New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தமிழ் தொல்லியல்


Guru

Status: Offline
Posts: 24601
Date:
தமிழ் தொல்லியல்
Permalink  
 


மணற்கேணியின் ஆய்வரங்கு…

வழமையானது

df01f-manal2b2.jpg?w=400&h=300

மணற்கேணி ஆசிரியர் இரவிக்குமார், முனைவர் விசயவேணுகோபால், அறிஞர் நடன.காசிநாதன், முனைவர் இராசன், முனைவர் செல்வக்குமார்

 தோழர் இரவிக்குமார் அவர்களின் மணற்கேணி அமைப்பு இன்றையச் சூழலில் தொல் தமிழ் ஆய்வுகள் குறித்த பல ஆய்வுக் கூட்டங்களைத் தொடர்ந்து நடத்தி வருகின்றமை பாராட்டிற்குரிய ஒன்றாகும். கிரந்த எழுத்துத் திணிப்பை எதிர்த்துத் தோழர் இரவிக்குமார் காட்டிய ஆர்வம் போற்றற்குரிய ஒன்றாகும். கிரந்தம் குறித்த அமைதிப்போர் பற்றிப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர்களோ, தமிழ்நாட்டின் தமிழாசிரியர்களோ இன்னும் அறியாமல் இருப்பதையும் இங்குக் குறிப்பிட்டாக வேண்டும்.
 
இந்த நிலையில் தோழர் இரவிக்குமார் அவர்கள் தமிழறிஞர்களையும், வரலாற்றுப் பேரறிஞர்களையும் நண்பர்களின் ஒத்துழைப்புடன் அழைத்து இளைய தலைமுறையினருக்கு வரலாற்றை நினைவுகூரச் செய்வதை நான் பாராட்டுகின்றேன். அந்த வகையில் நடைபெற்றத் தொல்லியல் குறித்த ஆய்வுக் கருத்தரங்கிற்குப்(24.11.2012) பிற்பகல் அமர்வில் பேராசிரியர் இராசன், பேராசிரியர் செல்வக்குமார் (தமிழ்ப் பல்கலைக்கழகம்) முனைவர் விசய வேணுகோபால் ஆகியோரின் உரை அமைவதை அறிந்து அந்த அமர்வுக்குச் சென்றிருந்தேன்.
 
புதுவைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் இராசன் அவர்களின் ஆய்வுகள்தான் தமிழர்களின் தொல் வரலாற்றை அறிவியல் அடிப்படையில் நிலைநிறுத்தும் என்பதை உணர்ந்தவன் ஆதலின் அவர் உரை சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையில் அரங்கில் அமர்ந்தேன். அங்குத் தொல்லியல் அறிஞர் நடன. காசிநாதன், கனடா பேராசிரியர் செல்வக்குமார், இராம. கி ஐயா, நாக. இளங்கோவன், விழுப்புரம் தமிழநம்பி, ஒரிசா பாலு, தாமரைக்கோ உள்ளிட்ட அன்பர்களைக் கண்டு உரையாடினேன்.
 
பேராசிரியர் இராசன் அவர்கள் கொடுமணல் அகழாய்வுகள் குறித்துச் சிறப்பாகக் காட்சி விளக்கத்துடன் விளக்கினார்கள்.
 
ஓர் ஊரை முழுமையாக ஆய்வு செய்ய ஐம்பதாண்டுகள் ஆகும் என்று குறிப்பிட்டு இதற்குப் பலரின் ஒத்துழைப்பும் உதவியும் தேவை என்று குறிப்பிட்டார். தம் ஆய்வுக்குத் தம் மாணவர்கள்தான் அடிப்படையாக இருந்து உதவி வருவதை நன்றிப் பெருக்குடன் குறிப்பிட்டார். அதுபோல் தம் ஆய்வுக்கு உதவும் அன்பர்களையும் மேடையில் சிறப்பாக நினைவுகூர்ந்தார்.
 
கொடுமணல் அகழாய்வில் கிடைத்துள்ள எஃகு உருக்காலை, பதுக்கைகள், மணிகள் பற்றிய பல புதிய செய்திகளைகளை அரங்கிற்கு எடுத்துரைத்தார். “வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்” என்னும் பட்டினப் பாலை வரிகளில் குறிப்பிடப்படும் மணிகள் விந்திய சாத்பூரா மலைகளில் கிடைக்கின்றன எனவும் அதனை இங்குக் கொண்டுவந்து அழகுப்படுத்தி மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கியுள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.
 
கொடுமணலில் இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கும் முன்பாக நெய்யப்பட்ட துணிகள் கிடைப்பதைக் குறிப்பிட்டு அந்தத் துணிகளைக் காட்சிப்படுத்தினார். கொடுமணல் அகழாய்வுகளைக் கொண்டு அந்தப் பொருட்கள் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு என்று காலக்கணிப்பையும் குறிப்பிட்டார். கொடுமணலில் கிடைத்த புலிச்சின்னம், தங்கம், வெள்ளிப்பொருள்கள் குறித்தும் உரையாற்றினார். அதுபோல் அழகன்குளம் அகழாய்வுகள் குறித்தும் பேசினார். நிகம வணிகக்கழுக்கள் பற்றியும் பல செய்திகளை எடுத்துரைத்தார். தொல்லியல் அறிஞர் நடன.காசிநாதன் தலைமையில் இந்த அமர்வு அமைந்தமை குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
 
தமிழ்ப்பல்கலைக்கழகப் பேராசிரியர் செல்வக்குமார் அவர்களின் ஆய்வுரையும் மிகச்சிறப்பாக இருந்தது. அத்திரப்பாக்கம், குடியம்-குகை, கருப்பலவாடி, ஆய்வுகள் குறித்து விளக்கினார். நுண்கற்காலம் சார்ந்த மாங்குடி, பரிக்குளம், தேரிருவேலி(இராமநாதபுரம் மாவட்டம்) ஊர்களில் நடைபெற்ற ஆய்வுகள் குறித்து நினைவூட்டினார். தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பிள்ளையார் பட்டி ஆய்வு குறித்து விளக்கிப் பழங்கற்கால மாந்தர்கள் தமிழகத்தில் வாழ்ந்துள்ளனர். 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு குறிப்பிட்ட இனக்குழு இங்கு வாழ்ந்துள்ளது என்பதை அறிவியல் அடிப்படையில் சான்றுகளுடன் விளக்கினார்.
 
மூன்றாவது உரையாளராகப் பேராசிரியர் விசய வேணுகோபால் அவர்கள் புதுவையில் அமைந்துள்ள பிரெஞ்சு ஆசியவியல் பள்ளி தமிழாய்வுகளுக்கு எந்த எந்த வகையில் தொண்டாற்றி வருகின்றது என்பதைச் சிறப்பாகக் குறிப்பிட்டார்.
 
கோயிற்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை குறித்த ஆய்வுகளுக்கு இந்த ஆய்வுநிறுவனம் செய்துள்ள பல்வேறு பணிகளைப் பட்டியலிட்டுக் காட்டினார். சுப்பிரமணியர் வழிபாடு(1978) பற்றி 246 புகைப்படங்களுடன் நூல் வெளிவந்துள்ளது என்றார். பைரவர் வழிபாடு(2005) குறித்தும் இந்த நிறுவனம் ஆய்வுநூல் வெளியிட்டுள்ளது என்றார். தாராசுரம்கோயில், பல்லவர் காலச் சைவ சமயச் சிற்பங்கள், திருப்புடைமருதூர் ஓவியங்கள், தமிழகம் ஆந்திரம், கேரளக் குகைகள் குறித்த ஆய்வுநூல்கள் சிறப்புடன் வெளிவந்தமையைக் குறிப்பிட்டார்.
 
தமிழகக் கோட்டைகள் குறித்து இதுவரை 4 நூல்கள் வெளிவந்துள்ளன எனவும், தேவாரம் மூன்று தொகுதிகள் தி.வே. கோபாலையரால் வெளியிடப்பட்டுள்ளன எனவும், பரிபாடல் பிரெஞ்சு நாட்டு அறிஞர் பிரான்சுவா குரோ அவர்களால் பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது (1968) எனவும், கணினித் தேவாரம்(2008) வெளிவந்துள்ளது எனவும் கர்ணமோட்சம் (நாட்டுப்புறவியல்) ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ளது எனவும் சங்க இலக்கியம் செம்பதிப்பாக வெளிவந்துள்ளமையும் குறிப்பிட்டார்.
 
அறிஞர் செவ்வியாரின் தொல்காப்பியம் – சேனாவரையம் பிரெஞ்சு மொழிபெயர்ப்பு, ஈவா வில்டனின் நற்றிணை, குறுந்தொகைப் பதிப்புகள் பற்றியும், யாப்பருங்கலக்காரிகை(1993), மாறனகப்பொருள் – கோபாலையர் பதிப்பு, உத்திரமேரூர் கல்வெட்டுகள் (1970), பற்றியும்  திருவண்ணாமலைக் கல்வெட்டுகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டுள்ளது எனவும், 1970 முதல்  கல்வெட்டு ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன எனவும் குறிப்பிட்டார்.
 
புதுவை மாநிலக் கல்வெட்டுகள் 435 இதுவரை பதிப்பிக்கப்பட்டுள்ளன எனவும், கன்னடத்தில் 1500, ஆந்திராவில் 6000, கேரளாவில் 6000  தமிழ்க்கல்வெட்டுகள் இருப்பதையும் குறிப்பிட்டார். இந்தக் கல்வெட்டுகளில் கன்னடநாட்டில் கிடைக்கும் கல்வெட்டுகள் இராசேந்திர சோழன் காலத்திய கல்வெட்டுகள் என்றும் குறிப்பிட்டார்.
 
கல்வெட்டில் இடம்பெறும் “ஜாதிநாசம் செய்தல்” என்ற தொடரை விளக்கினார். தற்பொழுது தமிழ்க் கல்வெட்டுச் சொல்லகராதி உருவாகி வருவதையும் எடுத்துரைத்தார்.
 
மொத்தத்தில் மணற்கேணியின் பங்களிப்பால் தமிழுக்கு வற்றாமல் ஆய்வுத் தரவுகள் சுரந்துகொண்டே உள்ளன. 


3fc4d-mani.jpg?w=300&h=400


கொடுமணல் அகழாய்வில் கிடைத்த மணிகள்(பட்டினப்பாலை குறிக்கும் மணிகள்)

ea1e0-manal2b4.jpg?w=300&h=400

கொடுமணல் அகழாய்வில் கிடைத்த சங்குகள் 


c66a5-manal2b3.jpg?w=300&h=400

கொடுமணல் அகழாய்வுகள் 

816bc-manal1.jpg?w=320&h=240

 

 
நாக.இளங்கோவன், தாமரைக்கோ, தமிழநம்பி, செல்வா(கனடா), இராம.கி. 


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

சில சரித்திர நூல்களைப் படிக்கையில்..

May 5, 2010
நரசய்யா rss_icon16.jpg

 

சரித்திரத்தை எழுதும் போது நமது பிரபல சரித்திர ஆசிரியர்கள், சில நேரங்களில் உண்மையை மறைத்து விடுகிறார்கள். இதை அவர்கள் வேண்டுமென்றே செய்கிறார்களா அல்லது அப்படித்தான் எழுத வேண்டுமென்று ஒரு கூட்டம் நினைக்கிறதா என்றே புரிவதில்லை!

சமீபத்தில் எனக்கு இரண்டு நூல்கள் ஒரு பிரபல ஆங்கில தினசரியால் விமர்சனத்துக்கென அனுப்பப் பட்டிருந்தன. அவை இரண்டுமே சிறந்த ஒரு ஆஸ்திரேலிய சரித்திர அறிஞரால் (மைக்கேல் பியர்சன்) முன்னுரை எழுதப்பட்டவை. அவர் இந்து மஹா சமுத்திரத்தின் சரித்திர ஆய்வை மிக்கத் திறம் படச் செய்தவர். ஆகையால் அந்நூல்கள் வந்தவுடன் நான் மகிழ்வுடன் தான் படிக்க ஆரம்பித்தேன்.

ஆனால் பல விஷயங்களில் எனக்கு அவை ஏமாற்றத்தையே அளித்தன.

முதல் நூல் பல ஆசிரியர்களின் சரித்திரக் கட்டுரைகளின் தொகுப்பு. யோகேஷ் ஷர்மா என்பவர் தொகுப்பாசிரியர். இரண்டாவது நூல் பயஸ் மாலேக்கண்டத்தில் என்பவருடைய பல கட்டுரைகளின் தொகுப்பு. இரண்டுமே கடல் சார் வணிகத்தினை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டவை. ஆகையால் தான் அவை எனக்கு விமர்சனத்துக்கென அனுப்பப் பட்டன.

கடல்சார் வணிகம் எவ்வாறு பல நாடுகளின் இடையில் கலாசார பரிவர்த்தனைக்கும், மத மாற்றங்களுக்கும் துணை புரிந்தது என்பதை எடுத்துக் கூறுகின்ற நூல்களாகையால் நான் விரும்பிப் படித்து தான் அவற்றிற்கு விமர்சனம் எழுதியுள்ளேன். அந்த விமர்சனம் தி ஹிந்து நாளிதழில் (27 ஏப்ரல் 2010) வெளியானது.

06oeb_maritimeபயஸ் தனது நூலில் கிறிஸ்துவ மதத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதியுள்ளார். அவர் குறிப்பிடுகையில், கிறிஸ்து சகாப்தத்தின் ஆரம்ப நாட்களிலிருந்தே கிறிஸ்து மதம் சேர நாட்டில் நன்றாக இருந்ததென்றும் அவர்கள் எவ்வாறு கலாசார முறையில் சேர நாட்டாரோடு இணந்திருந்தார்கள் என்றும் எழுதியுள்ளார். செயிண்ட் தாமஸ் கிறிஸ்துவர்கள் என்றறியப்பட்ட  கிறிஸ்துவர்கள் வாஸ்கோட காமா போன்றவர்கள் வருகையில் துணை புரிந்தனர் என்றும் எழுதியுள்ளார். தவிரவும் சேரர்கள் காலத்தில் முசிறி தான் சிறந்த துறைமுகமாக இருந்ததென்றும், மற்றவை சேரநாட்டுக் குறுநில மன்னர்களால் முசிறிக்குத் துணைத் துறைமுகங்களாகவே நடத்தப்பட்டு வந்ததாகவும் குறிப்பிடுகிறார்.

இது எனக்குச் சரியெனப்படவில்லை. ஏனெனில் சங்க காலத்திலேயே தொண்டி அறியப்பட்டிருந்தது. அர்த்தசாஸ்திரத்தில் கூட விவரங்கள் உள்ளன். செங்கடல் வழிகாட்டி இவ்வாறு கூறுகிறது (53 ஆம் பத்தி) –

“கலியாணாவுக்கு அடுத்து வருவது செமில்லா (இன்றைய சால்). மண்டகோரா (பாங்கொட்), ப்லேபடமே (தாபோல்), மெலிஜிகாரா (ராஜாபுரா), பைஜாந்தியம் (விஜயடுர்க்கா), டோகரம் (தியோகர்), அவுராணபோஸ் (மால்வன்), ஐகிதி (கோவா), நெள்வ்ரா (கண்ணனூர்), திண்டிஸ் (பொன்னாணி), இவையெல்லாம் டாமிரிகாவின் (தமிழகத்தின்) சந்தை ஊர்கள், பிறகு முஜிரிஸ் (கிரங்கணூர் – சமீபத்தில் பட்டணம்), நெல்சிந்தா (கோட்டயத்திற்கு அருகையில்) ஆகியன முக்கிய ஊர்கள்”

அகநானூறு (149) இவ்வாறு சொல்கிறது:

”யவனர் தந்த வினைமான் நன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
வளங்கெழு முசிறி”

புறநானூறு (343 : 5-10) இவ்வாறு சொல்கிறது:

”மீன்நொடுத்து நெல்குவைஇ
மிசையம்பியின் மனமறுக்குந்து
மனைக்குவைஇய கறிமூடையால்
கலிசும்மைய கரைக்கலக்குறுந்து
கலம் தந்த பொற்பரிசம்
கழித்தோணியான் கரை சேர்க்குந்து
மலைத்தாரமும் கடல்தாரமும்
தலைப் பெய்து வருநர்க்குஈயும்
புனலங் கள்ளின் பொலந்தார்க் குட்டுவன்
முழங்கு கடல் மழவின் மிசிறியன்ன”

இவை மேலே குறிப்பிட்ட சரித்திர ஆசிரியர்களால் குறிப்பிடப் படவில்லை! கண்களில் படுவதில்லையோ?

கடல் வழி வணிகம் முதல் நூற்றாண்டிலிருந்தே நன்கு அறியப்பட்டிருந்தது. சங்க நூல்களில் சிறப்பாக எடுத்துரைக்கப் பட்டுள்ளது. சங்க நூலினின்று, எவ்வாறு அரசு, வணிகப் பெருமக்களுக்கு உதவி செய்து அவர்கள்து பொருட்களை ஜாக்கிரதையாகப் பாதுகாத்ததென்பதும் தெரிந்து கொள்கிறோம். இது குறித்து இந்த நூலில் விவரம் கூறப்படவில்லை. ஆனால் கிறிஸ்துவர்கள் எவ்வாறு உதவினார்கள் என்று கூறப்பட்டுள்ளது. அதே போல கிழக்கு நாடுகளில் செயல் பட்டுவந்த வணிகக் குழுக்களின் பெருமையும் கூறப்படவில்லை. முக்கியமாக, கிழக்கு ஆசிய நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகள் குறித்து ஒன்றும் கூறப்படவில்லை.

ஷர்மா தொகுத்துள்ள கட்டுரைகளுக்கு அவர் எழுதியுள்ள நீண்ட முகவுரையில் மதராசைக் குறித்து எழுதுகையில் படகோட்டிகளின் வாழ்க்கையைக் குறிப்பிட்டுள்ளார். அது பலவிதங்களில் உண்மைக்குப் புறம்பாக உள்ளது. படகோட்டிகள் ஆனந்தமாக வாழ்க்கை நடத்திக்கொண்டு ஆங்கிலேயர்களுக்கு உதவினர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அதைப் பற்றி எழுதுகையில் ஆர்ம்ஸ்ட்ராங்க் என்பவர் (இவர் மதராஸ் துறைமுகத்தின் தலைவராக நீண்டகாலம் இருந்தவர்) படகோட்டிகள் (மசூலா படகுகள்) எவ்வாறு பணம் வசூலிப்பதில் சிறந்திருந்தனர் எனபதைக் குறிப்பிடுகிறார்.

அதே போல கம்பெனி காலத்தில் அடிமை வியாபாரம் சிறந்திருந்தது என்பதையும், மெட்ராஸ் தான் அதற்குப் பெயர் பெற்றிருந்ததென்பதையும் இவ்வாசிரியர்கள் கூறவேயில்லை.

ஆங்கில நூல்களிலேயே எவ்வாறு கிறிஸ்துவர்கள், முக்கியமாக கத்தோலிக்கர்கள் (போர்ச்சுகீசியர்கள்) இந்தியாவுக்கு வருகையிலேயே ஒரு கையில் வாளுடனும் மற்றொரு கையில் சிலுவையுடன் வந்தார்கள் என்பது நன்றாகவே சொல்லப்பட்டுள்ளது. எல்லோராலும் குறிப்பிடப்படுகிற சரித்திர ஆசிரியரும் ஆண்மையாளருமான் ஹண்டர், தமது நூலில் இவ்வாறு கூறுகிறார்: “டி காமாவினுடைய வெற்றிகள் அவன் செய்த கொடூரச் செயல்களினால் கறை பட்டிருந்தன. கோழிக்கோட்டிலிருந்த கப்பல்களைத் தன் வசமாக்கிக் கொண்ட பிறகு டி காமா அங்கிருந்த எண்ணூறு மாலுமிகளின் கைகளையும் கால்களையும் மற்ற அவயவங்களையும் வெட்டினான். அவ்வாறு வெட்டப்பட்ட அவயவங்களைக் காய்ந்த இலைகளில் கட்டி, அவற்றை ராஜாவுக்கு அனுப்பி வைத்தான்!”

இது போன்ற செய்திகள் இந்த ஆசிரியரால் கூறப்படவில்லை. ஆனால் கிறிஸ்துவர்கள் செய்த பல வணிக சம்பந்தப்பட்ட காரியங்கள் கூறப்படுகின்றன.

குறை கூறும் நோக்கத்துடன் நான் இதை முன் வைக்க வில்லை. படிப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஒரே நோக்கத்தால் தான் இதை நான் சொல்ல வேண்டியுள்ளது. சரித்திரத்தின் உண்மைகள் மறைக்கப்படலாகாது என்பதே எனது நோக்கம். இவற்றைக் குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள்?

குறிப்பிடப் பட்ட நூல்கள்:

COASTAL HISTORIES SOCIETY AND ECOLOGY IN PREMODERN INDIA: Edited by Yogesh Sharma;
MARITIME INDIA – Trade, Religion and Polity in the Indian Ocean: Pius Malekandathil;

Both the books pub. by Primus Books, Virat Bhavan, Mukherjee Nagar, Commercial Complex, Delhi-110009.

narasiah”கடலோடி” நரசய்யா தமிழின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர்.   கடல்வழிவாணிகம்,  கடலோடி, துறைமுக வெற்றிச் சாதனை ஆகிய நூல்களுடன்,   பல  சிறுகதைகளும், சென்னையின் வரலாறு குறித்து மதராசபட்டினம் என்ற நூலும்,  மதுரை வரலாறு குறித்து ஆலவாய் என்ற நூலும் எழுதியுள்ளார்.  மேலும் விவரங்கள் இங்கே.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard