New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கம்யூனிசம்,


Guru

Status: Offline
Posts: 24601
Date:
கம்யூனிசம்,
Permalink  
 


ஒரு மடாதிபதியின் அறிவியல் -அரவிந்தன் நீலகண்டன்

பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரியாகத் தன்னையே பிரகடனப்படுத்திக்கொண்டவர் ஸ்டாலின். தன் கீழிருந்த மானுட சமுதாயத்தை மட்டுமல்லாது, தனது ஆட்சிப்பரப்பில் இருந்த இயற்கையையும் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரத் தலைப்பட்டார். இருக்கவே இருக்கிறது – இறைத்தூதர் ஏங்கல்ஸுக்கு வெளிப்படுத்தப்பட்ட சுவிசேஷமான மார்க்சிய டயலட்டிக்ஸ். இயற்கையைச் சம்மட்டியால் அடித்து, பாட்டாளி வர்க்கப் பேரரசுக்கு ஏற்றபடி மாற்றியெடுக்க வேண்டும்.

சோவியத் யூனியனெங்கும் பெரும் தொழிற்சாலைகள், மிகப்பெரிய அணைகள், மாபெரும் கால்வாய்கள் தோன்றின.  கூலியில்லா வேலை செய்ய வதைமுகாம்வாசிகள் இருக்கும்போது, சில முக்கியமான முதலாளித்துவ பொருளாதாரப் பிரச்னைகளை சோவியத் எதிர்கொள்ளவேண்டிய அவசியம்கூட இருக்கவில்லை.  ‘இதோ பிறக்கிறது புதிய யுகம்’ என்றார்கள் ஸ்டாலினின் பிரசாரகர்கள். அவர்கள் சமானியமானவர்கள் அல்லர். மேற்கத்திய உலகின் மிகச்சிறந்த அறிவுஜீவிகள். ஸ்டாலினின் ஐந்தாண்டுத் திட்டங்களால் அழகாக்கப்பட்டு வரும் சோவியத் நங்கையின் மேனி எழிலை வர்ணிக்க, சாலமோனின் உன்னத கீதங்களை உருவிக் கவியெழுதக்கூட திட்டமிட்டார் ஓர் அறிவுஜீவி பிரசாரகர்:

“என் காதலியின் கண்கள் ஸ்டெப்பி ஆலைப் பட்டறைகளின் நெருப்பாக ஒளி விடுகிறதே. வெண்கடல் கால்வாயின் அழகைப் போன்றதே அவள் பற்கள். தெனெப்பேர் அணையின் வளைவாக அழகோடு மிளிருமே அவள் தோள்கள். அவள் முதுகின் நேர்த்தியோ சைபீரிய இருப்புப்பாதை போல… இந்த அழகிய திராட்சை வனத்தை ஒழிக்க முயலும் நரிக்கும்பல் எதிர்ப்புரட்சி வீணர்கள்.”

ஆனால் சோவியத் யூனியனுக்குச் சென்ற பெரும்பாலான வெளிநாட்டு மார்க்சிய ஆதரவாளர்கள்,  உடனடி விளைவாக தீவிர சோவியத் எதிர்ப்பாளர்களானார்கள். அதற்காக அவர்கள் அமெரிக்க முதலாளித்துவத்தின் அடிவருடிகளாகவோ, ஆதரவாளர்களாகவோ மாறிவிடவில்லை. ஆனால் சோவியத் எதிர்ப்பாளர்கள்!

காரணம்?

சாலமோனின் உன்னதப்பாட்டை ஸ்டாலினுக்கு மாற்ற நினைத்த அறிவுஜீவியின் பெயர் ஆர்தர் கோய்ஸ்லர். வீடு வீடாக ஏறி வாக்குவம் க்ளீனர் விற்பதுபோல மார்க்சியப் புரட்சியின் பிரசாரத்தை மேற்கொண்டவர். சோவியத் யூனியனுக்குச் சென்ற பிறகு கம்யூனிசத்தைக் கைவிட்டவர். அதற்கான காரணத்தை அவரே சொல்கிறார்:

‘ 1932-33 பஞ்சத்தின் உக்கிரத்தை நான் உக்ரைனில் கண்டேன். கூட்டம் கூட்டமாக, குடும்பம் குடும்பமாக மக்கள் கந்தல் துணிகளுடன் ரயில்வே ஸ்டேஷன்களில் உணவுக்காகக் கையேந்திப் பிச்சை எடுப்பதைக் கண்டேன். ரயிலின் ஜன்னல்களுக்கு இடையே, எலும்புகளாகத் தேய்ந்திருந்த குழந்தைகளைத் தூக்கி அவர்களின் கரங்களால் பிச்சை கேட்கும் பெண்கள். கருவில் இறந்த குழந்தைகளின் உடல்களைப் பரிசோதனைச் சாலைகளில் ஆல்கஹால் குடுவைகளில் பத்திரப்படுத்தி வைத்ததுபோல இருந்தார்கள் அந்தக் குழந்தைகள்… இவர்களெல்லாம் நிலத்தைப் பொதுவுடமையாக்கும் புரட்சியை எதிர்த்த குலக்குகள் என எனக்குச் சொல்லப்பட்டது..’

ஆர்தர் கோய்ஸ்லர் மட்டுமல்ல, ஸ்டாலினைவிட இருபது வயது இளையவரான ஸ்டாலினின் இரண்டாவது மனைவி, சில கல்லூரி மாணவர்களிடம், உக்ரைனில் நிலவும் தீவிரப் பஞ்சம் குறித்துக் கேட்டறிந்தார். இது குறித்து ஸ்டாலினிடம் விவாதிக்க முயன்றார். விளைவாகக் கடுமையாக அவமதிக்கப்பட்டார். அவரிடம் பஞ்சம் குறித்துப் பேசிய மாணவர்கள் கண்டறியப்பட்டுக் காணாமல் போயினர். ஸ்டாலினின் மனைவி  ‘தற்கொலை’ செய்துகொண்டார்.

மனிதர்களைக் கட்டுப்படுத்த முயன்றதால் ஏற்பட்ட பஞ்சத்தை, இயற்கையைக் கட்டுப்படுத்தித் தீர்க்க முயன்றார் ஸ்டாலின். வரலாற்றில் மட்டுமல்லாது, அறிவியலின் வரலாற்றிலும் ஒரு கொடூர அத்தியாயம் சோவியத் பஞ்சத்துடன் தொடங்கியது. இதன் முழுத் தன்மையை அறிய சற்றே பின்னோக்கிச் செல்லவேண்டும்.

1920களில் உயிரியலில் சூழ்நிலையும் மரபணுக் காரணிகளும் எந்த அளவு ஓர் உயிரினத்தின் தன்மையை நிர்ணயிக்கின்றன என்பது குறித்துத் தீவிரமான அறிவியல் விவாதங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தன. ஆஸ்திரியப் பாதிரியான கிரிகோர் மெண்டல், தனது மடாலயத் தோட்டத்தில்பட்டாணிகளில் செய்த பரிசோதனைகள் மூலம் மரபணுவியலின் ஆதார விதிகளைக் கண்டுபிடித்திருந்தார். அடுத்த நூற்றாண்டில் மோர்கன், தொப்ஸான்ஸ்கி போன்ற மரபணுவியலாளர்கள் கடுமையாக உழைத்து நியோ-டார்வினியக் கோட்பாட்டினை உருவாக்கினர். எப்படி மரபணுக்கள் ஓர் உயிரினத்தின் தன்மைகளை முடிவு செய்கின்றன என்பதையும், அந்தத் தன்மைகள் வெளிப்படும் விதத்தைப் பல மரபணு – அகக் காரணிகளும் புறச்சூழல்களும் முடிவு செய்கின்றன என்பதைக் குறித்தும் ஒரு தெளிவான சித்திரம் உருவாகத் தொடங்கியது.

இந்நிலையில் சோவியத்திலோ இந்த அறிவியல் விவாதம் மார்க்சிய மத சித்தாந்தங்களின் அடிப்படையில் நடத்தப்பட வேண்டிய ஒன்றாயிற்று. ஜீன்களா? சூழலா? எது மார்க்சியத்துக்கு உகந்தது? எது ஆகாது?  – இந்த ரீதியில் மார்க்சிய மத பீடத்தின் அங்கீகாரத்துக்கு ஏங்கியபடி அறிவியலாளர்கள், தத்தம் நிலைபாடுகளே மார்க்சிய அருளாசி கொண்டதும் திரிபுவாதங்கள் அற்றதுமென நிறுவ முயன்றார்கள். இதற்காக, டாஸ் காபிடல் முதல் டயலடிக்ஸ் வரை புனித மூல கிரந்தங்களையும், ஏங்கல்ஸ் முதல் லெனின், ஸ்டாலின் என ஆசாரிய பாஷ்யங்களையும் எடுத்துப் புரட்ட வேண்டியதாயிற்று. அதாவது, பரிசோதனைச் சாலைகளில் உண்மை என நிரூபிக்கிறார்களோ இல்லையோ, பொலிட் பீரோ உறுப்பினர்களின் சித்தாந்த நம்பிக்கைகளுக்குத் தாங்கள் புறம்பாக நடக்கவில்லை என நிரூபிக்க வேண்டிய கட்டாயத்துக்கு அவர்கள் ஆளானார்கள்.

துரதிர்ஷ்டவசமாக, அதிகாரத்தின் அதி உச்சியிலிருந்த மார்க்ஸிய அதிபதியான ஸ்டாலின் “சூழ்நிலைகளை மாற்றுவதன் மூலம் உயிரினத்தின் அடிப்படையையே மாற்றி அமைத்துவிட முடியும்” எனும் கோட்பாட்டுக்குப் பச்சை கொடி காட்டினார். நியோ-லமார்க்கியானிசம் என சொல்லப்படுகிற அந்தக் கோட்பாடு அறிவியல் அடிப்படை அற்றது என உயிரியலாளர்கள் அப்போதுதான் உலகம் முழுவதும் சொல்லத் தொடங்கி இருந்தார்கள்.

ஆனால் சோவியத் யூனியனிலோ, நிலை வேறாக இருந்தது. “ஜெனிடிக்ஸ் என்பதே முதலாளித்துவ – கருத்துமுதல்வாத பிற்போக்குவாதிகளின் வக்கிரம். உயிரினங்களையே மாற்றி அமைப்பதில் சோவியத் அடையப்போகும் வெற்றியைத் தடுத்து, குழப்பம் விளைவிக்கச் செய்யும் சதி வேலை” என்று கூறினார் ஸ்டாலினால் தேர்ந்தெடுக்கப்பட்ட லைசென்கோ என்கிற வேளாண்மை அறிவியலாளர்.

லைசன்கோ

ட்ரோஃப்பிம் லைசென்கோ தடாலடி ஆசாமி. வாய்ப்பந்தல் போடுவதில் மன்னன். கூசாமல் அதியற்புத விளைவுகளைத் தான் உருவாக்கியதாகக் கதைவிடுபவர். இவரது வாய்ச்சவடாலில் மயங்கி, இவரது சில செயல்முறைகளைத் தமது மரபணுச் சோதனைகளில் பயன்படுத்தலாம் என நினைத்து, லைசன்கோவை முதலில் பிரபலப்படுத்தியவர் மரபணுவியலாளர் நிகோலாய் வவிலோவ். ஸ்டாலினின் கூட்டுப்பண்ணை முறை, விவசாயத்துக்கே உலை வைத்து, பாரம்பரிய தானிய வகைகளை இல்லாமல் ஒழித்துவிட்டது. இந்நிலையில் 4-5 ஆண்டுகளுக்குள் அதிக விளைச்சல் தரும் புதிய தானிய வகைகளை உருவாக்க உத்தரவிட்டார் ஸ்டாலின். மரபணுவியலாளர்கள் இதை எதிர்த்தனர். அன்றையச் சூழலில் அத்தகைய தானிய வகைகளை உருவாக்கக் குறைந்தது 12 ஆண்டுகளாவது ஆகும். லைசென்கோ இதனை நல்ல வாய்ப்பாகப் பார்த்தார்: “நான் 4 வருடங்களில் அப்படிப்பட்ட தானியங்களை உருவாக்கித் தருகிறேன். ஜெனிடிக்ஸ் ஒரு முதலாளித்துவ ஏமாற்றுத்தனம் என நிரூபிக்கிறேன்.”

1939 இல் லைசென்கோ சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரபூர்வ இதழில் தெளிவாக அறிவித்தார்: “அறிவியலில் இருக்கும் பொய்களையும் குப்பைகளையும் நாங்கள் மறுக்கிறோம். இயக்கமில்லாத மெண்டலிய-மோர்கனிய ஜெனிடிக்ஸை நாங்கள் ஒதுக்கித் தள்ளுகிறோம்.”

ஆகஸ்ட் வெய்ஸ்மான் என்கிற உயிரியலாளர் ஜெனிடிக்ஸின் முக்கியப் பிதாமகர்களில் ஒருவர். உயிரினங்கள் தங்கள் உடற்செல்களில் (somatoplasm) அடையும் மாற்றங்கள் மறு தலைமுறைக்குச் செல்வதில்லை, இனப்பெருக்கச் செல்களில் (germplasm) அடையும் மாற்றங்களே அடுத்தத் தலைமுறைக்குச் செல்லும் என்னும் அடிப்படை விதியை அவர் கண்டுபிடித்திருந்தார். இன்று பூமி சூரியனைச் சுற்றுகிறது என்பது போல அடிப்படையான உயிரியல் விதி இது. பள்ளி மாணவர்களுக்குக்கூடத் தெரியும். ஆனால் ஸ்டாலினும் லைசென்கோவும் இதையெல்லாம் திட்டவட்டமாக மறுத்தனர். ஏனெனில், ஸ்டாலினின் புரிதலின்பாற்பட்ட மார்க்சிய சுவிசேஷத்துக்கு ஏற்றதாக இல்லையே.

ஸ்டாலின் 1947 இல் லைசென்கோவுக்கு எழுதினார்: “சுற்றுச்சூழலிலிருந்து பெறும் குணாதிசயங்கள் மரபுவழியாகக் கடத்தப்படுவதில்லை என நினைக்கும் வெயிஸ்மானிஸ்டுகளுக்கும் அவர்களது கோஷ்டியினருக்கும் நீண்ட காலத்துக்கு அவை குறித்தெல்லாம் பேசும் உரிமையே இருக்கக் கூடாது.”

இது வெறும் தத்துவார்த்த அரசியல் சார்பு மட்டுமல்ல, ஏதோ தலைமை மதகுருவுக்குப் பிடித்த ஆசாமியை உளறவைத்துக் கொண்டிருக்கிறார் என்றுவிட்டுவிட. லைசென்கோவை எதிர்த்த, ஜெனிடிக்ஸை ஆதரித்த மரபணுவியலாளர்கள் திறமையுடன் வேட்டையாடப்பட்டனர்.

அதில் முக்கியமானவர் நிகோலாய் வவிலோவ். லைசென்கோவை முதலில் ஆதரித்தவர். மரபணுவியலாளரின் பூர்விகங்கள்

வவிலோவ் - சிறையில் எடுத்த படம்

ஆராயப்பட்டன: “நீ குலாக்குகள் சாதியில் பிறந்தவன், அதனால்தான் சாமானியனான லைசென்கோவுக்கு எதிராக நடக்கிறாய்” என்று கட்சி அதிகாரிகளால் அறிவியலாளர்கள் குறுக்கு விசாரணை செய்யப்பட்டார்கள். ‘ஜெனிடிக்ஸ் பொய், முதலாளித்துவ சதி, லைசென்கோ உருவாக்கிய படைப்பாக்கப் பரிணாமமே உண்மை என்று சொல்லுங்கள்’ என அறிக்கையிடும்படி ‘கேட்டுக்கொள்ள’ப்பட்டார்கள். ‘முடியாது’ என்றவர்கள் சைபீரியாவுக்குச் சென்றார்கள். துரோகிகள் என குற்றம்சாட்டப்பட்டு அவமானப்படுத்தப்பட்டார்கள். சில அறிவியலாளர்கள் பொறுக்கமுடியாமல் தற்கொலை செய்து கொண்டார்கள். 1948 இல் அதிகாரபூர்வமாக ஜெனிடிக்ஸ் சோவியத் யூனியனில் தடை செய்யப்படுவதாக பொலிட் பீரோ அறிவித்தது.

பஞ்சம் அலையடித்தது. லைசென்கோவால் தான் சொன்னபடி மாய மந்திர விளைச்சல்களைக் காட்டமுடியவில்லை. ஆனால் சித்தாந்த சமாளிப்புகளைச் சளைக்காமல் ஸ்டாலினுக்கு அள்ளி வீசிக்கொண்டிருந்தார். மற்றொருபுறம் பிரசாரப் புள்ளிவிவரங்கள் சர்வதேச நம்பிக்கையாளர்களின் காதுகளில் பூ சுற்ற, இரும்புத்திரை மறைவில் மக்கள் மடிந்து கொண்டிருந்தார்கள். பிரசாரத்துக்கு மட்டுமல்ல, உயரதிகாரிகளிடமிருந்து உயிர் தப்பிக்கவே கீழதிகாரிகள் உண்மையை மறைத்துப் பொய் புள்ளிவிவரங்களைக் கொடுக்க வேண்டிய சூழ்நிலை.

உண்மையைச் சொன்னால் சைபீரியா, வதை முகாம்கள், சித்திரவதைகள். தனக்கு மட்டுமல்ல, தன் குடும்பத்தினருக்கும்.

இந்த அடியிலிருந்து வெளியில் வர சோவியத் வேளாண்மைக்கு அடுத்த அரை நூற்றாண்டு தேவைப்பட்டது. ஏழுமுறை சோவியத்தின் மிக உயர்ந்த விருதான லெனின் விருது, “பாட்டாளி வர்க்க தீர புருஷன்” விருது என விருதுகளால் கௌரவிக்கப்பட்ட லைசென்கோ 1976 இல் மரணமடைந்தார்.

வவிலோவ்?

“நாங்கள் மரணத்தைத் தழுவுவோம் ஆனால் அறிவியல் உண்மைகளைக் கைவிட மாட்டோம்” என்று சொன்ன அவரது வார்த்தைகளைக் கச்சிதமாக நிறைவேற்றிக் கொடுத்தார் ஸ்டாலின். கலிலியோ போல, இல்லை அதைவிடக் கொடுமையான திறமையுடன் விசாரிக்கப்பட்டார் வவிலோவ். 1700 மணி நேரங்கள் கொண்ட 400 விசாரணைகள். அடிகள். இரவில் எழுப்பிவரப்பட்டு பத்து மணி நேரம் தொடர்ச்சியாக நிற்க வைக்கப்பட்டு விசாரணை. அன்றைய உலகின் விரல்விட்டு எண்ணக்கூடிய தலைசிறந்த தாவரவியல்-வேளாண்மை மரபணுவியலாளர்களில் ஒருவர் வவிலோவ். இறுதியாக அவருக்குத் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்படும் தண்டனை அளிக்கப்பட்டது.

ஆனால் இரண்டாம் உலகப்போர் தொடங்கிவிட்டபடியாலும் வேறு சிலரின் முயற்சியாலும் அது இருபதாண்டு வதை முகாம் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

1943 ஆம் ஆண்டின் ஏதோ ஒரு நாள் அது. சோவியத்தின் பஞ்சத்தைக் களைய முனைந்து 200,000 தானிய விதை வகைகளைச் சேகரித்து வந்த நிகோலாய் வவிலோவ் சரியான உணவின்மையால் சிறையில் அனாதரவாக இறந்தார். ஸ்டாலினின் வார்த்தைகள் சத்தியமானவை:

”வறட்சியையும் நாங்கள் எங்கள் அதிகாரத்தில் வைத்திருப்போம்.”

பின்குறிப்பு:

ஸ்டாலின் காலத்துக்குக்கொஞ்ச காலம் கழித்து வவிலோவ் சோவியத் யூனியனால் மீள்-அங்கீகாரம் கொடுக்கப்பட்டார். கலிலியோவின் மரணத்துக்குப் பிறகு அவர் சொன்னது சரிதான் என போப் ஒப்புக்கொண்டது போல.

சோவியத் யூனியனில் வவிலோவுக்கு நினைவு தபால்தலைகூட வெளியிட்டார்கள்.

மேலதிகத் தகவல்களுக்கு:

* · ஆர்தர் கோய்ஸ்லர், Arrow in the Blue (New York:Macmillan, 1952)

* · மார்க் பொபோவ்ஸ்கி, The last days of Nikolai Vavilov, The New Scientist, 16 November 1978.

* · மிகிலோஸ் குன், Stalin: an unknown portrait, Central European University Press, 2003

* · வலேரி என். சோய்ஃபெர், The consequences of political dictatorship for Russian science, Nature Reviews Genetics 2, 723-729 (September 2001),

ஆன்லைனில்: http://tracerkinetics.engr.iupui.edu/…/lysenko-nature-rev-genetics2001-nrg0901_723a.pdf



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

லாபம் என்றால் சுரண்டலா?

லாபம் என்றால் சுரண்டல் என்றுதான் இன்று பலரும் புரிந்துவைத்திருக்கிறார்கள். ஒரு நிறுவனம் நேர்மையான முறையில் லாபம் சம்பாதிப்பது சாத்தியமல்ல என்றும் அவர்கள் நம்புகிறார்கள். இந்த நம்பிக்கையை ஏற்படுத்திய புத்தகம் டாஸ் கேபிடல்.

கம்யூனிசத்தின் பைபிளாகக் கருதப்படும் டாஸ் கேபிடல், லாபம் என்பது தொழிலாளர்களின் உழைப்பின் ‘உபரி மதிப்பினால்’ மட்டுமே உருவாகிறது என்று வாதிடுகிறது. அதாவது தொழிலாளர்களுக்கு அளிக்கப்படும் சம்பளம் அல்லது கூலி என்பது அவர்கள் உயிர்வாழத் தேவையான அடிப்படை அளவிலேயே (subsistence level) நிர்ணயிக்கப்பட்டு, அவர்களுடைய உழைப்பின் ‘உபரி மதிப்பை’த்தான் முதலாளிகள் ‘சுரண்டி’ லாபமாக எடுக்கின்றனர் என்பதே மார்க்சியம் முன்மொழியும் வாதம். லாபம் என்பதற்கு வேறு எந்த அடிப்படையும் இல்லை என்பதும் அனுமானம்.

இந்த ‘சுரண்டல்’ என்ற கருத்தாக்கம், அதன்பின் பொதுபுத்தியில் ஏற்றப்பட்டு, கடந்த 150 வருடங்களாக மாபெரும் தாக்கத்தை உலக வரலாற்றில் ஏற்படுத்தியுள்ளது. இந்த அளவுக்கு பெரும் பிரளயத்தை ஏற்படுத்திய கருத்து வேறு எதுவும் இருக்க முடியாது. சுரண்டலை ஒழிக்கவும், வர்க்க எதிரிகளை அழிக்கவும், செம்புரட்சியை உலகெங்கும் உருவாக்கி, ஒரு பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிலைநாட்டவும், அதன் மூலம் சோஷலிச அரசையும், பிறகு படிப்படியாக தூய கம்யூனிச அரசையும் உருவாக்குவதை லட்சியமாகக் கொண்ட பயணத்துக்குமான inspiration இந்த ‘சுரண்டல்’ என்ற கருத்தாக்கம்தான்.அது இன்றுவரை தொடர்கிறது.

இந்த சுரண்டல் என்ற கருத்தாக்கம் தவறாது, அறிவியல்பூர்வமற்றது. உபரிமதிப்புதான் லாபமாக மாறுகிறது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், இந்த ‘உபரி மதிப்பு’ யாரால் உருவாக்கப்படுகிறது எனபதில்தான் பிரச்னை இருக்கிறது. தொழில்முனைவோர்களின் உழைப்பு, ஊக்கம், நிர்வாக மேலாண்மை, திறமை போன்ற விஷயங்கள்தான் உபரி மதிப்பை உருவாக்குகிறது என்பதே சரியாகும். பல நாடுகளில், ஒரே அளவு உழைப்பைச் செலுத்தும் தொழிலாளர்களுக்கு கிடைக்கும் கூலி வேறுபட்ட அளவுகளில் உள்ளது. அவர்கள் வாழ்க்கை தரமும் மாறுபடுகிறது.

டாஸ் கேபிடலில் மார்க்ஸ் மேலும் சில முக்கிய அனுமானங்களை முன் வைக்கிறார். ஒரு நாட்டில், படிப்படியாக நிகர உபரி மதிப்பு குறைந்துகொண்டே போகும். Labour saving machineகளை படிப்படியாக முதலாளிகள் அறிமுகப்படுத்தி, அதன் மூலம் தொழிலாளர்களின் நிகர பங்களிப்பைக் குறைக்க முயல்வர். ஆனால், உபரி மதிப்பு மற்றும் லாபம் என்பது தொழிலாளர்களின் உழைப்பினால் ’மட்டும்’ (repeat மட்டும்) உருவாகும் என்ற கருத்தாக்கத்தின்படி, நிகர உபரி மதிப்பும் லாபங்களும் படிப்படியாக குறைந்துகொண்டே போகும். இது பொருளாதார மந்தங்களை ஏற்படுத்தி, பெரும் சிக்கல்களை உருவாக்கும். Business cycles அடுத்தடுத்து உருவாகும். பொருளாதார மந்தங்களின்போது சிறு நிறுவனங்கள் அழிந்து, அவற்றைப் பெரும் நிறுவனங்கள் விழுங்கி ஏப்பம்விடும். ஒவ்வொரு மந்தமும், அதற்கு முன்பு உருவான மந்தத்தைவிட மோசமாகவே இருக்கும். தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரம் படிப்படியாக சீரழியும். ஒரு கட்டத்தில் இறுதிப் பேரழிவு உண்டாகி, மொத்த முதலாளித்துவ அமைப்பே தகர்ந்துவிடும். பிறகு, சோஷலிச அமைப்பு இயல்பாகவே உண்டாகும். சுருக்கமாக, இதுதான் டாஸ் கேபிடல் தரும் அனுமானம்.

ஆனால், கடந்த 150 ஆண்டுகால வரலாறு இதை பொய்பிக்கிறது. உலகின் மொத்த உபரி மதிப்பு கூடிக்கொண்டே செல்கிறது. தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்துகொண்டேதான் செல்கிறது. 150 ஆண்டுகளுக்கு முன்பு கார்ல் மார்க்ஸ் ஐரோப்பாவில் கண்ட தொழிலாளர்களின் நிலை மிகக் கொடுமையானதாக இருந்தது. Sweat shops என்கிற நிலை. 12 மணி நேர ஷிஃப்டுகள், சொற்பக் கூலி, கொடுமையான பணிச்சூழல், குழந்தை தொழிலாளர்கள்; இவை யாவும் படிப்படியாக மாறி, தொழிலாளர்களின் நிலை அங்கு பெரும் உயர்வையே அடைந்தது. இதற்கு, ‘காலனி ஆதிக்க ஏகாதிபத்தியத்தின்’ மூலம் ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளைச் சுரண்டியதால்தான் சாத்தியமானது என்று ஒரு விளக்கத்தை காம்ரேடுகள் வைப்பர். ஆனால், அது மிகத் தவறனாது. காலனியாதிக்கத்தில் ஈடுபடாத பல நாடுகளிலும் இதே முன்னேற்றம் உருவானது. மேலும், காலனியாதிக்கம் இரண்டாம் உலகப்போருக்கு பின் படிப்படியாக அழிந்தது. அதன் பின்தான் உலகெங்கிலும் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தில் நிஜ முன்னேற்றம். முக்கியமாக வளர்ந்த நாடுகளில்.

மதிப்பு என்பது வாங்குபவரின் கோணத்தில்தான் நிச்சயிக்கப்படுகிறது. வாங்குபவருக்குப் பயன் இல்லாவிட்டால், பெரும் உழைப்பில் உருவான எந்தப் பொருளுக்கும் மதிப்போ, தேவையோ இருக்காது. உதாரணமாக, பாலைவனத்தில் சிக்கி, குடிநீருக்கு ஏங்குபவருக்கு ஒரு மர மேசை தேவைப்படாது, பயன்படாது. அந்த மேசையை ஒரு தொழிலாளி எத்தனை பாடுபட்டு, உழைத்து உருவாக்கியிருந்தாலும், அங்கு அதற்கு மதிப்பில்லை, தேவையில்லை. அதேபோல்தான் அனைத்துப் பொருள்கள் மற்றும் சேவைகளுக்குமான மதிப்பு. ஒரு பொருளின் மதிப்பு என்பது அதை உருவாக்க உழைத்த தொழிலாளியின் உழைப்பின் சாரம் மட்டுமே என்பது மார்க்சிய கருத்து.

உபரி மதிப்பு என்று ஒன்று உள்ளது என்று வைத்துக்கொள்வோம். அந்த ‘உபரியை’ ‘சுரண்டி’ லாபமாக மாற்றுகிறார் ஒரு முதலாளி (இந்தச் சொல் எமக்கு ஏற்புடையதாக இல்லை. வில்லத்தனமான அர்த்தம் இதற்கு, பொதுப் புத்தியில் ஏற்றப்பட்டுள்ளதால், ‘தொழில் முனைவோன்’ என்ற சொல்லே சரியானது.) இந்த லாபம் என்பது தொழிலாளர்களின் உழைப்பின் உபரி மதிப்பு என்கிறது மார்க்சியம். சில கேள்விகள்:

1.தொழில்முனைவோரின் ‘உபரி மதிப்பு’ என்ன? ஒரு நிறுவனத்தைக் கட்டமைக்க, நிர்வாக மற்றும் மேலான்மைத் திறன்கள் மிக மிகத் தேவை. ரிஸ்க் எடுக்கும் திறன், புதிதாக ஒன்றைக் கண்டுபிடிக்கும் திறன், புதுமையான சிந்தனை, தலைமைப் பண்புகள், தகவல் பரிமாற்றத் திறன் ஆகியவை அவசியம்.இவை இல்லாமல் தொழில்முனைவோர் ஒரு நிறுவனத்தை உருவாக்கி, வெற்றிகரமாக நடத்தமுடியாது. இவற்றின் ’உபரி மதிப்பு’ என்ன ?

2. ஒரு தொழிற்பேட்டையில், ஒரே வகையான இரு தொழிற்சாலைகள் (சம அளவிலான முதலீட்டில்), ஒரே நாளில் தொடங்கப்படுகின்றன என்று வைத்துக்கொள்வோம். இரண்டும் ஒரே வகையான எந்திரங்களைக் கொண்டு, ஒரே வகையான பொருள்களை உற்பத்தி செய்து, ஒரே சந்தையில் விற்க முயல்கின்றன. இரண்டிலும், ஏறக்குறைய சம அளவு திறமை, உற்பத்தித்திறன் கொண்ட தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். ஒராண்டுக்குப் பிறகு, ஒரு தொழிற்சாலை ஒரளவு லாபத்தையும், மற்றொன்று நஷ்டத்தையும் அடைகின்றன. முதல் தொழிற்சாலையின் நிகர லாபம், அதன் தொழிலாளர்களின் உழைப்பின் உபரிதான் என்றால், பிறகு நஷ்டத்தில் இயங்கும் இரண்டாவது தொழிற்சாலையின் தொழிலாளர்களின் ‘உபரி மதிப்பு’ எங்கு சென்றது? இரு நிறுவனங்களிலும் சம திறன் கொண்ட தொழிலாளர்கள், சம எண்ணிக்கையில், சம திறன் கொண்ட எந்திரங்களைக் கொண்டு, ஒரே ரகபொருள்களைத்தான் உற்பத்தி செய்தனர். பிறகு லாப அளவில் வித்தியாசம் எப்படி ஏற்பட்டது?

3. கூட்டுறவு அல்லது அரசுத் துறையில், மேற்கொண்ட உதாரணத்தில் உள்ளதைப் போன்ற அதே வகை /அளவிலான நிறுவனத்தை (தொழிலாளர்களுக்கு அதே சம்பளம் என்று வைத்துக்கொள்வோம்) உருவாக்கினால், அதன் லாபம் மற்றும் உற்பத்தித் திறன், தனியார் நிறுவனங்களைவிடக் குறைவாக இருப்பது இய்லபு. ஏன்? காரணம், உரிமையாளர் என்று யாரும் இல்லாவிட்டால் ஏற்படும் பொறுப்பற்ற
மனோபாவம். அரசுத் துறையின் மேலாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் உற்பத்தித் திறன் தனியார் துறையைவிட குறைவாகவே இருக்கிறது. இவர்களின் ‘உபரி மதிப்பு’ எப்படிக் குறைந்தது? அது எங்கு சென்றது?

மேலும், பொருளாதார மந்தங்கள் படிப்படியாக மோசமானவைகளாகவே உருவாகும் என்ற அனுமானமும் தவறு. அதாவது முந்தைய மந்தத்தைவிட அடுத்து உருவாகும் மந்தம் மோசமாகவே இருக்கும் என்ற அனுமானம் தவறு என்றே வரலாறு நிரூபிக்கிறது. 1930களில் உருவான பெரிய மந்தத்தைவிட அடுத்து உருவானவை அவ்வளவு கடுமையானதாக இல்லை. இன்று உருவாகியுள்ள மந்தத்துக்கான காரணிகள் வேறு.

-K.R. அதியமான்



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 மாவோ-ஹூ ஜிண்டாவ் : நவீன சீனாவின் சித்தாந்த முரண்பாடு

1

நூற்றாண்டுகளாக சீனாவில் நிலவிவந்த முடியாட்சி முறை அக்டோபர் 1911ல் முடிவுக்கு வந்தது. கடைசியாக எஞ்சியிருந்த கிங் வம்ச ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர சன் யாட் ஸென் ஒரு முக்கிய உந்துசக்தியாக இருந்தார். புரட்சிகர அரசியல் நடவடிக்கைகள் மூலம் கொடுங்கோல் ஆட்சிமுறையை ஒழிக்கலாம் என்பதை சன் யாட் ஸென் சீனாவுக்கு உணர்த்தினார். ஜனவரி 1, 1912 அன்று சீனக் குடியரசு மலர்ந்தபோது, அதன் அரசுத் தலைவராக ஸென் பொறுப்பேற்றுக்கொண்டார். ஸென் தொடங்கி வைத்த கோமிண்டாங் கட்சி, அவர் மரணத்துக்குப் பிறகு சிதறுண்டது.

சன் யாட் ஸென் சந்தித்த அதே எதிர்ப்புகளை மாவோவும் எதிர்கொள்ள வேண்டி வந்தது. 1949ம் ஆண்டு மக்கள் சீனக் குடியரசு உதயமானது. உள்நாட்டு யுத்தங்களையும் ஜப்பான் ஆக்கிரமிப்பையும் எதிர்கொண்டு வெற்றிபெற்றபிறகே இது சாத்தியமானது. புரட்சியில் வெல்வதை விடவும் சவாலானது புரட்சியை தக்கவைத்துக்கொள்வது. கலாசாரப் புரட்சி தொடங்கப்பட்டது இதற்காகத்தான். முன்னதாக, 1958ல் மாவோ மாபெரும் பாய்ச்சல் என்னும் திட்டத்தை முன்னெடுத்துச்சென்றார். விவசாயத்தை மட்டுமே பிரதானமாக கொண்டிருந்த சீனாவை நவீனப்படுத்தி அடுத்தக் கட்டத்துக்குக் கொண்டுசெல்வதற்கான பொருளாதார, சமூக திட்டமாக மாபெரும் பாய்ச்சல் வளர்த்தெடுக்கப்பட்டது. தொழில்மயமாக்கல் கொள்கை அமல்படுத்தப்பட்டது. தொழிற்சாலைகளையும் உற்பத்தி கருவிகளையும் கட்டமைக்கும் பணி முடுக்கிவிடப்பட்டது.

கலாசாரப் புரட்சியைப் போலவே மாபெரும் பாய்ச்சல் திட்டமும் எதிர்ப்புகளை சந்தித்தது. கட்சிக்குள் இருந்துகொண்டு திட்டத்தை எதிர்த்து கிளர்ச்சி செய்த லியு ஷோகி (Liu Shaoqi), டெங்சியோபிங் இருவரும் நீக்கப்பட்டனர். மாபெரும் பாய்ச்சல் திட்டத்துக்கு மாற்றாக அவர்கள் முன்வைத்தது முதலாளித்துவ மாதிரி பொருளாதாரத்தை. மாவோ இதனை எதிர்த்தார். முதலாளித்துவத்துக்கும் ஏகாதிபத்தியத்துக்கும் எதிரான போராட்டத்தை தொடரவேண்டிய சமயத்தில் இதுபோன்ற சிந்தனைகள் எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும் என்று மாவோ சுட்டிக்காட்டினார்.

சோவியத்தில் நிகிதா குருஷேவ் இழைத்துவரும் தவறுகளை அவர் ஆதாரமாகச் சுட்டிக்காட்டினார். லெனின், ஸ்டாலின் ஆகியோர் உருவாக்கி வைத்திருந்த சோஷலிச கட்டுமானத்தை உடைத்து தகர்த்து முதலாளித்துவத்தை வரவேற்றிருந்தார் குருஷேவ். சோவியத் யூனியன் சறுக்கியது போல் சீனா சறுக்கக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தார் மாவோ. சீனாவை குருஷேவின் சோவியத்தாக மாற்ற முயன்ற அனைவரையும் மாவோ நிராகரித்தார்.

விவசாயிகள், தொழிலாளர்கள், ஆண்கள், பெண்கள் என்று அனைவரையும் ஒன்றிணைத்து போராட்டத்தை ஆரம்பித்தார் மாவோ. அந்த வகையில், மாணவர்களையும் அவர்கள் ஒருங்கிணைத்துக்கொண்டிருந்தார்கள். மே 1966ல் செம்படையின் முதல் மாணவர் பிரிவு சிங்குவா பல்கலைக்கழகத்தோடு தொடர்புடைய சிங்குவா மத்திய பள்ளியில் தொடங்கப்பட்டது. ஹூ ஜிண்டாவ் தன் படிப்பை முடித்துக்கொண்டு அந்தப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிக்கொண்டிருந்தார். பிற்போக்குவாதிகளுக்கு எதிரான மாவோவின் முழக்கத்தால் உந்தப்பட்ட பல மாணவர்கள் கிளர்ச்சியிலும் கலகத்திலும் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள். சிலர் முறை தவறி வன்முறையிலும் ஈடுபட நேர்ந்தது.

முதலாளித்துவத்தை ஆதரித்த டெங்சியோபிங் 1966ல் பதவியில் இருந்து அகற்றப்பட்டார். அதே எண்ணம் கொண்ட லியு ஷோகி இரண்டு ஆண்டுகள் கழித்து கைது செய்யப்பட்டார். அரசியல், கல்வி, தொழில் துறைகள் மட்டுமின்றி பல்வேறு பிரிவுகளிலும் உள்ள புரட்சி விரோத மனப்பான்மை கொண்டவர்கள் கைது செய்யப்பட்டனர். ஹூ ஜிண்டாவின் தந்தையும் இதில் அடங்கும்.

கலாசாரப் புரட்சியில் ஹூவின் பங்களிப்பு என்ன என்பது தெரியவில்லை. கலாசாரப் புரட்சியை அப்போது அவர் ஆதரித்தாரா? தன் தந்தையை கைது செய்தததால் கம்யூனிஸ்ட் கட்சி மீது சினம் கொண்டாரா? தனது எதிர்ப்பை யாரிடமாவது பதிவு செய்தாரா? அல்லது கலாசாரப் புரட்சியின் நோக்கங்களைப் புரிந்துகொண்டு அங்கீகரித்தாரா? இந்தக் கேள்விகளுக்கு விடையில்லை. சிங்குவா செம்படைப் பிரிவில் அப்போது பல மாணவர்களும் மாணவர் தலைவர்களும் ஆசிரியர்களும்கூட இணைந்திருந்தனர் என்பதால் ஹூவும் அதில் இணைந்திருக்கலாம் என்று யூகங்கள் உள்ளன. அவை யூகங்கள் மட்டுமே.

இரண்டு ஆண்டுகள் கழித்து 1968ல், கிராமப்புறத்துக்குச் செல்வோம் என்று அறைகூவல் விடுத்தார் மாவோ. ‘உங்கள் தந்தையர் நாடு உங்களை எங்கே அழைக்கிறதோ அங்கே செல்லுங்கள்!’ எல்லா நாடுகளைப் போல சீனாவும் அப்போது கிராமம், நகரம் என்று இருவேறாகப் பிரிந்துகிடந்தது. கிராம மக்களின் நலன் குறித்த அக்கறை நகரவாசிகளுக்கு இருக்காது. நம்மளவில் வசதியாக இருந்தால் போதுமானது என்னும் நடுத்தர வர்க்க மனோநிலை இயல்பாக நிலவிவந்தது.

முடியாட்சி சீனாவை, கம்யூனிச சீனாவாகவும் பிறகு சோஷலிச சீனாவாகவும் வளர்த்தெடுக்க விரும்பிய மாவோ, நகர மக்களுக்கும் கிராம மக்களுக்கும் இடையே நிலவிவந்த இடைவெளியை நிரப்பும் முயற்சியை ஆரம்பித்தார். கலாசாரப் புரட்சியோடு சேர்த்து அல்லது அதன் ஒரு பகுதியாக இதனை சாதிக்கலாம் என்று திட்டமிட்டார்.

அதற்கு முதலில் கிராமங்களை அறிந்துகொள்ளவேண்டும். கிராம மக்களின் சிரமங்கள் என்னென்ன என்று தெரிந்துகொள்ளவேண்டும். அவர்கள் வாழ்க்கை முறை எப்படி இருக்கிறது என்பதை அறியவேண்டும். எனவே, கிராமத்துக்குச் செல்வோம் என்றார் மாவோ. சீனாவின் இன்னொரு பக்கத்தைக் காண மலைகள் மீது ஏறி கிராமப்புறங்களுக்கு இறங்கிச் செல்ல இளைஞர்களை வரவேற்றது சீனக் கம்யூனிஸ்ட் கட்சி. நகரங்களை மட்டுமே அறிந்து வைத்திருக்கும் இளைஞர்கள் சிலரைத் தேர்ந்தெடுத்து கிராமங்களுக்கு அனுப்பி வைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பாடப்புத்தகங்களால் அளிக்கமுடியாத நேரடி அறிவை இந்த இடப்பெயர்ச்சி ஏற்படுத்தும் என்பது மாவோவின் நம்பிக்கை.

மாணவர்களோடு சேர்த்து அறிவுஜீவிகள் பலரும்கூட இவ்வாறு அனுப்பிவைக்கப்பட்டனர். கிராமங்களில் அவர்களுக்குத் தனி சலுகைகள் அளிக்கப்படவில்லை. ஏழை விவசாயிகளோடு சேர்ந்து அவர்களும் ஒண்டிக்கொள்ளவேண்டியது. அவர்களுடன் தங்கி, உண்டு, உறங்கி அவர்கள் பணி கற்று, அவர்களுடன் சேற்றில் இறங்கி, களை அகற்றி, நெல் விதைத்து, அறுவடை செய்து வாழவேண்டியது. அப்போதுதான் உடலுழைப்பு அறிவுழைப்பைவிட தாழ்ந்தது என்னும் எண்ணம் மறையும். உடலுழைப்புக்குக் குறைந்த கூலியும் அறிவுழைப்புக்கு பன்மடங்கு அதிக கூலியும் அளிக்கும் வழக்கம் மாறும். மனிதர்களை அவர்கள் செய்யும் பணியை வைத்து தரம் பிரித்து அணுகும் முறையும் மாற்றமடையும். கற்றுக்கொள்வதோடு சேர்த்து, பிறருக்குக் கற்றுக்கொடுக்கவும் முடியும். நகர்புற மக்கள் கிராமங்களைப் புரிந்துகொள்வதைப் போல் கிராமப்புற மக்கள் நகரங்களைப் புரிந்துகொள்வார்கள்.

ஹூ கான்சு மாகாணத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டார். ஒரு ஹைட்ரோ எலெக்ட்ரிக் எஞ்சினியராக, கட்டுமானப் பணியில் ஈடுபடும் வாய்ப்பு கிடைத்தது. கலாசாரப் புரட்சி நீடித்த காலம் முழுவதும் ஹூ இங்கேதான் இருந்தார்.

2

மாவோ குறித்த இன்றைய சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மதிப்பீடு, அவர் நல்லதும் செய்தார், தீங்கும் செய்தார் என்பதுதான். எத்தனை விழுக்காடு நன்மைகள் செய்தார், எத்தனை விழுக்காடு தீமைகள் செய்தார் என்பதற்கான கணக்கும் அவர்களிடம் இருக்கிறது. பொதுவுடைமை என்பது பொதுவறுமை ஆகிவிடக்கூடாது என்றார் மாவோவுக்குப் பிறகு ஆட்சியைப் பிடித்த டெங்சியோபிங். மாவோவின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு அவர் செயல்களை நிராகரிக்கலாம் என்றார் இவர். முதலாளித்துவம் அப்படியொன்றும் தீங்கான சொல் அல்ல என்னும் டெங்கின் கருத்தை சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்றுக்கொண்டது.

டெங்சியோபிங்கின் வழிதான் ஹூ ஜிண்டாவின் வழியும். ஹூ ஜிண்டாவ் இரண்டாவது முறையாக சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராகவும் (2007ல்) அதிபராகவும் (2008ல்) தேர்ந்தெடுக்கப்பட்டபோது சீனா அமெரிக்காவுக்குச் சவால்விடும் மாபெரும் சக்தியாக வளர்ந்திருந்தது. பொருளாதார ரீதியில், ஹூ ஆட்சிக் காலத்தில் சீனா தொட்டுள்ள உயரம் அசாத்தியமானது. வளர்ச்சியற்ற கிராமப் பகுதிகளைத் தேர்ந்தெடுத்து சிறப்புக் கவனம் குவித்து அவற்றை தொழில்மயமாக்கும் பணியில் ஆர்வம் காட்டினார். ஜிங்ஜியாங், கான்சு உள்ளிட்ட பகுதிகள் லாபமீட்டும் வர்த்தக கேந்திரங்களாக மாற்றியமைக்கப்பட்டன.

விசித்திரம் என்னவென்றால், சந்தைப் பொருளாதாரத்தை விரும்பி ஏற்றுக்கொண்டபிறகும்கூட அவ்வப்போது மாவோவை நினைவுபடுத்திக்கொண்டே இருக்கிறது சீனக் கம்யூனிஸ்ட் கட்சி. ஹூ தான் பங்குபெறும் கூட்டங்களில் உரையாடும்போது சில சமயம் மார்க்சியத்தையும் உரையில் இழுத்து வருவார். ’உலகம் முழுவதும் பல துறைகளில் மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. சீனாவும் புதிய சவால்களை, புதிய பிரச்னைகளை, புதிய சூழ்நிலைகளை எதிர்கொண்டுள்ளது. இந்நிலையில், மார்க்சிய சித்தாந்தத்தை வாசிப்பது பொருத்தமாக இருக்கும் என்று கட்சி கருதுகிறது.’

ஹூ குறிப்பிடும் மார்க்சியர்களில் மார்க்ஸ், லெனின், மாவோ மட்டுமல்லாமல் டெங்கியோபிங்கும் அடங்குவார். மாவோவும் வேண்டும். டெங்சியோபிங்கும் வேண்டும். இதில் உள்ள முரண் ஹூவை பாதிக்கவில்லை. ’இவர்களது சித்தாந்தங்களை நாம் வளர்த்தெடுக்கவேண்டும். மாற்றங்களோடு சேர்ந்து நாமும் பயணம் செய்யவேண்டும். சீனாவில் கம்யூனிசம் வளர பாடுபடவேண்டும். வளமான ஒரு சமூகத்தை உருவாக்க முனையவேண்டும்.’

அதே சமயம், சீனர்களின் தனிப்பட்ட வாழ்க்கையும் கலாசாரமும் பின்னடைவைச் சந்தித்துள்ளதாக பல செய்திகள் வெளிவந்தன. அரசு அதிகாரிகள் மற்றும் கட்சி உறுப்பினர்களின் ஊழல், மேலை நாட்டு கலாசாரத்தைப் பின்பற்றியதால் ஏற்பட்ட கலாசார தேக்கம், போதை மருந்துகளுக்கு அடிமையாதல், பாலியல் ஒழுக்கீனங்கள், துளிர் விடும் மதப் பிற்போக்குத்தனம் ஆகியவை பற்றிய புகார்கள் ஊடகங்களில் வெளிவந்தன. இளைஞர்களுக்கு அறம் பற்றியும் ஒழுக்கம் பற்றியும் எடுத்துரைக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டது.

உலகமயமாக்கலின் விளைவுதான் இது என்பது ஹூவுக்குத் தெரியாமல் இல்லை. சீனர்களின் நலனுக்காக ஹூ முன்வைத்த அறம் சார்ந்த முழக்கம், Eight Honours and Eight Shames என்று அழைக்கப்பட்டது. ஹூவின் எட்டு அம்சத் திட்டம் என்று இது அழைக்கப்பட்டது. ஒருவரது பணி, நடவடிக்கை மற்றும் நோக்கத்தை அளவிட இந்த எட்டு அம்சங்கள் ஒரு அளவீடாக இருக்கும் என்றார் ஹூ. குறிப்பாக, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் இதனை கடைபிடிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.

அந்த எட்டு அம்சங்கள். 1) நாட்டை, நேசி, நாட்டுக்கு பங்கம் விளைவிக்காதே. 2) மக்களுக்கு சேவை செய், அவர்களை ஏமாற்றாதே. 3) அறிவியலை பின்பற்று, அறியாமையை அகற்று. 4) சோம்பேறித்தனத்தை ஒழி, அக்கறையுடன் பணியாற்று. 5) ஒற்றுமையை வளர்த்துக்கொள், உதவி செய், அடுத்துவரை ஏமாற்றி லாபம் சம்பாதிக்காதே. 6) நேர்மையாகவும் உண்மையாகவும் இரு, லாபத்துக்காக அறத்தை விட்டுக்கொடுக்காதே. 7) சட்டத்தை மதி 8. கடினமான உழைப்பு, எளிமை இரண்டையும் கடைபிடி. ஆடம்பரங்கள் வேண்டாம்.

உலக அரங்கில் சீனா பொருளாதார ரீதியில் முதலிடம் வகிக்கவேண்டும் என்பதுதான் ஹூவின் நீண்ட கால கனவு. பிற கனவுகளைக் காட்டிலும் இதையே அவர் முதன்மைப்படுத்தி இயங்கிக்கொண்டிருக்கிறார். இது சாத்தியமாகவேண்டுமானால் தற்போதைய முதலாளித்துவ, உலகமய சூழலுக்கு ஏற்ற தத்துவத்தை மட்டுமே உயர்த்திப்பிடிக்கவேண்டும். இதன் பொருள் மாவோவை முற்றிலுமாக கைவிடவேண்டும் என்பதுதான்.

மாவோவின் ஆன்மாவை அகற்றிவிட்டு அவர் நிழலை மட்டும் ஓர் அடையாளத்துக்காக வைத்துக்கொண்டார் டெங்சியோபிங். அந்த நிழலையும் ஹூ ஜிண்டாவ் இப்போது அகற்றவேண்டியிருக்கும். 2006ம் ஆண்டு வெளிவந்த வரலாற்று பாடப்புத்தகங்கள் இதைத்தான் சுட்டிக்காட்டுகின்றன. கடந்த காலங்களில் வெளிவந்த புத்தகங்களைக் காட்டிலும் இந்த முறை கம்யூனிசம், சோஷலிசம் குறித்த அறிமுகம் குறைவாகவே அளிக்கப்பட்டிருந்தது. வரலாற்றை பாடமாக படிக்கும் உயர் கல்வி மாணவர்களுக்கு சோஷலிச சித்தாந்தம் குறித்து மிக சுருக்கமான அறிமுகமே கிடைக்கும். 1979ல் பொருளாதாரச் சீர்திருத்தம் ஏற்பட்டதற்கு முந்தைய காலகட்டம் பற்றி ஒரே ஒரு வரி செய்திதான் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், மாவோ பற்றியல்ல, முதலாளித்துவம், முதலாளித்துவப் பாணி உற்பத்தி முறை, நவீன பொருளாதாரம் பற்றித்தான் எதிர்கால மாணவர்கள் அதிகம் படிக்கப்போகிறார்கள். ஹூ ஜிண்டாவ் அரசாங்கமும் இதைத்தான் விரும்புகிறது.

கம்யூனிச, சோஷலிச சித்தாந்தத்துக்கு மாற்றாக முதலாளித்துவத்தையும் கட்டுப்பாடற்ற வர்த்தகத்தையும் தழுவிக்கொண்டதன் மூலம், சீனாவின் எதிர்காலம் கேள்விக்குள்ளாகியிருப்பதாக எழுத்தாளர் வில்லியம் ஹிண்டன் கருதுகிறார்.

‘டெங்கின் தலைமையில் சீனா சுதந்தரச் சந்தையை நோக்கி முன்னேறும்போது, வெளிநாட்டு மூலதனத்துக்கு கதவு திறக்கப்படும்போது, உலகப் பொருளாதாரத்துடன் மேலும் நெருக்கமாகப் பின்னிப் பிணையும்போது, அது தவிர்க்கவியலாதபடி துன்புறும்.’ ‘புதிய சந்தைப் பொருளாதாரத்தால் உந்தப்பட்டு லட்சக்கணக்கானோர் தனது பக்கத்திலிருப்பவரைக் கொண்டு தாம் முன்னேற முனைகையில் ஊழல் நோய் பரவும். மேற்கத்தியக் கலாசாரம் ஒவ்வொன்றிலும் ஊடுறுவி ஆதிக்கம் செலுத்துகையில் கலாசாரப் பின்னடைவும், தார்மீகச் சீரழிவும் ஏற்படும்.’

‘பணக்காரர்களும், சக்திமிக்கவர்களும் மேலும் பணக்காரர்களாகவும், மேலும் சக்திமிக்கவர்களாகவும் ஆகும்போது முந்தைய பங்குதாரர்களான விவசாயிகள் அனைத்து நிகர மதிப்பையும் இழந்து சந்தையில் விற்பதற்கு தமது உழைப்புச் சக்தியைத் தவிர வேறு எதுவுமின்றி நுழைவர்.’ ‘போட்டி அதிகமாகி, மந்த நிலை ஆழமாகி, ஒரு நாட்டைத் தொடர்ந்து மற்றொரு நாட்டை தாழ்வு நிலை ஆக்கிரமித்து, உலக மோதல்கள் கூர்மையடையும்.’

‘1949ல் சீனா புரட்சியில் வெற்றி பெறுமுன் அரை நிலப்பிரபுத்துவ அரைக் காலனிய பிரபுத்துவ முதலாளித்துவ நாடாக இருந்தது. தற்போது, சீனா விரைவான திருப்பத்துடன் அரை நிலப்பிரபுத்துவ, அரைக் காலனிய, பிரபுத்துவ முதலாளித்துவ தகுதியுடையதாக மாறிக்கொண்டிருக்கிறது. இது துயரமானது.’

0

மருதன்



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 லாபங்களும் இழப்புகளும்

மோட்டார் சைக்கிள் டைரி / அத்தியாயம் 10

சூச்சிகாமாட்டா சுரங்கத்தை நெருங்க நெருங்க மூச்சு முட்டுவது போல் இருந்தது. மாபெரும் தாமிர வளம் நிறைந்த பகுதி அது. இருபது மீட்டர் உயரமுள்ள அடுக்குத் தளங்கள் சுரங்கத்தில் அமைந்திருந்தன. தாதுவை எளிதாகக் கொண்டு செல்வதற்கான இருப்புப் பாதைகள் அமைக்கப்பட்டிருந்தன. ஆனாலும், ‘கவர்ச்சியோ உணர்ச்சியோ அற்றதாக, ஏமாற்றம் அளிக்கக்கூடியதாக’ அந்தச் சுரங்கம் அமைந்திருந்தது போல் இருந்தது எர்னஸ்டோவுக்கு.

செல்வத்தை அள்ளித்தரும் இடமாக சுரங்கம் அவருக்குக் காட்சியளிக்கவில்லை. ‘திறந்தவெளியில்தான் தாது எடுக்கப்படுகிறது என்பதையும், டன் ஒன்றுக்கு ஒரு சதவீதம் தாமிரத்தைக் கொண்டு கனிமவளம் பெருமளவில் சுரண்டப்படுகிறது என்பதையும் போக்குவரத்தின் தனிச்சிறப்பான அமைப்பே புலப்படுத்துகிறது.’

எந்த இயற்கையைத் தேடி அலைந்து வந்தாரோ அந்த இயற்கை இங்கே வெடிவைத்து சிதறடிக்கப்படுவதை அவர் கண்கொண்டு பார்த்தார். ‘ஒவ்வொரு நாள் காலையிலும் மலையில் வெடிவைக்கப்படுகிறது.’ தொழில்நுட்ப விவரங்கள் உள்பட அனைத்தையும் கேட்டுத் தெரிந்துகொண்டு விரிவாக தன் நோட் புத்தகத்தில் குறித்துக்கொண்டார் எர்னஸ்டோ. தகர்க்கப்பட்ட கனிமக் கற்கள் ராட்சத இயந்திர வாகனப் பெட்டிகளில் ஏற்றப்படுகின்றன. கற்கள் இயந்திரத்தை அடைகின்றன. அங்கே கற்கள் நொறுக்கப்படுகின்றன. நடுத்தர அளவுள்ள சரளைக் கற்கள் உடைக்கப்படுகின்றன. பிறகு கந்தக அமிலக் கரைசலில் போடப்படுகின்றன. வேதியியல் மாற்றங்கள் நடைபெறுகின்றன. திரவத்தில் மின்சாரம் தொடர்ச்சியாக செலுத்தப்படுகிறது. தாமிரம் மெல்லிய தாமிரத் தகடுகளில் ஒட்டிக்கொள்கிறது. ஐந்து அல்லது ஆறு நாள்களுக்குப் பிறகு இந்தத் தகடுகள் உருக்கும் உலைக்கு அனுப்பப்பட ஏற்ற நிலையைப் பெற்றுவிடும். தக்க முறையில் 12 மணி நேரம் உருக்கப்பட்ட பிறகு இந்தத் தகடுகளில் இருந்து ‘350 பவுண்ட் எடையுள்ள தாமிர வார்ப்புப் பாளங்களைப் பெறமுடியும். ஒவ்வொரு நாள் இரவும் நாற்பத்தைந்து லாரிகளில் ஒவ்வொன்றிலும் இருபது டன் தாமிரம் வீதம் வரிசையில் எடுத்துச் செல்லப்படும். ஒருநாள் உழைப்பின் பலன் இது.’

எறத்தாழ மூவாயிரம் பேர் ஈடுபடும் உற்பத்தி நடவடிக்கை பற்றிய சுருக்கமான எளிய விவரணை இது என்று குறிப்பிடுகிறார் எர்னஸ்டோ. இந்த உற்பத்தி நடவடிக்கையால் யாருக்குப் பலன்? அந்தப் பலனை யார் அனுபவிக்கிறார்கள்? சுரங்கத்தில் பணியாற்றும் மூவாயிரம் சொச்சம் பேர் எப்படிப்பட்ட நிலையில் இருக்கிறார்கள்? சுரங்கத்தின் கதி என்ன?

‘நைட்ரேட் தாது நிறைந்த, புல் பூண்டுகூட முளைக்காத இந்த மலைகள் காற்று, மழை ஆகியவற்றின் தாக்குதலுக்கு எதிராக எந்தப் பாதுகாப்பும் அற்றவையாக இருக்கின்றன. இயற்கைக்கு எதிரான போராட்டத்தில் உரிய காலத்துக்கு முன்பே மூப்படைந்து தங்களது சாம்பல் நிற முதுகெலும்போடு காட்சியளிக்கின்றன. அவற்றின் சுருக்கங்கள் அவற்றின் உண்மையான புவியியல் ரீதியான வயதைப் பற்றிய தவறான கருத்தை உருவாக்குகின்றன. இந்த இடத்தைச் சூழ்ந்துள்ள எத்தனை மலைகள் இதேபோன்று மிகப் பெரும் வளங்களைத் தங்கள் மடிகளில் மறைத்து வைத்துள்ளனவோ… தங்கள் வயிற்றுக்குள் மண்வாரி இயந்திரங்களின் வெற்றுக் கைகளை அனுமதிக்கக் காத்திருக்கின்றனவோ…’

சுரங்கத் தொழிலாளர்களின் பரிதாபகரமான நிலைமை எர்னஸ்டோவுக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது. அரை மணி நேரம் சுற்றி வருவதற்கு மட்டுமே அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ‘இது சுற்றுலாத் தலமல்ல, சுற்றிப் பார்த்தவுடன் நீங்கள் வெளியே போய்விடுவது நல்லது. எங்களுக்கு நிறைய வேலைகள் இருக்கின்றன!’ என்று சுரங்கத்தின் கங்காணிகள் கண்டிப்பான குரலில் எர்னஸ்டோவுக்கு அறிவுறுத்தியிருந்தார்கள். அவர்கள் திறன்மிக்கவர்களாகத் தோற்றமளித்த அதே நேரம், திமிரானவர்களாகவும் இருந்தார்கள். இவர்களிடம் வேலை செய்யும் பணியாளர்களின் நிலைமை எப்படி இருக்குமோ?

விரைவில் சுரங்கத்தில் ஒரு வேலை நிறுத்தம் நடைபெறுவதாக இருந்ததை எர்னஸ்டோ அறிந்துகொண்டார். தொழிலாளர்களின் மேற்பார்வையாளராக இருந்த ஒருவரிடம் (அவர் ஒரு கவிஞரும்கூட) உரையாடும்போது மேலதிக விவரங்கள் கிடைத்தன. சுரங்கத்தின் செயல்பாடுகள், பணியாளர்களின் நிலைமை, வேலை நிறுத்தத்துக்கான காரணங்கள், பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் என்று பலவற்றையும் கேட்டறிந்துகொண்டார் எர்னஸ்டோ. இறுதியாக அவர் கேட்ட கேள்வி இது. ‘இந்தச் சுரங்கம் எத்தனை பேரை பலி வாங்கியிருக்கிறது?’

அவர் ஆச்சரியமடைந்தார்.‘இந்தப் புகழ்பெற்ற சுரங்கங்கள் இங்கே இருக்கிற தாமிரம் முழுவதையும் சுத்தமாகச் சுரண்டியெடுத்துவிடும். உங்களைப் போன்றவர்கள் என்னிடம் ஏராளமான கேள்விகளைக் கேட்கிறார்கள். ஆனால் இதற்காக எத்தனை உயிர்கள் பலியாக்கப்பட்டன என்று யாருமே இதுவரை கேட்டதில்லை. இந்தக் கேள்விக்கு எனக்கு விடை தெரியாது, மருத்துவர்களே. ஆனால் இந்தக் கேள்வியைக் கேட்டதற்கு நன்றி.’

எர்னஸ்டோவுக்கு ஏமாற்றமாக இருந்தது. ‘உணர்ச்சியற்ற ஆற்றலும் கையாலாகாத கசப்புணர்வும் இந்த மாபெரும் சுரங்கத்தில் கைகோர்த்துச் செல்கின்றன. உயிர் வாழவேண்டும் என்ற நெருக்கடியால் ஏற்பட்ட வெறுப்பும் கொள்ளை லாபம் சம்பாதிக்கும் முனைப்பும் எதிரெதிராக இருந்தபோதிலும், அதையும் மீறி இவ்விரு பண்புகளும் இணைந்திருக்கின்றன.’

மிக முக்கியமான ஒரு பார்வை இது. கொள்ளை லாபம் அடிக்கத் துடிப்பவர்களும் ஒருவேளை உணவுக்கு உடலையும் உள்ளத்தையும் உயிரையும் பணயம் வைக்கத் துடிப்பவர்களும் கைகோர்க்கும் அதிசயத்தையும் அவலத்தையும் எர்னஸ்டோ இந்தச் சுரங்கத்தில் தரிசித்தார். லாபம், மேலும் லாபம் என்னும் துடிப்பு இயற்கையை மட்டுமின்றி மனிதர்களையும் சேர்த்தே அழிக்கிறது என்பதை எர்னஸ்டோ உணர்ந்துகொண்ட தருணம் இது.

‘வெறும் உணவைப் பெறுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்ட எத்தனை மனித உயிர்களை இவை (சுரங்கங்கள்) குடித்தனவோ… இந்த யுத்தத்தில் தனது புதையல்களைப் பாதுகாப்பதற்காக இயற்கைஏற்படுத்தியுள்ள ஆயிரக்கணக்கான மரணக்குழிகளில் துயரமான மரணத்தைச் சந்தித்தவர்கள் எத்தனை பேரோ… காவியங்களில் இடம் பெறாத இத்தகைய ஏழை வீரர்களின் எத்தனை உயிர்களை (தவிர்க்க இயலாமல்) இவை குடித்தனவோ…’

சிலி நில ஆய்வு நிறுவனம் சல்ஃபேட் தாதுவைச் சுரண்டுவதற்கு இன்னொரு ஆலையை அமைத்து வருவதை எர்னஸ்டோ அறிந்துகொண்டார். ‘உலகத்திலேயே மிகப் பெரியதாக விளங்கப் போகின்ற இந்த ஆலையின் 96 மீட்டர் உயரப் புகைப்போக்கிகள் இரண்டு அமைக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் முழு உற்பத்தியும் இந்த ஆலையிலேயே நடைபெறப் போகிறது. அதே சமயத்தில், ஆக்ஸைடு தாதுவளம் தீர்ந்து வருவதால் பழைய ஆலையின் உற்பத்தி சிறிது சிறிதாகக் குறைந்து முற்றிலுமாக நின்றுவிடும். புதிய உருக்காலைக்குத் தேவையான கச்சாப் பொருள்கள் ஏற்கெனவே பிரம்மாண்டமான அளவுக்குத் தயாராக உள்ளன. 1954ம் ஆண்டு ஆலை திறக்கப்பட்டவுடன் உடனடியாக உற்பத்தியும் தொடங்கிவிடும்.’

ஆனால் இதை எப்படி வரையறுப்பது? வளர்ச்சி என்றா? பழைய ஆலையா, புதிய ஆலையா என்பதா இங்கு முக்கியம்? எவ்வளவு நவீனமாக ஓர் ஆலை இயங்குகிறது என்பதா அதை மதிப்பிடுவதற்கான அளவுகோல்? ஓர் ஆலையின் கட்டுமானத்தைவிட, உற்பத்தித் திறனைவிட, இயந்திரங்களைவிட, லாபத்தைவிட பணியாளர்கள் முக்கியம் அல்லவா? அவர்களுடைய வாழ்நிலை முக்கியமல்லவா?

மிக அடிப்படையான ஒரு கேள்வியும் எர்னஸ்டோவுக்கு எழுந்தது. ஆலைகளை யார் நிர்வகிக்கவேண்டும்? தனியார் நிறுவனங்களா அல்லது அரசாங்கமா?



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

காந்தியின் சோஷலிசமும் கம்யூனிசமும்

 

‘உண்மையான, வன்முறை தவிர்த்த, தூய இதயம் கொண்ட சோஷலிஸ்டுகளால் மட்டுமே இந்தியாவிலும் உலகத்திலும் சோஷலிச சமுதாயத்தை நிலைநாட்ட முடியும். நான் அறிந்தவரை, இவ்வுலகில் தூய்மையான சோஷலிச நாடு என்று எந்த ஒரு நாட்டையும் சொல்வதற்கில்லை. மேலே விளக்கிய வழிமுறையைப் பின்பற்றாமல் அவ்வாறான சமுதாயம் உருப்பெறுவது அசாத்தியம்.’ ஹரிஜன், ஜூலை 13, 1947ல் காந்தி இவ்வாறு எழுதினார்.  சோஷலிசம், கம்யூனிசம், போல்ஷ்வியம் மூன்றையும் காந்தி இந்த அளவுகோலின் படியே மதிப்பிடுகிறார். காந்தியின் மதிப்பீட்டை கீழ்கண்டவாறு  தொகுத்துக்கொள்ளலாம்.

  • சோஷலிசம் ஓர் உயர்ந்த தத்துவம், உன்னதமான லட்சியம்.
  • கம்யூனிச சமூகம் அமைவது மனிதகுலத்தின் தேவை.
  • போல்ஷ்வியம் வகுப்பு பேதமற்ற ஒரு சமூகத்தை உருவாக்க முயற்சிசெய்கிறது.
  • இந்த மூன்று தத்துவங்களையும் நான் ஏற்கிறேன். ஆனால் மேற்படி லட்சியங்களையும் நோக்கங்களையும் வன்முறை மூலம் அடைவதை ஏற்கவியலாது. வன்முறையை ஒரு கருவியாகக் கொண்டு அமைக்கப்படும் சமூகம் நிலைபெறாது.
நவஜீவன் பிரசுராலயம்  தொகுத்துள்ள மகாத்மா காந்தி படைப்புகள் ஒரு சிறப்புத் தொகுதியில்  இருந்து  (பாகம் 5 : உண்மையின் குரல்), அவருடைய விரிவான கருத்துகளை இனி பரிசீலிக்கலாம்.
 
இந்தியாவில் பலரும் தங்களை சோஷலிஸ்டுகள் என்று அழைத்துக்கொள்வதற்கு முன்பே, தன்னை ஓர் ‘இயல்பான சோஷலிசவாதியாக’ அடையாளம் காண்கிறார் காந்தி. புத்தகங்கள் மூலமாகப் பெறப்பட்ட சித்தாந்தமாக அல்லாமல் அகிம்சைமூலம் கண்டடைந்த சித்தாந்தம் அது என்கிறார் காந்தி. ரஷ்ய பாணி சோஷலிசம் மீதான அவருடைய விமரிசனமும் முரண்பாடும் இங்கிருந்தே எழுகிறது. ‘தீவிர அகிம்சாவாதியாக இருப்பவர் சமூக அநீதியை (அது எங்கு நிகழ்ந்தாலும் சரி) எதிர்த்துக் கிளர்ந்து எழாமல் வாளாவிருக்க மாட்டார். துரதிருஷ்டவசமாக, மேற்கத்திய சோஷலிஸ்டுகள், நான் அறிந்தவரை, சோஷலிசத் தத்துவக் கோட்பாடுகளை அமல் செய்வதற்கு வன்முறையின் அவசியத்தில் நம்பிக்கை கொண்டிருந்தனர்.’ (ஹரிஜன், பிப்ரவரி 20, 1937).

பலவந்ததத்தின்மூலம் ‘கடையனுக்கும் கடையர்க்கான சமூக நீதியையும் பலவந்தத்தினால் பெறமுடியாது.’ மாறாக, ‘வன்முறை தவிர்த்த ஒத்துழையாமை வாயிலாகச் சுதந்தரம் பெறுவதற்கான கலையைக் கற்கும் கடைநிலை மக்களும்கூட அதன் ஒளி வண்ணத் தழலை உணர முடியும்.’

அனைவரும் சமம் என்னும் சோஷலிச நிலையை  ‘கோமகனின் தலையைச் சீவி, கோமகனையும் குடியானவனையும் சமப்படுத்துவதன்மூலம்’ பெறமுடியாது என்கிறார் காந்தி. அவருக்கு அகிம்சையும் சத்தியமும் ‘ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்.’ இதே காரணங்களுக்காக, ஒரு ‘சோஷலிஸ்ட் ஆர்வலன் கடவுள் நம்பிக்கையுள்ளவனாக இருத்தல் அவசியம்’ என்கிறார் காந்தி.

கடவுள் நம்பிக்கையில்லாத சோஷலிஸ்டுகள் ஏன் தோன்றுகிறார்கள் என்பதற்கோ, அதீத கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் ஏன் சோஷலிஸ்டுகளாக இல்லை என்பதற்கோ காந்தியிடம் விளக்கமில்லை. அவரே குறிப்பிடும்படி, ‘தெய்வீக புருஷர்களும் பெண்டிர்களும் இருந்து வந்தபோதிலும் இவ்வுலகில் மூடநம்பிக்கைகளும் தழைத்தோங்கியுள்ளன. கடவுள் நம்பிக்கை மிகுந்த இந்து மதத்திலும்கூட சமீப காலம் வரை தீண்டாமை தலைவிரித்தாடி வந்துள்ளது.’

சோஷலிசம், கம்யூனிசம் இரண்டும் மேற்கத்திய சிந்தனைகள் அல்ல, ‘ஈசோபநிஷத்தின் முதல் செய்யுளில் தெளிவுபடக் காணக்கிடைக்கும்’ உண்மைகள். இந்தச் செய்யுளின்படி, ‘பிரபஞ்சமெங்கும் காணப்பெறும் யாவற்றிலும் ஆண்டவன் ஊடுருவி நிற்கிறான். அனைத்தையும் துறந்து விடுக. அதன்பின் அவற்றை அளவோடு துய்த்து மகிழ்க. பிறர் பொருளுக்கு ஆசைப்படலாகாது.’ (கலெக்டட் வொர்க்ஸ் ஆஃப் மகாத்மா காந்தி, நூல் 64).

சிலர் பணக்காரர்களாகவும் பலர் ஏழைகளாகவும் நீடிக்கும் பொருளாதார நிலையை காந்தி ஏற்கவில்லை. இந்த நிலை சோஷலிசமே தீர்வு என்பதை தென்னாப்பிரிக்காவில் இருந்தபோதே தான் கண்டுகொண்டதாக அவர் குறிப்பிடுகிறார். ஆனால் தன்னுடைய சோஷலிசத்தின் பொருள் வேறு என்கிறார். அமெரிக்கா போன்ற நாடுகள் அடையவிரும்பும் சமத்துவத்தையும் ரஷ்யா பாணியிலான சோஷலிசத்தையும் அவற்றின் நோக்கங்களையும் தனது புரிதலின்பேரில் காந்தி நிராகரிக்கிறார். ஹரிஜன், ஆகஸ்ட் 4, 1946 இதழில் இது குறித்து அவர் பதிவு செய்திருப்பது கீழே.

‘எனது சோஷலிசத்தின் பொருள் கடையனுக்கும் கடைத்தேற்றம் என்பதில் பொதிந்துள்ளது. குருடர், செவிடர், ஊமைகளின் சாம்பலின்மீது நான் என்னை உயர்த்திக் கொள்ள விரும்பவில்லை. சோஷலிசம் பேசுவோர்க்கு இத்தகையோர் ஓர் பொருட்டல்ல என்றே அனுமானிக்கிறேன். உலகாயதமான மேம்பாடு ஒன்றே அவர்களது ஒரே குறிக்கோள். உதாரணமாக, ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒரு கார் கிடைக்கப் பெற வேண்டும் என்பது அமெரிக்காவின் நோக்கமாக உள்ளது. எனக்கு அப்படி இல்லை. எனது தனிமனிதப் பண்பியல்களின் மெய்ம்மை நிலை முழுவதும் பரிணமிப்பதற்கான சூழ்நிலையும், சுதந்தரமும் எனக்கு வேண்டும். சிரியஸ் நட்சத்திர மண்டலத்துக்குப் படிக்கட்டுகள் அமைப்பதற்கான பூரண சுதந்தரம் எனக்கிருக்க வேண்டும். அதுபோன்று ஏதேனும் செய்ய விரும்புகிறேன் என்று அர்த்தம் அல்ல. மற்ற சோஷலிசத்தில் தனி மனிதனின் சுதந்தரம் பறிக்கப்படுகிறது. நீங்கள் எதிலும் உரிமை கொண்டாட முடியாது. உங்கள் உடல் மீது கூட உங்களுக்கு அதிகாரம் கிடையாது.’

கம்யூனிசம் பற்றிய காந்தியின் புரிதல் இது. ‘வகுப்பு வித்தியாசங்கள் அற்ற சமூகம். பாடுபட்டு அடையத்தக்க லட்சியம் அது என்பதில் ஐயமில்லை.’ ஆனால், ‘ருஷ்யாவில் இருப்பது போன்ற கம்யூனிசம், அதாவது மக்களின்மீது திணிக்கப்படும் கம்யூனிசம், இந்தியாவுக்கு ஒவ்வாது. வன்முறை தவிர்த்த கம்யூனிசத்தில் எனக்கு நன்மதிப்பு உண்டு.’

ஆக, சோஷலிசம் வேண்டும். ஆனால் அந்த சோஷலிசம் தனிமனித உடைமைகளையும் நுகர்வு உரிமைகளையும் பறிக்கக்கூடாது. கடவுளின் உடைமைகளை தேவைக்கேற்ப பயன்படுத்தி நிறைவடையும் குணத்தை மக்கள் வளர்த்துக்கொள்ளவேண்டும். இத்தகைய குணம் மக்களிடையே இயல்பாக வளரவில்லையென்றால் பலவந்தப்படுத்தக்கூடாது. பலவந்தப்படுத்தி அதன் மூலம் சோஷலிச சமூகம் உருவானால், ‘நீங்கள் எதிலும் உரிமை கொண்டாட முடியாது. உங்கள் உடல் மீது கூட உங்களுக்கு அதிகாரம் கிடையாது.’ என்று எச்சரிக்கிறார் காந்தி.

பலாத்காரம் அற்ற கம்யூனிசம் சாத்தியம் என்கிறார் காந்தி. ‘அப்படியொரு நிலை வந்தால் உடைமைகளை மக்கள் சார்பாக, மக்களின் பொருட்டு நிர்வகிக்கப்படுமே தவிர, யாருக்கும் தனிச்சொத்து என்று ஏதும் இராது. ஒரு லட்சாதிபதி தமது பல லட்ச மதிப்புள்ள உடைமைகளை தொடர்ந்து வைத்துக்கொண்டிருப்பார். ஆனால் அவற்றை மக்களின் சார்பிலேதான் அவ்வாறு அறங்காவலராக நிர்வகித்து வருவார். பொது நலன்களைக் கருதி அரசாங்கம் எப்போது வேண்டுமானாலும் அந்த உரிமையை எடுத்துக்கொள்ளலாம்.’

போல்ஷ்வியம் என்பது, ‘தனிநபர் சொத்துரிமை என்கிற முறையமைப்பை ஒழித்துக்கட்டுவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது.’ உடைமை யாவற்றையும் துறப்பது அல்லது உடைமையின்மை என்கிற ‘அறநெறி லட்சியத்தை பொருளாதாரத் துறையில் பொருந்தவைப்பதே அதன் நோக்கம்.’ இந்த நோக்கத்தையும் லட்சியத்தையும், ‘மக்கள் தாமாகவே முன்வந்து ஏற்றுக்கொண்டால், அல்லது சாத்வீகமாக மக்களுக்கு எடுத்துக்கூறி அவர்களை இணங்க வைத்தால், அந்த லட்சியம் மேலானதே ஆகும்.’

ரஷ்யா இந்த உயர்ந்த சிந்தனையை வன்முறையின் மூலம் அடைய முயன்றதால் காந்தி அந்த வழிமுறையை நிராகரிக்கிறார். அதே சமயம், ‘போல்ஷிக் லட்சியத்தின் பின்னால் எண்ணற்ற ஆண், பெண்களின் தூயதான தியாகம் நிறைந்துள்ளது’ என்று ஒப்புக்கொள்கிறார் காந்தி. ‘அவர்கள் தங்களது அனைத்தையும் அர்ப்பணித்திருக்கிறார்கள். லெனின் போன்ற தனிச் சிறப்பு வாய்ந்த பெருந்த தலைவர்களின் தியாகங்கள் வீண்போகாது. அவர்களது தன்னலம் மறுத்த தியாகங்களின் உயர்ந்த உதாரணம் என்றென்றும் பளீரிட்டுப் பிரகாசிக்கும். காலம் செல்லச் செல்ல அந்த லட்சிய நிறைவை துரிதப்படுத்தும், தூய்மைப்படுத்தும்.’ (யங் இந்தியா, ஜனவரி 15, 1928).

ரஷ்யாவின் சிந்தனையும் தன்னுடைய சிந்தனையும் ஒன்றுதான் என்கிறார் காந்தி. ‘கம்யூனிச லட்சியம் என்ற சொல்லின் சிறந்த உட்கருத்தின்படியே நான் எனது வாழ்க்கையை அமைத்துக்கொள்ள பெருமுயற்சி செய்துவருகிறேன்.’

– மருதன்

(மூன்று பகுதிகளைக் கொண்ட கட்டுரையின் முதல் அத்தியாயம்).



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

 

காந்தி கம்யூனிசத்தை நிராகரித்தது ஏன்?

 

எகிப்து நாட்டில் இருந்து வந்த ஒரு பிரமுகருக்கு 1937 ஜனவரி 22 அன்று காந்தி அளித்த பேட்டியில் இடம்பெறும் கேள்வி பதில் இது.

கேள்வி : ரஷ்யாவிலுள்ள கம்யூனிசம் தனியார் உடைமைகளுக்கு எதிரானது. நீங்கள் சொத்துரிமை வேண்டும் என்கிறீர்களா?

காந்தி : பலாத்காரம் ஏதுமின்றி கம்யூனிசம் வரக்கூடுமானால், அது வரவேற்கத்தக்கதே. அப்போது உடைமைகள் மக்கள் சார்பாக, மக்களின் பொருட்டு நிர்வகிக்கப்படுமே தவிர, யாருக்கும் தனிச்சொத்து என்று ஏதும் இராது. ஒரு லட்சாதிபதி தமது பல லட்ச மதிப்புள்ள உடைமைகளைத் தொடர்ந்து வைத்துக்கொண்டிருப்பார். ஆனால் அவற்றை மக்களின் சார்பிலேதான் அவ்வாறு அறங்காவலராக நிர்வகித்து வருவார். பொது நலனைக் கருதி அரசாங்கம் எப்போது வேண்டுமானாலும் அந்த உரிமையை எடுத்துக்கொள்ளலாம்.

அகிம்சையின் வழியில் பொதுவுடைமையை அடைந்துவிடமுடியும் என்னும் காந்தியின் நம்பிக்கையை நேரு பகிர்ந்துகொள்ளவில்லை. நேரு தன்னிடம் இருந்து மாறுபடுவதை காந்தி உணர்ந்திருந்தார். ‘நேரு நல்விளைவை அழுத்தந்திருத்தமாக வலியுறுத்துகிறார். நானோ அதனை அடையும் மார்க்கத்துக்கு முதன்மை அளிக்கிறேன். ஒருவேளை நான் அகிம்சையை அளவுக்கு அதிகமாக வற்புறுத்துகிறேன் என்று அவர் நினைக்கலாம். அவருக்கு அகிம்சையில் நம்பிக்கை உண்டு என்ற போதிலும், மாற்று வழிமுறைகளின் வாயிலாக சோஷலித்தைக் கொண்டுவர விரும்புகிறார்.’

இந்தியக் கம்யூனிஸ்டுகளின் வழிமுறையையும் செயல்பாட்டையும் காந்தி விமரித்தார். ரஷ்ய பாணி புரட்சியை இந்தியாவில் கொண்டுவருகிறார்கள் அவர்கள் முயற்சி தவறானது என்றார் காந்தி. அதே சமயம், கம்யூனிஸ்ட் என்று தன்னை அழைத்துக்கொள்பவரையும் தன்னையும் அவர் அவ்வப்போது ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளத் தயாராகயில்லை. இந்த ஒப்பீடு அவருடைய முன்முடிவை மேலும் உறுதிபடுத்தியதே தவிர மாற்றியமைக்கவில்லை. கட்சி கம்யூனிஸ்டுகளைவிட நான் எவ்வளவவோ மேல் என்று காந்தி பெருமிதமும் கொண்டார்.

யங் இந்தியாவில் 26 மார்ச் 1931 அன்று இவ்வாறு எழுதினார் காந்தி.

‘நீங்கள் (கம்யூனிஸ்டுகள்) இந்நாட்டை உங்கள்  வழியில் இட்டுச் செல்ல விரும்பினால் நாட்டு மக்களுக்கு நீங்கள் முறையாக உங்கள் நியாயத்தை எடுத்துரைக்கவேண்டும். அதனை வலுக்கட்டாயமாகத் திணிக்கமுடியாது. நாட்டை உங்கள் நோக்குக்குச் சாதகமாக வளைப்பதற்காக நாசகாரச் செயலை மேற்கொள்ள நீங்கள் துணியலாம். ஆயினும் எத்தனை பேர்களை உங்களால் அழிக்கமுடியும்? லட்சோப லட்சம் மக்களையா ஒழித்துக் கட்டுவீர்கள்?’

பகத் சிங் தூக்கிலடப்பட்டு மூன்று தினங்கள் கழித்து காந்தி எழுதும் வாசகங்கள் இவை என்பதை வைத்து பார்க்கும்போது காந்தி அறிந்து வைத்திருந்த கம்யூனிசத்தின் வடிவம் எத்தகையது என்பது புரிய வருகிறது.

1. கம்யூனிசம் என்பது கொள்கையளவில் ஏற்கத்தக்கது. ஆனால், அதை வன்முறை வாயிலாக மட்டுமே நடைமுறைப்படுத்தமுடியும் என்பதை ரஷ்யா நிரூபித்து காட்டியுள்ளது. அங்கும்கூட தனிப்பட்ட முறையில் லெனின் மகத்தான தலைவர் என்றபோதும் வன்முறை துணையுடன்தான் அங்கே அவர் பொதுவுடைமை ஆட்சியை அமைக்கிறார்.

2.  ரஷ்ய பாணி கம்யூனிசத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்த இந்தியக் கம்யூனிஸ்டுகள் துடிக்கிறார்கள். அவர்கள் வழிமுறை தவறானது. அதைக் காட்டிலும் அபாயகரமானது நேரு போன்றோர் கம்யூனிசத்தின்மீதும் ரஷ்யாவின்மீதும் கொண்டிருக்கும் ஈர்ப்பு.

கம்யூனிசத்தை காந்தி தன்னுடைய தனிப்பட்ட எதிரியாகவே காந்தி வரித்துக்கொண்டார் என்பது புரிகிறது. அகிம்சை வழியிலான தன்னுடைய போராட்ட முறைக்கு கம்யூனிசம் நேர் எதிரானது என்று அவர் கண்டார். எனில், கம்யூனிசம் என்பது ரஷ்யாவில் நடைமுறைப்படுத்தப்பட்ட தத்துவம் என்பது மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட புரிதல் அல்லவா?

How to Change the World என்னும் நூலில்  எரிக் ஹாப்ஸ்பாம் இந்த விஷயத்தை எடுத்துக்கொண்டு விவாதிக்கிறார். கார்ல் மார்க்ஸ், எங்கெல்ஸ் முன்வைத்த கோட்பாடுகளைக் கொண்டுதான் கம்யூனிசத்தை மதிப்பிடவேண்டுமே தவிர, ரஷ்யப் புரட்சியைக் கொண்டு மதிப்பிடக்கூடாது என்கிறார் ஹாப்க்ஸ்பாம். அதே போல், சீனாவிலும் கிழக்கு ஐரோப்பாவிலும் லத்தீன் அமெரிக்காவிலும் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் அனைத்தையும் தனித்தனியேதான் பரிசீலிக்கவேண்டியிருக்கும். லெனின், மாவோ போன்றோர் கம்யூனிசத்தை அப்படியே நடைமுறைப்படுத்தினார்கள் என்று எடுத்துக்கொள்ளக்கூடாது என்கிறார் ஹாப்ஸ்பாம். மார்க்சின் மாணவர்கள் என்றமுறையில் அவர்கள் தங்கள் நாட்டில் நிலவிய பிரச்னைகளுக்கு தாங்கள் அறிந்த வழியில் தீர்வைக் கொண்டுவந்தனர். அந்தத் தீர்வுகளில் உள்ள சரி, தவறுகளை விமரிசிப்பது என்பது மார்க்சியத்தை விமரிசிப்பதாகாது. ‘மார்க்சின் மாணவர்கள் அளித்த பதில்களில் நீங்கள் முரண்படலாம். ஆனால், மார்க்ஸும் எங்கெல்ஸும் எழுப்பிய கேள்விகளை நீங்கள் ஒருபோதும் புறக்கணிக்கமுடியாது’ என்கிறார் எரிக் ஹாப்ஸ்பாம்.

இந்தியக் கம்யூனிஸ்டுகளின் அணுகுமுறை, லெனினின் சோஷலிசம், நேருவின் சோஷலிச ஈர்ப்பு, பகத் சிங்கின் புரட்சிகர அணுகுமுறை அனைத்தையும் காந்தி ஒன்றுபோலவே அணுகினார். நேரு, ஈர்ப்பு என்னும் அளவிலேயே இருந்ததால் அவரைத் தன்வசப்படுத்தமுடியும் என்று காந்தி நம்பினார். இந்த நம்பிக்கை மற்றவர்களிடம் ஏற்படாததால் அவர்களையும் அவர்களது வழிமுறைகளையும் அவர் நிராகரித்தார்.

இந்தியாவில் ஆட்சியைக் கைப்பற்றுவதற்குப் பதில் ‘காங்கிரஸ் ஸ்தாபனத்தை நிலைமாற்றுவித்துக் கைப்பற்றுங்களேன்’ என்று கேள்வி எழுப்பினார் காந்தி. ‘உங்களது கருத்துகளை முழுவீச்சுடன் வெளியீடு செய்வதற்கு தடையேதும் இல்லையே? யாரும் எதையும் நம்பத்தக்க முறையில் வலியுறுத்திப் பேசுவதைச் செவிமெடுக்கும் சகிப்புத்தன்மை கொண்டதாயிற்றே நம் இந்தியா?’

தீண்டப்படாதவர்கள் இந்து மதத்தைவிட்டு வெளியேற வேண்டியதில்லை, அவர்கள் தங்கள் உரிமைகளை இந்து மதத்தில் இருந்தபடியே கேட்டுப் பெற்றுக்கொள்ளலாம் என்று சொன்னது போலவே கம்யூனிஸ்டுகள் காங்கிரஸுக்கு வெளியில் இருந்து புரட்சி செய்யவேண்டியதில்லை, காங்கிரஸில் இருந்தபடியே புரட்சி செய்யலாம் என்றார் காந்தி. இந்தியப் பிரிவினையைப் பின்னர் காந்தி எதிர்த்ததும் இந்த அடிப்படையில்தான் என்று புரிந்துகொள்ளலாம்.

– மருதன்

(மூன்று பகுதிகளைக் கொண்ட கட்டுரையின் இரண்டாவது அத்தியாயம்).



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard