New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தோலை வாயினால் கவ்வித் தின்னும் நாயானது


Guru

Status: Offline
Posts: 24601
Date:
தோலை வாயினால் கவ்வித் தின்னும் நாயானது
Permalink  
 


 ஔவியம் பேசேல்

ஈராண்டு முன்பு நவிமும்பை – பனுவேல் தமிழ்ச்சங்க ஆண்டு விழாவுக்கு சிறப்பு விருந்தினராகப் போயிருந்தேன். பத்து முந்நூறு தமிழ்க் குடும்பங்கள். என் தம்பி G.ரவி பிள்ளை தலைவராக இருந்தான். ஆண்டு விழாவில் சிறுவர் சிறுமியர் திருக்குறள், ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன் சொன்னார்கள். பாரதியார் பாடினார்கள். சேவை மனப்போக்குடன், ஞாயிறு தோறும் ஒருவர் குழந்தைகளுக்கு, எந்த எதிர்பார்ப்பும் இன்றி தமிழ் பயிற்றுவித்தார். உறுப்பினர்களில் ஒருவர் மாற்றி ஒருவராக , சிறுவருக்கு சமோசா, வடாபாவ், வடை வாங்கிக் கொடுத்தார்.

avvaiyarநான் மேடையில் இருந்தபோது, தமிழ்ப் பாட்டுகள் சொன்ன பல சிறுவரில் என் தம்பி மகன் சபரீஷ் பிள்ளையும் ஒருவன். ஆத்திச் சூடி சொன்னான். அகரம் முதல் ஒளகாரம் ஈறாகப் பன்னிரண்டு. பன்னிரெண்டாவது எழுத்துக்கான ஒளவையாரின் ஆத்திச்சூடி, `ஒளவியம் பேசேல்`. இதை வாசிக்கும் நீங்கள், இந்த இடத்தில் நின்று, ஒளவியம் பேசேல் எனும் தொடருக்குப் பொருள் யோசித்துப் பாருங்கள். உண்மையில், நம்மில் பலரைப்போல, எனக்கும் பொருள் தெரிந்திருக்கவில்லை.

வீட்டுக்கு வந்த பிறகு, சபரீஷிடம் மராத்தியில் கேட்டேன்.

`ஒளவியம் பேசேல் என்றால் என்னடா சப்பு?`

`Don’t talk bad words about others`, என்றான்.

பள்ளியில் அவன் தமிழ் மாணவன் அல்ல. மராத்தி, இந்தி, ஆங்கிலம் அவனது மொழிகள்.

கோவை திரும்பிய பின், ஆத்திச்சூடிக்கு, நாவலர் மு.வேங்கடசாமி நாட்டார் உரை விளக்கம் எடுத்துப் பார்த்தேன். ஒளவியம் – பொறாமை வார்த்தைகள் என எழுதப்பெற்றிருந்தது. இந்த ஒளவியம் எனும் சொலில் சில நாட்கள் மனம் சிக்கிக்கொண்டு கிடந்ததால் இந்தக் கட்டுரை.

`எழுத்து எனப் படுவ
அகரம் முதல் னகரம் இறுவாய்
முப்பஃது என்ப`

என்பது தொல்காப்பிய நூற்பா. அதாவது எழுத்து எனப்படுவன, அகரம் தொடங்கி னகரம் ஈறாக முப்பது என்ப. தமிழில் உயிர் எழுத்துக்கள் 12, மெய் எழுத்துக்கள் 18, ஆக முப்பது. உயிரும் மெய்யும் புணர்ந்து, உயிர்மெய் 216 எழுத்துக்கள். ஆய்த எழுத்து எனப்படும் ஃ ஒன்று. எனவே, ஆக மொத்தம், தமிழ் எழுத்துகள் 247. இது பாலபாடம்.

மேலும், சில உச்சரிப்புகளைத் தமிழில் கொண்டுவருவதற்காக, ஏற்படுத்தப்பட்ட கிரந்த எழுத்துகள் க்,ஷ்,வ்,ஷ்,ஹ் எனும் ஐந்தும் பன்னிரு தமிழ் உயிருடன் புணர்ந்து, மொத்த கிரந்த எழுத்துகள் 65, அவற்றுடன் சிறப்பெழுத்து ஸ்ரீ சேர்ந்து ஆக 66. அரசியல் காரணங்களுக்காகவும் தூய தமிழ்க் காரணங்களுக்காகவும் இந்த எழுத்துகள் பாடத்திட்டத்தில் இருந்து இன்று நீக்கப்பட்டுவிட்டன. என் போன்ற மூத்த எழுத்தாளர்கள் மட்டுமே நஷ்டம், ஆஹா, ஜாங்கிரி, எஸ்ரா பவுண்ட், சுபஸ்ரீ, பஷி போன்ற சொற்களை அறிந்து வைத்திருக்கிறோம். இந்த கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்துவதா வேண்டாமா என்பது மொழி அரசியல். இராஜாஜி எனில் நமக்குக் கடுப்பு, இராசாசி என்றே அரசு ஆவணங்கள் சொல்லும். ஆனால் ஸ்டாலின் என்றால் உவப்பு, அது இசுடாலின் ஆகாது. இது நம் மொழி நேர்மை. ஆனால் கம்பன் தனது 10,368 பாடல்களில் எங்குமே இந்த எழுத்துகளைப் பயன்படுத்தவில்லை என்ற உண்மையை ஈண்டு குறித்துச் சொல்கிறேன்.

அது கிடக்கட்டும். கிரந்த எழுத்துகளின் பயன்பாட்டைப் பற்றி நாம் பேசும்போது, ஃ எனும் பாவப்பட்ட ஆய்த எழுத்தையும், ஒள எனும் இன்னொரு புறக்கணிக்கப்பட்ட எழுத்தையும் பற்றிப் பேச வேண்டும். எனது முந்திய கட்டுரையான, `அஃகம் சுருக்கேல்`, ‘ஃ’ பற்றி விரிவாகப் பேசியது. இப்போது ‘ஒள‘ வில் இருக்கிறோம்.

`ஒளகார இறுவாய்ப்
பன்னீர் எழுத்தும் உயிர் என மொழிப`

என்கிறது, தொல்காப்பிய எழுத்ததிகார நூற்பா. அஃதாவது அ முதல் ஒள வரை பன்னிரண்டு எழுத்தும் உயிர் எழுத்துக்கள் என்பதாம்.

`ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்னும்
அப்பால் ஏழும்
ஈர் அளபு இசைக்கும் நெட்டெழுத்து என்ப`

என்பதும் தொல்காப்பியம் தான். அதாவது குறில் எழுத்துக்கள் ஒலிக்கும் காலம் ஒரு மாத்திரைக்காலம் எனில், நெட்டெழுத்துக்கள் இசைக்கும் காலம் இரண்டு மாத்திரைக் காலம் ஆகும். எனிமும் ஐ எனும் நெட்டெழுத்துப் போல, ஒள எனும் நெடிலும் இரண்டு மாத்திரை கால அளவில் ஒலிப்பதாயினும், சில சந்தர்ப்பங்களில் மட்டும் ஒலியளவில் குறுகி ஒரு மாத்திரை கால அளவிலும் ஒலிக்கலாம். அதாவது இந்த இரு நெடில்களும் குறில்களாகவும் பயன்படும். இதனை இலக்கணம் ஐ காரக் குறுக்கம், ஒளகாரக் குறுக்கம் என்கிறது. மேலும் ஐ எனும் எழுத்தும் ஒள எனும் எழுத்தும் செய்யுளின் இலக்கண அமைதிக்காகவும் இசை அமைதிக்காகவும் அளபெடுத்து வரும் போது இ மற்றும் உ எனும் குறில்கள் முறையே இசை நிறைக்கும். அளபெடை என்றால் தெரியும் தானே! செய்யுளில் ஒரு எழுத்து, இலக்கணத்தை நிறைவு செய்ய, இசையை நிறைவு செய்ய, அளபெடுத்து வருவது அளபெடை.

உறா அர்க் குறுநோ யுரைப்பாய் கடலைச்
செறா அம் வாழிய நெஞ்சே

எனும் 1200 குறளில் உறார் எனும் சொல்லும் செறார் எனும் சொல்லும் உறா அர், செறா அர் என்று அளபெடுக்கின்றன.

பாடலின் பொருள் – மனமே! நின்னொடு பொருந்தார்க்குத் தூது விட்டு, உற்ற நோயைச் சொல்ல நினைக்கின்றாய்; அதனினும் நன்று நம்மை உறங்காமல் வருத்துகின்ற கடலைத் தூர்ப்பாய் ஆயின். [வ.உ.சி.]

மேலும் நெட்டெழுத்துக்களான ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ எனும் ஏழும், சொற்களாகவும் நின்று பொருள் தருவன. எடுத்துக்காட்டு, ஆ – பசு, ஈ – கொடு, ஊ – ஊன், ஏ – அம்பு, ஐ – தலைவன், ஓ – சென்று தங்குதல், மதகு தாங்கும் பலகை ஔ – உலகம், ஆனந்தம் என்மனார் புலவ.

இங்ஙனம் உயிர் எழுத்துக்களிலும், உயிர்மெய் எழுத்துக்களிலும் ஓர் எழுத்து ஒரு மொழியாகத் தமிழில் 42 உண்டு என்றும், 66 உண்டு என்றும் அறிஞர்கள் கருதுகின்றனர். எடுத்துக்காட்டு – கை, பை, மை, கா, தீ, பீ, சே எனப்பற்பல.

எழுத்துப் போலிகள் என இலக்கணத்தில் ஓர் இனம் உண்டு. இவற்றிற்கும் இலக்கியப் போலிகளுகளுக்கும் தொடர்பு இல்லை. எழுத்துப் போலிகளுக்கு எடுத்துக்காட்டாக, ‘அகர இகரம் ஐகாரம் ஆகும்’ என்றும் ‘அகர உகரம் ஔகாரம் ஆகும்’ என்றும் தொல்காப்பியம் கூறும். அஃதாவது வைரம் எனும் சொல்லை வயிரம் என்று கௌந்தியடிகள் எனும் சொல்லை கவுந்தியடிகள் என்றும் எழுதலாம். அது போன்றே,

‘அகரத்து இம்பர் யகரப் புள்ளியும் ஐ என் நெடுஞ்சினை மெய் பெறத் தோன்றும்’ என்கிறது தொல்காப்பியம். அதாவது ஐ எனும் எழுத்துக்கு மாற்றாக அய் என்று எழுதலாம். அவ்விதம் ஐயர் என்பது அய்யர் ஆகும். இதைத் தொல்காப்பியமே அனுமதிக்கிறது. ஆதலால் இவை ஈ.வே.ரா.வின் கண்டுபிடிப்புகள் அல்ல.

என்றாலும் இவை யாவுமே எழுத்துப் போலிகள் என்பதை மறந்துவிடலாகாது. மெய்யில் புழங்குவதா, அன்றிப் போலிகளில் புழங்குவதா என்பது அவரவர் தேர்வு.

செய்யுள் இயற்றும் போது, யாப்புக்கான வசதி குறித்தும், ஓசை கருதியும் குறுக்கங்களையும் போலிகளையும் பயன்படுத்தினார்கள். தமிழ் இலக்கியப் பரப்பில் இவற்றுக்கான எடுத்துக் காட்டுகள் ஏராளம் உண்டு. எனினும் நாமே ஒலித்துப் பார்த்தால் ஐ என்பதும் அய் என்பதும் ஒன்றல்ல என்பதும் ஔ என்பதும் அவ் என்பதும் ஒன்றல்ல என்பதும் அர்த்தமாகும். எனவே தான் எழுத்துப் போலி என்றனர் போலும்.

எடுத்துக்காட்டுக்கு ஒரு திருக்குறள் பார்ப்போம்.

‘அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்’

அழுக்காறு உடையானை, செய்யவள் அவ்வித்துத் தவ்வையைக் காட்டிவிடும் என்று கொண்டு கூட்டுகிறார் பரிமேலழகர். பிறர் ஆக்கம் கண்டு பொறாமை உடையவளை, திருமகள் தானும் பொறாது, தன் மூத்தவளான மூதேவியைக் காட்டி விடுவாள் என்பது பொருள். இங்கு அவ்வித்து என்றால், தானும் அழுக்காறு செய்து என்றே மணக்குடவரும் பொருள் கொள்கிறார்.

இந்தப் பாடலில் ‘அவ்வித்து’ எனும் சொல்லுக்கு அடுத்த அடியில் ‘தவ்வை’ எதுகை ஈண்டு ‘ஔவித்து’ எதுகை போட்டு செய்யுளைத் தொடங்கி, அடுத்த அடிக்கு ‘தௌவை’ என்று எதுகை போட்டாலும், தௌவை எனும் சொல்லுக்கு தமக்கை, மூதேவி என்ற பொருள் இருக்கிறது. ஒரு வேளை திருவள்ளுவர் ஓசை கருதினார் போலும்!

கம்ப ராமாயணத்தில், பால காண்டத்தில் திரு அவதாரப் படலத்தில், ‘அவ்வியம் நீத்து உயர்ந்த மனத்து அருந்தவனைக் கொணர்ந்து ஆங்கண் விடுப்பென்’ என்றும், அகலிகைப் படலத்தில், ‘அவ்வியம் அவித்த சிந்தை முனிவனை அற்றம் நோக்கி’ என்றும், மிதிலைக் காட்சிப் படலத்தில், ‘அவ்வியம் அவித்த சிந்தை முனிவனை ஆண்டுக் காணா’ என்றும் கம்பன் ‘அவ்வியம்’ பயன்படுத்தும் போது, அந்தச் சொல்லுக்கு பொறாமை முதலாய தீக்குணங்கள் என்றே வை.மு. கோபால கிருஷ்ணமாச்சாரியார் பொருள் காண்கிறார். ஈங்கெல்லாம் ஔவியம் எனும் சொல் அவ்வியம் ஆனது எதுகைக்கும் ஓசைக்கும் வேண்டித்தான் எனில், எழுத்துப் போலியை வாழ்விக்க நேர்ச்சொல்லை இழப்பது நியாயமா எனும் கேள்வி பிறக்கிறது.

இந்த  எனும் ஆதித் தமிழ் எழுத்து, தொல்காப்பியம் வரையறுக்கும் எழுத்து, தொல்காப்பியருக்கு முந்தியே இம்மொழியில் தோன்றி வாழ்ந்திருந்த எழுத்து, இன்று போலிக்குள் பதுங்கிக் கொள்வது சங்கடமாக இருக்கிறது.

தமிழ் லெக்சிகன், ஔ வரிசையில் 37 பதிவுகளைக் கொண்டுள்ளது. முழுப் பட்டியலும் தரலாம் தான். வசதி கருதி சில சொற்களைத் தருகிறேன்.

  1. ஔ – தார இசையின் எழுத்து (திவாகர நிகண்டு)
  2. ஔகம் – இடைப்பாட்டு அல்லது பின்பாட்டு (சிலப்பதிகார உரை)
  3. ஔகாரக் குறுக்கம் – தன் மாத்திரையில் குறுகிய ஔகாரம் (நன்னூல்)
  4. ஔசனம் – உபபுராணம் பதினெட்டினுள் ஒன்று
  5. ஔசித்தியம் – தகுதி
  6. ஔடதம் – மருந்து
  7. ஔடவம் – ஔடவ ராகம் (சிலப்பதிகார உரை)
  8. ஔடவ ராகம் – ஐந்து சுரம் மட்டும் உபயோகிக்கப்படும் இராகம்
  9. ஔதா – அம்பரி
  10. ஔதாரியம் – உதாரணம்
  11. ஔபசாரிகம் – ஒன்றின் தன்மையை மற்றொன்றில் ஏற்றிக் கூறுவது
  12. ஔபாசனம் – காலை மாலைகளில் கிருகஸ்தர் ஓமத் தீ ஓம்பும் புகை
  13. ஔபாதிகம் – உபாதி சம்பந்தமுள்ளது
  14. ஔரச புத்திரன் – சொந்தப் பிள்ளை. சுவீகார புத்திரனின் எதிர்ப்பதம்
  15. ஔரசன் – சொந்தப் பிள்ளை
  16. ஔரிதம் – ஒரு தரும நூல் (திவாகர நிகண்டு)
  17. ஔலியா – அரபிச் சொல். ஞானிகள்
  18. ஔவித்தல் – பொறாது
  19. ஔவியம் – அவ்வியம், அழுக்காறு, Envy.
  20. ஔவுதல் – வாயால் பற்றுதல். அழுந்தி எடுத்தல். கன்று புல்லை ஔவித் தின்கிறது.
  21. ஔவை – அவ்வை, Mother, Matron, Old Woman
  22. ஔவை நோன்பு – Secret ceremony performed by some Velala women, twice a year on a Tuesday at midnight, when no males, even babies in arms are allowed to be present. செவ்வாய் நோன்பு.
  23. ஔவையார் – பழைய பெண்பால் புலவர்களில் ஒருவர்

ஒரு விநோதம், மேற்கண்ட பதிவுகளில், ஔ என்னும் எழுத்து, பல பதிவுகளில் திசைச் சொல் அல்லது வடசொற்களை புழங்க அனுமதிக்கப் பயன்படுத்தப் பட்டுள்ளது என்பது தெரிய வருகிறது.

திசைச்சொல் அல்லது வடசொல் செய்யுளில் அனுமதிக்கப் படலாம் என்கிறது தொல்காப்பியம்.

‘இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்று அனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே’

என்பது சொல்லதிகார நூற்பா. இவற்றுள்

‘வடசொல் கிளவி வட எழுத்து ஒரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும்மே’

என்பதும் ஒரு நூற்பா. அஃதாவது வடமொழி ஒலிகளை நீக்கி, தமிழ் எழுத்துக்களோடு அமைந்த சொற்கள் வடசொல் ஆகும்.

எடுத்துக்காட்டுக்கு பங்கஜம் பங்கயம் ஆவதும், ஸர்ப்பம் சர்ப்பமாவதும். இலக்கணத்துக்கு அடங்கி, தமிழுக்குள் வேற்றுமொழிச் சொற்கள் பிரவேசிப்பதன் தன்மை இதுதான். நான் சொல்ல வருவது, பல அரபுச் சொற்களும் வட சொற்களும் தமிழ்ச் சொல்லாக உருமாற்றம் பெறுவதற்கு ஔ எனும் இவ்வெழுத்து உதவி இருக்கிறது. அது மொழிக்குப் பெரிய தொண்டு என்று கருதலாம். ஆனால், ‘அப்ப அந்த மூதி மொழிக்குள்ளே என்னத்துக்கு? தூக்கிக் குப்பையிலே கடாசு’ என்றும் தனித்தமிழ்வாதி எவரும் உரைக்கக் கூடும்.

இனி ககர ஒற்று முதல் நகர ஒற்று ஈறாக, அதாவது க் முதல் ன் வாயிலான பதினெட்டு மெய்யெழுத்துக்களையும், ஔ எனும் பன்னிரண்டாவது உயிர் எழுத்து புணர்ந்து, மொழிக்குள் செயல்படும் சொற்களைப் பார்ப்போம். அதாவது கௌ, ஙௌ, சௌ, ஞௌ, டௌ, ணௌ, தௌ, நௌ, பௌ, மௌ, யௌ, ரௌ, லௌ, வௌ, ழௌ, ளௌ, றௌ, னௌஎனும் பதினெட்டு உயிர்மெய் எழுத்துக்கள் புழங்கும் வெளி.

கௌ எனத் தொடங்கும் 110 பதிவுகள் லெக்சிகனில் உண்டு. அவற்றுள் எனக்கு முக்கியமாகப் பட்ட சில சொற்களின் பட்டியல்:

  1. கௌ – காணம், கொள்ளு
  2. கௌசலம் – தந்திரம்
  3. கௌசலை – இராமனின் தாய், கவுசலை
  4. கௌசனம் – கௌபீனம், கோவணம், கோமணம், கௌபீகம்
  5. கௌசாம்பி – கங்கைக் கரையின் தொல் நகரம்
  6. கௌசிகம் – கூகை (பிங்கல நிகண்டு), பட்டாடை (பிங்கலம்), பண் வகை, விளக்குத் தண்டு
  7. கௌசிகன் – விசுவாமித்திர முனிவன்
  8. கௌசுகம் – குங்கிலியம்
  9. கௌஞ்சம் – கிரவுஞ்சப் பறவை
  10. கௌடா – வங்காள-ஒடிசா எல்லையில் அமைந்ததோர் நகரம். சாதிப்பெயர் (எ.கா.) தேவ கௌடா, மூலிகை
  11. கௌடிலம் – வளைவு
  12. கௌடில்யர் – சாணக்கியன். கௌடில்ய கோத்திரம் என்று ஒரு கோத்திரம் உண்டு
  13. கௌண்டர் – கவுண்டர்
  14. கௌணம் – முக்கியம் இல்லாதது
  15. கௌணியன் – கவுணியன்
  16. கௌத்துவக்காரன் – வஞ்சகன்
  17. கௌத்துவம் – அஸ்த நட்சத்திரம், பத்மராகம் எனும் நவமணிகளில் ஒன்று. பாற்கடல் கடைந்ததில் வந்த மணி. திருமால் மார்பில் அணிந்தது.
  18. கௌத்துவ வழக்கு – பொய் வழக்கு
  19. கௌதமன் – புத்தன், முனிவன்
  20. கௌதமனார் – முதற் சங்கப் புலவர்
  21. கௌதமி – ஒரு நதி, கோரோசனை
  22. கௌதாரி – பறவை – கவுதாரி
  23. கௌதுகம் – மகிழ்ச்சி
  24. கௌந்தி – வால் மிளகு, கடுக்காய் வேர், கவுந்தி அடிகள்
  25. கௌபீன சுத்தன் – பிற பெண்களைச் சேராதவன்
  26. கௌபீன தோஷம் – பிற பெண்களைச் சேரும் குற்றம்
  27. கெளமாரம் – இளம் பருவம், முருகனை வழிபடு சமயம்
  28. கெளமாரி – ஏழு மாதர்களில் ஒருத்தி, மாகாளி
  29. கெளமோதகி – திருமாலின் தண்டாயுதம் (பிங்கல நிகண்டு)
  30. கெளரம் – வெண்மை, பொன்னிறம்
  31. கௌரவம் – மேன்மை, பெருமிதம்
  32. கௌரவர் – கவுரவர்
  33. கௌரி – பார்வதி, காளி, எட்டு அல்லது பத்து வயதுப் பெண், பொன்னிறம், கடுகு, துளசி
  34. கௌரி கேணி – வெள்ளைக் காக்கணம்
  35. கௌரி சிப்பி – பூசைக்குப் பயன்படும் பெரிய சங்கு
  36. கௌரி மைந்தன் – முருகன்
  37. கௌரியம் – கரு வேம்பு
  38. கௌரி விரதம் – நோன்பு
  39. கௌல் – நாற்றம்
  40. கௌவாளன் – ஒரு வகை மீன்
  41. கௌவியம் – பசுவில் இருந்து பெறப்படும் பால், தயிர், நெய், கோசலம், கோமயம் இவற்றின் கூட்டு. பஞ்ச கவ்வியம்
  42. கௌவுதல் – கவர்தல், கவ்வுதல்
  43. கௌவுகண் – கீழ்ப் பார்வை
  44. கௌவுதடி – கவைக்கோல்
  45. கௌவை – வெளிப்பாடு,பழிச் சொல், அலர், துன்பம் (பிங்கல நிகண்டு), கள் (பிங்கல நிகண்டு), கவ்வை
  46. கௌளம் – இராக வகை, கேதாரகௌளம்
  47. கௌளி – கவுளி, பல்லி, குறி சொல்லுதல், ஒரு ராகம்
  48. கௌளி சாத்திரம் – பல்லி சொல்லும் பலன்
  49. கௌளி பத்திரம் – வெள்ளை வெற்றிலை
  50. கௌளி பந்து – ஒரு இராகம்
  51. கௌளி பாத்திரம் – மஞ்சள், இளஞ்சிவப்பு நிறத்திலான தேங்காய்
  52. கௌஸ்துபம் – திருமால் மார்பு ஆபரணம்
  53. கௌசிகம் – பாம்பு, வியாழன்
  54. கௌசிகாயுதம் – வானவில்
  55. கௌசிகேயம் – வெண் கிலுகிலுப்பை
  56. கௌஞ்சிகன் – பொன் வினைஞன்
  57. கௌதுகம் – தாலி (யாழ்ப்பாண அகராதி)
  58. கௌதூகலம் – மிதி பாகல்
  59. கௌபலக்காய் – மிளகாய்
  60. கௌமுதம் – கார்த்திகை மாதம்
  61. கௌரி – துளசி, பூமி, இராகவகை
  62. கௌரி லலிதம் – அரிதாரம்
  63. கௌரீ புத்திரர் – தெலுங்கு வைசியர் பிரிவு
  64. கௌரீ மனோகரி – மேள கர்த்தா ராகம்
  65. கௌலகம் – வால் மிளகு
  66. கௌவியம் – கோரோசனை

பட்டியல் எழுதுவதை எனக்கான மொழிப் பயிற்சி என்று கொள்கிறேன். எதிர்காலத்தில் இவற்றுள் சில சொற்களைப் பயன் படுத்துவேனாயில், எனக்கது பெருமிதமாக அமையும்.

இனி ‘கௌ’வுக்கு அடுத்த ஔகார உயிர்மெய் ‘ஙௌ’ பார்க்கலாம், என்றால் ‘ங’கர வரிசையில் லெக்சிகன் ஐந்து எழுத்துக்களே பதிவு செய்துள்ளது. ஙௌ எழுத்தில் பதிவு இல்லை. அடுத்த எழுத்தான சகர வரிசையில், சௌ பற்றிய பதிவுகள் 82. அவற்றுள் சில:

  1. சௌ – சௌபாக்கியவதி என்பதைச் சொல்லும் முதலெழுத்துக் குறிப்பு
  2. சௌக்கம் – பண்டங்களின் மலிவு
  3. சௌக்கிதார் – பாராக்காரன்
  4. சௌக்கியம் – நலம்
  5. சௌகந்தி – மாணிக்க வகை, கந்தக பாஷாணம்
  6. சௌகந்திகம் – வெள்ளாம்பல்
  7. சௌகம் – நான்கு
  8. சௌகரியம் – வசதி, மலிவு
  9. சௌசன்னியம் – அன்னியோன்னியம்
  10. சௌண்டி – திப்பிலி
  11. சௌண்டிகன் – கள் விற்பவன்
  12. சௌத்தி – சக்களத்தி
  13. சௌதாயம் – வெகுமதிப் பொருள்
  14. சௌந்தம் – கனிம நஞ்சு
  15. சௌந்தரம் – சௌந்தரியம்
  16. சௌந்தர முகம் – முகக்குறிப்பு பதினான்கினுள் மிக்க மகிழ்ச்சியைக் காட்டும் அபிநயம்
  17. சௌந்தரியம் – அழகு
  18. சௌந்தர்ய லகரி – ஆதிசங்கரர் இயற்றிய, வீரைக் கவிராச பண்டிதர் மொழி பெயர்த்த செய்யுள் நூல்
  19. சௌந்தர்யவதி – அழகுள்ளவள்
  20. சௌப்திகம் – இரவில் துயில்வோரை எதிர்த்துக் கொல்லுதல்
  21. சௌபஞ்சனம் – நீர் முருங்கை
  22. சௌபாக்கியம் – மிகுந்த பாக்கியம், 108 உபநிடதங்களில் ஒன்று
  23. சௌபாக்கிய ரேகை – கையில் ஓடும் ஒரு ரேகை
  24. சௌபாக்கியவதி – மகளிருக்கான மங்கலச் சொல்
  25. சௌபானம் – படிக்கட்டு
  26. சௌமன் – சந்திரன் மகன், புதன்
  27. சௌமிய – 60 ஆண்டுகளில் 43-வது ஆண்டு
  28. சௌமியம் – சாந்தம், அழகு
  29. சௌமிய வாரம் – புதன்கிழமை
  30. சௌமியன் – சாந்தமுள்ளவன், புதன், அருகன்
  31. சௌரம் – 18 உபபுராணங்களில் ஒன்று, சூரியனை வழிபடும் மதம், மயிர் மழித்தல்
  32. சௌராட்டிரம் – ஒரு பண் வகை. சௌராஷ்ட்ரம் – கத்தியவார் தேசம்
  33. சௌரி – சனி, யமன், கர்ணன், யமுனை நதி, திருமால், சவுரி
  34. சௌரியம் – களவு, வீரம், சௌகரியம்
  35. சௌரு – கொச்சை நாற்றத்தோடு கூடிய சுவை – துவர்ப்பு
  36. சௌல் – மகிழ்ச்சி, இடம்பம்
  37. சௌலப்பியம் – சுலபமான தன்மை
  38. சௌவர்ச்சலம் – உப்பு வகை உவர் நீர்
  39. சௌவீரம் – 32 வைப்பு நஞ்சுகளில் ஒன்று
  40. சௌஸ்தி – தருமக் கொடை
  41. சௌபன்னம் – சுக்கு

ஞ கர வரிசையில், ட கர வரிசையில், ண கர வரிசையில், குறிப்பாகச் சொல்ல ஏதுமில்லை. தகர வரிசையில், ‘தௌ’வில் தொடங்கும் பதிவுகள் 26. அவற்றுள் சில.

  1. தௌகித்திரன் – மகளுக்கு மகன்
  2. தௌகித்திரி – மகளுக்கு மகள்
  3. தௌசருமியம் – சுன்னத்து
  4. தௌசாரம் – குளிர், பனி (யாழ்ப்பாண அகராதி)
  5. தௌத்தியம் – தூது, ஒருத்தியைக் கூட்டிக் கொடுத்தல், pimping
  6. தௌசிலம் – பளிங்கு (யாழ்ப்பாண அகராதி)
  7. தௌதம் – துவைத்த ஆடை, குளித்தல், வெள்ளி
  8. தௌதிகம் – முத்து
  9. தௌமியன் – பாண்டவர் புரோகிதன்
  10. தௌர்ப்பல்லியம் – பலவீனம்
  11. தௌரிதம் – துரதம் (யாழ்ப்பாண அகராதி)
  12. தௌல் – மதிப்பீடு
  13. தௌலத் – தவுலத்து (அரபு)
  14. தௌலேயம் – ஆமை
  15. தௌவல் – கேடு
  16. தௌவாரிகன் – வாயிலோன்
  17. தௌவை – தவ்வை, அக்கா, மூதேவி

நகர வரிசையில், ‘நௌ எழுத்தில் எட்டுப் பதிவுகள். அவற்றுள் சில.

  1. நௌ – மரக்கலம்
  2. நௌகா – மரக்கலம்
  3. நௌவி – நவ்வி, மான்

பகர வரிசையில், பௌ எழுத்துக்கு 85 பதிவுகள் லெக்சிகனில். சுவாரசியமான சில.

  1. பௌட்கரம் – சைவ உப ஆகமங்களில் ஒன்று
  2. பௌட்டிகம் – பூமியில் விழுமுன் தாமரை இலைகளில் ஏந்திய பசுஞ்சாணம்
  3. பௌடிகம் – ரிக் வேதம்
  4. பௌண்டிரம் – ஒரு தேசம்
  5. பௌத்தம் – புத்த மதம்
  6. பௌத்தி – மரணம்
  7. பௌத்திரம் – மூலநோய், பவித்திரம்
  8. பௌத்திரன் – மகனின் மகன், பவித்திரன்
  9. பௌத்திரி – மகனின் மகள்
  10. பௌதிகம் – கரு நெல்லி
  11. பௌதிகன் – சிவன்
  12. பௌமி – சீதை
  13. பௌர்ணமி, பௌரணை, பௌர்ணமை, பௌர்ணிமி – நிறைமதி நாள்
  14. பௌரகம் – புறநகர்ச் சோலை
  15. பௌரணை – மரக்கன்று, கடல்
  16. பௌரன் – நகரவாசி
  17. பௌராணிகம் – பௌராணிக மதம்
  18. பௌரி – பெரும் பண் வகை (பிங்கல நிகண்டு)
  19. பௌரிகன் – குபேரன்
  20. பௌருஷம் – ஆண் தகைமை
  21. பௌலுருவி – புல்லுருவி
  22. பௌலஸ்தி – சூர்ப்பணகை
  23. பௌலஸ்தியன் – இராவணன், குபேரன்
  24. பௌழியன் – பூழியன் என்னும் சேரமன்னன், கடவுள்
  25. பௌளி – இராக வகை
  26. பௌன் – பவுன்
  27. பௌ கண்டம் – ஆறு முதல் பத்து வயது வரையான குழந்தைப் பருவம்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

மகர வரிசையில், மௌ எழுத்துப் பதிவுகள் நாற்பத்தொன்று. அவற்றுள் தேர்ந்தெடுத்த சில.

  1. மௌகூப் – நிறுத்தப்பட்டது (உருது)
  2. மௌசானி – பெரும் பண்கள் பதினாறில் ஒன்று
  3. மௌசு – கிராக்கி (உருது), மிகு பிரியம், கவர்ச்சி, ஆடம்பரம்
  4. மௌட்டியம் – அறியாமை
  5. மௌட்டியன் – முட்டாள்
  6. மௌட்டை – முஷ்டிக் குத்து
  7. மௌடி – மகுடி
  8. மௌண்டிதம் – ஓர் உபநிடதம்
  9. மௌண்டிதன் – தலை மழிக்கப்பட்டவன், முண்டிதன்
  10. மௌத்திகம் – முத்து
  11. மௌத்து – மரணம் (அரபு)
  12. மௌரியர் – ஒரு பேரரசு
  13. மௌல்வி – முகம்மதிய மத வித்வான் (அரபு)
  14. மௌலன் – நற்குணத்தான் (யாழ்ப்பாண அகராதி)
  15. மௌலானா – மௌல்வி
  16. மௌலி – சடை முடி, மயிர் முடி, மணிமுடி, தலை, கோபுரச் சிகரம். ‘தாரணி மௌலி பத்தும்…’ – கம்பன்
  17. மௌவல் – காட்டு மல்லிகை, முல்லை, தாமரை
  18. மௌவலாரம் – சலங்கைச் சிலம்பு
  19. மௌவழகன் – குதிரை வகை
  20. மௌவை – ஔவை, தாய்
  21. மௌனம் – பேசாமை
  22. மௌனி – மௌன விரதம் பூண்டவன். மூத்த தமிழ்ச் சிறுகதை ஆசிரியரின் புனைப் பெயர்

‘ய’ வரிசையில் ‘யௌ’ பற்றிய பதிவுகள் பன்னிரண்டு. அவற்றுள் சில.

  1. யௌகிகம் – பகுபதம்
  2. யௌதம் – மகளிர் கூட்டம்
  3. யௌவன கண்டகம் – முகப்பரு (யாழ்ப்பாண அகராதி)
  4. யௌவன தசை – வாலிபப் பிராயம்
  5. யௌவனம் – இளமை, அழகு, களிப்பு
  6. யௌவன லக்கணம் – அழகு, கொங்கை
  7. யௌவனிகை – பதினாறு முதல் ஐம்பது வயது வரையுள்ள பெண்.

ர கர வரிசையில், ரௌ எழுத்தில் தொடங்கும் சொற்கள் ஐந்தேதான். அவற்றுள் நான்கு.

  1. ரௌத்திராகாரம் – பயங்கரத்தின் வடிவம்
  2. ரௌரவம் – ஒரு நகரம்
  3. ரௌத்திரி – ஆண்டு அறுபதினுள் 54-வது
  4. ரௌத்திர – நவ சக்திகளில் ஒன்று

ல கர வரிசையில் லௌ எழுத்துப் பதிவுகள் பத்து. அவற்றுள் ஆறு.

  1. லௌகிக தந்திரம் – உலக வாழ்வில் சாமர்த்தியம்
  2. லௌகிக தர்மம் – உலகியல்
  3. லௌகிகம் – உலகியல்
  4. லௌகிகன் – உலகியல் வாதி
  5. லௌகீகம் – உலகிற்கு உரியது, உலகப் பற்றுடைமை, உத்தியோகம்
  6. லௌகீகன் – உலகப் பற்றுடையவன்

வகர வரிசையில் வௌ எழுத்தின் பதிவுகள் எட்டு. அவற்றுள் ஆறு.

  1. வௌ – வௌவுதல், கைப்பற்றுதல்
  2. வௌவால் – Bat
  3. வௌவால் வலை – மீன் பிடிக்கும் வலை வரிசை
  4. வௌவுதல் – கைப்பற்றுதல், திருடுதல், கவர்தல்
  5. வௌவுலகம் – மரவகை
  6. வௌவால் – ஒரு மீன். இந்த மீனை வாவல் எனும் பெயரில் அறிவேன்

ழ வரிசையில், ள வரிசையில், ற வரிசையில், ன வரிசையில் ஔகாரம் ஏறிய பதிவுகள் இல்லை.

மேற்கண்ட பட்டியல் அலுப்பூட்டுவதாக இருக்கக் கூடும். எனினும் பல புதிய சொற்களை அறிந்து கொள்ள உதவியது. எழுத்துப் போலி மூலம் அசலை இழக்க நினைப்பதும் தற்பவம் எனும் இலக்கணம் மூலம் மொழிக்குள் ஏற்கனவே புகுந்து நடமாடும் சொற்களை மறக்க நினைப்பதும் நியாயம் தானா? தொல்காப்பியமும் பாட்டும் தொகையும் கீழ்க்கணக்கு நூல்களும் வள்ளுவமும் பெருங்காப்பியங்களும் பயன்படுத்திய சொற்களை இன்று திருத்தி எழுதுவது சாத்தியமா? திருத்தி எழுத ஒத்த புலமை உடையவர் தற்காலத்தில் வாழ்கிறார்களா? இல்லை பல்கலைக் கழகங்கள் பொறுப்பில் விட்டுவிடலாமா?

சங்க இலக்கியம் ஔகாரம் பயன்பட்ட பல சொற்களை ஆண்டிருக்கிறது.

கௌவை எனும் சொல் அலர் தூற்றுதல் எனும் பொருளில் சங்கம் ஆள்கிறது. அகநானூற்றின் 50-வது பாடல், நெய்தல் திணைப் பாடல், கருவூர்ப் பூதஞ்சாத்தனார் பாடியது:

‘கடல்பாடு அவிந்து, தோணி நீங்கி,
நெடு நீர் இருங் கழிக் கடுமீன் கலிப்பினும்
வெவ் வாய்ப் பெண்டிர் கௌவை தூற்றினும்’

எனும் வரிகளில், கௌவை எனில் பழிச் சொல் அல்லது அலர் தூற்றுதல் என்று பொருள் சொல்கிறார்கள்.

குளிர்ந்த கடற்கரையை உடைய நம் தலைவன், முன்பு கடல் ஒலி அவிய, தோணி கடலில் செல்லாது ஒழிய, மிக்க நீரினை உடைய பெரிய கழியில் சுறா முதலியன செருக்கித் திரியினும், கொடிய வாயினை உடைய பெண்கள் அலர் தூற்றினாலும் பெருமை மிகு இழையினை உடைய நீண்ட தேர் தாழ்ந்து நிற்க, பகற்காலத்தும் நம்மிடத்து நின்று பிரியாதவனாக, அடுத்தடுத்து வருவான் என்று தோழி பாணனுக்குச் சொல்வதாகப் பொருள் வளர்ந்து நடக்கும் வரிகள்.

நற்றிணையில் ‘தௌவின’ எனும் சொல் இழந்தன எனும் பொருளில் கையாளப் படுகிறது. அம்மூவனார் பாடல், தலைவி தோழிக்கு உரைப்பது போன்று:

‘தோளும் அழியும், நாளும் சென்றன,
நீள் இடை அத்தம் நோக்கி, வான் அற்று
கண்ணும் காட்சி தௌவின’

என்பன பாடல் வரிகள். அத்தம் – வழி, வாள் – ஒலி, தௌவின – இழந்தன.

‘நௌவி’ எனும் சொல் மானின் வகை எனும் பொருளில் ஆளப்பட்டிருக்கிறது. ‘பெருங் கவின் பெற்ற சிறு தலை நௌவி’ என்பது மதுரைக் காஞ்சி. கவின் எனில் அழகு என்று பொருள்.

‘பௌவம்’ எனும் சொல் கடல் எனும் பொருளில் பயன்படுத்தப் பட்டிருக்கிறது.

‘தண் பெரும் பௌவ நீர்த் துறைவற்கு’

என்று கபிலர் பாடிய நற்றிணைப் பாடல் பேசுகிறது.

பாண்டியன் பல்யாக சாலை முது குடுமிப் பெருவழுதியைக் காரி கிழார் பாடுகிறார்:

‘வடா அது பனி படு நெடுவலை வடக்கும்,
தெனா அது உருகெழு குமரியின் தெற்கும்,
குணா அது கரையொரு தொட கடற் குணக்கும்,
குடா அது தொன்று முதிர் பௌவத்தின் குடக்கும்’

என்று எல்லைகளை வரையறுக்க. எளிய பொருள், வடக்கு இமயமலை, தெற்கே குமரிக்கடல், கிழக்கே ஆழ்கடல், மேற்கே பழமையான கடல் என்பதாகும்.

திரைப்பாடல் ஒன்றில் இன்று ஆம்பல், மௌவல் எனும் சொற்கள் ஆளப்பட்டுள்ளன. ஆம்பல் தெரியும், மௌவல் என்றால் என்ன? காட்டு முல்லை என்று பொருள் தருகிறார்கள்.

‘மனை இள நொச்சி மௌவல் வால் முகை’ என்று அகநானூறும், ‘மல்லன் மருங்கில் மௌவலும் அரும்பின’ என்று நற்றிணையும், ‘எல்லுறும் மௌவல் நாறும் பல் இருங் கூந்தல் யாரளோ நமக்கே?’ என்று குறுந்தொகையும் மௌவலைப் பேசுகின்றன.

வௌவல்’ எனும் சொல் பற்றுதல் எனும் பொருளில் பயன்படுத்தப்பட்டது. கலித் தொகை, நெய்தல் கலி, பாடல்-133. தலைவனுக்கு தோழி கூற்று.

‘ஆற்றுதல் என்பது ஒன்று அலர்ந்தவர்க்கு உதவுதல்
போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை
பண்பெனப் படுவது பாடறிந்து ஒழுகுதல்
அன்பெனப் படுவது தன் கிளை செறா அமை;
அறிவெனப் படுவது பேதையார் சொல் நோன்றல்
செறிவெனப் படுவது கூறியது மறா அமை
நிறைவெனப் படுவது மறைபிறர் அறியாமை
முறையெனப் படுவது கண்ணோகாது உயிர் வௌவல்
பொறையெனப் படுவது போற்றாரைப் பொறுத்தல்’

என்பது பாடல். பற்றுதல் என்பது கவர்தல் என்றும் பொருள் தரும். புறநானூற்றில் மாங்குடிக் கிழார், ‘முரசு வௌவி’ என்று பாடுகிறார்.

ஏற்கனவே ஔகாரத்தை இன்றைய தமிழ் வழக்கு புறக்கணிப்பது என்பது மொழியை வாழவைக்க ஒரு போதும் உதவாது. எனவேதான் ஆத்திச்சூடியைத் துணை கொண்டு நாம் ஔகாரம் பார்த்தோம். ஔவியம் என்பதற்குப் பொருந்திய பொருள் அழுக்காறு.

‘அழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.’

என்பது திருக்குறள். பொறாமை, ஆசை, வெகுளி, இன்னாச்சொல் இந் நான்கையும் நீக்கிச் செய்யப் பெற்ற வினையே அறமாகும். ஆக ஔவியம் பேசுவது அறத்திற்கு எதிரான செயல்பாடு.

அனுமானைப் பேசும் போது, கம்பன் கூறுவது, ‘தர்மத்தின் தனிமை தீர்ப்பான்’ என்று. அதாவது தர்மம், அறம் என்பது எப்போதும் தனியனாக இருப்பது. அதற்கொரு கூட்டுக் கிடைப்பது எளிதன்று. அனுமன் என்பவன் அறத்தின் தனிமை தீர்த்து அதற்கொரு துணையாக இருக்கும் தன்மை கொண்டவன். அந்த அறத்தின் எதிரி அழுக்காறு.

‘அழுக்காறு எனவொரு பாவி திருச் செற்றுத்
தீயுழி உய்த்து விடும்’

என்பதும் திருக்குறள்.

அழுக்காறு என்று சொல்லப்பட்ட ஒப்பற்ற பாவி, செல்வத்தைக் கொடுத்து, நரகத்தின் கண் புகுத்திவிடும் என்பது பொருள்

எனவே, எளிமையாக, ஒரு கட்டளையாக, ஔவை சொல்வது ‘ஔவியம் பேசேல்’!

நாலடியார் பேசுவது:

‘அவ்வியம் இல்லார் அறத்தாறு உரைக்குங்கால்
செவ்வியர் அல்லார் செவிகொடுத்தும் கேட்கலார்;
கவ்வித்தோல் தின்னும் குணுங்கர்நாய் பாற்சோற்றின்
செவ்வி கொளல்தேற்றாது ஆங்கு.’

அதாவது, தோலை வாயினால் கவ்வித் தின்னும் நாயானது, பால் சோற்றின் நன் சுவையை அறிந்து கொள்வதில் தெளிவற்று இருக்கும். அது போல, அழுக்காறு இல்லாத சான்றோர் அறநெறியை உரைக்கும் போது, நற்குணம் இல்லாத புல்லறிவாளர் செவி கொடுத்தும் கேட்க மாட்டார்கள்.

எனவே ஔவியம் இல்லாதவர்களே அறத்தின் வழிகள் பற்றிப் பேசத் தகுதியானவர்கள் என்பது பெறப்படும்.

ஆகவே ஔவை சொல்கிறாள், ‘ஔவியம் பேசேல்’

- See more at: http://solvanam.com/?p=31402



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard