது. (Transition). இம்மாற்றத்தை பிற்காலப் பல்லவர்கள், பாண்டியர்கள் காலத்திலும், சோழர்களில் முதலாம் இராஜராஜன் காலம் வரையிலுமுள்ள எழுத்துக்களிலும் காணலாம், என்கிறார் தி.ந.சுப்ரமணியன். இவ்வகை எழுத்துக்கள் ஓலைச் சுவடிகளில் எழுதுவதற்கு ஏற்றதாக இருந்தன என்றும் கூறுகிறார்.இந்தக் காலகட்ட எழுத்துக்களில் ஏற்பட்டிருந்த மாற்றத்தைப் பற்றி பதிநான்கு குறிப்புகளைத் தருகிறார் அவர். அவற்றுள் குறிப்பிடத் தக்கன, சுலபமாக எழுதுவதற்கு ஏற்றவாறு முன்னர் இடப்பக்கமாக ஆரம்பிக்கப் பட்டதும், பின்னர் வலப்பக்கமாக ஆரம்பிக்கப்பட்டதும், haa, bha.
போன்ற எழுத்துக்களில் ஏற்பட்ட மாற்றத்தையும், ஆ, இ, ஐ, ஒள--அகிய எழுத்துக்கள் மெய்யெகழுத்துக்களிலிருந்து முழுவதுமாகப் பிரிந்து விட்டதையும் கூறுகிறார்.*10


இடைக்காலத்தைச் சேர்ந்த எழுத்துக்களாக (Mediaeval) சுந்தர சோழனின் அன்பில் செப்பேடுகள், ராஜசிம்ம பாண்டியனின் சின்னமனூர் பெரிய செப்பேடு, ராஜராஜனின் காஞ்சிபுரக் கல்வெட்டு ஆகியவற்றைக் கூறுகிறார். திரு தி.ந.சு. மேற்கூறிய சாசனங்கள் கி.பி. 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. முதலாம் இராஜேந்திர சோழனின் திருவாலங்காட்டுச் செப்பேடு கி.பி. 1052-ஐச் சார்ந்தது என்று கூறும் அவர், மேற் கூறிய சாசனங்களில் இடைக்கால கிரந்த எழுத்துக்களின் வடிவங்களைக் காணலாம் என்கிறார். மேலும் விக்கிரம சோழனின் செவிலிமேட்டுக் கல்வெட்டிலும் இவ்வகை எழுத்துக்களைக் காணலாம் என்கிறார். இக்கால கட்டத்தின் முக்கியக் கூறுகள் பற்றியும் தெளிவு படுத்தியுள்ளார். *11


1.ga, bha, ha--என்ற எழுத்துக்கள் இடது புறத்தினடியில் ஓரத்தில் முடிகிறது.


2. kha, ca, tha, dha, ba---என்ற எழுத்துக்களில் உள்ள மேல் வளைவுகள் நெருங்கியிருந்து விசாலமாகியது.


3. Ma--என்பதன் மேல்பகுதி முற்றிலும் அடைப்பாக மாறியது.


4.Ya--என்ற எழுத்திலுள்ள இடதுபுற வளைவு மறைந்து பழைய நிலைக்கே திரும்பியது.


5. Ka, ta, na, ra--என்ற எழுத்துக்கள் மேல் நேர்கோடு சில சமயங்களில் இடதுபுறம் கீழ் நோக்கி வளையும்.


6. ta--என்ற எழுத்தின் கீழுள்ள வால் நீளமாகியது.


7.la---என்ற எழுத்து மேல் வளைவு கனமாகவும் கீழ் நோக்கிய வளைவு குட்டையாகவும் மாறியது.


8. i--என்ற எழுத்து இடப்புறத்திலிருந்து வலப்புறமாக மாறியது.*12


ஆரியம் விராய்த் தமிழ் கொடுத்ததாகப் பாண்டியரின் தனவாய் புரச் செப்பேடு கூறுகிறது.*13


இடைக்காலத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படும் சின்னமனூர் பெரிய செப்பேட்டின் சுலோகப் பகுதியில் சில முக்கிய பகுதிகள் குறிப்பிடத் தக்கன. அது தமிழ் மொழியின் சிறப்பு எழுத்துக்களாகிய "ழ" "ற" என்னும் எழுத்துக்கள் சமஸ்கிருதத்தில் கிரந்த எழுத்துக்களுடன் சேர்த்து எழுதப் பட்டிருப்பது தான். அப்பகுதிகளைக் கீழே காணலாம்.


வரி 58--இல்:


ராஜசிம்ம குளக்கீழித்யுக்தே ராஷ்ட்ரே

(ராஜசிம்ம குளக்கீழ் என்று சொல்லப் பட்ட நாட்டில்) வரி 59-இல்

சூழலாக் யோஜ்வலம்

(சூழல் என்னும் பெயரால் விளங்கும்) வரி 60--இல்

அழ நாட பாஜம்

(அழல் நாட்டைச் சேர்ந்த)வரி 68--இல்

கூற்றங்கோனா ஹ்வயோ

(கடற்றங்கோன் என்ற பெயருள்ள) வரி 69--இல்

கீழ் வேம்ப நாடாபிஜ நஸ்ய

(கீழ் வேம்ப நாட்டில் பிறந்த)


பல்லவர் செப்பேடுகள் முப்பது--என்ற நூலைப் பதிப்பித்த திரு தி.நா. சுப்பிரமணியன் அவர்கள் க்ஷகரம் என்ற எழுத்தைப் பற்றிக் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகின்றார்.


"க்ஷகரம் ஒரு தனி எழுத்து இல்லை என்பது உண்மைதான். அது கூட்டெழுத்தே.எனினும் தமிழ்நாடு சம்பந்தப் பட்டவரையில் கிரந்த நெடுங்கணக்கிலே அது ஒரு தனி எழுத்தாகவே கருதப்பட்டு வந்திருக்கிறது. சிறுவர்களுக்குக் கிரந்த எழுத்தைக் கற்பிக்கும் பால பாடத்திலே க்ஷகரம் மெய்யெழுத்துக்களில் கடைசி எழுத்தாகக் கொடுக்கப் பட்டிருக்கும். ஸம்ஸ்கிருத நெடுங்கணக்கு எழுத்துக்களை மொத்தமாகக் குறிக்கும் போது


"அகாராதி க்ஷகாராந்தம்"
(அகரம் முதல் க்ஷகரம் முடிய)

என்று குறிப்பிடுவது வழக்கம். அதிலிருந்து க்ஷகரம் கிரந்த நெடுங்கணக்கின் கடைசி எழுத்து என்பது தெளிவாகும். எழுத்தைக் குறிக்கும்,"அக்ஷரம்" என்னும் சம்ஸ்கிருதச் சொல்லும் அவ்விதம் அமைந்ததே என்றும் கூறலாம்' என்கிறார்.


அடிக்குறிப்பில்,


உயிரும் மெய்யுமாக சமஸ்கிருத நெடுங்கணக்கு மொத்தம் 49 எழுத்துக்களைக் கொண்டது என்பர். ஆனால் தமிழ்நாட்டிலோ அதிகப்படியான எழுத்துக்களைக் கொண்டு 51 எனவும் 52 எனவும் இருவிதமாகக் கொள்ளப் படுகிறது.நாற்பத்தொன்பதுடன், ள, க்ஷ ஆகிய இரண்டையும் சேர்த்து 51 ஆகக் கருதுவர். "ஷ்ப" என்ற எழுத்தையும் சேர்த்து ஐம்பத்திரண்டாகவும் கருதுவர்--என்கிறார்.


சமஸ்கிருதத்தில் 'க' காரத்துடன் தொடங்கும் சொல்லுக்கு முன் வரும் பாதி விஸர்க்கம் ஜிஹ்வா மூலியம் என்றும், 'ப'காரத்திற்கு முன் வரும் பாதி விஸர்க்கம் உபத்மாநீயம் என்றும் சொல்லப் படும்.*14


சோழர் காலக் கல்வெட்டுகளில் தமிழ் கிரந்த எழுத்துக்கள் எவ்வாறு வளர்ச்சியுற்றிருந்தது என்பதை திரு டி.ஏ.கோபிநாதராவ் கூறியுள்ளார். ஆனால் கிரந்த எழுத்துக்கள் பற்றிக் கூறுகிறபோது பல எழுத்துக்களை அசோகன் காலத்தில் எவ்வாறு வடிவம் கொண்டிருந்தது என்பதையும், அதே எழுத்துப் பல்லவர் காலத்திலும் பின்னர் சோழர் காலத்திலும் எவ்வாறு மாற்றமடைந்தது என்பதையும் விளக்கியுள்ளார்.*15


ஆரியம் விராய் தமிழ் தொடுத்ததைப் பாண்டியர் செப்பேடு கூறியது போல சோழர்காலத்திலும் கிரந்த எழுத்தில் எழுதப்பட்டுள்ள சமஸ்கிருதச் சொற்கள் கலந்தே தமிழ்க் கல்வெட்டுகள் வடிவமைக்கப்பட்டிருந்தன. செப்பேடுகளில் முதல் பகுதி சமஸ்கிருத மொழியில் கிரந்த எழுத்திலும் செப்பேடு வெளியிடக் காரணமான செய்தியைக் கூறவரும் இரண்டாம் பகுதி தமிழ் எழுத்திலும் அமைந்திருக்கும்.இதிலும் சமஸ்கிருதச் சொற்கள் கலந்தே எழுதப் பட்டிருக்கும்.பல்லவர், பாண்டியர்களை அடுத்துச் சோழர்களும் அப்படியே மேற்கூறியவாறு பின் பற்றினர். ஆனால் பாண்டியர்கள் மட்டும் தமிழ் பகுதியை வட்டெழுத்தில் எழுதினர்.


பிற்காலச் சோழர்களில் முதலாமவனான விஜயாலய சோழனின் கல்வெட்டாகக் கருதப் படும் திருப்பூந்துருத்திக் கல்வெட்டிலும் *16 கிரந்த எழுத்துக்கள் கலந்து எழுதப் பட்டிருக்கின்றது. கோப்பரகேசரி, என்பதி கேசரி--மஹாதேவர், சபையோம், பன்மாஹேஸ்வர ரக்ஷை ஆகிய பகுதிகள் கிரந்த எழுத்துக்களில் காணப்படுகின்றன.


கி.பி. 7-ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் கிரந்த எழுத்துக்களில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன என்பதைத் தான் தி.ந.சு. அவர்கள் 2-ஆம் காலகட்டத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்தக் காலகட்டம் கி.பி. 650 முதல் 950 வரை எனக் கூறுகிறார். இந்தக் கால கட்டத்திற்குள் சோழ மன்னர்களாகிய விஜயாலயன், முதலாம் ஆதித்த சோழன், கண்டராதித்த சோழன், முதலாம் பராந்தக சோழன், உத்தம சோழன் ஆகியோர் காலம் அடங்குகிறது. இவர்கள் காலக் கல்வெட்டுக்களில் உள்ள கிரந்த எழுத்துக்களை ஒப்பிட்டுப் பார்த்தால் பல வேறுபாடுகள் இருப்பதைக் காண முடிகிறது.


உதாரணமாக --ம--என்ற எழுத்தை எடுத்துக் கொண்டால், விஜயாலயன், முதலாம் ஆதித்த காலத்தில்*17 "ம" என்ற எழுத்தின் கிரந்த வரிவடிவம் எப்படி யிருந்தது என்பதையும், அதைப்போல முதலாம் ப்ராந்தக சோழன்*18, கண்டராதித்த சோழன்*19, சுந்தர சோழன்*2, உத்தம சோழன்*21 ஆகியோர் காலங்களில் எவ்வாறெல்லாம் 'ம' என்ற கிரந்த வரிவடிவம் வேறுபட்டிருந்தது என்பதைத் தெளிவு படுத்தியிருக்கிறார்.


இதைப் போல பிற எழுத்துக்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால் வித்யாசங்களை அறிய முடிகிறது. எனவே இந்தக் காலகட்டத்தில் வேறுபடுகிறது என்று கூறியது மிகவும் பாராட்டிற்குரியது--


சோழர் கல்வெட்டுக்களில் கும்பகோணம் நாகேஸ்வரன் கோயில் முதலாம் பராந்தக சோழனின் கல்வெட்டு இருமொழியில் அமைந்தது.*22 தமிழ்ப் பகுதி முழுவதும் கிடைக்கவில்லை. சமஸ்கிருதப் பகுதிலிருந்து தான் செய்தியை அறிந்து கொள்ள முடிகிறது. அப்பகுதியில் காசுகள்--நிஷ்கா எனக் குறிப்பிடப் பட்டுள்ளது.திருமால்புரம் கல்வெட்டும்*23 இருமொழியிலமைந்த கல்வெட்டேயாகும். இதில் திருமாலை--கம்சாரி--என்கிறது கிரந்தப் பகுதி. மூன்றாம் குலோத்துங்கனைப் பாண்டியாரி என்கிறது திரிபுவனம்கல்வெட்டு.*24 பேரங்கியூர் கல்வெட்டில் இறுதியிருவரிகள் கிரந்தத்தில் உள்ளன. கோயில் தேவராயன் பேட்டையில் முதலாம் ஆதித்த சோழனின் கல்வெட்டொன்று முதல் பாதி கிரந்தத்திலும் பின் பாதி தமிழிலும் உள்ளது.*25 இதில் குறிப்பிடத் தக்கதாக ஒரு ஊரின் பெயர் காணப்படுகிறது. வடமொழிப் பகுதியில் கால கிராமம் என்று கூறப்பட்டுள்ள ஊர், தமிழ்ப் பகுதியில் கூற்றமங்கலம் என்று கூறப்பட்டுள்ளது. கால=கூற்ற: கிராமம்=மங்கலம். அக மங்கலம்--ஊர் அமைப்பைக் குறிக்கக் கூடிய மற்றொரு வார்த்தை எனப்புரிகிறது.அதாவது ஊர் என்ற தமிழ்ச் சொல், வடமொழியில் கிராமம் என்றும், பிராகிருதத்தில் காம--என்றும் கூறப்படும்.மொத்தத்தில் ஊர், கிராமம், காம, ஆகிய சொற்களுடன் 'மங்கலம்' என்பதும் ஊரைக் குறிக்கிறது.

 

இக்கல்வெட்டில் முதல் ஒன்பது வரிகள் கிரந்தத்திலும் 10 முதல் 22-வது வரி வரை தமிழும் கிரந்தமும் கலந்தும் 23 முதல் 25 வரை முழுவதும் கிரந்தத்திலும் காணப்படுகிறது. மார்கழி திருவாதிரை யன்று இரவில் ஜைமினிகள் சாம வேதத்து மேற்பாதத்து ஒரு துருவும் கீழ் பாதத்து ஒரு துருவும் தவறில்லாமல் சொல்லும் ஒருவர்க்கு மூன்று காசுகள் அளிப்பதற்காக நிவந்தமளிக்கப் பட்டிருந்ததை அக்கல்வெட்டு கூறுகிறது. இது போன்று பல கல்வெட்டுகளைக் கூறலாம். இருமுறையில் கல்வெட்டுகள் எல்லாம் கிரந்தம் கலந்த மணிப் பிரவாள நடையிலேயே காணப்படுகிறது. சோழர்கள் சமஸ்கிருத மொழியை எழுதக் கல்வெட்டிலும் செப்பேட்டிலும் கிரந்த எழுத்தையே பயன்படுத்தினர். நாகரி எழுத்தைப் பயன்படுத்தவில்லை. ஆனால் சில நாணயங்களில் மட்டுமே பயன்ப்டுத்தியுள்ளனர்.


சோழர்கள் தங்களாட்சியை சைவத்தின் அடிப்படையில் தேவார மூவரின் அடியொற்றி அமைத்திருந்தனர். அப்பர் தேவாரத்தில் கூறியது போல ஆரியத்தையும், தமிழையும் சமமாகப் பாவித்தனர். காரணம் அவர்களுக்கு அரசியல் ரீதியில் இச்செய்கை இன்றியமையாதது ஆயிற்று.


பெளத்த சமண மதங்களை எதிர்த்து, அதற்கு மாற்றாக சைவ வைணவ சமயங்களையும், பாலி--பிராகிருத மொழிகளுக்கு மாற்றாக தமிழையும் சமஸ்கிருதத்தையும் முன் வைத்தனர் தேவார மூவர். சமய குருக்களையும், ஊராட்சி நிர்வாகத்திற்குப் பிரமதேயம் மூலம் அந்தணர்களையும், பெரும்பகுதி நம்பியிருந்தனர் சோழர்கள். ஆதலால் அவர்களது மொழியான சமஸ்கிருதத்தையும் ஆதரிக்க வேண்டிய கட்டாயத்திலிருந்தனர்.


ராஜகுருக்கள் கோயில் நிர்மாணப்பணிகளில் ஈடுபட்டிருந்ததையும் கல்வெட்டுகள் மூலமாக அறிய முடிகிறது. அத்தகைய கல்வெட்டுகள் அனைத்தும் கிரந்தக் கல்வெட்டுக்களேயாகும். இந்த ராஜகுருக்கள் ராடதேசம், கெளடதேசம் போன்ற பகுதிகளிலிருந்து வந்தவர்கள். இப்பகுதிகள் மேற்கு வங்காளத்தில் உள்ளன.


முதலாம் இராஜ ராஜ சோழனது ராஜகுரு தஞ்சைப் பெரிய கோயில் கலசத்தைத் தானமளித்தார்.*26 அச்சுதமங்கலத்தில் ஶ்ரீகண்ட சம்பு என்ற குரு அவ்வூர்க்கோயிலைக் கட்டினார்.*27 இவரது மகன் ஈச்வர சிவர் என்ற சோமேஸ்வரர் மூன்றாம் குலோத்துங்கனுக்கு ராஜகுருவாக விளங்கினார். அவர் கட்டிய திரிபுவனம் கோயிலில் சிவனையும் பார்வதியையும் பிரதிஷ்டைச் செய்தார். ராஜகுரு ஈச்வரசிவர். அச்சுதமங்கலம் கோயிலைக் கட்டிய ஶ்ரீகண்ட சம்புவின் புதல்வர் சைவ தர்சனங்களை முழுவதும் அறிந்தவர். 18 வித்தைகளைக் கற்றவர். உபநிஷதங்களுக்கு விளக்கம் அளிக்க வல்லவர். இவர் எழுதிய நூல்தான் சித்தாந்த ரத்னாகரம் என்ற சைவ சமயத்தைப் பற்றிய நூலாகும்.*28


முதலாம் இராஜேந்திர சோழனின் ராஜகுரு சர்வ சிவ பண்டிதர் எண்ணாயிரம் அருகே எசாலத்தில் கோயில் கட்டினார்.*29 இம்மன்னன் காலத்தில் தான் திருவொற்றியூர் கோயில் கற்றறியாகக் கட்டப் பட்டது. இச்செய்தியக் கூறும் கல்வெட்டும் கிரந்தக் கல்வெட்டாகும்.


கல்வி, கேள்விகளில் சட்ட நுணுக்கங்களில் போர் பயிற்சியில் சிறந்திருந்த அந்தணர்களை உயர்ந்த நிர்வாகப்பதவியில் சோழர்கள் அமர்த்தினர். ஆதலாலும், அரசியல் நிர்வாகம், சமய நிர்வாகம், சமூக நிர்வாகம், பொருளாதார நிர்வாகம் படை நிர்வாகம் போன்ற நிர்வாகப் பணிகளில்அவர்களே பங்காற்றும் சூழல் அமைந்திருந்தது. ஆதலாலும் சாசனங்கள் எல்லாம் மேற் கூறிய வகையில் அமைந்திருந்தன எனலாம். இது தவிர்க்க முடியாததாயிற்று. விஷ்ணு கோயில்களிலேயே பாடசாலை நடந்தது. மருத்துவமனையும் செயல்பட்டது. என்றாலும் சோழர்காலங்களில் பல்லவர்கள் போற்றி நடத்தி வந்த கடிகை என்னும் கல்லூரிகளைக் காண முடியவில்லை. இக்கடிகைகள் முழுக்க முழுக்க வேதங்கள், புராணங்கள், ஆயுதப் பயிற்சி, நீதி நூல்கள் பயிற்சி போன்றவற்றை சமஸ்கிருத மொழியில் கற்றுத் தரும் நிறுவனமாகும்.


சோழர்களின் பிரமதேய ஊர்களில் கிராமசபை நடவடிக்கைகள் பற்றிக் கூறும் இரு முக்கியக் கல்வெட்டுகளும் தொண்டை மண்டலத்தில் தான் உள்ளன. முதலாம் பராந்தக சோழனின் திருநின்றஊர் கல்வெட்டு கிரந்த எழுத்திலேயே உள்ளது.உத்தரமேரூர் கல்வெட்டு கிரந்தம் கலந்த தமிழ் கல்வெட்டாகும்.


முதலாம் இராராஜ சோழன், அவன் மகன் முதலாம் இராஜேந்திர சோழன் ஆகியோர் காலத்தில் கிரந்த எழுத்துக்களும் தமிழ் எழுத்துக்களும் மிகவும் செம்மைப் படுத்தப் பட்டனவாக அமைந்துள்ளன.


சோழர் கல்வெட்டு ஒன்றிலுள்ள கிரந்தப் பகுதியில் ஆதிசங்கரர் எழுதிய பிரம்மசூத்ரம் பற்றிக் குறிப்பிடப் பட்டுள்ளது. திருச்சி அருகேயுள்ள சோழமாதேவி என்ற ஊரிலுள்ள சிவன் கோயிலில் உள்ள கல்வெட்டுகளில் ஒன்று வீர ராஜேந்திரன் காலத்தைச் சேர்ந்தது. அக்கல்வெட்டில் சங்கரர் எழுதிய பிரம்ம சூத்திரத்திற்கு சிதானந்த பிடாரர் என்பவர் ஒரு உரை எழுதிய புதிய செய்தி கூறப்படுகிறது.*30 இச்செய்தி இதுவரை அறியப் படாததாகும். இந்த உரையை, சோழமாதேவி என்ற ஊரின் பிரம்மஸ்தானத்தில் அமர்ந்து கொண்டு விளக்கம் அளிக்க வேண்டும்--என்பதற்காக ஒரு ஆசிரியருக்கு விருத்தியால நிலமளிக்கப்பட்ட செய்தி கூறப்படுகிறது. சங்கரரை இக்கல்வெட்டு 'பகவத்' என்றும் அவர் உரையை--சாரீரக பாஷ்யம்--என்றும் கூறுகிறது. அதாவது 'பகவத் பாதீயம் சாரீரக பாஷ்யம்'-- என்று காணப்படுகிறது. விஷ்ணு கோயில்களில் மகாபாரதம் படித்து விளக்கமளிக்கப் பட்டதைப் பல கல்வெட்டுகள் கூறுகின்றன.


சோழர்களின் எழுத்துக்களில் மிகவும் புகழ் பெற்ற வாசகங்களுள் தஞ்சைப்பெரிய கோயிலில் பொறிக்கப்பட்ட சமஸ்கிருத வாசகமும் அடங்கும்.


"ஏதத் விஸ்வ நிருபஸ்ரேணி மெளலி மாலோபலாலிதம் சாசனம் ராஜ ராஜஸ்ய ராஜகேஸரி வர்மனஹ" உலகில் உள்ள மன்னர்களுடைய முடிகள் (மகுடங்கள்) யாருடைய திருவடிகளை மாலை போல அலங்கரிக்கின்றனவோ அந்த ராஜராஜ கேசரி வர்மனுடைய சாசனம் என்பதே அதன் பொருள்.


அந்த அரசன் முதலாம் இராஜராஜ சோழன் ஆவான். தஞ்சைப் பகுதியில் பல துண்டுகளாக உடைந்த சமஸ்கிருத பாடல் வடிவக் கல்வெட்டு ஒன்று கிரந்த எழுத்துக்களில் கண்டுபிடிக்கப் பட்டது. இராஜராஜனைப் புகழ்ந்து பாடப்பட்ட பாடல்களாக அவை காணப்படுகின்றன.


இராஜராஜனின் புகழ்பெற்ற ஆனைமங்கலம் செப்பேடு, கடார மன்னன் நாகப்பட்டினத்தில் கட்டிய பெளத்த விகாரைக்கு பள்ளிச் சந்தமாக நிலம் கொடுக்கப்பட்ட செய்தியைக் கூறுகிறது. இச்செப்பேடுகளில் உள்ள தமிழ்ப் பகுதியை ராஜராஜன் காலத்திலும் கிரந்தப் பகுதி அவனது மகன் முதலாம் ராஜேந்திரன் காலத்திலும் வெளியிடப் பட்டு பின்னர் வளையத்தில் கோர்க்கப் பட்டது என்றும் கூறப்படுகிறது.*31


முதலாம் ராஜேந்திர சோழனின் திருவாலங்காட்டுச் செப்பேட்டிலுள்ள கிரந்தப் பகுதியில் புராண கால மன்னர்கள் நாற்பது பேர் குறிப்பிடப் பட்டுள்ளனர்.


இவர்களில் இருபது பேர் கிரித யுகத்திலும் 17 பேர் திரேதாயுகத்திலும், இருவர், த்வாபர யுகத்திலும் வாழ்ந்தவர்களாகக் குறிக்கப்பட்டுள்ளனர் என்றும் இந்தப் பெயர்களுள் சில விஷ்ணு புராணத்தில் உள்ளதாகவும் இச்செப்பேட்டைப்பதிப்பித்துள்ள மத்திய தொல்பொருள் ஆய்வுத்துறை கல்வெட்டாய்வாளர் குறிப்பிடுகின்றார்.* 32 எனவே இச்செப்பேட்டு சமஸ்கிருதப் பகுதியை எழுதிய அறிஞன் விஷ்ணுபுராணம் போன்ற அனைத்து நூல்களிலும் வல்லவனாக இருந்தமை விளங்குகிறது.


கங்கை கொண்ட சோழபுரத்திலுள்ள முதலாம் குலோத்துங்க சோழனது கல்வெட்டொன்று முற்றுப் பெறாது காணப்படுகிறது.*33 இது ஒரு கிரந்தக் கல்வெட்டு. இந்தக் கல்வெட்டுப் பகுதியானது, கனோஜ் நாட்டைச் சேர்ந்த காகதவவல அரசனாகிய கோவிந்த சந்திரனின் செப்பேட்டினைச் சேர்ந்ததாகக் காணப் படுகின்றது. (Ep. Ind. Vol IV. p. 100) இச்செப்பேட்டுப்பகுதியைத் தலைநகரிலுள்ள கோயிலில் பொறித்திருப்பது காகதவால அரசன் கோவிந்த சந்திரனுக்கும் முதலாம் குலோத்துங்கனுக்கும் இடையே நெருக்கமான நட்புறவு இருந்ததை வெளிப்படுத்தியுள்ளது. காகதவாலா அரசர்கள் சூரிய வழிபாடுடையவர்கள். முதலாம் குலோத்துங்கனும் சூரிய வழிபாட்டைச் சிறப்பாகக் கொண்டாடியவன்.அவன் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட சூரியன் கோயில் தான் இன்று சூரியனார் கோயில் என்ற ஊரின் பெயராகவும் வழங்குகிறது.

 

மொத்தத்தில் சோழர்கள் சமஸ்கிருத மொழியையும் கிரந்த எழுத்துக்களையும் தமிழ் மொழிக்கும் எழுத்துக்களுக்கும் இணையாகப்பயன்படுத்தி வந்தனர் எனில் அது மிகையன்று.

 

அடிக்குறிப்புகள்


1.T.V. Mahalingam--Early South Indian palaeography p. 85

2. Ibid. p. 79

3. Ibid. p. 80

4. Ibid. p. 81

5. Ibid. p. 130--40

6.திரு. மு.கு. ஜகந்நாதராஜா--- தமிழும் பிராகிருதமும் பக். 12--18

7.T.N. Subramaniyan--South Indian Temple Inscriptions Vol III Part II p. 1522

8. Ibid. p. 1522

9. Ibid. p. 1523

10.Ibid. p. 1526--1527

11. Ibid.p. 1527--1535

12. பாண்டியர் செப்பேடுகள் பத்து--தளவாய்புரச் செப்பேடு வரி --215

13. பல்லவர் செப்பேடுகள் முப்பது பக். 34

14. பாண்டியர் செப்பேடுகள் பத்து. பக். 4

15.T.A.Gopinatha Rao---Travancore Archaeological series Vol I.p. 310--315.

16. S.I.I. Vol XIX No. 74

17. Ibid. No. 74

18. Ibid. No. 149

19. S.I.I.Vol.III No. 146

20. Ibid. No. 213

21. Ibid. No. 128

22. S.I.I. Vol XIX No. 431

23. S.I.I. Vol XIII No. 34

24. ARE 190/1907

25. S.I.I. Vol. XIII No. 83

26. ARE 24/1897

27. ஆ. பத்மாவதி--நன்னிலம் கல்வெட்டுகள் இரண்டாம் தொகுதி அச்சுதமங்கலம் --கல்வெட்டுகளைக் காண்க.

28. ARE: 1908/p. 80

29. Bulletin De PE cole francaise D'Extreme--orient Tome LXXVI Archaeological finds in South India Esalam Bronzes and copper plates By Dr. R. Nagaswamy--1987--paris.

30. Indian Express&Dinamani 18, May, 1991--Dr. R. Nagaswamy

31. Are 1906/p. 521

32. Ibid.p. 66

33. Are 1908 p./77--78



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

 சோழர் கால சமயம் பகுதி -3- வேத கால சபைகள்

 
 
 

எழுத்து:  டாக்டர் பத்மாவதி


வேதகாலச் சபைகள்


வேதங்களும் அதனைத் தொடர்ந்து எழுந்த பிராம்மணங்களும் மேய்ச்சல் தொழிலில் ஈடுபட்டிருந்த அக்கால ஆரியர்களின் நாகரிகம், கலாச்சாரம், அரசியல் சமயக் கருத்துக்களைத் தெரிவிக்கின்றன. இவற்றை ஆய்வு செய்தாலன்றி பிற்கால அரசியல், சமூகப் பண்பாட்டு வரலாற்றினை நம்மால் சரியாகப் புரிந்து கொள்ள முடியாமற் போய்விடும்.

 

ஆரியர்களால் போற்றப் பட்ட தெய்வங்களுள் ஒன்று பிரஜாபதி என்பதை வேத, பிராம்மணங்களிலிருந்து அறிந்து கொள்ளலாம். அத்தெய்வத்தின் தோற்றம், வளர்ச்சி ஆகியவற்றையும், அவசியம் பற்றியும் ஆராய்வது பல ஆய்வுகளுக்கு உதவும்.

 

விதாதா:

கங்கை நதிப் பள்ளத்தாக்கில் குடியேறி வாழ்ந்த ஆரியர்கள் ஏற்படுத்திக் கொண்ட கூட்டமைப்பு விதாதா என்றழைக்கப் பட்டது. இந்த அமைப்பில் அவ்வின மக்களின் மூத்தவர்கள் இடம் பெற்றிருந்தனர். விதாதா என்ற இந்தச் சபை.

 

1. அவர்களது நம்பிக்கையின் அடிப்படையில் யாகம் செய்யும் பணியையும்

2. தங்களுக்குள் ஏற்படும் சிறு சிறு சச்சரவுகளைத் தீர்த்து வைக்கும் பணியினையும்,

3. அம்மக்களுக்கு அபயம் தரும் அமைப்பாகவும்

4. தங்கள் செல்வங்களைப் பங்கீடு செய்து கொள்ளும் இடமாகவும் செயல்பட்டு வந்தது.*1


"கடவுள்களும் பேய்களும் சண்டையிட்டுக் கொண்ட போது, கடவுள்கள் பேய்களால் தோற்கடிக்கப் பட்டனர்." என்று கூறும் அய்த்ரேய பிராம்மணம், கடவுள்கள், தாங்கள் தோற்கடிக்கப் பட்டதற்குத் தங்களுக்கு ஒரு அரசன் இல்லாததுதான் என்று கருதி ஓர் அரசனை நியமித்து அவனுதவியால் பேய்களைத் தோற்கடித்தனர் என்றும் கூறுகிறது.*2

 

அதாவது ஆரியர்களின் அருகாமையிலும் சுற்றிலும் பல்வேறு ஆரியரல்லாத இனக்குழு மக்களும் வாழ்ந்தனர்.இவ்வினக் குழுக்களிடையே நடந்த சண்டை, கொள்ளை போன்றவைகள் ஆரியர்களையும் பாதித்தன. ஆரியர்கள் அவ்வினக்குழு மக்களால் தோற்கடிக்கப் பட்டனர். இந்நிலையில் தஙகள் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு தேவைப்பட்ட போதுதான் அரசன் ஒருவனை நியமித்துத் தங்களைப் பாதுகாத்துக் கொண்டார்கள் ஆரியர்கள். இந்த சம்பவத்தைத் தான் ஆரியர்கள் உயர்ந்தவர்கள் என்ற பொருளில் கடவுள்கள் என்றும் பிற இனக்குழுக்கள் பேய்கள் என்றும் வர்ணிக்கிறது அய்த்ரேய பிராம்மணம்.

 

பிரஜாபதி:


கடவுள்கள் பிரஜாபதியின் தலைமையில் ஒன்று கூடி மிகுந்த வீரமும் நேர்மையும் உள்ள ஒருவனை அரசனாகத் தேர்ந்தெடுத்தார்கள் என்று கூறும் தைத்ரீய பிராம்மணம், கடவுள்களுக்குள் மிகவும் கீழான நிலையிலிருந்த இந்திரன் பிரஜாபதியால் அரசனாக்கப் பட்டான் என்றும், பிரஜாபதியிடமிருந்து இந்திரன் அரசச் சின்னங்களையும் கீர்த்தியினையும் பெற்றான் என்றும் கூறுகிறது. இவ்வாறு அர்சனைத் தேர்ந்தெடுத்த அந்தப் பிரஜாபதி யார்?

 

சமிதி--சபா


ஆரியர்கள், கருத்து வேறுபாடின்றித் தங்களுக்குள் ஒருங்கிணைந்து வாழ ஏற்படுத்திக் கொண்ட அமைப்பாகிய விதாதா என்ற சபை--சமிதி, சபா என்ற இரு சபைகளை உருவாக்கியது.*3 சமிதி என்றால் போர் என்று பொருள். இந்த அமைப்பில் அரசனும் மூத்தோர் சிலரும் பங்கு பெற்றிருந்தனர். சபா--விதாதாவால் தேர்ந்தெடுக்கப் பட்ட உறுப்பினர்களைக் கொண்டிருந்தது.

 

சமிதி, சபா என்ற இரு அமைப்புக்களும் விதாதா என்ற மூல அமைப்பிலிருந்து தோன்றியது. ஆதலால் சமிதி, சபா இரண்டையும் விதாதா பெற்றெடுத்ததாகக் கூறப்படுகிறது.

 

எனவே, பிரஜாபதியின் தலைமையில் ஆரியர்களாகிய கடவுள்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட அரசன்-சமிதி, சபா இரண்டிற்கும் வணக்கம் செலுத்துவான். அப்போது, பிரஜாபதியின் இரு பெண்களாகிய சமிதியும், சபாவும் ஒற்றுமையுடன் எனக்கு உதவட்டும் என வேண்டிக் கொள்வான் என்கிறது சதபத பிரம்மாணம். சமிதி, சபா இரண்டையும் பிரஜாபதியின் இரு பெண்கள் என அதர்வ வேதமும் வர்ணிக்கிறது.

 

விதாதா என்ற தெய்வீக அமைப்பு, சமிதி, சபா என்ற இரண்டையும் பெற்றெடுத்ததாகக் கூறப்படுவதையும் பிரஜாபதியின் இரு பெண்களென சமிதி, சபா இரண்டும் வர்ணிக்கப் படுவதையும் ஒப்பு நோக்க வேண்டும்.

 

கடவுள்களாகிய ஆரியர்கள் ஒன்றிணைந்து யாகம் செய்து வழிபட்டது விதாதா என்ற சபையின் கீழ். ஆதலால் அந்த சபை தெய்வீகமாகக் கருதப் பட்டு, பிரஜாபதி என்னும் தெய்வமாக உருவகப் படுத்தப் பட்டிருக்கிறது.

 

ஆரியர்களாகிய கடவுள்கள் இந்த விதாதா என்ற சபையின் கீழ் ஒன்றிணைந்து அரசனைத் தேர்ந்தெடுத்ததால் தான் பிரஜாபதியின் தலைமையில் அரசனை நியமித்ததாகக் கூறப்பட்டுள்ளது. எனவே விதாதாவாகிய பிரஜாபதியின் இரு பெண்களே சபா, சமிதி என்பது உறுதிப் படுகிறது.

 

விதாதா--என்ற சபையின் வளர்ச்சியே சமிதி, சபா ஆதலாலும், அதற்குக் கட்டுப்பட்டவன் அரசன் என்பதாலும் அதற்கு வணக்கம் செலுத்தினான். அரசனை நியமிப்பதற்கும் நீக்குவதற்கும் இந்த சபைகளுக்கே முழு உரிமை உண்டு. அரசன் கண்டிப்பாக சமிதி, சபா கூட்டங்களில் பங்கு பெறல் வேண்டும். இந்த அரசன் மக்களுக்காகத் தேர்ந்தெடுக்கப் பட்டவனேயொழிய அரசனுக்காக மக்களல்லர் என்பதும் பெறப்படுகிறது.

 

அப்பர் தேவாரத்தில் குடந்தைப் பதிகத்தில் விதாதாவின் தலையைச் சிவபெருமான் கிள்ளியது பற்றிக் கூறப்பட்டுள்ளது. ஆகவே 'விதாதா' என்ற சபையை அப்பர் பிரம்மாவாகக் குறிப்பிட்டுள்ளது கவனத்திற்குரியது.*4 இதே விதாதாவை முந்தைய பிராமண நூல்கள் பிரஜாபதி என்கின்றன. விதாதா--என்ற சபையில் நடந்த யாகத்தின் மூலம் அக்னி வணங்கப் பட்டதால் வைதீகப் பிராமணர்கள் உருவ வழிபாட்டைக் கொண்டிருக்கவில்லை. உருவமில்லாத பிரம்மத்தையே (முழுமை) அவர்கள் அக்னியின் மூலம் வழிபட்டார்கள். இந்த பிரம்மம் பிரம்மாவாயிற்று. அதனால் தான் பிரம்மாவுக்கென்று தனிக் கோயில்கள் பரவலாக எடுக்கப் படுவதில்லை போலும்.

 

உயிரினங்களை யெல்லாம் காக்கும் இறைவன் என்ற பொருளில் பிரஜாபதி என உருவகப் படுத்தப்பட்ட விதாதா செல்வத்தின் அறிகுறியாகவும் கருதப் பட்டது. விதாதாவால் நியமிக்கப் பட்ட அரசன் வாஜபேயம், ராஜசூயம் போன்ற யாகங்கள் செய்வதன் மூலம் அவன் பிரஜாபதியாகிறான். அவன் ராஜசூய யாகம் செய்ய வேண்டுமாயின் அதற்கு முன்னர் நான்கு திசைகளிலும் போருக்குச் சென்று வெற்றி பெற்றவனாக இருத்தல் வேண்டும். அதன் பின்னர் செய்யப் படும் யாகமே ராஜசூய யாகமாகும். இதனைச் செய்துவிட்ட பின் மன்னன் பிரஜாபதியாக உயர்கிறான். ஏராளமான போர்களில் வெற்றி கொண்ட மன்னன், அங்கிருந்து கவர்ந்து வந்த ஏராளமான பொருட்களை சமிதி, சபா மூலம் பங்கீடு செய்வான்.இவ்வாறு செல்வத்திற்கும் வீரத்திற்கும் அதிபதியாக விளங்கிய அரசன் பிரஜாபதியாகவே கருதப் பட்டான். 'பிரஜாபதியின் வெளித்தோற்றமாக மன்னன் விளங்குகிறான்.' --- என்று சதபத பிரம்மாணம் கூறுகிறது. பிரஜாபதி என்றால் உயிர்களைக் காப்பவன் என்று பொருள். செல்வத்திற்கும் வீரத்திற்கும் அதிபதியாக விளங்கும் அரசன் அவற்றின் மூலம் உயிர்களைக் காப்பவனுமாவான்.

 

இவ்வாறு ஆரியர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசன், வீரத்துடன் அருகாமையிலுள்ள பிற இனக்குழுக்களிடமிருந்து அவர்களைக் காத்தும், பொருள்களைக்கவர்ந்தும் ஆரிய இனமக்களுக்கு அளித்துக் காத்தல் தொழில் புரிந்து வந்தான். வெற்றிக்கு மேல் வெற்றிகளைக் குவித்து வாஜபேய ராஜசூய யாகங்களையும் செய்து பிரஜாபதியின் மறுவுருவாகாவே கருதப்பட்டுவிட்டான் என்பது தெளிவாகிறது. சதபத பிரம்மாணம் கூறும் இக்கருத்து, "திருவுடை மன்னனைக் காணிற் திருமாலைக் கண்டேனே" என்ற ஆழ்வார் பாடல் வரியோடு ஒப்பு நோக்கத் தக்கதாக உள்ளது.

 

பிரஜாபதியின் பெண்கள்


பிரஜாபதியின் பெண்கள் எனக் கூறப்பட்ட சமிதி, சபா இரண்டையும் சுபர்ணா, சாவித்ரி என்ற பெயர்களுடன் முறையே அழைத்தனர்.*5

 

சுபர்ணா; தொடர்ந்து நீரைப் பங்கிட்டு அளிப்பவள்

 

சாவித்ரி: செல்வத்தைப் பங்கீடு செய்து அளிப்பவள்

 

நிலமகளே நிலத்திற்குத் தொடர்ந்து நீரை அளித்துத் தானும் நீர்மயமாகத் திகழ்பவள். திருமால் வராக அவதாரம் எடுத்துக் கடலுக்கடியிலிருந்து நிலமகளை வெளிக்கொணர்ந்த கதையும் மாம்மல்லபுரச் சிற்பமும் நாமறிந்ததுதான்.

 

செல்வத்தைக் காப்பவளும் அளிப்பவளும் செல்வமகளாகிய லட்சுமியே..

 

எனவே சுபர்ணா, சாவித்ரி இருவரும் நிலமகளும் செல்வமகளுமேயாவர். இவர்களையே பூதேவி, ஸ்ரீதேவி என்றழைக்கிறோம். ஆக, நிலத்தைப் பங்கீடு செய்த சபையாகிய சமிதியும், செல்வத்தைப் பங்கீடு செய்த சபையுமே பூதேவி, ஸ்ரீதேவி என்று உருவகப் படுத்தப் பட்டிருக்கின்றனர் என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.

 

ஆரியர்களால் நியமிக்கப் பட்டு, போரில் சிறந்து விளங்கி, செல்வத்திற்கும், வீரத்திற்கும் அதிபதியாகி, வாஜபேய, ராஜசூய யாகங்கள் செய்து பிரஜாபதியான அரசன், தான் வெற்றி பெற்று அடைந்த செல்வங்களையெல்லாம் ஆரியர்களுக்கு சமிதி--சபா மூலம் பங்கிட்டு அளிக்க வேண்டும் என்னும் அரச தர்மம் நிலை நாட்டப் பட்டிருந்ததை முன்னரே கூறினோம். ஆகவே அவன் போரின் போது கவர்ந்த செல்வங்களும் நிலங்களும் அவனுக்கே சொந்தமாவது முறையல்ல என்பதும் பெறப்படுகிறது. அவனால் கவரப்பட்ட பொருட்செல்வங்களும் வெற்றி கொள்ளப் பட்ட நிலங்களும் சமிதி, சபா மூலம் பங்கீடு செய்யப் பட்டதால் அவை இரண்டையும் சுபர்ணா, சாவித்ரி என உருவகப் படுத்தி அவனால் அனுபவிக்க முடியாத அவனது பெண்களாகக் கூறினர் போலும்.

 

பிரஜாபதியின் முறையற்ற செயல்


பிரஜாபதியின் மகள் ஒரு பெண் மானாகத் தன் உருவத்தை மாற்றிக் கொண்டபோது, பிரஜாபதி ஒரு ஆண் மானாகத் தன் உருவத்தை மாற்றிக் கொண்டு தன் பெண்ணுடனேயே உறவு மேற் கொண்டான். அவனது முறையற்ற இந்தச் செயலைத் தண்டிப்பதற்காக கடவுள்கள் ருத்ரனை உருவாக்கி அனுப்பினார்கள். ருத்ரனின் அம்பினால் துளைக்கப் பட்ட பிரஜாபதி வானத்தில் மிருக நட்சத்திரமானான். அவனது பெண் ரோகிணி நட்சத்திரமானாள் என்று அய்த்ரேய பிரம்மாணமும், பஞ்ச விம்ச பிராம்மணமும் கூறுகின்றன.

 

இதே கதை சதபத பிரம்மாணத்தில் சற்று வித்யாசமாகக் கூறப்பட்டிருக்கிறது. பிரஜாபதியின் முறையற்ற செயலைக் கண்டிக்கும்படி மிருகங்களின் தலைவனான ருத்ரனை அனுப்பினார்கள். ருத்ரன் தனது அம்பால் பிரஜாபதியைத் தண்டித்த பின்னர் கடவுள்களின் கோபம் தணிந்தது. பிரஜாபதியைக் குணப்படுத்தினார்கள்.

 

பிரஜாபதியைப் பற்றி மிகவும் உயர்வாகப் பேசிய அதே பிரம்மாணங்கள், இவ்வாறு இழிவாகக் கூறும் காரணமும் மிக முக்கியமானதாக இருத்தல் வேண்டும்.

 

விதாதா--சமிதி, சபா ஆகிய சபைகளுக்குக் கட்டுப்பட்டிருந்த அரசன் தன் வீரத்தையும் செல்வத்தையும் அவர்களுக்கே அளித்தான். அவர்களால் நியமிக்கப் பட்டிருந்த காரணத்தினால், ஆனால் காலப் போக்கில் மன்னனின் புகழும் பெருமையும் ஓங்க ஆரம்பித்த பின்னர், அவனது வீரத்தின் இன்றியமையாத் தன்மை ஏற்பட்டு விட்ட பின்னர் மேற்கூறிய சபைகள், தாங்கள் நினைத்தாலும் அவனைத் தூக்கியெறிந்துவிட முடியாது என்ற நிலையில் தன் மேலாதிக்கத்தை அச்சபைகளின் மேல் புகுத்தித் தன் வெற்றியின் பயன்களாகிய செல்வங்களையும் நிலங்களையும் தன் புகழுக்காகவும் வளர்ச்சிக்காகவும் பயன்படுத்த ஆரம்பித்தான். அதாவது சுபர்ணா, சாவித்ரியாகிய பூமிதேவி, ஸ்ரீதேவி ஆகியவர்களைத் தனக்கே உரிமை கொண்டாடியபோது தான் மேற்கூறிய கதைகள் தோன்றியிருத்தல் வேண்டும். தன் மகளைத் தானே அடைந்தது முறையற்ற செயல் என்று கூறப்பட்டது. அவனது இந்த மனமாற்றத்தைத் தான் அவனது உருவ மாற்றமாகக் கூறப்பட்டது. இதன் பின்னர்தான் க்ஷத்திரியக் கடவுளாகிய விஷ்ணுவுக்கு ஸ்ரீதேவியும், பூதேவியும் இரு மனைவிகளாக ஆக்கப் பட்டிருக்கின்றனர்.

 

இங்கு நாம் இன்னொரு கருத்தையும் கவனிக்க வேண்டும். பிரஜாபதியின் மகள் தன் உருவத்தை மாற்றிக் கொண்டதைப் பார்த்த பின்னரே, பிரஜாபதியும் தன் உருவத்தை மாற்றிக் கொண்டான். எனவே, சபா, சமிதியின் போக்கு, மாறுபட ஆரம்பிக்கும்போது தான் பிரஜாபதியாகிய மன்னன் தன் போக்கை மாற்றிக் கொண்டான் என்பது இங்கு குறிப்பிடத் தக்கதாகும்.*6

 

சற்றேறக் குறைய இக்கால கட்டத்தில் தோன்றியவை தமிழக சங்கப்ப்பாடல்கள். ஆரிய இனக்குழுக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட அரசனைப் போலல்லாது, தமிழ் இனக்குழு மக்களிடையே தன் வீரத்தால் வீரயுகத்தில் குறுநிலத் தலைவர்களாகி, அரசர்களாயினர். இவர்கள் ஓரிருவர் மத்தியில் வேத உபநிஷதங்களின் தாக்கம் இருந்திருக்கிறது. உதாரணமாக ராஜசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி ஆகியோர் பல வேள்விகளைச் செய்திருக்கிறார்கள். அத்தகைய யாகங்கள் செய்தால் மேன்மையடையலாம் என்ற ஆரியர்களின் நம்பிக்கைக்கு இவர்களும் ஆளானார்கள் என்பது தெரிகிறது.

 

(இதன் காரணமாகவே பிற்காலத்திலும் கூட மன்னர்கள் தங்களது ஒவ்வொரு வெற்றியின் போதும் அந்தணர்களுக்குப் பழைய மரபின் அடிப்படையில் நிலக் கொடைகள் அளித்தனர்.)

 

அடிக்குறிப்புகள்

1.Self Government in India--N.B. Pavgee(1980)

2. I bid. p. 45--51

3. I bid. p. 99, 109, etc.

4.அப்பர் தேவாரம், குடந்தைப் பதிகம்

5.I bid p. 127

6. The Vedic Age p. 448 gen. editor R.C. Majumdar, Bharadiya Vidya Bhavan, (1988)



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard