New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இயேசு வரலாறு


Guru

Status: Offline
Posts: 24601
Date:
இயேசு வரலாறு
Permalink Closed


இயேசு வரலாறு 1 : இயேசுவின் பிறப்பு

 Image result for Birth of Jesus
ரோமப் பேரரசிற்கு உட்பட்ட கலிலேயா நகரில் இருந்தது நாசரேத்து என்னும் ஓர் கிராமம். மலைகளின் பின்னால் மறைக்கப்பட்டிருந்த நாசரேத் நகரம் வணிகர்கள் கடந்து செல்லும் ஒரு நகரமாக இருந்ததால் ஒட்டகங்களும், வியாபாரிகளின் சத்தமும் அந்த நகரத்தை எப்போதுமே சூழ்ந்திருந்தன.

ரோம உளவாளிகள் வணிகர்களின் வடிவில் நாசரேத் நகர் இருக்கும் கலிலேயா, எருசலேம் நகரை உள்ளடக்கிய யூதேயா போன்ற ரோமப் பேரரசுக்கு உட்பட்ட நகரங்களில் உலவிக் கொண்டிருப்பது வழக்கம். அந்த பயத்தின் காரணமாக ரோமப் பேரரசருக்கு எதிராக எந்தக் குரல்களும் அங்கே எழுவதில்லை. மக்கள் தங்கள் வேலை உண்டு தாங்கள் உண்டு என்னும் மனநிலையில் தங்களுடைய கடமைகளை ஆற்றிக் கொண்டிருந்தார்கள். கி.மு 1009ல் தாவீது மன்னன், பின் கி.மு 971 இல் அவருடைய மகனான ஞானத்தின் இருப்பிடம் என்று புகழப்படும் சாலமோன் மன்னன் போன்றவர்கள் கொடிகட்டிப் பறந்த சுதந்திர மண் இப்போது ரோமப் பேரரசின் கீழ் வந்து அகஸ்து சீசர் என்னும் மன்னனுக்கு கப்பம் கட்டிக் கொண்டிருந்தது. கடவுளின் வழியை விட்டு மக்கள் விலகிப் போகும் போதெல்லாம் அடிமை நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்னும் உறுதியான எண்ணம் யூத மக்களிடம் இருந்தது.

கலிலேயா கிராமம் உழைப்பாளிகள் நிறைந்த கிராமம். அந்த கிராமத்தில் தச்சு வேலை செய்து கொண்டிருந்தான் ஒரு இளைஞன். மரப்புழுதி சூழ்ந்திருந்த அவன் கடையில் மர சாமான்கள் புதிது புதிதாக பிறந்து கொண்டிருந்தன. உழைப்புக்குச் சற்றும் சலிக்காத அவன் தன்னுடைய வேலையிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தான். தன் வாழ்க்கைக்காக தானே உழைத்துப் பணம் சம்பாதிக்க வேண்டிய நிலையில் இருந்தான் அவன். அவனுடைய பெயர் யோசேப்பு. யூத ஏட்டுச் சுருள்களை வாசிப்பதும், தன்னுடைய கடமையைச் செய்வதுமாக சென்று கொண்டிருந்தது அவனுடைய வாழ்க்கை. எதற்கும் அதிர்ந்து பேசாத, எதிர்ப்பைக் கூட மென்மையாகக் காட்டும் மனம் படைத்தவனாக இருந்தான் யோசேப்பு.

அவருக்கு திருமண ஒப்பந்தம் முடிந்திருந்தது. மணப்பெண்ணின் பெயர் மரியா. அழகிலும், அமைதியிலும் மரியா தனித்துவத்துடன் இருந்தாள். தனக்கு மனைவியாக ஒரு அழகான, கலாச்சார மீறல் இல்லாத ஒரு பெண் அமையப்போவதை நினைத்து யோசேப்பு மிகவும் மகிழ்ந்தார். தன்னுடைய உழைப்பை அதிகமாகச் செலுத்தி தன் மணவாழ்க்கைக்காக அதிகம் பொருளீட்டத் துவங்கினாள். மரியாவும், யோசேப்பைக் கணவனாக அடைவதில் பெருமையடைந்தாள். தாவீது மன்னனின் பரம்பரையில் வந்த யோசேப்பின் பூர்வீகமும், அவருடைய கடவுள் நம்பிக்கையும், கடினமாக உழைக்கும் போக்கும், மென்மையான மனப் பாங்கும் மரியாவின் உள்ளத்தில் யோசேப்பைக் குறித்த கனவுகளை கிளறிவிட்டிருந்தன.

அந்த ஆனந்தமான சூழலில் ஒரு சூறாவளியாக வந்தது தேவதூதன் ஒருவரின் காட்சி. மரியா தன்னுடைய வீட்டில் அமர்ந்திருக்கையில் திடீரென அவளுக்கு முன்னால் வந்து நின்றான் அவன். ஒளிவெள்ளம் தன்னைச் சூழ ஒரு தேவதூதன் தன் முன்னால் வந்து நிற்பதைப் பார்த்த மரியா திகைத்தாள். வந்திருப்பது தேவதூதன் என்பதை அறிந்ததும் அவளுடைய உள்ளம் பதை பதைத்தது. ஏதேனும் தவறு செய்துவிட்டோமோ என்று அஞ்சி நடுங்கினாள். படித்தும் கேட்டும் மட்டுமே பழக்கமான தேவதூதன் ஒருவனை நேரில் பார்ப்பது எவ்வளவு திகிலூட்டக் கூடியது என்பதை மரியா அன்று உணர்ந்தாள்.

‘அருள் நிறைத்தவளே வாழ்க’ தூதன் சொன்னான். மரியா குழம்பினாள். நான் அருள் நிறைந்தவளா ? சாதாரணமான குடும்பத்தில் உள்ளவள் நான். நான் எப்படி அருள் நிறைந்தவளாக முடியும் ? மரியாவின் மனதில் பயம் கேள்விகளை விதைத்தது.

‘கடவுள் உம்முடன் இருக்கிறார். நீர் பெண்களுக்குள் மகிமையானவர்’ தூதன் மீண்டும் சொல்ல மரியா குழப்பத்தின் உச்சிக்குத் தாவினாள். என்ன சொல்கிறார் தூதர். நான் பெண்களுக்குள் பாக்கியம் செய்தவளா ? அப்படி என்ன பாக்கியம் செய்தேன் ? ஒரு வேளை யோசேப்பைத் திருமணம் செய்யப்போவதைத் தான் குறிப்பிடுகிறாரோ ? மரியாவின் மனதில் கேள்விகள் நிற்காமல் வழிந்தன.

தேவதூதன் அவளை ஆறுதல் படுத்தினான். ‘மரியே அஞ்சவேண்டாம். நீர் கடவுளின் அருளைப் பெற்றவர். நான் ஒரு ஆனந்தச் செய்தியை சொல்லத் தான் வந்திருக்கிறேன். நீர் ஒரு மகனைப் பெறுவீர். அவருக்கு இயேசு என்று பெயரிடுங்கள். அவர் முடிவில்லாத ஒரு ஆட்சியைத் தருவார். மன்னர் தாவீதின் அரியணை இனிமேல் அவருக்குச் சொந்தமாகும்’ தேவதூதன் சொல்ல மரியா வியந்தாள்.

எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லையே. இப்போதுதான் மண ஒப்பந்தமாகியிருக்கிறேன். அதற்குள் எப்படி எனக்குக் குழந்தை பிறக்கும் ? மரியாள் கேட்டாள்.

நீர் கருத்தாங்குவது கடவுளின் ஆவியால் தான். தூய ஆவி உம் மேல் இறங்கும், நீர் கருத்தரிப்பீர். தூதன் சொல்ல மரியாள் என்ன சொல்வதென்று தெரியாமல் தவித்தாள். மண ஒப்பந்தமாகி இருக்கும் நேரத்தில் இப்படி ஒரு செய்தி வருகிறதே. கடவுளின் ஆவியால் தான் கர்ப்பமானேன் என்று சொன்னால் யாராவது நம்புவார்களா ? என்று மரியாவின் மனதில் ஏராளம் கேள்விகள். ஆனாலும் சிறுவயது முதலே இறைபக்தியில் வளர்ந்த மரியாவால் எதையும் மறுத்துச் சொல்ல முடியவில்லை. தூதனின் செய்தியை ஏற்றுக் கொண்டாள்.

மரியா கர்பமாய் இருக்கும் செய்தி யோசேப்பின் காதுகளை எட்டியது. யோசேப்பு அதிர்ந்தார். அன்பும், மரியாதையும் வைத்திருந்த மரியா தனக்குத் துரோகம் செய்து விட்டாளே என்று மனதுக்குள் எரிச்சலும், ஆத்திரமும், கோபமும் கொண்டார். இவ்வளவு அன்பு வைத்திருக்கும் தன்னை மரியா எப்படி துரோகம் செய்யலாம், தன்னிடம் எதுவும் சொல்லாமல் இப்படி ஒரு தவறைச் செய்திருக்கிறாரே என்று யோசேப்பு உள்ளம் உடைந்தார். மரியாவைத் திருமணம் செய்து கொள்ளப்போவதில்லை என்று முடிவெடுத்தார். ஆனாலும் மரியா கர்ப்பமாய் இருக்கும் செய்தியை ஊருக்குத் தெரியப்படுத்த அவருடைய மென்மையான மனது இடம் தரவில்லை. எனவே காதும் காதும் வைத்தது போல திருமண ஒப்பந்தத்தை உடைத்துப் போடவேண்டும் என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டார்.

மனதுக்குள் கவலை வந்து அமர்ந்து கொள்ள தூக்கமில்லாமல் புரண்டு படுத்துக் கொண்டிருந்தார் யோசேப்பு. எப்போது தூங்கிப் போனார் என்று தெரியாது அவருடைய தூக்கத்தில் வந்து நின்றார் அதே தேவதூதன். தூதன் யோசேப்பின் கனவில் புன்னகைத்தான்.

யோசேப்பு வருத்தப் பட வேண்டாம்.மரியா கர்ப்பமாய் இருப்பது மரியா செய்த தவறல்ல, அது கடவுளின் வரம். கடவுளின் மகனைத் தான் அவர் ஈன்றெடுக்கப் போகிறார். எனவே நீர் வருத்தப்படாமல் மரியாவை மணமுடிக்கலாம்.

திடுக்கிட்டு விழித்த யோசேப்பின் காதுகளின் தேவதூதனின் குரல் எதிரொலித்துக்கொண்டே இருந்தது. இயல்பிலேயே இளகிய மனமும், இறைபக்தியும் கொண்ட யோசேப்பு தூதனின் சொல்லை ஏற்றுக்கொண்டார்.

ரோம் பேரரசை ஆட்சி செய்து கொண்டிருந்த அகஸ்து சீசர் ஒரு கட்டளை பிறப்பித்தார். அதன்படி அவருடைய பேரரசுக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் தங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். அதுவும் அவர்கள் வசிக்கும் இடத்தில் தங்கள் பெயர்களைப் பதிவு செய்ய இயலாது அவர்களுடைய பூர்வீக கோத்திரம் எங்கேயோ அங்கே சென்று தான் அவர்கள் பெயர்களைப் பதிவு செய்ய வேண்டும். மக்கள் தொகையைக் கணக்கிட்டு தனக்குச் சேரவேண்டிய வரியைத் தராமல் ஏமாற்றும் மக்களைக் கண்டறிய வேண்டும் என்னும் நோக்கமே அவரிடம் இருந்ததாக மக்கள் உள்ளுக்குள் கொதிப்படைந்தார்கள். ஆனாலும் பேரரசிடமிருந்து நேரடியாகவே வந்த அந்த அரசாணையை யாரும் மீறத் துணியவில்லை. பொதுவாக சிற்றரசர்களிடமிருந்தே அரசாணைகள் வரும். அப்படிப் பார்த்தால் அப்போது அங்கே ஆட்சி செய்து கொண்டிருந்த ஏரோதிடமிருந்தே கட்டளை பிறந்திருக்க வேண்டும். ஏரோதை அகஸ்து சீசர் நம்பவில்லையா ? அல்லது இந்தக் கட்டளை வீரியத்துடன் பரவ வேண்டுமென்று நினைத்தாரா தெரியவில்லை. கட்டளை சீசரிடமிருந்தே வந்தது.

மரியாவுக்கு அப்போது நிறைமாதம். எப்போது வேண்டுமானாலும் குழந்தை பிறந்து விடக் கூடும் என்னும் நிலையில் இருந்தார். மன்னனின் கட்டளையை மீறவும் முடியாமல், எல்லோருமே செல்லவேண்டும் என்னும் கட்டாயத்தினால் மரியாவை வீட்டில் விட்டுச் செல்லவும் முடியாமல் யோசேப்பு தவித்தார். யோசேப்பும் மரியாவும் யூதேயாவிலுள்ள பெத்லகேம் என்னும் இடத்துக்குச் செல்ல வேண்டி இருந்தது.

பெத்லகேம் கலிலேயாவிலிருந்து சுமார் நூற்று ஐம்பது கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தது. பயணம் குறைந்த பட்சம் மூன்று நாட்கள் நீடிக்கலாம். நடந்தோ கழுதையின் மீதமர்ந்தோ தான் செல்ல வேண்டிய இடத்துக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலை. ஊர் பரபரப்பாய் இருந்தது. மக்கள் குடும்பம் குடும்பமாக உணவுப் பொட்டலங்களுடனும், கூடாரமடிக்கத் தேவையான பொருட்களுடனும் பெத்லேகேமுக்குச் செல்லத் துவங்கியிருந்தார்கள். யோசேப்பும் ஒரு கழுதையை ஏற்பாடு செய்து அதில் மரியாவை அமரவைத்து பெத்லேகேமை நோக்கிய பயணத்தைத் துவங்கினார்.

மூன்று நாள் பயணத்தின் முடிவில் அவர்கள் பெத்லேகேமை அடைந்தனர். பெத்லகேம் நெரிசல் காடாய் மாறியிருந்தது. எங்கு பார்த்தாலும் மனிதத் தலைகள். பல்வேறு இடங்களில் தங்கியிருந்த மக்கள் அனைவரையும் மன்னனின் ஆணை பெத்லேகேமுக்கு அழைத்து வந்திருந்தது. மக்கள் வெள்ளம் சாலைகளில் கரைபுரண்டோடிக் கொண்டிருந்தது. யோசேப்பு விடுதி ஒன்றை அணுகினார். விடுதிகளின் படிகளிலும் மக்கள் அமர்ந்திருந்தார்கள். விடுதிக் காப்பாளனை அணுகிய யோசேப்பு தனக்கு ஒரு படுக்கை வசதி வேண்டுமென்று வினவினார். விடுதிக் காப்பாளன் சிரித்தான். பெத்லகேம் நகரில் எந்தப் படுக்கையும் காலியாக இல்லை. எப்போதோ நிறைந்து விட்டது என்றான். யோசேப்பு திகைத்தார். மரியாவோ நிறை மாத கர்ப்பத்தில், விடுதிகளோ நிறைந்து வழியும் நிலையில். யோசேப்பு கெஞ்சினார். எப்படியேனும் மரியாவுக்கு ஒரு இடம் அளிக்கவேண்டும் என்று விண்ணப்பம் வைத்தார். மரியாவின் கண்களில் பேறுகால வலி மிதந்தது. மரியா எப்போது வேண்டுமானாலும் ஒரு குழந்தையை ஈன்றெடுக்கும் நிலையில் இருப்பதைக் கண்ட விடுதிக் காப்பாளனின் மனைவி மனது வைத்தார்.

‘ஒரு இடம் இருக்கிறது அங்கே உங்களால் இருக்க முடியுமா என்று தெரியவில்லை’

‘எந்த இடமானாலும் பரவாயில்லை. மரியாவுக்குத் தேவையான தனிமையும், ஓய்வும் கிடைத்தால் போதும்’ யோசேப்பு சொன்னார்.

‘விடுதியின் பின்னால் ஒரு தொழுவம் இருக்கிறது. தங்கிக் கொள்ளுங்கள்.’

‘தொழுவமா ?’ யோசேப்பு வினாடி நேரம் திகைத்தார். அப்போதைய நிலையில் ஏதேனும் ஒரு இடம் அவருக்குத் தேவையாய் இருந்தது. ஒருவேளை அந்த இடம் வேண்டாமென்று சொன்னால் அதை ஆக்கிரமிப்பதற்கும் தயாராய் இருந்தது முண்டியடித்துக் கொண்டிருந்த கூட்டம்.

‘மிக்க நன்றி’ மரியா நன்றி சொன்னாள்.

யோசேப்பும் மரியாவும் தொழுவத்தை நோக்கி நடந்தார்கள்.

தொழுவம் மாடுகளாலும், அவற்றின் கழிவுகளாலும் நிரம்பியிருந்தது.

இரவு.

ஓய்வெடுப்பதற்காக மக்கள் விடுதிகளின் அறைகளிலும், கூடாரங்களின் உள்ளேயும் புகுந்து வெகுநேரமாகி இருந்தது. அந்த இரவில், தொழுவத்தில் கால்நடைகள் கண்ணயர்ந்திருந்த வேளையில் மரியா குழந்தையைப் பெற்றெடுத்தாள். மரியா தாயானாள். குழந்தையைக் கிடத்துவதற்கும் அந்தத் தொழுவத்தில் நல்ல இடம் இருக்கவில்லை. இருந்த துணிகளில் குழந்தையைப் பொதிந்து அவர்கள் தீவனத் தொட்டியில் கிடத்தினார்கள். வீதிகளும், விடுதிகளும் இயேசுவின் பிறப்பை அறியாமல் சலசலத்துக் கொண்டிருக்க,

வரலாற்று நாயகன் இயேசு வைக்கோல் மீதில் துயின்றார்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink Closed

இயேசு வரலாறு 2. ஞானிகள் வாழ்த்தும், ஏரோது மன்னனின் பயமும்

Image result for 3 wise men and child jesus

கிழக்கு தேசத்தில் மூன்று வானியல் ஞானிகள் இருந்தார்கள். அவர்கள் காலத்தின் மாற்றங்களையும், வானத்தின் நிகழ்வுகளையும் வைத்து சம்பவங்களை அறிந்து கொள்ளும் திறன் படைத்தவர்கள். அதிலும் குறிப்பாக வானத்தில் தோன்றும் நட்சத்திரங்களை வைத்து உலகில் நடக்கும் முக்கிய சம்பவங்களை கணிப்பதில் அவர்கள் சிறந்து விளங்கினார்கள்.

ஒருநாள் அவர்கள் வானத்தை ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் போது அதைக் கண்டார்கள்.

ஒரு வால் நட்சத்திரம். வழக்கத்துக்கு மாறாக, ஒரு புத்தம் புதிய வால் நட்சத்திரம். இதுவரை பார்த்த நட்சத்திரங்களிலிருந்து வேறுபட்டுத் தோன்றிய வால் நட்சத்திரம் அவர்களுடைய கவனத்தில் ஆர்வத்தைக் கூட்டியது. அவர்கள் அந்த நட்சத்தித்தின் தோன்றல் காரணம் குறித்து தங்களுக்குள் பேசத் துவங்கினார்கள்.

தங்கள் கலந்துரையாடலின் முடிவில் அந்த வால்நட்சத்திரம் புதிய அரசன் பிறந்திருப்பதன் அடையாளம் என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். வால்நட்சத்திரம் யூதேயா நாட்டின் மேல் தன்னுடைய வெளிச்ச வாலை நீட்டிக் கொண்டிருந்தது.

அப்படியானால், யூதேயா நாட்டில் ஒரு மன்னன் பிறந்திருக்க வேண்டும். யூதேயாவின் மன்னன் ஏரோதின் அரண்மனையில் தான் அவன் பிறந்திருக்க வேண்டும். ஞானிகள் யூதேயா நோக்கிப் பயணம் செய்ய முடிவெடுத்தார்கள். ஏரோதின் அரண்மனைக்குச் சென்று புதிய மன்னனைக் கண்டு வணங்கி அவருக்கு பரிசுகள் அளிக்க வேண்டும் என்பது அவர்களுடைய எண்ணம்.

ஞானிகள் தங்களுக்குள்ளே கலந்துரையாடிக் கொண்டு, விலையுயர்ந்த ஆடைகளை அணிந்து, பொன், தூபம், நறுமணப் பொருளான வெள்ளைப் போளம் இவற்றை காணிக்கையாக எடுத்துக் கொண்டு நல்ல ஒட்டகங்களில் ஏறி ஏரோது மன்னனின் அரண்மனையை நோக்கி பயணித்தார்கள். அரண்மனை யூதேயா நாட்டின் தலை நகரான எருசலேமில் இருந்தது.

அரண்மனையைச் சென்றடைந்த ஞானிகள் ஏரோது மன்னனைக் கண்டு வணங்கினார்கள். தனக்கு முன்னால் வந்திருக்கும் ஞானிகளைக் கண்ட ஏரோது நெற்றி சுருக்கினான். காரணம் புரியாமல் குழம்பினான்.

‘வாருங்கள் ஞானியரே. உங்கள் வரவு நல்வரவாகுக. நீங்கள் யார்? . என்ன சேதி ?’ மன்னன் கேட்டான்.

ஞானியர்கள் மன்னனின் முன்னால் தலை வணங்கி தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்கள்.

‘அரசே என் பெயர் காஸ்பர், இவர் மெல்கியர், பெல்தாசர் நாங்கள் மூவரும் யூதர்களின் அரசரைக் காண வந்திருக்கிறோம்’ ஞானிகள் சொன்னார்கள்.

‘நான் தான் இந்த நாட்டின் மன்னன். உங்களுக்குத் தெரியாதா ?’ மன்னன் புன்னகைத்தான்.

‘அரசே மன்னிக்க வேண்டும். யூதர்களுக்கு அரசனாக வேண்டிய ஒரு பாலகன் பிறந்திருக்கிறானே. அவரைக் காண வந்திருக்கிறோம்’

‘என்ன உளறுகிறீர்கள். அரண்மனையில் என்னுடைய வாரிசுகள் யாரும் பிறக்கவில்லை. உங்களுக்கு யாரோ தவறான தகவலைச் சொல்லியிருக்கிறார்கள்’ மன்னன் சொன்னான்.

‘இல்லை அரசே. மக்கள் யாரும் எங்களிடம் எதுவும் சொல்லவில்லை, வானத்து நட்சத்திரம் சொல்லிற்று. அதனால் தான் வந்தோம்.’

‘வானத்து நட்சத்திரமா ? புரியவில்லையே ?’ மன்னன் கேட்டான்.

‘ம் அரசே. வானத்தில் புதிதாய் வால் நட்சத்திரம் ஒன்றைக் கண்டோம். அதன் பொருள் ஒரு மீட்பர், ஒரு மாபெரும் மன்னன் பிறந்திருக்கிறார் என்பது தான். அந்த அரசர் யூதேயாவில் தான் பிறந்திருக்கிறார். அதனால் தான் இங்கே வந்தோம்’

‘நீங்கள் தவறாகக் கணித்திருப்பீர்கள். இங்கே புதிய அரசன் பிறக்கவில்லை’

‘அதெப்படி அரசே அவ்வளவு உறுதியாகச் சொல்கிறீர்கள். ஒரு வேளை அரண்மனையில் பிறக்காத ஏதேனும் குழந்தை நாளை அரசராகலாம் இல்லையா ?’ ஞானிகள் சொன்னதும் மன்னன் அதிர்ந்தான்.

‘என்ன சொல்கிறீர்கள்’

‘ம் அரசே. புதிய அரசர் பிறந்திருக்கிறார் என்பது மறுக்க முடியாத உண்மை. அவர் அரண்மனையில் பிறக்கவில்லை என்பதும் இப்போது தெளிவாகி விட்டது. அப்படியானால் அவர் நாட்டில் வேறு ஏதோ ஒரு வீட்டில் தான் பிறந்திருக்க வேண்டும்’ ஞானிகள் உறுதியுடன் சொன்னார்கள்.

‘சரி. நீங்கள் அரண்மனையிலேயே சில நாட்கள் தங்கியிருங்கள். உங்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும்’ மன்னன் கூறினான்.
ஞானிகள் அகன்றதும் மன்னன் அரண்மனைப் பணியாளனை அழைத்தான்,

‘எல்லா தலைமைக் குருக்களையும், மக்களிடையே இருக்கும் மறைநூல் அறிஞர்கள் அனைவரையும் உடனே அரண்மனையில் ஒன்று கூட்டு’ என்று ஆணையிட்டான். மன்னனின் ஆணைப்படி அனைவரும் அரசர் முன்னிலையில் ஒன்று திரண்டனர்.

‘நான் உங்களை எதற்குக் கூட்டி வந்திருக்கிறேன் தெரியுமா ?’ மன்னன் கேட்டான்.

‘இல்லை அரசே. ஏதோ அவரச நிலை என்பது மட்டும் புரிகிறது’ தலைமைக் குரு சொன்னார்.

‘கிழக்கு திசை நாட்டிலிருந்து மூன்று ஞானிகள் அரண்மனைக்கு வந்திருக்கிறார்கள். யூதர்களின் புதிய அரசனைச் சந்திப்பதற்காக !’ மன்னன் சொல்லி நிறுத்தினான்.

‘புதிய மன்னனா ?’

‘ம். அப்படித் தான் அவர்கள் சொன்னார்கள். புதிய வால் நட்சத்திரம் ஒன்றைக் கண்டார்களாம். அதன் படி ஒரு புதிய மீட்பர் நம்முடைய நாட்டில் தோன்றியிருக்க வேண்டும் என்பது அவர்களுடைய அசைக்க முடியாத நம்பிக்கை’

மன்னன் சொல்லச் சொல்ல அனைவரும் குழம்பிப் போய் ஒருவரையொருவர் பார்த்தார்கள்.

‘எனக்கு இப்போது ஒரு விஷயம் தெளிவாக வேண்டும். அரசரோ, மீட்பரோ, மெசியாவோ ஒருவர் நம்முடைய நாட்டில் பிறக்கிறார் என்றால் அவர் எங்கே பிறப்பார் ? அரண்மனையில் அவர் பிறக்கவில்லை ! அப்படியானால் எங்கே பிறந்திருக்கக் கூடும் ?’

‘பெத்லகேம் !’ மறைநூல் அறிஞர் ஒருவர் சொன்னார்.

‘பெத்லகேம் ? என்ன சொல்கிறீர்கள் ? அந்த கிராமத்திலா அவர் பிறப்பார். அது ஒரு பின் தங்கிய கிராமம் அல்லவா ? அங்கே இருப்பவர்கள் எல்லோரும் சாதாரண ஏழைகள் அல்லவா ? ஞானிகளோ, அரச பரம்பரையினரோ அங்கே இல்லையே ?’ மன்னன் சந்தேகக் கேள்விகளை அடுக்கினான்.

‘ஆனால் மறைநூல் வார்த்தை அப்படிச் சொல்கிறது அரசே ?’

‘மறை நூல் வாக்கு சொல்கிறதா ?’

‘ ஆம்.. அரசே. மீக்கா எனும் தீர்க்கத் தரிசி ஒருவர் பல நூறு ண்டுகளுக்கு முன்பே சொல்லியிருக்கிறார்’

‘என்ன சொல்லியிருக்கிறார். தெளிவாகச் சொல்லுங்கள்’ மன்னனின் குரலில் அதிர்ச்சி மெலிதாக வெளிப்பட்டது.

‘யூதா நாட்டு பெத்லேகேமே, யூதாவின் ஆட்சி மையங்களில் நீ சிறியதே இல்லை. ஏனெனில் என் மக்களாகிய இஸ்ரயேலரை ஆயரென ஆள்பவர் ஒருவர் உன்னிலிருந்தே தோன்றுவார். என்பதே அந்த வாக்கு அரசே’

‘அப்படியானால் ஞானிகள் சொன்னது உண்மையாக இருக்கலாம். மீட்பர் ஒருவர் பெத்லேகேமில் பிறந்திருக்கலாம் என்று நினைக்கிறீர்களா ?’ மன்னன் மீண்டும் கேட்டான்.

‘அப்படி ஒரு முடிவிற்குத் தான் வரவேண்டியிருக்கிறது அரசே. வானியல் ஞானிகள் சொன்னது உண்மையா என்பது எங்களுக்குத் தெரியாது. ஆனால் அது உண்மையாய் இருக்கும் பட்சத்தில் மீட்பர் பெத்லேகேமில் பிறந்திருக்க நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன’ அவர்கள் உறுதியுடன் சொல்ல ஏரோது ஏகமாய் கலங்கினான். தன் அரியணை பறிபோய் விடுமோ என பரிதவித்தான்.

இந்தச் செய்தி எருசலேம் முழுவதும் பரவியது.எருசலேம் வாழ் மக்களுக்கு இந்த செய்தி அதிர்ச்சியூட்டுவதாகவும், கலக்கமூட்டுவதாகவும் இருந்தது.

மன்னன் ஞானிகளை அழைத்தான்.

‘ஞானிகளே. என்னிடம் உண்மையைச் சொல்லுங்கள் நீங்கள் விண்மீனைக் கண்டது உண்மை தானே ?’ மன்னன் அதிகாரத் தோரணையில் கேட்டான்.

‘ம் அரசே. மன்னனிடம் நாங்கள் பொய் சொல்வோமா ?’ ஞானிகள் பதில் சொன்னார்கள்.

‘சரி. நான் மறைநூல் அறிஞர்களையும், தலைமைக் குருக்களையும் அழைத்து விசாரித்தேன். நீங்கள் சொல்லும் மீட்பர் பெத்லேகேமில் பிறந்திருக்கக் கூடும் என்பது அவர்களின் கணிப்பு’ மன்னன் சொன்னான்.

‘நன்றி அரசே. நாங்கள் சென்று அவரைக் கண்டு வணங்க வேண்டும். நாங்கள் புறப்படலாமா ?’

‘கண்டிப்பாக. நீங்கள் பெத்லகேம் சென்று அவரைத் தரிசியுங்கள். அவரைத் தரிசித்தபின் என்னிடம் வந்து அவருடைய இருப்பிடத்தைத் தெரியப்படுத்துங்கள். அவரை நானும் வணங்கவேண்டும். என்னுடைய நாட்டில் மீட்பர் பிறந்திருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. அவருக்கு நான் அரச மரியாதை செலுத்த வேண்டும். எனவே நீங்கள் பாலனைக் கண்டு வணங்கியபின் என்னிடம் வந்து சொல்லுங்கள்’ மன்னன் சொன்னான். அவர்கள் கண்டு வந்து சொன்னதும் பாலனைக் கொன்றுவிடவேண்டும். அரசராக நான் இருக்கும் வரை இன்னொரு அரசர் இந்த நாட்டில் பிறக்கக் கூடாது. ஏரோது உள்ளுக்குள் சதித்திட்டம் தீட்டினான்.
ஞானிகள் மகிழ்ச்சியுடன் பயணத்தைத் தொடங்கினார்கள். அவர்கள் வால்நட்சத்திரம் இருக்கும் திசை நோக்கி நடந்து கொண்டே இருந்தார்கள். வால் நட்சத்திரம் அவர்களுக்கு முன்னால் நகர்ந்து கொண்டே இருந்தது. சென்று கொண்டிருந்த விண்மீன் ஒரு இடத்தில் வந்ததும் நின்றது. அதன் ஒளி ஒரு குடிசையின் மீது படர்ந்தது. விண்மீன் நின்றதைக் கண்டதும் ஞானிகள் உற்சாகமடைந்தார்கள். அந்த குடிசைக்குள் விரைந்து சென்றார்கள்.

அது ஒரு தொழுவம். அங்கே மரியாவின் கைகளில் ஒரு குழந்தை. கந்தல் துணியால் சுற்றப்பட்ட கள்ளம் கபடமற்ற மழலை முகம். அருகிலேயே யோசேப்பு. சுற்றிலும் கால்நடைகள்.

ஞானிகள் ஒரு வினாடி திடுக்கிட்டனர். வானத்தில் அதிசய வால்நட்சத்திரம். பூமியில் தொழுவத்தில் அரசரா ? இத்தனை எளிமையாய் ஒரு மீட்பரா என்று வினாடி நேரம் உள்ளுக்குள் கேள்விகளை உருட்டியவர்கள் நெடுஞ்சாண்கிடையாக விழுந்தனர்.

பட்டாடைகள் தொழுவத்தின் அழுக்கில் புரள, தங்களுக்கு முன்பாக விழுந்து கிடக்கும் மூன்று ஞானிகளைக் கண்ட மரியாவும், யோசேப்பும் பதறினார்கள்.

‘ஐயா நீங்கள் யார் ? எங்கிருந்து வருகிறீர்கள்’ யோசேப்பு கேட்டார்.

‘நாங்கள் கிழக்கு திசையிலிருந்து வரும் ஞானிகள். நீண்ட தூரம் பயணித்து இங்கே வந்திருக்கிறோம். அரசரைக் காண்பதற்காக !’ அவர்கள் சொன்னார்கள்.

‘இந்தக் குழந்தையைப் பற்றி உங்களுக்குச் சொன்னது யார் ?’ யோசேப்பு வியந்தார்.

‘வானம் ‘

‘வானமா ?’

‘ம். வானத்தில் ஒரு அதிசய வால் நட்சத்திரம் தோன்றியது. அதுதான் எங்களை வழிநடத்தியது !. இவரைக் காணும் பாக்கியம் எங்களுக்குக் கிடைத்திருப்பதில் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம். ஞானிகள் சொன்னார்கள்’.

‘இதோ பொன்…’ இது எனது காணிக்கை. ஒரு ஞானி தன் ஒட்டகத்தில் சுமந்து வந்திருந்த மூட்டையை குழந்தையின் முன்னால் வைத்தார்.

‘இது தூபம். சாம்பிராணி… என்னுடைய காணிக்கை’ இரண்டாவது ஞானி காணிக்கை படைத்தார்.

‘இதோ வெள்ளைப் போளம். இது என்னுடைய காணிக்கை’ மூன்றாவது ஞானி பேழையைத் திறந்து காணிக்கை கொடுத்தார்.

பொன் மிக விலையுயர்ந்த அந்தஸ்தின் அடையாளம். தூபம் என்பது வழிபாட்டுக்குரியவர் என்பதன் அடையாளம். வெள்ளைப்போளம் மிகவும் நறுமணம் மிகுந்த பொருள். இறந்தவர்களை அடக்கம் செய்யும் போது இதை கல்லறையில் வைப்பதும் அரச குலத்தினரின் வழக்கம். மரியாவும், யோசேப்பும் நடப்பதையெல்லாம் வியப்புடன் பார்த்துக் கொண்டே இருந்தார்கள்.

ஞானிகள் குழந்தையை வணங்கிவிட்டு விடைபெற்று அரண்மணை நோக்கி பயணித்தார்கள்.

இரவு. ஞானிகள் ஓரிடத்தில் தங்கி ஓய்வெடுத்தார்கள்.

அவர்கள் மூவருமே அன்று ஒரு கனவு கண்டார்கள். கனவில் ஒரு தேவதூதன் தோன்றினான்.
‘ஞானிகளே. நீங்கள் ஏரோது மன்னனின் அரண்மனைக்குச் செல்லவேண்டாம். அவனுக்கு எந்தத் தகவலையும் அளிக்க வேண்டாம். வேறு வழியாக உங்கள் நாட்டுக்குத் திரும்பிச் செல்லுங்கள்’

கனவு கண்ட அவர்கள் திடுக்கிட்டு விழித்தார்கள். அனைவரும் ஒரே கனவைக் கண்டிருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்தார்கள். இது கடவுளின் கட்டளை தான். நாம் நம்முடைய பயணத்தை மாற்றிக் கொள்வோம். இனிமேல் எருசலேமிற்கே செல்லவேண்டாம். வேறு வழியாக நம்முடைய நாட்டுக்குப் போவோம். மன்னனின் கட்டளையை மீறலாம், ஆனால் கடவுளின் கட்டளையை மீறக் கூடாது !’ ஞானிகள் முடிவெடுத்தார்கள்.

அதே இரவில் யோசேப்பும் ஒரு கனவு கண்டார். கனவில் கடவுளின் தூதன் யோசேப்பை நோக்கி,
‘யோசேப்பு ! நீர் எழுந்து குழந்தையையும் எடுத்துக் கொண்டு எகிப்து நாட்டுக்குச் செல்லும். இங்கே ஏரோது மன்னன் குழந்தையைக் கொல்ல சூட்சி செய்கிறான். நான் சொல்லும் வரை நீங்கள் எகிப்திலேயே தங்கியிருங்கள்’ என்றான்.

யோசேப்பு உடனே எழுந்தார். மரியாவை எழுப்பி, இயேசுவையும் எடுத்துக் கொண்டு அந்த இரவிலேயே எகிப்தை நோக்கிப் பயணித்தார்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink Closed

இயேசு வரலாறு 3 : பாதகர்கள் கையில் பாலகர்கள்

Image result for Herod kills kidsஇதற்கிடையில் ஏரோது மன்னன் ஞானிகளின் வருகைக்காகக் காத்திருந்தான். நாட்கள் கடந்து கொண்டேயிருந்தன. ஞானிகளைக் காணவில்லை !

ஞானிகள் தன்னை ஏமாற்றிவிட்டு சென்றுவிட்டனர் என்பது ஏரோதுக்கு விளங்கியது. தன்னுடைய ஆணையை மீறி ஞானிகள் செயல்பட்ட கோபமும், தன்னுடைய அரசாட்சிக்கு ஆபத்தாக ஒரு அரசன் தோன்றியிருக்கும் கோபமும் அவருக்குள் பெரும் எரிமலையாக உடைந்து சிதறியது. குழந்தையைக் கொல்லவேண்டும் என்ற தன்னுடைய திட்டம் தோல்வியில் முடியுமோ என்னும் கவலை அவனை ஆட்கொண்டது. ஆனால் எப்படியும் குழந்தையைக் கொன்றே ஆகவேண்டும் என்னும் வெறி அவனுக்குள் ஊறியது. யார் அந்தக் குழந்தை ? அவன் எப்படி இருப்பான் ? அவனுடைய பெற்றோர் யார் ? எதுவுமே ஏரோதுக்குத் தெரிந்திருக்கவில்லை. அவனிடம் இருக்கும் ஒரே ஒரு செய்தி, அந்தக் குழந்தை பெத்லேகேமில் இருக்கிறது !. ஆனால் பெத்லகேம் நகரமோ ஆட்களின் கூட்டத்தால் பிதுங்கி வழிகிறது. அங்கே எப்படிக் கண்டு பிடிப்பது குழந்தையை ?

அவனுடைய மனதுக்குள் ஒரு கொடூரமான எண்ணம் பிறந்தது. எந்தக் குழந்தை என்று கண்டுபிடிப்பது தானே கஷ்டம். எந்தக் குழந்தையுமே உயிரோடு இல்லாவிட்டால் அந்தக் குழந்தையும் இறந்து போகும் அல்லவா ? அப்படியானால் எல்லா ஆண்குழந்தைகளையும் கொல்வதற்குச் சட்டம் இயற்றலாமா ? அப்படி ஒரு கொடூரமான சட்டம் இயற்றினால் சீசரின் கோபத்துக்கு ஆளாக நேரிடுமா ? ஏரோது பலவாறாகச் சிந்தித்தான். ஆனால் அவனுடைய மனதில், தன்னுடைய சிம்மாசனத்துக்கு எங்கிருந்தும் எந்த விதத்திலும் போட்டி வந்து விடக் கூடாது. தான் இறக்கும் வரை மன்னனாகவே இருக்க வேண்டும் என்ற எண்ணம் பாறைபோல நின்றது. மனதைக் கல்லாக்கிக் கொண்டு உத்தரவிட்டான்.

‘உடனே சென்று பெத்லேகேமிலும் அதன் சுற்றுப் புறங்களிலுள்ள ஊர்களிலும் இருக்கும் இரண்டு வயதுக்குட்பட்ட அனைத்து ஆண் குழந்தைகளையும் கொன்று விடுங்கள்’ மன்னனின் ஆணை கோபத்தில் கொழுந்துவிட்டு எரிந்தது.

மன்னனின் பணியாளர்கள் மறுபேச்சுப் பேசி பழக்கமில்லாதவர்கள். ஆணையைப் பொறுக்கிக் கொண்டு பெத்லேகேமிற்குச் சென்றார்கள்.

‘இங்கே உள்ள இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளையெல்லாம் கொல்லவேண்டும் என்பது மன்னனின் ஆணை !’ வீரர்கள் சொல்ல மக்கள் அதிர்ந்தார்கள்.

‘என்ன ? குழந்தைகளைக் கொல்வதா ?’

‘பாலகர்களைப் படுகொலை செய்ய மன்னன் ஆணையிட்டிருக்கிறானா ?’

‘இருக்காது. கூடாது….ஐயோ… வேண்டாம்..’ மக்கள் அலறினார்கள். தாய்மார்கள் கதறினார்கள். ஆனால் மன்னனின் வீரர்கள் எதையும் கண்டு கொள்ளவில்லை. அவர்கள் நகருக்குள் நுழைந்தார்கள்.

சிலருடைய கைகளிலே பளபளப்பான வாள். சிலருடைய கைகளிலே கூர்மையான ஈட்டி. அவர்கள் பெத்லேகேமின் வீடுகளுக்குள் நுழைந்தார்கள். அங்கே தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகளை வாளினால் வெட்டித் துண்டாக்கினார்கள்.

அன்னையரின் மடியில் அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை இழுத்து தாய்மாரின் முன்னிலையிலேயே வெட்டித் துண்டாக்கினார்கள். பால் குடித்துக் கொண்டிருந்த பச்சைக் குழந்தைகளும் படுகொலைக்குத் தப்பவில்லை. தெருக்களில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளின் மார்பை கூர் ஈட்டிகள் குத்திப் பிளந்தன. ஈவு இரக்கமில்லாத படுகொலை நிகழ்ச்சி ஒன்று அங்கே அரங்கேறியது.

தங்கள் குழந்தைகள் தங்கள் கண் முன்னாலேயே படுகொலை செய்யப்படுவதைக் கண்ட பெற்றோர் கதறினர். எதிர்க்கும் வலுவில்லாத அவர்களுடைய அலறல் ஒலிகளால் பெத்லகேம் நிரம்பியது. தெருக்களும் வீடுகளும் மழலைகளின் இரத்தத்தால் நனைந்தது.

பெத்லேகேமின் குழந்தைகள் எல்லாம் மடிந்தபின் அடுத்திருந்த ஊர்களுக்கும் வீரர்கள் சென்றார்கள். அங்கும் வீரர்கள் படுகொலையை நிகழ்த்தினார்கள். எல்லா குழந்தைகளும் கொல்லப்பட்டபின் வீரர்கள் மன்னனிடம் சென்றார்கள்.

‘அரசே… உமது கட்டளை நிறைவேற்றப் பட்டது. பெத்லேகேமிலும் அதன் சுற்றுப் புற ஊர்களிலும் குழந்தைகளோ, சிறுவர்களோ யாருமே இப்போது உயிருடன் இல்லை’

‘யாரும் தப்பவில்லையே ?’

‘இல்லை அரசே. ஒரு உயிர் கூட தப்பவில்லை’ வீரர்கள் உறுதிபடச் சொன்னார்கள்.

ஏரோது மன்னன் மகிழ்ந்தான். தன்னுடைய அரசுக்கு எதிராகத் தோன்றிய பாலகன் இறந்து விட்டான் என்று களிப்படைந்தான். ஞானிகள் சொன்ன பாலகன் மடிந்து போயிருப்பான் என்று மகிழ்ந்தான். தன்னுடைய அரசுக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் தீர்ந்தது என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டான்.

அவன் கொல்லத் தேடிய இயேசுவோ எகிப்து நாட்டில் மரியாவின் மடியில் அமைதியாகத் துயின்று கொண்டிருந்தார்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink Closed

இயேசு வரலாறு 4 : இயேசுவின் மழலைக் காலம்

Image result for Simeon temple jesusயூதர்களுக்கு ஒரு வழக்கம் இருந்தது. அதன்படி, ஆண்குழந்தை பிறந்தால் பிறந்த எட்டாவது நாள் அவனை ஆலயத்துக்குக் கொண்டு சென்று விருத்த சேதனம் செய்ய வேண்டும். தலைப்பேறான மகன் என்றால் அவனை ஆண்டவருக்கென்று அர்ப்பணிக்க வேண்டும். அப்படி அற்பணிப்பதன் அடையாளமாக ஒரு ஜோடி மாடப் புறாக்களையோ, ஒரு ஜோடி புறாக் குஞ்சுகளையோ பலியிடவேண்டும். இயேசுவும் தலைப்பேறான மகன் என்பதால் அவருக்கும் இந்த சடங்குகள் செய்யவேண்டியிருந்தது. எனவே மரியாவும், யோசேப்பும் இயேசு பிறந்த எட்டாவது நாளில் குழந்தையை எடுத்துக் கொண்டு எருசலேம் தேவாலயத்துக்குச் சென்றார்கள்.

எருசலேமில் சிமியோன் என்றொருவர் வாழ்ந்து வந்தார். அவர் ஒரு இறைபக்தர். ஆண்டவருடைய மெசியாவைக் காண்பதற்கு முன்னால் ( மெசியா என்றால் அனுப்பப்பட்டவர் என்பது பொருள் ) சாவதில்லை என்று கடவுளின் ஆவியால் வரம் அருளப்பட்டிருந்தவர் அவர். இயேசு ஆலயத்துக்கு வந்த அதே நாளில் சிமியோனின் உள்ளத்துக்குள் ஒரு குரல் ஒலித்துக் கொண்டே இருந்தது.
‘சிமியோன் எழுந்து எருசலேம் தேவாலயத்துக்குப் போ… உனக்கு அங்கே ஒரு ஆச்சரியம் காத்திருக்கிறது. தாமதிக்காதே… போ.. ஆலயத்துக்குப் போ…’

சிமியோன் தன் உள்ளத்துக்குள் ஒலிக்கும் குரலுக்கான காரணத்தை அறியாமல் குழம்பினார். ஆனாலும் ஆலயத்துக்குரிய ஆடைகளை அணிந்து கொண்டு சிமியோன் எருசலேம் தேவாலயத்துக்கு விரைந்தார்.

மரியா குழந்தையைக் கையில் ஏந்தியபடி எருசலேம் தேவாலயத்துக்குள் நுழைந்தார். ஆலயத்தின் உள்ளே சிமியோன் அமர்ந்திருந்தார். தனது உள்ளத்தில் ஒலித்த குரலுக்கான காரணத்தை அறியவேண்டுமென்று அவருடைய மனம் துடித்துக் கொண்டிருந்தது. தனக்குக் கடவுள் காட்டப் போகும் அதிசயம் என்னவாக இருக்கும் என்று அவருடைய உள்ளம் விடாமல் கேட்டுக் கொண்டே இருந்தது. மரியா ஆலயத்தின் உள்ளே நுழைந்ததும் சிமியோனின் கண்கள் பிரகாசமடைந்தன. அவருடைய கையில் இருந்த இயேசுவைக் கண்டதும் அவருக்குள் மீண்டும் அதே குரல் ஒலித்தது.
‘உனக்கு நான் வரமளித்திருந்தேன். இப்போது கடவுளை உன் கண்கள் கண்டு கொண்டன !’

உள்ளத்துக்குள் ஒலித்த கடவுளின் குரலைக் கேட்டதும் சிமியோன் துள்ளி எழுந்து குழந்தையை நோக்கி ஓடினார். குழந்தை இயேசுவைக் கைகளில் அள்ளி எடுத்தார்.

முன்பின் தெரியாத ஒரு நபர் ஓடி வந்து தன் கைகளில் இருந்த குழந்தையை அள்ளி எடுத்ததைக் கண்ட மரியா திகைத்தார். அதற்குள் சிமியோன் குழந்தையை கைகளில் ஏந்தி,
‘கடவுளே உம்முடைய வார்த்தையின் படி உமது அடியானாகிய என்னை இப்போது அமைதியுடன் செல்ல அனுமதித்து விட்டீர். இதோ… இந்தக் குழந்தையே கடவுளின் ஒளி. இஸ்ரயேல் மக்களின் இருள் அகற்றும் ஒளி. மக்கள் அனைவரின் மீட்புக்காகவும் நீர் அனுப்பிய உம் மகனை என் கண்கள் கண்டு கொண்டன. இதோ இந்தக் குழந்தை இஸ்ரயேல் மக்கள் பலருடைய வீழ்ச்சிக்கும், எழுச்சிக்கும் காரணமாக இருப்பான்’ என்றார்.

மரியாவும், யோசேப்பும் சிமியோனின் வார்த்தைகளைக் கேட்டு பரவசமடைந்தார்கள். மரியாவின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தோடியது. சிமியோன் மரியாவின் பக்கம் திரும்பி
‘உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும்’ என்றார்.

மரியாவுக்கு அந்த வார்த்தைகளின் பொருள் விளங்கவில்லை. அமைதியாய் நின்றார்.

அங்கு அன்னா என்றொரு பெண் இறைவாக்கினரும் இருந்தார். எண்பத்து நான்கு வயதான அவர் எருசலேம் தேவாலயத்திலேயே அல்லும் பகலும் திருப்பணி செய்து வந்தார். அவரும் குழந்தை இயேசுவைக் கண்டதும் பரவசமடைந்தார்.

‘இதோ.. இந்தக் குழந்தை தான் நம்முடைய மீட்பர். இவர் கடவுளின் மகன். இவரால் தான் மனுக்குலம் மீட்படையப் போகிறது’ என்று அனைவரிடமும் இயேசுவைப் பற்றிப் புகழ்ந்து பேச ஆரம்பித்தார்.

மரியாவும், யோசேப்பும் நிகழும் அனைத்தையும் வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.

பின் யூத மரபுப்படி பாலன் இயேசுவுக்குச் செய்ய வேண்டிய விருத்தசேதனத்தை நிறைவேற்றி, ஆலயத்தில் பலிகளை இட்டபின் கலிலேயாவில் இருந்த தங்கள் ஊராகிய நாசரேத்துக்குத் திரும்பினார்கள்.

அவர்களுடைய சிந்தனைகள் முழுவதும் சிமியோனையும், அன்னாவையுமே சுற்றிச் சுற்றி வந்தன. அவர்கள் குழந்தை இயேசுவை பாசம் வழிய, பக்தியுடன் பார்த்தார்கள்.

எகிப்தில் இயேசுவும் குடும்பமும் கிலியோபாலிஸ் என்னுமிடத்தில் தங்கியிருந்தது. அந் நகரத்திலிருந்து சுமார் பத்து மைல் தொலைவில் தான் பிரமிக்க வைக்கும் பிரமிடுகள் இருந்தன. இயேசுவின் மழலைக்காலம் எகிப்தியரின் பிரமாண்டமான கற் சிலைகளோடு கழிந்தது. தாயார் இயேசுவுக்கு மழலையிலேயே ஒரு போதனையை ஊட்டி வளர்த்தினாள். ‘நமது கடவுள் ஒருவரே’.

வருடங்கள் இரண்டு உருண்டோடின. ஏரோது மன்னன் நோயில் விழுந்தான். எத்தனையோ தாய்மாரின் அழுகை காரணமாய் இருந்திருக்கலாம், அல்லது அவனால் கொடூரமாக கொல்லப்பட்ட அவனுடைய உறவினர்களே காரணமாக இருக்கலாம், அல்லது அவனுடைய அடக்குமுறை ஆட்சிக்கு எதிராக எழுந்த மக்களின் சாபம் காரணமாக இருக்கலாம். அவன் வலியினால் துடித்தான். உடலெங்கும் வீக்கம் காணப்பட்டது. நடக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டான். தன்னுடைய சாவுக்காய் யாரும் சங்கடப் படப் போவதில்லை என்று அவனுக்குத் தோன்றியது. முப்பத்து ஏழு ஆண்டுகள் கொடுங்கோல் ஆட்சி புரிந்த ஏரோது மன்னனின் ஆட்சி அவனுடைய பரிதாபமான சாவுடன் முற்றுப் பெற்றது.

ஏரோதின் மரணத்துக்கு முன் அவன் உயில் ஒன்றை எழுதி வைத்திருந்தான். அதன்படி அவனுடைய ஒரு மகன் ஆர்கிலேயு யூதேயாவின் மன்னனாக முடிசூட்டப் பட வேண்டும். யூதேயா முழுவதுக்குமான பேரரசராக ஆர்க்கிலேயு முடிசூட்டப் பட்டாலும் கலிலேயா அவனுடைய கட்டுப்பாட்டுக்கு வராது, அது ஏரோதின் இன்னொரு மகனான ஏரோது அந்திபாஸ் ஆளுகைக்குள் வந்தது. ஏரோதின் சாவுச் செய்தியை அறிந்த யோசேப்பும் மரியாவும், குழந்தை இயேசுவுடன் நாடு திரும்ப முடிவெடுத்தனர். ஆர்க்கிலேயு ஆளும் பகுதிகளில் வாழ்வதைத் தவிர்க்க விரும்பிய யோசேப்பு எருசலேமில் தங்கலாம் என்னும் தன்னுடைய எண்ணத்தை விட்டு விட்டு மீண்டும் கலிலேயாவுக்கே திரும்பினார். தச்சு வேலை செய்து தன்னுடைய வாழ்க்கையைத் தொடரலாம் என்று முடிவெடுத்து நாசரேத்துக்கே திரும்பினார். இரண்டு வருட ஆச்சரியமும், பயமும், நாடோடித்தனமானதுமான வாழ்க்கை முடிவுக்கு வர யோசேப்பு சற்று மன நிம்மதியுடன் தன்னுடைய தச்சு வேலையைத் துவங்கினார்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink Closed

இயேசு வரலாறு 5 : இளமையில் இயேசு

Image result for Jesus at age 12

சிறுவயது இயேசு தந்தையின் தச்சுக் கூடத்தில் விளையாடி வளர்ந்தார். தந்தை செய்து தரும் மரவேலைப்பாடுள்ள பொருட்களை வைத்து விளையாடுவதில் மிகுந்த விருப்பம் அவருக்கு. இயல்பிலேயே இயற்கையோடும் பறவைகள் விலங்குகளோடும் மிகவும் அன்பு கொண்டவராக இருந்தார் இயேசு. இயற்கையின் அழகை ரசிப்பதும், அதைக் குறித்த கேள்விகளை எழுப்புவதும், பறவைகளோடு நேசமாய் பேசி விளையாடுவதுமாய் ஆனந்தமாய் இருந்தது அவருடைய மழலைக்காலம்.

தந்தை அவருக்கு இறைவாக்கினர்களின் ஏட்டுச் சுருள்களை வாசித்து விளக்கம் சொல்வதுண்டு. தலை முறைகளின் கதைகளையும், ஆதாம் துவங்கி சில தலைமுறைகளுக்கு முன்பு வரை நடந்த கதைகளையும் தந்தை அவருக்கு விளக்கிச் சொல்ல அதை ஆர்வமாய்க் கேட்டு வளர்ந்தார் இயேசு. குறிப்பாக மோசேயின் கதைகளும், இறைவாக்கினர்களின் பணிகளும், தாவீது மன்னன், சாலமோன் மன்னன் போன்றவர்களுடைய இறை புகழ்ச்சிப் பாடல்கள் இவற்றை அவர் வாசித்து நேசிக்கத் துவங்கினார். திரும்பத் திரும்ப தந்தையிடமிருந்து கதைகள் கேட்டுக் கேட்டு அவை அவருடைய மனதில் பசுமரத்தாணி போல பதிந்தது.

அவருடைய அன்பு மிகவும் பரந்து பட்டதாக இருந்தது. அழகிய பறவை முதல், அசிங்கமான பூச்சிகள் வரை எல்லாவற்றையும் ஒரே போல பாவித்தார். தந்தையிடமும், தாயிடமும் காட்டும் அன்பை அனைவரிடமும் காட்டினார். அவருடைய பரந்து பட்ட அன்பைக் கண்ட தந்தை வியந்தார்.

சிறுவயதிலேயே அருகிலிருக்கும் மலைகளுக்குச் சென்று ஏறி விளையாடுவது இயேசுவுக்குப் பிடித்தமானதாக இருத்தது. சிறுவர்களோடு சண்டையிடாமலும், போட்டியிடாமலும் விளையாடுவது அவருடைய பாணியாய் இருந்தது.

வாரத்தின் கடைசி நாளான ஓய்வு நாளில் எந்த வேலையையும் செய்யாமல் இருக்கும் சட்டத்தை யோசேப்பு கடைபிடித்து வந்தார். அவர் அந்த நாளில் எந்த வேலையும் செய்வதில்லை. தச்சு வேலை, தங்கள் கால்நடைகளைக் குளிப்பாட்டுவது போன்ற வேலைகள் மட்டுமல்லாமல், சிறு சிறு வேலைகளான விளக்கை ஏற்றி வைப்பது, வீட்டை சுத்தம் செய்வது போன்ற வேலைகளைக் கூட செய்ய சட்டம் அனுமதிப்பதில்லை. யோசேப்பு இயேசுவுக்கும் அவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தார்.

இயேசுவுக்குப் பிடித்தமான இன்னொரு இடம் தொழுகைக் கூடம். அங்குள்ள குருக்களிடம் ஆலோசனைகளும், அறிவுரைகளும் பழைய ஏட்டுச் சுருள்களில் எழுதப்பட்டிருக்கும் செய்திகளுக்கான விளக்கங்களும் இயேசுக்குத் தேவையாக இருந்தது. எனவே எப்போதெல்லாம் கலந்துரையாடல்கள், விளக்கங்கள் நடந்தாலும் அங்கே தவறாமல் கலந்து கொண்டார். குருக்களுக்குப் பணிவிடைகள் செய்தும் மறைநூல் அறிவை வளர்த்தார். ஆனால் தான் கற்றதையெல்லாம் அப்படியே ஒப்புக்கொள்ள இயேசுவுக்கு மனம் வரவில்லை. சின்ன வயதிலேயே மறைநூல் அறிஞர்களின் பேச்சுக்கும், நடத்தைக்கும் இடையே இருக்கும் வேறுபாடுகளை உணரும் பக்குவம் வந்திருந்தது. ஏன் என்று கேள்வி எழுப்பும் ஞானம் வந்திருந்தது.

இயேசுவுக்கு பதினோரு வயது நிரம்பியபோது நாட்டில் மிகப்பெரிய கலகம் ஒன்று பிறந்தது. ஆளும் ஏரோது மன்னனுக்கு விரோதமாக யூதாஸ் என்னும் போராளி தலைமையில் ஆயிரக்கணக்கானோர் கிளர்ச்சியில் ஈடுபட்டார்கள். ஆனால் கிளர்ச்சியாளர்கள் வளர்ச்சியடைய ஏரோது விடவில்லை. அவனுடைய குரூரம் விஸ்வரூபமெடுத்து தலைவிரித்தாடியது. கண்களில் கோபத்தின் கடல் கொந்தளித்தது. இரு விழிகளும் எரிமலையாய் தெரிந்தன. ஆணையிட்டான். கிளர்ச்சியாளர்களைச் சிலுவையில் அறைய ஆணையிட்டான். கிளர்ச்சியாளர்கள் பலவந்தமாய் கைது செய்யப்பட்டனர். கைதான அனைவருமே அடித்து நொறுக்கப்பட்டனர். கொல்லப்பட்டனர். சிலுவையில் அறையப்பட்டு !. அப்படிச் செத்தவர்களின் எண்ணிக்கை சுமார் இரண்டாயிரம்.

அந்த நிகழ்வு சிறுவன் இயேசுவின் மனதில் என்ன விளைவுகளை ஏற்படுத்தியிருக்கக் கூடும் ? கிளர்ச்சி செய்தால் மரணம் நிச்சயமென்றா ? அல்லது ஆளும் அரசுக்கு எதிராக யாரும் வாய்திறக்கக் கூடாது என்றா ? அல்லது ஏதேனும் பய உணர்வுகளையா ? தெரியவில்லை. ஆனால் சிலுவை மரணம் என்பது எப்படிப் பட்டது என்பதை நேரில் கண்டறியும் வாய்ப்பு அவருக்கு பதினோரு வயதிலேயே வாய்த்தது !

இப்படிப்பட்ட அனைத்து விதமான கொடுமைகளிலிருந்தும் தங்களை மீட்க ஒரு மீட்பர் வருவார் என்று மக்கள் அனைவரும் நம்பினார்கள். அவர்களுடைய நம்பிக்கையைப் பயன்படுத்தி பலர் தான் தான் மெசியா என்று சொல்லிக் கொண்டு அவர்களிடம் உரையாற்றுவதும், பின் அவர்கள் போலிகள் என்று தெரியவருவதும் அவ்வப்போது நிகழ்ந்து கொண்டிருந்தது. இயேசு சிறுவனாக விளையாடிக்கொண்டிருந்த காலத்திலும், திதேயுஸ் என்னும் ஒருவன் தான் தான் கடவுள், மீட்பர் என்று சொல்லித் திரிந்தான். மக்கள் அவனிடம் ஏதேனும் அருங்குறிகள் செய்து காட்டுமாறு விண்ணப்பம் வைத்தனர். அவன் மக்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு ஒலிவமலையில் ஏறி நின்று, எருசலேம் தேவாலயத்தின் சுவர் இடிந்து விழட்டும் என்றார். சுவருக்குக் காது கேட்கவில்லை. அது அப்படியே நின்றது. திதேயுஸின் மீட்பர் பிம்பம் உடைந்தது. இந்த செய்திகளெல்லாம் மக்கள் எந்த அளவுக்கு ஒரு மீட்பரை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள் என்பதை இயேசுவுக்குப் புரியவைத்தன.

அறிவிலும் ஞானத்திலும் தொடர்ந்து வளந்து வந்த இயேசு பன்னிரண்டு வயதுப் பாலகனானார்.

பாஸ்கா விழாக் காலம்.

இயேசுவின் பன்னிரண்டாவது வயதில் வந்த பாஸ்கா வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகவும், இயேசுவின் வாழ்க்கைக்கு ஒரு சிறு முன்னுரை போலவும் அமைந்தது.

பாஸ்கா என்பது யூதர்கள் மிகவும் சிறப்பாகக் கொண்டாடும் ஒரு விழா. அந்த விழாவிற்காக சுற்றிலுமுள்ள எல்லா ஊர்களிலுமிருந்தும் மக்கள் திரண்டு எருசலேம் தேவாலயத்துக்கு வருவது வழக்கம். அந்நாட்களில் வாகன வசதிகள் ஏதும் இல்லாததால் மக்கள் கூட்டம் கூட்டமாக ஒவ்வொரு ஊர்களிலிருந்தும் கால்நடைகள் மற்றும் தேவையான உணவுப் பொருட்களுடன் எருசலேம் நோக்கி பெரும்பாலும் நடந்தே செல்வார்கள். பெரும் பேரணி போல மக்கள் கூட்டம் செல்வதனால் பயணக் களைப்பிலிருந்தும், கொள்ளையர்களின் தாக்குதல் பயத்திலிருந்தும் தப்பிவிடலாம் என்பது தான் அவர்களின் எண்ணம்.

நாசரேத் ஊர் மக்களும் ஒரு நாளைக் குறிப்பிட்டு அந்த நாளில் எருசலேம் செல்வதென்று முடிவு செய்தார்கள். அதன்படி அவர்கள் பயணத்தையும் துவங்கினார்கள். யோசேப்பு, மரியா, இயேசு மூவரும் அந்தப் பயணத்தில் ஈடுபட்டிருந்தனர். இயேசு முதன் முறையாக எருசலேம் தேவாலயத்துக்குச் செல்கிறார்.

பயணம் எருசலேம் தேவாலயத்தை அடைந்தது. மக்கள் திரள் திரளாக வந்து எருசலேம் ஆலயத்தை முற்றுகையிட்டார்கள். இயேசுவும் எருசலேம் ஆலயத்துக்கு வந்தார். எருசலேம் என்னும் புனித நகரம் இயேசுவின் மனதுக்குள் இருந்த ஆன்மீக ஊற்றுகளைத் திறந்து விட்டது மோரியா மலைமீது கட்டப்பட்டிருந்த எருசலேம் தேவாலயத்தைக் கண்டதும் இயேசுவின் மனதுக்குள் சொல்ல முடியாத பரவசம் பாய்ந்தோடியது. அவர் எருசலேம் தேவாலயத்தைப் பயபக்தியுடன் பார்த்தார். அவருடைய பாதங்கள் ஆலய முற்றத்தில் பதிந்தன. ஆலயம் பெருமையடைந்தது. பாலன் எருசலேம் தேவாலயத்தைச் சுற்றி நடந்தார். தான் வந்து சேரவேண்டிய இடத்துக்கு வந்து சேர்ந்து விட்டோம் என்ற ஒரு எண்ணம் அவருக்குள் நிழலாடியது. ஏதோ ஓர் பூர்வ ஜென்ம ஈர்ப்பு அந்த ஆலயத்தோடு தனக்கு இருப்பதாய் அவர் உணர்ந்தார். ஆலயத்தை நேசிக்கத் துவங்கினார். ஆலயத்தைச் சுற்றி நடந்தார். ஒவ்வோர் இடமாக தன் பாதங்களைப் பதித்தும், தன் கை விரல்களால் தொட்டுத் தடவியும் ஆலயத்தை தனக்குள் குறித்துக் கொண்டார்.

ஆலயத்தின் அழகு வாசலருகே வந்தார். அழகு என்பது அந்த வாசலின் பெயர். யோசேப்பும் குடும்பமும் ஆலயத்துக்குள் நுழைவதற்கான வரிப் பணத்தைச் செலுத்தி விட்டு ஆலயத்துள் நுழைந்தார்கள். எருசலேம் தேவாலயம் இருந்த யூதேயா சுதந்திர நாடாக இல்லாததால் ஆலயத்துக்குள் செலவிடுவதற்கென சீசரின் உருவம் பொறித்த நாணயம் இருந்தது. தங்களிடம் இருக்கும் வெள்ளியையோ, பொன்னையோ அந்த நாயணமாக மாற்றி தான் ஆலயத்துள் செலவிட முடியும். அந்த பணம் மாற்றுவதற்கென தனியே ஆட்கள் கடைவிரித்திருந்தார்கள். அவர்கள் பெரும்பாலும் தலைமைக் குருக்களின் ஆட்களோ, அல்லது ஆளுநரின் ஆட்களோ தான். அவர்கள் பாதிக்குப் பாதி பணம் கொடுத்து கொள்ளை லாபம் அடித்துக் கொண்டிருந்தார்கள்.

‘ஆலயத்துக்குள் எதற்கு பணம் தேவை ? கடவுளை வழிபட அல்லவா ஆலயத்துக்கு வருகிறோம் ?’ இயேசுவின் கேள்விக்கு யோசேப்பு விளக்கம் கொடுத்தார்.

‘ஆலயத்தில் பலியிடும் வழக்கம் இருந்தது. பல்வேறு காரணங்களுக்காக, வெள்ளைப் புறாக்களையோ, ஆடுகளையோ ஆலயத்தில் பலியிடுவார்கள். அப்படிப் பலியிடும் பொருட்களை ஆலயத்தில் தான் வாங்க வேண்டும். அதுவும் மிக மிக அதிக விலை கொடுத்து ! அந்த பணத்திலும் ஒரு நல்ல சதவீதம் அதை நடத்த அனுமதிக்கும் ஆலய தலைமைக் குருவுக்கோ, ஆளுநரின் ஆட்களுக்கோ தான் செல்லும். இதெல்லாம் இங்கே காலம் காலமாக நடக்கும் வழக்கம் தான். ‘

இயேசுவுக்கு யோசேப்பின் பதில் திருப்தி தரவில்லை. ஏன் ஆலயத்தில் பலியிடவேண்டும் ? ஆண்டவரின் ஆலயத்தில் மாமிசம் கருகும் வாசமும், இரத்தம் ஒழுகும் வாசமும் தேவையா ? ஏழைகள் ஏன் தங்கள் பணத்தைச் செலவிட்டு காணிக்கை செலுத்த வேண்டும் ? இதையெல்லாமா கடவுள் எதிர்பார்க்கிறார் ? முதன் முதலாக ஆலயத்தில் நுழைந்து ஆலயத்தின் நிலையைப் பார்த்த இயேசுவின் மனதுக்குள் கேள்விகள் வட்டமடித்தன.

இயேசுவின் தாயும், தந்தையும் கூட்டத்தினருடன் கலந்து விழா நிகழ்ச்சிகளிலும், வழிபாடுகளிலும் ஈடுபட, சிறுவன் இயேசு மட்டும் தனியே சிந்தித்துக் கொண்டிருந்தார்.
ஆலயத்தில் அன்று எங்கு பார்த்தாலும் குருக்களின் நடமாட்டம். ஏட்டுச் சுருளைக் கையில் ஏந்தி நீளமான ஆடைகள் அணிந்து உலாவிக் கொண்டிருந்தார்கள் அனைவரும். இயேசுவுக்கோ மனதுக்குள் கேள்விகள் துருதுருத்துக் கொண்டிருந்தன. இவற்றுக்கெல்லாம் சரியான விளக்கம் எங்கிருந்தேனும் வாங்க வேண்டும். எப்போதும் எருசலேம் ஆலயத்துக்கு வருவது சாத்தியமில்லை. எனவே இப்போதே யாரிடமேனும் விவாதிக்க வேண்டும் என்னும் எண்ணத்தில் இயேசு ஆலயத்துள் நடந்தார்.
ஆலயத்தின் ஒரு பிரிவில் மறைநூல் அறிஞர்களும், குருக்களும் வேதநூல்களைப் பற்றியும், சட்டங்களைப்பற்றியும் விவாதித்துக் கொண்டிருந்தார்கள். எல்லாரும் வயதிலும், அனுபவத்திலும் தலை நரைத்தவர்கள். இயேசுவும் அவர்களுடைய கூட்டத்தில் சென்று அமர்ந்து கொண்டார்.

அறிஞர்கள் தங்களிடையே வந்து அமர்ந்த சிறுவனை வினோதமாய்ப் பார்த்தார்கள்.

‘என்ன தம்பி, வழி தப்பி வந்துவிட்டாயா ? வெளியே போய் விளையாடு. இது பெரியவர்கள் உரையாடும் இடம்’ ஒருவர் சொன்னார்.

‘பெரியவர் என்பதை எதை வைத்து அளவிடுகிறீர்கள் ? வயதை வைத்தா ? இல்லை புரிந்து கொள்ளும் திறனை வைத்தா ? புரிந்து கொள்ளும் திறனை வைத்தென்றால் அது எனக்கு இருக்கிறது’ இயேசு சொன்னார். அவர்களால் பதில் பேச முடியவில்லை. சிறுவன் இயேசுவை அவர்கள் வியப்புடன் பார்த்தார்கள்.

‘எதைப் புரிந்து கொள்ள முடியும் என்று நினைக்கிறாய் ? உன்னால் புரிந்து கொள்ள முடியாது’

‘உண்மை தான் சில விஷயங்களை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. காலங்காலமாக எல்லா இறைவாக்கினர்களும் அன்பைப் போதித்துக் கொண்டிருந்த பூமி இது. ஆனால் ஆலயத்தில் நாணயம் மாற்றுமிடத்திலும் ஏழைகள் ஏய்க்கப் படுகிறார்கள், பலிகள் இடுவதை ஆலயம் கட்டாயமாக்கியது போல் தோன்றுகிறது. புறாக்களை வெட்டவேண்டுமென்றும், ஆடுகளை பலியிட வேண்டும் என்றுமா ஆமோஸ் இறைவாக்கினரும், எரேமியா தீர்க்கத்தரிசியும் முழங்கினார்கள் ? எனக்கு இவையெல்லாம் புரியவில்லை’ இயேசு சொல்ல கூட்டம் அதிர்ச்சியடைந்தது.

பன்னிரண்டு வயதுப் பாலகனுக்கு இறைவாக்கினர்களைப் பற்றித் தெரிந்திருக்கிறது ! ஆலய நிகழ்வுகள் பற்றித் தெரிந்திருக்கிறது. ஆயிரம் ஆண்டுகளாக நடந்து வரும் வழக்கங்களுக்கு எதிராகப் பேசும் துணிச்சல் இருக்கிறது என்று வியந்தார்கள். ஆனால் அவர்களிடம் அவற்றுக்கான பதில் இல்லை.

இயேசு அத்துடன் நிற்கவில்லை. கூடி இருந்த மக்கள் கூட்டம் எல்லாம் அமைதியாய் கைகட்டி மறை நூல் அறிஞர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருக்க இயேசு தொடந்து கேள்விகள் கேட்டார்..

‘ஏன் அந்தச் சட்டம் இருக்கிறது ? அந்தச் சட்டத்தினால் என்ன நன்மை ? அப்போதைய காலகட்டத்தில் வரையப்பட்ட சட்டங்கள் இந்த காலத்துக்குப் பொருந்துமா ?’ மறைநூல் அறிஞர்கள் தங்கள் வாழ்நாளில் அப்படியெல்லாம் யோசித்துக் கூட பார்த்ததில்லை. எது எழுதப்பட்டிருக்கிறதோ, அதை அப்படியே மனப்பாடம் செய்து ஒப்புவித்துக் கொண்டிருந்தவர்களால் இயேசுவின் அறிவு சார் வேள்விகளுக்குப் பதில் கூற முடியவில்லை. இயேசு நிறுத்தவில்லை, எதிரே இருப்பவர்கள் தங்கள் வாழ்நாளில் பெரும்பாகத்தை சட்டங்களைக் கிரகிப்பதில் செலவிட்டவர்கள் என்பதைப்பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. எல்லா சட்டங்களிலும் இருந்த நியாயமின்மையைச் சுட்டிக் காட்டினார். அவர்களுடைய விவாதம் சூடு பிடித்தது. திருப்பிக் கேள்விகள் கேட்டவர்களுக்கெல்லாம் தயங்காமல் விளக்கமளித்தார். ஆலயத்தில் தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்த இயேசு தன் தாயையும், தந்தையையும், ஊரையும் மறந்து விட்டார். உரையாடலுக்குள் மூழ்கினார்.

இயேசு ஆலயத்திலேயே தங்கி விட்ட செய்தி தெரியாத மரியாவும், யோசேப்பும், நாசரேத் ஊர் மக்களும் பாஸ்கா விழா நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு தங்கள் ஊருக்குத் திரும்பினார்கள். சிறுவன் இயேசுவும் கூட்டத்தில் விளையாடிக் கொண்டிருப்பான். பக்கத்து வீட்டுச் சிறுவர்களுடன் சேர்ந்து தங்களுக்கு முன்னால் சென்றிருப்பான் உணவு வேளை வரும்போது தங்களைத் தேடி வருவான் என்று அவர்கள் நினைத்தார்கள்.

ஆனால் அது நடக்கவில்லை. அன்று இரவுவரை இயேசு தாயைத் தேடி வரவில்லை. மரியாவின் பதட்டம் அதிகரித்தது. மறுநாள் காலையில் முதல் வேலையாக பயணிகளிடையே இயேசுவைத் தேடினார்கள். உறவினர்கள், நண்பர்கள், சிறுவர்கள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள்.. அனைவரும் விசாரிக்கப் பட்டார்கள். ஆனால் யாரும் இயேசுவைப் பார்க்கவில்லை.

மரியாவின் கண்களில் கண்ணீர் வழிய மனசுக்குள் படபடப்பு வந்து ஒட்டிக் கொண்டது. யோசேப்பு அவளைப் சமாதானப் படுத்தி எருசலேமுக்குச் சென்று தேட முடிவெடுத்தார். எருசலேமில் எங்கேனும் வழி தெரியாமல் இயேசு திணறிக் கொண்டிருக்கக் கூடும் என்று அவர் கருதினார்.

‘நீங்கள் எல்லோரும் ஊருக்குச் செல்லுங்கள். நாங்கள் எருசலேமுக்குத் திரும்பச் சென்று இயேசு அங்கே இருக்கிறானா என்று பார்த்து வருகிறோம். ஒருவேளை நீங்கள் அவனைக் கண்டால் வீட்டிலேயே இருக்கச் சொல்லுங்கள். ‘ பயணிகளிடம் கூறிவிட்டு யோசேப்பும், மரியாவும் எருசலேமை நோக்கி ஓடினார்கள்.

எருசலேமிற்கு வந்து எருசலேம் நகரைச் சுற்றிச் சுற்றி தேடினார்கள். விளையாட்டு திடல்கள், நதிகள், அழகிய இயற்கைக் காட்சிகள் அடங்கிய இடங்கள் எல்லா இடங்களிலும் தேடினார்கள். எங்கும் இயேசு இல்லை.

கடைசியாக எருசலேம் ஆலயத்துக்குள் நுழைந்தார்கள். ஆலயத்துக்குள் இயேசு இருப்பார் என்று அவர்கள் கனவிலும் நினைத்திருக்கவில்லை. ஆலயத்துக்குள் அவர்கள் நுழைந்தபோது அங்கே ஒரு பெரிய கூட்டம் இருந்தது. அவர்கள் நடுவே சிறுவன் இயேசு !

‘அது யார் ? நமது மகன் தானே ?’ மரியா ஆனந்தமாய்க் கேட்டாள்.

‘ஆம். ஆனால் இந்த பெரியவர்களின் சபையில் அவன் என்ன செய்கிறான் ?’ யோசேப்பு குழம்பினார்.

அவர்கள் கூட்டத்தை நெருங்கினார்கள். நெருங்க நெருங்க இயேசுவின் தெளிவான குரலும், அவருடைய கேள்விகளும், விளக்கங்களும் எல்லாம் பெற்றோரின் காதுகளில் விழுந்தன.

‘இவனுக்கு இதெல்லாம் எப்படித் தெரியும் ? இவன் இதுவரை இங்கே வந்ததேயில்லையே ?’ தந்தை வியந்தார். மரியாவோ மகனைப் பார்த்த சந்தோசத்தில் அவனை நோக்கி ஓடினாள். கட்டியணைத்து முத்தமிட்டாள்.

‘மகனே… ஏன் இப்படிச் செய்துவிட்டாய் ? எங்களைத் தனியே அலையவிட்டு விட்டாயே ? எவ்வளவு கவலைப்பட்டோம் தெரியுமா ?’ மரியா ஆனந்தக் கண்ணீர் விட்டாள்.

‘ஏன் அம்மா என்னைத் தேடினீர்கள் ?’

இயேசுவின் கேள்வி மரியாவைத் திடுக்கிட வைத்தது. சட்டென்று ஓரடி விலகினாள். முகத்தில் அழுகையும், சோர்வும், புரியாமையும் தெரிய பேசினாள்.

‘அம்மா அப்பாவை தவிக்க விட்டுவிட்டு இங்கே கூட்டத்தில் வந்து பேசிக்கொண்டிருக்கிறாயே ? வீட்டுக்குச் போக வேண்டாமா ? ‘

‘வீட்டில் தானே அம்மா நிற்கிறேன். என் தந்தையின் வீட்டில் தானே நிற்கிறேன் ! என் தந்தையின் அலுவல்களில் தானே ஈடுபட்டிருக்கிறேன் !!’ இயேசு சொன்னார். மரியா தடுமாறினாள். அவளுக்கு இயேசுவின் பதில் புரிந்தது போலவும், புரியாதது போலவும் இருந்தது.

இயேசு மரியாவின் முகத்தைப் பார்த்தார். அவளுடைய கன்னங்களில் வழிந்த கண்ணீர்த் துளிகளைப் பார்த்தார்.

‘வாருங்கள் அம்மா.. வீட்டுக்குப் போகலாம்’ அமைதியாய்ச் சொன்னார்.

தாய் இயேசுவை அணைத்துக் கொண்டார். அவர்கள் மூவரும் ஆலயத்தை விட்டு வெளியேறினார்கள். கூட்டத்தினர் மொத்தமும் இயேசுவையும், அவருடைய குடும்பத்தினரையும் வைத்த கண்வாங்காமல் பார்த்துக் கொண்டே இருந்தனர். அவர்கள் நாசரேத் நோக்கி நடக்கத் துவங்கினர். மரியாவின் மனதுக்குள் இயேசு சொன்ன வார்த்தைகள் எதிரொலித்துக் கொண்டே இருந்தன. மகன் தவறிழைக்கிறானா, தான் தவறிழைக்கிறோமா அல்லது இரண்டு பேருமே சரியாய் தான் இருக்கிறோமா என சரமாரியான கேள்விகள் மரியாவுக்குள் கண்மண் தெரியாமல் ஓடிக் கொண்டே இருந்தன.

அதன்பின் இயேசு தன் தந்தையுடன் தச்சுத் தொழில் கற்கத் துவங்கினார். வருடங்கள் ஓடிக் கொண்டிருந்தன. இயேசுவின் தந்தை யோசேப்பு மறைந்தார்.

இயேசுவின் மேல் குடும்பத்தைக் காப்பாற்றும் கடமை வந்தது. தச்சுத் தொழிலைச் செய்யத் துவங்கினார். நாசரேத் நகர்வழியாகச் செல்லும் பயணிகளிடமெல்லாம் பல்வேறு விஷயங்களைப் பேசுதல் அவருடைய வழக்கமாக இருந்தது. வாழ்வியல் பற்றியும் துன்பியல் பற்றியும் சொன்ன பல்வேறு வேதங்கள், மதங்களின் அடிப்படைக் கருத்துக்களையெல்லாம் அவர் ஆர்வமுடன் அறிந்து கொண்டார். இந்தியாவின் வேதநூல்கள், சூத்திரங்கள், மஹாபாரதம் உட்பட பல்வேறு நாடுகளின் முக்கியமான நூல்களை அவர் வாசித்து வளர்ந்தார். வாழ்க்கை என்பது மாயை. கடலில் விழுந்துக் கரைந்து போகும் ஒரு துளி மழை நீர் போன்றதே வாழ்க்கை, கதிரவன் வந்து தின்று விட்டுப் போகும் பனித்துளியே வாழ்க்கை என்னும் தத்துவங்கள் அவரை வசீகரிக்கவில்லை. அவருடைய பார்வை எப்போதுமே ஏழைகளைச் சார்ந்தும், அவர்களுக்கு உள்ளன்போடு உதவி செய்யும் சிந்தனைகளைச் சார்ந்துமே இருந்தன.

எருசலேம் தேவாலயத்தில் பதினோரு வயதில் அவர் கண்ட காட்சி ஆரம்பம் என்றால் தினசரி வாழ்வில் அவர் அதன் விஸ்வரூபத்தைக் கண்டு வந்தார். சமாரியர்கள், யூதர்கள் பிரிவினையும். மக்களை மத அடிமைத்தனத்தில் மூழ்கடிக்கச் செய்யும் மதவாதிகளின் அடக்குமுறையும். பயத்தில் விழவைக்கும் அரசியலும் அவரை மிகவும் பாதித்தன. இவற்றுக்கு எதிராக தன்னுடைய குரல் உயரவேண்டும் என்றும். தன்னுடைய வாழ்வின் அர்த்தமே சமுதாய அடித்தட்டு மக்களின் மனதில் ஏற்படக் கூடிய மறுமலர்ச்சியில் தான் அடங்கியிருக்கிறது என்பதும் அவருடைய அசைக்க முடியாத நம்பிக்கையாய் இருந்தது.

அவருடைய பணிவாழ்வின் அடிப்படை புரட்சி செய்து அரசைப் பிடிப்பதில் இருக்கவில்லை. தெளிவான சிந்தனையை அவர் வகுத்துக் கொண்டார். மாற்றம் என்பது மனங்களில் வருவது. போர்க்களத்தில் பெறப்படுவதல்ல. மக்களுக்கு உண்மையை அறிந்து கொள்ளும் ஆர்வத்தையும், வாய்ப்பையும் வழங்க வேண்டும். உண்மை உணரும் மக்கள் தங்கள் அடிமைத்தனங்களை அடையாளம் கண்டு கொள்வார்கள். போதனையின் முக்கிய இரண்டு அம்சமே கடவுளை நேசி, மனிதனை நேசி என்பதாக இருக்கவேண்டும் என்று தனக்குள் தெளிந்த சிந்தனைகளை எழுதிக் கொண்டார். தன்னளவில் தெளிவற்ற மனிதன் பிறரைத் தெளிய வைத்தல் சாத்தியமில்லை என்பதை அவர் அறிந்திருந்தார்.

பன்னிரண்டு வயது முதல் பதினெட்டு ஆண்டுகள் தச்சுத் தொழிலிலும், உலகைப் படிப்பதிலும் ஆர்வம் காட்டிய அவருடைய தனி வாழ்க்கை, முப்பதாவது வயதுடன் முடிவுக்கு வந்தது. இதற்கிடையில் இயேசுவின் தந்தை யோசேப்பு மறைந்து விட்டிருந்தார். தன்னுடைய பணி உளிகளைக் கொண்டு மரங்களைச் செதுக்குவதல்ல, சிந்தனைகளைக் கொண்டு மனங்களைச் செதுக்குவது என்று தனது முப்பதாவது வயதில் முடிவெடுத்தார் இயேசு. அன்னையையும், தொழிலையும் வீட்டிலேயே விட்டு விட்டு வீதிக்கு வந்தார் !

அதே நேரத்தில் எருசலேமில் ஒரு சலசலப்பு. யோவான் என்னும் மனிதர் அரசுக்கு எதிராகக் குரல் கொடுக்கிறார். மக்களை தங்கள் பாவ வழிகளை விட்டு விலகி நீதியான பாதைக்கு வர அழைப்பு விடுக்கிறார். விரைவில் மீட்பர் வரப்போகிறார் என்று முழங்குகிறார். இயேசுவின் காதுகளில் அந்த செய்தி விழுந்தது. அவரைச் சந்தித்து தன்னுடைய பணி வாழ்வை ஆரம்பிப்பதே சரியாக இருக்கும் என்று முடிவெடுத்த இயேசு யோவானைத் தேடிப் புறப்பட்டார்.

மக்கள் கூட்டம் யோவானை மொய்க்கத் துவங்கியது. கூட்டம் கூட்டமாக மக்கள் அவரிடம் வந்து தண்ணீரில் மூழ்கி யோவானின் குழுவில் தங்களை இணைத்துக் கொண்டார்கள்.

அந்த யோவான் இயேசுவின் உறவினர் !

Advertisements


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink Closed

இயேசு வரலாறு 6 : பாலைவனத்தில் கூக்குரல்

Image result for John the baptist in desert

அது போந்தியு பிலாத்து யூதேயாவின் ஆளுநராக இருந்த காலம். அன்னா, கயபா இருவரும் மிகவும் செல்வாக்குடைய தலைமைக் குருக்களாக இருந்தார்கள். யூதேயா ரோமப் பேரரசின் ஆட்சியின் கீழ் இருந்தது, ரோமப் பேரரசை அப்போது திபேரியு சீசர் அரசாண்டு வந்தார்.

ஆலயக் குருக்களாகப் பணியாற்றிவந்த செகரியாவுக்கும், எலிசபெத்துக்கும் வயதான காலத்தில் கடவுளின் அருளினால் பிறந்தவர் தான் இந்த யோவான். அவர் ஒட்டக ரோமத்தினால் ஆன ஆடையை அணிந்து கொண்டு, தோல் கச்சையினால் இடையை வரிந்து கட்டிக் கொண்டு வெட்டுக்கிளிகளையும், காட்டுத் தேனையும் உண்டு வந்தார். அவருடைய பணி கடவுளுக்கான வழியில் மக்களைச் செலுத்துவதே.

அவர் யோர்தான் நதிக்கரையிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் சுற்றித் திரிந்து உரத்த குரலில் ‘மனம் திரும்புங்கள். நீங்கள் செல்லும் வழி கோணலானது. கடவுளுக்கான வழியில் திரும்புங்கள். அதற்கு அடையாளமாக இந்த யோர்தான் நதியில் மூழ்கி எழுங்கள். இது தான் நீங்கள் மனம் திரும்பியதற்கான அடையாளம். என்னிடம் வாருங்கள் உங்களுக்கு நான் திருமுழுக்கு செய்து வைக்கிறேன்’ என்று முழங்கிக் கொண்டிருந்தார்.

அவருடைய துணிச்சல் அசாத்தியமானது. அவருடைய எச்சரிக்கை சாதாரண மக்களையும் அவர்களுடைய தவறான பாதையையும் நோக்கி மட்டும் இருக்கவில்லை. யூதேயாவின் ஆளுளர் போந்தியு பிலாத்துவையும் எச்சரித்தார், ஏரோது மன்னனின் மகனை நோக்கியும் எச்சரிக்கை வீசினார், ரோமப் பேரரசர் சீசரை நோக்கியும் எச்சரிக்கை விடுத்தார். அவருடைய எச்சரிக்கைக்கு போலித்தனமான மதத் தலைவர்கள் யாருமே தப்பவில்லை.

யோர்தான் நதி பல சரித்திர முக்கியத்துவங்களைக் கொண்டது. இந்த யோர்தான் நதியில் மூழ்கச் செய்து தான் பல நூறு ஆண்டுகளுக்கு முன் எலிசா என்னும் தீர்க்கத் தரிசி படைவீரன் ஒருவனின் தொழுநோயைக் குணமாக்கியிருந்தார். இந்த யோர்தான் நதி தான் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இஸ்ரயேல் மக்கள் நடந்தபோது தண்ணீர் இரண்டு பக்கங்களிலும் விலகிக் கொள்ள பாதை அமைத்துக் கொடுத்தது. அதே யோர்தான் நதியில் இப்போது யோவான் திருமுழுக்கு வழங்கிக் கொண்டிருந்தார்.

சிலர் அவரைப் பைத்தியக் காரனாகப் பார்த்தார்கள். தலைமைக் குருக்களும், மறை நூல் அறிஞர்களும் அவரைப் பொருட்படுத்தவில்லை. ஆனால் ஏழை எளிய மக்களும், கடவுளின் மேல் பக்தியும் , பயமும் கொண்டிருந்த மக்களும் யோவானிடம் சென்று திருமுழுக்குப் பெற்றார்கள். யோவானின் பெயர் நகரம் முழுவதும் பரவியது. அவரிடம் வரும் மக்களின் கூட்டமும் அதிகரித்தது.

தங்களை விட நீதிமான்கள் யாருமே இல்லை என்று ஆணவத்தில் நடந்த பரிசேயர்களும், நாத்திகர்களான சதுசேயரும் கூட யோவானிடம் வரத் துவங்கினர். அவர்களைக் கண்ட யோவான் ஆச்சரியமடைந்தார்.

‘விரியன் பாம்புக் குட்டிகளே ! கடவுளின் சினத்திலிருந்து தப்பிக்கும் வழியை நீங்கள் கண்டு கொண்டீர்களே ! வாருங்கள். திருமுழுக்குப் பெறுங்கள். திருமுழுக்கு என்பது வெறும் ஆரம்பம் தான். நீங்கள் உங்கள் தீய வழிகளை விட்டு விட்டு நீதியோடும், நியாயத்தோடும் நடக்க வேண்டும். அது தான் கடவுளுக்குப் பிடித்தமானது’ யோவான் குரலுயர்த்திச் சொன்னார்.

‘நீர் தான் கடவுள் அனுப்பிய இறைவாக்கினரா ?’

‘நான் கடவுளின் இறைவாக்கினர் அல்ல. கடவுளின் வருகையை ஆயத்தம் செய்ய வந்திருப்பவன்’ யோவான் சொன்னார்.

‘கடவுளின் வழியை ஆயத்தம் செய்யவா ? அப்படியானால் இன்னொருவர் வருவாரா ?’

‘ஆம்.. எனக்குப் பின்னால் ஒருவர் வருவார். அவருடைய காலணிகளைத் தொடும் தகுதி கூட எனக்கில்லை’

‘அவர் எங்கள் முற்பிதா ஆபிரகாமை விடப் பெரியவரா ?’

‘மூடர்களே. கடவுள் நினைத்தால் இந்தக் கற்களிலிருந்து கூட ஆபிரகாமுக்குச் சந்ததிகள் தோன்றச் செய்வார். எனவே கடவுளின் அருள் பெற்ற ஆபிரகாமை வணங்குவதை விடுத்து, அவருக்கு அந்த அருளைக் கொடுத்தக் கடவுளை வணங்குங்கள். கடவுளின் உண்மையான மகன் இனிமேல் தான் வரப் போகிறார்.’

‘அவர் யார் ? எப்போது வருவார்’ வந்திருந்தவர்கள் தொடர்ந்து கேள்விகளை எழுப்பினார்கள்.

‘அவர் ஒளி. நான் ஒளிக்குச் சான்று பகர வந்தவன். அவர் வரும்போது நீங்கள் அவரை அறிந்து கொள்வீர்கள்’ யோவான் சொன்னார்.

‘நாங்கள் செய்ய வேண்டியது என்ன ?’

‘ஏற்கனவே மரத்தின் வேரருகே கோடரி வைத்தாயிற்று. நல்ல கனி கொடாத மரம் எல்லாம் வெட்டுண்டு தீயில் போடப்படும். எனவே நல்ல கனி தரும் நல்ல மரங்களாய் வாழுங்கள்’ யோவான் சொன்னார்.

‘எங்களுக்குப் புரியவில்லை. விளக்கமாகச் சொல்லுங்கள்’ மக்கள் பணித்தார்கள்.

‘நல்ல கனி என்பது நல்ல செயல்கள். உங்களிடையே பணக்காரரும் இருக்கிறீர்கள் வறியவர்களும் இருக்கிறீர்கள். பணக்காரர் பணக்காரரோடும், ஏழைகள் ஏழைகளோடும் மட்டுமே சகவாசம் செய்கிறீர்கள். இது நல்லதல்ல. உங்களில் இரண்டு அங்கி வைத்திருப்பவர்கள் அதில் ஒன்றை அங்கியே இல்லாதவனுக்குக் கொடுங்கள். சுவையான உணவை உண்டு வாழ்பவர்கள், தேவையான உணவு கூட இல்லாதவனோடு பகிர்ந்து கொள்ளுங்கள். பகிர்தலே உன்னதநிலை’ யோவான் விளக்கினார்.

யோவானின் பெயர் எங்கும் பரவிவிட்டது. மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து அவரிடம் திருமுழுக்குப் பெறத் துவங்கினார்கள். பல்வேறு பணி செய்பவர்களும் அவரிடம் வந்து தாங்கள் செய்யவேண்டியது என்ன என்று அவரிடம் கேட்கத் துவங்கினார்கள்.

வரி வசூலிப்பவர்கள் அவரிடம் வந்து,’ போதகரே.. நாங்கள் என்ன செய்யவேண்டும் ?’ என்று கேட்டார்கள்.

‘நீங்கள் வரி வசூலிப்பவர்கள். உங்கள் பணியை நேர்மையுடன் செய்யுங்கள். குறிப்பிட்ட வரிக்கு மேலாக வசூலிக்காதீர்கள்.’ என்றார்.

படைவீரர்கள் அவரிடம் வந்தார்கள். ‘போதகரே எங்களுக்கும் அறிவுரை வழங்குங்கள்’

‘நீங்கள் உங்கள் கடமையைச் செய்யுங்கள். யாரையும் மிரட்டிப் பணம் பறிக்காதீர்கள். வலிமையும், அதிகாரமும் இருக்கிறது என்ற காரணத்தினால் ஏழைகளை வாட்டாதீர்கள். கிடைக்கும் ஊதியமே போதும் என்றிருங்கள்’ என்றார்.

யோவானுடைய உறுதியான போதனைகளையும், தெளிவான வார்த்தைகளையும் கேட்ட மக்கள் இவர் தான் கடவுளிடமிருந்து வந்திருக்கும் மீட்பர் கிறிஸ்து என்று நினைத்தார்கள். எனவே மீண்டும் மக்கள் அவரிடம் சென்று,

‘போதகரே.. நீர்தான் மீட்பரா ?’ என்று கேட்டார்கள்.

‘இல்லை. நான் ஏற்கனவே உங்களிடம் சொல்லிவிட்டேன். நான் கிறிஸ்துவுமல்ல, இறைவாக்கினருமல்ல, கடவுளின் வழியை ஆயத்தம் செய்யும் ஒரு குரல் நான். நான் நீரினால் தரும் திருமுழுக்கை எனக்குப் பின் வருபவர் தூய ஆவி என்னும் நெருப்பினால் தரும் வல்லமை படைத்தவர். தூற்றுக் கூடை அவருடைய கைகளில் இருக்கிறது. அவர் அதைக் கொண்டு கோதுமையையும், பதரையும் பிரித்தெடுப்பார். கோதுமையைக் களஞ்சியத்திலும், பதரை நெருப்பிலும் போட்டுச் சுட்டெரிப்பார்’ என்றார்.

யோவான், இயேசுவை விட ஆறு மாதம் முன்னால் பிறந்தவர். யோவான் கருவுற்றிருக்கும் போதே இயேசுவின் தாய் யோவானின் சிறப்பை அறிந்து கொண்டு அவருடைய தாய் எலிசபெத்தைச் சென்று வாழ்த்தியிருந்தார். யோவானின் திருமுழுக்குப் பணி மிகவும் சிறப்பாக நடந்து கொண்டிருந்தது. இயேசுவிற்கு அப்போது வயது முப்பது.

தன்னுடைய பணிவாழ்வை ஆரம்பிக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது என்பதை இயேசு உணர்ந்தார். அவர் நேராக யோவான் திருமுழுக்குக் கொடுத்துக் கொண்டிருந்த யோர்தான் நதிக்குச் சென்றார். யோவான் நதியில் நின்று மக்களுக்குத் திருமுழுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தபோது இயேசு அவருக்கு முன்னால் வந்து நின்றார்.

யோவான் இயேசுவைப் பார்த்தார். திடுக்கிட்டார். தன் உறவினர் இயேசுவை யோவான் நீண்ட பல வருடங்களுக்குப் பின் இப்போது தான் பார்க்கிறார். இயேசுவின் பிறப்பைப் பற்றி தாய் எலிசபெத் மூலமாக கேட்டு அறிந்திருந்தார் யோவான். இயேசுவையும் அவருடைய தெளிவான முகத்தையும், தீர்க்கமான கண்களையும் கண்ட அவருக்குள் பரவச நதி பாய்ந்தோடியது. இயேசுவுக்குத் திருமுழுக்கு வழங்க யோவான் தயங்கினார்.

‘எனக்கு திருமுழுக்கு வழங்குங்கள். மக்களை வழிநடத்த வேண்டிய நான் திருமுழுக்குப் பெறாமல் இருப்பது நீதியல்ல. கடவுளுக்கு ஏற்புடைய அனைத்தையும் நான் முதலில் நிறைவேற்றியாக வேண்டும். அதற்கு என்னை அனுமதியுங்கள்’ இயேசு புன்னகைத்தார்.

யோவான் தடுமாறினார். ‘ உமக்கே திருமுழுக்குத் தரும் பெருமையை எனக்குத் தந்தீரே !…’ என்று தழுதழுத்தார்.

அப்போதே இயேசுவுக்குத் திருமுழுக்குக் கொடுத்தார்.

இயேசு யோர்தானை விட்டுக் கரையேறினார். யோர்தான் ஆற்றைச் சுற்றிலும் மக்கள் கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது. இயேசு நதியை விட்டுக் கரையேறுவதையே யோவான் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்.

திடீரென வானத்தில் மேகங்கள் விலகின. ஒரு பெரிய விரிசல் வானத்தில் தோன்றுவதைக் கண்ட மக்கள் அதிர்ச்சியடைந்தனர். கடவுளின் தூய ஆவியானவர் ஒரு புறாவின் வடிவில் இறங்கி இயேசுவுக்குள் கலந்தார். மக்கள் பயத்துடனும், திகைப்புடனும், வியப்புடனும் அந்த காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

விரிசல் விழுந்த வானத்திலிருந்து கடவுளின் குரல் ஒலித்தது. ‘இவரே என் அன்பார்ந்த மகன். இவரில் நான் பூரிப்படைகிறேன்’.
கடவுளின் குரலைக் கேட்ட மக்கள் பரவசமடைந்தார்கள்.

இயேசுவின் பணிவாழ்வு அங்கே ஆரம்பமானது. இயேசுவின் பணிவாழ்வுக்கான வருகையைக் கண்டபின் யோவான் இன்னும் அதிக உற்சாகத்துடன் போதிக்கத் துவங்கினார்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink Closed

இயேசு வரலாறு 7 : மூன்று சோதனைப் பேய்கள்

Image result for jesus tempted in the desert

யோவானிடம் திருமுழுக்குப் பெற்ற இயேசு தன்னுடைய பணிவாழ்வை ஆரம்பித்தார். பணிவாழ்வைத் துவங்கும் முன் அவர் பாலை நிலத்திற்குச் சென்றார். முப்பது ஆண்டுகாலம் பெற்றோருக்குப் பணிந்திருந்து அவர்களுடைய பணிகளில் உதவியாய் இருந்த இயேசு வானகத் தந்தையான கடவுளிடம் வேண்டுவதை மட்டும் எப்போதும் நிறுத்தியதில்லை. அதுவும் தனிமையில் அமைதியான இடத்தில் அமர்ந்து வேண்டுவது அவருக்கு மிகவும் பிடித்தமான செயல். செபம் செய்வதை ஒரு மிகப் பெரிய தியானம் போல செய்வது இயேசுவின் வழக்கம். இந்தமுறையும் இயேசு தனிமையாக செபிக்கச் சென்றார். இந்தமுறை அவருக்கு மிக முக்கியமான விஷயங்களுக்காகக் கடவுளிடம் உரையாடவேண்டியிருந்தது. எனவே அவர் சற்றுத் தொலைவில் ஆள்நடமாட்டம் அறவே இல்லாத பாலை நிலத்தில் ஒரு தனிமையான இடத்தைக் கண்டுபிடித்து கடவுளோடு உரையாடி செபம் செய்யத் துவங்கினார்.

தன்னுடைய பணிவாழ்வை எப்படித் துவங்குவது ? எங்கே துவங்குவது என்று அவருக்குள் கேள்விகள் நிறைய இருந்தன. அமைதியாகக் கண்களை மூடி, கடவுளோடு ஒன்றிக்கத் துவங்கிய இயேசுவிற்கு நேரம் போவதே தெரியவில்லை. ஏன் நாட்கள் போவது கூடத் தெரியவில்லை. நாட்கள் வாரங்களாகி, மாதமாகி நாற்பது நாட்கள் அவர் கடவுளுடன் ஒன்றித்திருந்தார். நாற்பதாவது நாள் முடிவுற்றபோது இயேவுவை சோர்வு வந்து தொற்றிக் கொண்டது. நாற்பது நாட்களாக கடவுளுடன் ஒன்றித்திருந்தபோது தோன்றாத பசியும் சோர்வும் அவரை சட்டென்று வந்து பிடித்துக் கொண்டன. அவருக்குள் ஒரு சஞ்சலம் உருவானது. அந்த சஞ்சலச் சாத்தான் அவருக்கு முன்பாக வந்து குதித்தான்.

‘இயேசுவே… நான் வியக்கிறேன். நீண்ட நெடிய நாற்பது நாட்கள் கடவுளோடு உரையாடி, செய்யவேண்டிய செயல்களைப் பற்றியெல்லாம் முடிவெடுத்து விட்டீர்கள். நல்லது. நீர் அதிசயங்களையும், அற்புதங்களையும் செய்யும் வல்லமையையும் கடவுள் உம்மிடம் கொடுத்திருக்கிறார். அப்படித்தானே ?’

‘ஆம். நான் என்ன செய்யவேண்டும் என்பதைப் பற்றித் தெளிவடைந்து விட்டேன். இறைவல்லமையை நிறைவாகப் பெற்றுவிட்டேன்’

‘அப்படியானால் இன்னும் ஏன் பசியால் வாடிக் கொண்டிருக்கிறீர் ? ஏதேனும் உண்ணவேண்டியது தானே ?’

‘உண்பதற்கு என்னிடம் ஒன்றுமில்லை’

‘அதிசயங்களைச் செய்யும் வல்லமையைக் கையில் வைத்துக் கொண்டு இதென்ன தேவையற்ற பேச்சு ? நீர் நினைத்தால் உணவு வரும். இதோ இந்த வெண்கற்களைக் கூட நீர் நினைத்தால் இப்போது அப்பமாக மாற்றி உண்ணலாமே ?’

‘அற்புதங்களை நான் என்னுடைய சுய விருப்பத்துக்காக வீணடிப்பதில்லை. நான் செய்ய வந்திருப்பது சொகுசுப் பணியல்ல. கடினமான பணி. சோதனைகளைத் தாங்கும் வல்லமை எனக்கு இருக்கிறது’

‘உடம்பில் வலு இருந்தால் தானே உம்மால் பணி செய்ய முடியும் ? இப்போதைக்கு இந்த கற்களை அப்பமாக்கி உண்டு கொள். அதன் பின் மற்றதைப் பற்றிப் பார்த்துக் கொள்ளலாம்’

‘மனிதன் உயிர்வாழ்வது அப்பத்தினால் மட்டுமல்ல. கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றினாலும் உயிர் வாழ்வான். என்று மறை நூல் சொல்லியிருக்கிறதே. நான் இப்போது இந்த கற்களை அப்பமாக்கி உண்ணாமலிருந்தாலும் இறந்து விடமாட்டேன். எனக்குள் கடவுளின் வார்த்தை இருக்கிறது’ இயேசு சஞ்சலப் பேயை அடக்கினார்.

அதன்பின் இயேசு எருசலேம் தேவாலயத்துக்குத் திரும்பினார். ஆலயத்தின் உயர்ந்த பகுதி ஒன்றில் போய் நின்று சுற்றிலும் பார்த்தார். தான் பணி செய்யவேண்டிய பகுதிகளை அவருடைய கண்கள் பார்த்தன. தான் கடவுளின் வல்லமையுடன் வந்திருக்கும் அவருடைய மகன் என்னும் பெருமைச் சாத்தான் அவருக்குள் எட்டிப் பார்த்தான்.

‘நீர் கடவுளின் மகன் தானே. இங்கிருந்து கீழே குதித்தால் கூட உமக்கு ஒன்றும் நேராதே. குதிக்க வேண்டியது தானே ?’

‘நான் ஏன் குதிக்க வேண்டும் ? அதன் அவசியம் என்ன ?’

‘நீர் கடவுளின் மகன். நீர் குதித்தால் தேவ தூதர்கள் வந்து உமது கால் தரையில் படும் முன் தங்கள் கைகளினால் தாங்கிக் கொள்வார்களே. இது மறை நூலில் கூட எழுதப்பட்டிருக்கிறது. உமக்குத் தெரியாமல் இருக்காதே’

‘உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதியாதே என்று கூட எழுதியிருக்கிறதே. சோதனைப் பேயே மறைந்து போ’ இயேசு இரண்டாவது சோதனையையும் கடந்தார்.

அதன்பிறகு இயேசு மலையுச்சிக்குச் சென்றார். சுற்றிலும் பார்த்தார். இயற்கை மிகவும் அழகாக விரிந்து பரந்து கிடந்தது. சொகுசான மாட மாளிகைகள் அவருடைய கண்களுக்குத் தெரிந்தன. அவருக்குள் ஆசைப் பேய் மெல்ல மெல்ல எட்டிப் பார்த்தது.

‘ஏன் நீ கடவுளுக்கான பணிகளைச் செய்து உன் வாழ்க்கையை வீணடிக்க வேண்டும் ? பேசாமல் இந்த வளங்களையெல்லாம் அனுபவிக்கும் ஒரு பெரிய தலைவனாக மாறிவிடலாமே ? அல்லது அரசனாகி விடலாமே. எல்லா வளங்களும் உனக்கே. நீ நினைத்தால் இதெல்லாம் முடியும்’

‘கடவுளின் பணியே சிறந்தது’

‘எப்படி சொல்கிறாய் ? எத்தனையோ இறைவாக்கினர்கள் வந்தும் திருந்தாத மக்களா நீ சொல்லித் திருந்தப் போகிறார்கள். பேசாமல் கடவுள், போதனை இதையெல்லாம் விட்டு விட்டு ஆசையை அணைத்துக் கொள். மகிழ்ச்சியாக வாழ்’ சாத்தான் சொன்னான்.

‘போ.. அப்பாலே சாத்தானே. என்னைச் சோதிக்காதே. கடவுளை மட்டுமே வணங்கி அவரை மட்டுமே பணிந்திரு என்று சொல்லியிருக்கும் கட்டளைப்படிதான் வாழப் போகிறேன்’ இயேசு உறுதியாய் இருந்தார்.

உறுதியாய் இருக்கும் மனதை எந்த தீய எண்ணங்களும் திருடிக் கொள்வதில்லையே. இயேசுவும் மிகவும் உறுதியாக இருந்தார். தான் செய்யவேண்டிய பணிகளைத் தெளிவாகத் தெரிந்து வைத்திருந்தார். தன்னுடைய மனதைத் தன்னுடைய கட்டுப் பாட்டில் வைத்திருக்கும் உறுதியும் கொண்டிருந்தார்.

சோதனைகள் இயேசுவின் மனதை விட்டு அகன்றன. இயேசு தெளிவடைந்தார். பணிவாழ்வுக்கான பக்குவத்தைப் பெற்றார். ஆசைகளையும், சோதனைகளையும் தாண்டி தன்னால் மக்கள் பணி செய்யமுடியும் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டார்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink Closed

இயேசு வரலாறு 8 : முதல் சில சீடர்களை அழைத்தல்

Image result for Jesus calling disciples

இயேசுவும் தன்னுடன் இணைந்து கொண்டபின் யோவான் அதிக உற்சாகத்துடன் மக்களுக்குப் போதிக்கத் துவங்கினார். அவர் யோர்தான் நதியில் நின்றுகொண்டு மக்களுக்கு திருமுழுக்கு வழங்கிக் கொண்டிருந்தார். அவரைப் பிடிக்க அரசு உளவாளிகளை அனுப்பியிருந்தது. ஆனாலும் அவர் துணிச்சலைக் கைவிடவில்லை. தீயவர்களை நோக்கிய எச்சரிக்கையையும் கைவிடவில்லை. அவர் தன்னிடம் வரும் சீடர்களிடம் எல்லாம் ‘இயேசுவே உண்மையான கடவுளின் மகன். அவருடைய வழியில் செல்லுங்கள்’ என்று பகிரங்கமாக அறிவிக்கத் துவங்கினார்.

இயேசு அப்போதுதான் நாற்பது நாள் செபத்தை முடித்துக் கொண்டும், சோதனைகளை முறித்துக் கொண்டும் வெளிவந்திருந்தார். யோவானுடைய போதனையும், அவருடைய பணியும் எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்கும் ஆர்வத்தில் அவர் யோர்தான் நதிக்கரை ஓரமாக நடந்து கொண்டிருந்தார்.

இயேசுவைக் கண்ட யோவான், ‘இதோ போகிறாரே. இவர்தான் கடவுளின் ஆட்டுக் குட்டி. வானத்திலிருந்து கடவுளின் ஆவி அவர் மேல் இறங்குவதைக் கண்டோமே’ என்று மக்களிடம் உரக்கச் சொன்னார். மக்கள் அனைவரும் இயேசு நடந்து கொண்டிருந்த திசையைப் பார்த்தார்கள். இயேசு தொடர்ந்து நடந்து கொண்டிருந்தார்.

அந்திரேயா, யோவான் என்ற இரு மீனவர்கள் திருமுழுக்கு யோவானிடம் சீடர்களாகச் சேரவேண்டும் என்னும் ஆசையில் யோர்தான் நதிக்கரையிலேயே காத்திருந்தார்கள். அவர்கள் தங்கள் வாழ்வின் கஷ்டங்களிலிருந்து தங்களுக்கு விடுதலை தர வந்த மீட்பராக திருமுழுக்கு கொடுத்துக் கொண்டிருந்த யோவானைப் பார்த்தார்கள்.

யோவான் அவர்களுடைய சிந்தனையையும், எண்ணத்தையும் அறிந்தார். அவர்களிடம், ‘நீங்கள் பின் செல்ல வேண்டியது என்னையல்ல. நீங்கள் தேடும் மீட்பர் நான் அல்ல. நான் மீட்பருக்கான பாதையைச் செம்மைப்படுத்துபவன் அவ்வளவே. செல்லுங்கள். இயேசுவைப் பின் தொடருங்கள்’ என்று அனுப்பி வைத்தார். அவர்களும் யோவானுடைய வார்த்தைகளின் படி இயேசுவைப் பின் தொடர்ந்தார்கள்.

அவர்களும் இயேசுவைப் பின் தொடர்ந்து அவர்களுக்குப் பின்னால் சென்றார்கள். இயேசு நடந்து கொண்டே இருந்தார். அவர்கள் இருவரும் விடாமல் அவரைப் பின் தொடர்ந்து கொண்டே இருந்தார்கள். இயேசு நின்றார். திரும்பி அவர்களைப் பார்த்துப் புன்னகைத்தார். ,

‘ ஏன் ? எதையேனும் தேடி நடக்கிறீர்களா ?’

‘நாங்கள் யோவான் தான் மீட்பர் என்று நினைத்து அவரிடம் சீடர்களாகும் ஆசையில் வந்தோம். அவரோ நீர் தான் உண்மையான கடவுளின் மகன் என்று சொல்லி எங்களை அனுப்பினார். நாங்கள் உம்முடைய சீடர்களாக விரும்புகிறோம். எங்களுடைய மனதில் வலிகளும், கேள்விகளும், இயலாமைகளும் நிறைந்து கிடக்கின்றன. உம்முடைய வருகை தான் எங்களைச் சீர் செய்ய வேண்டும்’ அவர்கள் சொன்னார்கள்.

‘என்னைப் பின் தொடர்ந்து என் சீடர்களாக வருவது அவ்வளவு எளிதல்ல..’ இயேசு சொன்னார்.

‘என்ன கடினமானாலும் அதை நாங்கள் தாங்கிக் கொள்ளத் தயாராக இருக்கிறோம். எத்தனை நேரமானாலும் உம்முடன் செலவிடத் தயாராக இருக்கிறோம்’ அவர்கள் சொல்ல இயேசு மீண்டும் புன்னகைத்தார்

‘என்னுடைய பணிக்கு வருபவன், நேரத்தையல்ல வாழ்க்கையையே தரவேண்டும். தன்னுடைய குடும்பத்தின் மீதான பற்றுதலை முற்றிலுமாக விட்டு விட்டு நற்செய்தியை எங்கும் அறிவிக்க வேண்டும். மக்கள் பணியில் ஈடுபடுகையில் எந்தவிதமான சுயநல எண்ணங்களோ, உறவினர்களின் சிந்தனைகளோ எழக் கூடாது. நீங்கள் ஆர்வத்தினால் வந்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். ஆனால், மறுபரிசீலனை செய்யுங்கள். இது இலகுவான பணி அல்ல. இது விரும்பிச் சுமக்கும் பாரம்.’ இயேசு சொன்னார்.

‘நாங்கள் ஆர்வ மிகுதியால் வந்தவர்கள் அல்ல. ஒரு மீட்பரைக் காலம் காலமாய் எதிர்பார்த்துக் காத்திருந்தவர்கள். நாங்கள் உம்முடனே வருவோம். நீர் எங்கே தங்கியிருக்கிறீர் என்பதைச் சொல்லுங்கள்.’ அவர்கள் சொன்னார்கள்.

இயேசு அவர்களின் கண்களை உற்றுப் பார்த்தார். அவர்களுடைய பார்வையில் மிளிர்ந்த உறுதியைக் கண்டார். ‘ வந்து பாருங்கள் ‘ என்று ஒற்றை வரியில் பதிலளித்து விட்டு அமைதியாய் நடந்தார். அவர்கள் அவரைப் பின் தொடர்ந்து சென்று இயேசு தங்கியிருந்த இடத்துக்கு வந்தார்கள். இயேசு இப்போது தன்னுடைய குடும்பத்தை விட்டு விட்டு தனியே தங்கியிருந்தார். இயேசுவுடன் வந்த இருவரும் அவருடன் அமர்ந்து பேசத் துவங்கினார்கள். இயேசு அவர்களுக்கு தன்னுடைய சிந்தனைகளையும், இறையரசின் தன்மைகளையும், நேர்மையான வழிமுறைகளையும் போதித்தார். போதனை நீண்டு கொண்டே இருந்தது. இயேசுவின் போதனைகளில் இருந்த உறுதியும், கேள்விகளை எதிர்கொள்ளும் அறிவும், தீர்க்கமான சிந்தனைகளும், இழையோடிய மனித நேயமும் அவர்களைக் கட்டிப் போட்டன. அவர்கள் இயேசுவை என்றும் பிரியப்போவதில்லை என்று முடிவெடுத்தார்கள்.

‘போதகரே.. நீர் தான் உண்மையான இறைவாக்கினர். இனிமேல் நாங்கள் உம்மை விட்டுப் பிரியப் போவதில்லை. எப்போதும் உம்முடன் தான் இருப்போம்’ என்றார்கள். அந்திரேயா, யோவான் என்னும் அந்த இருவரும் இயேசுவின் முதல் இரு சீடர்களானார்கள்.

தாங்கள் அறிந்த இயேசுவைப்பற்றி தங்கள் சகோதரர்களும் அறிந்து கொள்ளவேண்டும் என்று அவர்கள் இருவரும் ஆசைப்பட்டார்கள். அந்திரேயா தன்னுடைய சகோதரன் சீமோனைச் சந்திக்க ஓடினார். இந்த ஆச்சரியச் செய்தியைப் பரிமாறிக் கொள்ளும் அவசரம் அவரிடம் தெரிந்தது.

‘சகோதரனே… மெசியாவைக் கண்டோம்.. மீட்பரைக் கண்டோம்’ அவருடைய குரலில் உற்சாகம் பீறிட்டது.

சீமோன் ஆர்வம் காட்டவில்லை.’ நீங்கள் இப்படித்தான் அடிக்கடி சொல்லிக் கொண்டு திரிகிறீர்கள். இப்போது திருமுழுக்கு யோவானின் பின்னால் அலைகிறீர்கள். அப்படித்தானே ?’

‘இல்லை. அவர் மீட்பர் இல்லை. இது வேறு ஒரு நபர்’

‘ஓ.. அவரையும் விட்டு விட்டீர்களா ? இப்போது யார் புதிதாய் ?’ சீமோன் சிரித்துக் கொண்டே கேட்டார்.

‘சிரிக்கவேண்டாம் சகோதரனே… உண்மையைத் தான் சொல்கிறேன். நாம் காலங் காலமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோமே ஒரு மெசியா ! ஒரு மீட்பர் ! அவரைத் தான் கண்டோம். கடந்த சில நாட்களாக அவருடன் தான் பேசிக்கொண்டிருக்கிறோம். அவரை முழுமையாக அடையாளம் கண்டு கொண்டோம். இனிமேல் சந்தேகமே இல்லை. இது மீட்பர் தான். அவருடைய போதனைகளையும், பதில்களையும் வந்து கேட்டுப் பார் உனக்கே தெரியும்’

‘உளறாதீர்கள். பலர் வந்து இப்படியெல்லாம் பேசி உங்களை ஏமாற்றுவார்கள். எச்சரிக்கையாய் இருங்கள்’ சீமோன் சொன்னார்.

‘இல்லை… இல்லை.. இவர் அப்படியல்ல. எத்தனையோ பேர் பேசினார்கள். எத்தனையோ போதகர்கள் வந்தார்கள். ஏன் யோவான் கூட திருமுழுக்கு கொடுத்து வருகிறார். அவர்களில் யாரையாவது நான் மெசியா என்று சொல்லியிருக்கிறேனா ? போதகர்கள் என்று தானே சொல்லியிருக்கிறேன் ? இவர் உண்மையிலேயே மெசியாதான். வந்து பார்’ அந்திரேயா சகோதரனை சம்மதிக்க வைத்தார்.

சகோதரனின் ஆர்வத்தைக் கண்ட சீமோனுக்கும் இயேசுவைப் பார்க்கவேண்டும் என்னும் எண்ணம் வந்தது. அவர் இயேசுவிடம் வந்தார். இயேசுவைக் கண்ட சீமோன் ஒரு வினாடி திகைத்தார். இயேசுவின் சாந்தமான முகமும், அவருடைய தீர்க்கமான பார்வையும் அவரைக் கட்டிப் போட்டன. இயேசுவும் சீமோனை உற்றுப் பார்த்தார்.

‘சீமோனே. உன் பெயர் இனிமேல் கேபா ! கேபா என்றால் பாறை என்பது பொருள். நீ பாறையைப் போன்று வலிமையானவன். ‘ என்றார். சீமோன் திகைத்தார். இயேசுவின் வித்தியாசமான அணுகுமுறையும், வரவேற்பும் அவரை வசீகரித்தன. அந்த நிமிடத்திலேயே இயேசுவின் சீடரானார். அவர்கள் ஒரு குழுவானார்கள்.

மறுநாள் அவர்கள் அனைவரும் கலிலேயா செல்லவேண்டும் என்று முடிவெடுத்து பயணத்தைத் துவங்கினார்கள். வழியில் பிலிப்பு என்பவரைக் கண்டார். அவர் கப்பர்நாகூமில் பிறந்து தன்னுடைய பெரும்பாலான காலத்தை பெத்சாய்தாவில் செலவிட்டவர். அவரைக் கண்டதும் தன்னுடைய சீடனாகும் தகுதி அவருக்கு இருப்பதை அறிந்த இயேசு அவரைப் பார்த்து ‘என்னைப் பின் தொடர்ந்து வா’ என்றார். பிலிப்பு ஏதும் பேசாமல் அவரைப் பின் தொடர்ந்தார்.

இயேசுவின் வார்த்தைகள் பிலிப்புவையும் கட்டிப் போட்டன. அவரும் இயேசுவின் சீடரானார். இயேசுவின் போதனைகளை ஊரெங்கும் பரப்பவேண்டும் என்று உறுதியும் கொண்டார். அவருக்கு தன்னுடைய நண்பர் நத்தனியேலின் நினைவு வந்தது. நத்தனியேலும் மீட்பரை எதிர்பார்த்துக் காத்திருந்தவர். பிலிப்பு பலமைல்கள் தொலைவில் இருந்த தன்னுடைய நண்பர் நத்தானியேலைக் காண விரைந்தார். நத்தனியேல் ஒரு அத்திமரத்தின் அடியில் படுத்து வானத்தை வெறித்துக் கொண்டிருந்தார்.

‘நத்தனியேல், ஒரு ஆனந்தமான செய்தி. நாங்கள் ஒரு மிகச் சிறந்த போதகரைக் கண்டோம். அவர் ஒருவேளை மீட்பராக இருக்கலாம். நம்முடைய சட்டநூல்கள் சொன்ன மெசியாவாக இருக்கலாம். இந்த செய்தியைக் கேட்டு சந்தோசப் படுவாய் என்று எனக்குத் தெரியும் அதனால் தான் உன்னைத் தேடி ஓடி வந்தேன். ‘ பிலிப்பு சொன்னதைக் கேட்ட நத்தனியேல் சட்டென்று எழுந்தார். அவருடைய கண்கள் மின்னின.

‘மெசியாவா ? மிகச்சிறந்த போதகரா ? எங்கே கண்டீர்கள் ? எங்கிருந்து வந்திருக்கிறார் ? சொல்.. சொல்’ நத்தனியேல் அவசரமானார்.

‘அவர் நாசரேத்தில் இருக்கிறார். மரியா, யோசேப்பு என்பவரின் மகன் தான் அவர்’ பிலிப்பு சொன்னதும் நத்தனியேல் பின்வாங்கினார். அவருடைய கண்களில் மின்னிக் கொண்டிருந்த வெளிச்சம் அணைந்தது.

‘நாசரேத்தா ? அங்கிருந்து நல்லது எதுவும் தோன்றாது. நீர் சொல்வது உண்மையாய் இருக்க வாய்ப்பில்லை’ நத்தனியேல் சுருதி குறைத்துத் தயங்கினார்.

‘வந்து பாரும். புரிந்து கொள்வீர்.. சந்தேகப் பட வேண்டாம். வந்து பார்த்து அவர் நல்ல போதகரில்லை என்று தோன்றினால் திரும்பி விடு ‘ பிலிப்புவின் குரலில் இருந்த உறுதி நத்தனியேலை இயேசுவிடம் அழைத்து வந்தது.

‘வா. நத்தனியேல். நீ உண்மையிலேயே நல்ல தூய்மையானவன். கபடமற்ற இஸ்ரயேலன்’ இயேசு அவரைப் பார்த்துச் சொன்னார்.

நத்தனியேல் நெற்றி சுருக்கினார். ‘என்னைப்பற்றி உங்களுக்கு எப்படித் தெரியும் ? பிலிப்பு சொன்னாரா ?’

‘பிலிப்பு உன்னைக் கூப்பிடும் முன், நீ அத்திமரத்தின் அடிவாரத்தில் இருந்தபோதே நான் உன்னைக் கண்டேன்’ இயேசு புன்னகையுடன் சொன்னார்.

நத்தனியேல் வியந்தார். தான் பல மைல் தொலைவில் ஒரு அத்தி மரத்தின் கீழே இருந்ததை இவர் எப்படிக் கண்டார் ? அப்படியானால் இவர் உண்மையிலேயே பெரியவர் தான் நத்தனியேல் வியந்தார்.

இயேசு மீண்டும் புன்னகைத்தார். ‘ உன்னை அத்திமரத்தின் அடியில் பார்த்தேன் என்று சொன்னதற்கா வியப்படைகிறாய். நீ காணப் போகும் அதிசயங்கள் ஏராளம் உள்ளன. ஏன் வானம் திறப்பதையும், கடவுளின் தூதர்கள் இறங்கி என் மீது வருவதையும் கூட நீ காண்பாய்’

இயேசு சொன்னதைக் கேட்ட நத்தனியேல் அந்நேரமே இயேசுவின் சீடரானார்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink Closed

இயேசு வரலாறு 9 : கானாவூரில் திருமணம்; அதிசயத்தின் ஆரம்பம்

Image result for Wedding in Cana

இயேசு தன்னுடைய புதிய ஐந்து நண்பர்களையும் அழைத்துக் கொண்டு நாசரேத்தில் இருந்த தன் வீட்டுக்குத் திரும்பினார். இயேசுவையும் அவருடைய புதிய நண்பர்களையும் கண்ட மரியா அவர்களை ஆனந்தத்துடன் வரவேற்று உபசரித்தாள். மகனை நீண்ட நாட்களுக்குப் பிறகு பார்க்கும் ஆனந்தம் அவளுடைய கண்களில் மின்னியது.

‘என்னுடைய தோழியின் மகளுக்குத் திருமணம். அந்த விழாவுக்குச் செல்ல இருக்கிறேன். நீயும் உன் நண்பர்களும் வந்தால் நன்றாக இருக்கும்’ இயேசுவின் தாய் விண்ணப்பித்தாள். இயேசு மறுக்கவில்லை. தன்னுடைய நண்பர்களையும் அழைத்துக் கொண்டு அன்னையுடன் திருமண விழாவுக்குப் புறப்பட்டார்.

திருமணம் கலிலேயாவிலுள்ள கானா என்னும் கிராமத்தில் இருந்தது. அது தான் நத்தனியேலின் கிராமம். அவர்கள் அனைவரும் நாசரேத்திலிருந்து ஐந்து மைல் தொலைவில் இருந்த கானாவை நோக்கி நடந்தார்கள். இயேசு பொதுவாக இப்படிப்பட்ட விழாக்களில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை. அவருக்கு சிந்திப்பதிலும், மக்களுடன் உரையாடுவதிலும், செபிப்பதிலும் மட்டுமே ஆர்வம் இருந்தது. ஆனாலும் தாயின் சொல்லை அவர் தட்டுவதில்லை. தாயின் விண்ணப்பத்தை நிராகரிப்பதும் இல்லை. பன்னிரண்டாவது வயதில் எருசலேம் தேவாலயத்தில் மறைநூல் வல்லுநர்களுடன் ஆர்வமுடன் உரையாடிக் கொண்டிருந்தபோதே அன்னையின் கவலை கண்டு எல்லாவற்றையும் விட்டு விட்டு அன்னையோடு திரும்பியவர் அவர். எனவே திருமணத்துக்கு வர அன்னை அழைத்தபோதும் அதை மறுக்கவில்லை.

திருமணம் வெகு விமரிசையாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. மக்கள் ஆடலும் பாடலுமாக திருமண அரங்கையே விழா மேடையாக்கிக் கொண்டிருந்தார்கள்.

அன்றைய நாட்களில் திருமண விழாக்களில் முக்கிய இடம் பிடிப்பது திராட்சை இரசம். அவரவர் வசதிக்கும், அந்தஸ்துக்கும் ஏற்ப நல்ல திராட்சை ரசத்தை வழங்குவது வழக்கம். இந்த திருமண விழாவிலும் சுவையான திராட்சை இரசம் பரிமாறப்பட்டுக் கொண்டிருந்தது. மக்கள் ஆர்வமாய் அதை சுவைத்து மகிழ்ந்து இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்தார்கள்.

திடீரென திருமண அரங்கில் சிறு சலசலப்பு.

‘இங்கே.. கொஞ்சம் திராட்சை இரசம் கொண்டு வாருங்கள்…’

‘திராட்சை இரசம் கேட்டேனே கிடைக்கவில்லையே’

ஆங்காங்கே குரல்கள் மெலிதாக எழ ஆரம்பித்தன. வீட்டின் பின் புறத்திலோ பணியாளர்கள் திகைத்துப் போய் கைகளைப் பிசைந்து கொண்டு நின்றிருந்தார்கள்.

பணியாளர்கள் நிற்கும் நிலமையைப் பார்த்த இயேசுவின் தாய்க்கு ஏதோ பிரச்சினை என்பது புரிந்தது. ஆனால் என்ன பிரச்சினை என்பது சரியாக விளங்கவில்லை. எனவே அவர் அவர்களிடம் சென்று
‘என்ன பிரச்சினை ? மக்கள் திராட்சை இரசம் கேட்கிறார்கள். நீங்கள் பரிமாறவில்லையே ! செல்லுங்கள். விருந்தினர்களை உபசரியுங்கள்’ என்றார்.

‘அம்மா. அதில் தான் பிரச்சினையே. எங்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை’

‘ஏன் என்னாச்சு ?’

‘அம்மா. திராட்சை இரசம் தீர்ந்து விட்டது !’

‘என்ன திராட்சை இரசம் தீர்ந்து விட்டதா ? திருமண விழா இன்னும் முடியவில்லையே. இரசம் மிகவும் குறைவாகத் தான் இருந்ததா ?’ மரியாளின் குரலில் அதிர்ச்சி தெரிந்தது.

‘இல்லை அம்மா. தேவையான அளவு இரசம் இருந்தது. ஆனால் ஆடலும், பாடலும் இருப்பதால் மக்கள் அதிகமாக திராட்சை இரசம் அருந்துகிறார்கள். அதனால் தான் நாங்கள் எதிர்பார்த்ததுக்கு மாறாக இரசம் தீர்ந்து விட்டது. எஜமானருக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை.’ பணியாளர்கள் குரல் தடுமாறியது.

‘இப்போது என்ன செய்வது ?’ மரியா கவலையுடன் கேட்டாள்.

‘அது தானம்மா எங்களுக்கும் புரியவில்லை. எங்கள் மானம் போய்விடும் போலிருக்கிறது. இப்போது திடீரென சென்று இரசம் வாங்கி வரவும் முடியாது. நாங்கள் வாங்கி வரும் முன் விழா முடிந்து விடும். அவமானமும் நிச்சயம். ‘ பணியாளனின் கண்களில் கண்ணீர்.

அதற்குள் திருமண அரங்கில் பலரும் திராட்சை இரசம் கேட்கத் துவங்கிவிட்டார்கள். எங்கும் குரல்கள் ஒலிக்க, பணியாளர்களின் பதட்டம் அதிகரித்துக் கொண்டே வந்தது.

இவர்களுக்கு எப்படியாவது உதவவேண்டும் என்று மரியா முடிவெடுத்தார். தன் மகன் கடவுளின் வல்லமைபெற்றவன் அவன் நினைத்தால் எது வேண்டுமானாலும் செய்ய முடியும் என்று அவர் நம்பினார். அவர் இயேசுவை அழைத்தார்.

‘அம்மா அழைத்தீர்களா’ இயேசு அமைதியாய்க் கேட்டார்.

‘ஆம்.. மகனே. திருமண விழாவில் ஒரு குறை’. இயேசு தாயின் முகத்தைப் பார்த்தார்.

‘இரசம் தீர்ந்து விட்டது.’

‘அம்மா.. இப்போது இந்த திருமண வீட்டில் ஏதேனும் அதிசயம் செய்து ஆரம்பித்து வைத்தால் அது விடிவதற்குள் ஊரெங்கும் பரவி விடும். அதன்பின் என்னால் சுதந்திரமாக உலவ முடியாது. என்னுடைய பணியை நான் உடனே ஆரம்பித்தாக வேண்டிய கட்டாயம் வந்து விடும். எனக்கு போதகர், மீட்பர் என்னும் முத்திரை விழுந்து விடும். என்னால் தயாரிப்புப் பணியைத் தொடர முடியாது. நான் என்னுடைய பணியை ஆரம்பிக்கும் நாள் என்பது என்னுடைய மரணத்தை நோக்கிய பயணத்தைத் துவங்குவது போல. அம்மா. என்னுடைய நேரம் இன்னும் வரவில்லை ‘ இயேசு அன்னையின் காதுகளில் கிசுகிசுத்தார்.

‘இக்கட்டான நேரத்தில் உதவுதல் தான் முக்கியம். உன்னுடைய பணி இங்கேயே ஆரம்பிக்கட்டுமே’ மரியா மெல்லிய குரலில் சொன்னார். சொல்லிவிட்டு வேலையாட்களை அழைத்து,

‘வாருங்கள். உங்கள் குறைகளை நாங்கள் அறிகிறோம். இதோ இவர் சொல்வதையெல்லாம் நீங்கள் செய்யுங்கள்’. இயேசுவைக் சுட்டிக் காட்டி மரியா சொன்னாள். இயேசு புன்னகைத்தார். அன்னையின் பேச்சுக்கு மறு பேச்சு சொல்லவில்லை.

அவர்கள் இயேசுவை கேள்விப் பார்வை பார்த்தார்கள். இயேசுவின் கைகளில் ஒன்றும் இல்லை. விழாவில் திராட்சை இரசம் இல்லை. இவர்களுடைய வீடும் அருகில் இல்லை. இவர் எப்படி உதவ முடியும் என்ற கேள்வியே அனைவரின் பார்வையிலும். ஆனாலும் ஏதேனும் வழியில் திராட்சை இரசம் கிடைக்குமெனில் அதை விடப் பெரிய சந்தோசம் ஏது ? பணியாளர்கள் இயேசுவின் முகம் பார்த்து நின்றார்கள்.

இயேசு சுற்றுமுற்றும் பார்த்தார். அங்கே ஆறு கற்சாடிகள் இருந்தன.

‘இதென்ன சாடிகள் ?’ இயேசு கேட்டார்.

‘தூய்மைச் சடங்குகளுக்காக இதை இங்கே வைத்திருக்கிறோம். இப்போது இவற்றில் ஒன்றும் இல்லை’ பணியாளர்கள் சொன்னார்கள்.

‘இதில் எத்தனை குடம் தண்ணீர் பிடிக்கும் ?’

‘ஒவ்வொன்றிலும் இரண்டு மூன்று குடம் தண்ணீர் கொள்ளும்’

‘சரி. இந்த ஆறு கற்சாடிகளிலும் தண்ணீர் நிறையுங்கள்’ இயேசு சொல்ல, பணியாளர்களுக்கு மீண்டும் குழப்பம். ஆனாலும் ‘இவர் சொல்வதையெல்லாம் செய்யுங்கள்’ என்று மரியா சொல்லியிருந்தாரே. பணியாளர்கள் அவ்வாறே செய்தனர். மிக விரைவாக ஆறு கற்சாடிகளிலும் தண்ணீர் நிறைத்தார்கள்.

இயேசு சிறிது நேரம் கண்களை மூடி செபித்தார். பின் கைகளை நீட்டி அந்த சாடிகளை ஆசீர்வதித்தார்.

‘சரி.. இப்போது இதைக் கொண்டு பந்தி மேற்பார்வையாளனிடம் கொடுங்கள்’ இயேசு சொன்னார்.

‘என்ன சொல்கிறீர்கள் ? எங்களுக்குத் தண்ணீருக்குத் தட்டுப் பாடு வரவில்லை. திராட்சை இரசம் தான் தீர்ந்து விட்டது. ‘ பணியாளர்கள் குரலில் எரிச்சலும் வெறுப்பும் வெளிப்பட்டது.

‘அதுதான் இதோ ஆறு கற்சாடிகளில் இருக்கிறதே.’ இயேசு புன்னகைத்தார்.

‘இதுவா… இந்தத் தண்ணீரா ? என்ன விளையாடுகிறீர்களா ? எங்கள் வேதனை உங்களுக்கு விளையாட்டாய் தெரிகிறதா ? ‘ கற்சாடியிலிருந்த தண்ணீரைக் கைகளில் அள்ளியபடி கேட்டான் பணியாளன்.

‘தண்ணீரா இது ?’ இயேசு கேட்டார்.

பணியாளன் கைகளைப் பார்த்தான். அவனுடைய விரல்களில் இடையே திராட்சை இரசம் வழிந்து கொண்டிருந்தது !. திகைத்தான். உள்ளுக்குள் நடுங்கினான். இமைகளை மூடவும் மறந்து வியந்து நின்றான்.

‘இதை மொண்டு பந்தி மேற்பார்வையாளனிடம் கொண்டு செல்’ இயேசு சொல்ல, மறு பேச்சு எதையும் பேசாமல் பணியாளன் விரைந்தான்.

‘ஐயா… இ…இதோ திராட்சை இரசம்’

‘தி….திராட்சை இரசமா ? அது தான் தீர்ந்து விட்டதே. எங்கிருந்து கிடைத்தது இது ?’ ஆச்சரியத்துடன் கிசு கிசுப்பாய்க் கேட்டுக் கொண்டே பந்தி மேற்பார்வையாளன் அந்த திராட்சை இரசத்தைச் சுவைத்தான். சுவையில் சொக்கினான்.

‘ஆஹா… அருமையான இரசம்… அருமையான இரசம். எங்கே போய் வாங்கினீர்கள் ? எங்கிருந்து கிடைத்தது ? ‘

‘தண்ணீரிலிருந்து’

‘தண்ணீரிலிருந்தா ? என்ன சொல்கிறாய் ?’ மேற்பார்வையாளர் குழம்பினார்.

‘ஆம். இயேசு என்றொருவர் விருந்துக்கு வந்திருக்கிறார். அவர் தான் தண்ணீரை திராட்சை இரசமாக்கிக் கொடுத்தார்’ பணியாளன் சொல்லிவிட்டு நகர, மேற்பார்வையாளன் மெய்மறந்து நின்றான்.

திராட்சை இரசம் மீண்டும் திருமணப் பந்திக்கு வந்தது.

‘குடியுங்கள் ஐயா… நல்ல திராட்சை இரசம்’ விருந்தினர்களுக்கு இரசம் போதும் போதுமென்னும் அளவுக்குப் பரிமாறப்பட்டது.

‘இதென்ன ? இந்த திராட்சை இரசம் இவ்வளவு சுவையாய் இருக்கிறது ‘

‘ஆஹா… இதுவல்லவா திராட்சை இரசம். திருமணம் வெகு சிறப்பு !’

‘எல்லோரும் நல்ல ரசத்தை முதலில் பரிமாறிவிட்டு, கடைசியில் மோசமானதைப் பரிமாறுவார்கள். ஆனால் இங்கே, இவர்கள் நல்ல இரசத்தைக் கடைசி வரை வைத்திருக்கிறார்கள் பார்த்தாயா ?’

திருமண மண்டபம் களைகட்டியது. அனைவரும் மகிழ்ந்தார்கள்.

இயேசு அமைதியாய் நின்றார். அவருடைய மனதுக்குள் பணிவாழ்வைப்பற்றியும் தான் செய்ய வேண்டிய பணிகளைப் பற்றியும் சிந்தனைகள் சுற்றிக் கொண்டிருந்தன. விழா கலகலப்பாய் நடக்க, இயேசு தன்னுடைய சீடர்களையும் அழைத்துக் கொண்டு நாசரேத் திரும்பினார்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink Closed

இயேசு வரலாறு 10 : இயேசுவின் பணித்தளம்

Image result for Jesus with disciples

சில நாட்களில் இயேசு தன்னுடைய ஐந்து சீடர்களையும் அழைத்துக் கொண்டு கப்பர்நாகும் என்னும் ஊருக்கு வந்தார். கலிலேயா ஏரியின் அருகே கம்பீரமாய் இருந்தது கப்பர்நாகும் நகரம். சுமார் பதினைந்து மைல் தூர ஏரிக்கரையில் இருந்த கப்பர்நாகும் அனைத்து விதமான மக்களையும் உள்ளடக்கிய ஒரு இடம் என்று கூட சொல்லலாம். வணிகர்களையும், ஏழைகளையும், பணக்காரர்களையும் கிழக்கிலும், மேற்கிலுமிருந்து ஏராளம் மக்கள் வந்து செல்லும் இடமாக இருந்தது அது. பேதுருவின் மாமியாரின் இல்லமும் அங்கே தான் இருந்தது.

கப்பர்நாகும் அக்காலத்தில் ஏரிகளின் ராணி என்று அழைக்கப்பட்டது. கலிலேயாவின் மிக முக்கியமான ஒரு நகரம் அது. சுமார் பதினைந்து மைல் நீளத்தில் விரிந்திருந்த அந்த ஏரியின் கரை பல நகரங்களை இணைத்து அழகுடன் கம்பீரமாக இருந்தது. ஏரிகளுக்கு முதுகு காட்டி நடந்தால் பச்சையும், மலைகளும் என இயற்கை அழகின் இன்னோர் பக்கம் அங்கே இருந்தது. பேதுரு அந்த ஏரிகளின் ஒவ்வோர் பகுதியையும் மிகவும் தெளிவாக அறிந்தவர். அங்கே தான் அவருடைய படகு மீன்களைத் தேடி அங்கும் இங்கும் அலையும். பேதுரு இயேசுவுக்கு கப்பர்நாகும் நகரைப் பற்றியும் அதன் தன்மைகளைப் பற்றியும் விளக்கினார். மீனவர்களின் வாழ்க்கையையும், அன்றாட வாழ்க்கை முறைகளையும் அவர் விளக்கினார்.

கப்பர்நாகும் நகர் இயேசுவை மிகவும் கவர்ந்தது. அழகான ஏரியும், பலதரப்பட்ட மனிதர்களும், மலை வெளிகளும் என கப்பர் நகூமில் தன்னுடைய போதனைகளுக்கான தளம் இருப்பதை இயேசு கண்டு கொண்டார். கப்பர்நாகும் நகரை தன்னுடைய போதனைகளின் தலைமையிடமாக்க வேண்டும் என்பதை அப்போதே அவர் உறுதி செய்து கொண்டார். ஆனால் இன்னும் எதைப் பற்றிய தெளிவும் சீடர்களிடம் இல்லை. முதலில் சீடர்களுக்குத் தன்னுடைய பணியை விளக்க வேண்டும். என்ன செய்யப் போகிறோம் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும், ஒத்துக் கொள்ள வேண்டும் அதன் பிறகே பணிக்குள் செல்ல வேண்டும் என்பதே இயேசுவின் திட்டமாக இருந்தது.

கப்பர்நாகூமை இயேசு போதனைகளுக்கான இடமாகத் தெரிந்து கொண்டதற்கு இன்னும் ஒரு காரணம் இருந்திருக்க வேண்டும், அது மேற்கிலிருந்தும் கிழக்கிலிருந்தும் வருபவர்களுக்கான ஒரு சந்திப்பு ஊராகவும் இருந்தது. பல நாடுகளிலிருந்தும் வரும் வணிகர்கள் மூலமாக தன்னுடைய போதனைகள் பல இடங்களுக்கும் பயணிக்க முடியும் என்பதையும் இயேசு கணித்திருக்கக் கூடும்.

முதலில் சீடர்களை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும், பிறகு அவர்களுக்கு மனித நேயம் பற்றியும், தற்போதைய யூத மதப் போதனைகளில் ஒளிந்திருக்கும் மனித விரோத சிந்தனைகள் பற்றியும் விளக்கவேண்டும் என்று இயேசு முடிவெடுத்தார். இயேசு அவர்களுடன் சகஜமாகப் பழகி அவர்களுக்குத் தன்னுடைய சிந்தனைகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த அதே காலகட்டத்தில் திருமுழுக்கு யோவான் அரசுக்கு எச்சரிக்கை அனுப்பிக் கொண்டிருந்தார்.

ஏரோது மன்னன் மோவாய் தேய்த்து யோசித்துக் கொண்டிருக்கையில் அவனுடைய மனைவி எப்படியேனும் யோவானைக் கொல்லுங்கள் என்று நச்சரித்தாள்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink Closed

இயேசு வரலாறு 11 : மாற்றான் மனைவியை அபகரித்தல் பாவம் – யோவான்

Image result for John the baptist warns

இறைவாக்கினர்கள் எதற்கும் அஞ்சாதவர்கள். அவர்கள் நீதி என்று தங்களுக்குப் படுவதை எந்த சபையிலும் எடுத்துரைக்கத் தயங்குவதில்லை. யோவான் இறைவாக்கினரும் இதற்கு சற்றும் விதிவிலக்கல்ல. அந்நாட்களில் வாழ்ந்த மறைநூல் அறிஞர்கள், சட்ட வல்லுனர்கள், ஆலய குருக்கள் அனைவருக்கு எதிராகவும் குரல் கொடுத்தார். அத்துடன் நின்று விடவில்லை. அவருடைய குரல் அரசவையிலும் எதிரொலித்தது.

கலிலேயாவை ஆண்டு வந்த மன்னன் ஏரோது அந்திபாஸ், இயேசு குழந்தையாய் இருந்தபோது குழந்தைகளைக் கொல்ல சட்டம் இயற்றிய ஏரோது மன்னனின் மகன். அவனுடைய ஆட்சி நியாயமானதாக இருக்கவில்லை. அவன் ஏழைகளை பலவகைகளில் ஒடுக்கியும் நியாயத்தை இருட்டடிப்பு செய்தும் வாழ்ந்து வந்தான். அத்துடன் நிற்கவில்லை, தன்னுடைய சகோதரன் பிலிப்பின் மனைவி மேல் ஆசைப்பட்டு அவளைத் தன்னுடன் வைத்திருந்தான். மக்கள் யாரும் ஏரோது மன்னனின் கொடுமைகளுக்கு எதிராகக் குரல் கொடுக்க முடியவில்லை. அப்படிக் குரல் கொடுத்தால் மரணம் நிச்சயம் என்பதை எல்லோரும் அறிந்து வைத்திருந்தார்கள்.

யோவான் இறைவாக்கினர் உயிருக்குப் பயப்படவில்லை. அவர் நேராக மன்னனின் முன்னால் சென்று நின்றார்.

‘அரசே… நியாயமான வழிகளில் நடக்காதவன் அழிவுக்கு உள்ளாவான். நீ உன்னுடைய தவறான வழிகளை விட்டு விலகி விடு’ யோவான் நேரடியாக எச்சரித்தார்.

‘நீ யாரிடம் பேசுகிறாய் தெரியுமா ?’

‘வழி தவறிப்போன ஒரு தலைவரிடம் பேசுகிறேன்’

‘நான் ஒரு அரசன். என்னுடைய அவையில் வந்து நின்று என்னையே எதிர்க்க உனக்கு என்ன துணிச்சல்’ ஏரோது மன்னன் கர்ஜித்தான்.

‘துணிச்சல் மனிதனால் வருவதல்ல. உன் துணிச்சல் உன் அதிகாரத்தினால் வருகிறது. என் துணிச்சலோ கடவுளால் வருகிறது. எனவே உன் துணிச்சலை விட என் துணிச்சல் மேலானது. அது அழிவுறாது’ யோவான் தயங்காமல் சொன்னார்.

‘இத்தனை துணிச்சலோடு என்ன பேச வந்திருக்கிறாய் ?’

‘நீ மோகத்தின் வால் பிடித்துக் கொண்டு உன்னுடைய சகோதரனின் மனைவியை உன்னுடைய வைப்பாட்டியாக்கி வைத்திருக்கிறாயே ! அதைத் தான் சுட்டிக் காட்ட வந்தேன்’ யோவான் சொன்னார்.

‘அவளுடைய விருப்பத்துடன் தான் அவளுடன் வாழ்க்கை நடத்துகிறேன்’ ஏரோது சொன்னான்.

யோவான் சிரித்தார். ‘ விருப்பம் ! அது மனித விருப்பம். கடவுளின் சட்டம் என்ன சொல்கிறது என்று தெரியாதா ? சாக்குப் போக்கு சொல்வதில் எந்தப் பயனும் இல்லை’ யோவான் நகைத்தார்.

ஏரோது மன்னன் திருமுழுக்கு யோவானைப் பற்றி அறிந்திருந்தான். தான் செய்வது தவறு என்றும் யோவான் சொல்வதில் பிழை ஒன்றும் இல்லை என்றும் அவனுக்குத் தெரிந்திருந்தது. யோவானுடைய தினசரிப் போதனைகள் ஏரோதின் காதுக்கு வந்து கொண்டே தான் இருந்தன. அவை சரியானவை என்றும் ஒருவேளை அவர் கடவுளின் தீர்க்கத்தரிசியாக இருக்கலாம் என்னும் பயமும் ஏரோதை பயமுறுத்தின.

ஆனால் அவனுடைய ஆசை மனைவியோ, தன்னைப் பற்றி இப்படி எச்சரிக்கையும் சாபமும் விட்டுக் கொண்டிருக்கும் யோவான் சாக வேண்டும் என்று கொதித்தாள். ஆசை நாயகியின் விருப்பங்களுக்குத் தடை ஏது ? நியாயத்தையும் நீதியையும் போதித்துக் கொண்டிருந்த திருமுழுக்கு யோவான் சிறையிலடைக்கப் பட்டார்.

யோவானைச் சிறையிலடைத்தபின்னும் ஏரோதியாளின் கோபம் அடங்கவில்லை. ஒரு சாதாரண மனிதன் அரச நிலையில் இருக்கும் தன்னை இழித்துரைப்பதா என்று ஆத்திரமடைந்தாள். சரியான நேரம் வரும்போது யோவானைப் பழிவாங்க வேண்டும் என்று காத்திருந்தாள்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink Closed

இயேசுவின் வரலாறு 12 : சமாரியப் பெண்

Image result for Samaritan womenசெய்தியை கேள்விப்பட்ட இயேசுவும் அவருடைய ஐந்து சீடர்களும் யூதேயாவை விட்டு கலிலேயாவை நோக்கிப் பயணமானார்கள். ஆச்சரியப்படும் விதமாக இயேசு அவர்களை வழக்கமான பாதையில் கூட்டிச் செல்லாமல் சமாரியா வழியாக கூட்டிச் சென்றார் !

சமாரியா ! யூதர்களுக்குப் பிடிக்காத ஒரு ஊர்.
சமாரியர்கள் ! யூதர்களால் வெறுக்கப்படும் இனம்.

இவர்களுக்குள் அப்படியொன்றும் பெரிய வித்தியாசம் இல்லை. மூதாதையர்களைப் பொறுத்தவரை எல்லோரும் ஒன்றாக இருந்தவர்கள் தான். காலப்போக்கில் வழிபாட்டு இடத்தைப் பிரதானப் படுத்தி யூதர்களும், சமாரியர்களும் பிளவுபடத் துவங்கினார்கள். அந்தப் பிளவு நாளாவட்டத்தில் அதிகரித்து அதிகரித்து இரு பிரிவினருக்கும் இடையே எந்தவிதமான உறவும் இல்லை என்றானது. இன்னும் சொல்லப்போனால் சமாரியர்களை யூதர்கள் தாழ்ந்தவர்களாக, பேசத்தகாதவர்களாகப் பார்த்தார்கள்.

யூதர்களும், சமாரியர்களும் ஒரே கடவுளைத் தான் வழிபட்டும் வந்தார்கள். ஆனால் சிற்சில வேறுபாடுகளுடன். சமாரியர்களின் புனித நூல் என்பது மோசே எழுதிய சட்டதிட்டங்கள் அடங்கிய ‘தோரா’ என்றழைக்கப்படும் ஐந்து நூல்களை மட்டுமே. யூதர்களின் புனித நூலில் வேறு பல பகுதிகளும் உள்ளன.

யூதர்கள் எருசலேமில் மோரியா மலைமீது அமைந்துள்ள எருசலேம் தேவாலயத்தில் கடவுளை வழிபடுவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தார்கள். சமாரியர்களோ கரிசிம் மலையின் மீது கட்டப்பட்டிருந்த ஆலயத்தில் தான் கடவுளை வழிபட்டு வந்தார்கள். அந்த ஆலயம் கி.மு 180 ல் இடிக்கப்பட்டது. ஆனாலும் சமாரியர்கள் வேறு இடங்களை நாடிச் செல்லாமல் அந்த மலையிலேயே கடவுளை வழிபட்டு வந்தனர். எருசலேம் தேவாலயத்தில் வழிபடுவதே சரியான முறை என்று யூதர்களும், கரிசிம் மலையே சரியான இடம் என்று சமாரியர்களும் வாதிட்டு வந்தார்கள். இது தான் யூதர்களுக்கும் சமாரியர்களுக்குமிடையே இருந்த மிகப் பெரிய கருத்து வேற்றுமைக்குக் காரணம்.

கலிலேயாவிற்கும், யூதேயாவுக்கும் இடையே தான் இருந்தது இந்த சமாரியா. கலிலேயாவிலிருந்து யூதர்கள் எருசலேம் தேவாலயத்துக்குச் செல்லவேண்டுமென்றால் சமாரியா வழியாகச் செல்லலாம். அது தான் நேரடியான பாதை. ஆனால் யூதர்கள் அப்படிச் செல்வது தங்களுக்கு இழுக்கு என்று கருதி சமாரியாவைச் சுற்றிக் கொண்டு சுற்றுப் பாதையில் தான் செல்வார்கள். அந்த அளவுக்கு யூதர்களுக்கும், சமாரியர்களுக்கும் இடையே வெறுப்பு இருந்து வந்தது.

மற்றபடி சமாரியா செல்வச் செழிப்பான பூமி. கோதுமையும், பிற தானியங்களும் அதிகமாகவே விளையும் பூமி அது. அதன் பள்ளத்தாக்குப் பிரதேசங்கள் எல்லாம் பச்சைப் பசேல் என்று தாவரங்களின் கூடாரங்களாய் தான் இருந்தன. ஆனால் என்ன பயன் ? அங்கே விளையும் பொருட்களை எங்கும் விற்பனை செய்ய முடியாது. அதை எந்த யூதரும் வாங்குவதும் இல்லை, அவர்களைத் தங்களுடன் சேர்த்துக் கொள்வதும் இல்லை. எனவே ஒரு தீவு வாழ்க்கை போல அவர்களுடைய வாழ்க்கை நடந்து கொண்டிருந்தது. ரோமர்கள் மட்டுமே அவர்களை ஓரளவு பிரிவினை இல்லாமல் பார்த்தார்கள்.

இப்படிப்பட்ட ஒரு காலகட்டத்தில், இந்த வேறுபாடுகளையெல்லாம் நன்கு அறிந்திருந்த இயேசு சமாரியாவுக்குள் நுழைந்தார். சீடர்கள் பயந்தார்கள், ஆச்சரியப்பட்டனர்.

‘இயேசுவே… நீர் சமாரியாவுக்குள் நுழைகிறீர்கள். இது யூதர்களுக்கு விரோதமான செயல்.’

‘யூதர்களுக்கு விரோதமா, சமாரியர்களுக்கு விரோதமா என்பதெல்லாம் முக்கியமல்ல. கடவுளுக்கு விரோதமில்லாதவற்றைச் செய்யவேண்டும். வாருங்கள், யூதர்களுக்கும் சமாரியர்களுக்கும் இடையே உள்ள பள்ளத்தாக்கில் ஒரு பாலம் அமைக்க வேண்டும்’ இயேசு சொன்னார். சீடர்கள் அமைதியாக இயேசுவைப் பின் தொடர்ந்தார்கள்.

சமாரியா வழியாக நடந்து கொண்டிருந்த இயேசு அங்கே இருந்த ஒரு கிணற்றின் அருகே அமர்ந்தார். அந்தக் கிணறு மிகவும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இஸ்ரவேல் என்னும் மனிதர் வெட்டிய கிணறு அது. அவருடைய சந்ததியினர் தான் இஸ்ரயேலர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். இயேசு அந்தக் கிணற்றையே தேர்ந்தெடுத்து அங்கே அமர்ந்தார்.

‘நீங்கள் போய்.. உண்பதற்கு ஏதேனும் வாங்கி வாருங்கள்’ சீடர்களைப் பார்த்து இயேசு சொல்ல, சீடர்கள் உணவு வாங்கி வருவதற்காக ஊருக்குள் நுழைந்தார்கள்.

இயேசு கிணற்றை எட்டிப் பார்த்தார். கிணறு மிகவும் ஆழமாக இருந்தது. மதியம் மணி பன்னிரண்டு. அப்போது சமாரியப் பெண் ஒருத்தி தண்ணீர் எடுப்பதற்காகத் தலையில் குடமும், கையில் கயிறும் சுமந்து கிணற்றை நோக்கி வந்தாள். கிணற்றின் கரையில் ஒருவர் அமர்ந்திருப்பதைக் கண்ட அவள் அவரை உற்றுப் பார்த்தார்.

யூதன் !

எப்படி ஒரு யூதன் சமாரியாவுக்குள் நுழைந்து இந்தக் கிணற்றின் கரையில் அமர்ந்திருக்கிறான். அவனுக்கென்ன வேலை இங்கே ? இதுவரை பார்த்திராத காட்சியாய் இருக்கிறதே ! அவளுடைய மனதில் அடுக்கடுக்காய் பல கேள்விகள் எழுந்தன.

அவள் கிணற்றை நெருங்கினாள். அவளுடைய வருகைக்காகத் தான் இயேசு காத்திருக்கிறார். அவள் மெளனமாக தண்ணீர் மொள்ள ஆரம்பிக்கிறாள்.

‘பெண்ணே… மிகவும் தாகமாய் இருக்கிறது. குடிப்பதற்குக் கொஞ்சம் தண்ணீர் தர முடியுமா ?’ இயேசு உரையாடலை ஆரம்பித்தார். அவள் ஏகமாய்த் திடுக்கிட்டாள்.

பேசுகிறாரே. இந்த யூதன் சமாரியப் பெண்ணாகிய தன்னிடம் பேசுகிறாரே. சமாரியர்கள் சாத்தானின் கூடாரங்கள் என்று யூதர்கள் கூவுவதை பல முறை கேட்டிருக்கிறாள் அவள். சமாரியர்களிடமிருந்து உணவு வாங்கி உண்பதும் விலக்கப்பட்ட பன்றியின் இறைச்சியை சாப்பிடுவதும் ஒன்று என்பது யூதர்களின் எழுதப்படாத சட்டங்களில் ஒன்று. அப்படி சமாரியர்களை இழிவாகக் கருதி அவர்களைப் புறக்கணிப்பது தானே யூதர்களின் வழக்கம் ! அவளுக்குள் ஆச்சரியம் ஊற்றெடுக்கிறது.

‘ஐயா…. நீர் யூதன். நான் சமாரியப் பெண். யூதர்கள் சமாரியர்களிடம் பேசுவதேயில்லை. நீர் என்னிடம் பேசுகிறீரே ! தண்ணீர் கேட்கிறீரே.’ அவள் வியப்பில் விரிந்த இமைகளைச் சுருக்காமல் கேட்டாள். சமாரியர்களின் ஒட்டு மொத்த உணர்வைப் பிரதிபலிக்கும் வார்த்தை. யூதர்களுக்கும் சமாரியர்களுக்கும் இடையே எவ்வளவு பெரிய பள்ளம் இருந்தது என்பதை வரலாற்றுக்குப் புரியவைக்கும் ஒரு வார்த்தை அது.

இயேசு சமாரியப் பெண்ணின் வார்த்தைகளைக் கேட்டுப் புன்னகைத்தார். ‘ஏன் ? நான் தண்ணீர் கேட்கக் கூடாதா ?’ பழக்கமான நண்பன் உரிமையாய்க் கேட்பது போல பேசினார் இயேசு.

‘அப்படியல்ல. சமாரியர்களிடம் யூதர்கள் பேசுவதில்லை. இது வழக்கத்துக்கு மாறாக இருக்கிறதே என்று தான் கேட்டேன்’

‘அம்மா.. கடவுளின் கொடை என்ன என்பதையும், உன்னிடம் தண்ணீர் கேட்பவர் யார் என்பதையும் நீ அறிந்திருந்தால் ஒரு வேளை நீயே அவரிடம் தண்ணீரைக் கேட்டிருப்பாய்’ இயேசு சொன்னார்.

‘உம்மிடம் தண்ணீர் கேட்பதா ? நானா ? நல்ல விந்தை ! உம்மிடம் தான் கயிறும் இல்லை , தண்ணீர் மொள்ள பாத்திரமும் இல்லையே. இறங்கித் தண்ணீர் எடுக்கவும் முடியாது. கிணறு மிகவும் ஆழமானது’ அவள் குரலில் கொஞ்சம் நகைப்பைக் கலந்து சொன்னாள்.

‘நான் வாழ்வு தரும் தண்ணீரைத் தந்திருப்பேன். அது கிணற்றிலிருந்து கிடைப்பதல்ல’

‘நீர் ஏதோ புரியாத விஷயங்களைப் பேசுகிறீர். இந்த கிணற்றை வெட்டியவர் யார் தெரியுமா ? இஸ்ரவேல் என்று கடவுளால் பெயரிடப்பட்ட யாக்கோபு ! அவரை விட நீர் பெரியவராய் இருக்க நியாயமில்லையே !’ அவள் புன்னகையுடன் சொன்னாள்.

‘யாக்கோபு வெட்டிய இந்தக் கிணற்றிலிருந்து நீ தண்ணீரைக் குடித்தால் உன் தாகம் தற்காலிகமாகத் தான் நிற்கும். மீண்டும் உனக்குத் தாகம் எடுக்கும். ஆனால் நான் தரும் தண்ணீரைக் குடித்தாலோ உனக்குத் தாகம் என்பதே எடுக்காது’ இயேசுவின் குரலில் தெரிந்த உறுதியும் தெளிவும் அவளை ஆச்சரியப் படுத்திக் குழப்பின.

‘என்னது ? ஒருமுறை குடித்தாலே வாழ்நாள் முழுவதும் தாகம் எடுக்காதா ?’

‘ஆம். அது உள்ளுக்குள் ஒரு ஊற்றாக மாறி நிலை வாழ்வை அளிக்கும்’ இயேசு சொன்னார்.

‘ஐயா.. ஒரு வேளை அப்படி ஒரு தண்ணீர் இருந்தால் அதை எனக்குத் தாருங்களேன். நான் நீண்ட தூரம் நடந்து இங்கே வந்து தண்ணீர் எடுத்துக் கொண்டிருக்கிறேன். தாகம் எடுக்காத நீரை நீர் தந்தால் நான் தினமும் இங்கே நடந்து வரவும் தேவையிருக்காது. ஆழமான இந்தக் கிணற்றிலிருந்து கஷ்டப்பட்டு தண்ணீர் இறைக்கவும் தேவையிருக்காது’ அவள் கேட்டாள்.

‘சரி… உனக்கு அந்த வாழ்வளிக்கும் தண்ணீரைத் தருகிறேன்’

‘விரைவாய்த் தாருங்கள்’ அவள் நீர் இறைப்பதை நிறுத்தி விட்டு உற்சாகமானாள்.

‘நீ போய் உன் கணவனைக் கூட்டி வா’ இயேசு சொன்னார்.

‘ஐயா… மன்னிக்க வேண்டும் எனக்குக் கணவன் இல்லை’ அவள் குரலில் சுருதி குறைந்தது.

‘பெண்ணே உண்மையைச் சொன்னதற்காக உன்னைப் பாராட்டுகிறேன்’ இயேசு புன்னகைத்தார்.

‘நான் சொன்னது உண்மை என்பது உங்களுக்கு எப்படித் தெரியும் ?’

‘உனக்குக் கணவன்கள் ஐந்து பேர் இருந்தார்கள் என்பதும், இப்போது உன்னுடன் இருப்பவன் உன் கணவன் அல்ல என்பதும் எனக்குத் தெரியும்’ இயேசு புன்னகை மாறாமல் சொன்னார்.

‘ஐயா……….’ அவளுடைய குரலில் இருந்த நகைப்பு விடைபெற திகைப்பு ஓடி வந்து ஒட்டிக் கொண்டது.

‘ஐயா… நீங்கள் எல்லாம் அறிந்தவர் போல பேசுகிறீர்கள். நீங்கள் கண்டிப்பாக ஒரு பெரிய மனிதராகத் தான் இருக்க வேண்டும். நீர் இறைவாக்கினர் தானே’ அவள் படபடப்புடன் பேசினாள்.

இயேசு புன்னகைத்தார்.

‘ஐயா… உங்களைப் போன்ற ஒரு இறைவாக்கினரைக் காணும்போது கேட்கவேண்டும் என்பதற்காகவே நான் ஒரு கேள்வியை மனதில் வைத்திருக்கிறேன். இதுவரை அந்தக் கேள்விக்கு யாரும் நல்ல பதிலைச் சொல்லவில்லை. உங்களிடம் கேட்கலாமா ?’ அவளுடைய குரலில் எதிர்பார்ப்பு இழையோடியது.

இயேசு தலையசைத்தார்.

‘ஐயா… எங்கள் முன்னோர்கள் இந்த மலையில் தான் கடவுளை வழிபட்டார்கள். ஆனால் யூதர்களாகிய நீங்களோ எருசலேமில் வழிபடுவதே சிறந்த வழிபாடு என்கிறீர்கள். எங்கே கடவுளை வழிபடவேண்டும். எருசலேமிலா ? அல்லது இந்த மலையிலா ? சொல்லுங்கள்’ அவள் தன் மனதில் நீண்ட காலமாகப் பொத்தி வைத்திருந்த கேள்வியை இயேசுவின் முன்னால் வைத்தாள்.

‘அம்மா.. உண்மையைச் சொல்கிறேன். காலம் வருகிறது. அப்போது நீங்கள் கடவுளை இந்த மலையிலோ, எருசலேமிலோ வழிபட மாட்டீர்கள் !’

‘புரியவில்லையே !’ அவள் குழம்பினாள்.

‘மலைக்குச் சென்று வழிபடுவதோ, ஆலயத்துக்குச் சென்று வழிபடுவதோ அல்ல உண்மை வழிபாடு. உள்ளத்தில் வழிபட வேண்டும். அது தான் தந்தையின் இயல்பு’ இயேசு விளக்கினார். இந்தப் பதிலை அவள் இதுவரை கேட்டதேயில்லை. அவள் பிரமித்தாள்.

‘உண்மை இயல்பு என்றீர்களே அது என்ன ?’

‘கடவுள் உருவமற்றவர். அது தான் அவருடைய உண்மை இயல்பு. உருவம் இல்லாத ஒருவரை வழிபட ஏன் நீங்கள் மலைக்கும், ஆலயத்துக்கும் அலைய வேண்டும். உருவமற்றவரை, உருவமற்ற உள்ளத்தில் வழிபடுவதே சிறந்த வழிபாட்டு முறை !’ இயேசு சொன்னதைக் கேட்கக் கேட்க அவளுடைய மனதுக்குள் சொல்ல முடியாத தெளிவு வந்து நிறைந்தது.

‘ஐயா.. நீங்கள் சொல்வது நன்றாக இருக்கிறது. நாங்கள் கிறிஸ்து என்னும் மீட்பரை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம். அவர் வரும்போது எங்களுக்கு எல்லாவற்றையும் எடுத்துரைப்பார்’ அவள் அமைதியாய்ச் சொல்ல, இயேசு தெளிவான குரலில் சொன்னார்.

‘நானே அவர் ! நம்பு. ‘

‘நானே அவர்’ என்று இயேசு சொன்னதைக் கேட்டதும் அந்தப் பெண் குடத்தையும் கயிறையும் அங்கேயே விட்டு விட்டு நகருக்குள் ஓடினாள். நகரிலுள்ள மக்கள் அவள் ஓடிவருவதை வித்தியாசமாகப் பார்த்தார்கள்.

‘நான் மெசியாவைக் கண்டேன்.. கிறிஸ்துவைக் கண்டேன்… ‘ அவள் மூச்சிரைக்கச் சொன்னாள். கேட்டவர்கள் குழம்பினார்கள்.

‘கிறிஸ்துவைக் கண்டாயா ? என்ன உளறுகிறாய் ? அதற்குரிய அடையாளங்கள் எதுவும் நிகழவில்லையே…’ மக்கள் சொன்னார்கள். மெசியா வரும்போது இயற்கையில் மாபெரும் மாற்றங்கள் நிகழும் என்பது அவர்களுடைய நம்பிக்கைகளில் ஒன்று.

‘வந்து பாருங்கள் அவரை. அவர் தான் கிறிஸ்து. அவருக்கு எல்லோரைப் பற்றியும் தெரிந்திருக்கிறது. தெளிவாகப் பேசுகிறார். நான் இதுவரை இப்படி ஒரு பேச்சைக் கேட்டதேயில்லை’ அவள் படபடத்தாள்.

‘எங்கே அவர்’

‘நம் தந்தை யாக்கோபின் கிணற்றின் அருகே நிற்கிறார்.’

அவர்கள் கிணற்றை நோக்கி ஓடினார்கள். அதற்குள் இயேசுவின் சீடர்களும் கிணற்றை வந்தடைந்தனர். இயேசு ஒரு பெண்ணிடம் பேசிக்கொண்டிருந்ததை அவர்கள் தூரத்திலிருந்தே கண்டனர். ஆனாலும் அவரிடம் எதுவும் கேட்கவில்லை.

‘போதகரே.. உணவு வாங்கி வந்துள்ளோம்… உண்ணுங்கள்’

‘எனக்குரிய உணவு இதுவல்ல’ இயேசு சொல்ல அவர்கள் குழம்பினார்கள்.

‘இந்த உணவைத்தானே நாம் இதுவரை உண்டு வருகிறோம் ? வேறு ஏதாவது வாங்க வேண்டுமா ?’

‘என்னுடைய தந்தையாகிய கடவுளின் விருப்பத்தை நிறைவேற்றுவது தான் எனக்குப் பிடித்தமான உணவு. அதைத் தான் நான் உண்டு கொண்டிருக்கிறேன்’ இயேசு சொல்ல சீடர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

‘வயல்வெளிகளைப் பாருங்கள். பயிர்கள் அறுவடைக்குத் தயாராக இருக்கின்றன. விதைப்பவன் ஒருவன். அறுப்பவன் வேறொருவன். அறுப்பவன் கூலி பெறுகிறான். விதைப்பவன் விளைச்சலின் பயனைப் பெறுகிறான். இப்படி, விதைப்பவனும், அறுப்பவனும் ஒருசேர பயனடைகிறார்கள். நீங்கள் உழைத்துப் பயிரிடவில்லை. உங்களை நான் அறுவடைக்கு ஆயத்தப் படுத்தினேன். எனவே நீங்கள் அந்த உழைப்பின் பயனைப் பெறுகிறீர்கள்’ இயேசு சொல்லச் சொல்ல சீடர்கள் புரிந்தும், புரியாத மனநிலையில் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

இதற்கிடையில் சமாரியப் பெண் சொன்னதைக் கேட்டு ஓடி வந்த மக்கள் கூட்டம் இயேசுவை முற்றுகையிட்டது.

இயேசு அவர்களிடம் பேசினார். மக்கள் மெய் மறந்து கேட்டுக் கொண்டிருந்தனர்.

‘போதகரே.. நீங்கள் எங்கள் ஊரில் தங்கி எங்களுக்கு இறையரசைப் பற்றி இன்னும் அதிகமாகச் சொல்லவேண்டும்.’ சமாரியர்களின் வேண்டுதலில் இயேசு மகிழ்ந்தார். முதன் முறையாக அவர்கள் ஒரு யூதரிடம் சகஜமாகப் பழகினார்கள். சமாரியர்கள் இயேசுவை தங்கள் ஊரிலேயே தங்கும் படி வைத்த விண்ணப்பத்தை அவர் தட்டவில்லை. அவர் அப்படி ஒரு வாய்ப்புக்காகத் தானே சமாரியாவைத் தேர்ந்தெடுத்தார். யூதர்கள் நுழைய விரும்பாத சமாரியாவின் தொழுநோயாளர் தெருக்களிலும் இயேசு நடந்து மக்களோடு கலந்துரையாடினார்.

சமாரியர்கள் இயேசுவிடம் ஏராளமான கேள்விகளைக் கேட்டார்கள். யூதர்கள், சமாரியர்கள் என்னும் பிளவுகள் உட்பட. இயேசு பழைய சட்ட நூல்களையும், அவற்றின் கால கட்டங்களையும் அவை ஏன் அவ்வாறு எழுதப்பட்டன என்பதையும் விளக்கி, புதிய போதனையை அளித்தார். மன்னிப்பு, பொறுமை, பணிவு போன்ற புதிய போதனைகள் சமாரியர்களை வியப்புக்குள் தள்ளின. இதுவரை அவர்களிடம் யாரும் இப்படிப் பேசியது இல்லை. சமாரியர்கள் காலம் காலமாக தங்களுக்குள் தூக்கிச் சுமந்த கேள்விகளை வெளியே கொட்ட, இயேசு அவர்களுக்கு விளக்கங்களைக் கொடுக்க, நாட்கள் இரண்டு ஓடி விட்டிருந்தன.

‘உண்மையிலேயே இவர் மீட்பர் தான்…’ சமாரியர்கள் பேசத் துவங்கினார்கள்.

அனைத்துக்கும் காரணமான அந்தச் சமாரியப் பெண் மகிழ்ந்தாள்.

‘பார்த்தீர்களா ? நான் சொன்னேனே இவர் மீட்பர் தானென்று ! ‘ அவள் பெருமையுடன் மக்களைப் பார்த்துக் கேட்டாள்.

‘பெண்ணே… நீ சொன்னதனால் தான் நாங்கள் இங்கே வந்தோம். ஆனால் நாங்கள் நம்பிக்கை கொண்டது அவருடைய பேச்சைக் கேட்ட பின்பு தான். நீ சொன்னதனால் அல்ல.’ அவர்கள் பதில் சொன்னார்கள்.

இயேசு விரும்பிய ஒரு உறவுப்பாலம் அங்கே அமைக்கப்பட்டது



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink Closed

இயேசு வரலாறு 13 : போ.. உனது மகன் பிழைப்பான்

Image result for jesus heals son of army

இயேசு சமாரியாவை விட்டு கலிலேயாவை நோக்கி நடந்தார் நண்பர்களுடன். நாசரேத்துக்கு சற்று தொலைவில் அவரும் சீடர்களும் தங்கினார்கள். இயேசு வந்திருக்கிறார் என்பதைக் கேள்விப்பட்ட மக்கள் அவரிடம் வந்து உரையாடினார்கள். கானா வில் அவர் நிகழ்த்தியிருந்த அதிசயத்தைப் பற்றிய செய்தி அருகிலுள்ள ஊர்களுக்கும் பரவியிருந்தது. எனவே அவரை மக்கள் ஒரு ஆச்சரியங்கள் செய்யும் மந்திரவாதி போல பார்த்தார்கள். அவரை சந்தித்தால் இன்னும் ஏதேனும் நல்ல பொழுது போக்கு கிடைக்கும் என்னும் எண்ணம் சிலருக்கு, தங்களுடைய குறைகள் தீரும் என்னும் எண்ணம் சிலருக்கு, யார் இந்த இயேசு என்பதைப் பார்த்து விடும் ஆர்வம் வேறு சிலருக்கு. இப்படி கூட்டம் இயேசுவைச் சூழ்ந்தது.

அதே நேரத்தில் கப்பர் நாகூமில், ஒரு அரச அலுவலர் இருந்தார். அவருடைய மகன் மிகவும் நோயுற்றிருந்தான். தன் மகனை இழந்து விடுவோமோ என்னும் கவலையில் ஆழ்ந்திருந்தார் தந்தை. ஏராளமான செல்வங்களைக் கொண்டிருந்த அவரிடம் தன்னுடைய மகனின் நோயைத் தீர்க்கும் மருத்துவர் அமையவில்லையே என்னும் பதட்டமும், சோகமும் நிறைந்திருந்தது. அவருடைய பணியாளன் அவரிடம் வந்து

‘தலைவரே.. போதகர் இயேசு கானா அருகே தங்கியிருக்கிறாராம். இப்போதைய சூழ்நிலையில் அவரிடம் சென்று உம்முடைய மகனுடைய சுகத்துக்காக வேண்டலாமே’ என்று பணிவாய்ச் சொன்னான்.

‘இயேசு இங்கே வந்திருக்கிறாரா ? கானாவில் திருமண வீட்டில் தண்ணீரைத் திராட்சை இரசமாக்கினாரே.. அந்த இயேசுவைத் தானே சொல்கிறாய் ?’

‘ஆம் தலைவரே. அவரே தான்’

‘அப்படியா ! ஆனால் அவரை நான் பார்த்ததில்லையே ? எப்படிக் கண்டுபிடிப்பது ?’ அரச அலுவலர் கண்களில் கொஞ்சம் நம்பிக்கை ஒளி மின்னியது.

‘அது மிகவும் எளிது என்று தான் நினைக்கிறேன். அவரைச் சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும். அதை வைத்தே அவரைக் கண்டு பிடித்துவிடலாம். அதுமட்டுமன்றி அங்கே எல்லோருக்கும் அவரைத் தெரிந்திருக்கும் எனவே அடையாளம் காண்பதில் சிரமம் இருக்கும் என்று தோன்றவில்லை. நான் போய் உமது மகனின் நோயைத் தீர்க்குமாறு வேண்டவா ?’ பணியாளன் கேட்டான்.

‘வேண்டாம் வேண்டாம். நானே நேரடியாகச் சென்று அவரிடம் மன்றாடுகிறேன்’ சொன்னவர் வீட்டினுள் சென்று மகனைப் பார்த்தார். அவன் மரணத்துக்கும், வாழ்வுக்கும் இடையே ஊசலாடிக் கொண்டிருந்தான். அதைக் கண்ட அவருடைய கண்கள் கலங்கின. இதயம் உடைந்தது. உடனே இயேசுவைச் சந்திக்க விரைந்தார்.

இரண்டு நாள் பயணித்து இயேசு தங்கியிருந்த இடத்தைச் சென்றடைந்தார். இயேசு அங்கே சீடர்களின் கூட்டத்தில் உரையாடிக் கொண்டிருந்தார். இயேசுவின் போதனைகளைக் கேட்க ஏழைகள், வறியவர்கள், பிச்சையெடுப்பவர்கள் உட்பட ஏராளமானோர் கூடியிருந்தனர். இயேசு மக்களுக்குத் தெரிந்திருந்த சட்ட நூலில் உள்ளவற்றின் உண்மை அர்த்தங்களைப் போதித்துக் கொண்டிருந்தார். காலம் காலமாக தவறாகவே புரிந்து கொள்ளப்பட்டிருந்த நீதி நூல்களின் உண்மை விளக்கங்களை இயேசு சொல்ல மக்கள் வியப்புடன் கேட்டுக் கொண்டிருந்தனர். இயேசுவை அடையாளம் கண்டு கொள்ள அரச அலுவலருக்கு எந்த சிரமமும் இருக்கவில்லை. ஓடிச் சென்று அவருடைய பாதங்களில் பணிந்தார்.

‘போதகரே… எனக்கு உதவுங்கள்’ அவர் கதறினார். இயேசு பார்த்தார். பணக்காரத் தனத்தின் மொத்த உருவமாக தன் முன்னால் வந்து நின்ற அவரைப் பார்த்துக் கேட்டார்.

‘என்ன வேண்டும் ? நீங்கள் யார் ?’

‘நான் கப்பர்நகூமிலிருந்து வருகிறேன். என்னுடைய மகன் நோய்வாய்ப் பட்டிருக்கிறான். எந்த மருத்துவராலும் அவனைக் குணப்படுத்த முடியவில்லை. நீர் தான் அவனைக் குணப்படுத்த வேண்டும்’ அவர் கண்ணீருடன் விண்ணப்பித்தார்.

‘என்னால் உம் மகனைக் குணப்படுத்த முடியும் என்று எப்படிச் சொல்கிறீர் ?’ இயேசு கேட்டார்.

‘போதகரே. நீர் தண்ணீரை திராட்சை இரசமாக்கிய அதிசயத்தை நான் அறிவேன். மருத்துவர்கள் கைவிட்ட என் மகன் ஏதேனும் அதிசயத்தால் தான் பிழைக்க முடியும். எனவே வாரும். வந்து என் மகனைப் பிழைக்க வையும்’ அவர் கண்கள் நில்லாமல் வழிந்தன.

‘நீங்கள் என்னுடைய போதனைகளை வைத்து என்னை நம்புவதில்லை. நீங்கள் நம்பவேண்டுமென்றால் அதிசயங்களும், அற்புதங்களும் நடக்க வேண்டும்’ இயேசு பொறுமையாய்ச் சொன்னார்.

தன்னுடைய பதட்டத்தைக் கணக்கில் கொள்ளாமல் இயேசு இப்படி பொறுமையாய் இருக்கிறாரே என்று கவலைப்பட்டார் அரச அலுவலர்.

‘போதகரே.. விரைவாய் வாரும். கப்பர் நகூமுக்குச் செல்லவே இரண்டு நாட்கள் ஆகும். விரைவாய்ப் போவோம். இல்லையேல் என் மகன் இறந்து விடக் கூடும்’ அவர் அவசரப் படுத்தினார்.

இயேசு அவனைப் பார்த்தார்.

‘இப்போது மணி என்னவாகிறது ?’

‘பிற்பகல் ஒரு மணி’

‘இந்த நேரம் முதல் உம்முடைய மகன் சுகமாய் இருப்பான். கவலைப்படாமல் செல்லுங்கள்’ இயேசு சொன்னார். அந்த வார்த்தைகளை அப்படியே நம்பிய அலுவலர் இயேசுவிடமிருந்து விடைபெற்று தன்னுடைய வீட்டுக்குப் புறப்பட்டார். சீடர்களும் கூடியிருந்த கூட்டத்தினரும் ஸ்தம்பித்தனர். அவர்களுக்கு நடப்பது எதுவும் விளங்கவில்லை. இதுவரை அவர்கள் நோயாளியை சந்தித்து எண்ணை பூசி குணப்படுத்துவதைத் தான் அறிந்திருந்தார்கள். ஒரு வார்த்தை சொல்லியே குணப்படுத்த முடியுமா என்னும் ஐயம் அவர்களை ஆட்கொண்டது. ஆனாலும் யாரும் இயேசுவை எதிர்த்துக் கேள்வி கேட்கவில்லை. இயேசுவின் மீது அவர்களுக்கு ஒரு பயம் கலந்த பணிவு தோன்றியது. தங்களையும் ஏதேனும் சபித்து விடுவாரோ என்று கூட கூட்டத்தினர் கருதியிருக்கக் கூடும்.

மறுநாள். வழியிலேயே பணியாளன் அரச அலுவலரை எதிர்கொண்டு ஓடி வந்தான். பணியாளனைக் கண்ட அலுவலரின் உள்ளம் பதறியது.

‘என்ன ஆச்சு ? ஏன் பதட்டமாய் ஓடி வருகிறாய் ?’ தன் மகனுக்கு ஏதேனும் நேர்ந்து விட்டதோ என்னும் கவலை அவரைப் பிடித்து உலுக்கியது.

‘பதட்டம் இல்லை தலைவரே… பரவசம். உம்முடைய மகன் நலமடைந்து விட்டான்’

அரச அலுவலரின் உள்ளம் ஆனந்தத்தால் துள்ளியது. ‘ எ…என்ன ? என் மகன் நலமடைந்து விட்டானா ? உண்மையாகவா சொல்கிறாய் ? ‘ அவர் ஆனந்த மிகுதியால் கத்தினார். குதிரையிலிருந்து துள்ளிக் குதித்து இறங்கினார். பணியாளரை அப்படியே கட்டிக் கொண்டு ஆனந்தத்தை வெளிப்படுத்தினார். பணியாளன் பரவசமானான்.

‘தலைவரே. உமது மகன் நேற்று திடீரென்று எழுந்து நடந்தார். உணவருந்தினார். நோயில் கிடந்தவரைப் போலவே இல்லை. தூங்கி எழுந்தவர் போல இருக்கிறார்’ பணியாளனும் ஆனந்தத்தைப் பகிர்ந்தான்.

‘சரி.. எப்போது நலமடைந்தான் ?’

‘நேற்றைக்குத் தலைவரே. நான் அவருடைய படுக்கையருகே தான் இருந்தேன்’ பணியாளன் சொன்னான்.

‘நேற்றைக்கு எத்தனை மணிக்கு சுகமடைந்தான் என்று தெரியுமா ? ‘

பணியாளன் வினாடி நேரமும் தாமதியாமல் சொன்னான்.

‘ஒரு மணிக்கு’

அலுவலர் உடனே தரையில் மண்டியிட்டு கடவுளைப் புகழ்ந்தார். இயேசுவின் வார்த்தைகளினால் தன் மகன் குணம்பெற்றிருக்கிறான் என்பதை அவர் முழுமையாக நம்பினார். இயேசுவுக்கு நன்றி சொல்லிக் கொண்டே வீட்டை நோக்கி விரைந்தார்.

அந்தச் செய்தி காட்டுத் தீ போல சட்டென்று பரவியது. ஊர்கள் தோறும் இயேசுவின் கானா திருமண திராட்சை ரச அதிசயமும், அலுவலர் மகன் குணமான அற்புதமும் நிறுத்தாமல் பேசப்பட்டன. இயேசுவின் பேச்சைக் கேட்க ஏராளமான ஆட்கள் குவிந்தனர். ஆலயங்களுக்கும் இயேசு அழைக்கப்பட்டார்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink Closed

இயேசு வரலாறு 15. கொடிய காய்ச்சல் விலகியது

Image result for mother in law fever Jesus

இயேசுவின் சீடரான பேதுரு போதனைகளைக் கேட்பதிலும் இயேசுவோடு பயணிப்பதிலுமே கவனம் செலுத்திக் கொண்டிருக்க, அவருடைய மாமியார் நோயில் விழுந்தார். பயங்கரமான கொடிய காய்ச்சல் அவளைப் பிடித்தது. அது சாதாரணக் காய்ச்சல் அல்ல, வயதானவர்களை வாட்டி எடுக்கும் கொடிய காய்ச்சல். உடலெல்லாம் அனலாய்க் கொதிக்க பேதுருவின் மாமியார் வலியில் துடித்துக் கொண்டிருந்தார். அந்தகாலத்தில் நடைமுறையில் இருந்த வைத்தியம் மிகவும் வித்தியாசமானது. பெரும்பாலும் விலங்குகளின் மண்டை ஓடுகளை எரித்த சாம்பலை நெற்றியில் பூசுவதே மருந்து. சர்வ நிவாரணி போல அவர்கள் கலாச்சார மருந்து ஒன்று உண்டு. நரியின் மண்டைஓடு, எலியின் தலை, நண்டுகளின் கண்கள், ஆந்தையின் மூளை, தவளையின் ஈரல், யானையின் உடம்பில் ஒட்டிக் கொண்டிருக்கும் பேன் போன்ற உயிரினங்கள் இவற்றையெல்லாம் கலந்து சுட்டு சாம்பலாக்கியது தான் அந்த சர்வ நிவாரணி !. இப்போது வாசித்தால் சிரிப்பை உண்டாக்கும் வைத்தியங்களும் அந்நாட்களில் ஏராளம் உண்டு. ஜலதோஷம் தீரவேண்டுமானால் எலியின் மூக்கில் முத்தமிடுவது, தவளையை வினிகரில் சமைத்து உண்டால் பல்வலி பறக்கும் என்பவையெல்லாம் அவற்றில் சில.

எந்தவிதமான மருந்தும் பேதுருவின் மாமியாருடைய காய்ச்சலைக் குணப்படுத்தவில்லை. மாறாக காய்ச்சலின் வீரியத்தை அதிகரிக்கவே செய்தன. பேதுருவுக்கு இயேசுவிடம் உதவி கேட்பதை விட வேறு வழியில்லை. இயேசுவின் காதுக்கு செய்தி சென்றதும் இயேசு பேதுருவின் வீட்டுக்கு விரைந்தார். பேதுருவின் மாமியார் இறந்து விடுவார் என்றே சுற்றத்தினர் நம்பியிருந்தனர். பேதுரு கூட அவளுடைய நிலைமையைப் பார்த்து அவ்வாறே நினைத்திருக்கக் கூடும். இயேசு நேராக பேதுருவின் மாமியார் படுத்திருந்த படுக்கை அருகே சென்றார். அவருடைய கைகளைத் தொட்டார். அவ்வளவு தான், காய்ச்சல் சட்டென்று விலக மாமியார் எழுந்தாள். அனலடித்த தேகம் சகஜ நிலைக்குத் திரும்பியிருந்தது. மூட்டுகளில் இருந்த வலி மறைந்திருந்தது. நடுங்கிக் கொண்டிருந்த உடம்பு இயல்பாக இருந்தது. இயேசுவின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தவள் கண்கள் பனித்தாள். ஒரு தொடுதல் மூலம் தன்னை குணப்படுத்திய இயேசுவின் மீதும் அவருடைய பணிகளின் மீதும் நம்பிக்கை கொண்டாள்.

பேதுருவின் மாமியார் மரணத்தின் பிடியிலிருந்து மீண்டார் என்னும் செய்தி சடுதியில் வீதிகள் தோறும் விரைந்தோடியது. மக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தார்கள். இயேசு அப்போது அவர்களுடைய பார்வையில் ஒரு மருத்துவர். காய்ச்சல், தொழுநோய், புற்று நோய், வாதம் என அனைத்து விதமான நோயாளிகளும் வீதிகளில் நிரம்பி வழிந்தார்கள். இயேசு வந்தார். வந்திருந்த அனைவரையும் குணமாக்கினார் ! அதுவும் மக்களோடு பேசிக்கொண்டே, சிரித்துக் கொண்டே, ஒரு நண்பனைப் போல அவர்களிடையே நடந்து அனைவரையும் தொட்டு சுகமாக்கினார். அனைவரையும் வாழ்த்தி அனுப்பி வைத்தார்.

சுகமாக்கும் போதனையாளர்கள் வரலாற்றில் இருந்திருந்தாலும் இயேசுவின் அணுகுமுறை மிகவும் புதிதாக இருந்தது. அவருடைய நோய் தீர்க்கும் முறை பிச்சையிடுவது போல இருக்கவில்லை. நண்பனுக்கு நட்புடன் கை குலுக்குவது போல, உறவினர் ஒருவருடன் உரையாடுவது போல ஆத்மார்த்தமான அன்புடன் மிளிர்ந்தது. எனவே தான் மக்கள் இயேசுவை நோக்கி கூச்சலிட்டார்கள்

‘நீர் உண்மையிலேயே கடவுளின் மகன் தான்’

ஆலய குருக்களும், மறைநூல் அறிஞர்களும் அவசர அவசரமாக ஏடுகளைப் புரட்டினார்கள். பழைய இறைவாக்கினர்கள் ஏதேனும் சொல்லியிருக்கிறார்களா என்பதை அறிய. அவர்கள் கண்ணுக்குத் தட்டுப்பட்டது இறைவாக்கினர் எசாயா எழுதிய தீர்க்கத் தரிசனம் ஒன்று. ‘செபுலான் நாடே, நப்தலின் நாடே… இருளில் இருக்கும் மக்கள் பேரொளியைக் காண்பார்கள்…’. கப்பர்நாகும் நகரம் செபுலான், நப்தலி என்னும் நகரங்களின் எல்லையில் தான் இருந்தது. எனவே இந்த தீர்க்கத் தரிசனம் இயேசுவின் வருகையைக் குறித்ததாக இருக்குமோ என்று அவர்கள் விவாதிக்கத் துவங்கினர்.

இன்னொருவர் ஏசாயா தீர்க்கத் தரிசியின் இன்னொரு தீர்க்கத் தரிசனத்தை குறிப்பிட்டார். ‘ அவர் நம் நோய்களைத் தாங்கிக் கொண்டார், நம் வலிகளை ஏற்றுக் கொண்டார்’ இது கூட இயேசுவைக் குறித்ததாக இருக்குமோ ? விவாதங்கள் தொடர்ந்தன. பழைய நூல்களிலிருந்தும், தீர்க்கத் தரிசனங்களிலிருந்தும் இயேசுவைக் குறித்த செய்திகள் இருக்குமோ என்ற ஆராய்ச்சியும் தொடர்ந்தது. இயேசுவின் புகழ் பரவியது.

மீண்டும் மீண்டும் இயேசுவைக் கூட்டம் மொய்க்கத் துவங்கியது. இயேசு சுற்றியிருக்கும் ஊர்களுக்கும் சென்று போதனைகளைச் செய்ய விரும்பினார். கப்பர்நாகூமிலேயே ஒரு மருத்துவரைப் போல தங்கி விட அவர் விரும்பவில்லை. வந்தவர்களைச் சுகமாக்கி விட்டு அவர் சீடர்களுடன் பயணத்தைத் துவங்கினார். சமாரியா, யூதேயா போன்ற இடங்களிலெல்லாம் இயேசுவின் கப்பர்நாகும் சுகமளித்தல் செய்தி பரவத் துவங்கியது. எருசலேம் வரை அவருடைய பெயர் வியப்புக்குரிய ஒன்றாக உச்சரிக்கப்பட்டது.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink Closed

இயேசு வரலாறு 16 : மனிதர்களைப் பிடிப்போராகுங்கள்

Image result for Simon jesus net

ஒரு நாள் அதிகாலையில் கெனேசரேத்துக் ஏரிக்கரையில் நின்று கொண்டிருந்தார். அவருடைய போதனைகளைப் பற்றி அறிந்திருந்த மக்கள் கூட்டம் அவருடைய அருளுரையைக் கேட்பதற்காக அவரை நெருங்கி வந்தார்கள். மக்களைக் கண்ட இயேசு மகிழ்ந்தார். அவர்களுக்கு ஏதேனும் நற்செய்தி சொல்லவேண்டுமே என்று ஆசைப்பட்டார். ஆனால் அவர் நின்று பேசுவதற்கு வசதியான ஒரு இடமும் தென்படவில்லை. கரையில் கூட்டம் முண்டியடித்தது.

இயேசு சுற்றுமுற்றும் பார்த்தார். அங்கே ஏரிக்கரையில் இரண்டு படகுகள் நின்றிருந்தன. அதில் ஒன்று சீமோனுடையது. இன்னொன்று செபதேயுவின் மக்களுடையது. அவர்கள் படகை விட்டிறங்கி ஏரிக்கரையில் தங்கள் வலைகளைக் கழுவிக் கொண்டிருந்தார்கள். மீன் எதுவும் கிடைக்காத சோகம் அவர்களுடைய கண்களில் தெரிந்தது.

இயேசு அந்தப் படகுகளில் ஒன்றில் ஏறினார். பின் படகை கரையிலிருந்து ஏரிக்குள் சற்றுத் தள்ளினார். இப்போது இயேசுக்குத் தேவையான மேடை தயாராகிவிட்டது. படகில் இயேசு, ஏரிக்கரையில் மக்கள். இயேசு போதிக்கத் துவங்கினார்.

கவலைகளை விட்டு விடுங்கள். உயிர்வாழ எதை உண்பது, உடலை மூட எதை உடுப்பது என்றெல்லாம் நீங்கள் கவலைப்படுவது வீண். உணவை விட உயிரும், உடையை விட உடலும் சிறந்தவை அல்லவா ! வானத்துப் பறவைகளைக் கவனியுங்கள். அவை விதைப்பதும் இல்லை, அறுப்பதும் இல்லை, களஞ்சியங்களில் சேமிப்பதும் இல்லை. ஆனால் கடவுள் அவற்றுக்கும் உணவளிக்கிறார். பறவைகளுக்கே உணவளிக்கும் பரமன், அதைவிட மேலான உங்களுக்கு உணவளிக்க மாட்டாரா ?

வயல்வெளி மலர்களையோ, காட்டுச் செடிகளையோ கவனித்திருக்கிறீர்களா ? அவை கவலையின்றி சிரிக்கின்றன. சாலமோன் மன்னன் கூட அணிந்திராத மென்மையில் அந்த மலர்களை கடவுள் உடுத்தியிருக்கிறார் அல்லவா ?

எனவே கவலைப் படாதீர்கள்.

கவலைப்படுவதால் உங்களில் யாராவது தமது உயரத்தோடு ஒரு முழம் கூட்ட முடியுமா ? அப்படியெனில் கவலைப்படுங்கள். கவலைப்படுவதால் உங்கள் தலைமயிரில் சிலவற்றைக் கறுப்பாக்க முடியுமா ? அப்படியெனில் கவலைப்படுங்கள். எதையும் தராத கவலையை ஏன் நீங்கள் இறுகப்பற்றிக் கொண்டிருக்கிறீர்கள்.

கவலைப்படுவது கடவுளை அறியாதவர்களின் பணி. நீங்கள் கடவுளைப் பற்றிக் கொள்ளுங்கள். மற்ற அனைத்தையும் பெற்றுக் கொள்வீர்கள்.

உடமைகளை சேர்த்து வைக்கவேண்டாம். விற்று ஏழைகளுக்குக் கொடுங்கள். விண்ணுலகில் செல்வம் சேரும். ஏனென்றால் உங்கள் செல்வம் எங்கே உள்ளதோ அங்கே தான் உங்கள் உள்ளமும் இருக்கும் !

அலைகள் இல்லாத ஏரியும், சத்தம் இல்லாத காலைவேளையும் அவருக்கு போதனை செய்ய வசதியாய் இருந்தது. நீண்ட நேரம் போதனை வழங்கிய பின் இயேசு படகை விட்டுக் கீழிறங்கினார். கரையில் சீமோன் அமர்ந்து வலைகளை அலசிக் கொண்டிருந்தார்.

‘சீமோனே… மீன்கள் எதையும் காணோமே… வலைகளை அலசிக் கொண்டிருக்கிறீர்கள் ?’ இயேசு கேட்டார்.

‘போதகரே. இன்று எங்களுக்கு மோசமான நாள். மீன்கள் எதுவும் கிடைக்கவில்லை. இரவு முழுவதும் இந்த ஏரியின் எல்லா பாகங்களிலும் வலை வீசிப் பார்த்தோம். வீண்…. தூக்கம் போனது தான் மிச்சம். இன்றைய பொழுது என்ன செய்வதென்றே தெரியவில்லை.’ சீமோனின் குரலில் சோகம் கலந்திருந்தது

‘சரி.. ஏரியின் ஆழத்தில் அதோ அந்த இடத்தில் வலைகளை வீசுங்கள்’

‘போதகரே. அந்த இடத்தில் பல தடவை வலை விரித்தோம். அங்கே ஒன்றும் இல்லை’

‘சரி. இப்போது ஒருமுறை வலையை வீசு’ இயேசு புன்னகையுடன் சொன்னார்.

‘இரவு முழுவதும் வலைவிரித்தும் ஒன்றும் கிடைக்கவில்லை. ஆனாலும் நீர் சொல்வதால் இன்னொருமுறை வலை விரிக்கிறேன்’ சொல்லிய சீமோனிடம் நம்பிக்கை இருக்கவில்லை ஆனாலும் இயேசு கை காட்டிய இடத்தில் வலையை வீசினார்.

வலையை வீசிவிட்டு எப்படியும் வெற்று வலைதான் வரப்போகிறது என்னும் நினைப்பில் வலையை இழுத்த சீமோன் நிலை தடுமாறினார். வலை வரவில்லை. மிகவும் பாரமாக இருந்தது. வலையில் ஏராளமான மீன்கள் சிக்கியிருப்பதை உணர்ந்த அவர் பெரிதும் வியப்படைந்தார். இரவு முழுதும் வலைவீசி எதுவும் அகப்படாத அதே இடத்தில் இப்போது இவ்வளவு மீன்கள் அகப்பட்டது எப்படி என்று அவர் திகைத்தார்.

வலையை அவரால் இழுக்க முடியவில்லை. இரண்டாவது படகும் சீமோனுக்கு உதவி செய்யச் சென்றது. அவர்களும் இழுத்தார்கள். முடியவில்லை. வலை கிழிந்து விடும் போலிருந்தது. அவர்கள் ஆங்காங்கே மீன்பிடித்துக் கொண்டிருந்த மற்ற மீனவ நண்பர்களை உதவிக்கு அழைத்தார்கள். எல்லோருமாய்ச் சேர்ந்து வலையை இழுத்து அதிலுள்ள மீன்களைப் பொறுக்கி இரண்டு படகுகள் நிறைய நிரப்பினார்கள். இப்போது படகுகள் மூழ்கும் நிலையில் தடுமாறியது.

மீனவர்கள் அனைவரும் திகிலடைந்தனர். இத்தனை பெரிய மீன் கூட்டத்தை அவர்கள் தங்கள் வாழ்நாளில் பார்த்திருந்ததேயில்லை.

அவர்கள் தட்டுத் தடுமாறி கரையில் வந்து சேர்ந்தார்கள். படகு கரையை நெருங்கியதும் சீமோன் படகிலிருந்து குதித்து இயேசுவை நோக்கி ஓடி வந்தார்.

‘ஆண்டவரே.. நான் பாவி. என்னை விட்டுப் போய்விடும்.’ என்று அவருடைய கால்களில் விழுந்து அரற்றினார்.

அவருடன் இருந்த யாக்கோபு, யோவான் ஆகியோரும் இந்த அதிசயச் செயலைக் கண்டு மெய்மறந்து நின்றார்கள்.

இயேசு சீமோனை தூக்கினார்.

‘சீமோனே. மீன்களைப் பிடித்ததற்கா இப்படிச் சொல்கிறாய். என்னுடன் வா. நான் உன்னை மனிதர்களைப் பிடிப்பவன் ஆக்குவேன்’ என்றார்.

அவர்களிடம் மறுத்துப் பேச வார்த்தைகள் இருக்கவில்லை. அனைவரும் படகுகளையும், வலைகளையும், பிடித்த மீன்களையும் அங்கேயே விட்டு விட்டு இயேசுவின் பின்னே சென்றனர். அதன்பின் அந்த சீடர்கள் இயேசுவை விட்டு விலகவில்லை. இயேசுவின் கடைசி நாட்கள் வரை இயேசுவுடனே இருந்தார்கள். அவர்கள் மீன்களைப் பிடிப்பதல்ல, மனிதர்களின் மனங்களில் இயேசுவின் போதனைகளைக் கொண்டு சேர்ப்பதே முக்கியம் என்பதை மனதுக்குள் குறித்துக் கொண்டார்கள்.

இயேசுவோடு கூடவே நடந்து அவருடைய நோய் தீர்க்கும் பணிகளையும், போதனைகளையும் நேரடி அனுபவம் வாயிலாக அறிந்து கொண்டிருந்த சீடர்கள் நாளுக்கு நாள் அவர் மேல் கொண்டிருந்த ஈடுபாட்டை அதிகரித்துக் கொண்டார்கள். ஒவ்வோர் ஊராகச் சென்று பேசுவதும், மக்கள் ஒருவருக்கொருவர் அன்புடன் இருக்கவேண்டும் என்று அறிவுரை வழங்குவதும் மட்டுமல்லாமல் தன்னைச் சந்திக்க வரும் நோயாளிகளைக் குணமாக்குவதும், பேய்பிடித்தவர்களின் பேய்களை ஓட்டுவதும் கூட அவருடைய பணியாக இருந்தது. சீடர்களுக்கு இயேசுவின் பணி சற்று கர்வத்தைத் தருவதாகவும் இருந்தது. எங்கே சென்றாலும் அவர்களுக்கும் மரியாதை கிடைத்தது. இயேசு நோய்களைத் தீர்க்கும் போதெல்லாம் இவர்களும் சற்று பெருமைப்பட்டார்கள்.

இயேசு அடிக்கடி அவர்களை விட்டு விட்டு மலைப்பகுதிகளுக்குச் சென்று செபிப்பதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தார். தன்னுடைய பணியிலிருந்து விலகிவிடாதிருக்கவும், மக்களிடம் தனக்குக் கிடைத்திருக்கும் புகழ் என்னும் போதை தன்னுடைய இலட்சிய வாழ்வுக்குக் குறுக்கே இடர்கல்லாக இருந்து விடாதபடிக்கும் தன்னுடைய மனதை செம்மைப்படுத்தவும், வானகத் தந்தையிடம் தன்னுடைய உறவை பலப்படுத்திக் கொள்ளவுமே இயேசு செபத்தில் ஈடுபட்டார்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink Closed

இயேசு வரலாறு 17 : கூரை வழியே திமிர்வாதக் காரன்

Image result for Jesus man sick roof

தொடர்ந்த நீண்ட நாள் பயணத்தின் முடிவில் ஏரியோர நகர்களை எல்லாம் சுற்றி முடித்து இயேசுவும் சீடர்களும் மீண்டும் கப்பர்நகூமுக்கு வந்தார்கள். இதற்கிடையில் இயேசுவின் புகழ் எருசலேம் தேவாலயம் வரைக்கும் பரவ, அங்கிருந்த குருக்கள் இயேசுவைப் பற்றி விசாரிக்க இரண்டு உளவாளிகளை அனுப்பினார்கள்.

அதற்குள் இயேசுவின் பெருமை பல மடங்கு அதிகரித்திருந்தது. இயேசுவைக் காண கூட்டம் முண்டியடித்தது. இயேசு ஒரு வீட்டில் அமர்ந்து கேள்விகளுக்குப் பதிலளிப்பதும், மக்களுக்குப் போதிப்பதுமாய் இருந்தார். அந்த கூட்டத்தினரிடையே எருசலேம் தேவாலய உளவாளிகளும் உட்கார்ந்திருந்தார்கள்.

வீட்டு வாசல், சுற்றுப்புறம் எங்கும் மக்கள் திரள். ஏராளமான நோயாளிகள் அந்தக் கூட்டத்தில் வந்திருந்தார்கள். எப்படியாவது இயேசுவின் நோய்தீர்க்கும் கரம் தன் மேல் பட்டால் தம்முடைய வாழ்நாள் கவலை மறைந்து விடுமே என்று அவர்கள் காத்திருந்தார்கள். இயேசுவின் பேச்சைக் கேட்கவும், குற்றம் கண்டுபிடிக்கவும் கூட மக்கள் வந்திருந்தார்கள். குறிப்பாக பல மறைநூல் அறிஞர்கள் கூட்டத்தில் கலந்து நின்றார்கள். அவர்களுடைய எண்ணம் இயேசுவின் பேச்சில் குற்றம் கண்டு பிடிப்பது மட்டுமே.

அந்த ஊரில் முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒரு மனிதனும் இருந்தான். அவனால் நடக்கவும் முடியாது, அசையவும் முடியாது ஏன் பேசக் கூட முடியாது. படுக்கையே உலகமாக வாழ்ந்து கொண்டிருந்தான் அவன். அவனும் இயேசுவைப் பற்றியும் அவருடைய குணமாக்கும் வரத்தைக் குறித்தும் அறிந்திருந்தான். அவனுடைய மனைவியும் நான்கு மகன்களுமாக அவனைப் படுக்கையோடு தூக்கிக் கொண்டு கலிலேயா முழுவதும் அலைந்தார்கள். யாருடைய மருத்துவக் கரமும் அவனைக் குணப்படுத்தவில்லை. இயேசு கப்பர்நாகூமில் இருப்பதை அறிந்த அவர்கள் அவரை இயேசுவிடம் கூட்டிக் கொண்டு போக முடிவெடுத்தார்கள்.

நான்கு மகன்களும் அவரைப் படுக்கையோடு தூக்கிக் கொண்டு முன்னே செல்ல, கண்ணீருடன் மனைவி அவர்களைப் பின் தொடர்ந்தாள். தன்னை இயேசுவிடம் கூட்டிச் சென்றால் சுகம் கிடைக்கும் என்று அவன் உறுதியாக நம்பினான். அவர்கள் இயேசு போதித்துக் கொண்டிருந்த வீட்டை அடைந்தார்கள்.

வீட்டை அடைந்த அவர்களுக்கு மிகுந்த அதிர்ச்சி ! வீடு மக்கள் கூட்டத்துக்குள் மூழ்கிக் கிடந்தது. தனிமனிதனாக வீட்டை நெருங்குவதே இயலாத நிலை. கட்டிலோடு வீட்டுக்குள் நுழைவதைப் பற்றி கற்பனை செய்து கூட பார்க்க முடியாது என்பது அவர்களுக்கு விளங்கியது. ஆனால் அவர்களுடைய நம்பிக்கையை அவர்கள் தளரவிடவில்லை.

அவர்கள் வீட்டின் பின்புறமாகச் சென்றார்கள். அந்த முடக்குவாதக் காரனைக் கட்டிலோடு சுமந்து கொண்டு வீட்டின் கூரையில் ஏறினார்கள். கூரையை உடைத்துத் திறப்பு உண்டாக்கினார்கள். வீட்டுக் கூரை உடையும் சத்தம் கேட்டு இயேசுவும் கூட இருந்தவர்களும் மேலே பார்த்தார்கள். திடுக்கிட்டார்கள். என்ன நடக்கிறது என்பதை விளங்கிக் கொள்ளவே அவர்களுக்கு சில வினாடிகள் பிடித்தன.

மேலே அந்த நான்குபேரும் அவனை கட்டிலோடு கீழே இறக்கிக் கொண்டிருந்தார்கள்.

அவர்களுடைய நம்பிக்கையைக் கண்ட இயேசு பிரமித்தார். நம்பிக்கை வைக்கும் மனிதனை கைவிடக் கூடாது என்று தீர்மானித்தார். சுற்றும் முற்றும் பார்த்தார். பின் தனக்கு முன்னால் கட்டிலோடு கீழே இறக்கப்பட்ட அந்த மனிதனை நோக்கி,

‘மகனே உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன’ என்றார்.

இயேசு வழக்கமாக குணம்பெறு என்றோ உன் நம்பிக்கை உன்னைக் குணமாக்கியது என்றோ தான் சொல்வது வழக்கம். அவர் குணமாக்கும் போது, ‘பாவங்கள் மன்னிக்கப்பட்டன’ என்று இதுவரை சொன்னதில்லை. இப்போது தான் சொல்கிறார்.

மறைநூல் அறிஞர்கள் திடுக்கிட்டார்கள்.
‘இவன் ஏன் இப்படிப் பேசுகிறான். பாவங்களை மன்னிக்க இவன் யார் ? பாவங்களைக் கடவுள் ஒருவர் தான் மன்னிக்க முடியும்’ அவர்கள் மனதில் எரிச்சலடைந்தார்கள். உளவாளிகளுக்கு ஒரு தகவல் கிடைத்து விட்டது. இயேசு தேவ நிந்தனை செய்கிறார். கடவுள் மட்டுமே பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் கொண்டவர், இவர் பாவங்களை மன்னிப்பதாகக் கூறி தன்னையும் கடவுளைப் போல காட்டிக் கொள்கிறார். இது சாவுக்குரிய பாவம். உளவாளிகள் உள்ளுக்குள் சொல்லிக் கொண்டார்கள்.

இயேசு அவர்களைத் திரும்பிப் பார்த்தார்.
‘ஏன் உங்கள் உள்ளங்களில் அப்படி நினைக்கிறீர்கள் ? எழுந்து படுக்கையைத் தூக்கிக் கொண்டு போ என்று இவனிடம் நான் சொல்லியிருக்க முடியும். அது எனக்கு மிகவும் எளிது. ஆனாலும் மானிட மகனுக்குப் பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் உணரவேண்டும் என்பதற்காகவே இப்படிச் சொல்கிறேன்’ என்றார்.

மானிட மகன்! இயேசுவின் வார்த்தைப் பிரயோகத்தைப் பார்த்த மறைநூல் அறிஞர்களுக்கு இன்னும் அதிர்ச்சி. ஏனென்றால் அவர்களுடைய பழைய இறைவாக்கினர்களில் ஒருவரான தானியேல் ‘மானிட மகன் வானத்திலிருந்து மண்ணுக்கு இறங்கி வருவார்..’ என்று குறிப்பிட்டிருந்தார். இயேசுவின் மானிட மகன் பிரயோகம் இயேசு தன்னை தானியேல் தீர்க்கத் தரிசி சொன்ன கடவுளாகக் காட்டிக் கொள்கிறார் என்பது அவர்களுக்குப் புரிந்தது. இதை எப்படியும் எருசலேமுக்குத் தெரிவிக்க வேண்டும். ஆலய தலைமைக் குருக்களும் அரசும் இதை அறியவேண்டும் என்று அவர்கள் உள்ளுக்குள் தீர்மானித்தார்கள்.

ஆனால் அப்போது வெளிப்படையாக எதுவும் பேசாமல் அமைதிகாத்தனர். ஏனென்றால் அங்கே இருந்த கூட்டத்தில் ஒருசிலரைத் தவிர அனைவரும் இயேசுவின் ஆதரவாளர்கள் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள்.

இயேசு முடக்குவாதக் காரனிடம் திரும்பி ‘ நீ எழுந்து உன்னுடைய படுக்கையை எடுத்துக் கொண்டு நட’ என்றார்.

அதுவரை உடல் அசைவில்லாமல் கிடந்த அவனுடைய உடல் மெல்ல அசைந்தது. அவனுடைய உதடுகள் அசைந்தன. அவன் மெல்ல எழுந்தான். கூட்டம் ஸ்தம்பித்தது. அவன் கால்களைத் தரையில் ஊன்றினான். வலுவற்றுக் கிடந்த கால்கள் இப்போது சுயமாக நிற்கின்றன. அவன் இயேசுவை நோக்கி கண்ணீர் மல்க பணிந்தான். அவன் உதடுகள் நன்றி அறிவித்தன. இயேசு புன்னகைத்தார். அவன் அந்த மக்கள் கூட்டத்துக்கு முன்பாகவே தன்னுடைய படுக்கையைத் தூக்கிக் கொண்டு வெளியேறினான். கூரையில் இருந்து இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த அவருடைய மகன்கள் நான்குபேரும் ஆனந்தத்தில் திளைத்தார்கள். கண்ணீருடன் காத்திருந்த மனைவி உற்சாகத்தில் கத்தினாள்.

பரிசேயர்களும், மறைநூல் அறிஞர்களும் உள்ளுக்குள் வஞ்சத்தை வளர்த்தார்கள். அவர்களுக்கு மனித நேயம் எல்லாம் இரண்டாம் பட்சத்துக்கும் கீழே அகல பாதாளத்தில் இருந்தது. ஆனால் சட்டங்களை மீறுவதும், இயேசு தன்னைக் கடவுளாகக் காட்டிக் கொள்வதும் அவர்களுடைய பார்வையில் கவனிக்கப் படத் தக்கதாக இருந்தன. அவர்கள் இயேசுவை மாட்ட வழி தேடினார்கள்.

இயேசுவுக்கு எதிராக தங்களுடைய முதல் எதிர்ப்பை பரிசேயர்கள் இங்கே தான் காட்டுகிறார்கள். பரிசேயர்கள் எதைச் செய்தாலும் விளம்பரப்படுத்தியடி செய்வது தான் வழக்கம். செபம் செய்யும்போது நகரத்தின் சந்திப்புகளில் நிற்பதும், தங்களுடைய ஆடைகளில் தாங்கள் பெரியவர்கள் என்று காட்டிக் கொள்வதும், சட்டத்தைக் கரைத்துக் குடித்ததாகக் கர்வம் கொள்வதும் பரிசேயர்களின் பரம்பரைப் பழக்கம். இயேசுவின் பாஷையில் சொன்னால் குருடருக்கு வழிகாட்டும் குருடர்கள் இவர்கள். இயேசுவுக்கு எதிராக தங்களுடைய முதல் சுவடை வைக்கிறார்கள்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink Closed

இயேசு வரலாறு 18 : குதர்க்கக் கேள்விகள்

 Image result for Pharisees asking ques to Jesus

வாழ்க்கை என்பது மண்ணுலக வாழ்க்கை மட்டும் தான். அதன்பின் உயிர்த்தெழுதல், விண்ணகம் செல்லுதல் போன்றவை எதுவும் இல்லை. மண்ணுலகில் நல்லவர்களாக வாழ்ந்தால் அதன் பலன் மண்ணுலகிலேயே கிடைக்கும் என்று நம்பும் ஒரு கூட்டத்தினர் அந்த காலத்திலும் இருந்தார்கள். அவர்கள் சதுசேயர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். அவர்கள் இயேசுவிடம் வந்து,

‘போதகரே… ஒருவன் பிள்ளைப்பேறு இல்லாமல் இறந்து போனால், அவனுடைய சகோதரன் அவளை மணந்து கொண்டு வழிமரபு உருவாக்க வேண்டும் என்பது மோசேயின் சட்டங்களில் ஒன்று. அதன்படி ஒருவன் மகப்பேறின்றி இளம் வயதிலேயே இறந்தான். அவனுடைய மனைவியை அவனுடைய சகோதரன் மணந்தான் அவனுக்கும் குழந்தைப்பேறு இல்லை. இப்படியே ஏழு சகோதரர்கள் அவளை மணந்தும் அவளுக்குக் குழந்தைகள் இல்லை. கடைசியில் அந்தப் பெண்ணும் இறந்தாள்’ சொல்லிவிட்டு நிறுத்தியவன் இயேசுவைப் பார்த்து

‘இப்போது நான் என்னுடைய கேள்விக்கு வருகிறேன். உயிர்த்தெழுதல் உண்டு என்று நீங்கள் சொல்கிறீர்களே. இந்த எட்டுபேரும் உயிர்த்தெழுந்தபின் அவள் விண்ணுலகில் யாருக்கு மனைவியாய் இருப்பாள் ?’ கொக்கிக் கேள்வி ஒன்றைக் கேட்ட திருப்தியில் அவர் புன்னகைத்தார்.

ஒட்டுமொத்த கூட்டமும் சட்டென்று அமைதியாகி இயேசு சொல்லப்போகும் பதிலுக்காகக் காத்திருந்தது. முதலாமவனுக்குத் தான், கடைசியாய் திருமணம் செய்தவனுக்குத் தான் ? ஒருவேளை எல்லாருக்குமோ ? மக்கள் தங்களுக்குள் கிசுகிசுத்தார்கள்.

இயேசு அவர்களைப் பார்த்தார். ‘ உங்களுக்கு மறைநூலைப் பற்றியும், விண்ணகத்தைப் பற்றியும் ஒன்றுமே தெரியாது என்பதை நீங்கள் மறுபடியும் நிரூபித்து விட்டீர்கள்’ இயேசு சொன்னார்.

‘ஏன் அப்படிச் சொல்கிறீர்கள் ?’ அவர்கள் கேட்டார்கள்.

‘விண்ணகத்தில் பெண் கொள்வதும் இல்லை, பெண் கொடுப்பதும் இல்லை. அவர்கள் அங்கே தேவ தூதர்களைப் போல இருப்பார்கள் !’ இயேசு சொல்ல கேள்வி கேட்டவர்கள் முகத்தில் ஈயாடவில்லை.

Related image

‘ஒருவர் தம்முடைய மனைவியை ஏதாவது காரணம் காட்டி விலக்கி விடுவது முறையா ?’ இயேசுவை நோக்கி சோதிக்கும் கேள்வி ஒன்றை பரிசேயர்கள் நீட்டினார்கள்.

‘படைப்பின் துவக்கத்திலேயே கடவுள் ஆணையும், பெண்ணையும் படைத்து அவர்கள் துணையாக வாழவேண்டுமென்று தான் விரும்பினார். எனவே கடவுள் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருப்பதே நல்லது’ இயேசு சொன்னார்.

இதைக் கேட்டதும் பரிசேயர்கள் உள்ளுக்குள் குதூகலித்தார்கள். ஏனென்றால் அவர் சொன்னது மோசேயின் கட்டளை ஒன்றுக்கு மாறானதாக இருந்தது.
‘போதகரே.. நீர் சொல்வது மோசேயின் கட்டளைக்கு எதிராய் இருக்கிறதே. அவர் மணவிலக்குச் சான்றிதழ் கொடுத்து திருமண பந்தத்தை முறித்து விடலாம் என்று சொல்லியிருக்கிறாரே’ அவர்கள் பிடித்துக் கொண்டார்கள்.

‘உங்களுடைய கடின மனதைக் கண்டே மோசே அப்படிச் சொன்னார். ஆதியில் அப்படி இல்லை என்பதை நீங்கள் மறை நூலில் வாசித்ததில்லையா ?
நான் உங்களுக்குச் சொல்வதைக் கவனமாய்க் கேளுங்கள். பரத்தைமையில் ஈடுபட்டதைத் தவிர வேறு எந்த காரணத்துக்காகவும் தன் மனைவியை விலக்கி விட்டு வேறு பெண்ணை மணப்பவன் எவனும் விபச்சாரப் பாவம் செய்கிறான்’ இயேசு தெளிவாய்ச் சொன்னார்.

பரிசேயர்கள் அகன்றார்கள். அப்படியானால் தாங்கள் பாவிகளா என்று பலர் தங்களுக்குள் வருந்தத் துவங்கினர்.

சீடர்கள் இயேசுவிடம் ,’ திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்வதே சிறந்தது போலிருக்கிறதே’ என்று கேட்டார்கள்.

‘அப்படியல்ல சிலர் பிறவியிலேயே மணவாழ்வுக்குத் தகுதியில்லாமல் இருப்பார்கள், சிலர் சூழ்நிலைகளினால் அப்படித் தள்ளப்படுவார்கள், வேறு சிலர் விண்ணக வாழ்வுக்கு முதலிடம் அளித்து திருமணம் செய்யாமல் இருப்பார்கள். இதை ஏற்றுக் கொள்பவர்கள் ஏற்றுக் கொள்ளட்டும்.’ என்றார். சீடர்கள் மெளனமானார்கள்



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink Closed

இயேசு வரலாறு 19. பாவிகள் வீட்டில் பரமனா ?

Image result for jesus feast with sinnersஅக்காலத்தில் வரி வசூலிக்கும் ஆயக்காரர்கள் மிகவும் கீழ்த்தரமானவர்களாகக் கருதப்பட்டார்கள். அவர்களில் பெரும்பான்மையானவர்கள் நேர்மையற்ற முறையில் தான் வரி வசூலித்து வந்தார்கள். எனவே தான் யோவான் கூட வரி வசூலிப்பவர்களுக்கு அறிவுரை செய்யும் போது ‘ அளவுக்கு அதிகமான வரியை வசூலிக்காதீர்கள்’ என்று அறிவுரை வழங்கினார். மக்களின் வெறுப்பைச் சம்பாதித்துத் தான் வாழ்க்கை நடத்தி வந்தார்கள் இந்த ஆயக்காரர்கள்.

அந்த வரி வசூலிப்பவர்களில் நல்லவர்களும் இருந்தார்கள். ஆனால் அவர்களையும் மக்கள் திருடன் என்றும் தீண்டத் தகாதவன் என்றும் தான் அழைத்தார்கள். ஏனென்றால் அவர்கள் தானே மக்களிடமிருந்து பணத்தை வரியாக வசூலிக்கிறார்கள். எய்தவன் இருக்க அம்பை நோவது போல மக்கள் அவர்களை வெறுத்தனர்.

இயேசு ஒரு நாள் ஆயக்காரர்கள் வரி வசூலிக்கும் சுங்கச் சாவடி வழியாகச் சென்றார். அங்கே ஒரு மனிதர் அமர்ந்து வரி வசூலித்துக் கொண்டிருந்தார். அவருடைய பெயர் லேவி. அல்பேயு என்பவருடைய மகன். கிரேக்கம், ரோமன் உட்பட பல்வேறு மொழிகளில் நல்ல பரிச்சயம் உடையவர் லேவி. ரோமர்களின் பணமான பென்ஸ், பவுண்ட்ஸ், தாலந்துகள் எனப்படும் வெள்ளி மற்றும் தங்கத்திலான நாணயங்கள் அவருடைய கைகளில் புரண்டு கொண்டிருந்தன. அவற்றை கவனமாக வசூலித்துக் கொண்டிருந்தார்.

இயேசு அவரைப் பார்த்தார். அவருடைய கண்களில் சோகம் இழையோடிக்கொண்டிருந்தது.

‘என்னைப் பின்பற்றி வா’ அவனுக்கு அழைப்பு விடுத்தார். ஒரே ஒரு வார்த்தை. லேவியை நேருக்கு நேராய் பார்த்து அழுத்தமாய்ச் சொல்லிவிட்டு நடந்தார் இயேசு.

லேவி யோசிக்கவில்லை. உடனே தன்னுடைய இருக்கையிலிருந்து எழுந்து இயேசுவின் பின்னே சென்றான். ! என்ன நடக்கும் என்பதை யோசிக்கவில்லை, என்ன செய்யப் போகிறோம் என்று யோசிக்கவில்லை, வரி வசூலிக்காமல் சென்றால் அரசு தரப்பிலிருந்து என்ன சிக்கல்கள் வரும் என்பதை யோசிக்கவில்லை. இயேசுவின் பின்னே நடந்தார்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த மக்கள் புரியாமல் விழித்தனர். எத்தனையோ வருடமாக வரி வசூல் செய்து கொண்டிருக்கும் ஒருவன், இயேசு வந்து என்னைப் பின்செல் என்றவுடன் பணத்தைக் கூட அங்கேயே விட்டு விட்டு அவரோடு செல்கிறானே என்று ஆச்சரியமடைந்தார்கள்.

இயேசு அவரைப் பார்த்தார். இனிமேல் நீ என் நண்பன். உன் பெயர் இனிமேல் மத்தேயு என்றார்.

மத்தேயு, இயேசுவின் ஐந்து சீடர்களுடன் சேர, சீடர்களின் எண்ணிக்கை ஆறானது. வரி வசூலிப்பவராக இருந்து மக்களிடமிருந்து ஓரமாய் ஒதுக்கப்பட்டிருந்த தனக்கு இயேசுவின் அங்கீகாரமும், கூடவே ஐந்து நண்பர்களும் கிடைத்ததில் மத்தேயு மகிழ்ந்தார்.

‘இயேசுவே… என்னையும் ஒரு பொருட்டாக மதித்து உமது சீடனாக்கியதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். என் வீட்டில் நான் இன்று உமக்கு விருந்து ஒன்றை ஏற்பாடு செய்கிறேன். வந்து உணவருந்தவேண்டும்.’ என்று இயேசுவுக்கு அழைப்பும் விடுத்தார்

இயேசு அவனுடைய அழைப்பை ஏற்று விருந்துக்குச் சென்றார். வீடு ஆயக்காரர்களாலும், பாவிகள் என்று பிறரால் அழைக்கப்பட்ட மனிதர்களாலும் நிறைந்திருந்தது. இயேசுவும் அவருடைய சீடர்களும் மனிதருக்குள் பாகுபாடு காட்டும் வழக்கம் இல்லாதவர்கள். அவர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்தினார்கள்.
இயேசுவின் இருபுறமும் அவர்கள் தான் அமர்ந்திருந்தார்கள்.

இயேசு அனைவருடனும் நேசத்துடன் உரையாடி, அவர்கள் பரிமாறிய உணவைப் பகிர்ந்து உண்டு கொண்டிருந்தார்.

குற்றம் சொல்லும் கூட்டம் சீடர்களை அழைத்துக் கேட்டது.

‘ஏன் உங்கள் போதகர் ஆயக்காரரோடும், பாவிகளோடும் உணவருந்துகிறார் ? பாவிகளோடு பாவிகளும், ஆயக்காரரோடு ஆயக்காரரும் விருந்துண்பது தானே முறை ?’ கேள்வியில் எள்ளல் இருந்தது. இயேசுவின் காதுகளில் தாங்கள் கேட்பது விழவேண்டும் என்பதற்காக சற்று உரக்கவே கேட்டார்கள்.

இயேசு அவர்களுடைய குரலில் தெறித்த ஏளனத்தை அறிந்து கொண்டார். ஆனாலும் புன்னகையுடன் பதில் சொன்னார்.
‘மருத்துவன் நோயற்றவர்க்கல்ல, நோயுற்றவருக்கே தேவை. நான் பலியை விரும்பவில்லை, இரக்கத்தையே நாடுகிறேன். நீதிமான்களை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்’ என்றார்.

குற்றம் சொன்னவர்கள் குறுகுறுத்துக் கொண்டே அவ்விடம் விட்டு நகர்ந்தனர்.

இயேசுவும் சீடர்களும் நன்றாக விருந்துண்டு இயல்பாக இருப்பதைக் கண்ட திருமுழுக்கு யோவானின் சீடர்களுக்கும் குழப்பம். திருமுழுக்கு யோவானுக்கே குழப்பம் வந்திருக்க வேண்டும். இவர் தான் மீட்பர் என்று அறிவித்தவர் அவர். இயேசுவோ உண்டு குடித்து திரிகிறார். நோன்பு இருக்கும் வழக்கத்தைக் கொள்வதில்லை.

யூதர்களுக்கு நோன்பு என்பது மிகவும் முக்கியமானது. நோன்பு நாட்களில் உண்ணாமல் இருப்பது வெளியே தெரிய வேண்டும் என்பதற்காகவே கலைந்த தலையுடனும் சோர்வடைந்த முகத்துடனும் அலைவார்கள். இயேசுவும் அவருடைய சீடர்களும் எப்போதும் புத்துணர்ச்சியுடன் சுற்றி வந்தார்கள்.

திருமுழுக்கு யோவானின் சீடர்கள் இயேசுவிடம் வந்து தங்கள் சந்தேகத்தைக் கேட்டனர்.
‘நாங்கள் நோன்பு முறைகளையெல்லாம் கடைபிடிக்கிறோம். அது தான் கடவுளுக்கு ஏற்புடையது என்பதை சட்ட நூல்களே சொல்கின்றன. நீரும் உம்முடைய சீடர்களுமோவென்றால் எப்போதுமே நோன்பு இருப்பதில்லையே ? ஏன்’

இயேசு அவர்களைப் பார்த்து ,’ மணமகன் தங்களோடு இருக்கும் வரை அவருடைய நண்பர்கள் நோன்பு இருக்க வேண்டிய தேவையில்லை. மணமகன் அவர்களை விட்டுப் பிரியும் நாள் வரும் அப்போது அவர்கள் நோன்பு இருப்பார்கள்’ என்றார்.

அவர்களுக்கு அவருடைய விளக்கம் புரியவில்லை. ஆனாலும் அவ்விடம் விட்டு அகன்றனர்.

ஓய்வு நாள் ஓய்வெடுக்கவா ?

எருசலேம் தேவாலய உளவாளிகளுக்கு இப்போது சில தகவல்கள் கிடைத்துவிட்டது. இயேசு பாவங்களை மன்னிப்பதாகச் சொல்லிக் கொள்கிறார், மானிட மகன் என்கிறார், நோன்பைக் கடைபிடிப்பதில்லை, பாவிகளோடு உண்கிறார் குடிக்கிறார். வேறு என்ன கிடைக்கும் என்று அவர்கள் தேடிக் கொண்டே இருந்தார்கள். அவர்களுக்குக் கிடைத்தது மேலும் ஒரு துருப்புச் சீட்டு.

அது ஒரு ஓய்வு நாள். இயேசுவும் அவருடைய சீடர்களும் வயல்வெளி வழியாகச் சென்று கொண்டிருந்தார்கள். வயலில் தானியங்கள் கொத்துக் கொத்தாகக் காய்த்திருந்தன. இயேசு அடுத்துள்ள ஊரில் போதனையை முடித்துக் கொண்டு வந்து கொண்டிருந்தார். உணவருந்தி நீண்ட நேரம் ஆகியிருந்ததால் சீடர்களுக்குப் பசி எடுத்தது. அவர்கள் அந்தக் கதிர்களைக் கொய்து கைகளினால் கசக்கி ஊதி தானிய மணிகளை உண்டார்கள். கண்ணில் விளக்கெண்ணை ஊற்றி இயேசுவின் மீது குற்றம் கண்டுபிடிக்கக் காரணம் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு ஒரு காரணம் கிடைத்துவிட்டது.

இயேசுவின் சீடர்கள் ஓய்வு நாளில் வேலை செய்கிறார்கள் !

அவர்கள் இயேசுவை அணுகினார்கள்.
‘பாரும் இயேசுவே பாரும். இன்றைக்கு ஓய்வு நாள். உங்கள் சீடர்கள் செய்வது என்ன என்பது உங்களுக்குத் தெரிகிறதா ?’ பரிசேயர்கள் கேட்டார்கள். இயேசு பார்த்தார். ‘ என்ன செய்கிறார்கள் ? பசியாய் இருப்பதால் சில கதிர்களைக் கொய்து உண்கிறார்கள் இதில் என்ன தவறு ?’ இயேசு கேட்டார்.

‘மறை நூலை நீங்கள் வாசித்ததில்லையா ? ஓய்வு நாளில் உணவு சேகரிப்பது கூட பாவம் என்று மோசே சொல்லியிருக்கிறார். உங்கள் சீடர்கள் செய்வது ஒருவகையில் அறுவடை தான். ஓய்வு நாளில் எந்தப் பணியும் செய்யக் கூடாது என்று சட்டம் தெளிவாகச் சொல்கிறது. நீங்கள் வாசித்ததில்லையோ ?’ பரிசேயர்கள் சற்று அதிகாரத் தோரணையில் சொன்னார்கள்.

‘அதே மறை நூலில் நீங்கள் எல்லோரும் புகழ்ந்து பேசும் தாவீது அரசர் செய்த ஒரு காரியமும் சொல்லப்பட்டிருக்கிறது தெரியுமா ? அவரும் அவருடன் இருந்தவர்களும் பசியாய் இருந்தபோது ஆலயத்தில் குருக்கள் மட்டுமே உண்ணக் கூடிய அற்பண அப்பங்களை உண்டார்கள். இதை நீங்கள் வாசித்ததில்லையோ ?’ இயேசு பதிலடி கொடுத்தார். பரிசேயர்கள் மெளனமானார்கள்.

‘அது மட்டுமல்ல. ஓய்வு நாளில் குருக்கள் ஆலயத்தில் பணியாற்றுவது ஓய்வு நாளை மீறிய செயலாகாது என்பதையும் திருச் சட்ட நூல் சொல்கிறதே ! தெரியாதா ?’ இயேசு மீண்டும் கேட்டார். பரிசேயர்களிடமிருந்து பதில் ஏதும் வரவில்லை.

‘ஓய்வு நாளில் விருத்த சேதனம் செய்வது கூட பாவமாகாது என்பதாவது தெரியுமா ?’ இயேசுவின் தொடர் கேள்விகளால் அவர்கள் மெளனமானார்கள்.

‘கோயிலை விடப் பெரியவர் இங்கே உங்கள் முன்னால் இருக்கிறார். அதை நீங்கள் அறியவில்லை. பலியை அல்ல இரக்கத்தையே விரும்புகிறேன் என்று நான் போதிப்பதன் பொருள் உங்களுக்கு விளங்கும் வரை நீங்கள் இவற்றையெல்லாம் உணரமாட்டீர்கள். கடைசியாக ஒன்று சொல்கிறேன். ஓய்வு நாள் இருப்பது மனிதனுக்காக, மனிதன் இருப்பது ஓய்வு நாளுக்காக அல்ல. கடவுள் ஓய்வு நாளிலும் பணியாற்றுகிறார்’ இயேசு அதிகாரத் தோரணையில் சொல்லி விட்டு நகர்ந்தார்.

குற்றம் சொன்ன கூட்டம் முணுமுணுத்துக் கொண்டே அகன்றது.

இயேசு அங்கிருந்து நேராக தொழுகைக் கூடத்துக்குச் சென்றார். அங்கும் பரிசேயர்களும், மறைநூல் அறிஞர்களும் இயேசுவிடம் குற்றம் ஏதேனும் காணவேண்டும் என்னும் நோக்கில் அவரைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள்.

அங்கே தொழுகைக் கூடத்தில் சூம்பிப் போன கைகளை உடைய ஒரு மனிதன் அமர்ந்திருந்தான். இன்று ஓய்வு நாளாயிற்றே, இயேசு அவனைக் குணமாக்குவாரா ? ஒரு சண்டைக்குத் தயாராகலாமா ? என்று அவர்களுடைய மனம் கேட்டுக் கொண்டிருந்தது.

அவர்கள் இயேசுவை நோக்கி,
‘ஓய்வு நாளில் ஒருவனைக் குணமாக்குதல் முறையா ?’ என்று கேட்டார்கள்.

இயேசு அவர்களிடம்,’ நீங்கள் சொல்லுங்கள். எது முறை ? நன்மை செய்வதா ? தீமை செய்வதா ? உயிரைக் காப்பதா ? அழிப்பதா ? எது முறை ? எதை ஓய்வு நாளில் செய்யலாம் ? சொல்லுங்கள்’ என்று கேட்டார்.

அவர்களிடமிருந்து பதில் இல்லை.

இயேசு கை சூம்பிப்போன அந்த மனிதரை அழைத்து அவர்கள் நடுவிலே நிறுத்தினார். அவர் வந்து இயேசுவின் முன்னால் நின்றார். பரிசேயர்களும், மறை நூல் அறிஞர்களும் அவர் என்ன செய்யப் போகிறார் என்று பார்த்துக் கொண்டிருந்தார்கள். இயேசு அவர்களைப் பார்த்து

‘உங்களுடைய ஒரே ஒரு ஆடு ஓய்வு நாளில் பள்ளத்தில் விழுந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள் ? அதைத் தூக்கி விடுவீர்களா ? இல்லை ஓய்வு நாள் முடியுமட்டும் அந்தக் குழியிலேயே கிடக்கட்டும் என்று விட்டு விடுவீர்களா ? தூக்கி விடுவீர்கள் தானே ? ஆட்டுக்கே நன்மை செய்ய நீங்கள் நினைக்கும் போது ஆட்டை விட உயர்ந்த மனிதனுக்கு நன்மை செய்ய நான் நினைக்கக் கூடாதா ?’ இயேசு அவர்களிடம் கேட்டார். அவர்களிடம் பதில் ஏதும் இருக்கவில்லை.
அவர்கள் இயேசுவின் கேள்விகளில் இருக்கும் கூர்மையையும், அவருடைய சட்ட அறிவையும் கண்டு திகைத்துப் போய் பேச்சிழந்து நின்றார்கள்.

‘உன் கையை நீட்டு’ இயேசு கை சூம்பிப் போனவரிடம் சொன்னார்.

அவன் கையை நீட்டினான். கை நேராகிவிட்டது. அவன் மிகவும் ஆனந்தமடைந்து இயேசுவைப் பணிந்து வணங்கினான்.

பரிசேயர்கள் நேராக அரச அதிகாரிகள் சிலருடன் இயேசுவை எப்படியாவது ஒழித்துக் கட்டவேண்டும் என்று ஆலோசனை செய்தார்கள்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink Closed

 இயேசுவின் வரலாறு 20 : ஒரு வார்த்தை போதும்

Image result for Centurion's faith Jesusபரிசேயர்களின் அச்சுறுத்தல் இயேசுவைப் பணி செய்வதிலிருந்து இம்மியளவும் பாதை மாற்றவில்லை.

கப்பர்நாகும் என்னும் ஊரில் படைத்தளபதி ஒருவர் இருந்தார். அவருக்குக் கீழே நூறு வீரர்கள் இருந்ததால் அவர் நூற்றுவர் தலைவர் என்று அழைக்கப் பட்டார். அந்நாட்களில் நூறுபேர், ஐம்பது பேர், பத்து பேர், ஆயிரம் பேர் என்று பல அளவுகளில் படைகள் இருந்தன. ஒவ்வொரு குழுவும் ஒவ்வொரு படைத்தளபதியின் கீழ் செயலாற்றி வந்தன. படைவீரர்களின் எண்ணிக்கையை வைத்து குழுக்கள் பெயரிட்டு அழைக்கப் பட்டன.

இந்த தலைவன் தன்னுடைய படைவீரர்களை மிகவும் நேசித்தான். அவர்களுடைய தேவைகளை எல்லாம் நிறைவேற்றி வைக்கும் நல்ல மனத்தினனாக இருந்தான்.

ஒருமுறை அவனுடைய பணியாளன் ஒருவன் நோயுற்றுச் சாகும் நிலையில் இருந்தான். தன்னுடைய பணியாளனின் நிலையைக் கண்ட தலைவன் மிகவும் மன வருத்தமடைந்தான். அவனை எந்த வழியிலாவது சுகப்படுத்த முடியுமா என்று எல்லா வைத்தியர்களையும், போதகர்களையும் வைத்து முயன்றான். எந்த பயனும் இல்லை. பணியாளன் நாளுக்கு நாள் பலவீனமடைந்து மரணத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தான்.

இயேசு மக்களுக்குப் போதனைகள் நிகழ்த்துவதற்காக கப்பர் நகூமுக்கு வந்தார்.

இயேசு வந்திருக்கிறார் என்பதைக் கேள்விப்பட்ட நூற்றுவர் தலைவன் மகிழ்ந்தான். இயேசுவைப் பற்றி அவன் மிகவும் நன்றாக அறிந்திருந்தான். இயேசுவின் அற்புதங்களின் மேல் அவர் ஆழமான விசுவாசம் கொண்டிருந்தார். இயேசு நினைத்தால் நிச்சயமாக தன்னுடைய பணியாளனின் நோய் நீங்கி விடும் என்று அவர் உறுதியாக நம்பினார்.
அவருக்குள் காய்ந்து போயிருந்த நம்பிக்கை மரம் மெல்ல மெல்ல துளிர் விட ஆரம்பித்தது.

அவர் யூதப் பெரியவர்கள் சிலரை அழைத்து ‘ஐயா.. நீங்கள் எனக்காக இயேசுவிடம் சென்று என்னுடைய பணியாளனுக்கு நலம் பெற்றுத் தாருங்கள்’ என்று வேண்டினார்.

அந்தப் பெரியவர்கள் நூற்றுவர்த் தலைவனையும் பணியாளர்கள் மேல் அவன் காட்டும் கரிசனையையும் ஏற்கனவே அறிந்திருந்தார்கள். யூதர்களுக்கென்று ஒரு தொழுகைக் கூடத்தையும் அவன் அமைத்துக் கொடுத்திருந்தான். எனவே அவர்கள் அந்த நூற்றுவர்த் தலைவன் மேல் மிகவும் மரியாதை வைத்திருந்தார்கள்.

அவர்கள் இயேசுவைக் காணச் சென்றார்கள். இயேசு மக்கள் கூட்டத்தினரிடம் பேசிக் கொண்டிருந்தார்.
‘நான் சொல்வதைக் கேட்டு நீங்கள் அதைச் செயல்படுத்த வேண்டும். நம்பிக்கை இல்லாமல் வெறுமனே கேட்டு விட்டு உங்களுக்குத் தோன்றும் வழியில் நடப்பது பயன் தராது. என்னை நோக்கி ஆண்டவரே ஆண்டவரே என்று சொல்வது முக்கியமல்ல. நான் சொல்வதன் படி நடப்பதே முக்கியம். என்னை நம்பி என்னுடைய போதனைகளின் படி நடப்பவன் பாறையின் மீது தன்னுடைய வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவான். பெரும்புயலடித்தது, பெரும் சுழல்காற்று வீசியது. ஆனால் வீடு அசையவில்லை. என்னுடைய வார்த்தையின் படி நடக்காதவனோ, மணலின் மீது வீடு கட்டிய மூடனுக்கு ஒப்பாவான். சிறு புயலுக்கே அது சிதறடிக்கப்பட்டது. எனவே ஆழமான நம்பிக்கை உங்களுக்கு இருக்க வேண்டும். அந்த நம்பிக்கையை நீங்கள் செயல்களில் வெளிப்படுத்த வேண்டும்’ இயேசுவின் போதனையைக் கேட்டுக் கொண்டிருந்தது மக்கள் கூட்டம்.

இயேசு போதனைகளை நிறுத்த்¢யதும், யூத பெரியவர்கள் அவரிடம் சென்றார்கள்.
‘போதகரே வணக்கம்’

இயேசு அவர்கள் பக்கம் திரும்பினார்.

‘இங்கே நூற்றுவர் தலைவர் ஒருவர் இருக்கிறார். அவருடைய பணியாளன் ஒருவன் சாகும் தருவாயில் இருக்கிறான். எவ்வளவோ வைத்தியம் பார்த்தும் அவனுக்குச் சுகம் கிடைக்கவில்லை. நீர் நினைத்தால் அவன் சுகம் பெறுவான் என்பது எங்களின் நம்பிக்கை’ அவர்கள் அமைதியாய்ச் சொன்னார்கள்.

இயேசு பதில் சொல்லவில்லை.

‘அவர் மிகவும் நேர்மையானவர். நமக்காக தொழுகைக் கூடங்கள் எல்லாம் அமைத்துத் தந்தவர். நீங்கள் அவருக்கு உதவ வேண்டும்’ அவர்கள் மீண்டும் பணிவுடன் சொன்னார்கள்.

‘சரி வாருங்கள் அவரிடம் செல்வோம்’ இயேசு அவர்களுடன் அந்த நோயாளியைச் சந்திக்கச் சென்றார்.

இயேசுவும் கூட்டத்தினரும் நூற்றுவர் தலைவரின் வீட்டை நெருங்கினார்கள். இயேசு தன் வீட்டை நோக்கி வந்திருப்பதைக் கண்ட நூற்றுவர்த் தலைவன் பரவசமடைந்தான். அவன் தன் ஊழியக் காரரை அழைத்து நீங்கள் இயேசுவிடம் போய்
‘ஐயா… உமக்குத் தொந்தரவு வேண்டாம். நீர் என் வீட்டுக்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். ஆனால் ஒரே ஒரு வார்த்தை மட்டும் சொன்னால் போதும். என்னுடைய ஊழியன் நலமடைவான். நான் அதிகாரத்துக்கு கட்டுப்பட்டவன் ஆனாலும் எனக்குக் கீழேயும் படை வீரர்கள் உண்டு. ஒருவனைப் பார்த்து போ என்றால் போவான், இன்னொருவனைப் பார்த்து வா என்றால் வருவான், இதைச் செய் என்றால் செய்வான். அதுபோல நீர் ஒரு வார்த்தை சொன்னால் போதும் நோய்கள் எல்லாம் என் பணியாளனை விட்டு விட்டு ஓடிப்போய்விடும்’ என்று சொல்லுங்கள் என்றான்.

ஊழியர்கள் இயேசுவை எதிர்கொண்டு போய் அவர் சொன்னதை அப்படியே சொன்னார்கள்.

இயேசு வியந்தார். நூற்றுவர் தலைவனுடைய ஆழமான நம்பிக்கையையும், அறிவையும் கண்டு மிகவும் ஆனந்தமடைந்தார். அவர் திரும்பி தன்னைப் பின் தொடர்ந்து வந்த கூட்டத்தினரை நோக்கி

‘பாருங்கள். இதுதான் நம்பிக்கை. நான் இஸ்ரயேலரிடத்தில் கூட இத்தனை ஆழமான நம்பிக்கையைக் கண்டதில்லை. உண்மையாகவே உங்களுக்கு ஒரு விஷயத்தைச் சொல்ல விரும்புகிறேன். கிழக்கிலும், மேற்கிலும் இருந்தெல்லாம் என்னை நம்பும் மக்கள் வந்து விண்ணுலகில் கடவுளோடு அமர்ந்திருப்பார்கள். ஆழமான நம்பிக்கை இல்லாத கடவுளின் மக்களான நீங்கள் புற இருளுக்குள் தள்ளப்படுவீர்கள் ‘ என்றார்.

பின் அந்த ஊழியர்களை நோக்கி,
‘நீங்கள் நிம்மதியுடன் செல்லுங்கள். உங்கள் சக பணியாளனின் நோய் இந்த வினாடியில் விடைபெற்றிருக்கிறது.’ என்றார்.

ஊழியர்கள் வீட்டை நோக்கி ஓடினார்கள்.

அவர்கள் வீட்டை அடையும் முன் மரணப்படுக்கையில் கிடந்த ஊழியன் முழு உடல் நலத்துடன் வீட்டை விட்டு வெளியே வந்தான்.

ஊழியர்கள் வியந்தார்கள்.

ஒற்றைச் சொல்லால் நலமடைந்த நண்பனை நண்பர்கள் ஆனந்தமாய்ப் பார்த்தார்கள்.

இயேசு தன்னுடைய பயணத்தைத் தொடர்ந்தார். பயணம் நயீன் என்னும் பட்டணத்தை நோக்கி நகர்ந்தது.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink Closed

இயேசு வரலாறு 21 : நயீன் விதவையின் மகன்

 Image result for Son of Nain widow Jesus
நயீன் ஊரை இயேசு நெருங்கினார். அவருடன் ஏராளமான மக்கள் கூடவே சென்றார்கள்.

நயீன் ஊர் வாசலில் ஒரு மரண ஊர்வலம் அவர்களை எதிர்கொண்டது. அழுகையும், ஒப்பாரியுமாய் அவர்களை நெருங்கியது அந்த ஊர்வலம்.

இறந்து போனவன் ஒரு இளைஞன். அவனுடைய தாய்க்கு அவன் ஒரே மகன். அவள் ஒரு கைம்பெண். ஊர்வலம் இயேசுவின் அருகே வந்தது.

இயேசு நின்றார். அந்தத் தாயைப்பார்த்தார். ஆதரவற்ற நிலையில், அனாதைபோல அழுது புலம்பிக் கொண்டிருந்த அவளுடைய நிலை அவருடைய மனதைத் தொட்டது.

‘அழாதீர்கள் அம்மா..’ இயேசு சொன்னார்.

‘ஐயா… எனக்கு இருந்த ஒரே ஆதரவும் இப்படிப் போய்விட்டதே. அன்பு மகன் இறந்து போனால் அழாமல் இருக்க முடியுமா ? எனக்கு இனிமேல் யாருமே இல்லையே ? என்ன செய்வேன்…’ அந்தத் தாய் கதறினாள்.

இயேசு பாடையைத் தொட்டார். பாடையைத் தூக்கி வந்தவர்கள் நின்றார்கள்.

‘இளைஞனே நான் உனக்குச் சொல்கிறேன் எழுந்திரு’ இயேசு சொன்னார்.

கூட்டத்தினர் ஒரு வினாடி திகைத்தனர். மறு வினாடி ஆச்சரியத்தில் திளைத்தனர்.

இறந்து கிடந்த அந்த இளைஞன் எழுந்திருந்தான். பாடையைத் தூக்கி வந்தவர்கள் பாடையை நழுவவிட்டார்கள். இளைஞன் எழுந்து சுற்றுமுற்றும் பார்த்தான். அழுது அழுது கண்கள் வீங்கிப் போன தாயை பலமடங்கு பாசத்துடன் அள்ளி அணைத்துக் கொண்டான்.

கூட்டத்தினருக்கு அதிர்ச்சி. ‘உண்மையிலேயே ஒரு மாபெரும் இறைவாக்கினர் நம்மிடையே வந்திருக்கிறார்’ என்று அவர்களுடைய உதடுகள் ஓயாமல் பேசத் துவங்கின.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink Closed

இயேசு வரலாறு 22 : யோவானின் படுகொலை

Image result for John the baptist in jailசிறையிலிருந்த யோவான் இயேசுவின் பணிகளைப் பற்றி கேள்விப்பட்டார். ஆனால் அவர் கேள்விப் படுபவை எல்லாம் அவருக்கு நம்பிக்கையையும் குழப்பத்தையும் ஒரு சேர கொடுத்தன. இயேசு நோயாளிகளைக் குணமாக்கினார் என்பதைக் கேள்விப்படுகையில் ஆனந்திப்பார், ஆனால் உடனே அடுத்த தகவல் வரும், இயேசு பாவிகளோடு பந்தியமர்கிறார். போதனைகளை வழங்குகிறார் என்று ஆனந்தப்படுவார் கூடவே ஓய்வு நாளை அனுசரிப்பதில்லை, நோன்பு இருப்பதில்லை என்று தகவல்களும் வரும். இதற்கு முன் வந்த எல்லா இறைவாக்கினர்களுமே மக்களுக்குப் போதனைகள் செய்வதுடன் கூடவே நோன்பு, ஓய்வு நாள் போன்ற அனைத்தையும் சரியாகக் கடைபிடித்து வந்தார்கள். இயேசு அவற்றைக் கடைபிடிக்கவில்லை என்றால் அவர் இறைவாக்கினராகவோ, மெசியாவாகவோ இருக்க முடியுமா என்னும் சந்தேகம் அவருக்கு. ஆனாலும் ஒரு வார்த்தை சொல்லி நோயாளிகளைக் குணமாக்குவதும், மரித்தவர்களுக்கு உயிர் கொடுப்பதும் ஒரு இறைவாக்கினர் தான் அவர் என்பதை அழுத்தமாய்க் காட்டுகின்றன. ஆனால் இவர் தன்னைப் போல இன்னொரு இறைவாக்கினரா ? இல்லை இவர் இறைமகனா ? என்பதை அறிந்தாக வேண்டும். யோசனையின் முடிவில் சிலரை இயேசுவிடம் அனுப்பி அவரிடமே நேரடியாகக் கேட்டு விட முடிவு செய்தார் யோவான்.

யோவான் அனுப்பியவர்கள் இயேசுவிடம் சென்றார்கள்.

‘இயேசுவே நாங்கள் யோவானின் சீடர்கள். யோவான் எங்களை உங்களிடம் அனுப்பினார். அவர் நீர்தான் இறைவனின் செம்மறி என்றும், மெசியா என்றும் ஊருக்கெல்லாம் சொன்னவர். அவர் சொன்னது உண்மைதானா என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறார். சிறையில் அவருடைய மரணம் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம், எனவே மெசியா வந்துவிட்டாரா என்பதை அவர் அறிந்து கொள்ள ஆசிக்கிறார்’ சொன்னார்கள் வந்தவர்கள்.

‘நீங்கள் பார்ப்பதையெல்லாம் யோவானிடம் சொல்லுங்கள். பார்வையிழந்தவர் பார்க்கின்றனர், முடவர்கள் நடக்கின்றனர், தொழுநோயாளிகள் சுகமாகின்றார்கள், கேட்கும் திறன் இழந்தவர்கள் கேட்கின்றார்கள், இறந்தவர்கள் உயிர்க்கிறார்கள். இது மட்டுமல்ல எளியவர்களுக்கு நற்செய்தியும் அறிவிக்கப் படுகிறது’ இயேசு வந்தவர்களிடம் சொன்னார். இயேசுவைச் சுற்றியிருந்த கூட்டத்தினர் நடப்பதை எல்லாம் புரியாத மனநிலையில் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

இயேசு கூட்டத்தினரைப் பார்த்து,’ பெண்களில் பிறந்தவர்களில் திருமுழுக்கு யோவானை விடப் பெரியவர் எவரும் இல்லை. ஆனால் கடவுளின் அரசில் மிகச் சிறியவராய் உள்ளவர் கூட யோவானை விடப் பெரியவரே. குறைகூறும் கூட்டம் குறை கூறிக்கொண்டே இருக்கும். அதைப்பற்றிக் கவலைப் படாதீர்கள். யோவான் நோன்பு இருந்தார், பாலை நிலங்களில் போதித்தார் அவரை பைத்தியக்காரன் என்றும் பேய்பிடித்தவன் என்றும் சொன்னார்கள். நான் உண்டு குடிக்கிறேன் என்றால் போஜனப் பிரியன் என்கிறார்கள். எது செய்தாலும் சிலருக்குப் பிடிப்பதில்லை’ என்றார்.

கூடவே… இது எப்படி இருக்கிறதென்றால், ‘ நாங்கள் குழலூதினோம் நீங்கள் ஆடவில்லை, நாங்கள் பாடினோம் நீங்கள் ஆடவில்லை’ என்று அழுகின்ற குழந்தைகளைப் போலிருக்கிறது. உங்கள் உள்ளத்தில் நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதையே பின்பற்றுங்கள். போலித் தலைவர்கள் எதையும் எதிர்ப்பவர்கள். அவர்களை பின்பற்றாதீர்கள்.’ என்று இயேசு தெளிவான விளக்கம் ஒன்றை அளித்தார்.

சிறையிலிருந்த யோவானுக்கு செய்தி சென்று சேர்ந்தது. அவர் மகிழ்ந்தார். தான் சுட்டிக்காட்டிய மனிதர் ஒரு இறைமனிதராகத் தான் இருக்க வேண்டும் என்பதில் அவருக்கு நம்பிக்கை மிகுந்தது.

இதற்கிடையில் ஏரோதியாளின் விரோதம் அதிகரித்துக் கொண்டே வந்தது. யோவான் ஏரோதை எச்சரித்ததிலிருந்தே மக்களிடம் ஏரோது செய்வது தவறு என்னும் பேச்சு உலவி வந்தது. அதை ஏரோதியாள் விரும்பவில்லை. எப்படியேனும் யோவானை வைத்து தான் சொன்னது தவறு என்றும், ஏரோது செய்வது தவறில்லை என்றும் சொல்ல வைக்க விரும்பினாள். பலமுறை ஏரோது மன்னன் தூதனுப்பியும் யோவான் வளைந்து கொடுக்கவில்லை. தனக்கு முன்னால் மரணம் தான் விரிக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிந்தாலும் யோவான் அசரவில்லை. தவறு எப்போதுமே சரியாவதில்லை என்பதில் அவர் நேராக நின்றார். எனவே எப்படியேனும் யோவானைத் தீர்த்துக் கட்டுவது என்ற ஏரோதியாளின் முடிவு வலுவடைந்து கொண்டே வந்தது. சரியான வாய்ப்புக்காகக் காத்திருந்தவளுக்கு வந்தது அந்த அற்புதமான வாய்ப்பு !

Image result for John the baptist killed
வாய்ப்பு ஏரோது மன்னனின் பிறந்தநாள் விழா மூலம் வந்தது !

ஏரோது மன்னனின் பிறந்தநாள் விழா. மன்னன் உயர் அதிகாரிகளையும், படைத் தளபதிகளையும், நாட்டின் மரியாதைக்குரிய தலைவர்களையும் அழைத்து ஒரு மிகப் பெரிய விருந்து ஏற்பாடு செய்தான். விழா கோலாகலமாக நடந்தேறிக் கொண்டிருந்தது. எங்கும் பணக்காரத் தனம் பளிச்சிட்ட அவை. உண்பதற்கும், குடிப்பதற்கும் தனித் தனி இடங்கள். மெலிதாகக் கசியும் மெல்லிசை. அரச வாசனை வழியும் நடைபாதைகள். எங்கும் வண்ண வண்ணப் பட்டாடை அலங்காரத் தொங்கல்கள்.

அந்த விழாவின் தனிச்சிறப்பாக ஏரோதியாளின் மகளின் நடனம் அமைந்தது. அவள் ஏரோதியாளுக்கும், அவளுடைய முதல் கணவன் பிலிப்பிற்கும் பிறந்தவளாக இருக்கக் கூடும். அவளுடைய பெயர் சலோமி. வயதுக்கு மீறிய கவர்ச்சியும், அழகும் நிறைந்த அவளுடைய ஆட்டத்தில் மன்னர்களும், விருந்தினர்களும் லயித்துப் போய் கிடந்தார்கள். அவளுடைய பார்வையில் மிதந்த காந்தக் கவர்ச்சியில் அழைக்கப்பட்டவர்கள் எல்லோருமே மெய்மறந்தனர்.

ஆடல் முடிந்ததும், ஏரோது மன்னன் ஆனந்தமாய் எழுந்தான்.

‘ஆஹா… பிரமாதம் பிரமாதம்… மிகவும் அற்புதமாக நடனமாடினாய். என்னுடைய பிறந்த நாள் விழாவை மிகவும் சிறப்புடையதாக்கினாய். உனக்கு ஏதாவது பரிசு தர விரும்புகிறேன். என்ன வேண்டும் கேள். அரசில் பாதியைக் கேட்டால் கூட நிச்சயமாய்த் தருவேன்’ உற்சாகமாய்ச் சொன்னான் மன்னன்.

அரசில் பாதி கூட தர தயாரா ? என்னுடைய நடனத்துக்கு அத்தனை மதிப்பா ? அந்த இளம் பெண் ஆனந்தித்தாள். பரவசத்தில் பறந்தாள்.

‘அரசே. என் தாயிடம் சென்று ஆலோசித்து வர அனுமதி வழங்குங்கள்’ அவள் கேட்டாள்.

ஏரோது மன்னன் ஒப்புக் கொண்டான். அவள் நேராக தன்னுடைய தாயிடம் சென்று ‘அம்மா.. என்னுடைய நடனம் மிகவும் சிறப்பானதாக இருந்ததாம். மன்னர் எனக்கு என்ன வேண்டுமோ தருகிறேன் என்று சொல்லியிருக்கிறார். நான் என்ன கேட்கட்டும்’ என்று உற்சாகமாகக் கேட்டாள்.

தாயின் மனதுக்குள் குடிகொண்டிருந்த குரூர குணம் தலைநீட்டியது.

‘மகளே நீ மன்னனிடம் சென்று ஒரு தங்கத் தட்டில் யோவானின் தலையைத் தரவேண்டும் என்று கேள்’ என்றாள் தாய்.

அவள் திகைத்தாள். என்னம்மா ? யோவானின் தலையா ? எத்தனையோ மதிப்பு மிக்க பரிசுப் பொருட்கள் இருக்க இதைப் போய் கேட்கிறீர்களே ? வேறு ஏதேனும் கேளுங்கள். அரசில் பாதியைத் தரக் கூட அரசர் தயார். மகள் சொல்ல தாய் சிரித்தாள். யோவானின் தலை நான் இரவு பகலாக விரும்புவது. அதையே கேள் என்று சொல்லியனுப்பினாள்.

மகள் பதில் ஏதும் பேசவில்லை. நேராக மன்னனிடம் சென்றாள்.

‘என்ன ? தாயிடம் கலந்தாலோசித்து விட்டாயா ? என்ன வேண்டும் கேள். என்னிடம் இருப்பதில் சிறந்தவற்றைக் கேள்’ மன்னன் சொன்னான்.

‘மன்னா, யோவானின் தலையை வெட்டி ஒரு தங்கத் தட்டில் வைத்து எனக்குத் தரவேண்டும்’ சிறுமி தாய் விரும்பியதைக் கேட்டாள்.

எரோது மன்னன் திடுக்கிட்டான். விழாவில் இருந்த அத்தனை பேரும் திடுக்கிட்டார்கள்.

‘சிறுமியே ? இ…இது தான் நீ விரும்பியதா ?’ ஏரோது மன்னன் தடுமாறினான்.

‘ஆம் அரசே… எனக்கு அது போதும்’ சிறுமி சொன்னாள்.

ஏரோது மன்னன் மிகவும் கவலையடைந்தான். ஆனாலும் இத்தனை மக்கள் முன்னிலையில் தான் கொடுத்த வாக்குறுதியை மீறவும் அவன் விரும்பவில்லை. சொன்ன சொல்லைக் காப்பாற்றாத மன்னன் என்னும் பெயரைப் பெற அவன் விரும்பவில்லை. கூட்டத்தினர் அனைவரும் ஏரோது மன்னன் என்ன செய்யப் போகிறான் என்பதைக் காணும் ஆவலில் இருந்தார்கள். மன்னன் சுற்றிலும் பார்த்தான், இருந்தவர்கள் அனைவரும் பெரும் புள்ளிகள். அவர்கள் மத்தியில் வாக்குறுதி நிறைவேற்றத் தவறிய கரும்புள்ளியாக மாற அவன் விரும்பவில்லை. அவனுடைய நிலமை ஒரு இருதலைக் கொள்ளி எறும்பு போல, யோவானைக் கொன்றால் மக்களிடம் அதிருப்தியைச் சம்பாதிக்க வேண்டி வரும். கொல்லாவிடில் தலைவர்கள் முன்னிலையில் அவமானப் பட நேரிடும். கர்வத்தை எப்படி விட்டுத் தருவது ?

‘யோவானின் தலையைக் கொய்து வாருங்கள்’ நடுங்கும் குரலில் மன்னன் ஆணையிட்டான்.

சேவகர்கள் சென்று சிறையிலிருந்த யோவானிடம் சென்றார்கள்.

‘ஐயா… உமது தலையை வெட்ட வேண்டும் என்னும் மன்னனின் உத்தரவோடு வந்திருக்கிறோம்’ சேவகர்கள் சொன்னார்கள்.

‘கடவுளில் ஒன்றித்திருப்பவனுக்கு சாவு என்பது வெகுமானம் தான், அவமானம் அல்ல… ஆணையை நிறைவேற்றுங்கள்’ யோவான் சலனமில்லாமல் பதில் சொன்னார்.

அவர்கள் அவருடைய தலையை வெட்டி, ஒரு தங்கத் தட்டில் வைத்து அதை ஏரோதியாளின் மகளிடம் கொடுத்தார்கள். அவள் அதை தன்னுடைய நடுங்கும் கரங்களினால் வாங்கி ஏரோதியாளின் காலடியில் வைத்தாள். தரையில் சில துளி இரத்தங்கள் சிதறின. ஏரோதியாளின் முகத்தில் எதையோ சாதித்த நிம்மதி படர்ந்தது.

யோவான் இறைவாக்கினர் படுகொலை செய்யப்பட்ட செய்தி ஊருக்குள் பரவ அவருடைய ஆதரவாளர்கள் பெரும் துயருற்றனர். அவர்கள் அரண்மனைக்கு வந்து அவருடைய உடலை எடுத்துச் சென்று நல்லடக்கம் செய்தார்கள்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink Closed

இயேசுவின் வரலாறு 24 : பாதத்தில் கழுவப்பட்ட பாவம்

Image result for feet of jesus womenசீமோன் என்னும் பரிசேயர் ஒருவர் இயேசுவை விருந்துக்கு அழைத்தார். அவர் இயேசுவின் மீது முழு நம்பிக்கை கொண்டிருந்தவர் அல்ல, சட்டதிட்டங்களின் மேல் சுற்றிக் கிடந்தவர் தான். இயேசுவின் புகழைக் கேள்விப்பட்டு அவரை நேரடியாக சந்தித்து அவரைப்பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்பதே அவருடைய நோக்கமாக இருந்தது. இயேசு எல்லா இடங்களிலும் பரிசேயர்களை எதிர்த்து வந்ததால் இந்த அழைப்பை ஏற்பாரா என்னும் சந்தேகமும் அவரிடம் இருந்தது. இயேசு அழைப்பை ஏற்றுக் கொண்டால் அவரை எப்படியேனும் சிக்க வைக்க வேண்டும் என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டார்.

இயேசு அவருடைய அழைப்பை ஏற்றார். விருந்துக்கு வருகிறேன் என்று வாக்களித்தார்.

பரிசேயன் மகிழ்ந்தான். அவன் தன்னுடைய நண்பர்களையெல்லாம் அழைத்து இயேசுவை எப்படியெல்லாம் கேள்விகள் கேட்டு மடக்கலாம் என்று ஆலோசனை செய்துவிட்டு விருந்துக்குத் தயாரானான். அந்த சீமோன் மாபெரும் செல்வந்தன்.

இயேசு ஒப்புக்கொண்டபடி அவருடைய இல்லத்துக்கு உணவருந்தச் சென்றார். விருந்தினர்களை உபசரிக்கும் யூத கலாச்சாரத்தை அந்த பரிசேயர் பின்பற்றவில்லை. அவர் இயேசுவை ஒரு தச்சனின் மகனாகப் பார்த்தாரேயன்றி ஒரு விருந்தினராகப் பார்க்கவில்லை.

இயேசு உணவு உண்பதற்காகப் பந்தியில் அமர்ந்தார்.

அதே ஊரில் பாவி என்று மக்களால் ஒதுக்கப் பட்ட ஒரு பெண் இருந்தாள். அவள் இயேசு இருக்கும் இடத்தை அறிந்ததும் ஒரு அழகிய படிகச் சிமிழில் நறுமணத் தைலத்தைக் கொண்டு வந்து இயேசுவின் முன்னால் வந்து மண்டியிட்டாள். அவள் வாழ்ந்து கொண்டிருந்த பாவ வாழ்க்கை அவளுடைய கண்களில் கண்ணீரை வரவழைத்தது. அவள் குனிந்து இயேசுவின் பாதத்தைத் தொட்டாள். அவளுடைய கண்களில் வழிந்த கண்ணீத் துளிகள் இயேசுவின் பாதங்களில் வழிந்தோடின. அவள் அதைத் தம்முடைய செந்நிற கூந்தலினால் அவருடைய பாதங்களைத் துடைத்து அவருடைய பாதங்களில் பணிந்து முத்தமிட்டாள்.

பின் தான் கொண்டு வந்திருந்த படிகச் சிமிழைத் திறந்து நறுமணத் தைலத்தை எடுத்து அவருடைய பாதங்களில் பூசினாள்.

இயேசுவை விருந்துக்கு அழைத்திருந்த பரிசேயனை இந்தக் காட்சி எரிச்சலடையச் செய்து விட்டது. இயேசுவின் மீது குற்றம் சுமத்த வேண்டும், குறை கண்டுபிடிக்க வேண்டும் என்று நினைத்திருந்த அவருக்கு இது ஒரு வாய்ப்பாக அமைந்து விட்டது.

‘பாருங்கள்… இவரெல்லாம் ஒரு பெரிய இறைவாக்கினராம். தம்மைத் தொடும் இவள் எத்தனை பெரிய பாவி என்பது கூட இவருக்குத் தெரியவில்லை..’ என்று சுற்றியிருந்த அவருடைய பரிசேய நண்பர்களிடமெல்லாம் கேலியாய் பேசினார்.

இயேசு அவரை அழைத்தார்.
‘ஐயா… நான் ஒன்று கேட்கிறேன். அதற்குப் பதில் சொல்லும்..’ இயேசு சொல்ல அந்தப் பரிசேயன் இயேசுவின் முகத்தைப் பார்த்தான்.

‘கடன் கொடுப்பவர் ஒருவரிடம் இரண்டு பேர் கடன் வாங்கியிருந்தார்கள். ஒருவர் ஐநூறு தெனாரியமும், மற்றவர் ஐம்பது தெனாரியமும் கடன் வாங்கியிருந்தார்கள். ஆனால் அவர்களால் அந்தப் பணத்தைத் திரும்பச் செலுத்த முடியவில்லை. அவர்கள் மேல் மனமிரங்கிய கடன் கொடுத்தவன் அவர்களுடைய கடனைத் தள்ளுபடி செய்தான். அந்த இருவருள் யார் அதிகம் மகிழ்ந்திருப்பார் ?’ இயேசு கேட்டார்.

‘அதிகக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டவர் தான் அதிகம் மகிழ்ந்திருப்பார்’ அவர் பதில் சொன்னார்.

இயேசு புன்னகைத்தார். ‘சரியாகச் சொன்னீர். பாரும். நான் உமது வீட்டுக்கு வரும்போது நீர் என் கால்களைக் கழுவ தண்ணீர் தரவில்லை. ஆனால் இந்தப் பெண்ணோ கண்ணீரினாலேயே என் பாதங்களைக் கழுவி விட்டாள். நீர் என்னை முத்தமிடவில்லை. இந்தப் பெண்ணோ என் பாதங்களில் முத்தமிட்டாள். நீர் எனது தலைக்குக் கூட எண்ணை பூசவில்லை, இவள் என் பாதத்துக்கே பரிமளத் தைலம் பூசினாள். மொத்தத்தில் என்னை விருந்துக்கு அழைத்த நீர் எனக்கு எந்த வரவேற்பையும் செய்யவில்லை. இந்தப் பெண் யாரும் அழைக்காமலேயே வந்து மரியாதை செய்கிறாள் ‘ இயேசு சொல்ல அந்த மனிதர் இயேசுவை எரிச்சல் கலந்த பார்வையுடன் பார்த்துக் கொண்டிருந்தார்.

‘நல்ல கனி தரும் கெட்ட மரமும் இல்லை. கெட்ட கனி தரும் நல்ல மரமும் இல்லை. கனிகளை வைத்தே மரங்களின் தன்மை அறியப்படும். நல்லவன் தன் உள்ளமென்னும் கருவூலத்திலிருந்து நல்லவற்றைச் செயல்படுத்துவான், தீயவனோ தீயவற்றைச் செயல்படுத்துவான். ஒவ்வொரு மரமும் அதன் கனியினால் அறியப்படும். முட்செடிகளில் அத்திப் பழங்களையோ, முட்புதர்களில் திராட்சைக் கொடிகளையோ யாரும் அறுத்துச் சேகரிக்க முடியாது’ இயேசு தொடர்ந்தார்.

‘உண்மையாகவே உமக்குச் சொல்கிறேன். இந்தப் பெண் செய்த பல பாவங்கள் இன்று மன்னிக்கப்பட்டன. ஏனெனில் இவருடைய அன்பு மிகுதியானது ! அதிகமாய் அன்பு செலுத்துவோர், அதிக மன்னிப்பையும், குறைவாக அன்பு செலுத்துவோர், குறைவான மன்னிப்பையும் பெறுவர்.’ என்றார்.

அந்த விருந்தில் பந்தியமர்ந்திருந்த பலருக்கும் இயேசுவின் பதில் திருப்தியளிக்கவில்லை. ‘பாவிகளை மன்னிக்க இவர் யார் ? அது கடவுளின் பணியல்லவா ?’ என்றார்கள்.

இயேசு அவர்களைப் பார்த்து,’ எனக்கு அந்த அதிகாரம் உண்டு என்பதை விரைவில் உணர்வீர்கள்’ என்றார். பின் அந்தப் பெண்ணிடம்
‘உனது நம்பிக்கை உன்னை மீட்டது. அமைதியுடன் செல்க’ என்றார்.

அவள் இதயம் நிறைந்த மகிழ்வுடன் அவ்விடம் விட்டு வெளியேறினாள். அவளுடைய குற்ற உணர்வும், தாழ்வு மனப்பான்மையும், தவறு செய்யும் குணமும் அக்கணமே அவளை விட்டு வெளியேறியது.

இயேசுவும் அதற்குமேல் அந்த வீட்டில் தங்கியிருக்கவில்லை.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink Closed

 இயேசுவின் வரலாறு 25 : வலுவான போதனைகள்

தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுபவரே தாயும் சகோதரியும்

Image result for who is my brother and mother Jesus
இந்த நிகழ்ச்சிக்குப் பின் இயேசுவைக் குறித்த பேச்சுகள் இன்னும் தீவிரமடைந்தன. இயேசுவை ஆதரித்தும் அவருடைய செயலை எதிர்த்தும் மக்களிடையே இருவேறுபட்ட பேச்சுகள் உலவின.

இயேசுவின் பாதத்தைத் கண்ணீரால் துடைத்தவன் விபச்சாரத் தொழில் செய்து வந்த பெண். பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த, பாவி என்று மக்களால் அழைக்கப்பட்ட பெண் இயேசுவைத் தொட்டாள் என்பதே அவருடைய இறைவாக்கினர் என்னும் அடைமொழிக்கு எதிரானது என்பது ஒரு தரப்பு மக்களின் வாதம். பாவிகளைக் கூட மன்னிக்கிறார் என்பது இன்னொரு தரப்பு மக்களின் வாதம்.

கப்பர்நாகூமில் நடந்த நிகழ்ச்சி இயேசுவின் சொந்த ஊரான நாசரேத் வரைக்கும் பரவியது. இயேசுவின் உறவினர்கள், தங்கள் உறவினர் மிகப்பெரிய பெயரும் புகழும் பெற்றுவிட்டாரே என்று மகிழ்ந்தனர். ஆனால் இயேசுவோ, தன்னுடைய குடும்பத்தைக் குறித்தோ, உறவினர்களைக் குறித்தோ எங்கும் உரையாடவே இல்லை. அதை அவர் வெளிக்காட்டவும் இல்லை. அவருடைய எண்ணமெல்லாம் இறையரசு குறித்த போதனைகளைச் சார்ந்தே இருந்தன. மக்களிடம் இருக்கும் அறியாமையை அகற்றவேண்டும் என்றும், புதிய ஒரு புரிதல் தளத்துக்குள் அவர்களை அழைத்துச் செல்ல வேண்டும் என்பதைச் சுற்றியுமே இருந்தன.

இயேசுவின் தாய் தன் மகனைக் குறித்த பேச்சுகளினால் மகிழ்ச்சியடைந்தாள். இயேசுவின் வாழ்க்கை சாதாரண வாழ்க்கையாய் இருக்காது என்பதில் அவளுக்கு உறுதியான நம்பிக்கை இருந்தது. எனவே இயேசு குறித்த பேச்சுகள் அவளைக் கலவரப்படுத்தவில்லை. இயேசுவின் உறவினர்களும், சுற்றத்தினரும், சித்தப்பா பெரியப்பா மக்கள் என பெரும் கூட்டம் இயேசுவின் புகழின் நிழலில் தங்களையும் வெளிச்சப்படுத்திக் கொள்ள விரும்பினார்கள். இயேசு புகழ் பரவ பரவ அவருக்கு உறவினர்களும் அதிகரித்தார்கள். அவர்கள் இயேசுவின் தாய் மரியாவையும் அழைத்துக் கொண்டு கப்பர்நாகும் சென்றார்கள்.

கப்பர்நாகும் இயேசுவினால் மிகவும் பிரபலமடைந்தது. இயேசுவுக்காகவே வரும் கூட்டம் அங்கே அதிகரித்தது. இயேசு அங்கே ஒரு வீட்டில் நின்று போதித்துக் கொண்டிருந்தார். அவருடைய தாயும், உறவினர்களும் அங்கே வந்து சேர்ந்தார்கள். கூட்டம் மிகுதியாய் இருந்தது. வீடு நிரம்பி வழிந்தது. முற்றத்திலும் கூட்டம் நெருக்கியடித்தது. அவர்களால் இயேசுவின் அருகில் செல்ல முடியவில்லை.

திடீரென்று சிலர் இயேசுவின் தாயை அடையாளம் கண்டு கொண்டார்கள். உடனே தகவல் கூட்டத்தில் பரவியது.

‘இயேசுவே இதோ, உம்மைக் காண உமது தாயும், சகோதரர்களும் வந்திருக்கிறார்கள்..’ கூட்டத்தினர் இயேசுவிடம் சொன்னார்கள்.

இயேசு உடனே கூட்டத்தை விலக்கிக் கொண்டு வெளியே ஓடி வந்து தாயையும், உறவினர்களையும் சந்தித்து நலம் விசாரிப்பார் என்று அவர்கள் நினைத்தார்கள். ஆனால் அது நடக்கவில்லை. அவர்கள் வியப்படையும் விதமாக இயேசு ‘ யார் என் தாய் ? யார் என் சகோதரர் ? என்னுடைய வானகத் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுபவரே என் தாயும் உறவினரும். நீங்கள் அதை நிறைவேற்றினால் நீங்கள் அனைவருமே என்னுடைய தாயும் சகோதரரும் தான்’ என்றார்.

இயேசுவின் உறவினர்களை அது எரிச்சலடையச் செய்தது. அவர்களுக்கு அது ஒரு அவமானத் தொனியாகத் தெரிந்தது. ஆனால் இயேசுவின் தாய் புரிந்து கொண்டாள். அவளுக்கு தன் மகனைப் பற்றித் தெரிந்திருந்தது. சிறுவனாக இருக்கும்போதே தந்தையின் இல்லத்தில் இருக்கவேண்டும் என்று தாயையும், தந்தையையும் விட்டு விட்டு விவாதங்களில் ஈடுபட்டிருந்தவர், இளைஞரானபின் குடும்ப உறவுகளைப் பற்றிக் கொள்ளாதிருந்ததில் அவளுக்கு வியப்பு ஏற்படவில்லை.

இயேசு போதனையைத் தொடர்ந்தார். இயேசுவின் தாயும், உறவினர்களும் நாசரேத் நோக்கி திரும்பி நடந்தார்கள்.

 நீதிமானல்ல பாவியே தேவை.

 

இயேசுவின் போதனைகள் தொடர்ந்து கொண்டே இருந்தன. தன்னுடைய போதனைகளுக்கு இயேசு தேர்ந்தெடுத்த ஆயுதம் கதைகள். கதைகள் மூலமாக வாழ்க்கையைக் குறித்த கேள்விகளையும், ஆன்மீகம், நிலைவாழ்வு குறித்த விளக்கங்களைக் கொடுப்பதையுமே அவர் தன்னுடைய போதனைகளின் பாணியாகக் கொண்டிருந்தார். அதற்காக அவர் தேர்ந்தெடுக்கும் கதைகள் எல்லாம் அன்றைய வாழ்க்கை சார்ந்த கதைகளாகவே இருந்தன. அவருடைய கதைகளில் உலவும் கதாநாயகனும், வில்லனும் எல்லோரும் கதையைக் கேட்கும் மக்களுக்குப் பரிச்சயமானவர்களாகவே இருந்தார்கள். எனவே அவருடைய கதைகள் மக்களிடம் நேரடியாகச் சென்று சேர்ந்தன.

பெரும்பாலும் மலைப்பகுதிகளிலோ, ஏரிகளின் ஓரத்திலோ, ஏரியில் படகில் அமர்ந்து கரையில் இருக்கும் மக்களை நோக்கியோ தன்னுடைய போதனையைச் செய்வதையே இயேசு வழக்கமாக்கிக் கொண்டிருந்தார். அவருடைய எளிய கதைகள் இதுவரை மக்கள் அறிந்திராத சட்டநூல்களின் கடின பாகங்களை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டின. வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டியவற்றை மிக எளிமையாக விளக்கின.

அவருடைய போதனையின் முக்கியமான நோக்கம் தெளிவு படுத்துதல். மக்களுக்குப் புரியாத சட்டங்களையும், உண்மைகளையும், தன்னை நோக்கி வீசப்படும் கேள்விகளையும், சந்தேகங்களையும் தெளிவுபடுத்துதல். எது உண்மை எதை கடைபிடிக்கவேண்டும் என்பதை சட்டென்று புரிந்து கொள்ளும் வகையில் எளிமையாய் எடுத்துரைத்தல். இது தான் இயேசுவின் போதனைகள் மீதான ஆர்வத்தை மக்களிடம் தூண்டின. இதற்கு முன் வந்த இறைவாக்கினர்கள் பலர் செய்யாத செயல் இது ! எனவே இயேசு அதிகமாகக் கவனிக்கப்பட்டார்.

அவற்றிலும் சில போதனைகள் கதைகளின் வழியாகப் பயணித்து புரியாத ஒரு செய்தியை நோக்கிய கேள்விகளை எழுப்பின. எனவே தான் பல வேளைகளில் இயேசுவின் சீடர்களே இயேசு சொன்ன கதைகளுக்கான விளக்கங்களை தனியே இயேசுவிடம் கேட்க நேர்ந்தது.

அவருடைய கதைகளில் விவசாயிகள், ஏழைகள், தோட்டம் வைப்பவர்கள், கூலி வேலை செய்பவர்கள், பயணிகள் இவைகளைச் சார்ந்தே இருந்தன. இவையெல்லாம் மக்களுக்குப் பரிச்சயமான களங்கள்.

இயேசுவை நோக்கிக் கேள்விகள் வீசப்படும் போதெல்லாம் பெரும்பாலும் கதைகளாலேயே விளக்கம் கொடுத்தார் இயேசு.

மறைநூல் வல்லுனர்களும், குருக்களும் இயேசுவைப் பார்த்து, ‘இறைவாக்கினர்கள் என்பவர்கள் மிகவும் தூய்மையானவர்கள். அவர்கள் தூய்மை முறைகள் அனைத்தையும் கடைபிடிக்கவேண்டும். அதை விடுத்து பாவிகளோடும், ஒதுக்கப்பட்டவர்களோடும் உணவருந்துவதும், உரையாடுவதும் முறையற்ற செயல்’ என்று குற்றம் சுமத்தினார்கள்.

இயேசு அவர்களைப் பார்த்து,

Image result for The Lost Sheep
‘ஒருவருக்கு நூறு ஆடுகள் இருக்கின்றன. அதை அவர் மேய்ச்சலுக்காகக் கூட்டிப் போகிறார். மேய்ச்
சலை முடித்து விட்டு மாலையில் ஆடுகளை வீட்டுக்கு ஓட்டி வரும்போது ஒரு ஆடு குறைவு படுகிறது என்றால் அவன் என்ன செய்வான் ? அந்த தொன்னூற்று ஒன்பது ஆடுகளையும் அங்கேயே விட்டு விட்டு, காணாமல் போன ஒரு ஆட்டைத் தேடிப் போக மாட்டானா ? அதைக் கண்டு பிடித்தபின். ஆஹா… வழி தவறிப்போயிருந்த ஆட்டை கூட்டி வந்து விட்டேன் என்று ஆனந்தப் படமாட்டானா ? அந்த ஆட்டைத் தூக்கித் தோளில் போட்டு விட்டு மற்ற ஆடுகள் இருக்கும் இடத்துக்கு ஆனந்தமாய் ஓடி வர மாட்டானா ?’ என்று கேட்டார்.

‘வருவான்… ‘ அவர்கள் பதில் சொன்னார்கள்.

‘அதன் பின் அண்டை வீட்டாரையெல்லாம் அழைத்து. வாருங்கள் என்னோடு மகிழுங்கள் காணாமல் போயிருந்த ஆட்டைக் கண்டுபிடித்துவிட்டேன். என்று சொல்வான் இல்லையா ?’

‘ஆமாம். அதற்கென்ன ?’

‘அதே போலத் தான், மனம் திரும்பத் தேவையில்லாத தொன்னூற்று ஒன்பது நீதிமான்களை விட, மனம் திரும்பிய ஒரு பாவியைக் குறித்து விண்ணகம் மகிழும்’
இயேசு கதையை முடித்தார்.

பாவிகளோடு தான் பழகுவதற்குக் காரணம் அவர்களுடைய பாவ வாழ்க்கையை சரிசெய்வதற்கே என்பதை இயேசு விளக்குகையில் கூட்டத்தினர் புரிந்து கொள்கிறார்கள். ஏனென்றால் ஆடு மேய்ப்பது அங்கே வழக்கமான செயல். ஒரு ஆடு காணாமல் போனாலும் மற்ற ஆடுகளை மேய்ப்பன் ஒரு இடத்தில் நிற்க வைத்துவிட்டு தொலைந்த ஆட்டைத் தேடிப் போவான் என்பது அனைவருக்கும் தெரிந்த செயல், எனவே இயேசு தன்னுடைய பணியை ஒரு மேய்ப்பனுடன் ஒப்பிடுகையில் மக்கள் கூட்டம் புரிந்து கொள்கிறது.

புரிந்து கொள்ளாத மக்களுக்காக மீண்டும் ஒரு கதையைச் சொல்கிறார் இயேசு,

‘ஒரு பெண்ணிடம் பத்து வெள்ளிக்காசுகள் இருந்தன. அதில் ஒன்று காணாமல் போய்விட்டால், போனால் போகட்டும் என்று விட்டு விட்டு இருப்பதை வைத்து திருப்தியா படுவாள் ? விளக்கைக் கொளுத்தி வீடு முழுவதிலும் நன்றாகத் தேடமாட்டாளா ? வீட்டின் அழுக்கான மூலை முடுக்குகளையும், சுத்தமில்லாத இடங்களையும் கூட விட்டு விட மாட்டாள் இல்லையா ? தேடிக் கண்டுபிடித்தபின்பு தானே அவள் நிம்மதிப் பெருமூச்சு விடுவாள் ! அவ்வாறு தான் மனம் திரும்பும் ஒரு பாவியைக் குறித்து தூதர்கள் நிம்மதியும், மகிழ்ச்சியும் அடைவார்கள்’

இயேசு இந்தக் கதையைச் சொல்கையில் ஆடுமேய்க்கும் தொழில் தெரியாத, நகர் வழியாகப் பயணிக்கும் பயணிகளும், வியாபாரிகளும், மீனவர்களும் எல்லோரும் புரிந்து கொள்கிறார்கள்.

இயேசு சொல்லவந்த கருத்தை மக்களிடம் சொல்லி முடித்தபின், ‘விசுவாசத்தைக் காத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு கடுகளவு விசுவாசம் இருந்தால் இந்த மலையைப் பார்த்து நீ போய் கடலில் விழு என்று சொன்னால் விழும். நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். ஒரு சிறு விதைக்குள் ஒரு பெரிய மரமே அடங்கி விடுகிறது. விசுவாசமும் வேர்விட்டு வளரவேண்டும், கிளைகளில் பறவைகள் வந்து தங்குமளவுக்கு பெரிதாக வளரவேண்டும்’ என்றார்.

கொசுவை வடிகட்டி ஒட்டகத்தை முழுங்குகிறீர்கள் !

மறைநூல் அறிஞர்களையும் பரிசேயர்களையும் மக்களை தவறான வழிகளில் வழிநடத்தும் தலைவர்களையும் கதைகளின் மூலம் எச்சரித்து வந்த இயேசு ஒரு கட்டத்தில் தன்னுடைய கோபத்தை நேரடியாகவே காட்டி விட்டார்.

மக்களே. மறைநூல் அறிஞர்கள் சட்ட நூல்களிலிருந்து எடுத்துச் சொல்வதை நீங்கள் கடைபிடியுங்கள் தவறில்லை. ஆனால் அவர்களுடைய செயல்களிலிருந்து எதையும் கற்றுக் கொள்ளாதீர்கள். அவர்கள் சொல்வதோடு நிறுத்திக் கொள்வார்கள். எதையும் செய்வதில்லை. அவர்கள் மக்களின் தோளில் சுமையைக் கட்டி வைப்பார்கள், ஆனால் தங்கள் சுண்டு விரலால் கூட அதை அசைக்க உதவ மாட்டார்கள். எனவே அவர்கள் சொல்வதைச் செய்யுங்கள், அவர்கள் செய்வதைச் செய்யாதீர்கள்.

மக்கள் பார்க்கவேண்டுமென்பதற்காகவே அவர்கள் எல்லாவற்றையும் செய்கிறார்கள். தங்கள் மறைநூல் வாசகப் பட்டைகளை அகலமாக்குகிறார்கள். அங்கியின் குஞ்சங்களைப் பெரிதாக்குகிறார்கள். விருந்துகளில் முதன்மையான இடத்தையும், தொழுகைக் கூடங்களில் முதல் இடத்தையும் விரும்புவார்கள். அதையெல்லாம் நீங்கள் கடைபிடிக்க வேண்டாம். அதெல்லாம் போலித்தனத்தின் வெளிப்பாடுகள். உங்களில் பெரியவனாக இருக்க விரும்புகிறவன் அனைவருக்கும் தொண்டனாக இருங்கள்.

தம்மைத் தாமே உயர்த்துகிறவன் தாழ்த்தப் படுவான். தன்னைத் தாழ்த்துகிறவனே உயர்த்தப்படுவான்.

Image result for pharisees and jesus

வெளிவேட மறைநூல் அறிஞர்களே ஐயோ.. உங்களுக்குக் கேடு. உங்கள் மதத்திலே ஒருவனைச் சேர்ப்பதற்கு நாடு, கடல் பாராது சுற்றி அலைகிறீர்கள். அவ்வாறு சேர்த்தபின் உங்களைவிட இரு மடங்கு நரகத் தண்டனைக்கு அவர்களை ஆளாக்குகிறீர்கள். நீங்கள் குருட்டு வழிகாட்டிகள். குருடன் குருடனுக்கு எப்படி வழிகாட்ட முடியும். முதலில் உங்கள் பார்வையை பரிசீலனை செய்து கொள்ளுங்கள்.

யாரவாது ஆலயத்தின் மீது ஆணையிட்டால் பரவாயில்லை. ஆனால் ஆலயப் பொன்னின் மீது ஆணையிட்டால் அதை நிறைவேற்ற வேண்டுமென்பது உங்கள் சட்டமாம். வேடிக்கையாக இருக்கிறது. மடையர்களே எது பெரியது ? பொன்னா ? இல்லை பொன்னையே தூயதாக்கும் திருக்கோவிலா ? சொல்லுங்கள்.

பலிபீடத்தின் மீது ஆணையிட்டால் பரவாயில்லை. ஆனால் அதிலிருக்கும் காணிக்கைகளின் மீது ஆணையிட்டால் அதை நிறைவேற்றியே ஆகவேண்டும் என்று ஒரு முட்டாள்தனமான சட்டத்தைப் பிடித்துத் தொங்குகிறீர்கள். எது பெரிது ? பலிபீடமா ? பொருட்களா ?

வெளிவேட மறைநூல் அறிஞர்களே, பரிசேயர்களே உங்களைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. நீங்கள் தானியங்களில் பத்தில் ஒருபங்கைப் படைக்கிறீர்கள், ஆனால் திருச்சட்டத்தின் முக்கியப் போதனைகளான நீதி, இரக்கம், நம்பிக்கை எல்லாவற்றையும் காற்றில் பறக்கவிடுகிறீர்கள்.

குருட்டு வழிகாட்டிகளே. நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று தெரியுமா ? நீங்கள் பருகும் பானத்தில் கொசுவை வடிகட்டி அகற்றுகிறீர்கள். ஆனால் ஒட்டகத்தையோ விழுங்கி விடுகிறீர்கள் !

எதைச் சுத்தமாக்க வேண்டும் என்னும் தெளிவு கூட இல்லை. கையைக் கழுவி சுத்தமாக்குகிறீர்கள். பாத்திரத்தின் உள்ளும், புறமும் பளிச் என்று இருக்க விரும்புகிறீர்கள். ஆனால் உங்கள் உள்ளமோ தன்னல விருப்பு வெறுப்புகளால் இருண்டு கிடக்கிறதே ! முதலில் உள்ளத்தைத் தூய்மையாக்குங்கள். ஏன் இப்படி வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள் போல வெளிப்பக்கம் அழகையும், உள்ளே அழுக்கையும் வைத்திருக்கிறீர்கள் ?

இறைவாக்கினர்களுக்குக் கல்லறை கட்டுகிறீர்கள், இறைவாக்கினர்களுக்கு நினைவுத் தூண்கள் நாட்டுகிறீர்கள். அந்தக் காலத்தில் நாங்கள் இருந்திருந்தால் இறைவாக்கினர்களைக் கொன்றிருக்கமாட்டோம் என்கிறீர்கள். ஆனால் அதையே தான் இப்போதும் செய்கிறீர்கள் என்பதை அறியாமல் இருக்கிறீர்கள் !

இயேசு தங்களை நோக்கி விரல் நீட்டி நேரடி எச்சரிக்கை விட்டதைக் கண்ட தலைவர்கள் அனைவரும் கொலைவெறியை இன்னும் கொஞ்சம் அதிகப்படுத்தினார்களே தவிர திருந்த வேண்டுமென்று நினைத்துக் கூடப்பார்க்கவில்லை

மூலைக்கல்

இயேசு தன்னுடைய கதைகள் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதனால் தொடர்ந்து கதைகள் வழியாகவே பேச ஆரம்பித்தார்.

ஒருவனுக்கு இரண்டு மகன்கள் இருந்தார்கள். அவர் தன்னுடைய மூத்த மகனை அழைத்து,
‘மகனே நம்முடைய திராட்சைத் தோட்டத்தில் கொஞ்சம் வேலை இருக்கிறது. நீ போய் அதைச் செய்வாயா ? ‘ என்று வினவினார். அவனோ,’ இல்லையப்பா, என்னால் இப்போது வேலைக்குச் செல்ல முடியாது’ என்று சொன்னான். ஆனாலும் கொஞ்ச நேரம் சென்றபின் தந்தை தன்னிடம் கேட்டதும் தான் அவருடைய சொல்லைத் தட்டிவிட்டோமே என்ற உறுத்தலும் அவனை தோட்டத்துக்குச் செல்ல வைத்தது.

முதல் மகன் மறுத்துவிட்டதால் தந்தை இரண்டாவது மகனிடம் சென்று அதே விண்ணப்பத்தை வைத்தார். அவனோ,’ அதற்கென்ன தந்தையே. நீங்கள் சொல்லி நான் மறுப்பதா ? இதோ உடனே போகிறேன்’ என்றான். பின் சோம்பலில் படுத்துவிட்டான். தோட்டத்துக்குச் செல்லவில்லை.

‘இந்த இரண்டு மகன்களில் தந்தையின் விருப்பப்படி செயல்பட்டவன் யார் ?’ இயேசு கேட்டார்.

‘மூத்த மகன் தான்’ மக்கள் ஒரே குரலில் பதில் சொன்னார்கள்.

‘விண்ணக வாழ்விலும் இப்படியே நடக்கும். தங்களுடைய விருப்பத்தை மாற்றிக்கொண்டு தந்தையின் விருப்பத்துக்குச் செவி கொடுக்காத யாருமே விண்ணக வாழ்வைச் சுவைக்க முடியாது. மனம் மாறி வரும் ஏழைகளும், பாவிகளும், விலைமாதரும் விண்ணகத்தை நிறைப்பார்கள். மனம் மாற மறுக்கும் குருக்களும், மறைநூல் அறிஞர்களும் விண்ணகத்துக்குள் வரமாட்டார்கள்’ இயேசு உறுதியான குரலில் சொன்னார்.

இன்னும் ஒரு கதை கேளுங்கள்….

இயேசு சொன்னார்.

Image result for parable of vineyard

நிலக்கிழார் ஒருவருக்கு ஒரு பெரிய திராட்சைத் தோட்டம் இருந்தது. அதை அவர் மிகவும் கவனத்துடன் பராமரித்து வந்தார். உரிய காலத்தில் உரங்களைப் போட்டும், காவல் அமைத்தும், வேலிகள் கட்டியும் தன்னுடைய தோட்டத்துக்கு எந்த அழிவும் வராமல் பாதுகாத்து வந்தார். அவர் நெடும்பயணம் செல்லவேண்டியிருந்ததால் அந்த நிலத்தைக் குத்தகைக்காரரிடம் குத்தகைக்கு விட்டார்.

குத்தகைக் காலம் வந்தது. தமக்குச் சேரவேண்டிய குத்தகையைப் பெற்றுவரும்படி அவர் ஒரு பணியாளனை அனுப்பினார். குத்தகைக்கு நிலத்தை எடுத்திருந்தவர்களோ அந்தப் பணியாளனை அடித்து, உதைத்து, ‘குத்தகையெல்லாம் தரமுடியாது போ’ என்று துரத்தி விட்டார்கள்.

தலைவர் மீண்டும் ஒரு சிலரை அனுப்பினார். பயனில்லை.

மூன்றாவதாக நிறைய பணியாளர்களை அனுப்பிப் பார்த்தார். குத்தகைக்காரர்கள் மசியவில்லை. அனைவரையும் கல்லால் எறிந்து துரத்தினார்கள். கல்லடி பட்ட பலர் இறந்தே போனார்கள்.

கடைசியாக உரிமையாளன் தன் மகனை அனுப்புவேன். அவர்கள் எனக்குத் தரும் மரியாதையை என் மகனுக்கும் தருவார்கள் என்று தன்னுடைய மகனை அனுப்பினார். அவர்களோ,’ வாருங்கள். இவன் தான் சொத்துக்கு உரியவன். இவனைக் கொன்றுவிட்டால் போதும். அதன்பின் நிலம் நமக்கே நமக்குத் தான். யாரும் சொந்தம் கொண்டாட வரமாட்டார்கள் என்று சொல்லிக் கொண்டே மகனைப் பிடித்து தோட்டத்துக்கு வெளியே தள்ளிக் கொன்றனர்’

‘திராட்சைத் தோட்ட உரிமையாளன் வரும்போது என்ன செய்வான் ?’ இயேசு கேட்டார்.

‘அத் தீயோரை ஈவு இரக்கமின்றி ஒழித்து விடுவார். பின் ஒழுங்காகக் குத்தகைக் கூலியைத் தரும் ஒருவருக்கு நிலத்தைத் தருவார்’ மக்கள் சொன்னார்கள்.

‘சரியாகச் சொன்னீர்கள்…. மறைநூலில் வாசித்திருப்பீர்களே, கட்டுவோர் விலக்கிய கல்லே கட்டிடத்துக்கு மூலைக் கல்லாய் அமைந்தது ! கடவுளால் இது நிகழ்ந்துள்ளது. நம் கண்களுக்கு வியப்பே ! என்று. உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன். குத்தகைக் காரர்களாகிய நீங்கள் இறைவாக்கினர்களை நிராகரித்தீர்கள், தீர்க்கத் தரிசிகளைத் தீர்த்துக் கட்டினீர்கள் இப்போது கடவுளின் மகனையும் மறுதலிக்கிறீர்கள். இந்தக் கல்லின் மீது விழுபவர்கள் நொறுங்கிப் போவீர்கள். கடவுளின் மகனை ஏற்றுக் கொள்ளாதவர்களிடமிருந்து இறையாட்சி பிடுங்கப்பட்டு நம்பும் இன்னொரு இன மக்களுக்குக் கொடுக்கப்படும்…’ இயேசு உரத்த குரலில் மறைநூல் அறிஞர்களையும், குருக்களையும் பார்த்துச் சொன்னார்.

இயேசு தங்களைக் குறிவைத்துத் தான் அந்தக் கதைகளைச் சொன்னார் என்பதை அறிந்த அவர்கள் இயேசுவை அதிகநாள் உயிருடன் வைத்திருக்கக் கூடாது என்று தங்களுக்குள்ளே பேசிக்கொண்டார்கள். மக்கள் கூட்டம் அவருக்கு ஆதரவாக இருந்ததால் இயேசுவை வீழ்த்தும் ஒரு வலுவான காரணத்தைத் தேடத் துவங்கினார்கள்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink Closed

 இயேசு வரலாறு 26 : விதைப்பவன் உவமை

Image result for parable of sowerஇயேசு தம்முடைய போதனைகள் மக்களைச் சென்றடைவதற்காகவும், மக்களுக்கு அவை மறந்துவிடாமல் இருப்பதற்காகவும் உவமைகள் வழியாகப் போதிப்பது வழக்கம். அவற்றில் சிறப்பிடம் பெற்ற ஒன்று விதைப்பவன் உவமை.

விதைப்பவன் ஒருவன் விதைப்பதற்குரிய விதைகளைக் கூடையில் எடுத்துக் கொண்டு வயலை நோக்கிச் சென்று கொண்டிருந்தான்.

சில விதைகள் அவனுடைய கூடையிலிருந்து நழுவி வழியோரத்தில் விழுந்தன. அந்த விதைகள் முளைப்பதற்கு முன்பாகவே வானத்துப் பறவைகள் வந்து அவற்றைத் தின்று விட்டன.

இன்னும் சில விதைகள் பாறைநிலத்தில் விழுந்தன. மண்பிடிப்பு இல்லாத பாறைநிலத்தில் விதைகள் விரைவிலேயே முளைத்துவிட்டன. ஆனால் நிலத்தில் வேர் பிடிக்கவில்லை. சூரியன் வந்தபோது அதன் வெப்பத்தைத் தாங்க முடியாத அந்த முளைகள் எல்லாம் வெயிலில் காய்ந்து போய்விட்டன.

சில விதைகள் முட்செடிகளிடையே விழுந்தன. அவை முட்செடிகளிடையே விழுந்ததால் பறவைகளால் அவற்றை நெருங்க முடியவில்லை. அவை நிலத்தில் வேர்விட்டு முளைத்தன. நிலத்தில் வேரூன்றி விட்டதால் அவற்றைக் கதிரவனாலும் கருக வைக்க முடியவில்லை. ஆனால் வளர, வளர தன்னைச் சுற்றி நின்ற முட்செடிகளாலேயே அவை நெரிக்கப்பட்டு பலன் தராமல் போயின.

சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன. நல்ல நிலத்தில் விழுந்த விதைகள் மண்ணில் புதைபட்டதால் பறவைகளின் அலகுகளுக்குத் தப்பின, வளர்வதற்குத் தேவையான நீர் இருந்ததால் அவற்றைச் சூரியனின் கதிர்கள் சுட்டெரிக்கவில்லை. நிலம் விவசாயத்துக்குத் தயாராக இருந்ததால் முட்செடிகள் எங்கும் இல்லை. எனவே அந்த விதைகள் நன்றாக முளைத்து வளர்ந்தன. அவற்றில் சில முப்பது மடங்காகவும், சில அறுபது மடங்காகவும், சில நூறு மடங்காகவும் பலனளித்தன.

கேட்கச் செவியுள்ளவன் கேட்கட்டும் !

இயேசு உவமையைச் சொல்லி நிறுத்தினார். மக்கள் புரியாத முகங்களோடு பொறுமையாய் இருந்தார்கள். இயேசு அவர்களுக்குத் தன்னுடைய உவமைக்குள் மறைந்திருந்த பொருளை விளக்கத் துவங்கினார்.

வழியோரத்தில் விழுந்த விதைகளைப் போன்றவர்கள் இறையரசைக் குறித்த வார்த்தைகளைக் கேட்பார்கள் ஆனால் புரிந்து கொள்ளமாட்டார்கள். அவர்கள் காதுகளில் விழுந்த வார்த்தைகளை தீயவன் வந்து கவர்ந்து சென்று விடுவான். அது அவனுடைய உள்ளத்துக்குள் செல்லாது.

பாறை நிலத்தில் விழுந்தவர்கள் இறைவார்த்தையை மிகவும் மகிழ்வுடன் கேட்டு உள்ளுக்குள் முளை விடுவார்கள். ஆனால் சிறிது நாட்களிலேயே ஏதேனும் சோதனைகளோ, எதிர்ப்புகளோ வரும்போது எதிர்த்து நிற்கும் வலு இல்லாததனால் வார்த்தைகளை இறக்க விடுவார்கள்.

முட்செடிகளின் நடுவே விழுந்த விதையைப் போன்றவர்கள், இறைவார்த்தையைக் கேட்டு அதன் படி நடக்க வேண்டும் என்று முடிவெடுத்து நல்ல முறையில் நடக்கத் துவங்குவார்கள். ஆனால் உலகக் கவலைகள், பணம் சேர்க்கும் ஆசை, சிற்றின்ப மோகம் இவற்றால் நெரிக்கப்பட்டு பலனளிக்காமல் போவார்கள்.

நல்ல நிலத்தில் விழுந்தவிதையைப் போன்றோர், இறை வார்த்தையைக் கேட்கும் முன்பாகவே தங்கள் மனதை அதற்கேற்பத் தயாரித்துக் கொள்வார்கள். பின் இறைவார்த்தையைக் கேட்டதும் அதை உள்வாங்கிக் கொள்வார்கள். அது உள்ளேயே முளைத்து, வளரும் போது அதற்குரிய நல்ல எண்ணங்களையும், நம்பிக்கைகளையும் வளர்த்துக் கொள்வார்கள். அவர்களை உலகக்கவலைகளோ, சிற்றின்ப மோகங்களோ, எதிர்ப்பாளர்களின் போலிக் கூச்சல்களோ பின் வாங்க வைக்காது. அவர்கள் நிலைத்திருந்து செயல்களில் இறைவார்த்தையை வெளிப்படுத்துவார்கள். சிலர் முப்பது மடங்கு, சிலர் அறுபது மடங்கு, சிலர் நூறு மடங்கு என பயன் தருவார்கள்.

இதுவே அந்த உவமையின் விளக்கம். இயேசு சொல்ல, மக்கள் அனைவரும் தெளிவடைந்தார்கள்.

‘இதை நேரடியாகச் சொல்லலாமே… ஏன் உவமைகள் ?’ சீடர்கள் கேட்டனர்.

‘விண்ணரசின் மறைபொருளை நீங்கள் அறிகிறீர்கள். ஆனால் பொது மக்கள் அறிவதில்லை. அவர்களுக்காகவே இவ்வாறு சொல்கிறேன்…’ இயேசு சொன்னார்.

‘இன்னோர் உவமையும் சொல்கிறேன் கேளுங்கள்… ‘ இயேசு ஆரம்பித்தார்.

ஒருவன் வயலில் நல்ல விதைகளை விதைத்தான். ஆனால் அவன் தூங்கும் போது பகைவன் வந்து அவனுடைய வயலில் களைகளையும் விதைத்து விட்டுப் போனான். முளைத்து வருகையில் களையும் பயிரும் வித்தியாசம் காட்டவில்லை. வளர வளர களைகள் தங்கள் சுய முகத்தைக் காட்டத் துவங்கின. பயிர்களோடு பயிர்களாக களைகள் வளர்ந்து பயிர்களின் சத்தையும் உறிஞ்சிக் கொண்டிருப்பதை வேலையாள் கண்டு தலைவனிடம் வந்தான்

‘ஐயா… நீர் உமது வயலில் நல்ல விதைகளையல்லவா விதைத்தீர். களைகள் வந்திருக்கின்றனவே. நான் போய் களைகளை வெட்டி விடவா ?’

‘வேண்டாம். நீ களைகளைப் பிடுங்குகையில் பயிரையும் கூட அழித்துவிடக் கூடும். அறுவடைக்காலம் வரை இரண்டுமே வளரட்டும். அறுவடை செய்யும்போது பயிர்களைத் தனியாகவும், களைகளைத் தனியாகவும் கட்டு. பயிர்களை என்னுடைய களஞ்சியத்துக்கு அனுப்பி வை. களைகளையோ அழியா நெருப்பில் சுட்டெரி’ தலைவன் ஆணையிட்டான்.

உவமை சொல்லி முடித்த இயேசு மக்களைப் பார்த்தார்.

‘உங்களிடையே நல்ல பயிர்களும், களைகளும் உண்டு. களைகளாக வாழ்வோருக்கு இறுதி நாளில் அழிவு நிச்சயம். பயிர்களாக வாழுங்கள்’ இன்னொரு உவமையும் சொல்கிறேன் கேளுங்கள்,

ஒருவர் தம்முடைய திராட்சைத் தோட்டத்தில் அத்திமரம் ஒன்றை நட்டு வைத்திருந்தார். அவர் வந்து அதிலே கனிகள் இருக்கிறதா என்று ஆவலுடன் பார்த்தார். ஊஹூம்… பலனில்லை. அவர் பணியாளரை அழைத்தார்.

‘பாரும்… நானும் மூன்று ஆண்டுகளாக இந்த மரத்தில் கனி தேடுகிறேன். ஒரு பலனும் இல்லை. இந்த திராட்சைத் தோட்டத்திற்கு இந்த அத்திமரம் தேவையில்லாததாகிவிட்டது. எனவே இதை வெட்டி விடு’ என்றார்.

பணியாளனோ,’ ஐயா… இருக்கட்டும். இந்த ஆண்டும் இதைக் கொத்தி நல்ல எரு போடுகிறேன். ஒரு கடைசி முயற்சி. கனி கொடுத்தால் தொடர்ந்து பராமரிப்போம். இல்லையேல் வெட்டி விடலாம்’ என்றான்.

கனிகொடாத அத்திமரமாய் இருக்காதீர்கள். அழிவிலிருந்து தப்ப வேண்டுமெனில் கனிகொடுங்கள்.

மக்களுக்குப் புரியும் விதத்தில் விதைகள், விளை நிலம், என்று உவமைகள் சொல்லி செய்திகளை விளங்க வைத்த இயேசுவின் திறமையை மக்கள் வெகுவாகப் புகழ்ந்தார்கள்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink Closed

இயேசு சொன்ன உவமைகள் 27 : விதைப்பவன் உவமை

இயேசு சொன்ன உவமைகள் 27 : விதைப்பவன் உவமை

Image result for parable of sower

மார்க் 4 : 1 முதல் 20 வரை

அவர் மீண்டும் கடலோரத்தில் கற்பிக்கத் தொடங்கினார். மாபெரும் மக்கள் கூட்டம் அவரிடம் ஒன்றுகூடி வர, அவர் கடலில் நின்ற ஒரு படகில் ஏறி அமர்ந்தார். திரண்டிருந்த மக்கள் அனைவரும் கடற்கரையில் இருந்தனர். அவர் உவமைகள் வாயிலாகப் பலவற்றை அவர்களுக்குக் கற்பித்தார். அவர் அவர்களுக்குக் கற்பித்தது;

“இதோ, கேளுங்கள், விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார். அவர் விதைக்கும் பொழுது சில விதைகள் வழியோரம் விழுந்தன. பறவைகள் வந்து அவற்றை விழுங்கிவிட்டன. வேறு சில விதைகள் மிகுதியாக மண் இல்லாப் பாறைப் பகுதிகளில் விழுந்தன. அங்கே மண் ஆழமாக இல்லாததால் அவை விரைவில் முளைத்தன. ஆனால் கதிரவன் மேலே எழ, அவை காய்ந்து, வேர் இல்லாமையால் கருகிப் போயின. மற்றும் சில விதைகள் முட்செடிகளிடையே விழுந்தன. முட்செடிகள் வளர்ந்து அவற்றை நெருக்கிவிடவே, அவை விளைச்சலைக் கொடுக்கவில்லை. ஆனால் இன்னும் சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன. அவை முளைத்து வளர்ந்து, சில முப்பது மடங்காகவும் சில அறுபது மடங்காகவும் சில நூறு மடங்காகவும் விளைச்சலைக் கொடுத்தன. கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்.”

மேலும் அவர் அவர்களை நோக்கி, “இந்த உவமை உங்களுக்குப் புரியவில்லையா? பின்பு எப்படி மற்ற உவமைகளையெல்லாம் நீங்கள் புரிந்துகொள்வீர்கள்? விதைப்பவர் இறைவார்த்தையை விதைக்கிறார். வழியோரம் விழுந்த விதைகளுக்கு ஒப்பானவர்கள் வார்த்தையைக் கேட்பார்கள். ஆனால் அதைக் கேட்டவுடன் சாத்தான் வந்து அவர்களுள் விதைக்கப்பட்ட வார்த்தையை எடுத்துவிடுகிறான்.

பாறைப் பகுதியில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானவர்கள் இறைவார்த்தையைக் கேட்டவுடன் அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் அவர்கள் வேரற்றவர்கள்; சிறிது காலமே நிலைத்திருப்பவர்கள். இறைவார்த்தையின் பொருட்டு இன்னலோ இடுக்கண்ணோ நேர்ந்த உடனே அவர்கள் தடுமாற்றம் அடைவார்கள்.

முட்செடிகளுக்கு இடையில் விதைக்கபட்ட விதைகளுக்கு ஒப்பானவர்கள் இறைவார்த்தையைக் கேட்டும் உலகக் கவலையும் செல்வ மாயையும் ஏனைய தீய ஆசைகளும் உட்புகுந்து அவ்வார்த்தையை நெருக்கி விடுவதால் பயன் அளிக்கமாட்டார்கள்.

நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானவர்கள் இறைவார்த்தையைக் கேட்டு அதை ஏற்றுக் கொண்டு பயன் அளிப்பார்கள். இவர்களுள் சிலர் முப்பது மடங்காகவும் சிலர் அறுபது மடங்காகவும் சிலர் நூறு மடங்காகவும் பயன் அளிப்பர்” என்றார்.

* * *

இயேசு மக்களிடம் இறையரசைப் பற்றியும், இறைவனின் அன்பைப் பற்றியும், விண்ணக வாழ்வுக்கான வாழ்க்கை பற்றியும் தொடர்ந்து மக்களிடம் போதித்து வந்தார். மக்கள் அவருடைய போதனைகளின் பால் ஈர்க்கப்பட்டனர். மக்களுக்கு அவர் தொடர்ந்து வாழ்வியல் சிந்தனைகளை வழங்கிக் கொண்டே இருந்தார்.

இயேசு மனித நேயத்தின் மொத்த உருவமாய் இருந்தார். நோயாளிகளை சுகப்படுத்துவதும், ஒடுக்கப்பட்டவர்களை அரவணைப்பதும், நிராகரிக்கப்பட்டவர்களை நேசிப்பதும், பாவிகளை அரவணைப்பதும் அவரது பணிகளாய் இருந்தன‌. நாட்கள் செல்லச் செல்ல இயேசுவின் போதனைகளை விட அதிகமாய் நோய் தீர்க்கும் வல்லமைகளுக்காக அவரை மக்கள் அவரை நாட ஆரம்பித்தனர். அதன்பின் இயேசு உவமைகளால் மக்களிடம் பேசத் தொடங்கினார்.

உவமைகள் உண்மையை மறைத்து கதைகளைப் பேசுபவை. தேடல் உள்ளவர்கள் மட்டுமே உவமையின் பொருளை கண்டு கொள்ள முடியும். தூய ஆவியானவரே மறை பொருளை உணர்த்துவார்.

இந்த உவமை “நான்கு நிலங்களைப்” பேசுகிறது. வழியோரம், முட்புதர், பாறை நிலம், நல்ல நிலம் என்பவையே அந்த நிலங்கள். இன்னொரு விதமாகப் பார்த்தால் இது ஆறு வகை நிலங்களைப் பேசுகிறது. நல்ல நிலத்தை நல்ல நிலம் 1, 2, 3 என மூன்றாகப் பார்க்கலாம்.

இந்த உவமை இயேசு சொன்ன உவமைகளில் முக்கியமானது. மூன்று நற்செய்தி நூல்களிலும் ( மத்தேயு, மார்க், லூக்கா ) இடம்பெற்ற சில உவமைகளில் இதுவும் ஒன்று. இயேசுவே நேரடியாகப் பொருள் கூறிய வெகு சில உவமைகளில் இதுவும் ஒன்று.

இந்த உவமை சில சிந்தனைகளை நமக்குள் உருவாக்குகிறது.

Image result for parable of sower1. இறைவனின் வார்த்தைகளே விதைகள் என்பதை இயேசுவே தெளிவு படுத்துகிறார். அந்த விதைகளை விதைக்கும் மனிதர்கள் நற்செய்தியை அறிவிப்பவர்கள் என்பதையும் விவிலியம் சொல்கிறது. விதைக்கின்ற பணியை செய்பவனே விதைப்பவன். அவனுடைய நிறம், உயரம், படிப்பு, வேலை, ஆடை, வசதி எதுவுமே இங்கே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. எனவே இறை வார்த்தையை அறிவிக்க நமக்கு ஆர்வம் மட்டும் இருந்தால் போதும் என்பதே கற்றுக் கொள்ள வேண்டிய பாடம். இறைவார்த்தையை விதைக்க வெளிப்படையான அலங்காரங்களோ, சம்பிரதாயங்களோ எதுவும் தேவையில்லை.

Image result for parable of sower2. விதைகள் இறை வார்த்தைகள். எந்தப் பையில் சுமக்கிறோம் என்பதை வைத்து விதைகளின் தன்மை மாறுவதில்லை. பைகள் அழகாய் இருக்கிறதா, பெரிதாய் இருக்கிறதா என்பதெல்லாம் முக்கியமற்ற சங்கதிகள். அவை விதைகளை பத்திரமாய் சுமந்து செல்ல வேண்டும் என்பது மட்டுமே தேவையானது. இறைவார்த்தைகளைச் சொல்ல பேச்சு, எழுத்து, வாழ்க்கை, கலைகள், வாட்ஸப் டுவிட்டர் ஃபேஸ்புக் என‌ எதை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். இந்தப் பை இருப்பவர்கள் மட்டுமே விதைக்கும் பணியைச் செய்ய முடியும் என்பது தவறான சிந்தனை.

Image result for parable of sower3. விதைக்கின்ற விதைகள் எல்லாமே பயன் தருவதில்லை. பயன் தருகின்ற விதைகளும் ஒரே மாதிரி பயனளிப்பதில்லை . விவசாயம் வரவில்லையே என உடைந்து போகத் தேவையில்லை. விதைத்தவை பாழாயினவே என பதறத் தேவையில்லை. இறைவனின் வார்த்தைகள் அதற்குரிய பணியை அதுவாகவே செய்து விடும். எவ்வளவு கனி கிடைக்கும் என எண்ணிப் பார்த்து விதையை நாம் ஊன்றத் தேவையில்லை. இறைவனின் சித்தப்படி கனி கொடுக்கட்டும் என சிந்திப்பதே போதுமானது.

Image result for parable of sower4. நிலங்களின் இயல்புகள் நிலையானவை அல்ல. நன்றாக உழுது நீர்ப்பாய்ச்சினால் வழியோரமும் வயலாக முடியும். முட்களையும் கற்களையும் அகற்றி ஆழ உழுதால் முட்புதர்கள் வயல்வெளிகளாக முடியும். ஆழ உழுது செப்பனிட்டால் பாறைநிலமும் விளைநிலமாக முடியும். அதே போல, கவனிக்கப்படாமல் கைவிடப்பட்டால் நல்ல வயல் கூட பயனற்ற நிலமாய் மாறக் கூடும். எனவே நிலங்களை நிராகரிக்காமல், அவற்றை செப்பனிடும் வழிகளை மேற்கொள்வதே சிறப்பானது. மனித மனங்களை இதயங்கள் என கொண்டால், அந்த இதயங்களைத் தயாராக்குவதை உழுதல் எனக் கொள்ளலாம்.

Image result for parable of sower5. எல்லா நிலங்களும் அருகருகே தான் இருக்கின்றன. “விதைக்கும் போது” தான் விதைகள் இத்தகைய வேறுபட்ட நிலங்களில் விழுகின்றன. அருகருகே இருந்தாலும் முழுக்க முழுக்க வித்தியாசமான மனநிலையில் தான் மக்கள் இருப்பார்கள் என்பதை இது சுட்டிக் காட்டுகிறது. கூடவே இருந்தாலும் நல்ல நிலம் அருகே உள்ள வழியோரத்தை வயலாக்க முடியாது. அது தன்னகத்தே மாற்றத்தை கொண்டால் மட்டுமே தன்மையை மாற்றிக் கொள்ள முடியும். எனவே நல்ல நிலத்தின் அருகிலேயே இருக்கிறேன் விளைச்சல் நிச்சயம் எனும் சிந்தனைகள் தவறானவை.

Image result for parable of sower6. விதைகள் இறைவார்த்தைகள். விதைகளை உடைத்தாலோ, விதைகளைச் சிதைத்தாலோ அவை பயன் தரப் போவதில்லை. நெல்லை விதைக்கப் போகும் விதைப்பவன் விதை கடினமாய் இருக்கிறது என உமியை விலக்கி விட்டு விதைத்தால் அந்த விதையினால் எந்த பயனும் இல்லை. விதைப்பவன் விதைகளை அப்படியே விதைக்க வேண்டும். அப்போது தான் விதைகளுக்குள் இருக்கின்ற உயிர் வெளிவரும். விதைப்பது மட்டுமே விதைப்பவனுடைய பணி. அதை முளைக்க வைப்பது இறைவனின் பணி.

Image result for parable of sower7. விதைத்தவன் பின்னர் தூங்கிப் போவதில்லை. அந்த நிலத்தை தொடர்ந்து கண்காணிப்பான். சரியான கால இடைவெளியில் நீர் ஊற்றுவான். தேவையான உரங்களை இடுவான். இவையெல்லாம் விதைப்பவன் செய்கின்ற பணிகள். இறைவார்த்தை முளைத்து வரும்போது அதை அன்புடன் பராமரிப்பதும், கனிகொடுக்கும் வரையில் கூட இருப்பதும். அந்த கனிகளே விதைகளாய் மாறுவதை உறுதிசெய்வதுமெல்லாம் உண்மையான ஒரு விவசாயியின் பணிகள். அதை இறைவன் வெளிப்படையாகச் சொல்லவில்லையெனினும் நிச்சயம் எதிர்பார்க்கிறார்.

Image result for parable of sower8. வழியோர நிலம் காலம் காலமாய் பல்வேறு மனிதர்கள் நடந்து இறுகிப் போன நிலம். யார் நடந்தாலும் ஏற்றுக் கொள்ளும் நிலம் என வைத்துக் கொள்ளலாம். கடின இதயத்தோடு இருக்கின்ற மனிதர்கள் இவர்கள். இங்கே இறைவார்த்தைகள் விழும்போது அவை எந்த சலனத்தையும் ஏற்படுத்துவதில்லை. அடுத்த மனிதர்கள் நடக்கும்போது உடைபடலாம். அல்லது சாத்தான் எனும் பறவையின் அலகுக்கு இரையாகலாம். இவை இறைவார்த்தையை சற்றும் ஏற்றுக் கொள்ளாத மனிதர்களைப் போன்றது.

Image result for parable of sower9. பாறை நில விதை சட்டென முளைக்கிறது. வேர்கள் கீழிறங்க கீழிறங்க அது பாறையில் மோதுகிறது. அதற்கு மேல் கீழே செல்ல முடியாமல் அது அங்கேயே தங்கிவிடுகிறது. ஆனால் தொடக்கத்தில் அது சட்டென வளர்கிறது. மகிழ்ச்சியோடு வார்த்தையை ஏற்றுக் கொள்பவர்களெல்லாம் நீண்டகாலம் நிலை நிற்பார்கள் என்று சொல்வதற்கில்லை. முதலில் செழித்து வளர்வதால் அவர்கள் ஆன்மீக ஆழம் கொண்டவர்கள் என நினைப்பதும் தவறு. மெதுவாக முளைப்பவர்கள் ஆன்மீக சிந்தனையற்றவர்கள் என அளவிடுவதும் தவறு. மனம் பக்குவமாய் இருக்கிறதா என்பதைப் பொறுத்தே இவை அமையும். விதை மட்டுமே விளைச்சல் தருவதில்லை, நிலத்தின் ஏற்றுக் கொள்ளும் தன்மை இங்கே மிக முக்கியம்.

Image result for parable of sower10. நகர்ந்து கொண்டே இருக்கும் விதையால் வேர்விட முடிவதில்லை. சிலருக்கு உலகக் கவலைகள், சிலருக்கு தனிப்பட்ட கவலைகள், சிலருக்கு உலக இலட்சியம், சிலருக்கும் தேவையற்ற பயங்கள். இப்படி ஏதோ ஒரு விஷயம் அவர்களை அலைக்கழித்துக் கொண்டே இருக்கிறது. முட்கள், கற்கள் இவைகளோடு சேர்ந்து இறைவார்த்தையும் வளர்கிறது. ஒரு சிக்கல் வரும்போது இறைவார்த்தையைப் பற்றிக் கொள்ளாமல் சுய சிந்தனைகளை இவர்கள் பற்றிக் கொள்வார்கள். இறைவார்த்தையை சுய முட்களும், கற்களும் சிதைத்து விடுகின்றன. விதைகள் வளரவேண்டுமெனில் மற்ற சிந்தனைகளை அகற்ற வேண்டியதும், முழுமையான நம்பிக்கையை விதையின் மேல் வைக்க வேண்டியதும் அவசியம்.

Image result for parable of sower11. நல்ல நிலமும் ஒரே மாதிரி பயனைத் தருவதில்லை. 30, 60 மற்றும் 100 மடங்கு என்பது விவசாயத்தில் பிரமிப்பு விளைச்சல். சராசரியாக 8 மடங்கு விளைச்சல் என்பதே அதிகபட்ச விளைச்சல் என்பார்கள். 30 மடங்கு, 100 மடங்கு என்பதெல்லாம் அசாதாரண வளர்ச்சி. இறைவார்த்தைக்கு நிலம் எவ்வளவு ஒத்துழைக்கிறது என்பதே விளைச்சலை நிர்ணயிக்கிறது. நிலம் மிகவும் பக்குவப்பட்ட நிலமாய், அதிக பயன்கொடுக்க ஆர்வமாய் இருந்தால் விளைச்சல் மிக அதிகமாய் இருக்கும். விளைச்சல் எவ்வளவு என்பதையல்ல, விளைச்சல் கொடுக்கிறது என்பதையே இறைவன் பார்க்கிறார். எனவே தான் மூன்று நிலங்களையுமே “நல்ல நிலம்” என்கிறார் இயேசு.

Image result for parable of sower12. “கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்” என இறைமகன் முத்தாய்ப்பாய் உவமையை முடிக்கிறார். காதுகளில் இறைவார்த்தை விழுவதால் மட்டுமே ஒருவர் “வார்த்தையைக் கேட்டவர்” ஆகி விட முடியாது. அந்தக் காதுகளுக்குள்ளே நுழைந்து, மனதில் விழுந்து, இரண்டறக் கலந்தால் மட்டுமே பயன் தரமுடியும். கேட்பதற்கான ஆர்வம் உடையவர்களால் மட்டுமே வார்த்தை எனும் உணவை உண்டு, செரிக்க வைத்து, உடலுக்கு ஆற்றலாய் மாற்றிக் கொள்ள முடியும்.

இந்த சிந்தனைகளை மனதில் கொள்வோம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink Closed

இயேசு வரலாறு 27-2 : ஊதாரி மைந்தன்

Image result for Prodigal son

இயேசு விளக்கங்கள் எத்தனை கொடுத்தாலும், அவர் பாவிகளோடு பழகுகிறார் என்ற குற்றச்சாட்டுகள் மட்டும் நிற்கவேயில்லை. ஏனென்றால் பாவிகள் என்று அழைக்கப்படுபவர்களோடு பழகுவது என்பது கடவுளுக்கு விரோதமான செயல் என்பது அவர்களுடைய பரம்பரை இரத்தத்தில் பாய்ந்து கொண்டிருந்தது. அதையும் ஒரு இறைவாக்கினர், தன்னை மானிட மகன் என்று சொல்லிக் கொள்ளும் ஒருவர் பேசுகிறார் என்றால் அது பாவம் என்பதை பரிசேயர், மற்றும் மறைநூல் அறிஞர்களால் தங்கள் மனதிலிருந்து விலக்க முடியவில்லை. இயேசு அவர்களுடைய கேள்விகளை ஒரு அழகிய கதை மூலம் சந்தித்தார்.

ஒருவனுக்கு இரண்டு மகன்கள் இருந்தார்கள். அவர்களுக்கு ஏராளமான செல்வங்கள் இருந்தன. கால்நடைகள், வயல்கள், பணியாள்கள் என அவர்கள் நல்ல ஏகபோக வாழ்க்கை வாழ்ந்து வந்தார்கள்.

மூத்தமகன் அமைதியானவன். அவன் தன் தந்தையுடன் வயலுக்குச் சென்று உழைப்பதிலும், வீட்டைப் பராமரிப்பதிலும் அனைத்திலும் பொறுப்புடன் செயல்பட்டு வந்தான்.

இளையவனோ கொஞ்சம் விளையாட்டுப் புத்திக்காரன். அவனுக்கு நண்பர்களுடன் சுற்றித் திரிவதிலும், பணத்தைச் செலவு செய்து நண்பர்களுடன் உல்லாசமாய் இருப்பதிலும் தான் அதிக நாட்டம். வயலில் வேலை செய்வதோ, வீட்டுக்கு உபயோகமாய் இருப்பதோ அவனுக்குக் கசந்தது.
அடிக்கடி தந்தையிடம் பணத்தை வாங்கிக் கொண்டு ஊதாரித்தனமாகச் செலவு செய்து இன்பமாய் இருந்தான்.

‘அப்பா… நீங்கள் தந்த பணம் எல்லாம் தீர்ந்து விட்டது. எனக்குப் பணம் வேண்டும்’ இளைய மகன் கேட்டான்.

‘இப்படி ஊதாரித்தனமாக பணத்தையெல்லாம் செலவு செய்கிறாயே. இதைச் சம்பாதிக்க நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா ?’ தந்தை அறிவுரை சொன்னார்.

‘அதெல்லாம் எனக்குத் தெரியவேண்டிய அவசியம் இல்லை. இப்போது பணத்தைக் கொடுங்கள்’ மகன் எரிச்சலுடன் சொன்னான்.

‘உன்னுடைய அண்ணனைப் பார். அவன் வீட்டிலேயே இருந்து எவ்வளவு வேலைகள் செய்கிறான். அவன் எப்போதும் எனக்கு உதவியாகவும் இருக்கிறான். தேவையில்லாமல் பணத்தைச் செலவு செய்வதும் இல்லை. அவனைப் பார்த்துக் கற்றுக் கொள்’

‘அவன் வாழ்க்கையை அனுபவிக்கத் தெரியாதவன். அவனைப் பார்த்து நான் என்ன கற்றுக் கொள்ள் வேண்டியிருக்கிறது ?’

‘அப்படியெல்லாம் சொல்லாதே. அந்த வாழ்வு தான் நீடிக்கும். உன்னுடைய வாழ்வு நிலைக்காது. மனம் திருந்தி நீயும் ஒரு நல்ல மகனாக வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்’ தந்தை சொன்னார்.

‘அப்பப்பா… என்னால் இந்தப் பேச்சுகளை தினம் தினம் கேட்க முடியவில்லை. நான் ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன்’ மகன் சொன்னான்.

‘என்ன முடிவு ?’

‘நம்முடைய சொத்தில் எனக்குச் சேரவேண்டிய பாகத்தை எனக்குக் கொடுத்துவிடுங்கள். அதை விற்று நான் என்னுடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறேன்’ இளைய மகன் சொன்னான்.

‘சொத்தை விற்பதா ? அதெல்லாம் நடக்கிற காரியம் இல்லை’ தந்தை அதிர்ச்சியுடன் மறுத்தார்.

‘இல்லை. இதுதான் என்னுடைய முடிவு. நீங்களாக சொத்தை விற்றுத் தராவிடில் நான் ஊர் மக்களிடம் சென்று நியாயம் கேட்பேன். என்னை நீங்கள் கொடுமைப்படுத்துகிறீர்கள் என்று சொல்வேன். எனக்கு சொத்தில் எனக்குரிய பாகம் இப்போதே வேண்டும்’ இளைய மகன் உறுதியானான்.

தந்தை எவ்வளவோ அறிவுரைகள் சொல்லிப் பார்த்தார். அதையெல்லாம் கேட்கும் மனநிலையில் அவன் இல்லை. கடைசியில் தந்தை ஒப்புக் கொண்டார். தன்னுடைய சொத்துக்களின் ஒருபாகத்தை உடைந்த மனதுடன் தன்னுடைய இளைய மகனுக்குக் கொடுத்தார்.

அவன் மிகவும் ஆனந்தமடைந்தான். அதையெல்லாவற்றையும் விற்று பெரும் பணம் திரட்டினான். ஏராளமான செல்வத்தோடு தன் நண்பர்களைக் காணச் சென்றான்.

பணத்தோடு வந்த நண்பனைக் கண்டவர்கள் மகிழ்ந்தார்கள்.

‘வா… வா… இதைத் தான் நாங்கள் நீண்ட நாட்களாகச் சொல்லிக் கொண்டிருக்கிறோம். இப்போது தான் உனக்குப் புத்தி வந்திருக்கிறது. இப்போதாவது சொத்தையெல்லாம் பெற்றுக் கொண்டாயே. இல்லாவிட்டால் உன்னுடைய வாழ்க்கையே சீரழிந்திருக்கும்’

‘ஆம் உண்மை தான். வாழ வேண்டிய வயதில் வாழாமல், அனுபவிக்கும் வயதையெல்லாம் கடந்தபின் பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது ? வாருங்கள் நாம் வெளியூர் சென்று உல்லாசமாய் இருக்கலாம்’

‘இரு… நம்முடைய நண்பர்கள் இன்னும் சிலர் உண்டு. அவர்களையும் அழைக்கலாம். அனைவருமாய் சென்று உல்லாச வாழ்க்கை வாழலாம்’

‘அழையுங்கள். அழையுங்கள். என்னிடம் இருக்கும் பணம் தீராது. இன்பமாய் வாழ்வோம்’ அவன் உற்சாகமானான்.

தேனை மொய்க்கும் எறும்புகள் போல இளையமகனை தீய நண்பர்கள் ஆக்கிரமித்துக் கொண்டார்கள். வெளியூர் சென்று விடுதிகளிலும், சூதாட்ட இடங்களிலும் சென்று ஆனந்த வாழ்க்கை ஆரம்பித்தார்கள். பணம் கொஞ்சம் கொஞ்சமாய்க் கரையத் துவங்கியது. அவன் அதை அறியவில்லை.

மதுவின் நெடியும், மாதுவின் பிடியும் என அவனுடைய வாழ்க்கையைப் பணம் புரட்டிக் கொண்டிருந்தது.

ஒரு நாள் தன்னுடைய பணப்பையைத் திறந்து பார்த்த இளையமகன் திடுக்கிட்டான்.
‘என்ன ? அதற்குள் பணத்தின் பெரும்பகுதி தீர்ந்து விட்டதா ? என்ன செய்வது ? ‘ அவனுடைய மனதுக்குள் ஒரு சின்ன புயல் அடித்தது. அவன் நண்பர்களை அழைத்தான்.

‘நண்பர்களே, பணம் மிகவும் விரைவாய் தீர்ந்து கொண்டிருக்கிறது. இப்படியே போனால் என்ன செய்வது ?’

‘எனக்கென்ன தெரியும் ? நீ விருப்பப்பட்டு அழைக்கிறாயே என்று தான் வந்தேன். உன்னுடன் உல்லாசமாய் இருந்தேன்…. ‘ ஒருவன் சொன்னான்.

‘நீ தானே செலவு செய்தாய் ? நான் உன் பணத்தை எடுக்கவேயில்லையே’ இன்னொருவன் சொன்னான்.

‘சரி.. நான் போய் எங்கிருந்தாவது கொஞ்சம் பணம் சேகரித்து வருகிறேன்’
நண்பர்கள் அவனிடம் இருந்த கொஞ்ச நஞ்ச பணத்தையும் அவனுக்குத் தெரியாமல் எடுத்துக் கொண்டு இரவோடு இரவாக தலைமறைவானார்கள்.

மறுநாள் விடிந்தபோது, நண்பர்கள் யாரும் அவனுடன் இல்லை.

அவன் காத்திருந்தான். யாரும் வரவில்லை. பணப்பெட்டியைத் திறந்தான். இருந்த பணத்தின் பெரும்பகுதியை நண்பர்கள் சுருட்டிக் கொண்டு சென்றிருப்பதை அறிந்து இன்னும் அதிகமாய் கவலைப்பட்டான்.

சில நாட்கள் கடந்தன. அவனிடமிருந்த பணம் முழுவதும் தீர்ந்து போக, விடுதியிலிருந்தும் துரத்தப் பட்டான் !

செல்வத்தின் மீது நிமிர்ந்து படுத்திருந்த அவன் இப்போது கோணிக்குள் உடல் சுருக்கி தெருவோரத்தில் கிடந்தான். பசி அவனுடைய வயிற்றைக் கிள்ளியது. உண்பதற்கு ஏதாவது வேண்டுமே ! என்ன செய்வதென்று தெரியவில்லை அவனுக்கு. வாழ்வின் மீதான பயம் முதன் முதலாய் அவனை வந்து சந்தித்தது.

‘ஐயா.. எனக்கு ஏதாவது ஒரு வேலை தாருங்களேன்…’ அவன் வீடு வீடாகச் சென்று வேலை தேடினான்.

‘உனக்கு என்ன வேலை தெரியும் ?’

‘வயல் வேலை தெரியுமா ?’

‘வியாபார நுணுக்கம் தெரியுமா ?’

‘ஏதேனும் கலைப் பொருட்கள் செய்யத் தெரியுமா ?’

எல்லா கேள்விகளுக்கும் இல்லை என்ற பதிலைத் தான் அவனால் சொல்ல முடிந்தது.
‘எதுவும் தெரியாதவனுக்கு வேலை எதுவும் இங்கே இல்லை’. கதவுகள் அடைக்கப்பட்டன.

கடைசியில் ஒருவர் இரக்கப் பட்டு ஒரு பணி கொடுத்தார். அது பன்றிகளை மேய்க்கும் பணி. பன்றி என்பது விலக்கப்பட்ட ஒரு மிருகம். அதோடு பழகுவதோ, அதைப் பராமரிப்பதோ, அதன் இறைச்சியை உண்பதோ அவமானத்தின் உச்சம் அங்கே. அந்த வேலை தான் அவனுக்கு வழங்கப்படுகிறது.

வேறு வழியில்லை. பன்றிகளை மேய்க்க ஒப்புக்கொண்டு வேலையைத் துவங்கினான். அதுவும் அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை. பன்றிகளோடு பன்றியாக அலைந்து உடலெல்லாம் அழுக்கடைந்து புழுதிகளில் படுத்துறங்கி அவன் மிகவும் வருந்தினான்.

அவனுடைய போதாத காலம், அந்த நாட்டில் பஞ்சம் பரவத் துவங்கியது. மக்கள் உண்பதற்கு ஏதும் கிடைக்காமல் வருந்தினார்கள். பன்றிகளின் உரிமையாளனுக்கே உண்ண உணவில்லையேல் பன்றி மேய்ப்பவனுக்கு எங்கே கிடைக்கப் போகிறது உணவு ? அவன் பட்டினிக்குள் தள்ளப்பட்டான்.

கடைசியில் பன்றிகளுக்கு வைக்கும் தவிட்டை உண்ணத் துவங்கினான். அதுவும் அங்கே அனுமதிக்கப்படாத ஒன்றாய் இருந்தது. சக பணியாளர்கள் அதையும் தலைவனிடம் சொல்ல, தலைவன் அவனை வேலையை விட்டே துரத்தினான்.

அப்போது தான் அவனுக்குப் புத்தி தெளிந்தது. எத்தனை சுகமாய் வாழ்ந்தேன். தேவைக்கேற்ற பணம் எப்போதும் கைகளில் புரளும். கைதட்டிக் கூப்பிட்டால், கைகட்டி நிற்க ஏராளம் பணியாட்கள். அந்தப் பணியாட்களுக்கே தனியே வீடுகள், தேவைக்கேற்ற உணவு, நல்ல வாழ்க்கை. தான் இப்போது வாழும் வாழ்க்கையை விட ஆயிரம் மடங்கு உயர்ந்தது தன் வீட்டுப் பணியாட்களின் வாழ்க்கை என்பது அவனுக்கு உறைத்தது.

எத்தனை பெரிய தவறு செய்தேன். தந்தையின் அறிவுரைகளை அலட்சியம் செய்தது எத்தனை பெரிய பிழை. இனி தந்தையிடம் சென்றால் தந்தை மன்னிப்பாரா ? இல்லை தந்தை மன்னிக்கவே மாட்டார். ஆனால் ஒன்று செய்யலாம், அங்கே ஒரு வேலை கேட்கலாம். பணியாட்களில் ஒருவனாகவேனும் தன்னுடைய இல்லத்தில் இருப்பது மிகவும் உயர்ந்த வாழ்க்கையே. மகன் முடிவெடுத்தான்.

தயக்கங்களை எல்லாம் தள்ளி வைத்துவிட்டு தந்தையின் இல்லம் நோக்கி நடந்தான். நடந்தான் நடந்தான் நடந்து கொண்டே இருந்தான். தந்தையோ மகன் என்றேனும் மனம் திருந்தி வருவான் என்று இன்னும் நம்பிக்கையுடன் வாசலை நோக்கியே கண்களை வைத்துக் காத்திருந்தார். நீண்ட நாட்கள் நடந்து சோர்ந்து போன மகன் கடைசியில் வீடு வந்து சேர்ந்தான்.

அழுக்கடைந்த ஆடைகளுடன் ஒரு உருவம் தள்ளாடித் தள்ளாடி வருவதைக் கண்ட தந்தை அவனை அடையாளம் கண்டுகொண்டார் ! தன் மகன் ! நிழலை வைத்துக் கூட அடையாளம் கண்டுகொள்ளுமளவுக்கு அவர் மகனை நேசித்திருந்தார். மகன் அருகில் வரும்வரை காத்திருக்கும் பொறுமை அவரிடம் இல்லை. ஓடினார். மகனை நோக்கி முடிந்தமட்டும் விரைவாய் ஓடினார்.

‘மகனே…..’ தன்னை நோக்கி நெருங்கி வந்த தந்தையைக் கண்டு மகன் திடுக்கிட்டான். அவனுடைய கண்களில் கண்ணீர் கரைபுரண்டு ஓடியது.

‘அப்பா…. மன்னியுங்கள்…’

தந்தை அவனை நெருங்கி அரவணைத்தார்.

மகன் பின்னோக்கி நகர்ந்தான்.
‘அப்பா… விண்ணகத் தந்தைக்கு எதிராகவும், உமக்கு எதிராகவும் நான் பாவம் செய்து விட்டேன். இனிமேல் எனக்கு உமது மகனாய் இருக்கும் தகுதி இல்லை. என்னை உம்முடைய வேலைக்காரரில் ஒருவராக எண்ணி உணவளிப்பீரா ?’

மகனின் பேச்சைக் கேட்ட தந்தையின் உள்ளம் உடைந்தது.
‘மகனே… என்ன வார்த்தை சொல்லிவிட்டாய் ? நீ என்றும் என் மகன் தான்…’ தந்தை அவனை அப்படியே அணைத்துக் கொண்டார்.

தந்தை பணியாளரை அழைத்தார்.
‘முதல் தரமான ஆடைகளைக் கொண்டு வந்து இவனுக்கு உடுத்துங்கள். விரல்களுக்கு மோதிரமும், காலுக்கு மிதியடியும் உடனே அணிவியுங்கள். போங்கள்… போய் ஒரு கொழுத்த கன்றை அடித்து விருந்து வையுங்கள்… இதோ.. என்னுடைய இறந்து போயிருந்த மகன் திரும்ப வந்திருக்கிறான் ! ‘ தந்தை உற்சாகமானார்.

வீடு உற்சாகமானது.

மகன் குளித்து புத்தாடையும், மோதிரங்களும் அணிந்து புத்துணர்ச்சியடைந்தான். அவனுடைய மனம் தெளிவடைந்திருந்தது. உண்மையான அன்பை அவனுடைய கண்கள் கண்டுகொண்டன. வீட்டில் விருந்து தடபுடலாய் ஆரம்பமானது. இசைநிகழ்ச்சிகளும், நடனங்களும் துவங்கின.

அப்போது தான் மூத்த மகன் வயலிலிருந்து வீடு நோக்கி வந்து கொண்டிருந்தான். வீட்டிலிருந்து இசை கேட்கிறது ! நடனம் நடப்பதற்கான அறிகுறிகளும் தெரிகின்றன. அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. வீட்டை நெருங்கினான். வெளியே பணியாளர்கள் எல்லோரும் பம்பரமாய் சுழன்று வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவன் ஒரு பணியாளனை அழைத்தான்.

‘என்ன நடக்கிறது இங்கே ? இசை கேட்கிறது ! நடனச் சத்தம் கேட்கிறது. எல்லோரும் பரபரப்பாய் இருக்கிறீர்கள் ! என்ன விஷயம் ?’ அவன் கேட்டான்.

‘ஐயா… உமது தம்பி திரும்பி வந்திருக்கிறான் !’

‘தம்பி…. தம்பி திரும்பி வந்திருக்கிறானா ? ‘

‘ஆம் ஐயா… எல்லா செல்வங்களும் இழந்தவனாக, மிகவும் கஷ்டப்பட்டுவிட்டு இப்போது தான் வந்திருக்கிறான்.’

‘ஓ… செல்வங்களையெல்லாம் இழந்து விட்டு வந்திருக்கிறானா ?’

‘ஆம்.. ஐயா.. ஆனாலும் அவன் வந்ததில் தந்தை மிகவும் மகிழ்ச்சியடைந்திருக்கிறார். நல்ல ஆடை அளித்து, ஆபரணங்களும் அணிவித்து, கொழுத்த கன்றை அடித்து விருந்தும் வைக்கிறார்’ பணியாளன் சொல்லிவிட்டு நகர்ந்தான்.

மூத்த மகனின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தன. ஒரு உதவாக்கரைக்கு இத்தனை பெரிய விழாவா ? நான் இத்தனை காலம் அவரோடு இருந்திருக்கிறேன் எனக்கு எதுவும் செய்யாமல், ஒரு ஊதாரி மகனுக்காக விருந்து வைக்கிறாரா ? வைக்கட்டும் வைக்கட்டும்… அவனுடைய மனதில் கோபம் கொழுந்து விட்டு எரிந்தது.

‘ஐயா… உமது மூத்த மகன் வீட்டுக்கு வெளியே கோபமாய் நிற்கிறார்’ பணியாளன் ஒருவன் தந்தையின் காதைக் கடித்தான்.

தந்தை வெளியே ஓடினார்.

‘மகனே உள்ளே வா… சந்தோசமான செய்தி. உன் தம்பி திரும்பி வந்திருக்கிறான்’ தந்தை ஆனந்தமாய்ச் சொன்னார்.

‘உம் சொத்தையெல்லாம் அழித்து விட்டு வந்த மகனுக்காக விருந்தா ?’

‘அப்படிச் சொல்லாதே மகனே. அவன் உன் தம்பி. அவன் திருந்தி வந்திருக்கிறான். அவனை நாம் வரவேற்க வேண்டும்’

‘சரி.. ரொம்ப நல்லது. நீங்கள் விருந்து கொண்டாடுங்கள். நான் உள்ளே வரவில்லை.’

‘ஏன் ? ஏன் இத்தனை கோபம் ?’

‘இருக்காதா ? நான் இத்தனை காலம் உம்மோடு இருக்கிறேனே. நான் விருந்துண்டு மகிழ எனக்கு ஒரு ஆட்டுக்குட்டியையாவது நீர் தந்ததுண்டா ? இதோ ஒரு உதவாக் கரை மகனுக்காக இத்தனை பெரிய ஆர்ப்பாட்டம், கொழுத்த கன்றை அடித்து விருந்து !!! நடத்துங்கள்…’ மகன் கோபத்தைக் குறைக்கவில்லை.

தந்தை மகனைப் பார்த்துப் புன்னகைத்தார்.

‘மகனே… நீ எப்போதும் என்னுடன் இருக்கிறாய். என்னுடையது எல்லாமே உன்னுடையது தான். நாம் இப்போது மகிழ்வது தான் முறை. ஏனென்றால், உன் தம்பி இறந்து போயிருந்தான் உயிர்த்துவிட்டான். காணாமல் போயிருந்தான் கிடைத்துவிட்டான்’ என்றார்.

இயேசு கதை சொல்லி முடித்தார். கதையின் வழியாக இயேசு கூடியிருந்த மக்களுக்கு விண்ணகத் தந்தை மிகவும் அன்பானவர், அவர் பாவிகள் மனம் திரும்புவதற்காக வழிமேல் விழிவைத்துக் காத்திருக்கும் ஒரு பாசமிகு தந்தை என்னும் புதிய பரிமாணத்தைக் கடவுளுக்கு வழங்குகிறார். பாவம் செய்தால் தண்டிக்கும் கடவுளையும், மதகுருமார்களையும் மட்டுமே அறிந்திருந்த மக்களுக்கு பாவம் செய்தாலும், திருந்தி விட்டால் மன்னிக்கும் கடவுள் மிகவும் நேசத்துக்குரியவராகிவிட்டார். மக்கள் இயேசுவின் பால் அதிகமாய் ஈர்க்கப்பட்டார்கள்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink Closed

இயேசு வரலாறு 28 : இறுதி நாளில் என்ன நடக்கும் ?

இறுதி நாளில் என்ன நடக்கும் ?

Image result for second coming

‘உலக இறுதி நாளில் என்ன நடக்கும் ?’ மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த கேள்விக்கு மானிட மகன் இயேசு விளக்கமளித்தார்.

இறுதிநாளில் வானதூதர்கள் படைசூழ மானிட மகன் மாட்சியுடன் வருவார். அவர் தம்முடைய அரியணையில் கடவுளாக வீற்றிருப்பார். மக்கள் அனைவரும் அவருடைய முன்னிலையில் ஒன்று கூட்டப்படுவார்கள்.

ஒரு ஆயன் தன்னுடைய மந்தையில் உள்ள செம்மரி ஆடுகளையும், வெள்ளாடுகளையும் இரண்டாகப் பிரிப்பதைப் போல மானிடமகனும் தன்முன்னால் நிற்கும் மக்களினத்தையும் இரண்டாகப் பிரிப்பார். வலது புறத்தில் விண்ணக வாழ்வுக்குத் தகுதியானவர்களும், இடதுபுறத்தில் கடவுளின் அரசுக்குத் தகுதியில்லாத மக்களும் பிரித்து நிறுத்தப்படுவார்கள்.

வலப்பக்கம் இருப்பவர்களைப் பார்த்து அரியணையில் இருக்கும் மானிடமகன் சொல்லுவார்
‘வாருங்கள் என் தந்தையின் ஆசி பெற்றவர்களே வாருங்கள். உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்திருந்த தந்தையின் விண்ணக வாழ்வுக்குள் வாருங்கள். ஏனென்றால் நான் பசியாய் இருந்தேன். நீங்கள் எனக்கு உணவளித்தீர்கள். நான் தாகமாய் இருந்தேன் நீங்கள் என் தாகத்தைத் தணித்தீர்கள், அன்னியனாய் இருந்த என்னை நீங்கள் ஏற்றுக் கொண்டீர்கள். ஆடையின்றி இருந்த எனக்கு நீங்கள் உடை தந்தீர்கள். நோயுற்றிருந்தேன். என்னை நீங்கள் சந்தித்து ஆறுதல் சொன்னீர்கள். நான் சிறையில் இருந்தபோது நீங்கள் என்னைத் தேடி வந்தீர்கள்.’ என்பார்.

அப்போது நீதிமான்கள்.
‘ஆண்டவரே… நாங்கள் எப்போது உம்மைக் கண்டோம் ? எப்போது நீர் பசியாய் இருக்கக் கண்டு உணவு தந்தோம் ? எப்போது நீர் தாகமாய் இருக்கக் கண்டு தண்ணீர் தந்தோம் ? எப்போது நீர் அன்னியனாய் இருக்கக் கண்டு உம்மை ஏற்றுக் கொண்டோம் ? எப்போது நீர் நோயுற்று இருந்தீர் ? எப்போது நீர் சிறையில் இருந்தீர் ? ‘ என்று கேட்பார்கள்.

அதற்கு மானிடமகன்.,’ மிகச் சிறியவராகிய உங்கள் சகோதரர் சகோதரிகளுக்கு நீங்கள் இவற்றைச் செய்தபோதெல்லாம் எனக்கே இவற்றைச் செய்தீர்கள். நீங்கள் என்னை மனிதனில் கண்டீர்கள். மனிதனுக்கு உதவுவதின் வாயிலாக எனக்கு உதவினீர்கள். அதுவே மிகச் சிறந்த பணி. வாருங்கள் விண்ணக வாழ்வு உங்களுக்குரியதே’ என்பார்.

பின்பு இடப்பக்கம் நிற்பவர்களிடம்
‘சபிக்கப்பட்டவர்களே… நீங்கள் என்னை விட்டு அகன்று போங்கள். நீங்கள் அலகைக்கும் அதன் தூதர்களுக்கும் சொந்தமான எரியும் நெருப்புக்குச் சொந்தமானவர்கள். நீங்கள் என் பசியைத் தீர்க்கவில்லை, தாகத்தைத் தணிக்கவில்லை, என்னை ஏற்றுக் கொள்ளவுமில்லை ஆறுதல் சொல்லவும் இல்லை’ என்பார்

அதற்கு அவர்கள்.’ஆண்டவரே… எப்போது நீர் பசியாய் இருக்கக் கண்டு உமக்கு உணவளிக்காமல் இருந்தோம் ? எப்போது நீர் தாகமாய் இருக்கக்கண்டு உமக்கு தண்ணீர் தராமலிருந்தோம் ? எப்போது நீர் அன்னியராய் இருந்து உம்மைப் புறக்கணித்தோம் ? நீர் நோயுற்றோ சிறையிலோ இருந்தபோது உம்மைச் சந்திக்காமல் இருந்தது எப்போது ? இது வீண் பழி’ என்பார்கள்.

அதற்கு அவர்,’ உங்களோடு வாழ்ந்த ஏழை எளிய மக்களுக்கு நீங்கள் இவற்றைச் செய்யாமல் ஒதுக்கியபோதெல்லாம் என்னையே புறக்கணித்தீர்கள்’ என்பார்.

எனவே வலப்பக்கத்தில் உள்ளவர்கள் எல்லோரும் இறையாட்சிக்குள் ஆனந்தமாய் நுழைய , மனிதநேயமில்லாத வாழ்க்கையை மண்ணுலகில் வாழ்ந்த மக்கள் எல்லோரும் நரக வாழ்க்கைக்குள் தள்ளப்படுவார்கள்.

உலக முடிவில் என்ன நடக்கும் என்பதை வெளிப்படுத்தியதன் வாயிலாக வாழ்வின் மையம் மனிதநேயம் என்பதை மக்களுக்குத் தெளிவுபடுத்தினார்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink Closed

இயேசு வரலாறு 29 : அதிசயங்களின் நாயகன்

விரும்பினால் சுகமாவேன்

healing

இன்னொருமுறை இயேசு செபக்கூடங்களில் உரையாற்றியும் பொதுவிடங்களில் போதித்தும் நடந்தபோது துணியால் உடம்பை முழுவதும் போர்த்திய ஒரு மனிதன் அவருடைய காலடியில் மண்டியிட்டான். பின் தன்னுடைய போர்வையை விலக்கினான்.

அவன் ஒரு தொழுநோயாளி.

தொழுநோயாளியைக் கண்டதும் கூட்டம் சட்டென்றி விலகியது. இயேசு கூட்டத்தினரைப் பார்த்தார். அருகில் மண்டியிட்டிருந்த தொழுநோயாளியையும் பார்த்தார்.

‘ஆண்டவரே… நீர் விரும்பினால் என்னைக் குணமாக்க உம்மால் கூடும்’ ஒரே ஒரு வரியில் விண்ணப்பத்தை முடித்துக் கொண்டு தலை கவிழ்ந்தான்.

இயேசு கரம் நீட்டி அவனைத் தொட்டார் !

கூட்டம் வெலவெலத்தது. தூய்மையான மனிதர், தீட்டான ஒருவனைத் தொடுகிறாரே என்று கூட்டம் முணுமுணுத்தது.

இயேசு கூட்டத்தினரின் மன ஓட்டத்தைப் புரிந்து கொண்டு புன்னகைத்தார். பின் அந்த நோயாளியை நோக்கி

‘நான் விரும்புகிறேன். குணமாகு ‘ என்றார்.

அந்த வார்த்தைகள் மருந்தாக மாறின. அவனுடைய உடல் முழுவதும் இருந்த தொழுநோய் சட்டென்று மாறியது. அவனுடைய உடல் முழுவதும் மிகவும் அழகான குழந்தையின் சருமம் போல மென்மையாகவும், அழகாகவும் மாறியது.

விலகி நின்ற கூட்டம் வியப்புடன் நெருங்கி வந்தது.

‘நீ போய் குருக்களிடம் உன்னைக் காட்டு. பின் செலுத்த வேண்டிய காணிக்கைகளைச் செலுத்து’ என்றார். அவன் புறப்பட்டபோது இயேசு அவனை அழைத்தார். அவன் திரும்பினான்.

‘இங்கே நடந்ததை யாருக்கும் சொல்லாதே !’ இயேசு சொன்னார்.

அவன் விடைபெற்றான். காண்போரிடமெல்லாம் தான் குணமானதையும், இயேசு குணம் தந்தார் என்பதையும் பறைசாற்றத் துவங்கினான்.

இயேசு சொன்னால் தொழுநோயும் தீர்ந்துவிடும் என்பதைக் கூட்டத்தினர் மனதுக்குள் குறித்துக் கொண்டார்கள்.


பேய்களும், பன்றிக் கூட்டமும்,

possessed_pigs_don__t_fly_by_prisoneronearth-d37io3z

இயேசு தம்முடைய சீடர்களையும் அழைத்துக் கொண்டு கெரசேனர் பகுதிக்குப் படகில் சென்றார். அந்தப் பயணத்தின் வழியில் தான் இரையும் கடலை அமைதியாக்கியிருந்தார் இயேசு. சீடர்கள் அந்தத் திகைப்பிலிருந்து இன்னும் விடுபட்டிருக்கவில்லை.

படகிலிருந்து இயேசுவும் சீடர்களும் இறங்கிய உடனேயே பேய்பிடித்த ஒருவன் கல்லறைகளுக்கு இடையேயிருந்து அவரை நோக்கி ஓடி வந்தான். கல்லறைகளே அவனுடைய இருப்பிடம். அவனை ஊர்மக்கள் அடிக்கடி சங்கிலிகளால் பிணைத்து மரங்களில் கட்டி வைப்பார்கள். ஆனால் அவன் அவற்றையெல்லாம் மிகவும் எளிதாக உடைத்தெறிந்துவிடுவான். சங்கிலிகள் எத்தனை கனமானதாக இருந்தாலும் அவனை அடக்க முடிவதில்லை. கூரான கற்களைக் கொண்டு தன்னுடைய உடலையே அவன் கீறிக் காயப்படுத்துவான். அதனால் அவனுடைய உடம்பு முழுவதும் காயங்களின் வடுக்களும், மாறாத புண்களும், வழியும் இரத்தமும் நிரந்தரமாகிவிட்டன.

எத்தனையோ குருக்கள், மந்திரவாதிகள், மருத்துவர்கள் முயன்றும் அவனுடைய வியாதியைத் தீர்க்க முடியவில்லை. யாராலும் அவனுக்குள் இருக்கும் ஆவியைத் துரத்த முடியவில்லை.

தன்னை நோக்கி ஓடிவரும் மனிதனை இயேசு கண்டார். அவனை உற்று நோக்கினார். மூச்சிரைக்க, உதடுகளின் ஓரம் உமிழ்நீர் வழிய இயேசுவுக்கு முன்னால் வந்து நின்றவன் கத்தினான்.

‘இயேசுவே… உமக்கு இங்கே என்ன வேலை. திரும்பிப் போய்விடும். என்னைத் தொந்தரவு செய்ய வேண்டாம்’

இயேசு அவனையே பார்த்துக் கொண்டிருந்தார்.

‘இயேசுவே உமக்கும் எமக்கும் இடையே ஏன் தகராறு ? என்னுடைய வழியில் நான் போய்க்கொண்டிருக்கிறேன். என்னைத் தடுக்க வேண்டாம்’ என்று மீண்டும் கத்தினான்

‘உன் பெயர் என்ன ?’ இயேசு கேட்டார்.

‘இலேகியோன்’ பேய் பிடித்திருந்தவன் பதில் சொன்னான்.

இலேகியோன் என்பது ரோம அரசனின் கீழ் சுமார் அறுபதினாயிரம் வீரர்களை உள்ளடக்கிய மாபெரும் படை.

‘இலேகியோனா ?’ இயேசு அவனை உற்றுப் பார்த்துக் கேட்டார்.

‘ஆம்… நாங்கள் பலர்.’ அவன் பல்லைக் கடித்துக் கொண்டே பதில் சொன்னான்.

‘நான் ஏற்கனவே உன்னை எச்சரித்திருக்கிறேனே. இன்னும் ஏன் மக்களைத் தொந்தரவு செய்கிறாய் ?’ இயேசு குரலைக் கடுமையாக்கினார்.

‘இயேசுவே… நீர் கடவுளின் மகன் என்பதை நான் அறிவேன். என்னைத் துரத்த வேண்டாம்.’ அவன் உறுமினான்.

‘உன்னை விரட்டுவதைத் தவிர வேறு வழியில்லை’ இயேசு சொன்னார்.

‘அப்படியானால் அதோ அந்த பன்றிகளின் கூட்டத்தில் எம்மை அனுப்பிவிடும். எம்மை அழிக்க வேண்டாம்.’ தீய ஆவி இரைச்சலாய்ப் பேசியது.

இயேசு திரும்பிப் பார்த்தார். அங்கே ஏரிக்கரை ஓரமாக சிலர் ஏராளமான பன்றிகளை மேய்த்துக் கொண்டிருந்தார்கள். இயேசு பேய் பிடித்தவனைப் பார்த்தார்.

‘போ….’ ஆணையிட்டார்.

பேய்கள் அவனை விட்டு அகலத் துவங்கின. அவன் அலறத் துவங்கினான். அவனை விட்டு வெளியேறிய பேய்கள் எல்லாம் பன்றிக் கூட்டத்தில் பாய்ந்தன. பன்றிகள் எல்லாம் ஆவிகளின் திடீர்த் தாக்குதலால் சரிவில் உருண்டு ஏரியில் விழுந்து மாண்டு போயின. பன்றி மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் இந்த எதிர்பாராத நிலையைக் கண்டு அதிர்ந்துபோய் பின் வாங்கினார்கள்.

இயேசுவின் சீடர்கள் வியந்தார்கள். மக்கள் பயந்தார்கள். பேய்பிடித்திருந்தவன் துவண்டுபோய்க் கிடந்தான். இயேசு அவனைத் தூக்கி நிறுத்தினார். இதற்குள் மக்கள் நாலா திசைகளிலும் ஓடிப் போய் தாங்கள் கண்ட செய்தியைப் பரப்பினார்கள்.

தாங்கள் கேள்விப்படுவது உண்மையா என்று அறிய மக்கள் ஓடி வந்தார்கள். அங்கே பேய் பிடித்திருந்தவன் இயேசுவின் காலடியில் அமர்ந்திருப்பதைக் கண்டு திகைத்தார்கள். நடந்த அனைத்தையும் கண்டு ஆச்சரியப் படுவதற்கு மாறாக, அச்சமடைந்தனர்.

‘இயேசுவே… நீர் உண்மையிலேயே பெரியவர். ஆனாலும் எங்களுக்குப் பயமாக இருக்கிறது. தயவு செய்து எங்களை விட்டுப் போய்விடும்.’ அவர்கள் இயேசுவிடம் வேண்டினார்கள்.

இயேசு பார்த்தார். போதனை செய்வதற்குரிய சூழல் அங்கே இல்லை என்பதைக் கண்டு கொண்டு, சீடர்களையும் அழைத்துக் கொண்டு படகில் ஏறினார்.

நலம்பெற்ற அந்த மனிதன் இயேசுவிடம்,’ ஐயா.. என்னையும் இனிமேல் உம்முடன் சேர்த்துக் கொள்ளும்’ என்று வேண்டினான்.

இயேசு அவரிடம்,’ இல்லை. நீர் போய் கடவுள் உனக்குச் சொன்னதையெல்லாம் மக்களுக்கு அறிவி. அது போதும்.’ என்றார்.

தீய ஆவி பிடித்திருந்த அந்த மனிதன், இயேசுவின் அற்புதத்தை ஊரெங்கும் அறிவிக்கத் துவங்கினான்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink Closed

எப்பத்தா

jesus.heal_

இயேசு தம்முடைய சீடர்களுடன் தெக்கப்போலி நாட்டிற்கு வந்து கலிலேயக் கடலை அடைந்தார். காது கேட்காத, திக்கித் திக்கிப் பேசும் ஒரு நபரை சிலர் அழைத்து வந்து அவருக்கு முன்பாக நிறுத்தினார்கள்.

‘இயேசுவே இந்த மனிதருடைய நோயைக் குணமாக்கி இவனுக்கு உதவுங்கள்’ அவர்கள் வேண்டினார்கள்.

இயேசு அவனை கூட்டத்திலிருந்து தனியே அழைத்துச் சென்றார். ஒரு கையின் விரலால் அவனுடைய காதுகளைத் தொட்டு இன்னொரு கை விரலில் தன்னுடைய உமிழ்நீரைத் தொட்டு அதை அந்த மனிதனுடைய நாவில் வைத்தார். பின் வானத்தை அண்ணாந்து பார்த்து பெருமூச்சு விட்டு

‘எப்பத்தா’ என்றார்.

எப்பத்தா என்றால் திறக்கப் படு என்பது பொருள்.

எப்பத்தா ! என்றதும் அவனுடைய காதுகள் திறந்தன. பேரிரைச்சலைக் கேட்ட அவன் சட்டென்று தன்னுடைய காதுகளைப் பொத்திக் கொண்டான். அவனுடைய காதுகள் சத்தம் கேட்டுப் பழகியிருக்கவில்லையே. பின் கைகளை எடுத்தான். மக்கள் பேசுவது அவனுக்குத் தெளிவாகக் கேட்டது. அவன் ஆனந்தமடைந்தான்.

‘இயேசுவே என்னால் தெளிவாகக் கேட்க முடிகிறது’ அவன் ஆனந்தத்தில் கத்தினான்.

‘உன்னால் பேசவும் முடிகிறது’ இயேசு புன்னகைத்தார்.

‘ஆம் ஆண்டவரே.. திக்கித் திணறாமல் என்னால் பேசவும் முடிகிறதே !’ அவன் ஆனந்தக் கூத்தாடினான்.

‘இதை யாரிடமும் சொல்லாதே… ‘ இயேசு அவனுக்குக் கட்டளையிட்டார். அவனோ சென்று காண்பவர் அனைவரிடமும் இயேசு தன்னைக் குணமாக்கிய செய்தியைப் பறைசாற்றினான்.

அதன் பின் இயேசு அங்கிருந்து பெத்சாய்தா என்னும் ஊருக்கு வந்தார். அங்கே ஒரு பார்வையில்லாத மனிதரை சிலர் அழைத்துக் கொண்டு வந்து சுகம் கொடுக்குமாறு விண்ணப்பித்தார்கள்.

இயேசு அவனையும் தனியே அழைத்துச் சென்றார்.

அவனுடைய கண்களின் மேல் தம்முடைய கைகளை வைத்துச் செபித்தார். பின் கைகளை எடுத்து ‘ ஏதாவது தெரிகிறதா ?’ என்று கேட்டார்.

‘மங்கலாய் ஏதேதோ அசைகின்றன ஆண்டவரே…’ அவன் பதில் சொன்னான்.

இயேசு தன்னுடைய கையை மீண்டும் அவன் கண்களில் வைத்தார்.

‘இப்போது பார்…’ கைகளை எடுத்த இயேசு கூறினார்.

‘என்னால்…. என்னால் பார்க்க முடிகிறது !’ அவன் ஆனந்தமடைந்தான்.

‘ஆண்டவரே… மிக்க நன்றி…. மிக்க நன்றி… ‘ அவனுடைய உதடுகள் ஓயாமல் கத்தின.

புயல் காற்று அடங்கியது.

Rembrandt_Christ_in_the_Storm_on_the_Lake_of_Galilee

ஒருநாள் ஏரி ஓரமாக இயேசு போதித்துக் கொண்டிருந்தார். அவருடைய போதனையைக் கேட்க வந்த கூட்டம் கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டே இருந்த்து இயேசு போதனையை நிறுத்திவிட்டு மறுகரைக்குச் செல்ல விரும்பி அருகிலிருந்த சீடரின் படகொன்றில் ஏறி அமர்ந்தார்.

அப்போது மறைநூல் அறிஞர் ஒருவர் வந்து,
‘ஐயா… நானும் உம்முடன் வர எனக்கு அனுமதி தரவேண்டும்.’ என்றார்.

இயேசு அவரிடம்,’ அறிஞரே… நீர் நல்ல சுகமான வாழ்க்கை வாழ்ந்து பழக்கப் பட்டவர். நரிகளுக்கு வளைகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு. ஆனால் மனுமகனுக்கோ தலை சாய்க்கவும் இடம் இல்லை. அதெல்லாம் உமக்கு ஒத்து வராது’ என்று கூறி அனுப்பி வைத்தார். வந்தவர் யோசனையுடன் திரும்பிச் சென்றார்.

இயேசுவின் சீடர்களில் ஒருவர் இயேசுவிடம்,
‘இயேசுவே, என்னுடைய தந்தை இறந்து விட்டதாகத் தகவல் வந்திருக்கிறது. நான் போய் அவரை அடக்கம் செய்து விட்டு வருகிறேன்’ என்றார்.

இயேசு அவரிடம். ‘இறந்தவர்கள் அடக்கம் செய்யப் படுவார்கள். நீர் அதைப்பற்றிக் கவலைப் படவேண்டாம். கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்க்கும் எவனும் விண்ணக வீட்டுக்கு உரியவன் அல்ல’ என்றார். அந்த சீடர் இயேசுவின் பேச்சைக் கேட்டு அவருடனே தங்கி விட்டார்.

இயேசுவும் சீடர்களும் படகில் ஏறி மறுகரைக்குச் செல்லத் துவங்கினார்கள். அந்த ஏரியின் மறுகரை நீண்ட தொலைவில் இருந்தது. எனவே இயேசு படகில் படுத்துத் தூங்கத் துவங்கினார். சீடர்கள் இயேசு கடற்கரையில் பேசியவற்றைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.

‘பிறர் உங்களுக்கு என்ன செய்யவேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அதையே நீங்கள் பிறருக்குச் செய்யுங்கள் என்றாரே… அது இதுவரை நாம் கேட்டதேயில்லை இல்லையா ?’ சீடர் ஒருவர் சொல்ல மற்றவர்கள் ஆமோதித்தனர்.

‘விண்ணக வாழ்வைப்பற்றி இன்னொன்று சொன்னாரே, இடுக்கமான வாயில் வழியே நுழைய வேண்டும். அதுதான் வாழ்வுக்கான வழி. விரிவான பாதையோ அழிவுக்கானது என்று, அது உனக்குப் புரிந்ததா ?’

‘புரிந்ததே. விண்ணக வாழ்வு வேண்டுமென்றால் கடவுளின் வார்த்தைகளின் படி வாழ வேண்டும். அப்படி வாழ்வது மிகவும் கடினமான பாதையில் செல்வதைப் போல, அதைத் தான் அவர் அப்படிக் குறிப்பிட்டார்’

சீடர்களின் உரையாடல்கள் எதையும் கேட்காமல் இயேசு படகின் ஒரு ஓரத்தில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தார்.
தண்ணீர் அமைதியாக அவர்களுடைய உரையாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்தது. கொஞ்ச நேரத்திலேயே யாரும் எதிர்பாராத அந்த சம்பவம் நடந்தது.

கடல் கொந்தளித்தது.

புயல்க்காற்று வீசியது !

அமைதியாய் இருந்த அந்த கடல்பகுதி ஆக்ரோஷமாய் மாறியது. அலைகள் உயரமாயின. கடலின் கொந்தளிப்பில் படகு நிலை தடுமாறத் துவங்கியது. இதே கடல்வழியில் பலமுறை பயணம் செய்திருக்கிறார்கள். ஆனால் இதுவரை இப்படி ஒரு புயல்க்காற்று வீசியதில்லை. எப்போதும் அமைதியாகவே இருக்கும் இந்தக் கடல் பகுதிக்கு இன்று மட்டும் என்னவாயிற்று என்று சீடர்கள் பயந்தார்கள்.

இயேசுவைப் பார்த்தார்கள். இயேசு அமைதியாகப் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்.
கடல் கொந்தளிப்பு அதிகரித்துக் கொண்டே வந்தது. சீடர்களின் பயமும் அதிகரித்துக் கொண்டே இருந்தது. இயேசு ஆழமான உறக்கத்தில் இருந்தார். அலைகடல் சத்தம் அவருடைய உறக்கத்தைக் கலைக்கவில்லை.

சீடர்கள் நீண்ட நேரம் பொறுமையாய்க் காத்திருந்தார்கள். புயலின் சீற்றம் குறைந்தபாடில்லை. படகு எந்நேரமும் கவிழ்ந்து விடலாம் என்ற சூழ்நிலை !

‘இயேசுவை எழுப்புவோம். வேறு வழியில்லை. இல்லாவிட்டால் நாம் மடிய வேண்டியது தான்’ சீடர்கள் பதட்டமடைந்தார்கள்.

‘இயேசுவே… இயேசுவே…’ சீடர்கள் கத்தினார்கள்.

இயேசு கண்விழித்தார்…

‘இயேசுவே… காப்பாற்றும். சாகப் போகிறோம்… காப்பாற்றும்’ என்று கத்தினார்கள்.

இயேசு அவர்களைப் பார்த்தார்.
‘இன்னும் உங்களுக்கு நம்பிக்கை வரவில்லையா ? ஏன் இப்படி பயந்து சாகிறீர்கள் ? எப்போது தான் நம்பிக்கை கொள்வீர்களோ ?’ என்று சொல்லிவிட்டு கடலைப் பார்த்தார்.

‘இரையாதே… சும்மாயிரு’ காற்றுக்கும், கடலுக்கும் கட்டளையிட்டார் இயேசு.

அவ்வளவு தான். அத்தனை நேரமும் பேய்பிடித்தவனைப் போல அலறிக் கொண்டிருந்த கடல் சட்டென்று அமைதியானது. இந்தக் கடலா அப்படிச் சத்தம் போட்டது என்று நினைக்குமளவுக்குக் கடல் அமைதியாகிவிட்டது.

எத்தனையோ முறை இயேசு அதிசயச் செயல்கள் செய்வதை அவர்கள் பார்த்திருக்கிறார்கள். நோய்கள் ஓடுவதையும், குருடர்கள் பார்ப்பதையும், ஒரு வார்த்தை சொல்லி மக்களைக் குணப்படுத்துவதையும், அனைத்தையும் சீடர்கள் பார்த்திருக்கிறார்கள். ஆனாலும் அவர்களுக்கு நம்பிக்கை வரவில்லையே என்னும் கவலையின் ரேகைகள் இயேசுவின் முகத்தில் ஓடின.

சீடர்கள் வியப்புக் கடலின் நடுவே நின்றார்கள்.

‘நோய்கள் ஓடியதையும், பேய்கள் ஓடியதையும் கண்டிருந்தோம். இப்போது என்னவென்றால் காற்றும் கடலும் கூட இவருடைய கட்டளைக்குக் கட்டுப்படுகிறதே ! ‘என்று வியந்தார்கள். மனசுக்குள் இந்த ஆச்சரிய நிகழ்வையும் எழுதிக் கொண்டார்கள்.

உதிரப்போக்கு நின்றது. மரணம் அகன்றது

yesus-menyembuhkan-anak-yairus-1000

இயேசு படகிலிருந்து இறங்கினார். அவருக்காகக் கடற்கரையில் ஏராளமான மக்கள் காத்திருந்தார்கள். அவர்கள் இயேசுவை மிகவும் ஆரவாரத்துடன் வரவேற்றனர்.

அந்தக் கூட்டத்தில் தொழுகைக் கூடத் தலைவர்களில் ஒருவரான யாயீர் என்பவனும் இருந்தான்.
அவன் இயேசுவிடம் வந்து

‘ரபீ… தாங்கள் என்னுடைய இல்லத்துக்கு வரவேண்டும்’ என்று விண்ணப்பித்தான். அவனுடைய கண்களில் கண்ணீர் வழிந்தோடியது.

‘என்ன ஆயிற்று ?’ இயேசு அவனைத் தேற்றினார்.

‘என்னுடைய ஒரே மகள் சாகும் தருவாயில் இருக்கிறாள். பன்னிரண்டு வயது சிறுமி அவள். ஓடி ஆடி ஆனந்தமாய் வளைய வரவேண்டிய வயதில் அவளை கொடிய நோய் பிடித்துவிட்டது. அவள் மரணத்தோடு போராடிக் கொண்டிருக்கிறாள். நீர் மட்டுமே அவளைச் சுகப்படுத்த முடியும்’ அவர் மீண்டும் அழுதார்.

‘அழவேண்டாம். கடவுளிடம் நம்பிக்கை வைத்தால் அதிசயங்களைக் காண்பது எளிது’ சொல்லிய இயேசு சீடர்களை அழைத்து,’ வாருங்கள் அவருடைய வீட்டிற்குப் போவோம்’ என்றார்.

இயேசுவும் அவருடைய சீடர்களும் யாயீரின் இல்லத்தை நோக்கி விரைந்தார்கள். கூட்டத்தினர் என்ன நடக்கப் போகிறது என்பதைக் காணும் ஆவலில் அவரை நெருக்கியடித்துக் கொண்டு அவருக்குப் பின்னாலும் முன்னாலும் செல்லத் துவங்கினார்கள்.

அந்தக் கூட்டத்தில் பன்னிரண்டு ஆண்டுகளாய் இரத்தப்போக்கினால் வருந்திக் கொண்டிருந்த ஒரு பெண்ணும் இருந்தாள். அவள் தன்னுடைய சொத்தை எல்லாம் மருத்துவர்களிடம் செலவழித்தும் ஒரு பயனும் இல்லாத கவலையில் இயேசுவைக் காண வந்திருந்தவள். ஆனால் இந்தப் பரபரப்புகளுக்கு இடையே அவளால் இயேசுவைத் தனியே சந்திக்க இயலவில்லை. இரத்தப் போக்குடைய பெண்கள் பொதுவிடங்களில் வருவதும் நடைமுறையில் இல்லாத வழக்கமாய் இருந்தது.

இயேசுவைத் தனியே சந்திக்க முடியாவிட்டாலும் அவளுக்குள் இருந்த அசைக்க முடியாத நம்பிக்கை உடையவில்லை. இயேசுவின் ஆடையின் விளிம்பைத் தொட்டால் கூட போதும் நலமடைவேன் என்று அவளுடைய மனம் சொல்லிக் கொண்டே இருந்தது. ஆனால் கூட்டத்தினர் இயேசுவை நெருக்கியடித்துக் கொண்டு போய்க் கொண்டிருந்தார்கள்.

அவளும் கூட்டத்தினரிடையே புகுந்து புகுந்து இயேசுவின் அருகே சென்றாள். இயேசுவின் பின்னாலிருந்து அவருடைய ஆடையின் விளிம்பைத் தொட்டாள்.

ஆச்சரியம் ! அவளுடைய இரத்தப் போக்கு சட்டென்று நின்றது.

இயேசு நின்றார்.

‘என்னைத் தொட்டது யார்?’ இயேசு கேட்டார்.

இயேசுவின் கேள்வி மக்களையும், சீடர்களையும் பெரும் வியப்பில் ஆழ்த்தியது.

‘இயேசுவே இதோ எல்லா மக்களும் உம்மைத் தொட்டுக் கொண்டு தான் வருகிறார்கள். பலர் நெருக்கியடிக்கிறார்கள். என்னைத் தொட்டவர் யார் என்று கேட்கிறீரே ?’ சீடர்கள் கேட்டார்கள்.

‘இல்லை. என்னை யாரோ தொட்டார்கள். என்னிடமிருந்து வல்லமை வெளியேறியதை நான் உணர்ந்தேன்’ இயேசு சொன்னார்.

சீடர்களும், மக்களும் குழம்பினார்கள்.

அந்தப் பெண் இனிமேலும் ஒளிந்திருக்க முடியாதென்பதை உணர்ந்து இயேசுவுக்கு முன்னால் வந்து விழுந்தாள்.

‘ஆண்டவரே… என்னை மன்னியும். உம் அனுமதியின்றி உம் ஆடையின் விளிம்பைத் தொட்டது நான் தான்’ அவள் சொல்ல கூட்டத்தினரின் முகத்தில் கேள்விகள் ஓடின.

‘ஏன் என்னைத் தொட்டாய் ?’

‘ஆண்டவரே… பன்னிரண்டு ஆண்டுகளாய் இரத்தப் போக்கு நோயினால் வருந்திக் கொண்டிருந்தேன். இந்த நோயுடன் உம்முன்னிலையில் வரவும் தயக்கம். ஆனால் உம்முடைய ஆடையைத் தொட்டால் கூட போதும் சுகம் பெறுவேன் என்று நம்பினேன். அதனால் தான் உம்முடைய ஆடையைத் தொட்டு சுகமடைந்தேன்’ அவள் சொல்லச் சொல்ல கூட்டத்தினர் வியந்தார்கள்.

‘உன் நம்பிக்கை உன்னை நலமாக்கியது. அமைதியுடன் போ’ இயேசு சொன்னார்.

‘இயேசுவே இது எப்படி ? எல்லோரும் தான் உம்மைத் தொடுகிறார்கள். ஒருவர் மட்டும் நலமடைகிறாரே ?’ சீடர்கள் கேட்டனர்.

‘முழுமையான நம்பிக்கை வைத்தால் எதுவும் சாத்தியமாகும். நம்பிக்கை இல்லாதவருக்கு அதிசயங்கள் நிகழாது’ இயேசு சொன்னார்.

இயேசு பேசிக் கொண்டே பயணத்தைத் தொடர்ந்தார். அப்போது தொழுகைக் கூடத் தலைவர் யாயீரின் வீட்டிலிருந்து ஒருவர் ஓடி வந்தார்.

‘ஐயா… ‘ அவன் யாயீரை அழைத்தான்.

யாயீர் பதட்டத்துடன் அவனைப் பார்த்தார்.

‘துக்கமான செய்தி. உமது மகள் இறந்து விட்டாள். இனிமேல் போதகரை தொந்தரவு செய்யவேண்டாம். வாரும். இறுதிச் சடங்குகள் துவங்கிவிட்டன’ என்றார்.

யாயீர் உடைந்துபோனார். ‘மகளே… ‘ என்று அலறினார்.

இயேசு அவரிடம்,’ அஞ்சாதீர். நம்பிக்கையோடு இரும். உம் மகள் பிழைப்பாள்’ என்றார்.

வீட்டுக்கு வந்ததும் எங்கும் அழுகுரல்கள். சிறுமியின் மரணத்துக்காக உறவினர்கள் அனைவரும் கண்ணீர் விட்டுக் கதறி அழுது துடித்துக் கொண்டிருந்தார்கள். சிறுமியின் தாயின் ஒப்பாரிச் சத்தம் அந்த சுற்றுப் புறத்தையே கரைத்துக் கொண்டிருந்தது.

இயேசு அவர்களிடம்,’ அழாதீர்கள். சிறுமி சாகவில்லை. தூங்குகிறாள்’ என்றார்.

‘சிறுமி சாகவில்லையா ? தூங்குகிறாளா ? எங்களுக்கென்ன பைத்தியமா ? தூங்கும் சிறுமியை செத்துவிட்டாள் என்று சொல்லி ஒப்பாரி வைக்க ?. இவருக்கு புத்தி பேதலித்து விட்டதோ ‘ மக்கள் இயேசுவை வித்தியாசமாய்ப் பார்த்தார்கள்.

இயேசு எதையும் காதில் வாங்கவில்லை. நேராக சிறுமியின் உடல் கிடத்தப் பட்டிருந்த இடத்துக்குச் சென்றார். சிறுமியின் கையைப் பிடித்து
‘சிறுமியே எழுந்திரு’ என்றார்.

சிறுமி உயிருடன் எழுந்தாள்.

கேட்டுக் கொண்டிருந்த ஒப்பாரிக் கூட்டம் சட்டென்று நின்றுபோக, ஆனந்த அலறல்கள் வீறிட்டன. பலர் பயந்து பின் வாங்கினார்கள். என்ன நடக்கிறது என்று நடுநடுங்கிய பலர் இயேசுவை விட்டு தூரமாய்ப் போய் நின்றார்கள்.

‘இவளுக்கு உணவு கொடுங்கள்’ இயேசு சொன்னார்.

சிறுமியின் பெற்றோர் மலைத்துப் போய் நின்றிருந்தார்கள்.

இயேசு புன்னகைத்தார்.

‘இதை யாருக்கும் சொல்ல வேண்டாம்.’ என்று அவர்களிடம் சொல்லிய இயேசு, சிறுமியின் தலையை அன்புடன் வருடினார்.

மரணத்துக்குள் போய்விட்டுத் திரும்பி வந்த அச்சிறுமி ஆனந்தமாய்ப் புன்னகைத்தாள். அந்தச் செய்தி காட்டுத் தீ போல பரவியது. இயேசுவின் மீது அரைகுறை நம்பிக்கை வைத்தவர்கள் அவர் மீது முழு நம்பிக்கை வைப்பதற்கு அந்த செய்தி துணை செய்தது.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink Closed

இயேசு வரலாறு 30 : முற்றத்து முல்லைக்கு மணமில்லை

Image result for jesus reading scroll

தொடர்ந்து கப்பர்நாகுமிலேயே பணியாற்றி வந்த இயேசு தன்னுடைய சொந்த ஊராகிய நாசரேத்திலும் போதனை நடத்த வேண்டும் என்று ஆசைப்பட்டு, சீடர்களையும் அழைத்துக் கொண்டு நாசரேத் நகர் வந்தார். வந்து நாசரேத்தில் இருந்த ஆலயத்தில் அமர்ந்து செபிக்கத் துவங்கினார்.

சுற்றிலுமுள்ள ஊர்களிலெல்லாம் அவருடைய போதனைகளும், அவருடைய அறிவுரைகளும் மக்களை வெகுவாகக் கவர்ந்தாலும் சொந்த ஊரில் அவருடைய போதனைகளுக்குச் செல்வாக்கு அதிகமில்லை.சிறுவயது முதலே தம்முடன் உறவாடி, விளையாடி சாதாரணத் தச்சுவேலை செய்து கொண்டிருந்த ஒருவன் திடீரென கடவுள் என்று தன்னைப் பறைசாற்றுவதையும், அதிகாரத்துடன் போதனைகள் செய்வதையும் அவர்கள் நம்பவில்லை. ஆனாலும், இயேசு அடுத்துள்ள ஊர்களிலெல்லாம் பல அற்புதங்களைச் செய்திருந்ததைக் கேள்விப்பட்டதால் மக்கள் அவரைச் சூழ்ந்து கொண்டார்கள்.

கூடியிருந்த மக்களின் எண்ணமெல்லாம் இயேசுவின் போதனைகளைக் கேட்பதல்ல, அவர் ஏதேனும் அற்புதங்கள் செய்தால் வேடிக்கை பார்க்கலாமே என்பதுதான். மக்கள் ஆலயத்தில் வந்து கூடியபோது இயேசு எழுந்துநின்றார்.

‘மறைநூல் உங்களிடம் இருக்கிறதா ?’ இயேசு வினவினார்.

‘ஆலயத்தில் இல்லாத ஏட்டுச் சுருளா ?’ என்றவர்கள் ஏசாயா தீர்க்கத்தரிசி எழுதிய புத்தகச் சுருளை அவரிடம் கொடுத்தார்கள். அவர் அதிலிருந்து ஒரு பகுதியை எடுத்து வாசித்தார்.

‘ஆண்டவரின் ஆவி என்மேல் இருக்கிறது. அவர் என்னை அபிஷேகம் செய்திருக்கிறர். எளியோருக்கு நற்செய்தியைச் சொல்லவும், சிறைப்பட்டோர் விடுதலை வாழ்வு பெறுவர் என்று அறிவிக்கவும் ஆண்டவர் என்னை அனுப்பினார்’

வாசித்து முடித்த இயேசு அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்தார். மக்கள் ஒன்றும் புரியாமல் அவரைப் பார்த்தனர்.

‘நீங்கள் கேட்ட இந்த மறை நூல் வார்த்தை பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு எசாயா இறைவாக்கினர் தீர்க்கத் தரிசனமாய் எழுதியது என்பதை நீங்கள் அறிவீர்கள் தானே’ இயேசு கேட்டார்.

‘ஆம். வரப்போகும் மீட்பரைக் குறித்து ஏசாயா தீர்க்கத் தரிசி சொன்ன வார்த்தைகள் இவை’ மக்கள் சொன்னார்கள்.

‘இந்த வார்த்தை இன்று நிறைவேறியது’ இயேசு சொல்ல மக்கள் நெற்றி சுருக்கினார்கள்.

‘நிறைவேறியது என்றால் ?…’

‘என்னைக் குறித்தே ஏசாயா இப்படிக் குறிப்பிட்டிருக்கிறார்’ சொன்ன இயேசு அவர்களுக்குப் போதிக்கத் துவங்கினார். இப்படி ஒரு போதனையை இதுவரை கேட்டதேயில்லை என்று மக்கள் வியக்கும் வண்ணம் இருந்தது இயேசுவின் போதனைகள். செய்யவேண்டியவை என்ன என்பதைத் தெளிவாக தயக்கம் இல்லாமல் அதிகாரத்தோடு போதித்தார். குறிப்பாக மறைநூலில் எழுதப்பட்டுள்ள பல சட்டங்களை அவர் எதிர்த்துப் புதிய செய்திகளைச் சொன்னார்.

மக்கள் இயேசுவின் போதனைகளை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். எவ்வளவு அருமையாக, தெளிவாக, எதார்த்தமாகப் பேசுகிறார் என்று மக்கள் எண்ணிக் கொண்டிருக்கும்போதே அந்தக் குரல் ஒலித்தது.

‘இவன் யாரு இப்படியெல்லாம் போதிக்க ?’

குரல் வந்த திசையில் மக்கள் திரும்பினார்கள்.

‘உங்களுக்கெல்லாம் வேறு வேலையே இல்லையா ? ஒரு தச்சன் மகன் வந்து ஏதோ உளறுகிறான் நீங்கள் எல்லாம் வந்து கூடி இருந்து நேரத்தை வீணடிக்கிறீர்களே !’ குரல் மீண்டும் உயர்ந்தது.

‘நீ சொல்வதும் சரிதான். இவன் சட்ட நூல் எதையும் கற்றதும் இல்லை, எங்கும் குருவாகவோ, மறைநூல் அறிஞராகவோ இருந்ததும் இல்லை.’

‘பின் இன்னும் ஏன் இங்கே அமர்ந்து பொழுதைப் போக்குகிறீர்கள்’

‘ஒருவேளை இவருக்குக் கடவுளின் அருள் இருக்கலாம். அதன் மூலம் பேசலாம் இல்லையா ?’

‘உனக்கென்ன பைத்தியமா ? இவன் முப்பது வருஷமாக இங்கே தான் இருக்கிறான். இவனுடைய தாயும், தந்தையும் இங்கே தான் இருந்தார்கள். இவனுடைய சொந்தக்காரர்கள் எல்லாரும் கூட இங்கே தான் இருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது இவன் கடவுளின் மகன் என்று சொன்னால் எப்படி நம்புவது ?’

‘இவர் அடுத்துள்ள ஊர்களிலெல்லாம் பல அற்புதங்களைச் செய்திருக்கிறாரே !’

‘அப்படியானால் அவற்றையெல்லாம் இங்கே செய்யட்டுமே ?’

வாக்குவாதம் வலுத்தது. இயேசு அவர்களுடைய மனநிலையை ஆச்சரியமாய்ப் பார்த்தார். எல்லா ஊர்களிலும் தன்னுடைய போதனைகள் அங்கீகரிக்கப்பட்டதையும், தன் சொந்த ஊரில் நிராகரிக்கப் படுவதையும் அவரால் நம்ப முடியவில்லை. சொந்த ஊர் மக்கள் நன்கு பழக்கமானவர்கள் அவர்களிடம் போதிப்பது எளிது என்றே அவர் கருதியிருந்தார். ஆனால் நிலமையோ வேறாக இருக்கிறது.

‘இயேசுவே, நீர் உண்மையிலேயே மீட்பர் என்றால் எங்களுக்கு சில அதிசயங்களைச் செய்து காட்டும்’ மக்கள் கூறினார்கள்.

இயேசு புன்னகைத்தார். ‘ இறைவாக்கினருக்கு சொந்த ஊரில் மரியாதை இருக்காது என்பது உண்மை தான்.’

‘அதெல்லாம் சரி.. அற்புதங்களைக் காட்டு. அல்லது போதனையை நிறுத்து’ மக்கள் நம்பிக்கை இழந்து கத்தினார்கள்.

‘மூடர்களே ! நம்பிக்கை இல்லாத மனிதர்களிடையே அற்புதங்கள் நடைபெறுவதில்லை. எலிசா காலத்திலே இஸ்ரயேலரில் எத்தனையோ தொழுநோயாளிகள் இருந்தார்கள் ஆனால் நாகமான் மட்டும் தானே சுகம் பெற்றான் ! எலியா காலத்தில் எத்தனையோ விதவைகள் இருந்தாலும், ஒரு விதவை தானே மாவு தீராத பானையையும், எண்ணை தீராத பாத்திரத்தையும் பெற்றாள் ! உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன். நம்பிக்கை இல்லாவிட்டால் செயல்கள் அங்கே இல்லை’ இயேசு கூட்டத்தினரைப் பார்த்து உரத்த குரலில் சொன்னார்.

மக்கள் கடும் கோபம் கொண்டனர். இயேசுவை அடிக்க வேண்டும் என்று ஊர் மக்கள் பலர் கூடினர். இயேசு அவர்களிடமிருந்து விலகிச் சென்றார்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink Closed

 இயேசு வரலாறு 31 : பணி வாழ்வின் இரண்டாம் ஆண்டு

ஏரோதின் கவலை

2006_the_nativity_story_042

திருமுழுக்கு யோவானைக் கொலை செய்துவிட்டால் பிரச்சினை தீர்ந்து விடும் என்று ஏரோதியாள் கனவு கண்டு கொண்டிருந்தாள். ஆனால் திருமுழுக்கு யோவானின் மரணம் ஒரு தீர்வைத் தரவில்லை, மாறாக அவருடைய சீடர்களும் இயேசுவோடு இணைந்து மிகப்பெரிய கூட்டமாக மாறிவிட்டார்கள். இயேசுவின் போதனைகள் திருமுழுக்கு யோவானின் போதனைகளை விட அதிக வீரியமுள்ளதாக எங்கும் விரைந்து மக்களைத் தீண்டியது. ஏரோதுக்கும் இயேசுவின் திடீர் வளர்ச்சி மிகப்பெரிய கவலையை அளித்தது. இயேசுவைப் பற்றி உளவாளிகள் தினம் தினம் கொண்டு வரும் புதுப் புதுச் செய்திகளால் அவன் கவலையடைந்தான். தன்னுடைய ஆட்சிக்கே இயேசுவால் ஆபத்து வந்துவிடுமோ என்று பயந்தான்.

இயேசு தன்னுடைய சீடர்கள் இருவர் இருவராக போதனைகள் செய்ய தனியே அனுப்பினார். தன்னுடைய சீடர்களை அவர் வரவழைத்து அவர்களுக்கு நோய்களைத் தீர்க்கும் வல்லமையையும், பேய்களை ஓட்டும் வல்லமையையும் கொடுத்தார். இலவசமாக இந்த வரத்தை நான் உங்களுக்கு வழங்குகிறேன், நீங்களும் இலவசமாகவே மக்களுக்கு வழங்குங்கள் என்று சீடர்களுக்கு அறிவுறுத்தினார். சீடர்களும் செல்லுமிடங்களில் காணும் மனிதர்களைக் குணப்படுத்தத் துவங்கினர். மக்கள் ஆச்சரியப்படும் விதமாக சீடர்களும் அதிசயங்கள் செய்யத் துவங்கினார்கள். எனவே இயேசுவைப் பற்றிய புகழ் பல மடங்கு பரவியது.

ஏரோது மன்னனும் அவனுடைய அரசவையிலிருந்தவர்களும் திகைத்தார்கள். அதெப்படி பேய்களை ஓட்டுவதற்கும் நோய்களை நீக்குவதற்குமான வரத்தை எல்லோருக்கும் வழங்க முடிகிறது ? இயேசு யாருக்கெல்லாம் பேயோட்டும் வரம் வழங்கினாரோ அவர்களெல்லாம் பேய் ஓட்டுகிறார்களே ! அதெப்படி சாத்தியம் ? என்று எல்லோரும் திகைப்பில் விழுந்தார்கள். சீடர்கள் தனியே பணி செய்யத் துவங்கியதை கண்ட இயேசுவும் ஆனந்தமடைந்தார். வானகத் தந்தையை நோக்கி அவர் செபித்தார். தந்தையே உமக்கு நன்றி. மேன்மையானவர்களுக்கு இவற்றை மறைத்து எளியவர் என்று மக்கள் கருதுவோருக்கு வழங்கினீரே. உமக்கு நன்றி என்று செபித்தார்.

இப்போது இயேசு முன்னை விட அதிக மன உரம் பெற்றார். அவருடைய போதனைகள் எழுச்சியடைந்தன. தன்னைப்பற்றி விளக்கமாக, இன்னும் தெளிவாகப் பேசத் துவங்கினார் அவர். ‘தந்தையையன்றி மகன் யார் என்று எவனும் அறிவதில்லை. தந்தை யாரென்று மகனும், மகன் யாருக்கெல்லாம் அவற்றை வெளிப்படுத்துகிறாரோ அவர்களுமே அறிவார்கள்.’ என்று தான் விண்ணகத் தந்தையின் மகன் என்று வெளிப்படையாக இயேசு பிரகடனப் படுத்தத் துவங்கினார்.

‘சுமை சுமந்து சோர்ந்திருப்போர்களே, நீங்கள் எல்லோரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்’ என்று இயேசு மக்கள் கூட்டத்தினரிடையே உரத்த குரலில் அழைப்பு விடுத்தார். இயேசுவின் போதனைகளை கேட்கவும், அவருடைய வரங்களைப் பெறவும் வந்த கூட்டம் இயேசுவின் அழைப்பில் மகிழ்ந்தது. வாழ்வின் வருத்தங்களை இயேசுவிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஏராளமானோர் இயேசுவை அணுகத் துவங்கினர்.

ஏரோதின் காதுகளுக்கு இந்த செய்திகளெல்லாம் விழ அவன் கலக்கமடைந்தான். திருமுழுக்கு யோவானின் ஆவிதான் இயேசுவின் மேல் வந்து இப்படிப் போதனைகள் நிகழ்த்துகிறதோ என்றும் அவனுடைய மனதில் சிந்தனைகள் ஓடின. சுற்றிலும் இருந்த சுமார் இருநூற்று நான்கு கிராமங்கள், நகரங்களில் இயேசுவின் போதனையினால் மக்கள் கவரப்பட்டிருந்தார்கள். குறைந்தபட்சம் பதினைந்தாயிரம் நபர்கள் ஒவ்வொரு கிராமத்திலும் இருந்ததாக வரலாறு சொல்கிறது. எல்லா இடங்களிலும் வாழ்ந்த ஏழை, எளியவர்கள் இயேசுவின் பின்னால் அணிதிரண்டதை ஏரோது உணர்ந்தான். இயேசுவுக்கு ஒரு அதிகார வளையம் உருவாகி இருப்பதை அறிந்த அவன் அதை எப்படியும் உடைத்து விட வேண்டும் என்று மனதுக்குள் முடிவெடுத்தான்.

இயேசுவோ எதற்கும் கவலைப்படாமல் தன்னுடைய பணிகளைத் துரிதமாகச் செய்து கொண்டே இருந்தார்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink Closed

ஐந்து அப்பமும், ஐயாயிரம் பேரும்

Miracle_Loaves_Fishes

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink Closed

எப்போதும் இயேசுவைச் சுற்றி ஒரு மிகப்பெரிய கூட்டம் அவருடைய போதனைகளைக் கேட்கவும், தங்களுடைய நோய்களைத் தீர்த்துக் கொள்ளவும் இருந்து கொண்டே இருந்ததால் இயேசுவுக்குத் தேவையான தனிமை கிடைக்காமல் போயிற்று. கிடைக்கும் குறைந்த நேரங்களில் இயேசு தனிமையாகச் சென்று செபம் செய்வது வழக்கம். இப்போதும் அவர் தனிமையாய் இருக்க விரும்பி சீடர்களை மட்டும் அழைத்துக் கொண்டு திபேரியாக் கடல் என்று அழைக்கப்பட்ட மிகப் பெரிய ஏரியைக் கடந்து மறு பக்கம் இருந்த பாலை நிலத்துக்குச் சென்றார். அங்கு சென்று தனிமையில் கடவுளிடம் செபம் செய்யத் துவங்கினார்.

ஆனால் அதற்குள் இயேசு வந்திருக்கிறார் என்னும் செய்தி மக்களுக்குத் தெரிய வர, மக்கள் கூட்டம் கூட்டமாக அவரைத் தேடி பாலை நிலத்துக்கு வந்தனர். செபம் செய்து முடித்த இயேசு தான் அமர்ந்திருந்த மலையைச் சுற்றிலும் ஏராளமான மக்கள் அமைதியாய் காத்துக் கொண்டிருப்பதைக் கண்டார். மக்களின் அன்பையும், நம்பிக்கையையும் கண்டு நெகிழ்ந்த அவர் மக்களுக்குப் போதிக்கத் துவங்கினார்.

ஆட்டுக் கொட்டிலுக்கு வாயில் வழியாக நுழையாமல் வேறு வழியாக ஏறிக் குதிப்பவன் திருடன், அல்லது கொள்ளைக்காரன். வாயில் வழியாக நுழைபவனே ஆடுகளின் ஆயன். அவருக்கே காவலர் வாயிலைத் திறந்து விடுவார். ஆடுகளும் ஆயனின் குரலுக்குச் செவிசாய்க்கும். தம்முடைய சொந்த ஆடுகளை கொட்டிலுக்கு வெளியே கூட்டி வந்தபின் ஆயன் அவற்றுக்கு முன்னால் செல்வார். ஆடுகள் அவரைப் பின் தொடரும். ஏனென்றால் ஆயனின் குரலை அவை அறிந்திருக்கின்றன.

அறியாத ஒருவரை ஆடுகள் பின்பற்றுவதில்லை. அவை சிதறிப்போகும். ஆயன் தன் ஆடுகளுக்காக உயிரையும் கொடுப்பான். ஆனால் கூலிக்கு மேய்ப்பவனோ, ஓநாய் வருவதைக் கண்டால் தன்னுடைய உயிரைக் காத்துக் கொள்வதற்காக ஆடுகளை விட்டு விட்டு ஓடிப்போவான். ஓநாய் வந்து மந்தையைச் சிதறடிப்பதைப் பற்றிய கவலையை விட தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் கவலையே அவனுக்கு அதிகமாய் இருக்கும்.

நானே நல்ல ஆயன்.

என் ஆடுகளுக்காக நான் உயிரையும் கொடுப்பேன். எனக்கு முன்னால் வந்த பலர் திருடர், கொள்ளைக்காரர். ஆதாயத்துக்காக ஆடுகளைக் கூட்டிச் சேர்த்தவர்கள் அவர்கள். நான் ஆடுகளின் நிலைவாழ்வுக்காய் வந்திருக்கிறேன். என்னுடைய கொட்டிலைச் சேராத வேறு பல ஆடுகளும் எனக்கு உண்டு அவற்றையும் நான் கூட்டிச் சேர்க்க வேண்டும். அவையும் என் குரலுக்குச் செவிகொடுக்கும். தந்தை என்மீது அன்பு செலுத்துகிறார். ஏனென்றால் நான் என் உயிரையே கொடுக்கிறேன். என் உயிரைப் பறித்துக் கொள்ளும் அதிகாரம் யாருக்கும் இல்லை. ஆனால் அதை நானே உவந்தளிப்பேன்.

நேரம் கடந்து கொண்டே இருந்தது. இயேசுவின் போதனை நீண்டு கொண்டே சென்றது.

சீடர்கள் இயேசுவிடம் வந்து
‘போதகரே, எவ்வளவு நேரம் தான் போதிக்கப் போகிறீர்கள். போதும். இவர்களை அனுப்பிவிடும். இவர்கள் பசியோடு இருப்பார்கள். இவர்களுக்குத் தேவையான உணவு இங்கே கிடைக்காது. நேரமும் இருட்டிக் கொண்டே வருகிறது. இப்போது இவர்களை அனுப்பினால் இவர்கள் சென்று தங்களுக்குத் தேவையான உணவைப் பெற்றுக் கொள்வார்கள் அல்லவா ? ‘ என்று இயேசுவின் காதில் கிசுகிசுத்தனர்.

‘ஏன்.. நீங்களே இவர்களுக்கு உணவளிக்கலாமே ?’ இயேசு புன்னகையுடன் கேட்டார்.

‘அதெப்படி முடியும் ? இத்தனை பேருக்கு உணவளிக்க வேண்டுமென்றால் நமக்கு இருநூறு தெனாரியம் பணம் தேவைப்படுமே ? ‘ சீடர்கள் சொன்னார்கள். இயேசுவிடம் எப்போதுமே பணம் இருப்பதில்லை என்பது சீடர்களுக்குத் தெரியும்.

‘உங்களிடம் உணவு இல்லையா ?’ இயேசு கேட்டார்.

‘இல்லை… இங்கே ஒரு சிறுவனிடம் மட்டும் ஏதோ கொஞ்சம் உணவு இருக்கிறது’ சீடர் சொன்னார்.

‘சரி… அதை இங்கே வாங்கி வாருங்கள்’

சீடர்கள் சென்று அந்தச் சிறுவனையும், அவனிடம் இருந்த உணவையும் இயேசுவிடம் கொண்டு வந்தார்கள். இயேசு பார்த்தார். சிறுவனுடைய கூடையில் ஐந்து கோதுமை அப்பங்களும், இரண்டு மீன்களும் இருந்தன.

‘இது போதுமே ?’ இயேசு சொல்ல சீடர்கள் வியப்படைந்தார்கள்.

‘ஐந்து அப்பங்களும், இரண்டு மீன்களும் எத்தனை பேர் சாப்பிட முடியும் ? இங்கே சுமார் ஐயாயிரம் பேர் இருக்கிறார்களே ‘ அவர்கள் சந்தேகமாய்க் கேட்டார்கள்.

‘எல்லோரையும் வரிசை வரிசையாக பந்தி அமர்த்துங்கள்’ இயேசு கூற, சீடர்கள் சென்று வந்திருந்த அனைவரையும் வரிசை வரிசையாய் பந்தியமர்த்தினார்கள்.

இயேசு அந்த அப்பங்களையும், மீன்களையும் எடுத்தார். வானத்தை அண்ணாந்து பார்த்து செபித்து அதைப் பிட்டு சீடர்களிடம் கொடுத்தார்.

‘இதை நீங்கள் பரிமாறுங்கள். எல்லோரும் உண்பார்கள். மீதி வருவதை வீணாக்காமல் கூடைகளில் சேகரியுங்கள் ‘ என்றார்.

சீடர்களின் சந்தேகம் தீரவில்லை. அவர்கள் அப்பத் துண்டுகளை மக்களுக்குக் கொடுக்கத் துவங்கினார்கள். என்ன ஆச்சரியம் ! அப்பம் வந்து கொண்டே இருந்தது. மக்கள் வயிறார உண்டனர்.

‘போதும்… போதும்… ‘

‘இங்கே மீதமும் இருக்கிறது’

குரல்கள் ஆங்காங்கே ஒலிக்கத் துவங்கின. சீடர்கள் இயேசு சொன்னபடி மிகுதியானவற்றைக் கூடைகளில் சேகரித்தார்கள். அவை பன்னிரண்டு கூடைகள் நிறைய இருந்தன.

ஒரு சின்ன கூடையில் இருந்த ஐந்து அப்பங்களின் மீதித் துண்டுகள் பன்னிரண்டு கூடைகளில் ! மக்கள் வியந்தார்கள்.

‘இவர் நம்மோடு கூடவே இருந்தால் உணவுக்குப் பஞ்சமே இருக்காது’

‘இவரை எங்கும் போக விடக் கூடாது. இவரை நம்முடைய நாட்டின் மன்னனாக்க வேண்டும்’

‘ஆம்.. இவர் அரசரானால் நமக்கு உணவுக்குக் குறைவே வராது.’ மக்கள் இயேசுவை அரசனாக்க வேண்டுமென்று ஆலோசனை செய்யத் துவங்கினார்கள்.

மக்களின் உள்ளுணர்வை அறிந்த இயேசு வருந்தினார். விண்ணக வாழ்வைப் பற்றிப் போதிக்க வந்தால் மக்கள் மண்ணுலக வாழ்வுக்கே முன்னுரிமை தருகிறார்களே என்று கலங்கினார். மக்களை அனுப்பிவிட்டு மலைமீது அமர்ந்து மீண்டும் செபிக்கத் துவங்கினார்.

கூட்டம் ஐந்து அப்பங்கள் எப்படி இந்தப் பெருங்கூட்டத்தின் பசியைத் தீர்த்தது என்று வியந்து கொண்டே சென்றது. ஐந்து அப்பங்கள் கொண்டு வந்திருந்த அந்த சிறுவன் கூடை நிறைய அப்பங்களோடு திரும்பிச் சென்று கொண்டிருந்தான்.

ஏரோதின் காதுகளுக்கு இந்த செய்தி வந்தபோது இன்னும் அதிகமாகக் கலங்கினான். இயேசுவை இப்படியே வளரவிட்டால் ஒரு மிகப்பெரிய அரசியல் தலைவராகி தன்னுடைய இருக்கையை அசைத்து விடுவானோ ? முழு இஸ்ரவேல் குலத்துக்குமான அரசனாக அவன் ஆகிவிடுவானோ என்று அஞ்சினான். இயேசுவை அடக்கவேண்டும், அடங்காவிடில் அழிக்கவேண்டும் என்று ஏற்கனவே ஏரோதின் அரசவையில் குரல்கள் உயர ஆரம்பித்திருந்தன.

ஏரோது மீண்டும் சில உளவாளிகளை இயேசுவிடம் அனுப்பினான் இயேசுவைப்பற்றியும், அவருடைய திட்டங்களைப் பற்றியும் அறிந்து வர. இயேசு அவர்களிடம் எருசலேம் எப்போதுமே இறைவாக்கினர்களை வாழவைத்ததில்லை. அதனால் கடவுளின் சாபத்துக்கு ஆளாகியிருக்கும். அந்த நரியிடம் சொல்லுங்கள், நான் இன்றும் நாளையும் பணிசெய்யவேண்டும் என்று இயேசு துணிச்சலாய்ப் பேசினார்.

ஏரோது தகவல் கிடைத்ததும் நெற்றியைத் தேய்த்தான். அப்படியானால் இயேசு எருசலேமில் கொல்லப்படுவார் என்று அவராகவே சொல்கிறாரா ? அல்லது வேறு ஏதேனும் சொல்லவருகிறாரா ? அவனுக்கு விளங்கவில்லை.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink Closed

கடல் மீது கடவுள்

jesus-walking-on-water-benjamin-mcpherson

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink Closed

இயேசு சீடர்களை அழைத்து, ‘நீங்கள் கப்பர்நகூமுக்குச் செல்லுங்கள். நான் சற்று நேரம் கழித்து அங்கே வருகிறேன்’ என்று கூறி அவர்களை அனுப்பினார். சீடர்கள் படகில் ஏறி கப்பர்நாகும் புறப்பட்டார்கள். இயேசு அவர்களை அனுப்பிவிட்டு மலையில் ஏறி செபம் செய்யத் துவங்கினார். தன்னை மறந்த நிலையில் அவர் செபித்துக் கொண்டிருந்தார். நேரம் சென்று கொண்டிருந்தது. சீடர்கள் படகில் பயணித்துக் கொண்டிருந்தார்கள். திடீரென கடலில் சுழல்காற்று வீசத் துவங்கியது. கடல் அலைகள் படகை முன்னேற விடாமல் பின்னுக்குத் தள்ளின. சீடர்கள் மிகவும் சிரமப்பட்டு துடுப்பிழுத்துப் படகைச் செலுத்திக் கொண்டிருந்தார்கள். சிறிது நேரத்துக்கு முன்பு தான் இயேசு ஐந்து அப்பங்களைக் கொண்டு ஐயாயிரம் பேருக்கு வயிறார உணவளித்திருந்தார். அவர்கள் பயணம் முழுவதும் அந்த வியப்புச் செய்தியையே அசை போட்டுக் கொண்டிருந்தார்கள்.

இரவு முழுவதும் கடலில் மிகவும் சிரமத்துடன் ஐந்தாறு கிலோ மீட்டர் தொலைவு படகை ஓட்டிய சீடர்கள் மிகவும் களைப்படைந்தார்கள்.

இரவின் நான்காம் ஜாமம்.

கடலில் ஒரு உருவம் அவர்களை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தது.

சீடர்கள் கண்களைக் கசக்கினார்கள். உற்றுப் பார்த்தார்கள். யாரோ கடலின் மீது நடந்து வருகிறார். சீடர்கள் அந்த குளிர் இரவிலும் குப்பென்று வியர்த்தார்கள்.

‘ஐயோ… பேய்…பேய்’ சீடர்கள் தங்களை மறந்து அலறினார்கள். துடுப்புகள் அவர்களுடைய கையினின்று நழுவி ஓடின. அவர்கள் படகுக்குள் செய்வதறியாது திகைத்து நின்றனர்.

‘அஞ்சாதீர்கள்…’ குரல் ஒலித்தது. கடல் இரைச்சலின் இடையேயும் அந்த குரலை சீடர்கள் தெளிவாகக் கேட்டனர்.

‘இது… நம்முடைய இயேசுவின் குரல் போல இருக்கிறதே ! ‘

‘இல்லை… இது இயேசுவின் குரல் அல்ல. நாம் இயேசுவின் குரலைக் கேட்டுக் கேட்டு எந்தக் குரல் கேட்டாலும் அவர் குரல் போல் ஒலிக்கிறது.’

‘இயேசு எப்போதுமே படகில் தானே வருவார். அவர் தண்ணீரில் நடப்பதை நாம் பார்த்ததேயில்லையே !’ சீடர்கள் பதட்டமடைந்தார்கள்.

‘அஞ்சாதீர்கள் நான் தான்…’ இயேசு மீண்டும் சொன்னார்.

இந்த முறை சீடர்களின் பயம் போய்விட்டது. இயேசு தான் குரல் கொடுக்கிறார். பேய் அல்ல என்பதை அறிந்தனர். ஆசுவாசமடைந்தனர். ஆனாலும் அவர்களுடைய பயம் முழுமையாய்ப் போகவில்லை.

அவருடைய சீடர் சீமோன் அவரிடம்,’ ஆண்டவரே… வந்து கொண்டிருப்பது நீர் தான் என்றால் நானும் தண்ணீரில் நடந்து உம்மிடம் வரச் செய்யும் ‘ என்றார். பதட்டத்தில் என்ன சொல்கிறோம் என்பதே அவருக்குத் தெரியவில்லை.

‘வா…’ இயேசு அழைத்தார்.

சீமோன் தண்ணீரின் மீது கால்வைத்தார். ஆச்சரியமடைந்தார். அவர் மூழ்கவில்லை. அடுத்த காலையும் தண்ணீரில் வைத்தார் ! தரையில் நிற்பது போல தண்ணீரிலும் அவரால் நிற்க முடிந்தது. படகில் இருந்த சீடர்கள் எல்லாம் ஆரவாரக் குரல் எழுப்பினார்கள்.

சீமோன் இயேசுவை நோக்கி நடந்தார். இரண்டு மூன்று அடி தூரம் நடந்ததும் சுற்றிலும் பார்த்தார். இயேசு சற்றுத் தொலைவில் வந்து கொண்டிருக்கிறார். ஒருவேளை தான் அமிழ்ந்து போனால் என்ன செய்வது என்று ஒரு வினாடி பயந்தார். அவ்வளவு தான் அவருடைய கால்கள் தண்ணீருக்குள் சென்றன. கடலுக்குள் மூழ்கத் துவங்கினார் சீமோன்.

‘ஆண்டவரே … காப்பாற்றும்… கா….காப்பாற்றும்….’ சீமோன் அலற, படகிலிருந்த சீடர்களும் பெரும் குரலெடுத்து அலறினார்கள்.

இயேசு விரைந்து வந்து கை நீட்டி அவரைத் தூக்கினார்.

‘ஏன் நீ நம்பிக்கை இழந்தாய் ? நம்பிக்கையுடன் இருந்தபோது உன்னால் நடக்க முடிந்தது. நம்பிக்கை இழந்ததும் மூழ்கி விட்டாய் பார்த்தாயா ? நான் உன்னுடன் இருந்தும் உனக்கு நம்பிக்கையில்லையா ?’ இயேசு அவரைப் பார்த்துக் கேட்டார்.

‘மன்னியும் கடவுளே’ சீமோன் தலை கவிழ்ந்தார். இயேசு அவர்களோடு படகில் ஏறி அமர்ந்து பயணத்தைத் தொடர்ந்தார். சீடர்கள் இன்னும் திகைப்பிலிருந்து விடுபடாதவர்களாக அவரையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

வி¢டிந்து விட்டது. படகு மறுகரையை அடைந்தும் விட்டது.

அங்கும் மக்கள் கூட்டமாக நின்றார்கள். இயேசு தனியாக மலையில் செபிக்கச் சென்றிருந்ததையும் சீடர்கள் மட்டுமே படகில் ஏறி கப்பர்நாகூமுக்குப் புறப்பட்டதையும் பல படகுக்காரர்கள் கண்டிருந்தார்கள். எனவே அவர்கள் இப்போது இயேசுவும் படகில் வருவதைக் கண்டு ஆச்சரியப் பட்டார்கள்.

‘ரபீ… எப்போது வந்தீர் ?’ என்ற கேள்விகளுடன் கூட்டம் அவரைச் சூழ்ந்து கொண்டது.

மக்களின் மனநிலையைப் புரிந்து கொண்ட இயேசு,’ நீங்கள் வந்திருப்பது என்னுடைய போதனைகளுக்காகவோ, இறையரசைப் பற்றிய தேடலுக்காகவோ அல்ல. அப்பங்களுக்காகவே என்று அறிகிறேன். அழிந்து போகும் உணவுக்காக அலையாதீர்கள். அதைவிடப் பெரிய முடிவில்லா வாழ்வுக்காக வாழுங்கள்’ என்றார்.

‘அது எங்கே கிடைக்கும் ?’ மக்கள் கேட்டார்கள்.

‘நானே அந்த உணவு ! என்னை நம்புவதே உங்களுக்குப் பசியாற்றும் உணவு !’ இயேசு சொன்னார்.

‘உம்மை நம்பவேண்டுமெனில் நீங்கள் ஏதேனும் அருங்குறி காட்ட வேண்டும்’ மக்கள் கேட்டார்கள்.

‘அது தான் தினமும் பார்க்கிறீர்களே… நோயாளிகள் குணமடைகிறார்கள், இறந்தவர் எழுகிறார்கள்’ இயேசு சொன்னார்.

‘அது மட்டுமல்ல. மோசே காலத்தில் வானத்திலிருந்து அவர்களுக்கு மன்னா எனப்படும் உணவு பாலை நிலப் பயணத்தில் வழங்கப்பட்டதே.. அது போன்ற ஒரு அடையாளம் வேண்டும்’ மக்கள் இயேசுவை விடாமல் கேள்விகள் கேட்டனர்.

‘நானே உயிருள்ள உணவு. என்னை உண்பவனுக்குப் பசி எடுக்காது’ இயேசு சொன்னார்.

இயேசு சொன்னதன் பொருளை உணராத மக்கள், ‘ உம்மை எப்படி உண்பது ?’ என்று நகைத்தனர்.

‘என்னுடைய இரத்தத்தைக் குடிக்கவும் வேண்டும்…’ இயேசு சொன்னார்.

‘இது என்ன ? உம்முடைய பேச்சு மிதமிஞ்சிப் போகிறதே..’ அவர்கள் அவரை வித்தியாசமாய்ப் பார்த்தார்கள்.

சீடர்கள் பலரும் ‘ இவர் ஏதேதோ பேசத் துவங்கிவிட்டார். இனிமேல் நாம் இவருடன் சுற்றினால் மக்கள் நம்மையும் பைத்தியக் காரனாய்ப் பார்ப்பார்கள்…’ என்று பேசிக் கொண்டனர்.

சீடர்களில் பலர் இயேசுவை விட்டு விலகத் துவங்கினார்கள். ஆனால் பன்னிரண்டு அப்போஸ்தலர்களும் தங்கள் நிலையிலிருந்து எள்ளளவும் பின் வாங்கவில்லை. ஏரோது மன்னனின் உளவாளிகள் உலவுவதை அறிந்த பயம் பலரை பின்வாங்க வைத்தது. இயேசுவின் போதனைகள் வலுவடைந்ததும், இயேசு தன்னை வானகத் தந்தையின் மகன் என்று பேசியதும் கூட மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி பின்வாங்கத் தூண்டியது. அரசுக்கும் மதவாதிகளுக்கும் எதிராக இயேசு செயல்படுவதால் தங்களுக்கு நிச்சயமாகப் பிரச்சினை வரும் என்ற பயமும் பல சீடர்களை விலகிச் செல்ல வைத்தது. இயேசு கலங்கவில்லை. உறுதியான மனம் இல்லாதவர்கள் இறுதிவரை வருவதில்லை என்பதை அவர் அறிந்தே வைத்திருந்தார்.

 உறுதியற்றோர் உதிர்ந்தனர்

jesus-teaching-apostles-friends-1138161-wallpaper

இயேசு தன்னுடைய போதனைகளை குறைத்துக் கொள்ளவில்லை. நாளுக்கு நாள் அவருடைய போதனைகள் வலுவடைந்து கொண்டே வந்தன.

ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். பிறர் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களோ அதையே நீங்கள் பிறருக்குச் செய்யுங்கள். இறைவாக்குகளும் திருச்சட்டங்களும் இதைத் தான் சொல்கின்றன.

நான் உலகிற்கு அமைதியைக் கொண்டு வந்தேன் என்று எண்ணாதீர்கள். நான் வாளையே கொண்டு வந்தேன். வீட்டில் தந்தையை மகனுக்கு எதிராகவும், மகளை தாய்க்கு எதிராகவும் பிரிப்பேன். இயேசு சொன்னதைக் கேட்ட மக்கள் ஒரு வினாடி திகைத்தனர். இயேசு அவர்களுக்கு தான் சொன்னதன் விளக்கத்தை அளித்தார். என்னை விட தன் தந்தையையோ, தாயையோ அதிகம் நேசிப்பவன் எனக்கு ஏற்றவன் அல்ல. குடும்பத்தில் ஒருவர் என்னை ஏற்றுக் கொண்டால் ஒருவன் மறுதலிப்பான். அவர்களிடையே பிரிவினை வரும். உலகத்தின் செல்வங்களை வெறுத்து என்னைப் பின்பற்றி வருபவனே விண்ணரசுக்கு உரியவன்.

ஒருவனை விட்டு வெளியேறுகின்ற தீய ஆவி வறண்ட வெளிகளெங்கும் சுற்றித் திரியும். பின் தான் வெளியேறிய இடத்துக்கே திரும்பி வரும். அந்த இடம் சுத்தமாக்கப் பட்டு யாருமின்றி இருக்கக் கண்டால் தன்னை விடப் பொல்லாத ஏழு ஆவிகளைக் கூட்டி வந்து மீண்டும் அவனிடம் குடியேறும். அவனுடைய பிந்தைய நிலமை முந்தைய நிலமையை விட மோசமாகும்.

தீய ஆவி வெளியேறிய பின் மனதை நல்ல சிந்தனைகளாலும், இறைவனாலும் நிரப்ப வேண்டும். இல்லையேல் அழிவு மிகவும் மோசமானதாக இருக்கும்.

‘உயிர்ப்பும் உயிரும் நானே. என்னில் நிலைத்திருப்பவன் இறப்பினும் வாழ்வான். என் வழியாக அன்றி யாரும் தந்தையிடம் வர முடியாது’ இயேசு தன்னை இறைவனின் மகனாக மீண்டும் மக்கள் முன்னால் பிரகடனப் படுத்தினார். ‘மானிடமகன் உங்கள் பாவங்களுக்காக தன்னுடைய உயிரையே கொடுப்பார். தன்னைப் பலியாகக் கொடுத்து உங்கள் பாவங்களை மீட்பார். நண்பனுக்காக உயிரைக் கொடுப்பதை விட மேலான அன்பு உலகில் இல்லை.’ இயேசுவின் வார்த்தைகளைக் கேட்ட மக்கள் வியந்தனர். எருசலேம் ஆலயத்துக்குச் சென்று புறாவையோ, ஆடுகளையோ பலியிட்டு பாவங்களைத் தீர்ப்பது தான் வழக்கம். இதென்ன புது விதமான பலி என்று மக்கள் தங்களுக்குள் விவாதிக்கத் துவங்கினார்கள். இயேசு அதிசயங்களை செய்து கொண்டிருந்தபோது வியந்த மக்களும், பாராட்டிய மக்களும் இயேசுவின் இந்த போதனைகளினால் சற்று கலவரப்பட்டுப் போனார்கள்.

ஒருவர் பின் ஒருவராக ஏராளமானோர் தன்னை விட்டு விலகிப் போவதைக் கண்ட இயேசு தன்னுடைய நம்பிக்கைக்குரிய சீடர்கள் பன்னிரண்டு பேரையும் திரும்பிப் பார்த்தார்.
‘நீங்களும் போய்விட எண்ணுகிறீர்களா ?’ இயேசு கேட்டார்.

இயேசு கடலில் நடந்து வந்த அதிசயத்தின் பாதிப்பே அவர்களின் கண்களை விட்டுப் போகவில்லை. அதற்குள் இயேசுவின் கேள்வி.

‘இல்லை ஆண்டவரே ! வாழ்வு தரும் வார்த்தைகள் உம்மிடம் இருக்க நாங்கள் யாரிடம் போவோம் ?’ அவர்கள் உறுதியுடன் சொன்னார்கள்.

‘நீங்கள் பன்னிரண்டு பேரும் என்னுடன் கடைசி வரை இருப்பீர்கள் தானே !’

‘கண்டிப்பாக இருப்போம் கடவுளே’ அவர்கள் சொன்னார்கள்.

‘நீங்கள் இருப்பீர்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால் உங்களிலும் ஒரு அலகை இருக்கிறான்.’ சொல்லிய இயேசு யூதாஸைப் பார்த்துப் புன்னகைத்தார்.

அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink Closed

பெதஸ்தா குளமும், ஓய்வு நாளும்

bethesda4
எருசலேமில் பாஸ்கா விழா நெருங்கி வந்தது. இயேசு விழாவுக்காக எருசலேமிற்குச் சென்றார். எருசலேம் ஆலயத்திலுள்ள குருக்களும், மறைநூல் அறிஞர்களும் இந்த முறை இயேசு ஏதேனும் தகராறு செய்தால் தக்க பதிலடி கொடுக்கவேண்டும் என்று காத்திருந்தார்கள்.

எருசலேமில் இருந்த ஒரு நகர வாசலின் பெயர் ஆட்டு வாசல். அதன் அருகே ஒரு குளம் உண்டு அதன் பெயர் பெத்சதா. அந்த குளத்தைச் சுற்றிலும் ஐந்து மண்டபங்கள் இருந்தன. அந்த ஐந்து மண்டபங்களிலும் எப்போதும் நோயாளிகள் நிரம்பி வழிவார்கள். அழகான சூழலுடன் கூடிய அந்தக் குளம் நோயாளிகளின் மண்டபம் ஆனதற்கு ஒரு சிறப்புக் காரணம் உண்டு.

கடவுளின் தூதர்கள் அவ்வப்போது வந்து அந்தக் குளத்தைக் கலக்குவார்கள். அப்படி குளம் கலங்குவதற்காகத் தான் அனைவரும் காத்திருப்பார்கள். குளத்தை அவர்கள் கலக்கியதும் முதலில் அந்தக் குளத்தில் இறங்கும் மனிதன் எந்த நோயினால் பீடிக்கப்பட்டிருந்தாலும் உடனே குணமாவான். இது தான் அந்தக் குளத்தின் அற்புதச் சிறப்பு. அதற்காகத் தான் நோயாளிகள் அனைவரும் குளத்தைச் சுற்றிக் காவல் இருப்பார்கள். தேவதூதர் வந்து குளத்தைக் கலக்கியதும் அதில் இறங்குவதற்காக நோயாளிகள் முண்டியடித்து முன்னேறுவார்கள். அந்த பாக்கியம் ஒருவனுக்குக் கிடைக்கும். மற்றவர்கள் சோர்வுடன் மீண்டும் தங்கள் இடத்துக்கு வந்து படுத்துக் கொள்வார்கள்.

தூதர்கள் அடிக்கடி வருவதில்லை. எனவே நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்தது. பல வருடங்களாகக் காத்திருக்கும் நோயாளிகள் ஏராளமானோர் அங்கே இருந்தனர். அவர்களுடைய எதிர்பார்ப்பு எல்லாம் சுகம் பெறுவது மட்டுமே. அவர்கள் தேவதூதனுக்காகக் காத்திருப்பதிலேயே தங்கள் ஆயுளைக் கரைத்துக் கொண்டிருந்தார்கள்.

இயேசு அந்தக் குளத்தைப் பார்ப்பதற்காகச் சென்றார்.

குளத்தைச் சுற்றியிருந்த மண்டபங்களில் நடந்து திரிந்த இயேசு அங்கே நோய்வாய்ப்பட்டிருந்த மக்களின் நிலையைக் கண்டு கண்கலங்கினார். அந்த நோயாளிகள் கூட்டத்திலேயே ஆதரவு ஏதும் இல்லாமல், தனிமையாக, படுக்கையில் ஒரு மனிதன் கிடப்பதைக் கண்டார். அவனுடைய தோற்றமும், முதிர் வயதும் அவரைப் பாதித்தன. அந்த மனிதனுக்குச் சுகம் கொடுக்கவேண்டும் என்று இயேசு முடிவு செய்தார்.

‘ஐயா… நீர் சுகமடைய விரும்புகிறீரா ?’ இயேசு நேரடியாகக் கேட்டார்.

‘ஐயா, நான் முப்பத்து எட்டு ஆண்டுகளாக இந்த மண்டபத்தில் காத்திருக்கிறேன். தேவதூதர்கள் ஒவ்வொரு முறை வந்து குளத்தைக் கலக்கும்போதும் ஆவலுடன் குளத்தில் இறங்குவதற்காகப் போவேன். என்னால் நடக்க முடியாது. தவழ்ந்துத் தவழ்ந்து நான் அங்கே செல்வதற்கு முன் வேறொருவர் இறங்கி விடுவார். எனக்கு ஏமாற்றம் மட்டுமே கிடைக்கும். இது தான் நடக்கிறது. எப்படியாவது சுகம் கிடைக்காதா என்ற எதிர்பார்ப்பில் தான் முப்பத்தெட்டு ஆண்டுகளாக இந்த இடத்தில் கிடக்கிறேன்’ அவர் ஏக்கத்துடன் சொன்னார்.

‘எழுந்து உம்முடைய படுக்கையை எடுத்துக் கொண்டு செல்லும்’ இயேசு சொன்னார்.

‘என்னால் எழும்பவே முடியாது. எழுந்து படுக்கையை வேறு எடுத்துக் கொண்டு செல்வதா ? அதெல்லாம் நடக்கிற காரியமா ?’ அந்த மனிதன் சொல்ல நினைத்த வார்த்தைகள் தொண்டையுடன் நின்றன. அவனுடைய உடலெங்கும் மின்சாரம் பாய்ந்தது போல ஒரு உணர்வு. காலை அசைத்துப் பார்த்தான். அசைகிறது. கைகளை அசைத்துப் பார்த்தான். வலி இல்லை. அவனால் அவனையே நம்ப முடியவில்லை.

எழுந்தான் ! அவனிடமிருந்த நோய் விடைபெற்று ஓடியிருந்தது. கைகளுக்கும் , கால்களுக்கும் புதுத் தெம்பு வந்திருந்தது.

தன்னுடைய படுக்கையைத் தூக்கினான். அவனுடைய ஆனந்தத்துக்கு அளவே இல்லை. முப்பத்து எட்டு ஆண்டுகளாக படுக்கை இவனைச் சுமந்தது. இப்போது தான் முதல் முறையாக இவன் படுக்கையைச் சுமக்கிறான். ஓடினான். ஆனந்தம் மேலிட ஓடினான்.

அவன் சுகமான அந்த நாள். ஒரு ஓய்வு நாள் !

ஓய்வு நாள் என்பது யூதர்கள் மிகவும் கடுமையாகக் கடைபிடிக்கும் ஒரு நாள். அன்றைய தினம் யாரும் எந்த வேலையும் செய்யக் கூடாது. சிறு துரும்பைக் கூட கிள்ளி அந்தப் பக்கம் போடக்கூடாது என்பது தான் அவர்களுடைய சட்டம் காட்டும் வழிமுறை. இந்த நாளில் தான் இவன் படுக்கையைத் தூக்கிக் கொண்டு நடக்கிறான்.

‘ஏய்… நில்… நில்… இன்று ஓய்வு நாள் என்று தெரியாதா ? படுக்கையைத் தூக்கிக் கொண்டு போகிறாய் ? அதைக் கீழே போடு’ வழிமறித்த ஒருவன் கத்தினான்.

‘ஐயா… அது முடியாது ! என்னைக் குணமாக்கியவர் படுக்கையையும் சுமந்து கொண்டு போகத் தான் சொல்லியிருக்கிறார்’

‘உன்னைக் குணமாக்கினவரா ?’

‘ஆம்.. நான் முப்பத்து எட்டு ஆண்டுகளாக நோயால் வாடிக் கொண்டிருந்தேன். இன்றைக்குத் தான் சுகம் பெற்றேன். என்னை ஒருவர் சுகமாக்கினார். அவர் தான் எனக்குக் கடவுள். அவர் சொல்வது தான் எனக்குச் சட்டம். படுக்கையைக் கீழே போட முடியாது’ அவன் மறுத்தான். இதற்குள் அங்கே ஒரு கூட்டம் கூடி விட்டது.

‘என்ன ? என்ன விஷயம் ?’ அங்கே ஒரு பரபரப்புச் சூழ்நிலை உருவானது.

‘இதோ… இவனைப் பாருங்கள். படுக்கையைத் தூக்கிக் கொண்டு நடக்கிறான். நம்முடைய ஓய்வு நாளை இழிவு படுத்துவதல்லவா இது ? கேட்டால், யாரோ இவனை சுகமாக்கி விட்டார்களாம். சுகமாக்கியவன் இவனிடம் படுக்கையையும் தூக்கிக் கொண்டு போகச் சொன்னானாம். அதனால் இவன் படுக்கையைக் கீழே போட மாட்டானாம் !..’

‘உன்னிடம் படுக்கையைத் தூக்கிக் கொண்டு நடக்கச் சொன்னவன் யார் ?’ கூட்டத்தினர் குரல் உயர்த்தினர்.

மக்கள் யாரும் அவன் சுகம் பெற்றதைப்பற்றி மகிழ்ச்சியோ, அவன் நோய்வாய்ப்பட்டிருந்ததை நினைத்து வருத்தமோ கொள்ளவில்லை. அவர்களுடைய எண்ணமெல்லாம் ஓய்வு நாளில் இவனை வேலை செய்யச் சொன்னது யார் என்பதைப் பற்றியே இருந்தது.

சுகமானவர் இயேசுவைத் தேடினார். அவர் எங்கும் இல்லை !
‘அவரைக் காணோம்…’

‘அவரைக் கண்டால் உடனே எங்களிடம் சொல்லவேண்டும். புரிகிறதா ? ‘ கூட்டத்தினர் மிரட்டினர்.

தான் சுகமான ஆனந்த நிகழ்ச்சிக்கு முன்னால் கூட்டத்தினரின் மிரட்டலும், சத்தமும், கோபமும் அவனை ஒன்றும் செய்யவில்லை. அவன் நேராக ஆலயத்துக்குச் சென்றான்.

‘கடவுளே… தூதர்கள் குளத்தைக் கலக்கியபோதெல்லாம் சுகம் பெறும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை என்பதால் என்னைக் குணமாக்க தனியே ஒரு தூதரை அனுப்பினீரே. உமது கருணைக்கு முன்னால் தான் பணிகிறேன்’ அவன் உள்ளம் உருக செபித்தான். செபித்துமுடித்து கண்களைத் திறந்தவனுக்கு முன்னால் புன்னகையுடன் இயேசு !

‘ஐயா… நீ…நீர்… இங்கேயா இருக்கிறீர்’

இயேசு புன்னகைத்தார். ‘ நோய் உன்னை விட்டு விலகிவிட்டது. பாவம் உன்னை அணுகாமல் பார்த்துக் கொள்’. சொல்லிவிட்டு இயேசு அகன்றார்.

குணமானவன் நேராக யூதர்களிடம் சென்றான்,
‘என்னைக் குணமாக்கியவரைக் காணவேண்டும் என்றீர்களே. அதோ போகிறாரே ! அவர்தான் என்னைக் குணமாக்கியவர்’ என்றான்.

யூதர்கள் விரைந்து சென்றார்கள்.

 ‘ஏய்… நில்….’

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink Closed

இயேசு திரும்பினார்.

‘ஓ… நீ தானா அது ? கலகம் செய்வதற்காகவே எருசலேம் தேவாலயத்துக்கு வருவாயோ ? போன முறை வந்து எல்லோரையும் அடித்தாய். இப்போது எங்கள் சட்டங்களை மீறுகிறாயா ?’ அவர்கள் ஆத்திரமடைந்தார்கள்.

‘எருசலேம் தேவாலயம் என் தந்தையின் வீடு. இங்கே வருவதற்கு யாருடைய அனுமதியும் எனக்குத் தேவையில்லை’

‘வருவது சரி. எல்லோரையும் போல அமைதியாய் வந்து விட்டுப் போகவேண்டியது தானே. ஏன் கலகம் மூட்டுகிறாய் ? ஓய்வு நாளில் பணிகள் எதையும் செய்யக் கூடாது என்று உனக்குத் தெரியாதா ?’ அவர்களின் கோபம் அதிகரித்தது.

‘என் தந்தை இன்றும் பணியாற்றுகிறார். நானும் பணியாற்றுவேன்.’ இயேசு தெளிவாகச் சொல்ல அவர்களின் ஆத்திரமோ கரைகடந்தது.

‘யார் உன் தந்தை !’

‘நீங்கள் யாரைக் கடவுள் என்று சொல்கிறீர்களோ, அவர் தான் என் தந்தை. நான் அவருடைய மகன்.’ இயேசு சொல்ல மக்கள் கோபத்தின் உச்சிக்குச் சென்றார்கள்.

‘ஓய்வு நாள் சட்டத்தை மீறியதும் இல்லாமல் உன்னைக் கடவுளின் மகனாக வேறு காட்டிக் கொள்கிறாயா ?’

‘நானாக எதையும் செய்வதில்லை. தந்தை என்னிடம் என்ன சொல்கிறாரோ அதைத் தான் நான் செய்கிறேன்.’ இயேசுவின் குரல் உறுதியாக ஒலித்தது.

‘உனக்கு என்ன தைரியம் இருந்தால் இப்படியெல்லாம் பேசுவாய் ?’

‘இதற்கே இப்படித் திகைக்கிறீர்களே. தந்தை தீர்ப்பு அளிக்கும் அதிகாரத்தையும் எனக்கு அளித்துள்ளார். என்னை மதிக்காதவன், என் தந்தையை அவமதிக்கிறான். என்னைப் பற்றி நானே சான்று பகர்தல் முறையல்ல. மனிதனின் சான்று எனக்குத் தேவையுமில்லை. ஆனாலும் உங்களுக்குச் சொல்கிறேன். யோவான் என்னைப்பற்றி சான்று பகர்ந்தாரே தெரியாதா ?’ இயேசு அசராமல் சொன்னார்.

‘நீ அளவுக்கு அதிகமாகப் பேசுகிறாய்….’ கூட்டத்தினரின் குரலில் எரிச்சல் மேலிட்டது.

‘ஒரு காலம் வரும் அப்போது நீங்கள் என்னைப்பற்றி அறிவீர்கள். மறைநூலில் சுட்டிக் காட்டப்பட்டுள்ள மீட்பர் நான் என்பதை உணர்வீர்கள்’ இயேசு கூட்டத்தினரின் கோபத்துக்குக் கட்டுப்படவில்லை.

அதற்குள் இயேசுவின் போதனைகளை ஆங்காங்கே கேட்டும், கடந்த ஓராண்டு காலமாக அவரை அறிந்தும், அவரால் அற்புதங்களை பெற்றும் இருந்த கூட்டத்தினர் இயேசுவுக்கு ஆதரவாக அவருக்குப் பின்னால் திரண்டார்கள்.

இயேசுவின் ஆதரவாளர்களின் கூட்டம் அதிகரிப்பதைக் கண்ட எதிர்ப்பாளர்கள் உள்ளுக்குள் கொலைவெறியுடன், எப்படியாவது இவனைக் கொன்று விடவேண்டும் என்ற தீர்மானத்துடனும் அகன்றார்கள்.

அந்த ஓய்வு நாள் அனைவரின் ஓய்வையும் பறித்துக் கொண்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink Closed

 சுற்றி வளைத்த குற்றச்சாட்டுகள்

Sermon_on_the_Mount

பரிசேயர்கள் விடவில்லை. எல்லா விதங்களிலும் இயேசுவை எப்படியேனும் சிக்க வைக்கவேண்டும் என்பதிலேயே தங்கள் நேரத்தையெல்லாம் செலவிட்டார்கள். இயேசு உண்ணும்போது கூட அவரை விட்டு வைக்கவில்லை.

இயேசுவும் சீடர்களும் கைகளைக் கழுவாமல் அப்பங்களை உண்கிறார்கள் என்று குற்றம் சாட்டினார்கள் பரிசேயர்கள்.
‘தூய்மைச் சட்டங்களை ஒரு இறைவாக்கினரும், கடவுளின் மகனாக தன்னைக் காட்டிக் கொள்பவரும் கடைபிடிக்கவில்லையென்றால் எப்படி ? நீர் கடைபிடிக்காததால் அவற்றை உமது சீடர்களும் கடைபிடிப்பதில்லை. முன்மாதிரிகை காட்டவேண்டிய நீங்களே இப்படி இருந்தால் அது தவறில்லையா ?’

இயேசு அவர்களை திரும்பிப் பார்த்தார்.

‘நீங்கள் எல்லாம் கடவுளை உதடுகளினால் புகழ்பவர்கள். ஆனால் உங்கள் உள்ளம் என்னை விட்டு வெகு தொலைவில் இருக்கிறது. நீங்கள் இப்படிப் புகழ்வது வீண். கடவுளின் கட்டளைகளைக் கடைபிடியுங்கள் என்று நான் வலியுறுத்தினால் நீங்களோ மனிதரின் சட்டங்களையே பற்றிக்கொண்டிருக்கிறீர்கள். பாத்திரங்களைக் கழுவுவதும், கைகளைக் கழுவுவதும் தான் உங்களுக்குப் பிரதானமாய்ப் படுகிறது.’ இயேசுவின் துணிச்சலான பதிலடி பரிசேயர்களை சற்று திணறடித்தது.

‘உள்ளே செல்வது மனிதனை மாசுபடுத்தாது. உள்ளிருந்து வெளியே வருவது தான் மனிதனை மாசுபடுத்தும். மனிதன் உண்ணும் உணவு எதுவானாலும் அவனுடைய வயிற்றுக்குள் சென்று பின் கழிவாகி அழிந்து விடும். ஆனால் அவனுடைய வாயினின்று வரும் சொற்கள் உள்ளத்திலிருந்து தான் உருவாகின்றன. தீய எண்ணங்கள், பரத்தமை, களவு, பொய்சான்று இவையெல்லாம் உள்ளத்திலிருந்து வருபவை. இவை தான் மனிதனை மாசு படுத்தி அழிவுக்குள் தள்ளுகின்றன’

கடவுளின் சட்டத்தைக் கடைபிடியுங்கள் அதுதான் உங்களுக்கு நல்லது ‘தாய் தந்தையரைச் சபிப்போர் கொல்லப்படவேண்டும் என்பது தான் கடவுளின் சட்டம் நீங்கள் என்ன செய்கிறீர்கள் ? என் தாய் தந்தையருக்குத் தரவேண்டியது கடவுளுக்குக் காணிக்கையாயிற்று என்று சொன்னால் தாய் தந்தையருக்கு எதுவும் தரவேண்டாம் என்கிறார்கள். இதெல்லாம் உங்கள் மரபின் முறையாம். முதலில் சரியானவைகளைச் செய்யுங்கள். கடவுளை உள்ளத்தால் பின்பற்றுங்கள்’ இயேசு பரிசேயர்களுக்கு பதிலடி கொடுத்தார்.

இயேசுவின் பதில்கள் எருசலேம் குருக்களை எரிச்சலடையச் செய்தது. சரியான தருணத்துக்காய் அவர்கள் காத்திருந்தார்கள்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink Closed

கேட்டால் கிடைக்கும்

christ_canaanite_woman

இயேசு தம்முடைய சீடர்களையும் அழைத்துக் கொண்டு தீர், சீதோன் பகுதி வழியாகச் சென்று கொண்டிருந்தார். சீதோன் ஒரு மிகப் பழமையான நகரம். இயேசுவும் சீடர்களும் தனியாக நடந்து கொண்டிருந்தார்கள். இயேசுவின் வருகை அங்கே யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. சீடர்களின் பணிகள் என்னவென்பதைக் குறித்தெல்லாம் இயேசு அவர்களிடம் விளக்கிக்கொண்டிருந்தார்.

ஆனால் அந்த தனிமை நீண்ட நேரம் நீடிக்கவில்லை. திடீரென்று ஒரு அழுகுரல் பின்னாலிருந்து ஒலித்தது. இயேசுவும் சீடர்களும் திரும்பிப் பார்த்தார்கள்.
அவர்களுக்குப் பின்னால் தூரத்திலிருந்து ஒரு பெண் அழுது கொண்டே அவர்களுக்குப் பின்னால் ஓடி வருவது தெரிந்தது.

‘ஆண்டவரே… எனக்கு இரங்கும்…. என் மகள் பேய் பிடித்து மிகவும் துன்பப்படுகிறாள்’ அவள் கதறினாள். அவள் ஒரு கனானியப் பெண் !

இயேசு எதையும் கண்டு கொள்ளாமல் நடந்து கொண்டிருந்தார்.

அவள் தொடர்ந்து அவருக்குப் பின்னால் அழுதுகொண்டே வந்தாள். சீடர்களை அவளுடைய கண்ணீர் கரைத்தது. அவர்கள் இயேசுவிடம்

‘இயேசுவே… அவளை ஏதாவது சொல்லி அனுப்பி விடும்… வருத்தமாக இருக்கிறது’ என்றார்கள்.

இயேசு அவளிடம், ‘ பிள்ளைகளின் உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல. நான் இஸ்ரயேல் குல மக்களை மீட்கவே அனுப்பப்பட்டேன். கனானியர்களை மீட்க அல்ல’ இயேசு சொன்னார்.

இயேசுவின் பதில் சீடர்களை வியப்பில் ஆழ்த்தியது. ஆனாலும் ஒன்றும் பேசாதிருந்தார்கள். இயேசுவோ அந்தப் பெண்ணின் நம்பிக்கையைச் சோதிப்பதற்காகவே அப்படி ஒரு பதிலைச் சொன்னார். அவளிடமோ கடல் போல் நம்பிக்கை நிறைந்திருந்தது.

அவள் அவரிடம்,’ ஆம் போதகரே. பிள்ளைகளின் உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல தான். ஆனாலும் தங்கள் உரிமையாளனின் மேஜையிலிருந்து விழும் துண்டுகளை நாய்க்குட்டிகள் தின்னுமே’ என்றாள்.

இயேசு புருவங்களை உயர்த்தினார். ‘ அம்மா.. உன் விசுவாசம் பெரிது. நீர் விரும்பிய படியே உன் மகளுக்கு நடக்கட்டும்’ என்றார். அந்த கணமே அவளுடைய மகள் பேய் நீங்கி நலமடைந்தாள்.

சிறிது நேரத்துக்குப் பின் சீடர்கள் அவரிடம்,’ நாங்கள் இஸ்ரயேல் மக்களிடம் மட்டும் தான் பணிசெய்ய வேண்டுமா ?’ என்று கேட்டார்கள்.

நான் அவளுடைய விசுவாசத்தைச் சோதித்தறியவே அவ்வாறு கேட்டேன். நான் முன்னமே உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன். நம்பிக்கையே முக்கியம். நம்பிக்கை இருந்தால் இஸ்ரயேலர் மீட்படையாமல் இருப்பதும், விசுவசித்தால் கிழக்கிலும் மேற்கிலுமிருந்து மக்கள் வந்து விண்ணகத்தில் நம் மூதாதையரோடு அமர்வதும் நிகழும். ஒரு கதை சொல்கிறேன் கேளுங்கள்

ஒரு ஊரில் நடுவர் ஒருவர் இருந்தார். அவர் கடவுளுக்கும் அஞ்சுவதில்லை மனிதரையும் மதிப்பதில்லை. அந்த ஊரில் ஒரு கைம்பெண்ணும் இருந்தாள். அவளுக்கு நீதி வழங்க வேண்டிய இந்த நடுவர் அவளைக் கண்டுகொள்ளவேயில்லை.

கைம்பெண் விடவில்லை. மனம் தளரவும் இல்லை. தொடர்ந்து சென்று அவரிடம் மன்றாடிக் கொண்டே இருந்தாள். காலையிலும், மாலையிலும், பார்க்கும் போதெல்லாம் அவரிடம் கெஞ்சி மன்றாடிக் கொண்டே இருந்தாள்.

நடுவர் வேறு வழியில்லாமல் கடைசியில் அந்தப் பெண்ணிடம், ‘ அம்மா.. நான் யாருக்கும் பயப்படமாட்டேன். ஆனால் உன்னுடைய தொந்தரவு தாங்க முடியவில்லை. இதற்காகவாவது நான் உனக்கு நீதி வழங்க வேண்டும்’ என்றான்.

அந்தப் பெண் நீதி பெற்றாள்.

ஒரு நீதியற்ற நடுவரே இப்படிச் செய்வாரென்றால், தொடர்ந்து செபித்து வரும் உங்களுடைய விண்ணப்பங்களை நேர்மையின் பிறப்பிடமான கடவுள் நிராகரிப்பாரோ ?

எனவே செபத்தை இறுக்கமாய்ப் பற்றிக் கொள்ளுங்கள். கேட்பது கிடைக்கும் வரை நம்பிக்கையுடன் மன்றாடுங்கள்.

செபிக்கும்போது தாழ்மையான மனதுடன் செபியுங்கள்.

ஒரு கதை சொல்கிறேன் கேளுங்கள்,

இருவர் செபம் செய்ய ஆலயத்துக்குச் சென்றார்கள். ஒருவர் பரிசேயர். அவர் தம்மை நீதிமானாகக் கருதிக் கொண்டிருப்பவர். இன்னொருவர் வரிவசூலிப்பவர்.

பரிசேயர் ஆலயத்துக்குள் சென்றார். கடவுளின் சந்நிதி முன்னால் நிமிர்ந்து நின்று கொண்டு உரத்த குரலில் பேச ஆரம்பித்தார்.

‘கடவுளே… நான் கொள்ளையனாகவோ, வரி வசூலிக்கும் கேவலமான தொழில் செய்பவனாகவோ, விபச்சாரம் போன்ற தீய பழக்கங்களில் ஈடுபடும் மற்ற மக்களைப் போலவோ இல்லாததற்காய் உமக்கு நன்றி செலுத்துகிறேன்’

‘வருவாயில் பத்தில் ஒரு பங்கை நான் காணிக்கை செலுத்தத் தவறியதேயில்லை’

‘வாரத்தில் இரண்டு முறை நோன்பு இருக்கிறேன்’…. பரிசேயன் தன்னைப்பற்றி அடுக்கிக் கொண்டே போனான்.

வரிவசூலிப்பவனோ வானத்தை ஏறிட்டுப் பார்க்கவும் தயங்கியவனாய்
‘கடவுளே நான் பாவி. என்னை மன்னியும்’ என்ற ஒற்றை வார்த்தையை உள்ளத்தின் ஆழத்திலிருந்து உச்சரித்தான்.

கதையைச் சொன்ன இயேசு, ‘ பரிசேயன் அல்ல, அந்த வரிவசூலிப்பவன் தான் கடவுளுக்கு ஏற்புடையவனாய்த் திரும்பிச் சென்றான். ஏனென்று தெரியுமா ?’ என்று கேட்டார்.

கூட்டத்தினர் அமைதிகாத்தனர்.

‘ஏனென்றால், தன்னைத் தாழ்த்துபவன் உயர்த்தப்படுவான். தன்னை உயர்த்துபவன் தாழ்த்தப்படுவான் !’ இயேசு சொல்ல சீடர்கள் தலையாட்டினார்கள்.

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink Closed

நான் யார் ?

Jesus with disciples

சில நாட்களுக்கு முன் ஐந்து, அப்பங்களைக் கொண்டு ஐயாயிரம் பேருக்கு உணவளித்த இயேசு மீண்டும் ஒரு முறை அதே புதுமையைச் செய்தார். இந்தமுறை ஏழு அப்பங்களைக் கொண்டு நாலாயிரம் பேர் உணவு உண்டார்கள்.

எருசலேம் தேவாலய ஒற்றர்களும், ஏரோது மன்னனின் உளவாளிகளும் இயேசுவைப் பின்தொடர்ந்து நடப்பதை அனைத்தையும் அறிந்து தகவல் அனுப்பிக் கொண்டே இருந்தார்கள். இயேசுவின் உணவு வினியோகிக்கும் புதுமை அவர்களை நிலைகுலையச் செய்தது. மக்களின் பசியை ஆற்றும் வல்லமை ஒருவருக்கு இருக்கிறது என்றால் அவன் விரைவில் மிகப்பெரிய மக்கள் செல்வாக்கை அடையமுடியும். எனவே இயேசுவை மக்கள் அணுகவிடாமல் செய்தாக வேண்டும், அவர்கள் மீண்டும் திட்டமிட்டார்கள். அவர்கள் மனதில் உதித்தது ஒரு திட்டம்.

‘இயேசு பேய்பிடித்தவர்’. இயேசு பேயோட்டுவது கடவுளின் ஆவியினால் அல்ல. சாத்தானின் உதவியினால். நரகத்தின் செயல்களையே இயேசு செய்து கொண்டிருக்கிறார். எனவே அவரிடம் செல்லாதீர்கள். என்று மக்களிடையே வதந்தியைக் கிளப்பி விட்டார்கள். ஊரெங்கும் இந்த செய்தி மெல்ல மெல்ல நுழைந்தது.

இயேசுவை சந்தித்த பரிசேயர்கள் கேட்டார்கள், ‘பேய்களைக் கொண்டு தானே பேயோட்டுகிறீர் ? பேய்களின் தலைவனான பெயல்சபூல் உங்கள் வசம் இருக்கிறான் என்பது உண்மை தானே.. சொல்லும்’

‘சாத்தான் சாத்தானுக்கு எதிராய் எழுவானா ? ஒரு வீடு தனக்கு எதிராகவே போரிட்டால் வாழுமா ? ஒரு நாடு தனக்கு எதிராகவே போரிடுமா ? தீமையைக் கொண்டு தீமையை அழிக்க முடியுமா ? சொல்லுங்கள்’ இயேசு கேள்விக்குக் கேள்விகளையே பதிலாய்க் கொடுத்தார்.

தனக்கு எதிராய் ஒரு வதந்தி உலவுவதை அறிந்த இயேசு தனிமையில் தன்னுடைய சீடர்களை அழைத்தார்.

‘மக்கள் என்னை யார் என்று சொல்கிறார்கள் ?’ இயேசு கேட்டார்.

இயேசுவின் திடீர் கேள்வியினால் வியப்புற்ற சீடர்கள் ஒருவரை ஒருவர் பார்த்தார்கள். யோர்தான் நதியிலிருந்து வீசும் காற்று அவர்களை இதமாய் வருடிக்கொண்டிருந்தது. சீடர்கள் பதிலளிக்கத் துவங்கினார்கள்.

‘சிலர் உங்களை திருமுழுக்கு யோவான் திரும்பி வந்தது போல பார்க்கிறார்கள்’

‘சிலர் உங்களைப் போதகர் என்கிறார்கள்’

‘சிலர் உங்களை இறைவாக்கினர் என்கிறார்கள். குறிப்பாக எலியா இறைவாக்கினர் மீண்டும் வந்திருக்கிறார் என்கிறார்கள்’ எலியா இறைவாக்கினர் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இஸ்ரயேல் மக்களிடையே வாழ்ந்த ஒரு மிகப் புகழ் பெற்ற தீர்க்கத்தரிசி. அவர் குணமாக்குதல், இறந்தோரை உயிர்த்தெழவைத்தல் போன்ற பல அற்புதங்களைச் செய்தவர். அச்சமில்லாமல் அரசவைகளில் முழக்கமிட்டவர். இயேசுவும் ஒரு விதத்தில் அவருடைய பணிகளையே பிரதிபலித்ததால் மக்கள் இயேசுவை எலியா இறைவாக்கினராக இருப்பாரோ என்று சந்தேகித்தனர்.

இயேசு சீடர்கள் சொன்னதையெல்லாம் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்துவிட்டு சீடர்களிடம் திரும்பினார்.
‘நீங்கள் என்னை யாரென்று நினைக்கிறீர்கள் ?’

இயேசுவின் கேள்வியைக் கேட்டவுடன் சீடர்களிடையே கண நேரம் மெளனம் நிலவியது. பேதுரு சட்டென்று அந்த மெளனத்தைக் கலைத்தார்.

‘நீர் கடவுளின் மகன். இறைமகன்’

‘பேதுருவே நீ பேறுபெற்றவன்’ இயேசு உற்சாகமாய் சொன்னார். ‘ஏனெனில் உனக்கு இதை வெளிப்படுத்தியது மனிதரல்ல, விண்ணகத்தில் இருக்கும் எனது தந்தையே. நான் உனக்குச் சொல்கிறேன். நீ பாறை. உன்மேல் எனது திருச்சபையை நான் கட்டுவேன். விண்ணகத்தின் திறவுகோல்களையும் நான் உன்னிடமே தருவேன். நீ பூமியில் கட்டுபவை எல்லாம் விண்ணகத்திலும் கட்டப்படும். நீ பூமியில் அனுமதிப்பவை மட்டுமே விண்ணகத்திலும் அனுமதிக்கப்படும்’ இயேசு சொன்னார்.

சீடர்கள் அவர் சொன்னதன் பொருளை முழுதாகப் புரிந்து கொள்ளவில்லை.

‘நான் இப்போது மிகவும் முக்கியமான ஒரு விஷயத்தை உங்களிடம் சொல்லப் போகிறேன்’ இயேசு சொல்ல சீடர்கள் கவனமானார்கள். இயேசு அடுத்து செய்யப் போகும் ஏதோ ஒரு அதிசயச் செயலைக் குறித்தோ, போதனையைக் குறித்தோ, பயணத்தைக் குறித்தோ பேசுவார் என்று அவர்கள் எதிர்பார்த்திருந்தார்கள்.

இயேசு அவர்களிடம்,’ நான் இப்போது சொல்லப் போவது இதுவரை சொல்லாதது.’ என்றார்.

சீடர்கள் இன்னும் கூர்மையானார்கள்.

‘என்னுடைய பயணத்தின் கடைசிப் பகுதிக்கு வந்திருக்கிறேன். இதுவரை நீங்கள் என்னுடன் நடப்பதைப் பெருமையாகவும், பாதுகாப்பாகவும், மகிழ்வாகவும் கருதினீர்கள். ஆனால் இனிமேல் அப்படியல்ல… நீங்கள் உங்களைக் குறித்துப் பயப்பட ஆரம்பிப்பீர்கள்’ என்றார்.

‘அது ஏன் ஆண்டவரே அப்படிச் சொல்கிறீர் ?’

‘இதுவரை நீங்கள் நான் செய்த அற்புதங்களைக் கண்டீர்கள் ! இனிமேல் தான் நீங்கள் நான் அனுபவிக்கப் போகும் பாடுகளைப் பார்க்கப் போகிறீர்கள்’ இயேசு சொன்னார்.

‘பாடுகளா ? என்ன பாடுகள் ?’

‘எருசலேமுக்குச் சென்று மூப்பர்கள், மறைநூல் அறிஞர்கள், தலைமைக் குருக்கள் ஆகியோரிடம் நான் அகப்பட்டு துன்புறுத்தப் படுவேன்’

‘நீங்களா ? இருக்கவே இருக்காது. அவர்களை பலமுறை நீங்கள் மடக்கியிருக்கிறீர்கள். இனிமேல் அவர்கள் உமக்கு எதிராய் வரத் துணிய மாட்டார்கள். அப்படியே வந்தாலும் உம்மால் எது வேண்டுமானாலும் செய்ய முடியும்’ சீடர்கள் சொன்னார்கள்.

‘அது என் தந்தையின் விருப்பமல்ல. நான் கொலை செய்யப்படுவேன். அதன்பின்பு மூன்றாம் நாள் உயிர்த்தெழுவேன்.’ இயேசு சொன்னார்.

‘நீர் உயிரோடு இருந்தால் இறந்தவர்களை உயிர்ப்பிக்கலாம், நீரே இறந்து விட்டால் உம்மை எப்படி நீரே உயிர்த்தெழ வைக்க முடியும் ?’ சீடர்கள் கேட்டார்கள்.

‘உயிர்ப்பும் உயிரும் நானே. என்னில் நம்பிக்கை வைப்பவன் இறப்பினும் வாழ்வான்’ இயேசு சொல்ல சீடர்கள் புரியாமைகளில் புதைந்தார்கள்.

பேதுரு இயேசுவைத் தனியே அழைத்துச் சென்றார்.
‘ஆண்டவரே… இதெல்லாம் என்ன புதுப் பேச்சு. இதெல்லாம் வேண்டாம். சாவைப்பற்றியெல்லாம் இனிமேல் நீர் பேசக் கூடாது. நமக்கு ஆதரவாக மிகப்பெரிய மக்கள் சக்தி ஒன்று இருக்கிறது. அதை வைத்து நாம் இன்னும் பல அதிசயச் செயல்களைச் செய்யவேண்டும், அதை விட்டு விட்டு சாவு , மரணம், உயிர்ப்பு என்றெல்லாம் உளறாதீர்கள்’ பேதுரு சொல்ல இயேசு பேதுருவின் முகத்தை உற்றுப் பார்த்தார்.

‘பேதுரு.. என் கண் முன்னால் நிற்காதே. ஓடிவிடு. உன்னுடைய முகத்தில் சாத்தானின் நிழலை நான் பார்க்கிறேன். நீ கடவுளுக்கு ஏற்றவைகளை எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவைகளையே எண்ணுகிறாய்’ இயேசு சொன்னார்.

‘இல்லை ஆண்டவரே… இருந்தாலும் சாவு என்பது கடைசி நிலையல்லவா ? அது இப்போதே வந்தால்… ?’ பேதுரு இழுத்தார்.

‘அது தான் கடவுளின் விருப்பம். நான் அரசனாகி உன்னை மந்திரியாக்குவேன் என்று கனவு கண்டாயா ? அதன் மூலம் உங்கள் பெயர் நாடெங்கும் பரவும் என்று கனவு கண்டீர்களா ? செல்லுமிடமெல்லாம் மக்கள் பட்டுக் கம்பள வரவேற்பு அளிக்க வேண்டுமென்று ஆசைப்பட்டீர்களா ?’ இயேசு கேட்க சீமோன் அமைதியானார்.

‘என்னைப் பின் பற்ற விரும்புபவன் தன்னலம் துறந்து தன்னுடைய சிலுவையைச் சுமந்து கொண்டு என்னைப் பின் செல்லட்டும். ஏனெனில் உயிரைக் காப்பாற்ற விரும்புபவனால் அது முடியாது. ஒருவன் உலகமெல்லாம் தனதாக்கிக் கொண்டாலும் தன் உயிரை இழந்து விட்டால் வரும் பயனென்ன ? ‘ என்றார்.

அதற்குள் சீடர்களும் அவரை சூழ்ந்து கொள்ள இயேசு அவர்களிடம்
‘சீடர்களே. உங்களை நான் பக்குவப் படுத்தியிருக்கிறேன். பணிவாழ்வில் நீங்கள் என்னோடு கூட இருந்திருக்கிறீர்கள். பாடுகள் வரும்போது அதை நானே சுமக்கிறேன். நீங்கள் சுயநலம் மறந்து என் பணியைத் தொடரவேண்டும்’ என்றார்.

‘இயேசுவே.. இதையெல்லாம் கேட்கக் கவலையாக இருக்கிறது’

‘இல்லை. விண்ணரசு நெருங்கிவிட்டது. இது நீங்கள் மகிழ்வுற வேண்டிய தருணம். கடவுளின் திருவுளம் நிறைவேறும். அதன் பின் நான் என் தந்தையின் மாட்சியோடு வானதூதர்கள் சூழ வருவேன். ‘ இயேசு சொன்னார்.

இதுவரைக் கேட்டிராத இயேசுவின் திடீர் அறிவிப்பைக் கேட்ட சீடர்கள் உள்ளுக்குள் பயமும், கலக்கமும் அடைந்தார்கள். அவர்களுடைய பல கனவுகள் சரியத் துவங்கின.

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink Closed

உருமாற்றம்

Circa 33 AD, The Transfiguration of Jesus is witnessed by the disciples Peter, James and John. (Photo by Hulton Archive/Getty Images)

ஆறு நாட்களுக்குப் பின் இயேசு தன்னுடைய சீடர்களான பேதுரு, யாக்கோபு மற்றும் யோவானைக் கூட்டிக் கொண்டு தாபர் மலைக்குச் சென்றார். அது அதிக உயரமில்லாத மிகவும் பிரபலமடையாத ஒரு மலை. இயேசுவின் ஊரான நாசரேத்திலிருந்து பார்த்தால் அந்த மலை தெரியும். அளவில் பெரியதாக இல்லாவிட்டாலும் அது வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு புனித மலையாகி விட்டது. அதற்குக் காரணம் அன்று அங்கே நடந்த ஒரு நிகழ்வு.

இயேசு மலையில் பசுமையான இடங்களைக் கடந்து செபிப்பதற்கு வசதியான ஒரு சமதளப் பரப்பு வந்ததும் முழங்காலில் அமர்ந்து செபிக்கத் துவங்கினார். அவருடைய சீடர்கள் மூவரும் அவரோடு மண்டியிட்டு அமர்ந்து செபிக்கத் துவங்கினர்.

திடீரென்று இயேசுவிடம் ஏதோ ஒரு மாற்றம் தெரிவதை சீடர்கள் உணர்ந்தார்கள். இயேசு இயல்பு நிலையில் இல்லாததுபோல ஒரு தோற்றம். திடீரென்று அவருடைய ஆடைகள் ஒளிவீசத் துவங்கின. ஆடை மிகவும் தூய்மையான வெள்ளை நிறமாக மாறியது. சீடர்கள் வியப்புடன் அந்த நிகழ்ச்சியையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். நீண்ட தூரம் நடந்து வந்ததால் ஆடையில் படிந்திருந்த தூசுகள் எல்லாம் காணாமல் போயிருந்தன, ஒளியை மிஞ்சும் வெண்மை நிறம் வெண் பனியைப் போன்று அவருடைய ஆடைகளில் பதிந்தன.

‘இயேசு உருமாறுகிறார்.’ உடனிருந்த சீடர்கள் கிசுகிசுத்தனர்.

அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே திடீரென இயேசுவுக்கு முன்னால் இரண்டு பேர் தோன்றினார்கள். சீடர்கள் உற்றுப் பார்த்தார்கள். அதிர்ந்து போனார்கள். இயேசுவுக்கு முன்பாக தோன்றியவர்கள் மோசேவும், எலியாவும். இஸ்ரேல் மக்களை பல நூற்றாண்டுகளுக்கு முன்பு எகிப்தியரின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாக்கிக் கொண்டு வந்த மாபெரும் தலைவர் மோசே. அவர் தான் தோரா எனும் சட்டங்களை மக்களுக்குக் கொடுத்தவர். எலியா ஒரு மாபெரும் தீர்க்கத்தரிசி. அவரும் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர். பல அதிசயங்களையும், தீர்க்கத் தரிசனங்களையும் தந்தவர். அந்த இருவரும் தான் இதோ தங்களுடைய கண்களுக்கு முன்னால் நின்று இயேசுவுடன் பேசிக்கொண்டிருக்கிறார்கள். என்ன ஒரு அற்புதமான காட்சி ! சீடர்களுக்கு தங்கள் கண்களை நம்பவே முடியவில்லை.

வியப்பு ஒருபுறம் அவர்களைக் கட்டி வைத்தாலும், பயம் அவர்களை மறுமுனையிலிருந்து ஆட்டிப் படைத்தது.

இயேசு திரும்பி சீடர்களைப் பார்த்தார். சீடர்கள் திடுக்கிட்டனர். பேதுரு தன்னையுமறியாமல் உளறினார். ‘ ஆண்டவரே நாம் இங்கே இருப்பது மிகவும் நல்லது. உமக்கு ஒன்றும், மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக நாங்கள் மூன்று கூடாரங்களை ஏற்பாடு செய்யவா ?’ என்றார்.

இயேசு புன்னகைத்தார். திடீரென வானம் மேகமூட்டமானது. ஒரு பெரிய மேகம் மலையை உரசிச் சென்றது. அவர்களையும் ஒரு மேகம் வந்து மூடிக்கொள்ள வானத்திலிருந்து ஒரு ஒலி பிறந்தது.

‘இவரே என் அன்பார்ந்த மகன். இவருக்குச் செவிகொடுங்கள்’

சீடர்கள் குரலைக் கேட்டதும் பயந்து போய் கீழே விழுந்தார்கள். இயேசு வந்து அவர்களை எழுப்பினார். அவர்கள் எழும்பியபோது அங்கே இயேசுவைத் தவிர யாரையும் காணவில்லை.

‘மானிட மகன் இறந்து உயிர்க்கும் வரை இதை யாருக்கும் சொல்லாதீர்கள்’ இயேசு கட்டளையிட்டார். அவர்கள் ஆச்சரியமடைந்தார்கள். அவர்கள் எலியாவின் மறு பிறவியே இயேசு என்று நம்பிக் கொண்டிருந்தார்கள். எனவே இயேசு மீண்டும் உயிர்த்து வருவார் என்று சொன்னபோது அவர்கள் ஆச்சரியமடைந்தார்கள்.

இயேசு அவர்களிடம். ‘ எலியா ஏற்கனவே வந்து விட்டார். மக்கள் அவரை அறிந்து கொள்ளவில்லை. மனுமகன் பாடுகள் பட்டு மரணமடைய வேண்டும் என்பது தந்தையின் விருப்பம். மனுக்குலத்துக்காக மானிட மகன் இறப்பார். மீண்டும் உயிர்ப்பார். அதுவரை இந்த நிகழ்ச்சியை யாருக்கும் சொல்லாதீர்கள்’ என்று தெளிவு படுத்தினார்.

சீடர்களை விட்டு அச்சம் இன்னும் முழுதாய் விலகவில்லை. அவர்கள் இயேசு சொல்வதையெல்லாம் அமைதியாய்க் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink Closed

பேய்கள் பல வகை

Image result for Jesus and demon possessed boy

ஒரு நாள் பேய்பிடித்த ஒரு சிறுவனை தந்தை சீடர்களிடம் கொண்டு வந்தார். சீடர்களுக்கு இயேசு பேயோட்டும் வல்லமையை அளித்திருந்ததனால் தந்தை மகனை சீடர்களிடம் ஒப்படைத்தார். சீடர்கள் அந்த சிறுவனைப் பிடித்திருந்த பேயைத் துரத்த முயன்றார்கள். ஆனால் ஆச்சரியப்படும் விதமாக பேய் நீங்கவில்லை. சீடர்கள் வியந்தார்கள். எத்தனையோ பேய்களை ஓட்டியிருக்கிறோம், இந்த பேயை ஓட்ட முடியவில்லையே என்று ஆச்சரியப்பட்டார்கள்.

தந்தை இயேசுவிடம் ஓடினார். ‘ஐயா என் மகனைக் காப்பாற்றும் அவன் அடிக்கடி நீரிலும் நெருப்பிலும் விழுகிறார். நுரை தள்ளுகிறான். அவனைக் குணமாக்க உம்முடைய சீடர்களால் முடியவில்லை. நீர் தான் குணப்படுத்த வேண்டும்’ என்று கதறினார்.

இயேசு அந்த சிறுவனைப் பிடித்திருந்த பேயைத் துரத்தினார்.

சீடர்கள் அன்று இரவு இயேசுவுடன் தனியே நடக்கையில் கேட்டார்கள்.

‘ஆண்டவரே ஏன் எங்களால் அந்தப் பேயை ஓட்ட முடியவில்லை ? நிறைய பேய்களை ஓட்டியிருக்கிறோம் ஆனால் இது கொஞ்சம் பிடிவாதப் பேயாய் இருந்தது. ஏன் எங்களால் ஓட்ட முடியவில்லை ?’

இயேசு அவர்களிடம். ‘இவ்வகைப் பேய் செபத்தினாலும், உறுதியான நம்பிக்கையிலும் தான் விலகும். உங்களுக்கு விசுவாசம் இல்லை. விசுவாசம் இருந்தால் இதோ இந்த மரத்தைப் பார்த்து நீ வேரோடு பெயர்ந்து கடலில் விழு என்றால் கூட விழும். விசுவாசமே சுகமளிக்கும்’ என்று விளக்கமளித்தார்.

Image result for Jesus walking with disciples

இயேசு தன்னுடைய பன்னிரண்டு அப்போஸ்தலர்களிடமும் தான் இறக்கப் போவதைக் குறித்து அடிக்கடி உறுதிப்படுத்திக் கொண்டிருந்தார். தான் மீண்டும் உயிர்த்து வருவதாகவும் சீடர்களிடம் அவர் உறுதிப்படுத்தினார்.

இயேசுவை மெசியாவாக சீடர்கள் நம்பினார்கள். எனவே இயேசு உயிர்பெற்று வந்தால் இஸ்ரேல் குலத்தை அவரே அரசராக இருந்து ஆள்வார் என்றும் அப்படி ஒரு நாள் வருகையில் தங்களுக்கு உயர்ந்த பதவிகள் கிடைக்கும் என்றும் சீடர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.

மறுநாள் இயேசுவும் சீடர்களும் கப்பர்நாகும் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது இந்த பேச்சே முக்கிய இடம் வகித்தது. விண்ணக வாழ்விலும், இவ்வுலக வாழ்விலும் இயேசு தங்களில் யாருக்கெல்லாம் என்னென்ன முன்னுரிமைகள் அளிப்பார் என்பதைக் குறித்து அவர்கள் தர்க்கமிடவும் துவங்கினார்கள். ஒவ்வொருவரும் தாங்கள் எந்தவிதத்தில் இயேசுவோடு நெருக்கமானவர்கள் என்றும் எனவே தங்களுக்கே முன்னுரிமை என்றும் வாதிட்டுக் கொண்டே வந்தார்கள். இயேசு எதையும் கவனிக்காதவர் போல அவர்களுக்கு முன்பாக நடந்து கொண்டிருந்தார்.

அவர்கள் கப்பர்நாகுமை வந்தடைந்ததும் இயேசு சீடர்களைப் பார்த்து
‘வழி நெடுகிலும் பெரும் வாக்குவாதங்களில் ஈடு பட்டிருந்தீர்களே எதைப்பற்றி ?’ என்று கேட்டார்.

சீடர்கள் பேசவில்லை. மெளனமாய் இருந்தார்கள். தாங்கள் எதைப்பற்றி பேசினோம் என்பதை இயேசுவிடம் சொல்ல அவர்கள் தயங்கினார்கள்.

இயேசு அவர்களைப் பார்த்து. ‘உங்களில் தலைவனாக விரும்புகிறவன் எல்லோருக்கும் பணியாளனாய் இருக்க வேண்டும். உங்களில் முதல்வனாக இருக்க விரும்புகிறவன் எல்லோரிலும் கடைசியாக இருக்கவேண்டும். பணிவே முதன்மையானது’ என்றார்.

சீடர்களோ பேசாமல் மெளனமாய் இருந்தார்கள். இயேசு சுற்றுமுற்றும் பார்த்தார் தூரத்தில் ஒரு சிறுவன் விளையாடிக்கொண்டிருந்தான். இயேசு அந்தச் சிறுவனை தன்னருகே அழைத்தார். அவனை சீடர்கள் முன்னிலையில் நிறுத்தி சீடர்களைப் பார்த்து
‘இந்தச் சிறுவனைப் போல நீங்கள் மாறாதவரை விண்ணகத்தில் நுழைய முடியாது. சிறுவன் ஒருவனைப் போல மனத் தூய்மையுடன் கர்வமில்லாமல் இருப்பவர்களுக்கே விண்ணக வாழ்வு சொந்தமாகும். இந்தச் சிறுவருள் ஒருவனை என் பெயரால் ஏற்றுக் கொள்பவன் எவனும் என்னையே ஏற்றுக் கொள்கிறான். என்னை ஏற்றுக் கொள்பவன் என்னை அனுப்பிய வானகத் தந்தையையே ஏற்றுக் கொள்கிறான்’ என்றார். சீடர்கள் தாங்கள் தர்க்கித்த விஷயத்தைக் குறித்து வெட்கமடைந்தார்கள்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink Closed

 இயேசுவுக்கு வரி செலுத்திய மீன்

peter-catches-fish-with-coin

இயேசுவும் சீடர்களும் எங்கெல்லாம் சென்றாலும் அவர்களை உளவாளிகளும், ஒற்றர்களும் பரிசேயர்களும் தொடர்ந்து கொண்டே இருந்தார்கள். கடந்த இரண்டு வருடகாலமாக இயேசுவை எந்த ஒரு பெரிய கண்ணியிலும் சிக்க வைக்க முடியாதவர்கள் தங்கள் முயற்சியைத் தொடர்ந்து கொண்டே இருந்தார்கள். தன்னைக் கடவுளாகக் காட்டிக் கொள்கிறார், ஓய்வு நாளை மதிப்பதில்லை போன்ற சில காரணங்களை வைத்துக் கொண்டு அவரை தீர்த்துக் கட்டவும் அவர்களால் முடியவில்லை.

இதுவரை இயேசுவின் போதனைகளையும், அவருடைய பிரகடனங்களையும் மட்டுமே குறிவைத்து குற்றம் கண்டு பிடித்துக் கொண்டிருந்தவர்கள் இப்போது பண விஷயமாக இயேசுவிடம் கேள்வி எழுப்பினார்கள். ஒரு சட்ட மீறலை இயேசு நியாயப்படுத்துகிறார் என்று நிரூபித்து அவரை சட்டச் சிக்கலுக்குள் தள்ளி அரசியல் குற்றவாளியாக்கி சிறைபிடிக்கவேண்டும் என்பது அவர்களுடைய திட்டம்.

அந்நாட்களில் ரோம எல்லைக்குட்பட்ட எல்லா இடங்களிலும் ஏராளமான வரிகளை மக்கள் செலுத்தவேண்டியிருந்தது. அதில் முக்கியமான இரண்டு வரிகள், ஒன்று நிலவரி, இன்னொன்று சொத்து வரி. சொத்து வரி என்பது விளைச்சலில் பத்தில் ஒரு பங்கை அரசுக்கு வரியாகச் செலுத்துவது. விளைவது பழவகைகள் என்றால் அவற்றில் ஐந்தில் ஒரு பங்கை வரியாகச் செலுத்தவேண்டும். இவை தவிர ஒவ்வொரு முறை நகருக்குள் நுழைவதற்கும், வியாபாரத்திற்கும், அதற்கும் இதற்கும் என ஏகப்பட்ட வரிகள்.

ரோமர்களின் ஆளுகைக்குள் இருந்த இஸ்ரேல் மக்கள் வரி செலுத்துவதை விருப்பமில்லாமல் தான் செய்து வந்தார்கள். இயேசு வரி செலுத்துவதில்லை. அவர் வரிசெலுத்தாததற்குக் காரணம் ரோம அரசின் மீதான வெறுப்பும், இஸ்ரேல் மக்கள் மீதான கரிசனையும் என்று சீடர்கள் நினைத்தார்கள்.

வரி வசூலிக்கும் ஒருவன் பேதுருவைத் தனியே அழைத்து
‘இங்கே ஆலய வரியாக இரண்டு திராக்மா செலுத்துவது சட்டம். தெரியும் தானே ?’ என்று கேட்டார்.

‘தெரியும் ?.’ பேதுரு சொன்னார்..

‘உங்கள் போதகர் அந்த வரியை இன்னும் செலுத்தவில்லை. முன்பு ஒரு முறை வரி செலுத்துதல் முறையா என்று கேட்டபோது. வரி செலுத்துவது முறைதான் என்றும். சீசருக்குரியதை சீசருக்கும், கடவுளுக்குரியதைக் கடவுளுக்கும் கொடுங்கள் என்று சொன்ன உங்கள் போதகரே வரி செலுத்தாமல் இருப்பது நியாயமா ? எனவே நீங்கள் தான் அவரிடம் பேசி வரி செலுத்தச் சொல்ல வேண்டும்’ அவர் பேதுருவிடம் வற்புறுத்தினார்.

பேதுரு தலையாட்டி விட்டு அகன்றார்.

பேதுருவின் மனதுக்குள் இந்த வரி விஷயமே ஓடிக் கொண்டிருந்தது. எப்படிப் போதகரிடம் சொல்வது ? அவருக்குப் பதிலாக நாமே வரியைக் கட்டியிருக்கலாமோ ? என்றெல்லாம் அவருடைய மனதுக்குள் சிந்தனைகள் ஓடிக்கொண்டிருக்க இயேசு அவரை அழைத்தார்.

‘பேதுரு…’

‘சொல்லுங்கள் ஆண்டவரே…’

‘இவ்வுலக அரசர்கள் சுங்க வரியையோ, தலை வரியையோ யாரிடமிருந்து பெறுகிறார்கள் ? தம் மக்களிடமிருந்தா ? இல்லை மற்றவரிடமிருந்தா ?’ என்று கேட்டார்.

இயேசு வரியைப் பற்றிக் கேட்டதும் பேதுரு வியந்தார். ஆனாலும் இயேசுவைப் பற்றி ஆழமாகப் புரிந்து கொண்டிருந்ததால் அமைதியாய் பதில் சொன்னார்.

‘மற்றவரிடமிருந்து தான் ஆண்டவரே.’

‘அப்படியானால் குடிமக்கள் இதற்குக் கட்டுப் பட்டவர்கள் அல்ல…’ இயேசு கேட்க பேதுரு பதில் பேசாமல் புன்னகைத்தார்.

‘சரி.. ஆனாலும் நாம் அவர்களுக்கு இந்த விஷயத்தில் தடையாய் இருக்க வேண்டாம். நீ நாளை காலையில் கடலில் தூண்டில் போடு’ இயேசு சொன்னார்.

‘தூண்டில் போட்டு மீன்களைப் பிடித்து அதை விற்று நான் வரியைக் கட்டி விடுகிறேன் ஆண்டவரே.’ பேதுரு சொன்னார்.

‘வேண்டாம். நீ தூண்டில் போடு. முதலில் சிக்கும் மீனின் வாயைத் திறந்து பார்த்தால் ஸ்தாத்தேர் நாணயம் ஒன்று இருக்கும். அதை எடுத்து உன் சார்பாகவும் என் சார்பாகவும் வரி செலுத்து’ இயேசு சொல்ல அனைவரும் ஆச்சரியமாய்க் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

மறுநாள் காலையில் பேதுரு கடலுக்குச் சென்று தூண்டில் வீசினார். முதல் வீச்சிலேயே ஒரு பெரிய மீன் அகப்பட்டது. பேதுரு அதன் வாயைத் திறந்தார். உள்ளே நாணயம் ஒன்று ஒளிவீசிக் கொண்டிருந்தது !

பேதுரு தூண்டிலைச் சுருட்டினார். நாணயத்தை எடுத்துக் கொண்டு வரி வசூலிப்பவரிடம் சென்றார்.
‘இதோ.. போதகருக்கும் எனக்குமான வரி. எங்கள் பெயரில் எழுதிக் கொள்ளுங்கள்’ என்று சொன்னார்.

வரி செலுத்தவில்லை என்றாவது இயேசுவை மாட்ட வைக்கலாம் என்னும் எதிரிகளின் எண்ணமும் தகர்ந்தது. ஆனால் எப்படியேனும் இயேசுவை மாட்டியே தீருவது என்பது அவர்களுக்கு இப்போது கௌரவப் பிரச்சினையாகிவிட்டிருந்தது.

இரவு வெளிச்சத்துக்கு வருகிறது

nicodemus-2

இயேசு எதற்கும் அஞ்சாமல் தன்னுடைய போதனைகளைத் தொடர்ந்து கொண்டே இருந்தார். அவருடைய போதனைகள் பழையகாலத்தின் கடுமையான பழிவாங்கும் கட்டளைகளாக இல்லாமல் தோழமையுடன் பேசும் அறிவுரைகளாக இருந்ததால் மக்கள் இன்னும் அதிகமாக இயேசுவை நேசித்தார்கள். மற்ற இறைவாக்கினர்களிடமெல்லாம் அச்சத்துடன் பழகிவந்த மக்கள் இயேசுவிடம் நெருக்கமாகவும், நேசத்துடனும் பழகி வந்தார்கள். இயேசு போதனைகளோடு மட்டும் நின்றுவிடாமல் பல்வேறு நோயாளிகளையும் குணமாக்கி வந்ததால் அவரிடம் எப்போதும் ஒரு கூட்டம் இருந்து கொண்டே இருந்தது.

தங்களை நீதிமான்கள் என்று பறைசாற்றிக் கொண்டிருந்த பரிசேயர்களும், சில குருக்களும் கூட இயேசுவின் போதனைகளால் கவரப்பட்டு அவர் பால் ஈடுபாடு கொண்டிருந்தார்கள். ஆனால் அதை வெளிக்காட்டினால் தங்கள் சுய கவுரவம் பாதிக்கப்படும் என்று கருதி அமைதியாய் இருந்தார்கள். ‘எல்லாம் தனக்குத் தெரியும்’ என்னும் மாயையை அவர்கள் மக்களிடம் உருவாக்கி வைத்திருந்தார்கள் அது அழிந்து விட்டால் தங்கள் மரியாதையும், பிழைப்பும் பறி போய்விடுமே என்னும் கவலை அவர்களுக்கு. அப்படிப்பட்டவர்களில் ஒருவர் தான் நிக்கதேம்.

இயேசுவின் போதனைகள் நிக்கதேமின் நிம்மதியைக் கெடுத்தன. தான் நினைத்து வைத்திருப்பதற்கும் இயேசு போதிப்பதற்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் இருப்பதை அவர் உணர்ந்தார். அவர் யூதத் தலைவர்களில் ஒருவர். எப்படியாவது ஒருமுறை இயேசுவைச் சந்தித்து தன்னுடைய மனதில் இருக்கும் கேள்விகளுக்கான விடைகளைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்று தவித்தார். ஒருநாள் இரவில் யாருக்கும் தெரியாமல் முகத்தை மறைக்குமளவுக்கு ஒரு பெரிய துண்டை தலையில் போட்டுக் கொண்டு அவர் இயேசுவிடம் சென்றார்.

‘ராபி வணக்கம்’

‘வாருங்கள் நிக்கதேம்… அமருங்கள்.’ இயேசு அவருடைய பெயரைச் சொல்லி அவரை வரவேற்றார்.

தன் பெயரைச் சொல்லி இயேசு அழைப்பதை வியப்புடன் பார்த்த நிக்கதேம்,
‘ராபி, நீர் கடவுளிடமிருந்து வந்த போதகர் என்பதை நாங்கள் அறிகிறோம். கடவுள் உம்மிடம் இல்லாவிட்டால் நீங்கள் இப்படி அதிசயங்களைச் செய்யமுடியாது என்று நம்புகிறோம்.’ நிக்கதேம் சொல்லி நிறுத்தினார்.

‘உங்கள் மனதில் ஒரு கேள்வி இருக்கிறதே. அதைக் கேளுங்கள்’ இயேசு சொன்னார்.

நிக்கதேம் மீண்டும் வியந்தார்.
‘ராபி, கடவுளின் அரசை, இறையாட்சியைக் காண நான் என்ன செய்யவேண்டும் ?’ நிக்கதேம் கேட்டார்.

‘ஒருவன் மறுபடியும் பிறந்தாலன்றி இறைவனின் அரசைக் காண முடியாது !’ இயேசு சொன்னார். நிக்கதேம் குழம்பினார்.

‘போதகரே… எனக்குப் புரியவில்லை. மறுபடியும் பிறப்பதா ? வயதானபின் ஒருவன் எப்படி மறுபடியும் தாயின் கருவறைக்குள் புக முடியும்? ஒருவேளை வேறு பிறவி பற்றிப் பேசுகிறீரா ?’ கேள்விகளை அடுக்கினார் நிக்கதேம்.

‘நிக்கதேம், ஒருவன் தண்ணீரினாலும், தூய ஆவியினாலும் பிறந்தாலன்றி கடவுளின் அரசைக் காணமாட்டான்’ இயேசு பதிலை சற்று விரிவாக்கினார்.

‘இன்னும் எனக்குச் சரியாக விளங்கவில்லை’ நிக்கதேம் தடுமாறினார்.

‘எல்லாம் அறிந்த நீங்களே புரியவில்லை என்கிறீர்களே. மனிதரால் பிறப்பவர் மனித இயல்பை உடையவராய் இருக்கிறார். தூய ஆவியினால் பிறப்பவரே தூய ஆவியின் இயல்பை உடையவராய் இருக்கிறார். நீர் மனிதரால் பிறந்திருக்கிறீர். இனிமேல் தூய ஆவியினால் பிறக்க வேண்டும். அப்போது தான் மீட்படைய முடியும்’ இயேசு சொன்னார்.

‘ஆவியினால் பிறப்பதா ? அது எப்படி ? ஒருவன் ஆவியினால் பிறந்தான் என்பதை எப்படி அறிந்து கொள்வது ? அவனை எப்படிக் கண்டு கொள்வது’ நிக்கதேம் கேட்டார்.

‘காற்று வீசுகிறது. அதை நீர் எப்படி அறிந்து கொள்கிறீர் ? அதன் மூலம் ஏற்படும் விளைவுகளை வைத்து தானே ! அப்படித் தான் ஆவியினால் பிறந்தவனும் இருக்கிறான். அவனுடைய செயல்கள் சொல்லும் அவன் மனித இயல்பினனா, இல்லை தூய ஆவியில் பிறந்தவனா என்பதை’ இயேசு விளக்கினார்.

‘இது எப்படி நடக்கும் ?’ நிக்கதேம் இன்னும் குழப்பத்தின் கைக் குழந்தையாய் இருந்தார்.

‘மக்களை வழிநடத்தும் ஒரு போதகரே இப்படிச் சந்தேகப் படலாமா. நான் கண்டதையும், அறிந்ததையும் மட்டுமே பேசுகிறேன். நீங்கள் என் சான்றுகளை ஏற்றுக் கொள்வதில்லை. நான் மண்ணுலகு சார்ந்த விஷயங்களைத் தான் பேச ஆரம்பித்திருக்கிறேன். இதுவே உங்களுக்கு விளங்கவில்லையென்றால், விண்ணுலகு சார்ந்த விஷயங்களை எப்படி விளங்கிக் கொள்ளப் போகிறீர்கள் ?’ இயேசு கேட்டார்.

‘விண்ணக விஷயமா அது என்ன ?’ நிக்கதேம் வியப்புடன் கேட்டார்.

‘விண்ணகத்திலிருந்து இறங்கி வந்துள்ள மானிட மகனைத் தவிர யாரும் இதுவரை விண்ணகத்துக்கு ஏறிச் சென்றதில்லை என்று உறுதியாக உனக்குச் சொல்லுகிறேன்’ இயேசு சொல்ல நிக்கதேம் அமைதியானார்.

‘எகிப்து மக்கள் பாம்பு கடி பட்டு மரணத் தருவாயில் இருக்கையில் மோசே வெண்கலத்தினால் ஒரு பாம்பைச் செய்தார். அந்தப் பாம்பை ஒரு கோலில் கட்டி உயர்த்திப் பிடித்தார். அதைப் பார்த்த பாம்புக் கடி பட்டவர்கள் எல்லோரும் உயிர் பிழைத்தார்கள். இந்த நிகழ்ச்சி தெரியும் தானே ?’ இயேசு கேட்டார்.

நிக்கதேம் நூல்களை எல்லாம் கற்றுத் தேர்ந்தவர். மோசேயின் வாழ்க்கை வரலாறும் மோசே மக்களுக்கு அளித்த சட்டங்களும் அவருக்கு அத்துப்படி. எனவே நிக்கதேமிடம் இந்தக் கேள்விக்குத் தடுமாற்றம் இருக்கவில்லை. ‘ தெரியும் போதகரே. நன்றாகத் தெரியும்’ என்றார்.

‘அதே போல மானிட மகனும் உயர்த்தப் படுவார். அவரை ஏறிட்டுப் பார்க்கும் பாவிகள் அனைவரும் விண்ணக வாழ்வுக்குத் தகுதி பெறுவார்கள்’ இயேசு சொன்னார்.

‘உலகுக்குத் தீர்ப்பளிக்கவும், மக்கள் தவறாய் நடக்கும் போது அவர்களை அழிக்கவும் தானே அவதாரங்கள் வழக்கமாக நிகழும். உம்முடைய வருகைக்கும் அது தான் ஆதாரமா ?’

‘இல்லை. நான் தண்டனைத் தீர்ப்பு தர வரவில்லை. உலகை மீட்கவே வந்தேன். என்னை நம்பியவர்கள் தீர்ப்புக்கு ஆளாக மாட்டார்கள். நம்பாதவர்கள் தீர்ப்புக்குத் தப்புவதும் இல்லை’ இயேசு உறுதியாய்ச் சொன்னார்.

இயேசுவின் வார்த்தைகள் நிக்கதேமுவைக் கட்டிப் போட்டன.
‘போதகரே பேசும். நான் கேட்கிறேன்’ நிக்கதேம் பணிந்தார். இயேசு தன்னுடைய போதனைகளைத் தொடர்ந்தார்.

‘ஒளி உலகில் வந்திருக்கிறது. ஆனால் தீமை செய்பவர்கள் ஒளியிடம் வருவதில்லை. ஒளியிடம் வந்தால் அவர்களுடைய தீமை ஒளியாது வெளிப்பட்டு விடும் என்பது அவர்களுக்குத் தெரியும். எனவே அவர்கள் இருளிலேயே இளைப்பாறுகிறார்கள். அவர்கள் கடவுளின் தண்டனைக்குத் தப்பவே முடியாது. உண்மைக்கேற்ப வாழ்பவனுக்கு இருள் ஒத்து வருவதில்லை, அவன் ஒளியின் முன்னால் ஒளியாய் பிரகாசிக்கிறான். அவனுடைய செயல்கள் எல்லாம் கடவுளுடன் இணைந்தே செயல்படும். நீ ஒளியில் வாழ்பவனாய் இரு. ஒளிந்து வாழ்பவனாய் இராதே’ இயேசு விளக்கினார். மந்திரத்துக்குத் தலையாட்டும் மதிமறந்த நிலையில் நிக்கதேமு அனைத்தையும் அப்படியே ஏற்றுக் கொண்டார்.

அதன் பின்பு நிக்கதேமிடம் இருந்த தயக்கங்கள் எல்லாம் விடைபெற்று விட்டன. இயேசுவிடம் வருவதற்குக் கூட இரவைத் தேர்ந்தெடுத்த அவருடைய எண்ணங்களுக்காக அவர் வெட்கமடைந்தார். இரவில் கற்றதையெல்லாம் பகலில் விளம்பத் துவங்கினார்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink Closed

இயேசு வரலாறு 32 : விபச்சாரப் பெண்ணும், பார்வையற்ற மனிதனும்

Image result for Jesus walking with disciples

இயேசுவும் சீடர்களும் எருசலேம் நோக்கிப் பயணம் செய்தார்கள். அச்சம் கலந்த ஒரு பயணம். துணிச்சல் மிக்க ஒரு பயணம் என்றும் சொல்லலாம். கடந்த இரண்டு ஆண்டுகளாக எருசலேம் தேவாலய உளவாளிகள் இயேசுவைக் குறித்துச் சொன்ன சேதிகளினால் குருக்களும், மறை நூல் அறிஞர்களும் கோபத்திலும், வன்மத்திலும் இருந்த வேளை அது. இயேசு சீடர்களுடன் எருசலேம் நோக்கிப் பயணிக்கிறார்.

இயேசுவும் சீடர்களும் சமாரியா வழியாக சென்றார்கள். ஒருமுறை மிகவும் நன்றாக இயேசுவை உபசரித்த சமாரியர்கள் இம்முறை அந்த வரவேற்பை நல்கவில்லை. காரணம் இப்போது இயேசுவும் சீடர்களும் எருசலேம் நோக்கிச் செல்கிறார்கள். எருசலேமில் விழாவுக்காகச் செல்கிறார்கள். எருசலேமிற்குச் செல்லும் யூதர்களை வெறுப்பவர்கள் தான் சமாரியர்கள். ‘நான் அழிப்பதற்கல்ல, மீட்பதற்காகவே வந்திருக்கிறேன் என்பதை மக்கள் எப்போது தான் உணர்வார்களோ’ இயேசு சொன்னார்.

பாதி வழியில் இரண்டு பரிசேயர்கள் இயேசுவைச் சந்தித்து மீண்டும் தர்க்கத்தில் ஈடுபட்டார்கள். இயேசு அவர்களிடம் ‘ ஏன் என்னைக் கொல்லும் வழி தேடுகிறீர்கள்’ என்று சட்டென்று கேட்டார். பரிசேயர்கள் ஒரு வினாடி நிலை தடுமாறினார்கள். பின் சுதாரித்துக் கொண்டு

‘கொல்லும் வழி தேடுகிறோமா ? உனக்கென்ன பேய் பிடித்திருக்கிறதா ? ஏதேதோ கற்பனை செய்கிறாய். அதனால் தான் ஓய்வு நாளில் கூட ஏதேதோ வேலைகள் செய்கிறாய்’ என்றார்கள் படபடப்பாக.

மறுபடியும்.. மறுபடியும் ஓய்வு நாள் பிரச்சினையை இவர்கள் கிளப்புவதால் எரிச்சலடைந்த இயேசு அவர்களிடம். ‘விருத்தசேதனம் செய்வது ஓய்வு நாளில் ஒத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. அதுவும் ஒரு பணி தான். நோய் தீர்க்கும் பணி மட்டும் செய்யக் கூடாதென்று பிடிவாதம் பிடிக்காதீர்கள்’ என்றார். அவர்கள் இயேசுவின் பதிலைக் கேட்டு வாயடைத்தார்கள்.

எப்படியும் இயேசுவுக்கு எதிராக ‘தன்னைக் கடவுளாக்கிக் கொண்டான்’ என்னும் குற்றச் சாட்டைப் பதிவு செய்யவேண்டும் என்று அவர்கள் ஏற்கனவே முடிவு செய்திருந்தார்கள். ஆனால் அதை நிரூபிக்க வேண்டும் ! பரிசேயர்களும், மறை நூல் அறிஞர்களும் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் இயேசுவைக் கடவுளாகப் பார்க்கவேயில்லை. கடவுள் ஒரு பரம ஏழையாகப் பிறக்க மாட்டார் என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தார்கள். எனவே தான் இயேசுவை அவர்கள் அழிப்பதிலேயே ஆர்வம் காட்டினார்கள்.

அப்போதைய தலைமைக் குருவாக இருந்த கயபாவுக்குத் தகவல்கள் சென்று கொண்டே இருந்தன. அவனும் இயேசு மீட்பர் என்பதில் எள்ளளவும் நம்பிக்கை கொள்ளவில்லை. அவரிடம் உளவாளிகள் தகவல்களைத் தவறாமல் தந்து கொண்டே இருந்தார்கள்.

இயேசு எருசலேம் ஆலய வாசலுக்கு வந்தார்.

‘நீங்கள் என்னைத் தேடுவீர்கள் ஆனால் காணமாட்டீர்கள். நான் இருக்கும் இடத்துக்கு நீங்கள் வரவும் முடியாது’

‘யாரேனும் தாகமாய் இருந்தால் என்னிடம் வரட்டும். அவனுக்குள் உயிருள்ள நீர் ஆறாய்ப் பெருக்கெடுத்து ஓடச் செய்வேன்’ இயேசு துணிச்சலாய் தேவாலய முற்றத்தில் நின்று உரையாற்றிக் கொண்டிருந்தார்.

இயேசுவின் போதனைகளைக் கேட்ட மக்கள் பலர் அவரில் நம்பிக்கை கொண்டார்கள். இவர் நம்மை மீட்பதற்காக வந்தவராய் தான் இருப்பார். அதில் சந்தேகமில்லை என்று பலர் பேசத் துவங்கினார்கள்.

தலைமைக் குரு கயபாவின் ஆட்கள் சிலர் கயபாவிடம் சென்று,’ இது போல் ஒரு மனிதர் பேசி நாங்கள் கேட்டதே இல்லை. ஏதோ ஒரு வல்லமை அவரிடம் இருக்கிறது’ என்றார்கள்.

கயபா கர்ஜித்தான்.’ நீங்களும் அவன் பேச்சில் மயங்கி விட்டீர்களா ? அறிவில்லாதவர்கள் தான் அவன் பின்னால் அலைகிறார்கள் என்றால் நீங்களுமா ? ஏதாவது குருக்கள் அவனை நம்புகிறார்களா ? ஏதாவது பரிசேயன் அவரை நம்புகிறானா ? இந்த கூட்டம் மட்டும் தான் அவனோடு அலைகிறது..’

இயேசுவின் சீடர்கள் ஆலயத்தில் அன்றிரவு தங்கினார்கள். இயேசுவோ ஒலிவ மலைக்குச் சென்றார். அங்கு சென்று செபித்துவிட்டு அங்கேயே தூங்கினார். மறுநாள் காலை அங்கிருந்து தனியாக எருசலேம் தேவாலயத்துக்குச் சென்றார். மக்கள் அவரை அடையாளம் கண்டு கொண்டு அவரைச் சூழ்ந்தார்கள். அவர் அவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink Closed

 பாவமில்லையேல் கல்லெறி

woman_9

அமைதியாக இருந்த கூட்டம் திடீரென பெரும் சத்தத்தால் கலைக்கப்பட்டது. பலர் சேர்ந்து ஒரு பெண்ணை இழுத்துக் கொண்டு வந்து இயேசுவின் முன்னால் தள்ளினார்கள். ஆடைகள் அலங்கோலமாய், தலைமுடி ஒழுங்கில்லாமல் அலைய அவள் உதடுகளில் வழியும் இரத்தத்தோடு இயேசுவின் முன்னால் வந்து விழுந்தாள்.

‘போதகரே… இந்தப் பெண் விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்… ‘ ஒருவர் ஆரம்பித்து வைத்தார்.

‘இப்படிப்பட்டவர்களைக் கல்லால் எறிந்து கொல்லவேண்டும்…’ இன்னொருவர் அதைத் தொடர்ந்தார்.

‘இதை நாங்களாகச் சொல்லவில்லை. நீங்கள் மதிக்கும் மறைநூல் தான் சொல்கிறது. அதுவும் மோசே தான் சொல்லியிருக்கிறார். என்ன சொல்கிறீர் ?’ சிலர் அதை முடித்து வைத்தார்கள்.

இயேசுவை நோக்கி ஒரு முக்கியமான கண்ணியை விரித்து வைத்த திருப்தி அவர்களுக்கு. இயேசு ஓய்வு நாளில் கூட குணமாக்குபவர், எனவே இயேசுவால் இந்தப் பெண்ணைக் காப்பாற்றாமல் இருக்க முடியாது. ஆனால் அவர் அப்படிக் காப்பாற்றினால் சட்டத்தை மீறுகிறார் என்பது இந்த ஆலய முற்றத்திலேயே நிரூபிக்கப்பட்டு விடும். ஒன்று இயேசு என்னும் கருணை பிம்பம் உடையும், அல்லது இயேசுவின் பாதுகாப்பு உடையும். வந்தவர்கள் ஆவலுடன் இயேசுவின் பதிலுக்காய் காத்திருந்தார்கள்.

இயேசு பதில் சொல்லாமல் குனிந்து ஆலய முற்றத்து மணலில் விரலால் ஏதோ எழுதிக் கொண்டிருந்தார். இயேசு என்ன எழுதினார் என்பதை விவிலிய ஆராய்ச்சியாளர்கள் பலவிதமாகக் ஆராய்ந்து தங்கள் கருத்துக்களைச் சொல்லியிருக்கிறார்கள். இயேசு சுற்றிலும் நின்றிருந்த மக்களில் யாரெல்லாம் விபச்சாரத் தவறுக்கு உடந்தையாய் இருந்தார்கள் என்பதை அறிந்திருந்ததாகவும் எனவே அந்த பெண்களின் பெயர்களை இயேசு தரையில் எழுதியதாகவும் சிலர் குறிப்பிடுகிறார்கள்.

‘நாங்கள் உம் முன்னிலையிலேயே இவளைக் கல்லால் எறிந்து கொல்லப் போகிறோம். இவள் பாவம் செய்தவள்…’ இயேசு எழுதுவதைத் தொடர்ந்து கொண்டிருக்க, அவர்கள் கத்தினார்கள்.

இயேசு நிமிர்ந்து பார்த்தார். எல்லாருடைய கண்களிலும் கொலைவெறி. கைகளில் கற்கள். விபச்சாரத் தவறுக்காக ஒரு பெண்ணை கொண்டுவந்திருந்தார்களே தவிர, அந்த பாவத்தைப் பகிர்ந்து கொண்ட அல்லது அதற்கு ஏதுவான ஆணைக் காணோம்.

‘உங்களில் பாவம் இல்லாதவன் முதலில் இவள் மீது கல் எறியட்டும்’ சொல்லிய இயேசு மீண்டும் தரையில் எழுதத் துவங்கினார்.

ஒருவர் கல்லை எடுத்துக் கொண்டு முன்னே வந்தார். ‘ ஒரு பெண்ணை இச்சையுடன் பார்ப்பதே பாவம்…’ இயேசுவின் வார்த்தைகள் அவருடைய காதில் ஒலிக்க கல்லைப் போட்டு விட்டுப் பின் வாங்கினார்.

இன்னொருவர் கல்லுடன் முன்னேறினார். இயேசு எழுதிக் கொண்டிருந்த எழுத்துக்களில் அவர் செய்த பாவங்களின் பட்டியல் தெரிந்திருக்கவேண்டும் அதிர்ந்து போய் பின் வாங்கி கல்லைப் போட்டு விட்டுப் போனார்.

எல்லோரும் சில வினாடிகள் யோசித்தனர். பாவம் இல்லாதவனாய் அங்கே யாரும் இல்லை. அவர்கள் முதியவர் துவங்கி இளையவர் வரை ஒருவர் பின் ஒருவராகக் கற்களைப் போட்டு விட்டு சென்று விட்டார்கள். கடைசியில் இயேசுவும், அவரும் அந்தப் பெண்ணும் மட்டுமே நின்றார்கள். இழுத்துக் கொண்டு வந்தவர்கள் யாரும் இல்லை.

‘பெண்ணே அவர்கள் எங்கே ? உன் மீது யாரும் கல்லெறியவில்லையா ?’ இயேசு கேட்டார்.

‘இல்லை ஐயா…’ அவள் கண்ணீருடன் சொல்லிவிட்டு இயேசுவின் பாதங்களில் விழுந்தாள்.

‘நானும் உன்னைத் தீர்ப்பிடமாட்டேன். நீ போகலாம். இனிமேல் பாவம் செய்யாதே !’ இயேசு சொல்ல, அந்தப் பெண் கண்களில் நன்றியும், தெளிவும் வழிய அவ்விடம் விட்டு அகன்றாள்.

மிகச் சிக்கலான ஒரு வழக்கை மிகவும் எளிதாகத் தீர்த்த இயேசுவின் ஞானத்தைக் கண்டு போதனை கேட்க வந்திருந்த மக்கள் சிலிர்த்தார்கள்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink Closed

 இயேசு வரலாறு 33 : முதலானோர் கடைசியாவர்.

aas

இயேசு ஒரு வீட்டில் பந்தியமர்ந்திருக்கையில் ஒரு கதை சொன்னார்.

ஒரு ஊரில் பணக்காரர் ஒருவர் இருந்தார். அவர் ஊரிலுள்ள பெரிய மனிதர்களையும், சாதாரண மனிதர்களையும் அனைவரையும் திருமண விருந்து ஒன்றுக்கு அழைத்திருந்தார். இயேசுவும் அந்த விருந்துக்கு அழைக்கப்பட்டிருந்தார். விருந்தில் கலந்து கொண்ட இயேசு தன்னுடைய சீடர்களுடன் பந்தியமர்ந்திருந்தார்.

எல்லோரும் முதலிடத்தைப் பிடிப்பதற்காக ஓடினார்கள், முண்டியடித்தார்கள். முதல் வரிசை நிரம்பிவிட்டது. அந்தக் கூட்டத்தில் இன்னொரு மனிதர் இருந்தார். அவர் முண்டியடித்த அத்தனை மனிதர்களை விடவும் முக்கியமானவர். ஆனால் அவர் அவசரப் படவில்லை. நேராக கடைசி இடத்துக்குச் சென்று அமர்ந்து கொண்டார்.

விருந்துக்கு அழைத்திருந்தவர் வந்தார். அவர் முதலில் முதல் வரிசையில் இருந்தவர்களைச் சென்று பார்வையிட்டார்.

‘வாருங்கள். என்னுடைய அழைப்பை ஏற்று வருகை தந்தமைக்கு நன்றி’ அழைத்தவர் சொல்ல
பந்தியில் இருந்தவர்கள் புன்னகைத்தார்கள்.

ஒவ்வொரு நிலையாகச் சென்று அனைவரையும் நலம் விசாரித்த அந்த செல்வந்தர் கடைசி இடத்துக்கு வந்தபோது அங்கே அமர்ந்திருந்த அந்த முக்கியமான மனிதரைக் கண்டார்.

‘நண்பா… நீ என்ன கடைசி இடத்தில் அமர்ந்திருக்கிறாய் ? நீ எனக்கு மிகவும் முக்கியமானவன் இல்லையா ? வா.. வா.. நீ முதலிடத்துக்கு உரியவன்’ என்று கூறி அவனை முதலிடத்திற்கு அழைத்துச் சென்றார். அதைக் கண்ட அனைவரும் அந்த மனிதனைப் பெருமையுடன் பார்த்தார்கள்.

முதலிடத்துக்கு வந்த அவர் அங்கிருந்த ஒருவரிடம்,’ நீ… போய் அந்த கடைசி இடத்தில் அமர்ந்து கொள். ஏனென்றால் இவனுக்கு நான் முதலிடம் தந்தாக வேண்டும்’ என்றார்.

முதலிடத்திலிருந்து கடைசியிடத்துக்கு அனுப்பப்பட்டவர் அனைத்து விருந்தினர் முன்னிலையிலும் அவமானமாய் உணர்ந்தார். தலை குனிந்தபடியே கடைசி இடத்துக்குச் சென்றார். ஆனால் கடைசி இடத்திலிருந்து முதலிடத்துக்கு வந்தவர் அனைவர் முன்னிலையிலும் முக்கியமானவராகக் கருதப்பட்டு பெருமையடைந்தார்.

இயேசு புன்னகையுடன் இந்த நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தார். பின் தன்னுடன் பந்தியமர்ந்திந்தவர்களை நோக்கி
‘இதன் மூலம் என்ன தெரிந்து கொண்டீர்கள் ? ‘ என்று கேட்டார்.

அவர்கள் ஆளாளுக்கு ஒரு பதிலைச் சொன்னார்கள். இயேசு அவர்களிடம்,
‘தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப் படுவான். தன்னை உயர்த்துகிறவனோ தாழ்த்தப் படுவான். இதுவே செய்தி. இதை வாழ்வில் கடைபிடியுங்கள்’ என்றார்.

பின் அந்த விருந்து ஏற்பாடு செய்திருந்த மனிதரை அழைத்து,
‘நீர் விருந்துக்கு அழைக்கும்போது உறவினர்களையோ, சகோதரர்களையோ, தெரிந்தவர்களையோ அழைக்கவேண்டாம். அப்படி அழைத்தால் அவர்களும் உம்மை விருந்துக்கு அழைத்து பதில் மரியாதை செய்வார்கள். உமது அழைப்பும் அவர்களுடைய அழைப்பும் சரிக்குச் சரியாகிவிடும். மாறாக நீர் விருந்துக்கு அழைக்கும்போது ஏழைகள், நோயுற்றோர், உடல் குறைபாடு உடையோர் இவர்களை விருந்துக்கு அழையும். அப்போது அவர்களால் உமக்குப் கைம்மாறு செய்ய முடியாது. எனவே உமக்குரிய கைம்மாறைக் கடவுள் செய்வார். விண்ணுலகில் உமக்கு ஓரிடம் தயாராக்கப் படும்’ என்றார்.

அப்போது இயேசுவோடு பந்தியமர்ந்திருந்த ஒருவர்,

‘இறையாட்சியில் பங்குகொள்வது எத்தனைப் பெரிய பாக்கியம்.’ என்றார். இயேசு அவரிடம்

ஒருவர் பெரிய விருந்து ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். விருந்துக்கு ஏராளமானோர் அழைக்கப்பட்டிருந்தார்கள். விருந்து நாளும் வந்தது. ஆனால் அழைக்கப்பட்ட யாரும் விருந்துக்கு வந்து சேரவில்லை. அவர் தம்முடைய பணியாளரை அழைத்து,
‘விருந்து ஏற்பாடாகி விட்டது என்று அழைக்கப்பட்டவரிடம் சொல்லுங்கள்’ என்று அனுப்பி வைத்தார்.

பணியாளன் ஒவ்வொருவராகச் சென்று பார்த்து அவர்களை அழைத்தான். அவர்களோ விருந்தில் கலந்து கொள்ளாமலிருக்க சாக்குப் போக்குகளைச் சொல்ல ஆரம்பித்தார்கள்.

‘நான் வயல் ஒன்றை வாங்கியிருக்கிறேன். இன்று உழவு நாள். நான் இல்லாவிட்டால் சரிவராது…’

‘நான் ஐந்து ஏர் மாடுகள் வாங்கியிருக்கிறேன்… நான் அதை ஓட்டிப் பார்த்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்’

‘மன்னியுங்கள். இப்போது தான் எனக்குத் திருமணம் ஆகியிருக்கிறது. என்னால் வர இயலாது’

பணியாளர்கள் சோர்ந்து போய் தலைவரிடம் சென்று நடந்ததைக் கூறினார்கள். தலைவன் சினந்தான்.

‘வராதவர்களை விட்டு விடுங்கள். நீங்கள் போய் நகரின் வீதிகளிலும், சந்துகளிலும் காணும் ஏழைகள், ஊனமுற்றோர், பார்வையிழந்தோர்.. எல்லோரையும் கூட்டி வாருங்கள்’ என்றார்.

அவர்கள் சென்று நகரில் இருந்த ஏழைகளையும், உடல் ஊனமுற்ற மனிதர்களையும் விருந்துக்கு அழைத்தார்கள். அவர்கள் மிகவும் ஆச்சரியத்துடனும், ஆனந்தத்துடனும் விருந்துக்கு வந்து கலந்து கொண்டார்கள்.

‘இதுதான் விண்ணக விழாவிலும் நடக்கப் போகிறது. அழைக்கப்பட்ட இஸ்ரயேல் குல மக்கள் அழைப்பைப் புறக்கணிப்பார்கள். பிற இன மக்கள் கடவுளால் தேர்ந்தெடுக்கப் பட்டு விண்ணக விருந்தைச் சுவைப்பார்கள்’ இயேசு சொன்னார்.

இயேசு இதைச் சொன்னதும் இயேசுவை விருந்துக்கு அழைத்தவரும், விருந்தில் கலந்து கொண்டிருந்த அனைத்து மக்களும் இயேசுவின் போதனையின் பொருளை உணர்ந்து கலக்கமடைந்தார்கள்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink Closed

நல்ல பங்கு

Christ with Martha and Maria *oil on canvas *191 x 302.5 cm *signed b.l: H SIEMIRADZKI.PINX.AD.MDCCCLXXXVI / ROMA *1886பெத்தானியா எருசலேம் நகரிலிருந்து சில மைல்கள் தூரத்தில் இருந்த ஒரு ஊர். அங்கே இயேசுவுக்கு இலாசரஸ் என்று ஒரு நண்பர் இருந்தார். அவருக்கு இரண்டு சகோதரிகள், மார்த்தா மரியாள்.

மரியா எதையும் அறிந்து கொள்ளும் ஆர்வம் உடையவள். மார்த்தாவோ ஒரு குடும்பத் தலைவிக்குரிய முறையில் வீட்டு வேலைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவள்.

இயேசு அவர்கள் வீட்டுக்குச் சென்றார். வீட்டின் திண்ணையோரம் உட்கார்ந்து இயேசு அவர்களுடன் பேசத் துவங்கினார். மரியா இயேசுவின் பாதத்தருகே அமர்ந்து இயேசு பேசுவதை விழிகள் விரிய கேட்டுக் கொண்டிருந்தாள். அவளிடம் ஏராளமான கேள்விகள் இருந்தன. இயேசுவிடம் பதில்களுக்குப் பஞ்சம் இருந்ததில்லையே அவர்களின் உரையாடலில் நேரம் சென்று கொண்டே இருந்தது.

மார்த்தாவோ, வீட்டுச் சமையலறையில் பாத்திரங்களை உருட்டிக் கொண்டிருந்தாள். இயேசுவுக்கு குடிக்க ஏதேனும் கொடுக்க வேண்டும், உண்பதற்கு நன்றாக சமையல் செய்ய வேண்டும் என்றெல்லாம் அவளுடைய மனம் பரபரப்படைந்து கொண்டிருந்தது. தனியே வேலை செய்து செய்து வேலை முடியவில்லை. நேரமாகிக் கொண்டே இருந்தது. மரியா இயேசுவின் அருகில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க, தான் மட்டும் இங்கே சமையலறையில் வெந்து கொண்டிருக்கிறோமே என்னும் சலிப்பும் அவளிடம் எழுந்தது. நேராக இயேசுவிடம் போனாள்,

‘இயேசுவே மரியாவை இங்கே அனுப்பும். தனியே வேலை செய்யக் கஷ்டமாக இருக்கிறது.’ மார்த்தா சொன்னாள்.

இயேசு அவளை திரும்பிப் பார்த்து,’ மார்த்தா.. நீ தேவையில்லாத விஷயங்களைக் குறித்து கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறாய். தேவையானது ஒன்றே. மரியா நல்ல பங்கைத் தேர்ந்து கொண்டாள். அது அவளிடமிருந்து எடுக்கப்பட மாட்டாது’ என்றார்.

மார்த்தா குழம்பினாள். அப்படியானால் இயேசு நல்ல உணவு உண்ணவேண்டுமென்பதற்காக கஷ்டப்படுவது தவறா ? நான் செய்தது நல்ல செயல் இல்லையா ? அவளுடைய மனதுக்குள் கேள்விகள் ஓடின. இயேசுவின் போதனைகளைக் கேட்பதும், விண்ணக வாழ்வுக்கான ஆயத்தங்களைச் செய்வதும் முக்கியமான செயல் என்று இயேசு சொல்ல வந்ததை மார்த்தா புரிந்து கொண்டாள்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink Closed

இயேசு வரலாறு 34 : சாதனைகளும், போதனைகளும்

நம்பிக்கை உன்னை நலமாக்கிற்று.

Jesus heals two blind men

இயேசு பெத்தானியாவில் ஒரு தெரு வழியாக சீடர்களுடன் நடந்து கொண்டிருந்தார். பெரும் திரளான மக்கள் அவரைப் பின் தொடர்ந்து சென்று கொண்டிருந்தார்கள். அந்தத் தெரு ஓரத்தில் இரண்டு பார்வையிழந்தவர்கள் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் சத்தத்தைக் கேட்டபோது தங்களுக்கு அதிக காசு கிடைக்கும் என்ற ஆவலில் சத்தமாகப் பிச்சை கேட்டார்கள்.

வழக்கத்துக்கு மாறான கூட்டம் என்பதால் அவர்களில் ஒருவன் சென்று கொண்டிருந்த ஒருவனைப் பிடித்து ஏன் இவ்வளவு கூட்டம் என்று கேட்டான்.

‘இயேசு சென்று கொண்டிருக்கிறார். அதனால் தான் இத்தனை கூட்டம்’ அவர் பதில் சொன்னார். இயேசு சென்று கொண்டிருக்கிறார் என்பதைக் கேட்டதும் அந்த இரண்டு பார்வையிழந்த மனிதர்களும் உரத்த குரலில் கத்தினார்கள்.

‘தாவீதின் மகனே.. இயேசுவே … எங்கள் மீது இரக்கம் வையும்’. ஏனெனில் அவர்கள் இயேசுவைப் பற்றியும் அவருடைய குணமாக்கும் வல்லமை பற்றியும் கேள்விப்பட்டிருந்தார்கள். பார்வையில்லாமல் இருந்ததால் அவர்களால் இயேசுவைச் சென்று சந்திக்க முடியவில்லை.

‘தாவீதின் மகனே.. இயேசுவே … எங்கள் மீது இரக்கம் வையும்’ மீண்டும் அவர்கள் கத்தினார்கள்.

‘பேசாதே…. அமைதியாய் இரு..’ கூட்டத்தினர் அவர்களை அதட்டினார்கள். ஆனால் அவர்கள் தங்கள் கூச்சலை நிறுத்தவில்லை. கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்தால் அமைதியாய் போக முடியுமா ? அவர்கள் இன்னும் உரக்கக் கத்தினார்கள்.

‘தாவீதின் மகனே.. இயேசுவே … எங்கள் மீது இரக்கம் வையும்’.

இயேசு நின்றார். ‘அவர்களை என்னிடம் கூட்டி வாருங்கள்’ என்றார்.

கூட்டத்தினர் அவனிடம் சென்று ‘உற்சாகமாய் இரு. இயேசு உன்னை அழைக்கிறார். ‘ என்றனர். சத்தம் போடாதே என்று சற்று முன்னர் அதட்டிய மக்கள் இப்போது நேசத்துடன் பேசுகிறார்கள்.

இயேசு அவர்களைப் பார்த்தார்.

‘உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்கள் ?’ இயேசு கேட்டார்.

‘ஆண்டவரே.. நாங்கள் பார்வை பெற வேண்டும். எங்கள் கண்களைத் திறந்தருளும்’ அவர்கள் வேண்டினார்கள்.

இயேசு அவர்கள் கண்களைத் தொட்டார். ‘உங்கள் நம்பிக்கை உங்களை நலமாக்கியது. பார்வையைப் பெற்றுக் கொள்ளுங்கள்’ என்றார். இருட்டுக்குள் கிடந்த இருவரும் சட்டென்று வெளிச்சத்துக்குள் வந்தார்கள்.

கூட்டத்தினர் அதிசயிக்க, பார்வை பெற்றவர்கள் சொல்ல முடியா ஆனந்தத்தில் குதிக்க, இயேசு பயணத்தைத் தொடர்ந்தார்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink Closed

 பத்துத் தொழுநோயாளிகள்.

10-lepers-slide1

 

இயேசு எருசலேம் நகர் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். வழியில் தூரமாய் பத்து பேர் நின்று கொண்டிருப்பதை இயேசு கண்டார். அவர்கள் தொழுநோயாளிகள்.

தொழுநோயாளிகள் பொதுமக்கள் இருக்கும் இடத்துக்கு வரக்கூடாது என்பதும், அவர்களுக்கு எதிரே யாரேனும் வந்தால் கூட ‘தீட்டு தீட்டு’ என்று உரக்கக் கத்தி எதிரே வருபவர்களை எச்சரிக்கை செய்ய வேண்டும் என்பதும் மோசேயின் சட்டங்கள் அடங்கிய நூலில் கூறப்பட்டுள்ளது. ஏனென்றால், தொழுநோயாளிகள் என்பவர்கள் கடவுளின் சாபத்துக்கு உள்ளானவர்கள் என்றும், அவர்களுடைய நோய் ஆண்டவரின் சாபத்தின் விளைவாகத் தோன்றுவது என்றும் மக்கள் உறுதியாக நம்பினார்கள். அவர்களுடைய பாவத்தின் நிழல் தங்கள் ‘புனிதமான’ உடலில் படக்கூடாது என்பதற்காகவே இந்தப் பழக்கத்தைக் கடைபிடித்து வந்தார்கள்.

அவர்கள் மக்கள் தங்கும் நகரங்களின் ஓரமாகக் கூட தங்க அனுமதிக்கப்படுவதில்லை. அவர்கள் தனியாக ஒதுக்குப் புறமாக புதர் அடர்ந்த, ஆளற்ற கிராமங்களிலும், குகைகள் போன்ற இடங்களிலும் தங்குவது தான் வழக்கம்.

இயேசுவும் சீடர்களும் கூட்டமாக வருவதைத் தூரத்தில் நின்ற தொழுநோயாளிகள் கண்டார்கள். அவர்களும் இயேசுவைப் பற்றியும், அவருடைய நோய்தீர்க்கும் வல்லமையையும் அறிந்திருந்தார்கள். அவர்கள் தூரத்தில் நின்று கொண்டே

‘இயேசுவே எங்களுக்கு இரங்கும். நாங்கள் மிகவும் வேதனைப்படுகிறோம். எங்களைக் குணமாக்கும்’ என்று உரத்த குரலில் வேண்டினார்கள்.

இயேசு அவர்களைப் பார்த்தார். அவர்களுடைய நம்பிக்கையைப் பார்த்தார்.
‘நீங்கள் போய் குருக்களிடம் உங்களைக் காட்டுங்கள். நீங்கள் நலமடைந்து விட்டீர்கள்’ இயேசு சொன்னார்.

தொழுநோயாளிகள் யாரேனும் முழுமையாகக் குணமடைந்து விட்டால் அவர்கள் குருக்களிடம் தங்கள் உடலைக் காண்பித்து தாங்கள் குணமானதைப் பறைசாற்றவேண்டும். அதன் பின் கடவுளுக்குச் செலுத்த வேண்டிய காணிக்கைகளைச் செலுத்த வேண்டும். இது வழக்கிலிருந்த சட்டங்கள். அதனால் தான் இயேசு’ உங்களைக் குருக்களிடம் காட்டுங்கள்’ என்றார்.

தொழுநோயாளிகள் தங்கள் உடம்பைப் பார்த்தார்கள். நோய் அப்படியே தான் இருந்தது. நோய் தீராமலேயே குருக்களிடம் போய் காட்டச் சொல்கிறாரே என்று தங்களுக்குள் குழம்பினார்கள். ஆனாலும் இயேசுவின் வார்த்தைகளை நம்பிப் புறப்பட்டார்கள். என்ன ஆச்சரியம் ! போகும் வழியிலேயே அவர்களுடைய நோய் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து முழு உடல் நலம் பெற்றார்கள். அவர்களால் நம்பமுடியவில்லை. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

‘ஏய்… உன்னுடைய முகம் சரியாகிவிட்டது..’

‘என்னுடைய உடல் கூட சரியாகிவிட்டது…’

‘நாம் சுகமாகிவிட்டோம்.. இயேசு சொன்னது சரியாகிவிட்டது !’ அவர்கள் ஆனந்தக் கூத்தாடினார்கள். நகரை நோக்கி ஓடினார்கள்.

ஒருவன் மட்டும் திரும்பி ஓடினான். அவன் ஒரு சமாரியன். மற்றவர்கள் அனைவரும் யூதர்கள்.
அவனுடைய எண்ணமெல்லாம் இயேசுவுக்கு நன்றி செலுத்தவேண்டும் என்பதிலேயே இருந்தது. அவனுடைய ஆனந்தத்தின் காரணகர்த்தவாகிய இயேசுவை நோக்கி அவன் ஓடிக் கொண்டிருந்தான். வழியில் இயேசுவைக் கண்டு அவருடைய பாதங்களில் விழுந்து வணங்கினான்.

‘போதகரே… என்னுடைய அவப்பெயரையும், மனவலியையும் நீக்கினீரே. உமக்கு எப்படி நன்றி சொல்வேன் … ‘ என்று கண்ணீர் விட்டான்.

இயேசு அவனைத் தூக்கினார்.

‘பாருங்கள். கடவுளுக்கு நன்றி செலுத்த யூதர்கள் தயாரில்லாத போது, இந்த அன்னியன் சமாரியன் மட்டும் வந்திருக்கிறான் பாருங்கள் !’ இயேசு சீடர்களிடம் கூறினார்.

சீடர்கள் இயேசுவின் அதிசயத்தைக் கண்டு வியந்து நின்றார்கள். அவர்களுக்கு இயேசுவுடன் நடப்பதே பெருமையாய் தோன்றியது.

இயேசு அவனைப் பார்த்து,’ உன் நம்பிக்கை உனக்கு நலமளித்தது. இனிமேல் கடவுளிடம் மாறாத நம்பிக்கை கொள்’ என்று கூறி அனுப்பி வைத்தார்.

அவன் மகிழ்வுடன் விடைபெற்று குருவிடம் தன்னைக் காண்பிக்க ஓடினான்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink Closed

 

 

Image result for jesus heals the old woman

இயேசு செபக்கூடத்துக்குச் சென்று கற்பிக்கத் துவங்கினார். அங்கே பதினெட்டு ஆண்டுகளாக கூன் முதுகினால் அவதிப்பட்ட ஒரு மூதாட்டி இருந்தார். அவர் இயேசு தன்மீது கருணைக் கண் வைக்க மாட்டாரா என்னும் ஆவலினால் அவரையே பார்த்துக் கொண்டிருந்தாள்

இயேசு அவளைக் கண்டு மனமிரங்கி, ‘அம்மா இந்நேரம் முதல் நீர் இந்த நோயிலிருந்து விடுபட்டீர்’ என்றார். உடனே அவளுடைய முதுகு நேராக அவள் வலி விலகி ஆனந்தமடைந்தாள். இயேசுவின் பாதத்தில் விழுந்து நன்றி சொன்னாள்.

அது ஒரு ஓய்வு நாள்.

ஓய்வு நாளும், இயேசுவும் சர்ச்சை பிரிக்க முடியாதபடி மீண்டும் பிணைந்து விட்டது. தொழுகைக் கூடத் தலைவன் எரிச்சலடைந்தார். கூட்டத்தினரைப் பார்த்துக் கத்தினார்.

‘வாரத்தில் ஆறு நாட்கள் உண்டே. அந்த நாளில் வந்து குணம் பெற்றுப் போங்கள். ஓய்வு நாளில் யாரும் ஆலயத்தைக் களங்கப்படுத்த வேண்டாம்’

இயேசு அவனைப் பார்த்து, ‘ வெளிவேடக்காரனே.. எதற்கு இந்த வீண் பாய்ச்சல் ? ஓய்வு நாளில் உன்னுடைய மாட்டையோ ஆட்டையோ கூட்டிக் கொண்டு போய் தண்ணீர் காட்ட மாட்டாயா ? மாட்டுக்கு கருணை காட்டலாம் மனிதனுக்குக் காட்டக் கூடாதோ ? இதென்ன உங்கள் சட்டம்’ என்று உரத்த குரலில் கேட்க அவன் அமைதியானான்.

 

பொறாமைக் கண்கள்

Jesus-teaching

 

இயேசுவை பரிசேயர்கள் மீண்டும் சூழ்ந்து கொண்டார்கள்.

‘சரி நீர் நிறைய நோயாளிகளைக் குணமாக்குகிறீர். நல்லது. நிறைய மக்களுக்குப் போதிக்கிறீர். அதுவும் நல்லதே. ஆனால் நீர் மறைநூலை புரட்டிப் பார்த்தால் நம்முடைய முன்னோடிகளாய் வந்த பல இறைவாக்கினர்கள் இதையெல்லாம் செய்திருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் இறைவாக்கினர்களாய் இருக்கும்போது, நீர் மட்டும் எப்படிக் கடவுளின் மகனாக இருக்க முடியும் ? அதை நாங்கள் எப்படி நம்புவது ? வானத்திலிருந்து ஒரு அதிசய அடையாளத்தை எங்களுக்குக் காட்டும். அப்போது நாங்கள் நம்புகிறோம்.’ என்றனர்.

இயேசு அவர்களின் நோக்கத்தைப் புரிந்து கொண்டவராகப் புன்னகைத்தார்.
‘மாலை வேளையில் வானம் சிவந்திருந்தால் வானிலை நன்றாக இருக்கிறது என்பீர்கள். காலையில் வானம் சிவந்து மந்தாரமாய் இருந்தால் இன்று காற்றுடன் கூடிய மழை பெய்யும் என்பீர்கள். வானத்தில் தோற்றத்தைப் பகுத்துணரப் படித்த நீங்கள், காலத்தின் மாற்றத்தைக் கணித்துணர முடியாமல் இருப்பது வேடிக்கை தான்’ இயேசு சொன்னார்.

‘என்ன தான் சொல்கிறீர் ? புரியவில்லையே’ பரிசேயர்கள் கேட்டார்கள்.

‘உங்களுக்கு இப்போது அருங்குறிகள் எதுவும் கொடுக்கப் பட மாட்டாது. யோனாவின் கதை தெரியுமா ? மூன்று நாட்கள் மீனின் வயிற்றுக்குள் இருந்தார். யோனாவை விடப் பெரியவர் இங்கே இருக்கிறார். மானிட மகன் மூன்று நாட்கள் பூமியின் வயிற்றுக்குள் இருப்பார். உங்களுக்கு இந்த அடையாளங்கள் இப்போது புரியாது. காரணம் நீங்கள் காதுகளை அடைத்து விட்டு சத்தமில்லை என்று சாதிக்கும் சந்ததியினர்.’ என்றார்.

‘எவனும் இரண்டு தலைவர்களுக்கு ஊழியம் செய்ய முடியாது. அப்படிச் செய்தால் ஒருவனை சார்ந்து கொண்டு மற்றவனைப் புறக்கணிப்பான். கடவுளுக்கும், மனிதனுக்கும் ஊழியம் செய்ய உங்களால் முடியாது. என்னைப் பின் தொடர விரும்புபவன் தன்னையே வெறுத்து, தன் வருத்தங்களைச் சுமந்து கொண்டு, தன்னுடைய உறவினர்கள் அனைவரையும் விட்டு விட்டு என்னைப் பின்தொடர வேண்டும். அப்படிச் செய்யாதவன் என்னுடைய சீடனாக முடியாது’ இயேசு சொல்ல பரிசேயர்கள் விலகினர்.

Image result for jesus teaching to his disciples

தான் திருமுழுக்கு யோவானிடம் திருமுழுக்கு பெற்ற யோர்தான் நதியை ஒட்டிய ஒரு பகுதியில் தன்னுடைய சீடர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தார் இயேசு. தன்னுடைய பணியின் கடைசி கட்டத்தில் வந்துவிட்டோம் என்னும் உள்ளுணர்வு அவருக்குள் எழுந்தது. எனவே சீடர்களுக்கு அவர்களுடைய கடமைகளைப் பற்றியும், அவர்கள் செய்ய வேண்டிய பணிகளைப்பற்றியும் விண்ணக வாழ்க்கை குறித்தும் இயேசு உரையாடினார்.

யோவான் சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன், ‘இதோ.. இவரே கடவுளின் மகன்’ என்று உரக்கக் கூறிய யோர்தான் நதிக்கரையில் மூன்று ஆண்டுகளுக்குப் பின் இயேசுவும் சீடர்களும் நடக்கிறார்கள். இந்த மூன்று ஆண்டுகளில் நடந்த மாற்றத்தை ஒரு விஸ்வரூப வளர்ச்சி என்று தான் சொல்ல வேண்டும். சாதாரண ஒரு தச்சனின் மகனாக மூன்று ஆண்டுகளுக்கு முன் யோர்தான் நதியில் வந்து இறங்கிய இயேசு இன்று எருசலேம் எல்லைகளையும் அசைக்கும் ஒரு மாபெரும் மனித சக்தியாக வளர்ந்து நிற்கிறார். துணிச்சலின் மொத்த உருவமாக உழைப்பின் பிரதிநிதியாக ஓய்வெடுக்கக் கூட தனிமை கிடைக்காத பிரபலமானவராக வளர்ந்திருக்கிறார்.

சீடர்கள் நினைத்துப் பார்த்தார்கள். ஒருமுறை இயேசு போதித்துக் கொண்டிருந்தபோது குழந்தைகள் இயேசுவின் போதனைக்கு இடையூறாக அவருடன் விளையாடுவதும், அவருடைய மடியில் ஏறிக் குதிப்பதுமாக இருந்தனர். சீடர்கள் குழந்தைகளை அதட்டினர். இயேசுவோ, குழந்தைகளை என்னிடம் வர விடுங்கள். அவர்களைத் தடுக்க வேண்டாம் ஏனெனில் விண்ணரசு அத்தகையோரதே என்றார்.

சீடர்களின் மன ஓட்டத்தைப் புரிந்து கொண்ட இயேசு அவர்களிடம், குழந்தைகளிடம் தான் கள்ளம் கபடம் ஏதும் இருப்பதில்லை. அவர்களைப் போன்ற மனதைப் பெறுவது என்பது எளிதான செயல் அல்ல. ஆனால் அத்தகையோருக்கே கடவுளின் விண்ணகம் தயாராகியிருக்கிறது

மேலும் இயேசு அவர்களைப் பார்த்து ‘இரண்டு நாணயத்துக்கு ஐந்து கிளிகள் விற்பதைப் பார்த்திருப்பீர்கள். அவற்றில் ஒன்று கூட கடவுளின் பார்வைக்கு தப்பாது. கடவுள் அவற்றையும் மறப்பதில்லை. உங்கள் தலைமுடிகள் எல்லாம் எண்ணப்பட்டுள்ளன’ என்றார்.

ஒவ்வொரு மனிதனுடைய தனித்தன்மையைக் குறித்து இயேசு கூறிய வார்த்தைகள் இரண்டாயிரம் வருடங்களுக்குப் பின்னும் நிலைபெறுகின்றன. எந்த இரண்டு மனிதர்களுடைய தலைமயிரும் ஒன்று போல் இருப்பதில்லை, ஏன் ஒரே தலையில் இருக்கும் இரண்டு முடிகள் கூட இரண்டு தன்மையுடையவையாய் இருக்கின்றன. அதுமட்டுமல்ல இரண்டு மனிதர்களுடைய பாதச் சுவடுகளோ, கைவிரல் அடையாளங்களோ ஏன் இரண்டு விலங்குகளுடைய பாதப் பதிவுகள் கூட வேறுபட்டவையாய் இருக்கின்றன என்று அறிவியல் இன்று விவரிப்பதை இயேசு ‘உங்கள் தலைமுடிகள் எல்லாம் எண்ணப்பட்டுள்ளன’ என்று ஒரே வார்த்தையில் குறிப்பிடுகிறார். ஒவ்வொரு மனிதனும் பூமியில் தனித்தன்மையோடு படைக்கப்பட்டிருப்பதை இயேசுவின் ஒற்றை வாக்கியம் உணர்த்துவதாக இறையியல் ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.

‘நான் தூய ஆவியானவரை உங்களிடம் விட்டுச் செல்வேன். அவர் உங்களுடன் இருப்பார். நீங்கள் என்ன பேசவேண்டும் என்பதை அவர் உங்களுக்குள் இருந்து உங்களுக்குச் சொல்வார்’ இயேசு தூய ஆவியானவரைப் பற்றி சீடர்களுக்கு அறிமுகப்படுத்துகிறார். தன் பெயரால் சீடர்கள் பிரச்சினைகளைச் சந்திப்பார்கள் என்றும் அவர்கள் பிரச்சினைகளில் விழும்போது தூய ஆவியானவர் அவர்களுக்கு உள்ளே இருந்து செயலாற்றுவார் என்றும் சீடர்களுக்கு நம்பிக்கையை வழங்குகிறார் இயேசு.

நீண்ட நேர போதனைகள் மற்றும் அறிவுரைகளுக்குப் பிறகு சீடர்கள் மனதளவில் மிகுந்த தைரியமடைந்தார்கள்

ஊசியின் காதில் ஒட்டகம் நுழையும்

Image result for Rich young man and Jesus

‘இயேசுவே நான் விண்ணக வாழ்வுக்குள் நுழைய வேண்டும் என்று விரும்புகிறேன். நான் என்ன செய்யவேண்டும் என்பதைச் சொல்லுங்கள்.’ செல்வந்தர் ஒருவர் இயேசுவின் முன் வந்து பணிவாய்க் கேட்டார். அவருடைய தோற்றமும் அவருடைய கேள்வி கேட்ட விதமும் உண்மையிலேயே விண்ணக வாழ்வுக்கு நுழைவதற்கான வழியைக் கேட்க வந்தவராய் இருக்கவில்லை. இயேசு என்ன சொல்கிறார் என்பதை அறிந்து கொள்ள வந்தவராகவே இருந்தது. இயேசு அவனைப் பார்த்தார்.

‘கட்டளைகளைக் கடைபிடியும். அது மட்டுமே போதும்… விண்ணக வாழ்வில் நுழைந்து விடலாம்’ இயேசு பதில் சொன்னார்.

‘எந்தக் கட்டளைகளைச் சொல்கிறீர்கள் ?’ அவர் கேட்டார்.

‘பத்துக் கட்டளைகளைப் பற்றி அறிந்திருக்கிறாயா ? கொலை செய்யாதே, விபச்சாரம் செய்யாதே, பெற்றோரை மதித்து நட… போன்ற கட்டளைகள்…’ இயேசு கேட்டார்.

‘இவைகள் எல்லாவற்றையும் கடைபிடிக்கிறேன்… எதிலும் தவறியதில்லை’

‘உன் மீது நீ அன்பு கூர்வது போல உன் அயலான் மீதும் அன்பு செய். என்னும் கட்டளையையும் கடைபிடி. விண்ணகத்தில் நீ நுழையலாம்’ இயேசு சொன்னார்.

‘அதையும் நான் கடைபிடிக்கிறேன் இயேசுவே…’

‘இல்லை. நீ அதைக் கடைபிடித்திருந்தால் இத்தனை பெரிய செல்வந்தனாய் இருந்திருக்க முடியாது. ஏழைகள் உன்னைச் சுற்றி உண்ண உணவில்லாமல் இருக்கும்போது நீ செல்வந்தனாய் இருக்கிறாய் என்றால் உன்மீது நீ காட்டும் அன்பை அவர்கள் மீது காட்டவில்லை என்பது தானே பொருள் ?’ இயேசு கேட்க அவன் அமைதியானான்.

‘போய் உமக்குள்ளதையெல்லாம் விற்று ஏழைகளுக்குக் கொடும். விண்ணகத்தில் உமக்குரிய செல்வம் மிகுதியாகும்’ இயேசு சொன்னதைக் கேட்டதும் அவர் மிகவும் மன வருத்தத்துடன் சென்றார். ஏனென்றால் அவருக்கு ஏராளமான சொத்து இருந்தது.

இயேசு சீடர்களிடம் திரும்பி, ‘செல்வந்தர் விண்ணகத்தில் சேர்வது மிகவும் கடினமானது. செல்வர் இறையாட்சிக்கு உட்படுவதை விட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது’ என்றார்.

‘அப்படிப் பார்த்தால் யார் தான் மீட்புப் பெற முடியும் ?’ சீடர்கள் கேட்டார்கள்.

‘மனிதரால் இயலாதவை எல்லாம் கடவுளால் இயலும்.’ இயேசு சொன்னார்.

சீடர்களுக்குள் குழப்பம் எழுந்தது. விண்ணகத்தில் யார் நுழைவார்கள் ? கடைசி காலம் வரை செல்வத்தையெல்லாம் அனுபவித்துவிட்டு கடைசி நிமிடத்தில் தங்கள் சொத்தையெல்லாம் விற்று ஏழைகளுக்கு வழங்கும் ஒரு மனிதன் விண்ணகம் நுழைய முடியும் என்றால், துவக்கம் முதலே எல்லாவற்றையும் உதறிவிட்டு இயேசுவோடு நடக்கும் தங்களுக்கு என்ன கிடைக்கும் ?

இயேசு சீடர்களைப் பார்த்து,’ நீங்கள் என் நண்பர்கள். உங்கள் பணிகளுக்கான பயனை நீங்கள் பெறாமல் போகமாட்டீர்கள்’ என்றார்.

Image result for parable of the unmerciful servant

இயேசு மன்னிப்பின் மகத்துவத்தைப் பற்றி சீடர்களிடம் உரையாடிக் கொண்டிருக்கையில், இயேசுவின் சீடர் பேதுரு இயேசுவிடம் ஒரு கேள்வியைக் கேட்டார்.

‘இயேசுவே, என்னுடைய சகோதரனோ, சகோதரியோ எனக்கு எதிராகத் தொடர்ந்து பாவம் செய்துவந்தால் நான் எத்தனை முறை மன்னிப்பது ? ஏழு முறையா ?’

ஏழு என்பது இஸ்ரயேலர்களின் வரலாற்றில் மிகவும் முக்கியமான எண். ஏழு என்பது கடவுளுக்குரியது என்று அவர்கள் எண்ணினார்கள். எனவே தான் பேதுரு அப்படி ஒரு கேள்வியைக் கேட்டார்.

இயேசு அவரிடம்,’ ஏழு முறை மட்டுமல்ல. எழுபது தடவை ஏழுமுறை நீ அவனை மன்னிக்க வேண்டும்’ என்றார். அத்தனை முறை மன்னித்துவிட்டால் அதன்பின் மன்னிப்பது மனிதனுக்குப் பழக்கமாகிவிடும் என்பது இயேசுவின் எண்ணம். இத்தனை முறை மன்னிப்புப் பெற்றவன் தொடர்ந்து பாவங்கள் செய்யமாட்டான் என்பதும் அவருடைய நம்பிக்கை.

அதை விளக்க இயேசு ஒரு கதை சொன்னார்.

விண்ணக அரசை நான் சொல்லப்போகும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம். ஒரு அரசன் இருந்தான். அவன் சற்று நேர்மையான மன்னன். மக்களின் இக்கட்டான நேரங்களில் அவர்களுக்குத் தேவையான பண உதவிகளை அளிப்பது அவனுடைய வழக்கம். ஒருமுறை அவன் தன்னுடைய பணியாளனை அழைத்து, யாரெல்லாம் தன்னிடம் கடன் வாங்கியிருக்கிறார்கள். யாரெல்லாம் அதை நேர்மையாகக் கட்டியிருக்கிறார்கள், யார் யார் அதை சரியாகக் கட்டாமல் இழுத்தடிக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்கச் சொன்னான். பணியாளன் ஏடுகளைப் புரட்டி கணக்கு பார்க்கத் துவங்கினான்.

‘அரசே… ஒரு பணியாளன் உம்மிடம் பத்தாயிரம் தாலந்து கடன்பட்டு பல வருடங்களாகிறது. இன்னும் திருப்பிச் செலுத்தவில்லை’ பணியாளன் சொன்னான்.

‘உடனே அவனை இங்கே அழைத்துவாருங்கள்’ மன்னன் ஆணையிட்டான்.

கடன் பட்ட அந்த மனிதர் மன்னனின் முன்னிலையில் இழுத்து வரப்பட்டான்.

‘என்னிடம் கடன் வாங்கிவிட்டுத் திருப்பிச் செலுத்தாமல் என்னை ஏமாற்றுகிறாயா ?’ மன்னன் கர்ஜித்தான்.

‘அரசே… உம்மை ஏமாற்றும் எண்ணம் எனக்குச் சிறிதும் இல்லை. என்னால் கடனை திருப்பிக் கட்ட இயலாத நிலை. வறுமையில் உழல்கிறேன்’ கடன் பட்டவன் பணிந்தான்.

‘உம்முடைய சொத்துக்களையெல்லாம் பறிமுதல் செய்வேன்’ அரசன் சொன்னான்

‘அரசே எனக்கு சொத்துக்கள் என்று எதுவுமே இல்லையே…’

‘இருக்கும் சொத்துக்களையும், உன் மனைவி பிள்ளைகளையும் விற்று என்னுடைய கடனை நீ திரும்பச் செலுத்த வேண்டும்.’ மன்னன் கத்தினான்.

கடனாளி அதிர்ந்து போனான். அவன் மன்னனின் காலில் விழுந்து. ‘ அரசே.. நீர் எனக்கு இரக்கம் காட்டவேண்டும். உம்முடைய கருணைக் கண்ணை என்மீது வைத்து என்னை மன்னிக்க வேண்டும். எனக்கு இருப்பதே என் மனைவியும், பிள்ளைகளும் தான். அவர்களும் இல்லையென்றால் நான் சாவதைத் தவிர வேறு வழியே இல்லை. என்னை மன்னியுங்கள். என் கடனை மன்னியுங்கள்’ என்று கதறினான்.

அவனுடைய அழுகை மன்னனைக் கரைத்தது. ‘சரி.. நீ போ… உன்னுடைய அனைத்துக் கடன்களையும் நான் தள்ளுபடி செய்கிறேன்’ மன்னன் சொல்ல, கடன்பட்டவன் நம்பமுடியாமல் பார்த்தான். அவனுடைய உள்ளத்தில் உற்சாகம் புரள, கண்களில் கண்ணீர் பனிக்க நன்றி சொன்னான்.

அவன் அரசனுடைய முன்னிலையிலிருந்து வெளியே வந்தான். தன்னுடைய கடன்கள் எல்லாம் மன்னிக்கப்பட்டதில் ஒரு மிகப்பெரிய சுமை இறங்கியதாய்த் தோன்றியது அவனுக்கு. அவனுக்கு எதிரே அவனிடம் நூறு தெனாரியம் கடன்பட்டவன் வந்து கொண்டிருந்தான். நூறு தெனாரியம் என்பது மிகவும் குறைந்த தொகை.

‘ஏய்.. என்னுடைய நூறு தெனாரியங்கள் எங்கே ? வாங்கிப் போய் பல நாட்களாகிறதே’ மன்னனிடம் மன்னிப்பைப் பெற்ற அந்த மனிதன் கேட்டான்.

‘ஐயா, மன்னியுங்கள். விரைவிலேயே கொடுத்துவிடுகிறேன்.’ அவன் கெஞ்சினான். ஆனால் இவனுடைய மனம் இறுகியது. தன்னுடைய பத்தாயிரம் தாலந்துக் கடனை மன்னன் மன்னித்ததுபோல, இந்த மனிதனுடைய நூறு தெனாரியம் கடனை மன்னிக்க இவன் விரும்பவில்லை. அவனுடைய கழுத்தைப் பிடித்து கீழே தள்ளி, நன்றாக அடித்துத் துவைத்து, அவனை தன்னுடைய அதிகாரத்தின் கீழ் சிறையில் அடைத்தான்.

சக ஊழியர்கள் இதைக் கண்டபோது மிகவும் வருந்தினர். மன்னனிடம் சென்று விஷயத்தைச் சொன்னார்கள். மன்னன் அதிர்ந்தான்.
‘உடனே அவனை இங்கே இழுத்து வாருங்கள்’ என்று ஆணையிட்டான்.

அவன் இரண்டாம் முறையாக மன்னனின் முன்னால் நிறுத்தப்பட்டான்.
‘பொல்லாதவனே….’ மன்னன் கோபத்தின் உச்சத்தில் உரத்த குரலில் அழைத்தான். ‘ உன்னுடைய பத்தாயிரம் தாலந்தை நான் மன்னித்தேனே. அதே போல நீயும் அவனுடைய நூறு தெனாரியம் கடனை மன்னித்திருக்கலாமே ! அதை விட்டுவிட்டு அவனைச் சிறையில் அடைத்துக் கொடுமைப்படுத்துகிறாயே ! இப்போது சொல்கிறேன் கேள். நீ இப்போதே சிறையிலடைக்கப் படுகிறாய். நீ வாங்கிய பத்தாயிரம் தாலந்துக் கடனை நீ திரும்பிச் செலுத்தும் வரை, சிறையில் நீ சித்திரவதை செய்யப்படுவாய். மன்னிக்க மறுக்கும் உன்னை நானும் மன்னிக்க மாட்டேன்’ என்றான்.

இயேசு கதையைச் சொல்லி முடித்துவிட்டு பேதுருவிடம் திரும்பி,’ விண்ணகத்தின் நிலை இதுதான். மண்ணகத்தில் நீ மன்னிக்க மறுக்கும் நிகழ்வுகளுக்காய், விண்ணகத்தில் உனக்கான மன்னிப்பும் மறுக்கப்படும். எனவே மன்னிக்க மனம் கோணாதே ! அது உன்னை விண்ணக வாழ்வுக்கு ஆயத்தப்படுத்தும்’ என்றார்.

பேதுரு தெளிந்தார்.



__________________
1 2  >  Last»  | Page of 2  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard