New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: செம்மொழிகளில் தமிழின் தொன்மையும் சங்க இலக்கியங்களில் வாழ்வியல் நெறிகளும் கோ. புண்ணியமூர்த்


Guru

Status: Offline
Posts: 24601
Date:
செம்மொழிகளில் தமிழின் தொன்மையும் சங்க இலக்கியங்களில் வாழ்வியல் நெறிகளும் கோ. புண்ணியமூர்த்
Permalink  
 


 செம்மொழிகளில் தமிழின் தொன்மையும் சங்க இலக்கியங்களில் வாழ்வியல் நெறிகளும்

 

கோ. புண்ணியமூர்த்தி

 

tamils.jpg

 

முன்னுரை

 

முதலாவதாக மேற்குறிப்பிட்ட தலைப்பை இருபெரும் பிரிவுகளாக பிரித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டியுள்ளன, அவை

1. செம்மொழிகளில் தமிழின் தொன்மை

2. சங்க இலக்கியங்களின் வாழ்வியல் நெறிகள்

என்பதே அவ்விரு பெரும் பிரிவுகள். இதில் எண் ஒன்றில் குறிப்பிட்டுள்ள தலைப்பான செம்மொழிகளில் தமிழின் தொன்மை என்றத் தலைப்பை மேலும் இரு பிரிவுகளாகப் பிரித்து ஆய்வு செய்ய வேண்டியதாக உள்ளன. அவை செம்மொழிகளில் தமிழின் தொன்மை என்பதில் ‘செம்மொழிகளில்’ என்றச் சொல்லின் பொருண்மை தமிழுடன் பிற மொழிகளும் செம்மொழிகளாக கருதப்படுகின்றன என்பதேயாகும். தமிழைப் போன்றே உலக மொழிகளில் செம்மொழிகள் என்ற ஒரு தனிப்பிரிவு உள்ளன என்பதை தலைப்பே உணர்த்துவதாக உள்ளன. அப்படியாயின் தமிழுக்கு இணையாக இன்னும் பிற செம்மொழிகளின் தொன்மையை தமிழுடன் ஒப்பு நோக்க வேண்டியதாக உள்ளன. மேலும் அவற்றில் எவையெவை செம்மொழித் தர வரிசையில் இடம் பெறுகின்றன. அத்துடன் அவற்றின் தொன்மையையும் தமிழின் தொன்மையையும் ஒப்பாய்வு செய்ய வேண்டியுள்ளன. ஒப்பியல் நோக்கு வாயிலாகத்தான் ஒரு மொழியின் செம்மொழித் தொன்மை குறித்தான முடிவிற்கு வரஇயலும். உலகச் செம்மொழிகளில் எந்தெந்த மொழிகள் செம்மொழிகள், அவ்வரிசையில் தமிழிற்கான இடம் எவ்விடத்தில் இடம் பெற்றுள்ளன என்பதை நோக்க வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயமாகும். இவற்றில் விருப்பு வெறுப்பிற்கு இடமின்றி பொது நோக்குடன் நிறைகள் மற்றும் குறைகளையும் சீர்தூக்கி ஆய்வது ஒரு உண்மையான ஆய்வின் நோக்கமாக இருக்குமென்பதே இவ்வாய்வுக் கட்டுரையின் பரந்த நோக்கமாகும்.

மேலும் தலைப்பின் இரண்டாம் பகுதியான சங்க இலக்கியங்களின் வாழ்வியல் நெறிகள் (Ethics in Sangam Literature) என்றப் பொருண்மையில் சங்க இலக்கியங்கள் உணர்த்தும் ‘வாழ்வியல் அறநெறிகள்’, ‘அறவியல்’, ‘நன்னெறிக்கோட்பாடுகள்’, ‘ஒழுக்கவியல்’, ‘நீதிநெறி’, ‘வாழ்வியல் ஒழுகலாறுகள்’ போன்ற பல்வேறு பொருண்மைகளை தாங்கி நிற்கின்றன.

 

1. உலகச் செம்மொழிகள் வரிசையில் தமிழின் தொன்மை

 

அ. செம்மொழி என்றால் என்ன?

 

ஒரு மொழிக்கு செம்மொழி என்ற தகுதி அம்மொழியில் இடம்பெற்றிருக்கும் இலக்கியத் தரத்தின் அடிப்படையில் வருகிறது. முதலில் அடையாளம் காணப்படுவது செம்மொழி இலக்கியம். அவ்விலக்கியத்தைக் கொண்ட மொழி செம்மொழி எனப்படுகிறது.

 



ஆ. செம்மொழிக்கான பிற அடிப்படைத் தகுதிக் கூறுகள் யாவை?

 

ஒரு மொழி செம்மொழித் தன்மை கொண்டது என்பது அம்மொழியின் 

1. தொன்மை (Antiquity)
2. ஒத்திசைவு (Harmony)
3. தெளிவு (Clarity)
4. தன்னடக்கம் (Restraint)
5. கண்ணியம் (Serenity)
6. இலட்சியம் (Idealism)
7. பொதுமை (Universality)
8. பகுத்தறிவு (Reason)
9. ஒழுங்கு (Order) 
10. கண்ணோட்டம் (Humanism)

போன்ற கூறுபாடுகளின் தொகுப்பாக கருதப்படுகிறது. அதோடல்லாமல் ஒரு மொழியின் செம்மொழித் தன்மையை அம்மொழியில் இடம்பெற்றுள்ள இருபெரும் சிறப்புகள் சுட்டுகின்றன. அவை ஒன்று அம்மொழியில் இடம்பெற்றுள்ள ‘கருத்துப்பொருட்கள்’ (Incorporeal objects) அதாவது இலக்கியப் படைப்புகள், இரண்டாவது ‘காட்சிப்பொருட்கள்’ (Corporeal objects). அவை பண்டையக் கலைப்படைப்புகள் என்பவையாகும். ஒரு மொழியின் செம்மொழிச் சிறப்புகளில் தலையாய சிறப்பிற்கு சான்றாக இருப்பவை ‘கலைப்படைப்புகளே’ அவற்றுள் குறிப்பாக பண்டையக் கட்டடக்கலை மற்றும் சிற்பக் கலையின் பங்கு இன்றியமையாததாகும். இவ்விரு கலைப்படைப்புகள் எந்தெந்த மொழிப் பகுதிகளில் மிகுதியாக இடம் பெற்றுள்ளனவோ அவையே உலகச் செம்மொழி வரிசையில் முன்னணியில் உள்ளன என்பதே அறிஞர்கள் உலகம் ஏற்றுக் கொண்ட உண்மையாகும் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு கிரேக்க இலக்கியங்களாகும்.

 

இ. உலகச் செம்மொழி வரிசையில் இடம்பெற்றுள்ள மொழிகள் எவையெவை அவற்றின் தனிச்சிறப்புகள் யாவை?

 

இன்றைய உலகச் செம்மொழிகளாக கருதப்படுவன

1. கிரேக்கம் (Greek)
2. இலத்தீன் (Latin)
3. அரேபியம் (Arabic) 
4. சீனம் (China) 
5. ஹீப்ரு (Hebrew) 
6. பாரசீகம் (Persian) 
7. சமஸ்கிருதம் (Sanskrit) 
8. தமிழ் (Tamil)

போன்ற மொழிகளாகும். செம்மொழி (Classical Language) என்ற கருத்துரு (Concept) முதன் முதலாக கருப்பெற்றது ஐரோப்பாவில்தான் Classicus என்ற இலத்தீன் வேர்ச்சொல்லைக் கொண்ட இந்தச் சொல்லாட்சி கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் உருப்பெற்றது.

 



ஈ. உலகச் செம்மொழிகள்

 

1. கிரேக்கம் (Greek)

 

pyramids.jpg

 

4500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கிரேக்கக் கட்டிடக் கலை

 

கிரேக்க மொழி நீண்ட பாரம்பரியம் உடையது. மேலைநாட்டு இலக்கிய மரபை உருவாக்கியவர்களே கிரேக்கர்கள்தான். ஹோமர் என்ற மகா கவியின் காப்பியங்களை இலியது (Iliad) மற்றும் ஒடிசி (Odyssey) ஆகியன செவி வழி மரபினவாக கிரேக்க இலக்கிய உலகில் ஆதிக்கம் செலுத்தின. ஏறத்தாழ கி.மு.700 போல அவை வரிவடிவம் பெற்றிருக்க கூடும் என கருதப்படுகிறது. பின்னர் ஹெரடோட்டஸ் (Herodotus) போன்றவரின் வரலாற்றுப்பதிவுகள், டெமாஸ் தனிசின் சொற்பொழிவுகள், பிளேட்டோ (Plato), அரிஸ்ட்டாடில் (Aristotle) ஆகியோரின் தத்துவ நூல்கள் போன்றவை செம்மொழி இலக்கியங்களாக திகழ்ந்தன. கி.மு.500 முதல் கி.மு.320 வரையிலான காலப்பகுதி கிரேக்கத்தின் செம்மொழி இலக்கியக் காலமாகத் கருதப்பட்டது. இலக்கியத்தில் செம்மொழித் தன்மை என்பதே கிரேக்க இலக்கியங்களில் அமைந்த கூறுபாடுகளின் அடிப்படையில் இடம் பெற்றதேயாகும். அத்தோடு அல்லாமல் கிரேக்க செம்மொழி இலக்கியத்தின் சிறப்பை உலகிற்கு பறைசாற்றும் வகையில் அந்நாட்டில் 4500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரமிடுகளின் (Pyramids) பண்டையக் கட்டடக்கலை மற்றும் சிற்பக் கலைகளின் சிறப்பு உலக மக்களின் தனி கவனத்தை ஈர்த்தது என்றால் அது மிகையாகாது, இவை கிரேக்க செம்மொழி இலக்கியத்திற்கு கட்டியம் கூறுவதாக அமைந்துள்ளது.

 

2. இலத்தீன் (Latin)

 

colosseum.jpg

 

1900 ஆண்டுகள் பழமை வாய்ந்த இலத்தீன் கட்டிடக் கலை

 

ஐரோப்பாவைப் பொருத்தவரை அடுத்து இடம்பெறுவது இலத்தீன் இலக்கியம். இலத்தீன் மொழியில் செம்மொழி இலக்கியப் பாரம்பரியம் வர்ஜில் (Vergil) படைத்த இனீட் (Aeneid) என்ற காவியத்திலிருந்து தொடங்குவதாக கொள்ளலாம். அம்மொழியின் மேம்பாட்டிற்கும் வளத்திற்கும் பெரும் பங்களித்தவர்கள் சிறந்த சொற்பொழிவாளரும் தத்துவ அறிஞருமான சிசிரோ (Cicero), சேலஸ்ட் (Sallust), டேசிட்டஸ் (Tacitus), செனகா (Seneca) போன்றோராவர். கி.மு.70 முதல் கி.பி.18 வரையிலான காலப்பகுதி இலத்தீன் இலக்கியத்தின் பொற்காலமாக கருதப்படுகிறது. அத்தோடு அல்லாமல் இலத்தீன் செம்மொழி இலக்கியத்தின் சிறப்பை உலகிற்கு எடுத்துரைக்கும் வகையில் அந்நாட்டில் 1900 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்படுத்தப்பட்ட, உலக அதிசயங்களில் ஒன்றான இத்தாலிய நாட்டு கோலோசியம் (The Roman Colosseum Built in 78 – 80 A.D.) எனப்படும் மாபெரும் திறந்தவெளி அரங்கம் இன்றைய உலக அதிசயங்களில் ஒன்றாகும்.

 

3. அரேபியம் (Arabic)

 

arabian.jpg

 

4500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரேபியக் கட்டிடக் கலை

 

அரேபிய மொழியில் முதன் முதலாக எழுத்துவடிவம் கி.மு.328-இல் அரச குடும்பத்தினரின் ஈமச்சடங்கில் பொறிக்கப்பட்டவை எனக் கருதப்படுகிறது. அரேபிய மொழியில் முதல் செம்மொழி இலக்கியம் ‘குரான்’ என்றே கூறப்படுகிறது. இது ஏழாவது நூற்றாண்டைச் சேர்ந்தாகவும், செவி வழி வந்த அரேபியப் பழமொழிகள், கவிதைகள் போன்றவை ஆறாவது நூற்றாண்டைச் சேர்ந்தவை என்றும் பின்னர் அவை ஏழாவது, எட்டாவது நூற்றாண்டுகளில் எழுத்துவடிவம் பெற்றன. பொதுவாகத் தமிழின் பண்டைய இலக்கியத்தோடு ஒப்பிடும்பொழுது அரேபிய இலக்கியங்கள் தொன்மை என்ற பண்பில் மிகவும் பிந்தியவை. இருப்பினும் முகலாயர்களின் பண்டையக் கட்டடக்கலையின் சிறப்புத் தன்மைகள் அரேபிய செம்மொழியை உலகம் திரும்பிப் பார்க்கச் செய்துள்ளது என்றால் அது மிகையாகாது.

 

4. சீனம் (China)

 

greatwallofchina.jpg

 

3500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சீனக் கட்டிடக் கலை

 

சீன இலக்கியம் 5000 ஆண்டுப் பாரம்பரியம் மிக்கது. சீன இலக்கிய வரலாற்றில் கி.மு.3000 முதல் கி.மு.600 உள்ள காலத்தை வரலாற்றுக்கு முந்திய காலம் எனப்படுகிறது. கி.மு.600 முதல் கி.பி.200 வரை தொன்மைக்காலம். சீன இலக்கிய வரலாற்றில் தொடக்கக் காலத்தில் முக்கியப் பங்கு வகித்தவர் இருவர் கி.மு.600 போன்ற காலப் பகுதியில் வாழ்ந்த கன்ஃபூசியஸ் (Confucious) மற்றும் லாவுட்சு (Laotse) என்போர் ஆவர். சீன மொழியில் கி.மு. 3000 முதல் கி.மு.600 வரையிலான இலக்கியங்களை கன்ஃபூசியஸ் நான்கு தொகுதிகளாக தொகுத்தார். ஐந்தாவது தொகுதியாகத் தனது படைப்பான தென்றலும் வாடையும் என்ற நூலை வெளியிட்டார். கன்பூசியஸ் தொகுத்த நான்கு தொகுதிகளில் சீன இலக்கியத்திற்கு அவர் செய்த மகத்தான பங்களிப்பு பழம்பாடல் தொகுதியே ஆகும். கன்ஃபூசியசுக்கு சற்று முந்தியவராகவும், அவருக்கு சமகாலத்தவராக கருதப்படுவருமான லாவுட்சு என்ற அறிஞர் தாவ் என்ற நெறியைக் கண்டவர்.



மிகப்பெரிய இலக்கியப் பாரம்பரியம் கொண்ட சீன செம்மொழி இலக்கியத்திற்கு உலக அதிசயங்களில் ஒன்றான சீனப் பெருஞ்சுவரின் (The great wall of China) பங்கு இன்றியமையாத ஒன்றாகும். சீனப் பெருஞ்சுவரின் சிறப்பு வாயிலாக சீன மொழியின் செம்மொழி இலக்கியச் செல்வங்கள் உலகப் பார்வைக்கு வந்தது என்றால் அது மிகையாகாது.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
RE: செம்மொழிகளில் தமிழின் தொன்மையும் சங்க இலக்கியங்களில் வாழ்வியல் நெறிகளும் கோ. புண்ணியமூர்த
Permalink  
 


 

 

5. ஹீப்ரு (Hebrew)

 

solomontemple.jpg

 

3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஹீப்ரு கட்டிடக் கலை

 

ஹீப்ரு மொழிக்கு கி.மு.12-ஆம் நூற்றாண்டு முதல் தற்காலம் வரையிலான இலக்கியப் பாரம்பரியம் உண்டு. ஹீப்ரு மொழியின் வரலாறு நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அதில் செம்மொழிக்காலம் அல்லது விவிலிய காலம் என்பது கி.மு.3-ஆம் நூற்றாண்டு வரை இது முதல் பகுதியாகும். இந்தக் காலப்பகுதியில்தான் பழைய ஏற்பாடு (Old Testament) எழுதப்பட்டது. அடுத்தது யூதர்களின் நீதி நெறி முறைகள், சட்டங்கள் ஆகியவை மிஷனா (Mishna) என்ற பெயரில் ஜூடா-ஹா-நசி (Juda-ha-Nasi) என்பவரால் ஏறத்தாழ கி.பி.200 போன்ற காலப்பகுதியில் தொகுக்கப்பட்டது. இது ஹீப்ரு மொழியில் இரண்டாவது காலம் அதாவது மிஷனா காலம். இத்தொகுப்பிற்கு பல தலைமுறை அறிஞர்கள் விளக்கம் எழுதினர். இது கெமாரா (Gemera) என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டது. மிஷ்னா மற்றும் கெமாரா ஆகிய இரண்டின் தொகுப்புதான் யூதர்களின் முக்கிய நூலான டாலமுட் (Talmud) என்ற பதிப்பாக போற்றப்படுகிறது. மூன்றாவதாக கி.பி. 6-ஆம் நூற்றாண்டு முதல் 13-ஆம் நூற்றாண்டு வரை இடைக்காலம். அடுத்ததாக நவீன ஹீப்ரு காலம். விவிலிய காலம் ஹீப்ரு மொழியின் செம்மொழிக் காலமாக கருதப்படுகிறது. ஹீப்ரு மொழியின் செம்மொழித் தொன்மையை உலகறியச் செய்ய 3000 ஆண்டுகளுக்கு முன்பாக அரசர் சாலமன் என்பவரால் ஜெருசலேம் என்ற பகுதியில் எழுப்பிய சாலமன் கோயிலின் (Solomon’s Temple) சிறப்பேயாகும்.

 

6. பாரசீகம் (Persian)

 

persepolis.jpg

 

2500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாரசீகக் கட்டிடக் கலை

 

பாரசீகம், ஈரான் நாட்டின் ஆட்சிமொழி அரேபிய வரிவடிவத்தில் எழுதப்படுகிறது. இன்றைய உலக நாகரிகங்கள், அறிவியல் முதலிவற்றிற்குத் தக்க கொடைகள் வழங்கிய நாடுதான் பண்டைய பாரசீகம். இன்று உலகம் முழுவதிலும் வழக்கத்தில் உள்ள எண்கள் உலகிற்கு கொடையாக வழங்கியதும் இம்மொழிதான். அழகுணர்ச்சி, வாழ்வின் இன்பங்கள் மீது நாட்டம், அறிவின் மீது ஈடுபாடு, முதலிய கூறுகளால் சிறப்புற்று விளங்குவது பாரசீக இலக்கியம். உமர் கய்யாம் என்ற கவிஞரின் மூலமாக உலகத்திற்கே தன்னையறிவித்துக் கொண்ட இலக்கியச் செல்வம் நிறைந்த மொழி பாரசீகம், பாரசீக மக்கள் அறிவின் சிறப்பினைக் குறிக்க ஒளியை குறியீடாகக் கொண்டனர். இந்த அடிப்படையில் பாரசீக இலக்கியம் தமிழ் இலக்கியத்தை ஒத்துக் காணப்படுகிறது. சான்றாக தூய்மை என்பது குறித்து

 

“பொருள்கள் அனைத்திலும் தூய்மையே 
மிக்க அழகும் பெருமையும் வாய்ந்தது”.

 

- என்று கூறப்படும் கருத்து

 

“மனத்துக் கண் மாசிலனாதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற”

 

- என்ற குறட்பாவின் கருத்துடன் இயைந்து செல்வதை காணலாம். பாரசீக செம்மொழியின் தொன்மையை உலகறிய செய்வதில் அதனுடைய பண்டையக் கட்டடக் கலையான பெரிசிபோலிசு (Persepolis) 2500 ஆண்டு பழமை வாய்ந்ததென்றால் அது மிகையாகாது.

 

7. சமஸ்கிருதம் (வடமொழி)

 

harappa.jpg

 

5000 ஆண்டுகள் பழமை வாய்ந்த தரையில் புதையுண்டு போன மொஹஞ்சாதரோ, ஹரப்பா கட்டிடக் கலை

 

கிரேக்க, இலத்தீன் இலக்கியம் போன்று செம்மொழி இலக்கியமென மேலை நாட்டினரால் மதிக்கப்பட்டது. பாராட்டப்பட்டது, பரவலாகப் படிக்கப்பட்டது. வடமொழி இலக்கியம். வடமொழி இலக்கியத்தை இரு பிரிவுகளாக காணலாம் வேதகால இலக்கியம் கி.மு.1500 முதல் கி.மு.200 மற்றும் செம்மொழி கால இலக்கியம் கி.மு.500 முதல் கி.பி.1000. வேதகால இலக்கியத்திற்கும் செம்மொழி கால இலக்கியத்திற்கும் பொதுவாக ஏறத்தாழ மூன்று நூற்றாண்டுகள் கணக்கிடப்படலாம். வடமொழியில் செம்மொழிக்கால இலக்கியம் இராமயண, மகாபாரதக் காப்பியங்களில் தொடங்குகிறது. இச்செம்மொழியே சமஸ்கிருதம் (Sanskrit) எனப் பாணிணியால் அழைக்கப்பட்டது. அதற்கான இலக்கணத்தையும் அவர் வகுத்தார். ஹோமரின் இரு பெருங்காப்பியங்களான இலியது, ஒடிசி இரண்டும் சேர்ந்த தொகுதிபோல் எட்டு மடங்கு பெரியது இராமயணம், மகாபாரதம் என்ற காப்பியங்கள் வடமொழியான சமஸ்கிருதத்தை செம்மொழி என கிரேக்க இலத்தீன் மொழிகளோடு சேர்த்து உருவகபடுத்திய பணியை நாம் செய்யவில்லை. இந்தப் பெருமை ஐரோப்பியர்களையே சாரும். சர். வில்லியம் ஜோன்ஸ் என்பவர் 1784-இல் ஆசியக் கல்விச் சங்கம் (Asiatic Society) என்ற நிறுவனத்தை கல்கத்தாவில் உருவாக்கினார். இந்த நிறுவனத்தின் மூலமும், மார்க்ஸ் முல்லர், கேல் புரூக் போன்றோரும் வடமொழி நூல்களை ஆங்கிலம், ஜெர்மன், பிரெஞ்சு போன்ற பல ஐரோப்பிய மொழிகளில் வெளியிட்டார்கள். கீழை உலகின் புனித நூல்கள் (Sacred Books of the East) என்ற வரிசையில் மார்க்ஸ் முல்லர் பதிப்பித்த 50 தொகுதிகளில் பெரும்பாலானவை வடமொழி நூல்களாகும்.

இலக்கியம், தத்துவம், அரசியல் போன்ற துறைகளில் பெரும்பாலும் கிரேக்க, ரோம பங்களிப்புகளையே பார்த்துக் கொண்டிருந்த ஐரோப்பியர்களுக்கு வேதம், உபநிடதம் தொடங்கி வடமொழியின் இதிகாசங்கள், காப்பியங்கள், நாடகங்கள் தத்துவ நூல்கள், நீதி நூல்கள் ஆகியவற்றின் வரவு ஒரு புதிய உலகத்தை அவர்களுக்கு அறிமுகபடுத்தியது. வடமொழி இலக்கியம் கிரேக்க, இலத்தீன் போன்று செம்மொழி இலக்கியமாக கருதப்பட்டது. வடமொழி செம்மொழியாக ஏற்கப்பட்டது.

 



8. தமிழ்

 

எப்படி ஆரியம் சார்ந்த இந்தியப் பண்பாட்டிற்கு வடமொழி கொள்கலனாக (Container) விளங்குகிறதோ அதைப் போலவே திராவிடம் சார்ந்த பண்பாட்டிற்கு திராவிட மொழிகளில் மூத்ததும், ஏறத்தாழ 2500 ஆண்டு இலக்கிய பாரம்பரியம் கொண்டதுமான தமிழ் மொழி கொள்கலன் ஆகும். எப்படி ஐரோப்பிய நாகரிகத்தை அறிந்து கொள்வதற்கு கிரேக்கமும், இலத்தீன் மொழியும் தேவையோ அதுபோலவே இந்திய வரலாற்றை, இந்தியப் பண்பாட்டை, அதன் ஆன்மிக தத்துவ மரபுகளை முழுமையாக உணர்ந்து கொள்ள வடமொழி, தமிழ் ஆகிய இரண்டு மொழிகளும் தேவை. தமிழின் தொன்மை என்பது தமிழ் செம்மொழித் தகுதிக்குத் தொன்மை ஒரு முக்கியமான கூறுபாடாகக் கருதப்படுகிறது. தமிழின் தொன்மை உலகு அளாவிய ஒன்று. பிரிட்டானிய கலைகளஞ்சியம் கீழ்க் கண்டவாறு கூறுகிறது.

“Apart from literature written in classical (Indo-Aryan) Sanskrit, Tamil is the oldest literature in India” Encyclopedia Britannica. Vol.II.P.350 - என்று என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா (Encyclopedia Britannica) தமிழையும், சமஸ்கிருதத்தையும் தொன்மையான மொழிகள், செம்மொழிகள் என கூறியிருப்பினும், பன்னாட்டு நிறுவனமான யுனெஸ்கோ (UNESCO) தமிழையும், சமஸ்கிருதத்தையும் செம்மொழிகள் என ஒப்புதல் அளித்ததாக தெரியவில்லை.

தமிழின் செம்மொழித் தகுதியை உலகு அறிய செய்யத் தக்கவல்ல சங்க இலக்கிய நூல்களான எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினென்கீழ்கணக்கு நூல்கள், தொல்காப்பியம், சிலப்பதிகாரம், மணிமேகலை, முத்தொள்ளாயிரம், இறையனார் களவியல் போன்றவை ஐரோப்பிய செம்மொழிகளான கிரேக்கம், இலத்தீன், சீனம், ஹீப்ரு, பாரசீகம், அரேபியம் ஆகியவற்றை காட்டிலும் இலக்கியச் செறிவு மிக்கது.

இருப்பினும், ஐரோப்பிய நாடுகளை சார்ந்த கிரேக்கம், இலத்தீன், பாரசீகம், ஹீப்ரு, அரேபியம் மற்றும் கிழக்கு ஆசியப் பகுதியைச் சார்ந்த சீனம் செம்மொழிகளுக்கென்றே தனிச் சிறப்பு வாய்ந்த உலகை கவர்ந்து இழுக்கும் வல்லமை மிக்க பண்டையக் கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலைகள் போன்று உயர்தனி செம்மொழியாம் தமிழ் மொழிக்கு கட்டியம் கூறும் வகையில் பண்டையக் கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலைகள் இருந்ததாக கருதப்படுகிறது. எடுத்துக்காட்டாக திராவிட நாகரிகத்தை சார்ந்த மொஹஞ்தாரோ, ஹராப்பா போன்ற பண்டையக் கலைகள் இயற்கை சீற்றங்களினாலும், அந்நியர் படையெடுப்பினாலும் தரையில் புதையுண்டு போயின. இது ஆரியக் கட்டடக்கலையை சார்ந்தனவா? அல்லது திராவிடக் கட்டடக்கலையை சார்ந்தனவா? என்ற வரலாற்று அடிப்படையிலான கருத்துவேற்றுமை இருதரப்பினரிடமும் இன்றளவும் நிலவிவருகிறது என்பதை கருத்தில் கொள்ளவேண்டியுள்ளது. ஆதலினால் தமிழின் தொன்மையை உலகறிய செய்வதில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது என்பதே இக்கட்டுரையின் மிக முக்கிய அம்சமாகும்.

“மேற்குறிப்பிட்ட மேலைநாட்டு செம்மொழிகள் மற்றும் கிழக்கு ஆசிய நாடான சீன செம்மொழிக்கு 3500 முதல் 4500 ஆண்டுகளுக்கு முற்பட்ட உலக அதிசயங்களாக கருதப்படுகின்ற பண்டையக் கட்டடக்கலைகள் மற்றும் சிற்பக்கலைகளை படைப்பதற்கான மொழிச்‘செறிவு’ மிக்க, கலைகள் குறித்தான ‘சொல்லாட்சிகள்’, ‘அளவீடுகள்’, ‘குறியீடுகள்’, ‘எண்கணக்கு’, ‘வரைபடங்கள்’, ‘கருவிகள்’, மற்றும் ‘வேதி மூலப்பொருட்கள்’ போன்ற அடிப்படைத் ‘தொழில்நுட்ப நுணுக்கம்’ இருந்திருந்தால் மட்டுமே மேற்படி பண்டைய உலக அதிசயங்களை வடிவமைத்திருக்க கூடும் என்பதே இக்கட்டுரையின் மிக முக்கியக் கண்ணோட்டம் (அ) நோக்காகும், இதில் ஒரு மொழியின் ‘பங்கு’ மிகப் பெரியதெனக் கருதப்படுகிறது என்பதே மேலும் இக்கட்டுரையின் தலையாய கருத்தாகும்”.

 



2. சங்க இலக்கியங்களின் வாழ்வியல் நெறிகள்

 

இரண்டாவதாக சங்க இலக்கியங்கள் என்பவை எவை, அவை எந்த நூற்றாண்டு முதல் எந்த நூற்றாண்டு வரை என்பதில் தெளிவான வரையறைக்கு உட்படுத்தியிருப்பது செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமாகும், தமிழை செம்மொழித் தமிழ் என்று நடுவண் அரசு அரசாணையாக 2004-இல் அறிவித்தது. மேற்படி நிறுவனம் சங்க இலக்கிய நூல்கள் என்பவை கி.பி. ஆறாம் நூற்றாண்டிற்கு முற்பட்டவை என்றும், அவை எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ் கணக்கு நூல்கள், தொல்காப்பியம், சிலப்பதிகாரம், மணிமேகலை, முத்தொள்ளாயிரம் மற்றும் இறையனார் களவியல் என 41 நூல்களை சங்க இலக்கிய நூல்கள் என இனம் கண்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட சங்க இலக்கிய நூல்களில் வாழ்வியல் நெறிகள் என்ற அறக்கோட்பாடுகளே தலையாய நோக்காக உள்ளது. சங்க இலக்கிய நூல்கள் குறிப்பிடுகின்ற பண்டைய தமிழர் பண்பாடு என்பது, அது எதோ தமிழர்களுக்கு மட்டுமே பொருந்தக் கூடியது என்பதல்ல இவை வையக மாந்தர் யாவருக்கும் பொருந்தக்கூடியவையாகும். இன்று உலகம் முழுவதும் பேசப்படுகிற உலகமயமாதல் (Globalization) என்றக் குவலயக் குடும்பம் (Global Family) அணுகுமுறைகள் குறித்து பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே தமிழின்

 

“யாதும் ஊரே யாவரும் கேளீர்”

 

- என்ற மாபெரும் தத்துவத்தின் கீழ் உலக மக்கள் யாவரும் உறவினர்களே இதில் நாடு இனம் நிறம் என்ற பாகுபாட்டிற்கு இடமில்லாமல் யாவரும் உறவினர்களே, எல்லா நாடுகளும் பண்பட்ட ஊர்களே என்ற மிகப்பெரிய உயரிய வாழ்வியலை உணர்த்தும் அறநெறியாக உள்ளது.

வாழ்வியல் நெறிகள் என்ற சொல்லிற்கு ஆங்கில சொற்களஞ்சியம் குறிப்பிடும் பொருள் ETHICS என்பதாகும். ETHICS என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையாக தமிழில் அறநெறிகள், அறவியல், நன்நெறிக்கோட்பாடுகள், வாழ்வியல் ஒழுகளாறுகள், பண்புகள், ஒழுக்க முறைகள் முதலான சொற்கள் வழங்கி வருகின்றன. இவற்றுள் வாழ்வியல் நெறிகள் என்ற சொல்லே பரவலான ஏற்பினைப் பெற்றுள்ளது, வழக்கிலும் நிலைபெற்றுள்ளது.

சமூகத்தில் முழுமையும் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவ வேண்டுமெனில் ஒவ்வொரு தனிமனிதனும் தனக்கென்று சில கடமைகளையும் கட்டுபாடுகளையும், ஒழுக்கங்களையும் விதித்துக்கொள்ளவேண்டும். இந்தக் கடமைகள் மற்றும் கட்டுப்பாடுகளின் தொகுப்புகளைத்தான் நாம் வாழ்வியல் நெறிகள் என்று கூறுகிறோம்.

வேறு வகையில் குறிப்பிடுவது என்றால், ஒரு தனிமனிதன் பிறரிடம் எந்த எந்தப் பண்புகளை எதிர்பார்க்கின்றானோ, அந்தப் பண்புகளைத் தானும் பெற்றிருக்கவேண்டும் என எண்ணும்போது, அந்தப் பண்புகள் யாவும் தன் வாழ்வில் பின்பற்ற வேண்டிய வாழ்வியல் அறிநெறிகளாக ஆகிவிடுகின்றன.

உலகச் சொற்களஞ்சியங்கள் வாழ்வியல் நெறிகளின் பல்வேறு வகைகளை அடையாளம் காட்டியுள்ளன. அவற்றை ஆங்கிலத்தில் ‘THE CODE OF ETHICS’ என்கின்றனர். வாழ்வியல் அறநெறிகள் என்றென்றும் மாறாதவை இவை உலகப் பொதுவானவை (Universal Ethics) இவை இரு பிரிவுகளாக உள்ளன. ஒன்று தனிமனித வாழ்வியல் நெறிகள் (Personal Ethics) இரண்டாவது சமூக வாழ்வியல் நெறிகள் (Social Ethics).

சமூக நெறிமுறைகளை அறம், பொருள், இன்பம் என மூன்றாக பகுத்துக் கூறுவது பண்டைத் தமிழ் மரபு.

 



“இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு”

 

- என்பது தொல்காப்பிய நூற்பா. சங்க இலக்கியமும் இங்ஙனமே குறிப்பிடும். இவ்வுலகில் வாழும் அனைத்து உயிர்களும் இன்பத்தை தழுவி நிற்கும். இன்ப நுகர்ச்சிக்குத் தேவைப்படுவது பொருள் அப்பொருள் அறவழியில் வரவேண்டும் என்பதே பண்டைத் தமிழரின் வாழ்வியல் அறநெறியாகும். அறம், பொருள், இன்பம் என்ற மூன்றுடன் வீடு என்ற ஒன்றையும் சேர்த்து உறுதிப் பொருள்களை நான்கு என்றது பின்னை வழக்கு, இவ்விரிவாக்கம் பக்தி நெறிக் காலத்தில் உருவானது. முப்பாலில் நான்கு பகுப்பையும் அடக்கிக் கூறியிருப்பது திருவள்ளுவரின் தனித்தன்மை ஆகும். இதனையே பின் வரும் திருக்குறள் வாயிலாக உணர்த்துகின்றார்.

 

“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்” (குறள் எண். 50)

 

சங்க இலக்கியத்தை வாழ்வியல் நெறிகள் நோக்கில் ஆராய்வதற்கு மிகுந்த இடமுள்ளது. அறம் சார்ந்த வாழ்வியல் நெறிகள், பொருள் சார்ந்த வாழ்வியல் நெறிகள், இன்பம் சார்ந்த வாழ்வியல் அறநெறிகள் என மூன்று நிலைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அறம் சார்ந்த வாழ்வியல் நெறிகளில் வாய்மை, பொய்யாமை, செய்நன்றி அறிதல், நடுவு நிலைமை, அடக்கம் உடைமை, ஒழுக்கம் உடைமை, பிறன் இல் விழையாமை, புறங்கூறாமை, பயன்இல சொல்லாமை, புலால் மறுத்தல், ஈகை, கள்ளாமை, இன்னாசெய்யாமை, கொல்லாமை பற்றிய சிறப்புக் குறிப்புகள் பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான திருக்குறள் என்னும் நூலில் திருவள்ளுவர் சுட்டும் வாழ்வியல் அறநெறிகள் ஆகும்.

பொருளின் நிலையாமைப் பண்பைப் பற்றிப் பேசுவதுடன் நில்லாமல் பொருளின் அருமையையும் தேவையையும் முதன்மையையும் வலியுறுத்திக் கூறியிருப்பது சங்க இலக்கியத்தின் தனித்தன்மை ஆகும்.

 

“அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருள்இல்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு” (குறள் எண்.247)

 



இன்பம் சார்ந்த வாழ்வியல் அறநெறிகள் என்னும் நோக்கில் சங்க இலக்கியத்தை நுணுகி ஆராயும் போது கிடைக்கும் வாழ்வியல் உண்மைகள் திட்பமும், நுட்பமும் வாய்ந்தவை ஆகும். வெறும் உடல் இன்பம் பற்றி மட்டும் சங்க இலக்கியம் பேசவில்லை. அவற்றிற்கு மேலாகத் தலைவன் தலைவி உள்ளப் புணர்ச்சிக்குச் சங்க இலக்கியம் முதன்மை தந்துள்ளது. 

எ.கா.

 

“அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே” (குறுந்தொகை-40)

 

அகத்திணைப் பாடல்களில் மட்டுமின்றி, புறத்திணைப் பாடல்களிலும் வாழ்வியல் நெறிகள் குறித்தான பற்பல அரிய கருத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. 

எ.கா.

பண்டையச் சமூகத்தில் மக்களிடையே வாழ்வியல் அறநெறிகள் எங்ஙனம் ஓங்கியிருந்தன. அதில் அந்நாட்டு அரசர்களின் பங்கு எப்படியிருந்தன என்பதை சுட்டும் பாடலாக புறத்திணை பாடல் எண். 312-இல்

 

“நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே”

 

- என்றப் பாடல் வாயிலாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன. “பானை சோற்றிற்கு ஒரு சோறே பதம்” என்ற பழமொழிக்கேற்ப பண்டையக் காலத்தில் அரசர்கள் மக்களின் வாழ்வியல் அறநெறிகளில் எவ்வளவு அக்கறை கொண்டிருந்தனர் என்பதை மேற்படி பாடலின் ஒரே ஒரு அடியாயினும் அது நெற்றி அடியாய் உணர்த்துகிறது. இதையேதான் தமிழ் மரபில் தொன்றுதொட்டு வரும்

 

“கோன் எவ்வழியோ குடியும் அவ்வழியே”

 

என்னும் பழமொழி வாயிலாக மக்களின் வாழ்வியல் அறநெறிகள் அச்சமூகத்தை வழிவழியாக தொன்றுதொட்டு வழிநடத்தி வரும் அரசர்களின் வாழ்வியல் நெறிகளை அடியொட்டி வருவன என்பதை வலியுறுத்தி கூறப்படுகிறது.

 



முடிவுரை

 

இந்த ஆய்வு கட்டுரையின் முடிபாக சொல்ல விழைகின்ற கருத்து யாதெனின் செம்மொழிகளில் தமிழின் தொன்மை என்றத் தலைப்பில் தமிழின் தொன்மையையும் இலக்கண, இலக்கியச் செல்வங்களை மட்டுமே தலையாய ஒன்றாக கருதி மற்ற உலகச் செம்மொழிகளுடன் ஒப்பு நோக்கிக் கொண்டுள்ளோம். உலகச் செம்மொழிகளாக கருதப்படுகின்ற கிரேக்கம், இலத்தீன், அரேபியம், சீனம், ஹீப்ரு, பாரசீகம் மற்றும் சமஸ்கிருதம் போன்ற செம்மொழிகள் வரிசையில் தமிழின் தொன்மை ஏறத்தாழ 5000 ஆண்டுகளுக்கு மேலாக இருக்க வேண்டும் என்றக் கருத்தை ஐந்திரம் வாயிலாக சொல்லப்படுகிறது. இருப்பினும் இதற்கான தக்க இலக்கிய வரலாற்று சான்றுகள் நம்மிடையே இல்லாத காரணத்தால் தமிழ் பின்னுக்கு தள்ளப்பட்டு உலகச் செம்மொழிகள் வரிசையில் கடைக்கோடியில் இடம்பெற்றுள்ளது. இந்த உண்மையை ஒப்புக்கொள்கின்ற பரந்த மனப்பான்மையுடன், இனியாவது உயர்தனி செம்மொழி கிரேக்க மொழியையே விஞ்சுமளவிற்கு நம்முடைய செயற்கரிய செயல்கள் வாயிலாக முன்னிருக்க செய்யும் செயல்களை உடனே தொடங்க வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம் என்பதை இக்கட்டுரை வாயிலாக என் சிற்றறிவிற்கு எட்டிய கருத்தை முன்வைக்க விழைகின்றேன்.

“இதற்கான திட்டப்பணி மற்றும் செயல்திட்டம் (PROJECT PLAN & ACTION PLAN) உருவாக்கப்பட்டுள்ளது என்றச் செய்தியை இங்கு பதிவு செய்ய விழைகின்றேன், இதில் ‘தமிழ்’ மற்றும் ‘பொதுமக்கள் நலனில்’ அக்கறை கொண்ட ‘சாதி’, ‘மத’, ‘இன’ பாகுபாடு பாரா நல்லுள்ளம் கொண்ட ‘புரவலர்கள்’ யாரேனும் முன் வந்தால் இதனை செய்து முடிப்பது 100 க்கு 100 உறுதி”.

கிரேக்க மொழி உலகச் சொம்மொழிகள் தர வரிசையில் முதல் இடம் பெற்றுள்ளது. தமிழ் மொழியில் சங்க இலக்கியங்களில் இடம் பெற்றுள்ள வாழ்வியல் நெறிகள் அரசியல், பொருளாதார கோட்பாடுகள், தத்துவங்கள், நீதி மொழியுடன் ஒப்பிட்டு நோக்குங்கால் செம்மொழித் தமிழ் பன்மடங்கு பெரியதென கருதப்படுகிறது. தமிழ் மற்றும் ஏனைய உலகச் செம்மொழிகளைக் காட்டிலும் கிரேக்க மொழி உலகச் செம்மொழிகளின் வரிசையில் எப்படி முதல் இடம் பெற்றன?!?! இதற்கான காரணங்கள் இல்லாமல் இல்லை. கிரேக்க மொழியின் சிறப்பிற்கு மற்றைய பின்னணிகள் எவை என்பதை சற்று ஆழ்ந்து நோக்குங்கால், ஆல்பாதி ஆடைபாதி என்றப் பழமொழிக்கு ஏற்ப பண்டைய கிரேக்க கலைகளுக்கு அணிகலன்களாய் கிரேக்கத்திற்கே உரிய 4500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கட்டடம் மற்றும் சிற்பக் கலைக்கு கட்டியம் கூறும் வகையில் இன்றைய உலக அதிசயங்களில் முதலாவதாக இடம் பெற்றுள்ள பிரமிடுகள் (Pyramids) என்பதே அதனுடைய தனிச்சிறப்பாகும். “உலகமே அதிசயிக்கும் நெடிதுயர்ந்த பண்டையக் கட்டடக் கலைகளையும் சிற்பக்கலைகளையும் படைத்த இவர்களின் மொழியும் கண்டிப்பாக செம்மொழியாக இருக்குமென்பதில் என்ன ஐயம் என பாமரமக்களும் நினைத்தால் அது தவறாகாது அல்லவா?”. அதுமட்டும் அல்லாது இன்றைய உலகச் செம்மொழிகள் அனைத்திற்கும் அம்மொழிகளை சார்ந்த பாரம்பரியம் மிக்க உலக மக்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்க்கச் செய்யும் நெடிது உயர்ந்த பண்டையக் கட்டடக் கலைகள் மற்றும் சிற்பக் கலைகள் அச்செம்மொழிகளுக்கு “வலுவான பின்னணி” (SOUND BACKGROUND) ஆக உள்ளன. அதுமட்டுமல்ல அண்மைக் காலத்தில் இயேசு கிருத்துவிற்கு (CHRIST THE REDEEMER) பிரேசில் நாட்டில் 130 அடி உயரத்தில் ஏற்படுத்தப்பட்ட சிலை இன்- றைய உலக 7அதிசயங்களின் பட்டியலில் இடம் பெற்று அந்நாட்டின் பெருமையை உலகறிய செய்துள்ளது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அது போன்று உயர்தனி செம்மொழியாம் தமிழ் மொழியின் தனிச் சிறப்பை உலகிற்கு பறைசாற்றும் வகையில் கிரேக்க கலைகளுக்கு இணையாக பண்டையக் கட்டடக்கலைகள் மற்றும் சிற்பக் கலைகள் தமிழ் நாட்டில் இல்லாமல் போனது என்பதை சுட்டிக்காட்டுவதே இக்கட்டுரையின் முடிபாகும்.



உலகமே வியக்கும் ‘கருத்துப் படைப்புகள்’ அதாவது ‘இலக்கியப் படைப்புகள்’ படைத்த நம்முன்னோர்கள் ‘காட்சிப் பொருள்களான’ பண்டையக் கட்டடக் கலைகள் மற்றும் சிற்பக் கலைகளை படைக்கத் தவறிவிட்டனர் என்றால் அது ஏதோ ‘குறைகூறல்’ என்றாகாது. 4500 ஆண்டுகளுக்கு முன்பே கிரேக்கர்கள் பிரமிடுகளை படைத்தார்கள் என்றால் அதுப்போன்று நம் முன்னோர்களால் இயலாமற்போனது ஏனோ?... பிரமிடுகளுக்கு இணையாக நாமும் எதோ ஒரு வகையில் உலகம் வியக்கும்படியான ‘கலைப்படைப்புகளை’ படைத்திருந்தால் அது ‘உலகத்தின் பார்வையை’ தமிழ் நாட்டின் மீதும், தமிழ் மொழியின் மீதும் இயற்கையாகவே ஈர்த்திருக்குமல்லவா? இதில் நாம் கோட்டைவிட்டுவிட்டு இன்று தமிழின் சிறப்பை வாய்மொழியாகவும், நூல்கள் வாயிலாகவும் கூறிக்கொண்ருந்தால் பரபரப்பான இத்துரித உலகத்தில் இதனை யார் கண்டுகொள்வார்கள்? செவிமடுத்துக் கேட்பார்கள்? என்ற என்னுடைய கருத்தை கேள்வியாக இங்கே பதிவு செய்ய விழைகின்றேன். இதில் ஏதேனும் மாறுபட்ட கருத்திற்கு இடமுண்டோ?

இனிவரும் காலங்களிலாவது உயர்தனி செம்மொழித் தமிழின் சிறப்பை உலகிறியச் செய்வதற்கான மிகப்பெரிய அளவிலான முயற்சி அதாவது இன்றைய உலக அதிசயங்களை எல்லாம் ‘விஞ்சி’ நின்று உலக அதிசயங்களின் முதன்மையான அதிசயம் தமிழ்நாட்டில் இடம் பெற்றுள்ளன என்ற காட்சிப்பொருளின் (Corporeal Objects) வாயிலாக உலகப் பார்வையை தமிழின்பால் ஈர்க்கச் செய்து உலக மக்கள் யாவரும் தமிழ்நாட்டை நோக்கி வரச்செய்யும் அளவிலான மிகப்பெரிய, உலக முதன்மையான அதிசயத்தின் வாயிலாக இதை செய்ய வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தும், இதில் தமிழின்பால் பற்று கொண்ட யாவரும் ஒன்றுபட்ட நோக்குடன் சாதி, மத, இன பாகுபாடு அற்ற நிலையில் அணுகி இதனை செய்து முடிக்க வேண்டும் என்ற ‘வேண்டுகோளை’ முன் வைத்தும், உயர்தனி செம்மொழியாம் தமிழ் மொழியில் இடம்பெற்றுள்ள சங்க இலக்கியங்களை உலகமொழிகளில் நாம் மொழி பெயர்ப்பதைக் காட்டிலும், வெளிநாட்டவர் முன்வந்து அதனை மொழிபெயர்த்தால் அது தமிழுக்கும் பெருமை, நமக்கும் பெருமை. நம்முடைய மிகப்பெரிய செயற்கரிய செயல்கள் வாயிலாக உலக மக்களின் பார்வை முழுவதும் தமிழின்பால் ஈர்க்கச் செய்து உலக மக்கள் அவர்களாகவே முன் வந்து செம்மொழி இலக்கியங்களை அவரவர்களின் தாய் மொழியில் அவர்களாகவே மொழி பெயர்த்து கொள்கின்ற அளவிற்கு நாம் செயல்படவேண்டுமே தவிர; தமிழை உலக மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்யும் பணி நமதல்ல. எடுத்துக்காட்டாக, இன்று உலகையே ஆளுமை செய்து கொண்டுள்ள ஆங்கில மொழியில் இடம் பெற்றுள்ள ஆங்கில இலக்கியங்களை ஆங்கிலேயர்கள் பிறமொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யவில்லை. அவர்கள் செய்தது யாதெனில் தங்களின் செயற்கரிய செயல்கள் வாயிலாக உலகையே தங்களுடைய ஆளுமையின் கீழ் கொணர்ந்து, தங்கள் இலக்கியச் செல்வங்களை உலகறியச் செய்து அந்தந்த நாட்டினர் அவரவர் தாய் மொழியில் ஆங்கில இலக்கியங்களை மொழி பெயர்ப்பு செய்து கொள்ளும்படியாக செய்தனர் என்றால் அது மிகையாகாது.


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard