New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கடவுள் டெம்போரல் லோபில் வருகிறார்


Guru

Status: Offline
Posts: 24601
Date:
கடவுள் டெம்போரல் லோபில் வருகிறார்
Permalink  
 


கடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் – 1

ஆர் கோபால்

ஆர் கோபால்

வி எஸ் ராமச்சந்திரன் என்ற அறிவியலாளரை பற்றி தமிழர்களுக்கு அதிகம் தெரியாது என்று கருதுகிறேன். ஆகவே அவரை பற்றிய சில அறிமுக வார்த்தைகள்.

விலயனூர். எஸ்.ராமச்சந்திரனது விக்கி பக்கம் அவரை பற்றிய ஏராளமான தகவல்களை தருகிறது.
http://en.wikipedia.org/wiki/Vilayanur_S._Ramachandran
சாண்டியாகோவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் மனவியல் துறை பேராசிரியராகவும், நியூரோசயன்ஸ் க்ராசுவேட் புராகிராமின் இயக்குனராகவும் இருக்கிறார். நியூஸ்வீக் பத்திரிக்கை இவரை 1997இல் உலகத்தில் மிக முக்கியமான நூறு பேர்கள் பட்டியலில் இவரது பெயரையும் சேர்த்திருந்தது. 2011இல் டைம் பத்திரிக்கை இவரை உலகத்தின் மிக முக்கியமான நூறு பேர்களில் இவரை சேர்த்திருந்தது.

மனித மனத்தை பற்றி வி.எஸ் ராமச்சந்திரன் அளித்த டெட் உரை இங்கே இருக்கிறது
http://www.ted.com/talks/vilayanur_ramachandran_on_your_mind.html

ஹ்யூமானிட்டீஸ், அறிவியல் என்ற இரு தனியான துறைகளை இணைக்கும் அவரது சயன்ஸ்நெட்வொர்க் உரை
http://thesciencenetwork.org/programs/beyond-belief-enlightenment-2-0/v-s-ramachandran

நேரம் இருக்கும்போது அவற்றை எல்லாம் பார்க்க அழைக்கிறேன்.

இப்போது நான் விளக்க இருப்பது அவரது டெம்போரல் லோப் பற்றிய ஆய்வுகளும் அதில் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்களது அனுபவங்களும், அதன் மூலம் அறிவியல் அடையும் முடிவுகளும்.

டெம்போரல் லோப் எபிலப்ஸி Temporal lobe epilepsy என்றால் என்ன?

வலிப்பு நோய் என்பது மூளையில் திடீரென்று மூளை நியூரான் செல்கள் கன்னாபின்னாவென்று மற்ற மூளைப்பகுதிகளுக்கு தொடர்பில்லாமல் மின்சார சிக்னல்கள் பாய்வதால் உருவாகிறது. எந்த பகுதியில் அப்படிப்பட்ட மூளை நியூரான்களின் கன்னாபின்னா மின்சார சிக்னல்கள் பாய்கின்றன என்பதை வைத்து அதற்கு அந்த பெயர் சூட்டுவார்கள்.

மனித மூளையில் பல பகுதிகள் பெயரிடப்பட்டுள்ளன. நீங்கள் இந்த படத்தில் பச்சையாக இருப்பது டெம்போரல் லோப்.

டெம்போரல் லோபில் உருவாகும் கன்னாபின்னா மின்சார சிக்னல்கள்களால் வலிப்பு நோய் பெறுகிறவர்களுக்கு கடவுள் சந்திக்கிற உணர்வு, தேவதைகளை பார்ப்பது, மிகவும் வலிமையான ஆன்மீக உணர்வு அடைகிறார்கள் என்பதை மருத்துவவியலாளர்கள் வெகுகாலமாகவே அறிந்திருக்கிறார்கள். சில சமயங்களில் கடவுளோடு ஐக்கியமான உணர்வு, சில சமயங்களில் உலகம் பிரபஞ்சம் அனைத்தோடும் ஒன்றிய ஒவ்வொரு துகளோடும் ஐக்கியமான உணர்வு பெறுகிறார்கள்.

இதற்கான விக்கி பக்கம் இங்கே
http://en.wikipedia.org/wiki/Temporal_lobe_epilepsy

இந்த வலிப்பு நோய் துவங்குவதற்கு நேரம் காலம் ஏதும் இல்லை. 17 வயதில்தான் முதன்முறையாக இந்த நோய் தோன்றியவர்களும் இருக்கிறார்கள். 43 வயதில் முதன்முறையாக பாதிக்கப்பட்டவர்களும் இருக்கிறார்கள். இதற்கான சில முக்கியமான பக்க விளைவுகள், ஜூரம் வந்து, கடுமையாக குளிர்வது போன்ற உணர்வு, இது மற்ற வலிப்பு நோய்கள் போல நீடித்துகொண்டே செல்வதில்லை. ஒரு சில வினாடிகள், அல்லது ஒரு சில நிமிடங்கள் மட்டுமே தோன்றுகின்றன. இதனால், மற்ற வலிப்பு நோய்கள் போல கால் கைகளை இழுத்துகொண்டு கிடப்பதோ அல்லது ஒரு பக்கத்தில் வலி தோன்றுவதோ இல்லை.

இதற்கு ஹெர்ப்பஸ் என்னும் பால்வினை நோய் வைரஸ் human herpesvirus 6 காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. பெரும்பாலும் தலையில் அடிபடுவதோ, ரத்தக்குழாய் பாதிக்கப்பட்டதோ, முதுகுத்தண்டில் மெனிஞ்சிடிஸ் நோய் உருவாவதோ, மூளையில் கட்டிகள் உருவாவதோ காரணமாக அறியப்படுகிறது.

கீழே காணும் இந்த இரண்டு வீடியோக்களும் “கடவுளும் டெம்போரல் லோபும்” என்பது பற்றிய ஆவணப்படத்தின் பகுதிகள்

ஜான் என்ற ஒரு டெம்போரல் லோப் வலிப்பு நோய் கொண்டவரது அனுபவங்கள் இங்கே பகிரப்படுகின்றன.

”நான் கடவுளாக உணர்ந்தேன். நான் சொர்க்கத்தையும் நரகத்தையும் உருவாக்கியது நானே என்று உணர்ந்தேன்” என்கிறார் ஜான்.

ஒருமுறை தனது பெண் நண்பரோடு மலைகளுக்கு நடுவே நடந்துகொண்டிருந்தபோது தனக்கு இந்த தாக்குதல் நடந்ததை உணர்ந்தார். அந்த நிகழ்வு முடிந்த பிறகு மிகவும் தத்துவரீதியில் அவரது மனது ஆன்மீகம், கடவுள், இந்த மாபெரும் நடனத்தில் தனது இடம் என்பதை மிகவும் ஆழமாக தீவிரவாக சிந்தித்துகொண்டிருந்ததை உணர்ந்தார்.

இந்த நிகழ்வுகளுக்கு பிறகு மிகவும் பலவீனமாக உணர்ந்தார். ஆனால் அதே நேரத்தில் எதையுமே சாதிக்கக்கூடிய வலிமை பெற்றவராகவும் தன்னை உணர்ந்தார்.

ஒருமுறை திடீரென்று தெருவில் நடந்துகொண்டிருந்தபோது இந்த உணர்வு வந்ததும், “நானே கடவுள்” என்று நடுத்தெருவில் கத்திகொண்டே ஓடினார். அவரது தந்தை அவரை திட்டி உள்ளே வா என்று கூட்டிக்கொண்டு சென்றதை கூறுகிறார்.

ஒரு சில நேரங்களில் அந்த நிகழ்வு நடக்கும்போது அவர் வேறொரு தளத்தில் வேறொரு உண்மையில் அவர் சில நிகழ்வுகளை அனுபவித்துகொண்டிருக்கும் உணர்வை பெறுகிறார்.

அந்த நிகழ்வு வரும்போது மிக அற்புதமான இன்ப உணர்வு பெறுவதும், மிகவும் அதிகமான துன்ப உணர்வை பெறுவதும், சில நேரங்களில் மற்றவர்களுக்கு அந்த உணர்வை விளக்கவே முடியாத துன்பத்தை அடைவதையும் விளக்குகிறார்.

அப்பாவும் மகனும் எந்த காலத்திலும் மத உணர்வாளர்களாகவே இருந்ததில்லை. இருப்பினும்,  ஏன் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த நிகழ்வுகளுக்கு பின்னர் மத உணர்வை பெறுகிறார்கள் என்ற முக்கியமான கேள்விக்கு விடையறிய ராமசந்திரன் முயல்கிறார்.

”உண்மையில் ஒருவேளை கடவுள் இந்த நோயாளிகளை மனத்தில் சந்திக்கலாம். அது உண்மையாக இருந்தாலும் அதனை ஒரு அறிவியலாளனாக என்னால் பரிசோதனை செய்து அறியமுடியாது. இன்னொரு விளக்கம், இந்த நியூரான்களின் வெடிப்புகள் அந்த உணர்வை இவர்களுக்கு அளிக்கின்றன என்று கூறலாம்.” என்கிறார் எஸ். ராமச்சந்திரன்.

அடுத்த வீடியோ

”மூன்றாவது விளக்கம் என்று நான் கருதுவது என்னவென்றால், இந்த டெம்போரல் லோப் என்பது உலகத்தில் எது முக்கியம் எது முக்கியமில்லை என்பதை அறிய உதவும் பகுதி.  நீங்கள் உலகத்தில் நடந்து செல்லும்போது அதன் பொருட்களில் எது உணர்வுப்பூர்வமாக நமக்கு முக்கியமானது, எது முக்கியம் குறைவானது என்பதை பற்றிய ஒருவரைபடத்தை வைத்து அதன் மூலம் நாம் உலகத்தோடு தொடர்பு கொள்கிறோம்.  இந்த டெம்போரல் லோப்பின் மிக அருகே அமைந்துள்ளது அமிக்டலா என்னும் பகுதி. இது உணர்ச்சிகளை நமக்கு உருவாக்கித்தரும் பகுதியோடு இந்த டெம்போரல் லோபை இணைக்கும் பகுதி. இந்த பகுதிகளுக்குள் இருக்கும் தொடர்பின் வலிமையே எந்த பொருள் நமக்கு முக்கியம், எது முக்கியமில்லை என்பதை நமக்கு உணர்த்துகிறது.  நம் ஒவ்வொருவருக்கும் நமது வாழ்க்கை மூலமாக எது முக்கியம் எது முக்கியமில்லை என்பதற்கான வெவ்வேறு வரைபடங்கள் இருக்கின்றன. டெம்போரல் லோபில் வலிப்பு நோய் உருவானார்களுக்கு என்ன ஆகும் என்று சிந்தியுங்கள். கன்னாபின்னாவென்று பாரபட்சம் இல்லாது ஏதேதோ இணைப்புகள் வலிமையாகும். மலை மேலிருந்து வழியும் தண்ணீர் ஒரு பாதையை உருவாக்க, தொடர்ந்து பாயும் தண்ணீர் அந்த பாதையை இன்னும் ஆழமாக இன்னும் அதிக வேகத்துடன் வருவதாக மாற்றுகிறது. இதனால் பல விஷயங்கள் மிகவும் முக்கியமானவையாக இவர்களுக்கு ஆகின்றன.  இதனால், அம்மா, அப்பா, வேலை, பாய தயாராக இருக்கும் புலி ஆகியவை உணர்வு ரீதியில் முக்கியமாக இருப்பதை விட்டுவிட்டு, உலகத்தில் அனைத்து பொருட்களுமே மிகவும் உணர்வுப்பூர்வமாக முக்கியமானவையாக ஆகின்றன.  ஒரு மணல் துகள், ஒதுங்கிக்கிடக்கும் ஒரு மரத்துண்டு, கடற்பாசி ஆகிய எல்லாமே மிகவும் ஆழமாக உணர்வுப்பூர்வமாக முக்கியமானவையாக பெரும் பொருள் கொண்டவையாக ஆகிவிடுகின்றன. இப்படி உலகத்தில் உள்ள அனைத்து பொருட்களுமே மாபெரும் பொருள் கொண்டவையாக பிரபஞ்சத்தோடு தன்னை இணைத்து அவற்றோடு பங்குபெற்ற உணர்வைத்தான் நாம் ஆன்மீக உணர்வு என்று அழைக்கிறோம்..” என்று எஸ். ராமச்சந்திரன் கூறுகிறார்.

“வலிப்பு நிகழ்வு நடக்கும்போது அவரது மனத்தில் ஓடியவற்றை பற்றி அனைத்து விஷயங்களையும் தனது நிகழ்வு முடிந்ததும் வேகவேகமாக பேசுகிறான் ஜான்.” என்று ஜானின் தந்தை கூறுகிறார். “எது நியாயம் எது அநியாயம் என்பதெல்லாம் உருவாகிறது. ஏதேனும் பேரழிவு நடந்திருந்தால், அழிவு நடந்தது நியாயமானதுதான். அது அவர்களது தவறுக்கு கொடுக்கப்பட்ட தண்டனை என்ற எண்ணமெல்லாம் உருவாகிறது. ” என்று ஜான் கூறுகிறார்.

ஜான் கூறுகிறார்” இந்த மனித குலத்துக்கு நடந்ததெல்லாம் நூற்றுக்கு நூறு நடந்தது சரியாகவே நடந்தது என்ற உணர்வு தோன்றுகிறது. நான் நூற்றுக்கு நூறு சரியாகவே சொல்கிறேன். நான் வெளியே சென்று எல்லோரையும் என்னை பின்பற்ற வைக்க முடியும் என்று கருதுகிறேன். தலையில் தொப்பிகளை வைத்திருக்கும் பாதிரிமார் முட்டாள்களைப்  போலல்லாமல் நான் உண்மையான விஷயத்தை சொல்கிறேன். உலக மக்கள் மிக மிக சரியானவற்றையே சொல்லும் என்னைத்தான் பின்பற்ற வேண்டும்” என்று சொல்கிறார்

“நான் தான் புதிய தீர்க்கதரிசி என்ற உணர்வை பெறுகிறேன். உலகத்தை காப்பாற்ற வந்தவன் நான். நான் இதுவரை மத நம்பிக்கையே இல்லாதவனாக இருந்தேன். ஆனால் இப்போதோ உலகத்தை நானே காப்பாற்ற வந்தவன் என்ற உணர்வை பெறுகிறேன்”

ராமச்சந்திரன் தவறாக இணைக்கப்பட்ட நியூரான் வயர்களே இப்படிப்பட்ட உணர்வுகளுக்கு காரணம் என்று கூறுகிறார். சில வருடங்களுக்கு முன்னால், பத்திரிக்கைகள் மூளையில் கடவுள் பகுதி இருக்கிறது என்று செய்திகளை வெளியிட்டன.

டெம்போரல் லோபில் சில நியூரான்கள் ஆன்மீக உணர்வை உருவாக்குபவையாக இருக்கலாம். இந்த உணர்வை ஆன்மீக உணர்வு என்று பெயர் வைத்து அழைக்கப்பட்டிருக்கலாம். உலக மனிதர்களிடம் இப்படிப்பட்ட மத உணர்வு எல்லா சமூகங்களிலும் இருக்கின்றன. இப்படிப்பட்ட மத உணர்வுகள் ஒரு சமூகத்தை நிலையாக வைத்திருக்க உதவுவதாலும் இருக்கலாம் என்று கூறுகிறார்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

கடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் – 2

ஆர் கோபால்

மூளைக்குள் கடவுள் வீடியோ

இது பிபிஸி ஆவணப்படம்.
இதற்கான தமிழ் சப்டைட்டில்கள் நான் எழுதியவை.

இதன் முதல் பகுதி மட்டுமே இங்கே உள்ளது.
இரண்டாம் பகுதி அடுத்த வாரம் வெளிவரும்

ரூடி: நான் இறந்துவிட்டதாகவும் நான் நரகத்துக்கு சென்றதாகவும் நினைத்தேன்.

க்வென்: என்னுடைய மகனை கடவுள் என்று நினைத்திருந்தேன்

பெர்னி: (க்வெனின் கணவர்) அப்புறம் பார்த்தால், அவள் என்னை ஜோஸப்பாகவும், அவள் மேரி என்றும், சின்ன சார்லி (மகன்) கிறிஸ்து என்றும் நினைத்திருந்தாள்.

குரல் (பார்பரா ஃப்ளைன்): மூளை நோய்களிலேயே மிகவும் வினோதமான மூளை நோயால் இந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். தாங்கள் கடவுளால் தொடப்பட்டதாக இவர்கள் நினைக்கும்படி இது ஆக்குகிறது. ஆனால், இவர்களது அசாதாரணமான நிலை, மனித மனத்துக்குள்ளும், மத நம்பிக்கைக்குள்ளும் விஞ்ஞானிகள் நுழைந்து பார்க்க ஒரு தனித்த பார்வையை தருகிறது. இதன் விளைவாக, நமது மூளையின் பௌதீக அமைப்புதான் நம்மை கடவுளை நம்பும்படி தூண்டுகிறதா என்ற மிகவும் அதிரடியான கேள்வியை ஆய்வாளர்கள் கேட்டுகொண்டிருக்கிறார்கள்.

ரூடி: என்னுடைய வலிப்பு நோய் இருக்கும் டெம்போரல் லோப் இவைதான்.

குரல்: ரூடி அஃபோல்டர் தன் வாழ்நாள் முழுவதும் மிகவும் தீவிரமான டெம்போரல் லோப் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு வந்திருக்கிறார். அவர் 18 மாதமாக இருந்தபோது அவருக்கு வந்த கடுமையான வலிப்பு காரணமாக ஏறத்தாழ சாவுக்கே சென்று மீண்டார். அவரது டெம்போரல் லோப் பகுதியில் அசாதாரணமான மின்சார சிக்னல்கள் தோன்றுவதால் அவருக்கு வலிப்பு வருகிறது.

ரூடி அஃபோல்டர்: ஒரு சில நிமிடங்களுக்கு உங்களுக்கு என்ன நடந்தது என்றே தெரியாது. அதன் பின்னர், உங்களுக்கு பெரும்பாலும் தலை சுற்றும். நீங்கள் கீழே விழுந்து சில நிமிடங்கள் இழுத்துகொள்வீர்கள். சில வேளைகளில் முழு நினைவும் இருக்கும். சில வேளைகளில் நினைவிழந்து கிடப்பீர்கள்.

குரல்: டெம்போரல் லோப் வலிப்புநோய்க்கு ஒரு அசாதாரணமான பக்க விளைவு உண்டு. அந்த நோயால் பாதிக்கப்படுபவர்களில் சிறுபான்மையினருக்கு மத சம்பந்தமான பிரமைகளை உருவாக்குகிறது. இந்த பிரமைகள் இதுவரை கேட்டிராத சில கேள்விகளை கேட்கும்படி விஞ்ஞானிகளை தூண்டியிருக்கின்றன. ரூடி எப்போதுமே முழுமையான உறுதிப்படுத்தப்பட்ட நாத்திகர். இருப்பினும், 43 வயதில், மிகவும் வலிமையான ஆன்மீக உணர்வு ஏற்பட்டது.

ரூடி: க்ராளி மருத்துவமனையில் நான் படுத்திருந்தபோது திடீரென்று எல்லாமும் மாறியது போல காணப்பட்டது. அந்த அறை அதே அளவில்தான் இருந்தது, இருந்தும் அது வேறொன்றாக மாறிக்கொண்டிருந்தது. இதற்கு எதிராக போராட வேண்டும் என்று முதலில் நினைத்தேன். அதனால், என்னை மீண்டும் மன ரீதியில் சாதாரணமாக ஆக்க முயன்றேன். ஏனெனில் நான் பைத்தியமாக ஆகிகொண்டிருக்கிறேன் என்று நினைத்தேன். நான் இறந்து நரகத்துக்கு சென்றுவிட்டேன் என்று நினைத்தேன். நான் மதநம்பிக்கையுள்ள கிறிஸ்துவனாக இல்லாததால், நான் நரகத்துக்கு அனுப்பப்பட்டேன் என்று சொல்லப்பட்டேன். கிறிஸ்துவ மதமே சரியானது என்று அறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். மிகவும் மன அழுத்தத்துக்குள்ளானேன். அதே நேரத்தில் திகிலும் அடைந்தேன். என்ன நடந்தது என்பதை அறிந்தும்இங்கேயே இருக்கப்போகிறேன் என்பதை அறிந்து மிகவும் கவலையடைந்தேன்.

குரல்: ரூடியின் அதிர்ஷ்டம், அவருக்கு அதற்கு பின்னால் அப்படிப்பட்ட ஒரு பிரமை தோன்றவில்லை. இன்னும் உறுதியான நாஸ்திகராகவே இருக்கிறார். ஆனால், க்வென் டிகே, பல வருடங்கள் தொடரந்த பிரமைகளால் அவர் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளார். ரூடி போலல்லாமல், அவர் உறுதியான மத நம்பிக்கையுடன், ரோமன் கத்தோலிக்கராக இருக்கிறார். இந்த பிரமைகளால் க்வென் எவ்வாறு பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பதன் சாட்சியாக அவரது கணவர் பெர்னி இருந்துவருகிறார். அவரது தேனிலவுக்கு பிறகு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதுதான் அவருக்கு முதலாவது பிரமை தோன்றியது.

பெர்னி டிகே: வார்டின் எதிரே இருந்த ஒரு பெண்மணிதான் சாத்தான் என்று எனது காதில் சொன்னாள். அதுதான் நான் முதலில் அவள் அப்படி சொல்லி கேட்டது. அந்த பெண்மணி பச்சை தோலுடன் ஒரு சாத்தானாக இருப்பதாக சொன்னாள்.

க்வென் டிகே: அது வெறுமே என் மனத்தில்தான். அந்த சாத்தான் என்னை திகிலடைய வைத்தது. பளீரென்ற ஒளியில்.. சாதாரணமாக மக்கள் மங்கின ஒளியில்தான் சாத்தானை பார்த்ததாக சொல்வார்கள். அப்போது பளீரென்று ஒளி இருந்தது. அது என்னை அதிர்ச்சியடைய வைத்தது. மிகவும் திகிலாக இருந்தது.

பெர்னி: கிரிக்கி…(சிரிக்கிறார்) நான் என்ன செய்ய… என்ன நடக்கிறது? அதன் பின்னர் பலமுறை அவளுக்கு வலிப்பு வந்தது. சில சமயங்களில் அவளது மருந்து லேசாக தவறாகிவிடும்.. அப்போது குழப்பமடைவாள். அப்போதெல்லாம் சாத்தானை பற்றி பேச ஆரம்பிப்பாள்.

குரல்: பல வருடங்களுக்கு அந்த பிரமைகள் முழுவதுமாக நின்றுவிட்டன. அதன் பின்னர் க்வென் கர்ப்பமடைந்தார்.

பெர்னி: க்வெனுக்கு அழகான கர்ப்பம். எதுவும் தவறாக சென்றதாக தெரியவில்லை.

க்வென்: காருக்கு சென்றோம். காருக்குள் போகும்போது குடம் உடைந்தது. அதன் பின்னால் எதுவும் நினைவிலில்லை.

பெர்னி: சார்லஸ் பிறக்கும்போது, அது என் மகன், பாதிவரை வரும்போது, அவனது தலையில் தொப்பூள்கொடி சுற்றிகொண்டுவிட்டது. அவன் சற்றே முரண்டினான். சிசேரியன் பண்ண லேட்டாகிவிட்டது. ஒருவழியாக சார்லஸ் வந்துவிட்டான். அவனுக்கு ஒரு பாதிப்புமில்லை. அவள் அங்கே உட்கார்ந்திருந்து என்னை பார்த்து புன்னகைத்துகொண்டிருந்தாள். என் பக்கம் திரும்பி, “புனித குடும்பத்தின் பகுதியாக இருப்பது நன்றாகத்தானே இருக்கிறது?” என்றாள். என்னது? ஹோலி ஃபேமிலியா? புனித குடும்பமா? பின்னால், அவள் என்னை ஜோஸப்பாகவும், அவலை மேரியாகவும், சார்லியை கிறிஸ்துவாகவும் நினைத்தாள் என்று அறிந்தேன். அவள் மனநல மருத்துவமனைக்கு போகாவிட்டால், அவளை அடைத்துவிடுவார்கள் என்று சொன்னேன். அந்த சமயத்தில் மிகவும் பயமாக இருந்தது. உண்மையைச்சொன்னால், நான் எங்கே போகிறேன் என்று எனக்கு தெரியவில்லை.

க்வென்: பழையதை திரும்பி பார்க்கும்போது மிகவும் வினோதமாக இருக்கிறது. நான் ஏன் அவற்றை சொன்னேன் என்று தெரியவில்லை.

குரல்: ரூடி, க்வென் ஆகியோரின் பிரமைகள் வினோதமாக இருக்கலாம். ஆனால், இந்த கேள்விகள், தத்துவ கேள்விகளிலேயே மிகவும் ஆழமான கேள்விக்கு பதிலை தரக்கூடும் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். அதாவது மத நம்பிக்கை எங்கிருந்து வருகிறது? மூன்று பெரிய மதங்களுக்கு ரெவலேஷன் என்னும் வெளிப்படுத்துதல் அல்லது இறைவசனம் என்பது மிகவும் அடிப்படையான ஒன்று. தீர்க்கதரிசிகள், நபிகள் போன்றோர் உருவாக்கிய மதங்கள், நம்பிக்கைகளின் வழியே மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். அவற்றுக்காக உயிர்கொடுத்தும் இருக்கிறார்கள். மத நம்பிக்கையாளர்கள் இப்படிப்பட்ட வெளிப்படுத்துதல்கள், இறைவசனங்கள் இறைவனிடமிருந்து வருகின்றன என்று நம்புகிறார்கள். நாத்திகர்களோ, இவை மூட நம்பிக்கைகள் என்றும் சமூக கட்டுப்பாடுகள் என்றும் கருதுகிறார்கள். இரண்டு பக்கமுமே சிந்திக்காக ஒன்று, இது மனித அடிப்படையிலேயே, சாப்பிட விரும்புவது, தூங்குவது , பாலுறவு கொள்வது போன்ற அடிப்படையான ஒன்றாக இருக்கலாம் என்பது. ஆனால், அந்த கருத்து இப்போது மாறிவருகிறது. டெம்போரல் லோப் வலிப்பு நோயே இதன் திறவுகோல். இந்த நோயே, செவந்த் டே அட்வண்டிஸ்ட் என்ற மதப்பிரிவின் தோற்றத்துக்கு காரணம் என்பது தெரிகிறது. இது தற்போது மிகவும் அதிகமாக பரவி வரும் ஒரு மதமாக, ஏறத்தாழ 12 மில்லியன் மக்களை கொண்டதாக உள்ளது. இந்த மதத்தின் சர்ச்சு ஆவணங்களில், எல்லன் வொயிட் என்ற பெண்மணியின் வெளிப்படுத்தல்கள் மூலமாக இதன் ஆரம்பத்தை உணரமுடிகிறது.

மெர்லின் பர்ட்: (எல்லன் ஜி வொயிட், எஸ்டேட் பிரான்ச் ஆபிஸ், லோமா லிண்டா): செவன்ந்த் டே அட்வண்டிஸ்ட் சர்ச்சின் பிரதான நிறுவனர்களில் ஒருவர் எல்லன் ஜி வொயிட் என்னும் பெண்மணி. அவருக்கு வினோதமான ஆன்மீக மத உணர்வு காட்சிகள் மூலம் இந்த சர்ச்சுக்கு வழிநடத்தல், கட்டளைகள் கிடைக்கப்பெற்றன. இது கடவுள் அளித்த கட்டளைகள் என்று நம்புகின்றனர். செவண்ந்த் டே அட்வண்டிஸ்ட் சர்ச்ச்குக்கு இந்த மத உணர்வு காட்சிகள் மிகவும் அடிப்படையானவை.

குரல்: எல்லன் வொயிட் 1827இல் பிறந்தார். அவரது வாழ்நாளுக்குள் 100.000 பக்கங்கள் மத நம்பிக்கை பற்றியும், கடவுளால் உந்தப்பட்டதாக நம்பி கடுமையான ஒழுக்க விதிகளை உருவாக்கி தந்தார். அவர் தேனீர் சாப்பிடுவது பாவம் என்பதிலிருந்து சுயமைதுனம் உட்பட எல்லாவற்றையும் ஒழுக்க விதிகளாக எழுதி வைத்திருக்கிறார். அதே நேரத்தில் அவர் தான் அனுபவித்த நூற்றுக்கணக்கான மத உணர்வு காட்சிகளை பற்றியும் விலாவாரியாக எழுதி வைத்துள்ளார்.

எல்லன் வொயிட்: நான் பிரார்த்தனை செய்துகொண்டிருக்கும்போது, அங்கே நூற்றுக்கணக்கான முறைகளோ அதற்கு மேலோ, ஒரு மெல்லிய ஒளி அறைக்குள் சுற்றிகொண்டிருக்கும், மலர்களது நறுமணம் போன்ற நறுமணம் வரும். அப்போது கடவுள் அருகே வந்துவிட்டார் என்று அறிந்துகொள்வேன்.

குரல்: இந்த மத உணர்வு காட்சிகள் காரணமாக, அந்த பெண்மணி கடவுளால் அனுப்பப்பட்ட தூதர் என்று அவரை பின்பற்றியவர்கள் முழுமையாக நம்புகிறார்கள். ஆனால், விஞ்ஞானிகள் எல்லன் வொயிட்டின் கடந்த காலத்தை ஆராய்ந்த போது, இந்த பெண்மணி டெம்போரல் லோப் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவரோ என்று சந்தேகித்தார்கள். ஏனெனில் ஒரு நாள், இந்த நிலையை அவருக்கு உருவாக்கக்கூடிய ஒரு நிகழ்ச்சி நடந்தது. அவர் 9 வயதாக இருந்தபோது ஒரு பெரிய சிறுமியால் பள்ளிக்கூடத்திலிருந்து வீட்டுக்கு துரத்தப்பட்டார்.

எல்லன்: அந்த பெண் எனக்குபின்னால், எவ்வளவு தூரத்தில் வருகிறாள் என்று பார்க்க திரும்பினேன். நான் திரும்பும்போது ஒரு கல் என் மூக்கை தாக்கியது. கண்களை குருடாக்கும், மரத்துப்போகும் ஒரு உணர்வு என்னை தாக்கியது. நான் உணர்வற்று கிடந்தேன். என்னுடைய அம்மா எதையுமே பார்க்காமல், மூன்று வாரம் அப்படியே கிடந்தேன் என்று கூறினார். எனக்கு மீண்டும் நினைவு வந்தபோது நான் அதுவரை தூங்கிக்கொண்டிருந்ததாகத்தான் உணர்ந்தேன். அதிர்ச்சியடைந்தேன். என்னுடைய முகத்தின் ஒவ்வொரு வடிவமும் மாறியிருந்தது.

குரல்: அந்த காயத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட எல்லன் மீண்டும் பள்ளிக்கூடத்துக்கு செல்லவே முடியவில்லை. அவரது குணாம்சமே முழுமையாக மாறிவிட்டது. அவர் கடுமையான மத பிடிப்பாளராகவும், ஒழுக்கவாதியாகவும் மாறினார். அதன் பின்னால், முதல்முறையாக சக்திவாய்ந்த மத உணர்வு காட்சிகளை உணர ஆரம்பித்தார்.

பேராசிரியர் கிரெகொரி ஹோல்ம்ஸ் (டார்ட்மவுத் மெடிகல் ஸ்கூல்): பொதுவாக இந்த மத உணர்வு காட்சிகள் திடீரென ஆரம்பிக்கும். அவரது முக பாவத்தில் மாறுபாடு உண்டாகும். பெரும்பாலும் அன்னாந்து பார்ப்பார். அவரது அந்த உணர்வின் போது அவரை சுற்றி என்ன நடக்கிறது என்ற உணர்வு இல்லாமல் இருப்பார். பெரும்பாலும் அடோமேடிஸம் எனப்படும் திருப்பித்திருப்பி ஒரே அசைவை செய்துகொண்டிருப்பார். அந்த நிகழ்வுக்கு பின்னால், அதனை செய்தோம் என்ற நினைவை பெற்றிருக்கமாட்டார்.

குரல்: குழந்தைகள் நியூராலஜியில் உலகத்தில் மிகச்சிறந்தவராக கருதப்படும் பேராசிரியர் கிரெகொரி ஹோல்ம்ஸ், எல்லன் வொயிட்டின் மத உணர்வு காட்சிகள் அவரது தலையில் அடிபட்ட பின்னால் தோன்ற ஆரம்பித்தன என்பது எதேச்சையான விஷயம் இல்லை என்று கூறுகிறார்.

ஹோல்ம்ஸ்: கண்களுக்கு பின்னால் இருக்கும் எலும்புகள் மிகவும் பலவீனமானவை. கண்களுக்கு பின்னால் இருக்கும் மூளை திசுக்களும், இந்த வலிமையற்ற எலும்புகள் காரணமாக எளிதில் பாதிப்பு அடையக்கூடியவை. முகத்தில் கல்லால் அடி வாங்கியவர்களது மூளையில் உண்மையான பாதிப்பு இருக்கும். தலையில் அடிபடும்போது தலை பின்னால் சென்று திரும்ப வரும். உள்ளே இருக்கும் மூளையும் பின்னால் சென்று திரும்ப வரும்

குரல்: குணாம்சம் மாறுதல், மிகவும் தீவிரமான மத உணர்வு, மத உணர்வு காட்சிகள் பிரமைகள் ஆகியவை எல்லன் வொயிட்டின் நிலைமைக்கு ஒரே ஒரு சாத்தியம்தான் இருக்கிறது என்று ஹோல்ம்ஸ் கூறுகிறார்.

ஹோல்ம்ஸ்: அவர் நிச்சயமாக டெம்போரல் லோப் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். ஆகவே அவருக்கு நேர்ந்த ஆன்மீக உணர்வு காட்சிகள் நிச்சயமாக உண்மையானவை அல்ல. அது இந்த வலிப்பு நோயால் வந்தது.

குரல்: செவந்த் டே அட்வண்டிஸ்ட் சர்ச் இயக்கத்துக்கு இது பலத்த அடி. இருந்தாலும் எல்லன் வொயிட் உண்மையிலேயே இறைவனால் உந்தப்பட்டார் என்றுதான் அவர்கள் வலியுறுத்தி கூறுகிறார்கள். அவர்களது அதிகாரப்பூர்வ பேச்சாளர், அவரும் ஒரு நியூராலஜிஸ்ட், பேராசிரியர் ஹோல்ம்ஸ் கூறுவதை மறுக்கிறார்.

டாக்டர் டேனியல் ஜியங் (Loma Linda University Medical Center): எல்லன் வொயிட்டின் மத உணர்வு பார்வைகள், டெம்போரல் லோப் வலிப்பு காரணமாக உருவானவை அல்ல என்று நான் நினைப்பதற்கு காரணங்கள் பல. முதலாவது அவருக்கு நடந்த காயம் அவரது மூக்கில் ஏற்பட்டது. அது டெம்போரல் லோபுக்கு தொலைவில் உள்ளது. இரண்டாவது அவருக்கு நேர்ந்த மத உணர்வு காட்சிகள் தலையில் அடிபட்டு 8 வருடங்களுக்கு பிறகு ஆரம்பித்தது. பெரும்பாலான டெம்போரல் லோப் வலிப்பு நோய்கள் தலையில் அடிபட்டு ஒன்று அல்லது மூன்றுவருடங்களுக்குள் வர ஆரம்பித்துவிடும். இறுதியாக அவரது மத உணர்வு காட்சிகள் 15 நிமிடங்களிலிருந்து மூன்று மணி நேரங்கள் வரைக்கும் நீடிக்கும். அவருக்கு எப்போதுமே மிகக்குறைவான நேரத்தில் மத உணர்வு காட்சிகளோ வலிப்போ தோன்றியதில்லை. இவை எல்லாமே வலிப்பு நோயாக இருந்தால், அசாதாரணமானவை.

குரல்: எல்லன் வொயிட்டுக்கு டெம்போரல் லோப் வலிப்பு இருந்ததா இல்லையா என்று அறுதியிட்டு கூறமுடியாது. இருந்தாலும், அவருக்கு வரும் மத உணர்வு காட்சிகள் எடுக்கும் நேரமும், அவருக்கு தலைகாயம் அடைந்து 8 வருடங்களுக்கு பிறகு காட்சிகள் தோன்ற ஆரம்பித்தன என்பதும் இந்த நோயின் அறிகுறிகளே. விவாதத்துக்குரியதாக, இன்னும் ஏராளமான மத தலைவர்களும் இதே டெம்போரல் லோப் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்களே என்று கூறப்படுகிறது.

பேராசிரியர் விலயனூர் ராமச்சந்திரன்: (University of California, San Diego):
மாபெரும் மத தலைவர்களுக்கு டெம்போரல் லோப் வலிப்பு நோய் இருந்திருக்கும் என்பது சாத்தியமான ஒன்று. இது அவர்களுக்கு பிரமைகள், காட்சிகள், விளக்கமுடியாத ஆன்மீக உணர்வு ஆகியவற்றுக்கு தயாராக ஆக்குகிறது.

குரல்: செயிண்ட் பவுல் அவர்களை இங்கே குறிப்பிடலாம். டமாஸ்கஸுக்கு போகும் சாலையில் கண் குருடாக்கும் ஒளியில் இறைவன் இவருக்கு காட்சி அளிக்கிறார்.

ராமச்சந்திரன்: பல மதஞானிகள், செயிண்ட் பவுல் உட்பட, அவர்கள் விவரிக்கும் அனுபவங்கள் இந்த நோயாளிகள் விவரிக்கும் அனுபங்களை ஒத்து இருக்கின்றன. ஆகவே செயிண்ட் பவுலுக்கு இதே மாதிரி வலிப்பு இருந்திருக்கும் என்பது சாத்தியமானதுதான்.

குரல்: மோஸஸ்? பத்து கட்டளைகளை கொண்டுவந்த மோசஸ், கடவுளின் குரலை எரியும் செடியில் கேட்டதாக நம்பினார்.

ராமச்சந்திரன்: மோஸசும், அதே போல இந்தியாவின் நிறைய ஞானிகளும் மூளையில் இப்படிப்பட்ட வலிப்புகளால் அப்படிப்பட்ட நம்பிக்கைகளுக்கும் அனுபவங்களுக்கும் ஏற்ப இருந்தார்கள் என்பது சாத்தியமானதுதான். இந்த அனுபவங்கள் அவர்களது மன வாழ்க்கையை மிக அதிகமாக செழுமைப்படுத்தியிருக்கலாம்.

குரல்: ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு பிறகு இந்த மத ஞானிகளுக்கு டெம்போரல் லோப் வலிப்பு இருந்தது என்பதை அறுதியிட்டு கூறமுடியாது என்று பிஷப் ஸ்டீபன் சைக்ஸ் நம்புகிறார்.

பிஷப் ஸ்டீபன் ஸைக்ஸ் (துர்ஹம் பல்கலைக்கழகம்): அவர்களது மனநிலைகளது விவரணம் அவர்களது காலத்து மக்களிடமே உண்டு. அவர்களது பின்புலம் நமது பின்புலத்தை விட வேறுபட்டது. நான் அவநம்பிக்கையுடனே அணுகுகிறேன். இந்த மனிதர்கள் மத உணர்வு அனுபவத்தை பெற்றது, நமது எல்லையற்ற ஞானத்தின் மூலம் அவர்கள் ஒரு வகை வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்கள் என்று சொல்வது எளிது. நாம் சற்று அடக்கத்துடன் இருப்பது தவறில்லை என்று கருதுகிறேன்.

குரல்: மோஸஸ், செயிண்ட் பவுல் போன்றவர்களது உண்மையை நாம் அறியமுடியாமலிருக்கலாம். ஆனால், கலிபோர்னியா பல்கலைக்கழக பேராசிரியர் ராமச்சந்திரன், டெம்போரல் லோபுக்கும் ஆன்மீக அனுபவத்துக்கும் உள்ள தொடர்பை ஆராய முடிவு செய்தார். ஆகவே டெம்போரல் லோப் வலிப்பு உள்ளவர்களது மூளையையும், இல்லாதவர்களது மூளையையும் ஒப்பிட பரிசோதனை ஏற்பாடு செய்தார்

ராமச்சந்திரன்: நாங்கள் என்னசெய்தோமென்றால், இந்த வலிப்பு இல்லாத சாதாரண நபர்களை எடுத்துகொண்டோம். அவர்களது விரல் நுனிகளில் எலட்ரோடுகளை பொருத்தி அவர்களது தோல் மின்சார தடுப்பு அளவை அளந்தோம். இது அவர்கள் ஒரு சில வார்த்தைகளை பார்க்கும்போது எந்த அளவுக்கு வேர்க்கிறார்கள் என்பதை அளக்கிறது. ஒரு சாதாரண மனிதர், மேஜை என்ற வார்த்தையை காட்டினால், வேர்க்கமாட்டார். ஆனால், செக்ஸ் என்ற வார்த்தையை காட்டினால் வேர்க்க ஆரம்பிப்பார். அது பதிவாகிறது. இதன் பெயர் கால்வனிக் ஸ்கின் ரெஸ்பான்ஸ் அல்லது கால்வனிக் தோல் அளவீடு என்று சொல்லலாம். இப்போது கேள்வி என்னவென்றால், இதே பரிசோதனையை டெம்போரல் லோப் வலிப்பு உள்ளவர்களிடம் நடத்தினால் என்ன நடக்கும்?

குரல்: வலிப்பு உள்ள நோயாளிகளிடம் மூன்று வகையான வார்த்தைகள் கொடுக்கப்பட்டன. பாலுறவு ரீதியான வார்த்தைகள், சாதாரண வார்த்தைகள், மத ரீதியான வார்த்தைகள். சாதாரண வார்த்தைகள், எதிர்பார்த்தது போலவே ஒரு உணர்ச்சியையும் ஏற்படுத்தவில்லை. ஆனால், பாலுறவு மற்றும் மத ரீதியான வார்த்தைகளை காட்டும்போது கிடைத்த அளவீடுகளை பார்த்து அதிசயித்தார் பேராசிரியர் ராமச்சந்திரன்.

ராமச்சந்திரன்: “கடவுள்” போன்ற் மத ரீதியான வார்த்தைகளை பார்க்கும் ஒவ்வொரு தடவையும் அவர்களுக்கு மிகப்பெரிய கால்வனிக் ஸ்கின் ரெஸ்பான்ஸ் இருந்தது என்பதை பார்த்து அதிசயித்தோம். மாறாக, பாலுறவு ரீதியான வார்த்தைகளை காட்டும்போது, குறைவாகவே கால்வனிக் ரெஸ்பான்ஸ் இருந்தது. வேறொரு வகையில் சொல்ல வந்தால், கடவுள் மதம் ஆகிய வார்த்தைகளுக்கு அவர்களது ரெஸ்பான்ஸ் அதிகமாகவும் பாலுறவு வார்த்தைகளுக்கு குறைவாகவும் இருந்தது. சாதாரண மனிதர்களுக்கு தலைகீழாக இருக்கும்.

குரல்: மத ரீதியான பிம்பங்களுக்கு மனித உடலின் பௌதீக வெளிப்பாடு, மூளையில் இருக்கும் டெம்போரல் லோபில் இருக்கும் செயற்பாடுகளுடன் நேரடியாக தொடர்பு கொண்டது என்பதை மருத்துவ ரீதியாக நிரூபித்த முதல் ஆதாரம், தடயம் இதுவே.

ராமச்சந்திரன்: ஆக, நாங்கள் என்ன சொன்னோமென்றால், டெம்போரல் லோபில் சில இணைப்புகள் இருக்கின்றன. அவற்றை நாங்கள் தேர்ந்தெடுத்து செயலாக்கினோம். அந்த இணைப்புகளின் செயற்பாடுகள் இந்த நோயாளிகளிடம் உச்சத்துக்கு கொண்டுசெல்கின்றன. இந்த குறிப்பிட்ட நியூரான்களின் இணைப்புகள் மத நம்பிக்கைக்கும், ஆன்மீக நம்பிக்கைகளுக்கும் உகந்தவையாக இருக்கின்றன. இவை இவர்களை நம்பிக்கையாளர்களாக ஆக்குகின்றன.

குரல்: இந்த டெம்போரல் லோப் வலிப்பு நோய் கொண்டவர்களது மனதில் நடப்பது நம் எல்லோருடைய மனதில் நடக்கும் விஷயங்களே. ஆனால் உச்சகதியில் இவர்களிடம் நடக்கின்றன என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். இப்போது, டெம்போரல் லோப்களே நமது மத, ஆன்மீக நம்பிக்கைகளின் அனுபவங்களின் திறவுகோல் என்று தெரிகிறது. மத நம்பிக்கை எவ்வாறு மூளையை பாதிக்கிறது என்பதை ஆராயும் இந்த அதிர்ச்சியான ஆய்வுகள் அறிவியலின் புத்தம் புதிய துறையை உருவாக்கியுள்ளன. அதன் பெயர் நியூரோதியாலஜி. வடக்கு கனடாவில் ஒரு விஞ்ஞானி இந்த நியூரோ தியாலஜி துறையை பரிசோதிக்க முனைகிறார். டெம்போரல் லோப்களை தூண்டுவதன் மூலம் செயற்கையாக ஆன்மீக உணர்வை எல்லா மனிதர்களுக்கும் அடைய வைக்க முடியும் என்று டாக்டர் மைக்கேல் பெர்ஷிங்கர் கூறுகிறார். டெம்போரல் லோப்களுக்கு நடுவே ஒரு மின்காந்த புலத்தை உருவாக்கும் ஒரு கருவியை டாக்டர் பெர்ஷிங்கர் வடிவமைத்தார். உண்மையான ஒரு மத வெளிப்பாடு அனுபவத்தை இந்த கருவி மூலம் உருவாக்க முடியும் என்று கூறுகிறார்.

டாக்டர் மைக்கல் பெர்ஷிங்கர்(Laurentian University): இந்த ஹெல்மெட் பலவீனமான காந்த புலத்தை, முக்கியமாக டெம்போரல் லோபில் உருவாக்கும்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதற்குள் இருக்கும் சோலனாய்ட்கள் இணைக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே ஒரு நேரத்தில் ஹெல்மட்டுக்குள் காந்த புலம் பாய்கிறது. அதே நேரத்தில் மூளைக்குள்ளும் பாய்கிறது.

குரல்: பரிசோதனை நடப்பதற்கு முன்னால், டாக்டர் பெர்ஷிங்கர் நபர்களை ஒரு அமைதியான அறைக்கு அழைத்துச்சென்று அவர்களது கண்களை மூடி கட்டிவிட்டார். டான் ஹில் அவர்களுக்கு எதற்கு பரிசோதனைக்கு அழைத்துச் செல்கிறார்கள் என்பது கூட தெரியாது.

டான் ஹில்: ஹெல்மட் வைத்ததும், பல வினோதமான அனுபவங்களை பெற்றேன். என்னுடைய கைகள் இறுக்கிகொண்டன. விவரிக்க முடியாத பய அலைகள் தோன்றின. கூச்செரியும் உணர்வுகள். அதிவேகத்தில் சக்தி மேலேயும் கீழேயும் என் முதுகுத்தண்டில் பாய்வதை உணர்ந்தேன். ஏப்பம் (சிரிக்கிறார்) வந்தது. அது கொஞ்சம் வெட்கமாகவும் இருந்தது. பொதுவாக நோய்வாய்ப்பட்ட உணர்வு.

குரல்: டாக்டர் பெர்ஷிங்கர் காந்த புலத்தை மாற்ற மாற்ற, டானுக்கு வினோதமான உணர்வுகள் தோன்றின. தான் தனியாக இல்லை என்ற உணர்வு.

டான் ஹில்: என் காதுகள் அளவுக்கு என்னுடைய தோள்கள் இறுக்கமடைந்தன.
நான் இருக்கும் அறையில் யாரும் இல்லை என்பது எனக்கு நன்றாகவே தெரிகிறது. ஆனாலும், இங்கே ஏதோ ஒன்று இருக்கிறது என்ற உணர்வை விட முடியவில்ல. அது ஒளிந்திருக்கிறது. என்னை கவனிக்கிறது. அதன் கவனிப்பில் நான் இருக்கிறேன் என்ற உணர்வு. என் பின்னால் வந்துகொண்டிருக்கிறது என்ற உணர்வு. அது அங்கே இருக்கிறது. அதுமாதிரி உணர்ந்தேன். ஆமாம். அது எப்படி இருக்கமுடியும். அங்கே ஒன்றுமில்லை. பாதுகாப்பான இடத்தில்தான் நான் இருக்கிறேன்.

குரல்: அந்த அறைக்குள் டான் இந்த பரிசோதனை நடத்தும்போதெல்லாம் வரும் பொதுவான, ஆனால்,வினோதமான விளைவை அனுபவித்தார். அவர் கூட இன்னொருவர் இருப்பது போன்ற உணர்வு. டாக்டர் பெர்ஷிங்கர் இதனை “இருப்பறியும் உணர்வு” என்று கூறுகிறார்

பெர்ஷிங்கர்: இந்த பரிசோதனையின்போது அனைவரும் அடையும் அடிப்படையான அனுபவம், இந்த ”இருப்பறியும் உணர்வு”. இன்னொரு வியக்தி அங்கே இருக்கிறது.உங்களை விட பெரியது, காலத்திலும் வெளியிலும் பெரிய வியக்தி இருக்கிறது என்ற உணர்வை வலது மூளையில் இருக்கும் டெம்போரல் லோபை தூண்டினால், மிக எளிதில் அடைந்துவிடலாம் என்று எங்களது பரிசோதனை முடிவுகள் சொல்லுகின்றன.

குரல்: இன்னொரு வியக்தியை உணர்வது இந்த காந்த புலத்தால் மட்டுமே வருகிறதா என்பதை அறிய, காந்தபுலத்தை உருவாக்கியும் உருவாக்காமலும் தன் சோதனைகளை நடத்தினார். முக்கியமாக, இந்த பரிசோதனையின் உண்மை நோக்கம் என்ன என்பதை யாரிடமும் சொல்லவில்லை. இது சும்மா மன ஓய்வுக்காக என்று மட்டுமே சொன்னார்கள். பரிசோதனைமுடிவுகள் வந்தபோது ஆச்சரியமாக இருந்தது. ஹெல் மட்டில் காந்தப்புலம் இருந்தபோது, 80 சதவீதத்தினர் அருகே யாரோ இருப்பதாக உணர்ந்தனர். டாக்டர் பெர்ஷிங்கர் இந்த ஆய்வை இன்னும் மேலே எடுத்துச் சென்றார். இயற்கையாகவே காணப்படும் காந்தப்புலமும் இதே போல உணர்வை ஏற்படுத்தலாம் என்று நம்புகிறார். கடவுளை பற்றிய உணர்வை மட்டுமல்ல, இன்னும் சில அமானுஷ்ய அனுபவங்களையும் விளக்கலாம் என்று கருதுகிறார்.. உதாரணமாக ஆவிகள்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

கடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் – 3

 
மூளைக்குள் கடவுள்
இது பிபிஸி ஆவணப்படம்.
இதற்கான தமிழ் சப்டைட்டில்கள் நான் எழுதியவை.
இரண்டாம் பகுதி

குரல்: பரிசோதனை நடப்பதற்கு முன்னால், டாக்டர் பெர்ஷிங்கர் நபர்களை ஒரு அமைதியான அறைக்கு அழைத்துச்சென்று அவர்களது கண்களை மூடி கட்டிவிட்டார். டான் ஹில் அவர்களுக்கு எதற்கு பரிசோதனைக்கு அழைத்துச் செல்கிறார்கள் என்பது கூட தெரியாது.
டான் ஹில்: ஹெல்மட் வைத்ததும், பல வினோதமான அனுபவங்களை பெற்றேன். என்னுடைய கைகள் இறுக்கிகொண்டன. விவரிக்க முடியாத பய அலைகள் தோன்றின. கூச்செரியும் உணர்வுகள். அதிவேகத்தில் சக்தி மேலேயும் கீழேயும் என் முதுகுத்தண்டில் பாய்வதை உணர்ந்தேன். ஏப்பம் (சிரிக்கிறார்) வந்தது. அது கொஞ்சம் வெட்கமாகவும் இருந்தது. பொதுவாக நோய்வாய்ப்பட்ட உணர்வு.
குரல்: டாக்டர் பெர்ஷிங்கர் காந்த புலத்தை மாற்ற மாற்ற, டானுக்கு வினோதமான உணர்வுகள் தோன்றின. தான் தனியாக இல்லை என்ற உணர்வு.
டான் ஹில்: என் காதுகள் அளவுக்கு என்னுடைய தோள்கள் இறுக்கமடைந்தன.
நான் இருக்கும் அறையில் யாரும் இல்லை என்பது எனக்கு நன்றாகவே தெரிகிறது. ஆனாலும், இங்கே ஏதோ ஒன்று இருக்கிறது என்ற உணர்வை விட முடியவில்ல. அது ஒளிந்திருக்கிறது. என்னை கவனிக்கிறது. அதன் கவனிப்பில் நான் இருக்கிறேன் என்ற உணர்வு. என் பின்னால் வந்துகொண்டிருக்கிறது என்ற உணர்வு. அது அங்கே இருக்கிறது. அதுமாதிரி உணர்ந்தேன். ஆமாம். அது எப்படி இருக்கமுடியும். அங்கே ஒன்றுமில்லை. பாதுகாப்பான இடத்தில்தான் நான் இருக்கிறேன்.
குரல்: அந்த அறைக்குள் டான் இந்த பரிசோதனை நடத்தும்போதெல்லாம் வரும் பொதுவான, ஆனால்,வினோதமான விளைவை அனுபவித்தார். அவர் கூட இன்னொருவர் இருப்பது போன்ற உணர்வு. டாக்டர் பெர்ஷிங்கர் இதனை “இருப்பறியும் உணர்வு” என்று கூறுகிறார்
பெர்ஷிங்கர்: இந்த பரிசோதனையின்போது அனைவரும் அடையும் அடிப்படையான அனுபவம், இந்த ”இருப்பறியும் உணர்வு”. இன்னொரு வியக்தி அங்கே இருக்கிறது.உங்களை விட பெரியது, காலத்திலும் வெளியிலும் பெரிய வியக்தி இருக்கிறது என்ற உணர்வை வலது மூளையில் இருக்கும் டெம்போரல் லோபை தூண்டினால், மிக எளிதில் அடைந்துவிடலாம் என்று எங்களது பரிசோதனை முடிவுகள் சொல்லுகின்றன.
குரல்: இன்னொரு வியக்தியை உணர்வது இந்த காந்த புலத்தால் மட்டுமே வருகிறதா என்பதை அறிய, காந்தபுலத்தை உருவாக்கியும் உருவாக்காமலும் தன் சோதனைகளை நடத்தினார். முக்கியமாக, இந்த பரிசோதனையின் உண்மை நோக்கம் என்ன என்பதை யாரிடமும் சொல்லவில்லை. இது சும்மா மன ஓய்வுக்காக என்று மட்டுமே சொன்னார்கள். பரிசோதனைமுடிவுகள் வந்தபோது ஆச்சரியமாக இருந்தது. ஹெல் மட்டில் காந்தப்புலம் இருந்தபோது, 80 சதவீதத்தினர் அருகே யாரோ இருப்பதாக உணர்ந்தனர். டாக்டர் பெர்ஷிங்கர் இந்த ஆய்வை இன்னும் மேலே எடுத்துச் சென்றார். இயற்கையாகவே காணப்படும் காந்தப்புலமும் இதே போல உணர்வை ஏற்படுத்தலாம் என்று நம்புகிறார். கடவுளை பற்றிய உணர்வை மட்டுமல்ல, இன்னும் சில அமானுஷ்ய அனுபவங்களையும் விளக்கலாம் என்று கருதுகிறார்.. உதாரணமாக ஆவிகள்.
பெர்ஷிங்கர்: ஒருவர் தனது மகள் மீது அக்கறை காரணமாக எங்களை ஒருவர் கூப்பிட்டார். அந்த மகளது அனுபவங்கள் காரணமாக அவளுக்கு பைத்தியம் பிடித்திருக்கிறது என்று மற்றவர் கருதினர்.
குரல்: அந்த சிறுமிக்கு தூங்குவது பெரிய பிரச்னையாக இருந்தது. ஒவ்வொரு நாளும், திகிலான அமானுஷ்ய அனுபவங்கள் அவளுக்கு தோன்றின. அவள் இன்னும் அதிகமாக திகிலடைந்து தனது அறையில் ஒரு ஆவி சுற்றுவதாக கருதினாள். இதனால் பயந்து தனது படுக்கையறைக்கு போவதற்கே அஞ்சினாள். ஆகவே டாக்டர் பெர்ஷிங்கர் அவளது வீட்டுக்கு செல்ல முடிவெடுத்தார். அந்த சிறுமியின் பிரமைகளுக்கு அங்கே மறைந்திருக்கும், மாறுபடும், மின்காந்த புலமே காரணமாக இருக்கலாம் என்று டாக்டர் கருதினார். வீட்டுக்குமேலே செல்லும் மின் கம்பிகளோ அல்லது தரைக்குள் செல்லும் மின்கம்பிகளோ இதற்கு காரணமாக இருக்கலாம். இந்த காந்த புலத்தை கண்டறிவதே டாக்டர் பெர்ஷிங்கருக்கும், அவரது உதவியாளர் ஸ்டான் கோரனுக்கும் சவால். இதற்காக அவர்கள் உருவாக்கிய கருவிகளை உபயோகித்தனர். பால் டப்பாவும் அதனை சுற்றி கட்டப்பட்ட செம்பு கம்பிகளுமே.
பெர்ஷிங்கர்: கிகாஹெர்ட்ஸுக்கு என்ன அலைஎண்? 15?
கோரன்: 15 கிலோஹெர்ட்ஸ் – சரிதான்.
பெர்ஷிங்கர்: சில சமயங்களில், மின்காந்த புலங்கள் மூளை உருவாக்குவதோடு ஊடுபாடு கொள்கின்றன. சிலரது மூளை, எளிதில் பாதிக்கப்படக்கூடியதாக இருப்பதால், இந்த புலங்களினால், சக்திவாய்ந்த, பொருள் பொதிந்த அனுபவங்களை உருவாக்குகின்றன. சில சமயங்களில், அதுகடவுள், அல்லது ஆவி. அவரவரது அர்த்தப்படுத்துதலுக்கு உகந்ததாக. 
ஆகவே இந்த காந்த புலத்துக்கு ஆதாரமாக இருக்கக்கூடும் என்று நாங்கள் கருதியவற்றை தேடிப்பார்த்தோம். சில சமயங்களில் அனுபவம் மூலமாக, இங்கேதான் நடந்தது என்று அவர்களே சொல்வார்கள்.
குரல்: ஆரம்பத்தில், அவர்கள் கண்டறிந்தது எதுவும் நிச்சயமானதாக இல்லை. பிறகு அந்த சிறுமியின் அறையில் ரேடியோ கடிகாரத்தை கவனித்தார்கள்.
பெர்ஷிங்கர்: நாங்கள் அருகே சென்று அளந்தோம். அவள் அந்த கடிகாரத்தின் அருகேதான் தூங்கினாள் என்பதை அறிந்தோம். அந்த கடிகாரத்தை அளந்தோம். அந்த கடிகாரத்தில் அசாதாரணமான காந்தபுலம் இருந்தது. அதே வடிவமைப்புடனே நாங்கள் பரிசோதனைச்சாலையில் காந்தப்புலத்தை உருவாக்கி அதன் மூலம் “இருப்பறியும் உணர்வை” உருவாக்கியிருந்தோம். அந்த கடிகாரம் நீக்கப்பட்டது. அந்த ஆவி வருவதாக உணர்வதும் நின்றுவிட்டது.
குரல்: டாக்டர் பெர்ஷிங்கர் சொல்வது நம்பமுடியாதது போல உள்ளது. ஆனால், அமானுஷ்ய காட்சிகளுக்கும், காந்தப்புலங்களுக்கும் இடையேயான தொடர்பை நிரூபிக்கும் தடயங்கள் உள்ளன. வட துருவத்திலும் தென் துருவத்திலும் அசாதாரணமான காட்சிகளை உண்டுபண்ணும் துருவ ஒளிகள் சூரியனின் காந்தப்புயல் பூமியை தாக்கும்போது உருவாகின்றன. இந்த புயல்கள் பூமியின் காந்தப்புலத்தை மாற்ற வலிமைகொண்டவை. எப்போதெல்லாம் இது நடக்கிறதோ அப்போதெல்லாம் ஆவிகளை பார்த்ததாக மனிதர்கள் குறிப்பிடுவதும் அதிகரிக்கிறது. பல விஞ்ஞானிகள் மாறும் காந்தப்புலங்களால் மூளையில் வலிப்பு நோய் ஏற்படுகிறது என்பதை குறித்திருக்கிறார்கள். 
பெர்ஷிங்கர்: புவி காந்தப்புல செயல்பாடு டெம் போரல் லோப்களை பாதிக்கிறது என்பதை அறிவோம். ஏனெனில், எப்போதெல்லாம் புவியின் காந்தப்புல செயல்பாடு அதிகரிக்கிறதோ அப்போதெல்லாம் வலிப்பு, டெம் போரல் லோப் வலிப்புகள் அதிகரிக்கின்றன என்பதற்கு விஞ்ஞான ஆதாரம் உண்டு.
குரல்: விவாதத்துக்குரியதாக, டாக்டர் பெர்ஷிங்கர் பெரும்பாலான ஆன்மீக, மத அனுபவங்களை மனித மூளையில் உள்ள டெம் போரல் லோப்களில் காந்தப்புலத்தின் பாதிப்பு மூலமாக விளக்கிவிடலாம் என்று கூறுகிறார்.
பெர்ஷிங்கர்: என்னுடைய பல சக ஆய்வாளர்கள் ஏன் இதனை ஆராய்கிறாய் என்று கேட்கிறார்கள். ஏனெனில் எனக்கு எந்த ஆய்வுப்பண உதவியும் கிடைக்காது என்கிறார்கள். எதனை ஆராயக்கூடாதோ அதனை ஆராய்கிறாய். மத அனுபவங்கள், அமானுஷ்ய அனுபவங்கள், இவையெல்லாம் அறிவியலுக்கு அப்பாற்பட்டு இருக்கின்றன என்கிறார்கள். என்னுடைய கேள்வி என்னவென்றால், ஏன் இவற்றை ஆராயக்கூடாது? பரிசோதனை ஆய்வுமுறைதான் நம்மிடம் இருக்கும் மிகவும் சக்திவாய்ந்த கருவி. இதன் மூலமாகவே எது உண்மை எது உண்மையல்ல என்று அறிகிறோம்.
குரல்: ஆகவே, டாக்டர் பெர்ஷிங்கரின் தேற்றத்துக்கு ஒரு கடினமான பரிசோதனை வைக்க முடிவு செய்தார். உலகத்தின் மிகவும் கடினமான நாத்திகரான பேராசிரியர் ரிச்சர்ட் டாகின்ஸுக்கு மத அனுபூதி அனுபவத்தை அளிப்பதே அது. பேராசிரியர் டாக்கின்ஸின் கருத்தின்படி, நாத்திகத்துக்கும் மதத்துக்குமான போராட்டம், உண்மைக்கும் அறியாமைக்குமான போராட்டம். போப்பாண்டவரும், காண்டர்பரி ஆர்ச்பிஷப்பும், தலாய்லாமாவும் தோற்ற ஒரு விஷயத்தில் டாக்டர் பெர்ஷிங்கர் வெற்றிபெறுவாரா?
பேராசிரியர் ரிச்சர்ட் டாகின்ஸ்(ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம்): நான் ஒரு ஆத்திகனாக மாறினால், என் மனைவி என்னை விட்டு போய்விடுவேன் என்று சொல்லியிருக்கிறாள். இந்த ஆன்மீக அனுபவம் எப்படி இருக்கும் என்பதை அறிவதற்கு நான் எப்போதுமே ஆவலாகத்தான் இருக்கிறேன். இந்த முயற்சிக்கு இன்றைய மாலையை ஆவலோடு எதிர்பார்த்துகொண்டிருக்கிறேன்.
குரல்: டாக்டர் பெர்ஷிங்கர் பல விதமான காந்தப்புலங்களை ரிச்சர்ட் டாகின்ஸின் மூளை நடுவே அனுப்ப திட்டமிட்டார்.
டாகின்ஸ்: நான் இதுவரை எந்த அசாதாரணமான அனுபவத்தையும் அடையவில்லை.
குரல்: டாக்டர் பெர்ஷிங்கரின் ஆய்வின்படி, வெவ்வேறு விதமான புலங்களை அது இடது புறமா வலதுபுறமா அனுப்பப்படுகிறது என்பதை வைத்து அந்த நபர் கடவுள் அனுபவம் அடைவாரா இல்லையா என்பதை தீர்மானிக்கும்.
டாக்கின்ஸ்: எனக்கு லேசாக தலைசுற்றுகிறது.
குரல்: ஆரம்பத்தில் டாக்டர் பெர்ஷிங்கர் டாக்கின்ஸின் தலையின் வலது புறம் காந்தப்புலத்தை உருவாக்கினார்.
டாக்கின்ஸ்: வினோதமான உணர்வு.
குரல்: :”இருப்பறியும் உணர்வு” வரும் சாத்தியத்தை அதிகரிக்க டாக்டர் பெர்ஷிங்கர் காந்தப்புலத்தை இருபுறமும் அனுப்பினார்.
டாகின்ஸ்: என்னுடைய மூச்சு இழுத்துகொள்கிறது. இது என்னவென்று தெரியவில்லை. எனது இடது கால் நகர்கிறது. எனது வலது கால் இழுத்துகொள்கிறது.
குரல்: ஆக 40 நிமிடங்களுக்கு பிறகு, கடவுளுக்கு அருகாமையில் ரிச்சர்ட் டாகின்ஸ் கொண்டுவரப்பட்டாரா?
டாகின்ஸ்: துரதிர்ஷ்டவசமாக, இருப்பறியும் உணர்வை நான் பெறவில்லை. முழு இருட்டில், தலை மீது ஹெல்மட்டுடன், சந்தோஷமாக ஓய்வுடன், அவ்வப்போது நான் மைக்ரோபோனில் சொன்ன உணர்ச்சிகளை அடைந்தேன். ஒரு சாதாரண இருட்டு நேரத்தில் நடந்திராத ஒன்றுதான் நடந்தது என்று என்னால் அறுதியிட்டு கூறமுடியாது. நான் ஏமாற்றமடைந்திருக்கிறேன். மதவாதிகள் அனுபவிக்கும் அனுபூதி நிலையை, பிரபஞ்சத்துடன் ஐக்கியமான நிலையை, நான் அனுபவித்திருந்தால் சுவாரஸ்யமாக இருந்திருக்கும். நிச்சயமாக அதனை அனுபவிக்க விரும்புகிறேன்.
குரல்: ஆனால், டாக்டர் பெர்ஷிங்கர் ரிச்சர்ட் டாகின்ஸுக்கு ஏன் பரிசோதனை வேலை செய்யவில்லை என்பதற்கான காரணம் இருக்கிறது என்கிறார்.
பெர்ஷிங்கர்: சில வருடங்களுக்கு முன்னால், ஒரு கேள்விபதில் சர்வே தயாரித்திருந்தோம். அதன் படி, டெம் போரல் லோப் உணர்ச்சிகர அளவை மானி ஒன்றை தயாரித்தோம். ஒருசிலர் பாதிக்கப்பட மாட்டார்கள், சிலர் பாதிக்கப்படுபவர்களாக இருப்பார்கள். சிலர் மிகவும் பாதிக்கப்படுபவர்களாகவும், ஒரு சிலர் அங்கு டெம் போரல் லோப் எபிலப்ஸி அளவுக்கும் இருப்பார்கள். டாகின்ஸின் அளவை ஒரு சாதாரண நபரது பாதிக்கப்படும் அளவை விட மிக மிக குறைவு.
பிஷப் ஸ்டீபன் ஸைக்ஸ்(துர்ஹம் பல்கலை): எல்லோருக்கும் ஒரே அளவு ஆன்மீக உணர்வை பெற திறந்திருக்காது. மதரீதியாக ஒரு சிலருக்கு திறமை இருக்கிறதா அல்லது அது இசை போல ஒரு சிலருக்கு உண்டு ஒரு சிலருக்கு இல்லை என்பது போன்றதா என்பது சுவரஸ்யமான விவாதம்.
குரல்: பேராசிரியர் டாகின்ஸ் தவிர்த்து, டாக்டர் பெர்ஷிங்கர் சுமார் 1000க்கும் மேற்பட்ட மனிதர்கள் மீது பரிசோதனை நடத்தி மற்ற எவரையும் விட, மனிதமூளையில் இருக்கும் டெம் போரல் லோப்களுக்கும் ஆன்மீக அனுபவத்துக்கும் இடையேயான துல்லியமான தொடர்பை உறுதிப்படுத்தியிருக்கிறார். நியூரோ தியாலஜியின் மிக முன்னேறிய ஆய்வுகளாக இவரது ஆராய்ச்சிகள் உள்ளன. மோட்டார்சைக்கிள் ஹெல்மட்டுக்கும் உண்மையான ஆன்மீக உணர்வுக்கும் இடையே மாபெரும் வித்தியாசம் உள்ளது என்று மத ஆதரவாளர்கள் கூறுகின்றனர்
பிஷப் சைக்ஸ்: என்னுடைய மனத்தை ஒரு சில அனுபவங்கள் மூலம் மாற்றினாலோ, வேறொருவர் நின்று எனக்காக செய்து தந்தாலோ, அந்த அனுபவம் சந்தோஷமானதாக இருந்தாலும், அதற்கு நல்ல விளைவுகள் இருந்தாலும், அதற்கும் மதத்துக்கும் ஒரு சம்பந்தமுமில்லை என்றே கருதுவேன். என்னுடைய மத நம்பிக்கை காரணமாக
குரல்: மூளையின் ஒரு பகுதியை தூண்டி அடைவது போன்ற அனுபவத்தை விட மிகவும் சிக்கலானது மத ஆன்மீக அனுபவம் என்பது உண்மையே. டாக்டர் பெர்ஷிங்கரின் ஆய்வு ஒரு ஆரம்பமே. இப்போது பல விஞ்ஞானிகள் மூளைக்கும் மத நம்பிக்கைக்கும் இடையே மிகவும்நெருங்கிய தொடர்பு உண்டு என்று நம்புகிறார்கள். ஒரு ஆய்வு குழு இந்த உறவை ஆராய ஒரு வித்தியாசமான வழியை முயற்சித்தார்கள். உண்மையான ஆன்மீக உணர்வு அடையும்போது மூளையில் என்ன நடக்கிறது என்பதை ஆராய்ந்தார்கள். மைக்கேல் பெய்ம் அவர்களது மூளை அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பை அளித்தது.
டாக்டர் மைக்கேல் பைம்: தியானத்தில் அப்படிப்பட்ட ஒரு அனுபவத்தை அடையலாம். மிகவும் ஆழமான தியானம். அது ஒரு வகை பிரபஞ்சத்தோடு ஐக்கியம்.
குரல்: மைக்கேல் பைம் ஒரு பௌத்தர். இந்த மதத்தில் தியானத்தின் மூலம் ஆன்மீக அனுபவத்தை அடைவது வலியுறுத்தப்படுகிறது.
பைம்: மனம் லகுவாக லகுவாக, நமக்கு இருக்கும் தனித்தன்மைக்கும் பிரபஞ்சத்தில் உள்ள மற்ற பொருட்களுக்கும் இடையேயான எல்லைக்கோடு மறைகிறது. எல்லாமே கரைந்துவிடுகிறது. உலகத்தில் உள்ள அனைத்து பொருட்களுடனுமான ஒரு ஐக்கியம் தோன்றுகிறது. அப்போது தனித்தன்மை மறைகிறது.
குரல்: ஆய்வாளர் டாக்டர் ஆண்ட்ரூ நியுபெர்க் ஒரு மூளை பிம்பம் எடுக்கும் அமைப்பை வடிவமைத்தார். இதன் மூலம் முதன்முதலாக, மைக்கேலின் மூளை அவர் தியானம் செய்யும்போது என்ன ஆகிறது என்பதை எளிதே பார்க்கலாம்,
டாக்டர் ஆண்ட்ரூ நியுபெர்க( பென்ஸில்வேனியா பல்கலை மருத்துவமனை): எங்களதுபரிசோதனை சாலைக்கு வரும்போது, நாங்கள் வழக்கமாக, ஒரு அமைதியான அறைக்கு அழைத்துச் செல்வோம். அதன் பிறகு அவர் தியானம் செய்ய ஆரம்பிப்பார். அப்போது நாங்கள் அறைக்குள் இருக்கமாட்டோம். எந்த விதமான இடையூறும் இருக்கக்கூடாது என்பதற்காக. அவர்களது கையில் ஒரு சின்னகயிற்றை கொடுத்திருப்போம். தியானத்தின் உச்சத்தை அடையும்போது அவர்களை அந்த கயிற்றை இழுக்கச் சொல்வோம்.
குரல்: கயிற்றை இழுப்பது, மைக்கேலின் உடலுக்குள் ஒரு ரேடியோஆக்டிவ் தடயம் தரும்வேதிப்பொருளை அனுப்ப கொடுக்கும் சங்கேதம். இந்த வேதிபொருள் அவரது ரத்த்ததுக்குள் கலந்து அவரது மூளைக்கு சென்று அவரது மூளையில் அவரது தியான உச்சத்தின்போது எப்படி ரத்தம் செல்கிறது என்பதை காட்டும் வரைபடம். இந்த படங்கள் அவரது மூளைக்கும் ரத்தத்தின் அளவை காட்டும். சிவப்பு மிக அதிகமான ரத்த பாய்ச்சல். மஞ்சள் மிக மிக குறைவான ரத்தப்பாய்ச்சல். இந்த பரிசோதனை முடிவுகள், மற்ற பரிசோதனைகள் போலவே டெம் போரல் லோப்கள் நிச்சயமாக பங்கெடுக்கின்றன என்பதை காட்டுகின்றன. ஆனால் அவை வேறொன்றையும் காட்டின. மைக்கேலின் தியானம் உச்சம் அடைய அடைய, அவரது மூளையில் பெரிய்டல் லோப் என்பதற்கு மேலும் மேலும் ரத்தம் குறைந்தது. ஏறத்தாழ அது வேலையை நிறுத்தும் அளவுக்கு. இது மிகவும் முக்கியமான புதிய செய்தி. பெரிய்டல் லோப் தான் நமக்கு காலம் , இடம் ஆகியவற்றை உணர வைக்கிறது.
நியூபெர்க்: மூளையின் இந்த பகுதி நமது உடலிலிருந்து வரும் உணர்ச்சிகள் எல்லாவற்றையும் எடுத்துகொண்டு அந்த உணர்ச்சிகள் மூலம் நமக்கான சுய அடையாளத்தை உருவாக்குகிறது. மனிதர்கள் தியானம் செய்யும்போது சுய அடையாள இழப்பதை குறிப்பிட்டு சொல்கிறார்கள். அதைத்தான் இந்த தியானம் செய்பவர்களின் மூளையை ஆராயும்போது நமக்கு தெரிகிறது. இந்த பெரிய்ட்ல் லோபில் ரத்த ஓட்டம் செயல்பாடு குறைவதை காண்கிறோம்.
குரல்: சுய அடையாளம் இழக்கும் ஒரு வினோத உணர்வே எல்லா உலகத்து மதங்களிலும் மைய கருத்தாக ஆன்மீக உணர்வாக சொல்லப்படுகிறது. பௌத்தர்கள் பிரபஞ்சத்தோடு ஐக்கியமாகும் உணர்வை தேடுகிறார்கள். இந்துக்கள் ஆன்மாவும் கடவுளும் ஐக்கியமாவதை தேடுகிறார்கள். யுனியோ மிஸ்டிகா Unio Mystica என்பதை கத்தோலிக்கர்கள் தேடுகிறார்கள். டாக்டர் நியூபர்க் இவ்வாறு பலமதங்கள் கூறுவது அனைத்தும் ஒரே விஷயத்தைத்தானா என்று சிந்திக்கிறார். இதனை பரிசோதிக்க ஃப்ரான்ஸிஸ்கன் கன்யாஸ்திரிகள் பிரார்த்தனை செய்யும்போது அவர்களது மூளைக்கும் பௌத்தர்களது மூளைக்கும் ஒற்றுமை இருக்குமா என்று பரிசோதித்தார்.
நியூபர்க்: சுவாரஸ்யமாக, பிரான்ஸிஸ்கன் கன்யாஸ்திரிகளது மூளையை பார்க்கும்போதும், பெரிய்ட்ல் லோப் பகுதி செயலற்று இருந்ததை பார்த்தோம். திபேத்திய பௌத்தர்களது மூளை போலவெ.
குரல்: பௌத்தர்களும் கத்தோலிக்கர்களும் இரு வெவ்வேறான மத பாரம்பரியங்களிலிருந்து வந்திருந்தாலும், அவர்களது மூளை எவ்வாறு தியானத்திலோ பிரார்த்தனையிலோ செயல்படுகிறது என்பது, மூளை வேதியியலை பொறுத்தமட்டில், ஒரே மாதிரிதான். டாக்டர் நியூபெர்கின் ஆராய்ச்சி, முதன்முறையாக நமது மூளையில் பல்வேறு விதமான பகுதிகள் எவ்வாறு மத நம்பிக்கையில் செயலாற்றுகின்றன என்பதை அறிவியற்பூர்வமாக காட்டியது.
நியூபர்க்: எங்களது ஆய்வுகள் மூலம் அறிந்தது என்னவென்றல், மூளையில் பல்வேறுவிதமான வித்தியாசமான அமைப்புகள் ஆன்மீக அனுபவத்தின்போது ஒன்றோடு ஒன்று தொடர்புடனிருக்கின்றன. பல பகுதிகள் செயலூக்கம்பெறுகின்றன. பல செயலற்று போகின்றன. இப்படிப்பட்ட பயிற்சிகளின்போது பெரிய தொடர்பு வலை இதில் பங்கெடுக்கிறது என்று அறிகிறோம்.
குரல்: டாக்டர் நியுபர்கின் ஆராய்ச்சியும், டாக்டர் பெர்ஷிங்கரின் ஆராய்ச்சியும் சில முக்கியமான பெரிய பாதிப்புகளை ஏற்படுத்த வல்லவை. நாம் எதனை நம்புகிறோமோ அது நமது மனத்தின் பௌதீக அமைப்பினால் கட்டுப்படுத்தப்படுகிறது. நமக்கு ஏன் இந்த வல்லமை தோன்றியது? இதற்கு பரிணாமவியல்ரீதியாக எளிய விளக்கம் இருக்கலாம். மத நம்பிக்கையாளர்கள் வெகுகாலம் வாழ்கிறார்கள், ஆரோக்கியமாக வாழ்கிறார்கள், குறைவான புற்றுநோய், இதயநோய் கொண்டவர்களாக இருக்கிறார்கள். நாம் உயிர்வாழ உபாயமாக இந்த மத நம்பிக்கையை பரிணமித்துகொண்டோமா?
டாகின்ஸ்: ”பரிணாமரீதியின் மத நம்பிக்கையின் மதிப்பு என்ன?” என்று கேட்டால், நீங்கள் தவறான கேள்வியை கேட்கிறீர்கள் என்றும் இருக்கலாம். சரியான சூழ்நிலையில், மத நம்பிக்கை என்று தன்னை காட்டக்கூடிய மூளைக்கு எவ்வளவு பரிணாமவியல் ரீதியில் மதிப்பு இருக்கும் என்று கேட்பது சரியானதாக இருக்கலாம்.
குரல்: பரிணாமத்தின் பக்க விளைவுதான் மத நம்பிக்கை என்றால், கடவுள் நம்பிக்கையை இயற்கையின் ஒரு வினோதமான உப விளைவு என்று ஒதுக்கிவிட முடியுமா? உண்மை என்னவென்றால், மக்களது நம்பிக்கையை விளக்கிவிட நியூரோ தியாலஜியே போதும் என்பது அவசரமான முடிவாக இருக்கக்கூடும். மதத்துக்கு நமது மூளை தகுந்ததாக இருந்தாலும், கடவுள் என்பதை மூளை வேதியியலின் ஒரு வினோத பக்க விளைவு என்று ஒதுக்கிவிடமுடியாது.
ராமச்சந்திரன்: உங்களது மூளையில் இருக்கும் சர்க்யூட்டுகள் உங்களை மத நம்பிக்கைக்கு ஏற்றவராக ஆக்கினாலும், மத நம்பிக்கையின் மதிப்பை இல்லையென்று ஆக்கிவிட முடியாது. உங்களது மூளைக்குள் கடவுளை அறிந்துகொள்ள கடவுள் போட்டு வைத்த ஆண்டணா என்றும் இருக்கலாம். மதத்துக்கு உகந்த மூளை சர்க்யூட்டுகள் பற்றி நமது விஞ்ஞானிகள் சொல்வது எதுவும், கடவுள் இல்லை என்றும் ஆக்கிவிடாது. ஆன்மீக அனுபவத்தை அடையும் மனிதனது அனுபவத்தையும் அதற்கான மதிப்பையும் இல்லையென்றும் ஆக்கிவிடாது.
பிஷப் சைக்ஸ்: மத நம்பிக்கை மூலமாக நாம் அடையும் சந்தோஷத்துக்கு எப்படிப்பட்ட பௌதீக வேதியியல் வினைகள் துணை புரிகின்றன என்று அறியாமல் இருந்தால்தான் ஆச்சரியம். கிறிஸ்துவர்களும், மற்ற மதத்தினரும் மேலும் ஆய்வுகளை செய்வதற்கு அஞ்ச வேண்டியதில்லை. சொல்லபோனால், நாம் ஆர்வமுடன் இருந்து அவற்றை புரிந்துகொள்ள முயலவேண்டும்.
குரல்: மதத்தின் தோற்றம் நாம் நினைத்ததை விட மிகவும் சிக்கலானது என்பது சந்தேகத்துக்கு இடமில்லாதது. மதத்தை வெறுமே மத தலைவர்கள் உருவாக்கியது என்றோ, சமூக கட்டுப்படு மூலம் உருவானது என்றோ கூறுவது மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட விளக்கம் என்பதையே நியூரோ தியாலஜி வெளிப்படுத்துகிறது. ஏதோ காரணங்களால், கடவுளை நம்பும் சில அமைப்புகள் நமது மூளையில் உருவாகியிருக்கின்றன என்பதையே இவை காட்டுகின்றன. குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமென்றால், கடவுள் இருக்கிறாரோ இல்லையோ, நமது மூளைகள் உருவான விதத்தில், நாம் கடவுளை தொடர்ந்து நம்பிக்கொண்டிருப்போம்.
டாகின்ஸ்: மனித மத உணர்வு மிக எளிதில் நீக்க முடியாதது. அது எனக்கு கொஞ்சம் துக்கத்தையே தருகிறது. தெளிவாக மதத்துக்கு பிடிவாதம் நிச்சயம் உண்டு.
நியுபர்க்: மூளையின் வடிவமைப்பினால், மதமும் ஆன்மீகமும் அதற்குள் கட்டப்பட்டு இருக்கின்றன. கடவுள் மதம் ஆகிய கருத்துகள் ரொம்ப ரொம்ப காலம் இருக்கப்போகின்றன.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

கடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் – 4

ஆர் கோபால்

டெம்போரல் லோப் என்பது என்ன?

 

படத்திலிருப்பது மூளையின் பல பகுதிகள். ஒவ்வொரு பகுதியும் ஒரு லோப் என்று வழங்கப்படுகிறது.  ஆங்கிலத்தில் டெம்பில் temple என்பது http://en.wiktionary.org/wiki/temple நெற்றிக்கு பக்கவாட்டில் கண்களுக்கு பின்னால் இருக்கும் இடம். இந்த இடத்தில் இருக்கும் மூளையின் பகுதி டெம்போரல் லோப் என்று அழைக்கப்படுகிறது.

 

உடலின் உணர்வு தளங்கள், கண், மூக்கு, வாய், தோல் ஆகியவை இந்த பகுதிக்கு தன் நரம்புகளை அனுப்பிகொடுக்கின்றன. இந்த மூளை அந்த உணர்வுகளை பொருளுள்ளதாக மாற்றுகிறது. இதுவே காதிலிருந்து வரும் ஒலியையும், பேச்சு, கண் ஆகிய உறுப்புகளிலிருந்து வரும்  செய்திகளையும் ஒழுங்குபடுத்துகிறது. temporal lobe என்னும் இந்த பகுதியில் வரும் வலிப்பு இவ்வளவு உணர்வுத்தளங்களிலிருந்து வரும் செய்திகளை பாதிக்கின்றன. இந்த பகுதியில் வரும் வலிப்பு நோய்,  ஹிப்போகாம்பஸ்  பகுதியையும்  பாதிக்கிறது.

 

 What is TLE? டெம்போரல் லோப் எபிலப்ஸி என்பது என்ன?

 

டெம்போரல் லோப் எபிலப்ஸி என்னும் டெம்போரல் லோப் வலிப்பு ஒரு நோய். இது டெம்போரல் லோப் பகுதியில் தோன்றும் வலிப்பு (நியுரான்களில் நடக்கும் மின்புயல்). இது வலது டெம்போரல் லோப் இடது டெம்போரல் லோப் அல்லது இரண்டிலும் நடக்கலாம்.

 

டெம்போரல் லோப் வலிப்பு இரண்டு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. ஹிப்போகாம்பஸ், அமிக்டலா பகுதிகளில், அதாவது ஏறத்தாழ மூளையின் மையப்பகுதியில் நடப்பது, மெசியல் டெம்போரல் லோப் வலிப்பு MTLE என்று அழைக்கப்படுகிறது. மூளையின் வெளிப்புறத்தில் டெம்போரல் லோபின் மேற்பரப்பில் நடப்பது லேட்டரல் டெம்போரல் லோப் வலிப்பு அல்லது LTLE என்று அழைக்கப்படுகிறது.

 

இரண்டு வகையிலும், பொதுவாக வலிப்பு வருபவர்களுக்கு நடக்கும் பலவிதமான குணநலன்கள் இந்த வலிப்புகளிலும் இருக்கலாம். மூளையின் ஒரு சிறுபகுதியில் நடக்கும் மூளை வலிப்பு (simple partial seizures )  இதனை aura அல்லது ஒளிவெள்ளம் என்று குறிக்கிறார்கள். இது முழு நினைவு இருக்கும்போதே நடக்கிறது. இந்த சிறு மூளைவலிப்பு அடைபவர்கள் நினைவு தவறிவிடுவதில்லை. ஏற்கெனவே இந்த உணர்வை அடைந்திருப்பது போன்ற உணர்வு (feelings of deja vu ), பழங்காலத்தில் நடந்த விஷயங்கள் மீண்டும் நினைவுக்கு வருதல், அல்லது நடந்ததை மறந்துவிடுதல் ஆகியவை பக்க விளைவுகள்.  உணர்வுகளை ஒழுங்குபடுத்தும் டெம்போரல் லோபில் இந்த வலிப்பு வருவதால், இல்லாத மணத்தை நுகர்வது, ருசி, எதுவும் யாருமே பேசாமலிருந்தாலும் எதையோ கேட்பது, இல்லாததை பார்ப்பது போன்ற பிரமைகளை நோயாளிகள் அடையலாம்.

Image from http://www.migraines.org

 

பெரிய பகுதி வலிப்புகள் (Complex partial seizures) சுயநினைவை பாதிக்கின்றன. சாதாரண பகுதி வலிப்புகள் பரவி முழு டெம்போரல் லோபையும் தாக்கும்போது இவ்வாறு நடக்கிறது. இவ்வாறு நடக்கும்போது, பிரமைகள், வன்மையான போக்கு, மனநிலையில் மாற்றம், நினைவில் பாதிப்பு ஆகியவை நடக்கலாம். சுய நினைவு இழப்பதோடு கூடவே, கை கால்களில் சில பகுதிகளில் ஒரே மாதிரி இழுத்துகொள்ளும் செய்கைகளுமோ, வாய் கோணிக்கொள்வதோ நடக்கலாம். அல்லது நகராமல் அப்படியே பார்த்துகொண்டிருப்பது, யாராவது கூப்பிட்டால் பதில் கூறாமல் இருத்தல் ஆகியவை நடக்கலாம்.

 

மற்ற வகை வலிப்புகளிலிருந்து டெம்போரல் லோப் வலிப்பு எவ்வகையில் மாறுபட்டது?

 

டெம்போரல் லோப் வலிப்பு உள்ளவர்களுக்கும் மற்ற வகை வலிப்பு உள்ளவர்களுக்கும் இடையே சில முக்கியமான வேறுபாடுகள் உள்ளன.(Rodin et al., 1976).  நோய்க்கு காரணம் எது,  மருந்துக்கு எவ்விதத்தில் நோய் பதிலீடு அளிக்கிறது, குணாம்ச மாறுதல் ஆகியவை இந்த வேறுபாடுகள் எனலாம். சுமார் 71% சதவீத டெம்போரல் லோப் நோயாளிகள் மூளையில் மற்ற இடங்களில் தோன்றும் மற்ற வகை வலிப்புகளாலும் பாதிக்கப்படுகிறார்கள்.

 

டெம்போரல் லோப் வலிப்பு மரபணு ரீதியாக வருவதற்கும் வாய்ப்புகள் உண்டு. மைய நரம்பு மண்டலம் பாதிக்கப்படுவதால், காயப்படுவதால் இவை தோன்றலாம். உதாரணமாக சிறு குழந்தையாக இருக்கும்போது எதாவது ஒரு வகையில் பாதிக்கப்பட்டிருப்பது, அவர்கள் வயது முதிர்ந்ததும் டெம்போரல் லோப் வலிப்பாக வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

 

http://www.macalester.edu/psychology/whathap/UBNRP/tle09/TLE.html

 

டெம்போரல் லோப் வலிப்பு நோய் அறிகுறிகள்

 

டெம்போரல் லோப் வலிப்பு வரும்போது என்ன நடக்கிறது என்பதை நோய்வாய்ப்பட்டவரே விவரித்தது இது “ ஒரு வினோதமான உணர்வு அடையப்பெற்றேன். இதனை வார்த்தைகளில் கூறவியலாது. முழு உலகமும் மிக மிக உண்மையாக முதலில் தோன்றியது. எல்லாமே மிக தெளிவடைந்தாற்போல ஒரு உணர்வு. பிறகு நான் இங்கே இருக்கிறேன். ஆனால் இங்கே இருக்கவில்லை. சொல்லப்போனால் ஒரு கனவில் இருப்பது போல. இதே உணர்வை இதே நிகழ்வை பல்லாயிரக்கணக்கான முறை வாழ்ந்து விட்டதுபோன்ற ஒரு உணர்வு. மற்றவர்கள் பேசுவது எனக்கு கேட்கிறது. ஆனால் அவற்றில் எதுவும் எனக்கு அர்த்தமாகவில்லை. இது நடக்கும்போது நான் பேசக்கூடாது என்பதை அறிந்திருக்கிறேன். ஏனெனில் நான் முட்டாள்த்தனமாக பேசுகிறேன். சில சமயங்களில் நான் பேசுகிறேன் என்று நினைக்கிறேன். ஆனால் மற்றவர்கள் நான் எதுவும் சொல்லவில்லை என்று சொல்கிறார்கள். இது முழுவதும் நடக்க ஒரு நிமிஷமோ அல்லது இரண்டு நிமிஷமோ ஆகிறது” (www.epilepsy.com)

 

Auras ஒளி வெள்ளம்

குறிப்பிட்ட பகுதிகளில் மென்மையான வலிப்புகள் தோன்றுவதையே ஒளிவெள்ளம் Auras என்று குறிக்கிறோம். இந்த வகையில் டெம்போரல் லோப் பகுதியில் தோன்றும் வலிப்பு. இது பெரும்பாலும் வலிப்பு தோன்றுவதற்கு முன்னால் தோன்றும். பல நோயாளிகள் இதனை வலிப்பு தோன்றப்போகிறது என்பதன் எச்சரிக்கை என்று விவரிக்கிறார்கள். சுமார் 80 சதவீத டெம்போரல் லோப் வலிப்பு நோயாளிகள் இவ்வாறு ஒளிவெள்ளம் தோன்றுவதை குறிப்பிடுகிறார்கள். இந்த ஒளிவெள்ளங்கள் பல விதங்களில் தோன்றுகின்றன. 327 வகையான வெவ்வேறு உணர்ச்சிகளை (Lennox, Cobb, 1933) பரந்த அளவு ஆராய்ச்சிகள் அட்டவணைப்படுத்தியிருக்கின்றன.

 

பார்வை பிரமைகள் இந்த பார்வை பிரமைகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி தோன்றுகின்றன. ஒக்கிபிடல் லோப்occipital lobeபகுதியே கண்ணிலிருந்து வரும் செய்திகளை குவித்து பொருளாக்கம் செய்கிறது.  இந்த ஓக்கிபிடல் லோபில் வலிப்பு தோன்றுபவர்களுக்கு நேரும் பார்வை பிரமைகளை விட டெம்போரல் லோபில் வலிப்பு வரும் நோயாளிகள் வித்தியாசமான பார்வை பிரமைகளை அடைகிறார்கள். அடிப்படையான பார்வை பிரமைகளை விட சிக்கலானதும், பிம்பங்கள் வலைந்து நெளிந்தும் காணப்படலாம்.  சாதாரண உருவத்தை விட பெரியதாகவோ சிறியதாகவோ காணப்படலாம். சில சமயங்களில் தலை சுற்றல்  vertigo (உலகம் சுழல்வது போன்ற உணர்வு) தோன்றலாம். சில சமயங்களில் தங்களது உடலை தாங்களே வெளியேயிருந்து பார்ப்பது போன்ற உணர்வு இருந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்கள். சில சமயங்களில் இந்த பிரமைகளை செயற்கை முறையிலேயே தூண்டி எந்த பகுதி வலிப்பு அடைகிறது என்பதை மருத்துவர்கள் காண்கிறார்கள்.

 

மற்ற குணாம்ச அறிகுறிகள் பார்வை பிரமைகளும் மற்ற நான்கு உணர்வுகளில் தோன்றும் பிரமைகளும் டெம்போரல் லோப் வலிப்பு கொண்டவர்களுக்கு பொதுவானதாக இருந்தாலும், மற்ற வகை குணாம்ச அறிகுறிகளும் டெம்போரல் லோப் நோயாளிகளுக்கு உண்டு. இவை கீழே கூறப்பட்டுள்ளன

 

Aggression வன்மையான போக்கு

 

வன்மையான எதிர்ப்பு குணம் தோன்றுவது சில சமயங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது (Taylor, 1969). மற்ற வன்மையான குணமுள்ளவர்களிடமிருந்து டெம்போரல் லோப் வலிப்பு நோய் உள்ளவர்கள் கொள்ளும் வன்மையான குணம் பல விதங்களில் வேறுபட்டுள்ளது. இவர்கள் மிக குறுகிய காலத்திலேயே கோப வயப்படுவதும், விரைவிலேயே அமைதியாவதும், மறதியும் கொண்டவர்களாக இருக்கிறார்கள். உயிரற்ற பொருள்கள் மீதும், மற்ற மனிதர்கள் மீதும் கோபம் கொள்வதும் பொதுவாக காணப்படுகிறது.

 

சைகோபாதலஜி Psychopathology

 

1961இல் டெம்போரல் லோப் நோயாளிகளிடம் பாரோனோயா (மற்றவர்கள் தன்னை கொல்ல திட்டமிடுகிறார்கள் என்ற உணர்வு), மன அழுத்தம், கவலை, மற்றவர்களிடமிருந்து விலகியிருத்தல் போன்றவை மற்றவர்களை விட இந்த டெம்போரல் லோப் நோயாளிகளிடம் அதிகம் என்று கிப்ஸ் என்ற ஆராய்ச்சியாளர் தெரிவிக்கிறார் இடது டெம்போரல் லோபில் பாதிக்கப்பட்டவர்கள் பிளவாளுமை ( schizophrenia ), மற்றவர்கள் உங்களை கொடுமைப்படுத்துகிறார்கள் அடக்குமுறை செய்கிறார்கள், (paranoic ideation, persecuted mentality) என்ற உணர்வு கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

உணர்வுப்பூர்வமான அணுகுமுறை Emotionality

 

தீவிரமான உணர்ச்சிகள் கடுமையான மன அழுத்தம் ஆகியவை டெம்போரல் லோப் வலிப்பு நோய் உருவாக காரணமாக இருக்கின்றன என்று காட்டப்பட்டுள்ளதாலும், அவர்களது தீவிர உணர்ச்சிகள், அவர்கள் அடையும் வலிப்பின் தீவிரத்தன்மையையும் பாதிப்பதால், மனவியல் ஆலோசனைகள் மனநோய் உதவி ஆகியவை டெம்போரல் லோப் வலிப்புக்கு நல்ல மருத்துவமாக இருக்கமுடியும் என்று கருதுகிறார்கள். தங்களது உணர்ச்சிகளை கட்டுப்படுத்த பழகிக்கொண்டால், வலிப்பும் குறையும் என்று அறிகிறோம்.

 

 

மதமும் இலக்கியமும்

 

டெம்போரல் லோப் வலிப்பு நோயின் கலாச்சார வெளிப்பாடுகள்.

 

மனித வரலாற்றில் மிகவும் ஆழமான  அனுபவங்களுடன் தொடர்புடையதாக டெம்போரல் லோப் வலிப்பு நோய் இருக்கிறது. இதுவே மற்ற வலிப்பு நோய்களிலிருந்து இந்த டெம்போரல் லோப் வலிப்பு நோயை பிரித்து காட்டுகிறது எனலாம். பல முக்கியமான வரலாற்று நாயகர்கள் நரம்பு மூளை வியாதிகளால் பாதிக்கப்பட்டிருந்தார்கள். அந்த காலத்தில் இந்த அறிகுறிகள் புரிந்துகொள்ளப்படவில்லை, சொல்லப்போனால், பெயர் சூட்டக்கூட படவில்லை. டெம்போரல் லோப் எபிலப்ஸி பற்றிய ஆய்வுகளும், அறிகுறிகளும் மருத்துவ ஆராய்ச்சிகளும் நடந்த பின்னால், பல வரலாற்றாசிரியர்களும், மூளை நரம்பு அறிவியலாளர்களும், பல வரலாற்று நாயகர்களும், அவர்களது வாழ்வில் TLE எனப்படும் டெம்போரல் லோப் வலிப்பு நோயின் பங்கும், அவர்களது அந்த வலிப்பு நோயின் விளைவாக அவர்களது வாழ்க்கையும், நமது கலாச்சாரமும் எவ்வாறு மாற்றப்பட்டுள்ளது என்பதை ஆராய்ந்திருக்கிறார்கள்.

 

 

 

டெம்போரல் லோப் வலிப்பு நோய் உள்ளவர்கள் தங்களது வலிப்பு அனுபவங்களுக்கு முன்னால், aura எனப்படும் ஒளிவெள்ளத்தை பற்றி கூறியுள்ளார்கள்.  இவை குத்துமதிப்பான எச்சரிக்கையிலிருந்து, மிகவும் ஆழமான அனுபவங்கள் விரிந்த மனநிலைகள் வரைக்கும் வித்தியாசனவை. இவை பாதிக்கப்படும் அந்த மனிதரின் உலகப்பார்வையையே மாற்றக்கூடியவை. ஒவ்வொரு நபருக்கும் இந்த வலிப்பு நோய் வருவதற்கு முன்னால் வரும் aura வித்தியாசனது என்றாலும், பெரும்பாலானவை கீழ்க்கண்டவற்றை கொண்டிருக்கின்றன(Taylor, 1987):

 

hypergraphia (விடாது அதிகப்படியாக எழுதிகொண்டேயிருத்தல் அல்லது வரைதல், ) முன்னர் பார்த்தது போன்ற உணர்வு(deja/jamais vu ) புதியதாக நடப்பது ஏற்கெனவே நடந்தது போன்ற உணர்வும். ஏற்கெனவே நடந்தது முதன்முறையாக நடப்பது போன்ற உணர்வும். முன்னர் கேட்டது போன்ற உணர்வு (deja/jamais entendu )  இது கேட்பது. ஏற்கனவே கேட்டது போன்ற உணர்வு, முன்னர் கேட்டதை புத்தம் புதியதாய் கேட்பது போன்ற உணர்வு. பயம், அதி மகிழ்ச்சி, உச்சகட்ட உணர்ச்சிக்குவியல் கடவுளிடமிருந்து செய்தி வந்தது போன்ற உணர்வு

 

இவை எல்லாம் நமது சாதாரண வாழ்வில் எல்லோருக்கும் நடக்கக்கூடியவை என்றாலும், இந்த tle டெம்போரல் லோப் நோயாளிகளுக்கு உச்சகட்டமாகவும் எல்லாமே சேர்ந்து வலிப்பு நோய் சமயத்தில் நடப்பதும் முக்கியமானது. இந்த அறிகுறிகள் இருக்கும் வரலாற்று நாயகர்களை நாம் புரிந்துகொள்வதும், நம்மை பற்றியும் நம் கலாச்சாரத்தை பற்றியும் அறிந்துகொள்வதற்கும் உதவும்.

 

மதம்

 

இந்த ஆராய்ச்சிகளில் பெரும் விவாதப்பொருளாக இருக்கும் ஒரு துறை,  நியூரோ தியாலஜி எனலாம். இது மதம் பற்றிய நியூரான் அறிவியலும், மத அனுபவங்கள் பற்றிய ஆராய்ச்சியும். பலர் இப்படிப்பட்ட ஆராய்ச்சிகள் மத நம்பிக்கைகளது மதிப்பை குறைப்பதாகவும், அவமரியாதை செய்வதாகவும் கருதுகிறார்கள். ஆனால், இந்த ஆராய்ச்சிகள் மதத்தை கேவலப்படுத்தும் எந்த முயற்சியிலும் இல்லை. நாம் அனைவருக்கும் பொதுவான மத அனுபவங்களை அறிவியல் ரீதியில் புரிந்துகொள்வதற்கும் மூளையின் செயல்பாடுகளை புரிந்துகொள்வதற்குமே இந்த ஆராய்ச்சிகள். மத பிம்பங்கள் தோன்றும் பிரமை, மிகவும் தெளிவாக தோன்றும் நினைவுகள், கேட்பது போன்ற பிரமை,  தீவிரமான மத நம்பிக்கை உணர்வு, ஏதோ ஒரு மதத்துக்கு திரும்பி செல்லும் அளவுக்கு மத மாற்றம் ஆகியவற்றோடு டெம்போரல் லோப் வலிப்பு நோய்  இறுக்கமாக தொடர்பு கொண்டது.

 

சொல்லப்போனால், பல விஞ்ஞானிகளும் வரலாற்றாசிரியர்களும் கிறிஸ்துவத்தின் செயிண்ட் பால்  அவர்களுக்கு டெம்போரல் லோப் வலிப்பு நோய் இருந்திருக்கிறது என்றே கூறுகிறார்கள்.

 

St. Paul செயிண்ட் பால்

அபோஸ்தலர்களின் நடபடிகள் என்ற விவிலிய புத்தகத்தில் செயிண்ட் பவுலின் மத மாற்றத்துக்கு இரண்டு வெவ்வேறு விவரிப்புகள் காணப்படுகின்றன. முதலாவது மூன்றாம் மனிதரது பார்வையில். மற்றொன்று ஜெருசலத்தில் அவர் கைது செய்யப்பட்டபோது அவர் பேசியது. இரண்டுமே சிறியதாக இருந்தாலும், அவரை மருத்துவ ரீதியில் பார்க்க ஏராளமான தடயங்களை தரவில்லை. ஆனால், அவற்றில் சொல்லப்பட்டுள்ளவை அவருக்கு டெம்போரல் லோப் வலிப்பு இருந்திருக்கிறது என்பதற்கு தெளிவான அடையாளங்களை சொல்கின்றன.

 

St. Paul’s Conversion from Livre d’Heures d’Étienne Chevalier by Jean Fouquet Image from http://www.wikipedia.org

 

இரண்டு பத்திகளுமே பவுல் தரையில் விழுவதையும், குருடாக்கவைக்கும் ஒளியை அனுபவித்ததையும் விவரிக்கின்றன. அதன் பிறகு “நான் நாசரேத்தின் ஜீஸஸ், நீ என்னை துன்பப்படுத்துகிறாய்” “Jesus of Nazareth, whom you are persecuting” (Acts of the Apostles 22:6-21 ) என்ற குரல் கேட்டதாக சொல்கிறார்.  அதன் பிறகு அவரால் பார்க்க முடியவில்லை. டமாஸ்கஸுக்கு போகும் மூன்று நாட்களில் அவர் சாப்பிடவோ குடிக்கவோ இல்லை. அவரது இந்த அனுபவத்துக்குப் பிறகு பவுல் கிறிஸ்துவத்தின் தீவிரமான பின்பற்றுபவராகவும், கிறிஸ்துவத்தின் மிஷனரியாகவும் ஆகிறார். தீவிர மத ஆர்வத்தையும், மதமாற்ற வேகத்தையும் பெறுகிறார்.

 

கடவுளின் குரல்கள்,  தெய்வீக உருவங்களின் காட்சி ஆகிய பிரமைகள், உடல் தளர்ந்து விழுதல் ஆகியவை எல்லாமே டெம்போரல் லோப் வலிப்பு நோயின் பொதுவான அறிகுறிகள். டெம்போரல் லோப் வலிப்பு நோயாளிகள் திடீரென்று மதம் மாறுவது அடிக்கடி ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. 2 கொரிந்தியன்12 இல்  பவுல் இன்னொரு அனுபவத்தை விவரிக்கிறார். அதில்  சுவர்க்கத்தில் மாட்டிகொண்டதை பற்றியும் மனித வாய்களால் உச்சரிக்கப்படாத புனித ரகசியங்களை பற்றியும் பேசுகிறார். அதே போல, அவருக்கு மாம்சத்திலே முள் கொடுக்கப்பட்டிருக்கிறது என்றும் அது சாத்தானுடைய தூதனாக இருக்கிறது என்றும் பேசுகிறார். அந்த முள், அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கின்ற abundance of the revelations ஏராளமான தீர்க்கதரிசனங்கள் அல்லது  wealth of visionsஇலிருந்து  அவர் சுய பெருமை பட்டுகொள்ளாதபடிக்கு அவரை துன்புறுத்துகிறது என்றும் கூறுகிறார். இந்த விவரிப்பு செயிண்ட் பவுலுக்கு டெம்போரல் லோப் வலிப்பு நோய் இருந்திருக்கும் என்று காட்டுகிறது. அடிக்கடி வரவில்லை என்றாலும், திரும்பத்திரும்ப வரும் இப்படிப்பட்ட காட்சிகளும், தன்னிடமே ஏதோ குறையுள்ளது என்ற அவருடைய உணர்வும் இங்கே வெளிப்படுகிறது.

 

இப்படிப்பட்ட முக்கியமான வரலாற்று நாயகரை பற்றி பேசுவது அவரை அவமரியாதை செய்ய அல்ல. மாறாக, பொதுவாக மனிதர்களுக்குள்ள இப்படிப்பட்ட குணாம்சத்தை வெளிகொணர்வதும் அது பற்றிய ஒரு புரிதலுக்கு நம்மை தயார் படுத்துகொள்வதுமே.

 

இது பற்றி பல ஆய்வுக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. அதில் ஒன்று இங்கே இருக்கிறது

http://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC1032067/pdf/jnnpsyc00553-0001.pdf

 

Art கலை இலக்கியம்

 

மனித அடிப்படையான குணாம்சத்திலிருந்து வெளிப்படுவது கலை.  நியூரோ சயன்ஸ், மதம் ஆகியவை எவ்வாறு புற உலகை நாம் எவ்வாறு புரிந்துகொள்கிறோம் என்பதற்கு உதவுகிறதோ அதே போல கலையும் இலக்கியமும் உலகத்தை பற்றிய புரிதலுக்கு நம்மை அழைக்கின்றன. மனவியலில் பல துறைகள் கலையை ஆராய்கின்றன. 1992இல் டெம்போரல் லோப் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட பல கலைஞர்களை ஒன்று சேர்த்து அவர்கள் அந்த நோயை பற்றி உணர்வை வெளிப்படுத்த வாய்ப்பளிக்கப்பட்டனர். இப்படிப்பட்ட நிலையால் பாதிக்கப்பட்டவர் எவ்வாறு உலகத்தை அணுகுகிறார் என்பதை மற்றவர்கள் காண  இது ஒரு வாய்ப்பாகும்.

 

வரலாற்று நாயகரான ஒரு மாபெரும் எழுத்தாளர் இதே நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அது அவரது வாழ்க்கையையும் கலையையும் எவ்வாறு செழுமைப்படுத்தியது, மாற்றியது என்பதை அவரே அறியத்தருகிறார். அது ஃபேடோர் மிகயீலோவிச் தாஸ்தாவஸ்கி.

 

 Dostoevsky தாஸ்தாவஸ்கி

 

 பெடோர் தாஸ்தாவஸ்கி உலகத்தின் மிகச்சிறந்த நாவலாசிரியர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.  குற்றமும் தண்டனையும், Crime and Punishment, The Idiot and The Brothers Karamazov. முட்டாள், கரமசோவ் சகோதரர்கள் ஆகிய உன்னத படைப்புகளுக்காக அவர் உலகெங்கும் கொண்டாடப்படுகிறார். அதே நேரத்தில் அவருக்கு இருந்த டெம்போரல் லோப் வலிப்பு நோய் மீது ஏறத்தாழ காதலுடன் இருந்தார் என்பது ஆச்சரியமானது. ஒரு ராணுவ அறுவை சிகிச்சை மருத்துவருக்கு 1821இல் பிறந்த தாஸ்தாவெஸ்கி ருஷ்ய ராணுவத்தில் சில காலம் பணியாற்றினார். அதன் பிறகு எழுத்துக்கே முழுவதுமாக தன்னை அர்ப்பணித்துகொண்டார். 1849இல் ருஷ்ய அரசால் துரோக குற்றம் சாட்டப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்டார். அவரை சுட்டு கொலை செய்ய போர்வீரர்கள் தயாராக இருக்கும்போது ஜார் அவரை மன்னித்து விடுதலை செய்தார். தன் வாழ்நாளில் மீத நாட்கள் முழுவதும் எழுதுவதிலேயே கழித்தார். இரவிலும் பகலிலும் தொடர்ந்து வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். ஒரு நாளைக்கு இரண்டு தடவையிலிருந்து நான்கு மாதங்களுக்கு ஒருமுறை என்ற வீதத்தில் அவருக்கு டெம்போரல் லோப் வலிப்பு வந்தது என்பதை குறித்திருக்கிறார்.

 

http://en.wikipedia.org/wiki/Fyodor_Dostoyevsky

 

A portrait of the young Dostoevsky

 

தாஸ்தாவெஸ்கிக்கு வந்த டெம்போரல் லோப் வலிப்பு உச்சகட்டமகிழ்ச்சியை உண்டுபண்ணியது என்பது ஒரு வித்தியாசமான செய்தி.  வலிப்பு வருவதற்கு முன்னால் வரும் aura என்னும் ஒளிவெள்ளம் அவருக்கு கொடுத்த இன்பமும் பெரும் மகிழ்ச்சியும் அவருக்கு மிகவும் பிடித்தமானதாக இருந்தன என்று எழுதுகிறார். அந்த ஒரு சில வினாடிகளுக்காக தன் வாழ்நாளில் 10 வருடங்களையும் தியாகம் செய்ய தயாராக இருப்பதாக எழுதினார். தாஸ்தாவெஸ்கியின் “முட்டாள்” நாவலில் வரும் கதாநாயகன் இளவரசன் முஷ்கின் என்பவருக்கும் வலிப்பு நோய் இருக்கிறது. பெரும்பாலான திறனாய்வாளர்கள் அந்த நாவலை அவரது சுயசரிதை என்று கருதுகிறார்கள்.  அதன் இரண்டாம் அத்தியாயத்தில் இளவரசருக்கு வரப்போகும் வலிப்புக்கு முந்திய நிலையை விவரிக்கிறார்,” “immediately preceding (his seizures), he had always experienced a moment or two when his whole heart, and mind, and body seemed to wake up to vigour and light; when he became filled with joy and hope, and all his anxieties seemed to be swept away for ever; these moments were but presentiments, as it were, of the one final moment… in which the fit came upon him.”

 

”அவரது வலிப்புக்கு சற்றுமுன்னர், அவர் எப்போதுமே, ஓரிரு கணங்கள் தனது முழு இதயமும், மனமும், உடலும் உச்சகட்ட உணர்வுக்கும், ஒளிவெள்ளத்துக்கும் எழுச்சி அடைந்து நின்றதையும், எல்லையற்ற பேரானந்தத்தையும் நம்பிக்கையும் நிறைந்து நின்றதையும், அவரது கவலைகள் அனைத்தும் துப்புரவாக நீக்கப்பட்டதையும், உணர்ந்தார். அந்த கணங்கள் ஒரு எச்சரிக்கை மணிஒலிகள், ஒரு இறுதிகணம், அவருக்கு வலிப்பு பாய்ந்தேறியது”

 

தாஸ்தாவெஸ்கியின் நிலை, இந்த நோயை பற்றிய எதிர்மறையான கருத்துக்கள் இருப்பதை பற்றிய,  பல சிக்கலான கடினமான கேள்விகளை எழுப்புகிறது. அதே நேரத்தில் இன்பம், மகிழ்ச்சி ஆகியவற்றை பற்றியும் நம்மை ஆராயத்தூண்டுகிறது. பின்னொரு அத்தியாயத்தில் “முட்டாள்” நாவலில் இதே கேள்வியை தாஸ்தாவெஸ்கி எழுப்புகிறார்.

 

“What matter though it be only disease, an abnormal tension of the brain, if when I recall and analyze the moment, it seems to have been one of harmony and beauty in the highest degree–an instant of deepest sensation, overflowing with unbounded joy and rapture, ecstatic devotion, and completest life?”

 

”நான் அந்த கணத்தை திரும்ப நினைவுபடுத்திகொண்டு ஆராயும்போது, அந்த கணம் உச்சகட்ட இணக்கத்தையும், உச்சகட்ட அழகையும் கொண்டிருந்ததை உணர்கிறேன் என்றால், அது அக்கணத்தில் மிகவும் ஆழமான உணர்வையும், கட்டற்ற எல்லையற்ற மகிழ்ச்சியிலும், பேரானந்தத்தையும், களிப்பூட்டும் பக்தியையும், வாழ்க்கை முழுமையடைந்ததையும் உணர்ந்தேன் என்றால்,  அது நோயாகவோ, அல்லது மூளையில் அசாதாரணமான பிரச்னையாகவோ இருந்தால் என்ன?”  என்று எழுதுகிறார்.

 

இவர் மட்டுமே அல்ல. பல மிகச்சிறந்த எழுத்தாளர்களையும் கலைஞர்களும் இப்படிப்பட்ட டெம்போரல் லோப் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு அதன் மூலம் அடைந்த அனுபங்களை மிகச்சிறந்த கலைப்படைப்புகளாக மாற்றியவர்கள்.

 

இதுவரை ஆவணப்படுத்தப்பட்ட கலைஞர்களாக கீழ்க்கண்டவர்களை குறிப்பிடலாம்.

 

ஓவியர் வின்சண்ட் வான்கோ லூயிஸ் கரோல் (சார்லஸ் டாட்ஜ்சன்) எட்கர் ஆலன் போ குஸ்டாவ் ஃப்ளாபெர்ட் பிலிப் கே டிக் ஸில்வியா பிளாத் டிவைன் காமெடி எழுதிய இத்தாலியின் மிகச்சிறந்த கவிஞர் டாண்டே 18ஆம் நூற்றாண்டின் நாடகாசிரியர் மோலியெர் சர் வால்டர் ஸ்காட் (இவான்ஹோ , வேவர்லி ஆகிய படைப்புகளை எழுதியவர்) 18 ஆம் நூற்றாண்டு எழுத்தாளர் ஜோனதன் ஸ்விஃப்ட் (குலிவர் ட்ராவல்ஸ் எழுதியவர்) அல்பிரட் லார்ட் டென்னிஸன் (மாபெரும் ஆங்கிலக்கவிஞராக மதிக்கப்படுபவர்) மாபெரும் கவிஞர் ஷெல்லி சகலகலாவல்லவர் லியனர்டோ டா வின்ஸி

 

மேலே இருப்பது சிறிய வரிசைதான். விக்கி பக்கம் இன்னும் ஏராளமான வரலாற்று நாயகர்களை வலிப்பு நோய் கொண்டவர்களாக பட்டியலிடுகிறது

http://en.wikipedia.org/wiki/List_of_people_with_epilepsy

 

http://www.macalester.edu/psychology/whathap/UBNRP/tle09/home.html



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

கடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் – 5

ஆர் கோபால்

இந்த பகுதியில், எவ்வாறு டெம்போரல் லோப் வலிப்பு நோய், ஒரு புதிய மதத்தை உருவாக்கியது என்பதை பார்க்கலாம். அதே நேரத்தில் எவ்வாறு ஒரு புதிய மதம், அதற்கு முன்னால் வந்த மதங்களின் நீட்சியாகவும், அதே நேரத்தில் அதன் தூய வடிவாகவும் தன்னை தகவமைத்துகொள்கிறது என்பதையும் காணலாம்.

தற்போதைய அமெரிக்க தேர்தலில் குடியரசு கட்சியின் சார்பில் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுபவர்களில் முதலாவதாக வந்துகொண்டிருப்பவர் மிட் ராம்னி என்ற மோர்மன் பிரிவைச் சேர்ந்தவர். மோர்மன் பிரிவு என்பது என்ன? மோர்மன் பிரிவு என்பது கிறிஸ்துவ அடிப்படைவாதத்தில் தோன்று மருவி தனியொரு மதமாக பரிணமித்த ஒரு அமெரிக்க மதம். இன்று அமெரிக்காவை தாண்டி உலகமெங்கும் பரவியிருக்கிறது. இந்த மதத்தை தோற்றுவித்தவர் ஜோஸப் ஸ்மித் ஜூனியர்.

அமெரிக்காவில், வெர்மாண்ட் மாநிலத்தில், 1805 ஆம் ஆண்டு, ஜோஸப் ஸ்மித் சீனியர் என்பவருக்கும், லூசி மாக் ஸ்மித் என்பவருக்கும் ஐந்தாவது குழந்தையாக ஜோஸப் ஸ்மித் ஜூனியர் பிறந்தார்.

அவருக்கு 17 வயதாக இருக்கும்போது அவருக்கு ”காட்சிகள்” தோன்ற ஆரம்பித்தன.

அவரிடம் மொரோனி (moroni) என்ற ஒரு தேவதை வந்து புதைக்கப்பட்டிருக்கும் தங்க ஏடுகளை காண்பிப்பதாகவும், அதன் மூலம் கிறிஸ்துவத்தை மீட்டெடுக்க வேண்டும் என்றும் கோரியது என்று தன் நண்பர்களிடமும் உறவினர்களிடமும் கூற ஆரம்பித்தார். 1830இல் (அவருக்கு 25 வயதாக இருக்கும்போது) மோர்மன் புத்தகம் (Book of Mormon) என்பதன் ஆங்கில மொழிபெயர்ப்பை பிரசுரித்தார். (அதாவது அந்த தங்க ஏடுகளில் இருந்தது ஒரு எகிப்து மொழியும், எபிரேயமும் கலந்த ஒரு புராதன மொழி என்று கூறிகொண்டார். அந்த மொழியை மொழிபெயர்க்க அவருக்கு அந்த தேவதை வலிமை கொடுத்தது என்றும் அந்த தங்க ஏடுகளை மொழிபெயர்த்து அவர் ஆங்கில புத்தகமாக வெளியிடுகிறார் என்றும் கூறினார்). அவர் தங்கியிருந்த கிராமத்துக்கு அருகே இருந்த குமோரோ என்ற மலையில் ஒரு கல்லாலான பெட்டியின் உள்ளே இந்த ஏடுகள் இருந்தன என்று இவர் கூறினார். இன்று அந்த மலை மார்மன் கிறிஸ்துவர்களின் தீர்த்தஸ்தலமாக இருக்கிறது.

மீண்டும் ஆரம்பகால தூய வடிவில் சர்ச்சை நிறுவனப்படுத்த தன்னை கடவுள் தேர்ந்தெடுத்ததாகவும் கூறினார். இந்த சர்ச்சுக்கு சர்ச் ஆஃப் லேட்டர் டே செயிண்ட்ஸ் அல்லது சர்ச் ஆஃப் மோர்மன் என்ற பெயர் சூட்டப்பட்டது.
இந்த காலகட்டம் ஐரோப்பாவிலிருந்து துரத்தப்பட்ட, அல்லது வெளியேறிய ஐரோப்பியர்கள் அமெரிக்கா வந்து குடியேறும் காலகட்டம். இந்த காலகட்டத்தில் ஏற்கெனவே ஒரு இடத்தில் வந்து சேர்ந்தவர்களுக்கும், புதியதாக வந்து சேர்பவர்களுக்கும் இடையே சண்டைகள் அவ்வப்போது நடந்தன.
1831இல் இவரிடம் கணிசமான சீடர்கள் சேர்ந்திருந்தார்கள். ஆகவே ஸ்மித் இவர்களை கூட்டிக்கொண்டு ஒஹையோ மாநிலத்தில் கிர்ட்லாந்த் என்ற நகரில் ( Kirtland, Ohio ) ஜியான் (Zion) என்னும் புனித நகரை ஸ்தாபிக்க அழைத்துச் சென்றார். ஆனால், அங்கே ஏற்கனவே இருந்தவர்கள் இந்த புதிய வரவாளிகளை துரத்திவிட்டனர். ஏற்கெனவே வடக்கு மிஸோரி மாநிலத்துக்கு இவர்கள் சென்றனர். இந்த காலகட்டத்திலேயே, மோர்மன்களின் அதிகரிப்பை கண்டு பயந்தவர்களும் மோர்மன்களும் போர் புரிந்தனர். இது 1838 மோர்மன் போர் என்று அழைக்கப்படுகிறது. இதில் மோர்மன்கள் தோற்றனர். அதனால், மிசோரியிலிருந்து மோர்மன்கள் துரத்தப்பட்டனர். ஸ்மித் சிறைபிடிக்கப்பட்டார்.
மிசோரி சிறையிலிருந்து தப்பிய ஸ்மித் அங்கிருந்து சென்று, மோர்மன்களுடன், இல்லினாய் மாநிலத்தில் நாவோ பகுதியில் (Nauvoo, Illinois) குடியேறினார்கள். அங்கு அவர் மேயராகவும், பிறகு மோர்மன்களின் மிகப்பெரிய போர்ப்படைக்கு தலைவராகவும் இருந்தார். 1844இல் அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டார். நாவோ எக்ஸ்போஸிடர் என்ற பத்திரிக்கை ஸ்மித் பலதார மணம் புரிந்திருப்பதை விமர்சித்தது. இதனால், நாவோ நகர கவுன்ஸில் அந்த பத்திரிக்கை அழிக்கப்பட வேண்டும் என்று ஆணையிட்டது.
இதனால் நடந்த குழப்பத்தின் இறுதியில், நாவோ பகுதியில் ராணுவ சட்டம் என்று (martial law) அறிவித்தார். பிறகு இல்லினாய் கவர்னரிடம் சரண்டைந்தார். வழக்கை எதிர்பார்த்து இருக்கும்போது அவர் இல்லினாய் மாநிலத்தில் கொல்லப்பட்டார்.
ஸ்மித்தின் சீடர்கள், அவர் எழுதியது எல்லாவற்றையும் இறைவனால் கொடுக்கப்பட்டவையாக கருதுகிறார்கள். கடவுளின் தன்மை, குடும்பம் எப்படி இருக்க வேண்டும், அரசியலமைப்பு, மதம் ஒரு கட்டுக்கோப்பான ராணுவம் போல இருக்க வேண்டும் என்ற எல்லாவற்றையும் இறை வாக்குகளாக கருதுகிறார்கள். மோஸஸ், எலிஜாவுக்கு நிகராக அவரையும் ஒரு தீர்க்கதரிசியாக கருதுகிறார்கள். அவரது மறைவுக்கு பின்னால், மோர்மனிஸம் பல பிரிவுகளாக பிரிந்திருக்கிறது. அதன் முக்கிய பிரிவு சர்ச் ஆஃப் ஜீஸஸ் கிரிஸ்ட் ஆஃப் லாட்டர் டே செயிண்ட்ஸ் ( Church of Jesus Christ of Latter-day Saints ) என்று அழைக்கப்படுகிறது. மிசோரியில் ஒரு பிரிவு தன்னை கம்யுனிட்டி ஆஃப் கிறிஸ்ட் என்று அழைத்துகொள்கிறது. அதிகாரப்பூர்வமான இந்த இரண்டு சர்ச்சுகளும் பலதார மணத்தை தாங்கள் இனி போதிக்க மாட்டோம் என்று அமெரிக்க அரசாங்கத்திடம் உத்தரவாதம் கொடுத்ததினால், இதிலிருந்து பல மோர்மன்கள் பிரிந்து சென்று பலதார மணத்தை ஆதரிக்கும் பல மோர்மன் உப பிரிவுகளை உருவாக்கிக்கொண்டனர்.
– ஜோஸப் ஸ்மித்தின் பெற்றோரும் அவரது தாய்வழி தாத்தாவும், அடிக்கடி தங்களிடம் கடவுள் பேசுவதாக கூறிகொண்டனர். இந்த டெம்போரல் லோப் வலிப்பு மரபணு ரீதியாகவும் வரலாம் என்பதை கருத்தில் கொள்ளலாம்.
இப்படிப்பட்ட குடும்ப சூழ்நிலையில் வளர்ந்த ஸ்மித் தனக்கும் இந்த டெம்போரல் வலிப்பு வந்ததை இறைவனின் வசனம் தன்னிடமும் இறங்குவதாக கூறிகொண்டதில் ஆச்சரியமில்லை. தன்னிடம் இறைவனின் தூதரும் இறைவனும் வந்து பேசியதாக ஸ்மித் எழுதியிருக்கிறார்.
இவரிடம் மோரோனி என்ற தேவதை கொடுத்த தங்க ஏடுகளை அவர் ஒரு பாதுகாப்பான அறையில் பூட்டி வைத்ததாக கூறிக்கொண்டார். மோரோனி தேவதை அந்த ஏடுகளை யாரிடமும் காட்டக்கூடாது என்றும், அதன் மொழிபெயர்ப்பை மட்டுமே பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று ஆணையிட்டிருப்பதாக கூறிக்கொண்டார். இவரது வார்த்தையை நம்பி பலர் இவரிடம் மொழிபெயர்ப்பு வேலை செய்ய வந்தனர். நடுவில் இவரது மனைவி குறைப்பிரசவத்தில் இறந்து பிறந்த குழந்தையை பெற்றார்.
அப்போதிலிருந்து அந்த பழங்கால ஏடுகளிலிருந்து மொழிபெயர்க்கும் திறன் போய்விட்டதாக கூறினார். பிறகு 1828இல் இவருக்கு மீண்டும் அந்த திறன் கொடுக்கப்பட்டதாகவும் கூறிகொண்டார். பலர் இந்த தங்க ஏடுகளை பார்க்க விரும்பினர். ஆனால், மோரோனி தேவதை மற்றவர்கள் பார்க்ககூடாது என்று கூறிவிட்டதால் காண்பிக்கவில்லை என்று கூறிவிட்டார். அவரது நெருங்கிய உறவினர்கள் 11 பேர் அந்த தங்க ஏடுகளை பார்த்ததாக சாட்சியமளித்தனர். இவை இப்போதும் பிரசுரிக்கும் மோர்மன் புத்தகம் என்ற இந்த பிரிவின் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. மொழிபெயர்ப்பு முடிந்ததும், அந்த தங்க ஏடுகளை மோரோனி எடுத்துகொண்டு சென்றுவிட்டதாக ஸ்மித் கூறிவிட்டார்.
தான் வன்முறையை விரும்பவில்லை என்று ஸ்மித் அடிக்கடி கூறிகொண்டாலும், மோர்மன் மதத்தை காக்கவும், மோர்மன் எதிர்ப்பாளர்களுக்கு எதிராக ராணுவப்போருக்கு ஆட்களை அழைக்க வேண்டும் என்றும் விரும்பினார்.
இவரது சில போதனைகள் பல முன்னுக்குப் பின் முரணாக இருப்பவை. ஒரு காலகட்டத்தில் வந்த போதனைகளை பின்னொரு காலத்தில் அதனை மறுத்து வேறொரு கருத்தை கடவுள் தன்னிடம் சொன்னதாக கூறிவிடுவார்.
உதாரணமாக அடிமைமுறையை ஆதரித்து 1836ல் பேசினார். பின்னர் கடுமையாக அடிமைமுறையை எதிர்த்திருக்கிறார். அவர் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்ட போது, 1850ஆம் ஆண்டில் அடிமைமுறையை ஒழிக்கப்போவதாகவும், ஏற்கெனவே அடிமைகளை வைத்திருந்தவர்களுக்கு நஷ்ட ஈடாக, பொது நிலங்களை விற்று பணம் தரப்போவதாகவும் வாக்குறுதி அளித்தார்.
மோர்மன் மதத்துக்குள் அடிமைகள் வரலாம். ஆனால், அந்த அடிமைகளின் எஜமானர்கள் அதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். அதே நேரத்தில் கருப்பினத்தவரும், வெள்ளையினத்தவரும் திருமணம் செய்வதை தடுக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.
ஜனநாயகமே சரி என்று ஒரு சமயத்தில் கூறியிருக்கிறார். பின்னர் மோர்மன் மத அடிப்படையிலான மத அரசாங்கமே ஒரு நாட்டை அரச வம்சத்தால் ஆளப்பட வேண்டும் என்று கூறியிருக்கிறார். அமெரிக்கா பல நாடுகளையும் ஆக்கிரமித்து ஆள வேண்டும் என்று கூறியிருக்கிறார். பின்னால், அந்த ஆக்கிரமிப்பு என்பது சகோதரத்துவ ஆக்கிரமிப்பு என்று அழைத்திருக்கிறார்.
மனிதர்கள் உருவாக்கிய சட்டத்தை விட கடவுள் கொடுக்கும் சட்டமே உன்னதமானது என்றும், இறைவசனத்தின் மூலம் வரும் சட்டத்தையே மக்கள் பின்பற்ற வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.
இது அவரது கருத்து.
”that which is wrong under one circumstance, may be and often is, right under another. God said thou shalt not kill—at another time he said thou shalt utterly destroy. This is the principle on which the government of heaven is conducted—by revelation adapted to the circumstances in which the elders of the kingdom are placed. Whatever God requires is right…even things which may be considered abominable to all those who do not understand the order of heaven.”
”ஒரு இடத்தில் கொல்லக்கூடாது என்று கடவுள் சொல்லியிருக்கிறார்(பைபிளில்). மற்றொரு இடத்தில் அழித்து முடி என்றும் சொல்லியிருக்கிறார். நேரத்துக்கு தகுந்தாற்போல வரும் இறைவசனங்கள் மூலமாகத்தான் அரசாங்கம் நடைபெற வேண்டும். இந்த அரசாங்கத்தின் மூத்த தலைவர்களுக்கு இறைவனிடமிருந்து வரும் கட்டளைகள் மூலமாகத்தான் அரசாங்கம் நடைபெற வேண்டும். கடவுள் என்ன கேட்கிறாரோ அதுவே சரி. மற்றவர்கள் இந்த கட்டளைகளை என்ன கேவலமாக கருதினாலும்….” என்று கூறுகிறார்.

பலதார மணமே சிறந்த மணம் என்றும் அதுவே மனிதனை கடவுளாகக்கூட ஆக்ககூடிய விஷயம் என்றும் கூறியிருக்கிறார்.

அவருக்கு இருந்த டெம்போரல் லோப் வலிப்பு நோய்க்கான ஆதாரங்கள்.

அவருக்கு வலிப்பு நோய் இருந்திருக்கிறது என்பதை பல வரலாற்றாசிரியர்கள் குறித்துள்ளனர்.
. A voice from above reveals “the same messenger” from earlier, who commands Smith to go tell his father what’s been going on.
“I obeyed; I returned to my father in the field, and rehearsed the whole matter to him. He replied to me that it was of God, and told me to go and do as commanded by the messenger.” அவரது முதலாவது பிரமை பற்றி அவரே எழுதியது.
“‘. . . I was seized upon by some power which entirely overcame me, and had such an astonishing influence over me as to bind my tongue so that I could not speak. Thick darkness gathered around me, and it seemed to me for a time as if I were doomed to sudden destruction.'” (“Pearl of Great Price, Joseph Smith — History,” v. 15) ”ஒரு சக்தி என் மீது படர்ந்து என்னை அமுக்கியது. என்னால் பேசவே முடியாதது போல என் நாக்கை கட்டிப்போட்டது. என்னைச் சுற்றிலும் கருமை சூழ்ந்தது. நான் அந்த கணமே உடனே அழியப்போகிறவனாக உணர்ந்தேன்” “Joseph Smith described the remarkable vision he saw and then went on to say: ‘When I came to myself again, I found myself lying on my back, looking up to heaven. When the light had departed, I had no strength; but soon recovering in some degree, I went home.’ (ibid., v. 20) நான் என் சுய உணர்வுக்கு வந்தபோது மல்லாக்க வானத்தை பார்த்து படுத்திருந்ததை அறிந்தேன். ஒளிவெள்ளம் என்னை விட்டு நீங்கியபோது என்னிடம் உடல் வலிமையே இல்லாதிருந்தது. சற்று நேரத்தில் என் வலிமையை திரட்டிக்கொண்டு வீடு சென்றேன்” “While Joseph Smith claimed that he saw an actual vision, there is a similarity to his grandfather’s experience in that both of them were overpowered and passed out. Interestingly, both Joseph and his grandfather used the expression, ‘When I came to myself’ (compare v. 20 with Solomon Mack’s account cited above).
அவரது தாத்தாவும் ஜோஸப் ஸ்மித்தும் ஒரே மாதிரியாக தங்களது அனுபவங்களை விளக்கியுள்ளார்கள். அவர்கள் சுயநினைவுக்கு வந்ததை இருவருமே ‘When I came to myself’ என்று கூறுகிறார்கள் “Another account of the [First] [V]ision appears in Joseph Smith’s 1835 dairy. This account contains some eerie material about a strange noise Joseph heard that was not published in the official version: “‘My tongue seemed to be swol[l]en in my mouth, so that I could not utter. I heard a noise behind me like some person walking towards me.
I strove again to pray but could not. The noise seemed to draw nearer. I sprung up on my feet {page 23} and looked around, but saw no person or thing that was calculated to produce the noise of walking.’ (“An American Prophet’s Record: The Diaries and Journals of Joseph Smith,” edited by Scott H. Faulring, 1987, p. 51) என்னுடைய நாக்கு என் வாய்க்குள் வீங்கிப்போனது போல உணர்ந்தேன். என்னால் பேசமுடியவில்லை. எனக்கு பின்னால் ஒருவர் நடந்து என்னை நோக்கி வருவது போல சத்தம் கேட்டது. நான் மீண்டும் பிரார்த்தனை செய்ய முனைந்தேன். ஆனால் முடியவில்லை. சத்தம் என்னை நெருங்கி வந்தது.
நான் எழுந்து நின்றேன். சுற்றுமுற்றும் பார்த்தேன். என்னை நோக்கி நடந்து வந்த உருவத்தையோ அல்லது யாரையுமோ பார்க்கவில்லை.” இதே அனுபவத்தையே டெம்போரல் லோப் தூண்டப்படுபவர்களும் அடைகிறார்கள், டெம்போரல் லோப் வலிப்பு நோய் கொண்டவர்களும் அடைகிறார்கள் என்பதனை முன்னரே பார்த்தோம்.
தங்க ஏடுகளை கொடுத்த மொரோனி என்ற தேவதையை பார்த்த நிகழ்ச்சி பற்றி ஜோஸப் ஸ்மித் எழுதுகிறார் “‘I shortly after arose from my bed, and, as usual, went to the necessary labors of that day; but, in attempting to work as at other times, I found my strength so exhausted as to render me entirely unable. My father, who was laboring along with me, discovered something to be wrong with me, and told me to go home. I started with the intention of going to the house; but, in attempting to cross the fence out of the field where we were, my strength entirely failed me, and I fell helpless on the ground, and for a long time was quite unconscious of anything.
“‘The first thing that I can recollect was a voice speaking unto me, calling me by name. I looked up, and beheld the same messenger . . .’ (“Pearl of Great Price, Joseph Smith — History,” v. 48-49) “Joseph Smith wrote that after he had his First Vision, he was severely tempted: “‘. . . I was left to all kinds of temptations; and mingled with all kinds of society, I frequently fell into many foolish errors, and displayed the weakness of youth, and the foibles of human nature; which, I am sorry to say, led me into divers temptations, offensive in the sight of God. . . .
on the evening of the above-mentioned twenty-first of September, after I had retired to my bed for the night, I betook myself to prayer and supplication to Almighty God for forgiveness of all my sins and follies . . .
“‘While I was thus in the act of calling upon God, I discovered a light appearing in my room, which continued to increase until the room was lighter than at noonday, when immediately a personage appeared at my bedside . . . The room was exceedingly light . . . He called me by name . . . He said there was a book deposited, written upon gold plates . . .
“‘After this communication, I saw the light in the room begin to gather immediately around . . . the room was left as it had been before the heavenly light had made its appearance.
“‘I lay musing on the singularity of the scene . . . when in the midst of my meditation, suddenly discovered that my room was again beginning to get lighted, as it were, the same heavenly messenger was again by my bedside.’ (“Pearl of Great Price, Joseph Smith — History,” v. 28-30, 32-34, 43-44) “Joseph Smith, of course, also asserted that when he had his [F]irst [V]ision he ‘saw a pillar of light exactly over my head, above the brightness of the sun . . . .’ (“Pearl of Great Price, Joseph Smith — History,” v. 17) . . .
அவருக்கு முதலாவது காட்சி வந்தபோது அவரது தலைக்கு மேல் ஒளி தூண் நின்றுகொண்டிருந்ததையும் அது சூரியனை போன்று பிரகாசித்ததையும் பார்த்ததாக கூறியிருக்கிறார்.
1835இல் அவர் பார்த்த காட்சிகளில் இருந்த இரண்டு பேரை அவரால் அடையாளம் காணமுடியவில்லை என்றும், பல தேவதைகளை இந்த காட்சிகளில் பார்த்ததாகவும் அவர் எழுதியுள்ளார் “In the version written in 1835, Smith maintained that there were two persons whom he did not identify. In addition, however, he also said that he ‘saw many angels in this vision . . .’ (ibid., p. 51) “In his book, ‘Hearts Made Glad: The Charges of Intemperance Against Joseph Smith the Mormon Prophet,’ LaMar Petersen wrote the following: “‘Joseph’s associates sometimes spoke of his paleness when “in vision” or when receiving a revelation. A daughter of Adaline Knight Belnap recorded her mother’s impression of the Prophet in an instance of spiritual (spirituous?) passivity. “How well she remembers one day before her father died (Vinson Knight) of a little excitement in school. The children were busy when the school room door was carefully opened and two gentlemen entered, carrying the limp form of Joseph Smith. The children all sprang to their feet, for Brother Joseph lay helpless in their arms, his head resting on his brother’s shoulder, his face pale as death, but his eyes were open, though he seemed not to see things earthly. The teacher quieted them by telling them that Brother Joseph was in a revelation, and they were carrying him to his office above the schoolroom.”‘ (Peterson, “Hearts Made Glad,” 1975, p. 206) ஜோஸப் ஸ்மித்துக்கு இறைவசனம் வரும்போது எப்படி இருந்தார் என்பதை அவருடன் படித்த பெண்மணி நினைவுபடுத்தி கூறுவதையே மேலே காண்கிறீர்கள். இது டெம்போரல் வலிப்பு நோய்வாய்ப்பட்டவர்கள் அடையும் ”காட்சிகள்” போலவே இருப்பதை பார்க்கவும்.
Persecutionally Paranoid “. . . Lucy Smith . . . claim[ed] that one evening when Joseph ‘was passing through the door yard, a gun was fired across his pathway, with the evident intention of shooting him. He sprang to the door much frightened. We immediately went in search of the assassin . . . The next morning we found his tracks under a wagon, where he lay when he fired . . . We have not as yet discovered the man who made this attempt to murder, neither can we discover the cause thereof.’ (“Biographical Sketches of Joseph Smith,” p. 73) அவரை கொல்ல முனைகிறார்கள் என்ற பயம் அவரிடம் ஆரம்பகாலத்திலிருந்தே இருப்பதையும் மேலே காண்கிறோம். இதுவும் டெம்போரல் லோப் வலிப்பு நோயின் பக்கவிளைவு. இது அவர் மோர்மனிஸம் பிரச்சாரம் ஆரம்பித்த பின்னால் வந்தது அல்ல.இது அவர் தனது முதலாவது காட்சியை காணும் முன்னால் நடந்தது என்பதை நினைவில் கொள்ளுவோம்.


மோர்மன் கிறிஸ்துவ பிரிவின் அசுர வளர்ச்சி.
மோர்மன்கள் தங்களை கிறிஸ்துவர்கள் என்றே கூறிகொள்கின்றனர். கத்தோலிக்க மதத்தாலும், மற்ற பிராடஸ்டண்ட் பிரிவினராலும் கெடுக்கப்பட்ட கிறிஸ்துவத்தை புனரமைத்து, தூய கிறிஸ்துவத்தை நிலை நாட்ட வந்ததாகவே ஜோஸப் ஸ்மித்தும் கூறியுள்ளார். இவ்வாறு பழங்கால தூய நிலைப்பாடுக்கு செல்வது என்பது பல revivalist மதங்களின் பொது நிலைப்பாடு. இயேசு கிறிஸ்து அமெரிக்காவுக்கு பழங்கால யூதர்களை அழைத்து வந்ததற்கோ, அல்லது அமெரிக்காவில் முதலாம் நூற்றாண்டில் ஒரு யூத சமுதாயம் இருந்ததாக சொல்லப்படுவதற்கோ, இங்கிருக்கும் செவ்விந்தியர்கள் யூதர்களிலிருந்து பிரிந்தவர்கள் என்பதற்கோ எந்த வித ஆதாரமும் கிடையாது. வரலாற்றாய்வாளர்கள் இவை எல்லாமே ஜோஸப் ஸ்மித்தின் கட்டுக்கதைகள் என்றேசொல்கிறார்கள். ஆனால், மார்மன் மதம் வளர்வது நிற்கவில்லை.

இதன் ஆதரவாளர்கள், மோர்மன் புத்தகத்தில் உள்ளவை எவ்வாறு உண்மையானவை என்றும், அவற்றில் உள்ளவை உண்மை என்று எதிர்கால விஞ்ஞானிகள் உணர்வார்கள் என்றும் எழுதி வருகிறார்கள். எவ்வாறு பைபிளில் கூறப்பட்டுள்ளவை பரிணாமவியலுக்கு எதிராக இருப்பதால், பரிணாமவியல் பொய் என்று அடிப்படைவாத கிறிஸ்துவர்கள் கூறுகிறார்களோ, அதேபோல மோர்மன் புத்தகத்தில் உள்ளவற்றுக்கு எதிராக இருக்கும் அறிவியல் ஆய்வுகளை மறுக்கவும், மோர்மன்புத்தகத்தை நிரூபிக்க இவர்களே அறிவியல் ஆய்வுகள் என்ற பெயரில் ஆய்வுகளை வெளியிடுவதையும் செய்து வருகிறார்கள்.

இன்றைக்கு அமெரிக்காவில் 20 மில்லியன் மோர்மன் பிரிவினர் இருக்கிறார்கள். இன்றைக்கு அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு மோர்மன் மதத்தினர் போட்டியிட்டிருக்கிறார். மோர்மன் மதத்தினரான மிட் ராம்னி. ரிபப்ளிகன் கட்சியின் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு பலத்த ஆதரவு இருக்கிறது. இது ஆப்பிரிக்கா, தென்னமெரிக்கா இந்தியா கொரியா போன்ற நாடுகளில் மோர்மன் மிஷனரிகள் மோர்மன் மதத்தை பரப்புகிறார்கள்.

மோர்மன் மதத்தினர் பெரும்பாலான கிறிஸ்துவ பிரிவுகளை போலவே tithing என்னும் தசமபாகத்தை அளிக்க வேண்டும்.  அதனை மோர்மன் சர்ச் எவ்வாறு செலவழிக்கிறது என்று எந்த மோர்மனும் கேட்கக்கூடாது என்றெல்லாம் சட்டம் வைத்துகொண்டுள்ளார்கள்.

http://mormonthink.com/tithing.htm

 

டெம்போரல் லோப் வலிப்பு நோயை பற்றி ராமச்சந்திரனின் உரை

Series Navigationதமிழகக் கல்வி நிலை பற்றிரம்யம்/உன்மத்தம்


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

கடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் – 6

ஆர் கோபால்

சமீப காலத்தில், ஜோஸப் ஸ்மித் ஜூனியர் உருவாக்கிய மார்மனிஸம் மதத்தை விட பெரிய மதத்தை உருவாக்கியவர் என்று ஒருவரை குறிப்பிடலாம் என்றால், பஹாவுல்லா என்று அழைக்கப்படும் மிர்ஸா ஹூசைன் அலி நூரி என்ற ஈரானியரை குறிப்பிடலாம்

மிர்ஸா ஹூஸைன் அலி நூரி நவம்பர் 12 ஆம் மாதம் 1817இல் , பெர்ஷியா (ஈரானின்) தலைநகரான டெஹ்ரானில் கதிஜா கானும் என்ற அம்மையாருக்கும், மிர்ஸா புஸுர்க் என்பவருக்கும் பிறந்தார்.

இவரது வரலாற்றை கூறுமுன்னர், பாப் bab என்று தன்னை அழைத்துகொண்ட ஈரானியரது வரலாற்றை அறியவேண்டும்.
1844 ஆம் வருடம் ஷிராஜ் நகரத்தை சேர்ந்த சையத் மிர்ஸா அலி முகம்மது என்னும் 25 வயது இளைஞர் தன்னை இஸ்லாமியர்கள் எதிர்பார்க்கும் மெஹ்தியாக அறிவித்துகொண்டார். இவரது ஆதரவாளர்களாக உருவான மக்கள் இயக்கம் வெகு வேகமாக பெர்ஷிய பேரரசில் பரவியது. இது இஸ்லாமிய முல்லாக்களின் எதிர்ப்பை சம்பாதித்துகொண்டது. இவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு, இவரது 30 ஆம் வயதில், 1850இல் தாப்ரிஸ் நகர மையத்தில் போர்வீரர்கள் வரிசையாக நின்று இவரை சுவரோரம் நிறுத்தி பலருக்கும் முன்னிலையில் சுட்டு கொன்றனர். அதன் பின்னர் இவரது ஆதரவு இயக்கம் ஏறத்தாழ முழுக்க அழிக்கப்பட்டுவிட்டது என்று கூறலாம்.

தன்னிடம் இறைவன் பேசினார் என்று இந்த பாப் கூறிக்கொண்டாலும், தன்னிடம் கூறியதே இறைவனின் கடைசி வார்த்தை என்று கூறிக்கொள்ளவில்லை. இவரது பெரும்பான்மையான எழுத்துக்களில் “இறைவன் இன்னும் வரப்போகும் ஒருவர்” என்பவரை பற்றி குறிப்பிடுகிறார். இவ்வாறு வரப்போகும் அவர் உலகத்தில் பழைய மதங்களை எல்லாம் அழித்து, கடவுளின் ராஜ்ஜியத்தை அமைப்பார் என்று கூறுகிறார். தன்னை பின்பற்றுபவர்களையும் வரப்போகும் ஒருவரை பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறார். தனக்கு பின்னால் தனது இயக்கத்துக்கு தலைமை யாரும் இல்லை என்றும், வரப்போகும் அவர் கூறுவதே இறுதியாகும் என்றும் கூறுகிறார்.

மிர்ஸா ஹூஸைன் அலி நூரி தனது 27ஆம் வயதில்தான் பாப் என்ற மேற்கண்டவரை பற்றி கேள்விப்படுகிறார். அதன் பின்னால், இவர் பாப்-இன் கருத்துக்களை ஏற்றுகொண்டு அவரது இயக்கத்தின் பிரதான நம்பிக்கையாளரானார். 1848இல் முக்கிய பாப் சீடர்கள் ஒன்று சேர்ந்து, பழைய இஸ்லாத்தை பின்பற்றவேண்டுமா அல்லது பிரிந்து தனி மதமாக தங்களை அறிவித்துகொள்ள வேண்டுமா என்று ஆலோசனை செய்தார்கள். மாற்றம் வேண்டும் என்ற பிரிவுக்கு தலைவராக மிர்ஸா ஆனார். இந்த மாநாட்டுக்கு பிறகு தனது பெயரை பஹா என்று மாற்றிகொண்டார்.

பிராந்திய கஜார் அரசாங்கத்துக்கும் பாப் சீடர்களுக்கும் இடையே வன்முறை வெடித்தது. இவர் கைது செய்யப்பட்டார். பாப் சீடர்கள் நாடெங்கும் கைது செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். இப்போதுதான் பாப் தன்னை கடவுளின் வெளிப்படுத்தலாகவும் Manifestation of God அறிவித்துகொள்கிறார்.

அதன் பின்னர் பாப் 1850இல் கொல்லப்பட்டதும், அதன் எதிர்வினையாக ஷா நாஸர் அல் தின் ஷா என்ற ஈரானிய அரசரை கொல்ல ஒரு சில பாப் சீடர்கள், திட்டமிட்டு அது கண்டுபிடிக்கப்பட்டு பாப் சீடர்கள் அவர்களது குடும்பங்கள் எல்லோருமே ஒட்டுமொத்தமாக குற்றம் சாட்டப்பட்டு கொல்லப்படலாயினர். பஹா என்று தன்னை அழைத்துகொண்ட மிர்சா உட்பட பலர் கைது செய்யப்பட்டு டெஹ்ரானில், பாதாள சிறையில் அடைக்கப்பட்டனர்

இவ்வாறு பாதாள சிறையில் இருக்கும்போதுதான் தனக்கு பல காட்சிகள் தோன்றின என்று பஹாவுல்லா கூறுகிறார். பல ஆன்மீக அனுபவங்கள் ஏற்பட்டன என்று கூறுகிறார். இந்த சமயத்தில் இறைவன் அனுப்பிய பெண் maiden from God காட்சி தந்ததாக கூறுகிறார். இறைவனின் தூதுவராக வந்த இந்த பெண் இவருக்கு பல செய்திகளை தருகிறார். பாப் தீர்க்கதரிசனமாக கூறிய ”வரவேண்டிய கடவுளின் வெளிப்படுத்தல்” மிர்ஸாதான் என்று இந்த இறைவன் அனுப்பிய பெண் இவரிடம் கூறியதாக கூறினார்.

நான்கு மாதங்களுக்கு பிறகு ரஷிய தூதரின் தலையீட்டால், பாப் இயக்கத்தின் தலைவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் இவர்களை அரசாங்கம் நாடு கடத்தியது. பஹாவுல்லாவும் அவரது குடும்பமும் ஒட்டாமன் பேரரசின் கீழ் இருந்த ஈராக்குக்கு சென்றனர். இந்த காலகட்டத்தில் அவர் பாப் சீடர்களின் ஆன்மீக தலைவராகவும் பார்க்கப்பட ஆரம்பிக்கிறார். தன் குடும்பத்தை தனது சகோதரரிடம் ஒப்புவித்துவிட்டு குர்திஸ்தானில் இரண்டு வருடம் தனிமை வாழ்வு வாழ்கிறார். இந்த காலகட்டத்தில்தான் அவர்
“நான்கு பள்ளத்தாக்குகள்” போன்ற முக்கியமான புத்தகங்களை எழுதுகிறார்.
பாக்தாதுக்கு திரும்பி வந்த பஹாவுல்லா பாபி சமூகத்துக்கு புத்துயிர் அளிக்கிறார். இந்த காலகட்டத்தில் அவரை பின்பற்றுபவர்கள் அதிகரிக்கிறார்கள். இந்த காலகட்டத்தில் பாப் நியமித்த தலைவரான மிர்ஸா யாஹ்யா என்பவருக்கும் பஹாவுல்லாவுக்கும் இடையே பிரிவு தோன்றுகிறது.
1863இல் பஹாவுல்லா பாக்தாதிலிருந்து நஜிபியா தோட்டத்துக்கு சென்று அங்கு பன்னிரண்டு நாட்கள் இருக்கும்போது தானே இறைதூதர் என்ற அறிவிப்பை செய்கிறார். இந்த 12 நாட்களை பஹாய் மதத்தினர் இன்றும் ரித்வான் என்ற திருவிழாவாக கொண்டாடுகின்றனர். இந்த நாளே பாபி சமூகத்திலிருந்து வேறுபட்ட ஒரு தனி மதமாக பஹாய் மதம் பிரிவதாக கருதுகிறார்கள்.

அதன் பிறகு பஹாவுல்லா கான்ஸ்டாண்டிநோபிள் செல்லும் வழியில் பாபி சமூகத்தின் தலைவராக இருக்கும் மிர்ஸா யாஹ்யா இவரை பலமுறை கொல்ல முயற்சிக்கிறார். அவை பலனளிக்கவில்லை. இறுதியில் அவருக்கு விஷம் வைப்பதில் வெற்றியடைகிறார். அதில் அவர் இறக்கவில்லை என்றாலும், அவருக்கு கை நடுங்குவது தோன்றி அவர் சாகும் வரை இருந்தது.

பாபி சமூகத்திலிருந்து ஆட்கள் பஹாய் பிரிவினராக ஆவதை பாபி சமூகத்தால் தடுக்கமுடியவில்லை. 1867இல் மிர்ஸா யாஹ்யா இவரை ஒரு மசூதிக்கு அழைத்து அங்கே போலி இறைதூதர் இறைவனால் கொல்லப்படட்டும் என்று சவால் விட்டார். பஹாவுல்லா ஒத்துகொண்டார். ஆனால், மிர்ஸா யாஹ்யா வரவில்லை. இதனால் பழைய பாபி சமூகம் அவமானமடைந்தது.

பஹாவுல்லாவை பின்பற்றுபவர்கள் தங்களை பஹாய்கள் என்று கூறிகொள்ள ஆரம்பிக்கிறார்கள்.

இதன் பிறகு பஹாவுல்லா தான் இறைவனால் அனுப்பப்பட்ட இறைதூதர் எனவும், தன் மதத்தை ஒப்புகொண்டு தனக்கு கீழ்ப்படிய வேண்டும் என்றும் எழுதிய பல கடிதங்களை பல அரசர்களுக்கு அனுப்பி வைத்தார். பழைய பாபி எதிரிகள் இதனை கொண்டு அவரை கைது செய்யவேண்டும் என்று ஒட்டாமன் அரசை கேட்டுகொண்டனர். பஹாய் மதத்தினரும் இவரது குடும்பமும் இவரும் அக்கா நகரில் சிறை வைக்கப்பட்டனர்.

பெயரளவுக்கே சிறையாக இருந்ததால், இந்த காலகட்டத்தில் இவர் ஆயிரக்கணக்கான நூல்களை பஹாவுல்லா எழுதினார்.

மே 9 ஆம் தேதி 1892இல் ஜூரம் வந்து தனது 74ஆவது வயதில் மறைந்தார்.

பஹாவுல்லா கூறியவை

தானே இறைவனின் வெளிப்படுத்தல் Manifestation of God என்று கூறிகொண்டார். இது கடவுளுக்கும் மனிதனுக்கும் இடைப்பட்ட ஒரு கருத்து என்றார்.

பல மதங்களில் எதிர்பார்க்கப்படும் இறுதி இறைவடிவம் தானே என்று கூறிகொண்டார். கிறிஸ்துவர்கள் எதிர்பார்க்கும் கிறிஸ்துவின் மறு தோற்றம், ஷியாக்கள் எதிர்பார்க்கும் மூன்றாம் இமாம், ஜோராஸ்டிரியர்கள் எதிர்பார்க்கும் ஷா பஹ்ரம் வர்ஜவந்த், இமாம் ஹூஸைன், இஸ்லாமியர்கள் எதிர்பார்க்கும் இறுதி மெஹ்தி, பாப் சீடர்கள் எதிர்பார்க்கும் இறைவனின் வெளிப்படுத்தல் எல்லாம் தானே என்று கூறிகொண்டார்.

ஆப்ரஹாமின் மூன்றாவது மனைவி வழியாக தான் தோன்றியதாகவும் கூறிகொண்டார்.

இதுவரை 15000க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியிருக்கிறார்.


இவருக்கு பின்னால் பஹாய் மதத்தின் தலைவராக தனது மூத்த மகனான அப்பாஸ் எஃபண்டி என்பவரை நியமித்தார்/ அப்பாஸ் எஃபண்டி தனது பெயரை அப்துல் பஹா என்று மாற்றிகொண்டார்.


இன்று பஹாய் மதம் ஒரு உலகளாவிய மதமாக வளர்ந்திருக்கிறது. சுமார் 200 நாடுகளில் இது மத நிறுவனங்களை கட்டியிருக்கிறது. சுமார் 7 மில்லியன் பஹாய்கள் உலகெங்கும் இருப்பதாக கணக்கிடப்பட்டிருக்கிறது. இந்தியாவே மிக அதிகமான பஹாய்கள் வாழும் நாடு. இங்கே 2.2 மில்லியன் பஹாய்கள் வாழ்கின்றனர். இதற்கு அடுத்தபடியாக ஈரானில் 350000 பஹாய்கள் வாழ்கின்றனர். ஆப்பிரிக்காவில் 1.8 மில்லியன் பஹாய்கள் இருக்கின்றனர். பஹாய் மதமே உலகத்தின் இரண்டாவது அதிகமான வேகத்தில் மதமாக கருதப்படுகிறது.

பஹாய் நிறுவனரான பஹாவுல்லாவுக்கு டெம்போரல் லோப் வலிப்பு நோய் இருந்திருப்பதற்கான அறிகுறிகள்.

http://bahai-library.com/walbridge_erotic_allegory

வலிப்பு நோய் என்றதும் நாம் வலிப்பு நோய் உள்ளவர்கள் கீழே விழுந்து கை கால் இழுத்துகொள்வதை கற்பனை செய்வோம்.

epilepsy என்பதை வலிப்பு என்று மொழிபெயர்ப்பதில் வரும் சிக்கல் இது.

epilepsy என்பது மூளைக்குள் நடக்கும் அசாதாரண மின் இணைப்புகளையே குறிக்கிறது. அது மோட்டார் (அதாவது கை கால்களுக்கு கட்டளை கொடுக்கும் மூளையின்) பகுதியில் இப்படிப்பட்ட அசாதாரண மின் அலைகள் தோன்றும்போது அது கை கால் இழுப்பதாக வெளிப்படுகிறது. அதுவே டெம்போரல் லோப் போன்ற சிந்தனையை அலசும் மையம், அல்லது காட்சிகளை அலசும் மையத்தில் தோன்றும்போது அது பிரமைகளையும் அசாதாரண காட்சிகளையும் தோற்றுவிக்கிறது.
சென்ற வார பகுதியில் (பகுதி ஐந்து) இறுதியில் வரும் ராமச்சந்திரனது வீடியோவின் ஆரம்பத்திலேயே டெம்போரல் லோப் எபிலப்ஸியை விவரிக்கிறார். இந்த வலிப்பு மூளைக்கும் நடக்கும் ஒன்று. இது உடல் ரீதியாக அதே போல வெளிப்படுத்த தேவையில்லை.
இது இரண்டும் ஒரே நேரத்தில் இருக்கலாம். ஒன்றில் ஒரு அளவுக்கும் மற்றொறு பகுதியில் வேறொரு அளவுக்கும் இருக்கலாம். ஆகவே பஹாவுல்லா கீழே விழுந்து கை கால் இழுத்துகொள்ளவில்லை என்பதால் அவருக்கு டெம்போரல் லோப் எபிலப்ஸி இல்லை என்று கூற முடியாது.
டெம்போரல் லோப் எபிலப்ஸிக்கு என்ன குணாதிசியங்கள் உண்டோ அவைகளில் பெரும்பாலானவை இவருக்கும் இருந்திருக்கிறது என்பதை அவரது வரலாற்றிலிருந்தே அறிந்திருக்கலாம்.

டெம்போரல் லோப் வலிப்புக்கு இருக்கும் சில குணாதிசியங்களை வகைப்படுத்தினால், அவை பஹாவுல்லாவுக்கும் இருக்கின்றன என்பதை பார்க்க்லாம்.
1) மிதமிஞ்சிய இறை உணர்வு.
2) பிரபஞ்சத்தின் உண்மையான பொருளை உணர்ந்துகொண்டதாக கூறுவது
3) காட்சிகள். யாரோ வந்து பேசுவது போன்ற உணர்வு. இறைவனோ இறைவனின் தூதரோ தன்னை வந்து சந்திப்பது போன்ற உணர்வு
4) மிகவும் விளக்கமான தெளிவான காட்சிகள்.
5) மிகவும் அதிகமாக சட்டங்கள், ஒழுக்க வரையறைகள், பற்றி பேசுவது.
6) ஏராளமாக எழுதுவது அல்லது பேசுவது அல்லது வரைவது.
7) தன்னை எல்லோரும் பின்பற்ற வேண்டும் என்று கூறுவது

பஹாவுல்லாவின் எழுத்துக்களில் அவருக்கு பெண் வடிவத்தில் காட்சிகள் இருந்திருப்பதை ஆவணப்படுத்துகிறார்.

http://en.wikipedia.org/wiki/Maid_of_Heaven

In his Súriy-i-Haykal (Tablet of the Temple) Bahá’u’lláh describes his
vision as follows:

“While engulfed in tribulations I heard a most wondrous, a most sweet voice, calling above My head. Turning My face, I beheld a Maiden – the embodiment of the remembrance of the name of My Lord – suspended in the air before Me. So rejoiced was she in her very soul that her countenance shone with the ornament of the good-pleasure of God, and her cheeks glowed with the brightness of the All-Merciful. Betwixt Earth and Heaven she was raising a call which captivated the hearts and minds of men. She was imparting to both My inward and outer being tidings which rejoiced My soul, and the souls of God’s honoured servants. Pointing with her finger unto My head, she addressed all who are in Heaven and all who are on Earth saying: “By God! This is the best beloved of the worlds, and yet ye comprehend not. This is the Beauty of God amongst you, and the power of His sovereignty within
you, could ye but understand.”[2]

ஷோகி எஃபண்டி இந்த சுவர்க்கத்தின் பெண்ணே கிறிஸ்துவர்கள் குறிப்பிடும் பரிசுத்த ஆவி என்கிறார்.
மோஸசுக்கு எரியும் செடியிலும், இயேசு கிறிஸ்துவுக்கு புறாவாகவும், முகம்மதுவுக்கு காப்ரியேல் என்ற தேவதையாகவும் வந்தது என்று கூறுகிறார்.

Shoghi Effendi compares the Maid of Heaven with the Holy Spirit as manifested in the burning bush of Moses, the dove to Jesus, the angel Gabriel to Muhammad. [3] She appears in several tablets of Bahá’u’lláh’s: Tablet of the Maiden (Lawh-i-Ḥúrí), Tablet of the Deathless Youth (Lawh-i-Ghulámu’l-khuld), Tablet of the Holy Mariner (Lawh-i-Malláhu’l-quds) and The Tablet of the Vision (Lawh-i- Ru’yá). The first three of these were written in Baghdad).[1]

இதனையே பஹாய் மதத்தின் அதிகாரப்பூர்வமான பக்கங்கள் எதிரொலிக்கின்றன.

http://www.bahaullah.com/

The year was 1852, and the man was a Persian nobleman, known today as Bahá’u’lláh. During His imprisonment, as He sat with his feet in stocks and a 100-pound iron chain around his neck, Bahá’u’lláh received a vision of God’s will for humanity.

The event is comparable to those great moments of the ancient past when God revealed Himself to His earlier Messengers: when Moses stood before the Burning Bush; when the Buddha received enlightenment under the Bodhi tree; when the Holy Spirit, in the form of a dove, descended upon Jesus; or when the archangel Gabriel appeared to Muhammad.

Shoghi Effendi was once asked about Joseph Smith, and he replied:

“Joseph Smith was a Seer, not a Prophet; neither major nor minor. He had a high standard, but the Baha’is have a higher standard coupled with God’s power that comes direct from God for this age.” (Memories of ‘Abdu’l-Baha, p.117)
பஹாவுல்லாவின் வாழ்க்கை ஆவணப்படம்

3.16இல் பஹாவுல்லா சிறையில் இருக்கும்போது காட்சிகள் தோன்றியது விவரிக்கப்படுகிறது

தொடர்ந்து இப்படிப்பட்ட காட்சிகள் பஹாவுல்லாவுக்கு வந்துகொண்டேயிருந்திருக்கின்றன என்பது தெளிவாகிறது.
அதே போல மிதமிஞ்சிய இறையுணர்வால் அவர் பல்லாயிரக்கணக்கான புத்தகங்களை விடாது எழுதிக்கொண்டேயிருந்திருக்கிறார். இதுவும் hypergraphia என்னும் டெம்போரல் லோப் வலிப்பின் ஒரு பக்க விளைவே.
தானே இறைதூதர், இறைவன் தன்னிடம் வந்து சொல்லியிருக்கிறார் என்ற உச்சக்கட்ட நம்பிக்கை அவரிடம் இருந்திருக்கிறது.
உலகம் தனது இறை தூதர் தனத்தை ஒப்புகொள்ளவேண்டும் என்ற விடாத நம்பிக்கையின் காரணமாக பல அரசர்களுக்கு தனிப்பட கடிதம் எழுதியிருக்கிறார்.
உலகம் ஒன்றுபட்டு தனது மதத்தை ஒப்புகொள்ள வேண்டும் என்றும் அதன் பின்னால் எப்படி உலக அரசு இருக்க வேண்டும், அதன் சட்டங்கள் என்ன என்ன என்பது பற்றி பல புத்தகங்களில் விரிவாக எழுதியிருக்கிறார்.
இவை அனைத்துமே இவருக்கு டெம்போரல் லோப் வலிப்பு நோய் இருந்திருக்கிறது என்பதற்கான தெளிவான ஆதாரங்களாக இருக்கின்றன.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

கடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் 7

ஆர் கோபால்

ஐரோப்பாவில் கிறிஸ்துவம் கேள்விக்கு அப்பாற்ப்பட்டதாக இருந்த காலத்தில் இது போன்ற டெம்போரல் லோப் வலிப்பு நோய் பெற்றவர்கள் என்ன விதமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளார்கள் என்று ஆராய்வது இன்னும் சில சுவாரஸ்யமான சிந்தனைகளை நமக்கு தரும்.

கிறிஸ்துவ இறையியலாளர்களாக இப்படிப்பட்டவர்கள் பலர் அடையாளப்படுத்தப்பட்டாலும் இவற்றில் சில முக்கியமானவர்களை இங்கே அணுகலாம்.


செயிண்ட் பிர்கிட்டா (1303-1373) ஸ்வீடனின் முக்கியமான செயிண்டாக அறியப்படுகிறார். இவர் சிறுமியாக இருந்த காலத்திலிருந்தே இப்படிப்பட்ட காட்சிகளை அனுபவிப்பவராக இருந்தார். இவரது கல்லறையில் மண்டையோடு ஆராயப்பட்டிருக்கிறது. அதில் இவருக்கும் மெனிஞ்சியோமா என்ற வியாதி இருப்பது தெரியவருகிறது. இது வலிப்புகளை உருவாக்கும் வியாதி. ஆனால், இது டெம்போரல் லோபுக்கு பரவாமல் இருந்தாலும் அதிலும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கலாம். காட்சி பிரமைகளும் தானாக உருவாக்கிக்கொண்ட psychogenic non-epileptic seizures, or a combination இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

கிறிஸ்து பிறப்பு என்று வரையப்படும் படங்களின் முன்மாதிரி இவர் விவரித்ததே. இயேசு தரையில் படுத்துகொண்டு ஒளி பிரகாசித்துகொண்டு இருப்பதையும், கன்னி மேரி தங்கநிற (ஸ்வீடன் மக்களைப் போல) முடி கொண்டவராக இருப்பதாகவும் இவரே விவரித்து உள்ளார். சுவரில் ஒரே ஒரு மெழுகுவர்த்தி இருப்பது, இயேசுவின் தந்தையான கடவுள் மேலே இருப்பது ஆகியவற்றையும் இவரே விவரித்துள்ளார். இயேசு எத்தனை அடிகள் வாங்கினார் என்று அறிந்துகொள்ள விடாமல் பிரார்த்தனை செய்ததாகவும், இயேசுவே இவரிடம் காட்சி அளித்து 5480 அடிகள் வாங்கியதாகவும் கூறுகிறார். இந்த அடிகளை பெருமைப்படுத்த அவர் சொல்லிக்கொடுக்கும் பிரார்த்தனையை சொல்லவேண்டும் என்று கூறினாராம். இயேசு இவரிடம் கொடுத்ததாக இவர் கூறும் பிரார்த்தனை Fifteen O’s என்று அழைக்கபடுகிறது.

ஜோன் ஆஃப் ஆர்க் (Joan of Arc அல்லது The Maid of Orléans) என்று அழைக்க்ப்படும் புகழ்பெற்ற பிரஞ்சு வீராங்கனையும் இது போல அடிக்கடி காட்சிகளை பிரமையாக கண்டவர் என்று கூறப்படுகிறது.

இங்கிலாந்துக்கும் பிரான்சுக்கும் நட்ந்த நூறாண்டு போரில் பிரான்ஸ் வெற்றி அடைவதற்காக இவர் போரிட்டிருக்கிறார். இங்கிலாந்தின் ஆதிக்கத்திடமிருந்து எவ்வாறு பிரான்ஸை விடுவிப்பது என்பது குறித்து கடவுள் இவருக்கு காட்சி அளித்து அறிவுரைகள் கூறியதாக இவர் கூறிக்கொண்டார். சார்லஸ் 7 அரசர் பிரான்ஸின் மன்னராக முடிசூட்டிக்கொள்வதில் இவரது பங்கு பெரும்பான்மையாக இருந்தது. இவருக்கு தனது 12 ஆவது வயதில் 1424இல் இறைக்காட்சிகள் தோன்ற ஆரம்பித்தன என்று கூறியிருக்கிறார். இந்த காட்சிகளில் செயிண்ட் மைக்கேல், செயிண்ட் கேதரீன், செயிண்ட் மார்கரட் போன்றோர் தோன்ரினர் என்று கூறுகிறார். அந்த காட்சிகள் நீங்கும்போது அவற்றின் உன்னதமான அழகு தன்னை அழச்செய்ததாகவும் கூறுகிறார். பதினாறு வயதில் பலரது எதிர்ப்புகளையும் மீறி ஆர்லியன்ஸ் நகருக்கு அருகே ராணுவத்தலைமை ஏற்று மாபெரும் வெற்றி பெற்றார்.
அதன் பின்னர் தொடர்ந்த வெற்றிகளுக்கு பின்னர் சாம்பியன் நகருக்கு சென்று போரிட்டபோது சிறை பிடிக்கப்பட்டார். பிரான்ஸ் அரசு அவரை கண்டுகொள்ளவில்லை. இங்கிலாந்துக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு கிறிஸ்துவ மதகுருக்களால் கிறிஸ்துவத்துக்கு புறம்பான கருத்துக்களை பிரச்சாரம் செய்ததாக விசாரணை செய்யப்பட்டு 19 ஆவது வயதில் தீயில் வைத்து கொல்லப்பட்டார்.

தற்போதைய கத்தோலிக்கர்களால் பெரிதும் கொண்டாடப்படுகிறார். அதுவும் பிரஞ்சு கிறிஸ்துவர்களால். மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் இவருக்கு டெம்போரல் லோப் வலிப்பு இருந்தது என்று கூறுகிறார்கள்.

அவில்லாவின் செயிண்ட் தெரஸா Saint Teresa of Ávila, also called Saint Teresa of Jesus, baptized as Teresa Sánchez de Cepeda y Ahumada, (March 28, 1515 – October 4, 1582) இவர் ஸ்பெயினில் பிறந்தார். மிகச்சிறிய வயதிலேயே நோய்வாய்ப்பட்ட இவர் Tercer abecedario espiritual,” translated as the Third Spiritual Alphabet (published in 1527 and written by Francisco de Osuna) என்ற புத்தகத்தை படிக்கும்போதெல்லாம் காட்சிகளையும் பிரமைகளையும் அடைந்தார். இப்படிப்பட்ட காட்சிகளின் போது பேரானந்தத்தையும் அதீதமான அழகை பார்த்ததால் பெருகும் கண்ணீரையும் அனுபவித்ததாக எழுதுகிறார்.

ஆனால், கத்தோலிக்க போதனைகளுக்குப் பிறகு முதல்பாவத்தையும், மனிதர்கள் எப்போதுமே பாவத்தில் உழல்வதையும் போதிக்கப்பட்ட பின்னால், இந்த காட்சிகள் எல்லாம் தனது பாவத்தினாலேயே வருவதாக கருதிகொண்டு, தன்னைத்தானே கடுமையாக வருத்திக்கொண்டு தனது பாவத்தை போக்க முனைந்தார். அதன் பின்னால், ஒரு பாதிரியார் இவரது பிரமைகள் உண்மையிலேயே இறைவனால்தான் அனுப்பப்பட்டதாக உறுதி கூறியபின்னால், தன்னிடம் இயேசுவே வந்து பேசுவதாக கருதிக்கொள்ள ஆரம்பிக்கிறார். இயேசு வந்ததை இப்படி எழுதுகிறார்
I saw in his hand a long spear of gold, and at the iron’s point there seemed to be a little fire. He appeared to me to be thrusting it at times into my heart, and to pierce my very entrails; when he drew it out, he seemed to draw them out also, and to leave me all on fire with a great love of God. The pain was so great, that it made me moan; and yet so surpassing was the sweetness of this excessive pain, that I could not wish to be rid of it…
இவர் ஏராளமாக தனது அனுபவங்களை எழுதியுள்ளார். இவரது சுயசரிதையில் பிரார்த்தனையின் நான்கு நிலைப்பாடுகளை பற்றி எழுதியிருக்கிறார்.

அடிக்கடி தலைவலி வருதல், மனப்பிரமைகள், அவ்வப்போது பிரக்ஞை இழந்து கிடப்பது, நான்கு நாட்கள் கோமாவில் கிடந்தது ஆகியவையும், ஏராளமான எழுத்தும், மிகவும் விவரிப்பு கொண்ட பிரமை பற்றிய எழுத்துக்களும் இவருக்கும் டெம்போரல் லோப் எபிலப்ஸி இருந்ததை உறுதி செய்கின்றன.

இவர்கள் ஆரம்பத்திலேயே தனியான மதம் ஒன்றை ஆரம்பிப்பதற்கான சூழ்நிலையில் இல்லை. இவர்களது மத அனுபவங்கள் அந்தந்த காலத்திலும் பிறகும் நிறுவனமான கத்தோலிக்க மதத்தால், ஏற்றுகொள்ளப்பட்டிருக்கின்றன. இவர்கள் ஒருவேளை கத்தோலிக்க மதத்தால் புறக்கணிக்கப்பட்டிருந்தாலோ, அல்லது இவர்களை புனிதர்களாக ஏற்றுகொண்டவர்களை மற்ற கத்தோலிக்கர்கள் ஒதுக்கி வைத்திருந்தாலோ, இவர்கள் ஒருவேளை தனி மதத்தை உருவாக்கியவர்களாக அறியப்பட்டிருக்கலாம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

கடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் 8

ஆர் கோபால்

சென்ற வாரம் கிறிஸ்துவம் ஐரோப்பாவில் கோலோச்சிக்கொண்டிருந்த மத்திம காலத்தில் புனிதர்கள் என்று அறியப்பட்டவர்களின் டெம்போரல் லோப் வலிப்பு எப்படிப்பட்ட தாக்கத்தை உருவாக்கியது, அது எவ்வாறு அவர்களால் புரிந்துகொள்ளப்பட்டது, அவர்களை மற்ற கிறிஸ்துவர்கள் எவ்வாறு புரிந்துகொண்டார்கள் என்பதை பார்த்தோம். இந்த புனிதர்கள் தங்களுக்கு இயேசு காட்சியளித்தார் என்பதையும், மேரி காட்சியளித்தார் என்பதையும் உலகுக்கு சொன்னதும் அது எவ்வாறு கிறிஸ்துவத்தை வலுப்படுத்தியது என்பதையும் அறிந்தோம்.

ஒரு சமூகத்தின் உள்ளே இருக்கும் பாதிப்புகள், சூழ்நிலைகள் இப்படிப்பட்ட டெம்போரல் லோப் வலிப்பு உள்ளவர்கள்களையும் பாதிக்கின்றன. அந்த சூழ்நிலைகளே, இந்த வலிப்பின் மூலம் தோன்றும் பிரமைகளுக்கும், காட்சிகளுக்கும் பொருள் எந்த மாதிரியான பொருளை இந்த வலிப்பு நோயாளர்களுக்கு அளிக்கின்றன என்பதும் இங்கே ஆய்வுக்குரியது.

கத்தோலிக்க மதம் வலுவற்ற நிலையிலும், ஆனால் மாறுபட்ட கிறிஸ்துவ இறையியல்களும், கிறிஸ்துவ இறையியல் பரிசோதனைகளும் அதிகமாக நடந்துகொண்டிருந்த அன்றைய அமெரிக்காவின் சூழ்நிலையில் உருவாகிற ஜோஸப் ஸ்மித் அமெரிக்காவுக்கே உரித்தான ஒரு மதத்தை, அதாவது இயேசு கிறிஸ்து அமெரிக்காவுக்கு வந்தார் என்பது போன்ற பொருளை அந்த காட்சிகளில் அடைகிறார்.

மத்திய காலத்தில் கிறிஸ்துவம் கோலோச்சிக்கொண்டிருந்த காலத்தில் வந்த டெம்போரல் லோப் வலிப்பு நோயாளர்கள் தாங்கள் கண்ட காட்சிகள் ஏற்கெனவே இருக்கும் அரசியல் ரீதியில் வலிமையான கிறிஸ்துவ இறையியலின் தொடர்ச்சியாகவே தங்களை காண்கிறார்கள். அதுவும் ஜோன் ஆஃப் ஆர்க் என்ற பெண்மணி இரண்டு கிறிஸ்துவ நாடுகளுக்கு (பிரான்ஸ், இங்கிலாந்து) இடையே நடந்த நூறாண்டு போரில் பிரான்ஸுக்கு வெற்றி வர வேண்டும் என்று இறைவனால் அனுப்பப்பட்டதாக கூறுவதும் இங்கே கருத்தில் கொள்ள வேண்டியது. அந்த இறுக்கமான போர்ச்சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட ஜோன் ஆப் ஆர்க் அந்த போர்ச்சூழலில் ஒரு பக்கத்துக்கான வெற்றிக்காக, அதுவும் தான் எந்த நாட்டை சார்ந்தவரோ அந்த நாட்டின் வெற்றிக்காக இறைவனால் அனுப்பப்பட்டதாகவும், வழிநடத்தப்படுவதாகவும் நினைத்துகொள்வது எந்த அளவுக்கு சூழ்நிலையால் இவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை காட்டுகிறது.

உலக மக்கள் அனைவருக்கும் சொல்வதற்காக, ஒரே மூச்சில் இறைவனிடமிருந்து அனுப்பப்பட்ட செய்தியை, தங்களது சூழ்நிலைக்கு ஒரு சம்பந்தமும் இல்லாத செய்தியை, இப்படிப்பட்ட ”இறைவனால் வழிநடத்தப்படுகிறவர்கள்” சொல்வதில்லை. இவர்களுக்கு வரும் ஒவ்வொரு செய்திக்கும் அந்தந்த சூழ்நிலையே காரணமாகிறது. அந்த தனிநபரின் நெருக்கடிகளின் போது அவருக்கு தோன்றும் கருத்துக்களே இறைவனின் வாசகங்களாக அவர்களால் கூறப்படுகின்றன. இதுவே ஜோஸப் ஸ்மித், பஹாவுல்லா, ஜோன் ஆப் ஆர்க் இன்னும் இது பலரின் பேச்சிலும் எழுத்திலும் வெளிப்படுகிறது. இதுவே இவர்களை அவநம்பிக்கையோடு மற்றவர்கள் அணுக முகாந்திரமாகவும் அமைந்துவிடுகிறது.

புராடஸ்டனிஸம் தோன்றிய காலம் 1500களில் விவசாயிகள் புரட்சி ஐரோப்பாவில் வெடித்தது. இது peasants war என்று அழைக்கப்படுகிறது. இந்த விவசாயிகளின் புரட்சி1524–1526 காலத்தில் மட்டுமே ஒரு லட்சத்துக்கும் மேலானவர்கள் கொல்லப்பட்டார்கள் என்று கணக்கிடப்படுகிறது. இந்த விவசாயிகளின் போரை தூண்டியவர்களாக நிகோலஸ் ஸ்டோர்க்(Nicholas Storch), தாமஸ் முண்ட்ஸர் Thomas Müntzer ஆகியோர் கூறப்படுகின்றவர்கள். இவர்களே அனபாப்டிஸ்ட் கிறிஸ்துவ இயக்கத்தை தோற்றுவித்தவர்களாகவும் கூறப்படுகின்றனர். இவர்கள் நேரடியாக பரிசுத்த ஆவி (holy sprit) மூலமாக காட்சிகளை பெறுவதும், அதன் மூலம் இவ்வுலக வழிமுறைகளை அறிந்துகொள்வதையும் முக்கியமாக கருதினர். இவர்களை இன்றைக்கு பரவி வரும் பெந்தகொஸ்தே கிறிஸ்துவ இயக்கத்தின் மிக மிக முன்னோடிகள் எனலாம்.

இவர்கள் விவசாயிகளின் போர் தலைவர்களாகவும் அதன் ஆன்மீக தலைவர்களாகவும் இருந்தார்கள். இவர்களின் வார்த்தையில் கடவுளின் வார்த்தைகள் பைபிளோடு முடிந்துவிடவில்லை. இதனை “living word of God” என்று அழைத்தார்கள். அதாவது பரிசுத்த ஆவியால் தூண்டப்பட்டவர்கள் தங்களது இறையாவேசத்தில் இறைவனின் வார்த்தைகளையும் தீர்க்கதரிசனங்களையும் தொடர்ந்து சொல்லிக்கொண்டேயிருப்பார்கள் என்று போதித்தார்கள். ஆகவே வெறும் பைபிளின் உள்ளே இருக்கும் வார்த்தைகளையே வைத்துகொண்டு உலக விவகாரங்களில் முடிவுக்கு வருவது தவறு என்றும் பரிசுத்த ஆவியின் தூண்டுதலால் புதிய புதிய உயிருள்ள இறைவனின் வார்த்தைகள் வந்துகொண்டேயிருக்கும் என்று கூறினார்கள். பரிசுத்த ஆவியால் தூண்டப்பட்டு இறைவசனங்களை தருவதை மதத்தின் முக்கியமான பகுதியாக அறிவித்துகொண்டனர்.

உதாரணமாக முண்ட்சர் தனது உரைகளில் மேரியும் அப்போஸ்தலர்களும் ஞானஸ்னானம் செய்தவர்கள் அல்ல என்றும், தண்ணீர் மூலம் ஞானஸ்னானம் அடைவது கீழானது என்றும் பரிசுத்த ஆவியால் ஞானஸ்னானம் அடைவதே மேலானது என்றும் கூறினார்.
நிக்கோலஸ் ஸ்டார்க் தனது உரைகளில் கனவுகள், இறை காட்சிகள், இறையாவேசத்தில் வரும் தீர்க்கதரிசனங்களே முக்கியமானவை என்று கூறினார். இருவருமே இதோ உடனே உலகம் முடிவடைந்து இயேசு வரப்போகிறார் என்று தங்களது பரிசுத்த ஆவி தூண்டுதலில் கூறியதாக கூறினர். இவர்களால் தூண்டப்பட்ட விவசாயிகளின் போர் மிகப்பெரிய அழிவை ஐரோப்பாவுக்கு கொண்டுவந்தது. இந்த இருவருமே ஐரோப்பிய கம்யூனிஸத்தின் மூத்த முன்னோடிகளாக கருதப்படுகிறார்கள். முல்ஹாசன் நகரத்தை ஆக்கிரமித்த முன்ஸ்டரது படைகள் அங்கு முதன் முதல் கம்யூனிஸ அரசாங்கத்தை நிறுவனம் செய்தனர். 1525இல் battle of Frankenhausen என்ற போருக்கு முண்ட்ஸரது 8000 விவசாயிகள் படையும் அன்றைய பிரபுக்கள் படையை எதிர்கொண்டது. அந்த போரில் கடவுள் நம் பக்கமே இருப்பார் என்று இறைவசனம் கூறியிருந்தார். முண்ட்ஸரது படைகள் படுதோல்வி அடைந்து இவர் சிறைப்படுத்தப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டார். சித்ரவதையின் முடிவில் தனது தவறுகளை ஒப்புகொண்டு கத்தோலிக்க மதத்தை தான் ஏற்றுகொள்வதாக கூறியபின்னால், அவர் சிரச்சேதம் செய்யப்பட்டார். கத்தோலிக்க சர்ச்சால் அவரது தலையும் உடலும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்க காட்சிப்பொருளாக வைக்கப்பட்டன.





__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 அன்று இவர்களது தத்துவத்தின் விளைவாக தோன்றிய அனபாப்டிஸம் என்ற கிறிஸ்துவ பிரிவு (2) அதனுள் பரிசுத்த ஆவியால் தூண்டப்பட்டு அன்னிய பாஷை பேசுவதையும், நடனமாடுவதையும், பரிசுத்த ஆவியால் விழுவதையும் ஊக்குவித்தது. In Germany some Anabaptists, “excited by mass hysteria, experienced healings, glossolalia, contortions and other manifestations of a camp-meeting revival”.[2] ஆகவே இது இன்றைய பெந்தகொஸ்தே இயக்கத்திற்கு முன்னோடியாக இருந்துள்ளது என்று அறியலாம். பெந்தகொஸ்தே இயகக்தினரை இன்றைய நியூரோஅறிவியலறிஞர்கள் ஆராய்ந்துள்ளனர்.

பெந்தகொஸ்தே கூட்டங்களில் கத்துதலும், தாறுமாறாக நடந்துகொள்ளுதலும், அன்னிய பாஷை பேசுவதாக கூறிகொண்டு பேசுவதும், வலிப்பு வந்தாற்போல நடந்துகொண்டு பரிசுத்த ஆவி வந்ததாக கூறிக்கொள்வதும் பார்க்கலாம். இதனை self induced epileptic seizure என்று அழைக்கிறார்கள்.

இவை பெந்தகொஸ்தே கூட்டங்களில் எடுக்கப்பட்ட வீடியோக்கள். இவர்கள் பரிசுத்த ஆவி தங்கள் மீது இறங்குவதாக கூறிக்கொள்கின்றனர்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 


குழந்தைகளையும் இது போன்ற வழிகளில் இந்த பெற்றோர் ஊக்குவிப்பதை இந்த வீடியோவில் காணலாம்.

அன்னிய பாஷை பேசுவதாக கூறினாலும் இது pseudolanguage என்று அறிவியல் ஆய்வுகளில் வரையறுக்கப்படுகிறது. இது கிறிஸ்துவத்தின் ஆரம்ப காலத்தில் கிறிஸ்துவ போதகர்கள் தாங்கள் பரிசுத்த ஆவியால் அன்னிய தேசங்களின் பாஷைகளை பேச சக்தி கொடுக்கப்பட்டோம் என்று காண்பிக்க இவ்வாறு பொய்யான மொழி பேசுவது ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இன்று அன்னியபாஷை என்பது உலகத்தில் எங்குமே பேசப்படாத மொழிகளைப்போல பொய்யாக பேசுவது. அதனாலேயே இது பொய்மொழி என்று அறிவியல் வரையறுக்கிறது.
இவ்வாறு பொய்மொழியை பேசுவது சில மணிநேரங்கள் பழக்கப்படுத்திகொண்டாலே யார் வேண்டுமானாலும் பேசலாம் என்று ஆராய்ச்சிகளில் நிரூபித்துள்ளனர்
http://psycnet.apa.org/journals/abn/95/1/21/
Glossolalia as learned behavior: An experimental demonstration.
Spanos, Nicholas P.;Cross, Wendy P.;Lepage, Mark;Coristine, Marjorie
Journal of Abnormal Psychology, Vol 95(1), Feb 1986, 21-23. doi: 10.1037/0021-

பெந்தகொஸ்தே (Pentecostalism) இயக்கத்திலுள்ளவர்கள் மத்தியில் மற்ற புராடஸ்டண்ட் கிறிஸ்துவ மதத்திலுள்ளவர்கள் மத்தியில் காணப்படும் மனபிறழ்வு நோய்களை விட ஆறு மடங்கு அதிகமாக காணப்படுகிறது என்று ஆய்வு தெரிவிக்கிறது (3) இது ஏன் என்பது பொதுவாக ஒரு பெந்தகொஸ்தே இயக்கத்தின் கூட்டத்துக்கு செல்பவருக்கு எளிதில் புலப்படலாம்.

பெந்தகொஸ்தே இயக்கத்திலிருந்து வெளியேறிய பலரும் இது ஒரு முக்கியமான பிரச்னை என்று கருதி பேசுகிறார்கள் (4)

இணைப்புகள்

1) http://en.wikipedia.org/wiki/Nicholas_Storch
http://en.wikipedia.org/wiki/Thomas_M%C3%BCnzer

2) George Williams, The Radical Reformation (Philadelphia: Westminster Press, 1962), 443

3) http://www.ncbi.nlm.nih.gov/pubmed/8088740
Religious affiliation and psychiatric disorder among Protestant baby boomers.
Koenig HG, George LK, Meador KG, Blazer DG, Dyck PB.
Duke University Medical Center, Durham, NC 27710.

4) http://expentecostalforums.yuku.com/topic/4328#.Ty9dnMVSR8s
http://www.ex-christian.net/topic/35446-anxiety-disorders-and-pentecostalism/



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

கடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் – 9

ஆர் கோபால்

இஸ்லாமிய வழியில் வந்த மத ஸ்தாபகர்களில் ஒருவராக பஹாவுல்லா அவர்களை முன்பு பார்த்தோம்.

இந்த வாரம் இந்தியாவில் பிறந்து இஸ்லாமில் ஒரு பிரிவாகவே தொடர விரும்பும் அஹ்மதியா பிரிவை தோற்றுவித்த மிர்ஸா குலாம் அஹ்மது அவர்களை பார்க்கலாம்.

இஸ்லாமில் நிறைய பிரிவுகள் இருந்தாலும் இரண்டு மிக முக்கியமான பிரிவுகளாக ஷியா பிரிவையும் சுன்னி பிரிவையும் குறிப்பிடலாம். இதற்கு முக்கிய காரணம் இந்த பிரிவுகளே சரியான பிரிவுகள் என்று கருதும் அரசாங்கங்கள் ஆட்சியில் இருப்பதே. அரேபியாவை ஆளும் சவுதி வமிசம் அரேபியாவுக்கு சவுதி அரேபியா என்று பெயரிட்டு அதில் அதிகாரபூர்வ மதமாக இஸ்லாமை அறிவித்துள்ளது அறிவோம். ஆனால், அது சுன்னியில் ஒரு பிரிவான வஹாபி இஸ்லாமே என்பது கூறாமல் விளங்குவது. அதே போல சுன்னி பிரிவினர் பெரும்பான்மையாக இருக்கும் பல நாடுகளில் சுன்னி பிரிவே சரியான இஸ்லாமிய வழியாக அங்கீகரிக்கப்படுவது போலவே ஷியா பிரிவு ஆளும் மதமாக உள்ள ஈரானில் ஷியா பிரிவே அதிகாரப்பூர்வமான சரியான இஸ்லாமாக பறைசாற்றப்படுகிறது.

அப்படி அதிகாரப்பூர்வமாக இல்லாமல் இருந்தாலும் ஏராளமான பிரிவுகள் இஸ்லாமில் உண்டு. அதில் சமீபத்தில் தோன்றி பரவி வரும் ஒரு பிரிவு அஹ்மதியா பிரிவு. இந்த பிரிவை ஷியாக்களும் சுன்னிகளும் முஸ்லீம்கள் அல்ல என்று நிராகரிக்கிறார்கள். பாகிஸ்தான் போன்ற சில நாடுகளில் இந்த பிரிவினர் தங்களை முஸ்லீம்கள் என்று கூறிகொள்வதும், அவர்களது மதவழிபாட்டுத்தலங்களை மசூதிகள் என்று அழைப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்தியா உட்பட பல நாடுகளில் அப்படிப்பட்ட தடை எதுவும் இல்லை.

மிர்ஸா குலாம் அஹ்மது பெப்ரவரி 13 ஆம் தேதி 1835 ஆம் ஆண்டு பஞசாப் மாநிலத்தில் இருக்கும் குவாதியான் என்ற நகரில் பிறந்தார். இவர் ஈரானிலிருந்து இந்தியா வந்து தங்கிய முஸ்லீம்களின் வழியில் பிறந்தவர். தனது 40 ஆவது வயதில் இறைவன் தன்னிடம் பேச ஆரம்பித்ததாக கூற ஆரம்பித்தார். 1886இல் ஹோசியார்பூர் என்ற ஊருக்கு சென்ற போது தன்னிடம் இறைவசனங்கள் இறங்க ஆரம்பித்ததாக கூறுகிறார். அந்த நேரத்தில் சூபி ஞானிகள் செய்யும் சில்லா நாசினித்தில் (பெரும்பாலும் இந்திய ஈரானிய சூபிகளிடம் இருக்கும் பழக்கம்) ஈடுபட்டிருந்தார். இது தனிமையில் ஒரு வட்டத்துக்குள் இருந்து 40 நாட்கள் தூக்கமும் உணவும் இல்லாமல் இருப்பதாகும். இது இயேசு நாற்பது நாட்கள் வனத்தில் இருந்ததையும், மோஸஸ் சினாய் மலையில் நாற்பது நாட்கள் இருந்ததற்கும், எலிஜா என்ற தீர்க்கதரிசி நாற்பது நாட்கள் பட்டினியாக இருந்ததோடும் ஒப்பிடப்படுகிறது. ஆனால், குலாம் மிர்ஸா பட்டினியுடன் இருக்கவில்லை. அவ்வப்போது உணவு உண்டதாக கூறுகிறார். இந்த காலத்தில்தான் அவருக்கு ஒரு மிகச்சிறப்பான மகன் பிறக்கப்போவதாக இறைவன் கூறியதாக கூறினார்.

இதற்குப் பின்னர் தன்னை ஒரு முஜாதித் (சீர்திருத்தவாதி) என்று கூறிகொண்டு தன்னை இஸ்லாமிய நபியாக முன்னிருத்திக்கொண்டார். இறுதித்தீர்ப்பு நாளன்று இயேசு வருவார் என்ற இஸ்லாமிய நம்பிக்கையை முன்னிருத்தி தன்னையே அப்படிப்பட்ட இயேசு என்று கூறிக்கொண்டார். இஸ்லாமியர்கள் எதிர்பார்ப்பது போல மிலிட்டரி தலைவராக இயேசு வரமாட்டார் என்றும் ஆன்மீக தலைவராகவே வருவார் என்றும், இனி ஜிஹாத் என்னும் இஸ்லாமிய போர் இந்த காலத்தில் தேவை இல்லை என்றும் அறிவித்தார்.

இது பல இஸ்லாமிய தலைவர்களை இவருக்கு எதிராக திருப்பியது. இப்போதும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு உதவியாக முஸ்லீம்களின் ஜிஹாத் உணர்வை மழுங்கடிக்க இவர் பயன்படுத்தப்பட்டார் என்று இதர முஸ்லீம் தலைவர்கள் இவரை குற்றம் சாட்டுகிறார்கள். தன்னை இறுதி மெஹ்தியாகவும் வாக்களிக்கப்பட்ட மெசியாவாகவும் அறிவித்துகொண்டபின்னால், பல முஸ்லீம் தலைவர்கள் இவரை காபிர் என்றும், இவரையும் இவரது சீடர்களையும் கொல்லத்தகுந்தவர்களாக அறிவித்து பத்வா விதித்தனர். அந்த பத்வா இந்தியாவெங்கும் எடுத்து செல்லப்பட்டு 200க்கும் மேற்பட்ட முஸ்லீம் தலைவர்கள் கையெழுத்திட்டனர்.

ஈத்-உல்-அதா திருவிழாவன்று 1900இல் இவர் அரபிய மொழியில் ஒரு மணிநேரம் தியாகத்தை பற்றி உரையாற்றினார். இந்த உரை இறைவனால் அவருக்கு அளிக்கப்பட்டது என்று அவரை பின்பற்றுபவர்கள் கொண்டாடுகின்றார்கள். இந்த உரையின் போது அவர் குரல் மாறியதாகவும், அவர் ஒரு மோன நிலையிலிருந்து இந்த உரையை ஆற்றியதாகவும் கூறுகிறார்கள். இந்த உரையை பற்றி பின்னால் மிர்சா குலாம் எழுதும்போது
It was like a hidden fountain gushing forth and I did not know whether it was I who was speaking or an angel was speaking through my tongue. The sentences were just being uttered and every sentence was a sign of God for me.
— Mirza Ghulam Ahmad, Haqeeqatul-Wahi[41]
என்று எழுதினார்.

இஸ்லாமிய பாரம்பரியத்தின் படி இயேசு இரண்டாம் முறை வரும்போது டமாஸ்கஸ் நகருக்கு கிழக்கே வெள்ளை மினாரட்டுக்கு அருகே உதிப்பார் என்று இருப்பதாக கூறிய இவர், தன்னையே இயேசு என்று கூறிகொள்வதால், தனது ஊரான குவாதியான் நகரிலேயே 1903இல் வெள்ளை மினாரட் கட்ட அஸ்திவாரம் போட்டார். இந்த மினாரட் 1916 இல் கட்டி முடிக்கப்பட்டது. இது அஹ்மதியா இஸ்லாமின் சின்னமாக கருதப்படுகிறது.

ஆர்ய சமாஜ் அமைப்பினரோடும், கிறிஸ்துவ மிஷனரிகளோடும், இதர இஸ்லாமிய தலைவர்களோடு விவாதத்தில் ஈடுபட்டார்.

லாகூரில் அவரது மருத்துவர் டாக்டர் சையத் முகம்மது உசேனின் வீட்டில் இருக்கும்போது வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மரணமடைந்தார்.

இவரது காலத்திலேயே ஏராளமான முஸ்லீம்கள் இவரை பின்பற்றினர். இவரது காலத்துக்கு பின்னர் அந்த இயக்கம் இரண்டாக உடைந்தது. ஒன்று லாகூர் அஹ்மதியா இயக்கம் அடுத்தது அஹ்மதியா முஸ்லீம் இயக்கம்.
அஹ்மதியா முஸ்லீம் இயக்கம் இன்று 200 நாடுகளில் உள்ளது. இந்த இயக்கத்தில் சுமார் இரண்டு கோடிக்கு மேல் உள்ளனர். லாகூர் அஹ்மதியா இயக்கம் 17 நாடுகளில் உள்ளது. பாகிஸ்தானில் இவர்கள் முஸ்லீம்கள் என்று அங்கீகரிக்கபப்டவில்லை என்றாலும் அவர்கள் எண்ணிக்கை அதிகரித்துகொண்டே உள்ளது. பாகிஸ்தானின் ஒரே நோபல் பரிசு விஞ்ஞானி அப்துஸ் சலாம் அஹ்மதியா பிரிவை சேர்ந்தவர்

அல்லாஹ் சுமார் 7000 வருடங்களுக்கு முன்னால், முதல் மனிதரான ஆதாமை உருவாக்கியதாகவும் அதன் பின்னால் முகம்மது நபி 4508 ஆண்டுகளுக்கு பின்னால் தோன்றியதாகவும் கூறியிருக்கிறார். (Lecture Sialkot – Page 11, Lecture Sialkot – Page 15) இருந்தாலும் இன்றைய அஹ்மதியா பிரிவினர் பரிணாமவியலை ஒப்புகொள்வதாக கூறுகின்றனர்

மிர்ஸா குலாம் அஹ்மதுவுக்கு டெம்போரல் வலிப்பு நோய் இருந்திருக்கலாம் என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.

முதலாவது அவர் தன்னை கடவுளோடு உரையாடுபவராக கூறிகொள்கிறார்.

“On one occasion I saw in a vision that I had written certain divine decrees setting out events in the future and then presented the paper to God Almighty for His signature… In my vision I presented the document containing divine decrees to the form which was a manifestation of an attribute of beauty of God Almighty for His attestation. He was in the form of a Ruler. He dipped His pen in red ink and first flicked it in my direction and with the rest of the red ink which remained at the point of the pen He put His signature to the document. Thereupon the vision came to an end and when I opened my eyes I saw several red drops falling on my clothes and two or three of them also fell on the cap of one Abdullah of Sannaur in Patiala State who was at the time sitting close to me. Thus the red ink which was part of the vision materialized externally and became visible�” (Tadhkirah – Page 166, 167 & 168)

மற்றொரு இடத்தில் கடவுள் இவரிடம் சொன்னதாக எழுதியதில்
நீ என்னுடைய ஒருமையைப் போல இருக்கிறாய். என்னுடைய தனித்துவத்தை போல இருக்கிறாய். என்னுடைய ஆசனம் போல இருக்கிறாய். என்னுடைய மகனைப் போல இருக்கிறாய்

இவருக்கு வலிப்பு நோய் இருந்திருப்பதை இவரது மருத்துவரும் மற்றவர்களும் குறித்து வைத்துள்ளனர்

தனக்கு இருந்த வலிப்பு நோய் போல இயேசுவுக்கும் இருந்திருக்கிறது என்று எழுதியிருக்கிறார்

�Jesus actually suffered from epilepsy and that was the reason that he used to see dreams�Jesus had actually become insane due to epilepsy.� (Roohani Khazain, Satt Bachan – Volume 10 – Page 295)

இவர் எதிர்காலத்தில் நடக்கப்போவதாக நிறைய சொல்லியிருக்கிறார். அந்த தீர்க்கதரிசனங்கள் அனைத்தையும் அல்லாவே தன்னிடம் கூறியதாக சொன்னார்.

தேவதைகள் இவருக்கு அருகே இருப்பதாகவும் கூறுகிறார்
��.I have a special resemblance to Jesus, on account of which I have been sent with his name so that I should demolish the doctrine of the cross. I have been sent to break the cross and to slaughter the swine. I have descended from heaven with angels on my right and left� the angels� have been furnished with powerful maces with which to break the cross and to demolish the temple of the worship of creatures.� (Ahmadiyyat Renaissance Of Islam – Page 141)

இது போன்ற ஏராளமான வாசகங்களை அவர் எழுதிய நூற்றுக்கும் மேலான புத்தகங்களில் காணலாம்.

இவருக்கு இருந்த சில நோய் அறிகுறிகள் இவருக்கு இந்த டெம்போரல் லோப் வலிப்பு இருந்திருக்கலாம் என்று கருத இடமளிக்கிறது.
1) தேவதைகள் தன்னிடம் பேசுவதாக கருதியது
2) கடவுள் தன்னிடம் அடிக்கடி பேசுவதாகவும், எதிர்காலத்தில் என்ன நடக்கப்போகிறது என்று கூறுவதாகவும் கூறியது
3) கடவுளும் இவரும் என்னென்ன செய்யலாம் என்று ஆலோசனை செய்வதாக கூறிகொண்டது.
4) hypergraphia என்னும் ஏராளமாக எழுதுவது
5) paranoid என்னும் தன்னை மற்றவர்கள் கொடுமைப்படுத்துகிறார்கள் என்று காரணமில்லாமல் கருதிகொள்வது
6) மிக அதிகமான ஆன்மீக உணர்வு
7) வலிப்பு நோயே இருந்திருப்பது



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

கடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் – 10

ஆர் கோபால்

இந்த தொடர் நடுவில் ஏற்பட்ட தடங்கலுக்கு வருந்துகிறேன்.

இதுவரை நாம் பார்த்த சிலரது வாழ்க்கை வரலாறும், அவர்களது பிரமைகளும் அந்த பிரமைகள் மீது கட்டப்பட்ட அவர்களது நம்பிக்கைகளும் நமக்கு ஒரு சித்திரத்தை அளிக்கின்றன.

இதிலிருந்து நாம் அடையக்கூடிய ஒரு முடிவு, இறை உணர்வு என்பது ஒருவருக்கு மட்டுமே கிடைக்கக்கூடியதல்ல என்பதுதான். இவரிடம் மட்டுமே இறைவன் பேசினார் மற்றது எல்லாம் போலி என்பதோ அவரவர் பார்வை மட்டுமே. இந்த இறை அனுபவம் அல்லது ஆன்மீக உணர்வு என்பது god helmet என்பதிலிருந்து, பிறவியிலேயே டெம்போரல் லோப் பாதிக்கப்பட்டதன் மூலமாகவோ, இயற்கையாகவே டெம்போரல் லோப் பாதிக்கப்பட்டதன் மூலமாகவோ, செயற்கையாக, அதாவது அடி படுவதாலோ, அல்லது வேறு விதமான மருந்துகளாலோ டெம்போரல் லோப் பாதிப்படைவதன் மூலமாகவோ இந்த ஆன்மீக உணர்வை அடையலாம் என்பது பல ஆத்திகர்களுக்கு சங்கடமான ஒரு உண்மையாகத்தான் இருக்கும். அதுவும் டெம்போரல் லோப் பாதிப்படைந்ததும் உடனேயோ அல்லது பல வருடங்களுக்கு பின்னரோ கூட இந்த பாதிப்பு தன் வெளித்தோற்றத்தை ஆரம்பிக்கிறது.

இவ்வாறு “இறை உணர்வினால்” உந்தப்பட்டு, டெம்போரல் லோப் பாதிக்கப்பட்டவர்கள் கூறும் வாசகங்கள் “revelation” (அதாவது இறைவன் இவர் மூலமாக பேசுவது) என்று அவரை பின்பற்றுபவர்கள் நம்புகிறார்கள். அப்படிப்பட்டவர்களாக சில உதாரணங்களை பார்த்தோம். பஹாவுல்லா, செயிண்ட் பவுல், மிர்ஸா குலாம் அஹமது, ஜோஸப் ஸ்மித் ஆகியோரோடு இன்னும் பலரையும் தாராளமாக இணைக்கலாம்.

உதாரணமாக, முகம்மது நபி டெம்போரல் லோப் பாதிக்கப்பட்டவர் என்று பலர் கூறுகிறார்கள். அதற்கான பல ஆதாரங்களை வைக்கிறார்கள். முக்கியமாக கிறிஸ்துவ போதகர்கள் முகம்மது நபி டெம்போரல் லோப் பாதிக்கப்பட்டவர் என்று காட்ட பிரயத்தனப்படுகிறார்கள்.

உதாரணமாக கூகுளில் mohammad temporal lobe என்று தேடலில் இட்டால் ஏராளமான தளங்கள் வருகின்றன.

கூகுள் தேடல்

இது மிகவும் பரவலான குற்றச்சாட்டாக இருப்பதால், முகம்மதுவுக்கு டெம்போரல் லோப் வலிப்பு நோய் இல்லை என்று நிரூபிக்கும் முயற்சியில் பல இஸ்லாமிய தளங்களும்உள்ளன.

முகம்மதுவுக்கு இருந்த டெம்போரல் லோப் வலிப்பு நோய் பற்றி தமிழிலும் எழுதப்பட்டிருக்கிறது. இது பற்றி தமிழோவியம்.காமில் ஒரு தொடர் வந்தது

நாம் நம்புவதை நாம் ஏன் நம்புகிறோம்? இது ஒரு முக்கியமான கேள்வி. உதாரணமாக இந்துக்களின் குழந்தைகள் இந்து மதத்தை நம்புகிறார்கள். கிறிஸ்துவர்களின் குழந்தைகள் கிறிஸ்துவ மதத்தை நம்புகிறார்கள். முஸ்லீம்களின் குழந்தைகள் இஸ்லாமை நம்புகிறார்கள். காரணம் என்ன? இதனை அறிவியல் பூர்வமாக ஆராய முடியுமா?

ரிச்சர்ட் டாகின்ஸ் குழந்தைகளின் மத நம்பிக்கை என்பது அவர்கள் தன்னிச்சை இல்லாமல் ஏற்றுகொண்ட ஒரு விஷயம் என்று கூறுகிறார்.

ஒரு ஆடு பிறந்ததுமே நின்று நடக்கிறது. பெரும்பாலான பாலூட்டி விலங்குகள் பிறந்ததுமே அடிப்படை வாழ்க்கை வாழ தேவையான பெரும்பாலான விஷயங்களை பெற்றவாறே பிறக்கின்றன. ஆனால், சமூக விலங்குகளான குரங்குகள், மனிதர்கள் போன்ற பாலூட்டிகள் ஒரு குறிப்பிட்ட காலம் வரைக்கும் பெற்றோர், பெற்றோர் அல்லாத சமூக பாதுகாப்பில் வளர்கின்றன. ஒரு குரங்கு குழந்தை தன் தாயை விட்டு விலகுவது கிடையாது. ஒரு குரங்கு தாயும் தன் குழந்தையை மற்ற ஒரு குரங்கிடம் கொடுத்து பார்த்துகொள்ளச்சொல்வதும் கிடையாது. ஆனால், மனிதர்கள் என்ற பாலூட்டிகள் மட்டுமே பிறந்த குழந்தையை கூட சமூக நிறுவனங்களின் பாதுகாப்பில் விட்டுவிடவும், சமூக நிறுவனங்கள் மூலமாக தன் குழந்தையின் வாழ்க்கைக்கு தேவையான விஷயங்களை அளிக்கவும் கொடுக்கின்றன. நாம் குழந்தைகளாக இருக்கும்போது, நாம் உலகில் வாழ தேவையான விஷயங்களை பெற பெற்றோரிடமிருந்து விஷயத்தை பெறுவது மிக முக்கியமானது. அந்த பருவத்தில் நாம் ஒரு பஞ்சு ஈரத்தை உறிஞ்சுவதுபோல, வெகு விரைவில் எந்த கேள்வியும் இல்லாமல் கொடுக்கும் அனைத்தையும் ஏற்றுகொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம்.

பெற்றோரிடமிருந்து ஒரு குறிப்பிட்ட காலம் வரைக்கும் எந்த கேள்வியும் இல்லாமல் குழந்தை விஷயங்களை பெற்றுகொள்கிறது. மொழி, எழுத்தறிவு, சமூகத்தில் எப்படி நடந்துகொள்வது, எங்கே எச்சில் துப்பக்கூடாது, எங்கே எச்சில் துப்பலாம், எங்கே மல ஜலம் கழிக்கலாம், எங்கே நடக்கலாம், எங்கே நடக்கக்கூடாது என்ற அனைத்தின் கூடவே, உடை நடை பாவனை, பண்டிகைகள், பழக்க வழக்கங்கள் ஆகிய அனைத்து கலாச்சார உபகரணங்களோடு மத நம்பிக்கையும் ஏறி வருகிறது. இங்குதான் கேள்வி கேட்காமல் குடும்பம் சொல்லும் தெய்வத்தை ஏற்றுகொள்வதும் வருகிறது. அந்த குடும்பம் பஹாவுல்லாவை ஏற்றுகொண்டிருந்தால் குழந்தையும் பஹாவுல்லாவை ஏற்றுகொள்கிறது. அந்த பெற்றோர் ஜோஸப் ஸ்மித்திடம் கடவுள் பேசினார் என்று குழந்தையிடம் சொன்னால், அந்த குழந்தையும் கேள்வி கேட்காமல், அதனை ஏற்றுகொள்கிறது. அது வளரும்போது அந்த நம்பிக்கையுடன் கூடவே வளர்கிறது. அது தன் குழந்தையிடம் அதே விஷயத்தை சொல்லிச் செல்கிறது.

Why We Believe What We Believe: Uncovering Our Biological Need for Meaning, Spirituality, and Truth [Hardcover]
Andrew Newberg (Author), Mark Robert Waldman (Author)

நம்புவது என்பது என்ன என்று சிந்தித்தால், எதனை கேள்வி கேட்காமல் ஏற்றுகொள்கிறோமோ அதனை நம்புவது எனலாம்.

நாம் சமையலறையில் சமைக்க வேண்டும், அங்கே மலஜலம் கழிக்கக்கூடாது என்பது நமக்கு பெற்றோர்களின் போதனையிலிருந்து வருகிறது. இது போன்ற சமூக ஒழுக்கங்களுக்கு பின்னால் கற்றறிந்து, பண்பட்ட ஒரு பண்பாடு இருக்கிறது. அந்த சமூகத்தின் அறிவே நமக்கு போதனையாக வருகிறது. இவற்றில் பெரும்பான்மையானவை சரியானவையே.

உதாரணமாக கூறுவதென்றால், ஒரு வீட்டில் மரணம் சம்பவித்தது என்றால், அந்த குடும்பத்தினர் கோவில் போன்ற திருவிழா நடக்கும் இடங்களுக்கு செல்வது தடை செய்யப்பட்டது என்று அறிவோம். இது ஏன்? இதனை நாம் சமூக ஒழுக்கமாக பெற்றோர், குடும்பத்தினர், சமூகத்தில் உள்ள இதர குடும்பங்கள் வழியாக இந்த செய்தியை பெறுகிறோம். அதனை ஏற்றுகொள்கிறோம்.

ஒரு குடும்பத்தில் மரணம் சம்பவித்தால், முக்கியமாக துர்மரணம், அகால மரணம் சம்பவித்தால், அது ஒரு நோய் சம்பந்தப்பட்டதாக இருக்கலாம். அந்த நோய் கிருமிகளோடு பழகியவர்கள் கோவில் போன்ற பலர் கூடும் இடங்களுக்கு சென்றால், அந்த நோயை பரப்ப ஏதுவாகும். அது பலரின் மரணத்துக்கு காரணமாகலாம். அது சமூகத்துக்கு கெடுதி.

ஆகவே இந்த சமூக நியதிகள் ஒரு சமூகத்தின் பொது அறிவாக நிற்கிறது. மற்றவர் மீது படும்படி தும்முவதோ இருமுவதோ நாகரிகமானதில்லை என்று சொல்லி வளர்க்கப்படுகிறோம். இது சுகாதாரமானதல்ல என்பது நவீன அறிவு. இவை பெரும்பாலும் சமூக நியதிகள், பழக்க வழக்கங்கள், பண்டிகைகள், புராணக்கதைகள், இதிகாசங்கள், நாடோடி கதைகள், நாடோடி பாட்டுகள், கிராமப்புற உழவு பாட்டுகள், விளையாட்டுகள் என்று நம்மிடம் சமூக அறிவு இந்தியாவில் வருகிறது. இவற்றின் விதிகளையோ இவற்றின் போதனைகளையோ நாம் கேள்வி கேட்பதில்லை. ஏன் கபடி அப்படி ஆட வேண்டும் என்று நாம் யோசிப்பதில்லை. ராமாயணத்தில் சொல்லப்படும் ஒரு தார மணம் என்பது ஆதர்சம் என்பதை நாம் ஏற்றுகொள்கிறோம். ராமாயணத்தில் சொல்லப்படும் ஒரு தார மணம் என்பதன் சமூக பின்புலமோ அதன் சமூக பயன்பாடோ நாம் ஆராயவில்லை என்றாலும் அதற்கு இருக்கும் மதிப்பை நாம் உள்ளூர அறிந்திருக்கிறோம். ஆராய்வதற்கு இந்திய பின்னணியில் இவற்றை ஆராய ஒரு அறிவுஜீவி உலகம் நம்மிடம் இல்லை. மேற்குலக சிந்தனையில் ஊறியவர்களே இந்தியாவின் அறிவுஜீவிகளாக இருக்கிறார்கள் என்பது ஒரு துயரமான காலனிய பின் விளைவு.

மேற்கத்திய உலகில் “நம்பிக்கை” என்பதை மற்றொரு வடிவத்தில் கூறுகிறார்கள். அறிவுப்பூர்வமாக பொய் என்பதை உதாசீனம் செய்து ஒரு விஷயத்தை உண்மை என்று நினைக்கிறோமோ அதனை நம்புவது என்று கூறுகிறார்கள். இதற்கான காரணம், பொது அறிவு உலகம் பல கோடி வருடங்கள் பழையது என்று சொல்வதை மீறி, உலகம் ஆறு நாட்களில் படைக்கப்பட்டது, அது தோன்றி 7000 வருடங்களே ஆகிறது என்று நம்புவது ஒரு அறிவுக்கு பொருந்தாத, அறிவியலுக்கு பொருந்தாத ஒரு நம்பிக்கை.

ஆனால் எந்த ஒரு நம்பிக்கையாக இருந்தாலும் அது மிகவும் சக்தி வாய்ந்தது. நம்பிக்கை என்பது மனித மூளை என்னும் கம்ப்யூட்டரின் நினைவு தளங்களில் சேமிக்கப்பட்ட ஒன்று சைபர் ஒன்று சைபர் என்ற செய்தி தொகுப்பாக இருக்கலாம். ஆனால் பௌதீக ரீதியில் மாற்றங்களை ஏற்படுத்த வல்லது.

மேலே குறிப்பிட்ட புத்தகத்தில் ஆரம்பத்தில் ஒரு செய்தி சொல்லப்படுகிறது.

UCLA என்ற யூனிவர்ஸிட்டி ஆஃப் கலிபோர்னியா, லாஸ் ஏஞ்சலஸ் என்ற பல்கலைக்கழகத்தில் உண்மையில் நடந்த ஒரு விஷயம்.
அங்கே மருத்துவ பரிசோதனைக்காக ஒருவர் வந்து பல்கலைக்கழக மருத்துவ மனையில் சேர்ந்தார். உடலெங்கும் கான்ஸர் உருவாக்கிய புற்றுகள். கட்டிகள். சாகக்கிடந்தார். ஒரு மருந்து எந்த அளவுக்கு வேலை செய்கிறது என்பதை அறிய ஒரே கான்ஸர் உள்ள பத்து பேரை எடுத்து அதில் ஐந்து பேருக்கும் placebo எனப்படும் சர்க்கரை மாத்திரையும் மற்ற ஐந்து பேருக்கு பரிசோதிக்கப்படும் மருந்தும் கொடுப்பார்கள். சர்க்கரை மாத்திரை கொடுத்தவர்களுக்கு குணமானதை விட எந்த அளவுக்கு ஒரிஜினல் மாத்திரை கொடுத்தவர்கள் குணமானார்கள் என்பதை அறிந்து இந்த மருந்து உண்மையிலேயே குணப்படுத்துகிறதா என்பதை அறிவார்கள்.

அப்படிப்பட்ட பரிசோதனையின்போது இந்த மனிதருக்கு சர்க்கரை மாத்திரையை கொடுத்திருக்கிறார்கள். அந்த மனிதருக்கு உடலிலிருந்து கட்டிகள் கரைந்து ஒரே வாரத்தில் குணமானார். (இதன் பெயர் placebo effect இதனை பற்றி மேலும் அறிய http://en.wikipedia.org/wiki/Placebo )
எந்த மருந்து கொடுப்பதாக அந்த நபர் அறிந்தாரோ அந்த மருத்து சுத்த வேஸ்ட் என்று பத்திரிக்கை செய்திகள் சொன்னதை படித்தபின்னர் ஒரே வாரத்தில் அந்த கட்டிகள் மீண்டும் தோன்றிவிட்டன. மருந்து கொடுத்த டாக்டர், அதே சர்க்கரை மாத்திரையை அவருக்கு கொடுத்து, “இது புதிய வேறுபட்ட சரிசெய்யப்பட்ட மருந்து” என்று சொல்லி கொடுத்தபோது மீண்டும் அந்த கட்டிகள் மறைந்து அவர் குணமானார். FDA எனப்படும் அமெரிக்க உணவு மருந்து அமைச்சகம், அந்த பரிசோதனையே தோல்வியை தழுவியது என்று அறிவித்ததை அறிந்தபோது அந்த கட்டிகள் மீண்டும் தோன்றின.

இந்த நிகழ்ச்சி எவ்வாறு நமது மூளை நமது உடலை பாதிக்கிறது என்பதை காட்டுகிறது.

நாம் ஒரு optical illusion பார்க்கிறோம். அதுவே உண்மை என்று நாம் நம்பினால், அது உண்மையாகிறது. அதுவே நமது உலக அறிவாகவும் ஆகிவிடுகிறது. சிறு குழந்தைகள் பூச்சாண்டியை நம்புகின்றன, மேலை நாடுகளில் சாண்டா கிளாஸ் என்ற ஒருவர் இருக்கிறார் அவர் ஒவ்வொரு கிறிஸ்துமஸும் வந்து பரிசுப்பொருட்களை தருகிறார் என்று நம்புகின்றன. குழந்தைகளை பொருத்த மட்டில் அவை உண்மையானவை. இதே போலத்தான் அமானுஷ்யமான செய்திகளையும், மத நம்பிக்கைகளையும் மனிதர்கள் வைத்துகொண்டிருக்கிறார்கள். நமது மூளை 30 வயதில் இறுகிவிடுகிறது. அதன் பின்னால் மெல்ல மெல்ல தனது மாறுபடும் தன்மையை இழந்துவிடுகிறது. பொய்யான நிகழ்ச்சிகளை நடந்ததாக குழந்தைகளை கருத வைப்பது எளியது. அப்படி அவர்கள் நம்பிவிட்டால், அவை மூளையின் பல்வேறு பகுதிகளில் மிகவும் உண்மையானவையாக நிறுவப்பட்டுவிடுகின்றன.

சிறுவயதிலிருந்து அதிகாரத்தில் உள்ளவர்கள் சொல்வதை கேட்க வேண்டும் என்று பழக்கப்பட்டிருக்கிறோம். ஆகவே நமது ஒழுக்க மதிப்பீடுகளை உதாசீனம் செய்து அதிகாரத்தில் உள்ளதாக நம்மால் நம்பப்படுபவர்கள் சொல்வதை அது என்ன கேவலமான விஷயமாக இருந்தாலும் செய்ய தயாராக இருப்போம். பைபிள் சொல்கிறது என்பதற்காகவும் குரான் சொல்கிறது என்பதற்காகவும் தற்கொலை செய்துகொள்ளவும், மற்றவர்களை கொல்லவும் தயாராக இருந்திருக்கிறார்கள். சிலுவைப்போர்களும், ஜிஹாத் போர்களும் இவற்றை வரலாறாக நம் கண்முன்னே கொண்டு வந்து காட்டியிருக்கின்றன. அதனாலேயே மத வேறுபாடு எளிதில் அழிக்க முடியாதது.

இந்த புத்தகமும், பெந்தகொஸ்தே கிறிஸ்துவ பிரிவினர் அன்னிய பாஷைகள் பேசுவதாக நம்பிக்கொள்வதையும், பௌத்தர்கள் தியானம் மூலம் அடையும் காலமற்ற நிலையையும் நியூரோ பயாலஜி மூலமாக விளக்க முனைகிறது.

படிக்க வேண்டிய புத்தகம்



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

கடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் – 11

ஆர் கோபால்

ஆன்டரூ நியுபெர்க்கும் மார்க் ராபர்ட் வால்ட்மானும் இணைந்து எழுதிய “நாம் நம்புகிற விஷயங்களை நாம் ஏன் நம்புகிறோம்?”நூலின் அடிப்படை கருத்துகளையும் ஆய்வுகளையும் நாம் சென்ற பதிவில் பார்த்தோம். இந்த புத்தகம் பற்றியும் பொதுவாக நியுபெர்க் முன்வைக்கும் ஆய்வையும் அதன் தர்க்கங்களையும் பற்றிய கேள்விகளையும் அதற்கு அவர் தரும் பதில்களையும் இங்கே பார்க்கலாம்.

கேள்வி : நாம் நம்புகிற விஷயங்களை நாம் ஏன் நம்புகிறோம்?

நம்பிக்கை நான்கு முக்கிய விஷயங்களைச் சார்ந்திருக்கிறது – புலனறிவு, உணர்சசிகள், அறிதல், சமூக இணக்க உறவுகள். இந்த நான்குமே ஒன்றுக்கொன்று மிகுந்த தொடர்புடையவை. மனித மூளையின் செயல்பாட்டுடன் இவை கலந்து நமக்கு நம்பிக்கை உருவாகக் காரணமாய் இருக்கின்றன. நாம் பிறந்தவுடனேயே நம்பிக்கையும் பிறந்து விடுகிறது. சில வழிகளில் நம்பிக்கை நமது மூளையில் முன்வடிவுடன் தான் நம் பிறப்பு சம்பவிக்கிறது. ஆனால் வாழ்நாள் முழுதும் நாம் கொள்ளும் எண்ணங்கள், சிந்தனைகள், அன்பவங்கள் இணைந்து நம் நம்பிக்கைகளை செதுக்குகின்றன. உலகம் எப்படி இயங்குகிறது என்று உணரும் நம்பிக்கையை வாழ்நாள் முழுதும் நாம் கொண்டிருக்கிறோம். உலகம் எப்படி இயங்குகிறது என்ற எதிர்பார்ப்பை நாம் நம்பிக்கையாக வடிவமைத்துக் கொள்கிறோம். அந்த நம்பிக்கை நாம் வாழ்வதற்குத் தேவைப் படுகிறது. நாம் பிறரிடம் இணக்கமாய் இருந்தால் அவர்களும் நம்முடன் இணக்கமாய் இருப்பார்கள் என்ற எதிர்பார்ப்பும் நம்பிக்கையின் ஒரு வண்ணம் தான். வாழ்க்கையின் நோக்கம் மற்றும் அர்த்தம் பற்றியும் மடம் பற்றியும், பிரபஞ்சத்தின் சிக்கலான வடிவமைப்புப் பற்றியும் நாம் நம்பிக்கை கொள்ளக் கூடும். நமப்து நம்பிக்கைகள் நம் வாழ்வின் ஆதார சுருதி என்பதால் அந்த நம்பிக்கைகளை மிக வலுவாக நாம் பற்றிக் கொண்டிருக்கிறோம். இந்த நம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துகளும், உண்மைகளும் தெரிய வரும்போது கூட நாம் நமது நம்பிக்கைகளை விட்டுவிடத்தயாரில்லை. ஆனால் , நாம் புதிய கருத்துகளையும் , மற்றவர்களின் நம்பிக்கைகளையும் திறந்த மனதுடன் அணுகினால் மூளைக்கு தன் நம்பிக்கைகளை மாற்றிக் கொள்ளவும் தெரியும்.


ஆக்கபூர்வமான நம்பிக்கைகள், அழிவு பூர்வமான நம்பிக்கைகள் என்று பிரிவுகள் உண்டா?

நம் மனதின் மீதும், உடலின் மீதும் நம்பிக்கைகள் பல வேறுபட்ட தாக்கங்களை ஏற்படுத்த வல்லவை. நம்மை நம் உலகத்தோடு ஒட்ட ஒழுக உதவும் , நம்மைப் பற்றி ஆரோக்கியமான, நேர்மறைப் பார்வையை ஏற்படுத்தும் நம்பிக்கைகளை ஆக்க பூர்வமான நம்பிக்கைகள் எனலாம். நம்மில் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் நம்பிக்கைகள், மற்றவர் மீது வன்முறை உணர்ச்சிகளைக் கிளறும் நம்பிக்கைகள், நம் உடல் நலத்தையும், மனநலத்தையும் பாதிக்கிற நம்பிக்கைகளை அழிவு பூர்வமான நம்பிக்கைகள் எனலாம். ஒரு நம்பிக்கை ஆக்க பூர்வமானதாக ஆவதும், அழிவு பூர்வமானதாக ஆவதும் அந்த நம்பிக்கை மற்ற நம்பிக்கைகளை முழுக்க விலக்கி வைக்கிற நம்பிக்கையா என்பதைப் பொறுத்தும் அமையும், அந்த நம்பிக்கை எவ்வளவு தீவிரமாக உள்ளது என்பதைப் பொறுத்தும் உள்ளது. எல்லா நம்பிக்கைகளுக்கும் ஒரு எல்லை உண்டு. ஏனென்றால் மூளையின் செயல் பாட்டிற்கு ஒர் எல்லை உண்டு. ஆக்க பூர்வமான நம்பிக்கை என்பது மற்றவர்களின் மீது – மற்றவர்களின் நம்பிக்கைகள் மீது – பரிவிரக்கம் கொள்வதாக அமையும். ஏனென்றால் எல்லா நம்பிக்கைகளுமே எல்லைக்குட்பட்டவை என்பதால்.

கடவுள் நம் மூளையில் தான் இருக்கிறார் என்று சொல்லலாமா?

நம் ஆய்வின் படி கடவுளை உணர்தல், கடவுளைப் பற்றிய கேள்விகளை எழுப்புதல், கடவுளைப் பற்றிய முடிவுகளை உருவாக்கிக் கொள்ளுதல் எல்லாமே மூளையின் வழியே தான் நிகழ்கிறது. ஆனால் கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற கேள்விக்கு மூளை அறிவியல் ஆய்வு பதில் தராது. ஒரு நபர் ஒரு ஓவியத்தைப் பார்க்கும்போது மூளையின் எந்தப் பகுதி என்ன விதமாய்த் தூண்டப் படுகிறது என்று ஆய்வு செய்ய முடியும். ஆனால் ஓவியம் அவன் பார்க்கும் இடத்தில் இருக்கிறதா இல்லையா என்று அறிவியல் விடை அளிக்காது. ஓவியத்தை அவன் மனதளவில் உருவாக்கிக் கொள்கிறானா என்ற கேள்விக்கும் அறிவியல் விடை அளிக்க இயலாது. உண்மையைப் பற்றி உணர்வை நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய் உருவாக்கிக் கொள்கிறோம். எது உண்மை என்றறிவது சிக்கலான விஷயம்.

மதம் பற்றியும், மதம் சார்ந்திருப்பவர்கள் அடையும் உடல் நலப் பயன்கள் பற்றியும் உங்கள் ஆய்வு பேசுகிறதில்லையா?

மதத்திற்கும் உடல் நலத்திற்கும் இருக்கும் உறவு பற்றி எம் ஆய்வுகள் பேசுகின்றன. தியானம், பிரார்த்தனை போன்றவற்றின் போதும், சில சமயச் சடங்குகளின் போதும் மூளை எப்படி வேலை செய்கிறது என்று புரிந்து கொள்ள முயல்கிறோம். தியானம் செய்பவர்களின் மூளையை ஆய்வு செய்து, அவர்களின் உடல் நலம் அடையும் பெரும் மாற்றங்கள் – ரத்த அழுத்தம் குறைவு, இருதயத் துடிப்புகள் குறைவது, படபடப்பு குறைதல், மன அழுத்தம் குறைவது – குறித்து அறிகிறோம்.

“கடவுள் துகள்” அல்லது “கடவுள் பதிவு” இருப்பதாய் சொல்லப் படுகிறதே அதை ஒப்புக் கொள்கிறீர்களா?

சமய அனுபவங்களும், ஆன்மிக அனுபவங்களும் மிக சிக்கலானவை. உணர்ச்சிகள், எண்ணங்கள், உணர்வலைகள், நடத்தைகள் சார்ந்தவை. மூளையின் பல பகுதிகள் இவற்றில் பங்கேற்கின்றன. ஒரு தனிநபரின் தனித்த அனுபவங்களைக்ச் சார்ந்து மூளையின் பல பகுதிகள் தூண்டப்படலாம். தியானத்தில் ஈடுபடுவோரின் மூளைச் செயல்பாடும், மரணத்தின் விளிம்பில் உள்ளவர்களின் மூளைச் செயல்பாடும், வேறு வேறு வகையிலானவை. இந்தச் சான்றுகளைக் கொண்டு பார்க்கையில் ஒரு “கடவுள் பதிவு” அல்ல பல கடவுளர்களின் பதிவு, மூளையின் பல பகுதிகளும் ஒன்றிணைந்து செயல்பட்டு உருவாக்கம் கொள்கிறது என்று சொல்லலாம்.

டெம்போரல் மூளை பகுதிகள் சமய உணர்வெழுச்சிகளுக்குக் காரணம் என்று சொல்லப் படுவது பற்றி உங்கள் கருத்து என்ன?

டெம்போரல் மூளை பகுதிகள் சமய உணர்வெழுச்சிகளுக்கு மிக முக்கிய காரணிகள் என்பதை மறுக்க இயலாது. ஆழ்மன அனுபவங்கள், நினைவுகள், தியானம், பரவசக் காட்சிகள் இவற்றிற்கு மூளையின் amygdala and ஹிப்போகாம்புஸ் பகுதிகள் காரணம் என்பது நிரூபிக்கப் பட்டுள்ளது. டெம்போரல் பகுதிகள் மூளையின் மற்ற பல பகுதிகளுடன் இயைந்து சமய எழுச்சி உணர்வுகளுக்குக் காரணம் ஆகின்றன.

சமய அனுபவங்களுக்கும் இரட்டை மனநிலை, டெம்போரல் பகுதி வலிப்பு நோய் போன்றவற்றிற்கும் தொடர்பு உள்ளது என்ற கருத்து உங்களுக்கு உடன்பாடானதா?

ஆய்வுகள் பலவும் சமய அனுபவங்களுக்க்கும் மூளைக் கோளாறுக்கும் உள்ள தொடர்பை உறுதி செய்தது உண்மை தான் என்றாலும், இந்த தொடர்பு மட்டுமே ஒற்றை பதிலாக இருக்க முடியாது. முதலாவதாக மூளைக் கோளாறு உள்ள அனைவருமே ஆன்மிக அனுபவங்களைக் கொள்வதில்லை. டெம்போரல் பகுதி வலிப்பு உள்ள சிலர் தான் அசாதாரண அனுபவங்களைக் கொண்டிருக்கிறார்கள். இரண்டாவதாக இப்படிப் பட்ட அனுபவங்களை ஒரே ஒரு முறை பெற்று, பிறகு எப்போதுமே இப்படிப் பட்ட அனுபவங்களைப் பெறாதவர்களும் உண்டு. ஆனால் மூளைக் கோளாறு உள்ளவர்களின் நோய வெளிப்பாடு திரும்பத் திரும்ப வருகிற ஒன்று. மூன்றாவதாக சமய அனுபவங்கள் கொண்டோரின் எண்ணிக்கை அதிகமாகத் தான் உள்ளது. இவர்கள் அனைவருக்குமே மூளைக் கோளாறு என்பது சாத்தியமல்ல. முடிவாக இந்த சமய அனுபவங்கள் அந்த நபரின் வாழ்க்கை, மரணம், உறவுகள் குறித்து மிக பார தூரமான மாற்றங்களை அந்த நபரிடம் ஏற்படுத்துவது பார்க்கிறோம். வெறும் மூளைக் கோளாறு உள்ளவர்களின் பார்வையில் இப்படிப்பட்ட மாறுதல்கள் ஏற்படுவதில்லை. இதை இப்படிச் சொல்லலாம். சாதாரண மனிதர்களுக்கு சாதாரண அல்லது அசாதாரண சமய அனுபவங்கள் நிகழலாம். அசாதாரண மனிதர்களுக்கும் இது நிகழலாம். இந்த இரு குழுவினருக்கும் இடையில் வேறுபாடு காண்பது தான், மூளை ஆய்வுகளின் மிகப் பெரிய சவால்.

நாம் கடவுளை நம்பியே ஆகுமாறு உருவாக்கப் பட்டிருக்கிறோமா?

இந்தக் கேள்வி, நம் ஆதியிலேயே கடவுளை நம்புமாறு, முன்னரே தீர்மானித்த வகையில் யாரோலோ படைக்கப் பட்ட முறையில் எழுகிறது. மூளை ஆய்வுகள் “அர்த்தமுள்ள படைப்பு” என்ற கேள்வியை எதிர்கொள்ள முடியாது. ஆனாலும், ஒன்று சொல்லலாம். மூளைக்கு – உயிரியல் ரீதியாகவும் , பரிணாம ரீதியாகவும் – இரண்டு முக்கிய பணிகள் உள்ளன. தன்னைப் பாதுகாத்துக் கொள்வது, தன்னை தாண்டிச் செல்வது. நம் வாழ்நாள் முழுக்கவும் மூளை இந்தப் பணிகளைச் செய்தவாறே உள்ளது. சமயமும் இதே செயலைத் தான் செய்கிறது, ஆக, மூளையின் பணிகளை முன்வைத்த பார்வையில் சமயம் ஒரு அருமையான கருவி. மூளை தன் பிரதான பணிகளைச் செய்ய சமயம் உதவுகிறது. மூளை தன் பணிகளைப் பொறுத்து அடிப்படையான மாறுதலினை அடையும்வரை, மதமும் கடவுளும் இருக்கவே செய்யும்.

ஏன் கடவுள் மறையமாட்டார்?

கடவுள் ஏன் மறைய மாட்டார் என்றால், நம் மூளை கடவுளை மரிக்க விடாது என்பது தான் காரணம். மூளையின் முன்சொன்ன இரண்டு செயல்களை – சுய பாதுகாப்பு, தன்னைத் தாண்டி வளர்தல் -இவற்றிற்கு உதவ கடவுளும், மதமும் மிக வலுவான ஆயுதங்கள். நம் மூளையின் செயல்பாடு அடிப்படையிலேயே மாறுதல் பெறாத வரையில் கடவுள் நெடுங்காலம் இருக்கத் தான் செய்வார்.

தியானம் பற்றிய ஆய்வுகளில் நீங்கள் மேற்கொண்ட மூளைச் சித்திரங்கள் பற்றி கூறுங்கள்.

எங்களின் ஆய்வுகளில் மூளைக்கு ரத்த ஓட்டம் பற்றிய ஆய்வு செய்கிறோம். மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் மூளைச்செயல்பாட்டின் போக்கை நிர்ணயிக்கிறது. மூளைச் சித்திரங்கள் சமயச் செயல்பாட்டின் ஒவ்வொரு நிலையிலும் மூளையின் எந்தப் பகுதி தூண்டப் படுகிறது என்று ஆய்வு செய்ய முடியும். உதாரணமாக் திபெத்திய புத்த ரிஷிகள் தியானத்தின் போதும், அமைதியாய் இருக்கும்போதும் மூளைச் செயல்பாட்டைப் படம் பிடிக்க முடியும். தியானத்தின் போது மூளையின் முன்பகுதியில் அதிக தூண்டுதல் ஏற்படுகிறது, நம் உடலை வெளியிடத்தில் சமன் செய்யும் மூளைப்பகுதி மிகக் குறைந்த அளவில் செயல்படுகிறது, மூளையின் முன்பகுதியில் அதிக தூண்டுதல் த்யானத்தின் போது மட்டுமல்ல நாம் கவனம் செலுத்தி ஒரு செயலில் ஈடுபடும்போதும் தூண்டப் படுகிறது. தியானமே மனதை ஒருமுகப் படுத்தலில் ஈடுபடுத்துகிறது என்பதால் இது புரிந்து கொள்ளக் கூடியதே. வெளியுலகில் சமநிலை கொள்ளத் தேவையான பகுதிகள் செயல்படாததால் தன்னுணர்வினை இழப்பது நிகழ்கிறது, எதிர்காலத்தில் தியானத்தின் போது மூளையில் ஏற்படும் மாற்றங்கள் இன்னமும் ஆய்வுக்குள்ளாகும்.

தியானம் புரிபவர்களுக்கு நிரந்தர மாறுதல் ஏதும் நிகழ்வதுண்டா?

திபத்திய புத்த ரிஷிகளிடையே நுணுக்கமான வேறுபாடுகளைக் காணமுடிகிறது. இருபது வருடங்களாக அவர்கள் தியானத்தில் ஈடுபட்டிருப்பதால் அவர்களின் முளை மாறுதல் பெற்றதா அல்லது அந்த மாறுதல் அவர்களை தியானத்தில் தீவிர ஈடுபாடு கொள்ளச் செய்ததா என்பது ஒரு சுவாரஸ்யமான கேள்வி.

உங்களுக்கு இந்தத் துறையில் எப்படி ஆர்வம் ஏற்பட்டது?
இள வயதிலிருந்தே நான் உண்மை,கடவுள் யதார்த்தம் குறித்து கேள்விகளை எழுப்பிக் கொண்டே இருப்பேன். நான் மருத்துவம் பயிலும் போது டாக்டர் யுஜின் தே அகில் ( Dr. Eugene d’Aquili, ) -உடன் பணி புரிகையில் அவரும் இந்தத் துறையில் பணியில் ஈடுபட்டிருந்தார். அவருடன் மனித மனத்தின் சிக்கலான செயல்பாடுகளைப் பற்றி ஆய்வு செய்யும் வைப்புக் கிடைத்தது. அவருடைய கோட்பாடுகள் உருக்கொண்டு இருந்தன. அவருடைய அக்கறைகளும், என் மூளை ஆய்வு முடிவுகளும் ஒன்றிணைந்து ஒரு புதிய திசையில் மூளைக்கும் மதத்திற்குமான தொடர்பை , மூளைச்சித்திரங்கள் வழியாக சென்றடைய உதவியது.

நீங்கள் சமய நம்பிக்கை உள்ளவரா? ஆன்மிக ஈடுபாடு உள்ளவரா?

மற்ற மனிதர்களைப் போலவே பல ஆழமான கேள்விகளுக்கு நான் விடைகளைத் தேடி வந்திருக்கிறேன். மேனாட்டு மரபுகளின் அடிப்படையில் நான் விடைகளைத் தேடினேன். ஆனால் காலப் போக்கில், கீழ்நாட்டு மரபுகளை ஒத்த தியான முறைகளை நோக்கி என் தேடல் பரிணாமம் பெற்றுள்ளது. என் அணுகுமுறை தியான வழி என்றாலும், குறிப்பிட்ட சமய வழிகளையோ தியான முறைகளையோ நான்தொடர்ந்து செயல்படுத்தவில்லை. என் ஆய்வுகளை முன்னெடுத்துச் செல்ல நான் பல மரபுகளையும், மார்க்கங்களையும் கற்றுக் கொள்ள நேர்ந்தது. என் அணுகுமுறையை செப்பம் செய்யத் தான் நான் இவற்றை மேற்கொண்டேன். இதுவும் ஓர் ஆன்மிகப் பயணம் என்றே நம்புகிறேன்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard