New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஹிந்து என்னும் சொல் November 1, 2011


Guru

Status: Offline
Posts: 24603
Date:
ஹிந்து என்னும் சொல் November 1, 2011
Permalink  
 


ஹிந்து என்னும் சொல்

November 1, 2011
ஜடாயு

சொல் ஒன்று வேண்டும், தேவ சக்திகளை
நம்முள்ளே நிலைபெறச் செய்யும் சொல் வேண்டும்.

- மகாகவி பாரதி

பெங்களூரில் எங்கள் பகுதியில் சில வருடங்களாகவே ஒரு அறக்கட்டளை கிருஷ்ண ஜெயந்தி விழாவைச் சிறப்பாகக் கொண்டாடி வருகிறது.  சமூகசேவை, கலை நிகழ்ச்சிகள், சுயதொழில் வகுப்புகள் ஆகிய துறைகளில் இயங்கும் அறக்கட்டளை அது. விழா சமயத்தில் இசைக் கச்சேரிகள், பஜனைகள் ஆகிய நிகழ்ச்சிகள் விமரிசையாக நடக்கும். இதற்காகவென்றே நேர்த்தியான ஒரு நல்ல கலையரங்கத்தையும் அந்த அமைப்பினர் உருவாக்கியுள்ளார்கள்.

இந்த வருடம் கிருஷ்ண ஜெயந்தியின் போது பள்ளி மாணவர்களுக்கான வினாடி வினா நிகழ்ச்சியையும், பஜனைப் பாடல்கள் போட்டியும் நடத்தலாம் என்று நானும் எனது நண்பர்கள் சிலரும் இணைந்து திட்டமிட்டோம். அறக்கட்டளை நடத்தும் விழா ஏற்கனவே பிரபலமாக இருப்பதால், அந்த அரங்கிலேயே அந்த நிகழ்ச்சிகளுடன் சேர்த்து வைத்துக் கொள்ளலாம் என்று யோசித்து, அந்த அமைப்பாளர்களை அணுகினோம். அமைப்பாளர்கள் எங்கள் ஆர்வத்தை சிலாகித்துப் பாராட்டி,  யோசனையை உடனடியாக ஏற்றுக் கொண்டார்கள். முழு ஒத்துழைப்பு தருகிறோம் என்றார்கள். அழைப்பிதழ் வரைவில் A Quiz on Hindu culture and heritage என்று என் நண்பன் எழுதினான். அதுவரை கலகலப்பாகப் பேசிக் கொண்டிருந்த அமைப்பாளர் கொஞ்சம் முகம் கறுத்தார். பதட்டமடைந்து, ”Indian cultureஎன்று போடுங்க சார்” என்றார். ”Indian culture என்றால் அதில் பாலிவுட் சினிமா, பாங்கரா நடனம் எல்லாம் வந்து விடும் சார், மாணவர்கள் முற்றிலும் வேறு விதமான எதிர்பார்ப்புடன் வருவார்கள், குழப்பம் ஏற்படும். Hindu culture தான் ஏற்ற தலைப்பு” என்றான் என் நண்பன்.

அமைப்பாளர் முகம் இஞ்சி தின்ற குரங்கு போல ஆகியது. ”எந்த மாதிரியெல்லாம் கேள்வி கேட்பீர்கள்?” என்றார். ”ராமாயணம், மகாபாரதம், கோயில்கள், புராணங்கள்…” என்று நான் பட்டியல் போட, ”விவேகானந்தர், நாராயண குரு, ராமானுஜர் போன்ற ஞானிகள், ஆயுர்வேதம், வேத கணிதம்..” என்று என் நண்பன் சேர்ந்து கொண்டான். “சரி, அது எல்லாவற்றையும் அப்படியே போடுங்களேன்” என்றார் அமைப்பாளர்.  “சார் அப்போ அழைப்பிதழே மூன்று பக்கத்துக்குப் போகும்” என்று புன்னகைத்தான் என் நண்பன். ”நீங்களும் நானும் ஹிந்து தானே சார், நீங்கள் இங்கு கொண்டாடிக் கொண்டிருப்பது கிருஷ்ண ஜெயந்தி என்ற ஹிந்துப் பண்டிகையைத் தானே .. “ என்று எங்கள் குழுவில் இருந்த இன்னொரு நண்பன் உணர்ச்சிகரமாகக் கேட்க ஆரம்பிக்க, ஆமாம் ஆமாம் என்று தலையசைத்தார் அமைப்பாளர்.. “நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான். ஆனால் அப்படிப் போட்டால்…” என்று இழுத்தார்.

அப்போது தான் அங்கிருந்த விளம்பரப் பலகையைக் கவனித்தேன் “நன்கொடைகளுக்கு முழுமையான வருமான வரி விலக்கு..” என்றெல்லாம் நீளமாக எழுதியிருந்தது. நண்பர்களைக் கையமர்த்தினேன். ”சார், A Quiz on our glorious culture and heritage என்று போட்டு விடலாம்” என்றேன். ஏகமனதாக ஒத்துக் கொண்டார். எல்லாம் மங்களகரமாக முடிந்தது. இந்த தேசத்தின் போலி மதச்சார்பின்மைப் பாரம்பரியம் பூச்சாண்டி காட்டி அந்த அறக்கட்டளை நடத்துபவரை எந்த அளவு ”எச்சரிக்கையுடன்” நடந்து கொள்ள வைக்கிறது என்று எண்ணிக் கொண்டேன்.

தான் ஹிந்து என்பதில் இவருக்குச் சிறிதும் சந்தேகமில்லை. ஆனால் அதை வெளிப்படுத்த வேண்டுமா, எந்த வகையில் வெளிப்படுத்துவது என்பதில் சில தயக்கங்கள். ஆனால் ”நான் இந்துவா?” என்று கேள்வி கேட்டு ஜெயமோகனுக்கு கடிதம் எழுதியவருக்கு, அதிலேயே அடிப்படை சந்தேகம் இருந்திருக்கிறது. அந்த சந்தேகத்தையும் தெளிவிக்கும் வகையில் ஜெயமோகன் ஒரு அருமையான பதிலை அவருக்கு அளித்திருக்கிறார்.

********

பொதுவாக பலர் நினைப்பது போல, ஹிந்துக்கள் தங்களை “ஹிந்துக்களாக” உணரத் தொடங்கியது பிரிட்டிஷ் காலகட்டத்தில் தான் என்பது உண்மையல்ல.

வரலாற்று ரீதியாக, சிந்து நதிக்கு அப்பால் இருந்த பிரதேசத்தையும் அங்கு வாழும் மக்களையும், அவர்களது ஒட்டுமொத்த வாழ்க்கை முறையையும் குறிக்க, அந்த பூகோளப் பிரதேசத்திற்கு வெளியே இருந்த பண்டைய சுமேரியர், பாரசீகர், கிரேக்கர் ஆகிய மக்களால் தான் ஹிந்து என்ற பதம் முதன்முதலில் பயன்படுத்தப் பட்டது. ஆனால் இது அந்த அன்னிய மக்கள் உருவாக்கிய பதம் அல்ல. ரிக்வேத ரிஷிகள் தாங்கள் வாழ்ந்த பிரதேசத்தை ஸப்த ஸிந்து என்றே அழைத்தனர். அந்தச் சொல்லே ஹப்த ஹிந்து என்று பாரசீக மொழியில் உருமாற்றம் அடைந்தது.  சரஸ்வதி = ஹரஹ்வதி, அஸுர் = அஹுர் என்று பல சம்ஸ்கிருதச் சொற்கள் இதே ரீதியில் பண்டைய பாரசீக மொழியில் உருமாற்றம் பெற்றுள்ளன. இந்த சொல் உருமாற்றத்திற்கான அகச்சான்றுகள் நமது புராணங்களிலேயே உள்ளன.

சம்ஸ்கிருத பாஷை அன்னிய பிரதேசங்களில் அங்கு வாழ்வோரையும் இன்புறச் செய்யுமாறு ”யாவனீ”யாக, மிலேச்ச வாணி”யாக மாறுவது பற்றி பவிஷ்ய புராணம் இப்படிக் குறிப்பிடுகிறது-

சம்ஸ்க்ருதஸ்யைவ வாணீ  து பா⁴ரதம் வர்ஷமுஹ்யதாம் |
அன்யே க²ண்டே³ க³தா ஸைவ ம்லேச்சா² ஹ்யானந்தி³னோப⁴வன்  ||

ஜாதுஸ்தா²னே ஜைனசப்³த³: ஸப்தஸிந்து⁴ஸ் ததை²வ ச |
ஹப்தஹிந்து³ர் யாவனீ ச புனர்க்ஞேயா கு³ருண்டி³கா ||

(பவிஷ்ய புராணம், பிரதிஸர்கபர்வம், 5ம் அத்தியாயம்)

கிரேக்கர்கள், ஹூணர்கள், சகர்கள், டார்டார்கள், பலூச்சிகள் போன்று பாரதத்தின் வடமேற்கு எல்லைப் புறத்துக் குடியேறிகளும், தோற்கடிக்கப் பட்ட படையெடுப்பாளர்களும் இந்து சமுதாயத்தில் ஒன்றிணைந்து கொண்டிருந்த காலகட்டத்தில் (பொ.பி 1,2,3,4ம் நூற்றாண்டுகள்) மேற்கண்டது போன்ற சுலோகங்கள் புராணங்களில் காணக் கிடைக்கின்றன.  பின்னர் இஸ்லாமியப் படையெடுப்புகள் தொடங்கிய போது, ஹிந்துக்களாலேயே தங்களை, தங்களது வாழ்க்கை முறையை படையெடுப்பாளர்களான அன்னியரிடம் இருந்து வேறுபடுத்துவதற்காக ஹிந்து என்ற சொல் புழக்கத்தில் வந்தது.  பாரதத்தின் நிலப்பகுதியை ஹிந்துஸ்தானம் என்ற சொல்லால் பார்ஹஸ்பத்ய சாஸ்திரம் (பொ.பி 7ம் நூற்றாண்டு) என்ற நூல் குறிக்கிறது. இதே காலகட்டத்தில் இந்தியாவுக்கு வந்த சீன யாத்திரிகர் யுவான் சுவாங், ஹிந்து என்பதை சீன மொழியில் Yindu என்று உருமாற்றி பதிவு செய்துள்ளார். இன்று வரை சீனமொழியினர் இச்சொல்லைப் பயன்படுத்தி வருகின்றனர்.

சம்ஸ்கிருத நூல்களில் தொடங்கிய ஹிந்து என்ற சொல்லின் பயன்பாடு 9-10ம் நூற்றாண்டுகளில் வட இந்திய பிரதேச மொழிகளின் இலக்கியத்தில் அழுத்தமாக இடம் பெற்று விட்டது. பிருத்விராஜனின் பெருமைகளை விவரித்து அவரது அரசவைக் கவிஞரான சந்த பரதாயி எழுதிய பிருத்விராஜ் ராஸோ (11ம் நூற்றாண்டு) என்ற ஹிந்தி வீரகதைப் பாடலில் ஹிந்து என்ற சொல் ஏராளமான இடங்களில் வருகிறது.  ”ஹிந்துக்கள் மிலேச்சர் மீது நடத்திய போர்”, “ஹிந்துக்களாகிய நாங்கள் மிலேச்சர்களைப் போல மானமற்றவர்களல்ல” போன்ற வரிகள் இந்த நூலில் விரவியுள்ளன. 13ம் நூற்றாண்டில் வாழ்ந்த கபீர்தாசர், குருநானக், தாதூ தயால், நாபா தாசர் ஆகிய பக்தி இயக்கக் கவிஞர்களின் பாடல்களில் ஹிந்து, துரக் ஆகிய சொற்கள் முறையே இந்துக்களையும், இஸ்லாமியர்களையும் வேறுபடுத்திக் காட்டும் வகையில் பயின்று வந்துள்ளன. பாரதத்தின் கிழக்குப் பகுதியான வங்கத்தைச் சேர்ந்த தர்க்க சாஸ்திர நூல் ஒன்றில் “சிவ சிவா, அவன் ஹிந்துவும் அல்ல யவனனும் அல்ல” (சிவ சிவ ந ஹிந்துர் ந யவன:) என்ற சொற்றொடர் காணப் படுகிறது.

தென்னிந்தியாவை இஸ்லாமியப் படையெடுப்பிலிருந்து காப்பதற்காக 14ம் நூற்றாண்டில் எழுந்தது விஜய நகர சாம்ராஜ்யம். இதனைத் தோற்றுவித்த ஹரிஹர, புக்க சகோதரர்களின் அரசு முத்திரையில் “ஹிந்து ராய ஸுரத்ராண” என்ற பட்டப் பெயர் இடம் பெற்றுள்ளது. ராஜபுத்திர மன்னர்களின் ஆவணங்கள் அனைத்திலும் ஹிந்து என்ற பெயர் பெருமிதத்துடன் கூறப்படுகிறது. மகாராஷ்டிரத்தில் தோன்றிய சமர்த்த ராமதாசர் என்ற மகானின் பாடல்களில் “ஹிந்துஸ்தான் பளாவலேம்” போன்ற வரிகள் உள்ளன. இவரது ஆசியுடன் சத்ரபதி சிவாஜி அமைத்த சுதந்திர இந்து ராஜ்ஜியம் ”ஹிந்து பதபாதசாஹி” என்றே தன்னை அழைத்துக் கொண்டது. ”ஹிந்துவின் குரலையும், ஹிந்துவின் குடுமியையும், ஹிந்துவின் திலகத்தையும், வேத புராணங்களையும் காத்தவன்” என்று சிவாஜியைக் குறித்து கவிஞர் கவிராஜ பூஷண் புகழ்ந்து பாடியுள்ளார். வடக்கில் ஆப்கானிஸ்தானம் முதல் தெற்கே தஞ்சை வரை பரந்து விரிந்திருந்தது இந்த மராட்டிய ஹிந்து அரசு.  தமிழில் தஞ்சை மராட்டியரின் ஆவணங்களிலேயே முதன் முதலில் ஹிந்து என்ற சொல் காணப் படுகிறது.

சீக்கிய குருமார்களின் பல பாடல்களில் தங்களது அற நெறியை ஹிந்து தர்மம் என்று குறிப்பிடுகின்றனர். குரு தேக்பகதூர் அவர்களை இஸ்லாமிய மத அதிகார வர்க்கம் அச்சுறுத்திய போது, அவர் “என்னுடையது ஹிந்து தர்மம்; உயிரினும் மேலாக இதை நேசிக்கிறேன்” (uttar bhanyo dharam ham hindu, ati priyako kima kare nikandu) என்று பதிலிறுத்தார். சீக்கிய மதத்தை வீரர்களின் திருக்கூட்டமாக மாற்றியமைத்து அதற்கு காலசா என்று பெயரிட்ட குரு கோவிந்த சிங் (1666 – 1708) அந்தப் பிரகடனத்தையே ஹிந்து என்ற சொல்லால் அலங்கரிக்கிறார் -

sakal jagat mein khAlsA panth gAje
jAge dharam hindu sakal bhaND bhAje

ஹிந்து தர்மம் வாழ்வதற்காகவும், பொய்மைகள் அனைத்தும் அழிவதற்காகவும்
உலகெங்கும் காலசா என்ற மார்க்கம் செழிக்கட்டும்

இவ்வாறு, 6ம் நூற்றாண்டு தொடங்கி 18ம் நூற்றாண்டு வரை பாரதத்தின் பல மொழிகளிலும், பல பகுதிகளிலும் ஹிந்து என்ற சொல் ஏற்கனவே ஒட்டுமொத்த ஹிந்து மதத்தையும், அதைப் பின்பற்றும்  சமுதாயத்தையும் குறித்திருக்கிறது.  அதன் தொடர்ச்சியாகவே பிரிட்டிஷாரும் இந்தச் சொல்லைப் பயன்படுத்த ஆரம்பித்தார்கள்.

பரம்பொருளைப் போன்றே வரம்பு கடந்த தங்கள் மதத்திற்கு இப்படி ஒரு பெயரிட்டு அழைப்பதை 20ம் நூற்றாண்டின் ஆரம்ப கட்டத்தில் கூட பல இந்து சமயப் பெரியோர்களால், அறிஞர்களால் முழுதாக உள்வாங்கிக் கொள்ள முடியவில்லை.  “ஹிந்து என்ற சொல்லை விட வைதிகன், வேதாந்தி போன்ற சொற்கள் பொருத்தமானவை” என்று சில உரைகளில் விவேகானந்தர் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீஅரவிந்தர்,  திலகர், பாரதியார் ஆகியோரது உரைகளிலும் எழுத்துக்களிலும்  ஹிந்து யார்? ஹிந்து தர்மம் என்றால் என்ன?  போன்ற  பீடிகைகளும், விளக்கங்களும்  ஒரு சம்பிரதாயம் போலவே இடம்பெறும். டாக்டர் ராதா கிருஷ்ணன், காஞ்சி பரமாசாரியார்  உரைகளிலும் இத்தகைய பீடிகைகளைக் காணமுடியும். பல நூற்றாண்டுகளாக அறுபடாத பண்பாட்டுத் தொடர்ச்சி கொண்டிருந்த இந்து சமுதாயம், பல்வேறு அன்னிய ஆக்கிரமிப்புகளுக்கு ஆட்பட்டு, பின்னர் நவீன காலகட்டத்தில் தனக்குரிய பொது அடையாளத்தைத் தேடிக் கண்டடைவதில் உள்ள சிக்கல்களை சமன்வயப் படுத்தும் முயற்சியாகவே அந்தப் பீடிகைகள் அமைந்தன. நவீன இந்திய தேசிய மறுமலர்ச்சியின் ஊடாக, ஹிந்து என்ற அடையாளத்தை உலகின் எல்லாப் பகுதிகளிலும் வாழ்ந்து வந்த ஹிந்துக்கள் ஏற்றுக் கொண்டார்கள்.  இன்று வரலாற்றுக் கண்ணோட்டத்தோடு  இவைகளை நாம் படிக்கும்போது தான் இந்த விஷயம் நமக்குத் தெளிவாகத் தெரிய வருகிறது.

ஒரு மனிதனுக்கு பெயர் என்று ஒன்று இருப்பது எதற்காக? பிறர் அழைப்பதற்காகத் தானே? தன்னைத் தானே அறிந்து கொள்வதற்கு அவனுக்குப் பெயர் அவசியமில்லையே.  உலகளவில் தன்னைப் பிறரிடமிருந்து வேறுபடுத்திக் கொள்ளுதல் என்ற அடிப்படையிலேயே நமது மதத்திற்கு ஹிந்து என்ற பெயர் உருவாயிற்று (ஆராய்ந்து பார்த்தால், எல்லா மதங்களுக்கும், தேசங்களுக்கும் பெயர்கள் இந்த வகையில் தான் உருவாகியுள்ளன, இந்து மதம் மட்டும் இதில் விதி விலக்கு அல்ல). ஆனால் அதனாலேயே அந்தப் பெயர் ஆசாரக் குறைவானதாகவோ, அல்லது ஒட்டாததாகவோ ஆகி விடாது. அப்படி எண்ணுவது ஒரு குருட்டுத் தனமான, நடைமுறைக்கு ஒவ்வாத தூய்மைவாதம் அன்றி வேறில்லை. மாறாக, வரலாற்றின் போக்கில் உருவாகி, வளர்ந்து, திரண்டு வந்த ஹிந்து என்ற பெயரே இயல்பானதும், வேர்கொண்டதும் ஆகும்.

*******

ஹிந்து என்ற பெயர் ஒரு மதத்தை (religion), கலாசாரத்தை (culture),  தத்துவ ஞான மரபை (philosophy), வாழ்க்கை முறையை (way of life), இவை அனைத்தையும் உள்ளடக்கிய பண்பாட்டை (civilization) குறிக்கிறது. இவற்றை ஒட்டுமொத்தமாகக் குறிக்க ஹிந்து என்ற சொல்லே மிகமிகப் பொருத்தமானதும் கூட. சனாதன தர்மம், வைதிக தர்மம், வேதாந்தம் போன்ற சொற்கள் தம்மளவில் குறுகலான பொருள் கொண்டவை.  தர்மம் என்ற பொதுச் சொல் மிகப் பரந்தது. இந்தியப் பரப்பில் தோன்றிய இந்து மதம், பௌத்தம், சமணம், சீக்கியம் ஆகிய நான்கையும் சேர்த்து தர்ம மதங்கள் (Dharmic religions) என்று குறிப்பிடும் வழக்கமும் சமீப காலத்தில் உருவாகி வருகிறது.

இது குறித்து Who is a Hindu என்ற புத்தகத்தில் கொய்ன்ராட் எல்ஸ்ட்மிக அருமையாக ஆராய்ந்திருக்கிறார். இப்புத்தகத்தில் எல்ஸ்ட் முன்வைக்கும் கருத்துக்கள் பற்றிய ஒரு சிறிய அறிமுகத்தை இங்கு தருகிறேன்.

- முதலில் ஹிந்து என்ற சொல்லுக்கு திலகர்,அரவிந்தர்,சாவர்க்கர் போன்ற சித்தாந்திகள் ஒவ்வொருவரும் தரும் வரையறைகளை அலசுகிறார். வைதீக இந்துமதம், புராண இந்துமதம் என்ற பகுப்பில் சமயக் கொள்கைகளை வகைப் படுத்துகிறார். இந்து சமூகத்தில் சாதியின் பங்கு குறித்தும், அதன் நன்மை தீமைகள் குறித்தும் வரலாற்றுப் பார்வையுடன் மதிப்பீடு செய்கிறார். தலித்கள் இந்துக்களே என்று அசைக்க முடியாத வாதங்களை முன்வைக்கிறார்.

- அடுத்து சட்டரீதியாக “ஹிந்து” என்பதன் வரையறை பற்றிப் பேசுகிறார். இந்தியாவின் இந்து சிவில் சட்டங்கள் இந்துக்களோடு கூட சமண,பௌத்த,சீக்கிய மதத்தவர்கள் விஷயத்திலும் அமுல் படுத்தப் படுகின்றன. இதன் பின்னணியையும், இந்து மதம் தொடர்பான முக்கிய நீதிமன்ற தீர்ப்புகளையும் பற்றி விவரிக்கிறார்.

-   பின்னர், ஹிந்து மத சீர்திருத்தவாதிகள் & அவர்களது இயக்கத்தினர் ஹிந்துக்களா? இந்தியாவின் வனப்பகுதிகளில் வாழும் பழங்குடிகள் இந்துக்களா? சமணர்கள், சீக்கியர்கள்,பௌத்தர்கள், அம்பேத்கார் உருவாக்கிய நவ-பௌத்தர்கள் ஆகியோர் ஹிந்துக்களா? என்று ஒவ்வொரு கேள்வியையும் எடுத்துக் கொண்டு தனித்தனி அத்தியாயங்களில் விரிவாக ஆராய்கிறார். ஒவ்வொன்றிலும் அவர் அளிக்கும் முடிவுகள் மிகவும் அறிவுபூர்வமாகவும், நடைமுறை அம்சங்களையும் கணக்கில் கொள்வதாகவும் உள்ளன.

- இந்துமதம் உலக அளவில் இன்றும் செழித்து வாழும் பாகன் (pagan) மதமா?  இந்துமதம் செமிட்டிம் மதங்கள் போல ஆக்கப் படுகிறதா? இந்துத்துவம் என்றால் என்ன என்பது குறித்த விவாதங்களுடன்  நூல்  நிறைவடைகிறது.

நூல் முழுவதையும் இணையத்திலேயே இங்கு படிக்கலாம்.

ஹிந்து மதம், ஹிந்து அடையாளம் பற்றி விவாதிக்க, புரிந்து கொள்ள விரும்புபவர்கள் அனைவரும் கற்றுத் தெளிய வேண்டிய நூல் இது. ஆனால் நம் சூழலில் ஹிந்து அடையாளம் பற்றி விவாதிக்க வருபவர்கள் பொத்தாம் பொதுவான அவியல் கருத்துக்களை ஒரு குறுகிய தளத்தில் முன்வைப்பவர்களாக இருக்கிறார்களே அன்றி,  இது குறித்து ஏற்கனவே எழுதப் பட்டுள்ள காத்திரமான நூல்களைப் படித்து விட்டுப் பேசுவதில்லை என்பது துரதிர்ஷ்டமான விஷயம்.

”இங்கிருந்து தொடங்குவோம்” என்ற கட்டுரையில் ஜெயமோகன் எழுதுகிறார் -

இப்போது நாம் அடிக்கடிக் கேட்கும் ஒரு வரி உண்டு, இந்திய சிந்தனை என்று ஒன்று இல்லை. இந்து ஞான மரபு என்று ஒன்று இல்லை. அதெல்லாம் வெள்ளைக்காரன் வந்து உருவாக்கியது. பல தளங்களில் இந்த கூச்சல் எழுந்துகொன்டே இருக்கிறது. இந்தக் குரல் பெரும்பாலும் மேலை நாட்டு பல்கலை கழகங்களில் தயாரிக்கப்பட்டு நமக்கு அனுப்பப்படுகிறது … இந்தக்குரலை எவர் எதிரொலி செய்கிறார்களோ அவர்களுக்கே இந்தியாவில் இன்று வாய்ப்புகளும் வசதிகளும் அதிகம். அவர்களை மேலைநாட்டு பல்கலைகள் அழைத்து கௌரவிக்கும். பட்டங்களும் நிதிக்கொடைகளும் அளிக்கும்…

உண்மையில் அப்படித்தானா? உதாரணமாக இந்து ஞான மரபு என்ற ஒன்று எப்போதிருந்து இருக்கிறது?..  நமக்கு எப்போது முதல் நூல்கள் கிடைக்கின்றனவோ அப்போது முதல் இதற்கு ஒரு பாடத்திட்டம் [கரிக்குலம்] தெள்ளத்தெளிவாகவே கிடைக்கிறது. இருந்ந்தும் இப்படி ஒரு அமைப்பே இல்லை என்று நம்மிடம் வாதிடுகிறார்கள் நம் அறிவுஜீவிகள்.

இந்த பாடத்கிட்டம் எல்லா இந்து ஞான வழிகளுக்கும் பொதுவானது. நீங்கள் திருவாவடுதுறை மடம் சென்று சைவம் கற்றாலும் சரி, அகோபிலம் சென்று வைணவம் கற்றாலும் சரி இதை கற்றாக வேண்டும். செவ்வியல் இலக்கியங்களை விடுங்கள், நாட்டுப்புற இலக்கியங்களில் கூட அப்படித்தான். ஒரு கதாநாயகன் சகல கலா வல்லவன் என்றால் உடனே அவன் இந்த பாடத்திட்டத்தை கற்றவன் என்பார்கள். நீங்களே கேட்டிருக்கலாம். சுடலைமாடன் கொடையில் மாடன் கதை பாடுவார்கள் – ”ஆறு சாத்திரமும் ஆறு தத்துவமும் வேதம் அடங்கலுடனே அள்ளிவந்தானையா…” அதுதான் இந்து மெய்ஞான மரபு!

அந்த பாடத்திட்டம் இதுதான்.

1. வேதங்கள்

2. மூன்று தத்துவங்கள்: அதாவது பிரஸ்தான திரயம். கீதை, உபநிடதங்கள், பிரம்மசூத்திரம்.

3. ஆறு தரிசனங்கள்: சாங்கியம் யோகம் நியாயம் வைசேடிகம் பூர்வமீமாம்சம் உத்தர மீமாம்சம்

4 ஆறு மதங்கள்: சைவம் வைணவம் சாக்தம் கௌமாரம் காணபத்யம் சௌரம்

இவற்றை எல்லாம் ஒன்றுடன் ஒன்று இணைந்த ஒரு நூல்வரிசையாக எண்ணிவிடக் கூடாது.. ஒன்றுக்கு இன்னொன்றுடன் உள்ள உறவும் முரண்பாடும் முக்கியமானவை…

இந்த கருத்துச் சட்டகம் (framework) ஒன்றும் புதியதல்ல, இது ஜெயமோகன் உருவாக்கியதல்ல (துரதிர்ஷ்டவசமாக, தமிழ்ச் சூழலில் முதல் முறையாக அதைப் படிக்கும் பலர் அப்படி நினைத்துக் கொள்வதைக் காண்கிறேன். தமிழகம் இந்து சமயக்கல்வியில் எவ்வளவு பின் தங்கியிருக்கிறது என்பதையே இது காட்டுகிறது). பௌத்த சமண மதங்களை வேதநெறி ஒன்றுதிரண்டு எதிர்கொண்ட காலத்திலேயே இந்தச் சட்டகம் உருவாகி விட்டது. பொ.பி ஏழாம் நூற்றாண்டில் அவதரித்த ஆதி சங்கரர் அதற்கு உறுதியான, தகர்க்க முடியாத அரண் அமைத்து அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியது இந்து மத வரலாற்றில் ஒரு மாபெரும் திருப்பு முனையாக அமைந்தது. முரணியக்கம் கொண்ட சமய நெறிகளையும், தரிசனங்களையும் தத்துவ ரீதியாக சமன்வயப் படுத்தியதே சங்கரரின் ஒப்புயர்வற்ற தத்துவ சிந்தனையின் சிறப்பியல்பு ஆகும்.

ஜப்பானிய கலைகள், அரசியல், சமூக சிந்தனைகள், பழக்க வழக்கங்கள் என்று அனைத்தையும் ஷிண்டோ,ஜென்,பௌத்த தத்துவங்களின் ஒளியிலேயே நாம் ஆழமாக புரிந்து கொள்ள முடியும் என்று அறிஞர்கள் கருதுகிறார்கள். அவை ஒன்றுக்கொன்று தொடர்பற்ற உதிரிகள் அல்ல. அதுபோலவே, இந்துப் பண்பாட்டின், வாழ்க்கையின் கூறுகள் அனைத்தையும் இந்து ஞான மரபு வழங்கும் தத்துவ அடித்தளத்தின் பார்வையில் நின்று நாம் விளக்க முடியும். ஆனால் இதைச் சொல்லும் போது  சில “பாமரர்கள்” தருவித்துக் கொண்ட அறியாமையினாலும்,  சில ”அறிவுஜீவிகள்” தாங்கள்  தருவித்துக் கொண்ட சித்தாந்த சட்டகங்களாலும் அதனை மறுக்கிறார்கள்.  இரண்டுக்கும் பின்னால் உள்ளவை உள்நோக்கங்கள் மட்டுமே என்பது தெளிவு.

சமயமும், வரலாறும், கலாசாரமும் என்ன சொல்கின்றன என்று பார்த்தோம்.

இன்றைய சூழலில் ஹிந்து அடையாளம் என்பதன் பொருள் என்ன?  அதன் தேவை என்ன?  ஹிந்துத்துவம்  இதில் எங்கே வருகிறது என்பது பற்றி அடுத்த பகுதியில் பார்ப்போம்.

நாம்  ஹிந்துக்கள்.  ஹிந்து என்ற சொல்லைத் தப்பான அர்த்தத்தில் நான் பயன்படுத்தவில்லை. அல்லது அதற்கு ஏதாவது மோசமான பொருள் உண்டு என்று  நினைக்கிறவர்களின் கருத்தை நான் ஏற்கவுமில்லை. பழங்காலத்தில் அச்சொல் சிந்துவுக்கு மறுபுறம் வசிப்பவர்கள் என்று மட்டுமே பொருள்பட்டது.  இன்று நம்மை வெறுப்பவர்களில் பெரும்பாலானாவர்கள் அதற்குத் தவறான விளக்கம் தரலாம் என்றாலும் பெயரைப் பற்றி நாம் அதிகம் கவலைப் படவேண்டிய அவசியமில்லை.  ஹிந்து என்ற பெயர் உயர்ந்த லட்சியங்கள் அனைத்தையும், ஆத்மீகத் தொடர்புடைய அனைத்தையும் குறிக்கும் சொல்லாக விளங்குமா அல்லது நிந்தனைச் சொல்லாக, நசுக்குண்டவர்களை, உதவாக் கரைகளை, பாவிகளைக் குறிப்பதாக விளங்குமா என்பது நம்மைப் பொறுத்த விஷயமாகும்.  தற்பொழுது “ஹிந்து” என்ற சொல் இழிவான எதையாவது குறிப்பதாக விமர்சிக்கப் பட்டால், கவலைப் படவேண்டாம்.  எல்லா மொழிகளிலும் உள்ள எந்த ஒரு வார்த்தையைக் காட்டிலும் இதை உயர்ந்த பொருளுடையதாக ஆக்க நமது செயல் மூலம் முற்படுவோம்.

- சுவாமி விவேகானந்தர்,  1898ம் ஆண்டு லாகூரில் பேசியது.

(தொடரும்) 

 

 


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

வடமொழியில் ‘ஹிம்சை’ என்றால் ‘துன்புறுத்தல்’ என்று பொருள். ‘அஹிம்சை’ என்பது எதிர்மொழி. அதாவது, ‘துன்புறுத்தாமை’. என்று கொள்ள வேண்டும். யாரையும் துன்புறுத்தாமல் இருப்பது ‘ஹிந்து மதம்’ என்று உங்கள் குருநாதர் விளக்கினார் என்று பொருள் கொள்கிறேன். தாங்கள் ‘ஹிம்சை’ என்றல் ‘துன்புறுத்தாமை’ என்று எழுதியிருப்பது அவசரத்தினால் எனப்பட்ட ஒன்றோ என்று ஐயுறுகிறேன். அப்படி இல்லை என்றால், அருள் கூர்ந்து, அந்தச் சிறிய தவறைத் திருத்திக் கொள்ளுங்கள்.

 

‘இந்து’ என்ற சொல் ‘சிந்து’ நதிக்கு அப்பால் உள்ளவர்களைக் குறித்தாலும் (வடமொழியின் ‘ஸ’ என்ற ஒலி பாரசீகத்தில் ‘ஹ’ என்று மாற்றப் பட்டது, ‘ஷ’ என்ற வடமொழி ஒலி தமிழில் ‘ட’ என்று மாற்றி ஒலிக்கப் படுவதைப் போல. உதாரமாக, ‘அஷ்ட’ என்ற சொல் தமிழில் ‘அட்ட’ என்று ஒலிக்கப்படுகிறது.) எனவே, சிந்துக்கள் என்பதைப் பாரசீகர்கள் ஹிந்துக்கள் என்று குறிப்பிட்டார்கள். அதே பகுதி, அங்கு வாழும் மக்களால் ‘பாரதம்’ என்று குறிப்பிடப்பட்டு வந்தது. இன்றும் இந்தியாவுக்கு, ‘பாரத்’ என்ற பெயரும் உண்டு. நாணயங்களில் இந்தியில் எழுதி இருப்பதைப் பாருங்கள்.

சிந்து என்ற சொல் இந்தியத் துணைக்கண்டத்தின் வடக்குப்பகுதி ஆறான சிந்து ஆற்றை குறிப்பிட ரிக் வேதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.[2][3]
பிரகாஸ்பதி ஆகமத்தில்

हिमालयं समारभ्य यावदिंदुसरोवरम् ।
तं देवनिर्मितं देशं हिंदुस्थानं प्रचक्ष्यते ।।
ஹிமாலயன் ஸமாரப்ய யாவ்திந்துஸரோவரம் .
தன் தேவ்னிர்மிதன் தேஷன் ஹிந்துஸ்தானன் ப்ரசக்ஷ்யதே ..
பொருள்: கடவுள் படைத்த நிலப்பரப்பான இமயமலை முதல் தென் பெருங்கடல் வரை இந்துசுதான் என்று அழைக்கப்படுகிறது. இதில் இந்து என்கிற சொல் இந்துசுதானில் உள்ளது.[4][5]
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

By about 2nd - 1st century BCE, the term "Hein-tu" was used by Chinese, for referring to North Indian people. The Persian term was loaned into Arabic as al-Hindreferring to the land of the people who live across river Indus, and into Greek as Indos, whence ultimately English India. விவிலியம் எஸ்தெர் புத்தகம் இந்தியா இன்பதை ஹோடு எனதான் அழைக்கிறது

http://en.wikipedia.org/wiki/Hindu



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard