New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள்


Guru

Status: Offline
Posts: 24603
Date:
பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள்
Permalink  
 


பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள்

http://www.vallamai.com/?p=625

இ.அண்ணாமலை- பேராசிரியர் தெ.பொ.மீ.யிடமிருந்தும், மொழியியலைச் சிகாகோ பல்கலைக்கழகத்தில் நோம் சாம்ஸ்கியின் மாணவரும், பின்னாளில் மாற்றுக் கொள்கை உருவாக்கியவருமான ஜிம் மெக்காலேயிடமிருந்தும் கற்றார்.

இவர் உலகின் பல நிறுவனங்களில் ஆய்வுப் பணி ஆற்றியுள்ளார். இவற்றில் அண்ணாமலை நகர், சிகாகோ, டோக்கியோ, லெய்டன், மெல்போர்ன், லெய்ப்சிக், நியு ஹேவன் முதலிய இடங்களில் உள்ள நிறுவனங்கள் சேரும். இவர் அதிக காலம் பணியாற்றியது, மைசூரில் உள்ள இந்திய மொழிகளின் மைய நிறுவனம் ஆகும். ஓய்வு பெறும் போது இவர் இதன் இயக்குநர். இவருடைய அண்மைப் பணி, யேல் பல்கலைக்கழகத்தில்.

சென்னை, மாநிலக் கல்லூரியின் தமிழ்த் துறை இணைப் பேராசிரியர் இரா. சீனிவாசன் எழுப்பிய கேள்விகள்:

கல்வெட்டுகளில் பயின்று வரும் மொழி, இலக்கிய மொழியிலிருந்து வேறுபட்டிருப்பதன் காரணம் என்ன?

பேராசிரியர் இ.அண்ணாமலை பதில்:

சங்கக் கவிதைகளின் மொழியும் சமகால பிராமிக் கல்வெட்டுகளின் மொழியும் தனித்து நிற்கின்றன. கம்பராமாயணத்தின் மொழியும் சோழர் காலக் கல்வெட்டுகளின் மொழியும் வேறானவை. இதற்குக் காரண்ங்கள் பல. சில காரணங்கள் ஊகங்களே. ஒரு காரணம், எழுதப்பட்ட பொருள். கவிதையின் பொருள் கற்பனை கலந்தது. இந்தக் கற்பனைக்கு ஒரு மொழி சார்ந்த ஒரு மரபு இருந்தது. கல்வெட்டுகளின் பொருள், கொடை, போர் வெற்றி, கோயில் பராமரிப்பு முதலிய உலகியல் சார்ந்தது. இன்றும் அரசு ஆவணங்களின் மொழிக்கும் நவீன இலக்கிய மொழிக்கும் வேறுபாடு உண்டு.

இரண்டாவது காரணம், எழுத்தின் நோக்கம். இலக்கியம், மொழித் திறம் படைத்தவர்கள் படித்து இன்புற எழுதுவது. கல்வெட்டு, குறைந்த படிப்பறிவு உள்ளவர்களும் படித்து விஷயங்களைத் தெரிந்துகொள்வதற்காக எழுதப்பட்டது. இதனால் கல்வெட்டுத் தமிழில் பேச்சுத் தமிழின் கலப்பைப் பார்க்கலாம்.

மூன்றாவது காரணம் புரவலர்களின் மொழிக் கொள்கையும் நாட்டின் மொழி நிலையும். பிராமிக் கல்வெட்டுகளில் சுட்டப்படும் உறவிடங்களைத் தானமாகப் பெற்றவர்கள் பிராகிருதம் பேசிய சமணத் துறவிகள். இந்தக் கல்வெட்டுகள் தமிழும் பிரகிருதமும் கலந்து எழுதப்பட்டிருக்கின்றன. இதே சமணர்கள் தாங்கள் தமிழில் கவிதை எழுதும்போது தமிழ்க் கவிதை சார்ந்த மொழி மரபை – பிற மொழி கலக்காத, கலந்தாலும் தமிழாக்கப்பட்ட மொழியை – பின்பற்றுகிறார்கள். சோழ அரசர்கள் தங்கள் பேரரசுத் தகுதியை நிலைநாட்ட இந்தியாவிற்கு வெளியேயும் அரசவைகளில் கோலோச்சிய சமஸ்கிருதத்தைத் தழுவி அதைக் கல்வெட்டுகளில் தங்கள் பெருமையைப் பறைசாற்றப் பயன்படுத்தினார்கள். இதனால் கல்வெட்டுகளில் அரசனின் வம்சப் பெருமையையும் போர் வெற்றிகளையும் புகழும் மெய்க்கீர்த்தி சமஸ்கிருதத்தில் அல்லது சமஸ்கிருதம் கலந்த தமிழில் இருக்கும். ஆனால் இது போன்ற புகழ்ச்சியுரை இலக்கியத்தில் பாடாண்திணையாக வரும்போது நல்ல தமிழில் இருக்கும். மேலே சொன்ன காரணத்தால் கல்வெட்டுகளில் பிறமொழிச் சொற்கள் அதிகமாக இருக்கும். அரசு நிர்வாகத்தைச் சேர்ந்த பல கலைச் சொற்களும் பிராகிருதத்தில் இருக்கும்.

நான்காவது காரணம், மொழி வெளிப்பாட்டு வடிவம். இலக்கியம், கவிதை வடிவம் கொண்டது. கல்வெட்டு, உரைநடை வடிவம் கொண்டது. உரைநடையில் மொழியைப் பொறுத்தவரை அதிகச் சுதந்திரம் உண்டு. இறையனார் அகப்பொருள் உரை போன்ற இலக்கியம் தொடர்பான உரைநடை இலக்கிய மொழியின் தன்மைகளைக் கொண்டது. உலகியல் தொடர்பான உரைநடை, நாட்டு மொழிப் பயன்பாட்டைப் பிரதிபலிக்கிறது.

=========================
மணிப்பிரவாளம் என்ற உரைநடை வடிவம் எந்தச் சமயத்தினரால், எப்பொழுது தோற்றுவிக்கப்பட்டது?

பேராசிரியர் இ.அண்ணாமலை பதில்:

மணிப்பிரவாளம் என்னும் தொகையில் உள்ள இரு சொற்களைச் சேர்த்துக் காணும் வழக்கை முதலில் அகநானூற்றைத் தொகைப்படுத்திய காலத்தில் பார்க்கிறோம். அகநானூற்றுப் பாடல்களில் ஒரு பகுதிக்கு மணி மிடை பவளம் என்று பெயர் தரப்பட்டிருக்கிறது. இது இருமொழிச் சேர்க்கையைக் குறிக்கவில்லை. ஒரு உரையாசிரியரின் கருத்துப்படி, எளிய சொற்களும் கடினமான சொற்களும் கலந்து வருவதையோ, எளிய சொற்கள் கடினமான பொருளை ஏற்று வருவதையோ குறிக்கிறது.

மணிப்பிரவாளம் என்ற தொகைச்சொல், ஒரு மொழிநடையைக் குறிக்கும் பொருளில் முதலில் சமஸ்கிருத்தில் பதினோராம் நூற்றண்டைச் சேர்ந்த அபிநய குப்தரால் ஒரு தென்னிந்திய மொழி மரபைக் குறித்துப் பயன்படுத்தப்படுகிறது. வீரசோழியத்தின் அலங்காரப் படலத்திலும் இந்தத் தொகைச்சொல் கூறப்படுகிறது. ஆழ்வார் பாசுரங்களுக்கு உரை எழுத அவற்றின் உரையாசிரியர்களால் மணிப்பிரவாள நடை உருவாக்கப்பட்டது. இந்த நடை, பதினோராம் நூற்றாண்டில் துவங்கி இரண்டு நூற்றாண்டுகள் வழக்கில் இருந்தது. இந்தக் கலப்பு உரைநடை, ஏன் இந்தக் காலகட்டத்தில் தோன்றியது, ஏன் வைணவ உரையாசிரியர்களால் கையாளப்பட்டது, ஏன் கைவிடப்பட்டது என்ற கேள்விகள் ஆய்வுக்கு உரியவை.

கடன் சொற்களிலிலிருந்து வேறுபட்ட இருமொழிக் கலப்பைத் தமிழில் சில காலக்கட்டங்களில் சில மொழிப் பயன்பாடுகளில் காணலாம். சங்க காலத்தைச் சேர்ந்த பிராமிக் கல்வெட்டுகளில் தமிழும் பிராகிருதமும் கலந்திருப்பதை ஐராவதம் மகாதேவன் காட்டுகிறார்.

ஒரு காலத்தின் சமூக, கலாச்சாரக் கூறுகளும் தேவைகளும் மொழியின் வடிவத்தை உருப்படுத்துகின்றன. பதினோராம் நூற்றாண்டு சோழப் பேரரசின் ஆதிக்கம் உச்சத்தில் இருந்த காலம். அந்த ஆதிக்கத்தின் அடையாளமாக சமஸ்கிருதத்தைத் தழுவிய காலம். சமஸ்கிருதக் காப்பியங்களையும் பிரபந்தங்களையும் தமிழுக்குக் கொண்டு வருவதில் முனைப்புக் காட்டிய காலம். முக்கியமாக, தமிழை சமஸ்கிருதத்தின் வழி இந்திய நீரோட்டத்தோடு இணைக்க ஈடுபாடு காட்டிய காலம், பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆங்கிலத்தின் வழி தமிழை ஐரோப்பிய நீரோட்டத்தோடு இணைக்க அறிவுலகமும் இலக்கிய உலகமும் முயற்சி எடுத்ததைப் போல.

ஆழ்வார் பாசுரங்களை நிலைக்களனாகக் கொண்டு அவற்றின் உரையாசிரியர்கள் வைணவ இறையியல் கொள்கையையும் (theology) தத்துவத்தையும் (philosophy) தென்னிந்தியாவில் உருவாக்கினார்கள். இந்த உருவாக்கம் தமிழ்ப் பாசுரங்களின் கருத்துகளை உபநிஷத்துகளின் கருத்துகளோடு இணைத்துச் செய்யப்பட்டது. இந்த முயற்சியில் சம்ஸ்கிருதச் சொற்களை அப்படியே தமிழில் கிரந்த எழுத்துகளின் துணைகொண்டு பயன்படுத்தினார்கள். இந்தப் பயன்பாட்டின் அளவும் தன்மையும் இருநூறு ஆண்டுகளில் மாறி வந்திருக்கிறது. ஆனாலும் பயன்பாட்டின் அடிப்படை நோக்கம் சமஸ்கிருதச் சொல்லில் பல நூற்றாண்டுக் காலமாகச் சேர்ந்த அடிப்பொருளையும் குறிப்புப் பொருளையும் வழக்கில் உள்ள தமிழ்ச் சொல்லிலோ, மொழிபெயர்த்து உருவாக்கும் புதிய சொல்லிலோ கொண்டுவர முடியாது என்ற நிலையே. சிரிலதா ராமன் என்ற ஆய்வாளரின் கருத்து இது. இன்று ஆங்கிலத்தில் உள்ள post-structuralism, post-modernism போன்ற சொற்களின் வரலாற்றுச் சுமையைத் தாங்கிய முழுப்பொருளையும் தமிழில் மொழிபெயர்த்த பின் அமைப்பியல் வாதம், பின் நவீனத்துவம் என்ற சொற்களில் உணர்த்த முடியாது என்று எண்ணி ஆங்கிலச் சொற்களையே தமிழ் எழுத்துகளிலோ, ஆங்கில எழுத்துகளிலோ எழுதுவதைப் போன்றது இது.

தமிழின் சமய அறிவுசார் வளர்ச்சியில் மணிப்பிரவாள நடை ஒரு காலகட்டத்தின் கருத்தாக்கத் தேவையை நிறைவுசெய்யத் தோன்றிய ஒரு மொழி நடை.

மணிப்பிரவாள நடை சைவத் திருமுறைகளின் அடிப்படையில் சைவ சித்தாந்தத்தை உருவாக்கிய சமய ஆசிரியர்கள் ஏன் பின்பற்றவில்லை என்ற கேள்விக்குச் சமூகக் காரணங்களில் விடை தேட வேண்டும். இந்த நடை, இருநூறு ஆண்டுகளுக்குப் பின் ஏன் வழக்கிறந்தது என்று அறிய ஆய்வு தேவை.

=========================

மொழியைக் கையாள்வதில் சமயங்களுக்கிடையில் வேறுபாடுகள் உள்ளனவா? உள்ளன என்றால் எத்தகைய வேறுபாடுகள் உள்ளன?

பேராசிரியர் இ.அண்ணாமலை பதில்:

மொழியைக் கையாள்வதில் தனி நபர்களுக்கிடையே உள்ள வேறுபாடு அவர்களின் அறிவுத் திறனையும் அழகியல் உணர்ச்சியையும் (aesthetics) மொழித் தூய்மை போன்ற கருத்தாக்கத்தையும் சார்ந்திருக்கும். சமயங்களுக்கிடையே மொழிப் பயன்பாட்டில் வேறுபாடு இருந்தால் அது மொழி பற்றிய கருத்தாக்கத்தை மட்டுமே பொறுத்திருக்கும்.

தமிழைப் பொறுத்தவரை, சமயங்களிடையே மொழிக் கருத்தாக்கம் பெரிதாக வேறுபட்டிருக்கவில்லை. ஒவ்வொரு சமயத்திற்கும் உரிய கலைச் சொற்களிலும் சமயம் சார்ந்த கலாச்சாரச் சொற்களிலும் வேறுபாடு இருப்பது இயற்கை. இதை மொழிப் பயன்பாட்டின் வேறுபாடு என்று சொல்ல முடியாது.

இலக்கிய மொழி என்று வரும்போது எல்லாச் சமயக் கவிஞர்களும் தமிழ் இலக்கிய மொழி மரபையே பின்பற்றியிருக்கிறார்கள். இலக்கிய மொழி மரபு தமிழில் அவ்வளவு வன்மையாக இருக்கிறது. வேறுபாடு இருந்தால் அதை உரைநடையில்தான் தேட வேண்டும். சமய நூற்களின் உரையாசிரியர்களில் சைவ சமய இறையறிவைக் கட்டமைத்தவர்களுக்கும் வைணவ சமய இறையறிவைக் கட்டமைத்தவர்களுக்கும் சமஸ்கிருதச் சொற்களைக் கையாள்வதில் ஒரு காலக் கட்டத்தில் பெரிய வேறுபாடு இருந்ததை இன்னொரு கேள்விக்கான பதிலில் சுட்டியிருக்கிறேன்.

காலனிய காலத்தில், கிறிஸ்துவ மதத்தில் கத்தோலிக்கப் பிரிவைச் சேர்ந்த மத குருமாருக்கும் புரட்டஸ்டன்ட் பிரிவைச் சேர்ந்த மத குருமாருக்கும் கிறிஸ்துவ மத போதனை நூல்களில் உயர்வகுப்பினர் வழக்கில் உள்ள தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்த வேண்டுமா, பாமர மக்கள் வழக்கில் உள்ள தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்த வேண்டுமா என்பது பற்றி வாதம் நடந்தது. கத்தோலிக்கரின் வாதத்தை முன்நின்று நடத்தியவர் பெஸ்கி. புரட்டஸ்டன்ட் வாதத்தை முன்நின்று நடத்தியவர் ஸீகன்பால்கு. பெஸ்கி, கிறிஸ்துவ நூல்களில் பயன்படுத்தும் தமிழ்ச் செய்யுள் மரபை ஒட்டி இருக்க வேண்டும், உயர்வகுப்பினர் ஒப்புக்கொள்வதாக இருக்க வேண்டும் என்று நினைத்தார். கிறிஸ்துவ மதத்தை உயர்வகுப்பினர் ஏற்றுக்கொண்டால் கீழ்வகுப்பைச் சேர்ந்தவர்கள் ஒப்புக்கொள்ளும் வாய்ப்பு கூடும் என்று அவர் நினைத்தார். ஸீகன்பால்கு கீழ்வகுப்பினரை நேரடியாகக் கவர வேண்டும் என்று நினைத்தார். கடைசியில்  விவிலியத் தமிழ் என்று கூறும் ஒரு தமிழ் நடை பொதுவாக உருவாகியது.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

தமிழால் முடியுமா? – தமிழக அறிவுஜீவிகள் பலரும் எழுப்பும் கேள்வி – 49

http://www.vallamai.com/?p=40972

பேராசிரியர் இ. அண்ணாமலை

தமிழால் முடியுமா என்னும் கேள்வி நவீன காலத்தில் தோன்றியுள்ள கேள்வி. நவீன காலத்திற்கு முன்னால் இந்தக் கேள்வியைத் தமிழர்கள் கேட்டதாகத் தெரியவில்லை. சமஸ்கிருதத்தின் ஆதிக்கம் மேலோங்கியிருந்த காலத்தில்கூட இந்தக் கேள்வி எழவில்லை. காலனிய காலத்தில் ஆங்கிலத்தின் ஆதிக்கம் வேரூன்றியபோதே இந்தக் கேள்வி எழுந்தது. இது பாமரர்களிடம் எழவில்லை; ஆங்கிலம் கற்றவர்களிடம் எழுந்தது. முடியும் என்போர், முடியாது என்போர் என இரண்டு அணிகள் எழுந்தன; எரிந்த கட்சி, எரியாத கட்சி வாதத்திற்கு இன்னும் விடிவில்லை. இந்தக் கேள்வி எது முடியுமா என்று கேட்கிறது என்று வெளிப்படையாகச் தெரியப்படுத்தவில்லை. இது நிச்சயமாகக் காதல் செய்வது பற்றிக் கேட்கவில்லை; இலக்கியம் செய்வது பற்றிக் கேட்கவில்லை; திரைப்படம் எடுப்பது பற்றிக் கேட்கவில்லை; உழவுத்தொழில் செய்வது பற்றிக் கேட்கவில்லை; வணிகம் செய்வது பற்றிக் கேட்கவில்லை. இப்படிப்பட்ட பலவேறு துறைகளில் தமிழில் இயங்கமுடியுமா என்று இந்தக் கேள்வி கேட்கவில்லை. இந்தக் தமிழால் நாட்டை ஆட்சி செய்வதைப் பற்றியது; நீதிமன்றங்களில் வழக்காடுவது பற்றியது; கல்லூரிகளில் கல்வி கொடுப்பதைப் பற்றியது. அதாவது, தமிழ் அதிகார மொழியாக, அறிவு மொழியாகச் செயல்பட முடியுமா என்பதே இந்தக் கேள்வியின் சாரம்.

மொழிக்கென்று உள்ளார்ந்த தனித்திறன் எதுவும் இல்லை. ஒரு மொழி செய்வதை இன்னொரு மொழி அதன் தன்மை வேறுபாட்டால், இலக்கண வேறுபாட்டால் செய்ய முடியாது என்பதில்லை. எந்த மொழியும் எதையும் செய்ய முடியும். இதற்கு வாய்ப்பு வேண்டும். வாய்ப்பைத் தர அந்த மொழியைப் பேசுபவர்கள் விரும்ப வேண்டும்; விருப்பத்தை நிறைவேற்ற அவர்களுக்கு பலம் வேண்டும். இந்த பலம் ஆட்சி பலம், பண பலம் மட்டுமல்ல; அறிவு பலமும் ஆகும். ஆட்சி பலமும், பண பலமும் பெறுவது வரலாற்றுக் காரணங்களைப் பொறுத்தது; அறிவு பலம் பெறுவது சமூகத்தின் கையில் இருக்கிறது; செய்யவேண்டும் என்ற சமூகத்தின் முனைப்பில் இருக்கிறது. தமிழர்களின் அறிவு பலம் –அறிவியல் பலம், சட்டவியல் பலம், வணிக மேலாண்மை பலம் முதலானவை எல்லாம்- ஆங்கிலத்தில் கட்டப்பட்டிருக்கிறது. இந்த பலத்தின் கனம் தமிழர்களின் காலைத் தமிழ் அறிவு உலகில் ஓடவிடாமல் கட்டிப்போடுகிறது; தங்களால் முடியாது என்ற மனநிலையையும் உருவாக்குகிறது. இந்த மனநிலைதான் தமிழ் அறிவுத்துறைகளில் மேலே செல்லாமல் தடுக்கும் கால்கட்டு; தமிழ் மொழி அல்ல. தங்களால் முடியாது என்னும் மனநிலை தமிழால் முடியாது என்னும் சமாதானத்தில் மறைக்கப்படுகிறது.

அறிவுத் தமிழ் தான்தோன்றி அல்ல. இது அறிவியல் தமிழ் மட்டுமே அல்ல.; அதை விடப் பரந்துபட்டது இந்தத் தமிழ் உருவாவது அறிவுத்துறைகளில் புலமை பெற்றவர்களின் கையில் உள்ளது. தங்கள் புலமையைப் பிற மொழிகளின் வழியே பெற்றவர்கள் அதைப் பயன்படுத்தித் தமிழில் எழுத வேண்டும். மாணவர்களுக்கு மட்டுமல்ல, பொதுமக்களுக்கும் எழுத வேண்டும். பிற அறிவுத்துறைகளைச் சாரந்த புலவர்களுக்கும் தங்கள் துறை அறிவைத் தமிழில் எழுதவேண்டும். இந்த எழுத்தியக்கத்தைத் துவங்க அரசின் தயவுக்குக் காத்திருக்கத் தேவை இல்லை; அரசின் ஆங்கிலவழிக் கல்விக் கொள்கையை மாற்றாமல் செய்ய முடியாது என்று கையைப் பிசையத் தேவை இல்லை.; பழியை மற்றவர்களின் மேல்போடத் தேவை இல்லை.  பிரச்சனையைக் கையில் எடுத்துக்கொண்டு களத்தில் இறங்க இன்றைய தொழில்நுட்பம் கைகொடுக்கிறது. தமிழ்வழியே பல துறை அறிவை வளர்க்க எழுதுவதை, உலகமயமாதலின் விளைவாகத் தோன்றும் பொருளாதார, சமூக, கலாச்சாரக் கேள்விகளுக்குப் பதில் தேடி எழுதுவதை வலைப்பூக்களில், மின்னிதழ்களில், இணையதள விவாதக்குழுக்களில் ஆரம்பிக்கலாம். இங்கும் அரைத்த மாவையே அரைக்கத் தேவை இல்லை. எந்தத் துறையறிவைப் பற்றியும் தமிழில் எழுதினால், தமிழ்த்துறை சார்ந்தவர்களே எழுத வேண்டும் என்னும் நியதி மாற வேண்டும்.

அறிவுத்தமிழ் எழுதப் தமிழ்ப் புலமை தேவை என்பது தடுக்கும் சுவராக, விலங்காக அமையக் கூடாது. கலப்பற்ற தமிழில்தான் இந்தத் தமிழை எழுத வேண்டும் என்ற தேவை இல்லை. குழந்தை நடக்கத் துவங்கும்போது நேராக நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது இயற்கைக்கு முரணானது. புதிய துறையில் ஒரு மொழியின் வளர்ச்சியும் இப்படியே.

எழுத்தறிவு இயக்கத்தைப் போல, அறிவுத்தமிழ் எழுத்தியக்கமும் தமிழுக்கு அறிவொளி இயக்கமாகப் புத்தாண்டில் அடியெடுத்து வைப்பது தமிழ் அறிவுஜீவிகளின் கையில் இருக்கிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

இன்றைய எழுத்துத் தமிழும்  பேச்சுத் தமிழும் வேறுவேறு மொழிகளா?

-இணையக் குழுக்களில்  விவாதிக்கப்படும் கேள்வி

 

வல்லமையில் என்  முப்பத்தைந்தாம் கேள்வி-பதிலில்  இன்றைய எழுத்துத் தமிழுக்கும்  பேச்சுத் தமிழுக்கும் உள்ள சில இலக்கண வேறுபாடுகளை  எழுதினேன். மேலே உள்ள கேள்வி அந்த மாதிரியான இலக்கண வேறுபாடுகள்  இரண்டு தமிழையும் வேறு மொழிகள்  ஆக்குகின்றனவா என்று கேட்கிறது. அதாவது, வேறுபாடு நடை அல்லது வெளிப்பாட்டு வேறுபாடா, அல்லது மொழி வேறுபாடா என்பதே கேள்வி.

 

இந்தக் கேள்விக்குப் பதில் அளிப்பதற்கு முன் சில விளக்கங்கள் தேவை. எழுத்துத் தமிழ், பேச்சுத் தமிழ் என்ற பெயர்கள் பெரும்பான்மை வழக்கு பற்றித் தரப்பட்ட பெயர்கள். மேடைப் பேச்சும் எழுத்துத் தமிழில் அடங்கும்; எழுதப்படும் கதைகளின் பாத்திரங்களின் உரையாடல்களும் சிரிப்புத் துணுக்குகளும் பேச்சுத் தமிழில் அடங்கும். எழுத்துத் தமிழ், பேச்சுத் தமிழ் என்னும் வேறுபாடு, மொழி வெளிப்படும் ஊடக வேறுபாட்டைக் காட்டுவது மட்டுமல்ல; அது தமிழை வழங்குவோர்களிடையே உள்ள உறவின் தூரத்தையும் நெருக்கத்தையும் பொறுத்து வேறுபடுவது. இந்த வேறுபாடு மொழியின் இலக்கணத்தில் அல்லாமல் நடையிலும் பிரதிபலிக்கலாம். ஆனால், தமிழில் இலக்கணமும் இந்த வேறுபாட்டைப் பிரதிபலிக்கிறது. ஆகவே, இந்த இலக்கண வேறுபாடு மொழியை இரண்டாக்குகிறதா என்பதே கேள்வி.

 

கொச்சைத் தமிழும்  கலப்புத் தமிழும் மட்டுமே  பேச்சுத் தமிழ் அல்ல. எல்லாரும்  பொதுவாகப் பொது இடங்களில்  பேசும் தமிழ் ஒன்று உண்டு. அதுவே எழுத்துத் தமிழோடு ஒப்பிடப்படுகிறது. இதைப் போலவே, பண்டிதர்கள், அறிவியல், சட்டம், ஆட்சியை நடைமுறைப்படுத்துவர்கள் எழுதும் தமிழ் மட்டுமே எழுத்துத் தமிழ் அல்ல. சிறப்புத் துறை சாராமல் பொதுக்கல்வி உடையவர்கள் எழுதும் தமிழே இங்கே பேச்சுத் தமிழோடு ஒப்பிடப்படுகிறது.

 

ஒரு மொழிக் குழுவின் (linguistic community) மொழி வழக்கில் பல்வேறு மொழிகள் இருக்கலாம்; இதைப் பன்மொழியம் (multilingualism) என்பார்கள். ஒருவருடைய மொழி வழக்கில் பல வட்டார மொழிகளும் பல நடைகளும் இருக்கும். இது இயல்பு. இதைப் பன்மொழியம் என்பதில்லை; இதைப் பல்வழக்கியம் எனலாம். தமிழைப் பள்ளிகளில் கற்றவர்களிடம் உள்ள எழுத்து மொழி சேர்ந்த ஒன்றுக்கு மேற்பட்ட மொழி வழக்கு, இருமொழியியமா, இருவழக்கியமா என்பதே கேள்வி.

 

ஒரு மொழி இலக்கணத்தின் கட்டுமானம். இந்த இலக்கணம் மொழியின் கட்டை ஒரு கணித வாய்பாடு போல விளக்கும் வரையறை; மொழிக்குச் சட்டம் போலக் கட்டுப்பாடு விதிக்கும் குற்றக் கையேடு அல்ல. மொழி கலாச்சாரத்தின் கட்டுமானமும்கூட. அதன் கலாச்சாரத்தின் கட்டுமானத்தில் மொழிக்குழுவின் வரலாறும் அரசியலும் பெரும் பங்கு பெறும். தன்னை இனங்காட்டுவதாக வரித்துக்கொண்ட மரபுச் செல்வமும் வரலாற்றில் அடங்கும். மரபுச் செல்வத்தில் இலக்கியமும் தொன்மங்களும் பெரும் இடம் பெறும். எழுத்துத் தமிழை அறியாத தமிழர்களும் அதில் உள்ள இலக்கியம் தங்கள் மரபுச் செல்வம் என்ற உணர்வை உடையவர்கள். எழுத்துத் தமிழை அறிந்தவர்களும் காலந்தோறும் மாறிவரும் தமிழ் இலக்கியத்தின் வழிவருவதே இன்று பேச்சு மொழி கலந்து எழுதப்படும் தமிழ் இலக்கியம் என்று பார்ப்பவர்கள். தமிழகத்தின் பேச்சுத் தமிழுக்கு இலங்கையின் பேச்சுத் தமிழோடும் மலையாளத்தோடும் உள்ள தூரம் ஒப்பிடக் கூடியது என்றாலும், இலங்கைத் தமிழ் தனி மொழி அல்ல என்று தமிழின் மொழிக்குழு நினைப்பதற்கு இரண்டையும் பேசுபவர்கள் இலக்கியத்தை இருவருக்கும் பொதுவான கலாச்சாரப் பாரம்பரியமாகக் கொள்வது முக்கியமான காரணம். இதற்கு மேல் அரசியல் காரணமும் இருக்கிறது. இரண்டையும் வேறாகப் பார்ப்பதை விட ஒன்றாகப் பார்ப்பதில் அரசியல் நன்மை இருக்கிறது. மலையாளத்தைப் பொறுத்தவரை இந்த நன்மை தலைகீழானது. கலாச்சாரக் கட்டுமானம் என்னும் வகையில் எழுத்துத் தமிழும் பேச்சுத் தமிழும் ஒரு மொழியே. இது சமூக மொழியியலாளர்களின் பார்வை.

 

இலக்கண மொழியிலாளரின்  பார்வையில், இரண்டு வழக்குகள் அவற்றைப் பேசுபவர்கள் பயிற்சி இல்லாமலே ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளும் அளவீடு முக்கியமானது. ஒரு வழக்கில் மற்றவருக்குப் புரியாத பகுதி பத்து அல்லது இருபது சதவிகிதத்திற்குள் இருந்தால், அந்த வழக்குகள் ஒரே மொழி என்று சொல்ல அவர்களுக்குத் தடை இல்லை. ஒருவருக்கொருவர் புரிந்துகொள்ளும் பகுதி இலக்கண ஒற்றுமையாலும் அகராதி ஒற்றுமயாலும் அமையும். ஒரு மொழியைப் புரிந்துகொள்வது என்பது துல்லியமாகக் கணிக்க முடியாத ஒன்று; மேலும் நபருக்கு நபர் அவருடைய பின்னணியைப் பொறுத்து மாறும் ஒன்று. ஒரே மொழி என்றால் பயிற்சி இல்லாமல் புரிந்துகொள்ளக் கூடியது என்ற கருத்துக்கும் ஒரே மொழி எனபது கலாச்சாரத்தால் கட்டப்படுவது என்ற கருத்துக்கும் முரண்பாடு இருந்தால், பின்னைய கருத்தின் முடிவையே மொழிக்குழு ஏற்றுக்கொள்ளும். பேச்சில் இந்தி பேசுபவர்கள் உருதுவையும் உருது பேசுபவர்கள் இந்தியையும் புரிந்துகொள்ள முடியும் என்றாலும், அவர்களுக்கு இரண்டும் வேறு மொழிகள். இந்த எண்ணம் எழுத்துமுறை முதலாக அரசியல் ஈறாக உள்ள வரலாற்று விளைவினை ஒட்டி எழுவது. இந்தியர்கள் பேசும் ஆங்கிலத்திற்கும் ஆங்கிலேயர்கள் பேசும் ஆங்கிலத்திற்கும் புரிந்துகொள்வதில் அதிகமாகவே இடைவெளி இருந்தாலும் இரண்டும் ஆங்கில மொழியே என்று கருதுவது  வரலாற்றின் பிரதிபலிப்பு.

 

நேரடியாக இலக்கண இடைவெளியை  வைத்து ஒரு மொழி, இரு மொழி என்று வேறுபடுத்தலாம் என்பது வரலாற்று மொழியியலாளரின் கொள்கை. அதாவது, இலக்கண மாற்றங்கள் ஒரு அளவிற்கு மேல் அதிகமானால், ஒரு மொழி பிரிந்து இரண்டாகும் என்பதே இந்தக் கொள்கையின் அடிப்படை. ‘எந்த அளவிற்கு’ என்பதற்குப் புரிதலோடு தொடர்பில்லாத ஒரு துல்லியமான கணக்கு இல்லை. எழுத்துத் தமிழுக்கும் பேச்சுத் தமிழுக்கும் உள்ள வேறுபாடு அவற்றின் இலக்கண விதிகளுக்கு (அதாவது வாய்பாடுகளுக்கு) இடையே உள்ள வேறுபாடு; அது அளவில் அதிகம்; அதனால் அவை இரு வேறு மொழிகள் என்பது ஒரு வாதம். வேறு சிலர், அது இலக்கண விதிகளின் வேறுபாடு அல்ல; இலக்கண விதிகளை மீறுவதால் வரும் வேறுபாடு என்பார்கள், இவர்கள் இலக்கணத்தைக் காலத்தால் மாறாத சட்டப்பெட்டகமாகப் பார்ப்பவர்கள்; இந்தப் பார்வையில் புதிய விதிகள் தோன்றுவது பேசுபவர்களின் சோம்பேறித்-தனத்தாலோ கெட்ட புத்தியாலோ நடக்கும் செயல்; அதனால் மொழி விவாதத்தில், இது –தமிழ் பேசும் எல்லாரும் செய்யும் செயலாக இருந்தாலும்- ஒரங்கட்ட வேண்டிய செயல் என்று வாதிடுபவர்கள். இது ஒரு கற்பனையான நிலையை மொழி வழக்கில் பார்த்து, தமிழ் ஒன்றா, இரண்டா என்னும் கேள்விக்கே இடம் இல்லாமல் செய்ய முயலும் செயல்.

 

பேச்சுத் தமிழுக்கென்று  ஒரு இலக்கணம் உண்டு என்று ஒப்புக்கொள்பவர்களில் சிலர் சில எளிய விதிகளின் மூலம் எழுத்துத் தமிழைப் பேச்சுத் தமிழோடு இணைக்கலாம். இரண்டுக்கும் உள்ள இலக்கண இடைவெளி பொருட்படுத்தத் தக்கது அல்ல என்று வாதிடுவார்கள். ஆனால். இதை மறுக்கும் தரவுகள் உண்டு. தமிழ்க் குழந்தை பேச்சு மொழிக் கலப்பில்லாத எழுத்துத் தமிழைப் பள்ளியில் கற்க நான்கு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. எழுத்துத் தமிழ்மட்டும் படித்துவிட்டுப் பேச்சுத் தமிழைப் படிக்கும் வெளிநாட்டவருக்கு அதைப் படிக்கத் தனி மொழி படிக்கும் அளவிற்கு நேரம் எடுக்கிறது. அவர்கள் தமிழ்நாட்டுக்கு வந்தால் பேச்சுத் தமிழ் பத்துச் சதவிகித அளவுதான் புரிகிறது. (தமிழர்கள் தமிழை வேகமாகப் பேசுவதும் இதற்கு ஒரு காரணம் என்பார்கள்!). தமிழ் பேச மட்டும் தெரிந்தவர்கள் மேடைப் பேச்சை அமர்ந்து கேட்கிறார்கள் என்றால், அவர்களுடைய புரிதல் நூறு சதவிகிதம் என்று அர்த்தமல்ல. இன்னொரு மொழியில் இசைக் கச்சேரி கேட்பதைப் போல, ஒலியின் இனிமைக்கும் பேச்சாளரின் தமிழ்த் திறனுக்கும் மயங்கி இவர்கள் பேச்சைக் கேட்பதும் உண்மை. இதற்குப் புரிதல் முக்கியமல்ல.

 

எழுத்துத் தமிழுக்கும்  பேச்சுத் தமிழுக்கும் இடைவெளி  எப்படி இருந்தாலும், பல சமூகக் காரணங்களால் இருபதாம் நூற்றண்டிலிருந்து இடைவெளி குறைந்துகொண்டே வருகிறது. பேச்சு மொழியின் புதிய தொடரிலக்கணக் கூறுகளும் சொற்பொருளின் கூறுகளும் எழுத்து மொழியில் இடம் பெறுகின்றன. அதில் எழுத்து மொழிக்கே உரிய கூறுகளும் பேச்சு மொழியிலிருந்து வந்துசேர்ந்த கூறுகளும் சேர்ந்து உள்ளன. இதனால் எழுத்து மொழியில் ஒன்றைக் கூற ஒன்றிற்கு மேற்பட்ட அமைப்பு முறைகள் உள்ளன. சொல்லின் உள்ளமைப்புக் கூறுகளும் இப்படியே. இரண்டும் அதிகமாக வித்தியாசமாக இருப்பது சொல்லின் ஒலியமைப்பில் மட்டுமே. சொல்லிலக்கணத்தில் காணப்படும் பெரும்பான்மை வேறுபாடுகள் ஒலியமைப்பால் வருவன. இதற்கான சான்றுகளை என்னுடைய Social Dimensions of Modern Tamil என்ற நூலில் (க்ரியா வெளியீடு) காணலாம்.

 

மொழிப் பயன்பாட்டிலும் இடைவெளி குறைந்துவருகிறது. மேடைத் தமிழில் நகைச்-சுவைக்கும், வகுப்பறையில் ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் இடையே நடக்கும் கலந்துரையாடலிலும், செய்தித் தாள்களின் செய்தித் தலைப்பிலும், பேட்டிக் கட்டுரையிலும், திரைப்படத்தின் தலைப்பிலும் பாடலிலும் பேச்சுத் தமிழ் இடம் பெறுகிறது. பேச்சில் புதிதாக உருவாக்கப்பட்ட எழுத்து மொழிக் கலைச்சொற்கள் இடம் பெறுகின்றன.

 

இயல்பாக நடக்கும் இந்த மாதிரியான  இடைவெளிக் குறைப்பை ஊக்குவிப்பதே தமிழ் ஒன்றா, இரண்டா என்ற கேள்வியின் தேவையைக் குறைக்கும். இடைவெளிக் குறைப்பில் எழுத்து மொழியில் பேச்சு மொழியின் தாக்கமே அதிகப் பங்கு வகிக்கிறது. இதற்கு மாறாக, தூய தமிழ் –அதாவது பழைய தமிழ்- வேண்டும் என்று பின்னோக்கிப் போய்ப் பழைய இலக்கண நூல்கள் சொல்லுவதைப் போல எழுத விரும்புவது இடைவெளியைக் கூட்டும். அப்படி எழுதுவதைப் போல் பேசி இடைவெளியைக் குறைக்கலாம் என்று சொல்வது எந்த மொழி வரலாற்றிலும் காணாத ஒன்று. தமிழை உன் தாயிடம் படிக்காதே, பழங்கால ஆசானிடம் மட்டுமே படி என்று சொல்வதைப் போன்ற நடக்க முடியாத செயல். இது சூடிதார் போடும் மகளைப் புடவைதான் கட்ட வேண்டும் என்று கட்டளையிடும் மனப்பாங்கின் வெளிப்பாடு. இதைச் செய்ய முடிந்தாலும், அது சர்வாதிகாரத்தினால்தான் முடியும். தமிழின் இயல்பான வளர்ச்சிக்குக் கடிவாளம் போடுவது தமிழை –தமிழ் பேசுபவர்களை- அடக்கியாளும் செயல். தமிழ் அதன் வரலாற்றில் என்றும் அடக்கியாளப் பட்டதில்லை; அதனாலேயே தமிழ் வழங்கு மொழியாக இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நிலைத்து நிற்கிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

மொழிகளில் தோற்றம் பற்றிக்  கணிக்க மொழியியலில் நெறிமுறை இருந்தால், அதைக் கொண்டு தமிழின் தொன்மையைக் கணக்கிட முடியுமா?

பதில்

PlosOne என்னும் ஆன்லைன் இதழில் வெளியான Charles Perreault & Sarah Mathew எழுதிய Dating the origin of language using phonemic diversity (http://www.plosone.org/article/info:doi/10.1371/journal.pone.0035289) என்னும் ஆய்வுக்கட்டுரையையும் இதன் எதிர்வினைகளையும் படித்துப் பார்த்த இராமகிtamilmanram@googlegroups.com –இல் தமிழ் ஒலியன்களின் எண்ணிக்கையை (முருகையன் கூறியதாக அவர் கொண்ட 95) வைத்து, கட்டுரை காட்டும் நெறிப்படி கணக்கிட்டால், தமிழின் தோற்றக் காலம் மில்லியன் ஆண்டுகளுக்கு மேல் போகும்போல் தெரிகிறது என்னும் ஐயத்தை எழுப்பி, ந.தெய்வசுந்தரத்தின் கருத்தைக் கேட்டிருந்தார். தெய்வசுந்தரம் தமிழ் ஒலியன்கள் 95 அல்ல; அது முருகையனின் கருத்தும் அல்ல என்று மறுத்துவிட்டு, மேலே சொன்ன கட்டுரையைப் பற்றி என்னுடைய கருத்தைக் கேட்டார். என் கருத்து இது.

மேலே சொன்ன கட்டுரையைப் போன்று இன்னொரு ஆய்வுக்கட்டுரை சயின்ஸ் என்ற புகழ்பெற்ற ஆய்விதழில் ஒன்றரை ஆண்டுக்கு முன் (4.15.2011) வெளிவந்தது. அது Quentin Atkinson எழுதிய Phonemic diversity supports serial founder effect model of language expansion from Africa என்னும் கட்டுரை.

தமிழின் தோற்றம் என்னும்போது தமிழ் மொழியின் தோற்றத்தைக் குறிக்கிறோம். தமிழ் இலக்கியத்தின் தோற்றத்திற்கு எழுத்துச் சான்று இருக்கிறது. உலகில் மொழிக்கு எழுத்து முறை தோன்றியது 5500 ஆண்டுகளுக்கு முன்தான். இதனால் மொழியின் தோற்றத்திற்கு எழுத்துச் சான்று எந்த மொழிக்கும் இதற்கு முன்னால் இருக்க முடியாது. எழுதப்படுவதற்கு முன் ஒரு மொழி பேச்சு வழக்கில் நிச்சயம் இருக்கும்.

5000 ஆண்டுப் பழமை உள்ள சிந்துவெளி நாகரிகத்தின் எழுத்து மொழி தமிழ் என்பதன் சான்று உலகின் தொல்லெழுத்து அறிஞர்கள் பொதுவாக ஒப்புக்கொள்ளும் வகையில் இன்னும் நிறுவப்படவில்லை. அது ஒரு திராவிட மொழி என்பதற்குப் பல வாதங்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அந்தத் திராவிட மொழி தமிழ் என்பதற்குப் போதுமான சான்று இல்லை.

கல்வெட்டுகளில் தமிழின் முதல் எழுத்துச் சான்று கிடைத்துள்ள கி.மு. ஐந்தாம் நூற்றாண்டுக்கு முன் தமிழ் பேச்சு மொழியாக இருந்திருக்கும். மொழியின் ஒலியைப் பதிவுசெய்யும் தொழில்நுட்பம் வரும்வரை காற்றோடு போன பேச்சு மொழி எந்த அகச்சான்றையும்  விட்டுப்போக முடியாது. தமிழ் என்று இனங்காணும் நிலையில் உள்ள ஒரு மொழி பேச்சு வழக்கில் இருந்த காலத்தைக் காண்பதற்குத் தமிழுக்கு வெளியே புறச்சான்றைத்தான் தேட வேண்டும்.

இன்று சில தொல்மானிடவியல் ஆய்வாளர்களும் மரபணுவியல் ஆய்வாளர்களும் சேர்ந்து ஒரு நிலப்பரப்பில் வாழும் பல மொழி பேசும் குழுக்களின் மொழி அமைப்பிலும் மரபணு அமைப்பிலும் காணும் ஒப்புமை ஒரு குழுவில் இல்லாமல் போகும்போது, குழுவின் மரபணு அமைப்பை வைத்து, அந்தக் குழுவின் மொழி காலத்தால் முந்தியதா, பிந்தியதா என்று ஆராயத் துவங்கி-யிருக்கிறார்கள். இந்த ஆராய்ச்சி துவக்கநிலையில் இருக்கிறது. (http://www.mpg.de/19395/Language_genetics)  திராவிடமொழி பேசுபவர்களையும் ஆரிய மொழி பேசுபவர்களையும் பற்றி இத்தகைய ஆராய்ச்சி இனிமேல்தான் நடைபெற வேண்டும். இது மொழியியலாளர்கள் மட்டும் செய்யக்கூடிய ஆராய்ச்சி அல்ல. மரபணு ஆராய்ச்சிதான் இதன் அடிப்படை. இந்த ஆராய்ச்சி நடந்தாலும், அது மூலத்= திராவிடமொழியின் காலத்தைக் காட்டலாமே தவிர, தமிழின் காலத்தைக் காட்டாது.

மொழியிலாளர்கள் போன நூற்றாண்டில் மொழியின் அகச்சான்றை வைத்து, ஒரு குடும்பத்தைச் சார்ந்த மொழிகளில் ஒவ்வொன்றும் எக்காலத்தில் மூல மொழியிலிருந்து பிரிந்து தனிப் பேச்சு மொழி ஆனது என்று கணிக்க ஒரு நெறிமுறையை உருவாக்கினார்கள். அதற்குச் சொல்வழிக் காலவரிசை (glottochronology) அல்லது சொல் புள்ளீயியல் (lexical statistics) என்று பெயர். இந்த ஆய்வு நெறியின் கருதுகோள் இது: மொழியில் பிரதிப் பெயர்கள், எண்ணுச் சொற்கள், உறவுச் சொற்கள் போன்ற சில வகைச் சொற்கள் பிற மொழிகளிலிருந்து  கடனாகப் பெறப் படுவதில்லை; அவை ஒரு மொழியின் இயல்பான வளர்ச்சிப் போக்கில் மறைந்தால், மறையும் காலவிகிதம் ஒரு வாய்பாட்டிற்குள் அடங்கும். இந்த வாய்பாட்டால் கண்டுபிடிக்கும் கால விகிதத்தை ஒரே மொழிக் குடும்பத்தின் மற்ற மொழிகளின் கால விகிதத்தோடு ஒப்பிட்டு ஒரு மொழி தனிமொழி ஆன காலத்தைக் கணிக்கலாம். 1970-இல் கமில் சுவலபில் போட்ட கணக்குப்படி, தமிழ் கி.மு. நான்காம் – மூன்றாம் நூற்றாண்டிற்கு இடையில் தனி மொழியானது. அதாவது, மூலத்திராவிட மொழியிலிருந்து காலப்- போக்கில் பிரிந்துவந்த மொழிகளிலிருந்து தமிழ் தன்னை வேறுபடுத்திக்-கொண்டது. மேலே சொன்ன தமிழ் ஆவணச் சான்றின்படி இது தவறான கணக்கு என்பது புரியும்.

இது போன்ற முரண்களாலும், கடன் வாங்காத சொல்வகையே இல்லை என்று சொல்லும் அளவுக்கு ஒப்பிடப் பயன்படுத்தும் அடிப்படைச் சொற்கள் குறைந்துகொண்டு போனதாலும் பேச்சுமொழியின் காலத்தைக் கணிக்கும் இந்த மொழியியல் முறை புறந்தள்ளப்பட்டது.

முதலில் சொன்ன கட்டுரைகளில் மொழியின் காலத்தைக் கணிக்க மொழிக் கூறுகள் பயன்படுத்தப்படுகின்றன, இந்த ஆய்வுகளைச் செய்தவர்கள் மொழியியலாளர்கள் அல்ல என்றாலும். இந்த ஆய்வு முறை சொற்களுக்குப் பதிலாக ஒலியன்களின் எண்ணிக்கையை வைத்து மொழியின் காலத்தைக் கணக்கிடுகிறது. இந்த ஆய்வின் நோக்கம் மனித மொழி தோன்றிய காலத்தைக் கண்டறிவது. ஒரு மொழியின் ஒலியன்களின் எண்ணிக்கை மிக மெதுவாகவே, மிகப் பெரிய கால இடைவெளியிலேயே, விரியும் என்பது இந்த ஆய்வின் கருதுகோள். இன்றைய ஆப்பிரிக்க மொழிகளில் ஒலியன்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது; குறைந்த ஒலியன்களோடு பிறந்த மனித மொழி இந்த அளவு எண்ணிக்கையில் அதிகரிக்கப் பத்தாயிரக் கணக்கான ஆண்டுகள் ஆகும்; அதிகரிப்பைக் கணிக்க ஒரு வாய்பாட்டை உருவாக்கலாம்; அதை வைத்து மொழியின் தோற்றதக் காலத்தைக் கணக்கிடலாம் என்று இந்தக் கட்டுரைகள் காட்ட முயல்கின்றன.

அதே நேரத்தில், இன்றைய மனிதனின் முன்னோடிகள், 100000 – 70000 ஆண்டுகளுக்கு முன்னால், ஆப்பிரிக்கக் கண்டத்திலிருந்து வெளியேறி உலகில் பரவியபோது புதிய சூழலில் அவர்களுடைய சில மரபணுக்கள் மறைவது போல, மொழியின் பரவலில் ஒலியன்கள் மறைகின்றன என்றும் இந்தக்  கட்டுரைகள் கருதுகின்றன. எனவே, ஆப்பிரிக்க மொழிகளின் ஒலியன்களின் எண்ணிக்கையை விடக் குறைவாக ஒலியன்கள் உள்ள மொழிகள் காலத்தால் பிற்பட்டவை என்பது இந்த ஆய்வின் மற்றொரு கருதுகோள். ஒரு மொழியின் ஒலியன் எண்ணிக்கைக்குப் பல காரணங்கள் இருந்தாலும், மேலே சொன்ன ஒலியன் தோன்றும், மறையும் விதி சரியானது என்பது இந்தக் கட்டுரைகளின் வாதம். இது மரபணுவின் தோற்றம், மறைவு விதி போன்ற ஒன்றை ஒலியன்களுக்கு ஏற்றிப் பார்க்கின்ற ஆய்வு முறை. ஒலியன்களின் தோற்றம், மறைவு பற்றிய இந்த வாதத்தை மொழியிய-லாளர்கள் பொதுவாக ஒத்துக்கொள்வதில்லை.. இந்த ஆய்வு முறையின் குறைகளைக் காட்டும் பல கட்டுரைகளை Language Typology என்னும் ஆய்விதழ் (Issue 15, 2011) வெளியிட்டிருக்கிறது.

தமிழின் ஒலியன்களின் எண்ணிக்கை உலக மொழிகளின் சராசரி (40) எண்ணிக்கையை விட பெரிதும் வித்தியாசமானது அல்ல. இந்த எண்ணிக்கையை வைத்துத் தமிழ் காலத்தால் பிந்தியது என்று சொல்ல முடியாது.

குமரிக் கண்டத்திலிருந்து இன்றைய மனிதர்களின் முன்னோர்கள் உலகில் பரவினார்கள் என்பதற்கு விஞ்ஞான ஆதாரம் இல்லை. ஆப்பிரிக்காவிலிருந்து உலகில் பரவிய இந்த முன்னோர்கள் –இவர்கள் இன்றைய மனிதர்களின் மூளைக்கு அடிப்டையான மூளை வளர்ச்சி பெற்றவர்கள்- இந்தியக் கண்டத்திற்குப் பரவிய காலத்தைப் பற்றி ஒன்றுக்கு மேற்பட்ட கருத்துகள் இருக்கின்றன. சிலர் இது 50000 ஆண்டுகளுக்கு முன் நடந்தது என்கிறார்கள்; சிலர் 70000 ஆண்டுகளுக்கு முன் என்கிறார்கள். (http://news.nationalgeographic.com/news/2005/11/1114_051114_india.html). இந்த முன்னோடிகள் ஆப்பிரிக்காவிலிருந்து கிளம்பிய காலத்திற்கு முன்னரே மனிதனின் மொழி தோன்றிவிட்டது. ஆனால், இந்தியக் கண்டத்திற்கு வந்தவர்கள் என்ன மொழி அல்லது மொழிகள் பேசினார்கள் என்று தெரியாது.

அவர்கள் பேசிய மொழியை, எந்தவித ஆதாரமும் இல்லாமல், வரலாற்றுக் காலத் தமிழுக்கு ஒத்த மொழி என்று எடுத்துக்கொண்டாலும்கூட தமிழின் தொன்மையின் மேல் எல்லை 70000-50000 ஆண்டுகள். ஆனால், தமிழ் என்று இன்று நாம் சொல்லும் மொழிக்கு ஒத்த மொழி இந்தக் கால கட்டத்திற்குச் சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னாலேயே தோன்றியிருக்கும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

 மிழில் சந்தி விதிகளை ஒரு சில தமிழ் அறிஞர்களை விட்டு யாரும் பின்பற்றுவதாகவும், தெரிந்து பேசுவதாகவும், அவை பற்றி உறுதியான கொள்கைகளை கொண்டிருப்பவர்களாகவும் தெரியவில்லை. புணர்ச்சிகளில் வல்லினம் மிகுமா மிகாதா என்பது என் கணிப்பில் 99.99% எழுதும் தமிழர்களுக்கு தெரியாது. இந்த அளவு வழக்கிறந்துவிட்ட நியதிகளை தொடர்ந்து பேசுவது நியாயமா?

— வன்பாக்கம் விஜயராகவன்

பதில்

ஒரு சொல் உருபுகள் சேர்ந்து அமையும்போது அடுத்தடுத்துச் சாதாரணமாக வராத ஒலிகள் வந்தால்  அவற்றை மாற்றிச் சொல்லொலி அமைப்பைச் சரிப்படுத்துவது  சந்தி. இது உச்சரிப்பையும் எளிமையாக்குகிறது. மாற்றத்தில், ஒரு ஒலியை மற்றொன்றாக்குதல், புதிய ஒலியைத் தோற்றுவித்தல், உள்ள ஒலியை நீக்குதல் ஆகிய மூன்றும் அடங்கும். இந்த மாற்றங்கள் எழுத்திலும் பிரதிபலிக்கும். இது அகச்சந்தி. ஒரு தொடரில் அடுத்தடுத்து வரும் இரண்டு சொற்களிடையேயும் இந்த மாற்றங்கள் நிகழும். இது புறச்சந்தி.

அகச்சந்தி சொல்லை ஒருமைப்படுத்துகிறது. இது பெரும்பாலான மொழிகளில்  உள்ளது. தமிழிலும் துவக்க காலத்திலிருந்து இன்று  வரை உள்ளது. தமிழ் பேசும், எழுதும் அனைவராலும் பின்பற்றப்படுகிறது. சில எடுத்துக்காட்டுகள்: ஆள் + கள் = ஆட்கள், பணம் + காரன் = பணக்காரன், அம்மா + ஐ = அம்மாவை, வீடு + க்கு = வீட்டுக்கு, கல் + த்த் + ஆன் = கற்றான், ஆள் + ந்த் + ஆன் = ஆண்டான். சொல்லாக்கத்தில் உருபுகள் சேரும்போது அவற்றை இணைக்கும் உருபு (சாரியை) தோன்றுவது இக்காலத் தமிழில் குறைந்துவருகிறது. அது + அன் + ஐ = அதனை, வீடு + இன் + க்கு = வீட்டிற்கு, வா + ந்த் + அன் + அன் = வந்தனன் முதலிய சொற்களுக்குப் பதில் அதை, வீட்டுக்கு, வந்தான் முதலிய சொற்கள் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனாலும், இது + அன் + க்கு = இதற்கு என்னும் சொல்லைப் பேச்சில் போல் இதுக்கு என்று எழுதுவதில்லை.

டி. கே. சிதம்பரநாத முதலியார்  அகச்சந்தியைப் பிரித்து எழுதலாம் (எ-டு கல்த்தான்) என்று சொன்ன யோசனை எடுபடவில்லை. சொல்லின் ஒலியமைப்பு முறைமைக்கு இது முரணாக இருப்பதே இதற்குக் காரணம்.

தொகைச் சொற்கள்  தனிச் சொல்லுக்கும் தொடருக்கும்  இடையில் உள்ள அமைப்பு. இவற்றிலும் எல்லாச் சந்தியும் உண்டு. இவை விட்டிசை (pause) இல்லாத ஒரு சொல் தன்மையுடையன என்று சொல்லச் சந்தி உதவுகிறது.

புறச்சந்தி சில மொழிகளிலேயே  உள்ளது. அவற்றுள் தமிழும்  ஒன்று. இக்காலத் தமிழில்  பெரிய மாற்றம் நிகழ்ந்துகொண்டிருப்பது இதில்தான். ஓலைச்சுவடியில் எழுதப்பட்ட செய்யுளில் மிகுதியான புறச்சந்தி உண்டு. இப்போது தமிழைச் சிறப்புப்பாடமாக எடுத்துப் படிக்கும் மாணவர்களும் சந்தி பிரித்த, அதாவது சந்தி இல்லாத, பதிப்புகளையே படிக்கிறார்கள். புறச்சந்திக்குச் சில காரணங்கள் உண்டு. உயிர்கள் அடுத்தடுத்து வருவதைத் தடுப்பது அவற்றில் ஒன்று. (எ-டு) பார்த்தது + இல்லை = பார்த்ததில்லை, பார்த்த + இடத்தில் = பார்த்தவிடத்தில், இலக்கண + ஆசிரியர் = இலக்கணவாசிரியர். மெய்யை அடுத்து வரும் உயிர் மெய்யின்மீது ஏறி நிற்க வேண்டும் என்பது இன்னொரு காரணம். எ-டு ஊரில் + இல்லை = ஊரிலில்லை; நேரம் + ஆகாது = நேரமாகாது. ஒரு சொல்லில் அடுத்தடுத்து வராத மெய்யெழுத்துகள் சொற்சேர்க்கையால் அடுத்தடுத்து வரும்போது ஒரு மெய்யை மாற்றும் தேவை பிறிதொரு காரணம். (எ-டு) காலம் + கடத்தினான் = காலங்கடத்தினான், காலம் + தாழ்த்தினான் = காலந்தாழ்த்தினான், முதல் + சொல் = முதற்சொல். இக்காலத் தமிழில் இந்தச் சந்தி வழக்கு பெரிதும் குறைந்துவிட்டது. இந்த மாற்றம் தமிழ் வகுப்புகளிலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

புறச்சந்தியில்  உயிரில் முடியும் சொல்லுக்குப்பின் வல்லெழுத்தில் துவங்கும்  சொல் வரும்போது அந்த வல்லெழுத்து  மிகுந்து முதல் சொல்லோடு சேர்ந்து ஒற்று மிகுதல் இலக்கண ஆசிரியர்கள் வலியுறுத்தும் சந்தி. தொடரில் சொற்களிடையே இலக்கண உறவைக் காட்டுவதற்காக இது விதிக்கப்படவில்லை என்றாலும், அது இந்தச் சந்தியின் ஒரு பயன். காலைப் பார், காலை பார் என்னும் தொடர்களில் முதலாவதில் காலை இரண்டாம் வேற்றுமை உருபு ஏற்ற பெயர்; இரண்டாவதில் காலை வினையடை. காலைச் சாப்பாடு இல்லை, காலை சாப்பாடு இல்லை என்னும் தொடர்களில் முதலதில் காலை பெயருக்கு அடையாகும் பெயர்; இரண்டாவதில் காலை வினையடை. முன்னுள்ள சொல்லில் வல்லெழுத்து இரட்டித்து நிற்கும்போது பின்னுள்ள சொல்லின் முதல் வல்லெழுத்து மிகுவது ஓசையமைதிக்காக. எ-டு எனக்குக் கொடு, எடுத்துக் கொடு, (வந்து கொடு என்பதில் மிகுவதில்லை), பாட்டுப் பாடு (வீடு பார் என்பதில் மிகுவதில்லை), நேற்றுப் பார்த்தேன், நாளைக்குப் பார்ப்பேன் (நாளை பார், இன்று பார் என்பதில் மிகுவதில்லை). முன்னுள்ள சொல் உயிரில் முடிந்து பின்னுள்ள சொல் வல்லெழுத்தில் துவங்கினால், வேகமாகப் பேசும்போது இடைவெளி போய் வல்லெழுத்து மென்மையாகும் வாய்ப்பைத் தடுப்பதற்கும் ஒட்டு இரட்டிக்கும் சந்தி பயன்படுகிறது. காகம் என்னும் சொல்லின் நடுவில் உள்ள ககரம் முதலிலுள்ள ககரத்தை விட வன்மை இழந்து ஒலிப்பதைப் போல, தலைக்கனம் என்னும் தொகைச்சொல்லில் கனம் என்னும் சொல்லில் உள்ள ககரம், ஒற்று இரட்டிக்காவிட்டால் உரசொலியாக ஒலிக்கும். இப்படிச் சில காரணங்கள் இருந்தாலும், செயவென் எச்சத்திற்குப் பிறகு, சுட்டுப்பெயரடைக்குப் பிறகு என்று பல இலக்கண வடிவங்களுக்குப் பிறகு ஒற்று இரட்டிப்பதற்குக் காரணம் இல்லை.

சுட்டுப் பெயரெச்சத்திற்குப் பின் மிகும் ஒற்று மற்றப் பெயரெச்சத்தின் பின் மிகுவதில்லை. ஒற்று எங்கு இரட்டிக்கும் என்று சொல்ல முடியுமே தவிர ஏன் இரட்டிக்கும் என்று மொழியின் பொது இயல்பு சார்ந்த காரணம் சொல்ல முடியாது.

அச்சும் அதோடு  நிறுத்தக்குறிகளும் வந்த பிறகு தமிழில் சந்தி  பற்றி மறுபார்வை ஏற்படுகிறது. நிறுத்தக்குறி சில வகை  விட்டிசையைச் சுட்டுகிறது. விட்டிசை உள்ள இடத்தில் சந்தியை விடுவது இயல்பாகிறது. தொடரில் உள்ள சொற்கள் பிரிந்து விட்டிசையோடு உச்சரிக்கப்படுவதால், இரு உயிர்களின் தொடர் வரவு, மெய்யேறாமல் உயிர் வருவது, சொல்லில் இல்லாத மெய்மயக்கத்தைத் தடுப்பது முதலனாவற்றைச் செய்யும் சந்தி விதிகளை இக்காலத்தில் பயன்படுத்துவதில்லை.  பார்த்த இடத்தில், இலக்கண ஆசிரியர், ஊரில் இல்லை, நேரம் ஆகாது, காலம் கடத்தினான், முதல் சொல் முதலியனவும், நான் வெளியே போக, தம்பி தூங்கிவிட்டான்; கடைக்குப் போக, பணம் என்னிடம் இல்லை; விலையைக் கேட்டு, பொருளைப் பார்த்து, பணத்தைக் கொடு முதலியனவும் சந்தி இல்லாமல் எழுதப்படுகின்றன. சந்தி இன்று ஒரு தொடரையோ சொல்லையோ ஒலிக்கும் முறையைப் பிரதிபலிக்கிறது. எழுத்தில் காற்புள்ளி, அரைப்புள்ளி முதலியவற்றைப் பேச்சில்  சுருதி ஓசை (intonation) காட்டும்போது சந்தி தேவையற்றதாகி விடுகிறது. இது ஒற்று இரட்டிக்கும் சந்திக்கும் பொருந்தும்.

தனி எழுத்தை ஒலிக்கும்  முறையையும் சந்தி பிரதிபலிக்கிறது. தோசை என்ற சொல்லின் முதல்  மெய் ஒலிப்புடன் (voiced) இருப்பதாலும், சாம்பார் என்ற சொல்லின் முதல் மெய் உரசலுடன் (fricative) இருப்பதாலும், சுட்டுப் பெயரடைக்குப் பின் இவை ஒற்று மிகாமல் இந்த தோசை, இந்த சாம்பார் என்று எழுதுவதே இன்று பெருகிவரும் வழக்கு. இரண்டு பெயர் சேர்ந்து வரும் தொகையிலும் இப்படியே: நெய் தோசை, கத்தரிக்காய் சாம்பார்

தமிழ்ச் சமூகத்தில் வாசிப்பு பரவலாகும் மாற்றம்  ஏற்பட்டபோது வாசித்துப் பொருள் விளங்கிக்கொளவதற்குத் துணையாகச் சொற்களைச் சந்தியால் சிதைக்காமல், அவை தனித்து நிற்கும்போது கொள்ளும் வடிவத்திலேயே, தொடரிலும் தொகையிலும் எழுதும் மரபு பெருகியது. சளிப் பிடித்தது, சொன்னாற்போல, பற்பொடி என்று சந்தியோடு எழுதும் வழக்கை விட சளி பிடித்தது, சொன்னால்போல, பல்பொடி என்று சந்தி இல்லாமல் எழுதும் வழக்கு பெருகியுள்ளது. சொற்களைச் சந்தியால் சேர்த்து நீளமாக எழுதுவதைத் தவிர்க்கும் விருப்பமும் சந்தியைக் குறைக்கிறது.

சமூகத்திலும் மொழியிலும் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் சந்தி உபயோகத்தை மாற்றியுள்ளன. இக்கால எழுத்து வழக்குக்குப் புதிய சந்தி விதிகள்  எழுத வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அவை எழுதப்படாமல், இன்றைய வழக்கிற்குத் தொடர்பில்லாத பழைய சந்தி விதிகளைப் பள்ளிகள் வலியுறுத்துவதால் மக்களிடையே குழப்பம் இருக்கிறது. சிலர் அகச்சந்தியும் இல்லாமல் சொல்லைப் பிரித்து வீட்டில் இருந்து வந்துகொண்டு இருக்கிறான் என்று எழுதுவதையும் பார்க்கிறோம். குழப்பத்தைப் போக்க, மக்களின் வழக்கை ஒட்டிய புதிய சந்தி விதிகள் இக்காலத் தமிழுக்கு வேண்டும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

 தமிழில் பேசும்பொழுது ஆங்கில ஒலிப்பு வேண்டும் என்பது இல்லை. தமிழ் முறைக்கு முரண் எனில் கூடாது. அதுவும் நம் மொழியை, மொழி மரபுகளைக் கெடுத்துக்கொண்டு வேற்று மொழி ஒலிப்புகளைத் தமிழில் காட்டத் தேவை இல்லை. நெகிழ்ச்சி எனில் ஏன் இந்த நெகிழ்ச்சியை filosofi என்று எழுதுவதில் காட்டக் கூடாது? தமிழில் எழுதும்பொழுது மட்டும் ஏன் அத்தனை விதிமீறல்?

– செ. இரா. செல்வக்குமார்

பதில்

தமிழில் பேசும்போதோ எழுதும்போதோ  ஆங்கில ஒலிகளை அப்படியே கொண்டுவர வேண்டிய அவசியம் நிச்சயம் இல்லை. நான் முந்திய பதில்  ஒன்றில் கூறியது போல, ஒரு சொல்லைப் பேசுவதைப் போலவே  எழுதுவதும், அதன் மூல மொழியின் உச்சரிப்பைப் போலவே எழுதுவதும் எந்த மொழியிலும் இல்லை. தேவையும் இல்லை.

ஒரு மொழியின் மரபு அதை இறுகப் பிடித்துவைத்திருக்கும் சட்டகம்  அல்ல; காலப்போக்கில் மாறாத ஒன்றும் அல்ல. கலப்புத் திருமணம் இன்று மரபிலிருந்து மாறிவரும் ஒரு வழக்கு, அதைக் கடுமையாக எதிர்ப்பவர்கள் இருந்தாலும். இதைப் போன்றுதான் தமிழ் மொழியின் மரபும் மாறிவருகிறது. மரபு மாற்றம் எல்லா மொழியிலும் நிகழும் ஒன்று. ஆங்கிலம் ஏற்றுக்கொண்ட அதன் மொழி மரபு மாற்றங்களைப் பற்றித் தனிக் கட்டுரையே எழுதலாம்.

ஒரு மொழிச் சமூகத்தின் (linguistic community) பார்வையில், எது மரபு, எவை ஏற்றுக்கொண்ட மாற்றங்கள் என்பவையே கவனிக்க வேண்டிய கேள்விகள். இந்தக் கேள்விகளுக்குப் பதில் தேடும்போதுதான் வழக்கு என்னும் கருத்து முன்னுக்கு வருகிறது. வழக்கு என்பதன் அர்த்தத்தை விளங்கிக்கொளவதற்கு முன் மரபு என்பதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். காலத்தால் முதன்மையானது மட்டும் மரபு அல்ல; ஒரு காலத்து மரபு அடுத்த காலத்தில் மாறிப் புதிதாக ஏற்படுத்தும் வழக்கும் மரபு ஆகும். இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய தனித் தமிழும் ஒரு மரபே. அதை மறுப்பதும், மறப்பதும் மொழி வளர்ந்த பாதையை மூடுவதாகும். இலக்கணத்தின் வேலை மொழியின் விதிகளை வரையறுப்பது அல்ல; அது வழக்கில் உள்ள விதிகளை வெளிப்படுத்துவது; புதிய மரபுக்கு வழி வகுப்பது. புதிய மரபில் பண்டைப் பழமையையோ அண்மைப் பழமையையோ முற்றிலும் அழித்துவிட முடியாது.

தமிழின் புதிய மரபு என்பது என்ன, அதை எப்படி இனம்காண்பது என்பவை பற்றிய விவாதம் தமிழ் மொழியின் வரலாற்றில் இக்காலத்தில் நிகழ்வது; நிகழ வேண்டியது; தமிழைப் பற்றிப் பலவிதமான கருத்தாக்கங்களைக் கொண்டவர்கள் கலந்துகொள்ள வேண்டியது. ஒரு மொழியைப் பேசுபவர்கள், எழுதுபவர்கள் எழுத்தில் தவறு செய்வதும், மாற்றம் செய்வதும் இயல்பு. இரண்டையும் பிரித்தறிவது இந்த விவாதத்தின் முதல் அவசியம். தவறு (error) ஒருவரால் திரும்பத் திரும்பச் செய்யப்படாதது; அவரே திரும்பப் பார்க்கும்போது திருத்திக்கொள்ளக் கூடியது; அதன் நிகழ்வு தனி மனிதரைச் சார்ந்தது. புதுவரவு (innovation) மாறி மாறி வராமல் ஒரு நிலையாக (consistent) வருவது; பலரிடம் பொதுவாக இருப்பது; மொழிச் சமூகத்தைச் சேர்ந்தது; பொதுவிதியில் அடங்குவது. பொதுவிதி புதிய விதியாக இருக்கும். மரபுவிதியிலிருந்து வித்தியாசப்படுவதெல்லாம் தவறு ஆகாது.

சில உதாரணங்கள். ஒருத்தன் : ஒருவன் :: ஒருத்தி என்னும் இணைகளில் காலியாக இருக்கும் இடத்தில் ஒருவள் என்னும் சொல்லை அமைப்பது தவறு ஆகாது; புதுவரவு ஆகும். ஆட்டுக்குட்டி, பன்றிக்குட்டி என்னும் வரிசையில் மாட்டுக்குட்டி என்னும் சொல்லை அமைப்பது இன்றைய வழக்கில் தவறு ஆகும். அடுத்த தலைமுறையில் புறனடை பொதுவிதியில் சேர்ந்து பிழையாகக் கருதப்படாமல் புதுவரவு ஆகலாம். அப்பா தம்முடைய பங்கை விற்றுவிட்டார் என்னும் வாக்கியத்தை அப்பா தன்னுடைய / அவருடைய பங்கை விற்றுவிட்டார் என்று எழுதும் இரண்டு வழக்குகளும் புதுவரவில் அடங்கும். தற்சுட்டுப் பெயரில் மரியாதைப் பன்மை இல்லை; தற்சுட்டுப் பெயர் சுட்டுப்பெயரோடு மருவிவரும் என்பவை புதிய விதிகள். அவர் சொன்னவற்றை, அவர் சொன்னவைகளை என்று மருவி எழுதுவதும் பேச்சில் உள்ளதைப் போல அவர் சொன்னதையெல்லாம் என்று எழுதுவதும் தவறு என்பதிலிருந்து புதுவரவு என்னும் தகுதியை நோக்கி நகர்கிறது எனலாம். சுவரில் என்பதை சுவற்றில் என்று எழுதுவது சுவறு என்னும் ஒரு புதுச் சொல்வடிவம் சுவர் என்னும் சொல்வடிவத்தை நீக்கும்வரை தவறு என்று கருதப்படும். அநாதை / அனாதை, அந்நியன் / அன்னியன், இயக்குநர் / இயக்குனர்  என்பதுபோல் அநியாயம் / அனியாயம் என்று பேச்சைப் பிரதிபலிக்கும் வழக்கு வந்தால், அது தவறு ஆகாமல் புதுவரவு ஆகலாம்; அல்லது நியாயம் என்னும் சொல்லோடு உள்ள தொடர்பைப் போற்றித் தவறாகவே கருதப்படலாம். இந்த உதாரணங்களிலிருந்து, மரபிலக்கணத்தில் விதி இல்லை என்பதாலேயே ஒரு வழக்கு தவறு ஆகாது என்பது விளங்கும். இக்காலத் தமிழின் இயல்பை விவரிக்கப் புதிய இலக்கண விதிகளின் தேவையும் விளங்கும்.

இலக்கியத்திற்கு இலக்கணம் என்பது போல், வழக்கிற்கு இலக்கணம். முன்னெழுதிய இலக்கணத்தின்படி வழக்கு இருக்க வேண்டும் என்பது இரண்டிற்கும் உள்ள உறவைத் தலைகீழாகப் பார்ப்பதாகும்.

மரபு இலக்கண விதிகளிலிருந்து  மாறவே கூடாது என்று பிடித்துக்கொள்வதைப்  போன்றதே நேர்மாறாக அந்த விதிகளை மீற வேண்டும் என்பதற்காகவே விடுவதும். இரண்டையும் மொழி கண்டுகொள்ளாது. மொழி சார்ந்த கருத்தாக்கங்களுக்கு மொழி மாற்றத்தில் பங்கு இருந்தாலும், மொழியின் பரிணாம மாற்றங்களையும், சமூகத் தேவைகளுக்கு ஈடுகொடுத்து ஏற்படும் மாற்றங்களையும் தடுத்து நிறுத்தும் வலிமை கருத்தாக்கங்களுக்கு இல்லை. செய்யுளின் யாப்பு, அழகியல் மரபுகளை முறிக்க வேண்டும் என்பதற்காகவே புதுக்கவிதை தோன்றவில்லை. நிலப்பிரபுத்துவச் சமூக வாழக்கையிலிருந்து மாறிய தழிழ்ச் சமூகத்தின் வாழ்வின் அசைவுகளையும் தேவைகளையும் மதிப்பீடுகளையும் வெளியிடுவதற்குத் தேவை இருந்ததாலேயே புதிய கவிதை மரபு தோன்றியது. தமிழுக்குப் புதிய இலக்கணமும் இந்த மாதிரியான காலத் தேவையின் விளைவே.

சுப்பிரமணியன், பாரதிதாசன், ரசம், புத்திரன் என்று எழுதுவதை முறையே ஸுப்ரமண்யன், பாரதிதாஸன், ரஸம், புத்ரன் என்று எழுதுவது தமிழை எழுதும் முறையின் மரபை முறிக்க வேண்டும் என்னும் நோக்கத்தில் எழுதுவதாகும்; சமூகத்தின், மொழியின் தேவையை நிறைவேற்ற எழுதுவது அல்ல. தமிழ்ச் சகரத்திற்கு வருமிடத்தைப் பொறுத்து ஸகர ஒலி உண்டு. அந்த இடங்களில் ஸகரத்தை எழுதுவது தமிழின் எந்தத் தேவையையும் நிறைவு செய்யவில்லை. தமிழில் வழங்கும் புதுவரவுச் சொற்களில் /ph, b/ என்னும் ஒலிகளையும் /ப/ ஆக எழுதுவது -பேதம் என்று எழுதுவதைப்போல- மரபைப் பின்பற்றி எழுதுவதே. இரசம் என்று எழுதுவது மரபைக் கட்டிக்காக்க வேண்டும் என்பதற்காகவே எழுதுவது. இதைத் தவிர, தமிழின் எந்தத் தேவையையும் இகரம் நிறைவு செய்யவில்லை.

ஒரு சொல்லை உச்சரிப்பது  போல் எழுதுவது, பொது இலக்கண விதிகளைப் புறந்தள்ளிவிட்டு, மொழிக்குத் தேவை இல்லாத நேரத்திலும் பின்பற்ற வேண்டிய கொள்கை அல்ல. எழுத்து மரபு பேச்சு மரபின் அசலான நகலாக இருப்பது மொழிகளில் அபூர்வம். மொழியில் நிகழ்ந்த மாற்றத்தால் உச்சரிப்பு மாறினால், மாறிய உச்சரிப்பை எழுத்தில் பிரதிபலிக்க வேண்டிய தேவை எல்லா மாற்றங்களுக்கும் பொருந்தாது. இன்றைய தமிழில், றகரம் ரகரமாக உச்சரிக்கப்படுகிறது. ஆயினும், மரபைப் பின்பற்றி றகரத்தை எழுதுவது வேறு இலக்கண விதிகளின் எளிமைக்குத் தேவை. ஒலிப்பில் ஒன்றினாலும், றகரம் தன் வல்லொலித் தன்மையை இழக்கவில்லை. றகர ஒற்றுக்குப்பின் வரும் வல்லெழுத்து வன்மையாக ஒலிக்கும், பிற வல்லெழுத்துக்குப்பின் வரும் வல்லெழுத்துக்களைப் போல. கற்பு என்னும் சொல்லில் /பு/, வேட்பு என்னும் சொல்லில் உள்ள /பு/ போலவே ஒலிக்கும். ரகர ஒற்றுக்குப்பின் வரும் வல்லெழுத்துகள் மெலிந்து ஒலிக்கும் (எ-டு) சார்பு. றகரத்தை ரகரமாக எழுதினால் கற்பு என்ற சொல்லை கர்ப்பு என்று எழுத வேண்டியிருக்கும். சொல்லின் இடையில் வரும்போது தவிர மற்ற இடங்களில் வருமிடத்தை வைத்து எழுத்துக் கூட்டலில் றகரத்தையும் ரகரத்தையும், அவற்றின் உச்சரிப்பு ஒன்றாக இருந்தாலும், சரியாக எழுத முடியும். சொல்லின் இடையில் றகரம் தனித்து வருபோது ரகரத்திலிருந்து பிரித்து எழுதுவதில் உள்ள இடர்ப்பாடு, சொல்லின் இடையில் மெய்யோடு வரும்போது எழுத்துக் கூட்டலில் செய்ய வேண்டிய திருத்தங்களால் வரும் இடர்ப்பாடுகளை விடச் சிறியது. றகரத்தால் கிடைக்கும் மற்றொரு இலக்கண எளிமை இது. வேற்றுமை வடிவில் சொல்லின் இறுதியில் றகரம் இரட்டிக்கும்; ரகரம் இரட்டிக்காது. (எ-டு) ஆற்றில், ஊரில். ஆரு என்று எழுதினால் இந்தச் சந்தி விதி சொல்லைத் தெரிந்து செய்யும் விதியாகிச் சிக்கலான விதியாகிவிடும். ஆரில் என்று இந்த ஏழாம் வேற்றுமை வடிவத்தை எழுதினால் அது ஆற்று மணல் என்னும் ஆறாம் வேற்றுமை வடிவத்தில் சிக்கலைத் தோற்றுவிக்கும், பேச்சு மொழியில் இது ஆத்து(மணல்) என்றே உச்சரிக்கப்படுகிறது. ஆரு(மணல்) என்று எழுதினால் பேச்சுக்கும் எழுத்துக்கும் ஒன்றாமையை உருவாக்குகிறோம். சந்தி ஒலியின் அடிப்படையில் நிகழும்; அது சொல்லின் அடிப்படையில் நிகழ்வது அபூர்வம். ஆறு என்ற எண்ணுப்பெயர் ஆறில் என்று சேரும்; நதி என்னும் பொருளுடைய ஆறு என்ற சொல் ஆற்றில் என்று சேரும். இந்த விதிவிலக்கை றகர ஈற்றுச் சொற்கள் எல்லாவற்றுக்கும் நீட்டினால், சந்தி இலக்கணம் சிக்கலாகிவிடும். இதனால் றகர, ரகரத்தை வேறுபடுத்தி எழுதும் சொல்வடிவச் சிக்கலை இலக்கணம் அனுமதிக்கிறது, றகரத்தின் உச்சரிப்பு ரகரத்தின் உச்சரிப்போடு ஒன்றிப்போனாலும். இலக்கணத்தின் பகுதிகள் தங்களுக்கிடையே ஒரு சமன்பாட்டைக் காக்கின்றன.

மேலே சொன்ன விபரங்கள்  ஒரு குறிப்பிட்ட இலக்கண மாற்றத்தை ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளாததும் இலக்கணத்தை ஒட்டுமொத்தமாகப் பார்த்துச் செய்யும் செயல் என்பதைப் புலப்படுத்தும். இந்தப் பண்பு  பெரும்பான்மையோரின் வழக்கில் காணப்படுவதை இங்கு குறிப்பிட வேண்டும். பழைய இலக்கண விதிகளிலிருந்து விலகுபவர்கள் புதிய விதிகளின்படி மொழியை வழங்குவார்கள். பெரும்பான்மையினோரின வழக்கை இயக்கும் புது விதி எதுவும் இல்லையென்றால், அந்த வழக்கு தற்செயல் நிகழ்வு (random occurrence) என்றால், அது இலக்கணத் தகுதி பெறுவது கேள்விக்குரியது.

பெரும்பான்மை வழக்கைக் கணிப்பதில் ஒரு சிக்கல்  இருக்கிறது. இது வெறும் எண்ணிக்கையைப்  பொறுத்த விஷயம் மட்டுமல்ல. இணையத்தில் வழங்கும் தமிழ் தமிழின் பல வகைகளில் ஒன்று மட்டுமே. கணினியைப் பயன்படுத்தத் தெரிந்தவர்கள் மட்டும் வழங்கும் வகை. அதில் எழுதுபவர்கள் தாங்கள் எழுதியதைப் பெரும்பாலும் திருப்பிப் படித்துப்பார்த்து, பிழை என்று தங்களுக்குத் தோன்றுவதைக்கூடத் திருத்தும் வாய்ப்பைப் பயன்படுத்துவதில்லை. இணையத்தில் உள்ள பல விவாதங்கள் இதற்கு நல்ல உதாரணம். ஒரு மொழியின் இலக்கணம் பெரும்பான்மை என்னும் மிருகபலத்தினால் மட்டும் நிர்ணயிக்கப்படுவதில்லை. ஆனால், பெரும்பான்மை வழக்கு இலக்கணத்தில் நிகழும் மாற்றங்களைக் கவனத்திற்குக் கொண்டுவருகிறது. அவற்றில் சிலவோ பலவோ இலக்கணத்தில் இடம்பெற்றுப் புதிய இலக்கணத்திற்கு வழிவகுக்கும்.

வாழும் மொழி தன்னைப் புதுப்பித்துக்கொண்டேயிருக்கிறது. தமிழ் வாழும் மொழி. இதனால் அதன் இலக்கணம் மாறிக்கொண்டேயிருக்கிறது. மாற்றத்துக்கு அணைபோடும்  இலக்கண விதிகள், தரமானது என்று சொல்லப்படும் ஒரு மொழி வழக்கை மட்டுமே முன்னிறுத்தி, மொழியை அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் மக்களிடமிருந்து தூரப்படுத்துகின்றன. மொழியைத் தரப்படுத்தும் முயற்சியும் இயல்பான ஒன்றுதான்; எல்லாச் சமூகமும் மேற்கொள்ளும் செயல்தான். அது மொழியின் மேல் அதிகாரம் உள்ளவர்கள் செய்வது. அவர்கள் மக்களின் வழக்கு அனைத்தையும் பிழை வழக்கு என்று புறந்தள்ளிவிட்டால், வீட்டு மொழிக்கும் பள்ளி மொழிக்கும் தூரம் அதிகமாகிவிடும். தூரம் அதிகமானால், தமிழர்கள் தமிழைத் தூர இருந்து வணங்கலாம்; ஆனால் தயக்கமின்றி வழங்குவது குறையும். நமக்குத் தமிழோடு உள்ள உறவு பிள்ளையாருக்கு முன்னால் உக்கிபோடும் உறவாக இருக்கக் கூடாது!



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

தொல்காப்பியம் எண்ணுப்பெயர்ப் புணர்ச்சி பற்றிய பகுதியில் பின்வருமாறு விளக்குகிறது:

 முதலீர் எண்ணின்முன் உயிர்வரு காலைத்

தவலென மொழிப உகரக் கிளவி

முதனிலை நீடல் ஆவயினான (தொல். எழுத்து 455)

முதலிரண்டு (ஒரு, இரு) எண்களுக்குப்பின் உயிர் வந்தால் (நிலைமொழி ஈறான) உகரம் கெடும் என்றும் அத் தருணத்தில் அதன் முதலெழுத்து நீளும் என்றும் இந் நூற்பா மிகத் தெளிவாகக் கூறுகிறது. நூற்பாவின் தொடக்கத்திலேயே, ‘முதலிரு என்ற சொல்’, ‘முதலீர்’ என்று வந்து ‘உடம்பொடு புணர்த்தல்’ என்ற உத்திப் படி, நூற்பாவுக்கு எடுத்துக்காட்டை நூற்பாவிலேயே தருகிறது. இந் நிலையில், இது “பழைய இலக்கண நூல்களில் இல்லாத ஒன்று” என்று அண்ணாமலையார் கூறுவதை எப்படி ஏற்பது?

செ. சீனி நைனா முகம்மது, தமிழ் மன்ற மின்குழுவைச் சேர்ந்த செ. இரா. செல்வக்குமார் வழியே. இவருடைய முழு எதிர்வினையைhttp://groups.google.com/group/tamilmanram/browse_thread/thread/0a54034d540291b6?hl=ta_US# இல் பார்க்கலாம்.

நான் என் முந்தைய பதிலில் கூறியபடி, தமிழில் ஒரு சொல்லுக்குக் குறில், நெடில் வேறுபடும் மாற்று வடிவங்கள் உண்டு. பெயர் என்ற சொல்லின் இடையில் உள்ள மெய் கெட்டு பெஅர் என்றாகும்போது, இரண்டு உயிர்கள் ஒரு சொல்லில் அடுத்தடுத்து வராது என்ற சொல்லின் ஒலியமைப்பு முறைமைப்படி, குறில்கள் இரண்டும் சேர்ந்து பேர் என்று நெடிலாகின்றன. பெயர், பேர் என்ற மாற்று வடிவங்கள் தோன்றுகின்றன. இந்த மாற்று வடிவங்கள் சந்தியால் தோன்றவில்லை. மெய் கெடாமல் உயிர் கெட்டுக் குறில், நெடில் வேறுபடும் மாற்று வடிவங்களும் உண்டு. இவற்றை எண்ணுப்பெயரடைகளில் காணலாம்: ஒரு – ஓர், இரு – ஈர், எழு – ஏழ். எழுகடல், ஏழ்கடல் என்னும் தொகைகளில் உள்ள மாற்று வடிவங்கள் சந்தியால் வந்தவை அல்ல.

 

இந்த மாற்று வடிவங்கள் சந்தியாலும் வரும். அதாவது, சொல்லின் இறுதியில் உள்ள உயிர் சந்தியால் கெட்டு, முதலில் உள்ள குறில் நெடிலாகும். மேலே சுட்டிய தொல்காப்பிய நூற்பா சந்தியால் தோன்றும் மாற்று வடிவங்களைப் பற்றியது. தற்கால இலக்கண ஆசிரியர் கூறும் ஒரு, ஓர் பயன்பாட்டு விதி, அதாவது அடுத்து வரும் பெயரின் முதலில் உள்ள எழுத்தைப் பொறுத்து ஒரு, ஓர் என்னும் எண்ணுப்பெயரடைகளைப் பயன்படுத்த வேண்டும் என்னும் விதி, சந்தி சாராதது; சொற்களின் தொடரைப் பற்றியது. இது பழைய இலக்கணத்தில் இல்லை என்பது என் கருத்து.

 

தொல்காப்பிய நூற்பா தருவது புணர்ச்சி விதி. உயிருக்கு முன்னால் முற்றியலுகரம் கெடாது. தெரு + ஏ = தெருவே. ஒரு, இரு, எழு என்னும் சொற்களில் உள்ள முற்றியலுகரம் கெடும். ஒரு ஆயிரம் = ஓராயிரம்; ஒருவாயிரம் அல்ல. முற்றியலுகரம் கெடுவதைச் சொல்லத்தான் இந்த நூற்பா. முற்றியலுகரம் கெடும்போது, என் பதிலில் சொன்னது போல, சொல்லின் ஓசையமைதிக்காக /ஒ/ என்னும் குறில் நெடிலாகிறது. இந்த ஓசையமைதி கட்டாயமாதலால் தமிழ்ச் சொற்களில் குறிலுக்குப் பின் / ர் / வருவதில்லை. கர்த்தர், கர்ப்பம், சர்க்கரை, சர்ச்சை, அர்த்தம் போன்ற ருகரம் இல்லாத சொற்கள் பிற மொழியிலிருந்து பெறப்பட்டவை. இன்று தமிழாகிவிட்ட சொற்கள். இதனால் தமிழில் சொல்லின் ஒலியமைப்பு முறைமை மாறுகிறது; இலக்கண விதியும் அதற்குத் தகுந்தபடி மாறும்.

கட்டாயமானாலும், இந்த விதிப்படி முற்றியலுகரம் கெட்டும் குறில் நெடிலாகாத சில விலக்குகள் உண்டு. தெரு + ஏ = தெருவே. இங்கு முற்றியலுகரம் கெடவில்லை. அதனால் குறில் நெடில் ஆகும் தேவை இல்லை. ஒரு + ஏ = ஒரே என்பதில் முற்றியலுகரம் கெட்டாலும், குறில் நெடிலாகி ஓரே என்று வருவதில்லை. இன்னொரு உதாரணம் அடையாக வரும் அதே (தெரு). இதில் உகரம் கெட்டபின் குறில் நெடில் ஆகவில்லை அது பெயராக வரும்போது உகரம் கெட்டும் கெடாமலும் வரும்: அதே / அதுவே (நல்லது). உகரம் கெடும்போதும் குறில் நெடிலாவதில்லை. தொல்காபியரின் சந்தி விதி (எழு உட்பட) எண்ணுப் பெயரடைக்கு மட்டுமே பொருந்தும்.

ஒருவேளை, ஒருசேர, ஒருமை போன்ற என்னுப் பெயரடையிலிருந்து பிறந்த சொற்களில் உகரம் உயிருக்கு முன்னால் வரவில்லை. அதனால் கெடவில்லை; /ஒ / நெடிலாகும் தேவை ஏற்படவில்லை.

என் பதிலில் கூறியது போல, இக்காலத் தமிழில் ஓராயிரம், ஈரேழ் போன்ற தொகைச் சொல் உருவாகும்போது, தொல்காப்பிய நூற்பா சொல்கின்றபடி, இந்த விதி பின்பற்றப்படுகிறது. இந்த விதி, வாக்கியத்தில் சொற்கள் ஒன்றுக்குப் பின் ஒன்று ஓசை இடைவிட்டு வரும்போது பின்பற்றப்படுவதில்லை. குறில் நெடிலாகும் ஓசையமைதி ஒற்றைச் சொல்லுக்கும், சந்தியால் சேர்ந்த சொல்லுக்குமே பொருந்தும்; சந்தி இல்லாமல் வரும் இரண்டு சொற்களுக்கிடையே இது நிகழாது. இது தவறான விளக்கம் என்றால், தொல்காப்பியரே தன் விதியைப் பின்பற்றவில்லை என்று சொல்ல வேண்டியிருக்கும்..

இந்த விளக்கத்தின்படி, பழைய இலக்கியத்தில் மேலே காட்டிய தொல்காப்பிய விதி இரண்டு தனிச் சொற்கள் தொடரும்போது பின்பற்றப்படவில்லை எனலாம். மெய்யெழுத்துக்கு முன் எண்ணுப் பெயரடையின் நெடில் வடிவம் (ஓர்), குறில் வடிவம் (ஒரு) ஆகிய இரண்டும் வருகின்றன. தொல்காப்பியத்திலும் வருகிறது. ஓர் வரும்போது உகரம் சந்தியால் கெட வாய்ப்பில்லை; எனவே உகரம் கெட்டு முதல் குறில் நெடிலாக மாறிய மாற்று வடிவம் இது எனலாம். சில எடுத்துக்காட்டுகள்:

மெய் முதல் சொல்லோடு ஒரு: தொல்காப்பியம்: ஒரு மொழி 43.1, ஒரு பெயர் 180.1, ஒரு பொருள் 526.1, ஒரு வினைக் கிளவி 530.1, ஒரு சொல் 535.3; நற்றிணை: ஒரு கோடு 18.9, ஒரு நாள் 328.5

மெய் முதல் சொல்லோடு ஓர்:: தொல்காப்பியம்: ஓர் பக்கம் 991.8; குறுந்தொகை: ஓர் யான் 6,4, ஓர் பெற்றி 28.4: நற்றிணை: ஓர் வாய்ச்சொல் 32.4,  ஓர் போர்வை 310.11

உயிர் முதல் சொல்லோடு உகரம் கெட்ட நெடில் வடிவமான ஓர் மட்டுமே வருகிறது. கீழே உள்ள எடுத்துக்காட்டுகளில் ஓர் அகச்சந்தியின் விளைவு எனலாம். சில எடுத்துக்காட்டுகள்:

தொல்காப்பியம்: ஓர் எழுத்து 43.1, ஓர் அளபு 3.3, ஓர் இடம் 964.2, ஓர் அசை 1316.1, ஓர் இனம் 1429.2; குறுந்தொகை: ஓர் இளம் மாணாக்கன் 33.1, ஓர் ஏர் உழவன்; நற்றிணை: ஓர் ஆன் 37.2, ஓர் எயில் 43.11, ஓர் ஆயிரம் 310.7. தொகையில்

மேலே காட்டிய இலக்கிய வழக்கிலிருந்து, தொடரில் எண்ணுப் பெயரடையின் இரண்டு வடிவங்களும் வரலாம்; சந்தி தேவையான இடங்களில் சந்தி விதி பின்பற்றப்பட்டு, இரண்டாவது சொல்லின் உயிர் நெடிலாகி ஓர் என்ற வடிவம்மட்டுமே வரும் என்பது தெரிகிறது.

இன்றைய தமிழ் இலக்கணத்தில், ஒரு, ஓர் பயன்பாட்டு விதியை இரண்டு சொற்கள் தொடர்ந்து வரும்போது கட்டாயமாகப் பின்பற்றப்பட வேண்டும் என்பது பழைய இலக்கணத்தில் சொல்லாத ஒன்று. இந்த விதி சந்தியில் பின்பற்றப்படும் என்பதே பழைய இலக்கணம்.

இக்காலத் தமிழில் ஒரு என்பது உயிருக்கு முன் ஓர் என்றாவது கட்டாயம் இல்லை. விட்டிசைப்பதைக் (phonetic pause) குறிக்க இன்றைய தமிழில் இடம்விட்டு இரு சொற்களை எழுதும்போது புறச்சந்தி பரவலாகத் தவிர்க்கப்படுகிறது. இதன்படி, ஒரு அரசன், ஓர் அரசன் என்று எழுதுவது வழக்கில் உள்ளது. இதில் வரும் இரண்டு எண்ணுப் பெயரடைகளையும் மாற்று வடிவங்கள் என்று கொள்ள வேண்டும்; இரண்டாவதைச் சந்தி மாற்றம் என்று கொள்ளக் கூடாது. சந்தி இல்லாத இடங்களில் ஒரு மன்னன், ஓர் மன்னன் என்று இரண்டு மாற்று வடிவங்களும் வருவதைக் காணலாம்.

புது வழக்குப் பெருகும்போது அதை ஏற்று இலக்கண விதி அமைப்பது தமிழ் இலக்கண ஆசிரியர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்ட ஒன்று. சங்கம், சகடம் முதலான சொற்கள் வழக்கிற்கு வந்தபின், நன்னூல் தொல்காப்பியச் சூத்திரத்தை விரித்து, சகரம் சொல்லுக்கு முதல் எழுத்தாக வரும் என்று விதி அமைத்தது. இந்தத் தமிழ் இலக்கண மரபு இக்காலத் தமிழுக்கு வந்துள்ள மாற்றங்களை ஏற்று விதி சொல்ல அனுமதிக்கிறது. நன்னூலின் புதிய இலக்கண விதிகள் எப்படித் தமிழ் இலக்கணத்தையோ தமிழ் மொழியையோ சீர்குலைக்கவில்லையோ அப்படியே இக்காலத் தமிழ் வழக்கின் அடிப்படையில் எழுதும் இலக்கண விதிகளும் தமிழ் இலக்கணத்தையும் மொழியையும் சீர்குலைக்கவில்லை. அப்படி ஒருவர் சொன்னால் அவர் தமிழில் இலக்கண வளர்ச்சி நின்றுவிட்டது என்று சொல்கிறார் என்றே கொள்ள வேண்டும். புதிய விதி மரபிலக்கண அறிவினாலோ மொழியியல் அறிவினாலோ வெளிப்படலாம். இரண்டும் ஒன்றையொன்று மறுப்பவை அல்ல. இரண்டும் மொழியின் வளர்ச்சியை ஏற்பவை.

சிலருடைய பார்வையில், தமிழ் மொழியின்மீது கருத்துக் கொண்டிருப்பவர்கள் தமிழைக் காப்பவர்கள், தமிழை அழிப்பவர்கள் என்று பிரிக்கப்படுகிறார்கள். இந்தப் பிரிப்பு தமிழ் பற்றிய ஒருவரின் மொழிக் கருத்தாக்கத்திலிருந்து பிறப்பது. என்னுடைய பார்வையில், தமிழ் வளர்ச்சியில் கரிசனம் உள்ளவர்கள், கரிசனம் இல்லாதவர்கள் என்னும் பிரிவே உண்டு. தமிழ் வளர்ச்சி பற்றி மாற்றுக் கருத்துகள் இருக்கலாம். அவை ஒன்று அழிப்பு, மற்றொன்று காப்பு என்று பார்க்கத் தேவை இல்லை. மொழிக் காப்பும் மொழி வளர்ச்சியும் ஒன்றல்ல என்பது என் கருத்து. தமிழ் உயிருள்ள மொழி; வளரும் மொழி. ‘கெடாமல்’ காப்பதற்காகத் தமிழை உறைய வைத்துப் பனிப்பெட்டியில் வைப்பது அதன் வளர்ச்சிக்கு உதவும் செயல் அல்ல.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

கேள்வி:

தற்காலத்தில் ர  , ல சொற்களின் முதலில் வருவது சகஜமாகி விட்டது. ஆனால், சிலர் இன்னும் ரகர சொற்களின் முன் அ, இ போடுவதும், லகர சொற்களின் முன் இ போடுவதும் பழமையைத் தொற்றிக்- கொண்டிருப்பதாகவும், வேண்டாததாகவும் உள்ளது. வழக்குதான் இலக்கணத்தை நிர்ணயிக்கின்றது என்றால், இதைப் போல் காலத்திற்கு ஒவ்வாத நியதிகளைத் தள்ளிவிடுவது நியாயம்தானே?  
– விஜயராகவன்

பதில்

தமிழின் ஒரு சிறப்பு ஒரு சொல்லை எழுதுவது போலவே வாசிப்பது. (பேசுவது வேறுபடும்). ககரத்தை உயிர்களுக்கிடையே ஹகரமாகவும், மெல்லெழுத்தை அடுத்து ஒலிப்புடனும் (g போல) உச்சரிப்பது வருமிடத்தைப் பொறுத்து ஊகிக்கக் கூடியது. ஆங்கிலத்தில் எழுத்துக்கூட்டலும் வாசிப்பும் ஒன்றாகப் போகாது. but, put என்ற சொற்களில் உள்ள உயிரின் உச்சரிப்பை வருமிடத்தை வைத்து ஊகிக்க முடியாது. knight, night என்னும் சொற்கள் வேறாக எழுதப்பட்டாலும் ஒன்றாக உச்சரிக்கப்படுகின்றன. முதல் சொல்லில் உள்ள k உச்சரிக்கப்படுவதில்லை; இரண்டு சொற்களிலும் உள்ள gh உச்சரிக்கப் படுவதில்லை.

தமிழின் இந்தச் சிறப்பை  இரயில், உரோமம் போன்ற சொற்கள் முறியடிக்கின்றன. இந்தச் சொற்களின் முதலில் உள்ள உயிர் வாசிக்கும்போது உச்சரிக்கப்படுவதில்லை. இந்த உயிர்கள் பேச்சிலும் இடம் பெறுவதில்லை. ஒரு மொழியில் பேச்சே எழுத்தில் வடிக்கப்படுகிறது என்னும் பொது விதிக்கு இது ஒரு விலக்கு. சில சொற்களில் சொல்லோடு இணைந்த் நிலையில் இந்த உயிர்கள் உச்சரிக்கப்படும். எடுத்துக்காட்டு: அரங்கம், உலோகம். இவை வரலாற்றுநோக்கில் பிற மொழிச் சொற்கள் என்றாலும் வழக்கில் தமிழ்ச் சொற்கள் ஆகிவிட்டன் என்பதை இது காட்டுகிறது.

தமிழில் சொற்களின்  முதல் மெய் எதுவாக இருக்கும்  என்பதற்கு விதி இருக்கிறது. ங, ண, ன, ழ ள ஆகிய மெய்கள் சொற்களின் முதலில் வராது. பழைய தமிழில் ல, ர ஆகிய மெய்களும் இதில் அடங்கும். இக்காலத் தமிழில் இவை சொற்களின் முதலில் வரும். லட்டு, ரவை போனற பிற மொழிச் சொற்களிலும், லேசு, ரொம்ப போன்ற எழுத்திற்கு வந்துவிட்ட பேச்சு வழக்குச் சொற்களிலும் இந்த இரணடு மெய்களும் சொல்லின் முதலில் வரும். தமிழின் புதிய சொல் வரவை ஏற்றுக்கொண்டு இந்த மாதிரியான சொற்களைச் சொல்லோடு ஒட்டாத முன்னுயிர் இல்லாமலே எழுதலாம். அதுவே முதலில் சொன்ன தமிழின் சிறப்பைப் பாதுகாக்கும். தமிழின் சொற்களின் இயல்பு மாறும்போது அதை எழுதும் முறையும் மாற வேண்டுமல்லவா?

எழுத்துத் தமிழுக்கென்று ஒரு கட்டுப்பாடு உள்ளது. எனவே  ‘ லட்டு’, ‘ ராமன்’ என்று பேச்சுவழக்கில் உள்ள சொற்களை எழுதும்போது, ‘ இலட்டு’ ‘ இராமன்’ என்று எழுதுவதால் எந்தவொரு பிரச்சினையும் தோன்றாது. அயல்மொழிச் சொற்களைத் தமிழில் கடன்வாங்கும்போது, தமிழ் அமைப்புக்கு உட்பட்டே கடன்வாங்கவேண்டும் என்பது எனது கருத்து..
--ந. தெய்வசுந்தரம். (தமிழ் மன்றம் மின்குழு விவாதத்தில் கருத்துப் பதிவு)

எந்த மொழியிலும் அதன் சொற்களின் ஒலியமைப்பில் ஒரு கட்டுப்பாடு உண்டு. ஒலியின் வரிசையிலும் ஒலி வருமிடத்திலும் கட்டுப்பாடு வெளிப்படும். மொழியை எழுதும்போது இந்தக் கட்டுப்பாடு பின்பற்றப்படும். பொதுவாக, பேச்சை விட எழுத்தில் கட்டுப்பாடு அதிகமாக இருக்கும். எழுத்தின் கட்டுப்பாட்டு விதிகளைப் பள்ளி மொழியைப் பேசுபவர்களிடம் வலியுறுத்தும். இந்த உலகளாவிய மொழியியல்புக்குத் தமிழ் விலக்கல்ல.

காலப்போக்கில் இந்தக் கட்டுப்பாட்டில் மாறுதல் ஏற்படுவது இயற்கை. மாறுதலுக்கு மொழியின் பரிணாம வளர்ச்சியும் பிற மொழித் தொடர்பும் காரணங்களாக அமையும். பேச்சு மொழியில் ஏற்படும் மாறுதல்கள் எழுத்து மொழியில் காலம் தாழ்த்து ஏற்றுக்கொள்ளப்படும். கலாச்சாரக் காரணங்களால் ஏற்றுக்கொள்ளப்படாமலேயும் இருக்கலாம். பிற மொழித் தொடர்பினால் சொற்கள் தமிழுக்கு வந்துசேரும்போது அதன் உச்சரிப்பு தமிழின் சொல்லொலி அமைப்புக்கு ஏற்ப மாறியிருக்கும். பிற மொழியில் புலமை இல்லாதவர்களிடம் அதிகமாகவே மாறியிருக்கும். tractor என்னும் ஆங்கிலச் சொல்லை ஆங்கிலம் தெரிந்தவர்கள் ட்ராக்டர் என்றும், தெரியாதவர்கள் தேக்தர் என்றும் உச்சரிக்கலாம். முன்னதில் ஒன்றுக்கு மேற்பட்ட தமிழ் ஒலியமைப்பு விதிகள் மாறியிருப்பதைக் காணலாம். எழுதும்போது அவற்றில் ஒன்றைக் குறைத்து டிராக்டர் என்று சிலர் எழுதலாம்.

சொல்லின் முதலில் டகரம் வராது என்னும் விதியைப் பின்பற்றி எழுதினால் சொல்லின் முன்னால் ஒரு உயிர் -இகரம்- சேர்த்து இடிராக்டர் என்று எழுத வேண்டியிருக்கும். இதைப் போலவே லகர ரகரத்தில் துவங்கும் சொற்களும். பிற மொழிச் சொற்கள் அதிகமாகித் தமிழோடு கலந்தபின் சொல்லின் ஒலியமைப்பு முறை மாறும். இந்த மாற்றம் மெதுவாக எழுத்திலும் பிரதிபலிக்கும். புகுந்த புதியதை இலக்கணமும் ஏற்றுக்கொள்ளும். இது பள்ளி முதலான நிறுவனங்களின் மூலம் நிகழ்வதால் மாற்றத்தை நிறுத்திவைக்கும் முயற்சிகளும் எடுக்கப்படலாம். இன்றைய சமூகச் சூழ்நிலையில் பள்ளியாசிரியர், இதழாசிரியர் கட்டுப்பாடில்லாமல் எழுதும் வாய்ப்பைத் தொழில்நுட்பம் தந்திருப்பதால் இத்தகைய நிறுவன முயற்சிகளின் வெற்றி வாய்ப்பு குறைவு.

எழுத்து மொழி பேச்சு மொழியின் எழுத்துப்பெயர்ப்பு அல்ல என்றாலும், எழுத்து மொழியின் மரபுகள் வேறாக இருக்கலாம் என்றாலும் இரண்டுக்கும் இடைவெளி அதிகமாக இருபபது மொழி கற்பதில் இடர்ப்பாட்டை ஏற்படுத்தும். எழுத்து மொழியை உறைந்த மொழி ஆக்கிவிடும், அதன் செயற்கைத் தன்மையை அதிகமாக்கிவிடும். இதனால், டகரம், ரகரம், லகரம் ஆகிய ஒலிகளில் துவங்கும் புதிய சொற்களை அப்படியே எழுதும் புதிய மரபு தோன்றும். இந்த மரபில் இந்த சொற்களை இகரம் முதலான முன்னுயிர் இட்டு எழுதத் தேவை இல்லை.

தமிழுக்கு இவை புதிய சொற்கள்; புதிய ஒலியமைப்பை அறிமுகப்படுத்தும் சொற்கள் என்பதற்கு மேலாக, இகரமோ உகரமோ அகரமோ சொல்லின் முதலில் சேர்த்து எழுதுவதற்கு வேறு காரணங்கள் இல்லை. இந்தச் சொற்களின் முன்னால் காதுக்குப் புலனாகாத உயிரொலி இருப்பதாக ஒலி ஆய்வுக் கருவி காட்டும் என்று நான் நினைக்கவில்லை. உச்சரிப்பில் spade என்னும் ஆங்கிலச் சொல்லை இகரம் சேர்த்து இஸ்பேடு என்று சிலர் உச்சரித்தால் அந்த மாதிரியான சொற்கள் இரண்டு மெய்களுடன் துவங்கும். புதிய சொற்கள் முன்னுயிரோடு உச்சரிக்கப்படுவதாக எடுத்துக்கொண்டாலும், அந்த உயிர் சொல்லின் பொருளில் மாற்றம் ஏற்படுத்தும் ஒலியன் அல்ல. அதனால் அது எழுத்துப் பெறாது. ஒலியனாக உள்ள உயிர் இருந்தால், சந்தியில் வெளிப்படும். சேர்த்துப் பேசும்போதும் எழுதும்போதும் இனிய இலட்டு என்பது இனியவிலட்டு என்றாகும், இனிய இதயம் இனியவிதயம் ஆவது போல. ஆனால், பேச்சிலும் எழுத்திலும் அப்படி ஆவதில்லை. இகரம் இட்டு இந்தச் சொற்களை எழுதுவது மொழியில் நிகழ்ந்துள்ள மாற்றத்தை ஏற்றுக்கொள்ளாததே காரணமாகும்.

பிற மொழித் தொடர்பால் தமிழுக்கு வந்துசேர்ந்த சொற்களால் ஏற்படும் சொல்லொலி அமைப்பின் மாற்றங்களை எழுத்தில் ஏற்றுக்கொள்வதில் வரையறை உண்டா என்பது முக்கியமான கேள்வி. ஒன்றையும் ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்பதும் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதும் தமிழின் வளர்ச்சிக்கு உகந்தவை அல்ல; மொழிகளின் பொது இயல்போடு ஒத்தவையும் அல்ல. இலக்கணத்திற்கப்பால் மொழி சார்ந்த கலாச்சார மரபுகளும் வரையறையைத் தீர்மானிப்பதில் பங்குபெறுகின்றன. தெலுங்கு, கன்னடம் போல், மூலத்திராவிடத்தில் இல்லாத வர்க்க எழுத்துகளைக் கடன்சொற்களால் தமிழ் சேர்த்துக்கொள்ளவில்லை. சொல்லில் இணைந்து வராத மெய்யெழுத்துகளை உயிர் கொடுத்துப் பிரித்து எழுதுவதும் – ப்ரச்னா என்று எழுதாமல் பிரச்சினை / பிரச்சனை என்றும் ப்ரியம், ப்ரிமியம், ப்ளேட் என்று உச்சரிப்பதைப் பிரியம், பிரிமியம், பிளேட்டு / பிளேட் என்று எழுதுவதும்- தமிழின் மொழிக் கலாச்சார மரபுக்கு உதாரணங்கள். சங்கம், யுகம், வோட்டு முதலான சொற்களில் சொல்லுக்கு முதலில் வரும் எழுத்துகளாகப் புதிய எழுத்துகளைத் தமிழ் சேர்த்துக்கொண்டுள்ளது. கேக், பந்த், சிங் முதலான சொல்லின் இறுதியில் புதிய எழுத்துகளைச் சேர்த்துக்கொண்டுள்ளது. சர்க்கரை, அர்த்தம் முதலான சொற்களில் குறிலுக்குப்பின் /ரு / அல்லாமல் /ர்/ வருவதை ஏற்றுக்கொண்டுள்ளது. இவையும், பழைய இலக்கண விதிக்கு மாறுபட்டதானாலும், தமிழ் மொழி மரபே.

மேலே சொன்னதைப் போல, ஒரு சொல்லைப் பேசுவதைப் போலவே  எழுதுவதும், அதன் மூல மொழியின் உச்சரிப்பைப் போலவே எழுதுவதும் எந்த மொழியிலும் இல்லை. எழுதும் விதிகளில் மொழியின் மரபுகள் வேறுபடுகின்றன. தமிழின் எழுதும் மரபு காலத்தால் உறைந்துவிடாமல் நெகிழ்வைத் தழுவ வேண்டும். இந்த நெகிழ்வைத் கடைசியில் தீர்மானிப்பவர்கள் புலவர்களோ, ஆசிரியர்களோ, மொழி ஆர்வலர்களோ, இலக்கணவாதிகளோ மொழியியலாளர்களோ அல்ல. தமிழைத் தங்கள் காலத்தின் தேவைக்கேற்ப எழுதும் பல துறை மக்களே ஆவர்.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

 தமிழ் இலக்கணப்படி  ஓர் அரசன், ஒரு மன்னன் என்றுதான் எழுத வேண்டுமா?

-ஒரு தமிழாசிரியர்

பதில்:

உயிரெழுத்தில் துவங்கும் பெயருக்கு முன் வரும் எண்ணுப் பெயரடை நெடிலிலும், மெய்யெழுத்தில் துவங்கும் பெயருக்கு முன் வரும் எண்ணுப் பெயரடை குறிலிலும் இருக்க வேண்டும் என்று எனக்குத் தெரிந்தவரை எந்த மரபிலக்கணத்திலும் விதி இல்லை. பழைய இலக்கியத்தில் இந்த வேறுபாடு பெரும்பான்மை வழக்காக இருக்கலாம். அதே சமயம் மாறான வழக்கையும் பழைய இலக்கியத்தில் பார்க்கலாம்.

தமிழில் ஒரு  சொல்லில் ஒலிமாற்றம் ஏற்படும்போது ஓசையமைதிக்காக குறில்-நெடில் மாற்ற்ம் தோனறலாம். துகள் என்னும் சொல்லில் ககரம் கெடும்போது தூள் என்று முதல் உயிர் நெடிலாகும். பகல்-பால் (பிரிவு என்ற பொருளில்) முதலிய சொற்கள் இதற்கு வேறு சில எடுத்துக்காட்டுகள். வா-வரு, தேர்-தெரி என்பவை வேறுவகையான் எடுத்துக்காட்டுகள். ஓர்-ஒரு, ஈர்-இரு என்பவை இந்த வகையைச் சேர்ந்தவை. நெடிலுள்ள சொற்களின் இறுதியில் ஒரு உயிர் சேரும்போது நெடில் குறிலாகிறது. இரண்டு வடிவங்களிலும் உயிர்களின் மொத்த அளபு இரண்டு மாத்திரை. இது ஓசையமைதி. இதற்கும் இச்சொல்லை அடுத்து வரும் சொல்லுக்கும் தொடர்பு இல்லை. துகள்-தூள் போல், ஒரு-ஓர் ஒரு சொல்லின் இரு வடிவங்கள். அவ்வளவே.

இன்றைய தமிழ்  வழக்கில், எண்ணுப்பெயர்த் தொகையில்மட்டும் பெயர் உயிரில் துவங்கும்போது எண்ணுப் பெயர் நெடில் வடிவத்தில் இருப்பது பெருவழக்கு. ஓராயிரம், ஈராண்டு ஆகியவை சில எடுத்துக்காட்டுகள்.

ஓராயிரம் பேர் வந்திருப்பார்கள், ஒரு ஆயிரம் பேர் வந்திருப்பார்கள் என்னும் வாக்கியங்களில் ஒர், ஒரு என்ற சொற்களுக்குப் பொருள் வேறுபாடு உண்டு.

எண்ணுப் பெயருக்கு  மட்டுமன்றிப் பண்புப் பெயரடைகளுக்கும் இரு வடிவங்கள் இருக்கலாம். எடுத்துக்காட்டு: பெருவழக்கு, பெரியப்பா பேராசிரியர். இந்தத் தொகைச்சொற்களில் ‘பெரும்’, ‘பெரி’, ‘பேர்’ ஆகிய்வை அடை.

இக்காலத் தமிழ்ப்  புலவர்கள் சிலர் நல்ல தமிழின்  இலக்கணம் என்று தாங்களே  கற்பித்துக்கொண்ட சில இலக்கணக் கொள்கைகளின் அடிப்படையில் புதிய இலக்கண விதிகள் கூறுகிறார்கள். ஒரு-ஓர் பயன்பாட்டு விதி இவற்றில் ஒன்று; பழைய இலக்கண நூல்களில் இல்லாத ஒன்று. இதில் ஆங்கிலத்தில் a, an பயன்பாட்டு விதியின் சாயலைக் காணலாம். இரு-ஈர் சொல் வடிவங்களுக்கு இரு மன்னர்கள், ஈர் அரசர்கள் என்னும் பயன்பாட்டை வலியுறுத்தி இந்த விதியை இவர்கள் சொல்லாதது இந்தக் கருத்தை உறுதிப்படுத்துகிறது. 



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

 வினா

‘மயில் போல் அழகு / மயில்போல் அழகு’ என்று ’போல்’, ’போன்ற’ ஆகிய உவமையுருபுகளைப் பிரித்தும் தனித்தும் எழுதுகிறோம். இவற்றைத் தனித்து எழுதலாம? வேற்றுமையுருபுகளை, ராமனை, ராமனால், ராமனுக்கு எனப் பிரித்தெழுதாமல் எவ்வாறு பெயர்ச்சொற்களோடு சேர்த்தெழுதுகிறோமோ அதுபோல, உவமையுருபுகளையும் சேர்த்துத்தானே எழுதவேண்டும்?.

சிவகுமார்

பதில்

சொற்களுக்கிடையே இடம் விட்டு எழுதுவது தமிழ் அச்சுக்கு வந்தபோது துவங்கிய மரபு. ஓலைச் சுவடிகளில் சொற்கள் இடைவெளி இல்லாமல் இருக்கும். செய்யுளில் யாப்புத் தெரிந்தவர்களுக்குச் சீர் பிரிக்கத் தெரியும். அது சொல் பிரிப்பு அல்ல. புள்ளி, காற்புள்ளி முதலான நிறுத்தக் குறிகளோடு புதிதாக வந்த மரபு சொல் பிரிப்பு. இது சொற்களை இனம்காண உதவும்; அதன்மூலம் வாசிப்பை விரைவுபடுத்தும். புதிதாக எழுதப் படிக்கக் கறற்வர்களுக்குச் சொல் பிரிப்பு பெரிய உதவி.

சொல்லைப் பிரித்து எழுதுவது புதிய மரபாதலால் அதற்கு

மரபிலக்கணத்தில் விதிகள் இல்லை. புதிய வழ்க்குக்கு இலக்கணம் எழுதப் புலவர்களுக்குத் தயக்கம். எனவே, பலர் பலவாறு எழுதுகிறார்கள். இந்திய மொழிகளின் மைய நிறுவனமும் மொழி அறக்கட்டளையும் சேர்ந்து வெளியிட்ட தமிழ் நடைக் கையேடு என்னும் நூல் இன்றைய வழக்கைச் செம்மைப்படுத்தும் முதல் முயற்சி.

சொல்லைப் பிரித்து எழுத எது சொல் என்பது பற்றி ஒரு தெளிவு வேண்டும். தனித்து வருவது சொல்; ஒரு சொல்லோடு ஒட்டி வருவது உருபு. உருபு எப்போதும் தனித்து இயங்காது. சொல்லைப் பிரித்து எழுதலாம்; உருபைப் பிரித்து எழுத முடியாது. பேச்சிலும் அது பிரிந்து நிற்காது. வேற்றுமை உருபுகள் அப்படிப்பட்டவை. எனவே பிரித்து எழுதுவ்தில்லை. ‘-ஓடு வந்தான்’ என்று பேசுவதில்லை; எழுதுவதில்லை. ‘அப்பாவோடு வந்தான்’ என்பது போன்றே வரும். ஆனால் ‘கூட வந்தான்’ என்று பேசலாம்; எழுதலாம். இது சொல்லுருபு எனப்படும். சொல்லின் குணமும் உருபின் குணமும் இதற்கு உணடு. ‘கூட, ஓடு’ ஆகிய இரண்டின் பொருளும் வேற்றுமைப் பொருளே. ஆனால் சொல்லின் தன்மையில் வேறுபாடு. சொல்லுருபைச் சொல்லைப் போல் பிரித்து எழுத வேண்டுமா, உருபைப் போலச் சேர்த்து எழுத வேண்டுமா என்னும் கேள்வி எழுகிறது. இத்ற்கு இலக்கணம் சார்ந்த விடை இல்லை.

இன்றைய வழக்கில் எழுதுபவர்கள் சொல்லுருபின் நீளத்தையும் அதன் முன் வரும் சொல்லின் நீளத்தையும் கணக்கில் எடுத்துக்- கொள்கிறார்கள். ‘வந்தபின்’ என்று சேர்த்தும் ‘வந்த பிறகு’ என்று பிரித்தும் எழுதும் வழக்கைப் பார்க்கிறோம். ‘வந்ததற்குப் பின், வந்ததற்குப் பிறகு’ என்று பிரித்து எழுதுவதே பெருவழக்கு. இதைப் போலவே ‘ஆசிரியரே, ஆசிரியர்கூட, ஆசிரியர் மட்டும்’ என்று எழுதும் வழக்கு. ‘பூப்போல்’ என்று சேர்த்தும், ‘செம்பருத்தி போல, பூவைப் போல’ என்று பிரித்தும் எழுதும் வழக்கு.

ஒரு வ்டிவத்தின் இலக்கண வகையை எடுத்துக்கொள்ளாமல், சொல்லின் அளவை எடுத்துக்கொண்டு வழக்கு அமைகிறது. இதைத் தொகைகளை எழுதுவதிலும் பார்க்கலாம். தீப்பெட்டி, தலைவலை’ என்று சேர்த்தும் ‘நெருப்புப் பெட்டி, முழங்கால் வலி’ என்று பிரித்தும் எழுதுவது இன்றைய வழக்கு.

பிரித்து எழுதுவது சொல்லின் வடிவத்தைத் தனித்துக் காட்டுகிறது. அது வாசிப்பை எளிமையாக்குகிறது; வாசிப்பின் வேகத்தைக் கூட்டுகிறது இலக்கண்த்தில் அடிப்படையில் பார்க்கும்போது முரண் இருப்பதாகத் தோன்றினாலும், இன்றைய வழக்கு மொழியின் பயனை –வாசிப்பின் எளிமையைக- கூட்டுகிறது அல்லவா?



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

 பெண்வழிச்சேறல் என்பதன் சரியான பொருள் என்ன? இங்கு வல்லின “ற ” செய்யும் பணி என்ன? “ஏறு”, “அல்” ஆகிய சொற்கள் இங்கு மறை நிலையாய்ப் பொதிந்துள்ளனவா?

பொதுவாக, செய்யவேண்டியவற்றையும், விலக்கவேண்டியவற்றையும் தெளிவாக உரைப்பதில் வல்லவரான வள்ளுவர், இங்கு உண்மையில் என்ன சொல்லவருகிறார்? –அவ்வை மகள்

 

பதில்:

திருக்குறளின் தொண்ணூற்றொன்றாம் அதிகாரம் பெண்வழிச்சேறல். இதற்கு முந்திய அதிகாரம் பெரியாரைப் பிழையாமை பற்றியது; அடுத்தது வரைவின் மகளிர் பற்றியது. பெண் வழி நடக்காதே என்று சொல்லும் இந்த அதிகாரம் ஆற்றலிலும் கல்வியிலும் பெரியவர்களாக இருப்பவர்களிடம் தவறு செய்யாதே என்ற அதிகாரத்திற்கும் பரத்தையரை நாடாதே என்ற அதிகாரத்திற்கும் இடையில் வருகிறது. அதிகார வரிசை வள்ளுவரே அமைத்ததா என்பது பற்றிக் கேள்விகள் இருந்தாலும், பரிமேலழகர் எடுத்துக்கொண்ட அதிகார வரிசை அவருக்குப் பின்னால் நிலைபெற்றது. நட்புக்கு அடுத்துப் பகையைப் பேசிய பிறகு வரும் அதிகாரங்கள் இவை மூன்றும். ஒருவனுக்கு யார், எப்படிப் பகையாகலாம் என்பதை விரிக்கும் வகையில் இந்த அதிகாரங்கள் அமைகின்றன என்று எடுத்துக்கொள்ள வேண்டும். இவை ஒழுக்கம் பற்றிப் பேசும் அறத்துப் பாலில் இல்லை; உலகியல் நடப்பு பற்றிப் பேசும் பொருட் பாலில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பெண்வழிச் சேறல் என்னும் தொடருக்கு ‘பெண்ணின் வழி செல்லுதல்’ என்பது பொருள். பெண் இங்கு மனைவியைக் குறிக்கிறது. சேறல் என்றால் செல்லுதல் என்று பொருள்; சேறு (சேர் அல்ல) என்பது வினை; சேறல் வினைப் பெயர்; சேறு + அல் என்று விரியும். ‘அல்’ உருபை எதிர்மறை உருபாக (செல்லற்க என்ற வியங்கோளில் போல) கொண்டால்), சேறல் என்பது ‘செல்லாதே’ என்று பொருள்படும். ஆனால், திருக்குறளில் எந்த அதிகாரத்தின் தலைப்பும் ஏவலில் இல்லை; பெயரிலேயே உள்ளது என்பதால், சேறல் என்பதற்குச் ‘செல்லுதல்’ என்றே பொருள்கொள்ள வேண்டும்.

திருவள்ளுவர் இந்த அதிகாரத்தில் எதைச் செய்ய வேண்டாம் என்று தெளிவாகவே சொல்கிறார். சுஜாதா உரைப் பாணியில் சொல்வதென்றால், ‘பெண்டாட்டி சொல்லைக் கேட்காதே’ என்று சொல்கிறார். அது ஒருவனுக்குப் பகை -உட்பகை- இந்த அதிகாரம் வரும் இடத்தால் உணரும் பொருள். எப்படிப் பகை என்றால், அவனுக்குப் பொருள் சேராது; பொருள் கொடுத்தோ நற்செயலாலோ வரும் அறமும் சேராது என்று சொல்கிறார். மனவி தரும் இன்பத்தை விரும்பி, ஆண்மையை அடையாளப்படுத்துவதாகக் கருதப்படும் செயல்களை ஒருவன் செய்யாமல் போனால் அவன் பொருளும் அறமும் இழப்பான் என்று சொல்கிறார்.

அறநெறியில் இல்லறத்தை ஒரு அறமாகச் சேர்த்த திருவள்ளுவர், குடும்பத்தில் மனைவி கணவன் வழியேதான் போக வேண்டும்; கணவன் தடுமாறும்போது அவனுக்கு வழி காட்டக் கூடாது என்று சொல்கிறாரா என்ற கேள்வி எழுகிறது. சங்க காலத்தில் அரசர்களுக்கு அறிவுரை கூறும் பெண்புலவர்களை வள்ளுவர் படித்திருப்பார். ஆணுக்குக் கற்பே ஆண்மை (பிறன் மனை நோக்காப் பேராண்மை என்பது அவர் வரி) என்று பெண்ணுக்குக் கற்பே பெண்மை என்பதற்கு இணையாக வலியுறுத்துகிறார். அதே சமயத்தில், பெண்களுக்கு முக்தி இல்லை என்று நம்பிய சமண சமயமும் பழக்கம். இப்படிப்பட்ட கருத்துச் சூழலில் பெண்வழிச் சேறலை எப்படி விளங்கிக்கொள்வது?

தேவநேயப் பாவணர், கெடுமதியுள்ள அமைச்சனின் சொல்லை அரசன் கேட்கக் கூடாது என்பதுபோல, புத்தியற்ற மனைவியின் சொல்லைக் கணவன் கேட்கக் கூடாது என்று சமாதான விளக்கம் கூறுகிறார். அப்படியென்றால், புத்தியற்ற கணவன் சொல்லை மனைவி கேட்கக் கூடாது என்றும் கூற வேண்டுமல்லவா? மடமை பெண்ணுக்கு மட்டும்தானா?

வழிவழியாகத் தமிழ் மக்கள், சமூகநிலையில் மனைவி கணவனுக்குத் துணையே தவிர இணை இல்லை என்ற கருத்திலேயே இயங்கிவருகின்றனர். இல்லறத்திலும் ஆண் தன் செயல்பாடுகளைச் சரிவரச் செய்து உய்வடையப் பெண் துணையாக நிற்க வேண்டும் என்பதே கருத்து. மனைவி சரியாக இருந்தால் குடும்பத்தில் எல்லாம் சரியாக இருக்கும் என்பதே வள்ளுவர் வாக்கும். கணவன் மோசமாக இருந்தால் குடும்பம் மோசமாக இருக்கும் என்ற சிந்தனைக்கு இடம் இல்லை. ஆன்மநிலையில் ஆணும் பெண்ணும் இணை என்ற கருத்தில் அமைந்த அர்த்தநாரீஸ்வரர் கோட்பாடு சமூக உறவில் இடம் பெறவில்லை. சமயநெறியில், பெண் தரும் இன்பம் ஆணின் ஆன்ம வேட்கைக்குத் தடை என்று பட்டினத்தார் போன்றவர்கள் பெண்ணை முற்றிலுமாக ஒதுக்கச் சொல்கிறார்கள். துணை இடமும் இல்லை என்பதுபோல்,  பெண்ணுக்கு ஆணின் வாழ்க்கையில் ஒரு இடமும் இல்லை என்னும் எண்ணம் இது. காரைக்கால் அம்மையார் போன்று சில புறனடைகள் இருந்தாலும், ‘ஆணைத் துற’ என்று பெண்ணை நோக்கி யாரும் பாடவில்லை.

தமிழ்ச் சமுதாயத்தில் இருந்த, இருக்கும் பெண்ணின் சமூக இடத்தைத்தான் பெண்வழிச் சேறல் பிரதிபலிக்கிறது. ‘பெண்டுக்கு மேய்ச்சடைப்பான்’ என்று மனைவியிடம் ஆலோசனை கேட்கும் கணவனை ஆண்மையற்றவன் என்று இழிவாகப் பேசுவது இன்றும் உண்டல்லவா! பெண் சமத்துவம் பற்றிப் புதிதாக வந்திருக்கும் கருத்தைத் திருக்குறளில் பார்ப்பது காலமுரண் (anachronism) ஆகும்.

திருக்குறள் முக்காலத்திற்கும், உலகில் அனைவருக்கும் பொருந்தும் கருத்துகளைக் கொண்ட நூல் என்பது தவறா என்ற கேள்வி.எழுகிறது. இல்லை. 1330 குறள்களில் 1300 அந்தத் தன்மையைக் கொண்டிருந்தாலே அது மகத்தான சாதனை. உலகில் அப்படிப்பட்ட நூல்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

நினைவு கூரல், நினைவு கூறல் எது சரி? 
-சிறீதரன்

கூரினார் என்று கூறுதல் என்பது சரியன்றுதானே? கூரப்பட்டது என்பது செயப்பாட்டு வினைதானே? ஆனால் சேரப்பட்டது என்னும் செயப்பாட்டு வினை வடிவம் கிடையாதே?
-C.R. செல்வக்குமார். கூகுளில் தமிழ்மன்றக் குழுவினரிடம் நடந்த விவாதம்

நினைவுகூரல் / கூர்தல் என்பதே வழக்கு. சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதியில் ‘கூர்’ என்னும் வினைக்குக் கொடுக்கப்பட்டுள்ள பல பொருள்களில் ‘மிகு’ என்னும் பொருளே இலக்கியத்தில் அதிகமாக வருவது. ஓருயிரிலிருந்து பல்லுயிர் ஆதல் என்னும் பொருளில் கூர்தலறம் ‘evolution’ என்ற கலைச்சொல் படைக்கப்பட்டது. நினைவுகூரலில் இந்தப் பொருள் இல்லை எனலாம். கூர்ப்படுத்துதல், கூர்மையாக்குதல் என்னும் பொருளிலே இந்த வினை வருகிறது எனலாம். ஆனால், இந்தப் பொருளில் ‘கூர்’ என்று ஒரு வினை இப்போது வழக்கில் இல்லை. கூர்முனை என்னும் தொகையைப் பெயர்த்தொகை என்றும் சொல்லலாம்; வினைத்தொகை என்றும் சொல்லலாம். கூரிய கத்தி, கூர்த்த மூளை என்னும் தொடர்கள் இருப்பதால் ‘கூர்’ என்று ஒரு வினை இந்தப் பொருளில் இருந்திருக்கும் என்று அனுமானிக்கலாம்.

‘கூர்’ என்ற வினையின் இறந்தகால வடிவம், ‘சேர்’ (சேர்ந்தார்) என்ற வினையைப் போல, கூர்ந்தார் என்பதே; ‘கோர்’ (கோரினார்) என்ற வினையைப் போல *கூரினார் அல்ல. ஓடிய என்ற சொல்லோடு தொடர்புடைய ஓடினார் என்னும் வினைமுற்று இருப்பது போல, கூரிய என்ற சொல்லோடு தொடர்புடைய வினைமுற்று வடிவம் இல்லை.

செயப்பாட்டு வினை வடிவம் செயப்படுபொருளை ஏற்கும் வினைகளுக்கே உண்டு. ‘சேர்’ போன்ற வினைகள் செயப்படுபொருளை ஏற்காமலும் ஏற்றும் வரும். இந்த வேறுபாடு கால உருபு ஏற்ற வினை வடிவத்தில் தெரியும். முதலாவது, சேர்ந்தார் என்றும், இரண்டாவது, சேர்த்தார் என்றும் வரும். முதலாவதற்கு, *சேரப்பட்டார் என்ற செயப்பாட்டு வினை வடிவம் இல்லை; இரண்டாவதற்கு, சேர்க்கப்பட்டார் என்ற செயப்பாட்டு வினை வடிவம் உண்டு. கூர்த்த என்னும் குறிப்புப் பெயரெச்சம் *கூர்த்தார் என்னும் செயப்படுபொருள் ஏற்கும் வினை இருந்திருக்கலாமோ என்று எண்ண வைக்கிறது. இதற்கு இலக்கிய ஆதாரம் இருக்கிறதா என்று தெரியவில்லை. அகராதிகள் இந்த வடிவத்தைத் தரவில்லை. இது எச்சரிக்கை விட்டார் / விடுத்தார் என்று பொருள்வேற்றுமை இல்லாமல் இரண்டு வேறு கால உருபுகளை ஏற்று ஒரு வினை வருவது போலவும் இந்த வழக்கு இருக்கலாம். தக்க/ தகுந்த(நேரம்) என்னும் இரட்டைவடிவம். இன்னொரு உதாரணம். போய்த் தொலைந்தார் / தொலைத்தார் என்ற வழக்கில் இரண்டாவது வினைமுற்று செயப்படுபொருள் குன்றிய வினையாக இருப்பது போலவும் இருக்கலாம்.

இன்றைய தமிழில், கூர்ந்தார் என்பது செயப்படுபொருள் குன்றாத வினையாக இருக்கிறது, மறந்தார் என்னும் வினையைப் போல. இதன் செயப்படுபொருள் நினைவு, நினைவுகூர்தல் நினைவைக் கூர்தல் என்று (கூர்மைப் படுத்துதல், அதாவது மறந்த ஒன்றை நினைவுக்குக் கொண்டுவருதல், என்னும் பொருள்கொண்டு) விரியும். நினைவுகூர்தல், (அவர்) முகம் மலர்(ந்தார்), (அவர்) படம் வரை(ந்தார்), (அவர்) பேட்டி கண்டார் என்பவை போல, கூட்டுவினை. அதாவது, பெயரும் வினையும் சேர்ந்து ஒரு வினையாக வரும் கூட்டுவினை (complex predicate). இதனாலேயே, சில கூட்டுவினைகள் வாக்கியத்தில் ஒரு செயப்படுபொருள் இருக்கும்போதே தன்னுள் இன்னொரு செயப்படுபொருளைக் கொண்டிருக்கும். என்னைப் படம்வரைந்தார், என்னைப் பேட்டிகண்டார் என்பனவற்றைப் போன்றது என்னை நினைவுகூர்ந்தார் என்பதும். (அவர்) முகம் மலர்(ந்தார்) என்னும் வாக்கியத்தில் ‘அவர்’, ‘முகம்’ இரண்டும் எழுவாய்.

நினைவுகூர் என்னும் கூட்டுவினை தமிழ்மொழியின் சில வரலாற்று உண்மைகளைக் காட்டுகிறது. வினைகள் தனி வழக்கு ஒழிந்து மற்றொரு சொல்லோடு சேர்ந்துமட்டுமே இக்காலத்தில் வரலாம். அப்படி வரும்போது கூட்டுவினை உருவாகலாம். ஒரு வினை ஒன்றுக்கு மேற்பட்ட இறந்தகால உருபை ஏற்கலாம். இலக்கண நூலில் சொல்லாத மாற்றங்கள் தமிழில் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

கேள்வி : பாரம்பரியம் என்பது சரியா அல்லது பாரம்பரீயம் என்பது சரியா?

 

பதில் : சொல்லெழுத்தை (spelling) பயிலுதல் எழுத்தறிவு (literacy) பெறுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பேசுவது போலவே எந்த மொழியும் எழுதுவதில்லை. அதனால் எழுத்தறிவில் சொல்லெழுத்தைப் பயிலுவதற்கு அதிகக் கவனம் தரப்படுகிறது. எந்த மொழியிலும் சொல்லின் உச்சரிப்பு மாறும் வேகத்தில் சொல்லின் எழுத்து வடிவம் மாறுவதில்லை. தமிழைப் பொறுத்தவரை பேச்சில் உச்சரிப்பு மிகவும் மாறியிருக்கிறது. ஆனால் சொல்லெழுத்து மாறியது மற்ற மொழிகளில் மாறியதை விட மிகவும் குறைவு. சங்ககாலக் குரீஇ என்னும் சொல் பிற்காலத்தில் குருவி என்று ஆனது போல் ஒரு சில எடுத்துக்காட்டுகளே உண்டு.

இப்போது இணையதளங்களில் தமிழ்மொழி பற்றிய கேள்விகளில் சொல்லெழுத்துப் பற்றிய கேள்விகள் மிகுதியாக உள்ளன. பேச்சு மொழியை ஒட்டிச் சொல்லெழுத்தில் மாற்றம் வருவதைக் கண்டு வரும் குழப்பமும் அச்சமும் இந்தக் கேள்விகளில் தென்படுகின்றன. ஒரு சொல்லுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துக்கூட்டு இருக்கும்- போது எது சரி என்னும் கேள்வி எழுகிறது. ஒன்றுக்கு மேல் இருப்பது தவறு என்னும் கருத்தின் அடிப்படையில் இந்தக் கேள்வி எழுகிறது. ஆனால் சில சொற்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட சொல்லெழுத்துகள் இருப்பதை மறந்துவிடக் கூடாது. ஐயர் – அய்யர், புடைவை –புடவை, சொல் – சொல்லு (சொல்கிறான் / சொல்லுகிறான்), கருப்பு – கறுப்பு, பதற்றம் – பதட்டம், பவளம் – பவழம், சார்த்து – சாத்து – சாற்று என்பவை இதற்குச் சில எடுத்துக்காட்டுகள்.

வேறுபாடு இருக்கும்போது, அதாவது புதிய வரவு இருக்கும்போது, ஒரு சொல்லெழுத்தை மட்டுமே தேர்ந்தெடுக்க விரும்பினால் அதற்கு என்ன அடிப்படை என்பது முக்கியமான கேள்வி. பழைய இலக்கிய வழக்கு சிலருக்கு அடிப்படை. கறுப்பிற்கு இலக்கியப் பழமை இல்லை என்றால் அந்த எழுத்தாக்கம் தவறு என்று சொல்லும் இந்த அடிப்படை. எந்த ஒரு மாற்றத்தையும் ஒரு இலக்கிய ஆசிரியன் முதலில் ஏற்றுப் பயன்படுத்துகிறான். பிறகு மற்றவர்களும் எழுத்தில் பயன்படுத்த, அது சரியான வழக்கு ஆகிறது. இன்றைய எழுத்தாளர்கள், இதழாசிரியர்கள் ஆகியோர் வழங்கும் புதிய சொல்லெழுத்தை மட்டும் தவறென்று தள்ளுவதை எப்படி நியாயப்படுத்த முடியும்?

சொல்லின் வேரிலிருந்து விலகாத தன்மை இன்னொரு அடிப்படை. இதன்படி, பதறு என்னும் வினையிலிருந்து பிறந்த பதற்றம் என்னும் சொல்லெழுத்தே சரியென்று கொள்ளப்படும். கரிய, கரும் போன்ற ஒரே வேரிலிருந்து பிறந்த சொற்களோடு தொடர்பு இருப்பதால் கருப்பு என்பதே சரி என்று இந்த அடிப்படை முடிவு செய்யும். இந்த அடிப்படை மொழி வளர்ச்சியை மறுத்து, மொழியை அதன் மூலத் தோற்றத்திற்குக் கொண்டுசெல்ல வைக்கிறது. பேத்தி, சித்தப்பா, சித்தி, காக்கைவலிப்பு முதலான சொல்லெழுத்துகள் தவறு; அவை முறையே பேர்த்தி, சிற்றப்பா, சிற்றி, கால்கை வலிப்பு என்று இருக்க வேண்டும் என்று சொல்லும் நிலைக்கு இது நம்மைத் தள்ளிவிடும். வேரிலிருந்து விரிவதுதானே வளர்ச்சி.

பெரும்பான்மையோர் வழக்கு என்பது மற்றொரு அடிப்படை. பெரும்பான்மையோர் செய்தால் தவறு சரியாகிவிடுமா என்பது இதற்கு எதிர்க் கேள்வி. முன்னே சொன்ன இரண்டு அடிப்படைகளாலேயே இரண்டில் ஒரு சொல்லெழுத்து தவறு என்று அனுமானிக்கப்பட்டு இந்தக் கேள்வி எழுப்பப்படுகிறது. இந்த அடிப்படைகளின் குறைகளை ஏற்கனவே பார்த்தோம். பெரும்பான்மையோர் செய்வது அறியாமையால் என்பது இன்னொரு அனுமானம். மொழியின் தன்மையைச் சமூகத்தில் அறிவுள்ள சிலரே நிர்ணயிக்க வேண்டும் என்பது இதன் உட்கருத்து. விக்கிபீடியா காலத்தில் மதிப்பிழந்துவிட்ட கருத்து இது.

பெரும்பான்மையோர் வழக்கு என்றால் பெருவழக்கு. சொல்லின் பொருளின் மாற்றத்தில் பெருவழக்கை ஒப்புக்கொள்கிறோம். நாற்றம் என்ற சொல்லின் பொருள் நல்ல வாசனையை விட்டு, கெட்ட வாசனையை இப்போது குறிப்பதைத் தவறு என்று யாரும் சொல்வதில்லை. இது சொல்லெழுத்து மாற்றத்துக்கும் பொருந்தும். பெருவழக்கு என்றால் பலருக்குத் தடையில்லாத வழக்கு என்று பொருள். காலையில் காபி குடிப்பது ஒரு உதாரணம். பெருவழக்கில் மேலே சொன்னபடி, ஒரே சொல்லுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட சொல்லெழுத்தும் இருக்கக் கூடும்.

பெருவழக்கை கணிக்கும் முறை முக்கியம். இது வெறும் எண்ணிக்கையால் தீர்மானிக்கும் ஒன்றல்ல. அச்சிதழ்களையும் மின்னிதழ்களையும் தேடுகருவியால் அலசி ஒரு சொல்வடிவத்தின் பயன்பாட்டு எண்ணை நிர்ணயிப்பது அல்ல இது. சொல்லின் பயிற்சிப் பரப்பு முக்கியம். சொல்லைக் கணக்கிடுவதில் இரண்டு வகையான எண்ணிக்கை முறைகள் உண்டு. ஒன்று சொல் எங்கு வந்தாலும் குருட்டடியாக எண்ணுவது; மற்றொன்று பிரதிகளை (texts) பாகுபடுத்தி, சொல் அதிகப்படியான பிரதி வகைகளில் வருவதை எண்ணுவது. அதாவது, ஆய்விதழ்க் கட்டுரையிலிருந்து வலையில் பதிவுசெய்யும் வம்பளப்பு வரை பல்வேறு இடங்களில் வருவதை எண்ணுவது. இந்த எண்ணிக்கையில் அதிகமாக உள்ள சொல்லெழுத்தே பெருவழக்கு.

க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதியில் சொற்களின் வடிவம், பலதரப்பட்ட எழுத்துக்களைக் கொண்ட தரவுவங்கியில் பெருவழக்காக உள்ள சொல் வடிவம் முதன்மையான பதிவாகத் தரப்பட்டு, சிறுவழக்காக உள்ள மாற்று வடிவத்தின்கீழ் பெருவழக்கு வடிவத்தைக் ‘காண்க’ என்று நெறிப்படுத்தப்பட்டிருக்கும். சிறுவழக்கு மிகக் குறைவான எண்ணிக்கையில் இருந்தால், ‘அருகிவரும் வடிவம்’ என்று அடையாளம் காட்டப்பட்டிருக்கும்.

பாரம்பரியம் – பாரம்பரீயம் போன்று தேசியம் – தேசீயம், மார்க்சியம் – மார்க்சீயம், நாகரிகம் – நாகரீகம் முதலிய சொற்களிலும் இணைச் சொல்லெழுத்து உண்டு. இவற்றில் முதலில் உள்ள சொல்லெழுத்தே பெருவழக்கு என்று எண்ணுகிறேன். இதன்படியே பள்ளி ஆசிரியர்களும், இதழாசிரியர்களும் நெடிலுள்ள மாற்று வடிவத்தைத் திருத்துவார்கள். அப்படியும் மாற்று வடிவம் ஒரு தலைமுறையைத் தொடர்ந்து பெருவழக்காக இருந்தால் அதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். முதல் வடிவம் மறையாமல் தொடர்ந்து வழக்கில் இருக்கலாம்.

மாற்று வடிவங்களைச் சொல்லின் இலக்கண வடிவங்களிலும் பார்க்கலாம். ஓடுகிறான் – ஓடுகின்றன, ஓடியது – ஓடிற்று, மரத்துக்கு – மரத்திற்கு, வந்ததால் – வந்ததனால், படிக்கிற – படிக்கும் முதலியவை சில எடுத்துக்காட்டுகள்.

தமிழின் நெகிழ்வுகளைக் கோணல்களாகப் பார்க்காமல் இருப்பது தமிழுக்கு நல்லது.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

 37கேள்வி

தற்காலத் தமிழ் – மலையாளத்துக்கு இடையே இயந்திர மொழிபெயர்ப்பு முயற்சி செய்யும் போது இலக்கண மாற்றமும் நிகழவேண்டும். அவ்வாறெனில் இலக்கணத்தில் எவ்வெக்கூறுகள் மாற்றப்பட வேண்டும்? மலையாளம் தமிழ் மொழியோடு மிகவும் ஒன்றுபட்டு இருப்பதால், தற்காலத்தமிழ் இலக்கணத்திற்கு எழுதப்பட்ட நூல்களை அடிப்படையாகக் கொண்டு, தமிழ் இலக்கண அமைப்பின் கண்ணோட்டத்தோடு மலையாள மொழியைப் பார்க்கலாமா? எல்லா மலையாள இலக்கணக் கூறுகளையும் தமிழை அடிப்படையாக வைத்துக்கொண்டு ஒப்பிட்டு நோக்கலாமா?

விஜயராஜேஸ்வரி, கேரளப் பல்கலைக்கழகம்

பதில்

இயந்திர மொழிபெயர்ப்பைப் பற்றிப் பேசும்போது, சில உண்மைகளை மனதில் கொள்ள வேண்டும். மனிதத் தலையீடு இல்லாமல் இயந்திரமே முழுவதும் செய்யும் மொழிபெயர்ப்பு ஒரு குறிப்பிட்ட மொழிப் பயன்பாட்டு வட்டத்தில் (specific domain), ஒரே வகையான வாக்கிய அமைப்பையும் சொல்லாட்சியையும் எதிர்பார்க்கலாம் என்பதால், சாத்தியம் ஆகும். பொருள் மயக்கம் இல்லாத, ஊகப் பொருள் இல்லாத, அறிவியல் பிரதிகளில் உள்ள மொழி வகையிலும் அது சாத்தியம். இந்த மொழிபெயர்ப்புச் சூழல்களில் மொழியின் முழு இலக்கணத்துக்கும் முக்கியத்துவம் தராமல், மொழியில் எண்ணிக்கையில் மிகுந்து திரும்பத் திரும்ப வரும் கூறுகளைக் (repetitive elements) புள்ளியியல் அடிப்படியில் கணக்கிட்டு இயந்திர மொழிபெயர்ப்புச் செய்யும் சாத்தியம் இருக்கிறது.

இன்னொரு வகை இயந்திர மொழிபெயர்ப்பு ஒரு மொழியின் பிரதியில் உளள சாரத்தை இன்னொரு மொழியில் தருவதோடு திருப்தி அடையும். மொழிபெயர்ப்பு இலக்கண சுத்தமாக இருக்கத் தேவை இல்லை. பொருளை மாற்றாமல் இருந்தால் போதும்; இலக்கணத் தவறுகள் இருந்தாலும் பொருளை ஊகித்துப் பொருள் கொள்ள முடிந்தால் போதும்.

மற்ற இயந்திர மொழிபெயர்ப்புகளில் இரண்டு மொழிகளையும் ஒப்பிட்டு அவற்றின் இலக்கண அமைப்பை நிரல்நிறை (algorithm)ச் செய்துகொளவது அவசியம். இந்த ஒப்பீட்டில் இலக்கண ஒற்றுமைகளும் வேற்றுமைகளும் அடங்கும். பொருளோடு கூடிய சொற்களஞ்சியமும் அடங்கும், இரண்டு மொழிகளின் இலக்கணம் மிகவும் வேறுபட்டிருக்கும்போது அவற்றின் நிரல்நிறைகளும் மிகவும் வேறுபட்டிருக்கும். அதனால் இரண்டையும் பொருத்தும் முயற்சியும் கடினமாக இருக்கும். இலக்கண ஒப்பீட்டுக்கு எந்த மொழிக்கும் முற்ற முடிந்த இலக்கண விளக்கம் தேவை இல்லை. வாக்கிய அமைப்பின் வகைகளை இனம் கண்டாலே போதும். அதோடு சேர்ந்துவரும் பொருத்தம் இல்லாத சொற்சேர்க்கைகளையும் (word combinations) இனம் காண வேண்டும்.

தமிழ்-மலையாளம் போன்று மிக நெருங்கிய இலக்கணம் உள்ள மொழிகளிடையே இலக்கண ஒற்றுமையால் இயந்திர மொழிபெயர்ப்பு எளிதாக இருக்கும். இருப்பினும், போலி ஒற்றுமைகளை (false positives) கவனத்தில் கொள்ள வேண்டும். முக்கியமாக, சொற்சேர்க்கையிலும் சொற்பொருளிலும் இதைப் பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

மொழிபெயர்ப்பில் இலக்கண மாற்றம் இலக்கண அமைப்புகள் ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்குச் செல்வதை (transfer) குறிக்கிறது. இயந்திரத்தைப் பொறுத்தவரை எல்லா இலக்கணக் கூறுகளும் மாற்றம் செய்யப்படுகின்றன. ஒத்த இலக்கண அமைப்புகள் மாறுதல் (change) இல்லாமல் இடமாற்றம் செய்யப்படுகின்றன. வேறான இலக்கண அமைப்புகள் மாற்றி இடமாற்றம் செய்யபடுகின்றன. இப்படிப் பார்க்கும்போது எல்லா இலக்கண அமைப்புகளும் இடமாற்றம் செய்யப்படுகின்றன. இயந்திரத்தின் வேலைக்கு முன்னால், மனிதன் இரண்டையும் நிரல்நிறையில் அடையாளம் காட்ட வேண்டும். மலையாள இலக்கணம் தற்காலத் தமிழ் இலக்கணத்தோடு ஒத்திருப்பதால் இந்த இலக்கணதோடான ஒப்பீடே மொழிபெயர்ப்பு வேலையை எளிதாக்கும்.

இயந்திரம் மொழிபெயர்ப்பு வேலையை முடித்தபின் எதிர்பாராது வந்த பிழைகளை மனிதன் திருத்தம் செய்ய வேண்ண்டியிருக்கும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

36. கேள்வி :

இத்தனை காலமாக இந்தியாவின் ஒரே செம்மொழி என்று கூத்தாடப்பட்டு வந்த வடமொழிக்கு இல்லாத, அதேபோது தமிழுக்கு மட்டுமே இருப்பதாக, நிறுவப்பட்ட சிறப்புகள் எவை? அவை நிறுவப்பட்ட பின்தான் – வேறுவழியின்றி – நம்மை மைய அரசு ‘கண்டு’ கொண்டதாக அறிகிறேன். தொன்மை, முன்மை, எண்மை, ஒண்மை, இனிமை தனிமை, இளமை, வளமை, இறைமை, மறைமை, தாய்மை, தூய்மை, அம்மை, செம்மை, இயன்மை, வியன்மை ஆகிய பதினாறும் செம்மொழிக்கு இலக்கணம் என்று படித்தேன். இவற்றில் வடமொழி பெறத் தவறிய தகுதிகள் எவை? தமிழ் எப்படி அவற்றில் வடமொழியை (பிற உலகச் செம்மொழிகளையும்) முந்துகிறது?– வெ.சீ. ராஜு

பதில் :

செம்மொழி என்ற சொல் classical language என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையாகப் புதிதாகக் காலனிய காலத்தில் படைக்கப்பட்ட சொல். தமிழ் இலக்கண மரபில் இந்தச் சொல் கையாளப்படவில்லை. செந்தமிழ் என்ற சொல்தான் உள்ளது. இரண்டுக்கும் பொதுவானது செம் என்னும் அடை. இந்த அடைக்கு நேரான என்னும் பொருள் உண்டு (செங்கோலில் இந்தப் பொருளைக் காணலாம்). இந்தப் பொருளிலேயே இந்த அடை செந்தமிழ் என்னும் சொல்லில் வழங்குகிறது. தொல்காப்பியர் சொல்லதிகார எச்சவியலில் செந்தமிழ்ச் சொல்லே செய்யுளில் வரும் இயற்சொல் என்கிறார். இந்தச் சொல்லைச் செய்யுளில் வரும் திசைச்சொல், திரிசொல், வடசொல்லிலிருந்து வேறுபடுத்திச் சொல்கிறார். இந்தக் கருத்தின் அடிப்படையில் செந்தமிழ் செய்யுள் தமிழ் -அதாவது இலக்கியத் தமிழ்- என்று விளங்கிக்கொள்ளலாம். நேர்தமிழ் என்றால் பழைய இலக்கணம் கூறும் விதிகளிலிருந்து வழுவாத மொழி என்னும் பொருள் வந்துவிட்டது; செம்மையான மொழி என்னும் பொருள் வந்துவிட்டது. இருப்பினும் செந்தமிழின் இலக்கண வளர்ச்சி ஒரே நேர்கோட்டில் இல்லை. காலம்தோறும் மாறி வந்திருக்கிறது; நேற்றைய செம்மை வேறு, இன்றைய செம்மை வேறு.

செந்தமிழ் என்ற சொல்லுக்கு எதிர்மறையாகப் பிற்காலத்தில் வளை தமிழ் என்னும் பொருளில் (கொடுவாளில் இந்தப் பொருளைக் காணலாம்) கொடுந்தமிழ் என்னும் சொல் பிறந்தது. வீரமாமுனிவர் வளையும் தமிழைப் பேச்சு மொழியாகக் கண்டார். இன்றைய மொழியியலில் இந்தச் சொல் கிளைமொழிகளை (dialects) குறிப்பதாகக் கொள்ளலாம்.

செம்மொழியில் உள்ள செம், நேர் என்ற பொருளில் வழங்கவில்லை. Classical என்னும் ஆங்கிலச் சொல்லின் பொருளிலேயே வழங்குகிறது. இந்த ஆங்கிலச் சொல்லுக்குப் பல பொருள் உண்டு. இதன் பல பொருள்களுக்குச் செம் என்னும் அடை பொருந்தாது. இந்த அடை மொழியோடு சேர்ந்து வரும்போது, பின்வந்த மொழிகளுக்கு வரலாற்றுக் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த, அவற்றுக்கு ஆதர்சமாக விளங்கும், அவற்றுக்கு மூல இலக்கியம் படைத்த மொழி என்ற பொருளில் வழங்குகிறது. ஒரு மொழி இந்தத் தன்மைகளைப் பெறக் காலப் பழமை வேண்டும்; ஆனால் அது மட்டுமே போதாது. எழுத்து வடிவம் பெற்ற சுமேரியன் முதலான மொழிகள் இலக்கியம் படைக்காததால் செம்மொழி எனப்படுவதில்லை. அவை பண்டை மொழி என்றே சொல்லப்படும். இலக்கியம் படைத்த லத்தீன் மொழி காலத்தால் பிந்தியதானாலும் இலக்கியம் படைத்ததால், மேலே சொன்ன மற்ற தன்மைகளைக் கொண்டிருப்பதால் செம்மொழி எனப்படும். இதன் இலக்கியம் லத்தீனிலிருந்து பிறந்த மொழிகளுக்கு ஆதர்சமாக இருக்கும். அதுவே செவ்விலக்கியம். சமஸ்கிருதத்திற்கும் இந்தத் தன்மைகள் உண்டு. செவ்விலக்கியம் இல்லாமல் செம்மொழி இருக்காது. சமஸ்கிருதத்தைச் செம்மொழி என்று முதலில் அழைத்தவர்கள் காலனிய காலத்து ஐரோப்பிய இந்தியவியல் ஆய்வாளர்கள். சுதந்திர இந்திய அரசு இந்தப் பெயர் மரபைத் தொடர்ந்தது.

தமிழுக்குச் செவ்விலக்கியம் இருக்கிறது. இன்றைய தமிழ் இலக்கிய ஆசிரியர்களுக்கு இது ஆதர்சமாக இருக்கிறதா என்னும் கேள்விக்குப் பல வகையில் விடை சொல்லலாம். இருப்பினும், தமிழின் கலாச்சார வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த, தனித்தன்மை கொண்ட இதன் சங்க இலக்கியம் செவ்விலக்கியம். பின்வந்த தமிழ் இலக்கியங்கள் இதை ஏற்றும், மறுத்தும், மாற்றியும் வளர்ந்திருக்கின்றன. இந்த இலக்கியத்தைக் கொண்ட தமிழ் செம்மொழி. இது அரசாங்க அங்கீகாரத்தால் வரும் ஒன்றல்ல. சங்க இலக்கியத்துக்கும் அதன் மொழிக்கும் ஒரு குறிப்பிட்ட கால வரையறை உண்டு. இந்தக் காலத்தைத் தமிழின் செம்மொழிக் காலம் என்று சொல்ல வேண்டும். லத்தீனும் சம்ஸ்கிருதமும் தொடர்ந்து இலக்கியம் படைத்துக் – கொண்டிருக்கவில்லையாதலால் இம்மொழிகளின் செவ்வியல் தன்மையில் காலவேறுபாடு காட்டுவதில்லை. தமிழ், கிரேக்க, சீன மொழிகளில் செம்மொழிக் காலகட்டம் என்று ஒரு காலகட்டத்தைச் சொல்லலாம். இவை ஒரு காலகட்டத்தில் செம்மொழிகள்; இன்றைய காலகட்டத்தில் நவீன மொழிகள். அன்று செம்மொழியாக இருந்து இலக்கியம் படைத்து இன்று நவீன மொழியாக இருந்து இலக்கியம் படைப்பது தமிழின் சிறப்பு. கிரேக்கம், சீனம், அரேபியம் போன்ற சில மொழிகளே இந்தச் சிறப்பைப் பெற்றவை. இந்தத் தனிச் சிறப்புக்குக் காரணம் தமிழ் வளையும் மொழியாக இருந்து வளர்ந்ததே.

கேள்வியில் பட்டியலிட்டுள்ள குணநலன்கள் மொழியின் உள்ளார்ந்த தன்மைகள் அல்ல, அவை மனிதர்கள், முக்கியமாக மொழியைப் பேசுபவர்கள், மொழியின் மீது ஏற்றும் தன்மைகளே. தமிழில் நாம் சில சிறப்புத் தன்மைகளை ஏற்றிப் பெருமைப்படுவது போல், வேறு மொழிபேசுபவர்கள் தங்கள் மொழிகளில் சில சிறப்புத் தன்மைகளை ஏற்றிப் பெருமைப்படுவார்கள். மொழிகளிடையே அவற்றின் தன்மைகளைப் பற்றிய போட்டி இல்லை; மொழிகளுக்கு அந்தத் தன்மைகளைத் தருபவர்களுக்கிடையேதான் போட்டி. தமிழின் செம்மொழித் தகுதிக்கு வாரிசுகளாகிய நாம் செய்ய வேண்டிய கடமை உலக அளவில் கிளாசிக் எனப் போற்றப்படும் தகுதி பெற்ற இலக்கியத்தைப் படைப்பதே.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

35.கேள்வி: பேச்சுத் தமிழுக்கும் இலக்கியத் தமிழுக்கும் உள்ள வேறுபாடுகளை இலக்கணக் கூறுகளைக் கொண்டு நிறுவ இயலுமா? காலப்போக்கில் இவ்வேறுபாடுகள் வளர்ந்திருக்கின்றனவா? —விஜயலக்ஷ்மி

 

பதில்: இலக்கிய மொழி நடைக்கும், முக்கியமாகக் கவிதை மொழி நடைக்கும், பேச்சு மொழி நடைக்கும் எந்த மொழியிலும் வேறுபாடுகள் இருக்கும். தொல்காப்பியர் துவங்கி நம் இலக்கண ஆசிரியர்கள் செய்யுள் வழக்கையும் உலக வழக்கையும் வேறாகப் பார்க்கிறார்கள். கவிதை மொழி நடை எழுத்து மொழி நடையிலிருந்தும் வேறுபடும். இதற்கான காரணங்களில் கவிதையின் உருவத்தை அமைக்கும் யாப்பமைதியும், கவிதையின் ஓசையோட்டமும் கவிதையில் சொற்சுருக்கமும் அடங்கும். தற்காலத்தில் நாவல்களிலும் சிறுகதைகளிலும் வசனமே இலக்கிய மொழி. இந்த இலக்கிய மொழி பேச்சுத் தமிழை நெருங்கி வந்திருக்கிறது. இவற்றின் அழகியல் தன்மை வேறானாலும் இலக்கணத்தில் இவற்றின் வேறுபாடு சொல்லெழுத்து (spelling) போன்ற மேற்போக்கான அம்சங்களிலேயே பெரும்பாலும் இருக்கிறது.

கேள்வியில் உள்ள இலக்கியத் தமிழ் இன்றைய கட்டுரைகளில் வழங்கும் தமிழைக் குறிக்கிறது என்று எடுத்துக்கொள்வோம். பேச்சுத் தமிழ் வட்டாரம் சார்ந்த, சாதி சார்ந்த பேச்சுகளை அல்லாமல் அனைவரையும் சார்ந்த பொதுப் பேச்சுத் தமிழைக் குறிக்கிறது என்று எடுத்துக்கொள்வோம். இரண்டுக்கும் இலக்கண வேறுபாடுகள் உண்டு. இந்த வேறுபாடுகள் இலக்கணத்தின் பல நிலைகளில் உண்டு. சொல்லெழுத்தில் உள்ள வேறுபாடு அனைவரும் அறிந்த ஒன்று. இறுதி மெய் கெடல் (அவ, மாங்கா), உகரம் மிகுதல் (கல்லு, ஊரு), மெல்லெழுத்து நீங்கி உயிர் மெல்லொலி பெறுதல் (மரம்) ஆகிய விதிகள் மூலம் பேச்சுத் தமிழில் சொற்கள் மெய்யெழுத்தில் முடிவதில்லை; ஒலிகள் முன் பின் வரும் வேறான ஒலிகளோடு ஒருமைப்படுகின்றன (assimilate) (வெட்கம் = வெக்கம், தம்பிக்கு = தம்பிக்கி, கொன்று = கொன்னு, அழிந்து = அழிஞ்சு, இடம் = எடம், உடம்பு = ஒடம்பு); மும்மெய்மயக்கம் இரு மெய்மயக்கமாகிறது (பார்க்க = பாக்க, காய்ச்சல் = காச்சல்); முன் அண்ணத்தில் எழும் வேறுபட்ட ஒலிகளின் எண்ணிக்கை குறைகிறது (த,ற,ட = த,ட: காற்று = காத்து, ந,ன,ண = ன,ண: வெந்நீர் = வென்னி, ர,ற = ர (கரி, கறி = கரி), இப்படி ஒலி அமைப்பில் பொதுமையான வேறுபாடுகள் பேச்சுத் தமிழில் உள்ளன. இவை பிழைகள் அல்ல; நாக்கின் அசைவின் சிரமத்தைக் குறைத்து உச்சரிப்பை எளிமையாக்கும் மொழி மாற்றங்கள்.

ஒரு சொல்லின் உருபுகளை இணைக்கும் சாரியைக்குப் பேச்சுத் தமிழில் இடம் இல்லை. (வீட்டிற்கு = வீட்டுக்கு, அதனை = அதை, கேட்டனர் = கேட்டாங்க). சொல்லியலில் அஃறிணையில் ஒருமை, பன்மை என்னும் எண் வேறுபாடு மறைந்துவிட்டது (வாரா = வராது). எழுவாய்க்குத் தக்கபடி பயனிலையின் முடிவு விகுதி இல்லாமல் எல்லா எழுவாய்க்கும் ஒரே பயனிலை விகுதி பேச்சுத் தமிழில் உள்ளது (தம்பி / அம்மா என்ன சொன்னாப்லே). உயர்திணைக்கு அஃறிணை பிரதிப்பெயரும் பயனிலை விகுதியும் உள்ளது (தம்பி ஏன் இப்படி சொல்லுது; அது அப்படித்தான் சொல்லும்). உயர்திணையில் பலர் பாலில் ஆண்-பெண் பால் வேற்றுமை தோன்றியிருக்கிறது ( மகனுக, மகளுக). அஃறிணை வினை முடிபில், எதிர்கால வினையில் இருப்பது போலக் காலத்திற்கும் திணைக்கும் இரண்டு உருபுகளுக்குப் பதில், இறந்த கால, நிகழ் கால வினையில் ஒரே உருபு இருக்கிறது (ஓடும் = ஓடும், ஓடிற்று = ஒடுச்சு, ஓடுகிறது = ஓடுது). தொழிற்பெயரிலும் வினையாலணையும் பெயரிலும் எதிர்கால உருபுக்குப் பதில் நிகழ்கால உருபு உள்ளது; பொருளில் வேறுபாடு இல்லை (தூங்குவது = தூங்குறது, தூங்குபவர்கள் = தூங்குறவங்க) இவை போன்று வேறு மாற்றங்களும் பேச்சு மொழியில் இருக்கின்றன. இவற்றில் பலவும் இலக்கணத்தை எளிமைப்படுத்தும் மாற்றங்களே. பேச்சுத் தமிழின் சில இலக்கணக் கூறுகள் இலக்கிய மொழியில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றன.

அவ காபியா குடிக்கிறா, நாளைக்கி அவ வருவாளா இருக்கும் என்பது போன்ற, -ஆ (ஆக) என்னும் உருபைப் புதிய வகையில் பயன்படுத்தும் வாக்கியங்கள் பேச்சுத் தமிழில் இடம் பெற்றுள்ளன. இது போன்ற இலக்கியத் தமிழில் இல்லாத வாக்கிய அமைப்புகள் பேச்சுத் தமிழில் குறைவே. பேச்சுத் தமிழில் இல்லாத, இலக்கியத் தமிழிலே மட்டுமே உள்ள வாக்கிய அமைப்புகள் அதிகம். ‘கோபம் வந்தது, கோபப்பட்டான்’ இரண்டு மொழிக்கும் பொது; ‘கோபம் அடைந்தான்’ இலக்கியத் தமிழுக்கு மட்டுமே உரியது.

சொற் களஞ்சியத்தில் உள்ள வேறுபாடு இலக்கணத்தின் கீழ் வராது என்பதால் அதை இங்கே தரவில்லை.

மேலே சொன்ன இலக்கணக் கூறுகள் இன்றைய இலக்கியத் தமிழுக்கும் பேச்சுத் தமிழுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளில் சில. ஒவ்வொரு கால கட்டத்திலும் இப்படிச் சில வேறுபாடுகள் இருக்கும். பழைய காலப் பேச்சுத் தமிழுக்கு நம்மிடம் ஆதாரம் இல்லை. கல்வெட்டுத் தமிழில் பேச்சுத் தமிழின் செல்வாக்கு இருக்கிறது எனலாம். கல்வெட்டுகள் சில வேறுபாடுகளைக் கோடி காட்டுகின்றன. கல்வெட்டுத் தமிழுக்கென்று ஒரு நடை இருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. கல்வெட்டுத் தமிழின் இலக்கணக் கூறுகள் எல்லாம் பேச்சுத் தமிழின் கூறுகள் என்று சொல்ல முடியாது. இலக்கியத் தமிழிலும் காலந்தோறும் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இவற்றில் சில பேச்சுத் தமிழின் தாக்கத்தால் ஏற்பட்டிருக்கலாம்; சில இலக்கிய மொழி வளர்ச்சியால், பிற மொழித் தாக்கத்தால் ஏற்பட்டிருக்கலாம். மொழி இலக்கணத்தில் சுய வளர்ச்சியால் வந்த மாற்றத்தையும் பிற மொழித் தாக்கத்தால் வந்த மாற்றத்தையும் பிரித்தறிவது எளிது அல்ல.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

34.கேள்வி:அல்ல என்ற சொல்லைப் பன்மையில் மட்டுமின்றி, ஒருமையிலும் பலர் பயன்படுத்துகிறார்கள் (அப்படி அல்ல, நான் சொல்வது அது அல்ல); இல்லை, அல்ல, அன்று ஆகிய சொற்கள், எந்தெந்த இடங்களில் இடம் பெற வேண்டும்? – அண்ணாகண்ணன்

பதில்: தமிழ் வாழும் மொழி. உயிருள்ள எதுவும் வளரும்; மாறும். மொழியில் தோன்றும் மாற்றங்களும் வளர்ச்சியின் வெளிப்பாடுகளே. நம் வீட்டுப் பையனுக்கு மீசை வளருவது தடுக்க முடியாத இயற்கையான வளர்ச்சி. மீசை வளர வேண்டாம் என்று மனிதன் விதி வகுக்க முடியாது. மீசையை வைத்துக் கொள்வதும் எடுப்பதும் ஒவ்வொருவரின் ஆளுமையைப் பொறுத்தது. நம் வீட்டுப் பெண் தன் நீண்ட சடையைக் குட்டையாக வெட்டி விரித்துத் தொங்க விட்டுக்- கொள்ளலாம். மற்றவர்களைப் பார்த்து அவள் இப்படித் தன் முடியை மாற்றி அமைக்கலாம். இதை முடியைப் பேணும் வசதி காரணமாகவோ அழகுணர்ச்சி காரணமாகவோ அவள் செய்யலாம்.

மொழியில் வரும் மாற்றங்களுக்கும் சில காரணங்கள் உண்டு. ஒன்று இயற்கையான வளர்ச்சி. மற்றொன்று, மற்றொரு மொழியுடன் தொடர்பு. இரண்டையும் தடுக்க முடியாது. ஆனால், மாற்றங்களைத் தடுக்க முயல வேண்டுமா என்பதும், மாற்றங்களை ஏற்றுக் கொள்பவர்களைத் கண்டிக்க வேண்டுமா என்பதும் கேள்விகள். முன் காலத்தில் சீனப் பெண்களின் பாதங்களைக் குறுகிய காலணிகளால் இறுகக் கட்டி நடையை நளினமாக்கும் வழக்கம் தவறானது என்பது இப்போது எல்லாரும் ஒத்துக் கொள்ளும் கருத்து. பெண்ணடிமை கூடாது என்னும் கருத்தாக்கத்தால் இந்த ஒருமித்த கருத்து உருப்பெற்றது. இதைப் போல் மொழியின் காலைக் கட்டிப் போடுவதிலும் மொழி பற்றிய கலாச்சாரப் பார்வையின் பங்கு இருக்கிறது.

மேலே சொன்ன மாதிரியான சமூகப் பழக்கங்களில் மாற்றங்களை ஒப்புவதும் ஒப்பாததும் பெண்ணைப் பற்றிய நம் கலாச்சார நம்பிக்கைகளை (cultural beliefs) பொறுத்தது. மொழி மாற்றத்தை ஒப்புவதும் ஒப்பாததும் தமிழ் பற்றிய நம் கலாச்சார நம்பிக்கைகளைப் பொறுத்தது. என்றும் மாறாத தமிழ் என்பது இப்படி ஒரு நம்பிக்கை. இந்தப் பின்னணியில் பார்க்கும்போது தமிழ் இலக்கண மாற்றங்கள் பற்றிய கேள்விகளுக்கு விடையை மொழி வடிவத்தைத் தரமிடுவதில் தேட முடியாது. மொழி பற்றிய பழம் ஆசிரியர்களின் கருத்துகளிலும் தேட முடியாது, தமிழ் இலக்கண ஆசிரியன் தமிழின் அமைப்பை விளக்குவான்; தமிழ் பேசும் மக்களே தமிழை உருவாக்குகிறார்கள்; தமிழில் மாற்றங்களை உண்டு பண்ணுகிறார்கள்.

இவர்கள் இலக்கண மாற்றங்களை எப்படி உள் வாங்கிக் கொள்கிறார்கள்; மாற்றங்கள் இவர்களுக்கு என்ன பயன் தருகின்றன என்னும் கேள்விகளே மாற்றங்களை ஒப்புவது பற்றி விடை அளிக்கும்.. இருப்பினும், பல மாற்றங்கள் மக்களின் உணர்வு நிலைக்கு வராமலே இயல்பாக நடக்கும். அப்படி நடக்கும் போது முடிவு செய்யும் அவசியம் மக்களுக்கு இல்லை.. மொழி வளர்ச்சி பற்றிய சில கலாச்சாரக் கொள்கைகள் மாற்றத்தை அழிவுப் பாதை என்று நினைக்க வைக்கலாம். ஆனால், தமிழ் பற்றிய நம் கலாச்சாரக் கொள்கை தன்னம்பிக்கை நிறைந்ததாக, ஆரோக்கியமானதாக இருந்தால் இத்தகைய பயம் வராது.  

இப்போது மேலே உள்ள கேள்வியை வரலாற்று ரீதியில் பார்க்கலாம். அப்படிப் பார்க்கும்போது இலக்கண மாற்றத்தின் இயல்பான வளர்ச்சி தெரியும். தமிழில் எழுவாய்க்கும் பயனிலைக்கும் பால் இயைபு உண்டு. இந்த இயைபு காலப்போக்கில் மாறுகிறது. மூலத் திராவிடத்தில் படர்க்கையில் பெண்பாலுக்கும் அஃறிணைக்கும் பால் இயைபில் வித்தியாசம் இல்லை; இரண்டுக்கும் ஒரே விகுதியே. இன்றைய தெலுங்கில் இந்த வழக்கு இருக்கிறது. தமிழ் தனி மொழியானபோது பயனிலையில் பெண்பால் தனி விகுதி பெற்றது. இலக்கணத்தைப் பொறுத்தவரை பெண் மனித வர்க்கத்தில் சேர்க்கப்பட்டாள்! சங்கத் தமிழில் பெயர்ப்பயனிலை எழுவாய்க்கு ஏற்றபடி மூவிட வேற்றுமை காட்டும். எடுத்துக்காட்டு: யான் மலையென், நீ மலையை, அவன் மலையன். இடைக்காலத் தமிழில் மூவிட எழுவாய்க்கும் பயனிலை ஒன்றே (நான் / நீ / அவன் மலையன்). எதிர்மறைப் பயனிலையும் இப்படியே: யான் பொருள் இலேன், நீ பொருள் இலாய், அவன் பொருள் இலான். இடைக்காலத்தில் பல பயனிலை இயைபு மறைந்து மூவிடத்திற்கும் இல்லான் / இல்லாதான் என்ற ஒன்றே பயனிலை. இக்காலத் தமிழில் இந்தப் பயனிலையின் வடிவம் இல்லாதவன். இக்காலத் தமிழில், அஃறிணையில் ஒருமை பன்மை வேறுபாடு மறைந்து வருகிறது. (பேச்சுத் தமிழில் ஆண்பால் பன்மை(எ-டு மருகன்கள்), பெண்பால் பன்மை (எ-டு.மருகள்கள்), ஆண்பால் மரியாதை ஒருமை (அவர்), பெண்பால் மரியாதை ஒருமை (அவங்க) என்று பால் பாகுபாடும் பயனிலை இயைபும் மாறியிருக்கின்றன). ஒருமைப் பயனிலையைப் பன்மை எழுவாயோடு இயைபுபடுத்தும் வழக்கு மிகுந்திருக்கிறது. சில எடுத்துக்காட்டுகள்: எனக்குக் காய்ச்சலும் தலைவலியும் இருக்கிறது, மழையும் பனியும் கொட்டியது, நான் வந்து நான்கு நாள் ஆகிறது, காய்ச்சலும் தலைவலியும் வராது, புத்தகங்கள் நல்லதாகவும் பிடித்ததாகவும் இருக்க வேண்டும்.

இக்காலத் தமிழில் காலம் காட்டாத எதிர்மறைப் பயனிலை பால் பாகுபாடு காட்டாமல் ஒரே வடிவம் கொண்டிருக்கிறது. இன்று, இல என்னும் ஒருமை, பன்மை வடிவங்களுக்குப் பதில் எல்லா எழுவாய்க்கும்இல்லை என்னும் ஒரே பயனிலைதான். இதே போல் அல்லன், அல்லள், அன்று, அல்ல என்னும் பால் காட்டும் பல பயனிலைகளுக்குப் பதில் அல்ல என்னும் ஒரே பயனிலை வடிவம் தான். அல்லபால்காட்டாத பயனிலை என்று சொல்ல வேண்டும். தமிழ் இலக்கண மரபை ஒட்டிப் பெயரிட வேண்டுமென்றால் விரவு வினை எனலாம். மரபிலக்கணம் விரவுப் பெயருக்கு இடம் தரும்போது விரவு வினைமுற்றை ஏற்றுக் கொள்ளலாம்.

இன்றையப் பேச்சு வழக்கில் அக்கா சொல்கிறாள்தம்பி சொல்கிறான் என்பதைவிட (இதுஎன்பனவற்றைவிட இயல்பாக உள்ளது!) அக்கா சொல்லுது, தம்பி சொல்லுது என்பதில் ஒரு பாந்தம் இருக்கிறது. எழுவாய்-பயனிலை இயைபு இல்லாததால் இந்த வாக்கியங்கள் பிழை என்று சொல்ல மாட்டோம்.

கேள்வியில் உள்ள மொழி வழக்கு மாற்றம், மேலே சொன்ன வரலாற்றின் தொடர்ச்சியாக வந்த, இயற்கையான தமிழ் வளர்ச்சி. பெயர்ப் பயனிலையில் மூவிட வேற்றுமை மறைந்தது போல் காலம் காட்டாத எதிர்மறைப் பயனிலையில் மூவிட வேற்றுமையும், ஈரெண் வேற்றுமையும் மறைந்து அல்லஎல்லா எழுவாய்க்கும் பொதுவாக வருகிறது. . இந்த மறைவு தமிழ் இலக்கணத்தைக் கற்பதற்கு எளிமையாக்குகிறது. எளிமையாக்கம் மொழி வரலாற்றில் மொழி மாற்றத்தின் உந்து சக்திகளில் ஒன்று

இல்லை ஒன்றின் இருப்பை எதிர்மறித்து உரைப்பது (இங்கே மரம் இல்லை). அல்ல ஒன்றின் அடையாளத்தை எதிர் மறித்து உரைப்பது (இது மரம் அல்ல). இது பொருளடிப்படையில் அமைந்த வேறுபாடு. இந்தப் பொருள் வேறுபாடு இக்காலத் தமிழில் மறைந்து வருகிறது (இங்கே மரம் இல்லை,இது மரம் இல்லை). இரண்டு சொற்களின் பொருள் வேறுபாடு மறைந்து ஒரே பொருளாவது மொழிகளில் காணக்கிடைக்கும் மாற்றம். கொடு, தா என்ற வினைகள் பொருளை வாங்குபவன் படர்க்கையா அல்லவா என்பதைப் பொறுத்துப் பயன்படுத்தப்படும் என்னும் வேறுபாடு பிற்காலத் தமிழில் மறைந்து விட்டது. இங்கே பொருள் மாற்றம் இலக்கண வேறுபாட்டைச் சார்ந்தது. அல்லஇல்லை என்ற சொற்களின் பொருள் மாற்றம் ஒரு இலக்கண வேறுபாட்டைப் போக்குகிறது.  இலக்கணம் மாறுவது மொழியின் இயற்கை என்று மேலே பார்த்தோம்.

‘நான் மாற்றத்தின் எதிரி இல்லை’ என்று தமிழர்கள் இயல்பாக எழுதினால் அது தமிழ் இல்லையா? (இன்றா, அன்றா அல்லவா என்பதை விட இல்லையா இயல்பான தமிழாகத்தான் இருக்கிறது!).

பழைய வழக்கு மட்டுமே நல்லது என்று சொல்லத் தேவை இல்லை. புதிய வழக்கும் தமிழுக்கு ஏற்ற வழியாக இருக்கலாம்.  ‘மாறுவது தமிழ்’ என்னும் புதிய ஆத்திசூடியை ஏற்றுக் கொள்வோம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

 33.ஒன்று என்ற சொல்லைக் கொச்சை வழக்கில் எழுதும்போது, ஒன்னு / ஒண்ணு என இரு வகையாக எழுதுகிறார்கள். இது போன்றே மூன்று என்பதை மூனு / மூணு என்றும் தோன்றுகிறது என்பதை தோனுது / தோணுது என்றும் எழுதுகிறார்கள். இவற்றில் எது சரி?

அண்ணாகண்ணன்

பதில்: பேச்சுத் தமிழைக் கொச்சை வழக்கு என்னும்போது அது தரமற்றது என்னும் பொருள் தொனிக்கிறது. கொச்சை வழக்கு என்னும் சொல்லைத் தரமற்ற பேச்சைக் குறிக்கப் பயன்படுத்தலாம். பேச்சே தரமற்றது என்னும் கருத்து மொழி பற்றிய தன்வயமான கொள்கையின் (ideology) அடிப்படையில் வருவது. பள்ளியில் படிக்கும் எழுத்து உயர்ந்தது, வீட்டில் படிக்கும் பேச்சு தாழ்ந்தது என்பது பரவலாக உள்ள மொழி பற்றிய ஒரு நம்பிக்கை. பரவலாக இருப்பதால் ஒரு நம்பிக்கை அறிவாதாரமானது என்று சொல்ல முடியாது.

மொழி வடிவங்களில் உயர்வு, தாழ்வு இல்லை. அவற்றின் உயர்வு, தாழ்வு மொழியைப் பயன்படுத்துபவர்களின் சமூக அந்தஸ்தைப் பொறுத்து அமைகிறது. பாமரரின் மொழி தாழ்ந்தது; கற்றோரின் மொழி உயர்ந்தது என்னும் கருத்து உருவாகிறது. வாழ்க்கையில் உயர்வடையக் கற்றோரின் மொழி தேவை என்னும்படி சமூக அமைப்பு இருப்பதால், அவர்கள் மொழிக்கு அந்தஸ்து கிடைக்கிறது. இது தனி மொழிகளுக்கும் பொருந்தும்; ஒரு மொழியின் வகைகளுக்கும் பொருந்தும். தரமான மொழி வகை என்று சொல்லும்போது சமூக அந்தஸ்து உள்ள மொழி வகை என்றே பொருள். மொழியின் வடிவத்துக்கும் தரத்துக்கும் தொடர்பில்லை. எழுத்துத் தமிழ் தரமானது என்னும் கருத்து அதற்குச் சமூகம் தரும் அந்தஸ்திலிருந்தே பிறக்கிறது. சென்ற நூற்றாண்டின் துவக்கத்தில் பிராமணர்களின் பேச்சு வழக்கு தரமானது என்னும் கருத்தில் சமூக உயர்வை நாடிய உயர் சாதியினர் அந்தப் பேச்சு வழக்கைத் தங்கள் பேச்சில் பிரதிபலித்தார்கள். பிராமணர்களின் சமூக உயர் நிலை மாறியபின் அவர்கள் பேச்சின் அந்தஸ்தும் குறைந்தது. இன்று தரமான பேச்சுத் தமிழ் பிராமணர் அல்லாத உயர் சாதியினரின் பேச்சை ஒட்டியே இருக்கிறது.

சென்ற நூற்றாண்டின் பிற்பாதியில் படித்தவர்கள் தங்களுக்கிடையே பேசும் பொதுப் பேச்சுத் தமிழ் உருவாகியது. இது வட்டாரம் சார்ந்த, சாதி சார்ந்த, தொழில் சார்ந்த வழக்குகளிலிருந்து தனிப்பட்டு நிற்பது. இதுவே தரமான பேச்சுத் தமிழ். இந்தப் பேச்சுத் தமிழுக்குச் சமூக அங்கீகாரம் கூடிவருகிறது. பொதுச் சமூகக் கதைகளைக் கொண்ட திரைப்படங்களில் இந்தத் தமிழ் பயன்படுகிறது. இது எழுத்து வடிவமும் பெறுகிறது. கதைகளில் வட்டாரம், சாதி சாராத பொதுநிலைக் கதை மாந்தர்களின் பேச்சு அவர்களுடைய உரையாடல்களில் எழுதப்படுகிறது. வார இதழ்களில் வம்புச் செய்திகளிலும் சிரிப்புத் துணுக்குகளிலும் பேச்சுத் தமிழை எழுதுவது பெருகிவருகிறது. திரைப்படங்களின் பெயரும், தினமலர் போன்ற சில நாளிதழ்களில் செய்தித் தலைப்புகளும் சில சமயம் பொதுப் பேச்சுத் தமிழில் இருக்கின்றன. கற்றுக்கொடுத்தலில் பேச்சுத் தமிழுக்கு இடம் சிங்கப்பூர் பள்ளிகளில் துவங்கியிருக்கிறது.

பேச்சு வழக்குச் சொற்களுக்கு எழுத்து வடிவம் கொடுப்பது முற்றிலும் புதிய வழக்கு அல்ல. இந்த வழக்கிற்கு அங்கீகாரம் அவ்வப்போது கிடைத்திருப்பதைத் தமிழ் மொழி வரலாற்றில் காணலாம். சில எடுத்துக்காட்டுகள்: குத்து (குற்று). கழிசல் (கழிதல்), இளிச்சவாயன் (இளித்தவாயன்), புடவை (புடைவை), பிஞ்சி (பிஞ்சு), இயக்குனர் (இயக்குநர்), பதிமூன்று (பதின்மூன்று), இருபத்திஒன்று (இருபத்தொன்று), முன்னூறு (முந்நூறு)

பொதுப் பேச்சுத்தமிழுக்குச் சமூக அங்கீகாரம் கிடைத்து, அதை எழுதும் தேவைகள் பெருகிவரும் வேளையில், இந்தத் தமிழுக்குத் தரமான எழுத்துக் கூட்டல் (spelling) உள்ள சொல்வடிவத்தை உருவாக்கிச் சமூகம் ஏற்றுக்கொளவது இன்றைய தேவை. இந்த நோக்கத்தில் மேலே உள்ள கேள்வியைப் பார்க்கலாம். எழுத்துத் தமிழ் பேச்சில் எப்படி மாறுகிறது என்பதில் நின்றுவிடாமல், பேச்சை எப்படி எழுதுவது என்று பார்க்கலாம்.

ஆனால், கேள்வி முதல் நோக்கத்தைக் கொண்டது. எழுத்துத் தமிழுக்கும் பேச்சுத் தமிழுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் முறைப்பாடானவை; விதிகளுக்குள் அடங்குபவை. எழுத்தில் ன்ற் என்னும் ஒலித்தொடர் பேச்சில் மெல்லொலியாக இருப்பது ஒரு சமன்பாடு. இந்த ஒலித்தொடரின் முன்னுள்ள உயிர் நெடிலாக இருந்தால் மெல்லொலி தனித்தும் (மூன்று, தோன்று), குறிலாக இருந்தால் (ஒன்று, கொன்று, என்று) இரட்டித்தும் இருக்கும். இந்த மெல்லொலியின் ஒலித்தன்மை என்ன என்பதே கேள்வி. உச்சரிப்பைப் பொறுத்தவரை இந்த ஒலி னகரத்திற்கும் ணகரத்திற்கும் இடைப்பட்டது. இந்த ஒலிக்குத் தமிழ் எழுத்து இல்லை. இருக்கும் இரண்டு எழுத்துகளில் ணகரம் ஏற்புடையதாகக் கருதப்பட்டுப் பெருவழக்கில் இருக்கிறது (மூணு, தோணு, ஒண்ணு). சொல் வினையாக இருந்து குறில் இருந்தால் னகரம் பெருவழக்கில் இருக்கிறது (கொன்னு, ன்னு). சில கிளைமொழிகளில் (சேலம் வட்டாரப் பேச்சு இவற்றில் ஒன்று) னகர, ணகரம், லகர, ளகரம் இவற்றுக்கிடையே ஒலிப்பில் வேறுப்பாடு இல்லை. இந்தக் கிளை வழக்குகளை எழுதும்போது முதலில் உள்ள சொற்களை மூனு, தோனு, ஒன்னு என்று எழுதலாம்.

முன்னால் சொன்ன எழுதும் வழக்கையே பேச்சுத் தமிழின் தரப்படுத்தப்பட்ட எழுத்து வடிவமாக ஏற்றுக்கொள்ளலாம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

32.

திரு தமிழன்பன் அவர்கள் எழுப்பிய கேள்வி :

செம்மொழியின்  இன்றைய பயன் அதிலமைந்த  செவ்விலக்கியம் இன்றைய இலக்கியத்திற்கு  ஆதர்சமாக இருக்கலாம் என்பது மட்டும்தானா?

பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்:

ஒரு சமூகத்தின் பண்பாட்டுச் செயல்களில் செம்மொழியின் ஆதர்சம் முக்கிய  பங்கு வகிக்கிறது. ஆதர்சம்  வெளிப்பட இலக்கியம் ஒரு  இடம். தமிழின் செவ்விலக்கியத்தின் சிறப்பால் அதன் படைப்புத் திறன்களிலிருந்து இன்றைய தமிழ் இலக்கியம் எடுத்துச் சோதனை செய்ய அதிகப்படியான வாய்ப்பு இருக்கிறது.

செம்மொழியின்  ஆதர்சத் தாக்கம் அறிவுப்  படைப்பிலும் இருக்கலாம். ஐரோப்பிய அறிவுத் துறை வளர்ச்சியில், கிரேக்கம், லத்தீன் ஆகிய செம்மொழிகளில் உள்ள சிந்தனைகளின் தாக்கத்தையும் தொடர்ச்சியையும் காணலாம். ஒரு துறையின் உதாரணத்தை மட்டும் தருகிறேன். தற்கால மொழியியலில் சாம்ஸ்கியின் இல்க்கணக் கொள்கை புதியது; செல்வாக்கு மிகுந்தது. அதன் அடிப்படைக் கருத்து, ஒரு மொழியைப் பேசும் எல்லோருடைய மனதிலும் அதன் அடிப்படை இலக்கண அறிவு உள்ளார்ந்து இருக்கிறது; சூழலிருந்து புலன்களின் மூலம் கற்றுப் பெறுவது மேல் மட்ட அறிவு மட்டுமே என்பது. இது கி.மு, நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த பிளேட்டோ என்ற கிரேக்கத் தத்துவ அறிஞன் எழுப்பிய ‘நமக்குத் தெரிந்தது நமக்கு எப்படித் தெரிகிறது?’ (‘How do we know what we know?’) என்ற கேள்விக்கு மொழியறிவைப் பொறுத்தவரை சாம்ஸ்கி தரும் விடை. இந்த்க் கேள்விக்குப் பதிலளித்த பதினேழாம் நூற்றாணடைச் சேர்ந்த, நவீன அறிவியலின் தந்தை என்னும் புகழ்பெற்ற, பிரெஞ்சு தத்துவ அறிஞன் டாஸ்கர்ர்ட் (Descartes) உள்ள்ளார்ந்த அறிவு (innate knowledge) என்ற ஒன்று இருக்கிற்து என்றார். இந்தக் கருத்தைச் சாம்ஸ்கி இலக்கண அறிவை விளக்கப் பயன்படுத்துகிறார். இப்படி ஐரோப்பிய செம்மொழிக் காலத்தில் எழுப்பிய ஒரு கேள்வி பல நூற்றண்டுகளாகத் தொடர்ந்து பல விதங்களில் பதிலளிக்கப்ப்பட்டுப் புதிய அறிவியல் கொள்கைகள் தோற்றுவிக்கப்பட்டிருக்கின்றன.

தமிழில் இத்தகைய  அறிவுத் தொடர்ச்சிக்கு  வாய்ப்பு குறைவு. சமயம் சாராத, அறிவு சார்ந்த தத்துவச் சிந்தனை தமிழில் தனியாக இல்லை. இலக்கியத்தில் ஆங்காங்கே அறிவுச் சிந்தனைச் சிதறல்களை ஒரு வேளை காணக் கூடும். இவற்றையும் அறிவுத் துறைகளில் ஈடுபட்டுளள தமிழ் அறிந்தவர்கள் கண்டு கொண்டு புதிய கொள்கைச் சிந்தனைகளை முன் வைப்பதில்லை. இவர்களுக்குச் செம்மொழித் தானத்தில் இருப்பது ஆங்கிலமே. மரபுத் தமிழ் இலக்கணத்தில் இலக்கணம் பற்றிய சில பொது உண்மைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. தமிழ் அறிந்த மொழியியலாளர்கள் அவற்றில் துவங்கிப் புதிய இலக்கணக் கொள்கைகளை முன் வைப்பதில்லை. இவர்கள் சாம்ஸ்கியின் இலக்கணக் கருத்துகள் தொல்காப்பியத்தில் இருக்கின்றன என்று சொல்வதிலேயே விருப்பம் காட்டுவார்கள். அதாவது, பழையதிலிருந்து புதியதை உருவாக்காமல் புதியதைப் பழையதில் பார்ப்பதில் தான் இவர்களுக்கு ஆர்வம். ‘எனக்கு இன்று தெரிந்தது தொல்காப்பியருக்கு அன்றே தெரிந்திருந்தது’ என்று சொல்வது அவரைச் சிறுமைப் படுத்துவது ஆகும். மரபு வழி இலக்கண அறிஞர்கள் ‘தொல்காப்பியர் எல்லாம் சொல்லி விட்டார்; இனி புதிதாகச் சொலவதற்கு ஒன்றும் இல்லை’ என்று நின்று விடுவார்கள். இது தமிழரின் அறிவு வளர்ச்சித் திறனைச் சிறுமைப் படுத்துவது ஆகும்.

செந்தமிழில் ஒழுக்கம் சார்ந்த அறக் கருத்துகள் இருக்குமளவு அறிவு சார்ந்த தத்துவக் கருத்துகளின் வளர்ச்சி குறைவாக இருப்பதாலும், இருக்கும் அறிவையும் முற்றும் முடிந்த முடிபாகப் பார்க்கும் கலாச்சார நோக்கு இருப்பதாலும் தமிழ்ச் செம்மொழி தமிழில் புதிய அறிவு உருவாவதற்கு ஆதர்சமாக் இல்லை

மொழியின்  உள்ளடக்கம் மட்டுமல்ல, மொழியின் மீதும் செம்மொழியின் வீச்சு இருக்க வாய்ப்பு உண்டு. இது வழக்கிழந்து போன இலக்கண வடிவங்களை உயிர்ப்பிப்பது அல்ல. லத்தீன் இலக்கணம் இன்றைய ஆங்கிலத்திற்குப் பொருந்தாது. ஆனால், அறிவியல் துறையின் சொல்லாக்கத்தில் செம்மொழிகளான லத்தீனுக்கும் கிரேக்கத்துக்கும் இன்று பங்கு இருக்கிறது. தமிழிலும் கலைச்சொல் ஆக்கத்தில் செம்மொழிக் கால இலக்கியங்களும் ஆவணங்களும் பயன் படுத்தப்படுகின்றன. ஆனால் ஒரு முக்கியமான வேறுபாடு இருக்கிறது. ஆங்கிலத்தைப் பொறுத்தவரை செம்மொழி தரும் கலைச் சொற்கள் அன்றாட மொழி வழக்கிற்காக அல்ல; சிறப்புப் பயிற்சி தேவைப்படும் துறைகளில் வல்லுநர்கள் பயன்படுத்தும் நிலையிலேயே அவை இருக்கின்றன். மேலும், தமிழ்ச் சொற்கள் தமிழ்ச் சமூகத்தில் அறிவுத் துறை வல்லுநர்களால் அவர்கள் ஆய்வுக் கருத்துகளை வெளியிட உருவாவதில்லை. அவர்களாலோ, த்மிழ்ப் பயிற்சி பெற்றவர்களாலோ ஆங்கிலக் கலைச் சொற்களின் மொழி பெயர்ப்பாகவே உருவாகின்றன. இந்த அளவில் கலைச் சொறக்ளில் தமிழ்ச் செம்மொழியின் ஆக்கம் சுயம்பாக வரும் ஒன்றல்ல; பரந்த பயன்பாட்டில் உள்ள ஒன்றும் அல்ல.

தமிழ்ச் செம்மொழியின் சிறப்பு அதைப் போற்றிப் புகழவதில் இல்லை; அந்த மொழி இன்றைய தமிழ் மொழிக்கும் தமிழரின் சிந்தனைக்கும் பயன் படும் விதத்திலும் தரத்திலுமே இருக்கிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

 31.செம்மொழி இளம் அறிஞரும் பச்சையப்பன் கல்லூரியின் தமிழ் இணைப் பேராசிரியருமான முனைவர் வா.மு.சே. ஆண்டவர் எழுப்பிய கேள்வி – 5:

செம்மொழித் திட்டத்தின் கீழ் செய்யக்கூடிய பணிகளைப் பற்றி உங்கள் கருத்துகள் என்ன?

பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்:

ஒரு செம்மொழிக்குச் செவ்விலக்கியம் இருக்கும். தமிழ் எழுதப்படுவதற்கு முன்னால் எழுதப்பட்ட சில மேற்காசிய மொழிகள் செம்மொழிகள் என்று கருதப்படுவதில்லை. இவற்றில் செவ்விலக்கியம் இல்லாததும் இதற்கு ஒரு காரணம். செவ்விலக்கியம் என்னும்போது தத்துவம் போன்ற புனைதல் இல்லாத எழுத்துகளும் அடங்கும். தமிழில் முதல் இலக்கியம் தோன்றிய காலத்தில் இத்தகைய எழுத்துகள் இல்லையென்றாலும் கவிதை இல்க்கியமே செம்மொழித் தகுதிக்குப் போதும்.

ஒரு இல்க்கியம் உன்னதமாக்வும் பின்வரும் இலக்கியங்களைப் படைப்போருக்கு ஒரு ஆதர்சமாக்வும் இருக்கும்போதே செவ்விலக்கியம் எனப்படும். இந்தத் தகுதி இலக்கியத்தின் காலப் பழமையால் மட்டும் வருவதல்ல. இக்காலத் த்மிழ் இலக்கிய ஆசிரியர்க்ளிடம் மேலைநாட்டு எழுத்தாளர்களின் செல்வாக்கு காணப்படுகிறதே தவிர தமிழ்ச் செவ்விலக்கியத்தின் செல்வாக்கு காணப்படவில்லை. இன்றைய படைப்பாளிகளுக்கு செவ்விலக்கியத்தில் பயிலரங்கு நடத்தலாம்.

செவ்விலக்கியம், சில பண்டிதர்கள் நினைப்பதைப் போல, நவீன இலக்கியத்துக்கு மாற்று அல்ல; அதற்கு உரம். இன்று த்மிழ் இலக்கிய விமரிசனம் மேலை நாட்டு இலக்கியக் கொள்கையின் அடிப்படையிலேயே நடக்கிறது. விமரிசனத்தில் தமிழ்ச் செவ்விலக்கியக் கொள்கைகளின் ப்யன், பொருத்தம் பற்றி விமரிசனப் பயிலரங்குகளில் விவாதிக்கலாம். தமிழ்ச் செவ்விலக்கியத்தைப் பயில்பவர்களும் பயிற்றுபவர்களும் கல்வி நிறுவனங்களில் குறைந்து வ்ருகிறார்கள். இந்தப் போக்கை மாற்ற வேண்டும். செவ்விலக்கியத்தைப் பயிற்றுவிக்கத் தனிப் பணியிடங்களைக் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் தோற்றுவிக்க வேண்டும். செவ்விலக்கியத்தில் தனிப் பயிற்சி பெறுபவர்கள் இன்னொரு செம்மொழி பயில வேண்டும். இவர்களில் சிலர் மொழி பெயர்ப்புப் பணியில் ஈடுபட ஒரு தற்கால் மொழியிலும் திறன் பெற வேண்டும். மொழி பெயர்க்க்ப்பட்ட இலக்கியங்கள் பிற மொழியினர் கைக்குப் போய்ச்சேர வணிக நூல்விற்பனை நிறுவங்களோடு ஒரு ஏற்பாடு செய்ய வேண்டியதிருக்கும். பிற மொழிகளில் ஒப்பிலக்கியப் பாடம் நடத்தும் ஆசிரியர்களைத் தமிழ்நாட்டுக்கு அழைத்து மொழி பெயர்த்த இலக்கியங்களை அறிமுகப்படுத்தலாம்.

செவ்விலக்கணம் தமிழில் செவ்விலக்கியத்தின் முக்கியமான அம்சம். செவ்விலக்கணத்தை நவீனத் தமிழின் இலக்கணத்தோடு ஒப்பிட்டுச் செய்யும் ஆராய்ச்சி அவசியம். செவ்விலக்கிய மொழியின் ஆராய்ச்சி மொழியியல் துறைகளில் மிகுதியாக நடந்திருக்கிறது. இன்னும் ந்டக்க நிறைய வாய்ப்பு இருக்கிறது. இதைத் திறம்படவும் விரைவாகவும் செய்யச் செவ்விலக்கியம் முழுவதையும் எண் வயப்ப்டுத்த வேண்டும், இது மதுரைத் திட்டத்தின் கீழ் தனி நபர்களின் தன்னார்வக் கூட்டு முயற்சியால் ந்டந்துவருகிறது. இன்னும் பல இலக்கிய நூல்களையும் உரைகளையும் எண் வய்ப்படுத்தும் தேவை இருக்கிறது. இலக்கிய மொழியின் சொல், பொருள், இலக்கண ஆராய்ச்சி செய்யத் தேடு பொறி தேவை. தேடு பொறி தேடும் வகையில் இலக்கியத தரவு வங்கி கட்டமைக்கப்பட வேண்டும். தானாக்ச் சந்தி பிரிக்கும் மென் பொருள் படைத்தால் ஆய்வுக்கும் கற்பதற்கும் உதவியாக இருக்கும்.

செம்மொழி இலக்கிய மொழி மட்டுமல்ல. செவ்விலக்கிய காலத்துக் கல்வெட்டுகளின் மொழியும் செம்மொழியே. ஆவணத் தமிழுக்கு முன்னோடியாக இருப்பது கல்வெட்டு மொழி. இந்த மொழியை ஆய்வுக்கு உட்படுத்தக் கல்வெட்டுகளை எண் வயப்படுத்த வேண்டும்.

செம்மொழியையும் செவ்விலக்கியத்தையும் சரிவர அறிந்து கொள்ள அவை வழங்கிய ச்மூக, பொருளாதாரச் சூழ்நிலை பற்றிய அறிவு வேண்டும். இதைப் பெற, காலனிய காலத்திலிருந்து நடந்துவரும் அகழாய்வை வலுப்படுத்த வேண்டும். முக்கியமாக, கடல் அகழாய்வு மேற் கொளளப்பட வேண்டும். தொல்பொருள் ஆய்வில் பயிற்சியைப் பெருக்க வேண்டும். கல்வெட்டுகளைப் படிக்கும் திறனும் இதில் அடங்கும். செம்மொழிக் காலத்துத் தடயங்களின் மதிப்புப் பற்றி மக்களுக்குப் புரிந்துணர்வு வேண்டும், அண்மையில் வெளிவந்த ஒரு பத்திரிக்கைச் செய்தியின்படி, இரும்புக்காலத் தமிழர்களின் ஈமச் சடங்குகள் பற்றித் த்கவல் தரும் கற்களை வீடு கட்டுவதற்குப் பொதுமக்கள் எடுத்துச் செல்கிறார்கள். பூமிக்குள் கல்லெடுக்கும் கம்பெனிகள் இபபடிப்பட்ட தலங்களை அழித்து விடுகிறார்கள். சிதிலமடைந்த பழைய கோயில்களுக்கும் சிலைகளுக்கும் இதே கதிதான். தமிழரின் வரலாற்றையும் சாதனைகளையும் காட்டும் தடயங்களைப் பாதுகாப்பதன் தேவையைப் பொது மக்களுக்கு உண்ர்த்தும் வகையில் பிரச்சாரம் நடத்த வேண்டும். தமிழைக் காப்பதில் தமிழரின் வரலாற்று எச்ச்ங்களைக் காப்பது முக்கிய இடம் பெற வேண்டும்.

செவ்விலக்கியத்தைப் பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்த இலக்கிய நயத்தை விளக்கும் சொற்பொழிவுகள் நடந்த வண்னம் இருக்கின்றன. பேருந்துகளில் திருக்குறள் எழுதப்பட்டிருக்கிறது. இன்றைய தலைமுறையினருக்கு செவ்வில்க்கியத்தை அறிமுகப்படுத்த என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி யோசிக்க வேண்டும். செவ்விலக்கியக் காட்சிகளை விளக்கங்களோடு படப் புத்தகங்களாகவும் , ஒளித் தட்டுகளாகவும், குறுந் தட்டுகளாகவும் வெளியிடுவது ஒரு வழி; யூடூபில் (You Tube) ஏற்றுவது இன்னொரு வழி. இன்று இணைய தளத்தில் பழைய இலக்கியத்தின் ஒலிப் பதிவுகளும் செய்திகளும் உள்ளன. ஆனால் எல்லாமே படித்து முடித்த தலைமுறையினருக்கு. இந்த ஊடகத்தைத் தமிழ்ப் புத்தகத்தை எடுத்துப் படிக்காத தலைமுறையினருக்குத் தமிழ் இலக்கியத்தில் பிடிப்பு ஏற்படுத்தப் பயன்படுத்த வேண்டும்.

செம்மொழி இலக்கியத்தை ஆய்வுக்கு உட்படுத்துவதும் இக்காலத் தமிழர் வாழ்க்கையில் பொருளுள்ளதாகக் கொண்டு வருவதுமே செம்மொழித் திட்டத்தின் இரு கணகளாகும். உல்க அள்வில் மனிதனின் படைப்புத் திறனுக்கும் படைப்புக் கொடைக்கும் தமிழ்ச் செவ்விலக்கியமும் ஒரு சான்றாக இருப்பதை, தமிழர் மட்டுமல்ல, உலகினர் அனைவரும் தெரிந்துகொள்ள வழிவகுக்கும் வகையில் ஆராய்ச்சி அமைய வேண்டும். தமிழின் செம்மொழிப் பாரமபரியம் புதிய தலைமுறையினருக்குக் கிரீடத்தின் பாரமாக்வோ பழ்ம்பெருமை பாடுவதாகவோ இல்லாமல் அவர்கள் வாழ்க்கையைக் கலாச்சார ரீதியில் செழுமைப்படுத்துவதாக ஆகும்படி செய்ய வேண்டும். செம்மொழிக்கு இக்காலத் தமிழ்ப் பயன்பாட்டில் இடம் இல்லை. செம்மொழியைப பழைய இலக்கிய வெளிப்பாட்டுக்குப் பயன்படுத்திய விதம் இன்றைய தமிழுக்கு இலக்கிய மெருகேற்றும் முயற்சியில் கை கொடுக்கும்



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

30.செம்மொழி இளம் அறிஞரும் பச்சையப்பன் கல்லூரியின் தமிழ் இணைப் பேராசிரியருமான முனைவர் வா.மு.சே. ஆண்டவர் எழுப்பிய கேள்வி – 4:

உலக நாடுகளில் தாய்மொழி வழிக் கல்வியினால் ஏற்பட்ட ஆராய்ச்சி வளர்ச்சி நிலைகளைத் தமிழ்நாட்டின் தமிழ்வழிக் கல்வியோடு ஒப்பிட்டுக் கருத்துரைக்க வேண்டுகிறேன்.

பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்:

ஆராய்ச்சி வளர்ச்சி நிலை என்பதை அறிவு வளர்ச்சி நிலை என்று புரிந்துகொண்டு பதில் எழுதுகிறேன். ஐரோப்பாவில் கிறிஸ்துவ மதச் சீர்திருத்தம் (Reformation) நடந்த காலம், பதினாறாம் நூற்றாண்டு. அந்தக் காலத்தில் ஐரோப்பாவின் வீட்டு மொழிகள் மத போதனையிலும் கல்வியிலும் கலையிலும் லத்தீன் பெற்றிருந்த இடத்தைப் பிடித்தன. பதினைந்தாம் நூற்றாண்டிலிருந்து அங்கு வளர்ந்த அச்சுக் கலை, குறைந்த விலையில் நூல் வெளியிட்டு,  இந்த மொழி மாற்றத்திற்கு உறுதுணை செய்தது.

கத்தோலிக்க மதத்தின் இறுக்கமும் லத்தீன் மொழியின் பிடியும் தளர்ந்த இந்தக் காலக்கட்டம் கல்வியிலும் கலையிலும் நடந்துகொண்டிருந்த ஐரோப்பிய மறுமலர்ச்சியை (Renaissance) உன்னத நிலைக்கு எடுத்துச் சென்றது. பதினாறாம் நூற்றாண்டில்தான் இங்கிலாந்தில் பள்ளிக் கல்வியில் லத்தீன் இடத்தில் ஆங்கிலம் வரத் தொடங்கியது. இது அறிவு தேடலைச் சமூகத்தில் பரவலாக்கியது; பல்கலைக்கழகங்களுக்கு வெளியே புதிய சாதனங்களின் கண்டுபிடிப்புகள் வந்ததற்கு இதுவும் ஒரு காரணம். பதினெட்டாம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் தொடங்கிய தொழில் புரட்சிக்கு உந்து சக்தியாக இந்த மாற்றங்கள் அமைந்தன.

தமிழ்நாட்டில் காலனிய காலம் வரை கல்வி, தமிழ் வழியே நடந்து இலக்கியமும் கலையும் செழித்தன. கணிதம், வானவியல் போன்ற பரம்பரை அறிவியல் கல்வி, சமஸ்கிருதம் மூலம் சிலரையே சென்றடைந்திருக்கலாம். தமிழுக்கு இந்த அறிவு வந்து சேரவில்லை. காலனிய காலத்தில் ஐரோப்பாவில் வளர்ந்த புதிய அறிவியல், ஆங்கிலம் மூலமே தமிழ்நாட்டில் கற்றுக் கொடுக்கப்பட்டது. அந்த நிலையே இன்று வரை தொடர்கிறது. உயர்நிலைக் கல்வியில் இதை மாற்ற முடியாது என்ற எண்ணம் வேரூன்றியிருக்கிறது. ஐரோப்பாவில் போல் தமிழ்நாட்டில் அறிவுத் துறை வளர்ச்சி பெருக வேண்டுமென்றால் இந்த மனநிலை மாற வேண்டும்.

ஆங்கிலத்தின் அறிவியல் ஆதிக்கம் உலகளாவி நிற்கும் இன்றைய நிலையில் ஐரோப்பிய நாடுகளிலும் உயர் கல்வியில் ஆங்கிலத்தின் செல்வாக்கு கூடி வரும்போது தமிழ்நாட்டு நிலையை மாற்ற நினைப்பது பின்னோக்கிச் செல்வதாகும் என்னும் வாதம் புறக்கணிக்கக் கூடியது அல்ல. ஆனால் ஒரு முக்கியமான வேறுபாடு இருப்பதைக் கவனிக்க வேண்டும். ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து முதலிய ஐரோப்பிய நாட்டுப் பல்கலைக்கழக மாணவர்கள் தங்கள் மொழிகளுக்கு மேலாக ஆங்கிலத்திலும் அறிவியல் பயில்கிறார்கள்; ஆய்வுக் கட்டுரைகள் எழுதுகிறார்கள். தங்கள் மொழிகளில் அறிவுத் துறைகளில் படிக்க, எழுத முடியாது என்று நினைப்பதில்லை. ஆங்கிலமும் தெரியாமல் அறிவியல் பயில முடியாது, ஆய்வு செய்ய முடியாது என்றுதான் நினைப்பார்கள். தேவைப்படும் நேரங்களில், இடங்களில், அவர்களால் தங்கள் மொழிகளில் அறிவியல் செய்ய முடியும்.

தமிழ்நாட்டிலும் இது சாத்தியம். பயிற்று மொழியாக இல்லாமல் ஆங்கிலத்தைக் கற்றுத் தேர்ச்சி பெற முடியும். தமிழை விடாமல், ஆங்கிலத்திலும் அறிவியல் செய்யலாம். தமிழ் மொழியிலும் இது சாத்தியம். இதற்குத் தமிழ் தன் சொல்லில் காக்கும் தூய்மையை விட்டுக் கொடுக்க வேண்டும். தமிழ்ப் பண்டிதர் எழுதும் தமிழே நல்ல தமிழ், அறிவியலாளர் ஆங்கிலத்திலிருந்து சொற்களைப் பெற்று எழுதும் தமிழ் பாழும் தமிழ் என்னும் பாகுபாடு மறைய வேண்டும். இரண்டும் தமிழே. லத்தீன் இடத்தை ஆங்கிலம் பிடித்த பிறகும் லத்தீன் சொற்களின் இடம் ஆங்கிலத்திலிருந்து போகவில்லை. ஆங்கிலத்தின் அறிவு வெற்றிக்கு இதுவும் ஒரு காரணம். தமிழைக் காக்கின்ற பேரில் தமிழில் அறிவைத் தடுப்பது, தமிழுக்கு அறிவைக் கொண்டு வருபவர்களைத் தடுப்பது அறிவுடைமை ஆகாது.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

29. செம்மொழி இளம் அறிஞரும் பச்சையப்பன் கல்லூரியின் தமிழ் இணைப் பேராசிரியருமான முனைவர் வா.மு.சே. ஆண்டவர் எழுப்பிய கேள்வி – 3:

உலகளாவிய நிலையில் ஒப்பியல் துறைகளில் நடைபெறும் தமிழ் ஆய்வுகள் குறித்துத் தங்கள் மதிப்பீடு என்ன?

பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்:

ஒப்பியல் இலக்கியத் துறையை மட்டும் இந்தப் பதிலில் எடுத்துக்கொள்கிறேன். இலக்கிய ஒப்பியல், இலக்கியத் திறனாய்வில் ஒரு வகை. ஒரு மொழியின் இலக்கியத்தில் மற்றொரு மொழியின் இலக்கியத் தாக்கம் என்ன என்று பார்ப்பது ஒப்பியல் திறனாய்வில் ஒரு வகை. இதில் ஒரு இலக்கிய ஆசிரியனின் படைப்புக் கலையில் மற்றொரு இலக்கிய ஆசிரியனின் செல்வாக்கைப் பார்ப்பது ஒன்று. பாரதியில் விட்மன் என்னும் ஆய்வு இதற்கு ஒரு எடுத்துக்காட்டு.

இத்தகைய ஒப்பீடு, ஒரே மொழியின் இரண்டு ஆசிரியர்களிடையேயும் இருக்கலாம். ஜெயகாந்தனில் புதுமைப்பித்தன் என்னும் ஆய்வு இதில் அடங்கும். இந்த ஆய்வு சாதாரணமாக வரலாற்றுப் பார்வையில் இலக்கியத்தின் வளர்ச்சியைப் பார்ப்பதாகவும் இருக்கும். தமிழ்நாட்டில் நடக்கும் ஒப்பியல் ஆய்வில் பெரும் பகுதி, மேலே சொன்ன இரண்டில் சேரும். முதலாவதில் மற்ற மொழி இலக்கிய ஆசிரியர்களைவிட ஆங்கில இலக்கிய ஆசிரியனோடு ஒப்பிடுவதே அதிகம்.

இந்த வகையைப் பொதுமைப்படுத்தி, ஒரு இலக்கிய வகையின் தாக்கத்தைப் பற்றியும் ஆய்வு அமையலாம். தமிழ் நாவல்களில் ஐரோப்பிய நாவல்களின் செல்வாக்குப் பற்றிய ஆய்வு இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. ஆய்வின் பார்வை செல்வாக்கைப் பற்றி அல்லாமல் வேறுபாடுகளைப் பற்றி இருக்கலாம். வேறுபாடு இலக்கியக் கொள்கையின் அடிப்படையில் அமையும். ஆனால் இலக்கிய வகைகளின் கொள்கைகள் ஒரு மொழியின் இலக்கியத்திலிருந்தே பிறக்கின்றன. நாவல் ஆய்வு ஐரோப்பிய நாவல்களோடு ஒப்பிட்டும், காப்பிய ஆய்வு கிரேக்கக் காப்பியங்களோடு ஒப்பிட்டும் (இடைக்காலத்தில் சம்ஸ்கிருதக் காப்பியங்களோடு ஒப்பிட்டும்) நடப்பது இதனாலேயே.

தமிழ் நாவல்களையோ காப்பியங்களையோ, பிற மொழிப் படைப்புகளைக் குறிக்கோளாகக் கொண்டு, அதை நோக்கிச் செல்லும் வரலாற்றுப் பயணமாகப் பார்க்காமல், தமிழ் இலக்கிய, கலாச்சார வரலாற்றின் விளைவாகப் பார்க்க முடியும். இந்தப் பார்வையில் காலத்தால் முந்திய இலக்கியத்தோடான ஒப்பீடு, இலக்கிய வளர்ச்சி ஆய்வோடு பின்னிப் பிணைந்து விடுகிறது. இந்தப் போக்கில் அண்மைக் காலத்தில் முனைப்பு கூடியிருக்கிறது.

இந்தியாவில் சில பல்கலைக்கழகங்களில் ஒப்பியல் இலக்கியத் துறைகள் இருக்கின்றன. அவற்றில் பல்கலைக்கழகம் உள்ள மாநிலத்து மொழியின் இலக்கியத்தைத் தமிழ் இலக்கியத்தோடோ வேறு இந்திய மொழி இலக்கியத்தோடோ ஒப்பிடுவதாகத் தெரியவில்லை. ஆங்கில இலக்கியத்தோடுதான் ஒப்பீடு. மேலைநாட்டுப் பல்கலைக்கழகங்களில், தென்னாசியத் துறைகளில் தமிழ் இலக்கியம் இந்திய மொழி இலக்கியங்களில் ஒன்று என்ற முறையில் ஒப்பியல் ஆய்வு நடைபெறுகிறது. இந்த ஆய்வு இந்திய இலக்கியங்களின் பொதுக் கூறுகளையும் தனிக் கூறுகளையும் காணும் வகையில் நடைபெறுகிறது.

தமிழ் இலக்கியத்தின் படைப்புகளைத் தமிழ் இலக்கியக் கலாச்சாரத்தின் வெளிப்பாடுகளை இரண்டு கால நிலைகளில் ஒப்பிடும் ஆய்வும் நடைபெறுகிறது. அகம் என்னும் இலக்கியக் கொள்கை சங்கப் பாடலிலும் கோவைப் பாடலிலும் பயன்படும் விதம் பற்றிய ஆய்வு இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. காலனிய காலத்திற்கு முந்தைய நூற்றாண்டுகளிலும் காலனிய காலத்திலும் படைக்கப்பட்ட இலக்கியங்களை ஆய்வது மற்றொரு எடுத்துக்காட்டு. இந்த ஒப்பாய்வு இலக்கியச் சூழல், பயிற்சி, ஏற்பு, புரிதல் முதலானவற்றை இரண்டு கால நிலைகளில் ஒப்பிடுவது.

சில அமெரிக்கப் பல்கல்கலைக்கழகங்களில் கல்லூரி மாணவர்களுக்கு உலக இலக்கியங்கள், உலக நாகரிகங்கள் ஆகிய பாடங்கள் உண்டு. இவை அறிமுகப் பாடங்கள். பல பண்பாட்டு இலக்கியங்கள் மொழிபெயர்ப்பில் அறிமுகப்படுத்தப்படும். இந்த அறிமுகத்தில் ஒப்புமை இலைமறை காயாக இருக்கும். மனிதரின் படைப்பாற்றலில், வாழ்க்கைப் பார்வையில், அழகுணர்ச்சியில் சில பொதுப் பண்புகள் உண்டு; அவற்றைப் பல மொழிகளின் இலக்கியங்களின் மூலம் உணரலாம் என்னும் கொள்கையின் அடிப்படையில் இந்தப் பாடங்கள் நடத்தப்படும். இதுவும் ஒரு வகை ஒப்பிலக்கியப் படிப்புதான்.

இந்தப் பாடங்களை நடத்தும் ஆசிரியர்களைப் பொறுத்து, இவற்றில் பொறுக்கி எடுத்த சில தமிழ் இலக்கிய நூல்கள் இடம் பெறுவதுண்டு. பெரும்பாலான இடங்களில் இராமாயணம், மகாபாரதம் இருக்கும்; சிலப்பதிகாரம் இருப்பது அபூர்வம். தமிழ்நாட்டில், மாணவர்களின் மனத்தை விரிவுபடுத்தும் இந்த மாதிரியான ஒப்பிலக்கியப் படிப்பு இல்லை. இளங்கலை மாணவர்களுக்கும் இல்லை; முதுகலை மாணவர்களுக்கும் இல்லை.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

28.செம்மொழி இளம் அறிஞரும் பச்சையப்பன் கல்லூரியின் தமிழ் இணைப் பேராசிரியருமான முனைவர் வா.மு.சே. ஆண்டவர் எழுப்பிய கேள்வி – 2:

அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் Area Studies வழியாக நடைபெற்ற மொழிசார் ஆராய்ச்சி வளர்ச்சி நிலைகளை மதிப்பிட வேண்டுகிறேன்.

பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்:

காலனிய காலத்தில் தங்கள் ஆதிக்கத்தில் இருந்த காலனிகளின் சமூகம், பழமைக் காலம், கலாச்சாரம், மொழி, இலக்கியம் முதலியவை பற்றிய அறிவை ஆட்சிக்குத் துணைசெய்யும் கருவியாக வளர்த்துக்கொள்ள வந்த துறைகளில் ஒன்று கீழைத் தேயவியல் (Oriental Studies).

இரண்டாம் உலகப் போரின் முடிவில் பழைய காலனி ஆதிக்கம் முடிந்துகொண்டிருந்தது. புதிய காலனி ஆதிக்கம், துவக்கத்தில் இருந்தது. இதில் முன்னணியில் இருந்த நாடு அமெரிக்கா. போரின்போது போர் வீரர்களுக்குப் போரிடச் செல்லும் நாடுகளின் மொழிகளில் பயிற்சி கொடுக்கத் தற்காலிக ஏற்பாடுகள் செய்யப்பட்டன. போர் முடிந்த பிறகு இந்த ஏற்பாடுகள் சில வகைகளில் நிலைப்படுத்தப்பட்டன. அவற்றில் ஒன்றுதான் சில பல்கலைக்கழங்களில் துவங்கப்பட்ட, மொழியை மையமாகக் கொண்ட மண்டலவியல் (Area Studies) துறைகள்.

உலகப் போரின் பின் தொடர்ந்த பனிப்போரின் பின்னணியில், நாடுகளின் எல்லைகள் மாறிய புதிய பூகோளத்தின் அடிப்படையில் அமைந்த உலகப் பகுதிகளைப் புரிந்துகொள்ள, அவற்றில் தங்கள் நலன்களைப் பாதுகாத்துக்கொள்ள இந்தத் துறைகள் தேவைப்பட்டன. மேலே சொன்ன பாடங்களோடு அரசியல், தற்கால வரலாறு முதலியன சேர்க்கப்பட்டன. இந்தத் துறைகளில் ஒன்று தென்னாசியவியல் (South Asian Studies) துறை. இந்தியத் துணைக் கண்டம் என்னும் நிலப் பகுதி, மண்டலப் படிப்பில் தென்னாசியாவாக விரிந்தது.

மண்டலவியல் படிப்பு, புதிய வல்லரசாக உருவாகிய அமெரிக்காவில் ஆழமாக வேரூன்றியது. 1957இல் சோவியத் யூனியன் வெற்றிகரமாக ஸ்புட்னிக்கை விண்ணில் ஏவிய அதிர்ச்சியில் அமெரிக்கா கல்வி வளர்ச்சிக்காகப் பணத்தை வாரி வழங்கியது. அந்தப் பணத்தில் மண்டலப் படிப்பிற்கும் அதில் மொழிப் படிப்பிற்கும் பங்கு கிடைத்தது.

கென்னடியின் அமைதிப் படை (Peace Corps) தொண்டர்கள் திட்டத்தின்கீழ் இந்தியா சென்ற மாணவர்கள் பலர் திரும்பி வந்த பின், தென்னாசியத் துறையில் சேர்ந்தார்கள். இந்தக் காரணங்களால் தென்னாசியப் படிப்பு, அமெரிக்காவில் வளர்ந்தது.

தென்னாசியத் துறைகளில் சமஸ்கிருதம், இந்தி நிச்சயமாகக் கற்றுக் கொடுக்கப்படும். அதற்கு மேல் உருது, தமிழ் சேர்க்கப்படும். அதற்கடுத்து வங்காளம். பிற மொழிகள் மாணவர்களின் தேவையைப் பொறுத்து, மானியத்தைப் பொறுத்துக் கற்றுக் கொடுக்கப்படும். தற்கால மொழிகளைக் கற்றுக் கொடுக்க இந்தியாவிலிருந்து இளநிலை விரிவுரையாளர்கள் வந்தார்கள். அவர்களில் பலர் முனைவர் பட்டத்திற்கு மொழியைப் பற்றி ஆராய்ச்சி செய்தார்கள்.

இவர்கள், மொழி கற்றுக் கொடுப்பதற்குப் பாடங்கள், தொகுப்புகள் (Readers) தயாரித்தார்கள். தமிழைத் தமிழ் தெரியாதவர்களுக்கு இரண்டாம் மொழியாகக் கற்றுக் கொடுக்கும் முறை தென்னாசியத் துறைகளில் வளர்ந்தது. பேச்சுத் தமிழ் ஒரு கற்பிக்கும் பாடமாக இங்கு ஒப்புக்கொள்ளப்பட்டது.

மொழிசார் ஆராய்ச்சியில் இலக்கிய ஆராய்ச்சியும் அடங்கும். தமிழ் இலக்கிய ஆராய்ச்சி, தமிழ்க் கலாச்சார ஆராய்ச்சியின் பகுதியாக, இந்திய இலக்கியங்களின் ஆராய்ச்சியின் பகுதியாக வளர்ந்தது. இந்த ஆராய்ச்சி உலகளாவிய பதிப்பகங்களால் வெளியிடப்பட்டு, பிற மொழி அறிஞர்களை எட்டுகிறது. தமிழ் இலக்கிய நூல்கள், ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, தமிழ் தெரியாதவர்களுக்கு அறிமுகமாகின்றன.

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள சமூக, பொருளாதார மாற்றங்களால் தென்னாசியப் படிப்பிற்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை சுருங்கி வருகிறது. பேராசிரியர் மட்டத்தில் நியமனங்கள் குறைந்து வருகின்றன. தமிழ் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்கள் தாங்கள் பணியில் சேரும் பிற கல்வித் துறைகளில் இந்த ஆராய்ச்சியைத் தொடரும் நிலை வரலாம். இந்த மாறுதல்களால் தமிழ் மொழிப் பயிற்சியும் ஆராய்ச்சியும் மாற்றம் பெறலாம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

 27.செம்மொழி இளம் அறிஞரும் பச்சையப்பன் கல்லூரியின் தமிழ் இணைப் பேராசிரியருமான முனைவர் வா.மு.சே. ஆண்டவர் எழுப்பிய கேள்வி -1:

தமிழகப் பல்கலைக்கழகங்களில் நிகழும் தமிழியல் ஆய்வுகளையும் அயல்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் நிகழும் தமிழியல் ஆய்வுகளையும் ஒப்பிட முடியுமா?

பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்:

ஐரோப்பிய அரசுகள் இந்தியாவோடு கொண்ட ஆதிக்க உறவின் ஒரு விளைவு, இந்தியவியல் (Indology) என்னும் அறிவுத் துறை. இந்தத் துறை ஆராய்ச்சியின் மையம், சமஸ்கிருதம். ஐரோப்பிய நாகரிகத்தின் அடிப்படையாகக் கொள்ளும் லத்தீன், கிரேக்க மொழிகளோடு சமஸ்கிருதத்துக்கு உள்ள உறவு, அதன் மைய இடத்துக்கு ஒரு காரணம். ஐரோப்பிய அலுவலர்களும் மத போதகர்களும் செய்த திராவிட மொழிகளைப் பற்றிய ஆய்வு, இந்தியவியல் ஆய்வில் விளிம்பு நிலையிலேயே இருந்தது. இந்தச் சூழ்நிலையில், இந்திய நாகரிகத்தைச் சரியாக அறியத் திராவிட நாகரிகத்தையும் ஆராய வேண்டும் என்ற நிலைப்பாட்டில், இந்த நாகரிகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தமிழ் சார்ந்து செய்த ஆய்வுப் பிரிவுக்குத் தமிழியல் என்னும் பெயர் ஏற்பட்டது. இந்த வரலாற்றின் வழியில் இந்தியவியலில் ஒரு அங்கமாகவும் திராவிட அரசியல் வழியில் தனித் துறையாகவும் போட்டித் துறையாகவும் தமிழியல் நோக்கப்படுகிறது.

தமிழ் ஆய்வு, தமிழ் இலக்கியத்தையும் இலக்கணத்தையும் பற்றியது. இதுவே இந்திய, இலங்கைப் பல்கலைக்கழகங்களில் மரபாக உள்ள தமிழ்த் துறைகளில் நடப்பது. தமிழியல் ஆய்வு, கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு உள்ளாக வந்த ஆய்வுத் துறை. இந்த ஆய்வுக்கு உந்துதல் தரவே உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் 1964இல் கீழைத் தேய ஆய்வாளர் (Orientalists) மாநாட்டில் துவங்கப்பட்டது. IATR நடத்திய மாநாடுகளில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளின் வீச்சைப் பார்த்தால், தமிழ் தொடர்பான இலக்கியம், மொழி, பண்பாடு, சமயம், சமூகம், அரசியல், வரலாறு முதலான பல்வேறு அறிவுத் துறைகளைச் சேர்ந்த அறிஞர்களின் பங்கு தெரியும். தமிழின் பன்முகத்தைப் பல்வகை அறிவுத் துறை வழியே அணுகும் ஆராய்ச்சி தமிழியல் என்பது விளங்கும்.

பல்கலைக்கழகங்களில் தமிழியல் துறை இதிலிருந்து குறுகிய பாடத் திட்டத்தை, ஆய்வுப் பரப்பைக் கொண்டது. இது மரபான தமிழ்த் துறை எடுத்துக்கொண்ட இலக்கியம், இலக்கணம் என்ற இரண்டு பொருளையும் விரிவுபடுத்தி அமைந்தது. இக்கால இலக்கியம், அதன் இலக்கிய விமரிசனம், நாட்டார் இலக்கியம் முதலியனவற்றைச் சேர்த்து இலக்கியம் விரிந்த பொருள் பெற்றது; மொழியியல் நோக்கு, பத்திரிகைத் தமிழின் இயல்பு என்று இலக்கணம் விரிந்தது. இலக்கியம், இலக்கணம் என்னும் இரண்டு பொருள்களைப் பற்றிய ஆராய்ச்சி வரலாறு, சமூகவியல், மானிடவியல் ஆகிய அறிவுத் துறைகளின் பார்வையிலும் நடத்தப்படும். இதைத் தமிழியல் துறை தமிழ்த் துறையை விட அதிகமாக அனுமதிக்கிறது. ஆயினும், தமிழியல் பட்டம் பெறும் மாணவர்களுக்கு இந்தத் துறைகளில் பயிற்சி இருக்காது; அவர்கள் இந்தத் துறைகளின் எந்த வகுப்பிலும் சேர்ந்து படிக்க முடியாது. இந்தத் துறைகளைச் சேர்ந்த மாணவர்கள், தமிழ் சார்ந்த ஆராய்ச்சி செய்தாலும்,. தமிழியல் துறையில் எந்தப் பாடமும் படிக்க முடியாது.

இந்தியா, இலங்கை, சிங்கப்பூர் தவிர்த்த வேறு நாடுகளில், தமிழியல் கல்வியின் மரபு வேறானது. தமிழியல், தனித்து நிற்கும் (autonomous) ஆய்வுத் துறை அல்ல; தனித்து நிற்கும் ஆய்வு நெறியும் அல்ல. அது இந்தியவியலின் அல்லது தென்னாசியவியலின் ஒரு பகுதியாகவே இருக்கும். இதில் முனைவர் பட்டத்துக்குத் தமிழ் சார்ந்த பொருளைப் பற்றி ஆராய்ச்சி செய்பவரும், தமிழோடு வேறொரு மொழியும் படித்திருப்பார். இலக்கிய, இலக்கணப் பிரதிகளைப் படிப்பதோடு வேறு துறைப் பாடங்கள் சிலவாவது படித்திருப்பார். வேறு துறைகளில் பட்டம் பெறும் மாணவர்கள், தமிழ் சார்ந்த பொருளை ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொண்டால், இந்தியவியல் அல்லது தென்னாசியவியல் துறையில் கட்டாயமாக உள்ள பாடங்களை எடுத்து, இரு துறை சேர்ந்த பட்டம் பெறலாம்.

தமிழாய்வின் பரந்த பார்வையும் அதன் பயிற்சியில் உள்ள நெகிழ்ச்சியும் ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் தமிழியல் படிப்பிலும் ஆய்விலும் பல்துறை நோக்கைக் (multi-disciplinary approach) கொண்டுவருகிறது. தமிழ்நாட்டில் விட, இங்கு ஆய்வு நெறியைக் கற்றுக் கொடுப்பதில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. மற்றவர் கண்ட உண்மைகளை அறிந்துகொள்ளச் செய்வதை விட, உண்மைகளைத் தானே தேட வைப்பதே பயிற்சியின் முக்கிய நோக்கம்.

இத்தகைய பயிற்சியின் விளைவை இங்கு தமிழியலில் செய்யப்படும் ஆய்வுகளில் காணலாம். இதில் முதலாவது பல்துறை நோக்கு. இரண்டாவது, தமிழியல் ஆய்வை புதிய அறிவுத் தளங்களான பின்காலனித்துவம் (post-colonialism), பின்நவீனத்துவம் (post-modernism) ஆகியவற்றின் கருத்தாக்கங்களின் வழி நடத்துவது. இதன் ஒரு பரிமாணம்தான் இலக்கியப் படைப்பைச் சமூகத்தின் இலக்கியக் கலாச்சார நடவடிக்கையாகப் பார்ப்பது. இது இலக்கியத்தின் மூலம் சமூகத்தின் கலாச்சாரத்தை அறிவது அல்ல; எப்படிப்பட்ட கலாச்சாரம் எப்படிப்பட்ட கோயிலைக் கட்டியிருக்கிறது என்று பார்ப்பதைப் போல, எந்த மாதிரியான கலாச்சாரம் – இலக்கியப் புரவலர்கள், நுகர்வாளர்களின் சமூகப் பின்னணி, இலக்கியத்தின் தன்மை பற்றிய கொள்கை, இலக்கியத்தின் கலாச்சாரப் பயன்பாடு முதலியவை இதில் அடங்கும் – எந்த மாதிரியான இலக்கியத்தை உருவாக்கியிருக்கிறது என்று பார்க்கிறது இது.

இந்தப் பார்வையில் எந்த இலக்கியப் படைப்பும் விலக்கல்ல. ஏனென்றால், இலக்கியத்தை ஆராய, அழகியல் பார்வை ஒன்றே வழி என்ற நிலைப்பாட்டிலிருந்து இது வேறுபட்டது. களப்பிரர் காலம் இருண்ட காலம் என்று இந்தப் பார்வை ஒதுக்காது. காலனிய காலத்திற்கு முந்தைய நூற்றாண்டுகள், வீழ்ந்து பட்ட தமிழ் இலக்கியம் நவீன காலப் பாதம்பட்டு வரும் விமோசனத்திற்காகக் காத்துக் கிடந்த காலம் என்று உதாசீனம் செய்யாது.

புதிய பார்வைகளும் ஆய்வு நெறிகளும் தமிழாய்வுக்கு உரமூட்ட, பல்கலைக்கழகங்களில் அதைப் பிற மொழி ஆய்வோடு, பிற துறை ஆய்வோடு ஒட்டிப் பயிற்றுவிக்க வேண்டும். தமிழ் பற்றிய அறிவு பிற அறிவுகளின் மூலம் வளம் பெற வேண்டும். இதுவே தமிழாய்வு மரபைத் தமிழியல் ஆய்வாகப் புதுப்ப்பிக்கும் வழி.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

 26. அண்ணாகண்ணன் எழுப்பிய கேள்வி:

ஆங்கில ஒலிபெயர்ப்பில் ஈழத் தமிழர்களுக்கும் தமிழகத் தமிழர்களுக்கும் பெரும் வேறுபாடு உள்ளது. முக்கியமாக T, D ஆகியவற்றை ர, ற என்ற எழுத்துகளால் ஈழத் தமிழர்கள் ஒலிபெயர்க்கின்றனர். நெடிலைக் குறிலாக எழுதுகின்றனர். http://tamilcnn.com தளத்திலிருந்து 2011 மார்ச்சு 29 அன்றைய தேதியில் எடுத்த சில சான்றுகள்:

Ontario – ஒன்ராறியோ – ஒன்டாரியோ

Toranto – ரொறன்ரோ – டொரன்டோ

Ticket – ரிக்கற்று – டிக்கட்டு

Credit – கிறடிட் – கிரெடிட்

New york –  நியூயோர்க் – நியூயார்க்

Police – பொலிஸ் – போலீஸ்

Hostel – ஹொஸ்டல் – ஹாஸ்டல்

எந்த ஒலிபெயர்ப்பு சரி?  இதைச் சீரமைக்க என்ன செய்யலாம்?

பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்:

ஒரு மொழி வேறொரு மொழியிலிருந்து சொற்களைக் கடன்பெற்றுப் பயன்படுத்தும் போது அந்தச் சொற்களில் புதிய ஒலிகள் இருந்தால் அவற்றை எப்படி எழுதுவது என்னும் கேள்வி எழுகிறது. கடன்பெறும் மொழியில் உள்ள ஒலிகளே இருந்தாலும், அந்த ஒலிகள் அந்த மொழியில் வராத இடங்களில் – சொல்லின் முதல், இறுதி, சில ஒலிகளின் அண்மை போன்ற இடங்களில் – வந்தால் எப்படி எழுதுவது என்னும் கேள்வியும் எழுகிறது. சமஸ்கிருதச் சொற்களைப் பொறுத்தவரை இந்தக் கேள்விகளுக்குத் தமிழ் இலக்கண நூல்கள் விடை கூறுகின்றன. இருப்பினும் விடைக்கு அடிப்படையான விதிகள் இன்றைய தமிழில் மீறப்படுகின்றன. கடன் சொற்களை எழுதும் விதிகள் காலத்தின் அடிப்படையில் மாறலாம். பழையன கழிதல் இயல்பல்லவா?

தமிழ் இலக்கண நூல்களின் பழைய விதிகள், பொதுச் சொற்களுக்கும் சிறப்புச் சொற்களுக்கும் (names) வேறுபாடு காட்டவில்லை. இன்றைய தமிழில் இரண்டுக்கும் வேறுபாடு உண்டு. சிறப்புச் சொற்களில் எழுத்து விதிகள் அதிகமாகத் தளர்த்தப்படுவதைக் காணலாம்.

இக்காலத்தில் தமிழ் அதிகமாகக் கடன்வாங்கும் மொழி ஆங்கிலம். ஆங்கிலச் சொற்களை – பொதுச் சொற்களையும், சிறப்புச் சொற்களையும் – தமிழில் எப்படி எழுதுவது என்னும் கேள்விக்கு விடையாக எந்த இலக்கண ஆசிரியரும் விதி சொல்லவில்லை. தமிழறிஞர்கள் கடன்சொற்களே வேண்டாம் என்ற கோட்பாட்டில் நின்று, இந்தக் கேள்வியைப் புறக்கணித்துவிடுகிறார்கள். கண்ணை மூடிக்கொண்டால் பிரச்சினை மறைந்துவிடுவதில்லை. ஊடகங்களில் பிற நாட்டுச் சிறப்புப் பெயர்களை எழுதும்போதும், அறிவியல் நூல்களில் கலைச்சொற்களை எழுதும்போதும் இந்தக் கேள்வி கண்முன்னால் பெரிதாக நிற்கிறது. ஆங்கிலச் சொற்களை எழுத விதிகள் இல்லாததால், நாம் மக்கள் எழுதும் மரபைப் பார்க்கலாம்.

சில மரபுகளுக்கு இவை உதாரணங்கள்:

ஆங்கில ஒலி / L / வல்லெழுத்தை ஒட்டிவரும்போது /ள்/ என்றும் (சைக்கிள், பிளேடு), வேறு இடங்களில் /ல்/ என்றும் (பார்சல், சிலேட்டு) எழுதப்படுகிறது. சொல்லின் இறுதியில் வல்லெழுத்து ஒலிப்புடன் வந்தால் ஒற்றையாகவும், ஒலிப்பின்றி வந்தால் இரட்டையாகவும் (சல்ஃபைடு, சல்ஃபைட்டு) எழுதப்படுகின்றன. மெல்லெழுத்தை அடுத்து வரும் வல்லெழுத்து தமிழில் ஒலிப்புடையதாகும். ஆங்கிலச் சொல்லில் இந்த இடத்தில் வரும் வல்லெழுத்து ஒலிப்பின்றி இருந்தால், மெல்லெழுத்தை ஓரின மெல்லெழுத்தாக எழுதாத மரபு (சென்ட்ரல், ஃபான்டா, அன்டார்டிக்கா), விலக்குகள் இருந்தாலும் பரவலாக, பின்பற்றப்படுகிறது.

/ae/ என்ற உயிரொலி /ஏ/ அல்லது /ஆ/ வாக (பேன்ட்ஸ்; பேங்க் / பாங்க்) என்று எழுதப்படுகிறது. ஆங்கிலச் சொற்களின் உச்சரிப்பைச் சார்ந்தில்லாமல் அவற்றின் எழுத்துக் கூட்டலை (spelling) வைத்துத் தமிழில் எழுதும் மரபும் இருக்கிறது (credit = கிரெடிட், மியாமி = Miami (இதன் அமெரிக்க உச்சரிப்பு மயாமி)). இன்னும் சில மரபுகளும் இருக்கின்றன.

இந்த மரபுகள் தமிழகத் தமிழிலும் ஈழத் தமிழிலும் வேறாக இருக்கலாம். ஒரு வேறுபாடு ஆங்கிலத்தில் உள்ள /aa/ என்னும் உயிர் தமிழகத்தில் /ஆ/ என்றும், ஈழத்தில் /ஓ/ என்றும் எழுதப்படுவது (ஹாஸ்டல், ஹோஸ்டல்). இந்த வேறுபாடு, தமிழ்ச் சொல்லிலும் உண்டு (ஆம், ஓம்). ஆங்கிலச் சொல்லின் முதலசையில் அழுத்தம் (stress) கொடுத்து ஒலிக்கும் குறில், தமிழகத்தில் நெடிலாகவும் ஈழத்தில் குறிலாகவும் எழுதப்படுகிறது (போலீஸ், பொலீஸ்).

தொல்காப்பியம் சொல்லும் உச்சரிப்பின்படி /ற்/ வல்லெழுத்து; நுனி நா, நுனி அண்ணத்தைத் தொட்டு எழும் ஒலி; ஆங்கில /t/ -யின் ஒலி. ஈழத்தில்      /ற்/ -க்குச் சில இடங்களில் இந்த உச்சரிப்பு இருக்கிறது. இது இரட்டிக்கும்போதும் மெல்லெழுத்துக்குப் பின் வரும்போதும், ஈழத் தமிழில்  வல்லொலியாக உச்சரிக்கப்படுகிறது. (‘என்று’ என்ற சொல் ‘என்டு’ என்று உச்சரிக்கப்படுகிறது). ஆங்கிலச் சொல்லின் இறுதியில் வரும் /t/ -யைத் தமிழர்கள் இரட்டித்து /tt/ என்று ஒலிப்பதைத் தமிழகத்தில் /ட்ட்/ என்றும் ஈழத்தில் /ற்ற்/ என்றும் எழுதுகிறார்கள் (டிக்கட்டு, ரிக்கற்று). தமிழகத்தில் பதற்றம் என்ற சொல் பதட்டம் என்றும் எழுதப்படுவதை இங்கு கவனிக்கவும். இது இரட்டித்து ஒலிக்கப்படாமல் சொல்லின் இறுதியில் உயிரேறாமல் வந்தால், /ட்/ என்றே இரண்டு வழக்குகளிலும் எழுதப்படுகிறது (கிரெடிட், கிறடிட்). இந்த ஒலி சொல்லின் முதலில் உயிரேற்று வரும்போதும், சொல்லின் இடையில் மெல்லெழுத்துக்குப் பின் உயிரேறி வரும்போதும் தமிழ்நாட்டில் /ட்/ -ஆகவும் ஈழத்தில் /ர்/ -ஆகவும் எழுதப்படுகிறது (டிக்கட்டு, ரிக்கற்று; டொரன்டோ, ரொறன்ரோ). இந்த இடங்களில் /t/ -வின் ஒலி நின்றிசைக்காமல் நழுவலாக (flap) ஈழ உச்சரிப்பில் ஒலிக்கும் என்பது என் அனுமானம். /r/ வல்லெழுத்தை அடுத்தும், இரு உயிர்களுக்கிடையேயும் வரும்போது தமிழகத்தில் /ர்/ என்றும், ஈழத்தில், மேலே சொன்ன /ர்/ -இலிருந்து வேறுபடுத்தி, /ற்/ என்றும் எழுதப்படுகிறது (கிரெடிட், கிறடிட்; ஒன்டாரியோ, ஒன்ராறியோ).

பிரிட்டிஷ் ஆங்கிலத்திற்கும் அமெரிக்க ஆங்கிலத்திற்கும் சொற்களின் எழுத்துக்கூட்டலில் வித்தியாசம் (colour, color; catalogue, catalog; programme, program;  realise, realize) இருப்பது போல், ஆங்கிலச் சொற்களை எழுதுவதில் தமிழக மரபிற்கும் ஈழ மரபிற்கும் வித்தியாசம் இருக்கிறது. இரண்டு மரபுகள் இருப்பதில் இழப்பில்லை. வழக்கில் இருக்கும் இரு மரபுகளையும் தரப்படுத்தும் தேவை இருக்கிறது. இக்காலத் தமிழுக்கு எழுதப்படும் புதிய இலக்கணம் இந்தத் தேவையை நிறைவு செய்ய வேண்டும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

 25. அண்ணாகண்ணன் எழுப்பிய கேள்வி:

அண்மையில் மறவன்புலவு க.சச்சிதானந்தன், பா.சசிரேகா ஆகியோருடன் உரையாடுகையில் சென்னை என்பதை ஆங்கிலத்தில் CHENNAI என எழுதுவது தவறு என்றும் ‘ச்செ‘ என்ற ஒலி, தமிழில் மொழிமுதலில் வராது என்றும் குறிப்பிட்டனர். இதே திசையில் சிந்தித்தபோது, சேப்பாக்கம் என்பதை Chepauk என்றும் சித்தூர் என்பதை  Chittoor என்றும் எழுதுவது நினைவுக்கு வந்தது. ஆனால், செம்பனார்கோவில் என்பதை Sembanarkoil என எழுதுகிறோம். ச்செ எனத் தொடங்கும் ஆங்கில ஒலிபெயர்ப்புகள் சரியா?

பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்:

தமிழ்ப் பெயர்களை ஆங்கிலத்தில் வழங்கும்போது ரோமன் எழுத்துகளைப் பயன்படுத்துவதில் சில மரபுகள் உண்டு. எடுத்துக்காட்டாக, நெடிலை வேறுபடுத்திக் காட்டுவதில்லை; ழகரத்தை /zh/ என்ற எழுத்தால் எழுதுகிறோம். இது எழுத்துப் பெயர்ப்பு (transliteration) அல்ல. எழுத்துப் பெயர்ப்பில் ஒவ்வொரு தமிழ் எழுத்தும் பெயர்க்கப்படும்; இதைச் சரியாகச் செய்யக் கூடுதல் குறிகளும் (diacritic marks) தேவைப்படும். ஆட்களின் பெயரையும் ஊர்களின் பெயரையும் ஆங்கிலத்தில் எழுதுவது எழுத்துக் கூட்டு (spelling). இதில் தமிழ் எழுத்து மட்டுமல்லாமல், அதன் உச்சரிப்பும் கவனத்தில் கொள்ளப்படும். வடமொழிப் பெயராக இருந்தால், அந்த மொழியில் உள்ள உச்சரிப்புகூட சேர்த்துக்கொள்ளப்படலாம். சுப்பிரமணிய பாரதியை எழுத்துப் பெயர்ப்பில் – உதாரணமாக நூலக அட்டைகளில் – CuppiramaNiya Paarati என்று எழுதுவார்கள். ஆங்கிலத்தில் கட்டுரை எழுதும்போது Subramanya Bharati  என்று எழுதுவார்கள்.

தமிழர்களுடைய உச்சரிப்பு இல்லாமல், ஆங்கிலேயருடைய உச்சரிப்பைப் பின்பற்றி எழுதுவதையும் பார்க்கலாம். தமிழ் என்ற பெயரை Tamil என்று எழுதுவது ஒரு எடுத்துக்காட்டே.

சகரம் வல்லெழுத்து; அது வல்லொலி உடையது. தொல்காப்பியம் இதன் உச்சரிப்பை வல்லொலியாகத்தான் விவரிக்கிறது. சொல் முதலிலும் இதே உச்சரிப்புதான். ககரம் போலல்லாமல், சகர வல்லொலியில் உரசொலியும் சேர்ந்திருக்கும். இதற்கு இணையான ஆங்கில எழுத்து /ch/. இந்தத் தமிழ் எழுத்து, இக்காலத்தில் சொல்லின் முதலில் /s/ என்றும் உச்சரிக்கப்படுகிறது. மொழி வரலாற்றில் இந்த உரசொலி உச்சரிப்பு எப்போது துவங்கியது என்று கண்டறிய இருமொழிக் கல்வெட்டு ஆவணங்களைப் பார்க்க வேண்டும்.
]
உரசொலி ஒலிப்பு, பல சொற்களில் வல்லொலிக்கு மாற்றாக (variant) வருகிறது. சில சொற்களில் வல்லொலி மட்டுமாகவோ, உரசொலி மட்டுமாகவோ ஒலிப்பதையும் பார்க்கிறோம். சட்டி என்னும் சொல்லில் இரண்டு ஒலிகளும் மாற்றாகவும், சட்னி என்னும் சொல்லில் எப்போதும் வல்லொலியாகவும், சாம்பார் என்னும் சொல்லில் எப்போதும் உரசொலியாகவும் சகரம் ஒலிப்பதைக் காண்கிறோம்.

சந்தியில் இரட்டித்து வந்தால், சகரம் எப்போதும் வல்லொலியாகவே ஒலிக்கும். வீட்டுச் சாம்பாரில் இரட்டிக்கிறது; வெங்காய சாம்பாரில் இரட்டிக்கவில்லை. இரண்டிலும் உச்சரிப்பு வேறு. இதே போலத்தான் சங்கம் என்னும் சொல்லில் உரசொலியாக இருக்கும் சகரம், தமிழ்ச் சங்கம் என்னும் தொகையில் வல்லொலி ஆகிறது.

ஊர்களின் பெயர்களிலும் இப்படியே. சென்னை என்னும் பெயரை வல்லொலியோடு ஒலிக்கும்போது ஆங்கிலத்தில் /ch/ என்று எழுதப்படுகிறது. செம்பனார்கோயில் என்னும் பெயரை உரசொலியோடு ஒலிக்கும்போது ஆங்கிலத்தில் /s/ என்று எழுதப்படுகிறது. ஒரு ஊரின் பெயரை இரண்டு ஒலிகளோடு உச்சரிக்கும் வழக்கம் இருந்தால், எந்த ஆங்கில எழுத்தில் அந்தப் பெயர் எழுத ஆரம்பிக்கப்பட்டதோ அதே எழுத்தில் தொடர்ந்து எழுதப்படுகிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

24. இலண்டன் பள்ளியில் தமிழ் படிக்கும் மாணவர்கள் எழுப்பிய கேள்விகள் (இலண்டனிலிருந்து அனுப்பியர், தமிழாசிரியர் ரீட்டா ஃபற்றிமாகரன்):

1.குறிலின் நீட்சிதான் நெடில் என்றால் ஓசையில் மட்டும் அல்ல, வரிவடிவத்திலும் தொடர்பு இருப்பது தானே பொருத்தம்? ஆனால் (இ-ஈ), (உ-ஊ) ஆகிய வரிவடிவங்களில்  ஓசையில் மட்டும்தான் தொடர்பு இருக்கிறது; வரிவடிவில் தொடர்பு இல்லை. இது ஏன்?

2. ஊ என்னும் வரிவடிவம் உ என்னும் வரிவடிவத்தோடு தொடர்பு உள்ளது போல் இருந்தாலும், இந்த எழுத்தில் உ என்னும் உயிரும் ள என்னும் உயிர்மெய்யும் ஒன்றின்மேல் ஒன்றாக எழுதப்பட்டு, அதை ஊ என்னும் உயிரெழுத்து என்று சொல்வது முற்றிலும் பொருத்தமற்றதாக உள்ளது. இதற்கான விளக்கம் என்ன?

3. ஔ என்னும் உயிர் எழுத்திலும் ஒ என்று ஏற்கனவே உள்ள உயிரெழுத்துக்குப் பக்கத்தில் ள என்ற உயிர்மெய்யெழுத்தை எழுதி விட்டு, அந்த இரண்டையும் இணைத்து ஔ என்று ஓரெழுத்தாகச் சொல்வதும் பொருத்தமற்றதாக உள்ளது. இதற்கு என்ன விளக்கம்?

4.  உயிர்மெய் எழுத்துகளுக்கு ஒரு உயிர்க் குறியீடு மட்டும் வருகையில், ஒ, ஓ, ஔ ஓசை உடைய உயிர்மெய்யெழுத்து-களுக்கு (கொ, பொ…), (கோ, போ…), (கௌ, பௌ….) என இரண்டு உயிர்க்குறியீடுகள் வருவது ஏன்?  மேலும், இந்தக் குறியீடுகள் ஏற்கனவே எ, ஏ, ஆ என்ற ஓசைகளுக்கான உயிர்க் குறியீடுகளாகவும் உள்ளன. இவற்றிற்கு ஓரு உயிர்க் குறியீட்டை தனித்துக் கொடுக்க முடியாதா?

5. மெய்யெழுத்தைப் பொறுத்த மட்டில் ர் என்னும் எழுத்து, உயிர்க்குறியீடாக வரும் ‘ா’ வரிவடிவின் மேல் மெய் எழுத்துக்கான புள்ளியைப் போட்டு ‘ர்’ எழுதப்படுகிறது. ஒரு உயிர்க் குறியீடு எப்படி ஒரு மெய்யெழுத்தாக வரமுடியும்? ரி, ரீ ஆகிய உயிர்மெய்யெழுத்துகளும் ா என்னும் உயிர்க் குறியீட்டின் மேல் ி, ீ என்னும் உயிர்க்குறியீடுகளைப் போட்டு எழுதப்படுவதால், இங்கு இரண்டு உயிர்க் குறியீடுகள் ஒன்றன் மேல் ஒன்றாக எழுதப்பட்டுவது போன்ற தோற்றத்தையல்லவா தருகிறது? இதனை எப்படி விளங்கிக்கொள்ள முடியும்?

6. உ, ஊ ஏறிய உயிர்மெய் எழுத்துகளுக்கு மற்றைய உயிர் எழுத்துகளுக்கு இருப்பது போல் ஏன் ஒரே உயிர்க்குறியீட்டைக் கொடுத்து, ஒழுங்கு முறையான பொதுவிதியில் அமையும் வரிவடிவு அமைப்பினைத் தோற்றுவிக்க முடியாதா?

7.  டி, டீ ஆகிய உயிர்மெய் எழுத்துகளைக் கணினியில் எழுதும் பொழுது முதலில் ட வை அமுக்கிப் பின்னர் ி, ீ என்பனவற்றை அமுக்கியே எழுத வேண்டியுள்ளது. இது ட ி, ட ீ வுக்கு மேல் விசிறிக் குறியீடுகளைப் போடுவது  போன்ற எண்ணத்தையே தருவதாகக் கருதுகிறார்கள் பிள்ளைகள். இதனை மாற்றிப் பொது ஒழுங்குமுறைக்குள் எல்லா எழுத்துகளும் அமையக் கூடிய முறையைத் தோற்றுவிக்க  இயலாதா?

பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்:

முதல் ஆறு கேள்விகள் மாணவர்கள் பலருக்கு எழும் கேள்விகள். தமிழ்நாட்டு மாணவர்கள் இந்தக் கேள்விகளைக் கேட்கிறார்களா, ஆசிரியர்கள் கேட்க விடுகிறார்களா என்று தெரியவில்லை.

முதல் ஐந்து கேள்விகள், தமிழ் எழுத்துகளின் வரிவடிவத்தின் வரலாற்றைப் பற்றியவை. ஆறாவது கேள்வி, எழுத்துச் சீர்திருத்தம் பற்றியது. கடைசிக் கேள்வி, கணினித் தமிழ் பற்றியது. இவற்றுக்கான பதில்களும் வேறு.

இன்றைய தமிழ் எழுத்துகளுக்கு 2500 ஆண்டு வரலாறு உண்டு. அசோக மன்னன் இந்தியாவிலும் இலங்கையிலும் பரவ வழிசெய்த பிராமி எழுத்துமுறையிலிருந்து (script) ஆங்கிலேயர் ஆட்சியின் வழி வந்த அச்சுத் தொழில்நுட்பம் வரை தமிழ் எழுத்துகளின் வடிவம் மாறிக்கொண்டே வந்திருக்கிறது. மாற்றங்களுக்கு ஓலை போன்ற எழுதும் ஊடகம், எழுத்தாணி போன்ற எழுதும் கருவி, எழுதக் கை இயங்கும் முறை, எழுதுவோனின் அழகுணர்ச்சி முதலியவற்றோடு, மொழியின் தேவை, அரசின் அதிகாரம் போன்றவையும் காரணமாக இருந்தன. காலம்தோறும் ஒவ்வொரு எழுத்திலும் ஏற்பட்ட மாற்றத்தையும் பொதுவான காரணங்களையும் தி. நா. சுப்பிரமணியன் எழுதிய பண்டைத் தமிழ் எழுத்துக்கள் என்ற நூலிலும், பிற தொல்லெழுத்தியல் (paleography) ஆய்வாளர்களின் எழுத்துகளிலும் காணலாம். இங்கு சுருக்கமாகக் கூறுகிறேன்.

ஒரு நெடில் உயிரின் வரிவடிவம் அதன் குறிலின் வடிவத்தில் சிறு மாற்றம் தந்து பெறப்படுவது பொதுவான உண்மை. /ஈ/ துவக்கத்தில் நேர்கோட்டுக்கு இரு புறமும் புள்ளியிட்டு எழுதப்பட்டது, 0l0 என்பது போல. ஆனால் தமிழ் பிராமியில் இது /இ/ என்று படிக்கப்படும்; இதற்கு /ஃ/ என்ற வரிவடிவமும் இருந்தது. காலப்போக்கில், முன்னது நெடிலுக்குரிய வலக்கோடு சேர்த்துக் கோடுகளை இணைத்து /ஈ/ என்றானது. பின்னதில், மூன்று புள்ளிகளும் இணைக்கப்பட்டு /இ/ என்றானது. /உ/வோடு நெடிலுக்குச் சேர்த்த வலக்கோடு இடப்பக்கம் வளைந்து சுழியாகி /ள/ என்ற வடிவமாக மாறி, மெய்யிலிருந்து தனித்து அதன் மேலே எழுதப்பட்டு /ஊ/ என்றானது. இதில் உள்ள நெடில் குறிக்கும் மெய்யெழுத்து /ள/வுக்கும் உள்ள வடிவ ஒற்றுமை தற்செயலானது. முன்னது பின்னதிலிருந்து பெறப்பட்டது அல்ல.

/ஒள/வைக் குறிக்க /ஒ/வுக்குப் பின் நெடிலுக்குரிய வலக்கோடு  இட்டு, அது வளைந்து சுழியாகி /ள/ என்றானது. இந்த உயிர்க்குறியும் மெய்யெழுத்து /ள/வும் வரலாற்று வளர்ச்சியில் ஒன்றல்ல; அவற்றின் இன்றைய ஒற்றுமை தற்செயலானது. /எ/ அப்போது நெடில்; இதன் குறில், தொல்காப்பியம் சொல்வது போல், புள்ளியிட்டு எழுதப்படும். தொல்காப்பியம் /ஔ/வை உயிரெழுத்துகளோடு சேர்த்திருந்தாலும், பிராமித் தமிழில் இதற்குத் தனி வரிவடிவம் இல்லை; ஒரு உயிரெழுத்துக்குப் பதில் /அவ்/ என்றே எழுதப்படுகிறது.

/ஆ, ஏ, ஓ/ என்ற மூன்று உயிரெழுத்துகளை மெய்யோடு ஏற்றி எழுதும்போது அவற்றை வேறுபடுத்த மூன்று வேறு உயிர்க்குறிகள் வேண்டும். /எ, ஒ/ என்ற உயிரெழுத்துகள் அண்மைக்காலம் வரை நெடில் வடிவங்கள்; இவற்றின் குறில் புள்ளியிட்டுக் காட்டப்படும். (இந்தப் புள்ளியை, ஓலையிலும் கல்லிலும் எழுதுவதில் உள்ள சிரமத்தால், சாதாரணமாக எழுதுவதில்லை. சொல்லை வைத்தே ஒரே வரிவடிவத்தைக் குறிலாகவோ நெடிலாகவோ படிக்க வேண்டும். சில கல்வெட்டுகளில் குறிலும் நெடிலும் வேறுவகையில் வேறுபடுத்தப்பட்டாலும், அச்சு வந்த பிறகே நெடில் /எ/வுக்குக் காலும், /ஒ/வுக்குச் சுழியும் இட்டு எழுதும் வழக்கம் நிலைபெற்றது).

மூன்று நெடில் உயிர்க்குறிகள் பின்வருமாறு வேறுபடுத்தி எழுதப்படும். /ஆ/வுக்கு வலக்கோடும், /ஏ/வுக்கு இடக்கோடும், /ஓ/வுக்கு வலக்கோடும் இடக்கோடும் மெய்யெழுத்தோடு சேர்த்து இடப்படும். பின் இரண்டு உயிர்க்குறிகளும் இடக்கோட்டில் இடதுபக்கம் வளைந்து பின் சுழியாகி, /எ/வுக்கு /கெ/யில் உள்ளது போன்றும், /ஒ/வுக்கு /கொ/வில் உள்ளது போன்றும் வடிவம் பெற்றன. இவற்றின் நெடில் உயிர்க்குறி இரண்டு சுழி பெற்றது. காலப் போக்கில் இந்த உயிர்க்குறிகளும், /ஆ/வின் உயிர்க்குறியான வலக்கோடும், மெய்யிலிருந்து பிரிந்து தனித்து நின்றன.

மெய்யெழுத்து /ர/, எந்த உயிர்க் குறியையும் போலல்லாமல், எப்போதும் தனித்து நிற்கும். இதற்கும் நெடிலின் உயிர்க்குறிக்கும் உள்ள வடிவ ஒற்றுமை தற்செயலானது; இவற்றின் தோற்றமும் வரலாறும் வேறானவை. இரண்டையும் வேறுபடுத்த, பின்னால் உயிர்க்குறி ஒட்டிச்சேராத /ர/வுக்குக் கால் இடப்பட்டது, /ரி, ரு/ முதலான எழுத்துகளில் இருப்பதைப் போல. கணினியில் /ர/வுக்கு (/உ, ஊ/வின் உயிர்க்குறி சேர்ந்து /ரு,ரூ/ என்று எழுதும்போது தவிர) எல்லா இடத்திலும் காலிட்டு எழுதுவது தொழில்நுட்பத்தின் விளைவு. கையால் எழுதும்போது, /ர/வுடன் உயிர்க்குறி இருந்தால் கால் இல்லாமலே எழுதினாலும், துணைஎழுத்து எனப்படும் உயிர்க்குறியோடு வடிவக் குழப்பம் இருக்காது என்ற கொள்கையினடியாக, கடைப்பிடித்த எழுதும் சிக்கனத்திற்குத் தேவை இல்லாமல் போய்விட்டது.

தமிழ் எழுத்துகளின் பரிணாம வளர்ச்சியின் சிக்கல்களை எல்லாம் இந்தச் சுருக்கமான விளக்கத்தில் சொல்லவில்லை. பரிணாம வளர்ச்சி நேர்கோடு அல்ல. இந்த விளக்கத்தினால் சில உண்மைகளை வாங்கிக்கொண்டால் போதும். எழுத்துகளின் வடிவத்தைப் புரிந்துகொள்ள தர்க்கப் பார்வை உதவாது; வரலாற்றுப் பார்வை வேண்டும். ஒரு மொழியின் நெடுங்கணக்கு அறிவியல் அலசல் பார்வையில் முரண்கள் உடையது போல் தோன்றலாம். ஆனால் வரலாற்றின் விளைவில் ஒரு அறிவுரீதியான வரன்முறையை (pattern) எதிர்பார்க்க முடியாது. தமிழ் கால வெள்ளத்தில் மாறி வந்திருக்கிறது. இன்றைய எழுத்து அன்று இல்லை; இன்றைய தமிழ்ப் பயன்பாடு அன்று இல்லை.

/உ, ஊ/வின் உயிர்க்குறிகளும் பரிணாம வளர்ச்சி பெற்றி-ருக்கின்றன. தமிழ் எழுத்தைப் போல் பிராமி எழுத்து முறையிலிருந்து உருவாகிய கிரந்த எழுத்துகளில், இந்த இரண்டு உயிர்களின் உயிர்க்குறிகள், /ஜு, ஜூ/வில் இருப்பதுபோல், ஒரு சீராக உள்ளன. இவற்றின் தமிழ் வரலாறு வேறு.

இந்த இரண்டு உயிர்களின் உயிர்க்குறிகளை, கிரந்தம் போல், சீர்ப்படுத்துவது எழுத்துச் சீர்திருத்தக் கோரிக்கைகளில் ஒன்று.  சீர்திருத்தம் பரிணாம வளர்ச்சி அல்ல; அது திட்டமிட்டுச் செய்யும் மாற்றம். சீர்மை (regularity) பகுத்தறிவின் பாற்படும் என்ற கொள்கையினடியில் செய்யும் மாற்றம். மொழியும் அதன் எழுத்தும் தர்க்கத்தைப் பின்பற்றி அமைவன அல்ல; அவை கலாச்சாரப் வழக்கைப் பிரதிபலிப்பவை. சீர்மையின் சார்பாக வைக்கப்படும் வாதங்களில், தொழில்நுட்பத்தை ஏற்று வளர அது மொழியைத் தயாராக்கும் என்பது ஒன்று. ஆனால் தொழில்நுட்பம் மொழியின் சிக்கலான அமைப்புக்குத் தக்கமாதிரி மாறும் என்பது நாம் வரலாற்றில் காணும் உண்மை. இன்னொரு வாதம் இது: சீராக அமைத்த நெடுங்கணக்கு எளிமையானது; அது எளிமையாக இருந்தால் தமிழர்களின் எழுத்தறிவு (literacy) கூடும்; குழந்தைகள் குறைந்த நேரத்தில் எழுதப் படிக்கத் தெரிந்துகொள்வார்கள். ஆனால், /உ,ஊ/வின் மூன்று வேறுபட்ட உயிர்க்குறிகளால் தமிழர்களின் எழுத்தறிவு குறைவாக இருக்கிறது என்பதற்கோ குழந்தைகள் தமிழ்மொழிக் கல்வியில் பின் தங்குகிறார்கள் என்பதற்கோ ஆராய்ச்சிச் சான்று எதுவும் இல்லை. மாறாக, தமிழ் நெடுங்கணக்கை விடச் சிக்கல் நிறைந்த நெடுங்கணக்கு உள்ள மொழி பேசும் சமூகங்கள் கல்வியில் முன்னேறியிருக்கின்றன. நிரூபிக்கப்படாத கொள்கைகள் கலாச்சார வெளிப்பாடான எழுத்தை மாற்றப் போதுமான வலிமையுடையவை அல்ல.

கணினியில் தமிழ் எழுத்துகளின் வெளியீடு (output), மென்பொருள் எழுதுவோரின் அழகுணர்ச்சியையும் கணினியின் வேலைத் திறனைச் சீர்ப்படுத்தும் நோக்கையும் சார்ந்தது. இது /டி,டீ/க்கும் பொருந்தும். அச்சு வந்தபோது தமிழ் எழுத்துகளின் வடிவங்களை அச்சு வார்த்தவர்கள் முடிவு செய்தார்கள். இப்போது எழுத்துருக்களை அமைக்கும் கலைஞர்கள் (font designers) உண்டு. இவர்கள் அனைவரின் படைப்புத் திறனில் இருக்கிறது மின்னச்சுத் தமிழ் எழுத்தின் அழகு.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

23.விஜயராகவன் எழுப்பிய கேள்வி:

“பேச்சுத் தமிழில் வந்துவிட்ட சில புதிய ஒலியன்களை எழுதத் தமிழுக்குச் சில புதிய எழுத்துகள் தேவை என்பது என் நிலைப்பாடு” என்னும் உங்கள் கருத்தைப் பற்றி விரிவாக எழுதுங்கள்.

பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்:

தமிழ் நெடுங்கணக்கில் முப்பது எழுத்துகள் என்று தொல்காப்பியம் வரையறுத்தது. புள்ளியால் வரிவடிவத்தில் வேறுபடுத்தப்படும் மூன்று சார்பெழுத்துகளை (குற்றியலுகரம், குற்றியலுகரம், ஆய்தம்) இணைப்பு போல் நெடுங்கணக்கில் சேர்க்கிறது. அடிப்படை நெடுங்கணக்கு அகரத்தில் துவங்கி, னகரத்தில் முடிகிறது. ற, ன என்னும் இரு எழுத்துகளையும் முறையே வல்லெழுத்தோடும் மெல்லெழுத்தோடும் வைக்காமல் நெடுங்கணக்கின் இறுதியில் வைத்ததற்குக் காரணம் அசோகன் பிராமி எழுத்து முறையில் இல்லாத இந்த இரண்டு மெய்யெழுத்துகளுக்கும் தமிழின் தேவைக்காகப் புதிய வரிவடிவம் அமைத்துக்கொண்டதாக இருக்கலாம். ஆனால் ழகரத்தை இந்த எழுத்துகளோடு வரிசைப்படுத்தி ளகரத்துக்குப் பின்னால் வைக்காததற்கு விளக்கம் இல்லை.

நமக்குக் கிடைத்துள்ள பிராமித் தமிழ்க் கல்வெட்டுகள் காட்டுவது போல, தொல்காப்பியர் காலத்தில் கல்வெட்டுகளில் தமிழ்ச் சொற்களும் பிராகிருதச் சொற்களும் கலந்து தமிழ் பிராமி எழுத்தில் எழுதப்பட்டிருக்கலாம். தொல்காப்பியர் இலக்கியத்தில் தமிழ்ச் சொற்களைத் தமிழ் நெடுங்கணக்கில் இல்லாத எழுத்துகளைக் கொண்டு எழுதுவது வழக்கம் இல்லை என்றார். பிராகிருதத்திலிருந்து தமிழ் கடன்வாங்கிய சொற்களுக்கும் இது பொருந்தும். தமிழ் எப்படி இருக்க வேண்டும் என்று விதிப்பதை விட, தமிழ் எப்படி இருந்தது என்று விளக்குவதே தொல்காப்பியம் என்பது என் கருத்து. தமிழ் நெடுங்கணக்கிலிருந்து விலகாமல் தமிழ்ப் புலவர்கள் செய்யுள் எழுதினார்கள்; ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகள் எழுதினார்கள். பதினேழாம் நூற்றண்டில் அருணகிரிநாதர் இந்த வழக்கத்திலிருந்து விலகினார். இதன்பின் இலக்கியத்தில் கடன்வாங்கிய சில தமிழ்ச் சொற்களை நெடுங்கணக்கு எழுத்துகளோடு கிரந்த எழுத்துகளைச் சேர்த்து எழுதும் வழக்கம் இன்றுவரை தொடர்கிறது. ஐந்து கிரந்த எழுத்துகளைத் தமிழ் நெடுங்கணக்கின் கடைசியில் சேர்த்து நெடுங்கணக்கை விரித்தது அச்சு வந்த, அந்நியர்களுக்குத் தமிழ் கற்றுக் கொடுத்த காலனிய காலத்தில் நடந்தது என்று நினைக்கிறேன்.

நெடுங்கணக்கிலிருந்து விலகி, வேறு எழுத்துகளைச் சேர்த்துத் தமிழை எழுதும் வழக்கத்தை அரசர்களும் நிலக் கிழார்களும், மற்றவர்களும்  ஆவணம் எழுதத் துவங்கிய காலத்திலிருந்தே தங்கள் ஆவணங்களில் கையாண்டிருக்கிறார்கள். இந்த ஆவணங்களில் பிராகிருதச் சொற்களையும், பின்னால் சமஸ்கிருதச் சொற்களையும், தமிழ் நெடுங்கணக்கு எழுத்துகளை மட்டும் கொண்டு எழுதுவதையும் பார்க்கலாம்; அதே நேரத்தில் நெடுங்கணக்கில் இல்லாத பிராமி எழுத்துகளையும், பின்னால் கிரந்த எழுத்துகளையும், கொண்டு எழுதுவதையும் பார்க்கலாம். புலவர்களைத் தவிர்த்து, அரசர் உட்பட மற்றவர்களிடம்  இந்த இரட்டை வழக்கம் காலந்தோறும் தொடர்ந்து இருந்துவந்திருக்கிறது. சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் ஆவணங்களிலும் துவக்க காலத்திலிருந்தே இந்த இரட்டை வழக்கம் இருக்கிறது.  கல்வெட்டுகள், செப்பேடுகள் மட்டுமல்லாமல் பானைச் சில்லுகளிலும், நாணயங்களிலும், இலச்சினைகளிலும் இரட்டை வழக்கம் இருக்கிறது. தொல்காப்பியர் விவரிக்கும் இலக்கியத் தமிழ் இவர்கள் எழுதும் ஆவணத் தமிழ் அல்ல.

தமிழ்ப் பேச்சிலும் இரட்டை வழக்கம் இருந்திருக்கும், இன்று இருப்பதைப் போல. சாதி / ஜாதி, நட்டம் / நஷ்டம் என்பது போல் இரண்டு சொல் வடிவங்களும், ஜோதி, கஷ்டம் என்பது போல் நெடுங்கணக்கிலிருந்து விலகிய சொல் வடிவங்களும் பேச்சு வழக்கில் இருந்திருக்கும். இத்தகைய பேச்சு வழக்கும் கிரந்த எழுத்துகள் தமிழ் நெடுங்கணக்கில் இடம் பெற உந்துதலாக இருந்திருக்கலாம்.

இலக்கியம் தாண்டிய வழக்கு மரபும் தமிழ் மரபுதானே. தற்காலத் தமிழின் பேச்சு வழக்கில் பொருளை வேறுபடுத்தும் சில புதிய ஒலிகள் வழங்குகின்றன. இவை பிற மொழிச் சொற்களைத் தமிழில் எழுதும்போது மட்டுமல்ல; கடன் வாங்கிய தமிழ்ச் சொற்களில் மட்டுமல்ல; தமிழுக்கே உரிய சொற்களிலும் வழங்குகின்றன. இவை சொல்லின் முதலில் வரும் ஒலிப்புடைய வல்லெழுத்துகள் (voiced stops). /g, k/ என்ற ஒலிகள் குரு, குருவி என்ற சொற்களிலும், /j, c/ என்ற ஒலிகள் ஜிப்பா, சிப்பம் என்ற சொற்களிலும், /d, t/ என்ற ஒலிகள் தேசம், தேர் என்ற சொற்களிலும், /b, p/ என்ற ஒலிகள் போகம், போக என்ற சொற்களிலும் ஒரே இடத்தில் வந்து, சொற்களின் பொருளை வைத்தே சரியான உச்சரிப்பை அறியும்படி செய்கின்றன. ஒலி வேறுபாட்டிலிருந்து பொருள் வேறுபாடு பெறுவதே மொழிகளின் இயல்பான விதி; பொருள் வேறுபாட்டிலிருந்து ஒலி வேறுபாட்டைப் பெறுவது விதிக்கு விலக்கு.

மேலே காட்டிய சொல் முதல் வல்லெழுத்தில் ஒலி வேறுபாடுள்ள சொற்கள் தமிழ்ச் சொற்கள் அல்ல என்பது ஒரு வாதம். இது சொல் வரலாற்றின்படி உண்மையாக இருந்தாலும், இன்றைய நடை-முறையில் பெரும்பான்மையான தமிழர்களால் இந்தச் சொற்கள் பேசப்படுகின்றன. இவர்கள் தாங்கள் வேறொரு மொழி தெரிந்து அதிலிருந்து எடுத்துக் கையாள்வதில்லை. தங்கள் தாயிடமிருந்து, தங்கள் தெருவிலிருந்து இந்தச் சொற்களைப் பெற்றுப் பேசுகிறார்கள். இவற்றின் எண்ணிக்கை, பெரும்பாலும் ஆங்கிலத்தின் வழி, கூடிவருகிறது. வேறு வழியிலும் தலித் போன்ற சொற்கள் அன்றாட வழக்கில் வந்திருக்கின்றன. மேலே காட்டிய ஒலி வேறுபாடு கடனாகப் பெறாத சில தமிழ்ச் சொற்களிலும் இருக்கிறது. தோசை, பூரி முதலியவை சில எடுத்துக்காட்டுகள்.

இத்தகைய சொற்களைத் தமிழிலிருந்தே நீக்கிவிடலாம் என்பது மற்றொரு வாதம். எழுத்தைக் கட்டுப்படுத்தும் அளவுகூட பேச்சைக் கட்டுப்படுத்த முடியாது. மேலும், அறிவியல் தமிழ் வளர, வளர, கலைச்சொல் படைப்பில் மொழிபெயர்ப்பு ஒரு வழிதான் என்னும் உண்மையை ஒப்புக்கொண்டால், கலைச்சொற்களில்  ஒலிப்புடை வல்லெழுத்துகள் மிகும். எதிர்கால ஒட்டத்தில் வெற்றி பெற எந்தக் கட்டும் தமிழுக்குத் தடையாக இருக்கக் கூடாது.
சொல் முதலில் ஒலிப்புடைய வல்லெழுத்துகளுக்குத் தனி வரிவடிவம் இருந்தால் தமிழ் உச்சரிப்புக்குச் சொல்லின் முதல் இடத்தில் விதிவிலக்கு தர வேண்டியதில்லை. விதிவிலக்கு இல்லாமல் தமிழின் ஒலி அமைப்பின் எளிமை தொடரும். எளிமை என்பது ஒலிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பது மட்டுமல்ல; ஒலிகளால் அமைந்த சொல்லுக்கும் பொருளுக்கும் உள்ள தொடர்பு குழப்பம் இல்லாமல் இருப்பதும் ஆகும்.

உச்சரிப்பில் உள்ள எல்லா ஒலிகளுக்கும் வரிவடிவம் தேவை இல்லை. ஒரு எழுத்து வரும் இடத்தை வைத்து அதன் ஒன்றுக்கு மேற்பட்ட ஒலிகளை அறிய முடியுமென்றால் அதுவே திறம்பட அமைந்த நெடுங்கணக்கு. மெல்லெழுத்துக்குப் பின் வரும் வல்லெழுத்து ஒலிப்புடையது ஆவதால் ஒரு வரிசை வல்லெழுத்தே போதும் என்ற புரிதலின் அடிப்படையில் அமைந்த தமிழ் நெடுங்கணக்கு சிக்கனமானது. இந்த இடத்தில் வரும் வல்லெழுத்துகளுக்கு உச்சரிப்பு வேறாக இருந்தாலும் தனி வரிவடிவம் தேவை இல்லை.

மேலே காட்டிய ஜிப்பா போன்ற சில சொற்களில் சொல்லின் இடையில் வரும் பகரமும் ஒலிப்புடைய வல்லெழுத்தாக உச்சரிக்கப்படுகிறது. இந்த உச்சரிப்பு கடன்வாங்கிய ஒரு சில சொற்களிலேயே இருப்பதால் ஒலிப்புடைய வல்லெழுத்தின் வரிவடிவத்தைப் பயன்படுத்தாமலும் விடலாம். பகரத்தின் உரசொலியாகிய /f/ கடன்வாங்கிய சொற்களில் மட்டும் இருக்கிறது. இதைப் போன்றதே ஜகரத்தின் உரசொலியாகிய /z/; ஆனால் பேச்சு வழக்கில் இந்த ஒலியை உச்சரிப்பது குறைவு. ஜெராக்ஸ், ஜிப் (zip) போன்ற சொற்களில் முதல் எழுத்து /j/ என்றே ஆங்கிலம் தெரியாதவர்களால் ஒலிக்கப்படுகிறது. இவற்றுக்குத் தனி எழுத்து வேண்டுமா என்பது வாதத்திற்கு உரியது.

உயிர்களில் /ae/  என்னும் புதிய உயிரொலி கடன் சொற்களிலேயே ஆங்கிலம் படித்தவர்களால் மட்டும் உச்சரிக்கப்படுகிறது; இது தமிழ் உயிரெழுத்துகள் /ஆ/ அல்லது /ஏ/-யால் எழுதப்படுகிறது. எடுத்துக்காட்டு: பாங்க் / பேங்க். பாங்கு ‘இயல்பு’: பாங்க் ‘வங்கி’ என்று எழுதும்போது ஒரே எழுத்து (ஆ) ஒரே இடத்தில் பொருள் வேறுபடுத்தும் இரண்டு ஒலிகளை (aa, ae) குறிக்கிறது. ஆனால் /ae/ என்ற ஒலி பெரும்பான்மையோர் உச்சரிப்பில் இல்லாததால் இதற்கு ஒரு வரிவடிவம் நெடுங்கணக்கில் சேர்க்கும் தேவை இல்லை. மேலும், இந்த ஒலியுடைய சொல் தமிழாக்கம் பெறும்போது /ஆ/ என்ற எழுத்தையே கொள்கிறது (எ-டு: டாங்கி). இன்னொரு புதிய உயிரொலியைத் தமிழ் வினைச்சொற்களில் காணலாம். சொல்லிவிட்டான் என்ற வினை இரண்டு பொருளில் வருகிறது: ‘நிச்சயமாகச் சொன்னான், செய்தி அனுப்பினான்’. பேச்சில் இந்த வினை முதல் பொருளில் சொல்லீட்டான் என்றும், இரண்டாவது பொருளில் சொல்யூட்டான் என்றும் உச்சரிக்கப்படுகிறது. இங்கு இரண்டு வேறு உயிர்கள் பொருள் வேறுபட்டைத் தருகின்றன. ஆனாலும், பேச்சுத் தமிழை எழுதும்போது சொல்லிட்டான், சொல்லிவிட்டான் என்று எழுதிப் பொருள் வேறுபாட்டைக் காட்டலாம்.

மேலே சொன்னவற்றால் பேச்சுத் தமிழில் வரும் புதிய ஒலிகள் எல்லாமே புது எழுத்து பெறாது என்பது புலனாகும். புது எழுத்து பெற, பொருள் வேறுபாடு, பெரும்பான்மை உச்சரிப்பு, எழுத மாற்று வழி இல்லாமை என்று சில வலுவான காரணங்கள் இருக்க வேண்டும், இயல்பாக ஆங்கிலம் பேசாத தமிழர் வாயில் வழங்கும் புதிய ஒலிகளுக்கு வரிவடிவம் தருவதற்கு.

மேலே காட்டிய புதிய ஒலிகள் உள்ள சொற்கள் தமிழ்த் தெருக்களிலும் ஜனரஞ்சக இதழ்களிலும் இயல்பாகப் புழங்குகின்றன. மேட்டுக்குடி இலக்கியத்தில், கட்டுரைகளில் வருவது மட்டுமே தமிழ் என்று தமிழைச் சுருக்க முடியாது, அல்லவா? இன்று புனைகதைகளில் பேச்சுத் தமிழை எழுதுவது நிலைபெற்றுவிட்டது. இதற்குத் தமிழ் நெடுங்கணக்கு துணைபோக வேண்டும், அல்லவா?

உலகில் எந்த மொழியும் தன் நெடுங்கணக்கில் மாற்றம் செய்ததில்லை என்பது இன்னொரு வாதம். ஒரு மொழி தன் எழுத்துமுறையையே மாற்றிக்கொண்டதற்குப் பல வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. நெடுங்கணக்கில் மாறுதல் செய்ததற்கு வரலாற்றுச் சான்றுகள் குறைவு. நெடுங்கணக்கு சில எழுத்துகளை விட்டுவிட்டதற்குத் தமிழிலேயே சான்று உள்ளது. தொல்காப்பியம் இணைப்பாகச் சேர்த்த மூன்று சார்பெழுத்துகளில் இரண்டு இன்று தமிழ் நெடுங்கணக்கில் இல்லை; ஆய்தம் ஒன்று மட்டுமே இருக்கிறது. கிரந்த எழுத்துகளில் க்ஷகரத்தை இன்று அதன் ஒலியோடு இன்று உச்சரிப்பதில்லை. சொல்லின் முதலில் சகரமாகவும் (எ-கா சத்திரியன்), சொல்லின் நடுவில் –ச்ச்- என்றும் (எ-கா பரிச்சை) பேச்சில் உச்சரிக்கப்படுகிறது. இந்த எழுத்தை நெடுங்கணக்கிலிருந்து எடுத்துவிடுவதால் உச்சரிப்புப் பிரச்சனையோ பொருள் பிரச்சனையோ வராது. இருப்பினும், எழுத்துக் குறைப்புக்குத் தீவிர எதிர்ப்பு இருந்திருக்கிறது. பெரியார் விடச் சொன்ன ஐகார, ஔகாரத்தைத் தமிழர்கள் ஏற்கவில்லை. ராஜாஜி உயிரேறிய ஙகர, ஞகரத்தை விட்டு எழுதிய பாடநூலைத் தமிழர்கள் ஒப்புக்கொள்ளவில்லை.

நெடுங்கணக்கில் எழுத்துக் கூட்டலுக்குத் தமிழில் ஐந்து கிரந்த எழுத்துகளைச் சேர்த்தது ஒரு சான்று. வேறு மொழிகளிலும் சான்று இருக்கிறது. கிரேக்கத்திலிருந்து கடன் வாங்கிய சொற்களால் ஆங்கில நெடுங்கணக்கில் /k, z/ என்னும் இரண்டு எழுத்துகள் இடம் பெற்றன. ஒரு மொழியின் இயற்சொற்களில் பேச்சில் ஏற்பட்ட உச்சரிப்பு மாற்றத்தால் அதன் நெடுங்கணக்கில் மாற்றம் ஏற்பட்டதற்கு இரண்டு மொழிகளிலிருந்து உதாரணங்கள் தருகிறேன். இந்த மாற்றம் கூடுதல் குறிகளை (diacritic marks) உள்ள எழுத்தின் மீது ஏற்றிப் புதிய வரிவடிவை உருவாக்கியது. ஜெர்மன் மொழியில் தாய் என்ற பொருளுடைய mutter என்ற சொல்லின் பன்மை வடிவம் muttere. இந்தச் சொல்லின் கடைசி /e/ உச்சரிக்கப்படாமல் முதல் /u/-வின் உச்சரிப்பை மாற்றியது. புதிய உச்சரிப்பைக் குறிக்க /u/-வின் மீது இரண்டு புள்ளியிட்டு ஒரு புதிய வரிவடிவம் (umlaut) நெடுங்கணக்கில் சேர்க்கப்பட்டது. இது போன்றே பிரஞ்சு மொழியில் தயார் என்ற பொருளுடைய prest என்ற சொல்லில் /s/ உச்சரிக்கப்படாமல் மறைந்து முந்திய உயிரின் உச்சரிப்பு மாறியபோது /e/-யின்மீது கூரைக்குறி (circumflex) இட்டு ஒரு புதிய வரிவடிவம் நெடுங்கணக்கில் சேர்க்கப்பட்டது. இது போன்றே மேல்குறியிட்ட வேறு உயிரெழுத்துகளும் சேர்ந்தன.

பேச்சுத் தமிழில் ஆங்கிலம் அறியாத பெரும்பான்மையோரின் உச்சரிப்பில் உள்ள, பொருள் வேறுபாடு காட்டும் புதிய ஒலிகளுக்கு வரிவடிவங்களை நெடுங்கணக்கின் திறன் கருதிச் சேர்க்கும் தேவையைப் பற்றி, பேச்சுத் தமிழின் செல்வாக்கு எழுத்துத் தமிழில் அதிகமாகி வரும் இந்தக் காலத்தில், தமிழ்ச் சமூகம் சிந்திக்க வேண்டும். புதிய வரிவடிவங்களை உருவாக்க இரண்டு வழிகள் இருக்கின்றன. ரோமன், கிரந்தம் போன்ற பிற எழுத்து- முறைகளிலிருந்து கடன் வாங்குவது ஒரு முறை. மொழியின் எழுத்து ஒரு கலாச்சார அடையாளமும் கூட என்பதால் இந்த வழியைப் பலர் ஒப்புவதில்லை.

தமிழ் எழுத்துகளிலேயே மாற்றம் செய்வது இன்னொரு வழி. மாற்றம் செய்ய உள்ள எழுத்துகளில் குறிகளைச் சேர்ப்பது, மேலே காட்டியது போல், மற்ற மொழிகள் கையாண்ட வழி. உரசொலியைக் குறிக்க /ஃப/ என்று எழுதுவதை நீட்டித்து, /ஃஜ/ என்னும் எழுத்தை /z/ என்னும் ஒலியைக் குறிக்கப் பயன்படுத்தலாம், இந்த ஒலியைத் தமிழர்கள் தங்கள் வழக்கில் உச்சரித்தால். /க, ச/ என்னும் வல்லொலிகளுக்கு இணையான உரசொலிகளைக் குறிக்க /ஹ,ஸ/ என்னும் எழுத்துகள் இருக்கின்றன. /த, ட/-வுக்குத் தமிழர் பேச்சில் உரசொலி உச்சரிப்பு இல்லை. இந்தக் குறியீட்டு முறையைப் பயன்படுத்தி, ஒலிப்புடைய வல்லொலியை (voiced stops) குறிக்க, வல்லெழுத்துக்கு முன் இரண்டு புள்ளியிட்டுக் காட்டலாம். /க, த, ப/ முறையே /:க, :த, :ப/ என்று வடிவம் பெறும். /ச/-வுக்கு /ஜ/ இருக்கிறது; /ட/, டமாரம் போல், பல சொற்களின் முதலில் ஒலிப்புடனேயே உச்சரிக்கப்படுகிறது.

தமிழ்ப் பெண் கன்னியாக வீட்டிற்குள் அடைந்து கிடக்காமல், உலகம் சுற்றும் பெண்ணாக வலம்வருவதற்குத் துணை செய்யச் சில கட்டுப்பாடுகளைத் தளர்த்தத் தமிழ்ச் சமூகம் தன்னைத் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும். தமிழின் பழைய வடிவங்களைக் காப்பதை விட, மாற்றங்களை ஏற்றுக்கொண்டு தமிழின் எதிர்காலத்தைக் காப்பது முக்கியமானது.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

விஜயராகவன் எழுப்பிய கேள்வி:

க்ரியாவின் தற்கால அகராதியில் சொற்களின்  வழக்கு பற்றிக் குறிப்பு உள்ளது. சில சொற்கள் ‘அருகி வரும்’, சில சொற்கள் ‘பெருகி வரும்’ எனப் பாகுபாடு செய்யப்பட்டுள்ளன. இது ஆர்பிட்ரரியாகவும் சப்ஜெக்டிவ் ஆகவும் உள்ளது. இதற்கு புறவய மதிப்பீட்டைப் பிரயோகித்தார்களா? அப்படியானால், அது என்ன? ‘அருகி வரும்’ என்று கூறும் சொற்கள், இன்றும் கூட பலரால் உபயோகிக்கப்படுகின்றன.

பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்:

தற்காலத் தமிழில் பழையன கழிந்து புதியன வருவதை, க்ரியா அகராதி, சொற்களுக்குத் தந்துள்ள அருகி வருவன, பெருகி வருவன என்னும் அடையாளக் குறியீடுகள் காட்டுகின்றன. இந்த அகராதி 1956ஆம் ஆண்டிலிருந்து எழுதப்பட்ட பல பொருள் துறைகளிலிருந்து எடுத்த 75 லட்சம் சொற்களைக் கொண்ட சொல்வங்கியின் துணைகொண்டு தயாரிக்கப்பட்டது. வழக்குக் குறியீடுகள் இன்றைய தமிழின் வழக்கு நிலவரத்தைப் பிரதிபலிக்கின்றன. இந்தக் குறியீடுகளின் பொருளை அகராதியின் முன்னுரையில் வழக்கு நிலை என்ற பத்தியில் பார்க்கலாம்.

dictionary-akarathiக்ரியா அகராதியின் திருத்திய பதிப்பில் 21,000 சொற்கள் இருக்கின்றன. இவற்றின் வடிவம், இலக்கண வகை, பொருள், வழக்கு நிலை எல்லாம் மேலே சொன்ன சொல்வங்கியிலிருந்து முடிவு செய்யப்பட்டவை. அகராதியில் உள்ள சொற்களில் வழக்கு அருகிவரும் சொற்கள் கிட்டத்தட்ட ஆயிரம்; வழக்கு பெருகிவரும் சொற்கள் சுமார் இருநூறு. அருகிவரும் சொற்கள், வழக்கிலிருந்து போய்விட்ட சொற்கள் அல்ல. அவை இன்னும்  உபயோகத்தில் இருக்கும். குறிப்பிட்ட துறையில் இருக்கலாம்; குறிப்பிட்ட வயதினர், தொழில் செய்பவர்கள் பயன்படுத்தலாம். அவை அளவில் குறைவாக வழங்கப்படுகின்றன என்பதையே வழக்குக் குறியீடுகள் சுட்டுகின்றன.

சொல்வங்கியில் உள்ள தரவைக் காலவாரியாகப் பார்க்கும்போது காலப்போக்கில் ஒரு சொல்லின் வரவு எண்ணிக்கை குறைந்து வந்தால், அது அருகிவரும் சொல் எனப்படும்; கூடிவந்தால், பெருகிவரும் சொல் எனப்படும். இது புறவய அலகு. முடிவுக்கு வரத் தடுமாற்றம் உள்ள இடங்களில் அகராதிக் குழுவினர் தங்களுடைய தமிழ் வாசிப்பு அனுபவத்தின் அடிப்படையில் முடிவு செய்வார்கள். இது அகவய முடிவு.

அகராதியில் தரப்பட்டுள்ள சொல் வழக்குக் குறியீடுகள் பற்றித் தமிழ் வாசகர்கள் அனைவருக்கும் ஒருமித்த கருத்து இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. மொழி பற்றிய பார்வை, வாசகர்களிடையே வேறுபடும். மேலும், அகராதி, மொழியின் போக்குகளின் பதிவே; புதிய போக்கில் பழமை ஓரளவு தொடரும். க்ரியாவின் அகராதி தற்காலத் தமிழ்த் தரவின் அடிப்படையில், கணினியின் உதவியோடு தயாரிக்கப்பட்டது. சொல்லின் வழக்கு நிலை அடையாளக் குறியீடுகளும் சொல் பற்றிய வேறு செய்திகளும் மனத்திற்குத் தோன்றியபடி தரப்படவில்லை. யாருடைய விருப்பு வெறுப்புகளின் அடிப்படையிலும் தரப்படவில்லை.

ஒரு பொருளோ, பழக்கமோ மறைந்துவிட்டால், அதற்குரிய சொல் இன்று தன் பொருளிலோ மரபுப் பொருளிலோ (idiomatic meaning) வழங்கினால் அந்தச் சொல் அகராதியில் இடம் பெறும். பரவலாக வழங்கினால் அருகிவரும் சொல் ஆகாது. (எ-டு) அணா, தேவதாசி, வீசை. அருகிவரும் சொற்களில் பெரும்பான்மையானவை, சமஸ்கிருதத்திலிருந்து கடன் வாங்கிய சொற்கள் (எ-டு) அகாரணமாக, வந்தனம்.

பெருகிவரும் சொற்களில், மதிப்பை உயர்த்தும் சொற்களும், ஆங்கிலச் சொற்களுக்கு இணையான சொற்களும், சமஸ்கிருதச் சொற்களின் மாற்றுச் சொற்களும் இருக்கின்றன. (எ-டு) அமரர் ஊர்தி (சவப்பெட்டி), பதின்பருவம் (teen age), இழப்பீடு (நஷ்டஈடு).

மாற்றப்படும் பழைய சொற்களில் சமஸ்கிருதச் சொல் மட்டுமல்லாமல், தமிழும் சமஸ்கிருதமும் கலந்த சொற்களும் உண்டு. (எ-டு) ஆசிரியர் உரை (தலையங்கம்), உருவ பொம்மை (கொடும்பாவி)

அகராதியில் ஒரு சொல்லின் பழைய பொருள் அருகிப் புதிய பொருள் பெருகும் பதிவுகளும் உண்டு. தமிழ்மொழி வரலாற்றில் சொல் வளர்ச்சி போல், சொல்லின் பொருள் வளர்ச்சியும் முக்கியமானது. இதைப் பற்றிய ஆராய்ச்சி குறைவாகவே இருக்கிறது. பள்ளிப் பாடப் புத்தகத்தில் நாற்றம் என்ற சொல்லின் பொருள் நல்ல வாசனை என்ற பொருளிலிருந்து இன்று கெட்ட வாசனை என்ற பொருளாக மாறியிருப்பது சொல்லப்படும். ஆனால் சமூக மாற்றத்தைப் பிரதிபலிக்கும் பொருள் வளர்ச்சி பற்றித் தெரிய வேண்டியது நிறைய இருக்கிறது.

ஒரு உதாரணம் மட்டும் தருகிறேன்.

தொண்டு என்ற சொல்லின் பழைய பொருள், கடவுள் காரியம், ஆண்டைக்குச் செய்யும் வேலை என்ற இரண்டு மட்டுமே. இந்தச் சொல்லின் இக்காலப் பொருள் அதன் நிலப் பிரபுத்துவப் பொருளிலிருந்து விலகி, பொதுநலச் சேவை என்னும் மதச் சார்பற்ற பொருளைப் பெற்றிருக்கிறது.

சொல்லும் பொருளும் அருகியும் பெருகியும் வருவது, தமிழ், காலத்துக்குத் தக்க மாறிக்கொள்ளும் நெகிழ்ச்சியுடைய மொழி என்பதைக் காட்டுகிறது,



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

 21 பேராசிரியர் ந.தெய்வசுந்தரத்தின் மறுகேள்வி:

ஒருங்குறியில் கிரந்தப் பிரச்சினையில், தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் இரண்டு கருத்துகள் நிலவுகின்றன. ஒன்று, கிரந்தமே கூடாது. மற்றொன்று கிரந்தத்திற்கு இடம் அளிப்பதை எதிர்க்கவில்லை, மாறாக, சமசுகிருதத்தில் இல்லாத ஒலிகளுக்கு அல்லது ஒலியன்களுக்கு, கிரந்தத்தில் ஏன் இடம் அளிக்கவேண்டும்? அதுவும் தமிழில் உள்ள வரிவடிவங்களை ஏன் சேர்க்கவேண்டும் என்பதே கேள்வி.

பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்:

இந்தக் கேள்விக்கு நான் ஏற்கெனவே எழுதிய பதில்களில் விடை இருக்கிறது. இருப்பினும் கொஞ்சம் விவரமாக இங்கே எழுதுகிறேன்.

ரோமன் எழுத்துகளோடு கூடுதல் குறியீடுகள் (diacritic marks) சேர்த்து புனல் க. முருகையனின் பன்னிரு திருமுறை ஒலிபெயர்ப்பு என்னும் நூல் அண்மையில் வெளியாகியிருக்கிறது. தமிழ் பேச மட்டும் தெரிந்தவர்கள், சைவப் பக்தி இலக்கியத்தைப் படிக்க உதவும் பொருட்டு இந்த நூல் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதே போல், சோழர் காலத்தில் தமிழ் எழுத்தும் பேச்சும் தெரியாதவர்கள் தென்கிழக்காசியக் கோயில்களில் தமிழ்ப் பக்திப் பாடல்களை மனப்பாடம் செய்து பாட, தமிழ் கிரந்தத்தில் எழுதப்பட்டிருக்கிறது. இன்று இந்திய அரசு தமிழை கிரந்தத்தில் எழுதும் முறையைக் கொண்டுவர வேண்டும் என்னும் உள்நோக்கத்தோடு ஒருங்குறியில் கிரந்த எழுத்துகளோடு தமிழ் எழுத்துகளைச் சேர்க்கப் பரிந்துரைத்திருக்கிறது என்பதே குற்றச்சாட்டு.

இந்த உள்நோக்கத்தை ஏகாதிபத்தியம் என்று சாடுபவர்கள் தங்கள் வாதத்தில் தகவல் பிழை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இந்திய அரசின் கோரிக்கையில் ழ, ற, ன என்ற மூன்று எழுத்துகளும் எகர ஒகரத்தின்  உயிர்க்குறிகளான ஒற்றைக் கொம்பும் இரட்டைக் கொம்பும் தமிழ் நெடுங்கணக்கிலிருந்து கிரந்தத்தில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. ஏழு எழுத்துகள் அல்ல. எகரமும் ஒகரமும் கிரந்த எழுத்துகளில் புள்ளியிட்டு எழுதப்படும்.

கிரந்தத்தில் தமிழ் எழுத்துகள் இருப்பது புதிதாகத் துவங்கும் வழக்கம் இல்லை. கிரந்தத்தில் ஏற்கெனவே தமிழ் எழுத்துகளின் ஒரே அல்லது ஒத்த வடிவத்தைக் கொண்ட உ, ஊ, ய, வ, ண, (த, ந) என்ற எழுத்துகள் இருக்கின்றன. தமிழ் எழுத்தும் கிரந்த எழுத்தும் பிராமி எழுத்து என்ற ஒரே மூலத்திலிருந்து வளர்ந்த வரலாறு, இந்த ஒப்புமைக்குக் காரணமாக இருக்கலாம்; அல்லது கிரந்தம் தமிழிலிருந்து முன்காலத்தில் கடன் வாங்கியிருக்கலாம்.

தமிழ் எழுத்துகளின் மீது தமிழர்களுக்குக் காப்பரிமை இருக்கிறது என்று சொல்ல முடியாது. பகரத்தின் உரசொலியாக /f/ என்ற ரோமன் எழுத்தைத் தமிழ் எடுத்துக்கொண்டால் ஆங்கிலேயர்கள் வழக்குப் போட முடியாது. கிரந்தத்திற்கும் தமிழுக்கும் மட்டும் பங்காளிச் சண்டை!

மேலே காட்டிய உதாரணத்தில் தமிழை ரோமன் எழுத்துகளில் ஒரு குறிப்பிட்ட பயன்பாட்டுக்காக எழுதுவதைப் போல, தமிழைக் கிரந்த எழுத்துகளில் எழுத எந்தப் பயன்பாடும் இல்லை. தமிழ் பேசவும் ரோமன் எழுதவும் தெரிந்தவர்கள் இருப்பது போல், தமிழ் பேசவும் கிரந்தம் எழுதவும் தெரிந்தவர்கள் யாரும் இல்லை.

தமிழ் எழுத்துக்கு மாற்று எழுத்தாக கிரந்த எழுத்தைக் கொண்டுவருவது நடைமுறைச் சாத்தியமற்றது. இந்தியாவில் ஒரு சர்வாதிகாரி ஆட்சிக்கு வந்து, ஒரு பொது எழுத்து முறையைக் கத்திமுனையில் புகுத்தினால் அது தேவநாகரியாகவோ, ரோமனாகவோ இருக்குமே ஒழிய கிரந்தமாக இருக்காது. இந்திய அரசுக்கு தேவநாகரியைப் பரப்புவதில் உள்ள ஆர்வத்தில் ஒரு சிறு பகுதிகூட கிரந்தத்தைப் பரப்புவதில் இருக்க முடியாது.

பின் ஏன் இந்திய அரசு கிரந்தத்தில் சில தமிழ் எழுத்துகளைச் சேர்க்க ஒத்துக்கொள்கிறது? கிரந்த வல்லுநர்களில் இரண்டு பிரிவினர் இருக்கிறார்கள். ஒரு பிரிவினர் கிரந்தத்தை ஒரு மரபு எழுத்து முறையாகவே (heritage script) பார்க்கிறார்கள். அவர்கள் உள்ள கிரந்தத்தில் ஒரு மாற்றமும் செய்ய விரும்புவதில்லை. மற்றொரு பிரிவினர் கிரந்தத்தை நவீன எழுத்து முறை ஆக்க விரும்புகிறார்கள். கிரந்தம் ஒரு மொழி அல்ல. சமஸ்கிருதத்தை எழுத – அதிகமாகத் தமிழ்நாட்டில்  எழுத – பயன்படுத்தபட்ட, பயன்படுத்தப்படும் ஒரு எழுத்து முறை.

இன்று சமஸ்கிருதத்தை நாளிதழிலும் வானொலியிலும் தொலைக்காட்சியிலும் பயன்படும் நவீன மொழியாக்கச் சிலர் முயற்சி செய்கிறார்கள். சமஸ்கிருதம் உள்வாங்கும் நவீனச் சொற்களை எழுத, கிரந்தத்திற்குப் புதிய எழுத்துகள் தேவைப்படும். இந்தத் தேவையையே இந்திய அரசு, தமிழக அரசின் கேள்விக்கும் கவலைக்கும் பதிலாக எழுதியிருக்கிறது. இது கிரந்தத்தை இன்று பயன்படுத்துபவர்களின் ஒரு பிரிவினரின் தேவை. இந்திய அரசு இந்தத் தேவையை நிறைவுசெய்ய விரும்புகிறது.

தமிழ்நாட்டில் சமஸ்கிருதத்தைக் கிரந்தத்தில் எழுதும்போது தொல்காப்பியம், தமிழ் போன்ற சில பெயர்களையும், சில நபர்களின், இடங்களின் பெயர்களையும் எழுதும் தேவை ஏற்படும். அந்தப் பெயர்களில் தமிழுக்கே உரிய ஒலிகள் இருக்கும்போது அவற்றுக்கு வரிவடிவம்  கொடுக்க எழுத்துகள் தேவைப்படும். புதிதாகப் படைப்பதற்குப் பதில் தமிழிலிருந்து கடன் வாங்கிக்கொள்ளலாம் என்கிறார்கள்.

கிரந்தம் நவீன எழுத்து முறை ஆக வேண்டுமா என்பதில் கருத்து வேறுபாடு இருக்கலாம். என்னைப் பொறுத்தவரை கிரந்தத்தை மரபு எழுத்து முறையாகப் போற்ற வேண்டும்; அதற்கு ஒருங்குறியில் இடம் தர வேண்டும் என்பதே முக்கியம். அதை எழுத்துக் கடன் வாங்கி, நவீன எழுத்து முறையாக்க விரும்பும் கிரந்தப் பயனாளிகளைத் தடுக்க, மற்றவர்களுக்கு உரிமை இல்லை; அரசுக்கு அதிகாரம் இல்லை.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

 19 . மின்தமிழ் இணையக் குழுமத்தில் விவாதித்த கேள்வியை அண்ணாகண்ணன் வழி பெற்றுப் பேராசிரியர் பதில் அளித்துள்ளார். அந்தக் கேள்வி:

கட்டாயமா, அவசியமா, நிச்சயமா, கண்டிப்பா முதலான சொற்களைப் பெருமளவில் யாருமே சரியாப் புழங்குறது இல்லை. ‘கட்டாயம்’ன்னா, நிபந்தனையின் பேரில் செய்வது; ‘அவசியம்’ன்னா, தவிர்க்க முடியாமையினால் செய்வது; ‘நிச்சயம்’ன்னா, நிர்ணயத்தின் பேரில் செய்வது; ‘கண்டிப்பா’ன்னா, நிர்ப்பந்தத்தின் பேரில் செய்வது…. compulsorily, necessarily, certainly, surelyன்னு ஆங்கிலத்துல மட்டும் சரியாப் பாவிக்கிறீங்களே?

பேராசிரியர் இ.அண்ணாமலை பதில்:

தமிழைத் துல்லியமாகப் பயன்படுத்துவதில் தமிழர்கள் கரிசனம் காட்டுவதில்லை என்பதில் உண்மை இருக்கிறது. தூய தமிழ் எழுதுவதில் காட்டுமளவு அக்கறை, துல்லியத் தமிழில் காட்டுவதில்லை. அலங்காரத் தமிழுக்கு இருக்கும் பாராட்டு, நேர் தமிழுக்கு இல்லை. தமிழர்கள் தங்கள் மொழியின்மீது கொண்டுள்ள எண்ணப் பாங்கே இதற்குக் காரணம். தமிழ் வீட்டு மொழி; அதை எப்படியும் எழுதலாம் என்பது ஒரு எண்ணப் பாங்கு. அவைக்கு வந்தால்தானே ஆடை சரியாக இருக்க வேண்டும் என்னும் மனநிலை. தமிழ் ஆராதனைக்கு உரிய மொழி; அதை எப்படிப் பயன்படுத்தினாலும், போற்றிப் புகழ்ந்தால் போதும் என்பது இன்னொரு மனப் பாங்கு. இஷ்டப்படி காரியம் செய்துகொண்டு சாமியைக் கும்பிட்டுவிட்டால் போதும் என்னும் மனநிலை.

துல்லியமாக எழுத வேண்டும் என்பதில் கருதும் பொருளை உரிய சொல்லில் தர வேண்டும் என்பதும் அடங்கும். சொல்லுக்கும் பொருளுக்கும் உள்ள தொடர்பு, வழக்கு மரபால் ஏற்படுவது. வழக்கு மாறினால் பொருளும் மாறும். இன்றைய ஜனநாயக சமூகத்தில் வழக்கு பெரும்பான்மை வழக்கைக் குறிக்கிறது; கலாச்சார ஆதிக்கம் செலுத்துபவர்களாக இருந்தாலும் சரி, அரசியல் ஆதிக்கம் செலுத்துபவர்களாக இருந்தாலும் சரி,  சமூகத்தில் அதிகாரம் உள்ளவர்களுடைய வழக்கை மட்டுமல்ல.

ஒரு சொல்லின் பொருளில் மாற்றம் ஏற்படும்போது, அதன் பொருள் சொல்லின் வேர்ச்சொல்லின் பொருளிலிருந்து விலகலாம். அதனால், பொருள் தொடர்புடைய பல சொற்களை ஒப்பிடும்போது, வேர்ச்சொல்லை வைத்து அவற்றை வித்தியாசப்படுத்த முடியாது. மேலும், வேர்ச்சொல்லை வைத்துப் பொருள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொல்வது வழக்கைப் புறக்கணிப்பதாகும். இந்தச் சொல்லுக்கு இந்தப் பொருள்தான் என்று விதி செய்வது மொழியின் பயன்பாட்டை உள்ளபடி விவரிப்பதாகாது. ஆங்கிலச் சொற்களை வைத்துப் பொருள் வேறுபாட்டைக் காட்டுவது சிக்கலைத் தரும். இரு மொழிகளில் எல்லா வகையிலும் பொருள் ஒத்திருக்கும் சொற்கள் இருப்பது அபூர்வம்.

எந்த மொழியிலும் எல்லா வகையிலும் ஒத்திருக்கும் பொருளொக்கும் சொற்கள் (synonyms) இருப்பது அபூர்வம் என்பது மொழியியலில் ஒரு கொள்கை. பொருள் ஒத்திருந்தாலும் நடை (style), சொற்சேர்க்கை (collocation) முதலியவற்றில் வேறுபாடு இருக்கும். இதை ஏற்றுக்கொண்டால், கேள்வியில் உள்ள சொற்களுக்கிடையே (அந்த நான்கு சொற்களோடு ‘உறுதி’யையும் சேர்த்துக்கொள்ளலாம்) பொருள் வேறுபாடு இருக்கிறதா, பயன்பாட்டு வேறுபாடு இருக்கிறதா என்ற கேள்விக்கு விடை காண வேண்டும்.

கட்டாயமாக, அவசியமாக, நிச்சயமாக, உறுதியாக, கண்டிப்பாக என்ற ஐந்து சொற்களில் முதல் மூன்றும் – ஆக என்ற உருபு இல்லாமலே வினையடையாக வரும்: ‘கட்டாயம், அவசியம், நிச்சயம் வருகிறேன்’.  இவற்றில் முதல் இரண்டு சொற்களே வேண்டிய என்னும் பெயரெச்சத்தின் பின் வரும்: வர வேண்டிய கட்டாயம், அவசியம். முதல் நான்கு சொற்கள் உருபு இல்லாமல் பயனிலையாக வரும்: ‘அவள் வருவது கட்டாயம், அவசியம், நிச்சயம், உறுதி’. கடைசி நான்கு சொற்களும் – ஆன உருபேற்றுப் பெயரடையாக வரும்: ‘அவசியமான, நிச்சயமான, உறுதியான, கண்டிப்பான கொள்கை’. இந்த வினையடைகள் முழு வாக்கியத்தையும் தழுவாமல், வினையை மட்டும் தழுவி நிற்கும்போது கடைசி இரண்டு சொற்கள் மட்டுமே வரும்: ‘கொள்கையில் உறுதியாக, கண்டிப்பாக இருப்பார்’.

இது போன்ற இலக்கணக் கூறுகளால் ஐந்து சொற்களின் பயன்பாட்டிலும் வேறுபாடு இருப்பதைக் காணலாம். அவை வருமிடம் வித்தியாசப்படுவதைக் காணலாம். வருமிட வேறுபாடு இந்தச் சொற்களின் பொருள் வேறுபாட்டால் வரலாம்; அல்லது வேறு காரணத்தாலும் இருக்கலாம். பொருள் வேறுபாடு இருக்கிறதா என்று அறிய க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதியைப் பார்க்கலாம். இந்த அகராதி 75 லட்சம் வார்த்தைகளைக் கொண்ட தரவு வங்கியைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்டது. எனவே, இதில் தரப்படும் பொருள் வழக்கின் அடிப்படையில் இருக்கும். இந்தச் சொற்கள் என்னென்ன பொருளில் வழங்கப்பட வேண்டும் என்பதல்லாமல், என்னென்ன பொருளில் வழங்கப்படுகின்றன என்ற உண்மை தெரியும்.

இந்த அகராதி தரும் பொருள்கள்:

கட்டாயமாக: அவசியம், தவறாமல்; அவசியமாக: கட்டாயமாக, நிச்சயமாக; நிச்சயமாக: கட்டாயம், உறுதியாக; உறுதியாக: மாறாமல், நெகிழாமல்; கண்டிப்பாக: உறுதியாக

இந்த அகராதிப் பதிவிலிருந்து பிரச்சனையில் உள்ள ஐந்து சொற்களும் ஒன்றுக்குப் பதில் ஒன்று வரலாம் என்று தெரிகிறது. மேலே சொன்னபடி, மொழியில் பொருளொன்றிய சொற்கள் (perfect synonyms; words with identical meaning)  இருக்காது; பொருளொத்த சொற்களே (synonyms, words with similar meaning) இருக்கும் என்றால், அகராதியில் தரப்படும் பொருள் ஒத்த பொருளே; ஒரே பொருள் அல்ல. அகராதிச் செய்தியின்படி, ஐந்து சொற்களிடையே பொருள் ஒப்புமை உண்டு என்று தெரிகிறது; மேலே காட்டிய எடுத்துக்காட்டுகளால் இலக்கண வேற்றுமை உண்டு என்று தெரிகிறது. இந்தச் சொற்களைத் தற்காலத்தில் பயன்படுத்தும்போது, ஒன்றுக்குப் பதில் மற்றொன்று வரலாம்; ஆனால் எல்லா இடத்திலும் அப்படி வராது.

தமிழர்கள் தமிழைத் துல்லியமாக உபயோகிப்பதில் கவனம் செலுத்த ஆரம்பித்தால் இந்த நிலை மாறலாம். இலக்கண வேறுபாடு, பொருள் வேறுபாட்டில் பிரதிபலிக்கலாம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

 18. தமிழ் உரிமைக் கூட்டமைப்பு, தமிழ் எழுத்துப் பாதுகாப்பியக்கம், தாளாண்மை உழவர் இயக்கம், தமிழக மக்கள் புரட்சிக் கழகம் ஆகியவை சேர்ந்து கிரந்த எதிர்ப்புப் போராட்டத்திற்கு ஆயத்தமாக, பொதுக் கூட்டத்துக்கு அழைத்த பிரசுரத்தின் சுருக்கம்:


“……….செம்மொழி தமிழுக்கு அரசால் பெறப்பட்டுள்ள குறியீடுகள் வெறும் 48 குறியீடுகளே. மொத்த ஒதுக்கீடு 128 இடங்கள். இந்த 48 குறியீடுகளில் 41 குறியீடுகள் கிரந்தத்தோடு பகிர்ந்துகொள்ளப்படுவன. ………. தமிழுக்கேயான குறியீடுகளைக் கிரந்தத்திற்கு வழங்க வேண்டுமென ஒரு முயற்சி நடைபெறுகின்றது. காஞ்சி மடத்து சிறி ரமண சர்மா என்பவர், தமிழுக்கான ஒதுக்கீட்டு இடத்தில் 27 கிரந்த குறியீடுகளைச் சேர்த்து அதை விரிவாக்கப்பட்ட தமிழ் என்று அழைக்கவேண்டும் என முயல்கிறார். ……. இறுதியாக 27 கிரந்த குறியீடுகள் தமிழ்க் குறியீட்டுக்கான இடத்தில் சேர்க்கப்படவுள்ளன. எனவே இந்த அரசாணை மூலம்  தமிழ்  வரிவடிவம்  கிரந்த வரிவடிவத்திற்குள் ஒரு சிறு பகுதியாக அடங்கி விடுகின்றது.

கிரந்தக் கலப்பிற்கு முனைய……… தமிழின் துய்மையைக் கெடுத்து தமிழ்ச் சொற்களின் பயன்பாட்டை குன்றச் செய்து அன்னிய சொற்களின் ஆதிக்கத்தை வலுப்படுத்தி காலப் போக்கில் தமிழை அழித்திடும் துரோக எண்ணங்களே காரணம்………. பண்டைய கல்வெட்டு, மத நூல்கள் ஆகிய ஆய்வுகளுக்கு கிரந்தம் தேவை என்ற வெற்றுரைகளை முன் வைத்து மொழிக் கலப்பை ஞாயப்படுத்தும் தந்திரமும் கையாளப்படுகிறது.”

நடக்கும் விவாதத்தின் ஒரு அடையாளமாகப் பொதுக் கூட்ட அழைப்பு வாசகத்தைச் சுருக்கி மேலே தந்திருக்கிறேன். (முழு அழைப்பையும் இங்கே பார்க்கலாம்:https://groups.google.com/group/tamilmanram/browse_frm/thread/76cd68044e7e0705?hl=en).

இன்னொரு உதாரணமாக, ஒருங்குறியில் கிரந்த எழுத்துகளைச் சேர்ப்பதை எதிர்த்து அந்தக் குழுமியத்திற்கு மின்னஞ்சல் அனுப்பக் கோரிப் பலருக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சலின் தலைப்பு:

Subject: எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! – இந்திய ஏகாதிபத்தியத்தின் மொழி அழிப்பு முயற்சியை “Unicode Consortium” – திற்கு தெரிவிக்க மின்னஞ்சல் அனுப்புவோம்

பேராசிரியர் இ.அண்ணாமலை விளக்கப் பதில்:

“எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு” என்பது ஒரு கருத்தை விவாதிக்க, வள்ளுவர் காட்டிய வழி. இன்று ஒருங்குறியில் கிரந்தம் பற்றிப் பொது மேடைகளிலும் இணைய அரங்குகளிலும் சிலர் நடத்தும் விவாதம், சொன்னது என்ன என்பதன் உண்மையை நாடாமல், சொன்னது யார் என்பதை வைத்தே நடப்பது போல் தோன்றுகிறது. இதனால், உண்மை விபரங்களை அறியும் முயற்சி இரண்டாம் பட்சம் ஆகிவிடுகிறது. கிரந்தப் பிரச்சனையில் கட்சி கட்டாதவர்களிடம் இது தவறான எண்ணத்தையும் குழப்பத்தையும் தோற்றுவிக்கிறது. விபரங்களை உள்ளபடி தருவதே இந்தப் பதிலின் நோக்கம். கிரந்தம் பற்றி நான் முன்னொரு முறை எழுதியபோது என்னிடம் முழு விபரமும் இல்லை. கூடுதல் விபரங்கள் தந்து, வாசகர்கள் தாங்களே ஒரு முடிவுக்கு வரவே இந்த விளக்கமான பதில். இந்த விவாதத்தில் உண்மையான விபரங்களை வெளிப்படுத்தாவிட்டால், விவாதத்தின் பயன் தமிழுக்குப் போகாது; அரசியல் ஆதாயத்திற்கே துணை செய்யும்.

மேலே உள்ள அழைப்பு, “ஒருங்குறியில் சீன மொழிக்கு 25000 (சரியான எண்ணிக்கை 20902) குறியீட்டு இடங்கள், சிங்களத்திற்கு 400 (சரியான எண்ணிக்கை, தமிழைப் போல், 128) இடங்கள், செம்மொழித் தமிழுக்கு 128 இடங்கள்தானா?” என்ற கேள்வியுடன் துவங்குகிறது. இந்தக் கேள்வி, ஒருங்குறி பற்றிய அடிப்படையான புரிதல் இல்லை என்பதைக் காட்டுகிறது. ஒருங்குறி ஒரு கருவி; உலகத்து மொழிகளை அவற்றின் எழுத்தில் கணினியில் கையாள உதவும் கருவி; எழுதுவதைத் தரப்படுத்தும் கருவி. ஒரு வரிசையில் ஒவ்வொரு மொழிக்கும் அதன் எழுத்துகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் இடம் கொடுத்து, ஒவ்வொரு எழுத்துக்கும் தனிக் குறியீட்டு எண் (code point) கொடுக்கிறது ஒருங்குறிக் குழுமியம். சொல்லை அலகாகக் கொண்டு எழுத்து முறை அமைந்த சீன மொழியில் எழுத்துகள் அதிகமாக இருப்பது இயற்கை. தமிழ், ஒலியின் அடிப்படையில் குறைந்த எழுத்துகளைக் கொண்டு எல்லாச் சொற்களையும் படைக்கிறது. எழுத்துகள் குறைவாக இருப்பதால், தமிழுக்கு ஒருங்குறியில் குறைந்த இடங்கள். ஒருங்குறியில் இடம், மொழியின் தகுதியைப் பொறுத்து அமைவதல்ல. அதனால் குறைந்த இடங்கள் தமிழின் தரத்தைத் தாழ்த்துவது ஆகாது.

தமிழ் எழுத்துகளுக்கு அதிக இடம் வேண்டும் என்று கணித்தமிழ் சங்கம் முதலான அமைப்புகளும், தமிழக அரசும் கேட்பது தொழில்நுட்ப அடிப்படையில். (இந்தத் திட்டத்தை இங்கே பார்க்கலாம்:www.tamilnet.com/img/publish/2010/11/TACE16_Report_English.pdf) தற்போது ஒருங்குறியில் தமிழ் உயிரெழுத்துகளும் அகரமேறிய மெய்யெழுத்துகளும் தனித்தனியே குறியீட்டு எண்கள் பெறுகின்றன. உயிர்மெய் எழுத்துகளுக்குத் தனி எண் கிடையாது. (தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கையைச் சொல்லும் தொல்காப்பியம் உயிர்மெய்யெழுத்துகளைச் சேர்க்கவில்லை என்பதை இங்கே மனத்தில் கொள்ளலாம்). உயிர்மெய் எழுத்துகளைக் கணினி ஒரு மென்பொருளால், (இதற்கு rendering engine என்று பெயர்), அகரமேறிய மெய்யையும் உயிர்க்குறியையும் சேர்த்து, உருவாக்குகிறது. உயிர்மெய் எழுத்துகளுக்குத் தனியே குறியீட்டு எண்கள் ஒதுக்க வேண்டும் என்பதே மேலே சொன்ன கோரிக்கையின் மூலக் கருத்து.

தமிழ் எழுத்துகளுக்குக் குறியீட்டு எண், ஒருங்குறியில், மற்ற இந்திய மொழிகளைப் போல, 7 பிட் அலகைப் பயன்படுத்தித் தரப்பட்டிருக்கிறது. (இது எல்லா இந்திய மொழிகளுக்கும் இந்திய அரசு அங்கீரித்த ISCII எனப்படும் குறியீட்டு முறை). அதாவது, 0, 1 என்ற இரண்டே எண்களைப் பயன்படுத்தி எந்தத் தகவலையும் எண்வயப்படுத்தும் கணினியில், 27 தகவல்களை இந்த அலகால் எண்வயப்படுத்த முடியும். கணினித் துறையில் இந்த அலகு காலாவதி ஆகி வருகிறது. இப்போது 16 பிட் அலகே (216) பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. தமிழ் எழுத்துகளை எண்வயப்படுத்த இந்த விரிந்த அலகை வேண்டுகிறது மேலே சொன்ன கோரிக்கை. தமிழ் எழுத்துகளின் விரிந்த எண்வய முறைக்கு TACE (Tamil All Character Encoding) என்று பெயர் கொடுக்கப்பட்டிருக்கிறது. தற்போது இது ஒருங்குறியில் தனியார் பயன்படுத்த மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ள பகுதியில் இடப்பட்டிருக்கிறது.

ஒருங்குறிக் குழுமியம், இப்போது தமிழ் எழுத்துகளுக்குக் கொடுத்துள்ள எண்வய முறையை மாற்ற விரும்பவில்லை. ஏற்கனவே முடிவு செய்த தமிழ் எழுத்துக்கான  எண்வய முறையை மாற்றுவதால் எழும் நடைமுறைச் சிக்கல்களே இதற்குக் காரணம். முதலாவது, ஒருங்குறியில் ஒரே மாதிரியாக இந்திய மொழிகளுக்குக் கொடுக்கப்பட்டுள்ள உள்ளமைப்பை இந்த மாற்றம் பாதிக்கும். இரண்டாவது, விரிந்த எண்வய முறை அமுலுக்கு வந்தால், தமிழில் பழைய முறையில் கோர்க்கப்பட்ட ஆவணங்களை எளிதாகப் படிக்க முடியாது. மூன்றாவது, புதிய எண்வயமுறை இல்லாமல், சில பயனேற்ற மென்பொருள்களை (application software) – குறுஞ்செய்தி அனுப்ப, அச்சிடத் தேவையானவை – தமிழில் பிசிறில்லாமல் பயன்படுத்த முடியாது என்று சொல்லும் குறை ஒரு தொழில்நுட்பப் பிரச்சனை; கணினி வல்லுநர்கள் தீர்வு காணக் கூடிய பிரச்சனை. ஒருங்குறிக் குழுமியத்தின் இந்தச் சிந்தனை, தமிழின் தகுதி பற்றியது அல்ல.

ஒருங்குறியில் தமிழுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 128 இடங்களில் 41 இடங்கள் கிரந்தத்தோடு பகிர்ந்துகொள்ளப்படும் என்பது அழைப்பில் காணப்படும் மற்றொரு தவறான விபரம். வழக்கில் உள்ள சில கிரந்த எழுத்துகளோடு சேர்த்துத் தமிழ் எழுத்துகளுக்குக் கொடுக்கப்பட்டுள்ள இடங்கள் 48. மீதியுள்ள இடங்கள் தமிழ் எண்களுக்கும் வேறு சில குறிகளுக்கும் கொடுக்கப்பட்டு, சில இடங்கள் எதிர்காலத்தில் தேவைப்படலாம் என்பதற்காகக் காலியாக விடப்பட்டுள்ளன. 41 இடங்களில் புதிய கிரந்த எழுத்துகள் இல்லை. அப்படிச் சேர்க்கும்படி யாரும் சொல்லவும் இல்லை. (ஒருங்குறியின் தமிழ்க் குறியீட்டுப் பட்டியலை இங்கே பார்க்கலாம்: http://www.unicode.org/charts/PDF/U0B80.pdf )

டாக்டர் ஸ்ரீரமண சர்மாவின் நீட்டித்த தமிழ் (Extended Tamil) பற்றிய முன்வரைவில் கிரந்த எழுத்துகளை அப்படியே தமிழ் எழுத்துகளோடு சேர்த்து எழுதும்படி சொல்லவில்லை. (அதை இங்கே பார்க்கலாம்:http://www.tamilnet.com/img/publish/2010/11/20100710-
extended-tamil-proposal.pdf
). சமஸ்கிருதத்தைத் தமிழ் எழுத்துகளைக் கொண்டு எழுதும்போது, அதில் உள்ள, ஆனால் தமிழில் இல்லாத, வர்க்க எழுத்துகளையும் வேறு சில எழுத்துகளையும் (மொத்தம் 26 எழுத்துகள்; 27 அல்ல) இணையான தமிழ் எழுத்துகளில் மேல்குறியிட்டு (super script) எழுதலாம் என்றே சொல்லியிருக்கிறார். அதாவது, சமஸ்கிருதத்தில் உள்ள kha, ga, gha போன்ற வர்க்க ஒலிகளை க2 க3, க4 என்றும் உயிர்ப்புடைய ரு, லு போன்ற ஒலிகளை ரு2, ல2 என்றும் எழுதலாம் என்றே சொல்கிறார். சமஸ்கிருதத்தின் இந்த ஒலிகளை கிரந்த எழுத்துகளால் எழுதும் சாத்தியத்தோடு ஒப்பிட்டு, எண்குறியிட்ட தமிழ் எழுத்துகளே ஏற்றவை என்ற தன் முடிவைச் சொல்கிறார்.

சர்மாவின் விரிவுத் தமிழ் பரிந்துரை, சமஸ்கிருதத்தைத் தமிழ் எழுத்துகளைக் கொண்டு எழுதும், இன்றும் உள்ள, ஒரு மரபிற்குக் கணினியின் துணையை நாடுகிறது; புதிதாக ஒரு எழுத்து வழக்கைப் பரிந்துரைக்கவில்லை. இந்த மரபில் தமிழ் எழுத்துகளில் எண்குறியிட்டு எழுதும் வழக்கம் இருக்கிறது. சமஸ்கிருதத்தைத் தமிழ் எழுத்துகளைக் கொண்டு எழுதும் மரபு, அதை கிரந்த எழுத்துகளில் எழுதும் மரபிலிருந்து வேறுபட்டது.
இந்தப் பரிந்துரை சமஸ்கிருதத்தை, தேவநாகரியில் அல்லாமல், தமிழ் எழுத்துகளில் எழுதும் முறை பற்றிய பிரச்சனை. இங்கு மொழி வேறு, எழுத்துரு வேறு என்ற உண்மையைச் சுட்ட வேண்டும். தேவநாகரி, ரோமன் போன்ற எழுத்துருக்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளை எழுதப் பயன்படுவது பலரும் அறிந்த உண்மை. ஒரு மொழி ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துருக்களில் எழுதப்படுவதும் உண்மை. வலைப்பதிவில் கருத்துத் தெரிவிக்கும் சிலர், தமிழ் எழுத்துரு அவர்களுக்குக் கிடைக்காததால், தமிழை ரோமன் எழுத்துகளில் எழுதினாலும் அது தமிழ் மொழிதான்.  சமஸ்கிருதத்தை, தமிழ் எழுத்துரு உட்பட, இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் வழங்கும் பல எழுத்துருக்களில் எழுதுவது வரலாறு காட்டும் உண்மை.

சமஸ்கிருதத்தை தமிழ் எழுத்துருவில் எழுதுவதைத் தமிழ் மொழியின் பிரச்சனையாகப் பார்ப்பது, அது தமிழ் நெடுங்கணக்கை நீட்டிக்கிறது என்ற எண்ணத்தால்; தமிழ் மக்கள் (தோசை, தலித், போகம் (‘crop’) போன்று) தாங்கள் பேசும் சொற்களில் உள்ள ஒலிப்புடைய (voiced) எழுத்துகளை (ga, da, dha, ba என்ற அவற்றின் உச்சரிப்பைக் காட்டும் முறையில்) எழுத விரும்பி, கிரந்த எழுத்துகளை (அல்லது எண் மேலேற்றிய தமிழ் எழுத்துகளை (க2, ட2, த2, ப2)) பயன்படுத்திவிடலாம் என்னும் பயத்தால்.

சர்மாவின் முன்வரைவை உத்தமம் (INFITT) என்னும் தமிழைக் கணினியில் பயன்படுத்தும் முயற்சிகளில் முன்னணியில் நிற்கும் அமைப்பும், சில நிறுவனங்களும், சில தமிழ் அறிஞர்களும் ஒப்புக்கொள்ளவில்லை. இவர்கள் விரிவுத் தமிழ் ஒருங்குறியில் இடம்பெற வேண்டாம் என்று ஒருங்குறிக் குழுமியத்திற்குக் கோரிக்கை அனுப்பினார்கள். (இதை இங்கே பார்க்கலாம்:http://www.infitt.org/pressrelease/INFITT_Response_to_Extended_Tamil_
proposal.pdf
 ). இரண்டாயிரம் ஆண்டுப் பாரம்பரியம் உள்ள தமிழ் நெடுங்கணக்கை இது மாற்றுகிறது என்னும் வாதம், சமஸ்கிருதத்தைத் தமிழ்நாட்டில் எழுதும் மரபில் உள்ள பிரச்சனையைத் தமிழ் நெடுங்கணக்கிற்குள் கொண்டுவர வேண்டாம் என்னும் எண்ணத்தை அடிப்படையாகக் கொண்டது.

விரிவுத் தமிழை எதிர்க்கும் வாதத்தின் நிலைப்பாடு இதுவே: “தமிழுக்குப் புதிய எழுத்துகள் தேவை இல்லை; தமிழர்கள் தங்கள் தமிழ் உச்சரிப்பில் காட்டும் சில புதிய ஒலிகளை வடிக்க எழுத்து வேண்டாம்; தமிழ்நாட்டில் வழங்கும் தமிழல்லாத எந்த மொழியையும் தமிழ் எழுத்துகளைக் கொண்டு எழுதத் தேவை இல்லை; அதனால், ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளை எழுதப் பயன்படும் ரோமன், தேவநாகரி போன்ற எழுத்து முறைகளுக்கு விரிவாக்கப்பட்ட எழுத்து (Extended Roman, Extended  Devanagari) இருப்பது போல், தமிழுக்கு எழுத்துமுறை விரிவு, கணினிக்கு மட்டுமே என்றாலும், தேவை இல்லை.”

ஒருங்குறிக் குழுமியம், சர்மாவின் விரிவுத் தமிழ் பரிந்துரையை ஏற்றுக்கொள்ளவில்லை. இதற்குக் காரணம் அது ஒரு சதித் திட்டத்தைக் கண்டுபிடித்துவிட்டது அல்ல; தொழில்நுட்ப ரீதியில் தேவை இல்லை என்பதே. புதிய ஒலிகளை எண் குறியீடாக ஒருங்குறியில் ஏற்கனவே இருக்கும் எண்களை வைத்தே எழுதலாம் என்பது அதன் கருத்து.

தமிழ் எழுத்துகளுக்கு யாரும் எண்குறியிட்டுப் புதிய உச்சரிப்புகளைக் காட்ட விரும்பினால், கிரந்தம் தேவை இல்லை. இப்போது ஒருங்குறியில் உள்ள எண்களை வைத்தே, விரிவுத் தமிழ் இல்லாமலே, எழுதலாம். ஒருங்குறியில் கிரந்தத்தைத் தடுத்தாலும் இதைத் தடுக்க முடியாது.
கிரந்த எழுத்துகளுக்கு ஒருங்குறியில் தனி இடம் ஒதுக்க வேண்டும் என்பது தனியான வேறு கோரிக்கை. ஒருங்குறியில் உள்ள எத்தனையோ எழுத்துருக்களைப் போல, கிரந்தத்திற்கும் இடம் வேண்டும் என்பதே இந்தக் கோரிக்கை. இந்தக் கோரிக்கையை இந்திய அரசு, கிரந்த எழுத்து முறை வல்லுநர் குழுவின் பரிந்துரையின் பேரில், ஒருங்குறிக் குழுமியத்திற்கு அனுப்பியது. (அதை இங்கே பார்க்கலாம்:http://dakshinatya.blogspot.com/2010/12/grantha-goi-chart.html) கிரந்தக் கோரிக்கையில் சில தமிழ் எழுத்துகளைக் கிரந்த நெடுங்கணக்கில் சேர்த்திருப்பதை மறுபரிசீலனை செய்யத் தமிழக அரசு நேரம் கேட்டதால், இதன் மீது முடிவெடுப்பதைக் குழுமியம் தள்ளிவைத்திருக்கிறது. இந்திய அரசின் பார்வையில் இது தமிழ் பற்றிய பிரச்சனை அல்ல; கிரந்தம் பற்றிய பிரச்சனை. எனவே, இது தமிழைப் பாதிக்கும் என்ற வாதத்தை ஒப்புக்கொள்ளாது.

ஒருங்குறியில் கிரந்த எழுத்துகள் இடம் பெறும் தேவைக்கான பல காரணங்களில் சமஸ்கிருத்தை கிரந்த எழுத்துகளில் எழுதும் மரபு ஒன்று.
சர்மா இந்த மரபின் தேவைக்காகவே ஒருங்குறியில் கிரந்தத்தைச் சேர்ப்பது பற்றித் தனியாக வேறு ஒரு முன்வரைவு அனுப்பினார். டாக்டர் நா. கணேசன் ஒரு முன்வரைவை அனுப்பினார். ஒருங்குறிக்கு யாரும் பரிந்துரைகள் அனுப்பலாம். தமிழும் தகவல் தொழில்நுட்பமும் அறிந்த சிலர் அனுப்புகிறார்கள். குழுமியம் தொழில்நுட்ப அடிப்படையில் – அரசியல் அடிப்படையில் அல்ல – பரிந்துரைகளைப் பரிசீலித்து முடிவெடுக்கிறது.  அது  நடைமுறைச் சிக்கல் உட்பட எல்லாவற்றையும் சீர்தூக்கி முடிவு செய்யும். அரசின் பலமோ, அரசியல் விளவுகளோ அந்த முடிவில் முக்கிய இடம் வகிப்பதில்லை.

தமிழுக்கே உரிய மூன்று (ழ, ற ன) எழுத்துக்களையும், எ, ஒ என்ற இரண்டு உயிர்கள் மெய்யோடு சேரும்போது எழுதும் இரண்டு உயிர்க்குறிகளையும் விரிவாக்கப்பட்ட கிரந்தத்தில் சேர்க்கும் பரிந்துரை, இந்திய அரசின் கோரிக்கையில் இருக்கிறது. (எ, ஒ என்ற  இரண்டு உயிர் எழுத்துகளுக்கு கிரந்த எழுத்திலேயே கூடுதல் குறியிட்டு (diacritic marks) எழுதவே பரிந்துரை இருக்கிறது). இது, கிரந்த வல்லுநர்கள் பலர் சேர்ந்த ஒரு குழு செய்த முடிவு. மேலே துவக்கத்தில் காட்டிய அழைப்பிதழில், ‘தமிழ் வரிவடிவம் கிரந்த வரிவடிவத்திற்குள் ஒரு சிறு பகுதியாக அடங்கிவிடுகின்றது’ என்று தவறாகவும் மிகைப்படுத்தியும் கூறுவது இதைத்தான்.

சர்மாவின் முன்வரைவில் தமிழுக்கே உரிய ஐந்து எழுத்துகளைக் கிரந்த எழுத்துகளோடு சேர்க்கும் பரிந்துரை இல்லை. அவர் நவீன சமஸ்கிருத்தில் தமிழ் உட்பட பிறமொழிச் சொற்களை, முக்கியமாகப் பெயர்களை (names), எழுதும் தேவை ஏற்படும்; அந்தத் தேவையை நிறைவு செய்யக் கிரந்த விரிவு (Extended Grantha) தேவைப்படும்; அதில் கூடுதல் குறி சேர்த்த கிரந்த எழுத்துகளைச் சேர்க்கலாம் என்று சொல்கிறார். எடுத்துக்காட்டாக, z என்ற ஒலியுள்ள Xerox, zebra என்ற ஆங்கிலச் சொற்களை ஜ-இன் கீழ் இருபுள்ளி இட்டுக் காட்டலாம் என்று சொல்கிறார். தொல்காப்பியர், தமிழ் என்ற தமிழ்ச் சொற்களைச் சமஸ்கிருத்தில் எழுதும்போது, தமிழ்நாட்டில் கிரந்தம் படிக்கத் தெரிந்தவர்களுக்குத் தமிழும் படிக்கத் தெரியும் என்பதால், கிரந்தத்தில் இல்லாத எழுத்துகளையும் உயிர்க் குறிகளையும் ஒருங்குறியில் உள்ள தமிழ் எழுத்துப் பகுதியிலிருந்து இறக்கிக்கொள்ளலாம் என்று சொல்கிறார். ஆனால், இது ஒருங்குறிக் குழுமியத்தின் ஒவ்வொரு எழுத்து முறைக்கும் தனிப்பகுதி (block) இருக்க வேண்டும் என்னும் கொள்கைக்கு  முரணானது. எனவே, இந்திய அரசின் கோரிக்கையில் தமிழில் உள்ள மூன்று எழுத்துகள் கிரந்தப் பகுதியிலேயே சேர்க்கப்பட்டிருக்கின்றன. கிரந்த எழுத்துகளில் பல காலமாக தமிழ் எழுத்துகளோடு ஒரே அல்லது ஒத்த வரிவடிவம் உடைய உ, ஊ, ய, வ, ண, (த, ந) என்ற எழுத்துகள் இருந்து வருகின்றன. இந்தக் கோரிக்கையின்படி மூன்று எழுத்துகள் அதிகமாக இருக்கும்.

கிரந்த எழுத்து முறை பற்றிய பிரச்சனையைத் தமிழின் பிரச்சனை ஆக்கத் தேவை இல்லை. இது கிரந்த எழுத்து முறையை நவீனமாக்கும் முயற்சி. தமிழ் நெடுங்கணக்கின் சில எழுத்துகள் கிரந்த எழுத்து முறையில் சேர்வது தமிழைக் கெடுப்பது ஆகாது; தமிழைத் தீட்டுப்படுத்தாது. தமிழ் என்ற சொல்லை ஆங்கிலத்தில் ஆங்கிலேயர் உச்சரிப்பில் Tamil என்று எழுதுகிறார்கள்; தமிழ் உச்சரிப்பின்படி எழுத வேண்டும் என்றால் Thamizh என்று எழுதலாம்; ஒரு ஆங்கிலேயர் Thamiழ் என்று எழுதலாம் என்று சொன்னால், தமிழ் கெட்டுப் போகும் என்று சொல்ல மாட்டோம், அல்லவா? ஆங்கிலத்தைக் கெடுக்கிறது என்று ஆங்கிலேயர்கள் சொல்லலாம். இதே போல், புதிய எழுத்துகள் கிரந்தத்தைக் கெடுக்கிறது என்று பழமையைப் போற்றும் சில கிரந்தவாதிகள் சொல்லலாம்.

தமிழுக்குக் கேடு என்று சிலர் சொல்லும்போது தமிழ்ச் சொற்களில் கிரந்த எழுத்துகளைச் சேர்ப்பது சுலபமாகிவிடும் என்பதையே குறிக்க முடியும் என்று மேலே சொன்ன விபரங்கள் காட்டும். தமிழ் எழுத்துகளும் ரோமன் எழுத்துகளும் ஒருங்குறியில் தனித்தனியே இருந்தும், தமிழில் எழுதும்போது ரோமன் எழுத்துகளைச் சேர்க்க முடிவதுபோல, தமிழ் எழுத்துகளும் கிரந்த எழுத்துகளும் தனித்தனியே இருந்தாலும், தமிழில் எழுதும்போது கிரந்த எழுத்துகளைத் தமிழர்கள் சேர்ப்பதைத் தடுக்க முடியாது. அவர்களைத் தடுக்க வேண்டுமென்றால், தொழில்நுட்பத்தை முடக்குவது வழி அல்ல; அவர்களுடைய மொழி நடத்தையை மாற்ற இசைவு வழியில் முயலுவதே வழி.

கிரந்த எழுத்தோடு தமிழ் எழுத்தைச் சேர்க்கலாமா என்ற கேள்வி, சூடேறிய விவாதத்தில், ஒருங்குறியில் கிரந்தத்திற்குத் தனியிடம் வேண்டுமா என்ற கேள்வியாக உருமாற்றம் பெற்றுவிட்டது. இதற்கும் கிரந்த எழுத்துகளில் தமிழ் எழுத்துகள் இருப்பதற்கும் சம்பந்தம் இல்லை. தமிழில் ரோமன் எழுத்துகளைச் சேர்த்து எழுதுவது எப்படி சாத்தியமோ அப்படித்தான் கிரந்த எழுத்துகளைச் சேர்த்து எழுதுவதும் சாத்தியம். இதனால், ரோமன் எழுத்துகள் ஒருங்குறியில் வேண்டாம் என்று யாரும் சொல்ல முடியாது; சொல்லவும் மாட்டார்கள்.

ஒருங்குறியில் கிரந்தத்திற்கு இடம் தருவது பற்றிய கேள்வி, தமிழ் மொழி சம்பந்தப்பட்டது மட்டுமல்ல. தமிழ் மொழி வரலாறு, இலக்கிய வரலாறு உட்பட்ட வரலாற்று ஆய்வு பற்றிய கேள்வியும் ஆகும். சமஸ்கிருதம், கிரந்தம் பற்றிய கேள்வியும் ஆகும். இந்தக் கேள்விக்கான பதில் காண்பதில் தனித்தமிழ் அறிஞர்களின் கருத்து, ஒரு சிறு பகுதிதான். தமிழ் வரலாற்று ஆய்வுக்குக் கிரந்தம் தேவை என்பது வெற்றுரை என்று சொல்லி, அது ஏன் பயனற்றது என்றுகூடச் சொல்லாவிட்டால், இந்த வெறும் கூற்றை யாரும் கணிப்பில் எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.

ஒருங்குறியில் கிரந்தத்துக்கு இடஒதுக்கீடு பற்றித் தமிழ்நாட்டில் ஆவேசமான விவாதம் இப்படி இருக்கிறது என்று சொல்லத் தோன்றுகிறது. நாம் குடியிருக்கும் தெருவில் காலியாக இருக்கும் ஒரு வீட்டில் பிற சாதிக்காரன் ஒருவன் குடிவர இருக்கும்போது, அவனைக் குடிவைக்கக் கூடாது; அவன் நம் வீட்டுப் பெண்ணை வசப்படுத்திவிடுவான்; ஆகவே, கூட்டம் சேர்த்து, கூக்குரல் எழுப்பி, அவனை வராமல் செய்துவிடுவோம் என்று சொல்வதைப் போல இது இருக்கிறது. கலப்புக் கல்யாணம் நடந்துவிடுமோ என்று அதை முளையிலே கிள்ளி எடுக்கக் காட்டும் வேகம் இது. நம் வீட்டுப் பெண்மீது நமக்கு நம்பிக்கை இல்லாததன் எதிர்வினை இது.

காலம் மாறிவிட்டது. தமிழின் தற்காலம், அதன் வரலாற்றின் இடைக்காலம் அல்ல. தமிழுக்கு ஆபத்து – தமிழ் அடுப்படி மொழியாக, குழாயடி மொழியாகச் சுருங்கிவிடும் ஆபத்து – என்றால், அது இன்று ஆங்கிலத்தின் மூலம் வரலாம்; சமஸ்கிருதத்தின் மூலம் அல்ல. அட்டைப் பாம்பை அடிக்கும் ஆசையில் நிஜப் பாம்பைக் கண்டுகொள்ளாமல் இருக்கும் கதையாக இருக்கிறது கிரந்த எதிர்ப்பு.

பொங்கல் நன்னாளில் தமிழின் எதிர்காலம் பற்றிய சிந்தனையில் உணர்ச்சி பொங்குவதை விடுத்து, அறிவு பொங்க வழி தேடுவது தமிழுக்கு நல்லது.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

17.சென்னைப் பல்கலைக்கழக மானுடவியல் துறை மாணவி வெ.ஜனனி எழுப்பிய கேள்விகள்:

1) பல துறைகளில் இன்னும் தமிழ் நூல்கள் வராமல் இருப்பதற்கு என்ன காரணம்? குறிப்பாக மானுடவியல், சமூகவியல், சுற்றுச்சூழல் போன்ற துறைகளில் கணக்கிடும் அளவிற்குத்தான் நூல்கள் இருக்கின்றன. மேலும் நம்மிடையே கலைச்சொற்கள் இன்னும் புதியதாக வரவில்லை. கலைச்சொல் அகராதியையும் பெரும்பாலோர் பயன்படுத்துவதில்லை.

2) தமிழில் encyclopedia போன்ற நூல்கள், மிகவும் குறைவாகவே இருக்கின்றன. இதுபோன்ற துறையில் நூல்கள் எழுதுவதன் மூலம், தமிழை அடுத்த தலைமுறையினரிடையே எடுத்துச் செல்ல முடியுமா?

பேராசிரியர் இ.அண்ணாமலை பதில்:

தமிழர்களுடைய அறிவு சார்ந்த சிந்தனை வரலாறு (intellectual history) இன்னும் எழுதப்பட வேண்டிய ஒன்று. அது இந்தியத் துணைக் கண்டத்தின் மற்ற பகுதிகளில் சமகாலத்தில் நிகழ்ந்த சிந்தனையோட்டங்களோடு இணைத்துப் பார்த்து எழுதப்பட வேண்டும்.

இலக்கணம் தவிர்த்த மற்ற அறிவுத் துறைகளில் தமிழ்ப் பிரதிகள் இருந்ததற்குச் சான்று இல்லை. இடைக்காலத்தில் தோன்றிய சித்த மருத்துவ நூல்கள் மருத்துவவியலுக்குச் சான்று என்று சொல்லாம். மறைந்துபோன நூல் பட்டியலில் சேர்க்கப்படும் கூவநூல் முதலான நூல்கள், கிணறு தோண்டுதல், நிலத்தடி நீர் இருப்பதைக் கண்டுபிடித்தல் போன்ற நடைமுறைச் செயல்களுக்கு உதவும் நூல்களாக இருக்கலாம்; அல்லது நீரியலின் அடிப்படைக் கொள்கைகளை விவாதிக்கும் நூல்களாக இருக்கலாம்; ஆனால் எது என்று சொல்லச் சான்று இல்லை. தமிழ் இலக்கிய நூல்களில் உயிரியல், தாவரவியல், வானியல், ஆட்சியியல், போரியல் போன்ற அறிவுத் துறைக் கருத்துகள் காணப்படுகின்றன. இவை தமிழ்ச் சமூகத்தில் வாழ்க்கை அனுபவத்தின் மூலம் பெற்றுப் பரவியிருந்த கருத்துகள். இவற்றைக் கொண்டு இந்த அறிவுத் துறைகளில் முறையான விசாரணை (systematic inquiry) நடந்தது; நூல்கள் இருந்தன என்று சொல்ல முடியாது. இன்றைய புனைவிலக்கியத்தில் சமூகவியல் கருத்துகள் இருக்கின்றன என்பதால் தமிழில் சமூகவியல் நூல்கள் பெருமளவில் இருக்கின்றன என்று சொல்ல முடியாது. அறிவியல் கருத்துகள் இலக்கியத்திற்கு அப்பால் ஏன் தனி நூல் வடிவம் பெறவில்லை என்ற கேள்விக்கு இன்னும் விடை இல்லை.

திருக்குறள் ஒரு வித்தியாசமான இலக்கிய நூல். ஆட்சியியல் சார்ந்த அறிவுச் செய்திகளை இலக்கியமாகச் சொல்லும் நூல்; குறளிலும், காமவியல் அறிவியலாகத் தரப்படவில்லை; இலக்கியமாகவே படைக்கப்பட்டிருக்கிறது. ஒழுக்கவியல் அல்லது அறவியல் (Ethics) சார்ந்த உன்னதமான கருத்துகளைத் தமிழ் நீதி இலக்கியம் தருகிறது. ஆனால், அவை முடிந்த முடிவுகளாக உள்ளனவே தவிர, அறிவியலின் அடிப்படையாகக் கருதும் பிரச்சினைகளின் விசாரணையாக இல்லை. இடைக்காலத்தில் தான் சமயம் சார்ந்த விசாரணை, தத்துவவியலாக வளர்ந்து சைவ சித்தாந்தத்தைத் தத்துவத் துறையின் படைப்பாகத் தந்தது. வைணவத்தில் தத்துவ விசாரணை மணிப்பிரவாளத்தில் எழுதப்பட்டது.

தமிழக வரலாற்றில் கட்டடக் கலை, சிற்பக் கலை, ஓவியக் கலை, இசை போன்ற நுண்கலைகள், உலோகக் கலை, நீர்ப்பாசனவியல், போரியல், ஆட்சியியல் முதலான அறிவுத் துறைகளில் ஆழ்ந்த அறிவு இல்லாமல் இவற்றில் உன்னதப் படைப்புகளை உருவாக்கியிருக்க முடியாது; உன்னத நிலையை அடைந்திருக்க முடியாது. இசையைப் பற்றி வேண்டுமானால் அறிவு சார்ந்த கட்டமைப்பு (constructed knowledge) எழுத்தில் இருந்தது எனலாம். அப்பாவிடமிருந்து மகனுக்கு என்று வாய்மொழியாக, செய்பயிற்சி மூலமாக, மட்டும் இத்தகைய அறிவு வளர்ந்தது என்று சொல்வதை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. துறைக் கல்வி வாய்மொழியாக நடந்திருக்கலாம்; துறை அறிவின் ஆக்கமும், இந்தியாவின் பழைய மரபுப்படி, நூலாக எழுதப்படாமல் வாய்மொழியாக நடந்திருக்கலாம். ஆனால், துறை அறிவை விவாதித்து வளர்த்த அறிவாளர் குழுக்கள் இருந்தது பற்றிக் கல்வெட்டுகள் குறிப்பிடவில்லை. வாய்மொழியாக வளர்த்த அறிவுத் திரட்டைப் பிந்தைய காலத்தில் தமிழர்கள் நூலாக வடிக்கவும் இல்லை; அரசர்கள் இதற்கு மானியம் கொடுக்கவும் இல்லை.

தமிழ் வரலாற்றில், இலக்கணம், பின்னால் தத்துவம், தவிர மற்ற அறிவு விசாரணைகள் தமிழ் அல்லாத ஒரு மொழியில் – ஒரு காலத்தில் பிராகிருதத்திலும் பின்னால் பெருவழக்காகச் சஸ்கிருதத்திலும் – எழுதப்பட்டிருக்கலாமோ என்று எண்ணத் தோன்றுகிறது. சமஸ்கிருத அறிவு நூல்களை எழுதியவர்களில் தமிழ் பேசியவர்களும் உண்டு என்பது பலரும் அறிந்த செய்தி. இவர்கள் சமஸ்கிருதக் கல்வி மரபில் பயிற்சி பெற்றவர்களாக இருக்கலாம். இன்று ஆங்கிலம்வழி கல்வி பெற்ற தமிழ் பேசுபவர்கள், ஆங்கிலத்தில் தங்கள் அறிவியல் விசாரணையை நடத்துவது போல, இவர்கள் சமஸ்கிருதத்தில் நடத்தியிருக்கலாம். இன்று ஆங்கிலம் போல், அன்று சமஸ்கிருதம் அறிவுலக மொழியாக இருந்திருக்கலாம். தமிழ்க் கல்வி மரபில் பயிற்சி பெற்றவர்களும் தங்கள் அறிவு விசாரணை உண்மைகளைச் சமஸ்கிருதத்தில் எழுதினார்களா என்ற கேள்விக்கு விடை இல்லை.

கடைசியில் சொன்ன கருத்து இன்று தமிழில் அறிவியல் நூல்கள், கட்டுரைகள் இல்லாத காரணத்தைக் கோடி காட்டும். தமிழ் பேசும் அறிவுத் துறைப் பயிற்சி பெற்றவர்கள், தங்கள் துறைக் கருத்துகளை ஆங்கிலத்திலேயே எழுதுகிறார்கள். இயற்பியல் போன்ற வன்துறைகளாக இருந்தாலும், மானுடவியல் போன்ற மென்துறைகளாக இருந்தாலும் இந்த வழக்கம் இருக்கிறது. தமிழில் எழுதினால், அது மொழிபெயர்ப்பாக இருக்கிறது; அல்லது பொது மக்களுக்கு அறிவியல் கருத்துகளை அறிமுகப்படுத்தும் துவக்க நூல்களாக இருக்கின்றன.

ஆங்கிலத்தில் சமூகம் பற்றிய நூல்களைச் சமூகவியல் பேராசிரியர்கள் எழுதுகிறார்கள்; துறை வல்லுநர்களுக்கு மட்டுமல்ல, வேறு துறைகளைச் சேர்ந்தவர்களுக்கும், பொதுமக்களுக்கும் எழுதுகிறார்கள். மேலை நாட்டுப் பல்கலைக்கழகங்களில் ஆய்வு நூல்கள் எழுதவில்லை என்றால் ஆசிரியர்களுக்கு வேலை நிரந்தரம் இல்லை; பெயர் இல்லை. அவர்களை மதிப்பீடு செய்வது அவர்களுடைய நூல்களே. நல்ல மதிப்பீடு இல்லை என்றால் அவர்கள் வகுப்புக்கு மாணவர்கள் வரமாட்டார்கள்.

தமிழ்நாட்டில் ஆசிரியர்களுக்கு மாணவர்களைத் தங்கள் சொந்த அறிவுப் படைப்புகளின் மூலம் ஈர்க்க வேண்டிய கட்டாயம் இல்லை. அவர்களுடைய முக்கியமான வேலை, மாணவர்களை மதிப்பிடுவதுதான். புதிய கருத்துகளை வெளியிடும் ஆசிரியர்கள் சிலரும் ஆங்கிலத்தில் எழுதுவார்கள். தமிழ்த் துறை ஆசிரியர்கள்தான் தமிழில் எழுதுவார்கள்; தமிழ் இலக்கியத்தைப் பற்றியும் மொழியைப் பற்றியும் மட்டுமல்ல, தமிழ்ச் சமூகத்தைப் பற்றியும். ஆனால் இவர்களுக்குச் சமூகவியலில் பயிற்சி இருக்காது.

இந்தியாவில் இப்போது பெரிய பொருளாதார மாற்றம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இதைப் பற்றிப் பத்திரிகைத் தலையங்கங்களும் கட்டுரைகளும் வெளிவந்திருக்கின்றன. எத்தனை பொருளாதாரப் பேராசிரியர்கள் இதன் பல அம்சங்களைப் பற்றித் தமிழில் எழுதியிருக்கிறார்கள்? இதன் சமூக விளைவுகளைப் பற்றி எத்தனை சமூகவியல் வல்லுநர்கள் தமிழில் அலசியிருக்கிறார்கள்? இதைப் போலவே, பூமியின் வெப்பம், உயிரினங்களின் அழிவு, நச்சுக் காற்று போன்ற சுற்றுச்சூழல் நாசம் பற்றி எத்தனை தமிழ் பேசும் விஞ்ஞானிகள் தமிழில் விவாதித்திருக்கிறார்கள்?

வசதியுள்ள நாடுகளில் பல சிந்தனை நிறுவங்கள் (think tanks) இருக்கும்; அவற்றிலிருந்து புத்தகங்கள் வெளிவரும். அங்கே பத்திரிகையாளர்களும் ஒவ்வொரு துறையில் சிறப்புக் கவனம் செலுத்தி எழுதுவார்கள். அவர்கள் அந்தத் துறையில் பொதுமக்களுக்கு நூலும் எழுதுவார்கள். எந்த நிறுவனத்தையும் சாராமல் தனிப்பட்டவர்கள் ஆய்வு செய்து நூல் எழுதுவது உண்டு. நூல்களை மக்களும் வாங்கிப் படிப்பார்கள்; எழுதியவர்களுக்குப் பணம் கிடைக்கும்; அது மேலும் புத்தகம் எழுத ஊக்குவிக்கும். தமிழிலும் இப்படி நூல்கள் எழுதினால் புத்தகம் படிக்கும் பழக்கம் கூடும்; அது கூடினால் அதிகப் புத்தகங்கள் வெளிவரும்.

தமிழில் அறிவுத் துறைக் கலைச்சொற்கள் ஏராளமாக உருவாக்கப்பட்டிருக்கின்றன. அவை அகராதிகளில் தூங்குகின்றன. இரண்டாயிரம் ஆண்டுகளில் தமிழ் உருவாக்கிய சொற்களைத் தமிழ்ப் பேரகராதி தருகிறது; அவற்றின் எண்ணிக்கை ஒன்றரை லட்சம். போன நூற்றாண்டில் உருவாக்கிய தமிழ்க் கலைச்சொற்களின் எண்ணிக்கை சுமார் மூன்று லட்சம். தமிழின் பிரச்சனை கலைச்சொற்கள் இல்லாதது அல்ல; அவற்றைப் பயன்படுத்த ஆங்கிலவழிக் கல்வியில் இடம் இல்லாததுதான்; பல கலைச்சொற்கள் அவற்றிற்கு இணையான ஆங்கிலச் சொற்களை விடப் புரிந்துகொள்ளக் கஷ்டமாக இருப்பதுதான். தமிழுக்கு அறிவியல் வர வேண்டுமென்றால் அது மக்களுக்குப் புரியும் மொழியில் இருக்க வேண்டும்; தமிழ் வல்லாரைத் தவிர மற்றவர்கள் தொடத் தயங்கும் தமிழில் அல்ல.

முறை சார்ந்த கல்வியில் தமிழின் நெகிழ்ச்சிக்கு இடம் மறுக்கும் சூழ்நிலையில் இன்று வலைப்பூ போன்ற தொழில்நுட்பம் தரும் வசதிகள் இருக்கின்றன. இது புதிய தலைமுறையினரையும் கவரும். ஆனால் இன்று பெரும்பாலான வலைப்பூக்களில் வரும் பதிவுகள் அறிவுலகச் செய்திகளைத் தருவதில்லை; அறிவுலகத்தில் பணிபுரிபவர்கள் அதில் தமிழில் எழுதுவதில்லை.

தமிழர்கள் தமிழுக்கு உயிரைத் தர வேண்டாம்; தங்கள் அறிவைத் தந்தால் போதும். அதுவே தமிழை அறிவு மொழி ஆக்கும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

 16.மறவன்புலவு க. சச்சிதானந்தன் எழுப்பிய கேள்வி:

வட்டார வழக்குகளைத் தாண்டி, தராதரத் தமிழ் (செந்தமிழ்) அமையாவிடின்…….. தமிழின் வகைகள் ஈழத் தமிழ், கன்னியாகுமரித் தமிழ், சென்னைத் தமிழ், ஊடகத் தமிழ் எனக் கிளைகளாவதைத் தவிர்க்க முடியாது. தோக்கியோ யப்பான் மொழியே வடக்கே சக்காலின் தொடக்கம் தெற்கே ஒக்கினாவா வரை நீண்ட யப்பான் நாட்டின் செம்மை மொழி………….. ஈழத் தமிழ் வேண்டுமா? தமிழகத் தமிழ் வேண்டுமா என்ற மாற்றுத் தேவையா?

பேராசிரியர் இ.அண்ணாமலை பதில்:

“தமிழ்ப் பேச்சுக்கும் எழுத்துக்கும் இடையே உள்ள இடைவெளி நெருங்கிவர வேண்டும்”  என்ற என் கருத்துக்கு எதிர்வினையாக எழும் கேள்வி இது. அதாவது, பேச்சுத் தமிழ் இடத்துக்கு இடம் மாறும்; எழுத்துத் தமிழே இடம் கடந்து பொதுவாக உள்ளது; எழுத்துத் தமிழ், பேச்சுத் தமிழுக்கு நெருங்கி வந்தால் தமிழ் பின்னப்பட்டுத் தனி மொழிகளாகப் பிரிந்து விடலாம். இந்தப் பயத்தை அர்த்தமற்றது என்று தள்ளிவிட முடியாது. இந்த பயத்திற்கு ஆதாரமாகக் காட்டப்படுவது மலையாளம் தனி மொழியாகப் போன வரலாறு.

ஒரு மொழி இரண்டாகப் பிரிவதற்கு மொழியில் உள்ள வேற்றுமைகள் மட்டும் காரணம் அல்ல. ஒரே இலக்கணம் உள்ள மொழியை இரண்டு மொழிகளாகக் கொள்வதையும் (இந்தி, உருது ஒரு உதாரணம், பழைய யூகோஸ்லோவாக்கியாவின் செர்பியன், குரோஷியன் இன்னொரு உதாரணம்), வேறுபட்ட இலக்கணங்கள் உள்ள இரண்டு மொழிகளை ஒரு மொழியாகக் கொள்வதையும் (தென்சீனாவிலும் ஹாங்காங்கிலும் வழங்கும் கான்டனீஸ், ஒரளவு சொற்களிலும் இலக்கணத்திலும், பெருமளவு உச்சரிப்பிலும் வேறுபட்டு, மாண்டரின் பேசுபவர்களுக்குப் புரியாமல் இருந்தாலும், இரண்டும் புறக் காரணங்களால் சீன மொழி என்று அழைக்கப்படுவது இதற்கு ஒரு உதாரணம்) உலகில் காணலாம். மொழி பிரிவதற்கு அரசியல், கலாச்சாரக் காரணங்கள் முக்கியமாக இருக்கும். ஒரு கிளை மொழி, தனி மொழியாவதும் இப்படியே.

இடைக்காலத்தில் சேர நாட்டில் பாட்டு, மணிப்பிரவாளம் என்று இரண்டு இலக்கிய வகைகளும் மொழிகளும் இருந்தன. பாட்டிலக்கியத்தின் மொழி, வழக்கில் இருந்த தமிழ்; மணிப்பிரவாள இலக்கியத்தின் மொழி தமிழோடு சமஸ்கிருதம் கலந்த மேல்தட்டு மக்களின் மொழி. மேல்தட்டு மக்கள், இந்தியத் துணைக் கண்டத்தில் மாறிய அரசியல், கலாச்சாரக் காரணங்களால், மணிப்பிரவாள இலக்கியத்தின் மொழி தனியானது, தமிழிலிருந்து (அன்றைய பிரயோகத்தில் பாண்டி பாஷையிலிருந்தும், சோள பாஷையிலிருந்தும்) வேறானது என்று நிறுவினார்கள். அதை நிலை நாட்ட (கேரள பாஷையைப் போலவே சமஸ்கிருதத்திலிருந்து கடன் வாங்கியிருந்த கர்நாடக பாஷையிலிருந்தும் ஆந்திர பாஷையிலிருந்தும் வேறுபட்டது என்று காட்டவும்), பதினான்காம் நூற்றாண்டில், கேரள பாஷையின் முதல் இலக்கணமாக லீலாதிலகம், சமஸ்கிருத்தில் எழுதப்பட்டது. பின்னால் கேரள பாஷைக்கு மலையாளம் என்ற பெயர் வந்தது.

யாழ்ப்பாணத்தில் பேசப்படும் தமிழ், பேச்சில் உள்ள வித்தியாசத்தால் மட்டும் ஒரு தனி மொழியாகப் பிரியாது. தமிழிலிருந்து விலகுவதற்குப் பெரிய அரசியல், கலாச்சாரக் காரணங்கள் தோன்ற வேண்டும். அவை, மலையாளம் போல், தமிழ் இலக்கியப் பாரம்பரியத்தை உதறும் அளவுக்கு உரமாக இருக்க வேண்டும். அப்படி ஒருவேளை நேர்ந்தால், மொழியளவில் பெரிய வித்தியாசம் இல்லை என்றாலும், தேசிய அடிப்படையில், தமிழ் இரண்டாகும். ஆனால் யாழ்ப்பாணத்தவர்கள் தமிழ்க் கலாச்சார மறுப்பைத் தழுவ முகாந்திரம் இல்லை. அரசியல், கலாச்சாரக் காரணங்கள் ஒற்றுமைக்குச் சாதகமாக இருந்ததால், வெப்ஸ்டர் அமெரிக்கன் மொழியை நிறுவத் தனி அகராதி தயாரித்தும், ஆங்கிலம், தனிப் பெயர்கள் வைத்துக்கொண்டு, இரண்டாகப் பிரியவில்லை.

தமிழ்ப் பேச்சும் எழுத்தும் இரண்டறக் கலக்கப் போவதில்லை; அதற்குத் தேவையும் இல்லை. இரண்டுக்கும் இடைவெளியைக் குறைப்பதற்கு, பேசுவதைப் போலவே எழுதுவது என்ற அர்த்தம் இல்லை. உலக மொழிகளில் எழுத்துக்கும் பேச்சுக்கும் குறைந்த அளவிலாவது வித்தியாசம் இருக்கிறது. தமிழைப் பொறுத்தவரை, இரண்டின் இடைவெளியைக் குறைப்பதில் முதல் படி, பள்ளித் தமிழை அச்சு ஊடகத் தமிழுக்குப் பக்கத்தில் கொண்டுவருவது. ஊடகத் தமிழில் வர்ணனைப் பகுதியில் (narratives) வரும் தமிழ் இக்கால எழுத்துத் தமிழ்; அதில் உரையாடலில் (conversations) வருவது பேச்சுத் தமிழ். இந்த எழுத்துத் தமிழ், செந்தமிழிலிருந்து விலகி, பேச்சுத் தமிழ்க் கூறுகளைக் கொண்டிருக்கிறது. இந்தக் கூறுகள் தொடரியல், பொருளியல், சொல்லியல், சந்தி சம்பந்தமானவை. சொல் வடிவில் – அதாவது, சொல்லின் எழுத்துக் கூட்டு, உருபுகளின் வடிவம் ஆகியவற்றில் – வேறுபாடு போற்றப்படுகிறது. இந்தப் போக்கை ஊக்கப்படுத்தலாம். தமிழ் எழுத்துக்கும் பேச்சுக்கும் உள்ள வேறுபாடு, எழுதும்போது சொல்லின் வடிவிலும், அதைப் பேசும்போது உச்சரிப்பிலும் இருக்கும்; இலக்கணத்தில் இருக்காது. எழுதிய சொல்லைப் படிக்கும்போது உச்சரிப்பு பேசுவதிலிருந்து வேறுபட்டிருக்கும். ஆங்கிலத்தில், படிப்பதும் பேசுவதும் ஒன்றாக இருக்கும்; எழுதுவது வேறாக இருக்கும். தமிழில், எழுதுவதும் படிப்பதும் ஒன்றாக இருக்கும்; பேசுவது உச்சரிப்பில் மட்டும் வேறாக இருக்கும்.

தற்கால எழுத்துத் தமிழ் உருவாகியிருப்பது போல், பேச்சுத் தமிழில் தகு வழக்கு (Standard Speech) உருவாகியிருக்கிறது. இது ஜப்பானிய மொழி போல், பிரிட்டிஷ் ஆங்கிலத்தைப் போல், அந்தஸ்து உள்ள ஒரு இடத்தில், அந்தஸ்து உள்ள ஒரு சமூகப் பிரிவினர் பேசும் மொழியின் அடிப்படையில் அமையவில்லை. வட்டாரத்தையும் சாதியயையும் சார்ந்த – பேசுபவரின் வட்டாரத்தையும் சாதியையும் காட்டிக் கொடுக்கும் – மொழிக்கூறுகளை அகற்றி, அவற்றுக்குப் பதில், இணையான பொது மொழிக்கூறுகளைச் சேர்த்து உருவாகும் பொதுப் பேச்சு மொழி (Standard Spoken Tamil) அது. பொதுக் கூறுகளில் எழுத்து மொழியிலிருந்து பெறும் கூறுகளும் அடங்கும். தற்காலத் தமிழில் பொது எழுத்து மொழி (அல்லது நடை), பொதுப் பேச்சுத் தமிழ் (அல்லது நடை) என்ற இரட்டைப் பிரிவு இருக்கிறது. இந்த இரண்டுக்கும் மேல், முன்னதில் செந்தமிழ், அறிவியல் தமிழ் என்று பல துணை வகைகளும், பின்னதில் கிளை மொழி, தொழில் சார்ந்த மொழி என்று துணை வகைகளும் உள்ளன. இவை எல்லாம் சேர்ந்ததுதான் பல நிலைகளைக் கொண்ட தற்காலத் தமிழ்.

யாழ்ப்பாணப் பேச்சு மொழி, தமிழின் ஒரு வட்டார மொழி. அதன் எழுத்து மொழி, தமிழ் நாட்டு எழுத்து மொழியோடு ஒத்தது. இரண்டுக்கும் வேறுபாடு பத்து சதவிகிதத்திற்குக் குறைந்த சொற்களிலும், ஒத்த சொற்களின் பொருளில் ஓரளவும் இருக்கிறது. யாழ்ப்பாணத்தின் பொதுப் பேச்சு மொழி, தமிழ்நாட்டில் போல, வட்டாரத்திற்கு உரிய தனிக் கூறுகளை விலக்கி, பொதுக்கூறுகளை ஏற்று அமைந்தால், இரண்டு நாடுகளின் பொதுப் பேச்சு மொழியிலும், எழுத்து மொழியைப் போலவே, வேறுபாடு குறைவாக இருக்கும். மேலே சொன்னபடி, பொது எழுத்து மொழியும், பொதுப் பேச்சு மொழியும் இலக்கணத்தில் நெருங்கி வரும்போது இரு நாட்டு மொழியும் வேறோ என்ற எண்ணம் தோன்றாது. தமிழ்நாட்டில் வட்டார மொழிகள் போல, உரையாடல்களில் யாழ்ப்பாண வட்டார மொழி வழங்கும்.

இப்படியான நவீனத் தகு தமிழ் (Modern Standard Tamil) வளர்ச்சியில், பொது எழுத்துத் தமிழுக்கும் பொது பேச்சுத் தமிழுக்கும் இடையே பெரிய விரிசல் இல்லாமல், அதனால் கல்விக்கும் கற்பனைப் படைப்புகளுக்கும் வரும் இடர்கள் இல்லாமல், போகும். இவை இரண்டும் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் பொது என்ற நிலையும் இருக்கும். இந்த நிலை பெருமளவு அராபிய மொழி நிலையை ஒத்தது. அராபியத்தின் பேச்சு மொழி, மேற்கு ஆசியாவில் அது பேசும் நாடுகளில் வித்தியாசப்படுகிறது. தற்காலத் தகு அராபியம் (Modern Standard Arabic), இந்த நாடுகளுக்குப் பேச்சிலும் எழுத்திலும் பொது. பொதுப் பேச்சு வழக்கில், நாட்டைப் பொறுத்து, வட்டார வழக்கின் கூறுகள் கொஞ்சம் இருக்கும். பொது எழுத்து வழக்கில் செம்மொழி அராபியத்தின் (Classical Arabic) கூறுகள் கூடக் குறைய இருக்கும். அரசியல், கலாச்சாரக் காரணங்களால் அராபிய மொழி பல மொழிகளாகப் பிரியும் வாய்ப்பு இல்லை.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

15.ஒருங்குறியில் கிரந்த எழுத்துகளைச் சேர்ப்பது பற்றிய கேள்விக்குத் தந்த என் பதிலுக்கு வந்த எதிர்வினைகள் (கொஞ்சம் சுருக்கப்பட்டுள்ளன):

பேராசிரியர் இ.அண்ணாமலை பதில்:

தமிழ் வாழ, வளர என்ன தேவை என்பது பற்றிய என்னுடைய நிலைப்பாட்டின் அடிப்படையில் என் பதில்கள் அமைகின்றன. தமிழ் வாழ்வு, வளர்ச்சி பற்றிய எதிர்வினை ஆற்றுபவர்களும் தமிழ் வாழ, வளர விரும்புவர்களே. ஆனால் அவர்களுடைய நிலைப்பாடு என்னுடையதிலிருந்து வேறுபட்டது. இந்த வேறுபாட்டுக்கு விவாதத்திற்கு உட்படுத்தக்கூடிய காரணங்களும் உண்டு. வேறுபாட்டை வைத்து, இரண்டாவது நிலைப்பாடே தமிழ் அன்பர்களுடயது, முதலாவது நிலைப்பாடு தமிழ் வம்பர்களுடையது என்று பட்டம் கட்டுவது, விவாதத்தைத் தடுக்கும். அது சூடு கிளப்பலாம்; வெளிச்சத்தைக் காட்டாது.

என்னுடைய நிலைப்பாட்டை ஓர் ஒப்புமை மூலம் விளக்குகிறேன். தமிழ் மகள் ஒருத்தி, சால்வாரோ, கால்சட்டையோ போடுவதால் தமிழ் மகள் அல்ல என்று ஆகிவிடாது; அவள் கெட்டுப்போய்விட்டாள் என்று சொல்ல முடியாது. மொழியும் அது போன்றதே. தமிழ் வேறு சொற்களையோ எழுத்துகளையோ சேர்த்துக்கொள்வதால் தமிழ் மொழி அல்ல என்று ஆகிவிடாது; கெட்டுப்போய்விட்டது என்று சொல்ல முடியாது. இரண்டும் காலத்தின் தேவைக்கு வேண்டியதை ஏற்றுக்கொள்வது ஆகும்; புதிய வாழ்க்கைச் சூழ்நிலைக்கு ஏற்றதும் ஆகும். இது என்னுடைய நிலைப்பாடு.

சுவடி யுகத்திலிருந்து அச்சு யுகத்திற்குத் தமிழ் வந்த போது நெகிழ்ந்து கொடுத்தது. நெடுங்கணக்கில் எகர ஏகாரத்தையும், ஒகர ஓகாரத்தையும் வடிவில் வேறுபடுத்தியது, சொற்களுக்கிடையே இடம் விட்டது, நிறுத்தக் குறிகளைப் பயன்படுத்தியது, புறச் சந்தியைக் குறைத்தது, தமிழ் எண்களைத் தசம முறையில் மாற்றி எழுதியது, பின்னால் அராபிய எண்ணுக்கு மாற்றிக்கொண்டது ஆகியவை தமிழ் ஏற்றுக்கொண்ட சில மாற்றங்கள். தற்போது கணினி யுகத்திற்கு வந்துள்ள போது நெகிழ்ச்சியின் தேவை மீண்டும் எழுந்துள்ளது. இப்போது மாற்றத்தை மறுப்பது, வரலாற்றை மறுக்கும் பார்வை. அது, தமிழின் வருங்காலத்தைக் கேள்விக்குறி ஆக்கும்.

============================================

பெரியண்ணன் சந்திரசேகரன் கருத்து:

“வெளிநாடுகளில் பிறந்து வளரும் இரண்டாம் தலைமுறைத் தமிழ்ப் பிள்ளைகளுக்குத் தமிழ் மீது நம்பிக்கை வர வேண்டுமென்றால் இந்த நெகிழ்ச்சி மிகவும் தேவை. இல்லையென்றால், அவர்களுடைய வாழ்க்கைக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பு நைந்துபோகும்.”

இதற்கு எந்த அடிப்படையும் இல்லை. அயல்நாட்டுப் பிள்ளைகள்……. சில கூடுதல் ஒலிகளைக் குறிக்கும் எழுத்துகள் கிட்டாததால் ……… தமிழ் மொழியில் இனிமேல் குவிக்கும் படைப்புகள் உடனே குன்றிப் போகும் நிலை இருப்பதாக ஒரு மாயத் தேவையைத் தோற்றுவிக்கிறார். ………அடுத்த தலைமுறைக் குழந்தைகளுக்குத் தமிழில் பயிற்சியில்லை. ……எனவே …..இப்படி ஒரு மாயைப் பேச்சுப் பேச அடிப்படையில்லை.

பேராசிரியர் இ.அண்ணாமலை பதில்:

வெளிநாடுகளில் வாழும் இரண்டாம் தலைமுறைத் தமிழ்ப் பிள்ளைகள் தமிழிலிருந்து விலகிப் போய்விட்டார்கள், அல்லது விலகிப் போய்க்கொண்டிருக்கிறார்கள். இதைப் பற்றி நானே எழுதியிருக்கிறேன். விலகலுக்குப் பல காரணங்கள் உண்டு. தமிழால் தாங்கள் வாழும் புதிய சமூகத்தில் நன்மை இல்லை என்பது முக்கியமான காரணம். கலாச்சார நன்மை ஒன்றே அவர்களைத் தமிழில் இருத்திக்கொள்வதற்கு உள்ள வழி. ஆனால் பாடப் புத்தகத் தமிழ், அவர்களுக்கு அந்நியமாக இருக்கிறது. ஜனரஞ்சகக் கலாச்சாரத் தமிழில் அவர்களுக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச ஆர்வமும் இலக்கியத் தமிழில் இல்லை. இது தமிழ்நாட்டில் உள்ள இளைய தலைமுறையினருக்கும் ஓரளவு பொருந்தும். இவர்கள் தன்னுடையது என்று கொண்டாடத் தமிழும் மாற வேண்டும்.

என்னுடைய பதிலில் நான் மனத்தில் கொண்டவர்கள் சிங்கப்பூரில் உள்ள இளைய தலைமுறையினரும், கனடாவில் டோரன்டோ நகரில், யாழ்ப்பாணத்திற்கு அடுத்து அதிக எண்ணிக்கையில் இருக்கும் இலங்கைத் தமிழரின் சந்ததியினரும். சிங்கப்பூர் தமிழ் மாணவர் சிலர் தாங்கள் வசிக்கும் தெருக்களின் பெயரையும் தங்கள் சீன நண்பர்களின் பெயரையும் மூல அடையாளத்தை முழுவதும் குலைக்காமல் எழுதத் தமிழ் இடம் கொடுக்க வேண்டும் என்றார்கள். தமிழ் உலகாளாவிய மொழி என்று சொல்லிக்கொள்ள தன் இறுக்கத்தை விட்டுக் கொடுப்பது அவசியம்.

============================================

பெரியண்ணன் சந்திரசேகரன் கருத்து:

மேலும் சமுதாயப் பிடியில் தமிழ் மொழி சிக்கியிருப்பதாகப் பேசுவதும் உண்மையில்லை.

பேராசிரியர் இ.அண்ணாமலை பதில்:

தமிழ், சமூக நிறுவனங்களின் (social institutions) பிடியில் – பள்ளி ஒரு உதாரணம் – சிக்கியிருப்பதாகவே சொன்னேன். தமிழ் பற்றிய தங்கள் கருத்தாக்கத்தின் (language ideology) சாயலில் தமிழை உருவாக்க இந்த நிறுவனங்கள் விழைகின்றன. நெகிழ்ச்சியைப் பிழை என்பது ஒரு கருத்தாக்கம். இன்று கணினித் தொழில்நுட்ப வளர்ச்சி, பழைய சமூக நிறுவனங்களின் ஆதிக்கத்தை ஓரளவு வலுவிழக்கச் செய்திருக்கிறது. அந்த அளவில் தமிழ், மரபுச் சமூகத்தின் பிடியிலிருந்து வெளிவந்துகொண்டிருக்கிறது என்று சொல்லலாம்.

============================================

செ.இரா.செல்வக்குமார் கருத்து:

“கிரந்த எழுத்துகள், தமிழர்கள் சமஸ்கிருதத்திலிருந்தும் பிற மொழிகளிலிருந்தும் சொற்களைக் கடன் வாங்குவதை ஊக்குவிக்கும்; தமிழின் தூய்மை கெடும் என்பது ஒரு வாதம். இந்த பயத்திற்கு ஆதாரம் இல்லை. எழுத வசதி இருக்கிறது என்பதால் எந்த மொழியும் அதிகமாகச் சொற்களைக் கடன் வாங்குவதில்லை.”

இதற்கு ஏதேனும் அடிப்படை உள்ளதா? எஞ்சின் என்று கடன்வாங்கி எழுத வசதி இருக்கும் பொழுதே வேண்டுமென்றே என்ஜின் என்று எழுதுகின்றன சில புகழ்பெற்ற ஊடகங்கள். …… வேண்டுமென்றே கிரந்தம் கலந்தே கலந்து எழுதுகின்றனர்.
இவை எழுத்துப் பிழை இல்லை என்பதைப் பல கோணங்களில் நிறுவ முடியும். ……… தமிழின் நெடுங்கணக்கை மாற்ற வேண்டும் என்பது அறிவுடைமை ஆகாது என்று கூறுவேன். பல கருத்துகளோடு ஒப்ப முடியவில்லை. பல கருத்துகளுக்குத் தக்க சான்றுகளோ பின்புலமோ இருப்பதாகத் தெரியவில்லை.

பேராசிரியர் இ.அண்ணாமலை பதில்:

தமிழில் புதிதாகச் சொற்கள் கடன் வாங்குவது வேறு; புதிய உச்சரிப்பு உள்ள சொற்களை எழுதப் புதிய எழுத்துகளை நாடுவது வேறு. புதிய எழுத்துகளை நாடினால் சொற்களைக் கடன் வாங்குவது மிகும் என்பதற்குத்தான் ஆதாரம் இல்லை என்று சொன்னேன். ஐம்பது ஆண்டுகளாக நான் படித்த, படிப்பித்த மொழியியல் ஆய்வு நூல்களில் நான் ஆதாரத்தைப் பார்க்கவில்லை. யாராவது ஆதாரம் காட்டும் ஆய்வைக் காட்டினால் என் கருத்தைத் திருத்திக்கொள்வேன்.

புதிய எழுத்துகளைப் பயன்படுத்த வாய்ப்பு எளிமையாகக் கிடைத்தால் பயன்பாடு கூடலாம்; ஆனால் வாய்ப்பைக் குறைத்தால், இன்றைய தொழில்நுட்ப வசதியில், அதை நிறுத்த முடியாது; அந்தப் பயன்பாட்டிற்கு ஆதாரமான மனநிலைக்கு உரிய காரணம் என்ன என்று பார்க்க வேண்டும் என்று கூறினேன். அந்த இடத்தில்தான் நெகிழ்ச்சியின் தேவை பற்றிக் கூறினேன்.

இப்போது தமிழுக்கு முன் உள்ள கேள்வி புதிய உச்சரிப்புகளைக் காட்டச் சில எழுத்துகள் வேண்டுமா என்பதுதான். அவை கிரந்தத்திலிருந்துதான் வர வேண்டும் என்பதில்லை. எங்கிருந்தும் வரலாம்; அவற்றைப் புதிதாகவும் உருவாக்கலாம். ஃபிரான்சு என்றோ ஃபிரான்ஸ் என்றோ உரசொலியை எழுத ஆய்த எழுத்தைப் பயன்படுத்தும் வழக்கைச் சிலர் ஏற்றுக்கொண்டது போல, புதிய வழிகளைக் காணலாம். பெரியார் ஆதரித்த எழுத்துச் சீர்திருத்தம், இரண்டு உயிர் எழுத்துகளைக் நெடுங்கணக்கில் குறைக்கும் எட்டு உயிர்மெய் எழுத்துகளின் வடிவத்தை மாற்றும். இவற்றுக்கு அடிப்படை, பகுத்தறிவு என்று ஒப்புக்கொள்ளபடுகிறது. இந்த வழியில் சில எழுத்துகளைச் சேர்ப்பதும் அறிவுடைமை ஆகலாம்.

============================================

இலக்குவனார் திருவள்ளுவன் கருத்து:

தமிழின் தூய்மை கெட்டதற்கு அறிஞர்கள் பலர் பல சான்றுகளை அளித்திருந்தும் ஆதாரம் இல்லை என நெஞ்சறிந்த பொய் ஏன் என்றும் புரியவில்லை. நல்ல ஆராய்ச்சி அறிஞர் ஏன் தடம் புரள்கிறார் என்று தெரியவில்லை.

பேராசிரியர் இ.அண்ணாமலை பதில்:

தமிழாக்கப்பட்ட சமஸ்கிருதச் சொற்களும், சில சொற்கள் தமிழாக்கப்படாமல் கிரந்த எழுத்துக்களோடு எழுதப்பட்டுத் தமிழில் சேர்ந்ததைச் சில அறிஞர்கள் தூய்மை அழிப்பு என்று சொல்கிறார்கள். இவர்கள், தொல்காப்பியர் சொல்லுக்கு முதலில் வராது என்ற சகரம், கடன் சொற்கள் உட்பட சில காரணங்களால், சொல்லுக்கு முதலில் வந்து தமிழ் ஏற்றுக்கொண்டதால், தமிழின் தூய்மை கெட்டுவிட்டது என்று சொல்லமாட்டார்கள். எது தூய்மை அழிப்பு என்பதே பிரச்சனை. கழிப்பறை வீட்டுக்கு வெளியே இருக்க வேண்டும், அது வீட்டிற்குள் இருந்தால் வீட்டின் தூய்மை கெட்டுவிடும் என்று சொன்னவர்கள் பலர். இன்று மாறிய கழிப்பறை வீட்டிற்குள், ஏன் படுக்கையறைக்குளேயே, வந்துவிட்டதைப் பலர் வீட்டின் தூய்மை கெட்டுவிட்டது என்று சொல்லமாடார்கள். அப்படிச் சொல்பவர்கள் ஆசாரத்தைக் கடைப்பிடிப்பவர்கள். தேவை, வசதி கருதி, தூய்மை எது என்ற எண்ணம் சமுகத்தில் மாறிவிட்டது. மொழியிலும் எது தூய்மை என்பது பற்றிய கருத்து, காலத்தால் மாறலாம்; தமிழர்களிடையே வேறுபடலாம். இதில் தடப்புரட்சி எதுவும் இல்லை.

============================================

செ.இரா.செல்வக்குமார் கருத்து:

நீங்கள் “நெகிழ்ச்சி தேவைப்படுகின்றது”……  என்று கூறுகின்றீர்கள்…… பிரான்சு மக்களுடனும், அவர்கள் மொழியுடனும் மிகவும் நெருக்கமாகவே ஆங்கிலேயர்கள் உறவாடியிருக்கின்றார்கள். அப்படி இருக்கும்பொழுது ஆங்கிலேயர்கள் ஏன் Paris என்னும் நகரின் பெயரைக்கூட பிரான்சியர்கள் போல் ஒலிப்பதில்லை?…. அவர்களுக்கு நெகிழ்ச்சி தேவை இல்லையா? தமிழுக்கு மட்டும் தேவையா? ….எல்லா ஒலிகளையும் எழுத்தாகக் காட்ட வேண்டும் எனில் ஏன் மற்ற மொழிகள் அப்படிச் செய்யவில்லை?

பேராசிரியர் இ.அண்ணாமலை பதில்:

ஒரு மொழி உலகிலுள்ள பெயர்களையெல்லாம் எழுதவோ, உலக மொழிகளில் உள்ள ஒலிகளையெல்லாம் எழுதவோ எழுத்துகளைத் தன்னகத்தே கொண்டிருக்க வேண்டும் என்று யாரும் சொல்வதில்லை; சொல்லவும் இல்லை. இது தேவையே இல்லை. அவற்றை மூலத்தில் உள்ளது போலவே உச்சரிப்பதும் எங்கும் காணாத ஒன்று. தமிழர்கள் பயன்படுத்தும் சொற்களில் உள்ள ஒலிகளுக்கு எழுத்து வேண்டுமா, அவர்கள் வேறிடத்துப் பெயர்களைப் பெரும்பான்மையாக உச்சரிக்கும் ஒலிகளுக்கு எழுத்து வேண்டுமா என்பதே கேள்வி. வேண்டும் என்ற பதிலை நடைமுறைப்படுத்தத் தமிழுக்கு நெகிழ்ச்சி தேவை. எப்படி, எவ்வளவு நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது தமிழ் வளர்ச்சியில் அக்கறை கொண்டவர்கள் கூடி முடிவு செய்ய வேண்டியது.

பழங்காலச் சீனாவில், பெண்ணுக்கு அழகு என்ற எண்ணத்தில், பெண்கள் பாதத்தைச் சிறிதாக்க, அதைக் குறுகிய காலணிக்குள் புதைத்து வைத்தார்கள். அவர்கள் அன்ன நடை நடந்தார்களோ என்னவோ, அவர்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டது. தமிழ் இன்றைய போட்டி உலகில் முன்னோட வேண்டுமென்றால் கட்டுகளை எடுக்க வேண்டும். இதுவே என் பதிலின் கருப் பொருள்.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

14.தமது முந்தைய கேள்வியின் தொடர்ச்சியாக ஆவரங்கால் சின்னத்துரை சிறிவாஸ் மீண்டும் எழுப்பியுள்ள கேள்வி.

“எழுத்து குறிப்பது பிறப்பிடங்களை மட்டுமே.” இந்த எனது கூற்றினைத் திரும்பவும் ஆய்ந்து பதில் தாருங்கள். உலகில் மனிதர்களினால் எழுப்பக்கூடிய ஒலிகளில் அதிக எண்ணிக்கையானவை பேச்சுத் தமிழில் உண்டு. இது ஏன்? எங்களுக்கு தமிழ் ஏன் சரியாகப் புரியவில்லை? தமிழ் இலக்கணம் என்ன கூறுகின்றது?

பேராசிரியர் இ.அண்ணாமலை பதில்:

எழுத்து குறிப்பது ஒலிகளை. ஒலிகள் அவை பிறக்கும் இடத்தையும் முறையையும் வைத்து வகைப்படுத்தப்படுகின்றன. /ப்/ என்ற ஒலி பிறக்கும் இடம் உதடுகள்; பிறக்கும் முறை உதடுகள் மூடுதல். ஒரு மொழியிலுள்ள எல்லா ஒலிகளுக்கும் எழுத்து தேவை இல்லை. சொல்லில் ஒரே இடத்தில் வந்து பொருள் வேறுபாடு தரும் ஒலிகளுக்கு மட்டும் எழுத்து இருந்தால் போதும். இப்படிப்பட்ட ஒலிகளை மொழியியலில் ஒலியன்கள் என்பார்கள். ஒரு ஒலியனின் உச்சரிப்பு அது சொல்லில் வரும் இடத்தைப் பொறுத்து வேறுபடலாம். இப்படி வேறுபடும் ஒலிகளுக்குத் தனி எழுத்துகள் தேவை இல்லை. எழுத்து வரும் இடத்தால் அதன் உச்சரிப்பு பெறப்படும். தமிழில் கிழங்குகள் என்ற சொல்லில் முதலில் வரும் /க்/ உயிர்ப்பொலியாக இல்லாமல்  /k/ என்றும், மெல்லெழுத்துக்கு அடுத்து வரும் இரண்டாவது /க்/ உயிர்ப்பொலியாக /g/ என்றும், மூன்றாவதாக இரண்டு உயிர்களுக்கு இடையே உள்ள /க்/ உரசொலியாக /h/ என்றும் உச்சரிக்கப்படுகின்றன. மூன்று ஒலிகளும் வருமிடத்தால் வித்தியாசப்படுவதால் அவற்றைக் குறிக்க /க்/ என்னும் ஒரு எழுத்தே போதும். ஒரு ஒலியன் மூன்று ஒலிகள். எழுத்துகள் ஒலியன்களின் அடிப்படையில் அமைவது எழுத்து முறையின் சிக்கனத்தை, திறனைக் கூட்டும்.

இருப்பினும், பல மொழிகளில் ஒலியன்களின் எண்ணிக்கையும் எழுத்துகளின் எண்ணிக்கையும் ஒன்றாக இருப்பதில்லை. ஏனென்றால் ஒரு மொழியின் நெடுங்கணக்கு மரபுவழிப்பட்டது. மரபு, ஒலியனியலின் அடிப்படையில் அமையாமல் இருக்கலாம். மொழி மாறினாலும் மரபு மாறாமல் இருக்கலாம்.

உலக மொழிகளில் ஒலியன்களின் எண்ணிக்கை நாற்பதுக்கு மேல் இருப்பது அபூர்வம் என்று மொழியியல் ஆய்வு காட்டுகிறது. இந்தப் பொது விதிக்குப் பேச்சுத் தமிழ் விலக்கு அல்ல. எழுத்துத் தமிழில் ஆய்த எழுத்தையும் கிரந்த எழுத்துகளையும் சேர்த்து எழுத்துகளின் எண்ணிக்கை 36. ஆப்பிரிக்காவில் போட்ஸ்வானா என்னும் நாட்டில் பேசப்படும் !Xந்ம்  என்ற மொழியில் 112 ஒலியன்கள் உள்ளன. பாப்பா நியுகினியில் பேசப்படும் Rotokas என்ற மொழியில் 11 ஒலியன்கள் உள்ளன. இவை புறநடை.

தமிழ் இலக்கண நூல்கள், தமிழைப் பிற மொழிகளோடு ஒப்பிடும் ஒப்பிலக்கண நூல்கள் அல்ல. அதனால் அவை தமிழின் ஒலிகள் கூடுதல் என்றோ, குறைவு என்றோ கூறுவதில்லை.

மொழிகளின் பொது விதியின் புறநடையாகப் பேச்சுத் தமிழின் ஒலிகள் அதிக அளவில் இல்லாததால், ஒலிகளின் எண்ணிக்கை பேச்சுத் தமிழைக் கற்பதற்குத் தடையாக இருக்க முடியாது; அது புரிவதற்கு இடராக இருக்க முடியாது. தான் வளரும் சூழ்நிலையில் உள்ள தாய்மொழியைக் கற்கவோ, புரிந்துகொள்ளவோ, அதில் எத்தனை ஒலிகள் இருந்தாலும் அதன் இலக்கணம் எவ்வளவு சிக்கலாக இருந்தாலும், ஒரு குழந்தைக்கு எந்த இடர்ப்பாடும் இருக்காது. கேள்வியில் உள்ள ‘எங்களுக்கு’ யாரைக் குறிக்கிறது என்று தெரியவில்லை. பேசும் தமிழை எழுதும்போது அதிக வித்தியாசம் வருவதால் எழுத்துத் தமிழைப் பள்ளிகளில் கற்கக் குழந்தைகள் நேரம் எடுக்கிறார்கள்.

தமிழைக் கற்பதில் மட்டுமல்ல, தமிழில் கருத்துகளையும் கற்பனைகளையும் வெளியிடும் திறனின் சக்தியைப் பெருக்கவும் தமிழ் வீட்டிற்குள் உறவாட உதவும் மொழி என்ற நிலையில் நிற்காமல் உலகோடு உறவாட உதவும் மொழி என்ற நிலையிலும் இயங்கத் தமிழ்ப் பேச்சுக்கும் எழுத்துக்கும் இடையே உள்ள இடைவெளி நெருங்கிவர வேண்டும். மக்கள் பேசுவதை எழுத்தை நோக்கி மாற்ற இயலாது; அவர்கள் எழுதுவதைப் பேச்சை நோக்கி மாற்ற முடியும். இந்த மாற்றம் உச்சரிப்பைப் பற்றியது மட்டுமல்ல. பல அம்ச மாற்றம், ஊடகங்களிலும் கறபனை இலக்கியத்திலும் மெல்ல நடந்துகொண்டிருக்கிறது. இது பள்ளிகளில் எல்லாப் பாடங்களிலும் நிகழ வேண்டும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

 13.கணேசனின் கேள்வி:

கிரந்த எழுத்துகளை ஒருங்குறியில் (Unicode) சேர்ப்பது பற்றி அரசு தலையிடும் அளவுக்குச் சர்ச்சை எழுந்துள்ளது. இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்:

பிராமி எழுத்து முறையிலிருந்து சிங்கள, திபேத்திய, பர்மிய, தாய் எழுத்துகளோடு, தமிழ் உள்ளிட்ட பெரும்பான்மையான இந்திய மொழிகளின் எழுத்துகள் தோன்றியது போல கிரந்த எழுத்துகளும் தோன்றின. தமிழ்நாட்டில் இடைக்காலத்தில் சமஸ்கிருதத்தை எழுதவும் சமஸ்கிருதம் மிகைபடக் கலந்த மணிப்பிரவாளத் தமிழ் நடையை எழுதவும் கிரந்த எழுத்துகள் பயன்பட்டன. இன்று தமிழில் ஆங்கிலச் சொற்களைக் கலந்து எழுதும் (இது கடன் சொற்களைச் சேர்த்து எழுதுவதிலிருந்து வேறுபட்டது) சிலர் அந்தச் சொற்களை ஆங்கில எழுத்துகளிலேயே எழுதுவது போன்றது இந்தப் பழக்கம்). தமிழ்க் கல்வெட்டு ஆவணங்களிலும் கிரந்த எழுத்துகளை மிகுதியாகப் பார்க்கலாம்.

தமிழ் இலக்கியத்தில், தொல்காப்பியரும் பின்வந்த இலக்கண ஆசிரியர்களும் சமஸ்கிருதத்திலிருந்து கடன் பெற்ற சொற்களைத் தமிழில் தமிழ் எழுத்துகளைக் கொண்டே எழுத விதித்த நெறிமுறையைப் பின்பற்றி, பதினெட்டாம் நூற்றாண்டு வரை, கிரந்த எழுத்துகள் இடம் பெறவில்லை. பின்னால் ஐந்து கிரந்த எழுத்துகள் (ஜ, ஸ, ஷ, ஹ, க்ஷ) தமிழ் அரிச்சுவடியின் விரிவாக இடம் பெற்றன. கவிதை உட்பட இன்றைய நவீனத் தமிழ் இலக்கியத்தில் இந்தக் கிரந்த எழுத்துகள் தயக்கமின்றிப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த எழுத்துகள் பல, தமிழர்களின் பெயர்களில் உள்ளன, முன்னாள், வருநாள் முதல் அமைச்சர்களின் பெயர்கள் உட்பட. தமிழ்ச் சொற்களிலும் தமிழர் பெயர்களிலும் இடம் பெற்றுள்ள இந்த ஐந்து கிரந்த எழுத்துகளுக்கும் (இன்னும் இரண்டு குறியீடுகளுக்கும்), பழைய தமிழ் எண்களைப் போலவே, ஒருங்குறியில் தமிழுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில், தமிழ் எழுத்துகளின் குறியீட்டு எண்களின் (code points) தொடர்ச்சியாக, இடம் தரப்பட்டிருக்கிறது. இந்த ஏற்பாடு தொடர்ந்து இருக்கும்; இருப்பது தேவை.

ஒருங்குறி, உலக மொழிகள் எல்லாவற்றின் எழுத்துகளுக்கும் இடம் தருகிறது. உலக வழக்கிலிருந்து போய்விட்ட எழுத்துமுறைகளுக்கும் இடம் தருகிறது. ஏனென்றால் அந்த எழுத்துகளில் எழுதப்பட்ட ஆவணங்கள் ஆய்வுலகிற்கு முக்கியம். அந்த முறையில் கிரந்த எழுத்துகளுக்கும் தேவை உள்ளது. அதை ஏற்று, இந்திய அரசு ஒருங்குறி ஆணையத்திற்கு எழுதியிருக்கிறது. தமிழைப் பொறுத்த வரை, மணிப்பிரவாள நடையில் உள்ள வைணவ உரைகளையும் பல கல்வெட்டு ஆவணங்களையும் எண்வயமாக்கி (digitize) ஆய்வுக்குப் பயன்படுத்த இந்த முடிவு உதவும். இதிலும் சர்ச்சை இருக்க முடியாது.

சர்ச்சை கிளம்பியிருப்பது கிரந்த எழுத்துக்களைப் பற்றி, உலகளாவிய ஒருங்குறி ஆணையத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ள புதிய வரைவுத் திட்டத்தைப் பற்றித்தான். இதை எழுதி அனுப்பியிருப்பவர் டாக்டர் ஸ்ரீரமண சர்மா என்பவர். இவர் காஞ்சி சங்கர மடத்தோடு தொடர்புடையவர் என்று சொல்லப்படுகிறது. இந்த வரைவுத் திட்டம் தனிப்பட்ட முறையில் அனுப்பப்பட்டதா, அல்லது ஒரு நிறுவனத்தின் சார்பில் அனுப்பப்பட்டதா என்று எனக்குத் தெரியவில்லை. இந்த வரைவுத் திட்டத்தைhttp://www.tamilnet.com/img/publish/2010/11/20100710-extended-tamil-proposal.pdf என்ற பக்கத்தில் பார்க்கலாம். இது, சமஸ்கிருதத்தைத் தமிழ் எழுத்துகளில் எழுத உதவும் பொருட்டுத் தயாரிக்கப்பட்டது. தமிழ் எழுத்துகளில் வடிக்க முடியாத சமஸ்கிருத ஒலிகள் உண்டு என்பது பலரும் அறிந்த உண்மை. அவற்றில் வல்லினத்தின் வர்க்க எழுத்துகளும், உயிர்ப்பொலி ஏறிய (vocalic) ரகர, லகரமும் அடங்கும். சமஸ்கிருத எழுத்துகளில் – அதாவது தேவநாகரி எழுத்து முறையில் – வடிக்க முடியாத தமிழ் ஒலிகளும் உண்டு. அவை எ, ஒ, ழ, ற, ன.

இந்த ஐந்து எழுத்து வடிவங்களையும் கிரந்த எழுத்துகளோடு சேர்க்கும்படி சர்மா பரிந்துரைத்திருக்கிறார், அப்படிச் சேர்ப்பது தமிழுக்கு ஆபத்து என்பதே சர்ச்சையின் சாராம்சம். இணைப்பில் உள்ள அவருடைய வரைவுத் திட்டத்தில் இந்தப் பரிந்துரை இல்லை. மேலே சொன்ன கிரந்த எழுத்துகளுக்கு ஒருங்குறியில் தனி இடமும் குறியீட்டு எண்ணும் தர வேண்டும் என்ற இந்திய அரசின் பரிந்துரையின் திருத்தமாக, கிரந்த எழுத்துகளோடு மேலே சொன்ன ஐந்து தமிழ் எழுத்துகளையும் சேர்க்க வேண்டும் என்று அவர் வேறு இடத்தில் சொல்லியிருக்கலாம்; அல்லது வேறு யாராவது சொல்லியிருக்கலாம். அது பற்றி எனக்குத் தெரியவில்லை.

தமிழைக் கிரந்த எழுத்துகளில் எழுதுவதற்கு இந்தப் பரிந்துரை உதவும்; சமஸ்கிருதத்தைத் தமிழ் எழுத்துகளில் எழுத, இந்தப் பரிந்துரை தேவை இல்லை. ஏனென்றால், சமஸ்கிருதத்தில் இந்த எழுத்துகள் குறிக்கும் ஐந்து ஒலிகளும் இல்லை. இந்தப் பரிந்துரை எதற்கு என்ற கேள்வி எழுகிறது. அதைப் பார்க்காமல் ஊகமாகத்தான் பதில் சொல்ல முடியும். தமிழைக் கிரந்த எழுத்துகளில் எழுத, எந்த நடைமுறைத் தேவையும் இல்லை. இந்திய மொழிகள் எல்லாவற்றுக்கும் பொதுவாக ஒரு வரிவடிவத்தை உருவாக்க வேண்டுமென்றால் ஒவ்வொரு மொழிக்கும் உரிய தனி ஒலிகளுக்கான எழுத்துகள் பொது வரிவடிவில் இடம் பெற வேண்டும். தமிழில் தனி ஒலிகளுக்கான எழுத்துகள் மட்டும் இடம் பெற்றால் போதாது. மேலும், பொது வரிவடிவுக்குச் சிலர் தேவநாகரி எழுத்துமுறையையும் சிலர் ரோமன் எழுத்துமுறையையும் அவ்வப்போது பரிந்துரைத்திருக்கிறார்கள். அவையே ஏற்றுக்கொள்ளப்படாமல் இருக்கும்போது, கிரந்த எழுத்துமுறையில் அமைந்த பொது வரிவடிவம், தேவை இல்லாத ஒன்று. இதைத் தேவையற்றது என்ற அடிப்படையிலேயே ஒருங்குறி ஆணையம் ஏற்றுக்கொள்ளாது என்று நினைக்கிறேன். தமிழை அழிக்கும் சதி என்றெல்லாம்  குரலெழுப்பத் தேவை இல்லை.

ஒருங்குறி ஆணையத்திற்குச் சர்மா அனுப்பியுள்ள வரைவுத் திட்டம், ஒருங்குறியில் தமிழ்ப் பகுதியில் சில கிரந்த எழுத்துகளை விரிவாக்கிய தமிழ் (Extended Tamil) என்று சேர்ப்பதன் அவசியத்தையும் கிரந்த எழுத்துகளை எப்படி வடிவமைக்கலாம் என்பது பற்றியும் பேசுகிறது. நடைமுறைப் பிரச்சினை சார்ந்த இரண்டாவதைப் பற்றி இங்கே நான் பேசவில்லை. எழுத்து வடிவின் அழகு, எழுதும் எளிமை முதலான எண்ணங்களின் அடிப்படையில் எது உகந்தது என்று தனியே எழுதப்பட வேண்டியது அது. முதலாவது கொள்கை சார்ந்தது; நோக்கம் சார்ந்தது. கிரந்த எழுத்துகளின் அவசியத்திற்குச் சர்மா இரண்டு காரணங்கள் தருகிறார். ஒன்று, சமஸ்கிருதத்தைத் தமிழ் எழுத்துகளில் எழுத, கிரந்த எழுத்துகள் வேண்டும். உயர் சாதிகளில் நாமகரணம் போன்ற சடங்குகளில் சமஸ்கிருத சுலோகங்களைத் தமிழ் எழுத்துகளில் எழுதிப் படிக்கும் பழக்கம் இன்னும் இருக்கிறது. சமஸ்கிருதம், இந்தி முதலான மொழிகளைத் தமிழ் எழுத்திலேயே படிக்கும் முறையும் இருக்கிறது.

இரண்டு, தமிழ்நாட்டில் வழங்கும் சௌராஷ்டிரம் போன்ற மொழிகளுக்குத் தமிழ் எழுத்துகளோடு கிரந்த எழுத்துகளைச் சேர்த்து ஒரு எழுத்துமுறை உருவாக்கலாம். ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளை எழுத வழங்கும் ரோமன், தேவநாகரி ஆகிய எழுத்துமுறைகளுக்கு ஒருங்குறியில் விரிவாக்கப்பட்ட எழுத்துகள் உண்டு.

சர்மா சொல்லவில்லை என்றாலும், தமிழ் எழுத்துமுறையின் அடிப்படையில் தமிழ்நாட்டில் வழங்கும் பழங்குடி மொழிகளுக்கும் பிற மொழிகளுக்கும் எழுத்துமுறை அமைக்கும்போது கிரந்த எழுத்துகள் தேவைப்படும். தமிழ்நாட்டில் பேசும் மொழிகளைத் தமிழ் எழுத்துமுறையை ஒட்டி எழுதுவதைத் தமிழர்கள் ஒப்புக்கொள்வார்கள். அந்த மொழிகளை தேவநாகரி, ரோமன் எழுத்துமுறைகளில் எழுதுவதை விட, தமிழ் எழுத்துமுறையில் எழுதுவதைத் தமிழர்கள் விரும்புவார்கள். இந்தத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமானால் தமிழ் எழுத்துகளோடு சில கிரந்த எழுத்துகளைச் சேர்க்க வேண்டும். தமிழின் தூய்மையைக் காப்பதும் தமிழ் எழுத்துமுறையைப் பரப்புவதும் ஒருசேர நடக்க முடியாது.

கிரந்த எழுத்துகளால் தமிழுக்கு ஆபத்து என்ற வாதம் ஏன் முன்வைக்கப்படுகிறது? கிரந்த எழுத்துகள், தமிழர்கள் சமஸ்கிருதத்திலிருந்தும் பிற மொழிகளிலிருந்தும் சொற்களைக் கடன் வாங்குவதை ஊக்குவிக்கும்; தமிழின் தூய்மை கெடும் என்பது ஒரு வாதம். இந்த பயத்திற்கு ஆதாரம் இல்லை. எழுத வசதி இருக்கிறது என்பதால் எந்த மொழியும் அதிகமாகச் சொற்களைக் கடன் வாங்குவதில்லை. ஒரு மொழி பேசுபவர்கள் பிற மொழிகளிலிருந்து சொற்களைக் கடன் வாங்குவதற்கு கலாச்சார – அரசியல் அதிகாரம், சமூக மாற்றத்தின் தேவைகள், புதிய சிந்தனைகள், பொருள்கள் முதலான பல காரணங்கள் இருக்கின்றன. எழுதும் வசதி, அவற்றில் ஒன்று அல்ல.

தமிழில் உள்ள சொற்களையே கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்தி எழுதுவது அதிகமாகும் என்பது மற்றொரு வாதம். பள்ளி ஆசிரியர், இதழாசிரியர், பதிப்பாளர் போன்ற தமிழை மேலாண்மை செய்வோரின் இடையீடு இல்லாமல், இணையத்தளம், வலைப்பூ போன்ற புதிய ஊடகங்களில் தமிழர்கள் எழுதும்போது பாயஸம், ஸன் டிவி என்று எழுதுவதைப் பார்க்கலாம். புதிய கிரந்த எழுத்துகள் ஒரு சொடுக்கில் கிடைத்தால், அவை தமிழ்ச் சொற்களில் வருவது அதிகமாகலாம். இது ப்ரியம், பத்ரிக்கை என்று இரண்டு மெய்யெழுத்துகளை இடையில் உயிரெழுத்து இல்லாமல் எழுதுவது போன்றது; இதற்கும் கிரந்த எழுத்து கைக்குக் கிடைப்பதற்கும் சம்பந்தம் இல்லை. இப்படி எழுதுவது தமிழைப் பற்றிய ஒரு மனநிலை; மரபை மீறும் மனநிலை. கல்லூரியில் படிக்கும் மகள், பையன்களோடு கைபேசியில் பேசுகிறாள் என்று அந்தச் சாதனத்தைக் கைக்குக் கிடைக்காமல் செய்தால், மனநிலை மாறப் போவதில்லை. தமிழ் தன் சனாதனத்தைக் கொஞ்சம் விட்டுக் கொடுத்து, மரபை நெகிழ்ச்சியாக்கி, அதன் ஈர்ப்புத்தன்மையைக் கூட்ட வேண்டும்.

ஒருங்குறியில் கிரந்த எழுத்துகளைச் சேர்ப்பதைத் தடுத்துவிட்டாலும், தமிழ்ச் சொற்களில் கிரந்த எழுத்துகளைச் சேர்ப்பதைத் தடுக்க முடியாது. ஒருங்குறியில் தனிப் பகுதியில் கிரந்த எழுத்து இருக்கப் போகிறது. தமிழ், ஆங்கில எழுத்துகளைப் போல, தமிழ், கிரந்த எழுத்துகளை ஒருத்தி தன் கணினியில் இறக்கிவைத்துக்கொண்டால், கிரந்த எழுத்துகளை வேண்டும்போது விசைப் பலகையை மாற்றும் சொடுக்கை உபயோகித்து எழுதலாம். தொழில்நுட்பம் மொழியின் மீது சமூகம் செலுத்தும் கட்டுப்பாட்டில் கீறல் ஏற்படுத்துகிறது. இது உலக நியதி.

தமிழின் முன் உள்ள ஒரு முக்கியமான கேள்வி இது. இலங்கைத் தமிழர்களையும் சேர்த்து, இன்று தமிழர்கள் உலகின் பல நாடுகளில் வாழ்கிறார்கள். அங்குள்ள சுற்றுச்சூழலில் உள்ளவற்றையும் உள்ளவர்களையும் அங்குள்ள வாழ்க்கை அனுபவங்களையும் தமிழில் தரத் தமிழ் எழுத்துமுறைக்கு நெகிழ்ச்சி தேவைப்படுகிறது. வெளிநாடுகளில் பிறந்து வளரும் இரண்டாம் தலைமுறைத் தமிழ்ப் பிள்ளைகளுக்குத் தமிழ் மீது நம்பிக்கை வர வேண்டுமென்றால் இந்த நெகிழ்ச்சி மிகவும் தேவை. இல்லையென்றால், அவர்களுடைய வாழ்க்கைக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பு நைந்துபோகும். தமிழ்நாட்டிலேயே தமிழர்களுக்கு பொருளாதாரக் காரணங்களால் உலகத் தொடர்பு கூடக் கூட, அந்த வாழ்க்கை முறைக்குத் தமிழைப் பொருத்தத் தமிழுக்கு நெகிழ்ச்சி தேவைப்படும்.

தமிழ் எழுத்துக்கும் உச்சரிப்புக்கும் இடையே வேறுபாடு கூடிவருகிறது. பேச்சுத் தமிழுக்கும் எழுத்துத் தமிழுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை இங்கே கூறவில்லை. தமிழ்ச் சொற்களிலேயே – இவை கடன் சொற்கள் மட்டுமல்ல – வல்லெழுத்துகளில் ஒலிப்புள்ள (voiced) உச்சரிப்பு இருக்கிறது. குரு, தோசை, பூரி ஆகிய சொற்கள் சில உதாரணங்களே. இந்த உச்சரிப்பு, படித்தவர்களிடமிருந்து மற்றவர்களுக்கும் பரவியிருக்கிறது. இந்த மாதிரி புதிய உச்சரிப்புகளைத் தமிழை எழுதும் முறையில் காட்டப் புது வரிவடிவங்கள் தேவை. எப்படிக் காட்ட வேண்டும் என்பது வேறு கேள்வி. காட்ட வேண்டுமா என்ற கேள்வியை ஒருங்குறியில் கிரந்த எழுத்துகள் பற்றிய சர்ச்சையில் எழுப்பி விவாதித்தால் அது தமிழுக்கு நல்லது. இந்த விவாதத்தைத் தமிழைப் பாதுகாக்கும் அரசியல் விவாதமாக ஆக்காமல், தமிழின் வன்மையைப் பெருக்கும் அறிவு விவாதமாக மாற்றினால், அது உலகமயமான அறிவுச் சமுதாயத்தின் புதிய சவால்களைச் சமாளிக்கத் தமிழ் தன்னைத் தயார்ப்படுத்திக்கொள்ள உதவும்.

இந்தச் சர்ச்சை இன்னொன்றையும் வெளிக்கொணருகிறது. தமிழ் வளரும் பாதை, அரசிடமிருந்தும் பழைய சமூக நிறுவனங்களிலிருந்தும் விலகி, தமிழ்ச் சமூகத்திற்கு அப்பால் இயங்கும் தொழில்நுட்பம், அவற்றைக் கையாளும் உலகம் சார்ந்த நிறுவனங்கள் ஆகியவற்றின் பாதையில் சேரும் போக்கு தோன்றியிருக்கிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

12.மின்தமிழ் இணையக் குழுமத்தில் complex number என்ற கணிதவியல் கருத்துக்குத் தமிழ்ச் சொல் என்ன என்ற விவாதத்தில் கலப்பெண், செறிவெண், சிக்கலெண் என்ற மூன்று சொற்கள் வழக்கில் உள்ளன என்று சொல்லி, ஒவ்வொருவரும் தங்களுக்குப் பிடித்த சொல் எது என்று சொன்னார்கள். இந்தச் சொல், கணிதக் கலைச்சொற்களில் அடிப்படை நிலையில் உள்ள ஒன்று. இந்த விவாதத்தில் பங்கெடுத்துக்கொண்ட ஃழான்-லூய்க் செவ்வியார் (Jean-Luc Chevillard) என்னும் பிரெஞ்சுத் தமிழறிஞர் எழுப்பிய கேள்வி:

சொல்லாக்கம் போன்ற சாதாரண விஷயத்திலும் தமிழர்கள் ஏன் ஒருமித்த முடிவுக்கு வரச் சிரமப்படுகிறார்கள்?

பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்:

கலைச்சொற்களின் சமூக ஏற்பு பற்றி நான் கள ஆய்வு செய்யவில்லை. கலைச்சொல்லில் இணக்கமின்மைக்கு என்ன காரணம் இருக்கலாம் என்று நான் நினைப்பதைச் சொல்கிறேன். ஒருமித்த முடிவுக்கு வர முடியாமைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்கள் இருக்கலாம். இவற்றில் சில, வேறு சில மொழிகளுக்கும் – குறிப்பாக நவீனமயமாக்கப்படும்மொழிகளுக்கும் – இருக்கலாம். சில தமிழ் மொழிக்கே உரியவை.

எந்தச் சமூகத்திலும் மாற்றுக் கருத்துக்கு இடம் உண்டு. மாற்றுக் கருத்துகளை வாதிட்டு ஒரு கருத்தை எல்லோரும் ஏற்றுக்கொள்வதும் உண்டு. இது எல்லா விஷயங்களிலும் நடப்பதில்லை; தேவையும் இல்லை. தமிழ்ச் சமூகத்தில் சொல்லாக்கத்தில் ஒருமிப்பு (consensus) இல்லாததைப் பார்க்கிறோம். மொழியின் முன்னேற்றத்திற்கு இதில் ஒருமிப்பு தேவை.

மாற்றுக் கருத்தை மாற்றார் கருத்தாகப் பார்க்கும் வழமை, தமிழ்ச் சமூகத்தில் இருக்கிறது. மாற்றார் கருத்து என்னும்போது தன்முனைப்பு வந்துவிடுகிறது; தனிப்பட்ட ஆசாபாசங்கள் வந்துவிடுகின்றன. கணினியில் தமிழ் எழுத்துருவை வடிப்பதில் இருபதுக்கும் மேற்பட்ட குறியீட்டு முறைகள் இருக்கின்றன. ஒருவர் கணினியில் தமிழில் எழுதுவதை இன்னொருவர் படிக்கத் தனி முயற்சிகள் எடுக்க வேண்டும். இருப்பினும், அரசு தலையிடும் வரை, இப்போது ஒருங்குறிக் குழுமம் (Unicode Consortium) வெளியிலிருந்து ஒரு பொதுக் குறியீட்டு முறையைத் தரும் வரை, தமிழ் சார்ந்த கணினிப் பொறிஞர்கள் கலந்து பேசி ஒரு ஒருமித்த குறியீட்டைத் தரவில்லை. ஒருமிப்பு, வெளியிலிருந்துதான் வர வேண்டியிருக்கிறது.
தமிழைப் பொறுத்தவரை மொழிக் கொள்கையில் (language ideology) தமிழர்களிடையே ஒருமைப்பாடு இல்லை. மொழித் தூய்மையில் தொடங்கி, ஆங்கில ஒப்புமை என்று அது பன்முகம் கொண்டிருக்கிறது. சொல்லாக்கத்தில் ஒருமைப்பாடு இல்லாததற்கு இது ஒரு காரணம். கேள்வியில் உள்ள சொல் வேறுபபாட்டுக்கு இது காரணம் அல்ல என்றாலும் கீழே உள்ள அதிகப்படியான காரணங்களில் ஒன்றோ, பலவோ அதற்குக் காரணமாக இருக்கலாம்.

ஆங்கில ஒப்புமைக் கொள்கை, ‘தமிழ் நவீன மொழியாக ஆங்கிலத்தை ஒட்டி அது மாற வேண்டும்’ என்ற கருத்தை உள்ளடக்கியது. இதன்படி, எந்தப் புதுத் தமிழ்ச் சொல், ஆங்கிலச் சொல்லின் பொருளை – வேர்ப் பொருளை – அப்படியே பிரதிபலிக்கிறது என்பதில் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. இதனால் பல சொற்கள் உருவாக்கப்பட்டு, அவற்றை உருவாக்கியவர்கள் தங்கள் உருவாக்கமே ஆங்கிலச் சொல்லுக்கு இணை என்று வாதிட்டு, தங்கள் சொல்லை மாற்றுவதில்லை.

தமிழர்களுக்குத் தங்கள் மொழியின் சொற்கள் மீது அறிவு சார்ந்த உறவை விட உணர்வுபூர்வமான உறவு, வன்மையாக இருக்கிறது. அதனால், ஒரு சொல்லைச் செதுக்கிச் செதுக்கி, மாற்றி மாற்றிச் செம்மை பண்ணுவதில் மனநிறைவு காண்கிறார்கள். இதனாலும் புதிதாக வரும் ஒரு சொல் நிலைபெறுவதில்லை.

மொழி வளர்ச்சி பற்றிய சிந்தனையில் தமிழர்களிடம் ஒரு தர்க்க முரண் (logical fallacy) இருக்கிறது. மொழியின் புதிய பயன்பாடு, மொழி தன்னை அதற்குத் தகுதி ஆக்கிக்கொண்ட பின்னரே வர வேண்டும் என்பதே அந்த முரண். ‘தமிழில் கலைச்சொற்கள் உருவான பின்னரே தமிழை அறிவியல் கற்றுக் கொடுக்கப் பயன்படுத்த வேண்டும்’ என்னும் வாதம் இந்தச் சிந்தனையால் வருகிறது. இந்தத் தர்க்க முரணைச் சொல்லாக்கத்திலும் காணலாம். எந்தச் சொல்லாக இருந்தாலும் ஏற்றுக்கொண்டு, புதிய சிந்தனைகளை வெளிப்படுத்த, தமிழின் பயன்பாட்டை முன்னெடுத்துச் செல்ல விடாமல், உருவாக்கிய சொல்லைச் செம்மைப்படுத்துவதிலேயே காலத்தைச் செலவிடுவதை இந்தச் சிந்தனை நியாயப்படுத்துகிறது.

கடைசியாகச் சொல்லவிருக்கும் காரணம், எனக்கு முக்கியமாகப் படுகிறது. ஆங்கிலம் போன்ற நவீன மொழிகளில், புதிய கருத்துகளையும்  தொழில்நுட்பப் பொருள்களையும் உருவாக்குபவர்களே அவற்றுக்குரிய சொல்லையும் உருவாக்குகிறார்கள். இரண்டின் சொந்தக்காரர்கள் என்ற முறையில் அவர்களுடைய சொல்லுக்கு நம்பகத்தன்மை (authenticity) வருகிறது. அவர்களுடைய சொல்லை மற்றவர்கள் கேள்விக்கு உள்ளாக்குவதில்லை. தமிழ் போன்ற நவீனமாகும் மொழிகளில் கலைச்சொற்கள் அந்தச் சொற்களைத் தந்த கருத்தின் உருவாக்கத்தில் தொடர்பு இல்லாத மூன்றாவது நபர்களால் உருவாக்கப்படுகின்றன. அதனால் அவர்கள் உருவாக்கும் சொற்களுக்கு நம்பகத்தன்மை இருப்பதில்லை; அவற்றை மாற்றி மாற்றி அமைப்பதில் ஒரு தடையையும் இந்த நபர்கள் உணர்வதில்லை. தமிழர்கள் தமிழில் ஆய்வு செய்தாலும், ஆங்கிலத்தில் செய்தாலும் ஆய்வாளர்களே (கற்றுக் கொடுப்பவர்கள் மட்டுமல்ல) கலைச்சொற்களை உருவாக்கும்போது, ‘எது சரியான சொல்’ என்ற கேள்வியின் வலு குறைந்துவிடும்.

தமிழியல் தவிர்த்து மற்ற அறிவுத் துறைகளின் கலைச்சொல் ஆக்கத்தில் தமிழ் அறிஞர்களின், தமிழ் அன்பர்களின் பங்கு இரண்டாம் பட்சமே என்னும் கருத்து வேரூன்றினால் சொல் வேறுபாடு வெகுவாகக் குறையும். இந்தக் கருத்தால் தமிழ் கெடாது. சொல் பற்றி இணக்கம் இல்லாமல், தமிழின் பயன்பாடு குறைந்தாலோ தள்ளிப்போடப்பட்டாலோதான் தமிழ் வளர்ச்சி பாதிக்கப்படும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

 11. மின் தமிழ் இணையக் குழுமத்தில் நிகழ்ந்த உரையாடலைமேற்கோள் காட்டி, அண்ணாகண்ணன் எழுப்பிய கேள்வி:

மின் தமிழ்க் குழுமத்தில் நிகழ்ந்த உரையாடலின் ஒரு பகுதி இது -

பாலமுரளி:

பவர் பாய்ண்ட் = தமிழ்ப் பதம் என்ன?

அண்ணாகண்ணன்:

திரை விரித்து உரை நிகழ்த்திய போது, ‘திரையுரை’ என்ற சொல்லைப் பயன்படுத்தினேன். திரை இல்லாமல் சுவர் போன்றவற்றிலும் ஒளியைப் பாய்ச்சி, உரை நிகழ்த்த முடியும் என்பது, பிந்தைய தெளிவு. மறவன்புலவு க.சச்சிதானந்தன், ‘ஒளியுரை’ என்ற பதத்தினைப் பயன்படுத்துகிறார். ஒளியைப் பாய்ச்சாமல், கணித் திரையிலேயே படத்தினை அடுத்தடுத்து நகர்த்தி, உரை நிகழ்த்த முடியும். இது தொடர்பாக, முனைவர் அருள் நடராசன் அவர்களுடன் உரையாடியபோது, ‘படவுரை’ என்ற சொல்லைப் பரிந்துரைத்தேன். முனைவர் மு.இளங்கோவன் ‘காட்சி விளக்க உரை’ என அழைத்து வருகிறார். இதன் தொடர்ச்சியாகக் ‘காட்சியுரை’ என்ற சொல்லை அண்மைக் காலமாகப் புழங்கி வருகிறேன்.

ஹரிகிருஷ்ணன்:

ஒன்றைச் சரியாக விளங்கிக்கொள்ள வேண்டும். PowerPoint என்பதை மொழிபெயர்க்க முடியாது. Presentation என்பதைத்தான் மொழிபெயர்க்கலாம்; முடியும். ஆகவே, காட்சியுரை என்று தமிழிலே குறிப்பிடப்படுவது பிரசன்டேஷன் என்ற சொல்லுக்கானது. பவர்பாயின்ட்டுக்கானது அன்று.  நுண்மென் சன்னல்கள், அதிமென் பலகணிகள், வெகுமென் காலதர்கள் என்றெல்லாம் Microsoft Widows எப்படி மொழிபெயர்க்கப்பட முடியாதோ அப்படியே பவர்பாயின்ட் மொழிபெயர்க்கப்பட முடியாது. Elder brother Eyeman என்று அண்ணா கண்ணனை மொழிபெயர்க்க முடியாததைப் போல. பிரசன்டேஷனுக்குக் காட்சியுரை, திரையுரை, காணுரை என்றெல்லாம் மொழிபெயர்க்கலாம். பொருந்தும்.

ராஜாசங்கர்:

இதைப் போலவே சோடியம், பொட்டாசியம், செலினியம் என்பதை எல்லாம் மொழி பெயர்த்தே தீருவேன் என்று கிளம்பிய ஆட்களும் உண்டு.
பவர் பாய்ண்டுக்கு காட்சியுரை. அப்ப கீழே இருக்கறதுக்கெல்லாம் என்ன வார்த்தை? MS Access, MS Outlook, MS Outlook Express

இந்த உரையாடல் குறித்துத் தங்கள் கருத்து என்ன?

பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்:

தமிழுக்குப் புதிய வளம் சேர்ப்பதில் புதிய சொல்லாக்கமும் ஒன்று. அது, தமிழை உயிரோட்டமுள்ள மொழியாக வைத்திருப்பதில் முக்கியமான ஒன்று. சொல்லாக்க நெறிமுறை பற்றிப் பாரதி காலத்திலிருந்து பேசிக்கொண்டிருக்கிறோம். இதைப் பற்றி ஒரு உடன்பாடு இன்னும் இல்லாததற்குக் காரணம், நெறிமுறை மொழி மரபைச் சார்ந்து மட்டும் அமைவதில்லை; மொழிக் கருத்தாக்கத்தைச் (language ideology) சார்ந்தும் அமையும் என்ற உண்மை. தமிழ் மொழியின் கருத்தாக்கம், ஒருமித்த ஒன்றாக இல்லை; அதனால் உடன்பாடு இல்லை.

சொல்லாக்கம் பற்றிப் பேசும்போது மொழியியலின் ஒரு அடிப்படியான கருத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். இதுவே தமிழ் இலக்கணவியலின் அடிப்படைக் கருத்தும் ஆகும். ஒரு சொல்லுக்கும் அதன் பொருளுக்கும் உள்ள தொடர்புக்குக் காரணம் இருப்பது சிறுபான்மையான சொற்களிலேயே. தொகைச் சொற்களின் பொருளில் அவற்றை உருவாக்கும் சொற்களின் பொருள்களின் கூட்டுப் பொருள் இருந்தாலும், அதற்கு மேல் பொருள் மாற்றம் இருக்கும். இதுவே இலக்கணம் சொல்லும் அன்மொழி. சொல்லுக்கும் பொருளுக்கும் உள்ள தொடர்பு, சமூக வழக்கு மரபாக வருவதே பெரும்பான்மை. ஒரு சொல்லின் பொருள் வெளிப்படையாகத் தோன்றாது என்று தொல்காப்பியர் சொல்வது இதைத்தான்.

ஆங்கிலத்தைத் தன் மாதிரியாக ஏற்றுக்கொண்ட நவீன தமிழ்ச் சமூகம், ஆங்கிலச் சொற்களை மொழிபெயர்ப்பதையே புதிய தமிழ்ச் சொல்லாக்கத்திற்குத் தலையாய நெறிமுறையாக ஏற்றுக்கொண்டிருக்கிறது. ஆங்கிலச் சொல்லில் உள்ள காரணப் பொருள், தமிழ்ச் சொல்லிலும் இல்லாவிட்டால் அது ஏற்புடைய சொல் அல்ல என்ற கருத்தும் பரவலாக இருக்கிறது. இந்தக் கருத்து, விடமுடியாத ஒன்று அல்ல. ஆங்கிலத்தில் கணினியின் பகுதியான ஒன்றை mouse என்று சொல்லும்போது அது உருவ ஒப்புமையின் அடிப்படையில் வந்தது. கிராமத்தில் tube light என்ற சொல்லைக் குழல்விளக்கு என்று மொழிபெயர்க்காமல் வாழைத்தண்டு விளக்கு என்று சொல்லும்போது சொல் உருவ ஒப்புமையின் அடிப்படையில் வருகிறது. இதேபோல ஆங்கிலச் சொற்களை அவற்றின் வேர்ச்சொற்களை – அப்படியே மொழிபெயர்க்க வேண்டியதில்லை. அந்தச் சொற்கள் குறிக்கும் பொருளின் பயன்பாட்டின் அடிப்படையில் தமிழ்ச் சொற்களை உருவாக்கலாம்.

காட்சியுரை, படவுரை, ஒளிப்படவுரை என்று எந்தச் சொல்லைப் பயன்படுத்தினாலும் பயன்பாட்டு வழக்கு மரபே ஒன்றை முடிவு செய்யும். சொல் குறிக்கும் பொருள் (object) மாற மாறச் சொல் மாற வேண்டியதில்லை. கரும்பலகை வெண்ணிறத்தில் வந்தாலும் அது கரும்பலகைதான்.

ஆங்கிலச் சொல் ஒருவரின் அல்லது ஒன்றின் பெயராக (name) இருந்தால் அதை மொழிபெயர்க்க முடியாது; கூடாது. இப்படிப்பட்ட பெயர், சொல் அல்ல; அது அடையாளம் காட்டும் குறியீடு. Oxford-ஐ கோதீர்த்தபுரி என்று பரிதிமாற்கலைஞர் மொழிபெயர்த்தது நிற்கவில்லை. அவருடைய பெயரின் மொழிபெயர்ப்பு நிற்கின்றதென்றால் அது பெயர் மாற்றம்; அடையாள மாற்றம்; சொல்லாக்கம் இல்லை. சதகர்ணியை நூற்றுவர்கன்னர் என்று இலக்கிய ஆசிரியர் மொழிபெயர்த்தால், அது இலக்கிய மரபு; வழக்கு மரபு அல்ல.

Power point என்ற சொல் ஒரு பொருளின் வணிகப் பெயராக இருந்தால் அது செய்யும் வேலையை மேலே சொன்ன ஏதாவது ஒரு தமிழ்ச் சொல்லால் குறிக்கலாம். வெகுஜன ஊடகம் பயன்படுத்தும் சொல் நிற்கும். Xerox என்ற வணிகப் பெயருக்கு ஒளிநகல் என்ற தமிழ்ச் சொல் வழக்கில் இருக்கிறது; கம்பெனியைக் குறிக்கும்போது ஜெராக்ஸ் கம்பெனி என்றே சொல்ல வேண்டும். Face Book என்ற வணிகப் பெயருக்கு முகமண்டலம் என்ற மொழிபெயர்ப்பு தேவை இல்லை. இந்த வணிகப் பொருள் செய்யும் வேலையைக் குறிக்க மின்னுறவு போன்று ஏதாவது ஒரு சொல்லை உருவாக்க வேண்டும்.

இன்று வணிகப் பெயர் பொதுப் பெயராக வரும் வழக்கு இருக்கிறது. Googled என்பது ஒரு எடுத்துக்காட்டு. தமிழில் இந்த மரபு இல்லை. மொழிபெயர்ப்புக்குத் தமிழாக்கம் என்ற சொல் வழங்குவது புறனடை. பேச்சு வழக்கிற்குச் சொல்லாக்கத்தில் இடம் கொடுத்தால், கூகுல்செய் என்று சொல்லலாம். அல்லது தேடு என்ற சொல்லே போதும்.

சொல்லின் நிலைப்பாடு அதன் பயன்பாட்டில் இருக்கிறது; அதன் பொருட்காரணத்தில் இல்லை; அதன் ஆங்கில ஒப்பீட்டு நெருக்கத்திலும் இல்லை.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

 10. 2010 அக்.25 அன்றைய வல்லமையில் வெளியான வெ.ஜனனியின் கேள்விகளை அண்ணாகண்ணன் சற்றே திருத்தி, எழுப்பிய புதிய கேள்விகள்:


“கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றி மூத்த குடி” என்று தமிழ்க் குடியைப் போற்றும் வசனத்தை எழுதியவர் யார்? இதை அறிவியல்பூர்வமாக ஆய்ந்திட முடியுமா?

பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்:

தமிழ் இனத்தின் பழமையைப் பெருமையுடன் சுட்டும் இந்தத் தொடரை எழுதிய இலக்கிய அல்லது இலக்கண உரையாசிரியர் யார் என்று எனக்குத் தெரியவில்லை. இது தமிழ் இனம் உலகின் மற்ற இனங்களை விடக் காலத்தால் முந்தியது என்று கூறும் வரி. ‘குரங்கிலிருந்து வந்த முதல் மனிதன் தமிழனே’ என்று புதுமைப்பித்தனைக் கிண்டலடிக்க வைத்த வரி.

இதன் கருத்தை அறிவியல்பூர்வமாக நோக்க இதன் நேர்பொருளை முதலில் பார்க்க வேண்டும். பூமி தோன்றியபோது பாறையாக இருந்தது; பின்னால் பாறை மண்ணாகியது; இப்படி மாறுவதற்கு முன்னாலேயே தமிழ்க் குடி கருவிகளைச் செய்து நாகரிகத்தில் முன்நின்ற குடி என்று பொருள்கொண்டால், அது புவியியல் அறிஞர்களின் முடிவுக்கு முரணானது. பூமி தோன்றியபோதே கல்லும் மண்ணும் நீரும் இருந்தன. பூமியில் உயிர் தோன்றுவதற்கு முன்னாலேயே இவை இருந்தன.

மனித வரலாற்றில் கற்கருவிக் காலத்திற்குப் பிறகு வரும் செம்புக் கருவிக் காலம் இந்தியத் துணைக் கண்டத்தைப் பொறுத்தவரை பொது யுகத்திற்கு முன்னால் (BCE) 3300இல் துவங்கியது என்பார்கள். செம்புக் காலத்திற்குப் பின் வந்த இரும்புக் கருவிக் காலம் இங்கே பொது யுகத்திற்கு முன்னால் 1800இல் துவங்கியது என்பார்கள். இந்த இரண்டு கால வரையறைகளுக்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்தது இந்துவெளி நாகரிகம். இரும்புக் காலம், இந்துவெளி நாகரிகத்தின் இறுதிப் பகுதியில் துவங்கினாலும், ஆரியர்களின் வேத காலத்திலேயே அது விரிவடைகிறது.

கேள்வியில் உள்ள தொடரில் உள்ள வாள் செம்பால் செய்யப்பட்டதென்றால், அதில் ‘கல் தோன்றி மண் தோன்றா’ என்ற பகுதியை அர்த்தமற்றது என்று விட்டுவிட்டால், இந்தத் தொடர் இந்துவெளி நாகரிகத்தை உருவாக்கிய குடியைக் குறிக்கிறது என்று சொல்ல வாய்ப்பு இருக்கிறது. இந்துவெளி நாகரிகத்தின் இருப்பு உலக அறிவிற்கு வந்தது, காலனிய காலத்தில். இந்தத் தொடர் காலனிய காலத்திற்கு முற்பட்ட புலவனால் எழுதப்பட்டது என்றால், அந்த அறிவு, தமிழ்க் குடியின் கூட்டு நினைவைச் (collective memory)சேர்ந்ததா என்ற கேள்விக்கு விடை வேண்டும். இதற்கு விடை காண்பது எளிதல்ல.

இந்தத் தொடர், இந்துவெளி நாகரிகக் குடியைக் குறிக்கிறது என்று எடுத்துக்கொண்டாலும், அந்தக் குடி எது என்பது மற்றொரு கேள்வி. அது திராவிடக் குடி என்று அஸ்கோ பர்ப்போலா, ஐராவதம் மகாதேவன் போன்ற அறிஞர்களின் முடிவை ஏற்றுக்கொண்டாலும், அது தமிழ்க் குடி என்று சொல்லத் தடையாக, இந்துவெளி நாகரிகத்தின் இறுதிக் காலத்திற்கும் சங்க இலக்கியமும் பிராமிக் கல்வெட்டுகளும் காட்டும் தமிழ் நாகரிகத்தின் துவக்கக் காலத்திற்கும் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் இடைவெளி இருக்கிறது. இந்த இடைவெளியில் தமிழ்க் குடி இருந்ததா, இருந்தால் இரண்டுக்கும் உறவு தொடர்ச்சியாக இருந்ததா என்ற கேள்விக்கு விடை சொல்ல ஆதாரம் வேண்டும்.

ஒப்பிலக்கண ஆய்வின்படி, பழந்தமிழோடு நெருங்கிய ஒரு பேச்சுமொழி அந்தக் காலக்கட்டத்தில் இருந்தது; அதற்குத் தமிழ் என்ற பெயர் இலக்கியம் எழுதப்பட்ட பின் வந்தது, ஆனால் இந்துவெளி நாகரிகம் போல் அந்தத் தமிழ்க் குடியிடம் நகர நாகரிகம் இருந்ததற்கு அகழாய்வுச் சான்று இல்லை. ஐராவதம் மகாதேவன் சங்க இலக்கியத்தில் வரும் பொறையன் என்ற அரசர் குடிப்பெயரும் அண்மையில் தமிழகத்தில் அகழ்ந்தெடுத்த இந்துவெளி எழுத்தைக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படும் சிறுகோடரியும் உறவுத் தொடர்ச்சிக்கு ஆதாரம் என்று சொல்கிறார். இந்த ஆதாரங்கள் இன்னும் சர்ச்சைக்கு உரியவையாக இருக்கின்றன.

கேள்வியில் உள்ள தொடரில் உள்ள ‘வாள்’ செம்புக் கருவிக் காலத்தைச் சுட்டுகிறது என்று எடுத்துக்கொண்டாலும், தமிழ்க் குடி மனிதக் குடிகளில் மூத்த குடி என்று சொல்வது தவறாகும். பொதுயுகம் 3000இலேயே சுமேரிய, பாபிலோனிய, அசிரிய நாகரிங்களின் பிறப்பிடமான மெசபடோமியா பகுதியில் செம்புக் கருவிகள் செய்யப்பட்டன.

கேள்வியில் உள்ள தொடர், இன்று பல தமிழ் ஆர்வலர்களிடம் இருப்பது போல், அறிவியல் அடிப்படையில் அல்லாமல், தமிழுக்குப் பழமைத் தகுதி தரும் ஆசையால் சொல்லப்பட்டதாகவும் இருக்கலாம். இதுவே என் கருத்து.

தமிழர்களுக்குப் பழமையை நிலைநாட்டுவதில் உள்ள ஆர்வத்தைத் தமிழுக்குப் புதுமையைக் கொண்டு வருவதில் காட்டினால் தமிழ் வளரும்.

=========================

இலக்கியம் மூலம் பருவ நிலை, சுற்றுச் சூழலை பற்றிப் புரிதல் பெற முடியுமா?

பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்:

இலக்கியம் அது எழுதப்பட்ட காலத்தின் பருவநிலை, சுற்றுச் சூழல் முதலியன பற்றிப் பேசலாம். ஆனால் அது அறிவியல் அடிப்படையில் இருக்கும் என்பதில்லை. அவை பற்றிய சமூகப் பார்வை இலக்கியத்தில் இருக்கும்.

பழைய இலக்கியத்தில் இக்கால எண்ணப் போக்கையும் மதிப்பீடுகளையும் தேடும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இன்றைய சிந்தனைகளை அன்றைய இலக்கியத்தின் மீது ஏற்றிப் பார்ப்பது கால முரண் ஆகும். இது பெண்ணுரிமை, மனித உரிமை, பொதுவுடைமை, மக்களாட்சி போன்ற சமூகம் சார்ந்த கருத்தியல்களுக்கு மிகவும் பொருந்தும்.

ஒரு சமூகத்தின் சிந்தனைப் போக்குகள் காலத்துக்குக் காலம் மாறும். அவற்றுக்குப் பழமைத் தொடர்ச்சி இருக்கலாம்; இல்லாமலும் இருக்கலாம். இக்காலச் சிந்தனைகள் எல்லாமே பழைய இலக்கியத்தில் காணக் கிடைக்கின்றன என்பது பழமையைக் கொண்டாடுவதற்கோ. புதுமையின் ஏற்பைக் கூட்டவோ பயன்படலாம். ஒரு இலக்கியத்தை அதன் காலச் சமூகத்தின் பின்புலத்தில் பார்க்கப் பயன்படாது. எல்லாக் காலத்திற்கும் ஏற்ற திருக்குறளுக்கும் இது பொருந்தும்.

இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழ் மொழி மாறவில்லை என்று சொல்வது போல், தமிழ்ச் சிந்தனையும் மாறவில்லை என்று நினைப்பதில் பெருமை இல்லை. இரண்டும் வளர்ந்து வந்தவை; இன்னும் வளர்ந்துகொண்டிருப்பவை.

=========================

தமிழில் உருவாக்க வேண்டிய புதிய ஆய்வுக் களங்கள் யாவை?

பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்:

புதிய ஆய்வுக் களங்களுக்கு ஒரு எல்லைக் கோடு இல்லை. தமிழ் வழங்கும் சமூகத்தில் நேரும் அமைப்பு மாற்றங்களால், அதனாலும் பிற உலகின் தொடர்பாலும் ஏற்படும் சிந்தனை மாற்றங்களால் புதிய ஆய்வுக் களங்கள் தோன்றும். இது தகவல் தொழில்நுட்பச் செயல்பாட்டிற்குத் தமிழ் தன்னைத் தகுதி ஆக்கிக்கொள்ளச் செய்யும் ஆய்வு மட்டுமன்றி, சாதி பற்றிய சமூகவியல் ஆய்வுக்கும் பொருந்தும். புதிய ஆய்வுக் களங்கள் தோன்றுவதோடு பழைய ஆய்வுக் களங்களில் புதிய பார்வை விழுவதும் வரையறை அற்றது.

என் கருத்துப்படி, தமிழ் மீதான ஆய்வுக் கவனம் தமிழின் பழமையையும் மாறாமையையும் நிலைநாட்டுவதிலிருந்து தமிழ் மொழியும் இலக்கியமும் கலாச்சாரமும் சமூகமும் எப்படிக்  காலந்தோறும் வந்த மாற்றங்களை உள்வாங்கின, இன்று எப்படி உள்வாங்குகின்றன என்னும் ஆய்வுக்கு விரிவடைய வேண்டும். இந்த ஆய்வு, எப்படி தமிழ் உயிருள்ள மொழியாக இரண்டாயிரம் ஆண்டுகள் தன்னைக் காத்துகொண்டது என்று காட்ட வேண்டும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

 9. வெ.ஜனனியின் கேள்விகள்:

i) கிரேக்க நாடு, பல வரலாற்றுச் சிறப்புகளை உடையது. அறிவியல், தத்துவம், இலக்கியம், கணிதம், படையெடுப்பு என முன்னேறி இருந்ததாக வரலாறு சொல்கிறது. கிரேக்க மொழியும் சரி, தமிழ் மொழியும் சரி, செம்மொழிச் சிறப்பினைச் சுமக்கிறது. ஆனால் இதுவரை நான் படித்த புத்தகங்களில் தமிழரின் சிறப்புகளை வேறு எவரும் பதிவு செய்ததாகத் தெரியவில்லை. நாமும் கிரேக்கமும் சம காலத்தில் பயணித்தோம். அப்படி என்றால் நாம் அவர்களோடு, அதாவது செம்மொழிகளோடு, எப்படி போட்டி போட்டோம்?

ii) சங்க இலக்கியம் நகர வாழ்க்கையைப் பற்றி எங்காவது பேசி இருக்கிறதா? நாகரிகம் மற்ற இடங்களில் தோன்றுவதற்கு முன் நம்மிடைய இருந்த நாகரிக வளர்ச்சி?

iii) ‘ஐஸ் ஏஜ்’ பற்றிய ஆய்வு, பல புதுப் புது  கண்டுபிடிப்புகளைக்  கைவசம் வைத்திருக்கிறது. இதைப் பற்றி சமீப காலத்தில் பல கட்டுரைகள் படிக்க நேரிட்டது. இதில் பெரும்பாலான கட்டுரைகள் ஐரோப்பா, அமெரிக்காவைப் பற்றியே கூறுகின்றன. சில பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் சங்க இலக்கியம் இதற்கெல்லாம் முன்னாலே தோன்றியமையால் அவற்றில் குறிப்புகள் இருந்திருக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறுகிறாகள். அப்படி இருப்பின், அது போன்ற புதிய ஆய்வுக் களங்களை உருவாக்கலாமா?

இலக்கியம் மூலம் பருவ நிலை, சுற்றுச் சூழலை பற்றிப் புரிதல் பெற முடியுமா? இந்த ஆய்வு, புதிய பரிமாணத்தை ஏற்படுத்தும் என்று தோன்றுகிறது. சிந்து வெளி நாகரிகத்திற்கு முன்பே ‘ஐஸ் ஏஜ்’ தோன்றிவிட்டது. மேலும் ”கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்த குடி” தமிழ்க் குடி என்று ஒரு செய்யுள் கூறுகிறது. இதற்கான பதிலுக்கும் என் கேள்விக்கும் தொடர்பு இருக்கிறது எனக் கருதுகிறேன்

பேராசிரியர் இ.அண்ணாமலையின் திரண்ட பதில்:

பனிபடர் காலம் (ice age), பூமியின் வரலாற்றில் அவ்வப்போது பூமி குளிரும்போது உள்ள காலத்தைக் குறிக்கும். கடைசிப் பனிபடர் காலம் 20,000 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்தது என்று புவியியல் அறிஞர்கள் கூறுகிறார்கள். சங்க இலக்கியம் இதற்கு மிகவும் பின்னால் தோன்றியது. அதில் பனிபடர் காலத்தைப் பற்றிய குறிப்பு இருக்க முடியாது. இலக்கியத்தில் அது தோன்றிய காலத்து நில அமைப்பு, தட்பவெப்பம், இயற்கையின் சீற்றம் பற்றிய குறிப்புகள் இருந்தாலும் பனிபடர் காலத்தைப் பற்றிய குறிப்பு இருக்க முடியாது. உலகின் எந்த மொழியின் இலக்கியமும் அவ்வளவு பழமையானது அல்ல.

பெருமளவு வணிகத்தையும், பல பிரிவுகள் கொண்ட சமூகத்தையும், இவற்றின் விளைவாக வரும் மையப்படுத்தப்பட்ட ஆட்சியையும், எழுத்து வடிவம் பெற்ற மொழியையும் கொண்ட நாகரிகத்தையே நகர நாகரிகம் என்பார்கள் ஆய்வாளர்கள். சங்க காலத்தில் தமிழகத்தில் கடல்கரையை ஒட்டி அமைந்த துறைமுகம் சார்ந்த பட்டினங்களும் இருந்தன; மக்கள் வேட்டையாடி உண்டு வாழ்ந்த காடுகளும் இருந்தன. நகர வாழ்க்கையும் இருந்தது; சிறுகுடி வாழ்க்கையும் இருந்தது.

நகர வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் வகையில் சங்க காலத்தில் தமிழகம் ரோமானியர்களுடன் (யவனர்களுடன்) வணிகம் செய்திருக்கிறது. அந்தக் காலக்கட்டத்தில் கிரேக்கம் பேசிய பகுதிகள், ரோமின் ஆளுகையின் கீழ் இருந்தன. குதிரை உட்பட சில வணிகப் பொருள்களும், சில சொற்களும் (ஒரை என்ற நேரத்தைக் குறிக்கும் சொல் hora என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து வந்தது. இதன் இன்றைய ஆங்கில வடிவம் hour) வந்தது போல், கிரேக்கப் பகுதிகள் சேர்ந்த ரோம் நாட்டின் வழியாகத் தத்துவம், கணிதம் போன்ற அறிவியல் சிந்தனைகள் தமிழகத்திற்கு வந்ததற்குத் தக்க  சான்று இல்லை.

தமிழின் செம்மொழித் தன்மை அதன் செவ்விலக்கியத்திலிருந்தும் செவ்விலக்கணத்திலிருந்துமே வருகிறது. சங்கம் மருவிய காலத்தில் நீதி வரையறைகள் பேசப்பட்டது போல், அப்போதும் அதற்கு முன்னாலும் மதம் சாராத தத்துவ விசாரணைகள் தமிழ்ச் சமூகத்தில், கிரேக்கச் சமூகத்தில் போல, தனித்து இல்லை. பருப்பொருள் உலகம் பற்றிய சில சிந்தனைகள் இலக்கியத்திலும் இலக்கணத்திலும் ஆங்காங்கே காணப்படுகின்றன. இந்தச் சிந்தனைகள், இலக்கணம் போல், ஒரு அறிவுத் துறையாக உருவாகவில்லை.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

8. அரிஅரவேலன்,முக மண்டலத்தில் எழுப்பிய கேள்வி:

மதுரையில் 5ஆவது முறையாக நடைபெறும் புத்தகக் கண்காட்சி என்பதைத் தெரிவிக்க பின்வரும் தொடர்களில் எது சரியானது?
* 5ஆவது மதுரை புத்தகக் கண்காட்சி
* 5ஆவது மதுரைப் புத்தகக் கண்காட்சி
* மதுரையில் 5ஆவது புத்தகக் கண்காட்சி
* மதுரையின் 5ஆவது புத்தகக் கண்காட்சி
* மதுரையில் நடைபெறும் 5ஆவது புத்தகக் கண்காட்சி

பேராசிரியர் இ.அண்ணாமலை பதில்:

‘மதுரையில் நடைபெறும்’ என்பது பெயரெச்சத் தொடர்; அது தழுவி நிற்கும் பெயர்ச்சொல் தொகுதி ‘5ஆவது புத்தகக் கண்காட்சி’. இரண்டும் சேர்ந்தது ‘மதுரையில் நடைபெறும் 5ஆவது புத்தகக் கண்காட்சி’ என்னும்  பெயர்த் தொடர். இந்தப் பெயர்த் தொடரை வினையை நீக்கிச் சுருக்கலாம். வினை இல்லாதபோது பெயரோடு வரும் வேற்றுமை உருபு ‘உரியது’ என்ற பொருளைத் தரும் ஐந்தாம் வேற்றுமை உருபாக (இன்) மாறும். அப்படி மாறினால் சுருக்கிய தொடர் பெயர்த் தொடராகவே இருக்கும். இதுவே ‘மதுரையின் 5ஆவது புத்தகக் கண்காட்சி’.

வேற்றுமை உருபு மாற்றம் நிகழாதபோது (‘மதுரையில் 5ஆவது புத்தகக் கண்காட்சி’) தொடர் பெயர்த் தொடர் அல்ல; அது, சுருக்கிய வாக்கிய அமைப்பு. இதைப் பயன்படுத்தும்போது ‘நடைபெற்றது’ போன்ற வினைமுற்று இறுதியில் தொக்கி நிற்கும். சுருக்கிய  வாக்கிய அமைப்புகளைப் பத்திரிக்கைச் செய்திகளின் தலைப்புகளில் பார்க்கலாம்.

ஐந்தாம் வேற்றுமை உருபு இல்லாமலும் இரண்டு பெயர்ச் சொற்கள் அடுக்கிவந்து ஒரு பெயர்த்தொடர் உருவாகலாம். அதுவே ‘5ஆவது மதுரைப் புத்தகக் கண்காட்சி’. பல பெயர்கள் அடுக்கி வந்து பெயர்த் தொடர் ஆகும்போது பெயர்கள் வரும் வரிசையில் ஒரு நிரல் உண்டு. எண்ணுப் பெயர் மற்ற பெயர்களுக்கு முன்னால் வரும். எனவே ‘*மதுரை 5ஆவது புத்தகக் கண்காட்சி’ என்று வரவேண்டிய தொடர் ‘5ஆவது மதுரைப் புத்தகக் கண்காட்சி’ என்று வரிசை மாறி வருகிறது.

பெயர்கள் அடுக்கி வரும்போது, மேலே காட்டிய தொடரில் உள்ளது போல், ஒற்று இரட்டிக்கும். இன்றைய தமிழில் ஒற்று இரட்டாமல் எழுதுவது பெருகி வருகிறது. வழக்கு மிகுதி கருதி அதையும் ஏற்றுக்கொள்ளலாம். இதுவே ‘5ஆவது மதுரை புத்தகக் கண்காட்சி’.

மகரத்தில் முடியும் பெயர்களையும் ஒற்று மிகாமல் அடுக்கி‘புத்தக கண்காட்சி’ என்று எழுதுவோரும் உண்டு.

கொடுத்துள்ள ஐந்து தொடர்களும் சரியானவைதான். அவற்றின் இலக்கணக் கூறுகள்தான் வேறுபடுகின்றன. முதல் தொடரை வேண்டுமானால் பள்ளியில் சொல்லித் தரும் இலக்கண விதியிலிருந்து முரண்பட்டது என்று சொல்லலாம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

7. மறவன்புலவு க.சச்சிதானந்தன் எழுப்பிய கேள்வி:

றகரம் தனித்தனியாதலையோ, ஒன்றிலிருந்து மற்றொன்றாவதையோ குறிக்கும் சொற்களில் எழுத்தாக வருகிறதே?

அற, இற, ஈறு, ஏற, கற, கீற, கூற, சிறை, சீற, சுற, சூற, திற, தேற, நற, நிற, மற, பற, பாற, பிற, பீற, புற, பெற, பேறு, பொறை, மற, மாற, மீற, முறை, வற, வாறு, விற, வீறு, வேறு (என்ற விகுதிகள் சேரா) மொழிப் பகுதிகளைக் காண்க.

யாவிலும் றகரம் உண்டு. யாவும் தனியாதலைக் குறிப்பன.

வேர் எவ்வாறு?

வல்லின றகரம் இவ்வாறு வருவதற்குக் காரணம் உண்டா?

நெஞ்சறையில் இருந்து வெளிவரும் காற்றுச் சற்றே வலிந்த முயற்சியால் அண்பல் அடைப்பொலியாக, நுனிநா நடுங்க அல்லது விசிற வருவதா றகர ஒலி? அதுவும் காரணமா?

பேராசிரியர் இ.அண்ணாமலை பதில்:

சொல்லுக்கும் அதன் பொருளுக்கும் உள்ள தொடர்பு சமூக மரபால் (social convention) ஏற்படுவது; அது இயற்கையாக இணைந்தது அல்ல. காலப்போக்கில் சொல்லின் வடிவம் மாறினால் அதன் பொருள் மாறுவதில்லை; சொல் சுட்டும் பொருளின் தன்மை மாறினால் சொல் வேறாவதில்லை. மரம் என்ற தமிழ்ச் சொல்லிற்கு இணையான ஆங்கிலச் சொல் tree. வெவ்வேறு ஒலிகளால் அமைந்த இரண்டு சொற்களும் ஒரே பொருளைத் தருகின்றன; இரண்டு சொற்களும் ஒரு வகையான தாவரத்திற்குப் பெயர் வைப்பதில் இரு வேறு சமூக மரபுகளைத் தாங்கி நிற்கின்றன.

சொற்கள் ஒலிகளின் சேர்க்கையால் உருவாகின்றன. ஒரு சொல்லின் ஒலிகளுக்கும் அது சுட்டும் பொருளுக்கும் இயற்கையான தொடர்பு இல்லை. ஒலிக்குப் பொருள் ஏற்றும் சமூக மரபும் இல்லை. இதற்குச் சில விதிவிலக்குகள் உண்டு. சில நிறங்களை மன உணர்வுகளோடு இயைபுபடுத்தும் மரபு இருப்பது போல, சில ஒலிகளை இனிமை, கடுமை போன்ற மனநிலைகளோடு இயைபுபடுத்தும் மரபும் இருக்கிறது. இந்த மரபைக் கம்பன் போன்ற கவிஞர்கள் பயன்படுத்தி, கவிதை அனுபவத்தை வளமாக்குகிறார்கள்.

ஆ, ஐயோ போன்ற வியப்பிடைச் சொற்கள் வலி போன்றவற்றை அனுபவிக்கும்போது வெளிப்படும் ஒலிகளை நேரடியாகப் பிரதிபலிக்கின்றன. படபட, வழவழ போன்ற ஒலிக் குறிப்புச் சொற்கள் (onomatopoeic words) அவற்றின் பொருளை நேரடியாகப் பிரதிபலிக்காவிட்டாலும்,  பிரதிபலிப்பது போன்ற ஒரு மனத்தோற்றத்தைத் தருகின்றன.

மேலே உள்ள கேள்வியில் உள்ள சொற்களில் உள்ள ஒலிக்குறியீடும் (sound symbolism) ஒரு விதிவிலக்கு. றகரம் உள்ள சில சொற்களில் ‘துண்டாதல், வேறாதல்’ என்ற பொருள் பொதுமையாக இருப்பதாகக் கருதினால் றகத்திற்கு அந்தப் பொருளுணர்வை ஏற்றும் மரபு இருக்கிறது என்று கொள்ள வேண்டும். றகரத்தின் ஒலிப்பிறப்பிற்கும் இந்தப் பொருளுணர்வுக்கும் தொடர்பு இல்லை. தொடர்பு மனதில் இருக்கிறது; அது மரபால் மனதில் இடம் பெறுகிறது. இந்தச் சொற்கள் முதன்முதலாக வழக்கிற்கு வந்தபோது இவற்றின் பொதுமைப் பொருளைக் கொண்டுவர வேண்டும் என்ற எண்ணத்தால் அவை உருவாக்கம் பெறவில்லை.

ஒலிக்கும் பொருளுக்கும் இயற்கையான தொடர்பு இருந்தாக வேண்டுமென்றால் ஒரு மொழியில் எண்ணிறந்த சொற்கள் உருவாக முடியாது. காதல் போன்ற உணர்வுகளையும் ஆபத்து பற்றிய எச்சரிக்கை போன்ற செய்திகளையும் வெளிப்படுத்தும் குறியீடுகளில் ஒலிகள் நேரடியாகப் பொருளைத் தருகின்றன என்பதையும் மறுக்க முடியாது. இந்த வழக்கை மற்ற உயிரினங்கள் இன்றும் நமக்குக் காட்டிக்கொண்டிருக்கின்றன. மனித மொழியின் வளர்ச்சியும் அதன் மூலம் மனித குலத்தின் வளர்ச்சியும், ஒலிக்கும் பொருளுக்கும் உள்ள நேரடித் தொடர்பு அறுந்த பிறகே சாத்தியமானது.

===============================================

கவிஞர் நெப்போலியன் எழுப்பிய கேள்வி:
அடைமான‌ம்  / அட‌மான‌ம். எது ச‌ரியான‌ வார்த்தை for ‘mortgage’?

பேராசிரியர் இ.அண்ணாமலை பதில்:

தமிழ்ப் பேரகராதி அடைமானம் என்ற வடிவத்தைத் தருகிறது. க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி அடமானம் என்ற வடிவத்தைத் தருகிறது. வின்ஸ்லோவின் அகராதியிலும் ஃபெப்ரீஷியஸின் அகராதியிலும் அடமானம் என்ற வடிவத்தையே பார்க்கிறோம். இதுவே இன்று பெரும்பான்மை வழக்கு.

அடைமானம் என்ற வடிவம், ‘பெறு’ என்ற பொருள் கொண்ட அடை என்ற சொல்லிலிருந்து பிறக்கிறது. இதுவே இந்தச் சொல்லின் பழைய வடிவம். பெறுமானம், வருமானம் என்ற சொற்களில் உள்ள பெயராக்க விகுதியான – மானம் அடைமானத்திலும் இருக்கிறது. ‘சுற்று’ என்ற பொருள் கொண்ட புடை என்ற சொல்லிலிருந்து பிறந்த புடைவை என்ற சொல் இன்று புடவை என்ற வடிவத்தில் வழங்குகிறது. சொல்லுக்கு நடுவில் ஐகாரம் அகரமாகக் குறுகுவது பொது விதி.

அடிச்சொல்லைச் சிதைக்காமல் ஒரு சொல்லை அடையாளம் காட்டும் வடிவமே சரியானது என்று சொல்வது மொழியைக் கட்டிப் போடுவதாகும். மொழியில் மாறுதல்கள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கின்றன. மாற்றம் எல்லாம் பிழை அல்ல. பிழை அல்லாத மாற்றத்தைப் பெரும்பான்மை வழக்கு அடையாளம் காட்டுகிறது. பழமை என்பதாலேயே ஒரு சொல்லின் வடிவம் சரியானதாக ஆகிவிடாது. பெரும்பான்மை வழக்கே சரியான வழக்காகிறது. மக்களுக்காக மக்களால் கட்டப்படுவதுதானே மொழி.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

6. சென்னை, மாநிலக் கல்லூரியின் தமிழ்த் துறை இணைப் பேராசிரியர் இரா. சீனிவாசன் எழுப்பிய கேள்விகள்:

கல்வெட்டுகளில் பயின்று வரும் மொழி, இலக்கிய மொழியிலிருந்து வேறுபட்டிருப்பதன் காரணம் என்ன?

பேராசிரியர் இ.அண்ணாமலை பதில்:

சங்கக் கவிதைகளின் மொழியும் சமகால பிராமிக் கல்வெட்டுகளின் மொழியும் தனித்து நிற்கின்றன. கம்பராமாயணத்தின் மொழியும் சோழர் காலக் கல்வெட்டுகளின் மொழியும் வேறானவை. இதற்குக் காரண்ங்கள் பல. சில காரணங்கள் ஊகங்களே. ஒரு காரணம், எழுதப்பட்ட பொருள். கவிதையின் பொருள் கற்பனை கலந்தது. இந்தக் கற்பனைக்கு ஒரு மொழி சார்ந்த ஒரு மரபு இருந்தது. கல்வெட்டுகளின் பொருள், கொடை, போர் வெற்றி, கோயில் பராமரிப்பு முதலிய உலகியல் சார்ந்தது. இன்றும் அரசு ஆவணங்களின் மொழிக்கும் நவீன இலக்கிய மொழிக்கும் வேறுபாடு உண்டு.

இரண்டாவது காரணம், எழுத்தின் நோக்கம். இலக்கியம், மொழித் திறம் படைத்தவர்கள் படித்து இன்புற எழுதுவது. கல்வெட்டு, குறைந்த படிப்பறிவு உள்ளவர்களும் படித்து விஷயங்களைத் தெரிந்துகொள்வதற்காக எழுதப்பட்டது. இதனால் கல்வெட்டுத் தமிழில் பேச்சுத் தமிழின் கலப்பைப் பார்க்கலாம்.

மூன்றாவது காரணம் புரவலர்களின் மொழிக் கொள்கையும் நாட்டின் மொழி நிலையும். பிராமிக் கல்வெட்டுகளில் சுட்டப்படும் உறவிடங்களைத் தானமாகப் பெற்றவர்கள் பிராகிருதம் பேசிய சமணத் துறவிகள். இந்தக் கல்வெட்டுகள் தமிழும் பிரகிருதமும் கலந்து எழுதப்பட்டிருக்கின்றன. இதே சமணர்கள் தாங்கள் தமிழில் கவிதை எழுதும்போது தமிழ்க் கவிதை சார்ந்த மொழி மரபை – பிற மொழி கலக்காத, கலந்தாலும் தமிழாக்கப்பட்ட மொழியை – பின்பற்றுகிறார்கள். சோழ அரசர்கள் தங்கள் பேரரசுத் தகுதியை நிலைநாட்ட இந்தியாவிற்கு வெளியேயும் அரசவைகளில் கோலோச்சிய சமஸ்கிருதத்தைத் தழுவி அதைக் கல்வெட்டுகளில் தங்கள் பெருமையைப் பறைசாற்றப் பயன்படுத்தினார்கள். இதனால் கல்வெட்டுகளில் அரசனின் வம்சப் பெருமையையும் போர் வெற்றிகளையும் புகழும் மெய்க்கீர்த்தி சமஸ்கிருதத்தில் அல்லது சமஸ்கிருதம் கலந்த தமிழில் இருக்கும். ஆனால் இது போன்ற புகழ்ச்சியுரை இலக்கியத்தில் பாடாண்திணையாக வரும்போது நல்ல தமிழில் இருக்கும். மேலே சொன்ன காரணத்தால் கல்வெட்டுகளில் பிறமொழிச் சொற்கள் அதிகமாக இருக்கும். அரசு நிர்வாகத்தைச் சேர்ந்த பல கலைச் சொற்களும் பிராகிருதத்தில் இருக்கும்.

நான்காவது காரணம், மொழி வெளிப்பாட்டு வடிவம். இலக்கியம், கவிதை வடிவம் கொண்டது. கல்வெட்டு, உரைநடை வடிவம் கொண்டது. உரைநடையில் மொழியைப் பொறுத்தவரை அதிகச் சுதந்திரம் உண்டு. இறையனார் அகப்பொருள் உரை போன்ற இலக்கியம் தொடர்பான உரைநடை இலக்கிய மொழியின் தன்மைகளைக் கொண்டது. உலகியல் தொடர்பான உரைநடை, நாட்டு மொழிப் பயன்பாட்டைப் பிரதிபலிக்கிறது.

=========================
மணிப்பிரவாளம் என்ற உரைநடை வடிவம் எந்தச் சமயத்தினரால், எப்பொழுது தோற்றுவிக்கப்பட்டது?

பேராசிரியர் இ.அண்ணாமலை பதில்:

மணிப்பிரவாளம் என்னும் தொகையில் உள்ள இரு சொற்களைச் சேர்த்துக் காணும் வழக்கை முதலில் அகநானூற்றைத் தொகைப்படுத்திய காலத்தில் பார்க்கிறோம். அகநானூற்றுப் பாடல்களில் ஒரு பகுதிக்கு மணி மிடை பவளம் என்று பெயர் தரப்பட்டிருக்கிறது. இது இருமொழிச் சேர்க்கையைக் குறிக்கவில்லை. ஒரு உரையாசிரியரின் கருத்துப்படி, எளிய சொற்களும் கடினமான சொற்களும் கலந்து வருவதையோ, எளிய சொற்கள் கடினமான பொருளை ஏற்று வருவதையோ குறிக்கிறது.

மணிப்பிரவாளம் என்ற தொகைச்சொல், ஒரு மொழிநடையைக் குறிக்கும் பொருளில் முதலில் சமஸ்கிருத்தில் பதினோராம் நூற்றண்டைச் சேர்ந்த அபிநய குப்தரால் ஒரு தென்னிந்திய மொழி மரபைக் குறித்துப் பயன்படுத்தப்படுகிறது. வீரசோழியத்தின் அலங்காரப் படலத்திலும் இந்தத் தொகைச்சொல் கூறப்படுகிறது. ஆழ்வார் பாசுரங்களுக்கு உரை எழுத அவற்றின் உரையாசிரியர்களால் மணிப்பிரவாள நடை உருவாக்கப்பட்டது. இந்த நடை, பதினோராம் நூற்றாண்டில் துவங்கி இரண்டு நூற்றாண்டுகள் வழக்கில் இருந்தது. இந்தக் கலப்பு உரைநடை, ஏன் இந்தக் காலகட்டத்தில் தோன்றியது, ஏன் வைணவ உரையாசிரியர்களால் கையாளப்பட்டது, ஏன் கைவிடப்பட்டது என்ற கேள்விகள் ஆய்வுக்கு உரியவை.

கடன் சொற்களிலிலிருந்து வேறுபட்ட இருமொழிக் கலப்பைத் தமிழில் சில காலக்கட்டங்களில் சில மொழிப் பயன்பாடுகளில் காணலாம். சங்க காலத்தைச் சேர்ந்த பிராமிக் கல்வெட்டுகளில் தமிழும் பிராகிருதமும் கலந்திருப்பதை ஐராவதம் மகாதேவன் காட்டுகிறார்.

ஒரு காலத்தின் சமூக, கலாச்சாரக் கூறுகளும் தேவைகளும் மொழியின் வடிவத்தை உருப்படுத்துகின்றன. பதினோராம் நூற்றாண்டு சோழப் பேரரசின் ஆதிக்கம் உச்சத்தில் இருந்த காலம். அந்த ஆதிக்கத்தின் அடையாளமாக சமஸ்கிருதத்தைத் தழுவிய காலம். சமஸ்கிருதக் காப்பியங்களையும் பிரபந்தங்களையும் தமிழுக்குக் கொண்டு வருவதில் முனைப்புக் காட்டிய காலம். முக்கியமாக, தமிழை சமஸ்கிருதத்தின் வழி இந்திய நீரோட்டத்தோடு இணைக்க ஈடுபாடு காட்டிய காலம், பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆங்கிலத்தின் வழி தமிழை ஐரோப்பிய நீரோட்டத்தோடு இணைக்க அறிவுலகமும் இலக்கிய உலகமும் முயற்சி எடுத்ததைப் போல.

ஆழ்வார் பாசுரங்களை நிலைக்களனாகக் கொண்டு அவற்றின் உரையாசிரியர்கள் வைணவ இறையியல் கொள்கையையும் (theology) தத்துவத்தையும் (philosophy) தென்னிந்தியாவில் உருவாக்கினார்கள். இந்த உருவாக்கம் தமிழ்ப் பாசுரங்களின் கருத்துகளை உபநிஷத்துகளின் கருத்துகளோடு இணைத்துச் செய்யப்பட்டது. இந்த முயற்சியில் சம்ஸ்கிருதச் சொற்களை அப்படியே தமிழில் கிரந்த எழுத்துகளின் துணைகொண்டு பயன்படுத்தினார்கள். இந்தப் பயன்பாட்டின் அளவும் தன்மையும் இருநூறு ஆண்டுகளில் மாறி வந்திருக்கிறது. ஆனாலும் பயன்பாட்டின் அடிப்படை நோக்கம் சமஸ்கிருதச் சொல்லில் பல நூற்றாண்டுக் காலமாகச் சேர்ந்த அடிப்பொருளையும் குறிப்புப் பொருளையும் வழக்கில் உள்ள தமிழ்ச் சொல்லிலோ, மொழிபெயர்த்து உருவாக்கும் புதிய சொல்லிலோ கொண்டுவர முடியாது என்ற நிலையே. சிரிலதா ராமன் என்ற ஆய்வாளரின் கருத்து இது. இன்று ஆங்கிலத்தில் உள்ள post-structuralism, post-modernism போன்ற சொற்களின் வரலாற்றுச் சுமையைத் தாங்கிய முழுப்பொருளையும் தமிழில் மொழிபெயர்த்த பின் அமைப்பியல் வாதம், பின் நவீனத்துவம் என்ற சொற்களில் உணர்த்த முடியாது என்று எண்ணி ஆங்கிலச் சொற்களையே தமிழ் எழுத்துகளிலோ, ஆங்கில எழுத்துகளிலோ எழுதுவதைப் போன்றது இது.

தமிழின் சமய அறிவுசார் வளர்ச்சியில் மணிப்பிரவாள நடை ஒரு காலகட்டத்தின் கருத்தாக்கத் தேவையை நிறைவுசெய்யத் தோன்றிய ஒரு மொழி நடை.

மணிப்பிரவாள நடை சைவத் திருமுறைகளின் அடிப்படையில் சைவ சித்தாந்தத்தை உருவாக்கிய சமய ஆசிரியர்கள் ஏன் பின்பற்றவில்லை என்ற கேள்விக்குச் சமூகக் காரணங்களில் விடை தேட வேண்டும். இந்த நடை, இருநூறு ஆண்டுகளுக்குப் பின் ஏன் வழக்கிறந்தது என்று அறிய ஆய்வு தேவை.

=========================

மொழியைக் கையாள்வதில் சமயங்களுக்கிடையில் வேறுபாடுகள் உள்ளனவா? உள்ளன என்றால் எத்தகைய வேறுபாடுகள் உள்ளன?

பேராசிரியர் இ.அண்ணாமலை பதில்:

மொழியைக் கையாள்வதில் தனி நபர்களுக்கிடையே உள்ள வேறுபாடு அவர்களின் அறிவுத் திறனையும் அழகியல் உணர்ச்சியையும் (aesthetics) மொழித் தூய்மை போன்ற கருத்தாக்கத்தையும் சார்ந்திருக்கும். சமயங்களுக்கிடையே மொழிப் பயன்பாட்டில் வேறுபாடு இருந்தால் அது மொழி பற்றிய கருத்தாக்கத்தை மட்டுமே பொறுத்திருக்கும்.

தமிழைப் பொறுத்தவரை, சமயங்களிடையே மொழிக் கருத்தாக்கம் பெரிதாக வேறுபட்டிருக்கவில்லை. ஒவ்வொரு சமயத்திற்கும் உரிய கலைச் சொற்களிலும் சமயம் சார்ந்த கலாச்சாரச் சொற்களிலும் வேறுபாடு இருப்பது இயற்கை. இதை மொழிப் பயன்பாட்டின் வேறுபாடு என்று சொல்ல முடியாது.

இலக்கிய மொழி என்று வரும்போது எல்லாச் சமயக் கவிஞர்களும் தமிழ் இலக்கிய மொழி மரபையே பின்பற்றியிருக்கிறார்கள். இலக்கிய மொழி மரபு தமிழில் அவ்வளவு வன்மையாக இருக்கிறது. வேறுபாடு இருந்தால் அதை உரைநடையில்தான் தேட வேண்டும். சமய நூற்களின் உரையாசிரியர்களில் சைவ சமய இறையறிவைக் கட்டமைத்தவர்களுக்கும் வைணவ சமய இறையறிவைக் கட்டமைத்தவர்களுக்கும் சமஸ்கிருதச் சொற்களைக் கையாள்வதில் ஒரு காலக் கட்டத்தில் பெரிய வேறுபாடு இருந்ததை இன்னொரு கேள்விக்கான பதிலில் சுட்டியிருக்கிறேன்.

காலனிய காலத்தில், கிறிஸ்துவ மதத்தில் கத்தோலிக்கப் பிரிவைச் சேர்ந்த மத குருமாருக்கும் புரட்டஸ்டன்ட் பிரிவைச் சேர்ந்த மத குருமாருக்கும் கிறிஸ்துவ மத போதனை நூல்களில் உயர்வகுப்பினர் வழக்கில் உள்ள தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்த வேண்டுமா, பாமர மக்கள் வழக்கில் உள்ள தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்த வேண்டுமா என்பது பற்றி வாதம் நடந்தது. கத்தோலிக்கரின் வாதத்தை முன்நின்று நடத்தியவர் பெஸ்கி. புரட்டஸ்டன்ட் வாதத்தை முன்நின்று நடத்தியவர் ஸீகன்பால்கு. பெஸ்கி, கிறிஸ்துவ நூல்களில் பயன்படுத்தும் தமிழ்ச் செய்யுள் மரபை ஒட்டி இருக்க வேண்டும், உயர்வகுப்பினர் ஒப்புக்கொள்வதாக இருக்க வேண்டும் என்று நினைத்தார். கிறிஸ்துவ மதத்தை உயர்வகுப்பினர் ஏற்றுக்கொண்டால் கீழ்வகுப்பைச் சேர்ந்தவர்கள் ஒப்புக்கொள்ளும் வாய்ப்பு கூடும் என்று அவர் நினைத்தார். ஸீகன்பால்கு கீழ்வகுப்பினரை நேரடியாகக் கவர வேண்டும் என்று நினைத்தார். கடைசியில்  விவிலியத் தமிழ் என்று கூறும் ஒரு தமிழ் நடை பொதுவாக உருவாகியது.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

5. சென்னை, மாநிலக் கல்லூரியின் தமிழ்த் துறை இணைப் பேராசிரியர் இரா. சீனிவாசன் எழுப்பிய கேள்விகள்:

தமிழில் இருப்பது போல் ஒற்று மிகுதல் உலகில் வேறு மொழிகளில் இருக்கிறதா?

பேராசிரியர் இ.அண்ணாமலை பதில்:

வண்ணப் பட்டைகள் ஒன்றை ஒட்டி ஒன்று வரும்போது இரண்டு பட்டைகள் சேருமிடத்தில் வண்ணக் கலவை இருக்கலாம். இதைப் போலவே இரண்டு சொற்களோ, உருபுகளோ, சொல்லும் உருபுமோ சேர்ந்து வரும்போது அடுத்தடுத்து வரும் ஒலியில் மாற்றம் ஏற்படலாம். இந்த மாற்றம் உச்சரிப்பு ஒருமையைக் கூட்டும். மொழியில் ஒலிச் சேர்க்கையின் விளைவு சந்தி எனப்படும்; தமிழ் இலக்கணத்தில் புணர்ச்சி எனப்படும். ஒற்று மிகுதல் மெய்யெழுத்து மிகுந்து வரும் ஒரு விளைவு.

தமிழில் கல் + ஐ = கல்லை என்றும், எழுத்து + கள் = எழுத்துக்கள் என்றும், ஆங்கிலத்தில்  travel + er = traveller என்றும், get + ing = getting என்றும் வருவது மெய்யெழுத்து இரட்டிப்பதற்குச் சில எடுத்துக்காட்டுகள். இவை ஒரு சொல்லுக்குள் நிகழும் மாற்றங்கள். இந்த மாற்றங்கள் தொகைச் சொல்லிலும் நடக்கும். கலை + சொல் = கலைச்சொல்.

ஒரு வாக்கியத்தில் இரண்டு சொற்களிடையே ஒற்று மிகுதல் சில மொழிகளில் நடக்கிறது. இது புறச் சந்தி. இதைப் போன்றதே ஒற்று திரிவதும். வீட்டில் பார் = வீட்டிற் பார். ஒற்று மிகும் சந்தியில், இரண்டு உயிரெழுத்துகள் முன்சொல்லின் இறுதியிலும் பின்சொல்லின் முதலிலும் வரும்போது உடம்படுமெய் மிகுவதைச் சில மொழிகளில் காணலாம். இந்தக் கேள்வியில் குறிக்கப்படும் பின்சொல்லின் முதல் வல்லெழுத்து மிகும் வல்லொற்று மிகுதல் எனக்குத் தெரிந்தவரை தமிழில் மட்டுமே காணப்படுகிறது. அதை பார் = அதைப் பார். ஏனைய திராவிட மொழிகளில் இந்தச் சந்தி இல்லை. தமிழிலிருந்து பிரிந்த மலையாளத்திலும் இல்லை. வல்லெழுத்துகளில் வர்க்க எழுத்துகளைத் தமிழ் தவிர்த்து, ஒற்றை வல்லெழுத்து, இரட்டை வல்லெழுத்து (அகம், அக்கம்) என்று வேறுபடுத்துவதை ஏற்றுக்கொண்டது தமிழின் வல்லொற்று மிகும் சந்திக்குக் காரணமாக இருக்கலாமோ என்று எண்ணத் தோன்றுகிறது.

புறச் சந்தியில் ஒற்று திரிவது இக்காலத் தமிழில் ஏறக்குறைய வழக்கொழிந்துவிட்டது. ஒற்று மிகும் வழக்கு குறைந்து வருகிறது. இந்த வாக்கியத்தில் ‘ஒற்றுத் திரிவது’, ‘வழக்குக் குறைந்து’ என்று ஒற்று சேர்த்து எழுதுவது சிறுபான்மை. ஒரு சொல் எல்லா இடத்திலும் ஒரே வடிவத்துடன் எழுத்துத் திரிபு இன்றி, எழுத்துச் சேர்க்கை இன்றி வருவது இன்று படிப்பு எளிமைக்காகப் போற்றப்படுகிறது.

புறச்சந்தியில் ஒற்று மிகுவதற்கு ஒலிப்பு ஒருமை மட்டுமே காரணமில்லை. இரண்டு சொற்களுக்கிடையே உள்ள இலக்கண உறவும் காரணமாக இருக்கிறது. ‘காலை புலர்ந்தது, காலைப் பிடித்தான்’ என்ற தொடர்களில் காலை என்ற சொல் ஒலிப்பில் ஒன்றாக இருந்தாலும் முதல் சொல் எழுவாய், இரண்டாவது சொல் வேற்றுமை விகுதி ஏற்ற செயப்படுபொருள் என்ற இலக்கண வேறுபாடு சந்தியிலும் வெளிப்படுகிறது. சந்திக்கு இலக்கண அடிப்படை இருப்பது தமிழுக்குரிய ஒன்று.

ஒலிப்பு ஒருமை இயல்பாக வருவது. காண்+த்+ஆன் = கண்டான் என்று புணவர்வதில் யாரும் சந்தி மாற்றம் இல்லாமல், ‘கண்தான்’ என்று சொல்வதில்லை. இலக்கண அடிப்படை, பள்ளியில் கற்பிப்பது. எனவேதான் புறச் சந்தியில் ஒற்று மிகுவது தமிழ்க் கல்வியின் அடையாளமாகக் கணிக்கப்படுகிறது. அது வழக்கில் குறைந்து வருவதற்கு அதன் இலக்கணச் சார்பும் ஒரு காரணம் என்று சொல்லலாம். பணத்தைத் திருடினான், பணத்தை திருடினான் என்று ஒற்று மிகுந்தும் மிகாமலும் இன்று எழுதுகிறார்கள்.

வல்லொற்று மிகுதல் குறைந்து வரும் வழக்கிற்கு மாறாக, இமையம், புகழ் ஆகிய எழுத்தாளர்களின் புனைகதைகளில் ஏழாம் வேற்றுமை, மூன்றாம் வேற்றுமை, பெயரெச்சம் முதலான புதிய இலக்கண வடிவங்களின்பின்னும் ஒற்று மிகுகிறது. இதற்கு ஒலிப்பு காரணமாக இருக்கலாம். பாமரர்களின் பேச்சில் உயிரெழுத்தில் முடிகின்ற சொற்களை அடுத்து வரும் சொற்களின் முதல் வல்லெழுத்து, படித்தவர்களின் பேச்சில் போல் இல்லாமல், வன்மையாக ஒலிப்பதை இரட்டித்த வல்லொற்று காட்டுகிறது என்று சொல்லலாம் என்று தோன்றுகிறது. பலருடைய பேச்சில், ‘வந்த பிறகு’ என்ற சொல் சேர்க்கை ‘வந்தப்பெறகு’ என்றும் ‘வந்துகொண்டு’ என்பது ‘வந்துக்கிட்டு’ என்றும் உச்சரிக்கப்படுவதைப் பார்க்கிறோம்.

=========================

ஐகாரம், ஔகாரம் ஆகிய எழுத்துகள் தேவையா? இல்லையா? என்ற விவாதத்தில் தங்களின் நிலைப்பாடு என்ன?

பேராசிரியர் இ.அண்ணாமலை பதில்:

ஐகார ஔகாரத்தை உயிரெழுத்து, மெய்யெழுத்து சேர்ந்த இரண்டு எழுத்துகளாகப் பல இடங்களில் எழுத முடியும். ஐயரை அய்யர் என்றும், ஔவையை அவ்வை என்றும் எழுதும் வழக்கு உண்டு. பை என்பதைப் பய் என்றும், சௌசௌ என்பதைச் சவ்சவ் என்றும் எழுத முடியும்; தலை என்பதைத் தலய் என்றும், தலைமை என்பதைத் தலய்மை என்றும் எழுத முடியும். எனவே ஐயும் ஔவும் அதிகப்படியான எழுத்துகள் என்பது வாதம்.

ஒரு மொழியின் எழுத்துகளைக் குறைப்பது அதன் முன்னேற்றத்தின் அடையாளம் என்று சொல்ல முடியாது. தனித்து வரும் நெடில் உயிரை இரண்டு குறில் உயிராக எழுத முடியும். ஆம் =அஅம். இந்த எழுதுமுறை ஐந்து உயிர் எழுத்துகளைக் குறைக்கும். ஆனால் இதற்கு மொழியின் அகத் தேவை இல்லை. செய்யுளைத் தவிர அளபெடை இல்லாத தமிழ்ச் சொல்லமைப்புக்கு மாறான அமைப்பைத் தரும். மொழியின் எழுத்துகளைக் கூட்டுவதும் குறைப்பதும் மொழியின் அகத் தேவைகளை வைத்தே செய்யப்பட வேண்டும். முன்னேற்றம், சீர்திருத்தம் போன்ற புறக் காரணங்கள் காலத்துக்குக் காலம் மாறுபவை.

தமிழ் அரிச்சுவடியில் உள்ள எல்லா எழுத்துகளையும் சொற்களில் பயன்படுத்துவதில்லை. ஙகர வரிசையில் ங், ங மட்டுமே சொற்களில் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இந்த வரிசையின் எல்லா எழுத்துகளும் அரிச்சுவடியில் இருக்கின்றன. இதைப் போல, ஐகாரமும் ஔகாரமும், சில இடங்களில் மாற்று எழுத்தால் எழுத முடிந்தாலும், அரிச்சுவடியில் இருக்கலாம். இன்று எழுது திறனைக் கற்பிக்கும்போது சொல்லின் மூலமே கற்பிக்கிறார்கள். அரிச்சுவடியைக் கற்பிப்பதில்லை. அரிச்சுவடியில் உள்ள அதிகப்படி எழுத்துகள், பிற மொழிச் சொற்களும் பெயர்களும் தமிழில் பயிலும்போது எழுதப் பயன்படலாம். கிரந்த எழுத்துகளின் பயன் இத்தகையது தானே. புதிய எழுத்துகளைப் போல இருக்கும் எழுத்துகளையும் புதிய தேவைகளுக்கு வைத்துக்கொள்ளலாம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

4.புதுச்சேரி, பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியின் தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் மு.இளங்கோவன் எழுப்பிய கேள்வி:

தமிழறிஞர்கள், மொழியியல் அறிஞர்களை ஏற்பதில்லை; மொழியியல் அறிஞர்கள், தமிழறிஞர்களை ஏற்பதில்லையே? ஏன்?

பேராசிரியர் இ.அண்ணாமலை பதில்:

தமிழ் இலக்கியம், இலக்கணம், பண்பாடு முதலானவற்றில் ஆய்வு செய்யும் தமிழறிஞர்களுக்கும் மொழியின் இலக்கணம், சமூகப் பயன்பாடு, மொழி மனத்தில் இயங்கும் விதம் முதலானவற்றில் ஆய்வு செய்யும் மொழியிலாளருக்கும் இலக்கணம் பொதுவான ஆய்வுப் பொருள். ஆயினும் இருவரும் மொழியைப் பார்க்கும் பார்வையில் சில அடிப்படை வேறுபாடுகள் இருக்கின்றன. இது ஒருவர் ஆய்வை மற்றவர் ஏற்பதில் பிரச்சனை ஏற்படுத்துகிறது.

மொழியிலாளர்களுக்கு எல்லா மொழிகளும் சமம். ஒரு மொழியின் எல்லா வகைகளும் சமம். எல்லாமே இலக்கணம் சார்ந்தே பயன்படுத்தப்படுகின்றன. இலக்கணம் சிதைந்த மொழியோ, மொழி வகையோ இல்லை. எழுத்துத் தமிழிற்குப் போலவே பேச்சுத் தமிழுக்கும் இலக்கணம் இருக்கிறது. இரண்டின் இலக்கணத்திலும் வேறுபாடு இருக்கிறது. ஆனால் இலக்கண வேறுபாட்டை இலக்கணச் சிதைவு என்று சொல்வது தவறாகும். தமிழ் மொழியிலாளர் பேச்சுத் தமிழுக்கும், தமிழின் கிளை மொழிகளுக்கும் இலக்கணம் எழுதலாம். தமிழறிஞர்களுக்கு இது ஒப்புக்கொள்ள முடியாத செயல். ஏனென்றால் எழுத்துத் தமிழ், படிப்பறிவு உள்ளவர்கள் பயன்படுத்தும் மொழி; அதனால் ஒழுங்குமுறை கொண்டது; உயர்ந்தது. பேச்சுத் தமிழ், பாமரர்கள் பயன்படுத்தும் மொழி; ஒழுங்குமுறை அற்றது; அதனால் இலக்கணம் எழுத அருகதை அற்றது.

இந்த வேறுபாடு இலக்கணம் பற்றிப் புரிதலில் இரு பிரிவினருக்கும் உள்ள வேறுபாட்டிலிருந்தும் பிறக்கிறது. மொழியிலாளர்கள் இலக்கணத்தை ஒரு வரையறுக்கும் வாய்பாடாகப் (formula) பார்க்கிறார்கள், வட்டத்திற்கு ஒரு வாய்பாடு இருப்பதைப் போல. தமிழறிஞர்கள் இலக்கணத்தைச் சரியான – அதாவது சமூகத்தின் மேல்மட்டத்தினர் ஏற்றுக்கொள்ளும் – மொழிப் பயன்பாட்டைச் சொல்லும் – விதியாகப் பார்க்கிறார்கள், உடை அணியப் போடும் விதிகளைப் போல.

இவை இரண்டும் மொழி, இலக்கணம் பற்றிய கொள்கை அடிப்படையில் உள்ள வேறுபாடு. இதைத் தவிர, இரு பிரிவினருக்குமிடையே உள்ள நம்பிக்கையின்மைக்குச் சில சமூகக் காரணங்களும் இருக்கின்றன. தமிழுக்கு நீண்ட இலக்கணப் பாரம்பரியம் உண்டு. அந்த மரபிற்கு ஒரு மாற்றை ஏற்றுக்கொள்ள எதிர்ப்பு இருக்கும். மரபு மாற்றம் ஆய்வில் அதிகார மாற்றத்திற்கு வழிவகுக்கும். தமிழ் மொழியிலாளரின் தமிழ் இலக்கண ஆய்வில் பெரும் பகுதி ஆங்கிலத்தில் நடக்கிறது. தமிழறிஞர் சிலர் தங்களுக்குத் தெரிந்த இலக்கணத்தை ஆங்கிலத்தில் சொல்லுவதே மொழியியல் என்று நினைத்து அதைப் புறக்கணிக்கிறார்கள். மொழியியலுக்குத் தனித் துறைகள் அறுபதுகளில் தோன்றித் தமிழ்த் துறைகளிடையே ஒரு போட்டி உணர்வைத் தோற்றுவித்தன.

மரபு வழித் தமிழ் இலக்கண ஆய்வுக்கும் புதிய மொழியியல் வழியான தமிழ் இலக்கண ஆய்வுக்கும் கொடுக்கல் வாங்கல் பொதுவாக இல்லையென்றாலும் ஒன்றிலிருந்து மற்றொன்று கற்றுக்கொள்வதற்கு விஷயங்கள் இருக்கின்றன. மரபிலக்கணப் பயிற்சி பெற்ற சில மொழியியல் அறிஞர்கள் மொழியியல் கண்ணோட்டத்தில் மரபிலக்கணத்தை மறுபரிசீலனை செய்வது போல, மரபிலக்கண அறிஞர்கள் அதன் கண்ணோட்டத்தில் மொழியியல் முன்வைக்கும் தமிழ் இலக்கணக் கருத்துகளை அறிவுபூர்வமாக விமரிசிக்க வேண்டும். ஒருவரை ஒருவர் ஏற்றுகொள்ளாமல் விலகியிருப்பது தமிழ் இலக்கணத்தின் உண்மைகளைக் கண்டறிவதிலிருந்து நம்மை விலக்கி வைக்கும். மரபுக் கவிதையும் புதுக் கவிதையும் ஒன்றையொன்று புறக்கணிக்காமல் ஊடாடினால் தமிழ் இலக்கியத்திற்குச் செழுமை சேரும். அதே போல, மரபு இலக்கணமும் புத்திலக்கணமும் ஊடாடினால் தமிழ் இலக்கணம் பற்றிய நம் அறிவு நுட்பம் பெறும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

3. ஆவரங்கால் சின்னத்துரை சிறிவாஸ் எழுப்பிய கேள்வி:

தமிழ் எழுத்துக் குறிப்பது பிறப்பிடங்களை மட்டுமே. ஒலிகளை அல்ல. இன்று ஆசிரியர்கள் தமிழ் எழுத்து என்றால் என்ன என்பதைத் தவறாக அறிந்து வைத்துள்ளனர். பிறப்பிடத்தினை அசைத்து இயக்கும் விதத்தில் ஒலியன்கள் பிறக்கின்றன. இது தொடர்பான உங்கள் கருத்து என்ன?

பேராசிரியர் இ.அண்ணாமலை பதில்:

எழுத்து என்ற சொல், தமிழ் இலக்கண நூல்களில் நாவால் ஒலிக்கும் ஒலி, கையால் எழுதும் எழுத்து என்னும் இரண்டு பொருளிலும் வழங்குகிறது. இன்றைய தமிழிலும் அதன் இலக்கண நூல்களிலும் இந்தச் சொல் இரண்டாவது பொருளில் மட்டுமே வழங்குகிறது. தமிழாசிரியர்கள் இந்தப் பொருளிலேயே இந்தச் சொல்லை விளங்கிக்கொள்கிறார்கள். இதில் தவறு எதுவும் இல்லை.

தொல்காப்பியம் தமிழை ஒலிக்கும் முறையையே விளக்குகிறது. மெய்யெழுத்துகளின் மேல் புள்ளி வரும் என்ற ஒரு சிறு குறிப்பைத் தவிர சமகாலத்து பிராமி எழுத்தை எழுதும் முறை பற்றி ஒரு செய்தியும் இல்லை.

ஒரு மொழியின் எந்த ஒலியையும் ஒலி பிறக்கும் இடம், ஒலியைப் பிறப்பிக்கும் முறை என்ற இரண்டு செய்தியையும் வைத்து விளக்கலாம். தொல்காப்பியம் முன்னதை வைத்தே தமிழ் ஒலிகளை விளக்குகிறது. நாவின் எந்தப் பகுதியும் அண்ணத்தின் எந்தப் பகுதியும் சேர்ந்து மெய்யெழுத்துகளை ஒலிக்கச் செய்கின்றன என்று பேசுகிறது. உயிரெழுத்துகளின் ஒலிப்பைப் பேசும்போது இந்த விபரமும் இல்லை. ஒலியைப் பிறப்பிக்கும் முறை, மெய்யெழுத்துகளை வல்லினம், மெல்லினம், இடையினம் என்று பகுப்பதோடு நின்றுவிடுகிறது.

ஒலியைப் பற்றிக் குறைந்த அளவே பேசினாலும், தொல்காப்பியரின் ஒலி பற்றிய அறிவு இன்றைய ஒலியிலாளர்களின் அறிவோடு ஒன்றுபட்டதாகவே உள்ளது.

=======================================

சின்சின்னாட்டி வேந்தன் அரசு எழுப்பிய கேள்வி:

எழுத்துச் சீர்திருத்தம் பற்றிப் பல வாதங்கள் சார்ந்தும் மறுத்தும் எழுந்துகொண்டு உள்ளன. இந்த உகர, ஊகாரக் குறிகள் சீர்திருத்தம், பள்ளிப் பிள்ளைகளின் கற்கும் திறனைக் கூட்டுமா? அது தொடர்பான ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளனவா?

பேராசிரியர் இ.அண்ணாமலை பதில்:

கிரந்த எழுத்துகளின் உகர, ஊகாரக் குறிகளை எல்லா மெய்யெழுத்துகளுக்கும் பயன்படுத்தலாம் என்ற கருத்து, அரசு ஆணையிட்ட எழுத்துச் சீர்திருத்தத்தோடு முன்வைக்கப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்படவில்லை. தமிழ் எழுத்துகளை எழுதுவது – முக்கியமாகக் கருவிகளின் துணைகொண்டு எழுதுவது, கற்பது எளிது என்ற வாதம் முன்வைக்கப்பட்டது. இது கள ஆய்வின் அடிப்படையில் வைக்கும் வாதம் அல்ல. அரிச்சுவட்டில் ஒழுங்குமுறை இருக்க வேண்டும், அதுவே தமிழின் நவீனத்திற்கு அடையாளம் என்னும் கருத்தாக்கத்தின் அடிப்படையில் வைக்கும் வாதம். எழுத்துச் சீர்திருத்தத்தில் கருத்தாக்கம் பற்றி நான் முன்னொரு கேள்விக்கு எழுதிய பதிலைப் பார்க்கவும்.

=====================================

தேவ் எழுப்பிய கேள்வி:

தமிழகத்தின் சமய வரலாறு என்ன? அது ஆசீவகத்திலிருந்து தொடங்குகிறதா?

பேராசிரியர் இ.அண்ணாமலை பதில்:

நான் சமயம் பற்றிய ஆய்வாளன் இல்லை. என்னுடைய ஆய்வு, மொழியைச் சார்ந்தது. தமிழ் அறிஞர்கள், தமிழ் தொடர்பான எந்தத் துறை பற்றியும் அந்தத் துறையின் சிறப்புப் பயிற்சி இல்லாமல் ஆய்வுக் கருத்துகள் கூறுவது ஆழமானதாக இருக்காது என்பது என் நிலைப்பாடு. இலக்கியம் காட்டும் தமிழ்ச் சமூகத்தைப் பற்றி ஆய்வு செய்பவர்கள் சமூகவியலும் படித்திருக்க வேண்டும். தமிழகத்தின் சமய வரலாறு பற்றி என் ஆய்வுக் கருத்துகளைச் சொல்ல எனக்குச் சமயத் துறையில் பயிற்சி இல்லை.

இருப்பினும், தமிழ் மாணவன் என்ற முறையில் நான் புரிந்திருக்கிற கருத்தைச் சொல்கிறேன். பிராமிக் கல்வெட்டுகளுக்கும் சங்க இலக்கியத்திற்கும் முன்னால் இருந்த தமிழர்களின் சமய மரபுகளைப் பற்றிச் சொல்ல நாம் இன்னும் போதுமான அகழாய்வு செய்யவில்லை.

நமக்குக் கிடைத்துள்ள எழுத்துப் பிரதிகளின்படி, நாட்டுச் சமயம், வைதீகச் சமயம், சமண சமயம், புத்த சமயம் எல்லாம் ஒரே காலக்கட்டத்தில் புழக்கத்தில் இருந்திருக்கின்றன. இவற்றில் சமண சமயத்தின் இருப்பு, தூக்கலாகத் தெரிகிறது. கடைசி மூன்று சமயங்களும் தமிழகத்திற்கு வெளியே இருந்து வந்தவை. அவை கிட்டத்தட்ட ஒரே காலக் கட்டத்தில் வந்திருக்கலாம்.

=====================================

சிவஹரி எழுப்பிய கேள்வி:

நாம் தமிழில் எழுதும் போது என் தோழி என்பதை என்றோழி என்று எழுதலாமா? வன்+தொடர் குற்றியலுகரம் = வன்றொடர் குற்றியலுகரம் என்பது போல?

பேராசிரியர் இ.அண்ணாமலை பதில்:

இப்படி எழுதுவது செய்யுள் மரபு. இதற்கு யாப்பிலக்கணம் காரணமாக இருக்கலாம். இது தமிழ் இலக்கண மரபும்கூட. நாவின் அசைவுகளைக் குறைத்து ஒலிகளை ஒரே பிறப்பிடத்திலிருந்து வரும்படி மாற்றி, ஒலிப்பு எளிமையைத் தருவது இந்தச் சந்தியின் பயனாக இருக்கலாம். இன்றும் ஒரு சொல்லுக்குள்ளே வரும் அகச் சந்தியில் இந்தத் திரிபு கட்டாயமாக இருப்பதைக் காணலாம். (எ-டு) தின் + த் + ஆன் > தின்றான்
ஆனால் இரண்டு சொற்களிடையே நடக்கும் புறச் சந்தியில், இந்த மாதிரியான திரிபு படிக்கும் எளிமை கருதி பெரும்பாலும் போய்விட்டது. சில தொகைச் சொற்களில் மட்டும் இத்தகைய திரிபு தொடர்வதைக் காணலாம். (எ-டு) பல் + பொடி > பற்பொடி & பல்பொடி. ஆனால், புல் + தரை > புல்தரை; புற்றரை என்று இன்று எழுதுவது அபூர்வம்.

தற்காலத் தமிழில், சந்தியில் எளிமையாக்கம் பற்றிய என் விரிவான கருத்துகளை க்ரியா வெளியிடவிருக்கும் Social Dimensions of Modern Tamil என்ற நூலில் காணலாம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

 2.தேவ் எழுப்பிய கேள்விகள்

E.Annamalai:

1. தமிழ்ச் சொற்களுக்கான வேர்களின் தொகுப்பு தனியாக இருக்கிறதா?

2. இந்தச் சொல்லுக்கு இதுதான் வேர் என்று கணடறிவது எப்படி?

3. தற்சமம், தற்பவச் சொற்களின் தொகுப்பு தனியாக வெளியிடப்பட்டுள்ளதா?

4. திருவாளர்கள் அருளி, தேவநேயர் போன்றோர் தொகுத்த வேர்ச்சொல் அகராதி இலக்கண முறைப்படி அமைந்ததுதானா?

5. இவர்களுக்குமுன் அறிஞர்கள் இத்தகைய முயற்சியில் ஏன் ஈடுபடவில்லை?

6. தமிழில் பிராகிருதம், பாலி மொழிகளின் பாதிப்பு உண்டா?

பேராசிரியர் இ.அண்ணாமலை பதில்:

தமிழ்ச் சொற்களின் வேர்களின் தொகுப்பு என்று தனியாக ஒரு நூல் என் பார்வைக்கு வரவில்லை. இதைப் போன்றே தற்சம, தற்பவச் சொற்களின் தொகுப்பும். வின்ஸ்லோ தன் தமிழ் – ஆங்கில அகராதியில் சமஸ்கிருதச் சொற்களை உடுக்குறியிட்டுக் காட்டியிருக்கிறார். தூய தமிழில் எழுத விரும்புவோருக்குத் துணையாக, தமிழில் வழக்கில் உள்ள சமஸ்கிருதச் சொற்களுக்குப் பதிலான தமிழ்ச் சொற்களைத் தரும் பட்டியல்களும் உண்டு. தேவநேயப் பாவாணரை ஆசிரியராகக் கொண்டு தொடங்கிய வேர்ச்சொல் அகராதித் தொகுதி, தமிழ்ச் சொற்களுக்கு வேர் கண்டுபிடித்துத் தருகிறது. அகராதியின் எல்லாத் தொகுதிகளும் வெளிவந்த பின் அவற்றில் உள்ள வேர்களைத் தனியாகத் தொகுத்தால் அது ஒரு தமிழ் வேர் அகராதி ஆகும். இன்னொரு ஆசிரியர் காணும் வேர்கள், இதிலிருந்து வேறுபடலாம். ஒரு ஆசிரியர் தமிழ் வேர் என்று இனங்காண்பது மற்றொரு ஆசிரியருக்கு சமஸ்கிருத வேராக இருக்கலாம். ஆய்வாளர்களுக்கிடையே உள்ள வேறுபாடுகள் வேர் காணக் கையாளும் அலசல் முறைகளால் இருக்கலாம்; ஆசிரியர்களின் மொழிக் கொள்கை (language ideology) அடிப்படையில் பிறந்தவையாகவும் இருக்கலாம்.

சமஸ்கிருத வேராக இருந்தாலும், பல சொற்கள் பிராகிருதம், பாலி வழியாகத் தமிழுக்கு வந்தவை. சமஸ்கிருதத்திலிருந்து நேரடியாகச் சொற்கள் தமிழுக்கு வருவதற்கு முன்னரே பிராகிருதம், பாலியின் சொல் வடிவங்கள் சமணம், பௌத்தம் மூலம் தமிழுக்கு வந்தன. தொல்காப்பியர் வடசொல் என்று கூறுவது மேலே உள்ள மூன்று மொழிச் சொற்களையும் குறிக்கும் என்பது என் கருத்து. வேர்ச்சொல் ஆராய்ச்சி ஒரு வேரிலிருந்து உருவாகும் பல சொற்களைப் பற்றிய சொல்லாக்க ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக இருக்கலாம்; ஒரு சொல் இன்னொரு மொழியிலிருந்து வந்த சொல்லா என்ற சொல் வரலாற்று ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக இருக்கலாம்; ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளை ஒப்பிட்டு அவை ஒரு மூல மொழியிலிருந்து பிரிந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவையா என்று அறியும் மொழி ஒப்பீட்டு ஆராய்ச்சியின் ஒரு பகுதியாகவும் இருக்கலாம்.

இவற்றில், தமிழைப் பொறுத்தவரை, இரண்டாவதிலும் மூன்றாவதிலும் ஓரளவு ஆய்வு நடந்திருக்கிறது. இங்கும் வரலாற்றுத் தொடர்புடைய சொற்களை அடையாளம் காணபதில் உள்ள ஆர்வம் அந்தச் சொற்களின் வேர்களைக் காண்பதில் இல்லை. முதலாவதில் ஆய்வு இனி தொடங்க வேண்டும். சொல் பிறப்பில் தமிழறிஞர்களுக்கு உள்ள ஆர்வம் (தொகை நீக்கிய) சொல்லாக்கத்தில் (word formation) இல்லாதது, இந்த நிலைக்குக் காரணமாக இருக்கலாம் (புதிய சொல்லாக்கத்தில் (word creation) இருக்கும் மிகுந்த ஈடுபாடு வேறு). சொல் பிறப்பில் உள்ள ஆர்வம் தமிழில் வழங்கும் ஒரு சொல் பிற மொழியில் பிறந்ததா என்று அறிவதில் இருக்குமளவு ஒரு சொல்லின் மூலமான அதன் வேரை அறிவதில் இல்லை. சொல்லின் வேர் பற்றிய உணர்வு, தொல்காப்பியர் காலத்திலிருந்தே இருக்கிறது. தமிழில் வட சொற்கள் இருந்ததும் அவற்றை வேறுபடுத்திக் காட்ட வேண்டிய தேவையும் இதற்குக் காரணம்.

தமிழ் இலக்கண மரபில் சொல்லமைப்பு விளக்கம், சமஸ்கிருத இலக்கண மரபில் போல, சொல்லின் வேரை அடிப்படையாகக் கொள்ளாதது, வேர்ச்சொல் ஆய்வையோ, வேர்ச்சொல் அகராதியையோ இலக்கணத்தின் ஒரு பகுதியாக அல்லது இலக்கணத்தின் துணைக் கருவியாக எடுப்பதைத் தேவையில்லாததாக ஆக்கிவிட்டது என்று நினைக்கிறேன். காலனிய காலத்தில் முக்கியத்துவம் பெற்ற திராவிட மொழிக் குடும்ப ஆய்வு, வேர்ச்சொல் ஆராய்ச்சியில் ஆர்வத்தை உண்டு பண்ணியது.

வேர்ச்சொல் ஆய்வில் முக்கியமான நெறிமுறையில் கீழ் வருபவை அடங்கும். வேர்ச்சொல்லிருந்து பிறக்கும் சொற்களை – அவை ஒரு மொழிக்குள்ளே இருந்தாலும் சரி, ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளில் இருந்தாலும் சரி – இணைக்கும் விதிகள் பொது விதிகளாக இருக்கும். அதாவது, ஒரு விதி ஒரு சொல்லுக்கு மட்டுமே பொருந்தும் விதியாக இருந்தால் அது சந்தேகப்படக்கூடியதாக இருக்கும். ஒரு வேர்ச்சொல்லிலிருந்து
பிறக்கும் பல சொற்களின் பொருள்கள் தர்க்கரீதியாக நியாயப்படுத்தக் கூடியவையாக இருக்கும். வேர்ச்சொற்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மொழிகளில் ஒன்றாக அல்லது சிறு வேறுபாடு மட்டுமே கொண்டவையாக இருக்கும்.

 

மறவன்புலவு க. சச்சிதானந்தன் கருத்து:

மொழியியல், மொழிசார் ஒலியியல், கணினி மொழியியல், பேச்சு – எழுத்துரை, எழுத்துரை – பேச்சு, எழுத்துப் பெயர்ப்பு, ஒலிபெயர்ப்பு, இவற்றில் தராதரம், இவை தொடர்பான தங்களின் கருத்துகளை அறிய விழைகிறேன்.

பேராசிரியர் இ.அண்ணாமலை பதில்:

இவை எல்லாவற்றையும் பற்றிச் சொல்ல ஒரு பெரிய கட்டுரையே எழுத வேண்டும். இங்கு சுருக்கமாகச் சில கருத்துகளைச் சொல்கிறேன். மொழி கருத்துப் பரிமாற்றத்திற்கு ஒரு கருவி, மொழி மனத்தின் கட்டமைப்பை (cognitive structure) அறிந்துகொள்ள ஒரு கருவி, மொழி சமூகத்தின் கட்டமைப்பைப் புரிந்துகொள்ள ஒரு கருவி என்று பல பரிமாணங்களில் மொழியை ஆய்வு செய்யும் அறிவியல் மொழியியல். முதல் இரண்டு ஆய்விலும் இலக்கணம் முக்கிய இடம் பெறும். இலக்கணம் மொழிசார் ஒலியை உலகுசார் பொருளுடன் இணக்கும், தட்டுகளுடன் கூடிய, ஒரு கட்டமைப்பு.

இலக்கணவியல், தமிழில் இரண்டாயிரம் ஆண்டுப் பழமை உடையது. இந்த மரபு மொழியை இலக்கியத்தின் கருவியாகப் பார்க்கும் ஒன்று. அதாவது, மொழியின் இலக்கணம் செய்யுளின் இலக்கணத்தை அறிந்துகொள்ளத் தேவையான ஒன்று என்ற கருத்தைக் கொண்டது. இக்கால மொழியியல் இதிலிருந்து பரந்துபட்டது. கணினியைக் கருவியாகக் கொண்டு மொழி என்ற கருவியை ஆராய்வதே கணினி மொழியியல். Natural Language Processing ஒரு உதாரணம். மனிதனின் குறுக்கீட்டைக் குறைத்துக் கணினி மூலமே மனிதன் மொழியின் மூலம் செய்யும் வேலைகளைச் செய்வதும்
இதில் அடங்கும். Machine Aided Translation, Synthetic Speech முதலியன இதற்குச் சில உதாரணங்கள். மொழியியலிருந்து தமிழ் ஆய்வாளர்கள் தெரிந்துகொள்ள வேண்டியவற்றில் பின்வருவனவற்றைச் சேர்க்கலாம்.

இலக்கணத்தின் தன்மையைப் பொறுத்தவரை மொழிகளிடையே ஏற்றத் தாழ்வு இல்லை. இது பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் பொருந்தும்; பண்டித மொழிக்கும் பாமரரின் கிளை மொழிக்கும் பொருந்தும். செந்தமிழ் இலக்கணத்தின் வன்மையும் வளமையும் பள்ளி செல்லாதவரின் பேச்சின் இலக்கணத்திலும் உண்டு. மொழிகளுக்கிடையே, ஒரு மொழியின் வகைகளுக்கிடையே உள்ளதாகக் கருதப்ப்டும் ஏற்றத் தாழ்வுகள் அவை
பேசுவோரின் அரசியல் அதிகார ஏற்றத் தாழ்வுகளின் பிரதிபலிப்பு.

மொழியில் உருவாக்கப்பட்டிருக்கும் இலக்கியம், அறிவியல் ஆகியவற்றில் உள்ள ஏற்றத் தாழ்வுகளின் பிரதிபலிப்பு. இதுவே மொழி ஆய்வில் மொழியியலின் அடிப்படை அணுகுமுறை. மொழியில் – மொழியின் இலக்கணத்தில் – மாற்றங்கள் நிகழ்வது இயல்பாக நடக்கும் ஒன்று; மக்களுடைய மொழிப் பயன்பாட்டினால் நிகழும் ஒன்று. இதைத் தடுக்கும் அரசியல் சார்ந்த முயற்சிகள் பெரும்பாலும் வெற்றி பெறுவதில்லை. இது மொழியியல் கண்ட ஒரு அடிப்படை உண்மை. மொழி பற்றிய இந்தப் புரிதல், தமிழ் (அல்லது ஆங்கில) மொழி மற்ற மொழிகளைவிட உயர்ந்தது; தமிழ் மொழி என்றும் மாறாதது என்ற நம்பிக்கைகளுக்கு மாறுபட்டது.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

1.தமிழின் உண்மையான வயது என்ன?

 

ஒரு இலக்கியத்தின் வயதைக் கணிப்பதை விட ஒரு மொழியின் வயதைக் கணிப்பது கடினமானது. பிற மொழியினர் எழுதிய வரலாற்று ஆவணங்கள், பிற மொழியில் உள்ள கடன் சொற்கள் போன்ற புறச்சான்றுகள் ஒரு கால எல்லைக்குப் பின்னால் போவதில்லை. ஏனென்றால், மொழி பேசப்படும் ஒன்று. பேச்சுக்கு எச்சம் இருப்பதில்லை. அதனால், தொல்லியல் எந்த ஆதாரத்தையும் தரமுடியாது. இது தமிழுக்கும் பொருந்தும்.

பிறப்பால் தொடர்புடைய  மொழிகளை ஒப்பிட்டு மூலமொழியை இனம்காண மொழியியல்  சில வழிமுறைகளைப் பின்பற்றுகிறது. மூலமொழியிலிருந்து மொழிகள் பிரிந்து தனி மொழிகளாகும் காலத்தையும் தோராயமாகக் கண்டறியலாம். இந்த வழிமுறையில்  ஊகங்கள் அதிகமாக இருப்பதால் இதன் முடிவு முழுவதும் நம்பக்கூடியது அல்ல. மேலும், இந்த முறை சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னால் போகப் பயன்படுவதில்லை.

எழுபதாயிரம் ஆண்டுகளுக்கு  முன்னால் மூலமனித இனம் ஆப்பிரிக்கக் கண்டத்திலிருந்து  வெளியேறி மெதுவாக உலகில் பரவ ஆரம்பித்துப் பல்லாயிர ஆண்டுகளுக்குக்குப் பின்தான் மனித மொழிகள்  தோன்றின. அவை இன்றுள்ள மொழிகள் போல இலக்கண முதிர்ச்சி அடைய இன்னும் சில ஆயிரம் ஆண்டுகள் ஆகியிருக்கும். தமிழ் உட்பட உலக மொழிகளின் வயதை இந்தக் காலத்திற்குப்பின்தான் கணக்கிட வேண்டும்.

தமிழின் வயதைப்  பற்றிப் பேசுவதைவிட அதன் இன்றைய  வீரியத்தைப் பற்றிப் பேசுவது தமிழுக்கும்  நல்லது, தமிழருக்கும் நல்லது.

* உலகின்  முதல் மொழி தமிழ் என்பதில் உங்களுக்கு உடன்பாடு உண்டா?

இல்லை. முதல் மொழி என்பதற்கு உலகில் முதலில் தோன்றிய மொழி, உலக மொழிகளின் மூலமொழி என்ற இரண்டு பொருள் உண்டு. உலக மொழிகள் யாவும் ஒரு மொழியிலிருந்து பிறந்தன என்ற கொள்கையை ஒப்புக்கொண்டால்தான் இரண்டு பொருளுக்கும் வேறுபாடு இருக்காது. இந்தக் கொள்கையை எல்லா மொழியியலாளர்களும் ஏற்றுக்கொள்வதில்லை. இரண்டு பொருளிலும் தமிழ் உலகின் முதல் மொழி என்று சொல்ல முடியாது.

மனித மொழி  முதன்முதலாக எப்போது தோன்றியது என்பதில் மொழியியலில்  முடிந்த முடிபு இல்லை. முதல் மொழி பற்றிய  ஆய்வுகளில் ஊகங்களே நிறைந்திருப்பதால் இது பற்றிய ஆராய்ச்சி எதையும் வெளியிடுவதில்லை  என்பது அமெரிக்க மொழியியல் கழகத்தின்  முடிவு. இந்த நிலையில் அந்த முதல் மொழி தமிழ்தான் என்று சொல்வது ஆசையின் வெளிப்பாடே. ஆய்வின் முடிவு அல்ல.

இன்று உலகிலுள்ள  ஆறாயிரத்திற்குச் சற்று அதிகமான மொழிகள்  ஒரிடத்தில், ஒரு இனத்திடம் பிறக்கவில்லை என்ற  பெரும்பான்மைக் கருத்தை ஏற்றுக்கொண்டால், மூலத்  தாய்மொழி தமிழா என்ற கேள்விக்கு இடம்  இல்லை.

தமிழ் உலகத்தின்  முதல் மொழியா என்னும் விவாதத்தைவிட, அது தமிழ்நாட்டிலேனும் முதன்மை மொழியாவதற்குத் தமிழர்கள் கல்வித்துறை துவங்கித் தங்கள் பிள்ளைகளுக்கு என்ன செய்ய வேண்டும் என்று பேசுவதே இன்றைய தேவை.

* தங்கள் மொழிகள் தமிழிலிருந்து வந்தவை அல்ல என இதர திராவிட மொழிகள் சில சொல்லி வருகின்றனவே?

இது சரிதான். இதர  திராவிட மொழிகள் தமிழின் சகோதர மொழிகள். சில நெருங்கிய கால இடைவெளி உள்ளவை; சில தலைமுறைகள் தள்ளியவை. ஒரு மொழிக் கூட்டத்தின் பிறப்பு மூலத்தை மொழிகளின் பொதுக் கூறுகளையும் புதிதாக விளைந்த கூறுகளையும் வைத்துக் கண்டறியச் சில வழிமுறைகள் இருக்கின்றன. அதன் மூலம் கட்டமைக்கப்படும் மொழிநிலை ஒரு கட்டுமானமே. மூலத் திராவிடம் என்பது இப்படியொரு கட்டுமானம். இதிலிருந்து மாற்றங்களால் வேறுபட்டு வேறுபட்டு மொழிகள் தனித்துவம் பெறுகின்றன. இப்படித் தனித்துவம் பெற்ற பல மொழிகளில் ஒன்று தமிழ். தமிழ் தோன்றியபின், அதிலிருந்து மாற்றம்பெற்று இருளம், மலையாளம் தனி மொழிகளாயின.

சகோதர உறவும் குடும்ப உறவுதானே?

* ‘தமிழின் எழுத்துகளைக் குறைத்து விடலாம்; குறைவான எழுத்துகளுடன் இருந்தால், மொழியை வேகமாகக் கற்கலாம்; மொழியும் வேகமாக வளரும்’ என்ற கருத்துகளைச் சிலர் முன் வைக்கிறார்கள். இது குறித்து உங்கள் கருத்து என்ன?

ஒரு மொழியின் எழுத்துக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் அந்த மொழியை எளிதாகக் கற்கலாம் என்று சொல்வதற்குக் கொள்கை அடிப்படையிலோ வரலாற்று அடிப்படையிலோ எந்தச் சான்றும் இல்லை.

அதே போல, உயிர்மெய்யெழுத்துக்கள் இல்லாமல், ஆங்கிலத்தில் போல், உயிருக்கும் மெய்க்கும் மட்டும் எழுத்துக்கள் இருந்தால் அது கற்பதற்கு எளிய மொழி என்றும் சொல்ல முடியாது. தாய்மொழியைக் கற்பதில் எத்தகைய மொழியையும் பேசக் கற்பதில் எந்தக் குழந்தையும் சிரமப்படுவதில்லை. எழுதக் கற்பதில் சொற்களைக் கற்பதுதான் முக்கியமானது. சொற்களைக் கற்றால் அதில் உள்ள எழுத்துக்களைக் கற்பது தனியாகச் சிரமம் தரக்கூடிய ஒன்று அல்ல. ஒரு மொழியை இரண்டாம் மொழியாகப் பள்ளியில் பயில்வதற்கும் இது பொருந்தும்.

சொற்களின் எழுத்தமைப்பை(spelling)க் கற்பதில் சிறிய அரிச்சுவடி உதவும் என்று சொல்ல முடியாது. ஆங்கிலச் சொற்களின் எழுத்தமைப்பைக் கற்பதில் உள்ள இடர்ப்பாடுகள் இதற்குச் சான்று. குறைந்த எழுத்துகள் இருக்கும்போது ஒவ்வொரு எழுத்தும் பல உச்சரிப்புகளை ஏற்கிறது. எழுத்தை அது வரும் இடத்திற்குத் தகுந்த அதன் உச்சரிப்போடு படிக்கத் தனி முயற்சி தேவை.

தமிழில் அடிப்படை எழுத்துகள் முப்பதே. உயிர்மெய்யெழுத்துகளைக்  கற்பது மெய்யையும் உயிரையும் சேர்க்கும் விதிமுறைகளைக் கற்பதேயென்றி எழுத்தெழுத்தாகக் கற்பது இல்லை.

* தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் என்ற பெயரில் வா.செ.குழந்தைசாமி  உள்பட பலரும் பலவித மாற்று வடிவங்களை வலியுறுத்தி வருகிறார்கள். இது தேவையா? ஆமெனில் எந்த மாற்று வடிவங்களை நீங்கள் பரிந்துரைப்பீர்கள்?

தமிழ் எழுத்துச்  சீர்திருத்தம் எழுத்துகளின் வடிவத்தைப்  பற்றியும் எழுத்துகளின் எண்ணிக்கையைக் குறைப்பது பற்றியும் மட்டுமே பேசுகிறது. இதைப் பற்றிய யோசனைகள் எழுது கருவிகளுக்கு ஏற்புடையதாகத் தமிழ் எழுத்துகளைத் திருத்த வேண்டும் என்ற கொள்கை அடிப்படையிலும், விதிவிலக்குகளைக் குறைப்பது பகுத்தறிவுக்கு உகந்தது என்ற கொள்கை அடிப்படையிலும் முன்வைக்கப்படுகின்றன. இதனாலேயே மாற்றம், சீர்திருத்தம் எனப்படுகிறது.

மொழியின் கூறுகள் அறிவுசார்ந்து மட்டுமல்லாமல், கலாச்சார உணர்வின் அடிப்படையிலும் காக்கப்படுகின்றன. கருவிகள் மாறிக்கொண்டே இருக்கும். தட்டச்சுக் கருவியில் இருந்த இடநெருக்கடி கணினியில் இல்லை. இத்தகைய புறக் காரணங்கள் மொழிபற்றிய சித்தாந்தங்களிலிருந்து பிறப்பவை. மொழியிலிருந்து பிறப்பவை அல்ல.

மொழியின் அகக் காரணங்களால் ஏற்படும் எழுத்து மாற்றங்களே மொழியின் அடிப்படைத் தேவையான கருத்துப் பரிமாற்றத்திற்குத் துணையாக வருகின்றன. தமிழுக்குப் புதிய சொற்கள் வந்து சேர்ந்தபோது கிரந்த எழுத்துகள் சேர்க்கப்பட்டன பகரத்தின் உரொசொலியைக் கொண்ட சொற்களை எழுத ஆய்த எழுத்து பயன்படுத்தப்படுகிறது.

இன்று பேச்சுத்  தமிழைத் தமிழ் எழுத்தில் எழுதும் தேவை ஏற்றுக்கொண்ட ஒன்றாகிவிட்டது. இதுவும் ஒரு அகக் காரணம். இந்தத் தேவையை நிறைவேற்ற, சில புதிய எழுத்துகள் – முக்கியமாக உயிரெழுத்துகள்- தமிழுக்குத் தேவைப்படலாம்.

எழுத்தைச் சீர்திருத்த வேண்டும் என்ற எண்ணத்தைவிட எழுத்தை  மொழியின் வளர்ச்சிக்குத் தகுந்தபடி மாற்ற வேண்டும் என்ற எண்ணமே அவசியமான ஒன்று.

* இக்காலச் சூழலுக்கு ஏற்ப, தமிழுக்குப் புதிய இலக்கண நூல் தேவையா?

இக்காலத்தில் மாறியுள்ள  தமிழுக்கு ஏற்ப புதிய இலக்கணம் எழுத வேண்டும். தமிழின் இலக்கணம் மாறிவிட்டது. மாறிய இலக்கணத்தை வரையறைப்படுத்தும் இலக்கண நூல்தான் இல்லை. இந்தத் தேவை நிறைவு செய்யப்பட வேண்டும். அது மாணவர்களுக்கும் பத்திரிக்கை ஆசிரியர்களுக்கும் முக்கியமாகத் தேவை.

தமிழுக்கு ஒரு இலக்கண மரபு உண்டு. இந்த மரபில் சில இன்றைய தமிழின் இலக்கணத்தை விவரிக்கப் போதுமானவையாக, பொருந்துவனவாக இல்லை. மொழியின் இலக்கணத்தைப் பற்றி இன்றைய மொழியிலாளர்கள் புதிய கருத்துகளைக் கூறுகிறார்கள். இரண்டையும் உள்வாங்கிப் புதிய இலக்கண நூல் எழுதப்பட வேண்டும்.

* செம்மொழி  அறிவிப்பின் மூலம் தமிழ்  பெற்ற பயன்கள் எவை எவை?

செம்மொழி அறிவிப்பின்  மூலம் தமிழுக்குத் செம்மொழித் தகுதி வரவில்லை. அந்தத் தகுதி அதற்கு ஏற்கனவே இருந்தது. கல்வியாளர்கள் இந்தத் தகுதியை ஏற்றுக்கொண்டிருந்தார்கள். இந்தத் தகுதியை அரசு தர வேண்டும் என்று கோரியது அரசு  முத்திரைக்குத் தமிழர்கள் தரும் மதிப்பால்தான். இந்தக் கோரிக்கையின் ஒரு நோக்கம் சமஸ்கிருதத்திற்குச்  சமமான தகுதியை இந்திய அரசு தமிழுக்குத் தர  வேண்டும் என்பது.

இதனால் வரும் பெருமையும் பணமும் தமிழுக்கும் கிடைக்க வேண்டும் என்பது. இந்திய அரசோ செம்மொழிப் பட்டியல் என்ற ஒன்றைப் புதிதாக உருவாக்கித் தமிழை அதில் சேர்த்தது. சமஸ்கிருதம், பிராகிருதம், பாலி, அரேபியம் முதலான மொழிகள் இந்தப் பட்டியலில் சேரவில்லை.

இந்திய அரசு  செம்மொழித் தமிழ் ஆய்வுக்காக ஒரு நிறுவனத்தைச் சென்னையில் நிறுவியிருக்கிறது. இந்த நிறுவனத்தின் ஆய்வுத் திட்டங்களால் தமிழுக்கு என்ன பயன் கிடைக்கப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

செம்மொழி என்ற  அரசுத் தகுதியால் தமிழுக்குப் பயன் என்று  சொல்ல வேண்டுமானால் பின்வரும் நிகழ்வுகள்  ஏற்பட வேண்டும். பல்கலைக்கழகங்களில் செம்மொழி இலக்கியத்தைச் சிறப்புப் பாடமாக எடுத்துப் படித்து ஆய்வு செய்யும் மாணவர்களின் எண்ணிக்கை பெருக வேண்டும். தற்கால இலக்கியப் படைப்பாளிகளிடம் செவ்விலக்கியத்தின் பாதிப்பு ஏற்பட வேண்டும். தங்கள் மொழி செம்மொழி என்று பெருமைப்படும் தமிழர்கள் தங்கள் சொந்த வாழ்க்கையில் தமிழ்வழிக் கல்விக்கு ஆதரவு தர வேண்டும். இவையெல்லாம் நடந்தால் செம்மொழி அறிவிப்பின்மூலம் தமிழ் பயன் அடைந்தது என்று சொல்லலாம்.

* தமிழுக்குச் சரியான முறையில் செம்மொழித் தகுதி வழங்கப்பட்டுள்ளதா? 1500 ஆண்டுகளாக வாழும் மொழி என்ற அடிப்படையில் இது வழங்கப்பட்டுள்ளதாகவும் இதனை 2000 என மாற்ற வேண்டும் எனவும் கூறப்படுகிறதே?

எந்த  மொழிக்கும் செம்மொழித் தகுதி அரசு தருவதே சரியான முறை இல்லை. அரசின் முடிவுகளில் அரசியல் கணக்கு இருக்கும். அரசு போட்ட கணக்கு பலித்தால் அரசைப் பொறுத்தவரை சரியான முடிவுதான்.

காலப் பழமை மட்டுமே செம்மொழித் தகுதியை நிர்ணயிப்பதில்லை. ஆயிரம் ஆண்டு என்றோ இரண்டாயிரம் ஆண்டு என்றோ வரையறுப்பது தன்னிச்சையான ஒன்று. காலம் மொழி வாழும் காலம் அல்ல; மொழியில் எழுத்திலக்கியம் தோன்றிய காலம். அந்த இலக்கியம் உன்னதமானதாக, தனித்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். இந்த இலக்கியத்தில் அறிவிலக்கியமும் சேரும். செவ்விலக்கியம் இல்லாத செம்மொழி இல்லை.

* தமிழைப் போலவே தங்களுக்கும் செம்மொழி அந்தஸ்தினை அளிக்க வேண்டும் என தெலுங்கு, கன்னட மொழியாளர் கோரிப் பெற்றதில் நியாயம் உண்டா?

செம்மொழித் தகுதியை அரசியல் கணக்குப் போட்டுக் கேட்கும்போது, தரும்போது யாரும் அரசியல் ஆதாயம் தேடுவதை எப்படி நியாயம் இல்லை என்று சொல்ல முடியும்? அரசியல் காரணத்துக்காக இந்திய அரசு எத்தனையோ மொழிகளுக்குச் செம்மொழித் தகுதி வழங்கலாம். எட்டாவது அட்டவணையில் புதிதாக மொழிகளைச் சேர்ப்பது போல செம்மொழிப் பட்டியலில் புதிய மொழிகளை அரசு சேர்ப்பதை நாம் எதிர்பார்க்கலாம்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard