New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தாலியும் தமிழரும்


Guru

Status: Offline
Posts: 24603
Date:
தாலியும் தமிழரும்
Permalink  
 


சங்க காலத்தில் தாலியின் நிலைமை என்ன என்பதைச் சங்க இலக்கியங்களைக் கொண்டு ஆராயலாம்.

   எட்டுத்தொகையும், பத்துப்பாட்டும் சங்க இலக்கியங்கள் எனப்படுவன. அவற்றுள் புறநானூறு என்பது தொகை நூல் எட்டில் ஒன்று. இருப்பனவற்றுளே ஆய பழமையானது. கி.மு.18000-த்திலிருந்து கி.பி.முதல் நூற்றாண்டு வரை பல்வேறு காலத்தில் பாடிய பாடல்களின் தொகுப்பு. தொல்காப்பியம் என்பது தொன்மையான தமிழ் இலக்கணம்; இடைச்சங்க காலத்தது. அகநானூறும் தொகைநூலே; அகத்துறையில் பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு; இன்னும் குறுந்தொகை, பதிற்றுப்பத்து, கலித்தொகை, பரிபாடல் என பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இவற்றில் எல்லாம் தாலி எப்படி கையாளப்பட்டிருக்கிறது என்று பார்ப்போம்.

   முதலில் மிகப் பழமையான புறநானூற்றைப் பார்ப்போம். புறநானூற்றில் 127-ம் பாட்டில்,

    “ஈகை அரிய இழையணி மகளிரொடு

    சாயின் றென்ப ஆய் கோயில்”

என வருகிறது. ஈகை அரிய இழையணி என்பதற்கு பழைய உரைகாரர் ‘பிறிதோர் அணிகலமும் இன்றிக் கொடுத்தற்கரிய மாங்கலிய சூத்திரத்தை அணிந்த மகளிருடனே’ என்று உரை கூறியிருக்கிறார்.

    இந்தப் பாடலைப் பாடியவர் ஏணிச்சேரி முடமோசியார்; பாடப்பட்ட தலைவன் ஆய் என்ற வள்ளல்.

    ஆய் வள்ளலின் வள்ளல் தன்மையைக் கூற வந்த புலவர், அவன் மட்டுமல்ல; அவனுடைய இல்லத்து மகளிரும் அவனுடைய வள்ளல் தன்மைக்கு உறுதுணை செய்தனர் என்று கூறுகிறார். அதாவது ஆய் வள்ளலின் விருப்பத்திற்கேற்ப அம்மகளிர் தாம் அணிந்துள்ள அணிகளுள் பிறர்க்குக் கொடுக்க முடியாத ஓர் இழையாகிய தாலியை மட்டும் அணிந்து கொண்டு பிற நகைகளை எல்லாம் கழற்றி இரவலர்களாக வந்த பாணர்க்குப் பரிசாகக் கொடுத்துவிட்டனர். இவ்வாறு அணிகளைக் கழற்றிக் கொடுத்து விட்ட பின் கோலத்தில் அவர்கள் முன்னைய ஒளி குன்றி இருந்தனர் என்பது பாட்டின் பொருள்.

    இங்கே உரையின் படி பார்க்கும் போது ‘ஈகை அரிய இழை’ என்பது கொடுத்தற்கரிய தாலியாகிய இழை எனப் பொருள்படுகிறது. எனவே இழை என்பது இங்கே தாலிக்கயிறு என்று குறிக்கப்படுவது காண்க.

    புறநானூற்றின் 224-ம் பாட்டு கரிகாற் பெருவளத்தானைப் பற்றியது. அவன் இறந்த போது அவனது மனைவி என்னும் உரிமை பெற்ற மகளிர் தமது திருமணச் சின்னமான தாலியைக் களைந்தனர் என பாடல் குறிப்பிடுகிறது.

     “அறிவுடையாளன் இறந்தோன்

     . . . . . . . . . . . . . . . . . . .
மெல்லியல் மகளிரும் இழை களைந்தனரே”

என்பது அப்பாடலில் வரும் வரிகள். இங்கேயும் இழை என்ற சொல் தாலிக் கயிற்றைக் குறிப்பிடுவது காண்க.

     அடுத்து அகநானூற்றிலும் இந்த இழை என்ற சொல்லால் தாலி குறிக்கப்படுவது அறிதற்குரியது.

     அகநானூற்றுப் பாடல் 86 ஒரு திருமண நிகழ்ச்சியைக் கூறுவது. இன்னொரு பாடலான 136-ஆம் பாடலும் தமிழ்த் திருமண நிகழ்ச்சியை விவரிக்கும் பாடலே.

    இதில் முதலில் கூறிய 86-ஆம் பாட்டில் நான்கு மகளிர் மணப்பெண்ணை மங்கல நீராட்டு செய்வது கூறப்படுகிறது. அப்போது நீராட்டுச் செய்யும் அந்த நான்கு மகளிரும் சுமங்கலிகளாக இருக்க வேண்டும் என்பதைத் தமிழர்கள் கடைப்பிடித்த வழக்கம் என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

      “வாலிழை மகளிர் நால்வர் கூடி”

என்பது அப்பாடல் வரி. அதில் வரும் இழை மகளிர் என்பது தாலிக் கயிறணிந்த பெண்கள் நால்வர் என்று பொருள்படுவது காண்க.

    அகநானூற்றின் 136-ம் பாட்டும் தாலியைப் பற்றிக் குறிப்பிடுகிறது. அதில் திருமணத்தையே ‘இழையணிச் சிறப்பு’ என்று குறிப்பிடுகிறது.

     “மழைபட்டன்ன மணல்மலி பந்தர்

     இழையணி சிறப்பின் பெயர் வியர்ப்பாற்றி”

என்பது குறிப்பிட்ட வரிகள்.

     சங்க இலக்கியத்தில் ஒன்றான நெடுநல்வாடையில், நெடுஞ்செழியன் என்னும் பாண்டியன் போருக்குச் சென்றிருந்த போது அவனுடைய மனைவியான கோப்பெருந்தேவி அடைந்த துயரை நக்கீரர் படம் பிடித்துக் காட்டுகிறார். மன்னன் கூட இருந்த போது முத்துமாலை அப்பெருந்தேவியின் மார்பில் அணி செய்திருந்தது மாறி இப்போது அவள் மார்பில் தாலி நாண் ஒன்று மட்டும் தாழ்ந்து தொங்குகிறது என்ற பொருள்பட,

     “ஆரம் தாங்கிய அலர்முலை ஆகத்துப்

      பின்னமை நெடுவீழ் தாழத் துணை துறந்து”

என்று பாடல் கூறுகிறது. பின் என்பது பிடரி; பிடரியைச் சுற்றி மார்பில் தாலி தொங்குதல் தாலி ‘பின்னமை நெடுவீழ்’ எனப்பட்டது. இதற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் ‘குத்துதல் அமைந்த நெடிய தாலி நாண்’ என்று உரை எழுதினார்.

    இது போல பதினெண் கீழ்க் கணக்கில் ஒன்றான திணைமாலை நூற்றைம்பதில் 66 – ஆம் பாடலில் இப்படி ஒரு வரி வருகிறது:

    “பவளக் கொழுந்தின் மேல் பெண் தாலி பாஅய்த்

    திகழக் கான்றிட்டன”

   இவ்வாறாக சங்க இலக்கியங்களில் தாலி பற்றி பல இடங்களில் பேசப்படுகிறது.

    ஆனால் அகநானூற்றில் திருமண நிகழ்ச்சி பற்றி விவரிக்கும் 86 – ஆம் பாட்டிலும், 136 – ஆம் பாட்டிலும் மற்றெல்லாம் கூறப்பட்டாலும் பெண்ணுக்குத் தாலி கட்டப்பட்டது என்ற தகவல் மட்டும் ஏன் இல்லை என்பது மா.ராசமாணிக்கனார் போன்றோர் எழுப்பும் கேள்வி.

   ஆம்; மேற்கூறிய பாடல் இரண்டிலும் மணமகளுக்கு மணமகன் தாலி கட்டினார் என்பது கூறப்படவில்லை. இதே பாடலில் திருமணம் ‘இழையணிச் சிறப்பு’ என்று கூறப்படுகிறது. ஆனால் மணமகன் மணமகளுக்கு இழையை அணிவித்தான் என்று பாடலில் வரவில்லை. திருமணம் இழையணிச் சிறப்பு எனக் கூறப்படுகிறது; என்ன துயர் வந்தாலும் பெண் தாலியாகிய இழையைத் துறக்க மாட்டாள் என்று கூறப்படுகிறது: மங்கலச் சடங்குகளில் இழையாகிய தாலி அணிந்த மகளிரே கலந்து கொண்டு சடங்கில் பங்கு பற்ற வேண்டும் என்று கூறப்படுகிறது; கணவன் இறந்த பின் இழையாகிய தாலியைக் களைந்தனர் பெண்கள் என்பதும் கூறப்படுகிறது. இதனால் எல்லாம் திருமணத்தில் தாலி அணிவிக்கப் பெற்றது என்பது உய்த்துணர்வாக உணரக் கூறப்பட்டது; ஆனால் தாலி திருமணத்தில் அணிவிக்கப்பட்டது என்பது மட்டும் கூறப்படவில்லை. ஏன் என்பதே இப்போது ஆய்வு செய்யத் தக்கது.

   எதை எதை தெய்வம் என்றும் தெய்வீகம் என்றும் நினைக்கிறார்களோ அதையெல்லாம் பெயரிட்டுக் கூறக்கூடாது என்பதைத் தமிழர்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர். உதாரணத்திற்கு சிவபெருமானை இலிங்க வடிவில் வைத்துக் கோயில் எழுப்பி வணங்கியவர்கள் தமிழர்கள்.

   ஆனால் சிவபெருமானை சங்க இலக்கியங்களில் அவரது அடையாளங்களைக் கூறி வழிபட்டனரே ஒழிய அவரைப் பெயரிட்டுக் கூறுவது இல்லை. சங்க இலக்கியங்களில் சிவபெருமானைப் பற்றி கூறும்போது இறைவன் என்று தான் கூறப்படுமே ஒழிய சிவன் என்ற சொல்லே கூறப்படுவதில்லை.

    சிலப்பதிகாரத்தில் முருகனின் குரவைக் கூத்து, ஆய்ச்சியரின் ஆய்ச்சியர் கூத்தில் திருமால், அம்பிகை எல்லாம் பேசப்படுகிறது. ஆனால் சிவபெருமானை ‘பிறவா யாக்கைப் பெரியோன்’ என்று பொதுப்படத் தான் கூறப்படுகிறதே ஒழிய சிவன் என்று சொல்லப்படவில்லை.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

‘உயிரினும் சிறந்தன்று நாணே’
(மார்ச் 2011, இதழ் 135இல் வெளிவந்த தமிழர் பண்பாடு குறித்த பிரபஞ்சன் கட்டுரைக்கான எதிர்வினை)
ப்ரவாஹன்

தமிழ்ச் சமூகம், ஒற்றைவகை மக்கள் திரளைக் கொண்டது போலக் கருதித் தமிழ்ப் பண்பாடு என்ற ஒன்று குறித்துப் பேசப்படுகிறது. வரலாற்றுக் காலம் தொட்டுத் தமிழ்ச் சமூகம் ஒருபடித்தாக இருந்ததற்குச் சான்று ஏதுமில்லை. வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலும்கூடத் தமிழ்ச் சமூகம் ஒருபடித்தாக இருந்ததில்லை என்பது தான் தொல்லெச்சங்கள் காட்டும் சித்திரம். சங்க இலக்கிய காலத்திற்கு முன்னர் தமிழ்ச் சமூகம் ஒற்றைவகை மக்கள் திரளைக் கொண்டிருந்ததற்கான சான்றுகள் அல்லது அதற்கான அடிப்படைகள் எதையும் சுட்டாமல் போகிற போக்கில் அப்படி ஒரு அனுமானத்தை மனதிற்கொண்டு கருத்துகள் கூறுவது தொடர்ந்து வருகிறது. அப்படியிருக்கையில் தமிழர் பண்பாடென்ற ஒன்றைச் சொல்லும்போது அது எந்தப் பிரிவிற்குரியது என்பதைச் சொல்லாமல் தமிழர்கள் அனைவரும் ஒரே குழு போலவும், ஏதோ ஆரிய/பிராமணர்கள் (வைதிகம் என்று சொல்லியிருக்கிறார் பிரபஞ்சன்) வந்துதான் பிரிவினையை உருவாக்கிவிட்டது போலவும் சித்தரிப்பதே வழக்கமாகிப் போனது. தவிரவும் வைதிகம்தான் மூடநம்பிக்கைகளை விதைத்துவிட்டது போலவும் அதற்கு முன்னர் தமிழர்களின் நடைமுறைகளெல்லாம் எதார்த்தமாகவும் அறிவுபூர்வமாகவும் இருந்தனவென்றும் கூறப்பட்டு வருகிறது. பிரபஞ்சனின் கட்டுரையும் இதற்கு விதிவிலக்கல்ல.

தமிழ் /திராவிடச் சமூகம் தாய்வழிச் சமூகம் எனவும் ஆரிய/பிராமணச் சமூகம் தந்தைவழிச் சமூகம் எனவும் சொல்லப்பட்டுவருகிறது. தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றுக் காலமான சங்க காலத்தில் வாரிசுரிமை என்பது தாய் என்னும் சொல்லின் அடியாகத் தோன்றிய தாயம் என்ற சொல்லால் குறிப்பிடப்பட்டது என்பது உண்மையே. எனினும், ஏடேறிய இலக்கியங்கள் அனைத்தும் தாயம் என்பதாகச் சுட்டி நிற்பது தாய்வழி உரிமையை அல்ல; மாறாக, தந்தைவழி உரிமையையே அவ்வாறு சுட்டுகின்றன. சேர, சோழ, பாண்டியர், அதியமான் ஆகிய தமிழக அரச வம்சங்கள் தந்தைவழி வாரிசுரிமைப்படியே ஆட்சியை நடத்திவந்தன என்பதற்குக் கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகன் கல் வெட்டுகளே சான்றாகும். அரசுரிமை, தந்தைக்குப் பின் மகனிடமே சென்று சேர்ந்ததற்கான பல சான்றுகள் சங்க இலக்கியத்தில் உள்ளன. பதிற்றுப்பத்தில் “பைதிரம் திருத்திய களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல்” என்ற வரி இடம்பெற்றுள்ளது. இதில் ‘பைதிரம்’ என்னும் சொல் நாட்டாட்சி உரிமையைக் குறிக்கிறது. பித்ரு (தந்தை) என்ற வட சொல்லின் அடியாகத் தோன்றியதே பைதிரம் என்பது.

இத்தகைய தந்தைவழி வாரிசுரிமைக்கு முரணாகச் சங்க காலம் தொட்டு அண்மைக் காலம்வரையிலும் பெண்வழிச் சமுதாயக் கூறுகளுடன் இருக்கிற மறவர், வேளாளரில் ஒரு பிரிவினர் போன்றோர் பலரும் இருந்து வருவதைப் பார்க்கிறோம். இத்தகைய முக்கியப் பண்பாட்டு வேறுபாடு இருக் கையில் தமிழ்ப் பண்பாடு என்பதாக ஒன்றைச் சொல்லும்போது எதைச் சொல்வது? சங்க காலத்திலேயே குடிகளாக - குடி என்பது ஆண் வழியில் அமைந்த ஒன்று- இருந்தவர்கள் இருக்கிறார்கள். இதே சங்க காலத்தில்குடி அந்தஸ்து இன்றியும் மணச் சடங்குகள் இன்றியும் இருந்த சமுதாயப் பிரிவுகளும் இருந்துள்ளன. ‘குடியானவன்’ என்னும் சொல்லாட்சி பிற்காலத்தில் குடியாக ஆனவர்களைக் குறிக்கக் கூடியது. அப்படியானால் இவர்களில் எந்தப் பிரிவினருடைய பண்பாட்டைத் தமிழ்ப் பண்பாடு என்று கூறுவது?

சங்க காலத்தில் மணவினைச் சடங்குகள் (கரணம்) இன்றி இருந்த மக்கள் பிரிவினர் இருந்துள்ளனர். அதே காலத்தில் மேலோர் மூவரும் (உயர் வர்ணத்தாராகிய அந்தணர், அரசர், வணிகர்) கரணத்துடன் இருந்துள்ளனர். இதில் எந்தப் பிரிவினர் பின்பற்றியது தமிழ்ப் பண்பாடு? கரணத்துடன் இருந்த மேலோர் மூவரிலேயே திருமணம் என்பது பலவகைத்தாக இருந்துள்ளது. தொன்முறை மனைவி/பெருங்குலக் கிழத்தி, பின்முறை வதுவை, வரையப்பட்டார், காமக்கிழத்தியர் எனத் தலை மகனுக்குரிய பலவகைப் பெண் கூட்டாளிகள் இருந்துள்ளனர். இதில் தொன்முறை மனைவியுடன் நிகழ்ந்த திருமணம் எப்படி நிகழ்ந்தது, பின் முறை வதுவையுடன் நிகழ்ந்த திரு மணம் எத்தகையது, வரைந்துகொள்ளுதல் - இந்த வரைந்துகொள்ளுதலிலேயே வெளிப்பட வரைதல், படாமை வரைதல் என இரண்டு உண்டு - எப்படி நிகழ்ந்தது போன்றவை குறித்த தெளிவு ஏதுமின்றி அகநானூற்றுப் பாடல்கள் இரண்டை மட்டும் வைத்துக்கொண்டு தமிழர் திருமணம் என்றாலே இதுதான் என்று முடிவுகட்டுவது முறையா? ‘தொன்முறை மனைவி’, ‘மறையின் வந்த மனையோள்’, ‘பின் முறை வதுவை’ போன்றவையெல்லாம் என்ன? இதில் தமிழர் பண்பாடு எது?

தலைவி கற்பு இலக்கணங்கொண்டு ஒழுகுகையில் அவளது தோழிக்குக் கற்பு இலக்கணம் கூறப்படவில்லை. தலைவியோடு இருக்கையில் கற் பொழுக்கத்தைப் பின்பற்ற வேண்டிய அவள் மற்ற நேரங்களில் அத்தகைய இலக்கணத்தைப் பின்பற்றியொழுக வேண்டியதில்லை என்று தொல்காப்பியம் (“அறத்தொடு நிற்கும் காலத்து அன்றி அறத்து இயல் மரபு இலள் தோழி என்ப” தொல்., பொருளியல்-11) தெளிவுறக் கூறியுள்ளமை நமக்கு எதைக் காட்டுகிறது? அறத்தொடு நின்று கற்புடன் ஒழுகுவது தமிழர் பண்பாடு என்றா அல்லது அறமின்றி, கற்பின்றி இருப்பது தமிழர் பண்பாடென்றா? ஏன், பரத்தையர்களிலே கூடப் பல வகையுண்டு. இற்பரத்தை, காதற்பரத்தை சேரிப்பரத்தை எனப் பல பெயர்கள் உள்ளன. இவை அனைத்தும் ஒரேநிலையில் வைத்துப் பார்க்கத் தகுந்தவை அல்ல. அப்படி இருக்கையில் தமிழ்ப் பண்பாடு ஒற்றை அடையாளத்துடன் இருந்ததாக நிறுவ முற்படுவது வரலாற்றைத் திரிப்பதாகும்.

“வைதிக இந்து மதத்தின் வர்ணா ஸ்ரமக் கருத்துகள், சடங்குகள் சம்பிரதாயங்கள் அதிகம் கலக்காத, மிகவும் அரிதாகக் கலந்த இலக்கியமே சங்க இலக்கியம். அந்த வகையில் அது ஆரோக்கியமானது” என்கிற பிரபஞ்சன் சங்க இலக்கியத்தை ஒழுங்காய்ப் படித்ததில்லை போலும். தமிழ்ப் பண்பாடு என்ற ஒன்றைக் கட்டமைக்க விரும்புபவர்கள் எப்போதுமே அதற்கு ஒரு நேர் அடையாளம் கொடுப்பதைவிட, வட/ஆரிய/சம்ஸ்க்ருத/பார்ப்பன எதிர்ப்பு என்ற கட்டமைப்பைச் செய்து, சார்பு அடையாளத்தை முன்வைப்பதையே செய்கின்றனர். தமிழர்கள் சமத்துவத்துவமாக இருந்ததைப் போலவும் வைதிகத்தின் வழியே வந்த வர்ணாஸ்ரமம் போன்ற அசமத்துவப் பண்பாடுகள் அதன் மீது ஆதிக்கம் செலுத்தியதாகவும் கூற முற்படுவது, ஆரியப் படையெடுப்பு எனும் கருத்தாக்கத்தின் பின்னணியில் விளைந்ததாகும். ஆரியப் படையெடுப்பு என்ற கருத்து வரலாற்றாளர்களால் எப்போதோ விட்டொழிக்கப்பட்டுவிட்டது. தமிழ் மொழியோ தமிழ்ச் சமூகமோ சம்ஸ்கிருதத்துடன் எதிர்நிலையில் மட்டும் மோதிக்கொண்டிருக்கவில்லை. மாறாக, இரு மொழிகளுமே உறழ்ந்தும் உறவாடியும் முரண்பட்டும் எனப் பல நிலைகளில் இருந்துள்ளன. சொல்லப் போனால், தொல்காப்பியத் தமிழ் இலக்கணத்திலேயே, “இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல், என்று அனைத்தே - செய்யுள் ஈட்டச் சொல்லே” என்று இலக்கணப்படுத்தப்படும் அளவுக்கு வடமொழி இருந்துள்ளது. இதை வெறுமனே வடமொழி ஆதிக்கம் என்பதாக மட்டுமே கருதுவோர் வரலாறு அறியாதவர்கள். தவிரவும், எழுத்ததிகாரம், பிறப்பு இயலில், ‘அளபின் கோடல் அந்தணர் மறைத்தே’ என்று இலக்கணம் வகுக்கும் அளவுக்குப் பங்களிப்பு செய்துள்ளதாகவும் பார்க்கலாம்.

மேலும், ‘ஆரியம் நன்று தமிழ் தீது’ என்பதாக வேட்கோ குயக்கோடன் கூற, அவனைச் சபித்த நக்கீரர், அந்தணர்களாகிய (அந்தணர் என்னும் சொல், தீயுடன் தொடர்புடையது; அப்பாடலில் தீயில் பொருள்களை இடும்போது உச்சரிக்கப்படுகிற ‘சுவாஹா’ என்னும் மந்திரச் சொல் இடம்பெற்றுள்ளதே இதற்குச் சான்று.) பரணரையும் கபிலரையும் வாழ்த்தியே வேட்கோ குயக்கோடனை இறந்து போம்படிக்குச் சபிக்கிறார். அகத்தியர் பெயரால் அவனை மீண்டும் உயிர்ப்பிப்பதும் கருதத்தக்கது; இந்த அகத்தியர் என்னும் பெயர் ரிக்வேதத்திலும் (ரிக் வேதத்தின் 1ஆவது மண்டலத்தில், அனுவாகம் 23இல் 167 முதல் 191 வரையுள்ள 25 சூக்தங்கள் அகத்தியரால் பாடப்பட்டவை) இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சங்க இலக்கியங்களில் வைதிக இந்துமத வர்ணாஸ்ரமக் கருத்து அரிதே என்று பிரபஞ்சன் சொல்வது உண்மைக்கு முரணானது. தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றுக் காலத்தின் தொடக்கத்திலிருந்து நான்கு வர்ணம், அதாவது ‘வேற்றுமை தெரிந்த நாற்பால்’ இருந்துவருவதுடன், பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி, இராஜசூயம் வேட்ட பெருநற்கிள்ளி போன்ற வேந்தர்கள் இருந்ததைக் கொண்டு சங்க காலத்திலேயே வைதிக முறை நன்கு வேரூன்றியிருந்ததை நாம் அறிய முடிகிறது. வர்ணம் என்ற கருத்தோட்டம் ஆரிய வைதிக சமயத்துடன் தொடர்புடையதா என்பதே தனியொரு விவாதத்திற்குரியது. இது ஒருபுறமிருக்க, கலித்தொகை, மருதக் கலி நான்காம் பாடல்,

போதவிழ் பனிபொய்கைப் புதுவது தளை
தாதுசூழ் தாமரைத் தனிமலர்ப் புறஞ்சேர்ப
காதல்கொள் வதுவைநாட் கலிங்கத்துள் ஒடுங்கிய
மாதர்கொள் மானோக்கின் மடந்தைதன் துணையாக
ஓதுடை யந்தணன் எரிவலஞ் செய்வான்போல்
ஆய்தூவி அன்னந்தன் அணிநடைப் பெடையொடு
மேதகத் திரிதரூஉம் மிகுபுனல் நல்லூர: (1-7 வரிகள்)

இதற்கு உரை கூறும் நச்சினார்க்கினியர், மேல் விளக்கமாகக் கூறுவதாவது: “வலஞ்செய்வான்போ லென்ற ஏனையுவமம் பய வுவமமின்றி வினையுவம மாத்திரையை மேல்வருகிற கருப்பொருட்குக் கொடுத்து அதனைச் சிறப்பித்து நின்றது, அன்னத்திற்கு அங்கியங் கடவுள் அறிகரியாக மந்திர விதியாற் சூழுங் கருத்தின்றித் தாமரையைச் சூழ வருகிற தொழின் மாத்திரையையே கோடலின். அந்தணன் எரிவலஞ் செய்வான் போல அக்கருத்தில்லாத அன்னம் பெடையோடே தனிமலரைச் சூழத் திரியும் ஊர வென்றதனான் நீயும் அக்கருத்தின்றிக் குலமகளிரைத் தீவலஞ்செய்து வரைந்துகொண்டு பாதுகாவாது ஒழுகுகிற நினக்கு எம்மைப் பாதுகாத்தலுள தாமோவெனக் காமக்கிழத்தியும் உள்ளுறையுவமங் கூறினாளாக உரைக்க: இதனை “ஏனோர்க் கெல்லாமிடம் வரைவின்றே” என்று உவமைப் போலியிற் கூறிய விதியாற்கொள்க” என்கிறார்.

ஊரன் தன் குலத்தைச் சேர்ந்த மகளிரைத் தீவலஞ்செய்து திருமணஞ் செய்துகொண்டதாக நச்சினார்க்கினியர் விளக்கமளிக்கிறார். ஆனால் அக நானூற்றுப் பாடல்கள் மட்டுமே தமிழ்ப் பண்பாடு என்று சொல்வது எத்தகையது? ஒரு வாதத்திற்காக அப்படியே வைத்துக்கொள்வோம். தமிழர் திரு மணத்தில் தாலி இல்லை என்பது குறித்து மிக நீண்ட விவாதங்கள் அறிஞர்களிடையே நிகழ்ந்துள்ளன. இதில் அடிப்படையான விஷயம், தாலி என்பதாக இப்போதைய தமிழ்ப் பெண்கள் கட்டியிருப்பதைப் போன்ற ஒன்றை அணிந்திருந்தார்களா என்பதைவிட, தாலி என்பது மங்கல அணிகலனாகப் பார்க்கப்படுவதுதான். எனவே மங்கலம், அமங்கலம் என்னும் கருத்தாக்கம்தான் இதில் முக்கியமானதேயொழிய இப்போதிருக்கிற வடிவங் கொண்ட தாலி அணிந்திருந்தார்களா என்பதல்ல. ஏனெனில் இந்த வடிவங்கள் காலப் போக்கில் மாறுதலுக்கு உட்படக்கூடியவை. பிரபஞ்சன் குறிப்பிட்டுள்ள விவரத்திலேயே, ‘மங்கல மகளிர் (வாலிழை மகளிர்) தலையில் நீர்க் குடத்தினை எடுத்துவந்து வைத்ததாக’ ஒன்றிலும், ‘மங்கல மகளிர் மணப் பெண்ணை நீராட்டினர்’ என்றும் வருகிறது. மணப்பெண்ணை நீராட்டியவர்கள் எந்த அடிப்படையில் ‘மங்கல மகளிர்’ ஆயினர் என்பதுதான் முக்கியம். சங்க இலக்கியத்தில் வேறுபல இடங்களில் ‘மாணிழை மகளிர்’ என்றும் வருகிறது. இந்த வாலிழை மகளிர் என்போர் ஒளி பொருந்திய அணிகலன்களை அணிந்திருந்தோராவர்; மாணிழை மகளிரும் அவ்வாறே மாண்புமிக்க அணிகளை அணிந்திருந்தனர். இவர்கள்தான் மங்கலப் பெண்கள் என்று குறிப்பிடப்படுகின்றனர். ‘ஈகையரிய இழையணி மகளிர்’ என்னும் புறநானூற்று (புறம். 127) வரிக்கு, 13ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பழைய வுரை, “கொடுத்தற்கரிய மங்கலிய சூத்திரத்தை அணிந்த மகளிர்” என்றே கூறுகிறது. ஆனால் கணவனை இழந்த பெண்கள் இத்தகைய வாலிழை மகளிராகவும் மாணிழை மகளிராகவும் இழையணி மகளிராகவும் கூறப்படவில்லை. மாறாக, அணிகலன்கள் களைவது குறித்தும் களைந்தவர்கள் குறித்தும் (“நிரையிவண் தந்து நடுகலாகிய / வென்வேல் விடலையின்மையிற் புலம்பிக் / கொய்ம்மழித் தலையொடு கைம்மையுறக் கலங்கிய / கழிகல மகடூ”, புறம். 261) சங்க இலக்கியக் குறிப்புகள் உள்ளன. அணிகலன் களையுமாறு செய்யப்பட்ட அத்தகைய மகளிர், ‘கழிகல மகடூஉக்கள்’ என்பதாக அமங்கலமானோராகவே கருதப்பட்டனர். இவ்வாறு மங்கல, அமங்கல மகளிரை வேறுபடுத்தியது எது? அவர்களுக்கு ஏதோவோர் அணிகலன் இருந்திருக்க வேண்டுமென்ற முடிவுக்கு நாம் வருவதில் தவறில்லை. அது இன்றைய தாலியாகத் தான் இருக்க வேண்டுமென்பதல்ல என்பதையும் நாம் மனதிற்கொள்ள வேண்டும். அமங்கல மகளிர் கூந்தல் கொய்தது (“. . . மகளிர் கைம்மை கூர / அவிரறல் கடுக்கு மம்மென் குவையிருங் கூந்தல் கொய்தல் கண்டே”, புறம். 25) பற்றிப் பல குறிப்புகள் உள்ளன. மயிர் களைதல் என்பது ஆரியப் பழக்கமோ திராவிடப் பழக்கமோ அல்ல. மாறாக, செமித்தியப் பழக்கமாகும். அதுவும் கலந்ததுதான் தமிழ்ப் பண்பாடு.

மேலும், குறிப்பிட்ட நட்சத்திரங்கள் பொருந்தி இருந்த நேரத்தில் திருமண வினை செய்யப்பட்டதாக அக நானூற்றுப் பாடல் தெரிவிக்கிறது. இந்தச் சடங்குகளைக் குறிப்பிட்ட அந்நாளில், குறிப்பிட்ட நேரத்தில் செய்தது வைதிகப் பண்பாடு சார்ந்ததா அல்லது தமிழ்ப் பண்பாடு சார்ந்ததா? குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் திருமணம் செய்யும்படிக்கு வைதிகத்தில் சொல்லியிருந்தால் அது மூடநம்பிக்கை தமிழ் மரபு என்றால் அது மூடநம்பிக்கை இல்லையா? வைதீகம் என்றாலே ஆரோக்கியமற்றதாகப் பார்க்கிற பிரபஞ்சனின் பார்வை, டார்வினியப் பரிணாமக் கோட்பாடுகள் பெரிதும் உறுதிப்படுத்தப்பட்டுவிட்ட இந்தக் காலத்தில் இருந்துகொண்டு, நவீன விஞ்ஞான யுகத்திற்கு முற்பட்ட காலத்திய பழைய/புதிய ஏற்பாட்டில் சொல்லப்பட்ட படைப்புக் கருத்தை இன்றைய விஞ்ஞானப் பார்வையின் அடிப்படையில் விமர்சிப்பதைப் போன்றது - அதாவது அந்தக் காலத்தில் அப்படி இருந்ததே தவறு; அவர்கள் அப்போதே நவீன விஞ்ஞானக் கோட்பாடுகளைப் பின்பற்றி ஒழுகியிருக்க வேண்டுமென்று கூறுவதைப் போன்றது. இன்றைய நவீன விஞ்ஞான யுகத்தில் இருந்துகொண்டு பழைய/புதிய ஏற்பாட்டில் இருக்கிற படைப்புக் கோட்பாடே சரி, அதுவே இன்றைக்கும் பொருந்தும் என்று எவரேனும் கூறினால் அது கண்டனத்திற்குரியதுதான். ஆனால் பழைய/புதிய ஏற்பாட்டில் படைப்புக் கோட்பாடு இவ்வாறு கூறப்பட்டுள்ளதே ஆரோக்கியமற்றது என்னும் பார்வை காழ்ப்புணர்விலிருந்து கூறப்படும் விமர்சனம்.

கலித்தொகை முல்லைக் கலியில் வரும் ஒரு பாட்டு:
ஆயர் மகனாயின் ஆயமகள் நீயாயின்
நின்வெய்ய னாயின் அவன் வெய்யை நீயாயின்
அன்னை நோதக்கதோ இல்லைமன் நின்நெஞ்சம்
அன்னை நெஞ்சாகப் பெறின்; (7:20-25)

இதற்கான உரை: “அவன் ஆயருடைய மகனாயிருப்பானாயின், நீ ஆய்ச் சாதியிற் பிறந்த மகளா-யிருப்பை யாயின், அவன் உன்னை விரும்பியிருப்பானாயின் நீ அவனை விரும்பியிருப்பையாயின் தாய் மிகவும் நோவத்தக்கதொரு காரியம் இல்லைகாணென்றாள்; அது கேட்ட தலைவி, அன்னையுடைய நெஞ்சு நின்னுடைய நெஞ்சாகப் பெறின் அவள் நோவத்தக்கதோ இல்லையென்றாள்” என்பதாகும். அதாவது இரண்டுபேருமே ஆயர் குலத்தவராக இருப்பின் தாய் அதிகம் நோகமாட்டாள் என்பதே இதன் பொருள். சாதி எந்த அளவுக்கு உறுதிப்பட்டிருந்தது என்பதை இது நமக்குக் காட்டுகிறது.

இதற்கு நேர்மாறான ஒரு பாடலையும் நாம் காண்கிறோம்:

யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி யறிதும்
செம்புலப் பெயனீர் போல
அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே. (குறுந்தொகை. 40)

இவற்றில் எது தமிழ்ப் பண்பாடு?

பல்வேறு மணங்களைக் கால வளர்ச்சியில் கண்ட தமிழ்ச் சமூகம் ஒருதார மணநிலையை எய்தியது சங்க காலத்திற்குச் சற்று முன்னர்தான் என்கிறார் பிரபஞ்சன். எதன் அடிப்படையில் இப்படி முடிவுசெய்தாரோ தெரியவில்லை. இதையும் தாண்டி, இந்தக் காலகட்டத்தில் பெண்கள் காதலிக்கும் சுதந்திரத்தை ஓரளவாவது பெற்றார்கள் என்கிறார். ஆனால் அந்தச் சுதந்திரம்கூட இவரே அக்கட்டுரையில் சித்தரித்துள்ளதைப் போன்ற சுதந்திரம் தானேயன்றி வேறல்ல.

இவை ஒருபக்கமிருக்க, பூதப்பாண்டியன் மனைவி பெருங்கோப்பெண்டு கூறியதாகவுள்ள புறப்பாடலில் வரும் செய்தியைச் சொல்லி, ‘மன்னனின் மனைவிக்கே கைம்மை நோன்பு இத்தனை கொடுமையெனில் பிறபெண்கள் எத்தகைய துன்பங்களை அனுபவித்திருப்பார்கள்’ என அங்கலாய்க்கிறார். மன்னரின் மனைவிக்குத்தான் இத்தனைத் துன்பமேயன்றி மற்றவர்க்கல்ல. ஏற்கனவே சுகபோகங்களை அனுபவித்து வந்த மன்னன் மனைவியர் அதிகாரத்தோடும் செல்வ வளத்தோடும் இருந்திருப்பர்; அதனால் அவர்களுக்குத்தான் இது அதிகக் கொடுமையான ஒன்று. இந்தத் தர்க்கத்தைக் கொண்டு சாதாரணப் பெண்கள் இதைவிடவும் துயருற்றிருப்பார்கள் என்று நாம் முடிவுக்கு வர முடியாது. உயர்குடிப் பெண்டிர்க்கான கடமைகளை வகுப்பது சமுதாயப் பார்வையே ஆகும். அதாவது சமுதாயம் எப்போதுமே அவர்கள்மீது தன் பார்வையைப் பதித்திருப்பதால் அவர்களுக்குக் கற்பு, பதிவிரதத் தன்மை போன்ற ஆதர்சங்கள் உருவாகி அவர்களை ஆட்கொண்டுவிடுகின்றன. இடைநிலை, கீழ்நிலைச் சமூகப் பெண்டிர்க்கு இத்தகைய நிர்ப்பந்தங்கள் இல்லை.

பிரபஞ்சன் குறிப்பிட்டுள்ள புறநானூற்றுப் பாடலில் உள்ள விஷயம் மற்ற சில பதிவுகளுடன் சேர்த்துப் பார்க்க வேண்டியது. ஒருதார மணம் என்பது கற்பிலக்கணத்துடன் இணைந்தது. உண்மையில் இது ஒரு கணவர் மணமேயன்றி ஒருதார மணம் அல்ல. பெண்ணுக்குத்தான் ஒரு கணவனேயன்றி ஆணுக்கு ஒரு மனைவியல்ல. கணவன் இறந்த செய்தியைக் கேட்டதும் மனைவிக்கு உயிர் பிரிய வேண்டும், அல்லது அவன் உயிர் பிரிந்ததைக் கண்டதும் மனைவியின் உயிர் பிரிய வேண்டும், இவை இரண்டும் இல்லையெனில், அவனோடு உடன்கட்டை ஏற வேண்டும், அதுவும் இல்லையாயின் கைம்மை நோன்பு ஏற்று வாழ வேண்டும் என்பதாகத் தமிழ் மரபில் கூறப்பட்டுள்ளது. கணவன் இறந்த செய்தியைக் கேட்ட மாத்திரத்திலேயே உயிர் பிரியக்கூடிய அளவு கற்புநிலை கற்பிக்கப்பட்டு இருந்ததெனில், அது பிரபஞ்சன் கருதுவதைப் போல, சங்க காலத்திற்குச் சற்று முன்னரே ஒருதார நிலையை எய்தியதாகச் சொல்வதுடன் பொருந்தக்கூடியதல்ல. சங்க இலக்கியம் காட்டும் சமூகப் பொருளாதார வளர்ச்சி நிலையுடனும் இது பொருந்தியிருக்கவில்லை.

இது மட்டுமல்ல. அச்சம், மடம், நாணம் என்ற பண்புகளுடன் தலைவிகள் சித்தரிக்கப்பட்டுள்ள அதே சங்க இலக்கியத்திலேயே இன்னொரு வகையான பெண்ணையும் பார்க்கிறோம். அவளது இயல்பைக் கடியலூர் உருத் திரங்கண்ணனார் பின்வருமாறு கூறுகிறார்:

“யானை தாக்கினு மரவுமேற் செலினு
நீனிற விசும்பின் வல்லேறு சிலைப்பினுஞ்
சூல்மகள் மாறா மறம் பூண் வாழ்க்கை”
(பெரும்பாணாற்றுப்படை 134-136)

‘யானை தாக்கினாலும் பாம்பு அவள்மேல் ஊர்ந்து சென்றாலும், இடியே விழுந்தாலும் அவளது சூல் மாறாது, அதாவது கரு கலைந்திடாத அளவுக்கு மறம் செறிந்த வாழ்க்கை’ என்பது இதன் பொருள். இத்தகைய மறப்பண்புகொண்ட எயினப் பெண் ஒருபோதும் தலைவியாகச் சங்க இலக்கியத்தில் சித்தரிக்கப்படவில்லை என்பதையும் நாம் மனத்தில் கொள்ள வேண்டும். பெண்கள் அச்சம், மடம், நாணம் ஆகியவற்றுடன் விளங்குவது தமிழ்ப் பண்பாடா அல்லது மேற்படி பாடலில் உள்ளது தமிழ்ப் பண்பாடா? நாணம் என்பது தமிழ்ப் பெண்கள் அனைவருக்கும் உரியதன்று என்பதைச் சங்க இலக்கியங்களை நன்கு பயின்றவர் அறிவர். தமிழ்ப் பெண்களில் உயர்குடிப் பெண்டிருக்கு மட்டுமே நாணம் என்னும் பண்பு கூறப்பட்டுள்ளது. மற்றவர்க்கன்று.

ஆரிய அரசன் பிரகதத்தனுக்குத் தமிழ் கற்பிப்பதற்காகப் பாடப்பட்டதாகக் குறிஞ்சிப் பாட்டைக் கூறுவதுண்டு. ஆனால் இது எந்த அளவுக்குச் சரி என்பது மிகப் பெரிய ஒரு வினா. இது சரி என்றால் தமிழ்ப் பண்பாடு என்றாலே களவு மணம் என்று ஆகிவிடுகிறது. அதே நேரத்தில் குறிஞ்சிப் பாட்டுக்கான துறை ‘அறத்தொடு நிற்றல்’ என்பது. பொதுவாகத் தமிழுக்கும் புறப்பொருளுக்கும் உள்ள நெருக்கத்தைவிடத் தமிழுக்கும் அகப்பொருளுக்குமான நெருக்கமே அதிகம். தமிழ் என்றால் அகம் என்று பொருள். இறையனார் களவியலுரைக்கு, அகப்பொருள் விளக்கம் என்றும் ஒரு பெயருண்டு. எனவே தமிழ் மரபில் கற்பே கிடையாது; களவும் களவு வழி வந்த கற்புமே உண்டு என்று யாரேனும் முடிவுகட்டினால் அவர் தனது அறியாமையை வெளிப்படுத்திக்கொள்வதாகவே பொருள். ‘உயிரினும் சிறந்தன்று நாணே; நாணினும் செயிர் தீர் காட்சிக் கற்பு சிறந்தன்று’ என்பது தொல்லோர் கிளவியாகும்.

இப்படியெல்லாம் பல்வேறு நிலைகளில் தமிழ்ப் பண்பாடு இருந்தது என்று சொன்னதும் திணைப்பண்பாடே தமிழர்களுக்குரிய “அசல் பண்பாடு”; மற்றவையெல்லாம் அயல் பண்பாடு என்று கூறக்கூடியவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தமிழ்ச் சமூகத்தின் அரசியல் பொருளியல் வளர்ச்சி, அரசுருவாக்கம் பற்றி அறியாதோராவர். சங்க இலக்கியம் காட்டும் தமிழ்ச் சமூகம் தெளிவான, வளர்ச்சியடைந்த ஒரு நிலப்பிரபுத்துவச் சமூகம். ஐரோப்பாவில் இத்தகைய நிலப்பிரபுத்துவம் கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்குப் பின்னரே அரும்பத் தொடங்கியது. கி.பி. 14ஆம் நூற்றாண்டு வாக்கில்தான் நன்கு வளர்ச்சியடைந்திருந்தது. எனவே தமிழர்களெல்லாம் வெறும் திணைக்குடிகள் என்பதாகக் கருதுவதும் தவறு. தமிழ்ப் பண்பாடு இதுதான் எனக் குறிப்பாக எதையும் சொல்வதற்கு முன்னர் இனவியல் வகையில் தமிழர்கள் மத்தியில் என்னென்ன இனங்கள் கலந்துள்ளன, தமிழ்நாட்டில் எந்தெந்தக் காலகட்டங்களில் எப்படியெப்படிப்பட்ட மக்கள் குடியேறினர், தமிழ் மொழியில் என்னென்ன மொழிகளின் தாக்கங்கள் உள்ளன என எல்லாவற்றையும் கணக்கில் கொண்டு பரிணாமப் போக்கில் வளர்ச்சியடைந்த ஒன்றாகவே தமிழ்ப் பண்பாட்டை அடையாளங் காண வேண்டும்.

ஏடறிந்த வரலாறு எனப்படும் சங்க இலக்கியங்களில் பிரபஞ்சன் போன்றோர் சொல்லக்கூடிய ஆரிய/சம்ஸ்கிருத/பார்ப்பன/வைதிகப் பண்பாடுகள் தமிழ்ச் சமூகத்துடன் இரண்டறக் கலந்த நிலையையே காண்கிறோம். அதற்கு முன்னர் தமிழர் பண்பாடு வேறாக இருந்ததற்குச் சான்றுகள் எவையுமில்லை என்பதுடன் இத்தகைய கலப்புகள் அனைத்தும் தமிழர்கள் என்போர் தமிழ்நாட்டுக்குள் வந்த பின்னர் ஏற்பட்டதெனக் கருதுவோர்தம் முடிவுகளை தொல்பொருள் சான்றுகள் மற்றும் தொல்மானுடக் குடியேற்றச் சான்றுகளுடன் பொருத்திப் பார்த்தால் இவை அனைத்தும் தமிழர்கள் தமிழகத்திற்கு வருமுன்னரே ஏற்பட்டவை என்பதை அறிய முடியும். தமிழர்கள் என்போர் தற்போதுள்ள தமிழ் நிலப்பரப்புக்கு வந்து சேர்ந்த காலம் என அநேகமாக கி. மு. 10 அல்லது அதிகபட்சமாக கி. மு. 12ஆம் நூற்றாண்டைக் கொள்ள முடியும். அதற்கு முன்னர் தமிழகத்தில் இருந்த மக்கள், அவர்கள் பேசிய மொழி போன்றவை தமிழ் மொழியிலோ அல்லது பண்பாட்டிலோ செலுத்திய தாக்கம் என்பது மிகமிகக் குறைவே. பொதுவாக, தமிழ் மொழி மற்றும் பண்பாட்டின் தூய்மையை வலியுறுத்துவதன் மூலமே தமிழைத் தழைத்தோங்கச் செய்ய முடியுமென்று பலரும் கருதுகின்றனர். தமிழ் மற்றும் தமிழர் தம் பண்பாட்டுத் தூய்மையைக் காப்பாற்ற நினைத்துத் தமிழர்களைத் திணைக் குடிகளாக, இனக்குழுக்களாக, இயல்பான வளர்ச்சி நிலைக்குப் பொருந்தாத வகையில் சித்தரிக்கும் அளவுக்குச் செல்கின்றனர். இதனாலேயே இக்கட்டுரையின் தொடக்கத்தில் நாம் குறிப்பிட்டதைப் போல் தமிழுக்கு ஒரு எதிர் அடையாளத்தைக் கட்டமைத்துத் தமிழை நிலைநிறுத்த முற்படுகின்றனர். மாறாக, தமிழ்ச் சமூகத்தின் வளர்ச்சியைக் கணக்கில் கொண்டு பார்ப்போமாயின் தமிழும் தமிழர் தம் பண்பாடும் இவ்வளவு காலமாக நிலைத்திருப்பதற்குக் காரணம் தமிழ் மொழியும் தமிழ்ச் சமூகமும் பல்வேறு சமூகங்களுடனும் மொழிகளுடனும் உறவாடி - நீஷீsனீஷீஜீஷீறீவீtணீஸீ sஷீநீவீமீtஹ்யைப் போன்று - அவற்றின் சிறந்த அம்சங்களை ஏற்றுத் தன்வயப்படுத்திக்கொண்டு பல்பண்பாட்டுச் சங்கமமாக இருப்பதுதான். பல்வேறு துறைகளிலான தரவுகளை இணைத்துப் பார்க்காமல் யானையைப் பார்த்த பார்வையற்ற ஐவர் இதுதான் யானை என்று விவரித்ததைப் போலல்லாமல் அனைத்தையும் சேர்த்துப் பார்ப்பது விசாலமான பார்வையைத் தருவதுடன் விரோதங்களையும் எதிர் அடையாளங்களையும் விட்டொழிப்பதை சாத்தியப்படுத்தும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

ஓர் ஆணும் பெண்ணும் இணைவதையும் தமிழர் தெய்வீகமாகக் கருதினார்கள். பால்வரைத் தெய்வத்தின் முயற்சியன்றி ஓர் ஆணும் – பெண்ணும் கூடுதல் நிகழாது என்று தொல்காப்பியம் கூறுகிறது. ஆண்டவனை அன்பு வடிவன் என்றனர்; ஆண் – பெண் இணையும் அகத்துறையை அன்பின் ஐந்திணை என்றனர். இது பற்றிய துறையையே வெளிப்படப் பேசாத அகத்துறை என்றனர். மதுரை சொக்கலிங்கமாம் இறைவனே தெய்வீகமான அகத்துறைக்கு இலக்கணம் வகுக்கும் ‘இறையனார் களவியல்’ என்ற நூல் அளித்தான் என்றனர்.

   மிகவும் தெய்வீகமாகக் கருதப்பட்ட ஆண் பெண் இணைப்பை ‘ஓருயிர்க்கிழமை’ என்றனர். தெய்வீகமான இந்த அகத்துறையில் பாடப்படும் பாடல்களில், எப்படி தெய்வத்தின் பெயர் கூறப்படாது என்ற மரபைக் கடைப்பிடித்தார்களோ அப்படி தலைவன் – தலைவியர் பெயர்களைக் கூறக் கூடாது என்று தொல்காப்பியம் வரையறுத்தது.

    மக்கள் நுதலிய அகன்ஐந் திணையும்

    சுட்டி ஒருவர்ப் பெயர்கொளப் பெறாஅர்   (தொல்; 1003)

   திருமணத்தில் ஓர் ஆணையும் பெண்ணையும் இணைக்கும் சடங்கு தாலி கட்டுவதால் அமைவது, அது ஓருயிர்க்கிழமையை நிகழ்த்தும் தெய்வீகச் சடங்காதலால் அதைச் சுட்டிக் கூறுதல் கூடாது என்ற வழிவழி கடைப்பிடித்த தமிழர் மரபின் காரணமாக அதை நேரடியாகக் கூறாமல் உய்த்துணர வைத்தார்கள். அடையாளத்தால் அதை இழையணிச் சிறப்பு என்றார்கள். சேர்த்து வைத்த இணையரில் கணவன் இறக்கப் பிரிவு நேரும் போது இழை களைந்தனர் பெண்டிர் என்று கூறினார்கள். இழையைக் கட்டி இருந்தால் தானே கணவன் இறப்பில் அதைக் களைய முடியும் என்று திருமணத்தில் தாலி கட்டியதை உய்த்துணர வைத்தார்கள்.

    தெய்வீகமான ஒன்று ஒருவர் உடலிலும் உயிரிலும் மாற்றத்தை ஏற்படுத்துவதை எல்லாம் இரகசியமாகவே செய்தார்கள். உதாரணத்திற்கு குரு ஒரு சீடனுக்கு உபதேசிக்கும் போது அது காது வழியாக உயிரில் புகுந்து மாற்றத்தை ஏற்படுத்துகிறது. எனவே அதை மறைத்து தொடர்புடைய இருவரும் துணியால் போர்த்தப்பட்டு உபதேசத்தைக் கூறிட வேண்டும் என்று மரபை அமைத்தார்கள். உபதேசங்கள் எல்லாம் மதில் மேல் நின்று கூறப்படுவதல்ல.

   எனவே ஓருயிர்க்கிழமையை தொடர்புடைய ஈருயிர் அடைய வழிவகுக்கும் நிகழ்ச்சியைப் பற்றி நேரடியாகக் கூறாமல் சங்க இலக்கியங்கள் மரபைக் கடைப்பிடித்தன. ஆனால் அதனைப் பிற இடங்களில் கூறி தாலி கட்டுவது அப்போது நடந்தது என்று உய்த்துணர வைத்தார்கள். ஆக, தாலி கட்டுவது அத்தனை புனிதமாக தெய்வீகமாகத் தமிழர்கள் கருதினார்கள் என்பது தெரிய வருகிறது.

 

வடமாநிலத்தில் பதவி வகித்த ஓர் ஆளுநரின் மகன், தான் அவருடை மகன் தான் என்பதை நிரூபிக்க நீதிமன்றம் முன் எத்தனை ஆண்டுகளாக பாடுபட வேண்டி இருந்தது என்றும் அதற்காக (DNA) விஞ்ஞான சோதனை எல்லாம் நடைபெற்ற பின்னர் தான் வழக்கு முடிவிற்கு வந்தது என்பதையும் நாம் அறிவோம். இன்றைக்கே இந்த நிலை என்றால் மிகப் பழைய கற்காலத்து நிலைமையை எப்படிச் சொல்வது? அக்காலத்திய பெண்ணின் சங்கடத்தை எப்படி வர்ணிப்பது?

     அக்காலத்திய சமூகச் சான்றோர்கள் சிந்தித்தார்கள்; இதை இப்படியே விட்டுவிட முடியாது. இதனால் சமூகத்தில் முறை பிறழ்ந்த குழந்தைகள் பல்கிப் பெருகி சமூக அடித்தளமே ஆட்டம் கண்டுவிடும். எனவே இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று சிந்தித்தார்கள். இறுதியில் ஆண் – பெண் இருவரும் பலரறிய மணந்து கொள்ளும் ஏதாவது ஒரு சடங்கை உண்டு பண்ணி அந்தக் கட்டுக்குள் இருவரும் கூடுவதானால், பொய்யான, முறையற்ற ஆண் – பெண் உறவுகளைத் தடுத்துவிடலாம் என்று எண்ணினார்கள். அப்படி அவர்கள் கூடிக் கண்டு பிடித்த சடங்கு தான் திருமணம் என்பது என்று தொல்காப்பியம் கூறுகிறது. உரிய தொல்காப்பிய வரிகள் வருமாறு:

    “பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்

     ஐயர் யாத்தனர் கரணம் என்ப”

    இங்கு கரணம் என்பது திருமணமாகிய சடங்கைக் குறிக்கும். ஐயர் என்பது கற்காலச் சான்றோர்களைக் குறிக்கும். காரணம், தொல்காப்பியம் இடைச்சங்க காலத்தில் கதவபுரம் என்னும் கபாடபுரத்தில் தெற்கே குமரி முனைக்கும் கீழே ஒரு கடல்கோளுக்கு முன்னே அரங்கேறிய நூல். அப்போது தொல்காப்பிய நூல் பிறந்த இடத்திற்கு 5000 மைல்களுக்கு வடக்கே கூட சமஸ்கிருதமும் இல்லை; சமஸ்கிருத வேத பிராம்மணர்களும் இல்லை. எனவே இப்போது நாம் ஐயர் என்று தவறாகப் பிராம்மணர்களுக்கு ஏற்றிக் கூறுவது அப்போதைக்குப் பொருந்த வாய்ப்பே இல்லை. எனவே இந்த ஐயர் தமிழ்ச் சான்றோர் தலைவர் என்பதே முற்றான உண்மை.

      ஆகவே தமிழ்ச் சான்றோர்கள் சமூகத்தில் நடந்த தவறுகளை திருத்தி ஒரு நாகரிகக் குடும்ப அமைப்புள்ள சமூகத்தை உருவாக்க செய்த உத்தியே இந்தத் திருமணச் சடங்கு. இது இரண்டு பேருக்கு அளித்த பாதுகாப்பு. ஒன்று சமகத்திற்குப் பாதுகாப்பு; இன்னொன்று பாதிக்கப்படக் கூடிய பெண்ணுக்கும் பாதுகாப்பு. இப்படித் தான் இந்த அரிய திருமணச் சடங்கு தமிழ் மக்களிடையே உதயமாயிற்று என்று தொல்காப்பியம் கூறுகிறது.

    இங்கே கரணம் என்பது இரு பொருள் உடையது. கரணம் என்பது அரணம் என்பதன் திரிபு. அரணம் என்றால் பாதுகாப்பு என்று பொருள்; அரண் செய்வது என்று பொருள். அரணம் கரணம் எனத் திரிந்தது – அனல் என்பதே கனல் என்று திரிந்தது போல என்க.

    கரணம் என்ற சொல்லிற்கு எழுதுவது என்றும் பொருள். ஓலை எழுதுபவனுக்குக் கரணத்தான் என்று பெயர்.

    எனவே மேற்கண்ட தொல்காப்பிய நூற்பா வரியில் ‘ஐயர் யாத்தனர் கரணம் என்ப’ என்பது தமிழ்ச் சான்றோர் தலைவர்கள் கரணம் என்னும் பாதுகாப்புடைய திருமணச் சடங்கை யாத்தனர் என்று ஒரு பொருள். இன்னொரு பொருள் என்ன எனில் தமிழ்ச் சான்றோர் தலைவர்கள் திருமணச் சடங்கை ஓலையில் எழுதி பாதுகாப்பு செய்தனர் என்பதாகும். இது உடம்பொடு புணர்த்தல் என்னும் இலக்கண விதியால் அமைந்தது.

    இதில் இரண்டு பொருளும் சிறப்பு என்றாலும், ஓலையில் எழுதிப் பாதுகாப்பு செய்தனர் என்பது சிறப்பில் சிறப்பு. இதன் அடிப்படையில் தான் தாலி என்ற பெயர் வந்தது. தாலம் என்ற தமிழ்ச் சொல்லிற்குப் பனையோலை என்று பொருள்.

   எனவே பனையோலையில் என்ன எழுதப்பட்டது என்றால் மணமகன், மணமகளை எவ்வித துரோகமும் இன்றி தன் இறுதி மூச்சு உள்ள வரை பாதுகாப்பேன் என்று எழுதிக் கைச் சாத்திட்டு, சாட்சிகளும் அதில் கைச் சாத்திட அதைச் சுருட்டி ஓர் உலோகக் குழையில் இட்டு அதனை ஒரு கயிற்றில் கட்டி மணமகள் கழுத்தில் கட்டுவது தான் தாலி. தாலமாகிய பனை ஓலையில் எழுதிக் கோத்த கயிறானதால் அதற்குத் தாலி எனப் பெயர் வந்தது. அது பாதுகாப்பாக எழுதியது என்பதால் தொல்காப்பியர் கரணம் என்றார். காரணம், கரணம் என்பது அரணம் என்பதன் திரிபாய் பாதுகாப்பையும் குறிக்கும், அதில் எழுதுவதே பாதுகாப்பு என்பதால் எழுதுவதைக் குறிக்கும் சொல்லான கரணமும் ஆகும் என்று ஒன்றிலேயே இரண்டையும் புணர்த்தி, உணர்த்தினார் என்க.

   இதில் மணமகன் தான் உறுதிமொழி எழுதி மணமகள் கழுத்தில் கட்டினான் என்பது எதனால் பெறப்படும் என்று கேள்வி எழும். பொய்யும், வழுவும் செய்யக் கூடியவன் மணமகன் தான் என்பதால் பொய்யும், வழுவும் தோன்றிய பின்னர் எழுதிக் கொடுக்க வேண்டியவன் அவனே ஆதலால் என்க.

    இல்லை, மணவோலை என்று சொல்வது உண்டே, அது திருமணம் இன்ன நாளில், இன்னார் மகனுக்கும், இன்னார் மகளுக்கும் நடைபெறும் என்று அறிவிப்பது தானே என்றும் சிலர் குழப்பிக் கொள்ளலாம்.

    மணவோலை என்பது மணமக்களின் பெற்றோர் திருமணத்திற்கு தம் சம்மதம் உண்டு என்று உலகோர்க்கு அறிவித்து அவரை அழைப்பது. இதை யாரும் எவர் கழுத்திலும் கட்டுவதில்லை. ஆனால் தாலி என்பது தாலமாகிய பனையோலையில் மணமகன் மணமகளுக்கு செய்யும் உறுதிமொழி அளித்து அவள் கழுத்தில் கட்டுவது. எனவே மணவோலை வேறு; தாலியில் உள்ள தாலவோலை வேறு.

    தால ஓலை ஒரு குழையில் அடைக்கப்பட்டுக் கயிற்றில் கோக்கப்படுவது என்பதற்கு அடையாளமாக இன்று கூட தாலி உருக்களில் ஒன்றாகச் சிறு குழை கோக்கப்படுவதைக் காணலாம்.

    தொல்காப்பியர் கூறும் கரணம் என்பது எதைக் குறிக்கும் என்று மேலே கண்டோம். இது பற்றி பல சான்றோர்களின் கருத்துக்களை சான்று காட்டலாம். ஓரிரண்டு சான்றுகளை இங்குக் காண்போம்.

    “தொல்காப்பியர் கூறும் கரணம் என்ற சொல் திருமணச் சடங்கைக் குறிப்பதாகும். கரணத்தின் நோக்கத்தையும், கரணத்தின் போது மேற்கொள்ளப்படும் உறுதிமொழியையும், மணமக்கள் தம் வாழ்நாள் முழுவதும் போற்றிக் காத்தல் வேண்டும்”

           “தமிழர் திருமணம்” பக்கம் 191 உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.

     “கரணம் என்ற சொல்லுக்கு இன்னொரு பொருளும் கொள்ளலாம். இக்காலத்தும் கரணம் என்று சொல்லப்படுபவர்கள் ஊர்க்கணக்கு எழுதும் கணக்கப்பிள்ளைகள் ஆவார். கரணம் கணக்கு எழுதுவோரைக் குறிப்பதால் எழுதுதலையும் குறிப்பதாகும். ஆதலின் இன்ன ஆடவனுக்கு இன்ன பெண் மனைவி என்று எழுதிக்கொள்ளும் பழக்கமும் இருந்திருக்கலாமன்றோ?”

           தொல்காப்பிய ஆராய்ச்சி; பக்கம் 179; டாக்டர் சி.இலக்குவனார்.

   “தாலி: பழங்காலத்தில் அணிகலன்கள் செய்யும் நாகரிகம் இல்லாதிருந்த போது ஒழுக்கம் மட்டும் உயர்ந்திருந்தது. தாலம் என்பது பனையோலையை ஒழுங்கு செய்து மஞ்சள் தடவி அதில் ‘இன்னாருடைய மகளை, இன்னாருடைய மகன் மணந்து கொண்டார், வாழ்க!’ என்றெழுதி அதைச் சுருட்டி மஞ்சள் கயிற்றிலே கோத்து மணமகள் கழுத்திலே தரிப்பர். தால ஓலையில் எழுதிக் கட்டியதனால் அதற்குத் தாலி என்று பெயர் வந்தது. நாகரிகம் வளர்ந்த பிறகு பனையோலை தண்ணீர் பட்டு நைந்து போவதால் தாலியைத் தங்கத்தினால் செய்து தரித்துக் கொண்டனர்.”

    ‘திருமண வாழ்த்து’ – பக்கம் 18 – தெய்வத்திரு கிருபானந்த வாரியார் சுவாமிகள்.

     தாலி என்பதன் உள்ளுறை என்ன என்பதை மேலே மூன்று தமிழ்ச் சான்றோர்கள் கூறியதும், இதற்கு முன் நாம் கூறிய விளக்கமும் ஒத்திருப்பது காண்க.

     இதில் என்ன வேறுபாடு என்றால் எழுதிக் கொடுக்கும் பனையோலை சுருட்டப்பட்டு தாலிக் கயிற்றில் கோக்கப்பட்டு மணமகள் கழுத்தில் கட்டப்பட்டது என்பதை மேலே மூவரும் ஒப்புக் கொள்கிறார்கள். ஆனால் அந்தப் பனையோலையில் எழுதிக் கொடுக்கப்பட்ட உறுதிமொழி பற்றி ஒருமித்த கருத்து காணப்படவில்லை.

     ஆனால் முன்னாலேயே காட்டியபடி பொய்யும், வழுவும் கூறக்கூடிய வாய்ப்புடைய மணமகன் தான் மணமகளுக்கு உறுதி மொழி எழுதிக் கொடுக்க வேண்டும் என்பது தொல்காப்பிய நூற்பாவின் படியும், இன்றும் மணமகன் தான் மணமகள் கழுத்தில் தாலி கட்டுகிறான் என்ற நடைமுறை உண்மையாலும் அது மணமகன் பனையோலையில் மணமகளுக்கு எழுதிக் கொடுக்கும் உறுதி மொழி என்பது மறுக்க இயலா உண்மை எனலாம்.

    இந்தத் தாலி பெண்ணுக்குரிய பாதுகாப்பிற்கு ஆண் உறுதி அளிப்பது. அது பெண்ணுக்கு மட்டுமல்ல முறையான சமூகத்திற்குப் பாதுகாப்பு அளிப்பது. இது பாதுகாக்கப்பட வேண்டியது. எனவே பாதுகாப்பான பெண்ணின் மார்பகத்தில் தொங்கும் படியாக பெண்ணின் கழுத்தில் கட்டும்படி செய்தனர் தமிழர்.

    இது எந்த வகையில் பெண்ணை அடிமையாக்குவது? இது எப்படி பெண்ணின் அடிமைச் சின்னமாக ஆகும்? தாலியால் உண்மையில் ஆண் தான் பெண்ணுக்குக் கடப்பாடுடையவன் ஆகிறான். அதாவது தாலி பெண்ணைக் கட்டுப்படுத்துவது அல்ல, ஆணைக் கட்டுப்படுத்துவது – பழந்தமிழ் வழக்கப்படி. அதனால் தான் இன்றும் கூட கட்டுக்கு அடங்காமல் திரிகின்ற ஆணுக்குக் கல்யாணம் செய்து விடுங்கள்; எல்லாம் சரியாகி விடும் என்ற பேச்சு வழக்கும் எழுந்தது.

    ஒரு நாடு எப்போது நல்ல நாடாகும் என்று ஔவையார் புறநானூற்றில் கூறுகிறார். அந்த நாட்டில் ஆக்ரோஷமும், ஆத்திரமும் இயற்கையாக மிகுந்த ஆடவர்கள் தணிந்த சிந்தையோடு நல்லவர்களாக இருப்பார்களேயானால் அதுவே சிறந்த நாடு என்கிறார்.

      நாடா கொன்றோ காடா கொன்றோ

      அவலா கொன்றோ மிசையா கொன்றோ

      எவ்வழி நல்லவர் ஆடவர்

      அவ்வழி நல்லை வாழிய நிலனே    (புறம்; 187)

     பெண்ணைப் பற்றிக் கவலையில்லை. இயற்கையாகவே பெரும்பான்மையான பெண்கள் நல்லவர்களாகவே இருப்பர் என்று தமிழ்ச் சமூகம் கருதியதால் பெண்ணுக்கு ‘நல்லார்’ என்று பெயர் வைத்தது. எனவே நல்லார்க்கு ஆண்களிடமிருந்து பாதுகாப்பு தருவதற்கே தாலியை உருவாக்கினர் தமிழர்.

    திருமணமும், தாலி கட்டும் சடங்கும் அற்புதமான நாகரிக சமூகத்தின் சிறந்த பாதுகாப்பு என்று தமிழரிடமிருந்து உலகெங்கிலும் உள்ளவர்கள் பாடம் கற்றனர் என்பதற்கு ஆங்கிலத்தில் காணப்படும் ‘தாலிஸ்மேன்’ என்ற சொல்லே சான்று. இது பாதுகாப்பை ஏதோ ஒரு வகையில் தருவதாகக் கருதப்படும் ‘தாயத்திற்கு’ ஆங்கிலேயர் சூட்டிய பெயர். பாதுகாப்பு என்றது நினைவிற்கு வரும்போது சிறந்த சமூகப் பாதுகாப்பை உறுதி செய்த தமிழர்களின் தாலி அவர்களின் நினைவில் வருகிறது. எனவே தாயத்தை ‘தாலிஸ்மேன்’ என்று அழைத்தார்கள். அதில் கூட ஒரு நயம் உண்டு. அது ஆண் பெண்ணுக்குக் கொடுத்த பாதுகாப்பு என்பதால் தாலி என்பதோடு ‘மேன்’ என்ற ஆணைக் குறிக்கும் சொல்லைச் சேர்த்தார்கள்.

    இவை எல்லாம் தாலிக்கும் தமிழருக்கும் உள்ள உண்மையான பெருமைகள். இவை இப்படி இருக்க, உள்ளதையே உணராமல் தாலி தமிழர்க்கு உரியதல்ல என்று 1954-ல் மா.ராசமாணிக்கனார் என்ற ஆய்வறிஞர் எப்படிச் சொல்ல முடிந்தது! இது தான் வியப்புக்குரிய விஷயம். ‘தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்’ என்று திருமந்திரத்தில் திருமூலர் ஆன்மிக நோக்கில் ஒன்றைக் கூறினார். அது பிற்காலத் தமிழர்களுக்கும், தற்காலத் தமிழர்களுக்கும் முற்றிலும் பொருந்தும்!

    இந்த விளக்கங்களின் அடிப்படையில் ஆணுக்கும் பெண் தாலி கட்ட வேண்டும் என்று சிலர் கூறுவதை நோக்கினால் அதன் உள்ளீடற்ற உண்மை தானே விளங்கும். ‘இறுதி வரை உன்னை நான் பாதுகாப்பேன்’ என்று மணமகன் மணமகளுக்கு உறுதிமொழி எழுதிக் கட்டுவது தான் தாலி என்று பார்த்தோம். இப்போது ஆணுக்குப் பெண் தாலி கட்டினால் என்ன எழுதிக் கொடுப்பதாகப் பொருளாகும்? ‘மணமகனாக வரும் உன்னை மணமகளான நான் இறுதி வரை பாதுகாப்பேன்’ என்று எழுதிக் கொடுத்ததாக ஆகாதா? நல்லது, ஒரு பெண்ணால் பாதுகாக்கப்பட வேண்டிய நிலையில் உள்ள ஆண்கள் எல்லாம் தாராளமாக பெண் கையால் தாலிக் கட்டிக் கொள்ளலாம்.!

    அதே போன்று, தாலி புனிதமானது என்றும், தெய்வீகம் அதன் உள்ளடக்கம் என்றும், பெண்ணுக்கும், முறையான, சீரான சமூகத்திற்கும் பாதுகாப்பு என்றும், ஆணைக் கட்டுப்படுத்துவது என்றும் இது முற்றிலும் பழந்தமிழர் கண்ட ஏற்பாடு என்றும் உணராத அறியாமை நிறைந்த பெண்கள் தாலியை ஆணாதிக்கத்தின் அடையாளம் என்று தாராளமாகத் தூக்கி எறியலாம். அவர்கள் கழுத்தில் தாலி இருக்கும் ஒவ்வொரு கணமும் தாலியும், சமூகமும் மேலும் மேலும் மாசடைந்து கொண்டே வரும் என்பது வெள்ளிடைமலை.

    முடிக்கும் முன் பழந்தமிழரது திருமணம் எந்த அளவில் தெய்வீகமாக நடந்தது அதன் சடங்கு முறைகள் எப்படி இருந்தன என்பதை 86 மற்றும் 136 – ஆவது அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை, ஐங்குறுநூறு, சிலப்பதிகாரம், கலித்தொகை முதலான இலக்கியங்களை ஆராய்ந்து எழுதிய ‘தமிழர் திருமணம்’ என்ற உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவன வெளியீட்டு நூலில் தொகுத்துக் கூறப்பட்டவைகளை படிப்பவர் பார்வைக்கு வைத்து முடிக்கலாம். இதனால் எது எது தமிழரின் வழக்கம் என அறிய தமிழர்களுக்கு வாய்ப்பு நேரும்.

    “இத்தகைய தொகை நூல்கள் வாயிலாகப் பழந்தமிழரின் திருமண நிகழ்ச்சிகளால் அறியவல்ல செய்திகள்:

  1. மணமக்கள் இல்லம் செம்மண் பூசி, புதுமணல் பரப்பி மாலைகள் தொங்க விடப்பட்டு அலங்கரிக்கப்படுதல்.
  2. மணம் நடக்கும் வீட்டில் சங்கொலி பறையொலி முழங்கும்.
  3. மணத்திற்கு முன் தலைவிக்குச் சிலம்பு கழி நோன்பு நடைபெறும் (குறிப்பு: இதுவே இப்போது சீக்கழித்தல் என வழங்கப் பெற்று நடைபெறுகிறது.)
  4. மணத்தில் முதல் நிகழ்ச்சியாக சிறந்த விருந்து அளித்தல்.
  5. மணப்பந்தலில் புதுமணல் பரப்பப்பட்டு விளக்கு வைக்கப்படுகிறது.
  6. இறைவழிபாடு செய்தல்.
  7. புள் நிமித்தம் பார்த்தல்.
  8. இளங்காலை நேரத்தில் திங்கள் உரோகிணியுடன் சேரும் நல்லோரையில் திருமண விழா நடைபெறும்.
  9. திருமண முழவும் பெரிய முரசும் முழங்கும்.

10. மங்கலப் பெண்டிர் குடங்களில் நீரேந்தி வருவர்.

11. அந்நீர்க் குடங்களில் நெல்லும் மலரும் தூவி மக்கள் ஈன்ற மகளிர் நால்வர் மணமகளை வாழ்த்தி மணநீராட்டல்.

12. காப்பு நூலைக் கட்டுதல்.

13. புத்தாடை அணிவித்தல்.

14. இழை அணிவித்தல்.

15. பெற்றோர் மணமகளைத் தலைவனுக்கு வாழ்த்தி அளித்தல்.

   அகநானூறு பாடலொன்றில் ‘தொன்றியல் மரபில் மன்றல் அயர’ என்று புகழ்ந்து போற்றிய மரபின் வழி நடந்த தமிழர் திருமணச் சடங்குகள் இவை என்பதைத் தமிழர் உணர வேண்டும்.

    இன்று காலக் கோளாறின் காரணமாக தமிழை ஏற்றிப் போற்றும் அன்பர்களில் பலர் பிராம்மண எதிர்ப்பு என்ற ஒன்றின் அடிப்படையிலேயே நாத்திகர்களாகத் தம்மைப் பறை சாற்றிக் கொள்வதில் கடைப்பிடியாக இருக்கிறார்கள். ஆனால் பழந்தமிழர்கள் முற்றிலும் தெய்வ வழிபாட்டினர். மேலே திருமணச் சடங்குகளில் ஒன்றாக இறை வழிபாடு செய்தல் என்பது உள்ளதை இலக்கியங்கள் சான்று பகர்வதைக் காண்க.

    ஒரு புறம், இவர்கள் பிராம்மண எதிர்ப்புக் கொள்கை காரணமாக தெய்வ வழிபாட்டையே திருமணத்தில் தூக்கி எறிந்து விட்டு அதன் காரணமாக தாலியையே மறுக்கும் கொள்கையினராகி விடுகிறார்கள்.

     மறுபுறம், வேறு வகை தமிழர்கள் முற்றிலும் பிராம்மணர்களையே தங்கள் இல்லத் திருமணங்களில் அழைத்து வந்து சடங்காற்றச் செய்வது தான் மணமக்களின் சிறப்பான வாழ்வுக்கு வழி வகுக்கும் என்று மூடநம்பிக்கையால் முத்தமிழ் மரபுகளை முழுதழிக்கிறார்கள். தமிழர் மரபுக்கு மாறான பிராம்மணப் புரோகிதர்களைத் தம் இல்லத் திருமணத்திற்கு அழைத்து வந்துவிட்டு அவர் தம் பிராம்மண மரபுகளை நம் வீட்டில் திணித்து விடுகிறார் என்று தமிழர் புலம்புவதில் நியாயமே இல்லை. அழைத்து வந்துவிட்டு அலட்டிக் கொள்ளலாமா?

     எனவே நாத்திகத் தமிழராயினும் சரி, ஆத்திகத் தமிழராயினும் சரி, இருவருமே தமிழர் மரபு இன்னதென்று அறியாமல் தடுமாறுவதைக் கண்டு தமிழ்ச் சொக்கன் அமிழ் வெட்கன் ஆகித் தலை குனிவான் என்பதில் தினையளவும் ஐயம் இல்லை.

    குங்குலியக் கலய நாயனார் திருப்பனந்தாளில் தலை சாய்ந்த சிவலிங்கத்தை கயிற்றைத் தம் கழுத்திலிட்டு இழுத்து நிமிர்த்தி நேராக்கினார் என்று பெரிய புராணம் கூறுகிறது. அதற்குக் கல்வெட்டுகளும் சான்று கூறுகின்றன.

    ஆனால் இந்தத் தலைகுனிவை நிமிர்த்த எவரை இறைவன் நியமித்துள்ளான் என்பது அவனுக்கே வெளிச்சம்!

    இப்போதைக்கு, எம் உள்ளம் உவந்த தமிழ்ச் சமுதாயமே! தமிழர் மரபிற்கு மாறாத தமிழ்த் திருமணங்களையே தமிழர்களைக் கொண்டு செய்க! தமிழர் மரபின் தலையாய சின்னமான தாலியைப் போற்றுக!

     செங்கம லத்திறை சிந்தையின் ஆற்றி

     அங்கையின் ஈந்திட ஆண்டகை கொண்டே

     மங்கல நாணை மணிக்களம் ஆர்த்து

     நங்கை முடிக்கொர் நறுந்தொடை சூழ்ந்தான்.

http://dheivamurasu.org/?p=259



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

 

வாழ்வியல் சடங்குகளில் திருமுறை மந்திரங்கள்

- முனைவர் அ. மா. இலட்சுமிபதிராசு

வரலாற்றுக்கு முற்பட்ட காலந்தொட்டு மக்கள் பலவிதப் பழக்க வழக்கங்களைக் கொண்டிருந்தனர். தெய்வ வழிபாடு, வாய்கட்டி வழிபடுதல், இறந்தோரைப் பலவகையான முறையில் அடக்கம் செய்தல் முதலிய சடங்குகள் அக்காலத்தில் இருந்துள்ளன. தொல்காப்பியத்தில் திருமணச் சடங்கு, தெய்வ நம்பிக்கை, நிலையாமை, நடுகல் வழிபாடு முதலியன குறிப்பிடப் பெற்றுள்ளன.

சங்க காலத்தில், கருவாய்க்க வேண்டுமென்று இறைவனை வழிபடுதல் (பரிபாடல் - 8), திருமணச் சடங்குகள் செய்தல் (அகநானூறு - 86), இல்லில் தெய்வம் கொண்டாடுதல் (பட்டினப்பாலை 159,160), இறந்த கணவனுக்கு பிண்டலம் வைத்தல் (புறநானூறு - 234), கடவுளுக்கு பலி கொடுத்தல் (நற்றிணை 358), கணவன் புண் வருத்தம் தீர மனைவி பாடுதல் (மலைபடுகடாம் 302-304), கணவனை இழந்த மகளிர் வளை அணியாமை (புறம் 238, 253), காக்கை கரைந்தால் விருந்து வரும் என்ற நம்பிக்கை (குறுந்தொகை 210), குயவன் தெய்வத்திற்க்கு பிலியிடுதல் (நற்றிணை 293), குழந்தைக்கு உணவூட்டுதல் (அகம் 210), கோயில்களில் திருவிழாக் கொண்டாடக் கொடிக் கட்டுதல் (மதுரைக் காஞ்சி 365-366), திருநாளில் ஏழாம் நாள் அந்தியில் தீர்த்தமாடுதல் (மதுரை 427-428), திருவிழாவுக்கு கால் கொள்ளுதல் (கலித்தொகை 83), பிறை தொழுதல் (குறுந்தொகை 179), பேய்க்குப் பலியிடல் (பதிற்றுப்பத்து 71), மகளிர் தெய்வத்தைப் பரசுதல் (அகம் 201), தெய்வத்திற்கு மஞ்சளும் பூவும் அணிதல் (அகம் 269) முதலிய பழக்க வழக்கங்கள் இருந்துள்ளன.

வாழ்வியல் அருளியல் சடங்குகள்:

பண்டைக் காலப் பழக்க வழக்கங்களில் பல சடங்குகளாக மாறி நிலைபெற்றுள்ளன. இச்சடங்குகளைச் செய்த முன்னோர் எவ்வாறு செய்தனர், என்ன சொல்லிச் செய்தனர் என்பதற்கான குறிப்புகள் மிகவும் அருகியே காணப்படுகின்றன. இச்சடங்குகளை இருவகையாகக் கொள்ளலாம். தனிமனித, சமுதாய வாழ்வில் நிகழ்கின்ற வாழ்வியல் சடங்குகள், திருக்கோயில் சார்ந்த திருக்குடநன்னீராட்டு முதலிய அருளியல் சடங்குகள் என்பன அவை.

சடங்குகளுக்கு வேள்வி செய்தல் என்பது பண்டைக்காலத்திலிருந்தே உள்ளது. அதற்கான சான்றுகள் பல உள்ளன. அரசர்கள் பல்வேறு வேள்விகளைச் செய்வித்துள்ளனர். முனிவர்கள் அருந்தமிழ் வேள்வி ஆற்றியுள்ளனர். வேள்விகளில் மந்திர ஆற்றலுடைய பாடல்கள் ஓதப்பெற வேண்டுமென்பதில் இருவேறுபட்ட கருத்தில்லை.

திருமுறைகள் மந்திரங்கள்:

திருமுறைகளில் பலவகைச் சடங்குகள் ஆங்காங்கு சுட்டப்பெற்றுள்ளன. அச்சடங்குகளைச் செய்வதற்குப் பொருத்தமாகத் தனிப்பாடல்களும், பதிகங்களும் திருமுறைகளில் பல உள. திருமுறைகள் மந்திர ஆற்றல் மிக்கவை.

     “நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த
      மறைமொழி தானே மந்திரம் என்ப”
  (தொல் – பொருள். நு.எ. 480)

எனத் தொல்காப்பியர் மந்திரத்திற்கு இலக்கணம் வகுத்துள்ளார். இவரைப் போலவே திருவள்ளுவரும்,

     “நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
      மறைமொழி காட்டி விடும்”
  (திருக்குறள் - 28)

எனக் கூறியுள்ளார். நிறை மொழி என்பது அருளிக் கூறினும் வெகுண்டு கூறினும் அவ்வப்பயன்களைப் பயந்தே விடும் எனப் பரிமேழலகர் உரை வரைந்துள்ளார்.

திருமுறை ஆசிரியர்கள் நிறைமொழி மாந்தர்களாவர். அவர்கள் கூறிய நிறைமொழி அருளிக் கூறியதாகும். “எனதுரை தனதுரையாக” (திருமுறை 1 – பா.எ. 824) எனத் திருஞானசம்பந்தர் கூறியுள்ளமையால் அவருரைத்த அருள்மொழிகள் அனைத்தும் இறைவனுடைய திருவாக்கே என அறியலாம்.

மூவர் தேவாரங்களும் மந்திர ஆற்றல் உடையவை என்பதைத் தில்லை வாழந்தணர் குலத்தில் தோன்றிய உமாபதி சிவாச்சாரியார் கூறியுள்ளார்.

     “கண்ட பெருமந்திரமே மூவர் பாடல்
      கைகாணா மந்திரம் கண்ணுதலோன் கூறல்”
  (திருமுறைகண்ட புராணம் பா.எ. 13)

என அவர் கூறியுள்ளது குறிக்கத்தக்கதாகும்.

திருமுறைகள் தமிழ் வேதங்கள்:

திருமுறைகள் தமிழர்தம் மெய்யியல் கொள்கைகளையும், வாழ்வியல் சிந்தனைகளையும் விதந்து கூறுகின்ற தமிழ்வேதங்களாகும். சைவம், வைணவம் ஆகிய இரு சமயங்களிலும் வேதம் தமிழில் செய்யப் பெற்றதாகக் கூறப்பெறும் மரபு காணப்பெறுகிறது.

     “மறைகளாய நான்குமென மலர்ந்த
      செஞ்சொல் தமிழ்ப்பதிகம்”

     “மிக்க சொற்றமிழினால் வேதமும் பாடினார்”

     “வேதம் தமிழ் செய்தான் மாறன்”

எனவரும் தொடர்கள் இதனை உணர்த்துகின்றன.

எனவே திருமுறைகளே தமிழர்களுக்கு வேதநூல் என்பது பெறப்படுகிறது. திருமுறைகளை ஓதுவதனால் இம்மை மறுமை பயன்கள் அனைத்தையும் எளிதில் பெற முடியும்.

திருப்பதிகங்களை ஓதினால் உண்டாகும் பயன்களைத் திருஞானசம்பந்தர் திருக்கடைக்காப்பில் பலவாறு குறிப்பிட்டுள்ளார்.

     “பாமரு செந்தமிழ் மாலை பத்திவை பாடவல்லார்கள்
      பூமலி வானவ ரோடும் பொன்னுல கில்பொலிவாரே”
  (திருமுறை 1 பா.எ. 469)

     “சம்பந்தன் தமிழ்பகர்ந்த சாய்க்காட்டுப் பத்தினையும்
      எம்பந்தம் எனக்கருதி ஏத்துவார்க் கிடர்கெடுமே”
  (திருமுறை 2 பா.எ. 1916)

     “உறும்பொரு ளால்சொன்ன ஒண்தமிழ் வல்லார்க்கு
      அறும்பழி பாவம் அவலம் இலரே”
  (திருமுறை 3 பா.எ. 4147)

எனவரும் பகுதிகளால் இதனை அறிந்து கொள்ளலாம். தமிழ் மக்கள் பன்னிரு திருமுறைகளையும் ஓதி வாழ்வியல் சடங்குகள் அனைத்தையும் செய்தும், செய்வித்தும் இறையருளை எளிதில் பெறலாம்.

திருமணம்:

திருமண நிகழ்வுகளில் சடங்குகள் செய்வது மிகப் பழங்காலந்தொட்டு இருந்து வருகிறது. திருமணத்தை,

     “கற்பெனப் படுவது கரணமொடு புணரக்
      கொளற்குரி மரபில் கிழவன் கிழத்தியைக்
      கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே”
  (தொல் – பொருள் – நச்சர் – நூ.எ. 142)

எனத் தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார். கரணம் என்பது திருமணச் சடங்காகும். கரணமொடு புணர என்பதற்கு வேள்விச்சடங்கோடே கூட என்று நச்சினார்க்கினியார் உரை வரைந்துள்ளார். கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே என்ற தொல்காப்பியரின் கூற்று இன்றும் “கொடுத்தோம் - கொண்டோம்” என்று வழக்கில் உள்ளது.

சங்க இலக்கியங்களில் திருமணச் சடங்குகள் மிக விரிவாகப் பாடப்பெறுற்றுள்ளன.

     “கனையிருள் அகன்ற கவின்பெறு காலை
      ………………………………………………
      வாலிழை மகளிர் நால்வர் கூடிக்
      ……………………………………………….
      பெற்றோற் பெட்கும் பிணையை யாகென
      நீரொடு சொரிந்த ஈரிதழ் அலரி
      பல்லிருங் கதுப்பின் நெல்லொடு தயங்க
      வதுவை நன்மணம்”
  (அகம் – பா. எ. 86)

என அக்காலத்து நடந்த திருமண நிகழ்வைச் சங்க இலக்கியம் படம் பிடித்துக் காட்டியுள்ளது.

     “சாலி ஒருமின் தகையாளைக் கோவலன்
      மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத்
      
     தீவலம் செய்வது”
  (சிலம்பு – மங்கல வாழ்த்து அடி எண். 51-53)

என இளங்கோவடிகள் கோவலன் கண்ணகி திருமணத்தை வேதவழிப்பட்ட அந்தணர் செய்து வைத்ததைக் காட்டுகிறார். எனவே சங்க காலத்திற்குப் பின்னரே சடங்குகளை அந்தணர் செய்யத் தொடங்கினர் என்பதை அறிய முடிகிறது. இரண்டாம் நூற்றாண்டுக்குப் பின்னர்தான் தமிழர் சடங்குகள் தமிழர் அல்லாத பிற இனத்தாரால், தமிழ் அல்லாத பிற மொழியால் செய்விக்கப் பெற்றன என்பது தெளிவுபடுத்தப் பெறுகிறது.

கி.பி ஏழாம் நூற்றாண்டில் தோன்றிய முத்தமிழ் விரகராகிய திருஞானசம்பந்தர் மீண்டும் தமிழ்வழிச் சடங்குகளுக்குத் தாமே முன்னின்று வித்திடுகிறார். திருமருகல் தலத்தில் அவர் வைப்பூர்தாமன் மகள் திருமணத்தை நடத்துகிறார்.

     “அருட்காழிப் பிள்ளையார் அடியில் வீழ்ந்த
      நங்கை யவள்தனை நயந்த நம்பியோடு
      நானிலத்தில் இன்புற்று வாழும் வண்ணம்
      மங்குல் தவழ் சோலைமலி புகலி வேந்தர்
      மணம்புணரும் பெருவாழ்வு வகுத்துவிட்டார்”
  (பெரியபுராணம் – பா.எ. 2381)

எனச் சேக்கிழார் இத்திருமணத்தை கூறுகிறார். இங்கு திருமணச் சடங்குகள் ஏதும் இருந்ததாகத் தெரியவில்லை. ஞானாசாரியர் நடத்தி வைக்கும் திருமணத்திற்குச் சடங்குகள் தேவையில்லை என்பது பெறப்படுகிறது. எனவே இத்திருமணம் எந்தவிதச் சடங்குமின்றி நடந்திருக்குமானால் தமிழகத்தில் நடந்த முதல் சீர்திருத்தத் திருமணம் என்பதில் ஐயமில்லை. சிவக்கவிமணி சி.கே.சுப்பிரமணிய முதலியார் “வகுத்து விடுதல் – உலகமுறைப்படி சடங்கு நிகழ்த்தி உழுங்கு செய்தல்” என உரை கூறுகிறார். இக்கருத்துப் பொருந்துமெனில் திருஞானசம்பந்தர் வடமொழி வேதம் நன்கு தெரிந்திருந்தும், தமிழன்றி, வேத வழிபாடு புரியாதவர். ஆதலால் தமிழ்வழியிலேயே திருமணச் சடங்கு நிகழ்த்தினார் என்ற கருத்து மிகத் தெளிவாகும்.

திருமணத்தில் சடங்குகள் மிகவும் முக்கியம். கரணம் தப்பின் மரணம் என்பர். திருமணச்சடங்குகளுக்குத் தேவையான திருமுறைப்பாடல்கள் பல உள.

     “மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்
      எண்ணில் நல்ல கதிக்கு யாதுமோர் குறைவிலைக்
      கண்ணில் நல்லஃதுறும் கழுமல வளநகர்ப்
      பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே.”
  (திருமுறை – 3 – பா.எ. 3052)

     “குரும்பை முலை மலர்க்குழலி கொண்டதவம் கண்டு
      குறிப்பினொடும் சென்று அவள்தன் குணத்தினை நன்கறிந்து
      விரும்பும் வரம் கொடுத்தவளை வேட்டருளிச் செய்த
      விண்ணவர்க்கோன் கண்ணுதலோன் மேவிய ஊர்வினவில்
      அரும்பருகே சுரும்பருவ அறுபதம் பண்பாட
      அணிமயில்கள் நடமாடும் அணிபொழில் சூழ் அயலின்
      கரும்பருகே கருங்குவளைக் கண்வளரும் கழனிக்
      கமலங்கள் முகமலரும் கலயநல்லூர் காணே”
  (திருமுறை – 7. பா.எ.156)

என்பன போன்ற திருமுறைப்பாடல்களை ஓதிச் திருமணச் சடங்குகளைச் செய்யலாம்.

மகப்பேறு – பெயர் சூட்டல்:

மக்கள் பெறுகினற பல பேறுகளில் மிகமுக்கியமானது மகப்பேறாகும். மிகப் பெருஞ் செல்வராய் இருப்பினும் அறிவை இன்பத்தால் மயக்கும் மக்கட்பேறில்லாதவர் வாழ்வு பயனற்றது எனச் சங்கச் சான்றோர் கூறியுள்ளனர். இதனை,

     “படைப்புப்பல படைத்துப் பலரோ டுண்ணும்
      உடைப்பெருஞ் செல்வ ராயினும்
      …………………………………………
      மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
      பயக்குறை இல்லை தாம்வாழு நாளே”
  (புறம் 188)

எனக் கூறியுள்ளமை இதனை உணர்த்தும்.

வள்ளுவனார் புதல்வரைப் பெறுதல் என்னும் அதிகாரத்தையே அமைத்துப் பாடியுள்ளார். இவ்வுலகத்தில் பெறுகின்ற பேறுகளில் மக்கட்பேற்றினைச் சுட்டிக் கூறுகிறார்.

பண்டைக் காலத்தில் கருவயிறு வாய்க்கப் பெறாத பெண்டிர் முருகப் பெருமானை வழிபட்டு குழந்தைபேறு அடைந்துள்ளனர். எம்முடைய வயிற்றில் கருப்பம் உண்டாகுக. அங்ஙனம் உண்டானால் இன்னது உனக்குச் செய்வோம் எனப் பெண்டிர் முருகப் பெருமானுக்கு நேர்த்திக் கடன் பூண்டதை இலக்கியம் குறிப்பிடுகிறது.

     “கருவயிறு உறுகெனக் கடம்படு வோரும்”  (பரிபாடல் – ப.எ. 8)

என்று கூறப் பெற்றுள்ளமை இதனை உணர்த்தும்.

இக்காலத்தில் எண் கணித முறைப்படி குழந்தைகளுக்கு ஆங்கில எழுத்துக்களைக் கணக்கிட்டுப் பெயர் சூட்டும் அவலம் தமிழகத்தில் பரவி வருகிறது. இது மிகத் தவறாகும். ஆண் குழந்தைகளுக்குச் சிவபெருமான், முருகன், திருமால், தமிழ்ச்சான்றோர், நாயன்மார் பெயர்களையும், பெண் குழந்தைகளுக்கு உமையம்மை, தமிழ் வளர்த்த பெண்பாற்சான்றோர் பெயர்களையும் சூட்டலாம். வடமொழி, வேற்று மொழிப் பெயர்களைச் சூட்டுதல் கூடாது.

     “நம்பி பிம்பி என்று நாட்டு மானிடப் பேரிட்டால்
      நம்பும் பிம்புமெல் லாம்நாலு நாளில் அழுங்கிப்போம்
      செம்பெருந் தாமரைக் கண்ணன் பேரிட்டழைத் தக்கால்
      நம்பிகாள் நாரணன் தம் அன்னைநர கம்புகாள்”
  (நாலாயிர திவ்வியபிரபந்தம். பா.எ. 388)

எனப் பெரியாழ்வார் குறிப்பிட்டுள்ளார். இறைவன் பெயர்களையே குழந்தைக்கு வைத்தால் பெயர்களைச் சொல்லுகின்ற பெற்றோரும், பெயருடைய குழந்தையும் நன்மையை அடைவர். மனிதப் பெயரிட்டு அழைப்பதைக் காட்டிலும் இறைவன் பெயரிட்டு அழைப்பதே சிறந்தது என்பது பெரியாழ்வாரின் கருத்தாகும்.

இத்தகு மகப்பேறு, பெயர் சூட்டல் சடங்குகளுக்கு வேள்வியில் திருவுருத் திருத்தாண்டகம், நின்ற திருத்தாண்டகம், முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் முதலிய தெய்வங்கள் குறித்து ஆண்பால், பெண்பால் பிள்ளைத்தமிழ்ப்பாடல்கள், கண்ணனைச் சிறுகுழந்தையாக்கிப் பெரியாழ்வார் பாடிய பிரபந்தப் பாடல்கள் முதலியவற்றை ஓதலாம்.

பூப்பு நீராட்டு:

உலகில் தோன்றிய அனைத்து உயிர்களுக்கும் உடல் சார்ந்த பருவநிலைமாற்றங்கள் ஏற்படுவது இயல்பாகும். மனித இனத்தில் பன்னிரு வயதில் ஆடவர், மகளிர் இருவருக்கும் உடல் நிலையில் மாற்றங்கள் ஏற்படுகிறது. ஆண் பிள்ளைக்கு இவ்வயதில் குரல் மாறுபாடு அடைகிறது. நெஞ்சுவிரிவடைகிறது, கை கால்கள் நீண்டு உரம் பெறத் தொடங்குகின்றன. ஆடவர்க்கு ஏற்படும் இவ்வுடல் மாற்றங்கள் தமிழ்ச் சமுதாயத்தில் சிறப்பாகக் கொள்ளப் பெறவில்லை என்றே கூறலாம். பெண் பிள்ளைகளுக்கு இவ்வயதில் ஏற்படும் உடல்மாற்றம் பூப்புத் தோன்றுதலாகும். இது சிறப்பாகக் கொள்ளப் பெறுகிறது.

உடற்கூற்றின்படி நிகழும் இப்பூப்பு மகளிர்க்கு மங்கலத் தன்மையையும் தெய்வத் தன்மையையும் உண்டாக்குகிறது. இந்நிலையை அடைந்த பெண்ணைப் பாராட்டிச் சீராட்டி மகிழ்கிறோம். மனித இன வளர்ச்சிக்கு அடிப்படை பூப்பு என்பதைக் கருதல் வேண்டும்.

பூப்படைந்த பெண்ணுக்கு உடற்கூறு, உளக்கூறு என்ற இரு கூறுகளும் வளர்ச்சி அடைகின்றன. உடற்கூறாக உடல் அழகு பெறுகிறது. மார்பகங்கள் வளர்ச்சி அடைகின்றன. கூந்தல் பொலிவு உண்டாகிறது. உளக்கூறாக அச்சம், மடம், நாணம் முதலிய முன்பு இல்லாத பண்புகள் புதிதாகத் தோன்றுகின்றன. குரும்பை முலை மலர்க்குழலி என உடல்சார்ந்த கூறுகளையும், அவள் தன் குணத்தினை நன்கறிந்து என உளம் சார்ந்த கூறுகளையும் சுந்தரர் வெளிப்படுத்திக் காட்டியுள்ளார்.

இந்த நல்ல தெய்வீக நிகழ்வினைத் தீட்டு எனக் கருதுதல் தவறாகும். தீட்டாகக் கருதிச் செய்கின்ற சடங்குகளும் பொருளற்றன ஆகும்.

இம்மங்கலச் சடங்கில் திருவெம்பாவை. திருப்பாவை, காசிபாகீரதியம்மை திருவருட்பா, அம்மை பற்றிப் பாடப் பெற்றுள்ள பிள்ளைத்தமிழ் நூல்களில் காணப்பெறும் நீராடல் பருவங்கள் வேள்விப் பாராயணத்திற்குப் பயன்படும்.

புதுமனை புகுவிழா:

மனித வாழ்வில் உணவு, உடை, இவற்றை அடுத்து அடிப்படைத் தேவையாக விளங்குவது உறையுளாகும். இறைவன், அரசர் முதலியோர் மனைகளைக் கோயில் என்றும், மக்கள் வாழும் இடங்களை வீடு என்றும் கூறுவது மரபு.

புதிதாக வீடு கட்டிக் குடிபுகுமுன் பூசை செய்பவது மிக முக்கியமாகும். குடிபுகும் நாளுக்கு முந்திய நாள் இரவு செய்யப்படும் பூசை நிலத் தேவர் வழிபாடாகும். இது வடமொழியில் வாஸ்த்து சாந்தி எனப்படுகிறது. நாம் இல்லத்தை அமைக்கும் முன் அந்நிலத்தில் பல் வேறு தீய ஆற்றல்கள் குடியிருக்கும். இத்தீய ஆற்றல்களுக்கு உரிய வழிபாடு ஆற்றி இல்லத்தைக் குடியிருப்பதற்குரிய தகுதி உடையதாக ஆக்கிக் கொள்வதே நிலத்தேவர் வழிபாடாகும். இவ்வழிபாட்டுக்கு இருநிலனாய் முதலான தேவாரப் பாடல்களை ஓதலாம்.

காலை வழிபாட்டில் அம்மையப்பரை எழுந்தருளச் செய்து வேள்வி செய்யும் போது முன்னிலைப் பரவலாக உள்ள திருத்தாண்டகங்களை ஓதலாம். சிவ வழிபாட்டில் நவகோள்களுக்கு இடமில்லை. எனவே தனியே நவகோள் வேள்வி, வழிபாடு முதலியன செய்தல் வேண்டா. கோளறு பதிகம், கோளிலிப் பதிகம் முதலியவற்றை ஓதல் நலம் பயக்கும்.

அறுபதாம் அகவை – மணி விழா:

மனித வாழ்வில் அறுபது வயது ஒரு நிறைவினை அடைகிறது. இக்காலத்தில் இது சஷ்டியப்த பூர்த்தி என்னும் பெயரில் கொண்டாடப் பெறுகிறது. இறையருளோடு வாழ்வு அமைவது சிறந்த உயர்நிலைக்கு உரியதாகும். இல்லை எனில் குறிக்கோள் இலாது கெட்டதாய் ஏற்றமின்றி அமையும்.இல்லறமாம் நல்லறத்தில் மக்கட்பேறெய்தி தெய்வ நலம் பேணி, விருந்தோம்பி அறம்பல செய்து திறம்பட வாழ்கின்ற வாழ்வு சிறந்தது.

மாந்தர் அறம்பல செய்வதற்கு நீண்ட ஆயுள் தேவை. இவ்வாழ்வை இறைவன் தந்தருள வேண்டும் என வேண்டுதல் மரபு. இறைவன் மார்க்கண்டனுக்கு நீண்ட வாழ்நாளை அருளினார். காலனை மார்க்கண்டேயர்க்காகக் காய்ந்தனை என்பது சேக்கிழார் வாக்கு, மார்க்கண்டனைப் போல நீண்ட வாழ்வு வாழ வேண்டும் என்பதற்காகத் திருக்கடவூரில் அறுபதாம் அகவை வாழ்வை மக்கள் நடத்துகின்றனர்.

தலைமகனாய் நின்ற தமிழ் ஞானசம்பந்தர் முதலிய அருளாளர்கள் அருளிய பைந்தமிழ் பனுவல்களாகிய திருமுறைகளின் வழி அறுபதாம் அகவை மணி விழாவை நடத்திக் கொள்வது நலம் பயக்கும்.

இவ்வழிபாட்டில் காலனை வென்ற கால காலனையும் கார்த்தியாயனி அம்மையையும் வேள்வி செய்து வழிபடுதல் வேண்டும். இறைவன் யாராலும் செய்ய முடியாத அட்ட வீர்ட்டச் செயல்களைச் செய்தார். அவ்வத்தலங்களுக்குரிய இறைவன் இறைவியை நிறைகுடங்களில் எழுந்தருளச் செய்து வழிபட வேண்டும். அவ்வத்தலங்களுக்குரிய திருமுறைகளை ஓதுதல் நலம் தரும்.

நீத்தார் கடன்:

வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திருந்து நீத்தார் கடன் வழிபாடு இருந்து வருகிறது. கற்பதுக்கை, கல்திட்டை, முதுமக்கள் தாழி முதலியன இறந்தவர்க்கு அமைக்கப்பட்ட ஈமச்சின்னங்கள் ஆகும்.

     “சுடுவோர் இடுவோர் தொடுகுழிப் படுப்போர்
      தாழ்வயின் அடைப்போர் தாழியில் கவிப்போர்”
  (மணிமேகலை – சக்கரவாளக் கோட்டமுரைத்த காதை)

எனச் சீத்தலைச் சாத்தனார் இறந்த உடலை அடக்கம் செய்யும் முறை பற்றிக் கூறுகிறார்.

உடல் வேறு; உயிர் வேறு என்ற கொள்கை சங்க காலத்திலிருந்து தமிழ் மக்களின் சமய நம்பிக்கையாக இருந்து வருகிறது. உடல் அழியும் உயிர் அழியாது என்ற கொள்கையைக் கொண்டிருந்தனர். “வீயாது உடம்பொடு நின்ற உயிருமில்லை” (புறம் – பா.எ. 363). என்பதனால் இதனை அறியலாம். இறந்த உயிர் தான் செய்த வினைக் கேட்ப மீண்டும் பிறக்கும். பிறந்து இறந்து துன்பமடையும். உயிர் இறைவன் திருவடி அடைதலே சமய வாழ்வின் இறுதிநிலையாகும். இது வீடுபேறு என்றும் முத்தி என்றும் கூறப்பெறுகிறது.

     “துறக்கப்படாத உடலைத் துறந்து வெந்தூதுவரோடு
      இறப்பன் இறந்தால் இரு விசும்பு ஏறுவன் ஏறிவந்து
      பிறப்பன் பிறந்தால் பிறையணி வார்சடைப் பிஞ்ஞகன்பேர்
      மறப்பன் கொலோ என்று என் உள்ளம் கிடந்து மறுகிடுமே”
  (திருமுறை – 4 – பா.எ. 1067)

எனத் திருநாவுக்கரசர் பிறப்பு இறப்பு பற்றிக் கூறுகிறார்.

பன்னிருத் திருமுறைகளிலும் பிறப்பு இறப்பு பற்றிய செய்திகள் ஆங்காங்கே காணப்படுகின்றன. உயிக்குச் சடங்கு செய்வது உயிர் நற்கதி பெற வேண்டும் என்ற எண்ணத்தினாலேயே ஆகும். திருக்கடவூர் மயானம், திருநாலூர் மயானம், சேத்திர வெண்பா, திருப்பொற்சுண்ணம், வாழாப்பத்து, நீத்தல் விண்ணப்பம், நால்வர் இறுதிப் பதிகங்கள் முதலியன இவ்வழிபாட்டிற்கு உரியனவாகும்.

அனைத்துச் சடங்குகளையும் திருமுறைப்படி செய்வதே சாலச் சிறந்ததாகும். திருமுறைகளைச் சடங்குகளில் ஓதும் போது ஓசை ஒலியெலாம் ஆனாய் என்பதற்கேற்ப எங்கும் பரவி நற்பயன் தரும். இறைவன் அட்ட மூர்த்தியானவன். அட்ட மூர்த்த வடிவில் ஒன்று நெருப்பு. நெருப்பின் முன் திருமுறை கூறுவது ஏற்புடையதே.

http://manivasagar.in/view_article.php?page=28



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

 

தமிழர் திருமணம்

- முனைவர் ந. இரா. சென்னியப்பனார்

வாழ்க்கையில் பல்வேறு நிகழ்ச்சிகள், பல்வேறு சடங்குகள் இன்று மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிறப்பு முதல் இறப்பு வரை பலவிதச் சடங்குகள் மக்கள் இனத்திற்கு ஏற்ப மாறுபடுகின்றன. பலவிதச் சடங்குகளில் திருமணச் சடங்கு மிகப் பின்பற்றப்பட வேண்டிய ஒன்றாகும். தமிழர் வாழ்க்கையில் தொல்காப்பியம் மிகப் பழைய கால திருமணச் சடங்கைச் சுட்டுகின்றது. பெரும்பாலோர் இன்று சோதிடம் பார்த்து, பொருத்தங்கள் பார்த்துத் திருமணம் செய்கின்றனர்.

நட்சத்திரப் பொருத்தம், பணப்பொருத்தம், வசியப்பொருத்தம், மகேந்திரப்பொருத்தம், தீர்க்கப்பொருத்தம், யோனிப்பொருத்தம், இராசிப்பொருத்தம், இராசி அதிபதிப் பொருத்தம், ரச்சுப்பொருத்தம், வேதைப்பொருத்தம் ஆகிய பத்துப் பொருத்தங்கள் இன்று பஞ்சாங்களில் உள்ளன. பத்துப் பொருத்தங்களில் தினம், கணம், யோனி, இராசி, ரச்சு, ஆகிய ஐந்தும் முக்கியமானவை. ரச்சுத் தட்டினால் திருமணம் செய்யக்கூடாது.

பத்துக்கு, ஐந்துக்குக் குறையாமல் பொருத்தங்கள் இருந்தால் திருமணம் செய்யலாம். இவையல்லாமல் செவ்வாய் திசை, திசா சந்திப்பு முதலியனவும் முக்கிய இடம்பெறுகின்றன. கந்தர்வம், கர்ப்பநிச்சிதம், சகுன நிச்சிதம், குரு தெய்வநியமனம் முதலிய வகையில் பொருத்தம் பாராமல் செய்யலாம் என்ற விதி விலக்கும் உண்டு.

பிறப்பு, குடிமை, ஆளுமை, வயது, வடிவம், நிலையான அன்பு வழிபட்ட காமம், நிறை, அருள், உணர்வு, திரு ஆகிய பத்து ஒப்புமை வகைகளைத் தலைமக்களுக்குத் தொல்காப்பியர் குறித்துள்ளார். அக்காலத்தில் இப்பத்தும் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன.

ஒத்த அன்புள்ள தலைவனும், தலைவியும் தாமே உடன்போக்கு மேற்கொள்வதையும், பின் திருமணம் செய்து கொள்வதையும்

     “கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டே
      புணர்ந்துடன் போகிய காலையான”

(கரணம்- திருமணச் சடங்கு)

தொல்காப்பியம் குறிப்பிடுகின்றது.

காதலித்து வந்த தலைவியைத் தலைவன் திருமணம் செய்யாமல் கைவிட்ட நிலையும் ஏற்பட்டது. இத்தகுநிலையில் ஆன்றோர் கூடித் திருமணச் சடங்குகளை வற்புறுத்தி மேற்கொள்ளச் செய்தனர்.

     “பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
      ஐயர் யாத்தனர் கரணம் என்ப”

(ஐயர் – அறிவில் மூத்த சான்றோர்)

என்ற நூற்பாவும் தொல்காப்பியத்தில் உண்டு.

கற்பை நிலை நாட்டும் இல்வாழ்க்கையில் திருமணச் சடங்கு உண்டாயிற்று. திருமணத்தின்போது சடங்குகள் செய்து தலைவியின் பெற்றோர் கொடுப்பத் தலைவனின் பெற்றோர் ஏற்றுக் கொண்டனர். இன்றைய திருமணச் சடங்குகளிலும் ‘கொடுத்தோம்-கொண்டோம்’ என்ற முறை உள்ளது.

சங்க இலக்கியங்களில் அகநானூற்றில் திருமண முறை விரிவாகப் பாடப்பெற்றுள்ளது.

     “உழுந்து தலைப்பெய்த கொழுங்களி மிதவை
      பெருஞ்சோற்று அமலை நிற்ப, நிரைகால்
      தண்பெரும் பந்தர்த் தருமணல் ஞெமிரி
      மனைவிளக்கு உறுத்து மாலை தொடரிக்
      கனையிருள் அகன்ற கவின்பெறு காலைக்
      கோள்கால் நீங்கிய கொடுவெண் திங்கள்
      கேடில் விழுப்புகழ் நாள்தலை வந்தென
      உச்சிக் குடத்தர், புத்தகல் மண்டையர்
      பொதுசெய் கம்மலை முதுசெம் பெண்டிர்
      முன்னவும் பின்னவும் முறைமுறை தரத்தரப்
      புதல்வற் பயந்த திதலை அவ்வயிற்று
      வால்இழை மகளிர் நால்வர் கூடிக்
      கற்பினின் வழாஅ நற்பல உதவிப்
      பெற்றோர் பெட்கும் பிணையை ஆகுஎன
      நீரொடுசொரிந்த ஈரிதழ் அலரி
      பல்லிருங் கதுப்பின் நெல்லொடு தயங்க
      வதுவை நன்மணம்”

என்பது அகநானூற்றுப் பாடல் பகுதி.

உழுந்தினை மிகுதியாகச் சேர்த்து நன்றாக வெந்த உணவுடன் சோற்றினைக் கூடியிருந்தோர் உண்டனர். ஆரவாரம் உண்டாயிற்று, பந்தலில் வரிசையாகக் கால்கள் நடப்பட்டிருந்தன. பந்தலின் கீழ்த்தரையில் புதுமணலைப் பரப்பினர், மனையில் விளக்கேற்றினர், மாலைகளைத் தொங்கவிட்டனர். இருள் நீங்கிக் காலை நேரம் வந்தது, சந்திரன் தீய கொள்களின் தொடர்பு நீங்கி உரோகினி நட்சத்திரத்துடன் சேரும் நல்ல நேரம் வந்தது. தலையில் மங்கல நீர்க்குடத்தைச் சுமந்தவர்களும், புதிய பாத்திரங்களைக் கையில் கொண்டவரும் ஆனமகளிர் கூடினர்.

பொதுவான ஆரவாரம் மிக்கது. வயதான மகளிர் திருமணத்திற்கு வேண்டியவற்றை முன்னும் பின்னுமாக முறையாகத் தந்தனர். மக்களைப் பெற்ற வயிறு வாய்த்த மங்கல மகளிர் நால்வர் கூடினர். கற்பினில் தவறாமல் கொண்ட கணவனுக்கு நல்ல பல உதவிகளைச் செய்து பெற்றோர்கள் பாராட்டும் சிறப்புடன் வாழ்வாயாக! என்று கூறி நீருடன் சேர்ந்த பூவையும் நெல்லையும் கரிய கூந்தலில் தங்குமாறு தூவினர்.

இவ்வாறு திருமணம் நடைபெற்றது என்பது பாடலின் கருத்தாகும். மற்றொரு அகநானுற்றுப் பாடலிலும் நற்றிணைப் பாடலிலும் திருமணச் சடங்குகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

தூவுவதில், நீர் தூய்மையைக் குறிக்கும். பூ – மங்கலத்தையும் கற்பையும் குறிக்கும். நெல் – உழைப்பையும் எதிர் கால நல்வாழ்வையும் குறிக்கும். இன்று நெல்லுக்குப் பதிலாக மஞ்சள் அரிசி வந்துவிட்டது.

சங்க காலத் திருமணமுறை, சிலப்பதிகாரக் காலத்திலேயே மாறிவிட்டது.

     “மாமுது பார்ப்பான் மறைவழிகாட்டிடத்
      தீவலம் செய்து காண்பவர்கள் நோன்பு என்னை-”

என்ற நிலை வந்துவிட்டது. சங்க இலக்கியங்களில் தீ வளர்த்தல், பார்ப்பான் சடங்கு செய்தல் இல்லை. சிலப்பதிகார்த்தில் அவை வந்துவிட்டன.

கொங்குவேள் பெருங்கதையில், அக்காலத்தில் கொங்கு நாட்டில் இருந்த திருமண முறைகளை விரிவாகப் பாடியுள்ளார். சேக்கிழார் பெருமான் பலவிதத் திருமண முறைகளைக் குறிப்பிட்டுள்ளார். சீர்திருத்தத் திருமணத்தையும் பாடியுள்ளார்.

திருமருகல் என்ற ஊரில் உடன்போக்கு வந்த தலைவனைப் பாம்பு தீண்டியதால் இறந்துவிட்டான். தலைவி அழுது புலம்பினாள். அங்கு தங்கியிருந்த திருஞானசம்பந்தர்க்குப் புலம்பல் ஒலி அதிகாலையில் கேட்டது. நேராக அடியார்களுடன் அங்கே சென்றார். நடந்ததைக் கேட்டார்.

வைப்பூர் எம்முடைய ஊர், அங்குள்ள தாமன் என் தந்தை, இங்கே உயிர் நீத்துள்ள இவன் என் தந்தைக்கு மருமகன், என்னுடன் பிறந்தவர் அறுவர், மூத்தவளை இவனுக்குத் திருமணம் செய்து தருவதாகத் தந்தை வாக்களித்திருந்தார். வேறு ஒருவன் பெரும்பொருள் கொடுத்ததால் மூத்தவளைத் திருமணம் செய்து கொடுத்தார். இவ்வாறு அறுவரையும் திருமணம் செய்து கொடுத்துவிட்டார். மனம்தளர்ந்த இவனுடன் நான் உடன்போக்கு வந்தேன். அரவு தீண்டி இறந்து விட்டான். துயர்நீங்க அருள் செய்வீர்! என்று அப்பெண் கூறினாள். ‘சடையாய் எனுமால்’ என்ற பதிகம் பாடினார். விடம் நீங்கி எழுந்தான் அவன்.

     “….அருட்காழிப்பிள்ளையார் அடியில் வீழ்ந்த
      நங்கை அவள்தனை நயந்த நம்பியோடும்
      நானிலத்தில் இன்புற்று வாழும் வண்ணம்
      மங்குல்தவழ் சோலைமலி புகலிவேந்தர்
      மணம்புணரும் பெருவாழ்வு வகுத்துவிட்டார்.”

என்பது சேக்கிழார் வாக்கு. எந்தவிதமான திருமணச் சடங்கும் இல்லாமல் திருஞானசம்பந்தர் மணம்புணரும் பெருவாழ்வு வகுத்துவிட்ட திருமணமுறை சீர்திருத்தத்தில் முன்னோடி முறையாகும். தற்போது பெரிய திருமண மண்டபம் பிடித்துப் பெரும் செலவு செய்து ஐயர்களை வைத்துத் திருமணம் செய்வது பரவலாக உள்ளது. அவர்கள் சொல்லுகின்ற மந்திரங்களின் பொருள் புரியாமல் செய்து வருகின்றனர்.

     “சோமஹ ப்ரமமோ, விவிதே கந்தர்வ
      விவிதே உத்ரஹ, த்ருதியே அக்னிஸ்டே
      பதிஸ துரியஸ்தே, மனுஷ்ய ஜாஹ”
 (சங்கராச்சாரியார்– ‘தெய்வத்தின் குரல்’ – இரண்டாம் பகுதி, பக்கம் 875)

முதலில் சோமன்(சந்திரன்) உன்னை அடைந்தான், இரண்டாவதாகக் கந்தருவன் உன்னை அடைந்தான், மூன்றாவதாக அக்கினி உனக்கு அதிபதி ஆனான். மனித வர்க்கத்தைச் சேர்ந்த நான்காவதாக நான் உன்னை ஆளுவதற்கு வந்திருக்கிறேன் – என்பது பொருளாகும்.

கற்பு முதன்மை எனக் கொண்ட தமிழர் வாழ்வில் இத்தகைய மந்திரங்கள் ஓதித் திருமணம் செய்ய வேண்டுமா?

திருமுறைகளிலும் திவ்வியப்பிரபந்தங்களிலும் திருமணம் பற்றிய பாடல்கள் ஏராளமாக உள்ளனவே!

     “குரும்பைமுலை மலர்க்குழலி கொண்டதவம் கண்டு;
      குறிப்பினொடும் சென்றவள்தன் குணத்தினை நன்கறிந்து;
      விரும்பு வரங்கொடுத்து அவளை வேட்டருளிச் செய்த;
      விண்ணவர்கோன் கண்ணுதலோன் மேவிய ஊர்”

எனத் தொடங்கும் தேவாரப் பாடலைக் கூறி மணம் செய்தால் நன்றாக இருக்கும்.

     “மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
      முத்துடைத்தாமம் நிரைதாழ்ந்த பந்தற்கீழ்
      மைத்துனன் நம்பிமது சூதனன் வந்து என்னைக்
      கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழீ நான்…”

என்ற சூடிக் கொடுத்த சுடர்க்கொடி நாச்சியார் பாடல் திருமணத்தில் ஓதினால் மிக நன்றாக இருக்கும்



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard