New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இந்தியாவில் மொழி அரசியல் பகுதி


Guru

Status: Offline
Posts: 24601
Date:
இந்தியாவில் மொழி அரசியல் பகுதி
Permalink  
 


இந்தியாவில் மொழி அரசியல் பகுதி -1

https://saravananagathan.wordpress.com/2016/01/19/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/

`LANGUAGE AND POLITICS IN INDIA’ என்கிற ஆஷா சாரங்கி தொகுத்த நூல் மொழி அரசியல், அரசியலின் மொழி ஆகிய இரண்டைக் குறித்தும் வெவ்வேறு அறிஞர்கள் எழுதிய கட்டுரைகளைக் கொண்டுள்ளது. இந்தத் தொகுப்பில் உள்ள பல்வேறு கட்டுரைகள் தனித்தனியாக விவரிக்கப்பட வேண்டியிருப்பதால் ஆறு பாகங்களாக இந்த நூல் தொடும் பேசுபொருட்களை எழுதுகிறேன்.
மொழி அரசியல், அரசியலின் மொழி ஆகிய இரண்டையும் ஏன் அறிந்துகொள்ள வேண்டும் என்று ஆஷா சாரங்கியின் அறிமுகம் விரிவாகப் பேசுகிறது.

மொழி என்பதை வெறும் தகவல்தொடர்பு கருவி எனச் சிலர் சொன்னாலும், மொழிக்கும் சமூகத்துக்கும், வரலாற்றுக்கும், தத்துவத்துக்கும், புலனுணர்வுக்கும், மானுடவியலுக்கும் இடையே உள்ள தொடர்பை ஆராயும் பிரிவுகள் உலகெங்கும் ஏற்பட்டுள்ளன. ஷெல்டன் போலாக்,’மொழி என்பது ஒரு தேசத்தின் அடையாளமாக மாறுகிறது என்றால் அதற்கு மொழியைத் தேசத்தின் தனித்த அடையாளமாக மாற்றும் செயல்பாடும் ஒரு முக்கியக் காரணம்’ என்று கருதுகிறார். ஐரோப்பியாவில் தேசிய அரசுகள் எழுந்ததை மொழியை எப்படி அவர்கள் தேச உருவாக்கத்தின் தனித்த அடையாளமாக மாற்றினார்கள் என்று அறியாமல் உணர முடியாது. திட்டமிட்டு பல்வேறு சமூக, கலாசார, அரசியல் வேறுபாடுகளை உருவாக்க பல்வேறு மொழியியல் நடைமுறைகள் பரிந்துரைக்கப்பட்டு, கட்டாயமாக நடைமுறைப்படுத்தப்பட்டு இந்தத் தேசங்கள் கட்டமைக்கப்பட்டன.

ஹாப்ஸ்பர்க், ஓட்டோமான், பிரெஞ்சு, ஆங்கிலேய, ஸ்பானிய அரசுகள் தங்களுடைய மொழியை உலகம் முழுக்கப் பரப்பியதோடு, தங்களின் மொழியை ஒரு உடைமையாக எண்ணித் தீவிரமாகக் காத்தார்கள். எல்லா மொழிகளும் ஒரு காலனிய அரசின் மொழியாகவோ, அல்லது காலனிகளில் பரவலான மொழியாகவோ மாறுவதில்லை. ராணுவ வெற்றிகள், முதலாளித்துவ விரிவாக்கம், மதப் போர்கள், மத மாற்றங்கள், கல்வி பரவலாக்கம் முதலிய பல்வேறு கூறுகள் இதில் பங்காற்றுகின்றன.

இந்தியாவைப் பொறுத்தவரை சாதியப் பாகுபாடுகள்
மொழியின் தூய்மை, அசுத்தம், படிநிலை ஆகியவற்றைக் குறிக்கப் பயன்படுகிறது என்பதற்கு எண்ணற்ற எடுத்துக்காட்டுகள் உண்டு. சம்ஸ்கிருதம் என்பதை இரட்டை பிறப்பாளர்களே கற்க வேண்டும் என்கிற பார்வை வெகுகாலம் நிலவி வந்ததும், மைதிலி என்கிற மொழியை ஒடுக்கப்பட்ட ஜாதியினர் பரவலாகப் பேசிவந்த சூழலில் அதனை ‘சுத்தப்படுத்தி’,, வரையறுத்து பிராமணர்களின் அடையாள மொழியாக வெற்றிகரமாக மாற்றி ‘மைதிலி’ எனக் குறிப்பதே மிதிலை பகுதியை சேர்ந்த பிராமணர்களைத் தான் என்கிற சூழலை உண்டாக்கினார்கள் பிராமணர்கள்.

இந்தியாவில் எண்ணற்ற மொழிகள், வட்டார வழக்குகள், பேசு தாய்மொழிகள் ஆகியன வழங்கி வருவதால் இவை அனைத்தையும் கணக்கிடுவது என்பது முடியாத காரியம். மொழியை இனத்தோடு இணைத்து ஆங்கிலேயர் காலத்தில் கணக்கெடுப்புகள் நிகழ்த்தப்பட்டன. ஜார்ஜ் கிரியர்சன் இந்தியாவின் மொழியியல் கணக்கெடுப்பை நிகழ்த்தி இருபது வருடங்களில் இந்தியாவில் 179 மொழிகள், 544 வட்டார வழக்குகள் உள்ளதாகப் பன்னிரெண்டு பகுதி தொகுப்பில் தெரிவித்தார். அறுபத்தி ஒன்றில் வெளிவந்த கணக்கெடுப்பு 1,652 பேசு தாய்மொழிகள் இருப்பதாக அறிவித்தது. இதனை முப்பது ஆண்டுகள் கழித்து வந்த கணக்கெடுப்பு 114 மொழிகளுக்குள் பிரித்தது.

அன்விதா அப்பி நாற்பத்தி ஏழு மொழிகளை இந்தி என்கிற பெயரில் வகைப்படுத்தி இருப்பதாக அதிரவைக்கிறார். உதாரணமாக மைதிலி மொழி விடுதலைக்குப் பிந்தைய முதல் இரு கணக்கெடுப்புகளில் இந்திக்குள் அடக்கப்பட்டது. பத்தாயிரத்துக்கும் குறைவான மக்களால் பேசப்படும் மொழிகளையும் அரசு கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் விட்டது.

இந்திய மானுடவியல் ஆய்வுக் கழகம் ‘இந்திய மக்கள்’ என்கிற கணக்கெடுப்பை பெருமளவில் மேற்கொண்டு எழுநூறு மொழிகள் நான்கு இந்திய மொழிக்குடும்பங்களைச் சார்ந்திருப்பதாக அறிவித்தார்கள். இந்திய வீடுகளில் பயன்படுத்தப்படும் 325 மொழிகளில் 75 பிராதன மொழிகள் என்று அது சொன்னது. மேலும் இந்தக் கணக்கெடுப்பு இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு பல்வேறு தாய்மொழிகளைப் பிராதன மொழியோடு சேர்க்கும் வழக்கத்தைத் தொடர்ந்து செயல்படுத்துவதால் பல்வேறு தாய்மொழிகள் காணாமல் போகச் செய்யப்படுகின்றன எனக் கவலை தெரிவிக்கிறது. 1951 கணக்கெடுப்பில் இந்தி பேசுபவர்களின் எண்ணிக்கை நாற்பத்தி இரண்டு சதவிகிதமாக அவாதி, போஜ்புரி, சதீஸ்கரி, பந்தல்கண்டி, கார்வாலி, ஹராவ்தி, ஹரியான்வி, காங்ரி, குமாவ்னி, மகதி, மைதிலி, மேவாரி, பஹாரி, ராஜஸ்தானி மொழிகளை உள்ளடக்கி காட்டப்பட்டது. அடுத்த 1961 கணக்கெடுப்பில் பஞ்சாபி, உருது, இந்துஸ்தானி, மைதிலி, மகதி, போஜ்புரி ஆகிய மொழிகள் தனியாகப் பட்டியலிடப்பட்டதால் இந்தி பேசுபவர்களின் எண்ணிக்கை முப்பது சதவிகிதமாகக் குறைந்தது. கலாசார ரீதியாக ஒன்றாகும் இருக்கும் குழுக்களிடையே கூடப் பல்வேறு மொழிகள் வழங்கி வருவது ‘இந்திய மக்கள்’ திட்டத்தின் மூலம் தெளிவானது.

அனைத்திந்திய வானொலி நூற்றி நான்கு மொழிகளில் தன்னுடைய செயல்பாட்டை மேற்கொள்வது ஒருபுறம், அரசுகள் இருபத்தி இரண்டு மொழிகளில் தங்களுடைய தகவல் தொடர்பை மேற்கொள்கின்றன. ஆதிக்கம் செலுத்துகிற மொழிகளுக்கு வெவ்வேறு மொழிக்குழுவினர் மாறுவது விருப்பதாலோ, சுயமாகவோ நிகழ்வதில்லை., அரசியல் தேவைகள், சமூக மதிப்பு, அடையாளம், பாதுகாப்பு ஆகிய பல்வேறு கூறுகள் இதில் கலந்துள்ளன. இந்தியை தேசத்துக்கான மொழியாக மாற்றுகிற முயற்சி அனைத்திந்திய வானொலியில் அதைக் கட்டாயமாக்குவதன் மூலம் சாதிக்கப்பட்டது. மேலும், திட்டமிட்டு ஹிந்துஸ்தானியின் பாரசீக, அரேபிய சொல்லாக்கங்களைத் துறந்து ‘புனிதப்படுத்தப்பட்டதாக’ சொல்லப்பட்ட சம்ஸ்கிருதமயமாக்கப்பட்ட இந்தியையே வானொலி பயன்படுத்தியது.

இந்திய அரசியலமைப்புச் சபை ஆறு வாரங்களுக்கு எது இந்தியாவின் தேசிய/அதிகாரப்பூர்வ மொழியாக வேண்டும் என்று விவாதித்து வாக்களித்தது. ஒரு ஓட்டு வித்தியாசத்தில் இந்தி இந்தியாவின் அதிகாரப்பூர்வ மொழியானது. மேலும் இந்த இந்தி தேவநாகரி வரிவடிவத்தில் எழுதப்படும் என்பதோடு, பதினைந்து ஆண்டுகளுக்கு ஆங்கிலம் துணை மொழியாகத் தகவல் தொடர்புக்கும், பயன்பாட்டுக்கும் தொடரலாம் என்று முன்ஷி-அய்யங்கார் திட்டப்படி ஏற்றுக்கொள்ளப்பட்டது.

சட்டப்பிரிவுகள் 343-351 மொழிச்சிக்கலை விரிவாக
எதிர்கொள்கின்றன. ஒரு மொழியை மாநில அரசு அதிகாரப்பூர்வ மொழியாக அறிவிக்க அம்மொழி பதினைந்து சதவிகித மாநில மக்களால் குறைந்தபட்சம் பேசப்படவேண்டும் எனச் சட்டப்பிரிவு 345வரையறுப்பதைப் பயன்படுத்தி வடகிழக்கு மாநிலங்கள் ஆங்கிலத்தை அதிகாரப்பூர்வ மொழியாக அறிவித்தன. ஜனாதிபதி விரும்பினால் ஒரு மொழியை மாநில அரசு அங்கீகரிக்க வழி செய்யலாம் என்று சட்டப்பிரிவு 347 கூறுகிறது. அதே சட்டப்பிரிவு ஒரு மாநிலத்தில் எழுபது சதவிகிதத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஒரே மொழியைப் பேசினால் மட்டுமே அது ஒரு மொழி பயன்படுத்தும் மாநிலமாக அறிவிக்கப்படலாம் என்று கூறுகிறது.

மாநில அரசின் எல்லைக்குள் பயன்படுத்தப்படும் எந்த மொழியிலும், இந்தியாவில் பேசப்படும் எந்த மொழியிலும் தன்னுடைய விண்ணப்பத்தை ஒரு குடிமகன் சமர்ப்பிக்கலாம் என்று சட்டப்பிரிவு 350 கூறுகிறது. மொழிச்சிறுபான்மையினரின் உரிமைகளைக் காக்க 350(A), 350 (B), 29(1), 30, 347, 350 சட்டப்பிரிவுகள் உருவாக்கப்பட்டன.

எட்டாவது பட்டியலில் ஆங்கிலத்தை 1959-ல் சேர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட பொழுது அது இந்திய மொழியில்லை என்று அது தடுக்கப்பட்டது. இந்தப் பட்டியல் என்ன அடிப்படைகளைக் கொண்டு மொழிகளை உள்ளடக்கியுள்ளது என்பதில் தெளிவில்லை. ஒரு பகுதியில் பயன்படுத்தப்படும் தனித்துவம், எண்ணிக்கை அளவிலான பெரும்பான்மை, வளம்மிகுந்த கடந்தகாலப் பண்பாட்டு வரலாறு,
திருந்திய மொழி ஆகியன கூறுகள் என்று கொண்டால் நம்மால் முறையே ராஜஸ்தானி, பிரஜ், போஜ்புரி ஆகிய மொழிகள் இப்பட்டியலில் இடம் பெறாததையோ, சிந்தி, கொங்கணி, சம்ஸ்கிருதம் ஆகியன இப்பட்டியலில் இடம்பிடிப்பதையோ விளக்க முடியாது.

பத்தாயிரத்துக்கும் குறைவான மக்களால் பேசப்படும் பழங்குடியின மொழிகளைப் பற்றித் தெளிவாக அரிய எமானோ சொல்வதைப் போல அவர்களின் இனக்குழு வரலாறு, ஜாதி, பழங்குடியினம் ஆகியவற்றுக்கு இடையே உள்ள உறவு ஆகியவற்றை உணரவேண்டும். ஜார்கண்ட், நாகா, மிசோ, காசி இயக்கங்கள் தங்களுடைய இன அடையாளத்தைத் தீவிரமாக மொழியைக்கொண்டே கட்டமைக்கின்றன. பில், புயான், பூமிஜ், முரியா, கோண்டு, மல்பஹரியா, லோதா முதலிய பழங்குடியினர் தங்களின் மொழியை ஒன்று இழந்தோ, அல்லது வேறு மொழிக்கு மாறும் அழுத்தத்துக்கு உள்ளாகியுள்ளனர். குவி எனும் திராவிட மொழி பேசும் மத்திய பிரதேசம், ஒரிசா, மேற்கு வங்கத்தில் பரவியுள்ள மக்கள் அந்தந்த பகுதியின் ஆதிக்க மொழிக்கு நகர்ந்துள்ளனர்.

வரிவடிவத்தில் கூட எண்ணற்ற சிக்கல்கள், போரட்டங்கள் நிகழ்ந்துள்ளன. போடோ மொழியினர் வங்காளி, அசாமி மொழிகளின் வரிவடிவத்தை முதலில் பயன்படுத்தினார்கள். அசாமியர்கள் போராட்டம் நிகழ்த்தி தங்களை முன்னிறுத்திக் கொள்ள முயன்ற பொழுது அசாமிய ஆதிக்கத்துக்கு எதிராக அந்த வரிவடிவத்தைப் போடோக்கள் துறந்தார்கள். ரோமானிய வரிவடிவத்துக்கு அவர்கள் மாற முயன்றதை அசாமியர்கள் கடுமையாக எதிர்க்க, மத்திய அரசின் தலையீட்டில் அவர்கள் தேவநாகரி மொழிக்கு மாறினார்கள். கொங்கணி, சந்தாலி மொழிகள் ஐந்து வரிவடிவங்களில் எழுதப்படுகின்றன, சௌராஷ்டிரா, படகா ஆகிய மொழிகள் தமிழ் வரிவடிவத்தில் எழுதப்படலாமா என்கிற விவாதமும் உள்ளது.

இந்திய அரசின் மும்மொழிக்கொள்கையும் குறிப்பிட்ட மொழிகள் வளர்வதற்கு மட்டுமே வழிவகைச் செய்கிறது. இந்தி மொழி பிராதனமாக வழங்கும் பகுதிகளில் ஆங்கிலம், இந்தி ஆகியவற்றொரு ஒரு தென்னிந்திய மொழி கற்பது கட்டாயமாக உள்ளது. பிற பகுதிகளில் இந்தி, அவரவரின் தாய்மொழி எட்டாவது பட்டியலில் உள்ள மொழியாக இருந்தால் அதைக்கற்பது, ஆங்கிலம் என்று பட்டியல் சற்றே மாறுபடும். இந்தப் பட்டியலுக்குள் வராமல் நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகள் இந்தியாவில் உள்ளன. அவற்றைப் பேசும் மொழிச்சிறுபான்மையினர் சமயங்களில் ஒரு லட்சம் பேருக்கு மேல் ஒவ்வொரு மொழிக்கும் உள்ளார்கள். அன்விதா அப்பி எனும் மொழியியல் அறிஞர் இந்திய அரசு இந்த மொழிகளையும் கற்க நான்கு மொழிக்கொள்கையைக் கொண்டுவர வேண்டும் என்று சொல்கிறார்.

ஜாதி, மொழிகளுக்கிடையே தொடர்பும் சிக்கலானது. பல்வேறு தனித்த எழுத்துக்கள் தலித்துகளின் பக்கமிருந்து பல்வேறு மொழிகளில் எழுவது ஒருபுறம் என்றால், தலித்துகளில் பலர் ஆங்கிலத்தை அடக்குமுறையில் இருந்து விடுபடும் மொழியாகவும், வாழ்க்கையில் முன்னேறும் வழியாகவும் காண்கிறார்கள்.

டி.கே.ஓமென் தன்னுடைய, ‘தேசம், மக்கள் சமுதாய, சமூக இயக்கங்கள்’ நூலில் பல்வேறு தேசக்குழுக்களை உள்ளடக்கிய இந்தியாவில் கலாசார மறுமலர்ச்சிக்கு மொழியை உகந்த அடிப்படை என்கிறார். மேலும், தமிழோடு திராவிட இந்து மதத்தை, சம்ஸ்கிருதத்தோடு வடக்கின் இந்து மதத்தை, பஞ்சாபிய மொழியோடு சீக்கிய மதத்தை, உருதுவோடு இஸ்லாமிய மதத்தை, பாலியோடு புத்த மதத்தை, ஆங்கிலத்தோடு கிறிஸ்துவ மதத்தைத் தொடர்புபடுத்தி ஒற்றைப்படையாகக் காண்பது தவறாகும்.இந்தியா மாதிரியான வண்ணமயமான, வேற்றுமை மிகுந்த சமூகங்கள் மிக்க நாட்டில் இப்படி ஒரு மதத்தை ஒரு மொழியோடு அடையாளப்படுத்துவது சமூக உறவுகள், அடையாளங்கள் ஆகியவற்றின் பன்முகத்தன்மையை மறுதலிக்கும் செயல்பாடாகும். மொழி அரசியலும், அரசியலின் மொழியும் ஒன்றுக்கொன்று நெருங்கி பிணைந்த ஒன்றாகும். ஆங்கிலம், இந்தியாவை இந்தியாவின் இணைப்பு மொழியாக ஆக்குவதைச் சார்ந்து எண்ணற்ற வன்முறை சம்பவங்கள், போராட்டங்கள், கலவரங்கள் இந்தியாவில் ஏற்பட்டுள்ள சூழலில் இந்தச் சிக்கலான பரப்பைப் பற்றி விரிவாக அடுத்தடுத்த கட்டுரைகளில் காண்போம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

மொழி அரசியல் பகுதி-2 ஏன் இந்தி தேசிய மொழி ஆகவில்லை? 

இந்தியாவில் மொழி அரசியல் பகுதி 2:

மொழியும், அரசமைப்புச் சட்டமும்- அரை-மனதான சமரசம்!
கிரான்வில் ஆஸ்டின் இந்தியாவின் அரசமைப்புச் சட்ட உருவாக்கம் எப்படி அரை மனதான சமரசத்தை மொழிக்கொள்கையில் மேற்கொண்டது என்பதை விரிவாகப் பேசுகிறார். விடுதலைக்கு முந்தைய இந்தியாவில் இந்தி, உருது, பஞ்சாபி முதலிய பல்வேறு மொழிகளை இணைத்துப் பேசப்பட்ட ‘பஜார் மொழி’யான இந்துஸ்தானி கூட 45% மக்களாலேயே பேசப்பட்டது.

இந்தியா என்கிற தேசக் கருத்தாக்கத்துக்கு விடுதலைக்குப் பின்னர் ஒரு தேசிய மொழி வேண்டும் என்கிற கருத்தாக்கம் பலரிடம் நிலவியது. அதே சமயம், அரசமைப்புச் சட்ட உருவாக்கத்தில் ஈடுபட்டவர்கள் ஒரே ஒரு மொழியை இந்தியாவுக்கான மொழியாக்கும் அதீத முடிவை எடுக்கவில்லை.
சாமர்த்தியமாக இந்தியை ‘இந்தியாவின் அதிகாரப்பூர்வ மொழி’ என்று அறிவித்தார்கள். ஆங்கிலத்தை இணை அதிகாரப்பூர்வ மொழியாகப் பதினைந்து ஆண்டுகள் தொடரலாம். அதற்குப் பிறகு இந்தி அதன் இடத்தை முழுமையாக எடுத்துக் கொள்ளும் அல்லது முந்தைய நிலையை நாடாளுமன்றம் தொடரலாம் என்றும் அரசியல் சட்டத்தில் சேர்க்கப்பட்டது. ஆங்கிலம் நீதிமன்றம், அதிகாரப்பூர்வ பயன்பாட்டில் தொடர்ந்து பயன்பாட்டில் இருக்கும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
இந்தத் தீர்மானத்தை அடைவதற்கு முன்னர் நிகழ்ந்த போராட்டங்கள், விவாதங்கள், எதிர்ப்புகள் முக்கியமானவை.

இந்தி/இந்துஸ்தானி இந்தியாவின் அதிகாரப்பூர்வ மொழியாக வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தாலும் ஆங்கிலம் எத்தனை ஆண்டுகளுக்கு அதிகாரப்பூர்வ மொழியாகத் தொடர்வது, மற்ற மொழிகளுக்கு என்ன இடத்தைக் கொடுப்பது என்பதில் பலத்த கருத்து மோதல்கள் ஏற்பட்டன. இதில் மூன்று சாரார் இருந்தார்கள். இந்தித் தீவிரவாதிகள் என ஆஸ்டின் அழைக்கும் முதல் பிரிவினர், பெரும்பாலும் இந்து தேசியத்தில் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தார்கள்.

இவர்கள் பனராஸ், அலகாபாத்தில் உள்ள இந்து கல்வி நிறுவனங்களில் கல்வி பயின்றவர்கள். கோவிந்த தாஸ், தாண்டன், பாலகிருஷ்ண சர்மா ஆகியவர்கள் பண்டைய இந்து மன்னர்களின் ஆட்சியைப் போல வருங்காலம் அமையவேண்டும் என்று கனவு கண்டார்கள். தாண்டன் இந்து சீர்திருத்த சட்டங்களைக் கடுமையாக எதிர்த்தவர். ஜி.எஸ்.குப்தா ஆரிய சமாஜத்தில் தொடர்ந்து இயங்கிய இஸ்லாமிய வெறுப்பை விதைத்தவர். ரகுவீரா பிற்காலத்தில் மதவாத ஜனசங்கத்தின் சார்பாகத் தேர்தலில் போட்டியிட்டவர். எனினும் அளகுராய் சாஸ்திரி, வி.டி.திரிபாதி, எஸ்.எல்.சக்சேனா ஆகியோர் மதச்சார்பின்மையில் நம்பிக்கையுள்ளவர்களாக இருந்தாலும் இந்தி மட்டுமே இந்தியாவில் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்று இவர்கள் அனைவரும் முழங்கினார்கள். மிதவாதிகள் இந்தி இந்தியாவின் முதன்மை மொழியாக இருந்தாலும், மற்ற மொழிகளும் சமமான இடத்தைப் பெறவேண்டும் என்று வாதாடினார்கள். நேரு இந்தப் பிரிவை சார்ந்திருந்தார், இதில் தான் வங்கம், மெட்ராஸ், பம்பாய் முதலிய பகுதிகளைச் சேர்ந்த ஆங்கிலத்தை இணைப்பு மொழியாகக் கொண்ட உறுப்பினர்களும் இருந்தார்கள்.

இந்தி மட்டுமே இந்தியாவின் தேசிய மொழி என அழுத்தி வாதிட்டு இந்தியாவைப் பிளவுபடுத்தினாலும் பரவாயில்லை என்பது போன்ற பார்வையையே இந்திவாலாக்கள் பிரதிபலித்தார்கள். இவர்கள் ஆங்கிலம் இந்திய தேச விடுதலைக்கு எதிரானது என்பதால் அதனைத் தேசிய மொழியாகக் கொள்ளவே முடியாது என்று வாதிட்டார்கள். அதனதன் தளத்தில் அந்தந்த மொழியைப் பயன்படுத்துவோம் என்றார்கள் மிதவாதிகள். இந்தியை தேசிய மொழியாக ஆக்காவிட்டாலும், உருது மொழியால் வளப்பட்டிருந்த இந்தி மொழியை அரசு பயன்படுத்துகிற பொழுது சம்ஸ்கிருத சொற்களையே பிரதானமாகப் பயன்படுத்த வேண்டும் என்று அரசமைப்புச் சட்டத்தில் பிரிவை சேர்த்தார்கள். மிதவாதிகள் இந்தியாவின் பன்மையான கலாசாரம், இந்துஸ்தானியில் காணப்படும் வடிவங்கள், பாணி, வெளிப்பாடுகள் ஆகியவற்றை வெளிப்படுத்துவதாக இந்தி அமையவேண்டும் என்கிற வரியை சேர்த்து திருப்திப்பட்டுக்கொண்டார்கள்.

பாகிஸ்தான், கனடா, தென் ஆப்ரிக்கா, சுவிட்சர்லாந்திலும் பல்வேறு மொழிகள் புழக்கத்தில் உள்ளன என்றாலும் அங்கே நிலவரம் இவ்வளவு சிக்கலானது இல்லை. பாகிஸ்தான் பெரும்பான்மை மொழிகளை விடுத்து உருது மொழியை தேசிய மொழியாகத் திணித்தது. கனடா, தென் ஆப்ரிக்காவில் மக்கள் தொகையும் , மொழிகள் எண்ணிக்கையும் இந்தியாவோடு ஒப்பிடும் பொழுது குறைவே! இவ்விரண்டு நாடுகளிலும் இரண்டு மொழிகளே பிரதான மொழிகள். சுவிட்சர்லாந்து நாட்டில் மூன்று மொழிகள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளன.

காந்தி இந்திய விடுதலைக் களத்துக்குள் வந்த பொழுதே, ‘இந்தியை தேசிய மொழிக்கான இடத்தையும் , மற்ற பிராந்திய மொழிகளை அவற்றுக்கான இடத்தை மக்களின் வாழ்வில் தராவிட்டால் சுயராஜ்யம் என்பது முழுமையடையாது என்பது என்னுடைய அடக்கமான, ஆனால், உறுதியான கருத்தாகும்.’ என்றார். காந்தியின் தலைமையில் மக்களின் மொழிகளைத் தன்னுடைய கூட்டங்களின் அலுவல் மொழியாகக் காங்கிரஸ் மாற்றியது. காக்கிநாடா காங்கிரசில் இந்துஸ்தானியிலேயே கட்சியின் அலுவல்கள் முடிந்தவரை நடைபெற வேண்டும் என்று கட்சிச்சட்டம் மாற்றப்பட்டாலும் ஆங்கிலத்தைப்
பயன்படுத்துவதைத் தவிர்க்க முடியவில்லை.

 

மோதிலால் நேருவின் அறிக்கை இந்தியாவின் பொது மொழியாக இந்துஸ்தானி ஆகவேண்டும் என்று ஆங்கிலத்தில் குறிப்பிட்டது. நேரு காந்தியைப் போலவே அந்தந்த பகுதி மக்களின் வளர்ச்சி தங்களின் தாய்மொழியால் கற்பதன் மூலமே சாத்தியம் என்று சொன்னார். ஆங்கிலத்தின் முந்தைய தொடர்புகள், தற்போதைய தேவையால் அதனைத் தவிர்க்க முடியாது என்று நேரு நடைமுறை உணர்ந்து கருதினார். இந்துஸ்தானி இந்தியாவின் தேசிய மொழியாக வேண்டும் என்று காந்தி நூறு முறை சொல்லியிருப்பார். நேருவும் அதுவே இந்தியாவின் தேசிய மொழியாகும் என்று கருதினார். ஏன் அப்படி? இந்துஸ்தானி சம்ஸ்கிருதமயமாக்கப்படாமல்,பாரசீகமயமாக்கப்பட்ட உருதுவாகவும் இல்லாமல் எல்லாப் பிராந்திய மொழிகளிலும் இருந்து வார்த்தைகளைப் பெற்று அம்மொழி வளரவே அவர்கள் கனவு கண்டார்கள்.

ராஜாஜி இந்துஸ்தானிய பிராந்திய மொழிகளின் வரிவடிவங்களில் எழுதுவதன் மூலம் அம்மொழியை வளர்க்க முடியும் என்று கருதினார். இந்திவாலாக்கள் இந்தி மொழியானது உருது, ஆங்கிலத்தை முழுக்க விலக்கி எழவேண்டும் என்று உறுதியாக இருந்தார்கள். ஆனால், நேரு உட்படப் பல இந்துக்கள் உருதுவை தங்களின் தாய்மொழியாகக் கொண்டிருந்தார்கள். காந்தி தொடர்ந்து இந்துஸ்தானி மொழியே இந்துக்கள், இஸ்லாமியர்களை இணைக்கும் என்று கருதினார். நாற்பத்தி ஐந்தில் தாண்டன் இந்தி சாஹித்திய சம்மேளனத்தில் நாகரி வடிவத்தில் மட்டுமே எழுத வேண்டும் என்று வலியுறுத்துவதைத் தொடர்ந்தால் தான் அவ்வமைப்பில் இருந்து விலகுவதாக எச்சரித்தார். தாண்டன் ஆங்கிலத்தைத் துரத்திவிட்டு பிராந்திய மொழிகளைப் பேசுபவர்கள் இந்திக்கு மாற்றப்பட வேண்டும் என்றார். காந்தி பதவி விலகினார். முப்பத்தி ஏழில் ராஜாஜி, சுப்பராயன் இந்துஸ்தானியை உயர்கல்வியின் மூன்று ஃபார்ம்களில் திணிக்க, கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. ‘தமிழ் வாழ்க, இந்தி ஒழிக. சுப்பராயன் ஒழிக! ராஜாஜி ஒழிக!’ என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன.

அரசியலமைப்பு வரைவுக் குழுவில் மொழிப்போர்:
விதிமுறைகள் கமிட்டியில் தான் முதல் சிக்கல் ஆரம்பமானது. அரசியலமைப்பு சட்ட விவாதங்கள் இந்துஸ்தானி அல்லது ஆங்கிலத்தில் நடக்கலாம் என்று ராஜேந்திர பிரசாத் அறிவிக்க, சேத் கோவிந் தாஸ் ‘இருபத்தி ஐந்து வருடங்கள் காந்தியடிகள் போராடியும் இந்துஸ்தானியை தெற்கைச் சேர்ந்தவர்கள் புரிந்துகொள்ளவில்லை. ஆங்கிலம் இந்தச் சபையில் ஆதிக்கம் செலுத்துகிறது என்பதை எங்களின் பொறுமையை முழுவதும் சோதிக்கிறது.’ என முழங்க, ‘ஒட்டுமொத்த சபையின் அலுவலும் ஆங்கிலத்தில் நடைபெற வேண்டும்’ என்று கே.சந்தானம் தீர்மானம் கொண்டுவந்தார். எனினும், இரண்டு மொழிகளுமே தொடரும் என்றே முடிவு செய்யப்பட்டது.
.
மத்திய அரசமைப்புச் சட்ட கமிட்டியில் இருந்த பனகல் நரசிங்க ராவ் பிராந்திய மொழிகளுக்கு எந்த இடத்தையும் அரசமைப்புச் சட்டத்தில் தர முடியாது என்றும், சட்டசபைகளில் கூட இந்துஸ்தானியோ, ஆங்கிலமோ தான் பயன்பாட்டு மொழியாக இருக்கும் என்று அவர் மாதிரியை வகுத்தார். இந்துஸ்தானியின் இடத்தை இந்திக்கு வழங்கியும், சட்டசபையில் இந்தியும், பிராந்திய மொழியும் தொடரும் என்றும் திருத்தங்கள் படேல் அறிமுகப்படுத்திய சட்ட வரைவில் கொண்டுவரப்பட்டன. இந்தச் சூழலில் பிரிவினை ஏற்பட்டு இந்துஸ்தானி மொழியை ஆதரிப்பவர்கள் இஸ்லாமியர்களுக்கும்,, பிரிவினைக்கும் ஆதரவானவர்கள் என்கிற கருத்தாக்கம் வலுப்பெற்றது. இந்தச் சிக்கலால் இந்துஸ்தானி என்கிற சொல்லுக்குப் பதிலாக நேரு, காந்தி முதலியவர்களே ‘பரவலான இந்தி’ என்று பயன்படுத்தினார்கள். விடுதலைக்குப் பிறகு மீண்டும் மொழிச்சிக்கல் களத்துக்கு வந்தது. இந்தியை ஏற்க இஸ்லாமியர்கள் தங்களின் தேசபக்தி பரிசோதனையில் வெற்றிபெற சம்மதித்தார்கள், தெற்கைச் சேர்ந்தவர்கள் ஆங்கிலமும் இணைந்து பயன்பாட்டில் பதினைந்து வருடம் இருக்க வேண்டும் என்று கோரினார்கள். வெறும் இந்தி மட்டுமே வேண்டும் என்று முரண்டுபிடித்தார்கள் இந்திவாலாக்கள்.

பீரார், மத்திய மாகாணங்களைச் சேர்ந்த அரசியலமைப்பு குழு உறுப்பினர்கள் கொண்டுவந்த திருத்தம் நிலைமையைச் சூடாக்கியது. மத்திய அரசுப்பணி தேர்வுகளில் ஒருவர் வெற்றி பெற இந்தி அறிவு கட்டாயம் தேவை என்றும், அரசமைப்புச் சட்டத்தின் அதிகாரப்பூர்வ வடிவம் இந்தியிலேயே இருக்க வேண்டும் என்றும் சொல்லப்பட்டது. இது இந்தி பேசாத பகுதி உறுப்பினர்களைக் கவலைகொள்ள வைத்தது. டிடிகே ‘ஏற்கனவே பிரிவினையைத் தென்னகத்தில் சில சக்திகள் பேசிக்கொண்டிருக்கையில், இந்த ஐக்கிய மாகாணங்களைச் சேர்ந்தவர்களின் ‘இந்தி சர்வாதிகாரம்’ அவர்களை வலுப்படுத்தும்.’ என்று கவலைப்பட்டார்.

ராஜேந்திர பிரசாத் ஏற்கனவே ஹிந்துஸ்தானி, உருது, இந்தி ஆகிய மொழியைப் பயன்படுத்த அலுவலில் அனுமதித்தாலும், ஆங்கிலச் சொற்களை இணைத்துக் கொள்ளவும், ஆங்கில மொழியை அலுவலில் பயன்படுத்தவும், தெற்கைச் சேர்ந்த பட்டாபி சீதாராமையாவை காங்கிரஸ் தலைவர் ஆக உதவியிருந்த அவரே அதிகாரப்பூர்வ அரசமைப்புச் சட்டமாக இந்தி வடிவமே கொள்ளப்பட வேண்டும் என்று அடம்பிடித்தார். நேரு ஆங்கில வடிவமே தொடரவேண்டும் என்றும், பலகாலம் கழித்து வேண்டுமானால் இந்திக்கு அந்த இடம் தரப்படலாம் என்றும் சொன்னார்.

சிறுபான்மையினர் தங்களின் மொழியை, கலாசாரத்தைக் காத்துக்கொள்ள உரிமை தந்த அதே சமயம், அரசு சிறுபான்மையினருக்கான கல்விக்கூடங்களை அமைப்பது அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்றும் அம்பேத்கர், முன்ஷி கருதினார்கள். அதாவது அரசு எதையெல்லாம் செய்யக்கூடாது என்று சொல்லும் அதே சமயம், இதையெல்லாம் செய்க என்று சிறுபான்மையினர் சார்ந்து சொல்லக்கூடாது என்று அவர்கள் கருதினார்கள். அரசுக்கு அறக்கடமையாக அது அமையலாமே அன்றிக் கட்டாயம் என்று அழுத்தம் தர அவர்கள் விரும்பவில்லை. மொழிச் சிறுபான்மையினர் மீது பெரும்பான்மை மொழியைத் திணிக்கக் கூடாது என்றும் அத்தீர்மானம் சொன்னது.

நாற்பத்தி எட்டாம் வருடத்தின் இலையுதிர் காலத்தில் ஓரிசா மாகாணத்தில் ஒரியா, தெலுங்கு இரண்டும் அதிகாரப்பூர்வ மொழி என்ற பொழுதும் கஞ்சம், கோராபுட் முதலிய தெலுங்கு பெரும்பான்மை மாவட்டங்களில் ஒரியா திணிக்கப்பட்டது. பீகாரின் மன்பாம் மாவட்டத்தில் வங்க மொழியினர் பெரும்பான்மையினராக இருந்த சூழலில் அங்கே இந்தி மொழி பள்ளிகளில் திணிக்கப்பட்டது. மத்திய மாகாணத்தின் நாக்பூரில் மராத்தி பேசுபவர்கள் இந்தி பேசுபவர்களைப் போல் இருமடங்கு இருந்தும் நாக்பூர் பல்கலை இந்தியை பயிற்றுமொழியாக அறிவித்தது.

இந்தச் சூழலில் காங்கிரஸ் செயற்குழு ஒரு தீர்மானத்தைக் கொண்டுவந்தது. ஒவ்வொரு மாநிலமும் தன்னுடைய பகுதியில் பயன்படுத்த வேண்டிய மொழியை அதுவே தேர்வு செய்யலாம். நீதிமன்ற, அலுவல் மொழியாக அதனையே பயன்படுத்தலாம் என்றும், இருபது சதவிகிதம் வரை ஒரே மொழிச் சிறுபான்மையினர் இருந்தால் அரசின் கோப்புகள் அந்த மொழியிலும் அமைய வேண்டும் என்றும் சொல்லப்பட்டது. மத்திய, மாநில அரசுகள் தொடர்பு கொள்ளும் மொழி மத்திய அரசு பயன்படுத்தும் ஒரு மொழியாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

ஆகஸ்ட் 7 1949-ல் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய தாண்டன் யாரெல்லாம் இந்தியை நாகரி வரிவடிவத்தில் தேசிய மொழி ஆவதை எதிர்க்கிறார்களோ அவர்கள் தேசியத்துக்கு எதிரானவர்கள், மதவாத சக்திகளுக்குத் துணை போவதையும் செய்கிறார்கள் என்றார். அரசமைப்பு வரைவுக் குழு கூடிய பொழுது நாடாளுமன்றம் ஆங்கிலம் அல்லது/மற்றும் இந்தி ஆகிய இரண்டையும் அலுவல் மொழியாகப் பயன்படுத்தலாம் பத்து வருடங்கள் பயன்படுத்தலாம் என்று தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதில் உள்ள ஓட்டையைப் பலர் எதிர்த்தார்கள். சந்தானம் தலைமையிலான குழு பதினைந்து ஆண்டுகள் என்று இதனை விரிவுபடுத்த கோரியது. அதோடு நில்லாமல் பொதுப் பயன்பாட்டுக்கு அரேபிய எண் முறையைப் பயன்படுத்தலாம் என்றும் அது பரிந்துரைத்தது.

இந்தியை தேசிய மொழியாக்கவும், இந்தியாவுக்குப் பாரத் எனப் பெயர் சூட்டவும் ஒரு பெண் துறவி உண்ணாவிரதம் இருந்தார். அவரை நேரு முதலியோர் சந்தித்துச் சமாதானப்படுத்தினார்கள். அரேபிய எண்கள் என்றால் எதிர்ப்பு வரும் என்று உணர்ந்து அதை ‘சர்வதேச எண்கள்’ என மாற்றினார்கள். இவை அனைத்தும் ஓட்டெடுப்புக்கு வந்தது. எழுபத்தி நான்கு-எழுபத்தி நான்கு என்று அரேபிய எண்கள், நாகரி எண்கள் இரண்டுக்கும் ஓட்டுக்கள் கிடைத்தன. மேலும், இந்தி பேசும் மாகாணங்கள் அரசோடு தொடர்பு கொள்ள இந்தியைப் பயன்படுத்தலாம் என்றும், எட்டாவது அட்டவணையில் ஆங்கிலம் சேர்க்கப்படாது என்றும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இந்தப் பதினைந்து வருடத்தைக் குறைக்கவும், நாகரி எண்களைப் பயன்படுத்தவும், அரசுப்பணிகளில் இந்தியை கட்டாயமாக்கவும் இந்திவாலாக்கள் போராடினார்கள். இறுதியில் நாகரி எண்கள், இந்தி எண்கள், சர்வதேச எண்கள் இணைந்து பயன்படும் என்றும், உச்ச, உயர் நீதிமன்றங்களில், சட்டங்கள், அவசரச்சட்டங்கள் ஆகியற்றில் அதிகாரப்பூர்வ மொழியாக ஆங்கிலமே பதினைந்து வருட காலத்துக்கு இருக்கும் என்று முடிவு செய்யப்பட்டது. அடுத்தடுத்து ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை இந்தியை இந்தியா முழுக்க வளர்ப்பதன் வேகத்தைக் கண்டறிய இந்தி கமிஷன்கள் அமைக்கப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

பிற மொழிகள் எட்டாவது பட்டியலில் இடம் அளிக்கப்பட்டதோடு, அரசுப் பணித் தேர்வுகளை ஆங்கிலத்தில் எழுதவும் அனுமதிக்கப்பட்டது. அந்தப் பிற மொழிகளைப் பிராந்திய மொழிகள் என்று சொல்லாமல், ‘அதிகாரப்பூர்வ அங்கீகரிக்கப்பட்ட மொழிகள்’ என்று அறிவிக்க நேரு சொன்னார். ஆர்.எஸ்.சுக்லா இப்படிப் பட்டியலில் பிற மொழிகளைச் சேர்ப்பது தேவையில்லாதது என்றார். இந்து மகாசபையின் முன்னாள் தலைவரும், வங்காளியுமான ஷ்யாம் பிரசாத் முகர்ஜி இந்தப் பட்டியலிடுதலை வரவேற்று இது இந்திக்கு இணையாகப் பிற மொழிக்கு வாய்ப்பு தரப்படுவதில்லை என்கிற சூழலை சரி செய்யும்.’ என்றார்.

ஓட்டெடுப்பில் இவை பெரும்பாலும் ஏற்கப்பட்டு இந்தி அதிகாரப்பூர்வ மொழியாக இந்துஸ்தானியை ஒரு ஓட்டில் முந்தி வென்றது. அம்பேத்கர் உட்பட இருபத்தி எட்டு பேர் சம்ஸ்கிருதத்தை இந்தியாவின் அதிகாரப்பூர்வ மொழியாக்க தீர்மானம் கொண்டுவந்தார்கள். எல்.கே.மைத்ரா என்பவர் யாருக்கும் வடமொழி தெரியாது என்பதால் அனைவர்க்கும் சமமான வாய்ப்பை அது வழங்கும் என்றார். எனினும் அது ஏற்கப்படவில்லை. நேரு இந்திவாலாக்களின் தொனியில் இருந்த அதிகார மமதையைக் கண்டித்தார். மக்களின் மொழிதான் தேசிய மொழியாக வேண்டுமே அன்றி, கற்ற சிலரின் மொழியல்ல என்றார்.

தாண்டன் ஆங்கிலத்தைப் பயன்படுத்துவது நம்மைப் பின்னோக்கி தள்ளிவிடும் என்றும், நாகரி வடிவத்தில் மட்டும் எண்களைப் பயன்படுத்துவது நம் பண்டைய பாரம்பரியத்தின் அடையாளம் என்றும், உடனடியாக ஆங்கிலத்தின் இடத்தை முழுமையாக இந்திக்குத் தரலாம், அதிகபட்சம் ஐந்து வருடங்கள் வேண்டுமானால் ஆங்கிலம் அமலில் இருக்கலாம் என்று கொதித்துப் பேச, மவுலானா அபுல் கலாம் ஆசாத், இந்தி படிப்படியாகவே தென்னகத்தை அடைய வேண்டும் என்றும், வடக்கு-தெற்கு இரண்டையும் இணைக்கும் புள்ளியாக இருக்கும் ஆங்கிலத்தை நீக்கிவிட்டால் அந்த இணைப்பு அறுந்துவிடும் என்று எச்சரித்தார்.

இறுதியாக முன்ஷி-அய்யங்கார் திட்டத்தில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. பதினைந்து வருடங்களுக்குப் பிறகு நாகரி, ஆங்கில எண் பயன்பாடு குறித்து நாடாளுமன்றம் சட்டம் இயற்றும். உயர்நீதிமன்றங்களில் ஜனாதிபதி அனுமதித்தால் இந்தி அலுவல் மொழியாகப் பயன்படலாம், சட்டங்கள், அவசரச்சட்டங்கள், மசோதாக்கள் அந்தந்த மாநில மொழியில் அதிகாரப்பூர்வ ஆங்கில மொழியாக்கத்தோடு பதிப்பிக்கப்படலாம் என ஒத்துக்கொள்ளப்பட்டது. சம்ஸ்கிருதம் எட்டாவது அட்டவணையில் இணைக்கப்பட்டது.

பதினைந்து வருடங்களுக்குப் பிறகு இந்தியின் பயன்பாடு அரசு அலுவல்களில் குறையவே செய்தது. காங்கிரஸ் கட்சியே ஆங்கிலத்தில் தன்னுடைய அலுவல்களை நடத்தியது. மொழி ஆதிக்கத்தைச் செலுத்த முயன்ற இந்தி வாலாக்களின் போக்கு அதற்குப் பலத்த எதிர்ப்பை சம்பாதித்துக் கொடுத்தது. அரைமனதான ஒரு சமரசமே எட்டப்பட்டது என்றாலும், அடுத்தடுத்து வந்த 1963-ன் அதிகாரப்பூர்வ மொழிகள் சட்டம் ஆங்கிலத்தை இந்தியோடு அரசின் அதிகாரப்பூர்வ மொழியாகத் தொடர்வதை உறுதி செய்தது. ஆங்கிலம் பேசுவது இந்தியத் தன்மைக்கு எதிரானது இல்லை என்கிற புரிதல் உண்டானது.

https://saravananagathan.wordpress.com/2016/01/19/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-2-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8/



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

மொழி அரசியல் பகுதி-3: மொழிவாரி மாநிலங்களின் உருவாக்கமும், உறுத்தல்களும்

 

ஜோசப் ஸ்வார்ட்ஸ்பர்க்கின் கட்டுரையின் சாராம்சம் இந்த அறிமுகத்தில் தரப்படுகிறது: 
இந்தியாவில் மொழிவாரி மாநிலம் என்கிற கோரிக்கையின் முக்கியமான அச்சாரம் வங்கப்பிரிவினையின் பொழுது ஏற்பட்டது. பல்வேறு மொழி பேசுபவர்கள் ஒன்றாக வழங்கிவருவதால் அவற்றைப் பிரிக்கலாம் என அப்பொழுதைய உள்துறை செயலாளர் ஹெர்பர்ட் ரிஸ்லே தெரிவித்தார். அப்படிப் பிரிக்கப்பட்டது உண்மையில் மொழி வளர்ச்சியைக் குறைத்தது, மீண்டும் வங்கம் சேர்க்கப்பட்ட பொழுது பல்வேறு மொழி பேசுபவர்கள் நிறைந்திருந்த பீகார், ஒரிசா பகுதிகள் ஒரே மாகாணமாக ஆக்கப்பட்டன. எனினும், அசாம் தனியாகப் பிரிக்கப்பட்டு அங்குள்ள வங்காளிகள் மொழிச்சிறுபான்மையினராக விடப்பட்டார்கள். காங்கிரஸ் முதல் மொழிவாரி மாநிலமாகப் பீகாரை 1908-ல் மாற்றியது.

ஒன்பது வருடங்கள் கழித்துச் சிந்த், ஆந்திரா மொழிவாரி மாநிலங்களாகக் காங்கிரஸ் செயல்பாட்டில் மாறின. காங்கிரஸ் காந்தி களத்துக்கு வந்த இருபதுகளில் துவங்கி மொழிவாரி மாநிலங்களை உருவாக்க வேண்டும் என்று ஆங்கிலேய அரசைக் கேட்டுக் கொண்டிருந்தது. அதனை ஏற்றுக்கொள்ளும் வகையில், 36-ல் சிந்த், ஒரிசா ஆகிய தனி மொழிவாரியான மாகாணங்கள் உருவாக்கப்பட்டன. இதில் சிந்து மாகாணம் மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டது எனச் சொல்லப்பட்டாலும் அது இஸ்லாமியர்களைப் பெரும்பான்மையாகக் கொண்டிருந்தபடியால் ஆங்கிலேயரின் பிரித்தாளும் சூழ்ச்சி என்று தேசியவாதிகள் குற்றஞ்சாட்டினார்கள்.

மெட்ராஸ் மாகாணத்தில் விடுதலைக்கு முன்னர் மொழிச்சிறுபான்மையினர் முறையே 1.77 கோடி தெலுங்கர்கள், நாற்பது லட்சம் ஒரியா மொழி பேசுபவர்கள், 37 லட்சம் மலையாளிகள், 17 லட்சம் கன்னடர்கள் இருந்தார்கள். மராத்தி மொழி பேசாத குஜராத்திகள், சிந்திக்கள், கன்னடர்கள் முறையே 34, 31,26 லட்சங்களில் இருந்தார்கள். மத்திய மாகாணங்களில் ஐம்பத்தி நன்கு லட்சம் மராத்தியர்களும், பஞ்சாபில் அறுபத்தி ஐந்து லட்சம் லஹ்நடா மொழி பேசுபவர்கள் இருந்தார்கள். ஆந்திராவை தனி மாநிலமாக ஆக்க வேண்டும் என்று தெலுங்கு மொழி பேசுபவர்கள் கேட்டுக் கொண்ட போதிலும், (1.77 கோடி) அவர்கள் தனி மாநிலமாக ஆனாலும், 25 லட்சம் தெலுங்கர்கள் மெட்ராஸ் மாகாணத்தில் தொடர்வார்கள் என்பதால் அதனை எதிர்த்தார்கள். எனவே, இந்த வகையான பிரிவினையை ஆங்கிலேய அரசு செய்ய மறுத்தது.

விடுதலைக்கு முன்னர்வரை மொழிவாரி மாநிலங்கள் என்று தொடர்ந்து பேசிக்கொண்டிருந்த காங்கிரஸ் மதரீதியாக நாடு துண்டாடப்பட்ட சூழலில் மொழிவாரியாக நாட்டைப் பிரிக்க யோசித்தது. அது நாட்டைப் பால்கன் பிரதேசங்கள் போலத் துண்டாடிவிடும் என்று அது பயந்தது, புதிய தேசத்தைக் கட்டமைப்பது, அகதிகளைக் குடியேற்றுவது, காஷ்மீர் சிக்கல், ஆங்கிலேயர் ஆளுகைக்குள் வராத 5௦௦க்கும் மேற்பட்ட மன்னராட்சி பகுதிகளை இணைப்பது, அரசமைப்புச் சட்டம் உருவாக்கல் ஆகியவற்றால் அதனைத் தள்ளிப்போட்டார்கள். விடுதலைக்குப் பிந்தைய வருடம் அமைக்கப்பட்ட மொழிவாரி மாநிலங்கள் அமைப்பதை பற்றி ஆராய வேண்டிய குழு அது தேவையற்றது என்று அறிக்கை அளித்தது.

விடுதலைக்குப் பின்னர் மெட்ராஸ், பம்பாய், ஹைதராபாத் மாகாணங்களில் மொழிச் சிறுபான்மையினர் மொத்தமாக ஐம்பது சதவிகிதத்துக்கும் மேலே இருந்தார்கள். அடுத்துச் சென்னையில் அமர்ந்தபடி பொட்டி ஸ்ரீராமுலு ஆந்திரா தனி மாநிலமாக வேண்டும் என்று போராட முதல் தனி மொழிவாரி மாநிலமாக அது உருவானது. 1955-ல் மொழிவாரி மாநிலங்களை இந்தியா முழுக்க அமைக்க அமைக்கப்பட்ட பாஸ்லி அலி தலைமையிலான குழுவின் முன்னர் 1,52,25௦ ஆவணங்கள் பல்வேறு தரப்புகளால் தரப்பட்டன. அவற்றில் இருந்து சலித்தெடுத்து மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. அவை புவியியல் தொடர்ச்சி, பொருளாதாரச் சாத்தியம், சமூககலாசாரத் தனித்துவம், ஜாதி, பகுதி, வர்க்க கூட்டணிகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு மொழிவாரி மாநிலங்களைப் பரிந்துரைத்தது. 

ஆந்திராவோடு தெலங்கானா இணைக்கப்பட்டது, மைசூர் மாநிலத்தோடு ஹைதராபாத், பம்பாய், மெட்ராஸ் பகுதிகளின் கன்னட மொழி பேசும் பகுதிகள் இணைக்கப்பட்டன. பம்பாய் மாகாணம் ஹைதராபாத்தின் மராத்வாடா பகுதி, குஜராத்தின் சவுராஷ்டிரா, கட்ச் பகுதிகள், மத்திய மாகாணத்தின் பீரார் ஆகியவற்றைச் சேர்த்து மராத்தி, குஜராத்தி இணைந்த இருமொழி மாநிலமாக ஆனது. பின்னர் மராத்திகள் பொங்கி எழுந்து தனி மாநிலமாக மாறினார்கள். மத்திய பாரத், விந்திய பிரதேசம், போபால் ஆகியவற்றை இணைத்து தனி இந்தி பெரும்பான்மை மாநிலமாக மத்திய பிரதேசம் மாறியது. மெட்ராஸ் மாகாணத்தின் மலபார் பகுதி திருவிதாங்கூர் பகுதியோடு இணைக்கப்பட்டுத் தனிக் கேரளா மாநிலமானது. PEPSU மாகாணத்தோடு பிரிவினைக்குப் பிந்தைய பஞ்சாப் சேர்க்கப்பட்டது.

வடகிழக்கில் பல்வேறு பழங்குடியின குழுக்கள் ஆயுதம் ஏந்தியது, சீனா, பாகிஸ்தான் ஆகியவற்றுக்கு அருகில் அம்மாநிலங்களின் எல்லை இருந்தது, பன்முகக் கலாசாரம் ஆகியன மிகக்குறைந்த மக்கள்தொகை இருந்தும் தனித்தனி மாநிலங்களை உருவாக்க அனுமதித்தன. மகாராஷ்டிரா, குஜராத் பிளவுபட்ட சூழலில் பஞ்சாப் பகுதி சீக்கியர்கள் குருமுகி வரிவடிவத்தில் தங்களின் மொழியை எழுதி தாங்கள் தனித்துவமானவர்கள் என்று காட்டினார்கள். மதரீதியாக இந்துக்களில் இருந்து தங்களைப் பிரிக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டது ஏற்கப்படாவிட்டலும் அதையே மொழிரீதியான கோரிக்கையாக மாற்றிய பொழுது பஞ்சாப், ஹரியானா, ஹிமாசல பிரதேசம் என்று மாநிலங்கள் சுருக்கியும், விரித்தும் மாற்றப்பட்டன. சண்டிகார் பஞ்சாப், ஹரியானாவுக்குப் பொதுவான தலைநகர் ஆனது.

அறுபத்தி ஒன்றில் மைதிலி, மகதி, போஜ்புரி மொழிகள் பேசுபவர்கள் தங்களை இந்தியில் இருந்து வேறுபட்டவர்களாகக் காட்டிக்கொண்ட சூழலில், அடுத்தக் கணக்கெடுப்பில் அவற்றை இந்தியோடு சேர்க்கும் பணி செவ்வனே மேற்கொள்ளப்பட்டது. மாநில மறுசீரமைப்புக்கான பாஸில் அலி குழு ஹிமாசல பிரதேசத்தைப் பஞ்சாபோடு இணைத்தால் அதிகத் தொழில் முனைவோர் மிக்கப் பஞ்சாப் அதனைச் சுரண்டும் என்று அதனைச் சேர்க்க வேண்டாம் என்று பரிந்துரைத்தார். தெலங்கானா, விதர்பா பகுதிகள் தனி மாநிலங்களாக ஆகவேண்டும் என்கிற அவரின் பரிந்துரை ஏற்கப்படாமல் போய் அவை இன்னமும் வளர்ச்சியில் பின்தங்கிய பகுதிகளாக உள்ளதைக் காணலாம்.

கோலார் மாவட்டத்தில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தெலுங்கு மொழி பேசுபவர்கள் என்றாலும், அந்த மாவட்டம் வளர்ந்ததற்கும், அதற்கான மின்சாரம், பொருளாதார வளர்ச்சிக்கு மைசூர் மாநிலத்தைச் சார்ந்திருந்ததாலும் அதனோடு அது இணைக்கப்பட்டது. கிழக்குப் பாகிஸ்தான் வங்கத்தைப் பிரித்து உருவாக்கப்பட்ட சூழலில் டார்ஜீலிங், கூச் பீஹார், ஜல்பாய்குரி பகுதிகள் மேற்கு வங்கத்தோடு துண்டிக்கப்பட்ட சூழலில், இவை இரண்டையும் இணைக்க இந்தி பெரும்பான்மை மிக்கப் பூர்ணியா மாவட்டத்தின் ஒரு பகுதி மேற்கு வங்கத்துக்குத் தரப்பட்டது.

பழங்குடியினரில் மொழி சார்ந்து மாநிலங்களைப் பிரிப்பது மிகவும் சிக்கலான ஒன்று என்கிற அளவுக்குப் பல்வேறு மொழி சிறுபான்மையினர் அவற்றில் வழங்கி வருகிறார்கள். லடாக் பகுதியை அதனைப் போலவே புத்த மதத்தினர் அதிகம் மிகுந்த ஹிமாசல பிரதேசத்தின் லாகுல், ஸ்பிதி பள்ளத்தாக்கு பகுதிகளோடு இணைக்கலாம் என்கிறார் ஆசிரியர். கச்சார் எனும் வங்காளிகள் பெரும்பான்மையாகயுள்ள அசாம் மாவட்டத்தை, திரிபுராவுடன் இணைக்கலாம்.
இதன்மூலம் பத்து லட்சம் வங்காளிகள் பயத்தில் இருந்து அசாம் விடுபடும். நேபாளி மொழியைப் பெரும்பான்மையாகப் பேசும் டார்ஜீலிங் மாவட்டத்தை, சிக்கிம் உடன் இணைக்கலாம். கோவாவை கொங்கணி மொழியைப் பேசும் கர்நாடகாவின் துளு பகுதி, மகாராஷ்டிராவின் சில பகுதிகளை இணைத்து விரிவாக்கலாம். ரஷீதின் கான் எனும் பேராசிரியர் மிகப்பெரிய பரப்பளவை கொண்ட உத்திர பிரதேசத்தை ஐம்பத்தி ஒன்பது சுயாட்சி மிக்கச் சமூக, கலாசாரப் பிரிவுகளாகப் பிரிக்கலாம் என்று பரிந்துரைக்கிறார்.

https://saravananagathan.wordpress.com/2016/01/20/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-3-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5/



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 மொழி அரசியல் பகுதி – 4 இந்தியாவை சமஸ்கிருதமயமாக்கல்

மொழி அரசியல் பகுதி 4:

சம்ஸ்கிருதம் என்கிற மொழியை விடுதலைக்குப் பிந்தைய இந்திய அரசு எப்படியெல்லாம் வளர்க்க முயன்றது என்பதைப் பற்றிப் புரிந்துகொள்ளச் சம்ஸ்கிருத கமிஷன் சார்ந்து பல்வேறு விஷயங்களைத் தொட்டுக் காண்பிக்கிறது சுமதி ராமசுவாமியின் கட்டுரை.

விடுதலைக்குப் பிந்தைய காலத்தில் சம்ஸ்கிருதத்தை வளர்க்க அளவில்லாத நேரம், சக்தி, பணம் ஆகியவற்றை மத்திய அரசு செலவிட்டது. அம்மொழி யாருடைய தாய்மொழியும் இல்லை என்பதாலும், இந்தியாவின் பழமையான மொழி அதுவே என்பதாலும் அதனையே இந்தியாவின் தேசிய மொழியாக்க வேண்டும் என்று அதன் ஆதரவாளர்கள் முழங்கினார்கள். ஹீப்ரு மொழியை இஸ்ரேலின் தேசிய மொழியாக, மக்கள் பயன்பாட்டு மொழியாக மறுஉருவாக்கம் செய்த பொழுது, அதுவரை யூதர்கள் முன்னொரு காலத்தில் பேசிக்கொண்டிருந்த மொழி மக்களின் பயன்பாட்டுக்குள் பரவலான இடத்தைப் பெற்றது. இதைப்போலச் சம்ஸ்கிருதத்தை மாற்ற முயன்றதை ராபர்ட் அல்டர் ஒப்பிட்டு பார்க்கிறார்.
இதன் ஆதரவாளர்கள் ‘சம்ஸ்கிருதமே இந்தியா’ என்று உறுதியாக நம்புகிறவர்கள். வேற்றுமையில் ஒற்றுமை என்று பலரும் கூறிக்கொண்டு இருக்கும் சூழலில், இந்தியாவின் குழப்பம் மிகுந்த வேற்றுமைகளைத் தாண்டி குறிப்பிடத்தகுந்த ஒற்றுமையைச் சம்ஸ்கிருதமே சாதிக்கும் என்று அவர்கள் கருதினார்கள்.

பல்கலைக்கழகக் கல்வி கமிஷன், பள்ளிக்கால உயர்கல்வி கமிஷன், அதிகாரப்பூர்வ மொழி கமிஷன் ஆகியவை வடமொழிக் கல்வி இந்தியக் குடிமகன்களுக்கு அவசியம் என்று நம்பிக்கை தெரிவித்தன. பல்வேறு கருத்துக்கள்,, அற எடுத்துக்காட்டுகள், இலக்கிய வளங்கள், அறிவு, ஞானத்தின் கருவூலமான அம்மொழி அழிந்து கொண்டிருக்கையில் அதனை அரசு காக்காவிட்டால் அம்மொழி அழிந்துவிடும் என்று இக்கமிஷன்கள் கவலை தெரிவித்தன. அக்டோபர் 1956-ல் மாநில மறுவரைவுக் குழுவை அமைத்த மத்திய அரசு சம்ஸ்கிருதத்தின் தற்போதைய நிலையை ஆய்வு செய்யச் சுனிதி குமார் கோஷ் எனும் வடமொழி அறிஞர் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. இவருடன் சென்னைப் பல்கலையின் வி.ராகவன், பூனா பல்கலையின் ஆர்.கே.தாண்டேகர், ஜாதவ்பூர் பல்கலையின் எஸ்.கே.டே உட்பட ஏழு சம்ஸ்கிருத அறிஞர்கள் நியமிக்கப்பட்டார்கள்.

சுனிதி குமார் கோஷ் இந்திய மொழிகளின் மொழியியல் வரலாற்றில் ஆழ்ந்த அறிவுள்ளவர். நாற்பத்தி மூன்றில் அவர் இந்துஸ்தானியே இந்தியாவின் தேசிய மொழியாக இருக்கும் தகுதி உடையது என்றும், இந்துக்கள் மட்டும் இருந்தால் மூவாயிரம் வருடமாக இந்தியாவின் இணைப்பு மொழியாக உள்ள வடமொழியை தேசிய மொழியாக ஆக்கலாம் எனக்கருதினார். அதிகாரப்பூர்வ மொழி கமிஷன் 56-ல் அறிக்கை சமர்ப்பித்த பொழுது அதன் உறுப்பினராக இருந்த கோஷ் ‘இந்தி ஏகாதிபத்தியத்தை’ எதிர்த்தார். வடமொழி, இந்தி, ஆங்கிலம் ஆகிய மூன்றும் மத்திய அரசின் மொழிகளாக வேண்டும் என அவர் கோரினார். வி.ராகவனோ எப்பொழுதும் வடமொழியே இந்தியாவின் தேசிய மொழியாக வேண்டும் எனவும், அப்படி இந்தி தேசியமொழியானால் அது சம்ஸ்கிருதமயமான வடமொழியாகவே இருக்க வேண்டும் எனக்கருதினார்.

கோஷ் தலைமை தாங்கிய கமிஷன் சம்ஸ்கிருதத்தை உச்சக்கட்ட ஒற்றுமை சக்தி, அளவில்லாமல் இணைக்கும் ஆற்றல், நம்முடைய இரத்தத்தில் கலந்த மொழி, அது மூச்சோடு மூச்சாகக் கலந்து விட்டது, இந்தியாவின் இருப்புக்கான ‘அடிப்படையே’ வடமொழியே என்று வாதிட்டது. ஒரு கலாசாரம், ஒரு மொழியின் அங்கம் என்கிற எண்ணத்தை வடமொழியை விலக்கினால் இந்தியர்கள் இழந்துவிடுவார்கள் என்று அது அஞ்சியது.

வடமொழியை இந்தியாவின் தேசிய மொழியாக, இணைப்பு மொழியாகக் கருதும் போக்கு ‘இந்துமத மறுமலர்ச்சி’யாளர்களிடம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் இருந்தே தென்பட ஆரம்பித்தது. இந்திய மொழிகளின் அனைத்துக்கும் அதுவே தாய் என்றும், ஒட்டுமொத்த வலிமை, அழகின் கருவூலம் என்றும் அது தவறாகப் போற்றப்பட்டது. சார்லஸ் வில்கின்ஸ், மோனியர் வில்லியம்ஸ் முதலிய ஆங்கிலேய நிர்வாகிகள் மற்ற இந்திய மொழியைக் கற்க முடியாத குறையை வடமொழியைக் கற்றுப் போக்கிக்கொள்ளலாம் என்று அறிவுறுத்தினார்கள்.

தயானந்தர், விவேகானந்தர், அரவிந்த கோஷ் ஆகியோர் வடமொழியைக் கற்றே ஆகவேண்டும் என்று வலியுறுத்தியதோடு, தாங்களும் அதைக் கற்றுத் தேர்ந்தார்கள். நேரு, காந்தி வடமொழிக்கு பதிலாக இந்துஸ்தானியை தேசிய மொழியாக்க விரும்பினாலும், காந்திக்கு வடமொழியின் மீது பற்று இருக்கவே செய்தது. பகவத் கீதையைச் சம்ஸ்கிருதத்தில் தான் ஒருவர் படிப்பது உகந்தது என்றார். நேருவோ ‘இந்தியாவின் சிறந்த கலாசாரம், புதையலை உள்ளடக்கியது எது எனக்கேட்டால் வடமொழியே என யோசிக்காமல் சொல்வேன்.’ என்றார்.

தயானந்தர் ஆரிய சமாஜத்தை உருவாக்கி, வடமொழியைக் கற்பதை பரவலாக்க முயன்றார். பின்னர் இந்து மதத்துக்குப் பிற மதத்தவரை மதமாற்றுவதில் ஈடுபட்டதால் இந்தியை முன்னிறுத்தினார். எனினும், ஆரிய சமாஜம் உருது/அரேபிய/இஸ்லாமிய எதிர்ப்பின் அடையாளமாகத் தன்னுடைய கல்வித் திட்டத்தில் வடமொழியைக் கட்டாயம் சேர்த்தது. ‘தேசிய மதத்தின்’ முதன்மை கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்க்க தியாசிபிகல் அமைப்பின் ஆல்காட் ‘தேசிய வடமொழி இயக்கம்’ ஒன்றை நடத்தக்கூடத் திட்டமிட்டார்.

விவேகானந்தர் மக்கள் தங்களுடைய தாய்மொழியில் பாடங்களைக் கற்க வேண்டும் என்றாலும், வடமொழியே அவர்களுக்கு அதிகாரமும், மரியாதையும் தரும் என்று உறுதியாகக் கூறினார். அதைக் கற்கா விட்டால் மக்கள் கூட்டம் அடிமைப்பட்டே இருக்கும் என்றும், ஆதிக்க ஜாதியினரை எதிர்ப்பதை விடுத்து ஒடுக்கப்பட்ட ஜாதியினர் வடமொழியைக் கற்று தங்களின் நிலையை உயர்த்திக் கொள்வதோடு, ஆதிக்க ஜாதியினரின் கலாசாரத்தை வடமொழியைக் கற்பதன் மூலம் பெற்று ஜாதிமுறையைச் சமப்படுத்தலாம் என்று கூறினார்.

காந்தி இந்துஸ்தானி சம்ஸ்கிருதமயமாவதை எதிர்த்தாலும், தெற்கு, வடக்கு இரண்டின் இணைப்பாக வடமொழியே திகழ்கிறது என்றும், வடமொழியின் மகள்களாகத் தென்னிந்திய மொழிகள் தங்களுக்கு வார்த்தைப் பஞ்சம் ஏற்படுகிற பொழுது தாயான வடமொழியை நாடின என்றும் நாற்பத்தி இரண்டில் பேசினார். நாகரி, உருது வரிவடிவங்களில் அவர் விருப்பம் கொண்டிருப்பதாகச் சொன்னாலும் நாற்பத்தி ஆறில் இந்துக்கள் அனைவரும் நாகரி வரிவடிவத்தைக் கற்பதை கட்டாயமாக்க தன் விரும்புவதாகத் தெரிவித்தார். தான் வடமொழியைப் பள்ளிக்காலத்தில் கற்க கடினப்பட்டதை ஒப்புக்கொண்ட காந்தி, ஒவ்வொரு இந்து ஆணும், பெண்ணும் சம்ஸ்கிருதத்தில் ஆழ்ந்த அறிவைக் கொண்டிருக்க வேண்டும் என்று தன்னுடைய
சுயசரிதையில் எழுதினார்.

இவ்வளவு ஆதரவு கருத்துக்கள் சொல்லப்பட்டாலும், இறுதியில் வடமொழி தேசிய மொழியாகாமல் போனது சம்ஸ்கிருத கமிஷனை வருத்தப்படுத்தியது. வடமொழி ஒவ்வொரு இந்தியனின் நாவிலும் நடமாடிய பொழுது, இந்தியா வெற்றிமகுடம் தரித்த வண்ணம் இருந்தது என்று வரலாற்றை ஒற்றைப்படையாக அவர்கள் அணுகி வாதிட்டார்கள். வடமொழியை ஷெல்டன் பொல்லாக் ‘மாண்டரின்’ மொழி என்று அதன் உயர்தட்டு மக்களுக்கு மட்டுமே பயன்பட்ட தன்மையைக் குறிக்கப் பயன்படுத்துகிறார். தூய்மைப்படுத்தப்பட்ட வடமொழி தற்போது மக்களைச் சென்றடைவதன் மூலம் அது இயற்கையான மொழியாக மாறக்கூடும் என்று அவர்கள் கருதினார்கள்.

விடுதலைக்கு முந்தைய காலத்திலேயே பம்பாய், கல்கத்தா பல்கலைகளில் வடமொழி இரண்டாவது கட்டாய மொழியாக இருந்தது. தேசிய கல்வியில் வடமொழியைச் சேர்க்க பல்வேறு கல்லூரிகள், அரசுகள் முயல்வது விடுதலைக்கு முந்தைய காலத்தில் ஆரம்பித்தது அதன் உச்சப்புள்ளி இக்கமிஷனில் வந்து நின்றது.

இந்தியன் என்பவர் தேசத்துக்கான வடமொழியின் அடிப்படை மதிப்பை மறுக்கக்கூடாது என்று இக்கமிஷன் வாதிட்டது. செப்டம்பர் நாற்பத்தி ஏழில், சம்ஸ்கிருதத்தை இந்தியாவின் தேசிய மொழியாக ஏற்பதன் மூலம் மேலும் இணைந்திருக்க முடியும் என்று அம்பேத்கர் உட்பட இருபத்தி எட்டு பேர் மனுவை அரசியலமைப்பு வரைவுக் குழுவின் முன்னர்ச் சமர்ப்பித்தார்கள். (டி.டி.கே,லக்ஷ்மிகாந்த மைத்ரா, துர்காபாய் தேஷ்முக், நஸ்ரூதின் அகமது ஆகியோர் பிறர்.)எது இந்தியாவின் தேசிய மொழியாக வேண்டும் என்கிற சிக்கல் எழுந்த பொழுது நஸ்ரூதின் அகமது, ‘வடமொழி யாருக்கும் தாய்மொழி இல்லை என்பதால் அது அனைவருக்கும் சமமான வாய்ப்பையே தரும்.’ எனக் கருதினார். எல்லா மொழிகளிலும் வடமொழியின் சொற்கள் இருப்பதால் அம்மொழியைக் கற்பது கடினமாக இருக்காது என்று வடமொழியின் ஆதரவாளர்கள் வாதிட்டார்கள்.

மைத்ரா வடமொழியை ஒருவர் ஏற்க மறுப்பது தன்னுடைய பாட்டியை நிராகரிப்பது போலாகும் என்றார். இன்னமும் அபத்தமாக இந்தியின் ஆதரவாளர்கள், இந்தி தான் வேதகால வடமொழியில் இருந்து இறங்கி வந்த, மூத்த மகள் எனவும் பேசினார்கள். வடமொழியின் வரிவடிவமே அதிகாரப்பூர்வ வரிவடிவமாக இந்திக்கு ஏற்கப்பட்டது. அளகுராய் சாஸ்திரி, இந்தி என்கிற தேசிய மொழியும், தேவநாகரி வரிவடிவமும் ரிக் வேதத்தில் இருந்து பெறப்பட்டவை என்று அடிப்படை மொழியறிவு இல்லாமல் அரசியலமைப்பு வரைவுக் கூட்டத்தில் பேசினார்.

சம்ஸ்கிருத கமிஷன் இந்தியாவுக்கான மொழி வடமொழி என்று நிறுவ இந்தியா முழுக்கப் பயணம் செய்து பலரை நேர்முகம் கண்டது. தெற்கில் மெட்ராஸ் மாகாணத்தில் இருந்தே பலரும் இதில் ஆர்வமாகக் கலந்து கொண்டார்கள் என்று அப்பொழுதைய காமராஜர் அரசு அவர்களை மதிக்காததை மறைத்து எழுதினார்கள். என்னென்ன கேள்விகள் எழுப்பினோம் என்று மட்டும் சொன்ன கமிஷன், என்னென்ன பதில்கள் வந்தன என்பதைப் பற்றி மூச்சுவிடவில்லை. ஈழவர்கள், மாப்பிள்ளைமார்கள், கிறிஸ்துவர்கள் ஆகிய அனைவரும் வடமொழியை விருப்பத்தோடு கற்பதாகவும், லக்னோவில் இஸ்லாமிய பெண்களும், குஜராத்தில் பார்சிக்களும், பஞ்சாபில் சீக்கியர்கள் அதைக் கற்பதைக் கண்டதாகவும் சுனிதி குமார் சாட்டர்ஜி சொன்னார். இஸ்லாமியர்களை எந்த இடத்திலும் தாக்காமல் கவனமாக இருந்த கமிஷன், ஒரே ஒரு இடத்தில் வடமொழியைக் கற்க மறுத்து ஆங்கிலேயர் நம்முடைய நாட்டைப் பிடிக்க அவர்கள் காரணமாகி விட்டனர் என்று ‘அறிவுப்பூர்வமாக’ கருத்துத் தெரிவித்தது.

வேதங்கள் கோயில்களில் பயன்படுத்துவதைக் கண்டு பூரித்த இந்தக் கமிஷன் ஒரு மதச்சார்பற்ற அரசு கோயில்களை முறைப்படுத்தக் கூடாது என்றாலும், இந்திய கலாசாரத்தின் அடிப்படையான வேதத்தைத் தாங்கிய வடமொழியின் வளர்ச்சிக்கு இக்கோயில்களின் வருமானத்தைப் பயன்படுத்தலாம் என்று பரிந்துரைத்தது. தினமும் சம்ஸ்கிருத செய்திகளோடு, கீதையும், மற்ற இதிகாசங்களும் வானொலியில் ஓதப்படவேண்டும் என்றும், காளிதாசர் தினத்தைக் கொண்டாட வேண்டும் என்றும் அது கோரியது. திரைப்பிரிவு இதிகாசங்கள் சார்ந்த ஆவணப் படங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று நீண்டன அதன் பரிந்துரைகள்.

அதன் அறிக்கையின் முதல் பக்கத்திலேயே தண்டி எனும் பல்லவர் அவையில் இருந்த வடமொழி அறிஞர் ‘மகா முனிவர்கள் பேசிய புனித மொழி’என்றதையும், தொல்காப்பியத்துக்கு உரை எழுதிய சேனாவரையர் ‘வடமொழி இந்தியாவின் எல்லாப் பகுதிகளுக்கும் பொதுவானது’ என்பதையும் சாதுரியமாகக் குறிப்பிட்டுத் தமிழர்கள் இம்மொழியை ஏற்பார்கள் என்று கருத்துத் தெரிவித்தது. தனித்தமிழ் இயக்கம் வடமொழியில் இருந்து கடன் பெறாமல் நவீன கருத்துக்கள், சிந்தனைகளை வெளிப்படுத்த முடியாது என்று சம்ஸ்கிருத திக்விஜயம் நூலில் சுனிதி குமார் சாட்டர்ஜி எழுதினார். ராகவன் இன்னும் ஒரு படிமேலே போய் இஸ்லாமியர்கள் ஆட்சியில் இந்தியா தன்னுடைய இந்தியத்தன்மையை வடமொழியை விலக்கியதால் இழந்தது என்றும், அப்பொழுது தெற்கு தான் வடமொழியைக் காத்தது என்றும் கருத்துரைத்தார்.

அதிகாரப்பூர்வ மொழி கமிஷன் ‘வெறும் ஐநூறு பேர் பேசும் ஒரு மொழியை அதிகாரப் பூர்வ மொழியாக’ ஆக்க முடியாது என்று குட்டியதை எதிர்கொள்ளும் விதமாக வால்மீகி ராமாயணத்தின் வரிகளைச் சொன்னால் மக்கள் புரிந்துகொண்டு கண்ணீர் விடுவதில்லையா என்று கேட்டுக் கலக்கியது! வடமொழி மற்ற தாய்மொழிகளைப் போல உயிரோடு இருப்பதோடு, கவிதை, கதைகளில் அது பயன்படுத்தப்படுகிறது, அது நவீன கருத்துக்களை வெளிப்படுத்தவும் பயன்படுகிறது என்றது இக்கமிஷன்.

ராஜா ராமண்ணா எனும் தேர்ந்த அறிவியல் அறிஞர் இன்றைய அறிவியல் காங்கிரஸ் சர்க்கஸுக்கு எல்லாம் முன்னோடியாக, ‘சம்ஸ்கிருதமும், அறிவியலும்’ எனும் துண்டறிக்கையில் ‘பாணினியின் இலக்கணமே மொழியை அறிவியல் முறைகளில் வேதியியல் பகுப்பாய்வு செய்தது’ என்றும், வடமொழியின் வடிவம் கணிதம், வடிவியல், தர்க்கம் ஆகியவற்றின் வடிவங்களை ஒத்திருப்பதாக மெய்சிலிர்த்தார். பெல்லியன் சூத்திரத்தை, பித்தாகரஸ் சூத்திரத்தை முன்னமே வடமொழியில் இருப்பதைச் சொல்லி கமிஷன் அறிவியலுக்கும் உகந்த மொழி வடமொழி என்றது. இந்து தேசியத்தின் மொழியில் பேசிய இந்தக் கமிஷன் சாமர்த்தியமாக அதைத் தேசியத்தின் போர்வையில் செய்வதாகக் காட்டிக்கொண்டது, இது மதச்சார்பின்மை அரசியலை விட்டுக் காங்கிரஸ் ஆட்சி ‘விலகிய கணம்’ எனப் பார்த்தா சாட்டர்ஜி’ வர்ணிக்கிறார்.

சத்யமேவ ஜெயதே என்று அரசு பொறித்ததும், ஸ்ரீமதி, ஸ்ரீமான் மிஸ்டர், மிஸர்ஸ் இடத்தை எடுத்துக்கொண்டதும், ஆயுள் காப்பீட்டுக் கழகம், இந்திய கடற்படை முதலிய அமைப்புகள் வடமொழியின் வாசகங்களைப் பயன்படுத்தியதை பெருமையோடு குறிப்பிட்ட கமிஷன் வடமொழியை அனைவரும் கற்க செய்யவேண்டும் என்றது.

மத்திய அரசு மத்திய சம்ஸ்கிருத வாரியத்தை வடமொழி வளர்ச்சி, பரவலாக்கம் ஆகியவற்றுக்கு அறிவுரை சொல்ல அமைத்தது. கேந்திரிய சம்ஸ்கிருத பரிஷத் அமைப்பை ஏற்படுத்தியும், கல்வித்துறையில் வடமொழி பிரிவு ஒன்றை உருவாக்கியும் வடமொழியைக் காக்க முனைந்தது. வடமொழி கற்றலை பல மாநில அரசுகளும், மத்திய அரசும் கட்டாயமாக்கின. ஒவ்வொரு ஐந்தாண்டு திட்டதிலும் கோடிக்கணக்கில் நிதி வடமொழி வளர்ப்புக்கு ஒதுக்கப்பட்டது. இந்து மதத்தை இந்தியாவின் இணைப்பு சக்தியாக மாற்ற முயன்று பிரிவினைக்கு வழிவிட்ட போக்கின் மறு வடிவமாக வடமொழி மீண்டும் இந்தியாவின் கலாசார முகமாக முன்னிறுத்தப்பட்டும் அரசின் செயல்பாடுகளைத் தாண்டி வடமொழி சீர்குலைந்து வருகிறது என்று அதன் ஆதரவாளர்கள் குமைகிறார்கள்.

சுதீப்தா கவிராஜ் குறிப்பிடுவதைப் போல, ‘நவீனத்தை எதிர்கொள்ள அஞ்சுகிற சமூகம் தன்னைக் கடந்தகாலம், கலாசாரம் ஆகியவற்றின் மாறுவேடங்களில் ஒட்டுமொத்த நவீன கருத்துக்களும் உள்ளதாகத் தன்னைப் புதைத்துக் கொள்வதைச் செய்கிறது. அது நவீனத்தை எதிர்கொள்ள மறுக்கும் பயமும், நவீனத்தால் தான் சிதைவுறுவதை ஏற்க மறுக்கும் போக்குமே இதற்குக் காரணம்.’

ஷெல்டன் பொல்லாக்கின் வரிகளில், ‘தெய்வங்களின் மொழியான சம்ஸ்கிருதம் தன்னுடைய வாழ்நாளை நீட்டித்துக் கொள்ள இம்மை உலகில் சாதாரண மனிதர்களின் நாவில் புழங்க வேண்டியது ஆகிற்று!’ என்கிறார். வடமொழி சில மேல்தட்டுக்கு மட்டுமே உரியது என்கிற போக்கு போய், அடித்தட்டு மக்களைச் சென்றடையும் ஜனநாயகமயமாக்கல் ஏற்பட்டு இருந்தாலும் அதனைக் கற்கும் ஒடுக்கப்பட்டவர்கள் மதிக்கப்படுகிறார்களா என்கிற கேள்வியையும் எழுப்பிக் கொள்ள வேண்டும்.

‘என் சம்ஸ்கிருதத்தின் கதை’ என்கிற கட்டுரையில் நவீன இந்தியாவில் முதன்முதலில் சம்ஸ்கிருதம் கற்ற தலித் பெண் என்கிற சிறப்புக்குரிய கும்தா பவ்டே தான் முதல்நிலையில் வடமொழியில் முதுகலைப் பட்டம் பெற்ற பின்னரும், பிராமணர்களும், ஆதிக்க ஜாதியினரும் அவரை ஏற்கவோ, அவருக்குப் பணி தரவோ விரும்பவில்லை. எனினும், அதே தேசம் நவீனத்தின் அடையாளமாக அவரை வரித்துக் கொண்டது. சாகாவரம் பெற்றது சம்ஸ்கிருதமும், சமத்துவமின்மையும் போலும்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 மொழி அரசியல் பகுதி-5 மொழி அரசியல் இயக்கங்கள், உருது சார்ந்த உறுத்தல்கள்

மொழி அரசியல் இயக்கங்கள், உருது சார்ந்த உறுத்தல்கள் :

மதம், மொழி என்பதைச் சார்ந்து அரசியல் அணியாகப் பல்வேறு குழுக்கள் திரள்கிறார்கள். இந்தியாவில் விடுதலைக்கு முந்தைய காலத்தில் மொழிச் சிக்கல்கள் இருந்தாலும் ஆங்கிலேய அரசு மதம் சார்ந்த அடையாளங்களைக் கொண்டே அதிகாரப் பிரிப்பை மேற்கொண்டதால் மத அரசியல் மொழி அரசியலை பின்னுக்குத் தள்ளியது. விடுதலைக்குப் பின்னால் நாற்பத்தி ஏழு வழக்கு மொழிகள், வட்டார வழக்குகள் எல்லாவாற்றையும் இணைத்து கரிபோலி என்கிற இந்தி வடிவத்தின் ஆதிக்கத்துக்குள் ஆட்படுத்தும் அரசியல் நடைபெற்றது. இந்த இந்தி சம்ஸ்கிருதமயமாக ஆக்கப்பட்டது.

விடுதலைக்கு முன்னால் உருதை முன்னெடுக்கும் அரசியலை மேற்கு ஐக்கிய மாகாணத்தில் (தற்போதைய உத்திர பிரதேசம்) பலமாக வேரூன்றி இருந்த இஸ்லாமிய இயக்கமான தியோபந்த்தும், அதன் அரசியல்-கலாசார இயக்கமான ஜமாத்-இ-உலமா-இ-ஹிந்த் அமைப்பும் மேற்கொண்டன. எனினும், இவை இரண்டும் தேசிய இயக்கத்துக்கு ஆதரவு தெரிவிப்பவையாக, காங்கிரஸ் சார்பாக இருந்ததால் உருது மொழியைப் பிரிவினையோடு இணைப்பது முழுக்கச் சரியல்ல.

பனராஸ் இந்து பல்கலையை உருவாக்கிய மதன் மோகன் மாளவியா ஹிந்தி சாஹித்திய சம்மேளனத்தை நிறுவினார். இந்து மதம், அதன் நூல்கள் ஆகியவற்றைப் பிரபலப்படுத்தும் நோக்கம் ஒருபுறம் என்றால், பாரசீகம்-அரேபிய மொழிகளால் அசுத்தமானதாக அவர்கள் கருதிய இந்தியை சம்ஸ்கிருதமயத்தின் மூலம் தூய்மைப்படுத்தினர். இந்தி-உருது சிக்கல் இந்து-முஸ்லீம் பிரச்சனையாக வடக்கில் கட்டமைக்கப்பட்டது. தெற்கில் நிலைமை வேறாக இருந்தது. மொழி அந்நியர்கள் என்று உருது மொழியை வடக்கில் சொன்ன பிராமணர்கள் தெற்கில் அந்நியர்கள் என்றும், அவர்களின் வடமொழி அன்னியம் என்றும் திராவிட இயக்கத்தால் வலியுறுத்தப்பட்டது. பார்ப்பனிய, சம்ஸ்கிருத கலாசாரம் அந்நியமானது என்று இங்கே அடையாளப்படுத்தப்பட்டது.

வடநாட்டில் சுத்திகரிக்கப்பட்ட இந்தியைக் கொண்டு இந்து-முஸ்லீம் தொடர்பு கொள்ளலில் இருந்ததாகத் தூய்மைவாதிகள் சொல்லிக்கொண்ட தடையை வட்டார வழக்குகள், பிற பேசு மொழிகள் ஆகியவற்றை இணைத்து நிலைநிறுத்தப்பட்ட அதிகாரப்பூர்வ இந்தியின் மூலம் சரி செய்ய முயன்றார்கள். எனினும், இந்து-முஸ்லீம் வேற்றுமை இப்படிப்பட்ட முயற்சிகளால் அதிகப்படவே செய்தது. இதைவிட மோசமாக, இஸ்லாமியர்களின் மொழியாக மட்டுமல்லாமல் எண்ணற்ற இந்துக்களின் மொழியாகவும் இருந்த உருது மொழியைக் காலங்காலமாக உருது மொழியைப் பேசாத பிற பகுதி இஸ்லாமியர்கள் தங்களின் மொழி என்று மக்கள் தொகை கணக்கெடுப்பில் பதியும் காரியம் நிகழ்ந்தேறியது. உருது மொழியை இஸ்லாமியர்களோடு தொடர்பு படுத்தும் செயல் இப்படி உச்சத்தைக் கவலைக்குரிய வகையில் எட்டியது.

ஒரு மொழியைப் பிடிக்கவில்லை என்றால் என்ன சிக்கல் என்று சிலர் கேட்கலாம். தமிழகத்தின் முதல்வராக இருந்த பக்தவத்சலம் இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்ற பொழுது பேசியது நகைமுரணாக இதற்குப் பதில் தரும், ‘ஒரு மொழியை ஒருவர் வெறுக்கிறேன் என்று சொன்னால் அதைப் பேசுகிறவர்களை வெறுப்பதாகவே பொருள். இது ஒரு மொழி, அதைப் பேசுபவர்கள் மீதான வெறுப்பை நாசூக்காக வெளிப்படுத்துவது ஆகும். அதிலும் இந்தியில் வளமை இல்லை என்று மறைமுகமாகக் கருதுவதன் வெளிப்பாடு இது.’ என்று அவர் சொன்னார். வடநாட்டின் மொழி இயக்கம் மதங்களைக் கொண்டு பிளவுபடுத்திய பொழுது, தெற்கில் நடைபெற்ற மொழி இயக்கம் தாங்கள் தமிழ் மொழி பேசுபவர்கள் என்று பெருமைகொண்ட எல்லா மதத்தவரையும் இணைத்துக் கொண்டு செயலாற்றும் அற்புதத்தை நிகழ்த்தியது.
தெற்கில் அதிகாரத்தில் குறைந்த எண்ணிக்கையில் இருந்த பிராமணர்களைப் பிற்படுத்தப்பட்ட ஜாதியினர் சுலபமாக அந்த இடங்களை விட்டு நகர்த்தியதால், வடக்கைப் போல வன்முறைகள் எதுவும் அவர்கள் மீது நடக்கவில்லை.

பால் பிராஸ் ஒரு மொழிக்காக மக்கள் தங்கள் உயிரைக் கொடுப்பார்கள் என்பதை தான் நம்பவில்லை என்று சொல்கிறார். எண்ணற்ற காரணிகள் இணைந்து அவற்றை மொழியின் பெயரால் எதிர்ப்பதே நடப்பதாக அவர் கருதுகிறார். மொழியியல் அறிஞரான அண்ணாமலை தமிழகத்தில் தாய்மொழிக்காக வேறு எதையும் எதிர்நோக்காமல் உயிரைவிட்ட எண்ணற்ற இளைஞர்களின் வாழ்க்கையைச் சொல்லி மொழிக்காக அப்படிப்பட்ட தியாகங்கள் நிகழ்வது சாத்தியம் என்று பதில் தருகிறார்.

சம்ஸ்கிருதத்தை மக்கள்தொகை கணக்கெடுப்பில் சொல்லப்படுவதைப் போல நிச்சயம் ஐம்பாதாயிரம் பேர் தாய்மொழியாகக் கொண்டிருக்கவில்லை. மேலும், அம்மொழியைத் தகவல் தொடர்புக்கு பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை இன்னமும் குறைவாகவே இருக்கும். எனினும், மேட்டுக்குடி இந்தியாவின் இந்து கலாசாரம், பண்பாடு, வரலாறு ஆகியவற்றின் அடையாளமாக அது திகழ்வதால் எட்டாவது அட்டவணையில் அதற்கு இடம் தரப்பட்டது.

அதே போலப் பாகிஸ்தானை விட்டு இந்தியாவுக்கு இடம்பெயர்ந்த சிந்திக்கள் சிந்தி மொழியைப் பேசினார்கள். இவர்கள் வியாபாரத்தில் ஈடுபடுபவர்களாக, அதிகக் கல்வியறிவு கொண்டவர்களாக இருந்தார்கள். சிந்திக்கள் தங்களின் பிழைப்புக்கு இந்தி, ஆங்கிலம் கற்றாலும் தங்களுக்கு என்று தனியான ஒரு பகுதியை கேட்டுப் போராட்டம் செய்யாவிட்டாலும் எட்டாவது அட்டவணையில் ஒரு மொழியாகத் தங்கள் மொழியைச் சேர்க்க வேண்டும் என்று போராடினார்கள். அது தங்களைத் தனித்து அடையாளப்படுத்தும் ஒரு செயலாக அவர்கள் உணர்ந்தார்கள். அதனால் அரசுக்கு எந்தச் செலவும் இல்லை என்பது ஒருபுறம், இன்னொருபுறம் சிந்த் மாகாணத்தை இந்தியாவை விட்டுப் பிரித்தது தவறு என்பதைச் சூசகமாக உணர்த்தும் அரசியல் லாபம் இந்திய அரசுக்கு இருந்தது.

மூன்றாவதாக மைதிலி மொழியை எட்டாவது பட்டியலில் சேர்க்க ஒரு காலத்தில் போராட்டம் நடந்து பிசுபிசுத்துப் போனது. ஆனால். பாஜக அரசு மத்தியில் ஆட்சிக்கு வந்த பொழுது பீகாரில் உள்ள பிராமணர்கள் பேசும் மொழியை மைதிலியை எந்த வேண்டுகோளும் இல்லாமலே எட்டாவது அட்டவணை மொழியாகச் சேர்த்தார்கள். பீகார், உத்திர பிரதேசத்தில் உருது மொழி சார்ந்து நடந்த அரசியல் காய் நகர்த்தல்கள் அடுத்தடுத்த பத்திகளில் இப்பொழுது காண்போம்.

இந்தியாவில் எட்டாவது பட்டியலில் மொழியாக உருது சேர்க்கப்பட்டு இருந்தாலும், அது பீகார், உத்திர பிரதேச பகுதிகளில் பரவலாகப் பேசப்பட்டாலும் அதை அந்தந்த மாநிலத்தின் அதிகாரப்பூர்வ மொழியாக அரசுகள் அறிவிக்கவில்லை. ஜனதா அரசின் ஆட்சி கவிழ்ந்த பிறகு வந்த பீகார், உத்திர பிரதேச சட்டமன்ற தேர்தலில் உருது மொழியை அதிகாரப்பூர்வ மொழியாக அறிவிப்பதாகக் காங்கிரஸ் (இ) வாக்குக் கொடுத்தது. இது குறித்துச் சமர்பிக்கப்பட்டு இருந்த குஜ்ரால் அறிக்கையைச் செயல்படுத்துவதாகக் கோடிட்டிருந்தது. இஸ்லாமியர்களின் ஓட்டுக்களைப் பெறப் போடப்பட்ட கணக்கு என்று சொல்லவேண்டியதில்லை.

பீகாரில் ஜெகந்நாத் மிஷ்ரா முதல்வராக இருந்தார். மைதிலி பிரமாணரான அவர் தன்னுடைய ஜாதியினரை உருதை அதிகாரப்பூர்வ மொழியாக்குவதை எதிர்க்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டு மைதிலி மொழியினருக்குச் சலுகைகள் வழங்கி இரண்டு மாங்காய்களைப் பறித்தார். இதற்கு முன்னர் உருதை அதிகாரப்பூர்வ மொழியாக மாற்ற முயன்ற பொழுது ஜனசங்கம் பீகாரில் போர்க்கோலம் பூண்டது என்றாலும்,தற்போது பாஜக வேடிக்கை பார்த்தது. உருதை அதிகாரப்பூர்வ மொழியாக்க 67-ல் முயன்ற பொழுது 15௦ பேர் கலவரங்களில் இறந்தார்கள். உருதுக்கு எதிராகப் போராட்டங்கள் எண்பதில் ஓரளவுக்கு வெடித்த பொழுது பத்து பேர் இறந்தார்கள். அன்ஜூமன்-தாரீக்-இ-உருது அமைப்பு உருதை அதிகாரப்பூர்வ மொழியாக ஆக்குவதில் தீவிரமாக இயங்கியது.

உத்திர பிரதேசத்தில் இப்படிப்பட்ட உருதை அதிகாரப்பூர்வ இரண்டாவது மொழியாக ஆக்கும் முயற்சி வெற்றிபெறவே இல்லை. எண்பத்தி ஒன்றின் டிசம்பர் மாதத்தில் தன்னுடைய கட்சி சகாக்கள், பிரதமர் ஆகியோரின் அனுமதியில்லாமல் உருதை வி.பி.சிங் அதிகாரப்பூர்வ மொழியாக ஆக்க முயன்று கடும் எதிர்ப்பை சம்பாதித்தார். அதிகாரப்பூர்வ என்கிற சொல்லை நீக்கி இரண்டாவது மொழி என்றாவது ஆக்கலாம் என்று முயன்றார். அவர் கொண்டுவந்த அவசரச்சட்டம் லக்னோ உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. அடுத்து ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் முதல்வர் ஸ்ரீபதி மிஸ்ராவும் வி.பி.சிங் வழியில் இரண்டாவது மொழியாக மட்டும் உருது மொழியை மாற்ற அவசரச்சட்டம் கொண்டு வர கட்சிக்குள் எதிர்ப்பு கிளம்பியது.

அதற்கு அடுத்து என்.டி.திவாரி முதல்வரானார். ராஜீவ் காந்தியின் இஸ்லாமியர்களைத் திருப்திப்படுத்தும் போக்குக்கு வலுசேர்க்க அவர் பழைய ஆயுதத்தைக் கையில் எடுத்தார். அவரும் அதே இரண்டாவது மொழி முயற்சியை மேற்கொண்டார். இந்தமுறை நிலைமை மோசமானது. உருதை ஆதரித்து ஒரு கல்லூரி மாணவர்களும், எதிர்த்து இன்னொரு கல்லூரி மாணவர்களும் பதவுன் நகரத்தில் ஊர்வலம் போய்ச் சந்தித்துக் கொள்ள அரசு கணக்கின்படி 26 பேர் இறந்து போனார்கள். இன்னமும் உருது அதிக மக்களால் பேசப்பட்டும் மாநில அரசால் அங்கீகரிக்கப்படாமல் உத்திர பிரதேசத்தில் இருக்கிறது.

முலாயம் சிங் யாதவ் உத்திர பிரதேச முதல்வர் ஆனபொழுது விபி சிங்கின் ஜனதா அரசை மூன்று காரணங்களுக்காக வெறுப்பதாகச் சொன்னார். பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தது, ஆங்கிலத்தை ஆதரித்துச் செயல்பட்டது, தேர்வுகளில் பிற்படுத்தப்பட்ட ஜாதியினர் காப்பி அடித்துத் தேர்ச்சி பெறுவதற்கு எதிரான விபி சிங்கின் பார்வையே என்று அவர் சொன்னார். அவர் ‘அங்க்ரேஸி ஹட்டாவ்’ (ஆங்கிலமே வெளியேறு) என்கிற முழக்கத்தைத் தந்தார். ஆங்கிலம் ஆதிக்க சக்திகளின் மொழி என்றும், அது மாநிலத்தை விட்டு வெளியேறி அந்த இடத்தை இந்தி பெறவேண்டும் என்றும், வெவ்வேறு மாநில அரசுகள் தங்களுக்குள் தத்தமது மொழியில் தகவல் பரிமாறிக்கொள்ள வேண்டும் என்பது அவரின் பார்வை.

லாலு இதற்கு மாறான பாதையைத் தேர்ந்தெடுத்தார்.
பிற்படுத்தப்பட்ட ஜாதியினர் ஆங்கிலம் கற்பதன் மூலமே முன்னேற முடியும் என்று அவர் ஆங்கிலம் கற்பித்தலை அரசுப் பள்ளிகளில் கட்டாயம் ஆக்கினார். அதைப் போல இஸ்லாமியர்களின் ஓட்டுக்களைப் பெற பாகல்பூரில் யாதவர்கள் இஸ்லாமியர்களைக் கலவரத்தில் கொன்றது போல இனிமேல் நடைபெறாது என்று உறுதி தந்தார். உருதும் அதன் இடத்தைப் பீகாரில் தொடர்ந்து பெற்றது. மைதிலி பிராமணர்களின் மொழியான மைதிலி அரசுப்பணிகளுக்குத் தேர்வு எழுதும் பட்டியலில் இருந்து லாலு அரசால் நீக்கப்பட்டது.

 

உருது மொழி உத்திர பிரதேசத்தில் தனக்குரிய இடத்தைப் பெறமுடியாமல் நிற்பது ஒரு முரண் என்றால், காஷ்மீரில் பெரும்பான்மை மக்களின் தாய்மொழியாக இல்லாத உருது அங்கே அதிகாரப்பூர்வ மொழியாக ஆதிக்கம் செலுத்துவது இன்னொரு கதை. காஷ்மீரில் மக்களால் பேசப்படும் மொழிகள் என்று கணக்கு போட்டால் காஷ்மீரி, டோக்ரி, கோஜ்ரி, மேற்கு பஹரி, இந்துஸ்தானி, பொத்வாரி, பால்ட்டி, லடாக்கி., ஷினா, புருஷாஸ்கி என்று பட்டியல் இறங்குவரிசையில் நீளும். இதில் காணப்படாத உருது தான் ஆனால் காஷ்மீர் அரசால் வளர்க்கப்படுகிறது.

ஒரு வினோதமான அம்சம் என்னவென்றால் பஞ்சாபில் இந்துக்கள் பஞ்சாபியை மொழியைப் பேசிய பொழுதும், தாங்கள் இந்தி மொழி பேசுவதாகக் கணக்கெடுப்புகளில் கூறினார்கள். கர்நாடகா, கேரளா, ஆந்திராவில் முஸ்லீம்கள் உருது மொழியில் பேசுவதாகக் கணக்கை கூட்ட பொய் சொல்வது நடந்தது. காஷ்மீரிலோ இஸ்லாமியர்கள் தங்களுடைய தாய் மொழியான காஷ்மீரை நேர்மையோடு பதிவது நிகழ்கிறது. ஷேக் அப்துல்லா நாற்பத்தி நான்கில் காஷ்மிரி, பால்டி, டார்டி, டோக்ரி, பஞ்சாபி, பஹரி, லடாக்கி முதலிய மொழிகளைக் காஷ்மீரின் தேசிய மொழிகளாகவும், உருதுவை இணைப்பு மொழியாகவும் ஆட்சிக்கு வந்தால் மாற்றுவதாக அறிவித்தார்.

காஷ்மீரில் உயர்கல்வியில் காஷ்மீரி மொழிக்கு இடமில்லை. பாடப்புத்தகங்கள் கூடக் காஷ்மீரி மொழியில் கிடைப்பதில்லை. காஷ்மீரி மொழியிலோ, இன்னபிற சிறுபான்மை மொழிகளிலோ செய்தித்தாள்கள் வருவதும் அரிதான ஒன்றாகவே உள்ளது. காஷ்மீரி மொழி சாரதா வரிவடிவத்தில் எழுதப்படுவது, அதைக் காஷ்மீரி பண்டிட்கள் நாகரி வரிவடிவத்தில் எழுதுவார்கள். இரண்டு வரிவடிவங்களையும் காஷ்மீர் அரசுகள் கண்டுகொள்ளவில்லை. அதோடு, எல்லா முக்கியத் தகவல் தொடர்பும் இந்தி, ஆங்கிலம், உருது ஆகியவற்றிலேயே மேற்கொள்ளப்படுகின்றன. காஷ்மீரி மொழிக்கு மத்திய அரசு வழங்கும் நிதி குறைவாகவோ, செலவு செய்யப்படாமலோ இருக்கிறது. எட்டாம் வகுப்புவரை காஷ்மீரி மொழியைக் கட்டாயமாக்கும் முயற்சியும் ஓரளவுக்கே வெற்றி பெற்றுள்ளது.

திபெத்திய மொழியின் கிளையான லடாக்கி மொழிக்கு வரிவடிவம் இருந்தும் லடாக் பகுதியில் உருது பயிற்றுமொழியாகத் திணிக்கப்பட்டது. திபெத்திய மொழியின் ஒரு பிரிவான பல்டி மொழியும் இந்தியாவின் வசமுள்ள காஷ்மீர், பாகிஸ்தான் வசமுள்ள காஷ்மீர் இரண்டு பக்கமும் உருது மொழியால் ஆதிக்கத்துக்கு உள்ளாகி காணாமல் போய்க்கொண்டு இருக்கிறது. பூன்ச், ரஜவுரி மாவட்டங்களில் நான்காம் வகுப்பு வரை கோஜ்ரி மொழி பயிற்றுவிக்கப்படுகிறது. பஹரி மொழிக்கும் காஷ்மீர் அரசுகள் சில சலுகைகளை வழங்குகின்றன. இந்தக் கொள்கையை வரிக்கூ எனும் பேராசிரியர் காஷ்மீரை இஸ்லாம் மயமாக்கும் வேலையே என்று கருதுகிறார். அரசியல் அறிவியல் அறிஞர் பால் பிராஸ் இதற்கு மாறாக வேலைவாய்ப்புகள் அருகியும், இந்தியாவில் இருந்தும் துண்டிக்கப்பட்டதாக உணரும் காஷ்மீரிக்களை மேலும் தகுதியுள்ளவர்கள் ஆக்கவும், இந்திய அரசுடனான தொடர்பு சுமுகமாக இருக்கவும் இந்த இந்தி, ஆங்கிலம், உருது எனும் மும்மொழிக்கொள்கை உதவுவதாகக் கருதுகிறார்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

மொழி அரசியல் பகுதி-6 கன்னட மொழி அரசியல் வரலாறு

கன்னட மொழி அரசியல் குறித்த ஜானகி நாயரின் கட்டுரை ‘LANGUAGE AND POLITICS IN INDIA’ நூலில் உள்ள கட்டுரைகளிலேயே முக்கியமானது எனலாம்., ஐம்பது பக்கங்களில் நீளும் அதன் சுருக்கத்தை இங்கே தந்தாலும், அதன் மூலத்தை முடிந்தவர்கள் வாசிக்கவும்.


புத்தாயிரம் வருடத்தின் ஜூலை 3௦ அன்று வீரப்பன் கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரை கடத்திய பொழுது நகரமே மூன்று நாட்களுக்கு மயான அமைதி கொண்டது. அவர் கடத்தப்பட்டு இருந்து நூற்றி எட்டு நாட்களும் பந்த்கள், உருளும் சேவைகள், பூஜைகள், கூட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றன. நகரத்தில் ஒரளவுக்கு வன்முறையும் இந்தக் காலத்தில் ஏற்பட்டது. சந்தனக் கடத்தல் வீரப்பன் தன்னுடைய கடத்தல் நாடகத்தில் கன்னட, தமிழ் தேசியங்களை எதிரெதிராக நிறுத்த முயன்றான்

.

நிலம், வேலைகள், நதிநீர் என்று பல்வேறு சிக்கல்களில் மோதிக் கொண்ட வரலாறை இருபது வருடங்களாகக் குறைந்தபட்சம் கொண்டிருந்த இம்மாநிலங்களுக்கு இடையே பகையை மேலும் வளர்க்கும் வகையில் அவனுடைய நிபந்தனைகள் இருந்தன. காவிரி நதிநீர் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு, 91 நடந்த காவிரி கலவரங்களில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உரிய இழப்பீடு, தமிழை நிர்வாக மொழியாகப் பெங்களூரில் பயன்படுத்துவது, வள்ளுவர் சிலையை அந்நகரில் திறப்பது, சிறப்பு அதிரடிப் படையின் அட்டூழியங்களை விசாரிக்க அமைக்கப்பட்ட சதாசிவ கமிட்டியின் மீதான நீதிமன்றத் தடையை நீக்குவது ஆகியன அதில் அடங்கும். தோட்டத்தொழிலாளர்களுக்கு இரு மாநிலங்களும் 15௦ ரூபாய் குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும் என்கிற நிபந்தனையையும் அவன் வைத்தான்.

பெங்களூர் வாழ் தமிழர்கள் தங்களை வீரப்பனின் கோரிக்கைகளில் இருந்து விலகியவர்களாகக் காட்டிக்கொண்டார்கள். பெங்களூரில் உள்ள தமிழ் சங்கங்களின் வேண்டுகோளுக்குச் செவி மடுக்காத கர்நாடக அரசு தற்போது வீரப்பனின் நிபந்தனைகளை ஏற்க முனைவதை தமிழ் சங்க தலைவர் ஆர்.எஸ்.மாறன் விமர்சித்தார். அரசின் கட்டுப்பாட்டை விட்டு போய்விட்ட இந்த விஷயங்களில் அரசு மீண்டும் தன்னுடைய பிடியை கொண்டுவரவேண்டும் என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.

ராஜ்குமார் கடத்தப்பட்டது ஒட்டுமொத்த கன்னட மொழியின் பெருமையைக் கடத்தியதற்கு ஒப்பாகும் என்று பல கன்னட அமைப்புகள் கொதித்தன. கன்னட பெருமையும் , கன்னட மொழி அரசியலும் எந்தளவுக்கு ஆதிக்கம் செலுத்துகின்றன என்பதைக் குறித்து விரிவாகப் பேசவேண்டி இருக்கிறது. மைசூர் அரசு ஆங்கிலேய ஆளுகைக்குக் கட்டுப்பட்டு இருந்தாலும் தனித்தே ஆட்சி செய்துவந்தது. நவீன வசதிகளைத் தன்னுடைய ஆட்சிப் பகுதியில் அவ்வரசு கொண்டு வந்தது. எனினும், தங்களுடைய மைசூர் மாகாண தேசியத்தில் மொழிப்பற்று இல்லை என்று அல்லூர் வெங்கட் ராவ் முதலிய அறிஞர்கள் கருதினார்கள், கன்னட சாஹித்ய பரிஷத் அமைப்பு மைசூரின் பொருளாதார வளர்ச்சிக்காக விஸ்வேஸ்வரய்யா தலைமையில் நூறு வருடங்களுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட பொழுது அது கன்னட மொழி வளர்ச்சியிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று பி.எம்.ஸ்ரீ கேட்டுக்கொண்டார்.

கன்னடமே உயர்ந்த மொழி என்கிற கருத்து மைசூர் மாநிலத்தில் நிலவிய பொழுதும், கேரளாவை போல நூலக இயக்கங்களின் மூலமோ, கல்வி இயக்கங்களின் மூலமோ மக்களைத் தாய்மொழியில் பெருமளவில் படிக்க வைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. முப்பதுகளில் கன்னட ஆசிரியரின் நிலைமை கவலைக்குரியதாகவே இருந்தது. ஆங்கிலமே அறிவியல், தொழில்நுட்பம்,, முதலாளிகள் அனைவருக்கும் உரிய மொழியாகப் பெருமளவில் இருந்தது கன்னட பற்றாளர்களைக் கவலைக்கு உள்ளாக்கியது. முப்பத்தி ஐந்தில் கன்னடத்தைப் பயிற்றுமொழியாக ஆக்கினாலும், உயர்நிலைப் பள்ளிகளில் சேர கன்னடம் தேவை என்கிற கட்டாய விதி அதே ஆண்டு நீக்கப்பட்டது. நித்தூர் ஸ்ரீனிவாச ராவ் முதலிய வெகுசில அறிவுஜீவிகள் தாய்மொழியில் பாடங்களைக் கற்பிக்க முயன்றார்கள்.

கர்நாடகாவை பொறுத்தவரை அறிவியல், தொழில்நுட்பம், பொருளாதாரம், ஐடி துறையில் ஆங்கிலமும், தொலைகாட்சி, சினிமாக்களில் இந்தி, தமிழ் ஆகியவை கலாசார ரீதியாகக் கோலோச்சுவது அம்மொழி மக்களைக் கடுப்பாக்கியது. எழுபதுகளில் வாட்டாள் நாகராஜ் தலைமையில் கன்னட சாலுவலி இயக்கத்தின் சார்பாகத் தமிழகத்தின் சில பகுதிகளைக் கர்நாடகத்தோடு இணைக்க வேண்டும் என்று போராட்டம் நிகழ்த்தியது. கடைகள், சினிமா கொட்டகைகள் தாக்கப்பட்டன. ஒரு தமிழகப் பேருந்து தாக்கப்பட்டது. கருணாநிதியின் கொடும்பாவி ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது. லக்ஷ்மிபுரம், ஒக்கலிபுரம், மகதி சாலை முதலிய தமிழர்கள் வாழ்ந்த பகுதிகள் இந்த வன்முறையால் பாதிக்கப்பட்டன. மைசூரின் பன்மொழி கலாசாரம் இப்பொழுது சுமையாகக் காணப்பட்டது.


அல்லூர் வெங்கட் ராவ் கர்நாடக விடுதலை இந்தியாவில் மாநிலமாக உருவான பொழுது, ‘கர்நாடகம் என்பது கன்னடத்தை விட விரிவானது…பிற வட்டார வழக்குகள், சிறுபான்மையின மொழிகளுக்கும் இங்கே இடமுண்டு. கன்னடமே ஆதிக்கம் நிறைந்தது என்றாலும் அறிவை எல்லாப் புறங்களில் இருந்தும் வரவேற்க வேண்டும்., ..;’ என்று அவர் பேசினார். இப்படிப்பட்ட ஆன்மீக தேசியத்தை விட்டுப் பயத்தை மையமாகக் கொண்ட சித்தானந்தா மூர்த்தி முதலியோர் முன்னிலைப்படுத்திய வெறுப்பைத் தூண்டும் தேசியம் முன்னணிக்கு வந்ததை டி.ஆர்.நாகராஜ் கவலையோடு குறிப்பிட்டார்.

இந்தச் சித்தானந்த மூர்த்தியின் மொழி அரசியலானது தமிழ் மொழி அரசியலின் அதே ஆண் தன்மையைத் தானும் கைக்கொண்டது. 91, 94 வருடங்களில் தமிழர்கள், இஸ்லாமியர்கள் மீது மொழி வெறியால் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. கன்னடத்தில் மராத்தி,. உருது, தெலுங்கு, தமிழ் மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டவர்களின் பங்களிப்பு உண்டு என்பதை அவர்கள் வசதியாக மறந்தார்கள். சித்தானந்த மூர்த்தித் தன்னுடைய சொந்த அனுபவங்களில் இருந்தே இந்தப் பயம் சார்ந்த அரசியலை முன்னெடுப்பதாகச் சொன்னார். மேலும் பெங்களூரின் மக்கள் தொகையில் 35 சதவிகிதம் மட்டுமே கன்னடர்கள் இருப்பதைக் கவலையோடு சொன்னார். கொல்கத்தாவில் இருபது சதவிகித பீகாரிகள் இருப்பதையும், சென்னையில் பரவலான மலையாள, தெலுங்கு மொழின் பேசுபவர்கள் இருப்பதும் வங்க, தமிழ் மொழியின் ஆதிக்கத்தைத் தடுத்துவிடவில்லை என்பதை அவர் மறந்து போனார். மேலும் தாய்மொழி என்று தங்களின் மொழியைப் பதிவு செய்தாலும் தமிழர்கள், மராத்தியர்கள் ஆகியோரில் பலரும் கன்னட மொழியில் சரளமாகப் பேசும் திறன் கொண்டவர்கள் என்கிற உண்மையும் கணக்கில் கொள்ளப்படவில்லை.

‘கர்நாடக இதன் பெயர், கன்னடம் நம் மூச்சாகட்டும்’ என்கிற கோஷத்தோடு தான் கர்நாடக மாநிலம் உதயமானது. 65 % கன்னட மொழி பேசுபவர்களும், துளு, குடகு, தெலுங்கு, தமிழ், மராத்தி முதலிய மொழிகளைப் பேசும் சிறுபான்மையினரும் மாநிலத்தில் இருந்தார்கள். மொழி சார்ந்து நான்கு கிளர்ச்சிகள் கர்நாடகாவில் நடைபெற்றன. கோகக் கிளர்ச்சி (1982), காவிரி போராட்டம் (1991), உருது ஒளிபரப்பு எதிர்ப்புப் போராட்டம் (1994), ராஜ்குமார் கடத்தல் (2000) உண்டாக்கிய கலவரம் ஆகியனவே அவை. முதல் போராட்டம் ஹூப்ளி-தாராவத் பகுதியை மையமாகக் கொண்டு ஒட்டுமொத்த கர்நாடகத்தையும் ராஜ்குமாரின் ஆதரவால் தாக்கியது, இராண்டாவது காவிரி போராட்டம் காவிரி படுகையான தெற்கு கர்நாடகத்தில் துவங்கி பெங்களூர் வரை பரவியது, உருது ஒளிபரப்பு எதிர்ப்புப் போராட்டம் பெங்களூர், மைசூர் பகுதிகளில் மட்டுமே நடைபெற்றது.

ராஜ்குமார் அபிமானிகள் சங்க தலைவர் ச.ரா. கோவிந்து கர்நாடகம் பலருக்குமான காஸ்மோபோலிடன் நகராக மாறி தங்களின் வாய்ப்புகள் பறிபோவதை தடுக்கப் பெங்களூரில் புதிய தொழிற்சாலைகள் எழுவது தடை செய்யப்பட வேண்டும் என்று கோரினார். கர்நாடக விமோசன ரங்கா முதலிய சிறிய அமைப்புகள் தனிக் கர்நாடக தேசம் என்றெல்லாம் கனவு கண்டன.
அறுபதுகளில் பெங்களூரின் ராமோத்ஸ்வ விழாக்களில் தமிழ் பாடகர்கள் அதிகம் இடம்பெறுவதை மாற்றி அங்கே கன்னட பாடகர்கள் இடம்பெற வேண்டும் என்று ஆ.நா.கிருஷ்ண ராவ், மா.ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய கர்நாடக சம்யுக்தா ரங்கா அமைப்புக் கிளர்ச்சி செய்தது.63-ல் வெளிவந்த காஞ்சித் தலைவன் எனும் எம்ஜிஆர் திரைப்படம் கன்னட அரசனான மயூரவர்மனை அவமானப்படுத்துவதால் ஒட்டுமொத்த கன்னட தேசமே அவமானப்பட்டதாகச் சொல்லி அப்படம் திரையை விட்டு நீக்கப்பட்டது./ வாட்டாள் நாகராஜ் தமிழ் படங்களை வன்முறையைக் கொண்டேனும் நிறுத்துவேன் என்று மெஜஸ்டிக் பகுதியில் இருந்த திரையரங்குகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்.


தமிழர்கள் ஆகாசவாணி என்கிற சொல்லை எதிர்த்ததை தேசியத்துக்கு எதிரானது என்று கன்னட அறிஞர்கள் சிலர் கூறினார்கள். கன்னட மொழியில் வானொலியில் ப்ரைம் டைம் செய்தி வாசிக்கப்படவேண்டும் என்று கர்நாடக அதிமுகக் கோரிக்கை வைத்தது. இந்தியில் இருந்து மொழிமாற்றம் செய்யப்பட்ட தொடர்களை வேலைவாய்ப்புகளைக் குறைக்கிறது என்று எதிர்த்தார்களே அன்றி,, இந்தி எதிர்ப்பால் அதைக் கன்னடர்கள் செய்யவில்லை.

தொண்ணூறுகளின் நடுவில் ராஜ்குமார் அபிமானிகள் சங்கம் ஆறு மாத காலத்துக்குக் கன்னட படங்களே திரையரங்குகளில் ஓட வேண்டும், ஒரு வருடத்துக்குப் பிற மொழி படங்களைத் தடை செய்யா வேண்டும், கன்னட படங்களுக்கு மட்டும் திரையரங்க வாடகையைக் குறைக்க வேண்டும் என்று கர்நாடக தயாரிப்பாளர், இயக்குனர் சங்கங்களை இணைத்துக் கொண்டு போராடியது. இந்த மற்ற மொழி திரைப்பட முடக்கம் தற்கொலைக்குச் சமம் என்று சொல்கிற அளவுக்குத் தொழிலை முடக்கியது. 76-ஆம் வருடத்தில் எல்லாத் திரையரங்குகளையும் மாநில அரசே எடுத்து நடத்தலாம் என்று பரிந்துரைக்கப்பட்டது. ஆறு மொழிகளில் படங்களைக் காட்டுகிறோம் என்று சொன்னாலும் அரசுத் தொலைக்காட்சி ப்ரைம் டைமில் கன்னட படங்களைக் காட்டவே செய்தது. பலர் இதனால் சேனல் மாற்றும் வேலையைச் செவ்வனே செய்தார்கள்.

கன்னடத்துவ அரசியலும், இந்துத்வ அரசியலும் பல்வேறு சமயங்களில் கைகோர்த்துக் கொண்டன என்றால் அது மிகையில்லை. 1994-ல் ப்ரைம் டைமில் உருது செய்தியை பத்தே நிமிடங்கள் ஒலிபரப்ப அரசு முடிவு செய்தது. எந்த இஸ்லாமிய அமைப்பும் இதற்காக எந்த வேண்டுகோளையும் வைக்கவில்லை. மேலும், இஸ்லாமியர்கள் மட்டுமே கர்நாடகாவில் உருது மொழி பேசுபவர்கள் இல்லை. சித்தானந்த மூர்த்தி ஆசீர்வாதத்தோடு உருது பேசும் இஸ்லாமியர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. இருபத்தி ஐந்து இஸ்லாமியர்கள் இறந்து போனார்கள்.

1984-ல் நான்காவது, மூன்றாவது வகுப்பு அரசுப் பணிக்கு சேர கட்டாயக் கன்னடம் தேவையில்லை என்று ராமகிருஷ்ண ஹெக்டே அரசு முடிவு செய்த பொழுது அது உருது பேசும் மக்களுக்கு ஆதரவானது என்று கலவரங்கள் வெடித்தும் அந்த அரசு தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது. எனினும், இந்த முறை அரசு விட்டுக்கொடுத்தது.
74-ல் தமிழகத்தில் தமிழக அரசு எண்பது சதவிகித வேலையிடங்களைத் தமிழர்களுக்கு ஒதுக்கிய பொழுது ஓரளவுக்கு மலையாளிகள் மீது நடந்த வன்முறை நீங்கலாகத் தமிழகம் மொழிச் சிறுபான்மையினர் மீது வன்முறையை மேற்கொண்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்லாமியர்கள் மீது இப்படித் தாக்குதல் என்றால் கிறிஸ்துவர்கள் மீதும் மொழிச்சாயம் பூசிக்கொண்டு தாக்குதல் நடைபெற்றது. ப்ரோட்டஸ்டன்ட் கிறிஸ்துவர்கள் கன்னட மொழியில் பூஜை நடத்தும் பாதிரியார்களை எல்லாச் சர்ச்சுகளிலும் நியமித்ததால் அவர்கள் சிக்கலில்லாமல் தப்பித்தார்கள். பெங்களூரில் உள்ள எண்பது சதவிகித கத்தோலிக்கக் கிறிஸ்துவர்கள் தமிழர்கள் என்பதால் அவர்கள் மீது மொழி வெறியால் வன்முறை கையாளப்பட்டது. கோகக் முதலிய மொழி அறிஞர்கள் கன்னட கத்தோலிக்கர்கள் மீது தமிழை இந்தச் சர்ச்சுகள் திணிப்பதாகக் குற்றஞ்சாட்டின. எண்பத்தி ஒன்றில் கிறிஸ்தரச் சங்கம் எனும் கன்னட சர்ச்சுகள் மட்டுமே இருக்க வேண்டும் என்று இயங்கிய அமைப்பு அருட்தந்தை ஆரோக்கியசாமி எனும் தமிழரை தாக்கியது. பெரும்பாலும் தமிழர்களே பிரியன்ட் சதுக்கச் சர்ச்சில் வழிபாட்டுக்கு வந்தாலும் கன்னடமே ஹை மாஸ் நிகழ்வில் பயன்படுத்தப்பட வேண்டும் எனச்]சொல்லி அந்தச் சர்ச் தாக்கப்பட்டது.

கன்னட எழுத்தாளர்கள் இது மத, கலாசாரப் பிரச்சனையில்லை, இது மொழிப்பிரச்சனை என்றதோடு கன்னட மொழியில் தமிழ் பாடல்களை அச்சிட்டுத் தருவது மொழித் திணிப்பு என்று வாதிட்டார்கள். எண்பத்தி எட்டில் கன்னட, தமிழ், ஆங்கிலம் என்று மூன்று மொழியில் ஆராதனை செய்யப்படும் எனச் சர்ச் அறிவித்தும் ஈஸ்டர் பண்டிகை காலத்தில் தொடர்ந்து கன்னட மொழிப்பற்றாளர்கள் போராடுகிறார்கள். தற்போது ஆர்ச்பிஷப் கர்நாடகாவில் இருந்து மட்டுமே தேர்வு செய்யப்படுகிறார்.

எண்பத்தி ஒன்றில் INTUC அமைப்பு நடத்திய வேலை நிறுத்தத்தில் தமிழர்கள், மலையாளிகள் அரசு வேலையை விட்டு அனுப்பப்பட வேண்டும் என்று கடும் கோரிக்கைகள் எழுந்தன. அடுத்து கோகக் போராட்டங்கள் எல்லா இடத்திலும் கன்னட மொழி பயன்பாட்டை உருவாக்க அறிவுஜீவிகள் வட்டத்தில் முதலில் துவங்கினாலும், அதற்கு ராஜ்குமார் ஆதரவு தெரிவிக்க மக்கள் போராட்டமாக மாறியது. பொதுச்சொத்துக்கள் கடும் வன்முறையால் தாக்கப்பட்டன. சரோஜ் மகிஷி கமிட்டி அமைக்கப்பட்டுக் கடைநிலை அரசு வேலைகளில் முழுக்கக் கன்னடர்களே வேலைக்கு அமர்த்தப்பட வேண்டும் முதலிய அரசுப் பணிகளில் மண்ணின் மைந்தர்களுக்கு முன்னுரிமை என்கிற கருத்தாக்கத்தை அது செயல்படுத்த உதவியது.

தமிழர்கள் மீது காவிரி நதிநீர் மன்ற ஆணையை கர்நாடக அமல்படுத்த தவறிய 91-ம் வருடம் நடைபெற்ற வன்முறைகள் குறித்து ஆராய்ந்த என்.டி.வெங்கடேஷ் கமிஷன் தரும் தகவல்கள் ஆச்சரியமூட்டலாம். மொழி சார்ந்த சிக்கல் என்று சொல்லப்பட்டாலும், இது நிலம் சார்ந்த சிக்கல் என்று அந்த அறிக்கை சுட்டுகிறது. தண்ணீர் சார்ந்த சண்டைகள், சச்சரவுகள் இருந்தாலும் பெங்களூரின் மேற்குப் பகுதியிலேயே கலவரங்கள் மிகுந்ததைக் காட்டி, அங்கே பல தமிழர்கள் சேரிப்பகுதிகளில் வாழ்வதையும், பல்வேறு ஆக்கிரமிப்புகள் இருப்பதும் நிலம் என்பது சட்டத்துக்குப் புறம்பாக ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பதையும் சுட்டிக்காட்டி தமிழர்கள் எந்தச் சூழலிலும் வாழ்ந்து தங்களின் வேலையைப் பறித்துக் கொள்வார்கள் என்கிற பார்வை அம்மக்களிடம் நிலவியதை கமிட்டி சுட்டுகிறது. அந்தக் கலவரங்களின் பொழுது போலீஸ் துப்பாக்கி சூட்டில் 17 தமிழர்கள், கலவரத்தில் 6 தமிழர்கள் இறந்தார்கள். மற்றபடி, 17 கோடி ரூபாய் அளவுக்குச் சொத்துக்கள் நாசப்படுத்தப்பட்டது இது பொருளாதாரத் தாக்குதல் என்பதை விளக்கும்.

தமிழகத்தில் இருந்து ஆதி திராவிடர்கள் பஞ்சம் பிழைக்கக் கர்நாடகம் நோக்கி வருவது ஜெர்ட்ரூட் வுட்ரபேவின் ஆய்வுகள் காட்டுகின்றன. பெங்களூரில் தெரு வண்டி வைத்தோ, வெவ்வேறு இடங்களில் வேலை பார்க்கவோ தங்களால் முடிவதாக அம்மக்கள் தெரிவிக்கிறார்கள். அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதியும், தந்தை பெரியாரும் கன்னட மண்ணில் தமிழர்கள் கன்னடர்களாகவே வாழ வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள். தமிழர்கள் தங்களின் கன்னடத் தொடர்பை மேலும் உறுதிப்படுத்த கெம்பகவுடா எனும் பெங்களூரு நகரை நிர்மாணித்தவர் வன்னியர் என்று குறிப்பிட்டார்கள்.

கோகக் போராட்டம் உச்சத்தில் இருந்த பொழுது அதைக் கடுமையாக விமர்சித்த டெக்கான் ஹெரால்ட் இதழின் ஆசிரியர் ஹரிகுமார்,’கன்னடத்தின் முக்கியமான அறிவுஜீவிகள் பெரும்பாலும் மொழி அறிஞர்களாக இருப்பதால் மொழிகளின் பணி, அதிலும் குறிப்பாகக் கன்னடத்தின் தேவை அதீதமாக முன்னிறுத்தப்படுகிறது. மொழி சாராத அடையாளங்கள், வெளிப்பாட்டு முறைகள், சமூக, அரசியல் சக்திகள் கணக்கில் கொள்ளப்படாமலோ, அல்லது மொழிக்கு அடங்கியவையாகவோ காணப்படுகின்றன.’ என்று எழுதினார்.

ஹரிஜன் ஒடுக்குமுறை, தீண்டாமை, திருமணம், தொழிற்சங்க போராட்டங்கள் ஆகியவற்றில் மொழிக்குப் பங்கில்லாமல் போகிறது, அல்லது மொழி வேறொரு பணியை ஆற்றுகிறது என்று அவர் சுட்டிக்காட்டினார். எழுபத்தி மூன்றில் புசா போராட்டங்களின் பொழுது கவிஞர் சித்தலிங்கையா எனும் தலித்துக்கு ஆதரவாகத் தமிழ் தலித்துகள் செயல்பட்டதை இந்தக் கருத்தோடு ஒப்பிட்டுக்கொள்ளலாம். தற்போது சேவைத் துறை மயத்தால் பெங்களூர் நிரம்பிக் கொண்டிருக்கும் சூழலில் கர்நாடக விமோசன ரங்கா அரசின் மொழி முதலாளித்துவமே என்று உறுதிபடக் கருதுகிறது. ஆண்மையிழந்த மொழி என்று இந்தி போரட்டங்களின் பொழுது அமைதியாக இருந்த கன்னடர்களைத் தமிழர்கள் நகைத்து வளையல்களை அனுப்பி வைத்ததாக ஒரு கதை உண்டு. அதற்குப் பிந்தைய காலத்தில் கன்னட மொழியை வெறியும், ஆண்தன்மையும் கொண்ட மொழியாக அதன் பற்றாளர்கள் கட்டமைத்தார்கள்.

ராஜ்குமார் கோகக் போராட்டங்களில் கலந்து கொண்டாலும், இந்திராவை எதிர்த்துச் சிக்மகளூரில் நிற்க தேடப்பட்ட பொழுது தலைமறைவானார். ராமகிருஷ்ண ஹெக்டே அரசு கன்னடத்தைக் கட்டாயமாக 2,3,4ம் வகுப்புப் பணிகளில் சேர கற்க வேண்டியதில்லை என அறிவித்த பொழுது போராட்டங்கள் எழுந்த நிலையில் அதனை நியாயம் என்றாலும் தான் பங்குபெறப்போவதில்லை என்று ராஜ்குமார் அறிவித்தார். தெற்கு ரயில்வேயின் மையம் கர்நாடகாவில் வேண்டும் என்று அவர் பெயரால் வன்முறையான போராட்டங்கள் நடைபெற்ற பொழுது தனக்கும் ரசிகர் மன்றங்களுக்கும் தொடர்பில்லை என்று கும்பிடு போட்டார்.

முன்னாள் அமைச்சர் நாகப்பா வீரப்பனால் கடத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டுக் கண்டெடுக்கப்பட்ட சூழலில் தமிழ் சேனல்கள் நிறுத்தப்பட்டன, தமிழ் படங்கள் நிறுத்தப்பட்டன. மொழி, தண்ணீர், நிலம் என்று பல்வேறு சிக்கல்கள் இருமாநில உறவை பாதிக்கின்றன.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard